ஸ்ரீ அழகர் ஆற்றில் இறங்குவது ஏன்? 10 நாள் விழாவின் சுவாரஸ்யக் கதை!
எல்லோருக்கும் ஐப்பசியில் தீபாவளி வரும். ஆனால், மதுரைவாசிகளுக்கு, சித்திரையிலும் ஒரு தீபாவளி.
அழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தை அந்த அளவுக்கு மிக விமரிசையாகக் கொண்டாடி வருகிறார்கள்.
திருவிழா நடக்கும் பத்து நாட்களும் ஊரே திமிலோகப்படும்.
மதுரை மற்றும் சுற்றிலுமுள்ள ஊர்களில் இருந்து குடும்பத்துடன் புறப்பட்டு வந்து சேருவார்கள்.
சுமார் பத்து லட்சம் பேருக்கு மேல் ஒரே இடத்தில் கூடும் திருவிழா இது.
கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தைச் சொல்வதற்கு முன்,
அவர் குடிக்கொண்டிருக்கும் அழகர்மலையின் சிறப்பையும் சொல்லியாக வேண்டும்.
மதுரைக்கு வடக்கே சுமார் இருபது கிலோ மீட்டர் தொலைவில், அழகர்மலை கம்பீரமாகக் காட்சி தருகிறது.
பார்ப்பதற்கு காளை வடிவிலிருப்பதால் இந்த மலைக்கு ‘விரிஷபாத்ரி’ என்று ஒரு பெயர் உண்டு.
தன்மேல் ஏவி விடப்பட்ட சாபத்துக்கு விமோசனம் கேட்டு, எமதர்மன் இந்த மலைக்கு வந்து பெருமாளை வேண்டித் தவமிருந்தான்.
தவத்தை மெச்சி, எமதர்மனுக்கு பெருமாள் சாபவிமோசனம் தந்தபோது,
‘இதேபோல் இங்கேயே தங்கியிருந்து பூலோக பக்தர்களுக்கும் அனுக்கிரகம் பண்ண வேண்டும்’ என்று
எமதர்மன் கேட்டுக்கொண்ட காரணத்துக்காக, இந்த மலையில் பெருமாள் குடிகொண்டதாகப் புராணம் சொல்கிறது.
எங்கும் இல்லாத சிறப்பாக இங்கு கள்ளழகராக அவதாரம் எடுத்து எழுந்தருளியிருக்கும் சுந்தரராஜப் பெருமாள்
சங்கு, சக்கரம், வில், வாள், கதை என பஞ்சாயுதங்களுடன் காட்சி தருகிறார்.
அதுமட்டுமின்றி, இங்கு மட்டும்தான் பெருமாளின் கையில் உள்ள சக்கரம் புறப்படத் தயாராக இருக்கிறது.
பக்தர்களிடமிருந்து அபயக்குரல் வந்தால், கண நேரமும் தாமதிக்காமல் துஷ்டர்களை அழிக்க வேண்டும்
என்பதற்காக சக்கரத்தைப் பிரயோக நிலையிலேயே வைத்திருக்கிறார் பெருமாள்.
மூலவருக்கு அடுத்தபடியாக அதிமுக்கியமானவர் சோலைமலைக்கரசராக விளங்கும் உற்சவர்தான்.
‘அபரஞ்சி’ என்ற அரியவகை தங்கத்தாலானவர் சோலைமலைக்கரசர்.
‘அபரஞ்சி’ என்பது தேவலோகத் தங்கம் என்பதால், இந்தப் பெருமாளையும் தேவலோகப் பெருமாளாக பூஜிக்கிறார்கள்.
உலகத்திலேயே அபரஞ்சி தங்கத்திலான பெருமாள் சிலைகள் இரண்டு இடங்களில்தான் இருக்கின்றன.
ஒன்று – அழகர் கோயிலில்! இன்னொன்று திருவனந்தபுரத்திலுள்ள அனந்த பத்மநாபசுவாமி கோயிலில்.
அழகர் ஆற்றில் ஏன் இறங்குகிறார் என்று பார்ப்போமா?
அழகர்மலை அடிவாரத்திலிருந்து சுமார் 2 கி.மீ. உயரத்தில் முருகனின் ஆறுபடை வீடுகளில்
ஆறாவதான பழமுதிர்சோலை முருகன் கோயில் உள்ளது. பழமுதிர்சோலை முருகன் கோயிலிலிருந்து
ஒரு கி.மீ. தொலைவில் ராக்காயி அம்மன் கோயில் உள்ளது.
இந்த ராக்காயி அம்மன் சந்நதியிலிருந்து தான் நூபுரகங்கை நீரூற்று உருவாகி வருகிறது.
இந்த நீருற்றில் சுதபமுனிவர் நீராடுவதை வழக்கமாக கொண்டிருந்தார்.
ஒரு முறை நீராடும்போது எதிர்பட்ட துர்வாசர் முனிவரை, கண்டும் காணாதது போல் இருந்து விட்டார்.
இதனால் ஆத்திரம் கொண்ட துர்வாச முனிவர், சுதபமுனிவரை மண்டூகமாக (தவளையாக) போகக்கடவாய் என சாபமிட்டார்.
சுதபஸ் என்ற முனிவர், நூபுரகங்கையில் தீர்த்தமாடி, பெருமாளை நோக்கித் தவமிருந்தார்.
அந்தச் சமயத்தில் துர்வாச மகரிஷி, தன் பரிவாரங்களோடு அவ்வழியாக வந்தார்.
பெருமாளையே நினைத்துக் கொண்டிருந்த முனிவர், ரிஷி வந்ததைக் கவனிக்காமலிருக்கவே ஆத்திரமடைந்த துர்வாசர்
‘மண்டூகோ பவ’ (தவளையாக போகக் கடவாய்!) என சாபமிட்டார்.
உடனே தவளையாகிப் போன சுதபஸ், சாபவிமோசனத்துக்கு வழிகேட்டபோது,
‘விவேகவதி தீர்த்தக்கரையில் (வைகை) நீ தவம் பண்ணிக்கொண்டிரு.
சித்ரா பௌர்ணமிக்கு மறுநாள் அழகர் அங்கு வந்து உனக்கு சாபவிமோசனம் கொடுப்பார்’ என சொல்லியிருக்கிறார் துர்வாசர்.
அதன்படி வைகைக் கரையில் தவம் பண்ணிக் கொண்டிருந்த சுதபஸ் முனிவருக்கு,
விமோசனம் கொடுக்க அழகர் மதுரைக்கு வந்து போனதாகப் புராணங்கள் விவரிக்கின்றன.
சித்ரா பௌர்ணமிக்கு நான்கு நாள் முன்னதாகச் சித்திரைத் திருவிழா தொடங்கிவிடுகிறது.
முதல் இரண்டு நாட்கள் கோயிலில் இருப்பார் அழகர்.
மூன்றாம் நாள் மாலை மதுரையை நோக்கிப் புறப்படுகிறார்.
ஆரம்ப காலத்தில் கோயிலை விட்டு கிளம்பும் அழகர், அலங்காநல்லூர் போய்ச் சேருவார்.
அங்கு அழகரை குதிரை வாகனத்தில் தூக்கிவைத்து (ஆற்றில் இறங்குவதற்காக) அலங்காரம் செய்வார்கள்.
அழகருக்கு அலங்காரம் செய்யும் ஊர் என்பதால், அலங்காரநல்லூராக இருந்து,
பின்பு அலங்காநல்லூராக மாறிப்போனதாகச் சொல்கிறார்கள்.
அலங்காநல்லூரில் இருந்து தேனூருக்கு வந்து வைகை ஆற்றில் இறங்கும் அழகர்,
அதன் பிறகு வண்டியூருக்கு வந்து மண்டூக முனிவருக்கு (சுதபஸ்) சாபவிமோசனம் கொடுப்பார்.
இதனால் மண்டூர் என அழைக்கப்பட்டு அதுவே மண்டியூராகிப் பிறகு வண்டியூராகிப் போனதாம்.
கள்ளர் கொண்டை, கொண்டையில் குத்தீட்டி, கையில் வலைதடி (பூமராங்), இடுப்பில் ஜமதாடு (ஒருவகை கத்தி)
என விதவிதமான ஆயுதங்களுடன் மதுரை நோக்கிப் புறப்படுகிறார் கள்ளழகர்.
அழகர் மலையிலிருந்து தங்கப்பல்லக்கில் புறப்பட்டுவரும் அவர், வழிநெடுக பக்தர்களால் ஏற்பாடு செய்யப்படுகிற
ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட மண்டகப்படிகளில் ஆசி வழங்கிவிட்டு,
நான்காம் நாள் இரவு தல்லாகுளம் பெருமாள் கோயிலுக்கு வந்து சேருகிறார்.
அதற்கு முன்னதாக மதுரை எல்லையான மூன்றுமாவடியில் அழகரை மக்கள் எதிர்கொண்டு
அழைக்கும் எதிர்சேவை நிகழ்ச்சி களைகட்டுகிறது.
நான்காம் நாள் இரவு தல்லாகுளம் பெருமாள் கோயிலில் கள்ளழகருக்கு அபிஷேகம் நடக்கும்.
இந்த அபிஷேகத்துக்கும் நூபுர கங்கையிலிருந்து தீர்த்த நீர் தலைச்சுமையாகக் கொண்டு வரப்படுகிறது.
அபிஷேகம் முடிந்ததும் அழகருக்கு அலங்காரம். இதிலும்கூட ஒரு நம்பிக்கை.
அழகருக்கான ஆடைகள், அலங்காரப் பொருட்கள் அனைத்தும் ஒரு பெரிய மரப்பெட்டியில் இருக்கும்.
இந்தப் பெட்டிக்குள் சிவப்பு, வெள்ளை, பச்சை, மஞ்சள், ஊதா…என பல வண்ணங்களில் பட்டுப்புடவைகள் இருக்கும்.
கோயிலின் தலைமைப் பட்டர் அந்தப் பெட்டிக்குள் கைவிட்டு ஏதாவதொரு புடவையை எடுப்பார்.
அவர் கையில் எந்த வண்ணப் புடவை சிக்குகிறதோ, அது அன்றைய தினம் அழகருக்கு அணிவிக்கப்படும்.
அழகர் எந்த வண்ணப் புடவை கட்டி ஆற்றில் இறங்குகிறாரோ அதற்கேற்ப
அந்த வருடத்தில் நல்லது – கெட்டது நடக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
பச்சைப்பட்டு கட்டி வந்தால் நாடு செழிப்பாக இருக்கும்.
சிவப்புப் பட்டு கட்டிவந்தால் அந்த வருடம் போதிய விளைச்சலுமிருக்காது.
நாட்டில் அமைதியும் இருக்காது. பேரழிவு ஏற்படும்.
வெள்ளை மற்றும் ஊதாப்பட்டு கட்டி வந்தால் நாடு இடைப்பட்ட நிலையில் இருக்கும்.
மஞ்சள்பட்டு கட்டிவந்தால், அந்த வருடத்தில் மங்களகர நிகழ்வுகள் நடக்கும்.
இப்படி நம்பிக்கை இருப்பதால் ‘ஆற்றில் இறங்க வரும்போது அழகர் என்ன கலர் பட்டுடுத்தி வரப் போறாரோ?’
எனப் பக்தர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்கள்.
ஐந்தாம் நாள் பௌர்ணமியன்று, அழகர் ஆற்றில் இறங்கும் வைபவம்.
இதற்கு தல்லாகுளத்தை விட்டு கள்ளழகர் கிளம்பியதுமே தண்ணீர் பீய்ச்சும் வைபவம் தொடங்குகிறது.
அந்தக் காலத்தில் அழகர் வருவதற்குப் புதிதாகப் பாதை அமைத்ததால் தூசி கிளம்பாமல் இருப்பதற்காகவும்,
வெப்பத்தைத் தணிப்பதற்காகவும் தண்ணீர் பீய்ச்சும் வழக்கத்தை வைத்திருக்கிறார்கள்.
காலப்போக்கில் தண்ணீர் பீய்ச்சுவது ஒரு முக்கிய வைபவமாக மாறிப்போனது.
அழகர் ஆற்றில் இறங்கி வண்டியூர் போய்ச் சேரும் வரை இந்த வைபவம் கலகலப்பாக நடக்கிறது.
ஆற்றிலிறங்கும் அழகரை மதுரையில் உள்ள வீரராகவப் பெருமாள் எதிர்கொண்டு அழைப்பார்.
ஆற்றுக்குள் இருவரும் மாலை மாற்றி மரியாதை பண்ணிக் கொள்வார்கள்.
அதன்பிறகு மண்டூக முனிவருக்கு சாபவிமோசனம் தருவதற்காக வண்டியூரை நோக்கிக் கிளம்புவார் அழகர்.
வழிநெடுக வரவேற்பு பெற்றுக்கொண்டு ஐந்தாம் நாள் இரவு வண்டியூர் போய்ச் சேருகிறார் அழகர்.
ஆறாம் நாள் அதிகாலையில் அழகருக்கு ஏகாந்த சேவை.
பயணக்களைப்பு நீங்குவதற்காக சந்தன அலங்காரம் பண்ணிக்கொள்ளும் கள்ளழகர்,
வண்டியூர் பெருமாள் கோயிலை வலம் வருவார்.
அதன்பிறகு சர்ப்பவாகத்தில் புறப்பட்டு தேனூர் மண்டபம்
(இந்த மண்டபம் வைகை ஆற்றுக்குள் திருமலைநாயக்கரால் கட்டிக் கொடுக்கப்பட்டது.
ஏற்கெனவே தேனூரில் நடந்து கொண்டிருந்த வைபவங்கள் இப்போது இந்த மண்டபத்தில் நடக்கிறது) வந்து சேருகிறார் அழகர்.
தேனூர் மண்டபத்தில் தங்க கருட வாகனத்துக்கு மாறும் அழகர்,
அங்கிருந்து மண்டூக முனிவருக்கு சாபவிமோசனம் தருகிறார்.
பிறகு தேனூர் மண்டபத்திலிருந்து மதுரை நோக்கிவரும் அழகர்,
ராமராயர் மண்டகப்படி மண்டபத்துக்கு ஆறாம்நாள் இரவு வந்து சேருகிறார்.
அன்றிரவு அங்கு தங்குகிறார்.
இரவு முழுவதும் தசாவதார அலங்காரங்களில் தோன்றி பக்தர்களைப் பரவசப்படுத்தும் அழகர்,
ஏழாம் நாள் காலையில் அங்கிருந்து அனந்தராயர் பல்லக்கில்
(திருமலை நாயக்கரின் திவானால் செய்து கொடுக்கப்பட்ட இது முழுக்கத் தந்தத்தால் இழைக்கப்பட்டது)
தல்லாகுளத்திலுள்ள சேதுபதிராஜா மண்டபம் வரைக்கும் வருவார்.
அன்றிரவு அங்கு அழகருக்கு அலங்காரம் கலைக்கப்பட்டு பூப்பல்லக்கில் ஜோடனை நடக்கும்.
எட்டாம்நாள் அதிகாலையில் பூப்பல்லக்கில் மலைநோக்கிக் கிளம்பும் அழகர் வழிநெடுக
பூஜை புனஸ்காரங்களை ஏற்றுக்கொண்டு ஒன்பதாம் நாள் காலையில் அழகர் கோயிலைச் சென்றடைவார்.
பத்தாம் நாள் பயணக்களைப்பு நீக்குவதற்காக உற்சவசாந்தி அபிஷேகம் நடக்கிறது.
அத்துடன் சித்திரைத் திருவிழாவின் பத்து நாள் கொண்டாட்டங்கள் சுபமாக நிறைவுற்று
மீண்டும் பழைய நிலைக்குத் திரும்புகிறது மதுரை.
கோயில் வளாகம் வந்ததும், பல இடங்களில் பலபேர் கண் பட்டிருக்குமே அழகருக்கு
அதனால் திருஷ்டி சுத்தி போடும் வகையில் 18 பூசணிக்காய் களுடன் 18 கன்னிப்பெண்கள் நிற்பார்கள்.
அவர்களிடம் இருந்து பூசணிக்காய்களை வாங்கி காளையர்கள் அழகருக்கு சுற்றிப் போட்டு உடைப்பார்கள்.
பின்னர் செம்பில் சர்க்கரை நிரப்பி அதை வாழ இலையில் மூடி, அதன் மேல் கற்பூரம் வைத்து தீபம் ஏற்று வார்கள்.
இதற்கு சர்க்கரை தீபம் ஏற்றுதல் என்று பெயர்.
காவல் ஜமீன்!
அந்தக் காலத்தில் கள்ளழகரின் பாதுகாவலராக வெள்ளியங்குன்றம் ஜமீன்தார் நியமிக்கப்பட்டிருந்தார்.
இன்றுவரை அந்த ஜமீன் வாரிசுகள் தான் கள்ளழகருக்குப் பாதுகாப்பு.
இன்றும் ஜமீன்தார் வந்து அவருக்குரிய மரியாதைகள் வழங்கப்பட்ட பிறகுதான் கோயிலை விட்டு மதுரைக்குக் கிளம்புவார் அழகர்.
அந்தக் காலத்தில் அழகருக்குப் பாதுகாவலாகக் குதிரை பூட்டிய சாரட் வண்டியில்
அழகரைப் பின்தொடர்ந்து வந்துகொண்டே இருப்பார் ஜமீன். இப்போது வண்டிதான் மாறியிருக்கிறது.
பத்து நாட்களும் அவர் அழகருடன் இருப்பார். இப்போதும் அதே வழக்கம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
பாண்டிய நாட்டின் இளவரசி தடாகை என்னும் மீனாட்சி போர்கலைகளில் கொடி கட்டி விளங்கி சென்ற
இடமெல்லாம் பாண்டிய நாட்டின் வெற்றிக் கொடியை ஏற்றி வந்தாள்.
வெற்றித் தொடரின் இறுதியில் திருகைலாயம் சென்றபோது சிவனை எதிர்த்து போரிட்டவள்
அவர் மீதான காதலில் தன் மனம் இழந்தாள். இந்த போரும் வெற்றி தான்.
ஆம் பாண்டிய நாட்டு மருமகனாக எம்பெருமான் சிவனை கொண்டு வந்தது மாபெரும் வெற்றிதானே.
போர்க்காயங்களை வெற்றித் தழும்புகளை சிவனின் காதல் மடை மாற்றியது.
மாறாத காதலுடன் மதுரை திரும்பிய தடாகை அன்னை மீனாட்சியானாள்.
அன்னை மீனாட்சியை மதுரையில் கரம் பிடித்து திருமணக்கோலம் கண்டார் சுந்தரேசர்.
தமக்கை மீனாட்சியின் திருமண வைபவத்தில் கலந்து கொள்ள சகோதரர் அழகர்,
மதுரையிலிருந்து 25கிமீ தொலைவில் உள்ள அழகர் மலையிலிருந்து புறப்பட்டார்.
அந்த கால கட்டத்தில் அழகர் மலைப் பகுதியில் கள்ளர்கள் (திருடர்கள்) அதிகம்.
எனவே அழகர் கள்ளர் வேடமிட்டு கள்ளழகராக மாறி தங்கை மீனாட்சிக்கு சீர் கொண்டு வந்த பொருட்களை
பாதுகாத்து வைகை ஆற்றின் அருகே வந்தடைந்தார்.
அதற்குள் மீனாட்சி கல்யாணம் நடந்து முடிந்தது என்பதை அறிந்த அழகர் பெருங் கோபம் கொண்டு
வைகை ஆற்றில் இறங்கினார். தமது சகோதரர் அழகரின் கோபம் அறிந்த மீனாட்சி தனது கணவரான
சுந்தரேஸ்வரருடன் வைகை ஆற்றிற்கே சென்று ஆசி பெற்று சீர் பொருள்களை பெற்றார்.
இன்றைக்கும் இந்த சடங்குகள் மிகச்சிறப்பாக நடைபெற்று வருகிறது.
அழகர்கோவிலுக்குள் ஆயிரமாயிரம் அதிசய தகவல்கள் மூழ்கிக் கிடக்கின்றன.
குறிப்பாக, அழகர்கோவில் கருவறையை ‘நங்கள் குன்றம்’ என்கின்றனர்.
கோயில் கருவறைப்பகுதிக்கு மட்டுமே தனி பெயர் இங்கு மட்டுமே அழைக்கப்படுகிறது.
என்கொல் அம்மான் திருஅருள்கள்?* உலகும் உயிரும் தானேயாய்*
நன்கு என் உடலம் கைவிடான்* ஞாலத்தூடே நடந்து உழக்கி*
தென் கொள் திசைக்குத் திலதமாய் நின்ற* திருமாலிருஞ்சோலை*
நங்கள் குன்றம் கைவிடான்* நண்ணா அசுரர் நலியவே.
ஞாலத்தூடே நடந்து உழக்கி – பூமியெங்கும் நடையாயடியுலாவி
தென்கொள்திசைக்கு நிலதம்ஆய் நின்ற திருமாலிருஞ்சோலை – தெற்குத் திக்குக்குத் திலகமாயிராநின்ற திருமாலிருஞ்டசோலையாகிற
நாங்கள் குன்றம் கைவிடான் – நமது திருமலையைக் கைவிடாதவனா யிருக்கிறான்;
என் உடலம் நன்கு கைவிடான் – என்னுடம்பிலே மிகவும் விருப்பம் பண்ணா நின்றான்;
அம்மான் திரு அருள் என்கொல் – எம்பெருமானுடைய வியாமோஹத்தின்படி என்னே!
கருவறை அடி முதல் முடி வரையான இக்கோயில் விமானம் வட்ட வடிவ அமைப்புடையது.
வட்ட வடிவ கருவறை அமைப்பு தமிழகத்தில்
அழகர் கோயிலுடன்,
காஞ்சிபுரம் கரபுரீஸ்வரர்,
புதுக்கோட்டை நார்த்தாமலை விசயாலயச் சோழீஸ்வரம் ஆகிய
3 பழமைக் கோயில்களில் மட்டுமே இருக்கின்றன.
அழகர்கோவிலின் இந்த வட்ட வடிவக் கருவறையைச் சுற்றி,
அதனுள்ளேயே வட்ட வடிவில் ஒரு திருச்சுற்று பிரகாரமும் இருக்கிறது.
இக்கோயிலின் இந்த கருவறை அமைப்பானது பிற்கால சோழர் காலத்திற்கும் முந்தியது.
பவுத்த கோயிலுக்குரிய வடிவமிக்க இக்கோயிலின் ஆதி தல விருட்சம் போதி (அரச) மரமாக இருந்ததும் அறியப்படுகிறது.
இக்கோயிலில் யுகத்திற்கு ஒன்றாக நான்கு யுகங்களிலும் நான்கு தல விருட்சங்கள் இருந்தாக
அழகர் குறவஞ்சி, சோலைமலைக் குறவஞ்சி இலக்கியங்கள் பேசுகின்றன.
இன்னும் ஸ்ரீரங்கம் கோயில், அழகர்கோயில் இடையே கோட்டை மதிற்சுவர்கள்,
சுதர்சன வழிபாடு, ஆர்யன் வாசல், ஆர்யபடான் வாசல் என பிரதான வாயில்கள்,
தனி நெய்யில் பிரசாதம், விளக்கிடுதல் என்பதுடன் திருவிழாக்களிலும் ஒற்றுமை காண முடிகிறது.
ஆனாலும்.. பக்தர்கள் இறைவனைத் தேடிச் செல்வது ஒருபுறமிருக்க,
தன் மலையிலிருந்து பல்லக்கு பயணத்தில் இறைவனே பக்தர்களைத் தேடி
மதுரை நகர் வரை வந்து 400க்கும் அதிக மண்டகப்படிகளில் எழுந்தருளி அருள் பாலிக்கிற
அதிசயம் ஆண்டுக்கொரு முறை இங்கு மட்டுமே நடக்கிறது.
மீனாட்சி கோயில் திருவிழாவை தொடர்ந்து அழகர் பெருமாள் வந்து செல்வதென ஒரு அற்புதப் பெருவிழா
ஒட்டு மொத்த சித்திரை விழாவாக இரண்டரை வாரங்கள் இந்த மதுரை மண்ணில் நடந்தேறி கடந்திருக்கிறது.
இவ்விழா கொட்டிச் சென்றுள்ள குதூகலம், அடுத்த ஆண்டு வரையிலும் மனதின் ஆழத்திற்குள் அமர்ந்து,
எண்ணும் போதெல்லாம் இதம் சுகம் நிறைக்கும்.
ஸ்ரீ கள்ளழகருக்குரிய திருவிழாக்களில் மிகவும் முக்கியமானது சித்ரா பௌர்ணமித் திருநாள் தான் .
மதுரை ஸ்ரீ மீனாட்சிக் கோயிலில் தொடங்கும் சித்திரைத் திருவிழாவும் இவ் விழாவும் ஒரே சமயத்தில் நடக்கின்றன .
திருமலை நாயக்கர் காலத்திற்கு முன்பு இந்த இரண்டு உற்சவங்களும் வெவ்வேறு மாதங்களில் நடந்தன.
இதனால் தான் மாசி மாதத்தில் நடக்கும் இத் திருவிழாவில் மீனாட்சி சுந்தரேசுவரர்களுடைய ரதம்
செல்லும் வீதிகளுக்கும் மாசி வீதிகள் என்று பெயர் ஏற்பட்டது .
திருமலை காலத்திற்கு முன்பு ஸ்ரீ அழகர் சித்திரை மாதத்தில் அலங்காநல்லூர் , தேனூர் முதலிய ஊர்கள்
வழியாக வந்து வைகை ஆற்றில் இறங்கி வண்டியூரில் தங்கியிருந்து , மீண்டும் அழகர் மலையையைடைவது வழக்கம் .
திருமலை நாயக்கர் , இந்த இரண்டு விழாக்களையும் ஒன்றாகச் சேர்ந்தால் அது மிகவும் சிறப்பாக இருக்கும்
என்று கருதி அப்படியே செய்தார் . அவருடைய ஏற்பாட்டின் படியே இப்பொழுதும் நடந்து வருகிறது.
ஸ்ரீ அழகர் ஆற்றுக்குச் செல்லும் பொழுது முதலில் வெட்டி வேர் சப்பரத்திலும் ,
பிறகு மைசூர் மண்டபத்திலிருந்து ஆயிரம் பொன் சப்பரத்திலும் எழுந்து அருள்வார்.
ஆற்றில் எழுந்தருளியருளும் மதுரை ஸ்ரீ வீர ராகவப் பெருமாள் அவரை எதிர் கொண்டு அழைக்கிறார் .
இந்த வைபவம் அழகர் ஆற்றில் இறங்குதல் என்று சொல்லப்படும் இதனைக் காண
இலட்சக்கணக்கான மக்கள் திரண்டு இதைக் காண வருகை தருவார்கள்.
பெரும்பாலும் ஆறுகள் மலைகளில் தோன்றி சமவெளிகளில் பாய்ந்து கடலை அடையும்.
ஆனால், வைகை கடலை அடையாத ஆறு.
அது ஏன் கடலை அடையவில்லை என்பதற்கு கவிஞர் ஒரு கற்பனையான காரணத்தைப் பாட்டாகக் கூறினார்.
பெருந்தொகை என்னும் நூலில் இடம்பெற்றுள்ள அப்பாடல்,
‘நாரி இடப்பாகர்க்கு நஞ்சளித்த பாவி’ என்று
வாரி இடம் போகாத வையையே நதி பெண். கடல் ஆண். தேவர்கள் பாற்கடலை கடைந்தார்கள்.
அப்போது ஆலகால நஞ்சு வந்தது. கடலில் வந்த அந்த நஞ்சை சிவபெருமான் ஏற்றுக்கொண்டார்.
வைகை நினைத்ததாம். “ஏ கடலே..எங்கள் அன்னை மீனாட்சியின் நாயகனுக்கு நஞ்சு கொடுத்த
உன்னைச் சேர என் மனம் ஒப்பவில்லை. எனவே, உன்னை அடைய மாட்டேன்.”
மீனாட்சியின் நாயகனுக்கு நஞ்சு கொடுத்த கடலை அடைதல் பாவம் என்பதால் வையை கடலை அடையவில்லை!
பாற்கடலை கடைந்த போது, அந்த கடல் சிவனுக்கு நஞ்சை கொடுத்தது. அந்த பாற் கடலுக்கு
இந்த கடல் எல்லாம் உறவுதானே என்று நினைத்து,
இப்படி பட்ட கடலுக்கு நாம் ஏன் நீர் தரவேண்டும் என்று வைகை நதி தன்னிடம் உள்ள நீரை எல்லாம்
வரும் வழியில் இரு புறமும் உள்ள வயல்களுக்குத் தந்து விட்டு மீதி உள்ள கொஞ்ச நீரை
ஒரு ஏரியில் கொண்டு செலுத்தி விடுவதாக புகழேந்திப் புலவர் கற்பனை செய்கிறார்…..
பாடல்
நாரியிட பாகருக்கு நஞ்சளித்த பாவியென்று
வாரியிடம் புகுதா வைகையே – மாறி
இடத்தும் புறத்தும் இருகரையும் பாய்ந்து
நடத்தும் தமிழ்ப் பாண்டிய நாடு.
நாரியிட பாகருக்கு = நாரி என்றால் பெண். பெண்ணை இடப் பாகம் கொண்டவருக்கு
நஞ்சளித்த பாவியென்று = நஞ்சு அளித்த பாவியென்று
வாரியிடம் = கடலிடம்
புகுதா வைகையே = புகாத வைகையே
மாறி = அதற்க்கு மாறாக
இடத்தும் புறத்தும் = இடப் புறமும் வலப் புறமும்
இருகரையும் பாய்ந்து = இரண்டு கரைகளும் பாய்ந்து
நடத்தும் = நல்வழி நடத்தும்
தமிழ்ப் பாண்டிய நாடு.= தமிழ் வளர்க்கும் பாண்டிய நாடு
இப்பவாவது தெரிஞ்சுக்குங்க ஏன் வைகை கடலில் கலக்கவில்லை என்று.
தமிழகத்திலேயே உற்பத்தியாகி இங்கேயே கடல் சேர்கிற வைகை ஆற்றின் நீளம் 258 கி.மீ. ஆகும்.
இது தமிழகத்தின் நான்காவது பெரிய ஆறு ஆகும். மேற்குத் தொடர்ச்சி மலைதான் வைகை உற்பத்தியாகிற இடம்.
வருசநாடு, மேகமலை பகுதிதான் வைகையின் பிறப்பிடம்.
கடல் மட்டத்திலிருந்து 5,333 அடி உயரத்தில் இருக்கிற மேகமலையில் உள்ள ஒரு சிகரமான வெள்ளி மலையில் தான் அது உற்பத்தியாகிறது.
சுருளியாறு, தேனியாறு, வரட்டாறு, வராகநதி, மஞ்சளாறு, நாகலாறு, மருதநதி, சிறுமலையாறு, சாத்தையாறு முதலியவை
வைகையின் துணை ஆறுகளாகும். பழனி மலையில் உற்பத்தியாகும் வராகநதி கொடைக்கானல் மலையிலிருந்து வரும்
பாம்பாற்றுடன் (வெள்ளி அருவி உள்ள ஆறு) இணைந்து தேனிக்குக் கிழக்கே குன்னூருக்குத் தெற்கில் வைகையுடன் கலக்கிறது.
பின்னர் முல்லையாறாக பயணிக்கிறது. இவ்வாறு பயணிக்கும் பொழுது சுருளியாறு இதனுடன் கலக்கிறது.
பின்னர், வள்ளல் நதி என்று சொல்லப்படும் வருசநாட்டு பள்ளத்தாக்கிலிருந்து உருவாகும் வள்ளல் நதியுடன்
கலந்து வைகையாறாக வைகை அணையைச் சென்று அடைகிறது.
சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் காட்டும் அழகர் கோயிலின் சிறப்பு
‘‘அவ்வழி படரீர் ஆயின், இடத்து செவ்வழி பண்ணிற் சிறைவண்டு அரற்றும் தடந்தால் வயலொடு
தண்பூங் காவொடு கடம்பல கிடந்த காடுடன் கழிந்து திருமால் குன்றத்து செல்குவிர் ஆயின் ”என
சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் அழகர் கோயிலின் சிறப்பு பற்றி கூறுகிறார்.
மதுரையைச் சுற்றி மூன்று அழகர்கள் இருக்கிறார்கள்.
ஒருவர் மாலிருஞ் சோலை அழகர்.
இன்னொருவர் திருமோகூர் அழகர்.
மூன்றாமவர் மதுரையிலேயே இருக்கக்கூடிய கூடல் அழகர்.
திருமாலிருஞ்சோலை அழகருக்கு கள்ளழகர் என்று பெயர்.
கருவறையில் பெருமாள் ஸ்ரீ பரமசுவாமி எனப்படுகிறார்.
இங்கு பெருமான் மட்டும் அழகரல்ல. மலை அழகு, மண்டபங்கள் அழகு, சிலை அழகு, சோலைகள் அழகு.
கண்ணதாசன் ஒரு பாடலில் இந்த அழகை ‘‘மலை அழகா? அழகர் சிலை அழகா” என்று வர்ணிப்பார்.
மூலவரின் கருவறை மீது எழுப்பப்பட்டுள்ள சோமசந்த விமானம் வட்ட வடிவமானது.
ஆரியன் மண்டபத்தில் இசைத் தூண்கள் உள்ளன.
கல்யாண சுந்தரவல்லி தாயாரின் சந்நதியும் கலைநயத்துடன் உள்ளது.
இராயகோபுரம் திருமலை மன்னரால் ஆரம்பிக்கப்பட்டு முற்றுப்பெறா நிலையில் உள்ளது.
சிதைந்த நிலையிலும் இக்கோபுரத்தின் சிற்ப வேலைப்பாடுகள் சிற்பிகளின் உன்னத உளி வேலைப்பாட்டினை வெளிப்படுத்துகிறது.
திருக்கல்யாண மண்டபத்தில் நரசிம்மர் அவதாரம், கிருஷ்ணன், கருடன், மன்மதன், ரதி, திரிவிக்கிரமன் அவதாரம்,
லட்சுமி வராகமூர்த்தி ஆகிய பெயர்களைக் கொண்ட கற்றூண்களில் உள்ள சிற்பங்கள் நாயக்கர் கால சிறந்த படைப்புகளாகும்.
வசந்த மண்டபத்தில் இராமாயணம் மற்றும் மகாபாரதம் நிகழ்ச்சிகளைச் சித்திரிக்கும் அழகிய ஒவியங்கள் உள்ளன.
கோயிலின் காவல் தெய்வம் பதினெட்டாம்படிக் கருப்பசாமி சந்நதியில் உள்ள கோபுரம் சிற்ப வேலைப்பாடுகள் மிக்கது.
இந்தச் சந்நதியும் இங்கு ஒரு சிறப்புதான். மக்கள் திரளாக வருகிறார்கள். பெருங்கதவு முன் நிற்கிறார்கள்.
பிரமாண்டமான இரட்டைக் கதவு. கதவு உள்பக்கமாகத் தாழிடப்பட்டிருக்கிறது.
அதில் சந்தனம், குங்குமம், கற்பூரம் முதலியன பூசி மாலையும் மலர்களும் சாத்தி கதவையே தெய்வமாக எண்ணி வணங்குகிறார்கள்.
தலையில் உருமால், தோளில் வல்லவேட்டு, இடுப்பில் சுங்குவைத்துக் கட்டிய கச்சை,
கையில் கத்தி, ஈட்டி, வல்லயம், வீச்சரிவாள், தோளில் சாத்திய கட்டாரி, காலில் சல்லடம் என்று
கம்பீரமாகக் காட்சி தருபவராம் கருப்பசாமி.
சித்திரைத் திருவிழாவுக்குப் புறப்படும்போது முதலில் கருப்பசாமியின் சந்நதிக்குதான் அழகர் வருகிறார்.
அங்கே அழகர் அணிந்திருக்கும் நகைகளின் பட்டியல் வாசிக்கப்படுகிறது.
திருவிழாக்கண்டு திரும்பிக் கோயிலுக்குள் செல்லும் முன்பு, கொண்டு சென்ற நகைகள் எல்லாம் திரும்ப
பத்திரமாகக் கொண்டு வந்துவிட்டதை கருப்பசாமியிடம் காட்டிச் செல்ல வேண்டும்.
அழகருக்கு அபிஷேகம் செய்ய கொண்டுவரப்படும் தீர்த்தத்தைக் கூடக் கருப்பசாமியிடம் காட்டிவிட்டுத்தான் எடுத்துச் செல்வது வழக்கம்.
பக்தர்களின் உள்ளம் கவர்ந்தவன். வெண்ணையை திருடித் தின்றவன் என்ற காரணங்களால் கள்ளழகர் எனப்பெயராயிற்று.
கள்ளர் கொண்டை, கொண்டையில் குத்தீட்டி, கையில் வலைதடி (வளரி), இடுப்பில் ஜமதாடு (ஒருவகை கத்தி) என
விதவிதமான ஆயுதங்களுடன் மதுரை நோக்கிப் புறப்படுகிறார் கள்ளழகர்.
அழகர் கள்ளர் வேடத்தில் வருவதால், அழகர் என்ற பெயர் கள்ளழகர் என மாறியது.
(ஆண்டாள் கோயில் மாலை 3 பேருக்கு மட்டும்தான்.
1, சித்திரை மாகம் கள்ளழகர்.
2,புரட்டாசி மாதம் திருப்பதி திருவேங்கடநாதன்.
3, பங்குனி மாதம் ஸ்ரீ ரங்க நாதர்.)
————————————-
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கல்யாண ஸூந்தர வல்லித் தாயார் ஸமேத ஸ்ரீ கள்ளழகர் ஸ்ரீ பரம ஸ்வாமி திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply