கடவுள் வாழ்த்து அதிகாரப் பாடல்களின் சாரம்:
- முதல் குறள் உலகம் ஆதிபகவனை முதலாக உடையது என கடவுள் இயல்பையும் கடவுளுக்கு உலகோடுடைய தொடர்பையும் கூறுகிறது.
- 2 ஆம்குறள் என்ன கற்றிருந்தாலும் இறைவனை நினையாமல் இருக்கக் கூடாது என அறிவுறுத்துவது.
- 3 ஆம்குறள் கடவுளின் திருவடியை நினைப்பவர் இந்நிலவுலகின்கண் நன்கு வாழ்வர் என்கிறது.
- 4 ஆம்குறள் சார்பற்ற இறைவனை நெஞ்சில் தாங்கியவர் எந்தச் சூழ்நிலையிலும் துன்பங்களை உணரமாட்டார் என்பதைச் சொல்வது.
- 5 ஆம்குறள் கடவுளின் பெருமை அறிந்து வாழ்த்துபவருக்கு நல்வினை தீவினை எதுவுமே தாக்கத்தை ஏற்படுத்தாது என்கிறது.
- 6 ஆம்குறள் ஒழுக்கத்தின்வழி நின்று கடவுள் வணக்கம் செய்க என அறிவுறுத்துவது.
- 7 ஆம்குறள் எல்லாம்வல்ல இறைவனால் மட்டுமே தீராக் கவலைகளுக்கு மாற்றல் தர முடியும் என்று சொல்கிறது.
- 8 ஆம்குறள் அருள் வடிவினனான இறைவனின் தாளை இடைவிடாது நினைந்தவர் குற்ற உணர்ச்சிகளிலிருந்து மீள வழியுண்டு எனச் சொல்வது.
- 9 ஆம்குறள் இறைவனை திருவடியை வணங்காதவர் தலை இருந்தும் இல்லாதது போல்தான் எனக் கூறுகிறது.
- 10 ஆவதுகுறள் இறைவன் அருள் இருந்தால் மட்டுமே நாம் வாழ்க்கை என்னும் கடலைக் கடக்க முடியும் என்கிறது.
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு–(அதிகாரம்:கடவுள் வாழ்த்து குறள் எண்:1)
பரிமேலழகர் உரை: எழுத்து எல்லாம் அகரம் முதல – எழுத்துக்கள் எல்லாம் அகரம் ஆகிய முதலை உடையன; உலகு ஆதிபகவன் முதற்று – அது போல உலகம் ஆதிபகவன் ஆகிய முதலை உடைத்து.
(இது தலைமை பற்றி வந்த எடுத்துக்காட்டு உவமை. அகரத்திற்குத் தலைமை விகாரத்தான் அன்றி நாதமாத்திரை ஆகிய இயல்பாற் பிறத்தலானும், ஆதிபகவற்குத் தலைமை செயற்கை உணர்வான் அன்றி இயற்கை உணர்வான் முற்றும் உணர்தலானும் கொள்க. தமிழ் எழுத்திற்கே அன்றி வட எழுத்திற்கும் முதலாதல் நோக்கி, ‘எழுத்து’ எல்லாம் என்றார். ஆதிபகவன் என்னும் இரு பெயரொட்டுப் பண்புத்தொகை வடநூல் முடிபு. ‘உலகு’ என்றது ஈண்டு உயிர்கள் மேல் நின்றது. காணப்பட்ட உலகத்தால் காணப்படாத கடவுட்கு உண்மை கூற வேண்டுதலின், ‘ஆதிபகவன் முதற்றே’ என உலகின் மேல் வைத்துக் கூறினார்; கூறினாரேனும், உலகிற்கு முதல் ஆதிபகவன் என்பது கருத்தாகக் கொள்க. ஏகாரம் – தேற்றத்தின்கண் வந்தது. இப்பாட்டான் முதற்கடவுளது உண்மை கூறப்பட்டது.)
(அஷராணாம் – அகாரோ -அஸ்மி – பகவத் கீதை – 10 வது அத்தியாயம் 88 வது சுலோகம்)”
கடவுள் இயல்பும் கடவுளுக்கு உலகோடுடைய தொடர்பும் கூறப்படுகிறது. நூலின் முதற்பாடல் என்பதால் பலராலும் இது மிக நுணுக்கமாக ஆராயப்பட்டுள்ளது.
தனக்கோர் மூலம் இன்றி எல்லா உலகும் தோன்றி நின்று இயங்குவதற்குத் தானே மூலமாய் நிற்றலால் இறைவன் ஆதி எனப்படுகிறான். பகவன் என்னும் சொல்லிற்கு நேர் பொருள் கடவுள் என்பதாகும். இந்த உலகின் தொடக்கத்துக்குக் கடவுள் காரணம். அந்த முதன்மையைக் காட்டும் நோக்கில் அவன் பெயரைச் சொன்னாலே எளிதில் விளங்கும்படி ஆதிபகவன் என்ற சொல்லால் கடவுளைக் குறிப்பிடுகிறார் வள்ளுவர்.
இதே கடவுள் வாழ்த்து அதிகாரத்தில் வள்ளுவரே இறைப் பண்பாக ‘கடவுள் தனக்குவமை இல்லாதவன்’ என்று கூறியிருக்கிறார். தனக்கு உவமை இல்லாதவன் கடவுள் என்ற கருத்தைப் பின்னர் (குறள் 7) சொல்ல வருபவர் அப்படிப்பட்ட கடவுளுக்கு “அ” எழுத்தை உவமை சொல்லி, முதல் குறளை எப்படி அமைத்தார்?
‘அ’ என்பது ‘இ’, ‘உ’ போன்ற மற்ற குற்றெழுத்துக்களைப் போன்றதுதானே? ‘இ’யைவிட ‘அ’ முதலில் வருவது என்பது தவிர வேறு எந்தவிதத்தில் சிறப்பானது? வேறுபட்டது? மேலும் எழுத்துக்களின் முதல் எழுத்துத் தான் ‘அ’ எழுத்தே தவிர, மற்ற எழுத்துக்களின் தோற்றத்திற்கோ ஒலிஅமைப்புக்கோ ‘அ’ எழுத்து அடிப்படையானதன்று. ‘உ’ என்ற எழுத்துக்கு ‘அ’ எழுத்து எப்படி அடிப்படையாக அமைய முடியும். ‘உ’ எழுத்தில் ‘அ’ எழுத்து எங்ஙனம் நுண்ணியதாகக் கலந்திருக்க முடியும்? ‘அ’ என்பதும் உயிர் எழுத்து; ‘உ’ என்பதும் உயிர் எழுத்து; இரண்டும் தனித்து நிற்கவல்லன; அதன் காரணம் பற்றியே அவை உயிர் எழுத்து எனப்பெயர் பெற்றன. ஒர் உயிர் இன்னொரு உயிருடன் கலவாது. உயிர் மெய்யுடன் மட்டும்தானே கலக்கும்? ஒவ்வொரு உயிரும் மெய்யெழுத்துடன் சேர்ந்து உயிர் மெய்யெழுத்தை உருவாக்கும். அப்படியிருக்க ‘அ’ எழுத்து எல்லா எழுத்துக்களிலும் நுண்ணியதாய்க் கலந்திருப்பதாகக் கொள்வது எப்படிச் சரியாகும்? ‘இ’ என்ற எழுத்தை எப்படி உச்சரித்தாலும் ‘அ’ ஒலி நுண்ணியதாய்க் கலப்பதை, கலந்திருப்பதை அறிய முடியவில்லையே. க்+அ=க என்று சொல்லும்பொழுது ‘க’ எழுத்தில் ‘அ’ கலந்துள்ளது வெளிப்படும். ஆனால், ‘இ’ எழுத்தில் ‘அ’ கலந்துள்ளதை எவ்வாறு புலப்படுத்த இயலும்? அல்லது எவ்வாறு புரிந்துக் கொள்ள இயலும்? இவை ஆய்வாளர்கள் எழுப்பும் வினாக்களில் சில.
அகரத்தின் பண்புகள் வேறு, இறைவனின் பண்புகள்வேறு என்பது வெளிப்படை. முதற்குறளின் சொற்பொருள்கள் புரிந்து கொள்ளப்படுகின்றன. உவமையின் வாயிலாக எழுத்தின் பெருமையும் புலனாகிறது. ஆனால் அகரம், கடவுள் என்ற இரு கருத்துக்களையும் ஒப்புமை செய்வதை முழுதாக உணர இயலவில்லை. எங்கும் எல்லாப் பண்புகளிலும் நீக்கமற நிறைந்துள்ள இறைவனுக்கு உவமை சொல்ல, ஒலி போல் நிறைந்துள்ளான் என்று ஒரு பண்பு மட்டுமே கொண்டு சொன்ன மொழி-அகரம், உலகம்-கடவுள் என்பதை நிறைவான உவமை என்று சொல்ல முடியாது. எனினும் அளவையால் அளக்கப்படும் பொருள் அளக்கப்பட்ட அளவு அறியப்படும். இறைவனே மூல முதல்; அவனே எல்லாவற்றிற்கும் அடிப்படை என்பன மொழியியல் துணைகொண்டு அளக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் எல்லையில்லாச் செம்பொருளாக இறைவன் ஒருவன் உளன் என்பதும் நிறுவப்பட்டது.
———–
கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.-(அதிகாரம்:கடவுள் வாழ்த்து குறள் எண்:2)
பரிமேலழகர் உரை: கற்றதனால் ஆய பயன் என் – எல்லா நூல்களையும் கற்றவர்க்கு அக்கல்வி அறிவான் ஆய பயன் யாது?; வால் அறிவன் நல் தாள் தொழாஅர் எனின் – மெய்யுணர்வினை உடையானது நல்ல தாள்களைத் தொழாராயின்?
எவன் என்னும் வினாப்பெயர் என் என்று ஆய், ஈண்டு இன்மை குறித்து நின்றது. ‘கொல்’ என்பது அசைநிலை. பிறவிப் பிணிக்கு மருந்து ஆகலின் ‘நற்றாள்’ என்றார். ஆகம அறிவிற்குப் பயன் அவன் தாளைத் தொழுது பிறவியறுத்தல் என்பது இதனான் கூறப்பட்டது.
தூய்மையான அறிவினனான கடவுளின் நல்ல அடிகளை வணங்காராயின் என்ன கற்றிருந்தாலும் பயன் ஒன்றுமில்லை.
தமிழில் வாலறிவு என்று இங்கு குறிக்கப்பட்டது பிராகிருதச் சொல்லான “கேவல ஞானம்” என்பதன் தமிழாக்கம் எனவும். இச்சொல் “கடையிலா அறிவு”, “வரம்பற்றஅறிவு”, “முழுதுணர்”, “வினையின் நீங்கி விளங்கிய அறிவு”, “அலகிலா அறிவு”, “முற்றறிவு”, ‘குற்றமற்ற அறிவு’ எனப் பொருள்படும் எனவும் கூறுவர். அளப்பற்கரிய தூய அறிவினை உடையவன் வாலறிவன் ஆவன். அது கடவுளைத் தவிர வேறு யாராகவும் இருக்க முடியாது. வாலறிவன் என்று சொல்லப்பட்டதால் கடவுள் அறிவு வடிவினன் ஆகின்றான்.
ஸத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்மம் -என்று ஆதிபகவானின் அடையாளம் சொன்னவாறு
தாள்கள் என்றால் மனித வடிவம் தோன்றிடலாம் என்பதால் தாள் என்று ஒருமையில் கூறினார். தோற்றமும் தரவேண்டும். அதே நேரத்தில் இயற்கைப் பொருளாகவும் இருந்துவிடக் கூடாது. எனவே இறை என்பது ஒற்றைத் தாள் உருவாக, அடி/தாள் என இங்கும் அதிகாரத்து மற்ற இடங்களிலும் குறிப்பிடுகிறார் வள்ளுவர். தாள் என்பதற்கு ‘நல்’ என்ற அடை கொடுத்து நல்தாள் எனச் சொல்லி இந்நற்றாளைத் தொழச் சொல்கிறார்.
தொழாஅர் எனின்’ என அளபெடுத்துச் சொல்லப்பட்டதால் தொழுதே ஆகவேண்டும் என்றாகிறது. அறிவுவடிவான இறைவனை எப்படித் தொழுவது? எங்கும் நிறைந்த கடவுளுக்கு நற்றாள் என்று தோற்றம் கூறப்பட்டதால், தாள் தொழல் என்பது இறைவனின் திருவடியை மனத்துக்குள் உறுதியாக வரித்துக் கொண்டு அவனது அருளை வேண்டுவது எனக் கொள்வர்.
அனைத்துக் கல்வியும் அறிவும், தூய குணமாகிய கடவுளை அறிதல் அல்லது தேடுதல் என்பதை நோக்கித்தான் செல்கிறது என்பதையும் அவன் அறிய வேண்டும். கல்வியின் நோக்கம் கடவுள் அறிதல் தவிர கடவுளின் நற்றாள் தொழுதலுமாகும் என்பதுவே வள்ளுவம்
——–
மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்.(அதிகாரம்:கடவுள் வாழ்த்து குறள் எண்:3)
பரிமேலழகர் உரை: மலர்மிசை ஏகினான் மாண்அடி சேர்ந்தார் – மலரின் கண்ணே சென்றவனது மாட்சிமைப்பட்ட அடிகளைச் சேர்ந்தார்; நிலமிசை நீடுவாழ்வார் – எல்லா உலகிற்கும் மேலாய வீட்டு உலகின் கண் அழிவின்றி வாழ்வார்.
(அன்பான் நினைவாரது உள்ளக் கமலத்தின்கண் அவர் நினைந்த வடிவோடு விரைந்து சேறலின் ‘ஏகினான்’ என இறந்த காலத்தால் கூறினார்; என்னை? “வாராக் காலத்தும் நிகழும் காலத்தும் ஓராங்கு வரூஉம் வினைச் சொற் கிளவி இறந்த காலத்துக் குறிப்பொடு கிளத்தல் விரைந்த பொருள் என்மனார் புலவர்” (தொல், சொல், வினை, 44) என்பது ஓத்தாகலின். இதனைப் ‘பூமேல் நடந்தான்’ என்பதோர் பெயர் பற்றிப் பிறிதோர் கடவுட்கு ஏற்றுவாரும் உளர்.
சேர்தல் – இடைவிடாது நினைத்தல்)
மலர்மிசை ஏகினான் என்ற தொடர்க்கு ‘மலர் மேல் நடந்தவன்’ ‘அண்டவெளியில் பரந்துள்ளான்’. ‘உள்ளக் கமலத்தின்கண் தோன்றுபவன்’. என்று மூன்று வகையான விளக்கங்கள் காணக் கிடக்கின்றன
இது சமண (ஜைன) சமயக் கடவுளான அருகனைக் குறித்தது என்பது பலரின் கருத்து. அருகப் பெருமான் எழுந்தருளும்போது தாமரைப் பூக்கள் தோன்றி அவருடைய திருப்பாதங்களைத் தாங்குகின்றன என்ற சமணர்களின் நம்பிக்கையின் அடிப்படையில் எழுந்தது இது
இக்குறள் குறிப்பிடுவதும் அருகக் கடவுளே என்பதற்கு இவ்வரிகள் சான்றாயின என்றும் கூறுவர்.
மலர்மிசை ஏகினான் என்ற தொடர் புத்தரைக் குறிக்கிறது என்றும் சிலர் உரைத்தனர். இங்கு ‘மலர்’ என்பது தாமரைப் பூ.என்றும் புத்தர் பிறந்தவுடனேயே ஏழடி நடந்தார் என்றும் ஒவ்வொரு அடியை வைக்கும்போது தாமரைப்பூ தோன்றி அவருடைய பாதங்களைத் தாங்கிக் கொண்டன என்றும் புத்த சமயநூல்கள் கூறுகின்றன என்றும் மேலும் அவர்கள் விளக்கினர்.
ஆனால் சமணரின் ஆதிநாதர் அல்லது புத்தர் மலரிலே நடந்தவர் என்று பொருள் கொண்டால் அதன் தொடர்ச்சியாய் அவன் அடிசேர்ந்தார் ‘நிலமிசை நீடுவாழ்தல்’ என்பது சமண-புத்தக் கொள்கைகளுக்குப் பொருந்தி வராது. அருகனும் புத்தனும் மனிதப் பிறவிகளே. மலர்மிசை ஏகினான் என்பது கடவுள் குறித்தது. அதற்கு மனிதரைச் சார்ந்து பொருள் கொள்ளமுடியவில்லை.
வள்ளுவர் எந்த இடத்திலும் சமயம் சார்ந்து குறள் படைக்கவில்லை. எனவே இக்குறள் அருகனையும் புத்தனையும் குறிக்கவில்லை என்பது தெளிவு.
‘மலர்தல்’ என்ற வினைச்சொல்லுக்கு ‘விரிதல், பரவுதல்’ என்று பொருள்; ‘மிசை’ என்னும் சொல்லுக்கு ‘மேலிடம்’ என்று பொருள்; வினைத்தொகை ஆகிய ‘மலர்மிசை’ என்பது ‘மலர்ந்த மிசை’ என்று விரிந்து ‘பரந்த மேலிடம்’ என்ற பொருள் தரும்; இது அண்டவெளியினைக் குறிக்கும்; ‘மலர்தலை’ என்பது பரந்த இடத்தையும், ‘மலர்தலை உலகம்’ என்பது பரந்த பூவுலகினையும் குறிப்பதைப் போல ‘மலர்மிசை’ என்ற தொடர் அண்டவெளியினைக் குறிப்பதாக இவர்கள் விளக்கம் தருவர்.
நெஞ்சமாகிய மலரில் இருப்பவனது திருவடியை மறவாமல் நினைப்பவர் என்பது இப்பகுதியின் பொருள்.
சேர்தல் என்ற சொல்லுக்குப் பரிமேலழகர் ‘இடைவிடாது நினைத்தல்’ என்று உரை தருகிறார். இடைவிடாமல் நினைத்தல் என்றதை மறவாதே எண்ணுதல் என்று கொள்வது சிறக்கும்.
மலர் அழகானது; சிறப்பானது; மென்மையானது; மணத்தையும், மகிழ்வையும் தருவது; தூய்மையானது. அழகிலும் தூய்மையிலும் ஒளியிலும் உள்ள இறைவன் மலர்மேல் இயங்குகிறான். எண்ணுவதற்கு எவ்வளவு இனிய காட்சி இது!
இறைவனைத் தேடி எங்கும் போகவேண்டாம். அவன் ஒவ்வொருவரது உள்ள மனமலரிலேயே வீற்றிருக்கிறான் அவனை மறவாமல் நினைந்திருப்பவர் இவ்வுலகில் நீண்ட காலம் வாழ்வர்.
நீண்ட நாட்கள் வாழ்தல் சிறப்புடையது என்பதும் இப்பாடலின் வழி பெறப்படுகிறது.
———————
வேண்டுதல் வேண்டாமை இலான்அடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல–(அதிகாரம்:கடவுள் வாழ்த்து குறள் எண்:4)
பரிமேலழகர் உரை: வேண்டுதல் வேண்டாமை இலான் அடி சேர்ந்தார்க்கு – ஒரு பொருளையும் விழைதலும் வெறுத்தலும் இல்லாதவன் அடியைச் சேர்ந்தார்க்கு; யாண்டும் இடும்பை இல – எக்காலத்தும் பிறவித் துன்பங்கள் உளவாகா.
(பிறவித் துன்பங்களாவன : தன்னைப் பற்றி வருவனவும், பிற உயிர்களைப் பற்றி வருவனவும், தெய்வத்தைப் பற்றி வருவனவும் என மூவகையான் வரும் துன்பங்கள். அடி சேர்ந்தார்க்கும் அவ்விரண்டும் (வேண்டுதலும் வேண்டாமையும்) இன்மையின், அவை காரணமாக வரும் மூவகைத் துன்பங்களும் இலவாயின.)
கெட்டவன் அடையும் ஆக்கமும் நல்லவன் உறும் கேடும் ஏன் என்று தமக்கு விளங்கவில்லை என்பதற்காக கடவுள் நடுநிலையில் இல்லை என்று முடிவுக்கு வந்துவிடவேண்டாம் என இங்கு அறிவுறுத்துகிறார் வள்ளுவர். இறைவன் வேண்டுதல் வேண்டாமை இல்லாதவன்தான் என்பதை இக்குறள்வழி அழுந்தச் சொல்கிறார் வள்ளுவர்.
விருப்பும் வெறுப்புமற்ற இறைவனது அடியை மறவாமல் நினைப்பவர்க்கு எவ்விடத்தும் எப்போதும் துன்பம் இல்லை என்பது இக்குறட்கருத்து.
————-
இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு-(அதிகாரம்:கடவுள் வாழ்த்து குறள் எண்:5)
பரிமேலழகர் உரை: இருள்சேர் இருவினையும் சேரா – மயக்கத்தைப் பற்றி வரும் நல்வினை, தீவினை என்னும் இரண்டு வினையும் உளவாகா; இறைவன் பொருள் சேர் புகழ் புரிந்தார் மாட்டு – இறைவனது மெய்ம்மை சேர்ந்த புகழை விரும்பினாரிடத்து.
(இன்ன தன்மைத்து என ஒருவராலும் கூறப்படாமையின் அவிச்சையை ‘இருள்’ என்றும், நல்வினையும் பிறத்தற்கு ஏதுவாகலான் ‘இருவினையும் சேரா’ என்றும் கூறினார். இறைமைக் குணங்கள் இலராயினாரை உடையர் எனக்கருதி அறிவிலார் கூறுகின்ற புகழ்கள் பொருள் சேராவாகலின், அவை முற்றவும் உடைய இறைவன் புகழே பொருள் சேர் புகழ் எனப்பட்டது. புரிதல் – எப்பொழுதும் சொல்லுதல்)
இக்குறளின் முதற்பகுதி ‘இருள்சேர் இருவினையும் சேரா’ என்பது. இதிலுள்ள இருள் என்ற சொல்லுக்கு மும்மலம், அஞ்ஞானம், பிறவிமயக்கம், யான் என்னும் இருள், தன்னல மயக்கம் என்றபடி பொருள் கூறினர். சிலர் அதற்கு மயக்கம் எனப் பொருள் உரைத்து ‘ஒன்றை இன்னொன்று எனப்பொருள் கொள்வது’ அதாவது இருள் நிறைந்த இடத்தில் கயிற்றினைப் பாம்பு எனப் புரிந்துகொள்வது போல என விளக்கம் செய்தனர். இருள் என்பதை விளக்கும் உரைப்பொருளாக அறியாமை என்பதையும் கூறினர். அறியாமையாவது, தெரியாத தன்மை ஆகும்.
‘இருள்சேர்’ என்பதற்கு மயக்கம் கலந்த அல்லது அறியாமை பொருந்திய என்பது பொருளாகும்.
‘இருவினை’ என்றதற்கு இன்ப துன்பங்களை உண்டாக்கும் நல்வினையும் தீவினையும், இருவகை வினையும், அறிவில்லாத வினைகள், நல்வினை தீவினையென்னும் இருவினைப் பயன்களாகிய இன்ப துன்பங்கள், சென்ற பிறப்பில் செய்த வினைகள் இந்தப் பிறப்பில் செய்த வினைகள், நலம் தீங்குகள், பெரிய துன்பங்கள், நன்மை தீமைகள். நல்லது கெட்டது, காதிவினையும் அகாதிவினை, இருவின பற்றிய பாவம், கூற்றும் செயலும், நல்வினை தீவினைகளின் பயனாகிய பிறப்பிறப்புக்கள், தெரிந்தும் தெரியாதும் செய்யும் இருவகைத் தீவினைகள், நன்மை தீமை பற்றிய தவறான கருத்துக்கள், தவறான எண்ணங்களினால் அல்லது பிறழ உணர்தலால் நற்செயல்களையும் தீச்செயல்களையும் கலந்து செய்தல் எனப்பலவாறு உரையாசிரியர்கள் பொருள் உரைத்தனர்.
‘இருவினை’ என்ற தொடர் நல்வினை, தீவினை இவற்றைச் சுட்டுவது. நல்வினை என்பது நற்செயல் என்றும் தீவினை என்பது தீச்செயல் என்றும் பொருள்படும். நமது அனைத்துச் செயல்களுக்கும் பயன் உண்டு; நல்வினையானால் புண்ணியம் கிடைக்கும்; தீவினையானால் பாவம் உண்டாகும் என்னும் கோட்பாடு எல்லாராலும் விரும்பப்படுவது; அவ்விதமே உலக இயக்கம் உள்ளது என்ற நம்பிக்கையுடனேயே நாம் வாழ்கிறோம். இவ்விருவினைகளால் உண்டாகும் பயன்களையே ‘இருவினை’ என்ற தொடர் குறிக்கிறது.
‘இருள்சேர் இருவினையும் சேரா’ என்ற பகுதிக்கு மயக்கம் கலந்த இருவினைப் பயன்களும் சென்றடையா என்பது பொருள்.
பாடலின் பிற்பகுதி ‘இறைவன் பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு’ என்பது. ‘இறைவன் பொருள்’ என்ற தொடர் செம்பொருள் குறித்தது. செம்பொருள் என்பது மெய்ப்பொருள் அல்லது இறைத்தன்மை எனவும் அறியப்படுவது. இறைவன் பொருள்சேர் புகழ் என்றது இறைவனது பெருமைகள் அல்லது இறைமைக் குணங்கள் குறித்தது. ‘புரிந்தார்’ என்ற சொல்லுக்கு தங்கினார், விரும்பினார், வணங்குகிறவர், ஓதுவார் (இடைவிடாது சொல்லுவார்), போற்றுவார் என்று பலவாறாகச் சொல்லப்பட்ட பொருள்களுள் ‘போற்றுவார்’ என்பது பொருத்தம். ‘இறைவன் பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு’ என்ற பகுதிக்குக் ‘கடவுளது உண்மையான பெருமைகளை உணர்ந்து போற்றுவார்க்கு’ என்பது பொருள்.
இறைவனது மெய்ம்மையான பெருமையை நினைந்து போற்றுவாரிடத்து அறியாமையால் உண்டாகும் இருவினைகளும் நெருங்கா என்பது இக்குறட்கருத்து.
—————————
பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்–(அதிகாரம்:கடவுள் வாழ்த்து குறள் எண்:6)
பரிமேலழகர் உரை: பொறி வாயில் ஐந்து அவித்தான் – மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் பொறிகளை வழியாக உடைய ஐந்து அவாவினையும் அறுத்தானது; பொய் தீர் ஒழுக்க நெறி நின்றார்-மெய்யான ஒழுக்க நெறியின்கண் நின்றார், நீடு வாழ்வார் – பிறப்பு இன்றி எக்காலத்தும் ஒரு தன்மையராய் வாழ்வார்.
(புலன்கள் ஐந்து ஆகலான், அவற்றின்கண் செல்கின்ற அவாவும் ஐந்து ஆயிற்று. ஒழுக்க நெறி ஐந்தவித்தானால் சொல்லப்பட்டமையின், ஆண்டை ஆறனுருபு செய்யுட் கிழமைக்கண் வந்தது. ‘கபிலரது பாட்டு’ என்பது போல. இவை நான்கு பாட்டானும் இறைவனை நினைத்தலும், வாழ்த்தலும், அவன் நெறி நிற்றலும் செய்தார் வீடு பெறுவர் என்பது கூறப்பட்டது)
மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐந்து ஐம்பொறிகளின் வழியாக ஏற்படும் உணர்வுகளைப் பக்குவப்படுத்தியவனாகி, மெய்யான ஒழுக்க நெறி நிற்பவர், நெடுங்காலம் இவ்வுலகின்கண் நெடுங்காலம் இனிது இருப்பர்.
———————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply