ஆசாரக்கோவை–பதினெண்கீழ்க்கணக்கில் ஒன்றாக வைத்து எண்ணப்படும் இது ஒரு நீதி நூல்-

மனித வாழ்க்கைக்கு இன்றியமையாத ஆசாரங்களை அதாவது ஒழுக்கங்களை எடுத்துக்கூறும் ஒரு நூல் ஆசாரக்கோவை. பண்டைக்காலத் தமிழ் நூல்களின் தொகுப்புக்களில் ஒன்றான பதினெண்கீழ்க்கணக்கில் ஒன்றாக வைத்து எண்ணப்படும் இது ஒரு நீதி நூல். வண்கயத்தூரைச் சேர்ந்த பெருவாயின் முள்ளியார் என்னும் புலவர் இதனை எழுதினார்.

பல்வேறு வெண்பா வகைகளால் அமைந்த 100 பாடல்களால் ஆனது இந்நூல். ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு விடயம் தொடர்பான ஒழுக்கத்தை எடுத்து இயம்புகின்றது. இவ்வொழுக்கங்களின் பட்டியல்.

நன்றி அறிதல், பொறையுடைமை, இன் சொல்லோடு,
இன்னாத எவ் உயிர்க்கும் செய்யாமை, கல்வியோடு,
ஒப்புரவு ஆற்ற அறிதல், அறிவுடைமை,
நல் இனத்தாரோடு நட்டல், – இவை எட்டும்
சொல்லிய ஆசார வித்து. . . . .[001]

தனக்குப் பிறர் செய்த நன்றியறிதலும், பொறையும், இன்சொல்லும், எல்லா உயிர்க்கும் இன்னாதன செய்யாமையும், கல்வியும், ஒப்புரவை மிக வறிதலும், அறிவுடைமையும், நல்லினத்தாரோடு நட்டலும் என இவ்வெட்டு வகையும் நல்லோராற் சொல்லப்பட்ட ஆசாரங்கட்குக் காரணம்.

நன்றியறிதல் பொறையுடைமை முதலிய எட்டும் நல்லொழுக்கங்கட்குக் காரணம்.

பிறப்பு, நெடு வாழ்க்கை, செல்வம், வனப்பு,
நிலக் கிழமை, மீக்கூற்றம், கல்வி, நோய் இன்மை,
இலக்கணத்தால், இவ் வெட்டும் எய்துப – என்றும்
ஒழுக்கம் பிழையாதவர். . . . .[002]
நற்குடிப் பிறப்பு, நெடிய வாணாள், செல்வம், அழகுடைமை, நிலத்துக்குரிமை, சொற்செலவு, கல்வி, நோயின்மை என்று சொல்லப்பட்ட இவ்வெட்டினையும் இலக்கணத்தோடு நிரம்பப் பெறுவர் என்றும் ஆசாரம் தப்பாமல் ஓழுகுவார்.
ஒழுக்கந் தவறாதவர்கள் மேற்கூறிய எட்டு வகையையும் எய்துவர்.
தக்கிணை, வேள்வி, தவம், கல்வி, இந் நான்கும்
முப் பால் ஒழுக்கினால் காத்து உய்க்க! உய்யாக்கால்,
எப் பாலும் ஆகா கெடும். . . . .[003]
குரவர்க்குத் தக்கணை கொடுத்தலும், யாகம் பண்ணுதலும், தவஞ்செய்தலும், கல்வியும் என்ற இந்நான்கினையும் மூன்றும் மாறுபடாது ஒழுகுமாறு பாதுகாத்துச் செய்துவருக. மாறுபடுமாயின் எவ்வுலகத்தின் கண்ணும் தனக்குப் பயனாகாவாய் இந்நான்கும் கெடும்

தக்கணை முதலியவைகளைக் காலதாமதமின்றி ஒருமனதோடு செய்து முடிக்கவேண்டும்.

வைகறை யாமம் துயில் எழுந்து, தான் செய்யும்
நல் அறமும் ஒண் பொருளும் சிந்தித்து, வாய்வதின்
தந்தையும் தாயும் தொழுது எழுக!’ என்பதே
முந்தையோர் கண்ட முறை. . . . .[004]
வைகறையாகிய பின்யாமத்திலே துயிலெழுந்து தான் பிற்றைஞான்று செய்யும் நல்லறத்தையும் ஒள்ளிய பொருட்கு வருவாயாகிய காரியத்தையும் ஆராய்ந்து சிந்தித்து, பின்னைக் கங்குல் புலர்ந்தால் பழுதின்றித் தந்தையையும் தாயையும் தொழுதெழுந்து ஒரு காரியத்தைச் செய்யத் தொடங்குக என்று சொல்லப்படும் ஒழுக்கம், அறிவுடைய பழையார் சொல்லிய முறைமை.
மறுநாட் செய்யப்புகுங் காரியத்தை வைகறையிலெழுந்து சிந்தித்துப் பின் பெற்றோரை வணங்கி அச்செயலைத் தொடங்குக.
‘எச்சிலார், தீண்டார் – பசு, பார்ப்பார், தீ, தேவர்,
உச்சந் தலையோடு, இவை’ என்ப; யாவரும்
திட்பத்தால் தீண்டாப் பொருள். . . . .[005]
பசு, பார்ப்பார், தீ, தேவர், உச்சந்தலையோடே கூட இவையிற்றை எச்சிலையுடையராய் யாவரும் தீண்டார் என்று சொல்லுவர்; எல்லோரும் யாப்புற எச்சிலோடு தீண்டப்படாத பொருளும் இவை.

பசு முதலிய ஐந்து பொருள்களை எவரும் எச்சிலுடன் தீண்டலாகாது.

எச்சிலார், நோக்கார் – புலை, திங்கள், நாய், நாயிறு,
அத்தக வீழ்மீனோடு, இவ் ஐந்தும், தெற்றென,
நன்கு அறிவார், நாளும், விரைந்து. . . . .[006]
புலையும் திங்களும் நாயிறும் நாயும் அழகிய வீழ்மீனோடு சொல்லப்பட்ட ஐந்தினையும் எச்சிலை யுடையார் விரைந்து தெளிய நாளும் கண்ணால் நோக்கார் நன்கறிவார்.

நன்கறிவார் புலை முதலிய ஐந்தையும் கண்ணாற் காணார்.

எச்சில் பலவும் உள; மற்று அவற்றுள்,
இயக்கம் இரண்டும், இணைவிழைச்சு, வாயில்
விழைச்சு, இவை எச்சில், இந் நான்கு. . . . .[007]
எச்சில்கள் பல உள. அவற்றுள் மல மூத்திரங்கள் இயங்கிய இயக்கம் இரண்டொடு கூட இணைவிழைச்சும் வாயினால் வழங்கிய விழைச்சும் ஆகிய இவ்வெச்சில் நான்கினையும் பாதுகாக்க.

பலவகை எச்சில்களில் மலசலங் கழித்தல் புணர்ச்சி அதரபானம் இந்நான்கையும் காக்க.

நால் வகை எச்சிலும் நன்கு கடைப்பிடித்து,
ஓதார், உரையார், வளராரே – எஞ் ஞான்றும்
மேதைகள் ஆகுறுவார். . . . .[008]
கூறப்பட்ட இந்நான்கு எச்சிலையும்மிகக் கடைப்பிடித்து ஒன்றனையும் ஓதார், வாயாலொன்றைச் சொல்லார், கண் துயிலார் எஞ்ஞான்றும் மதியுடையவராக வேண்டுவோர்.
நால்வகை எச்சிலு முண்டானவிடத்து ஒன்றும் படித்தலாகாது, வாயா லொன்றையுஞ் சொல்லலாகாது, தூங்கலாகாது.
நாள் அந்தி, கோல் தின்று கண் கழீஇத், தெய்வத்தைத்
தான் அறியுமாற்றால் தொழுது எழுக! அல்கு அந்தி
நின்று தொழுதல் பழி. . . . .[009]
சிறு காலையின்கண் ஒரு கோலாலே பற்றுடைத்துக் கண்கழுவித் தான் வணங்குந் தெய்வத்தைத் தானறியும்நெறியால் தொழுக. மாலைப் பொழுதின்கண் தான் வணங்குந் தெய்வத்தை நின்று தொழுதல் குற்றமாம்; இருந்து தொழுக.
விடியற்காலத்தில் பல் துடைத்துச் சுத்தஞ்செய்து கடவுளை வழிபட்டுப் பின் ஒரு கருமஞ்செய்க. மாலைக் காலத்தில் வீற்றிருந்தே கடவுளை வழிபடுக.
தேவர் வழிபாடு, தீக் கனா, வாலாமை,
உண்டது கான்றல், மயிர் களைதல், ஊண் பொழுது,
வைகு துயிலோடு, இணைவிழைச்சு, கீழ் மக்கள்
மெய் உறல், ஏனை மயல் உறல், – ஈர்-ஐந்தும்
ஐயுறாது, ஆடுக, நீர்! . . . .[010]
தன்னால் வணங்கப்படுந் தேவரை வழிபடுதற்கண்ணும், தீக்கனாக் கண்டவிடத்தும், தூய்மையின்மை யுண்டானவிடத்தும், உண்டதனைக் கான்றவிடத்தும், மயிர்களைந்தவிடத்தும், உண்ணும்பொழுதும், பொழுதேற உறங்கிய விடத்தும், இணைவிழைச்சு உண்டாயின விடத்தும், கீழ்மக்கள் உடம்பு தீண்டியவிடத்தும், மூத்திரபுரீடங்கள் கான்றவிடத்தும் என இப்பத்திடத்தும் ஐயுறாதே நீராடுக.

கடவுள் வழிபாடு முதலிய பத்துச் சமயங்களிலும் இன்றியமையாது நீராடல் வேண்டும்.

உடுத்து அலால் நீர் ஆடார்; ஒன்று உடுத்து உண்ணார்;
உடுத்த ஆடை நீருள் பிழியார்; விழுத்தக்கார்
ஒன்று உடுத்து என்றும் அவை புகார்; – என்பதே
முந்தையோர் கண்ட முறை. . . . .[011]
ஒன்றனை யுடுத்தல்லது நீராடார், இரண்டு உடுத்தன்றி ஒன்றுடுத்து உண்ணார், உடுத்த ஆடையை நீரின்கண்பிழியார், சீர்மை தக்கார் ஓராடையையுடுத்து அவையின் கண்செல்லார் என்று சொல்லப்படுவது பழமையோர் கண்ட முறைமை.

நீராடல் உண்ணல் அவை புகல் ஆகிய காலங்களில் உடையுடுத்த வேண்டிய முறையில் உடுத்துக.

தலை உரைத்த எண்ணெயால் எவ் உறுப்பும் தீண்டார்;
பிறர் உடுத்த மாசுணியும் தீண்டார்; செருப்பு,
குறை எனினும், கொள்ளார், இரந்து. . . . .[012]
தலையின்கண் தேய்த்த எண்ணெயால் யாதோர் உறுப்புந் தீண்டார், பிறர் உடுத்த அழுக்காடையும் தீண்டார், பிறர் தொட்ட செருப்பும், பிறர் இரந்து தமக்குக் காரியமென்று வேண்டிக் கொள்ளினுங் கொள்ளார்.
தலையிற்றேய்த்த எண்ணெயை வழித்து மற்ற உறுப்புக்களிற் பூசுதல், அடுத்தவராடையைத் தீண்டுதல் முதலியன செய்தலாகாது.
நீருள் நிழல் புரிந்து நோக்கார்; நிலம் இரா
கீறார்; இரா மரமும் சேரார்; இடர் எனினும்,
நீர் தொடாது, எண்ணெய் உரையார்; உரைத்த பின்,
நீர் தொடார், நோக்கார், புலை. . . . .[013]
நீரின்கண் தம் நிழலை விரும்பி நோக்கார். நிலத்தை இருந்து கீறார், இரவின்கண் ஒரு மரத்தின் கண்ணும் சேரார், நோய் கொண்டு இடர்ப்பட்டாராயினும் நீரைத் தொடாதே எண்ணெய் உடம்பின்கண் தேயார், அவ்வெண்ணெயைத் தேய்த்தபின் தம் உடம்பின்மேல் நீரைத் தெளித்துக் கொள்ளாது புலையைத் தம் கண்ணால் நோக்கார்.

தண்ணீரில் நிழல் பார்த்தல், சும்மா தரையைக் கீறுதல் முதலியன ஆகா.

நீராடும் போழ்தில், நெறிப் பட்டார், எஞ் ஞான்றும்,
நீந்தார்; உமியார்; திளையார்; விளையாடார்;
காய்ந்தது எனினும், தலை ஒழிந்து ஆடாரே,
ஆய்ந்த அறிவினவர். . . . .[014]
ஒரு முறைப்பட்டார் நீராடும் போழ்தின் கண் ஒருநாளும் நீந்தார். நீரின்கண் உமியார், நீரைக் குடைந்து திளையார், விளையாடுவதுஞ் செய்யார். எண்ணெய் பெறாது தலை காயந்ததெனினும் தலையொழிய நீராடார் ஆய்ந்த அறிவினார்.
குள முதலியவற்றில் நீராடுங்காலத்து நீந்துதல் எச்சிலுமிழ்தல் முதலிய அருவருக்கத்தக்க செயல்களைச் செய்யலாகாது. கழுத்துவரை குளிக்கலாகாது.
ஐம் பூதம், பார்ப்பார், பசு, திங்கள், ஞாயிறு,
தம் பூதம் எண்ணாது இகழ்வானேல், தம் மெய்க்கண்
ஐம் பூதம் அன்றே கெடும். . . . .[015]
நிலம் முதலாயின ஐம்பூதங்களையும் பார்ப்பாரையும் பசுக்களையும் திங்களையும் ஞாயிற்றையும் தன் உடம்பு போலக் கருதிப் போற்றா திகழ்வானாயின் தன் உடம்பின்கண் உள்ள ஐந்து பூதத்தையு முடைய தெய்வங்கள் அன்றே கெட்டகன்றுபோம்.
பஞ்ச பூதம் முதலியவைகளை இகழ்வானாயின் ஒருவன் உடம்பின்கணுள்ள ஐந்துபூதத்தையுடைய தெய்வங்கள் அன்றே நீங்கும்.
‘அரசன், உவாத்தியான், தாய், தந்தை, தம்முன்,
நிகர் இல் குரவர் இவ் ஐவர்; இவர் இவரைத்
தேவரைப் போலத் தொழுது எழுக!’ என்பதே
யாவரும் கண்ட நெறி. . . . .[016]
அரசனும் உவாத்தியும் தாயும் தந்தையும் தனக்கு மூத்தோனும் என இவர்கள் தமக்கு நிகரில்லாத குரவாவார். இவர்களைத் தேவரைப்போலத் தொழுதெழுக என்று சொல்லப்படுவது எல்லா நல்லாரும் உரைத்துச் சொல்லிய நெறி.

அரசன் முதலிய ஐங்குரவரையும் தேவரைப் போலத் தொழுது எழுக.

குரவர் உரையிகந்து செய்யார்; விரதம்
குறையுடையார் தீர மறவார்; நிறையுவா
மெல் கோலும் தின்னார்; மரம் குறையார்’ என்பதே
நல் அறிவாளர் துணிவு. . . . .[017]
முன்பு கூறப்பட்ட குரவர்கள் சொல்லிய சொல்லைக் கடந்து ஒன்றினையுஞ் செய்யார், முடியாது கிடந்த குறை விரதமுடையார் மிகவதனை மறந்தொழுகார், மதி நிறைந்த உவாவின் கண் தம் பல் துடைப்பதும் செய்யார், அவ்வுவாவின் கண் மரங்களையுங் குறையார் என்று சொல்லப்படுவது நல்லறிவாளர் தொழில்.
குரவர் சொற்கடந்து செய்தல், நிறையுவாவில் பல் துடைத்தல், மரங்குறைத்தல் முதலியவற்றைச் செய்யார் நல்லறிவாளர்.
நீராடிக் கால்கழுவி வாய்பூசி மண்டலம்செய்து,
உண்டாரே உண்டார் எனப்படுவார்; அல்லாதார்
உண்டார்போல் வாய்பூசிச் செல்வர்; அது எடுத்துக்
கொண்டார் அரக்கர், குறித்து. . . . .[018]
குளித்துக் கால்கழுவி வாய்பூசி உண்ணுமிடம் மண்டலஞ் செய்து உண்டார் உண்டாராவர். இப்படிச் செய்யாமல் உண்டவர்கள் உண்டாரைப்போல வாய்பூசிப் போவார் ஊனை அரக்கர் எடுத்துக் கொண்டார்.
உண்கலத்தினின்றும் உணவை யெடுத்துண்ணு முன் நீராடல் கால் கழுவல் முதலியன செய்துண்பதே, உண்பதாம்.
காலின் நீர் நீங்காமை உண்டிடுக! பள்ளியும்
ஈரம் புலராமை எறற்க!’ என்பதே
பேர் அறிவாளர் துணிவு. . . . .[019]
கால் கழுவி நீர் உலர்வதற்கு முன்னே உண்ணத் தொடங்குக, பாயலின் கண் கால் கழுவிய ஈரம் புலர்ந்தாலன்றி ஏறாதொழிக என்று சொல்லப்படுவது பேரறிவாளர் துணிவு.
கால் கழுவின ஈரங் காய்வதன் முன் உணவு கொள்க, கால் கழுவின ஈரங் காய்ந்தபின்னே பள்ளி ஏறுக.
உண்ணுங்கால் நோக்கும் திசை கிழக்குக்கண் அமர்ந்து,
தூங்கான், துளங்காமை, நன்கு இரீஇ, யாண்டும்
பிறிதி யாதும் நோக்கான், உரையான், தொழுது கொண்டு,
உண்க, உகாஅமை நன்கு! . . . .[020]
உண்ணும்போது நோக்கப்படும் திசை கீழ்த்திசையாகக் கண் பொருந்தி, தூங்காது புடைபெயராது நன்றாக இருந்து, எவ்விடத்தும் பிறிதொன்றினையும் நினையாது, நோக்காது, சொல்லாது, உண்கின்ற உணவினைத் தொழுது சிந்தாமல் உண்க.
உணவுட்கொள்வோன் கிழக்கு நோக்கி ஆடாமல் அசையாமல் உணவிலே கருத்துடையனா யுண்க. கிழக்கு மங்கலத் திசையாதலின் கிழக்கு நோக்கி எனப்பட்டது.
விருந்தினர், மூத்தோர், பசு, சிறை, பிள்ளை,
இவர்க்கு ஊண் கொடுத்து அல்லால் உண்ணாரே – என்றும்
ஒழுக்கம் பிழையாதவர். . . . .[021]
விருந்தினரும் மிக மூத்தோரும் பசுக்களும் சிறைகளும் பிள்ளைகளும் என்று சொல்லப்பட்ட இவர்கட்கு உணவு கொடுத்தல்லது உண்ணார் என்றும் ஒழுக்கம் பிழையாதார்.

விருந்தினர் முதலியவர்கட்கு உணவு கொடாமல் தாம் முன்னர் உண்ணலாகாது.

ஒழிந்த திசையும் வழிமுறையான் நல்ல;
முகட்டு வழி ஊண் புகழ்ந்தார்; இகழ்ந்தார்,
முகட்டு வழி கட்டில் பாடு. . . . .[022]
முன் சொன்ன கீழைத்திசையும், அக்கீழைத்திசைக்கு இடையூறு உளதாயின் பின்னை நோக்கி யுண்டற்கு மற்றைத்திசைகளும் நல்லவாம். உச்சிப்பொழு துண்டலை ஆமெனப் புகழ்ந்தார்கள். முகட்டினேர் கட்டிலிட்டுக் கிடக்கலாகாதென்று பழித்தார்கள் நல்லோர்.
கிழக்கு நோக்கி யிருந்துண்ண இயலாதாயின் வேறுதிசை நோக்கியிருந்து முண்ணலாம். வாயிற்படிக்கு நேர் கட்டிலிட்டுப் படுக்கலாகாது.
கிடந்து உண்ணார்; நின்று உண்ணார்; வெள்ளிடையும் உண்ணார்;
சிறந்து மிக உண்ணார்; கட்டில்மேல் உண்ணார்;
இறந்து, ஒன்றும் தின்னற்க, நின்று! . . . .[023]
கிடந்துண்ணல் ஆகாது, நின்றுண்ணல் ஆகாது, வெள்ளிடையின் கண்ணிருந்து உண்ணல் ஆகாது, விரும்பி மிகவும் உண்ணல் ஆகாது, நெறியைக் கடந்து யாதொன்றும் நின்றுகொண்டு தின்னலும் ஆகாது.

படுத்தோ நின்றோ வெளியிடையிலிருந்தோ உண்ணலாகாது, கட்டின்மேலிருந்துந் தின்னலாகாது.

முன் துவ்வார்; முன் எழார்; மிக்கு உறார்; ஊணின்கண்
என் பெறினும் ஆற்ற வலம் இரார்; – தம்மின்
பெரியார் தம்பால் இருந்தக்கால். . . . .[024]
தம்மிற் பெரியார் தம் பந்தியிலிருந்து, உண்ணுமிடத்து அப்பெரியார் உண்பதற்கு முன்னே தாம் உண்ணார், முந்துற எழுந்திரார், அவர்களை நெருங்கியிரார், உண்ணுமிடத்து மிக எல்லாச் செல்லமும் பெறுவதா யிருப்பினும் வலமிருந்து உண்ணற்க.
பெரியோர்களுட னிருந்துண்ணுங் காலத்து அவர்கட்கு முன் உண்ணலும் எழுதலும் முதலியன ஆகா. மிக்குறார் என்பது ‘மீக்கூறார் எனச் சொற்சிதைவாக்கி அதிகம் பேசார்’ என்பதுமாம்.
—————

கைக்குங் கறியெல்லாம் முடிவின்கண்ணாகவும், தித்திக்குங் கறியெல்லாம் முதலாகவும், ஒழிந்த சுவைகளுள்ள கறிகளெல்லாம் இடையாகவும் உண்க; புகழும் வகையான்.

உண்ணும்போது இனிப்பான கறிகளை முதலிலும், கசப்பான கறிகளை இறுதியிலும் ஒழிந்த சுவைக்கறிகளை இடையிலும் உண்க.

தம்மின் மூத்தார் உண்ணும்பொழுது, அம்மூத்தாரைத் தம் பக்கத்து வைத்து உண்ணார், முறைமையான் உண்ணுங் கலங்கள் எல்லாவற்றுள்ளும் சிறிய கலங்களைக் கடைப்பிடித்துத் தனக்குக் கைக்கொண்டு காதல் பிறழாத வகையும், ஒழுக்கத்தின் நீங்காத வகையும் உண்டு, வரைவோடு கூட உண்டமைந்தால் உள்ள கலங்களை முறைப்படி நீக்குக.

தம்மின் முதியாரைத் தம்பக்கம் வைத்துண்ணாமலும் உண்கலங்களிற் சிறியவற்றைப் பற்றி அன்பும்ஒழுக்கமுங் குன்றாமலும் உண்டு பின் உண்கலங்களை நீக்குக.

வாயில் புக்க நீர் உட்புகாமை மிகவும் உமிழ்ந்து, எச்சில் அறும்படி வாயையும் அடியையும் மிகத் துடைத்து, அழகுடைத்தாக முக்காற் குடித்துத் துடைத்து, முகத்தின்கண் உள்ள உறுப்புக்களை அவற்றுக்குப் பொருந்தும் வகையால் விரல்களை உறுத்தி, அப்பெற்றியானே பூசும் பூச்சு நெறிமிக்கவர் கண்ட நெறி.

உண்டபின் வாயை நன்கு கொப்புளித்து, எச்சிலறச் சுத்தி செய்து முக்கால் குடிக்க.

இரு கையால் முகந்தும் ஏற்றும் தண்ணீர் குடியார், குரவர் கொடுப்பனவற்றை ஒரு கையால் வாங்கிக் கொள்ளார்; அவருக்குத் தாம் ஒரு கையால் கொடார், உடம்பினை மடுத்து இரு கையால் சொறியார்.

தண்ணீரை இரு கையாலுங் குடிக்கலாகாது. பெரியோரிடம் ஒன்றைப் பெறும்பொழுதும் ஒன்றைக் கொடுக்கும் பொழுதும் இரு கையாலேயே வாங்கல் கொடுக்கல் செய்யவேண்டும். உடம்பை இரு கைகளாலும் சொறியலாகாது.

மாலைப்பொழுதின்கண் கிடத்தலும், வழி நடத்தலும் செய்யார்; ஒருவரைச் சீறுவதுஞ் செய்யார்; அந்திப் பொழுது விளக்கு இகழாது ஏற்றுவர்; மாலைப்பொழுதின்கண் உண்ணாது அல்கலின்கண் உண்டு, புறம்போகாது ஓரிடத்தின் கண்ணே அடங்குதல் நெறி.

மாலைப்பொழுதில் படுத்தல் வழிநடத்தல் செய்யாதும், உண்ணாமலும் எவரையும் சீறாதும், விளக்ககேற்றி இரவானது முண்டு அடங்கியிருத்தல் முறை.

கிடக்கும்பொழுது தெய்வத்தைக் கைகூப்பித் தொழுது வடதிசையின் கண்ணும் கோணத்திசையின் கண்ணும் தலைவையாது, மேற்போர்ப்ப தொன்றினை உடம்பின் கண் கொடுத்துக் கிடத்தல் நெறி.

படுக்கும்பொழுது கடவுளைத் தொழுது, வடக்கும் கோணத்திசையும் தலைவையாது, போர்த்துப்படுத்தல் முறை.

இருதேவர் நடுவும் பார்ப்பார் பலர் நடுவும் ஊடறுத்துப்போகார்; தும்மினபொழுது மிக்கார் வழுத்தினால் தொழுதெழுக; தம்மோடொப்பார்க்கு வழிபோம் பொழுது உடனே நேர் செல்க, தம்முள்ளம் உவந்து.

இரண்டு தெய்வங்களுக்கும் பார்ப்பாருக்கும் இடையில் செல்லக்கூடாது. தும்மினபொழுது பெரியோர் வாழ்த்தினால் அவரைத் தொழுக. ஒத்த நண்பன் எதிர் வருவானானால் உடன் செல்க.

புல், பைங்கூழ், ஆப்பி, சுடலை, வழி, தீர்த்தம்,
தேவகுலம், நிழல், ஆன் நிலை, வெண்பலி, என்று
ஈர் – ஐந்தின்கண்ணும், உமிழ்வோடு இரு புலனும்
சோரார் – உணர்வு உடையார். . . . .[032]

புல்லின் கண்ணும், விளைநிலத்தின் கண்ணும் ஆப்பியின் கண்ணும், சுடலையின் கண்ணும், வழியின் கண்ணும், தீர்த்தத்தின் கண்ணும். தேவர் கோட்டத்தின் கண்ணும். நிழலின் கண்ணும்; ஆநிரை நிற்கும் இடத்தின் கண்ணும் சாம்பலின் கண்ணும் என ஈரைந்தின் கண்ணும் உமிழ் நீரையும் மூத்திர புரீடங்களையும் சோரார் உணர்வுடையார்.

புல் முளைத்திருக்குமிடம் வயலிடம் முதலிய இடங்களை யுமிழ்ந்தும் மலசலங் கழித்தும் அசுத்தம் செய்தலாகாது.

பகல் தெற்கு நோக்கியும் இராவடக்கு நோக்கியும் இருந்து மூத்திர புரீடங்களைச் சேரார், பகற் பொழுதின்கண் தீயினுள் நீர் பெய்யார்.

மலசலங் கழிப்பவர் பகலில் தெற்கு நோக்கியும், இரவில் வடக்கு நோக்கியும் இருந்து கழித்தலாகாது.

திசை பத்தினையும் மறைத்தாராக மனத்தாற் கருதிப் பத்துத் திசையின் கண்ணும் அன்றியிலே வேறோரிடத்தின் கண்ணே சோர்கின்றாராகக் கருதியல்லது உமிழ் நீரையும் மூத்திர புரீடங்களையும் இந்திர பதவியைப் பெறுவதாயிருப்பினும் சோரார் நூன்முறையான் ஒழுகுதும் என்பார்.

திசை பத்தையும் மறைத்ததாகப் பாவித்து அந்தரத்திற் செய்வதாக நினைத்து எச்சிலுமிழ்தலும் மலசலங் கழித்தலும் செய்க.

நீரகத்தின் கண்ணின்றும் நடவாநின்றும் தம் வாயைப் பூசார், ஓடுநீர் பெற்றிலராயின் நிலை நீருள்ளும் அப்பெற்றி பூசார். அந்நீர் அருந்தும்போது பூசும்போதும் மனத்தான் வரையறுத்துக் கொண்டல்லது பூசார், அதுவுஞ் செய்வது கலத்தான் முகந்து சிலர் பெய்யப் பூச முடியாதாயின்.

தண்ணீரில் நின்றுகொண்டும் நடந்துகொண்டும் வாயலம்பாது ஒரு கலத்தில் மொண்டே வாயலம்ப வேண்டும்.

ஒருவருக்கும் விளக்கிற்கும் நடுவூடறுத்துப் போகார், சுவரின்மேல் உமியார், தமக்குக் குளிரான் இடர் வரினும் பிறருடுத்த மாசுணியைத் தங்கீழ்ப்படுப்பதும் மேற் போர்ப்பதும் செய்துகொள்ளார், படை வந்ததாயினும் தாமுடுத்த ஆடைக் காற்றுப் பிறர்மேல் உறைப்பப் போகார்; பலர் நடுவண் நின்று உடையை உதறார்; எஞ்ஞான்றும் கடப்பாட்டை அறிந்த அறிவுடையார்.

விளக்குக்கும் ஒருவர்க்கு மூடே செல்லுதல், சுவரில் உமிழ்தல், பிறரழுக்குடை யணிதல், அடுத்தவர்மேல் தம் ஆடைக் காற்றுப்படச் செல்லுதல், பலரிடைத் தம் ஆடையை உதறுதல் ஆகியவற்றைச் செய்தலாகாது.

பிறர் மனையாளும், கள்ளும், களவும், சூதும், கொலையும் என்றிவ் வைந்தினையும், அறனறிந்தார் செய்வோமென்று கருதார். கருதுவாராயின் திறப்பாடிலரென்று பலரால் இழக்கப் படுதலுமன்றியே, நரகத்தின்கண் செல்லும் நெறியில் இவை செலுத்துதலான்.

பிறர்மனை நயத்தல். கள்ளுண்ணல், களவு செய்தல், கொலைசெய்தல், சூதாடல் இவை இகழ்ச்சிக்கும் நரகத்துக்கும் காரணமாதலால் இவைகளை மனத்திலும் நினைத்தல் ஆகாது.

பொய்யும் குறளையும் பிறர் பொருளை வௌவுதலும் பிறராக்கத்தின்கண் பொறாமையும் என இவை நான்கினையும் ஐயந்தீர்ந்த அறிவினையுடையார் நினையார்; நினைப்பாராயின் பிச்சை புகுவித்து நரகத்தின் கண்ணேயும் புகுவிக்கும்: தெய்வமும் கெடுத்துவிடும்.

பொய் குறளை பேசுதலும், பொறாமை யுறுதலும், பிறர் பொருள் வௌவுதலும் ஆகிய இவை வறுமையுறுவித்துத் தெய்வத்தின் கோபத்துக்கும் ஆளாக்கும்.

தமக்கென் றுலை யேற்றார்; பிறருக்கு உழைப்பதற்காக அன்றித் தமக்காக உணவும் உட்கொள்ளார்; அட்டிலின்கண் எச்சிற்படுத்தார்; மனையுறை தெய்வங்கட்குப் பலியூட்டினமை அறிந்த பின்னைத் தாம் உண்பர்.

பெரியோர் தந்நலம் கருதிச் செயல் செய்யார்.

புதிய சுற்றத்தார் தம்மொடு சேர்ந்து உண்ணுமிடத்துக் குரவராயினார் உயர்ந்ததன் மேலிரார். இளங்கிளைஞர் மனமழிவனவற்றையும் செய்யார், முறைமை கடந்து மற்றவ் விளங்கிளைஞர் இன்னாத செய்த காலத்தும்.

புதிய உறவினர்கள் உண்ணுமிடத்துப் பெரியோர் உயர்ந்த பீடத்திலிருத்தலும், அவர்கள் மனம் நோகும்படி ஏதாவது செய்தலும் ஆகா.

ஒருவன் தன் கண்ணிற்கு மருந்து எழுதிய கோல்கொண்டு அவ்வெச்சில் கழியாது தங்கண்ணிற்கு அம்மருந்து ஊட்டார், தங் காலோடு கால் தேயார், புண்ணிய மாய பொருள்களைத் தம் தலையின் கண்ணும் மற்றை உறுப்பின் கண்ணும் உறுத்துக; நுண்ணிய நூலை யுணர்வார்.

ஒருவர் கண்ணெழுதிய கோலைச் சுத்தம் செய்யாமல் பிறர் கண்ணிற் செலுத்தக்கூடாது. காலொடு கால் தேய்க்கலாகாது. புனிதமான பொருள் கிடைத்தால் அதனைத் தலையிலும் கண் முதலிய உறுப்புக்களிலும் ஒற்றிக்கொள்க.

தம் மனைவியர்க்குப் பூப்பு நிகழ்ந்தால், மெய்யுறலாகாத நாள் மூன்றின் கண்ணும் அவரை நோக்கார், நீராடிய பின்பு பன்னிரண்டு நாளும் அகலாதொழிக என்று சொல்லப்படுவது பேரறிவாளர் துணிவு.

மனைவியர்க்கு மாதப்பூப்பு நிகழ்ந்தால் மூன்று நாளளவும், அவர் முகத்தைக் கணவன் காணலாகாது. மூன்று நாளுங்கழிந்து தலைமுழுகினபின் பன்னிரண்டு நாளளவும் அவரைப் பிரிதலாகாது.

உச்சியம்பொழுதும், நடுக் கங்குலும், மாலையுங் காலையும், மிக்க இருதேவர் நாளாகிய ஆதிரையும் ஓணமும், உவாவும், அட்டமியும், தாம் பிறந்த நாளும் என இந்நாட்களின்கண் தம் மனைவியரோடு உடனுறைதலின்கண் நல்லோர் உடன்படார்.

நடுப்பகலிலும் நள்ளிரவிலும் மாலையிலுங் காலையிலும் திருவாதிரையிலும் திருவோணத்திலும், அமாவாசை பௌர்ணமியிலும் அட்டமியிலும் பிறந்த நாளிலும் கலவியாகாது.

நாழியை மணைமேல் இருத்தார். மணையைக் கவிழ்த்து வையார், புத்தாடையைத் தலைக் கடையின்கண் விரியார், பலருங் புகுதுங் கடைத் தலைக்கண் ஆராயாது கட்டிற்படார்; தம்மை அறியாதவர் முன்பு நில்லாது விடுக.

அளக்கும் படியை மணைமேல் வைத்தலும், மணையைக் கவிழ்த்து வைத்தலும், புத்தாடையைத் தலைக் கடையில் விரித்தலும், தலைக் கடையிற் கட்டிலிட்டுப் படுத்தலும் ஆகா. தம்மை யறியாதா ரெதிரில் நிற்காதிரு.

துரால் சீக்குந் துடைப்பமும், துகளோடு கூடிய துராலும், பூவின் புறவிதழும், பழங் கருங்கலங்களும், கிழிந்த கட்டிலும் என இவ்வைந்தும் மணப்பந்தரின் கீழ்ப்பரப்பா தொழிக.

திருமணப் பந்தலின் கீழ்த் துடைப்பம், செத்தை, பூவின் புறவிதழ், பழங் கரிப்பானை. கிழிந்த கட்டில் என்னுமிவைகளைப் பரப்பலாகாது.

சிறு காலையே துயிலெழுந்து, இல்லத்துள்ள துராலைக் களைந்து, கருங்கலங்களைக் கழுவி, தம் மனை ஆப்பி நீராலே எங்குந் தெளித்து, நீர்ச்சாலையும் கரகத்தையும் நிறைய மலரணிந்து, இல்லத்துப் பொலியும்படி அடுப்பினுள் தீ யுண்டாக்குக; நல்ல செல்வத்தை யுறல் வேண்டுவோர்.

நல்ல செல்வத்தை யடைய வேண்டுவோர் வைகறையில் எழுந்து வீட்டை விளக்கிக் கலங்களைக் கழுவி வீடு முழுவதும் சாணநீர் தெளித்து, நீர்ச்சால், கரகங்களை மலரணிந்து, பின்பு அடுப்பினுள் தீ மூட்டுதல் வேண்டும்.

அட்டமி நாளும் உவாநாளும், பதினான்காநாளும், தாமுறையும் பூமி காக்கும் அரசர்க்கு உறுகண்ணுள்ள நாளும், தமக்குத் தூய்மை போதாத நாளும் என இந்நாட்கள் பார்ப்பார் வேதமோதாத நாட்கள்.

அட்டமி அமாவாசை பௌர்ணமி சதுர்த்தசி அரசர்க் குறுகண்வேளை பூகம்பம் இடிமுழக்கம் தூய்மையின்மை என்னு மிவை வேதமோதலாகாக நாட்கள்.

தான் செய்யும் கலியாண நாளின் கண்ணும், தேவர்க்குரிய சிறப்புநாளின் கண்ணும், பிதிர்கட்குச் சிறப்புச்செய்யும் நாளின் கண்ணும், விழாநாளின் கண்ணும் யாகம் செய்யும் நாளின் கண்ணும் இகழாதே கொடையறஞ் செய்க; விருந்தினர்க்குஞ் சோறிடுக.

கலியாண நாள் முதலிய ஐவகை நாட்களிலும் தானம் செய்வதுடன் விருந்தினர்க்குஞ் சோறிடுக.

உடையும் நடையும் சொற்சோர்வும் வைதலும் என இந்நான்கும், தாம் அரசனால் சிறப்புப் பெற்றமைக்கும், தன் ஆண்மைக்கும், தம் கல்விக்கும், குடிப்பிறப்புக்கும் தக்கனவாக அமையும் செயல்களாம்.

உடை நடை முதலியவைகள் தத்தம் நிலைமை கல்வி முதலியவற்றுக்குத் தகுந்தபடி அமையும்.

பலர் நடுவண் இருந்து பிறரைப் பழித்துரையார், இழித்துரையார் பலர் நடுவண் உறங்கார், தமக்குச் செய்யப் பொருந்தாதவற்றைப் பிறர்க்குச் செய்கிறோமென்று உடன்பட்டுச் செய்யாதொழியார், தகுதியின்றி வறியாரை இகழ்ந்து முறைமை கடந்து உரையார், பிறரால் வெல்லுதற்கரிய கேள்வியார் தவறியும்.

கல்வி கேள்வியுடையர் பலர் நடுவிலிருந்து பழித்திழித்துப் பேசார், உறங்கார், ஒன்றைச் செய்வதாக ஒப்பிப் பின் செய்யாதிரார், ஏழைகளை யிகழ்ந்துரையார்.

மின் னொளியையும், வீழ் மீனையும், வேசையர்கள் கோலத்தையும் தமது விளக்கத்தை வேண்டுவார் நோக்கார், பகற்கிழவோனுடைய காலை யொளியையும் மாலை யொளியையும் அப்பெற்றியே நோக்கார்.

தம் கண்ணின் ஒளியும், புகழும் கெடாதிருக்க வேண்டுவோர் மின்னல் எரிமீன் வேசையரின்கோலம் காலை மாலை வெயில் இவைகளை யுற்றுப் பார்த்தல் கூடாது.

வஞ்சனையுரையும், பயன்படாத உரையும், வாய் காவாது உரைக்கும் உரையும், பிறரைப் பழித்துரைக்கும் உரையும், இவை யாவும் சொல்லார், என்றுந் தளராத உள்ளத்தவர்.

வஞ்சனைமொழி பயனில் சொல் முதலியவற்றை ஒழித்தல் வேண்டும்.

தெறித்தலும் கல்லெறிதலும், வீளைசெய்தலும், தூரப்போகின்றா னொருவனை அழைத்தலும், ஒருவன் செய்கையும் சொல்லும் முதலாயினவற்றைத் தாமும் அவ்வகை இகழ்ந்து செய்து காட்டலும், வேகமுடையனாதலும், ஒளித்தலும், கையொடு கை புடைத்தலும், பிறர்க்கு வெளிப்படக் கண்ணிடுதல் முதலாயின செய்து தன்னுறுப்பைச் செகுத்தலும். இப்பெற்றிப் பட்டவையெல்லாம் பயின்று செய்யார் வழிப்பட்டார்.

ஒரு பொருளை விசிறி யெறிதல் கல்லெறிதல் முதலிய தீய பழக்கங்களைச் செய்யலாகாது.

முறுவலோடு கூடிய இனிதுரையும், கால் கழுவ நீரும், இருக்க மணையும், கிடக்கப் பாயும், கிடக்கும் இடமும் என இவ்வைந்தும் என்று சொல்லுப, தம்மிடத்துச் சென்றார்க்கு உணவுடனே செய்யும் சிறப்புக்கள்.

தம் வீட்டுக்கு வரும் விருந்ததினர்க்கு உணவளித்தலுடன் இன்முகம் இன்சொல்லுடன், கானீர் முதலியன உதவியும் சிறப்பிக்க வேண்டும்.

வெகுண்ட பகை முனையின் கண்ணும், கள்ளால் களித்தாடுமிடத்தும், பொதுமகளிர் சேரிக்கண்ணும், குணங்களை யாராய்ந்து தம்மை விரும்பிக்கொண்டார் கோட்பாடு விட்டவிடத்தும், பலர் தொகும் நீர்க்கரையிடத்தும் நெடிதாக நிற்கையை ஒப்பில்லாத அறிவினையுடையார் விரும்பார்.

போர்க்களம், கட்குடித்தாடுமிடம், பரத்தையர் சேரி முதலிய இடங்களில் தங்கியிருப்பது சரியன்று.

முற்றிய புல்லின் கண்ணும், முற்றிய காட்டின் கண்ணும் சேர்ந்திரார்; அவற்றைத் தீக்கு உணவாக ஊட்டார்; மழை பெய்யாநிற்கக் காலைப்பரப்பி ஓடார்; தேறமுடியாத காட்டுள் தமியராய்ப் போகார்; மழை குறைந்து பெய்யா தொழிதலால் வறுமை மிகப் பெரிதாயிற்றாயினும், தங்குடி யொழுக்கத்தை நீங்கிய தொழில்களைச் செய்யார்.

உலர்ந்த புற்றரையிலும் முதிர்ந்த காட்டிலும் தங்குதலும், அவற்றைத் தீயிட்டுக் கொளுத்துதலும், மழை பெய்கையில் காலைப் பரப்பி யோடுதலும்; வழிதுறை தெரியாத காட்டில் தனியாகப் போதலும்; வறுமை வந்த காலத்து நல்லொழுக்கந் தவறுதலும் தகாத காரியங்களாம்.

குடியில்லாத மனையகத்தும், தேவாலயங்களுக்குள்ளும் சுடுகாட்டுள்ளும், ஊரில்லாத இடத்து உளதாய தனி முதுமரத்தின் கண்ணும், அறிவின்றித் துணையோடல்லது தாமே போகார், பகலுறங்கார் நோயின்மை வேண்டுவோர்.

பாழ் வீடு, சுடுகாடு; தனித்த பாழ் மரம் இவற்றினிடத்துத் தனித்துச் சேராமலும் பகலில் தூங்காமலுமிருப்பது, நோயில்லாதிருப்பதற்கு ஏது.

பிறர் எழுந்து போகத் தொடங்கின பொழுது அவரைப் பின்னே நின்று அழையார். அப்பொழுது தும்முவதுஞ் செய்யார். மறந்தும் எங்குப் போகிறீர் என்று சொல்லார். முன்னே புக்கு எதிர்முகமாக நின்றும் ஒன்றைச் சொல்லார். அவர்க்கு இருமருங்கும் நின்று சொல்வார். தம் குரவர் போம்பொழுது வலங்கொண்டு போவர்.

ஒருவர் எழுந்து போம்பொழுது அவரை அழைத்தல், எங்கே போகிறீர் என்று கேட்டல் செய்யலாகாது, பெரியோர் பக்கம் நின்று பேசுக, வலங்கொண்டு போக.

பாடல் – 059


பிறரைப் பார்த்து உமது உடம்பு நன்றாயிருக்கிறது என்று சொல்லார், விளக்கினை வாயால் ஊதி யவியார், அட்டிலடுப்பின்கண் நெருப்பவியச் செய்யார், அந்நெருப்பின் சுடர் தம் மேற்படக் குளிர்கெடக் காயார்.

ஒருவருடம்பு நன்றாயிருக்கிற தென்பதும், விளக்கை வாயாலூதல், ஒருபொருள் வேகும்போது அடுப்பு நெருப்பை அவித்தல் முதலியவையும் தீயொழுக்கங்களாம்.

யாதொன்றிலும் ஏறிப்போகார், செருப்புத்தொடார், தம்மேல் வெயில்மறைக்கக் குடை பிடித்துப் போகார் ஆன்றவிந்த மூத்த விழுமியார் தம்முடன்கூட வழிபோமிடத்து.

வாலிய முறையான் வந்த நான்மறையாளரை மேலாகிய முறைமையையுடைய தங்குரவரைப்போல் கொண்டொழுகுதல் நூல்முறையாளர் துணிவு.

குலத்தாலும் ஒழுக்கத்தாலும் சிறந்த அந்தணரைத் தம்முடைய குரவர்போற் கொண்டு ஒழுக வேண்டும்.

காலின்கண் தொழுதலும், அவர் நன்றென்ற சமயத்தின்கண் நிற்றலும், அவரைக் கண்டால் எழுந்திருத்தலும் என இவை குரவர்க்குச் செய்யும் ஆசாரம் என்று சொல்லுவர் நல்லார்; குரவர்க்குச் செய்யும் ஆசாரங்கள் பல வற்றுள்ளும் சாரத்தாற் சொல்லப்பட்டவை இம் மூன்றுமேயாகும்.

குரவர்க்குச் செய்யும் ஆசாரங்கள் அவரைக் காலின்கண் வணங்குதல், அவர் கூறும் நெறியில் நிற்றல், கண்டவுடன் எழுந்திருத்தல் ஆகிய மூன்று.

அருந்தவரைப் பாதுகாத்தலும், பழிநாணலும், தாங் கற்றவற்றைக் குரவர்முன் மறந்தாயினுஞ் சொல்லாமையும் என இம்மூன்றும் திறப்பட வறிந்தார் அறிந்தநெறி.

அருந்தவரைப் பேணலும், பழி நாணலும், குரவர்முன் தாங் கற்ற திறத்தை யெடுத்துரையா திருத்தலும் சிறந்த வொழுக்கங்கள்.

பார்ப்பாரும், தவசியரும், சுமந்தாரும், பிணிப்பட்டாரும், மூத்தாரும், பிள்ளைகளும், பசுக்களும், பெண்டிரும் என்று சொல்லப்பட்ட இவர்க்கு மிகவும் வழி கொடுத்து விலகிப் போயினாரே மக்களாகப் பிறந்தவர்களுள் பிறராற் போற்றி யென்று சொல்லப்படுவார்.

பார்ப்பார் தவசியர் முதலியவர்களைக் கண்டால் வழிவிட்டுச் செல்வதே நெறி.

தாயுடனாயினும், மகளுடனாயினும், தம் உடன் பிறந்தாளுடனாயினும் சான்றோர் தனித்து உறையார், ஐம்புலன்களையுந் தடுக்கல் அரிதாகலான்.

ஐம்புலன்களையும் அடக்கி நடத்த லருமையாதலின் தாய் முதலியவர்களுடனும் தனித்திருத்தல் தகாது.

அரசர் வாயிலின்கண் தடையுண்டானால் வெகுண்டு காயார், அரசரோடு மிகக்கிழமையை அவர்பொறாத வகை செய்யார், தமக்கு ஒன்று உதவுமிடத்தும், அவர்தம்மைத் தலையளிக்குமிடத்தும், தமக்கு அவை அமையா என்றிகழார், அரசரொக்கக் கோலஞ் செய்யார், அரசர் இருந்த அவையின் கண் ஊடறுத்துப் போகார், பிறனொருவனைச் சேர்ந்திரார்; முன்பு போலப் பின் கடை போக வாழ்தும் என்று கருதுவார்.

அரசருடன் பழகுவோர் அவரிடம் எந்த அளவில் நடந்துகொள்ளல் நலந்தருமோ அவ்வளவில் நடப்பதே முறை யென்க.

தமக்குற்ற கட்டுரைகளும், தம்மிற் பெரியராக அரசனாற் சிறப்புச் செய்யப்பட்டார் உரைத்த உரைகளும், அஃதன்றியே பிறர்க் குறுதியாகிய கட்டுரைகளும்; அரசர்க்குச் சொல்லற்க, சொல்லுவராயின் தமக்கு வடுப்படுங் குற்றமாம்.

அரசனிடத்தில் தமக்குப் பொருந்திய உறுதிச்சொல், அரசனாற் சிறப்புச் செய்யப்பட்டவர் உறுதி மொழி, பிறர்க்குறுதியாகிய கட்டுரை இவற்றைச் சொல்லுதல் பெருங்குற்றமாம்.

பெரியராயுள்ளார் உவந்தனவற்றைத் தாம் உவவார்; தம்மில்லத்தின்கண் கீழ்மக்களைக் கொண்டு புகார்; அறிவினையறியாத பிள்ளையேயாயினும், உயர்த்தன்றி இழித்துச் சொல்லார், தம்மோடு அளவளாவு இல்லாத விடத்து.

பெரியார் உவந்தவற்றைத் தாம் விரும்புதலும், வீட்டுட் சிறியாரை யழைத்துச் செல்லுதலும் தம்மொடு பழக்கமில்லாதவர் சிறுவராயிருப்பினும் இகழாதிருத்தலும் நன்னெறி.

அரசன் செய்வனவற்றை வெறார் அவனோடு கலாயார், விலங்கலின்றி நேர்முகத் தெதிர் நில்லார், அரசன் தனியே இருக்கும் இடத்தின்கண் தம் கருமம் சொல்லார், இனியவான பொருள்களை யாங்கள் நுகர்ந்தறிவோம் என்று அரசர்க்குச் சொல்லார், காக்கை வெள்ளென்றிருக்கு மென்ன அரசன் சொல்லினானாயினும் அவன்மேல் அன்பின்றி மறுத்துரையார்.

அரசன் செய்வனவற்றை வெறுத்தல், அவனோடு கலாய்த்தல், முகத்தெதிர் நிற்றல், தங்கருமங் கூறல் இனியவை யறிவே மென்றல் ஆகா.

உமிதலும், உயர்ந்தவிடத் தேறியிருத்தலும், பாக்குத் தின்னலும், கூறுபாடில்லாதவுரையும், உறங்குதலும், இவ்வைந்தும், அரசர் முன்பு செய்யார்.

அரசர் முன்னிலையில் உமிழ்தல் வெற்றிலை தின்னல் முதலிய செய்கைகளைச் செய்தலாகாது.

அரசர் முன்புதம் செல்வமும், கல்வியும், தமது விளக்கமும், குணனும் குடிப்பிறந்தார் தமக்குத் துன்பஞ் செய்யும் பகைவர்போல் பரப்பிப் பல்கால் பயின்றுரையார்.

ஒருவர் தங்கல்வி, செல்வம், குணம் முதலியவற்றை அரசர் முன்ன ரெடுத்துரைத்து அதனால் கெடுதியடையாதிருக்க வேண்டும்.

அரசர் மனையகத்தும் தேவாலயங்களுள் குரவரையுங் கண்டால் வணங்கார், தெய்வங்கள் புறம் போந்தெழுந்தருளு மிடத்தும், அரசர் புறம் போதுமிடத்தும் கண்டாலும் வணங்கார்.

அரண்மனை, ஆலயம், தெய்வவிழாக் காலம் அரசர் ஊர்வலம் வருங்காலம் இவற்றில் பெரியரைக் கண்டால் வணங்கா தொழிக.

சிரிப்பும் கொட்டாவியும் காறியுமிழ்தலும் தும்மலும் என, இவையும் அரசர் முன்பு செய்யார், செய்வாராயின், பழி குறையாது நிற்கும்.

அரசர் எதிரில் சிரித்தல் கொட்டாவி விடுதல் முதலியவற்றைச் செய்யற்க, செய்தாற் பழியே உண்டாகும்.

நன்மாணாக்கர் என்றும் ஆசிரியர் முன் அடங்கி யொழுகவேண்டுதலின், அவர் பாடஞ் சொல்லுதலை நிறுத்தினால் தாமும் நிற்கக்கடவர், அவர்முன் இருந்தபோது அவர் ‘எழுந்து போ’ என ஏவுதற்குமுன் எழுந்து போகார். அவர் பாடம் முதலியவற்றைச் சொல்லின் செவிதாழ்த்துக் கேட்க, அவர் யாதொன்றும் சொல்லாவிடின் வினவாதிருக்கக் கடவர்.

நன்மாணாக்கர் ஆசிரியர் இருவென இருந்து சொல்லெனச் சொல்லிப் போவெனப் போய், செவி வாயாகக் கேட்டவை விடாதுளத்தமைக்க முயல்வர்.

பெரியாரவைக்களத்தில் ஆடையைக் களையார், காதைச் சொறியார், கைமேலெடுத்துப் பேசார். மாதர்களை நோக்கார், பிறர் செவியிற் சொல்லுஞ் சொல்லையுங் கேளார்.

பெரியோர் அவையிற் காதைச் சொறிதல், ஆடையைக் களைதல், கையுயர்த்திப் பேசுதல் முதலியன செய்யலாகாதன.

கடுகியுரையார், மேன்மேலுரையார், பொய்யாய சொற்களைப் பரக்க உரையார், தாம் உரைக்கத்தக்க சொற்களைப் பரப்பியுரையார், கூறவேண்டிய எனைத்தினையும் ஒரு மிக்க சில்லெழுத்தினானே பொருள் விளங்கும் வகை காலத்தோடு படுத்திக் கேட்போர் செவ்வியறிந்து சொல்லுவர்.

ஒருவரிடத்தில் ஒன்றைச் சொல்லும்பொழுது விரைதல் மேல்மேலுரைத்தல் முதலிய செய்யாது, சில்லெழுத்திற் பொருளடங்கப் பேசுதல் வேண்டும்.

நற்குலப் பெண்டிர் தம் கணவரது உடலின் வடிவத்தையன்றி ஏனை ஆடவரது மேனி எத்துணை அழகுடையவேனும் பாரார்; தம் உடலின் வடிவத்தையும் நோக்கார்; தலை மயிரைக் கோதார்; கைந்நொடித்தல் முதலியன செய்யார்.

குலமாதர் தம் கணவருடல் வடிவையன்றிப் பிறர் வடிவழகு காண வொருப்படார். தலைமயிர் கோதல் கைந்நொடித்தல் முதலிய தீப்பழக்கங்களுங் கொள்ளார்.

பிறரோடுகூட இருந்து ஒன்றனை ஆராயார், அரசனைச் சாரநில்லார் : அரசன் பிறனொருவனுக்குச் சொல்லுஞ் சொல்லைத் தஞ்செவியில் ஓரார், அரசன் ஒன்றனை ஒருவனுக்குச் சொல்லும்பொழுது குறுகநின்றாரெனின், பிறிதொன்றனை ஆராய்வார்போல முகந்திரிந்து நிற்க.

அரசவையில் வேறொருவனிடமிருந்து ஒன்றையாராய்தல், அரசன் அருகினிற்றல், மறை கேட்டல் முதலியன செய்தல் ஆகா.

துன்பக் காலத்தில் அத் துன்பத்துள் அமைவுற்று வாழ்தலும், இன்பக்காலத்தில் பிறர்க்கு இன்பு செய்யும் வகையான் இன்புற்று நடத்தலும், அன்பினின்றும் வேறுபட்டாரில்லம் புகாமையுமாகிய இம்மூன்றும் ஒரு திறப்பட்டார் கண்ணே உளவாம்.

துன்பக்காலத்தில் துன்பத்தைப் பொறுத்திருத்தலும், இன்பக்காலத்தில் பிறர்க்கும் இன்பமுண்டாக நடத்தலும், அன்பற்றவர் வீடு அடையாமையும் ஒருவழிப்பட்டார் செய்கையாம்.

நன்கறிவார் தாம் வெகுண்டாராயினும் தங்குரவர் பெயரைச்சொல்லார்; தம்மில்லத்தின்கண் தம் மனைவியை மிகவும் கழறியுரைத்து நெடிதிரார்; தம்மிற் பெரியாரை முறைப் பெயர் கொண்டு சொல்லார்; புலையரையும் முறைப்பெயர் கொண்டு கூறார்.

வெகுண்ட விடத்தும் தங்குரவர் பெயரைக் கூறுதலும், நெடுநேரம் மனையாளைக் கடிந்து பேசலும், பெரியார் புலைய ரிவர்களை முறைப்பெயரிட் டழைத்தலும் ஆகா.

பிறர் மனையின்கண் புழைக்கடை வாயிலால் புகார், அரசன் கோட்டி கொண்டு கூத்து முதலாயின இன்புறாநின்றவிடத்தும், உரிமை மகளிரோ டிருந்தவிடத்தும் செவ்வியராயுள்ளா ரென்றும் நோக்கார்; அந்தந்தத் தொழிற்குரிய ரல்லாதார்.

வேறொருவர் வீட்டில் புழைக்கடை வாயிலாற் போதலும், அரசன் களியாட்டிடத்தும் அந்தப்புரத்திடத்தும் செல்லுதலும் ஆன்றோர் செயலாகா.

அறிவுடையோர் என்று சொல்லப்படுவோர் கோலஞ்செய்யு மகளிரிடத்தோடு சேர்ந்த தம்மிடத்தை வாழ்க்கைக்குச் சிறந்த இடமாகக் கொள்ளார். தெளிவுற்று மிகுந்த உரிமையுளதாயினும் விரும்பப்படுவனவல்ல, தம் மனைவியர்க்கு விருப்பம் வேறுபடும் ஆதலால்.

பொது மகளிர் வீட்டினருகிற் குடியிருப்புக் கொள்ளின் மனைவியர் மனவிருப்பம் மாறுபடும்.

ஒருவர் பக்கத்தில் வரிசைப்படப் போகார் – ஒருவருடைய நிழலை மிதித்து நில்லார், முள்னர் ஆராய்ந்தன்றிப் பேசும்போது ஆராய்ச்சிசெய்து பேசார், ஊரிலுள்ளோர் வெறுக்கத் தக்கவைகளைச் செய்யார், அரசரது படையளவைப் பகைவர்க்குச் சொல்லார், எப்போதும் ஒரு தன்மையராய் வாழ்தும் என்பார்.

ஒருவர் பக்கத்திற் போகும்போது ஒரு வரிசைப்படப்போதல், ஒருவர் நிழலை மிதித்து நிற்றல், பேசும்போது இடையில் நினைந்து பேசுதல், ஊரார் வெறுப்பன செய்தல், அரசர் படையளவுரைத்தல் இவை ஆகாதன.

புற்றில் வாழ் அரவும் அரசனும் தீயும் குகையில் வாழ் சிங்கமும் என்கின்ற இந்நான்கினையும் இளையவென்றும், எளியவென்றும், பழகியவென்றும் எண்ணியிகழின், துன்பந் தருவனவாம்.

பாம்பு அரசன் நெருப்பு சிங்கம் இந்நான்குடன் நெருக்கமாயும் எச்சரிகை யில்லாமலும் பழகலாகாது.

அறிவுடையோர் தம்மாட்டுச் செல்வம் மிகப் பெருகிய விடத்தும், அறத்தினையுங் கல்யாணத்தினையும் முயற்சியையும் வீட்டினையும் அரசர் செய்வதினும் மேம்படச் செய்யாதொழிக; செய்வாராயின் தம்மாட்டுற்ற செல்வம் கெடும்.

எத்தகைய செல்வரும் அறம் மணம் முயற்சி வீடு இவ்வகையில் அரசரினும் மேம்படச் செலவு செய்யலாகாது.

ஐங்குரவரையும் சான்றோரையும் கண்டால் மனம் வேறுபடாதவர்கள் அவரை நோக்கி, ‘நீவிர் உண்டது யாது’ என வினவார். அதுபோல் கீழோரையும் ‘நீவிர் உண்டது யாது’ என்று வினவா தொழிக.

ஐங்குரவரையும் பெரியோரையும் கண்டால், ‘நீங்கள் உண்டது என்ன?’ என்று கேட்கலாகாது; அதுபோல் கீழோரையும் கேட்கலாகாது.

எப்போதுங் கட்டிலின்மீது படுத்திருப்பவரது காலைக் கழுவார், அவருக்குப் பூப்புனையார், அவருக்கு மறந்தாவது சந்தனமும் பூசார், அருகில் நிற்றலுஞ் செய்யார்.

ஒருவர் கட்டிலின்மேற் படுத்திருந்தால் அப்போது அவருடைய காலைக் கழுவுதலும், அவருக்குப் பூச்சூடுதலும், சந்தனம் பூசுதலும், அவரருகில் நிற்றலும் ஆகா.

தாமொருவருக்குச் செய்த நன்றியின் பயனைச் சொல்லார், தமக்கு ஒருவரிட்ட உணவை இகழ்ந்துரையார், தாம் செய்த அறத்தையும் விரதத்தையும் புகழ்ந்துரையார், பெரியோருடைய ஒழுக்கத்தினை நினைத்து அவ்வாறு வாழ்துமென் றெண்ணுவோர்.

தாம் பிறர்க்குச் செய்த உதவியைத் தாமே பாராட்டுதலும், பிறர் இட்ட உணவை யிகழ்தலும், தம் அறச் செய்கையையும் நோன்பையும் தாமே புகழ்தலும் தகா.

தமக்குக் கிடைத்தற் கரியவற்றை விரும்பார், தம்மால் இழக்கப்பட்டனவற்றிற்கு வருந்தார், அகற்றற்கரிய இடுக்கண் உற்றுழியும் அதற்கு மனங்கலங்கார், உண்மையான அறிவினை யுடையவர்.

கிடைத்தற் கரியவற்றை விரும்புதலும், இழந்த பொருட்கு வருந்துதலும், அரிய துன்பத்திற்கு மனங் கலங்குதலும் பயனற்ற செயல்களாம்.

எப்போதும் தலையில் முடித்த பூவைத்தாம் முகவார், ஒருவர் மோந்த பூவையும் சூடார், பிராமணர் பசுவினைக் கொடுத்தாலும் அதனைப் பெரியோர் வாங்கார், புலையருக்கு எச்சிலைக் கொடார், (ஆதலால்) இவைகளை விடுக.

தலையில் முடித்த பூவை மோத்தலும், மோந்த பூவைச் சூடுதலும், பிராமணரிடம் பசுக்கொடை பெறலும் கூடா; புலையருக்கு எச்சில் கொடுத்தலும் ஆகாது.

காட்டினிடத்திலேனும் தம்மினும் மூத்தன உளவா யிருப்பதனால், அங்கும் உடலின்மீது போர்த்தலும், இறுமாந்திருத்தலும், இரு தாளையுஞ் சேர்த்து இணைத்திருத்தலும் பழிக்கு ஏதுவாகும்.

காட்டிலும் உடலின்மீது போர்த்தலும், செருக்குற்றிருத்தலும் கூட, அட்டணைக் காலிட்டிருத்தலும் ஆகா.

அறிவுடையோர் மேலான நற்கருமங்களைச் செய்யுமிடத்து எப்போதும் புலையரிடத்து நாட்கேட்டுச் செய்யார். ஒழுக்கக் கேடில்லாத அந்தணரிடத்து நாட்கேட்டே நற்கருமஞ் செய்க; அவர் வாய்ச்சொல் என்றும் பிழைபடுவதில்லை ஆதலால்.

நற்கருமம் செய்பவர் ஒழுக்கங் குன்றாத அந்தணர்வாய் நாட் கேட்டுச் செய்தலே நன்மையானது.

அறிஞர், சான்றோர் அவைக்களத்து யாதோர் அங்க சேட்டையுஞ் செய்யார், மாசுள்ளவற்றைத் திமிர்ந்து கொண்டு நடவார், எக்காலத்தும் கடுஞ்சொற்கள் உரையார், இருவராயிருந்து பேசுமிடத்தும் போகார், ஆதலால் இவற்றை ஒழிக.

பெரியோர் அவையில் யாதோர் அங்க சேட்டையுஞ் செய்தலாகாது; நடக்கும்பொழுது அழுக்கைத் தேய்த்து நடக்கலாகாது; கடுஞ்சொற் கூறலாகாது; இருவராகவிருந்து பேசுமிடத்திற்கும் போதலாகாது.

ஐயமற்ற அறிவுடையோர் தங்குரவர் முன்கையைச் சுட்டிக்காட்டிப் பேசார், காலின்மேல் எழுதார், கல்வி முதலியவற்றை யுடையாரோடு அவற்றை இல்லாரை மெய்யெனச் சாதித்து ஒப்பிட்டுக் கூறார், குரவர் கொடுப்பதை உட்கார்ந்திருந்து ஏற்கார்.

பெரியோர்க்கு முன் கையைச் சுட்டிக்காட்டிப் பேசுதலும், காலால் எழுதுதலும், அறிவொழுக்கங்கள் இல்லாரை அவற்றை யுடையார்க்கு ஒப்பாகச் சொல்லிச் சாதித்தலும், பெரியோர் கொடுப்பதை இருந்து வாங்குவதும் தகாத செயல்கள்.

தன் உடலும், மனைவியும், தன்னிடத்தில் அடைக்கலமாக ஒருவன் வைத்த பொருளும், தன்னுயிர்க்கு உதவியாக எண்ணிச் சேர்த்து வைத்த பொருளும் ஆகிய இந்நான்கினையும் பொன்னைப் போலக் காத்தொழுகுக. அவ்வாறு ஒழுகாவிடத்து மிகுந்த துன்பத்தைத் தரும்.

தன்னுடம்பு, தன்னுடைய மனைவி, அடைக்கலப் பொருள், தான் சேர்த்துவைத்த பொருள் இவற்றை அருமையாகப் பாதுகாக்க வேண்டும்.

ஆக்கமுள்ள எறும்பும், தூக்கணம் பறவையும், காக்கையும் என்று சொல்லப்பட்ட இவைகளின் செய்கை போல நல்லனவாகிய தங் கருமத்தைச் சோராமற் கொண்டு, கிடையாத காலத்திற்கு உதவக்கிடைத்த காலத்தில் உணவிற் குரியவற்றைச் சேர்த்தலும், குளிர் காற்று முதலியவற்றால் இடையூறு உறாதவகையாக இல்லம் இயற்றிக் கொள்ளுதலும், சுற்றத்தாரை விளித்துண்கையுமாகிய இக் கருமங்களைச் செய்பவர்க்கு இல்வாழ்க்கையின் ஒழுக்கம் எத்தன்மையானுஞ் சிறப்புறும்.

எறும்பு, தூக்கணங் குருவி, காக்கை இவற்றின் செய்கையைக் கடைப்பிடித்தவர்க்கு இல்வாழ்க்கையின் ஒழுக்கம் எவ்விதத்திலும் சிறக்கும்.

அறிஞர், பெரியார் முன் யாதேனும் ஒன்று உரைக்கவேண்டின், வணங்கி நின்றேனும் வாய்புதைத்து நின்றேனும் உரைப்பரேயன்றி, வேறு வகையின் உரையார்; ஆதலால் நீ அவர்முன் குற்றம் யாதும் உளவாகாமல் ஆராய்ந்து உரைப்பாயாக.

பெரியோரிடத்தி லொன்றைப் பேசும்பொழுது வணங்கி நின்றாவது வாய் பொத்தி நின்றாவது சொல்வதன்றி வேறுவிதமாகச் சொல்லலாகாது, அவர்முன் குற்றம் யாதும் உண்டாகாமல் ஆராய்ந்து கொள்க. ‘வழியவர்’ என்றும் பாடம். உரை என்பதற்கு நீ தோன்றா எழுவாய்.

சூதாடுமிடத்தும், பாம்புகள் நீங்காதுறையும் இடத்தும், அறியாமையை யுடையரல்லார் புகார்; புகுவராயின் பல துன்பங்களும் உளவாம்.

சூதாடுமிடத்திலும் பாம்புகள் மிகுந்த இடத்திலும் அறிவுடையோர் செல்லார்.

சோர்வற்ற அறிவை யுடையவர் ஆரவாரஞ் செய்யுமிடத்தும் மடைப்பள்ளியிலும் பெண்டிர்கள் உறையிடத்தும் நோக்கார், எடுத்துரையார், இல்லத்துட்புகார் : ஆதலால் நீ விடுக.

ஆரவாரஞ் செய்யுமிடத்தைப் பார்த்தலும், மடைப்பள்ளியில் எடுத்துரைத்தலும், பெண்டிர்கள் உறைகின்ற இடத்துப் புகுதலும் ஆகா.

அறியாத தேசத்தான், வறியோன் மூத்தோன், சிறுவன், உயிரிழந்தவன், பயமுற்றவன், உண்பவன், அரசர் தொழிலில் : தலைவைத்தவன், மணமகன் என்னும் இவ்வொன்பதின்மரும் உண்மையா யுரைக்குமிடத்து ஆசாரமிலிகளாவர்.

அறியாத தேசத்தான் முதலிய ஒன்பதின்மருக்கும் ஆசாரக் கட்டுப்பாடில்லை.

சிறப்புப் பாயிரம்
ஆர் எயில் மூன்றும் அழித்தான் அடி ஏத்தி,
ஆரிடத்துத் தான் அறிந்த மாத்திரையான், ஆசாரம்
யாரும் அறிய, அறன் ஆய மற்றவற்றை
ஆசாரக்கோவை எனத் தொகுத்தான் – தீராத்
திரு வாயில் ஆய, திறல் வண், கயத்தூர்ப்
பெருவாயின் முள்ளி என்பான்.

—————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading