https://www.tamilvu.org/node/154572?linkid=118853
இரண்டாவது
பொருளணியிய லுரை.
1-தன்மையலங்காரம்
2-உவமையலங்காரம்
——
86.பொருளினுஞ்சொல்லினும்புனையுறுசெய்யுட்
கணிபெறப்புணர்த்தலினணியெனும்பெயர்த்தே.
என்பது சூத்திரம்.
இவ்வோத் தென்னுதலிற்றோவெனின், ஒத்த நுதலியதூஉ மோத்தினதுபெயருரைப்பவே விளங்கும்.
ஆயின் இவ்வோத் தென்னபெயர்த்தோவெனின்? பொருளணியிய லென்னும் பெயர்த்து ;
பொருளானா மணிக ளுணர்த்தினமையின். ஆயின், இதன்றலைச்சூத்திரம் என்னுதலிற்றோவெனின்?
சொல்வான் றொடங்கிய அணி யென்பவற்றிற்குக் காரண மிவையென்பதூஉம் அவை
செய்யுட் கின்ன சிறப்புடைத்தாகப் புணர்த்தலி னிப்பெயர்த்தாயிற் றென்பதூஉ முணர்-ற்று.
(இ-ள்) புலவராற் றொடுக்கப்பட்ட கவிகட்குப் பொருளானுஞ் சொல்லானும் அழகெய்தப் புணர்ப்பதால்
அணியென்னும் பெயரை யுடைத்தாயிற் றிவ்வலங்காரமென்றவாறு.
புலவரா லென்பதூஉம் அலங்கார மென்பதூஉஞ் சொல்லெச்சம் அணி யிரண்டனுண் முன்னையது அழகாம்.
பின்னையது பூணாம். எனவே பொருளானுஞ் சொல்லானு மணி யிரண்டென்பதாயிற்று.
87.அவற்றுள்,
புவனம்போற்றியபொருளணிபுகலிற்
றவலரும்பான்மைத்தன்மையுவமை
யுருவகமுள்ளுறையொட்டுல்லேக
மொப்புமைக்கூட்டம்வேற்றுமைதிட்டாந்தந்
தற்குணம்பிரத்தியனீகஞ்சந்தய
மற்புதநிதரிசனந்தற்குறிப்பதிசயஞ்
சிலேடைபின்வருநிலைதீபகநிரனிறை
பூட்டுவிலிறைச்சிப்பொருள்கோள்பொருண்மொழி
யதிகம்வகைமுதலடுக்கிணையெதுகை
விரோதமுபாயம்விசேடஞ்சமாயித
மேதுச்சுவைபரியாயமிலேசந்
தற்பவமசங்கதிதடுமாறுத்தி
புணர்நிலைவேற்றுப்பொருள்வைப்புவிபாவனை
யார்வமொழிநெடுமொழிபரிவருத்தனை
காரணமாலைகாரியமாலை
யேகாவலிபிரதீபம்பிறவணி
முன்னவிலக்கபநுதிநிந்தாத்துதி
புகழ்வதினிகழ்தன்மாறுபடுபுகழ்நிலை
பரிசங்கைகாவியலிங்கம்பரிகர
முறுசுவைவிநோத்திசமுச்சயமுதாத்த
மாசிசங்கரஞ்சங்கீரணமே
பாவிகமெனவறுபானான்காகும்.
(எ-ன்) வைத்தமுறையானே பொருளானா மணிகளது பெயருமுறையுந் தொகையு முணர்ற்று.
(இ-ள்) அங்ஙன மிரண்டுகூற்றவாகிய அணிகளுள் உயர்ந்தோர் முதலெனப் போற்றப்பட்ட பொருளணி
யொன்றனையுங் கூறுமிடத்துத் தன்மை முதலாகப் பாவிகமீறாக அறுபத்துநான்கா மென்றவாறு.
இவற்றிற்கெல்லா மெண்ணும்மை தொக்குநின்றன. என என்பது எண்ணிடைச்சொல் ; என்னை?
“என்று மெனவு மொடுவு மொரோவழி, நின்றும் பிரிந்தெண் பொருடொறு நேரும்” என்பதனால்.
எனவென்ப தனைத் தன்மைமுதலாக வெண்ணிய வெங்கு மொட்டுக.
அஃதாக ; இச்சூத்திரத்துள் சிலேடை, பின்வருநிலை, தீபகம், நிரனிறை முதலிய சொல்லானாமணிகளு மிதனுட்கூறா
நிற்பப் பொருளணியிய லென்ப தென்னையெனின், மிகுதி பொருண்மேலவாதலின் மிக்கவற்றாற் பெயர்கொடுத்தார்;
அஃ தியாவதுபோலவெனின், அங்கராகமாகிய சந்தனத்துடன் குங்கும கற்பூர கத்தூரி கூடினும் பூசியது சந்தனமென்பதுபோலக் கொள்க.
அற்றேல் இவை முறையாயினவாறென்னையோவெனின், இயல்பு விகாரமென விரண்டாகிய வவற்றுள்,
தன்மை யியல்பாகலான் முற்பட்ட முறைமைத்தாக வைக்கப்பட்டது.
உவமையை மூன்றுறுப்படக்கிய பிண்டமாகுந் தொல்காப்பியத்து ளிறுதிநின்ற பொருளகத் தகப்பட்டதாக
அலங்காரத்தினையுங் கூறிய ஒல்காப்புலமைத் தொல்காப்பியனாரு முவமையென்ப தொன்றாகத் தொகைபெற்று
வினைமுதலிய நான்காய் வகுத்துப் பலவேறு விரிவாய்நின்று விகாரமாயதன்றிப்
பிறவலங் காரங்கட்கு முபகாரமுடைத்தாகலானு மஃதொன்றினையுமே முக்கியமாக்கி யதனுட னுருவகமும்
உள்ளுறையுவமமும் வகுத்துக்கூறிய முதன்மையானும், இதற்குத் தனியே முதனூல்செய்த தெண்டி யாசிரியரும்
அவர் நோக்கமே தாமு முடம்பட்டாராகத் தன்மையின்பின் னுவமையை வைத்தாராகலானும்,
இருவர்நோக்கமு முட்கொண் டிந் நூலுடையா ரவையிரண்டிற்கு மிந்நூல் வழிநூலாகலானுந் தன்மையை முதல்
வைத் ததன்பின்ன ருவமையையு முதல்வைத்தது முறையெனக் கொள்க.
உருவகமும், உவமையும் பொருளும் வேறுபட்டு நில்லா தொன்றென்னும் பான்மைத்தாய மாட்டேற்று முவமையாதலானும்
உள்ளுறை யுவமமும் இசைதிரிந் திசைக்கப்படுவதா யுவமையோ டுவமிக்கப்படும்பொருள் பிறிதோராறு தாராது
அவ்வந்நிலங்களிற் பிறந்த கருப்பொருளோடுஞ் சார்த்தி யுள்ளுறுத்திக்கொள்ளுமுவமை யாதலானும் அவை முறையே வைக்கப்பட்டன.
ஒழிந்த ஒட்டு உல்லேக முதலியனவு முவமையைப் பின்சென்றிருத்தலா னவை வைத்தமுறையு முய்த்துணர்ந்துகொள்க.
அவையெல்லா மீண்டுரைப்பிற் பெருகும். உவமையைப் பின்சென்றனவல்லாத அலங்காரங்களையுந் தமக்குப்
பொருந்தின முறையே வைத்தமுறையு முய்த்துணர்ந்துகொள்க. அவையு மீண்டுரைப்பிற் பெருகும்.
அஃதாக ; ஆனா லிந்நூலுடையார் முதனூல்களிற் கூறியபடியே வழிநூலிற் சிறிது புடைநூலிலக்கணந் தவறாது கூறப்
புகுந்து மிகவுமிதன் முதனூலாகிய தண்டி கூறிய அணிகளுள் நுட்பமென்னும் அலங்காரத்தைக் குறைத்துப்
பிற முதனூலணிகள் கூறிய அணிகளையுந் திரட்டிக்கூறி, முந்து நூல்களுட் கூறாத பூட்டுவில் இறைச்சிப்பொருள் கோள்
பொருண்மொழி யென்னுமூன்றினோடும் வகைமுதலடுக்கு இணையெதுகை உபாயம் உறுசுவை புகழ்வதினிகழ்த லென்னும்
அலங்காரங்களையுங் கூட்டி அறுபத்துநாலாக மிகுத்ததூஉ மொருவழிக் குன்றக் கூறன் மிகைபடக்கூற லென்னுங்
குற்றமாம்பிறவெனின், ஆகாது ; என்னை? நுட்பமென்பது பரிகரத்து ளடங்குமெனக் குறைத்துச் செய்யுட் கணி
பெறப் புணர்ப்பதெல்லா மணியெனப்படுதலான் முன்னைய மூன்றுஞ் சொல்லிலக்கணத்தினும் பொருளியலினும்
புறத்திணையினுங் கூறியபடியே செய்யுட்கழகாதலி னணியிற்கூட்டி மிகுத்தார் ;
ஏனைய வைந்து மழகெய்துவதா யிலக்கியங்கண்டதற் கிலக்கண மியம்பியதாக்கி மிகுத்தாராகலானென்றுணர்க.
அன்றியும், வழிநூலும் புடைநூலுஞ் செய்தற்கேதுத் தொகுத்தன்முதலிய நான்கினுள்ளு முதலன
விரண்டு மிகவு மேதுவாகலானுங் கூறப்பட்டன. அற்றேல் ஐயமுந் தெரிதரு தேற்றமும் பொதுநீங்குவமையுந்
தெண்டியாசிரிய ருவமவிரியுட் புணர்க்க, அவற்றை யேனையாசிரியர் வேறுவேறணியாகப் புணர்க்க,
இந்நூலுடையார் முதலிரண்டும் பிறர்நோக்கத்தோடுங் கூட்டிப் பிறிதோ ரணியாக்கிப் பின்னையது தெண்டி
நோக்கத்தோடுங் கூட்டிப் புணர்த்ததூஉங் குற்றமாமெனின், குற்றமன்று. இருவர்க்கும் முதலான தொல்காப்பியனார்
“தடுமாறுவமங் கடிவரையின்றே” யென வழுவமைதிவாய் பாட்டாற்கூறினமையானும் அவற்றுள்
உவமவுருபு புணராமையானு முவமையைப் பின்சென்ற பிறிதோரணியாகப் பிறருடம்பட்டது தானுடம்படுதல் என்னுமுத்தியா னுடம்பட்டும்,
ஏனையது “தானே தனக்குவமைதா” னென உவமவாசகம் புணர்ந்தமையானும் “ஒரீஇக் கூறலு மரீஇய பண்பே” என்றாராதலானும்
பிறர்மதங்களைதலென்னு முத்தியானுங் கூறப்பட்டது. இங்ஙனம் பெயரு முறையுந் தொகையுமாகிய அணிகளை
முதனூலாசிரியர் வகைப்படுத்தியும் விரித்துங் கூறிய நோக்கத்தோடுஞ் சிலவற்றை யிந்நூலுடையார்
தன்கோட்கூறலென்னு முத்தியானுந் தன்குறியிடுதலென்னு முத்தியானும் வகுத்ததன்மேல் விரித்துவகுத்தும்
விரித்ததன்மேல் விரித்ததையும் அவ்வணிகட் குணர்த்தும் பீடிகைமுதலாய வுரைநடைநோக்கங்களா னாங்காங்குக் கண்டுகொள்க.
அவையெல்லா மீண்டுரைப்பிற் பெருகும்.
88.வழுவாமரபினெப்பொருளையும்விகாரந்
தழுவாநடைபெறப்புணர்ப்பதுதன்மை.
(எ-ன்) மேனிறுத்தமுறையானே தன்மையென்னு மலங்காரத்தினது பொதுவிலக்கண முணர்ற்று.
(இ-ள்) இருதிணையுட்குற்றமில்லாத இலக்கணத்தையுடைய எவ் வகைப்பட்ட பொருள்களையு முவமை முதலிய
விகாரவணிகள்கூடாதே சுபாவநடைபெறப் புலவன் பாடுவது தன்மையென்னு மலங்காரமா மென்றவாறு.
நடை – ஒழுக்கம். குற்றமில்லாத எவ்வகைப்பட்ட பொருளையு மெனவே குற்றமுள்ளவற்றின் சுபாவத்தைப் பாடுவதுந்
தன்மையா மெனினும் அலங்காரத்தின்பாற்கூடாதென்பதாம். வழுவாதமரபென்னும் வினையெதிர் மறுத்த
பெயரெச்சவாய்பாடு செய்யுள்விகாரத்தாற் றொக்கீற்றுயிர்மெய் கோவாமுத்தமென்பதுபோலக் குறைந்துநின்றது.
தழுவா வென்பது மது. விகாரம் ஆகுபெயர்.
89.அதுவே,
ஒண்பொருண்மக்களுயிருளவஃறிணை
சினைவினைபண்பிடமெனவுஞ்சிவணும்.
(எ-ன்) தன்மையின் சிறப்பிலக்கணப்பாகுபாடுணர்-ற்று.
(இ-ள்) அத் தன்மையென்னுமணி, உயர்திணையிடத்துப்பொருட் டன்மையும் மக்கட்டன்மையும்,
அஃறிணையிடத் துயிருள்ள அஃறிணைத் தன்மையும், உயிரில்லாத அஃறிணைத்தன்மையும்
அப்பொருளின் சினைத்தன்மையும், வினைத்தன்மையும், பண்புத்தன்மையும்,
இடத்தன்மையுமெனத் தனித்தனி புலப்படப் பொருந்துமென்றவாறு.
அதுவே, என்பது “சீர்கூனாதல் நேரடிக்குரித்தே” யென்பதனாற் சீர்கூனாயிற்று.
இவற்றிற்கெல்லா மெண்ணும்மை செய்யுள்விகாரத்தாற் றொக்குவிரிந்தன.
உயிரில்லாஃறிணை யென்பது முயர்திணையென்பது மெதிர்மறையெச்சமாகி விரிந்தன.
இன்னு மவ்விலேசானே யுயிருள வஃறிணையு ளியங்குதிணையும் உயிரில்லவற்றுட் கருத்துப்பொருளுங் கொள்க.
90.அவற்றுள்,
பொருளியல்பாண்பெண்ணெனவிருபுலப்படும்.
(எ-ன்) இதுவும் பொருட்டன்மைக்கோர் பகுதியுணர்ற்று.
(இ-ள்) அச் சொல்லப்பட்ட வுயர்திணை யஃறிணையுட் பொருட் டன்மை ஆடூஉப்பொருட்டன்மை
மகடூஉப்பொருட்டன்மை என விரு வகைத்தாய்த்தோற்றுமென்றவாறு.
91. அரும்பெறன்மக்கட்டன்மையுமற்றே.
(எ-ன்) இதுவும் உயர்திணைக்கண் மக்கட்டன்மைக்கோர் கூறுபா டுணர்-ற்று.
(இ-ள்) பெறுதற்கரிய மக்கட்டன்மையும் பொருட்டன்மைபோல விருவகைப்படு மென்றவாறு.
அற்று உவமவுருபு. அஃறிணைக் கொருமை பன்மை யென்பதல்லாது ஆண்பெண் ணென்பது சிறப்பின்மையாற் கூறாராயினார் ; என்னை? “ஆண்பெண்பலரெனமுப்பாற்றுயர்திணை”, “ஒன்றேபலவென்றிருபாற் றஃறிணை ” யென்பதனா லறிக.
இவற்றிற்கெல்லாஞ் செய்யுள் வருமாறு :-
செம்பொனாடைசெறிதிருமருங்கின
னம்புயத்தனிமலரலர்ந்தவுந்தியன்
கவுத்துவக்கடவுட்கவினிழன்முழுமணி
பவித்திரத்திருமகள்பதிந்தமார்பினன்
வலம்பயின்முப்புரிநூலொடும்வாடா
திலங்கியவனமாலிகைபுனையிணைப்புய
னிகல்புரிதிகிரிசங்கேந்தியகரத்தினன்
கதிர்மணிமௌலிகவித்தசேகரன்
மதிதவழ்சோலைமலையலங்காரன்
பூதலந்தாயபொன்னடி
காதலித்தவர்வல்வினைகடந்தவரே. (118)
இது ஆடூப்பொருட்டன்மை. திணை – பாடாண். துறை – கடவுள் வாழ்த்து
உரையிற்கோடலென்பதனா லுரையெழுத வேண்டுவதில்லை. பா – நேரிசையாசிரியப்பா.
கனையிருள்கடிவயிரப்பரல்செறிதமனியப்
புனைகழலொடுவனைபரிபுரப்பூந்தாளினன்
குறங்கிணையொடுமருங்கினைவளைபொலந்துகிலின
னறந்தழைதருமயன்றனையருளலருந்தியன்
கவுத்துவமணிவனமாலிகைகலந்தொளிர்திருப்
பவித்திரமுடன்மலர்மாமகள்பயின்மார்பினன்
வான்றோய்கதிரினிற்றிகிரியைவலனேந்தியு
மீன்றோய்மதியினில்வரிவளையிடனேந்தியு
மகரக்குழைதழைகாதினன்மணிமௌலியன்
சிகரப்பலதலைசேர்திருமலைமேலுறை
செல்வனை,
மனமொழிமெய்களின்வழிபடுபவராய்ப்
புனநறுமலர்பொழிபவர்பாற்
கனவிலுமுறான்கொடுங்கணிச்சியோனே. (119)
கனையிருள் – செறிந்தவிருள். வயிரப்பரல் – வயிரமணி ; உள்ளீடாய தரி.
தமனியப்புனைகழல் – பொன்னாற்புனையப்படும் வீரக்கழல். பூந்தா ளென்றது பொலிவினையுடைய சீபாதம்.
வான்றோய்கதிர்… ஏந்தியும் – வானிடத் தலமரல்பொருந்திய கதிராற்கொண்ட சக்கரத்தை வலத்தே தரித்தும்,
மீன்றோய்….. இடனேந்தியும் – நாண்மீனோடு பொருந்திய மதியாற்கொண்ட வலம்புரியை யிடத்தே பொறுத்து மென்க.
என்னை? வான்றோய் கதிர்போன்ற திகிரியை, மீன்றோய் மதிபோன்ற வலம்புரியை யென வுவமைத்தொகைத்
தொடர்மொழியன்றோவெனின், அன்று ; “இமையாதமுக்கண், மூவரிற் பெற்றவ” ரென்பது போலக் கொள்க.
ஈரிடத்தும் இன் சரியை. ஆல் என்னு முருபு இல்லென மூன்றாவ தைந்தனுருபாய் மயங்கின.
கொண்ட வென்னும் வினையுந் தொக்கது. செல்வனை யென்பது தனிச்சொல். சீபாத முதலியவற்றை யுடையனாகித்
திருமலைமே னிலைபெற்ற திருவுடையானைத் திரிவித கரணங்களாலும் அருச்சனைசெய்பவராய்க்
கைகளா னறுமலர்தூயவரிடத்துக் காலன் நனவினுங் கனவினு மணுகானென்றவாறு.
இது பத்தடியாய்ச் செல்வனை யென்னுந் தனிச்சொற்பெற்று மூன்றடி நேரிசையாசிரியச்சுரிதகத்தாலிற்ற சிந்தடிவஞ்சிப்பா.
அலங்காரமுந் திணையுந் துறையு மிதுவு மது.
பூங்கமலக்கோயிலாள்புத்தமிர்தினுட்பிறந்தாள்
வீங்குதுணைமுலையாள்வெண்ணகையா-ளோங்குபுனற்
பொன்னிநடுவுட்பொருண்மார்பகத்தாளென்
சென்னிபிரியாத்திரு. (120)
இது மகடூஉப் பொருட்டன்மை. இதனுள், பொன்னிநடுவுட் பொருள் என்ற திரண்டாற்றிடைக் கண்வளர்ந்த நம்பெருமாள்.
திணை – இதுவுமது. துறை – பெண்பாற்கடவுள்வாழ்த்து.
முப்புரிநூன்மார்பினான்முக்கோல்கைக்கொண்டுளான்
பொய்ப்புலனைவென்றபொறையுடையான்-மெய்ப்பொருளைச்
சேவிக்குநுண்ணுணர்வான்சீநிவாதன்றமியே
னாவிக்கருள்புரிந்தாள்வான். (121)
இஃது ஆடூஉ மக்கட்டன்மை. ஆவியை என்பது ஆவிக்கென இரண்டாவது நாலாவதாயிற்று.
திணை – வாகை. துறை – தாபதவாகை ; என்னை?
“பொறியுணர் வெல்லாம் புலத்தின் வழாம, லொருவழிப் படுப்பது தொகைநிலைப் புறனே”,
“மனத்தினை யொருவழி நிறுப்பது பொறையே”,
“நிறுத்திய மனத்தினை நிலைதிரி யாமற், குறித்த பொருளொடு கொளுத்துத னினைவே” என்ற
முறையே தொகைநிலை பொறைநிலை நினைத லென்னு மூன்று மிப்பாட்டினுள்ளே கூறினமையான்
“அறுவகைப்பட்ட பார்ப்பனப்பக்கமும்” என்னுஞ்சூத்திரத்துள்
‘நாலிரு வழக்கிற் றாபதபக்கமு’ மென்னு மெட்டனுள் தவஞ்செய்து யோகம்பயில்வார்க்குரிய விம்மூன்றும் வந்தமையா லெனக்கொள்க.
கூரெயிற்றாருண்கண்ணார்கொம்மையிளமுலையார்
வார்புருவத்தார்திலகவாணுதலார் – காரகத்தெம்
மால்வரையாரெண்ணிறந்தமாதருணின்னாற்குறித்த
கோல்வளையாராரிறைவகூறு. (122)
இது மகடூஉமக்கட்டன்மை. கூரெயிறு – கூரியபல். உண்கண் – மையுண்கண். கொம்மை – திரட்சி. இளமை – மேனிவனப்பு.
வார் புருவம் – நீண்டபுருவம். கோல்வளை – திரண்டவளை. வாணுதல் – ஒளி பொருந்திய நுதல். பகுதி – சேட்படை.
துறை – அறியாள்போன் றவனினைவுகேட்டல்.
வள்ளுகிருந்தோலடியுஞ்செவ்வாயும்வார்சிறைகூர்
புள்ளியுமென்சூட்டுமுறுபொற்பினதா–மொள்ளியரை
மாறிவருவாதியரைவென்றமகிழ்மாறனா
ரேறிவருவெள்ளோதிமம். (123)
இஃது உயிருளதா யியங்கு மஃறிணைத்தன்மை. வள் – கூர்மை. தோலடி – என்பில்லாத அடி. புள்ளி – பொறி.
திணை – பாடாண் பொதுவியல். துறை – அன்னவாழ்த்து. என்னை?
பாலறிமரபிற் பொருநர் கண்ணும் வாகைத்திணையுட்கூறிய சூத்திரம்போல வென்றி கூறாது
அன்னத்தினது தன்மைகூறியதனாலும் வாழ்த்தெல்லாம் பாடாணாதலாலு முணர்க.
பரியரைத்தாய்த்திணிவயிரம்பயின்றுநிலங்கிளைமுதற்றாய்
விரிசினைத்தாய்ப்பசுந்தழைத்தாய்விரைமலர்த்தாய்விழைகனித்தாய்ப்
பெரியகதிரவன்மறைந்தபிழம்பிருட்குமுறங்காது
வரிவளையூர்புனற்குருகூர்மகிழ்மாறர்திருப்புளியே. (124)
இஃது உயிருளதாகி யியங்கா வஃறிணைத்தன்மை. இவையிரண்டுங் கடவுட்டன்மையுடைத்தாயினு
முலகின்கட்டோன்றும் வடிவ மஃறிணைத் தன்மையவாதலி னிங்ஙனம் கூறுவதாயிற்று.
திணை – இதுவுமது. துறை – தாவரவாழ்த்து. பா – தரவுகொச்சகக்கலிப்பா. இருள் – ஆகுபெயர்.
ஆதாரபீடத்தமர்ந்துயர்ந்தபாதசெடி
மீதாயழுந்தமிதித்துநிமிர்தாட்டுணைத்தாய்த்
தாழ்ந்ததுதிக்கையினைத்தாவியிருகைபற்ற
வாழ்ந்தபகுவாயகத்தோங்குநாவின்
வளையெயிற்றுக்கூர்ங்கோட்டுவான்பிடர்வீழ்கற்றை
யுளைவனப்பிற்பாங்கருயர்செவித்தாயொண்கருக்கி
னூழொன்றியசீர்த்தொடூற்றமுறுமாளியின்மே
லாழங்குடைத்தாயதன்மேற்கொளாளியதாய்
நான்றதலைப்போதிகைத்தாநாவீறர்வண்புளிக்கீழ்த்
தோன்றுதிருக்காவணக்கற்றூண். (125)
இஃது உயிரிலஃறிணைத்தன்மை. இது பத்தடியான்வந்த பஃறொடை வெண்பா. திணை – இதுவுமது. துறை – மதலைவாழ்த்து.
நீண்டசெவியுறவினீள்புருவத்திம்பரொளி
கூண்டுபயநோக்கமுங்கைக்கொண்டதாம்–பாண்டவர்தந்
தேர்ப்பாகனானசிறுபுலியூரானுலகங்
காப்பான்றன்மால்வரையாள்கண். (126)
இது சினைத்தன்மை. உபயநோக்கம் – அருணோக்கமு மருணோக்க மும். பகுதி – சேட்படை. துறை – கண்ணயப்புரைத்தல்.
கைச்சிரத்தானுந்து திப்பக்கன்றினராகந்திறந்து
பச்சிரத்தமுண்டுயிருண்பான்மைத்தே–வச்சிரத்தாற்
குன்றெறிந்தானும்பரவுங்கோயிலான்பாரதப்போர்க்
கன்றெறிந்தவன்சக்கரம். (127)
இது வினைத்தன்மை. ஆகம் – மார்பு. திறத்தல் – பிளத்தல். பச்சிரத்தம் – குளிர்ந்த ரத்தம்.
அன்று – முற்காலத்து. குவ் வுருபு மயக்கம். திணை – வாகை. துறை – திகிரிவென்றி.
பூரித்துடலம்புளகித்திடப்புலமை
சீரித்துயிர்தளிர்ப்பச்சேர்ந்துருகும்–பாரித்த
முத்தமிழ்மாறன்ஞானமுத்திரைக்கைகண்டுதொழு
முத்தமராய்வாழ்வாருளம். (128)
இது பண்புத்தன்மை. பூரித்தல் – தடித்தல். புளகித்தல் – உரோமஞ் சிலிர்த்தல். புலமை – அறிவின்றன்மை.
சீரித்தல் – இடைவிடாமற் பழகுதல். தளிர்த்தல் – தழைத்தல். சேர்ந்துருகுதல் – பரத்துவ சொரூபத்தை யோகித்துக் குழைதல்.
பாரித்தல் – விரித்துரைத்தல். முத்தமிழ் – சித் தசித் தீச்சுர மூன்றுங் கூறுந் தமிழ் ; அது திருவாய்மொழி.
உளம் – ஆன்மஞானம். முத்தமிழ்மாறன் ஞானமுத்திரைத் திருக்கையைக் கண்ணினாற் கண்டுங் கையினாற் றொழுது
முத்தமராய் வாழ்வாரது ஆன்மஞானமான துடலந் தடித் துரோமஞ் சிலிர்ப்பப் பரத்துவஞானத்தோடும் பயின்ற
பரத்துவசொரூபத்தை யோகித்துக் குழையு மெனக் கூட்டுக. திணை – பாடாண். துறை – பழிச்சினர்ப் பரவல்.
உற்றபரமேட்டிமுதலோங்கியவைம்பூதநிலை
பெற்றுளதாய்ச்சோதிப்பிழம்பதாம்–பற்றிலர்பே
ரானந்தமெய்துவதாமாதியிடையென்பவுடன்
றானந்தமில்லான்றலம். (129)
இஃது இடத்தன்மை. பரமேட்டி முதலாய வைம்பூதமாவன :- பரமேட்டி, புமான், விச்சுவம், நிவிர்த்தி, சருவன்.
இது பரமபதமாகிய இடத்தன்மை. திணை – பாடாண்பொதுவியல். துறை – புலவரேத்தும் புத்தேணாடுவாழ்த்து. புலவர் – நித்தியசூரியர்.
ஏழாவரணமிசைந்தீர்ந்தண்புனற்பொன்னி
சூழாமணிமாடஞ்சூழ்ந்துளதா–வாழ்மறையோர்
வேதவொலியும்விழாவொலியுங்கூர்தகைத்தா
நாதனரங்கநகர். (130)
இதுவும் இடத்தன்மை. திணை – இதுவுமது. துறை – நகர் வாழ்த்து.
தேவும்புவனமுந்திரண்டமன்னுயிர்
யாவும்யாவருமிறந்தொடுங்கியஞான்
றொருபெருந்திருமாலுந்தியங்கமலத்
தருள்பகிரண்டகோடிகளெனுமவற்று
ளொன்றயனுலகாதியாயவீரேழி
னயனிலைமேருநடுக்கொள்பூலோக
நவகண்டமதாநாவலந்தீவொடு
முவரொன்றியநீருடைக்கருங்கடலொடு
மேழ்பெருந்தீவுமேழ்பெருங்கடலும்
வாழ்வுடைத்தாகியும்வானவர்வைகு
மேமபூதலமிடையிடுதிகிரிக்
காமர்மால்வரைகடந்தநள்ளிருளா
யண்டபித்தியினகத்தண்டகோளகைக்கீழ்
மண்டுமாழ்புனற்குமேல்வடக்கொடுகுணக்கெதி
ரைம்பதுகோடியோசனைத்தெனவளவை
யும்பரோடிம்பருமுணர்வுறவுணர்வான்
றீதறுபான்மையிற்றெருட்டும்
போதமுற்றோங்கியபுராணசித்தமதே. (131)
இதுவும் இடத்தன்மை. திணை – இதுவுமது. துறை – பேரண்ட வாழ்த்து.
இதனுள், தே என்றது அன்னியதெய்வங்கள். புவனம் – இருநூற்றொருபத்து நாலு புவனமும்.
யாவும் யாவரும் – அஃறிணைகளும் உயர்திணைகளும்.
மேருநடுக்கொள்பூலோகம் – மேருவைத் தனது மத்திமத்தே தாங்கிக்கொண்ட பூலோகம்.
வானவர் வைகு மேமபூதல மிடையிடுதிகிரிக் காமர்மால்வரை – கடவுளர் அரமகளிரோடு மின்ப மெய்திவைகும்
ஏமபூதலத்தை நல்லதண்ணீர்க்கடற்குந் தனக்கும் நடுவாக வைத்த சக்கரவாளகிரி யென்னு மழகிய பெரிய மலை.
மண்டுமாழ் புனல் – கெர்ப்போதகம். வடக்கொடு குணக்கெதிர் என்பது வடதிசைக்குங் கீழ்த்திசைக்கு மவற்றிற்
கெதிரான தென்றிசைக்கும் மேற்றிசைக்கு மென்பதாம். புராணசித்தம் – ஆகுபெயர். ஒழிந்த அகலமுரையிற்கொள்க.
பா – நேரிசையாசிரியம். எனவு மென்னு மும்மை யெச்சவும்மையாதலாற் காலத்தன்மையு முள.
நித்தமாய்மூன்றுநெறித்தாயிலவமுதல்
வைத்தபான்மைக்குரித்தாமாண்பிற்றே–யத்திகிரிச்
செங்கண்மாலுந்தியின்மேற்செங்கமலத்தோன்முதலா
மங்கண்ஞாலம்புகழ்காலம். (132)
இது காலத்தன்மை. இதனுள் மூன்றுநெறியென்றது இறப்பெதிர்வு நிகழ்வு.
இலவ முதலியனவும் முறையே பிரமகற்பமீறாக வுணர்ந்துகொள்க. திணை – பொதுவியல். துறை – பருவவாழ்த்து.
1-தன்மையலங்காரம் முற்றும்.
——-
2-வது உவமையலங்காரம்
—–
92.உவமையின்வகையேயுணருங்காலை
வினைபயனுறுப்புருவென்றநான்கினுந்
தமிதமிநிகழ்ந்துந்தம்மின்விரவியுங்
காதல்சிறப்பேநலன்வலியுடனிழி
போதியவைந்துமுறுநிலைக்களனா
யிருதிணையைம்பாலிவற்றொடுமயங்கியு
முதலொடுசினைகளின்முறைமையிற்பிறழ்ந்து
முதல்சினைவினைகுணமின்றியுமுயர்ந்தும்
பெருமையுஞ்சிறுமையும்பெற்றியிற்சிறந்து
மெண்மெய்ப்பாட்டினெழில்பெறமரீஇ
யகத்தினும்புறத்தினுமமர்தருநெறித்தா
யுரனுடையுரவோருளங்கொளமுதனூல்
வரன்முறைபுணர்க்குமாண்பிற்றாகும்.
(எ-ன்) வைத்தமுறையானே உவமையென்னு மலங்காரத்தினது பொதுவிலக்கண முணர்-ற்று.
(இ-ள்) உவமையென்னு மலங்காரத்தினது கூறுபாட்டை யாராயு மிடத்து வினையும் பயனு முறுப்பு முருவு மென்னு
நான்கும் காரணமாகத் தோன்றுவனவாகியும், அங்ஙனந் தோன்றுவன வொரு பொருளோடொருபொரு ளுவமஞ்செய்யும்
வழி யொன்றேயன்றி யிரண்டு மூன்று விரவுவனவாகியும், காதலுஞ் சிறப்பு நலனும் வலியு மவற்றோடுங் கிழக்கிடும்
பொருளுமாகிய வைந்துந் தமக்கு நிலைக்களனாகியும்,
உயர்திணைக் குயர்திணையு முயர்திணைக் கஃறிணையு மஃறிணைக் கஃறிணையு மஃறிணைக் குயர்திணையு மாண்பாற்
காண்பாலு மாண்பாற்குப் பெண் பாலும் பெண்பாற்குப் பெண்பாலும் பெண்பாற் காண்பாலும் ஒருமைப்பாற்
கொருமைப்பாலு மொருமைப்பாற்குப் பன்மைப்பாலும் பன்மைப்பாற்குப் பன்மைப்பாலும் பன்மைப்பாற் கொருமைப்பாலு
மயங்காதும் மயங்கியும், முதற்கு முதலும் முதற்குச் சினையும் சினைக்குச் சினையுஞ் சினைக்கு முதலுமாகப் பிறழாதும் பிறழ்ந்தும்,
முதலுஞ் சினையும் வினையுங் குணனு மின்றியு முவமங் கூறுவனவாகியும், பொருளினுமுவம முயர்ந்து மிறப்பவுயர்வு
மிறப்பவிழிபு முவமிக்குங்கா லின்னாவாகச் செய்யாது கேட்போர் மனங்கொள்ளும்படி சிறப்பிற்றீராவாகிச் சேர்தலியல்பு
சிறந்தும், எட்டு மெய்ப்பாட்டினொடுங் கூடி யழகுபெறு நிலைமைத்தாகி, அகப்பொருளினும் புறப்பொருளினுஞ் சென்று
பொருந்து நெறியை யுடைத்தாய்க் கற்றுவல்ல அறிவுடையோ ரறிவிற்குப் பொருந்த முதனூல் வரலாற்று
முறைமையிற் றிரியாது சேர்க்கப்பெறும் பெருமையை யுடைத்தென்றவாறு.
இதனுள் நான்கினுமென்ற வும்மை யெச்சவும்மையாகலா னவை நான்குமே காரணமாகிய வற்றோடுஞ் சொற்பொருள் காரணமாகவும்
உவமை பிறக்குமென்றவாறு. அவை மேற் கூறப்படும். மயங்கியும் பிறழ்ந்து மென்பது எதிரதுபோற்றுந் தந்திரவுத்தி.
இவற்றிற்கெல்லாம் உதாரணம் உரைநடையானுஞ் செய்யுணடையானும் வருமாறு :-
புலியன்ன மறவனென்பது வினையுவமம். ‘மாரியன்ன வண்மை’ யென்பது பயனுவமம்.
‘துடியன்ன விடை’யென்பது உறுப்புவமம். ‘செவ்வானன்ன மேனி’யென்பது உருவுவமம்.
‘செவ்வானன்னமேனி’ யென்பது வண்ணமொன்றுமே பற்றி யுவமஞ்சென்றது.
“ஊர்ந்ததேறே சேர்ந்தோளுமையே, செவ்வானன்னமேனியவ்வா, னிலங்குபிறையன்ன விலங்குவால்வையெயிற்” றென்பது
வண்ணத்தோடு வடிவும் பற்றி யுவமஞ் சென்றது.
வள்ளைக்கொடிமிசைபாய்மைக்கயல்போல்வார்குழையி
னுள்புக்குலாவருமையுண்கண்ணாய்–புள்ளார்
வகுளாம்புயன்வரைமேல்வான்பிறைக்குன்செங்கை
முகுளாததென்னோமொழி. (133)
இதனுள் வினையு முருவு முறுப்புமாகிய மூன்றுவமையு மொரு பொருட்கண்ணே பிறிதொருபொருளுங்கூடி வந்தவாறு காண்க.
இவை விரவுவமை. பகுதி – நாணநாடல். துறை – பிறைதொழுகென்றல்.
“பாவையன்ன பலராய மாண்கவின்” எ-து மகள்கட்சென்ற காதலுவமைக்கு நிலைக்களனாயிற்று.
‘என்னானை’ யென்பது மது. “முரச முழங்குதானை மூவருங்கூடி, யரசவையிருந்த தோற்றம்போலப்,
பாடல் பற்றிய பயனுடையெழாஅற், கோடியர்தலைவகொண்டதறிந”
எ-து சிறப்பினாற்பெற்ற வுவமமாதலிற் சிறப்புநிலைக்களனாயிற்று. உலகத்து ளியல்புவகையானன்றி விகாரவகையாற் பெறுஞ் சிறப்பு
‘ஓவத்தன்ன விடனுடைவரைப்பின்’ என்புழி அந்நகரின் செயற்கைநலந் தோன்றக் கூறினமையின் நல னிலைக்களனாயிற்று.
நலனென்பது அழகு. ‘அரிமா வன்னவணங்குடைத்துப்பிற், திருமாவளவன்றெவ்வர்க்”கென ஒருவன் வலிநிலைக்களனாயிற்று.
“அரவுநுங்குமதியி னுதலொளிகரப்ப”என்றது ஒன்றினிழிபுதோன்ற வுவமித்தலி னிழிபுநிலைக்களனாயிற்று.
குமரனனையானுங்குறமகளன்னாளு
மமரர்குழாமெனக்கூண்டன்பர்–தமரணங்கே
நின்றிறைஞ்சுமாயோனைநின்றவூரங்கிதன்முன்
சென்றிறைஞ்சுவார்நீதிரும்பு. (134)
இதனு ளுயர்திணைக் குயர்திணையும் ஒருமைப்பாற் கொருமைப் பாலும் பன்மைப்பாற்குப் பன்மைப்பாலும்
ஆண்பாலுக் காண்பாலும் பெண்பாற்குப் பெண்பாலும் வந்து திணையும் பாலு மயங்கா துவமை யாயிற்று.
பகுதி – உடன்போக்கு. துறை – இயைபெடுத்துரைத்தல். நகரடைந்தமைகூறலுமாம்.
“மகிழ்வார்க்கு மல்லார்க்குந், தாயாகித் தலையளிக்குந் தண்டுறை யூரனீ,”
“கலங்கவிழ்ந்தநாய்கன்போற் களைதுணைபிறிதின்றிப், புலம்பு மென் னிலைகண்டும் போகலனே யென்றியால்”
என்பனவிவை யாண் பாற்குப் பெண்பாலும் பெண்பாற் காண்பாலு மயங்கிவந் துவமை யாயிற்று.
அரிக்குழாமன்னவடலரக்கர்வாவும்
பரிக்குழாந்தேர்க்குழாம்பாயுங்–கரிக்குழா
மோர்வாளிபட்டுருள்வானோங்குசிலைக்கால்வளைகைக்
கார்வானமாலிமையோர்கண். (135)
எனவும்,
பிறைபுரைவெண்கோட்டுப்பிணர்த்தடக்கைவேழத்
திறைபுரந்தபொன்னகருக்கிப்பா–ருறைதருவான்
பூணவாவற்றெனமால்பொற்புருடையாட்கிரங்கும்
வேணவாநெஞ்சேவிடு. (136)
எனவும், வரு மிவற்றுள் உயர்திணையாண்பாற்பன்மைக் கஃறிணையாண் பாற்பன்மையும்
அஃறிணைப் பன்மைச்சினைக் குயர்திணை யொருமை முதலும் மயங்கிவந் துவமையாயிற்று.
வேழத்தையுடையவிறை – ஈண்டிந்திரன். அற்றென – அதுபோலுமென. பூணவா – மனத்துட்பூண்ட ஆசை.
வேணவா – வேட்கைப்பெருக்கம். இவ் விரண்டினுண் முன்னது திணை – வாகைப்பொதுவியல்.
துறை – வில்வென்றி ; அல்லது திணை – பாடாண். துறை – கடவுள்வாழ்த்துமாம்.
பின்னது பகுதி – இரவுக்குறி, துறை – அருமைகேட்டழிதல்.
முத்தநகைவெம்முலைபோன்மலைகொடியே
யெய்த்தவிடைநுதலுக்கேந்திழா–யொத்ததுதா
னேற்றுருவங்கொண்டநிலாத்தளிரேகூற்றுருவம்
வேற்றுருவங்கொண்டனையாண்டுமெய் (137)
இதனுள், பன்மைச்சினைக்குப் பன்மைச்சினையும், பன்மைச்சினைக் கொருமைமுதலும்,
ஒருமைச்சினைக் கொருமைமுதலும், ஒருமைச் சினைக்கு ஒருமைச்சினையும், பெண்பாற் காண்பாலும்
மயங்காதும் மயங்கியும்வந் துவமையாயிற்று. இதனுள் முத்தமும் நகையும் முலையும் சாதியேகவசனம்.
பகுதி – சேட்படை. துறை – தலைவன் பாங்கிக் கவயங்கூறல்.
‘கருஞாயிறன்னான்,’ ‘விசும்புதோலுரிப்பனபோல,’ ‘மலைநடந்தனைய,’ ‘அமிர்துபுளித்தாங்கு’
இவை முதலுஞ் சினையும் வினையுங் குணமு மில்லாதன வுவமையாயின.
“கடல்கண்டன்னகண்ணகன்பரப்பின்,” ‘மாரியன்னவண்மைத், தேர்வேளாயைக்காணிய,”
“தெள்ளமிர்தென்னத்திருந்தியதேமொழி,” “ஏறுபோற்பீடுநடை” என்பன உவமையினதுயர்ச்சியாற் பொருட்குயர்ச்சியாயின.
“அவாப்போ லகன்ற வல்குன்மேற் சான்றோ, ருசாப்போல வுண்டே மருங்கு” லென்பன
கழியபெரியவாயினுங் கழியசிறியவாயினுஞ் சிறப்பிற்றீரா வுவமையாயின. சிறப்பிற்றீர்வனவு முவமவொழிபிற் கூறுப.
எண்மெய்ப்பாட்டினும் அகத்தினும் புறத்தினும் வருவன முந்து நூல்களுட் கண்டுகொள்க.
அஃதாக ; இதன் முதனூல்செய்த தெண்டியாசிரியர் பண்புமுதலாகக் காரண மூன்றென்ப துணர்ந்து
மிந்நூலுடையா ருறுப்பினைக் கூட்டிக் காரண நாலென்பதூஉம் நிலைக்கள னைந்தென்பதூஉம்
மிகைபடக் கூறலென்னுங் குற்றமாமாலோவெனின்? ஆகாது ; என்னை?
தெண்டியாசிரியர் “வடிவி னளவின் வண்ணத்தின் வரூஉ” மென்னுஞ் சூத்திர நோக்கி வடிவும்
பண்பினுளடங்குமென் றுட்கொண்டாரேனுமிந் நூலுடையார், உற்றுணரும் பண்பும் கட்புலனாம்பண்பு மெனப்
பண்பினை வேறுபடக் கொண்டார், அங்ஙனங்கோடல் வடிவுபற்றியபண்பு இருளின் கண்ணும் உற்றுணரப்படும் ;
வண்ணமாகிய கட்புலனாம் பண்பு அவ்வாறுணரப்படாதாதலால் வடிவினைக்கூட்டி நாலென்றார்.
அன்றியும், “வினைபய மெய்யுரு வென்ற நான்கே, வகைபெற வந்த வுவமைத் தோற்றம்” எனவு
மிக்கருத்தேபற்றி முதனூல்செய்த ஒல்காப்பெருமைத் தொல்காப்பியனாருங் கூறினார் ;
இதற் கதுவு முந்து நூலாகலின் அவர்கருத்தே யிந்நூலுடையாரும் உட்கொண்டாரென வுணர்க.
அன்றியும், “விரவியும் வரூஉ மரபின வென்ப,” “சிறப்பே நலனே காதல் வலியோ, டந்நாற் சொல்லு நிலைக்கள னென்ப,”
“கிழக்கிடும் பொருளோ டைந்து மாகும்,” “முதலுஞ்சினையுமென் றாயிருபொருட்கு, நுதலிய மரபி னுரியவை யுரிய,”
“உயர்ந்ததன் மேற்றே யுள்ளுங் காலை, “பெருமையுஞ் சிறுமையுஞ் சிறப்பிற் றீராக், குறிப்பின் வரூஉ நெறிப்பாடுடைய,”
“பெருமையுஞ் சிறுமையு மெய்ப்பா டெட்டன், வழிமருங் கறியத் தோன்று மென்ப” எனவுங் கூறிய சூத்திரங்களானு மேனையவு முணர்க.
93.அதுவே,
நிறைவினுங்குறைவினுநிகழ்த்துதனெறித்தாய்த்
துறைதொறும்பழமையும்புதுமையுந்தோய்ந்து
விரியினுந்தொகையினும்விழுமிதினடைபெறும்.
(எ-ன்) இதுவும் அவ் வுவமைக்காவதோர் பொது விலக்கணமுணர்ற்று.
(இ-ள்) அதுவே- அவ்வகைப்பட்ட வுவமை யென்னுமது, நிறைவுவமை குறைவுவமை யெனப் புலவராற் கூறுதலைத்
தனக் கிலக்கண நெறியாகவுடைத்தாய் வினைமுதலாய் நால்வகைப்பட்ட இடந்தோறு முந்து நூற்புலவராற்
கூறப்பட்ட தொன்மைத்தாகியும், அதன்பின்னர் அவ்வவகாலத்துப் புலவராற் புதுவதுபுதுவதாகக் கூறப்பட்டுவரு வனவுமாகப்
பொருத்தமுற்று விரியுவமை தொகையுவமை யென இரு திறத்தினும் விழுமிதாக நடைபெறு மென்றவாறு.
விழுமிதினென்று சிறப்பித்தவதனால் இவைநான்கும் இனிமேல் வரும் விரியுவமையனைத்திற்கும் பொதுவாமெனவும்,
இன்னு மவ்விலேசானே அவற்றுள் விரியுவமையுந் தொகையுவமையும் வினைமுதலிய
நான்கினோடு மெட்டாமெனவுங் கொள்க ; என்னை? “நாலிரண் டாகும் பாலுமாருண்டே” என்றாராகலின்.
94.அவற்றுள்,
முக்கியப்பொருட்டிறமுற்றுதனிறைவே.
(எ-ன்) நிறைவுவமையின திலக்கண முணர்-ற்று.
(இ-ள்) உவமேயத்தி னான்குகூறுபாடு முவமையினு முற்றக் காண்பன நிறைவுவமையா மென்றவாறு.
ஆராவமுதமளித்ததிருப்பாற்கடலு
ணாராயணனாகணைமீது–நேரிழா
யெப்படியேகண்வளராநின்றானெனுமரங்கத்
தப்படியேகண்வளர்வானாம். (138)
இது நிறைவுவமை. இதனுள், திருப்பாற்கடனாத னுவமை. ஆரிய ரிதனைப் பூரணவுவமை யென்ப.
அங்ஙனமாதல், அவன் கண்வளரா நின்றதுபோல விவனுங் கண்வளராநின்றானென வினையுவமையும்,
அவன் றிருமேனி யெப்படியேயிருக்குமென்னும் அப்படியே யிவன் றிருமேனியுமிருக்கு மெனவே வடிவினோடு காந்தியாகிய பண்பும்,
அவனைச் சேவிப்பார்க் கச்சேவை காரணமாக முத்தியாகியகாரியம் பயக்குமது போல விவனைச் சேவிப்பார்க்கு
முத்தியாகியகாரியம் பயக்குமெனப் பயவுவமையும் உவமையாகிய திருப்பாற்கடலிடத்தும் வினைமுதலிய நான்கும்
பூரணமாகி யுவமை யுயர்ந்தபடியுங் காண்க.
எப்படியே கண் வளராநின்றானெனு மென்பது பிரமன்முதலாயினார் புராணங்க ளெப்படியேகூறுமென்பதாம்.
பயவுவமையென்பது ஒன்றன்றொழி லேதுவாகப் பிறக்குங் காரியம். அஃதெச்சமாயிற்று.
நேரிழா யென்பது மகடூஉமுன்னிலை. இரண்டாற்றிடையரங்கத்துத் திருமதிட்குப் பாற் கடனள்ளிடை யாவரண முவமை.
திணை – பாடாண். துறை – கண்படை வாழ்த்து.
பனிமதிக்கிரணம்வியன்களநடுவட்
பரந்துடல்கதுவுபோர்ப்பாய்மா
முனியுறப்பொழியுமிருண்மதமுடுக்க
முரணிழந்திரியல்போம்வேடர்
குனிதிரைத்திருப்பாற்கடலினைக்கடைநாட்
கொதித்தெழுங்கருவிடந்தொடரத்
தனிதனியுலக்கற்றறிவிழந்திரிந்த
தலைமைவானவரையொத்தனரே. (139)
இதுவுமது. இதனுள், திருப்பாற்கடலீன்ற கருவிடந் தொடர்ந்தது வெண்ணிலவு வியன்களநடுவட் பரந்துடல் கதுவிய
போர்ப்பாய்மாப் பொழியு மிருண்மத முடுக்கினதற் குவமை.
முரணிழந் திரியல்போம்வேடரென்பது தனித்தனி யொருவர்க்கொருவ ருதவாது ஓடின
தலைமைவானவரை யொத்தன ரென்றவாறு.
இருண்மத முடுக்கவெனவே பண்பும் வடிவும் வினையுவமையும், அறிவிழந்தெனவே அதனாலாய காரியமாதலாற்
பயனுவமையுமாகிப் பூரணவுவமையாயவாறு காண்க.
95. ஒன்றாதியசிலவொப்பதுகுறைவே.
(எ-ன்) குறைவுவமையாமா றுணர்-ற்று.
(இ-ள்) உவமேயத்தின்வினைமுதலிய கூறுபாடு நான்கும் ஒவ்வாது அவற்றுள் ஒன்று
முதன் மூன்றொப்பது குறைவுவமையா மென்றவாறு.
இஃது “ஒரீஇக் கூறலு மரீஇய பண்பே” என்பதன்பாற்படும்.
வாவித்திருக்குருகூர்மாறாநின்வண்டமிழென்
னாவிற்கினிமைநயப்பதாற்–றேவர்
மருந்துநிகரென்றேமதித்துரைப்பன்முற்றப்
பொருந்துவமற்றின்மையினிப்போது. (140)
இஃது ஒன்றொத்த குறைவுவமை.
வெள்ளைப்பிறைக்கோட்டுவெங்கரியைவென்றவிற்
பிள்ளைப்பெருமான்றென்பேரைவாழ்–வள்ளைக்
குழையாரைத்தோய்ந்தகன்றகொற்றவனைக்காய்ந்த
பிழையார்பொறுப்பாற்பிறர். (141)
இஃது இரண்டுபெற்றவுவமை.
பாயுங்கருங்கயல்போற்பாங்கியிவளென்றுமருங்
கேயும்படிதாவினதியற்பாத்–தோயும்
புவிநாவலர்புகழ்மால்புட்குழியாள்செவ்விக்
கவினானனத்துலவுண்கண். (142)
இது தொழில் பண்பு வடிவு மூன்றும்பெற் றொன்று குறைந்த வுவமை.
“அகர முதல வெழுத்தெல்லா மாதி, பகவன் முதற்றேயுலகு”
“மாதர் முகம்போ லொளிவிட வல்லையேற், காதலை வாழி மதி” என்பனவும் எடுத்துக்காட்டுவமை எனவும்,
ஒன்றொத்த குறைவுவமை எனவும் படும்.
செய்யகமலமுகஞ்செங்கனிவாய்முத்தநகை
வெய்யகளபமுலைமின்மருங்குன்–மொய்யிழாய்
பையரவப்பாயலான்பாடகத்தான்மால்வரைவாழ்
தையலடிமாந்தளிர். (143)
இதுவுமது. பகுதி – சேட்படை. துறை – தலைவன்பாங்கிக் கவயவங்கூறல். வடநூலார் உலுத்தவுவமை யென்பது மிது.
முந்துநூற் புலவராற் கூறப்பட்டுத் தொன்றுதொட்டுவரு முவமை யாவன :-
‘புலிபோற்பாயுமறவன்,’ ‘மாரியன்னவண்மை,’ ‘துடிபோற் சுருங்கு மருங்குல்,’ ‘பவளம்போன்ற செவ்வாய்,’
‘குறைபடுமதியந்தே யக்குறுமுயறேய்வதேபோல்,’ ‘நஞ்சுமமிர்தமுமேபோல் குணத்த,’
‘கரு மணியம்பாலகத்துப்பதித்தன்ன,’ ‘பொருகயற்கண்’ என்பன முதலியன.
அதன்பின்ன ராகுங்காலங்கடோறும் புலவராற் புதுவதுபுதுவதாகப் புணர்த்தவற்றுட் சில வருமாறு :-
கோழரையகாஞ்சிரைதாம்பழுத்தருகேநிற்பவற்றிற்
குறுகாதாங்குக்
காழிலவாங்கொழுங்கதலிக்கனிகளைச்சேட்சென்றருந்துங்
கவிகண்மார்க்க
மூழிலவாய்ப்படைத்தபொருள்பிறர்க்குதவாவுதலுத்தரைநீத்
துசிதமான
வாழ்வுடையோர்பொன்மனைச்சென்றமிர்தருந்திப்பசிதணிவார்
மார்க்கமானும். (144)
வாசமொருசிறிதின்றாயிணரூழ்த்தசெம்மலர்தம்
மருங்காய்நிற்பப்
பூசல்வரிவண்டினங்கணீளிடைப்போய்வாலிதாம்
பூந்தேன்மாந்த
லாசறக்கற்றுணர்ந்தறியாரவைக்களநீத்தேசெலச்சொல்
பவராய்நுண்ணூல்
காசறக்கற்றவர்கழகத்தடைந்துநலனுணர்பவர்தங்
காட்சிமானும். (145)
உற்றவயக்களிற்றினொடும்பிடியினையாங்கொருபாந்த
ளொருவாய்க்கொள்ளக்
கற்றதுகண்டிருதலைப்புளவற்றிருகைகவர்ந்தெடுப்பக்
கௌவுகாலைப்
பற்குலமுக்கிடருழத்தறீவினைவந்தடியிடுநாட்
பசையதாகப்
பெற்றபொருளினைப்பேணிமுதலுமிழந்திடருறுவோர்
பெற்றிமானும். (146)
உச்சவான்மலைச்சிகரத்துறுகொடிகள்படர்பாங்க
ருடையவாகும்
பச்சைவேய்ங்கழைத்தலையிற்சுழல்வனவாய்த்தோகைநடம்
பயிலுநீர்மை
மொய்ச்சுலாங்குழற்கழைக்காரிகைபாசம்பூண்டகழை
முடிமேனின்றே
விச்சைமேதகப்பவுரிகாட்டுவதாமெனக்கவினும்
விளம்பின்மன்னோ. (147)
காவின்மேற்படுபலவின்கனிகடுவன்கொடுசினைதாழ்
காமர்வல்லி
மாவின்மேற்படர்ந்ததன்மேன்மந்திகடாம்வயிற்றிடையே
மகவைத்தாங்கித்
தாவினாற்றவறுடைத்தாமெனவருவதொடுபோகுந்
தன்மைகூத்த
ரோவில்வான்கழைக்கயிற்றின்முழவுதழீஇயெதிர்நடப்ப
தொப்பதாமே. (148)
வெதிரெதிர்சென்றேபொரவிண்டுகுதழலவ்வெதிரினையும்
வெண்ணீறாக்கி
யெதிர்பொருதற்றிறனறியாச்சந்தனத்தேம்பொதும்பரையு
மெரித்தமார்க்கம்
பிதிரெனவாழ்ந்திடுசிறியார்விளைத்தசினமவர்திருவின்
பெற்றிதேய்த்துச்
சதிருடன்வாழ்ந்திடுதலைமைத்தமர்திருவுந்தொலைத்திடுமத்
தன்மைமானும். (149)
வீங்குபராரைக்கழைகண்முளிந்தனவாயுயிர்த்ததழன்
மிறைசெய்காலை
யோங்குபசுங்கழைக்குலங்கண்மழைக்குலங்கீண்டுகுபுனலா
லொழித்தபான்மை
தீங்குவிளைத்திடுமுதுவருறுமிடரையக்குலத்துட்
சிறுவர்மன்னர்
பாங்குபடைத்துளகருணைமுகத்தவராற்றணித்தருளப்
பான்மைமானும். (150)
கருநிறப்பரூஉக்காழ்க்களங்கனிவகுளக்காமர்தீங்
கனிகண்மாங்கனிகள்
பெருமிதப்பலவின்கனிசுவைத்ததன்பின்
பீடுலாங்காழிலாக்கனியை
யொருமுகப்படவுண்சுகமுறுசுகமாங்
குபயநூல்களைமுறைமுறையே
குருமுகத்துணர்ந்தபின்னர்நான்மறைதேர்
குறிப்பினர்சுகம்பொருவருமே (151)
இவை எட்டும் குருகாமான்மியத்திற் கந்தமாதனச் சுருக்கத்திற் பாட்டு.
இவற்றுள் நால்வகைக்கும் புதுவதா முவமை புணர்த்தவாறு காண்க.
96.உவமையுமுருபுமேதுவும்பொருளுந்
தவலருஞ்சிறப்பிற்றாம்விரிவனவிரி.
(எ-ன்) வைத்தமுறையானே விரியுவமைக் கிலக்கண முணர்ற்று.
(இ-ள்) உவமையும், உவமவுருபும், வினை பய முறுப் புருவென்ற நான்கினு ளொன்றும், உவமேயமும் என்னு நான்கும்
ஒன்றற் குவமங் கூறுமிடத்துத் தொகாது விரிவன விரியுவமையா மென்றவாறு.
தவலருஞ் சிறப்பிற் றாம்விரிவன வென்றதனாற் பெயரு முறையுந் தொகையுஞ் சிதையாமல் வருதல் சிறந்ததென் றுணர்க.
அவையாவன :- பவளம்போலச் செவ்வா யென்புழி, பவளம் உவமையெனவும் உவமான மெனவும் படும்.
போலவென்பது உவமவுருபு. செம்மை யென்பது குணமாகியவேது. வாயென்றது உவமேயமெனப்படும்.
இப்பெயர்-பெயர், இம்முறை முறை, இத்தொகை தொகை யெனக்கொள்க.
கருங்குவளைபோற்கருங்கண்கன்னல்போலின்சொற்
சுருங்குதுடிபோற்சுருங்கு–மருங்குல்
பிடிபோலியங்குநடைப்பெய்வளையைக்கண்டாற்
குடிபோங்குடிபோங்குணம். (152)
இதனுள் உவமைமுதலிய நான்கும் முறையே வந்தவாறு காண்க. அன்றியும், வினை பய முறுப்புரு வென்ற
நான்குவமையு மிதனகத்து வந்தவாறுங் கண்டுகொள்க. அடுக்குத் துணிவின்மேற்று. குணம் – அறிவு.
குடிபோமென்றல் தன்னிலையி னீங்குமென்றல். பகுதி – பாங்கற் கூட்டம். துறை – தலைவன்வியத்தல்.
இலவிதழ்போற்செவ்வாயியற்றமிழ்போலின்சொல்
கலகநமன்போலவடுங்கண்க–டிலகப்
பிறைபோல்வளைநுதலிப்பெண்ணமிர்தைக்கண்டா
லறைபோமறைபோமறிவு. (153)
இதுவுமது. இதனுள்ளும் நான்குவமையும் வந்தவாறுகாண்க. துறை – இதுவுமது.
இதன்கண் ணடுக்குந் துணிவின்மேற்று. அறை போதல் – கீழறுத்தல்.
97.உரைத்தநான்கினுளொன்றிரண்டிடையன
யாப்பினுளிடைப்பட்டெஞ்சலுந்தொகையே.
(எ-ன்) ஏனைத் தொகையுவமையிலக்கணமுணர்ற்று.
(இ-ள்) விரியுவமைக் குவமைமுதலாகச் சொல்லப்பட்ட நான்கனு ளிடைப்பட்டன விரண்டனு ளொன்றேயாயினும்
இரண்டேயாயினும் யாப்பினிடத் திடைப்பட்டுத்தொகுவது தொகையுவமையா மென்றவாறு.
இதனுள், தொகையென்றதல்லது உவமையென்பதுபெற்ற தியாதோவெனின், விரியுவமைக்கு
முதலே யுரைத்த சூத்திரத்தாற் பெற்ற தெனக் கொள்க.
அம்பவளச்செவ்வாயுமாரநிரைவெண்ணகையும்
பைம்பொனசலப்பணைமுலையின்–விம்பமுடன்
கண்டுகளித்தேந்திருமால்காட்கரையார்கன்னலின்சொல்
லுண்டுகளிப்புற்றிலமன்னோ. (154)
இஃ துவமவுருபொன்று மிடையிற் றொக்க தொகையுவமை ; இதனுள் அம்பவளச் செவ்வாய் முதலியவற்றிடையிற்
போலவென்னு முவமவுருபு தொக்கதனாலறிக. நெஞ்சமே யென்னு முன்னிலையு மெழுவாயு மெச்சம்.
மன்னும் ஓவும் அசை. பகுதி – இயற்கை. துறை – கிளவி வேட்டல்.
நீலம்போற்கண்ணுநிறைமதியம்போன்முகமும்
வாலமதிபோனுதலும்வண்டிமிர்பூங்–கோலத்
தொடைத்துளபமாலைத்தொழுமாறன்வெற்பிற்
படைத்துளதேன்மன்னுயிர்நண்பா. (155)
இஃதுவமவேது வென்பதொன் றிடையிற்றொக்க தொகையுவமை.
(இ-ள்) கருங்குவளைபோலக் கரியகண்ணினையும், எல்லாக் கலைகளு நிரம்பின மதிபோன்ற செம்முகத்தினையும்,
பிறைபோல வளைந்த நுதலினையும் வண்டுகளாரவாரிக்கு மழகிய தொடையாகிய துளப மாலிகையையுடைய
மாயோனைத் தொழு மாறன்றுடரிவெற்பிற் றனக் குறுப்பாகப் பெற்றுநிற்ப நீகண்டதுளதே லஃதென் னிலைபெற்ற வுயிரா மென்றவாறு.
இதனுள் நிற்ப நீகண்டது என்னுஞ் சொற்களையும் அஃ தென்னென்னுஞ் சொற்களையு மெச்சமாக நின்றனவாக்கி விரித்துரைக்க.
பகுதி – பாங்கற் கூட்டம். துறை – அவ்விடத்தேகல்.
அஃதாக ; இதன் முதனூல்செய்த தெண்டியாசிரியர் வினை பய முதலிய வேதுக்கடொகுவதே தொகையுவமையென நோக்கவும்
இந்நூலுடையா ருவமவுருபு தொகுவதுந் தொகையுவமையென்ற தென்னையோவெனின், அஃதே ;
நன்றுசொன்னாய் ! இவையிரண்டிற்கும் முதனூலாகிய தொல்காப்பியத்துள் “உவமைத் தொகையே யுவமவியல” என்பதனாலும்,
அதன்பின்னர் நேமிநாதர் பவணந்தி முதலியோரும் “உவமவுருபிலதுவமத்தொகையே” என்பதனாலுங் கூறப்பட்டது.
பவளவாய்முத்தநகைப்பைந்தொடியீரூழி
யவளவாய்க்கங்குனெடிதாமோ–துவளருவிச்
சோலைமலையார்துணைத்தோளிற்பைந்துளப
மாலைமலையாமயிற்கு. (156)
என்ப திரண் டிடையிற் றொக்க தொகையுவமை ; என்னை? பவளம் போலச் சிவந்த வாயினையு முத்துப்போல
வெளுத்த நகையினையுமென்னு முவமவுருபும் பண்பு மிடையிற் றொக்கதா லென்றுணர்க.
திணை-பெருந்திணை. துறை – கண்டுகைசோர்தல்.
கறைவேல்விழியிலவிதழிதழ்
நறைநாண்மலரஃதானனம்
புருவஞ்சிலையுருவம்புய
லுருவம்புரிகுழலெனுமது
பொன்னங்கிரிகொங்கைத்துணை
மின்னென்றுரையிடைகண்டிலன்
எனவாங்குக்
கற்றறிவுடையவென்னிறையினைக்கலந்து
ணற்றிருவுறைவிடநண்பா
சொற்றமிழ்மாறன்றுடரிவண்பொழிலே. (157)
இதுவு மிரண்டு தொக்க தொகையுவமை. இஃ தாறடித்தா யொன்றியும் ஒன்றாதும் வரும் வஞ்சித்தளையான்,
எனவாங்கு என்னுந் தனிச்சொற்பெற்று மூன்றடி நேரிசையாசிரியச்சுரிதகத்தாலிற்ற குறளடி வஞ்சிப்பா.
பகுதி – பாங்கற்கூட்டம். துறை – இயல்பிடங்கூறல்.
‘இடைப்பட்டெஞ்சலு’மென்ற வும்மையா னிடைப்பட்டுத்தொகாது முதலானும் முதலைக்கூறச் சினையறிகிளவியாகிய வாகு பெயரானும்
உவமையு முவமவுருபும் விரிந் தீற்றி லிரண்டு தொகுவனவு முளவென்ப தூஉந் தோன்றிநின்றது.
கொடிபோல்வடவரைபோற்கொவ்வைபோற்காமர்
பிடிபோலிளமான்பிணைபோல்–வடிவமைந்த
தென்னாருயிரமார்க்கின்னமிர்தன்றீந்தபிரான்
றன்னாகையன்னாடனக்கு. (158)
(இ-ள்) கொடிபோ னுடங்குகின்ற விடையினையும், வடமலை போலப் பெருத்த முலையினையும், கொவ்வைக்கனி
போலச் சிவந்தவாயினையும், அழகிய பிடிபோன்ற மென்னடையினையும், இளைய மான்பிணை போல
வெருண்ட நோக்கினையு முடைத்தாகிய வடிவா லழகமைந்திருப்ப தொன்று ;
தோழீ யெனக் குயிர்போலச் சிறந்தவனுமாகி யமரர்க்கு முன்னைநா ளமிர்தமீந்தபிரான் றிருநாகையனையாட் கென்றவாறு.
இதனு ளீற்றில் விரித்தவிரண்டுஞ் செய்யுட்கட்டொக்கவாறு காண்க. தோழீ யென்னு முன்னிலை யெச்சமாயிற்று.
பகுதி – சேட்படை. துறை – தோழிக் கவயவங்கூறல்.
இரண்டுமென்ற வும்மை யெச்சமாதலா னீற்றின் மூன்று தொகு வனவுமுள.
அன்னநடைமானோக்கணியிழாய்வார்சுமந்த
பொன்னசலந்தன்னைப்பொறுப்பதாய்–முன்னுதித்த
வெய்யாநடுவறக்கொன்றிட்டதைவைத்தென்னோசெங்
கையான்மறைத்தமையுண்கண். (159)
என்பது, அன்னநடைபோன்ற மென்னடையினையு மானோக்குப் போன்ற வெருண்ட நோக்கினையு மழகிய பூணினையு முடையாய் !
வாரைச் சுமந்த வாய்ப் பொன்மலைபோலப் பணைத்த முலையானவை தம்மைச்சுமப்பதுமாய்த் தாம் பிறந்து பணைப்பதற்கு
முன்னே பிறந்த வுடன்பிறப்பாகிய தேயாநடுவினை முற்றக்கொன்றவற்றைக் கொல்கவென வெளியில்வைத்து
யானுய்யும்படிக் குனதுயிர்போன்ற தோழியைக் காட்டித்தந்த மையுண் கண்களைக் கைகளான் மறைத்த தென்ன பேதைமையோ வென்றவாறு.
உண்கண்களையென் றோர் சொல் லிறுதி யிரண்டாவது தொக்கு விரிந்தது. ஒழிந்த சொல்லெச்சங்களும்
குறிப்பினால் விரித்துரைத்த வாறுங் காண்க. பகுதி – இடந்தலை. துறை – நாணிக்கண்புதைக்க வருந்தல்.
98. இருமையுமொருதொடர்பினுளுறலியல்பே.
(எ-ன்) இன்னு மத் தொகை விரி யுவமைகட் காவதோர் விதியுணர்ற்று.
(இ-ள்) அத்தொகையுவமையும் விரியுவமையு மாகிய விரண்டு தன்மையு மொருசெய்யுளகத்து வருதலுமா மென்றவாறு.
உம்மை செய்யுள்விகாரத்தாற் றொக்கது.
மொழியமுதமுற்றாமுலைமுகுளம்வைவேல்
விழிமகிழ்மாறன்றுடரிவெற்பி–லெழின்மயிற்கு
நன்போதவிழ்குழல்கார்நண்பனேசெம்மேனி
பொன்போன்ம்பல்வெண்முத்தம்போன்ம். (160)
என்பது, நண்பனே ! மகிழ்மாறன் றுடரிவெற்பி லழகிய மயில்போலுஞ் சாயலுடையாட்கு மொழி யமுதம்போலும் ;
இளமுலை தாமரைமுகுளம் போலும் ; விழி கூரிய வேல்போலும் ; செருகிய முல்லையரும்பவிழாநின்ற குழல் கார்போலும் ;
சிவந்தமேனி பொன்போலும் ; வெண்பல் முத்த நிரைபோலு மென்றவாறு.
இதனுள் முன்னையநான்கும் உவம வுருபு மேதுவு முவமேயத்தை முன்னிட்டுத் தொக்கன.
எழின்மயின் முற்றுவமை பின்னையவிரண்டும் விரியுவமை. போலு மென்னு முவமவுருபீற்றினுகரம்,
“செய்யுமெனச்சவீற் றுயிர்மெய் சேறலுஞ், செய்யுளு ளும்முந் தாகலு முற்றே, லுயிருமுயிர் மெய்யு மேகலு முளவே”
என்பதனால் முற்றாதலின் உயிர் கெட்டது. “மெல்லெழுத் தியையின் னகார மாகும்” என்பதனால் லகாரம் னகாரமாய்த் திரிந்தும்,
“னகார முன்னர் மகாரங் குறுகும்” என்பதனா லீற்றுமகாரங் குறுகியும்,
“செய்யு ளிறுதிப் போலி மொழிவயின், னகார மகார மீரொற்றாகும்” என்பதனா லீரொற்றுடனிலையாயும்,
மேலே பகரவொற்று வருதலின் செய்யுளிடைப்பட்டும் வந்த முற்றுப் போன்ம் என்றாயிற்று.
“ஐவிரைமாண்பகழியரந்தின்வாய்போன்ம் போன்ம்போன்ம், பின்னுமலர்க்கண்புனல்” எனப் பரிபாடலாகிய
சங்கச் செய்யுளகத்தும் பகர மேலே வருதலாற் செய்யுளிடைப்பட்டும் வந்தமை காண்க. இது தொகைவிரியுவமை.
இன்னும் வேறுபட வருவனவெல்லாந் தொகைவிரியுவமைக்க ணமைக்க.
99.அவைதாம்,
வெளிப்படைகுறிப்பினும்விழுமிதினடைபெறும்.
(எ-ன்) இதுவு மவ்விருவகை யுவமையின் கூறுபாடுணர்-ற்று.
(இ-ள்) அங்ஙனங் கூறப்பட்ட விரியுவமையுந் தொகையுவமையு மென்னு மிரண்டும்
வெளிப்படையுவமங் குறிப்புவம மென்னு மிரண்டாய் விழுமிதாக நடைபெறு மென்றவாறு.
பவளச்செவ்வா யென்புழி இரண்டற்கும் பொதுவாய செம்மைக் குணத்தை வெளிப்படையாகக் கூறினமையான்,
குறிப்பின்றியுவமை கொள்ளப்படுதலானும், பவளவா யெனநின்றவழிப் பவளத்தினையும் வாயினையுங்கூட்டிச்
செம்மைக்குணம்பற்றி யுவமஞ்செய்ததெனக் குறித்துக் கொள்ளப்படுவதல்லது வல்லென்ற பவளத்திற்கும்
மெல்லென்ற விதழிற்குமுள்ளதோரொப்புமைக்குணங்க ளாண்டில்லை யென்பதூஉம்,
பானல்போற் கருங்கண் ணென்புழியும் இரண்டற்கும் பொதுவாய கருமைக்குணத்தை வெளிப்படையாகக் கூறினமையாற்
குறிப்பின்றி யுவமையே கொள்ளப்படுதலானும், பானலுண்கண் ணெனநின்றவழிப் பானலையுங் கண்ணினையுங்கூட்டிக்
கருமைக்குணம்பற்றி யுவமஞ்செய்த தெனக் குறித்துக் கொள்ளப்படுவதல்லது பல விதழினோடும்
பலவல்லியுந் தாதுவுங் கூடிய பரிமளப்போதிற்கும் நீண்டு பிறழ்ந் துலாய்க் குழை மேற்றாய
கண்ணிற்கு முள்ளதோ ரொப்புமைக ளாண்டில்லை யென்பதூஉ முணர்க. பிறவுமன்ன ;
என்னை? “சுட்டிக் கூறா வுவம மாயிற், பொருளெதிர் புணர்த்துப் புணர்ந்தன கொளலே” என்றாராகலிற் கொள்க.
விழுமிதி னடைபெறு மென்றதனால் விழுமிதாய குறிப்புவமையுமுள. அவையு மேற்காட்டுதும்.
பாற்கடல்வெய்யோனிலொளிபாரித்தசோதிவட
நூற்கடலைத்தென்னுரைநன்னூற்கடலாய்–மாற்கடிமை
வாய்ந்தாரீடேறவகுத்தளித்தான்றண்ணளிதாந்
தாந்தாமெனும்வகுளத்தான். (161)
இது விழுமிதாய குறிப்புவமை.
(இ-ள்) உலகின்கண்ணேயிருந்து நோக்குவார்க்குத் திருப்பாற் கடலின்கட்டோன்று முதயதிவாகரனைப்போல
ஒளியைப்பாத்தின சோதிச்சொரூபத்தையுடையான் அவன் யாரெனில் வடமொழியாகிய சுருதிக்கடலைத்
தென்னுரை நூற்கடலாக்கித் திருமாலுக் கடிமையாகத் தோன்றினார் பேரின்பமெய்தப் பாடித்தந்தான்
குளிர்ந்த வண்டுகள் தாந்தாமெனப்பாடித் தேனையுண்ணும் வகுளமாலிகையை யுடையான் ;
அவன் பரமகருணையிருந்தபடியோ ! வென்றவாறு.
இது விழுமிதாய குறிப்புவமையாயது, இதனுள், திருப்பாற் கடலிற்றோன்று முதயதிவாகரன் றனது
செய்யமேனியி லாயிரங்கிரணங் களைப்பரப்பி யுலகத்திருளைத்துரத்தி யுலகினுள்ளார்க்குக் கடபடாதிகளைக் காட்டி
யின்பத்தைப் புரந்தாற்போல விவனும் வெண்டிரைப் பொருநைத்துறை மாடத் திருக்குருகூரினிடத்துச் சிவந்தமேனியோடுந்
தோன்றித் திருவாய்மொழியாகிய வாயிரம் பாடல்களையும் விரித்ததனோடு மன்னவாகனத்தினுந்தோன்றித் தன்னை
மனோவாக்குக் காயங்களாற் றியானித்தும் வாழ்த்தியும் வணங்குவார்மனத்து ளறியாமையாகிய வந்தகாரத்தை நீக்கிப்
பரப்பிரமத்தைக் காட்டித்தருவனென வினையுவமம் பயவுவமம் வடிவுவமம் உறுப்புவம மென்னும் நான்குவமையுங்
குறிப்பினாற் கொள்ளக்கிடந்தமையானெனக் கண்டுகொள்க.
தண்ணளி…… தான் என்பதற்குக் குளிர்மையுடன் கூடியதாய வண்டுகள் பாடித் தேனையுண்ணும்
வகுளமாலிகையை யுடையானெனினுமாம். வெண்டிரைப் பொருநைமாடத் திருக்குருகூரொடும்
அன்ன வாகனமுந் திருப்பாற்கடற்குவமை.
இக்குறிப்புவமை இந்நூலுடையார் யாண்டுப்பெற்றாரெனின்? நலமிகு புலமை நக்கீரர்
“உலக முவப்ப வலனேர்பு திரிதரு, பலர்புகழ் ஞாயிறு கடற்கண்டாஅங், கோவற விமைக்குஞ் சேண்விளங் கவிரொளி”
எனக் கூறிய முருகாற்றுப்படுத்ததுட் பெற்றாராம்.
வாழ்த்தெல்லாம் பாடாணாதலால் திணை- பாடாண்சார்ந்த பொதுவியல். துறை – பனுவல்வாழ்த்து ;
அன்றியும், வாகையைச் சார்ந்த பொது வியலிற்கூறிய பாடல்வென்றியுமாம்.
மின்பதிந்தகார்மேனிவிண்ணகர்மாலைப்புலவன்
பின்பதிந்துசென்றபெருமானை–முன்பதிந்து
சேவித்தாராளுந்திருநாடுதேவரெனப்
பாவித்தார்க்கெட்டாப்பதம். (162)
இதுவுமது ; என்னை? மின்குடிகொண்ட கார்போலுந் திருமகள் குடிகொண்ட மார்பினோடுங் கூடிய
கரிய திருமேனியையுடையான் எனக் குறிப்புவமை கொள்ளக்கிடந்தமையா னெனக்கொள்க.
தேவரெனப் பாவித்தார்க் கெட்டாப்பதம் என்பது-கண்டாகன்னனாலறிக. திணை – பாடாண். துறை – பழிச்சினர்ப்பரவல்.
100.உவமேயத்தியலுயர்த்தியபின்ன
ருவமப்பொருளியலுயர்த்திமுடித்தலுங்
கவினப்பொருட்குறிற்கடிநிலையிலவே.
(எ-ன்) இஃ தவ்வுமத்திற் கெய்தாத தெய்துவித்தது.
(இ-ள்) முதலே யுவமேயத்தினது பட்டாங்கை யுயர்த்திக்கூறி, அதன்பின்னர் உவமப்பொருளின்பட்டாங்கை யுயர்த்தி
முடித்தலும் அவ் வுவமேயத்திற் குயர்ச்சி குறிப்பினாலுண்டாம்படி பயனிலை தோன்றுமெனி னீக்கப்படா தென்றவாறு. கவின் ஆகுபெயர்.
முத்திரைக்கைம்மாறன்மொழிந்ததிருவாய்மொழியே
சத்தியநூலென்பர்தகைசான்ற–மெய்த்தமிழோர்
மேதினிமேலாரணப்பாமெய்த்திருமாலேபரனென்
றோதியதூஉமாதியினிலுண்டு. (163)
(இ-ள்) திருஞானமுத்திரைக்கையினையுடைய காரிமாறப்பிரான் சீமந்நாராயணனே பரதத்துவமென்று அவனது
சொரூபரூப குண விபூதிகளைக்கூறிய திருவாய்மொழியே யுண்மைநூலென்று பெருமை பூர்த்தியான வாய்மைத்தமிழ்ப்புலவோர் கூறுவர்.
அத்திருவாய்மொழியே யன்றி யுண்மைப்பொருளான திருமாலே பரதத்துவமென் றாதிகாலத்துப் பூலோகத்துக்கு மேலாய
சத்தியலோகத்தினுமிருந்து வடமொழியாகிய சுருதி கூறியதூஉ முண்டென்றவாறு.
எனவே, ஆதியாய்ச் சத்தியலோகந் தொடங்கிப் பரந்த வட மொழியா யுணர்த்திற்றென்று சுருதியாகிய நூலை
மிகச்சிறப்பித்துக் கூறுவானாகித் திருவாய்மொழியாகிய நூலை யுயர்த்திக் கூறாததுபோல வியல்பினாலாய
வுவமங் கூறினாராயினும், மண்ணின்குடத்தோடு பொன்னின்குடத்திற்குண்டாய வேற்றுமைபோல
அந்தணரு மேனை மூவகைக் குலத்தோரு மோதுவதாகவும் பரந்துபோகாதே தமிழ்மொழியா லெவ்வுலகத்தாரும்
பரதத்துவத்தையுணரும் படிக்கு மறைவின்றி யிருட்டற வேதசாரத்தை யெடுத்துக்கூறித் தெருட்டிற்றெனத்
திருவாய்மொழிக் கேற்றமானதோர் பயனிலை குறிப்பினாற் றோன்றினவாறு காண்க.
என்னை? “உவமத் தன்மையு முரித்தென மொழிப, பயனிலை புரிந்த வழக்கத்தான” என
ஒல்காப்பெருமைத் தொல்காப்பியனார் கூறிய விலக்கணத்தானும்,
“பாரி பாரி யென்றுபல வேத்தி-யொருவற் புகழ்வர் செந்நாப்புலவர்-பாரியொருவனு மல்லன்-மாரியு முண்டீண் டுலகுபுரப் பதுவே”
என்னுஞ் சங்கச்செய்யுளாகிய இலக்கியத்தானு முணர்க.
திணை – பாடாண். துறை – பனுவல்வாழ்த்து ; அல்லது வாகைசார்ந்த இயல்வென்றியுமாம். இதுவுங் குறிப்புவமைப்பாற்படும்.
101.பலபொருளொருபொருளொருவயிற்பலவயிற்
போலியில்பொருண்மறுபொருள்விபரீத
மருட்கைதலைதடுமாற்றம்விகாரந்
தடுமாற்றம்மேசமுச்சயமின்சொ
னியமமநியமம்புகழ்நிந்தையுவம
மோகமவயவமவயவிமுற்றே
யேகமாலையந்தாதிபொதுநீங்கலென்
றாகவையைந்தாமதன்விரியே.
(எ-ன்) இதன்முன்னர் உவமையெனத் தொகையா னொன்றாய் நின்றது வினை பய முறுப் புருவென்ற நான்கினோடுங்
கூடி யேதுவைந்தா மெனனுமவை முதலிய வகையின் பாகுபாடுகளெல்லா முணர்த்தி யவற்றினின்றும்
விரிந்த வுவமையினது பெயர்வேறுபாடுந் தொகையு முணர்ற்று.
(இ-ள்) அதன் விரி – அங்ஙனங் கூடுபடுத்தின வுவமையின் விரி, பலபொருளுவமைமுதலாகப்
பொதுநீங்குவமையீறாக விருபத்தைந்தா மென்றவாறு.
இவற்றிற்கெல்லாம் எண்ணும்மை தொக்கன. போலியென்பதனை யிறுதிவிளக்காக்கி, இருவயினுங் கூட்டி,
உவமமென்பதனை மத்திம தீபமாக்கி, முன்னும் பின்னும் எல்லாவற்றோடுங் கூட்டி யுரைக்க.
என்றென்ப தெண்ணிடைச்சொல் ; “என்று மெனவு மொடுவு மொருவழி, நின்றும் பிரிந்தெண் பொருடொறு நேரும்” என்பதனா லறிக.
இவையெல்லாஞ் சொல்லின்முடியு மிலக்கணத்தனவாதலாற் பெரும்பான்மையும் தம் பெயருள்ளே இலக்கணமும் புலப்படும்.
அல்லதூஉம் உரையினுங் கொள்க.
அவற்றுள், பலபொருளுவமையென்பது ஒருபொருட்குப் பலபொருளுவமைகாட்டுவது.
பலபொருளுவமையெனப் பொதுப்படக் கூறினமையான், அது ஒன்றுபலகுழீஇய பலபொருளுவமையும்,
வேறு பலகுழீஇய பலபொருளுவமையுமென விருகூற்றவாம். அவற்றுள், ஒன்றுபலகுழீஇய பலபொருளுவமை வருமாறு :-
எண்ணிற்கடங்காவிளஞாயிறொன்றியபோற்
கண்ணிற்கடங்காக்கதிர்விரிக்கும்–விண்ணிற்
பரந்தாமமாதவன்பொற்பாதநினைந்தேத்தும்
வரந்தாம்படைத்தார்வசம். (164)
இஃது ஒன்றுபலகுழீஇய பலபொருளுவமை. இதனுள், பரந்தாமம் என்றது பரமபதம்.
வரந்தாம் படைத்தார் வசம் என்பது மாதவன் றிருவடிகளை யிப்பிறப்பிற் சிந்திக்கவும் வாழ்த்தவும்
முற்பிறப்பில் வரம்படைத்தவர்தா மெவர் அவர் கைப்படும்பொருளாமென்றவாறு.
கொடியுமொருபிடியுங்கோளரவுமின்னுந்
துடியும்புரைமருங்குற்றோகை–வடிநெடுங்கண்
ணென்னுயிர்க்குத்தம்பமதாயிந்தளூர்மால்வரைத்தன்
மன்னுயிரைக்காட்டுமதித்து. (165)
(இ-ள்) திருஞானமுத்திரைக்கையினையுடைய காரிமாறப்பிரான் சீமந்நாராயணனே பரதத்துவமென்று
அவனது சொரூபரூப குண விபூதிகளைக்கூறிய திருவாய்மொழியே யுண்மைநூலென்று பெருமை பூர்த்தியான
வாய்மைத்தமிழ்ப்புலவோர் கூறுவர்.
அத்திருவாய்மொழியே யன்றி யுண்மைப்பொருளான திருமாலே பரதத்துவமென் றாதிகாலத்துப்
பூலோகத்துக்கு மேலாய சத்தியலோகத்தினுமிருந்து வடமொழியாகிய சுருதி கூறியதூஉ முண்டென்றவாறு.
இது வேறுபலகுழீஇய பலபொருளுவமை. ஒரு பிடி-ஒருகையை விரன்மடக்கின அளவாம்.
“ஒருபிடிநுசுப்பினாட்கே” எனச் சிந்தாமணியினுங் கூறினமை காண்க. பகுதி – இயற்கை. துறை – பாங்கியையறிதல்.
ஆலம்போற்செவ்வேளயில்போலடுங்காலன்
சூலம்போற்காமன்றொடுத்தியக்கு–நீலம்போற்
கொல்வான்பிறழ்கட்கொடிக்கிடமாமூலமெனச்
செல்வான்கடிகைச்சிலம்பு. (166)
இதுவுமது. பகுதி – பாங்கற்கூட்டம். துறை – இயல்பிடங்கூறல்.
2. ஒருபொருளுவமை யென்பது பலபொருட் கொருபொருளுவமை காட்டுவது :-
இமிழ்திரைநீர்ஞாலத்திருளிரியவான்றோய்ந்
துமிழ்கதிர்வெண்டிங்களுடனேயெஞ்ஞான்றும்
வலஞ்செய்சுவணவடவரைபோன்மாடம்
பொலஞ்செய்மதிள்கோபுரஞ்சிகரபந்தி
யிலங்குமதிளரங்கத்தெம்பிரான்பல்புகழைப்
பாடினார்பாதந்தனைப்பாடிச்சென்னியின்மேற்
சூடினார்க்குண்டோதுயர். (167)
என்பது பலபொருட் கொருபொருளுவமை. பலபொருள் – செம்பொன் மாட முதலியன. உவமை வடமேருவெனும் ஒன்று.
பா-ஏழடியான் வந்த பலவிகற்பப் பஃறொடைவெண்பா. திணை – பாடாண். துறை – பழிச்சினர்ப்பணிதல்.
வண்ணவனசமலர்போற்றிருமுகமுங்
கண்ணுமலரடியுங்கைக்கொண்ட–பெண்ணரசைச்
செந்தமிழ்மாறன்சிலம்பிற்சேர்ந்தகன்றென்பாலுரைக்க
வந்தவனேதிண்ணியனாவான். (168)
இதுவும் ஒருபொருளுவமை. பகுதி – இதுவுமது. துறை – தலைவனை வியத்தல்.
3. ஒருவயிற்போலி என்பது ஒரு தொடர்மொழிக்கட் பல வுவமைவந்தா லுவமைதோறும்
உவமைச்சொற் புணராது இறுதியி லோருவமைச்சொற் புணர்ப்பது :-
வாவித்திரையெறிந்தநித்திலத்தின்மள்ளரெறி
காவித்திரள்சேர்கமலமலர்–பாவைமார்
வெண்ணகையுண்கண்ணானனம்போன்மெனத்தோன்றுங்
கண்ணபுரத்தானிமையோர்கண். (169)
இஃ தொருவயிற்போலி. திணை – பாடாண். துறை – கடவுள் வாழ்த்து ; நாடுவாழ்த்துமாம்.
திரையெறிந்த நித்திலத்தினோடு மள்ளர்களை கட்டெறிந்த காவிகளுஞ் சேர் கமலமென்க.
போன்மெனத் தோன்று மென்பது போலத்தோன்று மென்றவாறு. ஒழிந்த அகல முரையிற் கொள்க.
4. பலவயிற்போலி யென்பது ஒருதொடர்மொழிக்கட் பல வுவமைவந்தா லுவமைதோறு முவமைச்சொற் புணர்ப்பது.
பொன்மலைபோலுந்திருமால்புட்குழியாள்பூண்முலைநீர்
மன்னருவிபோலுமணிவடங்கள்–சொன்னதன்மேற்
செக்கர்வான்போலுமெழிற்செம்படாமும்புனைந்தா
ரெய்க்குநூலென்னாமினி. (170)
இது பலவயிற்போலி. எய்க்குநூல் – எய்யாநிற்குநூல். பொன் மலைபோன்ற முலையின்மேற் பொற்பூணையும் பூட்டி
முத்து வடத்தையும் பூட்டிச் செம்படாத்தையு முத்தரீகமாகப்போட்டமையா னினி யிடை யிறுமென்றவாறு.
என்னா மென்பது குறிப்புமொழி. எனவே, இடையைத் தாங்கி வடமுதலியவற்றைத் தாங்கிப் புடைபெயர்த்துத்
தனத்தைப் பரிசித்து மருங்கணைந்தானாம். பகுதி – இடந்தலை. துறை – மருங்கணைதல்.
5. இல்பொருளுவமையாவது முன்பில்லாததொன்றை யொன்றற் குவமையாக்கி யுரைப்பது :-
உதிக்குங்கருஞாயிறென்றேயுவமை
மதிக்கும்வடமலைமாயோனைத்–துதிக்குந்
திருநாவுடையபிரான்செந்தமிழையோதி
யிருநாவேவாராதிடர். (171)
என்பது இல்பொருளுவமை. என்னை? கருஞாயிறு இல்லாத பொருளாதலால் அதனைக் காளமேகம்போன்ற
திருமேனிக் குவமைகூறினமையா னென்றுணர்க. திணை – பாடாண். துறை – ஓம்படை.
சொன்னவாறொன்றுரைக்கக்காணேன்றுணைமேரு
வென்னவாழ்வுற்றவிணைமுலையாண்-மன்னவா
பந்துகழங்கம்மனைகைப்பற்றுகவென்றின்றெனையும்
வந்துதழீஇக்கொண்டாண்மகிழ்ந்து. (172)
இதுவுமது ; இதனுள் துணைமேருவென்றதனால் வடமேரு ஒன்றல்ல தில்லையால் இல்பொருளுவமையாயிற்று.
இவ்வணஞ் சிந்தாமணியினும் “கோண்மின்னு மீன்சூழ் குளிர்மாமதித் தோற்ற மொத்தே” என
வந்தமையா லிதனது வேறுபாடுங் காண்க. பகுதி – உடன்போக்கு. துறை – குறிப்புணர்தல்.
6. மறுபொருளுவமை யென்பது முன்னர்வைத்த பொருட்கு நிகராவதோர் பிறிதொருபொருள் பின்னரு மதன்கண் வைப்பது :-
மாண்குலாமாறாநின்வண்டமிழ்போன்மற்றொருநூல்
காண்கலேனாங்கதுபோற்காண்கலேன்–மீண்டும்
புதல்வற்கருள்புரிந்துபொற்றூணிற்றோன்று
முதல்வற்கிணையாமுதல். 173)
இது மறுபொருளுவமை. திணை – பாடாண். துறை – பனுவல் வாழ்த்தோடு கடவுள்வாழ்த்துமாம்.
7. விபரீதவுவமையென்பது முன்பி லுவமையாகவந்ததனைப் பொருளாக்கிப் பொருளை யுவமையாக்குதல் :-
மென்றோளெனத்திரண்டவேயினங்கள்வெம்முலைக
ளன்றோவெனக்கோங்கரும்புறா–நின்றனவால்
வண்டமிழ்மாறன்றுடரிவண்பொழிலுமின்றெனக்கவ்
வொண்டொடியாய்த்தோற்றமுறும். (174)
இது விபரீதவுவமை. என்னை? “பொருளே யுவமஞ் செய்தனர் மொழியினு, மருளறு சிறப்பினஃ துவம மாகும்” என்றாராகலின்.
அன்றோ வென்பது அல்லவோவென எதிர்மறையாகி ஆம் என்றாயிற்று. பகுதி – பாங்கற்கூட்டம். துறை – பொழில்கண்டுமகிழ்தல்.
8. மருட்கையுவமை யென்பது உவமைகூறுவான் மருட்கை வயத்தனாகி யொருபொருட்குக் கூடாதபண்பினைக்
கூடுவதாகக்கொண்டு அதனை யொன்றிற் குவமையாக்கி யுரைப்பது :-
தாகம்பெறநுகர்தீந்தண்மருந்துகைத்தழலின்
வேகம்பயின்றவிதிபோலு–மோகம்
படையாதமாறன்பனிவரைமேலென்னோய்
துடையாதுநீயுரைக்குஞ்சொல். (175)
இது மருட்கையுவமை. தெண்டியாசிரியர் கூடாவுவமை யென்பது மிது.
தீந்தண்மருந்து – இனிய குளிர்ந்த வமிர்து. கைத் தழலின் வேகம் பயிலுதல் – கயந்து தழல்போலச் சுடுங் கோப மிடைவிடாமை.
பகுதி – இதுவுமது. துறை – பாங்கனைநொந்துகூறல்.
9. தலைதடுமாற்றவுவமை யென்பது மேற்றொட்டு முதலே வந்த வுவமப்பொரு ளிடையினு மீற்றில் வந்த
வுவமேயப்பொருண் முதலினும் இடையினின்ற வுவமவுருபு இறுதியிற் றொக்கதும் விரிந்ததுமாகப் புணர்ப்பது :-
மையமருண்கண்காவிவாய்பவளந்தோளிணைவே
யையவிடைநுண்ணூலகலல்குல்–பையரவங்
கஞ்சத்திருமாதுகாதலிக்குமார்பகத்தான்
றஞ்சைத்திருமான்றனக்கு. (176)
இது தலைதடுமாற்றவுவமை. இவை யுவமவுருபு இறுதியிற் றொக்கது.
“குவவின கொங்கை குரும்பை குழல் கொன்றை” யென்பது மிது.
மையமருண்கண்-கருமைபொருந்திய மையுண்கண். ஐயவிடை நுண்ணூல்-உண்டில்லையென்று சந்தேகமுற்ற
விடை நுண்ணிய நூல் போலு மென்றவாறு. ஐயவிடை யென்பதற்கு ஐயனே யென
அண்மை விளியா யுவப்பின்கண்ணே மயங்கியதாகக் கூறினானெனினுமாம். பகுதி – இதுவுமது. துறை – இயல்பிடங்கூறல்.
10. விகாரவுவமை யென்பது உவமையாகிய தன்மைப் பொருள் விகாரம் பண்ணியதாக உவமிப்பது :-
தெள்ளமிர்தத்துள்ளாயதீஞ்சுவையைமெய்வேதத்
துள்ளவுணர்வையுணர்வினா–லள்ளி
யெடுத்திசைத்ததொன்றெனலாமின்பொருளான்மாறன்
றொடுத்திசைத்தவுத்தமப்பாச்சொல். (177)
இது விகாரவுவமை. உணர்வை யுணர்வாலள்ளி யென்பது உபநிடதச் சொல்லுளிருந்த ஞானத்தைத்
தனதுண்மைஞானத்தாற் சொல்லைநீக்கித் திரட்டியெடுத் தென்றவாறு. இரும்பை யிரும்பினாலறுத் தென்பது போலக் கொள்க.
சொல்லெனவே சொல்லு மதனுட் பொருளுமாயிற்று. சொல்லு மதனுட்பொருளும் அமிர்தினுள்ள
சுவையையு முபநிடதச் சொல்லினுள்ள வுணர்வையுந் தனது பரம ஞானத்தா லள்ளி யெடுத்துச் சொல்லும்
பொருளுமாகத் தொடுத் திசைத்ததொன் றெனலா மென்க. இது பனுவல்வாழ்த்து.
11. தடுமாறுவம மென்பது ஒருபொருள் ஒருகால் உவமையுமாய் ஒருகாற் பொருளுமாகி யொருதொடர்ச்சிக்கண்ணே தடுமாறிவருவது :-
மெய்வேதம்போன்றதுநின்மெய்த்தமிழ்நின்மெய்த்தமிழ்போன்
மெய்வேதமுங்காட்சிமேயதால்–வையகமெண்
ணாவலவர்காரிதருநாவீறாநின்னிகராம்
பாவலரிங்காரோபகர். (178)
இது தடுமாறுவமை ; என்னை? “தடுமாறுவமங் கடிவரையின்றே” என்றாராகலின்.
தெண்டியாசிரியர் இதரவிதர மென்பது மிது. திணையுந் துறையு மிதுவுமது.
12. சமுச்சயவுவமை யென்பது இதனானேயன்றி யிதனையொப் பதினானு மொக்கும் என்பது :-
வண்ணத்தாலன்றிவடிவாலளவினா
லெண்ணிற்கமலமுகையேய்க்குமே–கண்ணன்
வழியார்துணைமாறன்மால்வரையாய்கன்னன்
மொழியார்துணைமாமுலை. (179)
இது சமுச்சயவுவமை. கண்ணன்வழியார்-கண்ணனே பரதத்துவ மெனநிற்கு மார்க்கத்தினையுடையார்.
துணையென்றது அவர்களான்மாவுக் குறுதித்துணை யென்றவாறு. மாறன் மால்வரையிலுள்ள தலைவனே !
கன்னலினதுபாகுபோலு மொழியையுடையாரென்று நீ சொல்லப் பட்டவ ருபயமுலை செம்மைநிறத்தா லொத்ததன்றி
வடிவினாலு மளவினாலு முள்ளத்தா லுவமைகுறிக்கின்ற செந்தாமரைமுகையை நீ சொன்னபடியே யொக்குமென்றவாறு.
குறிவழிச்சென்ற பாங்கன் தலைவி தனமுங் காண்பனோவெனிற் காண்ப துண்டென்பதற்குச் செய்யுள் :-
“அரனம்பலத்தி, னியலுள வேயிணைச்செப்புவெற்பாநினதீர்ங்கொடிமேல்” என்றதனா லறிக.
மால் வரையாயென்றதனா னில மொன்றென்பதாயிற்று. பகுதி – பாங்கற் கூட்டம். துறை – செவ்விசெப்பல்.
13. இன்சொலுவமை யென்பது பொருளினு முவமைக்கோர் மிகுதி தோன்றக்கூறி
யுவமேயத்தினு மிகுதியுளவேனு மொப்பதன்றிச் சிறந்ததன்றென்பது :-
ஒன்றாயநின்முகத்ததொண்டமிழ்வேதங்குரவ
னன்றாயுநான்முகத்ததவ்வேத–மென்றாலும்
வண்டமிழ்மாறாவண்டமிழ்மறைக்கொப்பன்றிமறைக்
குண்டெனலாமோவேறுயர்பு. (180)
இஃது இன்சொலுவமை. இதனுள் ஒப்பதன்றியென்பது ஒப்பன்றி யெனச் செய்யுள்விகாரத்தாற் றொக்கது.
திணை – பாடாண். துறை – பனுவல்வாழ்த்து.
14. நியமவுவமை யென்பது இன்னதற் கின்னதே யுவமை யென்று தேற்றேகாரம்பெறத் துணிந்துசொல்வது :-
வாய்மைமறையேநினதுவாய்ந்ததமிழ்மறையின்
வாய்மைதனக்கிணையாம்வாழ்த்துங்காற்–றாய்முலைப்பா
லுண்ணாதமெய்ஞ்ஞானமோங்கியமாறாகமலக்
கண்ணானேநின்னிணையாங்காண். (181)
இது நியமவுவமை. வாய்மைமறை – மெய்வேதம். திணை – வாகை. துறை – தாபதவாகை.
பைம்பொற்குன்றேபணையிளவனமுலை
யம்புத்துணையேயரிமதருண்கள்
குனிசிலையிரண்டேகொடுநன்புருவம்
பனிமாமதியேபழிதீர்நன்முகங்
கொடியேதளரிடைகொண்மூவேகுழ
லாடரவின்படமாமேகடிதடங்
காந்தளின்றுணைமலர்க்கவினேகையும்
பூந்தளிரன்றேபுடைபெயர்மெல்லடி மாதே,
படர்புகழ்மாறன்பராங்குசன்
றுடரிமால்வரைவளர்தோகையதியலே. (182)
இதுவுமது. பா-பொதுச்சீர் பதினாறும்வந்து நேரிசையாசிரியச் சுரிதகத்தாலிற்ற குறளடிவஞ்சிப்பா.
பணையிளவனமுலை – பெருத்த இளைய அழகிய முலை.
அரிமதருண்கண் – செவ்வரிபரந்து கண்டார்க்கு விருப்பத்தைக்கொடுக்கு மையுண்கண். பகுதி – சேட்படை. துறை – அவயவங்கூறல்.
15. அநியமவுவமை யென்பது நியமித்த வுவமையை விலக்கிப் பிறிதுமோருவமை புணர்ப்பது :-
தேன்சுவைக்கொண்டோங்குமகிழ்ச்செல்வாநின்செந்தமிழின்
வான்சுவைக்குவான்சுவைகொள்வான்கனியே–நான்பகர்தற்
கொப்பாகக்கண்டதுமற்றுள்ளிற்சுவைதெவிட்டா
தப்பான்மைத்தானதுமொப்பாம். (183)
இஃது அநியமவுவமை.
(இ-ள்) வண்டுகள் தேனையுண்ணும் பரிமள வகுளமாலிகையையுடைய செல்வனே !
நினது திருவாய்மொழியிலுண்டான சொல்லும் பொருளும் கேட்ட செவிக்கும் ஓதின நாவிற்கும் உற்ற வுணர்விற்கும்
இனிமைதரும் பெரிய வினிமைக்குப் பரமபதத்துள்ளார் மனோ வாக்குக் காயங்களால் இனிமைகொள்ளும்
பரமபதநாதனாகிய அக்காரக்கனியே நான் சொல்லுதற் கொப்பாகக் கண்டது ;
அஃதன்றி வேறுவமை குறிப்பேனாகின் முப்பொறிகளுஞ் சுவை தெவிட்டாத திருவாய் மொழியேபோலப்
பண்ணும் பாடலுமாய் நடைபெறுஞ் சுருதியும் அதற்கொப்பா மென்றவாறு.
அப்பான்மைத்தானதும் என்றது சுருதியை. துறை – பனுவல் வாழ்த்து.
16. புகழுவமை யென்பது உவமையைப் புகழ்ந்துவமிப்பது :-
விண்ணோருயிர்தளிர்ப்பான்வேலைவாயன்றுதித்த
தண்ணாரமிர்தந்தனைநிகர்க்கும்–பண்ணாற்
றிருந்துமறையைத்தமிழ்செய்தேவேசன்வெற்பின்
முருந்துநகையார்மொழி. (184)
இது புகழுவமை. பண்ணாற்றிருந்து மறை – கீதநடைத்தாய்க் குற்றமற்ற மறை ; அது சாமவேதம்.
மறையைத் தமிழ்செய் தேவேச னெனவே வேதந்தமிழ்செய்தபெருமாள் என்னு நாவீறுடையபிரான் என்பதாயிற்று.
பகுதி – இயற்கை. துறை – புணர்ச்சியிறுதிக்கட்டலைமகன் காதற்சிறப்புரைத்தல்.
17. நிந்தையுவமை யென்பது உவமையை இகழ்ந்துவமிப்பது :-
உறைகழித்துக்கைம்மிசைக்கொண்டொண்மறவரோச்சின்
மிறைபுரிவேலொப்பெனினுமேலா–நறையூர்வாழ்
தேந்துளபமால்வரைமேற்றானேதெறுஞ்செயலா
லேந்திழையாள்வன்கண்ணிணை. (185)
இது நிந்தையுவமை. ஒண்மறவர் – கொலைமேற்கொண்டொழுகு மொள்ளிமையுடையமறவர் ஒச்சில் – செலவிடுக்கில்.
மிறைபுரிவேல் – கொலையைவிரும்பும் வேல் ; எடுத்தெறிதலைவிரும்புவார்தொழிலை வேலின்மே லேற்றியது காரண காரிய மயக்கம்.
மறவரோச்சுகிற் கொல்வ தல்லது வன்கண்போற் றானேதெறுஞ்செய லின்றென்பதனால் நிந்தை யுவமையாயிற்று.
பகுதி – பாங்கற்கூட்டம். துறை – உற்றதுரைத்தல்.
18. மோகவுவமை யென்பது ஒருபொருளின்மே லெழுந்த வேட்கையாலதற்கு உவமையாகக் குறிக்கப்பட்ட
வதன்மேலும் வேட்கை நிகழ்ந்ததாகக் கூறுதல் :-
அம்பவளமொன்றிருப்பவன்புறுமாதொண்டையெனச்
செம்பதுமத்தேனேநின்செவ்வாயை–விம்பமுநே
ராதற்கதைவிரும்புமாழியான்கோழியூர்க்
காதற்சிறப்புடையேன்கண். (186)
இது மோகவுவமை.
(இ-ள்) ஆழியான் கோழியூர்ச் செய்யபதுமத்தினிடத்து விளைந்த தேன்போலுமொழியையுடையாய் !
நினது சிவந்த வாயை யதற்கொத்த அழகிய பவளமுளதாயிருப்பவும் ஆதொண்டையை யொப்பெனநோக்கி
யன்புறாநிற்கு மஃதன்றி யவ் வாதொண்டை செய்ய வாயினிறத்தோடும் வடிவிற்கு மொப்பதால்
அவ்வாயினையுங் காதலிக்கப்பட்ட சிறப்புடையே னோடுங் கூடிய கண்கள் அவ்வாதொண்டையையும் விரும்பாநின்ற வென்றவாறு.
ஆதற் கென்பது மூன்றாவது நான்காவதாயிற்று. அதையும் என்னு மும்மை விகாரத்தாற்றொக்கது.
விம்பம் – வடிவம். பகுதி – இடந்தலை. துறை – காதற்சிறப்புரைத்தல்.
19. அவயவவுவமை யென்பது அவயவத்தையுவமித் தவயவியை வாளாதே கூறுவது :-
மாதரிலவிதழ்போன்மாண்பிற்றேமாதவனால்
வானோரருந்துமருந்து. (187)
இதனுள், மாதரென்ற தவயவி. இலவித ழென்ற தவயவம். பகுதி – இதுவுமது.
துறை – நலம்புனைந் துரைத்தல். புணர்ச்சிமகிழ்தலுமாம்.
வல்லிக்கொடிமருங்குன்மாதினுக்குமேருமுலை
யல்லிக்கமலமனையதடி–கல்லதர்தீ
சொல்லும்பொழுதரங்கர்தொன்னகர்சேய்த்தாயிழாய்
செல்லும்படிக்கெளிதோசெப்பு. (188)
இதுவும் அவயவவுவமை.
(இ-ள்) வல்லிக்கொடிபோலு மருங்குல் ; வடமேருப்போலு முலை ; அல்லியோடுங் கூடிய தாமரைபோலுந் தாள்கள் ;
பரலோடுங் கூடிய வதரும் அழல்போலச் சுடும்.
சொல்லுங்காலத்தில் அரங்கர்நகரமென்றால் நெடுந்தூர மாகையா லாராய்ந்தணிந்த பூணினையுடையாய் !
நினது மாதினுக் கென்னோடும்வரும்படி யெளியதொன்றல்ல வென்றவாறு. பகுதி – உடன்போக்கு. துறை – அருமையுரைத்தல்.
20. அவயவியுவமை யென்பது அவயவியை யுவமித்து அவயவத்தை வாளாதே கூறுவது :-
பொன்னங்கொடியனையபொற்றொடிதன்றாட்சுவடு
மென்னன்புறத்தோன்றுமிங்கிவைக–ளன்னங்
கடிக்கமலஞ்சேரரங்கர்கானிகராங்காளை
யடிச்சுவடுமாங்கவையேயாம். (189)
இஃது அவயவியுவமை. அரங்கர்கானிகராங் காளை – அரங்கர்புதல்வ னாங் காமன்போல்வானாங் காளையென்பதாம்.
பகுதி – இதுவுமது. துறை – சுவடுகண்டறிதல்.
21. முற்றுவமை யென்பது அவயவ அவயவிகளை யொருசெய்யுளகத் தொக்க வுவமிப்பது :-
பொன்னெடுங்குன்றெனச்செறிந்துபுடைபரந்தபுளகமுலை
மின்னெனலாநுணுகிடையவேய்புரையுந்தடமென்றோட்
குளிர்மதிபோன்மிளிர்வதனக்கோமளப்பூங்கொம்பன்னா
டளிர்புரைமெல்லடிச்சுவடுந்தளர்ந்தனவெய்யோன்மன்னோ
குடதிசைவான்கதிர்சுருக்கிக்கொடித்தேரினொடுமறைந்தா
னடல்புனைவேடுவர்குறுகியற்றம்பார்த்தாறலைப்பார்
பொன்புனைபூண்மணிமார்பிற்புரவலவின்றிருவீரு
நன்குலத்தெம்மில்வைகிநறுந்தேன்செந்தினையருந்தி
மரையதளிற்றுயில்வைகிவைகறைவாய்த்துயிலெழுந்து
விரைகமழ்தார்மகிழ்மாறன்மெய்த்தமிழ்ச்சொற்குருகூரின்
முதிர்திரைப்பாலாழியின்வான்முகடுரிஞ்சுமுதயகிரி
கதிர்வருமுன்சேர்தல்கடன். (190)
இது முற்றுவமை.
(இ-ள்) பொன்மேருவாகிய மலைகளென்னும்படி சிக்கென்று மருங்ககன்ற புளகமுலையினையு மின்னெனத் தகுவதா
நுண்ணிய விடையினையு மூங்கில்போலும் பெரிய மெல்லிய தோளினையு மதிபோல விளங்கு முகத்தினையு முடைத்தாய
பூங்கொம்பன்னாள் தளிர்போன்ற மெல்லிய வடியிரண்டுந் தளர்ந்தன, ஆதித்தனுங் குடதிசைவாய் வானிற் கிரணங்களை
யொடுக்கிக் கொடியையுடைய தேரினோடு மறைந்தான், வெற்றியையுடைய வேடுவர்கள் அற்றம் பார்த்து வழிபறிப்பர்,
இனிப் பொன்னினாற்செய்த பூணினையணியு மார்பினையுடைய மன்னனே !
இற்றைப் போது நீங்களிருவீரு முத்தமகுலமாகிய எங்களில்லின்கண் வதிந்து, நல்லதேனினோடுங் கூடிய
தினைமாவினையுந் துய்த்து, மான்றோலிற் றுயிலமர்ந்து, வைகறையிற் றுயிலெழுந்து,
மணங்கமழாநின்ற வகுள மார்பன் மெய்த்தமிழ் பாராட்டப்பட்ட கீர்த்தியையுடைய குருகாபுரியிடத்துப் பெருத்த
திரையையுடைய திருப்பாற்கடலின்கண் வானின் துச்சியைத் தைவருங் கொடுமுடியையுடைய வுதயகிரியிற்
கதிரோ னுதிக்குமுன்ன மெய்துவதே முறைமை யென்றவாறு.
மன்னும் ஓவும் அசை. பகுதி – இதுவுமது. துறை – நெறிவிலக்கு. பா-வெண்கலிப்பா.
22. ஏகவுவமை யென்பது உவமையும் உவமேயமுந் திணை பான் முதல் சினை பெயர் வினை யென்பன மயங்கா தொன்றாயிருக்கை :-
முற்றவுணர்த்துமுதுகாப்பியம்புணர்ப்பா
னுற்றவர்தங்கண்போன்றுறங்காவா–மிற்பிரிந்தா
னல்லியலார்வந்தனைசெய்நாவீறன்மால்வரைமேன்
மெல்லியலாரின்பவிழி. (191)
என்பது ஏகவுவமை. இதுவும் பூரணவுவமைப்பாற்படும்.
(இ-ள்) நெஞ்சமே ! நன்புலவ ரஞ்சலிசெய்யு நாவீறுடைய பிரான் வண்குருகூரினிடத்து மெல்லிய
சாயலையுடையா ரின்பவிழியானது இனிநாமிவரை யில்லின்கண்வைத்துப் பிரிவோமாகில் அறமுதலிய
நாற்பொருளு மலை கடனாடு முதலிய பதினெட்டு வருணனையு மொழிந்தனவுங் குறைவின்றி யுணர்த்தப்
படுவனவாகும் பெருங்காப்பியம் பாடுதற் குட்கொண்ட புலவர்கண்போலத் துயிலொழிந்ததோடும் துன்பவிழியா மென்றவாறு.
இது, கற்பினு ளில்வாழ்க்கையென்னும் பகுதிக்கண் பிரிந்து சேய்நாட் சென்று வந்து கூடிய தலைமக னவளுறுப்புக்களை
வேட்கை மிகுதியாற் புதுவது புதுவதாகப் பாராட்டத் தலைமக ளிஃதொன்றுடைத்தென வஞ்சியவழிப்
புணர்ச்சியந்தியத்துந் துயிலாததைத் துயின்று துயிலொழிந்தோன் தன்கட் பிரிதற்குறிப்புளதாகக் குறித்த
வேறுபாடெனக் குறிப்பானறிந்த தலைமகன் முன்னிலைப் புறமொழியாகத் தன்னெஞ்சிற் கவள்குறிப்பறிவுறுத்துவான்போல
வினி நின்னிற் பிரியேனெனப் பிரியாத தன்குறிப்பினைத் தலைமகட்கறிவுறுத்தல் கலி யுள்ளும்,
“மாசில்வண் சேக்கை மணந்த புணர்ச்சியுட், பாயல்கொண் டென்றோட் கனவுவா ராய்கோற்,
றொடிநிரை முன்கையாள் கையாறு கொள்ளாள், கடிமனை காத்தோம்ப வல்லுநள் கொல்லோ” எனத்
தலைமகன் புணர்ச்சியந்தியத்துக் கனவினரற்றியதனைத் தலைவி துயிலொழிந்திருந்தவன் குறிப்புணர்ந்தனளென்பது முணர்க.
அன்றியும், கற்பினுட் குறிப்பறிவுறுத்த லென்னு மதிகாரத்தின்கண் வள்ளுவரும்
“கரப்பினுங் கையிகந் தொல்லாநின் னுண்க, ணுரைக்க லுறுவதொன் றுண்டு” என்னுங்
குறட்பாவினுட் டலைவன் றன்பிரியாமைக்குறிப்பினைத் தலைவிக் கறிவுறுத்தவாறுங் காண்க.
இதனுள், தலைவி இஃதொன் றுடைத்தென நாடின் மடனழிந்ததன்றோ வெனின்?
தலைவன்கட் டலைவி விரும்புதலா லதுவுங் கடனாயிற்று. என்னை?
“தன்வயிற்கரத்தலுமவன்வயின் வேட்டலு, மன்னவிடங்களல்வழியெல்லா, மடனொடுநிற்றல்கடனென மொழிப” என்னும்
பொருளியற்சூத்திரத்தா னுணர்க. முதுகாப்பியம் புணர்ப்பா னுற்றவர்தங் கண்போன் றுறங்காவா மென்றதனால் தோழி கூற்றன்று ;
தலைவன்கூற்றென வுணர்க ; என்னை? “இவ்விடத் திம்மொழி யிவரிவர்க் குரியரென், றவ்விடத் தவரவர்க் குரைப்பதை முன்னம்”
என்னுஞ் செய்யுளியற்சூத்திரத்தான், பெருங்காப்பிய வொழுக்கம் அறிவது பெண்டன்மைக் குரிமையன்மையி னுணர்க.
இங்ஙனங்கூறிய விலக்கணங்க ளிறந்தவற்றிற்கு மினிமேல்வருவன வற்றிற்கு மிலக்கணமென வுணர்க.
23. மாலையுவமை யென்பது ஒருபொருட்குப் பலவுவமை வந்தா லவை யொன்றோடொன் றிடைவிடாது
தொடர்ச்சியுடையனவாகப் புணர்த்துக் கடைக்கட் பொருளை வெளிப்படையாகக் கூட்டி முடிப்பது :-
பாற்கடலுண்மால்போலவன்மார்பிற்பைந்தொடிபோற்
கோற்றொடியுட்கொண்டகுணமேபோ–னூற்கடலாய்ந்
தாமாறுணர்ந்தாரறம்பயின்றநாவகலா
பாமாறன்சொன்னதமிழ்ப்பா. (192)
இது மாலையுவமை. அறம்-வேதம். உட்கொண்டகுணம் – கருணை. துறை-பனுவல்வாழ்த்து.
தென்னரங்கனுந்திச்செழுமலர்போலம்மலருண்
மன்னுமயன்போலயன்மனத்து–ணன்மறைபோ
னீங்காதொருபொழிற்கண்ணோவியம்போனின்றதொன்று
பாங்காகக்கண்டனன்வெற்பா. (193)
இதுவுமது.
(இ-ள்) வெற்பனே ! திருவரங்கேச னுந்தித்தாமரைபோலவும் அத்தாமரையுள் வைகும் பிரமனைப்போலவும்
பிரமன்மனத்துட் குடி கொண்ட நல்ல சுருதிபோலவும் ஒருபொழுதும் நீக்கமின்றி நீகூறிய
பொழிற்கண் ணோவியம்போனின்றதொரு பெண்ணுருவத்தைக் காவின தொருபக்கமாகக் கண்டன னென்றவாறு.
ஓவியம்போனின்ற தென்றான் உயிர் நின்னிடத்தும் உடலங்கு மாக நின்றதென்பது தோன்ற.
ஒருபக்கத்தேநின்ற தென்றான் ஆயத்தை நீங்கிநிற்பதுதோன்ற. பகுதி- பாங்கற்கூட்டம். துறை-பாங்கன் கண்டமைகூறல்.
24. அந்தாதியுவமை யென்பது ஒரு செய்யுளகத்துப் பல பொருட்குப் பலவுவமை வந்தான் முதலே
யுவமஞ்செய்த வுவமேயப் பொருட்பெயரினை யாகுபெயராதல் அன்மொழித்தொகைப்புறத்துவந்த
பெயராத லாக்கித் துணித்துநிறீஇ யவ்வுவமேயப்பெயரினை யந்தாதித் துவமானப்பெயராக்கி
யுவமவுருபுகொடுத்துப் பின்ன ரதன்மேல்வரு முவமேயப்பொருளோடு புணர்த்து நிகழ்த்துவது :-
குருமணிகுயின்றபொற்குடமெனத்தகைசால்
பருமணிவடந்தோய்ந்தெழுதருபணைமுலை
முலையெனப்பொடித்ததாமரைமுகைமுகைநெகிழ்
பொழுகுதண்ணறவெனவுறுநர்நன்மார்பத்
திழுகுமான்மதமளாயெழுபுனற்சங்கணித்
துறைவளங்கெழீஇயதொன்மைசான்மரபி
னீங்கிதுபுவனம்யாவையுந்தழைத்தற்
கோங்கியவிராமாநுசமுனியிருக்கை
யாங்கதுதருமமோர்படிவமுற்றனைய
பாங்குறுசக்கரபாணிபேர்புனைபதி
மழைகிழித்தெழுந்தபொன்மாளிகைச்சூளிகைத்
தழைதுகிற்கொடித்திரடாமவெண்மதியகட்
டுறுமறுத்துடைத்துவானொரீஇநுடங்கூங்குது
முருகார்மொய்ம்மகிழ்மாறன்
குருகாபுரியெனக்கூறுநன்னகரே. (194)
இஃது அந்தாதியுவமை. இதனுள், பணைமுலை யென்பது பணைத்த முலையினை யுடையாயென
வினைத்தொகைப்புறத்துவந்த வன் மொழித்தொகைப் பெயராய் அண்மைவிளியேற்றுத் துணித்துநிறீஇய வாறும்
முலையென வருபெயரினை யுவமானப்பெயராக்கி, யுவமவுருபு கொடுத்துப் பின்ன ரதன்மேல்வருந் தாமரை
முகையென்னு முவமேயப் பொருளோடும் புணர்த்தலுங் காண்க.
முகை நெகிழ்பு – முகைநெகிழ்ந்து. ஒழுகு தண்ணறவென – ஒழுகு தண்ணறவுபோல.
வுறுநர் – தன்னிடத்திலே பரிசிப்பார். இழுகுமான்மதம் – பூசுங் கத்தூரி.
அளாயெழுபுனற் சங்கணித்துறை – கலந்தோடும் புனலையுடைய திருச்சங்கணித்துறை.
ஈங்கிது வென்றது தமக்கு முன்னானவிடத்தை. ஆங்கது வென்றது தமக்குச் சேய்த்தானவிடத்தை.
ஊங்குது வென்றது இரண்டிற்கும் நடுவான விடத்தை. தாமவெண்மதி – ஒளியையுடைய மதி. ஒழிந்த வகல முரையிற் கொள்க.
அஃதேல், “அடுக்கிய தோற்றம் விடுத்தல் பண்பே” எனத் தொல்காப்பியனா ரிதனைக்கூறி மறுக்கவும்
இங்ஙனங் கூறுமது மாறுகொளக் கூற லென்னுங் குற்றமாம் பிறவெனின், ஆகாது ; என்னை?
அஃ தொருபொருளோ டொருபொருளை யுவமித் ததற் குவமவுருபுகொடுத்துப் பிறிதொருபொருளை யுவமித்தல்.
அதற்குச் செய்யுள், “மதியத் தன்ன வாண்முகம்போலும், பொதியவிழ் தாமரைப் புதுப்பூம் பொய்கை” என்பது ;
மதியத்தன்ன வாண்முகத்தை யொக்கும் தாமரை யென்றமையின் அவை யொன்றினோடொன்று பொருந்தாதென்பதுகருதி மறுத்தார்,
இஃதன்னதன்று. என்னை? பருமணிவடந்தோய்ந் தெழுதரு பணைமுலையினையுடையாயெனத் துணித்துக்கூறினமையா னென்றுணர்க.
“ஈர்ந்து நிலந்தோயு மிரும்பிடித் தடக்கையிற், சேர்ந்துடன் செறிந்த குறங்கினள் குறங்கென,
மால்வரை யொழுகிய வாழை வாழைப் பூவென” என்பதுபோலக் கூறினாரென்க.
பகுதி-உடன்போக்கு. துறை-பதிபரிசுரைத்தல். பா-நேரிசையாசிரியப்பா.
25. பொதுநீங்குவமை யென்பது உவமையைக் குறிப்பினானாதல் வெளிப்படையானாதல் கூறி
மறுத்துப் பொருடன்னையே பொருட் குவமையாக்கி யுரைப்பது :-
முற்குணத்தான்மாதர்முலைப்பாலருந்தாத
நற்குணத்தால்வேதமொருநான்கினையுஞ்–சிற்குணத்தா
லோதாதுணர்ந்துணர்த்துமுத்தமமாறற்கிணைபார்
மீதார்மனனேவிளம்பு. (195)
இது குறிப்பால் வந்த பொதுநீங்குவமை. இதனுள், மனனே விளம்பென்பது மரபுவழுவமைதி ; என்னை?
நாவாகியபொறியினது கிரியையை அந்தக்கரணத்தின்மேலேற்றி யதனைக் கூறுக வென்றதனால்.
நாவாகிய பொறிக்குச் சொற்கிளத்தலுஞ் சுவையறிதலுமாகிய இருதிறத்தனவா மவையிரண்டு மந்தக்கரணங்கள்கூடாதே
யதற்குங் கூடாதாதலா னதனை யங்ஙனங் கூறப்பட்டது.
திணை – பாடாண். துறை – “அமரர்கண் முடியு மறுவகை யானு” மென்பதனான் முனிவர்வாழ்த்து.
வாரியைமொண்டுண்டோன்வசிட்டன்முதலாய
சீரியரின்ஞானஞ்செறிந்ததாற்–காரிதருஞ்
சேயேயுடையநங்கைசெம்முலைப்பாலுண்ணாதாய்
நீயேநினக்குநிகர். (196)
இது வெளிப்படையாய்வந்த பொதுநீங்குவமை. துறை – இதுவுமது.
ஆகப் பலபொருளுவமைமுதற் பொதுநீங்குவமையீறாக வுவமவிரி யிருபத்தைந்தும் அடைவே காண்க.
102. சிறப்பினும்வரூஉந்திறமுமொன்றுளதே.
(எ-ன்) இஃதுவமவிரியு ளோதாததாகவொழிந்த தொன்றுணர்-ற்று.
(இ-ள்) ஒருபொருளைப் பிறிதொருபொருளாகச் சிறப்பித்துச் சொல்லுமிடத் துளவாய்வரூஉங் கூறுபாடு மொன் றுளதென்றவாறு.
சிறப்பென்பது ஒருபொருளையெடுத் ததற்குச் சிறந்த பல அடைகளையு முவமித் தவற்றானே யுவமையாக்கி யுரைப்பது.
நுண்டுகிற்கொடிகணுடங்குபுவளங்கெழு
வெண்பொன்மாளிகைசுலாம்வீதிதெண்டிரையெழும்
பாற்கடற்பரப்பதாய்வரிபலபயின்மதிண்
மேற்படநிவந்துவிளங்குகோபுர
மைவாய்ச்சேடன்மண்டலித்தனனாகிப்
பைவாய்த்தலைநிமிர்பான்மையவாகக்
கருங்கடன்மொண்டெழுங்கருவிக்கார்மழை
யொருங்கதனனந்தலையுறப்படிந்ததொடு
மோங்குபொற்கம்பத்துச்சிமேலதனொளி
பாங்குறவுச்சியிற்பதிதருபானு
யோகநித்திரைகொளுமுரவோனுந்தியி
னேகதாட்டாமரைப்பொகுட்டிறைவனைநிகர்
சினகரக்குருகாபுரியினுட்செவ்வியி
னனவரதமுஞ்சராசரங்களாக
வுதிக்குமன்னுயிர்களையுவந்தே
துதிப்பர்நித்தியரெனத்துறவுளோரே. (197)
இது சிறப்புவமை. திணை – இதுவுமது. துறை – சினகர வாழ்த்து.
103. அடையொடுபொருட்கடைபுணர்க்குமஃதிரட்டை.
(எ-ன்) இதுவும் விரியுளோதாத வொழிபுணர்-ற்று.
(இ-ள்) அடையடுத்த முக்கியப்பொருட் கொப்புமை கூறும் ஒப்புடைப்பொருளிடத்து முக்கியப்பொருளி னடை
புலப்படப் புணர்ப்பது மிரட்டையுவமையா மென்றவாறு.
புணர்ப்பது மென்னு மும்மையால் ஒற்றைக்கிளவியும் இரட்டைக் கிளவிவழித்தாகிவருவன கொள்க;
என்னை? “இரட்டைக்கிளவி யிரட்டைவழித்தே” என்றாராகலின். உவமை யென்பது அதிகாரத்தாற் பெற்றது.
நறைமல்கியகொழுங்காவியைப்போனள்ளிரவினுநீ
டுறைமல்கியகண்டுயிலாமையன்பர்க்குரைக்கிலநான்
மறைமல்கியசெந்தமிழ்மாறன்வண்குருகூர்ப்பொருநைத்
துறைமல்குசேவற்சிறையிறைநீங்கிற்றுயரன்னமே. (198)
இஃ திரட்டையுவமை ; நறைமல்கியகாவிபோ லுறைமல்கியகண் ணென்பதா லறிக. மல்குதல் – பெருகுதல்.
உறை – துளி. இறை நீங்கில் – சிறிது நீங்கில். துயரன்னம் – துன்புறுமன்னம்.
பகுதி – ஒருவழித்தணத்தல். துறை – ஓதிமப்பெடையோடூடியுரைத்தல்.
ஊனூறியவிருகோட்டொருமாவையுறுபுனல்வன்
மீனூறுசெய்வதைத்தீர்த்தபிரான்வடவேங்கடத்திற்
றேனூறிலவிதழைக்கண்டபோழ்திலென்சிந்தையும்பர்
வானூர்மதிமுகத்தாளிதழாகமதித்திடுமே. (199)
இஃது ஒற்றைக்கிளவி யிரட்டைவழித்தாய்வந்த வுவமை ; இதனுள், தேனூறிலவிதழைக்கண்டபோழ்தெனக் கூறிய
வழிப் பானமூறுமித ழென்னாதே இதழென ஒற்றைக்கிளவியாய்க் கூறினமையா னென்றுணர்க.
பின்னர்வந்த விதழ் – அதரம். உம்பர் வானூர் மதிமுகத்தா ளென்பதன்கண்ணு மிவ்வுவமை வந்தவாறு காண்க.
அது, “கருங்கால் வேங்கை வீயுகு துறுக-லிரும்புலிக் குருளையிற் றோன்றுங் காட்டிடை” என்னுங் பாட்டினுங் காண்க.
முன்னர்வந்ததற்கும் “பொன்காண் கட்டளை கடுப்பச் சண்பின் புன்காய்ச் சுண்ணம் புடைத்த மார்பின்” என்பதனுட் காண்க.
பகுதி – இடந்தலை. துறை – புனங்கண்டுமகிழ்தல்.
104. உவமையுமுருபுந்தொடர்வழிப்பிறிதுமொன்
றுவமேயப்பொருட்கடைபுணர்ப்பதுமுள.
(எ-ன்) இதுவு மெய்தாத தெய்துவித்தது.
(இ-ள். ) ஒப்புடைப் பொருளொடு புணர்ந்த வுவமவுருபிற்குப் பின்னாகப் பிறிதுமோ ரொப்புடைப்பொருண்
முக்கியப்பொருட் கடையாக முன்னோராற் புணர்க்கப்பட்டுவருவது முளவென்றவாறு.
இஃ திலக்கியங்கண்டதற் கிலக்கணங் கூறியதெனவுணர்க.
அம்பனையவேற்கண்ணணங்காலறிவழிந்த
திம்பருனக்கெய்தியதாலெவ்வுளா–னும்பரெலாம்
போற்றவருண்மாலைப்போற்றார்போலாயினையான்
மாற்றமிதற்கென்னுரைக்கேன்மற்று. (200)
அம்பனையவேற்கண்ணென்றவழி யுவமப்பொருளின் துருபின் பின்னர் வேற்கண்ணென வந்தவாறு காண்க.
இதற்கு முன்னோர் கூறிய விலக்கியமாகக் கண்டன யாவையோ வெனின்,
“துப்புறழ் தொண்டைச் செவ்வாய்” எனத் திருத்தக்கமாமுனிகள் கூறிய சிந்தாமணியினும்,
“ஆம்பனாறுந் தேம்பொதி நறுவிரைத்-தாமரைச் செவ்வாய்” என்புழித்
“தேம்பொதிநறுவிரை யாம்பனாறுந் தாமரைச் செவ்வாய்” என இளங்கோவடிகள் பாடிய அந்தி மாலைச்
சிறப்புச்செய்காதையினுங் கண்டவை யென்றுணர்க.
இம்பருனக்கும் என்னு மும்மை செய்யுள்விகாரத்தாற் றொக்கது. பகுதி – பாங்கற்கூட்டம். துறை-பாங்கன்கழறல்.
105. மரபினும்வருவதோர்மரபுடைத்தென்ப.
(எ-ன்) இதுவு மெய்தாததெய்துவித்தது. இலக்கியங்கண்டதற் கிலக்கணங்கூறலு மாம்.
(இ-ள்) ஒருதொடர்பினு ளொருபொருட்காதல் பலபொருட்காதல் உவமைகூறுமிடத் துவமப்பொரு ளொருகுழுவினு ளொரு
மரபாகப் பலவுவமம்வருவது மரபுவமையா மிலக்கணத்தை யுடைத்தென்று கூறுவர் சான்றோ ரென்றவாறு.
செந்தாமரைவதனஞ்சேதாம்பல்வாய்நயன
நந்தாதசெங்குவளைநாடுங்காற்–கொந்தார்
வகுளம்புனைவார்வரைமயிற்குக்கஞ்ச
முகுளம்புணர்மாமுலை. (201)
இது மரபுவமை ; என்னை? கோடு கொடி நீர் நிலம் என்னும் நால்வகைப்பூக்களுள் நீர்ப்பூவாகிய குழுவுள்,
செம்மையென்னு மோரிலக்கணத்தனவாந் தாமரை யாம்பல் குவளை யென்னும் மூன்றினையும்
முகம் வாய் நயனம் முலை யென நான்கிற்கு மரபுபொருந்துவனவாக வுவமம்புணர்த்தலினெனக் கொள்க.
இதற் கிலக்கியங்கண்டதாவது :
“கடையாயார் நட்பிற் கமுகனைய ரேனை, யிடையாயார் தெங்கி னனையர்- தலையாயா, ரெண்ணரும்
பெண்ணைபோன் றிட்டஞான் றிட்டதே, தொன்மை யுடையார் தொடர்பு” என்பதனுள் ஓரினத்தனவாகிய
புறக்காழ்ப் புன்மரமேகூறி யொழிந்தமரங்க ளொப்பன வுளவாயினுங் கூறாராயினாராதலான் மரபுவமையாமென வுணர்க.
துறை – இயல்பிடங் கூறல்.
106.ஒத்ததுவென்றதென்றொருபொருட்குவமை
வைத்தனவாயொருதொடர்பினும்வருமே.
(எ-ன்) இதுவு மெய்தாத தெய்துவித்தது.
(இ-ள்) ஒருபொருட் குவமைகூறுமிடத்து ஒருபொருளை யொத்தது ஒருபொருளை வென்றது என்றிருபொருளைக்
குறித்தனவா யொரு செய்யுளகத்துவருவனவு முவமவிலக்கணத்திற்குக் கூடியும் நீங்கியும் வருமென்றவாறு :-
கூற்றுவன்வேல்போன்றுகுகன்வேலைவென்றுகொலை
யாற்றலுறும்வன்கண்ணமர்விளைப்பத்–தோற்றமுறுங்
கொல்லிப்பாவைக்கிணையாய்நின்றதெவன்கோகனக
வல்லிப்பாவைக்கிணையாவாய். (202)
இஃது ஒத்தது வென்றதென்றல். ஆற்றல் – பெருமை. தோற்றம் – பொலிவு.
கொல்லிப்பாவை – காமுகரைக்கொல்லும் பாவை. கோகனக வல்லிப்பாவை – திருமகள். பகுதி – இயற்கை. துறை – இரந்துபின்னிற்றல்.
தெண்ணறவைவென்றுதிரைத்தெள்ளமிர்தையொத்தமொழிப்
பெண்ணரசேமாதவன்றென்பேரைவாய்த்–தண்ணறும்பூக்
கொய்யாமலாயமுடன்கூடாமலூசலிற்றாள்
வையாமனின்றதென்னோமற்று. (203)
இது வென்ற தொத்த தென்றல். பகுதி – இதுவுமது. துறை – முன்னிலையாக்கல்.
107. ஏதுநுதலியமுதுமொழியினும்வரும்.
(எ-ன்) விரியுவமையினு ளின்னு மோ ரொழிபுணர்-ற்று.
(இ-ள்) அவ்வுவமை யேதுப்பொருளைக்குறித்துமுடித்தற்குப் பிறிதொருபழமொழியினும் வருமென்றவாறு.
பாம்புகடித்ததற்குத்தேளுக்குப்பார்ப்பதுபோ
லாம்புகழ்மால்கச்சியணிவரைவா–யாம்பகட்டா
லோடத்துணிந்தளித்தானுய்த்தநோய்க்கின்றுவெறி
யாடத்துணிந்தானறிவு. (204)
இஃது ஏதுநுதலியமுதுமொழியுவமை ; என்னை?
“நுண்மையுஞ் சுருக்கமு மொளியுடை மையு. மென்மையு மென்றிவை விளங்கத் தோன்றிக்,
குறித்த பொருளை முடித்தற்கு வரூஉ, மேது நுதலிய முது மொழி யென்ப” என்றாராகலின்.
இதனுட் குறித்தபொருண்முன்னரொரு முதுமொழியினை வைத்துப் பின்னர்த் தான்குறித்த பொருளை
வெளிப்படையாகவைத்தமையா னெனவுணர்க.
பகட்டாலோடத் துணிந்தளித்தானென்பது யானையைக்கண் டியாங்கள் பயந்தோடா நிற்ப அவ்வியானையையும்
பொருதற்குத்துணிந் திவளுயிரைத் தந்தானென்க. உய்த்தநோய்க்கு-தந்தநோய்க்கு.
வெறியாடத் துணிந்தான் என்பது இகழ்ச்சிக்குறிப்பு. அறிவென்ற தீண்டறியாமை.
“உழுத வுழுத்தஞ் செய் யூர்க்கன்று மேயக், கழுதை செவியறிந் தற்றால்-வழுதியைக், கண்டநங்
கண்ணீ ருகுப்பப் பெரும்பணைத்தோள், கொண்டன மன்னோ பசப்பு” என்பது மிது. துறை – வெறிவிலக்கு.
108. பிசியினும்புலப்படும்பெற்றியதாகும்.
(எ-ன்) இதன்முன்னர் விரியுவமையி னொழிபுகூறி யிதனுட் டொகையுவமையினதொழிபுணர்-ற்று.
பிசியென்பது நற்பொருள் ; என்னெனின்? “பிசியென்ப பொய்யுஞ் சோறும் பேசுநற் பொருளும்” என்பதனா லறிக.
(இ-ள்) பிசியென்ற இலக்கணத்தோடும் புலப்படு மியல்பினையு முடைத் தவ்வுவமை யென்றவாறு.
அஃதாவது உவமேயப் பொருட்குள்ள சினை வினை சார்பு முதலியன வுவமப்பொருட்கண் ணில்லையாயினும்
அவற்றை யதனோடு சார்த்தி யுவமப்பொருளொன்றனையுங்கூற வுவமேயப்பொருளு மேதுவு முவம வுருபும் விரிந்து புலப்படுதலாம்.
வருங்குன்றினைக்கடிந்தெம்மன்னுயிரைத்தந்தா
னிருங்கங்கணக்குன்றிருப்பப்–பெருந்தகைசால்
செந்தமிழ்மாறன்சிலம்பிற்சேய்நீநடித்தருந்த
வந்ததையானோதடுப்பேன்மற்று. (205)
இஃது ஒப்பொடுபுணர்ந்த வுவமத்தானுஞ் சார்பினானும் வந்த பிசியுவமை ; என்னை?
“ஒப்பொடு புணர்ந்த வுவமத் தானுந், தோன்றுவது கிளந்த துணிவி னானு, மென்றிரு வகைத்தே பிசிவகை நிலையே”
என்றாராகலின். இதனுள், வருங்குன்றினை யென்றது யானையை எனவும், இருங்கங்கணக்குன்றென்றது
சார்போடுந் தோளினை யெனவும் வினையானும் வடிவானும் சார்பானும் உவமவுருபுமுதலியனவு
முவமேயப்பொருளும் புலப்படுவதாயிற்று. ஒழிந்த அகல முரையிற் கொள்க. பகுதி – இதுவுமது.
துறை-களிற்றிடையுதவிக் கறத்தொடு நிற்றல்.
109. முக்கியப்பொருட்குமுக்கியப்பொருளுவமை
புணர்ப்பதுமுதன்மைப்புலனெறிவழக்கே.
(எ-ன்) இதுவு மொருவகையா மொழிபுணர்-ற்று.
(இ-ள்) உவமேயப்பொருட் குவமேயப்பொருள்களை யுவமமும் பொருளுமாக்கியச் செய்யுளகத் துரைப்பனவும்
புலவராற்றுவழக்கமா மென்றவாறு. இஃது இலக்கியங்கண்டதற் கிலக்கணங் கூறல்.
சீதரனேமுத்தனெனுந்தேற்றமுறச்சிந்தையினுட்
பேதமைபோலற்றபிறர்நசையும்–பாதகமாம்
பொன்றாவழுக்காறெனப்போயதுபுலமைக்
கொன்றாப்புறங்கூறலும். (206)
என்பது, நெஞ்சமே ! நாம் சீமந்நாராயணனே யகிலாண்டகோடி பிரமாண்டங்களையுஞ் சத்தாவரணங்களையும் பிரகிருதியையும்
கடந்து மேலாய விரசைக்கக்கரையா முத்தியைத் தருவதற்குரியனென்ப தாரியனா லுணர்ந்து அறிவுபிறந்தபின்னர்
நம்மிடத்து முன்பு நின்ற வறியாமை போல வகன்ற தொழிந்த அர னய னென்னு மிருவரைப்பற்றின பசையும் ;
அதுவுமன்றிப் பாதகத்திற் கேதுவா மழுக்காறகன்றதுபோ லகன்றது அறிவிற்குப்பொருந்தாப் புறங்கூறலும் ;
ஆதலாலினி நா மீடேறினே மென்றவாறாயிற்று.
திணை – பொதுவியல். துறை – முதுகாஞ்சி. எதிர்மறைகளை யுவமமும் பொருளுமாக்கிய திரண்டானும் பெறுதற்கு இலக்கியம்,
“இழிவறிந் துண்பான்க ணின்பம்போ னிற்குங், கழிபே ரிரையான்க ணோய்” என்பதனாலறிக.
110.உருவகநிரனிறையதிசயஞ்சிலேடை
தற்குணந்தற்குறிப்பற்புதம்விரோத
மொப்புமைக்கூட்டமேதுவிலக்குடன்
மெய்ப்படவிரவுமேதகவுடைத்தே.
(எ-ன்) அவ் வுவமையலங்காரம் பிறவலங்காரங்களோடுங் கூடி வருமாறு கூறுகின்றது.
(இ-ள்) உருவகமுதலாக விலக்கீறாக மேற்கூறப்படும் பதினோரலங் காரங்களுடன் விரவிவரு மவ்வுவமையலங்கார மென்றவாறு.
மெய்ப்படவிரவும்-பொருள்பெறவிரவு மென்பதாம். மேதகவுடைத்து – பெருமையுடைத்து.
111.இவைதத்தமவிலக்கணங்களிற்றிறம்பா
துவமச்சொற்புணர்ந்திறினஃதுவமை.
(எ-ன்) இஃ தவ்வுவமையலங்காரம் பிறவலங்காரங்களோடுங்கூடி வருவதற் கோ ரறிகுறியுணர்-ற்று.
(இ-ள்) இவை-பதினோரலங்காரமும், தனக்குத் தனக்கு விதித்த விலக்கணங்களிற் குன்றா துவமவுருபுடனேகூடி
யுவமையந்தன்மை பெறமுடியுமாயி னவற்றை யவ்வவபெயரானே யுவமையென்று பெயர் கொடுத்து வழங்கப்பெறு மென்றவாறு.
பூந்தண்வகுளாபரணன்புயசயிலம்
வாய்ந்தவருவிவரைமானும்–பாய்ந்ததிரை
தங்கொலிநீர்வையந்தனைச்சூழிருடுரத்தும்
பொங்கொளிசேர்முத்தவடம்பூண்டு. (207)
இஃது உருவகவுவமை. இதனை முதனூல்செய்த தண்டியாசிரியர் உருவகத்தின்கண் ணுவமையுருவக மென்றார்.
அதற்குக் காட்டிய, “மதுமகிழ்ந்த மாதர் வதன மதிய, முதய மதியமே யொக்கும்” என்ற செய்யுளகத்
துருவகவாய்பாடாகவந் துவமவுருபோடிறுதலி னது பொருந்தாதாதலா னிவ ரதனை யுவமையி லுருவகவுவமையென்று
பெயர்கொடுத்ததே பொருத்தமென்றறிக.
பூந்தண் வகுளாபரணன்-பொலிவினையுங் குளிர்மையையுமுடைய மகிழமாலிகையை யாபரண மாகவுடைய மாறன்.
புயசயிலம் – திருப்புயங்களாகிய மலை வாய்ந்த – புலப்படுவதான.
அருவிவரைமானும் – நீரருவியோடுகூடிய வரையை யொக்கும். பாய்ந்ததிரை – பரந்ததிரை.
புயசயிலம் முத்துவடம்பூண்டதால் நீரருவியுடன்கூடிய மலையையொக்குமெனக் கூட்டுக. திணை – பாடாண். துறை – புயவருணனை.
மலைமதிதேன்மாறன்வரைவேல்விழியாண்
முலைவதனநண்பாமொழி. (208)
இது நிரனிறையுவமை. பகுதி – பாங்கற்கூட்டம். துறை – இயல்பிடங் கூறல்.
புருவநயனம்பொருசிலைவேல்போன்ற
திருமகணின்னோடுவரிற்செல்வா–கருவிளைமென்
பூநீனிறமாயன்புட்குழிசூழ்வாசமலர்க்
காநீர்த்தடமாங்கடம். (209)
இதுவுமது. இவையிரண்டும் பெயரொடுபெயர் நிரனிறையுவமை.
வாசமலர்க்காநீர்த்தடமாம் – பரிமள மலர்ச்சோலையும் வாவியும்போலக் குளிர்மையையுடையவாம் ;
கடம் – சுரம். நின்னொடுவருகி லவளுக்கெனக் கூட்டுக. ஒழிந்த வகல முரையிற் கொள்க.
பகுதி – உடன்போக்கு. துறை – ஆதரங்கூறல்.
காருலாவியகொழும்பொன்மணிமாடவெயிற்பிழம்புகதுவநாளு
மேருமால்வரையெனவேபொலிந்தபனிவரைக்குலங்கள்வேலைநீர்சூழ்
பாருமாடகநகரிற்சிறந்தவிறன்மதன்மகுடபந்திமானும்
வாருலாமுகிழ்முலைமங்கையருமலைமகள்குழுவின்வாழ்வார்மன்னோ. (210)
என்பது குணவதிசயவுவமை. திணை – பாடாண். துறை – நகர வாழ்த்து (குருகாமான்மியம்).
வார்செறிந்துகல்லாரமன்னியகலத்தவாய்த்
தார்செறிந்தவல்லியெழுதற்கிடமாஞ்–சீர்செறிந்த
நற்றிருமால்வைகியதென்னாகைத்தடமானு
முற்றிழையாண்முற்றாமுலை. (211)
இது செம்மொழிச்சிலேடையுவமை. தடத்திற்குந் தனத்திற்குஞ் சிலேடை.
(இ-ள்) தண்ணீர்பொருந்திச் செங்கழுநீரோடுங்கூடி யிடமகன்ற தாய்ப் பூநெருங்கின வல்லிக்கொடிகடோன்றுதற்
காகரமாந் தடத்தை யொக்கும், கச்சினதசத்தடங்கி மாணிக்கப்பூ ணிலைபெற்று மார்பிடத்த வா யொழுங்குசேர்ந்த
தொய்யிலெழுதுதற் கிடம்பெற்றன முற்றிழையா ளிளமுலையென்றவாறு.
பொலிவுகுடிகொண்ட நல்ல திருமால்வைகு மழகிய திருநாகைத் தடத்தை யெனக் கூட்டுக.
தடத்தின்மேற் சொல்லுங்கால், வார் – தண்ணீர். செறிதல் – பொருந்துதல். கல்லாரம் – செங்கழுநீர்.
மன்னி – கூடி. தார் – பூ. செறிதல் – நெருங்குதல். வல்லி – கொடி. எழுதல் – தோன்றுதல்.
இடமாம் – ஆகரமாம். தனத்தின்மேற் சொல்லுங்கால் வார்- கச்சு. செறிதல் – அடங்குதல். கல்லாரம் – மாணிக்கப்பூண்.
மன்னி – நிலைபெற்று. அகலம் – மார்பு. தார் – ஒழுங்கு. செறிதல் – சேர்தல். எழுதல் – எழுதுதல்.
இடமாம் – இடம்பெற்றதாம் என்க. பகுதி – பாங்கற் கூட்டம். துறை – செவ்விசெப்பல்.
பகுதி – இயற்கை. துறை – நலம்புனைந்துரைத்தலுமாம்.
மான்மதங்கூர்வெங்களபமட்டிக்கமைந்துளவாய்க்
கானிலவாவாரநிழல்கைக்கொண்ட–ஞானமுனி
செஞ்சொற்றமிழ்மலயமேபோலுஞ்சீதரன்வாழ்
தஞ்சைத்திருமான்றனம். (212)
இது பிரிமொழிச்சிலேடையுவமை. இது மலயத்திற்குந் தனத்திற்குஞ் சிலேடை.
(இ-ள்) மயக்கத்தைத்தருங் கடமுண்டான வெம்மையைச்செய்யும் யானையும் பூவிற்றேனும் வைத்ததேனும்
நிறைந்துளவாய்க் காடாய இலவும் ஆச்சாவும் சேர்ந்த மலைப்பக்கங்கள் குளிர்மையைத் தன்னிடத்துக்கொண்ட
தமிழ்மலையை யொக்கும், கத்தூரிமிகுந்த விருப்பத்தைத் தருஞ் சந்தனச்சேற்றைப் பூசப் புளகித் திறுகிய
வலியையுடையவாய்ப் பரிமளநிலைபெற்று முத்தினொளியைத் தன்னிடத்துக்கொண்ட
புன மான்போலும் விழியையுடையாள்தனம் என்றவாறு.
ஞானமுனி செஞ்சொற் றமிழ்மலையை யெனவுஞ் சீதான்வாழ் தஞ்சைத் திருமான்றனமெனவு முன்னும் பின்னுங் கூட்டுக.
கூர் வெங்களபம் – வினைத்தொகை. ஏகாரம் – அசை. பொதியத்தின்மேற்சொல்லுங்கால் மால் – மயக்கம். மதம் – கடாம்.
கூர் – உண்டான. வெம்மை – வெப்பம். களபம் – யானை. மட்டு – பூவிற்றேன். இக்கு – வைத்ததேன் ;
“தேன், றுளியொடுமதுத்துளி”யென்றார் சிந்தாமணியினும். அமைதல் – நிறைதல். உளவாய் – உண்டாய்.
கான் – காடு. இலவு – இலவமரம். ஆ – ஆச்சாமரம். வாரம் – பக்கம். நிழல் – குளிர்மை.
முலைமேற்சொல்லுங்கால். மான்மதம் – கத்தூரி. கூர்தல் – மிகுதல். வெம்மை – விருப்பம். களபம் – சந்தனச்சேறு.
மட்டித்தல் – பூசுதல். மைந்து – வலி. கான் – பரிமளம். நிலவா – நிலைபெற்று. ஆரம் – முத்துவடம்.
நிழல் – ஒளி. கைக்கொண்ட வென்ப திருதலைக்கு மொருபொருள். இது பகுதி – இயற்கை. துறை – நலம்புனைந்துரைத்தல்.
நடுக்கற்றறைவளத்தினன்பொருள்களெல்லா
மிடுக்கற்றுதவுமியல்சான்–றொடுக்கமற
வேய்ந்தமலையமெனவளர்கின்றான்பரன்சீ
ராய்ந்ததமிழ்மகிழ்மாறன். (213)
இஃது இருவகைச்சிலேடையும் விரவி யிரண்டுபொருளைக் கவிநாயகனுக் குவமையாக்கி யவற்றை யிரட்டுறமொழிந்து
மூன்றாவது கவி நாயகன்மேலுஞ் சிலேடை செல்வதாக வவனு மவைபோலிருந்தானென்னு மூன்று
பொருள்பயந்தசிலேடையுவமை. இது பொதியத்திற்குங் கடலுக்குங் காரிமாறப்பிரானுக்குஞ் சிலேடை.
(இ-ள்) அசைவற்றுப் பக்கப்பாறைகளின் வளத்தோடுங்கூடி நல்ல பொருள்களையெல்லாங் குறைவற்றளிக்கு
மியல்பமைந் தழிவின்றித் தகுதியடைந்த பொதியமலையொப்பெனவும் தழையாநின்றனன்.
மத்திமம் பாராகிய தறைவளத்தோடுங்கூடி நல்லபொருள்களையெல்லாங் குறைவறவளிக்கு மியல்பமைந்து
அழிவின்றித் தகவடைந் தழகிய வலையையுடைய கடலை யொப்பெனவுந் தழையாநின்றனன்,
அவன் யாரெனில் உண்மைநூல்களை யோதாதுணர்ந்து பிறர்க்குணர்த்தும் வளத்தினோடுங்கூடி
நல்லபொருள்களையெல்லாங் குறைவறவளிக்குந் தகுதியடைந்து பரத்துவ சொரூபரூபகுணவிபூதியாகிய
பொலிவினையாராய்ந்த திருவாய்மொழி யென்னுந் தமிழையுடைய திருமகிழ்மாறன் என்றவாறு.
மலயத்தின்மேற்சொல்லுங்கால், நடுக்கு – அசைவு. அற்று – இன்றி. அறை – பாறை. வளத்தின் – வளத்தோடுங்கூடி.
கடன்மேற்சொல்லுங்கால், நடு – மத்திமம். கற்றறை – பாராகிய தறை. வளத்தின் – வளத்தோடுங்கூடி.
மாறன்மேற் சொல்லுங்கால், நடுக்கற்று-உண்மைநூல்களை யோதாதுணர்ந்து. அறை – உணர்த்தும்.
வளத்தின் – வளத்தோடுங் கூடி என்க. எல்லாம் – முழுதும். இடுக்கு – குறைவு. அற்று – இன்றி.
உதவும் – அளிக்கும். இயல் – இயல்பு. சான்று – அமைந்து. ஒடுக்கம் – அழிவு. அற்று – இல்லையாக, என்க.
இப்பாட்டினுள் “வளத்தி னன்பொருள்களெல்லா மிடுக்கற்றுதவு மியல்சான் றொடுக்கமற வேய்ந்த” வென்னுந்
துணையு மூன்றுபொருட்கு மத்தச்சிலேடை யொன்றாய்நின்றன. அவற்றுள்ளும் பொருளென்பது
பலபொருளொருசொல்லாதலின் மலை முதலிய மூன்றுபொருட்கு முறை முறையே
சந்தனம் அகில் குங்குமம் தக்கோலம் ஏலம் இலவங்கம் சாதிக்காய் தேன் என்பனவும் பிறவும், சங்கு முத்து பவளம் என்பனவும் பிறவும்,
சித் தசித் தீச்சுர மென்பனவுமாம். இதனுள், ஏய்ந்தமலைய மெனநின்ற பெயரெச்சவாய்பாட்டைக் கடலைக்கூறுமிடத்து
ஏய்ந்து என வினையெச்சவாய்பாடாக நிறுத்தி அம் அலையென்பவற்றை இடையில் ஏற்பன வந்தனவாக
வளர்கின்றா னென்னுந் தன்னெச்சமான வினையோடுங் கூட்டுக.
பரன்சீராய்ந்த தமிழ் என்பது காரண காரிய மயக்கம். திணை – பாடாண். துறை – செந்துறைப்பாடாண்பாட்டு.
பெற்றாளிகழவளர்த்தாளிடர்செயப்பேர்த்துறவொன்
றற்றாகமெங்குங்கருகியும்வாய்விட்டாற்றுமந்தோ
பொற்றாமரைக்கண்ணன்விண்ணோர்பிரான்புட்குழியில்வஞ்சங்
கற்றார்பொருட்பிரிவுற்றிடைவேனிற்கருங்குயிலே. (214)
இஃது அத்தச்சிலேடையுவமை. பகுதி – பொருள்வயிற்பிரிதல். துறை – குயின்மேல்வைத்துக்கூறல்.
சொற்பொருள்காரணமாகவும் உவமைபிறக்கும் ; அவை முன்னர்க்காட்டுவது மென்றாம் ; அவை யிவை யெனவுணர்க.
அறிவுடையார்தத்துவநுண்பொருளுரையாய்ந்தறிகழகத்
தறிவொன்றில்லா
வறிதுடையாரடைதரிற்சிற்குணத்தினராய்த்தலைப்படுமவ்
வாழ்வுபோல
வெறிவரிவண்டுளர்நறுமென்சந்தனப்பூம்பொதும்பரிடை
விராயவேனை
முறிபடுதண்சினைவெளிற்றுத்தாருவுமாங்கதிற்கமழு
முதன்மைத்தாமே. (215)
இது தற்குணவுவமை. துறை – பருப்பதவாழ்த்து.
சிலைவணக்குந்திருநுதலார்சிற்றிடையைவணக்கியவச்
சிறுமைநோக்கி
முலைவணக்கஞ்செய்ததுபோன்முதுக்குறைவந்தடைந்துபொறை
முதிரநோன்றா
ணிலைவணக்கங்கொண்டதுகண்டீன்றதாய்சுமந்திறுத
னெறித்தன்றென்றே
தலைவணக்கங்கொண்டுகதிர்நிலமகட்கேசரணமெனச்
சாய்ந்தமன்னோ. (216)
இது தற்குறிப்பேற்றவுவமை. நாடுவாழ்த்து. (இவையிரண்டுங் குருகாமான்மியம். )
கொடிமேல்வளருமிருகுன்றுமுளவென்னும்
படிமேதகப்பணைத்தபாவாய்–வடிவேற்கட்
பொற்றொடிக்கைப்பூமகள்கோன்புத்தூர்வரைமடமான்
சிற்றிடைமேற்கொங்கைத்திரள். (217)
இஃது அற்புதவுவமை ; என்னை? குன்றின்மேற் கொடிவளர்வதல்லது கொடிமேற் குன்று வளர்வதின்று,
ஆதலான் அற்புதவுவமை. அற்புதமென்பது ஆச்சரியம். பகுதி – சேட்படை.
துறை – பாங்கிக் கவயவங்கூறல். பாங்கன் செவ்விசெப்பலுமாம்.
மின்னுமரவும்விளங்கிழாய்நின்னிடையும்
பன்னுதமிழ்மாறன்பனிவரைவா–யுன்னில்
விருத்தமுளவாயிருப்பமெய்யுவமைக்கென்னோ
பொருத்தமுடைத்தென்னும்புவி. (218)
இது விரோதவுவமை. பகுதி – இடந்தலை. துறை – நலம்புனைந் துரைத்தல்.
எப்பொருளுங்கோதற்றிசைக்குமறையம்மறைபோன்
மெய்ப்பொருளெல்லாஞ்சொலுநின்மெய்த்தமிழு–முப்பொருளு
மாசின்றுணர்த்துமயனயன்போன்மாறாநீ
யாசின்றுணர்த்துமவை. (219)
இஃது ஒப்புமைக்கூட்டவுவமை. எப் பொருளு மென்பன :-
“மிக்க விறைநிலையு மெய்யா முயிர்நிலையுந், தக்க நெறியுந் தடையாகித் தொக்கியலு, மூழ்வினையும் வாழ்வினையும்” என்பனவாம்.
முப்பொருளும்…… உணர்த்தும் என்பது அங்ஙன முதலிற் கூறிய மறை, அரி அயன் அரனென்னுமவர்
மூன்று பொருளாய் முக்குணமாய் மூன்றுதொழிலா யிருக்குமெனக் கூறியவண்ணமே குற்றமின்றி யுணர்த்து மென்பதாம்.
இன்றியென்னும் வினையெச்சவாய்பாட்டிகரம் இன்று என உகரவீறாயிற்று ; என்னை?
“அன்றி யின்றியென் வினையெஞ் சிகரந், தொடர்பினு ளுகர மாய்வரி னியல்பே” என்றாராகலின்.
அவற்றை யென்பது அவையென இரண்டாவ திறுதியிற்றொக்கது.
கோதற்றென்பதனைக் கோதறவென்றாக்குக. முன்னது – பனுவல்வாழ்த்து. பின்னது – இயன் மொழிவாழ்த்து.
மாடசூளிகைக்கொழும்பொற்றகட்டமைத்தமுழுமணிவால்
வயிரநீலம்
பாடல்சால்பசுமணிபொன்னிறப்புருடராகமிவை
பத்திவாய்ந்து
கோடலால்வளந்தருசெங்கேழ்கிளர்மாண்செக்கரொடுங்
குறைவொன்றில்லா
வாடகாசலக்குடுமிவளைத்தெழுமிந்திரதனுவொத்
தவிர்வதொன்றே. (220)
இஃ தேதுவுவமை. துறை – நாடுவாழ்த்து.
(குருகாமான்மியம். )
பூரணமாங்கண்மலர்க்கும்புத்திக்குந்தித்திக்குங்
காரணத்ததாமோகடலமிர்தந்–தாரணிமேற்
கன்னியிடத்தார்பரவக்காகோதரத்துவளர்
பொன்னியிடத்தாரமுதைப்போல். (221)
இது விலக்குவமை. துறை – கடவுள்வாழ்த்து.
அளிமருவும்பொற்காவகமணந்துஞ்சங்க
வொளிமருவுநீணிதியுட்கொண்டும்–விளிவில்லா
நன்னரங்கவீடருளநாடாதருளரங்கன்
றென்னரங்கநேர்வரும்புத்தேள். (222)
இதுவும் விலக்குவமை.
(இ-ள்) அளிமருவும் பொற்கா- கொடையைப்பயிலும் பொற்சொரூபமான கற்பகக்கா. மணந்து – குடிபுகுந்து.
சங்கவொளி மருவு நீணிதி – சங்கநிதி. திருவரங்கத்தின்மேற் சொல்லுங்கால். வண்டு பொருந்திய பொலிவையுடைய சோலைகள்.
(மணத்தல்-) பரிமளங்கூர்தல். சங்கவொளிமருவுநீணிதி – பாஞ்சசன்னியத்தைத்தரித்த அன்பர்க்கழியாவைப்பாகிய அரங்கநாதன்.
நன்னர் – நன்மை. வீடு – பரமபதம். நாடாது – ஒவ்வாது ; அப் பரமபதத்தைக்கொடுக்கப் புத்தேள் நினையாது.
திருவரங்கம் பரமபதங்கொடுக்கு நினைவுள்ளதா மாதலாற் புத்தேளைத் திருவரங்கத்துக் குவமைகூறுவது பொருந்தாதென விலக்குக.
நேர் வரும்புத்தேளென்பது இகழ்ச்சிக்குறிப்பு ; எதிர்மறையு ளடங்கும். இங்ஙன முவமையைக் கூறிவிலக்குதலால் விலக்குவமையாயிற்று.
இதனுள்ளுஞ் சிலேடை விரவிற்றேனும் வீடருளநாடாதென்பதனால் விலக்குவமையென்பதே நோக்கம்.
தண்டியாசிரியரும் “குழை பொருது நீண்டு குமிழ்மேன் மறியா, வுழைபொருதென் னுள்ளங்கவரா” வென்னும்
விலக்குவமையினுஞ் சிலேடைவிரவியதூங் காண்க. திணை – பாடாண். துறை – நகரவாழ்த்து.
ஆக உருவகவுவமை முதலாக விலக்குவமை யீறாகப் பதினொன்றும் அடைவே வந்தவாறு காண்க.
112.சிறப்பிற்றீர்ந்தசெய்கையவாகி
யிறப்பவுயர்த்தலிழித்தன்மிகுத்தல்
குறைத்தல்பான்மாறுதல்கொள்கடனிலவே.
(எ-ன்) உவமைக்குக் கூறிய பொதுவிதிச்சூத்திரத்துட் பெருமையுஞ் சிறுமையும் பெற்றியிற்சிறந்து மென்பதற்குச்
சிறப்பிற்றீர்ந்துவருவனவாய்க் கடியப்பட்டன முன்னர்க் கூறப்படுமென்றா மவையிவை யென்ப துணர்-ற்று.
(இ-ள்) ஒன்றினை யுவமிக்குங்காற் சிறப்பினைநீங்கியசெய்கையை யுடையவா யிறப்பவுயர்ந்த வுவமேயத்திற்
கிறப்பவிழிந்த வுவமானத்தினை யுவமித்தலு மிறப்பவிழிந்த வுவமேயத்திற் கிறப்பவுயர்ந்த வுவமானத்தினை
யுவமித்தலு முவமேயவடைக் குவமானவடை மிகப்புணர்த்தலு முவமேயஅடைக் குவமானவடை குறையப் புணர்த்தலும்
ஆண்பாற்குப் பெண்பா லுவமித்தலும் பெண்பாற் காண்பா லுவமித்தலும் ஒருமைப்பாற்குப் பன்மைப்பா லுவமித்தலும்
பன்மைப்பாற் கொருமைப்பா லுவமித்தலும் பெரியோ ராமெனக்கொள்ளுங் கடனிலவா மென்றவாறு.
ஆனையெருத்தமகழ்வான்வெரினேய்க்கும்
பூனையிடியேறுபோன்முழங்கு–மூனை
யயிலரியேறன்னாளிவளிவடன்னாசி
பயிலணிதாராகணமொப்பாம். (223)
இதனுள், இறப்பவிழிந்த அகழ்வான்வெரினை யிறப்பவுயர்ந்த யானையின்முதுகிற் குவமைகூறியதூஉம்,
இறப்பவிழிந்த பூனைமுழக்கிற்கு இறப்பவுயர்ந்த இடியேற்றின்முழக்கை யுவமைகூறியதூஉம், அரியேறாகி
யிறப்பவுயர்ந்த வஃறிணையாண்பாலை யுயர்திணைப் பெண்பாற் குவமைகூறியதூஉம்,
நாசியாபரணமான முத்தினொருமைக்குத் தாரா கணப் பன்மையை யுவமைகூறியதூஉம் வழுவாயிற்று.
பைங்குவளைமுல்லைபனிவண்டுலாங்குமுதந்
திங்களிடத்தாயினபோற்செவ்விதரு–மிங்கிதமே
கற்றமர்கூர்கண்ணகைவாய்காமுறவாழ்வெய்தியவிம்
முற்றிழையாள்சோதிமுகம். (224)
இதனுள், உவமானமான குமுதத்துட் புணர்த்த வண்டிற் குவமேயமின்றி யுவமான அடை மிகுந்து வழுவாயிற்று.
தேனருவிநீரருவியோடேசிறந்துளநற்
றானவடமேருவெனுஞ்சால்பிற்றே–மானனையார்
சித்திரப்பொற்கச்சணிந்துசெய்யமணிவடமு
முத்தவடமும்பூண்முலை. (225)
இதனுள், பொற்கச்சணிந்தென்னு முவமேயவடைக் குவமான வடை குறைந்து வழுவாயிற்று. பொற்கச்சு – பொன்னெழுத்துக்கச்சு.
நமன்மடந்தையன்னானிவனிவன்றன்னாரி
சமனனையளீங்கிவர்க்குத்தையா–லமர்புதல்வ
ரெண்ணிருவர்க்கொப்பாகுமன்றேயமன்சமரிற்
பண்ணமைத்தாங்கேறும்பகடு. (226)
இதனுள் உயர்திணையாண்பாற் குயர்திணைப்பெண்பாலு முயர்திணைப் பெண்பாற் குயர்திணையாண்பாலும்
உயர்திணையாண்பாற்பன்மைக் கஃறிணையாண்பாலொருமையுஞ் சிறப்பிற்றீர்ந்தனவாய் வழக்கின்றாய்க் கூறுதலால் வழுவாயிற்று.
வாலிலாச்சம்புவெனவாழ்மதங்காவந்ததற்குப்
பாலிலாவுண்டிபடையேமான்–மேலுமக்குக்
கூகைக்கறியிலையேகோதிலாத்தேனுடனே
பாகைச்சொரிந்தென்பயன். (227)
இதனுள் இங்ஙனம் வாலிலாச்சம்புவெனப் பழித் துவமைகூறுதல் வழுவன்று. சம்பு – நரி.
பகுதி – பரத்தையிற்பிரிதல். துறை – பாணனைப் பழித்தல்.
113.பொதுவினுஞ்சிறப்பினும்புணர்ந்துளவாகி
யிதுவழக்கிதுசெயுளெனுமீரிடத்தும்
வெளிப்படைகுறிப்பெனவிழுமியநெறியாற்
கொளப்படுமுவமவுருபினைக்கூறி
னன்ன போல வனைய மான்
வென்ன நேர விறப்ப நிகர்ப்ப
நாட நளிய நடுங்க நந்த
வோட வொன்ற வொடுங்க வொட்டக்
கள்ளக் கருதக்காட்டக் கடுப்ப
வெள்ள விழைய வெதிர வேய்ப்ப
மருள மலைய மாற மதிப்ப
வென்ற வந்த வேர வேய
வாங்க வொப்ப வமர வியையப்
புல்ல வுறழப் புரையப் பொருவ
வனை துணை கெழு வீழ்தழை செத்தற்றணி
யென்றிவைநாற்பானெட்டும்பிறவு
மொன்றியதிறத்தாலொழுகுதலுளவே.
(எ-ன்) இஃ துவமேயத்தினையு முவமானத்தினையு மொப்புமைப் படுத்துங்கா லிடையினு மீற்றினும்
வரு முவமவுருபினை யினைத்தெனக் கூறுத னுதலிற்று.
(இ-ள்) கொள்ளப்படு முவமவுருபினைக்கூறின் என்பது இது வினைப்பாலுவமம் இது பயனிலையுவமம்
இது மெய்ப்பாலுவமம் இஃ துருவினுவமம் என நால்வகைத்தாக மனத்தான் மதித்துக்கொள்ளப் படுதலையுடையவாய்ப்
பொதுவானுஞ் சிறப்பானும் பொருந்துவதுளதாயிது வழக்கிட மிது செய்யுளிடமென விரண்டிடத்தினோடுங்கூடி வெளிப்படை
குறிப்பென வருஞ் சொற்களுக்கு வரையறைகூறின் அவை, அன்ன போல வென்பன முதலாக அற்று அணி யென்பன வீறாக
வெண்ணப்பட்ட நாற்பத்தெட்டும் பிறவுமாகிப் பொருந்துங் கூறுபாட்டா னொழுகலாறுடைத்தா மென்றவாறு.
பிறவுமென்பதனால் எடுத்தோதினவேயன்றி வெல்ல, வென்ற, வியப்ப, ஒத்த, ஒக்கும், தகைய, தகைப்ப, பொற்ப, காய்ந்த,
நோக்க, மருளும், புரையும், துலை என்றற் றொடக்கத்தனவும், ஐந்தாம்வேற்றுமை யுருபாய்வரும்
இன்னும், என, என்னென வரும் எச்சவாய்பாடுகளாய் வருவனவும், பிறவுங் கொள்க.
சொல்லினை யிரண்டு நாலு மயக்கம். இவற்றுட் பலவும் செயவனெச்சமாயவாய்பாட்டான்வந்தனவெனினும் போல
வென்னுஞ்சொல் புலிபோலவந்தானென வினையெச்சவாய்பாட்டான் வினைகொண்டும்,
புலிபோலும்மறவ னென்புழியும் புலிபோன்ற மறவ னென்புழியும் பெயரெச்சவாய்பாட்டாற் பெயர்கொண்டும்,
புலி போன்மறவ னென்புழி யிடைச்சொல்வாய்பாட்டாற் பொதுவாயும் நிற்கும்.
இவ் வோதியவாய்பாடெல்லா நாக்குவமத்திற்கும் பொதுவென்ப தீண்டுக் கூறினார்.
இனிச் சிறப்புவகையா னுரியவாம்வகை, ஒல்காப் புலமைத் தொல்காப்பியனாரும், உவமவியலுள்
“அன்ன வாங்க மான விறப்ப, வென்ன வுறழத் தகைய நோக்கொடு, கண்ணிய வெட்டும் வினைப்பா லுவமம்,”
“அன்னவென் கிளவி பிறவொடுஞ் சிவணும்,”
“எள்ள விழையப் புல்லப் பொருவக், கள்ள மதிப்ப வெல்ல வீழ, வென்றாங் கெட்டே பயனிலை யுவமம்,”
“கடுப்ப வேய்ப்ப மருளப் புரைய, வொட்ட வொடுங்க வோட நிகர்ப்பவென், றப்பா லெட்டே மெய்ப்பா லுவமம்,”
“போல மறுப்ப வொப்பக் காய்த்த, நேர வியப்ப நளிய நந்த வென், றொத்துவரு கிளவி யுருவி னுவமம்,”
“தத்த மரபிற் றோன்று மன் பொருளே” என்ற சூத்திரங்களா னுணர்க.
இவற்றுள், அணியென்பது முதலாய சிலவுருபுக ளீறுவிகாரப் பட்டுநிற்பனவு முள.
அஃதேல் அணி, வந்த, துலை என்னு முருபுகள் முன்னோர்கூறிய வுவமவுருபுத்தொகைச்சூத்திரங்களு ளில்லையாலோ வெனின்,
அவை “முலையணிந்த முறுவலாள்” எனவும்,
‘கயல்வந்த கண்ணியர்’ எனவும்,
“தோல்வி, துலையல்லார் கண்ணுங் கொளல்” எனவும் இலக்கியங்களுட் கண்டமையாற் காட்டியதெனக் கொள்க.
ஒழிந்தனவாய் மறைந்த வுவமவுருபுகட்கு மீண் டிலக்கியங் காட்டி லிறப்பப் பெருகும். அவைகட்கும் வந்தவழிக் கண்டுகொள்க.
2-வது உவமையலங்காரம் முற்றும்.
——————————–
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருக்குருகைப் பெருமாள் கவிராயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –