ஸ்ரீபாஞ்சராத்ரம்–ஸ்ரீ ரெங்க பங்கஜம் –ஸ்ரீ முரளீ பட்டர் ஸ்வாமிகள்–

ஸ்ரீபாஞ்சராத்ரம்

நமஸ் ஸகல கல்யாண தாயிணே சக்ரபாணயே
விஷயார்ணவ மக்நாநாம் சமுத்தரண ஹேதவே!
நமஸ் சாண்டில்ய குரவே சனகாயன நமோ நம:
ஔபகாயண சாண்டில்ய பாரத்வாஜஸ்ச கௌசிக:
மௌஜ்யாயநஸ்ச பஞ்சைதே பாஞ்சராத்ர ப்ரவர்த்தகா:
தீக்ஷாச்சார்ய: ஜகத் ப்ரக்ஞா: திசந்து ஞானமத்புதம்

இது ஸ்ரீரங்கதிவ்ய க்ஷேத்திரத்திலே நம்பெருமாளின் அர்ச்சகர்கள் அநுதினமும் அநுசந்திக்கும் ஸ்ரீபாஞ்சராத்ர தியான ஸ்லோகம்.

என்ன சொல்லி துதிக்கின்றது இந்த ஸ்லோகம்..?

உன்னை ஆராதிக்கக்கூடிய அனைத்து விஷயங்களையும், ஔபகாயநர், சாண்டில்யர், பாரத்வாஜர், கௌசிகர், மௌஜ்யாயநர்
ஆகிய ஐந்து ரிஷிகளுக்கும் போதித்து அவர்களை பாஞ்சராத்ர ப்ரவர்த்தகளாகவும், இந்த ஜகத்திற்கே பிரகாசம் அளிக்கக் கூடியவர்களாக்கி,
அத்புதமான ஞானத்தினை அவர்களுக்கு அருளிய சகலவிதமான கல்யாண குணங்களையும் உடைய,
சக்கரத்தினை கையில் தரித்துள்ள ஸ்ரீமந் நாராயணனை வணங்குகின்றேன்.
சாண்டில்ய மகரிஷியினையும், சனகரையும் வணங்குகின்றேன்!

இந்த ஸ்லோகத்தில் “சக்ரபாணயே“ என்று துதிப்பதற்கு என்ன காரணம்..? யார் இந்த ஐந்து ரிஷிகளும்..?
ஔபகாயநர், சாண்டில்யர், பாரத்வாஜர், கௌசிகர், மௌஜ்யாயநர் ஆகிய இந்த ஐந்து ரிஷிகளுமே பஞ்சாயுதங்களின் அம்சம்!
இதில பிரதானமானது ஸ்ரீசுதர்ஸனர்!.
இந்த ஐந்து ரிஷிகளுக்கும் ஐந்து ராத்ரிகளில் பகவான் தனித்தனியே தன்னை ஆராதிக்கும் முறையை கற்பித்தான்.
ஐந்து ராத்ரிகளில் இது உபதேசிக்கப்பட்டமையால் இது பாஞ்சராத்ரம் என்றழைக்கப்படுகின்றது.

விஹகேந்திர ஸம்ஹிதை என்றவொரு க்ரந்தமானது, அனந்தன், கருடன், விஷ்வக்ஸேனர், பிரம்மா, சிவன் ஆகிய
ஐவருக்கும் முறையே ஐந்து ராத்ரிகளில் உபதேசித்தார், என்கிறது.

பாரத்வாஜ ஸம்ஹிதை என்கின்ற க்ரந்தமானது வேறொரு விதமாக பாஞ்சராத்ரத்தினை கூறுகின்றது.

நாம் இங்கு ஸ்ரீரங்கத்தில் எது பிரமாணமாக உள்ளதோ, ஸ்ரீரங்கத்தில் வழக்கத்தில் உள்ள தியான ஸ்லோகத்திலுள்ளபடி எடுத்துக் கொள்வோம்.

“ராத்ரி” என்றால் “இருள்” இந்த இருள் அறியாமையைக் குறிக்கும்.

“பாஞ்ச” என்றால் சூரியன் என்ற ஒரு பொருளுண்டு.

இந்த சூரியன் அறியாமையாகிய இருளை விரட்டவந்தபடியால் “பாஞ்சராத்ரம்”.

எது அறியாமை..?

எது முக்யமாக அறியப்பட வேண்டுமோ அதனை அறியாதது அறியாமை..!

எது முக்யமாக அடையப்பட வேண்டுமோ அதனை விடுத்து மற்றவற்றையெல்லாம் அடைதல், அடைய ஆசைப்படுதல் அறியாமை..!

பாஞ்சராத்ரம் சொல்கின்றது..

“யஸ்மின்யுக்தம் வாஸூதேவனே சாக்ஷாத்
ஞானம் யோக: கர்ம பக்தி: விபுக்தி:
ஏதத் ஞாத்வா ப்ரம்மபூதோ மஹாந்த:
தத்வத் சாஸ்த்ரம் பாஞ்சராத்ரம் ப்ரபத்யே..”

”பரம்பொருள் சாக்ஷாத் ஸ்ரீமந் நாராயணனே.
நாம் ஞானத்தினாலோ, யோகத்தினாலோ, கர்மங்களினாலோ அடையப்பட வேண்டியவன் இவனே“ என்கின்றது.

மற்றுமோர் தெய்வமுண்டோ? மதியிலா மானிடங்காள்*
உற்றபோதன்றி நீங்கள் ஒருவனென்று உணரமாட்டீர்*
அற்றம் மேல் ஒன்று அறியீர் அவனல்லால் தெய்வமில்லை*
கற்றினம் மேய்ந்த எந்தை கழலிணை பணிமின்நீரே !

பசுக்களுக்கும் கன்றுகளுக்கும் கூட எளியவனாய் இருக்கும் இந்த கண்ணனின், நம்பெருமாளின் பொற்பாதங்களை பணிமின்!
இவனைத் தவிர ”நானே ஈஸ்வரன்” என்று சொல்லிகொண்டிருக்கும் தெய்வங்கள் பல உண்டானாலும்,
இவனல்லால் வேறு தெய்வமில்லை..! இந்த பரமபருஷனிடத்து, அபயமளித்துக் காக்கும் எளியவனிடத்து அன்பில்லாது
மதிகெட்டு நிற்கும் மானிடர்காள்! உற்ற போது வரும்வரை இவனை நீங்கள் உணரமாட்டீர்கள்!
ஸர்வேஸ்வரனான இவன் ஒருவனால் மட்டுமே நமக்காக அவதரித்து, தம் நிலை தாழநின்று தன்னைப் பற்றினார்காக
தன்னோடு ஒத்த போகத்தினைத் தர காத்திருப்பவன்!.

———-

“ஸ்வேத த்வீபம்” என்பது திருப்பாற்கடலுக்கருகில் உள்ள ஒரு “வெள்ளைத் தீவு”.
பெரிய பெருமாளுக்கு நித்ய திருவாராதனம் செய்யும் அர்ச்சகர்கள் இங்கிருந்து வந்தவர்கள் என்பது
நம்மில் பலரும் அறியாத ரகசியம். அரங்கனை ஆராதிக்கும் இவர்கள் ஆழ்வாருக்கு ஒப்பானவர்கள் என்பது இங்கு கவனிக்கத் தக்கது.

——-

பாஞ்சராத்ரமானது “ஏகாயன வேதம்” என்றும் அழைக்கப் பெறுகின்றது.
“சாந்தோக்ய உபநிஷத்“ என்று ஒரு உபநிஷத். இதில் நாரதரும் சனகரும் இருவரும் தம்தம் கருத்துக்களை
பகிர்ந்து கொள்ளும் ஒரு பகுதி
இதில் “ருக்வேதம் பகவோத்யேபி, யஜூர் வேதம், சாமவேதம், ஹ்யதர்வணம், வாகோவாக்யம், ஏகாயனம்…“என்று
பாஞ்சராத்ரத்தினை ஏகாயனம் என்று குறிப்பிட்டு ஒரு சொற்றொடர் வருகின்றது.
இதன் மூலம் நாரதர் பேசுவதாக வரும் ”சாந்தோக்ய உபநிஷத்“ தின் காலத்திற்கு பலகாலம் முன்பே உள்ள
பாஞ்சராத்ரத்தின் அருமையினை தெரிந்து கொள்ளலாம்.
(இந்த பாஞ்சராத்ர ஆகமத்தினை பகவான் ப்ரஹ்மாவிற்கு உபதேசித்து பிரம்மாவினால் நாரதருக்கு உபதேசிக்கப்பட்டு
பின்னர் நாரதர் ஐந்து ரிஷிகளிடத்தும் உபதேசித்தாகவும் ஒரு கருத்துண்டு..!)

——–

நிகமம் என்பது நான்கு வேதங்கள், வேத ஸம்ஹிதைகள், உபநிஷத்துக்கள்,
உபவேதங்கள் (தனுர் வேதம், ஆயுர் வேதம் முதலானவைகள்) ,
ஜோதிடம், ஸ்மிருதிகள், புராணங்கள், இதிஹாசங்கள் முதலானவைகள். இவைகளனைத்தும் நிகமம் என்றழைக்கப்படும்.

ஆகம ரஹஸ்யம் என்னும் க்ரந்தத்தில்,

”ஆகதம் சிவ்வக்த்ரேப்யோ, கதஞ்சவ கிரிராஜாஷ்ருதௌ! மதம் ஸ்ரீவாஸூதேவஸ்ய தஸமாத் ஆகம உச்சேய்தே!“

– வாசுதேவரை பற்றி பேசும் ஆகமங்கள், சிவன் சொல்ல பார்வதி கேட்டதாக பேசபடுகிறது.

ஸ்ரீவாசஸ்பதி மிஸ்ரா என்பவர்,

ஆகச்சந்தி புத்திமாரோஹந்தி யஸ்மாத் அப்யுதயநி: ஷ்ரேயஸோபாயா: ஸ ஆகம:”

இந்த ஆகமங்கள் மூலமாக ஒருவன் மோட்ஷத்திற்கான உபாயாத்தை அறிந்து கொள்கிறான்.

வராஹி தந்தரம் என்னும் க்ரந்தம் ஆகமத்தினை ஏழு தலைப்புகளாகப் பிரிக்கின்றது.

1. படைத்தல்: இந்த தலைப்பில் படைத்தல் மற்றும் காத்தல் பற்றி விரிவாக கூறப்பட்டு உள்ளது.

2. அழித்தல்: இந்த தலைப்பில் அழித்தல் பற்றி விரிவாக கூறப்பட்டு உள்ளது.

3. வழிபாடு : இந்த தலைப்பில் வழிபடுதல் முறைகள் பற்றி விளக்கப்பட்டு உள்ளது.

4. தெய்வீக காரியங்கள் : பகவத் ஆராதனமாக செய்யும் கைங்கர்யங்கள் மற்றும் அதன் பலன்கள் பற்றி விவரிக்கப் பட்டுள்ளது.

5. புரஸ்சரண் : மந்திரங்கள் மற்றும் அதனை உச்சரிக்கும் முறைகள் பற்றி விரிவாக கூறப்பட்டுள்ளது.

6. வினை : அந்தணர்களுக்கு விதிக்கப் பட்டுள்ள ஆறு தொழில்கள் பற்றி கூறப்பட்டுள்ளது.

7. தியானம் : நான்கு வகை தியானங்கள் பற்றி விரிவாக கூறப்பட்டுள்ளது.

எல்லா ஆகமங்களும் மேற்ச் சொன்ன வரையரைக்கு உட்பட்டு இல்லாத போதிலும், பொதுவாக ஆகமம் என்பது
வழிபாட்டு வகைகளையும் அதன் முறைகளையும் எடுத்துரைக்கும் நூலாகவே கொள்ளப்படுகிறது.
ஆனால், ஸ்ரீபாஞ்சராத்ரம் இந்த ஏழு வரையரைகளையும் உள்ளடக்கியதாக உள்ளது. இது ஒரு தனி சிறப்பு.

——-

அர்ச்சை நிலைக்குக் கைங்கர்யம் செய்தல்–ஸ்ரீரகஸ்யத்ரய ஸாரம்-

மூலம் – அப்போது,
நித்யஸித்தே ததாகாரே தத்பரத்வே ச பௌஷ்கர யஸ்யாஸ்தி ஸத்தா ஹ்ருதயே தஸ்யாஸௌ ஸந்நிதிம் வ்ரஜேத் என்றும்,
யதா ஸாஸாமுத்ரமம்ப: அப்தை: ஸ்ப்ருஷ்டமேத்யுபோக்யதாம் ததைவ ஹி மநுஷ்யாணாம் பக்தை: ஸம்பாவிதோ ஹரி: என்றும்
சொல்லுகிறபடியே ஓர் அதிகாரி விசேஷத்துக்காக ஸாந்நித்யாதிகளைப் பண்ணிப் பரமைகாந்தியான தன்னையுகந்து வந்து
அர்ச்சாவதாரம் பண்ணியிருக்கிற எம்பெருமான் பக்கலிலே
ஸர்வாதிசாயி ஷாட்குண்யம் ஸம்ஸ்திதம் மந்த்ர பிம்பயோ: என்கிற பூர்த்தியையும்,
ஆபீடாந்மௌலி பர்யந்தம் பச்யத: புருஷோத்தமம் பாதகாந்யாசு நச்யந்தி கிம் புநஸ்தூபபாதகம் என்கிற பாவநதமத்வத்தையும்,
ஸந்தர்சநாதகஸ்மாச்ச பும்ஸாம் ஸம்பூட சேதஸாம் குவாஸநா குபுத்திச்ச குதர்க்க நிசயச்ச ய:
குஹேதுச்ச குபாவச்ச நாஸ்திகத்வம் லயம் வ்ரஜேத் என்கிறபடியே
ப்ரத்யக்ஷாதி ப்ரமாணத்ரயத்திலும் ஹேதுபலபாவத்தாலே வரும் மதிமயக்குகளெல்லாவற்றுக்கும் மருந்தாய் இருக்கிற படியையும்,
யே யதா மாம் ப்ரபத்யந்தே தாம்ஸ்ததைவ பஜாம்யஹம் என்றும்,
“தமருகந்தது எவ்வுருவம்” என்கிற பாட்டிலும் சொல்லுகிறபடியே அவாங்மனஸாபரிச்சேத்யமான ஆச்ரித பாரதந்த்ர்யத்தையும்,
“கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணா” என்கிற ஆகர்ஷகத்தையும் அநுஸந்தித்து,

ஸதீவ ப்ரியபர்த்தாரம் ஜநநீவ ஸ்தநந்தயம்
ஆசார்யம் சிஷ்யவந்மித்ரம் மித்ரவல்லாலயேத்திரம்
ஸ்வாமித்வேந ஸுஹ்ருத்வேந குருத்வேந ச ஸர்வதா
பித்ருத்வேந ததா பாவ்யோ மாத்ருத்வேந ச மாதவ:
யதா யுவாநம் ராஜாநம் யதா ச மதஹஸ்திநம்
யதா ப்ரியாதிதம் யோக்யம் பகவந்தம் ததா அர்ச்சயேத்
யதா ச புத்த்ரம் தயிதம் ததைவோபசரேத்திரம்–என்கிறபடியே
அவ்வோ ஸம்பந்தவர்க்க பரத்வ ஸௌலப்யாதிகளுக்கு அநுரூபமான வ்ருத்தியைப் பண்ணவும்.

பௌஷ்கர ஸம்ஹிதை –
நித்யஸித்தே ததாகாரே தத்பரத்வே ச பௌஷ்கர யஸ்யாஸ்தி ஸத்தா ஹ்ருதயே தஸ்யாஸௌ ஸந்நிதிம் வ்ரஜேத் –
எப்போதும் நிலையாக உள்ள ஸர்வேச்வரனின் திருமேனி குறித்தும்,
அவன் அனைவரைக் காட்டிலும் உயர்ந்தவன் என்பது குறித்தும்
யார் மனதில் உள்ளதோ அவன் அருகில் ஸர்வேச்வரன் எப்போதும் வருவான் – என்றும்,

பௌஷ்கர ஸம்ஹிதை –
யதா ஸாஸாமுத்ரமம்ப: அப்தை: ஸ்ப்ருஷ்டமேத்யுபோக்யதாம் ததைவ ஹி மநுஷ்யாணாம் பக்தை: ஸம்பாவிதோ ஹரி: –
கடலில் உள்ள நீரைப் பருகிய மேகங்களால் மழையாகப் பொழியப்பட்ட பின்னர்,
அந்தக் கடல்நீரே அனைவராலும் பருகும்படியாக உள்ளது;
இது போன்று எம்பெருமான் அர்ச்சையாக நின்ற பின்னர் அனைவராலும் கைங்கர்யம் செய்து,
அனுபவிக்கும்படியாக உள்ளான் – என்றும் கூறியது காண்க.

விஷ்வக்ஸேந ஸம்ஹிதை –
ஸர்வாதிசாயி ஷாட்குண்யம் ஸம்ஸ்திதம் மந்த்ர பிம்பயோ: –
மந்த்ரங்களில் காணப்படும் எம்பெருமானின் ஞானம் உள்ளிட்ட ஆறு குணங்களானவை அர்ச்சையாக உள்ள
அவனது வடிவத்தில் காணப்படுகின்றன – என்பதன் மூலம் பூர்ணமாக உள்ளது கூறப்பட்டது.

சாண்டில்ய ஸம்ஹிதை (2-89) –
ஆபீடாந்மௌலி பர்யந்தம் பச்யத: புருஷோத்தமம் பாதகாந்யாசு நச்யந்தி கிம் புநஸ்தூபபாதகம் –
அர்ச்சையாக நிற்கின்ற புருஷோத்தமின் ரூபத்தை திருவடிப்பீடம் தொடங்கி திருமுடிவரை காண்பவனின்
அனைத்துப் பாவங்களும் உடனே அழிந்துவிடும், இப்படி உள்ளபோது சிறு பாவங்கள் குறித்துக் கூறவேண்டுமா –
என்பதன் மூலம் அவனது அர்ச்சை ரூபமானது அனைத்து பாவங்களையும் நீக்கவல்லது என்பதை அறியலாம்.

பௌஷ்கர ஸம்ஹிதை (1-31-32) –
ஸந்தர்சநாதகஸ்மாச்ச பும்ஸாம் ஸம்பூட சேதஸாம் குவாஸநா குபுத்திச்ச குதர்க்க நிசயச்ச ய:
குஹேதுச்ச குபாவச்ச நாஸ்திகத்வம் லயம் வ்ரஜேத் – மதிமயக்கம் கொண்டவர்கள் அர்ச்சையாக நிற்கும்
எம்பெருமானின் ரூபத்தைத் தற்செயலாக வணங்கினாலும் அவர்களது தீயவாஸனை, வஞ்சனைகளின் தொகுப்பு,
தீய காரணம், தீய எண்ணங்கள் மற்றும் நாஸ்திகத்தன்மை ஆகியவை அழிந்துவிடும் – என்றது.
இப்படியாக அறிவு தடுமாற்றம் என்னும் நோய்க்கு ஏற்ற மருந்தாக அர்ச்சாரூபம் உள்ளது.

மனம் மற்றும் வாக்கால் அளவிட இயலாதபடி உள்ள எம்பெருமான், தனது அடியார்களின் பொருட்டு,
அவர்களுக்காகத் தன்னையும் கொடுத்தபடி நிற்கும் நிலையை எண்ணி த்யானித்தல் வேண்டும்.
இதனை – கீதை (4-11) –
யே யதா மாம் ப்ரபத்யந்தே தாம்ஸ்ததைவ பஜாம்யஹம் – என்னை அடைய விரும்புகிறவர்கள் எந்த வடிவில்
என்னை அமைக்கின்றனரோ, அந்த வடிவிலேயே நான் என்னை அவர்களுக்குக் காண்பிக்கிறேன் – என்றும்,

முதல் திருவந்தாதி (44) – தமருகந்தது எவ்வுருவம் – அடியார்கள் அந்த உருவத்தை விரும்புகின்றனரோ – என்றும்
கூறியது காண்க. மேலும்

அமலனாதிபிரானில் (10) – கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணா – என்னும்படியாக அவனது அர்ச்சா ரூபத்தில்
உள்ள ஈர்ப்பை அனுபவிக்க வேண்டும். அடுத்து அவனது எளிமை மற்றும் எஜமானத் தன்மை
ஆகியவற்றுக்கு ஏற்றபடி கைங்கர்யம் செய்தல் வேண்டும்.

கீழே உள்ள பல வரிகள் காண்க:

• சாண்டில்ய ஸம்ஹிதை (4-37) –
ஸதீவ ப்ரியபர்த்தாரம் ஜநநீவ ஸ்தநந்தயம் ஆசார்யம் சிஷ்யவந்மித்ரம் மித்ரவல்லாலயேத்திரம் –
உண்மையான மனைவி தனது கணவனையும், பெற்ற தாய் தனது குழந்தையையும், சிஷ்யன் தனது ஆசானையும்,
நண்பன் தனது நண்பனையும் உபசரிப்பது போன்று ஸர்வேச்வரனை உபசரிக்க வேண்டும்.

• சாண்டில்ய ஸம்ஹிதை (4-38) –
ஸ்வாமித்வேந ஸுஹ்ருத்வேந குருத்வேந ச ஸர்வதா பித்ருத்வேந ததா பாவ்யோ மாத்ருத்வேந ச மாதவ: –
மஹாலக்ஷ்மியைத் தரித்த எம்பெருமானை எப்போதும் எஜமானன், நண்பன், ஆசார்யன், தந்தை, தாய்
என எண்ணியபடி இருத்தல் வேண்டும்.

• சாண்டில்ய ஸம்ஹிதை (4-31) –
யதா யுவாநம் ராஜாநம் யதா ச மதஹஸ்திநம் யதா ப்ரியாதிதம் யோக்யம் பகவந்தம் ததா அர்ச்சயேத் –
இளவரசன் மற்றும் மதம் கொண்ட யானை ஆகியவர்களை எவ்விதம் பயந்து உபசரிப்போமோ,
அது போன்று எம்பெருமானை உபசரிக்க வேண்டும். இதே போன்று வீட்டிற்கு வந்த விருந்தினரை
மகிழ்வுடன் உபசரிப்பது போன்று எம்பெருமானை உபசரிக்க வேண்டும்.

• யதா ச புத்த்ரம் தயிதம் ததைவோபசரேத்திரம் –
தனக்குப் பிரியமான குழந்தையைக் கொண்டாடுவது போன்று எம்பெருமானைக் கொண்டாட வேண்டும்.

ஸர்வசக்தி படைத்த அவன் சக்தியேயில்லாத ஒரு குழந்தை போல மாறி அர்ச்சகரை எதிர் பார்த்திருப்பது தான்!.

ததிச்சயா ஹோதேஜா புங்கத்தே வை பக்தவத்ஸல
ஸ்நானம் பாநம்ததா யாத்ராம் குருதே வை ஜகத்பதி:
ஸ்வதந்த்ரஸ் ஸஜகந்நாதோ ப்யஸ்வதந்த்ரோயதாததா
ஸர்வசக்தி: ஜகத் தாதாப்ய சக்த இவசேஷ்டதே-விஷ்வக்ஸேன ஸம்ஹிதை-

ஸ்வதந்தர ஸஜகந்நாதோ – ஸர்வ சுதந்திரம் பெற்றவனாயிருக்கும் இந்த ஜகத்திற்கே அதிபதியான ஜகந்நாதன் –

ப்யஸ்வதந்த்ரோயதாததா – ஸ்வதந்தரம் இல்லாதவன் எப்படியிருப்பானோ அம்மாதிரியாக மாறி

த்திச்சயா ஹோதேஜா புங்கத்தே வை பக்தவத்ஸல – அடியார்களது குற்றங்களை பொருட்படுத்ததாது அந்த
பரம்பொருள் தன்னை ஆஸ்ரயித்தவர்களின் விருப்பப்படி உண்கின்றான்!

ஸ்நானம் பானம்த்தா யாத்ராம் குருதே ஜகத்பதி: – தன்னை ஆராதிப்பவர்களுடைய விருப்பத்தின்படி நீராடலையும்,
நீர் பருகுதலையும், புறப்பாடு(யாத்ரை) கண்டுருளுதலையும் செய்கின்றான்!

ஸர்வசக்தி: ஜகத் தாதாப்யசக்த இவசேஷ்டதே – எல்லா சக்திகளையும் அடைந்தவனாயிருந்தும்,
சக்தியில்லாதவனைப் போன்று நடிக்கின்றான்!

தான் நினைப்பதற்கு அரியவனாயிருப்பின் தன்னுடைய சொத்து தன்னை விட்டு விலகிவிடுமோ என்ற அச்சத்தினாலேயே,
நம்மை தடுத்து ஆட்கொள்ள அந்த அரியவனாகிய ஹரி எளியவனாய் அர்ச்சையில் தாமே வந்து அகப்பட்டு கொள்கின்றான்!

ஆழ்வார் சொல்கின்றார், ”இந்த அர்ச்சாவதாரத்தினை நான் ரஸித்து பருக வேண்டிய அமுதமாக இருக்க,
அதற்கு மாறாக இவன் என்னை முழுவதுமாய் பருகிவிட்டானே“ என்கிறார்.

தன்னழகைக் காட்டி நம்மை ஆட்கொள்ளத்தானே அவன் அர்ச்சையாய் அவதரிக்கின்றான்!

தானேயாகி நிறைந்து எல்லாவுலகும் உயிரும் தானேயாய் *
தானேயானென்பானாகித் தன்னைத்தானே துதித்து* எனக்கு
தேனே பாலே கன்னலேயமுதே திருமாலிருஞ்சோலை *
கோனேயாகி நின்றொழிந்தான் என்னைமுற்றும் உயிருண்டே!-திருவாய்மொழி 10-7-2

“ வாரிக்கொண்டு ன்னை விழுங்குவான் காணில்“ என்று *
ஆர்வுற்ற என்னை யொழிய – என்னில் முன்னம் பாரித்து * தான் என்னை முற்றப் பருகினான் *
காரொக்கும் காட்கரை யப்பன் – கடியனே -திருவாய்மொழி 9-6-10

———

பாஞ்சராத்ர ஆகமங்கள் பல உள்ளன. அவற்றில் பிரதானமாக எடுத்துக்கொள்ளப்பட்டது மூன்று ஆகமங்கள் ஆகும். அவைகள்
ஸாத்வதம், பௌஷ்கரம், ஜயாக்யம் ஆகியவையாம். இவைகள் “ரத்னத்ரயம்“ என்றழைக்கப்படுகின்றது.

இந்த மூன்றுக்கும் உப ப்ரஹ்மணங்களாக, அதாவது விவரணமாக
ஸாத்வதத்த்திற்கு -ஈஸ்வர ஸம்ஹிதையும்,
பௌஷ்கரத்திற்கு – பாரமேஸ்வர ஸம்ஹிதையும்,
ஜயாக்யத்திற்கு – பாத்ம ஸம்ஹிதையும் உள்ளன.

இம்மூன்றும் மூன்று முக்கிய திவ்யதேசத்தில் கடைப்பிடிக்கப்படுகின்றது.
மேல்கோட்டையில் ஈஸ்வர ஸம்ஹிதையும், ஸ்ரீரங்கத்தில் பாரமேஸ்வரமும், காஞ்சியில் பாத்மமும் அனுஷ்டானத்தில் உள்ளன.

நாம் இனி இங்கு ஸ்ரீரங்கத்தில் அனுஷ்டானத்திலுள்ள பாரமேஸ்வர ஸம்ஹிதையிலிருந்து முக்யமானவற்றைக் காண்போம்.!

பாரமேஸ்வர ஸம்ஹிதையின் முதல் ஸ்லோகமே
“நமஸ் ஸகல கல்யாண தாயிநே சக்ரபாணயே
விஷயார்ணவ மக்நாநாம் சமுத்தரணஹேதவே”
என்று தொடங்குகிறது
.
”ஸகல கல்யாண தாயிநே” என்றால் என்ன..? “ஸகல கல்யாண குணங்களும் நிரம்பிய“ என்று பொருள்!

”திருக்கையிலே பிடித்த திவ்யாயுதங்களும், வைத்தஞ்சல் என்ற கையும், கவித்த முடியும், முகமும் முறுவலும்,
ஆஸந பத்மத்திலே யழுத்தின திருவடிகளுமாய் நிற்கிற நிலையே நமக்கு தஞ்சம்” (முமுக்‌ஷுப்படி-142).
குற்றங்கண்டு வெருவாமைக்கு வாத்ஸல்யம் – கார்யஞ்செய்யும் என்று துணிகைக்கு ஸ்வாமித்வம் –
ஸ்வாமித்வம் கொண்டு அகலாமைக்கு ஸௌசீல்யம் – கண்டு பற்றுகைக்கு ஸௌலப்யம் –
விரோதியைப் போக்கித் தன்னைக் கொடுக்கைக்கு ஜ்ஞான சக்திகள்” (முமுக்‌ஷுப்படி-138).
இவையெல்லாம் நமக்கு நம்பெருமாள் பக்கலிலே காணலாம்”

——–

தோதாத்ரி மலை…! தற்போது வானமாமலை என்றழைக்கப்படும் மிக உன்னதமான க்ஷேத்திரம்.!
இங்கு தேவர்களும் கந்தர்வர்களும் இங்குள்ள பெருமாளை அனு தினமும் ஸேவித்தவாறு இருக்கின்றார்கள்.
பல புண்ய தீர்த்தங்கள் இந்த புனிதமான இடத்தினுள் உள்ளது. அனைத்து வகை ஜாதிபுஷ்பங்களும் பூத்து குலுங்குகின்றது.
பலவிதமான ஆஸ்ரமங்கள் அமையப் பெற்றது, அதில் பல தப ஸ்ரேஷ்டர்கள் வசித்து வருகின்றார்கள்.
வேதம் மற்றும் வேதாந்தாத்தில் நாட்டமுடைய அறிஞர்களும், தவத்தில் நாட்டமுடைய முனிவர்களும், சாங்க்ய சித்தாந்தத்தில்
(இது கபில மஹரிஷி என்பவரால் ஏற்படுத்தப்பட்ட ஒரு சித்தாந்தம்) சிறந்தவர்களும், யோக சித்தாந்தாத்தில்
(இது பதஞ்சலி மஹரிஷி என்பவரால் ஏற்படுத்தப்பட்ட ஒரு மார்க்கம்) ஈடுபட்டுள்ளவர்களும்,
இதிஹாஸ புராணங்களில் வல்லுனர்களும், தர்ம சிந்தனையுடையோர்களும் நிரம்பி வழிந்துள்ள ஒரு
அற்புதமான க்ஷேத்திரம்! தேவரிஷிகள் மற்றும் ராஜரிஷிகளும் அங்கு காணப்படுகின்றனர்.
மந்த்ர சித்தியடைந்த மஹான்கள் பலர் உள்ளனர்!

”தேறு ஞானத்தர் வேத வேள்வியறாச் சிரீவர மங்கலநகர் * ஏற வீற்றிருந்தாய்!
உன்னை எங்கெய்த கூவுவனே”-திருவாய்மொழி 5-7-4

இத்தகைய பலரது இருப்பினால் “இருப்பிடம் வைகுந்தம்” ஆன இந்த புண்யமான மலையினில் பிரும்மாவினுடைய
புத்ரர் ஆன “சனகர்“ என்பவர் பரம்பொருளை அடைய விரும்பி கடுமையான தபஸ் செய்கின்றார்!

ஒரிரு வருடங்கள் அல்ல..! நூறு வருடங்கள் காம க்ரோதங்கள், இந்திரியங்களை அடக்கி அந்த
பரம்பொருளான பகவானைக் குறித்த கோரத்தவம்..!

இவ்வளவு புனிதமான அதிர்வலைகள் கூடிய ஒரு புண்யமான இடத்தில் சிந்தை கலையாமல்
சிரீவரமங்கையில் தவமிருந்தும் பகவான் அவருக்குக் காட்சி தரவில்லை!

அந்த தபஸ்ரேஷ்டர் தவித்துப் போனார்..! சோகம் அவரைத் தொற்றிக் கொண்டது..!
தீடிரென்று அவர் தபஸ் செய்த இடமே பிரகாசமானது..!
அந்த புருஷோத்தமன், சாதாரண பக்தன் தவித்தாலே பொறுக்காத அந்த பக்தவத்ஸலன், அசரீரியாய் அந்த
சனகரிடத்து பேச ஆரம்பித்தான்..!

நூறு வருடங்கள் கடுமையான தபஸ்ஸின் பயனோ, அல்லது ஒரு சில நிமிடங்கள் பகவானைக் காணாது
சனகர் தவித்த தவிப்பு, சோகம் முதலானவற்றால் ஏற்பட்ட பரிவோ, ஸ்ரீவாஸூதேவன் அவரிடத்து பேச ஆரம்பித்தார்.

”ஹே! தவ உத்தமரே! உனக்கு மங்களம் உண்டாகட்டும்!
இதே மலையில் மற்றொரு இடத்தில் சாண்டில்யர் என்னும் ஒரு மஹாதபஸ்வி உள்ளார். நீ உடனடியாக அவரை ஆஸ்ரயிப்பாயாக!
உண்மையான பகவத் தர்மத்தை, இம்மையிலும், மறுமையிலும் செம்மை தரும் வழியினை,
என்னை அடையும் மார்க்கத்தினை அவர் உனக்கு உபதேசிப்பார்“ என்று ஆசீர்வதித்தது அந்த அசரீரி!

சனகர் அந்த தோதாத்ரி மலையில் சாண்டில்யரைத் தேடி வலம் வரலானார். ஒரிடத்தில் அழகிய தாமரைத் தடாகத்தினைக் கண்டார்.
ஒவ்வொரு ருதுக்களிலும் மட்டும் பூக்கும் புஷ்பங்கள் அங்கு ஒரு சேர பூத்து குலுங்குவதை கண்ணுற்றார்.
பல தபஸ்விகள் அந்த இடத்தில் நிஷ்டையில் ஆழ்ந்திருந்தனர். மஹா தேஜஸ்வியாய் அவர்களில் நாயகனாய்
சாண்டில்யர் விளங்கக் கண்டார். அவரைப் பணிந்து வீழ்ந்து வணங்கினார்.

சனகரை பார்த்தவுடனேயே சாண்டில்யர் உணர்ந்து விட்டார். சனகரை ஆசீர்வதித்தார். ”தபோ சிரேஷ்டா!
உண்மையான பகவத் தர்மத்தை நாடி நீ இங்கு வந்துள்ளாய்! நான் பல ஆண்டுகள் இதனைப் பெற கடுமையான தவம் செய்தேன்!
அப்போது அச்சுதன் தோன்றி எனக்கு வேதங்களை உபதேசித்தான். இந்த வேதங்கள் அனைத்துமே எம்பெருமானே பரம்பொருள்
என்று சில பாகங்களில் மட்டுமே சொல்லி பெரும்பாலான இடங்களில் இதர தெய்வங்களையும்
போற்றுவதாகயுள்ளது. ஆகவே எனக்கு இந்த வேத அறிவு நிறைவுத் தரவில்லை.

“யஸ்து சர்வ பரோதர்ம: யஸ்மான் நாஸ்தி மஹத்தர:
வாஸூதேவஹை நிஷ்டைஸ்து தேவாதாந்திர வர்ஜித:
தத்திஞ்ஞாஸ்ச்சா பலவதி ததாத் வாவி ரபூந் மம
ததோத்ர பர்வத ஸ்ரேஷ்டே தபஸ்த்தத்வம் மஹோத்தமம்
அநேகாணி சஹஸ்ராணாம் வர்ஷணாம் தபோஸோன் தத:
த்வாபரஸ்ய யுகஸ்யாந்தே ஆதௌ கலியுகஸ்யச
சாக்ஷாத் சங்கர்ஷணாத் வ்யக்தாத் ப்ராப்தயேஷ மஹத்தர:
ஏஷ ஏகாயனோ வேத: ப்ரக்யாத சாத்வதோ விதி:
துர்விக்ஞயோ துஷ்கரஷ்ச ப்ரதிபுத்யேர் நிஷ்வ்யதே
மோக்ஷாயனாய வைபந்தா: ஏத தன்யோ ந வித்யதே“

”எது உண்மையான பரம பகவத் தர்மம்? பொய்யான அறிவு விடுத்து எது உண்மையான ஞானம்?
இதர தெய்வங்களை நாடாது பரம்பொருளான வாஸூதேவனை மடடும் அடையச் செய்யும் மார்க்கம் எது?
இது குறித்து இந்த உன்னதமான மலையிலே நான் மேலும் பல ஆயிரம் வருடங்கள் தவம் செய்தேன்!
இந்த தவத்தின் பயனாக சாக்ஷாத் சங்கர்ஷணனே என் முன் தோன்றி “ஏகாயன வேதம்” என்றழைக்கப்படும்
இந்த பாஞ்சராத்ரத்தினை எனக்கு உபதேசித்தான். இது பகவானை அடையவேண்டும் என்ற
ஒரே சிந்தையுள்ளவர்களுக்கு மட்டுமே உபதேசிக்க வேண்டும்!
துர்சிந்தனையுள்ளவர்களுக்கும், வேறு தெய்வங்களை நாடுபவர்களுக்கும் உபதேசிக்கவே கூடாது!.
மோக்ஷத்திற்கு நம்மை அழைத்துச் செல்லும் மிகச் சிறந்த உபாயம், வித்யை இதுதான்..” என்று கூறுகின்றார்

சாண்டில்யர் தொடர்கின்றார் “இந்த பாஞ்சராத்ரமானது
வேதமாகிய மரத்திற்கு வேர் போன்றது..! எம்பெருமான் ஒருவனைப் பற்றிச் சொல்வதையே குறிக்கோளாய் கொண்டது.!
சந்தேகமேயில்லாதபடி எம்பெருமானைப் பற்றித் தெள்ளத் தெளிவாகச் சொல்லி அஞ்ஞானமாகிய இருட்டினை
அகற்றக் கூடியது, இந்த உயர்ந்த பகவத் சாஸ்திரம்..! “

இதனை பகவான் வைஸ்வமனுவிற்கு உபதேசித்துள்ளான். ஸ்வேத த்வீபத்தில் (திருப்பாற்கடலினை ஒட்டியுள்ள கரையோரம்.!)
நாரதருக்கு உபதேசிக்கப்பட்டது. நாரதருடன் கூட
ஸநத் சுஜாதர், ஸனந்தனர், ஸனத்குமாரர், கபிலர் முதலிய மஹாஞானிகள் இதனை அத்யயனம் செய்து வந்தனர்.

மரீசி, அத்ரி, அங்கீரஸர், புலஸ்யர், புலஹர், க்ரது, வஸிஷ்டர் மற்றும் ஸ்வாயம்புவ மனு ஆகிய
எட்டு மஹரிஷிகளும் இந்த பாஞ்சராத்ரத்தில் கூறியுள்ளபடி பகவானை வழிப்பட்டனர்.

இந்த அற்புதமான சாஸ்திரமானது அவ்வளவு எளிதில் கிட்டியதில்லை. பல ஆயிரக்கணக்கான தவத்தின் பயனாய் எனக்குக் கிடைத்தது.
பல லக்ஷக்கணக்கான ஸ்லோகங்களைக் கொண்டது.
இதனைப் பிரித்து ஸாத்வதம், பௌஷ்கரம், ஜயாக்யம் என பல ஸம்ஹிதைகளாகச் செய்தனர்.

மனு முதலானவர்கள் “மனு ஸ்மிரிதி“ பண்ணினார்கள்.
இதுவே எல்லா சாஸ்திரங்களுக்கும் ஆதாரம்..!
இதில் தர்மார்த்த காம மோக்ஷங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன..!
அஸ்வமேதம் முதலான யாகங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன.!
எம்பெருமானுக்கே உண்டான பல அரிய மந்த்ரங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன..!
“உபரி சரஸ்“ என்ற வசுக்களின் அரசன் ஸவர்க்கத்தினை அடைய அஸ்வமேதம் முதலாக யாகங்களை
இதில் கூறியபடி அனுஷ்டித்து அடைந்தான்.!
இதனை நான், சுமந்து, ஜெய்மினி, ப்ருகு, ஓளபகாயநர் மற்றும் மௌஜ்யாயனர் ஆகியோருக்குச் சொல்லிக் கொடுத்துள்ளேன்..!

லோகத்திற்கு நன்மையைச் செய்யும் பொருட்டு, பத்ரிகாஸ்ரமத்தில். ஸ்ரீமந் நாராயணன், இதில் சொல்லப்பட்டுள்ள
மூலமந்திரத்தினை, நரனுக்கு உபதேசம் செய்துள்ளார்.

க்ருத யுகத்தில் இந்த தர்மமானது எல்லாராலும் ஒரே மனதாக அனுஷ்டிக்கப்பட்டு எல்லோரும் உயர்ந்த கதியினையடைந்தனர்.
த்ரேதா யுகத்தில் மக்கள் பல ஆசைகளைக் கொண்டவர்களாய் மாறி சில தேவதாந்திர வழிபாட்டில்
(எம்பெருமான் ஸ்ரீமந் நாராயணனைத் தவிர்த்து இதர தெய்வ வழிபாடு.) ஈடுபாடு காட்டினர்.
அப்போது இந்த உயர்ந்த பகவத் தர்மமானது மறையத் தொடங்கியது. பகவான் யார் உண்மையான தாபத்துடன் உள்ளனரோ,
யார் உரிய யோக்யதாம்சங்களுடன் விளங்குகின்றனரோ அவர்களுக்கு மட்டுமே இந்த பகவத் தர்மத்தினை வெளிப்படுத்தினான்..!
அப்படிப்பட்ட எம்பெருமானிடமிருந்து நானும் இதனை கடும் தவத்தின் பயனாய் கைவரப் பெற்றேன்.
இதைத் தவிர இரண்டு விதமான ஞானம், 13 விதமான கர்மாக்கள், 12 விதமான வித்யை ஆகியவனவும் அடையப்பெற்றேன்
(இதில் சாண்டில்யர் குறிப்பிட்டுள்ள ஞானங்கள், கர்மாக்கள் மற்றும் வித்யைகள் எவை எவை யென்று இந்த
பாரமேஸ்வர ஸம்ஹிதைக்கான வியாக்யனம் ஏதும் கிடைக்காதப்படியினால் அறிய முடியவில்லை..!)” என்று சொல்லி
சனகரிடத்து இந்த பாஞ்சராத்ரமாகிய ஏகாயன வேதத்தினை உபதேசிக்கின்றார். பல ஆண்டுகள் உபதேசம் ஆகின்றது.

முடிவில் சனகர், சாண்டில்யரிடத்து கேட்கின்றார், ”தேவரீருடைய பரம அனுக்கிரஹத்தினால் மோக்ஷத்தினைத் தரக்கூடிய
இந்த உயர்ந்த தர்மமானது அடியேனால் அறியப்பட்டது. தபஸ்விகளான நமக்கே பல லக்ஷம் ஸ்லோகங்கள் கொண்ட
இந்த தர்மத்தினை அறிய பல ஆண்டுகள் ஆகும் போது, பாவம்..! இந்த ஸம்சாரிகள் எவ்விதம் அறிவது..?
எப்படிக் கடைத்தேறுவது..? என்று, நமக்காக பரிவுடன் வினவுகின்றார் !

சாண்டில்யர் சனகரிடத்து கூறுகின்றார், “உம்மைப் போலவேதான் நானும் சங்கர்ஷணரிடத்து சாமானிய மக்களும்
கடைத்தேற வேண்டி இந்த ஏகாயனசாகையினை எளிமையாகத் தரக் கோரினேன்.
அதற்கு சங்கர்ஷணரும் இரங்கி, இந்த லக்ஷம் ஸ்லோகம் கொண்ட ஏகாயனசாகையிலிருந்து 16000 ஸ்லோகம்
மட்டிலும் கொண்ட மிகச் சிறந்ததான இந்த பாரமேஸ்வர ஸம்ஹிதையினை எனக்கு அருளினார்.
இதனை திருப்பாற்கடலில் திருமாலிடமிருந்து நாரத மஹரிஷியும் கேட்டறிந்துள்ளார்..“ என்று கூறி
ஸ்ரீபாரமேஸ்வர ஸம்ஹிதையினை சனகருக்கு உபதேசிக்கின்றார் சாண்டில்யர்!

இதில் எம்பெருமானின் திவ்யாத்ம ஸ்வரூபங்களும், கல்யாண குணங்களும் சொல்லப்பட்டிருக்கின்றன.

இந்த பாரமேஸ்வர ஸம்ஹிதை, ஞான காண்டம், க்ரியா காண்டம் என இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது.
ஞான காண்டத்தில் எம்பெருமானின் ஆறு குணங்கள்,
திவ்யமங்கள விக்ரஹம் சிறப்பு, விபவ அவதாரம்,
லக்ஷ்மி, புஷ்டி (ஸ்ரீதேவி, பூதேவி) இருவரின் சிறப்பு,
திவ்யாயுதங்கள், கருடன் முதலான நித்யசூரிகள், பரமபதம், வ்யூக மூர்த்திகள், அவர்களது ஸ்தானங்கள்,
பரமபதத்தில் உள்ள சாலைகள், அதன் அழகு மற்றும் அளவுகள், ஜீவாத்மா ஸ்வரூபம், முக்தன் – பத்தன்,
முக்திக்குண்டான மார்க்கம், பகவத் மந்த்ரங்கள், முத்ரைகள், யோகங்கள் முதலானவைகள்
விரிவாகச் சொல்லப்பட்டிருக்கின்றன என்கிறார் சாண்டில்யர்.

நம்முடைய துரதிர்ஷ்டம் – இந்த பல அரிய சூக்குமமான விஷயங்கள் கொண்ட, 8000 ஸ்லோகங்கள் கொண்ட,
இந்த ஞானகாண்டம், இதனுடைய முதல் அத்யாயத்தினைத் தவிர இதர பாகங்கள் கிடைக்கவேயில்லை..!

சுமார் 200 வருடங்களுக்கு முன் ஸ்ரீநாராயண சூரி என்பவர் இந்த பாரமேஸ்வர ஸம்ஹிதைக்கு வியாக்யானம் செய்துள்ளார்.
அவருக்கே இந்த ஞான காண்டம் கிடைக்கவில்லை என்கிறார். ஆக 200 வருடங்களுக்கு முன்பே இதனுடைய
ஞான காண்டம் மறைந்து விட்டது (ஸ்ரீநாராயண சூரியின் வியாக்யானம் எவரிடமாவது உள்ளதா..? என்று தெரியவில்லை..!)
1953ம் ஆண்டு ஸ்ரீரங்கம் ஸ்ரீ உ.வே. கோவிந்தாச்சாரியார் என்னும் மஹா பண்டிதரின் கடும் உழைப்பின் பயனாய்
நாம் இன்று இப்போது நாம் படிக்கும் “க்ரியா காண்டம்“ கிடைத்துள்ளது.

—-

ஸ்ரீ பாரமேஸ்வர ஸம்ஹிதை
இரண்டாம் அத்யாயம்
ஸ்நான விதி

பகவானை ஆராதனம் செய்பவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய சில அடிப்படை நியமங்களை
இந்த இரண்டாம் அத்யாயத்தில் விவரிக்கின்றார் ஸ்ரீசாண்டில்ய மஹரிஷி..!

ஆராதகன் பிரம்ம முஹூர்த்தத்தில் (அதிகாலை -சூரியன் உதிக்கும் முன்பு) எழவேண்டும்.
படுக்கும் போதும், எழும் போதும்

“ஓம் நமோ வாஸூதேவாய நம: சங்கர்ஷணாய தே (ச)|
ப்ரத்யும்னாய நமஸ்தேஸ்து – அனிருத்தாய தே நம: ||–என்றும்

“நமோ நம: கேசவாய, நமோ நாராயணாய ச
மாதவாய நமஸ்ச்சைவ, கோவிந்தாய நமஸ்தத:
விஷ்ணவே த நமஸ்குர்யாத் நமஸ்தே மதுசூதன
நமஸ் த்ரிவிக்ரமாயத, வாமனாய நமஸ்தத:
ஸ்ரீதராய நமஸ்ச்சாத, ரிஷிகேசாய ஓம் நம:
நமஸ்தே பத்மநாபாய, நமோ தமோதராய ச” என்று
மேலே சொல்லப்பட்ட பகவானின் 16 நாமாக்களையும் (முதல் ஸ்லோகத்தில் நான்கு நாமாக்கள் – இரண்டாவது ஸ்லோகத்தில் 12 நாமாக்கள்)
மற்றும் எம்பெருமானின் தச அவதாரங்களின் நாமாக்களையும், சொல்லியபடியே படுக்க வேண்டும் – எழ வேண்டும்.

இந்த நாமாக்களை மனதிற்குள்ளே சொல்லக் கூடாது.
உரத்த குரலில் சந்துஷ்டியுடன் சொல்ல வேண்டும்.
கீர்த்தனையைப் போல உரத்து பாடவும் செய்யலாம்.
(இவ்வாறு சொல்வதால் நாம் மட்டுமின்றி அருகில் இருப்பவரும் இந்த பகவானின் நாமாக்களைக் கேட்பார்கள் –
அவர்கள் மனதிலும் பதியும் அல்லவா…?)

படுக்கையிலிருந்து எழும் போது, “ஹரி.., ஹரி…,“ என்று சொல்லியபடியே எழ வேண்டும்.

அவ்வாறு எழும் போது, “நம: க்ஷிதிதராய“ என்று சொல்லிக் கொண்டு முதலில் இடது காலை பூமியில் பதித்து எழுதல் வேண்டும்..“

இதன் பிறகு “சௌச ப்ரகாரம்“ (மலங்கழித்தல், சுத்தம் செய்தல்) சொல்கின்றார். இதனை விவரணமாக எழுதுதல் என்பதும் கடினம் –
கடைப்பிடித்தல் என்பது ஏறத்தாழ தற்கால சூழ்நிலைக்கு இயலாத ஒன்று – அந்த காலத்தில் இயற்கையோடு ஒன்றி வாழ்ந்துள்ள
ஒரு காலகட்டத்தில் இதனையெல்லாம் கடைப்பிடித்து வாழ்ந்துள்ளனர் நம் பெரியோர்கள். ஒரு சிறிய உதாரணம் சொல்கின்றேன்.
மலத்தினை நேரடியாக பூமியின் மீது கழித்தல் கூடாது என்கின்றார்.
புற்செடிகளைப் பிடுங்கி பூமி மீது பரப்பி அதன் மீது கழிக்கச் சொல்கிறார்..

—–

எந்த நதியானது சமுத்திரத்தில் சென்று கலக்கின்றதோ அந்த நதி மிகச் சிறந்த புண்ய நதியாம்!
இதில் வடக்கிலிருந்து கிழக்கு நோக்கி பிரவாகம் எடுத்து ஓடும் நதி மிகமிகச் சிறந்த புண்ய நதியாம்!
இவற்றில் எந்த பக்கத்து நதிக்கரை நித்ய அனுஷ்டானம் பண்ணுவதற்கு ஏற்றது..?
கிழக்கு நோக்கி ஓடும் நதிகளின் தென்கரை வடக்குக் கரையினைக் காட்டிலும் மிகவும் உயர்ந்தது.
வடக்கு நோக்கி ஓடும் நதிகளுக்குக் கிழக்குக் கரை நல்லது!
இதில் ஒவ்வொன்றைக் காட்டிலும் சிறந்தவற்றில் 10 மடங்கு பலன் அதிகமாம்!
நம் பூர்வாச்சார்யர்களை நாம் தற்சமயம் நினைவு கூறுவோம்..!

ஸ்ரீரங்கத்தில் ஓடும் இரு நதிகளுமே வடக்கிலிருந்து கிழக்கு நோக்கித்தான் பாய்கின்றது. அதில் நம் பூர்வாச்சார்யர்கள்
அனைவருமே கொள்ளிடக்கரையின் தென்கரையில் தற்சமயம் சிதிலமடைந்து காணாமலே போய்விட்ட
ஆதிகேசவ பெருமாள் சன்னிதியினைச் சுற்றியுள்ள (மணவாள மாமுனிகள் திருவரசு இருந்த இடம்.!)
சதுர்வேதி மங்கலத்தில் அன்றாட அனுஷ்டானங்களுக்கு ஏதுவாக வசித்து வந்துள்ளார்கள்!
அவர்கள் எவ்வளவு தெளிவான வாழ்க்கை வந்துள்ளனர் என்பதினை நினைக்கும்போது மனம் பூரிப்படைகின்றது..!

———-

தியான ஸ்நானம்
மேற்கூறியவாறு செய்து முடித்தவுடன் ஆகாயத்தில் மந்த்ரமூர்த்தியாய் இருக்கும் ஸ்ரீமந் புண்டரீகாக்ஷனை
“ஓம் புண்டரீகாக்ஷாய நம:” என்று தியானித்து தேஜோமயமான அவனது திருவடிகளில் இருந்து தீர்த்தம் பெருகி
நமது சிரஸ்ஸின் பிரும்மரந்தரத்தின் வழியே நமது சரீரத்தினுள் அந்த புண்ணிய தீர்த்தம் விழுவதாக மனதினால் பூரணமாக தியானிக்கவும்.
இது தீர்த்த ஸ்நானம், மந்த்ர ஸ்நானத்தினைக் காட்டிலும் மிக மிக உயர்ந்தது. ஒரே ஒரு விஷயம் நம் மனம் ஒருநிலைப்பட்டு,
வேறெந்த சிந்தனையுமில்லாது ஆத்மார்த்தமாக செயல்படுதல் மிக முக்கியம்.

திவ்ய ஸ்நானம்
சூர்யனின் கிரணங்களோடு கூடிய மழையில் ஸநானம் செய்வது.

பஸ்ம ஸ்நானம்
கோமயம், ஸமித்துக்களால் எரிக்கப்பட்டு சேகரிக்கப்பட்ட தூய வெண்மையான பஸ்மத்தில், நெற்றி முதலான அங்கங்களில்
அந்தந்த ஸ்தானத்திற்குரிய மந்திரங்களைச் சொல்லி ஊர்த்வ புண்டரமாக இட்டுக் கொள்ளுதல்.
(சாண்டில்யரின் காலத்தில் நாம் இப்போது இட்டுக் கொள்ளும் திருமண் என்பது வழக்கத்தில் இல்லை..!)

வாயவ்ய ஸ்நானம் அல்லது கோதூளி ஸ்நானம்
கோமாதா செல்லும் போது அதன் குளம்பிலிருந்து கிளம்பும் கோதூளிகள்(மண் துகள்கள்) நம் சரீரத்தில் படுவது.

பார்த்திவ ஸ்நானம்
உயர்ந்த மலையுச்சி, புண்ணிய க்ஷேத்திரங்கள் முதலான இடங்களில் பெறப்பட்ட வெண்மையான மண்ணினால்
கேசவாதி நாமங்களைச் சொல்லி நம் அங்கங்களில் ஊர்த்வபுண்டரமாக இட்டுக் கொள்ளுதல்.
இது அனைத்து பாவங்களையும் போக்கக் கூடியது.

இந்த ஏழு விதமான ஸ்நானங்களில் ஏதாவது ஒன்றை அவஸ்யம் செய்யவேண்டும்.

——

ஸ்ரீ பாரமேஸ்வர ஸம்ஹிதை
மூன்றாம் அத்யாயம்
ஸமாதிவ்யாக்யானம்

ஊர்தவ புண்டரம் இட்டு கொள்ள உதவும் மண் எங்கிருந்து எடுக்கலாம்…..?

கீழ்கண்ட இடங்களிலிருந்து சேகரித்துக்கொள்ளலாம்..!

1) புண்ய க்ஷேத்திரம்
2) மலையுச்சி
3) நதிக் கரை
4) சமுத்திரக் கரை
5) புற்று
6) துளசிச் செடி அடிப்பாகத்திலுள்ள மண்

மண் எந்த நிறத்தில் எல்லாம் இருக்கலாம்..?

1) சிகப்பு
2) மஞ்சள்
3) கருப்பு
4) வெண்மை – ஆகிய நிறங்களில் இருக்கலாம்.

எந்தெந்த நிறத்திற்கு என்ன பலன்கள்..?

1) சிகப்பு :: அனைவரையும் வசப்படுத்த விரும்புபவன்
2) மஞ்சள் :: தனத்தை அடைய விரும்புபவன்
3) கருப்பு :: மன அமைதி அடைய விரும்புபவன்
4) வெண்மை :: மோக்ஷத்தினை விரும்புபவன்

இந்த ஊர்த்வபுண்டரமானது எந்த வடிவினில் இருக்க வேண்டும்..?

1) திரியில் பிரகாசிக்கக்கூடிய தீபம் போன்றோ..
2) மூங்கில் இலை போன்றோ..
3) தாமரை மொட்டு போன்றோ..
4) அல்லி மொட்டு போன்றோ
5) மீன் அல்லது ஆமைப் போன்றோ..
6) சங்கு போன்றோ…

மேற்கூறிய ஆறு அம்சங்களில் ஏதேனும் ஒன்று போன்று தரித்துக் கொள்ள வேண்டும்.

———

நான்கு பட்சமாக ஊர்த்வ புண்டரம் இட்டுக் கொள்வோமேயானால்

நெற்றியில் – ஸ்ரீவாஸூதேவனையும்,
ஹ்ருதயத்தில் – ஸ்ரீசங்கர்ஷணனையும்
வலதுதோள் – ஸ்ரீப்ரத்யும்னனையும்
இடது தோளில் – ஸ்ரீ அநிருத்தனையும்

தியானித்தவண்ணம் இட்டுக் கொள்ளவேணும்.

12 பட்சத்தில்

நெற்றி – கேசவன்
உதரம் – நாராயணன்
ஹ்ருதயம் – மாதவன்
கண்டம் – கோவிந்தன்
வலதுபக்க உதரம் – விஷ்ணு
வலது தோள் – மதுசூதனன்
வலது கழுத்து – த்ரிவிக்ரமன்
இடது உதரம் – வாமனன்
இடது தோள் – ஸ்ரீதரன்
இடது கழுத்து – ரிஷிகேசன்
பின்புறம் பிருஷ்டபாகத்திற்கு மேல் – பத்மநாபன்
கழுத்து பின்புறம் – தாமேதரன்.
சிரஸ்ஸின் மேல் – ஸ்ரீவாஸூதேவன்
(இது சம்ஹிதையில் சொல்லப்படவில்லை ஆனால் சிலர் அனுஷ்டானத்தில் தற்சமயம் உள்ளது).

யக்ஞம், தானம், தபஸ், ஹோமம், போஜனம், பித்ரு கர்மாக்கள் இவையனைத்தும் ஊர்த்வபுண்டரம் இன்றி
செய்வோமாயின் பலனற்றதாகிவிடும். ஆகையினால் அனைத்து சித்தியையும் கொடுக்கக்கூடியதான
ஊர்த்வ புண்டரத்தினைச் சிரத்தையுடன் தரிக்கவேண்டும்.

ஊர்த்வபுண்டரங்கள் தரித்து அனுஷ்டானங்கள் முடிந்தவுடன் இரண்டு கைகளிலும் மோதிரவிரலில் பவித்ரம் தரித்துக் கொள்ளவேண்டும்.
(தற்சமயம் எல்லா அர்ச்சகர்களும் ஒரு கையில் (வலது கை) மட்டும் பவித்ரம் தரித்துக் கொள்கின்றனர்.
ஒருசிலர் தங்கத்தினிலான பவித்ரமோதிரம் மட்டும் தரித்துக்கொள்கின்றனர்.
மேல்கோட்டை திருநாராயணபுரத்தில் மட்டுமே இன்று வரை அர்ச்சகர்கள் இரு கைகளிலும் பவித்ரம் தரித்துத்
திருவாரதனம் முதலானவற்றைச் செய்து வருகின்றார்கள்). பவித்ரம் அணியாமல் பெருமாளுக்குச் செய்யப்பட்ட
ஸ்நானம், நைவேத்யம், அர்ச்சனம், நாம் செய்யக்கூடிய தானம், ஜபம், ஹோமம், பித்ருதர்ப்பணம் இவையெல்லாம் பயனற்றது.
ஆகையினால் இக்காலங்களில் அவசியம் பவித்ரம் தரித்துக் கொள்ள வேண்டும்.

———-

திருபள்ளியெழுச்சி

திருப்பள்ளியெழுச்சியின் போது துதிப் பாடகர்களலோ அல்லது அங்கு குழுமியுள்ள பாகவதர்களோ
“ஜய ஜய” என்று ஒருமித்த உரத்தக் குரலில் கோஷமிடவேண்டும்.

சங்கநாதம் ஒலிக்க வேண்டும்.

சுப்ரபாத (ப்ரபோத) சுலோகங்களைச் சொல்லி எம்பெருமானை பள்ளியெழுப்ப வேணும்.

த்வாரம் அருகே சென்று தசதிக்பந்தனம்
(8 திக்குகள்+ஆகாயம்+பூமி) செய்து தர்ஜனி விரலால்(ஆட்காட்டி விரல்) அவகுண்டனம் செய்து,
கவச மந்திரத்தினை உச்சரித்தவாறு, கருடன் முதலிய பரிவாரத்தோடு கூடிய ஏம்பெருமானை ப்ரணவம்,
நமஸ்ஸூக்களாலே புஷ்பங்களைக் கொண்டு “ஸமஸ்த பரிவாராய அச்சுதாய நமோ நம:“ என்று துதிக்க வேண்டும்.

பிறகு யதாக்ரமம் ‘வாஸ்து புருஷன்’ தொடங்கி அர்ச்சிக்க வேண்டும்.

ந்யாஸங்களோடோ அல்லது ந்யாஸங்கள் இல்லாமலோ, மூலமந்திரத்தினைச் சொல்லி, மூன்று தடவை “தாளத்ரயம்“ செய்யவேண்டும்.

மூல மந்திரத்தினை உச்சரித்தவாறு திருக்கதவுகளைத் திறக்கவேண்டும்.

——-

நாடிகளைப் பற்றி விரிவாக கூறுகின்றார் சாண்டில்ய மஹரிஷி..!

இந்த நாடிகள் அனைத்திற்கும் உற்பத்தி ஸ்தானம் “கந்த நாடி“ என்றும்

(கந்தம் = ஹ்ருதயம்..? ). நமது தேஹம் முழுவதும் 14000 நாடிகள் வியாபித்துள்ளன என்றும் தெரிவிக்கின்றார்.

இதில் மேலே போகக்கூடிய நாடிகள் “ஆக்நேய“ நாடிகளாகும்.

கீழே போகக்கூடிய நாடிகள் “ சௌம்ய“ நாடிகளாகும்.

குறுக்கே போகக்கூடிய நாடிகள் “சௌம்யாக்நேய“ நாடிகளாகும்.

இந்த 14000 நாடிகளில் மிக முக்யமானவை 10 நாடிகளாகும்.

அவைகள்

(1) இடா (2) பிங்களா (3) மேலே செல்லக்கூடிய “சுழும்னா“

(4) காந்தாரி (5) ஹஸ்திஜிஹ்வா (6) பூஷா (7) யஸஸ்வினி

(8) அலம்புஸா (9) குஹூ (10) கோசினி.

இந்த நாடிகள் நமது தேஹத்தில் எங்கெங்கு உள்ளன..?

“சுழும்னா” என்கிற மத்ய நாடி கந்தபாகத்திலிருந்து மேல்நோக்கிச் செல்கின்றது.

இந்த “சுழும்னா“ நாடியின் இடது புறம் “இடா“ என்கிற நாடியும்
வலது புறம் “பிங்களா“ என்ற நாடியும் நமது மூக்குவரை வியாபித்துள்ளது.
இந்த “சுழும்னா“ நாடிக்கு முன்புறம் “காந்தாரி” என்கிற நாடி நமது இடது கண் வரையிலும்
”ஹஸ்திஜிஹ்வா” என்னும் நாடி வலது கண் வரையிலும் வியாபித்துள்ளது. கந்த பாகத்திலிருந்து மேல் நோக்கிய வண்ணம்

இரு காதுகள் வரை ’பூஷா“ மற்றும் “யஸஸ்வினி” ஆகிய இரு நாடிகளும் உள்ளன.
கந்தபாகத்திலிருந்து, பாதம் வரை உள்ளது “அலம்புஸா“ என்கிற நாடி. இரகஸ்ய பிரதேசம் வரை உள்ளது “குஹூ“ நாடி.

கால் கட்டைவிரலில் “கோசினி“ என்னும் நாடி உள்ளது.

இந்த நாடிகளின் நிறங்கள்…

இடா – வெள்ளை

பிங்களா – சிகப்பு

காந்தாரி – மஞ்சள்

ஹஸ்திஜிஹ்வா – கருப்பு

பூஷா – கருமஞ்சள்

யஸஸ்வினி – பச்சை

அலம்புஸா – சிகப்பரக்கு (Redish Brown)

குஹூ – இளஞ் சிகப்பு

கோசினி – கருப்பு

இவைகள் பிரதானமாக விளங்கும் 10 நாடிகளாம்.

இந்த 10 நாடிகளிலும் விளங்கும் 10 வாயுக்கள்.

இடா – பிராணன்

பிங்களா – அபானன்

அலம்புஸா – சமானன்

குஹூ – வ்யானன்

சுழும்னா – உதானன்

பிங்களா – நாகன்

பூஷா – கூர்மன்

யஸஸ்வினி – க்ருகரன்

ஹஸ்திஜிஹ்வா – தேவதத்தன்

கோசினி – தனஜ்ஜயன்

இந்த வாயுக்களின் நிறம்

பிராணன், நாகன் – பவள நிறம்

கூர்மன், அபானன் – இந்திர கோபன்

சமானன், க்ருகரன் – ஆகாய நிறம்

தேவதத்தன், உதானன் – தாமரை மகரந்த நிறம்

தனஜ்ஜயன், வ்யானன் – கடல்நுரை போன்ற நிறம்.

இவ்வளவு விவரங்களையும் தெளிவாகச் சொல்லிவிட்டு “ப்ராணயாம“த்தினைப் பற்றி விளக்குகின்றார் சாண்டில்ய மஹரிஷி.

———

ப்ராணயாமம் என்பது சுவாசத்தினைக் கட்டுப்படுத்துவது.

சுவாசம் என்பது மூன்று செயல்பாடுகள் உடையது.

வெளிக்காற்றின் உபயோகத்தோடு மூக்கினால் காற்றை உள்ளே இழுத்துக் கொள்வது – இது “நிஷ்வாஸம்“ எனப்படும்.

உள்ளேயிருக்கும் காற்றினை வெளியேற்றுதல் “ உச்வாஸம்“ எனப்படும்.

இதன் இரண்டிற்கும் நடுவே சிறிது நேரம் மூச்சுக்காற்றை நிலைநிறுத்துதல் “ஸ்தம்பனம்“ எனப்படும்.

இதில் நிஷ்வாஸம் – “ரேசகம்“ என்றும்
உச்வாஸம் – “பூரகம்“ என்றும்
ஸ்தம்பனம் “கும்பகம்“ என்றும் அழைக்கப்படுகின்றது.

இதில் “ரேசகம் “ – அதமம் என்றும்,
“பூரகம்“ – மத்திமம்“ என்றும்
“ஸ்தம்பனம்“ – உத்தமம் என்றும் சொல்கின்றார் சாண்டில்யர்.

(இது இப்போது விஞ்ஞானப்பூர்வமாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளது. வேகவேகமாக சுவாசத்தினை
உள்ளிழுத்தலும் வெளியேற்றுதலும் ஆயுளைக் குறைக்கும் என்றும் எவ்வளவுக்கெவ்வளவு உள்ளிழுத்த மூச்சுக்காற்றினை நிறுத்தி
நிதானமாக சுவாசிக்கின்றோமோ ஆயுள் விருத்தி என்பதனை யோகம் கற்பிக்கின்றவர்களும்,
ஆழ்நிலை தியான பயிற்சியாளர்களும் வலியுறுத்துகின்றனர்.
நமது ஆயுளானது நாம் விடும் சுவாசித்தினைக் கொண்டே கணக்கிடப்படுகின்றது.)

சரி..! எந்தளவு காற்றினை உள்வாங்கலாம்.., அடக்கலாம்.., வெளியிடலாம்..?

இது தெரிந்து கொள்வதற்கு ஒரு கால அளவு உள்ளது. அது “மாத்திரை“ எனப்படும்.

இதனை எப்படி கணக்கிடுவது…?

உங்களது முழங்காலைச் சுற்றி வேகமாகவோ அல்லது மெதுவாகவோ இன்றி நிதானமாக
உங்கள் கைவிரல்களால் ஒரு சொடுக்குப்போடும் காலத்தின் அளவே ஒரு மாத்திரையாகும்.

இப்போது சுவாசத்திற்கு வருவோம்.

ரேசகம் – 12 மாத்திரை அளவு
பூரகம் – 24 மாத்திரை அளவு
கும்பகம் – 36 மாத்திரை அளவு.

இந்த கணக்கின்றி வெறுமனே காற்றினை உள்வாங்கி வெளியிடுவதற்கு “ரேசகம்“ அதாவது “அதமம்“ என்றே பெயர்.

பிராணனை அடக்க விரும்புவன் இந்த மாத்திரைகளை நன்றாக தெரிந்து கொள்ளவேண்டும்.
மாத்திரைகள் மாறினாலோ அல்லது குறைந்தாலோ அது பயன் தராது. அது அதமம்.

ரேசகம் செய்யும்போது வலதுகை விரல்களாலே இடது நாசிகா துவாரத்தினை மூடிக்கொண்டு நாபிதேசத்தில்
இருக்கக்கூடிய “ஸ்ரீமந் நாராயணனை“ மூலமந்திரத்தினால் தியானம் செய்தவண்ணம் குறிப்பிட்ட மாத்திரையளவு காற்றினை உள்வாங்கவேண்டும்.

இந்த ப்ராணயாமம் இரு வகைப்படும்.
அவை (1) அகர்ப்பம் (2) சுகர்ப்பம்.

ஜபம் மற்றும் தியானம் ஆகிய ஏதும் இல்லாது செய்யும் ப்ராணயாமம்
“அகர்ப்பம்“ – இவைகளை உடையது “சுகர்ப்பம்“.

அகர்ப்ப ப்ராணயாமத்தினைக் காட்டிலும் “சுகர்ப்ப“ ப்ராணயாமம் நூறு மடங்கு உயர்ந்தது.

——————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ முரளீ பட்டர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading