ஸ்ரீ நக்கீர தேவ நாயனார் -ஸ்ரீ திரு வெழு கூற்று இருக்கை

பதிக வரலாறு :
எழுகூற்றிருக்கை – ஏழு கூறுகளது இருக்கையாகிய பாட்டு. இருக்கை – இருப்பிடம்.
ஏழு கூறுகள், ஒன்று முதல் ஏழு முடிய உள்ள எண்கள் ஒரு முறை கூடியும், குறைந்தும் வர,
எண்ணலங்காரம் அமையப் பாடுவதால் அமையும்.

அம்முறையாவது:
1) 1,2,1.
(2) 1,2,3,2,1
(3) 1,2,3,4,3,2,1,
(4) 1,2,3,4,5,4,3,2,1,
(5) 1,2,3,4, 5,6,5,4,3,2,1,
(6) 1,2,3,4,5,6,7,6,5,4,3,2,1.

ஏழு கூறு வருதல் வேண்டும் என்பதற்காக ஆளுவதாகச் சொல்லப்பட்ட அந்த முறையை
மீட்டும் ஒருமுறை சொல்லிப் பாட்டை முடிப்பார்கள். இப்பாட்டு அகவற்பாவாகவே வரும்,
இது, `மிறைக் கவி` எனப்படும் சித்திர கவிகளில் ஒன்றாகும்.
அதற்கு ஏற்ப இதனைத் தேர்போல வரையப்பட்ட ஓவியத்திற்குள் எண்ணுப் பெயர்கள் முறையாக அமைய அடைத்துக் காட்டுவர்.
அதனால் இது `மிறைக் கவி` எனப்படும் சித்திர கவிகளில் ஒன்றாகும்.
அதற்கு ஏற்ப இதனைத் தேர்போல வரையப்பட்ட ஓவியத்திற்குள் எண்ணுப் பெயர்கள் முறையாக அமைய அடைத்துக் காட்டுவர்.
அதனால், இது `இரத பந்தம்` என்றும் சொல்லப்படும்.

சித்திர கவியை `அருளாளரல்லது பிறர் பாடலாகாது` எனத் தொல்காப்பிச் செய்யுளியல் உரையில்
ஆத்திரையன் பேராசிரியனார் கூறுவர்.
திருஞானசம்பந்தர் அருளிச் செய்த சித்திரக் கவிப்பாடல்களுள் திரு எழுகூற்றிருக்கையும் ஒன்று.1 என்பது அறியத்தக்கது.
இதனுள் சில சொற்கள் பொருளால் எண்ணுப் பெயராய் இல்லாவிடினும் சொல்லால் எண்ணுப் பெயராய் எண்ணலங் காரத்தை நிரப்பும்,
எண்ணலங்காரமும் முரண் தொடையுள் அடங்கும்.

ஒருடம் பீருரு வாயினை ஒன்றுபுரிந்
தொன்றின் ஈரிதழ்க் கொன்றை சூடினை
மூவிலைச் சூலம் ஏந்தினை
சுடருஞ் சென்னி மீமிசை
இருகோட் டொருமதி எழில்பெற மிலைச்சினை:
ஒருகணை இருதோள் செவியுற வாங்கி
மூவெயில் நாற்றிசை முரணரண் செகுத்தனை
ஆற்ற முன்னெறி பயந்தனை
செறிய இரண்டும் நீக்கி
ஒன்று நினைவார்க் குறுதி ஆயினை
அந்நெறி ஒன்று
மனம்வைத் திரண்டு நினைவிலோர்க்கு
முன்னெறி உலகங் காட்டினை அந்நெறி
நான்கென ஊழிதோற்றினை
சொல்லும் ஐந்தலை அரவசைத் தசைந்தனை

நான்முகன் மேல்முகக் கபாலம் ஏந்தினை
நூன்முக முப்புரி மார்பில்
இருவர் அங்கம் ஒருங்குடன் ஏந்திய
ஒருவநின் ஆதி காணா திருவர்
மூவுல குழன்று நாற்றிசை ஊழிதர

ஐம்பெருங் குன்றத் தழலாய்த் தோன்றினை
ஆறுநின் சடையது ஐந்துநின் நிலையது
நான்குநின் வாய்மொழி மூன்றுநின் கண்ணே
இரண்டுநின் குழையே ஒன்றுநின் ஏறே
ஒன்றிய காட்சி உமையவள் நடுங்க

இருங்களிற் றுரிவை போர்த்தனை நெருங்கி
முத்தீ நான்மறை ஐம்புலன் அடக்கிய
அறுதொழி லாளர்க் குறுதி பயந்தனை
ஏழில் இன்னரம் பிசைத்தனை
ஆறில் அமுதம் பயந்தனை ஐந்தில்
விறலியர்கொட்டும் அழுத்த ஏந்தினை
ஆல நீழல் அன்றிருந் தறநெறி
நால்வர் கேட்க நன்கினி துரைத்தனை
நன்றி இல்லா முந்நீர்ச் சூர்மாக்
கொன்றங் கிருவரை எறிந்த ஒருவன்

தாதை ஒருடல் திருவடி வாயினை
தருமம் மூவகை உலகம் உணரக்
கூறுவை நால்வகை
இலக்கண இலக்கியம் நலத்தக மொழிந்தனை
ஐங்கணை யவனொடு காலனை அடர்த்தனை அறுவகைச் சமயமும் நெறிமையில் வகுத்தனை
ஏழின் ஓசை இராவணன் பாடத்
தாழ்வாய்க் கேட்டவன் தலையளி பொருந்தினை
ஆறிய சிந்தை யாகி ஐங்கதித்
தேரொடு திசைசெல விடுத்தோன்
நாற்றோள் நலனே நந்திபிங் கிருடியென்
றேற்ற பூதம் மூன்றுடன் பாட
இருகண் மொந்தை ஒருகணம் கொட்ட
மட்டுவிரி அலங்கல் மலைமகள் காண
நட்டம் ஆடிய நம்ப அதனால்

சிறியேன் சொன்ன அறிவில் வாசகம்
வறிதெனக் கொள்ளா யாகல் வேண்டும்
வெறிகமழ் கொன்றையொடு வெண்ணில வணிந்து
கீதம் பாடிய அண்ணல்
பாதம் சென்னியிற் பரவுவன் பணிந்தே

பணிந்தேன்நின் பாதம் பரமேட்டீ பால்நீ
றணிந்தால வாயில் அமர்ந்தாய் தணிந்தென்மேல்
மெய்யெரிவு தீரப் பணித்தருளு வேதியனே
ஐயுறவொன் றின்றி அமர்ந்து

—————–

குறிப்புரை

அடி-1)
ஒருடம்பு ஈருரு வாயினை ஒன்று புரிந்து
ஓன்றின் ஈரிதழ்க் கொன்றை சூடினை

ஒன்று புரிந்து – வீடு பேற்றினை விரும்பி. (உயிர்கள் அடைய வேண்டும் என்று கொன்றை சூடினை என்க.)
கொன்றைப் பிரணவ வடிவினது ஆதலால், பிரணவத்தின் பொருள் தானே என்பதை உயிர்கள் உணர்ந்து
வீடடையவே அம்மாலையை அடையாள மாலையாகச் சிவன் சூடியுள்ளான்` என்றபடி.

(அடி-2)
ஓன்றின் ஈரிதழ்க் கொன்றை சூடினை
ஒன்றின் – `ஓரு காம்பிலே ஐந்து இதழ்` என்க.
ஈர் இதழ் – குளிர்ந்த இதழ்

(அடி-5)
இருகோட் டொருமதி எழில்பெற மிலைச்சினை:
இரு கோடு – இரண்டு முனை.

(அடி-7) `
மூவெயில் நாற்றிசை முரணரண் செகுத்தனை
மூவெயிலது அரண்` என்க.
முரண், நாற்றிசையிலும் செல்லும் முரண், முரண் – வலிமை.
அரண் பாதுகாத்தல். `முரணுடைய அரண்` என்க.

(அடி-8)
ஆற்ற முன்னெறி பயந்தனை
ஆற்ற – மிகவும், ஆற்றப் பயத்தல் – முற்ற விளக்குதல்.
முன் நெறி முதல் நெறி “முன்னெறியாகிய, முதல்வன்
முக்கணன் தன்னெறி“ 2 என அப்பரும் அருளிச் செய்தார்.
“முன்னெறி“ என்பது ஓசை வகையில் `முந்நெறி` என்பதனோடு ஒத்து,
`மூன்று` என்னும் எண்ணலங் காரமாய் நின்றது.
இவ்வாறு மேலும் வருவனவற்றை அறிந்து கொள்க.

(அடி-9)
செறிய இரண்டும் நீக்கி
இரண்டு – விருப்பு வெறுப்புக்கள்

(அடி-10)
ஒன்று நினைவார்க் குறுதி ஆயினை
ஒன்று, திருவருள்.
உறுதி – நல்ல துணை.

(அடி-11,12) `
அந்நெறி ஒன்று
மனம்வைத் திரண்டு நினைவிலோர்க்கு
அந்நெறி ஒன்றையே மனத்துள் வைத்து` என்க.
இரண்டு நினைவு – ஐயம்

(அடி – 13)
முன்னெறி உலகங் காட்டினை அந்நெறி
முன் ஏழாவது விரிக்க

(அடி -14)
நான்கென ஊழிதோற்றினை
ஊழி – யுகம். `ஊழி நான்கு எனத் தோற் றினை` (படைத்தனை) என்க.

(அடி-15)
சொல்லும் ஐந்தலை அரவசைத் தசைந்தனை
சொல்லும் – சிறப்பித்துச் சொல்லப்படுகின்ற.
அசைத்து – உறுப்புக்களில் கட்டி.
அசைந்தனை – ஆடினை

(அடி -16)
நான்முகன் மேல்முகக் கபாலம் ஏந்தினை
மேல் முகம் உச்சி முகம்.
கபாலம் – தலை ஓடு.

(அடி-17)
நூன்முக முப்புரி மார்பில்
நூல் முகப் புரி` என்க.
தோளில் ஏந்திய அங்கத்தை மார்பில் ஏந்தியதாகக் கூறினார்.

(அடி-18)
இருவர் அங்கம் ஒருங்குடன் ஏந்திய
இருவர், அயனும், மாலும். அங்கம் எலும்புக் கூடு.
இது `கங்காளம்` எனப்படும்.

(அடி-19) `
ஒருவ நின் ஆதி காணா திருவர்
ஒருவனாகிய நினது` என்க.
“ஆதி“ என்றதனானே அந்தமும் கொள்க.
ஐ – அழகு. இஃது `ஐந்து` என்பதுபோல நின்றது.

(அடி-22)
ஆறுநின் சடையது ஐந்து நின் நிலையது
ஆறு – யாறு; கங்கை. இதுவும் எண்ணுப் பெயர் போல நின்றது,
ஐந்து நிலைகளாவன படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல்

(அடி-23)
நான்குநின் வாய்மொழி மூன்றுநின் கண்ணே
வாய்மொழி, வேதம்.

(அடி-24)
இரண்டுநின் குழையே ஒன்றுநின் ஏறே
இரண்டு – இரண்டு வகை. `
`குழை“ என்பது பொதுப்பட, `காதணி` என்னும் பொருட்டாய் நின்றது.

(அடி-26)
இருங்களிற் றுரிவை போர்த்தனை நெருங்கி
இரு – பெரிய. இதுவும் எண்ணுப் பெயர்போல வந்தது

(அடி -28)
அறுதொழி லாளர்க் குறுதி பயந்தனை
உறுதி, அறம் முதலிய பொருள்கள்.
ஆறில் அமுதம் – அறுசுவையில் உணவு.

(அடி -31)
ஐந்தில் விறலியர்கொட்டும் அழுத்த ஏந்தினை
ஐந்து – ஐந்து வகையான இசைக் கருவிகள். (தோல், துளை, நரம்பு, கஞ்சம், மிடறு.)
கொட்டு – வாச்சியம்.
உம்மை, எச்சப் பொருட்டு. `எல்லா வாச்சியங்களையும் இறைவன் உடையவன்` என்றபடி,

(அடி-34)
நன்றி இல்லா முந்நீர்ச் சூர்மாக்
முந்நீர் – கடல். `முந்நீரில் நின்ற` என்க.
சூர் மா – சூரபதுமனாகிய மாமரம்.

(அடி-35)
கொன்றங் கிருவரை எறிந்த ஒருவன்
இருவரை – பெரிய மலை; கிரௌஞ்சம்.

(அடி – 36)
மிடல் வடிவம் – விசுவ ரூபம். மிடல் வலிமை,

(அடி-37,38) `
தருமம் மூவகை உலகம் உணரக்
கூறுவை நால்வகை
தருமம் கூறுவை` என இயையும்.

(அடி – 38,39) `
கூறுவை நால்வகை
இலக்கண இலக்கியம் நலத்தக மொழிந்தனை
நால்வகை இலக்கணங்களையும், அவற்றையுடைய இலக்கியங்களையும் மொழிந்தனை` என்க.
நால் வகை இலக்கணமாவன `எழுத்து, சொல்,பொருள், செய்யுள்` என்பன பற்றியவை,
அணியிலக்கணம் வடநூற் கொள்கை.

(அடி-41)
ஐங்கணை யவனொடு காலனை அடர்த்தனை அறுவகைச் சமயமும் நெறிமையில் வகுத்தனை
நெறிமையில் நெறியாம் வகையில்.

(அடி-42)
ஏழின் ஓசை இராவணன் பாடத்
ஏழ் இன் ஓசை` என்க.
ஓசை – இசை.

(அடி-43)
தாழ்வாய்க் கேட்டவன் தலையளி பொருந்தினை
தாழ்வு – இரக்கம்.
“அவன்தலை“ என்பதில் தலை ஏழன் உருபு.
அளி- அருள்,

(அடி-44)
ஆறிய சிந்தை யாகி ஐங்கதித்
ஆறிய – தணிந்த. சிந்தையனை, “சிந்தை“ என்றது. ஆகுபெயர்.

(அடி – 45)
ஆறிய சிந்தை யாகி ஐங்கதித் தேரொடு திசைசெல விடுத்தோன்
ஐங்கதி குதிரைகளின் ஓட்டத்தின் வகை.
`ஐங்கதியொடு தேர் திசை செலவிடுத்தோன்` பிரமன்.

(அடி- 46,47)
நாற்றோள் நலனே நந்தி பிங் கிருடியென்
றேற்ற பூதம் மூன்றுடன் பாட
அவனுக்கு முகம் நான்காயினும் தோளும் நான்கே.
நலன். இங்குத் திறமை. `அதனைப் பாட` என்க.
நந்தி பிங்கிருடி – நந்தி கணத்ததாகிய பிங்கிருடி. “
பூதம் மூன்று“ என்றதனால், தண்டி, குண்டோதரன் இவர் கொள்ளப்பட்டனர்,

(அடி-48)
இருகண் மொந்தை ஒருகணம் கொட்ட
கண் – பக்கம்.
மொந்தை, ஒருவகை வாச்சியம்.
ஒரு கணம் – ஒப்பற்ற கணங்கள்.
மட்டு விரி – தேனோடு மலரும்

(அடி -50)
நட்டம் ஆடிய நம்ப அதனால்
“அதனால்“ என்றது, கூறிவந்தவை அனைத்தை யும் தொகுத்துக் குறித்தது.
ஆகையால் இப்பாட்டினை,
`நம்ப, நீ ஓர் உடம்பு ஈருருவாயினை;
கொன்றை சூடினை;….அளி பொருந்தினை,
அதனால், சிறியேன் சொன்ன வாசகம் வறிதெனக் கொள்ளா யாதல் வேண்டும்;

(அதன் பொருட்டு)
அண்ணலாகிய நின் பாதம் சென்னி யிற் பணிந்து பரவுவன்` என இயைத்து முடிக்கற் பாற்று.

(அடி-52)
வறிதெனக் கொள்ளா யாகல் வேண்டும்
வெறிகமழ் கொன்றையொடு வெண்ணில வணிந்து
வறிது – பொருளற்றது.
வெளி – நறுமணம். `
சிவபெருமான் ஊழியிறுதியில் வீணை வாசித்திருப்பன்` என்பதை,
`பெருங்கடல் மூடிப் பிரளயங் கொண்டு பிரமனும்போய்,
இருங்கடல்மூடியிறக்கும்; இறந்தான் களேபரமும்,
கருங்கடல் வண்ணன் களேபர முங்கொண்டு கங்காளராய்
வருங்கடல் மீளநின் றெம்மிறை நல்வீணை வாசிக்குமே`*
என்னும் அப்பர் திருமொழியால் அறிக.
முக்காலத்தும் நிகழற் பாலதனை, “பாடிய“ என இறந்த காலத்தில் வைத்துக் கூறினார்.

திருஎழுகூற்றிருக்கை முற்றிற்று.

—————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading