Archive for December, 2023

ஸ்ரீ முமுஷுப்படி -அவதாரிகை -ஸ்ரீ மணவாள மா முனிகள் வியாக்யானம் –ஸ்ரீ ஸூத்த ஸத்வ தொட்டாச்சார்யார் ஸ்வாமிகள் அரும்பத விளக்கம் —

December 25, 2023

ஸ்ரீ மா முனிகள் ரஹஸ்ய அர்த்த ஸம்ப்ரதாய பரம்பரைக்கு அருளிச் செய்த தனியன்
தாயம்
ப்ரதாயம்
ஸம் ப்ரதாயம்
ஸூத்த ஸத்வ சம்ப்ரதாயம் அன்றோ இது

லோக குருஸ் குருபிஸ் ஸஹ பூர்வைஸ் கூர குலோத்தம தாஸம் உதாரம்
ஸ்ரீ நக பதயபி ராமவரே ஸு தீப்ரஸயாந குருஸ் சபேஜஹம் –

——

ஸ்ரீ ஈயுண்ணி பத்ம நாபர் அருளிச் செய்த ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யார் விஷயமான தனியன்

லோகாச்சார்யாய குரவே க்ருஷ்ண பாதஸ்ய ஸூநவே
ஸம்ஸார போகி சந்தஷ்ட ஜீவ ஜீவாதவே நம

——–

பூர்வ உக்த குரு பரம்பரைக்கு ப்ரத்யேக தனியன்கள்
ஸ்ரீ திருவாய் மொழிப்பிள்ளை அருளிச் செய்த ஸ்ரீ கூர குலோத்தம தாசர் விஷயமான தனியன்

லோகாச்சார்ய கிருபா பாத்ரம் கௌண்டின்ய குல பூஷணம்
ஸமஸ்த ஆத்ம குண வாஸஸ் வந்தே கூர குலோத்தமம்

—-

ஸ்ரீ மணவாள மா முனிகள் அருளிச் செய்த ஸ்ரீ திருவாய் மொழிப்பிள்ளை விஷயமான தனியன்

நமஸ் ஸ்ரீ சைல நாதாயா குந்தீ நகர ஜன்மனே
ப்ரஸாத லப்த பரம ப்ராப்ய கைங்கர்ய சாலிநே

——–

ஸ்ரீ மா முனிகளுக்கு மாதா மஹாரான ஸ்ரீ கோட்டூர் அழகிய மணவாளப் பெருமாள் பிள்ளை தனியன்

லோகாச்சார்ய பதாம் போஜ ராஜ ஹம்ஸாயி தாந்தரம்
ஞான வைராக்ய ஜலதி வந்தே ஸும்ய வர குரும்

———-

ஸ்ரீ மா முனிகள் அருளிச் செய்த திகழக் கிடந்தான் திரு நா வீறுடைய பிரான் தாதர் அண்ணரையன் விஷயமான தனியன்

ஸ்ரீ ஜிஹ்வா வததீச தாஸம் அமலம் அசேஷ ஸாஸ்த்ர விதம்
ஸூந்தர வர குரு கருணா கந்தளிதா ஞான மந்த்ரம் கலயே –

————-

ஸ்ரீ வானமாலை ஜீயர் அருளிச் செய்த தனியன் –

கோதில் உலகாசரியன் கூர குலோத்தம தாதர்
தீதில் திருமலை ஆழ்வார் செழும் குரவை மணவாளர்
ஒதரிய புகழ் திரு நாவீறுடைய பிரான் தாதருடன்
போத மணவாள மா முனிவன் பொன்னடிகள் போற்றுவனே –

வாழி யுலகாரியன் வாழி யவன் மன்னு குலம்
வாழி முடும்பை என்னு மா நகரம் -வாழி
மனம் சூழ்ந்த பேர் இன்ப மல்கு மிகு நல்லார்
இனம் சூழ்ந்து இருக்கும் இருப்பு

ஒது முடும்பை யுலகாரியன் அருள்
ஏது மறவாத வெம்பெருமான் நீதி
வழுவாச் சிறு நல்லூர் மா மறையோன் பாதம்
தொழுவார்க்கு வாரா துயர் —

முடும்பை குலத்துக்கும் இடத்துக்கும் பெயர்

————–

(ஸ்ரீயப்பதியான தனக்கு லோக ரக்ஷணத்தில் உண்டான மஹா ஆர்த்தி தீர்ந்து திருப்தி பெறுகைக்காக
அவதரிப்பித்து அருள திரு அவதரித்தவராய் -திரு அனந்தாழ்வானுடைய திரு அவதார விசேஷமான
அழகிய ஸ்ரீ மணவாள மா முனிகள் ஸம்ஸார சேதன உஜ்ஜீவன அர்த்தமாக ஸர்வேஸ்வரன் ஆச்சார்யனாய் நின்று
பிரகாசிப்பித்து அருளின ரஹஸ்ய த்ரயத்தினுடைய சம்பிரதாய ப்ராப்தமான அர்த்த விசேஷங்களை
சர்வரும் அறிந்து உஜ்ஜீவிக்கும் படி ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யார் தம்முடைய பரம கிருபையாலே செய்து அருளின
ஸ்ரீ முமுஷுப்படி என்னும் கிரந்தத்தின் வாக்ய அர்த்தங்களை அத்யந்தம் மந்த மத்தியிலும் அநாயாசேன அறிந்து
உஜ்ஜீவிக்கும் படி பஞ்ச லக்ஷண லஷிதமான வியாக்யானம் செய்து அருளுவதாக திரு உள்ளம் பற்றி
முமுஷுப்படிக்கு மூலமான ரஹஸ்யத் த்ரயத்தினுடைய அவதாரண க்ரமத்தை
உபோத்காத சங்கதியாக முந்துற இந்த ஸூர்ணையாலே அருளிச் செய்கிறார் )

——–

ஸ்ரீ யபதியாய்–ஸ்ரீ வைகுண்ட நிகேதனாய் –நித்ய முக்த அனுபாவ்யனாய் -நிரதிசய ஆனந்த யுக்தனாய் –
இருக்கிற சர்வேஸ்வரன் —

(ஸ்ரீ யபதியாகை யாவது -ஸர்வ மங்களாவஹையாய் -ஸர்வ உத்கர்ஷாவஹையான பெரிய பிராட்டியாருக்கு வல்லபனாய் இருக்கை
ஸ்ரீ வைகுண்ட நிகேதனாகை யாவது -ஸ்ரீயப்பதித்வத்தால் வந்த மேன்மைக்குத் தகுதியான தேச விசேஷத்தையும் நகர விசேஷத்தையும் இருப்பிடமாக உடையனாய் இருக்கை

நித்ய முக்த அனுபாவ்யனாகை யாவது -அபரிச்சின்ன ஞானாதி குணகரான நித்ய முக்தராலும் ஸதா பஸ்யந்திப்படியே அனுபாவ்யனாய் இருக்கை
நிரதிசய ஆனந்த யுக்தனாகை யாவது -ஆனந்த வல்லியில் சொல்லுகிறபடியே நிரதிசய ஆனந்த குண யுக்தனாய் இருக்கை
சர்வேஸ்வரன் -ஆகையாவது -த்ரிவித ஆத்ம வர்க்கத்துக்கும் ஈஸ்வரனாய் இருக்கை )

——–

அந்த நித்ய ஸூரிகளோபாதி தன்னை அனுபவித்து நித்ய கைங்கர்ய ரசராய்
வாழுகைக்கு பிராப்தி உண்டாய் இருக்கச் செய்தேயும் –அத்தை இழந்து –அசந்நேவ-என்கிறபடியே
அசத் கல்பராய் கிடக்கிற சம்சார சேதனர் உடைய இழவை அனுசந்தித்து -அத்யந்த வியாகுல சித்தனாய் –

———-

(அந்த நித்ய ஸூரிகளோபாதி தன்னை அனுபவிக்கை யாவது -அவர்கள் ஸதா பஸ்யந்தி ப்படியே அனுபவிக்கிறாப்போலே
பகவத் கடாக்ஷத்தாலே ஸம்ஸாரம் கழிந்து முக்தராய் -அபரிச்சின்ன ஞானாதி குணகராய் அனுபவிக்கை
தன்னை -ஸர்வ சேஷியான தன்னை
கைங்கர்யமாவது -பகவன் முக விலாஸ ஹேதுவான வ்ருத்தி விசேஷம்
நித்ய கைங்கர்ய ரசராய்-என்றது -அனுபவ ஜெனித ப்ரீதி காரித நித்ய கைங்கர்யத்தில் ப்ரீதி உடையவர்களாய் என்றபடி
வாழுகையாவது -ஸ்வாமி ஸந்நிதியிலேயே ஸூகமாக வர்த்திக்கை
பிராப்தி யாவது -சேஷ சேஷி பாவ சம்பந்தம்
அத்தை இழந்து என்றது -அந்த சேஷ சேஷி பாவ ஞானத்தை இழந்தது என்றபடி
அசந்நேவ-என்கிறபடியே-என்றது -அசந்நேவ-என்ற ஸ்ருதி அர்த்தத்தின் படியே என்றபடி
அசத் கல்பராய் கிடக்கிற என்றது -அஸத் ஸப்த வாஸ்ய மானத்தோடு கிஞ்சித் ந்யூனமாக ஸத்ருசராய் இருக்கிற என்றபடி
சம்சார சேதனர் உடைய இழவை -என்றது அநாதி அசித் சம்பந்தத்தாலே ப்ரவாஹ ரூபேண வருகிற
அவித்யா கர்ம வாஸனா ருசி விவசராய் ஜென்ம மரணாதி கிலேச பாகிகளாய்த் திரிகிற பத்த சேதனருடைய இழவை என்றபடி
அனுசந்திக்கை யாவது -இடைவிடாமல் எண்ணுகை
அத்யந்த வியாகுல சித்தனாய் -அந்தம் இல்லாத வ்யாகுல ஹ்ருதனாய் -என்றபடி )

———

இவர்கள் கரண களேபரங்களை இழந்து இறகு ஒடிந்த பஷி போலே கிடக்கிற தசையிலே –
கரணாதிகளைக் கொடுத்து -அவற்றைக் கொண்டு வியபிசரியாதே தன்னை ஆஸ்ரயித்து உஜ்ஜீவிகைக்கு உடலாக –

——-

(இவர்கள் -கீழ்ச் சொன்ன ஸம்ஸாரி சேதனர்
கரணம் -ஸ்ரோத்ரம் முதலான கரணங்கள்
களேபரங்கள் -கரணங்களுக்கு ஆஸ்ரயமான சரீரங்கள்
இறகு ஒடிந்த பஷி போலே–விஷ்ணு பத ப்ராப்தி ஸாதனங்களான இறகுகள் ஒடிந்த பக்ஷி போலே என்றபடி
கிடக்கிற தசையிலே -மூல ப்ரகாராதிகளிலே கிடக்கிற தசையில்
கரணாதிகளைக் கொடுத்து -பகவத் ப்ராப்தி உபகரணங்களான காத்ரங்களைச் சொல்கிறது
அவற்றைக் கொண்டு -தன்னை ஆஸ்ரயிக்கைக்குக் கொடுத்த அந்தக் கரணாதிகளைக் கொண்டு
வியபிசரியாதே -அந்தக் கரணாதிகளைக் கொண்டு அந்யத்ர ஸஞ்சரியாதே
தன்னை ஆஸ்ரயித்து -அவற்றைக் கொண்டு தன்னை ஆஸ்ரயித்து
உஜ்ஜீவிகைக்கு உடலாக -உத்க்ருஷ்டமாக ஜீவிக்கைக்கு உபாயமாக )

——–

அபுருஷேயமாய்-நித்ய நிர் தோஷமாய் -ஸ்வத பிரமாணமான வேதத்தையும் -தத் உப ப்ரும்ஹணங்களான
ஸ்ம்ருதி இதிகாச புராணங்களையும் ப்ரவர்ப்பித்த இடத்திலும் –

——–

(அபுருஷேயமாய்-புருஷனால் செய்யப்படாதது
நித்ய நிர் தோஷமாய் -நித்யமாயும் நிர்தோஷமாயும்
ஸ்வத பிரமாணமான -ஸாஸ்த்ரங்களிலே சொல்லுகிற அர்த்தங்களுக்குப் பிரமாணமாகத் தன்னை அபேக்ஷிக்குமா போலே
தன்னில் சொல்லுகிற அர்த்தங்களுக்கு ப்ரமாணமாகத் தான் ஒன்றுமே அபேஷியாமல் தனக்குத் தானே ப்ரமாணமாய் இருக்கை
வேதத்தையும் -புபுதஸூ க்களாய் ஆஸ்திகராய் இருப்பவருக்கு ஸ்வ அர்த்த ப்ரகாசமாய் இருக்கையாலே வேதம் என்கிறது
தத் உப ப்ரும்ஹணங்களான-அந்த வேதார்த்த வ்யக்தீ கரணங்களான
ஸ்ம்ருதி -மன்வாதி ஸ்ம்ருதிகள்
இதிகாச -மஹாபாரத ராமாயணங்கள்
புராணங்களையும் -விஷ்ணு புராணாதிகள்
ப்ரவர்ப்பித்த இடத்திலும் -மந்த மதிகளாலே வேதார்த்தம் அறுதி இடப் போகாது என்று மஹா மதிகளான
பராசர பாராசார்ய வால்மீகி ப்ரப்ருதி மஹரிஷிகளைக் கொண்டு ப்ரவர்த்திப்பித்த இடத்திலும் -_

——-

அந்த சாஸ்திர அப்யாசத்துக்கு அநேக யோக்யதை வேண்டுகையாலே –
அவ்வழியாலே ஞானம் பிறந்து சேதனர் உஜ்ஜீவிக்கை அரிதாய் இருக்கிற படியை திரு உள்ளம் பற்றி –
சகல சாஸ்திர தாத்பர்யங்களையும் ஸூக்ரகமாக இவர்கள் அறியலாம் படி பண்ண வேண்டும் என்று
ஸ்வரூப உபாய புருஷார்த்த யாதாத்ம்ய பிரதிபாதகமான
ரகஸ்ய த்ரயத்தையும் ஸ்வயமேவ ஆசார்யனாய் நின்று பிரகாசிப்பித்து அருளினான்-

——–

(அந்த சாஸ்திர அப்யாசத்துக்கு -ஸ உப ப்ரஹ்மணமான அந்த வேத ஸாஸ்த்ர அப்யாசத்துக்கு
அநேக யோக்யதை வேண்டுகையாலே -நியமம் பஹு வேதந சாமர்த்தியம் தீர்க்க ஆயுஷ்யம் முதலான அநேக யோக்யதை அவஸ்ய அபேக்ஷிதம் ஆகையாலே
அவ்வழியாலே -அநேக யோக்யதா சா பேஷமான அந்த மார்க்கத்தாலே
ஞானம் பிறந்து -ஸ்வரூப உபாய புருஷார்த்த யாதாத்ம்ய ஞானம் பிறந்து
சேதனர் உஜ்ஜீவிக்கை அரிதாய் இருக்கிற படியை திரு உள்ளம் பற்றி -உஜ்ஜீவிக்கை துர்லபமாய் இருக்கும் பிரகாரத்தைத் திரு உள்ளத்திலே விசாரித்து
சகல சாஸ்திர தாத்பர்யங்களையும் -ஸ்ருதி ஸ்ம்ருதி யாதி ஸகல ஸாஸ்த்ர தாத்பர்யங்களையும்
ஸூக்ரகமாக -அநாயாசமாக
இவர்கள் -பரிமித கால வர்த்திகளாய் -அல்பஞ்ஞராய் அல்ப ஸக்தர்களாய் இருக்கிற ஸம்ஸார சேதனர்கள்
அறியலாம் படி பண்ண வேண்டும் என்று -அறியும்படியாக
ஸ்வரூப உபாய புருஷார்த்த யாதாத்ம்ய பிரதிபாதகமான ரகஸ்ய த்ரயத்தையும் -இவற்றினுடைய யதாவஸ்தித வேஷத்தைப் ப்ரதிபாதியா நிற்கிற
ஸ்வயமேவ –ஸ்ருதி ஸ்ம்ருதியாதிகளைப் போலே அந்யரை இட்டுப் ப்ரவர்த்திப்பியாதே ஸ்வயமேவ என்றபடி
ஆசார்யனாய் நின்று -ஆச்சார்ய ரூபேண அவதரித்து
பிரகாசிப்பித்து அருளினான்– ஸர்வ ஸ்லாக்யமாகப் பண்ணினான் )

——–

அதில்
திருமந்த்ரத்தை ஸ்ரீ பதரிகாஸ்ரமத்தில் ஸ்வ அம்ச பூதனான ஸ்ரீ நரன் விஷயமாக பிரகாசிப்பித்தான் –
த்வயத்தை ஸ்ரீ விஷ்ணு லோகத்திலே ஸ்வ மகிஷியான ஸ்ரீ பிராட்டி விஷயமாக பிரகாசிப்பித்தான் –
சரம ஸ்லோகத்தை திருத் தேர் தட்டிலே ஸ்வ ஆஸ்ரீதனான ஸ்ரீ அர்ஜுனன் விஷயமாக பிரகாசிப்பித்தான் –
ஆகையால் இறே
ஸ்ரீ லஷ்மி நாத சமாரம்பாம் என்று குரு பரம்பராதியிலே ஸ்ரீ ஈஸ்வரனை அனுசந்திக்கிறது

(அதில்-அந்த ரஹஸ்ய த்ரயத்திலும்
ஸ்வ மகிஷி-என்றது பிராட்டிமாரில் பிரதானை என்றபடி –
த்வயம் என்கிறது இரண்டு வாக்யமாய் இருக்கையாலே
சரம ஸ்லோகம் என்கிறது சரமமான ஸ்லோகம் என்று அன்று -சரமமான உபாயத்தை ப்ரதிபாதிக்கையாலே சரம ஸ்லோகம் என்கிறது
ஆகையால் -ஸர்வேஸ்வரன் ஸ்வயமேவ ஆச்சார்யனாய் நின்று ரஹஸ்ய த்ரயத்தையும்
தத் தத் விஷயங்களில் பிரகாசிப்பித்து அருளினான் என்கையாலே இறே -இவ்வர்த்தம் பிரசித்தம் அன்றோ என்றபடி )

(இவ்வளவாய் ரஹஸ்ய த்ரயத்தினுடைய அவதரண கிரமத்தை அருளிச் செய்து
இனி தாம் வியாக்யானம் செய்து அருளும் முமுஷுப்படி கிரந்த அவதரண கிராமத்தை அருளிச் செய்கிறார் )

இனி இந்த ரகஸ்ய த்ரயம் தான் சப்தம் ஸூக்ரமமாய் இருந்ததே ஆகிலும் –
அர்த்தம் உபதேச கம்யம் ஆகையாலும் –
அது அறிந்தே எல்லார்க்கும் உஜ்ஜீவிக்க வேண்டுகையாலும் –
அந்த ரகஸ்ய த்ரயத்திலும் –
பூர்வாச்சார்யர்கள் உடைய உபதேச பரம்பரா ப்ராப்தமான அர்த்த விசேஷங்களை
சர்வருக்கும் ஸூக்ரமாகவும் ஸூவ்யக்தமாகவும் ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் –
தம்முடைய பரம கிருபையாலே -இப்பிரபந்த முகேன அருளிச் செய்கிறார் –

——–

(இனி -இப்போது என்றபடி
இந்த ரகஸ்ய த்ரயம் தான் -ஸம்ஸார சேதன உஜ்ஜீவன அர்த்தமாக ஸர்வேஸ்வரன் ஆச்சார்யனாய் நின்று பிரகாசிப்பித்து அருளினை ரஹஸ்யத் த்ரயம் தான்
சப்தம் ஸூக்ரமமாய் இருந்ததே ஆகிலும் -ஸ்ருதி ஸ்ம்ருதாதிகள் போலே க்ரஹண தாரணாதிகளுக்கு வருத்தமாம் படி பல ஸப்தங்களாய் இருக்கை அன்றிக்கே
எட்டு எழுத்தும்
இருபத்தைந்து எழுத்தும்
முப்பத்து இரண்டு எழுத்துமாக
அநாயாசேன க்ரஹிக்கும் படி இருந்த போதிலும்
அர்த்தம் உபதேச கம்யம் ஆகையாலும் -ஸ்வ புத்தி பலத்தாலும் ஸாஸ்த்ர அப்யாஸத்தாலும் அறியத்தக்கது அன்றிக்கே ஆச்சார்ய உபதேசத்தால் அறியத்தக்கத்து ஆகையாலும் –
அது அறிந்தே எல்லார்க்கும் உஜ்ஜீவிக்க வேண்டுகையாலும் -உபதேஸ கம்யமான அந்த ரஹஸ்யத்ரய அர்த்தத்தை அறிந்தே எல்லாரும் உஜ்ஜீவிக்க வேண்டுகையாலும்
அறிந்தே -என்ற அவதாரணத்தாலே அறியாத போது உஜ்ஜீவனம் இல்லை என்றதாயிற்று
அந்த ரகஸ்ய த்ரயத்திலும் -அந்த ரஹஸ்யத்ரய அர்த்தம் தன்னிலும்
பூர்வாச்சார்யர்கள் உடைய உபதேச பரம்பரா ப்ராப்தமான அர்த்த விசேஷங்களை -நம்மாழ்வார் தொடக்கமான பூர்வாச்சார்யர்களுடைய உபதேஸ பரம்பரையாகத் தமக்குப் பிராப்தமான விசேஷ அர்த்தங்களை
சர்வருக்கும் -ஸ்த்ரீ பாலாதி சர்வருக்கும்
ஸூக்ரமாகவும் -அநாயாசேன க்ரஹிக்கும் படியாகவும்
ஸூவ்யக்தமாகவும் -மிகவும் அர்த்த ப்ரகாசகமாகவும்
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் -தம்முடைய பரம கிருபையாலே -ரஹஸ் யத்ரய கிருபையிலும் அதிசயிதமான கிருபையால்
இப் பிரபந்த முகேன அருளிச் செய்கிறார் –வியாக்யானமான இப் பிரபந்த ஸ்ரேஷ்டத்தாலே -)

———–

(இப் பிரபந்த முகேன-என்றதாலே -இதற்கு முன்பே சில பிரபந்தங்கள் அருளிச் செய்ததாகத் தோன்றுகையாலே
அவற்றை உதாஹரித்து -அவற்றுக்கு உண்டான தோஷத்தையும்
அவற்றைக் காட்டில் இதற்கு உண்டான வை லக்ஷண்யத்தையும் அருளிச் செய்கிறார் மேல் )

—————

முன்பே ரகஸ்ய த்ரய விஷயமாக மூன்று பிரபந்தம் இட்டு அருளி  இருக்க செய்தேயும் -அதில்
யாத்ருக்சிகப்படி அதி ஸங்க்ரஹம் ஆகையாலும் –
பரந்த படி -அதி விஸ்ருதம் ஆகையாலும் –
ஸ்ரீ யபதிப்படி உபய தோஷம் இன்றிக்கே இருந்ததே ஆகிலும் -சம்ஸ்க்ருத வாக்ய பகுளம் ஆகையாலே –
பெண்ணுக்கும் பேதைக்கும் அதிகரிக்கப் போகாமை யாலும் –
த்ரிவித தோஷம் இல்லாத படி இன்னமும் ஒரு பிரபந்தம் இட வேண்டும் என்று திரு உள்ளம் பற்றி
எல்லா வற்றுக்கும் பின்பு இறே முமுஷுப்படி ஆகிற இப் பிரபந்தம் இட்டு அருளிற்று –

ஆகை இறே அல்லாத பிரபந்தங்கள் கிடக்க -இத்தை எல்லாரும் அதிகரிக்க போருகிறது –
இன்னமும் பூர்வ பிரபந்தங்களில் அனுக்தமான அர்த்த விசேஷங்களும் இப் பிரபந்தத்திலே
உண்டு ஆகையாலும் இதுவே எல்லார்க்கும் ஆதரணீயமாய் இருக்கும் .

(முன்பே -இப்பிரபந்தம் அருளிச் செய்வதற்கு முன்பே
அதி ஸங்க்ரஹம் ஆகையாலும் -பெண்ணுக்கும் பேதைக்கும் விசதமாக அர்த்த பிரகாசம் ஆகாமையாலும்
அதி விஸ்ருதம் ஆகையாலும் -இன்ன இடத்தில் இன்ன அர்த்தம் சொல்லிற்று என்று அறியப் போகாமையாலும்
உபய தோஷம் இன்றிக்கே இருந்ததே ஆகிலும் -அதி ஸங்க்ரஹமாயும் அதி விஸ்தாரமாயும் இன்றிக்கே இருந்ததே யாகிலும்
பேதை -அறிவில்லா சபலை
எல்லார்க்கும் ஆதரணீயமாய் இருக்கும்-பண்டிதர்களுக்கும் பரிக்ரஹிக்கத் தக்கது )

———————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஸூத்த ஸத்வ தொட்டாச்சார்யார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ ஆழ்வார்கள் விடு தூது- ரா. வேதவல்லி, முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த் துறை, சர் தியாகராயா கல்லூரி, சென்னை – 21

December 21, 2023

ஸ்ரீ ஆழ்வார்கள் விடு தூது-  ஸ்ரீ மதி ரா. வேதவல்லி, முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த் துறை, சர் தியாகராயா கல்லூரி, சென்னை – 21

ஆய்வுச்சுருக்கம் ;

ஆழ்வார்கள் விடு தூது என்னும் தலைப்பில் மேற்கொள்ளப்படும்; இந்தஆய்வானது,
ஆழ்வார்களின் அருளிச் செயல்களான நாலாயிர திவ்யப்ரபந்தத்தில் உள்ள ‘நாயக – நாயகி’ பாவத்தில் தூது விடுதலை பற்றியதாகும்.
நாலாயிர திவ்யப்ரபந்தத்தில்
நம்மாழ்வார்,
திருமங்கையாழ்வார்,
ஆண்டாள்
ஆகியோர் அருளிச் செய்த தூது விடும் பாசுரங்களே ஆய்விற்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன.
வண்டு, குயில், கிளி, அன்னம், நாரை அன்றில் போன்ற பறவைகளையும்
நெஞ்சு, மேகம், வாடை இவற்றையும் தூதுப் பொருட்களாகக்கொண்டனர்.
இப்பறவைகள் உள்ளுரையில் நல்லாசிரியனைக் குறிக்கும்.

ஆழ்வார்களின் இறையனுபவம், பெண் தன்மை, ஆழ்வார் நாயகியர், தாய்,தோழி, தலைவி, போன்ற நிலைகளில்
ஆழ்வாரின் பாடல்கள், பராங்குச நாயகியான நிலையில் அவரின் ஏக்கம் , பிரிவும் புணர்வும், நாயக நாயகியின் பாவனையின் ஆழம்,
தூது விடல், தூது விடும் பறவைகளுக்கு உள்ளுறைப் பொருள், தூதுவழி ஆழ்வார்கள் பெற்ற அனுபவம்,
தூதுப் பொருட்களோடு ஆசார்யர்கள் ஒப்பீடு போன்ற தலைப்புகளில் ஆய்வு மேற் கொள்ளப் படுகிறது.

———

ஆழ்வார்களின்  இறையனுபவம்  ;

ஆழ்வார்கள் இறைவனால் மயர்வற மதிநலம் அருளப் பெற்றவர்கள்.
மதி என்பது ஞானத்தையும்,
நலம் என்பது பக்தியையும் குறிக்கும்
ஆழ்வார்கள் சிறந்த பக்தர்கள்  மட்டுமல்லாது ஞானிகளும் ஆவர்.
அப்படிப்பட்ட ஞானிகளின் இறையனுபவத்தில் நிறைந்த காதல் அனுபவமே பாடல்களாக வெளி போந்தன.
ஆழ்வார்கள் அகத்தினின்றும் எழுந்த அருட்பாக்களே அருளிச்செயல்கள் என்றும் கூறுவது மரபு.
பிரேம தசையில் அவர்கள் பாடிய பாடல்களே அகப் பாடல்களாக அமைந்தன.

———-

ஆழ்வார்களின் பெண் தன்மை

இறைவனின் குணங்களிலும், எல்லையற்ற வடிவழகிலும் ஈடுபட்ட ஆழ்வார்கள் அவனை முக்கரணங்களாலும் இனிது அனுபவிக்க முற்பட்டு,
அது நடவாமையாலே துக்கித்துப் பெண் நிலையை எய்தினார் என்பது திரண்ட கருத்து.
விசிஷ்டாத்வைத கொள்கையின்படி பக்தியாலே தான் மோட்சம  .
பக்தி என்பது இறைவனிடத்தில் காமம்.
இறைவன் ஒருவனே ஆண். அவனே
புருஷோத்தமன். அவனது பேராண்மைக்கு முன் மற்றவை அனைத்தும்  “ஸ்த்ரீப்ராயமிதரத் ஸர்வம்’ என்றபடி பெண் தன்மை அடைகிறது.

எம்பெருமான்
தலைவனாகவும்,
ஆத்மாவாகவும்,
ஆட்கொள்பவனாகவும்,
புருஷோத்தமனாகவும்
இருப்பதற்குச் சேர ஜீவாத்மாவானது
அடியனாகவும்
சரீரமாகவும்
ஆட்பட்டவனாகவும் ஆகிறது.

அவன் புருஷோத்தமனாய் இருப்பது ஜீவாத்மாக்களுக்கு பெண் தன்மையை விளைவிக்கிறது.
இதனையே அழகிய மணவாளப் பெருமாள் நாயனாரும்,   ‘மணிவல்லிப் பேச்சு வந்தேறியன்று’ (திருவிருத்தம் )என்பர்.
அதாவது பெண்மை ஆன்மாவிற்கு இயற்கையாகையாலே  அதை உள்ளபடி கண்ட ஆழ்வாருக்கு
அதனால் உண்டான பேச்சு  இயற்கை என்று இதனை விளக்குகிறார் மணவாளமாமுனிகள்.

——

ஆழ்வார்  நாயகியர்  

காதல் உணர்வு இயற்கையில் ஆத்மாக்களை ஒன்றுபட ஈர்ப்பதாகும் .
ஆண் பெண் கவர்ச்சியின் அடிப்படை இயற்கையாய் அமைந்தது.
ஓன்று கூடும் புணர்ச்சி இன்பத்தை விடப் பிரிந்திருக்கும் . நிலையிலேயே இருவருக்கும், ஒன்றுபடும் ஆவல் அதிகரிக்கும்.
பிரிவில்  அன்பின் ஆழம் புலப்படும்.

திருமங்கையாழ்வார் படைப்பிலும் இதனைக் காணலாம். இறைவனாகிய தலைவன் தன்பால், தெய்வீகக் காதல் கொண்ட ஆத்மாவிடம்,
சேர்க்கை, பிரிவு என்று மாறி மாறி விளையாடுகிறான்.
சேர்க்கையில் ஆனந்தமும், பிரிவில் துயரமும் மாறி மாறி வரும் .

ஆண்டாள், இராதை ஆகியோரிடம் கண்ணனின் காதல் இத்தகையது.
பிரிவு என்பது “லீலா  விபூதி” என்ற இவ்வுலகில் மிகுதியாய் வரும்.
சேர்க்கை என்பது குறைந்திருக்கும்.
பரத்துவமாகிய “நித்திய விபூதி” யில் சேர்க்கை நித்தியமானது.

இறைவனை அடைய ஏங்கும் தலைவியின் நிலையில் உள்ள ஆத்மா “நான்” “எனது” என்ற, கணத்தில் அழியும்.
பற்றுக்களை நீக்கி, “தான் நிலையான இறைவனது உரிமை” என்ற பற்றினை பற்றுகிறது.

திருமங்கைமன்னன்,
நம்மாழ்வார்,
ஆண்டாள்
ஆகியோரது அகப் பாசுரங்களில் ஆத்மா நெஞ்சுருகித் தன்னிலை அழிந்து தலைவனாம் பரம் பொருளுடன் ஒன்றுபடுவது சிறப்பாய்க் காட்டப்பட்டுள்ளது.
இந்தப் பாசுரங்களில்
தலைவி கூற்று,
தோழி கூற்று,
தாய்க் கூற்று என்று மூவர் பேச்சுக்கள் அமைந்துள்ளன. ஆத்மாக்கள் இறைவனையே சார்ந்திருக்கும் நிலையே இதன் அடிப்படை.

தேன் கலந்த மருந்து போல், அகப் பொருள் கலந்த ஆன்மீகப் பாசுரங்கள்  இவை.பரமாத்மாவிடம் பெண்ணியல்போடு சரணாகதி அடைவதே இதன் அடிப்படை ஆகும்.

———-

தாய்,  தோழி, தலைவி

மனத்தளவில் ஆழ்வார் பெண்ணாக மாறிவிடுகிறார். தன் ஆண் உடம்பை மறக்கிறார்.
இதனை வேங்கடத்து இறைவனிடம் தன்மனத்தை இழந்த தலைவி நிலையில் வரும் திருவிருத்தப் பாசுரங்களில் காணலாம்.
திருவிருத்தத்தில் நாயகி தன் உடல் உறுப்பைப் பற்றிச் சொல்லுவதால் இந்த மனோபாவத்தின் முழுமை புலப்படுகிறது.
திருவாய்மொழி முழுமையுமே நம்மாழ்வாரின் இறையனுபவத்தை வெளிப்படுத்தும்.  எனினும்,
27 பதிகங்கள் பெண்ணியல்பியலாக தலைவி நிலையில் பாடப்பட்டவை.

17 திருவாய்மொழிகளில் பராங்குச நாயகியுடனுடைய காதல், “ப்ரேமத்தில் பெண்பேச்சாக” வெளிப்படுகிறது.
கரைகடந்த காதலினால் தன் நிலை மீறி பேசுவதைக் காணலாம்.
தாய்ப் பாசுரங்களில் தன் மகள் தகுந்த மணவாளனோடு கூடி, மனமகிழ்ச்சியோடு வாழ விரும்புவதைக் காணலாம்.
ஏழு திருவாய்மொழிகளில் தோழி பேசுகிறார். தலைவனோடு தலைவி கூட விரும்புவதை வற்புறுத்துகிறாள்.

ஆழ்வார் தாம் ஆடவராயினும் , தாய், தோழி என்ற பெண்ணியல்புகளை மேற்கொண்டு
தலைவியின் காதலைக் குறிப்பிடும் போது பெண்ணுள்ளம் முழுமையாக வெளிப்படக் காணலாம்.
பராங்குசர் என்ற நம்மாழ்வார் பராங்குச நாயகியாகிறார். பரம், வியூகம், அவதாரம், அந்தர்யாமித்துவம் , அர்ச்சை ஆகிய எந்த வடிவாயினும்
இறைவனுடைய வடிவழகில் மனம் செலுத்தித் தலைவி ஈடுபாடு கொள்கிறாள்.
ஏதேனும் ஒரு அவதார நிகழ்ச்சியிலோ, ஆலய வடிவத்திலோ மிகுந்த ஈடுபாடு காட்டப்படுகிறது.

நாயக நாயகி பாவத்தில் அமைந்த 27 திருவாய்மொழிகளுள்
9 திருவாய் மொழிகளும் 3 பாசுரங்களும், அர்ச்சாவதாரத்தின் மீது கொண்ட அளவற்ற காதலைக் குறிப்பிடுகின்றன.

பராங்குச நாயகியின் ஏக்கம் நம்மாழ்வார் நாராயணனிடம் கொண்ட காதலை அவரது திருவிருத்தம் என்னும் நூல் விளக்கும்
தலைவியின் வேறுபாடு கண்ட தோழி வியந்துரைத்தல், பிரிவாற்றாத தலைவி நெஞ்சழிந்து உரைத்தல்,
வாடைக்கு ஆற்றாது வருந்திக் கூறல்,
அந்நிலையில் , தலைவியின் மாமை கண்டு தோழி இரங்கல்,
தலைவியின் எழில் கண்டு வியந்து தலைவன் நலம் பாராட்டல்,
அவன் பிரிவுணர்ந்த தலைவி தோழிக்குரைத்தல்,
தலைவனைப் பிரிந்த தலைவி ஆற்றாமை கண்டு தோழி இரங்கல்,
வெறிவிலக்கு, வரைவு கடாவுதல்,
செவிலி இரங்கல், தார் பெற்றுத் தலைவி மகிழ்தல், அன்னங்களையும் , வண்டானங்களையும் , தூது வேண்டல்,
தூது செல்லாத மேகங்களைக் கண்டு தலைவி இரங்கல்,
கூடல் இழைத்தல்,
உருவெளிப்பாடு,
நெஞ்சத்தூது,
வண்டுவிடு தூது,
கட்டுவிச்சி  கூறல்,
செவிலி இரங்கல்  ,
கால மயக்கு,
மதிஉடம்பாடு,
தலைவி தலைவனைக் காண விரைதல்,
மாலைப் பொழுது கண்டு இரங்கல்,
பாங்கன் தலைவியைக் கண்டு தலைவனை அடுத்து வியந்து கூறல்,
அறத்தொடு நிற்றல் ,
தலைவி தலைவனிடத்துத் தனக்குள்ளே அன்புறுதியைத் தோழிக்குக கூறல்
போன்ற சங்க இலக்கிய அகமரபுப் பாசுரங்கள் திருவிருத்தத்தில் அமைந்துள்ளன.

“தெய்வத் தண்ணந்துழாய்த் தாரா யினும் தழையாயினும், தண் கொம்பதாயினும்,கீழ்வேரேயாயினும், நின்ற மண்ணாயினும்   கொண்டு வீசுமினே” (1)
என்ற பாசுரப் பகுதியில் திருமாலுக்குகந்த துளசிச் செடியின் இலையோ,தொடுத்த மாலையோ, கிளையோ, வேரோ, அடி மண்ணோ
கொண்டு இவன் ஏக்கத்தைப் போக்க வேண்டும் என்ற உணர்ச்சிப் பிழம்பைக் காணலாம்.
இதே போல திருவரங்கம், திருவேங்கடம், திருவெஃகா ஆகிய பெருமான்களையும் தலைவி நினைந்தேங்கக் காணலாம்.

———

பிரிவும் புணர்வும்

உலகியல் காதலுக்கும் ஆழ்வார்களின் தெய்வீகக் காதலுக்கும் பெரு வேறுபாடு உண்டு.
கண்ணன் மீது கொண்ட காதலை வெளிப்படுத்தும் பாசுரங்களில், அவனுடைய வடிவழகை வருணிக்கும் பகுதிகள்
என்றும் குன்றாத தெய்வீகப் பேரழகையே உணர்ந்து பாடியவையாம்,
கவிதைச் சிறப்பும் தத்துவ நோக்கும் உடைய ஆழ்வார் பாசுரங்கள் ஈடும் எடுப்பும்  இல்லாதவை.
ஜீவாத்மா பரமாத்மாவோடு இணைவதையே இவ்வகைப்பாடல்களில் உருவகபடுத்தப்படுகின்றன.

ஜீவாத்மாவுக்குப் பரமாத்மாவிடம் தோன்றும்  தெய்வீகக் காதலாகிய பேரவாவின் ஆழத்தை விடப்
பரமாத்மாவுக்கு ஜீவாத்மாக்களிடம் தோன்றும்  காதலின் ஆழம் மிகுதியானது.
“நாம் அவனை நோக்கி ஓரடி வைத்தால் அவன் நம்மை நோக்கி ஈரடி வைப்பான்” என்பது துணிபு.
பிரிவில் ஒவ்வொரு நொடியும் நெடுங்காலமாய் நீளும்  புணர்வில் நெடுங்காலம் ஒரு நொடியாய்க் குறுகும்.

நீயும்பாங்கல்லை காண் நெஞ்சமே! நீளிரவும்
ஓயும் பொழுதின்றி ஊழியாய்நீண்டதால் 
காயுங்கடுஞ்சிலை என்காகுத்தன்வாரானால் 
மாயும் வகையறியேன் வல்வினையேன் பெண்பிறந்தே (திருவாய்மொழி 5.4.3)–என்ற பாசுரத்தில் இரவு நீட்டிப்புக்கு வருந்திக் கூறும் தலைவியைக் காணலாம்.

பிரிவில்  தலைவி தலைவனுடைய கல்யாண குணங்களை நினைத்து ஏங்குகிறாள்.
புணர்வில் அவனது அழியாப் பேரழகில் தன்னை மறக்கிறாள்.
பிரிவும் புணர்வும் மாறி மாறி வருகையில் தீயில் புடமிட்ட பொன்னாக ஆழ்வார் நாயகியின் மனம் செம்மைப்படுகிறது.
இறுதியில் ஒன்றுபடுவதைக் காணலாம்.

———-

நாயக நாயகியின் பாவனையின் ஆழம்

கவிதையாற்றலும் கற்பனை நயமும் மிக்கது தலைவியின் உள்ளம்.
அர்ச்சை வடிவத்தை நேருக்கு நேராகத் தரிசிக்கும்போது பேரானந்தப் பெருங்கடலில் அமிழ்ந்த உள்ளம் பெருங்காதலில் உருகிப்போகிறது.
பிரிவின் துன்பம் புணர்வில் மறைகிறது. மாயன் தலைவியின் மனத்தில் புகுந்து, ‘ஆராஅமுது’ ஆகிறாள்.
இறைவனை ஆரா அமுதமாக அனுபவித்துப் பாடுவது “வைணவமரபு”

அமுதிலும் ஆற்ற இனியன்” என்பது திருவாய்மொழி,

தேனும் பாலும். நெய்யும்,கன்னலும், அமுதும் ஒத்தேநானும், யானும் எல்லாம் தன்னுள்ளே கலந்தொழிந்தோம் (திருவாய்மொழி 2.3.1) என்பது இறையன்பு அனுபவ வெளிப்பாடு,

என தாவிய நின்று, நின்று உருக்கி உண்கின்ற இச்சிறந்த வான்சுடரே (திருவாய்மொழி 5.10.1) என்று கண்ணனை ஆழ்வார் உருகி அழைக்கிறார்.

பத்துடை அடியவர்க்கு எளியவன் (திருவாய்மொழி 1.3.1) என்று அவரது சௌலப்யம் போற்றப்படுகிறது. இந்த
எளிமைத் தன்மையே அவனிடம் காதல் அன்பு கொள்ளவும் துணை புரிகிறது.
மாயோன், ஆழ்வார் நாயகியிடம் ஒளிந்து நின்று விளையாடுகின்றான்.
பிரிவில் நாயகியின் அன்பு தூய்மையடைகிறது.

நீர் நுமது என்ற இவை வேர் முதல் மாய்த்து (திருவாய்மொழி 1.2.3) என உலகியல் எண்ணங்களினின்று மனத்தை அகற்றி,
வைராக்யத்துடன் பகவத் காமத்தில் மனம் செல்கிறது. ஆன்மீகக் காதல் எம்பெருமானை அடையும் வேட்கையாக மாற்றம் பெறுகிறது.
திருவாய்மொழியிலும், திருவிருத்தத்திலும் காணப்படும் பிரிவுத் துயரமும், ஏக்கமும் , உருக்கமும்
பக்தி இலக்கியத்தில்  ஈடு இணையற்ற படைப்பாகும் .

கோலச் செந்தாமரை கண்ணற்குஎன் கொங்கலரேலக் குழலி இழந்தது சங்கே” (திருவாய்மொழி 6.6.1)

கொங்கல் தண்ணந் துழாய் முடியானுக்கு என் மங்கையிழந்தது மாமை நிறமே”  (திருவாய்மொழி 6.6.2)

இதேபோல் பல பாசுரங்களில் பிரிவில்  தலைவியின் நிறம் மாறுபடுவதும் உடல்  இளைப்பதுவும், வளை கழல்வதுவும்

கண்ணநீர் கைகளால் இறைக்கும் ;” (திருவாய்மொழி 7.2.1) நிலையும், உடல் நடுக்கமும், உள்ளச்  சோர்வும் போன்ற பலவித மாறுபாடுகள் தோன்றுகின்றன

.அன்றிலும் கிரௌஞ்சமும் துயரத்தில் அலறுகின்றன. திருத்துழாயைப் பெறத் தலைவி உள்ளம் ஏங்குகிறது

. உண்ணும் சோறு பருகும் நீர் தின்னும்  வெற்றிலையும் எல்லாம் கண்ணன் (திருவாய்மொழி 6.7.1) என்ற நிலைக்கு ஆழ்வார் நாயகி ஆளாவது காணலாம்.

ஆடி ஆடி அகங்கரைந்து இசைபாடிப்பாடிக் கண்ணீர் மல்கி எங்கும்

நாடி நாடி நரசிங்கா என்று வாடி வாடும்  இவ்வாணுதலே (திருவாய்மொழி 2.4.1) என்று ஏக்கமுற்ற நாயகியின் நிலை பேசப்படுகிறது.

தீயைத் தழுவி “அச்சுதன்” என்பாள் —காற்றைத் தழுவிக் “கோவிந்தன்” என்பாள் , கண்ணீர் மல்கி இறைவனை நினைத்து ஏங்குவாள்.

“பாசம் கொண்ட பரஞ்சுடர்ச் சோதிக்கு, நேசம் கொண்ட நங்கையின் அன்பு” பலவாறு புலனாகிறது.

நாலாயிர திவ்யப் பிரபந்தத்தில் பெரிய திருமொழி, திருநெடுந்தாண்டகம், திருவாய் மொழி திருவிருத்தம்,நாச்சியார் திருமொழி ஆகியவற்றில் தூதுக்குரிய பாடல்கள் உள்ளன.

——-

தேமருவுபொழிலிடத்து மலர்ந்தபோதைத் தேனதனைவாய்மடுத்து, உன்பெடையும்நீயும ;

பூமருவிஇனிதமர்ந்து பொறியிலார்ந்த அறுகாலசிறுவண்டே!  தொழுதேன் உன்னை

ஆமருவிநிரைமேய்த்த  அமரர்கோமான் அணியழுந்தூர்நின்றானுக்குஇன்றே சென்று

நீமருவியஞ்சாதே  நின்றுஓர்மாது நின்நயந்தாளென்று இறையே இயம்பிக்காணே.  (திருநெடுந்தாண்டகம் 26)

தூவிரியமலருழக்கித் துணையோடும்பிரியாதே பூவிரியமதுநுகரும் பொறிவரிய சிறுவண்டே!

தீவிரியமறைவளர்க்கும்  புகழாளர்திருவாலி ஏவரிவெஞ்சிலையானுக்கு என்நிலைமைஉரையாயே. (பெரியதிருமொழி 3.6.1)

தூதுரைத்தல் செப்புமின்கள் தூமொழிவாய்வண்டினங்காள்

போதிரைத்துமதுநுகரும்  பொழில்மூழிக்களத்துறையும்

மாதரைத்தம்மார்வகத்தே வைத்தார்க்கு, என்வாய்மாற்றம்

தூதுரைத்தல் செப்புதிரேல் சுடர்வளையும்கலையுமே. (திருவாய்மொழி 1.4.8.. )

———

திருமங்கையாழ்வார் அருளிச் செய்த பெரிய திருமொழியில் செம்போத்து, காக்கைப் பிள்ளை, குயில் , பல்லிக் குட்டி, களி, கோழி ஆகியவற்றை விளித்து

மாயனை அழைக்கும் படி வேண்டுவதாகச்  சில பாடல்கள் உள்ளன. அவற்றுள் ஒன்று

கரையாய் காக்கைப்பிள்ளாய்!

கருமாமுகில்போல் ; நிறத்தன்

உரையார்தொல்புகழ் உத்தமனைவர

கரையாய் காக்கைப்பிள்ளாய்.;. (பெரிய திருமொழி 10.10.2)

இத்தன்மைத்தான பாடலைத் தூதின் திரிபு எனக் கொள்ளலாம்.

———-

தூது விடல்

“திருவிருத்தம்” காவிய வடிவில் பிரிவினைச் சித்தரிக்கிறது. பிரிவுற்ற தலைவி தலைவனிடம் தன் காதலை வெளிப்படுத்தத் தூது அனுப்புகிறாள்.

அம்சிறைய மடநாரை, ஆழிவரி வண்டு, சிறுகுருகு, இளங்கிளி, சிறுபூவை போன்ற பறவைகளையும், வாடைக் காற்றையும், தன் மடநெஞ்சையும்

கண்ணனை நோக்கித் தூது அனுப்பும்  நிலையை அஞ்சிறைய மட நாரை”(திருவாய்மொழி  1.4.1) என்ற திருவாய் ழொழியில் ; காணலாம்

குருகினங்கள், புள்ளினங்கள் அன்னங்கள், குயில்கள், கிளிகள், பூனைகள், வண்டானங்கள் போன்றவற்றை தூது அனுப்பவதாக “வைகல் பூங் கழிவாய்” (திருவாய்மொழி 6.1.1) என்ற  கூறும்,

புள்ளினங்கள், கிளிகள், வண்டுகள், தும்பிகள், பூவைகள் , புறா வினங்கள் போன்றவற்றை தூது அனுப்புவதைப் போலவே பொன்னுலகாளீ ரோ” (திருவாய்மொழி 6.8.1) என்ற   காணலாம்.

நாரை, குருகு, கொக்கு, முகில், வண்டு, தும்பி,அன்னம் போன்றவற்றைத் தூது அனுப்புவதாக எங்கானலகம்கழிவாய் (திருவாய்மொழி 9.7.1) 1 என்ற திருவாய் மொழியில்  வருகிறது.

இந்த நான்கு திருவாய் மொழிகளிலும் வியூகம் விபவம், பரத்துவம், அந்தர்யாமித்துவம், அர்ச்சை வடிவங்களிடம் தூது அனுப்புவதாக ஆசார்யஹிருதயம் கூறும். 

தனது எல்லையற்ற பிரேமையினால் நாயகனையே தானாக நினைத்துப் பார்க்கிறாள்.

வண்டுகள் நோக்கித் தன்னிலையை இறைவனது “மாசு இல்  மலரடிக்கீழ் சென்று சொல்லுமாறு” (திருவிருத்தம் 54) கேட்கிறாள்.

———-

ஆழ்வார்  தூது விடுகின்ற பறவைகளுக்கு உள்ளுறை பொருள்

பெண்ணிலை எய்துகின்ற ஆழ்வார் எம்பெருமானிடத்தில் அவனைப் பிரிந்து
தாம் படுகின்ற துயரை அவனுக்குத் தெரிவிக்கும்படி பறவைகளைத் தூது விடுகின்றார்.
இராமபிரான் அனுமனைத் தூதுவிட்டபடியால் குரங்கினம் பெருமை அடைந்தது போல
ஆழ்வார் பறவைகளதை; தூது அனுப்பியதால் பறவை இனங்கள் பெருமை பெற்றன என்று பராசர பட்டர் அருளிச் செய்வராம்..
எம்பெருமானிடத்தில் தம்மைக் கொண்டு சேர்க்கின்றவர்கள் (ஆசாரியர்கள்)
பறவைகளாகக் கொள்ளப்படுவர் என்று நாயனார் உள்ளுறை பொருள் உரைக்கின்றார்.
எம்பெருமானை விரைவில் அடைவதற்கு உறுப்பான அவர்களுடைய ஞானத்தையும் ஒழுக்கத்தையும் சிறகுகளாகக் கூறுகின்றனர்.

இவர்கள் தூதுவிடுவதாக வருமிடங்களில் அந்தந்த இடங்களுக்குத் தக்கவாறு ஆசிரியர்களையோ, ஒரு சாலை மாணாக்கர்களையோ,
புத்திரர்களையோ, மாணாக்கர்களையோ குறிப்பதாகக் கொள்ள வேண்டும் என்பது வைணவ மரபு.

——————–

தூது வழி ஆழ்வார்கள் பெற்ற அனுபவம்

பக்தனுக்கு ஞானாசிரியனே உகந்த தூதுவர் ஆதலால் இப்படிப்பட்ட ஞானாசிரியர்கள் தூதர்களாக வரிக்கப்பட்டனர்.

மேலும்  தூதுக்கான அஃறிணைப் பொருட்களை வைணவ ஆசாரியர்களோடு ஒப்பிட்டு முறையில் குறிப்பிடுவது போற்றுதற்குரியதாகவே கருதப்படுகின்றது.

அதன்படி கீழே விளக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

1. அன்னம் – செல்வ நம்பி, பெரியாழ்வார், நாதமுனிகள் ஆளவந்தார் ஆகியோர்

2. தும்பி, வண்டு – நாதமுனிகள் , திருப்பாணாழ்வார்

3. கிளி, பூவை, குயில், மயில் – மதுர கவிகள், தொண்டரடிப்பொடி ஆழ்வார், கூரத்தாழ்வான், திருமலையாண்டான், எம்பார், அருளாளப் பெருமாள் ,எம்பெருமானார் முதலியோர்

4. நாரை, கொக்கு, குருகு – குலசேகரப் பெருமாள், முதலிகள்

5. மேகம் – திருமழிசைப்பிரான், திருமங்கையாழ்வார், இராமானுஜர் ஆகியோர்.

———-

தூது பொருட்களோடு ஆசாரியார்கள் ஒப்பீடு

வைணவ மரபுப்படி தூது என்பது ஞானத்தின் பக்தியின், பிரபத்தியின் வெளிப்பாடாக உரைக்கப்படுகிறது. வைணவ ஆசாரியர்களின் உயரிய குணங்களை ஒப்பீட்டு முறையில் தூதுப் பொருட்களோடு கீழே காணலாம்.

அன்னம் ஆசாரியர்கள்
1. நீரையும் பாலையும் வெவ்வேறாகப்

பிரிக்கும்

 சாரத்தையும் அசாரத்தையும்

பிரிப்பார்கள்

2. எம்பெருமான் அன்னத்தின் உருவமாய்

இருந்து சாத்திரங்களைக் கொடுத்தான்.

இவர்களும் கேட்கின்ற சீடர்களுக்கு

சாத்திரங்களை உபதேசிப்பர்.

 

3. அன்னம் சேற்று நீரில் பொருந்தாது.

.இவர்களும் இவ்வுலக வாழ்க்கை

யாகிற சேற்றில் பொருந்தார்கள்.

4. அன்னமானது பெண்களின் நடையழகைக் கண்டு அவ்வாறே தானும் பின்பற்றும்  

அன்னத்தின் நடையுடையை

பிராட்டியின் அநந்யார்ஹ

சேஷவண்டு ஆசாரியார்கள்

 

 

வண்டு

ஆசாரியர்கள்
1. வண்டு தேனைத் தவிர மற்றொன்றை

உணவாகக் கொள்ளாது

1. எம்பெருமானாகிய தேவனை

அனுபவிப்பதையே விரதமாகக்

கொண்டிருப்பவர்கள்.

2. வண்டுகள ; தம்மோடே

சேர்கின்றவற்றையும் தம்மினத்தோடே

சேர்விக்கும்

2. இவர்களும் “தூவியம் புள்ளுடைத்

தெய்வ வண்டு” ஆகிய

எம்பெருமானோடு  சேர்விப்பவர்கள்

 

கிளி,பூவை   ஆசாரியர்கள்
1. கிளி வலையில் அகப்படும் 1. எம்பெருமானது திருகண்ணோக்கு

வகையில் அகப்படுவார்கள்.

2. கிளி தன்னை வளர்ப்பவர்களுக்கு

வசப்பட்டிருக்கும்

2. இவர்கள் தங்களுக்கு ஞானமூட்டி

வளர்க்கின்ற ஆசாரியர்களுக்கு

வசப்பட்டிருப்பவர்கள்.

3. “தயிர் பழஞ்சோற்றொடு பாலடிசிலும்

தந்து” என்கிறபடியே பெண்கள்

உண்பிக்க கிளி உண்ணும்

3. இவர்களும் எம்பெருமானுடைய

கல்யாண குணங்களை ஆசாரியன்

அனுபவிக்க அனுபவிப்பர்கள்

4. கிளி கற்பித்ததையே சொல்லும் 4. இவர்களும் முன்னோர் மொழிந்த

முறை தப்பாமல் கேட்டு அதை

பின்பற்றி பேசுவார்கள்.

5. தலைவனோடு சேர்க்க வேண்டும்

என்று கூறித் தலைவி ஆதரித்த

நிலையிலும் எம்பெருமானைப் பிரிந்த

நிலையில் தலைவி வெறுத்துக்

கூறிய நிலையிலும் உகந்திருக்கும்.

5. ஆசாரியன் ஆதரித்த போதும்

எல்லாம் நமக்கு நன்மையே என்று உகந்து இருப்பவர்கள்.

.

நாரை, கொக்கு குருகு ஆசாரியர்கள்
1. குருகு உள்ளும் புறமும்

வெண்மையாக இருக்கும்

1. தூய்மை வாய்ந்த மன, மொழி

மென்மையுடையவர்கள்

2. நாரைகள் தங்களுக்கு

உணவாகிற மீன்களைக்

கவருவதற்காக அலைகள் மேலே

வந்து விழுந்த போதும்

கடற்கரையில் அசையாமல்

இருக்கும்

.2. எம்பெருமான் பக்கலில் நெஞ்சை

ஊன்ற வைத்து நிற்பதனால்,

இவ்வுலகத் துன்பங்கள்

மேன்மேலும் வந்து தாக்கினாலும்

அவற்றுக்கு வருந்தாதே

இருக்குமவர்கள்.

 

மேகம் ஆசாரியர்கள்
1. மழை பெய்ய வேண்டி காலங்களிலே

கடலிலே புக்கு அதனுடைய நீரைப்

பருகிக் கொண்டிருக்கும்.

1. எம்பெருமானுடைய  கல்யாண

குணங்களாகிய கடலில் புகுந்து

அதை அனுபவித்துக் கொண்டு

இருப்பர்.

2. மேகமானது எம்பெருமானது

திருமேனியோடொத்த நிறத்தை

உடைத்தாயிருக்கும்.

 

2. எம்பெருமானை  நெஞ்சுக்குள்

கொண்டிருப்பதால் அவனுடைய

நிறத்தை ஒத்தவர்களாயிருப்பர்.

3. மேகமானது மழை பெய்து எல்லா

உயிர்களையும் காக்கும் பொருட்டு

ஆகாயம் முழுதும் திரியும்.

3. உலக மக்களுக்கு உய்யும்

வகையைக் காட்ட எல்லா

இடத்திலும் சஞ்சரிப்பார்கள்.

 

4. மேகமானது மழையைப பொழிந்து

தடாகத்தை நிறைக்கும்.

4. எம்பெருமானது குணங்களாகிற

மழையினைப் பொழிந்து ஞானமாகிற

மடுவை நிறைப்பார்கள்.

5. மேகமானது தனக்காக அன்றி பிறர்

நலத்தைக் கண்டு உகக்கவே

காரியம் செய்யும்.

5. தங்களுக்காக அன்றி சீடர்களுடைய

நலத்தையே கண்டு உகந்து காரியம்

செய்வர்.

முடிவுரை

ஆழ்வாரின் அகப் பாடல்கள் அகமாந்தர் கூற்றுகளாகவே உள்ளன.
அவற்றுள் தலைவன், தலைவி, தோழி, தாய், செவிலி, கட்டுவிச்சி , பாங்கன் என்ற அகமாந்தர்களின்
கூற்றுகளில் முழுமையாக நம்மாழ்வார் ஒருவரே பாடல்களை அருளிச் செய்துள்ளார்.
ஆழ்வார் பாடல்களில் பேசப்படும் காமம் ஜீவாத்மாவிற்கும் பரமாத்மாவிற்கும் இடையே ஏற்படுவது.
அகப் பொருளில் தலைமகளுக்கு ஏழு பருவங்கள் கூறப்பட்டிருப்பது போல பக்தி நூல்களில்
நாயகிக்கு (பேற்றில் பதற்றம்) ஏழு நிலைகள் கூறப்படுகின்றன.
தூது விடப்படும் பறவைகள் நல்லாசிரியருக்கு இணையாக  கூறப்படுகிறது.
கண்ணனுக்கு ஆமது காமம் என்றபடி இது பகவத் காமமாதலால் இது எல்லா பாவங்களிலிருந்தும்
விடுபடுவதற்கும்  வீடு பேறு அடைவதற்கும்  இவ்வகப் பொருள் நூல்கள் காரணமாகின்றன.
சிற்பக்கலை போன்ற பிற துறைகளின் அங்கங்களிலும்  அகப்பாடல்களின் தாக்கத்தைக் காணலாம்.

——————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

 

திருக்குறளும் ஸநாதன தர்மமும்

December 20, 2023

கடவுள் வாழ்த்து அதிகாரப் பாடல்களின் சாரம்:

 

  • முதல் குறள் உலகம் ஆதிபகவனை முதலாக உடையது என கடவுள் இயல்பையும் கடவுளுக்கு உலகோடுடைய தொடர்பையும் கூறுகிறது.
  • 2 ஆம்குறள் என்ன கற்றிருந்தாலும் இறைவனை நினையாமல் இருக்கக் கூடாது என அறிவுறுத்துவது.
  • 3 ஆம்குறள் கடவுளின் திருவடியை நினைப்பவர் இந்நிலவுலகின்கண் நன்கு வாழ்வர் என்கிறது.
  • 4 ஆம்குறள் சார்பற்ற இறைவனை நெஞ்சில் தாங்கியவர் எந்தச் சூழ்நிலையிலும் துன்பங்களை உணரமாட்டார் என்பதைச் சொல்வது.
  • 5 ஆம்குறள் கடவுளின் பெருமை அறிந்து வாழ்த்துபவருக்கு நல்வினை தீவினை எதுவுமே தாக்கத்தை ஏற்படுத்தாது என்கிறது.
  • 6 ஆம்குறள் ஒழுக்கத்தின்வழி நின்று கடவுள் வணக்கம் செய்க என அறிவுறுத்துவது.
  • 7 ஆம்குறள் எல்லாம்வல்ல இறைவனால் மட்டுமே தீராக் கவலைகளுக்கு மாற்றல் தர முடியும் என்று சொல்கிறது.
  • 8 ஆம்குறள் அருள் வடிவினனான இறைவனின் தாளை இடைவிடாது நினைந்தவர் குற்ற உணர்ச்சிகளிலிருந்து மீள வழியுண்டு எனச் சொல்வது.
  • 9 ஆம்குறள் இறைவனை திருவடியை வணங்காதவர் தலை இருந்தும் இல்லாதது போல்தான் எனக் கூறுகிறது.
  • 10 ஆவதுகுறள் இறைவன் அருள் இருந்தால் மட்டுமே நாம் வாழ்க்கை என்னும் கடலைக் கடக்க முடியும் என்கிறது.

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு–
(அதிகாரம்:கடவுள் வாழ்த்து குறள் எண்:1)

பரிமேலழகர் உரை: எழுத்து எல்லாம் அகரம் முதல – எழுத்துக்கள் எல்லாம் அகரம் ஆகிய முதலை உடையன; உலகு ஆதிபகவன் முதற்று – அது போல உலகம் ஆதிபகவன் ஆகிய முதலை உடைத்து.
(இது தலைமை பற்றி வந்த எடுத்துக்காட்டு உவமை. அகரத்திற்குத் தலைமை விகாரத்தான் அன்றி நாதமாத்திரை ஆகிய இயல்பாற் பிறத்தலானும், ஆதிபகவற்குத் தலைமை செயற்கை உணர்வான் அன்றி இயற்கை உணர்வான் முற்றும் உணர்தலானும் கொள்க. தமிழ் எழுத்திற்கே அன்றி வட எழுத்திற்கும் முதலாதல் நோக்கி, ‘எழுத்து’ எல்லாம் என்றார். ஆதிபகவன் என்னும் இரு பெயரொட்டுப் பண்புத்தொகை வடநூல் முடிபு. ‘உலகு’ என்றது ஈண்டு உயிர்கள் மேல் நின்றது. காணப்பட்ட உலகத்தால் காணப்படாத கடவுட்கு உண்மை கூற வேண்டுதலின், ‘ஆதிபகவன் முதற்றே’ என உலகின் மேல் வைத்துக் கூறினார்; கூறினாரேனும், உலகிற்கு முதல் ஆதிபகவன் என்பது கருத்தாகக் கொள்க. ஏகாரம் – தேற்றத்தின்கண் வந்தது. இப்பாட்டான் முதற்கடவுளது உண்மை கூறப்பட்டது.)

(அஷராணாம்‌ – அகாரோ -அஸ்மி – பகவத்‌ கீதை – 10 வது அத்தியாயம்‌ 88 வது சுலோகம்‌)”

கடவுள் இயல்பும் கடவுளுக்கு உலகோடுடைய தொடர்பும் கூறப்படுகிறது. நூலின் முதற்பாடல் என்பதால் பலராலும் இது மிக நுணுக்கமாக ஆராயப்பட்டுள்ளது.

தனக்கோர் மூலம் இன்றி எல்லா உலகும் தோன்றி நின்று இயங்குவதற்குத் தானே மூலமாய் நிற்றலால் இறைவன் ஆதி எனப்படுகிறான். பகவன் என்னும் சொல்லிற்கு நேர் பொருள் கடவுள் என்பதாகும். இந்த உலகின் தொடக்கத்துக்குக் கடவுள் காரணம். அந்த முதன்மையைக் காட்டும் நோக்கில் அவன் பெயரைச் சொன்னாலே எளிதில் விளங்கும்படி ஆதிபகவன் என்ற சொல்லால் கடவுளைக் குறிப்பிடுகிறார் வள்ளுவர்.

இதே கடவுள் வாழ்த்து அதிகாரத்தில் வள்ளுவரே இறைப் பண்பாக ‘கடவுள் தனக்குவமை இல்லாதவன்’ என்று கூறியிருக்கிறார். தனக்கு உவமை இல்லாதவன் கடவுள் என்ற கருத்தைப் பின்னர் (குறள் 7) சொல்ல வருபவர் அப்படிப்பட்ட கடவுளுக்கு “அ” எழுத்தை உவமை சொல்லி, முதல் குறளை எப்படி அமைத்தார்?
‘அ’ என்பது ‘இ’, ‘உ’ போன்ற மற்ற குற்றெழுத்துக்களைப் போன்றதுதானே? ‘இ’யைவிட ‘அ’ முதலில் வருவது என்பது தவிர வேறு எந்தவிதத்தில் சிறப்பானது? வேறுபட்டது? மேலும் எழுத்துக்களின் முதல் எழுத்துத் தான் ‘அ’ எழுத்தே தவிர, மற்ற எழுத்துக்களின் தோற்றத்திற்கோ ஒலிஅமைப்புக்கோ ‘அ’ எழுத்து அடிப்படையானதன்று. ‘உ’ என்ற எழுத்துக்கு ‘அ’ எழுத்து எப்படி அடிப்படையாக அமைய முடியும். ‘உ’ எழுத்தில் ‘அ’ எழுத்து எங்ஙனம் நுண்ணியதாகக் கலந்திருக்க முடியும்? ‘அ’ என்பதும் உயிர் எழுத்து; ‘உ’ என்பதும் உயிர் எழுத்து; இரண்டும் தனித்து நிற்கவல்லன; அதன் காரணம் பற்றியே அவை உயிர் எழுத்து எனப்பெயர் பெற்றன. ஒர் உயிர் இன்னொரு உயிருடன் கலவாது. உயிர் மெய்யுடன் மட்டும்தானே கலக்கும்? ஒவ்வொரு உயிரும் மெய்யெழுத்துடன் சேர்ந்து உயிர் மெய்யெழுத்தை உருவாக்கும். அப்படியிருக்க ‘அ’ எழுத்து எல்லா எழுத்துக்களிலும் நுண்ணியதாய்க் கலந்திருப்பதாகக் கொள்வது எப்படிச் சரியாகும்? ‘இ’ என்ற எழுத்தை எப்படி உச்சரித்தாலும் ‘அ’ ஒலி நுண்ணியதாய்க் கலப்பதை, கலந்திருப்பதை அறிய முடியவில்லையே. க்+அ=க என்று சொல்லும்பொழுது ‘க’ எழுத்தில் ‘அ’ கலந்துள்ளது வெளிப்படும். ஆனால், ‘இ’ எழுத்தில் ‘அ’ கலந்துள்ளதை எவ்வாறு புலப்படுத்த இயலும்? அல்லது எவ்வாறு புரிந்துக் கொள்ள இயலும்? இவை ஆய்வாளர்கள் எழுப்பும் வினாக்களில் சில.
அகரத்தின் பண்புகள் வேறு, இறைவனின் பண்புகள்வேறு என்பது வெளிப்படை. முதற்குறளின் சொற்பொருள்கள் புரிந்து கொள்ளப்படுகின்றன. உவமையின் வாயிலாக எழுத்தின் பெருமையும் புலனாகிறது. ஆனால் அகரம், கடவுள் என்ற இரு கருத்துக்களையும் ஒப்புமை செய்வதை முழுதாக உணர இயலவில்லை. எங்கும் எல்லாப் பண்புகளிலும் நீக்கமற நிறைந்துள்ள இறைவனுக்கு உவமை சொல்ல, ஒலி போல் நிறைந்துள்ளான் என்று ஒரு பண்பு மட்டுமே கொண்டு சொன்ன மொழி-அகரம், உலகம்-கடவுள் என்பதை நிறைவான உவமை என்று சொல்ல முடியாது. எனினும் அளவையால் அளக்கப்படும் பொருள் அளக்கப்பட்ட அளவு அறியப்படும். இறைவனே மூல முதல்; அவனே எல்லாவற்றிற்கும் அடிப்படை என்பன மொழியியல் துணைகொண்டு அளக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் எல்லையில்லாச் செம்பொருளாக இறைவன் ஒருவன் உளன் என்பதும் நிறுவப்பட்டது.

———–

கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.-
(அதிகாரம்:கடவுள் வாழ்த்து குறள் எண்:2)

பரிமேலழகர் உரை: கற்றதனால் ஆய பயன் என் – எல்லா நூல்களையும் கற்றவர்க்கு அக்கல்வி அறிவான் ஆய பயன் யாது?; வால் அறிவன் நல் தாள் தொழாஅர் எனின் – மெய்யுணர்வினை உடையானது நல்ல தாள்களைத் தொழாராயின்?
எவன் என்னும் வினாப்பெயர் என் என்று ஆய், ஈண்டு இன்மை குறித்து நின்றது. ‘கொல்’ என்பது அசைநிலை. பிறவிப் பிணிக்கு மருந்து ஆகலின் ‘நற்றாள்’ என்றார். ஆகம அறிவிற்குப் பயன் அவன் தாளைத் தொழுது பிறவியறுத்தல் என்பது இதனான் கூறப்பட்டது.

தூய்மையான அறிவினனான கடவுளின் நல்ல அடிகளை வணங்காராயின் என்ன கற்றிருந்தாலும் பயன் ஒன்றுமில்லை.
தமிழில் வாலறிவு என்று இங்கு குறிக்கப்பட்டது பிராகிருதச் சொல்லான “கேவல ஞானம்” என்பதன் தமிழாக்கம் எனவும். இச்சொல் “கடையிலா அறிவு”, “வரம்பற்றஅறிவு”, “முழுதுணர்”, “வினையின் நீங்கி விளங்கிய அறிவு”, “அலகிலா அறிவு”, “முற்றறிவு”, ‘குற்றமற்ற அறிவு’ எனப் பொருள்படும் எனவும் கூறுவர். அளப்பற்கரிய தூய அறிவினை உடையவன் வாலறிவன் ஆவன். அது கடவுளைத் தவிர வேறு யாராகவும் இருக்க முடியாது. வாலறிவன் என்று சொல்லப்பட்டதால் கடவுள் அறிவு வடிவினன் ஆகின்றான்.

ஸத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்மம் -என்று ஆதிபகவானின் அடையாளம் சொன்னவாறு

தாள்கள் என்றால் மனித வடிவம் தோன்றிடலாம் என்பதால் தாள் என்று ஒருமையில் கூறினார். தோற்றமும் தரவேண்டும். அதே நேரத்தில் இயற்கைப் பொருளாகவும் இருந்துவிடக் கூடாது. எனவே இறை என்பது ஒற்றைத் தாள் உருவாக, அடி/தாள் என இங்கும் அதிகாரத்து மற்ற இடங்களிலும் குறிப்பிடுகிறார் வள்ளுவர். தாள் என்பதற்கு ‘நல்’ என்ற அடை கொடுத்து நல்தாள் எனச் சொல்லி இந்நற்றாளைத் தொழச் சொல்கிறார்.

தொழாஅர் எனின்’ என அளபெடுத்துச் சொல்லப்பட்டதால் தொழுதே ஆகவேண்டும் என்றாகிறது. அறிவுவடிவான இறைவனை எப்படித் தொழுவது? எங்கும் நிறைந்த கடவுளுக்கு நற்றாள் என்று தோற்றம் கூறப்பட்டதால், தாள் தொழல் என்பது இறைவனின் திருவடியை மனத்துக்குள் உறுதியாக வரித்துக் கொண்டு அவனது அருளை வேண்டுவது எனக் கொள்வர்.

அனைத்துக் கல்வியும் அறிவும், தூய குணமாகிய கடவுளை அறிதல் அல்லது தேடுதல் என்பதை நோக்கித்தான் செல்கிறது என்பதையும் அவன் அறிய வேண்டும். கல்வியின் நோக்கம் கடவுள் அறிதல் தவிர கடவுளின் நற்றாள் தொழுதலுமாகும் என்பதுவே வள்ளுவம்

——–

மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்.
(அதிகாரம்:கடவுள் வாழ்த்து குறள் எண்:3)

பரிமேலழகர் உரை: மலர்மிசை ஏகினான் மாண்அடி சேர்ந்தார் – மலரின் கண்ணே சென்றவனது மாட்சிமைப்பட்ட அடிகளைச் சேர்ந்தார்; நிலமிசை நீடுவாழ்வார் – எல்லா உலகிற்கும் மேலாய வீட்டு உலகின்  கண் அழிவின்றி வாழ்வார்.
(அன்பான் நினைவாரது உள்ளக் கமலத்தின்கண் அவர் நினைந்த வடிவோடு விரைந்து சேறலின் ‘ஏகினான்’ என இறந்த காலத்தால் கூறினார்; என்னை? “வாராக் காலத்தும் நிகழும் காலத்தும் ஓராங்கு வரூஉம் வினைச் சொற் கிளவி இறந்த காலத்துக் குறிப்பொடு கிளத்தல் விரைந்த பொருள் என்மனார் புலவர்” (தொல், சொல், வினை, 44) என்பது ஓத்தாகலின். இதனைப் ‘பூமேல் நடந்தான்’ என்பதோர் பெயர் பற்றிப் பிறிதோர் கடவுட்கு ஏற்றுவாரும் உளர்.
சேர்தல் – இடைவிடாது நினைத்தல்)

மலர்மிசை ஏகினான் என்ற தொடர்க்கு ‘மலர் மேல் நடந்தவன்’ ‘அண்டவெளியில் பரந்துள்ளான்’. ‘உள்ளக் கமலத்தின்கண் தோன்றுபவன்’. என்று மூன்று வகையான விளக்கங்கள் காணக் கிடக்கின்றன

இது சமண (ஜைன) சமயக் கடவுளான அருகனைக் குறித்தது என்பது பலரின் கருத்து. அருகப் பெருமான் எழுந்தருளும்போது தாமரைப் பூக்கள் தோன்றி அவருடைய திருப்பாதங்களைத் தாங்குகின்றன என்ற சமணர்களின் நம்பிக்கையின் அடிப்படையில் எழுந்தது இது

இக்குறள் குறிப்பிடுவதும் அருகக் கடவுளே என்பதற்கு இவ்வரிகள் சான்றாயின என்றும் கூறுவர்.
மலர்மிசை ஏகினான் என்ற தொடர் புத்தரைக் குறிக்கிறது என்றும் சிலர் உரைத்தனர். இங்கு ‘மலர்’ என்பது தாமரைப் பூ.என்றும் புத்தர் பிறந்தவுடனேயே ஏழடி நடந்தார் என்றும் ஒவ்வொரு அடியை வைக்கும்போது தாமரைப்பூ தோன்றி அவருடைய பாதங்களைத் தாங்கிக் கொண்டன என்றும் புத்த சமயநூல்கள் கூறுகின்றன என்றும் மேலும் அவர்கள் விளக்கினர்.

ஆனால் சமணரின் ஆதிநாதர் அல்லது புத்தர் மலரிலே நடந்தவர் என்று பொருள் கொண்டால் அதன் தொடர்ச்சியாய் அவன் அடிசேர்ந்தார் ‘நிலமிசை நீடுவாழ்தல்’ என்பது சமண-புத்தக் கொள்கைகளுக்குப் பொருந்தி வராது. அருகனும் புத்தனும் மனிதப் பிறவிகளே. மலர்மிசை ஏகினான் என்பது கடவுள் குறித்தது. அதற்கு மனிதரைச் சார்ந்து பொருள் கொள்ளமுடியவில்லை.
வள்ளுவர் எந்த இடத்திலும் சமயம் சார்ந்து குறள் படைக்கவில்லை. எனவே இக்குறள் அருகனையும் புத்தனையும் குறிக்கவில்லை என்பது தெளிவு.

‘மலர்தல்’ என்ற வினைச்சொல்லுக்கு ‘விரிதல், பரவுதல்’ என்று பொருள்; ‘மிசை’ என்னும் சொல்லுக்கு ‘மேலிடம்’ என்று பொருள்; வினைத்தொகை ஆகிய ‘மலர்மிசை’ என்பது ‘மலர்ந்த மிசை’ என்று விரிந்து ‘பரந்த மேலிடம்’ என்ற பொருள் தரும்; இது அண்டவெளியினைக் குறிக்கும்; ‘மலர்தலை’ என்பது பரந்த இடத்தையும், ‘மலர்தலை உலகம்’ என்பது பரந்த பூவுலகினையும் குறிப்பதைப் போல ‘மலர்மிசை’ என்ற தொடர் அண்டவெளியினைக் குறிப்பதாக இவர்கள் விளக்கம் தருவர்.

நெஞ்சமாகிய மலரில் இருப்பவனது திருவடியை மறவாமல் நினைப்பவர் என்பது இப்பகுதியின் பொருள்.

சேர்தல் என்ற சொல்லுக்குப் பரிமேலழகர் ‘இடைவிடாது நினைத்தல்’ என்று உரை தருகிறார். இடைவிடாமல் நினைத்தல் என்றதை மறவாதே எண்ணுதல் என்று கொள்வது சிறக்கும்.

மலர் அழகானது; சிறப்பானது; மென்மையானது; மணத்தையும், மகிழ்வையும் தருவது; தூய்மையானது. அழகிலும் தூய்மையிலும் ஒளியிலும் உள்ள இறைவன் மலர்மேல் இயங்குகிறான். எண்ணுவதற்கு எவ்வளவு இனிய காட்சி இது!
இறைவனைத் தேடி எங்கும் போகவேண்டாம். அவன் ஒவ்வொருவரது உள்ள மனமலரிலேயே வீற்றிருக்கிறான் அவனை மறவாமல் நினைந்திருப்பவர் இவ்வுலகில் நீண்ட காலம் வாழ்வர்.
நீண்ட நாட்கள் வாழ்தல் சிறப்புடையது என்பதும் இப்பாடலின் வழி பெறப்படுகிறது.

———————

வேண்டுதல் வேண்டாமை இலான்அடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல–
(அதிகாரம்:கடவுள் வாழ்த்து குறள் எண்:4)

பரிமேலழகர் உரை: வேண்டுதல் வேண்டாமை இலான் அடி சேர்ந்தார்க்கு – ஒரு பொருளையும் விழைதலும் வெறுத்தலும் இல்லாதவன் அடியைச் சேர்ந்தார்க்கு; யாண்டும் இடும்பை இல – எக்காலத்தும் பிறவித் துன்பங்கள் உளவாகா.
(பிறவித் துன்பங்களாவன : தன்னைப் பற்றி வருவனவும், பிற உயிர்களைப் பற்றி வருவனவும், தெய்வத்தைப் பற்றி வருவனவும் என மூவகையான் வரும் துன்பங்கள். அடி சேர்ந்தார்க்கும் அவ்விரண்டும் (வேண்டுதலும் வேண்டாமையும்) இன்மையின், அவை காரணமாக வரும் மூவகைத் துன்பங்களும் இலவாயின.)

கெட்டவன் அடையும் ஆக்கமும் நல்லவன் உறும் கேடும் ஏன் என்று தமக்கு விளங்கவில்லை என்பதற்காக கடவுள் நடுநிலையில் இல்லை என்று முடிவுக்கு வந்துவிடவேண்டாம் என இங்கு அறிவுறுத்துகிறார் வள்ளுவர். இறைவன் வேண்டுதல் வேண்டாமை இல்லாதவன்தான் என்பதை இக்குறள்வழி அழுந்தச் சொல்கிறார் வள்ளுவர்.

விருப்பும் வெறுப்புமற்ற இறைவனது அடியை மறவாமல் நினைப்பவர்க்கு எவ்விடத்தும் எப்போதும் துன்பம் இல்லை என்பது இக்குறட்கருத்து.

————-

இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு-
(அதிகாரம்:கடவுள் வாழ்த்து குறள் எண்:5)

பரிமேலழகர் உரை: இருள்சேர் இருவினையும் சேரா – மயக்கத்தைப் பற்றி வரும் நல்வினை, தீவினை என்னும் இரண்டு வினையும் உளவாகா; இறைவன் பொருள் சேர் புகழ் புரிந்தார் மாட்டு – இறைவனது மெய்ம்மை சேர்ந்த புகழை விரும்பினாரிடத்து.
(இன்ன தன்மைத்து என ஒருவராலும் கூறப்படாமையின் அவிச்சையை ‘இருள்’ என்றும், நல்வினையும் பிறத்தற்கு ஏதுவாகலான் ‘இருவினையும் சேரா’ என்றும் கூறினார். இறைமைக் குணங்கள் இலராயினாரை உடையர் எனக்கருதி அறிவிலார் கூறுகின்ற புகழ்கள் பொருள் சேராவாகலின், அவை முற்றவும் உடைய இறைவன் புகழே பொருள் சேர் புகழ் எனப்பட்டது. புரிதல் – எப்பொழுதும் சொல்லுதல்)

இக்குறளின் முதற்பகுதி ‘இருள்சேர் இருவினையும் சேரா’ என்பது. இதிலுள்ள இருள் என்ற சொல்லுக்கு மும்மலம், அஞ்ஞானம், பிறவிமயக்கம், யான் என்னும் இருள், தன்னல மயக்கம் என்றபடி பொருள் கூறினர். சிலர் அதற்கு மயக்கம் எனப் பொருள் உரைத்து ‘ஒன்றை இன்னொன்று எனப்பொருள் கொள்வது’ அதாவது இருள் நிறைந்த இடத்தில் கயிற்றினைப் பாம்பு எனப் புரிந்துகொள்வது போல என விளக்கம் செய்தனர். இருள் என்பதை விளக்கும் உரைப்பொருளாக அறியாமை என்பதையும் கூறினர். அறியாமையாவது, தெரியாத தன்மை ஆகும்.
‘இருள்சேர்’ என்பதற்கு மயக்கம் கலந்த அல்லது அறியாமை பொருந்திய என்பது பொருளாகும்.
‘இருவினை’ என்றதற்கு இன்ப துன்பங்களை உண்டாக்கும் நல்வினையும் தீவினையும், இருவகை வினையும், அறிவில்லாத வினைகள், நல்வினை தீவினையென்னும் இருவினைப் பயன்களாகிய இன்ப துன்பங்கள், சென்ற பிறப்பில் செய்த வினைகள் இந்தப் பிறப்பில் செய்த வினைகள், நலம் தீங்குகள், பெரிய துன்பங்கள், நன்மை தீமைகள். நல்லது கெட்டது, காதிவினையும் அகாதிவினை, இருவின பற்றிய பாவம், கூற்றும் செயலும், நல்வினை தீவினைகளின் பயனாகிய பிறப்பிறப்புக்கள், தெரிந்தும் தெரியாதும் செய்யும் இருவகைத் தீவினைகள், நன்மை தீமை பற்றிய தவறான கருத்துக்கள், தவறான எண்ணங்களினால் அல்லது பிறழ உணர்தலால் நற்செயல்களையும் தீச்செயல்களையும் கலந்து செய்தல் எனப்பலவாறு உரையாசிரியர்கள் பொருள் உரைத்தனர்.
‘இருவினை’ என்ற தொடர் நல்வினை, தீவினை இவற்றைச் சுட்டுவது. நல்வினை என்பது நற்செயல் என்றும் தீவினை என்பது தீச்செயல் என்றும் பொருள்படும். நமது அனைத்துச் செயல்களுக்கும் பயன் உண்டு; நல்வினையானால் புண்ணியம் கிடைக்கும்; தீவினையானால் பாவம் உண்டாகும் என்னும் கோட்பாடு எல்லாராலும் விரும்பப்படுவது; அவ்விதமே உலக இயக்கம் உள்ளது என்ற நம்பிக்கையுடனேயே நாம் வாழ்கிறோம். இவ்விருவினைகளால் உண்டாகும் பயன்களையே ‘இருவினை’ என்ற தொடர் குறிக்கிறது.
‘இருள்சேர் இருவினையும் சேரா’ என்ற பகுதிக்கு மயக்கம் கலந்த இருவினைப் பயன்களும் சென்றடையா என்பது பொருள்.

பாடலின் பிற்பகுதி ‘இறைவன் பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு’ என்பது. ‘இறைவன் பொருள்’ என்ற தொடர் செம்பொருள் குறித்தது. செம்பொருள் என்பது மெய்ப்பொருள் அல்லது இறைத்தன்மை எனவும் அறியப்படுவது. இறைவன் பொருள்சேர் புகழ் என்றது இறைவனது பெருமைகள் அல்லது இறைமைக் குணங்கள் குறித்தது. ‘புரிந்தார்’ என்ற சொல்லுக்கு தங்கினார், விரும்பினார், வணங்குகிறவர், ஓதுவார் (இடைவிடாது சொல்லுவார்), போற்றுவார் என்று பலவாறாகச் சொல்லப்பட்ட பொருள்களுள் ‘போற்றுவார்’ என்பது பொருத்தம். ‘இறைவன் பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு’ என்ற பகுதிக்குக் ‘கடவுளது உண்மையான பெருமைகளை உணர்ந்து போற்றுவார்க்கு’ என்பது பொருள்.

இறைவனது மெய்ம்மையான பெருமையை நினைந்து போற்றுவாரிடத்து அறியாமையால் உண்டாகும் இருவினைகளும் நெருங்கா என்பது இக்குறட்கருத்து.

—————————

பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்–
(அதிகாரம்:கடவுள் வாழ்த்து குறள் எண்:6)

பரிமேலழகர் உரை: பொறி வாயில் ஐந்து அவித்தான் – மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் பொறிகளை வழியாக உடைய ஐந்து அவாவினையும் அறுத்தானது; பொய் தீர் ஒழுக்க நெறி நின்றார்-மெய்யான ஒழுக்க நெறியின்கண் நின்றார், நீடு வாழ்வார் – பிறப்பு இன்றி எக்காலத்தும் ஒரு தன்மையராய் வாழ்வார்.
(புலன்கள் ஐந்து ஆகலான், அவற்றின்கண் செல்கின்ற அவாவும் ஐந்து ஆயிற்று. ஒழுக்க நெறி ஐந்தவித்தானால் சொல்லப்பட்டமையின், ஆண்டை ஆறனுருபு செய்யுட் கிழமைக்கண் வந்தது. ‘கபிலரது பாட்டு’ என்பது போல. இவை நான்கு பாட்டானும் இறைவனை நினைத்தலும், வாழ்த்தலும், அவன் நெறி நிற்றலும் செய்தார் வீடு பெறுவர் என்பது கூறப்பட்டது)

மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐந்து ஐம்பொறிகளின் வழியாக ஏற்படும் உணர்வுகளைப் பக்குவப்படுத்தியவனாகி, மெய்யான ஒழுக்க நெறி நிற்பவர், நெடுங்காலம் இவ்வுலகின்கண் நெடுங்காலம் இனிது இருப்பர்.

———————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

பரிபாடல்–சிலப்பதிகாரம்-பெருந்தேவனார் பாரதம்- -திருமால் பாடல்கள்

December 20, 2023

கிளரொளியிளமை’ என்ற திருவாய்மொழியின் பொருளைத் தன்னகத்துக் கொண்டிருக்கின்ற பரிபாடலில் உள்ள பாடல் ஒன்றையும் அதன் உரையையும், அழகர் திருமலையின் சிறப்பைக் கூறுகின்ற சிலப்பதிகாரத்தில் உள்ள பகுதியையும் அதன் உரையையும்  இங்கு, அவ்விரண்டும் ஒருதலையாகப் படித்து உணர்ந்துகோடற்குரியவை.

பரிபாடல்–பதினைந்தாம் பாடல்-திருமால்

புலவரை யறியாப் புகழொடு பொலிந்து
நிலவரை தாங்கிய நிலைமையிற் பெயராத்
தொலையா நேமிமுத றொல்லிசை யமையும்
புலவராய் புரைத்த புனைநெடுங் குன்றம்


5.  பலவெனின் ஆங்கவை பலவே; பலவினும்
நிலவரை யாற்றி நிறைபய னொருங்குடன்
நின்றுபெற நிகழுங் குன்றவை சிலவே;
சிலவினுஞ் சிறந்தன, தெய்வம் பெட்புறும்
மலரகன் மார்பின் மைபடி குடிமிய


10. குலவரை சிலவே; குலவரை சிலவினும்

1-5. அறிவெல்லையால் அறியப்படாத புகழுடனே பொலிந்து நில வெல்லையைத் தாங்கிய நிலைமை நீங்காத கெடாத சக்கரவாளமுதலாகத் தொல்லிசைப் புலவர் ஆராய்ந்துரைத்த கொண்டாடப்படும் நெடிய குன்றங்களைச் சிறப்பு வகையாற்கூறாது பொது வகையாற் பல வென்றுரைக்கின். ஆங்கு; அசை.


5-10. அப்பலவற்றுள்ளும் நிலத்துள்ளோரைப் பசி வெம்மை ஆற்றி நிறை பயன்களெல்லாவற்றையும் எப்பொழுதும் அவர் பெறப் பயன்படும் குன்று சில; அச்சிலவற்றுள்ளும் தெய்வங்கள் தாமாக விரும்பும் மலரையுடைய அகன்ற தடங்களுடனே மேகங்கள் படியும் சிகரத்தையுடையவாகிய குலவரைகள் சில சிறந்தன.

சிறந்தது, கல்லறை கடலுங் கானலும் போலவும்
புல்லிய சொல்லும் பொருளும் போலவும்
எல்லாம், வேறுவே றுருவி னொருதொழி லிருவர்த்
தாங்கு நீணிலை யோங்கிருங் குன்றம்;

     15.   நாறிணர்த் துழாயோ னல்கி னல்லதை
ஏறுத லெளிதோ வீறுபெறு துறக்கம்?
         அரிதிற்பெறு துறக்க மாலிருங் குன்றம்
          எளிதிற்பெற லுரிமை யேத்துகஞ் சிலம்ப!
                 அராவணர் கயந்தலைத் தம்முன் மார்பின்


20.   மராமலர்த் தாரின் மாண்வரத் தோன்றி
அலங்கு மருவி யார்த்திமிழ் பிழியச்
சிலம்பா றணிந்த சீர்கெழு திருவிற்
சோலையொடு தொடர்மொழி மாலிருங் குன்றம்
தாம்வீழ் காமம் வித்துபு விளைக்கும்


25.
   நாமத் தன்மை நன்கனம் படியெழ

10-14. அக்குலவரைகள் சிலவற்றிலும் கல்லென அறையும் கடலும் கானலும் போல வேறு வேறாகிய நிறத்தினையும், பிரிவில்லாத சொல்லும் பொருளும் போல வேறுபடாத தொழிலினையுமுடைய மாயோனையும் தம் முன்னோனையுந் தாங்கும் நீண்ட நிலைமையினையுடைய புகழான் உயர்ந்த இருங்குன்றம் சிறந்தது. ‘புகழான்’ என்பது வருவிக்கப்பட்டது.


15. நல்கினல்லது – வெளிப்பட்டுக் கொடுப்பினல்லது.


17-8. அவ்வரிதிற்பெறு துறக்கத்தை எளிதிற்பெறுதலுரிமை யான் மாலிருங்குன்றத்தை எல்லோருங் கேட்க ஏத்தக் கடவோம்,’ என்று ஏத்துகின்றார்.


19. அரவின் மெல்லிய தலையாற்கவிக்கப்பட்ட தம்முன்.


20. மராம் – வெண்கடம்பு.


21-2.  அசையும் அருவி மிக ஆர்த்து இழிதலாற் சிலம்பாறு அழகு செய்த இவ்வியக்கத்தக்க இருங்குன்றத்து (26)


22-6. ‘அழகு பொருந்திய  ‘திரு’ என்னுஞ் சொல்லொடும் சோலை யென்னும் சொல்லொடும் மாலிருங்குன்றம் என்னுஞ் சொல் தொடர்ந்த மொழியாகிய திருமாலிருஞ்சோலைமலையென்னும் நாமத்தினது பெருந்தன்மை நன்றாகப் பூமியின்கட்பரக்க, மகளிரும் மைந்தரும் தாம் வீழ்காமத்தை வித்தி விளைக்கும் யாமத்தியல்பையுடைய இவ்வையிருங் குன்றத்து’ எனக் கூட்டுக.

யாமத் தன்மையிவ் வையிருங் குன்றத்து
மன்புன லிளவெயில் வளாவவிருள் வளர்வெனப்
பொன்புனை யுடுக்கையோன் புணர்ந்தமர் நிலையே
நினைமின் மாந்தீர்! கேண்மின் கமழ்சீர்


30.   சுனையெலா நீல மலரச் சுனைசூழ்
சினையெலாஞ் செயலை மலரக் காய்கனி
உறழ நனைவேங்கை யொள்ளிணர் மலர

மாயோ னொத்தவின் னிலைத்தே
சென்றுதொழு கல்லீர்! கண்டுபணி மின்னே


35.  இருங்குன் றென்னும் பெயர்பரந் ததுவே
பெருங்கலி ஞாலத்துத் தொன்றியல் புகழது
கண்டுமய ரறுக்குங் காமக் கடவுள்

மகமுயங்கு மந்தி வரைவரை பாய
முகிழ்மயங்கு முல்லை முறைநிகழ்வு காட்ட   

26. குறிஞ்சிக்குச் சிறுபொழுதாகலான் யாமங் கூறினார்.


27-8. நிலை பெற்ற குளிர்ச்சியையுடைய இளவெயில் சூழ அதனிடையே இருள் வளர்தலையொக்கப் பீதாம்பரத்தையுடையோன் தம்முன்னொடு கூடி அமர்ந்து நிற்கும் நிலையை.


29. மாந்தீர்! நினைமின்; இனி, அம்மலையது சிறப்பைக் கேண்மின்.


30-33. சுனையெல்லாம் நீலமலர அச்சுனை சூழ்ந்த செயலை சினையிடமெல்லாம் மலர்தலானும் காய்கனிகளொடு நிறம் மாறுபட வேங்கை இணர் மலர்தலானும் மாயோனையொத்த இனிய நிலைமையையுடைத்து.
நீலமலரைச் சூழ்ந்த செயலை மலர் அவன் பொன்புனை உடுக்கைக்கு ஒப்பு; குன்றத்துக் காய்கனியுறழ மலர்ந்த வேங்கை அவன் மணி முடிக்கு ஒப்பு.


34-7. பெருங்கலி ஞாலத்து இருங்குன்றென்னும் பெயர் பரந்த அத்துணையே பழைதாய் இயல்கின்ற புகழையுடைய அது காணமயரை அறுப்பதொரு வழிபடு தெய்வம்; அதனால், சென்று அவனைத் தொழமாட்டாதீர்! அதனைக் கண்டு பணிமின்.


38. மகவால் முயங்கப்பட்ட மந்தி ஒரு சிகரத்தினின்று ஒரு சிகரத்திற்பாய


39. முகிழ் நெருங்கின முல்லை, மகளிர் கற்பு நிகழ்ச்சியைக்காட்ட

40.   மணிமருணன் னீர்ச்சினை மடமயி லகவக்
          குருகிலை யுதிரக் குயிலினங் கூவப்
பகர்குழல் பாண்டி லியம்ப வகவுநர்
நாநவில் பாடன் முழவெதிர்ந் தன்ன
சிலம்பிற் சிலம்பிசை யோவா தொன்னார்க்


     45.   கடந்தட்டான் கேழிருங் குன்று
தைய லவரொடுந் தந்தா ரவரொடும்
கைம்மக வோடுங் காத லவரொடும்
தெய்வம் பேணித் திசைதொழுதனிர் சென்மின்;
புவ்வத் தாமரை புரையுங் கண்ணன்


     50.   வவ்வற் காரிருண் மயங்குமணி மேனியன்
எவ்வயி னுலகத்துந் தோன்றி யவ்வயின்
மன்பது மறுக்கத் துன்பங் களைவோன்
அன்பது மேஎ யிருங்குன் றத்தான்

 40-45. சினையிடத்தவாகிய மணிமருள் மயில்கள் அகவவும், குருக்கத்தி இலையுதிர அதன்கணிருந்து குயிலினம் கூவவும், முழைக்கட் சிலம்புகின்ற எதிரொலி ஓவாது, அவுணரை நேரே பொருது கொன்றானது நிறத்தையுடைய குன்றத்தின்கண்.


42-3. சுருதியையுணர்த்துகின்ற குழலும் தாளமும் இயம்ப அவற்றைப் பாடுவாரது மிடற்றுப்பாடலும் முழவோசையும் எதிர்ந்தாற்போன்ற


இசையென்ற வழி, குழலொலியும் மிடற்றுப்பாடலும் குயிலினத்தது கூவற்கும் அதன் எதிரொலிக்கும் உவமை. தாள ஒலியும் முழவொலியும் மயிலது அகவற்கும் அதன் எதிரொலிக்கும் உவமை.


மந்தி பாய (38) முல்லை காட்ட (39) என நின்ற செயவெனெச்சங்கள், இசையோவாதென்னும் (44) பிற வினை கொண்டன.


46-8. அதனை நும் மனைவியரொடும் இருமுதுகுரவரொடும் குழவிகளோடும் சுற்றத்தோடுங்கூடத் தெய்வமாக மதித்துத் திசை நோக்கித் தொழுது சென்மின்.


49-53. தன் நாபிகமலத்தையொக்கும் கண்ணையுடையனாய், நீரை வௌவுதலையுடைய மேகமும் இருளும் நீலமணியும் போலுமேனியனாய், எல்லா உலகினும் வெளிப்பட்டு அவ்விடத்து உயிர்ப்பன்மையது மறுக்கத்தைச் செய்யும் பிறவித்துன்பத்தைக் களைவோன் அன்பு பட்டு இருங்குன்றத்தின்கண்ணான் ஆதலால்
புவ்வமென்பது (49) பாகதச் சிதைவு.

கள்ளணி பசுந்துளவினவை கருங்குன் றனையவை


55.   ஒள்ளொளியவை யொருகுழையவை
புள்ளணி பொலங்கொடியவை
வள்ளணி வளைநாஞ்சிலவை
சலம்புரி தண்டேந்தினவை
வலம்புரி வயநேமியவை


60.   வரிசிலை வயவம்பினவை
புகரிணர்சூழ் வட்டத்தவை புகர்வாளவை
எனவாங்கு,
நலம்புரீஇ யஞ்சீர் நாம வாய்மொழி
இதுவென வுரைத்தலினெ முள்ளமர்ந் திசைத்திறை


65.   இருங்குன்றத் தடியுறை யியைகெனப்
பெரும்பெய ரிருவரைப் பரவுதுந் தொழுதே.


கடவுள் வாழ்த்து


இளம்பெருவழுதியார் பாட்டு.
மருத்துவன் நல்லச்சுதனார் இசை.
பண் நோதிறம்.

இவ்வளவும் குன்றத்தையேத்திக் கண்டார்க்கும் அதன் சிறப்புக் கூறி மேல் அதன்கண் நின்ற இருவரையும் வாழ்த்தி வேண்டிக் கொள்கின்றார்:


57. கூர்மையணிந்த வளைநாஞ்சிலையுடையை.


58. கோபமிக்க தண்டினையேந்தினை.


59. வலம்புரியொடு வெற்றி நேமியையுடையை.


60. வரிசிலையோடு வெற்றி அம்பினையுடையை.


61. புகரொழுங்கு சூழ்ந்த பாராவளையினையுடையை.
இவ்வாழ்த்துக்களுள், ஒள்ளொளியவை, ஒரு குழையவை, (55) வள்ளணி வளைநாஞ்சிலவை, (57) சலம்புரி தண்டேந்தினவை, (58) என வந்தன
பலதேவன்; ஏனைய வாசுதேவன்.


63-6. அழகிய சீரையும் அஞ்சப்படுதலையுமுடைய வேதம் தனக்கு
நன்மையை விரும்பி அவர் பெருமை ஈதென்று சொல்லுதலால், யாமும் உள்ளம்
மேவி அச்சொற்களுள் அறிந்தவற்றைக் கூட்டி உரைத்தேமாய்ப்
பெரும்புகழையுடைய இருவரையும் தொழுது வேண்டுதும், ‘எமக்கு
இவ்விருங்குன்றத்து அடியின்கண் உறைதல் எய்துக என்று,’ என்றவாறு.

——————————————————

சிலப்பதிகாரம்


மதுரைக்காண்டம்


11. காடு காண் காதை


         
திருமால் குன்றத்துச் செல்குவி ராயின்,
பெருமால் கெடுக்கும் பிலமுண்டு; ஆங்கு
விண்ணோ ரேத்தும் வியத்தகு மரபிற்
புண்ணிய சரவணம் பவகா ரணியொ


95.   டிட்ட சித்தி யெனும்பெயர் போகி
விட்டு நீங்கா விளங்கிய பொய்கை
முட்டாச் சிறப்பின் மூன்றுள; ஆங்குப்
புண்ணிய சரவணம் பொருந்துவி ராயின்
விண்ணவர் கோமான் விழுநூ லெய்துவிர்;


100.  பவகா ரணிபடிந் தாடுவி ராயின்,
பவகா ரணத்திற் பழம்பிறப் பெய்துவிர்;

திருமால் குன்றத்துச் செல்லக்கடவீராயின், அவ்விடத்தே மிக்க
மயக்கத்தைக் கெடுக்கும் பிலத்து நெறியுண்டு’ என்றான் என்க.
திருமால் குன்றம் – அழகர் திருமலை.


92. ஆங்கு – அப்பிலத்துக்குள்ளே.


93-7. விண்ணோரேத்தும்
  மூன்றுள.


‘தேவர்களாலேத்தப்படுதலின், யாவரும் வியக்கத்தகும் மரபினையுடைய
‘புண்ணிய சரவணம், பவகாரணி, இட்டசித்தி’ என்னும் பெயர் எங்கும்
பரக்கப்பட்டு இடையறாத சிறப்பினையுடையவாய்த் தம்மிற் சேர்ந்திருக்கின்ற
மூன்று பொய்கைகள் உள’ என்றான் என்க.

      97. ஆங்கு – அவற்றுள்.


98-9. புண்ணிய சரவணம்
  எய்துவிர்.
‘புண்ணிய சரவணமென்னாநின்ற பொய்கையில் ஆடுவிராயின்,
இந்திரனாற்செய்யப்பட்ட ஐந்திரவியாகரணமென்னும் இலக்கணத்தை உணர்வீர்,’
என்றானென்க.
இது நினைவின்றிப் பெறும் பேறு.
பொருந்துதல் – ஆடுதல். எய்துதல் – உணர்தல்.


100-101. பவகாரணி . . . . . . . . . . . எய்துவிர்.
‘அதுவன்றிப் பவகாரணியென்னும் பொய்கைக்கண் ஆடுவீராயின்,
இப்பிறப்பிற்குக் காரணமாகிய பழம்பிறப்பையுணர்வீர்’ என்றானென்க.

இட்ட சித்தி யெய்துவி ராயின்,
இட்ட சித்தி யெய்துவிர் நீரே;
ஆங்குப் பிலம்புக வேண்டுதி ராயின்,


105.  ஓங்குயர் மலையத் துயர்ந்தோற் றொழுது
சிந்தையி லவன்றன் சேவடி வைத்து
வந்தனை மும்முறை மலைவலஞ் செய்தால்
நிலம்பக வீழ்ந்த சிலம்பாற் றகன்றலைப்
பொலங்கொடி மின்னிற் புயலைங் கூந்தற்


110.  கடிமல ரவிழ்ந்த கன்னிகா ரத்துத்
தொடிவளைத் தொளி யொருத்தி தோன்றி

முன்னும் பின்னுமாகிய இரு பிறப்பையும் உய்த்துணர்தற்குக் காரணமாகிய
இப்பிறப்பிலே எப்பிறப்பையும் எய்த வுணர்வீர்’ என்றானெனினுமமையும், இனிப்
பவமென்பதனை விகாரமாக்கிப் ‘பாவத்தான் வரும் பிறப்புகளை’ எனலுமாம்.


102-3. இட்டசித்தி 
 நீரே.
‘அதுவன்றி இட்டசித்தியென்னும் பொய்கையில் ஆடுவீராயின், நீர் நினைத்தவெல்லாம் எய்துதலையுடையீர்,’ என்றானென்க.

     இனி, ‘எண்வகைச் சித்திகளையும் தவம் செய்து வருந்திப் பெறாமல்
நினைத்துழிப் பெறுவீர்,’  என்றான் எனினும் அமையும்.


104. ஆங்குப் பிலம்புக வேண்டுதிராயின் – ‘அங்ஙனமாகிய அப்பிலத்துக்கட்புகுதலை விரும்புவீராயின்’ என்றானென்க. 

     105-7. ஓங்குயர் மலையத்து மலை வலஞ்செய்தால்
‘மிகவுமுயர்ந்த அத்திருமலைக்கணுள்ள பெரியோன் சேவடிகளைக்
கையாற்றொழுது மனத்தானினைந்து வாக்காற்றுதித்தலுடனே அம்மலையை
மும்முறை வலஞ்செய்தால்’ என்க.
அத்து – சாரியை, வைத்தல் – நினைத்தல், தியானம். வந்தனை -ஈண்டுத்
துதித்தல். ‘தொழுது வைத்து வந்தனைநோடு வலஞ்செய்தால்’ என்க.


108-11. நிலம்பக வீழ்ந்த 
 ஒருத்தி தோன்றி
‘பாதாள கங்கைக்கு மேலுள்ள நிலம் கூறுபடும்படி அறுத்துத் தாழ்ந்த
*சிலம்பாறென்னும் ( சிலம்பாற்றினை ‘நூபுரங்கை’ என்பர்.)அகற்சியையுடைய ஆற்றினது கரைக்

இம்மைக் கின்பமு மறுமைக் கின்பமும்
இம்மையு மறுமையு மிரண்டு மின்றியோர்
செம்மையி னிற்பதுஞ் செப்புமி னீயிரிவ்

      115.  வரைத்தாள் வாழ்வேன் வரோத்தமை என்பேன்
            உரைத்தார்க் குரியே னுரைத்தீ ராயின்
          திருத்தக் கீர்க்குத் திறந்தேன் கதவெனும்

கண்ணதாகிய விளக்கத்தையுடைய முகைகள் அவிழ்ந்த மலரையுடையதோர்
கோங்கின் நிழற்கண்ணே ஒரு பொற்கொடி போலவும் மின் போலவும் புயல்
போலவும் ஐவகைக் கூந்தலையும் வளைந்த தொடி புனைந்த
தோளினையுமுடையாளொருத்தி தோன்றி’ என்க.

     சிலம்பாறு – அவ்வியாற்றின் பெயர், தலை – இடம், இன் – உவமவுருபு,
கன்னிகாரம் – கொங்கு, தொடி – வளைவு, ஒருத்தி -ஓர் இயக்கி.


112-7. இம்மைக் கின்பமும்
 . கதவெனும்.

     ‘அங்ஙனம் தோன்றினவள், ‘இப்பிறப்பிற்கு இன்பமும் மறுபிறப்பிற்கு
இன்பமும் இவையிரண்டு மொழிந்து எக்காலத்தும் ஒன்றாந் தன்மையாய்க்
கோட்டமின்றி அழிவற நிற்கும் இன்பமுமாகிய பொருள்கள் யாவை? அவற்றை
நீயிர் உரைமின்; யான் 1இத்தாள் வரைக் கண்ணே வாழ்வேன்;
வரோத்தமையென்று கூறப்படுவேன்; யான் வினாய இவற்றை உரைத்தார்
உளராயின், அவர்க்கு எத்தொழிற்குமுரியேன்; ஆதலின், திருத்தக்கீர்!
உரைத்தீராயின், உமக்கு இப்பொழுதே இப்பிலவாயிற்கதவம் திறந்து தருவேன்
என்று சொல்லும்’ என்றான் என்க.

     இம்மைக் கின்பம் – புகழ், மறுமைக் கின்பம் – புண்ணியம், செம்மையில்
நிற்பது – மோக்கம். இனி, ஒருவர்க்கு இம்மை மறுமைகட்கு இன்பத்தைத் தந்து
பூமியுள்ளளவும் நிற்பது புகழெனலுமாம்; 2‘ஒன்றாவுலகத
தொன்றில்’ (திருக். 233.)எனவும்,
3
‘இவணிசை யுடையோர்க் கல்லதவண, துயர்நிலை யுலகத் துறையு ளின்மை,
விளங்கக் கேட்ட மாறுகொல்’ (புறநா. 50.)எனவுங் கூறினாராகலின். ‘கதவந்
திறத்தற்குரியேன்’ எனவுமாம். திறந்தேன் – காலமயக்கம்; விரைபொருட்கண்
வந்தது.

கதவந்  திறந்தவள் காட்டிய நன்னெறிப்
புதவம் பலவுள போகிடை கழியன


     120.  வொட்டுப் புதவமொன் றுண்டத னும்பர்
வட்டிகைப் பூங்கொடி வந்து தோன்றி,
‘இறுதியி லின்ப மெனக்கீங் குரைத்தாற்
பெறுதிர் போலுநீர் பேணிய பொருள்’ எனும்;
‘உரையீ ராயினு முறுகண் செய்யேன்


     125.  நெடுவழிப் புறத்து நீக்குவ னும்’எனும்;
உரைத்தா ருளரெனி னுரைத்த மூன்றின்
கரைப்படுத் தாங்குக் காட்டினள் பெயரும்;

118-23. கதவந் திறந்தவள் பேணிய பொருளெனும்.

      ‘அவருரைப்பின், அவள் கதவைத் திறந்து இதுவென்று காட்டிய நல்ல
வழியில் நீண்ட இடைகழி வாயில்கள் பல உள; அவை கழிந்தால், இரட்டைக்
கதவையுடைய வாயிலொன்று உண்டு; அதற்கு மேலாகச் சென்றால்
வட்டிகையிலே எழுதின பாவை போல்வாளொருத்தி வெளிப்பட்டு, ‘ஈறில்லாத
இன்பம் யாது? அதனை உரைத்தீராயின் நீயிர் இம் முப்பொருளிலும் விரும்பிய
பொருளைப் பெறுவீர்’ என்னும் என்றாளென்க.

    புதவம் – வாயில், போகு – நெடுமை, ஒட்டுப்புதவம் – இரட்டைக் கதவம்,
உம்பர் – மேல், பூங்கொடி-உவமப்பெயர்; அன்றித் ‘துவார
வட்டிகையிற்பூங்கொடி அங்ஙனம் கேட்கும்’ எனவுமாம். இறுதியில் இன்பம் –
வீடு. பெறுதிர்- முன்னிலைப் பன்மை. போலி – ஒப்பில் போலி.


124-5. உரையீராயினும்  நீக்குவன நும்மெனும்.

    வினாயவள், ‘யான் வினாயதனை நும் பேதைமையான் உரையீராயினும் நும்மை
லருத்தஞ்செய்யேன்; நீர் போகக் கடவ நெடுநெறிக் கண்ணே நும்மைப்
போக்குவன்’ என்னும் என்றான் என்க.


126-7. உரைத்தாருளர் பெயரும்.

    ‘அவள் அங்ஙனங் கேட்ட பொருளை உரைத்தாருளராயின், முற்கூறப்பட்ட
பொய்கை மூன்றின் கரைக்கட்செலுத்தி அவை இவையென்று காட்டி மீளும்,’
என்றானென்க.

    ஆங்கு -அசை.

அருமுறை மருங்கி னைந்தினு மெட்டினும்
வருமுறை யெழுத்தின் மந்திர மிரண்டும்


    130.  ஒருமுறை யாக வுளங்கொண் டோதி
வேண்டிய தொன்றின் விரும்பினி ராடின்
காண்டகு மரபின வல்ல மற்றவை
மற்றவை நினையாது மலைமிசை நின்றோன்
பொற்றா மரைத்தா ளுள்ளம் பொருந்துமின்;


135.  உள்ளம் பொருந்துவி ராயின், மற்றவன்
புள்ளணி நீள்கொடி புணர்நிலை தோன்றும்;

128-32. அருமறை மருங்கின் . . . . . . . . . . மற்றவை

    ‘ஓதவும் உணரவுமரிய மறையிடத்தனவாகிய ஐந்தானும் எட்டானும்
வருமுறைப்பட்ட எழுத்தினையுடைய மந்திரமிரண்டையும் ஒரு தன்மையாக
மனத்தானினைந்து வாக்காற்றுதித்து, அவற்றுள் வேண்டியது யாதொன்று,
அதனில் விரும்பினீராயாடின், அவற்றின் பயனாயவை, தவங்களைச்
செய்தோர்க்கும் காணத் தகும் மரபினையுடைய வல்ல’ என்றானென்க.

    இனி, ‘அங்ஙனமாகிய பொய்கைகளின் பயனை விரும்பினீராய்
ஒன்றினாடின், அதன் பயனை நுகர்ந்த நெஞ்சம் பிறிதொன்றனையும்
காதலியாது,’ எனலுமாம். இன்னும், ‘மற்றவை காண்டகு மரபினவல்ல’ என்பதற்கு,
‘இவையொழிந்த தீர்த்தங்கள் இவை போலக் கைமேற்காணத் தகும்
மரபினையுடையவல்ல,’ எனினும் அமையும்.

    138-8. மற்றைவை நினையாது துயர் கெடுக்கும்.

    ‘அங்ஙனமாகிய பொய்கைகளின் பயனை விரும்பீராயின், அவற்றை
நினையாதே அம்மலைமீது நின்றோனுடைய பொலிவு பொருந்திய தாமரை மலர்
போலும் தாள்களை நினைமின்கள்; அங்ஙனம் நினைப்பீராயின், அப்பொழுதே
அவனது கருடப்புள் எழுதிய கொடித் தண்டு பொருந்தி நிற்கும் நிலையிடத்தைக்
காண்பீர்; கண்டவளவிலே அவன் திருவடி நிலை நும்மை எடுத்துக்கொண்டு
பிறவித் துன்பத்தைக் கெடுக்கும்,’ என்றான் என்க.

    ‘நீயிர் ஆண்டுச் சென்று அது காண்பீர்’ என்பான், ‘தோன்றும்’
என்றான். கெடுக்கும் – முற்று.

 தோன்றிய பின்னவன் றுணைமலர்த் தாளிணை
ஏன்றுதுயர் கெடுக்கு மின்ப மெய்தி
மாண்புடை மரபின் மதுரைக் கேகுமின்.

38-9. இன்பமெய்த ஏகுமின்.

    ‘அங்ஙனம் அது காண்டலிற் பின்னர்ப் பரமபதத்திற்குச் சேறலும் மெய்யென்று
இன்பமெய்தி, மாட்சிமை பொருந்திய மரபினையுடைய மதுரைக்குச்
சென்மின்கள்,’ என்றானென்க.


பெருந்தேவனார் பாரதம்


‘தேனோங்கு நீழல் திருவேங் கடம்என்றும்
வானோங்கு சோலை மலைஎன்றும் – தானோங்கு
தென்னரங்கம் என்றும் திருஅத்தி யூர்என்றும்
             சொன்னவர்க்கும் உண்டோ துயர்?’

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீமந்நிகமாந்த மஹாதேசிகன் அருளிச்செய்த-ஸ்ரீ நவமணிமாலை

December 20, 2023

ஸ்ரீமந்நிகமாந்த மஹாதேசிகன் அருளிச்செய்த
ஸ்ரீ தேசிக ப்ரபந்தம்

சீரொன்று தூப்புல் திருவேங் கடமுடையான்
பாரொன்றச் சொன்ன பழமொழியுள் ஓரொன்று
தானே அமையாதோ தாரணியில் வாழ்வார்க்கு
வானேறப் போமளவும் வாழ்வு

17. நவமணிமாலை

17.1:
ஒரு மதி யன்பருளங் கவர்ந்தன
உலகமடங்க வளர்ந்தளந்தன
ஒரி சடை யொன்றிய கங்கை தந்தன
உரகபடங்களரங்குகொண்டன
தருமமுயர்ந்ததிதென்னநின்றன
தருமனிரந்த திசைந்து சென்றன
சகடமுடைந்து கலங்க வென்றன
தமர்க ளுருந்து மருந்தி தென்பன
திருமகள் செய்ய கரங்களொன்றின
திகழ்து ளவுந்து மனங்க மழ்ந்தன
செழுமணி கொண்ட சிலம்பிலங்கின
சிலைதனிலன் றோரணங்கு மிழ்ந்தன
அருமறையந்த மமர்ந்த பண்பின
அயன்முடி தன்னிலமர்ந்து யர்ந்தன
அருள்தர வெண்ணிய யிந்தைவந்தன
அடியவர் மெய்யர் மலர்ப் பதங்களே.

பொதுவாக சொல்லி விசேஷித்து இங்கும் அங்கும் -15 விஷயம் திருவடிகளின் கார்யம் இங்கு -அதே போல்

ஒரு மதி யன்பருளங் கவர்ந்தன–அணி குருகை நகர் முனிவர் நாவுக்கு அமைந்தன

ஒரு வகைப்பட்ட -ஒரே விதம் -எண்ணிக்கை -அத்விதீயம்

மதி -ஞானம் புத்தி
அன்பு -பக்தி

ஒரு அநந்யார்ஹ பக்தி-பரமைகாந்திகள் -மயர்வற மதிநலம் -கட்டடங்க மதி கட்டடங்க நலம் -பக்தி

ஸர்வாந்தக அந்தக–உள்ளும் புறமும் குருடாய் இருக்கிறாய் -பக்த்யா சாஸ்த்ராத் -ஜனார்த்தனை நான் அறிந்தேன் -சஞ்சயன்

உறு சகடம் உடைய ஒரு காலுற்று உணர்ந்தன
உடன் மருதம் ஓடிய ஒரு போதில் தவழ்ந்தன
உறி தடவும் அளவில் உரலோடு உற்று நின்றன
உறு நெறி ஓர் தருமன் விடு தூதுக்கு உகந்தன
மற நெறியர் முறிய பிருதானத்து வந்தன
மலர்மகள் கை வருட மலர் போதில் சிவந்தன
மறு பிறவி அறு முனிவர் மாலுக்கு இசைந்தன
மனு முறையில் வருவது ஓர் விமானத்து உறைந்தன
அறமுடைய விசயன் அமர் தேரில் நிகழ்ந்தன
அடல் உரக படம் மடிய ஆடிக் கடிந்தன
அறு சமயம் அறிவு அரிய தானத்து அமர்ந்தன
அணி குருகை நகர் முனிவர் நாவுக்கு அமைந்தன
வெறியுடைய துவள மலர் வீறுக்கு அணிந்தன
விழு கரி ஓர் குமரன் என மேவிச் சிறந்தன
விறல் அசுரர் படை அடைய வீயத் துரந்தன
விடல் அரிய பெரிய பெருமாள் மென் பதங்களே –ஸ்ரீ மத் ரஹஸ்ய த்ரய சாரம் — 32–நிகமன அதிகாரம் –ஸ்ரீ பெரிய பெருமாள் திருவடிகள் ஸ்தோத்ரம் –

———

17.2:
மகரம்வளரு மளவில்பெளவமடைய வுற்றலைத்தனை
வடிவுக மடமென வமர்ந்து கிரிதனைத் தரித்தனை
மலியுமசுரனு மைடந்து வசுதையைப்பெயர்த் தெடுத்தனை
வலிகொளவுணனுடல் பிளந்து மதலை மெய்க்கு தித்தனை
கருமுலக மடியளந்து தமர்மளுக் களித்தனை
பரசுமுனிவன் வடிவுகொண்டு பகைவரைத் துணித்தனை
பணியவிசைவில் தசமுகன்றன் முடுகள் பத்துதிர்த்தனை
படியுமுருவில் வருபிலம்ப வசுரனைத் தகர்த்தனை
நகரிதுவரையென வுகந்துவரை கரத்தெடுத்தனை
நடமொடிய லுபரியில் வந்துநலிவ றுக்கவுற்றனை
நலியுன் வினைகள் செகுமருந்தின் நலமுரைந்த வெற்பினை
நனுகு கருடநதி கிளர்ந்த புனலுகப் பில்வைத்தனை
அகரமுதலவுரை கொள்மங்கை கணவனுக்களித்தனை
யடையும் விந்தை சிறுவனுய்ய வருள்கொடுத்து யர்த்தினை
யடியு மணையு மெனு மனந்தண்டி தொழக்க ளித்தனை
அவனிமருவு திருவயிந்தை யடியவர்க்கு மெய்யனே.

17.3:
புரமுயர்த்த வசுரர்கட்கு ஓர்புறமுரைத்த பொய்யினான்
வரையெடுத்து மழைதடுத்த மழையொடொத்த மெய்யினான்
திரைநிரைத்த கடலெரித்த சிலைவளைத்த கையினான்
அருள்கொடுத்து வினைதவிர்க்கும் அடியவர்க்கு மெய்யனே.

17.4:
தேசொத்தாரில்லையெனும் தெய்வநாயகனார்
வாசக்குழல் மாமலராள் மணவாளர்
வாசித்தெழுமன்மதனார் மணற்றோப்பில்
மாசிக்கடலாடி மகிழ்ந்து வருவாரே.

17.5:
உருளுஞ்சகடமொன்றுதைத்தாய்
உலகமேழு முண்டுமிழ்ந்த ளந்தாய்
பொருளுமழலு மிறையாகப்
பூண்டேன் அடிமையினின் மீண்டேன்
இருளும் மருளுன் தருமந்நாள்
எழிலாராழிசங்கேந்தி
அருளுந்தெருளுன் தரவென்பால்
அடியோர் மெய்ய வந்தருளே.

17.6:
வஞ்சனை செய்த பூதனையை மலியுஞ்சாட்டை
மல்லரையோர் மதகளிற்றை வானோரஞ்சுங்
கஞ்சனை முங்கடிந்தவனி பாரந்தீர்ந்த
காவலனே கோவலனாய் நின்றகோவே
அஞ்சன முங்காயா வுமனையமேனி
அடியவர்க்கு மெய்யனே அயிந்தைவாழும்
மஞ்செனவே யருள்பொழியும் வள்ளலே நின்
வடிவழகு மறவாதார் பிறவாதாரே.

17.7:
மையுமாகட லுமயிலுமா மழையும்
மணிகளுங்கு வளையுங்கொண்ட
மெய்யனே அடியோர் மெய்யனே விண்ணோர்-
ஈசனே நீசனேண்டைந்தேன்
கையு மாழியுமாய்க் களிறு காத்தவனே
காலனார் தமரெனைக் கவராது
இயனே வந்தன்றஞ்ச லென்றருள் தென்
னயிந்தைமா நகர மர்ந்தானே.

17.8:
மஞ்சுலாவு சோலை சூழ யிந்தை மன்னுசீர்
வரையெடுத்து நிரையளித்த மாசில் வாசுதேவனே
செஞ்சொலன்பர் சிந்தை கொண்டு தீதிலாத தூதனாய்த்
தேருமூர்ந்து தேசுயர்ந்த செல்வம் தெய்வ நாயக
வெசொலாளர் காலதூதர் வீசு பாசம் வந்தென்மேல்
விழுந்தழுந்தி யானயர்ந்து வீழ்வதற்குமுன்ன நீ
அஞ்ச லஞ்ச லஞ்ச லென்றளிக்க வேண்டுமச்சுதா
அடியவர்க்கு மருளியக்கு மடியவர்க்கு மெய்யனே.

17.9:
பொருத்தம் பொருந்தலும் போகுந்தவற்றுடன் பொய்ம்மதிமேல்
விருத்தங்கலிதுறை மேவுமழன்மதம் வேறினியென்
திருத்தமனத்தினிற் சேராவெமைத் தெய்வநாயக, நின்
வருத்தம் பொறாவருளால் மன்ண்டைக் கலங்கொண்டருளே.

17.10:
அந்தமில் சீரயிந்தை நகரமர்ந்த நாத
நடியிணைமேல் அடியுரையாலைம்பதேத்திச்
சிந்தைகவர் பிராகிருத நூறு கூறிச்
செழுந்தமிழ் மும்மணிக்கோவை செறியச் சேர்த்தும்
பந்து கழலம்மானை யூசலேசல்
பரவு நவமணி மாலையிவையுஞ்சொன்னேன்
முந்தைமறை மொழிய வழிமொழி நீயென்று
முகுந்தனருள் தந்த பயன் பெற்றேன் நானே.

அடிவரவு: ஒருமதி, மகரம், புரமுயர்ந்த, தேசொத்தார், உருளம், வஞ்சனை
மலியும், மையும், மஞ்சு, பொருத்தம், அந்தமில்சீர், ஆழ்வார்.

——————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ மந் நிகமாந்த மஹா தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஶ்ரீ லக்ஷ்மீ சகஸ்ரநாமம்-ஸ்ரீ லக்ஷ்மீ அஷ்டோத்தர ஶதனாம ஸ்தோத்ரம்

December 20, 2023

ஶ்ரீ லக்ஷ்மீ சகஸ்ரநாமம்

நாம்நாம் ஸாஷ்டஸஹஸ்ரம் ச ப்³ரூஹி கா³ர்க்³ய மஹாமதே ।
மஹாலக்ஷ்ம்யா மஹாதே³வ்யா꞉ பு⁴க்திமுக்த்யர்த²ஸித்³த⁴யே ॥ 1 ॥

கா³ர்க்³ய உவாச ।

ஸநத்குமாரமாஸீநம் த்³வாத³ஶாதி³த்யஸந்நிப⁴ம் ।
அப்ருச்ச²ந்யோகி³நோ ப⁴க்த்யா யோகி³நாமர்த²ஸித்³த⁴யே ॥ 2 ॥

ஸர்வலௌகிககர்மப்⁴யோ விமுக்தாநாம் ஹிதாய வை ।
பு⁴க்திமுக்திப்ரத³ம் ஜப்யமநுப்³ரூஹி த³யாநிதே⁴ ॥ 3 ॥

ஸநத்குமார ப⁴க³வந் ஸர்வஜ்ஞோ(அ)ஸி விஶேஷத꞉ ।
ஆஸ்திக்யஸித்³த⁴யே ந்ரூணாம் க்ஷிப்ரத⁴ர்மார்த²ஸாத⁴நம் ॥ 4 ॥

கி²த்³யந்தி மாநவாஸ்ஸர்வே த⁴நாபா⁴வேந கேவலம் ।
ஸித்³த்⁴யந்தி த⁴நிநோ(அ)ந்யஸ்ய நைவ த⁴ர்மார்த²காமநா꞉ ॥ 5 ॥

தா³ரித்³ர்யத்⁴வம்ஸிநீ நாம கேந வித்³யா ப்ரகீர்திதா ।
கேந வா ப்³ரஹ்மவித்³யா(அ)பி கேந ம்ருத்யுவிநாஶிநீ ॥ 6 ॥

ஸர்வாஸாம் ஸாரபூ⁴தைகா வித்³யாநாம் கேந கீர்திதா ।
ப்ரத்யக்ஷஸித்³தி⁴தா³ ப்³ரஹ்மந் தாமாசக்ஷ்வ த³யாநிதே⁴ ॥ 7 ॥

ஸநத்குமார உவாச ।

ஸாது⁴ ப்ருஷ்டம் மஹாபா⁴கா³꞉ ஸர்வலோகஹிதைஷிண꞉ ।
மஹதாமேஷ த⁴ர்மஶ்ச நாந்யேஷாமிதி மே மதி꞉ ॥ 8 ॥

ப்³ரஹ்மவிஷ்ணுமஹாதே³வமஹேந்த்³ராதி³மஹாத்மபி⁴꞉ ।
ஸம்ப்ரோக்தம் கத²யாம்யத்³ய லக்ஷ்மீநாமஸஹஸ்ரகம் ॥ 9 ॥

யஸ்யோச்சாரணமாத்ரேண தா³ரித்³ர்யாந்முச்யதே நர꞉ ।
கிம் புநஸ்தஜ்ஜபாஜ்ஜாபீ ஸர்வேஷ்டார்தா²நவாப்நுயாத் ॥ 10 ॥

அஸ்ய ஶ்ரீலக்ஷ்மீதி³வ்யஸஹஸ்ரநாமஸ்தோத்ர மஹாமந்த்ரஸ்ய ஆநந்த³கர்த³மசிக்லீதேந்தி³ராஸுதாத³யோ மஹாத்மாநோ மஹர்ஷய꞉ அநுஷ்டுப்ச²ந்த³꞉ விஷ்ணுமாயா ஶக்தி꞉ மஹாலக்ஷ்மீ꞉ பராதே³வதா ஶ்ரீமஹாலக்ஷ்மீ ப்ரஸாத³த்³வாரா ஸர்வேஷ்டார்த²ஸித்³த்⁴யர்தே² ஜபே விநியோக³꞉ । ஶ்ரீமித்யாதி³ ஷட³ங்க³ந்யாஸ꞉ ।

த்⁴யாநம் ।

பத்³மநாப⁴ப்ரியாம் தே³வீம் பத்³மாக்ஷீம் பத்³மவாஸிநீம் ।
பத்³மவக்த்ராம் பத்³மஹஸ்தாம் வந்தே³ பத்³மாமஹர்நிஶம் ॥ 1 ॥

பூர்ணேந்து³வத³நாம் தி³வ்யரத்நாப⁴ரணபூ⁴ஷிதாம் ।
வரதா³ப⁴யஹஸ்தாட்⁴யாம் த்⁴யாயேச்சந்த்³ரஸஹோத³ரீம் ॥ 2 ॥

இச்சா²ரூபாம் ப⁴க³வதஸ்ஸச்சிதா³நந்த³ரூபிணீம் ।
ஸர்வஜ்ஞாம் ஸர்வஜநநீம் விஷ்ணுவக்ஷஸ்ஸ்த²லாலயாம் ।
த³யாளுமநிஶம் த்⁴யாயேத்ஸுக²ஸித்³தி⁴ஸ்வரூபிணீம் ॥ 3 ॥

ஸ்தோத்ரம்

ஓம் நித்யாக³தாநந்தநித்யா நந்தி³நீ ஜநரஞ்ஜநீ ।
நித்யப்ரகாஶிநீ சைவ ஸ்வப்ரகாஶஸ்வரூபிணீ ॥ 1 ॥

மஹாலக்ஷ்மீர்மஹாகாளீ மஹாகந்யா ஸரஸ்வதீ ।
போ⁴க³வைப⁴வஸந்தா⁴த்ரீ ப⁴க்தாநுக்³ரஹகாரிணீ ॥ 2 ॥

ஈஶாவாஸ்யா மஹாமாயா மஹாதே³வீ மஹேஶ்வரீ ।
ஹ்ருல்லேகா² பரமா ஶக்திர்மாத்ருகாபீ³ஜரூபிணீ ॥ 3 ॥

நித்யாநந்தா³ நித்யபோ³தா⁴ நாதி³நீ ஜநமோதி³நீ ।
ஸத்யப்ரத்யயநீ சைவ ஸ்வப்ரகாஶாத்மரூபிணீ ॥ 4 ॥

த்ரிபுரா பை⁴ரவீ வித்³யா ஹம்ஸா வாகீ³ஶ்வரீ ஶிவா ।
வாக்³தே³வீ ச மஹாராத்ரி꞉ காலராத்ரிஸ்த்ரிலோசநா ॥ 5 ॥

ப⁴த்³ரகாளீ கராளீ ச மஹாகாளீ திலோத்தமா ।
காளீ கராளவக்த்ராந்தா காமாக்ஷீ காமதா³ ஶுபா⁴ ॥ 6 ॥

சண்டி³கா சண்ட³ரூபேஶா சாமுண்டா³ சக்ரதா⁴ரிணீ ।
த்ரைலோக்யஜயிநீ தே³வீ த்ரைலோக்யவிஜயோத்தமா ॥ 7 ॥

ஸித்³த⁴ளக்ஷ்மீ꞉ க்ரியாளக்ஷ்மீர்மோக்ஷலக்ஷ்மீ꞉ ப்ரஸாதி³நீ ।
உமா ப⁴க³வதீ து³ர்கா³ சாந்த்³ரீ தா³க்ஷாயணீ ஶிவா ॥ 8 ॥

ப்ரத்யங்கி³ரா த⁴ரா வேலா லோகமாதா ஹரிப்ரியா ।
பார்வதீ பரமா தே³வீ ப்³ரஹ்மவித்³யாப்ரதா³யிநீ ॥ 9 ॥

அரூபா ப³ஹுரூபா ச விரூபா விஶ்வரூபிணீ ।
பஞ்சபூ⁴தாத்மிகா வாணீ பஞ்சபூ⁴தாத்மிகா பரா ॥ 10 ॥

காளீ மா பஞ்சிகா வாக்³மீ ஹவி꞉ப்ரத்யதி⁴தே³வதா ।
தே³வமாதா ஸுரேஶாநா தே³வக³ர்பா⁴(அ)ம்பி³கா த்⁴ருதி꞉ ॥ 11 ॥

ஸங்க்²யா ஜாதி꞉ க்ரியாஶக்தி꞉ ப்ரக்ருதிர்மோஹிநீ மஹீ ।
யஜ்ஞவித்³யா மஹாவித்³யா கு³ஹ்யவித்³யா விபா⁴வரீ ॥ 12 ॥

ஜ்யோதிஷ்மதீ மஹாமாதா ஸர்வமந்த்ரப²லப்ரதா³ ।
தா³ரித்³ர்யத்⁴வம்ஸிநீ தே³வீ ஹ்ருத³யக்³ரந்தி²பே⁴தி³நீ ॥ 13 ॥

ஸஹஸ்ராதி³த்யஸங்காஶா சந்த்³ரிகா சந்த்³ரரூபிணீ ।
கா³யத்ரீ ஸோமஸம்பூ⁴திஸ்ஸாவித்ரீ ப்ரணவாத்மிகா ॥ 14 ॥

ஶாங்கரீ வைஷ்ணவீ ப்³ராஹ்மீ ஸர்வதே³வநமஸ்க்ருதா ।
ஸேவ்யது³ர்கா³ குபே³ராக்ஷீ கரவீரநிவாஸிநீ ॥ 15 ॥

ஜயா ச விஜயா சைவ ஜயந்தீ சா(அ)பராஜிதா ।
குப்³ஜிகா காளிகா ஶாஸ்த்ரீ வீணாபுஸ்தகதா⁴ரிணீ ॥ 16 ॥

ஸர்வஜ்ஞஶக்தி꞉ ஶ்ரீஶக்திர்ப்³ரஹ்மவிஷ்ணுஶிவாத்மிகா ।
இடா³பிங்க³ளிகாமத்⁴யம்ருணாலீதந்துரூபிணீ ॥ 17 ॥

யஜ்ஞேஶாநீ ப்ரதா² தீ³க்ஷா த³க்ஷிணா ஸர்வமோஹிநீ ।
அஷ்டாங்க³யோகி³நீ தே³வீ நிர்பீ³ஜத்⁴யாநகோ³சரா ॥ 18 ॥

ஸர்வதீர்த²ஸ்தி²தா ஶுத்³தா⁴ ஸர்வபர்வதவாஸிநீ ।
வேத³ஶாஸ்த்ரப்ரமா தே³வீ ஷட³ங்கா³தி³பத³க்ரமா ॥ 19 ॥

ஶிவா தா⁴த்ரீ ஶுபா⁴நந்தா³ யஜ்ஞகர்மஸ்வரூபிணீ ।
வ்ரதிநீ மேநகா தே³வீ ப்³ரஹ்மாணீ ப்³ரஹ்மசாரிணீ ॥ 20 ॥

ஏகாக்ஷரபரா தாரா ப⁴வப³ந்த⁴விநாஶிநீ ।
விஶ்வம்ப⁴ரா த⁴ராதா⁴ரா நிராதா⁴ரா(அ)தி⁴கஸ்வரா ॥ 21 ॥

ராகா குஹூரமாவாஸ்யா பூர்ணிமா(அ)நுமதிர்த்³யுதி꞉ ।
ஸிநீவாலீ ஶிவா(அ)வஶ்யா வைஶ்வதே³வீ பிஶங்கி³ளா ॥ 22 ॥

பிப்பலா ச விஶாலாக்ஷீ ரக்ஷோக்⁴நீ வ்ருஷ்டிகாரிணீ ।
து³ஷ்டவித்³ராவிணீ தே³வீ ஸர்வோபத்³ரவநாஶிநீ ॥ 23 ॥

ஶாரதா³ ஶரஸந்தா⁴நா ஸர்வஶஸ்த்ரஸ்வரூபிணீ ।
யுத்³த⁴மத்⁴யஸ்தி²தா தே³வீ ஸர்வபூ⁴தப்ரப⁴ஞ்ஜநீ ॥ 24 ॥

அயுத்³தா⁴ யுத்³த⁴ரூபா ச ஶாந்தா ஶாந்திஸ்வரூபிணீ ।
க³ங்கா³ ஸரஸ்வதீவேணீயமுநாநர்மதா³பகா³ ॥ 25 ॥

ஸமுத்³ரவஸநாவாஸா ப்³ரஹ்மாண்ட³ஶ்ரேணிமேக²லா ।
பஞ்சவக்த்ரா த³ஶபு⁴ஜா ஶுத்³த⁴ஸ்ப²டிகஸந்நிபா⁴ ॥ 26 ॥

ரக்தா க்ருஷ்ணா ஸிதா பீதா ஸர்வவர்ணா நிரீஶ்வரீ ।
காளிகா சக்ரிகா தே³வீ ஸத்யா து ப³டுகாஸ்தி²தா ॥ 27 ॥

தருணீ வாருணீ நாரீ ஜ்யேஷ்டா²தே³வீ ஸுரேஶ்வரீ ।
விஶ்வம்ப⁴ராத⁴ரா கர்த்ரீ க³ளார்க³ளவிப⁴ஞ்ஜநீ ॥ 28 ॥

ஸந்த்⁴யாராத்ரிர்தி³வாஜ்யோத்ஸ்நா கலாகாஷ்டா² நிமேஷிகா ।
உர்வீ காத்யாயநீ ஶுப்⁴ரா ஸம்ஸாரார்ணவதாரிணீ ॥ 29 ॥

கபிலா கீலிகா(அ)ஶோகா மல்லிகாநவமல்லிகா ।
தே³விகா நந்தி³கா ஶாந்தா ப⁴ஞ்ஜிகா ப⁴யப⁴ஞ்ஜிகா ॥ 30 ॥

கௌஶிகீ வைதி³கீ தே³வீ ஸௌரீ ரூபாதி⁴கா(அ)திபா⁴ ।
தி³க்³வஸ்த்ரா நவவஸ்த்ரா ச கந்யகா கமலோத்³ப⁴வா ॥ 31 ॥

ஶ்ரீஸ்ஸௌம்யலக்ஷணா(அ)தீதது³ர்கா³ ஸூத்ரப்ரபோ³தி⁴கா ।
ஶ்ரத்³தா⁴ மேதா⁴ க்ருதி꞉ ப்ரஜ்ஞா தா⁴ரணா காந்திரேவ ச ॥ 32 ॥

ஶ்ருதி꞉ ஸ்ம்ருதிர்த்⁴ருதிர்த⁴ந்யா பூ⁴திரிஷ்டிர்மநீஷிணீ ।
விரக்திர்வ்யாபிநீ மாயா ஸர்வமாயாப்ரப⁴ஞ்ஜநீ ॥ 33 ॥

மாஹேந்த்³ரீ மந்த்ரிணீ ஸிம்ஹீ சேந்த்³ரஜாலஸ்வரூபிணீ ।
அவஸ்தா²த்ரயநிர்முக்தா கு³ணத்ரயவிவர்ஜிதா ॥ 34 ॥

ஈஷணத்ரயநிர்முக்தா ஸர்வரோக³விவர்ஜிதா ।
யோகி³த்⁴யாநாந்தக³ம்யா ச யோக³த்⁴யாநபராயணா ॥ 35 ॥

த்ரயீஶிகா² விஶேஷஜ்ஞா வேதா³ந்தஜ்ஞாநரூபிணீ ।
பா⁴ரதீ கமலா பா⁴ஷா பத்³மா பத்³மவதீ க்ருதி꞉ ॥ 36 ॥

கௌ³தமீ கோ³மதீ கௌ³ரீ ஈஶாநா ஹம்ஸவாஹிநீ ।
நாராயணீ ப்ரபா⁴தா⁴ரா ஜாஹ்நவீ ஶங்கராத்மஜா ॥ 37 ॥

சித்ரக⁴ண்டா ஸுநந்தா³ ஶ்ரீர்மாநவீ மநுஸம்ப⁴வா ।
ஸ்தம்பி⁴நீ க்ஷோபி⁴ணீ மாரீ ப்⁴ராமிணீ ஶத்ருமாரிணீ ॥ 38 ॥

மோஹிநீ த்³வேஷிணீ வீரா அகோ⁴ரா ருத்³ரரூபிணீ ।
ருத்³ரைகாத³ஶிநீ புண்யா கல்யாணீ லாப⁴காரிணீ ॥ 39 ॥

தே³வது³ர்கா³ மஹாது³ர்கா³ ஸ்வப்நது³ர்கா³(அ)ஷ்டபை⁴ரவீ ।
ஸூர்யசந்த்³ராக்³நிரூபா ச க்³ரஹநக்ஷத்ரரூபிணீ ॥ 40 ॥

பி³ந்து³நாத³கலாதீதா பி³ந்து³நாத³கலாத்மிகா ।
த³ஶவாயுஜயாகாரா கலாஷோட³ஶஸம்யுதா ॥ 41 ॥

காஶ்யபீ கமலாதே³வீ நாத³சக்ரநிவாஸிநீ ।
ம்ருடா³தா⁴ரா ஸ்தி²ரா கு³ஹ்யா தே³விகா சக்ரரூபிணீ ॥ 42 ॥

அவித்³யா ஶார்வரீ பு⁴ஞ்ஜா ஜம்பா⁴ஸுரநிப³ர்ஹிணீ ।
ஶ்ரீகாயா ஶ்ரீகலா ஶுப்⁴ரா கர்மநிர்மூலகாரிணீ ॥ 43 ॥

ஆதி³ளக்ஷ்மீர்கு³ணாதா⁴ரா பஞ்சப்³ரஹ்மாத்மிகா பரா ।
ஶ்ருதிர்ப்³ரஹ்மமுகா²வாஸா ஸர்வஸம்பத்திரூபிணீ ॥ 44 ॥

ம்ருதஸஞ்ஜீவநீ மைத்ரீ காமிநீ காமவர்ஜிதா ।
நிர்வாணமார்க³தா³ தே³வீ ஹம்ஸிநீ காஶிகா க்ஷமா ॥ 45 ॥

ஸபர்யா கு³ணிநீ பி⁴ந்நா நிர்கு³ணா க²ண்டி³தாஶுபா⁴ ।
ஸ்வாமிநீ வேதி³நீ ஶக்யா ஶாம்ப³ரீ சக்ரதா⁴ரிணீ ॥ 46 ॥

த³ண்டி³நீ முண்டி³நீ வ்யாக்⁴ரீ ஶிகி²நீ ஸோமஸம்ஹதி꞉ ।
சிந்தாமணிஶ்சிதா³நந்தா³ பஞ்சபா³ணப்ரபோ³தி⁴நீ ॥ 47 ॥

பா³ணஶ்ரேணிஸ்ஸஹஸ்ராக்ஷீ ஸஹஸ்ரபு⁴ஜபாது³கா ।
ஸந்த்⁴யாவளிஸ்த்ரிஸந்த்⁴யாக்²யா ப்³ரஹ்மாண்ட³மணிபூ⁴ஷணா ॥ 48 ॥

வாஸவீ வாருணீஸேநா குலிகா மந்த்ரரஞ்ஜநீ ।
ஜிதப்ராணஸ்வரூபா ச காந்தா காம்யவரப்ரதா³ ॥ 49 ॥

மந்த்ரப்³ராஹ்மணவித்³யார்தா² நாத³ரூபா ஹவிஷ்மதீ ।
ஆத²ர்வணி꞉ ஶ்ருதி꞉ ஶூந்யா கல்பநாவர்ஜிதா ஸதீ ॥ 50 ॥

ஸத்தாஜாதி꞉ ப்ரமா(அ)மேயா(அ)ப்ரமிதி꞉ ப்ராணதா³ க³தி꞉ ।
அவர்ணா பஞ்சவர்ணா ச ஸர்வதா³ பு⁴வநேஶ்வரீ ॥ 51 ॥

த்ரைலோக்யமோஹிநீ வித்³யா ஸர்வப⁴ர்த்ரீ க்ஷரா(அ)க்ஷரா ।
ஹிரண்யவர்ணா ஹரிணீ ஸர்வோபத்³ரவநாஶிநீ ॥ 52 ॥

கைவல்யபத³வீரேகா² ஸூர்யமண்ட³லஸம்ஸ்தி²தா ।
ஸோமமண்ட³லமத்⁴யஸ்தா² வஹ்நிமண்ட³லஸம்ஸ்தி²தா ॥ 53 ॥

வாயுமண்ட³லமத்⁴யஸ்தா² வ்யோமமண்ட³லஸம்ஸ்தி²தா ।
சக்ரிகா சக்ரமத்⁴யஸ்தா² சக்ரமார்க³ப்ரவர்திநீ ॥ 54 ॥

கோகிலாகுலசக்ரேஶா பக்ஷதி꞉ பங்க்திபாவநீ ।
ஸர்வஸித்³தா⁴ந்தமார்க³ஸ்தா² ஷட்³வர்ணாவரவர்ஜிதா ॥ 55 ॥

ஶரருத்³ரஹரா ஹந்த்ரீ ஸர்வஸம்ஹாரகாரிணீ ।
புருஷா பௌருஷீ துஷ்டிஸ்ஸர்வதந்த்ரப்ரஸூதிகா ॥ 56 ॥

அர்த⁴நாரீஶ்வரீ தே³வீ ஸர்வவித்³யாப்ரதா³யிநீ ।
பா⁴ர்க³வீ யாஜுஷீவித்³யா ஸர்வோபநிஷதா³ஸ்தி²தா ॥ 57 ॥ [பூ⁴ஜுஷீவித்³யா]

வ்யோமகேஶாகி²லப்ராணா பஞ்சகோஶவிளக்ஷணா ।
பஞ்சகோஶாத்மிகா ப்ரத்யக்பஞ்சப்³ரஹ்மாத்மிகா ஶிவா ॥ 58 ॥

ஜக³ஜ்ஜராஜநித்ரீ ச பஞ்சகர்மப்ரஸூதிகா ।
வாக்³தே³வ்யாப⁴ரணாகாரா ஸர்வகாம்யஸ்தி²தாஸ்தி²தி꞉ ॥ 59 ॥

அஷ்டாத³ஶசதுஷ்ஷஷ்டிபீடி²கா வித்³யயாயுதா ।
காளிகாகர்ஷணஶ்யாமா யக்ஷிணீ கிந்நரேஶ்வரீ ॥ 60 ॥

கேதகீ மல்லிகா(அ)ஶோகா வாராஹீ த⁴ரணீ த்⁴ருவா ।
நாரஸிம்ஹீ மஹோக்³ராஸ்யா ப⁴க்தாநாமார்திநாஶிநீ ॥ 61 ॥

அந்தர்ப³லா ஸ்தி²ரா லக்ஷ்மீர்ஜராமரணநாஶிநீ ।
ஶ்ரீரஞ்ஜிதா மஹாகாயா ஸோமஸூர்யாக்³நிலோசநா ॥ 62 ॥

அதி³திர்தே³வமாதா ச அஷ்டபுத்ரா(அ)ஷ்டயோகி³நீ ।
அஷ்டப்ரக்ருதிரஷ்டாஷ்டவிப்⁴ராஜத்³விக்ருதாக்ருதி꞉ ॥ 63 ॥

து³ர்பி⁴க்ஷத்⁴வம்ஸிநீ தே³வீ ஸீதா ஸத்யா ச ருக்மிணீ ।
க்²யாதிஜா பா⁴ர்க³வீ தே³வீ தே³வயோநிஸ்தபஸ்விநீ ॥ 64 ॥

ஶாகம்ப⁴ரீ மஹாஶோணா க³ருடோ³பரிஸம்ஸ்தி²தா ।
ஸிம்ஹகா³ வ்யாக்⁴ரகா³ தே³வீ வாயுகா³ ச மஹாத்³ரிகா³ ॥ 65 ॥

அகாராதி³க்ஷகாராந்தா ஸர்வவித்³யாதி⁴தே³வதா ।
மந்த்ரவ்யாக்²யாநநிபுணா ஜ்யோதிஶ்ஶாஸ்த்ரைகலோசநா ॥ 66 ॥

இடா³பிங்க³ளிகாமத்⁴யஸுஷும்நா க்³ரந்தி²பே⁴தி³நீ ।
காலசக்ராஶ்ரயோபேதா காலசக்ரஸ்வரூபிணீ ॥ 67 ॥

வைஶாரதீ³ மதிஶ்ரேஷ்டா² வரிஷ்டா² ஸர்வதீ³பிகா ।
வைநாயகீ வராரோஹா ஶ்ரோணிவேலா ப³ஹிர்வலி꞉ ॥ 68 ॥

ஜம்பி⁴நீ ஜ்ரும்பி⁴ணீ ஜம்ப⁴காரிணீ க³ணகாரிகா । [ஜ்ரும்ப⁴]
ஶரணீ சக்ரிகா(அ)நந்தா ஸர்வவ்யாதி⁴சிகித்ஸகீ ॥ 69 ॥

தே³வகீ தே³வஸங்காஶா வாரிதி⁴꞉ கருணாகரா ।
ஶர்வரீ ஸர்வஸம்பந்நா ஸர்வபாபப்ரப⁴ஞ்ஜநீ ॥ 70 ॥

ஏகமாத்ரா த்³விமாத்ரா ச த்ரிமாத்ரா ச ததா² பரா ।
அர்த⁴மாத்ரா பரா ஸூக்ஷ்மா ஸூக்ஷ்மார்தா²ர்த²பரா(அ)பரா ॥ 71 ॥

ஏகவீரா விஶேஷாக்²யா ஷஷ்டீ²தே³வீ மநஸ்விநீ ।
நைஷ்கர்ம்யா நிஷ்களாலோகா ஜ்ஞாநகர்மாதி⁴கா கு³ணா ॥ 72 ॥

ஸப³ந்த்⁴வாநந்த³ஸந்தோ³ஹா வ்யோமாகாரா(அ)நிரூபிதா ।
க³த்³யபத்³யாத்மிகா வாணீ ஸர்வாலங்காரஸம்யுதா ॥ 73 ॥

ஸாது⁴ப³ந்த⁴பத³ந்யாஸா ஸர்வௌகோ க⁴டிகாவளி꞉ ।
ஷட்கர்மா கர்கஶாகாரா ஸர்வகர்மவிவர்ஜிதா ॥ 74 ॥

ஆதி³த்யவர்ணா சாபர்ணா காமிநீ வரரூபிணீ ।
ப்³ரஹ்மாணீ ப்³ரஹ்மஸந்தாநா வேத³வாகீ³ஶ்வரீ ஶிவா ॥ 75 ॥

புராணந்யாயமீமாம்ஸாத⁴ர்மஶாஸ்த்ராக³மஶ்ருதா ।
ஸத்³யோவேத³வதீ ஸர்வா ஹம்ஸீ வித்³யாதி⁴தே³வதா ॥ 76 ॥

விஶ்வேஶ்வரீ ஜக³த்³தா⁴த்ரீ விஶ்வநிர்மாணகாரிணீ ।
வைதி³கீ வேத³ரூபா ச காளிகா காலரூபிணீ ॥ 77 ॥

நாராயணீ மஹாதே³வீ ஸர்வதத்த்வப்ரவர்திநீ ।
ஹிரண்யவர்ணரூபா ச ஹிரண்யபத³ஸம்ப⁴வா ॥ 78 ॥

கைவல்யபத³வீ புண்யா கைவல்யஜ்ஞாநலக்ஷிதா ।
ப்³ரஹ்மஸம்பத்திரூபா ச ப்³ரஹ்மஸம்பத்திகாரிணீ ॥ 79 ॥

வாருணீ வாருணாராத்⁴யா ஸர்வகர்மப்ரவர்திநீ ।
ஏகாக்ஷரபரா(ஆ)யுக்தா ஸர்வதா³ரித்³ர்யப⁴ஞ்ஜிநீ ॥ 80 ॥

பாஶாங்குஶாந்விதா தி³வ்யா வீணாவ்யாக்²யாக்ஷஸூத்ரப்⁴ருத் ।
ஏகமூர்திஸ்த்ரயீமூர்திர்மது⁴கைடப⁴ப⁴ஞ்ஜிநீ ॥ 81 ॥

ஸாங்க்²யா ஸாங்க்²யவதீ ஜ்வாலா ஜ்வலந்தீ காமரூபிணீ ।
ஜாக்³ரந்தீ ஸர்வஸம்பத்திஸ்ஸுஷுப்தா ஸ்வேஷ்டதா³யிநீ ॥ 82 ॥

கபாலிநீ மஹாத³ம்ஷ்ட்ரா ப்⁴ருகுடீகுடிலாநநா ।
ஸர்வாவாஸா ஸுவாஸா ச ப்³ருஹத்யஷ்டிஶ்ச ஶக்வரீ ॥ 83 ॥

ச²ந்தோ³க³ணப்ரதிஷ்டா² ச கல்மாஷீ கருணாத்மிகா ।
சக்ஷுஷ்மதீ மஹாகோ⁴ஷா க²ட்³க³சர்மத⁴ரா(அ)ஶநி꞉ ॥ 84 ॥

ஶில்பவைசித்ர்யவித்³யோதா ஸர்வதோப⁴த்³ரவாஸிநீ ।
அசிந்த்யலக்ஷணாகாரா ஸூத்ரபா⁴ஷ்யநிப³ந்த⁴நா ॥ 85 ॥

ஸர்வவேதா³ர்த²ஸம்பத்தி꞉ ஸர்வஶாஸ்த்ரார்த²மாத்ருகா ।
அகாராதி³க்ஷகாராந்தஸர்வவர்ணக்ருதஸ்த²லா ॥ 86 ॥

ஸர்வலக்ஷ்மீஸ்ஸதா³நந்தா³ ஸாரவித்³யா ஸதா³ஶிவா ।
ஸர்வஜ்ஞா ஸர்வஶக்திஶ்ச கே²சரீரூபகோ³ச்ச்²ரிதா ॥ 87 ॥

அணிமாதி³கு³ணோபேதா பரா காஷ்டா² பரா க³தி꞉ ।
ஹம்ஸயுக்தவிமாநஸ்தா² ஹம்ஸாரூடா⁴ ஶஶிப்ரபா⁴ ॥ 88 ॥

ப⁴வாநீ வாஸநாஶக்திராக்ருதிஸ்தா²கி²லா(அ)கி²லா ।
தந்த்ரஹேதுர்விசித்ராங்கீ³ வ்யோமக³ங்கா³விநோதி³நீ ॥ 89 ॥

வர்ஷா ச வார்ஷிகா சைவ ருக்³யஜுஸ்ஸாமரூபிணீ ।
மஹாநதீ³ நதீ³புண்யா(அ)க³ண்யபுண்யகு³ணக்ரியா ॥ 90 ॥

ஸமாதி⁴க³தலப்⁴யார்தா² ஶ்ரோதவ்யா ஸ்வப்ரியா க்⁴ருணா ।
நாமாக்ஷரபரா தே³வீ உபஸர்க³நகா²ஞ்சிதா ॥ 91 ॥

நிபாதோருத்³வயீஜங்கா⁴ மாத்ருகா மந்த்ரரூபிணீ ।
ஆஸீநா ச ஶயாநா ச திஷ்ட²ந்தீ தா⁴வநாதி⁴கா ॥ 92 ॥

லக்ஷ்யலக்ஷணயோகா³ட்⁴யா தாத்³ரூப்யக³ணநாக்ருதி꞉ ।
ஸைகரூபா நைகரூபா ஸேந்து³ரூபா ததா³க்ருதி꞉ ॥ 93 ॥

ஸமாஸதத்³தி⁴தாகாரா விப⁴க்திவசநாத்மிகா ।
ஸ்வாஹாகாரா ஸ்வதா⁴காரா ஶ்ரீபத்யர்தா⁴ங்க³நந்தி³நீ ॥ 94 ॥

க³ம்பீ⁴ரா க³ஹநா கு³ஹ்யா யோநிலிங்கா³ர்த⁴தா⁴ரிணீ ।
ஶேஷவாஸுகிஸம்ஸேவ்யா சபலா வரவர்ணிநீ ॥ 95 ॥

காருண்யாகாரஸம்பத்தி꞉ கீலக்ருந்மந்த்ரகீலிகா ।
ஶக்திபீ³ஜாத்மிகா ஸர்வமந்த்ரேஷ்டா(அ)க்ஷயகாமநா ॥ 96 ॥

ஆக்³நேயீ பார்தி²வா ஆப்யா வாயவ்யா வ்யோமகேதநா ।
ஸத்யஜ்ஞாநாத்மிகா நந்தா³ ப்³ராஹ்மீ ப்³ரஹ்ம ஸநாதநீ ॥ 97 ॥

அவித்³யாவாஸநா மாயாப்ரக்ருதிஸ்ஸர்வமோஹிநீ ।
ஶக்திர்தா⁴ரணஶக்திஶ்ச சித³சிச்ச²க்தியோகி³நீ ॥ 98 ॥

வக்த்ராருணா மஹாமாயா மரீசிர்மத³மர்தி³நீ ।
விராட் ஸ்வாஹா ஸ்வதா⁴ ஶுத்³தா⁴ நிருபாஸ்திஸ்ஸுப⁴க்திகா³ ॥ 99 ॥

நிரூபிதாத்³வயீ வித்³யா நித்யாநித்யஸ்வரூபிணீ ।
வைராஜமார்க³ஸஞ்சாரா ஸர்வஸத்பத²த³ர்ஶிநீ ॥ 100 ॥

ஜாலந்த⁴ரீ ம்ருடா³நீ ச ப⁴வாநீ ப⁴வப⁴ஞ்ஜநீ ।
த்ரைகாளிகஜ்ஞாநதந்துஸ்த்ரிகாலஜ்ஞாநதா³யிநீ ॥ 101 ॥

நாதா³தீதா ஸ்ம்ருதி꞉ ப்ரஜ்ஞா தா⁴த்ரீரூபா த்ரிபுஷ்கரா ।
பராஜிதா விதா⁴நஜ்ஞா விஶேஷிதகு³ணாத்மிகா ॥ 102 ॥

ஹிரண்யகேஶிநீ ஹேமப்³ரஹ்மஸூத்ரவிசக்ஷணா ।
அஸங்க்²யேயபரார்தா⁴ந்தஸ்வரவ்யஞ்ஜநவைக²ரீ ॥ 103 ॥

மது⁴ஜிஹ்வா மது⁴மதீ மது⁴மாஸோத³யா மது⁴꞉ ।
மாத⁴வீ ச மஹாபா⁴கா³ மேக⁴க³ம்பீ⁴ரநிஸ்வநா ॥ 104 ॥

ப்³ரஹ்மவிஷ்ணுமஹேஶாதி³ஜ்ஞாதவ்யார்த²விஶேஷகா³ ।
நாபௌ⁴ வஹ்நிஶிகா²காரா லலாடே சந்த்³ரஸந்நிபா⁴ ॥ 105 ॥

ப்⁴ரூமத்⁴யே பா⁴ஸ்கராகாரா ஸர்வதாராக்ருதிர்ஹ்ருதி³ ।
க்ருத்திகாதி³ப⁴ரண்யந்தநக்ஷத்ரேஷ்ட்யர்சிதோத³யா ॥ 106 ॥

க்³ரஹவித்³யாத்மிகா ஜ்யோதிர்ஜ்யோதிர்விந்மதிஜீவிகா ।
ப்³ரஹ்மாண்ட³க³ர்பி⁴ணீ பா³லா ஸப்தாவரணதே³வதா ॥ 107 ॥

வைராஜோத்தமஸாம்ராஜ்யா குமாரகுஶலோத³யா ।
ப³க³ளா ப்⁴ரமராம்பா³ ச ஶிவதூ³தீ ஶிவாத்மிகா ॥ 108 ॥

மேருவிந்த்⁴யாதி³ஸம்ஸ்தா²நா காஶ்மீரபுரவாஸிநீ ।
யோக³நித்³ரா மஹாநித்³ரா விநித்³ரா ராக்ஷஸாஶ்ரிதா ॥ 109 ॥

ஸுவர்ணதா³ மஹாக³ங்கா³ பஞ்சாக்²யா பஞ்சஸம்ஹதி꞉ ।
ஸுப்ரஜாதா ஸுவீரா ச ஸுபோஷா ஸுபதிஶ்ஶிவா ॥ 110 ॥

ஸுக்³ருஹா ரக்தபீ³ஜாந்தா ஹதகந்த³ர்பஜீவிகா ।
ஸமுத்³ரவ்யோமமத்⁴யஸ்தா² ஸமபி³ந்து³ஸமாஶ்ரயா ॥ 111 ॥

ஸௌபா⁴க்³யரஸஜீவாதுஸ்ஸாராஸாரவிவேகத்³ருக் ।
த்ரிவல்யாதி³ஸுபுஷ்டாங்கா³ பா⁴ரதீ ப⁴ரதாஶ்ரிதா ॥ 112 ॥

நாத³ப்³ரஹ்மமயீவித்³யா ஜ்ஞாநப்³ரஹ்மமயீபரா ।
ப்³ரஹ்மநாடீ³ நிருக்திஶ்ச ப்³ரஹ்மகைவல்யஸாத⁴நம் ॥ 113 ॥

காளிகேயமஹோதா³ரவீர்யவிக்ரமரூபிணீ ।
ப³ட³பா³க்³நிஶிகா²வக்த்ரா மஹாகப³லதர்பணா ॥ 114 ॥

மஹாபூ⁴தா மஹாத³ர்பா மஹாஸாரா மஹாக்ரது꞉ ।
பஞ்ஜபூ⁴தமஹாக்³ராஸா பஞ்சபூ⁴தாதி⁴தே³வதா ॥ 115 ॥

ஸர்வப்ரமாணா ஸம்பத்தி꞉ ஸர்வரோக³ப்ரதிக்ரியா ।
ப்³ரஹ்மாண்டா³ந்தர்ப³ஹிர்வ்யாப்தா விஷ்ணுவக்ஷோவிபூ⁴ஷிணீ ॥ 116 ॥

ஶாங்கரீ விதி⁴வக்த்ரஸ்தா² ப்ரவரா வரஹேதுகீ ।
ஹேமமாலா ஶிகா²மாலா த்ரிஶிகா² பஞ்சலோசநா ॥ 117 ॥ [பஞ்சமோசநா]

ஸர்வாக³மஸதா³சாரமர்யாதா³ யாதுப⁴ஞ்ஜநீ ।
புண்யஶ்லோகப்ரப³ந்தா⁴ட்⁴யா ஸர்வாந்தர்யாமிரூபிணீ ॥ 118 ॥

ஸாமகா³நஸமாராத்⁴யா ஶ்ரோத்ரகர்ணரஸாயநம் ।
ஜீவலோகைகஜீவாதுர்ப⁴த்³ரோதா³ரவிளோகநா ॥ 119 ॥

தடித்கோடிலஸத்காந்திஸ்தருணீ ஹரிஸுந்த³ரீ ।
மீநநேத்ரா ச ஸேந்த்³ராக்ஷீ விஶாலாக்ஷீ ஸுமங்க³ளா ॥ 120 ॥

ஸர்வமங்க³ளஸம்பந்நா ஸாக்ஷாந்மங்க³ளதே³வதா ।
தே³ஹஹ்ருத்³தீ³பிகா தீ³ப்திர்ஜிஹ்மபாபப்ரணாஶிநீ ॥ 121 ॥

அர்த⁴சந்த்³ரோல்லஸத்³த³ம்ஷ்ட்ரா யஜ்ஞவாடீவிளாஸிநீ ।
மஹாது³ர்கா³ மஹோத்ஸாஹா மஹாதே³வப³லோத³யா ॥ 122 ॥

டா³கிநீட்³யா ஶாகிநீட்³யா ஸாகிநீட்³யா ஸமஸ்தஜுட் ।
நிரங்குஶா நாகிவந்த்³யா ஷடா³தா⁴ராதி⁴தே³வதா ॥ 123 ॥

பு⁴வநஜ்ஞாநிநி꞉ஶ்ரேணீ பு⁴வநாகாரவல்லரீ ।
ஶாஶ்வதீ ஶாஶ்வதாகாரா லோகாநுக்³ரஹகாரிணீ ॥ 124 ॥

ஸாரஸீ மாநஸீ ஹம்ஸீ ஹம்ஸலோகப்ரதா³யிநீ ।
சிந்முத்³ராளங்க்ருதகரா கோடிஸூர்யஸமப்ரபா⁴ ॥ 125 ॥

ஸுக²ப்ராணிஶிரோரேகா² ஸத³த்³ருஷ்டப்ரதா³யிநீ ।
ஸர்வஸாங்கர்யதோ³ஷக்⁴நீ க்³ரஹோபத்³ரவநாஶிநீ ॥ 126 ॥

க்ஷுத்³ரஜந்துப⁴யக்⁴நீ ச விஷரோகா³தி³ப⁴ஞ்ஜநீ ।
ஸதா³ஶாந்தா ஸதா³ஶுத்³தா⁴ க்³ருஹச்சி²த்³ரநிவாரிணீ ॥ 127 ॥

கலிதோ³ஷப்ரஶமநீ கோலாஹலபுரஸ்தி²தா ।
கௌ³ரீ லாக்ஷணிகீ முக்²யா ஜக⁴ந்யாக்ருதிவர்ஜிதா ॥ 128 ॥

மாயா வித்³யா மூலபூ⁴தா வாஸவீ விஷ்ணுசேதநா ।
வாதி³நீ வஸுரூபா ச வஸுரத்நபரிச்ச²தா³ ॥ 129 ॥

சா²ந்த³ஸீ சந்த்³ரஹ்ருத³யா மந்த்ரஸ்வச்ச²ந்த³பை⁴ரவீ ।
வநமாலா வைஜயந்தீ பஞ்சதி³வ்யாயுதா⁴த்மிகா ॥ 130 ॥

பீதாம்ப³ரமயீ சஞ்சத்கௌஸ்துபா⁴ ஹரிகாமிநீ ।
நித்யா தத்²யா ரமா ராமா ரமணீ ம்ருத்யுப⁴ஞ்ஜிநீ ॥ 131 ॥

ஜ்யேஷ்டா² காஷ்டா² த⁴நிஷ்டா²ந்தா ஶராங்கீ³ நிர்கு³ணப்ரியா ।
மைத்ரேயா மித்ரவிந்தா³ ச ஶேஷ்யஶேஷகலாஶயா ॥ 132 ॥

வாராணஸீவாஸரதா சார்யாவர்தஜநஸ்துதா ।
ஜக³து³த்பத்திஸம்ஸ்தா²நஸம்ஹாரத்ரயகாரணம் ॥ 133 ॥

த்வமம்ப³ விஷ்ணுஸர்வஸ்வம் நமஸ்தே(அ)ஸ்து மஹேஶ்வரி ।
நமஸ்தே ஸர்வலோகாநாம் ஜநந்யை புண்யமூர்தயே ॥ 134 ॥

ஸித்³த⁴ளக்ஷ்மீர்மஹாகாளி மஹாலக்ஷ்மி நமோ(அ)ஸ்து தே ।
ஸத்³யோஜாதாதி³பஞ்சாக்³நிரூபா பஞ்சகபஞ்சகம் ॥ 135 ॥

யந்த்ரளக்ஷ்மீர்ப⁴வத்யாதி³ராத்³யாத்³யே தே நமோ நம꞉ ।
ஸ்ருஷ்ட்யாதி³காரணாகாரவிததே தோ³ஷவர்ஜிதே ॥ 136 ॥

ஜக³ள்லக்ஷ்மீர்ஜக³ந்மாதர்விஷ்ணுபத்நி நமோ(அ)ஸ்து தே ।
நவகோடிமஹாஶக்திஸமுபாஸ்யபதா³ம்பு³ஜே ॥ 137 ॥

கநத்ஸௌவர்ணரத்நாட்⁴யே ஸர்வாப⁴ரணபூ⁴ஷிதே ।
அநந்தநித்யமஹிஷீ ப்ரபஞ்சேஶ்வரநாயகி ॥ 138 ॥

அத்யுச்ச்²ரிதபதா³ந்தஸ்தே² பரமவ்யோமநாயகி ।
நாகப்ருஷ்ட²க³தாராத்⁴யே விஷ்ணுலோகவிளாஸிநி ॥ 139 ॥

வைகுண்ட²ராஜமஹிஷி ஶ்ரீரங்க³நக³ராஶ்ரிதே ।
ரங்க³நாயகி பூ⁴புத்ரி க்ருஷ்ணே வரத³வல்லபே⁴ ॥ 140 ॥

கோடிப்³ரஹ்மாதி³ஸம்ஸேவ்யே கோடிருத்³ராதி³கீர்திதே ।
மாதுலுங்க³மயம் கே²டம் ஸௌவர்ணசஷகம் ததா² ॥ 141 ॥

பத்³மத்³வயம் பூர்ணகும்ப⁴ம் கீரம் ச வரதா³ப⁴யே ।
பாஶமங்குஶகம் ஶங்க²ம் சக்ரம் ஶூலம் க்ருபாணிகாம் ॥ 142 ॥

த⁴நுர்பா³ணௌ சாக்ஷமாலாம் சிந்முத்³ராமபி பி³ப்⁴ரதீ ।
அஷ்டாத³ஶபு⁴ஜே லக்ஷ்மீர்மஹாஷ்டாத³ஶபீட²கே³ ॥ 143 ॥

பூ⁴மிநீலாதி³ஸம்ஸேவ்யே ஸ்வாமிசித்தாநுவர்திநி ।
பத்³மே பத்³மாலயே பத்³மி பூர்ணகும்பா⁴பி⁴ஷேசிதே ॥ 144 ॥

இந்தி³ரேந்தி³ந்தி³ராபா⁴க்ஷி க்ஷீரஸாக³ரகந்யகே ।
பா⁴ர்க³வி த்வம் ஸ்வதந்த்ரேச்சா² வஶீக்ருதஜக³த்பதி꞉ ॥ 145 ॥

மங்க³ளம் மங்க³ளாநாம் த்வம் தே³வதாநாம் ச தே³வதா ।
த்வமுத்தமோத்தமாநாம் ச த்வம் ஶ்ரேய꞉ பரமாம்ருதம் ॥ 146 ॥

த⁴நதா⁴ந்யாபி⁴வ்ருத்³தி⁴ஶ்ச ஸார்வபௌ⁴மஸுகோ²ச்ச்²ரயா ।
ஆந்தோ³ளிகாதி³ஸௌபா⁴க்³யம் மத்தேபா⁴தி³மஹோத³ய꞉ ॥ 147 ॥

புத்ரபௌத்ராபி⁴வ்ருத்³தி⁴ஶ்ச வித்³யாபோ⁴க³ப³லாதி³கம் ।
ஆயுராரோக்³யஸம்பத்திரஷ்டைஶ்வர்யம் த்வமேவ ஹி ॥ 148 ॥

பரமேஶவிபூ⁴திஶ்ச ஸூக்ஷ்மாத்ஸூக்ஷ்மதரா க³தி꞉ ।
ஸத³யாபாங்க³ஸந்த³த்தப்³ரஹ்மேந்த்³ராதி³பத³ஸ்தி²தி꞉ ॥ 149 ॥

அவ்யாஹதமஹாபா⁴க்³யம் த்வமேவாக்ஷோப்⁴யவிக்ரம꞉ ।
ஸமந்வயஶ்ச வேதா³நாமவிரோத⁴ஸ்த்வமேவ ஹி ॥ 150 ॥

நி꞉ஶ்ரேயஸபத³ப்ராப்திஸாத⁴நம் ப²லமேவ ச ।
ஶ்ரீமந்த்ரராஜராஜ்ஞீ ச ஶ்ரீவித்³யா க்ஷேமகாரிணீ ॥ 151 ॥

ஶ்ரீம்பீ³ஜஜபஸந்துஷ்டா ஐம் ஹ்ரீம் ஶ்ரீம் பீ³ஜபாலிகா ।
ப்ரபத்திமார்க³ஸுலபா⁴ விஷ்ணுப்ரத²மகிங்கரீ ॥ 152 ॥

க்லீங்காரார்த²ஸவித்ரீ ச ஸௌமங்க³ல்யாதி⁴தே³வதா ।
ஶ்ரீஷோட³ஶாக்ஷரீவித்³யா ஶ்ரீயந்த்ரபுரவாஸிநீ ॥ 153 ॥

ஸர்வமங்க³ளமாங்க³ல்யே ஶிவே ஸர்வார்த²ஸாதி⁴கே ।
ஶரண்யே த்ர்யம்ப³கே தே³வி நாராயணி நமோ(அ)ஸ்து தே ॥ 154 ॥

புந꞉ புநர்நமஸ்தே(அ)ஸ்து ஸாஷ்டாங்க³மயுதம் புந꞉ ।

ஸநத்குமார உவாச ।

ஏவம் ஸ்துதா மஹாலக்ஷ்மீர்ப்³ரஹ்மருத்³ராதி³பி⁴ஸ்ஸுரை꞉ ।
நமத்³பி⁴ரார்தைர்தீ³நைஶ்ச நிஸ்ஸத்வைர்போ⁴க³வர்ஜிதை꞉ ॥ 1 ॥

ஜ்யேஷ்டா²ஜுஷ்டைஶ்ச நி꞉ஶ்ரீகைஸ்ஸம்ஸாராத்ஸ்வபராயணை꞉ ।
விஷ்ணுபத்நீ த³தௌ³ தேஷாம் த³ர்ஶநம் த்³ருஷ்டிதர்பணம் ॥ 2 ॥

ஶரத்பூர்ணேந்து³கோட்யாப⁴த⁴வளாபாங்க³வீக்ஷணை꞉ ।
ஸர்வாந் ஸத்வஸமாவிஷ்டாம்ஶ்சக்ரே ஹ்ருஷ்டா வரம் த³தௌ³ ॥ 3 ॥

மஹாலக்ஷ்மீருவாச ।

நாம்நாம் ஸாஷ்டஸஹஸ்ரம் மே ப்ரமாதா³த்³வாபி யஸ்ஸக்ருத் ।
கீர்தயேத்தத்குலே ஸத்யம் வஸாம்யாசந்த்³ரதாரகம் ॥ 4 ॥

கிம் புநர்நியமாஜ்ஜப்துர்மதே³கஶரணஸ்ய ச ।
மாத்ருவத்ஸாநுகம்பாஹம் போஷகீ ஸ்யாமஹர்நிஶம் ॥ 5 ॥

மந்நாம ஸ்துவதாம் லோகே து³ர்லப⁴ம் நாஸ்தி சிந்திதம் ।
மத்ப்ரஸாதே³ந ஸர்வே(அ)பி ஸ்வஸ்வேஷ்டார்த²மவாப்ஸ்யத² ॥ 6 ॥

லுப்தவைஷ்ணவத⁴ர்மஸ்ய மத்³வ்ரதேஷ்வவகீர்ணிந꞉ ।
ப⁴க்திப்ரபத்திஹீநஸ்ய வந்த்³யோ நாம்நாம் ஜபோ(அ)பி மே ॥ 7 ॥

தஸ்மாத³வஶ்யம் தைர்தோ³ஷைர்விஹீந꞉ பாபவர்ஜித꞉ ।
ஜபேத்ஸாஷ்டஸஹஸ்ரம் மே நாம்நாம் ப்ரத்யஹமாத³ராத் ॥ 8 ॥

ஸாக்ஷாத³ளக்ஷ்மீபுத்ரோ(அ)பி து³ர்பா⁴க்³யோ(அ)ப்யலஸோ(அ)பி வா ।
அப்ரயத்நோ(அ)பி மூடோ⁴(அ)பி விகல꞉ பதிதோ(அ)பி ச ॥ 9 ॥

அவஶ்யம் ப்ராப்நுயாத்³பா⁴க்³யம் மத்ப்ரஸாதே³ந கேவலம் ।
ஸ்ப்ருஹேயமசிராத்³தே³வா வரதா³நாய ஜாபிந꞉ ।
த³தா³மி ஸர்வமிஷ்டார்த²ம் லக்ஷ்மீதி ஸ்மரதாம் த்⁴ருவம் ॥ 10 ॥

ஸநத்குமார உவாச ।

இத்யுக்த்வா(அ)ந்தர்த³தே⁴ லக்ஷ்மீர்வைஷ்ணவீ ப⁴க³வத்கலா ।
இஷ்டாபூர்தம் ச ஸுக்ருதம் பா⁴க³தே⁴யம் ச சிந்திதம் ॥ 11 ॥

ஸ்வம் ஸ்வம் ஸ்தா²நம் ச போ⁴க³ம் ச விஜயம் லேபி⁴ரே ஸுரா꞉ ।
ததே³தத்³ப்ரவதா³ம்யத்³ய லக்ஷ்மீநாமஸஹஸ்ரகம் ।
யோகி³ந꞉ பட²த க்ஷிப்ரம் சிந்திதார்தா²நவாப்ஸ்யத² ॥ 12 ॥

கா³ர்க்³ய உவாச ।

ஸநத்குமாரயோகீ³ந்த்³ர இத்யுக்த்வா ஸ த³யாநிதி⁴꞉ ।
அநுக்³ருஹ்ய யயௌ க்ஷிப்ரம் தாம்ஶ்ச த்³வாத³ஶயோகி³ந꞉ ॥ 13 ॥

தஸ்மாதே³தத்³ரஹஸ்யம் ச கோ³ப்யம் ஜப்யம் ப்ரயத்நத꞉ ।
அஷ்டம்யாம் ச சதுர்த³ஶ்யாம் நவம்யாம் ப்⁴ருகு³வாஸரே ॥ 14 ॥

பௌர்ணமாஸ்யாமமாயாம் ச பர்வகாலே விஶேஷத꞉ ।
ஜபேத்³வா நித்யகார்யேஷு ஸர்வாந்காமாநவாப்நுயாத் ॥ 15 ॥

இதி ஶ்ரீஸ்கந்த³புராணே ஸநத்குமாரஸம்ஹிதாயாம் லக்ஷ்மீஸஹஸ்ரநாமஸ்தோத்ரம் ஸம்பூர்ணம் ॥

———–

ஸ்ரீ லக்ஷ்மீ அஷ்டோத்தர ஶதனாம ஸ்தோத்ரம்

தேவ்யுவாச
தேவதேவ! மஹாதேவ! த்ரிகாலஜ்ஞ! மஹேஶ்வர!
கருணாகர தேவேஶ! பக்தானுக்ரஹகாரக! ||
அஷ்டோத்தர ஶதம் லக்ஷ்ம்யாஃ ஶ்ரோதுமிச்சாமி தத்த்வதஃ ||

ஈஶ்வர உவாச
தேவி! ஸாது மஹாபாகே மஹாபாக்ய ப்ரதாயகம் |
ஸர்வைஶ்வர்யகரம் புண்யம் ஸர்வபாப ப்ரணாஶனம் ||
ஸர்வதாரித்ர்ய ஶமனம் ஶ்ரவணாத்புக்தி முக்திதம் |
ராஜவஶ்யகரம் திவ்யம் குஹ்யாத்-குஹ்யதரம் பரம் ||
துர்லபம் ஸர்வதேவானாம் சதுஷ்ஷஷ்டி களாஸ்பதம் |
பத்மாதீனாம் வராம்தானாம் னிதீனாம் னித்யதாயகம் ||
ஸமஸ்த தேவ ஸம்ஸேவ்யம் அணிமாத்யஷ்ட ஸித்திதம் |
கிமத்ர பஹுனோக்தேன தேவீ ப்ரத்யக்ஷதாயகம் ||
தவ ப்ரீத்யாத்ய வக்ஷ்யாமி ஸமாஹிதமனாஶ்ஶ்றுணு |
அஷ்டோத்தர ஶதஸ்யாஸ்ய மஹாலக்ஷ்மிஸ்து தேவதா ||
க்லீம் பீஜ பதமித்யுக்தம் ஶக்திஸ்து புவனேஶ்வரீ |
அம்கன்யாஸஃ கரன்யாஸஃ ஸ இத்யாதி ப்ரகீர்திதஃ ||

த்யானம்
வம்தே பத்மகராம் ப்ரஸன்னவதனாம் ஸௌபாக்யதாம் பாக்யதாம்
ஹஸ்தாப்யாமபயப்ரதாம் மணிகணைஃ னானாவிதைஃ பூஷிதாம் |
பக்தாபீஷ்ட பலப்ரதாம் ஹரிஹர ப்ரஹ்மாதிபிஸ்ஸேவிதாம்
பார்ஶ்வே பம்கஜ ஶம்கபத்ம னிதிபிஃ யுக்தாம் ஸதா ஶக்திபிஃ ||

ஸரஸிஜ னயனே ஸரோஜஹஸ்தே தவள தராம்ஶுக கம்தமால்ய ஶோபே |
பகவதி ஹரிவல்லபே மனோஜ்ஞே த்ரிபுவன பூதிகரி ப்ரஸீதமஹ்யம் ||

ஓம்
ப்ரக்றுதிம், விக்றுதிம், வித்யாம், ஸர்வபூத ஹிதப்ரதாம் |
ஶ்ரத்தாம், விபூதிம், ஸுரபிம், னமாமி பரமாத்மிகாம் || 1 ||

வாசம், பத்மாலயாம், பத்மாம், ஶுசிம், ஸ்வாஹாம், ஸ்வதாம், ஸுதாம் |
தன்யாம், ஹிரண்யயீம், லக்ஷ்மீம், னித்யபுஷ்டாம், விபாவரீம் || 2 ||

அதிதிம் ச, திதிம், தீப்தாம், வஸுதாம், வஸுதாரிணீம் |
னமாமி கமலாம், காம்தாம், க்ஷமாம், க்ஷீரோத ஸம்பவாம் || 3 ||

அனுக்ரஹபராம், புத்திம், அனகாம், ஹரிவல்லபாம் |
அஶோகா,மம்றுதாம் தீப்தாம், லோகஶோக வினாஶினீம் || 4 ||

னமாமி தர்மனிலயாம், கருணாம், லோகமாதரம் |
பத்மப்ரியாம், பத்மஹஸ்தாம், பத்மாக்ஷீம், பத்மஸும்தரீம் || 5 ||

பத்மோத்பவாம், பத்மமுகீம், பத்மனாபப்ரியாம், ரமாம் |
பத்மமாலாதராம், தேவீம், பத்மினீம், பத்மகம்தினீம் || 6 ||

புண்யகம்தாம், ஸுப்ரஸன்னாம், ப்ரஸாதாபிமுகீம், ப்ரபாம் |
னமாமி சம்த்ரவதனாம், சம்த்ராம், சம்த்ரஸஹோதரீம் || 7 ||

சதுர்புஜாம், சம்த்ரரூபாம், இம்திரா,மிம்துஶீதலாம் |
ஆஹ்லாத ஜனனீம், புஷ்டிம், ஶிவாம், ஶிவகரீம், ஸதீம் || 8 ||

விமலாம், விஶ்வஜனனீம், துஷ்டிம், தாரித்ர்ய னாஶினீம் |
ப்ரீதி புஷ்கரிணீம், ஶாம்தாம், ஶுக்லமால்யாம்பராம், ஶ்ரியம் || 9 ||

பாஸ்கரீம், பில்வனிலயாம், வராரோஹாம், யஶஸ்வினீம் |
வஸும்தரா, முதாராம்காம், ஹரிணீம், ஹேமமாலினீம் || 10 ||

தனதான்யகரீம், ஸித்திம், ஸ்ரைணஸௌம்யாம், ஶுபப்ரதாம் |
ன்றுபவேஶ்ம கதானம்தாம், வரலக்ஷ்மீம், வஸுப்ரதாம் || 11 ||

ஶுபாம், ஹிரண்யப்ராகாராம், ஸமுத்ரதனயாம், ஜயாம் |
னமாமி மம்களாம் தேவீம், விஷ்ணு வக்ஷஃஸ்தல ஸ்திதாம் || 12 ||

விஷ்ணுபத்னீம், ப்ரஸன்னாக்ஷீம், னாராயண ஸமாஶ்ரிதாம் |
தாரித்ர்ய த்வம்ஸினீம், தேவீம், ஸர்வோபத்ரவ வாரிணீம் || 13 ||

னவதுர்காம், மஹாகாளீம், ப்ரஹ்ம விஷ்ணு ஶிவாத்மிகாம் |
த்ரிகாலஜ்ஞான ஸம்பன்னாம், னமாமி புவனேஶ்வரீம் || 14 ||

லக்ஷ்மீம் க்ஷீரஸமுத்ரராஜ தனயாம் ஶ்ரீரம்கதாமேஶ்வரீம் |
தாஸீபூத ஸமஸ்ததேவ வனிதாம் லோகைக தீபாம்குராம் ||
ஶ்ரீமன்மம்த கடாக்ஷ லப்த விபவத்-ப்ரஹ்மேம்த்ர கம்காதராம் |
த்வாம் த்ரைலோக்ய குடும்பினீம் ஸரஸிஜாம் வம்தே முகும்தப்ரியாம் || 15 ||

மாதர்னமாமி! கமலே! கமலாயதாக்ஷி!
ஶ்ரீ விஷ்ணு ஹ்றுத்-கமலவாஸினி! விஶ்வமாதஃ!
க்ஷீரோதஜே கமல கோமல கர்பகௌரி!
லக்ஷ்மீ! ப்ரஸீத ஸததம் ஸமதாம் ஶரண்யே || 16 ||

த்ரிகாலம் யோ ஜபேத் வித்வான் ஷண்மாஸம் விஜிதேம்த்ரியஃ |
தாரித்ர்ய த்வம்ஸனம் க்றுத்வா ஸர்வமாப்னோத்-யயத்னதஃ |
தேவீனாம ஸஹஸ்ரேஷு புண்யமஷ்டோத்தரம் ஶதம் |
யேன ஶ்ரிய மவாப்னோதி கோடிஜன்ம தரித்ரதஃ || 17 ||

ப்றுகுவாரே ஶதம் தீமான் படேத் வத்ஸரமாத்ரகம் |
அஷ்டைஶ்வர்ய மவாப்னோதி குபேர இவ பூதலே ||
தாரித்ர்ய மோசனம் னாம ஸ்தோத்ரமம்பாபரம் ஶதம் |
யேன ஶ்ரிய மவாப்னோதி கோடிஜன்ம தரித்ரதஃ || 18 ||

புக்த்வாது விபுலான் போகான் அம்தே ஸாயுஜ்யமாப்னுயாத் |
ப்ராதஃகாலே படேன்னித்யம் ஸர்வ துஃகோப ஶாம்தயே |
படம்து சிம்தயேத்தேவீம் ஸர்வாபரண பூஷிதாம் || 19 ||

இதி ஶ்ரீ லக்ஷ்மீ அஷ்டோத்தர ஶதனாம ஸ்தோத்ரம் ஸம்பூர்ணம்

———————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ அஷ்ட லட்சுமி ஸ்தோத்திரம்– ஸ்ரீ ஷோடச லட்சுமி துதி–ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்–ஸ்ரீ நாமகிரி தாயார் ஸ்லோகம்–

December 20, 2023

ஸ்ரீ அஷ்ட லட்சுமி ஸ்தோத்திரம்

செல்வத்தை மட்டுமல்ல அனைத்து வகையான தன, தான்ய, ஐஸ்வர்ய சம்பத்துக்களை அள்ளித்தருபவள் மகாலட்சுமி. அவரின் அஷ்ட வடிவங்கள் ஆதி லட்சுமி, சந்தான லட்சுமி, கஜ லட்சுமி, தன லட்சுமி, தான்ய லட்சுமி, விஜய லட்சுமி, வித்யா லட்சுமி மற்றும் தைரிய லட்சுமி

ஆதி³லக்ஷ்மீ

ஸுமனஸவந்தி³த ஸுந்த³ரி மாத⁴வி
சந்த்³ர ஸஹோத³ரி ஹேமமயே .
முனிக³ணமண்டி³த மோக்ஷப்ரதா³யினி
மஞ்ஜுளபா⁴ஷிணி வேத³னுதே ..

பங்கஜவாஸினி தே³வஸுபூஜித
ஸத்³கு³ணவர்ஷிணி ஶாந்தியுதே .
ஜயஜய ஹே மது⁴ஸூத³ன காமினி
ஆதி³லக்ஷ்மி ஸதா³ பாலய மாம் .. 1..

தா⁴ன்யலக்ஷ்மீ

அஹிகலி கல்மஷநாஶினி காமினி
வைதி³கரூபிணி வேத³மயே .
க்ஷீரஸமுத்³ப⁴வ மங்க³லரூபிணி
மந்த்ரநிவாஸினி மந்த்ரனுதே ..

மங்க³லதா³யினி அம்பு³ஜவாஸினி
தே³வக³ணாஶ்ரித பாத³யுதே .
ஜயஜய ஹே மது⁴ஸூத³ன காமினி
தா⁴ன்யலக்ஷ்மி ஸதா³ பாலய மாம் .. 2..

தை⁴ர்யலக்ஷ்மீ

ஜயவரவர்ணினி வைஷ்ணவி பா⁴ர்க³வி
மந்த்ரஸ்வரூபிணி மந்த்ரமயே .
ஸுரக³ணபூஜித ஶீக்⁴ரப²லப்ரத³
ஜ்ஞானவிகாஸினி ஶாஸ்த்ரனுதே ..

ப⁴வப⁴யஹாரிணி பாபவிமோசனி
ஸாது⁴ஜநாஶ்ரித பாத³யுதே .
ஜயஜய ஹே மது⁴ஸூத³ன காமினி
தை⁴ர்யலக்ஷ்மி ஸதா³ பாலய மாம் .. 3..

க³ஜலக்ஷ்மீ

ஜயஜய து³ர்க³திநாஶினி காமினி
ஸர்வப²லப்ரத³ ஶாஸ்த்ரமயே .
ரத²க³ஜ துரக³பதா³தி³ ஸமாவ்ருʼத
பரிஜனமண்டி³த லோகனுதே ..

ஹரிஹர ப்³ரஹ்ம ஸுபூஜித ஸேவித
தாபநிவாரிணி பாத³யுதே .
ஜயஜய ஹே மது⁴ஸூத³ன காமினி
க³ஜலக்ஷ்மி ரூபேண பாலய மாம் .. 4..

ஸந்தானலக்ஷ்மீ

அஹிக²க³ வாஹினி மோஹினி சக்ரிணி
ராக³விவர்தி⁴னி ஜ்ஞானமயே .
கு³ணக³ணவாரிதி⁴ லோகஹிதைஷிணி
ஸ்வரஸப்த பூ⁴ஷித கா³னனுதே ..

ஸகல ஸுராஸுர தே³வமுனீஶ்வர
மானவவந்தி³த பாத³யுதே .
ஜயஜய ஹே மது⁴ஸூத³ன காமினி
ஸந்தானலக்ஷ்மி த்வம்ʼ பாலய மாம் .. 5..

விஜயலக்ஷ்மீ

ஜய கமலாஸனி ஸத்³க³திதா³யினி
ஜ்ஞானவிகாஸினி கா³னமயே .
அனுதி³னமர்சித குங்குமதூ⁴ஸர-
பூ⁴ஷித வாஸித வாத்³யனுதே ..

கனகத⁴ராஸ்துதி வைப⁴வ வந்தி³த
ஶங்கர தே³ஶிக மான்ய பதே³ .
ஜயஜய ஹே மது⁴ஸூத³ன காமினி
விஜயலக்ஷ்மி ஸதா³ பாலய மாம் .. 6..

வித்³யாலக்ஷ்மீ

ப்ரணத ஸுரேஶ்வரி பா⁴ரதி பா⁴ர்க³வி
ஶோகவிநாஶினி ரத்னமயே .
மணிமயபூ⁴ஷித கர்ணவிபூ⁴ஷண
ஶாந்திஸமாவ்ருʼத ஹாஸ்யமுகே² ..

நவநிதி⁴தா³யினி கலிமலஹாரிணி
காமித ப²லப்ரத³ ஹஸ்தயுதே .
ஜயஜய ஹே மது⁴ஸூத³ன காமினி
வித்³யாலக்ஷ்மி ஸதா³ பாலய மாம் ..7..

த⁴னலக்ஷ்மீ

தி⁴மிதி⁴மி தி⁴ந்தி⁴மி தி⁴ந்தி⁴மி தி⁴ந்தி⁴மி
து³ந்து³பி⁴ நாத³ ஸுபூர்ணமயே .
கு⁴மகு⁴ம கு⁴ங்கு⁴ம கு⁴ங்கு⁴ம கு⁴ங்கு⁴ம
ஶங்க²னிநாத³ ஸுவாத்³யனுதே ..

வேத³புராணேதிஹாஸ ஸுபூஜித
வைதி³கமார்க³ ப்ரத³ர்ஶயுதே .
ஜயஜய ஹே மது⁴ஸூத³ன காமினி
த⁴னலக்ஷ்மி ரூபேண பாலய மாம் .. 8..

ஸ்ரீ ஷோடச லட்சுமி துதி

16 ஸ்ரீ லட்சுமிகள்

1. ஸ்ரீ தனலட்சுமி:- நாம் எல்லா உயிர்களிடத்திலும் அன்புடன் இருக்க வேண்டும், போதும் என்ற மனதோடு நேர்மையுடன் வாழ்ந்தால் ஸ்ரீ தனலட்சுமியின் அருளை பரிபூரணமாகப் பெறலாம்.

2. ஸ்ரீ வித்யாலட்சுமி:- எல்லா உயிரினங்களிலும் தேவியானவள் புத்தி உருவில் இருப்பதால் நாம் நம் புத்தியை நல்ல முறையில் பயன்படுத்த வேண்டும். அன்பாகவும், இனிமையாகவும் பேச வேண்டும். யார் மனதையும் புண்படுத்தாமல் நடந்து கொண்டால் ஸ்ரீ வித்யாலட்சுமியின் அருளைப் பெறலாம்

3. ஸ்ரீ தான்யலட்சுமி:- ஸ்ரீ தேவியானவள் பசி நீக்கும் தான்ய உருவில் இருப்பதால் பசியோடு, நம் வீட்டிற்கு வருபவர்களுக்கு உணவளித்து உபசரித்தல் வேண்டும். தானத்தில் சிறந்த அன்னதானத்தைச் செய்து ஸ்ரீ தான்யட்சுமியின் அருளை நிச்சயம் பெறலாம்.

4. ஸ்ரீ வரலட்சுமி:- உடல் பலம் மட்டும் வீரமாகாது மனதில் உறுதி வேண்டும், ஒவ்வொருவரும் தாங்கள் செய்த தவறுகளையும் பாவங்களையும் தைரியமாக ஒப்புக் கொள்ள வேண்டும், நம்மால் பாதிக்கப்பட்டவர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும், செய்த பாவங்களுக்காக மனம் வருந்தி, இனி தவறு செய்யமாட்டேன் என்ற மன உறுதியுடன் ஸ்ரீ வரலட்சுமியை வேண்டினால் நன்மை உண்டாகும்.

5. ஸ்ரீ சவுபாக்யலட்சுமி:- தேவி எங்கும் எதிலும் மகிழ்ச்சி உருவில் இருக்கின்றாள். நாம் எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருந்து கொண்டு மறற்றவர்களின் மகிழ்ச்சிக்கும் காரணமாக இருக்க வேண்டும். பிறர் மனது நோகாமல் நடந்தால் ஸ்ரீ சவுபாக்கிய லட்சுமியின் அருளைப் பெற்று மகிழலாம்.

6. ஸ்ரீ சந்தானலட்சுமி:- எல்லா குழந்தைகளையும் தன் குழந்தையாக பாவிக்கும் தாய்மை உணர்வு எல்லோருக்கும் வேண்டும். தாயன்புடன் ஸ்ரீ சந்தான லட்சுமியை துதித்தால் நிச்சயம் பலன் உண்டு.

7. ஸ்ரீ காருண்யலட்சுமி:- எல்லா உயிர்களிடமும் கருணையோடு பழக வேண்டும், உயிர் வதை கூடாது, உயிர்களை அழிக்க நமக்கு உரிமை இல்லை, ஜீவ காருண்ய ஒழுக்கத்தை கடை பிடித்தால் ஸ்ரீ காருண்ய லட்சுமியின் அருளைப் பெறலாம்.

8. ஸ்ரீ மகாலட்சுமி:- நாம் நம்மால் முடிந்ததை மற்றவர்களுக்கு கொடுக்க வேண்டும் என்றுமே நம் உள்ளத்தில் உதவ வேண்டும் என்ற எண்ணம் உறுதியாக இருந்தால் நமக்கு ஒரு குறையும் வராது. மேலும் ஸ்ரீ மகாலட்சுமி நம்மை பிறருக்கு கொடுத்து உதவும் படியாக நிறைந்த செல்வங்களை வழங்குவாள்.

9. ஸ்ரீ சக்திலட்சுமி:- எந்த வேலையும் என்னால் முடியாது என்ற சொல்லாமல் எதையும் சிந்தித்து நம்மால் முடியும் என்ற நம்பிக்கையுடன் செய்தால் ஸ்ரீ சக்தி லட்சுமி நமக்கு என்றும் சக்தியைக் கொடுப்பாள்.

10. ஸ்ரீ சாந்திலட்சுமி:- நாம் ஒவ்வொருவரும் வாழ்வில் வரும் இன்ப துன்பங்களை சமமாக பாவித்து வாழ பழக வேண்டும். நிம்மதி என்பது வெளியில் இல்லை. நம் மனதை இருக்குமிடத்திலேயே நாம் சாந்தப்படுத்த முடியும். ஸ்ரீ சாந்தி லட்சுமியை தியானம் செய்தால் எப்பொழுதும் நிம்மதியாக வாழலாம்.

11. ஸ்ரீ சாயாலட்சுமி:- நாம் சம்சார பந்தத்திலிருந்தாலும் தாமரை இலை தண்ணீர் போல கடமையை செய்து பலனை எதிர்பாராமல் மனதை பக்தி மார்க்கத்தில் சாய்ந்து ஸ்ரீ சாயாலட்சுமியை தியானித்து அருளைப் பெற வேண்டும்.

12. ஸ்ரீ த்ருஷ்ணாலட்சுமி:- எப்போதும் நாம் பக்தி வேட்கையுடன் இருக்க வேண்டும், பிறருக்கு உதவ வேண்டும், ஞானம் பெற வேண்டும், பிறவிப் பிணித் தீர வேண்டும் என்ற வேட்கையுடன் ஸ்ரீ த்ருஷ்ணாலட்சுமியைத் துதித்து நலம் அடையலாம்.

13. ஸ்ரீ சாந்தலட்சுமி:- பொறுமை கடலினும் பெரிது. பொறுத்தார் பூமியை ஆள்வார். பொறுமையுடனிருந்தால் ஸ்ரீ சாந்தலட்சுமியின் அருள் கிடைக்கும்.

14. ஸ்ரீ கிருத்திலட்சுமி:- நாம் செய்யும் ஒவ்வொரு செயலையும், மனதை ஒரு நிலைப்படுத்தி நேர்த்தியுடன் செய்தால், புகழ் தானாக வரும். மேலும் ஸ்ரீ கீர்த்தி லட்சுமியின் அருள் நிச்சயம் கிடைக்கும்.

15. ஸ்ரீ விஜயலட்சுமி:- விடாத முயற்சியும் உழைப்பும், நம்பிக்கையும் இருந்தால் நமக்கு எல்லா காரியங்களிலும் வெற்றி தான். ஸ்ரீ விஜயலட்சுமி எப்பொழுதும் நம்முடன் இருப்பாள்.

16. ஸ்ரீ ஆரோக்கிய லட்சுமி:- நாம் நம் உடல் ஆரோக் கியத்தை கவனித்தால் மட்டும் போதாது, உள்ளமும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும், கோபம், பொறுமை, காமம், பேராசை போன்ற நோய்க் கிருமிகள் நம் மனதில் புகுந்து விடாமல் இருக்க ஸ்ரீ ஆரோக்கிய லட்சுமியை வணங்க வேண்டும்.

———-

ஸ்ரீ ஷோடச லட்சுமி துதி

தனலட்சுமி

யாதேவீ ஸர்வ பூதேஷு
புஷ்டி ரூபேண ஸமஸ்த்திதா:
நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை
நமஸ் தஸ்யை நமோ நம:

தான்யலட்சுமி

யாதேவீ ஸர்வ பூதேஷு
சஷீதா ரூபேண ஸமஸ்த்திதா:
நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை
நமஸ் தஸ்யை நமோ நம:

வித்யாலட்சுமி

யாதேவீ ஸர்வ பூதேஷு
புத்தி ரூபேண ஸம்ஸ்த்திதா:
நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை
நமஸ் தஸ்யை நமோ நம:

வீரலட்சுமி

யாதேவீ ஸர்வ பூதேஷு
த்ரூதி ரூபேண ஸமஸ்த்திதா:
நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை
நமஸ் தஸ்யை நமோ நம:

ஸெளபாக்யலட்சுமி

யாதேவீ ஸர்வபூதேஷு
துஷ்டி ரூபேண ஸமஸ்த்திதா:
நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை
நமஸ் தஸ்யை நமோ நம:

ஸந்தானலட்சுமி

யாதேவீ ஸர்வ பூதேஷு
மாத்ரு ரூபேண ஸமஸ்த்திதா:
நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை
நமஸ் தஸ்யை நமோ நம:

காருண்யலட்சுமி

யாதேவீ ஸர்வ பூதேஷு
தயா ரூபேண ஸமஸ்த்திதா:
நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை
நமஸ் தஸ்யை நமோ நம:

மஹாலட்சுமி

யாதேவீ ஸர்வ பூதேஷு
மஹா ரூபேண ஸமஸ்த்திதா:
நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை
நமஸ் தஸ்யை நமோ நம:

சாந்திலட்சுமி

யாதேவீ ஸர்வ பூதேஷு
சாந்தி ரூபேண ஸமஸ்த்திதா:
நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை
நமஸ் தஸ்யை நமோ நம:

கீர்த்திலட்சுமி

யாதேவீ ஸர்வ பூதேஷு
கீர்த்தி ரூபேண ஸமஸ்த்திதா:
நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை
நமஸ் தஸ்யை நமோ நம:

சாயாலட்சுமி

யாதேவீ ஸர்வ பூதேஷு
ச்சாயா ரூபேண ஸமஸ்த்திதா:
நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை
நமஸ் தஸ்யை நமோ நம:

ஆரோக்கியலட்சுமி

யாதேவீ ஸர்வ பூதேஷு
காந்தி ரூபேண ஸமஸ்த்திதா:
நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை
நமஸ் தஸ்யை நமோ நம:

த்ருஷ்ணாலட்சுமி

யாதேவீ ஸர்வ பூதேஷு
த்ருஷ்ணா ரூபேண ஸமஸ்த்திதா:
நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை
நமஸ் தஸ்யை நமோ நம:

சாந்தலட்சுமி

யாதேவீ ஸர்வ பூதேஷு
ஷாந்தி ரூபேண ஸமஸ்த்திதா:
நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை
நமஸ் தஸ்யை நமோ நம:

விஜயலட்சுமி

யாதேவீ ஸர்வ பூதேஷு
விஜய ரூபேண ஸமஸ்த்திதா:
நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை
நமஸ் தஸ்யை நமோ நம:

சக்திலட்சுமி

யாதேவீ ஸர்வ பூதேஷு
சக்தி ரூபேண ஸமஸ்த்திதா:
நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை
நமஸ் தஸ்யை நமோ நம:

——–

ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்

அங்கம் ஹரே:புலகபூஷன மாச்ரயந்தீ
ப்ருங்காங்கநேவ முகுலாபரணம் தமாலம்
அங்கீக்ரு தாகில விபூதிரபாங்கலீலா
மாங்கல்ய தாஸ்து மம மங்கள தேவதாயா: 1

மொட்டுக்களால் அலங்கரிக்கப்பட்டு காட்சி தரும் மரத்தைப் பொன்வண்டு மொய்த்துக் கொண்டு இருப்பதைப் போல, ஆனந்தத்தையே ஆபரணமாய் அணிந்திருக்கும் திருமாலின் திருமார்பில் அக மகிழ்ந்து மெய் மறந்து பார்த்துக் கொண்டிருக்கும் ஸ்ரீதேவியின் அருட்கண்கள் அனைத்து மக்களுக்கும் சகல செல்வங்களையும் வழங்குமாறு வேண்டுகிறேன்.

முக்தா முஹீர்விதததீ வதனே முராரே:
ப்ரேமத்ரபா ப்ரணிஹிதானி கதாகதானி
மாலா த்ருசோர் மது கரீவ மஹோத்பலே யா
ஸாமே ச்ரியம் திசது ஸாகர ஸம்பவாயா:  2

? பாற்கடலில் உதித்த ஸ்ரீ லட்சுமி தேவி திருமாலின் திருமுகத்தினைப் பார்த்துக் கொண்டிருக்கும் காட்சி நீலோத்பல மலரில் தேனை உண்ண வரும் பொன்வண்டுகளை நினைவு படுத்துகின்றது. பெரிய நீலோத்பல மலர் போல காட்சியளிக்கும் பகவானின் திருமுகத்தை தரிசிக்க ஸ்ரீ தேவியின் கண்கள் ஆசையோடு செல்வதும், வெட்கம் காரணமாக திரும்புவதுமாக இருக்கின்றன. அருள் நிறைந்த அவள், தனது கடைக்கண் பார்வையால் என்னையும் பார்க்கட்டும். எனக்கு செல்வத்தை வாரி வழங்கட்டும்.

ஆமீலிதாட்ச மதிகம்ய முதா முகுந்தம்
ஆனந்த கந்த மநிமேஷ மநங்கதந்த்ரம்
ஆகேகர ஸ்தித கனீனிக பக்ஷ்ம நேத்ரம்
பூத்யை பவேன்மம புஜங்க சயாங்கனாயா:  3

? ஆதிசேஷன் மீது படுத்து பாற்கடலில் எப்போதும் யோக நித்திரையில் இருந்துவரும் ஸ்ரீமஹாவிஷ்ணுவை இமையாது நோக்கும் தாயே ! உனது கரு விழியின் ஒளி மிகுந்த கடைக்கண் அருட் பார்வை என் மீது விழுந்து சதா சர்வ காலமும் எனக்கு அளவில்லாமல் செல்வத்தை அள்ளித்தருவதற்கு துணைபுரியட்டும்.

பாஹ் வந்தரே மதுஜித: ச்ரித கெளஸ்துபே யா
ஹாராவலீவ ஹரிநீலமயீ விபாதி
காமப்ரதா பகவதோ(அ)பி கடாட்ச மாலா
கல்யாண மாவஹதுமே கமலாலயாயா: 4

ஸ்ரீ மகா விஷ்னுவின் திருமார்பில் திகழ்கின்ற மாலை உன் பார்வை பட்டு இந்திர நீல நிறமாக காட்சி அளிக்கும். அத்தகைய ஒளி நிறைந்த உன் கடைக்கண் பார்வை என் மேல் பட்டு எனக்கு எல்லாவித மங்களகளையும் உண்டாக்கட்டும்.

காலாம்புதாலி லலிதோரஸி கைடபாரே:
தாராதரே ஸ்புரதியா தடிதங்கநேவ
மாதுஸ்ஸமஸ்த ஜகதாம் மஹநீய மூர்த்தி
பத்ராணி மேதிசது பார்கவநந்தநாயா: 5

? மிகக் கொடிய அரக்கனான கைடபனை வதைத்த, நீருண்ட மேகம் போல திகழும் திருமாலின் திருமார்பில் கொடி மின்னலாய் விளங்கும் தாயே! பகவானின் மார்பில் இணைந்த தேவியின் கண்கள் மழை மேகத்தில் தோன்றிய மின்னலைப் போன்று காட்சி தருகின்றன. ஸ்ரீலட்சுமியின் இந்த மின்னொளிக் கண்கள் எனக்கு செல்வத்தை வழங்கட்டும்

ப்ராப்தம் பதம் ப்ரதமத: கலு யத்ப்ரபாவாத்
மாங்கல்ய பாஜி மதுமாதினி மன் மதேந
மய்யாபதேத் ததிஹ மந்தர மீக்ஷணார்த்தம்
மந்தாலஸம் சமகராலய கந்யகாயா: 6

? மங்களங்கள் அனைத்தும் தங்கும் இடமாகத் திகழும் திருக்கண்கள் கொண்டவளே! உன் பார்வை திருமாலுக்கே வலிமை தரக் கூடியது. அரக்கர்கள் பலரை அழித்த மஹாவிஷ்ணுவின் மனதிற்கு பெரும் மகிழ்ச்சியூட்டும் ஆற்றல் கொண்ட மஹாலட்சுமியின் திருக்கண்களின் கடைக்கண் பார்வையின் ஒரு சிறு துளி என்மேல் பட்டு மங்களங்களை அளிக்கட்டும்.

விச்வாம ரேந்த்ர பதவிப்ரமதா தட்சம்
ஆநந்த ஹேதுரதிகம் முரவித்விஷோ அபி
ஈஷந்நிஷீ தது மயிக்ஷண மீக்ஷணார்த்தம்
மிந்தீவரோதர ஸஹோதர மிந்திராயா:  7

? உன் பார்வை விளையாட்டாய் கூட எவர் மீது பட்டாலும் அவர் விண்ணுலக வாழ்வை பெற்று இந்திரனுக்கு சமமாக வாழ்வான். நீலோத்பல மலர் மகுடம் போன்ற உன் திருமுகத்தின் விழிகளின் கடைக்கண் பார்வை ஒரு க்ஷணம் என் மீது பட்டாலும் உன் கருணைக்கு ஆளாவேன் தாயே!

இஷ்டா விசிஷ்ட மதயோபி யயா தயார்த்ர
திருஷ்ட்யா த்ரிவிஷ்டபபதம் ஸுலபம் லபந்தே
திருஷ்டி : ப்ரஹ்ருஷ்ட கமலோதர திப்திரிஷ்டாம்
புஷ்டிம் க்ருஷீஷ்ட மம புஷ்கர விஷ்டராயா:  8

? அசுவமேத யாகம் போன்ற மகா யாகங்களும் பெருந்தவங்களும் செய்தால் மட்டும் அடையக்கூடிய சொர்க்க பதவியை அன்னை ஸ்ரீமஹாலட்சுமி தேவியின் அருட்பார்வையினால் மட்டுமே அடைய முடியும். அந்தத் தேவியின் திருப்பார்வை என் மேல் பொழிந்திடுவாய் தாயே!.

தத்யாத் தயாநுபவநோ த்ரவிணாம் புதாரா
மஸ்மிந்ந கிஞ்சன விஹங்க சிசெள விஷண்ணே
துஷ்கர்ம கர்மமபனீய சிராயதூரம்
நாராயண ப்ரணயநீ நயனாம் புவாஹ: 9

? காற்றின் காரணமாக கார் மேகங்கள் வானில் திரண்டு பூமிக்கு மழையை அளிக்கின்றது. பூமி செழிப்பாகின்றது. கார் மேகம் அளிக்கும் மழை நீர் பூமியை செழிப்பாக்குவது போல, ஸ்ரீ மகா விஷ்ணுவின் பிரியத்திற்குரிய லட்சுமி தேவியின் கடைக்கண் பார்வை என்மீது பட்டவுடன் எனது வறுமை எல்லாம் நீங்கி என் வாழ்வில் வளங்கள்பெருக நான் செல்வந்தனாவேன்.

கீர்தேவதேதி கருடத்வஜ ஸீந்தரீதி
சாகம்பரீதி சசி சேகர வல்லபேதி
ஸ்ருஷ்டிஸ்திதிப் ப்ரலயகேளிஷு ஸம்ஸ்திதாயா
தஸ்யை நமஸ்த்ரி புவநைக குரோஸ்தருண்யை!:  10

? ஆக்கல், காத்தல், அழித்தல் என்று கூறப்படும் சிருஷ்டி, ஸ்திதி, சம்ஹாரம் என்ற நிலைகளில், வேதத்தின் நாயகியாம் சரஸ்வதி தேவியான வாணியாகவும், கருட வாகன ஸ்ரீ விஷ்ணுவின் பத்னியான லக்ஷ்மியாகவும், பிறை சந்திரனை அணிந்த ஈசனொரு பாகமான ஈஸ்வரியாகவும் காட்சி அளிக்கும் ஸ்ரீ மகா லட்சுமிக்கு வணக்கங்கள்.

ஸ்ருத்யை நமோஸ்து சுபகர்ம பலப்ரஸீத்யை
ரத்யை நமோஸ்துரமணீய குணார்ணவாயை
சக்த்யை நமோஸ்து சதபத்ர நிகேதெனாயை
புஷ்ட்யை நமோஸ்து புருஷோத்தம வல்லபாயை:  11

? ஈடு இணையற்ற சிறந்த பேரழகு கொண்டவளும், மதுரமான குணங்களை கொண்டவளும், மகா சக்தியாக விளங்குபவளும், ஸ்ரீ மகா விஷ்ணுவின் பிரியத்திற்கு உரியவளும், நல்ல கர்ம வினைப் பயனுக்கு பலன்களை அள்ளி வழங்குபவளும் கருணைக் கடலாக விளங்கும் ஸ்ரீ மகா லட்சுமி தேவியின் அருளை வேண்டுகின்றேன்.

நமோஸ்து நாலீக நிபாநநாயை
நமோஸ்து துக்தோததி ஜன்மபூம்யை
நமோஸ்து ஸோமாம்ருத ஸோதராயை
நமோஸ்து நாராயண வல்லபாயை: 12

? பாக்கியம் நல்கும் திருமுகம் கொண்டவளே! பாற்கடலில் உதித்தவளே! மங்களங்களை சேர்க்கும் சந்திரனை உடன் பிறப்பாய் பெற்றவளே! பாற்கடலில் யோகநித்திரையில் பள்ளிகொண்டிருக்கும் ஸ்ரீமஹாவிஷ்ணுவின் அன்பிற்குரிய நாயகியே உன் பாதம் சரணம் எனப் பணிந்தேன்.

நமோஸ்து தேஹேமாம்பூஜை பீடிகாயை
நமோஸ்து பூமண்டல நாயிகாயை
நமோஸ்து தேவாதிதயபராயை
நமோஸ்து சார்ங்காயுத வல்லபாயை:  13

? தங்கத் தாமரை ஆசனத்தில் அமர்ந்தவளே ! தரணிக்கே தாயாகத் திகழ்பவளே! முப்பத்து முக்கோடி தேவர்களுக்கு கருணை வெள்ளத்தைப் பொழிபவளே! பெருமை மிக்க சாரங்கபாணியின் மனையாளே சரணம்.

நமோஸ்து தேவ்யை ப்ருகு நந்தநாயை
நமோஸ்து விஷ்ணோருரஸி ஸ்திதாயை
நமோஸ்து லஷ்ம்யை கமலாலயாயை
நமோஸ்து தாமோதர வல்லபாயை:  14

? பிருகு முனியின் திருமகளே சரணம்! ஸ்ரீ மகா விஷ்ணுவின் மார்பில் உறைபவளே சரணம்! தங்கத் தாமரை ஆசனத்தில் உறைபவளே சரணம்! தாமோதரனின் மனம் கவர்ந்தவளே சரணம் !

நமோஸ்து காந்த்யை கமலேக்ஷணாயை
நமோஸ்து பூத்யை புவனப்ரஸுத்யை
நமோஸ்து தேவாதி பிரார்ச்சிதாயை
நமோஸ்து நந்தாத்மஜ வல்லபாயை: 15

? ஜோதி வடிவாகத் திகழ்பவளே! தாமரை போன்ற கண்கள் உடையவளே! சகல ஐஸ்வர்யங்கள், எல்லாவித செல்வங்கள் ஆகியவற்றின் இருப்பிடமாகவும், எல்லா உலகங்களையும் படைத்தவளாகிய ஸ்ரீலட்சுமிதேவியே உனக்கு நமஸ்காரம்.

ஸம்பத் காரணி ஸகலேந்த்ரிய நந்தநானி
ஸாம்ராஜ்யதான விபவாநி ஸரோருஹாணி
த்வத் வந்தநானி துரிதா ஹரணோத்யதானி
மாமேவ மாதரநிசம் கலயந்து மான்யே: 16

? எல்லாவகைச் செல்வங்களைத் தரக்கூடியவளும், உலகத்து உயிரினங்கள் அனைத்திற்கும் ஆனந்தத்தை அளிக்கக்கூடியவளும், பக்தர்களாகிய அடியார்களுக்கு வேண்டும் வரங்களை அள்ளித் தருபவளுமாகிய ஸ்ரீமஹாலட்சுமியாகிய உன்னை வணங்குகிறேன்.

யத்கடாட்ச ஸமுபாஸனாவிதி
ஸேவகஸ்ய ஸகலார்த்த ஸம்பத்
ஸந்தனோதி வசனாங்க மானஸை
த்வாம் முராரிஹ்ருத யேஸ்வரீம்பஜே: 17

? உந்தன் கடைக் கண் பார்வை வேண்டி நித்தமும் உன்னை தொழுது பூஜை புரிபவர்க்கு தங்கு தடையில்லாமல் செல்வ வளம் தருபவளே! மடை திறந்த வெள்ளமென பெருகும் வகையில் நல்வரங்களை நல்கும் முராரியின் இதயம் கவர்ந்த நாயகியே| தன்னை வழிபடும் பக்தர்கள் மீது கடைக்கண் பார்வையால் கருணையை பொழிந்து அவர்களுக்கு எல்லாவித செல்வங்களையும் அள்ளித் தருகிற ஸ்ரீலட்சுமிதேவியை மிகவும் அடிபணிந்து வணங்குகிறேன்.

ஸரஸிஜ நிலயே ஸரோஜ ஹஸ்தே
தவல தமாம்சுக கந்த மால்ய சோபே
பகவதி ஹரிவல்லபே மநோஜ்ஞே
த்ரிபுவன பூதிகரி ப்ரஸீத மஹ்யம்: 18

? தாமரை மலரில் அமர்ந்தவளே! தாமரை போன்ற கரம் உடையவளே! சந்தன மாலையை அணிந்து ஜோதியாக திகழ்பவளே! சகல உலகங்களுக்கும் செல்வங்களை அளவின்றிக் கொடுப்பவளும், ஸ்ரீமந்நாராயணனின் அன்புக்குரிய நாயகியாகிய ஸ்ரீமஹாலட்சுமி தேவியே உன்னை அடிபணிந்து வணங்குகிறேன்.

திக்தஸ்திபி கனக கும்ப முகாவஸ்ருஷ்ட
ஸ்வர்வாகினி விமலசாரு ஜலாப்லு தாங்கீம
ப்ராதர் நமாமி ஜகதாம் ஜனனீமசேஷ
லோகாதி நாதக்ரு ஹிணீம் அம்ருதாப்தி புத்ரீம்: 19

? யானைகள் தங்கக் குடத்தில் உய்ய நீராட்டும் உடலை உடைய தெய்வத் தாயே! திருமாலின் திருமார்பில் திகழ்பவளே! பாற்கடலை தேவர்கள் கடைந்த போது கிடைத்தற்கரிய அமிர்தம் உண்டாகியது. அந்தப் பெருமை பொருந்திய பாற்கடலின் செல்வியே!உலகத்திற்கெல்லாம் நாயகனான ஸ்ரீமஹாவிஷ்ணுவின் நாயகியுமான ஸ்ரீலட்சுமிதேவியே! உன்னை வணங்கிப் போற்றுகிறேன்.

கமலே கமலாட்ச வல்லபேத்வம்
கருணாபூர தரங்கிதைரபாங்கை
அவலோகய மாமநிஞ் சனானாம்
ப்ரதமம் பாத்ர மக்ருத்ரிமம் தயாயா: 20

? தாமரை மலரில் இருப்பவளே! கமலக் கண்ணனாம் ஸ்ரீ விஷ்ணுவின் காதலியே! கருணை வெள்ளமே! உன் கடைக் கண் பார்வை வேண்டி உன்னை துதிக்கும் இந்த வறியவனின் பிழை பொறுத்து தரித்திரத்தை நீக்க வழியைக் காட்டியருள வேண்டும்.

ஸ்துவந்தியே ஸ்துதிபிரமீன் பிரந்வஹம்
த்ரயீமயீம் த்ரி புவன மாதரம் ரமாம்
குணாதிகா குருதர பாக்ய பாகினோ
பவந்தி தே புவி புத பாவிதாசயா:  21

? மறைகள் மூன்றின் வடிவமாகவும், மூவுலகம் தொழும் தேவியாகவும் திகழும் ஸ்ரீ மஹாலட்சுமியே உன்னை மேற் கூறிய ‘கனகதாரா ஸ்தோத்திரத்தினால் துதித்துப் போற்றுவோருக்கு நிறை செல்வம், கீர்த்தி, ஆரோக்கியம், நிறை ஆயுள், புத்தி, மற்றும் வாழ்வில் எல்லா ஐஸ்வர்யர்களையும் அளித்து பூரண நலமும் அளிப்பாய் தாயே.

ஒருநாள் துவாதசி தினம். இரவு முழுக்க கண் விழித்து ஏகாதசி விரதம் இருந்து வேத சாஸ்திரங்களை உச்சரித்தபடி ஒவ்வொரு வீதியிலும் ஒவ்வொரு வீடு வீடாகச் சென்று “பிட்சா பவந்தேஹி” என்று கூறியபடி பிச்சையெடுத்தார் சங்கரன்.

? ஒரு எளிய வீட்டின் முன்னால் போய் நின்றார். சங்கரனின் குரலைக் கேட்ட அந்த வீட்டுப் பெண் பிச்சையிட தன் வீட்டிலிருந்த பானைகளை எல்லாம் திறந்து பார்த்தாள். உணவு இல்லை. அரிசியும் இல்லை.

? பிச்சை கேட்டு வந்திருக்கும் அந்தச் சிவப்புதல்வனுக்கு என் கையால் பிச்சையிட இயலாத அளவிற்கு நான் ஏழையாகிப் போனேனே என்று மனதிற்குள் புழுங்கினாள். தேடிப் பார்த்ததில் ஒரே ஒரு நெல்லி வற்றல் இருந்தது. அந்த நெல்லி வற்றலோடு வாசலுக்கு வந்தாள்.

? சங்கரனின் முகத்தைப் பார்க்கப் பெறாமல் அவர் வைத்திருந்த பாத்திரத்தில் அந்த நெல்லி வற்றலை இட்டாள். பசி என்று வந்திருக்கும் குழந்தைக்கு வெறும் நெல்லி வற்றலை மட்டும் தருகிறோமே என்று அவள் கண்கள் கண்ணீர் சிந்தின. அது சங்கரன் வைத்திருந்த பாத்திரத்தில் விழுந்தது.

? சங்கரன் பாத்திரத்தில் இருந்த நெல்லி வற்றலையும் அந்தத் தாயின் கண்ணீரையும் பார்த்தார். உலகே துன்பத்திற்கு ஆளானது போல உணர்ந்தார். அந்தத் தாயின் அன்பில் உருகினார். அவள் மேல் கருணை கொண்டார்.

? செல்வங்களுக்கெல்லாம் நாயகியான லட்சுமி திருமகளை நினைத்தார். இனி இந்த உலகில் யார் வறுமையில் வாடினாலும் இந்தப் பாடலைப் பாட அவர்களின் வறுமை ஒழிந்து செல்வம் கொழிக்கட்டும் என்று ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரத்தைப் பாடத் தொடங்கினார்.

? நெல்லி வற்றலைப் பிச்சையிட்ட அந்தப் பெண்மணியிடம் ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரத்தைப் பாடிக் காட்டினார். “இந்தப் பாடலை பாடி திருமகளுக்கு ஆரத்தி செய். உன் வறுமை எல்லாம் தீரும்” என்று சொல்லிவிட்டுக் கிளம்பினார்.

? அந்தப் பெண்மணி தன் கணவன் வந்ததும் நடந்தவற்றைக் கூறினாள். அவளும் அவள் கணவனும் சேர்ந்து சங்கரன் கற்றுத் தந்த கனகதாரா ஸ்தோத்திரத்தைப் பாடி திருமகளை வழிபட்டனர். வறுமை குடியிருந்த அவர்களின் வீட்டில் தங்க மழை பொழிந்தது. அவர்கள் வறுமை தீர்ந்தது.

? ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம் பாடலின் தமிழ் விளக்கம் இதுதான்.

? மொட்டுக்கள் விரிந்து மலர்ந்து அழகு செய்கின்ற தமால மரத்தை தேனை உண்டு வாழும் வண்டுகள் மொய்த்திருப்பதைப் போல திருமாலின் அழகுப் பொன்மேனியைச் சேர்ந்திருப்பவளே, எல்லா வகைச் செல்வங்களுக்கும் நாயகியான மங்களத்தைத் தரும் மகாலட்சுமியாகிய உன் கடைக்கண் பார்வை எளியவனான என் மேல் மங்களத்தை அளிக்கட்டுமாக.

? பொன்னால் செய்யப்பட்ட குடங்களில் நிரப்பப்பட்ட தூய்மையான தேவ கங்கை நீரால் அட்டதிக்குகளைக் காக்கும் யானைகளால் அபிஷேகம் செய்யப்பட்டு அதனால் நனைந்த அழகு மேனியை உடையவளே. உலகிற்கு எல்லாம் அன்னையே. உலகத்தின் ஆசாபாசங்களை எல்லாம் ஆட்டுவிக்கும் நாயகனான திருமாலின் மனைவியுமானவளே. திருப்பாற்கடலின் புதல்வியே. மகாலட்சுமியே. உன்னை வணங்குகிறேன்.

? கனகதாரா ஸ்தோத்திரம் பாடல்களைப் பாடித் துதிப்பவர்கள் அனைவரும் எல்லா நற்குணங்களும் நிறைந்தவர்களாகவும் எல்லாப் பேறுகளும் பெற்ற வர்களாகவும் சான்றோர்கள் கொண்டாடும் வகையில் சிறந்து விளங்குவார்கள் என்று சங்கரர் கூறியுள்ளார்.

? சுயநலமின்றி பிறர் நலத்தைக் காக்கும் பொருட்டு பிறரின் வறுமையை ஒழிக்கும் பொருட்டு செல்வம் வேண்டும் யாவரும் இந்தப் பாடல்களைப் பாடி செல்வம் வேண்டினால் நிச்சயம் அவர்களுக்கு செல்வம் வந்து சேரும்.

கணிதத்தில் பலவீனமான மாணவர்களுக்கு – ஸ்ரீ நாமகிரி தாயார் கணிதமேதை ஸ்ரீ ராமானுஜத்திற்கு அருளியது

? கணித பாடத்தில் சிரமப்படும் மாணவர்கள் கீழ்கண்ட ஸ்லோகத்தை காலை, மற்றும் மாலை இருவேளையும் 12 தடவை பாராயணம் செய்து வந்தால் மிகவும் நல்ல மதிப்பெண் பெறுவது மட்டுமில்லாமல் கணித பாடமே மிகவும் எளிதானதாகவும், சுலபமானதாகவும் மாறி, கணிதத்தில் மேதை ஆகலாம். இது நாமக்கல் ஸ்ரீ நாமகிரி தாயார் மீது பாடப்பட்ட சுலோகம். கணிதமேதை ஸ்ரீ ராமானுஜத்துக்கு ஸ்ரீ நாமகிரி தாயார் அனுக்கிரகம் செய்து அருளியது:

ஸ்ரீ வித்யா மந்த்ர ரத்னா ப்ரகடித விபவா
ஸ்ரீ ஸுபலா பூர்ண காமா ஸர்வேஸ பிரார்த்திதா
ஸகல ஸுரநுதா ஸர்வ ஸாம்ராஜ்ய தாத்ரி
லக்ஷ்மீ ஸ்ரீ வேத கர்பா விதுரது மதிஸா விஸ்வ கல்யாணபூமா
விஸ்வ க்ஷேமாத்ம யோகா விமல குணவதி விஷ்ணு வக்ஷஸ்தலஸ்தா-ஸ்ரீ நாமகிரி தாயார் ஸ்லோகம்–

கணக்கு என்றாலே அலர்ஜி எனும் மாணவர்கள் இதன் மூலம் மிக சிறந்த பலன்பெறுவது சர்வநிச்சயம்.

———————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

புராண-லக்ஷண-வர்ணநம்

December 20, 2023

ஸூத உவாச—

அதர்வ-வித் ஸுமந்துஶ் ச ஶிஷ்யம் அத்யாபயத் ஸ்வகாம் ।

ஸம்ஹிதாம் ஸோऽபி பத்யாய வேத-தர்ஶாய சோக்தவாந் ॥

ஶ்ரீதர-ஸ்வாமீ (பாவார்த-தீபிகா) :

ஸப்தமேऽதர்வ-விஸ்தாரஃ புராண-வ்யஸநம் ததஃ ।

புராண-லக்ஷணாதீநி பலம் பாகவத-ஶ்ருதேஃ ॥

க்ரம-ப்ராப்தம் அதர்வ-வேத-விபாகம் ஆஹ, அதர்வ-வித் இதி । ஶிஷ்யம் கபந்த-நாமாநம் । ஸ்வகாம் ஸ்வகீயாம் ஸம்ஹிதாம் । ஸோऽபி ஶிஷ்யோऽபி தாம் த்விதா விபஜ்ய । தத் உக்தம் வைஷ்ணவே—

அதர்வ-வேதம் ஸ முநிஃ ஸுமந்துர் அமித-த்யுதிஃ ।
ஶிஷ்யம் அத்யாபயாம் ஆஸ கபந்தம் ஸோऽபி ச த்விதா ।
க்ரு’த்வா து வேத-தர்ஶாய ததா பத்யாய தத்தவாந் ॥ இதி ॥௧॥

———————————————————————————————————————

**வம்ஶீதரஃ (பாவார்த-தீபிகா-ப்ரகாஶஃ) : **புராணாநாம் வ்யஸநம் விபாகஃ । பாகவதஶ்ருதேர் இதி பகவாந்வ்யாஸஸ் தஸ்யேமே ஶிஷ்யா பாகவதாஃ பைலாத்யாஸ்தேஷாம் ஶ்ருதிஃ ஶ்ரவணம் தஸ்யாஃ பலம் । யத் வா, வேதோ நாராயணஃ ஸாக்ஷாத் இத்ய் உக்தேர் பகவதோ வேதஸ்யாயம் விபாகோ பாகவதஸ் தஸ்ய ஶ்ருதேஃ பலம், தச்சாத்யாயாந்திமஶ்லோகேந ப்ரஹ்மதேஜோவிவர்த்தநம் இதி வக்ஷ்யத்யேவ । வைஷ்ணவே விஷ்ணுபுராணே । ததேதச்ச்லோகோக்தம் வ்ரு’த்தமுக்தம் ॥௧॥

———————————————————————————————————————

ஜீவ-கோஸ்வாமீ (க்ரம-ஸந்தர்பஃ) : ந வ்யாக்யாதம்।

———————————————————————————————————————

**விஶ்வநாத-சக்ரவர்தீ (ஸாரார்த-தர்ஶிணீ) : **

ஸப்தமோऽதர்வாணோ வ்யாஸம் புராணஸ்ய ச தஸ்ய ச ।

லக்ஷணாநி தஶ ப்ரோச்ய தஸ்ய ஸங்க்யா ச கத்யதே ॥

ஶிஷ்யம் விஷ்ணு-புராணோக்தம் கபந்த-ஸம்ஜ்ஞம் ॥௧॥॥।॥ ௧௨.௭.௨ ॥

ஶௌக்லாயநிர் ப்ரஹ்மபலிர் மோதோஷஃ பிப்பலாயநிஃ ।

வேததர்ஶஸ்ய ஶிஷ்யாஸ் தே பத்ய-ஶிஷ்யாந் அதோ ஶ்ரு’ணு ।

குமுதஃ ஶுநகோ ப்ரஹ்மந் ஜாஜலிஶ் சாப்ய் அதர்வ-வித் ॥

**ஶ்ரீதர-ஸ்வாமீ (பாவார்த-தீபிகா) : **தத்ர வேத-தர்ஶஃ ஸ்வ-ஸம்ஹிதாம் சதுர்தா விபஜ்ய சதுரஃ ஶிஷ்யாந் அத்யபயாம் ஆஸ । பத்யஶ் ச த்ரிதா விபஜ்ய த்ரீந் இத்ய் ஆஹ ஸார்தேந, ஶௌக்லாயநிர் இதி ।

———————————————————————————————————————

ஜீவ-கோஸ்வாமீ (க்ரம-ஸந்தர்பஃ), விஶ்வநாத-சக்ரவர்தீ (ஸாரார்த-தர்ஶிணீ) : ந வ்யாக்யாதம்।॥।॥ ௧௨.௭.௩ ॥

பப்ருஃ ஶிஷ்யோऽதாங்கிரஸஃ ஸைந்தவாயந ஏவ ச ।

அதீயேதாம் ஸம்ஹிதே த்வே ஸாவர்ணாத்யாஸ் ததாபரே ॥

**ஶ்ரீதர-ஸ்வாமீ (பாவார்த-தீபிகா) : **அங்கிரஸஃ ஶுநகஸ்ய ஶிஷ்யோ பப்ருஃ ஸைந்தவாயநஶ் ச । தத் உக்தம்—

ஶுநகஸ் து த்விதா க்ரு’த்வா ததாவ் ஏகாம் து பப்ரவே ।
த்விதீயாம் ஸம்ஹிதாம் ப்ராதாத் ஸைந்தவாயந-ஸம்ஜ்ஞிநே ॥ இதி ।

ஸாவர்ண்யாத்யாஃ ஸைந்தவாயநாதீநாம் ஶிஷ்யாஃ ॥௩॥

———————————————————————————————————————

**வம்ஶீதரஃ (பாவார்த-தீபிகா-ப்ரகாஶஃ) : **தத்ர த்வயோர்மத்யே । ஹே ப்ரஹ்மந்ந் இதி ஸம்புத்திரக்தாபிப்ராயா ॥௨-௩॥

———————————————————————————————————————

ஜீவ-கோஸ்வாமீ (க்ரம-ஸந்தர்பஃ) : ந வ்யாக்யாதம்।

———————————————————————————————————————

விஶ்வநாத-சக்ரவர்தீ (ஸாரார்த-தர்ஶிணீ) : அங்கிரஸஃ ஶுநகஸ்ய ஶிஷ்யோ பபுர்ஃ । ஸாவர்ணாத்யாஃ ஸைந்தவாயநாதீநாம் ஶிஷ்யாஃ ॥௩॥॥।॥ ௧௨.௭.௪ ॥

நக்ஷத்ர-கல்பஃ ஶாந்திஶ் ச கஶ்யபாங்கிரஸாதயஃ ।

ஏதே ஆதர்வணாசார்யாஃ ஶ்ரு’ணு பௌராணிகாந் முநே ॥

**ஶ்ரீதர-ஸ்வாமீ (பாவார்த-தீபிகா) : **நக்ஷத்ர-கல்பஃ ஶாந்தி-கல்பஶ் சேதி த்வௌ । தத் உக்தம்—

நக்ஷத்ர-கல்போ வேதாநாம் ஸம்ஹிதாநாம் ததைவ ச ।
சதுர்தஃ ஸ்யாத் ஆங்கிரஸஃ ஶாந்தி-கல்பஶ் ச பஞ்சமஃ ॥ இதி ।

நக்ஷத்ர-கல்பாதீநாம் கர்தாரஸ் தத் தந் நாமபிர் உச்யந்தே ॥௪॥

———————————————————————————————————————

**வம்ஶீதரஃ (பாவார்த-தீபிகா-ப்ரகாஶஃ) : **தத் உக்தமித்ய்-ஆதி வாக்யம் விஷ்ணுபுராணீயம் ஏவ । கல்பஶப்தஸ்ய ப்ரத்யேகம் ஸம்பந்தஃ । வேதகல்பஃ, ஸம்ஹிதாகல்பஃ, ஆங்கிரஸகல்ப இதி । நக்ஷத்ரகல்போ நக்ஷத்ராதிபூஜாவிதிஃ, வேதகல்போ வைதாநிகப்ரஹ்மத்வாதிவிதிஃ, ஸம்ஹிதாகல்பஃ ஸம்ஹிதாவிதிஃ, ஆங்கிரஸகல்போऽபிசாராதிவிதிஃ, ஶாந்திகல்போऽஶ்வகஜாத்யஷ்டாதஶமஹாஶாந்த்யாதிவிதிர் இதி தட்டீகா ச ॥௪॥

———————————————————————————————————————

**ஜீவ-கோஸ்வாமீ (க்ரம-ஸந்தர்பஃ) : **பஞ்சம-வேதஸ்ய விபாக-ஜ்ஞாபநார்தம் ஆஹ—ஶ்ரு’ணு பௌராணிகாந் இதி ॥௪॥

———————————————————————————————————————

விஶ்வநாத-சக்ரவர்தீ (ஸாரார்த-தர்ஶிணீ) : ந வ்யாக்யாதம்।॥।॥ ௧௨.௭.௫ ॥

த்ரய்யாருணிஃ கஶ்யபஶ் ச ஸாவர்ணிர் அக்ரு’தவ்ரணஃ ।

வைஶம்பாயந-ஹாரீதௌ ஷட் வை பௌராணிகா இமே ॥

**வம்ஶீதரஃ (பாவார்த-தீபிகா-ப்ரகாஶஃ) : **இமே இதி புத்திஸந்நிஹிதத்வாத் ॥௫॥॥।॥ ௧௨.௭.௬ ॥

அதீயந்த வ்யாஸ-ஶிஷ்யாத் ஸம்ஹிதாம் மத்-பிதுர் முகாத் ।

ஏகைகாம் அஹம் ஏதேஷாம் ஶிஷ்யஃ ஸர்வாஃ ஸமத்யகாம் ॥

**ஶ்ரீதர-ஸ்வாமீ (பாவார்த-தீபிகா) : **மத்-பிதுர் முகாத் இதி । ப்ரதமம் வ்யாஸஃ ஷட்-ஸம்ஹிதாஃ க்ரு’த்வா மத்-பித்ரே ரோமஹர்ஷணாய ப்ராதாத் । தஸ்ய ச முகாத் ஏதே த்ரய்யாருண்யாதய ஏகைகாம் ஸம்ஹிதாம் அதீயந்த । ஏதேஷாம் ஷண்ணாம் ஶிஷ்யோऽஹம் தாஃ ஸர்வாஃ ஸமதீதவாந் ।

———————————————————————————————————————

**வம்ஶீதரஃ (பாவார்த-தீபிகா-ப்ரகாஶஃ) : **ஏகைகாம் இதி—த்ரிபிஸ்த்ரிபிர்மிலித்வைகத்வம் । த்ரிஷட் இதி வக்ஷ்யமாணாத் । தச் ச—ப்ராஹ்ம பாத்மம் வைஷ்ணவம் இதி மிலித்வைகாதிரூபாம் । அவாந்தரஸம்ஹிதா து க்வசிதேகா, யதா ஶ்ரீ-பாகவதஸ்ய பரமஹம்ஸஸம்ஹிதாத்வம், க்வசிதேகைகஸ்யைவ விபாகஶஃ। யதா—ஸ்காந்தஸ்ய ஸநத்குமாரப்ரோக்தஸம்ஹிதாநாமாதிகா, ஶ்ரீ-பாகவதஸ்ய ஶ்ரீஶுகாத்து பஶ்சாத்வ்யக்திஃ ஸூர்யாதேவ யஜுர்பாகஸ்ய வாஜஸநேயஸ்யாதௌ வ்யக்தத்வாத் ॥௬॥

———————————————————————————————————————

**ஜீவ-கோஸ்வாமீ (க்ரம-ஸந்தர்பஃ) : **ஏகைகாம் இதி த்ரிபிஸ் த்ரிபிர் மிலித்வைகத்வம் த்ரிஷட் இதி வக்ஷ்யமாணாத் । தச் ச ப்ராஹ்மம் பாத்மம் வைஷ்ணவம் [பா।பு। ௧௨.௭.௨௩] இதி மிலித்வைகேத்ய்-ஆதி-க்ரமாத் । அவாந்தர-ஸம்ஹிதா து க்வசித் ஏகா, யதா ஶ்ரீ-பாகவதஸ்ய பரமஹம்ஸ-ஸம்ஹிதாத்வம் । க்வசித் ஏகைகஸ்யைவ விபாகஶஃ, யதா ஸ்காந்தஸ்ய ஸநத்குமார-ப்ரோக்த-ஸம்ஹிதா-நாமாதிகா । ஏகைகாம் அஹம் இத்ய் அத்ர ஶ்ரீ-ஶுகாத் து ஶ்ரீ-பாகவதஸ்ய சமத்கார-வைஶிஷ்ட்யதயா1 பஶ்சாத்-வ்யக்திஃ ஸூர்யாத் ஏவ யஜுர்-பாகஸ்ய வாஜஸநேயஸ்ய ஜ்ஞேயம் ॥௬॥

———————————————————————————————————————

விஶ்வநாத-சக்ரவர்தீ (ஸாரார்த-தர்ஶிணீ) : மத்-பிதூ ரோமஹர்ஷணஸ்ய । ஏதேஷாம் ஷண்ணாம் அப்ய் அஹம் ஶிஷ்யாஃ ॥௬॥॥।॥ ௧௨.௭.௭ ॥

கஶ்யபோऽஹம் ச ஸாவர்ணீ ராம-ஶிஷ்யோऽக்ரு’தவ்ரணஃ ।

அதீமஹி வ்யாஸ-ஶிஷ்யாச் சத்வாரோ மூல-ஸம்ஹிதாஃ ॥

**ஶ்ரீதர-ஸ்வாமீ (பாவார்த-தீபிகா) : **ராம-ஶிஷ்யோऽக்ரு’தவ்ரணஃ । ஏவம் சத்வாரோ வயம் । மூல-ஸம்ஹிதா இத்ய் அநேந ததஃ ஸம்ஹிதா-பாஹுல்யம் ஸூசிதம் ।

———————————————————————————————————————

**வம்ஶீதரஃ (பாவார்த-தீபிகா-ப்ரகாஶஃ) : **கஶ்யபோऽஹமுக்ரஶ்ரவாஃ ஸாவர்ணிரக்ரு’தவ்ரணஶ்சதுர்த ஏதே சத்வாரோ வயமித்ய் அர்தஃ । மூலத்வமேஷாம் இதிஹாஸாபேக்ஷயா ஜ்ஞேயம் அஷ்டாதஶ புராணாநி க்ரு’த்வாஸத்யவதீஸுதஃ । பாரதம் க்ரு’தவாந்பஶ்சாத் இதி மாத்ஸ்யாத் ।

ப்ராஹ்மீ பாகவதீ ஶைவீ வைஷ்ணவீ ச ப்ரகீர்திதாஃ ।
சதஸ்ரஃ ஸம்ஹிதாஃ புண்யா தர்மகாமார்தமோக்ஷதாஃ ॥ இதி ।

க்வசித்பஞ்சோக்தாஃ ।

ப்ரஹ்மணஃ ஸ்யுஃ ஶிவஸ்யாபி ப்ரஹ்லாதஸ்யாபி ஸம்ஹிதாஃ ।
கௌதமஸ்ய குமாரஸ்ய ஸம்ஹிதாஃ பஞ்ச வர்ணிதாஃ ॥

க்வசித் ஷடுக்தாஃ—

ஆத்யா ஸநத்குமாரோக்தா த்விதீயா ஸூதஸம்ஹிதா ।
த்ரு’தீயா ஶாங்கரீ விப்ராஶ்சதுர்தீ வைஷ்ணவீ ததா ।
தத்பரா ஸம்ஹிதா ப்ராஹ்மீ ஸௌராந்த்யா பரிகீர்திதா ।
அந்யா அபி ஸம்ஹிதாஸ் து விஜ்ஞேயா முநிநிர்மிதாஃ ।
கௌஶிகீ ஸம்ஹிதா முக்யா வாஸிஷ்டீ மாநவீ ததா ।
கர்காதிமா ச ஸா பாராஶரீ வையாஸகீ ததா ।
ஹநுமத்ஸம்ஹிதா ஜ்ஞேயா ததா ஸௌதர்ஶநீ மதா ।

இதி ஸர்வார்தசிந்தாமண்யுக்தஃ । வ்யாஸஶிஷ்யாந்மத்பிதூ ரோமஹர்ஷணாத் ॥௭॥

———————————————————————————————————————

**ஜீவ-கோஸ்வாமீ (க்ரம-ஸந்தர்பஃ) : **மூலஸம்ஹிதா இதி த்வ் இதிஹாஸவிஶேஷாபேக்ஷயா ஜ்ஞேயம் பஹூநாமந்யேஷாம் இதிஹாஸாநாம் மூலத்வாத் மூலம் இதம் ச பரிஶேஷேண லக்ஷ்யதே “இதிஹாஸபுராணாநாம் பிதா மே ரோமஹர்ஷணஃ” இத்ய்-உக்தேஃ தே ச மஹாபாரதாத்யாஃ ஶ்ரு’ணு பௌராணிகாநிதி தூபலக்ஷணதயோக்தம் ।

———————————————————————————————————————

விஶ்வநாத-சக்ரவர்தீ (ஸாரார்த-தர்ஶிணீ) : வ்யாஸ-ஶிஷ்யாத் லோமஹர்ஷணாத் ॥௭॥॥।॥ ௧௨.௭.௮ ॥

புராண-லக்ஷணம் ப்ரஹ்மந் ப்ரஹ்மர்ஷிபிர் நிரூபிதம் ।

ஶ்ரு’ணுஷ்வ புத்திம் ஆஶ்ரித்ய வேத-ஶாஸ்த்ராநுஸாரதஃ ॥

**ஶ்ரீதர-ஸ்வாமீ (பாவார்த-தீபிகா) : **ஶுக-பரீக்ஷித்-ஸம்வாதே நிரூபிதம் அபி புராண-லக்ஷணம் தத்-பேத-கதநாய தர்ஶயதி, புராணேதி ॥௮॥

———————————————————————————————————————

**வம்ஶீதரஃ (பாவார்த-தீபிகா-ப்ரகாஶஃ) : **வேத ஏவ ஶாஸ்த்ரம் ததநுஸாரதோ யதா வேதே புராணலக்ஷணமுக்தம் ததநதிலந்த்யைவேஹ வர்ணயாமீத்ய் அர்தஃ ॥௮॥

———————————————————————————————————————

ஜீவ-கோஸ்வாமீ (க்ரம-ஸந்தர்பஃ) : ந வ்யாக்யாதம்।

———————————————————————————————————————

விஶ்வநாத-சக்ரவர்தீ (ஸாரார்த-தர்ஶிணீ) : ப்ரஹ்மர்ஷிபிஃ ஶ்ரீ-ஶுக-வசநைர் உபக்ரமே யத் உக்தம் ப்ராயேண தத் ஏவோபஸம்ஹாரேऽப்ய் உச்யதே ॥௮॥॥।॥ ௧௨.௭.௯-௧௦ ॥

ஸர்கோऽஸ்யாத விஸர்கஶ் ச வ்ரு’த்தி-ரக்ஷாந்தராணி ச ।

வம்ஶோ வம்ஶாநுசரிதம் ஸம்ஸ்தா ஹேதுர் அபாஶ்ரயஃ ॥

தஶபிர் லக்ஷணைர் யுக்தம் புராணம் தத்-விதோ விதுஃ ।

கேசித் பஞ்ச-விதம் ப்ரஹ்ம மஹத்-அல்ப-வ்யவஸ்தயா ॥

**ஶ்ரீதர-ஸ்வாமீ (பாவார்த-தீபிகா) : **அஸ்ய விஶ்வஸ்ய “அத்ர ஸர்கோ விஸர்கஶ் ச ஸ்தாநம் போஷணம் ஊதயஃ । மந்வந்தரேஶாநுகதா நிரோதோ முக்திர் ஆஶ்ரயஃ ।” இத்ய் அத்ரோக்தே ஸ்தாந-போஷணே வ்ரு’த்தி-ரக்ஷா-ஶப்தாப்யாம் உச்யேதே । அந்தராணி மந்வந்தராணி வம்ஶோ வம்ஶ்யாநுசரிதம் இதீஶாநுகதாஃ । ஸம்ஸ்தா நிரோதஃ । அநேநைவாத்யந்திக-லய-ரூபா முக்திர் அப்ய் உக்தா । ஹேது-ஶப்தேந ஜீவாஶ்ரய-வாஸநா-ஶப்த-வாச்யா ஊதயோ க்ரு’ஹீதாஃ ।

தஶபிர் ஏதைர் லக்ஷணைர் அர்தைர் யுக்தம் மஹா-புராணம் விதுஃ । கேசித் பஞ்ச-விதம், “ஸர்கஶ் ச ப்ரதிஸர்கஶ் ச வம்ஶோ மந்வந்தராணி ச । வம்ஶாநுசரிதம் சேதி புராணம் பஞ்ச-லக்ஷணம் ।” இதி । மஹத்-புராணம் அல்பம் சேதி வ்யவஸ்தயா யத்ர தஶாபி லக்ஷணாநி ப்ரு’தக் ப்ரு’தங் நிரூப்யந்தே தந் மஹா-புராணம் । யத்ர த்வ் அந்யேஷாம் பஞ்சஸ்வ் ஏவாந்தர்பாவஸ்ய விவக்ஷா தத் அல்பம் இதி வ்யவஸ்தயேத்ய் அர்தஃ ।

———————————————————————————————————————

**வம்ஶீதரஃ (பாவார்த-தீபிகா-ப்ரகாஶஃ) : **போஷணம் ததநுக்ரஹஃ இதி பூர்வலக்ஷிதம் போஷணமேவாத்ர ரக்ஷாஶப்தேநோச்யதே, தாம் வ்யாசஷ்டே ॥ இத்ய் அர்தஃ இதி—அந்தர்பாவஸ் து ஸ்வபுத்த்யைவ ஸர்கே ரக்ஷாயாஃ, ப்ரதிஸர்கே ஸம்ஸ்தாயா இத்யேவம் ரீத்யா யதாயதமநுஸந்தேயம் இதி வம்ஶவம்ஶாநுசரிதயோரீஶகதாயாமந்தர்பாவம் இதி பாவஃ ॥௯-௧௦॥

———————————————————————————————————————

**ஜீவ-கோஸ்வாமீ (க்ரம-ஸந்தர்பஃ) : **ஸர்கோऽஸ்யேத்ய் ஆதிகம் த்விதீய-ஸ்கந்த [பா।பு। ௨.௧௦.௧-௭] ஏவ வ்யாக்யாதம் । அஸ்ய ஶ்ரீ-பாகவதஸ்ய மஹா-புராணத்வ-வ்யஞ்ஜக-லக்ஷணம் ப்ரகாராந்தரேண ச வதந்ந் அபி தஸ்யைவாஶ்ரயத்வம் ஆஹ த்வயேந—ஸர்க இதி । அந்தராணி மந்வந்தராணி । பஞ்ச-விதம்—

ஸர்கஶ் ச ப்ரதிஸர்கஶ் ச வம்ஶோ மந்வந்தராணி ச ।
வம்ஶாநுசரிதம் சேதி புராணம் பஞ்ச-லக்ஷணம் ॥ இதி கேசித் வதந்தி ॥2

ஸ ச மத-பேதோ மஹத்-அல்ப-வ்யவஸ்தயா மஹா-புராணம் அல்ப-புராணம் இதி பிந்நாதிகரணத்வேந । யத்யபி விஷ்ணு-புராணாதாவ் அபி தஶாபி தாநி லக்ஷ்யந்தே, ததாபி பஞ்சாநாம் ஏவ ப்ராதாந்யேநோக்தத்வாத் அல்பத்வம் । அத்ர தஶாநாம் அர்தாநாம் ஸ்கந்தேஷு யதா-க்ரமம் ப்ரவேஶோ ந விவக்ஷிதஃ, தேஷாம் த்வாதஶ-ஸங்க்யத்வாத் । த்விதீய-ஸ்கந்தோக்தாநாம் தேஷாம் த்ரு’தீயாதிஷு யதா-ஸங்க்யம் ந ஸமாவேஶஃ । நிரோதாதீநாம் தஶமாதிஷ்வ் அஷ்டம-வர்ஜம் । அந்யேஷாம் அப்ய் அந்யேஷு யதோக்த-லக்ஷணதயா ஸமாவேஶநாஶக்யத்வாத் ஏவ । தத் உக்தம் ஶ்ரீ-ஸ்வாமிபிர் ஏவ—

தஶமே க்ரு’ஷ்ண-ஸத்-கீர்தி-விதாநாயோபவர்ண்யதே ।
தர்ம-க்லாநி-நிமித்தஸ் து நிரோதோ துஷ்ட-பூபுஜாம் ।
ப்ராக்ரு’தாதி-சதுர்தா யோ நிரோதஃ ஸ து வர்ணிதஃ ॥ இதி ।

அதோऽத்ர ஸ்கந்தே ஶ்ரீ-க்ரு’ஷ்ண-ரூபஸ்யாஶ்ரயஸ்யைவ வர்ணந-ப்ராதாந்யம் தைர் விவக்ஷிதம் । உக்தம் ச ஸ்வயம் ஏவ—தஶமே தஶமம் லக்ஷ்யம் ஆஶ்ரிதாஶ்ரய-விக்ரஹம் இதி । ஏவம் அந்யத்ராப்ய் உந்நேயம் । அதஃ ப்ராயஶஃ ஸர்வேऽர்தாஃ ஸர்வேஷ்வ் ஏவ ஸ்கந்தேஷு குணத்வேந வா முக்யத்வேந வா நிரூப்யந்த இத்ய் ஏவ தேஷாம் அபிமதம் । ஶ்ருதேநார்தேந சாஞ்ஜஸா [பா।பு। ௨.௧௦.௨] இத்ய் அத்ர ச ததைவ ப்ரதிபந்நம் ஸர்வத்ர தத்-தத்-ஸம்பவாத் । ததஶ் ச ப்ரதம-த்விதீயயோர் அபி மஹா-புராணதாயாம் ப்ரவேஶஃ ஸ்யாத் । தஸ்மாத் க்ரமோ ந க்ரு’ஹீதஃ ॥௯-௧௦॥ [தத்த்வ-ஸந்தர்பஃ ௬௧]

———————————————————————————————————————

விஶ்வநாத-சக்ரவர்தீ (ஸாரார்த-தர்ஶிணீ) : கேசித் பஞ்ச-விதம் இதி ।

ஸர்கஶ் ச ப்ரதிஸர்கஶ் ச வம்ஶோ மந்வந்தராணி ச ।
வம்ஶாநுசரிதம் சேதி புராணம் பஞ்ச-லக்ஷணம் ॥ இதி ।

மஹத் அல்பம் சேதி வ்யவஸ்தயா யத்ர தஶாபி லக்ஷணாநி ப்ரு’தங் நிரூப்யந்தே தந் மஹா-புராணம், யத்ர த்வ் அந்யேஷாம் பஞ்சஸ்வ் அந்தர்பாவோ விவக்ஷிதஸ் தத் அல்பம் இதி வ்யவஸ்தயேத்ய் அர்தஃ ॥௯-௧௦॥॥।॥ ௧௨.௭.௧௧ ॥

அவ்யாக்ரு’த-குண-க்ஷோபாந் மஹதஸ் த்ரி-வ்ரு’தோऽஹமஃ ।

பூத-ஸூக்ஷ்மேந்த்ரியார்தாநாம் ஸம்பவஃ ஸர்க உச்யதே ॥

**ஶ்ரீதர-ஸ்வாமீ (பாவார்த-தீபிகா) : **ஸர்காதி-லக்ஷணாநி வ்யாசஷ்டே, அவ்யாக்ரு’தேத்ய்-ஆதிநா । அவ்யாக்ரு’தஸ்ய ப்ரதாநஸ்ய குணாநாம் க்ஷோபாத்யோ மஹாம்ஸ் தஸ்மாத் யஸ் த்ரி-வ்ரு’த்-அஹங்காரஸ் தஸ்மாத் பூத-மாத்ராணாம் ஸுக்ஷ்மாணாம் இந்த்ரியாணாம் ச தத்-அர்தாநாம் ச ஸ்தூலாநாம் தேவதாநாம் ச ஸம்பவஃ ஸர்கஃ காரண-ஸ்ரு’ஷ்டி-ஸர்க இத்ய் அர்தஃ । உச்யத இதி யதாऽபேக்ஷம் உத்தரத்ராப்ய் அநுஷங்கஃ ।

———————————————————————————————————————

**வம்ஶீதரஃ (பாவார்த-தீபிகா-ப்ரகாஶஃ) : **இத்ய் அர்த இதி—விஸர்கஸ்ய ப்ரு’தகுபாதாநாத்ஸர்கபதேந காரணஸ்ரு’ஷ்டிரேவாத்ர ஜ்ஞேயேதி பாவஃ ॥௧௧॥

———————————————————————————————————————

**ஜீவ-கோஸ்வாமீ (க்ரம-ஸந்தர்பஃ) : **அத ஸர்காதீநாம் லக்ஷணம் ஆஹ—அவ்யாக்ரு’தேதி । ப்ரதாந-குண-க்ஷோபாந் மஹாந், தஸ்மாத் த்ரிகுணோऽஹங்காரஃ । தஸ்மாத் பூத-மாத்ராணாம் பூத-ஸூக்ஷ்மாணாம் இந்த்ரியாணாம் ச, ஸ்தூல-பூதாநாம் ச, தத்-உபலக்ஷித-தத்-தேவதாநாம் ச ஸம்பவஃ ஸர்கஃ । காரண-ஸ்ரு’ஷ்டிஃ ஸர்க இத்ய் அர்தஃ ॥௧௧॥ [தத்த்வ-ஸந்தர்பஃ ௬௨]

———————————————————————————————————————

விஶ்வநாத-சக்ரவர்தீ (ஸாரார்த-தர்ஶிணீ) : அத்ர ஸர்கம் வ்யாசஷ்டே । அவ்யாக்ரு’தஸ்ய ப்ரதாநஸ்ய குணாநாம் க்ஷோபாத் யோ மஹாந் தஸ்மாத் । யஸ் த்ரி-ப்ரு’ஹத்-அஹங்கார்ஸ் தஸ்மாத் பூத-மாத்ராதீநாம் ஸம்பவஃ ஸர்கஃ । அத்ரார்த-ஶப்தேந தேவதா ஜ்ஞேயாஃ । காரண-ஸ்ரு’ஷ்டிஃ ஸர்க இத்ய் அர்தஃ । உச்யத இதி யதாபேக்ஷம் உத்தரத்ராப்ய் ஆநுஷங்கஃ ॥௧௧॥॥।॥ ௧௨.௭.௧௨ ॥

புருஷாநுக்ரு’ஹீதாநாம் ஏதேஷாம் வாஸநா-மயஃ ।

விஸர்கோऽயம் ஸமாஹாரோ பீஜாத் பீஜம் சராசரம் ॥

ஶ்ரீதர-ஸ்வாமீ (பாவார்த-தீபிகா) : விஸர்கம் வ்யாசஷ்டே । புருஷேணேஶ்வரேணாநுக்ரு’ஹீதாநாம் ஏதேஷாம் மஹத்-ஆதீநாம் । பூர்வ-கர்ம-வாஸநா-ப்ரதாநோऽயம் ஸமாஹாரஃ கார்ய-பூதஶ் சராசர-ப்ராணி-ரூபோ பீஜாத் பீஜம் இவ ப்ரவாஹாபந்நோ விஸர்க உச்யதே இத்ய் அர்தஃ ॥௧௨॥

———————————————————————————————————————

**வம்ஶீதரஃ (பாவார்த-தீபிகா-ப்ரகாஶஃ) : **இத்ய் அர்த இதி—விஶிஷ்டஃ ஸர்கோ விஸர்க இதி பாவஃ ॥௧௨॥

———————————————————————————————————————

**ஜீவ-கோஸ்வாமீ (க்ரம-ஸந்தர்பஃ) : **புருஷேதி । புருஷஃ பரமாத்மா । ஏதேஷாம் மஹத்-ஆதீநாம், ஜீவஸ்ய பூர்வ-கர்ம-வாஸநா-ப்ரதாநோऽயம் ஸமாஹாரஃ । கார்ய-பூதஶ் சராசர-ப்ராணி-ரூபோ பீஜாத் பீஜம் இவ ப்ரவாஹாபந்நோ விஸர்க உச்யதே । வ்யஷ்டி-ஸ்ரு’ஷ்டி-விஸர்க இத்ய் அர்தஃ । அநேநோதிர் அப்ய் உக்தா ॥௧௨॥ [தத்த்வ-ஸந்தர்பஃ ௬௨]

———————————————————————————————————————

விஶ்வநாத-சக்ரவர்தீ (ஸாரார்த-தர்ஶிணீ) : விஸர்கம் வ்யாசஷ்டே । புருஷேணேஶ்வரேணாநுக்ரு’ஹீதாநாம் ஏதேஷாம் யஃ ஸமாஹாரஃ கார்ய-பூதஃ ஸமஷ்டி-வ்யஷ்டி-ஜீவோபாதிரூபஃ । கீத்ரு’ஶஃ ? வாஸநா-மயஃ ஸதஸத்-வாஸநா-ப்ரதாநஃ ஸ விஸர்கஃ । தத்ர சராசரம் ஜங்கம-ஸ்தாவராத்மகம் ஜகத் இதம் பீஜாத் பீஜம் இவ ப்ரவாஹாபந்நம் பவதி । ஊதயஃ கர்ம-வாஸநா இதி பூர்வ-லக்ஷிதா யா ஊதிஃ ஸாத்ர விஸர்க ஏவாந்தர்பாவிதா ॥௧௨॥॥।॥ ௧௨.௭.௧௩ ॥

வ்ரு’த்திர் பூதாநி பூதாநாம் சராணாம் அசராணி ச ।

க்ரு’தா ஸ்வேந ந்ரு’ணாம் தத்ர காமாச் சோதநயாபி வா ॥

**ஶ்ரீதர-ஸ்வாமீ (பாவார்த-தீபிகா) : **சராணாம் பூதாநாம் ஸாமாந்யதோऽசராணி, ச-காராச் சராணி ச வ்ரு’த்திஃ । தத்ர ந்ரூ’ணாம் ஸ்வேந ஸ்வபாவேந காமாச் சோதநயாபி வா யா நியதா வ்ரு’த்திர் ஜீவிகா க்ரு’தா, ஸா வ்ரு’த்திர் உச்யத இத்ய் அர்தஃ ॥௧௩॥

———————————————————————————————————————

**வம்ஶீதரஃ (பாவார்த-தீபிகா-ப்ரகாஶஃ) : **தத்ர ஸர்வஜீவேஷு । ஸ்வபாவேந ப்ரீஹ்யாதீநி காமநயா, பலாதீநி சோதநயா, விதிநா புரோடாஶாதீநி । இத்ய் அர்த இதி—ந து ஸாமாந்யதோऽபக்ஷ்யபக்ஷணமபீதி பாவஃ । தத்ர காம்யா வ்ரு’த்திர்கார்ஹ்யா, மாம்ஸாஶநலஶுநபலாட்வாதிஷ்வ் அபி தத்குணஶ்ரவணேந காமநோத்பத்தேஃ ॥௧௩॥

———————————————————————————————————————

**ஜீவ-கோஸ்வாமீ (க்ரம-ஸந்தர்பஃ) : **வ்ரு’த்திர் இதி । சராணாம் பூதாநாம் ஸாமாந்யதோऽசராணி, ச-காராச் சராணி ச, காமாத் வ்ரு’த்திஃ । தத்ர து ந்ரூ’ணாம் ஸ்வேந ஸ்வபாவேந காமாச் சோதநயாபி வா யா நியதா வ்ரு’த்திர் ஜீவிகா க்ரு’தா, ஸா வ்ரு’த்திர் உச்யத இத்ய் அர்தஃ ॥௧௩॥ [தத்த்வ-ஸந்தர்பஃ ௬௨]

———————————————————————————————————————

விஶ்வநாத-சக்ரவர்தீ (ஸாரார்த-தர்ஶிணீ) : பூர்வோக்தம் ஸ்தாநம் பாலநம் ஏவாத்ர வ்ரு’த்தி-ஶப்தேநோச்யதே । தாம் வ்யாசஷ்டே வ்ரு’த்திர் இதி । சராணாம் பூதாநாம் ஸாமாந்யதோऽசராணி ச காமாத் வ்ரு’த்திஃ । தத்ர ந்ரூ’ணாம் ஸ்வேந ஸ்வபாவேந காமாச் சோதநயாபி வா யா நியதா வ்ரு’த்திர் ஜீவிகா க்ரு’தா, ஸா வ்ரு’த்திர் உச்யத இத்ய் அர்தஃ । தேஷாம் சராசராணாஸ் த்வ் ஆஶ்ரயஃ ஸர்வைவ ப்ரு’த்வீதி வ்ரு’த்தி-ப்ரஸங்க ஏவ பூகோஅச-சக்ரம் பஞ்சம-ஸ்கந்தே நிரூபிதம் ॥௧௩॥॥।॥ ௧௨.௭.௧௪ ॥

ரக்ஷாச்யுதாவதாரேஹா விஶ்வஸ்யாநு யுகே யுகே ।

திர்யங்-மர்த்யர்ஷி-தேவேஷு ஹந்யந்தே யைஸ் த்ரயீ-த்விஷஃ ॥

ஶ்ரீதர-ஸ்வாமீ (பாவார்த-தீபிகா) : திர்யங்-மர்த்யர்ஷி-தேவேஷு யேऽச்யுதாவதாராஸ் தேஷாம் ஈஹா லீலா ஸா விஶ்வஸ்ய ரக்ஷோऽச்யுத இத்ய் அர்தஃ । யைர் அவதாரைர் இதி ஸமாஸாந் நிஷ்க்ரு’ஷ்ய கதஞ்சித் ஸம்பந்தஃ । த்ரயீ-த்விஷோ தைத்யாஃ ॥௧௪॥

———————————————————————————————————————

**வம்ஶீதரஃ (பாவார்த-தீபிகா-ப்ரகாஶஃ) : **இத்ய் அர்த இதி—ந து கவாஶ்வாதிரக்ஷணமாத்ரம் ஏவ ரக்ஷாபதார்த இதி பாவஃ । அவதாரேஹாऽவதாரகாரணம் ஸைவ ரக்ஷா । குத இத்யத ஆஹ—யைர் இதி । ஸமாஸாந்நிஷ்க்ரு’த்ய கதஞ்சிதகத்யா । யதா—பீஷ்மத்ரோணப்ரமுகதஃ ஸர்வேஷாம் ச மஹீக்ஷிதாம் இத்யத்ர ப்ரமுகத இத்யஸ்ய விவக்ஷாவஶாந்மஹீக்ஷிதாமித்யநேந ஸம்பந்தஸ் தத்வதத்ராபி । யத் வா, யஸ்யைதே ராஜமாதங்காஸ் தஸ்யைவைதே துரங்கமாஃ இதி புத்திஸ்தக்ராஹகத்வம் அபி த்யதாதீநாம் இதி ஜ்ஞேயம் । ஹந்யத இதி—துஷ்டநிக்ரஹாத்ஸ்வபக்தரக்ஷணம் ஏவ ரக்ஷேத்யாகதம் । உபலக்ஷணமேததந்யதாபி மஹாபயாத்ஸ்வபக்தரக்ஷணம் ரக்ஷோச்யதேऽத ஏவ ஷஷ்டேऽஜாமிலாதிபக்தாநாம் ரக்ஷோக்தா ॥௧௪॥

———————————————————————————————————————

**ஜீவ-கோஸ்வாமீ (க்ரம-ஸந்தர்பஃ) : **ரக்ஷேதி । யைர் அவதாரைஃ । அநேநேஶ-கதா । ஸ்தாநம் போஷணம் சேதி த்ரயம் உக்தம் ॥௧௪॥ [தத்த்வ-ஸந்தர்பஃ ௬௨]

———————————————————————————————————————

**விஶ்வநாத-சக்ரவர்தீ (ஸாரார்த-தர்ஶிணீ) : **போஷணம் தத்-அநுக்ரஹ இதி பூர்வ-லக்ஷிதம் போஷணம் ஏவாத்ர ரக்ஷா-ஶப்தேநோச்யதே । தாம் வ்யாசஷ்டே ரக்ஷேதி । திர்யக்-ஆதிஷு யாச்யுதஸ்யாவதாரேஹா அவதார-காரணம் ஸைவ ரக்ஷா, குத இத்ய் அத ஆஹ யைர் அவதாரைஸ் த்ரயீ-த்விஷோ ஹந்யந்தே இத்ய் அதோ துஷ்ட-நிக்ரஹாத் ஸ்வபக்த-ரக்ஷணம் ஏவ ரக்ஷேத்ய் அர்த ஆயாதஃ । உபலக்ஷணம் ஏதத் அந்யதாபி மஹா-பயாத் ஸ்வபக்த-ரக்ஷணம் ரக்ஷோச்யதே । அத ஏவ ஷஷ்டேऽஜாமிலாதி-பக்தாநாம் ரக்ஷோக்தா ॥௧௪॥॥।॥ ௧௨.௭.௧௫ ॥

மந்வந்தரம் மநுர் தேவா மநு-புத்ராஃ ஸுரேஶ்வராஃ ।

ரு’ஷயோऽம்ஶாவதாராஶ் ச ஹரேஃ ஷட்-விதம் உச்யதே ॥

ஶ்ரீதர-ஸ்வாமீ (பாவார்த-தீபிகா) : ஷட்-விதம் மந்வந்தரம் உச்யதே । ஷட்விதத்வம் ஏவாஹ—மநுர் இதி ।மந்வாதயஃ ஷட் ஏதே வர்காஃ ஸ்வ-ஸ்வாதிகாரேண, யதா ப்ரவர்தந்தே தந் மந்வந்தரம் இத்ய் அர்தஃ ॥௧௫॥

———————————————————————————————————————

**வம்ஶீதரஃ (பாவார்த-தீபிகா-ப்ரகாஶஃ) : **இத்ய் அர்த இதி—ஏஷாம் ப்ரவ்ரு’த்திகால ஏவ மந்வந்தரம் இதி பாவஃ ॥௧௫॥

———————————————————————————————————————

**ஜீவ-கோஸ்வாமீ (க்ரம-ஸந்தர்பஃ) : **மந்வந்தரம் இதி । மந்வ்-ஆத்ய்-ஆசரண-கதநேந ஸத்-தர்ம ஏவாத்ர விவக்ஷித இத்ய் அர்தஃ । ததஶ் ச ப்ராக்தந-க்ரந்தேநைகார்த்யம் ॥௧௫॥ [தத்த்வ-ஸந்தர்பஃ ௬௨]

———————————————————————————————————————

**விஶ்வநாத-சக்ரவர்தீ (ஸாரார்த-தர்ஶிணீ) : **மந்வந்தராணி ஸத்-தர்ம இதி பூர்வ-லக்ஷிதம் । மந்வந்தரம் வ்யாசஷ்டே மந்வந்தரம் இதி । விதததி ஸ்வ-ஸ்வ-க்ரு’த்யம் குர்வந்தீதி விதா மந்வாதயஸ் தே ஷட், யத்ர தத் ஷட்-விதம் இத்ய் அர்தஃ । மந்வாதயஃ ஷட் ஸ்வ-ஸ்வாதிகாரேண, யத்ர ப்ரவர்தந்தே தந் மந்வந்தரம் இத்ய் அர்தஃ ॥௧௫॥॥।॥ ௧௨.௭.௧௬ ॥

ராஜ்ஞாம் ப்ரஹ்ம-ப்ரஸூதாநாம் வம்ஶஸ் த்ரை-காலிகோऽந்வயஃ ।

வம்ஶாநுசரிதம் தேஷாம் வ்ரு’த்தம் வம்ஶ-தராஶ் ச யே ॥

ஶ்ரீதர-ஸ்வாமீ (பாவார்த-தீபிகா) : வம்ஶம் ஆஹ—ராஜ்ஞாம் இதி । ப்ரஹ்மணஃ ஸகாஶாத் ப்ரஸூதிர் யேஷாம் ஶுத்தாநாம் இத்ய் அர்தஃ । தேஸாம் அந்வயோ வம்ஶஃ । தேஷாம் வ்ரு’த்தம் । யே ச தத்-வம்ஶதராஸ் தேஷாம் ச வ்ரு’த்தம் வம்ஶாநுசரிதம் உச்யதே ॥௧௬॥

———————————————————————————————————————

வம்ஶீதரஃ (பாவார்த-தீபிகா-ப்ரகாஶஃ) : இத்ய் அர்த இதி—இதம் சகாரேண ஜ்ஞேயம் இதி பாவஃ । வ்ரு’த்தம் ஶீலம் । தத்வம்ஶதராஃ ப்ரியவ்ரதத்ருவப்ரு’த்வாதயஃ ॥௧௬॥

———————————————————————————————————————

**ஜீவ-கோஸ்வாமீ (க்ரம-ஸந்தர்பஃ) : **ப்ரஹ்ம-ப்ரஸூதாநாம் ப்ரஹ்மத ஆரப்தாநாம் இத்ய் அர்தஃ । தேஷாம் ராஜ்ஞாம் யே ச வம்ஶ-தராஸ் தேஷாம் வ்ரு’த்தம் வம்ஶ்யாநுசரிதம் ॥௧௬॥ [தத்த்வ-ஸந்தர்பஃ ௬௨]

———————————————————————————————————————

**விஶ்வநாத-சக்ரவர்தீ (ஸாரார்த-தர்ஶிணீ) : **வம்ஶம் வ்யாசஷ்டே—ராஜ்ஞாம் இதி । ப்ரஹ்மணஃ ஸகாஶாத் ப்ரஸூதிர் யேஷாம் தேஷாம் அந்வயோ வம்ஶஃ । வம்ஶாநுசரிதம் வ்யாசஷ்டே—தேஷாம் மத்யே யே வம்ஶ-தராஃ ப்ரஸித்தாஃ ப்ரியவ்ரத-த்ருவ-ப்ரு’த்வ்-ஆதயஸ் தேஷாம் வ்ரு’த்தம் சரித்ரம் வம்ஶாநுசரிதம் உச்யதே । ஏதத்-த்வயம் பூர்வம் ஈஶாநுகதாயாம் ஏவாந்தர்பாவிதம் ॥௧௬॥॥।॥ ௧௨.௭.௧௭ ॥

நைமித்திகஃ ப்ராக்ரு’திகோ நித்ய ஆத்யந்திகோ லயஃ ।

ஸம்ஸ்தேதி கவிபிஃ ப்ரோக்தஶ் சதுர்தாஸ்ய ஸ்வபாவதஃ ॥

**ஶ்ரீதர-ஸ்வாமீ (பாவார்த-தீபிகா) : **அஸ்ய விஶ்வஸ்ய । ஸ்வபாவதோ மாயாதோ நிஷ்பந்நஸ்ய । யத் வா, மாயாதோ யஶ் சதுர்-விதோ லய இதி ॥௧௭॥

———————————————————————————————————————

**வம்ஶீதரஃ (பாவார்த-தீபிகா-ப்ரகாஶஃ) : **ஸ்வஸ்யைவ ஶக்திரூபேண பவநம் ஸ்வபாவோ மாயா ந கேவலம் மாயாதோ லய ஏவ கிந்து ப்ரலயோऽபீத்ய் ஆஹ—யத்வேதி । அவ்யக்தாதீநி பூதாநி வ்யக்தமத்யாநி பாரத । அவ்யக்தாநிதநாந்யேவ இதி ஶ்ரீமுகோக்தேஃ ॥௧௭॥

———————————————————————————————————————

**ஜீவ-கோஸ்வாமீ (க்ரம-ஸந்தர்பஃ) : **அஸ்ய பரமேஶ்வரஸ்ய । ஸ்வபாவதோ மாயாக்ய-ஸ்வாபாவிக-ஶக்திதஃ । ஆத்யந்திக இத்ய் அநேந முக்திர் அப்ய் அத்ர ப்ரவேஶிதா ॥௧௭॥ [தத்த்வ-ஸந்தர்பஃ ௬௩]

———————————————————————————————————————

விஶ்வநாத-சக்ரவர்தீ (ஸாரார்த-தர்ஶிணீ) : பூர்வோக்த-நிரோத-ஶப்த-வாச்யாம் ஸம்ஸ்தாம் வ்யாசஷ்டே । நைமித்திக இதி । அஸ்ய விஶ்வஸ்ய ஸ்வபாவதஃ ஸ்வஸ்ய பாவேஷு காரணேஷு ப்ரு’திவ்ய்-ஆதி-தத்த்வேஷு க்ரமேண லயஃ ஸம்ஸ்தோச்யதே ॥௧௭॥॥।॥ ௧௨.௭.௧௮ ॥

ஹேதுர் ஜீவோऽஸ்ய ஸர்காதேர் அவித்யா-கர்ம-காரகஃ ।

யம் சாநுஶாயிநம் ப்ராஹுர் அவ்யாக்ரு’தம் உதாபரே ॥

ஶ்ரீதர-ஸ்வாமீ (பாவார்த-தீபிகா) : அஸ்ய ஜகதஃ ஸர்காதேர் ஹேதுர் நிமித்தம் ஜீவஃ, ஸோऽத்ர ஹேதுர் உச்யத இத்ய் அர்தஃ । தஸ்ய நிமித்ததாம் ஆஹ—அவித்யயா கர்ம-காரகஃ கர்ம-கர்தா । ஜீவாத்ரு’ஷ்ட-ப்ரயுக்தத்வாத் விஶ்வ-ஸர்காதேஃ, ஸ து தத்ர ஹேதுர் இத்ய் அர்தஃ । நந்வ் அநுஶயீ நிமித்தம் இதி கேசித், அவ்யாக்ரு’தம் இத்ய் அபரே, தத்ராஹ—யம் இதி । சைதந்ய-ப்ராதாந்யேநாநுஶயிநம், உபாதி-ப்ராதாந்ய-விவக்ஷயாவ்யாக்ரு’தம் ॥௧௮॥

———————————————————————————————————————

**வம்ஶீதரஃ (பாவார்த-தீபிகா-ப்ரகாஶஃ) : **இத்ய் அர்த இதி—ஜீவ ஏவ ஸ்வகர்மத்வாரா ஸ்ரு’ஷ்டிகாரணம் இதி பாவஃ । தஸ்ய ஜீவஸ்ய । இத்ய் அர்த இதி— ஜீவஸமுதாயஸுகதுஃகப்ராப்தயே தம் ஹேதும் க்ரு’த்வா ஜகதஃ ஸ்ரு’ஷ்ட்யாதிகமஸ்தீதி பாவஃ । அத்ராஶங்கதே—நந்வ் இதி । யம் ஜீவம் । உபாதிஃ ப்ரக்ரு’திஃ । சக்ரவர்திகாரஸ்து—அஸ்ய ஸர்காதேஜீவஃ காரணம் ஸ சாவித்யயா கர்ம கர்தா ஜீவார்தம் ஏவ பகவதா விஶ்வஸ்ய க்ரு’தத்வாஜ்ஜீவோ நிமித்தம் இதி பாவஃ । அத ஏவ யமநுஶயிநம் மாயிகோபாதிமநுஶயாநம் மாயிகஶரீரவரமேவைகே ப்ராஹுஃ । அபரபக்தாஸ்து—ஆவித்யககர்மகர்தாரம் ஜீவம் ஸாதுஸங்கவஶாத்பக்திமார்கஸ்தத்வே ஸதி அவ்யாக்ரு’தம் சிந்மயபார்ஷதஶரீரவந்தமப்யாஹுஃ । அப்யர்தே உத் ஶப்தஃ । தத்-உக்தம் நாரதேந—ஶுத்தாம் பாகவதீ தநும் । ஆரப்தகர்மநிர்வாணோ ந்யபதத்பாஞ்சபௌதிகஃ இதி । வேதஸ்தவாரம்பேபி—

புத்தீந்த்ரியமநஃப்ராணாஞ்ஜநாநாமஸ்ரு’ஜத்ப்ரபுஃ ।
மாத்ரார்தம் ச பவார்தஶ் ச ஆத்மநே கல்பநாய ச ॥ இதி ।

ஆத்மநேऽகல்பநாய புத்தீந்த்ரியமநஃப்ராணாந்ஸம்ப்ராபயிதும் இதி தத்ரார்தஃ । ஏதந்மத ஏவ நவமம் லக்ஷணம் பூர்வத்ரோக்தம் । முக்திர்ஹித்வாந்யதா ரூபம் ஸ்வரூபேண வ்யவஸ்திதிஃ இதி விஶேஷேண சித்தநஶரீரத்வேநாவஸ்திதிர் இதி தத்ர வ்யாக்யேதி விஶ்வநாதஃ ॥௧௮॥

———————————————————————————————————————

ஜீவ-கோஸ்வாமீ (க்ரம-ஸந்தர்பஃ) : ஹேதுர் நிமித்தம் । அஸ்ய விஶ்வஸ்ய । யதோऽயம் அவித்யயா கர்ம-காரகஃ । யம் ஏவ ஹேதும் கேசிச் சைதந்ய-ப்ராதாநேந்ஆநுஶயிநம் கர்ம-வாஸநா-யுக்தம் ஜீவம் ப்ராஹுஃ । அபரே உபாதி-ப்ராதாந்யேந்ஆவ்யாக்ரு’தம் ப்ரதாநம் ॥௧௮॥ [தத்த்வ-ஸந்தர்ப ௬௩]

———————————————————————————————————————

விஶ்வநாத-சக்ரவர்தீ (ஸாரார்த-தர்ஶிணீ) : ஹேதும் வ்யாசஷ்டே—அஸ்ய ஜகதஃ ஸர்காதேர் ஹேதுர் நிமித்தம் ஜீவஃ । ஸ சாவித்யா-கர்ம-காரகஃ அவித்யயா கர்ம-கர்தா । ஜீவார்தம் ஏவ பகவதா விஶ்வஸ்ய ஸர்காதேஃ க்ரு’தத்வாஜ் ஜீவோ நிமித்தம் இதி பாவஃ । அத ஏவ யம் அநுஶயிநம் மாயிகோபாதிம் அநுஶயாநம் மாயிக-ஶரீரவந்தம் ஏவைகே ப்ராஹுஃ । அபரே பக்தாஸ் து ஆவித்யக-கர்ம-கர்தாரம் ஜீவம் ஸாது-ஸங்க-வஶாத் பக்தி-மார்க-ஸ்தத்வே ஸதி அவ்யாக்ரு’தம் அப்ராக்ரு’தம் சிந்மய-பார்ஷத-ஶரீரவந்தம் அபி ப்ராஹுஃ । அப்ய்-அர்தே உத-ஶப்தஃ ।

யத் உக்தம் நாரதேந—

ப்ரயுஜ்யமாநே மயி தாம் ஶுத்தாம் பாகவதீம் தநும் ।
ஆரப்த-கர்ம-நிர்வாணோ ந்யபதத் பாஞ்ச-பௌதிகஃ ॥ [பா।பு। ௧.௬.௨௯] இதி ।

அத ஏவோக்தம் வேத-ஸ்தவாரம்பே—

புத்தீந்த்ரிய-மநஃ-ப்ராணாந் ஜநாநாம் அஸ்ரு’ஜத் ப்ரபுஃ ।
மாத்ரார்தம் ச பவார்தம் ச ஆத்மநேऽகல்பநாய ச ॥ [பா।பு। ௧௦.௮௭.௨] இதி ।

ஆத்மநே கல்பநாய புத்தீந்த்ரிய-மநஃ-ப்ராணாந் ஸம்ப்ராபயிதும் இதி தத்ரார்தஃ । ஏதந்-மத ஏவ நவமம் லக்ஷணம் பூர்வத்ரோக்தம்—முக்திர் ஹித்வாந்யதா-ரூபம் [பா।பு। ௨.௧௦.௬] இதி விஶேஷேண சித்-கந-ஶரீரத்வேநாவஸ்திதிர் இதி தத்ர வ்யாக்யா ॥௧௮॥॥।॥ ௧௨.௭.௧௯ ॥

வ்யதிரேகாந்வயோ யஸ்ய ஜாக்ரத்-ஸ்வப்ந-ஸுஷுப்திஷு ।

மாயா-மயேஷு தத் ப்ரஹ்ம ஜீவ-வ்ரு’த்திஷ்வ் அபாஶ்ரயஃ ॥

ஶ்ரீதர-ஸ்வாமீ (பாவார்த-தீபிகா) : அபாஶ்ரயம் ஆஹ—வ்யதிரேகேதி । ஜாக்ரத்-ஆதிஷ்வ் அவஸ்தாஸு ஜீவதயா வர்தந்த இதி ஜீவ-வ்ரு’த்தயோ விஶ்வ-தைஜஸ-ப்ராஜ்ஞாஸ் தேஷு மாயா-மயேஷு ஸாக்ஷிதயாந்வயஃ ஸமாத்ய்-ஆதௌ ச வ்யதிரேகோ யஸ்ய தத் ப்ரஹ்ம ஸம்ஸார-ப்ரதீதி-பாதயோர் அதிஷ்டாநாவதி-பூதம் அபாஶ்ரய உச்யத இத்ய் அர்தஃ ॥௧௯॥

———————————————————————————————————————

**வம்ஶீதரஃ (பாவார்த-தீபிகா-ப்ரகாஶஃ) : **ஸமாத்யாஹாவிதாதிநா மூர்சாக்ரஹஃ । ஸமாதௌ ஸ்வரூபாவஸ்தாநேந மூர்சாயாம் ப்ரதீத்யபாவேந ச வ்யதிரேகஃ ॥௧௯॥

———————————————————————————————————————

**ஜீவ-கோஸ்வாமீ (க்ரம-ஸந்தர்பஃ) : **ஶ்ரீ-பாதராயண-ஸமாதி-லப்தார்த-விரோதாத் அத்ர ச ஜீவ-ஶுத்த-ஸ்வரூபம் ஏவாஶ்ரயத்வேந ந வ்யாக்யாயதே, கிந்த்வ் அயம் ஏவார்தஃ—ஜாக்ரத்-ஆதிஷ்வ் அவஸ்தாஸு, மாயா-மயேஷு மாயா-ஶக்தி-கல்பிதேஷு மஹத்-ஆதி-த்ரவ்யேஷு ச ஜீவ-வ்ரு’த்திஷு ஶுத்த-ஜீவ-ஸ்வரூபாஸு ஸ்வ-ஶக்தி-வ்ரு’த்திஷு ச கேவல-ஸ்வரூபேண வ்யதிரேகஃ பரம-ஸாக்ஷிதயாந்வயஶ் ச யஸ்ய, தத் ப்ரஹ்ம சாபாஶ்ரய உச்யதே । தஸ்மாத் அபக்ரு’ஷ்டாநாம் அந்யேஷாம் ஸமஸ்தாநாம் ஆஶ்ரய இத்ய் அர்தஃ । ஜீவாநாம் வ்ரு’த்திஷு—ஶுத்த-ஸ்வரூபதயா ஸோபாதிதயா ச வர்தநேஷு ஸ்திதிஷ்வ் அபாஶ்ரயஃ ஸர்வம் அதிக்ரம்யாஶ்ரய இத்ய் அர்தஃ । அப இத்ய் ஏதத் கலு வர்ஜநே, வர்ஜநம் சாதிக்ரமே பர்யவஸ்யதீதி ।_।_௧௯॥ [தத்த்வ-ஸந்தர்ப ௬௩]

———————————————————————————————————————

**விஶ்வநாத-சக்ரவர்தீ (ஸாரார்த-தர்ஶிணீ) : **அபாஶ்ரயம் வ்யாசஷ்டே—வ்யதிரேகேதி । ஜாக்ரத்-ஸ்வப்ந-ஸுஷுப்திஷ்வ் அவஸ்தாஸு । ததா மாயா-மயேஷு ஸர்வேஷ்வ் ஏவ பதார்தேஷு யஸ்ய ஹேதுதயா அந்வயஃ । தேப்யோ வ்யதிரேகஶ் ச । தத் ப்ரஹ்ம அபாஶ்ரய உச்யதே ॥௧௯॥॥।॥ ௧௨.௭.௨௦-௨௧ ॥

பதார்தேஷு யதா த்ரவ்யம் ஸந்-மாத்ரம் ரூப-நாமஸு ।

பீஜாதி-பஞ்சதாந்தாஸு ஹ்ய் அவஸ்தாஸு யுதாயுதம் ॥

விரமேத யதா சித்தம் ஹித்வா வ்ரு’த்தி-த்ரயம் ஸ்வயம் ।

யோகேந வா ததாத்மாநம் வேதேஹாய நிவர்ததே ॥

ஶ்ரீதர-ஸ்வாமீ (பாவார்த-தீபிகா) : ஏதத் ஏவ ஸத்ரு’ஷ்டாந்தம் ப்ரபஞ்சயதி—பதார்தேஷு கடாதிஷு த்ரவ்யம் ம்ரு’த்-ஆதி யதா யுதம் அந்விதம் அயுதம் ச பஹிர் அப்ய் அவஸ்தாநாத் । ரூப-நாமஸு ச ஸந்-மாத்ரம் ஸத்தா-மாத்ரம் யதா । ஏவம் பீஜம் கர்பாதாநம் ஆதிர் யாஸாம் பஞ்சதாந்தோ யாஸாம் தாஸு தேஹாவஸ்தாஸு நவஸ்வ் அப்ய் அதிஷ்டாநத்வேந ஸாக்ஷித்வேந ச யுதம் அயுதம் ச யத் தத் அபாஶ்ரய இதி ॥௨௦॥

ஏவம் தஶாபி லக்ஷணாநி வ்யாக்யாய—தஶமஸ்ய விஷுத்த்ய்-அர்தம் நவாநாம் இஹ லக்ஷணம் । வர்ணயந்தி மஹாத்மநஃ [பா।பு। ௨.௧௦.௨] இதி யத் உக்தம், தத் ஆஹ—விரமேதேதி । யதா ஸர்காதீநாம் மாயாமயத்வாநுஸந்தாநேந வாமதேவாதேர் இவ ஸ்வயம் ஏவ சித்தம் விரமேத । இஹைவாநுஷ்டிதேந யோகேந வா தேவஹூத்ய்-ஆதிவத் । ததா விக்ஷேபாபாவாத் ஆத்மாநம் வேத । ததா சாவித்யா-நிவ்ரு’த்தேர் ஈஹாயாஃ ஸம்ஸார-ரூபாயா நிவர்தத இத்ய் அர்தஃ ॥௨௧॥

———————————————————————————————————————

**வம்ஶீதரஃ (பாவார்த-தீபிகா-ப்ரகாஶஃ) : **ஏதத் ஏவாந்வயவ்யதிரேகத்வம் ஏவ । ரூபநாமஸ்வ் இதி—ஸமீபஸ்தே மேருரயமித்ய் உக்தே மேருரூபே ஸத்தாந்வயஃ, தூரஸ்தேந மேருரித்ய் உக்தே து மேருதர்ஶநாபாவாந்மேருநாம்ந்யேவ ஸத்தாந்வயஃ । யத் வா, ரூபநாமயுக்தேஷு பதார்தேஷ்வ் இதி யோஜ்யம் । நவாவஸ்தாஸ்து—

நிஷேககர்பஜந்மாநி பால்யகைஶோரயௌவநம் ।
வயோமத்யம் ஜரா ம்ரு’த்யுரித்யவஸ்தாஸ்தநோர்நவ ॥

இத்யேகாதஶஸ்கந்தே ஸ்வயம் பகவதைவோக்தாஃ ।

அதிஷ்டாநத்வேந யுதம் ஸாக்ஷித்வேநாயுதம் ॥ வ்ரு’த்தித்ரயம் ஜாக்ரதாதித்ரயம் । வாமதேவ ரு’ஷிவிஶேஷஃ । ஆதிநா தத்தாத்ரேயாதிக்ரஹஃ । த்விதீயாதிநாஸுர்யாதிக்ரஹஃ । இத்ய் அர்த இதி—ஈஹாநிவ்ரு’த்தேர் ஏவ மோக்ஷத்வாத்—

யதா ஸர்வே ப்ரமுச்யந்தே காமா யேऽஸ்ய ஹ்ரு’தி ஶ்ரிதாஃ ।
அத மர்த்யோऽம்ரு’தோऽபவத்யத்ர ப்ரஹ்ம ஸமஶ்நுதே ॥

இதி ஶ்ருதேரயம் பாவஃ ॥௨௦-௨௧॥

———————————————————————————————————————

**ஜீவ-கோஸ்வாமீ (க்ரம-ஸந்தர்பஃ) : **தத் ஏவம் அபாஶ்ரயாபிவ்யக்தி-த்வார-பூதம் ஹேது-ஶப்த-வ்யபதிஷ்டஸ்ய ஜீவஸ்ய ஶுத்த-ஸ்வரூப-ஜ்ஞாநம் ஆஹ த்வாப்யாம்—பதார்தேஷு இதி । ரூப-நாமாத்மகேஷு பதார்தேஷு கடாதிஷு யதா த்ரவ்யம் ப்ரு’திவ்யாதி யுதம் அயுதம் ச பவதி । கார்ய-த்ரு’ஷ்டிம் விநாப்ய் உபலம்பாத்। ததா தந்-மாத்ரம் ஶுத்தம் ஜீவ-சைதந்ய-மாத்ரம் வஸ்து கர்பாதாநாதி-பஞ்சதாந்தாஸு நவஸ்வ் அப்ய் அவஸ்தாஸ்வ் அவித்யயா யுதம் ஸ்வதஸ் த்வ் அயுதம் இதி ஶுத்தம் ஆத்மாநம் இத்தம் ஜ்ஞாத்வா நிர்விண்ணஃ ஸந்ந் அபாஶ்ரயாநுஸந்தாந-யோக்யோ பவதீத்ய் ஆஹ விரமேதேதி । வ்ரு’த்தி-த்ரயம் ஜாக்ரத்-ஸ்வப்ந-ஸுஷுப்தி-ரூபம் । ஆத்மாநம் பரமாத்மாநம் । ஸ்வயம் வாஸுதேவாதேர் இவ மாயாமயத்வாநுஸந்தாநேந தேவ த்யாதேர் இவாநிஷ்டிதேந யோகேந வா । ததஶ் சேஹாயாஸ் தத்-அநுஶீலந-வ்யதிரிக்த-சேஷ்டாயாஃ ॥ [தத்த்வ-ஸந்தர்ப ௬௩]

———————————————————————————————————————

விஶ்வநாத-சக்ரவர்தீ (ஸாரார்த-தர்ஶிணீ) : ஏதத் ஏவ ஸ-த்ரு’ஷ்டாந்தம் ப்ரபஞ்சயதி । பதார்தேஷு கடாதிஷு த்ரவ்யம் ம்ரு’தாதி யதா யுதம் அந்விதம், அயுக்தம் ச பஹிர்-அவஸ்தாநாத் । ரூப-நாமஸு வாச்ய-வாசக-வஸ்துஷு யதா தந்-மாத்ரம் கந்தாதிகம் ச । ததைவ பீஜாதி-பஞ்சதாஸ் தாஸு பீஜம் கர்பாதாநம் ஆதிர் யாஸாம் பஞ்சதா அந்தோ யாஸாம் தாஸு தேஹாவஸ்தாஸு அதிஷ்டிதத்வேந ஸாக்ஷித்வேந ச யுதம் அயுதம் ச யத் தத் அபாஶ்ரயஃ ॥௨௦॥

ஏவம் தஶ-லக்ஷணாநி வ்யாக்யாயேதாநீம்—தஶமஸ்ய விஷுத்த்ய்-அர்தம் நவாநாம் இஹ லக்ஷணம் । வர்ணயந்தி மஹாத்மநஃ [பா।பு। ௨.௧௦.௨] இதி யத் உக்தம் தத் ஆஹ—விரமேதேதி । ஜரயத்ய் ஆஶு யா கோஷம் நிகீர்ணம் அநலோ யதா [பா।பு। ௩.௨௫.௩௩] இதி ந்யாயேந கேவலயா ஶ்ரவண-கீர்தநாதி-பக்த்யைவ ஸ்வயம் ஏவ வ்ரு’த்தி-த்ரயம் ஹித்வாசித்தம் ஸ்வயம் ஏவ விரமேத குணேப்யோ விரதம் ஸ்யாத் । பகவச்-சரணாரவிந்தே விஶேஷேண ரமேத வா । யோகேநாஷ்டாங்க-யோகேந வா விரமேத சித்தம் நிர்வாணம் ஸ்யாத், ததா ஆத்மாநம் வேத । பரமாத்மாநம் அநுபவந்தி, ததைவ ஈஹாயா வைஷயிகாத் காமாத் நிவர்ததே ॥௨௧॥॥।॥ ௧௨.௭.௨௨ ॥

ஏவம்-லக்ஷண-லக்ஷ்யாணி புராணாநி புரா-விதஃ ।

முநயோऽஷ்டாதஶ ப்ராஹுஃ க்ஷுல்லகாநி மஹாந்தி ச ॥

**ஶ்ரீதர-ஸ்வாமீ (பாவார்த-தீபிகா) : **புராண-விபாக-ப்ரஸ்தாவேந தல்-லக்ஷணாதி-ப்ராஸங்கிகம் உக்த்வா ப்ரஸ்துதம் ஆஹ, ஏவம்-விதைர் லக்ஷணைர் லக்ஷ்யாணி ॥௨௨॥

———————————————————————————————————————

ஜீவ-கோஸ்வாமீ (க்ரம-ஸந்தர்பஃ), விஶ்வநாத-சக்ரவர்தீ (ஸாரார்த-தர்ஶிணீ) : ந வ்யாக்யாதம்।॥।॥ ௧௨.௭.௨௩-௨௪ ॥

ப்ராஹ்மம் பாத்மம் வைஷ்ணவம் ச ஶைவம் லைங்கம் ஸ-காருடம் ।

நாரதீயம் பாகவதம் ஆக்நேயம் ஸ்காந்த-ஸம்ஜ்ஞிதம் ॥

பவிஷ்யம் ப்ரஹ்ம-வைவர்தம் மார்கண்டேயம் ஸ-வாமநம் ।

வாராஹம் மாத்ஸ்யம் கௌர்மம் ச ப்ரஹ்மாண்டாக்யம் இதி த்ரி-ஷட் ॥

ஶ்ரீதர-ஸ்வாமீ (பாவார்த-தீபிகா) : ந வ்யாக்யாதம்।

———————————————————————————————————————

**வம்ஶீதரஃ (பாவார்த-தீபிகா-ப்ரகாஶஃ) : **புராவிதஃ அதீதாநாகதவிதோ வ்யாஸாதயோ முநயஃ । க்ஷுல்லகாநி ஶ்லோகஸங்க்யா பரிமிதாநி ந த்வர்ததஃ, காநிசிதர்ததஃ ஶப்ததஃ பலதஶ் ச மஹாந்தி ॥ த்ரிராவ்ரு’த்தாஃ ஷட் த்ரிஷட் । ஶைவே து—

ப்ராஹ்மம் புராணம் தத்ராத்யம் ஸம்ஹிதாயாம் விபூஷிதம் ।
ஶ்லோகாநாம் தஶஸாஹஸ்ரம் நாநா புண்யகதாயுதம் ।
பாத்மம் த்விதீயம் கதிதம் த்ரு’தீயம் வைஷ்ணவம் ஸ்ம்ரு’தம் ।
சதுர்தம் வாயுநா ப்ரோக்தம் வாயவீயம் இதி ஸ்ம்ரு’தம் ।
ததோ பாகவதம் ப்ரோக்தம் பாகத்வயவிபூஷிதம ।
சதுர்பிஃ பர்வபிஃ ப்ரோக்தம் பவிஷ்யம் ததநந்தரம । மார்கண்டேயமதாக்நேயம் நாரதீய ததஃ பரம் ।
தஶமம் ப்ரஹ்மவைவர்தம் லிங்கம் ஏகாதஶம் ஸ்ம்ரு’தம ।
பாகத்வயேந லிங்கம் ச ததோ வாராஹமத்தமம ।
ஸம்யுக்தமஷ்டபிஃ கண்டஃ ஸ்காந்தம் சைவாதிவிஸ்தரம் ।
ததஸ் து வாமநம் கௌர்மம் பாகத்வயவிராஜிதம் ।
மாத்ஸ்யம் ச காருடம் ப்ரோக்தம் ப்ரஹ்மாண்டம் ச ததஃ பரம் ।
பாகத்வயேந கதிதம் ப்ரஹ்மாண்டம் அபி ஶப்திதம் ।
இதம் ப்ரஹ்மபுராணஸ்ய கிலம் ஸௌரமநுத்தமம் ।
ஸம்ஹிதாத்வயஸம்யுக்தம் புண்யம் ஶிவகதாஶ்ரயம் ।
ஆத்யா ஸநத்குமாரோக்தா த்விதீயா ஸூர்யபாஷிதா । இதி ।

கௌர்மே து—அந்யாந்யுபபுராணாநி முநிபிஃ கதிதாந்யபி மாத்ஸ்யே து—

அஷ்டாதஶப்யஸ் து ப்ரு’தக் புராணம் யத் ப்ரத்ரு’ஶ்யதே ।
விஜாநீத்வம் த்விஜஶ்ரேஷ்டாஸ்ததேதேப்யோ விநிர்கதம் ।
பஞ்சாங்கவத்புராணம் ஸ்யாதாக்யாநமிதரத்ஸ்ம்ரு’தம் ।
பாத்மே புராணே யா ப்ரோக்தா நாரஸிம்ஹோபவர்ணநா ।
ததஷ்டாதஶஸாஹஸ்ரம் நாரஸிம்ஹமிஹோச்யதே ।
யச்ச ஸாம்பம் புரஸ்க்ரு’த்ய பவிஷ்யேऽபி கதாநகம் ।
ப்ரோச்யதே தத்புநர்லோகே ஸாம்பம் ஏவ முநீஶ்வரஃ ।
ஏவமாதித்யஸம்ஜ்ஞம் ச தத்ரைவ பரிபாஷிதம் । இதி ஸந்தர்பஃ ॥௨௨-௨௪॥

———————————————————————————————————————

**ஜீவ-கோஸ்வாமீ (க்ரம-ஸந்தர்பஃ) : **ததா ச வாராஹே—

ப்ராஹ்மம் பாத்மம் வைஷ்ணவம் ச ஶைவம் பாகவதம் ததா ।
ததாந்யம் நாரதீயம் ச மார்கண்டேயம் ச ஸப்தமம் ॥
ஆக்நேயம் அஷ்டமம் ப்ரோக்தம் பவிஷ்யம் நவமம் ததா ।
தஶமம் ப்ரஹ்ம-வைவர்தம் லிங்கம் ஏகாதஶம் ததா ॥
வாராஹம் த்வாதஶம் ப்ரோக்தம் ஸ்காந்தம் சாத்ர த்ரயோதஶம் ।
சதுர்தஶம் வாமநம் ச கௌர்மம் பஞ்சதஶம் ததா ।
மாத்ஸ்யம் ச காருடம் சைவ ப்ரஹ்மாண்டாஷ்டாதஶம் ததா ॥

ஶைவ-புராணே—

ப்ராஹ்மம் புராணம் தத்ராத்யம் ஸம்ஹிதாயாம் விபூஷிதம் ।
ஶ்லோகாநாம் தஶ-ஸாஹஸ்ரம் நந-புண்ய-கதா-யுதம் ॥
பாத்மம் த்விதீயம் கதிதம் த்ரு’தீயம் வைஷ்ணவம் ஸ்ம்ரு’தம் ।
சதுர்தம் வாயுநா ப்ரோக்தம் வாயவீயம் இதி ஸ்ம்ரு’தம் ॥
ததோ பாகவதம் ப்ரோக்தம் பாக-த்வய-விபூஷிதம் ।
சதுர்பிஃ பஞ்சபிஃ ப்ரோக்தம் பவிஷ்யம் தத்-அநந்தரம் ॥
மார்கண்டேயம் அதோ ஜ்ஞேயம் நாரதீயம் அதஃ பரம் ।
தஶமம் ப்ரஹ்ம-வைவர்தம் லிங்கம் ஏகாதஶம் ஸ்ம்ரு’தம் ॥
பாக-த்வயேந லிங்கம் ச ததோ வாராஹம் உத்தமம் ।
ஸம்யுக்தம் அஷ்டபிஃ கண்டைஃ ஸ்காந்தம் சைவாத்ர விஸ்தரம் ॥
ததஸ் து வாமநம் கௌர்மம் பாக-த்வய-விராஜிதம் ।
மாத்ஸ்யம் ச காருடம் ப்ரோக்தம் ப்ரஹ்மாண்டம் ச ததஃ பரம் ॥
பாக-த்வயேந கதிதம் ப்ரஹ்மாண்டம் அபி ஸம்ஜ்ஞிதம் ।
இதம் ப்ரஹ்ம-புராணஸ்ய கிலம் ஸௌரம் அநுத்தமம் ॥
ஸம்ஹிதா-த்வய-ஸம்யுக்தம் புண்யம் ஶிவ-கதாஶ்ரயம் ।
ஆத்யா ஸநத்-குமாரோக்தா த்விதீயா ஸூர்ய-பாஷிதா ॥

கூர்ம-புராணே—

அந்யாந்ய் உபபுராணாநி முநிபிஃ கதிதாந்ய் அபி ॥

மாத்ஸ்யே—

அஷ்டாதஶப்யஸ் து ப்ரு’தக் ஷுராணம் யத் ப்ரத்ரு’ஶ்யதே ।
விஜாநீத்வம் த்விஜ-ஶ்ரேஷ்டாஸ் தத் ஏதேப்யோ விநிர்கதஃ ॥
பஞ்சாங்கவத் புராணம் ஸ்யாத் ஆக்யாநம் இதரம் ஸ்ம்ரு’தம் ।
பாத்மம் புராணே யா ப்ரோக்தா நரஸிம்ஹோபவர்ணநா ॥
தத் அஷ்டாதஶ-ஸாஹஸ்ரம் நாரஸிம்ஹம் இஹோச்யதே ।
யச் ச ஸாம்பம் புரஸ்க்ரு’த்ய பவிஷ்யேऽபி கதா-நவம் ॥
ப்ரோச்யதே தத் புநர் லோகே ஸாம்பம் ஏவ முநி-வ்ரதைஃ ।
ஏவம் ஆதித்ய-ஸம்ஜ்ஞம் ச தத்ரைவ பரிபட்யதே ॥௨௪॥

———————————————————————————————————————

விஶ்வநாத-சக்ரவர்தீ (ஸாரார்த-தர்ஶிணீ) : த்ரிஷட் அஷ்டாதஶ ॥௨௩-௨௪॥॥।॥ ௧௨.௭.௨௫ ॥

ப்ரஹ்மந்ந் இதம் ஸமாக்யாதம் ஶாகா-ப்ரணயநம் முநேஃ ।

ஶிஷ்ய-ஶிஷ்ய-ப்ரஶிஷ்யாணாம் ப்ரஹ்ம-தேஜோ-விவர்தநம் ॥

**ஶ்ரீதர-ஸ்வாமீ (பாவார்த-தீபிகா) : **உபஸம்ஹரதி—ப்ரஹ்மந்ந் இதி । முநேர் வ்யாஸஸ்ய । ஶிஷ்யாதீநாம் ச । ப்ரஹ்ம-தேஜோ ப்ரஹ்ம-வர்சஸம் தத்-விவர்தநம் । ஶ்ரோத்ரூ’ணாம் இதி ஶேஷஃ ॥௨௫॥

———————————————————————————————————————

**வம்ஶீதரஃ (பாவார்த-தீபிகா-ப்ரகாஶஃ) : **ப்ரஹ்மந்ந் இதி । வ்யாக்யாத-சரீ ஸம்புத்திஃ । ப்ரஹ்ம-வர்சஸம் யத்யபி ப்ராஹ்மண ஏவாஸ்தி, ததாபீதரேஷாம் அபி வேதோக்த-கர்ம-காரித்வேந யதா கதஞ்சித் தத் அஸ்த்ய் ஏவ, தத்-தத்-கர்ம-பலாதிக்யம் பவதீதி பாவஃ ॥௨௫॥

இதி ஶ்ரீமத்-பாகவத-பாவார்த-தீபிகா-ப்ரகாஶே த்வாதஶ-ஸ்கந்தே ஸப்தமோऽத்யாயஃ ॥௭॥

———————————————————————————————————————

ஜீவ-கோஸ்வாமீ (க்ரம-ஸந்தர்பஃ) : ஶாகா-ப்ரணயநம் இதி புராணேதிஹாஸாநாம் ஶாகா-ஸ்தாநீயத்வாத் இத்ய் அபிப்ராயஃ ஶிஷ்யாஃ ஸாக்ஷாத்-உபதேஶ்யாஃ ஶிஷ்ய-ப்ரஶிஷ்யாஃ ஶிஷ்யாணாம் ஶிஷ்ய-பரம்பராஃ ॥௨௫॥

———————————————————————————————————————

விஶ்வநாத-சக்ரவர்தீ (ஸாரார்த-தர்ஶிணீ) : முநேர் வ்யாஸஸ்ய, ஶிஷ்யாணாம் ஶிஷ்யாஃ, தேஷாம் அபி ப்ரஶிஷ்யாஃ, தேஷாம் ஶாகா-ப்ரணயநம்ப்ரஹ்ம-தேஜோ-விவர்தநம் இதி ஶ்ரோத்ரூ’ணாம் இதி ஶேஷஃ ॥௨௫॥॥।

இதி ஸாரார்த-தர்ஶிந்யாம் ஹர்ஷிண்யாம் பக்த-சேதஸாம் ।

த்வாதஶே ஸப்தமோऽத்யாயஃ ஸங்கதஃ ஸங்கதஃ ஸதாம் ॥*॥॥।

இதி ஶ்ரீமத்-பாகவதே மஹா-புராணே ப்ரஹ்ம-ஸூத்ர-பாஷ்யே பாரமஹம்ஸ்யம் ஸம்ஹிதாயாம் வையாஸிக்யாம் த்வாதஶ-ஸ்கந்தே
புராண-லக்ஷண-வர்ணநம் நாம
ஸப்தமோऽத்யாயஃ ।॥ ௧௨.௭ ॥

———————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஔவையாரின் ஆத்தி சூடி

December 20, 2023
1. அறஞ் செய விரும்பு
2. ஆறுவது சினம்
3. இயல்வது கரவேல்
4. ஈவது விலக்கேல்
5. உடையது விளம்பேல்
6. ஊக்கமது கைவிடேல்
7. எண் எழுத்து இகழேல்
8. ஏற்பது இகழ்ச்சி
9. ஐயம் இட்டு உண்
10. ஒப்புரவு ஒழுகு
11. ஓதுவது ஒழியேல்
12. ஔவியம் பேசேல்
13. அஃகஞ் சுருக்கேல்
14. கண்டு ஒன்று சொல்லேல்
15. ஙப் போல்வளை
16. சனி நீராடு
17. ஞயம் பட உரை
18. இடம் பட வீடு எடேல்
19. இணககம்அறிந்து இணங்கு
20. தந்தை தாய்ப் பேண்
21. நன்றி மறவேல்
22. பருவத்தே பயிர் செய்
23. மண் பறித்து உண்ணேல்
24. இயல்பு அலாதன செயேல்
25. அரவம்ஆடேல்
26. இலவம் பஞ்சில் துயில்
27. வஞ்சகம் பேசேல்
28. அழகு அலாதன செயேல்
29. இளமையில் கல்
30. அரனை மறவேல்
31. அனந்தல் ஆடேல்
32. கடிவது மற
33. காப்பது விரதம்
34. கிழமைப் பட வாழ்
35. கீழ்மை அகற்று
36. குணமது கைவிடேல்
37. கூடிப்பிரியேல்
38. கெடுப்பது ஒழி
39. கேள்வி முயல்
40. கைவினை கரவேல்
41. கொள்ளை விரும்பேல்
42. கோதாட்டு ஒழி
43. கௌவை அகற்று
44. சக்கர நெறி நில்
45. சான்றோர் இனத்திரு
46. சித்திரம் பேசேல்
47. சீர்மை மறவேல்
48. சுளிக்கச் சொல்லேல்
49. சூது விரும்பேல்
50. செய்வன திருந்தச் செய்
51. சேரிடம் அறிந்து சேர்
52. சை எனத் திரியேல்
53. சொல் சோர்வு படேல்
54. சோம்பித் திரியேல்
55. தக்கோன் எனத் திரி
56. தானமது விரும்பு
57. திருமாலுக்கு அடிமை செய்
58. தீவினை அகற்று
59. துன்பத்திற்கு இடம் கொடேல்
60. தூக்கி வினை செய்
61. தெய்வம் இகழேல்
62. தேசத்தோடு ஒத்து வாழ்
63. தையல் சொல் கேளேல்
64. தொண்மை மறவேல்
65. தோற்பன தொடரேல்
66. நன்மை கடைப்பிடி
67. நாடு ஒப்பன செய்
68. நிலையில் பிரியேல்
69. நீர் விளையாடேல்
70. நுண்மை நுகரேல்
71. நூல் பல கல்
72. நெல் பயிர் விளை
73. நேர்பட ஒழுகு
74. நைவினை நணுகேல்
75. நொய்ய உரையேல்
76. நோய்க்கு இடம் கொடேல்
77. பழிப்பன பகரேல்
78. பாம்பொடு பழகேல்
79. பிழைபடச் சொல்லேல்
80. பீடு பெற நில்
81. புகழ்ந்தாரைப் போற்றி வாழ்
82. பூமி திருத்தி உண்
83. பெரியாரைத் துணைக் கொள்
84. பேதமை அகற்று
85. பையலோடு இணங்கேல்
86. பொருள்தனைப் போற்றி வாழ்
87. போர்த் தொழில் புரியேல்
88. மனம் தடுமாறேல்
89. மாற்றானுக்கு இடம் கொடேல்
90. மிகைபடச் சொல்லேல்
91. மீதூண் விரும்பேல்
92. முனைமுகத்து நில்லேல்
93. மூர்க்கரோடு இணங்கேல்
94. மெல்லி நல்லாள் தோள் சேர்
95. மேன் மக்கள் சொல் கேள்
96. மை விழியார் மனை அகல்
97. மொழிவது அற மொழி
98. மோகத்தை முனி
99. வல்லமை பேசேல்
100. வாது முற்கூறேல்
101. வித்தை விரும்பு
102. வீடு பெற நில்
103. உத்தமனாய் இரு
104. ஊருடன் கூடி வாழ்
105. வெட்டெனப் பேசேல்
106. வேண்டி வினை செயேல்
107. வைகறைத் துயில் எழு
108. ஒன்னாரைத் தேறேல்
109. ஓரம் சொல்லேல்

ஆத்தி சூடி அமர்ந்த தேவனை
ஏத்தி ஏத்தித் தொழுவோம் யாமே.

ஆத்தி-திருவாத்தி பூமாலையைச் சூடி-அணிந்து கொண்டு அமர்ந்த– வீற்று இருக்கின்ற

தேவனை– கடவுளை (மத வேறுபாடு இன்றி ) ஏத்தி ஏத்தித்– (மனம்)வாழ்த்தி (மொழி)வாழ்த்தி

தொழுவோம்-(மெய்)வணங்குவோம் யாமே-நாமே.

——-

1.அறம் செய விரும்பு

அறம் – (விதித்தன செய்தல் விலக்கியன ஒழித்தல் – நல்ல செயல்களைச் செய்வது மற்றும் கெடுதல் செயல்களைச் செய்யாமல் இருப்பது) செய – செய்வதற்கு,
விரும்பு – நீ ஆசைப்படு.

  • தருமம் செய்ய நீ விரும்புவாயாக
  • நல்ல செயல்களைச் செய்வதற்கு மனம் விருப்பம் கொள்ள வேண்டும். மனம் விருப்பம் கொள்ள அந்த நல்ல செயல்களை மகிழ்வுடன் செய்ய முடியும்.

2. ஆறுவது சினம்

ஆறுவது- தவிர்க்க வேண்டியது,
சினம் – கோபம்.

  • கோபம் தணிக்கப்பட வேண்டியதாகும்.
  • கோபம் வரும் போது நமது சிந்திக்கும் அறிவு குறைந்து உணர்ச்சி வசப்பட்டுத் தவறான முடிவு எடுக்கும் சூழ்நிலை உருவாகும். அஃது எல்லோருக்கும் நல்லது அல்ல.

3. இயல்வது கரவேல்

இயல்வது – நம்மால் முடிந்ததைக் கொடுப்பதற்கு
கரவேல் –  வறுமையினாலே இரப்பவர்களுக்கு நீ ஒளியாதே ( “கரவல்” கொடாது மறைக்கை, கரப்பு, மறைப்பு, மறைக்காதே)

  • உன்னால் கொடுக்கக்கூடிய பொருளை யாசிப்பவர்க்கு ஒளிக்காது கொடு.

4. ஈவது விலக்கேல்

ஈவது – தருமத்தைக் குறித்து ஒருவருக்கு ஒருவர் கொடுப்பதை
விலக்கேல் – நீ தடுக்காதே

  • ஒருவர், மற்றவர்க்குக் கொடுப்பதை, வேண்டாமென்று தடுக்காதே

5. உடையது விளம்பேல்

உடையது – உனக்கு உள்ள பொருளை
விளம்பேல் – நீ பிறர் அறியும்படி  சொல்லாதே

  • உன்னிடத்திலுள்ள பொருளை அல்லது இரகசியங்களைப் பிறர் அறியுமாறு சொல்லாதே.
  • உனக்குள்ள பொருள் மற்றும் சிறப்புகளைப் பலரும் அறியும்படி பெருமையாகப் பேசாதே.
  • உன்னுடைய பலவீனத்தையும் பலரும் அறியும்படி சொல்லாதே. அதனால் நல்ல பயன் எதுவும் இல்லை.

6. ஊக்கமது கைவிடேல்

ஊக்கமது– செய்தொழிலில் மனஞ்சோராமை, உள்ளக் கிளர்ச்சியைக்
கைவிடேல்– நீ தளர்ந்து போக விடாதே.

  • எப்போதும் முயற்சியைக் கைவிடக்கூடாது.

7. எண் எழுத்து இகழேல்

எண் – கணித நூலையும்
எழுத்து – அற நூல்களையும், இலக்கண நூலையும்

  • எண்ணும் எழுத்தும் மக்களுக்கு இன்றியமையாதன; ஆகவே, அவற்றை வீணென்று இகழ்ந்து கற்காமல் விட்டு விடாதே.

8. ஏற்பது இகழ்ச்சி

ஏற்பது – ஒருவரிடத்திலே போய் இரப்பது  பிறரிடம் சென்று யாசித்தல்; இகழ்ச்சி – பழிப்பாகும் (அல்லது) இழிவு தரும்.

  • இரந்து வாழ்வது இழிவானது. அதனால் யாசிக்கக் கூடாது.

9. ஐயம் இட்டு உண்

ஐயமிட்டு – உன்னிடம் உணவு கேட்பவற்குக் கொடுத்து
உண் – பிறகே நீ உண்ண வேண்டும்.

  • யாசிப்பவர்கட்குக் கொடுத்துப் பிறகு உண்ண வேண்டும்.

10. ஒப்புரவு ஒழுகு

ஒப்புரவு – உலக போக்கிற்கு ஏற்றவாறு;
ஒழுகு – நட

  • உலக நடையை அறிந்துகொண்டு, அத்தோடு பொருந்துமாறு நடந்துகொள்.

11. ஓதுவதை ஒழியேல்

நல்ல நூல்களை எப்பொழுதும் படித்துக்கொண்டிரு.

12. ஔவியம் பேசேல்

ஒருவரிடமும் பொறாமை கொண்டு பேசாதே.

13. அஃகஞ் சுருக்கேல்

அதிக இலாபத்துக்காகத் தானியங்களைக் குறைத்து அளந்து விற்காதே.

14. கண்டு ஒன்று சொல்லேல்.

கண்ணாற் கண்டதற்கு மாறாகப் (பொய் சாட்சி) சொல்லாதே.

15. ஙப் போல் வளை.

ங’ என்னும் எழுத்தானது எப்படி தான் பயன்னுள்ளதாக இருந்து தன் வருக்க எழுத்துகளைத் தழுவுகிறதோ
அது போல நாமும் நம்மைச் சார்ந்தவர்களால் என்ன பயன் என்று பாராமல் அவர்களைக் காக்க வேண்டும்.

  • “ங” என்னும் எழுத்தைக் கூர்ந்து நோக்கினால், ஒருவர் வளைந்து வணக்கம் சொல்வது போல் உள்ளது விளங்கும்.
  • அதைப்போலப் பணிவாகப் பெரியவர் முன் வளைய வேண்டும் என்று ஔவை உரைத்ததாகவும் எடுத்துக்கொள்ளலாம்.

16. சனி நீராடு.

  • சனி(குளிர்ந்த) நீராடு.

17. ஞயம்பட உரை.

கேட்பவருக்கு இன்பம் உண்டாகும்படி இனிமையாகப் பேசு.

18. இடம்பட வீடு எடேல்.
உன் தேவைக்கு மேல் வீட்டை பெரிதாகக் கட்டாதே.

19. இணக்கம் அறிந்து இணங்கு.

ஒருவரிடம் நட்பு கொள்ளும் முன்,அவர் நல்ல குணங்களும்,நல்ல செய்கைகளும் கொண்டவரா எனத் தெரிந்த பிறகு

அவருடன் நட்பு கொள்ளவும்.

20. தந்தை தாய்ப் பேண்.

உன் தந்தையையும் தாயையும் அவர்களுடைய முதுமைக் காலம் வரை அன்புடன் காப்பாற்று.

21. நன்றி மறவேல்.

ஒருவர் உனக்குச் செய்த உதவியை ஒரு போதும் மறவாதே.

22. பருவத்தே பயிர் செய்.

எச்செயலையும் அதற்குரிய காலத்திலேயே செய்ய வேண்டும்.

23. மண் பறித்து உண்ணேல்.
பிறர் நிலத்தைத் திருடி அதன் மூலம் வாழாதே (அல்லது) நீதி மன்றத்தில் இருந்து கொண்டே

லஞ்சம் வாங்கிக்கொண்டு தீர்ப்பு வழங்காதே (என்றும் பொருள் கொள்ளலாம்)

24. இயல்பு அலாதன செய்யேல்.

நல்லொழுக்கத்துக்கு மாறான செயல்களைச் செய்யாதே.

25. அரவம் ஆடேல்.

பாம்புகளைப் பிடித்து விளையாடாதே.

26. இலவம் பஞ்சில் துயில்.
‘இலவம் பஞ்சு’ எனும் ஒரு வகை பஞ்சினால் செய்யப்பட்ட படுக்கையிலே உறங்கு

27. வஞ்சகம் பேசேல்.

கபடச்(உண்மைக்குப் புறம்பான,கவர்ச்சிகரமான) சொற்களைப் பேசாதே

28. அழகு அலாதன செய்யேல்.
இழிவான செயல்களைச் செய்யாதே

29. இளமையில் கல்.

இளமை பருவத்தில் இருந்தே கற்கவேண்டியவைகளைத் (இலக்கணத்தையும் கணிதத்தையும்) தவறாமல் கற்றுக்கொள்.

30. அரனை மறவேல்.

கடவுளை மனதில் எப்பொழுதும் நினைக்கவேண்டும்

31. அனந்தம் ஆடேல்.

கடல் நீரில் விளையாடுவது துன்பம் தரும்

மிகுதியாகத் தூங்காதே

ககர வருக்கம்

32. கடிவது மற

  • யாரையும் கோபத்தில் கடிந்து பேசிவிடாதே.

33. காப்பது விரதம்

  • தான் செய்யத் தொடங்கிய தருமத்தை விடாமல் செய்வதே விரதமாகும் (அல்லது)
  • பிற உயிர்களுக்குத் துன்பம் செய்யாமல் அவற்றைக் காப்பாற்றுவதே தவம் ஆகும்.

34. கிழமைப் பட வாழ்

  • உன் உடலாலும் பொருளாலும் பிறருக்கு நன்மை செய்து வாழ்

35. கீழ்மை அகற்று

  • இழிவான குணஞ் செயல்களை நீக்கு

36. குணமது கைவிடேல்

  • நன்மை தரக்கூடிய நல்ல குணங்களைப் பின்பற்றுவதை நிறுத்திவிடாதே(கைவிடேல்).

37. கூடிப் பிரியேல்

  • நல்லவரோடு நட்பு செய்து பின் அவரைப் பிரியாதே

38. கெடுப்பது ஒழி

  • பிறருக்குக் கேடு விளைவிக்கும் செயல்களைச் செய்யாதே.

39. கேள்வி முயல்

  • கற்றவர் சொல்லும் நூற் பொருளைக் கேட்பதற்கு முயற்சி செய்

40. கைவினை கரவேல்

  • உங்களுக்குத் தெரிந்த கைத்தொழிலை மற்றவர்களிடமிருந்து ஒளியாமற் செய்து கொண்டிருக்கவும்.

41. கொள்ளை விரும்பேல்

  • பிறர் பொருளைத் திருடுவதற்கு ஆசைப்படாதே.

42. கோதாட்டு ஒழி

  • குற்றமான விளையாட்டை விட்டு விடு (நீக்கு)

43. கௌவை அகற்று

  • வாழ்வில் செயற்கையாக ஏற்படும் துன்பத்தை நீக்கு

சகர வருக்கம்

44. சக்கர நெறி நில்

  • தர்மசக்கர நெறிப்படி வாழ வேண்டும். ( அரசன் = ஆள்பவர், தலைவர் )

45. சான்றோர் இனத்து, இரு

  • அறிவொழுக்கங்களில் நிறைந்த பெரியோர்களுடன் சேர்ந்து இரு.

46. சித்திரம் பேசேல்

  • பொய்யான வார்த்தைகளை மெய் போலப் பேசாதே

47. சீர்மை மறவேல்

  • புகழுக்குக் காரணமான நல்ல குணங்களை மறந்து விடாதே.

48. சுளிக்கச் சொல்லேல்

  • கேட்பவருக்குக் கோபமும் வெறுப்பும் உண்டாகும்படி பேசாதீர்

49. சூது விரும்பேல்

  • ஒருபொதும் சூதாட்டத்தை விரும்பாதே.

50. செய்வன திருந்தச் செய்

  • செய்யும் செயல்களைத் தவறோ குறையோ ஏதும் இல்லாமல் செய்யவும்

51. சேரிடம் அறிந்து சேர்

  • நீ பழகும் நபர்கள் நல்ல குணங்கள் உடையவர்களா என நன்கு ஆராய்ந்து பின்பு அவர்களுடன் பழகு.

52. சை, எனத் திரியேல்

  • பெரியோர் ‘சீ’ என வெறுக்கும்படி வீணாய்த் திரியாதே

53. சொல், சோர்வு படேல்

  • பிறருடன் பேசும் பொழுது மறந்தும் குற்றமுண்டாகப் பேசாதே

54. சோம்பித் திரியேல்

  • முயற்சியின்றிச் சோம்பேறியாகத் திரியாதே.

தகர வருக்கம்

55. தக்கோன் எனத் திரி

  • பெரியோர்கள் உன்னைத் தக்கவன்(யோக்கியன்,நல்லவன்) என்று புகழும்படி நடந்துக்கொள்

56. தானமது விரும்பு

  • யாசிப்பவர்களுக்குத் தானம் செய்.

57. திருமாலுக்கு அடிமை செய்

  • நாராயணமூர்த்திக்குத் தொண்டு செய்

58. தீவினை அகற்று

  • பாவச் செயல்களைச் செய்யாமல் இரு.

59. துன்பத்திற்கு இடங் கொடேல்

  • முயற்சி செய்யும் பொழுது வரும் உடம்பின் வருத்தத்திற்கு அஞ்சி அதனை விட்டு விடாதே.

60. தூக்கி வினை செய்

  • ஒரு வேளையை முடிப்பதற்கான வழிமுறைகளை நன்கு ஆராய்ந்து அறிந்த பின்பு அச்செயலைச் செய்யத் தொடங்கவும்

61. தெய்வம் இகழேல்

  • கடவுளைப் பழிக்காதே.

62. தேசத்தோடு, ஒத்து வாழ்

  • உன் நாட்டில் வசிக்கும் மக்களுடன் பகை இல்லாமல் வாழ்

63. தையல் சொல், கேளேல்

  • மனைவி சொல் கேட்டு ஆராயாமல் நடவாதே.

64. தொன்மை மறவேல்

  • பழைமையை மறவாதிருக்க வேண்டும் (பழங்கால மற்றும் பண்டைய முறையிலான நம் தமிழ் கலாச்சாரத்தை  விட்டுக் கொடுக்காமல் இயற்கையோடு ஒத்து வாழ வேண்டும்)

65. தோற்பன தொடரேல்

  • ஒரு செயலைச் செய்தால் தோல்வியில் தான் முடியும் எனத் தெரிந்தே அதைத் தொடங்காதே.

நகர வருக்கம்

66. நன்மை கடைப்பிடி

  • நல்வினை செய்தலை எவ்வளவு இடையுறு வந்தாலும் உறுதியாகத் தொடரவும்

67. நாடு ஒப்பன செய்

  • நாட்டில் உள்ள பலரும் ஒத்துக்கொள்ளத்தக்க நல்ல காரியங்களைச் செய்

68. நிலையில் பிரியேல்

  • உன்னுடைய நல்ல நிலையில் இருந்து என்றும் தாழ்ந்து விடாதே.

69. நீர் விளையாடேல்

  • வெள்ளபெருக்கில்  நீந்தி விளையாடாதே

70. நுண்மை நுகரேல்

  • நோயைத் தரும் சிற்றுண்டிகளை அதிகமாக உண்ணாதே

71. நூல் பல கல்

  • அறிவை வளர்க்கும் பல நூல்களைப் படி

72. நெற்பயிர் விளை

  • நெற்பயிரை விளையச் செய்வதை உன் வாழ்க்கை தொழிலாகக் கொண்டு வாழ்.

73. நேர்பட ஒழுகு

  • ஒழுக்கந் தவறாமல் நேர்வழியில் நட

74. நைவினை நணுகேல்

  • பிறர் வருந்தத் தகுந்த தீ வினைகளைச் செய்யாதே

75. நொய்ய உரையேல்

  • பயன் இல்லாத அற்ப வார்த்தைகளைப் பேசாதே.

76. நோய்க்கு இடங் கொடேல்

  • மிகுந்த உணவு உறக்கம் முதலியவற்றால் நோய்க்கு வழிவகை செய்யாதே.

பகர வருக்கம்

77. பழிப்பன பகரேல்

  • பெரியோர்களால் பழிக்கப்படும் இழிவான சொற்களான பொய்,கடுஞ்சொல் ஆகியவற்றைப் பேசாதே.

78. பாம்பொடு பழகேல்

  • பாம்புபோலக் கொடிய குணம் கொண்டவர்கள் உடன் பழகாதே.

79. பிழைபடச் சொல்லேல்

  • குற்றம் உண்டாகும்படி எதையும் பேசாதே.

80. பீடு பெற நில்

  • பெருமையை அடையும் படியான நல்ல நிலையிலே நில்

81. புகழ்ந்தாரைப் போற்றி வாழ்

  • உன்னையே நம்பியவர்களைக் காப்பாற்றி வாழ்

82. பூமி திருத்தி உண்

  • விளைநிலத்தை உழுது அதில் பயிர்செய்து உண்.(அ)விவசாயத்தை வாழ்க்கைத் தொழிலாகக் கொள்

83. பெரியாரைத் துணைக் கொள்

  • அறிவிலே சிறந்த பெரியோர்களை உனக்குத் துணையாகப் பேணிக்கொள்

84. பேதைமை அகற்று

  • அறியாமையைப் போக்கு

85. பையலோடு இணங்கேல்

  • அறிவில்லாத சிறுவனோடு கூடித் திரியாதே.

86. பொருள் தனைப் போற்றி வாழ்

  • பொருள்களை(செல்வம் உட்பட)வீண் செலவு செய்யாமற் பாதுகாத்து வாழ்.

87. போர்த்தொழில் புரியேல்

  • யாருடனும் தேவையில்லாமல் சண்டை பொடுவதை ஒரு வேலையாகச் செய்யாதே

மகர வருக்கம்

88. மனம் தடுமாறேல்

  • எதனாலும் மனக்கலக்கம் அடையாதே

89. மாற்றானுக்கு இடங்கொடேல்

  • பகைவன் உன்னைத் துன்புறுத்தி உன்னை வெல்வதற்கு இடம் கொடுக்காதே.

90. மிகைபடச் சொல்லேல்

  • சாதாரணமான விஷயத்தை மாயாஜால வார்தைகளால் பெரிதாகக் கூறாதே.

91. மீதூண் விரும்பேல்

  • மிகுதியாக உண்ணுதலை விரும்பாதே.

92. முனை முகத்து நில்லேல்

  • எப்போதும் யாருடனாவது சண்டையிடுவதற்காகப் போர் முனையிலே நிற்காதே

93. மூர்க்கரோடு இணங்கேல்

  • மூர்க்க குணம் கொண்டவர்கள் உடன் பழகாதே

94. மெல்லி நல்லாள் தோள்சேர்

  • பிற மாதரை விரும்பாமல் உன் மனைவியுடன் மட்டும் சேர்ந்து வாழ்.

95. மேன்மக்கள் சொல் கேள்

  • நல்லொழுக்கம் உடைய பெரியோர் சொல்லைக் கேட்டு நட.

96. மை விழியார் மனை அகல்

  • விலைமாந்தர் உடன் உறவு கொள்ளாமல் விலகி நில்

97. மொழிவது அற மொழி

[மொழிவது = பேசுவது]

  • சொல்லப்படும் பொருளைச் சந்தேகம் நீங்கும்படி சொல்
  • பேசுவதைத் தெளிவாகப் பேசு
  • சொல்வதற்கு முன், இதைச் சொல்ல வேண்டுமா? என்று ஆராய்ந்து, பின் சொல்க
  • எதைச் சொல்ல/பேச வேண்டும்?
  • எப்பொழுது சொல்ல/பேச வேண்டும்?
  • எதைச் சொல்லக்/பேசக் கூடாது?
  • எப்பொழுது சொல்லக்/பேசக் கூடாது?
  • எப்படிச் சொல்ல வேண்டும்?
  • எப்படிச் சொல்லக் கூடாது?

98. மோகத்தை முனி

  • நிலையில்லாத பொருள்களின் மேலுள்ள ஆசையை வெறுத்திடு

வகர வருக்கம்

99. வல்லமை பேசேல்

  • உன்னுடைய வலிமையை நீயே புகழ்ந்து பேசாதே

100. வாது முற்கூறேல்

  • முந்திக்கொண்டு வாதிடாதே

101. வித்தை விரும்பு

  • கல்வியாகிய நற்பொருளை விரும்பு

102. வீடு பெற நில்

  • முக்தியை பெறுவதற்கான சன்மார்க்கத்திலே வாழ்க்கையை நடத்து

103. உத்தமனாய் இரு

  • உயர்ந்த குணங்கள் கொண்டவனாக வாழ்.

104. ஊருடன் கூடி வாழ்

  • ஊராருடன் நன்மை தீமைகளில் கலந்து வாழ்

105. வெட்டெனப் பேசேல்

  • யாருடனும் கடினமாகப் பேசாதே

106. வேண்டி வினை செயேல்

  • வேண்டுமென்றே தீய செயல்களைச் செய்யாதே

107. வைகறைத் துயில் எழு

  • விடியற்காலையில் தூக்கத்திலிருந்து எழு
  • நாள்தோறும் சூரியன் உதிக்கும் முன்பே தூக்கத்தில் இருந்து எழுந்திரு

108. ஒன்னாரைத் தேறேல்

  • பகைவர்களை நம்பாதே

109. ஓரஞ் சொல்லேல்

  • நம்மைச் சுற்றி உள்ளவர்களைப் பற்றி பிறரிடம் குறை சொல்லக் கூடாது
  • அடுத்தவரைப் பற்றிப் புறம் (தவறாகப்) பேசக் கூடாது
  • எந்த வழக்கிலும் ஒருபுடைச் சார்பாகப் பேசாமல் நடுநிலையுடன் பேசு.
  • திருக்குறள் அதிகாரம் 19 – புறங்கூறாமை
  • ————-
  • புதிய ஆத்தி சூடி – பாரதியார்

    1. அச்சம் தவிர்.
    பயத்தை விட்டொழித்தால் வேண்டும்.
    2. ஆண்மை தவறேல்.
    எப்பொழுதும் வீரத்துடன் இருக்கவேண்டும்.
    3. இளைத்தல் இகழ்ச்சி.
    துடிப்புடன் இல்லாது, சோர்வடைந்திருப்பது இழிவாகும்.
    4. ஈகை திறன்.
    பிறருக்குக் கொடுத்து உதவும் ஆற்றலோடு விளங்கவேண்டும்.
    5. உடலினை உறுதிசெய்.
    நலமாக வாழ உடலினை பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.
    6. ஊண்மிக விரும்பு.
    உடலுக்கு நலத்தைத் தருகின்ற உணவுகளை விரும்பி உண்ண வேண்டும்.
    7. எண்ணுவ துயர்வு.
    உயர்வான எண்ணம் மேன்மை தரும்.
    8. ஏறுபோல் நட.
    அஞ்சா நெஞ்சத்துடன் செயற்பட வேண்டும்.
    9. ஐம்பொறி ஆட்சிகொள்.
    கண், காது, மூக்கு, வாய், மெய் முதலான ஐம்புலன்களையும் நல்ல நெறியில் செலுத்தும் ஆற்றலைப் பெற்றிட வேண்டும்.
    10. ஒற்றுமை வலிமையாம்.
    ஒன்றுபட்டு வாழ்வதே பலமாகும்.
    11. ஓய்த லொழி.
    ஒன்றுபட்டு வாழ்வதே பலமாகும்.
    12. ஔடதங் குறை.
    எடுத்ததெற்கெல்லாம் மருந்து உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.

    ——————————————————

    ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
    ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஆசாரக்கோவை–பதினெண்கீழ்க்கணக்கில் ஒன்றாக வைத்து எண்ணப்படும் இது ஒரு நீதி நூல்-

December 20, 2023

மனித வாழ்க்கைக்கு இன்றியமையாத ஆசாரங்களை அதாவது ஒழுக்கங்களை எடுத்துக்கூறும் ஒரு நூல் ஆசாரக்கோவை. பண்டைக்காலத் தமிழ் நூல்களின் தொகுப்புக்களில் ஒன்றான பதினெண்கீழ்க்கணக்கில் ஒன்றாக வைத்து எண்ணப்படும் இது ஒரு நீதி நூல். வண்கயத்தூரைச் சேர்ந்த பெருவாயின் முள்ளியார் என்னும் புலவர் இதனை எழுதினார்.

பல்வேறு வெண்பா வகைகளால் அமைந்த 100 பாடல்களால் ஆனது இந்நூல். ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு விடயம் தொடர்பான ஒழுக்கத்தை எடுத்து இயம்புகின்றது. இவ்வொழுக்கங்களின் பட்டியல்.

நன்றி அறிதல், பொறையுடைமை, இன் சொல்லோடு,
இன்னாத எவ் உயிர்க்கும் செய்யாமை, கல்வியோடு,
ஒப்புரவு ஆற்ற அறிதல், அறிவுடைமை,
நல் இனத்தாரோடு நட்டல், – இவை எட்டும்
சொல்லிய ஆசார வித்து. . . . .[001]

தனக்குப் பிறர் செய்த நன்றியறிதலும், பொறையும், இன்சொல்லும், எல்லா உயிர்க்கும் இன்னாதன செய்யாமையும், கல்வியும், ஒப்புரவை மிக வறிதலும், அறிவுடைமையும், நல்லினத்தாரோடு நட்டலும் என இவ்வெட்டு வகையும் நல்லோராற் சொல்லப்பட்ட ஆசாரங்கட்குக் காரணம்.

நன்றியறிதல் பொறையுடைமை முதலிய எட்டும் நல்லொழுக்கங்கட்குக் காரணம்.

பிறப்பு, நெடு வாழ்க்கை, செல்வம், வனப்பு,
நிலக் கிழமை, மீக்கூற்றம், கல்வி, நோய் இன்மை,
இலக்கணத்தால், இவ் வெட்டும் எய்துப – என்றும்
ஒழுக்கம் பிழையாதவர். . . . .[002]
நற்குடிப் பிறப்பு, நெடிய வாணாள், செல்வம், அழகுடைமை, நிலத்துக்குரிமை, சொற்செலவு, கல்வி, நோயின்மை என்று சொல்லப்பட்ட இவ்வெட்டினையும் இலக்கணத்தோடு நிரம்பப் பெறுவர் என்றும் ஆசாரம் தப்பாமல் ஓழுகுவார்.
ஒழுக்கந் தவறாதவர்கள் மேற்கூறிய எட்டு வகையையும் எய்துவர்.
தக்கிணை, வேள்வி, தவம், கல்வி, இந் நான்கும்
முப் பால் ஒழுக்கினால் காத்து உய்க்க! உய்யாக்கால்,
எப் பாலும் ஆகா கெடும். . . . .[003]
குரவர்க்குத் தக்கணை கொடுத்தலும், யாகம் பண்ணுதலும், தவஞ்செய்தலும், கல்வியும் என்ற இந்நான்கினையும் மூன்றும் மாறுபடாது ஒழுகுமாறு பாதுகாத்துச் செய்துவருக. மாறுபடுமாயின் எவ்வுலகத்தின் கண்ணும் தனக்குப் பயனாகாவாய் இந்நான்கும் கெடும்

தக்கணை முதலியவைகளைக் காலதாமதமின்றி ஒருமனதோடு செய்து முடிக்கவேண்டும்.

வைகறை யாமம் துயில் எழுந்து, தான் செய்யும்
நல் அறமும் ஒண் பொருளும் சிந்தித்து, வாய்வதின்
தந்தையும் தாயும் தொழுது எழுக!’ என்பதே
முந்தையோர் கண்ட முறை. . . . .[004]
வைகறையாகிய பின்யாமத்திலே துயிலெழுந்து தான் பிற்றைஞான்று செய்யும் நல்லறத்தையும் ஒள்ளிய பொருட்கு வருவாயாகிய காரியத்தையும் ஆராய்ந்து சிந்தித்து, பின்னைக் கங்குல் புலர்ந்தால் பழுதின்றித் தந்தையையும் தாயையும் தொழுதெழுந்து ஒரு காரியத்தைச் செய்யத் தொடங்குக என்று சொல்லப்படும் ஒழுக்கம், அறிவுடைய பழையார் சொல்லிய முறைமை.
மறுநாட் செய்யப்புகுங் காரியத்தை வைகறையிலெழுந்து சிந்தித்துப் பின் பெற்றோரை வணங்கி அச்செயலைத் தொடங்குக.
‘எச்சிலார், தீண்டார் – பசு, பார்ப்பார், தீ, தேவர்,
உச்சந் தலையோடு, இவை’ என்ப; யாவரும்
திட்பத்தால் தீண்டாப் பொருள். . . . .[005]
பசு, பார்ப்பார், தீ, தேவர், உச்சந்தலையோடே கூட இவையிற்றை எச்சிலையுடையராய் யாவரும் தீண்டார் என்று சொல்லுவர்; எல்லோரும் யாப்புற எச்சிலோடு தீண்டப்படாத பொருளும் இவை.

பசு முதலிய ஐந்து பொருள்களை எவரும் எச்சிலுடன் தீண்டலாகாது.

எச்சிலார், நோக்கார் – புலை, திங்கள், நாய், நாயிறு,
அத்தக வீழ்மீனோடு, இவ் ஐந்தும், தெற்றென,
நன்கு அறிவார், நாளும், விரைந்து. . . . .[006]
புலையும் திங்களும் நாயிறும் நாயும் அழகிய வீழ்மீனோடு சொல்லப்பட்ட ஐந்தினையும் எச்சிலை யுடையார் விரைந்து தெளிய நாளும் கண்ணால் நோக்கார் நன்கறிவார்.

நன்கறிவார் புலை முதலிய ஐந்தையும் கண்ணாற் காணார்.

எச்சில் பலவும் உள; மற்று அவற்றுள்,
இயக்கம் இரண்டும், இணைவிழைச்சு, வாயில்
விழைச்சு, இவை எச்சில், இந் நான்கு. . . . .[007]
எச்சில்கள் பல உள. அவற்றுள் மல மூத்திரங்கள் இயங்கிய இயக்கம் இரண்டொடு கூட இணைவிழைச்சும் வாயினால் வழங்கிய விழைச்சும் ஆகிய இவ்வெச்சில் நான்கினையும் பாதுகாக்க.

பலவகை எச்சில்களில் மலசலங் கழித்தல் புணர்ச்சி அதரபானம் இந்நான்கையும் காக்க.

நால் வகை எச்சிலும் நன்கு கடைப்பிடித்து,
ஓதார், உரையார், வளராரே – எஞ் ஞான்றும்
மேதைகள் ஆகுறுவார். . . . .[008]
கூறப்பட்ட இந்நான்கு எச்சிலையும்மிகக் கடைப்பிடித்து ஒன்றனையும் ஓதார், வாயாலொன்றைச் சொல்லார், கண் துயிலார் எஞ்ஞான்றும் மதியுடையவராக வேண்டுவோர்.
நால்வகை எச்சிலு முண்டானவிடத்து ஒன்றும் படித்தலாகாது, வாயா லொன்றையுஞ் சொல்லலாகாது, தூங்கலாகாது.
நாள் அந்தி, கோல் தின்று கண் கழீஇத், தெய்வத்தைத்
தான் அறியுமாற்றால் தொழுது எழுக! அல்கு அந்தி
நின்று தொழுதல் பழி. . . . .[009]
சிறு காலையின்கண் ஒரு கோலாலே பற்றுடைத்துக் கண்கழுவித் தான் வணங்குந் தெய்வத்தைத் தானறியும்நெறியால் தொழுக. மாலைப் பொழுதின்கண் தான் வணங்குந் தெய்வத்தை நின்று தொழுதல் குற்றமாம்; இருந்து தொழுக.
விடியற்காலத்தில் பல் துடைத்துச் சுத்தஞ்செய்து கடவுளை வழிபட்டுப் பின் ஒரு கருமஞ்செய்க. மாலைக் காலத்தில் வீற்றிருந்தே கடவுளை வழிபடுக.
தேவர் வழிபாடு, தீக் கனா, வாலாமை,
உண்டது கான்றல், மயிர் களைதல், ஊண் பொழுது,
வைகு துயிலோடு, இணைவிழைச்சு, கீழ் மக்கள்
மெய் உறல், ஏனை மயல் உறல், – ஈர்-ஐந்தும்
ஐயுறாது, ஆடுக, நீர்! . . . .[010]
தன்னால் வணங்கப்படுந் தேவரை வழிபடுதற்கண்ணும், தீக்கனாக் கண்டவிடத்தும், தூய்மையின்மை யுண்டானவிடத்தும், உண்டதனைக் கான்றவிடத்தும், மயிர்களைந்தவிடத்தும், உண்ணும்பொழுதும், பொழுதேற உறங்கிய விடத்தும், இணைவிழைச்சு உண்டாயின விடத்தும், கீழ்மக்கள் உடம்பு தீண்டியவிடத்தும், மூத்திரபுரீடங்கள் கான்றவிடத்தும் என இப்பத்திடத்தும் ஐயுறாதே நீராடுக.

கடவுள் வழிபாடு முதலிய பத்துச் சமயங்களிலும் இன்றியமையாது நீராடல் வேண்டும்.

உடுத்து அலால் நீர் ஆடார்; ஒன்று உடுத்து உண்ணார்;
உடுத்த ஆடை நீருள் பிழியார்; விழுத்தக்கார்
ஒன்று உடுத்து என்றும் அவை புகார்; – என்பதே
முந்தையோர் கண்ட முறை. . . . .[011]
ஒன்றனை யுடுத்தல்லது நீராடார், இரண்டு உடுத்தன்றி ஒன்றுடுத்து உண்ணார், உடுத்த ஆடையை நீரின்கண்பிழியார், சீர்மை தக்கார் ஓராடையையுடுத்து அவையின் கண்செல்லார் என்று சொல்லப்படுவது பழமையோர் கண்ட முறைமை.

நீராடல் உண்ணல் அவை புகல் ஆகிய காலங்களில் உடையுடுத்த வேண்டிய முறையில் உடுத்துக.

தலை உரைத்த எண்ணெயால் எவ் உறுப்பும் தீண்டார்;
பிறர் உடுத்த மாசுணியும் தீண்டார்; செருப்பு,
குறை எனினும், கொள்ளார், இரந்து. . . . .[012]
தலையின்கண் தேய்த்த எண்ணெயால் யாதோர் உறுப்புந் தீண்டார், பிறர் உடுத்த அழுக்காடையும் தீண்டார், பிறர் தொட்ட செருப்பும், பிறர் இரந்து தமக்குக் காரியமென்று வேண்டிக் கொள்ளினுங் கொள்ளார்.
தலையிற்றேய்த்த எண்ணெயை வழித்து மற்ற உறுப்புக்களிற் பூசுதல், அடுத்தவராடையைத் தீண்டுதல் முதலியன செய்தலாகாது.
நீருள் நிழல் புரிந்து நோக்கார்; நிலம் இரா
கீறார்; இரா மரமும் சேரார்; இடர் எனினும்,
நீர் தொடாது, எண்ணெய் உரையார்; உரைத்த பின்,
நீர் தொடார், நோக்கார், புலை. . . . .[013]
நீரின்கண் தம் நிழலை விரும்பி நோக்கார். நிலத்தை இருந்து கீறார், இரவின்கண் ஒரு மரத்தின் கண்ணும் சேரார், நோய் கொண்டு இடர்ப்பட்டாராயினும் நீரைத் தொடாதே எண்ணெய் உடம்பின்கண் தேயார், அவ்வெண்ணெயைத் தேய்த்தபின் தம் உடம்பின்மேல் நீரைத் தெளித்துக் கொள்ளாது புலையைத் தம் கண்ணால் நோக்கார்.

தண்ணீரில் நிழல் பார்த்தல், சும்மா தரையைக் கீறுதல் முதலியன ஆகா.

நீராடும் போழ்தில், நெறிப் பட்டார், எஞ் ஞான்றும்,
நீந்தார்; உமியார்; திளையார்; விளையாடார்;
காய்ந்தது எனினும், தலை ஒழிந்து ஆடாரே,
ஆய்ந்த அறிவினவர். . . . .[014]
ஒரு முறைப்பட்டார் நீராடும் போழ்தின் கண் ஒருநாளும் நீந்தார். நீரின்கண் உமியார், நீரைக் குடைந்து திளையார், விளையாடுவதுஞ் செய்யார். எண்ணெய் பெறாது தலை காயந்ததெனினும் தலையொழிய நீராடார் ஆய்ந்த அறிவினார்.
குள முதலியவற்றில் நீராடுங்காலத்து நீந்துதல் எச்சிலுமிழ்தல் முதலிய அருவருக்கத்தக்க செயல்களைச் செய்யலாகாது. கழுத்துவரை குளிக்கலாகாது.
ஐம் பூதம், பார்ப்பார், பசு, திங்கள், ஞாயிறு,
தம் பூதம் எண்ணாது இகழ்வானேல், தம் மெய்க்கண்
ஐம் பூதம் அன்றே கெடும். . . . .[015]
நிலம் முதலாயின ஐம்பூதங்களையும் பார்ப்பாரையும் பசுக்களையும் திங்களையும் ஞாயிற்றையும் தன் உடம்பு போலக் கருதிப் போற்றா திகழ்வானாயின் தன் உடம்பின்கண் உள்ள ஐந்து பூதத்தையு முடைய தெய்வங்கள் அன்றே கெட்டகன்றுபோம்.
பஞ்ச பூதம் முதலியவைகளை இகழ்வானாயின் ஒருவன் உடம்பின்கணுள்ள ஐந்துபூதத்தையுடைய தெய்வங்கள் அன்றே நீங்கும்.
‘அரசன், உவாத்தியான், தாய், தந்தை, தம்முன்,
நிகர் இல் குரவர் இவ் ஐவர்; இவர் இவரைத்
தேவரைப் போலத் தொழுது எழுக!’ என்பதே
யாவரும் கண்ட நெறி. . . . .[016]
அரசனும் உவாத்தியும் தாயும் தந்தையும் தனக்கு மூத்தோனும் என இவர்கள் தமக்கு நிகரில்லாத குரவாவார். இவர்களைத் தேவரைப்போலத் தொழுதெழுக என்று சொல்லப்படுவது எல்லா நல்லாரும் உரைத்துச் சொல்லிய நெறி.

அரசன் முதலிய ஐங்குரவரையும் தேவரைப் போலத் தொழுது எழுக.

குரவர் உரையிகந்து செய்யார்; விரதம்
குறையுடையார் தீர மறவார்; நிறையுவா
மெல் கோலும் தின்னார்; மரம் குறையார்’ என்பதே
நல் அறிவாளர் துணிவு. . . . .[017]
முன்பு கூறப்பட்ட குரவர்கள் சொல்லிய சொல்லைக் கடந்து ஒன்றினையுஞ் செய்யார், முடியாது கிடந்த குறை விரதமுடையார் மிகவதனை மறந்தொழுகார், மதி நிறைந்த உவாவின் கண் தம் பல் துடைப்பதும் செய்யார், அவ்வுவாவின் கண் மரங்களையுங் குறையார் என்று சொல்லப்படுவது நல்லறிவாளர் தொழில்.
குரவர் சொற்கடந்து செய்தல், நிறையுவாவில் பல் துடைத்தல், மரங்குறைத்தல் முதலியவற்றைச் செய்யார் நல்லறிவாளர்.
நீராடிக் கால்கழுவி வாய்பூசி மண்டலம்செய்து,
உண்டாரே உண்டார் எனப்படுவார்; அல்லாதார்
உண்டார்போல் வாய்பூசிச் செல்வர்; அது எடுத்துக்
கொண்டார் அரக்கர், குறித்து. . . . .[018]
குளித்துக் கால்கழுவி வாய்பூசி உண்ணுமிடம் மண்டலஞ் செய்து உண்டார் உண்டாராவர். இப்படிச் செய்யாமல் உண்டவர்கள் உண்டாரைப்போல வாய்பூசிப் போவார் ஊனை அரக்கர் எடுத்துக் கொண்டார்.
உண்கலத்தினின்றும் உணவை யெடுத்துண்ணு முன் நீராடல் கால் கழுவல் முதலியன செய்துண்பதே, உண்பதாம்.
காலின் நீர் நீங்காமை உண்டிடுக! பள்ளியும்
ஈரம் புலராமை எறற்க!’ என்பதே
பேர் அறிவாளர் துணிவு. . . . .[019]
கால் கழுவி நீர் உலர்வதற்கு முன்னே உண்ணத் தொடங்குக, பாயலின் கண் கால் கழுவிய ஈரம் புலர்ந்தாலன்றி ஏறாதொழிக என்று சொல்லப்படுவது பேரறிவாளர் துணிவு.
கால் கழுவின ஈரங் காய்வதன் முன் உணவு கொள்க, கால் கழுவின ஈரங் காய்ந்தபின்னே பள்ளி ஏறுக.
உண்ணுங்கால் நோக்கும் திசை கிழக்குக்கண் அமர்ந்து,
தூங்கான், துளங்காமை, நன்கு இரீஇ, யாண்டும்
பிறிதி யாதும் நோக்கான், உரையான், தொழுது கொண்டு,
உண்க, உகாஅமை நன்கு! . . . .[020]
உண்ணும்போது நோக்கப்படும் திசை கீழ்த்திசையாகக் கண் பொருந்தி, தூங்காது புடைபெயராது நன்றாக இருந்து, எவ்விடத்தும் பிறிதொன்றினையும் நினையாது, நோக்காது, சொல்லாது, உண்கின்ற உணவினைத் தொழுது சிந்தாமல் உண்க.
உணவுட்கொள்வோன் கிழக்கு நோக்கி ஆடாமல் அசையாமல் உணவிலே கருத்துடையனா யுண்க. கிழக்கு மங்கலத் திசையாதலின் கிழக்கு நோக்கி எனப்பட்டது.
விருந்தினர், மூத்தோர், பசு, சிறை, பிள்ளை,
இவர்க்கு ஊண் கொடுத்து அல்லால் உண்ணாரே – என்றும்
ஒழுக்கம் பிழையாதவர். . . . .[021]
விருந்தினரும் மிக மூத்தோரும் பசுக்களும் சிறைகளும் பிள்ளைகளும் என்று சொல்லப்பட்ட இவர்கட்கு உணவு கொடுத்தல்லது உண்ணார் என்றும் ஒழுக்கம் பிழையாதார்.

விருந்தினர் முதலியவர்கட்கு உணவு கொடாமல் தாம் முன்னர் உண்ணலாகாது.

ஒழிந்த திசையும் வழிமுறையான் நல்ல;
முகட்டு வழி ஊண் புகழ்ந்தார்; இகழ்ந்தார்,
முகட்டு வழி கட்டில் பாடு. . . . .[022]
முன் சொன்ன கீழைத்திசையும், அக்கீழைத்திசைக்கு இடையூறு உளதாயின் பின்னை நோக்கி யுண்டற்கு மற்றைத்திசைகளும் நல்லவாம். உச்சிப்பொழு துண்டலை ஆமெனப் புகழ்ந்தார்கள். முகட்டினேர் கட்டிலிட்டுக் கிடக்கலாகாதென்று பழித்தார்கள் நல்லோர்.
கிழக்கு நோக்கி யிருந்துண்ண இயலாதாயின் வேறுதிசை நோக்கியிருந்து முண்ணலாம். வாயிற்படிக்கு நேர் கட்டிலிட்டுப் படுக்கலாகாது.
கிடந்து உண்ணார்; நின்று உண்ணார்; வெள்ளிடையும் உண்ணார்;
சிறந்து மிக உண்ணார்; கட்டில்மேல் உண்ணார்;
இறந்து, ஒன்றும் தின்னற்க, நின்று! . . . .[023]
கிடந்துண்ணல் ஆகாது, நின்றுண்ணல் ஆகாது, வெள்ளிடையின் கண்ணிருந்து உண்ணல் ஆகாது, விரும்பி மிகவும் உண்ணல் ஆகாது, நெறியைக் கடந்து யாதொன்றும் நின்றுகொண்டு தின்னலும் ஆகாது.

படுத்தோ நின்றோ வெளியிடையிலிருந்தோ உண்ணலாகாது, கட்டின்மேலிருந்துந் தின்னலாகாது.

முன் துவ்வார்; முன் எழார்; மிக்கு உறார்; ஊணின்கண்
என் பெறினும் ஆற்ற வலம் இரார்; – தம்மின்
பெரியார் தம்பால் இருந்தக்கால். . . . .[024]
தம்மிற் பெரியார் தம் பந்தியிலிருந்து, உண்ணுமிடத்து அப்பெரியார் உண்பதற்கு முன்னே தாம் உண்ணார், முந்துற எழுந்திரார், அவர்களை நெருங்கியிரார், உண்ணுமிடத்து மிக எல்லாச் செல்லமும் பெறுவதா யிருப்பினும் வலமிருந்து உண்ணற்க.
பெரியோர்களுட னிருந்துண்ணுங் காலத்து அவர்கட்கு முன் உண்ணலும் எழுதலும் முதலியன ஆகா. மிக்குறார் என்பது ‘மீக்கூறார் எனச் சொற்சிதைவாக்கி அதிகம் பேசார்’ என்பதுமாம்.
—————

கைக்குங் கறியெல்லாம் முடிவின்கண்ணாகவும், தித்திக்குங் கறியெல்லாம் முதலாகவும், ஒழிந்த சுவைகளுள்ள கறிகளெல்லாம் இடையாகவும் உண்க; புகழும் வகையான்.

உண்ணும்போது இனிப்பான கறிகளை முதலிலும், கசப்பான கறிகளை இறுதியிலும் ஒழிந்த சுவைக்கறிகளை இடையிலும் உண்க.

தம்மின் மூத்தார் உண்ணும்பொழுது, அம்மூத்தாரைத் தம் பக்கத்து வைத்து உண்ணார், முறைமையான் உண்ணுங் கலங்கள் எல்லாவற்றுள்ளும் சிறிய கலங்களைக் கடைப்பிடித்துத் தனக்குக் கைக்கொண்டு காதல் பிறழாத வகையும், ஒழுக்கத்தின் நீங்காத வகையும் உண்டு, வரைவோடு கூட உண்டமைந்தால் உள்ள கலங்களை முறைப்படி நீக்குக.

தம்மின் முதியாரைத் தம்பக்கம் வைத்துண்ணாமலும் உண்கலங்களிற் சிறியவற்றைப் பற்றி அன்பும்ஒழுக்கமுங் குன்றாமலும் உண்டு பின் உண்கலங்களை நீக்குக.

வாயில் புக்க நீர் உட்புகாமை மிகவும் உமிழ்ந்து, எச்சில் அறும்படி வாயையும் அடியையும் மிகத் துடைத்து, அழகுடைத்தாக முக்காற் குடித்துத் துடைத்து, முகத்தின்கண் உள்ள உறுப்புக்களை அவற்றுக்குப் பொருந்தும் வகையால் விரல்களை உறுத்தி, அப்பெற்றியானே பூசும் பூச்சு நெறிமிக்கவர் கண்ட நெறி.

உண்டபின் வாயை நன்கு கொப்புளித்து, எச்சிலறச் சுத்தி செய்து முக்கால் குடிக்க.

இரு கையால் முகந்தும் ஏற்றும் தண்ணீர் குடியார், குரவர் கொடுப்பனவற்றை ஒரு கையால் வாங்கிக் கொள்ளார்; அவருக்குத் தாம் ஒரு கையால் கொடார், உடம்பினை மடுத்து இரு கையால் சொறியார்.

தண்ணீரை இரு கையாலுங் குடிக்கலாகாது. பெரியோரிடம் ஒன்றைப் பெறும்பொழுதும் ஒன்றைக் கொடுக்கும் பொழுதும் இரு கையாலேயே வாங்கல் கொடுக்கல் செய்யவேண்டும். உடம்பை இரு கைகளாலும் சொறியலாகாது.

மாலைப்பொழுதின்கண் கிடத்தலும், வழி நடத்தலும் செய்யார்; ஒருவரைச் சீறுவதுஞ் செய்யார்; அந்திப் பொழுது விளக்கு இகழாது ஏற்றுவர்; மாலைப்பொழுதின்கண் உண்ணாது அல்கலின்கண் உண்டு, புறம்போகாது ஓரிடத்தின் கண்ணே அடங்குதல் நெறி.

மாலைப்பொழுதில் படுத்தல் வழிநடத்தல் செய்யாதும், உண்ணாமலும் எவரையும் சீறாதும், விளக்ககேற்றி இரவானது முண்டு அடங்கியிருத்தல் முறை.

கிடக்கும்பொழுது தெய்வத்தைக் கைகூப்பித் தொழுது வடதிசையின் கண்ணும் கோணத்திசையின் கண்ணும் தலைவையாது, மேற்போர்ப்ப தொன்றினை உடம்பின் கண் கொடுத்துக் கிடத்தல் நெறி.

படுக்கும்பொழுது கடவுளைத் தொழுது, வடக்கும் கோணத்திசையும் தலைவையாது, போர்த்துப்படுத்தல் முறை.

இருதேவர் நடுவும் பார்ப்பார் பலர் நடுவும் ஊடறுத்துப்போகார்; தும்மினபொழுது மிக்கார் வழுத்தினால் தொழுதெழுக; தம்மோடொப்பார்க்கு வழிபோம் பொழுது உடனே நேர் செல்க, தம்முள்ளம் உவந்து.

இரண்டு தெய்வங்களுக்கும் பார்ப்பாருக்கும் இடையில் செல்லக்கூடாது. தும்மினபொழுது பெரியோர் வாழ்த்தினால் அவரைத் தொழுக. ஒத்த நண்பன் எதிர் வருவானானால் உடன் செல்க.

புல், பைங்கூழ், ஆப்பி, சுடலை, வழி, தீர்த்தம்,
தேவகுலம், நிழல், ஆன் நிலை, வெண்பலி, என்று
ஈர் – ஐந்தின்கண்ணும், உமிழ்வோடு இரு புலனும்
சோரார் – உணர்வு உடையார். . . . .[032]

புல்லின் கண்ணும், விளைநிலத்தின் கண்ணும் ஆப்பியின் கண்ணும், சுடலையின் கண்ணும், வழியின் கண்ணும், தீர்த்தத்தின் கண்ணும். தேவர் கோட்டத்தின் கண்ணும். நிழலின் கண்ணும்; ஆநிரை நிற்கும் இடத்தின் கண்ணும் சாம்பலின் கண்ணும் என ஈரைந்தின் கண்ணும் உமிழ் நீரையும் மூத்திர புரீடங்களையும் சோரார் உணர்வுடையார்.

புல் முளைத்திருக்குமிடம் வயலிடம் முதலிய இடங்களை யுமிழ்ந்தும் மலசலங் கழித்தும் அசுத்தம் செய்தலாகாது.

பகல் தெற்கு நோக்கியும் இராவடக்கு நோக்கியும் இருந்து மூத்திர புரீடங்களைச் சேரார், பகற் பொழுதின்கண் தீயினுள் நீர் பெய்யார்.

மலசலங் கழிப்பவர் பகலில் தெற்கு நோக்கியும், இரவில் வடக்கு நோக்கியும் இருந்து கழித்தலாகாது.

திசை பத்தினையும் மறைத்தாராக மனத்தாற் கருதிப் பத்துத் திசையின் கண்ணும் அன்றியிலே வேறோரிடத்தின் கண்ணே சோர்கின்றாராகக் கருதியல்லது உமிழ் நீரையும் மூத்திர புரீடங்களையும் இந்திர பதவியைப் பெறுவதாயிருப்பினும் சோரார் நூன்முறையான் ஒழுகுதும் என்பார்.

திசை பத்தையும் மறைத்ததாகப் பாவித்து அந்தரத்திற் செய்வதாக நினைத்து எச்சிலுமிழ்தலும் மலசலங் கழித்தலும் செய்க.

நீரகத்தின் கண்ணின்றும் நடவாநின்றும் தம் வாயைப் பூசார், ஓடுநீர் பெற்றிலராயின் நிலை நீருள்ளும் அப்பெற்றி பூசார். அந்நீர் அருந்தும்போது பூசும்போதும் மனத்தான் வரையறுத்துக் கொண்டல்லது பூசார், அதுவுஞ் செய்வது கலத்தான் முகந்து சிலர் பெய்யப் பூச முடியாதாயின்.

தண்ணீரில் நின்றுகொண்டும் நடந்துகொண்டும் வாயலம்பாது ஒரு கலத்தில் மொண்டே வாயலம்ப வேண்டும்.

ஒருவருக்கும் விளக்கிற்கும் நடுவூடறுத்துப் போகார், சுவரின்மேல் உமியார், தமக்குக் குளிரான் இடர் வரினும் பிறருடுத்த மாசுணியைத் தங்கீழ்ப்படுப்பதும் மேற் போர்ப்பதும் செய்துகொள்ளார், படை வந்ததாயினும் தாமுடுத்த ஆடைக் காற்றுப் பிறர்மேல் உறைப்பப் போகார்; பலர் நடுவண் நின்று உடையை உதறார்; எஞ்ஞான்றும் கடப்பாட்டை அறிந்த அறிவுடையார்.

விளக்குக்கும் ஒருவர்க்கு மூடே செல்லுதல், சுவரில் உமிழ்தல், பிறரழுக்குடை யணிதல், அடுத்தவர்மேல் தம் ஆடைக் காற்றுப்படச் செல்லுதல், பலரிடைத் தம் ஆடையை உதறுதல் ஆகியவற்றைச் செய்தலாகாது.

பிறர் மனையாளும், கள்ளும், களவும், சூதும், கொலையும் என்றிவ் வைந்தினையும், அறனறிந்தார் செய்வோமென்று கருதார். கருதுவாராயின் திறப்பாடிலரென்று பலரால் இழக்கப் படுதலுமன்றியே, நரகத்தின்கண் செல்லும் நெறியில் இவை செலுத்துதலான்.

பிறர்மனை நயத்தல். கள்ளுண்ணல், களவு செய்தல், கொலைசெய்தல், சூதாடல் இவை இகழ்ச்சிக்கும் நரகத்துக்கும் காரணமாதலால் இவைகளை மனத்திலும் நினைத்தல் ஆகாது.

பொய்யும் குறளையும் பிறர் பொருளை வௌவுதலும் பிறராக்கத்தின்கண் பொறாமையும் என இவை நான்கினையும் ஐயந்தீர்ந்த அறிவினையுடையார் நினையார்; நினைப்பாராயின் பிச்சை புகுவித்து நரகத்தின் கண்ணேயும் புகுவிக்கும்: தெய்வமும் கெடுத்துவிடும்.

பொய் குறளை பேசுதலும், பொறாமை யுறுதலும், பிறர் பொருள் வௌவுதலும் ஆகிய இவை வறுமையுறுவித்துத் தெய்வத்தின் கோபத்துக்கும் ஆளாக்கும்.

தமக்கென் றுலை யேற்றார்; பிறருக்கு உழைப்பதற்காக அன்றித் தமக்காக உணவும் உட்கொள்ளார்; அட்டிலின்கண் எச்சிற்படுத்தார்; மனையுறை தெய்வங்கட்குப் பலியூட்டினமை அறிந்த பின்னைத் தாம் உண்பர்.

பெரியோர் தந்நலம் கருதிச் செயல் செய்யார்.

புதிய சுற்றத்தார் தம்மொடு சேர்ந்து உண்ணுமிடத்துக் குரவராயினார் உயர்ந்ததன் மேலிரார். இளங்கிளைஞர் மனமழிவனவற்றையும் செய்யார், முறைமை கடந்து மற்றவ் விளங்கிளைஞர் இன்னாத செய்த காலத்தும்.

புதிய உறவினர்கள் உண்ணுமிடத்துப் பெரியோர் உயர்ந்த பீடத்திலிருத்தலும், அவர்கள் மனம் நோகும்படி ஏதாவது செய்தலும் ஆகா.

ஒருவன் தன் கண்ணிற்கு மருந்து எழுதிய கோல்கொண்டு அவ்வெச்சில் கழியாது தங்கண்ணிற்கு அம்மருந்து ஊட்டார், தங் காலோடு கால் தேயார், புண்ணிய மாய பொருள்களைத் தம் தலையின் கண்ணும் மற்றை உறுப்பின் கண்ணும் உறுத்துக; நுண்ணிய நூலை யுணர்வார்.

ஒருவர் கண்ணெழுதிய கோலைச் சுத்தம் செய்யாமல் பிறர் கண்ணிற் செலுத்தக்கூடாது. காலொடு கால் தேய்க்கலாகாது. புனிதமான பொருள் கிடைத்தால் அதனைத் தலையிலும் கண் முதலிய உறுப்புக்களிலும் ஒற்றிக்கொள்க.

தம் மனைவியர்க்குப் பூப்பு நிகழ்ந்தால், மெய்யுறலாகாத நாள் மூன்றின் கண்ணும் அவரை நோக்கார், நீராடிய பின்பு பன்னிரண்டு நாளும் அகலாதொழிக என்று சொல்லப்படுவது பேரறிவாளர் துணிவு.

மனைவியர்க்கு மாதப்பூப்பு நிகழ்ந்தால் மூன்று நாளளவும், அவர் முகத்தைக் கணவன் காணலாகாது. மூன்று நாளுங்கழிந்து தலைமுழுகினபின் பன்னிரண்டு நாளளவும் அவரைப் பிரிதலாகாது.

உச்சியம்பொழுதும், நடுக் கங்குலும், மாலையுங் காலையும், மிக்க இருதேவர் நாளாகிய ஆதிரையும் ஓணமும், உவாவும், அட்டமியும், தாம் பிறந்த நாளும் என இந்நாட்களின்கண் தம் மனைவியரோடு உடனுறைதலின்கண் நல்லோர் உடன்படார்.

நடுப்பகலிலும் நள்ளிரவிலும் மாலையிலுங் காலையிலும் திருவாதிரையிலும் திருவோணத்திலும், அமாவாசை பௌர்ணமியிலும் அட்டமியிலும் பிறந்த நாளிலும் கலவியாகாது.

நாழியை மணைமேல் இருத்தார். மணையைக் கவிழ்த்து வையார், புத்தாடையைத் தலைக் கடையின்கண் விரியார், பலருங் புகுதுங் கடைத் தலைக்கண் ஆராயாது கட்டிற்படார்; தம்மை அறியாதவர் முன்பு நில்லாது விடுக.

அளக்கும் படியை மணைமேல் வைத்தலும், மணையைக் கவிழ்த்து வைத்தலும், புத்தாடையைத் தலைக் கடையில் விரித்தலும், தலைக் கடையிற் கட்டிலிட்டுப் படுத்தலும் ஆகா. தம்மை யறியாதா ரெதிரில் நிற்காதிரு.

துரால் சீக்குந் துடைப்பமும், துகளோடு கூடிய துராலும், பூவின் புறவிதழும், பழங் கருங்கலங்களும், கிழிந்த கட்டிலும் என இவ்வைந்தும் மணப்பந்தரின் கீழ்ப்பரப்பா தொழிக.

திருமணப் பந்தலின் கீழ்த் துடைப்பம், செத்தை, பூவின் புறவிதழ், பழங் கரிப்பானை. கிழிந்த கட்டில் என்னுமிவைகளைப் பரப்பலாகாது.

சிறு காலையே துயிலெழுந்து, இல்லத்துள்ள துராலைக் களைந்து, கருங்கலங்களைக் கழுவி, தம் மனை ஆப்பி நீராலே எங்குந் தெளித்து, நீர்ச்சாலையும் கரகத்தையும் நிறைய மலரணிந்து, இல்லத்துப் பொலியும்படி அடுப்பினுள் தீ யுண்டாக்குக; நல்ல செல்வத்தை யுறல் வேண்டுவோர்.

நல்ல செல்வத்தை யடைய வேண்டுவோர் வைகறையில் எழுந்து வீட்டை விளக்கிக் கலங்களைக் கழுவி வீடு முழுவதும் சாணநீர் தெளித்து, நீர்ச்சால், கரகங்களை மலரணிந்து, பின்பு அடுப்பினுள் தீ மூட்டுதல் வேண்டும்.

அட்டமி நாளும் உவாநாளும், பதினான்காநாளும், தாமுறையும் பூமி காக்கும் அரசர்க்கு உறுகண்ணுள்ள நாளும், தமக்குத் தூய்மை போதாத நாளும் என இந்நாட்கள் பார்ப்பார் வேதமோதாத நாட்கள்.

அட்டமி அமாவாசை பௌர்ணமி சதுர்த்தசி அரசர்க் குறுகண்வேளை பூகம்பம் இடிமுழக்கம் தூய்மையின்மை என்னு மிவை வேதமோதலாகாக நாட்கள்.

தான் செய்யும் கலியாண நாளின் கண்ணும், தேவர்க்குரிய சிறப்புநாளின் கண்ணும், பிதிர்கட்குச் சிறப்புச்செய்யும் நாளின் கண்ணும், விழாநாளின் கண்ணும் யாகம் செய்யும் நாளின் கண்ணும் இகழாதே கொடையறஞ் செய்க; விருந்தினர்க்குஞ் சோறிடுக.

கலியாண நாள் முதலிய ஐவகை நாட்களிலும் தானம் செய்வதுடன் விருந்தினர்க்குஞ் சோறிடுக.

உடையும் நடையும் சொற்சோர்வும் வைதலும் என இந்நான்கும், தாம் அரசனால் சிறப்புப் பெற்றமைக்கும், தன் ஆண்மைக்கும், தம் கல்விக்கும், குடிப்பிறப்புக்கும் தக்கனவாக அமையும் செயல்களாம்.

உடை நடை முதலியவைகள் தத்தம் நிலைமை கல்வி முதலியவற்றுக்குத் தகுந்தபடி அமையும்.

பலர் நடுவண் இருந்து பிறரைப் பழித்துரையார், இழித்துரையார் பலர் நடுவண் உறங்கார், தமக்குச் செய்யப் பொருந்தாதவற்றைப் பிறர்க்குச் செய்கிறோமென்று உடன்பட்டுச் செய்யாதொழியார், தகுதியின்றி வறியாரை இகழ்ந்து முறைமை கடந்து உரையார், பிறரால் வெல்லுதற்கரிய கேள்வியார் தவறியும்.

கல்வி கேள்வியுடையர் பலர் நடுவிலிருந்து பழித்திழித்துப் பேசார், உறங்கார், ஒன்றைச் செய்வதாக ஒப்பிப் பின் செய்யாதிரார், ஏழைகளை யிகழ்ந்துரையார்.

மின் னொளியையும், வீழ் மீனையும், வேசையர்கள் கோலத்தையும் தமது விளக்கத்தை வேண்டுவார் நோக்கார், பகற்கிழவோனுடைய காலை யொளியையும் மாலை யொளியையும் அப்பெற்றியே நோக்கார்.

தம் கண்ணின் ஒளியும், புகழும் கெடாதிருக்க வேண்டுவோர் மின்னல் எரிமீன் வேசையரின்கோலம் காலை மாலை வெயில் இவைகளை யுற்றுப் பார்த்தல் கூடாது.

வஞ்சனையுரையும், பயன்படாத உரையும், வாய் காவாது உரைக்கும் உரையும், பிறரைப் பழித்துரைக்கும் உரையும், இவை யாவும் சொல்லார், என்றுந் தளராத உள்ளத்தவர்.

வஞ்சனைமொழி பயனில் சொல் முதலியவற்றை ஒழித்தல் வேண்டும்.

தெறித்தலும் கல்லெறிதலும், வீளைசெய்தலும், தூரப்போகின்றா னொருவனை அழைத்தலும், ஒருவன் செய்கையும் சொல்லும் முதலாயினவற்றைத் தாமும் அவ்வகை இகழ்ந்து செய்து காட்டலும், வேகமுடையனாதலும், ஒளித்தலும், கையொடு கை புடைத்தலும், பிறர்க்கு வெளிப்படக் கண்ணிடுதல் முதலாயின செய்து தன்னுறுப்பைச் செகுத்தலும். இப்பெற்றிப் பட்டவையெல்லாம் பயின்று செய்யார் வழிப்பட்டார்.

ஒரு பொருளை விசிறி யெறிதல் கல்லெறிதல் முதலிய தீய பழக்கங்களைச் செய்யலாகாது.

முறுவலோடு கூடிய இனிதுரையும், கால் கழுவ நீரும், இருக்க மணையும், கிடக்கப் பாயும், கிடக்கும் இடமும் என இவ்வைந்தும் என்று சொல்லுப, தம்மிடத்துச் சென்றார்க்கு உணவுடனே செய்யும் சிறப்புக்கள்.

தம் வீட்டுக்கு வரும் விருந்ததினர்க்கு உணவளித்தலுடன் இன்முகம் இன்சொல்லுடன், கானீர் முதலியன உதவியும் சிறப்பிக்க வேண்டும்.

வெகுண்ட பகை முனையின் கண்ணும், கள்ளால் களித்தாடுமிடத்தும், பொதுமகளிர் சேரிக்கண்ணும், குணங்களை யாராய்ந்து தம்மை விரும்பிக்கொண்டார் கோட்பாடு விட்டவிடத்தும், பலர் தொகும் நீர்க்கரையிடத்தும் நெடிதாக நிற்கையை ஒப்பில்லாத அறிவினையுடையார் விரும்பார்.

போர்க்களம், கட்குடித்தாடுமிடம், பரத்தையர் சேரி முதலிய இடங்களில் தங்கியிருப்பது சரியன்று.

முற்றிய புல்லின் கண்ணும், முற்றிய காட்டின் கண்ணும் சேர்ந்திரார்; அவற்றைத் தீக்கு உணவாக ஊட்டார்; மழை பெய்யாநிற்கக் காலைப்பரப்பி ஓடார்; தேறமுடியாத காட்டுள் தமியராய்ப் போகார்; மழை குறைந்து பெய்யா தொழிதலால் வறுமை மிகப் பெரிதாயிற்றாயினும், தங்குடி யொழுக்கத்தை நீங்கிய தொழில்களைச் செய்யார்.

உலர்ந்த புற்றரையிலும் முதிர்ந்த காட்டிலும் தங்குதலும், அவற்றைத் தீயிட்டுக் கொளுத்துதலும், மழை பெய்கையில் காலைப் பரப்பி யோடுதலும்; வழிதுறை தெரியாத காட்டில் தனியாகப் போதலும்; வறுமை வந்த காலத்து நல்லொழுக்கந் தவறுதலும் தகாத காரியங்களாம்.

குடியில்லாத மனையகத்தும், தேவாலயங்களுக்குள்ளும் சுடுகாட்டுள்ளும், ஊரில்லாத இடத்து உளதாய தனி முதுமரத்தின் கண்ணும், அறிவின்றித் துணையோடல்லது தாமே போகார், பகலுறங்கார் நோயின்மை வேண்டுவோர்.

பாழ் வீடு, சுடுகாடு; தனித்த பாழ் மரம் இவற்றினிடத்துத் தனித்துச் சேராமலும் பகலில் தூங்காமலுமிருப்பது, நோயில்லாதிருப்பதற்கு ஏது.

பிறர் எழுந்து போகத் தொடங்கின பொழுது அவரைப் பின்னே நின்று அழையார். அப்பொழுது தும்முவதுஞ் செய்யார். மறந்தும் எங்குப் போகிறீர் என்று சொல்லார். முன்னே புக்கு எதிர்முகமாக நின்றும் ஒன்றைச் சொல்லார். அவர்க்கு இருமருங்கும் நின்று சொல்வார். தம் குரவர் போம்பொழுது வலங்கொண்டு போவர்.

ஒருவர் எழுந்து போம்பொழுது அவரை அழைத்தல், எங்கே போகிறீர் என்று கேட்டல் செய்யலாகாது, பெரியோர் பக்கம் நின்று பேசுக, வலங்கொண்டு போக.

பாடல் – 059


பிறரைப் பார்த்து உமது உடம்பு நன்றாயிருக்கிறது என்று சொல்லார், விளக்கினை வாயால் ஊதி யவியார், அட்டிலடுப்பின்கண் நெருப்பவியச் செய்யார், அந்நெருப்பின் சுடர் தம் மேற்படக் குளிர்கெடக் காயார்.

ஒருவருடம்பு நன்றாயிருக்கிற தென்பதும், விளக்கை வாயாலூதல், ஒருபொருள் வேகும்போது அடுப்பு நெருப்பை அவித்தல் முதலியவையும் தீயொழுக்கங்களாம்.

யாதொன்றிலும் ஏறிப்போகார், செருப்புத்தொடார், தம்மேல் வெயில்மறைக்கக் குடை பிடித்துப் போகார் ஆன்றவிந்த மூத்த விழுமியார் தம்முடன்கூட வழிபோமிடத்து.

வாலிய முறையான் வந்த நான்மறையாளரை மேலாகிய முறைமையையுடைய தங்குரவரைப்போல் கொண்டொழுகுதல் நூல்முறையாளர் துணிவு.

குலத்தாலும் ஒழுக்கத்தாலும் சிறந்த அந்தணரைத் தம்முடைய குரவர்போற் கொண்டு ஒழுக வேண்டும்.

காலின்கண் தொழுதலும், அவர் நன்றென்ற சமயத்தின்கண் நிற்றலும், அவரைக் கண்டால் எழுந்திருத்தலும் என இவை குரவர்க்குச் செய்யும் ஆசாரம் என்று சொல்லுவர் நல்லார்; குரவர்க்குச் செய்யும் ஆசாரங்கள் பல வற்றுள்ளும் சாரத்தாற் சொல்லப்பட்டவை இம் மூன்றுமேயாகும்.

குரவர்க்குச் செய்யும் ஆசாரங்கள் அவரைக் காலின்கண் வணங்குதல், அவர் கூறும் நெறியில் நிற்றல், கண்டவுடன் எழுந்திருத்தல் ஆகிய மூன்று.

அருந்தவரைப் பாதுகாத்தலும், பழிநாணலும், தாங் கற்றவற்றைக் குரவர்முன் மறந்தாயினுஞ் சொல்லாமையும் என இம்மூன்றும் திறப்பட வறிந்தார் அறிந்தநெறி.

அருந்தவரைப் பேணலும், பழி நாணலும், குரவர்முன் தாங் கற்ற திறத்தை யெடுத்துரையா திருத்தலும் சிறந்த வொழுக்கங்கள்.

பார்ப்பாரும், தவசியரும், சுமந்தாரும், பிணிப்பட்டாரும், மூத்தாரும், பிள்ளைகளும், பசுக்களும், பெண்டிரும் என்று சொல்லப்பட்ட இவர்க்கு மிகவும் வழி கொடுத்து விலகிப் போயினாரே மக்களாகப் பிறந்தவர்களுள் பிறராற் போற்றி யென்று சொல்லப்படுவார்.

பார்ப்பார் தவசியர் முதலியவர்களைக் கண்டால் வழிவிட்டுச் செல்வதே நெறி.

தாயுடனாயினும், மகளுடனாயினும், தம் உடன் பிறந்தாளுடனாயினும் சான்றோர் தனித்து உறையார், ஐம்புலன்களையுந் தடுக்கல் அரிதாகலான்.

ஐம்புலன்களையும் அடக்கி நடத்த லருமையாதலின் தாய் முதலியவர்களுடனும் தனித்திருத்தல் தகாது.

அரசர் வாயிலின்கண் தடையுண்டானால் வெகுண்டு காயார், அரசரோடு மிகக்கிழமையை அவர்பொறாத வகை செய்யார், தமக்கு ஒன்று உதவுமிடத்தும், அவர்தம்மைத் தலையளிக்குமிடத்தும், தமக்கு அவை அமையா என்றிகழார், அரசரொக்கக் கோலஞ் செய்யார், அரசர் இருந்த அவையின் கண் ஊடறுத்துப் போகார், பிறனொருவனைச் சேர்ந்திரார்; முன்பு போலப் பின் கடை போக வாழ்தும் என்று கருதுவார்.

அரசருடன் பழகுவோர் அவரிடம் எந்த அளவில் நடந்துகொள்ளல் நலந்தருமோ அவ்வளவில் நடப்பதே முறை யென்க.

தமக்குற்ற கட்டுரைகளும், தம்மிற் பெரியராக அரசனாற் சிறப்புச் செய்யப்பட்டார் உரைத்த உரைகளும், அஃதன்றியே பிறர்க் குறுதியாகிய கட்டுரைகளும்; அரசர்க்குச் சொல்லற்க, சொல்லுவராயின் தமக்கு வடுப்படுங் குற்றமாம்.

அரசனிடத்தில் தமக்குப் பொருந்திய உறுதிச்சொல், அரசனாற் சிறப்புச் செய்யப்பட்டவர் உறுதி மொழி, பிறர்க்குறுதியாகிய கட்டுரை இவற்றைச் சொல்லுதல் பெருங்குற்றமாம்.

பெரியராயுள்ளார் உவந்தனவற்றைத் தாம் உவவார்; தம்மில்லத்தின்கண் கீழ்மக்களைக் கொண்டு புகார்; அறிவினையறியாத பிள்ளையேயாயினும், உயர்த்தன்றி இழித்துச் சொல்லார், தம்மோடு அளவளாவு இல்லாத விடத்து.

பெரியார் உவந்தவற்றைத் தாம் விரும்புதலும், வீட்டுட் சிறியாரை யழைத்துச் செல்லுதலும் தம்மொடு பழக்கமில்லாதவர் சிறுவராயிருப்பினும் இகழாதிருத்தலும் நன்னெறி.

அரசன் செய்வனவற்றை வெறார் அவனோடு கலாயார், விலங்கலின்றி நேர்முகத் தெதிர் நில்லார், அரசன் தனியே இருக்கும் இடத்தின்கண் தம் கருமம் சொல்லார், இனியவான பொருள்களை யாங்கள் நுகர்ந்தறிவோம் என்று அரசர்க்குச் சொல்லார், காக்கை வெள்ளென்றிருக்கு மென்ன அரசன் சொல்லினானாயினும் அவன்மேல் அன்பின்றி மறுத்துரையார்.

அரசன் செய்வனவற்றை வெறுத்தல், அவனோடு கலாய்த்தல், முகத்தெதிர் நிற்றல், தங்கருமங் கூறல் இனியவை யறிவே மென்றல் ஆகா.

உமிதலும், உயர்ந்தவிடத் தேறியிருத்தலும், பாக்குத் தின்னலும், கூறுபாடில்லாதவுரையும், உறங்குதலும், இவ்வைந்தும், அரசர் முன்பு செய்யார்.

அரசர் முன்னிலையில் உமிழ்தல் வெற்றிலை தின்னல் முதலிய செய்கைகளைச் செய்தலாகாது.

அரசர் முன்புதம் செல்வமும், கல்வியும், தமது விளக்கமும், குணனும் குடிப்பிறந்தார் தமக்குத் துன்பஞ் செய்யும் பகைவர்போல் பரப்பிப் பல்கால் பயின்றுரையார்.

ஒருவர் தங்கல்வி, செல்வம், குணம் முதலியவற்றை அரசர் முன்ன ரெடுத்துரைத்து அதனால் கெடுதியடையாதிருக்க வேண்டும்.

அரசர் மனையகத்தும் தேவாலயங்களுள் குரவரையுங் கண்டால் வணங்கார், தெய்வங்கள் புறம் போந்தெழுந்தருளு மிடத்தும், அரசர் புறம் போதுமிடத்தும் கண்டாலும் வணங்கார்.

அரண்மனை, ஆலயம், தெய்வவிழாக் காலம் அரசர் ஊர்வலம் வருங்காலம் இவற்றில் பெரியரைக் கண்டால் வணங்கா தொழிக.

சிரிப்பும் கொட்டாவியும் காறியுமிழ்தலும் தும்மலும் என, இவையும் அரசர் முன்பு செய்யார், செய்வாராயின், பழி குறையாது நிற்கும்.

அரசர் எதிரில் சிரித்தல் கொட்டாவி விடுதல் முதலியவற்றைச் செய்யற்க, செய்தாற் பழியே உண்டாகும்.

நன்மாணாக்கர் என்றும் ஆசிரியர் முன் அடங்கி யொழுகவேண்டுதலின், அவர் பாடஞ் சொல்லுதலை நிறுத்தினால் தாமும் நிற்கக்கடவர், அவர்முன் இருந்தபோது அவர் ‘எழுந்து போ’ என ஏவுதற்குமுன் எழுந்து போகார். அவர் பாடம் முதலியவற்றைச் சொல்லின் செவிதாழ்த்துக் கேட்க, அவர் யாதொன்றும் சொல்லாவிடின் வினவாதிருக்கக் கடவர்.

நன்மாணாக்கர் ஆசிரியர் இருவென இருந்து சொல்லெனச் சொல்லிப் போவெனப் போய், செவி வாயாகக் கேட்டவை விடாதுளத்தமைக்க முயல்வர்.

பெரியாரவைக்களத்தில் ஆடையைக் களையார், காதைச் சொறியார், கைமேலெடுத்துப் பேசார். மாதர்களை நோக்கார், பிறர் செவியிற் சொல்லுஞ் சொல்லையுங் கேளார்.

பெரியோர் அவையிற் காதைச் சொறிதல், ஆடையைக் களைதல், கையுயர்த்திப் பேசுதல் முதலியன செய்யலாகாதன.

கடுகியுரையார், மேன்மேலுரையார், பொய்யாய சொற்களைப் பரக்க உரையார், தாம் உரைக்கத்தக்க சொற்களைப் பரப்பியுரையார், கூறவேண்டிய எனைத்தினையும் ஒரு மிக்க சில்லெழுத்தினானே பொருள் விளங்கும் வகை காலத்தோடு படுத்திக் கேட்போர் செவ்வியறிந்து சொல்லுவர்.

ஒருவரிடத்தில் ஒன்றைச் சொல்லும்பொழுது விரைதல் மேல்மேலுரைத்தல் முதலிய செய்யாது, சில்லெழுத்திற் பொருளடங்கப் பேசுதல் வேண்டும்.

நற்குலப் பெண்டிர் தம் கணவரது உடலின் வடிவத்தையன்றி ஏனை ஆடவரது மேனி எத்துணை அழகுடையவேனும் பாரார்; தம் உடலின் வடிவத்தையும் நோக்கார்; தலை மயிரைக் கோதார்; கைந்நொடித்தல் முதலியன செய்யார்.

குலமாதர் தம் கணவருடல் வடிவையன்றிப் பிறர் வடிவழகு காண வொருப்படார். தலைமயிர் கோதல் கைந்நொடித்தல் முதலிய தீப்பழக்கங்களுங் கொள்ளார்.

பிறரோடுகூட இருந்து ஒன்றனை ஆராயார், அரசனைச் சாரநில்லார் : அரசன் பிறனொருவனுக்குச் சொல்லுஞ் சொல்லைத் தஞ்செவியில் ஓரார், அரசன் ஒன்றனை ஒருவனுக்குச் சொல்லும்பொழுது குறுகநின்றாரெனின், பிறிதொன்றனை ஆராய்வார்போல முகந்திரிந்து நிற்க.

அரசவையில் வேறொருவனிடமிருந்து ஒன்றையாராய்தல், அரசன் அருகினிற்றல், மறை கேட்டல் முதலியன செய்தல் ஆகா.

துன்பக் காலத்தில் அத் துன்பத்துள் அமைவுற்று வாழ்தலும், இன்பக்காலத்தில் பிறர்க்கு இன்பு செய்யும் வகையான் இன்புற்று நடத்தலும், அன்பினின்றும் வேறுபட்டாரில்லம் புகாமையுமாகிய இம்மூன்றும் ஒரு திறப்பட்டார் கண்ணே உளவாம்.

துன்பக்காலத்தில் துன்பத்தைப் பொறுத்திருத்தலும், இன்பக்காலத்தில் பிறர்க்கும் இன்பமுண்டாக நடத்தலும், அன்பற்றவர் வீடு அடையாமையும் ஒருவழிப்பட்டார் செய்கையாம்.

நன்கறிவார் தாம் வெகுண்டாராயினும் தங்குரவர் பெயரைச்சொல்லார்; தம்மில்லத்தின்கண் தம் மனைவியை மிகவும் கழறியுரைத்து நெடிதிரார்; தம்மிற் பெரியாரை முறைப் பெயர் கொண்டு சொல்லார்; புலையரையும் முறைப்பெயர் கொண்டு கூறார்.

வெகுண்ட விடத்தும் தங்குரவர் பெயரைக் கூறுதலும், நெடுநேரம் மனையாளைக் கடிந்து பேசலும், பெரியார் புலைய ரிவர்களை முறைப்பெயரிட் டழைத்தலும் ஆகா.

பிறர் மனையின்கண் புழைக்கடை வாயிலால் புகார், அரசன் கோட்டி கொண்டு கூத்து முதலாயின இன்புறாநின்றவிடத்தும், உரிமை மகளிரோ டிருந்தவிடத்தும் செவ்வியராயுள்ளா ரென்றும் நோக்கார்; அந்தந்தத் தொழிற்குரிய ரல்லாதார்.

வேறொருவர் வீட்டில் புழைக்கடை வாயிலாற் போதலும், அரசன் களியாட்டிடத்தும் அந்தப்புரத்திடத்தும் செல்லுதலும் ஆன்றோர் செயலாகா.

அறிவுடையோர் என்று சொல்லப்படுவோர் கோலஞ்செய்யு மகளிரிடத்தோடு சேர்ந்த தம்மிடத்தை வாழ்க்கைக்குச் சிறந்த இடமாகக் கொள்ளார். தெளிவுற்று மிகுந்த உரிமையுளதாயினும் விரும்பப்படுவனவல்ல, தம் மனைவியர்க்கு விருப்பம் வேறுபடும் ஆதலால்.

பொது மகளிர் வீட்டினருகிற் குடியிருப்புக் கொள்ளின் மனைவியர் மனவிருப்பம் மாறுபடும்.

ஒருவர் பக்கத்தில் வரிசைப்படப் போகார் – ஒருவருடைய நிழலை மிதித்து நில்லார், முள்னர் ஆராய்ந்தன்றிப் பேசும்போது ஆராய்ச்சிசெய்து பேசார், ஊரிலுள்ளோர் வெறுக்கத் தக்கவைகளைச் செய்யார், அரசரது படையளவைப் பகைவர்க்குச் சொல்லார், எப்போதும் ஒரு தன்மையராய் வாழ்தும் என்பார்.

ஒருவர் பக்கத்திற் போகும்போது ஒரு வரிசைப்படப்போதல், ஒருவர் நிழலை மிதித்து நிற்றல், பேசும்போது இடையில் நினைந்து பேசுதல், ஊரார் வெறுப்பன செய்தல், அரசர் படையளவுரைத்தல் இவை ஆகாதன.

புற்றில் வாழ் அரவும் அரசனும் தீயும் குகையில் வாழ் சிங்கமும் என்கின்ற இந்நான்கினையும் இளையவென்றும், எளியவென்றும், பழகியவென்றும் எண்ணியிகழின், துன்பந் தருவனவாம்.

பாம்பு அரசன் நெருப்பு சிங்கம் இந்நான்குடன் நெருக்கமாயும் எச்சரிகை யில்லாமலும் பழகலாகாது.

அறிவுடையோர் தம்மாட்டுச் செல்வம் மிகப் பெருகிய விடத்தும், அறத்தினையுங் கல்யாணத்தினையும் முயற்சியையும் வீட்டினையும் அரசர் செய்வதினும் மேம்படச் செய்யாதொழிக; செய்வாராயின் தம்மாட்டுற்ற செல்வம் கெடும்.

எத்தகைய செல்வரும் அறம் மணம் முயற்சி வீடு இவ்வகையில் அரசரினும் மேம்படச் செலவு செய்யலாகாது.

ஐங்குரவரையும் சான்றோரையும் கண்டால் மனம் வேறுபடாதவர்கள் அவரை நோக்கி, ‘நீவிர் உண்டது யாது’ என வினவார். அதுபோல் கீழோரையும் ‘நீவிர் உண்டது யாது’ என்று வினவா தொழிக.

ஐங்குரவரையும் பெரியோரையும் கண்டால், ‘நீங்கள் உண்டது என்ன?’ என்று கேட்கலாகாது; அதுபோல் கீழோரையும் கேட்கலாகாது.

எப்போதுங் கட்டிலின்மீது படுத்திருப்பவரது காலைக் கழுவார், அவருக்குப் பூப்புனையார், அவருக்கு மறந்தாவது சந்தனமும் பூசார், அருகில் நிற்றலுஞ் செய்யார்.

ஒருவர் கட்டிலின்மேற் படுத்திருந்தால் அப்போது அவருடைய காலைக் கழுவுதலும், அவருக்குப் பூச்சூடுதலும், சந்தனம் பூசுதலும், அவரருகில் நிற்றலும் ஆகா.

தாமொருவருக்குச் செய்த நன்றியின் பயனைச் சொல்லார், தமக்கு ஒருவரிட்ட உணவை இகழ்ந்துரையார், தாம் செய்த அறத்தையும் விரதத்தையும் புகழ்ந்துரையார், பெரியோருடைய ஒழுக்கத்தினை நினைத்து அவ்வாறு வாழ்துமென் றெண்ணுவோர்.

தாம் பிறர்க்குச் செய்த உதவியைத் தாமே பாராட்டுதலும், பிறர் இட்ட உணவை யிகழ்தலும், தம் அறச் செய்கையையும் நோன்பையும் தாமே புகழ்தலும் தகா.

தமக்குக் கிடைத்தற் கரியவற்றை விரும்பார், தம்மால் இழக்கப்பட்டனவற்றிற்கு வருந்தார், அகற்றற்கரிய இடுக்கண் உற்றுழியும் அதற்கு மனங்கலங்கார், உண்மையான அறிவினை யுடையவர்.

கிடைத்தற் கரியவற்றை விரும்புதலும், இழந்த பொருட்கு வருந்துதலும், அரிய துன்பத்திற்கு மனங் கலங்குதலும் பயனற்ற செயல்களாம்.

எப்போதும் தலையில் முடித்த பூவைத்தாம் முகவார், ஒருவர் மோந்த பூவையும் சூடார், பிராமணர் பசுவினைக் கொடுத்தாலும் அதனைப் பெரியோர் வாங்கார், புலையருக்கு எச்சிலைக் கொடார், (ஆதலால்) இவைகளை விடுக.

தலையில் முடித்த பூவை மோத்தலும், மோந்த பூவைச் சூடுதலும், பிராமணரிடம் பசுக்கொடை பெறலும் கூடா; புலையருக்கு எச்சில் கொடுத்தலும் ஆகாது.

காட்டினிடத்திலேனும் தம்மினும் மூத்தன உளவா யிருப்பதனால், அங்கும் உடலின்மீது போர்த்தலும், இறுமாந்திருத்தலும், இரு தாளையுஞ் சேர்த்து இணைத்திருத்தலும் பழிக்கு ஏதுவாகும்.

காட்டிலும் உடலின்மீது போர்த்தலும், செருக்குற்றிருத்தலும் கூட, அட்டணைக் காலிட்டிருத்தலும் ஆகா.

அறிவுடையோர் மேலான நற்கருமங்களைச் செய்யுமிடத்து எப்போதும் புலையரிடத்து நாட்கேட்டுச் செய்யார். ஒழுக்கக் கேடில்லாத அந்தணரிடத்து நாட்கேட்டே நற்கருமஞ் செய்க; அவர் வாய்ச்சொல் என்றும் பிழைபடுவதில்லை ஆதலால்.

நற்கருமம் செய்பவர் ஒழுக்கங் குன்றாத அந்தணர்வாய் நாட் கேட்டுச் செய்தலே நன்மையானது.

அறிஞர், சான்றோர் அவைக்களத்து யாதோர் அங்க சேட்டையுஞ் செய்யார், மாசுள்ளவற்றைத் திமிர்ந்து கொண்டு நடவார், எக்காலத்தும் கடுஞ்சொற்கள் உரையார், இருவராயிருந்து பேசுமிடத்தும் போகார், ஆதலால் இவற்றை ஒழிக.

பெரியோர் அவையில் யாதோர் அங்க சேட்டையுஞ் செய்தலாகாது; நடக்கும்பொழுது அழுக்கைத் தேய்த்து நடக்கலாகாது; கடுஞ்சொற் கூறலாகாது; இருவராகவிருந்து பேசுமிடத்திற்கும் போதலாகாது.

ஐயமற்ற அறிவுடையோர் தங்குரவர் முன்கையைச் சுட்டிக்காட்டிப் பேசார், காலின்மேல் எழுதார், கல்வி முதலியவற்றை யுடையாரோடு அவற்றை இல்லாரை மெய்யெனச் சாதித்து ஒப்பிட்டுக் கூறார், குரவர் கொடுப்பதை உட்கார்ந்திருந்து ஏற்கார்.

பெரியோர்க்கு முன் கையைச் சுட்டிக்காட்டிப் பேசுதலும், காலால் எழுதுதலும், அறிவொழுக்கங்கள் இல்லாரை அவற்றை யுடையார்க்கு ஒப்பாகச் சொல்லிச் சாதித்தலும், பெரியோர் கொடுப்பதை இருந்து வாங்குவதும் தகாத செயல்கள்.

தன் உடலும், மனைவியும், தன்னிடத்தில் அடைக்கலமாக ஒருவன் வைத்த பொருளும், தன்னுயிர்க்கு உதவியாக எண்ணிச் சேர்த்து வைத்த பொருளும் ஆகிய இந்நான்கினையும் பொன்னைப் போலக் காத்தொழுகுக. அவ்வாறு ஒழுகாவிடத்து மிகுந்த துன்பத்தைத் தரும்.

தன்னுடம்பு, தன்னுடைய மனைவி, அடைக்கலப் பொருள், தான் சேர்த்துவைத்த பொருள் இவற்றை அருமையாகப் பாதுகாக்க வேண்டும்.

ஆக்கமுள்ள எறும்பும், தூக்கணம் பறவையும், காக்கையும் என்று சொல்லப்பட்ட இவைகளின் செய்கை போல நல்லனவாகிய தங் கருமத்தைச் சோராமற் கொண்டு, கிடையாத காலத்திற்கு உதவக்கிடைத்த காலத்தில் உணவிற் குரியவற்றைச் சேர்த்தலும், குளிர் காற்று முதலியவற்றால் இடையூறு உறாதவகையாக இல்லம் இயற்றிக் கொள்ளுதலும், சுற்றத்தாரை விளித்துண்கையுமாகிய இக் கருமங்களைச் செய்பவர்க்கு இல்வாழ்க்கையின் ஒழுக்கம் எத்தன்மையானுஞ் சிறப்புறும்.

எறும்பு, தூக்கணங் குருவி, காக்கை இவற்றின் செய்கையைக் கடைப்பிடித்தவர்க்கு இல்வாழ்க்கையின் ஒழுக்கம் எவ்விதத்திலும் சிறக்கும்.

அறிஞர், பெரியார் முன் யாதேனும் ஒன்று உரைக்கவேண்டின், வணங்கி நின்றேனும் வாய்புதைத்து நின்றேனும் உரைப்பரேயன்றி, வேறு வகையின் உரையார்; ஆதலால் நீ அவர்முன் குற்றம் யாதும் உளவாகாமல் ஆராய்ந்து உரைப்பாயாக.

பெரியோரிடத்தி லொன்றைப் பேசும்பொழுது வணங்கி நின்றாவது வாய் பொத்தி நின்றாவது சொல்வதன்றி வேறுவிதமாகச் சொல்லலாகாது, அவர்முன் குற்றம் யாதும் உண்டாகாமல் ஆராய்ந்து கொள்க. ‘வழியவர்’ என்றும் பாடம். உரை என்பதற்கு நீ தோன்றா எழுவாய்.

சூதாடுமிடத்தும், பாம்புகள் நீங்காதுறையும் இடத்தும், அறியாமையை யுடையரல்லார் புகார்; புகுவராயின் பல துன்பங்களும் உளவாம்.

சூதாடுமிடத்திலும் பாம்புகள் மிகுந்த இடத்திலும் அறிவுடையோர் செல்லார்.

சோர்வற்ற அறிவை யுடையவர் ஆரவாரஞ் செய்யுமிடத்தும் மடைப்பள்ளியிலும் பெண்டிர்கள் உறையிடத்தும் நோக்கார், எடுத்துரையார், இல்லத்துட்புகார் : ஆதலால் நீ விடுக.

ஆரவாரஞ் செய்யுமிடத்தைப் பார்த்தலும், மடைப்பள்ளியில் எடுத்துரைத்தலும், பெண்டிர்கள் உறைகின்ற இடத்துப் புகுதலும் ஆகா.

அறியாத தேசத்தான், வறியோன் மூத்தோன், சிறுவன், உயிரிழந்தவன், பயமுற்றவன், உண்பவன், அரசர் தொழிலில் : தலைவைத்தவன், மணமகன் என்னும் இவ்வொன்பதின்மரும் உண்மையா யுரைக்குமிடத்து ஆசாரமிலிகளாவர்.

அறியாத தேசத்தான் முதலிய ஒன்பதின்மருக்கும் ஆசாரக் கட்டுப்பாடில்லை.

சிறப்புப் பாயிரம்
ஆர் எயில் மூன்றும் அழித்தான் அடி ஏத்தி,
ஆரிடத்துத் தான் அறிந்த மாத்திரையான், ஆசாரம்
யாரும் அறிய, அறன் ஆய மற்றவற்றை
ஆசாரக்கோவை எனத் தொகுத்தான் – தீராத்
திரு வாயில் ஆய, திறல் வண், கயத்தூர்ப்
பெருவாயின் முள்ளி என்பான்.

—————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –