(திருநாமங்கள் 422 [உக்ர:] முதல் 430[பீஜம் அவ்யயம்] வரை – கல்கி அவதாரம்)
(திருநாமங்கள் 436 [அநிர்விண்ண:] முதல் 445 [ஸமீஹன:] வரை – திருமாலின் சிம்சுமார வடிவம்)
(திருநாமங்கள் 446 [யக்ஞ:] முதல் 463 [ஜிதக்ரோத:] வரை – வேதச் சடங்குகளால் போற்றப்படுபவர் திருமால்)
(திருநாமங்கள் 457[ஸுமுக:] முதல் 470 [நைககர்மக்ருத்] வரை – தேவர்களுக்கு அமுதம் தந்த வரலாறு)
—————–
422. உக்ராய நமஹ (Ugraaya namaha)
(திருநாமங்கள் 422 [உக்ர:] முதல் 430[பீஜம் அவ்யயம்] வரை – கல்கி அவதாரம்)
பரீட்சித் மகாராஜாவுக்கு வியாசரின் மகனான சுகப்பிரம்மம், ஸ்ரீமத் பாகவதம் என்ற மிக உயர்ந்த புராணத்தை உபதேசம் செய்தார்.
அதில், பகவானின் வெவ்வேறு அவதாரங் களின் வரலாறுகளையும், இறையடியார்களின் வரலாறுகளையும் விவரித்த சுகப்பிரம்மம்,
குறிப்பாகக் கிருஷ்ணாவதாரத்தையும் கண்ணனின் லீலைகள் பற்றியும் விரிவாக உபதேசம் செய்தார்.
அவற்றை எல்லாம் கேட்ட பரீட்சித், கண்ணன் தனது அவதாரத்தை நிறைவு செய்து கொண்டு வைகுண்டம் சென்ற பின்
பூமியிலே என்ன நடக்கும் என்று சுகப்பிரம்மத்திடம் வினவினான். அதற்கான விடையை
ஸ்ரீமத் பாகவத புராணத்தின் நிறைவுப் பகுதியில் சுகப்பிரம்மம் வழங்குகிறார்.
கண்ணன் அவதாரத்தை நிறைவு செய்து வைகுண்டம் சென்றவாறே பூமியில் கலியுகம் தொடங்கிவிடும்.
கலியுகத்தில் வரும் மன்னர்கள் அதர்மத்திலும் பொய்மையிலும் பற்றுக் கொண்டவர்களாகவும், கருமிகளாகவும்,
கொடுங்கோபம் மிக்கவர்களாகவும், பெண்கள் குழந்தைகளைத் துன்புறுத்துபவர்களாகவும்,
பிறர் மனைவி பிறர் பொருளை விரும்புபவர்களாகவும், அற்ப ஆயுள் கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.
மேலும் அத்தகைய மன்னர்கள் தங்கள் பிரஜைகளைப் பலவாறு துன்புறுத்துவார்கள்.
நாளுக்கு நாள் மக்களிடத்தில் அறநெறி, வாய்மை, தூய்மை, ஆயுள், வலிமை ஆகியவை குறைந்து கொண்டே வரும்.
பணம் படைத்தவன் மேன்மையானவனாகக் கருதப்படுவான்.
வலிமை உள்ளவன் வைத்தது எல்லாம் சட்டமாக ஆகிவிடும். அந்தணர்களுக்குப் பூணூல் மட்டுமே அடையாளமாக இருக்குமே ஒழிய,
வேதம் ஓதுவதை மறந்துவிடுவார்கள். கையூட்டு கொடுக்காவிட்டால் நியாயம் பெற முடியாது.
ஓயாமல் பேசுபவனே பண்டிதனாகக் கருதப்படுவான். யார் திருடினாலும் அந்தத் திருட்டுப் பழி ஏழையின் மீதே விழும்.
வயிறு வளர்ப்பதையே லட்சியமாக மக்கள் கருதுவார்கள். குடும்பத்தைக் காப்பது மட்டுமே திறமை என்ற எண்ணம் மேலோங்கி இருக்கும்.
அறநெறியைப் பின்பற்றும் சிலர் பகட்டுக்காகவே பின்பற்றுவர். பஞ்சத்தாலும், அரசாங்கம் விதிக்கும் அதிக வரிகளாலும் மக்கள் துன்புறுவார்கள்.
பசி, தாகம் உள்ளிட்டவற்றாலும் மக்கள் துன்புறுவார்கள். துஷ்ட மன்னர்களின் ஆட்சியில், மக்கள் எல்லோரும் துன்புற்று
அதர்மம் மேலோங்கி இருக்கும் சூழலில்தான் பகவான் கல்கி அவதாரம் எடுப்பார்.
(கலியுகம் தொடங்கிய காலம் கி.மு. 3102 என்று பெரியோர்கள் காட்டியுள்ளார்கள்.
கலியுகத்தின் மொத்த அளவு 4,32,000 ஆண்டுகள்.
அந்தக் கலியுகம் முடிவடையும் தறுவாயில் கல்கியவதாரம் பகவானால் எடுக்கப்படும்.)
“சம்பள க்ராம முக்யஸ்ய ப்ராஹ்மணஸ்ய மஹாத்மன:
பவனே விஷ்ணு யசஸ: கல்கி: ப்ராதுர்பவிஷ்யதி”
சம்பளம் என்ற கிராமத்தில், மிகச்சிறந்த மகாத்மாவான விஷ்ணு யசஸ் என்பவர்க்கு மகனாகக்
கல்கி அவதாரத்தை பகவான் எடுக்க உள்ளார்.
தேவர்கள் அந்தக் கல்கி பகவானுக்குச் சிறந்த ஒரு குதிரையைக் காணிக்கையாக அளிப்பார்கள்.
அக்குதிரை மேல் ஏறிக்கொண்டு வேகமாகப் பூமியெங்கும் சஞ்சாரம் செய்து, அரசர்கள் வேஷத்தில் இருக்கும்
துஷ்டர்களை எல்லாம் கத்தியால் அழிப்பார் கல்கி பகவான். கல்கி பகவானின் திருமேனி நறுமணத்தை நுகரும்
மக்கள் அனைவரின் மனங்களிலும் உள்ள அழுக்குகள் யாவும் நீங்கி, அவர்கள் தூய்மை அடைவார்கள்.
அந்தக் கல்கி பகவான் அவதரித்த நேரத்தில் கலியுகம் முடிவடைந்து கிருதயுகம் தொடங்கும்.
சத்திய யுகம் என்றழைக்கப்படும் அந்தக் கிருதயுகத்தில் மக்கள் அனைவரும் சத்துவ குணம் நிறைந்த தர்மாத்மாக்களாகத் திகழ்வார்கள்.
இவ்வாறு கிருஷ்ணாவதாரத்துக்குப் பின் கலியுகத்தில் நடைபெற உள்ள சம்பவங்களைப் பரீட்சித்துக்குச் சுகப்பிரம்மம் உரைத்தார்.
கலியுகத்தில், அதர்மம் மேலோங்கி இருக்கும் வேளையில், கோபத்துடன் குதிரையில் வந்து துஷ்ட சக்திகளை அழிப்பதால்,
கல்கி பகவான் ‘உக்ர:’ என்று அழைக்கப்படுகிறார். ‘உக்ர:’ என்றால் உக்கிரமானவர் என்று பொருள்.
அறத்தை அழிக்க நினைக்கும் தீய சக்திகளுக்கு உக்கிரமானவராகத் திகழ்வதால், கல்கி பகவான் ‘உக்ர:’ என்று அழைக்கப்படுகிறார்.
அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 422-வது திருநாமம்.
“உக்ராய நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களின் மனங்களில் தீய எண்ணங்கள் தோன்றாதபடித் திருமால் காத்தருள்வார்.
——————-
423. ஸம்வத்ஸராய நமஹ (Samvathsaraaya namaha)
குலோத்துங்கச் சோழன் தனது ஆட்சிக் காலத்தில் நாகப்பட்டினத்துக்கு அருகில் உள்ள திருக்கண்ணபுரம் என்ற
திவ்ய தேசத்துக்குப் பலவாறான இடையூறுகளைச் செய்துவந்தான்.
முன்பு திருக்கண்ணபுரம் திருக்கோயிலைச் சுற்றி ஏழு மதில்கள் இருந்தன.
அதில் ஒரு மதிலுக்குள் வெள்ளி இருப்பதாக யாரோ சொன்ன செவி வழிச் செய்தியைக் கேட்டு அந்த மதிளை இடித்தான் சோழன்.
ஏதேதோ காரணங்களைச் சொல்லி மற்ற மதிள்களையும் இடிக்கத் தொடங்கினான்.
நாகைக் கடற்கரையில் கடற்படைத் தளம் அமைப்பதாகச் சொல்லித் திருக்கண்ணபுரம் சௌரிராஜப் பெருமாளின்
தொண்டர்கள் தங்கி இருந்த இருப்பிடங்களை அழித்தான். திருக்கண்ணபுரத்திலே ஓர் அரையர் வாழ்ந்து வந்தார்.
அவர் அங்கே கோயில் கொண்டிருக்கும் சௌரிராஜப் பெருமாள் முன்னே ஆழ்வார் பாசுரங்களை இசையோடு பாடி,
அவற்றின் பொருளை அபிநயம் பிடித்துக் காட்டி விளக்குவார்.
சோழனின் செய்கைகளைக் கண்டு கடும் கோபம் அடைந்த அந்த அரையர், ஒருநாள் சௌரிராஜப் பெருமாளிடம் சென்று,
“இறைவா! உனக்குக் கண் இல்லையா? ஒருவன் இத்தனை தவறுகள் செய்து வரும் போது
நீ கண்டும் காணாமல் இருக்கலாமா?” என்று கேட்டார்.
மேலும், தனது கோபத்தின் வெளிப்பாடாகத் தனது கையில் இருந்த தாளத்தைப் பெருமாள் மீதே எறிந்தார்.
அது பெருமாளின் நெற்றியில் பட்டது. இன்றும் திருக்கண்ணபுரம் சௌரிராஜப் பெருமாளின் நெற்றியில் அந்தத் தழும்பைத் தரிசிக்கலாம்.
சற்று கோபம் தணிந்தவாறே, “அடடா! பெருமாளை நாம் அடித்துவிட்டோமே! பெரும் தவறு செய்துவிட்டோமே!” என்று
தமது செய்கைக்கு வருந்திய அரையர், வருத்தத்துடன் தனது வீட்டுக்குத் திரும்பி, கண்ணீர் சிந்தியபடி சயனித்திருந்தார்.
அப்போது அரையரின் வீட்டு வாசல் கதவை யாரோ தட்டினார்கள். அரையர், கதவைத் திறந்து நீங்கள் யார் என்று கேட்டார். வந்தவர்,
“எனக்கு சபாநடேசன் என்று பெயர். நான் சிதம்பரத்தில் இருந்து வருகிறேன்!” என்றார்.
இவர் சோழனின் ஆளாக இருப்பாரோ என்று ஐயம் கொண்டார் அரையர்.
ஆனால், வந்தவர் யார் என்பதையும் அவரது பெயருக்கான காரணத்தையும் உணர்ந்து கொண்டார் அரையர்.
வந்தவர் சாட்சாத் சௌரிராஜப் பெருமாள் தான். ஆனால் தன் பெயரை சபாநடேசன் என்று சொன்னாரே,
அது பெருமாளின் திருப்பெயரா? ஆம். சபை என்பது இந்த மொத்தப் பிரபஞ்சத்தையும் குறிக்கிறது.
நட என்ற சொல் இந்தப் பிரபஞ்சமாகிய நாடகமேடையில் நடிக்கும் அனைத்து உயிர்களையும் குறிக்கிறது.
பிரபஞ்சத்தையும் அதில் உள்ள உயிர்களையும் தனது சொத்தாகக்கொண்ட திருமால் சபாநடேசன் எனப்படுகிறார்.
திருமாலின் அருளால் இதை உணர்ந்துகொண்ட அரையர், பரவசத்தோடு திருமாலை வரவேற்றார்.
“தேவரீரைக் கோபத்தில் அடித்து விட்டேன்! அடியேனை மன்னித்து அருள வேண்டும்!” என்று மனம் உருகி வேண்டினார் அரையர்.
அரையரைப் பார்த்து சௌரிராஜப் பெருமாள், “அரையரே! நான் சொன்ன பெயரின் மூலம்
நீங்களே ஒன்றை உணர்ந்திருப்பீர்கள். உலகமாகிய சபையும் என் சொத்து, அதில் நடமாடும் உயிர்களும் என் சொத்து.
என் சொத்தைக் காக்க வேண்டியது என் பொறுப்பு அல்லவா? சரியான நேரத்தில் அதைச் செய்வேன்.
விரைவில் கொடுங்கோல் ஆட்சி புரியும் அரசன் தொண்டையில் நோய் வந்து மாண்டு போவான்.
இந்த ராஜ்ஜியத்தில் பழைய நிலை மீண்டும் திரும்பும். தீய சக்திகளை அழிக்க எப்போதும் நான் தயார் நிலையில்
இருப்பேன் என்பதற்கு அடையாளமாக இனி இந்தத் திருத்தலத்தில் எனது சுதர்சனச் சக்கரத்தைப் பிரயோகச் சக்கர வடிவில் ஏந்தி இருப்பேன்!
அதர்மம் ஓங்குவதை என்றுமே நான் வேடிக்கை பார்க்க மாட்டேன்.உரிய நேரத்தில் அதர்மத்தை அழித்து
தர்மத்தை நிலைநாட்ட நான் என்றுமே தயார் நிலையில்தான் இருப்பேன்!” என்று கூறினார்.
அவ்வாறே திருக்கண்ணபுரம் திருத்தலத்தில் விரைவில் அமைதி திரும்பியது என்பது வரலாறு.
அதுபோலத்தான், கலியுகத்தில் நடைபெறும் அக்கிரமங்களை உரிய காலத்தில் அழிக்க விரும்பி,
கல்கி பகவான் இப்போதும் பாதாள லோகத்தில் ஆதிசேஷனில் சயனித்தபடிக் காத்திருக்கிறார்.
கலியுகம் முடிவடையும் காலம் வரும்போது, சம்பள கிரமாத்தில் விஷ்ணு யசஸ் மகனாகத் தோன்றி தீய சக்திகளை அழிப்பார்.
பராசர பட்டர், இந்தத் திருநாம விளக்கவுரையில் இதைத் தெளிவாகக் காட்டியுள்ளார் –
ஸம்வத்ஸரஸ் ஸ்யாத் பாதாளே அனந்தே ஸம்வஸதி இதி ஸ: என்று,
கல்கி பகவான் புதிதாகக் கலியுகத்தின் முடிவில்தான் தோன்றப் போகிறார் என்று பொருளல்ல,
அவர் ஏற்கனவே பாதாள லோகத்தில் ஆதிசேஷனில் சயனித்தபடி காத்திருக்கிறார்.
தனக்குரிய காலம் வரும்போது விஷ்ணு யசஸ் மகனாகத் தோன்றுவார்.
இப்படி தர்மத்தை நிலைநாட்டும் காலத்தை எதிர்நோக்கிப் பாதாளத்தில் வசித்து வருவதால்,
கல்கி பகவான் ‘ஸம்வத்ஸர:’ என்று அழைக்கப்படுகிறார்.
‘ஸம்வத்ஸர:’ என்றால் நன்றாக வசிப்பவர் என்று பொருள்.
பாதாளத்தில் வசிக்கும் கல்கி பகவான் ஸம்வத்ஸர எனப்படுகிறார். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 423-வது திருநாமம்.
“ஸம்வத்ஸராய நமஹ” என்று தினமும் சொல்லிவரும் அன்பர்களுக்கு வாழ்வில் நல்ல காலம் பிறக்கும்படித் திருமால் அருள்புரிவார்.
————-
424. தக்ஷாய நமஹ (Dhakshaaya namaha)
அடியேனுடைய குருவின் குருவான ஆசுகவி வில்லூர் ஸ்ரீநிதி சுவாமிகள், நாச்சியார்கோவிலில் கோவில் கொண்டிருக்கும்
கல் கருடன் விஷயமாக க்ஷேமகாரி சதகம் என்ற நூறு சுலோகங்களை அருளி உள்ளார்.
நாச்சியார்கோயில் ஸ்ரீநிவாசப் பெருமாளுக்காகத் திருமங்கை ஆழ்வார் நூறு பாசுரங்கள் பாடினார்.
ஆனால், அந்தத் திருத்தலத்தில் பெருமாளை விடப் பிரசித்தி பெற்றவர் கல்கருடன் அல்லவா?
அதனால், திருமங்கை ஆழ்வாரின் மறு அவதாரமாகப் போற்றப்படும் வில்லூர் ஸ்ரீநிதி சுவாமிகள் கல் கருடனுக்காக
நூறு சுலோகங்கள் அடங்கிய அத்துதியைச் சமர்ப்பித்தார்.
அதிலே கல் கருடனுக்கும் வில்லூர் சுவாமிகளுக்கும் இடையே நடைபெறும் உரையாடலாகக் கீழ்க்கண்ட ஸ்லோகம் அமைந்துள்ளது.
“ரக்ஷாம் பக்ஷிபதே கஜஸ்ய கலயன் அம்ஸே த்வதீயே ஸ்தித
தேனே கர்ஷணம் அத்ர தத்ர பவத: கேதாய கிம் நாபவத்
மோதாயைவ யதார்த்த ரக்ஷண க்ருதே வேகோஸ்ய மான்யோ குண:
தேனைவாஸ்ய பதாம்புஜேஸ்மி நிதராம் தாஸ்யம் கதோ நிர்வ்ருத:”
வில்லூர் சுவாமிகள்: பட்சி ராஜனே!
உனக்குத் தளர்ச்சி ஏற்படவில்லையா?
கல் கருடன்: எதற்காகத் தளர்ச்சி ஏற்பட வேண்டும்?
வில்லூர் சுவாமிகள்: கஜேந்திரனைக் காப்பதற்காக உன் மீது ஏறித் திருமால் பயணித்தார் அல்லவா?
அப்போது தளர்ச்சி ஏற்படவில்லையா உனக்கு?
கல் கருடன்: எப்போதுமே பகவான் என் தோளில் தானே பயணிக்கிறார்? அது எனக்கு பாக்கியமே.
தளர்ச்சி ஏற்படுவதில்லை.வில்லூர் சுவாமிகள்: மற்ற சூழ்நிலைகள் வேறு.
கஜேந்திரனை விரைந்து காப்பதற்காகத் திருமால் உன்னை மிகுந்த வேகத்தோடு உன்னைப் பயணிக்கச் சொன்னார் அல்லவா?
எந்த ஒரு ஓட்டுநருமே பயணி தன்னை வேகமாக ஓட்டும்படிப் பணித்துக்கொண்டே இருந்தால், அதை விரும்ப மாட்டார்.
ஆனால், திருமாலோ உன்னைப் பார்த்து வேகமாகப் போ… வேகமாகப் போ… என்று சொல்லிக்கொண்டே
கஜேந்திரன் இருந்த குளத்தங்கரை நோக்கி உன்மீது பயணித்தார்.
அது உனக்குத் தளர்ச்சியை உண்டாக்கவில்லையா என்று கேட்டேன்.
கல் கருடன்: அது தளர்ச்சியை ஏற்படுத்தவில்லை, மகிழ்ச்சியையே ஏற்படுத்தியது.
வில்லூர் சுவாமிகள்: அப்படியா?
கல்கருடன்: ஆம், அடியார்களைக் காக்க வேண்டும் என்பதிலே பகவான் எவ்வளவு வேகம் காட்டுகிறான்?
அந்த வேகம் என்பது போற்றுதற்குரிய குணம் அல்லவா? அடியவன் துன்பப் பட்டுக்கொண்டிருக்க,
பகவான் பொறுமையாகக் காப்பாற்றலாம் என்று காத்திருந்தால் அது அவனது கருணைக்கேற்ற செயல் ஆகுமா?
பக்தனுக்கு ஆபத்து என்றவுடன் விரைந்து சென்று காப்பது தானே இறைவனின் கருணைக்கு அழகு?
இறைவனின் அத்தகைய குணத்தைப் போற்றவேண்டாமோ?
வில்லூர் சுவாமிகள்: நிச்சயமாக!
கல்கருடன்: அந்த வேகத்தால் ஈர்க்கப்பட்டுத் தான் அவர் திருவடியை விட்டு நீங்காமல் அவரது தொண்டனாக
அவர் திருவடிவாரத்திலேயே என்றென்றும் இருக்கிறேன். அவர் என்னை வேகமாகப் பயணிக்கச் சொன்ன விஷயம்
அடியேனுக்கு மகிழ்ச்சியையும் அவர்மீது மதிப்பையுமே அளித்தது.இப்படித் தன் பக்தர்களைக் காப்பதிலும்
தீயசக்திகளை அழிப்பதிலும் மிகுந்த வேகம் கொண்டவராக விளங்குகிறார் திருமால்.
கலியுகத்தில் நடக்கும் அக்கிரமங்களை இறைவன் வெறுமனே வேடிக்கை பார்ப்பதாக நாம் எண்ணி விடக் கூடாது.
அவ்வப்போது ஏதோ ஒரு வகையில் அவற்றைத் தடுத்துக் கொண்டே தான் இருப்பார் இறைவன்.
கலியுகம் நிறைவடையும் காலம் வருகையில், கல்கி பகவானாகத் தோன்றி ஒட்டுமொத்தமாக
அனைத்துத் தீய சக்திகளையும் விரைவாக அழித்து உலகில் அறநெறி தழைத்தோங்கும்படிச் செய்வார்.
எனவே, இறைவனைப் பொறுத்தவரையில் தாமதம் என்ற பேச்சுக்கே இடமில்லை.
தீய சக்திகளை விரைந்து அழிப்பதால் கல்கி பகவான் ‘தக்ஷ:’ என்று அழைக்கப்படுகிறார்.
‘தக்ஷா:’ என்றால் விரைந்து செயல்படுபவர் என்று பொருள்.
அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 424-வது திருநாமம்.
“தக்ஷாய நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்குத் திருமால் விரைந்து அருள்புரிவார்.
———–
425. விஷ்ராமாய நமஹ (Vishraamaaya namaha)
ஓர் ஊரிலே ஒரு பிச்சைக்காரர் இருந்தார். அவர், “என்னிடம் காசு இல்லை, என்னிடம் பணம் இல்லை,
என்னிடம் சொத்து இல்லை!” என்று புலம்பிக்கொண்டே யாசகம் கேட்டுக்கொண்டிருந்தார்.
அவருக்குச் சொந்தமாக நூறு சதுர அடிக்குச் சிறிய நிலம் மட்டுமே இருந்தது. அதைத் தவிரத் தங்குவதற்கு வீடு கூட இல்லை.
“ஐயோ! இறைவன் என்னை இப்படி ஏழையாகப் படைத்து விட்டானே!” என்று தினந்தோறும் புலம்புவாராம்.
ஆனால், அந்தப் பிச்சைக்காரருக்கு ஒரு விஷயம் தெரியாது. அவருக்குச் சொந்தமாக நூறு சதுர அடி நிலம் இருக்கிறதே.
அதற்குக் கீழே மிகப்பெரிய தங்கச் சுரங்கமே உள்ளது என்று. அதில் உள்ள அத்தனை தங்கமும் இவருக்குத்தான் சொந்தம்.
ஆனால், மண்ணால் தங்கச் சுரங்கம் மூடப்பட்டிருப்பதாலே, தான் அமர்ந்திருக்கும் இடம் தங்கச் சுரங்கம் என்றே
அறியாமல் அவர் பிச்சை எடுத்துக்கொண்டிருந்தார்.
விஷ்ணு சஹஸ்ரநாம விளக்கத்தில் எதற்காக இந்தப் பிச்சைக்காரர் கதை? இது வெறும் பிச்சைக்காரர் கதை இல்லை,
இது சாந்தோக்ய உபநிஷத்தில் வரும் கதை. அந்தப் பிச்சைக் காரர் தான் ஜீவாத்மாக்காளாகிய நாம்.
ஆனந்தம் தான் நமக்குரிய செல்வம். அந்தப் பிச்சைக்காரர் காசு இல்லை என்று புலம்பியது போல்,
நாமும் நமக்கு வாழ்வில் ஆனந்தமே இல்லையே, துன்பப் படுகிறோமே என்று புலம்பிக்கொண்டே இருக்கிறோம்.
அந்தப் பிச்சைக்காரர் தங்கச் சுரங்கத்தின் மேலே அமர்ந்திருந்தார் அல்லவா?
அதுபோலத்தான் ஆனந்தத்தின் சுரங்கமான திருமாலே நமக்குள் எழுந்தருளியிருக்கிறார்.
சுரங்கம் மண்ணால் மூடப்பட்டிருப்பதால், பிச்சைக்காரருக்கு அது தங்கச்சுரங்கம் என்று தெரியவில்லை.
அதுபோல், நமது அறிவானது நம் முன்வினைகளாகிய பாபங்களால் மூடப் பட்டிருப்பதால், நமக்குள் எழுந்தருளி இருக்கும்
ஆனந்தத்தின் வடிவான இறைவனை நாம் அறியாமல், எங்கெங்கோ ஆனந்தத்தைத் தேடி அலைந்து கொண்டிருக்கிறோம்.
இதைக் கூறும் சாந்தோக்ய உபநிஷத் வாக்யம்:
“தத் யதா ஹிரண்ய நிதிம் நிஹிதம் அக்ஷேத்ரஜ்ஞா உபரி உபரி ஸஞ்சரந்தோ ந விந்தேயுரேவம் ஏவேமாஸ் ஸர்வா:
ப்ரஜா அஹரஹர் கச்சந்த்ய ஏதம் ப்ரஹ்ம லோகம் ந விந்தந்தி அந்ருதேன ஹி ப்ரத்யூடா:”
நமக்குள் இறைவன் இருக்கிறான் என்று உபநிஷத் சொல்கிறது. ஆனால், அவன் உள்ளே இருப்பதற்கு ஏதாவது நேரடிச் சான்று உண்டா?
அதையும் காட்டுகிறது உபநிஷத். தினமும் காலை தூங்கி எழும்போது,
“நான் இப்போது புத்துணர்ச்சி பெற்றேன்!” என்று மனிதர்கள் சொல்கிறார்களே! அந்தப் புத்துணர்ச்சி எங்கிருந்து வந்தது?
தூங்குபவரால் எதையாவது சம்பாதிக்க முடியுமா? உறங்கியவரால் புத்துணர்ச்சியை எவ்வாறு சம்பாதிக்க முடிந்தது?
உறக்க நிலையில் ஜீவாத்மா பரமாத்மாவோடு தற்காலிகமாக இணைந்து இருக்கிறார்.
அந்தப் பரமாத்மா ஜீவாத்மாவை ஆசையுடன் தழுவிக்கொண்டு, ஓர் இளைப்பாறும் இடமாக இருந்து,
ஜீவாத்மாவின் களைப்பைப் போக்கிப் புத்துணர்ச்சி கொடுக்கிறார். அதன் விளைவாகத் தான் மறுநாள் காலை எழும் போது
புத்துணர்ச்சி பெற்றவனாக ஜீவாத்மா தன்னை உணர்கிறான். எனவே, காலையில் நாம் எழும்போது உணரும்
புத்துணர்ச்சியே உள்ளே இறைவன் இருக்கிறான் என்பதற்குச் சான்று என்கிறது உபநிஷத்.
உறக்க நிலையில் மட்டும் இல்லை, கலியுகம் முற்றிய நிலையில் அதர்மம் ஓங்கி, அறநெறி தாழ்ந்து,
உலகில் வாழும் மக்கள் எல்லாம் தவித்துக் கொண்டிருக்கும் நிலையில், கல்கியாகத் திருமால் அவதாரம் செய்து
அந்தத் தீய சக்திகளில் இருந்தும் அதர்மத்தில் இருந்தும் மக்களைக் காத்து, அவர்களுக்குச் சிறந்த இளைப்பாறும் இடமாகத் திகழ்வார்.
உறக்க நிலையில் பரமாத்மாவோடு இணைந்திருக்கும் ஜீவாத்மாக்கள் புத்துணர்ச்சி பெறுவது போல்,
கல்கி பகவானின் திருமேனி நறுமணத்தை நுகர்ந்த அத்தனை பேரும் புத்துணர்ச்சியும் தூய சத்துவ குணமும் பெற்று,
அடுத்து தொடங்கும் கிருத யுகத்தில் தர்மாத்மாக்களாக வாழ்வார்கள்.இவ்வாறு கலியின் கொடுமையால் துன்புறுவோர்க்கெல்லாம்
இளைப்பாறும் இடமாகக் கல்கி பகவான் இருப்பதால், அவர் ‘விச்ராம:’ என்று அழைக்கப்படுகிறார்.
‘விச்ராம:’ என்றால் இளைப்பாறும் இடம் என்று பொருள். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 425-வது திருநாமம்.
“விஷ்ராமாய நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களின் களைப்பைத் திருமால் போக்கிப் புத்துணர்ச்சி தந்தருள்வார்.
——————
426. விஷ்வதக் ஷிணாய நமஹ:(Vishva-dhakshinaaya namaha)
(திருநாமங்கள் 422 [உக்ர:] முதல் 430[பீஜம் அவ்யயம்] வரை – கல்கி அவதாரம்)
சரஸ்வதி நதிக்கரையில் ஒரு வேள்வி செய்து வந்த சில மாமுனிவர்கள், பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய
மும்மூர்த்திகளுக்குப் பரீட்சை வைத்துப் பார்க்க நினைத்தார்கள்.
அதன் பொருட்டு, பிரம்மாவின் மகனான பிருகு முனிவரை மும்மூர்த்திகளிடம் அனுப்பி வைத்தார்கள்.
இவ்வரலாறு ஸ்ரீ மத் பாகவத புராணத்தின் 10ம் ஸ்கந்தம் 89ம் அத்தியாயத்தில் வருகிறது.
இவ்வரலாறு வழக்கில் பலவாறாகச் சொல்லப்பட்டுவந்தாலும்,
ஸ்ரீ மத் பாகவத புராணத்தில் சொல்லப்பட்ட சரித்திரம் இங்கே அப்படியே எடுத்தாளப்படுகிறது.
முதலில், பிரம்மாவின் சபைக்குச் சென்ற பிருகு முனிவர், பிரம்மாவை வணங்காமல், துதிக்காமல் அப்படியே நின்று கொண்டிருந்தார்.
அதைப் பார்த்துக் கோபம் கொண்டார் பிரம்மா. ஆனாலும் பிருகு முனிவர் தனது மகன் என்பதால்,
கோபத்தை வெளிக்காட்டிக் கொள்ளாது மனதுக்குள் மறைத்துக் கொண்டார்.
ஆயினும், பிரம்மாவின் மனதில் கோபம் எழுந்ததை பிருகு முனிவர் அறிந்து கொண்டார்.
அடுத்து கயிலாசத்துக்குச் சென்றார் பிருகு. பரமசிவன் ஆசையோடு பிருகு முனிவரை ஆலிங்கனம் செய்து கொள்ள வந்தார்.
ஆனால், சிவனை ஆலிங்கனம் செய்துகொள்ள மறுத்துக் கோபத்துடன் பேசினார் பிருகு முனிவர்.
அதனால் கோபம் கொண்ட பரமசிவன், சூலத்தால் பிருகுவைத் தாக்க முற்பட்டார்.
எனினும் பார்வதிதேவி சிவபெருமானைச் சமாதானப் படுத்தி, அவரது கோபத்தைத் தணித்தாள்.
சிவபெருமானுக்கும் கோபம் வருகிறது என உணர்ந்தார் பிருகு முனிவர்.
அடுத்ததாகக் காரிய வைகுண்ட லோகத்துக்குச் சென்றார் பிருகு முனிவர்.
அங்கே மகாலட்சுமியின் மடியில் சயனித்தபடித் திருமால், பிருகு முனிவருக்குக் காட்சி அளித்தார்.
அதைக் கண்ட பிருகு முனிவர் என்ன செய்தார்? ஸ்ரீ மத் பாகவத புராணம் சொல்கிறது.
“சயானம் ச்ரிய உத்ஸங்கே பதா வக்ஷஸி அதாடயத்
தத உத்தாய பகவான் ஸஹ லக்ஷ்ம்யா ஸதாம் கதி:”
திருமாலின் திருமார்பிலேயே வேகமாக எட்டி உதைத்துவிட்டார் பிருகுமுனிவர்.
ஆனால், திருமாலுக்குக் கோபமே வரவில்லை. மகாலட்சுமியும் திருமாலும்
ஆதிசேஷப் படுக்கையில் இருந்து விரைந்து எழுந்தார்கள்.
திருமால், பிருகு முனிவரை நமஸ்கரித்தார். பிருகுவைப் பார்த்த திருமால்,
“வாருங்கள் முனிவரே! உங்கள் வரவு நல்வரவாகுக! நீங்கள் வந்ததைக் கவனிக்காமல் நாங்கள் இருந்தமைக்கு
எங்களை நீங்கள் மன்னிக்க வேண்டும். மேலும், உங்கள் மென்மையான பாதங்களால்
எனது கரடு முரடான மார்பை உதைத்துவிட்டீர்களே! உங்கள் பாதங்களுக்கு வலிக்கிறதா?” என்று கேட்டுவிட்டு,
பிருகுவின் பாதங்களை மெல்லப் பிடித்து அமுக்கிவிட்டார்.
திருமாலின் எளிமையை எண்ணிக் கண்ணீர் வடித்த பிருகு முனிவர், சரஸ்வதி நதிக்கரைக்கே திரும்ப வந்து
திருமாலின் பெருமையை எடுத்துச் சொன்னார். “மிகவும் உயர்ந்தவனாக இருந்தபோதும்,
அந்த பகவான் அடியேன் செய்த தவறுக்காகக் கோபம் கொள்ளாது என் பாதங்களை அமுக்கி விட்டார்.
அத்தகைய இறைவன்தான் உலகிலுள்ள அனைவர் மீதும் கருணை காட்டக் கூடியவன்!” என்று மற்ற முனிவர்களிடம் சொன்னார்.
அச்சமயம் அங்கே வந்த நாரதர், “பிருகு முனிவரே! சரியாகச் சொன்னீர்கள்.
பின்னாளில் கலியுகம் முற்றிய நிலையில் கல்கி பகவானாகத் திருமால் அவதாரம் செய்வார்.
அப்போது அவர் தீய சக்திகளை அழித்தாலும், உண்மையில் அவர்கள் மீதும் இரக்கம் காட்டித்
தனது வாள் வீச்சால் அந்தத் தீயவர்களின் பாபங்களைப் போக்கி அவர்களுக்கும் நன்மையைத்தான் செய்யப் போகிறார்.
எல்லா நிலைகளிலும், அனைவர் மீதும் கருணையையும் பொறுமையையும் இரக்கத்தையும் காட்டுபவர் அன்றோ திருமால்?” என்று கூறினார்.
இப்படி உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகள் மீதும் இரக்கம் காட்டுவதால்,
கல்கி பகவான் ‘விச்வதக்ஷிண:’ என்று அழைக்கப்படுகிறார்.
‘விச்வ’ என்பது உலகிலுள்ள அனைத்து உயிர்களையும் குறிக்கிறது.
‘தக்ஷிண:’ என்றால் தாட்சிண்யம், அதாவது இரக்கம் காட்டுபவர் என்று பொருள்.
ஈவு இரக்கம் என்ற தொடரை தயவு தாட்சிண்யம் என்று குறிப்பிடும் வழக்கம் உள்ளது
அல்லவா அனைத்துயிர்களிடமும் இரக்கம் காட்டுவதால், கல்கி பகவான் ‘விச்வதக்ஷிண:’ எனப்படுகிறார்.
அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 426-வது திருநாமம்.
“விஷ்வதக் ஷிணாய நமஹ:” என்று தினமும் சொல்லிவரும் அன்பர்களுக்கு,
அவர்கள் செய்த பாபங்களைத் திருமால் மன்னித்து திருத்திப் பணிகொள்வார்.
—————
427. விஸ்தாராய நமஹ:(Visthaaraaya namaha)
உலகில் கலியுகம் தொடங்கிச் சுமார் நான்காயிரம் ஆண்டுகள் கடந்த அளவில்,
கலியுகம் கி.மு., 3102ம் ஆண்டு தொடங்கியதாகப் பெரியோர்கள் கணக்கிட்டுள்ளார்கள்.
உலகில் தருமங்கள் குறைந்துகொண்டேவந்தன. இதைக் கவனித்த திருமால், தனது படுக்கையான ஆதிசேஷனை அழைத்து,
“உலக நடைமுறையைப் பார்த்தாயா?” என்றார்.
ஆதிசேஷனும் “ஆம் பகவானே! அடியேனும் கவனித்துக்கொண்டு வருகிறேன்.
பூமியில் அறநெறி தொய்வடைந்து, அதர்மம் தலைதூக்கிவிட்டது.
நீங்கள் வழங்கிய வேதங்களை மக்கள் புறக்கணித்துவிட்டார்கள்.
வேறு சிலர் அந்த வேதங்களுக்கே தவறான பொருள் கூறிவருகிறார்கள்.
கருணைக் கடலாகிய உங்களுக்குக் குணங்களே இல்லை என்று சிலர் பிரச்சாரம் செய்கிறார்கள்.
ஆழ்வார்கள் அவதரித்துப் பாடிய ஈரத்தமிழ்ப் பாசுரங்கள் இப்போது வழக்கொழிந்து போய்விட்டன.
நீங்கள் பற்பல திவ்ய தேசங்களில் கோயில் கொண்டிருந்தாலும், உங்களை வந்து தரிசித்து உங்களுக்குத் தொண்டு
செய்யப் பெரும்பாலான மக்கள் முன்வரவில்லை. இவை அனைத்தையும் கவனித்து வருகிறேன் சுவாமி!” என்று பதிலளித்தார்.
திருமால் ஆதிசேஷனைப் பார்த்து, “அனந்தா! இவை மட்டும் இல்லை. வேத வியாசர் உலகுக்கு
எவ்வளவு நன்மைகள் செய்துள்ளார்? மகாபாரதம், புராணங்கள், பிரம்ம சூத்திரங்கள் இத்தனையும் வழங்கியவர் வியாசர்.
ஆனால், அவரை இப்போது நகைப்புக்கு உரிய பொருளாக மக்கள் மாற்றிவிட்டார்கள்.
அவரது பிரம்ம சூத்திரங்களைப் பயன் படுத்திக்கொண்டே வியாசரின் திருவுள்ளத்துக்கு முரணான கருத்துகளைப்
பிரச்சாரம் செய்துவருகிறார்கள். நான் ராமனாக அவதரித்த போது வெளிப்படுத்திய எனது மங்கல குணங்களைத் தொகுத்து
வால்மீகி முனிவர் ஸ்ரீ ராமாயணத்தை அருளினார்.
ஆனால், இப்போது வால்மீகியை ஒரு பொருட்டாகவே கருதாமல் தள்ளிவைத்து விட்டார்கள் மக்கள்.
ஸ்ரீ ராமாயணத்தையும் அதில் சொல்லப்பட்ட ராமனின் குணங்களையும், அடியோடு மறந்து விட்டார்கள்.
இவை மட்டுமா கிருஷ்ணனாக நான் அவதரித்துச் செய்த லீலைகளை எல்லாம் சுகப்பிரம்மம்
தேனினும் இனிய பாகவத புராணமாக வழங்கினார் அல்லவா?
அந்த சுகப்பிரம்மம் வழங்கிய பாகவத புராணத்தை ஏதோ விளையாட்டுக் கிளியின் உளறல் என்று
கருதித் தூக்கி எறிந்துவிட்டார்கள் மக்கள்.
வியாசரின் பிரம்ம சூத்திரங்களுக்குப் போதாயனர் என்ற மகான் விரிவான விளக்கவுரை வழங்கியுள்ளார்.
ஆனால் அந்தப் பெரியவரின் நூலையே மறுத்துப் பேசிக் குறைகூறி வருகிறார்கள் சில மக்கள்.
இப்படிப் பூமியில் தர்மம் க்ஷீணித்திருக்கும் நிலையில், ஆதிசேஷா! நீயே பூமியில் அவதாரம்
செய்து மீண்டும் தர்மம் தலைதூக்கும்படிச் செய்ய வேண்டும்.
அதற்கு முதல்படியாக வேத வியாசர் அருளிய பிரம்மசூத்திரங்களுக்குப் போதாயனர் அருளிய விளக்கவுரையின்
அடிப்படையில், ஓர் உரையை உருவாக்க வேண்டும்!” என்று சொல்லி ஆதிசேஷனைப் பூமிக்கு அனுப்பி வைத்தார் திருமால்.
திருமாலின் ஆணைக்கிணங்க பூமியிலே ராமானுஜராக அவதரித்த ஆதிசேஷன், பிரம்ம சூத்திரத்துக்குப் போதாயனர்
அருளிய விளக்கவுரையின் அடிப்படையில், “ஸ்ரீ பாஷ்யம்’’ என்ற அற்புதமான விளக்கவுரையை அருளிச்செய்தார்.
கலியுகத்தில் தருமங்கள் தழைத்தோங்கும்படிச் செய்து, மக்களுக்குள் ஏற்றத்தாழ்வு பாராது
பக்தியையும் ஞானத்தையும் எல்லோருக்கும் பரப்பினார் ராமானுஜர்.
ஆக, எப்போதெல்லாம் அதர்மம் தலைதூக்குவது போன்ற சூழல் ஏற்படுகிறதோ,
அப்போதெல்லாம் திருமால், நேராகவோ மறைமுகமாகவோ அந்த அதர்மத்தை அழித்துப் பூமியில் தர்மத்தை நிலைநாட்டிவிடுவார்.
கலியுகம் முற்றும்போது, தானே கல்கியாக அவதாரம் செய்து, ஒட்டுமொத்த அதர்மத்தையும் அழித்து,
பிரபஞ்சம் முழுவதும் தர்மத்தை நன்றாகப் பரப்பி, தர்மத்தைத் தழைத்தோங்கச் செய்வார்.
இவ்வாறு தர்மத்தைப் பரப்புவதால், கல்கி பகவான் ‘விஸ்தார:’ என்று அழைக்கப்படுகிறார்.
‘விஸ்தார:’ என்றால் பரப்புபவர் என்று பொருள்.
தர்மத்தைப் பரப்புவதால் கல்கி ‘விஸ்தார:’. அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 427-வது திருநாமம்.
“விஸ்தாராய நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களின் உள்ளங்களில்,
அறநெறியும் அறச் சிந்தனைகளும் பெருகும்படித் திருமால் அருள்புரிவார்.
———————–
428. ஸ்தாவர ஸ்தாணவே நமஹ:(Sthaavara-Sthaanave namaha)
பாண்டவர்கள் வனவாசம் மேற்கொண்ட சமயத்தில் காம்ய வனம் என்ற பகுதியில் தங்கி யிருந்தபோது,
கண்ணபிரான் அவர்களை வந்து சந்தித்தான்.
அப்போது, அங்கே மார்க்கண்டேயர், நாரதர் உள்ளிட்ட முனிவர்களும் வந்தார்கள்.
நாரதர் மார்க்கண்டேயரிடம் தர்மபுத்திரருக்கு நல்வார்த்தைகளை உபதேசித்து அருளுமாறு பிரார்த்திக்க,
மார்க்கண்டேயரும் பல புண்ணியக் கதைகளையும் நல் உபதேசங்களையும் தர்மபுத்திரருக்கு வழங்கினார்.
அவற்றை எல்லாம் கேட்டுக்கொண்டே வந்த தர்மபுத்திரர், மார்க்கண்டேயரைப் பார்த்து,
“முனிவரே! அடுத்து வர இருக்கும் கலியுகத்தின் நிலைமை எப்படி இருக்கும்?
பொதுவாகக் கலிகாலம் என்றாலே தர்மம் சீர்குலைந்திருக்கும் என்று எல்லோரும் சொல்கிறார்களே!
அவ்வாறு கலியுகத்தில் தர்மம் சீர்குலைந்தால் எப்போது அந்த நிலை சீரடையும்?
மீண்டும் கிருத யுகம் எப்படி உண்டாகும்? அறநெறி மீண்டும் எவ்வாறு தழைத்தோங்கும்?” உள்ளிட்ட கேள்விகளைக் கேட்டார்.
அதற்கு மார்க்கண்டேயர், “தர்மம் என்னும் காளை கிருதயுகத்தில் நான்கு கால்களோடும்,
திரேதாயுகத்தில் மூன்று கால்களோடும், துவாபரயுகத்தில் இரண்டு கால்களோடும்,
கலியுகத்தில் ஒரு காலோடும் இருக்கும். அதாவது, அறநெறியின் அளவு அப்படிக் குறைந்திருக்கும்.
கலியுகத்தில் மக்களின் ஆயுள், வீரியம், மனம், புத்தி, பலம், தேஜஸ் ஆகிய அனைத்தும் குறைந்திருக்கும்.
பிறரை ஏமாற்று வதற்காகவும், வெளிவேஷத்துக்காகவுமே மக்கள் அறநெறிகளைப் பின்பற்றுவார்களே தவிர,
உளமார அறநெறிப்படி வாழ்வோர் கலியுகத்தில் குறைந்துவிடுவார்கள்.
பேராசையும் அறியாமையும் மலிந்திருக்கும். கலியுகம் முடியும் தறுவாயிலில், சணல் நாரால் செய்யப்பட்ட
ஆடையே மிக உயர்ந்தது என்று மக்கள் கருதுவார்கள். மக்கள் ஒருவரை ஒருவர் துன்புறுத்திக்கொள்வார்கள்.
நதிக்கரையில், பூமியை வெட்டி அற்ப தானியங்களை விதைப்பார்கள்.
தந்தையின் பொருளை மகன்கள் கவர்ந்து செல்வார்கள். பசுக்களை வண்டி இழுக்க வைப்பார்கள்.
இளங்கன்றின் தலையில் மூட்டைகளை வைத்துச் சுமக்கச் செய்வார்கள்.
அரசர்களும் தீய எண்ணம் கொண்டவர்களாகக் கொடுங்கோல் ஆட்சிபுரிவார்கள். வியாபாரத்தில் நேர்மை இராது,
பொருளாசையால் வஞ்சனையே நடக்கும். சூரியன், சந்திரன், பிருகஸ்பதி ஆகிய மூன்று கிரகங்களும்
பூச நட்சத்திரத்தை அடைந்து ஒரு ராசியில் சேரும் சமயத்தில் கலியுகம் முடிவு பெறும்.
சம்பளம் என்னும் கிராமத்தில் விஷ்ணுயசஸ் என்பவர்க்கு மகனாகத் திருமால் கல்கி அவதாரம் எடுப்பார்.
அவர் மனத்தினால் நினைத்தவுடன் எல்லா வாகனங்களும், ஆயுதங்களும், படைவீரர்களும், கவசங்களும் அவரை வந்தடையும்.
குதிரை மேல் பயணித்து விஜயம் செய்து தீய சக்திகளை அழித்து, நல்லோர்களை அவர் மகிழ்விப்பார்.
குழப்பமுற்றுத் திரியும் மக்கள் யாவரும் அவரைத் தரிசித்து அவரது அருளால் தெளிவு பெறுவார்கள்.
ஒட்டுமொத்த தீய சக்திகளையும் அவர் அழித்தவாறே, உலகில் மீண்டும் நல்லோர்களின் எண்ணிக்கை கூடி
அறநெறி தழைத்து ஓங்கத் தொடங்கும். தீய சக்திகளை அழித்த பின், கல்கி பகவான் மிகப்பெரிய
அச்வமேத வேள்வி ஒன்றைச் செய்வார். அந்த வேள்வியின் நிறைவில் சான்றோர்களான நல்லோர்களுக்கு
இந்த மொத்த பூமியையும் தானம் செய்வார். அதன்பின் அந்த நல்லோர்கள் நல்லாட்சி செய்ய,
ஒட்டுமொத்த உலகமும் க்ஷேமமாக இருக்கும்.
இப்படிக் கிருதயுகத்தில் தர்மம் நன்றாக நிலைநாட்டப் பட்டபின், கல்கி பகவான் சாந்தமாக ஓய்வெடுக்கத் தொடங்குவார்.
இவ்வாறு அறநெறிகளை உலகில் நிலைநாட்டிய பின் சாந்தமாக இருப்பதால்,
கல்கி பகவான் ‘ஸ்தாவர ஸ்தாணு:’ என்று அழைக்கப்படுகிறார்.
‘ஸ்தாவர’ என்பது அறநெறியை நன்கு நிலைநிறுத்துவதைக் குறிக்கிறது.
‘ஸ்தாணு:’ என்பதற்கு சாந்தமாக இருப்பவர் என்று பொருள்.
‘ஸ்தாவர ஸ்தாணு:’ என்றால் அறநெறியை நிலைநாட்டியபின் சாந்தமாக இருப்பவர் என்று பொருள்.
அதுவே விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 428-வது திருநாமம்.
“ஸ்தாவர ஸ்தாணவே நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்கு, மன அமைதி ஏற்படும்படித் திருமால் அருள்புரிவார்.
———–
429. ப்ரமாணாய நமஹ:(Pramaanaaya namaha)
அடியேனுக்குப் பஞ்ச சம்ஸ்காரம் செய்தருளிய ஆசார்யரான சிறுபுலியூர் ஸ்ரீ .உ.வே. திருவாழி அண்ணன் சுவாமிகளிடம்,
ஒரு சீடர் ஒருமுறை ஓர் ஐயம் கேட்டார். “சுவாமி! தினமும் கோயிலுக்குப் போய் இறைவனுக்கு நமஸ்காரம் செய்கிறோம்.
இறைவனை வலம் வருகிறோம். உண்மையில் இவையெல்லாம் நமக்கு விஞ்ஞான ரீதியாக
ஏதோ பலன்களைக் கொடுக்கின்றன போலும். அந்த அறிவியல் ரீதியான பலனை நேராகச் சொன்னால்
நாம் கேட்க மாட்டோம் என்பதற்காகத் தான் இப்படி மறைமுகமாகத் தெய்வம், சுவாமி என்றெல்லாம் சொல்லிச்
சில உடற்பயிற்சிகளை நம் முன்னோர்கள் செய்யச் சொல்லி இருக்கிறார்கள் போலும்.
எனவே நமஸ்காரம் செய்தல், கோயிலை வலம் வருதல் இதனால் கிடைக்கும்
அறிவியல் ரீதியான பலன்கள் என்ன சுவாமி?” என்று அந்தச் சீடர் கேட்டார்.
அதற்கு எங்கள் ஆசார்யன் அற்புதமான ஒரு விடையை அளித்தார்.
“குழந்தாய்! தெய்வத்தோடு தொடர்புடைய விஷயத்தையே நீ அறிவியல் ரீதியாகச் சொன்னால்தான் ஏற்பேன் என்று சொல்கிறாய்.
அப்படி இருக்கும் போது அறிவியல் ரீதியான ஒரு விஷயத்தைத் தெய்வத்தோடு தொடர்பு படுத்திச் சொல்ல வேண்டிய தேவை என்ன?
அறிவியல் ரீதியான, உடல் ரீதியான, உலகியல் ரீதியான பலன்களுக்காக மட்டுமே ஒரு விஷயத்தைச் சொல்ல வேண்டும்
என்று நம் முன்னோர்கள் கருதி இருந்தால், அதை நேரடியாகத் தான் சொல்வார்களே தவிர,
அதில் தாமாகத் தெய்வத்தைச் சேர்த்துச் சொல்லவே மாட்டார்கள்.
கோயிலுக்குப் போவதும், அங்கே இறைவனை விழுந்து நமஸ்கரிப்பதும், இறைவனை வலம் வருவதும்,
இறைவனது உகப்பு என்ற ஒரே காரணத்துக்காகத்தான். இறைவனின் திருவுள்ளம் மகிழ வேண்டும் என்ற
ஒற்றை இலக்கோடு செய்யப்படும் செயலுக்கே கர்மயோகம் என்று பெயர்.
அதனால், நமக்குக் கிடைக்கும் உலகியல் பலனில் கண் வைத்துச் செயல் புரிந்தால், அது கர்மயோகமே ஆகாது.
காலை நீராடுவதோ, சந்தியாவந்தனம், பிராணாயாமம் போன்றவை செய்வதோ, இறை வனுக்குப் பூஜை செய்வதோ
என அத்தனையுமே இறைவனின் உகப்புக்காகத்தான் நாம் செய்கிறோம்.
அப்படியானால் இவற்றால் உலகியல் பலன் எதுவுமே கிடையாதா? இவை உடலுக்கு ஆரோக்கியம் தராதா? என்று நீ கேட்கலாம்.
நிச்சயமாக அவைகள் உடலுக்கு ஆரோக்கியம் தரலாம். அதை மறுக்கவில்லை.
ஆனால், இச்செயல்களின் முக்கிய நோக்கம் வெறும் தேக ஆரோக்கியம் மட்டும் கிடையாது.
அதைக் காட்டிலும் மிக உயர்ந்த பகவத் ப்ரீதி, இறைவனின் திருவுள்ள உகப்பு என்பதே இச்செயல் களால் கிடைக்கும் மிகமிகப் பெரிய பலன்.
ஒரு மாணவன் பள்ளிக் கூடத்துக்கு நடந்து சென்று வந்தால் அதன் விளைவாக
அவனது உடல் ஆரோக்கியம் பெறுகிறது என்று வைத்துக் கொள்வோம்.
அதை வைத்துக்கொண்டு, அவன் பள்ளிக் கூடம் போனதே உடல் எடையைக் குறைக்கத்தான் என்று சொல்லி விட முடியுமா?
பள்ளிக்கூடம் போவது கல்வி என்ற உயர்ந்த லட்சியத்துக்காக அல்லவா!.
அத்துடன் இலவச இணைப்பாக, உடல் ஆரோக்கியம் இவன் நடந்து சென்றதால் கிடைக்கிறது.
அதுபோலத் தான் இதுவும்!” என்று விளக்கினார்.
உடனே அந்தச் சீடர், “சுவாமி! அப்படி நம் சாஸ்திரச் சடங்குகளுக்கு அறிவியல் ஆதாரங்களைத் தேடாதே என்று
சொல்லி விட்டால், இளம் தலைமுறையினர் இவற்றை எப்படிப் பின்பற்றுவார்கள்?” என்று கேட்டார்.
அதற்கு ஆசார்யன், “நாம் அன்றாடம் பின்பற்ற வேண்டிய கடமைகளை வேத சாஸ்திரங்கள் சொல்கின்றன.
அந்த அறநூல்கள் யாவும் இறைவன் தானே திருவாய் மலர்ந்தருளிய வார்த்தைகள். இறைவன் விதித்த விதிகள்.
இறைவன் விதித்த ஒரு விதிக்கு யாரோ ஒரு விஞ்ஞானியின் அங்கீகாரம் எதற்கு?
நம் முன்னோர்களும் இறைவனும் என்ன விதித்திருக்கிறார்களோ, அதை அப்படியே பின்பற்றி நடப்பதற்குத் தான்
சிரத்தை, பக்தி என்று பெயர். யாரோ ஒரு விஞ்ஞானி அங்கீகரித்தால்தான் சாஸ்திரத்தை ஏற்பேன் என்று சொன்னால்,
இறைவன் மீது நமக்கு முழு நம்பிக்கை இல்லை என்று பொருள்படும்!” என்றார்.
மகாபாரதத்திலே ஒரு ஸ்லோகம் வருகிறது;
“தச்சீலம் அநுவர்தந்தே மநுஷ்யா லோகவாஸின:”
கலியுகம் முடியும்போது கல்கி பகவான் அவதாரம் செய்து தர்மத்தை நிலைநாட்டி கிருத யுகத்தைத் தொடங்கி வைக்கிறார்.
அந்தக் கிருத யுகத்தில் வாழ்வோர் எல்லாரும் எப்படி இது தான் தர்மம், இது அதர்மம் என்று அறிவார்கள்?
அதற்கு மகாபாரதம் விடை சொல்கிறது.
கல்கி பகவான் எதைச் செய்யச் சொல்கிறாரோ, அது தர்மம்,
கல்கி பகவான் எதிலிருந்து விலகி இருக்கச் சொல்கிறாரோ அது அதர்மம் என்று மக்கள் பின்பற்றுவார்கள். அப்படித்தான் கிருத யுகத்தில் தர்ம அனுஷ்டானம் தொடங்கும்.
ஆக, தர்மம் எது அதர்மம் எது என்பதைக் காட்டும் நம்பகத் தன்மைகொண்ட பிரமாணமாகக் (authority-ஆக)
கல்கி பகவான் திகழ்வதால், அவர் ‘ப்ரமாணம்’ என்று அழைக்கப்படுகிறார்.
ப்ரமாணம் என்றால் ‘நம்பத்தகுந்த ஆதாரம்’ என்று பொருள்.
தர்மம், அதர்மம் ஆகியவற்றை அறிவதற்குரிய ஆதாரமாக இருப்பதால், கல்கி பகவான் ‘ப்ரமாணம்’ எனப் படுகிறார்.
அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 429-வது திருநாமம்.“ப்ரமாணாய நமஹ:” என்று தினமும் சொல்லி
வரும் அன்பர்களின் மனங்களில் சிரத்தையும் நம்பிக்கையும் தழைத்தோங்கும் படித் திருமால் அருள்புரிவார்.
———
430. பீஜாய அவ்யயாய நமஹ:(Beejaaya Avyayaaya namaha)
திருக்கோஷ்டியூரில் செல்வ நம்பிகள் என்ற மகான் வாழ்ந்து வந்தார்.
(ராமானுஜரின் குருமார்களுள் ஒருவரான திருக்கோஷ்டியூர் நம்பிகள் அல்லர் இவர்;
இவர் திருக்கோஷ்டியூர் நம்பிக்குப் பல நூறாண்டுகள் முற்பட்டவர்.)
ஒருமுறை செல்வ நம்பிகள் ஒரு முக்கியப் பணிக்காக வெளியூர் சென்றிருந்தார்.
அவரது மனைவி மட்டும்தான் வீட்டிலே இருந்தார். அச்சமயம் திருக்கோஷ்டியூர் சௌமிய நாராயணப் பெருமாள்
திருக்கோயிலில் நடைபெறும் மாசி மக உற்சவத்தைத் தரிசிப்பதற்காகப் பல ஊர்களில் இருந்தும்
அடியார்கள் திருக்கோஷ்டியூருக்கு வந்திருந்தார்கள்.
அவர்கள் ஊர் மக்களிடம், “இவ்வூரில் எங்கே உணவு கிடைக்கும்?” என்று விசாரித்தபோது,
மக்கள் எல்லோரும் செல்வ நம்பிகளின் மாளிகையைக் காட்டி, “அந்தப் பெரியவரின் இல்லத்துக்குச் செல்லுங்கள்
நிச்சயமாக உணவு கிடைக்கும்!” என்று கூறினார்கள்.
அந்த அடியார்களும் செல்வநம்பிகளின் இல்லத்துக்கு வந்தார்கள். செல்வ நம்பிகளின் மனைவி அவர்களை
வரவேற்று உபசாரம் செய்தார். வந்திருந்த அடியார்கள், “நாங்கள் வெளியூரிலிருந்து இங்கே பெருமாளின்
உற்சவத்தைத் தரிசிப்பதற்காக வந்தோம். உங்கள் இல்லத்தில் உணவு கிடைக்கும் என்று கேள்விப் பட்டு வந்திருக்கிறோம்!” என்றார்கள்.
“அடியார்களான உங்களுக்கு உணவு பரிமாறுவது நாங்கள் செய்த பாக்கியம்!” என்று சொல்லி விட்டுச்
செல்வ நம்பிகளின் மனைவி சமையலறைக்குச் சென்றார்.
“சுமார் நாற்பது பேர் வந்திருக்கிறார்கள். இத்தனை பேருக்கும் சமைக்கும் அளவுக்கு நம் இல்லத்தில் அரிசி இல்லையே!
ஆனால், அதே நேரம் வந்திருக்கும் அடியார்களை வெறும் வயிற்றோடு திருப்பி அனுப்பு
வதும் பெரும் பாபம் ஆயிற்றே! என்ன செய்வது?” என்று சற்றுநேரம் சிந்தித்தார் செல்வ நம்பிகளின் மனைவி.
அவர் மனதில் ஓர் யோசனை தோன்றியது. “ஆஹா! அடுத்து வயலில் விதைப்பதற்காகக் கொல்லையிலே
விதை நெல்லை நம் கணவர் சேமித்து வைத்திருக்கிறாரே! அந்த விதை நெல்லைக் குத்தி அரிசி ஆக்கி
இவர்களுக்கு உணவளித்துவிடுவோம்!” என்று தீர்மானித்தார். அவ்வாறே உணவு தயாரித்து வந்திருந்தோர்
அனைவருக்கும் வயிறாரப் பரிமாறி விட்டார். அவர்களும் திருப்தியோடு புறப்பட்டுச் சென்றார்கள்.
வெளியூர் சென்றிருந்த செல்வ நம்பிகள் ஊர் திரும்பிய பின், அடுத்து வயலில் விதைப்பதற்காக
விதைநெல்லைச் சரிபார்க்கச் சென்றார். பார்த்தால் விதை நெல்லைக் காணவில்லை.
மனைவியிடம், “இங்கே வைத்திருந்த விதை நெல் எல்லாம் எங்கே போனது?” என்று கேட்டார் செல்வ நம்பிகள்.
“அவற்றை நான் வைகுண்டத்தில் விதைத்து விட்டேனே!” என்றார் மனைவி.
அதாவது, இறை அடியார்களின் வயிற்றில் அந்த நெல்லைச் சேர்த்தது வைகுண்ட லோகத்தில் விதைத்ததற்குச் சமம் என்பது தாத்பரியம்.
“அப்படியா? நல்ல காரியம் செய்தாய்! அடியார்கள் பட்டினியுடன் நம் வீட்டை விட்டு வெளியே சென்றிருந்தால்,
அது மிகப்பெரிய பாபம்!” என்று சொல்லித் தன் மனைவியைப் பாராட்டினார் செல்வ நம்பிகள்.
அன்று இரவு செல்வ நம்பிகளின் கனவில் தோன்றிய அரங்கன்,
“இந்த உலகுக்கும் உலகில் நடைபெறும் தருமங்களுக்கும் நானே விதையாக இருக்கிறேன்.
என் அடியார்களுக்கு விதை நெல்லைக் கொண்டு உணவளித்த உங்களுக்கு நானே விதை தந்து அருள்வேன்!” என்று சொன்னான்.
கனவில் அரங்கன் சொன்னது போலவே மறுநாள் திருவரங்கத்தில் இருந்து பல மூட்டை களில் விதை நெல்
செல்வ நம்பிகள் இல்லத்துக்கு வந்து சேர்ந்தது. அதை அவர் வயலில் விதைக்கவே மிகச்சிறந்த விளைச்சலும் உண்டானது.
செல்வ நம்பிகளின் கனவில் அரங்கன் சொன்னது போல், இந்த உலகுக்கும் உலகில் நடைபெறும் தருமங்களுக்கும்
மூலக் காரணமாக, அதாவது விதையாக திருமால் இருக்கிறார்.
நம்மாழ்வாரும் “முதல் தனி வித்து” என்றும் “வேர் முதலாய் வித்தாய்” என்றும் திருமாலைப் பாடுகிறார்.
கல்கி அவதாரத்திலும், கிருத யுகம் நிலைபெற்று அதிலே தருமங்கள் செழிப்பதற்குரிய வித்தாகக் கல்கி பகவான் திகழ்கிறார்.
அவரது அருளால்தான் கலியுகம் முடிந்து, கிருதயுகம் தொடங்கி, தருமம் என்னும் பயிர் செழிக்கத் தொடங்குகிறது.
தருமமாகிய பயிர் செழிப்பதற்கு விதையாக இருப்பதால், கல்கி பகவான் ‘பீஜம் அவ்யயம்’ என்று அழைக்கப்படுகிறார்.
அவ்யயம் என்றால் அழியாத, பீஜம் என்றால் விதை.
‘பீஜம் அவ்யயம்’ என்றால் அழியாத விதை, தருமங்கள் அழியாமல் செழிக்கச்செய்யும் விதை என்று பொருள்.
அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 430-வது திருநாமம்.“பீஜாய அவ்யயாய நமஹ:” என்று தினமும் சொல்லி
வரும் அன்பர்களின் வயல்களில் விவசாயம் நன்றாகச் செழிக்கும்படித் திருமால் அருள்புரிவார்.
———–
431. அர்த்தாய நமஹ (Arthaaya namaha)
கும்பகோணத்தில் கோமளவல்லித் தாயாரோடு உறையும் ஸ்ரீசார்ங்கபாணிப் பெருமாளைப் பூஜித்து வரும்
அர்ச்சகர்களுள் ஒருவரான ஸ்ரீ.உ.வே. சௌந்தரராஜ பட்டாச்சாரியார் சுவாமியோடு அடிக்கடி
ஆகமங்கள் குறித்து உரையாடும் பேறு அடியேனுக்குக் கிட்டுவதுண்டு.
அப்போதெல்லாம் ஸ்ரீபாஞ்சராத்திர ஆகமத்தில் உள்ள பல நுட்பங்களை ஸ்ரீ.உ.வே. சௌந்தரராஜ பட்டாச்சாரியார் அடியேனுடன் பகிர்வார்.
ஒருமுறை அடியேன் அவரிடம், “சுவாமி! உங்களைப் போல் இவ்வளவு ஆழமாக ஆகமங்களைக் கற்ற வித்வான்கள்
நம் சார்ங்கபாணிப் பெருமாளுக்குப் பூஜை செய்வதை நினைத்துப் பார்க்கையில் பெருமையும் பெருமிதமும் ஏற்படுகின்றன!” என்று சொன்னேன்.
அதற்கு சௌந்தரராஜ பட்டாச்சாரியார், “அடியேனின் தாய்வழித் தாத்தாவான தேரழுந்தூர் ஸ்ரீ.உ.வே. கண்ணன் பட்டாச்சாரியார்
சுவாமிக்குத்தான் நீங்கள் நன்றி சொல்ல வேண்டும்!” என்றார். ஏன் என்று அடியேன் கேட்க, அப்போது அர்ச்சகர் ஒரு கதை சொன்னார்:
நான் இளம் வயதில் அரைக்கால் சட்டை அணிந்தபடி விளையாடிக் கொண்டிருந்தேன்.
எனது நடவடிக்கைகளைக் கவனித்த என் தாத்தா என்னை அழைத்தார். “நீ என்ன படிக்கிறாய்?” என்று கேட்டார்.
விளையாட்டுச் சிறுவனான அடியேன், “நான் ஒன்பதாம் வகுப்பு படித்துவருகிறேன்!” என்று சொல்லிவிட்டு மீண்டும் விளையாட ஓடினேன்.
மீண்டும் அழைத்தார் தாத்தா. “குழந்தாய்! இங்கே வா! நீ எத்தகைய குடும்பத்தில் பிறந்திருக்கிறாய் தெரியுமா?
குடந்தையில் உள்ள திருக்கோவில்கள் மிகவும் ஏழ்மை நிலையில் இருந்த காலத்திலும்,
அந்நியப் படையெடுப்புகள் நடைபெற்ற காலத்திலும் உனது மூதாதையர்கள் தங்கள் குலதனமாகக் கருதிக்
கோவிலையும் பெருமாளையும் பூஜைமுறைகளையும் காத்து இன்றளவும் கொண்டு வந்து சேர்த்திருக்கிறார்கள்.
அவ்வாறு அந்நாட்களில் கோவிலைக் காத்த உங்களைப் போன்ற சில குடும்பங்களுக்கு இங்கே பூஜை மிராசு வழங்கப்பட்டுள்ளது.
இத்தகைய குடும்பத்தில் பிறந்துவிட்டு, வேதங்களையும் ஆகமங்களையும் பயிலாமல் இப்படி நீ விளையாடலாமா?” என்று கேட்டார்.
அவரது ஆழமான பேச்சைக் கேட்டவாறே என் மனம் அவர்பால் ஈர்க்கப்பட்டது.
“அடியேன் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டேன். தாத்தா மேலே சொல்லத் தொடங்கினார்,
“குழந்தாய்! அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது.
முக்திக்கு வழிகாட்டும் பாரத தேசத்தில் மனிதனாகப் பிறப்பது என்பது அதைவிட அரிதானது.
அதிலும், ஆழ்வார்களின் அமுதத் தமிழ் ஆறாகப் பெருகி ஓடும் தமிழகத்தில் பிறப்பது மிகவும் அரிது.
திருமாலிடம் பக்தி நிறைந்தவனாக இருத்தல் அதனினும் அரிது.
அந்தத் திருமாலையே தீண்டித் திருவாராதனம் செய்யும் பாக்கியம் பெறுதல் என்பது அதை விடவும் அரிதானது.
அங்கே கோவிலில் ஆராவமுதாழ்வான் என்று அழைக்கப்படும் சார்ங்கபாணிப் பெருமாள் உன் கையை எதிர்பார்த்துக் காத்திருக்கிறான்.
நாளை நீ பண்டிதனாகி வந்து அவனுக்குப் பூஜை செய்ய வேண்டும் என்று அவன் காத்திருக்க,
நீ வேத ஆகமங்களைப் பயிலாமல் விளையாடலாமா?
அனைத்து உலகங்களையும் அநாயாசமாகப் படைத்து, காத்து, அழிக்கும் இறைவன்,
தனது எளிமையை வெளிப்படுத்தும் விதமாகத் தன் பக்தர்களுக்குக் கட்டுப்பட்டு அர்ச்சாவதாரமாகக் கோவில்களிலே எழுந்தருளி உள்ளான்.
அனைத்து சக்திகளும் இருந்தாலும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் உன் கையை எதிர்பார்த்து அவன் காத்திருக்கிறான்.
உலகிலுள்ள அத்தனை பேருக்கும் அடைய வேண்டிய மிக உயர்ந்த இலக்காக இருப்பவன் பகவான்.
கடோபநிஷத் “ஸா காஷ்டா ஸா பரா கதி:” என்று சொல்கிறது. ‘காஷ்டா’ என்றால் இலக்கு.
நாம் அடையவேண்டிய மிக உயர்ந்த இலக்கு இறைவனே.
‘கதி:’ என்றால் வழி. இலக்காகிய அந்த இறைவனை அடைவிக்கும் வழியும் அவனே.
இலக்கும் அவனே, வழியும் அவனே என்பதே இவ்வாக்கியத்தின் பொருள்.
எல்லோருக்கும் அடைய வேண்டிய இலக்காக இருக்கும் அந்த எம்பெருமான் தானே உனக்கும் அடையத்தக்க இலக்காவான்?
எனவே அவனை ஆராதிக்க, அவனை மகிழ்விக்க நீ வேத ஆகமங்களை நன்றாகப் பயின்று மிகச்சிறந்த அர்ச்சகனாக வர வேண்டும்!”
என்று என்னை ஆசீர்வதித்தார்.
இந்தக் கதையைச் சொன்ன அர்ச்சகர், “அடியேன் ஒருவனுக்கு மட்டும் இல்லை. இதுபோல் பல குழந்தைகளையும் அழைத்து,
குழந்தைகளுக்குப் புரியும் மொழியில் நல்ல உபதேசங்களைச் செய்து, இறைவனே நாம் அடைய வேண்டிய
மிக உயர்ந்த இலக்காவான் என்பதைப் பிஞ்சு மனங்களில் தெளிவாக விதைத்தார் அந்த மகானான ஸ்ரீ.உ.வே. கண்ணன் பட்டாச்சாரியார் சுவாமி.
அவருடைய வழிகாட்டுதலும் வாழ்த்துகளும்தான் அடியேனைப் போன்ற பலரையும் இந்த நன்னிலையில் இன்று வைத்திருக்கிறது.
கோமளவல்லித் தாயாரின் கேள்வனான ஆராவமுதாழ்வானின் உகப்பு மட்டுமே எங்களின் ஒரே இலக்கு என்று நாங்கள் அவனுக்குத் தொண்டாற்றுகிறோம்!” என்று உருக்கமாகச் சொன்னார் அர்ச்சகர்.
விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 431-வது திருநாமமான ‘அர்த்த:’ என்ற திருநாமத்துக்கு என்ன கதை எழுதலாம்
என்ற கேள்வியுடன் கோவிலுக்குச் சென்ற அடியேனுக்கு அர்ச்சகர் மூலமாகவே
மிகச்சிறந்த கதையைக் காட்டி விட்டார்கள் கோமளவல்லித் தாயாரும் ஆராவமுதாழ்வானும்.
‘அர்த்த:’ என்றால் (இவ்விடத்தில்) அடைய வேண்டிய இலக்கு என்று பொருள்.
மிகச்சிறந்த பக்திமான்களுக்கு அடைய வேண்டிய இலக்காகத் திருமால் ஒருவரே இருப்பதால்,
திருமால் அர்த்த என்று அழைக்கப்படுகிறார்.
“அர்த்தாய நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்கள் அடைய விரும்பும் இலக்குகள்
விரைவில் கைகூடும்படி ஸ்ரீஆராவமுதாழ்வான் அருள் புரிவான்.
———-
கண்ணனுக்கு மாலிகன் என்றொரு நண்பன் இருந்தான்
கேட்டதும் கொடுப்பான் கண்ணன் என்று எல்லோரும் கண்ணனைப் புகழ்வதைக் கவனித்த அந்த மாலிகன்,
கண்ணனிடம், “நான் கேட்பதை நீ தருவாயா?” என்று கேட்டான்.
கண்ணபிரானோ, “நீ என்னையே கேட்டாலும் உனக்குத் தருவதற்குத் தயாராக உள்ளேன்!” என்று விடையளித்தான்.
ஆனால், முன் பிறவிகளில் செய்த பாபங்களாலே அந்த அளவுக்குப் பக்குவம் பெறாத அந்த மாலிகன் கண்ணனிடம்,
“கண்ணா! எனக்கு நீ ஆயுதப் பயிற்சி வழங்க வேண்டும். உலகிலுள்ள அனைத்து விதமான ஆயுதங்களையும்
எப்படிப் பயன்படுத்தி எதிரிகளை வெல்ல வேண்டும் என்று நீ சொல்லித் தரவேண்டும்!” என்று கோரினான்.
தனது நண்பனின் கோரிக்கையை நிறைவேற்ற எண்ணிய கண்ணனும், அவனுக்கு உலகிலுள்ள அனைத்து விதமான
ஆயுதங்களிலும் பயிற்சி அளித்தான். கண்ணனிடம் பயிற்சி பெற்றுக் கொண்ட அவன்,
பல்வேறு ஆயுதங்களைக் கையில் ஏந்தி நல்லவர்களைத் துன்புறுத்தத் தொடங்கினான்.
பல சாதுக்கள் அவனால் இன்னலுக்கு ஆளாயினர்.
இவற்றைக் கவனித்த பலராமன் கண்ணனிடம், “என்ன கிருஷ்ணா? இந்த மாலிகன் செய்யும் அட்டூழியங்களைப் பார்த்தாயா?
சீக்கிரமாக அவனை வதைக்க வேண்டும்.
ஆனால் நீ அவனை அழித்தால், நண்பனைக் கொன்றவன் என்று உனக்குச் சிலர் பெயர் வைக்கக்கூடும்.
நீ நேரடியாகத் தொடர்பு படாமல் அவனை அழிக்க வழி உள்ளதா என்று பார்!” என்றார்.
கண்ணன் சிரித்துக் கொண்டே, “அண்ணா! இத்தகைய சில தீய சக்திகளை நான் கொஞ்சம் வாழ விடுவேன்.
சில வாய்ப்புகளும் தருவேன். அவனாகத் திருந்துகிறானா என்று சோதித்துப் பார்க்கவே இவற்றை நான் செய்கிறேன்.
இவன் திருந்தாவிட்டால் சரியான நேரத்தில் சரியான விதத்தில் இவனது தீமைகளுக்கு நான் முற்றுப்புள்ளி வைத்துவிடுவேன் பாருங்கள்!” என்றான்.
இந்நிலையில், மாலிகன் கண்ணனிடம் வந்து, “கண்ணா! இப்போது தான் நாரதர் மூலம் ஒரு செய்தி அறிந்து கொண்டேன்.
என்னவென்றால், எல்லா ஆயுதங்களிலும் எனக்குப் பயிற்சி அளித்த நீ, உன் கையில் ஏந்தி இருக்கும்
சக்கராயுதத்தில் மட்டும் எனக்கு இன்னும் பயிற்சியே அளிக்கவில்லை.
அதையும் உன்னிடமிருந்து கற்று வருமாறு நாரதர் சொல்லி அனுப்பினார்!” என்றான்.
கண்ணன் பலராமனைப் பார்த்துப் புன்னகை செய்யவே, பலராமன்,
“ஓ! நாரதர் மூலம் கிருஷ்ணன் செய்த லீலை போலும் இது!” என்று புரிந்து கொண்டார்.
மாலிகனைப் பார்த்துக் கண்ணன், “மாலிகா! சக்கராயுதத்தை மிகவும் ஜாக்கிரதையாகப் பிரயோகிக்க வேண்டும்.
கொஞ்சம் கவனம் குறைந்தாலும் உன் கழுத்தையே அது சீவிவிடும். அந்தப் பயிற்சி உனக்கு வேண்டாம் என நான் நினைக்கிறேன்!” என்றான்.
மாலிகனோ, “இல்லை இல்லை! அதையும் நான் கற்றே தீருவேன்!” என்று கண்ணனை வற்புறுத்தினான்.
இனி உன் விருப்பம் என்று சொன்ன கண்ணன், மாலிகன் கையில் தன் சக்கரத்தைக் கொடுத்து,
அதை ஏவும் முறையையும் சொல்லிக் கொடுத்து ஏவச் சொன்னான். சக்கரத்தை மாலிகன் ஏவ முயன்றவாறே,
அது நேராக மாலிகனின் கழுத்தில் பாய்ந்து அவன் தலையைக் கொய்து வதைத்துவிட்டது.
கண்ணன் பலராமனிடம், “அண்ணா! என் நண்பனை நான் கொல்லவில்லை.
அவனே சக்கராயுதத்தைத் தவறாகப் பிரயோகித்துத் தன் கையால் தானே மரணத்தைத் தேடிக் கொண்டான் பாருங்கள்!” என்றான்.
அச்சமயம் அங்கே வந்த நாரதர், “கண்ணபிரானே! உங்களைத் தரிசிக்கும் பேறு பெற்ற சான்றோர்கள்,
உங்களையே மிக உயர்ந்த இலக்காக வேண்டிப் பெறுவார்கள்.
ஆனால் இந்த மாலிகனைப் போன்றவர்கள், நீங்கள் உங்களைத் தருவதற்குத் தயாராக இருந்தபோதும்,
உங்களைத் தவிர்ந்த மற்ற விஷயங்களை நாடித் தங்கள் முடிவைத் தேடிக் கொள்கிறார்களே!” என்றார்.
இவ்வரலாற்றைப் பெரியாழ்வாரும்,
“சீமாலிகன் அவனோடு தோழமை கொள்ளவும் வல்லாய்
சாமாறு அவனை நீ எண்ணிச் சக்கரத்தால் தலை கொண்டாய்
ஆமாறு அறியும் பிரானே அணி அரங்கத்தே கிடந்தாய்
ஏமாற்றம் என்னைத் தவிர்த்தாய் இருவாட்சிப் பூச்சூட்ட வாராய்”-என்று பாடியுள்ளார்.
மாலிகன் தீயவன் என்றபோதும், கண்ணனுடன் தோழமை கொள்ளும் பேறு பெற்றவன் என்பதால்
ஸ்ரீ என்ற அடைமொழி சேர்த்துச் சீமாலிகன் (ஸ்ரீமாலிகன்) என்று குறிப்பிடுகிறார் பெரியாழ்வார்.
பக்திமான்கள், ஞானிகளுக்கு அடையத் தக்க மிகச்சிறந்த இலக்காக இருப்பதால்,
திருமால் அர்த்த: (431-வது திருநாமம்) என்று அழைக்கப்படுகிறார்.
அதே சமயம், மாலிகன் போன்ற தீய எண்ணம் கொண்டவர்கள் திருமாலைத் தவிர்ந்த மற்றைய விஷயங்களை
இலக்காக எண்ணி, திருமாலைத் தங்கள் இலக்காகக் கொள்ளாமல் போவதால், திருமால் ‘அனர்த்த:’ என்று அழைக்கப்படுகிறார்.
அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 432-வது திருநாமம்.
‘அனர்த்த:’ என்றால் இலக்காக இல்லாதவர் என்று பொருள்.
துர்பாக்கியசாலிகளுக்கு இலக்காக இல்லாத திருமால் ‘அனர்த்த:’ எனப்படுகிறார்.
“அனர்த்தாய நமஹ” என்று தினமும் சொல்லிவரும் அன்பர்களின் எண்ணங்கள் உயர்ந்து பக்குவம் அடையும்படித் திருமால் அருள் புரிவார்.
————-
இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற வடமொழிக் கவிச் சக்கரவர்த்தியான ஆசுகவி வில்லூர் ஸ்ரீநிதி சுவாமிகள்
வாழ்வில் நடந்த ஓர் உண்மைச் சம்பவம்.
1945ம் வருடம். ஸ்ரீநிதி சுவாமிகள் கும்பகோணத்தில் வசித்து வந்த காலம்.
அவரது மூத்த மகனுக்கு உபநயனம் என்ற வைதிகச் சடங்கு செய்து, காயத்திரி மந்திர உபதேசம் செய்ய வேண்டிய தருணம் வந்தது.
உபநயனச் சடங்கு செய்வதற்கு அக்காலத்தில் சுமார் 200 ரூபாய் தேவைப்பட்டது.
இன்றைய காலக்கட்டத்தின் அடிப்படையில் அது சுமார் 50,000 ரூபாய்க்கும் மேற்பட்ட தொகையாகும்.
ஸ்ரீநிதி சுவாமிகளோ என்றுமே உலகியல் செல்வத்தில் நாட்டம் கொள்ளாமல் குடந்தையில் உறையும்
கோமளவல்லித் தாயார் – ஸ்ரீஆராவமுதாழ்வான் திருவடிகளையே தனது செல்வமாகக் கொண்டிருந்தார்.
“கிம் கேஹை: கலிதை: தனை: அபி கதை: கேதாரஜாலை: ததா
கிம் வா தை: அபி வஸ்துபி: ப்ரியதமை: யாதை: மனோஹாரிபி:
பந்துப்யச்ச ஸமாகதை: பரிபவை: கிம் வா மம அத்ர ஆகதம்
ஸ்ரீமத் கோமளவல்லிகா ஸஹசரம் ஸ்ரீசார்ங்கிணம் பச்யத:”–என்று
அபர்யாப்தாம்ருத விம்சதி என்னும் துதியில் அவரே பாடியுள்ளார்.
கோமளவல்லித் தாயாரின் கேள்வனான ஸ்ரீஆராவமுதாழ்வானைத் தரிசிக்கும் பாக்யம் பெற்ற அடியேனுக்கு
மாளிகைகளாலோ, செல்வங்களாலோ, படாடோபப் பொருள்களாலோ, உறவினர்கள் கொடுக்கும் பரிசுகளாலோ
ஆக வேண்டியது ஒன்றுமே இல்லை. எனது மிகப்பெரிய சொத்தே திருமகள் கேள்வனாகிய திருமால் தான் என்பது இதன் பொருளாகும்.
ஆனால் குடும்ப வழக்கத்தையும் உலகியல் கட்டாயங்களையும் அனுசரித்து அக்காலத்தில் 200 ரூபாயாவது செலவு செய்தாலன்றி
உபநயனச் சடங்கை மகனுக்கு நிறைவேற்ற இயலாது. அந்தப் பணத்துக்கு என்ன செய்வது என்று சிந்தித்த நிலையில்
சார்ங்கபாணிப் பெருமாள் திருக்கோவிலுக்குச் சென்ற ஸ்ரீநிதி சுவாமிகள், கோமளவல்லித் தாயாரைப் பார்த்து ஒரு
ஸ்லோகத்தை விண்ணப்பித்தார்
“மாத: கோமளவல்லி மன்மன இதம் யுஷ்மத் கடாக்ஷாபிதம்
ப்ருங்கம் வாஞ்சதி ஜங்க்ருதி பரதரா யஸ்யேத்ருசீ ராஜதே
அன்யோன்யம் தன ஹேம ஸங்கதி வசாத் அஸ்மன் மன கர்ணயோ:
ஆனந்தம் தததீ ஜணஜ் ஜணதிதி ப்ரக்ராந்த லீலா ரஸா”
“கோமளவல்லித் தாயே! எனது மனமாகிய தாமரை உனது அருளாகிய வண்டின் ரீங்காரத்தை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறது.
உன்னருளால் விரைவில் பொன்னும் பொருளும் மழையாகப் பொழிகின்ற அந்த ஒலியைக் கேட்டு
அடியேன் ஆனந்தம் பெறும்படி நீ அருள்புரிய வேண்டும்!” என்று
கோமளவல்லித் தாயாரிடமும் சார்ங்கபாணிப் பெருமாளிடமும் இந்த ஸ்லோகத்தின் வாயிலாகப் பிரார்த்தனை செய்தார்.
அதன்பின் தனது உறவினரான திருப்புல்லாணி. திரு. ஸ்ரீநிவாசன் அவர்களைச் சந்திப்பதற்காக
மதுரையில் உள்ள அவரது இல்லத்துக்குச் சென்றார் ஸ்ரீநிதி சுவாமிகள்.
கம்ப ராமாயணத்தில் மிகப்பெரிய ஆராய்ச்சியாளரான ஸ்ரீநிவாசன் அவர்கள்,
ஸ்ரீநிதி சுவாமிகளைக் கண்டதும் மிகவும் மகிழ்ந்து வரவேற்றார். “உங்களைத் தான் காணவேண்டும் என்று கள்ளழகரிடம் வேண்டிக் கொண்டிருந்தேன்.
கண்முன்னே வந்து நின்று விட்டீர்களே!” என்றார் ஸ்ரீநிவாசன்.
“என்ன விஷயம்?” என்று கேட்டார் ஸ்ரீநிதி சுவாமிகள்.
“நீங்கள் இங்கே என் வீட்டில் வால்மீகி ராமாயணச் சொற்பொழிவு ஒன்றை ஆற்ற வேண்டும்.
வால்மீகி ராமாயணத்தையும் கம்ப ராமாயணத்தையும் ஒப்பிட்டு வேறுபடுத்தி அடியேன் எழுதி வரும்
ஆராய்ச்சி நூலுக்கு நீங்கள் ஆற்றும் சொற்பொழிவு மிகவும் உதவியாக இருக்கும்!” என்றார் ஸ்ரீநிவாசன்.
அவ்வாறே அங்கே தங்கிப் பதினைந்து நாட்கள் வால்மீகி ராமாயணச் சொற்பொழிவு ஆற்றினார் ஸ்ரீநிதி சுவாமிகள்.
சொற்பொழிவு நிறைவடைந்தவாறே ஸ்ரீநிவாசன் அவர்கள் சரியாக 200 ரூபாய் சன்மானத்தை நாணயங்களாக வழங்கினார்.
அந்த நாணயங்களின் ஒலி கோமளவல்லித் தாயாரின் சலங்கை ஒலிபோல் ஸ்ரீநிதி சுவாமிகளின் காதுகளில் ஒலித்தது.
குசேலர் கேட்காமலேயே கண்ணன் செல்வத்தைத் தந்தருளியது போல், நாம் தற்செயலாக வந்த இடத்தில்
இவர் மூலம் 200 ரூபாய் கிடைக்கும் படித் திருமாலும் திருமகளும் அருள்புரிந்ததை எண்ணி மனம் நெகிழ்ந்த
ஸ்ரீநிதி சுவாமிகள், மேற்கொண்டு தமது மகனுக்குச் செய்ய வேண்டிய உபநயனத்தைச் சீரும் சிறப்புமாக நடத்தினார்.
இந்த ஒரு சந்தர்ப்பம் என்று மட்டுமில்லை, ஸ்ரீநிதி சுவாமிகளின் வாழ்வில் பல தருணங்களிலும்
இவ்வாறு செல்வத்தைக் கொடுத்து அவரைக் காத்திருக்கிறார் திருமால்.
இப்படி அடியார்களுக்கு அருள்புரிவதற்கு ஏதுவாக எல்லையில்லாத தனத்தைக் கொண்டிருக்கும்
திருமால் ‘மஹாகோச:’ என்று அழைக்கப்படுகிறார்.
‘மஹாகோச:’ என்றால் அள்ள அள்ளக் குறையாத நிதிகளை உடையவர் என்று பொருள்.
அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 433வது திருநாமம்.
“மஹாகோசாய நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களின் இல்லங்களில் செல்வச் செழிப்பு நிறையும்.
————–
கேரளாவில் உள்ள ஒரு திவ்யதேசமான திருவாறன்விளை என்ற திருத்தலத்தின் தல வரலாறு இது.
மகாபாரதப் போர் தொடங்கும் முன் பீஷ்மர் ஒரு சபதம் செய்தார்.
“கண்ணன் ஆயுதமே எடுக்காமல் பாண்டவர்களுக்கு உதவி செய்யப் போவதாக அறிவித்திருக்கிறார்.
நான் எப்படியாவது கண்ணனை ஆயுதம் எடுக்க வைப்பேன்!” என்பதே பீஷ்மர் செய்த சபதம்.
மகாபாரதப் போர் தொடங்கியது. கையில் குதிரைகளை ஓட்டும் கோலுடன் பார்த்தசாரதியாக –
அர்ஜுனனின் தேரோட்டியாக – தேர்த்தட்டில் அமர்ந்திருக்கிறான் கண்ணபிரான்.
அர்ஜுனன் கௌரவ சேனையை எதிர்த்துப் போரிலே ஈடுபடுகிறான்.
கௌரவ சேனையை வழிநடத்தும் பீஷ்மர் ஆக்ரோஷமாகப் பாண்டவ சேனையைத் தாக்கினார்.
பீஷ்மர் மேல் உள்ள மரியாதையாலே அர்ஜுனனுக்கு அவர்மீது கொடிய பாணங்களை ஏவ மனம் வரவில்லை.
ஒன்பதாம் நாள் போரில் அர்ஜுனன் பீஷ்மரின் பாணங்களால் கடுமையாகத் தாக்கப்பட்ட நிலையில்,
கண்ணன் கையில் பிடித்திருந்த கோலைக் கீழே போட்டு விட்டுச் சக்கராயுதத்தை ஏந்திக்கொண்டு பீஷ்மரை நோக்கி நடக்கத் தொடங்கினான்.
இதைக் கண்ட பீஷ்மர், தனது வில்லையும் அம்பையும் கீழே போட்டு விட்டு, “கண்ணா! உன் கையால் மரணிக்க நான்
தயாராக உள்ளேன்!” என்றார்.
ஆனால் கலங்கிப் போன அர்ஜுனன், கண்ணனின் திருவடிகளைப் பிடித்து மன்றாடி,
“என்னை மன்னிக்கவும்! நானே போர் புரிகிறேன்! வாருங்கள்!” என்று அழைத்து வந்து தேர்த்தட்டிலே அமர்த்திவிட்டான்.
ஏன் இவ்வாறு கண்ணன் சக்கராயுதம் ஏந்தி பீஷ்மரை நோக்கி நடக்க வேண்டும்?
இறைவன் தான் தோற்றாலும் தோற்பான், தனது பக்தனைத் தோற்க விடமாட்டான்.
ஆயுதம் எடுக்க மாட்டேன் என்று கண்ணன் சபதம் செய்திருந்தான்.
அவனை ஆயுதம் எடுக்க வைப்பேன் என்று பீஷ்மர் சபதம் செய்திருந்தார்.
தனது சபதத்தில் தான் தோற்றாலும் பரவாயில்லை, பக்தரான பீஷ்மர் அவரது சபதத்தில் தோற்கக்கூடாது என்பதற்காகத்தான்
இரண்டு முறை கையில் ஆயுதம் ஏந்தி பீஷ்மரை நோக்கி நடந்திருக்கிறான் கண்ணன்.
மேலும் பரமபக்தரான பீஷ்மருக்குத் தனது நடையழகைக் காட்டி அவரை மகிழ்விக்க வேண்டும் என்ற காரணத்துக்காகவும்
கண்ணன் பீஷ்மரை நோக்கி நடந்திருக்கிறான்.
இந்த ரகசியத்தை அம்புப் படுக்கையில் கிடந்த சமயத்தில் பீஷ்மர் அர்ஜுனனுக்கு எடுத்துச் சொன்னார்.
“நீ ராஜ்ஜியம், செல்வம் இவற்றால் எத்தகைய இன்பம் பெறுவாயோ, அதை விடப் பெரிய இன்பத்தை அருள வல்லவன் பகவான் கண்ணன்.
செல்வத்தால் பெறும் இன்பமும் உண்மையில் இறைவன் கொடுத்து வருவதே என்பதை உணர்ந்து கொள்!” என்று உபதேசித்தார் பீஷ்மர். அடியார்களுக்காகவும், அந்த அடியார்களை மகிழ்விப்பதற்காகவும் இறைவன் தன்னைத் தாழவிட்டுக் கொண்டு செய்யும் செயல்களை எண்ணி உருகினான் அர்ஜுனன்.
பின்னாளில், பாண்டவர்கள் தங்கள் வாரிசான பரீட்சித்துக்குப் பட்டாபிஷேகம் செய்து வைத்து விட்டுத்
தீர்த்த யாத்திரை மேற்கொண்டார்கள்.
கேரளாவில் உள்ள பம்பை நதிக்கரையை அவர்கள் அடைந்தபோது, பாண்டவர்களுள் ஒவ்வொருவரும்
அப்பகுதியில் திருமாலுக்காக ஓரோர் கோவில் அமைத்தார்கள். அவற்றுள் அர்ஜுனன் நிர்மாணித்த
திருக்கோவில் தான் திருவாறன்விளை பார்த்தசாரதிப் பெருமாள் திருக்கோவில் ஆகும்.
ஆறு மூங்கில் கழிகளைக் கொண்டு கோவிலின் அடிப்படைக் கட்டமைப்பை உருவாக்கி, மேற்கொண்டு கோவிலைக் கட்டினான் அர்ஜுனன்..
பீஷ்மர் எனும் பக்தரை மகிழ்விக்கக் கையில்
சக்கரம் ஏந்திய திருக்கோலத்தோடு பார்த்தசாரதி
பெருமாள் அங்கே கோவில் கொண்டு அர்ஜுனனுக்குப் பெருமகிழ்ச்சி அளித்தார்.
“போரில் வென்று ராஜ்ஜியம் பெற்றபோது அடைந்த ஆனந்தத்தை விட
உன்னை இங்கே தரிசித்ததாலே பேரானந்தம் பெற்றேன்!” என்றான் அர்ஜுனன்.
நம்மாழ்வார் திருவாய்மொழியில் திருவாறன்விளை திருத்தலத்தைப் பாடுகையில்,
“இன்பம் பயக்க எழில்மலர் மாதரும் தானும் இவ்வேழுலகை
இன்பம் பயக்க இனிதுடன் வீற்றிருந்து ஆள்கின்ற எங்கள் பிரான்
அன்புற்று அமர்ந்து உறைகின்ற அணிபொழில் சூழ் திருவாறன்விளை
அன்புற்று அமர்ந்து வலம்செய்து கைதொழும் நாள்களும் ஆகும்கொலோ”
திருக்குறளப்பன் என்றும் பார்த்தசாரதி என்றும் திருநாமம் கொண்டு, பத்மாசனித் தாயாரோடு ஆனந்தம் மேலிடும்படி
கோவில் கொண்டிருக்கும் திருமால், இந்த உலகனைத்துக்கும் ஆனந்தம் ஏற்படும்படி ஆட்சி செய்கின்ற தலைவர் ஆவார்.
அவர் கோவில் கொண்டிருக்கும் திருவாறன்விளை திருத்தலத்தைத் தொழும் நாள் எப்போது கைகூடுமோ என்று பாடுகிறார்.
இப்படி பீஷ்மர், அர்ஜுனன், நம்மாழ்வார் தொடக்கமாகத் தனது அடியார்கள் ஒவ்வொருவருக்கும் மிகப்
பெரிய ஆனந்தத்தை அருள்வதால், திருமால் ‘மஹாபோக:’ என்று அழைக்கப்படுகிறார்.
போகம் என்பது மகிழ்ச்சி, ஆனந்தத்தைக் குறிக்கும்.
செல்வச் செழிப்பால் ஒருவர் பெறும் ஆனந்தம் எதுவோ, அதுவும் கூட உண்மையில் இறைவனின் அருளால் தான் கிடைக்கிறது.
இப்படி அனைத்து வித ஆனந்தத்தையும் அருள்பவராகத் திகழ்வதால் திருமால் ‘மஹாபோக:’ என்று அழைக்கப்படுகிறார்.
அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 434வது திருநாமம்.
“மஹாபோகாய நமஹ” என்று தினமும் சொல்லிவரும் அன்பர்களுக்கு வாழ்வில் ஆனந்தம் பெருகும்படித் திருமால் அருள்புரிவார்.
————
435. மஹாதனாய நமஹ: (Mahaadhanaaya namaha)
சண்டன்-மர்க்கன் என்னும் அசுர குருமார்களின் பாடசாலையில் பயின்று வந்த பிரகலாதன்,
அங்குள்ள அசுரப் பிள்ளைகளுக்கும் பக்தியைப் போதித்தான்.
“அன்பர்களே! அருமை நண்பர்களே! இந்தக் குருமார்கள் பணத்துக்காகத் தவறான பாடத்தை நமக்குச் சொல்லித் தருகிறார்கள்.
நான் எந்தப் பிரதிபலனும் எதிர்பாராது உண்மையைச் சொல்கிறேன்! கேளுங்கள்!
இந்த உலகில் சுகமாக இருப்பவை எல்லாம் காலப்போக்கில் துக்கமாக மாறும். துக்கமாக இருப்பவை சில நேரங்களில் சுகமாகவும் மாறும்.
ஆனால், நிலையான ஆனந்தத்தைத் தரவல்லவன் இறைவன் ஒருவனே!
நீங்கள் இந்த உடல்கள் அல்லர். உள்ளே உறையும் ஜீவாத்மாக்கள் நீங்கள்.
உலகியல் ஆசைகளை விடுங்கள் பரமனின் பாதங்களை நாடுங்கள்!
பகவானின் திருவுள்ளம் உகந்துவிட்டால், உலகில் வேறு என்ன தான் கிடைக்காது?” என்றெல்லாம் நல்வார்த்தைகள் சொன்னான் பிரகலாதன்.
பிரகலாதன் சொல்வது நியாயமாக அந்தப் பிள்ளைகள் மனதில் பட்டாலும், இரணியனுக்கு அஞ்சிய அவர்கள்,
பிரகலாதன் போதித்த விஷயங்களைக் குருமார்களிடம் கூறிவிட்டார்கள்.
இரணியன் காதுக்கு இச்செய்தி போனவாறே, விஷம் கொடுத்துப் பிரகலாதனைக் கொன்றுவிடச் சொன்னான் இரணியன்.
ஆனால், நாராயண நாமங்களைத் துணையாகக் கொண்ட பிரகலாதனை விஷம் எதுவும் செய்யவில்லை.
இதைக் கவனித்த குருமார்களான சண்டனும் மர்க்கனும் பிரகலாதனை அழைத்து,
“நீ ஏன் இப்படி உன் தந்தையின் கருத்துக்கு மாறாகச் செயல்படுகிறாய்? உன் தந்தைதான் சர்வேஸ்வரன்.
உலகைக் காப்பவர் அவரே! தேவர்களாலோ, தெய்வத்தாலோ அவருக்கு ஆகவேண்டியது ஏதுமில்லை.
நீ திருமாலைப் புகழ்ந்து பேசுவதை நிறுத்து. உன் தந்தையின் புகழ் பாடு.
உன் தந்தைக்குப் பின் நீ தானே தெய்வமாக எல்லோராலும் போற்றப்படப் போகிறாய்?
தந்தை தான் சிறந்த குரு. அவர் சொல்வதைக் கேள். உனது குருவான எங்கள் பேச்சையும் நீ மீறக்கூடாது!” என்றெல்லாம் சொல்லிப் பார்த்தார்கள்.
ஆனால் பிரகலாதனோ, “குருமார்களே! தந்தையை வணங்க வேண்டும், குருவின் சொல்லைக் கேட்கவேண்டும் என்பவை சாமானிய தருமங்கள்.
அவற்றை அவசியம் அடியேனும் பின்பற்றுகிறேன். ஆனால், இறைவன் விசேஷ தருமம் ஆவான்.
அந்த விசேஷ தருமமான இறைவனுக்கு முரணாகச் சாமானிய தருமங்கள் இருக்குமாயின், விசேஷ தருமத்தையே கைக்கொள்ள வேண்டும் என்பது மரபு.
தந்தை என்ற முறையில் நான் அவரை இன்றளவும் வணங்குகிறேன்.
ஆனால், அதைக் கடந்து அவரையே முழுமுதல் கடவுள் என்று அவர் சொல்லிக்கொள்வதை அடியேனால் ஏற்கமுடியாது.
குரு என்ற முறையில் நீங்கள் சொல்வதை நான் கேட்டு நடப்பேன்.
ஆனால், மூலமான வேதத்துக்கு முரணாக நீங்கள் பேசலாமா என்று நீங்களும் சற்றே சிந்தித்துப் பாருங்கள்!” என்றான்.
இதைக் கேட்ட சண்டனும் மர்க்கனும், “திருமால் திருமால் என்று இவ்வளவு பேசுகிறாயே!
திருமாலை வணங்குவதால் என்ன பலன்?” என்று கேட்டார்கள்.
அதற்குப் பிரகலாதன்,
“தர்ம அர்த்த காம மோக்ஷாச்ச புருஷார்த்தா உதாஹ்ருதா:
சதுஷ்டயம் இதம் யஸ்மாத் தஸ்மாத் ச கிம் இதம் வ்ருதா
மரீசிமிச்ரை: தக்ஷேண ததைவ அன்யை: அனந்தத:
தர்ம: ப்ராப்த: ததா சான்யை: அர்த்த: காம: ததாபரை:”
“என்ன பலன் என்றா கேட்கிறீர்கள்? அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நான்கையுமே தன்னை அண்டிவரும்
அடியார்களுக்குப் பரிபூரணமாக வழங்க வல்லவர் திருமால்.
மரீசி போன்ற முனிவர்கள் திருமாலைப் பிரார்த்தித்துத் தருமத்தைப் பெற்றார்கள், அதாவது,
அறவழியிலான வாழ்க்கையை வாழும் பாக்கியத்தைப் பெற்றார்கள்.
குபேரன் போன்றோர் திருமாலைப் பிரார்த்தித்து மிக உயர்ந்த செல்வத்தைப் பெற்றார்கள்.
தேவர்கள், திருமாலின் அருளால் தேவலோக ராஜ்ஜியத்தையும் இன்பத்தையும் பெற்றார்கள்.
மிகச்சிறந்த ஞானியரும் யோகியரும் திருமாலைத் தியானித்து வீடுபேறாகிய முக்தியை பெறுகிறார்கள்.
திருமாலிடம் இல்லாத செல்வங்களே இல்லை. செல்வம் என்றால் நீங்கள் நினைக்கும் பணம், பொருள் என்று மட்டும் பொருள் இல்லை.
அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய புருஷார்த்தங்கள் அனைத்தையுமே செல்வம் என்ற சொல் குறிக்கும்.
இந்த அனைத்துச் செல்வங்களையுமே நிறைவாகக்கொண்டவர் திருமால். அதை நாடி வரும் அடியார்களுக்கு
அவற்றை வாரி வழங்குபவர் அவர்!” என்று விளக்கினான்.
இப்படி வறுமையில் வாடும் அடியார்களுக்கு அருள்வதற்குரிய எல்லையில்லாத செல்வத்தைக் கொண்டிருப்பதால்,
திருமால் ‘மஹாதன’ என்று அழைக்கப்படுகிறார். ‘மஹாதன’ என்றால் அளவில்லாத செல்வம் கொண்டவர் என்று பொருள்.
அதுவே சஹஸ்ரநாமத்தின் 435-வது திருநாமம்.
“மஹா தனாய நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்கு நற்செல்வத்தைத் திருமால் அருள்வார்.
—————
436. அநிர்விண்ணாய நமஹ:
(Anirvinnaaya namaha)
(திருநாமங்கள் 436 [அநிர்விண்ண:] முதல் 445 [ஸமீஹன:] வரை – திருமாலின் சிம்சுமார வடிவம்)
[விண்வெளியில் உடும்பு போன்ற வடிவில் ஒரு நட்சத்திரக் கூட்டம் உள்ளது. அதற்கு சிம்சுமாரச் சக்கரம் என்று பெயர். இந்த சிம்சுமாரச் சக்கர வடிவில் (galaxy) திருமாலே எழுந்தருளி உள்ளார். திருமாலின் நட்சத்திர மயமான இந்த வடிவின் வால் பகுதியில் தான் துருவ நட்சத்திரம் உள்ளது. இந்த சிம்சுமார வடிவைப் பற்றிய முழு விவரம் ஸ்ரீவிஷ்ணு புராணம் இரண்டாம் அம்சம் ஒன்பதாம் அத்தியாயத்தில் உள்ளது.]
“உடைமைக்கு ஒரு முழுக்கு என்றால் உடையவனுக்கு ஒன்பது முழுக்கு!” என்று கிராமப் புறங்களில் ஒரு பழமொழி உண்டு. இதன் பொருள் என்ன?
ஒரு வீட்டில் மருமகள் கிணற்றில் தண்ணீர் எடுக்கப் போனாள். அப்போது, வாளி கயிற்றில் இருந்து நழுவிக் கிணற்றில் விழுந்து விட்டது. அதைக் கண்ட மாமியார், “நீ வாளியை எடுக்காமல் வீட்டுக்குள் வரக்கூடாது!” என்று சொல்லி விட்டார். என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்துப் போய்க் கிணற்றடியில் அமர்ந்திருந்தாள் மருமகள்.
அவளது கணவர், அச்சமயம் அங்கே வந்தார். மனைவியின் சோகத்துக்கான காரணத்தை அறிந்துகொண்ட அவர், “நீ வருந்தாதே! நான் கிணற்றில் இறங்கி வாளியை எடுத்துத் தருகிறேன்!” என்றார். கிணற்றில் இறங்கிய கணவர் முதலில் ஒரு முழுக்கு போட்டுத் தேடினார். அப்போது வாளி கிடைக்கவில்லை, முன்பு கிணற்றில் விழுந்த பழைய சொம்புதான் கிடைத்தது.அடுத்து முழுக்கு போட்டார். அப்போதும் வாளி கிடைக்கவில்லை. முன்பு கிணற்றில் விழுந்திருந்த பழைய பெட்டி ஒன்று கிடைத்தது. அடுத்த முழுக்கு போட்டபோது கிணற்றில் விழுந்த பழைய பூட்டு ஒன்று கிடைத்தது. இப்படி ஒன்பது முழுக்குகள் போட்ட பின் தான், அவர் தேடிய வாளி கிடைத்தது. இந்தக் கதையைச் சற்றே கவனித்துப் பாருங்களேன். உடைமையாகிய வாளி ஒருமுறை தான் கிணற்றில் மூழ்கியது. ஆனால், அதை மீட்பதற்காக மூழ்கிய அதன் உடையவர், ஒன்பதுமுறை முழுக்குப் போட வேண்டி இருந்தது அல்லவா? இதன் அடிப் படையிலேயே உடைமைக்கு ஒரு முழுக்கு என்றால், உடையவனுக்கு ஒன்பது முழுக்கு என்ற பழமொழி ஏற்பட்டது.
இது அப்படியே இறைவனுக்கும் பொருந்தும். இறைவனின் உடைமைகள்தான் ஜீவாத்மாக்களாகிய நாம் அனைவரும். கிணறுதான் பிறவி என்னும் பெருங்கடல். உடையவன் இறைவன். இறைவனின் உடைமைகளாகிய நாம், பிறவி என்னும் கிணற்றுக்குள் விழுந்து கிடக்கிறோம். நம்மை மீட்பதற்காக இறைவன் இந்தப் பூமியிலே அவதாரங்களை செய்கிறார்.
இதில், உடைமையான ஜீவாத்மா ஒருமுறை தான் பிறவிக் கிணற்றில் சிக்கிக்கொண்டது. ஆனால், உடையவனான இறைவனோ ஜீவாத்மா என்னும் சொத்தை மீட்பதற்காக, இந்த உலகில் மீண்டும் மீண்டும் அவதரிக்கிறான்.
“மீனோடு ஆமை கேழல் அரி குறளாய் முன்னும் இராமனாய்த்தானாய்ப் பின்னும் இராமனாய்த் தாமோதரனாய்க் கல்கியும்ஆனான்…”என்று திருமங்கை ஆழ்வார் பாடியதற்கேற்றபடி ஒவ்வோர் அவதாரமாக, மீண்டும் மீண்டும் இங்கே பிறந்துகொண்டே இருக்கிறார். அதில் இறைவன் களைப்படைவதே இல்லை. மேலும், இறைவன் உலகைப் படைப்பதும் கூட, நாம் எல்லோரும் இறைவனை அடைய வேண்டும், முக்தி அடைய வேண்டும் என்ற நோக்கில்தான். ஆனால், நாமோ இறைவனை நாடாது உலகியல் இன்பங்களையே நாடுகிறோம். இறைவன் அவதரித்து வந்து திருத்த முற்படும் போதும் கூட, நம்மில் பெரும்பாலானோர் அவன்பால் மனம் செலுத்துவதில்லை.
ஆனால், இதை எல்லாம் பொருட்படுத்தாமல், நம்மைக் காக்கும் முயற்சியில் தளர்ச்சி இன்றித் தொடர்ந்து ஈடுபட்டுக் கொண்டே வருகிறான் இறைவன். இப்படி மனத்தளர்ச்சி இல்லாமல் உலகையும் உயிர்களையும் காத்து வருவதால், திருமால் ‘அநிர்விண்ண’ என்று அழைக்கப்படுகிறார். இதற்குச் சான்றாகத் தான், விண்வெளியில் சிம்சுமாரச் சக்கர வடிவில் திருமால் எழுந்தருளியிருந்து உலகையும் உயிர்களையும் அவர்களின் செயல்பாடுகளையும் கண்காணித்துக் காப்பாற்றிக் கொண்டு, அவர்கள் உயர்வதற்கான வழியைக் காட்டிக்கொண்டே வருகிறார்.
இப்படி சிம்சுமாரச் சக்கர வடிவில் இருந்து கொண்டு, தளர்ச்சி இல்லாமல் செயல்பட்டுக் கொண்டே இருப்பதால் ‘அநிர்விண்ண’ என்று திருமால் அழைக்கப்படுகிறார். ‘அநிர்விண்ண:’ என்றால் தளராமல் செயல்புரிபவர் என்று பொருள். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 436-வது திருநாமம்.“அநிர்விண்ணாய நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்கு வாழ்வில் மனத்தளர்ச்சி ஏற்படாதபடித் திருமால் காத்தருள்வார்.
—————-
437. ஸ்தவிஷ்டாய நமஹ:
(Sthavishtaaya namaha)
துருவனின் வரலாற்றை அறியாதவர்கள் இருக்க முடியாது. உத்தானபாதன் என்ற மன்னனின் முதல் மனைவி சுநீதியின் மகனாகப் பிறந்தான் துருவன். ஐந்து வயது சிறுவனான அவன், தன் தந்தையின் மடியில் அமர வேண்டும் என்று ஆசையோடு சென்றான். ஆனால், உத்தானபாதனனின் இரண்டாவது மனைவியான சுருசி அவனைத் தடுத்து, “என் வயிற்றில் பிறந்த மகனுக்கு மட்டுமே இவரது மடியில் அமரும் உரிமை உண்டு. முதல் மனைவியின் மகனாகப் பிறந்த உனக்கு அந்த உரிமை இல்லை!” என்று கூறிவிட்டாள். தந்தையின் மடியில் அமரும் பாக்கியம் கிட்டவில்லையே என்று மிகவும் வருந்திய துருவன், திருமாலைக் குறித்துத் தவம்புரியக் காட்டுக்குச் சென்றான்.
(விஷ்ணு புராணத்தின் அடிப்படையில்) சப்த ரிஷிகள் என்ற ஏழு முனிவர்களின் உபதேசங்களைப் பெற்ற துருவன், அவர்கள் காட்டிய வழியில் மதுவனம் என்னும் இடத்தில் திருமாலைக் குறித்துக் கடுந்தவம் புரிந்தான்.வலக்காலை உயர்த்தி இடக்காலை ஊன்றி ஒற்றைக்காலில் அவன் தவம்புரிந்தபோது, பூமியே இடப்புறமாகச் சாய்ந்து விட்டது. பின் இடக்காலை உயர்த்தி வலக்காலை ஊன்றி அவன் தவம் புரிந்த போது, பூமியே வலப்புறமாகச் சாய்ந்தது. அவனது தவத்தைக் கலைக்க முற்பட்ட தேவர்கள், தங்கள் முயற்சியில் தோல்வியைத் தழுவினார்கள்.
அவனது தவத்துக்கு உகந்த திருமால் அவனுக்குக் காட்சி அளித்து, “உத்தானபாதன் பெற்றெடுத்த உத்தமனே! உனக்கு மங்கலம் உண்டாகுக! பேரருளாளன் என்று பெயர் பெற்ற நான் உனக்கு வரங்களை அருள வந்திருக்கிறேன்!” என்று சொன்னார். திருமாலின் குரலைக் கேட்ட துருவன் கண் திறந்து திருமாலைத் தரிசித்தான்.
முதலில், திருமாலின் கிரீடத்தைத் தரிசித்தான். அந்தக் கிரீடம், திருமால் மிகவும் உயர்ந்தவர் என்பதற்கு அடையாளமாக அவரது தலையில் திகழ்வதை உணர்ந்துகொண்டான். அந்தப் புரிதலோடு துருவன், “இறைவா! தந்தையின் மடி என்ற பதவி எனக்கு மறுக்கப்பட்ட நிலையில், மிகப்பெரிய பதவி ஒன்றை அடையவேண்டும் எனக்கருதித் தவம்புரியத் தொடங்கினேன். உன்னைத் தரிசித்தவாறே உன்னை விட உயர்ந்தது உலகினில் வேறேதும் இல்லை என உணர்ந்தேன்! உன்னைத் துதிப்பதற்குத் தேவையான ஞானத்தை நீ கொடு! இதுவே நான் கேட்கும் வரம்!” என்றான். திருமால் தனது சங்கின் நுனியால் துருவனின் கன்னத்தை வருடினார்.
அடுத்த நொடியே திவ்ய ஞானம் பெற்ற துருவன், திருமாலைத் துதிக்கத் தொடங்கினான். “உலகையும் உயிர்களையும் உடலாகக் கொண்டு அவர்களுக்கு உள்ளே உயிராக உறைபவனே நீயே மிகவும் உயர்ந்தவன்’’!
“ப்ருஹத்வாத் ப்ரஹ்மணத்வாத் ச யத்ரூபம் ப்ரஹ்மஸம்ஜ்ஞிதம்
தஸ்மை நமஸ்தே ஸர்வாத்மன் யோகிசிந்த்ய அவிகாரிணே”
உனது சொரூபத்தாலும் சரி, குணங்களாலும் சரி, நீ மிக உயர்ந்தவனாக விளங்குகிறாய். `ப்ரஹ்ம’ என்றால் மிகப்பெரிய என்று பொருள். மிகப்பெரியவனாக இருப்பதால் நீ ப்ரஹ்மம் எனப்படுகிறாய். கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் என எல்லாக் காலங்களிலும் இருக்கும் அனைத்தையும் இயக்குபவன் நீயே!” என்று துதி செய்தான் துருவன்.
அவனது துதியைக் கேட்டு உகந்த திருமால், “இப்போது உலகில் எது உயர்ந்தது, எது தாழ்ந்தது என்ற தெளிவு உனக்கு ஏற்பட்டு விட்டது. நீ உன் அரண்மனைக்குத் திரும்பிப் போய் ஆட்சி புரிந்துவிட்டு, நான் அளிக்கும் மிக உயர்ந்த பதவியான துருவப் பதவியை அலங்கரிப்பாயாக. விண்வெளியில் சிம்சுமாரச் சக்கரம் என்ற நட்சத்திரக் கூட்ட வடிவில் நான் உள்ளேன். அந்த சிம்சுமாரச் சக்கரத்தின் வால் பகுதியில் உள்ள துருவ நட்சத்திரமாக மிக உயர்ந்த ஸ்தானத்தில் நீ திகழ்வாயாக!” என்று அருள்புரிந்தார்.
துருவனுக்குத் திருமால் உணர்த்தியபடி, உலகில் பெரியவை என நாம் நினைக்கும் அனைத்துப் பொருட்களை விடவும் பெரியவர் திருமால். தான் பெரியவன் என்பதற்கு ஒரு சான்றாகவே சிம்சுமாரச் சக்கரம் என்னும் மிகப்பெரிய வடிவோடு திருமால் விண்வெளியில் திகழ்கிறார்.
இப்படிப் பேருருவம் கொண்டிருப்பதால், ‘ஸ்தவிஷ்ட’ என்று திருமால் அழைக்கப்படுகிறார்.
‘ஸ்தவிஷ்ட’ என்றால் பேருருவம் கொண்டவர் என்று பொருள். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 437-வது திருநாமம்.“ஸ்தவிஷ்டாய நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்குப் பெரிய பதவிகள் கிட்டும்படி திருமால் அருள்புரிவார்.
————–
438. புவே நமஹ: (Bhuvey namaha)
பாண்டவர்கள் வனவாசத்தில் இருந்த போது, சௌகந்திகா என்னும் அதிசய மலரைப் பற்றிக் கேள்விப் பட்டாள் திரௌபதி. அந்த மலரைப் பற்றிய செய்திகளைப் பீமனிடம் கூறித் தனக்காக அம்மலரைப் பறித்து வருமாறு கேட்டுக் கொண்டாள் திரௌபதி. “திரௌபதி! கவலைப் படாதே! எனது வலிமையைப் பற்றி நன்றாக அறிவாய் அல்லவா? எனது வலிமையால் அந்த மலரை உன்னிடம் கொண்டு வந்து சேர்க்கிறேன்!” என்று முழங்கி விட்டு, சௌகந்திகா மலரைத் தேடிச் சென்றான் பீமன். காட்டுப்பாதையில் பீமன் நடந்து சென்றபோது வழியில் ஒரு வயதான குரங்கு படுத்திருந்தது.
“ஏ குரங்கே! வழி விடு!” என்று கருவத்துடன் சொன்னான் பீமன். அந்தக் குரங்கோ, “நான் மிகவும் களைப்போடு இருக்கிறேன்! நீ வேண்டுமானால் என்னைத் தாண்டிச் செல்!” என்று தழுதழுத்த குரலில் கூறியது.“ஏ குரங்கே! நீ வயதான குரங்கு போல் தெரிகிறாய். உன்னைத் தாண்டிச் செல்வது அவமரியாதை. எனக்கு நீ வழி விடுவதே முறை. வழி விடு!” என்றான் பீமன்.
“சரி, நீயே என் வாலைத் தள்ளி வைத்து விட்டுச் செல்!” என்று சொன்னது குரங்கு. குரங்கின் வாலை இரு கைகளாலும் பிடித்து நகர்த்தப் பார்த்தான் பீமன். ஆயிரம் யானை பலம் கொண்ட பீமனால் குரங்கின் வாலை அசைக்கக் கூட முடியவில்லை. அப்போது கருவம் குறையப்பெற்ற பீமன், பணிவோடு, “நீங்கள் யார்?” என்று குரங்கிடம் கேட்டான்.
“நீ யார்?” என்று அக்குரங்கு கேட்டது.
“நான் பீமன். வாயு தேவனின் அருளால் குந்தி தேவிக்குப் பிறந்த மகன்!” என்று சொன்னான் பீமன். “நான் உனது அண்ணன்!” என்றது குரங்கு. என்ன என்று பீமன் கேட்க, “ஆம்! வாயு தேவனின் அருளால் அஞ்ஜனா தேவிக்குப் பிறந்த ஆஞ்ஜநேயன் நான். நீ எனக்குத் தம்பி ஆவாய்!” என்று சொல்லித் தனது சுயரூபத்தைக் காட்டினார் அனுமான்.
பீமனது செருக்கு மொத்தமாக அடங்கி விட்டது. அனுமான் பீமனிடம், “நீ மலர் பறிக்கச் சென்ற பாதை தேவர்கள் பயணிக்கும் பாதை. அதில், பல ஆபத்துகள் உள்ளன. நான் கூறும் வழியில் செல்!” என்று சொல்லி அவரே பீமனைச் சௌகந்திகா மலர் இருக்கும் குளத்துக்கு அழைத்துச் சென்று மலர்களைப் பறித்துக் கொடுத்தார். மேலும், “பீமா! நீ போர்க்களத்தில் சிங்கம் போல் முழங்கும்போது, என் குரலும் உன் குரலோடு சேர்ந்து கொள்ளும். நமது ஒலி பாண்டவ சேனைக்குப் பலத்தையும் கௌரவ சேனைக்குப் பயத்தையும் கொடுக்கும். அர்ஜுனனின் தேர்க்கொடியிலும் நான் இருந்து உங்களுக்கு ஜெயத்தைத் தருவேன்!” என்று சொல்லிச் சௌகந்திகா மலர்களைப் பீமனுக்கு வழங்கினார் அனுமான்.
தான் பலசாலி என்றும், தன் பலத்தால் எதையும் சாதிக்க முடியும் என்று கருதிய பீமனிடம், “நீ பலசாலி என்று நினைப்பது எவ்வளவு தவறோ, அதே அளவு நான் பலசாலி என்று நினைப்பதும் தவறு. நம் இருவருக்கும் உள்ளே இருந்து கொண்டு நம்மைத் தாங்கிச் சக்தி அளிப்பவர் திருமால். இதை நீ மனதில் வைத்துக் கொள்!” என்று அறிவுரை சொல்லி அனுப்பினார் அனுமான்.
இவ்வரலாற்றை பாலகவி சுந்தரராஜன் சுவாமி ஹநூமத் பஞ்சாசத்தில்,
“புஷ்பம் ஸௌகந்திகாக்யம் ஹிமகிரிவிபினே க்ருஷ்ணயா ப்ரார்த்திதம் யத்
ப்ராத்ரே பீமாய தஸ்மை ததவசயக்ருதே: காம்யயா ப்ராம்யதே ப்ராக் |
ஸந்தர்ச்யானுக்ரஹம் யோ வ்யதரதபஹரன் ஸ்கந்தயோரஸ்ய கந்தம்
கந்தம் ஸம்ஸாரபந்தப்ரதமபஹரதாத் கந்தவாஹாத்மஜோ ந: ||”
என்று வர்ணித்துள்ளார்.
கும்பகோணத்துக்கு அருகில் உள்ள திருநறையூர் என்ற திவ்ய தேசத்தில் சௌகந்திகா அனுமார், தனிக்கோயில் கொண்டு காட்சி தருகிறார். கையில் சௌகந்திகா மலரை ஏந்திய வடிவில் காட்சி தரும் அந்த அனுமனைத் தரிசிக்கும் போதெல்லாம், “நாம் பெரியவர் அல்லர்! உள்ளிருந்து நம்மைத் தாங்கும் இறைவனே பெரியவன்!” என்ற எண்ணம் நமக்கு ஏற்படுகிறது.
அனைவரையும் தாங்குபவன் என்பதற்குச் சான்றாகத் திருமால் சிம்சுமாரச் சக்கர வடிவில் விண்வெளியில் காட்சி தருகிறார். எந்த துருவ ஸ்தானம் நட்சத்திரங்கள், கிரகங்கள் உள்ளிட்டவற்றைத் தாங்குகிறதோ, அந்த துருவ ஸ்தானத்தைத் தனது வால்பகுதியில் கொண்ட சிம்சுமாரச் சக்கர வடிவில் திருமால் விளங்கி, அனைவரையும், அனைத்தையும் தாங்குபவர் என்பதை உணர்த்துகிறார். ‘பூ’ (Bhoohu) என்றால் தாங்குபவர். அனைத்தையும், அனைவரையும் தாங்குவதால் திருமால் ‘பூ’ எனப்படுகிறார். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 438-வது திருநாமம்.
“புவே நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களைத் திருமால் தாங்கிக் காத்தருள்கிறார்.
————–
439. தர்ம யூபாய நமஹ: (Dharma Yoopaaya namaha)
ஆயர்பாடியில் கண்ணன் எழுந்தருளியிருந்த சமயத்தில், சரத் காலம், இலையுதிர் காலம் வந்தது. அப்போது ஒருநாள், மாலை சந்திரோதயம் ஆனவாறே, கண்ணன் ஒரு மரத்தடியில் நின்றபடிப் புல்லாங்குழல் ஊதத் தொடங்கினான். அந்தக் குழலோசையைக் கேட்ட கோபியர்கள் அத்தனை பேரும், தங்களது பணிகளை எல்லாம் மறந்துவிட்டுக் கண்ணனை நாடிச் சென்றார்கள்.
இக்காட்சியை, ஸ்ரீமத் பாகவத புராணத்தில் சுக முனிவர் அழகாக வர்ணிக்கிறார்.
சில கோபிகைகள் வீட்டில் பால் கறந்துகொண்டிருந்தார்கள். சிலர் அடுப்பில் பால் காய்ச்சிக் கொண்டிருந்தார்கள். (திருமணம் ஆன) சில கோபிகைகள் தங்கள் கணவன்மார்களுக்கு உணவு பரிமாறிக் கொண்டிருந்தார்கள். சிலர் குழந்தைகளுக்குப் பால் ஊட்டிக்கொண்டிருந்தார்கள். சிலர் நீராடிக் கொண்டிருந்தார்கள். சிலர் கண்களுக்கு மையிட்டுக் கொண்டிருந்தார்கள். சிலர் மாமியார் மானாருக்குப் பணிவிடை செய்து கொண்டிருந்தார்கள்.
கண்ணனின் குழலோசையைக் கேட்டவாறே அத்தனை பேரும் கண்ணன் இருக்கும் இடத்தை நோக்கி ஓடி வந்துவிட்டார்கள். சிலரின் வீட்டில் உள்ள பெரியவர்கள் தடுத்தும் கூட அவர்கள் கேட்கவில்லை. அவர்களைக் கண்ட கண்ணன், “வருக! வருக! என வரவேற்று மாலைப் பொழுதில் வீட்டை விட்டுவிட்டு என்னைத் தேடி வந்து விட்டீர்களே! வீட்டில் உள்ளவர்கள் உங்களைத் தேட மாட்டார்களா? திரும்பச் செல்லுங்கள்! சென்று உங்கள் குடும்பத்தைக் கவனியுங்கள்! உங்கள் கடமையைச் செய்யுங்கள்! குடும்பத்தைப் பேணுவதுதானே உங்களுக்கு மிகச்சிறந்த தருமம்? அதை விட்டு விட்டு எதற்காக என்னைத் தேடி வந்தீர்கள்?” என்று கேட்டான்.
அதைக் கேட்டுக் கண்ணீர் விட்ட கோபிகைகள், “கண்ணா! நீ வீட்டுக்குத் திரும்பச் சென்று எங்கள் குடும்பத்தைப் பேணுவதே எங்களுக்குத் தருமம் என்று உபதேசம் செய்கிறாய். ஆனால் உண்மையில் எங்கள் குடும்பத்தில் உள்ள கணவர், மற்ற உறவினர்கள் என அனைவருக்குள்ளும் அந்தராத்மாவாக உறைந்திருப்பவன் நீ தானே? அவர்களுக்கு நாங்கள் பணிவிடை செய்தலாகிய தர்மத்தைப் பின்பற்றினாலும் அதற்கு உகந்து அருள்புரிபவன் நீ தானே? காதைச் சுற்றி மூக்கைத் தொடுவது போல், அவர்களுக்குப் பணிவிடை செய்து அவர்களுக்குள் இருக்கும் உன்னை மகிழ்விப்பதற்குப் பதிலாக நேரடியாகவே உனக்கு நாங்கள் பணிவிடை செய்து விடுகிறோம்! உன் திருவடிகளால் எங்களைத் தீண்டி உன் திருக்கரங்களை எங்கள் மேல் வைத்து எங்களது சாபத்தைத் தணித்து அருள்புரிய வேண்டும்!” என்று பிரார்த்தித்தார்கள்.
கோபிகைகளின் மிக உயர்ந்த பக்தி நிலையையும் அவர்கள் தன்மீது கொண்ட உலகியலுக்கு அப்பாற்பட்ட தெய்வீகக் காதலையும் புரிந்து கொண்ட கண்ணன், குரவைக் கூத்து என்ற நாட்டியத்தை அவர்களோடு ஆடி அவர்களுக்கு அருள்புரிந்தான். (ஆழ்ந்த வேதாந்தக் கருத்துகளை உணர்த்தும் இக்குரவைக் கூத்தை நாம் உலகியல் கண்ணோட்டத்தில் பார்ப்பது தவறாகும்.) இரவு முழுவதும் கண்ணனோடு குரவைக் கூத்தாடிய கோபிகைகள், காலையில் வீடு திரும்பினார்கள். அவர்களை வீட்டில் யாராவது சேர்ப்பார்களா? இரவு எங்கே சென்றாய் உள்ளிட்ட கேள்விக் கணைகளைக் குடும்ப உறுப்பினர்கள் தொடுத்திருப்பார்களே! எதுவுமே இல்லை. அவர்கள் வீடு திரும்பியவாறே, எப்போதும் போல், தங்களது இயல்பான
நடவடிக்கைகளைத் தொடர்ந்தார்களாம்.
அதெப்படி சாத்தியம்?
கண்ணனை நாடிக் கோபிகைகள் சென்றவாறே, அத்தனை பேரின் வடிவங்களையும் கண்ணனே எடுத்துக்கொண்டு அவரவர் வீடுகளுக்குச் சென்று அவர்கள் செய்ய வேண்டிய கடமைகளைக் கண்ணனே செய்து முடித்து விட்டான். அதனால் கோபிகைகள் வீட்டில் இல்லை என்ற உணர்வு எந்த வீட்டில் உள்ள யாருக்குமே
ஏற்படவில்லை.
உலகியல் கண்ணோட்டத்தில் பார்ப்போருக்குத் தருமத்தை மீறிக் கோபிகைகள், கண்ணனை நாடிச் சென்று விட்டார்கள் எனத் தோன்றலாம். ஆனால், உண்மை என்னவென்றால் தருமத்துக்கெல்லாம் அதிபதியான, ‘க்ருஷ்ணம் தர்மம் ஸநாதனம்’ என்று போற்றப்படும் விசேஷ
தர்மமான கண்ணனையே நாடிச் சென்றுள்ளார்கள் அப்பெண்கள். விசேஷ தர்மமாகிய கண்ணனைப் பற்றி விட்டதால், அவர்கள் செய்ய வேண்டிய சாமானிய தர்மங்களை தானே
நடந்தேறி விட்டன.
ஆக, திருமால் தருமமே வடிவெடுத்தவராகத் திகழ்கிறார். அவரை மகிழ்விப்பதே அனைத்து வித தருமங்களின் நோக்காக உள்ளது. இதற்குச் சான்றாக சிம்சுமாரச் சக்கர வடிவில் இருக்கும் திருமால் தருமத்தையே தனது தலையாகக் கொண்டிருக்கிறார். அதனால் ‘தர்மயூப’ என்று அழைக்கப்படுகிறார். ‘தர்மயூப’ என்றால் தர்மத்தோடு கூடியிருப்பவர் என்று பொருள். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 439-வது திருநாமம்.“தர்மயூபாய நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்கள் என்றும் அறவழியில் இருந்து வழுவாதிருக்கத் திருமால் அருள்புரிவார்.
—————
440. மஹாமகாய நமஹ: (Mahaa Makhaaya namaha)
(திருநாமங்கள் 436 [அநிர்விண்ண:] முதல் 445 [ஸமீஹன:] வரை – திருமாலின் சிம்சுமார வடிவம்)[விண்வெளியில் உடும்பு போன்ற வடிவில் ஒரு நட்சத்திரக் கூட்டம் உள்ளது. அதற்கு சிம்சுமாரச் சக்கரம் என்று பெயர். இந்த சிம்சுமாரச் சக்கர வடிவில் (galaxy) திருமாலே எழுந்தருளி உள்ளார். திருமாலின் நட்சத்திர மயமான இந்த வடிவின் வால் பகுதியில்தான் துருவ நட்சத்திரம் உள்ளது. இந்த சிம்சுமார வடிவைப் பற்றிய முழு விவரம் ஸ்ரீவிஷ்ணு புராணம் இரண்டாம் அம்சம் ஒன்பதாம் அத்தியாயத்தில் உள்ளது.]
நர்மதா நதிக்கரையில் வேள்விசெய்து வந்த மகாபலியின் வேள்விச்சாலைக்குக் குள்ள வாமன வடிவில் எழுந்தருளிய திருமால், அவனிடம் மூவடி நிலத்தை யாசகமாகக் கேட்டார். மகாபலியும் அதைத் தாரைவார்த்துக் கொடுத்த அளவிலே, கிடுகிடு என ஓங்கி உலகங்களை எல்லாம் அளந்துவிட்டார் திருமால். ஓரடியால் மண்ணுலகையும் மற்றோர் அடியால் விண்ணுலகையும் அளந்த திருமால், மூன்றாம் அடி மண்ணைத் தராமைக்குத் தண்டனையாக மகாபலியைப் பூமிக்கு அடியில் உள்ள சுதலலோகத்துக்கு அனுப்பிவைத்தார். அப்போது மகாபலி தனது தவறை உணர்ந்து கர்வம் எல்லாம் நீங்கியவனாகத் திருமாலின் ஆணைக்கு அடிபணிந்தான்.
ஓங்கி உலகளந்த உத்தமனை அடிபணிந்த மகாபலி, “இறைவா! நான் இங்கே ஒரு வேள்வி தொடங்கி நடத்திவந்தேன். ஆனால் இப்போது நீங்கள் இடையில் வந்து என்னைச் சுதல லோகத்துக்கு அனுப்பி வைக்க உள்ளீர்கள். ஒரு யாகத்தைத் தொடங்கி விட்டு அதைப் பாதியில் நிறுத்துவது பெரும் குற்றமாகுமே! பாதியில் நின்றுபோன இந்த யாகத்தை நிறைவு செய்யத் தாங்களே வழிகாட்டி அருள வேண்டும்!” என்று பிரார்த்தித்தான்.
அப்போது திருமால், “மகாபலி! நீ வருந்த வேண்டாம். உன்னைப் பிடித்திருந்த ஆணவத்தை அகற்றவே இந்த லீலையை நான் புரிந்தேன். உனது யாகத்தை எனது அடியார்கள் நிறைவு செய்துவைப்பார்கள்!” என்று விடையளித்தார். “எப்படி?” என்று கேட்டான் மகாபலி. அதற்குத் திருமால், “வருடந்தோறும் கார்த்திகைத் தீபத் திருநாளன்று எனது திருக்கோயில்களில் சொக்கப்பனை என்பது எனது அடியார்களால் கொளுத்தப்படும். அந்தச் சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்வின் வாயிலாக நீ தொடங்கிய இந்த வேள்வியை எனது அடியார்கள் நிறைவு செய்து வைப்பார்கள்!” என்று கூறினார்.
இவ்வரலாறு ஸ்ரீபாஞ்சராத்ர ஆகமத்தின் ஒரு பகுதியான ஸ்ரீபிரச்ன சம்ஹிதையில் உள்ளது. இதன் அடிப்படையில்தான் விஷ்ணு ஆலயங்களில் கார்த்திகைதீபத் திருநாளன்று சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்வு நடைபெறுவதாக ஆகமம் கூறுகிறது. பாஞ்சராத்திர ஆகமத்தைச் சீடர்களுக்கு உபதேசம் செய்தவர்களுள் ஒருவரான சௌனக முனிவரிடம் சில சீடர்கள், “அதெப்படித் திருமாலின் கோயிலில் சொக்கப்பனை கொளுத்தினால் மகாபலியின் யாகம் நிறைவு பெற்றுவிடுமா?” என்று கேட்டார்கள்.
அதற்குச் சௌனக முனிவர், “நிச்சயமாக நிறைவு பெறும். ஏனெனில் வேள்விகள் அனைத்தாலும் ஆராதிக்கப்படுபவர் திருமால். வேள்வியின் வடிவமாகவே திருமால் இருக்கிறார். உலகிலுள்ள அனைத்து வேள்விகளைக் காட்டிலும் மிகச்சிறந்த வேள்வி திருமாலுக்குச் செய்யக்கூடிய திருவாராதனமே ஆகும். எனவே அத்தகைய திருமாலைக் குறித்து அவரது திருக்கோவிலில் சொக்கப்பனை கொளுத்தினால், அதுவே மகாபலி தொடங்கி வைத்த வேள்வியை நிறைவு செய்தமைக்கு நிகராகும் என்பதிலே எள்ளளவும் ஐயமில்லை!” என்றார்.
இப்படி வேள்விகளைத் தன் கட்டுப்பாட்டில் கொண்டவராகவும், அனைத்து வேள்விகளுக்கும் தலைவராகவும் தான் இருப்பதற்கு அடையாளமாகவே சிம்சுமாரச் சக்கர வடிவில் விண்வெளியில் திருமால் காட்சி அளிக்கிறார். அந்தச் சிம்சுமாரச் சக்கரத்தின் உடல்பகுதியாக யாகங்களே இருக்கின்றன. ‘மக’ (makha) என்றால் யாகம் என்று பொருள். யாகங்களைத் தனக்கு உடலாகக்கொண்டிருப்பதால் சிம்சுமார மூர்த்தியான திருமால் ‘மஹாமக:’ என்று அழைக்கப்படுகிறார். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 440-வது திருநாமம்.“மஹாமகாய நமஹ:” என்று தினமும் சொல்லிவரும் அடியார்களுக்கு மிகச்சிறந்த வேள்விகளின் பலன்களைத் திருமால் அருள்வார்.
—————-
441. நக்ஷத்ர நேமயே நமஹ: (Nakshathra Nemaye namaha)
சுவாமி வேதாந்த தேசிகன் என்னும் மகான் காஞ்சிபுரத்தில் வாழ்ந்துவந்த சமயம். காஞ்சிக்கு அருகில் உள்ளே திருப்புட்குழி என்னும் பகுதியில் வாழ்ந்த மக்கள் திடீரெனக் கொடிய விஷக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டார்கள். பெருந்தொற்றாகப் பரவிவந்த அந்த விஷக் காய்ச்சல் பல உயிர்களைப் பலி வாங்கியது. ஊர்மக்கள் எல்லோரும் ஒன்றுகூடிக் காஞ்சிபுரத்தில் எழுந்தருயிருந்த வேதாந்த தேசிகனின் திருவடிகளை அடிபணிந்து, “நீங்கள் மிக உயர்ந்த ஞானி என்று உங்களை எல்லோரும் கொண்டாடுகிறார்கள். நீங்கள்தான் ஏதாவது செய்து இந்த விஷக்காய்ச்சலில் இருந்து எங்கள் ஊரையும் ஊர் மக்களையும் காப்பாற்ற வேண்டும்!” என்று பிரார்த்தித்தார்கள்.
அவர்களின் துன்பத்தைச் செவியுற்ற வேதாந்த தேசிகனின் மனம் உருகியது. “உங்கள் ஊருக்கு நல்ல காலம் ஏற்பட ஒரு வழி உள்ளது. காலத்தை நிர்ணயிக்கும் நட்சத்திர மண்டலத்தைச் சுழற்றுபவர் திருமால். சிம்சுமாரச்சக்கர வடிவில் இருந்துகொண்டு நட்சத்திர மண்டலத்தின் சுழற்சியைத் திருமால் நடத்துகிறார். அதை நமக்கு உணர்த்தவே திருமால் திருக்கரத்தில் சுதர்சனச் சக்கரத்தை ஏந்தியுள்ளார். ‘காலச் சக்கரத்தோடு வெண்சங்கம் கை ஏந்தினாய்’ என்ற பாசுரத்தில் நம்மாழ்வார் திருமாலின் கையில் உள்ள சக்கரத்தைக் காலச் சக்கரம் என்றே அழைத்திருக்கிறார் பாருங்கள். எனவே அந்தச் சக்கரத்தாழ்வாரைத் துதி செய்வோம். அவரது திருவருளாலே உங்கள் ஊருக்கு நிச்சயமாக நல்ல காலம் ஏற்படும்!” என்று அவர்களைத் தேற்றினார் தேசிகன்.
திருப்புட்குழிக்கு வந்தார் தேசிகன். “எனது குருவின் குருவான நடாதூர் அம்மாள் முப்பத்திரண்டு முறை ஜய என்ற சொல் வரும் விதமாக ஹேதிபுங்கவ ஸ்தவம் என்று துதியை இயற்றி, சக்கரத்தாழ்வாரைத் துதி செய்துள்ளார். அவர் காட்டிய வழியில் முப்பத்திரண்டு முறை ஜய என்ற சொல் வரும்படி ஒரு துதியைச் சக்கரத்தாழ்வாரைக் குறித்து இயற்றுகிறேன் என்று சொல்லி,
“ப்ரதிபட ச்ரேணி பீஷண வரகுண ஸ்தோம பூஷண
ஜனிபய ஸ்தான தாரண ஜகத் அவஸ்தான காரண
நிகில துஷ்கர்ம கர்சன நிகம ஸத்தர்ம தர்சன
ஜய ஜய ஸ்ரீஸுதர்சன ஜய ஜய ஸ்ரீஸுதர்சன”
என்று தொடங்கி சுதர்சனாஷ்டகம் என்ற எட்டு ஸ்லோகங்களை இயற்றினார். ‘ஜகத் அவஸ்தான காரண’ – இந்தப் பிரபஞ்சம் நிலைபெற்று இருப்பதற்குக் காரணமானவர் என்று சக்கரத்தாழ்வாரை தேசிகன் இங்கே குறிப்பிட்டிருப்பதைக் காணலாம். நட்சத்திர மண்டலத்தையும் பிரபஞ்சத்தையும் திருமால் சுழற்றுவதற்கு அடையாளமாகவே அவரது கையில் சுழலும் சக்கரமாகச் சக்கரத்தாழ்வார் திகழ்வதால், உலகம் நிலைபெறக் காரணமானவர் என்று தேசிகன் அவரைக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த எட்டு ஸ்லோகங்களுடன், சக்கரத்தாழ்வார் தனது திருக்கரங்களில் ஏந்தியிருக்கும் பதினாறு ஆயுதங்களைக் குறித்து ஷோடசாயுத ஸ்தோத்ரம் என்ற ஒரு துதியையும் இயற்றி அருளினார் தேசிகன். இந்த இரண்டு துதிகளையும் சொல்லிச் சக்கரத்தாழ்வாரைத் துதிக்குமாறு ஊர் மக்களிடம் சொன்னார் தேசிகன். ஊராரும் அவ்வாறு சக்கரத்தாழ்வாரைத் துதி செய்யவே, விஷக்காய்ச்சல் நீங்கி மக்கள் எல்லோரும் நலம்பெற்றார்கள்.
இதன்மூலம் காலத்தை நிர்வகிக்கும் காலச்சக்கரமாகச் சுதர்சனாழ்வார் இருப்பதை நம்மால் உணர முடிகிறதல்லவா? காலத்தை நிர்ணயிக்கும் நட்சத்திர மண்டலத்தின் சுழற்சியைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதையே, சுதர்சனச் சக்கரத்தைக் கையில் ஏந்தியிருப்பதன் மூலம் நமக்கு உணர்த்துகிறார் திருமால்.‘நேமி:’ என்றால் சுழற்றுபவர் என்று பொருள். ‘நக்ஷத்ர நேமி:’ என்றால் நட்சத்திர மண்டலத்தைச் சுழற்றுபவர் என்று பொருள். சிம்சுமாரச் சக்கர வடிவில் இருந்து நட்சத்திர மண்டலத்தின் சுழற்சியை நிர்வகிப்பதால் திருமால் ‘நக்ஷத்ரநேமி:’ என்று அழைக்கப்படுகிறார். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 441-வது திருநாமம்.
“நக்ஷத்ர நேமயே நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்கு வாழ்வில்
எந்நாளும் பொன் நாளாய் இருக்கும்படி
திருமால் அருள்புரிவார்.
—————-
442. நக்ஷத்ரிணே நமஹ: (Nakshathriney namaha)
சிம்சுமாரச் சக்கர வடிவில் எழுந்தருளியிருக்கும் திருமாலிடம் பூரம், பூராடம், பூரட்டாதி ஆகிய மூன்று நட்சத்திரங்களுக்கு அதிபதியான தேவதைகள் வந்தார்கள். “முப்பூரம் என்றால் ஆகாது என்று சொல்லி எங்கள் மூன்று நட்சத்திரங்களையும் மக்கள் அமங்கலமாகக் கருதி வருகிறார்கள். நீங்கள்தான் எங்கள் மூவருக்கும் மங்கலத்தை அருள வேண்டும்!” என்று அவர்கள் பிரார்த்தித்தார்கள். அதைத் தொடர்ந்து செவ்வாய் கிரகத்துக்கு அதிபதியான அங்காரகன் திருமாலிடம் வந்து, “எனது கிழமையான செவ்வாய்க்கிழமையை மங்கல வாரம் என்று அழைக்கும் வழக்கம் இருந்தாலும், அது அமங்கலமான கிழமையாகவே கருதப்படுகிறது. அந்தக் கிழமைக்கு மங்கலத்தை நீங்கள் தான் அருள வேண்டும்!” என்று பிரார்த்தித்தார்.
தட்சிணாயன புண்ணிய காலத்துக்குரிய தேவதை திருமாலிடம் வந்து, “எனது ஆறு மாத தட்சிணாயன காலம் தொடங்கும் மாதமாகிய ஆடி மாதத்தையும் மார்கழி மாதத்தையும் அமங்கலமான மாதங்கள் என்று மனிதர்கள் கருதுகிறார்கள். அவைகளுக்கு நீங்களே மங்கலத் தன்மையை அருள வேண்டும்!” என்று
பிரார்த்தித்தார்.
தென்திசையின் தலைவனான யமன் திருமாலிடம் வந்து, “மற்ற எல்லாத் திசைகளை விடவும் எனது திசையான தென்திசையைத் தான் அமங்கலமானது என்று எல்லோரும் சொல்கிறார்கள். எனக்குக் கொஞ்சம் மங்கலத் தன்மையை நீங்களே அருள வேண்டும்!” என்று பிரார்த்தித்தார்.அவர்களிடம் திருமால், “உங்கள் அனைவருக்கும் சேர்த்து எனது தேவியான பூமிப் பிராட்டி அருள்புரிவாள்!” என்று விடையளித்து அவர்களை அனுப்பி வைத்தார். பூமிதேவியிடம் இந்த விஷயத்தைத் திருமால் சொன்ன போது, மகிழ்ச்சியுடன், “அவர்கள் அத்தனை பேருக்கும் மங்கலத்தை அருள வேண்டியது என் பொறுப்பு!” என்று பதிலளித்தாள்.
காலங்கள் கடந்தன. கலியுகம் பூமியில் ஏற்பட்டபோது, மக்கள் இறைவனையும் அறநூல்களையும் பக்திநெறியையும் மறந்து மனம் போன போக்கில் வாழத் தொடங்கினார்கள். அவர்களைத் திருத்தி, இறைவனின் திருநாமங்களைப் பாடி, அவனுக்கு மாலைகளைச் சமர்ப்பித்து, அவனிடம் சரணடைந்து முக்தி அடையும் வழியை உபதேசிக்கப் பூமிதேவி அவதாரம் செய்தாள்.
முப்பூரம் எனப்படும்மூன்றுநட்சத்திரங்களுள் முதல் நட்சத்திரமான பூரநட்சத்திரத்தில் அவதாரம் செய்து பூரம், பூராடம், பூரட்டாதி ஆகிய மூன்று நட்சத்திரங்களுக்கும் மங்கலத்தைக் கொடுத்தாள்.
செவ்வாய்க்கிழமையில் அவதாரம் செய்து அதற்கும் மங்கலத்தைக் கொடுத்தாள்.ஆடி மாதத்தில் அவதாரம் செய்து, மார்கழி மாதத்தில் பாவை நோன்பு நோற்று அவ்விரண்டு மாதங்களுக்கும் மங்கலத்தைக் கொடுத்தாள்.தமிழகத்தின் தென்பகுதியில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூரில் அவதாரம் செய்து தெற்குத் திசைக்கும் மங்கலத்தைக் கொடுத்தாள்.இப்படிப் பூர நட்சத்திரம், செவ்வாய்க் கிழமை, ஆடி, மார்கழி மாதங்கள், தென் திசை ஆகிய அனைத்துக்கும் மங்கலம் தரும் விதமாக பூமிதேவி ஆண்டாளாக அவதரித்தபடியால், அவள் கோதா மங்கலத்தை அருள்பவள் என்று அழைக்கப்படுகிறாள். கோ என்றால் மங்கலம், தா என்றால் அருள்பவள்.
இவ்வாறு மங்கலம் பெற்று மகிழ்ந்த அந்த நட்சத்திரங்கள், கிழமை, மாதங்கள், தென்திசை அனைத்தும் திருமாலுக்கு நன்றி கூறின. “சிம்சுமார வடிவில் இருந்து எங்களைத் தாங்கி நிற்கும் நீயே, எங்களது அமங்கலத்தைப் போக்கி எங்களுக்கு மங்கலத்தையும் அருளி விட்டாய்!” என்று திருமாலின் கருணையைப் போற்றித் துதித்தனர்.
இப்படி நட்சத்திர மண்டலம் தொடக்கமாக மொத்தப் பிரபஞ்சத்தின் இயக்கத்தையும் சிம்சுமாரச் சக்கர வடிவில் தாங்கியிருப்பதால் திருமால் ‘நக்ஷத்ரீ’ என்று அழைக்கப்படுகிறார். ‘நக்ஷத்ரீ’ என்றால் சிம்சுமார வடிவிலான நட்சத்திர ரூபம் கொண்டவர் என்று பொருள். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 442-வது திருநாமம்.
“நக்ஷத்ரிணே நமஹ:” என்று தினமும் சொல்லிவரும் அன்பர்களுக்கு அனைத்து வித மங்கலங்களையும் திருமால் அருள்வார்.
————-
443. க்ஷமாய நமஹ: (Kshamaaya namaha)
ராம லட்சமணர்களை அழைத்துக் கொண்டு ஜனகரின் வேள்விச் சாலைக்கு வந்தார் விச்வாமித்ரர். ராம லட்சமணர்களின் தோற்றத்தைக் கண்டு வியப்படைந்த ஜனகர், “இவ்விரு பிள்ளைகளும் யார்?” என்று விச்வாமித்ரரிடம் கேட்டார். “இவர்கள் தசரதனின் மகன்கள். உங்கள் வேள்வியையும் வில்லையும் காண வந்துள்ளார்கள்!” என்று விச்வாமித்ரர் விடையளித்தார். ஜனகர் தனது பணியாளர்களை அழைத்து சிவ தனுஸ்ஸைக் கொண்டு வருமாறு அறிவுறுத்தினார். அவர்களும் வில்லை எடுத்து வந்தார்கள்.
“உறுவலி யானையை ஒத்த மேனியர்
செறிமயிர்க் கல் எனத் திரண்ட தோளினர்
அறுபதினாயிரர் அளவில் ஆற்றலர்
தறிமடுத்து இடையிடைத் தண்டில்
தாங்கினர்”
– என்று இக்காட்சியைக் கம்பர் பாடுகிறார். யானைபோல் வலிமை மிக்கவர்களும், மலைபோன்ற தோள்களைக் கொண்டவர்களுமான அறுபதாயிரம் வீரர்கள் வில்லை எடுத்து வந்தார்களாம். அந்த அறுபதாயிரம் வீரர்கள் தங்கள் தோள்களிலே பெரிய தண்டைத் தாங்கிக்கொண்டு, அந்தத் தண்டுக்கு மேலே தூண்களை நாட்டி, அந்தத் தூண்களுக்கு மேலே வில்லை வைத்துச் சுமந்துகொண்டு வந்தார்களாம்.
அப்போது மிதிலை மக்கள், “திருமாலைத் தவிர வேறு யாராலும் இந்த வில்லைக் கையால் எடுக்கக்கூட முடியாது!” என்று பேசிக் கொண்டார்கள். வேறு சிலர், “நம் ஜனக மகாராஜா எதற்காக இந்த வில்லைக்கொண்டு வந்து காட்டுகிறார்? ராமனைப் போல் ஒரு மாப்பிள்ளை கிடைக்கும் போது, அவரே வில் இருக்கிறதா என்று கேட்டாலும், இல்லை என்று சொல்லிப் பெண்ணை மணம் முடித்துத் தந்துவிடலாமே!” என்று பேசினார்கள்.
ஜனகரின் குருவான சதானந்தர், “விஸ்வாமித்ர முனிவரே! தட்சனின் வேள்வியைத் தாக்க வந்த சிவபெருமான் இந்த வில்லைக் கையில் ஏந்தியபடி வந்தார். அதைக் கண்டு தேவர்கள் அஞ்சியதால், கோபம் தணிந்த சிவபெருமான் இவ்வில்லை ஜனகரின் குல முன்னோரான தேவராதன் என்ற ராஜாவுக்கு அளித்தார். அதுதான் நம் ஜனக மன்னரிடம் இப்போது வந்துள்ளது! இந்த வில்லை ராமன் எடுத்து நாண் ஏற்றினால், நம் அனைவருக்கும் நலம்!” என்றார்.
விஸ்வாமித்ரர் ராமனை ஒரு பார்வை பார்த்தவாறே, ஹோமத் தீயில் நெய்யை ஊற்றினால் அக்னி பொங்கி எழுவதுபோல் ராமன் எழுந்தான். சிங்கத்தைப்போல் கம்பீரமாகவும், காளையைப் போல் வேகமாகவும், மேரு மலை போல் பெருமையோடும், யானையைப் போல் அழகாகவும் வில்லை நோக்கி நடந்தான் ராமன்.
“ஆடக மால்வரை அன்னது தன்னை
தேடரு மாமணி சீதை எனும் பொன்
சூடக வால்வளை சூட்டிட நீட்டும்
ஏடவிழ் மாலை இது என்ன எடுத்தான்”
– என்று பாடுகிறார் கம்பர். சீதையின் கழுத்தில் அணிவிக்கப்போகும் பூமாலையைத் தூக்குவதாக எண்ணி வில்லை அநாயாசமாகக் கையில் எடுத்து விட்டான் ராமன். “எடுத்தது கண்டனர் இற்றது கேட்டார்” என்றபடி நாணேற்றி வில்லையும் முறித்துவிட்டான்.அறுபதாயிரம் பேர் கஷ்டப்பட்டு சுமந்து வந்த வில்லை எப்படி அநாயாசமாகத் தூக்கி நாண் ஏற்றினான் ராமன் என்று எல்லோரும் வியந்தார்கள். அப்போது சதானந்தர் ஜனகரிடம், “அரசே! வந்திருப்பவர் சாட்சாத் திருமால் என்பதை நிரூபித்துவிட்டார் பார்த்தீர்களா? இந்த மொத்தப் பிரபஞ்சத்தையும் எந்தச் சிரமமும் இல்லாமல் விளையாட்டாகவே சுமந்து கொண்டிருப்பவர் திருமால். உலகையே அநாயாசமாகச் சுமக்கும் அவருக்கு இந்த ஒரு வில்லைத் தாங்கிப் பிடிப்பது அரிதான செயலில்லையே!” என்றார்.
மொத்தப் பிரபஞ்சத்தையும் அநாயாசமாகத் தான் சுமப்பதை உணர்த்தவே திருமால் விண்வெளியில் சிம்சுமாரச் சக்கர வடிவில் இருந்து கொண்டு நட்சத்திர மண்டலத்தை நிலை
நிறுத்திவருகிறார். சிம்சுமார வடிவில் இருந்து உலகைத் தாங்க வல்லவராகத் திகழ்வதால் ‘க்ஷம:’ என்று திருமால் அழைக்கப்படுகிறார். ‘க்ஷம:’ என்றால் வல்லமை மிக்கவர், இங்கே பிரபஞ்சத்தைத் தாங்கும் வல்லமை மிக்கவர் என்று பொருள். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 443-வது திருநாமம்.“க்ஷமாய நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்குத் திருமால் வல்லமை தந்தருள்வார்.
—————-
444. க்ஷாமாய நமஹ:
(Kshaamaaya namaha)
Matter can neither be created nor be destroyed என்கிற வாக்கியத்தை நம்மில் பலரும் கேட்டிருப்போம். உலகப் படைப்பை வேதம் விளக்கும் விதத்தை அடியொற்றியே இந்த வாக்கியமும் அமைந்திருப்பது கவனிக்கத்தக்கது.ராமானுஜரிடம் ஒரு சீடர், “இறைவன் இவ்வுலகை எங்கிருந்து எதை மூலப்பொருளாகக் கொண்டு படைக்கிறார்?” என்று கேட்டார். அதற்கு ராமானுஜர், “ஜடப்பொருட்கள், ஜீவாத்மாக்கள், இறைவன் ஆகிய மூவகைத் தத்துவங்களும் எப்போதுமே இருந்து வருகிறார்கள். அறிவில்லாத ஜடப்பொருட்களும், அறிவுள்ள ஜீவாத்மாக்களும் இறைவனுக்கு உடலாக இருக்கிறார்கள். ஊழிக் காலத்தில் உலகும் உயிர்களும் சூட்சும நிலையில், அதாவது நுண்ணிய நிலையில் இறைவனோடு ஒன்றி யிருப்பார்கள். படைப்புக் காலத்தில் அவற்றை ஸ்தூல நிலைக்கு இறைவன் மாற்றிப் பெயர் உருவ வேறுபாடு உள்ளவையாக ஆக்குகிறார். இதையே படைப்பு என்று சொல்கிறோம்.
மீண்டும் ஊழிக்காலம் வருகையில் உலகையும் உயிர்களையும் சூட்சும நிலைக்கு மாற்றி விடுவார் இறைவன். படைப்புக் காலம் வருகையில் மீண்டும் ஸ்தூல நிலைக்கு மாற்றி விடுவார். இந்த மாறுதலைத்தான் நாம் படைப்பு அழிப்பு என்றெல்லாம் சொல்கிறோமே ஒழிய, எதையும் புதிதாக இறைவன் உருவாக்குவதுமில்லை, இருப்பதை அழிப்பதுமில்லை!” என்றார்.
“எங்களுக்குப் புரியும்படி சற்றே விளக்க முடியுமா?” என்று மற்ற சீடர்கள் பிரார்த்தித்தார்கள்.
அதற்கு ராமானுஜர், “ஒரு குயவர் பானை செய்கிறார் என்றால், புதிதாக ஒருபொருளை அவர் உருவாக்குகிறார் என்பதை விட இருக்கும் பொருளின் நிலையை மாற்றுகிறார் என்றே சொல்ல வேண்டும். ஏனெனில் களிமண் என்ற நிலையில் இருக்கும் பொருளைப் பானை என்னும் நிலைக்குக் குயவர் மாற்றித் தருகிறார். அதுபோலத்தான் சூட்சுமநிலையில் உள்ள உலகை ஸ்தூல நிலைக்கு இறைவன் மாற்றுவதைப் படைப்பு என்கிறோம்.
பானை அழிந்தால் மொத்தமாக அழிந்து போவதில்லை. பானை என்னும் நிலை மாறித் தூள்களாக ஆகி விடுகிறது. அங்கேயும் நிலைமாற்றம் தான் ஏற்படுகிறது. அவ்வாறே ஊழிக் காலத்திலும் உலகம் அழிந்துவிடுவதில்லை, சூட்சும நிலைக்கு அனைத்தையும் இறைவன் மாற்றிவிடுகிறார்!” என்று விளக்கினார்.“உலகும் உயிர்களும் இறைவனுக்கு உடலாக இருக்கிறது என்று சொல்லும் பட்சத்தில், இவைகளுக்கு ஏற்படும் நிலைமாற்றம் உள்ளிருக்கும் இறைவனைப் பாதிக்குமா?” என்று மற்றொரு சீடர் கேட்டார்.
அதற்கு ராமானுஜர்,
“ஆவிசேர் உயிரின் உள்ளால் யாதுமோர் பற்றிலாத
பாவனை அதனைக் கூடில் அவனையும் கூடலாமே”
என்ற நம்மாழ்வாரின் பாசுரத்தை மேற்கோள் காட்டி, “உடலுக்கு வரும் மூப்பு வியாதி உள்ளிட்ட மாறுதல்கள் எப்படி ஜீவாத்மாவைப் பாதிப்பதில்லையோ, அதுபோலத் தான் பிரபஞ்சத்துக்கு ஏற்படும் மாறுதல்களால் உள்ளிருக்கும் இறைவன் பாதிப்படைவதில்லை. தோகையுடன் கூடிய மயிலை உதாரணமாக எடுத்துக்கொள்ளுங்கள். ஸ்தூல நிலையில் உள்ள பிரபஞ்சத்தோடு கூடிய இறைவன் தோகையை விரித்தாடும் மயிலைப் போன்றவன் என்று கொள்ளலாம். ஊழிக் காலத்தில் சூட்சும நிலையில் உள்ள பிரபஞ்சத்தோடு கூடிய இறைவன் தோகை மூடிய மயிலைப் போன்றவன் என்று கொள்ளலாம். இரண்டு நிலைகளிலும் மயிலுக்கு எந்த மாற்றமும் இல்லை. தோகை தான் விரிந்த நிலையிலோ, அல்லது மூடிய நிலையிலோ உள்ளது. அதுபோல் ஊழிக் காலத்திலும் சரி, படைப்புக் காலத்திலும் சரி, இறைவன் மாறுவதே இல்லை. அவனுக்கு உடலாக இருக்கும் பிரபஞ்சம் மட்டுமே நிலைமாறுகிறது.
படைப்புக் காலத்தில் மொத்த நட்சத்திர மண்டலத்தையும் தாங்கியபடி சிம்சுமாரச் சக் கரம் திகழும். ஊழிக்காலத்தில், சிம்சுமாரச் சக்கரத்தில் உள்ள நான்கு நட்சத்திரங்கள் மட்டுமே அழியாது நிற்கும். சிம்சுமாரச் சக்கரம் தான் திருமால். படைப்புக் காலத்தில் தோகை விரித்த மயில் போல் அவர் தனது திருமேனியில் இருந்து பிரபஞ்சத்தை வெளியிடுவதை உணர்த்தவே படைப்புக் காலத்தில் பல நட்சத்திரங்களோடு சிம்சுமாரச் சக்கரம் விளங்குகிறது. ஊழிக் காலத்தில் தோகையை மூடும் மயில் போல் தனக்குள் பிரபஞ்சத்தை அவர் உள்வாங்கிக் கொள்வதை உணர்த்தவே ஊழிக்காலத்தில் சிம்சுமாரச் சக்கரமும் மெலிந்து நான்கு நட்சத்திரங்களோடு மட்டும் திகழ்கிறது.
இப்படிப் பிரபஞ்சத்தைச் சூட்சும நிலைக்கு மாற்றித் தனக்குள்ளே உள்வாங்கி வைத்துள்ளார் திருமால் என்பதை ஊழிக்காலத்தில் நான்கே நட்சத்திரங்களோடு மெலிந்திருக்கும் சிம்சுமாரச் சக்கரம் நமக்கு உணர்த்துகிறது. ஊழிக்காலத்தில் மெலிந்த வடிவுடைய சிம்சுமாரச் சக்கரமாகத் திருமால் காட்சி அளிப்பதால், அவர் ‘க்ஷாம:’ என்று அழைக்கப்படுகிறார். ‘க்ஷாம:’ என்றால் மெலிந்தவர் – நான்கே நட்சத்திரங்களோடு கூடிய மெலிந்த வடிவில் ஊழிக் காலத்தில் திகழ்பவர் என்று பொருள். அதுவே ஹஸ்ரநாமத்தின் 444-வது திருநாமம்.“க்ஷாமாய நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்கு வாழ்வில் தேய்பிறை இல்லாத வளர்பிறை ஓங்கும்படி திருமால் அருள்புரிவார்.
—————————-
445. ஸமீஹநாய நமஹ: (Sameehanaaya namaha)
(திருநாமங்கள் 436 [அநிர்விண்ண:] முதல் 445 [ஸமீஹன:] வரை – திருமாலின் சிம்சுமார வடிவம்)
[விண்வெளியில் உடும்பு போன்ற வடிவில் ஒரு நட்சத்திரக் கூட்டம் உள்ளது. அதற்கு சிம்சுமாரச் சக்கரம் என்று பெயர். இந்த சிம்சுமாரச் சக்கர வடிவில் (galaxy) திருமாலே எழுந்தருளி உள்ளார். திருமாலின் நட்சத்திர மயமான இந்த வடிவின் வால்பகுதியில்தான் துருவ நட்சத்திரம் உள்ளது. இந்த சிம்சுமார வடிவைப் பற்றிய முழு விவரம் விஷ்ணு புராணம் இரண்டாம் அம்சம் ஒன்பதாம் அத்தியாயத்தில் உள்ளது.]குருக்ஷேத்திரப் போர்க்களத்தில் பூஜிக்கத் தக்கவர்களான பீஷ்மர், துரோணர் போன்றவர்களையும், உறவினர்களான கௌரவர்களையும் எதிர்த்துப் போர் புரியத் தயங்கிய அர்ஜுனன், கலக்கம் அடைந்து காண்டீவத்தை நழுவ விட்டுத் தேரிலே அமர்ந்துவிட்டான். அவனைத் தேற்றுவதற்காக பகவத் கீதையை
உபதேசிக்கத் தொடங்கினான் கண்ணபிரான்.
“அர்ஜுனா! இவர்களின் உடல்களைத் தான் நீ அழிக்கப் போகிறாய், ஜீவாத்மாக்களை நீ அழிக்கப்போவதில்லை. ஜீவாத்மாக்களை ஆயுதங்களால் வெட்டமுடியாது, நெருப்பால் எரிக்க முடியாது, காற்றால் உலர்த்த முடியாது, நீரால் நனைக்க முடியாது. பரமாத்மாவாகிய நான் எப்படி எப்போதும் இருப்பேனோ அதுபோல் ஜீவாத்மாக்களும் நித்தியமாக எப்போதும் இருப்பார்கள். ஜீவாத்மாவின் தன்மையை அறிய வேண்டும் என்றால் உனக்கான கடமையைப் பலனில் பற்று வைக்காமல் செய். அவ்வாறு கடமையைச் செய்து கர்மயோகத்தில் ஈடுபட்டால், அது உன்னை ஞானயோகத்தில் கொண்டு போய்ச் சேர்க்கும். ஞானயோகத்தைப் பயின்று ஜீவாத்மாவைத் தியானித்தால் ஆத்ம சாட்சாத்காரத்தை நீ அடைவாய்!” என்று அறிவுறுத்தினான் கண்ணன்.
இதைக் கேட்ட அர்ஜுனன், “கடமையைச் செய்தலாகிய கர்ம யோகத்தில் ஈடுபட வேண்டும் என்றால் நான் மன்னனாகிய எனக்குரிய கடமையாகிய இந்த கோரமான போரைச் செய்ய நேரிடும். அதற்குப் பதிலாக நான் ஞான யோகத்தைப் பின்பற்றி ஆத்மாவைத் தியானிக்கிறேன்!” என்று கண்ணனிடம் சொன்னான்.அதற்குக் கண்ணன், “கர்மயோகம் தான் செய்வதற்கு எளிதானது. ஞானயோகத்தைச் சிலகாலம் பின்பற்றிய பின் நீ நழுவ வாய்ப்புண்டு. ஆனால் பழகிய கர்மயோகத்தில் இருந்து நழுவுவதற்கு வாய்ப்பில்லை.
செயல் செய்தே பழகிய உன் போன்றவர்களால் செயல்களை நிறுத்தி விட்டு ஞானயோகம் பயில்வது மிகவும் கடினம். இயற்கையின் போக்கோடு இணைந்து செயல்புரிவதே நலம். ஜனகர் போன்றோர் எல்லாம் கர்மயோகத்தைப் பின்பற்றியே ஆத்ம சாட்சாத்காரம் பெற்றார்கள். எனவே உன் கடமையாகிய இந்தப் போரைச் செய். பிறரைக் கொல்ல வேண்டும் என்பதற்காக இதை நான் செய்யச் சொல்லவில்லை. அறத்தையும் நாட்டையும் மக்களையும் காக்கும் கடமை மன்னனாகிய உனக்கு உண்டு. அந்தக் கடமையை உணர்ந்து பலனில் பற்று வைக்காமல் போர் புரிக!” என்றான் கண்ணன்.
தனது கூற்றை மேலும் வலியுறுத்துவதற்காக மற்றொரு செய்தியையும் கண்ணன் இங்கே தெரிவித்தான். “ஆதி காலத்தில் இறைவன் (தன்னையே சொல்லிக் கொள்கிறான் கண்ணன்) உலகைப் படைக்கும் போது, வேள்விகளோடு மனிதர்களைப் படைத்தார். மனிதர்களே! வேள்விகளாகிய இந்தக் கடமைகளை நீங்கள் தவறாமல் செய்யுங்கள். இந்த வேள்வியினாலே உலகில் வாழ்வதற்குரிய செழிப்பையும், முக்தி பெறுவதற்குரிய பக்குவத்தையும் நீங்கள் பெறுவீர்கள்!
“ஸஹ யஜ்ஞை: ப்ரஜா: ஸ்ருஷ்ட்வா புரோவாச ப்ரஜாபதி:
அனேன ப்ரஸவிஷ்யத்வம் ஏஷ வோஸ்து இஷ்ட காமதுக்”எனவே உலகைப் படைக்கும்போதே இறைவன் அவரவருக்கென்று சில கடமைகளைத் தந்துள்ளார். அவற்றைத் தவறாமல் ஒவ்வொருவரும் செய்யவேண்டும் என்பதே இறைவனின் ஆணை! நீயும் உன் கடமையைச் செய்வாயாக!” என்று கூறினான்.
இப்படி ஒவ்வொருவருக்கும் அவரவருக்குரிய கடமைகளைத் தந்து அந்த கடமைகளை நிறைவேற்றும்படி அவர்களைத் தூண்டும் திருமால், ‘ஸமீஹன:’ என்று அழைக்கப்படுகிறார். ‘ஸமீஹன:’ என்றால் அனைவரையும் அவரவர் கடமையில் ஈடுபடுத்துபவர் என்று பொருள். சிம்சுமாரச் சக்கர வடிவில் இருந்தபடி நட்சத்திரங்களும் கிரகங்களும் தங்களுக்கு உரிய முறையில் சுழலும்படி அவைகளையும் நிர்வாகிக்கிறார் திருமால். அதனால் ‘ஸமீஹன:’ என்று அழைக்கப்படுகிறார். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 445-வது திருநாமம். “ஸமீஹனாய நமஹ:”
என்று தினமும் சொல்லி வரும் அன்பர்கள் சிறந்த கடமை வீரர்களாக விளங்கும்படித் திருமால் அருள்புரிவார்.
அதற்குத் திருமால், “நாரதா! நீ ஒரு நாள் அந்த விவசாயியின் நடவடிக்கைகளைக் கவனித்து விட்டு வா!” என்று சொன்னார். அவ்வாறே விவசாயியின் நடவடிக்கையை ஒருநாள் முழுவதும் கவனித்தார் நாரதர். காலை, மாலை இரு நேரங்களில் மட்டும் அந்த விவசாயி திருமாலை வணங்குவதைக் கவனித்தார். மற்றைய நேரங்களில் அந்த விவசாயி தனது அன்றாடப் பணிகளைச் செய்துவருவதைப் பார்த்தார் நாரதர்.
திருமாலிடம் வந்து, “ஒருநாள் முழுவதும் அந்த விவசாயியைக் கவனித்துவிட்டேன். காலை எழுந்தவுடனேயும், இரவு உறங்கச் செல்லும் முன்பும் அவர் உன்னை வழிபடுகிறார். மற்ற நேரங்களில் அவர் தனது விவசாயத் தொழிலைத்தான் பார்க்கிறார். மற்றபடி அவர் பெரிய வேள்விகளோ மற்ற வழிபாடுகளோ செய்ததாகத் தெரியவில்லை. அவரைப் போய் உனக்குப் பிடித்தமான பக்தர் என்று எதை வைத்துச் சொன்னாய்?” என்று கேட்டார் நாரதர்.
அதற்குத் திருமால், “நாரதா! நான் உனக்கு ஒரு பரிசோதனை வைக்கிறேன். அதன்பின் நீ அந்த விவசாயியின் பெருமையை உணர்வாய்!” என்று சொல்லிவிட்டு நாரதர் கையில் ஒரு விளக்கைக் கொடுத்தார். “நாரதா! இந்த விளக்கில் இருந்து ஒரு சொட்டு எண்ணெய் கூடக் கீழே வழியாதபடி இந்த விளக்கைக் கையில் ஏந்தியபடி நீ உலகைச் சுற்றி வர வேண்டும்!” என்றார் திருமால்.
“உத்தரவு பகவானே!” என்று சொல்லி விட்டுக் கையில் விளக்கோடு மெதுவாகப் புறப்பட்டார் நாரதர். ஒருதுளி எண்ணெய் கூடக் கீழே சிந்தாமல் அனைத்துலகையும் சுற்றிவிட்டுத் திருமாலிடம் திரும்ப வந்தார். “
இறைவா! காரியத்தைக் கச்சிதமாக முடித்து விட்டேன் பார்த்தாயா?” என்று பெருமிதத்துடன் சொன்னார் நாரதர்.
நாரதரைப் பார்த்துச் சிரித்த திருமால், “நாரதா! விளக்கைக் கையில் ஏந்தியபடி உலகைச் சுற்றும் போது நீ எத்தனை முறை எனது நாராயண நாமத்தைச் சொன்னாய்?” என்று கேட்டார்.
திடுக்கிட்டுப் போனார் நாரதர். “இறைவா! விளக்கில் இருந்து எண்ணெய் வழியக் கூடாது என்று நீ சொன்னதாலே அதிலேயே மொத்தக் கவனத்தையும் செலுத்திவிட்டேன். நாராயண நாம உச்சரிப்பையே இன்று மறந்து விட்டேன்!” என்றார் நாரதர்.
திருமால், “நாரதா! ஆனால் அந்த விவசாயி இத்தனை கடின உழைப்புக்கு மத்தியிலும், எப்போதும் என்னை மனதில் நினைத்துக் கொண்டிருக்கிறார் தெரியுமா? அவரது விவசாயத் தொழிலை எனக்குச் செய்யக் கூடிய பூஜையாக எண்ணி, அதனால் கிடைக்கும் உலகியல் பலன்களில் நாட்டம் வைக்காமல், எனது மகிழ்ச்சியே பெரிய பலன் என்ற எண்ணத்துடன் தனது கடமையை ஆற்றுகிறார். காலை மாலை என்னை அவர் தியானிப்பது மட்டும் அவர் செய்யும் பூஜையன்று. அவரது கடமையையும் என்னைத் தியானித்தபடி எனக்குச் செய்யும் பூஜையாகத்தான் செய்துவருகிறார்.
அவர் வேள்வி செய்தாரா என்று கேட்டாயே நாரதா! வேள்வியின் வடிவமே நான்தான். அத்தகைய என்னைத்தானே அவர் தினமும் வழிபடுகிறார்? அனைத்து வேள்விகளுக்கும் ஒரே பலன் என்னை மகிழ்விப்பதுதான். எனக்குப் பூஜையாகத்தான் வேள்விகள் யாவும் செய்யப்படுகின்றன. அப்படிப்பட்ட என்னைத் தன் கடமைகளுக்கு மத்தியில் இடைவிடாது தியானித்து, கடமையையே எனக்குச் செய்யும் பூஜையாக எண்ணிச் செய்துவரும் இந்த விவசாயி தினந்தோறும் வேள்வி செய்தவரே ஆவார்.
இவர் தான் எனக்குப் பிரியமான பக்தர்!” என்று விளக்கினார்.
வேள்வியின் வடிவமாகவும், வேள்விக்கான கருவியாகவும், வேள்வியின் பலனாகவும் திருமாலே இருக்கிறார் என்பதையும், திருமாலைத் தியானித்துப் பூஜிக்கும் அடியார்கள் அத்தகைய வேள்வியின் பலனைப் பெறுவார்கள் என்பதையும் இதன்மூலம் அறிகிறோம் அல்லவா?
வேள்வியின் வடிவமாகத் திருமால் இருப்பதால் அவர் ‘யக்ஞ:’ என்று அழைக்கப்படுகிறார்.
அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 446-வது திருநாமம். ‘யக்ஞ:’ என்றால் வேள்வியின் வடிவானவர் என்று பொருள்.
“யக்ஞாய நம:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களைத் திருமால் தனது சிறந்த பக்தர்களாக அங்கீகரித்து அவர்கள் செய்யும் வழிபாடுகளை மகிழ்ச்சியுடன் ஏற்றருள்வார்.
447. இஜ்யாய நமஹ: (Ijyaaya namaha)
ஆண்டு தோறும் தை அமாவாசைக்கு மறுநாள் சீர்காழியை அடுத்த திருநாங்கூரில் பதினொரு கருடசேவை வைபவம் நடைபெறுவது வழக்கம். அந்தக் கருட சேவை வைபவத்தைத் தொடர்ந்து மறுநாள் காலை திருநாங்கூருக்கு அருகிலுள்ள அண்ணன் கோவில் எனப்படும் திருவெள்ளக்குளத்தில் கலியன் ஒலிமாலை என்ற வைணவ மாநாடு நடைபெறுவது வழக்கம். இம்மாநாட்டை அண்ணன் கோவில், ஸ்ரீஉ.வே. சடகோப கல்யாணராமன் சுவாமிகள் நடத்தி வருகிறார்.
2015-ம் ஆண்டு நடைபெற்ற அந்தக் கலியன் ஒலிமாலை மாநாட்டில் பேசுவதற்கு அடியேனை அழைத்திருந்தார்கள். திருமங்கை ஆழ்வார் மிகவும் ஈடுபட்ட திவ்ய தேசங்களுள் ஒன்றைப் பற்றிப் பேசுமாறு பெரியோர்கள் அடியேனைப் பணித்தார்கள். பற்பல மகான்கள் அலங்கரித்த அந்தச் சபையில், பொடியனான அடியேன் எங்கள் சொந்த ஊரான நாச்சியார்கோவில் எனப்படும் திருநறையூரில் கோவில் கொண்டுள்ள வஞ்சுளவல்லித் தாயார்-ஸ்ரீநிவாசப் பெருமாளிடம் திருமங்கை ஆழ்வார் கொண்டுள்ள ஈடுபாட்டைப்பற்றி உரையாற்றினேன்.
அதன் ஒரு பகுதியாக, திருமங்கை ஆழ்வார் வைணவராக ஆக விரும்பிய போது, நாச்சியார்கோவில் ஸ்ரீநிவாசப் பெருமாள் தான் ஆசார்ய ஸ்தானத்திலே இருந்து, திருமங்கை ஆழ்வாரின் தோள்களில் சங்க சக்கரப் பொறிகளை ஒற்றி, ஐஞ்சீர்ச் சடங்கைச் செய்து வைத்து திருமங்கை ஆழ்வாரை வைணவராக ஆக்கினார் என்பதைக் குறிப்பிட்டேன்.
இவ்வாறு பெருமாள் தனக்குச் சங்க சக்கரப் பொறிகளை ஒற்றி அருளியமையைத் திருவுள்ளத்தில் கொண்டே திருமங்கை ஆழ்வாரும்,
“வலங்கை ஆழி இடங்கைச் சங்கம் உடையான் ஊர்
நலங்கொள் வாய்மை அந்தணர் வாழும் நறையூரே!”
என்று பாடியுள்ளார் என்பதையும் குறிப்பிட்டேன். அத்தோடு நில்லாமல், இளங்கன்று பயம் அறியாது என்பதற்கேற்ப, திருமங்கை ஆழ்வாரின் தோள்களில் பெருமாள் சங்க சக்கரப் பொறிகளை அருளியமையை வேதமும் கொண்டாடுகிறது என்று சொன்னேன்.
“உத்தர்ஷய மகவன் ஆயுதானி உத் ஸத்த்வானாம் மாமகானாம் மஹாம்ஸி”
– என்ற யஜுர்வேத மந்திரத்தை மேற்கோள் காட்டினேன். அப்ரதிரதம் என்ற யஜுர்வேதப் பகுதியில் வரும் மந்திரம் இது.
“மகவன் – பற்பல மாயங்கள் செய்ய வல்ல நறையூர் நம்பியே!
ஆயுதானி உத்தர்ஷய – திருமங்கை ஆழ்வாரின் தோள்களில் சங்க சக்கரப் பொறிகளை ஒற்றி, அதன்மூலம் அந்த திவ்யாயுதங்களுக்கு மகிழ்ச்சி அளித்தவனே!” என்று கூட இந்த வேத வாக்கியத்துக்குப் பொருள் கொள்ள இடமுள்ளது என்று விண்ணப்பித்தேன்.
திருமங்கை ஆழ்வாரின் தோள்களின் ஸ்பரிசத்தால் பெருமாள் கையிலுள்ள திவ்யாயுதங்கள் மகிழ்ச்சி அடைந்தன என்று இந்த வேத வாக்கியம் குறிப்பிடுவதாக ரசிப்பதற்கு இடமுள்ளது என்றேன்.
ஆனால் பேசிய பின், “பல மகான்கள் நிறைந்த சபையில் வேத மந்திரத்துக்கு நாம் புதிதாக ஏதோ அர்த்தம் சொல்லி விட்டோமே! யாராவது கண்டிப்பார்களோ!” என்ற லேசான அச்சம் மனதில் உண்டானது.
அப்போது சபையில் வீற்றிருந்த திருச்சித்திரகூடம் டாக்டர் ஏவி ஆர் சுவாமிகள் சற்று நேரம் மௌனமாகவே இருந்துவிட்டு, அதன்பின், “உன்னைப் பாராட்ட வார்த்தைகள் தேடிக்கொண்டிருந்தேன். அதனால்தான் எதுவும் பேசவில்லை. உண்மையிலேயே இது மிகவும் பொருத்தமான, ஆழ்ந்த அர்த்தம்!” என்று பாராட்டினார்.
மேலும், “ராமாநுஜர் ஸ்ரீபாஷ்யத்தில் வைச்வானராதிகரணம் என்னும் பகுதியில், வேதங்களில் உள்ள அனைத்து தேவர்களின் பெயர்களுமே உண்மையில் நேரடியாகத் திருமாலைக் குறிப்பதாகக் கருதித் தியானிக்கலாம் என்ற வழியைக் காட்டி உள்ளாரே. அக்னி என்றால் (இலக்கண ரீதியில்) இருளில் முன்னே வழி நடத்திச் செல்பவர் என்று பொருள்.
ஞான ஒளி தந்து அறியாமை இருளைக் கடக்க உதவும் திருமாலையே அக்னி என்று வேதம் சொல்வதாகக் கொள்ளலாமே. இந்திரன் என்றால் அனைத்து உலகங்களுக்கும் தலைவன் என்று பொருள். பொங்கோதம் சூழ்ந்த புவனியும் விண்ணுலகும் ஆளும் திருவரங்கநாதனையே இந்திரன் என்று வேதம் சொல்வதாகக் கொள்ளலாமே. இதுபோல் வாயு, வருணன், பிருகஸ்பதி உள்ளிட்ட எல்லாப் பெயர்களும் திருமாலைக் குறிக்கும் தன்மைகொண்டவை என்று ராமாநுஜரே காட்டியுள்ளார். அந்த வழியை அடியொற்றி நீ பேசி இருக்கிறாய்! பாராட்டுகள்!” என்று வாழ்த்தினார்.
எனவே, இந்திரன், சந்திரன், சூரியன், வாயு என எந்தத் தேவதையின் பெயரைச் சொன்னாலும் அது அவர்களுக்குள்ளே உறையும் திருமாலைக் குறிக்கும். அவர்களைக் குறித்துச் செய்யும் வேள்விகளால் உகப்பவரும் திருமாலே. அந்தந்த தேவதைகளுக்குள் திருமால் இருந்துகொண்டு அந்தந்த வேள்விகளுக்கான பலன்களை அவர்கள் மூலம் திருமாலே அருள்கிறார்.
இப்படி அனைத்துத் தேவதைகளைக் குறித்த வேள்விகளாலும் ஆராதிக்கப்படுபவராகத் திருமால் ‘இஜ்ய:’ என்று அழைக்கப்படுகிறார். ‘
இஜ்ய:’ என்றால் வேள்விகளால் ஆராதிக்கப் படுபவர் என்று பொருள்.
அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 447-வது திருநாமம்.“இஜ்யாய நம:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்கள் செய்யும் அனைத்து வழிபாடுகளையும் திருமால் ஏற்று அருள்புரிவார்.
——————
448. மஹேஜ்யாய நமஹ: (Mahejyaaya namaha)
தேவர்களின் பக்திக்கும் ஆழ்வார்களின் பக்திக்கும் என்ன வித்தியாசம்?
இதற்கான விடையை ஆசுகவி வில்லூர் நிதி சுவாமிகள் தமது
அம்ருத சார்தூலம் என்ற துதியின் ஒரு சுலோகத்தில் வழங்கியுள்ளார்.
“க்ஷீராப்தேரம்ருதம் பபாவிதி பரம் ஜானந்தி மந்தாஸ்ஸுரா:
யத் கிஞ்சித் ததஹோ ததங்க லலித ஸ்வேத த்ரவாணாம் கண
தன்மத்யே பயஸாம்நிதேரபி ததா கும்பகோணே புரே
சேதே மான்யம் இதம் விசித்ரம் அம்ருதம் தத்த்வம் து வித்மோ வயம்”
பாற்கடல் கடையப்பட்ட வரலாற்றை நாம் எல்லோரும் அறிவோம்.
அசுரர்களிடம் தேவர்கள் தோல்வி அடைந்த நிலையில், இழந்த தேவலோக ராஜ்ஜியத்தை மீண்டும் பெற என்ன வழி என்று பாற்கடலில் பள்ளிகொண்டிருந்த திருமாலின் உதவியை நாடினார்கள் தேவர்கள்.
அப்போது திருமால், “நீங்கள் பாற்கடலைக் கடைந்தால் அமுதம் கிடைக்கும். அமுதை உண்டால் நீண்ட ஆயுளும் உடல் வலிமையும் பெறலாம்.
அதன்பின் நீங்கள் எளிதில் அசுரர்களை வீழ்த்த முடியும்!” என்று ஆலோசனை சொன்னார்.
வலிமை இழந்திருந்த தேவர்களுக்கு உதவியாக அசுரர்களையும் பாற்கடலை கடைய அழைக்குமாறு தேவர்களிடம் சொன்னார் திருமால்.
ராஜநீதியின் அடிப்படையில், அமுதம் தருவதாகச் சொல்லி அசுரர்களை அழைத்து விட்டு அதன்பின் அமுதம் தராமல் ஏமாற்றி விடலாம் என்ற ஆலோசனையைத் திருமால் வழங்கினார்.
அவ்வாறே மந்தர மலையை மத்தாக்கி, வாசுகியை நாணாக்கித் தேவர்களும் அசுரர்களும் திருப்பாற்கடலைக் கடையத் தொடங்கினார்கள்.
மந்தர மலை கடலில் மூழ்காமல் காக்கத் திருமாலே ஆமை வடிவில் கூர்மாவதாரம் எடுத்தார்.
தொடர்ந்து பாற்கடலைக் கடைந்த போது ஐராவதம் யானை, உச்சைசிரவஸ் குதிரை, பாரிஜாத மரம், ஆலகால விஷம் போன்ற பலவும் அதினின்று தோன்றின.
அமுதில் வரும் பெண்ணமுதான மகாலட்சுமி தோன்றித் திருமாலை மணந்தது தனி வரலாறு.
திருமால் தன்வந்தரி வடிவம் பூண்டு கையில் அமுதக் கலசத்துடன் பாற்கடலிலிருந்து உதித்தார்.
அமுதம் கிடைக்கப் போவதை எண்ணித் தேவர்கள் பேருவகை கொண்டார்கள்.
ஆனால் தங்களுக்கும் அமுதில் பங்கு வேண்டும் என்று அசுரர்கள் வரிசை கட்டி வந்து நின்றார்கள்.
அப்போது தான் திருமால் மோகினி அவதாரம் எடுத்து, அசுரர்களை மயக்கித் தேவர்களுக்கு அமுதம் கிடைக்கும்படிச் செய்துவிட்டார்.
அமுதை உண்டதால் வலிமை பெற்ற தேவர்கள் அடுத்து நடந்த போரில் அசுரர்களை வீழ்த்தினார்கள்.
அமுதைச் சுவைத்த தேவர்கள், தேவ லோக ராஜ்ஜியத்தை அனுபவிக்கத் தொடங்கிய தேவர்கள், தங்களது வெற்றிக்குக் காரணமான திருமாலை மறந்து விட்டார்கள்.
அற்ப இன்பம் துய்ப்பதிலேயே காலம் கழிக்கத் தொடங்கி விட்டார்கள்.
“இந்தத் தேவர்கள் பாற்கடலில் இருந்து அமுதம் வந்தது என்பதையே அறிவார்கள்.
ஆனால் அந்தப் பாற்கடலுக்கு அமுதம் எப்படி வந்தது? அதை நான் சொல்கிறேன்!” என்று இந்த சுலோகத்தில் கூறுகிறார் வில்லூர் சுவாமிகள்.
பாற்கடலுக்கு எப்படி அமுதம் வந்ததென்றால், பாற்கடலிலும் கும்பகோணத்திலும் ஆதிசேஷன் மீது பள்ளிகொண்டிருக்கிறாரே திருமால்!
அவரது திருமேனிக்கு வியர்த்தால் அந்த வியர்வைத் துளிகள் எங்கே சிந்தும்? பாற்கடலில்தான் சிந்தும்.
பாற்கடலில் சிந்திய திருமாலின் வியர்வைத் துளிகள் எல்லாம் ஒன்று கூடி அமுதமாக உருவாயின.
திருமாலின் வியர்வையே அமுதமாக உருவாகிறது என்றால் திருமால் எவ்வளவு இனியவராக இருப்பார்? அதனால்தான் அவர் ஆராவமுதம் என்று அழைக்கப்படுகிறார். அமுதம், ராஜ்ஜியம் உள்ளிட்ட பலன்களை விரும்பும் தேவர்களைப் போன்றோர், அதை மட்டும் பெற்றுக்கொண்டு திருமாலை மறந்து விடுகிறார்கள்.
ஆனால் ஆழ்வார்களைப் போன்ற மிக உயர்ந்த பக்தர்களோ, அமுதத்துக்கும் காரணமான ஆராவமுதம் திருமாலே என உணர்ந்திருக்கிறார்கள்.
அதனால் அவர்கள் மற்ற விஷயங்களில் கண் வையாது திருமாலையே இடைவிடாது வழிபட்டு வருகிறார்கள்.
அந்தத் திருமாலின் திருவடிகளுக்குத் தொண்டு செய்வதாகிய முக்தியையே பெரும் பேறாகக் கருதுகிறார்கள்.
இவ்வாறு வேறு பலனில் கண்வையாது இறைவனையே விரும்பும் மிக உயர்ந்த பக்திக்கு ‘மஹா இஜ்ய:’ என்று பெயர்.
இஜ்ய என்றால் வழிபாடு.
மஹா என்றால் மிக உயர்ந்த.
‘மஹேஜ்ய:’ (மஹா+இஜ்ய: = மஹேஜ்ய:) என்றால் மிக உயர்ந்த வழிபாட்டுக்கு இலக்காக இருப்பவர் என்று பொருள்.
உலகியல் பலனில் நாட்டம் வைக்காத ஆழ்வார்கள் போன்றவர்களின் உயர்ந்த பக்திக்கு இலக்காகத் திருமால் இருப்பதால், அவர் ‘மஹேஜ்ய:’ என்று அழைக்கப்படுகிறார்.
அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 448-வது திருநாமம்.
“மஹேஜ்யாய நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்கள் பக்தியில் விரைந்து முன்னேறும்படி திருமால் அருள்புரிவார்.
——————-
449. க்ரதவே நமஹ (Krathavey namaha)
(திருநாமங்கள் 446 [யக்ஞ:] முதல் 463 [ஜிதக்ரோத:] வரை –
வேதச் சடங்குகளால் போற்றப்படுபவர் திருமால்)ராகவேந்திர சுவாமிகள் கும்பகோணத்துக்கு விஜயம் செய்த சமயம். தஞ்சை மாவட்டம் முழுவதுமே பஞ்சத்தால் பாதிக்கப்பட்டிருந்தது. மழை சரியாகப் பெய்யாததால் விவசாயம் மிகவும் பாதிக்கப்பட்டிருந்தது. சுமார் பன்னிரண்டு ஆண்டுகளாக மழை பொழியாமல் பஞ்சம் நிலவி வருவதாக மக்கள் ராகவேந்திர சுவாமிகளிடம் தெரிவித்தார்கள்.
அப்போது ஆண்டுவந்த தஞ்சை மன்னர், ராகவேந்திர சுவாமிகளின் பெருமைகளைக் கேள்விப்பட்டு அவரை வந்து அடி பணிந்தார். “சுவாமி! சோழநாடு சோறுடைத்து என்பதற்கேற்ப, விவசாயத்தில் செழித்த இந்தத் தஞ்சைப் பகுதி இப்போது மழை பெய்யாததால் பஞ்சத்தில் தவித்து வருகிறது. தாங்கள்தான் இந்தப் பஞ்சம் நீங்குவதற்கு அருள்புரிய வேண்டும்!” என்று வேண்டினார் மன்னர்.அந்தப் பகுதி மக்களின் நடவடிக்கைகளைக் கவனித்த ராகவேந்திர சுவாமிகள், “மன்னனே! மனிதர்கள் ஐந்து வித வேள்விகளை அன்றாடம் தவறாமல் செய்து வரவேண்டும்.
அவற்றுக்குப் பஞ்ச மகா யக்ஞங்கள் என்று பெயர். அவை,
1) பிரம்ம யக்ஞம் – தினமும் வேதத்தில் இருந்து ஒரு பகுதியை ஓதுதல்.
2) தேவ யக்ஞம் – அக்னி ஹோத்ரம், ஔபாசனம் உள்ளிட்ட வைதிக கர்மாக்களால் தேவர்களை ஆராதித்தல்.
3) பித்ரு யக்ஞம் – முன்னோர்களுக்குச் செலுத்த வேண்டிய நீர்க்கடன் உள்ளிட்டவற்றை முறையாகச் செய்தல்.
4) மநுஷ்ய யக்ஞம் – வீடு தேடி வரும் விருந்தினருக்கும், ஏழையருக்கும் உணவு அளித்தல்.
5) பூத யக்ஞம் – மற்ற பிராணிகளுக்கு உணவு அளித்தல்
இந்த ஐந்து வித வேள்விகளாலும், வேதியர்கள் செய்யும் அக்னி ஹோத்ரம் ஔபாசனம் போன்ற வைதிகச் செயல்களாலும் ஆராதிக்கப் படுபவர் திருமால். இவற்றைச் சரியான முறையில் அனுஷ்டித்துத் திருமாலை மகிழ்வித்தால் மழை பொழியும், விளைச்சல் அதிகரிக்கும், செழுமை நிலைக்கும். இந்தக் கடமைகளைச் சரியாகச் செய்யாமல் போவதால்தான் பஞ்சம் போன்ற இயற்கைச் சீற்றங்கள் ஏற்படுகின்றன!” என்று சொன்னார்.
பின் மன்னரைப் பார்த்து, “இங்கே உடனடியாக “காரீரேஷ்டி’’ என்னும் வேள்வியை இருபத்தொரு நாட்கள் நடத்துங்கள். மழை பொழியும்!” என்று சொல்லி அருளினார் ராகவேந்திர சுவாமிகள். மன்னரும் அவ்வாறே வேள்விக்கான ஏற்பாடுகளைச் செய்தார். புரோகிதர்கள் மூலம் காரீரேஷ்டி வேள்வியை நடத்தி, அதனால் திருமாலை ஆராதித்து மகிழ்வித்தார் ராகவேந்திர சுவாமிகள். திருமாலின் திருவுள்ளம் மகிழ்ந்தவாறே சோழ நாட்டில் நல்ல மழை பொழிந்தது, பன்னிரண்டு ஆண்டுகாலப் பஞ்சம் நீங்கியது.
ராகவேந்திர சுவாமிகளின் பிரபாவத்தைக் கண்டு வியந்த தஞ்சை மன்னர், அவருக்கு ஒரு தங்கச் சங்கிலியைப் பரிசாக அளித்தார். தனக்கென்று எதையும் வைத்துக்கொள்ளாது, அனைத்தையும் திருமாலுக்கென்றே அர்ப் பணிப்பவரான ராகவேந்திர சுவாமிகள், அந்தத் தங்கச் சங்கிலியையும் வேள்வித் தீயில் திருமாலுக்கு அர்ப்பணித்தார். தான் கொடுத்த தங்கச் சங்கிலியைத் தீயில் இடுவதைக் கண்டு மன்னர் கோபம்கொண்டார்.
மன்னரின் முக பாவனையைக் கவனித்த ராகவேந்திர சுவாமிகள், முழு மனமில்லாமல் கொடுத்தவனின் பொருளை இறைவனுக்கு அர்ப்பணிக்கலாகாது எனக் கருதி, தம் கையை அக்னியில் விட்டு அந்தச் சங்கிலியை வெளியே எடுத்து மன்னரிடமே கொடுத்துவிட்டார். ராகவேந்திர சுவாமிகளின் கையிலோ, தங்க நகையிலோ அக்னி பட்டதற்கான எந்தச் சுவடுமே தெரியவில்லை. இதைக் கண்டு வியந்துபோன தஞ்சை மன்னர், ராகவேந்திரரின் பக்தரானார் என்பது வரலாறு. இதன்மூலம் நாம் அறிவது என்னவென்றால்;
தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு ஐம்புலத்தாறு ஓம்பல் தலை – என்று வள்ளுவர் பாடியபடி, பிரம்ம யக்ஞம், தேவ யக்ஞம், பித்ரு யக்ஞம், மனுஷ்ய யக்ஞம், பூத யக்ஞம் ஆகிய ஐந்து வித வேள்விகளாலும் ஆராதிக்கப்படுபவர் திருமால். இவற்றால் ஆராதித்தால் திருமாலின் மனம் உவப்படைகிறது. இத்தகைய ஐம்பெரும் வேள்விகளுக்கு `க்ரதுக்கள்’ என்று பெயர். க்ரதுக்களால் ஆராதிக்கப்படுவதால் ‘க்ரது:’ என்று திருமால் அழைக்கப்படுகிறார். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 449-வது திருநாமம்.
“க்ரதவே நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்கு, வாழ்வில் எந்நாளும் செழிப்பு நிலைக்கும்படித் திருமால் அருள்புரிவார்.
——————————————
453. நிவ்ருத்தாத்மனே நமஹ (Nivrutthaathmaney namaha)
(குறிப்பு: சில பாடங்களில் இந்தத் திருநாமம் ‘விமுக்தாத்மா’ என்று வழங்கப்பட்டுள்ளது. ஆனால் பராசர பட்டரின் அதிகாரப் பூர்வமான விளக்கவுரையில் ‘நிவ்ருத்தாத்மா’ என்றே இத்திருநாமம் எடுத்தாளப்பட்டுள்ளது. அதையே நாமும் பின்பற்றுகிறோம்.)“என்ன யோசனையில் இருக்கிறீர்கள்?” என்று வைகுண்டத்தில் சிந்தனையில் ஆழ்ந்திருந்த திருமாலிடம் திருமகள் கேட்டாள். அதற்குத் திருமால், “உலகிலுள்ள மக்கள் எல்லோரும் உய்வடைய நாராயண நாமத்தை உள்ளடக்கிய `அஷ்டாக்ஷரம்’ என்னும் எட்டெழுத்து மந்திரத்தை உபதேசிக்க விழைகிறேன்!” என்றார். “விரைவில் அதைச் செய்ய வேண்டியது தானே!” என்று கேட்டாள் திருமகள். “தேவி! இம்மந்திரத்தை உபதேசிக்கும் குருவுக்கும், உபதேசம் பெறும் சீடனுக்கும் அனைத்து நற்பண்புகளும் நிறைந்திருக்க வேண்டும். அவர்கள் மூலமாக குரு சிஷ்ய பரம்பரையில் இம்மந்திரம் உலகில் பரவ வேண்டும். அத்தகைய குருவும் சிஷ்யனும் கிடைப்பார்களா என்று தான் தேடிக்கொண்டிருக்கிறேன்!” என்றார் திருமால்.
“குருவுக்கு என்னென்ன லட்சணங்கள் வேண்டும்?” என்று கேட்டாள் திருமகள். அதற்குத் திருமால், “முன்னோர்கள் காட்டிய நன்னெறியில் நிலை பெற்றவராகவும், சந்தேகம் இல்லாத தெளிவான ஞானம் பெற்றவராகவும், களங்கம் அற்றவராகவும், வேத வேதாந்தங்களில் ஆழங்கால்பட்டவராகவும், அசைக்க முடியாத பக்தி கொண்டவராகவும், சத்துவ குணம் நிறைந்தவராகவும், சத்தியத்தையே பேசுபவராகவும், தான் உபதேசம் செய்வதை வாழ்வில் பின்பற்றுபவராகவும், பொறாமை டம்பம் போன்ற தீய குணங்கள் அற்றவராகவும், மனதையும் புலன்களையும் வென்றவராகவும், சீடர்களுக்கு அனைத்து வித நன்மைகளையும் செய்ய வல்லவராகவும், கருணை மிக்கவராகவும், சீடர்கள் தவறு செய்கையில் சுட்டிக் காட்டித் திருத்துபவராகவும் இருப்பவரே நல்ல குரு ஆவார்!” என்றார்.
இதைக் கேட்ட திருமகள், “சுவாமி! இத்தனை லட்சணங்கள் பொருந்திய ஒரு குருவைத் தேடுவதை விட, அனைத்து மங்கல குணங்களுக்கும் இருப்பிடமான நீங்களே பூமியில் ஒரு குருவாக அவதாரம் செய்துவிடுங்கள்!” என்று ஆலோசனை சொன்னாள். அதன்பின், சீடன் எப்படி இருக்க வேண்டும் என்று திருமகள் கேட்க, “குருவுக்கு அனைத்துவிதப் பணிவிடைகளும் செய்பவனாகவும், நல்லொழுக்கம் மிக்கவனாகவும், ஞானம் பெறுவதில் ஆர்வம் கொண்டவனாகவும், அகந்தையற்றவனாகவும், குருவுக்கு அடங்கி நடப்பவனாகவும், பணிவோடு பேசுபவனாகவும், மனவடக்கமும் புலனடக்கமும் கொண்டவனாகவும், பொறாமை அற்றவனாகவும், குருவிடம் முழுமையாகத் தன்னை அர்ப்பணித்தவனாகவும், குருவிடம் நன்றி விஸ்வாசம் கொண்டவனாகவும் இருக்க வேண்டும்!” என்றார், திருமால்.
அதற்குத் திருமகள், “நல்ல குருகூட கிடைத்துவிடுவார். இத்தகைய குணங்கள் நிறைந்த சீடன் கிடைப்பது இன்னும் கடினம். உலக நன்மைக்காக நீங்கள் குருவாக அவதரிப்பதோடு நில்லாமல், சீடனாகவும் நீங்களே அவதாரம் செய்துவிடுங்கள்!” என்றாள். அதன்படி, பத்ரிநாத்தில் நாராயணன் என்னும் குருவாகவும், நரன் என்னும் சீடனாகவும் திருமாலே அவதாரம் செய்தார். நாராயண ரிஷி நரனுக்கு, எட்டெழுத்து மந்திரத்தை உபதேசம் செய்ய, அதன்பின் அம்மந்திரம் சிஷ்ய பரம்பரையில் பரவியது.
அந்த நர நாராயணர்களின் தவத்தைக் கலைக்க முற்பட்ட இந்திரன், தேவலோகத்தில் இருந்து பல தேவமாதுகளை அனுப்பி நடனம் ஆட வைத்தான். ஆனால் நாராயண ரிஷி அதற்கெல்லாம் கலங்காமல், தனது தொடையில் ஒரு பூவை வைத்தார். அந்தப் பூவில் இருந்து ஊர்வசி என்னும் பூவை வந்தாள். அவளது அழகைப் பார்த்து வெட்கப்பட்டு தேவமாதுகள் தேவலோகத்துக்கே ஓடி விட்டார்கள். அதன்பின் ஊர்வசி தேவலோகத்தில் நடனமாதாக ஆனாள் என்பதை நாம் அறிவோம்.
இப்படி உலகியல் ஆசைகளை வென்ற நாராயணன் என்னும் குருவாகவும், நரன் என்னும் சீடனாகவும் அவதாரம் செய்து, சரணாகதி செய்வோருக்கு அவசியம் அறியத் தக்கதான எட்டெழுத்து மந்திரத்தைப் பிரச்சாரம் செய்தார் திருமால். அந்த நர நாராயண அவதாரத்தில் தான், உலகியல் ஆசைகள் நீங்கிய மனம் படைத்தவர் என்பதைத் திருமால் உணர்த்தியதாலே, அவர் ‘நிவ்ருத்தாத்மா’ என்று அழைக்கப்படுகிறார். ஆத்மா என்பது இங்கே மனதைக் குறிக்கிறது. நிவ்ருத்த என்றால் நீங்கப்பெற்ற. ‘நிவ்ருத்தாத்மா’ என்றால் உலகியல் ஆசைகள் நீங்கப் பெற்ற மனதை உடையவர். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 453-வது திருநாமம்.“நிவ்ருத்தாத்மனே நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்கள் மனங்களில் தாழ்ந்த ஆசைகள் ஏற்படாதபடித் திருமால் காத்தருள்வார்.
—————–
———————–
457 (B) ஸுமுகாய நமஹ: (Sumukhaaya namaha)
(திருநாமங்கள் 457[ஸுமுக:] முதல் 470 [நைககர்மக்ருத்] வரை – தேவர்களுக்கு அமுதம் தந்த வரலாறு)[குறிப்பு: 456-வது திருநாமம் [ஸுவ்ரத:] முதல் 463-வது திருநாமம் [ஜிதக்ரோத:] வரை உள்ள 8 திருநாமங்கள் நர-நாராயண அவதாரங்களைக் குறிப்பதாக ஏற்கனவே ஸ்ரீபராசர பட்டர் விளக்கவுரை வழங்கினார். இனி, அவரே தமது விளக்கவுரையில், 457-வது திருநாமம் [ஸுமுக:] முதல் 463-வது திருநாமம் [ஜிதக்ரோத:] வரை உள்ள 7 திருநாமங்கள், தேவர்களுக்குத் திருமால் அமுதம் தந்த வரலாற்றையும் குறிப்பிடும் வகையிலும் அமைந்துள்ளன என்று காட்டி, அதைத் தொடர்ந்து 464-வது திருநாமம் [வீரபாஹு:] முதல் 470-வது திருநாமம் [நைககர்மக்ருத்] வரை உள்ள அடுத்த 7 திருநாமங்களும் கூட அதே அமுதம் கடைந்த வரலாற்றைச் சொல்வதாக விளக்கவுரை வழங்கியுள்ளார். ஆகவே, 457 முதல் 463 வரை உள்ள திருநாமங்கள் நர நாராயண அவதாரங்களையும் குறிக்கும், அமுதம் கடைந்த வரலாற்றையும் குறிக்கும்.]
துர்வாசரின் சாபத்தால் தேவர்கள் தங்கள் செல்வத்தையும், வலிமையையும் இழந்து நின்ற நிலையிலே, தேவர்கள் அனைவரும் திருமாலின் உதவியை நாடினார்கள். அசுரர்களோடு கூட்டணி சேர்ந்து திருப்பாற்கடலைக் கடையும் படி தேவர்களுக்கு அறிவுரை சொன்னார் திருமால். அதன்படி திருப்பாற்கடல் கடையப்பட்ட போது, முதலில் ஆலகால விஷம் வந்தது. அதன் வீரியத்தைக் கண்டு தேவர்கள் அஞ்சிய வேளையில், பரமசிவனின் உதவியை நாடும்படி அவர்களை அறிவுறுத்தினார் திருமால். தேவர்கள் பிரார்த்னைக்கு இணங்கி விஷத்தைக் குடித்துத் தேவர்களைக் காத்தார் சிவபெருமான்.
அதன்பின் பாற்கடல் மீண்டும் கடையப்பட்ட போது, காமதேனு வந்தது. தங்களது அக்னிஹோத்ரத்துக்காக ரிஷிகள் அந்தக் காமதேனுவைப் பெற்றுக் கொண்டார்கள். அதைத் தொடர்ந்து, `உச்சைசிரவஸ்’ என்ற குதிரை, ஐராவதம் என்ற யானை, கௌஸ்துப மணி பாரிஜாத மரம், அப்ஸரஸ் பெண்கள் போன்ற பலரும் திருப்பாற்கடலில் இருந்து தோன்றினார்கள். அமுதில் வரும் பெண்ணமுதாகத் தோன்றிய மகாலட்சுமி, திருமாலையே தனக்குக் கணவனாகத் தேர்ந்தெடுத்து மணம்புரிந்து, அவரது திருமார்பிலே ஏறி அமர்ந்து கொண்டாள். மேலும், தேவ – அசுரர்கள் பாற்கடலைக் கடைந்தவாறே, ஓர் அதிசய புருஷன் பாற்கடலில் இருந்து தோன்றினார். அவர்தான் திருமாலின் அவதாரமான தன்வந்தரி. ஸ்ரீமத் பாகவத புராணத்தில் தன்வந்தரியின் தோற்றத்தை சுக ப்ரம்மம் 8ஆம் ஸ்கந்தம் 8ஆம் அத்யாயத்தில் வர்ணிக்கிறார்.
*தீர்க்க பீவர தோர்தண்ட: – நீண்ட பருமனான திருத்தோள்கள்
*கம்புக்ரீவ:- சங்கு போன்ற கழுத்து
*அருணேக்ஷண:- தாமரை போல் சிவந்த திருக்கண்கள்
*ச்யாமள: – கருநீல வண்ணத் திருமேனி
*தருண: – இளைஞனின் தோற்றம்
*ஸ்ரக்வீ: – கழுத்திலே அழகிய மாலைகள்
*ஸர்வாபரணபூஷித: – திருமேனியில் அனைத்து வித ஆபரணங்கள்
*பீதவாஸா: – இடுப்பில் பீதாம்பரம் என்னும் மஞ்சள் பட்டாடை
*மஹோரஸ்க: – அகன்ற திருமார்பு
*ஸும்ருஷ்ட மணிகுண்டல: – காதுகளில் தூயரத்தினங்கள் பதித்த குண்டலங்கள்
*ஸ்நிக்த குஞ்சித கேசாந்த: – வழவழப்பான சுருட்டையான கேசம்
*ஸுபக:- பேரழகன்
*ஸிம்ஹவிக்ரம: – சிங்கம் போல் கம்பீரமான நடை
இத்தகைய தோற்றம் கொண்ட அந்தத் தன்வந்தரி பகவான் தனது திருக்கையில் அமுதக் கலசத்தை ஏந்திக் கொண்டு வந்தார். அந்த தேவாமுதத்தைத்தான், எடுத்து தேவர்களுக்குத் திருமால் வழங்கினார். கையில் கொண்டு வந்த அமுதம் எவ்வளவு இனிமையானதோ, அதை விட அந்த அமுதைக் கொண்டு வந்த தன்வந்தரியின் முகம் மிகவும் இனிமையாக இருந்ததாம்.
“ஆனந்தாம்ருத ஸம்பூர்ண வதனேன இந்துகாந்தினா கலசாக்ருதி ரூபேண கரஸ்தேன விராஜிதம்”
அமுதைப் பொழியும் நிலவை விட அழகிய, ஆனந்தம் தரவல்ல முகத்தோடு விளங்கிக் கையில் உள்ள அமுதைத் தன் முக அழகாகிய அமுதால் வென்றவராக தன்வந்தரி பகவான் விளங்கினார். அவர்தான், ஆயுர்வேத சாஸ்திரத்தை உலகுக்கு அளித்தவர். ‘வைத்யோ நாராயணோ ஹரி:’ என்றும் ‘மருத்துவனாய் நின்ற மாமணிவண்ணன்’ என்றும் போற்றப்படுபவர் அவரே. மருத்துவர்களால் வணங்கப்பட வேண்டிய திருமாலின் வடிவமாக தன்வந்தரி திகழ்கிறார். இப்படி அழகிய முகத்தோடு தன்வந்தரியாகத் தோன்றியதால், திருமால் ‘ஸுமுக:’ அழகிய முகம் படைத்தவர் என்று அழைக்கப்படுகிறார். அதுவே சஹஸ்ரநாமத்தின் 457வது திருநாமம்.
“ஸுமுகாய நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்கு வாழ்நாளில், எந்நாளும் இனியநாளாக அமையும்படி திருமால் அருள்புரிவார்.
—————–
458 (B) ஸூக்ஷ்மாய நமஹ: (Sookshmaaya namaha)
ஒருமுறை திருமாலைத் தரிசிப்பதற்காகக் காரிய வைகுண்ட லோகத்துக்கு நாரதர் சென்றார். நாரதரைப் பார்த்தவாறே, மகாலட்சுமி தனது அறைக்குள்ளே சென்று விட்டாள். இதைக் கண்ட நாரதர், திருமாலிடம், “இறைவா! அடியேன் புலன்களை எல்லாம் வென்றவன். எந்தவித தாழ்ந்த ஆசைகளும் இல்லாதவன்! அப்படியிருக்க என்னைக் கண்டு ஏன் அன்னை விலகி நிற்கவேண்டும்?” என்று கேட்டார்.
அதற்குத் திருமால், “நாரதா! உலகியல் ஆசைகளை வெல்வது மிகவும் உயர்ந்த விஷயமே. ஆனால், உலகியல் ஆசைகளை வென்றவன் என்று கர்வம் கொள்வது தவறாயிற்றே. ஆசையை வென்றவன் என்று கர்வத்தோடு சொல்லிக் கொள்ளும் உன்னை, எனது ஆச்சரிய சக்தியாகிய மாயையால் நான் எப்போது வேண்டுமானாலும் மயக்க முடியும்!” என்றார். “அதெல்லாம் நான் மயங்க மாட்டேன்!” என்று கர்வத்துடன் சொன்னார் நாரதர். “அப்படியா? என்னுடன் வா!” என்று சொன்ன திருமால், நாரதரைத் தன்னோடு கருட வாகனத்தில் அமர்த்தி நர்மதா நதிக்கரைக்கு அழைத்துச் சென்றார். “நாரதா! நீ போய் நர்மதையில் நீராடிவிட்டு வா!” என்றார் திருமால். நாரதரும் நீராடிவிட்டு வெளியே வந்தார்.
வந்து பார்த்தால், நதிக்கரையில் திருமாலையோ கருடனையோ காணவில்லை. நாரதர் தன் நினைவையே மறந்தவர் போல் தெரிந்தார். மேலும், தண்ணீரில் அவரது முகத்தின் பிரதிபலிப்பைப் பார்த்த போது, அது பெண் உருவமாகத் தெரிந்தது. நாராயணனின் மாயையால் இப்போது நாரதர் பெண்ணாக மாறிவிட்டார். தான் நாரதர் என்பதையும் மறந்து விட்டார்.ஏதும் செய்வதறியாமல் நதிக்கரையில் அவர் நின்றிருக்க, அப்பகுதியை ஆட்சி செய்த மன்னன் தற்செயலாக அங்கே வந்தான். பெண்நாரதரின் வடிவில் மயங்கிய அவன், அவளைத் திருமணம் செய்து கொண்டான். தான்யார் என்ற புரிதலே இல்லாமல் மகாராணியாக வாழ்ந்து வந்தாள் பெண்நாரதர். அவளுக்குப் பன்னிரண்டு மகன்கள் பிறந்தனர். மன்னனும் பெண்நாரதரும் அப்பன்னிரண்டு குழந்தைகளையும் வளர்த்து ஆளாக்கித் திருமணமும் செய்து வைத்தார்கள். இந்நிலையில், அடுத்த நாட்டு அரசன் இவர்களின் நாட்டை எதிர்த்துப் போர் புரிய வந்தான். இவர்களின் பன்னிரண்டு மகன்களும் போர் புரியச் சென்று போர்க்களத்தில் மாண்டு போனார்கள்.
புத்திர சோகத்தால் மன்னனும் பெண்நாரதரும் கதறி அழுது கொண்டிருந்த வேளையில், ஒரு முனிவர் அங்கே வந்தார். இருவரையும் நர்மதா நதிக்கரைக்கு அவர் அழைத்துச் சென்றார். பெண்நாரதரைப் பார்த்து, “நீ நதியில் இறங்கி நீராடு!” என்றார். நீராடி விட்டு மேலே எழுந்தவாறே, பழைய தோற்றமும் பழைய நினைவும் நாரதருக்குத் திரும்பியது. நாரதரை வியப்புடன் பார்த்த மன்னனிடம் முனிவர், “மன்னா! நீ உன் மனைவியை எந்த இடத்தில் பார்த்தாயோ அதே இடத்தில் இப்போது பிரிகிறாய். நீ பலப்பல பிறவிகள் எடுத்து விட்டாய். அதில், எத்தனையோ மனைவிகளும் மகன்-மகள்களும் உனக்கு இருந்திருக்கிறார்கள். அவர்கள் ஒவ்வொருவருக்காகவும் நீ வேதனைப் படப்போகிறாயா? நீ இறைவனைக் குறித்துத் தவம் புரிந்து நற்கதி அடைவாயாக!” என்று சொல்லி அவனை அனுப்பி வைத்தார் முனிவர்.
கரை சேர்ந்த நாரதருக்கு முனிவர் திருமாலாக காட்சி அளித்தார். “நாரதா! என் மாயை உன்னை எப்படி மயக்கும் என்பதை உணர்த்தவே உன்னைப் பெண்ணாக்கி இத்தகைய ஒரு லீலையைச் செய்தேன். புலன்களை வென்றால் மட்டும் போதாது. நான் வென்றேன் என்ற கர்வத்தை விடுத்து, இறைவன் அருளால் புலன்கள் வசப்பட்டன என்று சொல்லும் பணிவும் வர வேண்டும். இதை உனக்கு உணர்த்தவே நானும் திருமகளும் சேர்ந்த இந்த லீலையைச் செய்தோம். நீயும் மயங்கி விட்டாய்!” என்றார் திருமால்.
அப்போது நாரதர், “இறைவா நான் என்ற கர்வம் கொள்வதும் அசுரத் தன்மைகளுள் ஒன்று. அசுரத் தன்மை கொண்டவர்கள் உன் மாயையில் சிக்கிக் கொள்கிறார்கள். அவர்களால் உன்னை அறிய முடியாது. என் மனதில் அசுரத் தன்மை எழுந்ததால், அடியேனும் உன்னை மறந்தேன், என்னையும் மறந்தேன்! மன்னித்தருள்க!” என்று வேண்டினார்.திருமாலும் மன்னித்து அருள்புரிந்தார். பாற்கடல் கடைந்த போதும், அசுரர்களுக்குத் தன் திட்டம் தெரியாதபடி, அவர்களை மயக்கி நல்லவர்களான தேவர்களுக்கு அமுதம் கிட்டும்படிச் செய்தார் அல்லவா திருமால்? அதனால்தான் அவர் ‘ஸூக்ஷ்ம:’ என்று அழைக்கப் படுகிறார். ‘ஸூக்ஷ்ம:’ என்றால் இவ்விடத்தில் அறிய முடியாதவர் என்று பொருள். அசுரர்களால் அறிய முடியாத சிந்தனை கொண்டதால் அமுதம் தந்த திருமால் ‘ஸூக்ஷ்ம:’ எனப்படுகிறார். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 458வது திருநாமம்.
“ஸூக்ஷ்மாய நமஹ:” என்று தினமும் சொல்லி வந்தால், கர்வம் போன்ற தீய குணங்களுக்கு நாம் வசப்படாமல் இருக்க திருமால் அருள்புரிவார்.
————–
459 ஸுகோஷாய நமஹ: (Sughoshaaya namaha)
வைகுண்டத்தில் திருமாலுக்கு அணுக்கத் தொண்டர்களாக இருந்து கைங்கரியம் செய்யும் அடியார்கள் நித்திய சூரிகள் என்று அழைக்கப் படுகிறார்கள். ஒருநாள் அவர்களைத் தன் அருகில் அழைத்த திருமால், “பூமியில் துவாபரயுகம் முடிந்து கலியுகம் வரப்போகிறது. இதுவரையிலான யுகங்களில் நான் பூமியில் அவதாரம் செய்து மக்களைத் திருத்த முயன்றேன். கலியுகத்தில் உள்ளவர்கள் நானே இறங்கிப் போனாலும் திருந்துவார்களா என்று தெரியவில்லை. யானையைக் கொண்டே யானையைப் பிடிப்பது போல், ஜீவாத்மாக்களான உங்களை என் பிரதி நிதிகளாகப் பூமிக்கு அனுப்பி வைத்து உங்களைக் கொண்டு மக்களைத் திருத்தலாம் என்று நானும், திருமகளும் திட்டமிட்டுள்ளோம்!” என்று கூறினார்.
“எம்பெருமானே! நாங்கள் என்ன செய்ய வேண்டும்? கட்டளை இடுங்கள்!” என்று நித்தியசூரிகள் கேட்டார்கள். அதற்குத் திருமால், “நீங்கள் பூமியில் போய் எனது பக்தர்களாக அவதாரம் செய்து பக்தியில் ஆழ்ந்திருந்து என்னைப் பற்றிப் பாடல்கள் பாட வேண்டும். அரிய கடினமான வேதங்களை அறிய முடியாதவர்கள், உங்களது இனிய எளிய தமிழ்ப் பாடல்களால் என்னை எளிதில் உணர்ந்து கொள்வார்கள்! எனவே பூமியில் போய் என்னைப் பற்றி அமுதத் தமிழில் பாடுங்கள்!” என்றார். “அப்படியே செய்கிறோம்!” என்றார்கள் நித்தியசூரிகள்.
முதலில் தன் கையில் உள்ள பாஞ்சஜன்னிய சங்குக்கு அதிபதியான நித்தியசூரியை அழைத்த திருமால், “நீ பூமியில் பொய்கை ஆழ்வாராகப் பிறக்க வேண்டும். சங்கின் நிறம் போல் வெண்மையான தத்துவ குணத்தை உனது பாடல்களால் மக்களுக்கு ஊட்ட வேண்டும்!” என்றார். அடுத்தபடியாகத் தனது கௌமோதகி என்னும் கதாயுதத்திடம், “நீ பூதத்தாழ்வாராகத் தோன்றி, எப்போதும் என் கைப்பாவையாக இருப்பது போல், உயிர்கள் எல்லோரும் என்னையே தஞ்சம் புகுந்து என் கைப்பாவைகளாக இருந்தால், நான் அவர்களைக் காப்பேன் என்பதை உன் பாடல்களால் மக்களுக்கு நீ உணர்த்த வேண்டும்!” என்றார்.
நந்தகம் என்னும் தன் வாளிடம், “நீ பேயாழ்வாராகத் தோன்றி, அறியாமை என்ற இருளை வெட்டி ஞான ஒளியை உன் பாடல்கள் மூலம் மக்களுக்கு வழங்க வேண்டும்!” என்றார். சுதர்சனச் சக்கரத்திடம், “தீய சக்திகளை அழிக்கும் நீ, பூமியில் திருமழிசைப் பிரானாகத் தோன்றித் தவறான கொள்கைகளைக் களைந்து வேத நெறியை நிலைநாட்ட வேண்டும்!” என்றார். தம் படைத்தளபதியான விஷ்வக்சேனரிடம், “நித்தியசூரிகளின் தலைவரான நீங்கள், ஆழ்வார்களின் தலைவரான நம்மாழ்வாராக அவதாரம் செய்து சரணாகதி நெறியை உலகுக்கு உணர்த்த வேண்டும்!” என்றார். விஷ்வக்சேனரின் தொண்டரான குமுதனிடம், “நீ நம்மாழ்வாரின் சீடர் மதுரகவிகளாக அவதரித்து, குருபக்தியின் பெருமையை உலகுக்கு உணர்த்த வேண்டும்!” என்றார்.
தமது கௌஸ்துப மணிக்கு அதிபதியான நித்திய சூரியிடம், “நீ குலசேகரப் பெருமாளாகத் தோன்றி, என் நெஞ்சுக்கினிய பாடல்களைப் பாடவேண்டும்!” என்றார். கருடனைப் பார்த்து, “வேத சொரூபியான நீ, வேதம் வல்ல பெரியாழ்வாராகத் தோன்றி வேத சாரத்தை விவரிக்க வேண்டும்!” என்றார். பூமி தேவியிடம், “நீ கோதைப் பிராட்டியாக அவதரித்து, எனக்குப் பூமாலை மற்றும் பாமாலை சமர்ப்பிப்பதன் மேன்மையைப் பாடவேண்டும்!” என்றார். தனது வைஜயந்தி மாலையிடம், “நீ தொண்டரடிப் பொடி ஆழ்வாராகப் பூமியில் தோன்றி, எனக்கு மாலைகள் சமர்ப்பித்துத் தொண்டு செய்து, பாசுரங்கள் பாட வேண்டும்!” என்றார்.
தன் மார்பில் உள்ள ஸ்ரீவத்சம் என்னும் மறுவுக்கு அதிபதியான நித்திய சூரியிடம், “நீ திருப்பாணாழ்வாராகத் தோன்றி என் இதயத்தில் எப்போதும் குடியிருக்கும் இனிய பாடல்களைப் பாடவேண்டும்!” என்றார். தமது சார்ங்க வில்லிடம், “நீ திருமங்கை ஆழ்வாராகத் தோன்றி வில்லில் இருந்து புறப்பட்ட அம்பு போல் என் திருக்கோயில்களுக்கெல்லாம் சென்று என்னைப் பாட வேண்டும்!” என்றார். “நித்தியசூரிகளே! பக்தியில் ஆழ்ந்திருக்கும் நீங்கள் ஆழ்வார்கள் என்று அழைக்கப்படுவீர்கள். நீங்கள் பாடும் தமிழ்ப் பாடல்கள் வடமொழி வேதங்களை விட ஏற்றம் பெற்று விளங்கும். பூமியிலும் சரி, வைகுண்டத்திலும் சரி, வேத கோஷம் என்னைச் சூழ்ந்திருப்பது போல், உங்கள் பாடல்களின் ஒலியும் என்னைச் சூழ்ந்திருக்கும்!” என்று அருள்புரிந்து அவர்களைப் பூமிக்கு அனுப்பி வைத்தார் திருமால்.
இப்படி வடமொழி மற்றும் தமிழ் வேத கோஷங்கள் எப்போதும் திருமாலைச் சூழ்ந்திருப்பதால், அவர் ‘ஸுகோஷ:’ என்று அழைக்கப்படுகிறார். நர நாராயண அவதாரத்திலும் எப்போதும் வேத மந்திரங்கள் அவரைச் சூழ்ந்திருந்து துதித்தன. ‘ஸுகோஷ:’ என்றால் மங்கல வேத ஒலிகளை உடையவர் என்று பொருள். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 459வது திருநாமம்.
“ஸுகோஷாய நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்கு நல்ல இனிய குரல்வளம் ஏற்படும்படி திருமால் அருள்புரிவார்.
————
460 ஸுகதாய நமஹ: (Sukhadhaaya namaha)
கண்ணன் தனது அவதாரத்தை நிறைவு செய்து கொண்டு, வைகுண்டம் செல்லத் தயாரானான். அப்போது கண்ணனின் நெருங்கிய நண்பரும் பக்தருமான உத்தவர் கண்ணனை அடிபணிந்து, “கண்ணா! உன் திருவடித் தாமரைகளைப் பிரிந்து ஒரு நொடியும் என்னால் வாழ இயலாது. என்னையும் உன்னோடு அழைத்துச் செல்ல வேண்டும்!” என்று பிரார்த்தித்தார். அப்போது கண்ணன், “உத்தவா! எனது இருப்பிடமான வைகுண்டத்தை நீ எப்படியும் வந்து அடையத்தான் போகிறாய். ஆனால், அந்த வைகுண்டத்தை அடைவதற்கு பக்தி யோகம், சரணாகதி என்று இரண்டு வித வழிகள் உள்ளன. அவற்றுள் பக்தியோக தியான முறையை உனக்கு விளக்குகிறேன். அதைப் பின்பற்றி நீ என்னை வந்து சேர்வாயாக!” என்றார்.
“கண்ணா! உலகியல் விஷயங்களையே பார்த்து வந்த மனிதர்களான நாங்கள் பக்தியோக தியானத்தில் ஈடுபடுவது சாத்தியமா?” என்று வினயத்துடன் கண்ணனிடம் கேட்டார் உத்தவர். அதற்குக் கண்ணன், “பாஞ்சராத்ர ஆகமம், கீதை போன்ற நூல்களில் நான் விதித்தபடி எனக்குப் பூஜை செய்தல், அர்ச்சனை செய்தல், கோயில் களிலே தொண்டு செய்தல், என் நாமங்களைப் பாடுதல், என் கதைகளைக் கேட்டல், எனது வடிவைத் தியானித்தல் போன்ற செயல்களில் ஈடுபட வேண்டும். அவரவருக்கென்று விதிக்கப்பட்ட கடமையைப் பலனில் ஆசையின்றிச் சரியாகச் செய்ய வேண்டும். இதைச் செய்யச் செய்ய மனம் பண்பட்டு பக்தியோக தியானத்தில் ஈடுபடும் ஆற்றல் ஏற்படும்!” என்றார்.
மேலும் கண்ணன், “உத்தவா! கபடமும் கர்வமும் இல்லாமல், வெறுப்பு இல்லாமல், குருவிடம் பக்தி நிறைந்தவனாக, ஜீவாத்ம – பரமாத்மாக்களை அறிவதில் ஆர்வம் கொண்டவனாக, வீண்பேச்சு பேசாதவனாக இருப்பவனுக்கு பக்தியோகம் நன்றாகக் கைகூடும். சூரிய மண்டலத்துக்குள் இருக்கும் என்னை வேத மந்திரங்களாலும், அக்னியில் இருக்கும் என்னை அவிஸ் அர்ப்பணிப்பதாலும், வேதியர்களுக்குள் இருக்கும் என்னை அதிதி பூஜையாலும், பசுவுக்குள் இருக்கும் என்னைப் புல் அளிப்பதன் மூலமாகவும், பக்தனுக்குள் இருக்கும் என்னை உபசாரத்தின் வாயிலாகவும், இதயத்தில் இருக்கும் என்னைத் தியானத்தாலும், வாயுவுக்குள் இருக்கும் என்னை முக்கியப் பிராணனாக எண்ணியும், எல்லா உயிர்களுக்குள்ளும் இருக்கும் என்னைச் சம புத்தியாலும் ஆராதிக்க வேண்டும்.
பக்தியோகத்தில் ஈடுபடுபவன் உலகியல் இன்பங்களையோ, இந்திர லோகத்தையோ, ஆத்ம அனுபவத்தையோ விரும்ப மாட்டான். என்னை அடைவதை மட்டுமே தனது உயரிய குறிக்கோளாகக் கொள்வான். அழகிய முகத்தோடும், நீண்ட அழகிய நான்கு தோள்களோடும், அழகிய கழுத்தோடும், அழகிய கன்னங்களோடும், அழகிய புன்னகையோடும், மகரக் குண்டலங்கள் ஒளிவீசும் காதுகளோடும், பட்டுப் பீதாம்பரத்தோடும், கார்முகில் போன்ற வண்ணத்தோடும், திருமார்பில் ஸ்ரீவத்சம் என்ற மறுவோடும், சங்கு சக்கரம் கதை தாமரை வனமாலை சிலம்பு கௌஸ்துபம் உள்ளிட்ட ஆபரணங்களோடும் திகழும் எனது வடிவத்தை இடைவிடாது தியானித்துக் கொண்டே இருந்தால் அது பக்தியோகம் ஆகும்.
உத்தவா! என்னை அடைய விரும்புகிறாய் அல்லவா? என் ஆணைப்படி நீ பத்ரிநாத்துக்குச் செல். எனது பாத நீரான கங்கா நதியில் நீ நீராடுவாயாக. கங்கையில் நீராடித் தூய்மை அடைந்து, அதன்பின் உலகியல் இரட்டைகளைப் பொருட்படுத்தாமல், மனதையும் புலன்களையும் அடக்கி, நான் சொன்ன முறையில் என்னைத் தியானித்து பக்தியோகத்தில் ஈடுபடுவாயாக. என் ஆணைப்படி பக்தியோகத்தில் ஈடுபடும் நீ, விரைவில் பேரானந்தத்தை அடைவாய்.
உன்னைப் போல் பக்தியோக தியானம் பயில்வோர்க்கு ஆனந்தம் வழங்கவே பத்ரிநாத்தில் நர நாராயணர்களாக நான் அவதாரம் செய்திருக்கிறேன். எனவே என்னைத் தியானித்து பத்ரிநாத்தில் பக்தியோகம் புரியும் நீ விரைவாகப் பேரானந்தமாகிய முக்தியை அடைந்து விடுவாய்!” என்று அருள்புரிந்தான். கண்ணனின் ஆணைப்படி பத்ரிநாத்தை அடைந்த உத்தவரும் அவ்வாறே பக்தி யோகத்தில் ஈடுபட்டுப் பேரானந்தமாகிய வைகுண்டத்தைப் பெற்றார்.
இப்படி பக்தியோக தியானத்தில் ஈடுபடுவோர்க்குப் பேரானந்தம் தருவதால் ‘ஸுகத:’ என்று நர-நாராயண வடிவிலான திருமால் அழைக்கப்படுகிறார். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 460வது திருநாமம். ஸுகத என்றால் பேரானந்தத்தை வழங்குபவர் என்று பொருள்.
“ஸுகதாய நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்கு வாழ்வில் பேரானந்தத்தைத் திருமால் அருள்வார்.
—————
461. ஸுஹ்ருதே நமஹ (Suhrudhey namaha)
(திருநாமங்கள் 456 [ஸுவ்ரத:] முதல் 463 [ஜிதக்ரோத:] வரை – நர நாராயண அவதாரம்)
ஒரு மனிதனுக்கு நான்கு நண்பர்கள் இருந்தார்களாம். அவர்களுள் முதல் நண்பன், இந்த மனிதன் மீது மிகவும் அன்பு காட்டி அவனுக்கு அனைத்து வித நன்மைகளையும் செய்துவந்தான். ஆனால் அதை உணர்ந்து கொள்ளாத அந்த மனிதன், முதல் நண்பனைக் கண்டுகொள்ளாமலேயே தனது வாழ்வை நடத்தி வந்தான்.
இரண்டாவது நண்பன் இந்த மனிதனுக்கு ஆபத்து வரும் போதெல்லாம் உதவி செய்து கொண்டும், ஆலோசனைகள் வழங்கிக் கொண்டும் இருந்தான். அந்த ஆலோசனைக்காகவும் உதவிகளுக்காகவும் அந்த நண்பனிடம் நட்பு பேணி வந்தானே ஒழிய, அவன் மீது இந்த மனிதனுக்கு முழுமையான அன்பு இருப்பதாகத் தெரியவில்லை.
மூன்றாவது நண்பன் மிகப்பெரிய செல்வந்தன். அந்தப் பணத்தின் மீதுள்ள ஆசையாலே அந்த நண்பனிடம் இந்த மனிதன் நட்பு பாராட்டினான். அந்த நண்பனிடம் வேறு யாராவது நட்பு கொண்டால் கூட அவர்களும் அவனது செல்வத்தைப் பெற்று விடுவார்களோ என்று அஞ்சி அஞ்சி அந்த நண்பனோடு இவன் பழகிவந்தான்.
நான்காவது நண்பன், இவனுக்குப் பெரிதாக எந்த உதவியும் செய்யவில்லை. ஆனாலும், இந்த மனிதனோடு கூடவே இருந்து முகத்துதி பாடிக் கொண்டிருந்தான். உண்மையில் இந்த நான்காவது மனிதன்தான் தனக்கு அனைத்து வித நன்மைகளும் செய்யக்கூடியவன் என்று கருதிக் கொண்டு, ஆத்மார்த்தமாக அந்த நான்காவது நண்பனை நேசித்தான் இந்த மனிதன்.
இந்நிலையில், இந்த மனிதனின் மரணக் காலம் வந்தது. யம தூதர்கள் வந்து அவன் மீது பாசக் கயிற்றை வீசினார்கள். தான் மிகவும் நேசித்த நான்காவது நண்பன் தான் தன்னோடு வருவான் எனக்கருதி அவனை அழைத்தான் மனிதன். வர மறுத்தான் நான்காவது மனிதன். மூன்றாவது நண்பனை அழைத்தான். அவனும் வரவில்லை. இரண்டாவது நண்பனை அழைத்த போது, அவனும் மறுத்தான். ஆனால், இவன் அழைக்காமலேயே முதல் நண்பன் மட்டும் அவனுக்கு உதவியாக உடன் வந்தான். “நீ எங்கே சென்றாலும் நான் உன்னோடு வருவேன்! உன்னை விடமாட்டேன்! நான் உனக்குச் செய்த நன்மைகளை நீ உணராவிட்டாலும் நான் நன்மை செய்வேன்!” என்றான் முதல் நண்பன்.
யார் அந்த மனிதன்? யார் அந்த நண்பர்கள்? அந்த மனிதன்தான் ஜீவாத்மா (நாம் அனைவரும்). நான்காவது நண்பன் நமது உடல். நாம் வாழும்போது, இந்த உடல்தான் நமக்கு எல்லாம் என்று கருதிப் புறஉடலில் கவனம் செலுத்தி வாழ்கிறோம். ஆனால், இறுதிக் காலத்தில் யமன் நம்மைக் கொண்டு செல்லும் போது இந்த உடல் நம்மோடு வருவதில்லை.
மூன்றாவது நண்பன்தான் நமது செல்வம். வாழ்நாள் முழுவதும் பணத்தின் உதவி நமக்குத் தேவை என்று கருதிப் பணத்தைச் சேர்த்து வைக்கிறோம். பிறர் அதைக் கொண்டு செல்லாமல் பாதுகாக்க முயல்கிறோம். ஆனால், மரணித்தபின் அந்தப் பணம் நம்மோடு வருவதில்லை. இரண்டாவது நண்பன், நமது சொந்தங்களும் நண்பர்களும். உதவியும் ஆலோசனையும் வழங்கி சுற்றமும் நட்பும் உயிர் பிரியும் தறுவாயில் வருந்துவார்களே ஒழிய, உடன் வர மாட்டார்கள். ஆனால், நாம் கண்டுகொள்ளாத அந்த முதல் நண்பன்தான் இறைவன். நாம் அவனை மறந்தாலும், அவன் நம்மை மறவாது நமக்குள் நம்மோடு நமது நண்பனாக உடன் இருக்கிறான். எல்லா நேரங்களிலும் எல்லாவித நன்மைகளையும் தன்னை வெளிக்காட்டிக் கொள்ளாமல், நமக்கு நன்மைகளை செய்து கொண்டேயிருக்கிறான். என்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் துணைநிற்கும் ஒரே நண்பன் அவன்தான் என்பதை நாம் உணர்வதில்லை.
எல்லா உயிர்களுக்கும் நன்மை செய்பவனாக, உற்ற நண்பனாக இருக்கும் அந்த இறைவன், உலக நன்மைக்காக நர நாராயணர்களாக அவதாரம் செய்து உலக நன்மைக்காகத் தவம் புரிந்தான். அதனால் நர நாராயண அவதாரம் செய்த திருமால் ‘ஸுஹ்ருத்’ என்று அழைக்கப்படுகிறார். ‘ஸுஹ்ருத்’ என்றால் நல்ல மனம் படைத்த நண்பர் என்று பொருள். அனைத்து உயிர்களுக்கும் நன்மை செய்யும் நல்ல மனம் கொண்ட நண்பனாகிய திருமால் ‘ஸுஹ்ருத்’ எனப்படுகிறார்.
அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 461வது திருநாமம்.
“ஸுஹ்ருதே நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்குத் திருமால் சிறந்த நண்பனாக இருந்து அனைத்து நன்மைகளையும் செய்தருள்வார்.
————–
462. மனோஹராய நமஹ (Manoharaaya namaha)
ஒரு ஊரில் ஒரு பெரிய கலவரம் நடந்தது. அச்சமயம் அந்த ஊரில் இருந்த கலவரக்காரர்கள் அவ்வூர் கோயிலுக்குள் சென்று, அங்குள்ள விக்கிரகத்தை வெளியே கொண்டு வந்துதரையில் போட்டு உடைத்தார்கள். இக்காட்சியை அந்த ஊரைச் சேர்ந்த ஒரு இளைஞன் பார்த்தான், சிந்திக்கத் தொடங்கினான். “தங்களது பிரார்த்தனை எல்லாம் நிறைவேற வேண்டும் என்பதற்காக இந்தத் தெய்வத்திடம் எல்லோரும் வந்து வேண்டுகிறார்கள்.
தங்களைக் காக்க வேண்டும் என்று மக்களால் வேண்டப்படும் தெய்வத்துக்குத் தன்னைக் காத்துக் கொள்ளக் கூட சக்தியில்லையே! அதனால் தானே கலகக்காரர்கள் இந்தச் சிலையை உடைத்து விட்டார்கள்! அப்படியானால் கோயிலில் உள்ள சிலைகளில் இறைவன் உள்ளானா? இல்லையா? நாம் செய்யும் வழிபாடுகள் உண்மையில் இறைவனைச் சென்று சேர்கின்றனவா? இல்லையா? பல கோயில்கள் பல ஊர்களில் இருக்கும்போது, எந்த ஊரில் எந்தக் கோயிலில் உண்மையில் இறைவன் இருக்கிறான்?” என்று பலவாறு சிந்திக்கத் தொடங்கினான் அந்த இளைஞன்.
அவ்வூரில் வாழ்ந்த ஒரு பெரியவரை அண்டித் தனது சந்தேகங்களை விண்ணப்பித்தான் அந்த இளைஞன். அவர் இளைஞனிடம், “கோயிலில் உள்ள சிலைகளில் இறைவன் இல்லை. அவை இறைவனை நினைவூட்டும் சின்னங்களே!” என்றார். “அப்படியானால் நாம் சமர்ப்பிக்கும் பொருள்களை இறைவன் ஏற்பானா? மாட்டானா?” என்று கேட்டான் இளைஞன். “அதெல்லாம் இறைவன் ஏற்கமாட்டான். ஒரே நேரத்தில் பொள்ளாச்சியில் ஒருவரும் செங்கல்பட்டில் ஒருவரும் அர்ப்பணிக்கும் பொருள்களை எப்படி இறைவனால் ஏற்க முடியும்?” என்றார் பெரியவர்.
“அப்படியானால் இறை வழிபாட்டுக்கு என்ன தான் பலன்?” என்று கேட்டான் இளைஞன். “நீ சுவர்க்கம் போவதற்காக ஒரு வேள்வி செய்கிறாய் என்று வைத்துக்கொள்! உடனே சுவர்க்கம் போய் விடுவாயா? இல்லை. நீ செய்யும் வேள்வி அபூர்வம் என்பதை உருவாக்கும். அந்த அபூர்வம் மற்றொரு அபூர்வத்தை உருவாக்கும். இது சங்கிலித் தொடராகத் தொடர்ந்து, பரம அபூர்வம் என்பதை உருவாக்கி, பின்னாளில் அது வேண்டிய பலனாகிய சுவர்க்கத்தைத் தரும்.
அதுபோலத்தான் இறைவழிபாடு செய்யும்போது, அபூர்வம் ஒன்று உருவாகும். அது சங்கிலித் தொடராகப் பெருகி அதுவே பலன் தந்துவிடும். அதனால், இறைவழிபாடு வீண்போவதில்லை!” என்றார். இதைக் கேட்ட இளைஞன், தனக்கு ஏதோ நன்மை கிடைக்க வாய்ப்புள்ளது என எண்ணி இறைவழிபாட்டில் ஈடுபடத் தொடங்கினான். ஆனால், அவன் மனதில் பக்தியோ பெரிய நம்பிக்கையோ இல்லை.
ஆனால் அடிக்கடி கோயிலுக்குச் செல்வதால், நாளடைவில் கோயிலில் உள்ள இறை வடிவத்தை வெறும் குறியீடு என்று ஏற்க அவன் மனம் மறுத்தது. மேலும், நாம் சமர்ப்பிக்கும் பொருள்கள் இறைவனைச் சென்று அடையாது என்றும், அவை ஏதோ அபூர்வத்தை உருவாக்கும் என்றும் பெரியவர் சொன்ன கொள்கைகளிலும் ஏதோ பிழை இருப்பதாக உணர்ந்தான் இளைஞன். அதனால், அதே ஊரில் வடமொழி வேதம், தமிழ்மறை அனைத்தும் கற்ற ஒரு பெரியவரை அணுகி விளக்கம் கேட்டான்இளைஞன். அவர், “கோயிலில் இருப்பவன் சாட்சாத் இறைவனே. நம்மைக் காக்க ராமனாகவும், கண்ணனாகவும் அவதரித்த அதே பகவான்தான், நம்மைக் காக்கத் திருக்கோயில்களில் அர்ச்சாவதாரமாகத் தோன்றியுள்ளான்.
இறைவன் பல வடிவங்களை எடுக்கவல்லவன். ஒரே நேரத்தில் பத்ரிநாத்தில் ஒருவரும், மதுரையில் மற்றொருவரும் வழிபாடுசெய்தாலும், அந்தந்த இடங்களுக்கு நேரடியாகச் சென்று அவ்வழிபாட்டை ஏற்பான். கோயிலில் எழுந்தருளும் போது, அவனுக்குத் தொண்டு செய்யும் பாக்கியத்தை நமக்குத் தருவதற்காகவே தன்னைக் குறைத்துக் கொண்டு நம் கைப்பாவையாக, நம் கையை எதிர்பார்த்து இருக்கிறான். அவன்மீது ஊர்கின்ற புழுபூச்சிகளைக் கூட அகற்ற முடியாதவன் போல், நாம் அகற்ற வேண்டும் என எதிர்நோக்கி இருப்பது அவன் எளிமையால் மகிழ்ந்து ஏற்றுக் கொள்வதே.
கோயிலில் உள்ள விக்கிரத்தை யாரோ நாத்திகர் உடைத்ததால், இறைவனுக்கு எந்த நஷ்டமும் இல்லை. அதனால் அதைப் பொருட் படுத்தாமல் உதாசீனனாக அவன் இருந்து விடுகிறான். அதே சமயம் உள்ளார்ந்த பக்தியுடன் வரும் அடியார்களிடம் வாய் திறந்து பேசவும், உறவாடவும் செய்வான்!” என்று விளக்கினார். “ஆஹா சுவாமி! இந்த விளக்கத்தை அடியேனுக்கு முன்னமே இறைவன் காட்டி இருக்கலாமே! நான் வேறொருவரிடம் சென்று வேறு விதமான விளக்கத்தைப் பெற்றுக் குழம்பிப் போனேன்! உங்களால்தான் தெளிவுபெற்றேன்!” என்றான் இளைஞன்.
அப்போது அந்தப் பெரியவர், “இல்லை குழந்தாய்! இளமைத் துடிப்புடன் கேள்வி கேட்டுக் கொண்டிருக்கும் உனக்கு எடுத்த எடுப்பிலேயே இந்த ஆழ்ந்த வேதக் கருத்தைச் சொன்னால் புரியாது. அதனால், உன்னைப் பக்குவப் படுத்தவே அந்தப் பெரியவரிடம் இறைவன் உன்னை அனுப்பி வைத்தான். அவரது விளக்கங்களால், அதுவரை கோயிலுக்கே செல்லத் தயங்கிய நீ, முதல்முறையாக ஏதோ ஒருவித எண்ணத்துடன் கோயிலுக்கு வந்துவிட்டாய். நீ கோயிலுக்கு வந்தபின், உன் மனதில் மேலும் சில கேள்விகளை எழவைத்து என்னிடம் அனுப்பி வேதாந்தக் கொள்கையை உணர்த்தி, உன்னை முழு பக்தனாக ஆக்கிவிட்டான் பகவான்.
இது அத்தனையுமே அவன் உனக்குச் செய்த நன்மைகள். இவை மட்டுமன்றுஎத்தனையோ பிறவிகளுக்கு முன்பு, நீ ஒரு புல்லாகவோ, பூண்டாகவோ, ஈயாகவோ, எறும்பாகவோ இருந்திருப்பாய். அப்போது முதல் இறைவன் உனக்குப் படிப்படியாகப் பல நன்மைகள் செய்து செய்து உன்னைப் பகுத்தறிவு உள்ள மனிதனாக ஆக்கியுள்ளான். நீ கேட்காமலேயே உனக்கு இவ்வளவு நன்மைகள் செய்தவன் இறைவன்!” என்றார்.
இதைக் கேட்டவாறே இறைவன் மீது அந்த இளைஞனுக்குப் பேரன்பு ஏற்பட்டது. திருக்கோயிலுக்குள் ஓடிச்சென்று இறைவன் முன்னே நின்று அழத் தொடங்கினான். “அறியாக் காலம் தொட்டு அடியேன் மீது அன்பு வைத்து இத்தனை நன்மைகள் புரிந்திருக்கிறாயா நீ?” என்று கதறி அழுதான். அவன் மனம் மொத்தமாக இறைவன்பால் ஈடுபடத் தொடங்கியது. இப்படி அடியார்களுக்கு நன்மைகள் பல செய்து, அதன்மூலம் அவர்கள் மனங்களைத் தன்பால் ஈர்ப்பதால், ‘மனோஹர:’ என்றுதிருமால் அழைக்கப்படுகிறார்.
நர நாராயண அவதாரத்திலும், நமக்காகத் தவம்புரிந்து அதன் மூலம் நம் மனங்களை ஈர்த்ததால் ‘மனோஹர:’ என்று பகவானுக்குத் திருநாமம்.
‘மனோஹர:’ என்றால் மனங்களைக் கவர்பவர் என்று பொருள். அதுவே சஹஸ்ரநாமத்தின் 462வது திருநாமம்.
“மனோஹராய நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களின் மனங்களையும் திருமால் கவர்ந்தருள்வார்.
————————
463. ஜிதக்ரோதாய நமஹ (Jithakrodhaaya namaha)
சாட்சாத் சுவாமி என்ற பெரியவர் திருவரங்கத்தில் வாழ்ந்து வந்தார். அவர் தினந்தோறும் விடியற்காலையில் காவிரியிலே நீராடுவதுவழக்கம். நீராடிவிட்டுச் சுத்தமான ஆடைகளை உடுத்திக்கொண்டு, காவிரிக் கரையில் தமது அனுஷ்டானங்களைச் செய்துவிட்டு, அரங்கனை வழிபடுவதற்காகச் செல்வார். அவரது நடவடிக்கைகளை அப்பகுதியில் வாழ்ந்த சில இளைஞர்கள் கவனித்து வந்தார்கள். அவருக்கு எப்படியாவது கோபத்தை உண்டாக்கி அதன்மூலம் தாங்கள் மகிழ வேண்டும் என்று அந்த இளைஞர்கள் கருதினார்கள். அதனால் தங்கள் குழுவில் உள்ள ஒரு இளைஞனைத் தேர்ந்தெடுத்து, “நாளை அவர் நீராடிவிட்டு வரும் போது நீ அவர் மீது எச்சில் துப்ப வேண்டும்!” என்று சொன்னார்கள். அவனும் சரி என்று ஏற்றுக் கொண்டான்.
மறுநாள் விடியற்காலை சாட்சாத் சுவாமி காவிரியில் நீராடி விட்டுக் கரைக்கு ஏறினார். இந்த இளைஞன் திட்டமிட்டபடி அவர் மீது எச்சில் துப்பினான். மற்ற இளைஞர்கள் அங்கே ஒளிந்திருந்து, சாட்சாத் சுவாமி கோபப்படுவதைப் பார்த்து ரசிக்க வேண்டும் என்று ஆவலோடு காத்திருந்தார்கள். ஆனால், சாட்சாத் சுவாமியின் முகத்தில் எந்தவித மாறுபாடும் இல்லை. துளி கூட கோபம் இல்லாமல், அமைதியாக மீண்டும் காவிரிக்குச் சென்று நீராடினார்.
நீராடிவிட்டுக் கரைக்குத் திரும்பிய சாட்சாத் சுவாமியின் மீது மீண்டும் எச்சில் துப்பினான் இளைஞன். மீண்டும் அவர் காவிரிக்குப் போய் நீராடினார். மீண்டும் எச்சில் துப்பினான். மீண்டும் நீராடி விட்டு வந்தார்.அவரது பொறுமையைக் கண்டு வியந்த இளைஞன், அடுத்த முறை அவர் கரைக்கு வந்த போது அவரது பாதங்களில் விழுந்து, “சுவாமி! அடியேனை மன்னிக்க வேண்டும்! உங்களிடம் இவ்வளவு அபச்சாரப்பட்டேனே! அடியேன் மீது உங்களுக்குக் கோபமே வரவில்லையா?” என்று கேட்டான்.
சாட்சாத் சுவாமி, “உன் மீது ஏனடா நான் கோபப்படவேண்டும்? உனக்கு நான் நன்றி தானே சொல்ல வேண்டும்! உன்னால்தான் காவிரியில் பிரம்ம முகூர்த்தத்தில் ஐந்து முறை நீராடும் பாக்கியம் அடியேனுக்குக் கிடைத்தது? இப்போது ஐப்பசி மாதம் வேறு! துலா காவிரி ஸ்நானம் அவ்வளவு விசேஷம் தெரியுமா?நன்றிகள் பல!” என்றார்.“சுவாமி! சிலரின் தவறான வழிகாட்டுதலாலே தவறு செய்து விட்டேன்! என்னை மன்னித்து விடுங்கள்! உங்களுக்குக் கோபமே வராதா?” என்று கேட்டான் இளைஞன்.
அதற்கு சாட்சாத் சுவாமி, “நமக்கு ஒருவர் தீங்கு இழைத்தால், நாம் உடனே யோசிக்காமல் அவர்மீது நமது எதிர்வினையைச் செலுத்துகிறோம். அதுதான் தவறு. ஒருவர் தீங்கு செய்தாலும், சற்றே நிதானித்துக்கொண்டு அதனால் நமக்கு என்ன நன்மை கிடைக்கிறது என்று பார்க்க வேண்டும்.
அவ்வாறு நிதானித்து அனைத்திலும் உள்ள நன்மையைப் பார்க்கத் தொடங்கினால் கோபம் வராது. நர நாராயணர்களாகத் திருமால் அவதரித்து, பத்ரிநாத்தில் தவம் புரிந்தார். அப்போது இந்திரன், பல தேவ மாதுகளை அனுப்பி அவர்களின் தவத்தைக் கலைக்க முற்பட்டான். அப்போது, நர நாராயணர்கள் இந்திரன்மீது கோபப்படவில்லை. மாறாக, ஊர்வசி என்னும் தேவமாதைத் தன் தொடையில் இருந்து உருவாக்கி, இந்திரனுடைய தேவலோகத்துக்கு அனுப்பி வைத்து விட்டார் பகவான்!” என்றார்.
“சுவாமி! அடியேன் இனி உங்களுக்கு மெய்காப்பாளனாக இருக்கிறேன். ஏதாவது தொண்டு செய்யவேண்டும் என்றால்சொல்லுங்கள். என்னிடம் நிறைய செல்வம் இருக்கிறது!” என்றான். “அப்படியானால், காவிரியின் இந்தப் படித்துறையை நன்றாகச் செப்பனிட்டு நீ கட்டிக் கொடுத்தால், பலருக்கும் பயன்படும்!” என்றார் சாட்சாத் சுவாமி. அதன்படி இன்று அம்மா மண்டபம் என்று அழைக்கப்படும் அந்தப் படித்துறையை அந்த இளைஞன் செப்பனிட்டுக் கட்டிக் கொடுத்தான்.
இப்படித் தனக்குத் தீங்கு செய்ய நினைப்பவர் மீது கோபம் கொள்ளாமல் இருந்து, கோபத்தை வெல்லவேண்டும் என்று உலகுக்கு உணர்த்திக் காட்டியவர் நர நாராயணர். அதனால்தான் நர-நாராயண பகவானுக்கு ‘ஜிதக்ரோத:’ என்று பெயர்.
‘ஜிதக்ரோத:’ என்றால் கோபத்தை வென்றவர் என்று பொருள். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 463வது திருநாமம்.
“ஜிதக்ரோதாய நமஹ:” என்று தினமும் சொல்லிவரும் அன்பர்களின் மனங்களில் கோபம் எழாதபடி பகவான் அருள்புரிவான்.
———–
464. வீரபாஹவே நமஹ (Veerabaahavey namaha)
(திருநாமங்கள் 457[ஸுமுக:] முதல் 470 [நைககர்மக்ருத்] வரை – தேவர்களுக்கு அமுதம் தந்த வரலாறு)
ஆழ்வார்களில் கடைக்குட்டியாக அவதரித்த திருமங்கை ஆழ்வார், திருவரங்கநாதனை மங்களாசாசனம் பண்ணும்பொழுது அற்புதமான ஒரு பாசுரம் பாடுகிறார்.
மாயிருங் குன்றம் ஒன்று மத்து ஆக மாசுணம் அதனொடும் அளவி
பாயிரும் பௌவம் பகடு விண்டு அலறப் படுதிரை விசும்பிடைப் படர
சேயிரு விசும்பும் திங்களும் சுடரும் தேவரும் தாம் உடன் திசைப்ப
ஆயிரம் தோளால் அலை கடல் கடைந்தான் அரங்க மா நகர் அமர்ந்தானே
இந்தப் பாசுரத்திலே பகவான் ரங்கநாதன் மந்தர மலையை மத்தாக்கி, வாசுகி என்னும் பாம்பைக் கயிறாகச் சுற்றி, மொத்தப் பிரபஞ்சமும் அலறும்படியாக,
யானையின் பிளிறல் ஓசை போல் கம்பீரமாக ஒலி பரவும்படி, திருப்பாற்கடலில் எழுந்த அலைகள் சுவர்க்கம் வரை தெளிக்கும் விதமாக,
அத்தகைய வேகத்தோடும் ஆற்றலோடும் திருப்பாற்கடலைக் கடைந்தார் என்று பாடுகிறார் திருமங்கையாழ்வார்.
மேலும், தனது ஆயிரம் தோள்களால் திருமாலே திருப்பாற்கடலைக் கடைந்ததாகவும், இதில் ஆழ்வார் குறிப்பிட்டுள்ளார். அவன் கடைந்த விதத்தைப் பார்த்துத் தேவர்கள், முனிவர்கள், சூரியன், சந்திரன் என அத்தனை பேரும் வியந்து போனார்களாம். தேவர்களும், அசுரர்களும் தானே திருப்பாற்கடலைக் கடைந்தார்கள்? திருமால் கடைந்ததாக இங்கே ஆழ்வார் பாடுகிறாரே என்ற ஐயம் உங்களுக்கு எழலாம். தேவர்களும் அசுரர்களும் தான் முதலில் கடைந்தார்கள். ஆனால் துர்வாசர் சாபத்தால் வலிமை இழந்திருந்த தேவர்களால் தொடர்ந்து கடைய முடியவில்லை. அவ்வாறே வாசுகியின் விஷம் பட்டு வலிமை இழந்தஅசுரர்களாலும் தொடர்ந்து கடைய முடியவில்லை.
இதைக் கண்ட திருமால், நாமே கடைவோம் என்று முடிவெடுத்து, தேவர்கள் மத்தியில் ஒரு உருவத்தோடும் அசுரர்கள் மத்தியில் மற்றோர் உருவத்தோடும் தோன்றினார் என்கிறது ஸ்ரீமத் பாகவத புராணம். ஏற்கனவே கூர்மாவதாரம் செய்து மந்தர மலையை முதுகில் தாங்கிநிற்கும் நாராயணன், இப்படியும் இரு வடிவங்கள் கொண்டாராம்.இப்படித் திருமால் தன் கையால் திருப்பாற்கடலைக் கடையத் தொடங்கியவாறே, பேரொலி உண்டானதாம்.
அந்த ஒலியைத் திருவாய்மொழியில் நம்மாழ்வார் வர்ணிக்கிறார்.
ஆறுமலைக்கு எதிர்ந்தோடும் ஒலி அரவு
ஊறுசுலாய் மலை தேய்க்கும் ஒலி கடல்
மாறு சுழன்று அழைக்கின்ற ஒலி அப்பன்
சாறுபட அமுதம் கொண்ட நான்றே
கடலில் கலக்கும் ஆறுகள் எதிர்த்திசையில் சென்று மலையில் மோதிய ஒலியும், வாசுகி பாம்பும் மந்தர மலையும் உரசும் ஒலியும், கடல்நீர் சுழல்கின்ற ஒலியும் மூன்றும் சேர்ந்து ஒரே நேரத்தில் பேரொலியாக ஒலிக்கப் பாற்கடலைக் கடைந்தார் திருமால். அனைத்தும் சரி, ஆனால் ஆயிரம் தோள்களால் திருமால் பாற்கடலைக் கடைந்ததாகத் திருமங்கை ஆழ்வாரின் பாசுரம் சொல்கிறதே. திருமாலுக்கு நான்கு கைகள் தானே என்று நமக்குத் தோன்றலாம். நான்கு திருத்தோள்களால் தான் திருமால் கடைந்தார். ஆனால், அவர் கடைந்த வேகத்தில் அந்த நான்கு திருக்கைகள் ஆயிரம் திருக்கைகள் போல் தெரிந்தனவாம்.
அதாவது, நம் வீடுகளில் உள்ள மின்விசிறிகளில் மூன்று அல்லது நான்கு இறக்கைகளே இருக்கும். ஆனால் மின்விசிறி வேகமாகச் சுற்றுகையில் அவை பல இறக்கைகள் போலத் தெரியும். அத்தகைய வேகத்தில் திருமால் கடைந்தார் என்பதைக் குறிப்பிடவே, ஆயிரம் தோளால் அலைகடல் கடைந்தான் என்று திருமங்கை ஆழ்வார் பாடியுள்ளார்.
பாஹு என்றால் தோள் என்று பொருள். வீரபாஹு: என்றால் வலிமை மிக்க தோள்களை உடையவர். திருப்பாற்கடலை வேகமாகவும், பேரொலி எழும் வகையிலும் கடைந்து அமுதை எடுத்த வலிமை மிக்க தோள்களை உடைய திருமால் வீரபாஹு : என்று அழைக்கப்படுகிறார். அதுவே சஹஸ்ரநாமத்தின் 464வது திருநாமம்.வீரபாஹவே நமஹ என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்கு நல்ல வலிமையோடு வாழும்படித் திருமால் அருள்புரிவார்.
————–
465. விதாரணாய நமஹ (Vidhaaranaaya namaha)
திருப்பாற்கடலில் இருந்து அமுதம் வெளிவந்தபோது, அது தேவர்களுக்கா அசுரர்களுக்கா என்ற மிகப்பெரிய போட்டி எழுந்தது. திருமாலின் உதவியை நாடினார்கள் தேவர்கள். அப்போது திருமால் மோகினி என்னும் பெண் வடிவம் பூண்டார். அழகிய தோற்றம் கொண்ட அந்த மோகினி, தன் அழகால் அசுரர்களை மயக்கி விட்டாள். அமுதின் மேல்பகுதி வெறும் சக்கைஎன்றும் அடிப்பகுதியே சாறு என்றும் சொன்ன மோகினி, “நானே அவரவருக்கு ஏற்றபடிபிரித்துத் தருகிறேன்!” என்று கூறினாள். அவளது அன்பைச் சம்பாதிக்க விரும்பிய அசுரர்கள் அவள் சொன்னதை அப்படியே தலை ஆட்டி ஏற்றுக்கொண்டார்கள்.
முதலில் சக்கையான மேல்பகுதியைத் தேவர்களுக்கு அளிக்கப் போகிறேன் என்று சொன்ன மோகினி, தேவர்களுக்கு அமுதை வழங்கத் தொடங்கினாள். அசுரர்கள் அவள் அழகில் மயங்கியபடி அப்படியே அமர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் சுவர்பானு என்ற ஒரு அசுரன் மட்டும் சூரியன் சந்திரன் ஆகிய இரு தேவர்களுக்கும் நடுவே தேவர் வேடத்தில் வந்து நின்று கொண்டான்.
“தேவ லிங்க ப்ரதிச்சன்ன: ஸ்வர்பானு: தேவஸம்ஸதி-ப்ரவிஷ்டஸ் ஸோமம் அபிபத் சந்த்ர அர்க்காப்யாம் ச ஸூசித:”–என்கிறது ஸ்ரீ மத் பாகவத புராணம்.
மோகினி கொடுத்த அமுதை அந்த சுவர்பானும் வாங்கி உண்டு விட்டான். ஆனாலும், தேவன் வேடத்தில் இருந்த அந்த அசுரனைச் சூரியனும் சந்திரனும் அடையாளம் கண்டு, மோகினி வடிவில் இருந்த திருமாலிடம் காட்டிக் கொடுத்தார்கள்.
உடனே மோகினி,–“சக்ரேண க்ஷுரதாரேண ஜஹார பிபதச் சிர:”-என்கிறபடி, தனது கூரிய சக்ராயுதத்தால் அவனது தலையைக் கொய்துவிட்டாள்.
அவனது உடல்பகுதிக்கு அமுதம் இன்னும் செல்லவில்லை என்றாலும் தலைப்பகுதிஅமுதத்தை உள்வாங்கிக் கொண்டுவிட்டது. அதனால் வெட்டப்பட்ட தலை மரணம் அடையாமல் அப்படியே இருந்தது. அவன்மீது கருணை கொண்ட பிரம்மா, ஒரு பாம்பின் உடலை அவனது தலையோடு ஒட்ட வைத்தார். அவனை ஒரு கிரகமாக, ராகு என்ற பெயருடைய ஒரு கிரகமாக பிரம்மதேவர் ஆக்கினார். சூரியனும் சந்திரனும் தன்னைக் காட்டிக் கொடுத்தார்கள் என்ற கோபத்தில் கிரகணக் காலங்களில் சூரியனையும் சந்திரனையும் ராகு விழுங்கிவிட்டு அதன்பின் விடுவிக்கிறான்.
இந்த வரலாறு நமக்கு ஒரு முக்கியத் தத்துவத்தை உணர்த்துகிறது.
திருப்பாற்கடல் என்பது நம் மனம்.
அதிலிருந்து எழுந்த அமுதம்தான் நம் மனதில் எழுகின்ற பரமாத்மாவைப் பற்றிய ஞானம்.
அச்சமயம் இறைவன் அந்த ஞானமாகிய அமுதை நம் நல்லெண்ணங்களாகிய தேவர்களிடம் தர முயல்கிறார்.
அமுத மயமான ஞானத்தை நல்லெண்ணங்கள் நல்ல விதத்தில் பயன்படுத்திக் கொண்டால், நாம் உய்வடையலாம்.
ஆனால், அப்போதும் கூட சுவர்பானு என்ற அசுரன் வந்தது போல், சில தீய எண்ணங்கள் எழுந்து நம் அமுதமயமான அறிவை வேறு பக்கம் திசைதிருப்பப் பார்க்கின்றன.
அவனது தலையைச் சீவிய பின்னும் அவன் சூரியனை விழுங்கப் பார்ப்பது போல், எவ்வளவு தான் பல தீய எண்ணங்களை நாம் அழித்தாலும்,
ஒரு சில தீய எண்ணங்கள் மீண்டும் மீண்டும் எழுந்து வந்து நம் மனதைக் கலைக்கப் பார்க்கின்றன.
சூரியனை ராகு விழுங்குவது போல் நம்புத்தியையும் தீயஎண்ணங்கள் அடிக்கடி விழுங்க முயல்கின்றன.
ராகு சூரியனை விழுங்கினாலும், அதிலிருந்து சூரியன் விரைவில் வெளிப்படுவது போல், நம் புத்தியை எத்தனை தீய எண்ணங்கள் கலைத்தாலும்,
நாம் இறைவனைச் சரணடைந்து அவன் அருளையே எதிர்நோக்கி இருந்தோமானால், நிச்சயமாக அந்த இறை அருளால்
தீய எண்ணங்கள் அனைத்தையுமே நாம் வென்று, அவற்றிலிருந்து வெளிவந்து பக்தியில் ஈடுபட்டுப் பரமனை அடைய முடியும்.
இதை உணர்த்தவே சுவர்பானு என்ற அசுரனின் தலையைச் சீவிக் காட்டினார் திருமால். அதுபோல் நம் மனதில் உள்ள தீய எண்ணங்களையும் வெட்டுபவர் அவர் என்பதை நமக்கு உணர்த்துகிறார். இப்படித் தீய சக்திகளை வெட்டுவதால், திருமால் விதாதா – வெட்டுபவர் என்று அழைக்கப்படுகிறார். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 465வது திருநாமம். விதாத்ரே நமஹ என்று தினமும் சொல்லி வந்தால் நம் மனதில் எழும் எல்லாத் தீய எண்ணங்களையும் திருமால் வெட்டி அருள்வார்.
—————–
459 (B). ஸுகோஷாய நமஹ:(Sughoshaaya namaha)
(திருநாமங்கள் 457[ஸுமுக:] முதல் 470 [நைககர்மக்ருத்] வரை – தேவர்களுக்கு அமுதம் தந்த வரலாறு)[குறிப்பு: 457 முதல் 463 வரை உள்ள திருநாமங்கள் நர நாராயண அவதாரங்களையும் குறிக்கும். அமுதம் கடைந்த வரலாற்றையும் குறிக்கும்.]மகாலட்சுமியின் பிரசாதமான ஒரு மாலையை துர்வாச முனிவர் இந்திரனுக்கு வழங்கினார். இந்திரன் அதை அனாயாசமாக வாங்கித் தனது யானையான ஐராவதத்திடம் வழங்கினான். அந்த யானையும் பிரசாத மகிமையை உணராது மாலையைக் கீழே போட்டு மிதித்துவிட்டது.
இதைக் கண்டு கோபம் கொண்ட துர்வாசர், இந்திரனும் தேவர்களும் லட்சுமி கடாட்சத்தை இழப்பார்கள் என்று சாபம் தந்துவிட்டார். துர்வாசரின் இந்தச் சாபத்தால் தங்களது ராஜ்ஜியத்தையும், செல்வத்தையும், வலிமையையும் இழந்து நின்றார்கள் தேவர்கள். அசுரர்கள் தேவலோக ராஜ்ஜியத்தைக் கைப்பற்றிவிட்டார்கள். இந்நிலையில் இந்திரனும் மற்ற தேவர்களும் பிரம்மாவின் உதவியை நாடினார்கள். “திருமாலைத் தவிர வேறு யாராலும் உங்களைக் காக்க முடியாது!” என்று தேவர்களுக்கு அறிவுரை கூறிய பிரம்மா, அனைவரையும் அழைத்துக் கொண்டு திருப்பாற்கடலின் கரைக்குச் சென்றார்.பாற்கடலுள் பையத்துயின்ற பரமன், தங்களுக்குக் காட்சி அளிக்க வேண்டும் என்ற பிரார்த்தனையோடு மனதாரத் திருமாலை பிரம்மாவும் தேவர்களும் வேண்டினார்கள்.
“நமாமி ஸர்வம் ஸர்வேசம் அனந்தம் அஜம் அவ்யயம் லோகதாம தராதாரம் அப்ரகாசம் அபேதினம்”என்று தொடங்கித் திருமாலைத் துதித்தார் பிரம்மதேவர்.
அவரைத் தொடர்ந்து மற்ற தேவர்களும்;
“பகவன் பூதபவ்யேச! யஜ்ஞமூர்த்திதராவ்யய! ப்ரஸீத ப்ரணாதானாம் த்வம் ஸர்வேஷாம் தேஹி தர்சனம்”என்று துதித்துத்
திருமால் திருவடிகளிலே சரணாகதி செய்தார்கள். அப்போது, பாற்கடலில் பள்ளிகொண்ட பெருமாள் தேவர்களுக்குக் காட்சி அளித்தார். தாங்கள் இழந்த ராஜ்ஜியத்தை மீண்டும் பெறுவதற்கு வழிகாட்டுமாறு திருமாலிடம் வேண்டினார்கள் தேவர்கள். தேவர்களைப் பார்த்துப் புன்னகை செய்த திருமால், “தேவர்களே! நீங்கள் பாற்கடலைக் கடையுங்கள். அதிலிருந்து தேவாமிர்தம் கிடைக்கும். அதை உண்டால் நீங்கள் நல்ல வலிமையும் நீண்ட ஆயுள் ஆரோக்கியமும் பெற்றுவிடுவீர்கள்.
அதன்பின் நீங்கள் எளிதில் அசுரர்களை வீழ்த்திவிட முடியும். உங்களால் மட்டும் இப்போது பாற்கடலைக் கடைய முடியாது. அதனால், அசுரர்களையும் கூட்டணி சேர்த்துக்கொண்டு பாற்கடலைக் கடைவீர்களாக!” என்று ஆலோசனை கூறினார்.அதன்படி, மந்தர மலையை மத்தாக்கி, வாசுகி நாகத்தை நாண் ஆக்கி, தேவர்களும் அசுரர்களும் திருப்பாற்கடலைக் கடையும் வேளையில், திருமாலே கூர்மாவதாரம் செய்து மந்தர மலையைத் தன் முதுகில் தாங்கினார். பாற்கடல் கடைந்த தேவர்களும் அசுரர்களும் சிறிது நேரத்தில் சோர்ந்து போன போது, திருமாலே அவர்களுக்குப் பதிலாகக் கடையத் தொடங்கி விட்டார். அவர் கடையும் அழகைக் கண்டு தேவர்களும் அசுரர்களும் வியந்ததை ஸ்ரீமத் பாகவத புராணத்தில் சுகமுனிவர் வர்ணிக்கிறார்;
“உபர்யகேந்த்ரம் கிரிராட் இவான்ய: ஆக்ரம்ய ஹஸ்தேன ஸஹஸ்ர பாஹு:
ஹஸ்தௌ திவி ப்ரஹ்ம பவேந்த்ர முக்யை: அபிஷ்டுவத்பி: ஸுமனோபிஹ்ருஷ்ட:”
மந்தர மலைக்கு எதிரே மற்றொரு மலை திகழ்வது போல், திருமால் தனது மலை போன்ற தோள்களாலே திருப்பாற்கடலைக் கடையும் அழகைப் பார்த்து வியந்த பிரம்மா, சிவன், இந்திரன், தேவர்கள், முனிவர்கள், அசுரர்கள் என அத்தனை பேரும் துதி செய்தார்கள். அத்தனை பேரும் செய்த அந்தத் துதிமொழிகள் பாற்கடல் கடைந்த பகவானைச் சூழ்ந்திருந்தன. இத்தகைய துதிகளால் சூழப்பட்டு விளங்கியமையால் திருப்பாற்கடல் கடைந்த திருமால் ‘ஸுகோஷ:’ என்று அழைக்கப்படுகிறார். ‘ஸுகோஷ:’ என்றால் நல்ல ஒலிகளால் சூழப்பட்டவர் என்று பொருள். தேவர்கள், அசுரர்கள் என அனைவராலும் துதிக்கப்பட்டு, அத்தகைய துதிகளால் சூழப்பட்டு விளங்கிய திருமால் ‘ஸுகோஷ:’! அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 459வது திருநாமம்.
அசுரர்கள் செய்த துதியை நல்ல வார்த்தை என்று எடுத்துக் கொள்ள முடியுமா? யார் சொன்னார்கள் என்பதை விட, யாரைப் பற்றிச் சொன்னார்கள் என்பதே முக்கியம் அல்லவா? திருமாலைக் குறித்த துதி என்பதால் அசுரர்கள் செய்த துதியையும் கூட தாழ்ந்த சொற்களாக நாம் கருத வேண்டியதில்லை.“ஸுகோஷாய நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்கள் செய்யும் அனைத்துத் துதிகளையும் திருமால் ஏற்று அருள்புரிவார்.
—————-
460 (B). ஸுகதாய நமஹ:(Sukhadhaaya namaha)
தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் போர் நடந்த வேளையில், அசுரர்கள் கடலுக்கு அடியில் ஒளிந்து கொண்டார்கள். தேவர்கள் பலவாறு தேடியும் அவர்களால் அசுரர்கள் கடலுக்கு அடியில் ஒளிந்திருக்கும் இடத்தைக் கண்டறிய முடியவில்லை. இந்நிலையில் தேவர்கள் அகத்திய முனிவரின் உதவியை நாடினார்கள். குறுமுனிவரான அகத்தியர் கடற்கரைக்கு வந்தார். “அச்யுதாய நமஹ:” என்று சொல்லிக் கையளவு நீரை எடுத்து உட்கொண்டார். உடனே ஏழு கடல்களும் வற்றிப்போயின. கடல் மொத்தமாக வற்றிய நிலையில், அசுரர்கள் ஒளிந்திருந்த இடத்தைத் தேவர்கள் கண்டறிந்துவிட்டார்கள். அவர்களை வீழ்த்திவிட்டார்கள்.
இந்நிலையில் ஏழு கடல்நீரையும் சுவைத்துப் பார்த்த அகத்திய முனிவர், அந்த ஏழு கடல் நீருக்கும் சாரமாக இருக்கும் அமுதைச் சுவைத்துப் பார்த்தாராம். “ஆஹா! இது மிகவும் இனிய அமுதமாக இருக்கிறதே! தேவர்களுக்கும்கூட கிடைத்தற்கரிய அமுதம் ஆயிற்றே இது! திகட்டாத அமுதம் ஆயிற்றே இது! இதை நாம் பாதுகாப்பாக வைக்க வேண்டும்!” என்று கருதினார் அகத்தியர்.
அதனால், தன் தாயான குடத்திடம் அந்த அமுதைக் கொடுத்துப் பத்திரப்படுத்தி வைக்கச் சொன்னார். ஆனால், அகத்தியரின் தாயான குடத்தால் அதை ரகசியமாக வைத்துக்கொள்ள மனமில்லை. ஆகையால், குடம் அந்த அமுதைக் குடமூக்கின் வாயிலாக வெளியிட்டுவிட்டது. குடமூக்கு என்பதுதான் கும்பகோணம் என்னும் திருத்தலம். அது வெளியிட்ட ஆராவமுதம்தான் திருமாலின் ஆராவமுதன் என்ற திருநாமம்.
இக்கருத்தை ஆசுகவிவில்லூர் ஸ்ரீநிதி சுவாமிகள், அம்ருத சார்தூலம் என்னும் துதியில்,-“மன்யே ஸப்தபயோநிதீன் அபி முனி: பீத்வா தத் உத்தாம்ருதம்
லாவண்யாதி ரஸாஸ்பதம் திவிஷதாம் அப்யந்ததோ துர்லபம் கூடம் மாதரி குப்தம் அத்ர தத் இதம் சக்ரே ததா தத்புன:லோகேப்யோ விவ்ருதம் ரஹஸ்யம் இதி ஹி த்ராதும் ந சக்தாஸ் ஸ்த்ரிய:”-என்ற ஸ்லோகத்தில் தெரிவிக்கிறார். இந்தக் கதைக்குள்ளே ஒரு தாத்பரியம் உள்ளது.
இங்கே ஏழு கடல் என்பது உலகில் உள்ள அனைத்து மொழிகளையும் குறிக்கிறது. அகத்தியர் தமிழுக்கு இலக்கணம் தந்த தமிழ் முனிவர் ஆவார். ஏழு கடல் நீரையும் அகத்தியர் பருகினார் என்றால், உலகிலுள்ள அனைத்து மொழிகளில் உள்ள அனைத்துச் சொற்களையும், சொல்லிப் பார்த்தார் தமிழ்த் தாயின் தவப் புதல்வரான அகத்தியர். ஆனால், அனைத்துக்கும் சாரமாக, அனைத்து வார்த்தைகளை விடவும் மிகமிக இனியதாக இருக்கும் ஒரு சொல் உண்டென்றால், தமிழ் மொழியில் உள்ள திருமாலின் திருப்பெயரான ‘ஆராவமுதன்’ என்பது. இத்தகைய அமுதம் தேவர்களுக்கும் கிடைக்காத படி அகத்தியர் ஒளித்து வைத்தார் என்றால், தேவ பாஷை எனப்படும் வடமொழியிலும் இத்தகைய இனிய சொல் கிடைக்காதபடி, தன் தாயான தமிழ்மொழியில் அதை ஒளித்து வைத்தார் அகத்தியர்.
ஆனால் தமிழ்மொழியோ, தனது மற்றொரு தவப்புதல்வரான நம்மாழ்வார் வாயிலாக, அவர் திருக்குடந்தை திவ்யதேசத்தைப் பற்றிப் பாடிய பாசுரமான,“ஆராவமுதே அடியேன் உடலம் நின்பால் அன்பாலே-நீராய் அலைந்து கரைய உருக்குகின்ற நெடுமாலே
சீரார் செந்நெல் கவரி வீசும் செழுநீர்த் திருக்குடந்தை ஏரார் கோலம் திகழக் கிடந்தாய் கண்டேன் எம்மானே”
என்ற பாசுரம் வாயிலாக வெளியிட்டு விட்டது. மேலும், நாலாயிரத் திவ்விய பிரபந்தம் என்ற அருளிச்செயல் அமுதத்தையே உலகுக்கு வெளியிட்ட திருத்தலமும் கும்பகோணமே ஆகும். இப்படித் தன்னையும் தனது திருநாமத்தையும் தன்னைக் குறித்த பாசுரங்களையுமே அமுதம் என்று கருதும் அடியார்களான நமக்கு, திருக்குடந்தையில் திருமால் ஆராவமுதனாகக் காட்சி தந்து, ஆராவமுதம் போல் இனிய திருநாமமும் பூண்டு, `ஆராவமுதே’ என்ற பாசுரத்தால் துதிக்கப்பட்டு விளங்குகிறார். தேவாமிர்தமே தங்களுக்கு இலக்கு எனக் கருதும் தேவர்களுக்கு அந்த அமுதைக் கொடுத்து அவர்களையும் மகிழ்விக்கிறார்.
இப்படி அவரவர் விரும்பும் அமுதத்தை அவரவர்க்கு அளித்து அவர்களுக்கு மகிழ்ச்சி தருவதால், திருமால் ‘ஸுகத:’ என்று அழைக்கப்படுகிறார். ‘ஸுகத:’ என்றால் அமுதம் தந்து மகிழ்விப்பவர் என்று பொருள். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 460வது திருநாமம்.“ஸுகதாய நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்கள் ஆராவமுதைப் பருகி இன்புறும் பேற்றை ஆராவமுதனின் அருளால் பெறுவார்கள்.
—————
461 (B). ஸுஹ்ருதே நமஹ:(Suhrudhey namaha)
துர்வாசர் சாபத்தால் ராஜ்ஜியம், செல்வம், வலிமை அனைத்தையும் இழந்த தேவர்கள் திருப்பாற்கடலில் பள்ளிகொண்ட திருமாலை அடிபணிந்து துதித்தார்கள் என்று நாம் ஏற்கனவே பார்த்தோம். அவர்களுக்குத் திருமால் தரிசனம் தந்தார். அவருடைய திருமேனி அழகில் ஈடுபட்டு ஆனந்தக் கண்ணீர் சிந்திய தேவர்கள், அவரது திருவடிகளிலே விழுந்து வணங்கினார்கள்.
“நமோ நமோ விசேஷஸ்த்வம் த்வம் ப்ரஹ்மா த்வம் பினாக த்ருக் இந்த்ரஸ்த்வம் அக்னி: பவன: வருணஸ் ஸவிதா யம:
த்வம் ப்ரஸாதம் ப்ரஸன்னாத்மன் ப்ரபன்னானாம் குருஷ்வ ந: தேஜஸா நாத ஸர்வேஷாம் ஸ்வசக்த்யா ஆப்யாயனம் குரு”
“திருமாலே! நீயே கதி என்று உன்னையே நாங்கள் சரணமாகப் பற்றி அடைக்கலம் புகுகிறோம். எங்களுக்கு அனைத்து நன்மை களையும் நீயே செய்தருள வேண்டும்!” என்று சரணாகதி செய்தார்கள். இவர்கள் சரணாகதி அடைந்ததால், அவர்கள் இதுவரை செய்த தவறுகளை மன்னித்தார் திருமால். “தேவர்களே! எப்போது என் பாதங்களில் நீங்கள் விழுந்து சரணடைந்து விட்டீர்களோ இனி நான் உங்களுக்கு நண்பன். ஒரு நண்பனாக இருந்து உங்களுக்கு அனைத்து நன்மைகளையும் நான் செய்கிறேன்!” என்றார் திருமால்.
“நீங்கள் முதலில் பாற்கடலைக் கடைந்து அமுதம் பெறுவீர்களாக! அதை உண்டால் நீங்கள் வலிமையும் நீண்ட ஆயுளும் பெற்று அசுரர்களை வீழ்த்த முடியும்!” என்றார் திருமால். “வலிமையில்லாத நிலையில் எங்களால் எப்படி இவ்வளவு பெரிய பாற்கடலைக் கடைய முடியும்?” என்று கேட்டார்கள் தேவர்கள். உடனே திருமால், “நீங்கள் அசுரர்களையும் கூட்டு சேர்த்துக் கொள்ளுங்கள். அவர்களுக்கு அமுதில் பங்கு தருவதாகச் சொல்லி அழையுங்கள். பின்னால், அமுதம் கொடுக்காமல் ஏமாற்றி விடலாம். இது ராஜநீதிப்படி சரிதான். பசுவைக் காப்பதற்காகப் புலியை வஞ்சிப்பதில் தவறில்லை!” என்று மீண்டும் நண்பனாக இருந்து ஆலோசனை வழங்கினார்.
பாற்கடலை எப்படிக் கடைவது என்று யோசித்தார்கள் தேவர்கள். மீண்டும் திருமாலே ஆலோசனை சொன்னார். “பச்சிலைகளை இட்டுப் பாற்கடலை நிரப்புங்கள்!” என்றார் திருமால். அவ்வாறே செய்தார்கள் தேவர்கள். மத்துக்கும் கயிறுக்கும் எங்கே போவது என்று சிந்தித்தார்கள் தேவர்கள். திருமாலே கருடனின் தோள் மீது மந்தரமலையைத் தூக்கிவைத்து, அவரே அந்த மலையைத் திருப்பாற்கடலில் மத்தாகக் கொண்டு வந்து நாட்டினார்.
வாசுகிப் பாம்பைக் கயிறாகச் சுற்றினார் திருமால். அதன் தலைப்பகுதியில் நின்றால் அதன் விஷம் தங்களைப் பாதிக்குமோ என அஞ்சினார்கள் தேவர்கள். திருமால் அங்கேயும் உதவி செய்து அசுரர்களைத் தலைப்பகுதியில் நிறுத்தி தேவர்களை வால் பகுதியில் நிறுத்தி விட்டார். வாசுகி கக்கிய விஷம் அனைத்தும் அசுரர்கள் மேலேயே பட்டது. தேவர்களும் அசுரர்களும் கடையத் தொடங்கியபோது, மலை கடலுக்குள் அழுந்தியது. அப்போதும் திருமாலின் உதவியையே நாடினார்கள் தேவர்கள். ஆமைவடிவில் கூர்மாவதாரம் எடுத்து அந்த மலையை முதுகில் தாங்கி அருளினார் திருமால். மேலும், தானே தன்வந்தரியாக அவதரித்து அமுதத்தைக் கொண்டுவந்து அளித்து, மோகினி அவதாரம் செய்து அசுரர்களை மயக்கி, அந்த அமுதம் தேவர்களுக்கே கிடைக்கும்படி செய்தார் திருமால்.
இப்படி ஒரு நண்பன் மற்றொரு நண்பனுக்கு ஆலோசனைகள் வழங்கி உதவிகள் செய்வது போல், தேவர்களுக்கு நல்ல நண்பனாக இருந்து ஆலோசனைகளும் வழங்கி, அமுதம் பெறுவதற்கான அனைத்து உதவிகளும் செய்தபடியால் திருமால் ‘ஸுஹ்ருத்’ என்று அழைக்கப்படுகிறார். ‘ஸுஹ்ருத்’ என்றால் நலம்விரும்பியாய் இருக்கும் நண்பர் என்று பொருள். அதுவே ஸஹஸ்ரநாமத்தின்461-வது திருநாமம் .“ஸுஹ்ருதே நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்கு நல்ல நண்பராக இருந்து அனைத்து நலங்களையும் திருமால் தந்தருள்வார்.
————
462 (B). மனோஹராய நமஹ:(Manoharaaya namaha)
ஆசுகவி வில்லூர் ஸ்ரீநிதி சுவாமிகள் கும்பகோணம் சாரங்கபாணிப் பெருமாளைக் குறித்து அருளிய “அபர்யாப்தாம்ருத விம்சதி’’ என்னும் துதியிலே ஒரு கவிநயம் மிக்க அற்புத ஸ்லோகம்
“அம்ருதம் அம்ருத! தத்வா மோஹினீ பாவதஸ்த்வம்-கிமிதி பரிணதோபூ: பூருஷஸ் ஸுந்தராங்க:
இதம் இதம் இதி தத்த்வம் ப்ருஷ்டதோ தேவதேவ! த்வயி விநிஹித த்ருஷ்டிர் வக்த்யஸௌ கும்பநாத:”
கும்பகோணம் திருத்தலத்துக்கு வந்த சிவபெருமான், நகரின் மத்தியில் கோயில் கொண்டிருக்கும் சாரங்கபாணிப் பெருமாளைக் கண்டாராம். குடத்துக்குள் சாரமாக அமுதம் இருப்பது போலே, கும்பகோணம் எனும் குடத்தினுள்ளே ஆராவமுதமாக இனிக்கும் சாரங்கபாணியின் அழகால் ஈர்க்கப்பட்டார் சிவபெருமான். அந்தப் பெருமாள் முன்னே வந்து நின்று தனது இரு கண்களாலும் சாரங்கபாணியின் அழகைப் பருகினாராம். பருகிய நோக்கென்னும் பாசத்தால் ஆராவமுதப் பெருமானை அப்படியே தனது மனத்தினுள்ளே நிலைநிறுத்திக் கொண்டார் பரமசிவன்.
ஆராவமுதனை அப்படியே வலம் வந்து அவனுடைய பின்னழகை ரசிக்கப் புகுந்தார் சிவபெருமான். அந்தப் பின்னழகைப் பார்த்தவாறே பரமசிவன், குடத்துக்குள் உள்ள அமுதம் போலே இங்கே திருமால் விளங்குகிறார். இவரது பின்னழகைப் பார்க்கும்போது ஏதோ ஒரு காட்சி என் நினைவுக்கு வருகிறதே என்று சிந்தனையில் ஆழ்ந்தார். அது என்ன காட்சி திருப்பாற்கடல் கடைந்து அமுதம் வந்த வேளையில், அந்த அமுதக் குடத்தைப் பெறுவதற்காக தேவர்களும் அசுரர்களும் போட்டி போட்டுக்கொண்டார்கள். அச்சமயம் அசுரர்கள் கையில் அமுதம் கிடைக்காமல் நல்லவர்களான தேவர்களின் கையில் அது சேர வேண்டும் என்பதற்காக மோகினி அவதாரம் எடுத்தார் திருமால்.
அந்த மோகினியின் வடிவழகில் அசுரர்கள் மொத்தமாக மயங்கி விட்டார்கள். நான் அமுதைப் பகிர்ந்தளிக்கிறேன் என்று சொன்ன மோகினி, கையில் அமுதக் குடத்தை ஏந்தியபடி தேவர்களுக்கு மட்டும் அமுதைக் கொடுத்தாள் என்பது வரலாறு. அந்த மோகினியின் அழகில் பரமசிவனும் மயங்கினார் என்று புராணத்தில் பார்க்கிறோம் அல்லவா?
இப்போது ஸ்ரீ சாரங்கபாணிப் பெருமாளின் பின்னழகைப் பார்த்த பரமசிவனுக்கு, அந்த மோகினியின் அழகுதான் நினைவுக்கு வந்ததாம். “ஓ திருமாலே! மோகினி அவதாரம் எடுத்த நீ, அப்படியே அந்தப் பெண் வடிவத்தில் இருந்து ஆண் வடிவத்துக்கு மாறி விட்டாய் போலும்! அதுதான் சாரங்கபாணியாகிய உனது இவ்வடிவம் போலும்!” என்று வியப்புடன் சொன்னார் பரமசிவன். இந்தப் பின்னழகை எப்பொழுதும் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று விரும்பிய பரமசிவன், கும்பேஸ்வரர் என்ற பெயரோடு அப்படியே சாரங்கபாணி சுவாமி திருக்கோயிலுக்குப் பின்னே கோயில் கொண்டு அமர்ந்து, ஆராவமுதனின் அழகை ரசிக்கத் தொடங்கினாராம். (கும்பேஸ்வரருக்குப் பிரசித்தமாக வழங்கப்படும் தல வரலாற்றை நாம் மதிக்கிறோம், மறுக்கவில்லை. ஒரு கவியின் கண்ணோட்டத்திலே இக்கருத்து வழங்கப்பட்டுள்ளது.)
கும்பேஸ்வரருக்கு அருகிலிருந்த பார்வதி தேவியான மங்களாம்பிகை, “என் அண்ணன் சாரங்கபாணியின் அழகில் மயங்கி விட்டீரோ? நீங்கள் மயங்கியதில் வியப்பில்லை. தீய சக்தி களான அசுரர்களே அவரது மோகினி அவதாரத்தைப் பார்த்து மயங்கிய போது, தூய மனத்துடன் எப்போதும் தவத்தில் ஈடுபடும் உங்கள் மனம் அவரது அழகில் ஈடுபட்டதில் வியப்பில்லையே!” என்று பரமசிவனைப் பார்த்துச் சொன்னாராம்.
இப்படி மனத்தூய்மை மிக்கவர்கள் முதல் தொடங்கி, தீய எண்ணம்கொண்ட அசுரர்கள் வரை அத்தனை பேரின் மனங்களையும் தனது மோகினி அவதார வடிவால் மயக்கியதால், திருமால் ‘மனோஹர:’ என்று அழைக்கப்படுகிறார். ‘மனோஹர:’ என்றால் மனங்களைக் கவர்பவர் என்று பொருள். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 462-வது திருநாமம்.“மனோஹராய நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களின் மனங்களையும் திருமால் தனது அழகால் கவர்ந்து தன்னிடம் ஈடுபடும்படி அருள்புரிவார்.
———-
463 (B). ஜிதக்ரோதாய நமஹ:(Jithkrodhaaya namaha)
அடியேனும் அடியேனின் ஸ்ரீபாஷ்ய குருவான ஸ்ரீ.உ.வே. கருணாகராச்சாரியார் சுவாமியும் கும்பகோணம் ஸ்ரீசாரங்கபாணிப் பெருமாள் திருக்கோயிலுக்குச் சென்றோம். அப்போது எங்களோடு வந்த ஒரு நபர், அந்தத் திருக்கோயிலின் பிரம்மாண்ட ராஜகோபுரத்தைச் சுட்டிக் காட்டி, ஸ்ரீ .உ.வே. கருணாகராச்சாரியார் சுவாமியிடம், “இந்தக் கோபுரத்தின் கீழ்த்தளத்தில் கண்ணன் கோபிகைகளோடு புரியும் சிருங்கார லீலைகள் சித்தரிக்கப் பட்டுள்ளனவே! எங்களைப் போன்றவர்களின் பார்வைக்கு முகம் சுளிக்க வைக்கும் சித்திரங்களாக இவை தெரிகின்றன! இந்த அமைப்புக்கு என்ன காரணம்?” என்று கேட்டார்.
அதற்குக் கருணாகராச்சாரியார் சுவாமி அற்புதமான ஒரு பதிலை வழங்கினார்; நம் மனித மனமானது அற்பமான உலகியல் சுகங்களையே நாடிக்கொண்டிருக்கின்றது. நேராக அப்படியே உலகியல் விஷயங்களை விடுத்து இறைவனை நாடு என்று சொன்னால், நம் மனம் அதற்கு உடனே இணங்காது. அதனால் நம் பெரியோர்கள் நம்மைப் பார்த்து, “நீ காதலைத் தானே பார்க்க விரும்புகிறாய்? உலகியல் காதலைப் பார்க்காதே! அந்த தெய்வீகமான இறைவனின் காதலைப் பார்!” என்கிறார்கள்.
இறைவனுக்கும் இறைவிக்கும் இடையே நடக்கும் காதல் என்பது தெய்வீகமான சிருங்கார ரசம். அது உலகியலுக்கு அப்பாற்பட்டது. உலகியல் காதலில் உள்ள ரஜோகுணம், தமோகுணம் போன்ற தோஷங்கள் ஏதுமே இறைவனுக்கும் இறைவிக்கும் இடையே நடக்கும் சிருங்கார ரசத்தில் இல்லை. அது உலகியலுக்கு அப்பாற்பட்ட சுத்த சத்துவ மயமாக இருக்கிறது. அதைத் தியானிக்கத் தியானிக்க நம் மனதில் உள்ள அழுக்குகள், ரஜோகுணம், தமோகுணம், பாபங்கள் அனைத்தும் நீங்கி மனத்தூய்மையை நாம் அடைகிறோம்.
அதனால்தான் சுவாமி வேதாந்த தேசிகன், “ஆஸீத் அநுத்யேயதமம் முனீனாம்” – முற்றும் துறந்த முனிவர்களுக்கும் தியானிக்கத் தக்கதாக இறைவன் – இறைவியின் சிருங்கார ரசம் இருக்கிறது என்கிறார். ஆசைகளைத் துறந்த முனிவர்களும் தங்களுக்கு முழுமையான வைராக்யம் கைகூட வேண்டும் என்றால் இந்த சிருங்கார ரசத்தைத் தியானிக்க வேண்டும். அத்தகைய சிருங்கார ரசத்தைக் காட்டி முதலில் நம் மனதைக் கோயில் பக்கம் ஈர்க்கிறார் திருமால். அதனால்தான் கோபுரத்தின் கீழ் தளத்திலே சிருங்கார ரசம் நிறைந்த சிற்பங்கள் காணப்படுகின்றன.
அதன்மூலம் நம் மனதை ஈர்த்தபின் மேலே தனது தெய்வீகப் பேரானந்தத்தில் நம்மை ஆழ்த்துகிறார் பகவான். அதனால்தான் அடுத்தடுத்த மேல் தளங்களில் பகவானின் மற்ற லீலைகளை விளக்கும் சிற்பங்கள் அமைந்திருக்கும். கோபுரம் போல் நம் மனதையும் எண்ணங்களையும் உயர்த்த முதல்படியாக சிருங்கார ரசத்தைச் செய்து காட்டுகிறார் இறைவன் என்பதே தாத்பரியம்.
“கோயில் என்றால் கோபுரம் காட்டும் தெய்வம் உண்டு அங்கே!-உள்ளம் என்றால் உயர்ந்து காட்டும் எண்ணம் வேண்டும் இங்கே!”-என்று திரு. பூவை செங்குட்டுவன் என்னும் கவிஞர் பாடியுள்ளார். நம் எண்ணங்களையும் உள்ளத்தையும் கோபுரம் போல் உயர்த்த வல்லது இறைவனின் சிருங்கார சேஷ்டிதம். மோகினி அவதாரம் எடுத்து அசுரர்களைத் திருமால் மயக்கினார் அல்லவா? அதன்மூலமும் இந்தத் தத்துவத்தையே உணர்த்தினார். நம் மனமே பாற்கடல். அதில் உள்ள நல்ல எண்ணங்கள் தேவர்கள், தீய எண்ணங்கள் அசுரர்கள். வேதம் என்னும் மத்தைக் கொண்டு, இறையருள் என்னும் கயிற்றால் நம் மனமாகிய பாற்கடலைக் கடைந்தால், ஜீவாத்மா – பரமாத்மா பற்றிய அமுதமயமான ஞானம் ஏற்படும். அந்த ஞானமாகிய அமுதம் தீய எண்ணங்களாகிய அசுரர்கள் கையில் கிட்டாமல் நல்ல எண்ணங்களாகிய தேவர்கள் கையில் கிடைக்கவே மோகினி வேடம் தரிக்கிறார் திருமால். அதாவது, தனது தெய்வீக சிருங்கார ரசத்தால் அசுரர்களாகிய நம் தீய எண்ணங்களை மயக்கி, நல்லெண்ணங்கள் அமுதமயமான ஞானத்தைப் பயன்படுத்திக் கொள்ள வழிவகை செய்கிறார்.
இந்த விளக்கத்தை ஸ்ரீ .உ.வே. கருணாகராச்சாரியார் சுவாமி அருளியவாறே, கேள்வி கேட்ட நண்பர் தெளிவுபெற்று நன்றி தெரிவித்து விட்டுச் சென்றார். தேவர்களுக்கு அமுதம் கிடைத்துவிடக்கூடாது என்று அசுரர்கள் கோபத்துடன் அவர்களைத் தாக்கப் பார்த்தார்கள். ஆனால், மோகினியாக பகவான் தோன்றி அவர்களை மயக்கியவாறே, அவர்களின் கோபம் மொத்தமாக அடங்கிவிட்டது. இதுபோலத்தான் நமது மனதில் எழும் தீய எண்ணங்களையும் தனது அழகைக் காட்டி சாந்தப்படுத்தி நீக்குகிறார் திருமால். இப்படி அசுரர்களின் கோபத்தை வென்றதால் ‘ஜிதக்ரோத:’ என்று திருமால் அழைக்கப்படு கிறார். ‘க்ரோத’ என்றால் கோபம், ‘ஜிதக்ரோத:’ என்றால் தேவர்கள் மீது அசுரர்கள்கொண்ட கோபத்தை வென்றவர். அதுவே ஸஹஸ்ர நாமத்தின் 463-வது திருநாமம்.“ஜிதக்ரோதாய நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்கள் மனதில் தீய எண்ணங்கள் எழாதபடி திருமால் அருள்புரிவார்.
————
466. ஸ்வாபநாய நமஹ (Swaapanaaya namaha)
(திருநாமங்கள் 457[ஸுமுக:] முதல் 470 [நைககர்மக்ருத்] வரை – தேவர்களுக்கு அமுதம் தந்த வரலாறு)
பாற்கடலில் இருந்து அமுதம் வெளிவந்தவாறே, அது தேவர்களுக்கா அசுரர்களுக்கா என்ற பெரும் போட்டி நடைபெற்றுவந்தது. ஒப்பீட்டு அளவில் நல்லவர்களான தேவர்களுக்கு அமுதைச் சேர்க்க நினைத்த திருமால், மோகினி என்ற பெண் வடிவம் தரிப்பது என்று முடிவெடுத்தார். அற்புதமான, அழகு மிக்க தோற்றத்தோடு மோகினியாக வடிவம் பூண்டார் திருமால். மதுரைக்கு அருகில் உள்ள திருமோகூர் என்ற திருத்தலத்தில்தான், திருமால் இந்த மோகினி வடிவைத் தரித்தார் என்று அத்தலத்தின் தலவரலாறு சொல்கிறது.
அந்த மோகினியை பாகவத புராணத்தில் அழகாக வர்ணித்துள்ளார் சுகமுனிவர். மிகவும் அழகான காயாம்பூ வண்ணத் திருமேனியோடும், அழகு மிளிரும் அங்கங்களோடும், காதுகளில் இணையான குண்டலங்களோடும், அழகிய கன்னங்களோடும், உயர்ந்த முகத்தோடும், சிறுத்த இடையோடும், தாமரை போல் நறுமணம் வீசும் முகத்தோடும், மலர்ந்த மல்லிகைப் பூக்கள் சூட்டிய கூந்தலோடும், அழகிய ஆபரணங்களோடும், தூய ஆடையோடும், வெட்கத்தோடு கூடிய புன்னகையோடும், புருவ நெரிப்போடும் அசுரர்களை நோக்கி வந்தாள் மோகினி.
அவளைப் பார்த்த அசுரர்களின் உள்ளத்தில் காமம் ஏற்பட்டது. இதுவரை அமுதம் வேண்டும் என்று தேவர்களை எதிர்த்துச் சண்டை போட்டுக் கொண்டிருந்த அசுரர்கள் மோகினியிடம் ஓடி வந்தார்கள். “பெண்ணே! நாங்கள் இவ்வளவு நேரம் சண்டை போட்டுக்கொண்டிருந்ததைப் பார்த்து எங்களை வெறுத்துவிடாதே. நாங்களும் தேவர்களும் பங்காளிகள்தான். நீயே பார்த்து எங்களுக்கு அமுதைப் பங்கு போட்டு அளித்து விடு!” என்று மோகினியிடம் அசுரர்கள் சொன்னார்கள்.
அதைக் கேட்ட மோகினி, “ஒரு பெண்ணின் புறத்தோற்றத்துக்கு மயங்கி இப்படியா பேசுவீர்கள்? நான்தான் அமுதைப் பங்கிட்டுத் தரவேண்டும் என்றால், நான் நியாயமாகவோ அநியாயமாகவோ எப்படிப் பிரித்துத் தந்தாலும் நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா?” என்று கேட்டாள். அசுரர்கள், “உன்னைப் போன்ற ஒரு பெண்ணின் அன்பு எங்களுக்குக் கிடைக்குமானால், வேறென்ன வேண்டும் உலகத்திலே? உன் இஷ்டப்படி செய்!” என்றார்கள்.
மோகினி, “அப்படியானால் தேவ அசுரர்களே! நீங்கள் எல்லோரும் நீராடி ஆசமனம் செய்து, ஹோமம் செய்து, விரதம் இருந்து, தர்ப்பைப் புல்லைத் தரையில் பரப்பி, அதன் மீது கிழக்கு முகமாக அமர்வீர்களாக. நானே அமுதைச் சரியாகப் பிரித்துத் தருகிறேன்!” என்றார். தேவர்களும், அசுரர்களும் அப்படியே செய்தார்கள். ஹோமம், விரதம் போன்றவற்றைப் பெரிதாக அறியாத அசுரர்களும் கூட, மோகினி தங்கள் மீது கோபித்துக்கொள்ளக்கூடாது என்பதற்காக அவள் சொன்னபடி அனைத்தையுமே செய்துவிட்டுக் காத்திருந்தார்கள்.
முதலில் தேவர்களுக்கு அமுதைத் தருவதாகச் சொன்ன மோகினி, வரிசையாகத் தேவர்களுக்கு அமுதை வழங்கி வந்தாள். அதை அசுரர்கள் அத்தனை பேரும் வேடிக்கை பார்த்துக் கொண்டே அமர்ந்திருந்தார்கள். யாருமே மறுத்துப் பேசவில்லை. மொத்த அமுதமும் தேவர்களுக்கே சென்று சேர்ந்துவிட்டது. உறங்கியவர் செயல்படாது இருப்பது போலவே அசுரர்கள் அப்படியே இருந்துவிட்டார்கள்.இப்படி மோகினி அவதாரம் எடுத்து அசுரர்களை மயக்கி உறங்க வைத்ததால், (இங்கே உறக்கம் என்பது செயல்படாதிருக்கும் நிலையைக் குறிக்கிறது) மோகினி அவதாரம் செய்த திருமால் ஸ்வாபன என்று அழைக்கப்படுகிறார்.
ஒரு நாட்டில் யாருமே செயல்படாமல் இருந்தால், நாடு உறங்குகிறதா என்று கேட்கிறோம் அல்லவா? அதுபோல் மோகினியின் அழகில் மயங்கிச் செயல்படாமலேயே அசுரர்கள் இருந்ததால், அவர்களின் நிலையை உறக்கத்தோடு பெரியோர்கள் ஒப்பிட்டுள்ளார்கள்.
‘ஸ்வாபன:’ என்றால் உறங்கச்செய்பவர் என்று பொருள். தீயசக்திகளான அசுரர்களை மயக்கிச் செயல்பட முடியாமல் செய்த மோகினிக்கு ‘ஸ்வாபன:’ என்று பெயர். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 466-வது திருநாமம்.
“ஸ்வாபனாய நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்கு வாழ்வில் எந்நாளும் தெளிவு ஏற்படும்படித் திருமால் அருள்புரிவார்.
—————-
467. ஸ்வவசாய நமஹ (Swavashaaya namaha)
`ஸ்ரீமகா பக்த விஜயம்’ என்னும் நூலில் இடம்பெற்றுள்ள ஒரு வரலாறு. பண்டரிபுரத்தில் கோயில் கொண்டுள்ள பாண்டுரங்கனின் சிறந்த பக்தர் நாமதேவர் என்பவர் நாமதேவரின் இளமைக் காலத்தில், அவரது தாயான குணாபாய், நாமதேவரிடம் ஒரு பாத்திரத்தில் பாயசத்தைக் கொடுத்து அதைப் பாண்டுரங்கனுக்கு நிவேதனம் செய்துவிட்டு வருமாறு அனுப்பிவைத்தாள்.நாமதேவரும் கையில் பாத்திரத்தோடு சென்றார். அந்த வீதியில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்களின் பந்து, மூடாமல் நாமதேவர் கொண்டு சென்ற பாயச பாத்திரத்தில் விழுந்து விட்டது. தெருமுனையில் நடந்த இந்த காட்சியை வீட்டுவாசலில் இருந்து பார்த்த குணாபாய், “நாமதேவா! இங்கே வா! பந்து விழுந்த பாயசத்தைப் பாண்டுரங்கனுக்கு நிவேதனம் செய்யாதே!” என்று அழைத்தாள்.
விவரம் அறியாச் சிறுவனான நாமதேவர், “அதெல்லாம் ஒன்றும் பிரச்னை இல்லை அம்மா! நான் சென்று வருகிறேன்!” என்று வேகமாகச் சென்றுவிட்டார்.கோயிலுக்குள் நாமதேவர் சென்று பார்த்த போது, கோயிலில் யாரையுமே காணவில்லை. “யாராவது பெரியவர்கள் இருந்தால், அவர்களிடம் கொடுத்துப் பாண்டுரங்கனுக்கு நிவேதனம் செய்யச் சொல்லலாம் என நினைத்தேன். ஆனால் இங்கே யாரையுமே காணவில்லையே! என்ன செய்வது? என்று சிந்தித்தார் நாமதேவர்.
“சரி! நாமே நிவேதனம் செய்வோம்!” என முடிவெடுத்த அவர், பாண்டுரங்கனுக்கு அருகில் சென்று, “பாண்டுரங்கா! என் தாய் உனக்காக இந்தப் பாயசத்தைக் கொடுத்து அனுப்பி யிருக்கிறாள். நீ இதைச் சாப்பிட வேண்டும்!” என்றார். பாண்டுரங்கன் அசையாமல் அப்படியே இடுப்பில் கைவைத்தபடி நின்றிருந்தான்.“ஏய் பாண்டுரங்கா! நீ மட்டும் உண்ணாமல் இருந்தால், பந்து விழுந்ததால்தான் நீ உண்ணவில்லை என்று என் தாய் என்னிடம் கோபித்துக் கொள்வாள். தயவுசெய்து சாப்பிடு!” என்றார் நாமதேவர். அப்போதும், பாண்டுரங்கன் எந்தப் பதிலும் சொல்லவில்லை.
மீண்டும்மீண்டும் பாண்டுரங்கனிடம் வேண்டி அழுத நாமதேவர், “நீ இப்படி என்னைத் தண்டிக்க நினைக்கிறாய் என்றால், நானே என்னை மாய்த்துக்கொள்கிறேன்!” என்று சொல்லித் தன் தலையைப் பாண்டுரங்கனின் திருவடிவாரத்தில் உள்ள செங்கல்லில் மோதப் போனார். “நில்!” என்ற குரல். பாண்டுரங்கன் எதிரே நிற்கிறான். “நாமதேவா! வா! இருவருமாகப் பாயசத்தை உண்போம்!” என்றான் பாண்டுரங்கன்.
பாண்டுரங்கனும் நாமதேவருமாகச் சேர்ந்து பாயசத்தை உண்டார்கள். நாமதேவர் தன் கையால் சந்தனம் பூச, அதைத் தன் திருமார்பில் ஆனந்தமாக ஏற்றுக்கொண்டான் பாண்டுரங்கன். தனது மாலையை, நாமதேவருக்கு அளித்து வீட்டுக்கு அனுப்பி வைத்தான் பாண்டுரங்கன். குதூகலத்துடன் வீடு திரும்பினார் நாமதேவர். பாத்திரத்தைப் பார்த்த குணாபாய், “என்ன நாமதேவா? பாத்திரத்தில் பாயசம் எங்கே?” என்றாள். “பாண்டுரங்கன் உண்டுவிட்டான்!” என்றார் நாமதேவர்.
வெளியே சென்றிருந்த நாமதேவரின் தந்தை தாம்சேட்டி வீட்டுக்கு வந்தார். மகன் சொல்வதை அவரிடமும் சொன்னாள் குணாபாய். நாமதேவரே சாப்பிட்டு விட்டுப் பாண்டுரங்கன் உண்டதாகப் பொய் சொல்கிறாரோ என்று பெற்றோர்கள் சந்தேகப்பட்டார்கள்.“நாமதேவா கோயிலுக்கு வா! இறைவன் உண்மையிலேயே உண்டானா என்று பார்ப்போம்!” என்றார்கள். பெற்றோருடன் கோயிலுக்குச் சென்றார் நாமதேவர். அப்போது, அசரீரியாகப் பேசிய பாண்டுரங்கன், “தாம்சேட்டி! உங்கள் மகன் தந்த பாயசத்தை நான் உண்டது உண்மை. என் பக்தர்களோடு ஆனந்தமாக என் இஷ்டப்படி நான் விளையாட விரும்புவேன். அதற்காக அதற்கு இடையூறாக இருக்கும் மற்றவர்களை எல்லாம் உறங்க வைத்துவிடுவேன்.
அப்படித்தான் இன்றும் கோயிலில் எல்லாரையும் உறங்க வைத்துவிட்டு, நாமதேவரோடு இஷ்டப்படி உறவாடினேன்!” என்றான். தங்கள் மகனுக்குக் கிடைத்த அருளை எண்ணித் தாம்சேட்டியும் குணாபாயும் பேரானந்தம் அடைந்தார்கள்.அதுபோலத்தான், தன் பக்தர்களான தேவர்களுக்கு அமுதம் தந்து அவர்களை வாழ்வித்து அவர்களோடு உறவாடிய திருமால், அதற்கு இடையூறான அசுரர்களை எல்லாம் மோகினியின் அழகால் மயக்கித் தூங்க வைத்துவிட்டார்.
இப்படி மற்றவர்களை உறங்கச் செய்துவிட்டு, தன் இஷ்டப்படி அடியார்களோடு உறவாடுவதால், ‘ஸ்வவச:’ என்று திருமால் அழைக்கப்படுகிறார். ‘ஸ்வவச:’ என்றால் தன் இஷ்டப்படி அடியாரோடு விளையாடுபவர் என்று பொருள். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 467-வது திருநாமம்.
“ஸ்வவசாய நமஹ:” என்று தினமும் சொல்லி வந்தால், நம்மோடும் திருமால் விளையாடி நமக்கும் நல்லருள்புரிந்தருள்வார்.
—————–
468. வ்யாபினே நமஹ (Vyaapiney namaha)
வைணவக் குருவான ஆளவந்தார் திருவரங்கத்தில் இருந்து காஞ்சிபுரத்துக்கு எழுந்தருளினார். காஞ்சியில் வரதராஜப் பெருமாளுக்கு விசிறி வீசித் தொண்டாற்றி வந்த திருக்கச்சி நம்பிகள் மூலம் காஞ்சியில் யாதவப் பிரகாசரிடம் வேதாந்தம் பயிலும் ராமானுஜரைப் பற்றிய செய்திகளை அப்போது ஆளவந்தார் அறிந்தார். யாதவப் பிரகாசர் வேதங்களுக்குத் தவறான பொருள் சொல்வதையும், குருவை மிஞ்சிய சிஷ்யராக ராமானுஜர் அவரைத் திருத்திச் சரியான பொருளை உரைப்பதையும் திருக்கச்சி நம்பிகள் ஆளவந்தாரிடம் எடுத்துச் சொன்னார்.
இதைக் கேட்ட ஆளவந்தாருக்கு ராமானு ஜரைக் காணவேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டது. அதைத் திருக்கச்சி நம்பிகளிடம் சொல்லிக் கொண்டே, வரதராஜப் பெருமாள் திருக்கோயிலுக்குள் சென்றார் ஆளவந்தார். அங்கே கரியமாணிக்க வரதர் சந்நதிக்கு அருகில் திருக்கச்சி நம்பிகளோடு ஆளவந்தார் நின்று கொண்டிருந்தபோது, யாதவப் பிரகாசர் தன்னுடைய சீடர்களோடு கோயிலுக்குள்ளே நுழைந்தார்.
உடனே திருக்கச்சி நம்பிகள் ஆளவந்தாரிடம், யாதவப் பிரகாசரின் கோஷ்டியைச் சுட்டிக்காட்டி, “சுவாமி! அதோ ஒரு கோஷ்டி வருகிறதே! அதில் நெடுகி சிவந்து ஆஜாநுபாகுவாகி வருகிறவர்தான் ராமானுஜர்!” என்றார். அதாவது எதிரே வரும் கோஷ்டியில், நல்ல உயரத்தோடும், சிவந்த வண்ணத்தோடும், முழங்கால் வரை நீண்ட கைகளோடும் கூடியவராக இருக்கும் அந்த இளைஞரே ராமானுஜர் என்று ஆளவந்தாருக்கு அடையாளம் காட்டினார் திருக்கச்சி நம்பிகள்.
முதன்முறையாக ராமானுஜரைப் பார்த்த ஆளவந்தார், “ஆம் முதல்வன் இவன்!” என்று சொல்லி ராமானுஜரை வாழ்த்தினார். ஆம் முதல்வன் இவன் என்ற தொடர் நம்மாழ்வாரின் திருவாய்மொழிப் பாசுரத்தில் இடம்பெற்ற தொடராகும்.
திருமால் தமக்குப் புரிந்த அருளை நம்மாழ்வார் பாடும்போது;
“ஆம் முதல்வன் இவன் என்று தற்றேற்றி என்
நாமுதல் வந்து புகுந்த நல் இன்கவி
தூமுதல் பத்தர்க்குத் தான் தன்னைச் சொன்ன என்
வாய்முதல் அப்பனை என்றும் மறப்பனோ?”-என்று பாடுகிறார்.
“உலகில் உள்ள மக்களை எல்லாம் திருத்தி பக்தியில் ஈடுபடுவதற்குரிய தலைவன், முதல்வன் இவனே என்று அடியேனைத் தேர்ந்தெடுத்து, என் நாவிலே வந்து திருமால் அமர்ந்து கொண்டு, தன் பெருமையை அடியேன் மூலமாகப் பாடவைத்து, தமிழ்வேதமாகிய திருவாய்மொழியை உருவாக்கியுள்ளார்!” என்பது இப்பாடலின் கருத்து.
அதன் அடிப்படையில், “நம்மாழ்வாரை முதல்வர் என்று தேர்ந்தெடுத்து, அவர் நாவில் அமர்ந்து அவரை இயக்கிப் பாடல்கள் பாட வைத்தார் அல்லவா திருமால், அதே திருமால்தான் இப்போது ராமானுஜரை முதல்வர் என்று தேர்ந்தெடுத்து, இவர் மூலமாக உலகம் உய்வடைய வேண்டும் எனக்கருதி ராமானுஜரின் உள்ளத்திலேயே குடிவந்து அவர்மூலம்தான் விரும்புவனவற்றை நடத்திக்கொள்ளப் போகிறான்!” என்று ஆளவந்தார் திருக்கச்சி நம்பிகளிடம் கூறியிருக்கிறார்.
இதுபோலவே திருப்பாற்கடல் கடைந்த போதும், அமுதம் கிடைக்க வேண்டும் என்பதற்காக மத்தாகச் சுழலும் மந்தர மலைக்குள்ளும், கயிறாகக் கட்டப்பட்ட வாசுகி பாம்புக்குள்ளும், கடைகின்ற தேவர்களுக்குள்ளும், அசுரர்களுக்குள்ளும் திருமால் நுழைந்து, அவர்களுக்குள்ளே நிறைந்திருந்து அவர்கள் மூலம் அமுதம் கடைதல் என்னும் செயல் நடைபெறும்படிச் செய்தார்.
இப்படி அனைவருக்குள்ளும் நுழைந்து உள்ளே நிறைந்திருந்து அவர்களைச் செயல்பட வைப்பதால் திருமால் ‘வ்யாபீ’ என்று அழைக்கப்படுகிறார்.
‘வ்யாபீ’ என்றால் உள்ளே நுழைந்து நிறைந்திருப்பவர் என்று பொருள். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 468-வது திருநாமம்.
“வ்யாபினே நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்குள் எப்போதும் திருமால் எழுந்தருளியிருந்து அவர்களை வழிநடத்துவார்.
—————
469. நைகாத்மனே நமஹ (Naikaathmaney namaha)
ஆசுகவி வில்லூர் ஸ்ரீநிதி சுவாமிகள் அருளிய `அம்ருத சார்தூலம்’ என்ற துதியில் உள்ள ஒரு ஸ்லோகம்;
கும்பம் பூஜயிதும் ச ரக்ஷிதும் அமுதம் யோக்யம் புராரிம் வ்யதாத்
ஸர்வஜ்ஞம் த்ருதகங்கம் ஏனம் அனகம் கும்பேச்வரோயம் யத:
ஸ்வஸ்யாதோ பஹுபிஸ்ஸமை: கலயிதும் பூஜாம் ஸ சாலாபத:
ஸஞ்ஜாதோ பஹுதா ஸ்வயம் ஹி பரிதஸ் த்வாம் கும்பகம் ஸேவதே
திருப்பாற்கடலைக் கடையும் போது, முதலில் தேவர்கள் ஒரு குடத்தில் திருமாலை ஆவாகனம் செய்து வழிபட நினைத்தார்களாம். எந்த ஒரு செயலையும் தொடங்குவதற்கு முன்பு, வேத மந்திரங்களால் இறைவனை வழிபட்டு விட்டுச் செய்தால் முழு வெற்றி கிட்டும் என்கிற அடிப்படையில் தேவர்கள் மேற்கொண்ட முயற்சி இது.கும்பத்தினுள்ளே திருமாலை எழுந்தருளச் செய்த பின், யார் மூலமாக இந்தப் பெருமாளுக்குப் பூஜைகளை நடத்தலாம் என்று சிந்தித்த தேவர்கள், சிவபெருமானைத் தேர்ந்தெடுத்தார்களாம். ஏனென்றால், சிவபெருமான் வேதங்களில் வல்லவர்.மேலும், தலையில் கங்கையைச் சுமந்தபடி எப்போதும் தூய்மையாகவே இருப்பவர்.
இத்தகைய ஞான அனுஷ்டான சீலர் தானே ஆராதகராக இருக்க முடியும்? அந்தக் குடம்தான் கும்பகோணம் அல்லது குடமூக்கு என்று அழைக்கப்படும் திருத்தலம். அக்கும்பத்தில் உள்ள திருமாலைப் பூஜித்தபடியால் கும்பேஸ்வரர் என்று கும்பகோணத்தில் சிவபெருமான் பெயர்பெற்றார் என்று இங்கே குறிப்பிடுகிறார் நிதி சுவாமிகள். (கும்பகோணத்தின் சைவ ஸ்தல புராணங்களில் கூறப்பட்ட மற்றொரு கோணத்திலான கதையை நாம் இங்கே மறுக்கவில்லை. இந்தத் திருநாமத்தை விளக்கும் கோணத்திலும் அம்ருத சார்தூல சுலோகத்தின் அடிப்படையிலும் மட்டுமே இது விவரிக்கப் படுகிறது).
மேலும், குடத்துக்குள் உள்ள அமுதம் போல் கும்பகோணத்தின் மத்தியில் எழுந்தருளிய திருமால், ஆராவமுதன் என்று பெயர் பெற்றார். கண்களால் பருகும் திகட்டாத அமுதமாய் இருக்கும் ஆராவமுதப் பெருமானின் அழகில் சிவபெருமான் ஈடுபட்டார். இவரைப் பூஜிக்க வேண்டும் என்றால் ஒரு வடிவம் எடுத்துக்கொண்டு பூஜித்தால் போதாது, பலப்பல வடிவங்கள் கொள்வோம் என்று முடிவெடுத்தார். அதன்படியாக, ஆராவமுதப் பிரானின் திருக்கோயிலைச் சுற்றிப் பற்பல சிவாலயங்களிலே கோயில்கொண்டு ஆராவமுதனைச் சுற்றிச்சுற்றி வந்து பூஜித்து மகிழ்ந்தாராம் சிவபெருமான். இன்றும் கும்பகோணத்தில் ஆராவமுதன் சந்நதியைச் சூழ்ந்து பல சிவாலயங்கள் இருப்பதைக் காணலாம்.
இதைக் கண்ட ஆராவமுதன், “சிவபெருமானே! நீங்கள் பல வடிவம்கொண்டு என்னை ஆராதித்தீர்கள். நானும் இப்போது பல வடிவங்களில் காட்சிதந்து உங்களுக்கும் தேவர்களுக்கும் அருள்புரியப்போகிறேன்!” என்று சொல்லி, சார்ங்கவில் ஏந்திய சாரங்கபாணி எனும் ஆராவமுதாழ்வானாகவும், சக்ராயுதம் ஏந்தியபடி சக்ரபாணியாகவும், கோதண்ட பாணியாகிய ராமனாகவும், செண்டு என்னும் மாடு மேய்க்கும் கோல் ஏந்தி யஷ்டிபாணியான ஸ்ரீ ராஜகோபாலனாகவும் காட்சி அளித்தார்.
பாணி என்றால் திருக்கரம். இப்படி நான்கு வித திவ்யாயுதம் தரித்த திருக்கரங்களோடு, நான்குவிதப் பாணிகளாகத் தேவர்களுக்குக் காட்சி தந்து அருள்புரிந்து திருப்பாற்கடல் கடைய அருள்புரிந்தாராம் திருமால்.அவ்வாறே திருப்பாற்கடல் கடையும்போதும், மந்தரமலையைச் சுமக்க ஆமை வடிவம் கொண்ட கூர்ம மூர்த்தியாகவும், பாற்கடலைக் கடைவதற்காக அஜிதன் என்ற மூர்த்தியாகவும், அமுதைக்கொண்டு வர தன்வந்திரியாகவும், அசுரர்களை மயக்குவதற்காக மோகினியாகவும் பலப்பல வடிவங்கள் எடுத்து அமுதத்தைத் தேவர்களுக்குப் பெற்றுக் கொடுத்தார் திருமால்.
இப்படிப் பலப்பல வடிவங்கள் தரித்து அடியார்களுக்கு அருள்புரிவதால், `நைகாத்மா’ என்று திருமால் அழைக்கப்படுகிறார். ஆத்மா என்பது இவ்விடத்தில் உடலை (வடிவைக்) குறிக்கிறது.
ஏக என்றால் ஒன்று, நைக என்றால் பல. நைக + ஆத்மா = நைகாத்மா என்றால் பலப்பல வடிவங்கள் தரிப்பவர் என்று பொருள். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 469-வது திருநாமம்.
நைகாத்மனே நமஹ: என்று தினமும் சொல்லிவரும் அன்பர்களை எல்லாத் திசைகளில் இருந்து வரும் ஆபத்துகளை நீக்கி திருமால் எப்போதும் காத்தருள்வார்.
——————-
470. நைக கர்ம க்ருதே நமஹ (Naika Karma Kruthey namaha)
(திருநாமங்கள் 457 [ஸுமுக:] முதல் 470 [நைககர்மக்ருத்] வரை – தேவர்களுக்கு அமுதம் தந்த வரலாறு)
நவ திருப்பதிகளுள் மூன்று திருத்தலங்
களான திருப்புளிங்குடி, வரகுணமங்கை, ஸ்ரீவைகுண்டம் ஆகிய திருத்தலங்களை,
புளிங்குடி கிடந்து வரகுண மங்கை இருந்து, வைகுந்தத்துள் நின்று
தெளிந்த என் சிந்தை அகங் கழியாதே என்னை யாள்வாய்
–என்று திருவாய்மொழியில் நம்மாழ்வார் பாடியுள்ளார்.
திருப்புளிங்குடி திவ்யதேசத்திலே சயனித்து,
வரகுணமங்கை திவ்யதேசத்திலே அமர்ந்து,
ஸ்ரீவைகுண்டம் என்னும் திருத்தலத்திலே நின்று,
நம்மாழ்வாரைப் பெறுவதற்காகத் திருமால் காத்திருக்கிறாராம்.
இக்கருத்தை `ஆசார்ய ஹ்ருதயம்’ என்னும் நூலில், அழகிய மணவாளப் பெருமாள் நாயனார், போக்ய பாகத்வரை தெளிந்த சந்தைக்கு முன்னில் மூன்றிலும் பிரகடம் என்று விளக்குகிறார்.
அதாவது, ஒரு வீட்டில் சமையலறையில் சமையல் ஆகிக் கொண்டிருக்கிறது என்று வைத்துக்கொள்வோம்.
அந்த வீட்டில் உள்ள ஒருவருக்குப் பசி அதிகமாக இருந்தால், உணவு தயாராகிவிட்டதா என்று அறியும் ஆர்வத்தோடு அவர் அடிக்கடி சமையல் அறைப் பக்கம் சென்றுசென்று வருவார் அல்லவா?
அதிலும் ஆரம்பநிலையில், சமையல் அறைப் பக்கமாக வந்து நிற்பார்.
இன்னும் தாமதம் ஆகிக்கொண்டே இருந்தால், சமையல் அறையிலேயே அவர் அமர்ந்துவிடுவார்.
உணவு தயாராகி அதை உண்டபின் இங்கிருந்து எழுவோம் என்ற எண்ணத்திலே அமர்ந்திடுவார்.
இன்னும் தாமதம் ஆகிக் கொண்டே போனால், சமையல் அறையிலேயே படுத்துவிடுவார்.
உணவு வந்து அதை உண்ட பின் தான் எழுவேனே ஒழிய, அதுவரை இங்கிருந்து நகருவதில்லை என்ற உறுதியால் சயனித்துவிடுகிறார்.
இதைப்போலத்தான் நம்மாழ்வார் என்ற ஜீவாத்மாவைத் தனக்கு உணவாகப் பெறவேண்டும் என்று திருமால் ஆசைப்பட்டாராம்.
அந்த நம்மாழ்வாரின் பக்தியானது பரபக்தி, பரஞானம், பரம பக்தி என்று அடுத்தடுத்த நிலைகளைக் கடந்து, பக்குவப்பட்டுச் சமைக்கப்பட்டு வரவேண்டும் என்று திருமால் காத்திருக்கிறாராம்.
நீண்ட நாள் பசியில் வாடியவர் உணவை விரைந்து பெறத் துடிப்பது போல், திருமாலே எனக்கு எல்லாம் என்று சொல்லும் உயர்ந்த பக்தரைத் தேடிக்கொண்டிருக்கும் திருமால்,
நம்மாழ்வாரைக் கண்டவாறே அவரை விரைந்து பெற வேண்டும் என்று வேட்கை கொண்டாராம்.
அந்த வேட்கையில்தான், முதலில் திருநெல்வேலிக்கு அருகிலுள்ள ஸ்ரீவைகுண்டத்தில் வந்து நின்றாராம் திருமால்.
ஆழ்வார் திருநகரி புளிய மரத்தின் அடியில் சமைக்கப்பட்டுவரும் நம்மாழ்வார் என்ற தன் உணவுக்குப் பரமபக்தி முழுமை பெற்றுவிட்டதா என்று பார்த்தாராம்
திருமால். ஆழ்வாரின் பக்தி நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்தாலும் கூட, அவரை விரைந்து அடைய வேண்டும் என்ற துடிப்பால்,
திருமால் விஜயாசனப் பெருமாளாக வரகுணமங்கையிலே அமர்ந்து கொண்டாராம்.
இன்னும் சற்று தாமதம் ஆகவே, திருப்புளிங்குடியிலே காய்சின வேந்தனாக வந்து பள்ளி கொண்டு, ஆழ்வாரைப் பெறாமல் இங்கிருந்து நகருவதில்லை என்று உறுதியோடு காத்திருந்து ஆழ்வாரைப் பெற்றாராம்.
ஆக, தன் பக்தர்களுக்கு அருள்புரிய வேண்டும் என்பதற்காக நிற்றல், இருத்தல், கிடத்தல் உள்ளிட்ட பல செயல்களைச் செய்கிறார் திருமால்.
அவ்வாறே திருப்பாற்கடலைக் கடைந்து தேவர்களுக்கு அமுதைக் கொடுப்பதற்காகப் பற்பல செயல்களைச் செய்தார் திருமால்.
மந்தர மலையைச் சுமந்து, தானே திருப்பாற்கடலைக் கடைந்து,
தன்வந்தரியாக அமுதைக் கொண்டு வந்து, மோகினியாக அசுரர்களை மயக்கி –
இப்படிப் பற்பல செயல்களைச் செய்து தேவர்களுக்கு அமுதைப் பெற்றுத் தந்தபடியால் அமுதம் தந்த திருமால் நைக கர்ம க்ருத் என்று அழைக்கப்படுகிறார்.
கர்ம என்றால் செயல், க்ருத் என்றால் செய்பவர்,
ஏக என்றால் ஒன்று, நைக என்றால் பல.
‘நைக கர்ம க்ருத்’ என்றால் பலப்பல செயல்களைச் செய்பவர் என்று பொருள். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 470-வது திருநாமம்.
“நைககர்மக்ருதே நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களைப் பலவிதங்களில் எப்போதும் திருமால் காத்தருள்வார்.
———–——————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக்குடந்தை டாக்டர்: உ.வே.வெங்கடேஷ் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பராசர பட்டர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பீஷ்மர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வியாச பகவான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்