Archive for January, 2022

ஸ்ரீ பிள்ளைப்பெருமாளையங்கார் வரலாறு–

January 22, 2022

ஸ்ரீ பிள்ளைப்பெருமாளையங்கார் வரலாறு

*அழகிய மணவாளதாச ரென்கிற திவ்வியகவி பிள்ளைப் பெருமாளை யங்கார்,
(கிருஷ்ணனுடைய குழந்தைத் திருநாமமாகிய பிள்ளைப் பெருமாளென்னும் பெயரை இடப் பெற்ற ஐயங்கா ரென்று
இப்பெயர்க்குப் பொருள் கூறுவர். ஐயங்காரென்பது, ஸ்ரீவைஷ்ணவப் பிராமணர்க்குக் குறியாக வழங்கும்.
அழகிய மணவாளனென்பது, ஸ்ரீரங்கத்தில் எழுந்தருளி யிருக்கின்ற திருமாலின் திருநாமம்;
அப்பெருமானுக்கே அடியவராயிருந்ததனால், இவர் அழகிய மணவாளதாச ரெனப் பெயர் பெற்றனர்.)
சோழநாட்டில் திருமங்கை யென்னுந் திருப்பதியில் பிராமணவரு ணத்தில் ஸ்ரீவைஷ்ணவ சமயத்தில் அவதரித்து,
நல்லாசிரியர்பக்கல் தென் மொழியில் தொல்காப்பியம் முதலிய அரிய பெரிய இலக்கண நூல்களையும்
பழைய சங்கச் செய்யுள்களையும் அக்காலத்து வழங்கிய மற்றை நூல்களையும் ஐயந்திரிபற ஓதி உணர்ந்து,
இங்ஙனமே வடமொழியிலும் வேதம் வேதாங்கம் வேதாந்தம் முதலிய சகல கலைகளிலும் வல்லவராகி,
மற்றும் தமது ஸ்ரீவைஷ்ணவ சமயத்திற்கு உரிய சம்பிரதாயக் கிரந்தங்க ளெல்லாவற்றையுங் கற்று அவற்றிலும் அதிநிபுணராய்,
அடக்கம் முதலிய நற்குணங்களெல்லாம் ஒருங்கே அமையப் பெற்று, ஆழ்வார்களருளிச் செயல்களில் ஆழ்ந்து ஈடுபடுபவராய்,
திருவரங்கம் பெரியகோயிலி லெழுந்தருளி யிருக்கின்ற நம் பெரிய பெருமாளுடைய திருவடித் தாமரைகட்கு
மிக்க பக்திப் பேரன்புபூண்டு ஒழுகுமவராய் அமர்ந்திருந்தனர்.
(இவரை ‘தென்கலை வைணவர்’ என்பர், புலவர் புராண நூலுடையார் )

அந்நாளில், அந் நாட்டில் ஆண்டு கொண்டிருந்த அரசன்,
(இவ்வரசனைப் பெரிய திருமலை நாயக னென்பர் ஒரு சாரார்; அது, காலக் கணக்குக்கு ஒத்துவராது)
அவரது நற் குணங்களனைத்தையும் அறிந்து,
‘இக்குணங்களெல்லாம் ஒருங்கு அமைவது அருமை அருமை!’ என வியந்து, அவரைத் தனது சம்ஸ்தானத்திற்கு வரவழைத்து
அவர்க்குத் தனது இராஜாங்க காரியங்களிற் சிறந்ததோர் உத்தியோகங் கொடுத்து, அவரைத் தன் சமீபத்தில் வைத்துக் கொண்டனன்.
அவர் உத்தியோகத்தை மேற்கொண்டிருந்தபோதும் விஷ்ணு பக்தி விஞ்சி நின்றார்.

அப்பொழுது ஒருநாள், இராஜ சம்ஸ்தானத்தில் உத்தியோகம் நடத்து கின்றவர்களின் நடுவே தாமும் உடனிருந்து
காரியஞ்செய்துவருகிற அவர், தமது தோளி லணிந்த உத்தரீயத்தை இரண்டு கையிலுங்கொண்டு ‘கிருஷ்ண கிருஷ்ண’ என்று தேய்த்தனர்.
அது கண்ட பலரும் ‘ஐயங்காரே! நீர் நுமது உத்தரீயத்தை இங்ஙனம் ஏன் செய்தீர்?’ என வினவ,
அவர், ‘திருவரங்கம் பெரியகோயிலில் நம்பெருமாள் திருத்தேரி லெழுந்தருளித் திருவீதியிலுத்ஸவங்கண்டருளுகிறபோது
அருகு பிடித்த கைப்பந்தத்தின் சுவாலை தாவியதனாற் பற்றி யெரிகின்ற திருத்திரையை அவித்தேன்’ என்றார்.

அது கேட்டு அவர்கள் ‘கோயிலில் நம்பெருமாள் திருத்தேருத்ஸவங் கண்டருளு கிறது உமக்கு இங்ஙன் எங்ஙனே தெரிந்தது?’
என்று நகைத்து ‘ஏதோ இவர்க்கு இவ்வாறு திகைப்பு உண்டாயிருக்கிறது: இது இராஜ சேவைக்கு மிக விரோதமாகுமே!’ என்று
அவர் விஷயத்தில் இரக்கமுற்றவர்களாய், நடந்த செய்தியை அரசனுக்கு அறிவித்தனர். இது நிற்க;

கோயிலில் திருத் தேரிலே திருத் திரையிற் பந்தத்தின் சுவாலை தாவி யெரியும் போது அருகிற் பெருமாளைச் சேவித்து நின்ற
ஐயங்கார் கைகளால் திரையைத் தேய்த்துத் தீயை அவித்திட்டதாக அர்ச்சகர் முதலிய சந்நிதி கைங்கரியபரர்கள் கண்டு
உடனே தோஷ பரிகாரஞ்செய்து திருத் தேருத்ஸவத்தை நடத்தினார்கள்.

பின்பு இவ்வரலாறுகளைச் செவி யுற்றறிந்த அரசன் ஆச்சரிய பரவசனாய் ஐயங்காரை நோக்கி
‘திருத்தேருத்ஸவத்திற்கு எங்ஙனே போயினீர்!’ என்ன,
ஐயங்கார் ‘எனக்கு மாநஸாநுபவமே யல்லது கோயிலுக்குப் போனதில்லை’ என,
அரசன் ‘ரதோத்ஸவத்தினன்றுநீர் அங்கு இருந்ததாகப் பலர் சொல்வது பொய்யோ?’ என்ன,
அப்போது இவர் இங்கிருந்தபடியே உத்தரீயத்தை ‘கிருஷ்ண கிருஷ்ண’ என்று தேய்த்தது கண்ட சிலர்
‘இவர் அப்பொழுது இங்கே தான் இருந்தனர்’ என்று உண்மை கூற,

அரசன் ‘நன்று!’ என்று அத் தெய்விகத் திருவருட் செயலைக் குறித்து ஆச்சரியப்பட்டது மன்றி அன்றை யிரவு நித்திரையில்
தான் நம்பெருமாள் சந்நிதிக்குப் போனதாகவும், தென் திருக்காவேரியில் ஐயங்கார் நீராட்டஞ்செய்து நிற்கக் கண்டு
அவருடனே சந்நிதிக்குப் போய்ப் பெரிய பெருமாளைச் சேவித்து மீளும் போது ஐயங்காரைக் காணாது மயங்கியதாகவுங் கனாக் கண்டு,
கண் விழித்து, பொழுது விடிந்தவுடனே ஐயங்காரை வருவித்து,
‘நீர் மகாநுபாவரும் நம் பெருமாளுக்கு அந்தரங்க பக்தருமாக இருக்கின்றதனால், இனி என்னிடம்
உத்தியோகஞ்செய்தற்குச் சிறிதுந்தக்கவரல்லீர்; அடியேன் இதுவரையிலுந் தேவரீர் பெருமையை அறியாது செய்த அபராதங்களை
யெல்லாம் பொறுத்து, அடியேன் செய்யவேண்டும் பணிவிடையை நியமித்தருளவேண்டும்’ என்று வேண்ட,
ஐயங்கார் ‘பெரியகோயிலில் எனக்கு நிரந்தரவாசங்கிடைக்கும்படி செய்யவேண்டும்’ என்ன,
அரசன் அன்றுதொடங்கிக் கோயிலில் அவர்க்கு ஓர் இருப்பிடம் அமைப்பித்து,
தளிகைப் பிரசாதமும் அவர்க்குக் கிடைக்குமாறு செய்து அனுப்பி விட்டனன்.

அவரும், அவ்வாறே எழுந்தருளியிருந்து, திருவரங்கத்தந்தாதி, திருவரங்கத்துமாலை, திருவரங்கக்கலம்பகம்,
ஸ்ரீ ரங்கநாயகரூசல், திருவேங்கடமாலை, திருவேங்கடத்தந்தாதி, அழகரந்தாதி, நூற்றெட்டுத்திருப்பதியந்தாதி என்னும்
எட்டு நூல்களையும் (இந்த எட்டுநூல்களும், ‘அஷ்டப்பிரபந்தம்’ எனவும், ‘ஐயங்கார்பிரபந்தம்’ எனவும் வழங்கும் )
பரப் பிரஹ்ம விவேகம் முதலிய பல நூல்களையும் அருளிச்செய்து, பலநாள் வாழ்ந்திருந்தனர்.

இவர் திருவேங்கடமாலை முதலிய நூல்க ளியற்றியதைக் குறித்து ஒருசாரார் வழங்குவதொரு வரலாறு வருமாறு:-
இவர் ஸ்ரீரங்கநாதனுக்கே தொண்டராகி அப் பெருமானை யன்றிப் பிறிதொரு தெய்வத்தை மறந்துந்தொழாத மனவுறுதியுடையவராய்,
அப் பரமன் விஷயமாகவே அந்தாதியும் மாலையும் கலம்பகமும் ஊசலும் பாடிய பொழுது,
திருவேங்கடமுடையான் இவர் வாயால் தாம் பிரபந்தம் பாடப்பெற விரும்பித் தமது உண்மை வடிவத்துடன்
இவரது கனவில் தோன்றி ‘வேங்கடத்தின் விஷயமாகச் சிலபிரபந்தம்பாடுக’ என்று கட்டளையிட,
இவர் அதற்கு இணங்காமல் ‘அரங்கனைப் பாடிய வாயாற் *குரங்கனைப் பாடேன்’ என்றுகூறி மறுக்க,
(திருவேங்கடமுடையானைக் குரங்கனென்றது, குரங்குகளுடன் மலையில் வாழ்தலால்;
“மந்தியாய் வடவேங்கடமாமலை,” “வானரமும் வேடுமுடை வேங்கடம்” என்றார் ஆழ்வார்களும்.
குரங்குகள் தங்களுக்கு என்று வசிக்கும் இடம் இல்லாமல் கிளைக்கு கிளை தாவுவது போல்
ஆஸ்ரிதர்களைப் பிடிக்க முயன்று அவர்கள் திரு உள்ளம் தேடி திரிபவன் இவனே என்றவாறு )

திருவேங்கடமுடையான் எங்ஙனமாவது இவர்வாயாற் பாடல்பெற அவாக் கொண்டதுமன்றி,
எல்லாத் திருப்பதிகளிலும் எழுந்தருளியிருக்கின்ற எம்பெருமான் ஒருவனே யென்று இவர்க்குத் தெரிவித்து
இவர் கொண்டுள்ள பேத புத்தியை அகற்றவுங் கருதியதனால், இவர்க்கு உடனே கண்டமாலையென்னுங் கொடியநோய் உண்டாகும்படி செய்ய,
அந்த வியாதியால் மிக வருந்திய இவர் அதன்காரணத்தை உணர்ந்து கொண்டு அப்பெருமான் பக்கல் தாம் அபசாரப்பட்ட அபராதம்
தீருமாறு உடனே திருவேங்கடமாலை திருவேங்கடத்தந்தாதி என்னும் பிரபந்தங்களை இயற்றி அப்பெருமானைத் துதிக்க,
அது பற்றித் திருவுள்ளமுவந்த திருவேங்கடமுடையான் உடனே இவரெதிரில் எழுந்தருளிக் காட்சிதந்து அநுக்கிரகிக்க,
(திருவேங்கடமுடையான் [ஸ்ரீநிவாசன்] ஐயங்கார்க்குச் சேவை சாதித்த இடம் – கோயிலில் சலவைக் கல்மண்டபப் பிராகாரமென்கிற
உட் பிரகாரத்தில் தென் கிழக்குப்பக்கத்தில் என்பர் )
அதனால் இவர் அப்பொழுதே அந்நோய் நீங்கப் பெற்றவராகி, பின்பு, அவ்வடமலைக்கு ஈடான தென்மலையின் விஷயமாக
அழகரந்தாதி பாடி, அப்பால் தமது பேத புத்தி யொழிந்தமை நன்கு விளங்க நூற்றெட்டுத் திருப்பதி யந்தாதி பாடினர்.

பரமத நிரஸநம் பண்ணி ஸ்வமதஸ்தாபநஞ் செய்தற் பொருட்டு இவர் பாடிய பாடல்களின் தொகுதியே,
பரப் பிரஹ்ம விவேக மெனப்படுவது.

விசுவரூப தரிசந பசு சம்வாதமென்னும் மறுபெயரை யுடைய பரப்ரஹ்ம விவேக மென்னும் நூலின் உரைத் தொடக்கத்தில்
அந்நூலின் வரலாற்றைக் குறித்து எழுதியுள்ள விவரத்தை அடியிற் காண்க:-

“திருவரங்கத்தமுதனார் திருப் பேரனாராகிய அழகிய மணவாளதாச ரென்கிற திவ்விய கவி பிள்ளைப் பெருமாளை யங்கார்
நம் பெருமாள் முதலிய சில திவ்விய தேசப்பெருமாள் களின் மீது தமிழ்ப் பிரபந்தங்கள் பல செய்தருளுங்காலத்தில்,
தமிழிலக்கண விலக்கியங்களைக் கற்றுவல்ல சிறந்த புலவர்கள் பலரும் இவருடைய கவிகளிற்
சொல் நோக்கு பொருள் நோக்கு முதலியவற்றைக் கண்டுங் கேட்டுங் கொண்டாடுவதை ஆனைக் காவிலிருக்கும்
ஆகமவாதிகள் கேள்விப்பட்டு ‘இப் படிப்பட்ட வித்துவானால் நம்முடைய ஜம்புகேசுவரச் சிவபெருமான்
மீது ஒரு பிரபந்தம் பாடுவித்துக்கொள்ளவேண்டும்’ என்னுங் கருத்துடையவர்களாய்
ஒருநாள் இவருடைய திருமாளிகையில் வந்து தங்கள்கருத்தை வெளியிட, அதுகேட்டருளி,

திரிகரணத்தாலுந் தேவ தாந்தரத்தைப் பற்றற விட்ட சுத்த சத்துவ தொண்டக் குல ஸ்ரீவைஷ்ணவ சிகாமணியாகிய ஐயங்கார்
புன்னகை கொண்டு ‘யாம் அரங்கனைப்பாடின வாயினால் மற்றொரு *குருங்கனைப் பாடுவதில்லையே’ எனத்
திருவாய் மலர்ந்தருள,

(குரங்கம் – மான்: வடசொல்; அதனை இடக்கையிலேந்தியுள்ளவன், குரங்கன்: எனவே, சிவபிரானாம்.
அன்றி, குரங்குமுகமுள்ள நந்திகேசுரனை அடிமையாகவுடையனாதல்பற்றியும்,
அநுமானாக அவதரித்தவ னாதல்பற்றியும், சிவபிரானைக் குரங்க னென்றன ரென்னலாம்.
கு – குற்சிதமான, ரங்கன் – அம்பலத்தையுடையான் என்றுங் கூறுவர்)

கேட்டு, ‘குளிக்கப் போய்ச் சேற்றைப் பூசிக் கொள்ளுமவரைப் போல நம்முடைய பரமசிவத்தின் மீது
பாடல் பெற்றுக் கொள்ள வந்து குரங்கனென்னுஞ் சொல்லைப் பெற்றுக் கொண்டோமே’ என்று மனம் பொறாதவர்களாய்ச்
சடக்கென எழுந்திருந்து, ‘எவ்வகையினாலாவது உம்முடைய வாக்கினால் எங்கள் பரம சிவத்தின் மீது
ஒரு பாடலாவது பெற்றுக் கொள்ளுகிறோம்’ என்று சபதங்கூறித் தங்களிருப்பிடத்திற்குப் போய் அதற்கு வகை தேடிக் கொண்டிருந்தனர்கள்.

இப்படியிருக்கச் செய்தே, கோயிலில் உதயத்தில் திருக் காப்பு நீக்கி நம்பெருமாளுக்குச் செய்யுங் கைங்கர்யமாகிய
விசுவ ரூபதரிசநஞ் செய்விக்கப் போகிற சமயத்திற் கொண்டு போய் அர்ச்சகர் சமர்ப்பிக்கிற பொருள்களில் ஒன்றாகிய
கபிலை யென்கிற பசுவானது ஒருநாள் ஆனைக்காவைச் சார்ந்த ஒருபுலத்தில் மேய அதை மேற்கூறிய ஆகமவாதிகள் பிடித்து
இதனால் தாங்கள் கொண்டகருத்தை ஈடேற்றுவித்துக் கொள்ளலாமென நினைத்துக் கட்டி வைத்தனர்கள்.

அன்று இராத்திரி கோயிலில் அர்ச்சகர் முதலாயினோர் விசுவரூப தரிசந பசுவைக் காணாமல் தேடிக் கொண்டு போகையில்,
ஆனைக்காவி லிருக்கக் கண்டு ஆகமவாதியர்களைப் பசுவைக் கொடுக்கும்படி கேட்க,
அவர்கள் ‘உங்களுடைய பிள்ளைப் பெருமாளையங்கார் வந்து கேட்டால் தருகிறோம்’ என்று சொல்ல,
அதுகேட்டு, விசுவரூப தரிசநத்துக்கு ப்ராதக் காலத்தில் வேண்டுமே யென்னும் எண்ணத்தினால்
அதை மறுத்து ஒன்றும் பேசாமல் ஒத்துக் கொண்டு, பரபரப்புடன் சென்று ஐயங்காரிடத்தில் விண்ணப்பஞ்செய்ய,

“மறந்தும்புறந்தொழாமாந்தர்” என்கிறபடியே அந்தப் பிரபந்நநிஷ்டாநுபவராகிய வைதிக வைஷ்ணவரானவர் அதுகேட்டருளி,
‘துஷ்கர்ம காலம் தவிர மற்றைக் காலத்தில் ருத்திர பூமியில் அடிவைப்பது கூடுமோ?
அன்றியும், அவ்வாலயத்திற் பிரவேசிப்பது வைதிக வைஷ்ணவனுக்குத் தக்கதன்று:
‘ஆனை துரத்தி வந்தாலும் ஆனைக்காவில் நுழையாதே என்கிற பழமொழியையேனும் கேட்டதில்லையோ?
ஆதலால், அந்த ஆகமவாதியர்களைக் கோயிலிடத்தில் அழைத்துவாருங்கள்’ எனச் சொல்லினர்.

அவ்வாறே அந்த ஸ்ரீவைஷ்ணவர்களும் ஆனைக்காவிற் சென்று அவர்களுக்குச் சொல்ல, எவ்வகையாலாயினும்
ஐயங்காரால் ஒருபாடல் பெற்றுக் கொள்ள எதிர்பார்த்துக் கொண்டிருந்த அவர்களும்,
‘நம்முடைய எண்ணம் நிறைவேறுங் காலம் இதுதான்’ என்று அதற்கு ஒத்துக்கொண்டு,
அதிக சந்தோஷத்தோடு அக் கபிலையையும் ஓட்டிக்கொண்டு, ஜயவிஜயர்கள் எழுந்தருளியிருக்கும்
சந்தநு மகாராஜமண்டபத்தில் வந்து சேர்ந்தனர்கள்.

ஐயங்காரும் அவ்விடத்தில் எழுந்தருளி, ‘கபிலையை விடுவதற்கு உங்களுடைய கருத்து ஏது?’ என்று கேட்டருள,
அவர்கள் ‘உம்முடைய வாக்கால் ஜம்புகேசுரச்சிவபெருமானாகிய எங்கள் தெய்வத்தின் மீது ஒருபாடல் பாடித் தருவீரேல்,
விசுவரூப தரிசனப் பசுவை நாங்கள் விடுவதற்கு யாதோராடங்கமு மில்லை’ என்று சொல்லினர்.
“பொய்ம்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த, நன்மை பயக்கு மெனின்” என்கிற குறளின்படி
அவர்கள் சொன்னதற்கு இணங்கினவரைப் போல நடித்து ஐயங்கார்
‘நம்பெருமாளுக்கு விசுவரூப தரிசனத்திற்கு மற்றாநாள் பிராதக் காலத்தில் ஆடங்கமாகிறபடியால்,
அப்பசுவை விடுவீர்களாகில், உடனே யாம் பாடுகிறோம்’ என,
‘எங்கள் சிவபெருமான்விஷயமாக நீர்பாடுவது யதார்த்தமாகில், அப்பாட்டில் இரண்டொரு சீரையேனும் முன்னே,
சொல்லுவீராகில் பசுவை விடுகிறோம்’ என்று அவர்கள் சொல்ல,
ஐயங்காரும் புன்னகைகொண்டு அவ்வாறே “மங்கை பாகன்” என்று முதலிரண்டு சீரை அருளிச் செய்த மாத்திரத்தில்,
அப்பசுவை விட்டனர்கள்.

உடனே ஐயங்காரும் முன் தாம் சொன்ன சீரைத் தொடங்கி,

“மங்கைபாகன் சடையில்வைத்த கங்கை யார்பதத்துநீர்
வனசமேவு முனிவனுக்கு மைந்தனான தில்லையோ
செங்கையா லிரந்தவன் கபால மாரகற்றினார்
செய்யதாளின்மல ரரன்சிரத்தி லான தில்லையோ
வெங்கண்வேழ மூலமென்ன வந்த துங்கள்தேவனோ
வீறுவாணனமரி லன்று விறலழிந்த தில்லையோ
அங்கண்ஞால முண்டபோது வெள்ளிவெற்பகன்றதோ
ஆதலா லரங்கனன்றி வேறுதெய்வ மில்லையே.

ஆதலால், சீவகோடியிற் சார்ந்தவரேயொழிய உங்கள் தேவதை பரமாத்மா வல்லர்” என்று இச்செய்யுளைச் சொல்லி
‘உலகத்துக்குப் பலதெய்வங்கள் உண்டோ? ஒரு தெய்வமேயாம்; அத்தெய்வம் திருவரங்கனே யல்லாமல் வேறில்லை’ என,

அது கேட்டு அவ்வாகமவாதியர்கள் ‘கிணறுவெட்டப்பூதம் புறப்பட்டாற்போல் இது என்ன விபரீதமாய் முடிந்ததே!’ என்று
சினங்கொண்டு அந்த ஆகமவாதிகளுக்குட் சிறந்த நிஷ்டாநுபவர்களாகிய சிலவித்வான்கள் வேதவிருத்தமாகிய
ஆகமபுராணங்களைக்கொண்டு புலவர் பெருமானாகிய ஐயங்காரோடு வாதுசெய்யத் தொடங்கினர்கள்.

அவ்வாதி சைவவித்வான்கள் கேட்ட வினாவுக்கு விடை சொல்லியருளிய உத்தரங்களைப் பின்னுள்ளோரும் தெரிந்துகொள்ளும்படி
பரமகாருணிகராகிய ஐயங்கார் வெள்ளைப்பாவாற் கூறினார்.
ஆதிசைவசமயநிஷ்டாநுபவர்களாகிய வித்துவான்கள் சொல்லிக் கொண்டுவந்த பிரச்நைகளுக்கு
வடமொழியிலும் தென்மொழியிலும் தெய்வப்புலமையுள்ள வீரவைஷ்ணவசிகாமணியாகிய ஐயங்கார் அருளிச்செய்த
விடைகளை மறுத்துச்சொல்ல ஒன்றுந் தோன்றாமல் அவ்வாதியர்கள் ‘ஓம்’ என்று தங்கள்தங்களிருப்பிடத்துக்குச் சென்றனர்கள்.”

‘திருநறையூர் நம்பி மேக விடு தூது’ என்றநூலும் இவர்செய்த தென்பர்.

இவர்செய்தனவாகத் தனிப்பாடல்களும் சில வழங்குகின்றன.

பின்பு இவர் ஒருநாள் தமது திருவடிகளிற் சம்பந்த முடையவர்களை நோக்கி
‘நமக்கு அந்திமதசை பசுவினாலே நேரிடும்’ என்று சொல்லி அப்படியே சக்கரவர்த்தித் திருமகனைச் சேவித்துக்கொண்டு
ஸ்ரீவைகுண்டநாதர் சந்நிதியிற் சேவிக்கும்பொழுது, ஒரு நொண்டிப்பசு வந்து தவறி இவர்மேல் விழ,
அது விழுந்ததனாலாகிய துன்பத்துடனே இவர்

“துளவ துளவவெனச் சொல்லுஞ் சொற் போச்சே
அளவி னெடுமூச்சு மாச்சே – முளரிக்
கரங்கால் குளிர்ந்ததே கண்ணும் பஞ்சாச்சே
இரங்கா யரங்கா வினி ”

என்று சொல்லித் திருநாட்டை யலங்கரித்தனர்.

இவர், சிலேடை திரிபு யமகம் அந்தாதி கலம்பகம் ஊசல் முதலியன விசித்திரமாகப் பாடுவதில் ஒப்புயர்வில்லாது மிக வல்லவர்;
இது, இவர் செய்துள்ள நூல்களால் இனிது விளங்கும்:
அன்றியும், ‘திவ்வியகவி’ என்ற இவரது பட்டப்பெயர்தானே இதனை வற்புறுத்தும்.
இவர் இயற்றிய திருவரங்கக்கலம்பகம் – வெண்பாப்பாடுதலில் வல்ல புகழேந்தியும்,
விருத்தம்பாட வல்ல கம்பரும், அந்தாதிக்கு எடுத்த ஒட்டக்கூத்தரும்,
கலம்பகத்திற்கென்று சிறப்பித்துச் சொல்லப்படுகின்ற இரட்டையர்களும்,
சந்தம்பாடுதலிற் சமர்த்தரான படிக்காசுப்புலவரும் முதலிய மகாவித்வான்கள் சேர்ந்து செய்தாலொத்த சிறப்பினை யுடையது.

இங்ஙன மிருக்க, ஒருசாரார் ‘ஐயங்கார் அம்மானையில் அடி சறுக்கினார்’ என்று குறை கூறுவது,
சிறிதும் சரியன்று; திருவரங்கக்கலம்பகத்திலுள்ள “தேனமருஞ்சோலை” என்ற தொடக்கத்து அம்மானைச் செய்யுளினது ஈற்றடியின்
பிற்பகுதியிற் பொருந்திய சிலேடைப் பொருள் நயத்தையும் சரித்திர வமைப்பையும் ஆழ்ந்த கருத்தையும் ஊன்றி நோக்குமிடத்து,
அங்ஙனம் இழித்துரைப்பாரது பழிப்புரை வெற்றுரையே யா மென்பது தெற்றென விளங்கும்:

அன்றியும், அக்கூற்று அழுக்காற்றினா லாகியதேபோலும;
அந்த அம்மானைச் செய்யுளின் அருமை பெருமைகள் இங்கு விரிப்பிற் பெருகும்.
இன்னும், இவர் செய்துள்ள பிரபந்தங்களெல்லாம், ஸ்ரீவைஷ்ணவசம்பிரதாயத்தில் உள்ள நம்மாழ்வார் முதலிய
ஆழ்வார்கள் பன்னிருவர் அருளிச்செய்த திவ்வியப்பிரபந்தங்களின் ஸாரார்த்தங்களும்,
நாதமுனிகள் முதலிய ஆசாரியர்களுடைய அருளிச்செயல்களின் விசேஷார்த்தங்களும் பொதிந்திருத்தல் மாத்திரமேயன்றி,
“சொல்நோக்கும் பொருள்நோக்கும் தொடைநோக்கும் நடைநோக்கும் துறையின்நோக்கோடு எந்நோக்குங் காண இலக்கிய” மாகியும் இருப்பன.

இவர், ஸ்ரீவைஷ்ணவவிசிஷ்டாத்வைத மதஸ்தாபநாசாரியரான ஸ்ரீ பகவத்ராமாநுஜாசார்யரென்கிற
ஸ்ரீபாஷ்யகாரரது அந்தரங்கசிஷ்யரான கூரத்தாழ்வானுடைய குமாரராகிய ஸ்ரீபராசரபட்டரது சிஷ்ய ராதலாலும்,
அந்தப்பட்டரது திருவவதாரம் சாலிவாகனசகாப்தம் ஆயிரத்துநாற்பத்தைந்தில் என்று தெரிதலாலும்,
இவரதுகாலம் இற்றைக்குச் சற்றேறக் குறைய எழுநூற்றறுபது வருஷத்துக்குமுன்ன ராகின்றது;
(இப்பொழுது நிகழ்கிற சாலிசகம் – 1836.)
இவரை ஸ்ரீபாஷ்யகாரரது ஸ்ரீபாதத்தி லாசிரயித்தவர்களுட் பிரதானரும்,
இராமாநுசநூற்றந்தாதி அருளிச்செய்தவருமாகிய திருவரங்கத்தமுதனாரது திருக்குமார ரென்று பலரும்
திருப்பேரனாரென்று சிலரும் வழங்கிவருவதும், கீழ்க்கூறிய காலக்கணக்கையே வற்புறுத்தும்.

இவர்பேரனார், ஸ்ரீரங்கநாயகியாரூசல்செய்த கோனேரியப்பனையங்கார்.

இன்னும் இவரது வைபவவிசேஷங்களை வல்லார்வாய்க் கேட்டு உணர்க.

அடியில் வருகிற புலவர்புராணச் செய்யுள்கள் இங்குநோக்கத் தக்கவை:-

(1) ” தென்கலைவயிணவன் செகமெலாம்புக
ழின்கவிப்பிரபலன் இணையில்பட்டர்தம்
நன்கணத்தினர்களிலொருவன் நாரணன்
பொன்கழலன்றி மற்றொன்றும் போற்றிலான்.

(2) மருவழகியமணவாளதாசனென்
றொருபெயர்புனைந்தவன் உரைக்குமோர்சொலாற்
பொருள்பலதருங்கவிபொறிக்கும்பொற்பினிற்
பெருமிதனெனப் பலர்பேசும் பெற்றியான்.

(3) செவ்வியசொற்சுவைசிறிதுந்தேர்ந்திடா
தவ்வியப்போர்பொருமவர்களன்றிமற்
றெவ்வியற்புலவருமிசைந்துநாடொறுந்
திவ்வியகவியெனச்செப்புஞ்சீர்த்தியான்.

(4) தேனையுமமுதையுமனையதீஞ்சொலோர்ந்து
ஆனையின்கன்றெனவமைக்கும்பாடலான்
ஏனையபாடலொன்றேனுமோதிலான்
பூனைபோல்வஞ்சனைப்புந்திகொண்டிலான். ”

இவரை மிகுதியாகச் சிவதூஷணை செய்கின்றவ ரென்று சைவர்கள் பழித்தற்குப் புலவர் புராணமுடையார்
கூறும் சமாதானத்தை அடியில் வருகின்ற செய்யுள்களிற் காணலாம்:-

(15) “சிவனைநிந்தனைசெய்தவனேயென
இவனைச்சிற்சிலிளஞ்சைவரேசுவார்
அவன்தன்மாயவனாகத்திற்பாதியென்று
உவந்துபாடியபாக்களுமுள்ளவே.

(16) என்றென்றுந்தனதிட்ட தெய்வத்தையே
நன்றென்றேத்திடல்ஞானிகள்சம்மதம்
அன்றென்றோதவொண்ணாததனாலவன்
குன்றென்றச்சுதனைக்குறிக்கொண்டதே.

(17) சைவரிற்சிலர் தாமரைக்கண்ணனை
வைவதொப்ப வயிணவரிற்சிலர்
மைவனக்களவள்ளலைநிந்தனை
செய்வதுண்டு மதங்கொண்டசிந்தையால்.

(23) திரிவுசொற்றிறந்தேடித்தினந்தினம்
அரியின்மேற்கவிபாடிடுமந்தணன்
கரிவலஞ்செய்கருவைமன்றன்னிலும்
பெரிதுநிந்தனைபேசிலனுண்மையே.

(24) வளங்குலாந் துறைமங்கலவாசன்போல்
உளங்கனன்றரியன்பரொருவரும்
களங்கறுத்தவராயிரர்க்காதுதல்
விளங்கொர்பாடல்விளம்பிலர்மெய்ம்மையே. ”

————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் அருளிய திருவரங்கத்தந்தாதி – -1-20-

January 22, 2022

காவேரீ விரஜா ஸேயம் வைகுண்டம் ரங்கமந்திரம்|
ஸ வாஸுதேவோ ரங்கேச: ப்ரத்யக்ஷம் பரமம் பதம்||
விமானம் ப்ரணவாகாரம் வேதச்ருங்கம் மஹாத்புதம்|
ஸ்ரீரங்கசாயி பகவாந் ப்ரணவாத்த ப்ரகாசக: ||

ப்ரபத்யே ப்ரணவாகாரம் பாஷ்யம் ரெங்க மிவா பரம்
பரஸ்ய ப்ரஹ்மணோ யத்ர சேஷித்வம் ஸ்புடம் ஈஷ்யதே

———

திரு அரங்கா உறை மார்பா திசை முகன் சேவிப்ப கந்
திருவர் அங்கு ஆதரித்து இன்னிசை பாட திருக் கண் வளர்
திருவரங்கா வுன் பழ அடியேற்கு அருள் செய்ய எழுந்
திரு வரம் காதலித்தேன் உனக்கே தொண்டு செய்வதற்கே–1-

திரு – திருமகள்,
அரங்கு ஆ – தான் வசித்தற்கு உரிய இடமாக (க்கொண்டு),
உறை – வசிக்கப் பெற்ற,
மார்பா – திருமார்பை யுடையவனே!
திசைமுகன் சேவிப்ப – பிரமன் தரிசித்து வணங்கவும்,
கந்திருவர் அங்கு ஆதரித்து இன் இசை பாட – கந்தருவர்கள் அவ்வாறே (தரிசித்து வணங்கிப்) பக்தி கொண்டு
இனிமையான கீதம் பாடவும்,
திரு கண் வளர் திரு அரங்கா – திருவரங்கமென்னுந் திருப்பதியில் அழகாகப் பள்ளி கொண்டு யோக நித்திரை செய்தருள்பவனே!
உனக்கே தொண்டு செய்வதற்கு வரம் காதலித்தேன் – (யான்) உனக்கே அடிமை செய்யுமாறு வரம் பெற ஆசைப்பட்டேன்:
உன் பழ அடியேற்கு அருள் செய்ய எழுந்திரு – நினது பழமையான அடியவனாகிய எனக்குக் கருணை செய்தற்கு எழுந்திருப்பாயாக; (எ – று.)

முதல் -வரி -திருவரங்கா -திரு அரங்கு ஆ -திரு மகள் தான் வசித்தற்கு இடமாக கொண்டு
இரண்டாம் வரி -திருவரங்கா தரித்து -கந்தருவர் அங்கு ஆதரித்து
மூன்றாம் வரி -திருவரங்கா -அவனையே குறித்து அருளி
நான்காம் வரி -திருவரங்கா -எழுந்திரு-உனக்கே தொண்டு செய்வதற்கு வரம் காதலித்தேன் – வரம் பெற ஆசைப்பட்டேன்-

‘திரு என்பது – கண்டாரால் விரும்பப்படுந் தன்மை நோக்கம்: என்றது, அழகு;
இஃது என்சொல்லியவாறோ வெனின், –
யாவனொருவன் யாதொரு பொருளைக் கண்டானோ அக் கண்டவற்கு அப் பொருள்மேற் சென்ற விருப்பத்தோடே கூடிய அழகு.
அதன் மேல் அவற்கு விருப்பஞ்சேறல் அதனிற் சிறந்த உருவும் நலனும் ஒளியும் எவ்வகையானும் பிறிதொன்றற்கு இல்லாமையால்’,
‘எல்லாராலும் விரும்பப்பட்ட அழகு அவட்கு உண்டாகையாலே திருமகள் என்று பெயராயிற்று’ என்பது, திருக்கோவையார் பேராசிரியருரை.
“அகலகில்லே னிறையு மென் றலர்மேன்மங்கை யுறை மார்பா” என்றாற்போல, ‘திருவரங்காவுறைமார்பா’ என்றார்.
அரங்கு – ரங்க மென்ற வடசொல்லின் விகாரம்: இதற்கு – கூத்தாடுமிடமென்றபொருளும் உண்டு;
ஆ – ஆக என்பதன் விகாரம்.
இனி, அரங்கா – அழுந்தி யெனினுமாம்; சிறிதுபொழுதும் விட்டுநீங்காமல் நிலையாக என்றபடி:
ஒருசொல்; செய்யா என்னும் வாய்பாட்டு உடன்பாட்டு இறந்தகாலவினையெச்சம்:
அரங்கு – வினைப்பகுதி, ஆ என்ற விகுதியே இறந்தகாலங்காட்டும். உறை மார்பு – வினைத்தொகை, இடப்பெயர் கொண்டது.

“எம்மாண்பிலயன் நான்கு நாவினாலுமெடுத்தேத்தி யீரிரண்டுமுகமுங் கொண்டு,
எம்மாடுமெழிற்கண்களெட்டினோடுந் தொழுதேத்தி யினிதிறைஞ்சநின்ற செம்பொன்,
அம்மான்றன் மலர்க் கமலக் கொப்பூழ் தோன்ற வணி யரங்கத்தரவணையிற் பள்ளிகொள்ளு, மம்மான்”,

“ஏதமில் தண்ணுமை யெக்கம் மத்தளி யாழ் குழல் முழவமோ டிசை திசை கெழுமிக்,
கீதங்கள் பாடினர் கின்னரர் கெருடர்கள் கெந்தருவரவர் கங்குலுமெல்லாம்,
மாதவர் வானவர் சாரண ரியக்கர் சித்தரு மயங்கினர் திருவடிதொழுவான்,
ஆதலிலவர்க்கு நாளோலக்கமருள அரங்கத்தம்மா பள்ளியெழுந்தருளாயே” என்ற ஆழ்வாரருளிச் செயல்களை அடியொற்றி,
‘திசைமுகன் சேவிப்பக்கந்திருவரங் காதரித்தின்னிசைபாடத் திருக்கண்வளர் திருவரங்கா எழுந்திரு’ என்றார்.

திசைமுகன் – நான்கு திசையையும் நோக்கிய நான்குமுகமுடையவன்;
எம் பெருமானைத்துதித்தல் முதலியன செய்தற்கு வேண்டிய கருவியிற் குறைவற்றவனென்பது இதில்தொனிக்கும்.
சேவிப்ப, பாட – வினைச் செவ்வெண்.
கந்தர்வர் என்ற வடமொழி, யமக நயத்தின் பொருட்டு, கந்திருவரென விகாரப்பட்டது;
பதினெண்வகைத் தேவ கணங்களுள் ஒருசாரார் இவர்: இசை பாடுதலிற் சிறந்தவர்.
அங்கு – அப்பிரமன் போலவே யென்றபடி; அவ்விடத்திலே யெனினுமாம்: அசையாகவுங் கொள்ளலாம்.

உன் பழவடியேன் –
“எந்தை தந்தை தந்தை தந்தை தம் மூத்தப்ப னேழ் படிகால் தொடங்கி வந்து வழி வழியாட்செய்கின்றோம்” என்றபடி
வம்ச பரம்பரையாக நெடுங்காலமாய் உனக்கு அடிமைசெய்துவருகிற தொண்டக்குலத்தில் தோன்றிய நான் என்றபடி.
அழகிய மணவாள தாசர் பெரியபெருமாள் திருவடிகளிலே அடிமை செய்ய ஆசைப்பட்டு அருகிற்சென்றவளவிலே,

அர்ச்சா ரூபியான அப்பெருமான் எதிர்முகங் கொடுத்தல், திருக்கண்களாலே குளிர நோக்குதல், கைகளை நீட்டி யணைத்தல்,
குசல ப்ரச்நம் பண்ணுதல் முதலியன செய்யாதே பள்ளி கொண்டிருக்க, அவனைப் பள்ளி யுணர்த்தி
அவனுணர்ந் தருளும் போதை யழகு கண்டு அவன் உகந்து வாய்திறந்து ஏவுங் குற்றேவல்களைச் செய்ய வேண்டி,
அவனை ‘எழுந்திரு’ என எழுப்புகிறார். எழுந்திருத்தல் – துயிலொழிதல்.
இதில், இரு என்பது – துணைவினை.

இனி, எழுந்து இரு – நாளோலக்கமாக வீற்றிரு என்றுங் கொள்ளலாம்.
“கிடந்த நாள் கிடந்தாய் எத்தனை காலங்கிடத்தி உன் திருவுடம்பசையத்,
தொடர்ந்து குற்றே வல் செய்து தொல்லடிமை வழி வருந்தொண்ட ரோர்க்கருளித்,
தடங்கொள் தா மரைக் கண் விழித்து நீயெழுந் துன் தாமரை மங்கையு நீயும்,
இடங்கொள் மூவுலகுந்தொழ இருந்தருளாய் திருப்புளிங்குடிக்கிடந்தானே” எனப்பள்ளி கொண்ட பெருமாளை
நம்மாழ்வார் துயிலுணர்த்தியெழுப்பி அடிமைசெய்யப் பரரித்தமை காண்க.

“மறந்தும் புறந்தொழா மாந்தர்” ஆதலால்,
“எற்றைக்குமேழேழ்பிறவிக்கு முன்றன்னோ, டுற்றோமேயாவோ முனக்கே நாமாட்செய்வோம்” என்றாற்போல,
“உன்பழவடியேன் உனக்கே தொண்டு செய்வதற்கு வரங் காதலித்தேன்” என்றார்;
ஏ – பிரிநிலை. வரம் – வேண்டுவன கொள்ளுதல்.

எல்லா நூல்களும் மங்கலமொழி முதல் வகுத்துக் கூறவேண்டுவது மரபாதலால், ‘திரு’ என்று தொடங்கினார்;
“சீர் மணி பரிதி யானை திரு நிலம் உலகு திங்கள், கார் மலை சொல் எழுத்துக் கங்கை நீர் கடல் பூத் தேர் பொன்,
ஏருறு மிவை மூவாறும் இதிற்பரியாயப்பேரும், ஆரு மங்கலச்சொல் செய்யுளாய்ந்து முன்வைக்க நன்றாம்” என்பது காண்க.

———–

செய்யவளைக் குருவின் இன்னருளால் திருத் தாள் வணங்கி
செய்ய வளைக் குலம் சூழ் அரங்க ஈசன் சிறிது அமுது
செய்ய வளைக்கும் புவிக்கும் அங்காந்த செவ்வாய் முகுந்தன்
செய்ய வளைக்கும் சிலம்பு அணி பாதங்கள் சேர்ந்தனமே -2-

குரு இன் அருளால் – ஆசாரியருடைய இனிமையான கிருபா கடாக்ஷத்தினால்,
செய்யவளை திரு தாள் வணங்கி – திருமகளைத் திருவடி தொழுது, –
செய்யவளை குலம் சூழ் அரங்க ஈசன் – கழனிகளிலுள்ள சங்கினங்கள் சூழப் பெற்ற திருவரங்கத்து நாதனும்,
அளைக்கும் புவிக்கும் அமுது செய்ய சிறிது அங்காந்த செம்வாய் முகுந்தன் – வெண்ணையையும் பூமியையும் உண்ணுதற்குச் சிறிது
திறந்த சிவந்த வாயை யுடைய முகுந்தனென்னும் ஒரு திருநாம முள்ளவனுமான திருமாலினது,
செய்ய வளைக்கும் சிலம்பு அணி பாதங்கள் – செவ்வியை யுடைய வளைந்துள்ள சிலம்பென்னும் ஆபரணத்தை யணிந்த திருவடிகளை,
சேர்ந்தனம் – அடைந்தோம்; (எ – று.)

ஆச்சார்ய அபிமானமே உத்தாரகம் -என்று அருளி செய்கிறார் -இத்தால்
சேர்ந்தனம் -முன்னோரும் தாமும் -பின்னோரும்
முதல் வரி செய்யவள் -செந்நிறம் உடையவள் -அவள் தாளை வணங்கி -அவளைத் தாளாலே சென்று வணங்கி
இரண்டாம் வரி -செய்ய வளை -கழனிகளில் உள்ள சங்கினங்கள் சூழப் பெற்ற திருவரங்கம்
மூன்றாம் வரி -அளைக்கும் புவிக்கும் -வெண்ணெயையும் பூமியையும் உண்ண -அமுத செய்ய சிறிது அங்காந்த செவ்வாய் முகுந்தன்
நான்காம் வரி -செவ்வியை உடைய வளைந்துள்ள சிலம்பு அணிந்த திருவடிகளை சேர்ந்தனம்

செய்ய -சிலம்புக்கும் திருப் பாதத்துக்கும் அடை மொழி-

ஸதாசாரியனை யடுத்து அவனபிமானத்தை அவனருளாற்பெற்று அது மூலமாக வுண்டான பிராட்டி புருஷகார பலத்தாலே
பெருமாள் திருவடியிலே சரண் புகுந்தோ மென்றார்.
ஆக, இதனால், ஆசார்யாபிமானமே உத்தாரக மென்னும் அர்த்தம் சொல்லியதாயிற்று.
ஈற்று ஏகாரம் – தேற்றவகையால், இனி எமக்கு ஒரு குறையுமில்லை யென்ற பொருளைத் தொனிப்பிக்கும்,
சேர்ந்தனம் என்ற தன்மைப் பன்மை – தனது குலத்து முன்னோரையும் பின்னோரையும் தனது அடியார்களையும் உளப்படுத்தும்.
வணங்கிச் சேர்ந்தனம் என இயையும்.

செய்யவள் – செந்நிறமுடையவள்: செம்மையென்னும் பண்பினடியாப் பிறந்த பெயர்.
குரு என்ற வடசொல் – அஜ்ஞாநமாகிய அகவிருளை யழிப் பவனென்று அவயவப்பொருள்படும். (கு – இருள், ரு – ஒழிப்பவன்.)
இன் அருள் – பண்புத்தொகை; இன் – சாரியையெனக் கொண்டு குருவினது அருளென்றால், னகரமெய் – விரித்தல் விகாரமாம்.

செய்யவளைத் தாளை வணங்கி என இரண்டு செயப்படு பொருள் வந்த வினையாகவாவது,
செய்யவளினது தாளை வணங்கி என உருபு மயக்க மென்றாவது, செய்யவளைத் தாளிலே வணங்கி யென்றாவது கொள்க.

செய்ய என்ற சொல் – இரண்டாமடியில் செய் என்னும் பெயரின் மேற் பிறந்த குறிப்புப் பெயரெச்சமும்;
மூன்றாம் அடியில், செய் என்னும் வினைப் பகுதியின் மேற் பிறந்த குறிப்புப் பெயரெச்சமும்;
மூன்றாம் அடியில், செய் என்னும் வினைப்பகுதியின் மேற் பிறந்த தெரி நிலை வினையச்சமும்
நான்காமடியில், செவ்வியை யுணர்த்தும் செம்மை யென்னும் பண்பின் மேற் பிறந்த குறிப்புப் பெயரெச்சமுமாம்;

வயலை ‘செய்’ என்பது பன்றிநகாட்டுத் திசைச் சொல்.
வளை – வளைந்துள்ளது; உட்சுழிந்துள்ளது. ‘செய்ய வளைக்குலஞ்சூழரங்கம்’ என்பது, நீர்வளமிகுதியை உணர்த்தும்.
அரங்கேசன் – குணசந்தி பெற்ற வடமொழித்தொடர்.
பெரியோர் உண்ணுதல், அமுதுசெய்தலெனப்படும்: உபசாரச்சொல்.

வெண்ணெ யுண்ண வாய் திறந்தது, கிருஷ்ணாவதாரத்திலே திருவாய்ப்பாடியில்வளர்ந்த குழந்தைப் பருவத்திலென்க.
புவி என்ற சிறப்புப்பெயர், பொதுப்பொருளின் மேலதாய் உலக மென்றவாறாம்.
அதனை யுண்ண வாய்திறந்தது, பிரளயகாலத்திலென்க.
பிரமன் முதலான சகலதேவர்களுமுட்பட யாவும் அழிந்து போகிற யுகாந்த காலத்தில் ஸ்ரீமகாவிஷ்ணு அண்டங்களை
யெல்லாம் தன் வயிற்றில் வைத்து அடக்கிக் கொண்டு பிரளயப் பெருங்கடலில் ஆதிசேஷாம்சமான தோராலிலையின் மீது
யோகநித்திரை செய்தருள்கின்றன னென்பது, நூற்கொள்கை.
அங்காந்த, அங்கா – பகுதி.
முகுந்தன் – (தன் அடியார்க்கு), மு – முத்தியின்பத்தையும், கு – நிலவுலகவின்பத்தையும், தன் – கொடுப்பவன்.
செய்ய என்பது – சிலம்புக்கும் பாதத்துக்கும் அடைமொழியாகத் தக்கது,
சிலம்புவது, சிலம்பு எனக் காரணக் குறி; நூபுரம், பாத தண்டை.

————-

தனமாதர் அம் சொல் குதலை புதல்வர் தரணி இல்லம்
தனம் ஆதரம் செயும் வாழ்வு அஞ்சியே தஞ்ச நீ எனப் போந்
தனம் ஆ தரங்கிக்க வெற்பு எடுத்தாய் தண் அனந்த சிங்கா
தன மாதரங்கம் உள்ளாய் அரங்கா முத்தி தந்து அருளே —-3-

ஆ பசுக்கள்,
தரங்கிக்க – (இந்திரன் பெய்வித்த மழையி னால்) நிலை கலங்க,
வெற்பு எடுத்தாய் – (அவற்றைப் பாதுகாத்தற்பொருட்டுக்) கோவர்த்தந கிரியைக் குடையாக எடுத்துப் பிடித்தவனே!
தண் அனந்த சிங்காதன – ஆதிசேஷனை மெத்தென்ற சிங்காதனமாக வுடையவனே!
மாதரங்கம் உள்ளாய் – பெரிய கடலிற் பள்ளி கொண்டுள்ளவனே!
அரங்கா – ஸ்ரீரங்கநாதனே! –
தனம் மாதர் – கொங்கை யெழிலை யுடைய மகளிரும்,
அம் சொல் குதலை புதல்வர் – அழகிய மழலைச் சொற்களை யுடைய பிள்ளைகளும்,
தரணி – விளை நிலமும்,
இல்லம் – வீடும்,
தனம் – செல்வமும் ஆகிய இவற்றில்,
ஆதரம் செயும் – ஆசை கொள்ளுகிற,
வாழ்வு – (நிலையற்ற இப்பிரபஞ்ச) வாழ்க்கைக்கு,
அஞ்சி – பயந்து,
நீயே தஞ்சம் என போந்தனம் – நீயே ரக்ஷகமென்று கொண்டு (வந்து உன்னைச்) சரணமடைந்தோம்;
முத்தி தந்தருள் – (அங்ஙனம் அடைந்த எமக்கு) மோட்சத்தைக் கொடுத்தருள்வாய்; (எ – று.)

தரங்கிக்க -நிலை கலங்க -இந்த்ரன் பெய்வித்த மழையினால்
மாதரங்கம் -பெரிய கடலிலே
அநந்தன் -ந அந்த -பிரளயத்திலும் அழிவில்லாதவன்
ஆதரம் செயும் வாழ்வு அஞ்சியே-ஆசை கொள்ளுகிற நிலை யற்ற சம்சார வாழ்வுக்கு அஞ்சியே

பற்றற்று உன்பக்கல் சரணம் புக்கோம்; நீ எமக்கு நற்கதி யருளக் கடவை யென்பதாம்.
உன்னை நம்பி யடுத்துள்ள உயிர்களைச் சிரமம் பாராது துயர் நீக்கிப் பாதுகாத்தருளுந் தன்மை யுடையாய்
என்னுங்கருத்துத் தோன்ற, ‘ஆ தரங்கிக்க வெற்பெடுத்தாய்’ என விளித்தார்: கருத்துடை யடை கொளி யணி.

ஆதிசேஷன் திருமாலுக்குப் பலவகைக் கைங்கரியங்கள் புரியும் வகையை
“சென்றாற் குடையாம். இருந்தாற் சிங்காதனமாம், நின்றால் மரவடியாம் நீள்கடலுள் – என்றும்,
புணையாம் மணிவிளக்காம் பூம்பட்டாம்புல்கும், அணையாம் திருமாற்கு அரவு” என்றதனால் அறிக.

திருப்பாற்கடலிலும் பிரளயப் பெருங்கடலிலும் திருமால் பள்ளி கொள்கின்றன னென்பது, நூற்கொள்கை.
குதலை – நிரம்பாமென்சொல். “குழலினிது யாழினி தென்ப தம்மக்கள், மழலைச்சொற் கேளாதவர்,”
“மக்கள் மெய் தீண்ட லுடற்கின்பம் மற்றவர், சொற்கேட்ட லின்பஞ் செவிக்கு” என்றபடி
தம் புதல்வருடைய மழலைச் சொல் தந்தை தாயர்க்கு மிக்க இனிமை விளைத்தலால், ‘அஞ்சொற்குதலைப் புதல்வர்’ என்றார்.
இல்லம், அம் – சாரியை. இரண்டாமடியில், ஏகாரம் பிரித்துக் கூட்டப்பட்டது.
தரங்கிக்க – அலைய; தரங்கம் என்னும் பெயரின் மேற்பிறந்த செயவெனெச்சம்.
தரங்கம் – அலை: வடசொல்; கடலுக்குச் சினையாகுபெயர்.
அநந்தன் என்ற வடமொழிப்பெயர், ந + அந்த என்று பிரிந்து, (பிரளயத்திலும்) அழிவில்லாதவ னென்று பொருள்படும்.
முக்தி என்ற வட சொல்லுக்கு – பற்றுக்களை விட்டு அடையும் இடமெனக் காரணப் பொருள்.

———–

தந்தமலைக்கு முன் நின்ற பிரான் எதிர் தாக்கி வெம்போர்
தந்தமலைக் குமைத்தான் அரங்கேசன் தண் பூவினிடை
தந்தமலைக்கு தலைவன் பொற் பாதம் சரண் என்று உய்யார்
தந்தமலைக்கும் வினையால் நைவார் பலர் தாரணிக்கே ——-4-

தாரணிக்கு – பூமியில்,
பலர் – அநேகர், –
தந்தம் மலைக்கு முன் நின்ற பிரான் – தந்தங்களை யுடையதொரு மலை போன்ற யானைக்கு
(கஜேந்திராழ்வானுக்கு) எதிரில் எழுந்தருளிக் காட்சி தந்த பெருமானும்,
எதிர் தாக்கி வெம் போர் தந்து ம(ல்)லை குமைத்தான் – எதிர்த்து மோதிக் கொடிய போரைச் செய்த மல்லர்களைச் சிதைத்து அழித்தவனும்,
தண் பூவின் தந்து இடை அமலைக்கு தலைவன் – குளிர்ச்சியான தாமரை மலரில் வீற்றிருக்கின்றவளும் நூல் போன்ற (மிக மெல்லிய)
இடையையுடையவளும் குற்றமற்றவளுமான திருமகளுக்குக் கொழுநனும் ஆகிய,
அரங்கேசன் – ஸ்ரீரங்கநாதனுடைய,
பொன் பாதம் – அழகிய திருவடிகளை,
சரண் என்று – சரணமாக அடைந்து,
உய்யார் – உய்வு பெறாராய்,
அலைக்கும் தம் தம் வினையால் நைவார் – வருத்துகிற தங்கள் தங்கள் பூர்வ கர்மங்களினால் வருந்துவார்கள்.

முதல் வரி -தந்த மலைக்கு முன் நின்ற பிரான் -தந்தங்களை உடைய தொரு மலை போன்ற
யானைக்கு -கஜேந்திர ஆழ்வானுக்கு எதிரில் எழுந்து அருளி காட்சி தந்த பெருமானும்
இரண்டாம் வரி -எதிர் தாக்கி வெம் போர் தந்த மல்லைக் குமைத்தான் –
மூன்றாம் வரி -தண் பூவின் தந்து இடை அமலைக்கு தலைவன் -குற்றமற்ற திருமகளுக்கு கொழுநன்
நான்காம் வரி -அலைக்கும் தம் தம் வினையால் நைவார்
வெண்ணெய் வைத்துக் கொண்டு நெய்க்கு அழுவார் போலே சரண் புக்க மாதரத்தில்
சரணாகதருடைய கருமங்களை ஒழித்து முக்தி தருபவன் திருவடிகள் இருக்க

வெண்ணெயை வைத்துக் கொண்டு நெய்க்கு அழுவார் போலே, சரண் புக்க மாத்திரத்தில் அச் சரணாகதருடைய
கருமங்களை யெல்லாம் ஒழித்து முத்தி தருபவையான எம்பெருமானது திருவடிகள் இருக்க
அவற்றை யடைந்து பிறவிப் பெருங்கடல் கடந்து வாழாது உலகத்திற் பேதையர் பலர்
கரும வசப்பட்டு வருந்துவது என்னே யென்று உலகை நோக்கி இரங்கிய படியாம்.

‘தந்தமலை’ எனவே, யானை யென்றாயிற்று; மலை – உவமை யாகு பெயர்: பருமை வலிமைகளால் உவமம்.
முன் – இடமுன்.
இரண்டாமடியில், மலை என்பது – தொகுத்தல். மல் – ஆயுதமின்றி உடல் வலிமை கொண்டு செய்யும் போர்;
இங்கு அப்போருடையார்க்கு ஆகு பெயர்.
இடைத்தந்து – முன் பின் னாகத் தொக்க உவமைத் தொகை; தந்து – வடசொல்.
அமலை – அமலா என்ற வடசொல் ஆவீறு ஐயாயிற்று; இப் பெயர், தூய்மை யுடைமையை உணர்த்தும்.
சரண் – சரணமென்ற வடசொல்லின் விகாரம். தாரணிக்கு – உருபு மயக்கம். தரணி என்ற வடசொல் விகாரப்பட்டது.

———–

தாரணி தானவன் பால் இரந்தான் சங்கம் வாய் வைத்து ஒன்னார்
தாரணி (தார் அணி )தான் அவம் செய்தான் அரங்கன் தமர்கள் பொருந்
தாரணி தான ( பொருந்தார் அணிது ஆன அமராவதியும் ) தரு நிழலும்
தாரணி தானம் அயிராவதமும் தருகினுமே——-5–

தானவன் பால் – அசுரனான மகாபலியினிடத்து,
தாரணி இரந்தான் – (மூன்று அடி) நிலத்தை யாசித்தவனும்,
சங்கம் வாய் வைத்து – (தான் தனது) திவ்விய சங்கத்தை வாயில் வைத்து ஊதிய மாத்திரத்தாலே,
ஒன்னார் தார் அணி அவம் செய்தான் – பகைவர்களுடைய படை வகுப்பி னொழுங்கைப் பழுது படுத்தியவனும் ஆன,
அரங்கன் – ரங்கநாதனுடைய,
தமர்கள் – அடியார்கள், –
அணிது ஆன அமராவதியும் – அழகியதாகிய சுவர்க்க லோகத்தையும்,
தரு நிழலும் – (அங்குள்ள) கற்பக விருக்ஷங்களின் நிழலையும்,
தார் அணி தானம் அயிராவதமும் – கிண்கிணி மாலையை யணிந்ததும் மதங்கொண்டதுமான ஐராவதமென்னுந் தெய்வ யானையையும்,
தருகினும் – (வலியக்) கொடுத்தாலும்,
பொருந்தார் – (மனமிசைந்து அவற்றைப் பெற) உடன் படார்; (எ – று.)

தாநவன் -காசியப முனிவரது மனைவி தநு என்பவளது மரபினன்-அசுரனான மகாபலியிடம் நிலத்தை யாசித்தவனும்
அணிது -அணித்து -சமீபத்தில் உள்ள -இந்திர லோகம் அமராவதி மற்றவற்றை விட அருகில் உள்ளதால் –
அணிது -எளிது என்னும் பொருளிலும் கொள்ளலாம்
பாரிஜாத தருவை கொணர்கையில் எதிர்த்த -சங்க நாதத்தினால் பங்கப் படித்தினான்
மகா பாரத யுத்தத்திலும் சங்கு ஒலியால் அச்சப் படுத்தியும் -அறிவோம்

திருமாலடியார்கள் மீளா வுலகமாய்ப் பேரின்பத்திற்கு உரிய இடமான பரமபதத்திற்குச் செல்ல இணங்குவரே யன்றிச்
சில காலம் சிற்றின்பங்களை யனுபவித்தற்கே உரிய சுவர்க்க லோகத்து இந்திர பதவியைக் கொடுத்தால்
அதனையும் சிறிதும் பொருள் செய்யார் என்பதாம்;
“ஆனாத செல்வத் தரம்பையர் கடற்சூழ, வானாளுஞ் செல்வமு மண்ணரசும் யான் வேண்டேன்” என்று
குலசேகராழ்வார் அருளிச் செய்தமை காண்க;
பிரமன் கட்டளையால் இந்திரன் சரபங்க மகரிஷியைச் சத்திய லோகத்துக்கு அழைத்தபோது,
மகா விஷ்ணு பக்தரான அம் முனிவர் அம் மேலுலகையுமுட்பட இகழ்ந்து
“அற்பங்கருதேன்” என்றும்,
“மறுகாநெறி யெய்துவென்” என்றும் உரைத்ததும் உணரத்தக்கது.

தாநவன் – (காசியப முனிவரது மனைவிகளுள்) தநுவென்பவளது மரபினனென்று பொருள்படும்; வடமொழித் தத்திதாந்தநாமம்.
ஒன்னார் – ஒன்றார் என்பதன் மரூஉ. அவம் செய்தான் – பயனிலதாக்கியவன். தமர் – தம்மவர்: கிளைப்பெயர்.
அணிது – அண்ணிது; அதாவது – சமீபத்திலுள்ளது என்றும் உரைக்கலாம்.
எல்லா வுலகங்களினும் மேலுள்ளதான முத்தி யுலகத்தின் சேய்மையை நோக்குமிடத்து, இந்திரனது நகரமான
அமராவதி மிக அருகிலுள்ளதாதல் காண்க.
சேணுலகமாகிய முத்தியைப் பெற வல்ல பாகவதர்க்குச் சுவர்க்க லோகம் அரியதொன்றன் றாதலால்,
எளிது என்னும் பொருளில் ‘அணிது’ என்றதாகவுங் கொள்ளலாம்.
சங்கம், அமராவதி, தரு, தாநம், ஐராவதம் – வடசொற்கள். அமராவதீ என்ற பெயர் – தேவர்களை யுடையதென்று காரணப் பொருள்படும்.
சுவர்க்க லோகத்தில் பஞ்சதேவ தருக்களின் நிழல் இந்திரன் அரசு வீற்றிருக்கு மிடமாதலை,
“இன்றளிர்க் கற்பகநறுந்தே னிடைதுளிக்கு நிழலிருக்கை” என்றதனாலும் அறிக.
அயிராவதம் – முதற்போலி. இது, இந்திரனது வெள்ளை யானை; நான்கு தந்தங்களை யுடையது.
தருகின், கு – சாரியை. உம்மை – உயர்வு சிறப்பு.

கண்ணன் சத்திய பாமைக்காகப் பாரிசாத தருவைத் தேவ லோகத்தினின்று பெயர்த்துப் பூலோகத்துக் கொணர்கையில்
வந்து எதிர்த்துப் போர் செய்த சகல தேவசைநியங்களையும் தனது சங்க நாதத்தினாலே பங்கப்படுத்தினமையும்,
மகா பாரத யுத்தத்தில் கண்ணன் அருச்சுனனுக்குச் சாரதியாய் நிற்கையில் தனது சங்கினொலியாற்
பகைவர்களை அஞ்சுவித்து அழித்தமையும், மற்றும் பல போர்களில் இங்ஙனஞ் செய்தமையும் பற்றி,
‘சங்கம் வாய்வைத் தொன்னார் தாரணி தானவஞ்செய்தான்’ என்றார்.

“அருட்கொண்ட லன்னவரங்கர்சங்கோசையிலண்டமெல்லாம்,
வெருட்கொண்டிடர்படமோ கித்துவீழ்ந்தன வேகமுடன்,
தருக் கொண்டு போகப் பொறாதே தொடருஞ் சதமகனும்,
செருக் கொண்ட முப்பத்து முக்கோடி தேவருஞ் சேனையுமே,”

தருண வாள் நிருபர் மயங்கி வீழ் தர வெண் சங்கமுமுழக்கி” என்பன காண்க.

———-

தருக காவலா வென்று புல்லரைப் பாடித் தன விலை மா
தருக்கு ஆவலாய் மயிலே குயிலே என்று தாமதராய்
தருக்கா அலா நெறிக்கே திரிவீர் கவி சாற்றுமின் பத்
தருக்கு ஆ அலாயுதன் பின் தோன்று அரங்கர் பொன் தாள் இணைக்கே ——–6–

தரு காவலா என்று புல்லரை பாடி – கற்பக விருக்ஷத்துக்குத் தலைவனான இந்திரனே யென்று அற்ப மனிதர்களைப் புகழ்ந்து பாடியும்,
தனம் விலை மாதருக்கு ஆவல் ஆய் மயிலே குயிலே என்று – கொங்கை யெழிலை யுடைய வேசையர்கள் பக்கல்
மோகங்கொண்டு (அவர்களை) மயிலே யென்றும் குயிலே யென்றும் கொண்டாடி விளித்தும்,
தாமதர் ஆய் – தாமத குணத்தை யுடையவர்களாய்,
தருக்கா – களிப்புக் கொண்டு,
அலா செறிக்கே திரிவீர் – நல்லதல்லாத வழியிலேயே திரிகிற புலவர்களே! –
(இனி நீவிர் அங்ஙனஞ்செய்வதை விட்டு),
பத்தருக்கு ஆ அலாயுதன் பின் தோன்று அரங்கர் பொன் தாள் இணைக்கே கவி சாற்றுமின் – அடியார்கட்கு அருள் செய்யும்
பொருட்டாகப் பலராமனுக்குப் பின்னே (அவன் தம்பியாய்க் கண்ணனாய்த்) திருவவதரித்த
நம்பெருமாளுடைய உபயதிருவடிகளின் விஷயமாகவே கவிபாடித் துதியுங்கள்; (எ – று.) –
ஈற்று ஏகாரம் – பிரிநிலை.

தாமதராய் -தமோ குணத்தை உடையவராய்
அலாயுதன் -பலராமன்
அலா நெறி -துர் மார்க்கம்
சாற்றும் இன் பத்தருக்கு

எம்பெருமானைத் துதித்து அவனருள் பெற்று அழிவிலா வீட்டை அடைதற்கு ஏற்ற சாதனமான நாவையும் கவன சக்தியையும்
அவன் விஷயத்தில் உபயோகியாமல் தரும விரோதமாக நிலை யில்லாத பொருளையும் சிற்றின்பத்தையும் பெறுதற்கு ஆசைப்பட்டு
அவற்றிற்காக நரகவனமும் விலைமாதரை நயந்துரைத்தலுஞ் செய்யும் அற்பப் புலவர்களை நோக்கி,
‘அங்ஙனஞ் செய்ய வேண்டா: துஷ்ட நிக்கிரக சிஷ்ட பரிபாலந சீலனும் அடியவர்க்கெளியவனுமான
ரங்கநாதன் விஷயமாகக் கவி பாடித் துதித்து உய்யுங்கள்’ என உணர்த்தியவாறாம்.

செல்வ அதிகாரங்களிற் சிறப்பை விளக்குதற்கு இந்திரனே யென்றும்,
சாயலிலும் குரலிலும் உள்ள இனிமையை விளக்குதற்கு மயிலே குயிலே யென்றும் விளிப்ப ரென்க.
பலராமன் – கண்ணனுக்குத் தமையன்; திருமாலின் எட்டாம் அவதாரம்:
வசுதேவனுடைய பத்தினிகளுள் தேவகியின் கருப்பத்தில் முதலில் ஆறு மாசந் தங்கிப் பின்பு ரோகிணியின்
கர்ப்பத்திற் சென்று சேர்ந்து ஆறுமாசம் இருந்து பிறந்தவன் இவன்.
ஹலாயுதன் என்ற இவன் பெயர் – ஹல ஆயுத எனப் பிரிந்து, கலப்பையை ஆயுதமாக வுடையவ னென்று பொருள்படும்; தீர்க்கசந்தி;
ஹலம் – கலப்பை. கண்ணன் – திருமாலின் ஒன்பதாம் அவதாரம்.

காவலன் – காத்தலில் வல்லவன். புல்லர் – புன்மை யுடையவர்.
விலை மாதர் – தமது இன்பத்தை விலை கொடுப்பார் யாவர்க்கும் விற்கும் மகளிர்.
ஒழுக்க வழு, காமம், நீதிவழு முதலியன தாமச குண காரியமாம்.
தருக்கா – உடன்பாட்டு இறந்த கால வினையெச்சம்.
அலாநெறி – துர் மார்க்கம், தீயொழுக்கம். நெறிக்கு – நெறியில்; உருபுமயக்கம். ஏ – பிரிநிலையோடு இழிவுசிறப்பு.
திரிவீர் – திரிவார் என்பதன் ஈற்றயல்திரிந்த விளி.
சாற்றும் இன் பக்தருக்கு, இன்பத்தர் – இனிமையான அடியார்களென்றலு மொன்று.
பத்தர் – பக்தர் என்ற வட சொல்லின் விகாரம்; பக்தி யுடையவர்.
ஆக என்பது, ஆ என விகாரப்பட்டது.
பின் என்பது – இங்கே காலப் பொருளது.
‘கவி சாத்துமின்’ என்ற பாடத்துக்கு – கவி மாலையைச் சமர்ப்பியுங்க ளென்று பொருள்.

————

தாளத் தனத்தத்தைச் சொல்லியரால் வரும் தாழ் மல பா
தாளத் தனத்தத்தைத் தப்ப நிற்பீர் புடை தங்கிய வே
தாளத்தன் அ தத்தை தீர்த்தான் அரங்கன் சகடு உதைத்த
தாள் அத்தன் அத்தத்து ஐ ஆயுதன் பாதம் தலைக் கொண்மினே ——-7–

தாளம் தனம் தத்தை சொல்லியரால் வரும் – கைத் தாளம் போன்ற வடிவமுடைய கொங்கைகளையும்
கிளி கொஞ்சிப் பேசுவது போ லினிய சொற்களையு முடைய அயல் மாதர்களின் சம்பந்தத்தா லுண்டாகும்,
தாழ் மல பாதாளத்து அனத்தத்தை – ஆழ்ந்த அசுத்தம் பொருந்திய நரகத் துன்பத்தை,
தப்ப நிற்பீர் – தப்பி உய்ய வேண்டி நிற்பவர்களே! – (நீங்கள்),
புடை தங்கிய வேதாளத்தன் அதத்தை தீர்த்தான் – எல்லாப் பக்கங்களிலுஞ் சூழ்ந்து நின்ற பூத கணங்களை
யுடையவனான சிவபிரானது (பிச்சை யெடுத்த லாகிய) அந்தத் துன்பத்தைப் போக்கி யருளியவனும்,
சகடு உதைத்த தாள் அத்தன் – சகடாசுரனை உதைத்துத் தள்ளி யழித்த திருவடிகளை யுடைய இறைவனும்,
அத்தத்து ஐ ஆயுதன் – திருக் கைகளில் ஏந்தும் பஞ்சாயுதங்களை யுடையவனுமான,
அரங்கன் – ரங்கநாதனுடைய,
பாதம் – திருவடிகளை,
தலை கொண்மின் – தலை மேற் கொண்டு பணியுங்கள்; (எ – று.)

தாளத் தனத்தத்தைச் சொல்லியரால் வரும் -கைத் தாளம் போன்ற
வடிவமுடைய கொங்கைகளையும் கிளி கொஞ்சிப் பேசுவது போலே
இனிய சொற்களையும் உடைய அயல் மாதர்களின் சம்பந்தத்தால் உண்டாகும்
தாழ் மல பாதாளத்து அ னத்தத்தை-ஆழ்ந்த அசுத்தம் பொருந்திய நரக துன்பத்தை தப்ப நிற்பீர்
புடை தங்கிய வேதாளத்தன் அ தத்தை தீர்த்தான் -எல்லாப் பக்கங்களிலும் சூழ்ந்து நின்ற
பூத கணங்களை உடையவனான சிவபிரானது -பிச்சை எடுதலாகிய -அந்த துன்பத்தை போக்கி அருளினவனும்
சகடு உதைத்த தாள் அத்தன் அத்தத்து ஐ ஆயுதன்-பஞ்சாயுதங்கள் ஏந்திய திருக்கைகளை யுடையவன்
பாதம் தலைக் கொண்மினே

தத்தை – கிளி; அதன் மொழிக்கு முதலாகுபெயர். சொல்லி என்ற பெண்பாற் பெயரின் மேல்
அர் – பலர்பால் விகுதி. நரகம் கீழுலகிலுள்ளதாதலால், அதனை ‘பாதாளம்’ என்றார்; இடவாகுபெயர்.
அநர்த்தம் பேதாளம் சகடம் ஹஸ்தம் என்ற வட சொற்கள் விகாரப் பட்டன.
தாருக வனத்து முனிவரால் ஏவப் பட்டுத் தன்னைக் கொல்ல வந்து சூழ்ந்த பூத கணங்களைச் சிவபிரான் தனது
ஆற்றலால் அடக்கி அடிமை யாக்கிக் கொண்டன னாதலால், ‘புடை தங்கிய வேதாளத்தன்’ எனப்பட்டான்.
அத்தத்து என்றவிடத்து, அகரச்சுட்டு – பிரசித்தியையும் இழிவையும் விளக்கும்.
நத்தத்தை எனப் பதம் பிரித்து, கேட்டை யென்று உரைப்பாரு முளர்;
நத்தம் – நந்து என்ற வினைப் பகுதியின் தொழிற்பெயர்.

———

தலையிலங்கா புரம் செற்றான் அரங்கன் என் தாழ் சொல் புல்கு
தலையில் அங்கு ஆதரம் செய்த பிரான் சரண் அன்றி மற்றோர்
தலை யிலங்கா நின்ற கண் இலம் காண்கைக்கு தாழுகைக்குத்
தலை யிலம் காதிலம் கேட்கைக்கு வாயிலம் சாற்றுகைக்கே ———-8–

தலை இலங்கா புரம் செற்றான் – தலைமை பெற்ற (ராக்ஷச ராஜ தானியான) இலங்கை நகரை அழித்தவனும்,
என் தாழ் சொல் புல்கு தலையில் ஆதரம் செய்த பிரான் – எனது இழிவான துதிச் சொற்களில் பொருட்சிறப்பில்லாத
(தம் மக்கள் பேசும்) மழலைச் சொற்களினிடத்தில் (தாய் தந்தையர் அன்பு வைக்குமாறு) போல விருப்பம் வைத்த பெருமானு மாகிய,
அரங்கன் – திருவரங்கனுடைய,
சரண் அன்றி – திருவடிகளே யல்லாமல்,
மற்று ஓர்தலை – வேறோரிடத்தை,
காண்கைக்கு – தரிசித்தற்கு,
இலங்கா நின்ற கண் இலம் – விளங்குகின்ற கண்களை யுடையோமல்லோம்;
தாழுகைக்கு – வணங்குதற்கு,
தலை இலம் – தலையை யுடையோமல்லோம்;
கேட்கைக்கு – கேட்பதற்கு,
காது இலம் – செவிகளை யுடையோமல்லோம்;
சாற்றுகைக்கு – துதித்துப் பேசுதற்கு,
வாய் இலம் – வாயை யுடையோமல்லோம்; (எ – று.) – இரண்டாம்அடியில், அங்கு – அசை.

தலையிலங்கா புரம் செற்றான் -தலைமை பெற்ற இலங்கை நகரை அழித்தவனும்
என் தாழ் சொல் புல்கு தலையில் அங்கு ஆதரம் செய்த பிரான் -என் இழிவான துதிச் சொற்களில் –
பொருள் சிறப்பு இல்லாத தம் மக்கள் பேசும் மழலைச் சொற்களின் இடத்தில்
தாய் தந்தை அன்பு கொள்ளுவது போலே விருப்பம் வைத்த பெருமான்

தேவாதி தேவனான எம்பெருமான் விஷயத்தில் உபயோகித்து ஈடேறுவதற்கே உரியவையாய் அமைந்த உறுப்புக்களைத்
தேவதாந்தர விஷயத்தில் உபயோகிக்கக் கடவோமல்லோம் யாம் என்றார்,

“மறந்துபுறந்தொழாமாந்த” ராதலின்; “வாயவனை யல்லது வாழ்த்தாது கையுலகந், தாயவனை யல்லது தாம் தொழா –
பேய் முலை நஞ்சு, ஊணாக வுண்டானுருவொடு போரல்லால், காணா கண் கேளா செவி” என்ற
ஆழ்வாரருளிச்செயலை அடியொற்றியது இச்செய்யுள்.

இலங்கா புரத்துக்குத் தலைமை, திக் விஜயஞ்செய்து அனைவரையும் கீழப் படுத்திய ராக்ஷச ராசனான இராவணனது
இராசதானியா யிருத்தல். அதனைச் செற்றது, ஸ்ரீராமாவதாரத்தில். இராம தூதனான அநுமான் இலங்கையை எரியூட்டி யழித்ததும்,
அவ்விலங்கா நகர வாசிகளான கொடிய அரக்கர்களை யெல்லாம் இராமபிரான் அழித்திட்டதும் ஆகிய இரண்டும்
‘இலங்காபுரஞ்செற்றான்’ என்ற தொடரில் அடங்கும்.
செற்றான், செறு – பகுதி. குதலையில், இல் – ஐந்தனுருபு, ஒப்புப்பொருளது;
ஏழனுருபாகக் கொண்டு, எனது இழிவான புல்லிய குதலைச் சொல்லாகிய துதியில் எனினுமாம்.
இலங்கா நின்ற, ஆநின்று – நிகழ்கால இடை நிலை. இலம் என்ற தன்மைப் பன்மை – பிறரையும் உளப்படுத்தியது.

—————

கை குஞ்சரம் அன்று அளித்தாய் அரங்க மண் காக்கைக்குமாய்க்
கைக்குஞ்சரம் (கும் சரம் )அசரம் படைத்தாய் கடல் நீறு எழ து
கைக்குஞ்சர (கும் சர ) மகரம் குழையாய் எனைக் கைக் கொள் உடல்
கைக்குஞ்சரம (கும் சரம ) தசையில் அஞ்சேல் என்று என் கண் முன் வந்தே —9–

கை – துதிக்கையை யுடைய,
குஞ்சரம் – யானையை (கஜேந்திராழ்வானை),
அன்று – (ஆதி மூலமே யென்று கூவி யழைத்த) அக் காலத்தில்,
அளித்தாய் – பாதுகாத்தருளியவனே!
அரங்க – திருவரங்கனே!
காக்கைக்கும் – காக்கப்படுவதற்கும்,
மாய்க்கைக்கும் – அழிக்கப்படுவதற்கும் உரியனவாக,
மண் – உலகத்திலே,
சரம் அசரம் படைத்தாய் – ஜங்கமமும் ஸ்தாவரமுமான உயிர்களைப் படைத்தருளியவனே!
கடல் நீறு எழ துகைக்கும் சர – கடல் வறண்டு புழுதிபடும்படி அதனை வருத்தத் தொடங்கிய ஆக்நேயாஸ்திரத்தை யுடையவனே!
மகரம் குழையாய் – மகர குண்டலங்களை அணிந்துள்ளவனே!
உடல் கைக்கும் சரம தசையில் என் கண் முன் வந்து அஞ்சேல் என்று எனை கைக்கொள் – உடம்பை (உயிர்) வெறுத்தொழியும்படியான
(எனது) அந்திமகாலத்திலே நீ எனது கண்களினெதிரில் வந்து தோன்றிக் காட்சி கொடுத்து ‘அஞ்சாதே’ என்று அபயமளித்து
என்னை அடிமையாக ஏற்றுக்கொண்டருள்வாயாக; (எ – று.)

கை குஞ்சரம் அன்று அளித்தாய் -துதிக்கை உடைய யானையை -கஜேந்த்ரனை
அன்று
அரங்க மண் காக்கைக்கும் மாய்க்கைக்கும் சரம் அசரம் படைத்தாய் -ஜங்கமம் ஸ்தாவரங்கள் படைத்து
கடல் நீறு எழ துகைக்கும் சர -ஆக்நேய அஸ்த்ரத்தை வுடையவனே
மகரம் குழையாய்–எனைக் கைக் கொள் உடல் கைக்கும் சரம தசையில்-உடம்பை உயிர் வெறுத்து ஒழியும்படியான அந்திம தசையில்
அஞ்சேல் என்று என் கண் முன் வந்தே –

எய்ப்பு என்னை வந்து நலியும் போது அங்கு ஏதும் நான் உன்னை நினைக்க மாட்டேன்
அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன் போலே பிரார்தித்தவாறும்

பெரியாழ்வார் திருமொழியில் “துப்புடையாரை” என்ற தொடக்கத்துத் திருப்பதிகத்தில்
“ஒப்பிலேனாகிலும் நின்னடைந்தேன் ஆனைக்கு நீ அருள் செய்தமையால்”,
“வஞ்ச வுருவின் நமன்றமர்கள் வலிந்து நலிந் தென்னைப் பற்றும் போது,
அஞ்சலமென்றென்னைக் காக்க வேண்டும் அரங்கத்தரவனைப் பள்ளியானே” என்றவற்றின் பொருள்
இச் செய்யுளில் விளங்குதல் காண்க.

கஜேந்திராழ்வானைக் காத்தருளின வரலாற்றை யெடுத்துக் கூறினது, உயர்திணைப் பொருள்களோடு
அஃறிணைப் பொருள்களோடு பேதமற அடிமைப் பட்ட உயிர்களை அன்போடு துயர் தீர்த்துப் பாதுகாத்தருள்கிற
எம்பெருமானது கருணை மிகுதியை விளக்குதற்கு, குஞ்சரத்துக்குக் கொடுத்த ‘கை’ என்ற அவசியமில்லாத அடைமொழி,
அந்த யானை கால் முதல் உடம்பு முழுவதும் முதலையின் வாய்ப்பட்டு எம்பெருமானை யழைத்தற்குக் கைம் மாத்திரமே
வெளித் தோன்ற நின்ற தென்னுங் கருத்தைப் புலப்படுத்தும்.

“கைம்மான மதயானை யிடர் தீர்த்த கருமுகிலை,”
“கடுத்த கராங்கதுவ நிமிர் கையெடுத்து மெய் கலங்கி….. எடுத்தொரு வாரண மழைப்ப நீயோ வன்றே னென்றாய்” என்பன காண்க.

மண் சரம் அசரம் படைத்தாய் – உலகங்களையும் சராசரங்களையும் படைத்தவனே யென்றும்,
உலகங்களைச் சராசரங்களுடன் படைத்தவனே யென்றும் கொள்ளலாம்.
சரம் – சஞ்சரிப்பன, இயங்குதிணைப் பொருள். அசரம் – சஞ்சரியாதன, நிலைத்திணைப்பொருள்.

மண் காக்கைக்கும் மாய்க்கைக்கும் சரம் அசரம் படைத்தாய் –
“உலகம் யாவையும் தாமுளவாக்கலும், நிலை பெறுத்தலும் நீக்கலும் நீங்கலா, அலகிலாவிளையாட்டுடையாரவர்” என்றபடி
உலகங்களைப் படைத்தலையும் காத்தலையும் அழித்தலையும் விளையாட்டாக வுடையவனே யென்றபடி.

நீறுஎழ – எரிபட்டுச் சாம்பலாய் மேலெழ,
மகரகுண்டலம் – சுறாமீன் வடிவமமையச் செய்யப்படுவதோர் காதணி. இது, மற்றை யாபரணங்கட்கும் உப லக்ஷணம்.

குஞ்சரம் – வடசொல்; காட்டுப் புதர்களிற் சஞ்சரிப்ப தென்றும், துதிக்கையுடைய தென்றும் காரணப்பொருள்படும்.
‘அன்று’ எனச் சுட்டினது, கதையை உட்கொண்டு.
சரம தசா – வடமொழித் தொடர்.
அஞ்சேல் – எதிர்மறை யொருமையேவல். காக்கை, மாய்க்கை – ‘கை’ விகுதி பெற்ற தொழிற்பெயர்.
சரம தசையில் எனைக் கைக்கொள் – “எய்ப்பு என்னை வந்து நலியும் போது அங்கு ஏதும் நான் உன்னை நினைக்க மாட்டேன்,
அப்போதைக் கிப்போதே சொல்லி வைத்தேன்” என்றாற் போலப் பிரார்த்தித்தவாறாம்.

———–

வந்தனை ஏற்றனை என் புன் சொல் கொண்டனை வன் மனத்தே
வந்தனை ஏற்று அனை யாவையும் ஆயினை வான் தர வு
வந்தனை யேற்றனைத் தானொத்த தாளில் வைப்பாய் பலித்து
வந்தனை யேற்றனைத் தீர்த்தாய் அரங்கத்து ,மாதவனே ———–10–

ஏற்றனை பலித்து வந்தனை தீர்த்தாய் – ருஷப வாகனமுடையனான சிவபிரானை இரத்தற்றொழிலை நீக்கி யருளியவனே!
அரங்கத்து மாதவனே – திருவரங்கத்தில் எழுந்தருளி யிருக்கிற திருமகள் கணவனே!
(என்) – எனது,
வந்தனை – நமஸ்காரத்தை,
ஏற்றனை – ஏற்றுக்கொண்டாய்;
என் புல் சொல் கொண்டனை – எனது இழிவான துதிச் சொற்களை ஏற்றுக் கொண்டாய்;
(என்) வல் மனத்தே வந்தனை ஏற்று – எனது வலிய மனத்திலே வந்து பொருந்தி,
அனை யாவையும் ஆயினை – (எனக்குத்) தாயும் மற்றை எல்லா வுறு துணையு மாயினாய்;
வான் தர உவந்தனை ஏல் – (எனக்குப்) பரம பதம் அளிக்கத் திருவுளங்கொண்டனையானால்,
தனை தான் ஒத்த தாளில் வைப்பாய் – (வேறு ஒப்புமை யில்லாமையால்) தன்னைத் தானே ஒப்பதான (உன்)
திருவடியில் (என்னைச்) சேர்த்துக்கொண்டருள்வாய்; (எ – று.)

யேற்றனை பலித்து வந்தனை தீர்த்தாய் -ரிஷப வாகனம் உடைய சிவ பிரான் இரத்தல் தொழிலை நீக்கி அருளினவனே
அரங்கத்து ,மாதவனே
என் வந்தனை ஏற்றனை
புன் சொல் கொண்டனை
என் வன் மனத்தே வந்தனை ஏற்று-வலிய மனத்திலே வந்து பொருந்தி
அனை யாவையும் ஆயினை-எனக்கு தாயும் மற்று எல்லா உறு துணையும் ஆயினை
வான் தர வுவந்தனை யேல்
தனை தானொத்த தாளில் வைப்பாய்-தன்னைத் தானே ஒப்பதான திருவடியில் சேர்த்து கொண்டு அருள்வாய்

எளியேன் திரி கரணங்களாலுஞ் செய்யும் வந்தனை வழிபாடுகளை ஏற்றுக் கொண்டு என் பக்கல் அன்பு காட்டினை யாதலால்,
அந்த அன்பை முற்றச் செலுத்தி எனக்குப் பரமபதங்கிடைக்குமாறு என்னை உன்
திருவடியிற் சேர்த்துக் கொண்டருள வேண்டுமென வேண்டியபடி.
அன்பால் நினைவாரது உள்ளக் கமலத்தின் கண் எம்பெருமான் அவர் நினைந்த வடிவத்துடன் விரைந்து சென்று
வீற்றிருத்தலால், ‘மனத்தே வந்தனையேற்று’ என்றார். ‘என்’ என்பதைப் பிறவிடத்துங் கூட்டுக.

வந்தனை – வந்தநா என்ற வடசொல்லின் விகாரம்.
ஏற்றனை என்ற முன்னிலை யொருமை யிறந்த காலமுற்றில், ஏல் – பகுதி;
ஏற்றல் – அங்கீகரித்தல், இணங்குதல், கொள்ளுதல்.
வன் மனம் . “இரும்புபோல் வலியநெஞ்சம்” “மரங்கள்போல் வலியநெஞ்சம்” என்பன காண்க.
வந்தனை – முன்னிலை யொருமை யிறந்தகால முற்றெச்சம்.
ஏற்று என்ற இறந்தகாலவினை யெச்சத்தில், ஏல் – பகுதி; ஏலுதல் – பொருந்துதல்.

அனையாவையும் ஆயினை – “அத்தனாகி யன்னையாகி யாளுமெம்பிரானுமாய்” என்றார் பெரியாரும்.
அனை – அன்னை யெண்பதன் தொகுத்தல்: தனையென்பதும் இவ்வாறே. ஏல் – என்னில் என்பதன் மரூஉ.

தனைத்தானொத்ததாள் – இயைபின்மையணி: ஒருபொருளையே உபமானமும் உபமேயமுமாகச் சொல்லுதல்,
இதன்இலக்கணம்; உவமையாதற்கு ஏற்ற பொருள் வேறு யாதுமில்லை யென்பதை விளக்கும்.
ஏற்றனைப் பலித்து வந்தனைத் தீர்த்தாய் – இரண்டு செயப்படுபொருள் வந்த வினை.
பலித்து வந்தனை ஏற்றனுக்குத் தீர்த்தாய் என உருபு மயக்கமுமாம்.
பலித்துவம் – ஒருசொல்; அதன்மேல், தன் – சாரியை, ஐ – இரண்டனுருபு.
பலி துவந்தனை எனத் தொடர் மொழியாக் கொண்டு பிரித்து, இரத்தலினாலாகிய துன்பத்தை எனினுமாம்;
துவந்தனை – துன்பம்; பந்தம். ஏறு – பசுவின் ஆண்பாற்பெயர்; எருது: அதனையுடையவன், ஏற்றன்.
மாதவன் – ஸ்ரீய: பதி: வடசொல்; மா – இலக்குமி, தவன் – கணவன். அரங்கத்துமா – ஸ்ரீரங்கநாயகி.
வைப்பாய் – ஏவலொருமை முற்று; விளிப் பெயராகக் கொண்டு, ஓர் உயிர்க்குப் பரமபதமளிக்கத் திருவுளங் கொண்டனை யானால்,
அவ்வுயிரையித் திருவடியிற் சேர்த்துக் கொண்டருள்பவனே யென்றலும் ஒன்று.

—————

மாதங்கத் தானை யரங்கனை வஞ்சன் இலங்கையிலே
மாதங்கத் தான் ஐ யிரு திங்கள் தாழ்த்து பின்பு வாம் பரி தேர்
மாதங்கத் தானை வலத்தானை முன் வதைத்தானைத் தன் பான்
மாதங்கத்தானை வைத்தானை வைத்தேன் என் மதி யகத்தே ——–11-

மாதங்கம் தானை அரங்கனை – சிறந்த மாற்றுயர்ந்த பொன்மயமான ஆடையையுடைய திருவரங்கனும், –
வஞ்சன் இலங்கையிலே மாதங்க – வஞ்சகனான இராவணனுடைய இலங்காபுரியிலே திருமகளின் அவதாரமான சீதாபிராட்டி தங்கியிருக்க,
தான் -, ஐ இரு திங்கள் தாழ்த்து – பத்து மாதம் கழித்து,
பின் – பின்பு,
வாம் பரி தேர் மாதங்கம் தானை வலத்தானை முன் வதைத்தானை – தாவிச் செல்லுங்குதிரைகளும் தேர்களும் யானைகளும்
காலாள்களுமாகிய சேனையின் பலத்தோடு மற்றும் பலவகை வலிமைகளை யுமுடையனான இராவணனை முற்காலத்தில் அழித்திட்டவனும்,
மாது அங்கத்தானை தன்பால் வைத்தானை – உமாதேவியை வாமபாகத்திற் கொண்டுள்ளவனான
சிவபிரானை (த் தனதுவல) ப்பக்கத்தில் அமைய வைத்துள்ளவனுமான திருமாலை,
என் மதியகத்து வைத்தேன் – எனது மனத்தினுள்ளே நிலையாக வைத்திட்டேன்; (எ – று.)

எப்பொழுதும் நம்பெருமாள்பக்கலிலே மனத்தைச்செலுத்தி அப்பெருமானையே தியானிக்கின்றேன் என்பதாம்.

தங்கத்தானை – பீதாம்பரமெனப்படும் பொற்பட்டாடை.
வஞ்சன் – எண்ணம் சொல் செயல் என்னும் திரிகரணத்தொழிலிலும் வஞ்சனைக்கொண்டவன்;
பிராட்டியை வஞ்சனையாற் கவர்ந்துசென்றவன்.
திருமால் இராமனாகத் திருவவதரித்தபோது திருமகள் சீதையாகத் திருவவதரித்ததனால், சீதையை ‘மா’ எனக் குறித்தார்.
ஐயிருதிங்கள் – பண்புத் தொகைப் பன்மொழித்தொடர்.
சாந்திரமானபக்ஷத்தில் அமாவாசைக்கு அமாவாசை ஒருமாசமெனக்கொண்டு சந்திரசம்பந்தத்தாற் கணக்கிடுதல்பற்றி,
திங்கள் என்ற சந்திரனது பெயர் இலக்கணையாய் மாதத்தை யுணர்த்தும்; ‘
மதி’ என்பதும் இவ்வாறே வருதல் காண்க.
வாம் – வாவும் என்னுஞ் செய்யுமெனெச்சவீற்றுயிர்மெய் சென்றது.
மூன்றாமடியிலுள்ள ‘மாதங்கம்’ என்ற வடசொல் மதங்க முனிவரிடத்தினின்று ஆதியில் உண்டானதென்று காரணப்பொருள்படும்.
இங்கே, வலம் – வரபலம் புஜபலம் ஆயுதபலம் மனோபலம் ஸ்தாநபலம் முதலியன,
பலம் என்ற வடசொல், வலமென விகாரப்பட்டது; வலம் – வெற்றியுமாம்.
பின், முன் என்பன – காலத்தின்மேல் நின்றன.
மாது அங்கத்தான் – அர்த்தநாரீசுவர மூர்த்தியானவன்.
மாதங்கத்தானைத் தன்பால் வைத்தான் – “பிறைதங்குசடையானை வலத்தேவைத்து,”
“வலத்தனன் திரிபுரமெரித்தவன்” என்பன காண்க.
மதியகத்து – அறிவிலே எனினுமாம்; அகத்து – ஏழனுருபு.
அம்பிகையை ஒருபாகத்தில் வைத்தவனைத் தனது ஒரு பாகத்தில் வைத்தவனை
எனது அகத்துறுப்பினுள்ளே வைத்தேன் யான் என ஒரு சமத்காரம் தோன்றக் கூறியவாறு.

———–

மதிக்கவலைப் புண்ட வெண்டயிர் போல மறு குறு மென்
மதிக்கவலைப் புண்டணி கின்றிலேன் மண்ணும் வானகமும்
மதிக்கவலைப் புனல் சூழ் அரங்கா நின் மனத்தருடா
மதிக்கவலைப் புன் பிறப்பினி மேலும் வரும் கொல் என்றே —–12-

மண்ணும் வானகமும் மதிக்க – மண்ணுலகத்தாரும் விண்ணுலகத்தாரும் கொண்டாடும்படி,
அலை புனல் சூழ் – அலைகளையுடைய காவேரிதீர்த்தத்தாற்புடைசூழப்பெற்ற,
அரங்கா – திருவரங்கத்தில் எழுந்தருளி யிருப்பவனே!
நின் மனத்து அருள் தாமதிக்க – உனது திருவுள்ளத்திலுண்டாகும் கருணை (என்பக்கல் உடனே சித்தியாமல்) காலம்நீட்டித்தலால்,
வலை புல் பிறப்பு இனிமேலும் வரும்கொல் என்று வலைபோன்ற இழிவான சன்மம் இனிமேலும் (எனக்கு) வந்துவிடுமோ வென்று சிந்தித்து,
மதிக்க அலைப்புண்டவெள் தயிர்போல மறுகுறும் என் மதி கவலை புண் தணிகின்றிலேன் – கடைதலால் அலைக்கப்பட்ட வெண்மையான
தயிர்போல (ஒருநிலை நில்லாது) சுழல்கிற எனதுமனத்தின் கவலையாகிய விரணம் ஆறப்பெற்றிலேன்; (எ – று.)

எனதுகவலை தணியுமாறு விரைவில் எனக்கு நற்கதியருளவேண்டு மென்பதாம்.
எனது கவலை தணியுமாறு எனக்கு நல் கதி அருள வேண்டும் என்பதாகும்
வலை மிருக பஷிகளைப் பந்தப்படுதுவது போலே பிறப்பு உயிரை பந்தப்படுதலால்
வலைப்புன் பிறப்பு எனப்பட்டது-

மறுகுறும், மறுகு – பகுதி, உறு – துணைவினை.
மனத்திற்குச் சுழற்சி – பலவகைச்சிந்தனையால் தடுமாற்றங்கொள்ளுதல்.
கவலை – கவற்சி; ‘ஐ’ விகுதி பெற்ற தொழிற்பெயர். கவலைப்புண் – மனோவியாதி.
தணிகின்றிலேன் – தன்மையொருமை யெதிர்மறை நிகழ்காலமுற்று.
மண், வானகம் – இடவாகு பெயர்கள்.
மூன்றாமடியில், மதிக்கச் சூழ் என இயையும். வலை மிருகபக்ஷிகளைப் பந்தப்படுவதுபோலப்
பிறப்பு உயிரைப் பந்தப்படுத்துதலால், ‘வலைப்புன்பிறப்பு’ எனப்பட்டது.
இனிமேலும் – இப்பிறப்பு ஒழிந்தபின்பும் என்றபடி.
வருங்கொல் என்றதில், கொல்என்ற இடைச்சொல் – ஐயவினாப் பொருளோடு இரக்கத்தையும் உணர்த்தும்.

————

வருந்து வரைப்பட்ட மங்கையர் எண்மர் மனங்களைக் க
வருந்து வரைப்பட்ட வாய் அரங்கேசனை வஞ்சப்பகை
வருந்து வரைப்பட்ட வேழம் அட்டானை மறந்து உலகோர்
வருந்து வரைப்பட்ட வீப்போன் மடந்தையர் மால்வலைக்கே ——–13–

துவரை வரும் – துவாரகாபுரியில் வந்து சேர்ந்த,
பட்டம் மங்கையர் எண்மர் – பட்டத்துத் தேவிமார் எட்டுப் பேர்களுடைய,
ருக்மிணி -சத்யபாமை -ஜாம்பவதி -சத்யை -மித்ரவிந்தை -ஸு சிலை -ரோகிணி -லஷணை-என்கிற எட்டு பட்ட மகிஷிகள்
துவரை வரும் -கண்ண பிரானுக்கும் திருத் தேவிமார்களுக்கும் அடை மொழி.
மனங்களை கவரும் – (தன்பக்கல்) இழுக்கின்ற,
துவரை பட்ட வாய் – செந்நிறத்தைப் பொருந்திய வாயழகையுடைய,
அரங்க ஈசனை – ரங்கநாதனும்,
வஞ்சம் பகைவர் உந்து – வஞ்சனையை யுடைய பகைவர் (தன்னை நோக்கிச்) செலுத்திய,
வரை பட்ட வேழம் – மலையை யொத்த (குவலயாபீடமென்னும்) யானையை,
அட்டானை – கொன்றவனுமான திருமாலை,
மறந்து, உலகோர் – உலகத்துச்சனங்கள்,
ஐ பட்ட ஈ போல் – கோழையில் அகப்பட்டு (மீளவொண்ணாதபடி) சிக்கிக்கொண்டழிகிற ஈயைப்போல,
மடந்தையர் மால் வலைக்கே வருந்துவர் – மகளிர் பக்கல் கொள்ளும் மோகமாகிய வலையிலே அகப்பட்டு (மீளமாட்டாது) வருந்துவர்; (எ – று.)

ஜராசந்தனும் காலயவநனும் ஒருங்குபடை யெடுத்து வந்த காரணத்தாற் கண்ணன் மதுரையை விட்டுத் துவாரகாபுரியை
மேல்கடலிலே நிர்மாணஞ்செய்துகொண்டு அங்குச் சகலசனங்களுடனே குடிபுகுந்தமையும்,
வெவ்வேறுநாடுகளிற்பிறந்த ருக்மிணி முதலிய இளமகளிர் கண்ணனால் மணஞ்செய்துகொள்ளப்பட்டு
அவனதுவாசஸ்தாநமான துவாரகைக்கு வந்துசேர்ந்தமையும் காண்க.

அம்மனைவியரனைவர்க்கும் ஒருநிகராக மகிழ்ச்சிவிளைத்து வந்தமையை ‘மனங்களைக் கவரும்’ என்றதனால் வெளியிட்டார்.
‘எண்மர்மனங்களைக் கவருந் துவரைப்பட்டவா யரங்கேசன்’ என்றது, அதரத்தினழகில் ஈடுபாடு.
‘பகைவர்’ என்றது, கம்சனையும், அவனது பாகன் முதலிய ஏவலாளரையும்.

துவரை – வடமொழிச் சிதைவு.
பட்டமங்கையர் – பட்டமகிஷிக்கு உரிய நெற்றிப்பொற்பட்டத்தைத் தரித்துள்ள மாதர்கள்,
எண்மர் – எட்டு என்ற பகுதி எண்என விகாரப்பட்டது: ம் – பெயரிடைநிலை.
இரண்டாமடியில், துவர் ஐ பட்ட என்று பதம் பிரித்து, செந்நிறமும் அழகும் அமைந்த என்று உரைப்பாரு முளர்.
மூன்றாமடியில், பட்ட – உவமவுருபு. அட்டான், அடு – பகுதி.
அகப்பட்டவரை மீளவிடாமையால், மடந்தையரதுமால் ‘வலை’ எனப்பட்டது. வலைக்கு – உருபுமயக்கம்.

———-

எம்பெருமானுக்கு ஆட்பட்டு உய்யாமல் விஷயாந்தரங்களில் ஆழ்ந்து அழிகிற பேதை மாந்தர்களுடைய
தன்மையைக் குறித்து இரங்கிக் கூறியவாறாம்.

மாலைக்கல்லார மடவார் புண்ணாக்கையில் வாஞ்சை வைத்து
மாலைக்கல்லாரம் புலிக்கு நையா நிற்பர் மாய்விப்பதோர்
மாலைக்கல்லாரம் புயத்தாளில் வைக்கும் மதில் அரங்க
மாலைக்கல்லார் அஞ்சலி யார் என்னே சில மானிடரே ——–14–

சில மானிடர் – (உலகத்துச்) சிலமனிதர்கள்,
மாலை கல்லாரம் மடவார் புண் ஆக்கையில் வாஞ்சை வைத்து – மாலையாகத் தொடுக்கப்பட்ட செங்கழுநீர் மலர்களைச் சூடிய
மாதர்களுடைய அசுத்தமான உடம்பினிடத்திலே விருப்பம் வைத்து, (அக்காமத்தினால்),
மாலைக்கு அல் ஆர் அம் புலிக்கு நையா நிற்பர் – (காமோத்தீபகப்பொருள்களான) அந்தி மாலைப் பொழுதுக்கும்
இரவில் விளங்குகின்ற சந்திரனுக்கும் வருந்தி நிற்பார்கள்;
மாய்விப்பது ஓர் மாலை கல்லார் – (இவ்வாறு தங்களை) அழியச் செய்வதான ஒப்பற்ற காம மயக்கத்தைக் களைந்தொழிக்க மாட்டார்கள்;
அம்புயம் தாளில் வைக்கும் – தாமரைமலர்போன்ற (தனது) திருவடிகளில் (அடியார்களை) இருத்துகிற,
மதில் அரங்கம் மாலை – (ஏழு) மதிள்கள்சூழ்ந்த திருவரங்கத்திற் பள்ளிகொண்டிருக்கிற திருமாலை,
கல்லார் – துதிக்கமாட்டார்கள்;
அஞ்சலியார் – கை கூப்பி வணங்க மாட்டார்கள்:
என்னே – இது என்ன பேதைமையோ?

மாலைக்கல்லாரம் – கல்லாரமாலை என முன் பின்னாக மாற்றிக்கூட்டிச் செங்கழுநீர்மலர்மாலை யென்னலாம்.
கல்ஹாரம் – வடசொல். ‘மாலைக்கல்லாரமடவார்’ என்றது, மேனி மினுக்குபவ ரென்றபடி.
மடவார் இளமையை அல்லது மகளிர்க்கு உரிய பேதைமைக் குணத்தை யுடையவர்.
வாஞ்சை – வாஞ்சா என்ற வடசொல்லின் விகாரம்.
நையா – உடன்பாட்டு இறந்தகால வினையெச்சம்.

மூன்றாமடியில், மால் – பெண்மோகம். கல்லல் – கல்லுதல், வேரூன்றினதைப் பெயர்த்தொழித்தல்.
‘அம்புயத்தாளில் வைக்கும்’ என்றதனால் திருவடியே வீடாயிருக்கு மென்றபடி.
ஸ்ரீரங்கம் ஸப்தப்ராகார முடைய தாதலால், அச்சிறப்பு விளங்க, ‘மதிலரங்கம்’ எனப்பட்டது.

நான்காமடியில், கற்றல் – எம்பெருமானுடைய திருநாமங்களைச் சொல்லிப் பழகுதலும்,
அவனுடைய சொரூபகுணவிபவங்களைக் கூறுகிற நூல்களைப் படித்தலும்,
அவனைப் புகழ்ந்து கூறுதலும்.

மானிடர் – மாநுஷரென்ற வடசொல்லின் திரிபு;
காசியபமுனிவரது மனைவியருள் மநுவின் சந்ததியா ரென்று காரணப்பொருள்படும்.

தாம்காதலித்த மகளிரின் சேர்க்கை நேராத விரகதசையில் அந்திப் பொழுதும், சந்திரனது நிலாத் தோற்றமும்
அத்துயரை வளர்த்து வருத்து மென்க.
புண்ணாக்கை – மாம்சசரீரம்.

————–

மானிடராக வரலரிதோர் மண்டலத்தின் நெறி
மானிடராக மிலாதவராதன் மலரயனார்
மானிடராக மத்தாலன்பராய வரங்கத்துள் எம்
மானிடராக மலரடிக்கு ஆட்படும் வாழ்வரிதே ——–15–

ஓர் மண்டலத்தின் – ஒப்பற்ற இந்தநிலவுலகத்திலே,
மானிடர் ஆக வரல் – மனிதராய்ப் பிறத்தல்,
அரிது – அருமையானது;
(அங்ஙனம் மனிதசன்மமெடுத்தாலும்),
இடர் ஆகம் இலாதவர் ஆதல் (அரிது) – துன்பம் மிக்க விகார சரீரமில்லாதவராதல் அரியது;
(அங்ஙனம் உடற்குறையில்லாதவராயினும்),
நெறிமான் (ஆதல் அரிது) – நீதி நெறியுடையவனாயிருத்தல் அருமையானது;
(அங்ஙனம் சன்மார்க்கத்தில் ஒழுகினாலும்),
மலர் அயனார் – தாமரைமலரில்தோன்றிய பிரமதேவரும்,
மான் இடர் – மானை இடக்கையிலேந்திய சிவபிரானும்,
ஆகமத்தால் – சாஸ்திரங்களிற் கூறிய முறைப்படி,
அன்பர் ஆய – தொண்டுபூண்டொழுதற்கு இடமான,
அரங்கத்துள் – ஸ்ரீரங்கத்தில் (பள்ளிகொண்டருள்கிற),
எம்மான் – எம்பெருமானுடைய,
இடம் ராகம் மலர் அடிக்கு – பெருமை யுடைய சிவந்த தாமரை மலர் போன்ற திருவடிகளுக்கு,
ஆள்படும் – அடிமை செய்து ஒழுகுகிற,
வாழ்வு – வாழ்க்கை,
அரிதே – (பெறுதற்கு) அருமையானதே; (எ – று.)

திருவரங்கநாதனான திருமாலினது திருவடிகளுக்கு அடியவராதல் நல்வினைப் பயனாலன்றி நேராது என்பதாம்.

அரியது கேட்கின் வரிவடிவேலாய் அரிது அரிது மானிடராதல் அரிது
மானிடர் ஆயினும் கூன் குருடு செவிடு பேடு நீக்கிப் பிறத்தல் அரிது
பேடு நீக்கிப் பிறந்த காலையும் ஞானமும் கல்வியும் நயத்தல் அரிது
ஞானமும் கல்வியும் நயந்த காலையும் தானமும் தவமும் தான் செய்தல் அரிது
தானமும் தவமும் தான் செய்வர் ஆயின் வானவர் நாடு வழி திறந்திடுமே-

நெறிமான் என்பதில், மான் – ஆண்பாற்பெயர்விகுதி.
அயனார், மானிடர் – உயர்வுப்பன்மை.
மலர் – திருமாலின் நாபித்தாமரைமலர்.
அயன் – அஜன்; இவ்வடமொழிப்பெயர் – திருமாலினிடத்தினின்று தோன்றினவனென உறுப்புப்பொருள்படும்;
அ – விஷ்ணு. சிவபிரான் இடக்கையிலேந்திய
மான், தாருகவனமுனிவர் ஏவினது.

நான்காமடியில், மான் – மஹாந்.
இடராகம் என்பதற்கு – தன்னிடத்துச் செந்நிறத்தையுடையஎன்று உரைத்தலு மொன்று.
எம்மானிடம் – எம்பெருமானுடைய என்று உரைத்து,
இடம் என்பதை ஆறனுருபின்பொருளில்வந்த சொல்லுரு பென்பர் ஒருசாரார்.
ஈற்று ஏகாரம் – தேற்றம். ‘இலாதவனாதல்’ என்றும் பாடம்.
‘அரிது’ என்பதும், ‘ஆதல்’ என்பதும் எடுத்துப் பிறவிடத்தும் கூட்டப்பட்டன.

———–

அரி தாமரைக்கண் தோல் உடுத்தார் அயனார்கு அரியான்
அரி தாமரைக்கண் அம்மான் திருப்பாதம் அடைமின் சன்மம்
அரி தாமரைக்கணம் தங்காது உயிர் அவனூர் வினவில்
அரி தாமரைக்கணம் ஈர்த்து ஓடும் பொன்னி யரங்கம் அன்றே ———16–

அரி – இந்திரனுக்கும்,
தாம் அரைக்கண் அம் தோல் உடுத்தார் – தாம் இடையிலே அழகிய புலித்தோலை யுடுத்துள்ளவரான சிவபிரானுக்கும்,
அயனார்க்கு – பிரமதேவர்க்கும்,
அரியான் – (அறிதற்கு) அரியவனும்,
அரி – ஹரி என்னும் ஒருதிருநாமமுடையவனும்,
தாமரை கண் அம்மான் – செந்தாமரைமலர் போன்ற திருக்கண்களையுடைய தலைவனுமான எம்பெருமானுடைய,
திரு பாதம் – திருவடிகளை,
அடைமின் – சரணமடையுங்கள்;
(அதனையடைவதனாற் பயனென்னவெனின், -)
சன்மம் அரிது ஆம் – மீண்டும் பிறப்புஇல்லாமற்போம்:
(அது எங்ஙனமெனின், -)
உயிர் அரைக்கணம் தங்காது – (சரணமடைபவருடைய) உயிர் (முத்தி புகுமே யன்றி மறுபடி ஓருடம்பில்)
அரை க்ஷணப் பொழுதும் பொருந்தி நிற்க மாட்டாது:
அவன் ஊர் வினவில் – அப்படிப்பட்ட மகாவிபவமுடைய எம்பெருமானது திருப்பதி (யாது என்று) வினாவினால்,
அரி தாம் மரை கணம் ஈர்த்து ஓடும் பொன்னி அரங்கம் அன்றே – சிங்கங்களையும் தாவிப்பாயும் மான்களின் கூட்டத்தையும்
ஒருங்கு இழுத்துக்கொண்டு ஓடிவருகிற உபய காவேரியின் மத்தியிலுள்ள திருவரங்கமன்றோ? (எ – று.) – அன்றே – தேற்றம்.

முதலடியில், அரி – ஹரி; (பகைவரை) அழிப்பவன். தாம் – அசை. அரைக்கண், கண் – ஏழனுருபு.
அரை – பாதி; உடம்பிற் பாதியளவிலுள்ள உறுப்பான இடையைக் குறிக்கும்போது ஆகுபெயர்.

இரண்டாமடியில், அரி – ஹரி; (அடியார்களுடைய துயரத்தை) ஒழிப்பவன். தாமரைக்கண் அம்மான் – புண்டரீகாக்ஷன்.
அரி – செவ்வரிபரந்த கண் என்றலும் ஒன்று; அரி – உத்தம லக்ஷணமான சிலசிவந்தரேகைகள்.
இனி, அரி – (காண்பவர்களுடைய கண்களையும் மனத்தையும்) அபஹரிக்கிற (கவர்கிற) கண் எனினுமாம்.
அம்மான் – அப்படிப்பட்ட மகான். ஜந்மம் – வடசொல். அரிது என்பதில், அருமை – இன்மைமேலது.
கணம் – க்ஷணம்; வடமொழிவிகாரம்.

நான்காமடியில், அரி – ஹரி; யானை முதலிய விலங்குகளை அரிப்பது; அரித்தல் – அழித்தல். தாம் – தாவும் என்பதன் விகாரம்;

கீழ் 11 – ஆஞ் செய்யுளில் ‘வாம்’ என்பது போல. ஸஹ்யபருவதத்தினின்று உற்பத்தியாகிப் பெரு வெள்ளமாய்ப்
பெருகி வரும் விசையில் அக்குறிஞ்சி நிலக் கருப் பொருளாகிய சிங்கம் மான் முதலிய விலங்குகளை
அடித்துத் தள்ளிக் கொண்டு வரும் காவேரியென்க;

“மலைத்தலையகடற் காவிரி, புனல்பரந்துபொன்கொழிக்கும்” என்றபடி
தான் பெருகும் போது பொன்னைக் கொழித்துக்கொண்டு வருதலால், காவேரிக்குப் பொன்னியென்று பெயர்;
இ – உடைமைப் பொருள் காட்டும் பெண் பால் விகுதி.

செய்யுளடிகளினிறுதியில் சந்தி அநித்யமென்பது இலக்கண நூலார் துணி பாதலின், நின்ற அடியின் ஈற்றோடு வரும்
அடியின் முதல் சேருமிடத்துப் புணர்ச்சி கொள்ளப் பட்டிலது, யகமப்பொருத்தத்தின்பொருட்டு.
இதனை, மேல் இங்ஙனம் வருமிடங்கட்கெல்லாங் கொள்க.

————-

அரங்காதுவார் கணை கண் வள்ளை கோங்கின் அரும்பு மங்கை
அரங்காதுவார் முலை என்று ஐவர் வீழ்ந்தனர் ஆடரவின்
அரங்காதுவாரமிலா மணியே யணியார் மதில் சூழ்
அரங்காதுவாரகையாய் அடியேன் உன் அடைக்கலமே ———-17–

மங்கையர் – இளமகளிருடைய,
கண் – கண்கள்,
அரம் காதுவார் கணை – அரமென்னுங்கருவியினால் அராவப்பட்ட (கூரிய) நீண்ட அம்பு போலும்:
அம் காது வார் முலை – (அம்மாதரது) அழகிய காதுகளும் கச்சிறுக்கிய கொங்கைகளும்,
வள்ளை கோங்கின் அரும்பு – (முறையே) வள்ளை யென்னும் நீர்க்கொடியின் இலையையும் கோங்கமரத்தின் அரும்பையும் போலும்,
என்று – என்று (உவமமுகத்தாற் புனைந்து) கருதி,
ஐவர் வீழ்ந்தனர் – பஞ்சேந்திரியங்களாகிய ஐந்துபேர் (அம்மகளிர் பக்கல்) ஆசைகொண்டு (அப்பெண்மோகக்கடலில்) விரைந்து விழுந்தன்மையர்;
ஆடு அரவு இன் அரங்கா – படமெடுத்தாடுகிற (காளியனென்னும்) பாம்பை இனிய கூத்தாடுமிடமாகக் கொண்டவனே!
துவாரம் இலா மணியே – புரைசலில்லாத முழு மாணிக்கம் போன்றவனே!
அணி ஆர் மதில் சூழ் அரங்கா – அழகு நிறைந்த மதிள்களாற் சூழப்பட்ட திருவரங்க நகருடையவனே!
துவாரகையாய் – (கிருஷ்ணாவதாரத்தில்) துவாரகாபுரியில் எழுந்தருளியிருந்தவனே!
அடியேன் உன் அடைக்கலம் – நான் உனக்கு அடைக்கலப் பொருளாகின்றேன்; (எ – று.)

யான் உன்னையே சரணமாக அடைந்து உன்னாற் பாதுகாக்கப்படும் பொருளாயினேனாதலால்,
என்னைப் பஞ்சேந்திரியங்களின் வசப்பட்டு அழியாதபடி பாதுகாத்தருளவேண்டு மென்பதாம்.

அரம் . வாள்விசேடம். அரங்காது வார்கணை – “வாளரந்துடைத்த வைவேல்” என்றாற்போலக் கொள்க.
காது வார் என்ற இரண்டும் – வினைத்தொகை. வார் – உரிச்சொல்லுமாம்.
வள்ளைபோலும் காது, கோங்கினரும்புபோலும் முலை என முறையே சென்று இயைதல், முறைநிரனிறைப்பொருள்கோள்.

இரண்டாமடியில், வார் – கஞ்சுகம்.
மெய் வாய் கண் மூக்குச் செவி யென்னும் ஐம்பொறிகளை ஐவர் என உயர்திணையாகக்கூறியது,
இழிப்புப்பற்றிய திணைவழுவமைதி;
தொல்காப்பியவுரையில் நச்சினார்க்கினியர்.”தாம்வந்தார் தொண்டனார்” என்பது,
உயர்சொல் குறிப்புநிலையின் இழிபு விளக்கிற்று’ என்பது, இங்கு உணரத்தக்கது. ஐவர் – தொகைக்குறிப்பு.
வீழ்ந்தனரென இறந்தகாலத்தாற் கூறினது, விரைவை விளக்கும்.

மூன்றாமடியில், அரங்கு – ரங்கமென்ற வடசொல்லின் விகாரம். த்வாரம், த்வாரகா – வடசொற்கள்.
அனைவராலும் விரும்பியேற்றுக்கொள்ளப்படுதலும், மதித்தற்கரிய மதிப்புடைமையும், சிறப்பும் பற்றி, ‘மணியே’ என்றார்.
‘அடியேன்’ என்றது, பணிவை விளக்கும்.
‘அடியேன் உன் அடைக்கலம்’ என்றவிடத்து, தன்மையிற் படர்க்கை வந்த இடவழுவமைதியும்,
இழிப்பினால் (பணிவு பற்றி) உயர்திணை அஃறிணையாகக் கூறப்பட்ட திணைவழுவமைதியும் இருத்தல் காண்க.

கண்ணன் காளியனுடைய முடியின்மேல் ஏறி நர்த்தநஞ்செய்தருளும் போது ஐந்து தலைகளை யுடைய அந்நாகம்
எந்தெந்தப் படத்தைத் தூக்குகின்றதோ அந்தப்படத்தைத் துவைத்து நர்த்தனஞ்செய்து நின்று
அப்பாம்பின் வலிமையை யடக்கி அதனை மூர்ச்சையடையச் செய்கையில் பலவகை
நடனத்திறங்களைச் செய்து காட்டியமை தோன்ற, ‘ஆடரவினரங்கா’ என்றார்.

முதலடியினிறுதியில், மங்கையர் என்ற பெயர்ப்பகுபதத்தினிடையே சந்தியால் வரும் உடம்படு மெய்யாகிய
யகரத் தோற்றத்தைக் கொள்ளாது விட்டது, யமகநயத்தின்பொருட்டு.
இப்படி பகுபதத்தின் அல்லது பகாப்பதத்தினிடையிலே யுள்ள எழுத்துக்களை யமகப் பொருத்தத்தின் பொருட்டுப்
பிரித்து எழுதியுள்ள விடங்களிலெல்லாம் மூலத்தில் (-) இக்குறி இடப்பட்டிருக்கிறது.
இங்ஙனம் சொல்லணிக்காகப் பிரித்துக்காட்டியிருந்தாலும் பொருள் நோக்கும் பொழுது சேர்த்துப் படித்துக் கொள்க.

—————

அடைக்கலந் தாயத்தவர் போலுடலுறையை வரையும்
அடைக்கலந் தாவுலகம் கொண்ட தாள்களுக்கண்ட முண்டால்
அடைக்கலந் தாயரங்கா வாயர்பாடியிலன்று நெய்பால்
அடைக்கலந் தாய் வைத்து வாய் நெரித்தூட்ட வழுமையனே——–18–

அண்டம் – அண்ட கோளங்களை,
உண்டு – உட் கொண்டு,
ஆல் அடை கலந்தாய் – ஆலிலையிற் சேர்ந்து (பிரளயப் பெருங்கடலிற்) பள்ளி கொண்டவனே!
அரங்கா!
அன்று – அக் காலத்தில் (முன்பு கண்ணனாகத் திரு வவதரித்த பொழுது),
ஆயர்பாடியில் – திருவாய்ப் பாடியிலே,
நெய் – நெய்யை (எண்ணெயை),
பாலடை கலம் வைத்து – பாலடையாகிய பாத்திரத்திற் பெய்து கொண்டு,
தாய் – (உன்னை வளர்த்த) தாயாகிய யசோதைப் பிராட்டி,
வாய் நெரித்து ஊட்ட – (உனது) வாயில் வைத்து அவ் வாயை நெரித்து உண்பிக்க,
அழும் – (ஏறிட்டுக் கொண்ட மனிதப் பிறப்புக்கேற்ப எளிய சிறு குழந்தை போலவே) அழுத,
ஐயனே – இறைவனே!
தாயத்தவர் போல் – பங்காளிகள் போல,
உடல் உறை – (விலக்க வொண்ணாதவராய் எமது) உடம்பாகிய குடிசையிலே ஒருங்கு உடன் இருக்கிற,
ஐவரையும் – ஐந்து இந்திரியங்களையும்,
அடைக்கலம் – (விஷயாந்தரத்திற் செல்ல வொட்டாமல்) அடக்கி வசப்படுத்தி வைக்க வல்லமை யுடையோமல்லோம், (யாம்);
தாய் உலகம் கொண்ட தாள்களுக்கு அடைக்கலம் – தாவி உலகங்களை அளந்து கொண்ட
(உனது) திருவடிகளுக்கு அடைக்கலப் பொருளாகிறோம்; (எ – று.)

யாம் பஞ்சேந்திரிய நிக்ரக சக்தியை யுடையோமல்லோமாயினும் உனது திருவடிகளிற் சரண்
புகுந்தோ மாதலால், எங்களை நீ பாதுகாத்தருளக் கடவை யென்பதாம்.

அடைக்கலம் – தன்மைப் பன்மை யெதிர் மறைமுற்று; கு – சாரியை, அல் – எதிர்மறையிடைநிலை.
அடைத்தல் – இப்பொருளதாதலை, “ஐவரை யகத் திடை யடைத்த முனி” என்ற விடத்துங் காண்க.
தாயம் – பங்குக்கு உரிய பொருள்; அதனைப் பெறுதற்கு உரியவர், தாயத்தவர்; தாயாதிகள், ஞாதிகள்.
ஓர் இல்லத்திலே ஒருங்குவசித்தற்கு உரியவர்களான அவர்கள்,
ஓர் உடம்பிலே ஒருங்கு வசிக்கின்ற ஐம்பொறிகட்கு உவமை கூறப்பட்டனர்;
இவ்வுவமையில் ‘பங்காளியோ பகையாளியோ’ என்னும்படி தீங்கு செய்யுந்தன்மையும் விளங்கும்.
ஐவரையும், உம் – இனைத்தென்றறிபொருளில்வந்த முற்றும்மை.

தாய் என்ற தெரிநிலை வினையெச்சத்தில், தாவு என்பதன் விகாரமான தா – வினைப்பகுதி, ய் என்ற விகுதியே இறந்தகாலங்காட்டும்.
அண்டம் – உலக வுருண்டை. அடை என்ற சொல் – இலை யென்ற பொருளில் வருதலை,
‘அடைக்காய்’ என்றவிடத்திலுங் காண்க. ஆ – பசு; அதனையுடையவர், ஆயர்: இடையர்; ய் – எழுத்துப்பேறு. அவர்கள் வசிக்கிற ஊர்,
ஆயர்பாடி. கண்ணபிரான் வளர்ந்த இடம், கோகுலமென்னும் பெயரினது.

‘அன்று’ எனச் சுட்டினது, கதையை உட்கொண்டு. பாலடை – பால்புகட்டும் சங்கு;
பால் அடுக்கப் பெறுவதெனப் பொருள்படுங் காரணக்குறி;
கலம் – உண்கலம்.

“பத்துடையடியவர்க் கெளியவன் பிறர்களுக் கரியவித்தகன்” என்றபடி
அருமையான பரத்வத்தையுடைய எம்பெருமான் அதனை இருந்தது தெரியாதபடி விட்டு
எளிமை மேற்கொண்டு பாவனைசெய்த சௌலப்பியம் விளங்க,
‘ஆயர்பாடியி லன்று செய் பாலடைக் கலந்தாய்வைத்து வாய் நெரித்தூட்ட வழுமையனே’ என்றார்.

————-

செல்வ நிலையாமையையும் சிற்றின்பத்தின் சிறுமையையும் அறிந்து அவற்றை வெறுத்து,
முற்ற மூத்த நிலையில் மனம் ஒருநிலைப்படா தாதலால், இம்மையில் வருந்தியாவது
இளமை தொடங்கியே அழகிய மணவாளனுக்குத் தாசராவீரேல்,
மறுமையில் பேரின்பமடைந்து அழிவிலாநந்தம் பெறலாமென்று உலகத்தார்க்கு உணர்த்தியவாறாம்.

ஐயமருந்திவை யுண் என்று மாதர் அட்டு ஊட்டும் செல்வம்
ஐயமருந்தினைப்போதே அவர் இன்பம் ஆதலினால்
ஐயமருந்தியக்கங் குறுகா முன் அரங்கற்கு அன்பாய்
ஐயமருந்தயும் வாழ்மின் கண் மேல் உனக்கு ஆநந்தமே ——–19–

ஐய – ஐயனே!
இவை – இவ்வுணவுகள்,
மருந்து – (இன்சுவை மிகுதியால்) தேவாமிருதம்போன்றன;
உண் – (இவற்றை) உண்ணக் கடவை,’
என்று – என்று (அன்புபாராட்டி உபசாரவார்த்தை) சொல்லி,
மாதர் – காதற்கு இடமான உரிமை மகளிர்,
அட்டு ஊட்டும் – (தாமே) சமையல் செய்து உண்பிக்கும்,
செல்வம் – ஐசுவரியம்,
ஐயம் – சந்தேகத்துக்கு இடமானது (நிலையற்றது என்றபடி);
அவர் இன்பம் – அந்த மகளிருடைய போக ரசமும்,
அருந் தினை போதே – சிறிய தினையென்னுந் தானியத்தி னளவினதான அதி சொற்ப காலத்ததே;
ஆதலினால் – ஆதலால்,
ஐ அமரும் தியக்கம் குறுகாமுன் – கோழை (கண்டத்திற்) பொருந்துகிற கலக்கம்
(அந்திமதசையில் ஆகின்ற தடுமாற்றம்) நெருங்குதற்கு முன்னமே,
ஐயம் அருந்தியும் அரங்கற்கு அன்பு ஆய் வாழ் மின்கள் – பிச்சை யெடுத்துப் புசித்தாயினும் ரங்கநாதன்
விஷயத்திற் பக்தி கொண்டு சீவியுங்கள்; (இப்படிசெய்வீராயின்),
மேல் – இனிமேல்
(இப்பிறப்பு ஒழிந்தவளவில் என்றபடி),
உமக்கு – உங்களுக்கு, ஆநந்தமே – (பரமபதத்து) நித்தியாநந்தமே உண்டாம்; (எ – று.) –
ஈற்று ஏகாரம் – பிரிநிலையோடு தேற்றம்.

ஐய – ஸ்வாமீ; இவ்விளி, அன்பையும் மரியாதையையும் காட்டும்: அண்மை விளி யாதலின், ஈறு அழிந்தது.
மருந்து = சாவா மருந்து; சாவாமைக்குக் காரணமாகிய மருந்து.
‘இவை’ என்ற பன்மையால், பல்வேறு வகைப்பட்ட உண்டிகளும் சிற்றுண்டிகளுமென விளங்கும்.
ஊட்டும், உண் என்பதன் பிறவினையான ஊட்டு – பகுதி.
செல்வவானாதலால் பரிசாரகர் பலர் இருக்கையிலும் மனைவியரே சமைத்து உண்பித்தல், அன்புடைமையால் இன்பஞ்செய்தற்பொருட்டு,
‘ஊட்டும்’ என்ற சொல்லின் ஆற்றலால், தாம் கையில் வாங்கி யுண்ணாமல் மனைவியர் தாமே வாயிற் போகட உட்கொள்ளுதல் தோன்றும்.
செல்வச் செருக்கினால் சிறிதளவே உண்டு மிச்சத்தை வேண்டாவென்று விலக்குதலால்,
‘சாமி! அமிருதம் இவை உண்’ என்று உரிமை மகளிர் வேண்டலாயிற்று.
செல்வம் என்ற பெயர் தானே அதன் நிலைமை யின்மையை விளக்கும்.
செல்வம் – நிலைத்திராமல் நீங்கிச் செல்வதென்று பொருள்படுங் காரணக்குறி:
செல் – பகுதி, அம் – கருத்தாப் பொருள்விகுதி, வ் – எழுத்துப்பேறு.

“அறுசுவையுண்டி யமர்ந்தில்லா ளூட்ட, மறுசிகைநீக்கி யுண்டாரும் – வறிஞராய்ச்,
சென்றிரப்ப ரோரிடத்துக் கூழெனிற் செல்வமொன்று, உண்டாக வைக்கற்பாற்றன்று,”

“முல்லை முகை சொரிந்தாற்போன் றினிய பாலடிசில் மகளிரேந்த, நல்ல கருணையால் நாள்வாயும்
பொற்கலத்துநயந் துண்டார்கள், அல்லலடைய அடகிடுமி னோட்டகத்தென்று அயில்வார்க்கண்டும்,
செல்வம் நமரங்காள் நினையன்மின் செய்தவமே நினைமின்கண்டீர்”,

“ஆமின்சுவை யவையாறோ டடிசிலுண்டார்ந்தபின், தூமென் மொழிமடவா ரிரக்கப் பின்னுந் துற்றுவார்,
ஈமி னெமக் கொரு துற்றென் றிடறுவ ராதலிற், கேண் மின் துழாய்முடி யாதியஞ்சோதிகுணங்களே” என்பன இங்கு நோக்கத்தக்கவை.

அருமை – சிறுமையின்மேலது. தினை – சிறுமைக்குக் காட்டுவதோ ரளவை.
போகாதே, ஏ – தேற்றத்தோடு இழிவு சிறப்பு.

செல்வ நிலையாமையையும், இன்ப நிலையாமையையும் முன்னிரண்டடியில் விளக்கினவர்,
மூன்றாமடியில் இளமை நிலையாமையையும், யாக்கை நிலையாமையையும் விளக்கினார்.
தியக்கம் – தியங்கு என்ற பகுதியின் தொழற்பெயர்; அம் – விகுதி, வலித்தல் – விகாரம்.
ஐ அமர் உந்தி அக்கம் குறுகாமுன் எனப் பதம் பிரித்து, கோழை (கண்டத்தில் வந்து சிக்கிக் கொண்டு
வெளிவருதற்பொருட்டுப்) போரைச் செலுத்தி இந்திரியங்கள் ஒடுங்காத முன்னே யென்று உரைத்தலு மொன்று.

செல்வம் இன்பம் இளமை யாக்கை நிலையாமை விளக்கி
புலன்கள் நைய மெய்யில் மூத்துப் போந்திருந்து உள்ளம் எள்கிக்
கலங்க ஐக்கள் போத உந்திக் கண்ட பிதற்றா முன்
அலங்கலாய தண் துழாய் கொண்டு ஆயிரம் நாமம் சொல்லி
வலம்கொள் தொண்டர் பாடியாடும் வதரி வணங்குதுமே -பெரிய திருமொழி

அக்கம் – அக்ஷ மென்ற வடசொல் லின்விகாரம்.
இனி, அக்கம் குறுகாமுன் – கண்பார்வை குறைதற்கு முன்னே எனினுமாம்.
அருந்தியும், உம் – இழிவுசிறப்பு. வாழ்மின்கள், கள் – விகுதிமேல் விகுதி.
மேல் ஆநந்தம் – மேன்மையான ஆநந்தத்தைத் தருவதாம் எனினுமாம்.

———–

நந்த மரங்கனை மா கடல் ஏழு நடுங்க எய்த
நந்த மரங்கனைப் பற்று நெஞ்சே வினை நையும் முன்கை
நந்த மரங்கனையார் மயல்போம் வரு நற் கதிவா
நந்த மரங்கனைவர்க்கும் எஞ்ஞான்று நரகில்லையே ———20–

நெஞ்சே – என் மனமே!
மரம் (ஏழும்) நந்த – ஏழு மராமரங்களும் அழியவும் (துளைபடவும்),
கனை மா கடல் ஏழும் நடுங்க – ஒலிக்கின்ற பெரிய ஏழு சமுத்திரங்களும் அஞ்சி நடுங்கவும்
(வெம்மையை ஆற்றாமல் கலங்கிக் குழம்பவும்),
ஏழும் -மரங்களிலும் கடல்களிலும் கூட்டிப் பொருள்
எய்த – அம்புதொடுத்த,
நம்தம் அரங்கனை – திருவரங்கத்து எம்பெருமானை (நம்பெருமாளை),
பற்று – சரணமடைவாய்; (அங்ஙனம் அடைந்தால்),
வினை நையும் – கருமங்கள் அழிந்து போம்;
முன் கை நந்து அமர் அங்கனையார் மயல் போம் – முன்னங்கைகளிற் சங்கு வளையல்கள் பொருந்திய
மாதர்கள் பக்கல் உண்டாகும் ஆசை மயக்கமும் ஒழியும்;
நல் கதி வாநம் வரும் – (எல்லாப் பதவிகளினுஞ்) சிறந்த பதவியாகிய பரமபதம் சித்திக்கும்;
தமர் அனைவர்க்கும் – (நமக்கே யன்றி) நம்மைச் சார்ந்தவரெல்லார்க்கும்,
எஞ்ஞான்றும் – எப்பொழுதும் நரகு இல்லை – நரகமடைதல் இல்லையாம்; (எ – று.) –
ஈற்று ஏகாரம் – தேற்றம். அங்கு – அசை.

உவர்நீர்க்கடலின் மேல் இராமபிரான் ஆக்நேயாஸ்த்ரந்தொடுக்கத் தொடங்கியவளவில், அதன் வெப்பத்திற்கு ஆற்றாது
ஏழு கடல்களும் கொதித்தனவென்பதை,
“அண்டமூலத்துக்கப்பாலாழியுங் கொதித்த தேழு,
தெண்டிரைக் கடலின் செய்கை செப்பி யென் தேவன் சென்னி,
பண்டைநாளிருந்த கங்கைநங்கையும் பதைத்தாள் பார்ப்பான்,
குண்டிகையிருந்தநீரும் குளுகுளு கொதித்ததன்றே” என்றதனால் அறிக.

“ஒற்றைச்சரஞ் சுட்ட வுட்கடல்போற் புறத்தோலமிட,
மற்றைக்கடல் வெந்த தெவ்வண்ணமோ மதமாவழைக்க,
அற்றைக்குதவுமரங்கர் வெங்கோபத்தை யஞ்சி யரன்,
கற்றைச்சடையினிடையே வெதும்பினள் கங்கையுமே” என்றார் திருவரங்கத்துமாலையிலும்.

‘ஏழும்’ என்பதை ‘மரம்’ என்பதனோடும் கூட்டுக; கடைநிலைத்தீவகம்.
பற்றுதல் – இடைவிடாது நினைத்தல்.
நல்வினையும் பிறத்தற்கு ஏதுவாதலால், ‘வினை’ எனப் பொதுப்படக் கூறினார்.
நைதல் – நசித்தல்.
‘முன்கை’ என்றதில், முன் என்பது – இடமுணர்த்தும்.
நந்து – சங்கு; அதனாலாகிய வளைக்குக் கருவியாகுபெயர்.
அங்கநா என்ற வடசொல், அங்கனை யென விகாரப்பட்டது; அச்சொல், அழகிய தனது அங்கங்களாற்
பிறரைத் தன்னிடம் சேர்ப்பவ ளென்று பொருள்படும்.

பொதுநகரத்துக்கும் சிறப்புனகரத்துக்கும் வரிவடிவில் மிக்கவேறுபாடு இருப்பினும்,
ஒலிவடிவில் மிக்கவேறுபாடு இல்லாமைபற்றி, யமகம் திரிபு சிலேடை இவற்றில் நகரனகரங்களை
அபேதமாகக்கொண்டு அமைத்தல் மரபாதலால், ‘வானம்’ என்னவேண்டியவிடத்து ‘வாநம்’ எனப்பட்டது.
இங்ஙனம் யமகநயத்தின்பொருட்டு வரிவடிவின் வேறுபாடு கருதாது ஒலிவடிவொற்றுமையால் ஒன்றுக்குஒன்றாகக்
கொள்ளப்பட்ட எழுத்துக்கள், தடித்தவெழுத்தில் அச்சிடப்பட்டிருக்கின்றன.

————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் அருளிய திருவரங்கத்தந்தாதி -தனியன் -காப்புச் செய்யுள்கள் -1-5-

January 22, 2022

காவேரீ விரஜா ஸேயம் வைகுண்டம் ரங்கமந்திரம்|
ஸ வாஸுதேவோ ரங்கேச: ப்ரத்யக்ஷம் பரமம் பதம்||
விமானம் ப்ரணவாகாரம் வேதச்ருங்கம் மஹாத்புதம்|
ஸ்ரீரங்கசாயி பகவாந் ப்ரணவாத்த ப்ரகாசக: ||

ப்ரபத்யே ப்ரணவாகாரம் பாஷ்யம் ரெங்க மிவா பரம்
பரஸ்ய ப்ரஹ்மணோ யத்ர சேஷித்வம் ஸ்புடம் ஈஷ்யதே

———

‘திரு’ என்னும் பலபொருளொருசொல் – வடமொழியில் ‘ஸ்ரீ’ என்பது போல,
தமிழிலே தேவர்கள் அடியார்கள் ஞானநூல்கள் மந்திரங்கள் புண்ணிய ஸ்தலங்கள் புண்ணிய தீர்த்தங்கள் முதலிய
மேன்மையையுடைய பலபொருள்கட்கு விசேஷணபதமாகி மகிமைப்பொருளைக்காட்டி, அவற்றிற்குமுன்னே நிற்கும்;
இங்கு அரங்கத்திற்கு அடைமொழி; அந்தாதிக்கு அடைமொழியாகவுமாம்.

(ஸ்ரீவைகுண்டம் திருப்பாற்கடல் சூரியமண்டலம் யோகிகளுடைய உள்ளக்கமலம் என்னும் இவையனைத்தினும் இனிய தென்று திருமால்)
திருவுள்ளமுவந்து எழுந்தருளியிருக்கு மிட மானதுபற்றி, ‘ரங்கம்’ என்று அவ் விமானத்திற்குப் பெயர்;
திருமால் இங்கு ரதியை (ஆசைப் பெருக்கத்தை) அடைகின்றன னென்க. ரங்கம் என்னும் வடமொழி,
அகரம் மொழிமுதலாகி முன்வரப்பெற்று ‘அரங்கம்’ என நின்றது; (நன்னூல் – பதவியல் – 21.)

இங்கு ‘அரங்கம்’ என்பது – விமானத்தின்பெயர் திருப்பதிக்கு ஆனதோர் ஆகுபெயர் (தானியாகுபெயர்).
இனி, திருமகளார் திருநிருத்தஞ்செய்யுமிடமாயிருத்தலாலும், ஸ்ரீவைஷ்ணவர்களுடைய திருவுக்கு (மேன்மைக்கு) க்கூத்துப்
பயிலிடமாயிருத்தலாலும், ஆற்றிடைக்குறை (நதியினிடையேஉயர்ந்த திடர்) யாதலாலும், திருவரங்கமென்னும் பெயர் வந்த தெனினுமாம்.

இங்கு ‘அரங்கம்’ என்பது – அத்திருப்பதியில் எழுந்தருளியிருக்கின்ற எம்பெருமானைக் குறித்தது; இலக்கணை.
இனி, “திருவாளன் திருப்பதிமேல் திருவரங்கத் தமிழ்மாலை விட்டுசித்தன் விரித்தன” என்று பெரியாழ்வார் திருமொழியிற்
கூறியபடி திருவரங்கத்தின் விஷயமான தமிழ்த்தொடை யாதல்பற்றி ‘திருவரங்கத்தந்தாதி’

இந்நூலிலுள்ள கலித்துறைகள் யாவும் யமக மென்னுஞ் சொல்லணி யையுடையன வாதலால், இந்நூல் யமகவந்தாதியாம்.
யமகமாவது – பலஅடிகளிலாயினும் ஓரடியிற்பலவிடங்களிலாயினும் வந்த எழுத்துத் தொடர்களே மீண்டும் வந்து பொருள் வேறுபடுவது;
இது, தமிழில் மடக்கு என்னப்படும். இந்நூற்செய்யுள்களிலெல்லாம் நான்கடிகளிலும் முதலெழுத்துக்கள் சில ஒன்றி நின்று
வெவ்வேறு பொருள்விளைத்தல், இடையிட்டுவந்த முதல் முற்று மடக்கு எனப்படும்.

இந்நூல் – நூற்புறமாக முதலிற்கூறப்பட்ட காப்புச்செய்யுள் ஐந்தும்,
நூலினிறுதியிற் கூறப்பட்ட தற்சிறப்புப்பாயிரச்செய்யுள் ஒன்றும் தவிர,
அந்தாதித்தொடையாலமைந்த நூறு கட்டளைக்கலித்துறைகளை யுடையது.
சொற்றொடர்நிலைச்செய்யுள் பொருட்டொடர்நிலைச்செய்யுள் என்ற வகை யில், இது, சொற்றொடர்நிலை;
“செய்யு ளந்தாதி சொற்றொடர் நிலையே” என்றார் தண்டியலங்காரத்தும்.

தலத்தின் பெயர் – ரங்கம், ஸ்ரீரங்கம், திருவரங்கம், பெரியகோயில், கோயில் என்பன.
பூலோக வைகுண்டம், போகமண்டபம்,
ஸ்வயம் வ்யக்த க்ஷேத்திரம் என்பவை – விசேஷநாமங்களாம். இது, ஸ்வயம் வ்யக்த க்ஷேத்ரம் எட்டில் ஒன்று.

இத்திருப்பதியின் எம்பெருமானது திருநாமம் – ஸ்ரீரங்கநாதன், பெரியபெருமாள், நம்பெருமாள், அழகியமணவாளன்.
கோலம் – பள்ளி கொண்ட திருக்கோலம். சேஷசயனம்.
சந்நிதி – தெற்கு நோக்கியது.
நாச்சியார் – ஸ்ரீரங்கநாயகி, ஸ்ரீரங்கநாச்சியார்.
விமானம் – பிரணவாகார விமானம், வேத சிருங்கம்.
நதி – உபய காவேரி. [தென்திருக்காவேரியும், வடதிருக்காவேரியும் (கொள்ளிடம்.)]
தீர்த்தம் – சந்திரபுஷ்கரிணி முதலிய நவதீர்த்தங்கள்.
தலவிருக்ஷம் – புன்னைமரம்.
பிரதியக்ஷம் – தர்மவர்மா, ரவிதர்மன், சந்திரன், காவேரி முதலான வர்களுக்குப் பிரதியக்ஷம்.

பாடல் – பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், திருமழிசையாழ்வார், நம்மாழ்வார், குலசேகராழ்வார்,
பெரியாழ்வார், தொண்டரடிப்பொடியாழ்வார், திருப்பாணாழ்வார், திருமங்கையாழ்வார் என்கிற
ஆழ்வார்கள் பதின்மர், ஆண்டாள் இவர்கள் மங்களாசாஸநம்.

பஞ்சகாவியங்களுள் ஒன்றாகிய சிலப்பதிகாரத்தில் இந்தத் திவ்வியதேசமும் இதிலெழுந்தருளியிருக்கின்ற எம்பெருமானும்
நீல மேக நெடும் பொற் குன்றத்து பால் விரிந்து அகலாது படிந்தது போலே
ஆயிரம் விரித்து எழு தலை உடை அரும் திறல் பாயற் பள்ளி பலர் தொழுது ஏத்த
விரை திரை காவிரி வியன் பெரும் துருத்தி திரு அமர் மார்பன் கிடந்த வண்ணமும்
—என் கண் காட்டு என்று என் உளம் கவற்ற வந்தேன்
என்று பாராட்டிக் கூறப்பட்டிருத்தலுங் காண்க.

————————–

தனியன் –
சிறப்பு பாசுரம் –
மணம் வாள் அரவிந்தைமார் நோக்க இம்மை மறுமையில் மா
மண வாளர் தம் பதம் வாய்த்திடும் கோயிலிலே வந்த அந்த
மண வாளர் பொன் திருப்பாத அம்புயங்கட்கு மாலை என
மண வாளர் சூடும் யமகம் அந்தாதியை வாசிமினே-

கோயிலில் வந்த – திருவரங்கத்தி லெழுந்தருளியுள்ள,
அந்தம் மணவாளர் – அழகிய மணவாளருடைய,
பொன் திரு பாத அம்பு யங்கட்கு – அழகிய திருவடித்தாமரைகட்கு (உரிய),
மாலை என – மாலையாக,
மணவாளர் சூடும் – அழகிய மணவாளதாசர் சாத்திய,
யமகம் அந்தாதியை – இந்த யமகவந்தாதிப் பிரபந்தத்தை வாசிமின் –
(நீங்கள் படியுங்கள்:) (இதனைப்படிப்பீராயின் உங்கட்கு), –
இம்மை – இம்மையிலே,
மணம் வாள் அர விந்தைமார் நோக்க – வாசனையையும் ஒளியையுமுடைய செந்தாமரை மலரில்
வசிக்கின்ற அஷ்டலக்ஷ்மிகளும்
ஆதிலக்ஷ்மி, கஜலக்ஷ்மி, தநலக்ஷ்மி, தானியலக்ஷ்மி, வீரலக்ஷ்மி, விஜயலக்ஷ்மி, சந்தாநலக்ஷ்மி, சௌபாக்கிய லக்ஷ்மி
கருணையோடு பார்த்தருள, –
மறுமையில் – மறுமையிலே,
மா மணவாளர் தம் பதம் வாய்த்திடும் – திருமகள் கணவரான திருமாலினது ஸ்தானம்
[ஸ்ரீவைகுண்டம்] தவறாது கிடைக்கும்; (என்றவாறு.) –
ஏ – ஈற்றசை.

ஸ்ரீரங்கத்துக்கு அருகி லுள்ளதும் நிசுலாபுரியென்னும் மறுபெயரை யுடையதுமான உறையூரை
இராச தானியாகக் கொண்டு அதில் வீற்றிருந்து அரசாளுகிற தர்மவர்மாவின் வம்சத்தவனான நந்தசோழன்
வெகுகாலம் பிள்ளையில்லாமலிருந்து ஸ்ரீரங்கநாதனைக்குறித்துத் தவஞ்செய்து அத்தவத்தின் பயனாய்
ஒருநாள் தாமரையோடையில் ஒருதாமரைமலரில் ஒருபெண்குழந் தையிருக்கக்கண்டு களித்து
அக்குழந்தையை எடுத்துக் கொண்டு வந்து கமலவல்லி யென்று திருநாமஞ்சாத்தி வளர்த்துவருகையில்,
மங்கைப்பருவ மடைந்த அந்தப்பெண் தோழியருடன் உத்தியானவனத்தில் மலர்கொய்து விளையாடிவரும்போது,
திருமகளின் அம்சமான அப்பெண்மணியை மணம் புரிந்து ஏற்றுக்கொள்ள விரும்பிய ஸ்ரீரங்கநாதன்

அதி சுந்தர மூர்த்தியாய் விபவாவதாரமாகக் குதிரைமீது ஏறி வேட்டையாடச்செல்லுகிற வியாஜத்தால் அவளெதிரில்
எழுந்தருளிக் காட்சிகொடுக்க, மிகஅழகிய அப்பெருமானைக் கண்டு கமலவல்லி மோகங்கொள்ள,
அதனையுணர்ந்த நந்தசோழன் அந்தக்கன்னிகையை ரங்கநாதனுக்கு மிக்கசிறப்போடு மணம்புரிவித்தான்;
இங்ஙனம் அழகியவடிவங்கொண்டுமணம்பெற்றுக் கலியாணக்கோலத்தோடு விளங்கியதனால்,
ஸ்ரீரங்கநாதனுக்கு அழகியமணவாளனென்று ஒருதிருநாம மாயிற்று;
(மணம் – விவாகம்; அதனை ஆள்பவன் [பெற்றவன்] – மணவாளன்.)
முன்னிலும் பின்னழகிய பெருமாள், ஆபரணத்துக்கு அழகு கொடுக்கும் பெருமாள் என்ற திருநாமங்களும் உண்டு.
“எழிலுடையவம்மனைமீர் என் அரங்கத்து இன்னமுதர், குழலழகர் வாயழகர் கண்ணழகர் கொப்பூழி, லெழு
கமலப்பூவழகர் எம்மானார் என்னுடைய, கழல்வளையைத் தாமும் கழல்வளையே யாக்கினரே” என்ற நாச்சியார் திருமொழியையுங் காண்க.
அழகிய மணவாள னென்ற பொருளில் ‘அந்த மணவாளன்’ என்றார்; (அந்தம் – அழகு).
அந்த என அகரச்சுட்டின் மரூஉவாக எடுத்து, அப்படிப்பட்ட [அதாவது – அதிப்பிரசித்திபெற்ற] என்றும் உரைக்கலாம்; உலகறிசுட்டு.

கோ+இல்=கோயில்; பொதுவிதிப்படி கோவில்என வகரவுடம்படு மெய் பெறாது யகரம்பெற்று வழங்குவது, இலக்கணப்போலி.
பெருமானுடைய இருப்பிடமென ஆறாம்வேற்றுமைத் தொகையாகவாவது,
தலைமையான இடமெனப் பண்புத்தொகையாகவாவது விரியும். (கோ – தலைவன், தலைமை; இல் – இடம், வீடு.)
இது தேவாலயங்கட்கெல்லாம் பொதுப்பெயராயினும், நூற்றெட்டுத் திருமால் திருப்பதிகளுள்
திருவரங்கம் தலைமைபெற்ற தாதலால், இதனைக் ‘கோயில்’ எனச் சிறப்பாகவழங்குவது, வைஷ்ணவ சம்பிரதாயம்;

ரங்கநாதன் ஆதியில் பிரமனது திருவாராதநத்திருவுருவமாய்ச் சத்தியலோகத்திலே இருந்து பின்பு
இக்ஷ்வாகுகுலதநமாய்த் திருவயோத்தியி லெழுந்தருளியிருந்து,
பின்பு விபீஷணாழ்வானால் இவ்விடத்து வந்தமை தோன்ற, ‘கோயிலில் வந்த அந்த மணவாளர்’ என்றார்.

பொன் – பொன்போலருமையாகப் பாராட்டத்தக்க எனினுமாம்.

பா தாம்புஜம் – தீர்க்கசந்தி பெற்ற வடமொழித்தொடர்; திருவடியாகிய தாமரைக்கு என உருவகப்பொருள்பட ‘
பாதாம்புயங்கட்கு’ எனக் கூறினாலும், மேல்வரும் ‘மாலையெனச்சூடும்’ என்ற முடிக்குஞ்சொல்லுக்கு ஏற்ப,
தாமரை போன்ற திருவடிக்கு என முன்பின்னாகத்தொக்க உவமைத்தொகையாகக் கருத்துக் கொள்ளுதலே சிறப்பாமென்க;
உருவகத்துக்கு ஏற்ற தொடர்ச்சிச் சொல் இல்லாமையின். திருவடிக்குத் தாமரைமலர் உவமை,
செம்மை மென்மை யழகுகட்கு. அம்புஜம் – நீரில்தோன்றுவதெனப் பொருள்படும்;
தாமரைக்குக் காரணவிடுகுறி; மலர்க்கு முதலாகுபெயர். (அம்பு – நீர்.) அம்புய ங்கட்குமாலையென – நான்காம்வேற்றுமை, தகுதிப்பொருளது;
அழகியமணவாளனது திருவடிகளின் மகிமைக்கும் மென்மைக்கும் ஏற்ற சிறப்பும் மென்மையும் வாய்ந்தது
இந்நூலென்ற கருத்து இதனாற்போதரும். பாதாம்புயங்களிற் சூடின எனக் கொள்ளுதலும் ஒன்று; உருபு மயக்கம்.

பெருமானது திருவடிகளிற் சூட்டும் பூமாலைபோன்ற பாமாலை யென்க;
(“அடிசூட்டலாகுமந்தாய மம்,” “செய்யசுடராழியானடிக்கே சூட்டினேன்சொன்மாலை,”
“கற்றினம் மேய்த்த கழலிணைக்கீழ் – உற்ற, திருமாலை பாடுஞ் சீர்” என்றார் பெரியாரும்.)

வாள் – ஒளி; உரிச்சொல். அரவிந்தம் – தாமரை; வடசொல்: அதில் வாழ்பவள், அரவிந்தை:
அதன்மேல், மார் – பலர்பால்விகுதி. இம்மை – இப்பிறப்பு, மறுமை – இறந்தபின்வரும் நிலை.
மாமணவாளர் – ஸ்ரீயஃபதி.மா, பதம் – வடசொற்கள்.
“தேனார்கமலத்திருமாமகள்கொழுநன், தானே வைகுந்தந்தரும்” என்றபடி பிராட்டியின் புருஷகார பலத்தாலே
பெருமான் தனது உலகத்தைத் தந்தருள்வ னென்பதுதோன்ற, ‘மாமணவாளர்தம்பதம் வாய்த்திடும்’ என்றார்.
மணவாளர் என்றது – மூன்றடியிலும், உயர்வுப்பன்மை.
ஒரு பெயரின் ஒருபகுதியைக் கொண்டு அப் பெயர் முழுதையுங்குறிப்பதொரு மரபுபற்றி,
அழகியமணவாளதாசரை ‘மணவாளர்’ என்றார்; இதனை வடநூலார் ‘நாமைகதேசேநாமக்ரஹணம்’ என்பர்.
இரண்டாமடியில், தம் – சாரியை. வாய்த்திடும், இடு – தேற்றமுணர்த்தும் துணைவினை.

‘மணவாளர்’ என ஆக்கியோன் பெயரும், ‘யமகவந்தாதி’ என நூற்பெயரும்,
‘கோயிலில் வந்த அந்தமணவாளர் பொற்றிருப்பாதாம்புயங்கட்கு மாலையெனச்சூடும்’ என நுதலியபொருளும்,
‘மணவாளரவிந்தைமார்நோக்க விம்மை மறுமையில் மாமணவாளர்தம்பதம் வாய்த்திடும்’ எனப் பயனும் பெறப்பட்டன.
“ஆக்கியோன் பெயரே வழியே யெல்லை, நூற்பெயர்யாப்பே நுதலியபொருளே, கேட்போர் பயனோடா யெண்பொருளும்,
வாய்ப்பக்காட்டல் பாயிரத்தியல்பே” என்ற சிறப்புப்பாயிரத்திலக்கணத்தில் மற்றவை குறிப்பிக்கப்படுவன உய்த்துணர்ந்துகொள்க.

இக்கவி, பிறன்கூறியது; அபியுக்தரிலொருவர்செய்த தென்பர்:
இது, வைஷ்ணவசம்பிரதாயத்தில் ‘தனியன்’ எனப்படும்;
(நூலுள் அடங்காது தனியே பாயிரமாய் நிற்றல் பற்றியது, அப்பெயர்; ‘அன்’ விகுதி – உயர்வுப் பொருளது.)

———–

காப்பு

காப்பு – காத்தல்; அது, இங்கு, காக்கின்ற கடவுளின் விஷயமான வணக்கத்தைக் குறிக்கும்:
ஆகவே, கவி தமக்குநேரிடைத்தக்க இடையூறுகளை நீக்கித் தமது எண்ணத்தை முடிக்க வல்ல
தலைமைப் பொருளின் விஷயமாகச் செய்யுந் தோத்திர மென்பது கருத்து.

[விஷ்வக்ஸேநரும், பஞ்சாயுதமும்.]
ஓர் ஆழி வெய்யவன் சூழ் உலகு ஏழ் உவந்து ஏத்து அரங்கர்
கார் ஆழி வண்ணப் பெருமாள் அந்தாதிக்கு காப்பு உரைக்கின்
சீர் ஆழி அம் கையில் பொன் பிரம்பு ஏந்திய சேனையர் கோன்
கூர் ஆழி சங்கம் திரு கதை நாந்தகம் கோதண்டமே–1-

ஓர் ஆழி – ஒற்றைச் சக்கரங்கோத்த தேரையுடைய,
வெய்யவன் – சூரியனால்,
சூழ் – சூழ்ந்துவரப்பெற்ற,
உலகு ஏழ் – ஏழுதீவுகளாகவுள்ள பூமியி லிருக்கிற சனங்கள்,
உவந்து ஏத்து – மனமகிழ்ந்து துதிக்கப் பெற்ற,
அரங்கர் – திருவரங்கமென்னுந் திருப்பதியில் எழுந்தருளியிருக்கின்றவரும்,
கார் ஆழி வண்ணம் பெருமாள் – கரியகடல் போன்ற திருநிறமுடைய நம்பெருமாளுமாகிய எம்பெருமான் விஷயமாக (யான்பாடுகிற),
அந்தாதிக்கு – அந்தாதியென்னும் பிரபந்தம் இடையூறின்றி இனிது நிறைவேறுதற்கு,
காப்பு – பாதுகாவலாகும் பொருள்கள், –
உரைக்கின் – (இன்னவை யென்று) சொல்லுமிடத்து, –
சீர் ஆழி அம் கையில் பொன் பிரம்பு ஏந்திய சேனையர்கோன் – சிறந்த மோதிரத்தை யணிந்த அழகிய கையிற்
பொன் மயமான பிரம்பை [செங்கோலைத்] தரித்த சேனை முதலியாரும்,
கூர் ஆழி சங்கம் திருகதை நாந்தகம் கோதண்டமே – கூரிய சக்கரமும் சங்கமும் அழகிய கதையும் வாளும் வில்லுமாகிய
(திருமாலின்) பஞ்சாயுதங்களும்;

“சிறைப் பறவை புறங்காப்பச் சேனையர் கோன் பணிகேட்ப,
நறைப் படலைத் துழாய் மார்பினாயிறுபோன் மணி விளங்க,
அரியதானவர்க்கடிந்த ஐம்படையும் புடை தயங்க,….
ஆயிர வாய்ப் பாம்பணை மேலறி துயிலினினி தமர்ந்தோய்”,

“கோலார்ந்த நெடுஞ்சார்ங்கம் கூனற் சங்கம் கொலை யாழி கொடுந் தண்டு கொற்ற வொள் வாள்,
காலார்ந்த கதிக் கருடனென்னும் வென்றிக் கடும் பறவை யிவை யனைத்தும் புறஞ் சூழ் காப்பச்,
சேலார்ந்த நெடுங்கழனி சோலை சூழ்ந்த திருவரங்கத் தரவணையிற் பள்ளி கொள்ளு, மாலோன்” என்றபடி
எம்பெருமானது திருவுள்ளக் கருத்தின்படி அவனுக்குக் குற்றேவல் செய்யும் பரிசனங்களும் எப்பொழுதும் அவனருகில் விடாது நின்று
அவனது திருமேனிக்குப் பாதுகாவல் செய்பவருமான ஸ்ரீசேனை முதலியாரும், திவ்விய பஞ்சாயுதமூர்த்திகளுமே,
அப்பெருமானது தோத்திரமாகத் தாம் செய்யும் அந்தாதிக்கு நேரும் இடையூறுகளை நீக்கிப் பாதுகாப்ப ரென்று
கொண்டு அவர்களை இவ்வந்தாதிக்குக் காப்பு என்றார்.

ஸ்ரீவைஷ்ணவ சமயத்தவரான இந்நூலாசிரியராற் கூறப்பட்ட இக் காப்புச் செய்யுள் அந்த ஸ்ரீமகாவிஷ்ணுவினது
தொண்டர்கட்குத் தலைவரான சேனை முதலியாரையும், அத் திருமாலின் ஐம்படையையுங் குறித்ததாதலால்,
வழிபடு கடவுள் வணக்கம் ஏற்புடைக் கடவுள் வணக்கம் என்ற வகை யிரண்டில் வழி படு கடவுள் வணக்கமாம்.

அடுத்த நான்குசெய்யுள்களும் இவ்வாறே. தம் தமது மதத்துக்கு உரிய கடவுளை வணங்குதலே யன்றி
அக்கடவுளினடியார்களை வணங்குதலும் வழிபடு கடவுள் வணக்கத்தின் பாற்படுமென அறிக.

சேனையர் கோன் – பரமபதத்திலுள்ள நித்திய முக்தர்களின் திரளுக்கும் மற்ற வுலகங்களிலுள்ள திருமாலடியார்கட்கும்
தலைவராதலாற்சேனை முதலியாரென்றும் சேனைத் தலைவரென்றும் சொல்லப்படுகிற விஷ்வக்ஸேநர்.
தம்மைச் சரணமடைந்தவர் தொடங்குந் தொழில்கட்கு வரும் விக்கினங்களை [இடையூறுகளை]ப் போக்குதலாலும்,
தம்மை யடையாது அகங்கரித்தவர்கட்கு விக்கினங்களை ஆக்குதலாலும் விக்நேசுவரரென்று பெயர்
பெற்றவரான விநாயகர் இவரது அம்சத்தைச் சிறிதுபெற்றவரே யாதலால், இவரை முதற் காப்பாகக் கொள்ளுதல் சாலும்.

“ஆளி லமர ரரங்கேசர் சேவைக் கணுகுந்தொறுங், கோளில் திரளை விலக்கும் பிரம்பின் கொனை படலால்,
தோளிலடித் தழும்புண்டச் சுரர்க்கு” என்றபடி திரள் விலக்குதற் பொருட்டும்,
எம்பெருமானது ஆணையைத் தான் கொண்டு நடத்துதற்கு அறிகுறியாகவும் இவர் கையிலே பொற்செங்கோலேந்தி நிற்பர்.

இவர்கையில் ‘ஆழி’ என்றது, எம்பெருமானிடம் இவர் பெற்றுள்ள அதிகாரத்துக்கு அறிகுறியான முத்திரை மோதிரத்தை.
திருமாலின் பஞ்சாயுதங்களுள் சக்கரம் – சுதர்சநமென்றும், சங்கம் – பாஞ்சஜந்ய மென்றும், கதை – கௌமோதகி யென்றும்,
வாள் – நந்தக மென்றும், வில் – சார்ங்க மென்றும் பெயர்பெறும்.
இவை துஷ்ட நிக்கிரக சிஷ்டபரிபாலநஞ் செய்யுங் கருவியாய்ச் சிறத்தலால், இவற்றைக் காப்பாகக் கொண்டார்.

சூரியனது தேர் சம்வற்சர ரூபமான ஒற்றைச் சக்கரமுடைய தென்று புராணம் கூறும்.
வெய்யன் – உஷ்ணகிரணமுடையவன்; வெம்மை யென்னும் பண்பினடியாப் பிறந்த பெயர்.
இங்கு ‘உலகேழ்’ என்றது, ஜம்பு பிலக்ஷம் குசம் கிரௌஞ்சம் சாகம் சால்மலி புஷ்கரம் என்ற ஏழுதீவுகளை,
இங்கு ‘உலகு’ என்றது, உயிர்களின்மேல் நிற்கும்.
காராழிவண்ணம் – மேகமும் கடலும் போன்ற திருநிறமெனினுமாம்.

பெருமாள் = பெருமான், பெருமையையுடையவர்;
இதில், பெருமை யென்ற பகுதி ஈற்று ஐகாரம் மாத்திரம் கெட்டு, பெரும் என நின்றது; ‘
ஆன்’ என்ற ஆண்பால்விகுதி ‘ஆள்’ என ஈறு திரிந்தது;
‘ஆள்’ என்ற பெண்பால் விகுதியே சிறுபான்மை ஆண் பாலுக்கு வந்ததென்றலும் ஒன்று:
அன்றி, பெருமையை ஆள்பவனெனக்கொண்டால் ஆள் என்ற வினைப் பகுதி கருத்தாப் பொருள் விகுதி புணர்ந்து கெட்டதென வேண்டும்.

பெருமாளந்தாதி என்ற தொடரில் தொக்குநின்ற ஆறாம்வேற்றுமையுருபின் பொருளாகிய சம்பந்தம் – விஷயமாகவுடைமை;
விஷ்ணுபுராணம், விநாயகரகவல் என்பவற்றிற் போல.

நாந்தகம் – நந்தக மென்பதன் விகாரம். ஆழி என்ற சொல் – தேர்ச் சக்கரம் மோதிரம் சக்கராயுதம் என்ற பொருள்களில்
வட்டவடிவுடைய தென்றும், கடலென்றபொருளில் ஆழ்ந்துள்ளது என்றும் காரணப் பொருள்படும்;
இனி கடலென்றபொருளில் பிரளயகாலத்து உலகங்களை அழிப்ப தென்றும்,
சக்கராயுதமென்ற பொருளில் பகைவர்களையழிப்ப தென்றும் கொள்ளலு மொன்று.
‘ஓர்ஆழி’ என்றது – ஒற்றைச் சக்கரமுடைய தேருக்கு, பண்புத் தொகை யன்மொழி.

இச் செய்யுளில் ஆழி என்கிற ஒரு சொல் அடி தோறும் வேறு பொருளில் வந்தது, சொற்பின்வருநிலையணி.
இப்பொருளணியோடு திரிபு என்னும் சொல்லணியும் அமைந்திருத்தல் காண்க.
(திரிபாவது – ஒவ்வோரடியிலும் முதலெழுத்துமாத்திரம் வேறுபட்டிருக்க, இரண்டு முதலிய பல எழுத்துக்கள்
ஒன்றி நின்று பொருள்வேறுபடுவது.) இவ்விரண்டணியும் பேதப்படாமற் கலந்துவந்தது, கலவையணி.

———–

[பன்னிரண்டு ஆழ்வார்களின் அருளிச் செயல்.]

வையம் புகழ் பொய்கை பேய் பூதன் மாறன் மதுரகவி
யையன் மழிசை மன் கோழியர் கோன் அருள் பாண் பெருமான்
மெய்யன்பர் காற் பொடி விண்டு சித்தன் வியன் கோதை வெற்றி
நெய்யங்கை வேற் கலியன் தமிழ் வேத நிலை நிற்கவே –2-

வையம் புகழ் – உலகத்தவர்களாற் புகழப்படுகிற,
பொய்கை – பொய்கையாழ்வாரும்,
பேய் – பேயாழ்வாரும்,
பூதன் – பூதத்தாழ்வாரும்,
மாறன் – நம்மாழ்வாரும்,
மதுரகவி ஐயன் – மதுரகவியாழ்வாரும்,
மழிசை மன் – திருமழிசையாழ்வாரும்,
கோழியர்கோன் – குலசேகராழ்வாரும்,
அருள் பாண் பெருமாள் – (நம்பெருமாளின்) விசேஷ கடாக்ஷம் பெற்ற திருப்பாணாழ்வாரும்,
மெய் அன்பர் கால் பொடி – தொண்டரடிப் பொடியாழ்வாரும்,
விண்டு சித்தன் – பெரியாழ்வாரும்,
வியன் கோதை – பெருமையை யுடைய ஆண்டாளும்,
வெற்றி நெய் வேல் அம்கை கலியன் – சயம் பொருந்தியதும் நெய் பூசியதுமான வேலாயுதத்தை யேந்திய
அழகிய கையை யுடைய திருமங்கையாழ்வாரும் ஆகிய பன்னிரண்டு ஆழ்வார்களால் அருளிச்செய்யப்பட்ட,
தமிழ் வேதம் – திரவிட வேதமாகிய (நாலாயிர) திவ்வியப் பிரபந்தங்கள்,
நிலை நிற்க – (எக் காலத்தும் அழிவின்றி உலகத்தில்) நிலை பெற்றிருக்கக் கடவன; (எ – று.)

ஆசீர்வாதம் [வாழ்த்து]. நமஸ்காரம் [வணக்கம்], வஸ்துநிர்த்தேசம் [தலைமைப்பொருளுரைத்தல்] என்ற
மூவகை மங்களங்களுள், இது வாழ்த்தாம்.
ஆழ்வார்களால் வெளியிடப்பட்ட திவ்வியப்பிரபந்தங்களின் சொற்பொருட் கருத்துக்கள் அமைய
அப்பிரபந்தங்கள் போலச் செய்யப்படுவது இத்திரு வரங்கத்தந்தாதி யாதலால்,
இந்நூலின் இக்காப்புச் செய்யுளை ஏற்புடைக் கடவுள்வாழ்த்தென்றும் கொள்ளலாம்.

வையம் – இடவாகுபெயர். ‘வையம்புகழ்’ என்ற அடைமொழியை எல்லா ஆழ்வார்கட்கும் கூட்டலாம்.
இனி, வையம் புகழ் பொய்கை – “வையந் தகளியா” என்றுதொடங்கிப் பிரபந்தம்பாடி (எம்பெருமானை)த் துதித்த
பொய்கையாழ்வா ரெனினுமாம்; அவ்வுரைக்கு, வையம் என்பது – அவர் பாடிய முதல் திருவந்தாதிக்கு முதற்குறிப்பு.
“பொய்கையார் பூதத்தார் பேயார் புகழ்மழிசை, யையனருள்மாறன்சேரலர்கோன் –
துய்யபட்ட, நாதனன்பர் தாட்டூளி நற்பாணனன்கலியன், ஈதிவர்தோற்றத்தடைவாமிங்கு” என்றபடி
திருவவதாரக்கிரமத்தால் பொய்கையார் பூதத்தார் பேயார் மழிசைப்பிரான் மாறன் குலசேகரர் பெரியாழ்வார்
தொண்டரடிப்பொடி திருப்பாணர் திருமங்கையாழ்வார் என முறைப்படுத்தி,
பெரியாழ்வாரது திருமகளான ஆண்டாளையும் நம்மாழ்வாரது சிஷ்யரான மதுரகவியையும் ஈற்றில் வைத்தாயினும்,
ஆண்டாளைப் பெரியாழ்வாரை யடுத்தும் மதுரகவியை நம்மாழ்வாரை யடுத்தும் வைத்தாயினும் கூறுவதே முறையாயினும்,
இங்குச் செய்யுள் நோக்கி முறை பிறழ வைத்தார்.

பொய்கை – குளம்; பொற்றாமரைப் பொய்கையில் திருவவதரித்த ஆழ்வாரை ‘பொய்கை’ என்றது, இடவாகுபெயர்.
இனி, உவமவாகுபெயராய், ஊர்நடுவேயுள்ள குளம்போல எல்லார்க்கும் எளிதிற் பயன்கொடுப்பவ ரென்றுமாம்.

பேய் – உவமையாகுபெயர்: உலகத்தவராற் பேய் போல எண்ணப் படுபவர்; அல்லது, அவர்களைத் தாம் பேய் போல எண்ணுபவர்:
“பேயரே யெனக்கி யாவரும் யானுமோர், பேயனே யெவர்க்கும் இது பேசி யென்,
ஆயனே யரங்கா வென்றழைக்கின்றேன், பேயனாயொழிந்தே னெம்பிரானுக்கே” என்ற கொள்கைப்படி,
இவர் பகவத் பக்தியாற் பரவசப்பட்டு, நெஞ்சழிதல் கண்சுழலுதல் அழுதல் சிரித்தல் தொழுதல்
மகிழ்தல் ஆடுதல் பாடுதல் அலறுதல் முதலிய செய்கைகளையே எப்பொழுதும் கொண்டு,
காண்பவர் பேய் பிடித்தவரென்னும்படி யிருந்ததனால், பேயாழ்வாரென்று பெயர் பெற்றனர்.

பூதன் – எம்பெருமானை யறிதலாலே தமது உளனாகையை யுடையவராதலால், இவர்க்கு, பூதனென்று திருநாமம்:
‘பூஸத்தாயாம்’ என்றபடி ஸத்தையென்னும் பொருள்கொண்ட பூ என்னும் வடமொழி வினையடியினின்று பிறந்த பெயராதலால்,
பூதன் என்பதற்கு – ஸத்தை [உள்ளவனாயிருக்கை] பெறுகின்றவனென்று பொருளாயிற்று.
இனி, இத்திருநாமத்துக்கு – உலகத்தவரோடு சேராமையாற் பூதம் போன்றவரென்று பொருளுரைத்தல் சம்பிரதாயமன்று.

நம்மாழ்வார்க்கு அநேகம் திருநாமங்கள் இருப்பினும் அவற்றில் ‘மாறன்’ என்பது, முதலில் தந்தையார் இட்ட
குழந்தைப் பெயராதலால் அதில் ஈடுபட்டு அப்பெயரினாற் குறித்தார்.
பிறந்தபொழுதே தொடங்கி அழுதல் பாலுண்ணுதல் முதலியன செய்யாது உலகநடைக்கு மாறாயிருந்ததனால்
சடகோபர்க்கு ‘மாறன்’ என்று திருநாமமாயிற்று.
வலியவினைகட்கு மாறாக இருத்தலாலும், அந்நியமதஸ்தர்களை அடக்கி அவர்கட்குச் சத்துருவாயிருத்தலாலும்,
பாண்டியநாட்டில் தலைமையாகத் தோன்றியதனாலும் வந்த பெயரென்றலும் உண்டு.

மதுரகவி – இனிமையான பாடல் பாடுபவர்.

மழிசைமன் – திருமழிசையென்று வழங்குகின்ற மஹீஸார க்ஷேத்திரத்தில் திருவவதரித்த பெரியோன்;
இது, தொண்டைநாட்டி லுள்ளது.

கோழியர்கோன் – கோழியென்னும் ஒருபெயருடைய உறையூரி லுள்ளார்க்குத் தலைவர்;
உறையூர், சோழ நாட்டிராசதானி. சேரநாட்டரசரான குலசேகராழ்வார் திக்விஜயஞ்செய்த போது
சோழராசனை வென்று கீழ்ப்படுத்தி அந்நாட்டுக்குந் தலைமை பூண்டதனால், ‘கோழியர்கோன்’ எனப்பட்டனர்.
“கொல்லிகாவலன் கூடல்நாயகன் கோழிக்கோன் குலசேகரன்” என்றதனால்,
இவர் தமிழ்நாடுமூன்றுக்குந் தலைமைபூண்டமை விளங்கும்.
முற்காலத்து ஒருகோழி நில முக்கியத்தால் அயல்நாட்டு யானையோடு பொருது அதனைப் போர் தொலைத்தமை கண்டு
அந்நிலத்துச்செய்த நகரமாதலின், ‘கோழி’ என்று உறையூருக்குப் பெயராயிற்று.
இனி, குலசேகராழ்வார் அரசாட்சிசெய்த இடமான கோழிக்கூடு என்ற சேரநாட்டு இராசதானி
(நாமைகதேசேநாமக்கிரகணத்தால்) கோழியெனப்பட்ட தென்றலு மொன்று.

பாண்பெருமாள் – வீணையும் கையுமாய்ப் பெரிய பெருமாள் திருவடிக்கீழே நிரந்தர சேவை பண்ணிக்கொண்டு பாட்டுப் பாடிப் புகழ்பவர்;
பாண் – இசைப்பாட்டு: அதற்குத் தலைவர், பாண்பெருமாள். இவர் நம் பெரியபெருமாளுடைய திருமேனியழகில் ஈடுபட்டு
அதனை அடிமுதல் முடிவரை அநுபவித்து அப்பெருமாளாற் கொண்டாடி யழைக்கப்பெற்று அப்பெருமாளின்
திருவடிகளிலே ஐக்கியமடைந்ததனால், ‘பெருமாள்’ என்று சிறப்பித்துக் கூறப்படுவர்;
“சீரிய நான்மறைச் செம்பொருள் செந்தமிழா லளித்த, பாரியலும் புகழ்ப் பாண்பெருமாள்”,
“காண்பனவுமுரைப்பனவு மற்றொன்றின்றிக்கண்ணனையேகண்டுரைத்தகடியகாதற், பாண்பெருமாள்” என்பன காண்க.

உறையூரில் அயோநிஜராய் நெற்பயிர்க் கதிரில் அவதரித்துப் பஞ்சம சாதியிற் பாணர் குலத்திற்பிறந்தானொருவன் வளர்க்க வளர்ந்து
யாழ்ப் பாடலில் தேர்ச்சிபெற்று மகாவிஷ்ணுபக்தரான இவர், ரங்கநாதனுக்குப் பாடல் திருத்தொண்டு செய்யக் கருதி,
தாம்தாழ்ந்தகுலத்தில் வளர்ந்தவராதலால் உபயகாவேரி மத்தியிலுள்ள ஸ்ரீரங்கதிவ்விய க்ஷேத்திரத்தில் அடியிடு தற்குந் துணியாமல்
தென் திருக்காவேரியின் தென்கரையில் திருமுகத்துறைக்கு எதிரிலே யாழுங்கையுமாக நின்றுகொண்டு
நம்பெருமாளைத் திசைநோக்கித் தொழுது இசைபாடி வருகையில், ஒருநாள், நம்பெருமாள் தமக்குத் தீர்த்த கைங்கரியஞ்செய்பவரான
லோகசாரங்கமகாமுனியின் கனவில் தோன்றி ‘நமக்கு நல்லன்பரான பாண்பெருமாளை இழிவாக நினையாமல்
நீர் சென்று தோள்களில் எழுந்தருளப்பண்ணிவாரும்’ என்று நியமிக்க,
அவரும் அங்ஙனமே சென்று பாணரை அரிதில் இசைவித்துத் தோளில் எடுத்துக்கொண்டு வந்து சேர்க்க,
அம்முனிவாகனர் அணியரங்கனைச்சேவித்து அவனடியிலமர்ந்தனர்;
இங்ஙனம் விசேஷகடாக்ஷம் பெற்றமைபற்றி, ‘அருட்பாண்பெருமாள்’ என்றார்.
ஐயன் – ஆர்யன்: பூசிக்கத்தக்கவன், அந்தணன்; ஆசாரியன்.

மெய்யன்பர்காற்பொடி – உள்ளும்புறமும் ஒத்துத் தொண்டு செய்யும் மெய்யடியாரான ஸ்ரீவைஷ்ணவர்களுடைய
திருவடித் தூளிபோல அவர்கட்குக் கீழ்ப்படிந்து அடிமைபூண்டு ஒழுகுபவராதலால், இவர்க்கு, தொண்ட ரடிப்பொடியென்று திருநாமம்.

இளமைதொடங்கி எப்பொழுதும் தமது சித்தத்தை விஷ்ணுவினிடத்திலே செலுத்தி
“மார்வமென்பதோர்கோயிலமைத்து மாதவனென்னுந் தெய்வத்தை நாட்டி” என்னும்படி அப்பெருமானை மனத்திலே
நிலைநிறுத்தித் தியானித்துவந்ததனால், விஷ்ணுசித்தர் என்று பெரியாழ்வார்க்குப்பெயர்.

கோதை – மாலை; எம்பெருமானுக்கு மாலைபோல மிகஇனியளா யிருப்பவள்;
அல்லது, எம்பெருமானுக்குச் சமர்ப்பித்தற்காகத் தனது தந்தையார் அமைத்து வைத்த பூமாலையை அவர் இல்லாத சமயத்தில்
தான் சூடிக்கொண்டு அழகு பார்த்துப் பின்பு கொடுத்தவள்;
அன்றி, எம்பெருமானுக்குப் பாமாலை சூட்டினவள்.
“ஆழ்வார்கள்தஞ் செயலை விஞ்சிநிற்குந் தன்மையளாய்ப், பிஞ்சாப்பழுத்தாளை யாண்டாளை” என்றபடி.
ஞான பக்தி யாதிகளில் ஆழ்வார்களனைவரினும் மிகவிஞ்சியிருத்தல், மிக்க விளமையிலேயே பரமபக்தியை
இயல்பாகக்கொண்டமை முதலிய சிறப்புக்களை யுடைமையால், ‘வியன்கோதை’ என்றார்.

கலியன் – மிடுக்குடையவன். சோழராசன் கட்டளைப்படி மங்கை நாட்டுக்கு அரசராகிய இவ்வாழ்வார்
குமுதவல்லி யென்னுங் கட்டழகியை மணஞ்செய்துகொள்ளும்பொருட்டு அவள்விருப்பத்தின்படி நாள்தோறும்
ஆயிரத்தெட்டு ஸ்ரீவைஷ்ணவர்களை அமுதுசெய்வித்து வருகையில், கைப்பொருள் முழுவதுஞ் செலவாய் விட்டதனால்
வழிபறித்தாகிலும் பொருள் தேடிப் பாகவதததீயாராதநத்தைத் தடையற நடத்தத் துணிந்து வழிச் செல்வோரைக் கொள்ளை யடித்து
வரும்போது ஸ்ரீமந்நாராயணன் இவரை யாட்கொள்ளக் கருதித் தான் ஒரு பிராமணவேடங் கொண்டு
பல அணி கலங்களைப் பூண்டு மணவாளக் கோலமாய் மனைவியுடனே இவரெதிரில் எழுந்தருள,
இவர் கண்டு களித்து ஆயுதபாணியாய்ப் பரிவாரத்துடன் சென்று அவர்களை வளைந்து வஸ்திர ஆபரணங்களை யெல்லாம்
அபகரிக்கையில், அம்மணமகன் காலிலணிந்துள்ள மோதிரமொன்றைக் கழற்ற முடியாமையால் அதனையும் விடாமற் பற்களாலே
கடித்துவாங்க, அம்மிடுக்கை நோக்கி எம் பெருமான், இவர்க்கு ‘கலியன்’ என்று ஒருபெயர்கூறினா னென உணர்க.

தமிழ் வேதம் – வேதங்களின் சாராம்சமான கருத்து அமையப் பாடிய தமிழ்ப் பிரபந்தங்கள்.
வியன் – உரிச்சொல்; வியல் என்பதன் விகாரமுமாம். நெய் வேல் – பகைவரது நிணம் தோய்ந்த வேலுமாம்.

———–

குரு பரம்பரை-

சீதரன் பூ மகள் சேனையர் கோன் குருகைப் பிரான்
நாதமுனி உய்யக் கொண்டார் இராமர் நல் ஆளவந்தார்
ஏதமில் வண்மை பராங்குச தாசர் எதித் தலைவர்
பாதம் அடைந்து உய்ந்த ஆழ்வான் எம்பார் பட்டர் பற்று எமக்கே –3-

சீதரன்-(பரமாசாரியனான) திருமாலும்,
பூமகள் – (அத்திரு மாலினது சிஷ்யையான) திருமகளும்,
சேனையர் கோன் – (அப் பெரிய பிராட்டியாரின் சிஷ்யரான) சேனை முதலியாரும்,
தென் குருகை பிரான் – (அச்சேனைத் தலைவரது சிஷ்யரான) அழகிய திருக் குருகூரில் அவதரித்த தலைவராகிய நம்மாழ்வாரும்,
நாதமுனி – (அச்சடகோபரது சிஷ்யரான) ஸ்ரீமந் நாதமுனிகளும்
உய்யக்கொண்டார் – (அந்நாதமுனிகளின் சிஷ்யரான) உய்யக்கொண்டாரும்,
இராமர் – (அவருடைய சிஷ்யரான) ராமமிச்ரரென்னுந் திருநாமமுடைய மணக்கால்நம்பியும்,
நல் ஆளவந்தார் – (அவரது சிஷ்யரான ஞானங் கனிந்த) நலங்கொண்ட ஆளவந்தாரும்,
ஏதம் இல் வண்மை பராங்குசதாசர் – (அவர் சிஷ்யரான) குற்றமில்லாத உதார குணமுள்ள பெரியநம்பியும்,
எதி தலைவர் – (அவர் சிஷ்யரான) யதிராஜராகிய ஸ்ரீபாஷ்யகாரரும்,
பாதம் அடைந்து உய்ந்த ஆழ்வான் – (அவருடைய) திருவடிகளைச் சரணமடைந்து நல்வாழ்வு பெற்ற கூரத்தாழ்வானும்,
எம்பார் – (அவ்வாழ்வான் போலவே ஸ்ரீபாஷ்யகாரர்க்கு அதி அந்தரங்க சிஷ்யரான) எம்பாரும்,
பட்டர் – (கூரத்தாழ்வானுடைய குமாரரும் எம்பாரது சிஷ்யருமான) பட்டரும்,
(ஆகிய இவர்கள்), எமக்கு பற்று – எமக்குத் தஞ்சமாவர்; (எ – று.)

இந்த நூல் ஆச்ரியருக்கு பட்டர் ஆசார்யர் ஆகையாலே அவர் வரை அருளி
அவர் திரு தகப்பனாரையும் சேர்த்து அருளுகிறார்
இந்நூலாசிரியர்க்குப் பட்டர் ஸ்வாசாரிய ராதலால், குருபரம்பரையில் அவரளவே கூறலாயிற்று,

சீதரன் முதல் பட்டர் ஈறாகச் சொல்லும் குரு பரம்பரைக் கிரமத்தில் எதித்தலைவர்க்குப் பின்னே எம்பார்க்கு முன்னே
கூரத்தாழ்வானை வைக்கவேண்டிய அவசியமில்லையாயினும்,
ஸ்வாசாரியரான பட்டர்க்குக் கூரத்தாழ்வான் திருத்தமப்பனாராதல்பற்றியும்,
தம்குல முதல்வரான திருவரங்கத்தமுதனார் ஸ்ரீபாஷ்யகாரருடைய திருவடிகளில் ஆசிரயித்தற்குக்
கூரத்தாழ்வான் புருஷகாரராய் நின்றமை பற்றியும், அவ்வாழ்வானை இடையிலே நிறுத்தினார்.
இது, இந்நூலாசிரியருடைய குலகுருபரம்பரை யென்க.

அன்றியும், ஸ்ரீபாஷ்யகாரரது நியமனத்தின்படி சென்று பட்டர்க்கு த்வயோபதேசஞ்செய்து ஆசாரியராகி
அவர்க்குப் பஞ்சஸம்ஸ்காரங்களையும் திருவாய்மொழிமுதலிய கிரந்தங்களையும்,
அவற்றின் வியாக்கியாநங்களையும் அருளினவர், எம்பார்:
பட்டர்க்கு ஜாதகரும நாமகரண சௌளோபநயநாதிகளையும், ஸ்ரீபாஷ்யாதி கிரந்தங்களையும் அருளினவர்,
திருத் தந்தையாரான கூரத்தாழ்வான்; ஆதலால், ஆழ்வானையும் பட்டர்க்கு ஆசாரியரென்றல் ஒருவாறு அமையும்.

ஸ்ரீதரன் – வடசொல்; திருமகளைத் (திருமார்பில்) தரிப்பவன்.
பூமகள் – (மலர்களிற் சிறந்ததான) தாமரைமலரில் வாழும் மகள்.
தென் குருகை – தெற்கிலுள்ள குருகூரெனினுமாம்; இது, தென்பாண்டி நாட்டிலுள்ளது: ஆழ்வார்திருநகரியென வழங்கும்.

நாதமுனி – தலைவராகிய முனிவர்: யோகீசுவரர். முநி – மநநசீலன்;
ஸ்ரீரங்கநாதனுடைய ‘நாதன்’ என்ற திருநாமத்தை வகித்து நம்மாழ்வாரால் தமக்கு உபதேசிக்கப்பட்ட
அர்த்தங்களை அடைவே எப்பொழுதும் மநநம் பண்ணிக் கொண்டு எழுந்தருளியிருக்கிற அந்தணராதலால்,
நாதமுனி யென்று பெயர் வழங்கலாயிற்று என்பதையும் உணர்க.

உய்யக்கொண்டார் –
மணக்கால்நம்பி முதலிய பலரையும் உய்யுமாறு ஆட் கொண்டவர்:
அன்றி, நாதமுனிகளால் உய்வு பெற ஆட்கொள்ளப்பட்டவ ரெனினுமாம்.

மணக்காலென்கிற ஊரில் திருவவதரித்தவராதலால் மணக்கால்நம்பி யென்று திருநாமம்பெற்ற ஆசாரியரது இயற்பெயர்,
ராமர் என்பது: கடவுளின் பெயரை அடியார்கட்கு இடுதல், மரபு.

நாதமுனிகளின் பேரனாரான யமுனைத்துறைவர் இளமையிலே ராஜபுரோகிதனும் மகாவித்துவானுமான
ஆக்கியாழ்வானோடு வாதஞ்செய்யத் தொடங்கியபோது இராசபத்தினியானவள் ‘இவர் தோற்கமாட்டார்’ என்று அரசனுக்கு உறுதிகூற,
அரசன் அதனை மறுத்து, ‘நமது ஆக்கியாழ்வான் தோற்றால் இவர்க்குப் பாதி இராச்சியம் தருவேன்’ என்று பிரதிஜ்ஞைசெய்ய,
உடனே நடந்த பலவகை வாதங்களிலும் யமுனைத்துறைவரே வெற்றியடைய,
அதுகண்டு தனதுபிரதிஜ்ஞை நிறைவேறினமைபற்றி மகிழ்ச்சிகொண்ட இராசமகிஷி
‘என்னையாளவந்தவரோ!’ என்றுகொண்டாடியதனால், இவர்க்கு ‘ஆளவந்தார்’ என்று திருநாமமாயிற்று.

பெரியநம்பியின் மறுபெயரான பராங்குசதாசரென்பது பராங்குசரென்னும் ஒருதிருநாமத்தையுடைய நம்மாழ்வாரது
அடியவரென்று பொருள்படும்.
இவர் ஸ்ரீபாஷ்யகாரர்க்குப் பஞ்சஸம்ஸ்காரங்களையும் மந்த்ரரத்நத்தையும் அருளி
அவரை நம் தரிசநப்பிரவர்த்தகராம்படி செய்திட்ட சிறப்புத் தோன்ற,
இவர்க்கு ‘ஏதமில் வண்மை’ என்ற அடைமொழி கொடுக்கப்பட்டது.
இங்கு வண்மை, கைம்மாறு கருதாது மந்திரோபதேசஞ் செய்தல்;
அதற்கு ஏதமின்மை, நூல்முறைக்கும் சிஷ்டாசாரத்துக்கும் சிறிதும் வழுப்படாமை.

எதித்தலைவர் – சந்யாசிசிரேஷ்டர். யதி என்ற வடசொல், எதியென விகாரப்பட்டது;
யந்திரம் – எந்திரம், யமன் – எமன், யஜ்ஞம் – எச்சம், யது – எது, யஜுர் – எசுர் என்பன போல.

ஆழ்வான் – எம்பெருமானுடைய குணகணங்களில் ஆழ்ந்து ஈடுபடுபவர்.
கூரமென்கிற தலத்தில் அவதரித்தவராய், ‘கூரத்தாழ்வான்’ என்று வழங்குகிற பெயர் இங்கு
நாமைகதேசே நாமக்ரஹணத்தால் ‘ஆழ்வான்’ எனப்பட்டதென்றும் கொள்க.

ஸ்ரீபாஷ்யகாரர் கோவிந்தபட்டருடைய வைராக்கியத்தைக் கண்டு அவர்க்குச் சந்யாசாச்சிரமந் தந்தருளித்
தமது திருநாமங்களிலொன்றான எம்பெருமானா ரென்ற பெயரை அவர்க்குச் சாத்த,
அவர் அப்பெரும் பெயரைத் தாம் வகிக்க விரும்பாதவராய் ‘தேவரீர்க்குப் பாதச் சாயையாயிருக்கிற அடியேனுக்குத்
தேவரீர் திருநாமச்சாயையே அமையும்’ என்று விண்ணப்பஞ்செய்ய,
பாஷ்யகாரரும் அப்பெயரையே சிதைத்து எம்பார் என்று பெயரிட்டருளினார்.

பண்டிதர்க்கு வழங்குகின்ற ‘பட்டர்’ என்ற பெயர் கூரத்தாழ்வானுடைய குமாரர்க்குச் சிறப்பாக வழங்கும்.
எம்பெருமானாரால் நாம கரணஞ்செய்தருளப்பெற்றவர், இவர்.

பற்று – பற்றுக்கோடு, ரக்ஷகம்.

எமக்கு என்ற தன்மைப் பன்மை,
ஸ்ரீவைஷ்ணவரனைவரையும் உளப்படுத்தியது; கவிகட்குஉரிய இயற்கைப் பன்மையுமாம்.

————

(எழுபத்து நான்கு சிங்காசநாதிபதிகள்.)

திருமாலை யாண்டான் திருக்கோட்டியூர் நம்பி திருவரங்கப்
பெருமாள் அரையர் திருமலை நம்பி பெரிய நம்பி
அருமால் கழல் சேர் எதிராசர் தாளில் சிங்கா தனராய்
வரும் ஆரியர்கள் எழுத்து நால்வர் என் வான் துணையே –4-

திருமாலை யாண்டன் -, திருக்கோட்டி நம்பி -, திருவரங்கப் பெருமாளரையர் -,
திருமலைநம்பி -, பெரியநம்பி -, (என்பவர்களுடைய),
அருமால் கழல் – அருமையான சிறந்த திருவடிகளை,
சேர் – அடைந்த,
எதிராசர் – எம்பெருமானாருடைய,
தாளின் – திருவடி சம்பந்தத்தால்,
சிங்காதனர் ஆய் வரும் – ஸிம்ஹாஸநாதிபதிகளாய் விளங்குகின்ற,
ஆரியர்கள் எழுபத்து நால்வர் – ஆசாரியர்கள் எழுபத்து நான்கு பேரும்,
என் வான் துணை – எனக்குச் சிறந்த துணையாவர்;

முதலிரண்டடியிற் குறித்த ஐவரும், ஸ்ரீபாஷ்யகாரர்க்குப் பஞ்சாசாரிய ரெனப்படுவர்.
அவர்களில், திருமாலையாண்டான், இவர்க்குத் திவ்வியப் பிரபந்த வியாக்கியாநம் அருளிச்செய்து
‘சடகோபன் பொன்னடி’ என்கிற திருநாமத்தைச் சாத்தியருளினார்;
திருக்கோட்டியூர்நம்பி, இவர்க்குத் திருமந்திரார்த்தத்தையும் சரம ச்லோகார்த்தத்தையும் அருளிச்செய்து
‘எம்பெருமானார்’ என்கிற திருநாமத்தைச் சாத்தியருளினார்;
திருவரங்கப்பெருமாளரையர், இவர்க்குப் பெரிய திருமொழி மூலமும் திருவாய்மொழி மூலமும்
கண்ணி நுண்சிறுத்தாம்பு வியாக்கியாநமும் த்வயார்த்தமும் அருளிச்செய்து ‘லக்ஷ்மணமுனி’ என்கிற திருநாமஞ் சாத்தியருளினார்;
பெரியதிருமலைநம்பி, இவர்க்கு ஸ்ரீராமாயண வியாக்கியாநம் அருளிச் செய்து ‘கோயிலண்ணன்’ என்கிற திருநாமஞ் சாத்தியருளினார்;
பெரியநம்பி, இவர்க்கு ‘ராமாநுஜன்’ என்கிற திருநாமமும் திருமந்திரமும் த்வய சரமச்லோகங்களும் உள்படப்
பஞ்ச ஸம்ஸ்காரம் செய்தருளி, முதலாயிரம் இயற்பா என்ற ஈராயிர மூலத்தை அருளிச்செய்தார்.

எழுபத்து நால்வர் – பட்டர், சீராமப்பிள்ளை, கந்தாடையாண்டான், அநந்தாழ்வான், எம்பார், கிடாம்பியாச்சான் முதலியோர்.
இவர்கள் பெயர் வரிசையை, குருபரம்பராப்பிரபாவம் முதலிய நூல்களிற் காணலாம்.
இவர்கள், ஸ்ரீபாஷ்யகாரரிடமிருந்து உபய வேதாந்தார்த்தங்களையும் உபதேசம் பெற்று அவராலேயே
ஆசாரிய புருஷர்களாக நியமிக்கப்பட்டவர்கள்.
சிங்காதனராய் வரும் ஆரியர்கள் – ஆசாரிய பீடத்தில் வீற்றிருந்து அதற்கு உரிய அதிகாரத்தை நிர்வகிப்பவர்கள்.
‘எதிராசர்தாளிற் சிங்காதனராய் வருமாரியர்கள்’ என்ற சொற்போக்கினால்,
பாஷ்யகாரராகிய ஒரு சக்ரவர்த்தி பின் கீழடங்கி ஆட்சி செய்யும் சிற்றரசராவர் இவரென்பது தோன்றும்.

——–

நம்மாழ்வார்

மால் தன் பராங்கதி தந்து அடியேனை மருள் பிறவி
மாறு அன்பர் ஆன குழாத்துள் வைப்பான் தொல்லை வல் வினைக்கு ஓர்
மாறன் பாராமுகம் செய்யாமல் என் கண் மலர்க் கண் வைத்த
மாறன் பராங்குசன் வாழ்க என் நெஞ்சினும் வாக்கினுமே-5-

மால்தன் – திருமாலினுடைய,
பராங்கதி – பரமபதத்தை,
தந்து – அளித்து,
அடியேனை – தொண்டனான என்னை,
மருள் பிறவி மாறு அன்பர் ஆன குழாத்துள் வைப்பான் – மயக்கமுள்ள பிறப்பு நீங்கப்பெறுகிற
அடியார்களான முக்தர்களுடைய கூட்டத்தில் (ஒருவனாகச்) சேர்த்தருள விருப்பவனும்,
தொல்லை வல்வினைக்கு ஓர் மாறன் – அநாதியாய் வருகிற வலிய கருமங்கட்கு ஒரு சத்துருவா யுள்ளவனும்,
பராமுகம் செய்யாமல் என் கண் மலர் கண் வைத்த மாறன் பராங்குசன் – உபேக்ஷை செய்யாமல் என் மீது
தாமரை மலர் போன்ற (தனது) திருக்கண் பார்வையை வைத்தருளியவனும் மாறனென்றும் பராங்குசனென்றும்
பெயர்களையுடையவனுமான ஸ்ரீசடகோபன்,
என் நெஞ்சினும் வாக்கினும் வாழ்க – எனது மனத்திலும் மொழியிலும் வாழக்கடவன்; (எ – று.)

இப்பிரபந்தம் இனிது முடிதற்பொருட்டு ஆழ்வார் எனது மனத்திலும் வாக்கிலும் இருந்து நல்ல கருத்துக்களையும்
வளமான சொற்களையும் தோற்றுவிப்பாராக வென வேண்டியவாறாம்.
ஆழ்வாரை மனத்திற்கொண்டு தியானித்துச் சொல்லிற்கொண்டு துதிப்பே னென்ற கருத்தும் அமையும்.

மால்தன் பராங்கதி – விஷ்ணுலோகமாகிய ஸ்ரீவைகுண்டம்.
மருள் – விபரீத ஞானம். மருட் பிறவி – அவித்தையினாலாகிற பிறப்பு எனினுமாம்;
“பொருளல்லவற்றைப் பொருளென் றுணரும், மருளானா மாணாப் பிறப்பு” என்றார் திருக்குறளிலும்.
கருமத்தை முற்றும் ஒழித்து மீளாவுலகமாகிய முக்தி பெற்றவர் மீண்டும் பிறத்தல் இல்லையாதலால், ‘பிறவி மாறுஅன்பர்’ எனப்பட்டனர்.
வல்வினைக்கு மாறன் – அழித்தற்கு அரியகருமங்களை எளிதில் அழிப்பவன்.
பராமுகம் = பராங்முகம், முகங்கொடாமை.
என்கண், கண் – ஏழனுருபு.
மலர்க்கண் வைத்தல் – அருள் நோக்கம்.
மிகக் களித்துக் கொழுத்துச் செருக்கித் திரிந்து எதிர்த்து வாதப் போர்க்கு வரும் பிற மதத்தவராகிய மத யானைகளைத்
தமது பிரபந்தங்களிற் கூறிய தத்வார்த்தங்களினால் அடக்கிக் கீழ்ப்படுத்தித் தம் வசத்தில் வைத்து நடத்துந் திறமுடையராய்
அவற்றிற்கு மாவெட்டி யென்னுங் கருவிபோ லிருத்தலால்,
நம்ஆழ்வார்க்குப் பராங்குசனென்று திருநாமமாயிற் றென்க:
பர அங்குசன் என்று பிரிக்க: பரர் – அயலார்; அங்குசம் – மாவெட்டி, தோட்டி, தந்து வைப்பானென முடியும்.

————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஶ்ரீமச்ச²ங்கர-ப⁴க³வத: க்ருʼதௌ -ஸ்ரீ ॥ ஹனுமத் பஞ்ச ரத்னம் ॥

January 20, 2022

ஸ்ரீ ॥ ஹனுமத் பஞ்ச ரத்னம் ॥

வீதாகி²ல-விஷயேச்ச²ம் ஜாதானந்தா³ஶ்ர புலகமத்யச்ச²ம் ।
ஸீதாபதி தூ³தாத்³யம் வாதாத்மஜமத்³ய பா⁴வயே ஹ்ருʼத்³யம் ॥ 1 ॥

தருணாருண முக²-கமலம் கருணா-ரஸபூர-பூரிதாபாங்க³ம் ।
ஸஞ்ஜீவனமாஶாஸே மஞ்ஜுல-மஹிமானமஞ்ஜனா-பா⁴க்³யம் ॥ 2 ॥

ஶம்ப³ரவைரி-ஶராதிக³மம்பு³ஜத³ல-விபுல-லோசனோதா³ரம் ।
கம்பு³க³லமனிலதி³ஷ்டம் பி³ம்ப³-ஜ்வலிதோஷ்ட²மேகமவலம்பே³ ॥ 3 ॥

தூ³ரீக்ருʼத-ஸீதார்தி: ப்ரகடீக்ருʼத-ராமவைப⁴வ-ஸ்பூ²ர்தி: ।
தா³ரித-த³ஶமுக²-கீர்தி: புரதோ மம பா⁴து ஹனுமதோ மூர்தி: ॥ 4 ॥

வானர-னிகராத்⁴யக்ஷம் தா³னவகுல-குமுத³-ரவிகர-ஸத்³ருʼஶம் ।
தீ³ன-ஜனாவன-தீ³க்ஷம் பவன தப: பாகபுஞ்ஜமத்³ராக்ஷம் ॥ 5 ॥

ஏதத்-பவன-ஸுதஸ்ய ஸ்தோத்ரம்
ய: பட²தி பஞ்சரத்னாக்²யம் ।
சிரமிஹ-னிகி²லான் போ⁴கா³ன் பு⁴ங்க்த்வா
ஶ்ரீராம-ப⁴க்தி-பா⁴க்³-ப⁴வதி ॥ 6 ॥

இதி ஶ்ரீமச்ச²ங்கர-ப⁴க³வத: க்ருʼதௌ ஸ்ரீ ஹனுமத் பஞ்ச ரத்னம் – ஸம்பூர்ணம் ॥

————

வீதாகி²ல-விஷயேச்ச²ம் ஜாதாநந்தா³ஶ்ர புலகமத்யச்ச²ம் ।
ஸீதாபதி தூ³தாத்³யம் வாதாத்மஜமத்³ய பா⁴வயே ஹ்ருʼத்³யம் ॥ 1॥

“வீதாகி²ல-விஷயேச்ச²ம்” –
எல்லா விஷய இச்சைகள், புலன்களுக்கு இன்பத்தை தரக் கூடிய, போகப் பொருட்கள் மேல்
இருக்கிற ஆசைகளிடமிருந்து விடுபட்டவர்.

“ஜாதாநந்தா³ஶ்ர புலகம்” –
அவர் ராம நாமத்தை ஜபிச்சு,

‘ஆனந்த அஶு’ – ஆனந்த கண்ணீர் பெருகுபவராகவும்,
‘புலகம்’னா மயிர்கூச்செரியறது. அப்படி அந்த ராம நாமத்துனால, இடையறாது ராம நாம ஜபத்துனால,
எவருக்கு கண்களில் ஆனந்த பாஷ்பமும், உடம்புல மயிர்கூச்சலும் ஏற்படறதோ, அப்படி ராம பக்தி வந்துடுத்துனா,
எங்க ராமன் இருக்கானோ அங்க காமன் வராமாட்டான்! அப்பா கிட்ட பிள்ளைக்கு பயம்!
எங்க காமன் இருக்கானோ, அங்க ராமர் வர மாட்டார்!
அந்த மாதிரி அந்த காம வாஸனையே இத்து போன ஒரு
‘அத்யச்ச²ம்’ –
ரொம்ப நிர்மல வடிவானவர், தூய்மையே வடிவானவர் ஹனுமார்!

“ஸீதாபதி தூ³தாத்³யம்” –
ஸீதா பதியினுடைய, ஸீதையினுடைய கணவரான ராமருடைய தூதர்.
இந்த ‘ஸீதாபதி தூ³தாத்³யம்’ங்கறது கிஷ்கிந்தா காண்டத்துல, 3வது ஸர்கத்துல மொதல்ல
ஸுக்ரீவன அனுப்ச்சு ராமர் கிட்ட ஹனுமார் வேஷம் போட்டுண்டு வரார்!
ஒரு பிக்ஷு வேஷம் போட்டுண்டு வந்து நமஸ்காரம் பண்ணி, ரொம்ப அழகா பேசறார்.
“நீங்க யாரு? உங்களைப் பார்த்தா ராஜகுமாரர்கள் மாதிரி இருக்கேள்! ஆனா ரிஷிகள் மாதிரி வேஷம் போட்டுண்டு இருக்கேள்!
சுத்திமுத்தி ஏதோ தேடிண்டே வரேள். சந்த்ர ஸூர்யாளே பூமில இறங்கி வர்றமாதிரி அவ்ளோ தேஜஸா இருக்கேள்!
உங்களுடைய தேஜஸுனால இந்த பம்பை ஏரியும் இந்த மலையும் ஒளிர்கிறது!”, அப்படீன்னு அழகா பேசி ,
ராம லக்ஷ்மணாளை வந்து பார்த்து நமஸ்காரம் பண்ணவொடனேயே அவா மேல பக்தி ஏற்படறது!

அதனால ஸுக்ரீவன் “சூழ்ச்சியா பேசி தெரிஞ்சுண்டு வா”னு சொன்னா கூட, ஹனுமார் உள்ளபடி சொல்லிட்டார்.
“நான் ஸுக்ரீவன் என்கிற வானர ராஜாவின் மந்திரி. என் பேர் ஹனுமான். ஸுக்ரீவன் உங்களோடு நட்பை விரும்புகிறார்!”
அப்படீன்னு சொல்லிடறார்.

அப்போ ஹனுமாருடைய இந்த பேச்சைக் கேட்டு ராமர் ரொம்ப கொண்டாடறார்.
“ரிக் யஜுஸ் ஸாம வேதங்களை அத்யயனம் பண்ணி, நவ வ்யாகரணங்களையும் பல முறை கேட்டாத் தான் இந்தமாதிரி பேச முடியும்!
இவளோ நேரம் பேசினார். இவர் பேசினதுல ஒருவிதமான grammatical mistake, அபசப்தம் ஒண்ணு கூட வரல!
இவர் ரொம்ப உரக்க பேசல! ரொம்ப அடி தொண்டைல பேசல! ரொம்ப விருவிருன்னு பேசல!
ரொம்ப இழுத்து இழுத்து subjectடுக்கே வராம பேசிண்டே இருக்கல!”

ஸம்ஸ்கார க்ரம ஸம்பந்நாம அத்3ருதாம விலம்பி3தாம் |
உச்சாரயதி கல்யாணீம் வாசம் ஹ்ருத3ய ஹாரிணீம் ||

மனத்தை கொள்ளைக் கொள்ளும் மங்களகரமான வார்த்தைகளைப் பேசறார்.
‘ஸம்ஸ்காரம்’ – ரொம்ப பண்பாடோட cultureரோட இருக்கு இவரோட வார்த்தைகளும் பேச்சும்!
இப்பேர்ப் பட்ட ஒரு தூதன் ஒரு ராஜாக்கில்லைன்னா அவனோட காரியங்கள் எப்படி நடக்கும்!”

ஏவம் குணக3ணைர்யுக்தா யஸ்ய ஸ்யு: கார்யஸாத4கா: |
தஸ்ய ஸித்4யந்தி ஸர்வார்தா2 தூ3தவாக்ய ப்ரசோதி3தா: ||

“அதே நேரத்துல இப்பேர்ப்பட்ட ஒரு தூதன் இருந்தான்னா, அந்த ராஜாக்கு இந்த தூதனுடைய வார்த்தைகள்னால
எல்லா காரியங்களும் நடக்குமே!” அப்படீன்னு சொல்லி, ராமர் அந்த ஹனுமாரைப் பார்த்தவொடனேயே
‘இந்த ஹனுமார் தான் நமக்கு ஸஹாயமா இருக்கப் போறார்ன்னு ராமதூதன் அப்படீங்கற அந்த titleல அங்கேயே குடுத்துட்டார்!’

லக்ஷ்மணன்கிட்ட, “நீ நம்மளுடைய விஷயத்தை சொல்லிடு”னு லக்ஷ்மணன் ரொம்ப தயவா ரொம்ப பரிதாபமா சொல்றான் .
“இந்த சக்ரவர்த்தி குமாரர், தானா காட்டுக்கு வந்திருக்கார். மனைவியை இழந்து கஷ்டப்படறார்.
தனுங்கற கந்தர்வன் , ஸுக்ரீவன் ஸஹாயம் பண்ணுவான்னு சொல்லிருக்கான்.
எங்களுக்கு ஸுக்ரீவனோட தயவு வேணும்!”னு சொல்லும் போது,

ஹனுமார் சொல்றார் , “ஆஹா! நீங்க அப்படி சொல்லாமா? உங்களை மாதிரி உயர்ந்த குலத்தில் பிறந்தவர்களும் ,
புலன்களையும் கோபத்தையும் ஜெயிச்சவர்களுமா இப்பேர்ப்பட்ட மஹானுபாவர்கள் அந்த ஸுக்ரீவனுக்கு ஒரு நட்பா கிடைக்கறது
இப்ப அவன் பண்ண புண்ணியம்! அவன் இந்த ரிஷ்யமுக மலையிலேர்ந்து வெளியே போகமுடியாம மாட்டிண்டிருக்கான்!
அப்படி இருக்கும்போது நீங்க வந்தது அவன் பண்ண பாக்யம்! நான் உங்களை அவன்கிட்ட அழைச்சுண்டு போறேன்”னு அழைச்சுண்டு போறார்.

ஸுக்ரீவன்கிட்ட, அழகா ராம லக்ஷ்மணாளைப் பத்தி பெருமையா சொல்லி, , “இவாளுடைய நட்பை நீ கோர வேண்டும்.
இதனால உனக்கு காரியம் நடக்கும். உனக்கு உன்னுடைய மனைவி, ராஜ்யம் திரும்பவும் கிடைக்கும்!”
அப்படீன்னு சொன்னவொடனே,

ஸுக்ரீவன் கை கூப்பி, “நான் ஒரு ஸாதாரண வானரம். என்னை நீங்க நண்பனா ஏற்றுக்கொள்வீர்களா?” அப்படீன்னு கேட்கறான்.

ராமரும் அவன் கையை பிடிச்சு ஆலிங்கனம் பண்ணிண்டு, “நானும் நீயும் நண்பர்கள்” அப்படீன்னு சொல்றார்.
உடனே ஹனுமார், அக்னியை மூட்டி, அக்னி சாட்சியா ராமரும் ஸுக்ரீவனும் ஸக்யம் பண்ணிக்கறா!

ஸுக்ரீவன் கிட்ட ராமரை அழைச்சிண்டு வந்ததுலேர்ந்து, ஸீதா தேவிகிட்ட ராம தூதனா போய், ராமருடைய சேதியை சொல்லி,
ஆச்வாஸப்படுத்தி, அவளுடைய உயிரையே காப்பாத்தினார். அவ உயிரையே விடறதா இருந்தா. அவகிட்ட மெதுவா,
அவ காதுல மட்டும் விழறமாதிரி ராம கதையை சொல்லி, அவ மனஸை ஸமாதானப்படுத்தி, அப்புறம் போய்
எதிர்ல நமஸ்காரம் பண்ணி, நம்பிக்கையை சம்பாதிச்சு, நடந்த விவரங்களெல்லாம் ஒண்ணு விடாம அழகா சொல்லி,
அப்புறம் ராமருடைய மோதரத்தைக் கொடுத்து,

ராம நாமாங்கிதம் சேத3ம் பஶ்ய தே3வி அங்கு3லீயகம் ||

“இதோ பாரம்மா! ராமருடைய மோதரம் கொடுத்திருக்கார்!” அப்படீன்னவொடனே ஸீதைக்கு பரம சந்தோஷம்!

விக்ராந்தஸ்த்வம் ஸமர்த2ஸ்த்வம் ப்ராஜ்ஞஸ்த்வம் வாநரோத்தம |

“ஹே வானரோத்தமா! ஹே ஹனுமான்! நீதான் ‘விக்ராந்த:’ – உன்னிடத்தில் தான் உடல் பலமிருக்கு!
‘ஸமர்த்த:’ – மனோபலம் இருக்கு! ‘ப்ராஞ:’ – புத்தி பலமிருக்கு! எல்லாம் உன்கிட்ட தான் இருக்கு!
இப்பேர்ப்பட்ட காரியத்தை இந்த ராவணனுக்கு பயப்படாம வந்து இத்தனை படையும் காவலையும் தாண்டி,
மீறி என்னை வந்து பார்த்து, என் உயிரைக் காப்பாத்தி, ராமருடைய செய்தியை சொல்லி என்ன ஆச்வாஸப்படுத்தினியே!”
அப்படீன்னு கொண்டாடறா.

“ஸீதாபதி தூ³தாத்³யம் வாதாத்மஜம்” – எப்படி ஹனுமாரால இந்த ஸமுத்ரத்தை தாண்ட முடியறதுனா,
ஜாம்பவான் உத்ஸாஹப்படுத்தும் போது சொல்றார்,
“ஹே ஹனுமான்! நீ வாயுவோட அனுக்ரஹத்துனால அஞ்ஜனா தேவிக்கு பிறந்தவன்.
அதனால உன்னால வாயு மாதிரி, கருடன் மாதிரி ஆகாஶத்துல பறக்க முடியும்! கருடனுக்கு றெக்கைகள்ல என்ன பலமோ,
அந்த பலம் உன்னுடைய கைகள்ல இருக்கு! உன்னால இந்த காரியத்த பண்ண முடியும்!

த்வய்யேவ ஹனுமனஸ்தி பலம் புத்தி: பராக்கிரம:

உன்னால முடியும்னு சொல்லல. “உன்னாலதான் முடியும் ஹனுமான்!” அப்படீன்னு சொல்லி உத்ஸாஹப் படுத்தி,
எல்லா வானராளுமா ஹனுமாரை ஸ்தோத்ரம் பண்ணின உடனே,
“ஆமா. நான் என்னுடைய அப்பாவுக்கு நிகரான பலமும் பராக்ரமமும் படைத்தவன்! என்னாலேயே எங்கும் தடையில்லாம போகமுடியும்!
இதோ ஆகாசத்துல போறேன் பாருங்கோ!” அப்படீன்னு சொல்லிட்டு,

யதா2 ராக4வ நிர்முக்த: ஶர: ஶ்வஸன விக்ரம: |
க3ச்சேத் தத்3வத்3 க3மிஷ்யாமி லங்காம் ராவண பாலிதாம் ||

“எப்படி ராம பாணம் தடையில்லாம போகுமோ, அந்த மாதிரி நான் கிளம்பி இப்போ இலங்கைல போய் குதிப்பேன்!
அங்க ஸீதை இல்லனா மூவுலகத்துலேயும் தேடி எப்படியாவது ஸீதைய கண்டுபிடிச்சிண்டு வருவேன்!
இராவணனை வால்ல கட்டி இழுத்துண்டு வருவேன்! எப்படியாவது காரியத்தை முடிச்சிண்டு வருவேன்!”
அப்படீன்னு கர்ஜனை பண்ணிண்டு ஆகாச மார்க்கமா, பல தடைகள்லாம் வர்றது. அதை மீறிண்டு போய் இலங்கைல குதிக்கறார்.

‘வாதாத்மஜம் அத்³ய பா⁴வயே ஹ்ருʼத்³யம்’ –
‘என்னுடைய ஹ்ருதயத்துல இன்னிக்கு நான் அவரை த்யானம் பண்றேன்!’ அப்படீன்னு சொல்றார்.

———–

அடுத்த ஸ்லோகம்,

தருணாருண முக²-கமலம் கருணா-ரஸபூர-பூரிதாபாங்க³ம் ।
ஸஞ்ஜீவநமாஶாஸே மஞ்ஜுள-மஹிமாநமஞ்ஜநா-பா⁴க்³யம் ॥ 2॥

‘தருணாருண முக²கமலம்’ –
‘அருண:’னா ஸூரியன். ‘தருணாருண:’னா இளம் ஸூரியன்! உதய ஸூரியன் போன்ற தேஜஸ் கொண்ட முகம்.
‘கமலம்’ – கமலம் போன்ற அழகான ஸூரியனை போன்ற அழகான அவருடைய முகம்!

‘கருணாரஸபூர’ –
கருணாரஸம் நிரம்பிய,

‘பூரிதாபாங்க³ம்’ –
கண்கள். அவருடைய கண்கள்ல கருணை நிரம்பியிருக்கு! அப்பேர்ப்பட்ட கருணை!
அதனால தானே அவர் ஸீதை படற கஷ்டத்தைப் பார்த்து தவிக்கறார்.
இந்த ஸீதை இப்படி கஷ்டப் படலாமா? ராமன் கணவரா, ஜனகர் அப்பாவா, தஶரதரை மாமனாராப் பெற்ற
இந்த ஸீதை இப்படி இங்க கஷ்டப் படறாளே!
இந்த ராமரையும் ஸீதையயும் சேர்த்து வெக்கணும். அந்த ராமர் அங்க அப்படி கஷ்டப்படறார் ஸீதைய பிரிஞ்சு!

ஸீதேதி மது4ராம் வாணீம் வ்யாஹரந்ப்ரதிபு3த்4யதே৷৷

ராமர் தூங்காம சாப்படாம இந்த ஸீதைய நெனச்சுண்டு கஷ்டப்படறார்.
எப்பயாவது தூங்கினாகூட “ஸீதா!”னு சொல்லிண்டு எழுந்துண்டுடறார்.
அப்படி அங்க அவர் தவிக்கறார். இங்க இவ இப்படி தவிக்கறா. தபஸ் பண்ணிண்டிருக்கா.

நைஷா பஶ்யதி ராக்ஷஸ்யோ நேமாந்புஷ்பப2லத்3ருமாந் |
ஏகஸ்தஹ்ருத3யா நூநம் ராமமேவாநுபஶ்யதி৷৷

இவள், இந்த அசோகவனம் இவ்ளோ அழகா இருக்கு! இதையும் பார்க்கல!
ராக்ஷஸிகள் கோரமா இருந்துண்டு பயமுறுத்தறா! அதையும் பார்க்கல!

‘ஏகஸ்தஹ்ருத3யா நூநம் ராமமேவாநுபஶ்யதி’ –

‘ஒரே மனஸா ராமனயே பார்த்துண்டிருக்கா! தபஸ் பண்ணிண்டிருக்கா இவோ!
அதனால இந்த ராமனையும் ஸீதையையும் சேர்த்து வெக்கணும்!’
அப்படீன்னு அதுக்கு என்னென்ன பண்ணணுமோ அதெல்லாம் பண்றார்.
அங்கிருந்து வந்து, ராமரை பார்த்தவொடனே ஸீதை படற கஷ்டத்தை சொல்லி,

ஸர்வதா2 ஸாக3ரஜலே ஸம்தார: ப்ரவிதீ4யதாம்|

‘உடனே எப்படி கடல் தாண்டறது? அதுக்கான முயற்சியைப் பண்ணுவோம்’னு அப்படி கிளப்பறார் ஹனுமார் ராமரை!

‘ஸஞ்ஜீவநமாஶாஸே’ –
உயிரைக் கொடுத்த அந்த ஹனுமாரை போற்றுகிறேன்! ஹனுமார் இந்தமாதிரி ஸீதைக்கு மட்டுமா உயிர் கொடுத்தார்!
லக்ஷ்மணன் அடிப்பட்டு விழுந்த போது, ஸஞ்ஜீவி மலையைக் கொண்டு வந்து உயிர் கொடுத்தார்.
எல்லா வானரப்படையுமே இந்திரஜித் ப்ரம்மாஸ்த்ரத்துனால வீழ்த்தினபோது, ஸஞ்ஜீவி மலையைக் கொண்டு வந்து உயிர் கொடுத்தார்.

அப்படி நமக்கே ஹனுமாருடைய த்யானம்

அபராஜித பிங்காக்ஷ நமஸ்தே ராமா பூஜிதா |

அவருடைய ஸ்தோத்ரம் பண்ணா, நம்முடைய உயிர் வளரும். அப்படி உயிரைக் கொடுப்பவர் எல்லாருக்கும்!

‘மஞ்ஜுள-மஹிமாநம்’ –
அவருடைய மஹிமை ரொம்ப அழகான மஹிமை அப்படீங்றார் ஆசார்யாள். அவரே ஸுந்தரர்னு பேரு!
அவருடைய மஹிமையும் ரொம்ப ஸுந்தரமா இருக்கு! அதனால தான் அந்த காண்டத்துக்கே ‘ஸுந்தர காண்டம்’னு பேரு!
‘மஞ்ஜுள-மஹிமாநம்’ – அவர் பார்க்கறதுக்கு ரொம்ப அழகா இருக்கார். ஏன்னா,

‘அஞ்ஜநா-பா⁴க்³யம்’ –
‘அஞ்ஜநா’ங்கறவ ஒரு அப்ஸர ஸ்த்ரீ வானரமா பொறந்திருக்கா! அந்த அப்ஸர ஸ்த்ரீக்கு குழந்தையா பொறந்து,
அந்த ஹனுமார் அவ்ளோ அழகா இருக்கார். ஸீதா தேவி ராம கதையைக் கேட்டு நிமிர்ந்து பார்த்தபோது,
ஸூர்யோதயம் போன்று மஞ்சள் பட்டு உடுத்திக்கொண்ட அழகான அந்த வானர வீரரைப் பார்த்து,
மனஸுல ஸந்தோஷப்பட்டா! அவர் வந்து நமஸ்காரம் பண்ணும்போது, ‘கொரங்கைப் பார்த்தேனே!’ன்னு கவலைப்படறா.
அப்பறம் இது கனவில்லை! கனவுல தான் கொரங்கைப் பார்த்தா கஷ்டம். இது நனவு தான்!
“ஏன்னா எனக்கு ஸுகமிருந்தாதான் தூக்கம் வரும். தூக்கமிருந்தாதான் கனவு வரும். எனக்கு கனவே கிடையாது.
இது நேரத்தான் நான் பார்க்கறேன். இவன் சொன்ன வார்த்தையெல்லாம் சத்தியமாகட்டும்”!
அப்படீன்னு. நமஸ்காரம் பண்ணும்போது இராவணனான்னு ஸந்தேஹம் வர்றது!
ஆனா சீதை சொல்றா, “அன்னைக்கு ஸந்யாஸி வேஷம் போட்டுண்டு வந்த இராவணனைப் பார்த்தபோது என் மனம் நடுங்கித்து!
இன்னிக்கு வானரமா நீ வந்திருக்க! ஆனாலும் உன்னைப் பார்த்து என் மனஸுல ஒரு உல்லாசம் ஏற்படறது! ஒரு சாந்தி ஏற்படறது!”ன்னு சொல்றா.

அப்படி ஒரு ரூபம் ஹனுமாருடைய ஒரு ரூபம்! அந்த ஹனுமார்ங்கறதே குருவினுடைய வடிவம்தான்!
ஸீதாதேவி, அம்பாளே ஒரு ஜீவனா இருந்து, ராமர்ங்கிற பகவானை அடையறதுக்காக தவிச்சிண்டிருக்கா.
தபஸ் பண்ணிண்டிருக்கா. அப்போ நம்ம மஹா பெரியவா மாதிரி, ஆசார்யாள் மாதிரி வர அந்த குரு,
அந்த குரு மாதிரி ஹனுமார் வந்தார்! அந்த ஸுந்தர காண்டத்துல, த்ரிஜடை ஸ்வப்னம் சொன்ன பின்ன ஒரு ஸ்லோகம் வர்றது.

பக்ஷீ ச ஶாகாநிலயம் ப்ரவிஷ்ட: புந: புநஶ்சோத்தமஸாந்த்வவாதீ3 |
ஸுஸ்வாக3தாம் வாசமுதீ3ரயாந: புந: புநஶ்சோதயதீவ ஹ்ரு’ஷ்ட:৷৷

ஒரு பக்ஷியானது மரக்கிளைல உட்கார்ந்துண்டு, ‘புந: புநஶ்ச உத்தமஸாந்த்வவாதீ3’ –
‘மீண்டும் மீண்டும் உத்தமமான மனஸ் ஸமாதானம் ஆகக்கூடிய வார்த்தைகளைப் பேசிண்டே இருக்கு’
அப்படீன்னு! இது ஹனுமார் வந்திருக்கார்ங்கறதுக்கு ஸூசகமா சொல்றார். வால்மீகி,
“ஒரு குருவானவர் ஒரு ஜீவன் கிட்ட, பகவான் வருவார்! உன்னை மீட்டுண்டு போவார்”.

“க்ஷிப்ரமேஷ்யதி ராகவா:”
சீக்கிரம் வருவார். வானரப் படைய இழுத்துண்டு வருவார். எப்படி கருடனை இழுத்துண்டு கஜேந்திரனைக்
காப்பாத்தறதுக்காக விஷ்ணு பகவான் வந்தாரோ, அந்த மாதிரி, வானரப் படைய இழுத்துண்டு வந்துருவார்.
உன்னை மீட்டுண்டு போவார். நான் போய் திரும்பி சொல்ற இந்த நேரம் தான் delay ஆகப் போறது!
இனிமே நீ கவலையே படவேண்டாம்!” அப்படீன்னு ஒரு 25 வாட்டி வர்றது அந்த பத்து ஸர்கத்துல!
அத்தனை வாட்டி சொல்லி ஆறுதல் சொல்றார். இதத்தான் ஒரு குருவானவர் பண்ணுவார்!
“பகவான் உன்னை நினைச்சுண்டிருக்கார். உன்னை வந்து மீட்பார்! நீ கவலைப்படாதே!”
அப்படீன்னு சொல்ற அந்த வார்த்தையை ஹனுமார் பண்றார்.
அதனால ஹனுமார் வந்து ஒரு குருவுக்கு உருவகம். அந்த ஹனுமாருடைய மஹிமை மஞ்ஜுள மஹிமை!
அஞ்ஜனையுடைய பாக்யமா அவதாரம் பண்ணவர்! அதனால ஆஞ்சநேயன்னு பேரு!

———-

ஶம்ப³ரவைரி-ஶராதிக³மம்பு³ஜத³ல-விபுல-லோசநோதா³ரம் ।
கம்பு³க³லமநிலதி³ஷ்டம் பி³ம்ப³-ஜ்வலிதோஷ்ட²மேகமவலம்பே³ ॥ 3॥

‘ஶம்ப³ர:’ –
ஶம்பராஸுரன்னு ஒருத்தன் இருந்தான். அவனுக்கு எதிரி அவனை ஜயிச்சவன் மன்மதன்.
மன்மதனுடைய ‘ஶராதிக³ம்’. ‘ஶரம்’னா அவனுடைய பஞ்ச புஷ்ப பாணங்கள். அதுல அடிபடாதவர் ஹனுமார்.
அந்த ஶரங்களுக்கு டிமிக்கி கொடுத்தார் ஹனுமார். மன்மதனை ஜயிச்சவர் ரொம்ப கொஞ்ச பேர்தான்.
பிள்ளையார், ஹனுமார், நம்ப மகாபெரியவா.
அந்த இராவணன் அந்தபுரத்துல போய் பெண்கள் தூங்கிண்டிருக்கிறதை பார்த்தார்.
ஆனா கொஞ்சங்கூட அவருக்கு சலனம் இல்லை. அவர் அப்புறம் ஒரு நிமிஷம் யோசிக்கறார்.
“என்னடா இது? பிறன் மனைவிகளை தூங்கும்போது பார்த்துட்டோமே!
இதுனால நம்மளுடைய பிரம்மச்சர்ய விரதத்துக்கு ஏதாவது பங்கம் வந்துடுத்தானு!”.
அப்புறம், “மனசு தான் இந்திரியங்களுடைய சலனத்துக்கு காரணம். என் மனசு ரொம்ப அடங்கியிருக்கு.
அதனால என்னுடைய பிரம்மச்சர்ய விரதத்துக்கு எந்த பங்கமும் வரவில்லை.
ஆனாலும், நான் இந்த மாதிரி இடங்களுக்கு வரமாட்டேன். ராமர் சொல்லி ஒரு பெண்ணை தேடி வந்திருக்கேன்.
நான் ஒரு பெண்ணை தேடும்போது வேற எங்க தேட முடியும்? மான் கூட்டத்துலயா தேட முடியும்?
அதனால நான் இங்க வந்தேன்!”னு சொல்றார்.

அந்த மாதிரி, அவருடைய பிரம்மச்சர்ய விரதத்துக்கு பங்கம் ஏற்படக்கூடிய situationலயும் அவருக்கு கொஞ்சம்கூட
சலனம் இல்லாமல் இருந்தாலும், “இந்த மாதிரி இடங்களுக்கு நான் வரமாட்டேன்”னு தீர்மானமும் வெச்சிருந்தார்.
அந்த மாதிரி ஒழுக்கத்தை வெச்சுதான் மகா பெரியவா, social service பண்றவாள்லாம் ஹனுமாரை பாத்துக்கணும்னு பேசியிருக்கார்.
Social service பண்ணும்போது, பலவித இடைஞ்சல்கள் வரும். பலவித temptations வரும்.
ஆனா ரொம்ப humbleஆ இருக்கணும். நாம பண்றோம்னு நினைச்சுக்கக் கூடாது.
“ராம பாணம் மாதிரி போவேன்”னு ஹனுமார் சொன்னார்னா, ராமர் விட்டாதான் பாணம் போகும்.
அதுமாதிரி ராமருடைய சக்தியினால, பிரபாவத்துனால்தான் எல்லாமே நடக்கறது.
நம்மகிட்ட ஒண்ணுமே இல்லைனு நினைச்சவர் அவர். அந்த ஒரு சரணாகதி பாவம் அவருக்கு இருந்ததுனால,
உலகத்துல யாருமே பண்ண முடியாத அபார காரியங்கள் எல்லாம் அவர் பண்ணார். சமுத்திரத்தை தாண்டினார்.
இலங்கையை எரிச்சார். எல்லா காவலையும் மீறி சீதையைப் பார்த்து சமாதனம் சொன்னார். ராவணனையே மிரட்டிட்டு வந்தார்.
அப்படி அவருடைய வைபவம்! அது தன்னை “ராமதூதன்”னு நினைச்சதுனால! தனக்கு எந்த சக்தியுமே இல்லை.
ஆனா “ராமர் 14 உலகங்களையும் ஸ்ருஷ்டி பண்ணி சம்ஹாரம் பண்ணக் கூடியவர்”ங்கிற பூரண நம்பிக்கை வச்சிருந்தார்
அவர். அப்படி, ‘ஶம்ப³ரவைரி ஶராதி’ – மன்மதனுடைய அம்புகளுக்கு மீறினவர்!

‘அம்பு³ஜத³ல’ – ‘அம்பு³ஜம்’னா தாமரை. ‘‘அம்பு³ஜத³லம்’னா தாமாரையினுடைய இதழ்.
அது போன்ற ‘விபுல-லோசநோதா³ரம்’ – பெரிய கண்கள்.
‘உதா³ரம்’ – அதுல எப்பவுமே கருணை இருக்கும்.
‘கம்பு³க³லம்’ – ‘கம்பு³’னா சங்கு. சங்கு போன்ற அழகான கழுத்து.
‘அநிலதி³ஷ்டம்’ – வாயுபகவானுக்கு ரொம்ப இஷ்டமானவர்.
பொறந்த உடனே சூரியனை பழம்னு நினைச்சு 3௦௦௦ யோஜனை ஆகாசத்துல பறந்தார்.
சூரியனைப் பிடிச்சு சாப்பிடனும்னு! எல்லாரும் பயந்து போயிட்டா. சூரியன் சந்தோஷப்படறார். இந்த குழந்தையை வரவேற்கிறார்.
ஆனா இந்திரனுக்கு கோபம் வர்றது. ‘என்னுடைய jurisdiction!’னு வஜ்ரத்துனால ஹனுமாரை அடிக்கறான்.
ஹனுமார் கீழ விழுந்து, அவருடைய இடது தாடை கொஞ்சம் அடி பட்டுடறது.
உடனே வாயு பகவான் கோவிச்சுண்டு, “நான் சலிக்கவே மாட்டேன்!”னு ஒரு குகைல போய் உட்கார்ந்துடறார்.
உடனே பிரம்மாதி தேவர்கள் எல்லாரும் ஓடி வந்து, ஹனுமாருக்கு சிரஞ்சீவி வரமும்,
இன்னும், பிரம்மாஸ்திரம் முதற்கொண்டு எந்த அஸ்திரமும் ஒண்ணும் பண்ணாதுங்கிற வரமும் கொடுத்த பின்ன
வாயு பகவான் வெளியில வந்து எல்லாருக்கும் திரும்ப உயிர் கொடுக்கறார்.
அப்படி ‘அநிலதி³ஷ்டம்’ – வாயு பகவானுக்கு ரொம்ப இஷ்டமானவர் ஹனுமார்.

‘பி³ம்ப³-ஜ்வலிதோஷ்ட²ம்’ – கோவைப்பழம் போன்ற சிவந்த உதடுகள் கொண்டவர்.
‘ஏகம் அவலம்பே³’ – அவர் ஒருத்தர்தான். ஹனுமார் மாதிரி இன்னொருத்தர் கிடையாது.

புத்திர்-பலம் யசோ தைர்யம் நிர்பயத்வம் அரோகதா |
அஜாட்யம் வாக்-படுத்வம் ச ஹநூமத் ஸ்மரணாத் பவேத் ||

அப்படின்னு ஹனுமாரை ஸ்மரணம் பண்ணா நமக்கே புத்தி, பலம், யஶஸ், ‘யஶஸ்’னா புகழ், தைர்யம்,
நிர்பயக்த்வம், அரோகதா. எந்த ஒரு வியாதியும் இல்லாத health. இப்படி எல்லாமே கிடைக்கும்.
ஒண்ணு இருந்தா ஒண்ணு இருக்காது. புத்தி இருந்தா ரொம்ப நோஞ்சானா இருப்பான் .
பலசாலியா இருந்தா அசடா இருப்பான். இப்படி இல்லாமல் எல்லாம் தன்னிடத்தில் இருந்தவர்,
இதுக்கெல்லாம் மேல பணிவு. இதுக்கெல்லாம் மேல பிரம்மச்சர்யம்.
அப்பேற்பட்ட அந்த ஹனுமாரை நினைச்சா நமக்கும் அதெல்லாம் வரும்.

அப்பேற்பட்ட தன்னிகரில்லாத ‘ஏகம்’. அந்த ஹனுமாரை,
‘அவலம்பே³’ – நான் சரணடைகிறேன். என்னுடைய புகலிடமாக கொண்டிருக்கிறேன்.

————

தூ³ரீக்ருʼத-ஸீதார்தி: ப்ரகடீக்ருʼத-ராமவைப⁴வ-ஸ்பூ²ர்தி: ।
தா³ரித-த³ஶமுக²-கீர்தி: புரதோ மம பா⁴து ஹநுமதோ மூர்தி: ॥ 4॥

‘தூ³ரீக்ருʼத-ஸீதார்தி:’ –
சீதையினுடைய கஷ்டத்தை போக்கினவர். சீதா தேவியை முதல்ல பார்த்த உடனே, அவளுடைய நிலைமையை உணர்ந்து,
அவளை ராமனோட சேர்த்து வைக்கணும்னு தீர்மானம் பண்ணிடறார். அப்புறம் இராவணன் வந்து சீதையை மிரட்டறான்.
கொஞ்சம் கூட சீதை பயப்படலை. அப்புறம் ஹனுமார் ராம கதையை சொல்லிட்டு வந்து நமஸ்காரம் பண்ணி, “நீ யாரம்மா?”

“கிமர்தம் தவ நேத்ராப்யாம் வாரி ஸ்ரவதி ஷோகஜம் |”
ஏன் உன் கண்ணுல இந்த துக்க கண்ணீர் வர்றது? நீ கண் ஜலம் விடறதுனாலயும், பூமியில உன் கால் பாவறதுனாலயும்,
பெருமூச்சு விடறதுனாலேயும், நீ பூமியை சேர்ந்த பெண்தான்! தெய்வப் பெண் இல்லேன்னு நினைக்கறேன்.
நீ ஒரு ராஜகுமாரின்னு உன்னுடைய லக்ஷணங்களை பார்த்தா தெரியறது. நீ தசரதர் நாட்டுப் பெண்,
ராமருடைய மனைவி சீதையா?”ன்னு கேட்கறார்.

அப்புறம் சமாதானம் சொல்லிட்டு கிளம்பும் போது,

“மா ருதோ3 தே3வி ஶோகேந மாபூ4த்தே மனஸோऽப்ரியம் |”

“அம்மா! இனிமே நீங்க அழவே வேண்டாம். மனசுல எந்த அப்ப்ரியமான எண்ணமும் வேண்டாம்.
உங்களுக்கு ராம லக்ஷ்மணா இருக்கா. அக்னி, வாயு போன்ற அவா இருக்கும்போது உங்களுக்கு ஒரு கவலையும் இல்லை.
வெகு விரைவில் இலங்கை வாசலில் பெரும்படையுடன் அவர்கள் வருவார்கள். அதை நீங்க பார்க்கத்தான் போறேள்!”னு
சீதையோட வருத்தத்தை போக்கினார். பின்னாடியே ராமர் வந்து சீதையை மீட்டுண்டு போயிடறார்.

‘ப்ரகடீக்ருʼத-ராமவைப⁴வ-ஸ்பூ²ர்தி:’ –
ராமருடைய வைபவத்தை உலகுக்கு தெரியபடுத்தினவர் ஹனுமார் தான். ஹனுமார், ராமரை உற்சாகப்படுத்தி,
“என் தோள்ல ஏறிண்டு யுத்தம் பண்ணுங்கோ!”ன்னு ராவணனோட யுத்தம் பண்ணும்போது சொல்றார்.
“எப்படி விஷ்ணு பகவான் கருடன் மேல ஏறிண்டு யுத்தம் பண்ணுவாரோ,
அப்படி என் மேல ஏறிண்டு யுத்தம் பண்ணுங்கோ”ன்னு கூட்டிண்டு போறார்.

‘தா³ரித-த³ஶமுக²-கீர்தி:’ –
‘த³ஶமுக²’னான பத்துதலை படைத்த ராவணனுடைய ‘கீர்தி:’ – கீர்த்தியை, புகழை, ‘‘தா³ரித’ – கிழிச்சு போட்டார்.
முதல்ல அவனை பார்த்த உடனே சொல்றார். “ஹே ராவணா! நீ தப்பு பண்றே. இவ்ளோ நாள் ஏதோ புண்யம் பண்ணியிருந்தே!
சுகப்பட்டே! ஆனா பெரிய தப்பு பண்றே. சீதையை ராமர் கிட்ட ஒப்படைச்சு உயிர் பிழைச்சுக்கோ. இல்லேன்னா,

ஸர்வான் லோகான் ஸுஸம்ஹ்ருத்ய ஸபூ4தான் ஸசராசரான் |
புனரேவ ததா2 ஸ்ரஷ்டும் ஶக்தோ ராமோ மஹாயஶா: ||

“14 லோகங்களையும் ஸம்ஹாரம் பண்ணி, ஸ்ருஷ்டி பண்ணகூடியவர் ராமர்! அவர்கிட்ட அபசாரம் பண்ணா,
நீ யார்கிட்ட போய் நின்னாலும் மீள முடியாது!”ன்னு கர்ஜிக்கறார். அவரை “கொல்லுங்கோ”ங்கிறான்.
விபீஷணன் “தூதரை கொல்ல வேண்டாம்”ங்கிறான். “வால்ல நெருப்பு வைங்கோ”ங்கிறான்.
அந்த வால்ல இருக்கிற நெருப்பை வெச்சு இலங்கையையே எரிச்சுட்டு வந்துடறார்.

‘ருத்3ரேண த்ரிபுரம் யதா2 ‘ –
எப்படி ருத்ரன் பகவான் முப்புரங்களை எரித்தாரோ, அப்படி ஹனுமார் இலங்கையை எரிச்சார்!
முதல்ல அசோக வனத்தை அழிச்ச உடனே, இராவணன் 80 ஆயிரம் கிங்கரர்களை அனுப்பறான்.
அவாளை எல்லாரையும் ஒரு பெரிய தூணை எடுத்து சுழட்டி அடிக்கறார்.
அதுலேயிருந்து நெருப்பு வர்றது. எல்லாரையும் வதம் பண்ணிடறார். கர்ஜிக்கறார்.

ஜயத்யதிப3லோ ராமோ லக்ஷ்மணஶ்ச மஹாப3ல: |
ராஜா ஜயதி சுக்3ரீவோ ராக4வேணபி4பாலித: ||
தா3ஸோ(அ)ஹம் கோஸலேந்த்3ரஸ்ய ராமஸ்யாக்லிஷ்ட கர்மண: |
ஹனுமான் ஶத்ருஸைன்யானாம் நிஹந்தா மாருதாத்மஜ: ||
ந ராவண ஸஹஸ்ரம் மே யுத்3தே4 ப்ரதிப3லம் ப4வேத் |
ஶிலாபி4ஸ்து ப்ரஹரத: பாத3பைஶ்ச ஸஹஸ்ரஶ: ||
அர்த3யித்வா புரீம் லங்காமபி4வாத்3ய ச மைதி2லீம் |
ஸம்ருத்3தா4ர்தோ க3மிஷ்யாமி மிஷதாம் ஸர்வரக்ஷஸாம் ||–என்று கர்ஜிக்கறார்.

“1௦௦௦ ராவணர்கள் வந்தாலும் என்னை அழிக்க முடியாது! ஒரு ராவணனுக்காக ராமன் அவதாரம்.
ஆன ராம பக்தனான ஹனுமான் நான் 1௦௦௦ ராவணர்களை அழிப்பேன்! யார் என்னை தடுக்கறான்னு பார்க்கறேன்!
சீதையைப் பார்த்துட்டு, உங்க எல்லாரையும் துவம்சம் பண்ணிட்டு நான் கிளம்பப் போறேன்.
என்னை தடுக்க முடியுமான்னு பாருங்கோ ! நான் ராமதூத ஹனுமான்”னு கர்ஜிக்கறார்.
அப்பேற்பட்ட ஹனுமார் யுத்தத்தின் போதும் ராவணனை அழ விடறார். அவர் விட்ட குத்துல இராவணன் மயங்கி விழுந்துடறான்.
அப்பேற்பட்ட பராக்ரமம். இராவணனுடைய புகழை ஒண்ணும் இல்லாம பண்ணவர் ஹனுமார்.

‘புரதோ மம பா⁴து ஹநுமதோ மூர்தி:’ –
“அப்பேற்பட்ட ஹனுமார் என் முன்னால் காட்சி கொடுக்கட்டும்!”னு ஆச்சார்யாள் பிரார்த்தனை பண்றார்.
அப்படி பிரார்த்தனை பண்ண உடனே, அவருக்கு ஹனுமாருடைய தர்சனம் கிடைக்கறது.

ஸமர்த்த ராமதாசர், “ஸ்ரீ ராம ஜய ராம ஜய ஜய ராம”ன்னு 13 கோடி தரம் ஜபிச்சு ராம தரிசனம் பண்ணாரோ,
எப்படி, 96 கோடி “ராம நாமா” ஜபிச்சு தியாகராஜ ஸ்வாமிகள், ஹனுமாரையும், ராம லக்ஷ்மண சீதா தேவியை தரிசனம் பண்ணாரோ,
அந்த மாதிரி ஆச்சார்யாள் இந்த ஸ்லோகத்தை சொல்லி ஹனுமத் தரிசனம் பண்ணார்.

அப்பேற்பட்ட ஸ்லோகம்.
தூ³ரீக்ருʼத-ஸீதார்தி: ப்ரகடீக்ருʼத-ராமவைப⁴வ-ஸ்பூ²ர்தி: ।
தா³ரித-த³ஶமுக²-கீர்தி: புரதோ மம பா⁴து ஹநுமதோ மூர்தி: ॥ 4॥

—————–

வாநர-நிகராத்⁴யக்ஷம் தா³நவகுல-குமுத³-ரவிகர-ஸத்³ருʼக்ஷம் ।
தீ³ந-ஜநாவந-தீ³க்ஷம் பவந தப: பாகபுஞ்ஜமத்³ராக்ஷம் ॥ 5॥

‘வாநர-நிகராத்⁴யக்ஷம்’ –
வானர கூட்டத்தில் சிறந்த தலைவர்! ஜாம்பவான், ஹனுமாரை உற்சாகப் படுத்தும் போது,
“ஹே ஹனுமான்! நீ ராமருக்கும், லக்ஷ்மணனுக்கும், சுக்ரீவனுக்கும் சமமான பராக்ரமம் படைத்தவன்!”னு சொல்றார்.
ஹுனுமார் சீதையை பார்த்துட்டு அசோக வனத்தை அழித்த போது, இராவணன், யுத்தத்துக்கு அனுப்பிச்சுண்டே இருக்கான்.
80 ஆயிரம் கிங்கரர்களை அனுப்பறான். ஜம்புமாலியை அனுப்பறான். ஒவ்வொருத்தரா அனுப்பிச்சு, ஒருத்தரும் திரும்ப வரலை.
சேனாதிபதிகளை அனுப்பறான். அவாள்கிட்ட சொல்றான். “நான் வாலியை பார்த்திருக்கேன். சுக்ரீவன், நளன், நீலன்,
ஜம்பவான்லாம் பார்த்திருக்கேன். ஆனா இப்படிப்பட்ட ஒரு தேஜஸ், பலம் நான் பார்த்ததே இல்லே!”ன்னு ராவணனே சொல்றான்.
அக்ஷயகுமாரன்னு மண்டோதரி பிள்ளையை அனுப்பறான். அவனையும் ஹனுமார் வதம் பண்ணிடறார்.

இந்திரஜித் வந்து பிரம்மாஸ்திரம் போட்ட உடனே, “சரி. இராவணனை பார்க்கறதுக்காகத்தானே இந்த அசோகவனத்தையே அழிச்சோம்.
இப்ப இவாளே கூட்டிண்டு போறா!”ன்னு நேரா ராவணனை பார்க்கப் போறார். வானரக் கூட்டத்தின் தலைவர்.
இலங்கையை எரிச்சபோது, ராக்ஷஸர்களுடைய கர்வமே அவாகிட்ட சொத்து இருக்குன்னு தான். எல்லாம் போயிடறது.
அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம். உயிரை காப்பாதிண்டா போறும்னு ஓடறா. அவா அப்போ சொல்றா. அவா மூலமா வால்மீகி ஹனுமார்
“தெய்வங்களுக்கு எல்லாம் மேலான தெய்வம்” ங்கிறதை வேற விதமா சொல்றார்.

வஜ்ரீ மஹேந்த்3ரஸ்த்ரித3ஶேஶ்வரோ வா
ஸாக்ஷாத்3யமோ வா வருணோ (அ)னிலோ வா |
ருத்3ரோ(அ)க்3னிரர்கோ த4னத3ஶ்ச ஸோமோ
ந வானரோ(அ)யம் ஸ்வயமேவ கால: ||

இது சாதாரண வானரமா தெரியலை! ‘வஜ்ரீ’ – வஜ்ரத்தை வெச்சிண்டிருக்கிற இந்திரனா.
சாக்ஷாத் எமனா? வருணனா? வாயுவா? ருத்ர பகவானா? அக்னியா? குபேரனா? சாதாரண சோமனா?
அஷ்டதிக் பாலருக்கும் மேலான தெய்வம்”ங்கிறார்.

கிம் ப்3ரஹ்மண: ஸர்வபிதாமஹஸ்ய ஸர்வஸ்ய தா4துஶ்சதுரானனஸ்ய |
இஹாக3தோ வானரரூபதா4ரீ ரக்ஷோபஸம்ஹாரகர: ப்ரகோப: ||

“பிரம்மாதான் ராக்ஷதர்கள் மேல இருக்கிற கோவத்துனால இந்த உருவம் எடுத்துண்டு வந்துட்டாரா?”

கிம் வைஷ்ணவம் வா கபிரூபமேத்ய ரக்ஷோ வினாஶாய பரம் சுதேஜ: |
அனந்தமவ்யக்தமசிந்த்யமேகம் ஸ்வமாயயா ஸாம்ப்ரதமாக3தம் வா ||

விஷ்ணு பகவான்தான் தன்னுடைய மாயைனால, இப்படி ஒரு ரூபம் எடுத்துண்டு வந்து நம்மளை எல்லாம் வதம் பண்றாரா?
“மும்மூர்த்திகளுக்கும் நிகரான தெய்வம் ஹனுமார்!”ங்கிறதை காவியத்துல சொல்லும்போது,
இப்படி மத்தவா மூலமாதான் சொல்லணும்னு வால்மீகி சொல்றார்.
அப்படி வானரர்களுக்கு மட்டும் இல்ல. தெய்வங்களுக்கெல்லாம் நிகரான தெய்வம் ஹனுமார்!

‘தா³நவகுல-குமுத³-ரவிகர-ஸத்³ருʼக்ஷம்’ –
சில பாடங்கள்ல, ‘ஸத்³ருʼஶம்’னு போடறா. ‘ஸத்³ருʼக்ஷம்’மும் உண்டு.

வலக்ஷஶ்ரீர்ருʼக்ஷாதி3பஶிஶு ஸத்3ரு’க்ஷைஸ்தவ நகை2:
ஜிக்4ரு’க்ஷுர்த3க்ஷத்வம் ஸரஸிருஹ பி4க்ஷுத்வகரணே |
க்ஷணான்மே காமாக்ஷி க்ஷபிதப4வஸங்க்ஷோப4க3ரிமா
வசோவைசக்ஷன்யம் சரணயுக3லீ பக்ஷ்மலயதாத் ||57||என்று ஒரு மூக கவி பாதாரவிந்த ஸ்லோகம் இருக்கு!

‘ஸத்³ருʼக்ஷம்’ங்கிற வார்த்தையை use பண்றார்.
இங்க ‘பாகபுஞ்ஜமத்³ராக்ஷம்’ங்கிறதுக்கு, ‘ஸத்³ருʼக்ஷம்’னு ஆச்சார்யாள் use பண்ணியிருக்கார். அதுதான் correct.
‘தா³நவகுல’ – ராக்ஷஸ குலம் என்ற ‘குமுத³’ – அல்லி மலருக்கு, ’ரவிகர ஸத்³ருʼக்ஷம்’ – சூரியனை போன்றவர்.
அல்லி ராத்திரி ஆனா மலரும். சூரியன் வந்தா வாடி போயிடும். ராக்ஷச கூட்டத்தை வாடச் செய்பவர் ஹனுமார்.
ராம, ராவண பிரதம யுத்தம். அதுக்கு முன்னாடி இராவணன், ‘ப்ரஹஸ்தன்’ வதம் ஆன உடனே, பெரிய எதிரியா தெரியறான்,
நானே யுத்தத்துக்கு வரேன்னு வரான். வந்த இடத்துல ஹனுமார் எதிர்ல வரார்.
ராவணன் சொல்றான், “தெரியும் தெரியும்! நான் உன்னை பார்த்திருக்கேன். நீ ஒரு குத்து விடு.
உன் பலம் என்னன்னு பார்த்துண்டு உன்னோட யுத்தம் பண்றேன்”ங்கறான் இராவணன்.
ஹனுமார் சொல்றார், “அக்ஷ வதம் பண்ணதுலேயே என் பலம் உனக்கு தெரியலையா!”ங்கறார்.
உடனே அவனுக்கு ரோஷம் ஆயிடறது. ஹனுமாரை இராவணன் ஒரு குத்து விடறான்.
ஹனுமார் ஒரு நிமிஷம் ஆடிடறார். அப்புறம்“இந்தா!”ன்னு ஹனுமார் ஒரு குத்து விடறார்.
அவன் அப்படியே தேர் தட்டுல கலங்கி போய் உட்கார்ந்துடறான்.
இராவணன் எழுந்துண்டு சொல்றான், “ஹே ஹனுமான்! நீ ரொம்ப பலசாலி”ன்னு சொல்றான்.

அப்ப ஹனுமார் சொல்றார், “நான் ஒருத்தனை குத்தி, அவன் உயிரோட இருந்துண்டு என்னை பார்த்து
பலசாலின்னு சொல்றதாவது! எனக்கு அவமானம்”ங்கிறார்.
உடனே இராவணனுக்கு திரும்பி ரோஷம் வந்துடறது. அவன் ஹனுமாரை திரும்ப குத்து விடறான்.
இந்த வாட்டி ஹனுமார் தளர்ந்து உட்கார்ந்துடறார்.
அப்புறம் நீலன் வரார். இராவணன் நீலனோட யுத்தம் பண்ணப் போயிடறான். நீலன் நிறைய மாயை பண்றான்.
அப்புறம் லக்ஷ்மணனோட யுத்தம் பண்றான். அப்போ லக்ஷ்மணனை இராவணன் வீழ்த்திடறான்.
லக்ஷ்மணனை தூக்கிண்டு போகப் பாக்கறான். மேரு மந்த்ரமலை எல்லாம் தூக்கின இராவணனால,
லக்ஷ்மண பகவானை தூக்க முடியலை. ஏன்னா, அவர் விஷ்ணு அம்சம்.
லக்ஷ்மணனை தூக்கப் பார்க்கும்போது, ஹனுமார் வந்து ராவணனைப் பார்த்து,
“ஒரு குத்து பாக்கியிருக்கு! இந்த வாங்கிக்கோ”ன்னு குத்து விடறார். அவன் ரத்தம் கக்கிண்டு மயங்கி விழுந்துடறான்.
ஹனுமார் லக்ஷ்மணனை தூக்கறார். பக்தர்ங்கிறதால அவரால சுலபமா தூக்க முடியறது!
லக்ஷ்மணனை தூக்கிண்டு வந்து ராமர் கிட்ட சேர்த்துடறார்.
ராமர், “அப்போ நானே யுத்தம் பண்றேன்!”னு ராவணனோட யுத்தம் பண்றார்.

ராம ராவண யுத்தம். ஹனுமார் ராமரை தூக்கிண்டிருக்கார். இந்த ராவணனுக்கு ஹனுமார் மேல கோவம்.
அதுனால ஹனுமாரையே அடிக்கறான். ராமர் பார்க்கறார். என்னடா இது! இவ்ளோ அம்பு வர்றது,
நம்ம மேல ஒண்ணுமே படலையேன்னு பார்க்கறார். கால்ல எல்லாம் ரத்தம் வர்றது!
ஹனுமார் மேல அம்பு பட்டு, ரத்தம் தன் கால்கள் மேல பட்ட உடனே,
ராமர்,’ கோபஶ்ய வஶமேயிவான்’ – ராமர் கோபத்தை எடுத்துண்டார்னு வரும்,
‘கர’ வதம் போது! இங்க கோவத்துக்கு வசம் ஆயிட்டார். பக்தனை அடிச்சிட்டானேன்னு!
பட பட படன்னு இராவணன் மேல அம்பு போடறார். அவனோட தேரை உடைக்கறார். சாரதியை கொல்றார்.
குதிரையை வீழ்த்தறார். கொடியை அறுக்கறார். அவன் கையில இருக்கிற வில்லு போயிடுத்து.
தலையில கிரீடம் போயிடுத்து. அடுத்த அம்பு போட்டா ராவணனோட உயிர் போயிடும். அப்படி அவனை அடிக்கறார்.

முதன்முதல்ல ராவணனுக்கு உயிர் பயம் வர்றது! ஆனா ராமர், “நீ பிழைச்சு போ! நீ நன்னா யுத்தம் பண்ணியிருக்க.
ஆனா களைச்சு போயிருக்க. கைல ஆயுதம் இல்லாம இருக்க. உன்னை விட்டுடறேன்.
நீ ஆயுதம் தேர்லாம் சம்பாதிச்சுண்டு திரும்ப யுத்தத்துக்கு வா!”ங்கறார் ராமர்.
இராவணன் ரொம்ப அவமானப்பட்டு, அப்புறம் போய் கும்பகர்ணனை எழுப்பறான். ராம ராவண பிரதம யுத்தம் அது!
அப்பேற்பட்ட வீரம்! ‘தா³நவகுல-குமுத³-ரவிகர-ஸத்³ருʼக்ஷம்’ – ராக்ஷச குலத்தை தவிக்க விட்டவர் ஹனுமார்.

‘தீ³ந-ஜநாவந-தீ³க்ஷம்’ –
இந்த ஹனுமார் தீனர்களை காப்பது என்று தீக்ஷை எடுத்துண்டு இருக்கார்.
ராமர் எப்படி, “தன்னை சரணாகதி பண்ணவாளை காப்பாத்துவேன்!”னு தீக்ஷை வெச்சிண்டிருக்காரோ,
அதே மாதிரி ராம பக்தனான ஹனுமாரும், “தன்னை அடைக்கலம் புகுந்தவர்களைக் காப்பது என்ற தீக்ஷை வெச்சிண்டிருக்கார்!”
அதுதான் நமக்கு பெரிய லாபம். ஹனுமாரை சரண் புகுந்தா ஹனுமாரும் காப்பாத்துவார், ராமரும் நம்மளை காப்பாத்துவார்!

‘பவந தப: பாகபுஞ்ஜமத்³ராக்ஷம்’ –
‘பவந’ன்னா வாயு பகவான். அவர் பண்ண தபஸ் எல்லாம் சேர்ந்து ஒரு ஒளி உருவம் எடுத்தது.
அதுதான் ஹனுமார். அந்த ஹனுமாரை ‘அத்³ராக்ஷம்’ – ‘நான் கண்டேன்!’னு சொல்றார்.

போன ஸ்லோகத்துல ஆச்சார்யாள், ‘புரதோ மம பா⁴து ஹநுமதோ மூர்தி:’ –
“என் முன்னாடி ஹனுமார் தரிசனம் கொடுக்கட்டும்!”னு சொன்னார்.
“இங்க ஹனுமாரை கண்டேன்!”ங்கிறார்.
அதுனால இந்த ஸ்லோகத்தை சொன்னா ஹனுமார் தர்சனம் கிடைக்கும்!

——–

ஏதத்-பவந-ஸுதஸ்ய ஸ்தோத்ரம் ய: பட²தி பஞ்சரத்நாக்²யம் ।
சிரமிஹ-நிகி²லாந் போ⁴கா³ந் பு⁴ங்க்த்வா ஶ்ரீராம-ப⁴க்தி-பா⁴க்³-ப⁴வதி ॥ 6॥

‘ஏதத்-பவந-ஸுதஸ்ய ஸ்தோத்ரம்’ –
இந்த வாயு குமாரனான ஹனுமார் மேல பண்ண இந்த ஸ்தோத்திரத்தை,

‘ய: பட²தி பஞ்சரத்நாக்²யம்’ –
ஹனுமத் பஞ்சரத்னம் என்ற பேர் கொண்ட இந்த ஸ்தோத்திரத்தை எவனொருவன் படிக்கிறானோ,

‘சிரம் இஹ-நிகி²லாந் போ⁴கா³ந் பு⁴ங்க்த்வா’ –
வெகு காலம் இந்த உலகத்தில் மூன்று போகங்களையும் அனுபவித்து,

‘ஶ்ரீராம-ப⁴க்தி-பா⁴க்³-ப⁴வதி’ –
ஸ்ரீராமரிடத்தில் மாறாத பக்தியை அடைவான்! ஹனுமாரை தியானம் பண்ணா,
ஹனுமார் போகங்களை கொடுத்தாக் கூட ஹனுமாரை தியானம் பண்ண powerனாலேயே நமக்கு ராம பக்தி வராதா?
அப்பேற்பட்ட ராமபக்தர் அவர்!

அவரை பார்க்கும் போது எத்தனையோ வாய்ப்புகள் இருந்தாலும், எல்லாம் முடிஞ்சு புஷ்பக விமானத்துல திரும்ப வந்துண்டிருக்கா!
பரத் வாஜர் ஆஸ்ரமத்தை பார்த்த உடனே ராமர் இறங்கறார், பரத் வாஜரை நமஸ்காரம் பண்ணலாம்னு.
பரத்வாஜர், “நீ இங்க ஒருநாள் இருந்து சாப்பிடு. விருந்து தரேன்”ங்கறார்.
“உனக்கென்ன வரம் வேணும்?”ங்கிறார்.
ராமர் சொல்றார், “இங்கேயிருந்து அயோத்தி வரைக்கும் எல்லா மரங்களையும்
தேன் சொட்டும் கனிகள் எப்போதும் இருக்கணும்!”ங்கிறார். இது அந்த வானராள் எல்லாம் சாப்பிடறதுக்காக!
பரத்வாஜரும், “ஆஹா!”ங்கிறார். ராமர் ஹனுமாரை கூப்பிட்டு, “நீ போய் பரதன்கிட்ட நான் வருவேன்னு சொல்லு.
என்னை எதிர்பார்த்திண்டிருப்பான். பரத்வாஜர் என்னை தங்க சொல்லியிருக்கார்.
நான் நாளைக்கு வரேன்னு பரதன்கிட்ட சொல்லு”ங்கிறார்.

ஹனுமார் ஒருநாளும் விருந்துக்கு ஆசைப்படறவர் கிடையாது. ராம காரியம் தான் அவருக்கு விருந்து!
ஓடிப் போறார் ஹனுமார். அப்படி ஹனுமார் எந்த சுகத்தையும் ஆசைபடாதவர்.
சுக்ரீவன் தெற்கு திக்குல வானரர்களை அனுப்பும்போது, எல்லாரையும் பார்த்து சொல்றான்.
நாலா திக்குல போறவாளையும் பார்த்து, “யார் போய் சீதா தேவியை பார்த்து, திரும்ப என்கிட்ட வந்து,
‘த்ருஷ்டா சீதா!’ன்னு சொல்றாளோ அவாளுக்கு எனக்கு துல்யமான வைபவங்கள் எல்லாம் கொடுப்பேன்.
எல்லா போகங்களும் அவா ராஜா மாதிரி அனுபவிக்கலாம். அவா என்ன தப்பு பண்ணியிருந்தாலும் மன்னிசுடுவேன்!”னு சொல்றார்.
ஆனா யார் பார்த்துட்டு வந்தா? ஹனுமார்தான் பார்த்துட்டு வந்தார். ஹனுமார் எந்த போகத்தையும் விரும்பாதவர்.
அவர் எந்த தப்புமே பண்ணாதவர்.

ஸ்வாமிகள் சொல்வார், “புராணங்கள் எல்லாம் பலஸ்ருதி கொடுத்திருக்கும். போகங்கள் கிடைக்கும்.
தப்புகள் எல்லாம் பகவான் மன்னிப்பார்னு! ஆனா நாம உத்தம பக்தி பண்ணினோமானால், எந்த போகங்களையும் விரும்பாமல்,
எந்த தப்பும் பண்ணாமல், பகவத் பஜனம் பண்ணா, எப்படி ஹனுமாருக்கு சீதா தேவியுடைய தர்சனம் கிடைச்சுதோ,
அந்த மாதிரி அம்பாளுடைய தர்சனம் கிடைக்கும்!

———————

வீதாகி²ல-விஷயேச்ச²ம் ஜாதாநந்தா³ஶ்ர புலகமத்யச்ச²ம் ।
ஸீதாபதி தூ³தாத்³யம் வாதாத்மஜமத்³ய பா⁴வயே ஹ்ருʼத்³யம் ॥ 1॥

தருணாருண முக²-கமலம் கருணா-ரஸபூர-பூரிதாபாங்க³ம் ।
ஸஞ்ஜீவநமாஶாஸே மஞ்ஜுள-மஹிமாநமஞ்ஜநா-பா⁴க்³யம் ॥ 2॥

ஶம்ப³ரவைரி-ஶராதிக³மம்பு³ஜத³ல-விபுல-லோசநோதா³ரம் ।
கம்பு³க³லமநிலதி³ஷ்டம் பி³ம்ப³-ஜ்வலிதோஷ்ட²மேகமவலம்பே³ ॥ 3॥

தூ³ரீக்ருʼத-ஸீதார்தி: ப்ரகடீக்ருʼத-ராமவைப⁴வ-ஸ்பூ²ர்தி: ।
தா³ரித-த³ஶமுக²-கீர்தி: புரதோ மம பா⁴து ஹநுமதோ மூர்தி: ॥ 4॥

வாநர-நிகராத்⁴யக்ஷம் தா³நவகுல-குமுத³-ரவிகர-ஸத்³ருʼக்ஷம் ।
தீ³ந-ஜநாவந-தீ³க்ஷம் பவந தப: பாகபுஞ்ஜமத்³ராக்ஷம் ॥ 5॥

ஏதத்-பவன-ஸுதஸ்ய ஸ்தோத்ரம் ய꞉ பட²தி பஞ்சரத்னாக்²யம் ।
சிரமிஹ-நிகி²லான் போ⁴கா³ன் பு⁴ங்க்த்வா ஶ்ரீராம-ப⁴க்தி-பா⁴க்³-ப⁴வதி ॥ 6॥

ஜானகி காந்த ஸ்மரணம்… ஜய ஜய ராம ராம

——–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஶ்ரீமச்ச²ங்கர-ப⁴க³வத: ஸ்வாமிகள் திரு வடிகளே சரணம்.
ஸ்ரீ திருவடி -ஸ்ரீ பரத ஸ்ரீ சத்ருக்ந ஸ்ரீ இளைய பெருமாள் ஸ்ரீ சீதா பிராட்டி ஸமேத ஸ்ரீ சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு வடிகளே சரணம்

ஸ்ரீ அந்திமோபாய நிஷ்டை–ஸ்ரீ பர வஸ்து பட்டர் பிரான் ஜீயர்

January 18, 2022

திருநக்ஷத்ரம் : கார்த்திகை புனர் பூசம்-பாரத்வாஜ கோத்ரம்
ஆசார்யன்: மணவாள மாமுனிகள்

சிஷ்யர்கள்: கோயில் அப்பன் (தன்னுடைய பூர்வாஸ்ரம திருக்குமாரர்), பரவஸ்து அண்ணன், பர வஸ்து அழகிய மணவாள ஜீயர், அண்ணராய சக்ரவர்த்தி, மேல்நாட்டுத் தோழப்பர் நாயனார் எனப் பலர்.

அருளிச் செயல்கள்:அந்திம உபாய நிஷ்டை -பஞ்சம உபாய நிஷ்டை

திருநாடு அலங்கரித்த திவ்யதேசம் : திருமலை

கோவிந்தர் என்னும் திருநாமத்துடன் மதுரகவி ஐயர் (-ஸ்ரீ ராமானுஜருடைய 74 சிம்ஹாசநபதிகளில் ஒருவர்-அரணபுரத்தாழ்வான் திருவம்சம் என்றும் நடுவில் ஆழ்வான் திருவம்சம் என்றும் கூறுவர்) என்பவருடைய திருக்குமாரராக பர வஸ்து திருவம்சத்தில் அவதரித்தார். இவரை கோவிந்த தாஸரப்பன் என்றும் பட்டநாதன் என்றும் பூர்வாச்ரமத்தில் அழைப்பர். ஸந்யாஸாச்ரமம் ஏற்ற பின் பட்டர்பிரான் ஜீயர் என்றும் பட்டநாத முனி என்றும் அழைக்கப் பெற்றார். மாமுனிகள் அஷ்டதிக்கஜங்களில் ஒருவர் (மாமுனிகள் பிரதான சிஷ்யர்களும் நம் சம்பிரதாயத்தின் முக்கியத் தலைவர்களும் அஷ்டதிக் கஜங்கள் ஆவர்). நம் சம்பிரதாயத்திற்குப் பல கிரந்தங்களை அருளிச்செய்த பிள்ளைலோகம் ஜீயர் இவருடைய திருப்பேரனார் ஆவார்.

மாமுனிகளே இவரைத் தன் கோஷ்டியில் கோவிந்தப்பாதசர் (பட்டர் பிரான் ஜீயர்)  என்று போற்றியிருக்கிறார். ஒருமுறை மாமுனிகள் தன் கோஷ்டியார் குழுமியிருந்த போது பட்டர்பிரான் ஜீயர் ஒருவரே “தேவுமற்றறியேன்” என்ற  மதுரகவியாழ்வார் நிலைக்குத் தகுதியானவர் (நம்மாழ்வரைத் தவிர வேறு தெய்வம் அறியேன்) என்று சாதித்தார். பட்டர்பிரான் ஜீயரை மதுரகவி ஆழ்வார் நம்மாழ்வாருக்கும், தெய்வவாரியாண்டான் ஆளவந்தாருக்கும், வடுக நம்பி எம்பெருமானாருக்கும் போன்று ஒப்பிட்டுக் கூறுவர். எம்பார் எப்படி எம்பெருமானாரை விட்டுப் பிரியாமல் இருந்தாரோ அதேபோல் பட்டர்பிரான் ஜீயர் மாமுனிகளை விட்டுப் பிரியாமல் இருந்தார். இதனால் அனைத்து சாஸ்திரங்களையும் மாமுனிகளிடத்தே நேரடியாய்க் கற்று தொடர்ந்து மாமுனிகளுக்குத் தொண்டு பூண்டார்.

ஸ்ரீ பட்டர்பிரான் ஜீயர் தன் பூர்வாச்ரமத்தில் முப்பது ஆண்டுகளாக மாமுனிகள் போனகம் செய்த சேடத்தை (பெரியோர்கள் சுவீகரித்த பிரசாதத்தின் மீதம்) உண்டார். “மோர் முன்னார் ஐயர்” என்று ப்ரஸித்தமாய் அழைக்கப் பட்டார் (பக்தி ஸ்ரத்தையாலே மோர் பிரசாதத்தை முதலில் ஸ்வீகரிப்பவர்). வழக்கமாக நாம் முதலில் அருரிசி சோறுடன் பருப்பு – குழம்பு முதலியன உண்டு இறுதியாய் மோர் பிரசாதத்தை உண்போம். ஆனால் பட்டர்பிரான் ஜீயர் மாமுனிகளின் இலையில் அமர்ந்து மாமுனிகள் ஸ்வீகரித்த மோர் பிரசாதத்தை சுவை மாறாமலிருக்க மோர் பிசாதத்தை முதலில் தினப்படி உண்பார் (மோர் பிரசாதம் ஆரம்பித்து பருப்பு – குழம்பு முதலியன). இதனாலேயே இவர் “மோர் முன்னார் ஐயர்” என்று என்னும் திருநாமம் கொண்டு வழங்கப் பெற்றார்.

ஸ்ரீ மாமுனிகள் சிஷ்யர்கள் மாமுனிகளை “பட்டநாத முனிவர அபீஷ்ட தைவதம்” எனக் குறிப்பிடுவர்கள். பட்டர்பிரான் ஜீயரின் அன்பைப் பெற்ற ஆசார்யன் என்று பொருள். அதே போல் பட்டர்பிரான் ஜீயரை மாமுனிகளிடம் மதுரகவி நிஷ்டை உடையவராய்க் கொண்டாடுவர்.

வர யோகி பதச்சாயா பரத்வாஜ கோத்ரம் -கோவிந்த பட்டர்

ஸ்ரீ மாமுனிகள் அந்திம காலத்தில் அண்ணராயச் சக்ரவர்த்தி (திருமலை நல்லான் சக்ரவர்த்தி வம்சத்தில் அவததரித்தவர்) திருமலையிலிருந்து ஸ்ரீரங்கத்திற்கு எழுந்தருளினார். பெரியகோயிலை மங்களாசாசனம் செய்யது விட்டு, தன் தாயார் சொன்னதை சிரமேற்கொண்டு, பெரிய ஜீயரை தண்டன் சமர்ப்பிக்க பெரிய ஜீயர் மடத்தை அடைந்தார். தன் குடும்பத்துடன் பட்டர்பிரான் ஜீயர் மூலமாக மாமுனிகளை அணுகுகிறார். பெரிய ஜீயர் தன் திவ்ய பாதத்தை அண்ணராயச் சக்ரவர்த்தி சென்னியில் (தலையில்) பதித்து பரிபூரணமாய் அனுகிரஹிக்கிறார். அண்ணராயச் சக்ரவர்த்தியின் திருமலை கைங்கர்யங்களை புகழ்ந்து, பிறகு பட்டர்பிரான் ஜீயரிடம் அண்ணராயச் சக்ரவர்த்தியை தன் சிஷ்யராக ஏற்கும்படி அழைத்தார். மாமுனிகள் “ராமஸ்ய  தக்ஷிணோ பாஹு” என்று சாதித்து , இராமனுக்கு இலட்சுமணன் வலது கரம் போலே – அடியேனுக்குப் பட்டர்பிரான் ஜீயர் வலது கரம் போலே; எனவே பட்டர்பிரான் ஜீயர் உமக்கு பஞ்ச ஸம்ஸ்காரம் செய்யது வைத்து, சிஷ்யராய் ஏற்று நம் சம்பிரதாயத்தின் ஒரு தலைவராய் உம்மை நியமனம் பண்ணட்டும் – என சாதித்தருளினார். இதை அண்ணராயச் சக்ரவர்த்தி மகிழ்வுடன் ஏற்று பட்டர்பிரான் ஜீயரை தன் ஆசார்யராக ஏற்றுக் கொண்டார்.

ஸ்ரீ மாமுனிகள் திருநாடு அலங்கரித்த பிறகு பட்டர்பிரான் ஜீயர் திருமலையில் இருந்து பல ஜீவாத்மாக்களை உய்வித்தார். அந்திமோபாய நிஷ்டை என்னும் அற்புதமான கிரந்தத்தை அருளி அதில் நம் ஆசார்ய பரம்பரையைக் கொண்டாடி, எப்படி நம் பூர்வாசார்யர்கள் தம் தமது ஆசார்யர்களை ஆச்ரயித்து இருந்தனர் என விவரித்தருளினார். இந்த கிரந்தத்தின் ஆரம்பத்திலேயே அனைத்து சம்பவங்கள் மற்றும் தாத்பர்யங்கள் அனைத்தும் மாமுனிகள் தன் திருவாய் மலர்ந்து அருளியது என்றும் , தான் எழுதும் கரணமாகவே இருப்பதாயும் அறிவித்திருக்கிறார்.

இவர் ஒரு சிறந்த அறிஞர் மற்றும் மாமுனிகளின் அபிமானத்துக்கு மிகவும் பாத்திரமானவர். இவரின் திருவடிகளை வணங்குவதன் மூலம் சிறிதேனும் இவரைப் போல் பாகவத நிஷ்டையைப் பெறுவோம்.

ரம்ய ஜாமாத்ரு யோகீந்த்ர பாதஸேவைக தாரகம் | பட்டநாத முநிம் வந்தே வாத்ஸல்யாதி குணார்ணவம் ||-ஸ்ரீ பரவஸ்து பட்டர்பிரான் தனியன

ஶ்ரீஸௌம்ய ஜாமாத்ரு  முநே: ப்ரஸாத ப்ரபாவ ஸாக்ஷாத் க்ருத ஸர்வ தத்த்வம்|
அஜ்ஞாந தாமிஸ்ர ஸஹஸ்ர பாநும் ஶ்ரீ பட்ட நாதம் முநிமாஶ்ரயாமி||-ஸ்ரீ பரவஸ்து பட்டர்பிரான் தனியன

————-

ஸ்ரீ ஶாஸ்த்ரம் ஸ்ரீ பகவானுக்கு நிரந்தரமாகக் கைங்கர்யம் செய்வதையே
சிறந்த புருஷார்த்தமாக நிர்ணயித்துக் காட்டுகிறது.
இப் பலனான கைங்கர்ய ப்ராப்தியை அடைவதற்குப் பல வழிகளைக் காட்டியிருந்தாலும்
பக்தி மற்றும் ப்ரபத்தி அவற்றில் சிறந்ததாகச் சொல்லப்படுகின்றன.

அவற்றிற்கும் மேலே இப் பலனை அடைய ஒரு ஆசார்யனிடம் முழுவதுமாக அடிமை பூண்டு இருப்பதையே
தலை சிறந்ததாகவும் எளியதாகவும் சொல்லப்படுகிறது.

ஆஶிநோதி ய: ஶாஸ்த்ரார்த்தம் ஆசரே ஸ்தாபயதி அபி
ஸ்வயம் ஆசரதே யஸ்மாத் ஆசார்யஸ் தேந கீர்த்தித:

ஆசார்யன் என்பவன் ஶாஸ்த்ரத்தைத் தான் முழுதுமாக அறிந்து,
தான் அதை அனுஷ்டித்து பிறருக்கும் அதை உபதேசிப்பவன்.

மேலும் நம் பூர்வாசார்யர்கள் ஶாஸ்த்ரத்தை அடிப்படையாகக் கொண்டு ஒரு ஆசார்யன் என்பவன்
ஸ்ரீமந் நாராயணனுக்கே ஆட் பட்டு இருந்து, அவனுடைய பரத்வத்தை முழுமையாக ஏற்றுக் கொண்டு,
ஞான பக்தி வைராக்யங்களில் சிறந்து விளங்கி, உபாயாந்தரங்களிலிருந்தும் (எம்பெருமான் தவிர வேறு உபாயங்கள்),
உபேயாந்தரங்களிலிருந்தும் (எம்பெருமானுக்கும் அவன் அடியாருக்கும் தொண்டு செய்வதைத் தவிர வேறு பலன்கள்),
தேவதாந்தரங்களிலிருந்தும் விலகி இருத்தல் வேண்டும் என்று காட்டினர்.
நம் பூர்வாசார்யர்கள் அனைவரும் இந்த குணங்களில் சிறந்து விளங்கினர்.

பிள்ளை லோகாசார்யர், மணவாள மாமுனிகள், பரவஸ்து பட்டர்பிரான் ஜீயர்
பிள்ளை லோகாசார்யர் ஶாஸ்த்ரத்தின் ஸாரத்தை பூர்வாசார்யர்களின் உபதேசத்தின்படி
ஸ்ரீவசன பூஷண திவ்ய ஶாஸ்த்ரத்தின் மூலம் வெளியிட்டருளினார்.

இதன் முடிவில், “ஆசார்ய அபிமானமே உத்தாரகம்”, அதாவது
சிஷ்யனிடத்தில் ஆசார்யனின் கருணையே சிஷ்யனின் கைங்கர்ய ப்ராப்திக்கு வழி என்பதை அருளியுள்ளார்.

இந்தக் கொள்கையை பரவஸ்து பட்டர்பிரான் ஜீயர் (மணவாள மாமுனிகளின் ப்ரதான சிஷ்யர்களில் ஒருவர்)
தன்னுடைய திவ்ய க்ரந்தமான அந்திம உபாய நிஷ்டையில், பல உதாரணங்களுடன் அழகாக விளக்கியுள்ளார்.

அந்திம = சிறந்த/எல்லையான, உபாய = வழி, நிஷ்டை = நிலைத்து நிற்றல்.
இதன் பொருள் “ஆசார்யனிடத்தில் முழுமையாக அடி பணிந்து இருத்தல்”.
பரவஸ்து பட்டர்பிரான் ஜீயர் தானே, இந்த முழு க்ரந்தமும் மாமுனிகளின் நேரடி உபதேசங்களைக் கொண்டு எழுதப்பட்டது என்றும்
தான் ஆசார்யனின் வார்த்தைகளை ஏடுபடுத்த உதவும் ஓலைச் சுவடி, எழுத்தாணி போல மட்டுமே என்றும் சொல்கிறார்.-அந்திமோபாயநிஷ்டா யா வக்தா ஸௌம்ய வரோ முநி: |
லேககஸ்ய அந்வயோ மேத்ர லேகநீ தால பத்ரவத் |

இது நம்பிள்ளையின் ஈடு கால க்ஷேபங்களை எவ்வாறு வடக்குத் திருவீதிப் பிள்ளை ஏடுபடுத்தினாரோ அதைப் போன்றதே.
ஆக, இந்த நூலாசிரியரின் கருத்துப்படி இவை மாமுனிகளின் நேர் உபதேசங்களே

இந்த ஆசார்ய நிஷ்டை
மதுரகவி ஆழ்வாருக்கு நம்மாழ்வாரிடத்திலும்,
ஆண்டாளுக்குப் பெரியாழ்வாரிடத்திலும்,
தெய்வவாரி ஆண்டானுக்கு ஆளவந்தாரிடத்திலும்,
வடுக நம்பிக்கு எம்பெருமானாரிடத்திலும் இருந்தது.

இந்த நிலைக்குச் சரம பர்வ நிஷ்டை என்றும் ஒரு பெயருண்டு.
பகவானிடம் முழுமையாக அடிமை கொண்டிருத்தல் ப்ரதம் பர்வ நிஷ்டை (முதல் நிலை) என்றும்
ஆசார்யனிடம் அவ்வாறு இருப்பது சரம பர்வ நிஷ்டை (முடிந்த நிலை) என்றும் சொல்லப்படுகிறது.

ஆழ்வார்களும் ஆசார்யர்களும் முறையே திவ்ய ப்ரபந்தங்கள் மூலமாகவும்
தங்கள் ஸ்ரீஸூக்திகள் மூலமாகவும் இதை உபதேசித்துள்ளார்கள்.

பகுதி 1 – ஆசார்ய வைபவமும் சிஷ்ய லக்ஷணமும் – ப்ரமாணங்கள்
பகுதி 2 – ஆசார்ய வைபவம் மதுரகவி ஆழ்வார் மற்றும் பிள்ளை லோகாசார்யர் வார்த்தைகள் மூலம்
பகுதி 3 – சிஷ்ய லக்ஷணம் அருளாளப் பெருமாள் எம்பெருமானார், திருவரங்கத்து அமுதனார், பிள்ளை லோகாசார்யர் மற்றும் மாமுனிகள் வார்த்தைகள் மூலம்
பகுதி 4 – வடுக நம்பி மற்றும் அருளாளாப் பெருமாள் எம்பெருமானாரிடத்தில் எம்பெருமானாரின் கருணை மற்றும் அவர்களின் பூர்ண சரணாகதி
பகுதி 5 – பட்டர், நஞ்சீயர் மற்றும் நம்பிள்ளை – சிறந்த ஆசார்ய-சிஷ்ய ஸம்பந்தம்
பகுதி 6 – பகவானிலும் ஆசார்யனின் மேன்மை
பகுதி 7 – நம்பிள்ளை வைபவம் 1
பகுதி 8 – ஆனி திரு மூலம் – ரம்யஜாமாத்ருவும் (ஸ்ரீரங்கநாதன்) ரம்யஜாமாத்ரு முனியும் (மாமுனிகள்)
பகுதி 9 – நம்பிள்ளை வைபவம் 2
பகுதி 10 – ஸ்ரீ ராமானுஜரின் சிஷ்யர்களின் நிஷ்டை
பகுதி 11 – எம்பார் மற்றும் எம்பெருமானாரின் சிஷ்யர்களின் நிஷ்டை
பகுதி 12 – ஆசார்யன் பகவத் அவதாரம்
பகுதி 13 – ஆசார்ய அபசார விளக்கம்
பகுதி 14 – பாகவத அபசார விளக்கம்
பகுதி 15 – ஆசார்ய/பாகவத ப்ரஸாதத்தின் பெருமை மற்றும் ஸ்ரீபாத தீர்த்தம்
பகுதி 16 – பாகவதர்களின் பெருமை (எந்த ஜன்மத்தில் பிறந்திருந்தாலும்)
பகுதி 17 – பாகவதர்களின் நிர்ஹேதுக க்ருபை
பகுதி 18 – முடிவுரை – ஆசார்ய நிஷ்டையின் பெருமைகள்

——–

அந்திமோபாய நிஷ்டை – 1 – ஆசார்ய வைபவமும் சிஷ்ய லக்ஷணமும் – ப்ரமாணங்கள்

ஶ்ரீஶைலேஶ தயா பாத்ரம் தீ பக்த்யாதி குணார்ணவம் |
யதீந்த்ர ப்ரவணம் வந்தே ரம்ய ஜாமாத்ரம் முநிம் ||

ரம்ய ஜாமாத்ரு யோகீந்த்ர பாத ரேகா மயம் ஸதா|
ததாயத் தாத்ம ஸத்தாதிம் ராமாநுஜ முநிம் பஜே||

பரவஸ்து பட்டர்பிரான்ஜீயர் தனியன்கள்

ரம்ய ஜாமாத்ரு யோகீந்த்ர பாத ஸேவைக தாரகம் |
பட்ட நாத முநிம் வந்தே வாத்ஸல்யாதி குணார்ணவம் ||

காந்தோ பயந்த்ரு யமிந: கருணாம்ருதாப்தே :
காருண்ய ஶீதல கடாக்ஷ ஸுதா நிதாநம் |
தந் நாம மந்த்ர க்ருத ஸர்வ ஹிதோபதேஶம்
ஶ்ரீபட்ட நாத முநி தேஶிகமாஶ்ரயாமி ||

உபநிஷதம்ருதாப்தே ருத்த்ருதாம் ஸார வித்பி :
மதுரகவி முகைஸ் தாம் அந்தி மோபாய நிஷ்டாம் |
உபதிஶதி ஜநேப்யோ யோ தயா பூர்ண த்ருஷ்டி :
பஜ ஹ்ருதய ஸதாத்வம் பட்ட நாதம் முநீந்த்ரம் ||(ஜநேப்யோ-ஜென்மம் அடைந்தார்க்கு எல்லாம் உபதேசம்)

ருசி வர முநீந்த்ரேண ஆதரேணோபதிஷ்டாம்
அக்ருத க்ருதி வரிஷ்டாம் அந்திமோபாயநிஷ்டாம் |
தமிஹ நிகில ஜந்து உத்தாரணோத் யுக்த சித்தம்
ப்ரதி திந மபி வந்தே பட்ட நாதம் முநீந்த்ரம் ||

நமோஸ்து பட்ட நாதாய முநயே முக்தி தாயிநே |
யேநைவம் அந்திமோபாய நிஷ்டா லோகே ப்ரதிஷ்டதா||

தாதொன்றும் தார் புயத்தான் மணவாள முனி தனது
பாதம் பரவும். பட்டர் பிரான் முனி பல்கலையும்
வேதங்களும் சில புராணங்களும் தமிழ் வேதியரும்
ஓதும் பொருள் அந்திமோபாய நிட்டை யுரைத்தவனே!

அந்திமோபாயநிஷ்டா யா வக்தா ஸௌம்ய வரோ முநி: |
லேககஸ்ய அந்வயோ மேத்ர லேகநீதால பத்ரவத் |

எந்தை மணவாள யோகி எனக்குரைத்த
அந்திமோபாய நிட்டையாமதனை – சிந்தை செய்திங்
கெல்லாரும் வாழ எழுதி வைத்தேன் இப் புவியில்
நல்லறி வொன்றில்லாத நான்.

கற்றோர்கள் தாமுகப்பர் கல்வி தன்னிலாசை யுள்ளோர்
பெற்றோமென உகந்து பின்பு கற்பர் – மற்றோர்கள்
மாச்சரியத்தா லிகழில் வந்த தென்னெஞ்சே இகழ்கை
ஆச்சரியமோ தானவர்க்கு.

———–

“ஆப்ரஹ்ம ஸ்தம்ப பர்யந்தா: ஜகதந்தர் வ்யவஸ்திதா: |
ப்ராணிந: கர்ம ஜநித ஸம்ஸார வஶ வர்த்திந:” என்றும்,

“ஏவம் ஸம்ஸ்ருதி சக்ரஸ்தே ப்ராம்யமாணே ஸ்வ கர்மபி:” என்றும் சொல்லுகிறபடியே
இருள் தரு மா ஞாலமான ஸம்ஸாரத்திலே,

(ஏவம் ஸம்ஸ்ருதி சக்ரஸ்தே ப்ராம்யமாணே ஸ்வ கர்ம அபி  ஜீவே துக்க ஆகுலே விஷ்ணோ க்ருபா காப்யுபஜாயதே ஸமீஷிதஸ்து தாஸோயம் கர்ணா வர்ஷ ரூபயா கர்ம ஸாம்யம் பஜேத்யேவ ஜீவோ விஷ்ணு ஸமீஷயா சக்தி பாவஸ் ஸவை ஜீவ முத்தாரயதி ஸம் ஸ்ருதே கர்மணீ ச ஸமே தத்ர தூஷ்ணீம் பாவம் உப கர்யதே –அஹிர் புத்த்ய ஸம்ஹிதை -என்று
ஸம்ஸார சக்ரஸ்தனாய் துக்காகுலனான ஜீவன் விஷயமாக ஸர்வேஸ்வரனுக்கு ஒரு கிருபை பிறக்கும் படியையும்
அந்தக் கிருபை அடியாக உண்டான அவன் கடாக்ஷத்துக்கு விஷயபூதனாயக் கொண்டு இவன் கர்ம ஸாம்யத்தைப் பஜிக்கும் என்னுமத்தையும்
அந்த அநுகிரஹாத் மிகையான சக்தியினுடைய ஸ்வ பாவம் இவனை சம்சாரத்தின் நின்றும் உத்தரிப்பிக்கும் என்னும் இடத்தையும்
கர்ம சாம்யம் என்பதின் கருத்தை ஸங்க்ரஹேண சொல்லிற்று)

இருள் தரு மா ஞாலமான ஸம்ஸாரத்திலே,

“ந அபுக்தம் க்ஷீயதே கர்ம கல்ப கோடி ஶதைரபி” என்றும்,

“யத் ப்ரஹ்ம கல்ப நியுத அநுபவேப்ய நாஶ்யம்” (கூரத்தாழ்வான் -பல கல்பங்களில் அனுபவித்தும் முடிக்க முடியாத கர்மங்ளை அரை விநாடியில் ஸம்பாதிக்கிறோமே)என்றும் சொல்லுகிறபடியே

பிறப்பாம் பொல்லா வருவினை மாய வன் சேற்றள்ளல் பொய்ந் நிலமாகையாலே, தரை கண்டு காலூன்றித்
தரித்து நின்று அடி கண்டறுக்க வொண்ணாதபடி மூடிக் கிடக்கிற கொடு வினைத் தூற்றில் நின்று
பல காலம் வழி திகைத்தலமருகின்ற ஸம்ஸாரி சேதநனுக்கு அஞ்சினான் புகலிடமான
ஆசார்யாபிமாநமே உஜ்ஜீவிக்கைக்கு உசிதோபாயமென்று ஶ்ரீவசந பூஷணாதி திவ்ய ப்ரபந்த முகேந அறுதியிட்டு,

ஸம்ஸாரத்தில் உரு மாய்ந்து “அஸந்நேவ” என்கிறபடியே நஷ்ட கல்பனாய் கிடந்த இவனை
“ஸந்தமேநம்” என்னும்படி நிர்ஹேதுகமாக அங்கீகரித்தருளி, த்யாஜ்ய உபாதேயங்களைத் தெளிய அறிவித்து
ரக்ஷித்தருளின மஹோபகாரகனான ஸ்வாசார்யன் திருவடிகளை உபாயமாகப் பற்றி,

(அஸந்நேவ ஸ பவதி । அஸத்ப்ரஹ்மேதி வேத சேத் । அஸ்தி ப்ரஹ்மேதி சேத்வேத । ஸந்தமேந ந்ததோ விதுரிதி । தஸ்யைஷ ஏவ ஶாரீர ஆத்மா । ய: பூர்வஸ்ய । அதாதோ(அ)நுப்ரஶ்நா: । )

“தேவுமற்றறியேன்” என்றிருக்கும் அந்திமோபாயநிஷ்டனுக்கு ஸ்வாசார்யனுடைய திவ்ய நாம வைபவத்தையும்,
அவருடைய ஜ்ஞாந ப்ரேமாதி குண வைலக்ஷண்யத்தையும் அவருடைய திரு வவதார வைபவத்தையும்-
அவர் எழுந்தருளி யிருக்கும் திவ்ய தேஶ வைபவத்தையும், அவர் திருவடிகளே உபாயமென்னும் அவ் வழியாலே
உபேயமான தத் விக்ரஹ வைலக்ஷண்யத்தையும், அவர் திருமேனியை ஸர்வ தேஶ ஸர்வ கால ஸர்வ அவஸ்தைகளிலும்
த்ரிவித கரணத்தாலும் ஒன்றும் தப்பாமல் பேணும் வழியாலே தத்  கைங்கர்ய வைபவத்தையும்,
அந்த கைங்கர்ய த்வாரா அவருக்குண்டான ப்ரீத் யதிஶயத்தாலே தாம் பெறும் பேற்றினுடைய கௌரவத்தையும்
இடைவிடாமல் அநுஸந்தித்து தத் விஷயமாக மங்களாஶாஸநம் பண்ணி வாழுகையே
அநவரத கர்த்தவ்யம் என்னுமத்தையும் இப் ப்ரபந்த முகேந சொல்லுகிறது.

———–

அனந்த பாரம் பஹூ வேதிதவ்யம் அல்பஶ்ச காலோ பஹவஸ்ச விக்நா: |
யத் ஸார பூதம் தது பாஸிதவ்யம் ஹம்ஸோ யதா க்ஷீர மிவாம்பு மிஶ்ரம் ||

அஸாரம் அல்ப ஸாரஞ்ச ஸாரம் ஸார தரம் த்யஜேத் |
பஜேத் ஸார தமம் ஶாஸ்த்ரம் ரத்நாகர இவாம்ருதம் ||

(அஸாரம் –ஐஹிக ஆமுஷ்மிக பலன்களைக் கொடுக்கும் ஸ்ருதி பாகம்
அல்ப ஸாரம் -கைவல்ய பலனைக்கொடுக்கும் ஸ்ருதி பாகம்
ஸாரம் -உபாயாந்தரங்களைச் சொல்லும் ஸ்ருதி பாகம்
ஸார தரம் -அவனே உபாயம் என்று சொல்லும்-ஸ்வார்த்த கைங்கர்யம் ஸ்வ கத ஸ்வீகாரம்- ஸ்ருதி பாகம்
த்யஜேத்
பஜேத்
ஸார தமம் –பரார்த்த கைங்கர்யம் பர கத ஸ்வீகாரம்-அவன் திருவடிகள் ஸ்தானமான ஆச்சார்யர் அபிமானமே உத்தாரகம் -என்று சொல்லும் ஸ்ருதி பாகங்கள்)

தத் கர்ம யந்ந பந்தாய ஸா வித்யா யாவிமுக்தயே |
ஆயாஸாயாபரம் கர்ம வித்யாந்யா ஶில்ப நைபுணம் ||

ஶாஸ்த்ர ஜ்ஞாநம் பஹு க்லேஶம் புத்தேஶ் சலந காரணம் |
உபதேஶாத் தரிம் புத்த்வா விரமேத் ஸர்வ கர்மஸு ||

ஆ   த்யாநம் ஸத்ருஶேகதம் விஸத்ருஶே தேஹே பவத்யாத்மந:
ஸத் புத்தேஸ்ஸ ச ஸங்க மாதபி பவேதௌஷ்ண்யம் யதா பாதஸி |
கோவா ஸங்கதி ஹேதுரேவம் அநயோ: கர்மாத ஶாம்யேத் குத:
தத் ப்ரஹ்மாதி கமாத் ஸ ஸித்யதி மஹாந் கஸ்மாத் ஸதாசார்யத: ||

(ஆ   த்யாநம் ஸத்ருஶே–தியானம் தொடங்கி ப்ரீதி காரித கைங்கர்யங்கள் வரை ஆத்மாவுக்குப் பொருந்திய கர்மாக்கள்
கதம் -எவ்வாறு
விஸத்ருஶே தேஹே பவத்யாத்மந:-ஆத்மாவுக்குப் பொருந்தாத தேஹத்தைப் பற்றிய கர்மங்களில் சேதனன் ஈடுபடுகிறான்
ஸத் புத்தேஸ்ஸ ச ஸங்க மாதபி –ஞானிகளும் கூட அன்றோ -இவ்வாறு அநர்த்தப்படுகிறார்கள் -தேஹ சம்பந்தம் -தொடர்பு காரணம்
பவேதௌஷ்ண்யம் யதா பாதஸி |–நீருக்கும் அக்னியின் தொடர்பால் உஷ்ணம் வருவது போல்
கோவா ஸங்கதி ஹேதுரேவம் அநயோ: கர்மாத ஶாம்யேத் குத:-இதில் இருந்து எவ்வாறு சேதனன் மீள்வான்
தத் ப்ரஹ்மாதி கமாத் ஸ ஸித் யதி மஹாந் கஸ்மாத் ஸதாசார்யத: ||ஆச்சார்யர் உபதேசத்தால் ப்ரஹ்ம ஞானம் பெற்று மீள்கிறான்)

அநாசார்ய உபலப்தாஹி வித்யேயம் நஶ்யதி த்ருவம் |
ஶாஸ்த்ராதிஷு ஸுத்ருஷ்டாபி ஸ அங்கா ஸஹ பலோதயா |
ந ப்ரஸீததிவை வித்யா விநா ஸ துபதேஶத: ||

தைவாதீநம் ஜகத் ஸர்வம் மந்த்ராதீநம் து தைவதம் |
தந் மந்த்ரம் ப்ராஹ்மணாதீநம் தஸ்மாத் ப்ராஹ்மண தைவதம் ||

வ்ருதைவ பவதோ யாதா பூயஸி ஜந்ம ஸந்ததி: |
தஸ்யாம் அந்ய தமம் ஜந்ம ஸஞ்சிந்த்ய ஶரணம் வ்ரஜ ||

பாபிஷ்ட: க்ஷத்ர பந்துஶ்ச புண்டரீகஶ்ச புண்ய க்ருத் |
ஆசார்ய வத்தயா முக்தௌ தஸ்மாத் ஆசார்யவாந் பவேத் ||

ப்ரஹ்மண்யேவ ஸ்திதம் விஶ்வம் ஓங்காரே ப்ரஹ்ம ஸம்ஸ்திதம் |
ஆசார்யாத் ஸ ச ஓங்காரஸ் தஸ்மாத் ஆசார்யவாந் பவேத் ||

ஆசார்யஸ் ஸ ஹரிஸ் ஸாக்ஷாத் சர ரூபீ ந ஸம்ஶய: ||(உலாவும் பெருமாள் ஆச்சார்யர்)

தஸ்மாத் பார்யாத ய: புத்ராஸ்தம் ஏகம் குருமாப்நுயு: ||

ஸாக்ஷாந் நாரயணோ தேவ: க்ருத்வா மர்த்யமயீம் தநும் |
மக்நாந் உத்தரதே லோகாந் காருண்யாச் சாஸ்த்ர பாணிநா ||

தஸ்மாத் பக்திர் குரௌ கார்யா ஸம்ஸார பய பீருணா ||

குருரேவ பரம் ப்ரஹ்ம குருரேவ பரா கதி: |குருரேவ பரா வித்யா குருரேவ பரம் தநம் || குருரேவ பர: காமோ குருரேவ பாராயணம் |யஸ்மாத் தது பதேஷ்டாஸௌ தஸ்மாத் குருதரோ குரு: ||

அர்ச்சநீயஶ்ச பூஜ்யஶ்ச கீர்த்தநீயஶ்ச ஸர்வதா |
த்யாயேஜ் ஜபேந் நமேத் பக்த்யா பஜேதப் யர்ச்சயேந் முதா ||

உபாயோபேய பாவேந தமேவ ஶரணம் வ்ரஜேத் |
இதி ஸர்வேஷு வேதேஷு ஸர்வ ஶாஸ்த்ரேஷு ஸம் மதம் ||

யேந ஸாக்ஷாத் பகவதி ஜ்ஞாந தீப ப்ரதே குரௌ |
மர்த்ய புத்தி: க்ருதா தஸ்ய ஸர்வம் குஞ்ஜர ஶௌசவத் ||

யோ கத்யாத் பகவத் ஞானம் குர்யாத் தர்ம உப ஸேவனம்
க்ருத்ஸ்நாம் வா ப்ருதிவீம் தத்யாந் ந தத் துல்யம் கதஞ்சந ||

(பொன்னுலகு ஆளீரோ
இரண்டு உபய விபூதிகளையும் இரண்டு உபய விபூதி நாதனையும் கொடுத்தாலும் ஸத்ருசம் ஆகாதே)

ஐஹிகாமுஷ்மிகம் ஸர்வம் குரு ரஷ்டாக்ஷர ப்ரத: || இத்யேவம் யே ந மந்யந்தே த்யக்த வ்யாஸ்தே மநீஷிபி: ||

யேநைவ குருணா யஸ்ய ந்யாஸ வித்யா ப்ரதீயதே |
தஸ்ய வைகுண்ட துக்தாப்தி த்வாரகாஸ் ஸர்வ ஏவ ஸ: ||

யத் ஸ்நாதம் குருணா யத்ர தீர்த்தம் நாந்யத் ததோதிகம் |
யச்ச கர்ம ததர்த்தம் தத் விஷ்ணோ ராராதநாத் பரம் ||(ஆளவந்தார் படித் துறையில் நீராடி அனுஷ்டானம்)

பஶுர் மநுஷ்ய: பக்ஷீ வா யே ச வைஷ்ணவ ஸம்ஶ்ரயா: |
தேநைவ தே ப்ரயாஸ் யந்தி தத் விஷ்ணோ: பரமம் பதம் ||

பால மூக ஜடாந்தாஶ்ச பங்கவோ பதி ராஸ்ததா|
ஸதாசார்யேண ஸந்த்ருஷ்டா: ப்ராப்நுவந்தி பராங்கதிம் ||

யம் யம் ஸப்ருஶதி பாணிப்யாம் யம் யம் பஶ்யதி சக்ஷுஷா |
ஸ்தாவராண்யபி முச்யந்தே கிம் புநர் பாந்தவா ஜநா: ||

அந்த அநந்த க்ரஹண வஶகோ யாதி ரங்கேஶயத்வத்
பங்குர் நௌகா குஹர நிஹிதோ நீயதே நாவிகேந |
புங்க்தே போகாந் அவிதி தந்ருபஸ் ஸேவகஸ்யார்ப காதி:
த்வத் ஸம்ப்ராப்தௌ ப்ரபவதி ததா தேஶிகோ மே தயாலு: ||

(குருடன் கண் உள்ளவனைக் கொண்டும்
படகால் நீரைக் கடந்தும்
ராஜ சேவக மக்கள் ராஜாவைப் பார்க்காமல் ஐஸ்வர்யம் அனுபவிப்பது போல்)

ஸித்தம் ஸத் ஸம்ப்ரதாயே ஸ்திரதியமநகம் ஶ்ரோத்ரியம் ப்ரஹ்ம நிஷ்டம்
ஸத்த்வஸ்தம் ஸத்ய வாசம் ஸமய நியதயா ஸாது வ்ருத்த்யா ஸமேதம் |
டம்பா ஸூயாதி முக்தம் ஜித விஷய கணம் தீர்க்க பந்தும் தயாலும்
ஸ்காலித்யே ஶாஸிதாரம் ஸ்வ பர ஹித பரம் தேஶிகம் பூஷ்ணுரீப்ஸேத் ||

சத் ஸம்ப்ரதாயே -நல்ல -சத்துக்கள் -ஸ்ம்ப்ரதாயத்திலே
சித்தம் -சித்தி -நிலை பெற்றவனும் -ப்ரஸித்தி வாய்ந்தவனும்
ஸ்திர தியம் -உறுதி கொண்ட மனப்பான்மை கொண்டவனும்
அநகம் –குற்றம் அற்றவனும்
ஸ்ரோத்ரியம் -வேத வேதாந்தங்களைக் கசடறக் கற்று அறிந்தவனும்
ப்ரஹ்ம நிஷ்டம்-பரமாத்மாவிடம் நிலை பெற்றவனும்
சத்வஸ்தம் -ஸத்வ குணத்தில் இருப்பவனும்
சத்யவாஸம் -பேசியத்தைப் பழுது ஆக்காதவனும்
சமய நியதயா -காலம் தவறாத -காலத்துக்கு ஒத்ததான
சாது வ்ருத்த்யா -நல்ல ஒழுக்கத்தோடே -மதக் கொள்கைக்கு ஏற்ற நல்ல நடத்தை யுடையவனும்
ஸமேதம்-கூடியவனும்
டம்பா ஸூ யாதி முக்தம் -டம்பம் அஸூயை போன்ற கெட்ட குணங்கள் இல்லாதவனும்-ஆதி -பிற ஆத்ம கெட்ட குணங்கள் இல்லாதவனும்
ஜித விஷயி கணம் -ஸப் தாதி விஷயங்களில் செல்லும் இயல்புடைய ஐம் புலன்களையும் தனது வசமாக்கிக் கொண்டவனும்
தீர்க்க பந்தும் -மிகப் பெரிய பந்துவாகவும்
தயாளும்-வருந்துவர் இடம் இரக்கம் கொண்டவனும்
ஸ்காலித்யே சாஸிதாரம் -தவறு நேர்ந்தால் கண்டிப்பவனும்
ஸ்வ பர ஹித பரம் -தனக்கும் பிறருக்கும் நன்மையைத் தேடுபவனும்
ஆகிய இந்த 14 குணங்கள் வாய்ந்தவரை
பூஷ்ணுர் –நல்ல நிலையில் இறுக்கப் போகும் சிஷ்யன்
தேசிகம் –ஆச்சார்யனாக
ஈப்சேத் –பெற விரும்ப வேணும்

ஆச்சார்ய லக்ஷணங்கள் -14-அருளிச் செய்கிறார் இதில் –
ஆஸீ நோதி சாஸ்த்ரார்த்தம் -ஸூ யம் ஆச்ரயதே ஆச்சாரயத் -மூன்றும் -ஞானம் ஞானம் அனுஷ்டானம் வாக் சாதுர்யத்தால் சிஷயரை அப்படியே ஆக்கி –
சேர்ப்பார்களை பஷிகளாக்கி ஞான கர்மங்களை சிறகு என்னும் -கடகர்கள்-
கு ரு –கு -இருட்டை தொலைக்கும் – அம் பொன் அரங்கர்க்கும் ஆவிக்கும் அந்தரந்த சம்பந்தம் காட்டி -தடை காட்டி
உம்பர் தெய்வம் என்னும் வாழ்வுக்கு சேர்ந்த நெறி காட்டும்-
சம்சார நிவர்த்தகமான திரு மந்த்ரத்தை நேராக உபதேசிப்பவரே ஆச்சார்யர் –

1–சித்தம் சத் ஸம்ப்ரதாயே–சத் சம்பிரதாய தத்வ த்ரய அர்த்த பஞ்சக -ஞானம் பெற்று
2–ஸ்திரதியம் -அசைக்க முடியாத –புற சமயிகளால் —
3–அநகம் -குற்றம் இல்லாத -க்யாதி லாப பூஜைக்காக இல்லாமல் தம் பேறாக –
ஏற்ற காலங்கள் எதிர் பொங்க மீது அளிக்கும் –பாலை சொரியும் வள்ளல் பெரும் பசுக்கள் -ஆற்றப் படைத்தான் –
கூரத் தாழ்வான போல்வார் இந்த பசுக்களை -கொண்ட நம் ராமானுஜர் – மகன் -யதிராஜ சம்பத்குமாரார் -செல்ல -செல்வப் பிள்ளை /
தாய்க்கும் தம்பிக்கும் மகனுக்கும் இவருக்கும் இவர் அடி பணிந்தார்க்கும் உண்டே இந்த லக்ஷணங்கள் –
4–ஸ்ரோத்ரியம் ப்ரஹ்ம நிஷ்டம்–இது ஒன்றே நிஷ்டை
5–சத்வஸ்தம் –சத்வ குணத்திலே நிலை நின்று
6–சத்யவாஸம்-உண்மையே பேசி -முன்னோர் மொழிந்த முறை தப்பாமல் கேட்டு -பின்னோர்ந்து –தன நெஞ்சில் தோற்றியதை சொல்லி
இது பூர்வர் சொன்னார் என்று உலகை மயக்குவார்கள் பலர் –
ஆச்சார்யர் சிஷ்யனை தன் ஆச்சார்யனுக்கு சிஷ்யன் -என்ற நினைவால் –
ஆச்சார்யர் திருவடிகளே சரணம் சொல்லி -வெள்ளத்தில் தப்பி -ஆச்சார்யர் தன் திருவடிகளே சரணம் என்று ஆழ்ந்த கதை –
7– சமய நியதயா –அனுஷ்டானம் விடாமல்
8—சாது வ்ருத்த்யா ஸமேதம்
9–டம்பா ஸூ யாதி முக்தம் -டாம்பீகம் அ ஸூ யை இத்யாதிகள் இல்லாமல் – சரீரம் அர்த்தம் பிராணன் அனைத்தையும் சிஷ்யன் சமர்ப்பித்து
சிஷ்யன் ஆச்சார்யர் தேக ரக்ஷணம் -சிஷ்யன் ஆத்ம ரக்ஷணம் ஆச்சார்யர் கடமை /சிஷ்யன் ஆசார்யன் சொத்தை வைத்து தன் தேக ரக்ஷணம்
வாங்கிக் கொள்ள கூடாது -கொடுக்க கூடாது -நினைவுடன் கொடுக்காமல் அவர் சொத்தை திரும்பி கொடுக்கிறோம் -தன்னது என்று அபிமானிக்க கூடாதே
கொள்ளில் மிடியனாம் -கொடுக்கில் கள்ளனாம் –
10–ஜித விஷயி கணம்
11 —தீர்க்க பந்தும்-எற்றைக்கும் ஏழு ஏழு பிறவிக்கும்
12–தயாளும் –கிருபை பொழிந்து- கட்டாயம் தரையில் பாட்டம் மழை பொழிந்தால் போலே பகவத் விஷயம் உபதேசித்து -சஜாதீயர் –
அனுஷ்ட்டித்தும் உபதேசித்தும் காட்டி அருளுவார் -மோக்ஷ பந்த இரண்டும் பகவான் ஹேது -ஆச்சார்யர் மோக்ஷ ஏக ஹேது –
13–ஸ்காலித்யே சாஸிதாரம்–சம்சாரத்தில் திருத்தி பணி கொண்டு
14—ஸ்வ பர ஹித பரம்
தேசிகம் பூஷ்ணுரீப்சேத் –மார்க்கம் திசைதி தேசிகம் -கை காட்டும்

14-லக்ஷணங்கள்
ஆச்சார்ய சம்பந்தம் இருப்பில் ஆத்ம குணங்கள் வந்து சேரும் பகவத் சம்பந்தமும் வரும் –
ஆச்சார்யர் பிரியம் சிஷ்யன் செய்ய வேண்டும் –  சிஷ்யன் ஹிதம் ஆச்சார்யர் பார்க்க வேண்டும் – ஈஸ்வரனை கொண்டு ஆசார்யன் நடத்த கடவன்
பெருமாள் நடுவில் இருந்து ஆச்சார்யருக்கு ஹிதமும் சிஷ்யனுக்கு பிரியமும் -நடத்தி அருளுவான் —

ஸத் சம்பிரதாயத்தில் ஸித்தம் -ஸத் சம்பிரதாயத்தில் ஸ்திர தியம் -திட அத்யவசாயம்

அநகம்–
அகம் என்பது பாவம் துக்கம் வியசனம் -ஆபத்து -அஜாக்கிரதை –காம க்ரோதங்களால் வரும் வியசனம்
இவை அனைத்தையும் விலக்கியவன் அநகம் உள்ளவன்

ப்ரஹ்ம நிஷ்டை -உண்ணும் சோறு பருகும் நீர் தின்னும் வெற்றிலை எல்லாம் கண்ணனே என்று இருக்கும் நிலை

ஸத்யம் பூத ஹிதம் ப்ரோக்தம் -ஸத்யமும் பிரியமும் கலந்த பேச்சு

தர்மஞ்ஞய ஸமயே ப்ரமாணம் –ஆச்சார்யர் அனுஷ்டானத்தையே தழுவி இருத்தலே ஸமய நியதம்

தீர்க்க பந்து -உலகு எல்லாமே உருவாகக் கொண்டவன்
ஸர்வஸ் தரது துர்காணி ஸர்வோ பத்ராணி பஸ்யது-ஸ்ரீ வியாஸர் -அனைவர் துக்கங்களையும் போக்கி ஸர்வ ஸூஹ்ருத்தாக இருக்க வேண்டும்

பயன் அன்றாகிலும் பாங்கு அல்லராகிலும் திருத்திப் பணி கொள்ள வேண்டுமே)

உத்பாதக ப்ரஹ்ம பித்ரோர் கரீயாந் ப்ரஹ்மத: பிதா |
ஸ ஹி வித்யாதஸ்தம் ஜநயதி தச் ஸ்ரேஷ்டம் ஜந்ம |
ஶரீரமேவ மாதா பிதரௌ ஜநயத: |
தேஹ க்ருந் மந்த்ர க்ருந் ந ஸ்யாத் மந்த்ர ஸம்ஸ்கார க்ருத் பர: |
தௌ சேந் ந ஆத்மவிதௌ ஸ்யாதாம் அந்யஸ்த்வ ஆத்மவித் ஆத்ம க்ருத் ||

நாசார்ய: குல ஜாதோபி ஜ்ஞாந பக்த்யாதி வர்ஜித: |
ந வயோ ஜாதி ஹீநஶ்ச ப்ரக்ருஷ்டாநாம் அநாபதி ||

கிமப் யத்ராபி ஜாயந்தே யோகி ந: ஸர்வ யோநிஷு |
ப்ரத்யக்ஷித ஆத்மநாதாநாம் ந ஏஷாம் சிந்த்யம் குலாதிகம் ||

பிந்ந நாவாஶ்ரிதோ ஜந்துர் யதா பாரம் ந கச்சதி |
அந்தஶ்ச அந்த கராலம்பாத் கூபாந்தே பதிதோ யதா ||

ஜ்ஞாந ஹீநம் குரும் ப்ராப்ய குதோ மோக்ஷமவாப்நுயாத் |
ஆசார்யோ வேத ஸம்பந்நோ விஷ்ணு பக்தோ விமத்ஸர: |
மந்த்ரஜ்ஞோ மந்த்ர பக்தஶ்ச ஸதா மந்த்ராஶ்ரயஶ் ஶுசி: ||

ஸத் ஸம்ப்ரதாய ஸம் யுக்தோ ப்ரஹ்ம வித்யா விஶாரத: |
அநந்ய ஸாதநஶ்சைவ ததா அநந்ய ப்ரயோஜந : ||

ப்ராஹ்மணோ வீத ராகஶ்ச க்ரோத லோப விவர்ஜித: |
ஸத் வ்ருத்தஶ் ஶாஸிதா சைவ முமுக்ஷு : பரமார்த்த வித்||

ஏவமாதி குணோபேத ஆசார்யஸ்ஸ உதாஹ்ருத: |
ஆசார்யோபி ததா ஶிஷ்யம் ஸ்நிக்தோ ஹித பரஸ் ஸதா ||

ப்ரபோத்ய போதநீயாநி வ்ருத்தம் ஆசாரயேத் ஸ்வயம் |
உத்தாரயதி ஸம்ஸாராத் ததுபாய ப்லவேந து ||

குரு மூர்த்தி ஸ்திதஸ் ஸாக்ஷாத் பகவாந் புருஷோத்தம: |
த்ரி ரூபோ ஹிதமாசஷ்டே மநுஷ்யாணாம் கலௌ ஹரி: ||குருஶ்ச ஸ்வப்ந த்ருஷ்டஶ்ச பூஜாந்தே ச அர்ச்சகாநநாத் |(தேவப் பெருமாள் ராமானுஜருக்கு ஸ்வப்ன முகமாக யஜ்ஞ மூர்த்தி வாதத்தில்)

ஈஶ்வரஸ்ய வஶஸ் ஸர்வம்– மந்த்ரஸ்ய வஶ ஈஶ்வர: | மந்த்ரோ குரு வஶே நித்யம் -குருரேவே ஈஶ்வரஸ்திதி: ||

ஏஷவை பகவாந் ஸாக்ஷாத் ப்ரதாந புருஷேஶ்வர: ||யோகீஶ்வரைர் விம்ருக்ய அங்க்ரிர் லோகோயம் மந்யதே நரம் ||

(சாஷாத் பகவானே ஆச்சார்யர் -யோகிகளும் தேடும் திருவடி ஸ்தானீயர் ஆச்சார்யர் –
பகவானே இவர் என்று அறியாமல் மனுஷ்ய ரூபம் என்று இகழ்ந்து இழந்தே போகிறார்கள்)

நாராயணாஶ்ரயோ ஜீவஸ் ஸோயம் அஷ்டாக்ஷராஶ்ரய: |
அஷ்டாக்ஷரஸ் ஸதாசார்யே ஸ்திதஸ் தஸ்மாத் குரும் பஜேத் ||

தயா தம ஶமோபேதம் த்ருட பக்தி க்ரியா பரம் |
ஸத்ய வாக் ஶீல ஸம்பந்நமேவ கர்ம ஸு கௌஶலம் ||ஜிதேந்த்ரியம் ஸு ஸந்துஷ்டம் கருணா பூர்ண மாநஸம் |
குர்யால் லக்ஷண ஸம்பந்நம் ஆர்ஜவம் சாரு ஹாஸிநம் |
ஏவங்குணைஶ்ச ஸம் யுக்தம் குருமா வித்யாத் து வைஷ்ணவம் |

ஸஹஸ்ர ஶாகாத் யாயீ ச ஸர்வ யத்நேஷூ தீக்ஷித: |
குலே மஹதி ஜாதோபி ந குருஸ்ஸ்யாத் அவைஷ்ணவ: |
அஜ்ஞாந திமிர அந்தஸ்ய ஜ்ஞாந அஞ்ஜந ஶலாகயா |
சக்ஷுருந்மீலிதம் யேந தஸ்மை ஶ்ரீகுருவே நம: ||

மந்தர: ப்ரக்ருதி ரித்யுக்தோஹ் யர்த்த: ப்ராண இதி ஸ்ம்ருத: |
தஸ்மாந் மந்த்ர ப்ரத ஆசார்யாத் கரீயாந் அர்த்ததோ குரு: ||

(மந்த்ரம் சரீரம் போல்
அவற்றின் அர்த்தங்கள் பிராணன் போல்)

குஶப்த ஸ்த்வந்தகாரஸ் ஸ்யாத் ருஶப்தஸ் தந் நிரோத க: || அந்தகார நிரோதி த்வாத் குருரித் யபி தீயதே ||

ஶிஷ்யம் அஜ்ஞாந ஸம்யுக்தம் ந ஶிக்ஷயதி சேத் குரு: || ஶிஷ்ய அஜ்ஞாந க்ருதம் பாபம் குரோர் பவதி நிஶ்சய: ||

லோபாத்வா யதி வா மோஹாச் சிஷ்யம் ஶாஸ்திநயோ குரு: |
தஸ்மாத் ஸம் ஶ்ருணுதே யஶ்ச ப்ரஸ் யுதௌதாத் உபாவபி ||

ஆஶிநோதி ஹி ஶாஸ்த்ரார்த்தாந் ஆசாரே ஸ்தாபயத்யபி |
ஸ்வயம் ஆசரதே யஸ்து ஆசார்யஸ்ஸோபி தீயதே ||

ரவி ஸந்நிதி மாத்ரேண ஸுர்ய காந்தோ விராஜதே|| குரு ஸந்நிதி மாத்ரேண ஶிஷ்ய ஜ்ஞாநம் ப்ரகாஶேதே ||

யதாஹி வஹ்நி ஸம்பர்க்காந் மலம் த்யஜதி காஞ்சநம் | ததைவ குரு ஸம்பர்க்காத் பாபம் த்யஜதி மாணவ: ||

ஸ்நேஹேந க்ருபயா வாபி மந்த்ரீ மந்த்ரம் ப்ரயச்சதி |
குருர் ஜ்ஞேயஶ்ச ஸம் பூஜ்யோ தாந மாநாதி அபிஸ் ஸதா ||

அநந்ய ஶரணாநாஞ்ச ததா வாந்ந்ய ஸேவிநாம் |
அநந்ய ஸாதநாநாஞ்ச வக்தவ்யம் மந்த்ர முத்தம்ம் ||

ஸம்வத்ஸரம் ததார்த்தம் வா மாஸ த்ரயமதாபி வா |
பரீக்ஷ்ய விவிதோபாயை: க்ருபயா நிஸ் ஸ்ப்ருஹோவதேத் ||

நாதீக்‌ஷிதாய வக்தவ்யம் நாபக்தாய ந மாநிநே |
நாஸ்திகாய க்ருதக் நாய ந ஶ்ரத் தாவிமுகாய ச ||

தேஶகாலாதி நியமம் அரிமித்ராதி ஶோதநம் |
ந்யாஸமுத்ராதி கம் தஸ்ய புரஶ்சரணகம் ந து ||

தேச காலாதி நியமமும் -வேண்டியவன் வேண்டாதவன் என்ற ஆராயவும் -சோதனமும் —ஞாச முத்ரா பிரகாரமும் -தஸ்ய புரஸ் கரனுக்கு -சரணாகதனுக்கு இவை  வேண்டாம்
விஷய நியமம் மட்டுமே உண்டு -வகுத்த ஸ்வாமியிடம் சரணாகதி பண்ண வேண்டும்

ந ஸ்வர: ப்ரணவோங்காநி நாப்யந்யவித யஸ்ததா |
ஸ்த்ரீணாஞ்ச ஶுத்ரஜாதீநாம் மந்த்ர மாத்ரோக்தி ரிஷ்யதே ||

ருஷ்யாதிஞ்ச கர ந்யாஸம் அங்க ந்யாஸஞ்ச வர்ஜயேத் |
ஸ்த்ரீ ஶூத்ராஶ் ச விநீதாஶ்சேந் மந்த்ரம் ப்ரணவ வர்ஜிதம் ||

ந தேஶ காலௌ நாவஸ்தாம் பாத்ர ஶுத்திஞ்ச நை[நே] ச்சதி |
த்வயோபதேஶ கர்த்தாது ஶிஷ்ய தோஷம் ந பஶ்யதி ||

துராசோரோபி ஸர்வாஸீ க்ருதக்நோ நாஸ்திக: புரா |
ஸமாஶ்ரயே தாதி தேவம் ஶ்ரத்தயா ஶரணம் யதி |
நிர் தோஷம் வித்திதம் ஜந்தும் ப்ரபாவாத் பரமாத்மந: ||

மந்த்ர ரத்நம் த்வயம் ந்யாஸம் ப்ரபத்திஶ் ஶரணாகதி: |
லஷ்மீ நாராயணஞ்சேதி ஹிதம் ஸர்வ பல ப்ரதம் |
நாமாநி மந்த்ர ரத்நஸ்ய பர்யாயேண நிபோதத || தஸ்யோச்சாரண மாத்ரேண பரிதுஷ்டோஸ்மி நித்யஶ: ||

ப்ராஹ்மணா: க்ஷத்ரியா வைஶ்யாஸ் ஸ்த்ரியஶ் ஶூத்ராஸ் ததே தரா: |
தஸ்ய அதிகாரிணஸ் ஸர்வே மம பக்தோப வேத்யதி ||

யஸ்து மந்த்ர த்வயம் ஸம்யக்  அத்யாபயதி வைஷ்ணவாந் |
ஆசார்யஸ்ஸ து விஜ்ஞேயோ பவ பந்த விமோசக: ||

ந்ருதேஹம் ஆத்யம் ப்ரதி லப்ய துர் லபம்
ப்லவம் ஸுகல்யம் குரு கர்ண தாரகம் |
மயா அநுகூலேந நபஸ்வ தேரிதம்
புமாந் பவாப்திம் ஸதரேத் ந ஆத்மஹா ||

(என்னுடைய அனுகூலத்தாலே ஆச்சார்யன் மூலம் பிறவிக் கடலைக் கடக்கிறான்
காற்று மூலம் கர்ண தாரகம்-படகோட்டி ஆற்றைக் கடக்க உதவுவது போல்)

ஆசார்யம் மாம் விஜாநீயாந் ந அவமந்யேத கர்ஹிசித் |
ந மர்த்ய புத்த்யா த்ரஶ்யேத ஸர்வ தேவ மயோ குரு: ||

————

அத ஶிஷ்ய லக்ஷணம்: –

மாநுஷ்யம் ப்ராப்ய லோகேஸ்மிந் ந மூகோ பதிரோபி வா |
ந அபக்ரமாதி ஸம்ஸாராத் ஸகலு ப்ரஹ்மஹா பவேத் ||

ஸதாசார்யோபஸத்த்யா ச ஸ அபிலாஷஸ் ததாத்மக: |
தத்வ ஜ்ஞாந நிதிம் ஸத்த்வ நிஷ்டம் ஸத் குண ஸாகரம் |

ஸதாம் கதிம் காருணிகம் தமாசார்யம் யதா விதி |
ப்ரணி பாத நமஸ்கார ப்ரிய வாக்பிஶ்ச தோஷயந் |
தத் ப்ரஸாத வஶேநைவ ததங்கீகார லாபவாந் |
ததுக்த தத்வ யாதாத்ம்ய ஜ்ஞாந அம்ருத ஸுஸம்ப்ருத: ||அர்த்தம் ரஹஸ்ய த்ரிதய கோசரம் லப்த வாநஹம் ||

பரீக்ஷ்ய லோகாந் கர்ம சிதாந் ப்ராஹ்மணோ நிர்வேத மாயாத் நாஸ்த் யக்ருத:
க்ருதேந தத் விஜ்ஞாநார்த்தம் ஸ குருமேவ அபி கச்சேத் ஸமித் பாணிஶ்
ஶ்ரோத்ரியம் ப்ரஹ்ம நிஷ்டம் தஸ்மை ஸ வித்வாந் உபஸந்நாய ஸம்யக் ப்ரஶாந்த சித்தாய
ஶமாந்விதாய யேந அக்ஷரம் புருஷம் வேத ஸத்யம் ப்ரோவாச தாம் ததத்வதோ ப்ரஹ்ம வித்யாம் ||

குரும் ப்ரகாஶயேத் தீமாந் மந்த்ரம் யத்நேந கோபயேத் |
அப்ரகாஶ ப்ரகாஶாப்யாம் க்ஷீயேதே ஸம்பதாயுஷீ ||

ஆசார்யஸ்ய ப்ரஸாதேந மம ஸர்வ மபீப்ஸிதம் |
ப்ராப்நுயாமீதி விஶ்வஸோ யஸ்ய அஸ்தி ஸ ஸுகீ பவேத் ||

ஆத்மநோஹ் யதி நீசஸ்ய யோகி த்யேய பதார்ஹதாம் |
க்ருபயை வோப கர்த்தாரம் ஆசார்யம் ஸம்ஸ்மரேத் ஸதா ||

ந சக்ராத் யங்கநம் நேஜ்யா ந ஜ்ஞாநம் ந விராகதா |
ந மந்த்ர: பாரமை காந்த்யம் தைர் யுக்தோ குரு வஶ்யத: ||

நித்யம் குருமுபாஸீத தத் வச: ஶ்ரவணோத் ஸுக: |
விக்ரஹ ஆலோகந பரஸ் தஸ்யைவ ஆஜ்ஞா ப்ரதீக்ஷக: ||

ப்ரக்ஷால்ய சரணௌ பாத்ரே ப்ரணி பத்யோ பயுஜ்ய ச |
நித்யம் விதி வித் அர்க்யாத்யாத்யை ராத்ருதோப் யர்ச்சயேத்  குரும் ||

ஶ்ருதி: – ஆசார்யவாந் புருஷோ வேத | தேவமிவாசார்ய முபாஸீத |

ஆசார்யாதீநோ பவ | ஆசார்யாதீநஸ் திஷ்டேத் | ஆசார்ய தேவோ பவ |
யதா பகவத் யேவம் வக்த்ரி வ்ருத்தி: | குரு தர்ஶநே சோத்திஷ்டேத் | கச்சந்த மநுவ்ரஜேத் |

ஶரீரம் வஸு விஜ்ஞாநம் வாஸ: கர்ம குணாநஸூந் |
குர்வர்த்தம் தாரயேத் யஸ்து ஸஶிஷ்யோ நேதரஸ் ஸ்ம்ருத: ||

தீர்க்க தண்ட  நமஸ்காரம் ப்ரத்யுத்தாநம் அநத்ரம் |
ஶரீரமர்த்தம் ப்ராணஞ்ச ஸத் குருப்யோ நிவேதயேத் ||

குர்வர்த்தஸ் யாத்மந: பும்ஸ: க்ருதஜ்ஞஸ்ய மஹாத்மந: |
ஸுப்ரஸந்நஸ் ஸதா விஷ்ணுர் ஹ்ருதி தஸ்ய விராஜதே ||

மந்த்ரே தீர்த்தேத் விஜே தேவே தைவஜ்ஞே பேஷஜே குரௌ |
யாத்ருஶீ பாவநா யத்ர ஸித்திர் பவதி தாத்ருஶீ ||

யஸ்ய தேவே பரா பக்திர் யதா தேவே ததா குரௌ |
தஸ்யைதே கதிதா ஹ்யர்த்தா: ப்ரகாஶ்யந்தே மஹாத்மந: |

தர்ஶந ஸ்பர்ஶ வசநைஸ் ஸஞ்சாரேண ச ஸத்தமா: |
பூதம் விதாய புவநம் மாமேஷ்யந்தி குரு ப்ரியா: ||

தேஹ க்ருந் மந்த்ர க்ருந் ந ஸ்யாந் மந்த்ர ஸம்ஸ்கார க்ருத் பர: |
தௌசேந் ந ஆத்ம விதௌ ஸ்யாதாம் அந்யஸ்த் வாத்மவித்  ஆத்ம க்ருத் ||

அவைஷ்ணவோபதிஷ்டம் ஸ்யாத் பூர்வம் மந்த்ர வரம் த்வயம் |
புநஶ்ச விதி நா ஸம்யக் வைஷ்ணவாத் க்ராஹயேத் குரோ: ||

அத ஸ்த்ரீ ஶூத்ர ஸங்கீர்ண நிர் மூல பதிதாதி ஷு |
அநந்யேந அந்ய த்ருஷ்டௌ ச க்ருதாபி ந க்ருதா பவேத் ||

அதோந்யத்ராநுவிதி வத் கர்த்தவ்யா ஶரணாகதி: |
தண்டவத் ப்ரணமேத் பூமா வுபேத்ய குரு மந்வஹம் |
திஶே வாபி நமஸ் குர்யாத் யத்ராஸௌ வஸதி ஸ்வயம் ||

ஆசார்யா யாஹரதேர்த்தாந் ஆத்மாநஞ்ச நிவேத யேத் |
தத்தீநஶ்ச வர்த்தேத ஸாக்ஷாந் நாரயணோ ஹி ஸ: ||

ஸத் புத்திஸ் ஸாது ஸேவீ ஸமுசித சரிதஸ் தத்த்வ போத அபிலாக்‌ஷீ
ஶுஶ்ரூஷுஸ் த்யக்தமாந: ப்ரணி பதந பர: ப்ரஶ்ந கலா ப்ரதீக்ஷ: |

ஶாந்தோ தாந்தோ அநஸுயுஶ் ஶரண முபகதஶ் ஶாஸ்த்ர விஶ்வாஸ ஶாலீ
ஶிஷ்ய: ப்ராப்த: பரீக்ஷாங்க்ருதவித் அபிமதம் தத்த்வத: ஶிக்ஷணீய: ||

யஸ்த்வாசார்ய பராதீநஸ் ஸத் வ்ருத்தௌ ஶாஸ்யதே யதி |
ஶாஸேநே ஸ்திர வ்ருத்திஸ் ஸஶிஷ்யஸ் ஸத் பிருதாஹ்ருத: ||

ஶிஷ்யோ குரு ஸமீபஸ்தோ யத வாக் காய மாநஸ: |
ஶுஶ்ரூஷயா குரோஸ் துஷ்டிம் குர்யாந் நிர்தூத மத்ஸர: ||

ஆஸ்திகோ தர்ம ஶீலஶ்ச ஶீலவாந் வைஷ்ணவஶ் ஶுசி: |
கம்பீரஶ் சதுரோ தீர: ஶிஷ்ய இத்யபி தீயதே ||

ஆஸநம் ஶயநம் யாநம் ததீயம் யச்ச கல்பிதம் |
குரூணாஞ்ச பதா க்ரம்ய நரோ யஸ்த்வத மாம் கதிம் ||

கோஶ்வோஷ்டர யாந ப்ரஸாத ப்ரஸ்தரேஷு கடேஷு ச |
நாஸீத குருணா ஸார்த்தம் ஶிலாப லகநௌஷு ச ||

யஸ்திஷ்டதி குரூணாஞ்ச ஸம க்ஷமக்ருநாஞ்ஜலி: |
ஸம த்ருஷ்ட்யாத தாஜ்ஞாநாத் ஸ ஸத்யோ நிரயம் வ்ரஜேத் ||

ஆஸநம் ஶயநம் யாநம் அபஹாஸஞ்ச ஶௌநக |
அதி ப்ரலாபம் கர்வஞ்ச வர்ஜயேத் குரு ஸந்நிதௌ ||

யத்ருச்சயா ஶ்ருதோ மந்த்ரஶ் சந்நேந அதச் சலேந வா |
பத்ரேக்‌ஷிதோ வா வ்யர்த்தஸ் ஸ்யாத் தம் ஜபேத் யத் யநர்த்த க்ருத்||

மந்த்ரே தத் தேவதாயாஞ்ச ததா மந்த்ர ப்ரதே குரௌ |
த்ரிஷு பக்திஸ் ஸதா கார்யா ஸாது ஹி ப்ரதம ஸாதநம் ||

அதமோ தேவதா பக்தோ மந்த்ர பக்தஸ்து மத்யம: |
உத்தமஸ்து ஸ மே பக்தோ குரு பக்தோத்த மோத்தம: ||

ஶ்ருதி: –

ஆசார்யாந்மா ப்ரமத: | ஆசார்யாய ப்ரியம் தநமாஹ்ருத்ய |
குரோர் குரு தரம் நாஸ்தி குரோர் யந்ந பாவயேத் |
குரோர் வார்த்தாஶ்ச கதயேத் குரோர் நாம ஸதா ஜபேத் |

{குரு பதாம் புஜம் த்யாயேத் குரோர் நாம ஸதா ஜபேத் |
குரோர் வார்த்தாஶ்ச கதயேத் குரோர்ந் யந்ந பாவயேத் – பாட பேதம் }

அர்ச்சநீயஶ்ச வந்த்யஶ்ச கீர்த்தநீயஶ்ச ஸர்வதா |
த்யாயேஜ் ஜபேந் நமேத் பக்த்யா பஜே தப் யர்ச்சயேந் முதா ||

உபாய உபேய பாவேந தமேவ ஶரணம் வ்ரஜேத் |
இதி ஸர்வேஷு வேதேஷு ஸர்வ ஶாஸ்த்ரேஷு ஸம்மதம் ||

ஏவம் த்வய உபதேஷ்டாரம் பாவயேத் புத்திமாந் தியா |
இச்சா ப்ரக்ருத் யநுகுணைர்  உபசாரைஸ் ததோசிதை: ||

பஜந் நவஹிதஶ் சாஸ்ய ஹிதம் ஆவேதயே த்ரஹ: |
குர்வீத பரமாம் பக்திம் குரௌ தத் ப்ரிய வத்ஸல: ||

தத் நிஷ்டா வஸாதீ தந் நாம குண ஹர்ஷித: |
ஶாந்தோ நஸுயு: ஶ்ரத் தாவாந் குர்வர்த்தாத் யாத்ம வ்ருத்திக: ||

ஶுசி: ப்ரிய ஹிதோ தாந்த: ஶிஷ்யஸ்ஸ உபரதஸ் ஸுதீ: |
ந வைராக்யாத் பரோ லாபோ ந போதாத பரம் ஸுகம் |
ந குரோர பரஸ் த்ராதா ந ஸம்ஸாராத் பரோ ரிபு: ||

————

அந்திமோபாய நிஷ்டை – 2 – ஆசார்ய வைபவம்
மதுரகவி ஆழ்வார் மற்றும்
பிள்ளை லோகாசார்யர் வார்த்தைகள் மூலம்

இன்னமும் ஆசார்ய வைபவம் –
ஸதாசார்ய ஸமாஸ்ரயணத்துக்கு முன்புள்ள அநாதி காலமெல்லாம் ஒரு காலராத்ரி,
அன்று தொடங்கி இவனுக்கு நல் விடிவு. ஆனபடி எங்ஙனே என்னில் –
“புண்யாம் போஜவிகாஸாய பாபத்வாந்தக்ஷயாய ச | ஶ்ரீமாநாவிரத்பூமௌ ராமானுஜ திவாகர:” என்றும்,
“ஆதித்ய – ராம – திவாகர – அச்யுத பாநுக்களுக்குப் போகாத உள்ளிருள் நீங்கி, ஶோஷியாத பிறவிக் கடல் வற்றி,
விகஸியாத போதிற் கமல மலர்ந்தது வகுல பூஷணபாஸ்கரோதயத்திலே” என்றும்,
விடியா வெந் நரகான ஸம்ஸாரமாகிற கால ராத்ரிக்கு ஆசார்யன் தோற்றரவை ஸூர்யோதயமாகச் சொல்லுவார்கள்.

“பார்வை செடியார் வினைத் தொகைக்குத் தீ” என்றும்,
“ந ஹ்யம்மயாநி தீர்த்தாநி ந தேவாம்ருச்சி லாமயா: |
தே புநந்த்யுருகாலேந தர்ஶநாதே வ ஸாதவ: “ என்றும்,
“யாந் பஶ்யந்தி மஹாபாகா: க்ருபயா பாதகாநபி |
தே விஶுத்தா: ப்ராயஸ்யந்தி ஶாஶ்வதம் பத மவ்யயம்” என்றும் சொல்லுகிறபடியே

ஆசார்ய கடாக்ஷமானது ஸ்வ விஷயமானவர்களுக்கு வேறொரு ஸாதநாநுஷ்டாநம் பண்ண வேண்டாதபடி
தானே தூறு மண்டிக் கிடக்கிற அவர்களுடைய கர்மத்தை நிஶ் ஶேஷமாகச் சுட்டுப் பொகடுகையாலை
அவர்கள் முன்பு மஹா பாபிகளே யாகிலும் அந்த க்ஷணத்திலே மிகவும் பரிசுத்தராய்
அவ்வளவன்றிக்கே பின்பு ஸுஸ்திரமான பரம பதத்தையும் சென்றடையப் பெறுவார்கள்.

“நாராயணன் திருமால் நாரம் நாமென்னுமுறவு ஆராயில் நெஞ்சே அனாதி யன்றோ
சீராருமாசாரியனாலே யன்றோ நாமுய்ந்ததென்று கூசாமலெப்பொழுதும் கூறு”,

(அம்பொன் அரங்கர்க்கும் ஆவிக்கும் அந்தரங்க
சம்பந்தம் காட்டித் தடை காட்டி -உம்பர்
திவம் என்னும் வாழ்வுக்குச் சேர்ந்த நெறி காட்டும்
அவன் அன்றோ வாசாரியன்–1-)

“உண்ட போதொரு வார்த்தையும் உண்ணாத போதொரு வார்த்தையும் சொல்லுவார் பத்துப் பேருண்டிறே,
அவர்கள் பாசுரங்கொண்டன்று இவ்வர்த்தம் அறுதி யிடுவது, அவர்களைச் சிரித்திருப்பார் ஓருவருண்டிறே,
அவர் பாசுரங்கொண்டே இவ்வர்த்தம் அறுதி யிடக் கடவோம்”.

பரமாசார்யரான நம்மாழ்வார் “அப்பொழுதைக் கப்பொழுதென் னாராவமுதம்” என்றார்.
ஶ்ரீமதுர கவிகள் “தென் குருகூர் நம்பி என்றக்கால் அண்ணிக்கும் அமுதூருமென்னாவுக்கே” என்றார்.

அவர் “மலக்கு நாவுடையேன்” என்றார். இவர் “நாவினால் நவிற்றின்பமெய்தினேன்” என்றார்.

அவர் “அடிக் கீழமர்ந்து புகுந்தேன்” என்றார். இவர் “மேவினேனவன் பொன்னடி மெய்ம்மையே” என்றார்.

அவர் “கண்ணனல்லால் தெய்வமில்லை” என்றார். இவர் “தேவு மற்றறியேன்” என்றார்.

அவர் “பாடி யிளைப்பிலம்” என்றார். இவர் “பாடித் திரிவனே” என்றார்.

அவர் “இங்கே திரிந்தேற்கிழுக்குற்றென்” என்றார்.
இவர் “திரி தந்தாகிலும் தேவ பிரானுடைக் கரிய கோலத் திரு வுருக் காண்பன்” என்றார்.

அவர் “உரிய தொண்டன்” என்றார். இவர் “நம்பிக்காளுரியன்” என்றார்.

அவர் “தாயாய்த் தந்தையாய்” என்றார். இவர். “அன்னையாய் அத்தனாய்” என்றார்.

அவர் “ஆள்கின்றனாழியான்” என்றார். இவர் “என்னை யாண்டிடும் தன்மையான்” என்றார்.

அவர் “கடியனாய்க் கஞ்சனைக் கொன்ற பிரான்” என்றார். இவர் “சடகோபன்” என்றார்.

“யானே என்றனதே என்றிருந்தேன்” என்றார்.
இவர் “நம்பினேன் பிறர் நன் பொருள் தன்னையும் நம்பினேன் மடவாரையும் முன்னெலாம்” என்றார்.

அவர். “எமரேழுபிறப்பும் மா சதிரிது பெற்று” என்றார். இவர் “இன்று தொட்டுமெழுமையுமெம்பிரான்” என்றார்.

அவர் “என்னால் தன்னை இன் தமிழ் பாடிய வீசன்” என்றார். இவர் “நின்று தன் புகழேத்த அருளினான்” என்றார்.

அவர் “ஒட்டுமோ இனி என்னை நெகிழ்க்கவே” என்றார். இவர் “என்றுமென்னை இகழ்விலன் காண்மினே” என்றார்.

அவர் “மயர்வற மதிநலமருளினன்” என்றார். இவர் “எண்டிசையுமறிய வியம்புகேன் ஒண் தமிழ்ச் சடகோபனருளையே” என்றார்.

அவர் “அருளுடையவன்” என்றார். இவர் “அருள் கண்டீரிவ்வுலகினில் மிக்கதே” என்றார்.

அவர் “பேரேனென்று என்னெஞ்சு நிறையப் புகுந்தான்” என்றார். இவர் “நிற்கப் பாடி என்னெஞ்சுள் நிறுத்தினான்” என்றார்.

அவர் “வழுவிலா அடிமை செய்யவேண்டும் நாம்” என்றார். இவர் “ஆட் புக்க காதலடிமைப் பயனன்றே” என்றார்.

அவர் “பொருளல்லாத என்னைப் பொருளாக்கி அடிமை கொண்டாய்” என்றார்.
இவர் “பயனன்றாகிலும் பாங்கல்லராகிலும் செயல் நன்றாகத் திருத்திப் பணி கொள்வான்” என்றார்.

அவர் “ஆராத காதல்” என்றார். இவர் “முயல்கின்றேனுன்தன் மொய்கழற்கன்பையே” என்றார்.

அவர் “கோல மலர்ப்பாவைக்கன்பாகிய என் அன்பேயோ” என்றார். இவர் “தென் குருகூர் நகர் நம்பிக்கன்பனாய்” என்றார்.

அவர் “உலகம் படைத்தான் கவி” என்றார். இவர் “மதுரகவி” என்றார்.

அவர் “உரைக்க வல்லார்க்கு வைகுந்த மாகுந்தம் ஊரெல்லாம்” என்றார்.
இவர் “நம்புவார் பதி வைகுந்தங்காண்மினே” என்று தலைக் கட்டி யருளினார்.

அவர் “பீதக வாடைப்பிரானார் பிரம குருவாகி வந்து” என்றார்.
இவர் “கோலத் திரு மா மகள்கொழுநன் தானே குருவாகித் தன் அருளால்” என்றும், ***

பிள்ளை லோகாசார்யர்,
“தான் ஹிதோபதேஶம் பண்ணும் போது” என்று தொடங்கி,
“நேரே ஆசார்யனென்பது ஸம்ஸார நிவர்த்தகமான பெரிய திரு மந்தரத்தை உபதேஶித்தவனை.
ஸம்ஸார வர்த்தகங்களுமாய், க்ஷுத்ரங்களுமான பகவந் மந்த்ரங்களை உபதேஶித்தவர்களுக்கு ஆசார்யத்வ பூர்த்தி யில்லை.

ஆசார்யன் உஜ்ஜீவநத்திலே ஊன்றிப் போரும். ஆசார்யன் ஶிஷ்யனுடைய ஸ்வரூபத்தைப் பேணக் கடவன்.
ஆசார்யனுக்கு தேஹ ரக்ஷணம் ஸ்வரூப ஹாநி.
ஆசார்யன் தன்னுடைய தேஹ ரக்ஷணம் தன் வஸ்துவைக் கொண்டு பண்ணக் கடவன்.
ஆசார்யன் ஶிஷ்யன் வஸ்துவைக் கொள்ளக் கடவனல்லன். கொள்ளில் மிடியனாம்.
அவன் பூர்ணனாகையாலே கொள்ளான். அவனுக்குப் பூர்த்தியாலே ஸ்வரூபம் ஜீவித்தது.

ஈஶ்வரனைப் பற்றுகை கையைப் பிடித்து கார்யங்கொள்ளுமோபாதி,
ஆசார்யனைப் பற்றுகை காலைப் பிடித்துக் கார்யங்கொள்ளுமோபாதி.
ஈஶ்வரன் தானும் ஆசார்யத்வத்தை ஆசைப் பட்டிருக்கும்.
ஆகையிறே குரு பரம்பரையில் அந்வயித்ததும், ஶ்ரீ கீதையும் -அபய ப்ரதாநமும் அருளிச் செய்ததும்,
ஆசார்யனுக்கு ஸத்ருஶ ப்ரத் யுபகாரம் பண்ணலாவது விபூதி சதுஷ்டயமும் ஈஶ்வர த்வயமும் உண்டாகில்.
ஈஶ்வர ஸம்பந்தம் பந்தமோக்ஷங்களிரண்டுக்கும் பொதுவாயிருக்கும்.
ஆசார்ய ஸம்பந்தம் மோக்ஷத்துக்கே ஹேதுவாயிருக்கும்.

ஆசார்ய ஸம்பந்தம் குலையாதே கிடந்தால் ஜ்ஞாந பக்தி வைராக்யங்களை உண்டாக்கிக் கொள்ளலாம். என்று தொடங்கி,
“இத்தை யொழிய பகவத் ஸம்பந்தம் துர் லபம். ஸ்வாபிமாநத்தாலே ஈஶ்வராபிமாநதைக் குலைத்துக் கொண்ட இவனுக்கு
ஆசார்யாபிமாநமொழிய கதியில்லை என்று பிள்ளை பலகாலும் அருளிச் செய்யக் கேட்டிருக்கையாயிருக்கும்.

ஆசார்யாபிமாநமே உத்தாரகம்”. “நல்ல வென் தோழி” என்று தொடங்கி,
“ஆசார்யாபிமாநந் தான் ப்ரபத்தி போலே உபயாந்தரங்களுக்கு அங்கமுமாய் ஸ்வதந்த்ரமுமாயிருக்கும்.
பக்தியிலஶக்தனுக்கு ப்ரபத்தி, ப்ரபத்தியிலஶக்தனுக்கு இது.
இது ப்ரதமம் ஸ்வரூபத்தைப் பல்லவிதமாக்கும், பின்பு புஷ்பிதமாக்கும், அநந்தரம் பல பர்யந்தமாக்கும்”.(சூரணை -463-)

(பிரதமத்தில் இச் சேதனனுக்கு
பிரணவ யுக்த அநந்யார்ஹ சேஷத்வத்தை சரம பர்வ பர்யந்தமாக உணர்த்தி –
அநாதி காலம் ஸ்வாதந்த்ர்யாமாகிற அழலிலே மண்டி -சரக்கு இழந்து கிடந்த ஸ்வரூபத்தை துளிர்த்து எழும்படியாய்  இருக்கும் –
இப்படி பல்லவிதமான பின்பு -மத்யம பத யுக்த -அநந்ய சரணத்வத்தை -சரம பர்யந்தமாக உணர்த்தி –
பல ஸூசகமான உபாயத்வ அவஸாய யோகத்தாலே ஸ்வரூபத்தை புஷ்பிதமாம் படி யாக்கும் –
இப்படி புஷ்பிதமான அநந்தரம் –
சரம பத உக்த -அநந்ய போகத்வத்தையும் -சரம பர்யந்தமாக உணர்த்தி –
நித்ய கைங்கர்ய யோகத்தாலே -ஸ்வரூபத்தை பல பர்யந்தமாம் படி யாக்கும் -)

“பொறுக்கிறவனுமாசார்யனன்று, பெறுகிறவனுமாசார்யனன்று, நியமிக்கறவனே ஆசார்யன்” என்று
ஆச்சான் பிள்ளை அருளிச் செய்வர்.

விபரீத ஸ்பர்ஶமுடைய ஆசார்யன் முமுக்ஷுவுக்கு த்யாஜ்யன்.
விபரீத ஸ்பர்ஶமுடைய ஆசார்யனாவான் ஸம்ஸாரத்திலே சில மினுக்கங்கள் தோன்றச் சொல்லுமவன்.
ஆசார்யன் ஶிஷ்யனுயிரை நோக்கும்.
ஆசார்யனாவான் ஓட்டையோடத்தோடு ஒழுகலோடமாய்த் தன்னைக் கொண்டு முழுகுமவனன்று,
தன்னைக் கரை யேத்த வல்ல ஜ்ஞாநாதி பரிபூர்ணனாய் இருப்பானொருவனே.
ஆசார்யனுடைய ஜ்ஞாநம் வேண்டா, ஶிஷ்யனுக்கு விக்ரஹமே அமையும்.
கருட த்யாநத்துக்கு விஷம் தீருமாப் போலே ஆசார்யனை த்யாநித்திருக்கவே
ஸம்ஸாரமாகிற விஷம் தீர்த்துக் கொள்ளலாம் என்று அருளிச் செய்வர்கள்.

ஆசார்யன், இவன், அஜ்ஞாநத்தைப் போக்கி ஜ்ஞாநத்தை உண்டாக்கிக் கொடுக்கும் பெரிய மதிப்பனாய்,
அர்த்த காமோபஹதனன்றிக்கே (தர்மம் மோக்ஷம் இவற்றையே பற்றிக் கொண்டு)லோக பரிக்ரஹ முடையனாயிருப்பானொருவன் (ஆசார்யனாவான்).

————

அந்திமோபாய நிஷ்டை – 3 –
சிஷ்ய லக்ஷணம்
அருளாளப் பெருமாள் எம்பெருமானார்,
திருவரங்கத்து அமுதனார்,
பிள்ளை லோகாசார்யர்
மற்றும் மாமுனிகள் வார்த்தைகள் மூலம்

இன்னமும் ஶிஷ்ய லக்ஷணம் :-
“இருள் தரு மா ஞாலத்தே இன்பமுற்று வாழும் தெருள் தரு மா தேசிகனைச் சேர்ந்து”,
“குற்றமின்றிக் குணம் பெருக்கிக் குருக்களுக்கனுகூலராய்”,
“வேறாக ஏத்தி யிருப்பாரை வெல்லுமே மற்றவரைச் சார்த்தியிருப்பார் தவம்”,
“விட்டு சித்தர் தங்கள் தேவரை வல்ல பரிசு வருவிப்பரேல் அது காண்டுமே”,
“வேறொன்றும் நானறியேன்”,
“தேவு மற்றறியேன்”,
“ஶத்ருக்நோ நித்ய ஶத்ருக்ந”,
“வடுக நம்பி ஆழ்வானையும் ஆண்டானையும் இரு கரையரென்பர்”,

“இராமானுசன் சரணாரவிந்தம் நாம் மன்னி வாழ நெஞ்சே சொல்லுவோமவன் நாமங்களே”,
“இராமானுசன் புகழன்றி என் வாய் கொஞ்சிப் பரவகில்லாது என்ன வாழ்வின்று கூடியதே”,
“பேறொன்று மற்றில்லை நின் சரணன்றி அப் பேறளித்தற் காறொன்று மில்லை மற்றச் சரணன்றி”,
“நிகரின்றி நின்ற என்னீசதைக்கு நின்னருளின் கணன்றிப் புகலொன்று மில்லை அருட்கு மஃதே புகல்”,
“இராமானுசனை யடைந்த பின் என் வாக்குரையாது என் மனம் நினையாதினி மற்றொன்றையே”,
“இராமானுசன் நிற்க வேறு நம்மை உய்யக் கொள்ள வல்ல தெய்வமிங்கு யாதென்றுலர்ந்தவமே
ஐயப்படா நிற்பர் வையத்துள்ளோர் நல்லறிவிழந்தே”,
“கையில் கனி யென்னக் கண்ணனைக் காட்டித் தரிலும் உன்றன் மெய்யில் பிறங்கிய சீரன்றி வேண்டிலன் யான்”,

“இருப்பிடம் வைகுந்தம் வேங்கடம் மாலிருஞ்சோலையென்னும் பொருப்பிடம் மாயனுக் கென்பர் நல்லோர்” என்று தொடங்கி
“இன்றவன் வந்திருப்பிடம் என்றனிதயத்துள்ளே தனக்கின்புறவே”,
“நந்தலை மிசையே பொங்கிய கீர்த்தி இராமநுசனடிப் பூ மன்னவே”…

அருளாளப் பெருமாள் எம்பெருமானார்

“மாடும் மனையும் கிளையும் மறை முனிவர் தேடுமுயர் வீடும் செந் நெறியும்
பீடுடைய எட்டெழுத்தும் தந்தவனே என்றிராதாருறவை விட்டிடுகை கண்டீர் விதி”,

“வேதமொரு நான்கு” என்று தொடங்கித்
“தீதில் சரணாகதி தந்த தன்னிறைவன் தாளே அரணாகுமென்னுமது”,

வில்லார் மணி கொழிக்கும்” என்று தொடங்கி, “எந் நாளும் மாலுக்கிடம்”,

“தேனார் கமலம்” என்று தொடங்கி, “யார்க்குமவன் தாளிணையை உன்னுவதே சால வுறும்”.

(மாடும் மனையும் கிளையும் மறை முனிவர்
தேடும் உயர் வீடும் செம் நெறியும் –பீடுடைய
எட்டு எழுத்தும் தந்தவனே என்று இராதார் உறவை
விட்டிடுகை கண்டீர் விதி –30-

வேதம் ஒரு நான்கினுள் பொதிந்த மெய்ப் பொருளும்
கோதில் மனு முதல் நூல் கூறுவதும் தீதில்
சரணாகதி தந்த தன்னிறைவன் தாளே
அரணாகும் என்னும் அது –31-

வில்லார் மணி கொழிக்கும் வேங்கடப் பொற் குன்று முதல்
செல்லார் பொழில் சூழ் திருப்பதிகள் எல்லாம்
மருளாம் இருளோட மத்தகத்துத் தன் தாள்
அருளாலே வைத்த வவர் –36-பாட்டுக் கேட்க்கும் இடமும்– எல்லாம் வகுத்த இடமே

பொருளும் உயிரும் உடம்பும் புகலும்
தெருளும் குணமும் செயலும் -அருள் புரிந்த
தன்னாரியன் பொருட்டாச் சங்கற்பம் செய்பவர் நெஞ்சு
எந்நாளும் மாலுக்கு இடம் –37-

தேனார் கமலத் திரு மா மகள் கொழுநன்
தானே குருவாகித் தன்னருளால் -மானிடர்க்காய்
இந் நிலத்தே தோன்றுதலால் யார்க்கும் அவன் தாளிணையை
உன்னுவதே சால வுறும் –38-)

“ஆசார்ய ப்ரேமம் கனத்திருக்கையும்”,
“ஆசார்யனைக் கண்டால் பசியன் சோற்றைக் கண்டாப் போலேயும்”,

“இப்படி ஸர்வ ப்ரகராத்தாலும் நாஶ ஹேதுவான அஹங்காரத்துக்கும்
அதினுடைய கார்யமான விஷய ப்ராவண்யத்துக்கும் விளை நிலம் தானாகையாலே” என்று தொடங்கி,
“இப்படி இவை இத்தனையும் ஸதாசார்ய ப்ரஸாதத்தாலே வர்த்திக்கும்படி பண்ணிக் கொண்டு போரக் கடவன்.

வக்தவ்யம் ஆசார்ய வைபவமும் ஸ்வ நிகர்ஷமும்.
பரிக்ராஹ்யம் பூர்வாசார்யர்களுடைய வசநமும் அநுஷ்டாநமும்.
ஆசார்ய கைங்கர்யமறிவது ஶாஸ்த்ர முகத்தாலும், ஆசார்ய வசநத்தாலும்.

இவனுடைய ஜ்ஞாநத்துக்கிலக்கு ஆசார்ய குணம்,
அஜ்ஞாநத்துக்கிலக்கு ஆசார்ய தோஷம்,
ஶக்திக்கிலக்கு ஆசார்ய கைங்கர்யம்
அஶக்திக்கிலக்கு நிஷித்த அநுஷ்டாநம்.

ஶிஷ்யனென்பது ஸாத்யாந்தர நிவ்ருத்தியும், பல ஸாதந ஶுஶ்ரூஷையும், ஆர்த்தியும்,
ஆதரமும், அநஸூயையும் உடையவனென்கை”.

“மந்த்ரமும், தேவதையும், பலமும், பல அநுபந்திகளும்” – என்று தொடங்கி –
எல்லாம் ஆசார்யனே என்று நினைக்கக் கடவன்.
‘மாதா பிதா யுவதய:’ என்கிற ஶ்லோகத்திலே இவ் வர்த்தத்தை பரமாசார்யர் அருளிச் செய்தார்.

ஶிஷ்யன் தான் ப்ரியத்தை நடத்தக் கடவன். ஶிஷ்யன் (ஆசார்யனுடைய)உகப்பிலே ஊன்றிப் போரும்.
ஆகையால் ஆசார்யனுடைய ஹர்ஷத்துக்கிலக்காகை யொழிய ரோஷத்துக்கிலக்காகைக்கு அவகாஶமில்லை.(சூர்ணிகை-328)
ஶிஷ்யனுக்கு (நிக்ரஹம் உபாதேயம்)நிக்ரஹ காரணம் த்யாஜ்யம். ஶிஷ்யன் ஆசார்யனுடைய தேஹத்தைப் பேணக் கடவன்.

இவனுக்கு ஶரீராவஸாநத்தளவும் ஆசார்ய விஷயத்தில் “என்னைத் தீ மனங்கெடுத்தாய், மருவித் தொழும் மனமே தந்தாய்”
என்று உபகார ஸ்ம்ருதி நடக்கவேணும்.

பாட்டுக் கேட்குமிடமும் – என்று தொடங்கி – எல்லாம், வகுத்த விடமே என்று நினைக்கக் கடவன்.
இஹ லோக பரலோகங்களிரண்டும் ஆசார்யன் திருவடிகளே என்றும்,
த்ருஷ்ட அத்ருஷ்டங்களிரண்டும் அவனே என்றும் விஶ்வஸித்திருக்கிறதுக்கு மேலில்லை.

ஶிஷ்யன் ஆசார்யனுடைய தேஹ யாத்ரையே தனக்கு ஆத்ம யாத்ரையாக நினைத்திருக்க வேணும்.
ஶிஷ்யன் ஆசார்யனுடைய உடம்பை நோக்கும்,
ஆசார்யனுக்கு என் வஸ்துவை உபகரிக்கிறேனென்றிருக்கும் ஶிஷ்யனுடைய அறிவையும் அழிக்க வடுக்கும்.
ஆசார்யன் பொறைக்கிலக்கான ஶிஷ்யனுக்கு பகவஜ் ஜ்ஞாநம் கைவந்ததென்ன வொண்ணாது.
நியமநத்துக்குப் பாத்ரனாக வேணும். ஆசார்யன் பண்ணின உபகாரத்தை நாள்தோறும் அநுஸந்தித்திலனாகில்
இவனுடைய ஜ்ஞாநாம்ஶமடைய மறந்து அஜ்ஞாநமே மேலிடும்.
ஆசார்யன் திறத்தில் செய்த அடிமையை மறந்தும் –செய்யப் பெறாத அடிமைக்கு இழவும்- பட்டிருப்பான்.
ஶிஷ்யனுக்கு ஆசார்யனுடைய ஸுப்ரஸாதமே அப்ரஸாதமாகவும், அப்ரஸாதமே ஸுப்ரஸாதமாகவும் வேணும்.

(பெருமாளைக் காட்டுவார் -தன்னையே பற்று என்ன மாட்டார்
அவர் ப்ரஸாதம் பெருமாள்-அப்ரஸாதம் தனது திருவடி)

“சக்ஷுஸா தவ ஸௌம்யேந பூதாஸ்மி ரகுநந்தந | பாத மூலம் கமிஷ்யாமி யாநஹம் பர்யசாரிஷம் ||” என்று
பும்ஸாம் த்ருஷ்டி சித்த அபஹாரியான சக்ரவர்த்தி திருமகனார் தன் கண் முன்னே நிற்க
அவனை விட்டுத் தன்னுடைய ஆசார்யர்களுடைய பாத ஸேவை பண்ணப்போகிறேனென்று போனாளிறே
தான் சதிரியாயிருக்கச் செய்தேயும் எல்லைச் சதுரை யாகையாலே ஶ்ரீஶபரி.

(சதுர் பகவத் அனுக்ரஹம் -கடாக்ஷத்தால் புனிதம் ஆனாள்
எல்லை சதுர் -ஆச்சார்ய அபிமானம்
மா சதிர் பெற்று வாழ்வு இனிதாகும்)

ஞானமநுட்டானமிவை நன்றாகவே யுடையனான குருவை யடைந்தக்கால் – என்று தொடங்கி.
திருமாமகள் கொழுநன் தானே வைகுந்தந்தரும். உய்யநினைவுண்டாகில் – என்று தொடங்கி –
கையிலங்கு நெல்லிக்கனி. தன்னாரியனுக்குத் தானடிமை செய்வது – என்று தொடங்கி –
ஆசாரியனைப் பிரிந்திருப்பாரார் மனமே பேசு. ஆசார்யன் சிஷ்யன் – என்று தொடங்கி –
ஆசையுடன் நோக்குமவன். பின்பழகராம் பெருமாள் சீயர் – என்று தொடங்கி –
நம்பிள்ளைக்கான அடிமைகள் செய் அந் நிலையை நன்னெஞ்சே ஊனமற எப்பொழுதுமோர்.
ராமானுஜம் யதி பதிம் ப்ரணமாமி மூர்த்நா – என்று தொடங்கி – தஸ்மாத் அநந்ய ஶரணோ பவதீதி மத்வா என்று நம்முடைய ஜீயர்,
தாம் அந்திமோபாய நிஷ்ட அக்ரேஸரர் என்னுமிடத்தை
ஸ்வ ப்ரபந்தங்களான உபதேச ரத்தின மாலையிலும், யதிராஜ விம்ஶதியிலும் நன்றாக ப்ரகாஶிப்பித்தருளித் தாம் பெற்ற பேறுகளை அநுஸந்தித் தருளுகிற தனியனிலும் –

மதுரகவி சொற்படியே நிலையாகப் பெற்றோம், முன்னவராம் நங்குரவர் மொழிகளுள்ளப் பெற்றோம்,
முழுதும் நமக்கவை பொழுது போக்காகப் பெற்றோம், பின்னை யொன்றுதனில் நெஞ்சு பேராமற் பெற்றோம்,
பிறர் மினுக்கம் பொறாமை யில்லாப் பெருமையும் பெற்றோமே – என்று
தம்முடைய நிஷ்டையை மதித்துக் கொண்டு மிகவும் ஹ்ருஷ்டரானாரிறே

———

அந்திமோபாய நிஷ்டை – 4 –
வடுக நம்பி மற்றும் அருளாளாப் பெருமாள் எம்பெருமானாரிடத்தில்
எம்பெருமானாரின் கருணை
மற்றும் அவர்களின் பூர்ண சரணாகதி

வடுக நம்பி உடையவர் தளிகைக்குப் பாலமுது காய்ச்சா நிற்க, பெரிய திருநாளுக்குப் பெருமாள்
அழகாக உடுத்து முடித்துப் புறப்பட்டருளி மடத்து வாசலிலே எழுந்தருள,
உடையவர் புறப்பட்டு ஸேவித்து, “வடுகா! பெருமாளை ஸேவிக்க வா” என்று அழைத்தருள,
வடுக நம்பி, ‘அடியேன் உம்முடைய பெருமாளை ஸேவிக்க வந்தால்
என்னுடைய பெருமாளுக்குப் பாலமுது பொங்கிப் போங்காணும். ஆகையால் இத்தை விட்டு வரக் கூடாது’ என்று
அருளிச் செய்தார் என்று ப்ரஸித்தமிறே.

“உன்னை யொழிய வொரு தெய்வ மற்றறியா, மன்னு புகழ் சேர் வடுக நம்பி தன்னிலையை,
என்றனுக்கு நீ தந்தெதிராசா எந் நாளும், உன்றனக்கே ஆட் கொள் உகந்து” என்று
வடுக நம்பி நிலையையும் நம்முடைய ஜீயர் ப்ரார்த்தித் தருளினாரிறே.

(1) ப்ரக்ருதிமானாகில் ஸத் வைத்யன் கண் வட்டத்திலே வர்த்திப்பான்;
ஆத்மவானாகில் ஸதாசார்யன் கண் வட்டத்திலே வர்த்திப்பான் என்றும்

(2) நம்பிள்ளை தம்முடைய திருவடிகளுக்கு அந்தரங்கரான வடக்குத் திருவீதிப் பிள்ளையைப் பார்த்துத்
தம்முடைய தேவிகள் நிமித்தமாக ஒரு கைங்கர்யம் நியமித்தருளி,
பின்பு, ‘க்ருஷ்ண ! நாம் நியமித்த கார்யத்துக்கு என்ன நினைத்திருந்தாய்? ‘ என்று கேட்டருள,
‘அடியேனுமொரு மிதுனம் தஞ்சமென்றன்றோ இருப்பேன்’ என்று விண்ணப்பம் செய்ய,
அபிமாந நிஷ்டனாகில் இப்படி இருக்க வேணுமென்று நம்பிள்ளை பிள்ளையை உகந்தருளினார் என்றும்

(அறுகால சிறு வண்டே –ஆச்சார்யர் -தர்ம பத்தினி-திருக் குமாரர் இவ்வாறு ஆறு திருவடிகள்)

(3) பிள்ளை லோகாசார்யர் தம்முடைய திருவடிகளுக்கு அந்தரங்கராயிருப்பாரொரு ஸாத்த்விகையைப் பார்த்தருளி,
‘புழுங்குகிறது; வீசு’ என்ன, அவளும் ‘பிள்ளை! அப்ராக்ருதமான திருமேனியும் புழங்குமோ’ என்ன,
‘புழங்கு காண், “வேர்த்துப் பசித்து வயிறசைந்து” என்று ஓதினாய்’ என்று அவளுடைய ப்ரதிபத்தி குலையாமல்
அதுக்குத் தகுதியாகத் தம்முடைய க்ருபையாலே பிள்ளை அருளிச் செய்தார் என்றும்

இம் மூன்று வார்த்தையும் பல காலும் நம்முடைய ஜீயர் அருளிச் செய்தருளுவர்.
இதில் நடுவில் வார்த்தை (அர்த்த நிஷ்டைகள்)உபதேஶத்தாலே அறிய வேணும்.

(மேலே பல ஐதிக்யங்கள் அருளிச் செய்து ஆச்சார்ய சச் சிஷ்ய லக்ஷணங்களை விளக்கி அருளிச் செய்கிறார்)

(அருளாளப் பெருமாள் எம்பெருமானார்
திருநக்ஷத்ரம்: கார்த்திகை, பரணி
ஆந்திர பிரதேசத்தில் உள்ள -ஸுவர்ணமுகி நதிக்கரையிலுள்ள-விஞ்சிமூரில் பிறந்த இவருடைய இயற்பெயர் யஞ்ய மூர்த்தி என்பதாகும்.
சிஷ்யர்கள்: அநந்தாழ்வான், எச்சான், தொண்டனுர் நம்பி, மருதூர் நம்பி
அருளாளப் பெருமாள் எம்பெருமானார் அருளிச்செய்தவை: ஞான சாரம், ப்ரமேய சாரம்

ராமாநுஜார்ய ஸச்சிஷ்யம் வேத சாஸ்த்ரார்த்த ஸம்பதம்
சதுர்த்தாஸ்ரம ஸம்பந்தம் தேவராஜ முநிம் பஜே-அருளாளப் பெருமாள் எம்பெருமானாரின் தனியன்

எம்பெருமானாரின் ப்ரிய சிஷ்யர், வேதங்கள், சாஸ்த்ரங்களை உட் பொருள் உணர்ந்து கற்றவர். ஸந்யாச்ரமம் மேற்கொண்டவரான ஸ்ரீதேவராஜ முனிவர் என்னும் அருளாளப் பெருமாள் எம்பெருமானாரை அடியேன் சரண் புகுகிறேன்”

திருவாழுந் தென்னரங்கஞ் சிறக்க வந்தோன் வாழியே
தென்னருளாளர் அன்பால் திருந்தினான் வாழியே
தருவாழும் எதிராசன் தாளடைந்தோன் வாழியே
தமிழ் ஞானப் பிரமேய ஸாரம் தமர்க்குரைப்போன் வாழியே
தெருளாரும் மதுரகவி நிலை தெளிந்தோன் வாழியே
தேசு பொலி மடந்தன்னைச் சிதைத்திட்டான் வாழியே
அருளாள மா முனியாம் ஆரியன் தாள் வாழியே
அருள் கார்த்திகைப் பரணியோன் அனைத் தூழி வாழியே!!!-வாழித் திருநாமம்:)

உடையவர் காலத்திலே அருளாளப் பெருமாள் எம்பெருமானார் என்றொருவர்
வித்யையாலும் ஶிஷ்ய ஸம்பத்தாலும் அற மிகுந்தவராய் அநேக ஶாஸ்த்ரங்களை எழுதி க்ரந்தங்களைச் சுமையாகக் கட்டி
எடுப்பித்துக் கொண்டு தம்முடைய வித்யா கர்வமெல்லாம் தோற்றப் பெரிய மதிப்புடன் வந்து
உடையவருடனே பதினேழு நாள் தர்க்கிக்க,
பதினெட்டாம் நாள் அருளாளப் பெருமாளுடைய யுக்தி ப்ரபலமாக
உடையவர் ‘இது இருந்தபடியென்’ என்று எழுந்தருளி யிருக்க,
அவ்வளவில் அருளாளப் பெருமாள் தம்முடைய வெற்றி தோற்ற எழுந்திருந்து அற்றைக்குப் போக,

உடையவரும் மடமே எழுந்தருளித் திருவாராதநம் பண்ணிப் பெருமாளுடனே வெறுத்துப் பெருமாளை
‘இத்தனை காலமும் தேவரீருடைய ஸ்வரூப- ரூப- குண – விபூதிகள் ஸத்யமென்று ப்ரமாணத்தை நடத்திக் கொண்டு போந்தீர்;
இப்போது இவனொரு ம்ருஷாவாதியைக் கொண்டு வந்து என்னுடைய காலத்திலே எல்லா ப்ரமாணங்களையும்
அழித்துப் பொகட்டு லீலை கொண்டாடத் திரு வுள்ளமாகில் அப்படிச் செய்தருளும்’ என்று
அமுது செய்தருளாமல் கண் வளர்ந்தருள,
பெருமாளும் அந்த க்ஷணத்திலே ‘உமக்கு ஸமர்த்தனா யிருப்பானொரு ஶிஷ்யனை உண்டாக்கித் தந்தோம்;
அவனுக்கு இன்ன யுக்தியை நீர் சொல்லும், அவனும் அதுக்குத் தோற்று ஶிஷ்யனாகிறான்’ என்று
உடையவர்க்கு ஸ்வப்நத்திலே அருளிச் செய்தருள,

உடையவரும் திருக் கண்களை விழித்து, ‘இது ஒரு ஸ்வப்நமிருந்தபடி என்’ என்று திருவுள்ளமுகந்து
பெருமாள் ஸ்வப்நத்திலே அருளிச் செய்த யுக்தியைத் தம்முடைய திருவுள்ளத்திலே கொண்டு
“வலி மிக்க சீயமிராமாநுசன் மறை வாதியராம் புலி மிக்கதென்று இப் புவனத்தில் வந்தமை” என்கிறபடியே
மதித்த ஸிம்ஹம் போலே ப்ரஸந்ந கம்பீரராய்க் கொண்டு தர்க்க கோஷ்டிக்கு எழுந்தருள,
அவ் வளவில் அருளாளப் பெருமாள், உடையவர் எழுந்தருளுகிற காம்பீர்யத்தையும் ஸ்வரூபத்தையும் கண்டு
திடுக்கென்று இவர் நேற்று எழுந்தருளுகிற போது இங்கு நின்றும் சோம்பிக் கொண்டெழுந்தருளா நின்றார்,
ஆகையாலே இது மாநுஷமன்று என்று நிஶ்சயித்து, கடுக எழுந்திருந்து எதிரே சென்று உடையவர் திருவடிகளிலே விழ,

உடையவரும் ‘இதுவென்? நீ தர்க்கிக்கலாகாதோ?’ என்ன,
அருளாளப் பெருமாள், உடையவரைப் பார்த்து ‘தேவர்க்கு இப்போது பெரிய பெருமாள் ப்ரத்யக்ஷமான  பின்பு
தேவரீரென்ன, பெரிய பெருமாளென்ன பேதமில்லை என்றறிந்தேன்.
இனி அடியேன் தேவரீருடைய ஸந்நிதியிலே வாய் திறந்தொரு வார்த்தை சொல்ல ப்ராப்தி இல்லை.
ஆகையாலே அடியேனைக் கடுக அங்கீகரித்தருள வேணும் என்று மிகவும் அநுவர்த்திக்க,

உடையவரும் அவ் வளவிலே மிகவும் திருவுள்ளமுகந்து அவரைத் திருத்தி அங்கீகரித்து
விஶேஷ கடாக்ஷம் பண்ணி யருளி, அன்று தொடங்கி அருளாளப் பெருமாளெம்பெருமானார் என்று
தம்முடைய திருநாமம் ப்ரஸாதித்தருளிப் பெரியதொரு மடத்தையும் கொடுத்து,
‘உமக்குப் போராத ஶாஸ்த்ரங்களில்லை, புறம்புண்டான பற்றுக்களடைய ஸவாஸநமாக விட்டு ஶ்ரிய:பதியைப் பற்றும்,
உமக்கு பரக்கச் சொல்லலாவதில்லை. விஶிஷ்டாத்வைதப் பொருள் நீரும் உம்முடைய ஶிஷ்யர்களும் கூடி
வ்யாக்யாநம் பண்ணிக் கொண்டு ஸுகமே இரும்’ என்று திருவுள்ளம் பற்றி யருள,
அவரும் க்ருதார்த்தராய், அதுக்குப் பின்பு அருளாளப் பெருமாளெம்பெருமானாரும் அந்த மடத்திலே சிறிது நாள் எழுந்தருளியிருந்தார்.

அநந்தரம் தேஶாந்தரத்தில் நின்றும் இரண்டு ஶ்ரீவைஷ்ணவர்கள் கோயிலுக்கெழுந்தருளித் திருவீதியிலே
நின்றவர்கள் சிலரைப் பார்த்து ‘எம்பெருமானார் மடம் ஏது’ என்று கேட்க,
அவர்கள் ‘எந்த எம்பெருமானார் மடம்’ என்ன,
புதுக்க எழுந்தருளின ஶ்ரீவைஷ்ணவர்கள் நெஞ்சுளைந்து “நீங்கள் இரண்டு சொல்லுவானென்?
இந்த தர்ஶநத்துக்கு இரண்டு எம்பெருமானாருண்டோ?” என்ன, அவர்கள் ‘உண்டு காணும்;
அருளாளப் பெருமாளெம்பெருமானாரும் எழுந்தருளி இருக்கிறார்; ஆகையாலே சொன்னோம்’ என்ன,
‘நாங்கள் அவரை அறியோம், ஶ்ரீ பாஷ்யகாரரைக் கேட்டோம்’ என்ன,
ஆனால் ‘உடையவர் மடம் இது’ என்று அவர் காட்ட,
அந்த ஶ்ரீவைஷ்ணவர்களும் உடையவர் மடத்திலே சென்று புகுந்தார்கள்.

இந்த ப்ரஸங்கங்களெல்லாத்தையும் யாத்ருச்சிகமாக அருளாளப் பெருமாளெம்பெருமானார் கேட்டு,
‘ஐயோ நாம் உடையவரைப் பிரிந்து ஸ்தலாந்தரத்திலே இருக்கையாலே லோகத்தார் நம்மை
எம்பெருமானார்க்கு எதிராகச் (நிகராகச் )சொன்னார்கள். ஆகையாலே நாம் அநர்த்தப்பட்டு விட்டோம்’ என்று
மிகவும் வ்யாகுலப்பட்டு, அப்போதே தம்முடைய மடத்தையும் இடித்துப் பொகட்டு வந்து
உடையவர் திருவடிகளைக் கட்டிக்  கொண்டு ‘அநாதி காலம் இவ் வாத்மா தேவர் திருவடிகளை அகன்று
அஹம் என்று அநர்த்தப்பட்டு போந்தது போராமல் இப்போதும் அகற்றி விடத் திருவுள்ளமாய் விட்டதோ?’ என்று மிகவும் க்லேஶிக்க,

உடையவர் ‘இதுவென்’ என்ன, அங்குப் பிறந்த வ்ருத்தாந்தங்களை விண்ணப்பம் செய்ய,
உடையவரும் அச் செய்திகளெல்லாவற்றையும் கேட்டருளி, ‘ஆனால் இனி உமக்கு நாம் செய்ய  வேண்டுவதென்’ என்ன,
அருளாளப் பெருமாளெம்பெருமானார் ‘அடியேனை இன்று தொடங்கி நிழலுமடிதாறும்போலே
தேவரீர் திருவடிகளின் கீழே வைத்துக் கொண்டு நித்ய கைங்கர்யம் கொண்டருளவேணும்’ என்று விண்ணப்பம் செய்ய,
உடையவரும் , ‘ஆனால் இங்கே வாரும்’ என்று அவரைத் தம்முடைய ஸந்நிதியிலே ஒரு க்ஷணமும் பிரியாமல்
வைத்துக் கொண்டு ஸகலார்த்தங்களையும் ப்ரஸாதித்தருள அவரும் க்ருதார்த்தராய்த்
தாம் உடையவரொழிய வேறொரு தெய்வம் அறியாதிருந்தவராகையாலே ஸகல வேதாந்த ஸாரங்களையும்
பெண்ணுக்கும் பேதைக்கும் எளியதாக கற்று உஜ்ஜீவிக்கத் தக்கதாக ‘ஞான ஸாரம்’ ‘ப்ரமேய ஸாரம்’ என்கிற
ப்ரபந்தங்களையும் இட்டருளி, அதிலே “சரணாகதி தந்த தன்னிறைவன் தாளே அரணாகும்” என்றும்
“தேனார் கமலத் திரு மா மகள் கொழுநன் தானே குருவாகி’ என்றுமித்யாதிகளாலே
ஸச் சிஷ்யனுக்கு ஸதாசார்யனே பர தேவதை; அவன் திருவடிகளே ரக்ஷகம் என்னுமதும்,
அவன் தான் பகவதவதாரம் என்னுமதும் தோற்ற ஸர்வஜ்ஞரான அருளாளப் பெருமாளெம்பெருமானார்
அருளிச் செய்தாரென்று நம்முடைய ஜீயர் அருளிச் செய்தருளுவர்.

———-

அந்திமோபாய நிஷ்டை – 5 – பட்டர், நஞ்சீயர் மற்றும் நம்பிள்ளை – சிறந்த ஆசார்ய-சிஷ்ய ஸம்பந்தம்

கூரத்தாழ்வான் திரு வயிற்றிலே அவதரித்துப் பெருமாள் புத்ர ஸ்வீகாரம் பண்ணி வளர்த்துக் கொள்ள,
பெருமாள் குமாரராய் வளர்ந்த பட்டர் தர்ஶநம் நிர்வஹிக்கிற காலத்திலே, ஒரு தீர்த்தவாஸி ப்ராஹ்மணன் வந்து
பட்டருடைய கோஷ்டியிலே நின்று ‘பட்டரே! மேல்நாட்டிலே வேதாந்திகள் என்று ஒரு வித்வான் இருக்கிறான்,
அவனுடைய வித்யையும் கோஷ்டியும் உமக்கு துல்யமாயிருக்கும்’ என்ன,
பட்டர் அந்த ப்ராஹ்மணன் சொன்ன வார்த்தைக் கேட்டு ‘ஆமோ, அப்படி ஒரு வித்வாம்ஸர் உண்டோ’ என்ன,
‘உண்டு’ என்று சொல்ல,

அந்த ப்ராஹ்மணன் அங்கு நின்றும் புறப்பட்டு மேல்நாட்டுக்குப் போய், வேதாந்திகள் கோஷ்டியிலே நின்று
‘வேதாந்திகளே! உம்முடைய வித்யைக்கும் கோஷ்டிக்கும் சரியாயிருப்பாரொருவர் இரண்டாற்றுக்கும் நடுவே
பட்டர் என்றொருவர் எழுந்தருளியிருக்கிறார்’ என்ன,

வேதாந்திகள் அந்த ப்ராஹ்மணரைப் பார்த்து ‘ஆமோ, பட்டர் நமக்கொத்த வித்வானோ’ என்ன,
ப்ராஹ்மணன் ‘ஶப்த – தர்க்க – பூர்வோத்தரமீமாம்ஸம் தொடக்கமாக ஸகல ஶாஸ்த்ரங்களும் பட்டருக்குப் போம்’ என்ன,

வேதாந்திகள் அந்த ப்ராஹ்மணன் சொன்னது கேட்டு, ‘இந்த பூமியில் நமக்கெதிரில்லையென்று ஷட்தர்ஶநத்துக்கும்
ஆறு ஆஸநமிட்டு அதின் மேலே உயர இருந்தோம்; பட்டர் நம்மிலும் அதிகர் என்று ப்ராஹ்மணன் சொன்னான்’ என்று
அன்று தொடங்கி வேதாந்திகள் திடுக்கிட்டிருந்தார்.
அவ்வளவில் அந்த ப்ராஹ்மணன் அங்கு நின்றும் புறப்பட்டுக் கோயிலுக்கு வந்து பட்டர் ஸந்நிதியிலே நின்று,
‘பட்டரே! உம்முடைய வைபவமெல்லாம் வேதாந்திகளுக்குச் சொன்னேன்’ என்ன,
‘பட்டருக்கு எந்த ஶாஸ்த்ரம் போம்’ என்று கேட்டார்’ என்ன,
‘ப்ராஹ்மணா, அதுக்கு வேதாந்திகளுக்கு என் சொன்னாய்’ என்ன,

‘ஶப்த தர்க்கங்களும் ஸகல வேதாந்தங்களும் நன்றாக பட்டர்க்குப் போம் என்று வேதாந்திகளுடனே சொன்னேன்’ என்ன,
பட்டர் அந்த ப்ராஹ்மணனைப் பார்த்து ‘தீர்த்த வாஸியாய் தேஶங்களெல்லாம் நடையாடி எல்லாருடையவும்
வித்யா மாஹாத்ம்யங்களையும் அறிந்து நாகரிகனாய் இருக்கிற நீ நமக்குப் போமதெல்லாமறிந்து வேதாந்திகளுடனே சொல்லாமல்
வேத ஶாஸ்த்ரங்களே போமென்று தப்பச் சொன்னாய்’ என்ன,

அந்த ப்ராஹ்மணன் பட்டரைப் பார்த்து ‘இந்த லோகத்தில் நடையாடுகிற வேத ஶாஸ்த்ரங்களொழிய உமக்கு
மற்றெது போம் என்று வேதாந்திகளுடனே சொல்லுவது’ என்ன,
‘கெடுவாய்! பட்டருக்கு திருநெடுந்தாண்டகம் போமென்று வேதாந்திகளுடனே சோல்லப் பெற்றாயில்லையே’ என்று
பட்டர் வெறுத்தருளிச் செய்து, அநந்தரம் பட்டர் ‘வேதாந்திகளை நம்முடைய தர்ஶநத்திலே அந்தர் பூதராம்படி
பண்ணிக் கொள்ள வேணும்’ என்று தம்முடைய திருவுள்ளத்தைக்[தே] கொண்டு பெருமாளை ஸேவித்து,
‘மேல் நாட்டிலே வேதாந்திகளென்று பெரியதொரு வித்வான் இருக்கிறார்.
அவரைத் திருத்தி நம்முடைய தர்ஶந ப்ரவர்த்தகராம்படி பண்ண வேணும் என்று அங்கே விடைக் கொள்ளுகிறேன்,
அவரை நன்றாகத் திருத்தி ராமாநுஜ ஸித்தாந்தத்துக்கு நிர்வாஹகராம்படி திருவுள்ளம் பற்றி யருள வேணும்’ என்று
பட்டர் பெருமாளுக்கு விண்ணப்பம் செய்ய, பெருமாளும் ‘அப்படியே செய்யும்’ என்று திருவுள்ளமுகந்தருளித்
தம்முடைய குமாரரான வாசி தோற்ற, ‘அநேக கீத வாத்யங்களையும் கோயில் பரிகரத்தையும் கூட்டிப் போம்’ என்றுவிட,

பட்டரும் அங்கே எழுந்தருளி வேதாந்திகள் இருக்கிற ஊர் ஆஸந்நமானவாறே பராசர பட்டர் வந்தார், வேதாசார்ய பட்டர் வந்தார்’
என்று திருச்சின்னம் பரிமாறுகை முதலான அநேக வாத்ய கோஷத்துடனே பெருந்திரளாக மஹா ஸம்ப்ரமத்துடனே
ஸர்வாபரண பூஷிதராய்க் கொண்டு எழுந்தருள, அவ்வளவிலே அவ்வூரில் நின்றும் இரண்டு பேர் ப்ராஹ்மணர் எதிரே சென்று,
‘நீர் மஹா ஸம்ப்ரமத்துடனே வந்தீர், நீரார்? நீர் எங்கே எழுந்தருளுகிறீர்? என்று பட்டரைக் கேட்க,
அவர் ‘நாம் பட்டர், வேதாந்திகளுடனே தர்க்கிக்கப் போகிறோம்’ என்ன,
அந்த ப்ராஹ்மணர் சொன்னபடி – ‘நீர் இப்படி ஸம்ப்ரமத்துடனே எழுந்தருளினால் வேதாந்திகளை உமக்குக் காணப் போகாது.
அவர் க்ருஹத்துக்குள்ளே இருந்து விடுவர். அவருடைய ஶிஷ்ய ப்ரஶிஷ்யர்கள் தலை வாசலிலே இருந்து நாலிரண்டு மாஸம்
வந்த வித்வான்களுடனே தர்க்கித்து உள்ளே புகுர வொட்டாதே தள்ளி விடுவார்கள்’ என்ன,

பட்டரும் அந்த ப்ராஹ்மணரைப் பார்த்து ‘ஆனால் நான் நேரே சென்று அவருடைய க்ருஹத்திலே புகுந்து
வேதாந்திகளைக் காணும் விரகேது’ என்று கேட்க, அவர்கள் சொன்னபடி –
‘வேதாந்திகள் தநவானாகையாலே அவாரியாக {=தடையின்றி} ப்ராஹ்மணர்க்கு ஸத்ர போஜநமிடுவர்,
அந்த ப்ராஹ்மணருடனே கலசி அவர்களுடைய வேஷத்தையும் தரித்துக் கொண்டு ஸத்ரத்திலே சென்றால்
வேதாந்திகளைக் கண்களாலே காணலாம். ஆகையாலே உம்முடைய ஸம்ப்ரமங்களெல்லாத்தையும் இங்கே நிறுத்தி
நீர் ஒருவருமே ஸத்ராஶிகளுடனே கூடி எழுந்தருளும்’ என்று சொல்லிப் போனார்கள்.

பட்டரும் அவர்கள் சொன்னது கார்யமாம் என்று திருவுள்ளம் பற்றித் தம்முடைய அனைத்து பரிகரத்தையும் ஓரிடமே நிறுத்தி,
ஸர்வாபரணங்களையும் களைந்து, ஒரு அரசிலைக் கல்லையையும் குத்தி இடுக்கிக் கொண்டு ஒரு காவி வேஷ்டியையும்
தரித்து ஒரு கமண்டலத்தையும் தூக்கி ஸத்ராஶிகளுடனே கூட கார்ப்பண்ய வேஷத்தோடே உள்ளே எழுந்தருள,

வேதாந்திகள் ப்ராஹ்மணர் புஜிக்கிறத்தைப் பார்த்துக் கொண்டு ஒரு மண்டபத்தின் மேலே பெரிய மதிப்போடே இருக்க,
ப்ராஹ்மணரெல்லாரும் ஸத்ர ஶாலையிலே புகுர,
பட்டர் அங்கே எழுந்தருளாமல் வேதாந்திகளை நோக்கி எழுந்தருள,
வேதாந்திகள் ‘பிள்ளாய் இங்கென் வருகிறீர்?’ என்ன, பட்டரும் ‘பிக்ஷைக்கு வருகிறேன்’ என்ன,
‘எல்லாரும் உண்கிற விடத்திலே ஸத்ரத்திலே போகீர் பிக்ஷைக்கு’ என்ன, ‘
எனக்கு சோற்று பிக்ஷை அன்று’ என்ன,

வேதாந்திகள் இவர் ஸத்ராஶியானாலும் கிஞ்சித் வித்வானாக கூடும் என்று விசாரித்து, ‘கா பிக்ஷா?’ என்ன,
பட்டர் ‘தர்க்க பிக்ஷா’ என்ன,
வேதாந்திகள் அத்தைக் கேட்டுத் திடுக்கிட்டு தீர்த்த வாஸி ப்ராஹ்மணன் வந்து முன்னாள் நமக்குச் சொன்ன பட்டரல்லது
நம்முடைய முன் வந்து நின்று கூசாமல் தர்க்க பிக்ஷை என்று கேட்க வல்லார் இந்த லோகத்திலே இல்லை யாகையாலே,
வேஷம் கார்பண்யமாயிருந்ததே யாகிலும் இவர் பட்டராக வேணும் என்று நிஶ்சயித்து
‘நம்மை தர்க்க பிக்ஷை கேட்டார் நீரார், பட்டரோ? என்ன,
அவரும் ‘ஆம்’ என்று கமண்டலத்தை, காவி வேஷ்டியை இவை யெல்லாத்தையும் சுருட்டி எறிந்து எழுந்தருளி நின்று
மஹா வேகத்திலே உபந்யஸிக்க,

அவ்வளவில் வேதாந்திகள் எழுந்திருந்து நடுங்கி வேறொன்றும் சொல்லாதே அரை குலையத் தலை குலைய இறங்கி வந்து
பட்டர் திருவடிகளிலே விழுந்து, ‘அடியேனை அங்கீகரித்தருள வேணும்’ என்று மிகவும் அநுவர்த்திக்க
பட்டரும் தாம் எழுந்தருளின கார்யம் அதிஶீக்ரத்திலே பலித்தவாறே மிகவும் திருவுள்ளமுகந்தருளி,
வேதாந்திகளை அங்கீகரித்து அவர்க்குப் பஞ்ச ஸம்ஸ்காரமும் பண்ணி யருளி,
‘வேதாந்திகளே! நீர் ஸர்வஜ்ஞராயிருந்தீர். ஆகையாலே உமக்கு நாம் பரக்கச் சொல்லாவதில்லை.
விஶிஷ்டாத்வைதமே பொருள்; நீரும் மாயா வாதத்தை ஸ வாஸநமாக விட்டு, ஶ்ரிய:பதியைப் பற்றி,
ராமாநுஜ தர்ஶநத்தை நிர்வஹியும்’ என்று அருளிச் செய்து,
‘நாம் பெருமாளை ஸேவிக்கப் போகிறோம்’ என்று உத்யோகிக்கிற வளவிலே

ஊருக்குப் புறம்பே நிறுத்தின அனைத்துப் பரிகரமும் மஹாஸம்ப்ரமத்துடனே வந்து புகுந்து பட்டரை மீளவும்
ஸர்வாபரணங்களாலும் அலங்கரித்துத் திருப் பல்லக்கிலேற்றி உபய சாமரங்களைப் பரிமாற எழுந்தருளுவித்துக் கொண்டு
புறப்பட்டவளவிலே வேதாந்திகள் பட்டருடைய பெருமையும் ஸம்பத்தையும் கண்டு
‘இந்த ஶ்ரீமாந் இத்தனை தூரம் காடும் மலையும் கட்டடமும் கடந்து எழுந்தருளி நித்ய ஸம்ஸாரிகளிலும் கடை கெட்டு
ம்ருஷாவாதியாயிருந்த அடியேனுடைய துர் கதியே பற்றாசாக அங்கீகரித்தருளுவதே!’ என்று
மிகவும் வித்தராய்க் கண்ணும் கண்ண நீருமாய்க் கொண்டு பட்டர் திருவடிகளிலே விழுந்து க்லேஶித்து,

‘பெரிய பெருமாள் தாமாகத் தன்மையான ஸௌந்தர்ய ஸௌகுமார்யாதிகளுக்குத் தகுதியாக எழுந்தருளினார்,
அநாதி காலம் தப்பி அலம் புரிந்த நெடுந்தடக்கைக்கும் எட்டாதபடி கை கழிந்து போன இவ்வாத்மா
என்றும் தப்பிப்போம் என்று திருவுள்ளம் பற்றி, இப்படி அதி கார்ப்பண்யமாயிருப்பதொரு வேஷத்தையும் தரித்துக் கொண்டு
ஸத்ராஶிகளுடனேகூட எழுந்தருளி அதி துர்மாநியான அடியேனை அங்கீகரித்தருளின அந்த வேஷத்தை நினைத்து
அடியேனுக்குப் பொறுக்கப் போகிறதில்லை’ என்று வாய் விட,
பட்டரும் வேதாந்திகளை எடுத்து நிறுத்தித் தேற்றி, ‘நீர் இங்கே ஸுகமே இரும்’ என்று அருளிச் செய்து கோயிலேற எழுந்தருளினார்.

அதுக்குப் பின்பு வேதாந்திகள் அங்கே சிறிது நாள் எழுந்தருளி யிருந்து பட்டரைப் பிரிந்திருக்க மாட்டாதே
கோயிலுக்கு எழுந்தருளத் தேட அங்குள்ளவர்கள் அவரைப் போக வொண்ணாதென்று தகையத்
தமக்கு நிரவதிக தநம் உண்டாகையாலே அத்தை மூன்றம்ஶமாகப் பிரித்து, இரண்டு தேவிமாருக்கு இரண்டு அம்ஶத்தைக் கொடுத்து,
மற்றை அம்ஶத்தைத் தம்முடைய ஆசார்யருக்காக எடுப்பித்துக் கொண்டு தத் தேஶத்தையும் ஸவாஸநமாக விட்டு ஸந்யஸித்துக்
கோயிலிலே எழுந்தருளி, பட்டர் திருவடிகளிலே ஸேவித்துத் தான் கொண்டு வந்த தநத்தையும் தம்மதென்கிற அபிமாநத்தை விட்டு,
பட்டர் இஷ்ட விநியோகம் பண்ணிக் கொள்ளலாம்படி அவர் திரு மாளிகையிலே விட்டு வைத்து, க்ருதார்த்தராய் எழுந்தருளி நிற்க,

அவ் வளவில் பட்டரும் மிகவும் திருவுள்ளமுகந்து, ‘நம்முடைய ஜீயர் வந்தார்’ என்று கட்டிக் கொண்டு ஒரு க்ஷணமும் பிரியாமல்
தம்முடைய ஸந்நிதியிலே வைத்துக் கொண்டு ஸகலார்த்தங்களையும் ப்ரஸாதித்தருளினார்.
ஜீயரும் பட்டரை யல்லது மற்றொரு தெய்வம் அறியாதிருந்தார்.
பட்டர் நஞ்சீயர் என்று அருளிச் செய்தவன்று தொடங்கி வேதாந்திகளுக்கு நஞ்சீயரென்று திருநாமமாயிற்று.
நஞ்சீயர் நூறு திருநக்ஷத்ரம் எழுந்தருளியிருந்து நூறு திருவாய்மொழியும் நிர்வஹிக்கையாலே
ஜீயருக்கு ஶதாபிஷேகம் பண்ணிற்று என்று நம்முடைய ஜீயர் அருளிச்செய்வர்.

(நஞ்சீயர் இயற் பெயர் -மாதவர்

நமோ வேதாந்த வேத்யாய ஜகந் மங்கள ஹேதவே யஸ்ய வாகம்ருதஸார பூரிதம் புவந த்ரயம்-நஞ்சீயருடைய தனியன்:

தெண்டிரை சூழ் திருவரங்கம் செழிக்க வந்தோன் வாழியே சீமாதவனென்னும் செல்வனார் வாழியே பண்டை மறைத் தமிழ்ப் பொருளைப் பகர வந்தோன் வாழியே பங்குனியில் உத்தர நாள் பாருதித்தான் வாழியே ஒண்டொடியாள் கலவி தன்னை யொழித்திட்டான் வாழியே ஒன்பதினாயிரப் பொருளை யோதுமவன் வாழியே எண்டிசையும் சீர் பட்டர் இணையடியோன் வாழியே எழில் பெருகும் நஞ்சீயர் இனிதூழி வாழியே-நஞ்சீயருடைய வாழி திருநாமம்: )

நஞ்சீயர் பட்டரை அநேகமாக அநுவர்த்தித்து அவருடைய அநுமதி கொண்டு திருவாய்மொழிக்கு ஒன்பதினாயிரமாக
ஒரு வ்யாக்யாநமெழுதி, பட்டோலையானவாறே இத்தையொரு ஸம்புடத்திலே நன்றாக எழுதித் தரவல்லார் உண்டோ
என்று ஜீயர் தம்முடைய முதலிகளைக் கேட்க,
அவர்களும் ‘தென்கரையனென்னும் வரதராஜனென்று ஒருவர் பலகாலம் இங்கே வருவர். அவர் நன்றாக எழுதவல்லார்’
என்று ஜீயருக்கு விண்ணப்பம் செய்ய,
ஜீயரும் வரதராஜரை அழைத்து ‘ஒரு க்ரந்தம் எழுதிக்காட்டுங்காண்’ என்ன,
அவரும் எழுதிக் கொடுக்க, ஜீயர் அத்தைக் கண்டு ‘எழுத்து முத்துப் போலே நன்றாயிருந்தது;
ஆனாலும் திருவாய்மொழி வ்யாக்யாநமாகையாலே ஒரு விலக்ஷணரைக் கொண்டு எழுதுவிக்க வேணுமொழிய,
திருவிலச்சினை திருநாமமுண்டான மாத்ரமாய், விஶேஷஜ்ஞரல்லாத வரதராஜனைக் கொண்டு எப்படி எழுதுவிப்பது’
என்று ஸந்தேஹிக்க, வரதராஜனும் ஜீயர் திருவுள்ளத்தை யறிந்து
‘அடியேனையும் தேவரீர் திருவுள்ளத்துக்குத் தகும்படி திருத்திப் பணி கொள்ளலாகாதோ’ என்ன,

அவ்வளவில் ஜீயரும் மிகவும் திருவுள்ளமுகந்தருளி அப்போதே வரதராஜனை அங்கீகரித்து விஶேஷ கடாக்ஷம் பண்ணியருளி
ஒன்பதினாயிரமும் பட்டோலை ஓருரு வரதராஜனுக்கு அருளிச் செய்து காட்டி
‘இப்படித்தப்பாமல் எழுதித்தாரும்’ என்று பட்டோலையை வரதராஜன் கையிலே கொடுக்க,
அவரும் அத்தை வாங்கிக் கொண்டு ‘அடியேனூரிலே போய் எழுதிக் கொண்டு வருகிறேன்’ என்று விண்ணப்பம் செய்ய,
ஜீயரும் ‘அப்படியே செய்யும்’ என்று விட,

வரதராஜன் திருக் காவேரிக்குள்ளே எழுந்தருளினவளவிலே சத்திடம் (சிற்றிடம்) நீச்சாகையாலே பட்டோலையைத் திருமுடியிலே
கட்டிக்கொண்டு நீஞ்ச, அவ்வளவிலே ஒரு அலை அவரை அடித்து க்ரந்தம் ஆற்றுக்குள்ளே விழுந்து போக,
அவரும் அக்கரையிலேயேறி ‘பட்டோலை போய்விட்டதே, இனி நான் செய்வதேது’ என்று விசாரித்து,
ஒரு அலேகத்தை {=வெற்றேடு} உண்டாக்கிக் கொண்டு ஜீயர் அருளிச் செய்தருளின அர்த்தம்
ஒன்றும் தப்பாமல் ஒன்பதினாயிரமும் நன்றாக எழுதி, தாம் சதிருடைய தமிழ் விரகராகையாலே ஓரொரு பாட்டுக்களிலே
உசிதமான ஸ்தலங்களுக்கு ப்ரஸந்ந கம்பீரமான அர்த்த விசேஷங்களும் எழுதிக் கொண்டு போய் ஜீயர் திருக்கையிலே கொடுக்க,

ஜீயரும் ஶ்ரீகோஶத்தை அவிழ்த்துப் பார்த்த வளவிலே தாமருளிச் செய்த கட்டளையாயிருக்கச் செய்தே
ஶப்தங்களுக்கு மிகவும் அநு குணமாக அநேக விஶேஷார்த்தங்கள் பல விடங்களிலும் எழுதி யிருக்கையாலே
அத்தைக் கண்டு மிகவும் திருவுள்ளமுகந்தருளி வரத ராஜனைப் பார்த்து ‘மிகவும் நன்றாயிரா நின்றது; இதேது சொல்லும்’ என்ன,
அவரும் பயப்பட்டு ஒன்றும் விண்ணப்பம் செய்யாதிருக்க,

ஜீயரும் ‘நீர் பயப்பட வேண்டாம், உண்மையைச் சொல்லும்’ என்ன,
வரதராஜனும் ‘திருக் காவேரி நீச்சாகையாலே பட்டோலையை அடியேன் தலையிலே கட்டிக் கொண்டேன்.
ஓரலை வந்து அடிக்கையாலே அது ஆற்றிலே விழுந்து முழிகிப் போய்த்து.
இது தேவரீர் அருளிச் செய்தருளின ப்ரகாரத்திலே எழுதினேன்’ என்று விண்ணப்பம் செய்ய,

ஜீயரும் ‘இது ஒரு புத்தி விசேஷமிருந்தபடியென்! இவர் மஹா ஸமர்த்தராயிருந்தார். நன்றாக எழுதினார்’ என்று
மிகவும் திருவுள்ளமுகந்து வரதராஜனைக் கட்டிக்கொண்டு ‘நம்முடைய பிள்ளை திருக் கலிக்கன்றி தாஸர்’ என்று திருநாமம் சாத்தித்
தம்முடைய ஸந்நிதியிலே ஒரு க்ஷணமும் பிரியாமல் மாப்பழம்போலே வைத்துக் கொண்டு
பிள்ளைக்கு ஸகலார்த்தங்களையும் ப்ரஸாதித்தருளினார்.
ஆகையாலே ஜீயர் நம்பிள்ளை என்று அருளிச் செய்தவன்று தொடங்கி வரத ராஜனுக்கு நம் பிள்ளை என்று
திருநாமமாய்த்து என்று நம்முடைய ஜீயர் அருளிச் செய்தருளுவார்.

இந்த வ்ருத்தாந்தங்கள் தன்னை
“நம்பெருமாள் நம்மாழ்வார் நஞ்சீயர் நம்பிள்ளை என்பர், அவரவர்தம் ஏற்றத்தால்,
அன்புடையோர் சாற்று திருநாமங்கள் தானென்று நன்னெஞ்சே, ஏத்ததனைச் சொல்லி நீ இன்று” என்று
உபதேச ரத்தின மாலையிலே நம்முடைய ஜீயர் அருளிச் செய்தருளினார்.

‘இந்திரன் வார்த்தையும், நான்முகன் வார்த்தையும் ஈசனுடன்
கந்தன் வார்த்தையும் கற்பவராரினிக் காசினிக்கே
நந்தின முத்தென்றும் நம்பூர் வரதர் திருமாளிகையில்
சிந்தின வார்த்தை கொண்டே சில நாடு திறை கொள்வரே’ என்றிறே நம்பிள்ளை யுடைய வைபவமிருப்பது.

(நம்பிள்ளை திருநக்ஷத்ரம்: கார்த்திகை, கார்த்திகை அவதார ஸ்தலம்: நம்பூர் ஶிஷ்யர்கள்: வடக்குத் திருவீதிப் பிள்ளை , பெரியவாச்சான் பிள்ளை, பின்பழகிய பெருமாள் ஜீயர் , ஈயுண்ணி மாதவப் பெருமாள், நடுவில் திருவீதிப் பிள்ளை பட்டர் மற்றும் பலர் பரமபதித்த இடம்: ஸ்ரீரங்கம்

வேதாந்த வேத்ய அம்ருத வாரிராஸேர் வேதார்த்த ஸார அம்ருத பூரமக்ர்யம் ஆதாய வர்ஷந்தம் அஹம் ப்ரபத்யே காருண்ய பூர்ணம் கலிவைரிதாஸம்-நம்பிள்ளையின் தனியன்: தேமருவும் செங்கமலத் திருத்தாள்கள் வாழியே திருவரையில் பட்டாடை சேர் மருங்கும் வாழியே தாமமணி வட மார்வும் புரிநூலும் வாழியே தாமரைக் கை இணை யழகும் தடம் புயமும் வாழியே பாமருவும் தமிழ் வேதம் பயில் பவளம் வாழியே பாடியத்தின் பொருள் தன்னைப் பகர்நாவும் வாழியே நாமநுதல் மதிமுகமும் திருமுடியும் வாழியே நம்பிள்ளை வடிவழகும் நாடோறும் வாழியே-நம்பிள்ளையின் வாழி திருநாமம்:

காதலுடன் நஞ்சீயர் கழல் தொழுவோன் வாழியே கார்த்திகைக் கார்த்திகை யுதித்த கலிகன்றி வாழியே போதமுடன் ஆழ்வார் சொல் பொருளுரைப்போன் வாழியே பூதூரான் பாடியத்தைப் புகழுமவன் வாழியே மாதகவா லெவ்வுயிர்க்கும் வாழ்வளித்தான் வாழியே மதிளரங்கர் ஓலக்கம் வளர்த்திட்டான் வாழியே நாதமுனி ஆளவந்தார் நலம்புகழ்வோன் வாழியே நம்பிள்ளை திருவடிகள் நாடோறும் வாழியே-நம்பிள்ளையின் வாழி திருநாமம்:)

———-

அந்திமோபாய நிஷ்டை – 6 – பகவானிலும் ஆசார்யனின் மேன்மை

திருக்கோட்டியூர் நம்பி கோயிலுக்கெழுந்தருளித் திருநாள் ஸேவித்து மீண்டெழுந்தருளுகிறவரை
எம்பெருமானார் அநுவர்த்தித்து ‘அடியேனுக்குத் தஞ்சமாயிருப்பதொரு நல் வார்த்தை அருளிச் செய்ய வேணும்’ என்று கேட்க,
நம்பியும் ஒரு நாழிகைப் போது திருக் கண்களைச் செம்பளித்துக் கொண்டு நின்று, பின்பு
‘எங்கள் ஆசார்யர் ஶ்ரீஆளவந்தார் அடியோங்களுக்கு ஹிதம் அருளும் போது அகமர்ஷண ஸமயத்திலே(காவேரியில் இறங்கி ஆழ்ந்து குளிக்கும் பொழுது)திருமுதுகிருக்கும்படி வல்லார் கடாரம் கவிழ்த்தாப் போலே காணும் இருப்பது;
அதுவே நமக்குத் தஞ்சமென்று விஶ்வஸித்திருப்பேன்; நீரும் மறவாமல் இத்தை நினைத்திரும்’ என்று அருளிச் செய்தாரென்று ப்ரஸித்தமிறே.
நம்பி தான் திருக்கோட்டியூரிலே தளத்தின் மேலே படிக் கதவைப் புகட்டு ஆளவந்தாரை த்யாநித்துக் கொண்டு
யமுனைத் துறைவர் என்கிற மந்த்ரத்தை ஸதா அநுஸந்தாநமாய் எழுந்தருளி இருப்பர் என்று அருளிச் செய்வர்.

உடையவரும் ஒரூமையைக் கடாக்ஷித்தருளி அவனளவில் தமக்குண்டான க்ருபாதிஶயத்தாலே
அவனைக் கடாக்ஷிக்கக் கடவோம் என்று திருவுள்ளம் பற்றி, ஏகாந்தத்திலே வைத்துக் கொண்டு
ஸம்ஜ்ஞையாலே தம்முடைய திருமேனியை ஊமைக்கு ரக்ஷகமாகக் காட்டி யருள,
ஆருக்கும் ஸித்தியாத விஶேஷ கடாக்ஷத்தைத் கூரத்தாழ்வான் கதவு புரையிலே கண்டு மூர்ச்சித்துத் தெளிந்த பின்பு
‘ஐயோ ஒன்றுமறியாத ஊமையாய்ப் பிறந்தேனாகில் இப் பேற்றை உடையவர் அடியேனுக்கும் இரங்கி யருளுவர்;
கூரத்தாழ்வானாய்ப் பிறந்து ஶாஸ்த்ரங்களைப் பரக்கக் கற்கையாலே தம்முடைய திவ்ய மங்கள விக்ரஹத்தை
அடியேனுக்குத் தஞ்சமாகக் காட்டித் தந்தருளாமல் ப்ரபத்தியை உபதேஶித்து விட்டாராகையாலே
எம்பெருமானாருடைய திவ்ய மங்கள விக்ரஹமே எனக்குத் தஞ்சமென்கிற நிஷ்டைக்கு அநதிகாரியாய் விட்டேன்’ என்று
ஆழ்வான் தம்மை வெறுத்துக் கொண்டாரென்று நம்முடைய ஜீயர் அருளிச் செய்தருளுவர்.

உடையவர் ஆழ்வாரை ஸேவிக்க வேணுமென்று திருநகரிக்கெழுந்தருளுகிற போது திருப்புளிங்குடி என்கிற திருப்பதியிலே
எழுந்தருளினவாறே அவ் வூர்த் திருவீதியிலே பத்தெட்டு வயஸ்ஸிலே ஒரு ப்ராஹ்மணப் பெண் இருக்க,
உடையவர் அவளைப் பார்த்து, ‘பெண்ணே திருநகரிக்கு எத்தனை தூரம் போரும்’ என்று கேட்க,
அந்தப் பெண் உடையவரைப் பார்த்து ‘ஏன் ஐயரே! திருவாய்மொழி ஓதினீரில்லையோ?’ என்ன,
உடையவர் ‘திருவாய்மொழி ஓதினால் இவ்வூர்க்குத் திருநகரி இத்தனை தூரம் போம் என்று அறியும்படி எங்ஙனே?’ என்ன,
அப்பெண் – “திருபுளிங்குடியாய்! வடிவணையில்லா மலர்மகள் மற்றை நிலமகள் பிடிக்கும் மெல்லடியைக்
கொடுவினையேனும் பிடிக்க நீ ஒருநாள் கூவுதல் வருதல் செய்யாயே” என்று ஆழ்வார் அருளிச் செய்கையாலே
திருநகரிக்கு இவ்வூர் கூப்பிடு தூரமென்று அறிய வேண்டாவோ’ என்று உடையவரைப் பார்த்து விண்ணப்பம் செய்ய,

உடையவரும் ‘இதொரு வாக்யார்த்தமிருந்தபடி என்!’ என்று போர வித்தராய்,
அந்தப் பெண்ணளவிலே மிகவும் திருவுள்ளமுகந்து ‘இவளிருக்கிற ஊரிலே நமக்கு இன்று ஸ்வயம்பாகம் பண்ணுவதாகத்
தேடின பாண்டங்களையும் உடைத்துப் பொகட்டு, ‘பெண்ணே உன்னுடைய க்ருஹம் ஏது’ என்ன,
அவளும் தம்முடைய அகத்தைக் காட்ட, உடையவரும் அந்தக் க்ருஹத்திலே எழுந்தருளி,
அந்தப் பெண்ணையும் அவளுடைய மாதா பிதாக்களையும் தளிகைக்குத் திருப் போனகம் சமைக்கும்படி கற்பித்தருளித்
தாமும் முதலிகளும் அமுது செய்தருளி அந்தப் பெண்ணையும் அவளோடு ஸம்பந்தமுடையாரையும் அங்கீகரித்து
விசேஷ கடாக்ஷம் பண்ணியருளி, தாமும் முதலிகளுமாகத் திருநகரிக்கேற எழுந்தருளினார்.

அன்று தொடங்கி அந்தப் பெண்ணும் தத் ஸம்பந்திகளும் உடையவரல்லது மற்றொரு தெய்வமறியாமலிருந்து
வாழ்ந்து போனார்கள் என்று பெரியோர்கள் அருளிச் செய்வர்கள்.

இந்த வ்ருத்தாந்தங்களாலே
‘பாலமூக- ஜடாந்தாஶ்ச பங்கவோ பதிராஸ்ததா |
ஸதாசார்யேண ஸந்த்ருஷ்டா: ப்ராப்நுவந்தி பராங்கதிம்’ என்கிறபடியே
ஶாஸ்த்ர அநதிகாரிகளான இவர்களெல்லாம்  பரம கிருபையாலே உஜ்ஜீவித்தார்கள் என்பதை உடையவர் பக்கலிலே காணலாம் என்றபடி.

திருக் குருகைப் பிரான் பிள்ளான் கொங்கு நாட்டுக்கு எழுந்தருளி அங்கே ஒரு ஶ்ரீவைஷ்ணவ க்ருஹத்திலே விட்டு
ஸ்வயம்பாகம் பண்ணுவதாக எழுந்தருளியிருக்க, அங்குள்ளவர்களெல்லாரும் கேவல பகவந் நாம ஸங்கீர்தநங்களைப் பண்ண,
அது இவர் திருவுள்ளத்துக்குப் பொருந்தாத படியாலே அமுது செய்தருளாமல் அவ்வருகே எழுந்தருளினார் என்றும்,
ஶ்ரீபாஷ்யகாரர் காலத்திலே கோஷ்டியிலே ஒரு வைஷ்ணவர் வந்து நின்று திருமந்த்ரத்தை உச்சரிக்க,
வடுக நம்பி எழுந்திருந்து குரு பரம்பரா பூர்வகமில்லாத படியாலே இது நாவ காரியம் என்று அருளிச் செய்து
அவ் வருகே எழுந்தருளினார் என்றும் இரண்டு வ்ருத்தாந்தமும்
“நாவ காரியம் சொல்லிலாதவர்” என்கிற பாட்டில் வ்யாக்யாநத்திலே காணலாம்.

திருமாலை யாண்டான் அருளிச் செய்யும்படி –
நாம் பகவத் விஷயம் சொல்லுகிறோமென்றால் இஸ் ஸம்ஸாரத்தில் ஆளில்லை; அதெங்ஙனே என்னில்,
ஒரு பாக்கைப் புதைத்து அதுருவாந்தனையும் செல்லத் தலையாலே எருச் சுமந்து ரக்ஷித்து அதினருகே கூறைகட்டிப்
பதினாறாண்டு காலம் காத்துக் கிடந்தால் கடவழி ஒரு கொட்டைப் பாக்காய்த்துக் கிடைப்பது;
அது போலன்றிக்கே இழக்கிறது ஹேயமான ஸம்ஸாரத்தை, பெறுகிறது விலக்ஷணமான பரம பதத்தை,
இதுக்குடலாக ஒரு நல் வார்த்தை யருளிச் செய்த ஆசார்யன் திருவடிகளிலே ஒரு காலாகிலும் க்ருதஜ்ஞராகாத
ஸம்ஸாரிகளுக்கு நாம் எத்தைச் சொல்லுவது என்று வெறுத்தார் என்று வார்த்தா மாலையிலே ப்ரஸித்தம்.

“கோக்நேசைவ ஸுராபே ச சோரே பக்ந வ்ரதே ததா|
நிஷ் க்ருதிர் விஹிதா ஸத்பி: க்ருதக்நே நாஸ்தி நிஷ் க்ருதி:” என்கிறவிடத்தில்
க்ஷுத்ரமான ப்ராக்ருத த்ரவ்ய உபகார விஸ்ம்ருதியை அகப்பட, நிஷ்க்ருதி யில்லாத பாபமென்றால் அப்ராக்ருதமாய்,
நிரதிஶய வைலக்ஷண்யத்தை உடைத்தான ஆத்ம வஸ்துவை அநாதி காலம் தொடங்கி,
“அஸந்நேவ” என்கிறபடியே அஸத் கல்பமாய்க் கிடக்க, ஜ்ஞாந ப்ரதாநத்தாலே அத்தை “ஸந்தமேநம்” என்னும் போது
உண்டாக்கின ஆசார்யன் திறத்தில் க்ருதக்நராகை பாபங்களுக்கெல்லாம் தலையான பாபமென்னுமிடம் கிம்புநர் ந்யாய ஸித்தமிறே.

தண்ணீரை ஒரு பாத்ரத்திலே எடுத்துச் தேத்தாம் விரையை யிட்டுத் தேற்றினாலும் மண்ணானது கீழ் படிந்து
தெளிந்த நீரானது மேலே நிற்குமாப் போலே அஜ்ஞாந ப்ரதமான ஶரீரத்திலே இருக்கிற ஆத்மாவை
ஆசார்யனாகிற மஹோபகாரகன் திருமந்த்ரமாகிற தேத்தாம் விரையாலே தேற்ற, அஜ்ஞாநம் மடிந்து, ஜ்ஞாநம் ப்ரகாஶிக்கும்;
தெளிந்த ஜலத்தை பாத்ராந்தரத்திலே சேர்க்குந்தனையும் கைப்பட்ட போதெல்லாம் கலங்குமாப்போலே,
பிறந்த ஜ்ஞாநத்தைக் கலக்குகிற ப்ராக்ருத ஶரீரத்தை விட்டுப் போய்,
அப்ராக்ருத ஶரீரத்திலே புகுந்தனையும் கலங்காமல் நோக்கும் தன்னுடைய ஸதாசார்யன், தத் துல்யர்கள் கண் வட்டத்திலே
வர்த்திக்கை ஸ்வரூபம் என்று பூர்வாசார்யர்கள் அருளிச் செய்வார்கள். (கதக ஷோத இத்யாதி-கதக-தேத்தாம் விரை).

ஆளவந்தார் திருவநந்தபுரத்துக்கு எழுந்தருளுகிறபோது தமக்கு அந்தரங்க ஶிஷ்யரான தெய்வாரி யாண்டானை
‘பெருமாளுக்குத் திருமாலையும் கட்டி ஸமர்ப்பித்து மடத்துக்கு காவலாக இரும்’ என்று கோயிலிலே வைத்து எழுந்தருள,
ஆண்டானுக்கு திருமேனியும் ஶோஷித்து, தீர்த்த ப்ரஸாதங்களும் இழியாமையிருக்கையாலே மிகவும் தளர,
பெருமாள் அவரைப் பார்த்து ‘உனக்கிப்படி ஆவானென்’ என்று திருவுள்ளம் பற்றி யருள,
‘தேவரீருடைய கைங்கர்யமும் ஸேவையும் உண்டே யாகிலும் ஆசார்ய விஶ்லேஷத்தாலே இளைத்தேன்’ என்று அவரும் விண்ணப்பம் செய்ய,
‘ஆனால் நீர் ஆளவந்தார் பக்கல் போம்’ என்று பெருமாள் திருவுள்ளமாயருள,

அவரும் அங்கே எழுந்தருள, ஆளவந்தாரும் திருவநந்தபுரத்தை ஸேவித்து அரைக் காத வழி மீண்டு,
கரைமனை யாற்றங்கரையிலே விட்டெழுந்தருளி யிருந்தார்.
ஆண்டானும் அங்கே சென்று ஆளவந்தாரைக் கண்டு ஸேவித்துத் தம்முடைய க்லேஶம் தீர்ந்தவாறே மிகவும் ஹ்ருஷ்டராயிருக்க;
அவ்வளவிலே ஆளவந்தாரும் ‘திருவனந்தபுரம் திருச் சோலைகள் தோன்றுகிறது,
ஶ்ரீ வைஷ்ணவர்களையும் கூட்டிக் கொண்டு போய் ஸேவித்து வாரும்’ என்று திரு வுள்ளம் பற்றி யருள;
‘அது உம்முடைய திருவனந்தபுரம், என்னுடைய திருவனந்தபுரம் எதிரே வந்தது’ என்று ஆண்டான் விண்ணப்பம் செய்ய,
‘இது ஒரு அதிகாரம் இருந்தபடி யென்! இந் நினைவு ஒருவர்க்கும் பிறக்கை அரிது’ என்று
ஆளவந்தாரும் ஆண்டானளவிலே மிகவும் திருவுள்ளமுகந்தருளினார் என்று அருளிச் செய்வார்கள்.

பின்பழகிய பெருமாள் ஜீயர் ஒரு காலம் திருமேனி பாங்கின்றியிலே கண் வளர்ந்தருளுகிற போது
தமக்கு அந்தரங்கரான ஶ்ரீவைஷ்ணவர்களை அழைத்து
‘அடியேன் இப்போது திருவடிச் சாராமல் ஆலஸ்யமும் பொறுத்து இன்னமும் இங்கே சிறிது நாள் இருக்கும்படி
“ஏழையேதலன்”, “ஆழியெழச்சங்கும்” பெருமாள் திருவடிகளிலே விண்ணப்பம்செய்து ப்ரபத்தி பண்ணுங்கோள்’ என்ன,
அவர்கள் அப்படியே செய்து, ஜீயருக்குப் பண்டு போலே திருமேனி பாங்காயிற்று.

இத்தை ஶ்ரீவைஷ்ணவர்கள் இவருடைய ஆசார்யரான நம்பிள்ளை ஶ்ரீபாதத்திலே சென்று தண்டனிட்டு
‘ஜ்ஞாந வ்ருத்தருமாய் வயோவ்ருத்தருமான ஜீயர் இப்படிச் செயதார்,
இது இவர் ஸ்வரூபத்துக்குச் சேருமோ?’ என்று விண்ணப்பம் செய்ய,
பிள்ளையும் ‘அவருடைய அபிப்ராயம் அறிகிறிலோம்; ஸகல வேத ஶாஸ்த்ரங்களும் போவது,
பிள்ளை எங்களாழ்வானைச் சென்று இப்படி இவர் நினைவைக் கேளுங்கோள்’ என்று கேட்க,

அவரும் ஶ்ரீரங்கஶ்ரீயில் ஸங்கம் போலே காணும் என்று இருள் தருமா ஞாலமான ஸம்ஸாரத்திலே
“நாபுக்தம் க்ஷீயதே கர்ம கல்ப கோடிஶதைரபி” என்றும்,
“யத் ப்ரஹ்ம கல்ப நியுதாநுபவேப்ய நாஶ்யம்” என்றும் சொல்லுகிறபடியே என்ன,

பிள்ளையும் அத்தைக் கேட்டருளி, ‘திருநாராயணபுரத்தரையரைச் சென்று கேளுங்கோள்’ என்ன,
அவரும் ‘தொடங்கின கைங்கர்யங்கள் தலைக் கட்டாமையாலே காணும்’ என்ன,
பிள்ளையும் அத்தைக் கேட்டு, ‘ஆகிறது, அம்மங்கி யம்மாளைக் கேளுங்கோள்’ என்ன,

அவரும், ‘பிள்ளை கோஷ்டியிலே இருந்து அவர் அருளிச் செய்கிற பகவத் விஷயத்தைக் கேட்கிறவர்களுக்கு
ஒரு தேஶ விஶேஷமும் ருசிக்குமோ?’ என்ன,
மீளவும் பிள்ளை அத்தைக் கேட்டு, ‘அம்மங்கி பெரிய முதலியாரைக் கேளுங்கோள்’ என்ன,

“பெருமாள் சிவந்த திருமுக மண்டலமும் கஸ்தூரி திருநாமமும் பரமபதத்திலே கண்டேனில்லையாகில்
மூலை யடியே முடித்துக் கொண்டு மீண்டு வருவன்’ என்றன்றோ பட்டர் அருளிச் செய்தது,
அப்படியே இவரும் பெருமாள் சிவந்த திருமுக மண்டலத்தையும் விட்டுப் போகமாட்டராக வேணும்” என்றார்.

பிள்ளை இவை எல்லாத்தையும் கேட்டருளி ஜீயர் திருமுக மண்டலத்தைப் பார்த்து சிரித்து,
‘இவை உம்முடைய நினைவுக்கு ஒக்குமோ?’ என்ன,
‘இவை இத்தனையுமன்று’ என்று ஜீயர் விண்ணப்பம் செய்தார்.
‘ஆனால் உம்முடைய அபிப்பிராயத்தைச் சொல்லும்’ என்ன,

பிள்ளை ‘தேவர் ஸர்வஜ்ஞராகையாலே அறிந்தருளாததில்லை; ஆனாலும் அடியேனைக் கொண்டு வெளியிட்டருளத்
திருவுள்ளமாகில் விண்ணப்பம் செய்கிறேன். தேவரீர் மஞ்சன சாலையிலே எழுந்தருளித் திருமஞ்சனம் செய்தருளித்
தூய்தாகத் திருவொற்றெலியல் சாற்றி யருளி உலாவி யருளும் போது குருவேர்ப்பரும்பின திருமுக மண்டலத்தில் சேவையும்
சுழற்றிப் பரிமாறுகிற கைங்கர்யத்தையும் விட்டு அடியேனுக்குப் பரமபதத்துக்குப் போக இச்சையாயிருந்ததில்லை’ என்று
ஜீயர் விண்ணப்பம் செய்தார்.

இத்தைக் கேட்டருளிப் பிள்ளையும் முதலிகளும்
‘இந்த விபூதியிலும் இவ் வுடம்போடே ஒருவர்க்கு இவ் வைஶ்வர்யம் கூடுவதே!’ என்று மிகவும் திருவுள்ளம் உகந்தருளினார்கள் –
என்று இந்த ஜீயருடைய ஆசார்ய ப்ரேமம் தமக்குண்டாக வேணுமென்று நம்முடைய ஜீயர் தம்முடைய திருவுளத்தைக் குறித்து
உபதேச ரத்தின மாலையிலே
“பின்பழகராம் பெருமாள் சீயர் பெருந்திவத்திலன்பதுவுமற்று மிக்கவாசையினால் நம்பிள்ளைக்கான
அடிமைகள் செய் அந்நிலையை நன்னெஞ்சே ஊனமற எப்பொழுதுமோர்” என்றருளிச் செய்தருளினார்.

(பின்பழகராம் பெருமாள் சீயர்
திருநக்ஷத்ரம் : ஐப்பசி சதயம்
அவதார ஸ்தலம் : திருப்புட்குழி
ஆசார்யன் : நம்பிள்ளை
பரமபதம் அடைந்த இடம் : ஸ்ரீரங்கம்
ஜ்ஞான வைராக்ய ஸம்பூர்ணம் பச்சாத் ஸூந்தர தேசிகம் |
த்ரவிடோபநிஷத் பாஷ்யதாயிநம் மத குறும் பஜே ||-பின்பழகிய பெருமாள் ஜீயர் தனியன்)

பெரிய நம்பியும் திருக்கோட்டியூர் நம்பியம் திருமாலையாண்டானும் கூடிச் சந்த்ர புஷ்கரிணிக் கரையிலே
திருப்புன்னைக் கீழெழுந்தருளியிருந்து தங்கள் ஆசார்யரான ஆளவந்தார் எழுந்தருளியிருக்கும் படியையும்,
அவர் அருளிச் செய்தருளும் நல் வார்த்தைகளையும் நினைத்து அநுபவித்துக் கொண்டு மிகவும் ஹ்ருஷ்டராய்,
ஆனந்த மக்நராய்க் கொண்டு எழுந்தருளியிருக்கிற அளவிலே திருவரங்கச் செல்வர் பலி ப்ரஸாதிப்பதாக எழுந்தருளிப் புறப்பட,
இவர்களுடைய ஸமாதி பங்கம் பிறந்து எழுந்து இருந்து தண்டனிட வேண்டுகையாலே
‘இந்தக் கூட்டம் கலக்கியார் வந்தார்; இற்றைக்கு மேற்பட ஶ்ரீபலி யெம்பெருமான் எழுந்தருளாத கோயிலிலே இருக்கக்கடவோம்’
என்று ப்ரதிஜ்ஞை பண்ணிக்கொண்டார்கள் என்று வார்த்தா மாலையிலே உண்டு.

பட்டர் திருத்தின வேதாந்தியான நஞ்சீயரை அநந்தாழ்வான் மேல்நாட்டிலே சென்று கண்டு ‘ஆசார்ய கைங்கர்யத்துக்கு விரோதியான ஸந்யாஸி வேஷத்தை தரித்துத் தப்பச் செய்தீர்; வேர்த்த போது குளித்து, பசித்த போது புசித்து, பட்டர் திருவடிகளே ஶரணம் என்று இருந்தால் உம்மைப் பரம பதத்தில் நின்றும் தள்ளி விடப் போகிறார்களோ? இனிக் கைங்கர்யத்தையும் இழந்து, ஒரு மூலையிலே இருக்க வன்றோ உள்ளது” என்று அருளிச் செய்தார்.

முன்பு ஶைவனாயிருந்து பின்பு தொண்டனூர் நம்பி ஶ்ரீபாதத்திலே திருந்தினாரொரு ஶ்ரீவைஷ்ணவர் திருமலைக்கு எழுந்தருளி,
அநந்தாழ்வானை ஸேவித்து நின்றளவிலே அவர் திருப் பூ மரங்களைப் பிடுங்குவது நடுவதாய்க் கொண்டு
திருவேங்கடமுடையானுக்குத் திரு நந்தவநம் செய்கிறத்தைக் கண்டு
‘அநந்தாழ்வான்! வேங்கடத்தைப் பதியாக வாழ்கிற நித்ய ஸூரிகளை ஒரு விடத்திலே இருக்க வொட்டாமல்
கழுத்தை நெறிப்பது பிடுங்குவதாய்க் கொண்டு ஏதுக்கு நலுங்குகிறீர்;
அடியேனுடைய ஆசார்யன் தொண்டனூர் நம்பி திரு மாளிகையிலே நாள் தோறும் ஶ்ரீவைஷ்ணவர்கள் அமுது செய்தருளின இலை
மாற்றுகிற தொட்டிலே எப்பொழுதும் எடுத்துச் செப்பனிடுகிற கைங்கர்யம் அடியேனதாயிருக்கும்;
அதிலே நாலத்தொன்று தேவர்க்கு தருகிறேன். அந்த பாகவத கைங்கர்யத்திலே அந்வயித்து
*பயிலுஞ்சுடரொளி, *நெடுமாற்கடிமைப் படியே வாழலாம். திருப் பூ மரங்களை பாதியாமல் எழுந்தருள மாட்டீரோ?’ என்று அருளிச் செய்தார்.

அநந்தரம் அங்குத் தானே அந்த ஶ்ரீவைஷ்ணவர்க்கு திருமேனி பாங்கின்றியிலேயாய் மிகவும் தளர்ந்து
அநந்தாழ்வானுடைய திரு மடியிலே கண் வளர, அநந்தாழ்வானும் ஶ்ரீவைஷ்ணவரைப் பார்த்து
‘இப்போது உம்முடைய திருவுள்ளத்தில் ஓடுகிறதேது?’ என்று கேட்க,
அவரும் ‘தொண்டனூர் நம்பி அடியேனுடைய பூர்வாவஸ்தையில் பொல்லாங்கையும் பாராமல் அங்கீகரித்தருளின
அவருடைய திரு மாளிகையில் பின்னாடியை நினைத்துக் கொண்டு கிடக்கிறேன்’ என்று அருளிச் செய்த உடனே திரு நாட்டுக்கு எழுந்தருளினார்.

இத்தால் சொல்லித்தென் என்னில்,
அவருக்கும் திருவேங்கடமுடையான் ஸந்நிதி ஸித்தித்திருக்க, அதில் ஒரு தாத்பர்யமற்று
ஆசார்யன் தம்மை அங்கீகரித்த ஸ்தலமே உத்தேஶ்யமான படி சொல்லிற்று.

————

அந்திமோபாய நிஷ்டை- 7 – நம்பிள்ளை வைபவம் 1

நம்பிள்ளையும் ஶ்ரீபாதத்தில் முதலிகளும் திருவெள்ளறை நாய்ச்சியாரை ஸேவித்து மீண்டு கோயிலுக்கு எழுந்தருளா நிற்க,
திருக் காவேரி இரு கரையும் ஒத்துப் பெருக, ஓடம் கிடையாதபடியாலே தோணியிலே எழுந்தருள,
நட்டாற்றிலே சென்றவாறே அப்போது அஸ்தமித்து மழையும் இருட்டுமாய், அக்கரை இக்கரை முன்னடி தெரியாதே
திக் ப்ரமம் பிறந்து, தோணி அமிழத் தேட, ‘இந்த அவஸ்த்தைக்கு நாலிரண்டு பேர் தோணியை விட்டால் கரையில் ஏறலாம்;
ஒருவரும் விடாதிருக்கில் நம்பிள்ளை முதலாக எல்லாரும் அமிழ்ந்து, தட்டுப் பட்டுப் போகும்’ என்று
தோணி விடுகிறவன் கூப்பிட்டவளவில் ஒருவரும் அதற்கிசைந்து நட்டாறாகையாலே பயாதிஶயத்தாலே தோணியை விட்டார்களில்லை.

அவ்வளவில் ஒரு ஸாத்த்விகை தோணி விடுகிறவனைப் பார்த்து
‘நூறு பிராயம் புகுவாய்! உலகுகளுக்கெல்லாம் ஓருயிரான நம்பிள்ளையைப் பேணிக் கரையிலே விடு’ என்று சொல்லி,
அவனை ஆஶீர்வதித்துத் தோணியை விட்டு அந்தகாரத்தையும் பாராமல் ‘நம்பிள்ளை திருவடிகளே ஶரணம்’ என்று ஆற்றிலே விழுந்தார்.
அவ்வளவு கொண்டு தோணி அமிழாமல் மிதந்து அக் கரையிலே சேர்ந்தேறிற்று.
அவ்வளவில் பிள்ளையும் ‘ஐயோ! ஒராத்மா தட்டுப் பட்டு போய் விட்டதே!’ என்று பல காலும் அருளிச் செய்து வ்யாகுலப் பட்டருள,

அந்த ஸாத்த்விகை யம்மை தோணியை விட்டு நாலடி எழப் போன வளவிலே அங்கே ஒரு திடர் ஸந்திக்கத் தரித்து நின்று,
இராக் குரலாகையாலே அருளிச் செய்கிறத்தைக் கேட்டு
‘பிள்ளையே! தேவர் வ்யாகுலப் பட்டருள வேண்டாம்; அடியேனிங்கே நிற்கிறேன்’ என்று குரல் காட்ட,
பிள்ளையும் ‘திடர்கள் மரங்கள் ஸந்தித்தாக வேணும்’ என்று திருவுள்ளம் பற்றி யருளித் தோணிக் காரனை விட்டு
அவளைக் கரையிலே அழைப்பித்துக் கொள்ள, அவளும் திருவடிகளிலே வந்து ஸேவித்து ஆசார்யனை யொழிந்து
வேறொரு ரக்ஷகாந்தரமறியாதவளாகையாலே
‘ஆற்றிலே அடியேன் ஒழுகிப் போகிற போது தேவர் அங்கே வந்து ஒரு கரை மேடாய் வந்து அடியேனை ரக்ஷித்தருளிற்றே?’ என்று கேட்க,
பிள்ளையும் ‘உன்னுடைய விஶ்வாஸம் இதுவான பின்பு அதுவும் அப்படியே யாகாதோ’ என்று
அருளிச் செய்தருளினார் என்று நம்முடைய ஜீயர் பல காலும் அருளிச் செய்தருளுவர்.

வைஷ்ணவனாயிருப்பானொரு ராஜா ஒரு பெருந்திரள் வருகிறத்தைக் கண்டு
‘நம் பெருமாள் திருவோலக்கம் கலைந்ததோ, நம் பிள்ளை கோஷ்டி கலைந்ததோ’ என்று கேட்டான்.
இப்படி மஹா ஸம்ருத்தியான ஶ்ரீவைஷ்ணவஶ்ரீயோடே நம்பிள்ளை வாழ்ந்தருளுகிற காலத்திலே
ஶ்ரீபாதத்திலே உடையளாயிருப்பாளொரு அம்மையாருக்குத் திருமாளிகைக்கருகே ஒரு கோல் துறை(தரை) உண்டாய்,
அதிலே குடியிருக்கும் ஸப்ரஹ்மசாரியாய் இருப்பாரொரு ஶ்ரீவைஷ்ணவர், ‘பிள்ளை திருமாளிகைக்கு நெருக்கமாயிருக்கிறது,
இந்த ஒரு கோல் துறையையும் ஆசார்யனுக்குக் கொடுக்க வேணும்’ என்று அந்த அம்மையாருக்குப் பல காலும் அருளிச் செய்ய,

அவளும் ‘கோயிலிலே ஒருகோல் துறை ஆர்க்குக் கிடைக்கும், நான் திருவடி சேருந்தனையும் கொடேன்’ என்ன,
ஶ்ரீவைஷ்ணவரும் அந்தச் செய்தியைப் பிள்ளைக்கு விண்ணப்பம் செய்ய,
பிள்ளையும் ‘உனக்கொரு ஶரீரத்துக்கு ஒர் சத்திடமன்றோ வேண்டுவது? முதலிகள் எழுந்தருளியிருக்க
வென்றொரு கோல் துறையையும் நமக்குத் தாரும்’ என்று திருவுள்ளம் பற்றியருள,

அவளும் ‘அடியேன் அப்படிச் செய்கிறேன்; தேவரீர் பரம பதத்திலே ஒருகோல் துறை அடியேனுக்குத் தந்தருள வேணும்’ என்ன,
பிள்ளையும் ‘தந்தோம்’ என்று அருளிச் செய்ய,
‘அடியேன் ஸாது, அதிலே பெண் பெண்டாட்டி, தருகிறோம் என்று அருளிச் செய்த வார்த்தையால் போராது,
எழுதி எழுத்திட்டுத் தர வேணும்’ என்ன,
பிள்ளையும் ‘இவள் இப்படிக்கு கேட்பதே’ என்று மிகவும் திருவுள்ளமுகந்து,
‘இன்ன வருஷம் இன்ன மாஸம் இத்தனையாம் தேதி இந்த அம்மையாருக்குத் திருக் கலிக்கன்றி தாஸன்
பரம பதத்திலே ஒரு கோல் துறை கொடுத்தேன்; இத்தை ஶ்ரீவைகுண்டநாதன் க்ரயம் செலுத்திக் கொண்டு கொடுத்தருளவும்’ என்று
ஶாஸநம் எழுதித் தம்முடைய திருவெழுத்தும் சாத்திக் கொடுத்தருளினார்.

பின்பு அந்த அம்மையார் திரு முகத்தையும் வாங்கிக் கொண்டு தீர்த்த ப்ரஸாதங்களையும் ப்ரஸாதப்பட்டு அன்று
மற்று நாளும் பிள்ளையை ஸேவித்துக் கொண்டு ஸுகமே யிருந்து, மூன்றாம் நாள் பரம பதத்துக்குப் போனாள்.
ஆகையால் உபய விபூதியும் ஆசார்யனிட்ட வழக்காயிருக்குமென்று நம்முடைய ஜீயர் அருளிச் செய்தருளுவர்.

கூரத்தாழ்வானுடைய திருப்பேரனாரான நடுவில் திருவீதிப் பிள்ளை பட்டர்
நம்பிள்ளையுடைய ஜ்ஞான பக்தி வைராக்யங்களையும் பாகவத ஸம்ருத்தியையும், லோக பரிக்ரஹத்தையும்,
ஶிஷ்ய ஸம்பத்தியையும் கண்டு பொறுக்க மாட்டாமல் ‘கடி கடி’ என்று கொண்டு போருவராயிருப்பர்.
அக் காலத்திலே அந்த பட்டர் ராஜ ஸ்தாநத்துக்கு எழுந்தருளா நிற்க, வழியிலே பின்பழகிய பெருமாள் ஜீயரைக் கண்டு,
‘ஜீயா! நாம் ராஜ கோஷ்டிக்கு போகிறோம்; கூட வாரும்’ என்று ஜீயரைக் கூட்டிக் கொண்டு ராஜ ஸ்தானத்துக்கேற எழுந்தருள,
ராஜாவும் பட்டரை எதிர்க் கொண்டு பஹு மாநம் பண்ணி ஆஸநத்திலே எழுந்தருளுவித்து ஸேவித்துக் கொண்டு
பெரிய திருவோலக்கமா யிருக்கிற வளவிலே,

ராஜா, தான் பஹு ஶ்ருதனாகையாலே வ்யுத்பந்நனாகையாலும், பட்டர் ஸர்வஜ்ஞர் என்கிறத்தை ஶோதிக்க வேணும் என்று விசாரித்து,
‘பட்டரே! “ஆத்மாநம் மாநுஷம் மந்யே ராமம் தஶரதாத்மஜம்” என்று பரத்வம் தோற்றாமல் வர்த்திக்கிற பெருமாள்,
ஜடாயு மஹாராஜருக்கு மோக்ஷம் கொடுத்தபடி எப்படி?’ என்று கேட்க,
பட்டர் அதற்கு உத்தரம் அருளிச் செய்யச் சிறிது விசாரிக்க வேண்டி யிருக்க, அவ் வளவில் ராஜாவுக்கு வேறே பராக்காக,
அவ் வளவில் பட்டரும் ஜீயரைப் பார்த்து,
‘ஜீயா! திருக் கலிகன்றி தாஸர் பெரிய வுடையாருக்குப் பெருமாள் மோக்ஷம் கொடுத்தருளினத்தைப் எப்படி நிர்வஹிப்பர்?’ என்று கேட்க,
ஜீயரும் “ஸத்யேந லோகாந் ஜயதி தீநாந் தாநேந ராகவ:” என்று பிள்ளை நிர்வஹிப்பர் – என்ன,

பட்டரும் ‘ஆமோ’ என்று அத்தைத் திருவுள்ளத்திலே யோசித்து, ‘ஒக்கும்’ என்று எழுந்தருளி யிருக்க,
ராஜாவும் அவ்வளவில் திரும்பி, ‘பட்டரே! நாம் கேட்டதற்கு உத்தரம் அருளிச்செய்தீரில்லை’ என்ன,
பட்டரும் ‘நீ பராக்கடித்திருக்க நாம் சொல்லாவதொரு அர்த்தமுண்டோ? அபிமுகனாய் புத்தி பண்ணிக் கேள்’ என்று
“ஸத்யேந லோகாந் ஜயதி தீநாந் தாநேந ராகவ: குரூந் ஶுஶ்ரூஷயா வீரோ தநுஷா யுதி ஶாத்ரவாந்” என்று
இந்த ஶ்லோகத்தை பட்டர் அருளிச் செய்ய,
ராஜாவும் போர வித்தராய், ‘பட்டரே நீர் ஸர்வஜ்ஞர் என்றது நான் அறிந்தேன்’ என்று
ஶிர:கம்பம் பண்ணி மிகவும் ஶ்லாகித்து, மஹாநர்க்கங்களான அநேகாபரணங்கள், உத்தமமான அநேக வஸ்த்ரங்கள்,
அநேக தநங்களெல்லாத்தையும் கட்டிக் கொடுத்துத் தானும் தோற்று, பட்டர் திருவடிகளிலே விழுந்து,
‘நீர் திருமாளிகையிலேற எழுந்தருளும்’ என்று ஸத்கரித்துவிட,

பட்டரும் ராஜா கொடுத்த த்ரவ்யங்களை வாரிக் கட்டுவித்துக் கொண்டு அங்கு நின்றும் புறப்பட்டு
ஜீயர் திருக் கையைப் பிடித்துக் கொண்டு, ‘ஜீயரே! என்னையும் இந்த தநங்களையும் நம்பிள்ளை திருவடிகளிலே
கொண்டு போய்க் காட்டிக் கொடும்’ என்று போர ஆர்த்தியோடே அருளிச் செய்ய,
ஜீயரும் பட்டர் அருளிச்  செய்தபடியே நம்பிள்ளை கோஷ்டியிலே கொண்டுபோய்க் காட்டிக் கொடுக்க,

நம்பிள்ளையும் தம்முடைய பரமாசார்ய வம்ஶ்யரான பட்டர் எழுந்தருளுகையாலே மிகவும் ஆதரித்து,
‘ஐயரே! இது ஏது?’ என்று கேட்டருள, பட்டரும் பிள்ளை திருமுக மண்டலத்தைப் பார்த்து
‘தேவரீருடைய திவ்ய ஸூக்தியில் பதினாயிரம் கோடியில் ஒன்றுக்குப் பெற்ற தநமிதுவாகையாலே
அடியேனையும் இந்த த்ரவ்யங்களையும் அங்கீகரித்தருள வேணும்’ என்ன,

‘ஆகிறதென்? கூரத்தாழ்வானுடைய திருப் பேரனாரான நீர் இப்படிச் செய்ய ப்ராப்தமன்று காணும்’ என்ன,

பட்டரும் ‘நித்ய ஸம்ஸாரியான ராஜா தேவரீருடைய திவ்ய ஸூக்தியிலே சிந்தின சொல்லுக்குத் தோற்றுக் கொடுத்த தநமிது;
ஆன பின்பு கூரத்தாழ்வானுடைய குலத்தில் பிறந்த அடியேன் அந்தக் குல ப்ரபாவத்துக்குத் தகுதியாகும்
தேவருக்கு ஸமர்ப்பிக்கலாவதொன்றும் இல்லையே யாகிலும், அசலகத்தே யிருந்து இத்தனை நாள் தேவரை
இழந்து கிடந்த மாத்ரமன்றிக்கே தேவருடைய வைபவத்தைக் கண்டு
“அஸூயா ப்ரஸவபூ:” என்கிறபடியே அஸூயை பண்ணித் திரிந்த இவ் வாத்மாவை தேவருக்கு ஸமர்ப்பிக்கை யல்லது
வேறு எனக்கொரு கைம்முதலில்லை. ஆகையாலே அடியேனை அவஶ்யம் அங்கீகரித்தருள வேணும்’ என்று
கண்ணும் கண்ணீருமாய்க் கொண்டு பிள்ளை திருவடிகளிலே ஸேவிக்க,

(அமர்யாத ஷூத்ரஸ் சலமதிர் அஸூயாப்ரஸ்வபூ க்ருதக்நோ துர்மாநீ ஸ்மர ப்ரவஸோ வஞ்சன பர ந்ரு ஸ்ம்ஸ பாபிஷ்ட கத மஹமிதோ துக்க ஜலதே அபாராதுத் தீர்ணஸ் தவ பரிசரேயம் சரணயோ—62-

1-அமர்யாத –வரம்பு மீறினவனும் 2-ஷூத்ரஸ் –அற்ப விஷயங்களில் சாபல்யம் உள்ளவனும் 3-சலமதிர் -நின்றவா நில்லா நெஞ்சை உடையவனாயும் 4-அஸூயா ப்ரஸ்வபூ–பொறாமைக்குப் பிறப்பிடமானவனும் 5-க்ருதக்நோ -நன்றி கெட்டவனும் 6-துர்மாநீ –துர் அஹங்காரம் உள்ளவனும் 7-ஸ்மர ப்ரவஸோ –காமத்துக்குப் பரவசப் பட்டவனும் 8-வஞ்சன பர–பிறரை வஞ்சிப்பவனும் சூதனாய்க் கள்வனாகி -திருமாலை -16 சூதினைப் பெருக்கிக் களவினைத் துணிந்து -பெரிய திருமொழி -1-6-3-என்று சொல்லுகிறபடியே- 9-ந்ரு ஸ்ம்ஸ –கொடும் தொழில் புரிபவனும் 10-பாபிஷ்ட –மஹா பாபியுமான பாவமே செய்து பாவியானேன் -பெரிய திரு மொழி -1-9-9- ஒப்பிலாத் தீ வினையேன் -திருவாய் -7-9-4- நானே நாநாவித நரகம் புகும் பாவம் செய்தேன் -பெரிய திருமொழி -1-9-2- அஹம் அஸ்மா அபராதாநாம் ஆலய – ராவணோ நாம துர்வ்ருத்த நீசனேன் நிறை வொன்றும் இலேன் –திருவாய் -3-3-4-என்று அறிவுடையார் தம்தாமை-பேசும்படியான பாபத்திலே நிஷ்டை யுடையவன் – அஹம் இத அபாராத துக்க ஜலதே-அடியேன் இந்த கங்கு கரை அற்ற துன்பக் கடலில் நின்றும் உத்தீர்ணஸ் –கரை சேர்ந்தவனாய் கதம் பரிசரேயம் தவ சரணயோ—உனது திருவடிகளில் எங்கனே கைங்கர்யம் பண்ணப் பெறுவேன் )

பிள்ளையும் பட்டரை வாரி யெடுத்துக் கட்டிக் கொண்டு, விஶேஷ கடாக்ஷம் பண்ணி யருளி, தம்முடைய திரு வுள்ளத்திலே
தேங்கிக் கிடக்கிற அர்த்த விஶேஷங்களெல்லாத்தையும் ஒன்றும், தப்பாமல் பட்டருக்கு ப்ரஸாதித்தருள,
இவரும் க்ருதார்த்தராய், ஒரு க்ஷணமும் பிரியாமல் பிள்ளை ஸந்ததியிலே ஸதாநுபவம் பண்ணி,
ஸேவித்துக் கொண்டு மிகவும் ஹ்ருஷ்டராய் எழுந்தருளியிருந்தார்.

அக் காலத்திலே பிள்ளை ஓருரு திருவாய்மொழி நிர்வஹித்தருள- பட்டர் பிள்ளை யருளிச் செய்ததொன்றும் தப்பாமல் கேட்டு,
தரித்து, எழுதித் தலைகட்டினவாறே, தாமெழுதின க்ரந்தங்களை ஸந்நிதியிலே கொண்டு போய் வைக்க ‘இதேது?’ என்று கேட்டருள,
‘தேவரீர் இந்த உருத் திருவாய்மொழி நிர்வஹித்தருளின கட்டளை’ என்ன,
பிள்ளையும், ‘ஆமோ’ என்றுக் க்ரந்தங்களையும் அவிழ்த்துப் பார்க்க,
நூறாயிரத்து இருபத்தைந்தாயிரம் க்ரந்தமாக எழுதி மஹாபாரத ஸங்க்யை யாயிருக்க, அத்தைக் கண்டு பிள்ளை பெருக்க வ்யாகுலப்பட்டு,
பட்டரைப் பார்த்து, ‘இதுவென்? நம்முடைய அநுமதி யின்றிக்கே நாட்டுக்கு பாட்டுரையாம்படி நீர் நினைத்த படியே
திருவாய்மொழியை இப்படி வெளியிடுவானென்?’ என்ன,

பட்டரும் ‘தேவரீர் அருளிச் செய்த திவ்ய ஸூக்தியை எழுதினதொழிய,
ஒரு கொம்பு சுழி ஏற எழுதினதுண்டாகில் பார்த்தருளும்’ என்ன,

பிள்ளை பட்டரைப் பார்த்து, ‘திருவாய்மொழி நிமித்தமாக நாம் வாக்காலே சொன்னத்தை எழுதினீராகில்,
நம்முடைய நெஞ்சை எழுதப் போகிறீரோ?’ என்று வெறுத் தருளிச் செய்து,
‘உடையவர் காலத்திலே திருக் குருகைப்பிரான் பிள்ளான் திருவாய்மொழிக்கு ஶ்ரீ விஷ்ணு புராண ப்ரக்ரியையாலே
ஆறாயிர க்ரந்தமாக வ்யாக்யாநமிடுகைக்கு உடையவரை அநுமதி பண்ணுவித்துக் கொள்ளுகைக்குட்பட்ட யத்நத்திற்கு ஒரு மட்டில்லை.
ஆன பின்பு நம்முடைய காலத்திலே நம்மையும் கேளாமல் ஸபாத லக்ஷ க்ரந்தமாக இப்படி நெடுக எழுதினால்
ஒரு ஶிஷ்யாசார்ய க்ரமமற்று அஸம்பரதாயமுமாய்ப் போங்காணும்’ என்றருளிச் செய்து,
பட்டர் திருக் கையிலும் அவர் எழுதின க்ரந்தத்தை வாங்கிக் கொண்டு நீரைச் சொரிந்து கரையானுக்குக் கொடுக்க,
அவை அன்றே ம்ருத்தாய்ப் போய்த்து.

(நடுவில் திருவீதிப்பிள்ளை பட்டர் திருநக்ஷத்திரம் : ஐப்பசி அவிட்டம் அவதார ஸ்தலம் : ஸ்ரீரங்கம் ஆசார்யன் : அவருடைய தகப்பனார் (பட்டர்), நம்பிள்ளை சிஷ்யர் : வலமழகியார் பரமபதம் அடைந்த இடம் : ஸ்ரீரங்கம் அவர் எழுதிய நூல்கள் : திருவாய்மொழி 125000 படி வ்யாக்யானம் , பிஷ்ட பசு நிர்ணயம், அஷ்டாக்ஷர தீபிகை, ரஹஸ்ய த்ரயம், த்வய பீடக்கட்டு, தத்வ விவரணம், ஸ்ரீவத்ச விம்சதி முதலியவை

இவர் பராசர பட்டரின் குமாரன் என்றும் பேரன் என்றும் சொல்லப்படுகிறார். இவர் முதலில் உத்தண்டபட்டர் என்று பெயரிடப்பட்டு பிற்காலத்தில் நடுவில் திருவீதிப் பிள்ளை பட்டர் என்று புகழப்பட்டார். பெரிய திருமுடி அடைவு என்னும் நூலில் இவர் பராசர பட்டரின் குமாரன் என்றும், 6000 படி குரு பரம்பரை ப்ரபாவத்தில் இவர் கூரத்தாழ்வானின் பேரன் என்றும் அறியப்படுகிறார். பட்டோலையில் இவர் வேத வ்யாஸ பட்டரின் கொள்ளுப்பேரன் என்றும் அறியப்படுகிறார். இவ்வாறு சில அபிப்ராய பேதங்கள் இருந்தாலும் அவர் நம்பிள்ளையின் அன்பிற்குப் பாத்திரமான சிஷ்யரானார்.

லோகாசார்ய பதாஸக்தம் மத்யவீதி நிவாஸிநம் | ஸ்ரீவத்சசிஹ்னவம்சாப்திஸோமம் பட்டார்யாமாச்ரயே ||-நடுவில் திருவீதிப் பிள்ளை பட்டர் தனியன்)

அந்ந்தரம், பிள்ளை தமக்கு ப்ரிய ஶிஷ்யராய், தம்முடைய பக்கலிலே ஸகலார்த்தங்களையும் நன்றாகக் கற்றிருக்கிற
பெரியவாச்சான் பிள்ளையை நியமிக்க, அவரும் திருவாய்மொழிக்கு ஶ்ரீராமாயண ஸங்க்யையிலே
இருபத்து நாலாயிரமாக ஒரு வ்யாக்யாநம் எழுதினார்.

அதுக்கநந்தரம் பிள்ளைக்கு அந்தரங்கமான வடக்குத் திருவீதிப் பிள்ளை ஓருரு திருவாய்மொழி நிர்வஹிக்கிற கட்டளையை
பகல் கேட்டு தரித்து, ராத்ரியில் எழுதித் தலைக் கட்டினவாறே அத்தைப் பிள்ளை ஸந்நிதியிலே கொண்டு போய் வைக்க,
நம்பிள்ளை ‘இதேது?’ என்று கேட்டருள,

அவரும் ‘தேவரீர் இந்த உரு திருவாய்மொழி நிர்வஹித்த கட்டளை’ என்று விண்ணப்பம் செய்ய,

பிள்ளையும் ஸ்ரீகோஶங்களை அவிழ்த்து பார்த்தருள, அதிஸங்கோசமுமின்றிக்கே, அதிவிஸ்தரமுமின்றிக்கே
ஆனைக் கோலம் செய்து புறப்பட்டாப் போலே மிகவும் அழகாய், ஶ்ருத ப்ரகாஶிகை கட்டளையிலே
முப்பத்தாறாயிர க்ரந்தமாயிருக்கையாலே நம்பிள்ளை அத்தைக் கண்டு மிகவும் உகந்தருளி,
வடக்கு திருவீதிப் பிள்ளையைப் பார்த்தருளி
‘நன்றாக எழுதினீர்; ஆனாலும் நம்முடைய அநுமதி யின்றிக்கே எழுதினீராகையாலே க்ரந்தங்களைத் தாரும்’ என்று
அவர் திருக் கையில் நின்றும் வாங்கி வைத்துக் கொண்டு

பின்பு தமக்கு அபிமத ஶிஷ்யரான ஶ்ரீமாதவப் பெருமாள் என்று திருநாமத்தை யுமுடையரான
ஈயுண்ணிச் சிறியாழ்வார் பிள்ளைக்கு ஈடு முப்பத்தாறாயிரமும் கொடுத்தருளினார் என்னும்,
இவ் வ்ருத்தாந்தம் உபதேசரத்தின மாலையிலே
“சீரார் வடக்குத் திருவீதிப் பிள்ளை எழுதேரார் தமிழ் வேதத்தீடுதனைத் தாருமென வாங்கி முன்
நம்பிள்ளை ஈயுண்ணி மாதவர்க்குத் தாம் கொடுத்தார் பின்னதனைத்தான்” என்று
நம்முடைய ஜீயர் தாமே அருளிச் செய்தருளினார்.
ஆகையாலே இன்னமும் திருவாய்மொழிக்குண்டான வ்யாக்யாந கட்டளைகள் எல்லாம்
உபதேச ரத்தின மாலையிலே தெளியக் காணலாம்.

ஆக இப்படி நம்பிள்ளை அவதரித்து நெடுங்காலம் ஜகத்தை வாழ்வித்தருளின அநந்தரம் திருநாட்டுக்குக்கெழுந்தருளினார்.
அவர் திருவடிகளிலே ஆஶ்ரயித்த முதலிகளெல்லாரும் திருமுடி விளக்குவித்துக் கொள்ள,
நடுவில் திருவீதிப் பிள்ளை பட்டருக்கு நேரே ப்ராதாவாய் இருப்பாரொருவர் பட்டரைப் பார்த்து
‘திருக்கலிகன்றி தாஸர் பரம்பத ப்ராப்தி பண்ணினதுக்கு எங்கள் கூரகுலத்திலே பிறந்த நீர் தலை
ஷௌரம் பண்ணிக் கொண்டது கூரகுலத்துக்கு இழுக்கன்றோ?’ என்ன,

பட்டரும் அவரைப் பார்த்து ‘அப்படியாம்; உங்கள் கூர குலத்துக்கு இழுக்காகப் பிறந்தேனே’ என்ன,

அவரும் பட்டரைப் பார்த்து, ‘ஏன் வ்யதிரேகம் சொல்லுகிறீர்?’ என்ன,

பட்டரும் ‘நம்பிள்ளை திருநாட்டுக்கு எழுந்தருளினால் அவர் திருவடிகளிலே ஆஶ்ரயித்த நான்
கூர குலத்தில் பிறந்தேனாகில் ஆழ்வானுடைய ஶேஷத்வத்துக்குத் தகுதியாக தாஸ க்ருத்யமான
மோவாயும் முன் கையும் வபநம் பண்ணுவித்துக் கொள்ள வேண்டி யிருக்க,
அத்தைச் செய்யாதே ஶிஷ்ய புத்ரர்களுடைய க்ருத்யமான தலை மாத்ரம் ஷௌரம் செய்வித்துக் கொண்டது
உங்களுடைய கூரக் குலத்துக்கு இழுக்கன்றோ பின்னை?’ என்ன,

அந்த ப்ராதாவானவர் பட்டரைப் பார்த்து ‘உம்முடைய திருக் கலிகன்றி தாஸர் போய் விட்டாரே!
இனி உமக்கு அவர் பக்கல் எத்தனை நாள் உபகார ஸ்ம்ருதி நடக்கும்?’ என்ன,

பட்டரும் ‘நம்பிள்ளை திருவடிகளில் உபகார ஸ்ம்ருதி அடியேனுக்கு யாவதாத்மபாவி நடக்கும்’ என்ன,

அந்த ப்ராதாவானவர் பட்டர் அருளிச் செய்கிறதைக் கேட்டு ‘‘உபகார ஸ்ம்ருதி ஆசார்ய விஷயத்தில் யாவதாத்மபாவியோ?
இதொரு அர்த்த விஶேஷமிருந்த படி என்!’ என்று, பெரிய வித்வானாகையாலும், குல ப்ரபாவத்தாலும் தெளிந்து, போர வித்தராய்,
பட்டர் திருவடிகளிலே திருந்தி, தமக்கு வேண்டும் அர்த்த விஶேஷங்களெல்லாம் கேட்டுக் கொண்டு
ஜ்ஞாநாதிகராய் விட்டார் என்று நம்முடைய ஜீயர் அருளிச் செய்தருளுவர்.

சிலர் ஶ்ரீபாஷ்யத்தை எப்படியிருக்குமென்று சிலரைக் கேட்க, அவர்கள் சொன்னபடி –
நடுவில் திரு வீதியிலே அந்தியம் போதாக, பழுத்த வேஷ்டியும் உத்தரீயமுமாக தரித்துக் கொண்டு
கூரத்தாழ்வான் என்றொரு மூர்த்தீகரித்து ஸஞ்சரியா நிற்கும்;
அங்கே சென்றால் ஶ்ரீபாஷ்யத்தைக் கண்ணாலே காணலாம் என்றார்கள்.

(தாமரை நீள் வாசத் தடம் போல் வருவானே -ஆழ்வார்-பழுத்த வேஷ்டியும்-செங்கல் பொடிக்கூரை வெண் பல் தவத்தவர்)

சிலர் பகவத் விஷயம் எங்கே கேட்கலாம் என்று சிலரைக் கேட்க, அவர்கள் சொன்ன படி –
நடுவில் திருவீதியிலே பட்டர் என்பதொரு தேன் மா பழுத்து நிற்கிறது. அங்கே சென்று நன்றாகப் பார்த்து,
கல்லிட்டெறியாதே, ஏறித் துகையாதே, அடியிலே இருக்க மடியிலே விழும் என்றார்கள்.

பட்டருக்கு அதி பால்யமாயிருக்கச் செய்தே, ‘ஸர்வஜ்ஞன் வந்தான்’ என்று ஒருவன் அநேக ஸம்ப்ரமத்தோடே விருதூதி வர,
பட்டர் அவனைப் பார்த்து ‘நீ ஸர்வஜ்ஞனோ?’ என்ன,

அவனும் ‘நாம் ஸர்வஜ்ஞனாம்’ என்ன,

பட்டர் இரண்டு திருக் கையாலும் கிடந்த புழுதியை அள்ளி அவனைப் பார்த்து ‘இது எத்தனை என்று சொல்’ என்ன,
அவன் அதுக்கு ஒன்றும் சொல்ல மாட்டாமல் லஜ்ஜித்து வாயடைத்து, கவிழ்தலையிட்டு நிற்க,

பட்டர் ‘உன்னுடைய ஸர்வஜ்ஞனென்கிற விருதையும் பொகடு’ என்ன,
அவனும் அவை எல்லாத்தையும் பொகட்டு ‘உமக்கு தோற்றேன்’ என்ன,

பட்டர் அவனைப் பார்த்து ‘கெடுவாய்! இது ஒரு கைப் புழுதி என்று சொல்லி ஸர்வஜ்ஞன் என்று விருதூதித் திரிய மாட்டாதே
அஜ்ஞனாய் விட்டாயே! இனிப் போ’ என்று அவனை பரிபவித்துத் தள்ளி விட்டார்.

பாஷண்டி வித்வான்கள் அநேக பேருங்கூடி ராஜாஸ்தானத்திலே சென்று ராஜாவுடனே தப்த முத்ரா தாரணத்துக்கு
ப்ரமாணமில்லை என்று ப்ரதிஜ்ஞை பண்ண, ராஜாவும் மஹா ஸமர்த்தனாயிருக்கையாலே
இத்தை நன்றாக அறிய வேணும் என்று பட்டரைப் பார்த்து
‘பட்டரே! தப்த முத்ராதாரணத்துக்கு ப்ரமாணமுண்டோ?’ என்ன,

அவரும் ‘நன்றாக உண்டு’ என்ன,

‘உண்டாகில் காட்டிக் காணீர்’ என்ன,

பட்டர் ‘என் தோளைப் பாரீர்’ என்று திருத் தோளும் திரு விலச்சினைகளையும் ராஜாவுக்கு காட்ட,
ராஜாவும் ‘அப்படியே ஆம்; ஸர்வஜ்ஞரான பட்டர் செய்ததே ப்ரமாணம்’ என்று தானும் விஶ்வஸித்து,
ப்ரமாணமில்லை என்ற பாஷண்டிகளையும் வாயடைப்பித்துத் தள்ளி ஓட்டி விட்டார் என்று
இவ் வ்ருத்தாந்தங்களெல்லாம் பெரியோர்கள் அருளிச் செய்வார்கள்.

ஆகையாலே
‘மட்டவிழும் பொழில் கூரத்தில் வந்துதித்து இவ்வையமெல்லாம் எட்டுமிரண்டும் அறிவித்த எம்பெருமான் இலங்கு
சிட்டர் தொழும் தென்னரங்கேசர் தம் கையில் ஆழியை நானெட்டன நின்ற மொழி ஏழுபாருமெழுதியதே” என்று
இந்த திருநாமமும், ஶ்ருதி வாக்யமும்
“விதாநதோ ததாந: ஸ்வயமேநாமபி தப்த சக்ர முத்ராம், புஜயேவமமைவ பூ ஸுராணாம் பகவல் லாஞ்சந் தாரணே ப்ரமாணம்” என்று
பட்டர் தாமருளிச் செய்த இந்த ஶ்லோகமும் லோகத்திலே ப்ரஸித்தமாய்த்து.

இவ் வ்ருத்தாந்தங்களால் சொல்லிற்று ஏதென்னில்
இவர்கள் எல்லாதனைலும் பெரியோர்களே யாகிலும் ஒருவனுடைய அபிமாநத்திலே ஒதுங்குகையாலே
ஸர்வர்க்கும் ஆசார்யாபிமாநமே உத்தாரகம் என்னும் அர்த்தம் சொல்லித்தாயிற்று.

———-

அந்திமோபாய நிஷ்டை- 8 – ஆனி திரு மூலம் –
ரம்ய ஜாமாத்ருவும் (ஸ்ரீரங்க நாதன்) ரம்ய ஜாமாத்ரு முனியும் (மா முனிகள்)

மலைக் குனிய நின்ற பெருமாள் என்னும் திரு நாமத்தை யுடையராய் -இப்போது தர்ஶநத்துக்குக் கர்த்தாவாய்க்
கோயிலிலே நித்ய வாஸமாக எழுந்தருளி யிருக்கிற பட்டருடைய திருத் தகப்பனார்- நம்முடைய ஜீயருக்குத்
திருவாய்மொழி ஈடு முப்பத்தாறாயிரமும் நன்றாக பாடமுமாய்,
மற்றுமுள்ள வ்யாக்யாநங்களெல்லாம் பாட ப்ராயமுமாயிருக்கையாலே ‘முப்பத்தாறாயிர பெருக்கர்! இங்கே வாரும்’ என்று
நம்முடைய ஜீயரைத் தம்முடைய அருகே அணைத்துக் கொண்டு மிகவும் ப்ரியப்பட்டு உபலாலிப்பர்.

அவ்வளவன்றிக்கே
“நல்லதோர் பரீதாபி வருடந்தன்னில் நலமான ஆவணியின் முப்பத்தொன்றில் சொல்லரிய சோதியுடன் விளங்கு
வெள்ளிக் கிழமை வளர் பக்கம் நாலாம் நாளில் செல்வ மிகு திருமண்டபத்தில் செழுந் திருவாய் மொழிப் பொருளைச்
செப்புமென்று வல்லியுடை மணவாளரரங்கர் நங்கள் மணவாள முனிக்கு வழங்கினாரே” என்கிறபடியே
பரீதாபி வருஷத்தில் ஆவணி மாஸத்தில் பெருமாள் திருப் பவித்திரத் திருநாள் எழுந்தருளி
அணி யரங்கன் திரு முற்றத்திலே பெரியோர்களெல்லோரும் கூடிப் பெரிய திரு வோலக்கமாகத் தம்மை ஸேவித்து
மங்களாஶாஸநம் பண்ணிக் கொண்டு நிற்கிற வளவிலே பெருமாள் தாமே நம்முடைய ஜீயரைத் தனித்து அருளப் பாடிட்டருளி,
ஶ்ரீ ஶடகோபனையும் தீர்த்த ப்ரஸாதங்களையும் ப்ரஸாதித்தருளி,
‘நம்முடைய பெரிய திரு மண்டபத்திலே நாளை தொடங்கித் திருவாய்மொழி ஈடு முப்பத்தாறாயிரமும் நீர் ஓருரு நிர்வஹியும்’ என்று
திருவாய் மலர்ந்தருளி, பெருமாள் தாமும் நாச்சிமார்களும் ஸேநை முதலியாரும் ஆழ்வார் எதிராசனுடனே
பெரிய திரு மண்டபத்திலே பெரிய திருவோலக்கமாக எழுந்தருளி யிருந்து நம்முடைய பெரிய ஜீயரைத்
திருவாய்மொழி நிர்வஹிக்கும்படி பெருமாள் திருவுள்ளம் பற்றி யருளினார்.

ஆகையாலே ஒரு ஸம்வத்ஸரம் ஒரு விக்நமற அவ் விடத்திலே திருவாய்மொழி ஈடு முப்பத்தாறாயிரம் முதலாக
ஐந்து வ்யாக்யாநத்துடனே நடந்து, மீளவும் ஆ(னி)வணி மாஸத்திலே திருவாய்மொழி சாற்றுகிற போது
முன்பு போலே அனைத்துப் பரிகரத்துடனே கூடப் பெரிய திருமண்டபத்திலே பெருமாள் ஏறி யருளி(ஜீயர்)
திருவாய்மொழி சாற்றுகிற கட்டளையும் திருச் செவி சாற்றி யருளி, பெருமாள் மிகவும் திருவுள்ளமுகந்தருளி,
ஜீயரையும் நன்றாகப் பரிபாலித்தருளினார் என்னுமதுவும் ஜகத்ப்ரஸித்தம்.

ஆகையாலே
“நாமார் பெரிய திருமண்டபமார் நம்பெருமாள் தாமாக நம்மைத் தனித்தழைத்து நீ மாறன்
செந்தமிழ் வேதத்தின் செழும் பொருளை நாளுமிங்கே வந்துரை என்றேவுவதே வாய்ந்து” என்று
நம்முடைய ஜீயர் தாமும் தமக்குப் பெருமாள் செய்தருளின க்ருபாதிஶயத்துக்கும்
தம்மை விநியோகம் கொண்டருளின வ்யாவ்ருத்திக்கும் உபகார ஸ்ம்ருதி பண்ணி யருளினார்.

‘வலம்புரி யாயிரம் சூழ் தர வாழி மருங்கொளுரு செலம் செல நின்று முழங்குக போல் தனது தொண்டர்
குலம் பல சூழ் மணவாள மா முனி கோயிலில் வாழ நலங்கடல் வண்ணன் முன்னே தமிழ் வேதம் நவிற்றனனே.–என்றும்
தாராரரங்கரிதற்கு முன்னாள் தந்தாமளித்தார் சீரார் பெரிய திருமண்டபத்துச் சிறந்தாய் என்
ஆராவமுதனையான் மணவாள மா முனியை யழைத்து ஏரார் தமிழ் மறை இங்கே யிருந்து சொல் என்றனனே” என்று
இத்யாதிகளாலே
நம்முடைய முதலிகளும் ஜீயருடைய ஶிஷ்ய ஸம்ருத்தியையும் பெருமாள் ஆர்க்கும் செய்யாத ஆதரம்
ஜீயருக்குச் செய்தருளினார் என்னுமத்தையும் அநுஸந்தித்தார்கள்.

இப்போது ஸ்வாசார்ய வைபவமும் சொல்லுவானென் என்னில்,
“குரும் ப்ரகாஶயேந் நித்யம்”,
“எண்டிசையும் அறிய இயம்புகேன் ஒண்டமிழ்ச் சடகோபனருளையே”,
“வக்தவ்யம் ஆசார்ய வைபவம்” என்னக் கடவதிறே.

ஒரு நாள் நம்பிள்ளை பகவத் விஷயம் அருளிச் செய்த கோஷ்டி கலைந்த வளவிலே பின்பழகிய பெருமாள் சீயர் தண்டனிட்டு
‘இவ் வாத்மாவுக்கு ஸ்வரூபோபாய- புருஷார்த்தங்கள் இவை என்று அருளிச் செய்ய வேணும்’ என்று விண்ணப்பம் செய்ய,
பிள்ளையும் ‘எம்பெருமா(னாரு)னுடைய இச்சை ஸ்வரூபம், இரக்கம் உபாயம், இனிமை உபேயம்’ என்று அருளிச் செய்ய,
‘அப்படி யன்று அடியேன் நினைத்திருப்பது’ என்று ஜீயர் விண்ணப்பம் செய்ய,
பிள்ளை ‘ஆனால் உமக்கென்ன சில பிள்ளைக் கிணறுகளுண்டோ? அத்தைச் சொல்லிக் காணீர்’ என்ன,
‘தேவர் திருவடிகளிலே ஆஶ்ரயித்திருக்கும் ஶ்ரீவைஷ்ணவர்களுக்கு அடிமையாய் இருக்கை ஸ்வரூபம்,
அவர்களபிமாநமே அடியேனுக்கு உபாயம்,
அவர்களுடைய முக மலர்ச்சியே அடியேனுக்கு உபேயம் என்றிருப்பேன்’ என்று விண்ணப்பம் செய்ய,
பிள்ளையும் ஜீயரை உகந்தருளினார்.

———

அந்திமோபாய நிஷ்டை- 9 – நம்பிள்ளை வைபவம் 2

நம்பிள்ளை காலத்திலே முதலி யாண்டானுடைய திருப் பேரனார் கந்தாடை தோழப்பர் நம்பிள்ளை யுடைய வைபவத்தைக் கண்டால்
அஸூயையாலே பொறுக்க மாட்டாமல் இருப்பதாய், தோழப்பர் ஒரு நாள் கோயிலுக்குள்ளே பெருமாளை ஸேவித்துக் கொண்டெழுந்தருள,
நம்பிள்ளையும் முதலிகளும் பெருமாளை ஸேவிப்பதாகப் பெருந்திரளோடு கோயிலுக்குள்ளே எழுந்தருள,
தோழப்பர் அந்த ஸம்ருத்தியைக் கண்டு பொறுக்கமாட்டாமல் சீறிப் பெருமாள் ஸந்நிதியிலே நம்பிள்ளையை அநேகமாகப் பரிபவிக்க,
நம்பிள்ளையும் அத்தைக் கேட்டு நடுங்கிக் கொண்டு பெருமாளை ஸேவித்துப் புறப்பட்டெழுந்தருள,

அந்தச் செய்தியை ஜ்ஞாநாதிகையாயிருக்கிற தோழப்பர் தேவிகள் கேட்டுப் பெருக்க வ்யாகுலப்பட்டுத்
திருமாளிகைக்குள்ளே செய்கிற கைங்கர்யங்களையும் விட்டு, வெறுத்தருளி யிருக்க,
அவ்வளவிலே தோழப்பரும் பெருமாளை ஸேவித்து மீண்டு திருமாளிகைக்கெழுந்தருள,
தேவிகள் முன்பு போலே எதிரே புறப்பட்டு ப்ரியத்துடனே தமக்கொரு கைங்கர்யங்களும் பண்ணாமையாலே
தோழப்பர் தம்முடைய தேவிகளைப் பார்த்து ‘உன்னை நாம் அங்கீகரித்தவன்று தொடங்கி இன்றளவாக
ஆசார்ய ப்ரதிபத்தி பண்ணிக்கொண்டு போந்தாய், இன்று உதாஸீநரைப்போலே இராநின்றாய். இதுக்கடி ஏது?’ என்று கேட்க,

தேவிகள் தோழப்பரைப் பார்த்து, ‘வாரீர்! ஆழ்வார் தம்முடைய அவதாரம் போலே ஒரு அவதார விஶேஷமாய்,
பெருமாளுக்கு ப்ராண பூதராயிருந்துள்ள நம்பிள்ளையைப் பெருமாள் ஸந்நிதியிலே கூசாமல் அநேகமாகப் பரிபவித்து
இப்படிச் செய்தோம் என்கிற பயாநுதாபங்களுமற்று, உஜ்ஜீவிக்க வந்திருக்கிற உம்மோடு எனக்கென்ன ஸம்பந்தமுண்டு?
நீர் என்னை வெறுத்தாராகில் என்னுடைய மாதா பிதாக்கள் உம்முடைய கையில் காட்டித் தந்த என்னுடைய ஶரீரத்தை
உமக்கு வேண்டினத்தைச் செய்து கொள்ளும்.
என்னுடைய ஆத்மாவை எங்களாசார்யர் அடியிலே அங்கீகரித்தருளினவன்றே நான் உஜ்ஜீவித்தேன்,
ஆகையாலே ‘பத்மகோடிஶதேநாபி நக்ஷமாமி கதாசந’ என்று பாகவத நிந்தை பண்ணினவர்களை
ஒரு காலும் க்ஷமிப்பதில்லை என்று பெருமாள் தாமே அருளிச் செய்த திருமுகப் பாசுரத்தை அறிந்தும்,
அறியாதவராயிருக்கிற உம்மோடு எனக்கு ஸஹ வாஸம் கூடாது; ஆகையாலே நான் என் இஷ்டத்திலே இருந்து ஈடேறிப் போகிறேன்” என்ன,

தோழப்பரும் தேவிகள் சொல்லுகிற வார்த்தைகளைப் கேட்டும் சற்று போதிக்கும் திகைத்து எழுந்தருளி யிருந்து,
பெரிய வித்வானாகையாலும், குல ப்ரபாவத்தாலும் அஸூயையால் வந்த திருவுள்ளத்தில் வந்த கலக்கம் போய்,
தெளிந்து தேவைகளைப் பார்த்து ‘நீ சொன்னதெல்லாம் ஒக்கும்; நாம் தப்பும் செய்தோம். இனிமேல் செய்ய அடுக்குமது ஏது?’ என்ன,

தேவிகளும் ‘ஆற்றிலே கெடுத்துக் குளத்திலே தேடாதே கொள்ளீர். கெடுத்த விடத்தில் தேடீர்’ என்ன,

தோழப்பரும் ‘அதுக்குப் பொருள் ஏது?’ என்ன,

தேவிகள் ‘பரம க்ருபையாளரான நம்பிள்ளை திருவடிகளிலே சென்று ஸேவித்து, அவரை க்ஷாமணம் பண்ணுவித்துக் கொண்டு
அவர் க்ருபை பண்ணியருள ஈடேறுவீர்’ என்ன,

தோழப்பரும் ‘நான் இப்போது அவரை மஹத்தான பெருமாள் திருவோலக்கத்திலே பரிபவித்து
இப்போது அவர் ஸந்நிதியிலே போய் நிற்க வென்றால் எனக்கு லஜ்ஜாபயங்கள் வர்த்தியா நின்றது;
நீ கூட வந்து க்ஷமிப்பிக்க வேணும்’ என்ன,

தேவிகள், தோழப்பர் அருளிச் செய்கிறத்தைக் கேட்டு ‘அப்படியே செய்கிறேன்’ என்று கடுக எழுந்திருந்து
அவரையும் கூட்டிக் கொண்டு நம்பிள்ளை திருமாளிகைக்கு எழுந்தருளுவதாகப் புறப்படுகிற வளவிலே

நம்பிள்ளை செய்தபடி –
கோயிலுக்கு [கோயிலிலிருந்து] எழுந்தருளின பின்பு முதலிகளெல்லாரையும் ‘உங்களிடங்களிலே போங்கோள்’ என்றருளிச் செய்து,
பகலெல்லாம் அமுது செய்தருளாமல் தம்முடைய திருமாளிகை யளவிலே எழுந்தருளி யிருந்து,
போது அஸ்த்தமித்தவாறே ஒத்த {ஒற்றைத்} திருப் பரிவட்டத்துடனே முட்டாக்கிட்டுக் கொண்டு தாம் ஒருவருமே எழுந்தருளி,
கந்தாடை தோழப்பர் திருமாளிகை வாசலிலே கைப் புடையிலே வந்து கண் வளர்தருள,

தோழப்பரும் தேவிகளும் திரு விளக்கையும் ஏற்றிக் கொண்டு பிள்ளை திருமாளிகைக்கு எழுந்தருளுவதாகத் திருமாளிகை வாசலிலே
புறப்பட்ட வளவிலே திரு விளக்கொளியிலே ஒரு வெள்ளை கைப் புடையிலே கிடக்கிற அத்தைக் கண்டு
தோழப்பர் ‘இங்கு ஆர் கிடக்கிறார்?’ என்று கேட்க,

பிள்ளை ‘அடியேன் திருக்கலிக்கன்றி தாஸன்’ என்ன,

அவ்வளவில் தோழப்பர் ‘இதுவென்? நீரிருந்தபடியென்?’ என்று திகைத்து, பிள்ளையைப் பார்த்து,
‘மஹா தேஜஸ்வியான நம்மைப் பெருமாள் திரு வோலக்கத்திலே பரிபவிக்கலாவதே என்கிற கோபாதிஶயத்தாலே
நம்முடைய வாசலிலே மூர்க்கம் செய்வதாக வந்து கிடக்கிறீரோ?’ என்ன,

பிள்ளை தோழப்பரைப் பார்த்து ‘அடியேன் அப்படிச் செய்யவில்லை’ என்ன,

‘ஆகில் இங்கு வந்தது கிடப்பானென்?’ என்ன,

பிள்ளை அருளிச் செய்தபடி – ‘பெரிய பெருமாள் ஸந்நிதியிலே முதலியாண்டானுடைய திருப் பேரனாரான தேவரீர்
திரு வுள்ளம் கலங்க வர்த்தித்த மஹா பாபியான அடியேனுக்கு தேவர் திருவாசலல்லது புகுவாசல் மாண்டு வந்து கிடக்கிறேன்’ என்ன,

இவரை அநுவர்த்திப்பதாகப் புறப்பட்டு வந்து நிற்கிற தோழப்பரும் பிள்ளை கண் வளர்ந்தருளுகிற தைந்யத்தையும் கண்டு,
அவருடைய நைச்யமான வார்த்தைகளையும் கேட்டு ‘இதோர் அதிகரமிருந்தபடி என்!’ என்று போர வித்தராய்,
பிள்ளையை வாரி எடுத்தணைத்துக் கட்டிக் கொண்டு ‘இத்தனை நாளும் நீர் சிறிது பேருக்கு ஆசார்யர் என்றிருந்தேன்;
இப்போது லோகத்துக்கெல்லாம் நீரே ஆசார்யராகைக்கு ப்ராப்தர் என்றறிந்தேன் என்று –
‘லோகாசார்யர்’ என்று தோழப்பர் உகந்து பிள்ளைக்கு திருநாமம் சாற்றி, தம்முடைய திருமாளிகைக்குள்ளே கொண்டு புக்கு,
தாமும் தேவிகளுமாகப் பிள்ளையை அநேகமாக அநுவர்த்தித்து அவர் திருவுள்ளத்தையும் நன்றாக உகப்பித்துத்
தமக்கு வேண்டும் அர்த்த விஶேஷங்களெல்லாம் பிள்ளை திருவடிகளிலே கேட்டுக் கொண்டு
தோழப்பரும் மிகவும் க்ருதார்த்தரானார் என்று இவ்வ்ருத்தாந்தம்
“துன்னு புகழ்கந்தாடை தோழப்பர் தம்முகப்பால் என்ன உலகாரியனோ என்றுரைக்கப் பின்னை
உலகாரியனென்னும் பேர் நம்பிள்ளைக்கோங்கி விலகாமல் நின்றதென்றும் மேல்” என்று
உபதேசரத்தினமாலையிலே நம்முடைய ஜீயர் அருளிச் செய்தருளினார்.

‘நெஞ்சத்திருந்து நிரந்தரமாக நிரயத்துய்க்கும்
வஞ்சக் குறும்பின் வகை யறுத்தேன் மாய வாதியர் தாம்
அஞ்சப் பிறந்தவன் சீமாதவனடிக் கன்பு செய்யும்
தஞ்சத்தொருவன் சரணாம் புயமென் தலைக்கணிந்தே” ,

“நமாமி தௌ மாதவ ஶிஷ்ய பாதௌ யத் ஸந்நிதிம் ஸுக்தி மயீம் ப்ரவிஷ்டா: |
தத்ரைவ நித்யம் ஸ்திதி மாத்ரியந்தே வைகுண்ட ஸம்ஸார விரக்த சித்தா: ||

ஶ்ருத்வாபி வார்த்தாஞ்ச யதீய கோஷ்ட்யாம் கோஷ்ட்யந்தராணாம் ப்ரதமாபவந்தி|
ஶ்ரீமத் கலி த்வம்ஸந்த தாஸ நாம்நே தஸ்மை நமஸ் ஸூக்தி மஹார்ணவாய” –என்றிறே
நம்பிள்ளை யுடைய வைபவம் இருப்பது.

இப்படி லோகாசார்யர் என்று திருநாமத்தை யுடையரான நம்பிள்ளைக்கந்தரங்க ஶிஷ்யரான வடக்குத் திருவீதிப் பிள்ளை
தாமும் தேவிகளும் விரக்தராய்க் கொண்டு எழுந்தருளி யிருந்து நம்பிள்ளைக்கு ஸர்வ தேஶ ஸர்வ கால ஸர்வாவஸ்தைகளிலும்
ஸர்வ வித கைங்கர்யங்களும் பண்ணிக் கொண்டு எழுந்தருளியிருக்கிற காலத்திலே
ஒரு நாள் நம்பிள்ளை வடக்குத் திருவீதிப் பிள்ளை திருமாளிகைக்கெழுந்தருள,
அங்குள்ளாரெல்லாரும் பிள்ளை திருவடிகளிலே வந்து தண்டனிட, அப்போது வடக்குத் திருவீதிப் பிள்ளை தேவிகள்
ஈரப் புடவையுடனே தண்டனிட்டு நிற்க,

நம்பிள்ளை அருகு நிற்கிற ஸ்த்ரீ ஜனங்களைப் பார்த்து ‘இந்தப் பெண் ஈரப் புடவையுடன் நிற்பானென்?’ என்ன,
அவர்கள் சொன்னபடி – ‘நாலு நாளும் தூரஸ்தையாயிருந்து இப்போது தீர்த்தமாடி வந்து தேவர் திருவடிகளிலே ஸேவிக்கிறாள்’ என்ன,

அவ்வளவில் நம்பிள்ளை மிகவும் திருவுள்ளம் உகந்து அவளை ‘பெண்ணே! இங்கே வாரும்’ என்றழைத்துத்
தம்முடைய திருக் கையாலே அவளுடைய திரு வுதரத்தை ஸ்பர்ஶித்து
‘என்னைப் போலே ஒரு பிள்ளையைப் பெறுவாயாக’ என்று திருவுள்ளம் பற்றி யருளினார்.

ஆகையாலே அத்தைக் கண்டு அதுக்குப் பின்பு வடக்குத் திருவீதிப் பிள்ளை தமக்குக் குமாரர் உண்டானால்
ஆசார்யன் திருவுள்ளத்துக்கு உகப்பாம் என்றறிந்து ததுநுகுணமாக வர்த்திக்க, தத் ஸம்வத்ஸரத்திலே அவருடைய தேவிகள்
திரு வயிறு வாய்த்து குமாரர் திரு வவதரிக்க, அந்தக் குமாரரை லோகாசார்யர் என்று
ஆசார்யரான நம்பிள்ளை யுடைய திருநாமம் சாற்றி யருளினார்.

இப்படி நம்பிள்ளை யுடைய அருளாலே திருவவதரித்து வடக்குத்திருவீதிப்பிள்ளை குமாரரான பிள்ளை லோகாசார்யரும்
தம்முடைய பரம க்ருபையாலே ஸகலாத்மாக்களும் உஜ்ஜீவிக்க வேணும் என்று திருவுள்ளம் பற்றி யருள,
தத்வ த்ரய, ரஹஸ்ய த்ரய, ஶ்ரீவசந பூஷணம் முதலாக அநேக ப்ரபந்தங்கள் இட்டருளினார்.

(பிள்ளை லோகாசார்யர் திருநக்ஷத்ரம்: ஐப்பசி திருவோணம் அவதார ஸ்தலம்: திருவரங்கம் ஆசார்யன்: வடக்குத்திருவீதிப்பிள்ளை ஶிஷ்யர்கள்: கூரகுலோத்தம தாஸர், விளாஞ்சோலைப் பிள்ளை ,திருவாய்மொழிப் பிள்ளை, மணப்பாக்கத்து நம்பி ,கோட்டூர் அண்ணர், திருப்புட்குழி ஜீயர், திருக்கண்ணங்குடி பிள்ளை, கொல்லி காவல தாஸர் மற்றும் பலர். பரமதித்த இடம்: ஜ்யோதிஷ்குடி (மதுரை அருகிலே) அருளிச்செய்தது: யாத்ருச்சிக படி, ஶ்ரிய:பதி படி, முமுக்ஷுப்படி, பரந்த படி, தனி ப்ரணவம், தனி த்வயம், தனி சரமம், அர்த்த பஞ்சகம், தத்வ த்ரயம், தத்வ ஶேகரம், ஸார ஸங்க்ரஹம், அர்ச்சிராதி , ப்ரமேய ஶேகரம் , ஸம்ஸார ஸாம்ராஜ்யம், ப்ரபன்ன பரித்ராணம், நவரத்ன மாலை, நவ வித ஸம்பந்தம், ஸ்ரீ வசன பூஷணம் மற்றும் பல

லோகாசார்யாய குரவே க்ருஷ்ண பாதஸ்ய ஸூநவே ஸம்ஸார போகி ஸந்தஷ்ட ஜீவ ஜீவாதவே நம:-பிள்ளை லோகாசாரியரின் தனியன்: வாழி உலகாசிரியன் வாழி அவன் மன்னுகுலம் வாழி முடும்பை என்னும் மாநகரம் வாழி மனம் சூழ்ந்த பேரின்ப மால்மிகு நல்லார் இனம் சூழ்ந்து இருக்கும் இருப்பு .

அத்திகிரி அருளாளர் அனுமதியோன் வாழியே ஐப்பசியில் திருவோணத்தவதரித்தான் வாழியே முத்திநெறி மறைத்தமிழால் மொழிந்தருள்வோன் வாழியே மூதரிய மணவாளன் முன்புதித்தான் வாழியே நித்தியம் நம்பிள்ளைபதம் நெஞ்சில் வைப்போன் வாழியே நீள் வசன பூடணத்தில் நியமித்தான் வாழியே உத்தமமாம் முடும்பை நகர் உதித்தவள்ளல் வாழியே உலகாரியன் பதங்கள் ஊழிதொறும் வாழியே.)

வடக்குத் திருவீதிப் பிள்ளைக்கு பின்னையும் ஒரு குமாரர் திருவவதரிக்க, அவரை அழகிய மணவாளப் பெருமாள் நாயனார்
என்று திருநாமம் சாற்றி யருளினார். அவர் ஆசார்ய ஹ்ருதயம் இட்டருளினார்.

(அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருநக்ஷத்ரம் : மார்கழி அவிட்டம் அவதார ஸ்தலம் : ஸ்ரீரங்கம் ஆசார்யன் : வடக்குத் திருவீதிப் பிள்ளை பரமபதித்த இடம் : ஸ்ரீரங்கம் க்ரந்தங்கள் : திருப்பாவை ஆராயிரப்படி வ்யாக்யானம், கண்ணிநுண் சிறுத்தாம்பு வ்யாக்யானம், அமலனாதிபிரான் வ்யாக்யானம், அருளிச்செயல் ரஹஸ்யம் (ஆழ்வாரின் அமுதச்சொற்களைக் கொண்டே எழுதப்பட்ட ரஹஸ்யத்ரய விவரணம்), ஆசார்ய ஹ்ருதயம் பட்டோலை (ஆசார்ய ஹ்ருதயத்திற்கு அவரே எழுதிய வ்யாக்யானம் இப்பொழுது கிடைக்கவில்லை) மற்றும் பல.

நஞ்சீயர் செய்த வ்யாக்கியைகள் நாலிரண்டுக்கு எஞ்சாமை யாவைக்கும் இல்லையே தம் சீரால் வையகுருவின் தம்பி மன்னு மணவாளமுனி செய்யுமவை தாமும் சில மாமுடும்பை மன்னு மணவாள அண்ணலொடு சேமமுடன் வைகுந்தம் சென்றக்கால் மாம் என்று தொட்டுரைத்த சொல்லும் துயம் தன்னினாழ்பொருளும் எட்டெழுத்தும் இங்குரைப்பாரார். நாயனார் இவ்வுலகைவிட்டு பரமபதத்தை அடைந்தபின் ரஹஸ்யத்ரயத்தின் (திருமந்திரம், த்வயம், சரமஸ்லோகம்) சரமஸ்லோகத்தில் எம்பெருமான் தன் ஹ்ருதயத்தைத் தொட்டு “மாம்” (நானே காப்பவன்) என்று சொன்ன ஆழ்ந்த பொருளை இனி எடுத்துரைக்கவல்லார் யார் உளர் ? என்று சோகிக்கிறார். பிள்ளை லோகாசார்யரே இப்படி சோகத்தில் ஆழும்படியானது நாயனாரின் மகிமையாகும். த்ராவிடாம்நாய ஹ்ருதயம் குருபர்வக்ரமாகதம் | ரம்யஜாமாத்ருதேவேந தர்சிதம் க்ருஷ்ணஸூநுநா ||

தந்தருளவேணும் தவத்தோர் தவப்பயனாய் வந்த முடும்பை மணவாள – சிந்தையினால் நீயுரைத்த மாறன் நினைவின் பொருளனைத்தின் வாயுரைத்து வாழும் வகை)

ஆக இப்படி அவதார விஶேஷமாயிருந்துள்ள லோகாசார்யருடைய திருவடிகளிலே தம்முடைய திருத் தகப்பனார்
திகழக் கிடந்தான் திரு நாவீறுடைய பிரான் தாதரண்ணரையும் அஞ்சு திருநக்ஷத்ரத்திலே ஆஶ்ரயிப்பித்தார்கள்
அண்ணருடைய பெரியோர்கள் என்று அஸ்மதாசார்யோக்தம்.

———–

அந்திமோபாய நிஷ்டை- 10 – ஸ்ரீ ராமானுஜரின் சிஷ்யர்களின் நிஷ்டை

உடையவர் எழுந்தருளி யிருக்கிற காலத்திலே அருளாளப் பெருமாள் எம்பெருமானார் ஒருக்கால் திருமேனி பாங்கின்றிக்கே
கண் வளருகிற போது கூரத்தாழ்வான் அவரை அப்போதைக்கப்போது எழுந்தருளி ஆராயாமல்,
நாலு நாள் விளம்பித்து எழுந்தருளி, ‘தேவர் திருமேனியில் பாங்கில்லாமை செய்தபடி எப்படி’ என்று கேட்டருள,

அருளாளப் பெருமாள் எம்பெருமானார் ஆழ்வானைப் பார்த்து, ‘தேவரும் அடியேனும் இத்தனை நாளும் இருந்த ஸ்நேஹத்துக்கு
அடியேன் ஒரு நாள் தலை நொந்திருந்தேன் என்று கேட்டால் அப்போதே எழுந்தருளி க்ருபை பண்ணி யருளாமல்,
ஆழ்வான்! தேவரீர் இவ்வாத்மாவை உபேக்ஷித்திருந்த நெஞ்சாறல்,
அடியேன் போய் ஆளவந்தார் திருவடிகளிலே ஸேவித்தவன்று தீரும்’ என்றருளிச் செய்தார்.
இந்த ப்ரஸங்கம் *பொன்னுலகாளீரோ என்கிற திருவாய்மொழி ஈட்டில் ஸுஸ்பஷ்டம்.

வடுக நம்பி உடையவருக்குப் பின்பு சிறிது நாள் எழுந்தருளி யிருந்து பின்பு திருநாட்டுக்கு கெழுந்தருளினவாறே,
ஒரு ஶ்ரீவைஷ்ணவர் பட்டருடனே ‘வடுகநம்பி திருநாட்டுக்கெழுந்தருளினார்’ என்று விண்ணப்பம் செய்ய,
அவரும் ‘வடுக நம்பியை அப்படிச் சொல்லலாகாது காணும்’ என்ன,

‘ஏன், வடுகநம்பியை திருநாட்டுக்கெழுந்தருளினார் என்று சொல்லலாகாதோ?’ என்ன,

‘ஆகாது காணும், சரகு தின்னிகளான உபாஸகரோடு ப்ரபந்நரோடு உபாசியரோடு {?} வாசியற,
எல்லார்க்கும் போகிற பொதுவான தேஶங்களன்று காணும் அவர் எழுந்தருளுவது’ என்ன,

‘ஆனால் திருநாடொழிய அவருக்கு ப்ராப்ய பூமி வேறே உண்டோ?’ என்ன,

‘உண்டு காணும், வடுகநம்பி எம்பெருமானார் திருவடிக்கெழுந்தருளினார் என்று சொல்லீர்’ என்று
அருளிச் செய்தார் பட்டர் என்று அஸ்மதாசார்யோக்தம்.

‘அத்ர பரத்ர சாபி நித்யம் யதீய சரணௌ ஶரணம் மதீயம்” என்று ஆளவந்தார் ஸ்தோத்தரத்திலே அருளிச் செய்தார்.
‘விண்ணின் தலை நின்று வீடளிப்பான் எம்மிராமாநுசன் மண்ணின் தலைத்துதித்து மறை நாலும் வளர்த்தனனே” என்று
நூற்றந்தாதியிலே பிள்ளை அமுதனார் அருளிச் செய்தார்.

ஸர்வஜ்ஞரான அருளாளப் பெருமாள் எம்பெருமானாரும், கூரத்தாழ்வான் குமாரரான பட்டரும், பரமாசார்யரான ஆளவந்தாரும்,
உடையவரும் கூரத்தாழ்வான் முதலான இவர்களுடைய திவ்ய வைபவத்தை எல்லாருமறிந்து உஜ்ஜீவிக்கும்படி உபசரித்த
ஸர்வஜ்ஞராயிருக்கும் பிள்ளை அமுதனாரும் இப்படி ஏக கண்டமாக அருளிச் செய்கையாலே
சரமாதிகாரிகளுக்கு நித்ய விபூதியிலே போனாலும்
“பொது நின்ற பொன்னங்கழ”லாய்,
“தேவாநாம் தாநவாநாஞ்ச பர்வதமாயிருந்துள்ள ஈஶ்வரனைக் காட்டிலும், ஆத்மாவுக்கு அஸாதரண ஶேஷியாய்,
லீலா விபூதியிலே தொடங்கி, ‘சரணாகதி தந்த தன்னிறைவன்’ என்கிறபடியே அஸாதரண ஶேஷியாய்,
சரம பர்வமாயிருந்துள்ள ஆசார்யன் திருவடிகளே பரம ப்ராப்யமாயிருக்குமென்னும் இவ்வர்த்தம் உபபந்நம்.

(வேதம் ஒரு நான்கினுள் பொதிந்த மெய்ப்பொருளும்
கோதில் மனு முதல் நூல் கூறுவதும் தீதில்
சரணாகதி தந்த தன்னிறைவன் தாளே
அரணாகும் என்னும் அது –31-)

ஆகையாலேயிறே ‘எதிராசா என்றுன்னடி சேர்வன் யான்’,
‘எதிராசா எந் நாளும் உன் தனக்கே ஆட் கொள் உகந்து’ என்று
நம்முடைய ஜீயர் இப்படி அருளிச் செய்தருளிற்று.

ஒரு ஶ்ரீவைஷ்ணவர் அமுது செய்தருளா நிற்க, கிடாம்பி யாச்சான் அவருக்குத் தண்ணீரமுது திருப் பவளத்திலே
பரிமாறுகிறவர் செவ்வையிலே நின்று பறிமாறாமையாலே அந்த ஶ்ரீவைஷ்ணவருடைய திருக்கழுத்து சற்று சாய,
அத்தை உடையவர் கண்டருளி, ஆச்சானைத் தம்முடைய திருக் கையாலே அறைந்து,
‘ஶ்ரீவைஷ்ணவருக்குப் பாங்காகப் பரிமாறிற்றில்லையே!’ என்று கோபிக்க,
ஆச்சானும் உடையவர் திருவடிகளிலே தண்டனிட்டு,
“பணிமானம் பிழையாமே அடியேனைப் பணி கொண்ட மணிமாய”னன்றோ தேவரீர் – என்று விண்ணப்பம் செய்து
ஆச்சானும் மிகவும் க்ருதார்த்தரானார் என்று நம்முடைய ஜீயர் அருளிச் செய்தருளுவர்.

(மணிமாமை குறையில்லா மலர்மாதர் உறைமார்பன் அணிமானத் தடைவரைத்தோள் அடல்ஆழித் தடக்கையன் பணிமானம் பிழையாமே அடியேனைப் பணிகொண்ட மணிமாயன் கவராத மடநெஞ்சால் குறைஇலமே.–4-8-2-

உடையவர் எழுந்தருளியிருக்கிற மடத்திலே ஸ்ரீ வைஷ்ணவர்கள் அமுது செய்யா நிற்க, ஆச்சான் தண்ணீரமுது பரிமாறுகிறவர், ஓர் அருகே சாய நின்று பரிமாறினார்; அத்தை உடையவர் கண்டு, ஓர் அடி வந்து முதுகிலே மோதி, ‘நேரே நின்றன்றோவுடோ பரிமாறுவது?’ என்றார்; என்ன, ‘பணிமானம் பிழையாமே அடியேனைப் பணி கொண்ட’ என்று பணித்தார் ஆச்சான்.)

ஒரு நாள் கூரத்தாழ்வான் விஷயமாக உடையவர் சீறி யருள, நடுவு நின்றவர்கள் ஆழ்வானைப் பார்த்து
‘உம்மை உடையவர் நிக்ரஹித்தாரே, இப்போது நீர் என்ன நினைக்கிறீர்?” என்ன,
ஆழ்வான் அருளிச் செய்தபடி – “இவ் வாத்மா பாஷ்யகாரர்க்கே ஶேஷமான பின்பு அவருடைய
விநியோக ப்ரகாரங்கொண்டு அடியேனுக்குக் கார்யமென்?’ என்றார் என்னும் இவ் வ்ருத்தாந்தம்
மாணிக்ய மாலையிலே ஆச்சான் பிள்ளை அருளிச் செய்தார்.

பிள்ளை யுறங்கா வில்லி தாஸர் முதலி யாண்டான் ஶ்ரீபாதத்திலே சென்று தண்டனிட்டு
‘ஶிஷ்ய லக்ஷணம் இருக்கும்படி என்?’ என்று விண்ணப்பம் செய்ய, ஆண்டான் அருளிச் செய்தபடி –
ஆசார்ய விஷயத்தில் ஶிஷ்யன் பார்யா ஸமனுமாய், ஶரீர ஸமனுமாய், தர்ம ஸமனுமாய் இருக்கக் கடவன்.
அதாவது சொன்னத்தைச் செய்கையும்,
நினைத்ததைச் செய்கையும்,
நினைவா யிருக்கையும் என்றருளிச் செய்தார்.

அநந்தரம் பிள்ளை கூரத்தாழ்வான் ஶ்ரீபாதத்திலே சென்று தண்டனிட்டு ‘ஆசார்ய லக்ஷணம் எங்ஙனே இருக்கும்?’
என்று விண்ணப்பம் செய்ய, ஆழ்வான் அருளிச் செய்தபடி –
ஶிஷ்யன் விஷயத்தில் ஆசார்யன் பர்த்ரு ஸமனுமாய், ஶரீரி ஸமனுமாய், தர்மி ஸமனுமாய் இருக்கக் கடவன்.
அதாவது
ஏவிக் கொள்ளுகையும்,
எடுத்து இடுவிக்கையும்; அதாவது
அசேதநத்தை நினைத்த படியே விநியோகங் கொள்ளுமாப் போலே விநியோகங் கொள்ளுகையும்,
எடுத்துக் கொள்ளுகையும் என்றருளிச் செய்தார். இவ் வ்ருத்தாந்தம் ஶ்ரீவார்த்தா மாலையிலே உண்டு.

ஒரு நாள் கூரத்தாழ்வானும் முதலியாண்டானும் கூடி எழுந்தருளி யிருந்து சில அர்த்த விஶேஷங்களை அநுஸந்தியா நிற்க,
‘ஸ்வாநுவ்ருத்தி ப்ரஸந்நாசார்யனாலே மோக்ஷமோ?
க்ருபாமாத்ர ப்ரஸந்நாசார்யனாலே மோக்ஷமோ?” என்று இங்ஙனே ப்ரஸங்கமாக,
முதலியாண்டான் ‘ஸ்வாநுவ்ருத்தி ப்ரஸந்நாசார்யனாலே மோக்ஷம்’ என்ன,
கூரத்தாழ்வான் ‘க்ருபாமாத்ர ப்ரஸந்நாசார்யனாலே மோக்ஷம்’ என்ன,
ஆண்டான் “குற்றமின்றிக் குணம் பெருக்கிக் குருக்களுக்கனுகூலராய்” என்று பெரியாழ்வார் அருளிச் செய்கையாலே
ஸ்வாநுவர்த்தி ப்ரஸந்நாசார்யநாலே ஆக வேணும் என்ன,
ஆழ்வான் ‘அங்ஙனன்று; “பயனன்றாகிலும் பாங்கலராகிலும் செயல் நன்றாகத் திருத்திப் பணி கொள்வான்
குயில் நின்றார் பொழில் சூழ் குருகூர் நம்பி” என்று ஶ்ரீமதுரகவியாழ்வார் நமக்கெல்லார்க்கும்
ஸ்வ அநுவர்த்தி கூடாமையாலே க்ருபா மாத்ரத்தாலே மோக்ஷமாக வேணும்’ என்றருளிச் செய்தார்.
ஆண்டானும் ‘அப்படியே யாம்’ என்று மிகவும் ப்ரீதரானார் என்று அஸ்மாதாசார்ய உக்தம்.

க்ருமி கண்டன் வ்யாஜத்தாலே உடையவர் வெள்ளை சாற்றி மேல் நாட்டுக்கெழுந் தருளின போது
பெருமாள் பரிகரத்தார் தங்களை நெருக்கிக் கொண்டு போருகையாலே விஷமத்துக்காக
‘உடையவராலே யன்றோ இத் தேஶத்துக்குக் கலக்கங்கள் விளைந்தது, ஆகையாலே உடையவர் திருவடிகளில்
ஸம்பந்தமுள்ளவர்கள் ஒருவரும் கோயிலுக்குள் புகுந்து பெருமாளை ஸேவிக்க வொண்ணாது’ என்று திவ்யாஜ்ஞை இட்டு வைத்தார்கள்.

கூரத்தாழ்வான் தர்ஶநத்தை நிர்வஹிக்கைக்காக க்ருமி கண்டனிடத்திலே புக்கு அவனாலே திரு நயநங்களுக்கு உபத்ரவம் வந்தது
மீண்டு கோயிலுக்கெழுந்தருளி அங்குத்தைச் செய்தியை அறியாமல் பெருமாளை ஸேவிக்க எழுந்தருளின வளவிலே,
திரு வாசல் காக்கிறவர்களிலே ஒருவன் ஆழ்வானை ‘உள்ளே புகுராதே’ என்று தகைய,
ஒருவன் அவரைத் தகையாதே ‘கோயிலுக்குள்ளே புகுரும்’ என்ன,
அவ்வளவில் ஆழ்வான் திகைத்து நின்று ‘இங்குற்றை விசேஷம் ஏது?’ என்று திரு வாசல் காக்குமவர்களைக் கேட்க,
அவர்களும் ‘எம்பெருமானார் திருவடிகளில் ஸம்பந்தமுள்ளவர்களொருவரையும் பெருமாளை ஸேவிக்க விட வேண்டாம்
என்று திவ்யாஜ்ஞை யிட்டுத் தகைந்து கிடக்கிறது’ என்ன,

‘ஆனால் நீங்கள் என்னைப் புகுரச் சொல்லுவானென்?’ என்ன,

அவர்கள் ‘ஆழ்வானே! நீர் எல்லாரையும் போலன்றிக்கே நல்ல குணங்களை உடையவராகுயாலே புகுரச் சொன்னோம்’ என்ன,

ஆழ்வான் அத்தைக் கேட்டு ஜல சந்திரனைப் போலே நடுங்கி, சிவிட்கென்று நாலடி மீண்டு,
‘ஐயோ! ஆத்ம குணங்கள் உண்டானால் எல்லார்க்கும் ஆசார்ய ஸம்பந்தத்துக்கு ஹேதுவாம் என்று ஶாஸ்த்ரம் சொல்லிற்று;
எனக்குண்டான ஆத்ம குணங்கள் எம்பெருமானார் திருவடிகளில் ஸம்பந்தத்தை அறுத்து கொள்ளுகைக்கு ஹேதுவாய் விட்டதோ’
என்று வ்யாகுலப்பட்டுத் தம்மை மிகவும் நொந்து கொண்டு ‘எனக்குப் பேற்றுக்கு எம்பெருமானார் திருவடிகளில் ஸம்பந்தமே அமையும்;
தத் ஸம்பந்தத்தை யொழியப் பெருமாளை ஸேவிக்க வேண்டுவதில்லை’ என்று மீண்டு
ஆழ்வான் திருமாளிகைக்கு எழுந்தருளினார் என்று நம்முடைய ஜீயர் அருளிச் செய்தருளுவர்.

எம்பெருமான் தானே நம்மாழ்வாராய் வந்தது அவதரித்தருளினான் என்று ஆளவந்தார் அருளிச் செய்தருளுவர் என்னுமது
திரு விருத்த வ்யாக்யாநத்திலே ஸுஸ்பஷ்டம்.
அத்ரி ஜமதக்நி பங்க்தி ரத வஸு நந்த ஸுநுவானவனுடைய யுக வர்ண க்ரமாவதாரமோ என்று
இவ் வாழ்வாரை பகவதவதாரமாக ஆசார்ய ஹ்ருதயத்திலே அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் அருளிச் செய்தார்.

———

அந்திமோபாய நிஷ்டை- 11- ஸ்ரீஎம்பார் மற்றும் கொங்கில் பெரிய பிராட்டியார் நிஷ்டை

வட்டமணி குலத்தில் எம்பார் மஹா வித்வானாய், மஹா விரக்தராய், மிகவும் ஆசாரயுக்தராய் இருக்கச் செய்தே
ஶைவாகமத்திலே புகுந்து ஶிவபக்தியிலே மண்டி விழுந்து, அலந்த கொட்டையும் பூண்டு காளஹஸ்தியில்
ஒரு ருத்ராலயத்துக்கு சடங்கியாய், ஸர்வத்துக்கும் கர்த்தாவாய், குச்சியும் தாளும் எப்போதும் கையிலே பிடித்துக் கொண்டு
இரண்டாம் முத்தமிழ் விரகனான ஸம்பந்தன் என்னும்படியே பேயன் பாட்டுப்பாடி, காளஹஸ்தியிலே வர்த்திக்கிற காலத்திலே
திருமலையில் நின்றும் பெரிய திருமலை நம்பி ஒருகார்யத்திலே எழுந்தருளி, காளஹஸ்தி ஆஸந்நமாக,
ஒரு தோப்பிலே விட்டு எழுந்தருளியிருக்க,

அவ்வளவிலே எம்பாரும் ருத்ரனுக்குப் பூப்பறிப்பதாகப் பெரியதொரு பூக் கொடலையும்  கழுத்திலே கட்டிக் கொண்டு
ருத்ர ப்ரபாவமான பாட்டுக்களையும் கதறிக் கொண்டு, திருமலைநம்பி எழுந்தருளியிருக்கிற தோப்பிலே
நிறைய பூத்து நிற்பதொரு பாதிரியிலேயேறிப் பூப் பறியா நிற்க,

திருமலைநம்பி எம்பாருடைய ஶிவபக்தியில் பூத்த{ஊ}த்தைக்கண்டு ‘ஐயோ! இவ்வாத்மா அதிக்ஷுத்ரமான அப்ராப்த விஷயத்தில்
ப்ராவண்யங்களை ஸவாஸநமாக விட்டு ஆத்மாவுக்கு வகுத்த ஶேஷியான ஶ்ரிய:பதியைப் பற்றினானகில்
பெரிய வித்வானாகையாலும், அதிவிரக்தனாகையாலும் லோகத்துக்கு மிகவும் உபகாரகனாம்’ என்று திருவுள்ளம் பற்றித்
தாமும் முதலிகளும் எம்பார் பூப்பறிக்கிற பாதிரிக்கு ஆஸந்நமாக எழுந்தருளி யிருந்து
ஶ்ரிய:பதி நாராயணனே பரதத்வம் என்று சொல்லுகிற வேதாந்த வாக்யங்களை முதலிகளும் தாமும் ஒருவர்க்கொருவர் அநுபாஷிக்க,

எம்பார் ஆலயத்திலுண்டான கார்யங்களையும் பூப்பறிக்கிறத்தையும் மறந்து இவர்கள் அருளிச்செய்கிற
திவ்ய ஸுக்திகளைச் செவி மடுத்துக் கேட்டு ‘இதொன்று இருந்தபடி என்!’ என்று போர வித்தராய்,
நெடும்போது கேட்டுக் கொண்டு திகைத்து நிற்க,

நம்பியும் எம்பாருடைய ஆபிமுக்யத்தைக் கண்டு ‘இன்னமும் ஆழ்வாருடைய திவ்ய ஸூக்தியிலே ஒன்றைச் சொல்லித்
திருத்தக் கடவோம்’ என்று திருவுள்ளம்பற்றி, “தேவரும் எப்பொருளும் படைக்கப் பூவில் நான்முகனைப் படைத்த
தேவனெம்பெருமானுக்கல்லால் பூவும் பூசனையும் தகுமே” என்று பெருக்க நொந்து அருளிச்செய்ய,
எம்பாரும் தமிழுக்கு மஹாநிபுணராகையாலே இத்தையும் கேட்டு, அப்போதே தத்த்வஸ்திதியையும் நன்றாக அறிந்து
‘தகாது, தகாது’ என்று பாதிரியின்மேலே நின்று பூக்கொடலையும் சுழற்றி எறிந்து அரைகுலைய தலைகுலைய இறங்கி
‘இத்தனை காலமும் பெருங்கையாற் குடமெடுத்துப் பேய்ச்சுரைக்கு நீர் சொரிந்து கெட்டேன் கெட்டேன்’ என்று கூப்பிட்டு
நம்பி திருவடிகளிலே விழ,

நம்பியும் தான் நினைத்த காரியம் அப்போதே கைகூடுகையாலே மிகவும் திருவுள்ளமுகந்து
எம்பாரையும் ‘தீர்த்தமாடிவாரும்’ என்ன,
அவரும் எலந்தைக்கொட்டைவடங்களையும் அறுத்தெறிந்து பாஷண்ட வேஷத்தையும் கழித்து, தீர்த்தமாடி ஈரப்புடவையோடே
தம்முடைய ஆர்த்தியெல்லாம் தோன்ற வந்து நிற்க, நம்பியும் எம்பாரளவிலே மிகவும் திருவுள்ளமுகந்து
அப்போதே அவர்க்கு பஞ்சஸம்ஸ்காரமும் பண்ணி, த்யாஜ்யோபாதேயங்களையும் தெளிய அறிவித்து,
‘புறம்புண்டான பற்றுக்களை யெல்லாத்தையும் ஸவாஸநமாக விட்டு, ஶ்ரிய:பதியைப்பற்றி நம்முடைய தர்ஶநத்திலே
ஊற்றமுண்டாய் வாழும்’ என்று அருளிச் செய்ய,
அப்படியே எம்பாரும் க்ருதார்த்தராய், நம்பியை ஸேவித்துக் கொண்டு திருமலைக்கெழுந்தருளத்தேட,

அவ்வளவில் காளஹஸ்த்தியில் பாஷண்டிகளெல்லாரும் கூடி வந்து ‘எங்களுக்கு ஸர்வத்துக்கும் கர்த்தாவான நீர்
போக வொண்ணாது’ என்று எம்பாரைத் தகைய,
அவரும் ‘உங்கள் குச்சியும் தாளும் இதோ பிடியுங்கோள்’ என்று தூரத்திலே நின்று அவர்கள் மேலே எறிந்து
‘காளஹஸ்த்தி யாகிற சுடுகாட்டை நாமினிப் புரிந்துபாரோம்’ என்று அருளிச்செய்து,
பிராட்டி இலங்கை நின்றும் புறப்பட்டாப் போலே அங்குள்ள பற்றுக்களை அடைய ஸவாஸநமாக விட்டுப்
பெரிய ப்ரீதியோடே முக்தர் பரம பதத்தைக் குறித்து அர்ச்சிராதி மார்க்கத்தாலே ஹார்த்தன் வழிநடத்தப் போமாப்போலே
திருமலை நம்பியை ஸேவித்துக் கொண்டு கலியுக வைகுண்டமான திருமலைக்கெழுந்தருளி,
நம்பிக்கு மிகவும் அந்தரங்கராய் ஸர்வவித கைங்கர்யங்களும் பண்ணிக் கொண்டு வாழுகிற காலத்திலே,

உடையவர் திருமலைக்கெழுந்தருளி திருமலைநம்பி ஶ்ரீபாதத்திலே ஶ்ரீராமாயணத்துக்கு ஸம்ப்ரதாயார்த்தம் கேட்டு
மீண்டும் கோயிலுக்கு எழுந்தருளுகிறபோது நம்பியும் உடையவர் அவதார விஶேஷமென்றறிந்து மிகவும் ஆதரித்து
ஆளவந்தாரைப் போலே கண்டு தம்முடைய புத்ராதிகளையும் உடையவர் திருவடிகளிலே ஆஶ்ரயிப்பித்து
‘தேவரீருக்கு ஏதேனுமொன்று ஸமர்ப்பிக்க வேணும்’ என்ன,

உடையவரும் எம்பாருடைய ஆசார்ய ப்ரேமத்தைக் கண்டு திருவுள்ளமுகந்து ‘எம்பாரைத் தந்தருள வேணும்’ என்ன,

நம்பியும் எம்பாரை உடையவருக்கு உதகதாரா பூர்வமாகக் கொடுத்தார்.
அதுக்குப்பின்பு எம்பார் உடையவரை ஸேவித்துக்கொண்டு திருவரங்கத்துக்கு நாலஞ்சு பயணம் எழுந்தருள,
நம்பியைப் பிரிந்தது எம்பார்க்குத் திருமேனி ஶோஷிக்க, உடையவர் எம்பாரைப் பார்த்து ‘உமக்கிப்படி ஆவானென்’ என்ன,
‘அங்குத்தை யேறப்போம்’ என்ன, எம்பாரும் முன்பு நாலஞ்சு பயணமும் ஒரு பயணமாக மீண்டு
திருமலைக்கு எழுந்தருளி நம்பி திருவடிகளிலே தண்டனிட்டு நிற்க,
நம்பியும் எம்பாரைப் பார்த்து ‘உதக பூர்வமாக உம்மை உடையவருக்குக் கொடுத்து விட்டோமே;
அவரை விட்டு நீர் இங்கு வருவானென்?’ என்ன,
எம்பாரும் தம்முடைய திருமேனி ஸ்வபாவத்தை விண்ணப்பம் செய்ய,
நம்பியும் ‘விற்ற பசுவுக்குப் புல்லிடுவாருண்டோ? நீர் உடையவர்க்குத் தானே அடிமை செய்து கொண்டிரும்’ என்று
ஒரு போதும் ப்ரஸாதமிடாமல் தள்ளி விட்டார்.
எம்பாரும் அங்கு ஆசையற்று நமக்கினி உடையவர் திருவடிகளே தஞ்சம்’ என்று அறுதியிட்டுக் கோயிலுக்கெழுந்தருளி,
உடையவரை ஸேவித்துக் கொண்டு மிகவும் ப்ரீதராய் வாழுகிற காலத்திலே,

ஒருநாள் உடையவரும், முதலிகளும் பெரிய திருவோலக்கமாக எழுந்தருளியிருக்க, முதலிகளெல்லாரும் எம்பாருடைய
ஜ்ஞாந பக்தி வைராக்யங்களைச் சொல்லித் தலைத் தூக்கிக் கொண்டாட,
எம்பார் தாமும் ‘அது ஒக்கும், ஒக்கும்’ என்று அவர்களைக் காட்டில் மிகவும் தம்மை ஶ்லாகித்துக் கொள்ள,
உடையவரும் அத்தைக் கேட்டு எம்பாரைப் பார்த்து, ‘எல்லாரும் உம்மை ஶ்லாகித்தால் நீர் நைச்யாநுஸந்தாநம்
பண்ண வேண்டியிரா நிற்க, அது செய்யாதே நீர்தாமே உம்மை ஶ்லாகித்துக் கொள்ளா நின்றீர்;
இப்படி இருப்பது ஒன்றுண்டோ?’ என்ன,

எம்பாரும் உடையவரைப் பார்த்து, ‘ஐயா! முதலிகள் அடியேனைக் கொண்டாடில் காளஹஸ்த்தியிலே
கையும் குடமும் கழுத்தும் கப்படமுமாய்க் கொண்டு எளிவரவுபட்டு நின்ற அந்நிலையைக்
கொண்டாடுமத்தனை யன்றோ அடியேனுக்குள்ளது; இப்படியான பின்பு “பீதக வாடைப் பிரானார் பிரம குருவாகி வந்து” என்கிறபடியே
தேவரீர் இவ்வாத்மாவை எடுக்கைக்காக ஒரு திருவவதாரம் பண்ணி செய்தருளின க்ருஷி பரம்பரைகளை அநுஸந்தித்து
நித்ய ஸம்ஸாரிகளிலும் கடை கெட்டுக் கிடந்த அடியேனை காலதத்வமுள்ளதனையும்
‘எனக்கினி யார் நிகர் நீணிலத்தே”,
“நெஞ்சமே நல்லை நல்லை” என்கிறபடியே அடியேனை ஶ்லாகித்துக் கொள்ள ப்ராப்தி யுண்டு;
ஆகையாலே அடியோங்களெல்லாரும் தேவரீராலே இவ்வாத்மாவுக்குண்டான நன்மைகளை ஶ்லாகித்தது
தேவரீரைக் கொண்டாடித்தாமித்தனையன்றோ?’ என்று விண்ணப்பம் செய்ய,

உடையவரும் ‘ஶ்ரீகோவிந்தப் பெருமாளே! நல்லீர்! நல்லீர்!’ என்று எம்பாரை மிகவும் உகந்தருளினார்
என்று பெரியோர்கள் அருளிச் செய்தருளுவார்கள்.

(எம்பார் திருநக்ஷத்ரம்: தை புனர்பூசம் திரு அவதாரத்தலம்: மதுரமங்கலம் திருநாட்டுக்கு எழுந்தருளிய இடம்: திருவரங்கம் அருளிச்செய்தவை: விஞ்ஞான ஸ்துதி , எம்பெருமானார் வடிவழகு பாசுரம்

ராமானுஜ பதச்சாயா கோவிந்தாஹ்வநபாயிநீ | ததாயத்த ஸ்வரூபா ஸா ஜீயாந் மத் விஶ்ரமஸ்தலீ ||-எம்பாரின் தனியன்:

பூவளரும் திருமகளார் பொலிவுற்றோன் வாழியே பொய்கை முதல் பதின்மர் கலைப் பொருளுரைப்போன் வாழியே மாவளரும் பூதூரான் மலர் பதத்தோன் வாழியே மகரத்தில் புனர்பூசம் வந்துதித்தோன் வாழியே தேவுமெப்பொருளும் படைக்கத் திருந்தினான் வாழியே திருமலைநம்பிக் கடிமை செய்யுமவன் வாழியே பாவையர்கள் கலவியிருள் பகலென்றான் வாழியே பட்டர்தொழும் எம்பார் பொற்பதமிரண்டும் வாழியே–எம்பாரின் வாழி திருநாமம்:)

ஒரு ஆசார்யர் தம்முடைய ஶிஷ்யனுக்கு த்யாஜ்யோபாதேயங்களைத் தெளிய உபதேஶிக்க,
அவனும் அதுக்கு அநுரூபமாக நடக்க அறியாமையாலே அந்த ஆசார்யரும் “ஸ்காலித்யே ஶாஸிதாரம்” என்கிறபடியே
அவனை நியமித்துக் கொண்டு போர, அந்த ஶிஷ்யன் ஸ்வாசார்ய நியமநம் தனக்கு ஹிதம் என்று அறியாமல் வெருவி
இருந்த ஜ்ஞாநாதிகருடனே ‘ஐயோ! ஶிஷ்யன் என்ன, நியமியா நின்றார்கள்’ என்று வெறுக்க,
அந்த ஜ்ஞாநாதிகரும் ‘ஐயோ! ஶாஸநீயனான ஶிஷ்யனை யன்றோ நியமிப்பது? உம்மை நியமித்தாரோ’ என்று
வெறுத்தார் என்று அஸ்மதாசார்யோக்தம்.

இத்தால் விதேயனான ஶிஷ்யனையே ஆசார்யன் நியமிக்க வேணும் என்னுமதும்,
ஸதாசார்ய நியமநம் ஸச் சிஷ்யனுக்கு ப்ராப்யாந்தர் கதமாயிருக்கும் என்னுமதும் சொல்லிற்று.

நஞ்சீயர் திருவடிகளிலே ஆஶ்ரயித்து தேஶாந்தரத்திலே இருப்பானொரு ஶ்ரீவைஷ்ணவன் வந்து ஜீயரை ஸேவித்து
மீள எழுந்தருளிகிறபோது, ஜீயருக்கு அந்தரங்கராய்த் திருவடிகளிலே நித்ய ஸேவை பண்ணிக் கொண்டிருப்பாரொரு
ஶ்ரீவைஷ்ணவர் ஊருக்கு எழுந்தருளுகிற ஶ்ரீவைஷ்ணவரைப் பார்த்து
‘ஜயோ! உமக்கு ஜீயர் திருவடிகளை விட்டுப் பிரிந்து எழுந்தருள வேண்டுகிறதே! என்று க்லேஶிக்க,
அவரும் ‘அடியேன் எங்கே இருந்தாலும் ஜீயர் அபிமாநமுண்டே’ என்று தேறி வார்த்தை சொல்ல,
இந்த ப்ரஸங்கங்களை ஜீயர் திருவடிகளுக்கு அந்தரங்கையாயிருப்பாளொரு அம்மையார் கேட்டு,
ஆசார்யனைப் பிரிந்து அதிலே நெஞ்சு இழியாமல் போகிறவரைப் பார்த்து
‘என் சொன்னாய் பிள்ளாய்! – ஏனத்துருவாய் உலகிடந்த ஊழியான் பாதம் – நாடோறும் –
மருவாதார்க்கு உண்டாமோ வான்’ என்று அருளிச் செய்தார் என்று அஸ்மதாரசார்யோக்தம்.

இத்தால் ஸதாசார்யன் கண் வட்டத்தை விட்டால் இவனுக்கு த்யாஜ்யோபாதேயங்கள் தெரியாது.
ஆகையால் அஜ்ஞாநமே மேலிட்டு “நண்ணாரவர்கள் திருநாடு” என்கிறபடியே திருநாடு ஸித்திக்கை அரிது என்று கருத்து.

ஊனக் குரம்பையினுள் புக்கிருள் நீக்கி
ஞானச் சுடர் கொளீஇ நாடோறும் ஏனத்
துருவா யுலகிடந்த ஊழியான் பாதம்
மருவதார்க்கு உண்டாமோ வான் —-91-
(மருவாதார் -முதல் பிரபத்தி உபாயமாக -மேல் ருசி தூண்ட கைங்கர்யம் செய்ய வேண்டுமே)

கொங்கு நாடு க்ஷாமமானவாறே ஒரு ப்ராஹ்மணன் ஸ்த்ரீயும் தானும் கோயிலிலே வந்து இருந்தான்.
அக் காலத்திலே எம்பெருமானார் ஏழு க்ருஹம் மாதுகரம் பண்ணி அமுது செய்தருளுவர்.
திரு வீதியிலே எழுந்தருளும் போது அகளங்கநாட்டாழ்வானடைய வட்டத்தில் முதலிகளெல்லாரும் தண்டனிடுவர்கள்.
அந்த ப்ராஹ்மணன் ஸ்த்ரீயும் தானுமாக ஒரு மச்சிலே இருக்கையாயிருக்கும்.
ஒரு நாள் உடையவர் மாதுகரத்துக்கு அந்த க்ருஹத்துக்கு எழுந்தருளினவாறே அந்தப் பெண் மச்சு நின்றும் இழிந்து
இடை கழியிலே நின்று ‘ராஜாக்கள் உம்மை தண்டனிடாநின்றார்கள்; நீர் மாதுகரம் பண்ணா நின்றீர்;
இதுக்குக் காரணமேது?’ என்று உடையவரைக் கேட்க,

‘நாம் அவர்களுக்கு நல்வார்த்தை சொன்னோம்; ஆகையாலே தண்டனிடுகிறார்கள்’ என்று அருளிச்செய்ய, ‘

அந் நல்வார்த்தை எனக்கு அருளிச் செய்ய வேணும்’ என்று தண்டனிட்டாள்.

உடையவரும் அவளுக்கு ஹிதத்தை ப்ரஸாதித்தருளினார். பின்பு அவர்களுடைய தேஶம் ஸுபிக்ஷமாய்
அவர்கள் அங்கேறப்போக விருக்கிறவளவிலே உடையவரை ஸேவித்துப் போகப் பெற்றிலேன் என்று அந்தப்பெண் வ்யாகுலப்பட்டுக் கொண்டு இருக்கிறவளவிலே, மாதுகரத்துக்கு அங்கே எழுந்தருளினார்.
அந்தப் பெண் ‘மீளவும் எங்கள் நாடேறப் போகா நின்றோம்; முன்பு அருளிச் செய்த நல் வார்த்தை
அடியேன் நெஞ்சிலே படும்படி அருளிச் செய்து எழுந்தருள வேணும்’ என்று மிகவும் அநுவர்த்திக்க,

(மறக்கும் என்று செந்தாமரைக் கண்ணோடு மன்னினான்-ஆழ்வாருக்கு)

உடையவரும் அவ் வாத்மாவை மிகவும் க்ருபை பண்ணி யருளி, ஹிதத்தை நெஞ்சிலே படும்படி ப்ரஸாதித்தருளி
எழுந்தருளப் புக்கவாறே, ‘இன்னமும் அடியேனுக்கு ஆத்ம ரக்ஷகமாக ஏதேனுமொன்று ப்ராஸாதித்தருள வேணும்’ என்று
அவள் விண்ணப்பம் செய்ய,

உடையவர் அப்போது சாற்றி எழுந்தருளியிருக்கிற திருவடி நிலைகளைப் பெரிய பிராட்டியார் என்கிற அந்தப் பெண்ணுக்கு
ப்ராஸாதித்து எழுந்தருளினார். அவளும் அன்று தொடங்கி உடையவர் திருவடி நிலைகளைத் திருவாராதநம்
பண்ணிக் கொண்டு போந்நாள் என்னும், இவ் வ்ருத்தாந்தம் வார்த்தா மாலையிலே ப்ரஸித்தம்.

(பெருமாள் பரத்தாழ்வானுக்கு அருளினார் -அதே போல் ராமானுஜரும் இவ்வாறு செய்து அருளினார்)

இத்தால் சொல்லிற்று ஏதென்னில், எம்பெருமானையுங்கூட உபேக்ஷிக்கிற ஸம்ஸாரத்திலே ஆசார்ய ருசி பரிக்ருஹீதமானது(த்வய மந்த்ர ரத்னம் என்றவாறு)ஏதேனுமொன்று தஞ்சம் என்று விஶ்வஸித்திருக்கை அரிது. ஆசார்ய விஶ்வாஸமுண்டானவர்கள்
கொங்கில் பெரிய பிராட்டியாரைப் போலே இருக்க வேணும் என்று சொல்லிற்று.

இவ்விடத்திலே பொன்னாச்சியார், தும்பியூர்க் கொண்டி, ஏகலவ்யன், விக்ரமாதித்யன் வ்ருத்தாந்தங்களை ஸ்மரிப்பது.

———–

அந்திமோபாய நிஷ்டை- 12 – ஆசார்யன் பகவத் அவதாரம்

ஸாக்ஷாத்காரமென்றும்,
விபூதி ஸாக்ஷாத்காரமென்றும்,
உபய விபூதி ஸாக்ஷாத்காரமென்றும்,
ப்ரத்யக்ஷ ஸாக்ஷாத்காரமென்றும் நாலு படியாயிருக்கும்.(அஷி கண்)

ஸாக்ஷாத்காரமாவது – ஒரு ஜ்ஞாந விஶேஷம்.

விபூதி ஸாக்ஷாத்காரமாவது – இந்த ஜ்ஞாநம் விரோதியை அறிகை.

(வீடுமின் அஹங்காரம் மமகாராம் விட வேண்டும்
சொன்னால் விரோதம் அசேவை சேவை கூடாது
ஒரு நாயகம் -ஐஸ்வர்ய கைவல்யம் த்யாஜ்யம்
கொண்ட பெண்டிர் ஆபாச பந்துக்கள் கூடாதே)

உபய விபூதி ஸாக்ஷாத்காரமாவது – இந்த ஜ்ஞாநம் ப்ராப்யத்தை அறிகை.

ப்ரத்யக்ஷ ஸாக்ஷாத்காரமாவது – இந்த ஜ்ஞாநம் உபேயமான வஸ்து தானே உபாயம் என்றறிகை,

இவ் விஷயத்தில் பண்ணும் கைங்கர்யமுமே புருஷார்த்தமென்றறிகை,
அப் புருஷார்த்தமே உபாயம் என்றறிகை.

கீழ்ச் சொன்ன மூன்றுக்கும் புருஷார்த்தம் உண்டாய்த்ததே யாகிலும் ப்ரத்யக்ஷ ஸாக்ஷாத்காரம் இல்லாத போது
அவை உண்டானாலும் ப்ரயோஜநமில்லை.
அவை தான் ப்ரத்யக்ஷத்தாலல்லது ஸித்திக்க மாட்டாது.
அவை யாவன – பரத்வம், வ்யூஹம், விபவம், அந்தர்யாமித்வம், அர்ச்சாவதாரம், ஆசார்யத்வம் என்று ஆறுபடியாயிருக்கும்.

பரத்வம் நித்ய முக்தர்க்கும், வ்யூஹம் ஸநகாதிகளுக்கும், விபவம் தத்கால வர்த்திகளுக்கும்,
அந்தர்யாமித்வம் உபாஸகர்க்கும், அர்ச்சாவதாரம் எல்லார்க்கும், ஆசார்யத்வம் கதி ஶூந்யர்க்கும்.

இவனுக்கு முதல் சொன்ன நாலும் தேஶ-கால-கரண-விப்ரக்ருஷ்டதையாலே கிட்ட வொண்ணாது.
இனி இவை யிரண்டிலும் அர்ச்சாவதாரம் வாய் திறந்து ஒரு வார்த்தை அருளிச் செய்யாமையாலே
இதுவும் அல்லாத அவதாரங்களோபாதி.

ஆகையாலே பத்த சேதநன் முக்தனாம் போது, ஸகல ஶாஸ்த்ரங்களாலும் அறுதி யிட்டுப் பார்த்த விடத்தில்,
ஆசார்யாவதாரத்தாலல்லது ஜ்ஞாந ப்ரதாநம் பண்ண வொண்ணாமையாலே
ஜ்ஞாந ப்ரதாநம் பண்ணின வஸ்து தானே உபேயமாக வேணும்;
உபேயமான வஸ்து தானே உபாயமாக வேணும்; இவ் விஷயத்தில் கைங்கர்யமே ப்ராப்யமாக வேணும்.

மயர்வற மதி நலமருளப் பெற்று இவ் வர்த்தத்தையும் அறுதியிட்ட பரமாசார்யரும்,(ஆளவந்தார் -மாதா பிதா –ஸர்வம் யதேவ குல பதேர் வகுளாபரணம்)மயர்வற மதி நல மருளினவன் தானே இவனுக்கு அவை யெல்லாம் என்கையாலே இனி இவனுக்கு இதுவே உபாயம்;
அல்லாதது உபாயாந்தரங்களோபாதி.
இப் பரத்யக்ஷ ஸாக்ஷாத்காரத்தாலல்லது மோக்ஷப்ரதத்வம் இல்லாமையாலே – என்று திருமுடிக் குறை ரஹஸ்யத்திலே
வேதாந்திகளான நஞ்சீயர் நம்பிள்ளைக்கு அருளிச் செய்தார்.

“ஆசார்யாபிமாநமாவது இவை யொன்றுக்கும் ஶக்தனன்றிக்கே இருப்பானொருவனைக் குறித்து
இவனுடைய இழவையும், இவனைப் பெற்றால் ஈஶ்வரனுக்கு உண்டான ப்ரீதியையும் அநுஸந்தித்து,
ஸ்தநந்தய ப்ரஜைக்கு வ்யாதி உண்டானால் தன் குறையாக நினைத்துத் தான் ஔஷத ஸேவை பண்ணி ரக்ஷிக்கும்
மாதாவைப் போலே இவனுக்குத் தான் உபாயாநுஷ்டாநம் பண்ணி ரக்ஷிக்க வல்ல
பரம தயாளுவான மஹா பாகவதாபிமாநத்திலே ஒதுங்கி,
“வல்ல பரிசு வருவிப்பரேல் அது காண்டுமே” என்று அர்த்த பஞ்சகத்திலே பிள்ளைலோகாசார்யரும்
இவ் வர்த்தத்தை ஸுஸ்பஷ்டமாக அருளிச் செய்தார்.

லோகாசார்யரும் தாம் பேரருளாளப் பெருமாளுடைய திருவவதாரமென்று மணற்பாக்கத்து நம்பியாருக்கு ப்ரத்யக்ஷம்.
இவ் வ்ருத்தாந்தம் ஶ்ரீவசநபூஷண வ்யாக்யாநத்திலே நம்முடைய ஜீயர் தெளிய அருளிச் செய்தருளினார்.
இன்னமும் ஸச்சிஷ்ய – ஸதாசார்ய – லக்ஷணமான நல்வார்த்தைகள் நம்முடைய ஜீயர் அருளிச் செய்தவை பலவுமுண்டு;
அவையெல்லாம் க்ரந்த விஸ்தர பயத்தாலே சொல்லுகிறிலோம்.

ஆக, இப்படி ஸகல வேதங்களும், ததநுஸாரிகளான ஸ்ம்ருதீதிஹாஸ புராணங்களும்,
அவற்றினுடைய தாத்பர்யங்களை யதா தர்ஶநம் பண்ணியிருக்கும் முனிவரான
பராஶர – பாராஶர்ய – போதாயந – ஸுகாதிகளும், உபய விபூதியையும் கரதலாமலகமாக ஸாக்ஷாத்கரித்து
ஸகல வேதாந்த ஸாரார்த்தங்களையும் த்ராவிட ப்ரஹ்ம வித்யையாலே ஸர்வாதிகாரமாம்படி பண்ணியருளின
ப்ரபந்ந ஜன கூடஸ்தரான பராங்குஶ – பரகால – பட்டநாதிகளான நம் ஆழ்வார்களும்,
ஸர்வஜ்ஞராய், அவர்களுடைய அடிப்பாடு தப்பாமல் நடக்கும் ப்ராமாணிகரான நாத – யாமுன – யதிவராதிகள் (ஆதி-வர வர முனி அளவும்)தொடக்கமான
இவ் வருகுண்டான நம் ஆசார்யர்களெல்லாரும் ஏக கண்டமாக ஶ்ரிய:பதி நாராயணன் தானே
ஆசார்யனாய் வந்தவதரித்தான் என்று அறுதி யிட்டுப் பல விடங்களிலும் கோஷிக்கையாலே,

அநாதி காலமே தொடங்கி “ஸம்ஸாரிகள் தங்களையும் ஈஶ்வரனையும் மறந்து, ஈஶ்வர கைங்கர்யத்தையும் இழந்து,
இழந்தோமென்கிற இழவுமின்றிக்கே ஸம்ஸாரமாகிற பெருங்கடலிலே விழுந்து நோவுபட”
பரத்வாதி பஞ்ச ப்ரகாரனான ஸர்வேஶ்வரன் தன் க்ருபையாலே அவர்களைத் திரு மந்த்ர முகேந
“கடுங் கதிரோன் மண்டலத்தூடேற்றி வைத்து” என்கிறபடியே அர்ச்சிராதி மார்கத்தாலே கொண்டு போய்,
“ததஸ்து விரஜா தீர ப்ரதேஶம்” என்கிற அக்கரை யேற்றி, அமாநவ கர ஸ்பர்ஶத்தாலே அப்ராக்ருத ஶரீரத்தையும் கொடுத்து
நித்ய விபூதியிலே நித்ய கைங்கர்யம் கொண்டருளக் கடவோம் என்று திருவுள்ளம் பற்றி,
ஶ்ரீபதரிகாஶ்ரமத்திலே நரநாராயண ரூபேண வந்து முன்பு அவதரித்தாப் போலே
இப்போதும் நம்மை ஸம்ஸார ஸாகரத்திலே நின்றும் எடுக்கைக்காக
‘ஸாக்ஷாந் நாராயணோ தேவ:க்ருத்வா மர்த்யமயீம் தநும்|
மக்நாநுத்தரதே லோகாந் காருண்யாச் சாஸ்த்ர பாணிநா” என்கிறபடியே
ப்ரதம பர்வமான ஸர்வேஶ்வரன் தானே சரம பர்வமான ஆசார்யனாய் வந்து அவதரித்தான் என்று கொள்ள வேணும்.

இப்படி அவதார விசேஷமாயிருந்துள்ள ஸதாசார்யனை ஸச் சிஷ்யன் தேவதா ப்ரதிபத்தி பண்ண வேணுமென்று
கீழே பல ப்ரமாணங்களும் சொல்லிற்று; மநுஷ்ய புத்தி பண்ணலாகாதென்று மேலே ப்ரமாணங்களும் சொல்லுகிறது.
ஆகையாலே மநுஷ்ய புத்தி பண்ணினவன் நரகத்திலே விழுமென்றும்,
தேவதா ப்ரதிபத்தி பண்ணினவன் ஈடேறுமென்றும் கீழ் மேல் சொல்லுகிற உபய ப்ரமாணங்களாலும் பலித்தது.

“எக் காலும் நண்ணிடுவர் கீழாம் நரகு” என்கிறபடியே
குரு விஷயத்தில் நரக ஹேதுவான மநுஷ்ய புத்தியை ஸவாஸநமாக விட்டு,
“பீதக வாடைப் பிரானார் பிரம குருவாகி வந்து” என்கிறபடியே பகவதவதாரமென்று கொள்ள வேணுமென்னும்
இவ் வர்த்தம் பரமாஸ்திகராய், ப்ரமாண பரதந்த்ரராய் இருக்கும் சில பாக்யாதிகர்க்கு
நெஞ்சிலே ஊற்று மாறாமல் எப்போதும் நிலை நிற்கும்.

ஆக இப்படி “யத் ஸார பூதம் ததுபாஸிதவ்யம்” என்றும்,
“பஜேத் ஸார தமம் ஶாஸ்த்ரம்” என்றும் இத்யாதிகளில் சொல்லுகிறபடியே
ஸகல ஶாஸ்த்ர தாத்பர்யார்த்தமாய், ஶ்ரீமதுரகவி, நாதமுனிகள் தொடக்கமான நம் பூர்வாசார்யகளாலே
உபதேஶ பரம்பரா ஸித்தமாய், ஆத்மாவுக்கு நேரே வகுத்த விஷயமாய், ஒருக்காலும் ஸ்வாதந்த்ர்யாதிகள் கலசாத க்ருபா மூர்த்தியாய்,
அதி ஸுலபனாய், மோக்ஷைகஹேதுவாயிருந்துள்ள ஸதாசார்யனே
“உபாயோபேயபாவேந தமேவ ஶரணம் வ்ரஜேத்”,
“பேறொன்று மற்றில்லை நின் சரணன்றி” இத்யாதிகளில் சொல்லுகிறபடியே
உபாயோபேயமாகப் பற்ற வேண்டியிருக்க, அத்தைச் செய்யாதே

‘சக்ஷுர்கம்யம் குரும் த்யக்த்வா ஶாஸ்த்ரகம்யம் துயஸ்ஸ்மரேத்”,
“யதோ வாசோ நிவர்த்தந்தே அப்ராப்ய மநஸா ஸஹ” என்றும்,
“ஸுலபம் ஸ்வ குரும் த்யக்த்வா துர்லபம் உபாஸதே”, என்றும்,
‘விதிஶிவஸநகாத்யைர் த்யாதுமத்யந்ததூரம்” என்றும்,
‘பெண்ணுலாஞ்சடையினானும் பிரமனுமுன்னைக் காண்பான் எண்ணிலாவூழியூழித் தவஞ்செய்தார் வெள்கி நிற்ப”
என்றும் சொல்லுகிறபடியே அதி துர்லபனாய், பந்தமோக்ஷங்களிரண்டுக்கும் பொதுவாய்,

ஶரணாகதனான ஶ்ரீபரதாழ்வானையும்
“ஜலாந்மத்ஸ்யாவிவோத்ருதௌ” என்னும் ஸ்வபாவத்தையுடையளான
பிராட்டி போல்வாரையும் மறுத்து காட்டிலும் தள்ளிவிடும் நிர்க்ருணனாய்,
அர்ஜுநாதிகளுக்கு முதலடியிலே ப்ரபத்தியை உபதேஶித்து அவர்களை அத்யாபி லீலை கொண்டாடும் ஸ்வபாவத்தை உடையவனாய்,
“வைத்த சிந்தை வாங்குவித்து நீங்குவிக்க” வல்லனாய்,
“க்ஷிபாமி”, “ந க்ஷமாமி” என்னும் நிரங்குஶ ஸ்வதந்த்ரனான உபாயோபேயமாகப் பற்றி,

(நச்சு அராஅணைக் கிடந்த* நாத! பாத போதினில்,*
வைத்த சிந்தை வாங்குவித்து* நீங்குவிக்க நீஇனம்,*
மெய்த்தன் வல்லை ஆதலால்* அறிந்தனன் நின் மாயமே,*
உய்த்து நின் மயக்கினில்* மயக்கல் என்னை மாயனே!)

“உத்தாரயதி ஸம்ஸாராத் ததுபாயப்லவேந து|
குருமூர்த்திஸ்திதஸ் ஸாக்ஷாத் பகவாந் புருஷோத்தம:” என்கிறபடியே
உத்தாரகனாய், அவதார விஶேஷமாயிருந்துள்ள ஸ்வாசார்யனையே
“ஸர்வம் யதேவ நியமேந” என்கிறபடியே ஶேஷித்வ – ஶரண்யத்வ – ப்ராப்யத்வாதிகளில்
ஸகல புருஷார்த்தமுமாகப் பற்ற வேண்டி யிருக்க,(ஆகாரத் திரயமும் நம் ஆச்சார்யர் இடம் உள்ளதே என்று உணர வேண்டுமே)

அங்ஙனம் அன்றிக்கே,
தத் விஷயத்தில் ஸர்வ ஸாமாந்யமான கேவல-உபாகாரத்வமே கொண்டு
“முன்னோர் மொழிந்த முறை தப்பாமல் கூட்டுப் பின்னோர்ந்து தாமதனைப் பேசாதே
தன்னெஞ்சில் தோற்றினதே சொல்லி இது சுத்த உபதேச வரவாற்றதென்பர் மூர்க்கராவார்” என்கிறபடியே
நம் ஆசார்யர்களுடைய திருவுள்ளக் கருத்தை நன்றாக அறிந்து,
அதுக்குத் தகுதியாயிருந்துள்ள உக்த்யநுஷ்டாநங்களை ஆசரியாமல் தங்கள் மநஸ்ஸுக்குத் தோற்றினதே சொல்லி
‘இதுதானே ஸத் ஸம்ப்ரதாய பரம்பரா ஸித்தமாய் வருகிற அர்த்தம்’ என்றது –
ஸ்வதந்த்ர ப்ரக்ருதிகளாய், ஸ்வாசார்ய விஷயத்தில் ஊற்றமற்றிருக்கும் கர்ப்ப நிர்ப் பாக்யரான
ஶுஷ்க ஹ்ருதயர்க்கு நம் தர்ஶநத்தில் தாத்பர்யார்த்தமும் ததுநுகுணமான அநுஷ்டானமும் தெரியாதாகையாலே
மேலெழுந்தவாரியான இடு சிவப்புப் போலே இவ் வர்த்தம் நெஞ்சில் நிலை யில்லாது.

“ஆசார்யாயா ஹரே தர்த்தாந் ஆத்மாநஞ்ச நிவேதயேத்|
தததீநஶ்ச வர்த்தேத ஸாக்ஷாந் நாரயணே ஹி ஸ:”,
“யஸ்ய ஸாக்ஷாத் பகவதி ஜ்ஞாந் தீப ப்ரதே குரௌ, ஆசார்யஸ் ஸஹரிஸ் ஸாக்ஷாச் சரரூபீ ந ஸம்ஶய:”,
‘குருரேவ பரம் ப்ரஹ்ம”, “குருமூர்த்தி ஸ்திதஸ் ஸாக்ஷாத் பகவாந் புருஷோத்தம:” என்று
இத்யாதி ப்ரமாணங்களை விஶ்வஸித்து, ஆசார்ய நிஷ்டனாய் உஜ்ஜீவிக்க வேணும்;
அல்லாத போது ஈடேற வழி யில்லை என்று அஸ்மதாசார்யோக்தம்.

“ஸ்வாபிமாநத்தாலே ஈஶ்வராபிமாநத்தைக் குலைத்துக் கொண்ட இவனுக்கு ஆசார்யாபிமாநமொழிய கதியில்லை
என்று பிள்ளை பலகாலும் அருளிச் செய்யக் கேட்டிருக்கை யாயிருக்கும்” என்று ஶ்ரீவசநபூஷணத்திலே
பிள்ளை லோகாசார்யரும் அருளிச் செய்தார்.

இவ் வர்த்தம் ஸத் ஸம்ப்ரதாய பரம்பரா ஸித்தமாகையாலே தந்தாமுடைய ஸதாசார்யனை ஶ்ரிய:பதியான நாராயணனாகவும்,
அவன் திருவடிகளே உபாயோபேயங்களாகவும், அவன் திருவடிகளில் பண்ணும் கைங்கர்யமே புருஷார்த்தமாகவும்,
அவனுடைய முகோல்லாஸமே பலமாகவும், ப்ராப்ய பூமியும் அவன் எழுந்தருளி யிருக்கிற இடமாகவும்,
அவனுடைய விக்ரஹாநுபவாதிகள் *உண்ணுஞ் சோற்றுப் படியே தாரகாதிகளாகவும்,
“உத்தாரயதி ஸம்ஸாராத்” என்றும்,
“எதிராசா என்னை யினிக் கடுக இப் பவத்தினின்றும் எடுத்தருளே” என்றும்,
“ஆசார்யாபிமாநமே உத்தாரகம்” என்றும்,
“என் பெருவினையைக் கிட்டிக் கிழங்கொடு தன்னருளென்னும் ஒள் வாளுருவி வெட்டிக் களைந்த இராமாநுசன்” என்றும்,
“கண்டுகொண்டென்னைக் காரிமாறப் பிரான் பண்டை வல் வினை பாற்றி யருளினான்” என்றும் சொல்லுகிறபடியே

அவனே இஷ்ட ப்ராப்தி – அநிஷ்ட நிவாரணம் பண்ணித் தரும் உத்தாரகனாகவும் ப்ரதிபத்தி பண்ணி
விஶ்வஸித்திருக்கும் சரமாதிகாரிகளுக்கு
“குருணா யோபிமந்யேத குரும் வா யோபி மந்யதே தாவுபௌ பரமாம் ஸித்திம் நியமாதுப கச்சத:” என்று
ஆசார்ய விஷயத்தில் ஸ்வகத-பரகத-ஸ்வீகாரங்களிரண்டிலும் பேறு தப்பாதென்று சொல்லிற்றே யாகிலும்
ஆசார்யனையும் தான் பற்றும் பற்றும் அஹங்கார கர்ப்பமாகையாலே ‘காலன் கொண்டு மோதிரமிடுமோபாதி’ என்கிறபடியே
ஸ்வகத ஸ்வீகாரம் அவத்யமாகையாலே ஸ்வரூபத்துக்குச் சேராதென்று அத்தை விட்டு
“ஆசார்யாபிமாநமே உத்தாரகம்” என்கிறபடியே
அவனுடைய நிர்ஹேதுக க்ருபையான பரகத ஸ்வீகாரமே உத்தாரகம் என்று அறுதி யிட்டு

“ஸம்ஸார ஆவர்த்த வேக ப்ரஶமந ஶுப த்ருக் தேஶிகப்ரேக்‌ஷி – தோஹம்” என்றும்,
“நிர் பயோ நிர் பரோஸ்மி” என்றும்,
“ஆசார்யஸ்ய ப்ரஸாதேந மம ஸர்வம் அபீப்ஸிதம்| ப்ராப்நுயாமீதி விஶ்வாஸோ யஸ்யாஸ்தி ஸ ஸுகீ பவேத்” என்றும்,
‘தனத்தாலுமேதுங்குறைவிலேன் எந்தை சடகோபன் பாதங்கள் யாமுடைய பற்று” என்றும், சொல்லுகிறபடியே
த்ருஷ்டாத்ருஷ்டங்களிரண்டும் ஒருகரை சொல்லித்து.

“இருந்தேனிரு வினைப் பாசங் கழற்றி” என்கிறபடியே புண்ய பாபங்களிலும் ஒட்டற்று,
“இவ்வாறு கேட்டிருப்பார்க்காளென்று கண்டிருப்பர் மீட்சியில்லா நாட்டிருப்பார் என்றிருப்பன் நான்”,
“தத்தமிறையின் வடிவென்று தாளினையை வைத்தவரை”,
“நீதியால் வந்திருப்பார்க்குண்டியிழியாவான்” என்றும்,
“இருள்தரு மாஞாலத்தே இன்புற்று வாழும் தெருள் தருமா தேசிகனைச் சேர்ந்து” என்றும் சொல்லுகிறபடியே
நித்ய விபூதியோடு லீலா விபூதியோடு வாசியற கால தத்தவமுள்ளதனையும் ஆநந்த மக்நராய்க் கொண்டு வாழத் தட்டில்லை.

(அவ் வானவருக்கு மவ்வானவர் எல்லாம்
உவ் வானவர் அடிமை என்று உரைத்தார் –இவ்வாறு
கேட்டு இருப்பார்க்கு ஆள் என்று கண்டிருப்பார் மீட்சியிலா
நாடு இருப்பார் என்று இருப்பன் நான் –1-)

(தத்தம் இறையின் வடிவென்று தாளிணையை
வைத்த வவரை வணங்கி யிராப் –பித்தராய்
நிந்திப்பார்க்கு உண்டு ஏறா நீள் நிரயம் நீதியால்
வந்திப்பார்க்குக் உண்டு இழியா வான் –9-)

ஆகையாலிறே இஹ லோக பரலோகங்களிரண்டும் ஆசார்யன் திருவடிகளே என்றும்,
த்ருஷ்டாத்ருஷ்டங்களிரண்டும் அவனே என்றும் விஶ்வஸித்திருக்கிறதுக்கு மேலில்லை என்று
மாணிக்க மாலையிலே நிஶ்சயமாக ஆச்சான் பிள்ளை அருளிச் செய்தது.

ஆனால் இப்படி இருக்கும் அதிகாரிகளுக்கு லீலாவிபூதியே நித்யவிபூதியாமோ? என்னில்,
நம்பி திருவழுதி வளநாடு தாஸர் ஓருருவைக் கண்ணி நுண் சிறுத்தாம்பை அநுஸந்தித்து
“மதுரகவி சொன்ன சொல் நம்புவார் பதி வைகுந்தங்காண்மினே” என்று தலைக் கட்டினவாறே
ஶ்ரீபாதத்திலே ஸேவித்திருந்த ஶ்ரீவைஷ்ணவகள் “லீலா விபூதியிலே ஒருவன் இத்தை விஶ்வஸித்து அநுஸந்திக்க,
அவ்விடம் நித்ய விபூதியாம்படி எங்ஙனே?’ என்று கேட்க,

திருவழுதி வளநாடு தாஸர் ‘அதானபடி சொல்லக் கேளீர், கூரத்தாழ்வான் திருமகனார் அவதரித்த பின்பு இடைச்சுவர் தள்ளி
இரண்டு விபூதியும் ஒன்றாய்த்துக் காணும்’ என்று பணித்தார் என்னும்
இவ் வார்த்தை கண்ணி நுண் சிறுத் தாம்பு வ்யாக்யாநத்திலே ஸுஸ்பஷ்டம்.

———

அந்திமோபாய நிஷ்டை – 13 – ஆசார்ய அபசார விளக்கம்

அர்த்த பஞ்சக தத்த்வஜ்ஞா: பஞ்ச ஸம்ஸ்கார ஸம்ஸ்க்ருதா: |
ஆகார த்ரய ஸம்பந்நா: மஹா பாகவதாஸ் ஸ்ம்ருதா: ||
மஹா பாகவதா யத்ரா வஸந்தி விமலாஶ் ஶுபா: தத் தேஶம் மங்களம் ப்ரோக்தம் தத் தீர்த்தம் தத் து பாவநம் ||
யதா விஷ்ணு பதம் ஶுபம்” என்னுமிவ் வர்த்தத்தை பராஶர ப்ரஹ்மர்ஷியும் அநுக்ரஹித்தார்.

“பாட்டுக் கேட்குமிடமும், கூப்பீடு கேட்குமிடமும், குதித்த விடமும், வளைத்த விடமும், ஊட்டுமிடமும் எல்லாம்
வகுத்த விடமே என்றிருக்கக் கடவன்” என்று ஶ்ரீவசநபூஷணத்திலே பிள்ளை லோகாசார்யரும்
இவ் வர்த்தத்தை ஸுவ்யக்தமாக அருளிச்செய்தார்.

(நின்ற வண் கீர்த்தியும் நீள் புனலும் நிறை வேங்கடப் பொற்
குன்றமும் வைகுண்ட நாடும் குலவிய பாற் கடலும்
உன்றனக் கெத்தனை இன்பந்தரு முன்னிணை மலர்த்தாள்
என்றனக்கு மது இராமானுசா !இவை ஈந்தருளே – -76 –)

ஆகையால் இவர்கள் தங்களுடைய ஆசார்யனை உபய விபூதிநாதனென்றும், உபய விபூத்யைஶ்வர்யமும் இவனே
என்று ப்ரதிபத்தி பண்ணி இருக்க வேணும்,
“இராமானுசன் என் தன் மா நிதியே”,
“ இராமானுசன் என்தன் சேம வைப்பே” ,
“எனக்குற்ற செல்வமிராமாநுசன்” என்றிறே தந்நிஷ்டர் இருக்கும்படி.

“ஸாக்ஷாந் நாராயணோ தேவ: க்ருத்வா மர்த்ய மயீம் தநும்” (ஸாக்ஷாந் நாராயணோ தேவ: க்ருத்வா மர்த்ய மயீம் தநும் மக்நாநுத்தரதே லோகாந் காருண்யாச் சாஸ்த்ர பாணிநா.)என்று இத்யாதிகளிலே
சொல்லுகிறபடியே தங்களை ஸம்ஸாரத்தில் நின்றும் எடுக்கைக்காக ஸர்வேஶ்வரன் மநுஷ்ய ரூபம் கொண்டு
வந்திருக்கிறானென்று அறியாதே அவன் அமுது செய்தருளுகை, கண்வளர்ந்தருளுகை முதலான
மேலெழுந்த ஆகாரத்தைப் பார்த்து ஸ்வஜாதீய புத்தியாலே
“மாநிடவனென்றும் குருவை”,
“ஜ்ஞாநதீபப்ரதே குரௌ | மர்த்யபுத்திஶ்ருதம் தஸ்ய”,
“யோகுரௌ மாநுஷம்பாவம்”, “குருஷுநரமதி:” என்றும் சொல்லுகிறபடியே
ஆசார்யனை மநுஷ்யன் என்று ஒருக் காலாகிலும் ப்ரதிபத்தி பண்ணியிருக்கும் நீசர்க்கு வரும் அநர்த்தத்தைச் சொல்லுகிறது மேல்.

“விஷ்ணோரர்ச்சாவதாரேஷு லோஹ பாவம் கரோதிய: |
யோகுரௌமாநுஷம் பாவம் உபௌநரகபாதிநௌ”,
“நாராயணோபி விக்ருதிம் யாதி குரோ: ப்ரச்யுதஸ்யதுர்புத்தே: |
ஜலாதபேதம் கமலம் ஶோஷயதி ரவிர் ந போஷயதி”,
“ஏகாக்ஷர ப்ரதாதாரம் ஆசார்யம் யோவ மந்யதே|
ஶ்வாந யோநி ஶதம் ப்ராப்ய சண்டாலேஷ்வபி ஜாயதே|”,
“குரு த்யாகீ பவேந் ம்ருத்யு: மந்த்ர த்யாகீ தரித்ரதா|
குரு மந்த்ர பரி த்யாகீ ரௌரவம் நரகம் வ்ரஜேத்”,

“மாடும் மனையும்” என்று தொடங்கி “பீடுடைய எட்டெழுத்தும் தந்தவனே என்றிராதாருறவை விட்டிடுகை கண்டீர் விதி”,
“ஐஹிகாமுஷ்மிகம் ஸர்வம் குருரஷ்டாக்ஷர ப்ரத: |
இத்யேவம் யே ந மந்யந்தே த்யக்தவ்யாஸ்தே மநீஷிபி:”,
“மாநிடவனென்றும் குருவை” என்று தொடங்கி, “எக் காலும் நண்ணிடுவர் கீழாம் நரகு”,
“ஏகக்ராமநிவாஸஸ் ஸந் யஶ்ஶிஷ்யோ நார்ச்சயேத் குரும்|
தத் ப்ரஸாதம் விநா குர்யாத் ஸ வை விட்ஸூகரோ பவேத்”,

“எட்டவிருந்த குருவை இறை யன்றென்று விட்டு” என்று தொடங்கி, “அம்புதத்தைப் பார்த்திருப்பானற்று”,
“பற்று குருவைப் பரனன்றென இகழ்ந்து” என்று தொடங்கி, “அப் பொருள் தேடித் திரிவானற்று” ,
“என்றுமனைத்துயிருக்குமீரஞ்செய் நாரணனும்” என்று தொடங்கி, “பொங்கு சுடர் வெயிலின் அனலுமிழ்ந்து தானுலர்த்தி யற்று”,
“தத்தமிறையின் வடிவென்று தாளிணையை வைத்தவவரை வணங்கி யிராப்பித்தராய்,
நிந்திப்பார்க்குண்டேறா நீணிரயம் நீதியால் வந்திப்பார்க்குண்டிழியாவான்”,
“தன் குருவின் தாளிணைகள் தன்னிலன்பொன்றில்லாதார்” என்று தொடங்கி,
“ஆதலால் நண்ணாரவர்கள் திரு நாடு”,
“ப்ரதி ஹந்தா குரோர் அபஸ்மாரி வாக்யேந வாக்யஸ்ய ப்ரதிகாதம் ஆசார்யஸ்ய வர்ஜயேத்”,
“அர்ச்சா விஷ்ணௌ ஶிலாதீர் குருஷூ நரமதி:” என்று தொடங்கி, “ஸர்வேஶ்வரேஶே ததிதர ஸமதீர் யஸ்ய வா நாரகீ ஸ:”

குரு பரிபவமாவது – கேட்ட அர்த்தத்தின்படியே அநுஷ்டியாதொழிகையும்,
அநதிகாரிகளுக்கு உபதேஶிக்கையும்,
“தாமரையை அலர்த்தக் கடவ ஆதித்யன் தானே நீரைப் பிரிந்தால் அத்தை உலர்த்துமா போலே,
ஸ்வரூப விகாஸத்தைப் பண்ணும் ஈஶ்வரன் தானே ஆசார்ய ஸம்பந்தம் குலைந்தால் அத்தை வாடப் பண்ணும்”,
“குரோர் அபஹ்நுதாத் த்யாகாத் ஸாம்யாத் அஸ்மரணாதபி|
லோப மோஹாதிபிஶ் சாந்யைரபசாரைர் விநஶ்யதி”,
“குரோரந்ருதாபிஶம்ஸநம் பாதக ஸமாநம் கலு, குர்வர்த்தே ஸப்த புருஷாந் இதஶ்ச பரதஶ்ச ஹந்தி|
மநஸாபி குரோர்நாந்ருதம் வதேத்| அல்பேஷ்வப் யர்த்தேஷு”,
“பொய் யுரைத்தல், மாறுரைத்தல், பொருளல்லாதன உரைத்தல், பொருளருளச் சிதகுரைத்தல், போற்றுதற்கு நெகிழுதல்,
நை யுரைத்தல், வலி யுரைத்தல், விதி மறுத்தல், கிடத்தல், மேலிருத்தல், கால் நீட்டல், விலங்கு முகமவைத்தல்,
கையெடுத்துத் தொழ நாணுதல், களை ஒதுக்காதிருத்தல், கருத்தறியாப் பொருளுரைத்தல், காயிலே வாய்க்கிடுதல்,
மெய் விதிர்த்தல், நிழல் மிதித்தல், தன்னிழல் மேலிடுதல் – வியன் குருவின் சன்னதியில் விடுங்கருமமிவையே”.

“யஸ்ய ஸாக்ஷாத் பகவதி ஜ்ஞாந தீப்ப்ரதே குரௌ|
மர்த்ய புத்தி ஶ்ருதம் தஸ்ய ஸர்வம் குஞ்ஜர ஶௌசவத்”,
“ஸுலபம் ஸ்வ குரும் த்யக்த்வா துர் லபம் உபாஸதே|
லப்தம் த்யக்த்வா தநம் மூடோ குப்தமந்வேஷதிக்‌ ஷிதௌ”,
“சக்ஷுர் கம்யம் குரும் த்யக்த்வா ஶாஸ்த்ர கம்யம் து யஸ் ஸ்மரேத்|
ஹஸ்தஸ்த முதகம் த்யக்த்வா கநஸ்தமபி வாஞ்சதி”,
“குரும்த்வங்க்ருத்ய ஹுங்க்ருத்ய விப்ரம் நிர்ஜித்ய வாதத: |
அரண்யே நிர் ஜலே தேஶே பவந்தி ப்ரஹ்ம ராக்ஷஸா:”- இது ஆசார்யாபசாரம்.

————

அந்திமோபாய நிஷ்டை – 14 -பாகவத அபசார விளக்கம்

இனி தத் பக்த அபசாரமாவது – இவை ஒன்றுக்கொன்று க்ரூரங்களுமாய், உபாய விரோதிகளுமாய், உபேய விரோதிகளுமாயிருக்கும்,
கூரத்தாழ்வானுடைய ஶிஷ்யன் வீர ஸுந்தர ப்ரஹ்ம ராயன் என்பானொருவன் ஆழ்வான் குமாரரான பட்டருடனே விரோதித்து
அவரைக் கோயிலிலே குடி யிருக்க வொண்ணாதபடி கடலைக் கலக்கினாப் போலே
பட்டர் திருவுள்ளத்தைக் கலக்கி மிகவும் உபத்ரவிக்கையாலே பட்டரும் கோயில் நின்றும் புறப்பட்டுத்
திருக்கோட்டியூரிலே எழுந்தருளியிருந்த ப்ரகாரம்
“பூகி கண்டத் வயஸ ஸரஸ ஸ்நிக்த நீரோப கண்டாம் ஆவிர்மோத ஸ்திமித ஶகுநாநூதித ப்ரஹ்ம கோஷாம் |
மார்க்கே மார்க்கே பதி கநிவஹைருஞ்ச்யமாநாபவர்க்காம் பஶ்யேயம் தாம் புநரபி புரீம் ஶ்ரீமதீம் ரங்கதாம்ந:” என்று
பெருமாளையும் கோயிலையும் விட்டுப் பிரிந்து மிகவும் க்லேஶப் பட்டுக் கொண்டு எழுந்தருளியிருக்கிற காலத்திலே,

(பூகீ கண்ட த்வயஸ ஸரஸ ஸ்நிகத நீ ர –
பாக்கு மரங்களின் கழுத்து அளவாக பெருகுகின்றதும் –
வெள்ள நீர் பரந்து பாயும் விரி பொழில் அரங்கம் இ றே

உப கண்டாம் ஆவீர்மோத ஸ்திமித சகுநாநூதித ப்ரஹ்ம கோஷாம்-
தேனோடு கூடினதும்
சிநேக யுக்தமுமான
தீர்த்தத்தை சமீபத்திலே யுடையதாய்
மகிழ்ச்சி யுண்டாக்கி
ச்திமிதமாய் இருக்கின்ற பறைவைகளினால்
அநு வாதம் செய்யப் பட்ட வேத கோஷத்தை யுடையதாய் –

மார்க்கே மார்க்கே பதிக நிவஹை ருஞ்ச்யமாந அபவர்க்காம் பச்யேயம் தாம் புநரபி புரீம் ஸ்ரீ மதீம் ரங்கதாம்ந
வழி நடப்பவர்களின் கூட்டங்களினால்
வழிகள் தோறும் திரட்டி எடுத்துக் கொள்ளப் படுகிற
மோஷத்தை யுடையதான –
முக்தி கரஸ்தம் -என்றபடி
கோயில் வாசமே மோஷம் என்பார்களே-)


ஒரு ஶ்ரீவைஷ்ணவர் பட்டரை ஸேவித்து
“அடியேனுக்குத் திரு விருத்தத்திற்கு அர்த்தம் ஓருரு ப்ராஸாதித்தருள வேணும்” என்று மிகவும் அநுவர்த்திக்க,

பட்டரும் தம்முடைய ஶிஷ்யரான நஞ்சீயரைப் பார்த்து ‘ஜீயரே, எனக்குக் கோயிலையும் , பெருமாளையும் பிரிந்த
விஶ்லேஷாதிஶயத்தாலே செவிகள் சீப்பாயாநின்றது; ஆகையாலே எனக்கு வாய் திறந்தொரு வார்த்தை சொல்லப் போகிறதில்லை.
நீர் திருவிருத்தத்திற்கு அர்த்தம் ஓருரு இந்த ஶ்ரீவைஷ்ணவருக்குச் சொல்லும்’ என்று அவரை
ஜீயர் ஶ்ரீபாதத்திலே காட்டிக் கொடுத்து இங்ஙனே நடந்து செல்லுகிற நாளிலே
பட்டரளவிலே விரோதித்த வீர ஸுந்தர ப்ரஹ்மராயனுக்கு ஶரீர விஶ்லேஷமாக,
அவ்வளவில் கோயிலிலே பட்டர் திருத் தாயாரான ஆண்டாளை ஸேவித்துக் கொண்டு எழுந்தருளி யிருந்த ஶ்ரீவைஷ்ணவர்கள்
பட்டருடைய விரோதி போகையாலே திருப் பரிவட்டங்களை முடிந்து ஆகாஶத்திலே ஏறிட்டு,
நின்றார் நின்ற திக்கிலே ஸந்தோஷித்துக் கூத்தாட, அவ்வளவில் ஆண்டாள் செய்தபடி திரு மாளிகைக்குள்ளே புகுந்து
திருக்காப்பைச் சேர்த்து தாளை யிட்டுக் கொண்டு வயிற்றைப் பிடித்து வாய் விட்டழுதாள்;

அவ்வளவில் ஸந்தோஷித்துக் கூத்தாடுகிற முதலிகள் ஆண்டாளைப் பார்த்து
‘என்! பட்டருடைய விரோதி போகவும், பட்டரும் முதலிகளும் இங்கே எழுந்தருளவும்,
நாமெல்லாரும் கண்டு வாழவும் உமக்கு மிகவும் அஸஹ்யமாயிருந்ததோ?’ என்ன,
அவ்வளவில் ஶ்ரீவைஷ்ணவர்களைப் பார்த்து ஆண்டாள் அருளிச் செய்தபடி:-
பிள்ளைகாள்! நீங்கள் ஒன்றும் அறிகிறிகோளில்லை; வீர ஸுந்தர ப்ரஹ்மராயன் என்கிறவன் நேரே
ஆழ்வானுடைய ஶிஷ்யனாயிருந்து, ஆசார்ய புத்ரரான பட்டரைப் திண்டாட்டங்கண்டு அவர் திறத்தில்
மஹாபராதத்தை தீரக் கழியப் பண்ணி, ‘அறியாமல் செய்தேனித்தனை, பொறுத்தருள வேணும்’ என்று
பட்டர் திருவடிகளிலே தலை சாய்ப்பதும் செய்யாதே ‘இப்படி செய்தோம்’ என்கிற அநுதாபமற்றுச் செத்துப் போனான்.
ஆகையாலே அவன் ஶரீரம் விட்ட போதே யமபடர் கையிலே அகப்பட்டுக் கலங்கி அடி யுண்டு மலங்க விழிக்கிறான்
என்றத்தை நினைத்து என் வயிறெரிகிறபடி உங்கள் ஒருவருக்கும் தெரிகிறதில்லை – என்று ஆண்டாள் அருளிச் செய்தார்.
ஆகையால் அபராதாதத்தினுடைய கொடுமை இப்படியிருக்குமென்று அஸ்மதாசார்யோக்தம்.

அந்த பட்டர் திருவடிகளிலே ஆஶ்ரயித்துச் சோழ மண்டலத்திலே எழுந்தருளியிருக்கும்
கடக்கத்துப் பிள்ளை உடையவரைப் பழுக்க ஸேவித்து, சோமாசி யாண்டான் தாமும் மேல் நாட்டிலே எழுந்தருளி யிருந்து
ஶ்ரீபாஷ்யம் நிர்வஹிக்கிறார் என்கிற விசேஷம் கேட்டு அங்கே எழுந்தருள,
சோமாசி யாண்டானும் ‘கடக்கத்துப் பிள்ளை எழுந்தருளப் பெற்றதே’ என்று மிகவும் ஆதரித்துத்
தம்முடைய திருமாளிகையிலே கொண்டிருக்க, அப்பிள்ளையும் ஆண்டான் அருளிச் செய்கிற ஶ்ரீபாஷ்யம் முதலான
பகவத் விஷயங்களைக் கேட்டுக் கொண்டு ஆண்டானை ஸேவித்துக் கொண்டு ஒரு ஸம்வத்ஸரம் எழுந்தருளியிருந்து
ஶ்ரீபாஷ்யம் சாற்றினவாறே மீளவும் சோழ மண்டலத்துக்கு எழுந்தருளுவதாக
அப்பிள்ளை புறப்பட்டவளவிலே ஆண்டானும் எல்லை யறுதி எழுந்தருளி அப்பிள்ளையை வழி விட்டு மீண்டு
எழுந்தருளுகிற போது ‘தேவரீர் இங்கே ஒரு ஸம்வத்ஸரம் எழுந்தருளி யிருந்தவாறே
அடியேனுக்கு மிகவும் ஸந்தோஷமாயிருந்தது; இப்போது விஶ்லேஷத்தாலே பெருக்க வ்யாகுலமாயிரா நின்றது.
அடியேனுக்குத் தஞ்சமாயிருப்பதொரு நல் வார்த்தை ப்ரஸாதித்தருள வேணும்’ என்று அப்பிள்ளையை மிகவும் அநுவர்த்திக்க,
அப்பிள்ளை அருளிச்செய்தபடி:- ‘சோமாசி யாண்டான்! தேவரீர் ஜ்ஞாந வ்ருத்தருமாய்,
ஶ்ரீபாஷ்யம், திருவாய்மொழி இரண்டுக்கும் நிர்வாஹகருமாய், எல்லாத்தாலும் பெரியவராயிருந்தீரே யாகிலும்
சாற்றி யிருக்கிற திருப் பரிவட்டத் தலையிலே பாகவதாபசார நிமித்தமாக ஒரு துணுக்கு முடிந்து வையும்’ என்று
அருளிச் செய்தாரென்று அஸ்மதாசார்யோக்தம்.

‘ப்ராதுர் பாவைஸ் ஸுர நர ஸமோ தேவ தேவஸ் ததீயா: ஜாத்யா வ்ருத்தைரபி ச குணத: தாத்ருஶோநாத்ரகர்ஹா|
கிந்து ஶ்ரீமத் புவந பவந த்ராணதோந்யேஷு வித்யா வ்ருத்த ப்ராயோ பவதி விதவா கல்பகல்ப: ப்ரகர்ஷ:”,
“அர்ச்சாவதாரோபாதாநம் வைஷ்ணவோத்பத்தி சிந்தநம்|
மாத்ரு யோநி பரீக்ஷாயாஸ் துல்யமாஹுர் மநீஷிண:”,
“அர்ச்சாயாமேவ மாம் பஶ்யந் மத் பக்தேஷு ச மாம் த்ருஹந்|
விஷ தக்தை ரக்நி தக்தைராயுதைர் ஷந்தி மாமஸௌ”,
“யா ப்ரீதிர் மயி ஸம்வ்ருத்தா மத் பக்தேஷு ஸதாஸ்துதே|
அவமாந க்ரியா தேஷாம் ஸம்ஹரத் யகிலம் ஜகத்”,
மத் பக்தம் ஶ்வ பசம் வாபி நிந்தாம் குர்வந்தி யே நரா: |
பத்ம கோடி ஶதேநாபி ந க்ஷமாமி கதாசந” என்றுமுண்டு.

“சண்டாலமபி மத் பக்தம் நாவமந்யேத புத்திமாந்|
அவமாநாத் பதத்யேவ ரௌரவே நரகே நர:”,
“அஶ்வமேத ஸஹஸ்ராணி வாஜபேய ஶதாநி ச|
நிஷ்க்ருதிர் நாஸ்தி நாஸ்த்யேவ வைஷ்ணவம் வேஷிணாம் ந்ருணாம்”,
“ஶூத்ரம் வா பகவத் பக்தம் நிஷாதம் ஶ்வ பசம் ததா|
ஈக்ஷதே ஜாதி ஸாமாந்யாத் ஸ யாதி நரகம் த்ருவம்”,
“அநாசாராந் துராசாராந் அஜ்ஞாத்ரூந் ஹீந ஜந்மந:|
மத் பக்தாந் ஶ்ரோத்ரியோ நிந்தந் ஸத்யஶ் சண்டாலதாம் வ்ரஜேத்”,
“அபிசேத் ஸு துராசாரோ பஜதே மாதநந்யபாக்|
ஸாது ரேவ ஸ மந்தவ்ய: ஸம்யக் வ்யவஸ்தோ ஹி ஸ:”,
“ஸர்வைஶ்ச லக்ஷணைர் யுக்தோ நியுதஶ்ச ஶ்வ கர்மஸு|
யஸ்து பாகவதாந் த்வேஷ்டி ஸுதூரம் ப்ரச்யுதோ ஹி ஸ:”

“அமரவோரங்கமாறும்” என்று தொடங்கி,
“நுமர்களைப் பழிப்பராகில் நொடிப்பதோரளவில் ஆங்கே அவர்கள் தாம் புலையர் போலும்”,
“ஈஶ்வரன் அவதரித்துப் பண்ணின ஆனைத் தொழில்களெல்லாம் பாகவதாபசாரம் பொறாமை என்று ஜீயர் அருளிச் செய்வர்”,
“அவமாந க்ரியா”, “பாகவதாபசாரந்தான் அநேக விதம்;
அதிலே யொன்று அவர்கள் பக்கல் ஜந்ம நிரூபணம். இது தான் அர்ச்சாவதாரத்தில் உபாதந ஸ்ம்ருதியிலுங்காட்டில் க்ரூரம்.
அத்தை மாத்ரு யோநி பரீக்ஷையோடொக்கும் என்று ஶாஸ்த்ரம் சொல்லும்”,
“த்ரிஶங்குவைப் போலே கர்ம சண்டாலனாய் மார்விலட்ட யஜ்ஞோபவீதந்தானே வாராய் விடும்”,
“ஜாதி சண்டாலனுக்குக் காலாந்தரத்திலே பாகவதனாயிருக்க யோக்யதை யுண்டு; அதுவுமில்லை இவனுக்கு ஆரூட பதிதனாகையாலே”.

“திருவுடை மன்னர், செழு மா மணிகள், நிலத் தேவர், பெரு மக்கள், தெள்ளியார், பெருந் தவத்தர், உருவுடையார்,
இளையார், வல்லார், ஒத்து வல்லார், தக்கார், மிக்கார், வேத விமலர், சிறு மா மனிசர், எம்பிரான் தன சின்னங்கள்” என்று
நங்குல நாதரான ஆழ்வார்கள் ஶ்ரீவைஷ்ணவர்களுக்கு இப்படித் திரு நாமம் சாற்றுகையாலே
கேவலம் தன்னோடக்க ஒரு மநுஷ்யன் என்று வைஷ்ணவனை நினைத்திருக்கையே பாகவதாபசாரம்.

“தஸ்ய ப்ரஹ்ம விதாகஸ:”,
“நாஹம் விஶங்கே ஸுர ராஜ வஜ்ராந ந த்ர்யக்ஷ ஶுலாந் ந யமஸ்ய தண்டாத்|
நாக்ந் யர்க்க ஸோமா நாலவித்த ஹஸ்தாத் ஶங்கே ப்ருஶம் பாகவதாபசாராத்”.
ப்ரஹ்ம விதோபமாநாத் “ஆயுஶ் ஶ்ரியம் யஶோ தர்மம் லோகாநாஶிஷ ஏவ ச|
ஹந்தி ஶ்ரேயாம்ஸி ஸர்வாணி பும்ஸோ மஹததிக்ரம:”,
“நிந்தந்தியே பகவதஶ் சரணாரவிந்த சிந்தாவதூத ஸகலாகிலகல்ம ஷௌகாந்|
தேஷாம் யஶோ தந ஸுகாயுர பத்ய பந்து மித்ராணி சஸ்திரதராண்யபி யாந்தி நாஶம்”,
“அப்யர்ச்சயித்வா கோவிந்தம் ததீயாந் நார்ச்சயந்தி யே|
ந தே விஷ்ணோ: ப்ரஸாதஸ்ய பாஜநம் டாம்பி கா ஜநா:”,
‘இழவுக்கவர்கள்பக்கல் அபசாரமே போரும்”,
“வைஷ்ணவாநாம் பரீவாதம் யோ மஹாந் ஶ்ருணுதே நர:|
ஶங்குபி ஸ்தஸ்ய நாராசை: குர்யாத் கர்ணஸ்ய பூரணம்”,

“இவ் விடத்திலே வைநதேய வ்ருத்தாந்தத்தையும், பிள்ளைப் பிள்ளை யாழ்வானுக்கு ஆழ்வான் பணித்த வார்த்தையையும் ஸ்மரிப்பது”.

இப்படி ஆசார்யாபசாரமும், தத் பக்தாபசாரமும் அதி க்ரூரமென்று வேத ஶாஸ்த்ர புராணாதிகளும்,
அவற்றினுடைய அர்த்த தாத்பர்யங்களையும் யதா தர்ஶநம் பண்ணி ஸர்வஜ்ஞராயிருக்கும்
நம் ஆழ்வார்களும், ஆசார்யர்களும் ஒருக்கால் சொன்னாப் போலே ஒன்பதின்கால் சொல்லிக் கை யெடுத்து
ஒரு மிடறாகக் கூப்பிடுகையாலே ஆஸ்திகனாய், உஜ்ஜீவந பரனாய் இருக்குமவன் மறந்து ஒரு காலத்திலும், ஒரு தேஶத்திலும் ,
ஸ்வப்நாவஸ்தையிலும் தனக்கு வகுத்த ஶேஷிகளாய், ஸர்வ ப்ரகாரத்தாலும் ரக்ஷகராயிருந்துள்ள இவ் விஷயங்களை
கிஞ்சித் மாத்ரமும் நெகிழ நினைக்கக் கடவனல்லன். நெகிழ நினைத்தானாகில் நிலம் பிளந்தால் இழையிட வொண்ணாதாப் போலவும்,
கடலுடைந்தால் அடைக்க வொண்ணாதாப் போலவும், மலை விழுந்தால் தாங்க வொண்ணாதாப் போலவும்
இது அப்ரதி க்ரியமாயிருப்பதொரு அநர்த்தம் என்று நம்முடைய ஜீயர் பல காலும் அருளிச் செய்தருளுவர்.

ஆகையாலே ஸதாசார்ய – தத் துல்ய- விஷயங்களை கிஞ்சிந் மாத்ரமும் நெகிழ நினைக்கலாகாதென்கிற
அவஶ்யாநுஷ்டேயங்களை ப்ரதிபாதிக்கிறது மேல்.

———

அந்திமோபாய நிஷ்டை – 15 – ஆசார்ய/பாகவத ப்ரஸாதத்தின் பெருமை மற்றும் ஸ்ரீபாத தீர்த்தம்

“யோஸௌ மந்த்ரவரம் ப்ராதாத் ஸம்ஸாரோச்சேத ஸாதநம்|
யதிசேத் குருவர் யஸ்ய தஸ்யோச்சிஷ்டம் ஸுபாவநம்”, என்றும்,
“குரோர்யஸ்ய யதோச்சிஷ்டம் போஜ்யம் தத் புத்ர ஶிஷ்யயோ:” என்றும்.
“குரோருச்சிஷ்டம் புஞ்ஜீத” என்றும் சொல்லுகிறபடியே கீழே பல ப்ரமாணங்களாலும்
ஸர்வேஶ்வரனுடைய அவதாரமாக ப்ரதிபாதிக்கப்பட்ட தந்தாமுடைய ஸதாசார்யனே தைவமென்றும்
விஶ்வஸித்திருக்கும் சரமாதிகாரிகளுக்கு ஆசார்யன் அமுது செய்து திருக் கை மாற்றி யருளின திருத் தளிகையில் ப்ரஸாதமும்,(இவர் மோர் முன்னாக உண்டவர் அன்றோ)

“ப்ரக்ஷால்ய சரணௌ பாத்ரே ப்ரணி பத்யோபயுஜ்ய ச|
நித்யம் விதிவதர்க்யாத்யை ராவ்ருதோப் யர்ச்சயேத் குரும்” என்கிறபடியே
அவனுடைய திருவடிகளில் தீர்த்தமும் பரம பாவநமுமாய், பெற்ற தாயினுடைய முலைப் பால் போலே
தாரகமுமாய், போஷகமுமாயிருக்கையாலே ஶரீராவஸாநத்தளவும் போக்யமுமாயிருக்கும்.

அவ்வளவன்றிக்கே “கங்கா ஸேது ஸரஸ்வத்யா: ப்ரயாகாந் நைமிஶாதபி|
பாவநம் விஷ்ணு பக்தாநாம் பாத ப்ரக்ஷாலநோதகம்”,
“யத் தத் ஸமஸ்த பாபாநாம் ப்ராயஶ்சித்தம் மநீஷிபி:|
நிர்ணீதம் பகவத் பக்த பாதோதக நிஷேவணம்”,
“திஸ்ர: கோட்யர்த்த கோடீ ச தீர்த்தாநி புவந த்ரயே|
வைஷ்ணவாங்க்ரி ஜலாத் புண்யாத் கோடி பாகேந நோ ஸம:”,
“ப்ராயஶ் சித்தமிதம் குஹ்யம் மஹா பாதகிநாமபி|
வைஷ்ணவாங்க்ரி ஜலம் ஶுப்ரம் பக்த்யா ஸம் ப்ராப்யதே யதி”,
“நாரதஸ்யாதிதே: பாதௌ ஸர்வாஸாம் மந்த்ரே ஸ்வயம்|
க்ருஷ்ண: ப்ரக்ஷால்ய பாணிப்யாம் பபௌ பாதோதகம் முநே:||,

“தொண்டர் சேவடிச் செழுஞ்சேறென் சென்னிக் கணிவனே”,
“தொண்டரடிப் பொடி யாட நாம் பெறில் கங்கை நீர் குடைந்தாடும் வேட்கை என்னாவதே”,
“தத்பாதாமப் வதுலம் தீர்த்தம் ததுச்சிஷ்டம் ஸுபாவநம்|
ததுக்தி மாத்ரம் மந்த்ராக்ர்யம் தத் ஸ்ப்ருஷ்ட மகிலம் ஶுசி”,
“கோடி ஜந்மார்ஜிதம் பாபம் ஜ்ஞாநதோ அஜ்ஞாநத: க்ருத: |
ஸத்ய: ப்ரதஹ்யதே ந்ரூணாம் வைஷ்ணவோச்சிஷ்ட போஜநாத்”,
“போனகம் செய்த சேடம் தருவரேல் புனிதமன்றே” இத்யாதிகளில் சொல்லுகிறபடியே

ஜ்ஞாநமும், விரக்தியும், ஶாந்தியும் உடையவராயிருக்கும் பரம ஸாத்த்விகராய், ஆசார்ய துல்யராயிருக்கும் மஹா பாகவதர்கள் அமுது செய்தருளின திருத் தளிகையில் ப்ரஸாதமும்,
அவர்களுடைய ஶ்ரீபாத தீர்த்தமும் வைதமாக ஸ்வீகரிக்கை யன்றிக்கே ஆத்மாவினுடைய ஶேஷத்வத்தின்
எல்லை நிலமாகையாலே ஸத்தா தாரகம் என்று அவஶ்யம் ஸ்வீகரிக்க வேணும்.

அது எங்ஙனே என்னில், “ஶரீரமேவ மாதா பிதரௌ ஜநயத:” என்கிற ஸாமாந்ய விஷயத்தில்,
“பிது: ஜ்யேஷ்டஸ்ய ப்ராதுருச்சிஷ்டம் போக்தவ்யம்” என்று
அவர்களுடைய ஶிஷ்ய புத்ரர்களுக்கு ஸ்வீகார்யமென்று விதித்த ஆபஸ்தம்ப மஹர்ஷி தானே
“ஸ ஹி வித்யாதஸ்தம் ஜநயதி; தச் ச்ரேஷ்டம் ஜந்ம” என்று
ப்ரஹ்ம வித்யா ப்ரதனாகையாலே விஶேஷ பிதாவான ஸதாசார்யன் ஶரீரோத்பாதகனைப் பற்றவும்
இப்படி உத்க்ருஷ்டன் என்று ப்ரதிபாதிக்கையாலே ஶிஷ்யனுக்கு ஸதாசார்ய – தத் துல்யர்கள் அமுது செய்தருளின தளிகையில் ப்ரஸாதமும்,
அவர்களுடைய ஶ்ரீபாத தீர்த்தமும் அவஶ்யம் ஸ்வீகார்யமென்னுமிடம் கிம்புநர் ந்யாய ஸித்தமிறே.

இவ் விடத்தில் ஸதாசார்ய தத் துல்யரென்றது ஆரை என்னில் –
‘ஆசார்யவத் தைவவந் மாத்ருவத் பித்ருவத்’ இத்யாதிகளான ஶாஸ்த்ரங்கள் ஶ்ரீ வைஷ்ணவர்களை ஆசார்ய துல்யரென்று சொல்லுகையாலும்,
“அநுகூலராகிறார் ஜ்ஞாந பக்தி வைராக்யங்கள் இட்டு மாறினாப் போலே வடிவிலே தொடை கொள்ளலாம்படி யிருக்கும் பரமார்த்தர்” என்றும்,
“அதாவது ஆசார்ய துல்யரென்றும் ஸம்ஸாரிகளிலும், தன்னிலும், ஈஶ்வரனிலும் அதிகரென்று நினைக்கை” என்றும்,
“அநுகூலர் ஆசார்ய பரதந்த்ரர்” என்றும் ஶ்ரீவசந பூஷணத்திலே பிள்ளை லோகாசார்யரும் அருளிச் செய்த திவ்ய ஸூக்திப்படியே
பரம பாகவதர்களாய்,

“இராமாநுசனைத் தொழும் பெரியோர் பாதமல்லால் என்றன் ஆருயிர்க்கு யாதொன்றும் பற்றில்லையே”,
“இராமாநுசனைத் தொழும் பெரியோர் எழுந்திரைத்தாடுமிடம் அடியேனுக்கிருப்பிடமே” என்கிறபடியே
அர்த்த காமங்களில் நசை யற்று ஆசார்ய பரதந்த்ரர்க்கு ஶேஷமாய், தங்களுக்கு ஸதாநுபவ யோக்யராயிருக்கும் பெரியோர்களை.

இன்னமும் இவ் வர்த்தத்தை ஸர்வஜ்ஞராயிருக்கும் ஆசார்யர்கள் ஸம்ஶய விபர்யயமற ஸப்ரமாணமாக
ஸ்வ ஸ்வ ப்ரபந்தங்களிலே தெளிய அருளிச் செய்தார்கள்.

மற்றுள்ளாரும் சொல்லுவார்கள்.
அதெங்ஙனே என்னில்,
“நல்லார் பரவுமிராமாநுசன் திருநாமம் நம்ப வல்லார் திறத்தை மறவாதவர்கள் யவர்,
அவர்க்கே எல்லாவிடத்திலும் என்றுமெப்போதிலுமெத்தொழும்பும் சொல்லால் மனத்தால் கருமத்தினால் செய்வன் சோர்வின்றியே”,
“இன்புற்ற சீலத்திராமாநுச, என்றுமெவ்விடத்துமென்புற்ற நோயுடல் தோறும் பிறந்திறந்து,
எண்ணரிய துன்புற்று வீயினும் சொல்லுவதொன்றுண்டுன் தொண்டர்கட்கே அன்புற்றிருக்கும்படி, என்னை யாக்கி அங்காட்படுத்தே” என்று
நூற்றந்தாதியிலே பிள்ளை அமுதனாரும் அருளிச் செய்தார்.

கூரத்தாழ்வான் குமாரரான ஶ்ரீபராசர பட்டர் பகவத் விஷயம் அருளிச் செய்து கொண்டு தாமும் முதலிகளும் கூடிப்
பெரிய திருவோலக்கமாக எழுந்தருளி யிருக்கச் செய்தே கூரத்தாழ்வான் தேவிகள் ஆண்டாள் திருவோலக்கத்தின் நடுவே எழுந்தருளி
தம்முடைய குமாரரான பட்டரை தண்டனிட்டுத் தீர்த்தம் கொள்ள, ஒரு ஶ்ரீவைஷ்ணவர் அத்தைக் கண்டு
‘பெற்ற தாயார் தம்முடைய புத்ரனைத் தண்டனிட்டுத் தீர்த்தங்கொள்ளலாமோ’ என்ன,
அப்போது ஆண்டாள் அருளிச் செய்தபடி – திருவோலக்கத்திலே எழுந்தருளி யிருக்கிற முதலிகளைப் பார்த்து
‘பிள்ளைகாள்! அந்யர்க்குண்டான எம்பெருமானுடைய தீர்த்த ப்ரஸாதங்களை ப்ரஸாதப்பட வேணும்,
தான் ஏறி யருளப் பண்ணிக் கொண்ட எம்பெருமானுடய ப்ரஸாதங்கள் க்ரஹிக்கலாகாதென்று சொல்லுமவர்கள் ஶுஷ்க ஹ்ருதயராய்,
யதாஜ் ஞாநம் பிறவாத ப்ராந்தரன்றோ?’ என்று அருளிச் செய்தார்.என்னும் இப் ப்ரஸங்கம்
திருப்பாவை வ்யாக்யாநத்தில் அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் அருளிச்செய்தார்.

ஆண்டாள் தாம் அப்படி செய்தது என் கொண்டு? என்ன,
‘ ந பரீக்ஷ்ய வயோ வந்த்யா: நாராயண பராயணா:” என்றும்,
“வண்ணச்செஞ்சிறு கைவிரலனைத்தும் வாரி வாய்க் கொண்ட அடிசிலின் மிச்சில்
உண்ணப் பெற்றிலேன் ஓ கொடு வினையேன்” என்றுமுண்டாகையாலே செய்தாள்.

————-

அந்திமோபாய நிஷ்டை – 16- பாகவதர்களின் பெருமை (எந்த ஜன்மத்தில் பிறந்திருந்தாலும்)

ம்லேச்சனும் பக்தனானால் சதுர்வேதிகளநுவர்த்திக்க அறிவு கொடுத்துக் குலதெய்வத்தோடொக்க பூஜை கொண்டு
பாவந தீர்த்த ப்ரஸாதனாமென்கிற திருமுகப் படியும்,
விஶ்வாமித்ர – விஷ்ணுசித்த- துளஸீ ப்ருத்யரோடே உள் கலந்து தொழுகுலமானவன் நிலையார் பாடலாலே
ப்ராஹ்மண வேள்விக் குறை முடித்தமையும், கீழ் மகன் தலை மகனுக்கு ஸம ஸகாவாய்,
தம்பிக்கு முற் பிறந்து வேலும் வில்லுங்கொண்டு பின் பிறந்தாரை ஶோதித்து.
தமையனுக்கு இளையோன் ஸத் பாவம் சொல்லும்படி ஏக குலமானமையும்,
தூது மொழிந்து நடந்து வந்தவர்களுடைய ஸம்யக் ஸகுண ஸஹ போஜநமும்,
ஒரு பிறவியிலே இரு பிறவியானாரிருவர்க்கு தர்ம ஸுநுஸ்வாமிகள் அக்ர பூஜை கொடுத்தமையும்,
ஐவரில் நால்வரில் மூவரில் முற்பட்டவர்கள் ஸந்தேஹியாமல் ஸஹஜரோடே புரோடாஶமாகச் செய்த புத்ர க்ருத்யமும்,
புஷ்ப த்யாக போக மண்டபங்களில் பணிப் பூவும் ஆல வட்டமும் வீணையுங்கையுமான அந்தரங்கரை முடி மன்னவனும்,
வைதிகோத்தமரும், மஹா முநியும் அநுவர்த்தித்த க்ரமமும், யாகாநுயாகோத்தர வீதிகளில்
காயாந்ந ஸ்தல ஶுத்தி பண்ணின வ்ருத்தாசாரமும் அறிவார்க்கிறே ஜந்மோத்கர்ஷாபகர்ஷங்கள் தெரிவது.
அஜ்ஞர் ப்ரமிக்கிற வர்ணாஶ்ரம வித்யா வ்ருத்தங்களை கர்த்தப ஜந்மம், ஶ்வபசா தமம், ஶில்ப நைபுணம், பஸ்மாஹுதி,
ஶவ விதவாலங்காரமென்று கழிப்பர்கள் – என்று ஆசார்ய ஹ்ருதயத்தில்(85)
பிள்ளை லோகாசார்யர் திருத் தம்பியார் அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் அருளிச் செய்தார்.

உத்க்ருஷ்டமாக ப்ரமித்த ஜந்மம் ப்ரம்ஶ ஸம்பாவனையாலே “ஶரீரே ச” என்கிறபடியே பய ஜநகம்.
அதுக்கு ஸ்வரூப ப்ராப்தமான நைச்யம் பாவிக்க வேணும்.
அபக்ருஷ்டமாக ப்ரமித்த உத்க்ருஷ்ட ஜந்மத்துக்கு இரண்டு தோஷமுமில்லை. நைச்யம் ஜந்ம ஸித்தம்.
ஆகையாலே உத்க்ருஷ்ட ஜந்மமே ஶ்ரேஷ்டம். “ஶ்வபசோபி மஹீபால”.
நிக்ருஷ்ட ஜந்மத்தால் வந்த தோஷம் ஶமிப்பது விலக்ஷண ஸம்பந்தத்தாலே. ஸம்பந்தத்துக்கு யோக்யதை உண்டாம் போது
ஜந்மக் கொத்தை போக வேணும். ஜந்மத்துக்கு கொத்தையும், அதுக்குப் பரிஹாரமும்
“பழுதிலாவொழுகல்” என்கிற பாட்டிலே அருளிச் செய்தார்.

(ஸ்வ சோபி மஹீ பால – சூரணை-217–விஷ்ணு பக்தோ த்விஜாதிக-விஷ்ணு பக்தி விஹீநச்து யதிச்ச ஸ்வபசாதம -என்கிற படி
எத்தனை யேனும் நிக்ருஷ்ட ஜன்மாவாய் இருந்தானே ஆகிலும்–பகவத் பக்தனானவன் த்வைஜநிர் காட்டில் அதிகன்-)

(ஸ்ரீ தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் -பழுதிலா ஒழுகல்-இத்யாதியாலே -பிரம்மா தொடங்கி தங்கள் அளவும் வர
நெடுகப் போகிற வம்ச பிரவாகத்தில் ஒரு தோஷம் இன்றிக்கே இருக்கும் அவர்களாய் -பலராய் இருக்கிற சதுர் வேதிகாள்
இதில் கீழ்ப் பட்டது இல்லை என்னும் நிஹீன குலத்தில் பிறந்தார்களே  ஆகிலும்
என்னோடு உண்டான அசாதாராண சம்பந்தத்தை அறிந்து -அந்த ஞான அனுரூபமான ஸ்வ ஆசாரத்தை உடையார் ஆகில் –
நீங்கள் அவர்கள் காலில் விழுந்து ஆராதியுங்கோள் -அவர்கள் உங்கள் பக்கில் ஞான அபேஷை பண்ணில் -நீங்கள் ஆதரித்து சொல்லுங்கோள் –
அவர்கள் பகவத் ஞானத்தை உங்களுக்கு பிரசாதிக்கையில் -கேட்டு கிருதார்தர் ஆகுங்கோள் –
எனக்கு மேல் பூஜ்யரில்லாமையாலே -என்மாத்ரம் ஆகிலும் அவர்களை ஆராதித்து-நல் வழி போகுங்கோள்)

வேதகப் பொன் போலே இவர்களோட்டை ஸம்பந்தம்.
இவர்கள் பக்கல் ஸாம்ய புத்தியும், ஆதிக்ய புத்தியும் நடக்க வேணும். அதாவது ஆசார்ய துல்யரென்றும், ஸம்ஸாரிகளிலும்,
தன்னிலும், ஈஶ்வரனிலும் அதிகரென்றும் நினைக்கை. ஆசார்ய ஸாம்யத்துக்கடி ஆசார்ய வசநம்.
இப்படி நினையாதொழிகையும் அபசாரம். இவ் வர்த்தம் இதிஹாஸ புராணங்களிலும், பயிலுஞ்சுடரொளி நெடுமாற்கடிமையிலும்,
கண் சோர வெங்குருதியிலும், நண்ணாத வாளவுணரிலும், தேட்டருந்திறல் தேனிலும்,
மேம்பொருளுக்கு மேலில் பாட்டுக்களிலும் விஶதமாகக் காணலாம்.
க்ஷத்ரியனான விஶ்வாமித்ரன் ப்ரஹ்மர்ஷியானான். விபீஷணனை ராவணன் குலபாம்ஸநனென்றான்.
பெருமாள் இக்ஷவாகு வம்ஶ்யனாக நினைத்து வார்த்தை அருளிச்  செய்தார்.
பெரிய உடையாருக்குப் பெருமாள் ப்ரஹ்மமேத ஸம்ஸ்காரம் பண்ணி யருளினார்.
தர்ம புத்ரர் அஶரீரி வாக்யத்தையும், ஜ்ஞாநாதிக்யத்தையுங்கொண்டு ஶ்ரீவிதுரரை ப்ரஹ்மமேதத்தாலே ஸம்ஸ்கரித்தார்.
ருஷிகள் தர்ம வ்யாதன் வாசலிலே துவண்டு தர்ம ஸந்தேஹங்களை ஶமிப்பித்துக் கொண்டார்கள்.
க்ருஷ்ணன் பீஷ்ம த்ரோணாதி க்ருஹங்களை விட்டு ஶ்ரீவிதுரர் திருமாளிகையிலே அமுது செய்தான்.
பெருமாள் ஶ்ரீஶபரி கையாலே அமுது செய்தருளினார்.
மாறனேரி நம்பி விஷயமாகப் பெரிய நம்பி உடையவருக்கு அருளிச்செய்த வார்த்தையை ஸ்மரிப்பது – என்று
ஶ்ரீவசந பூஷணத்திலே பிள்ளை லோகாசார்யர் அருளிச் செய்தார்.

“பவத் தயயா யதீந்த்ர த்வத் தாஸ தாஸ கணநாசரமாவதௌய: தத்தாஸதைகரஸதா விரதா மமாஸ்து” என்று
நம்முடைய ஜீயரும் யதிராஜ விம்ஶதியிலே அருளிச்செய்தருளினார்.

(ஸப்தாதி போக விஷயா ருசிரஸ் மதீயா
நஷ்டா பவத்விஹ பவத் தயயா யதீந்த்ர ! |
த்வத் தாஸ தாஸ கணநா சரமாவதௌ ய:
தத் தாஸதைக ரஸதாSவிரதா மமாஸ்து ||
(16)

பதவுரை:- ஹே யதீந்த்ர – வாரீர் யதிராஜரே, இஹ – இந்த ஸரீரம் இருக்கும் நிலையிலேயே, அஸ்மதீயா – அடியேனுடையதான, ஸப்தாதி போக விஷயா – நீசங்களான ஸப்தம் முதலியவற்றாலுண்டான அநுபவத்தைப்பற்றிய ருசி: – ஆசையானது, பவத்தயயா – தேவரீருடையதாய் அதிகமான துக்கத்தையே பற்றுக்கோடாகக்கொண்ட தயையினால், நஷ்டா பவது – உருத்தெரியாதபடி காணாமல்போகுக, (மேலும்) ய: – எந்த பாக்யஸாலியானவன், த்வத்தாஸ – விற்கவும் வாங்கவும் உரியவனாய் தேவரீர் இட்ட வழக்காயிருக்கும் அடியேனுடைய, தாஸகணநா – அடியவர்களை எண்ணும்போது, சரமாவதௌ – அவ்வெண்ணிக்கையின் கடைசியான எல்லையில், பவதி – இருக்கிறானோ, தத்தாஸதா – அவனைக் குறித்துச்செய்யும் அடிமையில், ஏக ரஸதா – (மற்றவற்றில் ஆசையோடு கலசாமல்) ஒன்றுபட்ட ஆசையானது, அவிரதா – நித்யமாக , பவத்தயயா – தேவரீருடைய தயையினால், மம அஸ்து – அடியேனுக்கு உண்டாயிடுக.)

திருவயிந்திரபுரத்திலே ஶ்ரீவில்லிபுத்தூர்ப் பகவரென்று உத்தமாஶ்ரமியாயிருப்பாரொருவர் எல்லாரும்
ஒரு துறையிலே அநுஷ்டாநம்பண்ண, தாம் ஒரு துறையிலே அநுஷ்டாநம் பண்ணுவராய்த்து.
அவரொரு நாள் அநுஷ்டாநம் பண்ணி மீண்டு வாரா நிற்கச் செய்தே இருந்த ப்ராஹ்மணர்
‘உமக்கு ஒரு துறையிலே நீராடுவதேது?’ என்று கேட்க,
‘விஷ்ணு தாஸா வயம் யூயம் ப்ராஹ்மணா வர்ண தர்மிண:|
அஸ்மாகம் தாஸ வ்ருத்தீநாம் யுஷ்மாகம் நாஸ்தி ஸங்கதி:” என்று,
‘நீங்கள் ப்ராஹ்மண வர்ண தர்மிகள், நாங்கள் தாஸ வ்ருத்திகள். கைங்கர்ய பரர். ஆகையாலே
உங்களோடு எங்களுக்கு அந்வயமில்லை’ என்று துறை வேறிட்டுப் போந்தாரென்று இவ் வ்ருத்தாந்தம்
ஆசார்ய ஹ்ருதய வ்யாக்யாநத்திலே திருநாராயணபுரத்தில ஆய் அருளிச் செய்தார்.

“பூதங்களைந்தும் பொருந்துமுடலினாற்பிறந்த சாதங்கள் நான்கினொடும் சங்கதமாம்,
பேதங்கொண்டென்ன பயன் பெறுவீர்” (14) என்றும்,
“குடியுங்குலமுமெல்லாம் கோகனகை கேள்வனடியார்க்கு அவனடியே யாகும்” என்றும்,
கேவல வர்ணாஶ்ரமங்களையே பற்றி நிற்க வில்லை ஒரு ப்ரயோஜநமில்லை;
ஸர்வர்க்கும் ஸர்வ ப்ரயோஜநமும் ஶ்ரிய:பதி நாராயணன் திருவடித் தாமரைகளே காணும் என்று
ஞான சாரத்திலே அருளாளப் பெருமாள் எம்பெருமானார் அருளிச் செய்தார்.

(பூதங்கள் ஐந்தும் பொருந்து உடலினில் பிறந்த
சாதங்கள் நான்கினோடும் சங்கதமாம் பேதம் கொண்டு
என்ன பயன் பெறுவீர் எவ்வுயிர்க்கும் இந்திரை கோன்
தன்னடியே காணும் சரண் –14-

பதவுரை:

பூதங்கள் ஐந்தும் பொருந்தும்-நிலம், நீர், தீ, காற்று, வானம், என்னும் ஐந்து பொருட்களுடைய கூட்டுறவால் உண்டான
உடம்பினால்-உடலை அடிப்படையாக வைத்துப் பிறந்த
சாதங்கள்-சாதிகள்
நான்கினொடும்-அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் என்னும் நாலு வகைப் பிரிவோடும்
சங்கதமாம்-சேர்ந்திருக்கிற
பேதங்கொண்டு-உயர்வு தாழ்வாகிற வேற்றுமைகளைக் கொண்டு
என்னபயன் பெறுவீர்-என்ன லாபத்தை அடைவீர்?
எவ்வுயிர்க்கும்-அனைத்து உயிர்களுக்கும்
இந்திரைகோன்-லக்ஷ்மீ நாயகனான
தன்னடியே-எம்பெருமானுடைய திருவடிகளே
சரண்-புகலாகும் என்று
காணும் -அறிவீர்களாக (குறிப்பு) காணும் முன்னிலை

குடியும் குலமும் எல்லாம் கோகனகை கேள்வன்
அடியார்க்கு அவன் அடியே யாகும் படியின் மேல்
நீர் கெழுவும் ஆறுகளின் பேரும் நிறமும் எல்லாம்
ஆர்கலியைச் சேர்ந்திட மாய்ந்தற்று –15-

பதவுரை:

குடியும் -பிறந்த ஊரும்
குலமும் -பிறந்த கோத்திரமும்
எல்லாம் 0மற்றும் பிறப்பு (குறி) அடையாளங்கள் எல்லாம்
கோனகை-திருமங்கை மணாளன்
கேள்வனடியார்க்கு-தொண்டர்களுக்கு
அவனடியே யாகும்-இறைவனான அவனுடைய திருவடிகளே அனைத்தும் ஆகும்
இதற்கு எடுத்துக்காட்டு
படியின்மேல்-பூமியில்
நீர் கெழுவும்-நீர் நிறைந்த
ஆறுகளின்-நதிகளுடைய
பேரும்-கங்கை முதலிய பெயரும்
நிறமும்-சிவப்பு, வெளுப்பு, கருப்பு முதலிய
எல்லாம் வேற்றுமைகள் எல்லாம்
ஆர்கலி-சமுத்திரத்தை
சேர்ந்து-கலந்து
மாய்ந்திடும் அற்று-அழிந்து போவது போன்று)

 

“தேஹாத்ம ஜ்ஞாந கார்யேண வர்ண பேதேந கிம்பலம்|
கதிஸ் ஸர்வாத்மநாம் ஶ்ரீமந் நாராயண பத த்வயம்”
“ஏகாந்தீ வ்யபதேஷ்டவ்யோ …நைவ க்ராமகுலாதிபி: விஷ்ணுநா-தஸ்ய ஸர்வம் ஏவ ஹி” என்னக் கடவதிறே.
“அத்ய ப்ரப்ருதி ஹே லோகா: யூயம் யூயம் வயம் வயம்|
அர்த்த காம பரா யூயம் நாராயண பரா வயம்” என்று ஶ்ரீஶுக ப்ரஹ்மர்ஷி தாம்
வேத வ்யாஸ புத்ரராயிருக்க ஶுக தாதர் என்று தம்மை யிட்டுப் பிதாவை நிரூபிக்க வேண்டும் படியான
ஜ்ஞாநாதிக்யத்தை உடையவராகையலே லௌகிகரைப் பார்த்து ஒட்டற வார்த்தை சொல்லி அவ்வளவன்றிக்கே,
“நாஸ்தி ஸங்கதிரஸ்மாகம் யுஷ்மாகஞ்ச பரஸ்பரம்|
வயம் து கிங்கரா விஷ்ணோ: யூயமிந்த்ரிய கிங்கரா:” என்று(நீங்கள் இந்திரிய கிங்கரர்கள் -ஆக்கையின் வழி உழன்றுள்ளீர் அடியேன் இந்தர்யம் அருளிய அவனுக்கு கிங்கரர்)
தமக்குண்டான விஶேஷ ஜ்ஞாநத்தையும் அவர்களுக்குண்டான இந்த்ரிய பாரவஶ்யதையையும் சொல்லி,
தத் ஸம்பந்தத்தையும் அறுத்து, அவ்வளவுமன்றிக்கே,
“நாஹம் விப்ரோ ந ச நரபதிர்நாபி வைஶ்யோ ந ஶூத்ரோ நோ வா வர்ணீ நசக்ருஹபதிர் நோ வநஸ்தோ யதிர்வா|
கிந்து ஶ்ரீமத் புவந பவந ஸ்தித்யபாயைக ஹேதோர் லக்ஷமீ பர்த்துர் நர ஹரிதநோர் தாஸ தாஸஸ்ய தாஸ:” –
என்னுடைய ஸ்வரூபம் வர்ணாஶ்ரமங்களை விட்டு நிரூபிக்கப்பட்டது;
ஜ்ஞாநாநந்தங்களும், பகவச் சேஷத்வமும் புற விதழ் என்னும்படி ததீய ஶேஷத்வத்தை யிட்டே நிரூபிக்கும்படி யிருக்கும்.
இப்படியான பின்பு பாகவதர்களென்றும், அபாகவதர்களென்றும் இரண்டு ஜாதியாகச் சொல்லுமேதொழிய
வேறொருபடி சொல்லத் தக்க பந்தமில்லை உங்களுக்கும் எங்களுக்கும் – என்று
ஶ்ரீஶுக ப்ரஹ்மர்ஷி லௌகிகரோடுண்டான ஸம்பந்தத்தை அறுத்துக் கொண்டு ஶ்ரீநரஸிம்ஹரூபியான நாராயணனுக்கு
ஶேஷ பூதராயிருக்குமவர்களுக்கு ஶேஷமாயிருக்கும் பாகவதர்களுடனே கூடிப் போனார்களென்னுமது ஜகத் ப்ரஸித்தமிறே.

“பஞ்சாஸ்த்ராங்கா: பஞ்ச ஸம்ஸ்கார யுக்தா: பஞ்சார்த்தஜ்ஞா: பஞ்சமோபாயநிஷ்டா: |
தே வர்ணாநாம் பஞ்சமாஶ் ச ஆஶ்ரமாணாம் விஷ்ணோர் பக்தா:
பஞ்ச கால ப்ரபந்நா:”,
“தேவர்ஷி பூதாப்தந்ருணாம் பித்ரூணாம் ந கிங்கரோ நாயம் ருணீ ச ராஜந்|
ஸர்வாத்மநாயஶ் ஶரணம் அஶரண்யம் நாராயணம் லோக குரும் ப்ரபந்ந:” என்றிறே ஸ்வரூபமிருப்பது.
ஆகையாலே ஜ்ஞாநவான்கள், அஜ்ஞர் ப்ரமிக்கிற வர்ணாஶ்ரம வித்யா வ்ருத்தங்களை கர்த்தப ஜந்மம், ஶ்வபச அதமம்,
ஶில்ப நைபுணம், பஸ்மாஹுதி, ஶவவிதவாலங்காரமென்று கழித்துத் தந்தாமுக்குத் தஞ்சமாகப் பற்று மிடத்தில்
பந்த மோக்ஷங்களிரண்டுக்கும் பொதுவாயிருக்கும் ஈஶ்வரனைப் பற்றுவாரும்,
மோக்ஷத்துக்கே ஹேதுவான ஆசார்யனைப் பற்றுவாரும், உபேக்ஷணீயரான ஈஶ்வர பரதந்த்ரரைப் பற்றுவாரும்,
அநுகூலரான ஆசார்ய பரதந்த்ரரைப் பற்றுவாருமாய், அதிகார அநுகுணமாயிருக்கும்.

ஆகையாலே யிறே “நசேத் ராமாநுஜேத்யேஷா சதுரா சதுரக்ஷரீ|
காமவஸ்தாம் ப்ரபத்யந்தே ஜந்தவோ ஹந்தமாத்ருஶ:” என்று கூரத்தாழ்வான்
‘நாராயண’ ‘ராமாநுஜ” என்கிற திருமந்த்ரங்களிரண்டுக்கும் வாசி பந்த மோக்ஷங்களிரண்டுக்கும் பொதுவாயும்,
மோக்ஷைக ஹேதுவாயுமிருக்குமென்னுமிடம் தோற்ற ‘சதுரா சதுரக்ஷரீ’ என்று அருளிச் செய்தார்.

——-

அந்திமோபாய நிஷ்டை – 17- பாகவதர்களின் நிர்ஹேதுக க்ருபை

கண்ணன் எம்பெருமான் குசேலரை உபசரித்தல்
கண்ணன் எம்பெருமான் அர்ஜுனனுக்கு தேரோட்டியாய் இருத்தல்
ஸ்ரீரங்கநாதன் மாமுனிகளை ஆசார்யனாக ஏற்றுக் கொள்ளுதல்
எம்பெருமான் நம்மாழ்வாரிடம் அதீத அன்பு காட்டுதல்

“லோகே கேசந மத் பக்தாஸ் ஸத்தர்மாம்ருத வர்ஷிண:|
ஶமயந்த்யகமத்யுக்ரம் மேகா இவ தவா நலம்”,
“ஜ்ஞாநீத்வாத்மைவ மே மதம்” ,
”ப்ரியோ ஹி ஜ்ஞாநிநோத்யர்த்தம் அஹம் ஸ ச மம ப்ரிய:”,
“மம ப்ராணா ஹி பாண்டவா:”
“நிரபேக்ஷம் முநிம் ஶாந்தம் நிர்வைரம் ஸம தர்ஶநம்|
அநு வ்ரஜாம் யஹம் நித்யம் பூயேயேத் யங்க்ரிரேணுபி:”,
“மம மத் பக்த பக்தேஷு ப்ரீதிரப்யதிகாந்ருப|
தஸ்மாந் மத் பக்த பக்தாஶ்ச பூஜநீயா விஶேஷத:” ,
“அந்நாத்யம் புரதோ ந்யஸ்தம் தர்ஶநாத் க்ருஹ்யதே மயா|
ரஸாந் தாஸஸ்ய ஜிஹ்வாயாமஶ்நாமி கமலோத்பவ”,
“மத் பக்த ஜந வாத்ஸல்யம் பூஜாயாஞ்சாநுமோதநம்|
ஸ்வயம்ப் யர்ச்சநஞ் சைவ மதர்த்தே டம்ப வர்ஜநம்||
மத் கதா ஶ்ரவணே பக்திஸ் ஸ்வர நேத்ராங்க விக்ரியா|
மமாநுஸ்மரணம் நித்யம் யச்ச மாம் நோபஜீவதி||
பக்திரஷ்டவிதாஹ்யேஷா யஸ்மிந் ம்லேச்சேபி வர்த்ததே|
ஸ்விப்ரேந்த்ரோ முநிஶ் ஶ்ரீமாந் ஸ யதிஸ்ஸ ச பண்டித:||
தஸ்மை தேயம் ததோ க்ராஹ்யம் ஸ ச பூஜ்யோ யதா ஹ்யஹம்” என்று
ஸர்வேஶ்வரன் தானும் தன்னுடைய அடியாரை லோக பாவநராகவும், தனக்கு ஆத்மாவாகவும், ப்ராணனாகவும்,
‘நாள் தோறும் நான் அவர்களுடைய பாத ரேணுக்களை ஆசைப் பட்டுப் பின் செல்லா நின்றேன்’ என்றும்,
‘அவர்களுடைய ஸத் காரம் எனக்கு மிகவும் ப்ரியம்’ என்றும்,
‘அந்நாதிகளிலுண்டான ரஸங்களெல்லாம் அவர்கள் முகேந ஜீவிப்பேன்’ என்றும்,
ம்லேச்ச ஜாதியிலே பிறந்தார்களே யாகிலும் தன்னைப் போலே அவர்களும் பூஜ்யர் என்றும் அருளிச் செய்தான்.

“அக்ஷ்ணோ: பலம் தாத்ருஶ தர்ஶநம் ஹி தந்வா: பலம் தாத்ருஶகாத்ரஸங்கம்|
ஜிஹ்வாபலம் தாத்ருஶ கீர்த்தநஞ்ச ஸுதுர்லபா பாகவதா ஹி லோகே”,
“நாஹம் ஸமர்த்தோ பகவத் ப்ரியாணாம் வக்தும் குணாந் பத்மபுவோப்யகண்யாந்|
பவத்ப்ரபாவம் பகவாந் ஹி வேத்தி ததாபவந்தோ பகவத்ப்ரபாவம்” என்று –
மஹா பாகவதர்களுடைய தர்ஶந – ஸ்பர்ஶந – ஸம்பாஷணங்களே தனக்கு ஸர்வ ப்ரயோஜநமென்று
அவர்களுடைய திவ்ய குணங்களைச் சொல்லுகைக்கு நான் ஸமர்த்தை யன்று என்றும்,
அவர்களுடைய ப்ரபாவத்தை என்னால் சொல்லித் தலைக் கட்டப் போகாது என்றும்
ஶ்ரீபூமிப் பிராட்டியும் அருளிச் செய்தாள்.

எம்பெருமானார் திருவதாரத்தாலே அனைவருக்கும் உஜ்ஜீவனம்

“திறம்பேன்மின் கண்டீர்” என்று தொடங்கி ,
“இறைஞ்சியும் சாதுவராய்ப் போதுமின்களென்றான் நமனுந்தன் தூதுவரைக் கூவிச் செவிக்கு” என்றும்,
“அவன்தமர் எவ்வினையராகிலும் எங்கோனவன்தமரே என்றொழிவதல்லால்
நமன்தமராலாராயப் பட்டறியார் கண்டீர் அரவணைமேல் பேராயற்காட்பட்டார் பேர்” என்றும்,
“பொலிக பொலிக பொலிக போயிற்று வல்லுயிர்ச் சாபம் நலியும் நரகமும் நைந்த நமனுக்கிங்கு யாதொன்றுமில்லை” என்றும்,
“வெள்ள நீர் வெள்ளத் தணைந்த அரவணை மேல் துள்ளுநீர் மெள்ளத் துயின்ற பெருமானே வள்ளலே
உன் தமர்க்கென்றும் நமன் தமர் கள்ளர்” என்று பகவத் ப்ரபந்நர் எப்படி இருந்தார்களே யாகிலும்
அவர்களை யமாதிகள் ஏறிட்டுப் பார்க்க வொண்ணாத மாத்ரமுமன்றிக்கே யம படர் கள்ளர் பட்டது படுவார்கள் என்று
பாகவத ப்ரபாவத்தை ஆழ்வார்களும் அருளிச் செய்தார்கள்.

“நாவலிட்டுழி தருகின்றோம் நமன் தமர் தலைகள் மீதே” என்னும் மதிப்பரிறே ஆழ்வார்கள்.
“ந கலு பாகவதா யம விஷயம் கச்சந்தி” என்றும் பாகவத வைபவத்தைச் சொல்லுகிறது.

இந்த ப்ரஸங்கத்திலே யமாதிகள் பாகவத விஷயத்தில் வர்த்திக்கிறபடி சொல்லுகிறது.
“ஸ்வ புருஷமபி வீக்ஷ்ய பாஶ ஹஸ்தம் வததி யம: கில தஸ்ய கர்ண மூலே|
பரிஹர மதுஸூதந ப்ரபந்நாந் ப்ரபுரஹமந்ய ந்ருணாம் ந வைஷ்ணவாநாம்||
கமல நயந வாஸுதேவ விஷ்ணோ தரணிதர அச்யுத ஶங்க சக்ர பாணே|
பவஶரணமிதீரயந்தி யேவை த்யஜபட தூரதரேணதாநபாபாந்” என்றும் இத்யாதிகளாலே –
நான் பகவத் ப்ரபந்நரை நியமிக்கக் கர்த்தாவன்று; என்னுடைய ப்ருத்யரான நீங்களும் அவர்களைக் கண்டால்
தடஸ்தராய் உங்களைப் பேணிக் கொண்டு தூரத்திலே விலகிப் போங்கோள் – என்று
அவர்களுக்கு புத்தி சொல்லி எல்லாரையும் கர்மாநுகுணமாக உசித தண்டம் பண்ணுகிற
யமன் தன்னாலும் ஶ்ரீவிஷ்ணு புராணாதிகளிலே பாகவத வைபவம் சொல்லப்பட்டதிறே.

அபாகவத ஸம்ஶ்லேஷம் பாகவத விஶ்லேஷத்தையும், பகவத் விஶ்லேஷத்தையும் பிறப்பிக்கும்;
பாகவத ஸம்ஶ்லேஷம் பகவத ஸம்ஶ்லேஷத்தையும், அபாகவத விஶ்லேஷத்தையும் பிறப்பித்து,
இவனையும் கரை மரம் சேர்த்து விடும். இவ் வெல்லை மயக்கு ஸதாசார்யன் கண் வட்டத்திலே வர்த்திக்குமவனுக்கு வாராது.
அவன் கண் வட்டம் விட்டால் நித்ய ஸம்ஸாரியாய்ப் போமித்தனை என்று ஆச்சான் பிள்ளையும் மாணிக்க மாலையிலே அருளிச் செய்தார்.

ஆகையாலே ஸகல ப்ரவ்ருத்தி நிவ்ருத்திகளும் ஆசார்ய அதீநமா யிருக்க வேணும்;
அப்படி யிராமல் கலங்கி தத் ஸம்பந்தத்தையும் மறந்து, ஸ்வாதந்த்ர்யம் தலை யெடுத்து,
அக்ருத்ய கரணம், பகவதபசாரம், பாகவதாபசாரம், அஸஹ்யாபசாரம் தொடக்கமான அநர்த்தங்களிலே
ஏதேனுமொன்றை விளைத்துக் கொண்டு, யாவதாத்மபாவி ரௌரவாதி கோர நரகங்களிலே விழுந்து
நஶித்துப் போகத் தக்கதான ஆத்மாக்களையும், முற்படத் தங்கள் திருவடிகளிலே ஒரு ஸம்பந்தமுண்டாகையாலும்
அவ் வாத்மாக்கள் மேல் படப் போகிற து:க பரம்பரைகளை அறிந்தருளுகையாலும் அவர்கள் விஷயத்தில்
‘ஐயோ’ என்கிற க்ருபாதிஶயத்திலே விட மாட்டாதே
“பயனன்றாகிலும் பாங்கல்லராகிலும் செயல் நன்றாகத் திருத்திப் பணி கொள்”ளுகையிறே ஸதாசார்ய லக்ஷணம்.

ஆகையாலே தம்முடைய ஶிஷ்யனான நாலூரானும் க்ருமி கண்டனோடே கூடித் தம்முடைய விஷயத்திலே
மஹாபராதத்தைப் பண்ண, பெருமாள் அவனை ‘நஷமாமி’ என்று முனிந்தருள,
அவரோடே மறுதலைத்து ‘நாம் பெற்ற லோகம் நாலூரானும் பெற வேணும்’ என்று கூரத்தாழ்வானும்;

தம்முடைய ஶிஷ்யரா யிருப்பாரொருவர் ஸஹ வாஸ தோஷத்தாலே கலங்கி, விஷய ப்ராவண்யம் தலை யெடுத்து,
‘பட்டரே! உமக்கும் நமக்கும் பணியில்லை’ என்று அவருடைய திருவடிகளை விட்டகன்று போகத் தேட,
‘வாராய் பிள்ளாய்! அது உன்னுடைய அபிப்ராயத்தாலே யன்றே, நீ விட்டாலும் நான் விடேன்’ என்று
பட்டரும் தம்முடைய திருவடிகளிலே ஆஶ்ரயிப்பித்தும்;

அந்தரங்கராய், மஹா விரக்தராய் இருப்பாரொரு ஸாது ஶ்ரீவைஷ்ணவர் அந்ந தோஷத்தாலே அஹங்கராதிகள் தலை யெடுத்து,
பூர்வ தஶையில் பொகட்டு வந்த சவளத்தை (= ஈட்டியை) மீளவும் எடுத்துக் கொண்டு ராஜ ஸேவை பண்ணித் திரிய,
இப்படிக் கை கழிந்து போனவரையும் பின் தொடர்ந்து யத்நேந பிடித்துக் கொண்டு வந்து,
ஒரு அறையிலே தாமும் அவருமாக அடைத்துக் கொள்ள, ஶ்ரீபாதத்துக்கு பரிவரான முதலிகள் எல்லாருங்கூடி
‘ஐயோ! ப்ரமாதம் பிறக்கிறது; சவளமும் உடைத்துக் கையுமான அவனை விட்டு அறையினின்றும் புறப்பட வேணும்’ என்று
அதி க்லேஶத்தோடே கூப்பிட, “இவனை ரக்ஷித்தாலல்லது நான் புறப்படேன்; இவன் உஜ்ஜீவியாதிருக்கில்
இந்த சவளக்காரனோடே அடைத்துக் கொண்டு சாவேன்’ என்ற வேதாந்திகளான நஞ்சீயரும்;

தந்தாம் விஷயங்களிலே குற்றம் செய்தவர்கள் பக்கல் பொறையும், க்ருபையும், சிரிப்பும், உகப்பும், உபகார ஸ்ம்ருதியும்
நடக்க வேணுமென்று அருளிச் செய்த மாத்ரமன்றிக்கே அநுஷ்டாநத்துக்கு ஸீமா பூமியாயிருக்கும் பிள்ளை லோகாசார்யரும்,

“ஸ்வீகரோதி ஸதாசார்யஸ் ஸர்வாநப்ய விஶேஷத: |
யத் புநஸ் தேஷு வைஷம்யம் தேஷாம் சிஜ்ஜ்ஞாந வ்ருத்தயோ:||
தேஷாமேவ ஹி தோஷோயம், ந சாஸ்யேதி விநிஶ்சிதம்|
அபக்வ பத்ம கோசாநாம் அவிகாஸோ ரவேர்யதா” என்கிறபடியே

தங்கள் திருவடிகளிலே ஆஶ்ரயித்திருக்கச் செய்தேயும் அவர்களுடைய ஜ்ஞாநதௌர்பல்யத்தாலே மீளவும் விபரீத ப்ரவ்ருத்தராய்,
பிறந்து போகத் தேடினவர்களையும் விட க்ஷமரன்றிக்கே
“ஸ்காலித்யே ஶாஸிதாரம்” என்றும்,
“தேஶிகோ மே தயாலு:” என்றும் சொல்லுகிறபடியே
தங்களுடைய நியமத்தலும் க்ருபாதிஶயத்தாலும் இப்படி ரக்ஷித்துப் போந்தார்கள்.

ஸ்ரீ சீதாப்பிராட்டியும் ஸ்ரீ மணவாள மா முனிகளும்

“வாஸுதேவம் ப்ரபந்நாநாம் யாந்யேவ சரிதாநி வை|
தாந்யேவ தர்ம ஶாஸ்த்ராணீத்யேவம் வேத விதோ விது:”
இப்படி பூர்வசார்யர்கள் விசேஷத்தை நம்முடைய ஆசார்யர் திருநகரியிலே ஓலமேச்சான் மடத்திலே
தாம் கண் வளர்ந்தருளா நிற்க, எம்பெருமானாருக்கு விஷமிட்ட சண்டாளரைப் போலே மனக்குற்ற மாந்தரான
அஸூயா பரரானவர்கள் கர்ம காலத்திலே மத்ய ராத்ரியிலே அந்த மடத்திலே அக்நி ப்ரக்ஷேபத்தைப் பண்ண,
அந்தக் கள்ளளரை அத் தேஶத்துக்குக் கர்த்தரான ராஜாக்கள் கண்டு பிடித்துக் கொண்டு சித்ரவதம் பண்ணத் தேட

“கேட்பார் செவி சுடு” என்கிறபடியே ஆருக்கும் ஶ்ரவண கடோரமான இம் மஹா பாபத்தைத் தம்முடைய விஷயத்திலே கூசாமல்
தீரக் கழியப் பண்ணின நிஷ்டுரரையுமுட்பட {அகப்பட}
“பாபாநாம் வா ஶுபாநாம் வா வதார்ஹாணாம் ப்லவங்கம|
கார்யம் கருணமார்யேண ந கஶ்சிந் நாபராத் யதி” என்றும்,
“பவேயம் ஶரணம் ஹி வ:” என்றும்,
“க: குப்யேத் வாநரோத்தம” என்றும் சொல்லுகிறபடியே

அந்த ராஜாக்களோடே மறுதலைத்து அந்தக் கள்ளரைக் கொல்லாதபடி விடுவித்து ரக்ஷித்தருளின
பரம க்ருபையாளர் என்னுமது லோகத்திலே எல்லாருமறிய ப்ரஸித்தமிறே.

இன்னமும் அஸ்மதாசார்யருடைய க்ருபாதிஶயமும், அவதார விசேஷமும் கீரி, கிளி, வ்ருக்ஷ வ்ருத்தாந்தங்களிலும்,
ஸ்வப்ந வ்ருத்தாந்தங்களிலும் அறிவார்க்கிறே தெரிவது.

——-

அந்திமோபாய நிஷ்டை – 18 – முடிவுரை – ஆசார்ய நிஷ்டையின் பெருமைகள்

இப்படி “ஸ்தாவராண்யபி முச்யந்தே” என்றும்,
“பஶுர் மநுஷ்ய: பஷீ வா” என்றும் இத்யாதிகளிலே சொல்லுகிறபடியே
ஸகலாத்மாக்களும் உஜ்ஜீவிக்க வேணுமென்ற திருவுள்ளத்தையுமுடையராய்,
பரம தயாவான் களாயிருந்துள்ள நம் ஆசார்யர்களுடைய அபிமாநமாகிற அந்திமோபாயத்திலே ஒதுங்கித்

தாங்கள், ஸர்வஜ்ஞராகையாலே ஸாராஸார விவேகரில் தலைவராய், செய்த வேள்வியர் என்கிறபடியே க்ருதக்ருத்யராய்,
எப்போதும் மங்களா ஶாஸந பரராய்,
“நானும் பிறந்தமை பொய்யன்றே” ,(10-4)
“தங்கள் தேவரை வல்ல பரிசு வருவிப்பரேல் அது காண்டும்” என்று சொல்லுகிறபடியே

பழுதாகாத வழியை அறிந்து வேறாக ஏத்தி யிருக்குமவனைப் பற்றித் தெளிவுற்று வீவின்றி,
எல்லாம் வகுத்த விடமென்று விஶ்வஸித்து மார்பிலே கை வைத்துக் கோடையிலே குளிர் காற்றடிக்க மிகவும் ஸுகோத்தரராய்,
“சிற்ற வேண்டா” என்கிறபடியே ஒரு பரபரப்பற்று (குரு பரம்பரையைப் பற்றுகை)
“தேவுமற்றறியேன்” என்றிருக்கும் ஶ்ரீமாந்களான அதிகாரிகள்:

ஆழ்வார் திருமகளாராண்டாள்
நம்மாழ்வார் திருவடிகளிலே ஶ்ரீமதுரகவி யாழ்வார்
நாதமுனி திருவடிகளிலே குருகைக் காவலப்பன்
ஆளவந்தார் திருவடிகளிலே தெய்வ வாரி யாண்டான்
எம்பெருமானார் திருவடிகளிலே வடுக நம்பி
நம்பிள்ளை திருவடிகளிலே பின்பழகிய பெருமாள் ஜீயர்
வடக்குத் திருவீதிப் பிள்ளை, பிள்ளை லோகாசார்யர் திருவடிகளிலே கூர குலோத்தம தாஸ நாயன், மணல் பாக்கத்து நம்பியார்
திருவாய்மொழிப் பிள்ளை திருவடிகளிலே நம்முடைய ஜீயர்
இப்படியிருக்கும் உத்தமாதிகாரிகள் இவ்வாசார்யர்களிடத்திலே இன்னமும் உண்டாயிருக்கும் கண்டு கொள்வது.

நம்முடைய ஜீயர் திருவடிகளிலே இந் நிஷ்டைக்கு அதிகாரிகளாயிருக்கும் முதலிகள் பலருமுண்டு.
மற்றும் இக் காலத்தில் ஸச் சிஷ்ய – ஸதாசார்ய – லக்ஷணம் உண்டாயிருக்கும் ஜ்ஞாநாதிகரிடத்திலும் காணலாம்.

இனி மேலும் ராமாநுஜ ஸித்தாந்தம் நடக்கும் காலத்தளவும்
“கலியுங்  கெடும் கண்டு கொண்மின்” என்கிறபடியே ஏவம் பூதரான அதிகாரிகளும் ஸுசிதர்.

“வேத ஶாஸ்த்ர ரதா ரூடா: ஜ்ஞாந கட்க தராத் விஜா:|
க்ரீடார்த்தமபி யத் ப்ரூயுஸ் ஸ தர்ம: பரமோ மத:” என்றும்,
“அதி கந்தவ்யாஸ் ஸந்தோ யத்யபி குர்வந்தி நைகமுபதேஶம்|
யாஸ்தேஷாம் ஸ்வைரகதாஸ்தா ஏவ பவந்தி ஶாஸ்த்ரார்த்தா:” என்றும்,
‘அல்லி மலர்ப் பாவைக் கன்பரடிக் கன்பர் சொல்லுமவிடு சுருதியாம்” என்றும்,
“ததுக்தி மாத்ரம் மந்த்ராக்ர்யம்” என்றும் சொல்லுகிறபடியே
ஜ்ஞாநாதிகரானவர்கள் “நாவ காரியம் சொல்லிலாதவ”ர்களாகையாலே விநோதமாக ஒரு வார்த்தை அருளிச் செய்ததும்
நல் வார்த்தையா யிருக்குமதொழிய மறந்தும் அபார்த்தமாக ஒரு வார்த்தையும் அருளிச் செய்யார்களாகையாலே
அவர்களுடைய திவ்ய ஸுக்திகளெல்லாம் ஸகல வேதாந்த ஸாரமான திரு மந்த்ரமாயிருக்கும்.

‘ருசோ யஜும்ஷி ஸாமாநிததைவ அதர்வணாநி ச|
ஸர்வ மஷ்டாஷராந்தஸ்தம் யச்சாந்யதபி வாங்மயம்” என்கிறபடியே ஸகல ப்ரமாண ப்ரமேயங்களும் ததந்தர் பூதமாயிருக்கும்.

ஆகையாலே நம்முடைய பெரியோர்களெல்லாரும் திரு மந்த்ரத்தில் மூன்று பதத்திலும் சொல்லப்படுகிற
ஶேஷத்வ – பாரதந்த்ர்ய – கைங்கர்யங்கள் ப்ரதம பர்வமான ஈஶ்வர விஷயத்திலே அரை வயிறாய்,-சரம பர்வமான ஆசார்ய விஷயத்திலே பரிபூர்ணமாக ஸித்திக்கும் என்னும் இவ் வர்த்தம்
இம் மந்த்ரத்தில் தாத்பர்யார்த்தமாகையாலே அத்தை உட் கொண்டு
ஸம்ஸ்க்ருதமாகவும், த்ராவிடமாகவும், மணி ப்ரவாளவாகமவும், ஏக கண்டமாக அருளிச்செய்த
ப்ரமாண பலத்தாலே ஆசார்யாபிமாநமாகிற அந்திமோபாயத்திலே ஸுப்ரதிஷ்டிதராய்,

“தென் குருகூர் நம்பி என்னக்கால் அண்ணிக்கும் அமுதூறும் என் நாவுக்கே”,
“நாவினால் நவிற்றின்பமெய்தினேன்” என்றும்,
“எந் நா விருந்தெம்மையனிராமாநுசனென்றழைக்கும்”,(102)
“இராமானுசன் சரணார விந்தம் நாம் மன்னி வாழ நெஞ்சே சொல்லுவோமவன் நாமங்களே”,
“உன் நாமமெல்லாமென்றன் நாவினுள்ளே அல்லும் பகலும் அமரும்படி நல்கு அறு சமய வெல்லும் பரம இராமாநுச” என்றும்,

“குரோர்வார்த்தாஶ்ச கதயேத் – குரோர் நாம ஸதா ஜபேத்” என்றும் சொல்லுகிறபடியே
ஶேஷியாய், ஶரண்யனாய், ப்ராப்யனாய்,
“மாதா பிதா யுவதய:”,
“அன்னையாயத்தனாய்”,
“தந்தை நற்றாய் தாரம் தனயர் பெருஞ்செல்வம் என்றனக்கு நீயே எதிராசா” என்றும் இத்யாதிகளில்
சொல்லுகிறபடியே ஸர்வ வித பந்துவுமாயிருந்துள்ள ஸதாசார்யனைக் குறித்துப் பண்ணும் ப்ரபத்தியான
ப்ரதம நமஸ்ஸை ஸதாநுஸந்தேயமான மந்த்ரமென்றும்,

“குருரேவ பரம் ப்ரஹ்ம”,
“தேனார் கமலத் திரு மா மகள் கொழுநன் தானே குருவாகி”,(38)
“யஸ்ய ஸாக்ஷாத் பகவதி ஜ்ஞாந தீப ப்ரதே குரௌ”,
“பீதக வாடைப் பிரானார் பிரம குருவாகி வந்து” என்றும் இத்யாதிகளில் சொல்லுகிறபடியே அவனே பர தேவதை என்றும்,

“யேநைவ குருணா யஸ்ய ந்யாஸ வித்யா ப்ரதீயதே|
தஸ்ய வைகுண்ட துக்தாப்தி த்வாரகாஸ் ஸர்வ ஏவ ஸ:”,
“வில்லார் மணி கொழிக்கும் வேங்கடப் பொற் குன்று முதல் சொல்லார் பொழில் சூழ் திருப்பதிகள்
எல்லாம் மருளாம் இருளோட மத்தகத்துத் தன் தாள் அருளாலே வைத்த அவர்”,(36)
“நம்புவார் பதி வைகுந்தம்” என்றும் இத்யாதிகளில் சொல்லுகிறபடியே
அவன் எழுந்தருளி யிருக்கிற விடமே ப்ராப்ய பூமியான பரம பதம் என்றும்,

“ராமாநுஜஸ்ய சரணௌ ஶரணம் ப்ரபத்யே”,
“பேறொன்று மற்றில்லை நின் சரணன்றி, அப் பேறளித்தற்கு ஆறொன்றும் இல்லை மற்றச் சரணன்றி”,
“உபாயோபேயபாவேந தமேவ ஶரணம் வ்ரஜேத்” என்றும் இத்யாதிகளில் சொல்லுகிறபடியே
அவன் திருவடிகளே உபாயோபேயங்களென்றும்,

“ராமாநுஜார்ய வஶக: பரிவர்த்திஷீய”,
“நித்யம் யதீந்த்ர தவ திவ்ய வபுஸ் ஸ்ம்ருதௌ மே ஸக்தம் மநோ பவது வாக் குண கீர்த்தநேஸௌ|
க்ருத்யஞ்ச தாஸ்ய கரணந்து கர த்வயஸ்ய வ்ருத்த்யந்தரேஸ்து விமுகம் கரண த்ரயஞ்ச”,(4)
‘ஶக்திக்கிலக்கு ஆசார்ய கைங்கர்யம்” (293)என்று இத்யாதிகளில் சொல்லுகிறபடியே
த்ரிவித கரணத்தாலும் அவன் திருவடிகளில் பண்ணும் கைங்கர்யமே பரம புருஷார்த்தமென்றும்,

‘ஶிஷ்யனென்பது ஸாத்யாந்தர நிவ்ருத்தியும் பல ஸாதந ஶுஶ்ரூஷையும்”(323) என்கிறவிடத்தில் சொல்லுகிறபடியே
இவன் பண்ணும் கைங்கர்யம் கண்டு உகக்குமவனுடைய முகோல்லாஸமே மஹாபலம் என்றும்
அத்யவஸித்திருக்கும் அதிகாரிகளுக்கு ஸாம்ஸாரிகமான ஸகல துர் வ்யாபாரங்களையும் ஸவாஸநமாக விட்டு
அவனுடைய திவ்ய மங்கள விக்ரஹத்தை ஸதா பஶ்யந்திப்படியே அநுபவித்து,
“அத்ர, பரத்ரசாபி”ப்படியே
அந்தமில் பேரின்பத்த டியரோடிருந்து அம்ருத ஸாகராந்தர நிமக்ந ஸர்வ அவயவராய்க் கொண்டு
கால தத்த்வமுள்ளதனையும் மங்களாஶாஸநம் பண்ணி வாழலாம்.

கையிற் கனி யென்னக் கண்ணனைக் காட்டித் தரிலும்” (104)என்கிற பாட்டும்,
“நாவினால் நவிற்று” என்கிற பாட்டும்
“நல்ல வென் தோழி” என்கிற பாட்டும்,
“மாறாய தானவனை” என்கிற பாட்டும்,
பரமாசார்யரான ஆளவந்தாரருளிச் செய்த “மாதா பிதா யுவதய:” என்கிற ஶ்லோகமும்,
“பஶுர் மநுஷ்ய:” என்கிற ஶ்லோகமும்,
“பால மூக ஜட அந்தாஶ்ச” என்கிற ஶ்லோகமும்,
“ஆசார்யஸ்ய ப்ராஸாதே ந மம ஸர்வ மபீப்ஸிதம்” என்கிற வசநமும்,
“இஹ லோக பரலோகங்களிரண்டும் ஆசார்யன் திருவடிகளே என்றும்,
த்ருஷ்ட அத்ருஷ்டங்களிரண்டும் அவனே என்றும் விஶ்வஸித்திருக்கிறதுக்கு மேலில்லை” என்று
மாணிக்க மாலையிலே பெரியவாச்சான் பிள்ளை அருளிச் செய்த திவ்ய ஸூக்தியும்,

“மந்த்ரமும், தேவதையும், பலமும், பல அநுபந்திகளும், பல ஸாதநமும், ஐஹிக போகமுமெல்லாம் ஆசார்யனே
என்று நினைக்கக் கடவன்” (322)என்று ஶ்ரீவசந பூஷணத்திலே பிள்ளை லோகாசார்யர் அருளிச் செய்தருளின திவ்ய ஸுக்தியும்
இதுக்கு ப்ரமாணமாக அநுஸந்தேயங்கள்.

———-

ஶ்ரீஸௌம்ய ஜாமாத்ரு  முநே: ப்ரஸாத ப்ரபாவ ஸாக்ஷாத் க்ருத ஸர்வ தத்த்வம்|
அஜ்ஞாந தாமிஸ்ர ஸஹஸ்ர பாநும் ஶ்ரீ பட்ட நாதம் முநிமாஶ்ரயாமி||

——————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பரவஸ்து பட்டர்பிரான் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பிள்ளை லோகாசார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

பரம காருணிகரான ஸ்ரீ நாயனாராச்சான் பிள்ளை அருளிச்செய்த ஸ்ரீ சரமோபாய நிர்ணயம்

January 17, 2022

ஸ்ரீ நாயனாராச்சான் பிள்ளையின் தனியன்௧ள்

ஸ்ருத்யர்த்த ஸார ஜநகம் ஸ்ம்ருதி பால மித்ரம்
பத்மோல்லஸத் ப௧வதங்௧ரி புராண பந்தும் |
ஜ்ஞாநாதி ராஜம் அபய ப்ரத ராஐ புத்ரம்
அஸ்மத் குரும் பரம காருணிகம் நமாமி ||

(வேதப்பொருள்களின் ஸாரத்தைக் கடைந்து எடுப்பவராய்
ஸ்ம்ருதி௧ளாகிற தாமரைகளுக்கு இளஞ்சூரியனாய்,
ஶ்ரீய:பதியின் திருவடிகளுக்குப் பழைய உறவினராய்,
ஞானங்களுக்கு பேரரசராய்,
அபய ப்ரதராஜரின் பிள்ளையாய்,
பரம காருணிகரான என் ஆசார்யரை வணங்குகிறேன்.)

அபயப்ரத பாத தேஶிகோத்பவம்
குருமீடே நிஜமாதரேண சாஹம் |
ய இஹாகில லோக ஜீவநாதர:
சரமோபாய விநிர்ணயம் சகார ||

யாவரொருவருடைய அருளாலே அடியேன் சரமோபாய நிர்ணயத்தைச் சொல்லப் போகிறேனோ,
என் ஆசார்யராய், அபய ப்ரதபாதர் என்னும் திருநாமமுடைய அப்பெரியவாச்சான் பிள்ளையை ஆஶ்ரயிக்கிறேன்.

அபயப்ரத பாதாக்யமஸ்மத் தேஶிகமாஶ்ரயே |
யத் ப்ரஸாதஹம் வக்ஷ்யே சரமோபாயநிர்ணயம் ||

(அபயப்ரத பாதர் என்னும் பெரியவாச்சான் பிள்ளையாகிற ஆசார்யரின் பிள்ளையாய்,
எல்லா உலகினரையும் உய்விக்க விரும்பி ‘சரமோபாய நிர்ணயம்’ என்னும் நூலை
இயற்றியவரான என் ஆசார்யரை அன்புடன் துதிக்கிறேன்)

அஸ்மஜ் ஜநக் காருணய ஸுதாஸந்துஷி தாத்மவான் |
கரோமி சரமோபாய நிர்ணயம் மத்பிதா யதா ||

அடியேனுடைய தந்தையாருடைய கருணை அமுதத்தினால் உயிர்ப்பிக்கப்பட்ட ஆத்மாவையுடைய அடியேன்
எந்தையார் அருளிய முறையிலே சரமோபாய நிர்ணயத்தைச் செய்கிறேன்.

அஸ்மதுத்தாரகம் வந்தே யதிராஜம் ஜகத்குரும் |
யத்க்ருபாப்ரேரித: குர்மி சரமோபாய நிர்ணயம் ||

உலகனைத்துக்கும் ஆசார்யராய், நமக்கு உத்தாரகரான எதிராசரை வணங்குகிறேன்,
அவருடைய கருணையினால் தூண்டப்பட்டுச் சரமோபாய நிர்ணயத்தைச் செய்கிறேன்.

பூர்வாபர குரூகதைஶச ஸ்வப்ந வ்ருத்தைர் யதீஶபாக் |
க்ரியதேத்ய மயா ஸம்யக் சரமோபாய நிர்ணயம் ||

எம்பெருமானாருக்கு முன்னும் பின்னுமிருந்த ஆசார்யர்களின் ஶ்ரீஸூக்திகளைக் கொண்டும்,
ஸ்வப்ன வ்ருத்தாந்தங்களாலும், சரமோபாயத்வம் உடையவரிடத்திலேயே பொருந்தும் என்று
அடியேனால் நன்கு நிரூபிக்கப்படுகிறது.

பெரியவாச்சான் பிள்ளை யருளியதாக ஶ்ரீவைஷ்ணவ ஸமயாசார நிஷ்கர்ஷத்தில் எடுக்கப்பட்ட ஶ்லோகம்

விஷ்ணு: ஶேஷீ ததீய: ஶுப குண நிலயோ விக்ரஹ: ஶ்ரீஶடாரி:
ஶ்ரீமாந் ராமாநுஜார்ய: பத கமல யுகம் பாதி ரம்யம் ததீயம்|
தஸ்மிந் ராமாநுஜார்யே குருரிதி ச பதம் பாதி நாந்யத்ர, தஸ்மாத்
ஶிஷ்டம் ஶ்ரீமத் குரூணாம் குலமித மகிலம் தஸ்ய நாதஸ்ய ஶேஷ:||

[விஷ்ணுவானவர் அனைவர்க்கும் ஶேஷி யாயிருப்பவர்:
நற்குணங்களுக்கு இருப்பிடமான நம்மாழ்வார் அவருடைய திருமேனி யாவார்.
கைங்கர்யச் செல்வம் நிறைந்த எம்பெருமானார் அந்த நம்மாழ்வாருடைய அழகிய திருவடித் தாமரையிணையாய் விளங்குகிறார்.
அந்த எம்பெருமானாரிடத்திலேயே ஆசார்ய ஶப்தம் நிறை பொருளுடையதாய் விளங்குகிறது.
வேறெவரிடமும் அப்படி விளக்கவில்லை. ஆகையால், மற்ற ஸதாசார்ய பரம்பரை முழுவதும்
அந்த எம்பெருமானார்க்கு ஶேஷமாயிருப்பது.] (குருகுணாவளி)

உடையவருக்கு முன்புள்ள முதலிகளுடையவும், பின்புள்ள முதலிகளுடையவும் திவ்ய ஸூக்திகளாலும்
அத்யத்புதமான ஸவப்ன வ்ருத்தாந்தங்களாலும், சரமோபாயமானது உடையவரிடத்திலே பூர்ணமாக
நிர்ணயிக்கப்படுகையாலே இதுக்குச் சரமோபாய நிர்ணயமென்று திருநாமம் ஆயிற்று.

முதலிகள் தந்தாம் ஆசார்யர்கள் பக்கலிலே ஸாக்ஷாத் ஆசார்யத்வத்தை அறுதியிட்டு
அவ்வர்களுடைய அபிமானமே உத்தாரகமென்று சரமோபாயத்தை அறுதியிட்டிருந்தார்களேயாகிலும்,
தந்தாம் ஆசார்யர்கள் உடையவரையே உத்தாரகத்வேந அறுதியிட்டுத் தங்களைப் பற்றினார்க்கும்
உடையவரையே தஞ்சமாக உபதேசிக்கையாலே,
ஸர்வர்க்கும் உத்தாரகத்வேந சரமோபாயத்தை அறுதியிடலாவது உடையவர் பக்கலிலேயிறே.

குருரிதி ச பதம் பாதி என்கிறபடியே ஆசார்யத்வம் ஒளி விஞ்சிச் செல்லுகிறது
உடையவர் பக்கலிலே வ்யவஸ்திதமிறே.
வடுகநம்பி வார்த்தையை நினைப்பது.

உடையவர்க்கு முன்புள்ள முதலிகள் பாவ்யர்த்த ஜ்ஞாநமுடையவர்களாகையாலே,
பரம காருணிகரான இவரிடத்திலே உத்தாரகத்வம் நிலை நிற்குமென்று அறுதியிட்டுத்
தங்களுக்குப் பேற்றில் குறையின்றிக்கே இருக்கவும்
“கலியும் கெடும்” என்கிற ஆழ்வாருடைய திவ்ய ஸுக்தியை உட்கொண்டு இவரோடு
அவிநாபாவ ஸம்பந்தத்தைப் பரமோத்தாரகமென்று நினைத்து இருந்தார்கள்.

ஸம்பந்தம் தான் த்விவிதமாயிறேயிருப்பது;
ஆரோஹண ஸம்பந்தம் என்றும்,
அவரோஹண ஸம்பந்தம் என்றும்.

அதில் ஆரோஹண ஸம்பந்தம் ஆசார்யத்வேந படிப்படியாக ஏறி நிற்கும்.
அவரோஹண ஸம்பந்தம் ஶிஷ்யத்வேந படிப்படியாக இறங்கி வரும்.

இவை இரண்டுக்கும் விளை நிலம் உடையவரிறே.
இதில் ஒன்று நிரவதிகமாய் ஒன்று ஸாவதிகமாய் இருக்கும்.

அஸாவஸாவித்யாபகவத்த: என்கிறபடியே
எம்பெருமானளவும் சென்று கொழுந்திலையாயிருக்குமிறே.
மற்றயைது கொழுந்துவிட்டுப் படராநிற்கும். இந்த ஸம்பந்த த்வயந்தான் இடையிட்டு வந்ததொன்றிறே.
குருபரம்பரையிலே இடையிடபட்டாரிறே உடையவர்.

ஒரு முக்தாஹாரத்தில் நடுவே ஒளியுடைய மாணிக்கத்தை அழுத்தி வைத்தால் இருதலையும் நிறம்பெற்று வருமிறே.
அப்படியே உடையவரும் இருதலை நாயகமாகக் கொண்டு உபய ஸம்பந்திகளுக்கும் ப்ரகாசகரானார்.
இரண்டு திறத்தார்க்கும் கார்யம் கொள்ளும் போது மத்யஸ்தரைக் கொண்டு கொள்ளவேணுமிறே.
நடுச்சொன்னவரிறே மத்யஸ்தராவார். நாம் பற்றினாலும் முன் பின்னுற்ற ப்ரகாரம் கார்யம் தலைக்கட்டுமிறே
பத த்ரயத்துக்கும் மத்யம பதம் போலே ஆயிற்று.

இவர் இங்கிருக்கும் படி அதாவது – மகாரமான நார பதவாச்யர்க்கு இஷ்டாநிஷ்ட ப்ராப்தி பரிஹாரங்களைப்
பண்ணிக் கொடுக்கவற்றான எம்பெருமானுடைய உபாயபாவத்தை காட்டுகிறது மத்யம் பதம்.
அப்படியே உடையவரும் – குருபரம்பரைக்கிடையிலிருந்து ஸம்பந்த த்வயத்துக்கும் கார்யோபயோகியான
தம்முடைய ஆசார்யத்வேந உத்தாரகத்வத்தை விஶேஷேண வெளியிட்டுக் கொண்டு
விஶ்வஸநீயராயிறேயிருக்கிறது இத்தையிட்டாயிற்று.
அர்வாஞ்ச: என்று அருளிச் செய்தது

இப்படி உத்தாரகமான ஆசார்யத்வந்தான் இரண்டு படிப்பட்டிருக்கும் –
ஸ்வாநுவ்ருத்தி ப்ரஸந்நாசார்யத்வம் என்றும்,
க்ருபா மாத்ர ப்ரஸ்நநாசார்யத்வம் என்றும்.

இதில் பின்பு சொன்னது க்வாசித்கமாக இருக்கும்.
அக்ரோக்தமானது பஹுவ்யக்திதமாயிருக்கும்.

இவனுக்கு பேறு தப்பாதென்று துணிந்து இருக்கலாவது க்ருபா மாத்ர ப்ரஸந்நாசார்ய ஸம்பந்த்த்தாலே யாயிற்று.
எலியெலும்பனாயிருக்கிற இவனுக்கு ஆசார்யன் திருவுள்ளத்துக்கேற்க அநுவர்த்திக்க முடியாதிறே

இவ்வர்த்தத்தில் ஆழ்வானுக்கும் ஆண்டானுக்கும் ப்ரஸங்கமாக ஆழ்வான் அறுதியிட்ட வார்த்தையை நினைப்பது.
“மத்தகத்துத் தன்தாளருளாலே வைத்த அவா” என்ற அவர் அருளிச் செய்கையாலே,
அருளாளப் பெருமாள் எம்பெருமானார் க்ருபா மாத்ர ப்ரஸந்நாசார்யன் முக்யனென்று அறுதியிட்டார் என்று
நம்முடைய பிள்ளை பலகாலும் அருளிச்செய்வர்.

ப்ரதம பர்வத்தில் பரகத ஸ்வீகாரம் போலே
சரம பர்வத்திலும் பரகத ஸ்வீகாரமே இவனுடைய பேற்றுக்கு முக்யமான உபாயமென்று அருளிச் செய்வர்.

யஸ்ஸாபராதாந் ஸ்வபத ப்ரபந்நாந் ஸவகீய காருண்ய குணேந பாதி |
ஸ ஏவ முக்யோ குருரப்ரமேயஸ்தைவ ஸத்பி: பரிகீர்த்யதே ஹி || என்று
ஸோமாசியாண்டான் ஆசார்ய வைபவத்தை அருளிச்செய்கிற ‘குரு குணாவளி’ என்கிற ப்ரபந்தத்திலே
க்ருபா மாத்ர ப்ரஸந்நாசார்யனே முக்யமாக அருளிச்செய்தாரிறே.

இப்படி முக்கியமான க்ருபா மாத்ர ப்ரஸந்நாசார்யத்வம் க்வாசித்கமான விடத்திலும் உத்தாரகத்வ விஶிஷ்டமாயிருக்கும்.
அதுவும் ம்ருக்யமாயிருக்கும்.
உத்தாரகத்வ விஶிஷ்டமான க்ருபா மாத்ர ப்ரஸந்நாசார்யத்வம் பூரணமாக கடவது உடையவர் பக்கலிலேயிறே.

ஸ்வாநுவ்ருத்தியினாலே நம்பியை ப்ரஸன்னராம்படி பண்ணி வருத்தத்தினாலே பெற்ற சீரிய அர்த்தத்தை
தாம் மேல் விழுந்து க்ருபையினாலே எல்லார்க்கும் வெளியிட்டருளினாரிறே.

ராஜ மஹேந்தரப் பெருமாள் அரையருக்கு அரங்கமாளிகை என்று குமாரருண்டாய்,
அவர் பித்ருவசனாத் யுல்லங்கநம் பண்ணி அவிநீதராய்த் திரிகிற நாளிலே உடையவர் அறிந்தருளி,
ஶ்ரீ பாதத்திலுள்ளவர்களை அழைத்தருளி வலியப் பிடித்துக் கொண்டு வரச் சொல்லி அருளிச் செய்ய,
அவர்களும் அபிமத ஸ்தலத்தில் நின்றும் பிடித்துக்கொண்டு வந்து திருமுன்பே விட,

உடையவரும், “ பிள்ளாய்! நம்மோடு ஒட்டற்று நீ திரிந்தாலும் நாமுன்னை விட்டுக்கொடுப்பதில்லை காண் “ என்று
பேரருளாளர் ஸந்நதியிலே அழைத்துக் கொண்டு எழுந்தருளித் திருக் காப்பை அடைத்து திரிய ஒரு வட்டம்
பகவத் ஸம்பந்தம் பண்ணியருளி, ரஹஸ்யார்த்தத்தையும் ப்ரஸாதித்து அருளி,
தம்முடைய திருவடிகளிரண்டையும் அவர் தலையிலே வைத்து அருளி,
“ நீ பற்றிப் போந்த காலுக்கும் நம்முடைய காலுக்கும் வாசி கண்டாயே?
அது நரகாவஹம், இது மோஷாவஹம். இத்தையே தஞ்சமாக நினைத்திரும்” என்று
பூர்ணமாக கடாக்ஷித்துத் திருவடிகளைக் காட்டி அருளினார்.

அன்று தொடங்கி அப்படியே ப்ரதிபத்தி பண்ணிப் போந்தவராய் இந்த ரஹஸ்யத்தைப்
பிள்ளை அடியேனுக்கு அருளிச் செய்து, உடையவர் திருவடிகளையே தஞ்சமாக காட்டி அருளினார்.

அன்று தொடங்கி அப்படியே ப்ரதிபத்தி பண்ணிப் போருவன் உடையவருடைய உத்தாரகத்வ விஶிஷ்டமான
க்ருபா மாத்ர ப்ரஸந்நாசார்யத்வத்துக்கு இவ்விரண்டு வ்ருத்தாந்தமும் ப்ரமாணமாக அத்யவஸிக்கப் போரும்

அறிவுடையார்க்கு இன்னமும் இவ்வர்த்தத்தை ஸ்திரீகரிக்கைக்காக
உடையவர்க்கு முன்புள்ள முதலிகளுடைய திவ்ய ஸூக்திகளும்
ஸ்வப்ன வ்ருத்தாந்தங்களும் பரக்க ப்ரதிபாதிக்கப்படுகிறது மேல்.

நாதமுனிகளுக்கு ஆழ்வார் திருத் திரை வளைத்துத் திருவாய்மொழி ப்ரஸாதித்து அருளுகிற அளவிலே
“பொலிக பொலிக” வந்தவாறே பூத பவிஷ்யத்வர்த்தமான கால த்ரய பர்யவஸாயி ஜ்ஞாநமுடையராகையாலே
உடையவருடைய திரு அவதாரத்தைக் கடாக்ஷித்தருளி “கலியும் கெடும் கண்டு கொண்மின்” என்று
“இந்த ப்ரபந்ந குலத்திலே ஒரு மஹானுபாவர் திரு அவதரிக்க போகிறார். அவராலே நாடு அடங்க வாழப் போகிறது”
என்று நாதமுனிக்கு அருளிச் செய்ய,

அவரும் “பயன் அன்றாகிலும்” என்கிற பாட்டை இயலும் இசையுமாக ஏறிட்டு ஆழ்வாரைப் பாடி உகப்பித்து,
”தேவரீர் ஸர்வஜ்ஞராகையாலே அறியப் போகாது ஒன்றுமில்லை
அவ்யக்தியினுடைய ஸம்ஸ்தானத்தை தேவரீர் பாவித்துக் காட்டி யருள வேணும்” என்று ப்ரார்த்திக்க

அற்றை ராத்திரியிலே நாதமுனிகளுக்கு ஸ்வப்ன முகேந ஆழ்வார் எழுந்தருளி
த்வாதஶோர்த்வ புண்டரங்களும் காஷாய திருப் பரியட்டமும், த்ரிதண்ட ஹஸ்தமும், ஆஜானுபாஹுவும்
நிரவதிக தேஜோ ரூபமான திருமேனியும்,
“மகரம்சேர் குழையிருபாடிலங்கியாட” தீர்க்கராய் எழுந்தருளி, க்ருபா ப்ரவாஹ ஸூசகமான முகமும்,
முறுவலும் சிவந்த திருக் கண் மலருமாக ஸேவை ப்ரஸாதித்தருளி
‘அவ்யக்த்தி யிருக்கும்படி இது காணீரே’ என்றருளிச் செய்து,
‘இவ்யக்தி அடியாக ப்ரபந்ந குல பூதரெல்லாரும் பேறு பெறப் போகிறார்கள்’ என்று அருளிச் செய்தார்.

நாதமுனிகளும் உடனே உணர்ந்தருளி ஆழ்வார் திருவடிகளிலே தண்டம் சமர்ப்பித்து
‘தேவரீருடைய ஸம்ஸ்தானத்திலும் தேவரீர் பாவித்தருளின ஸம்ஸ்தானம் அடியேனுக்கு மிகவும் ஆகர்ஷகமாயிருந்ததீ!” என்ன,
“இதென்ன மாயம்! லோகமெல்லாம் இவ்யக்த்தியாலே காணும் மேல்விழப் போகிறது!” என்று அருளிச் செய்தார்.

நாதமுனிகளும் திரியவும் ஆழ்வாரை உகப்பித்து இந்த பவிஷ்யதாசார்ய விக்ரஹத்தை நித்யமாக அனுபவித்துக்
கொண்டிருக்க வேண்டுமென்று விண்ணப்பம் செய்ய,
ஆழ்வாரும் உடையவருடைய ஸர்வோத்தாரகத்வத்தை வெளியிடக்கடவோமென்று
மற்றை நாள் ராத்திரி ஸ்வ விக்ரஹத்துக் கடவ சில்ப வம்ஶரிடத்திலே ஸ்வப்ன முகேன எழுந்தருளி
பவிஷ்யதாசார்ய ஸம்ஸ்தானத்தை வகுத்துக் காட்டி யருளி
“நாளை நம் புளிக்கீழே வந்து இப்படியே ஸர்வாவயவ பூர்ணமாக சமையுங்கோள்” என்று அருளிச் செய்ய,
மற்றை நாள் விடிந்தவாறே, திருப்புளியின் கீழேவந்து ஶரீரஶோதன பூர்வகமாக
ஆஹார நித்ரை யின்றிக்கே அவ்விக்கிரஹத்தை நிர்மித்துக் கொடுக்க,
அவ்விக்ரஹத்திலே ஒரு ஶக்தி விசேஷத்தை அதிஷ்டிப்பித்தருளி, நாதமுனிகளை அழைத்தருளி,
“உம்முடைய அபேக்ஷிதத்தை இதோ தலைக் கட்டினோம் கண்டீரே” என்று அவ் விக்ரஹத்தை ப்ராஸாதித்து அருளி –

“ராமஸ்ய தக்ஷிணோ பாஹூ: “ இலக்குவன் ராமனுடைய வலது கை போன்றவன். (ரா-அ-34-13)
என்கிறபடியே நம்முடைய அவயவமாக நினைத்திரும்.
இவ்யக்த்திக்கு அடி நாமாகையாலே நமக்கு அடியுமாய் நம் கார்யத்துக்கு கடவதுமாயிருக்கும்.
இனிமேல் நம் தர்ஶனத்துக்கு வர்த்தகமாக அடியிட்டு வைத்தோம்.
உம்முடைய குலத்திலே ஒருவர் இவ் வயக்தியை ஸாக்ஷாத்கரிக்க போகிறார்.
அது தான் பெருமாள் திரு அபிஷேகத்துக்கு பாரித்த மாதத்திலே பதினெட்டாமோத்திலே ப்ரதமோபாயம் பிறந்தாப்போலே
நம் பிறவி நாளைக்கேறப்பார்த்தால் பதினெட்டாமவதியிலே சரமோபாயம் பிறக்கப் போகிறது,
இவ்வயக்தியை நம்மை கண்டு கொண்டிருந்தாப் போலே கண்டு கொண்டிரும் என்றருளிச் செய்து விடைக் கொடுத்தருள,
அப்போதே நாதமுனிகளும் ஆழ்வார் ஸேவை ஸாதித்தருளினதுக்குத் தோற்று.

யஸ் ஸ்வாபகாலே கருணாஸ்ஸந் பவிஷ்யதாசார்ய பர ஸ்வரூபம் |
ஸந்தர்ஶயாமாஸ மஹாநுபாவம் தம் காரி ஸூநும் ஶரணம் ப்ரபத்யே ||
எந்த நம்மாழ்வார் கருணை மிக்கவராய், அடியேன் தூங்கும் போது பவிஷ்யதாசார்யரின் சிறந்த விக்ரஹத்தை
எனக்கு காட்டியருளினாரோ, காரியாரின் பிள்ளையான அவரை ஶரணமடைகிறேன். (நாதமுனிகளருளியது)
என்கிற ஶ்லோகம் அருளிச் செய்தாரென்று
நம்முடைய பிள்ளை பலகாலும் அருளிச் செய்வர்.
இவ்வர்த்தம் ஓராண் வழியாய்ப் பரம குஹ்யமாய் வந்ததென்றும் அருளிச் செய்வர்.

இப்படி நாதமுனிகள் நாலாயிரமும் ஆழ்வார் பக்கலிலே கேட்டருளி, மீளவும் வீரநாராயணபுரத்தேற எழுந்தருளினவளவிலே,
ஆழ்வார் தம்மை விஷயீகரித்த ப்ரகாரங்களை மன்னனார் திரு முன்பே அருளிச் செய்து,
ஸந்நிதியிலே எல்லா வரிசைகளையும் பெற்றுத் தம்முடைய திருமாளிகையிலே எழுந்தருளித் தம்முடைய
மருமக்களான கீழையகத்தாழ்வானையும் மேலையகத்தாழ்வானையும் அழைத்தருளி,
ஆழ்வார் தம்மை விஶேஷ கடாக்ஷம் பண்ணி க்ருபை பண்ணி அருளின ப்ரகாரத்தையும்,
ஸ்வப்னமுகேன ஸேவை சாதித்த கட்டளையையும் அருளிச் செய்ய, அவர்களும் விஸ்மயப்பட்டு,
இப்படிப்பட்ட மஹானுபாவனுடைய ஸம்பந்தம்
ஆரோஹண க்ரமத்தாலே யாகிலும் உண்டாகக் பெற்றதே என்று தேறியிருக்கலாமென்றார்கள்;

பின்பு தம்முடைய ஶ்ரீபாதத்தில் ஆஶ்ரயித்து ஶிஷ்யகுண பூர்த்தியுடையவரான திருக்கண்ணமங்கை ஆண்டானுக்குத்
த்வயோபதேஶ பூர்வகமாகத் திருவாய்மொழி ப்ராஸாதித்தருளுகிற போது
‘பொலிக பொலிக’ வந்தவாறே ஆழ்வார் அருளிச் செய்த திவ்ய ஸூக்திகளையும்
ஸ்வப்ன வ்ருத்தாந்தங்களையும் அருளிச் செய்ய
“அவ்யக்த்தியை ஸ்வப்னமுகேன ஸாக்ஷாத்கரித்த தேவரீரோடே ஸம்பந்தமுள்ள
அடியேனுக்கு ஒரு குறைகளுமில்லை” என்று அருளிச்செய்தார்.

பின்பு உய்யக்கொண்டார், குருகைக்காவலப்பன், தம்முடைய குமாரரான ஈஶ்வர முனிகள் இவர்களை அழைத்துருளி
ஸ்வப்ன வ்ருத்தாந்தங்களையும் ஆழ்வார் அருளிச் செய்த திவ்ய ஸூக்திகளையும் அருளிச் செய்து,
குருகைக் காவலப்பனை யோக க்ரமத்தை அப்யஸிக்கச் சொல்லி,
உய்யக் கொண்டாரை தர்ஶனத்தை ப்ரவர்ப்பித்துக் கொண்டு வரச் சொல்லி,
ஈஶ்வர முனிகளை “ உமக்கொரு குமாரர் உண்டாகக் போகிறார். அவருக்கு யமுனைத் துறைவர் என்று திருநாமம் சாத்தும்”
என்று அருளிச் செய்து

ஆஸந்ந சரமதஶையானவாறே உய்யக்கொண்டாரை அழைத்தருளி, “ஒருவருக்கும் வெளியிடாதே கிடீர்” என்று
சூழரவு கொண்டு, ஆழ்வார் தமக்கு ப்ராஸிதித்தருளின பவிஷ்யதாசார்ய விக்ரஹத்தை ப்ரஸாதித்தருளி,
வரவும் அருளிச் செய்து, ‘இத்தை ஈஶ்வர முனிகள் குமார ருக்கு நாம் விரும்பின விஷயமென்று சொல்லித்
தஞ்சமாக காட்டிக் கொடும்’ என்று அருளிச் செய்து, அவ்விக்ரஹத்தைத் திருவுள்ளத்திலே த்யானம் பண்ணிக் கொண்டு,
ஆழ்வார் திருவடிகளே சரணம் என்று அந்தமில் பேரின்பத்தடியரோடு ஒரு கோவையாக எழுந்தருளினார்.

பின்பு உய்யக்கொண்டார், நாதமுனிகள் ஶ்ரீபாதத்து முதலிகளும் தாமுமாக தர்ஶநார்த்தங்களை ப்ரவர்த்திப்பித்துக் கொண்டு
ஸுகமே எழுந்தருளியிருக்கிற நாளிலே, உய்யக்கொண்டார் ஶ்ரீபாதத்து முதலிகள் மணக்கால்நம்பி,
திருவல்லிக்கேணிப் பாண் பெருமாளரையர் ஸ்வாசார்யரிடத்திலே திருவாய்மொழி கேட்கிறவளவிலே
“பொலிக பொலிக” என்கிற திருவாய்மொழி ஆனவாறே. “கலியும் கெடும்” என்கிற இடத்துக்கு அர்த்தம்
அருளிச்செய்கிற வளவில், நாதமுனிகள் தமக்கு அருளிச் செய்த ஸ்வப்ன வ்ருத்தாந்தங்களையும் அருளிச் செய்ய,
மிகவும் விஸ்மயப்பட்டு “நாதமுனிகள் பெற்ற பேறு ஆர் தான் பெறப் போகிறார்கள்?
பவிஷ்யதாசார்ய வ்யக்த்தியை ஸ்வப்னமுகேந ஸாக்ஷாத்கரித்த இடத்திலே அத்யாகர்ஷகமாயிருந்தது என்று
அருளிச் செய்யும் போது, ப்ரத்யக்ஷமாய் ஸாக்ஷாத்கரிக்கும் படியினால்
லோகமாக மேல் விழுந்து ஆஶ்ரயிக்குமாகாதே” என்று அருளிச் செய்தார்.
அவ்வளவிலே உய்யக்கொண்டார் “அந்த மஹானுபாவனுடைய ஸம்பந்தம் ஸித்தித்தாலே ஒழியத் தவிராதிறே” என்று அருளிச் செய்தார்.

உய்யக் கொண்டார் சரமதஶையிலே ப்ரதம சிஷ்யரான மணக்கால் நம்பியை அழைத்து அருளிப்
பன்னிரண்டு ஸம்வத்ஸரம் பழுக்க ஸ்வாநுவாத்தநம் பண்ணிப் போந்தவராகையாலே,
நாதமுனிகள் தமக்கருளிச் செய்த ரஹஸ்யார்த்தங்களையும் வெளியிட்டருளி, ஸ்வப்ன வ்ருத்தாந்தங்களையும் அருளிச் செய்ய,
மணக்கால் நம்பியும், இந்த தர்ஶன ப்ரவர்த்தகராரென்று கேட்க,
நம்முடைய பக்கலிலே பகவத் ஸம்பந்தம் பண்ணிக் கொண்ட நீரே நடத்தக் கடவீர்.
பின்பு சொட்டைக் குலத்திலே நாதமுனிகளுக்குத் திருப்பேரனாரான யமுனைத் துறைவர் ப்ரவர்த்தகராவார்.
அவருக்கு பின்பு கரையத் தேவையில்லை என்று அருளிச் செய்தார்.

அதாவது – நாதமுனிகள் அருளிச் செய்தபடியே ப்ரபன்ன குலமாகப் பேறு பெறும்படி ஒரு மஹானுபாவர் திருவவதரிக்கப் போகிறார்.
அவராலே தர்ஶனம் விளங்கப் போகிறது – என்று அருளிச் செய்தார் என்றபடி.

பின்பு உய்யக்கொண்டாரும் மணக்கால் நம்பியை அழைத்தருளி, அவ்விக்ரஹத்தை ப்ராஸிதித்தருளி ,
“ நம் காலத்திலே யமுனைத் துறைவர் திருவவதரிக்கப் பெற்றதில்லையே.
நீர் இவ் விக்ரஹத்தை, ‘உங்கள் திருப்பாட்டனார் விரும்பின விஷயம்’ என்று தஞ்சமாக காட்டிக் கொடுத்து,
நாம் சொன்ன ஸ்வப்ன வ்ருத்தாந்தங்களையும் ரஹஸ்யார்த்தர்தங்களையும் வெளியிடும்’ என்றருளிச் செய்தார்.

பின்பு மணக்கால் நம்பியும் ஆளவந்தாரைப் பச்சை யிட்டுக் கொண்டு கோயிலேற எழுந்தருளி
ஸ்வாசார்யரான உய்யக்கொண்டார் அநுமதிபடியே நாதமுனிகள் அருளிச் செய்ததாக ஸ்வாசார்யர் அருளிச் செய்த
அர்த்த விஶேஷங்களையும் விஶேஷித்து ஸ்வப்ன வ்ருத்தாந்தங்களையும் அருளிச் செய்து ‘
நெடுங்காலம் தேவரீர் இந்த தர்ஶனத்தை ப்ரவர்த்திப்பித்துக் கொண்டு ஶ்ரீவைஷ்ணவ ஸம்ருத்தியோடே எழுந்தருளியிரும்’ என்றருளிச் செய்தார்.

அப்படியே ஆளவந்தார் தர்ஶன ப்ரவர்த்தகராய் எழுந்தருளியிருக்கிற நாளிலே மணக்கால் நம்பி
சரமதஶையானவாறே, நாதமுனிகள் ஸ்வப்னத்திலே எழுந்தருளி நம்பியைப் பார்த்து,
”நம்முடைய யமுனைத் துறைவர்க்கு நாட்டையளித்து உய்யச் செய்து நடத்துமவனை நாம் தேடச் சொன்னோம் என்று சொல்லும்.
நாம் விரும்பின விக்கிரஹத்தைத் தஞ்சமாக அவர் கையிலே காட்டிக் கொடும்” என்றருளிச் செய்ய,
இப்படி அருளிச் செய்கிறது ஏதென்ன, ‘நமக்கு ஸ்வப்ன த்ருஷ்டமான வ்யக்தி
நம் பேரனுக்கு ப்ரத்யக்ஷ ஸித்தமானால் நமக்கு நெஞ்சாறல் தீரும்’ என்றருளிச் செய்தார்.

நம்பியும் – உடனே உணர்ந்தருளி மிகவும் விஸ்மயப்பட்டு, நிர்ஹேதுகமாக நமக்குப் பேறு கிடைப்பதேயென்று
போர ப்ரீதராய் எழுந்தருளியிருக்கிற அவ்வளவிலே, ஆளவந்தாரும் அவராய் எழுந்தருள,
“உம்முடைய திருப்பாட்டனார் நிர்ஹேதுகமாக நமக்கு சேவை சாதித்தருளி தேவரீர்க்கு ஒரு வார்த்தை விண்ணப்பம்
செய்யச் சொல்லி அருளிச் செய்தாரென்று அவ்வார்த்தையை அருளிச் செய்ய,
இது நேரேயாகப் பெற்றதில்லையேயென்று இழவு பட்டருளி, ஸத்வாரகமாகவாகிலும் விஷயீகரிக்கப்பட்ட
இதுவே அமையுமென்று ப்ரீதராய் எழுந்தருளியிருக்க,
பவிஷ்யதாசார்ய விக்ரஹத்தையும் ப்ராஸிதித்து, “உம்முடைய திருப்பாட்டனார், தாம் விரும்பின விஷயம்” என்று
உம்மை இவ் விக்ரஹத்தைத் தஞ்சமாகப் பற்றி யிருக்கச் சொல்லும் என்று நியமித்தருளினார்.
ஆகையாலே தேவரீரும் இந்த அவதார ரஹஸ்யத்தைப் பேணி நோக்கி கொண்டு போரும்;
இவ்வ்யக்திமானை நேரே ஸாக்ஷாத்கரிக்கப் போகிறீர். அவ்யக்திமானாலே
இத் தர்ஶனம் நெடுங்காலம் நிலைநிற்கப் போகிறது” என்று அருளிச் செய்தார்.

ஆளவந்தாரும் அப்படியே தர்ஶன ப்ரவர்த்தகராய் எழுத்தருளியிருந்து அவ்விக்ரஹத்தைப் பரம ரஹஸ்யமாகப்
பரிவுடனே நோக்கிக் கொண்டு மணக்கால் நம்பி அருளிச் செய்தபடியே நாட்டை அளித்து உய்யச் செய்து
நடத்துகிறவனைத் தேடுவதாக உத்யோகித்து ஒருவரையும் அடைவு படக் காணாமையாலே
வ்யாகுலாந்த கரணராய் எழுந்தருளியிருக்க,
இளையாழ்வாருடைய வ்ருத்தாந்தங்களைச் சிலர் விண்ணப்பம் செய்யக் கேட்டருளி,
பெருமாள் கோயிலுக்கு எழுந்தருளினவுடனே, நம்பி முகேன இளையாழ்வாரைக் கண்டு
அவருடைய திருநக்ஷத்ரமும் கேட்டருளி, மூன்று படியாலும் ஓத்திருக்கையாலே பூர்ணமாகக் கடாக்ஷத்தருளி,
‘ஆமுதல்வனிவன்’ என்று ப்ரதிபத்தி பண்ணி யருளினார்.

பின்பு கோயிலேற எழுந்தருளிச் சிலநாள் செல்லத் தம்முடைய சரம தஶையானவாறே,
திருக்கோட்டியூர் நம்பியை அழைத்தருளி, அந்த விக்ரஹத்தை ப்ராஸிதித்து வரவாறும் அருளிச் செய்து,
மற்றுமுண்டான வ்ருத்தாந்தங்களையும் அருளிச் செய்து, நீர் இளையாழ்வார்க்கு நாம் அருளிச் செய்த
ரஹஸ்யார்தங்களெல்லாம் அருளிச் செய்யுமென்று நியமித்து,
அவர் திருநாமத்தாலே தர்ஶனம் விளங்க போகிறது என்றும் ப்ரபன்ன குலமாகப் பேறு பெறும்படி
உத்தாரகராகத் திருவவதரித்திருக்கிறார் என்றும் அருளிச் செய்தார்.

பின்பு ஆஸந்ந சரமதஶையானவாறே, முதலிகள் எல்லாரும் சூழ விருந்து,
அடியோங்களுக்கு இனி தஞ்சம் ஏதென்று கேட்டருள,
“உங்களுக்கு நாம் ஒருவரை உண்டாக்கி யன்றோ பேறு பெறப் போகிறோம்.
உங்களுடைய இழவைத் தீர்த்து நாம் மாத்ரம் அன்றோ இழவோடே போகிறோம்” என்று அருளிச் செய்தார்.

இப்படி எம்பெருமானார்க்கு முன்புள்ள முதலிகள் எல்லாரும் உடையவரிடத்திலே உத்தாரகத்வத்தை அறுதியிட்டார்கள்.
முன்புள்ளார்க்கு இவர் உத்தாரகராக கூடும்படி எங்ஙனேயெனில்,

ஆஸ்போடயந்தி பிதர: ப்ரந்ருத்யந்தி பிதாமஹா: |
வைஷ்ணவோ ந: குலே ஜாத: ஸ ந: ஸந்தார யிஷ்யதி ||
‘வைஷ்ணவன் நம் குலத்தில் பிறந்து விட்டான்; நம்மைக் கரையேற்றுவான்’ என்று பித்ருக்கள்
கைகொட்டி ஆர்ப்பரிக்கிறார்கள்; பிதா மஹர்கள் நடனமாடுகிறார்கள். (வராஹ புராணம்)
என்று முன்பே லோகாந்தரஸ்தரான பித்ருக்கள் ஸ்வ குலத்திலே ஒருவன் வைஷ்ணவனாகப் பிறந்தால்
அவனையே தங்களுக்கு உத்தாரகனாகச் சொல்லக் கடவதிறே.

வைகுண்டே து பரே லோகே என்று சொல்லபடுகிற
(வைகுண்டம் என்னும் மேலான உலகில், உலகின் தலைவனாய் அளவிட்டறியமுடியாதவனாய்,
(குணநிஷ்டர்களான) பக்தர்களோடும், (கைங்கர்ய நிஷ்டர்களான) பாகவதர்களோடும் கூடியவனாய்,
பெரிய பிராட்டியாருடன் சேர்ந்த நாராயணன் எழுந்தருளியிருக்கிறான்.)
லோகாந்தரஸ்தரான நாதமுனி ப்ரப்ருதிகள், ஸ்வகீயமான ப்ரபந்ந குலத்திலே நித்ய ஸூரிகளின் தலைவராய்
வைஷ்ணவாக்ரேஸர் ஆகிய ஒரு மஹானுபாவன் திரு அவதாரம் பண்ணினால்,
அவரையே தங்களுக்கு உத்தாரகராக நினைத்திருக்கச் சொல்ல வேண்டாவிறே.

“பித்ராதிகளுக்கு வைஷ்ணத்வம் இல்லாமையாலும்,
அவர்களுக்கு ப்ராப்யமான தேஶ விசேஷம் வேறே ஒன்று உண்டாயிருக்கையாலும்,
உத்தரணாபேக்ஷை உடையவர்களாகையாலும் ஸ்வ குலோத்பன் ஆன வைஷ்ணவனை உத்தாரகனாகச் சொல்லக் குறையில்லை.

இவர்கள் தாம் வைஷ்ணவாக்ரேஸர் ஆகையாலும், ப்ராப்ய பூமி கைபுகுந்திருக்குமவர்கள் ஆகையாலும்
உத்தரணாபேக்ஷாரஹிதராயிருக்கவடுக்குமத்தனை போக்கிக் கால விப்ரக்ருஷ்டரான இவர் பக்கலிலே
ஸ்வோத்தாரகத்வ புத்தி பண்ணக்கூடாதே” என்னில் – அங்ஙனே சொல்லப்படாது.
இதுவும் கூடும். எங்ஙனேயென்னில்-

நாதமுனிகளுக்கு ஆழ்வாரிடத்திலே உத்தாரகத்வ ப்ரதிபத்தி நடக்குமே ; அதில் சோத்யமில்லையிறே;
இனி, நாதமுனிகள் தமக்கு உத்தாரகமாக ஆழ்வாருடைய திருவடிகளை அறுதியிட்டு இருக்கையாலும்,
ஆழ்வார் தாமும் பவிஷ்யதாசார்ய விக்ரஹத்தைக் காட்டிக் கொடுத்து –
ராமஸ்ய தக்‌ஷிணோ பாஹூ : என்கிறபடியே
“நம்முடைய அவயவமாக நினைத்திரும். இவ்வயக்திக்கடி நாமாகையாலே நமக்கு அடியுமாய் இருக்கும்” – என்று
உடையவரை ஆழ்வார் தமக்குத் திருவடிகளாக அறுதியிட்டு அன்றே அருளிச் செய்கையாலும்,
நாதமுனிகள் ஆழ்வார் ப்ரஸாதித்த வ்யக்தியிலே பரிபூர்ணமாக உத்தாரகத்வத்தை அறுதியிட்டு,
உய்யக்கொண்டார்க்கு வெளியிட்டருள, அவர் மணக்கால் நம்பிக்கு வெளியிட்டருள,
மணக்கால் நம்பியும் ஆளவந்தார்க்கு வெளியிட்டருள,
ஆளவந்தாரும் தம்முடைய ஶ்ரீபாதம் முதலிகளில் திருமலை நம்பி, திருக்கோட்டியூர் நம்பி, திருமாலையாண்டான்,
பெரிய நம்பி, திருவரங்கப் பெருமாள் அரையர் தொடக்கமானார்க்கு வெளியிட்டருள,

இவர்களுடைய தந்நிஷ்டராய், இந்த ரஹஸ்ய விசேஷத்தைத் திருவுள்ளத்திலே கொண்டு
உடையவரோடு ஸம்பந்தம் தங்களுக்கு வேண்டுமென்று கொண்டு
“ கொடுமின் கொண்மின்” என்றும்

13-மத் பக்த ஜந வாத்ஸல்யம் பூஜாயாஞ்சாநுமோதநம்|
ஸ்வயம் பயாச்சநஞ்சைவ மதர்தே டம்ப வர்ஜநம்||

மத் கதா ஶ்ரவணே பக்தி: ஸ்வரநேத்ராங்க விக்ரியா|
மமாநுஸ்மரணம் நித்யம் யஶ்ச மாம் நோபஜீவதி ||

பக்திரஷ்டவிதா ஹ்யேஷா யஸ்மிந் மிலேச்சேபி வாத்ததே |
ஸ விப்ரேந்த்ரோ முநி: ஸ்ரீமாந் ஸ யதி:ஸ ச பண்டித:
தஸ்மை தேயம் ததோ க்ராஹ்யம் ஸ ச பூஜயோ யதாஹ்யஹம் ||

1. என் பக்தர்களிடத்தில் வாத்ஸல்யம்
2. என்னை ஆராதனம் செய்வதை ஆமோதித்தல்
3. தானே என்னைப் பூஜித்ததால் 4. என் விஷயத்தில் ஆடம்பரமற்றிருத்தல்
5. என் கதைகளைக் கேட்பதில் அன்பு,
6. (என் கதைகளைக் கேட்கும் போது) குரல் தழதழத்தும், கண்ணீர் மல்கியும், உடம்பு மயிர்க்கூச்செறிந்து கொண்டுமிருக்கை
7. எப்போதும் என்னை நினைத்திருக்கை,
8. என்னிடம் வேறு ஒரு ப்ரயோஜனத்தையும் கேளாதிருக்கை,
என்னும் இந்த எட்டு விதமான பக்தியானது எந்த மிலேச்சனிடமும் காணப்படுகிறதோ அவனே ப்ராஹ்மண ஶ்ரேஷ்டன்,
அவனே முனிவன், அவனே தனவான், அவனே இந்திரிய நியமனம் செய்தவன், அவனே பண்டிதன்,
அவனுக்கு ஞானத்தை உபதேஶிக்கலாம், அவனிடமிருந்து ஞானோபதேஶமும் பெறலாம்.
அவன் என்னைப்போல் பூஜிக்கத்தக்கவன் ] (காருடம் 219 6-9)

13.– தஸ்மை தேயம் ததோ க்ராஹ்யம் என்றும் சொல்லுகிறபடியே
தாங்கள் உடையவர்க்கு ரஹஸ்யார்த்தங்களை உபதேஶித்து ஆசார்ய வ்யாஜேன ஸம்பந்தம் பெற்று ,
தந்தாம் குமார்களையும் ஆஶ்ரயிப்பித்து ,
அத்வாரகமான ஸம்பந்தத்திலும் ஸத்வாரகமான ஸம்பந்தத்தையிறே கனக்க நினைத்திருந்து
ஸ்வோத்பாதக விஷயீகாரக விஷயத்தில் ஸ்வோத்தாரகத்வ ப்ரதிபத்தி பண்ணியிருந்தார்கள்’ – என்றபடி

கண்டாகர்ணன் பக்கம் பண்ணின விஷயீகாரம் அவனுடன் பிறந்தவனளவும் சென்றாப்போலவும்,
ஶ்ரீ விபீஷணாழ்வான் பக்கல் பண்ணின விஷயீகாரம், கூடச் சென்ற நால்வரளவும் சென்றாப்போலவும்,
ஶ்ரீப்ரஹ்லாதாழ்வான் பக்கல் பண்ணின விஷயீகாரம் தத் ஸம்பந்திகள் அளவும் சென்றாப்போலவும் நினைத்திருந்தார்கள்.

பந்த மோக்ஷங்கள் இரண்டுக்கும் ஹேதுவான ப்ரதம பர்வ விஷயீகாரம் அப்படிச் செய்தபடி கண்டால்,
மோக்ஷைக ஹேதுவான சரம பர்வ விஷயீகாரம் இப்படியே செய்யச் சொல்ல வேண்டாவிறே.

இவர்கள் எல்லாரும் இவரிடத்திலே உத்தாரகத்வத்தை அறுதியிட்டு இருக்கைக்கு நிதானம் நாதமுனிகளிறே.
உடையவர்க்கு இவர்கள் ஆசார்யர்கள் ஆனது எதிலே அந்வயிக்கறது என்னில்
உபகாரத்வத்திலே அந்வயிக்கும் இத்தனை, உத்தாரகத்வத்தில் புகாது.

ஆசார்யத்வந்தான் உபகாரத்வேநவும் உத்தாரகத்வேநவும் த்விவிதமாயிருக்கும்.
அதில் உபகாரத்வேந ஆசார்யத்வமே இவர்கள் பக்கலில் உள்ளது.
தங்கள் பக்கல் உத்தாரகத்வமுண்டாகில், தந்தாம் குமாரர்களை இங்கு ஆஶ்ரயிப்பிக்கக் கூடாதிறே
தங்கள் பக்கல் உபகாரகத்வமே உள்ளது என்னும் இடத்தை இவ்வழியாலே தோற்றுவித்தார்கள்.

உத்தாரகத்வந்தான் வ்யக்தி த்ரயகதமாயிருப்பது,
ஈஶ்வரனிடத்திலும், ஆழ்வாரிடத்திலும், உடையவரிடத்திலுமிறேயுள்ளது.
உபயவிபூதிக்கும் கடவனிறே உத்தாரகனாவான்.

14. (அஸ்யா மம ச சேஷம் ஹி விபூதிருபயாத்மிகா) (விஷ்வக்ஸேந ஸம்ஹிதை)என்று
உபயவிபூதிக்கும் கடவனான ஶ்ரீமான் தானென்னுமிடத்தைத் தானே அருளிச் செய்தான்.

ஆழ்வார் “பொன்னுலகாளீரோ புவனிமுழுதாளிரோ“ என்று உபய விபூதியும் தாமிட்ட வழக்காய்
இருக்குமென்னிடத்தை தாமே அருளிச் செய்தார்.
பெரிய பெருமாள் உபய விபூதியும் கொடுக்கப் பெற்று உடையவரானாரிறே இவர்.
ஆகையாலே இது வ்யவஸ்தித விஷயமாயிருக்கும்..

அவ்யக்தி த்ரயத்திலும் உடையவரிடத்திலே உத்தாரகத்வம் உறைத்திருக்கும்.
ஈஶ்வரன் ஆழ்வாரை இவ்விபூதியிலே நெடுநாள் இட்டுவைத்து ஜகத்தைத் திருத்துவதாக நினைத்தளவிலே,
முப்பத்திரண்டு திருநக்ஷத்ரத்துக்குள்ளே, “கூவிக்கொள்ளும் காலம் இன்னம் குறுகாதோ” என்றும்,
“எந்நாள் யானுன்னை இனி வந்து கூடுவனே” என்றும்,
“மங்கவொட்டுன் மாமாயை” என்றும் அறப் பதறி வீடு பெற்றாரிறே.

அந்த இழவெல்லாம் தீர உடையவரை நூற்றிருபது திருநக்ஷத்ரமிட்டு வைத்து ஜகத்தை வாழ்வித்தானிறே;
ஆழ்வார் காலத்தில் இல்லாத வைஷ்ணவ ஸம்ருத்தி இவர் காலத்தில் பொலிந்ததிறே.
இதுக்கு நிதாநம் – உத்தாரகத்வத்தினுடைய உறைப்பாய்த்து.
ஆழ்வார் தாமும் “கடல் வண்ணன் பூதங்கள் மண் மேல் மலியப் புகுந்து இசை பாடியாடி உழிதரக் கண்டோம்” என்று
நிஶ்சயித்து அருளிச் செய்தாரிறே.

ஆகையாலே, இவரே ஸர்வோத்தாரகர்.
ஆசார்யத்வத்திலே வந்தால் க்ருபாமாத்ர ப்ரஸந்நாசார்யத்வத்தை முக்யமாக கொள்வது இவர் பக்கலிலே ஆயித்து.
அநர்த்தங்கண்டால் ஆற்றாமையும், மிக்க க்ருபையும் உடையவராயிறே இவரிருப்பது.
இது தான் வ்யவஸ்தித விஷயமாகையாலே துர்லபமாயிருக்கும் .
ஆகையிறே ஆசார்யத்வத்தை ஆசைப்பட்டு ஶ்ரீகீதையை உபதேசிக்குமளவிலே.

15. (யச்ச்ரேயஸ் ஸ்யாந் நிஶ்சிதம் ப்ரூஹி தந்மே ஶிஷ்யஸ் தேஹம் ஶாதி மாம் த்வாம் ப்ரபந்நம் )(கீதை 2-7)
எனக்கு எது நல்லது என்று உன்னால் நிஶ்சயிக்கப் படுகிறதோ, அதை எனக்குச் சொல்லுவாயாக.
நான் உனக்கு ஶிஷ்யன். உன்னை ஶரணமடைந்த என்னை நியமிப்பாயாக.

என்று தானும் ஸ்வாநுவ்ருத்தி ப்ரஸந்நாசார்யனாய்,
16. (தத் வித்தி ப்ரணிபாதேந பரிப்ரஶ்நேந ஸேவயா|
உபதேக்ஷ்யந்தி தே ஜ்ஞாநம் ஜ்ஞாநிநஸ் தத்வதர்சின: ||) (கீதை 4-34)
ஞானிகளை வணங்குவதாலும் நேரே குறிப்பிடாமல் கேட்பதாலும், ஶுஶ்ருஷை செய்வதாலும்
ஆத்மாவைப் பற்றிய அறிவைப் பெறுவாயாக.
உண்மையைக் கண்ட ஞானிகள் உனக்கு அவ்வறிவை உபதேஶிப்பார்கள். -என்று
ஸ்வ வ்யதிரிக்த விஷயத்திலும் ஸ்வாநுவ்ருத்தி ப்ரஸந்நாசார்யத்வத்தையிறே சொல்லிற்று.
ஆகையாலே, ஆழ்வாரிடத்திலும், அவரடியாக வந்த இவரிடத்திலும் க்ருபாமாத்ர ப்ரஸந்நாசார்யத்வம் வ்யவஸ்திதம்.

இன்னமும் இவருடைய உத்தாரகத்வ ஸாதகங்களான ஆசார்ய திவ்ய ஸூக்திகள் பலவும் சொல்லப்படுகிறது.

பெரியநம்பி மதுராந்தகத்து ஏரி காத்த பெருமாள் கோயில் திருமகிழ அடியிலே எழுந்தருளியிருந்து
17.(சக்ராதிதாரணம் பும்ஸாம் பர ஸம்பந்த வேதநம் |
பதி வ்ரதா நிமித்தம் ஹி வலயாதி விபூஷணம் || )
(சக்கரம் முதலியவைகளை தரிப்பது பரமாத்ம ஸம்பந்தத்தைக் காட்டுகிறது.
வளை முதலிய ஆபரணங்கள் பதி வ்ரதைக்கு அடையாளங்களன்றோ.)என்றும்,

18.(ஏவம் ப்ரபத்ய தேவேஶம் ஆசார்ய: க்ருபயா ஸ்வயம் |
அத்யாபயேந் மந்த்ர ரத்நம் ஸர்ஷிச்சந் தோதி தைவதம் || ) என்றும் சொல்லுகிறபடியே
பகவத் ஸம்பந்த பூர்வகமாக உடையவர்க்கு த்வயோபதேஶம் பண்ணியருளி

“நாம் உமக்கு ஆசார்யராக வேணுமென்று பெருமைக்கு செய்தோமில்லை.
ஆளவந்தார் கணிசித்த விஷயமென்று செய்தோமித்தனை.
ஆழ்வார் உம்மைக் கடாக்ஷித்து ‘கலியும் கெடும் கண்டு கொண்மின்’ என்று அருளிச் செய்தாராகையாலே
அப்படிப்பட்ட மஹாநுபாவனன்றோ; இவ் வழியாலே தேவரீரோட்டை ஒரு ஸம்பந்தம் வேணுமென்றும் செய்தோம் இத்தனை.

“வெங்கதிரோன் குலத்துக்கோர் விளக்காய்த் தோன்றி விண் முழுதும் உய்யக்கொண்ட வீரன்” என்றும்,
19. ஜநகாநாம் குலே கீர்த்திமாஹரிஷ்யதி மே ஸுதா -(ரா-பா 67.22)
(ஜனக வம்ஶத்திற்கு என் பெண் புகழை உண்டாக்குவாள்)என்றும் சொல்லுகிறபடியே,

“தேவரீர் வந்தவரதரிக்கையாலே ப்ரபன்ன குலமாக விளங்கப் போகிறது. தேவரீரே ஸர்வோத்தாரகர்.
அடியேன் ரஹஸ்யத்திலே நினைத்திருப்பதும் அப்படியே” என்றருளிச் செய்தார்.
இவ்வார்த்தை ஸம்ப்ரதாயமென்று பிள்ளை அருளிச் செய்வர்.

பெரிய திருமலை நம்பி திருமாளிகையிலே, உடையவர் ஒரு ஸம்வத்ஸரம் எழுந்தருளி இருந்து
இதிஹாஸ ஶ்ரேஷ்ட்டமான ஶ்ரீராமாயணம் நம்பி பக்கலிலே கேட்டருளுகிறவளவிலே,
20-யஶ்ச ராமம் ந பஶ்யேத்து யஞ்ச ராமோ ந பஶ்யதி|
நிந்தித: ஸ வஸேல்லோகே ஸ்வாத்மாப்யேநம் விகர்ஹதே||(ரா-அ 17-14)
[எவனொருவன் ராமனைக் காணாதிருப்பானோ, எவனை ராமனும் காணாதிருக்கிறாரோ அவன் உலகில்
நிந்திக்கப்பட்டவனாய் வாழ்வான்; தன் ஆத்மாவும் இவனை இகழும்] (ரா-அ 17-14)

21-இமௌ ஸ்ம முநிஶார்தூல! கிங்கரௌ ஸமுபஸ்திதௌ|
ஆஜ்ஞாபய யதேஷ்டம் வை ஶாஸநம் கரவாவ கிம் ||
[முநிஶ்ரேஷ்டரே! நாங்களிருவரும் (தேவரீருக்குக்) கைங்கரியம் செய்பவர்களாக அருகில் இருக்கிறோம்.
(தேவரீருடைய) இஷ்டப்பட கட்டளையிட வேண்டும்;
(தேவரீருடைய) எந்தக் கட்டளையை நாங்கள் செய்ய வேண்டும்? ] (ரா -பா 31-4) என்கிற ஶ்லோகம் வந்தவாறே
ஸ்வகத ஸ்வீகார பரகத ஸ்வீகாரங்கள் இரண்டுமன்றியிலே தானும் பிறரும் தன்னை இகழும்படி வர்த்திக்கிற சேதனனுக்கு
தஞ்சமேதென்று கேட்டருளினவளவிலே,
“நித்ய ஸூரிகளில் தலைவரான தேவரீருடைய அபிமானமே அமோகோத்தாரகம்” என்று அருளிச் செய்தார்.

பின்பு எம்பாரை உதக பூர்வகமாக உடையவர்க்கு ஸமர்ப்பித்து,
“நீர் உடையவரை நம்மிலும் அதிகராக நினைத்திரும் ; அவர் திருவடிகளே தஞ்சம்;
அவர் ஸர்வோத்தாரகராகத் திரு அவதரித்தவர். ஆகையாலே இவரோட்டை ஸம்பந்தம் நேராகப் பெற்றதில்லை என்று
ஶ்ரீராமாயண வ்யாஜத்தாலே ஒரு ஸம்பந்தம் பெற்றோம்.
ஆளவந்தாரும் இழவோடே எழுந்தருளும் படிகாணும் இவருடைய ஏற்றமிருப்பது.
இந்த மஹாநுபாவனோட்டை ஸம்பந்தத்தாலே நீரும் நிழலுமடிதாறுமாயிரும் “ என்றருளிச் செய்தார்.
இதுவும் ஸம்ப்ரதாயம்.

திருக்கோட்டியூரிலே உடையவர் எழுந்தருளி நம்பி பக்கலிலே சரம ஶ்லோகம் கேட்கிற போது,
தஞ்சமான அர்த்த விஶேஷங்களை எல்லாம் அருளிச்செய்து,
“தேவரீரைப் பலகாலும் துவளப் பண்ணினத்தைத் திருவுள்ளத்திலே கொள்ளாதே கிடீர்.
அர்த்தத்தின் சீர்மையை வெளியிட வேண்டிச் செய்தோமித்தனை.
தேவரீர் லோக ஸம்ரக்ஷணார்த்தமாகத் திருவவதரித்தருளிற்று. நாதமுனிகளுக்குத் தஞ்சமான விஷயம் தேவரீர்.
இப்படிப்பட்ட மஹானுபாவனோட்டை ஸம்பந்தமுண்டாகப் பெற்றோம் என்று மார்பிலே கைபொகட்டு உறங்கலாம்படிக்கு உடலாயிருக்கிறது.
எங்கள் ஆசார்யரான ஆளவந்தார் ஸ்ரீபாதத்திலே ஆஶ்ரயித்த முதலிகளிலே இத்தர்ஶநத்தை நிர்வஹிக்க ஆளுண்டாயிருக்கவும்,
தேவரீரே தர்ஶன ப்ரவர்த்தகராக வேணுமென்று பேரருளாளன் ஸன்னிதியிலே ப்ரபத்தி பண்ணியருளித்
திருநாட்டுக்கு எழுந்தருளுகிற போது, “இந்த மஹாநுபாவனோடே நாலு நாளாகிலும் கலந்து பரிமாறப் பெற்றோமில்லையே”
என்று இழவோடே எழுந்தருளினார். ஆகையாலே இத்தர்ஶனம் எம்பெருமானார் தர்ஶநமென்று தேவரீர் திருநாமத்தினால்
நாள் தோறும் கொழுந்து விட்டு விளங்கப்போகிறது” என்று அருளிச் செய்தார்.

திருக்கோட்டியூர் நம்பி நியோகத்தாலே உடையவர் திருமாலையாண்டான் பக்கலிலே திருவாய்மொழி நடத்தா நிற்க,
இடையிலே ஒரு அர்த்த வ்யத்யாஸத்தாலே வ்யாக்யானம் நடத்தாமல் தவிர,
இத்தைத் திருக்கோட்டியூர் நம்பி கேட்டருளிக் கோயிலேற எழுந்தருளினவளவிலே திருமாலை யண்டானை அழைத்தருளி
“ நீரிவருக்கு அஜ்ஞாத ஜ்ஞாபனம் பண்ணுகிறோமென்று இராதே கொள்ளும்.
இவர்க்கு ஆளவந்தார்க்குத் தோற்றின அர்த்தமொழிய விபரீதார்த்தம் தோற்றாது.
ஸாந்தீபநி பக்கலிலே க்ருஷ்ணன் வேதாத்யயநம் பண்ணினாப்போலே காணும்
உம்முடைய பக்கலிலே இவர் திருவாய்மொழி கேட்கிறது” என்றருளிச் செய்து,
விட்ட தருவாய் தொடங்கி உடையவர் மடத்திலே
திருக்கோட்டியூர் நம்பியும், திருமாலையாண்டானும், பெரிய நம்பியும் கூட எழுந்தருளியிருந்து திருவாய்மொழி
வ்யாக்யானம் நடத்துவியா நிற்க,
“பொலிக பொலிக” வந்தவாறே, “கலியும் கெடும்” என்கிறவிடத்திலே நம்பியும் உடையவரை ஏறவும் இறங்கவும் பார்க்க,
உடையவர் அத்தைக் கண்டருளி இதுக்குப் பொருளேதென்று கேட்க,
“ தேவரீர் திருவவதரித்து இதினுடைய அர்த்தத்தை வெளியிட்டுக் கொண்டு எழுந்தருளியிருக்கச் செய்தே கேட்க வேணுமோ?
ப்ரபன்ன குலோத்தாரகரான தேவரீரே இதுக்குப் பொருள்;
அஸ்மதாதிகளைக் கரையேற்றுகைக்காக வன்றோ நித்ய விபூதியில் நின்றும் இங்கே எழுந்தருளிற்று” என்று அருளிச் செய்தார்.
இத்தைக் கேட்டிருந்த திருமாலையாண்டானும் ஹர்ஷபுளகிதகாத்ரராய்,
“இனி நான் ஆளவந்தாரை அறியேன்; எல்லாப் பேறும் தேவரீரே;
தேவரீரோடு உண்டான ஸம்பந்தமே அடியேனுடைய பேற்றுக்கு ஸாதனம்” என்றருளிச் செய்தார்.

உடையவர், ஆழ்வார் திருவரங்கப் பெருமாள் அரையர் பக்கலிலே சென்று ஸ்வாநுவர்த்தனத்தாலே அவரை உகப்பித்து
பரம ரஹஸ்யமான சரமோபாயத்தைப் பெற்று ப்ரீதராய் எழுந்தருளியிருக்க அவ்வளவிலே உடையவரை அழைத்தருளி
“நாம் உமக்குச் சரமோபாய ரஹஸ்யத்தைச் சொன்னோமேயாகிலும் இது முக்யமாக விலைச்செல்லுகிறது
உம்முடைய பக்கலிலேதானே” என்றருளிச் செய்தார்”.
இதுக்கு நிதானம், நாதமுனிகளாகையாலே நீரே ஸர்வோத்தாரகராக குறையில்லை” என்றும் அருளிச் செய்தார்.

இப்படி ஐவரும் கூடி உடையவர்க்கு ஆசார்யர்களாக இருந்தார்களேயாகிலும்,
தாங்கள் தஞ்சமாக அறுதியிட்டு இருப்பது உடையவரிடத்தில் உத்தாரகத்வத்தையிறே.
திருக்கோட்டியூர் நம்பி தம் குமாரத்தியாரை உடையவர் திருவடிகளிலே ஆஶ்ரயிப்பித்தவளவிலே,
உடையவர் அப்பெண்பிள்ளையை ஏகாந்தத்திலே அழைத்தருளி தம் திருவடிகள் இரண்டையும் காட்டி,
“பெண்ணை! இத்தையே தஞ்சமாக நினைத்திரு” என்றருளிச் செய்தார்.

அந்தப் பெண்ணும் “மேவினேனவன் பொன்னடி மெய்ம்மையே” என்று,
தேவரீர் எங்கே எழுந்தருளியிருந்தாலும், அடியேனுக்கு தேவரீருடைய திருவடிகளே தஞ்சம்;
தேவரீருக்கு ஆசார்யரான எங்கள் ஐயர் நினைத்திருக்கும்படி கண்டால்
தேவரீருக்கு அநந்யார்ஹ சேஷபூதையான அடியேன் நினைத்திருக்கச் சொல்லவேணுமோ” என்று
சொன்னாளாகப் பிள்ளை அருளிச்செய்வர்.

திருக்கோட்டியூர் நம்பி தம்முடைய அந்திம தஶையிலே குமாரத்தியாரை அழைத்தருளி,
“பெண்ணே! நம் ப்ராயாணத்தில் நீ நினைத்திருப்பது என்” என்ன ,
“ஐயரே! எங்களாசார்யரான எம்பெருமானரோடு உண்டான ஸம்பந்தத்தாலே தேவரீருக்குப் பேறு முற்படப் பெற்றதே
என்று நினைத்திருக்கின்றேன்” என்ன,
அவரும், “ வளர்த்ததனால் பயன் பெற்றேன்” என்று அப் பெண் பிள்ளையை அழைத்தருளி,
ஆளவந்தார் ப்ராஸாத லப்தமான விக்ரஹத்தை ஸாதித்து உள்ளிற்கருத்தும் வெளியாம்படி,
“எம்பெருமானார் திருவடிகளே ஶரணம்” என்று திருநாட்டுக்கு எழுந்தருளினார்.
இத்தால் எம்பெருமானாரிடத்திலே நிஸ்ஸம்ஶயமாக உத்தாரகத்வத்தை அறுதியிட்டார் என்னுமிடம் ஸித்தமாயிற்றதிறே.

திருக்கச்சி நம்பி ஒரு நாள் ராத்திரி காலத்திலே பேரருளாளன் ஸன்னதியிலே நெடும் போது திருவாலவட்டம் பரிமாற ,
“நம்பி ! ஒன்று சொல்லுவாரைப் போலே இராநின்றீர், என்?” என்ன,
“நாயந்தே! இளையாழ்வார், ‘சில நினைவுகள் நினைத்தேன் அவை எவை என்று தேவரீரிடத்திலே கேட்டு வந்து சொல்ல வேணும்’ என்றார்.
அவற்றை அருளிச் செய்ய வேணும்” என்ன,
“வாரீர்! அவர் அறியாததோ நாம் சொல்லப் போகிறது. ஸாந்தீபனி பக்கலிலே நாம் அத்யயனம் பண்ணினாப் போலே காணும்
அவர் இருக்கும்படி ஸகல ஶாஸ்த்ரங்களும் ஸகலோபாயங்களும் அறிந்த ஸாரவித்தமராய்,
நம் முதன்மையிலே அடிமை செய்வாரில் தலைவராய், தம் பக்கலிலே ஸகலார்த்தங்களும் கேட்டு
நாடு அடங்க வாழ வேண்டியிருக்க , நாமென்று சொல்லக் கிடக்கிறதோ?
பின்னையும் உம்மையிடுவித்து கேட்கிறாரித்தனை” என்றருளிச் செய்தார்.

“உடையவர், பெரிய நம்பி தொடக்கமான ஐவர்களுக்கும் ஶிஷ்யராய், அவர்கள் ஆசார்யர்களாயிருக்க,
ஶிஷ்யரான இவரோட்டை ஸம்பந்தத்தாலே அவர்கள் பேறு பெற்றார்கள் என்று சொல்லும்படி எங்ஙனே?
ஆசார்ய ஸம்பந்தத்தாலே யன்றோ ஶிஷ்யனுக்குப் பேறு” என்னில் –

தஶரத வஸுதேவாதிகளிடத்திலே பிறந்த ராம க்ருஷ்ணாதிகள் வித்யாப்யாஸத்துக்குடலாக
விஶ்வாமித்ர ஸாந்தீபனீ ப்ரப்ருத்திகளை ஆசார்யத்வேந வரித்து
21-இமௌ ஸ்ம முநிஶார்தூல! கிங்கரௌ ஸமுபஸ்திதௌ|
ஆஜ்ஞாபய யதேஷ்டம் வை ஶாஸநம் கரவாவ கிம் ||(ரா -பா 31-4)
[முநிஶ்ரேஷ்டரே! நாங்களிருவரும் (தேவரீருக்குக்) கைங்கரியம் செய்பவர்களாக அருகில் இருக்கிறோம்
(தேவரீருடைய) இஷ்டப்பட கட்டளையிடவேண்டும்;
(தேவரீருடைய) எந்தக் கட்டளையை நாங்கள் செய்ய வேண்டும்? ] என்றும்
இத்யாதிகளில் சொல்லுகிறபடியே தாங்கள் ஶிஷ்யராய் நின்றவிடத்தில் ஶிஷ்ய ஸம்பந்தத்தாலே உபதேஶகத்வேந நின்று
குருக்களான விஶ்வாமித்ராதிகளுக்குப் பேறானாப் போலே,
ஶிஷ்யரான இவரோடுண்டான ஸம்பந்தத்தாலே ஆசார்யர்களான பெரியநம்பி தொடக்கமானாக்கும் பேறாகக் குறையில்லை.

23.(விஷ்ணுர் மாநுஷ ரூபேண சாசர வஸுதாதலே )
விஷ்ணுவானவர் மனித வுருவுடன் பூமியில் ஸஞ்சரித்தார். (பாரதம் – வனபர்வம்)-என்றும்,

24.(இதாநீமபி கோவிந்த லோகாநாம் ஹிதகாம்யயா |
மாநுஷம் வபுராஸ்தாய த்வாரவத்யாம் ஹி திஷ்டஸி || )
கோவிந்தனே! இப்போதும் உலகங்களுக்கு நன்மைக்காக மனித வுருக் கொண்டு த்வாரகையில் நிற்கிறாய் என்றும் சொல்லுகிறபடியே
ஸாக்ஷாத் ஸர்வேஶ்வரன் தானே மாநுஷரூபத்தை ஏறிட்டுக் கொண்டு
நான் உனக்கு அடியேன்; உனக்கு இப்போது என்ன செய்வேன்?–ஶிஷ்யத்வபாவநாமாத்ரமாய்,
தன்னில் தானான தன்மையாய் இருக்கையாலே, அவர்களும் அடியறிந்தவர்களாகையாலே ,
உபதேஷ்டருத்வ பாவனை ஒழிய வஸ்துத: அஜ்ஞாதஜ்ஞாபனத்வாரா குருத்வம் தங்களுக்கு இல்லாமையாலே
அவர்களுக்குப் பேறு அவராலேயாகக்‌ குறையில்லை.

இங்கு அப்படிக் கூடாதே – என்னில் இங்கும் கூடும். எங்ஙனேயென்னில்-
25. ஆசார்யஸ்ஸ ஹரிஸ்ஸாக்ஷாத் சரரூபி ந ஸம்ஶய:
ஆசார்யனே நேரே நடமாடும் பரம புருஷன்: இதில் ஐயமில்லை.என்றும்,

26. குருரேவ பரம் ப்ரஹ்ம என்றும், -குருவே மேலான ப்ரஹ்மம்; குருவே மேலான தனம்; குருவே மேலான காமம்;
குருவே மேலான ப்ராப்யம்; குருவே மேலான கல்வி; குருவே மேலான ப்ராபகம்;
அப் பரம்பொருளையே உபதேசிப்பதால் குரு அதைக் காட்டிலும் உயர்ந்தவர்.

“பீதகவாடைப் பிரானார் பிரமகுருவாகி வந்து” என்றும்,
“திருமாமகள் கொழுனன் தானே குருவாகி” என்றும் இத்யாதிகளில் சொல்லுகிறபடி
உடையவரும் அவதார விசேஷமாகையாலும்,
பெரிய நம்பி தொடக்கமானார் இவர்க்கு அஜ்ஞாத ஜஞாபனத்வாரா ஆசார்யர்களன்றிக்கே
இவரோடே நமக்கொரு ஸம்பந்தம் உண்டாகவேணுமென்னுமதிலே நோக்காய்
ஆசார்யத்வத்தை வ்யாஜமாக நினைத்திருக்கையாலும்
நாதமுனிகளுடைய ஸம்ப்ரதாய ஶ்ரவணத்தாலும், பேற்றுக்கு உடலாக உத்தாரகத்வத்தை இவரிடத்திலே அறுதியிட்டிருந்தார்கள்.

ப்ரதம குருவான எம்பெருமானுக்கும் இவர் உத்தாரகரானபடி கண்டால்,
அவாந்தர குருக்களுக்கு இவர் உத்தாரகராகச் சொல்ல வேண்டாவிறே.
உத்தாரகராகையாவது –
ஸ்வரூப ஸத்பாவம் அழிந்து அத:பதிதனானவனை ஸ்வரூப ஸத்பாவத்தை உண்டாக்கிக் கரைமரம் சேர்க்கையிறே.
பாஹ்ய குத்ருஷ்டிகள் ப்ரஹ்ம ஸ்வரூபத்தை இல்லை செய்ய, அத்தாலே ஸ்வரூப ஸித்தியில்லாமல்,
அத:பதிதனானவளவிலே, ஸகல வேதாந்தங்களாலும் பர ப்ரஹ்மத்தை ஸ்வரூப ஸித்தியுண்டாக்கிக் கரைமரம் சேர்த்தாரிறே.

இன்னமும்
27.அயம் ஸ கத்யதே ப்ராஜ்ஞை: புராணார்த்த விஶாரதை|
கோபாலோ யாதவம் வம்ஶம் மக்நமப் யுத்த ரிஷ்யதி||(வி-பு. 5-20-49)
[புராணப் பொருள்களிலே பண்டிதர்களான பேரறிவாளர்களாலே அவனே கோபாலனென்று கொண்டாடப்படுகிறான்.
தாழ்ந்து கிடந்த யதுகுலத்தைக் கைதூக்கிவிடப் போகிறான் இவன்]
(கோபாலோ யாதவம் வம்ஶம் ஸ்வயம் மக்நம் அப்யுத்தரிஷ்யதி) என்று நாரத பகவான் க்ருஷ்ணாவதாரத்தைக் கடாக்ஷித்து,
யது வம்ஶத்தை ஒரு கோபாலன் வந்து உத்தரிக்கப் போகிறான் என்று சொன்னாப் போலே,
ப்ரபன்ன ஜன கூடஸ்தரான ஆழ்வாரும் உடையவருடைய திருவவதாரத்தைக் கடாக்ஷித்து
“கலியும் கெடும் கண்டு கொண்மின்” என்று ஒரு மஹானுபாவன் திருவவதரித்து ப்ரபன்ன குலமாக வாழும்படிக்கு
ஶ்ரீவைஷ்ணவஶ்ரீ கொழுந்துவிட்டுச் செல்லும்படி பண்ணப்போகிறாரென்று அருளிச் செய்தாரிறே.

ஆகையாலே ஆளவந்தார் தொடக்கமான முன்புள்ள முதலிகள் பலரும் தர்ஶந ப்ரவர்த்தகராயிருக்க,
இங்கும் அங்கும் இவர் திருநாமத்தாலே தர்ஶனம் பேறு பெற்று –
எழுபத்துநாலு ஸிம்ஹாஸனஸ்தாரும், ஜ்ஞாநாதிகரான ஸந்யாஸிகளும், ஶ்ரீவைஷ்ணவர்களும், ஏகாங்கிகளும்,
ஜ்ஞாநாதிகைகளான அம்மையார்களும் நிரவதிக வைஷ்ணவ ஶ்ரீயோடே வாழ்ந்தது.
அந்த ஸம்ருத்தி இன்றளவும் வெள்ளமிட்டுப் பெருகும்படி ராமாநுஜ தர்ஶநமென்று கொழுந்து விட்டுச் செல்லுகிறது.

ஸர்வேஶ்வரன் க்ருஷ்ணாவதாரத்திலே அர்ஜுன வ்யாஜத்தாலே ஸ்வ விஷயமான சரமஶ்லோக முகத்தாலே
ப்ரதமோபாயத்தை நிஶ்சயித்துக் காட்டினாப் போலே
உடையவரும், அவதார விஶேஷமான தம் பக்கலிலே சரமோபாயத்தை நிஶ்சயித்து அருளிச் செய்தாரிறே.
எங்ஙனேயென்னில்:
திருநாராயணபுரத்திலே உடையவர் முதலிகளும் தாமுமாக எழுந்தருளி இருக்கிற நாளிலே
முதலியாண்டான் யாதவகிரி மாஹாத்ம்யம் வாசியா நிற்க,

28.(அனந்த: ப்ரதமம் ரூபம் லக்ஷ்மணஶ்ச தத: பரம் |
பலபத்ரஸ் த்ருதீயஸ்து கலௌ கஶ்சித் பவிஷ்யதி || )
(திருவனந்தாழ்வான் முதல் மூர்த்தியாவான். லக்ஷ்மணன் அவனுடைய அடுத்ததான அவதாரமாவான்.
பலராமன் அவனுடைய மூன்றாவது மூர்த்தியாவான்,
நாலாவது மூர்த்தியாகக் கலியுகத்தில் ஒரு மஹாபுருஷர் அவதரிக்கப் போகிறார் )
என்கிற ஶ்லோகம் வந்தவாறே
சதுர்த்த பாதத்துக்குப் பொருள் ஏதென்று சில முதலிகள் முதலியாண்டானைக் கேட்க,
அவரும் உடையவர் திருமுக மண்டலத்தைப் பார்க்க, உடையவரும்,
‘ஆழ்வாரை அபேக்ஷித்து ருஷி சொன்னதாயிருக்கும்’ என்று அருளிச் செய்ய,
அதினாலே முதலிகளுக்கு த்ருப்தி இல்லாதபடியைக் கண்டு,
“இற்றைக்குச் செல்லும்; பின்னை வெளியிடுகிறோம்” என்றருளிச் செய்ய,

அவ்வளவிலே மாஹாத்ம்யத்தை முட்ட வாசித்துக் கட்டி, கோஷ்டியும் குலைந்து போய் அன்று ராத்ரி காலத்திலே
முதலியாண்டான், எம்பார், திருநாராயணபுரத்தரையர், மாருதியாண்டான், உக்கலம்மாள் இவர்கள்
ஐவர்களும் உடையவர் திருவடிகளிலே தண்டம் ஸமர்ப்பித்து,
“தேவரீர் அடியோங்களுக்கு அவ்வர்த்தத்தை அருளிச்செய்ய வேணும்’ என்ன,
“ஆகில் இத்தை ஓருவர்க்கும் வெளியிடாதே கிடீர்கள்.
இதிலே ப்ரதிபத்தி பிறக்கிறது மிகவும் துர்லபமாயிருக்கும்” என்றருளிச் செய்து,

28. (கலௌ கஶ்சித் பவிஷ்யதி) என்றதுக்கு நாமே விஷயம்;
நம் பிறவி ஸர்வோத்தாரகமாகப் பிறந்த பிறவியாய் இருக்கும்.
ஆகையாலே எல்லாரும் நம்மைப் பற்றி நிர்ப் பரராய் இருங்கோள். ஒரு குறைகளுமில்லை” என்றருளிச் செய்தார்.
இவ்வர்த்தம் பரம ரஹஸ்யம்.

உடையவர் தாம் அவதார விஶேஷமென்னுமிடத்தைப் பலரும் வெளியிட்டார்களிறே.
எங்ஙனே என்னில் –
அழகர் ஸன்னிதியிலே திருவத்யயனம் நடவாநிற்க, ஒரு நாள் திருவோலக்கத்திலே நம்மிராமாநுசமுடையார்க்கு
அருளப்பாடென்று திருவுள்ளமாய் அருள, ‘நாயந்தே’ என்று முதலிகள் எல்லாம் எழுந்திருந்து,
அழகர் திருவடிகளுக்கு ஆஸன்னமாக எழுந்தருள, பெரிய நம்பி வழியிலே சிலர் எழுந்திருந்து வாராமலிருக்க,
‘நாமழைக்க நீங்கள் வாராமலிருப்பானேன்’ என்ன,
“இராமநுசமுடையார்க்கு அருளப்பாடென்று தேவரீர் திருவுள்ளம் பற்றுகையாலே அவர் எங்களுக்கு ஶிஷ்யராய் இருக்கையாலே,
அவர் எங்களுக்கு ஶேஷபூதரன்றோ என்று வாராமலிருந்தோம்” என்ன,
அவரும் “நம்மை தஶரத வஸுதேவாதிகள் புத்ர ப்ரதிபத்தி பண்ணினாப் போலே இருந்தது
நீங்கள் நம் இராமநுசனை ஶிஷ்ய ப்ரதிபத்தி பண்ணினது.
நம் முதன்மையிலே அடிமை செய்வாரில் தலைவரான இவரோட்டை ஸம்பந்தத்தை
அறுத்துக் கொண்ட உங்களுக்கு கதி ஏது?” என்று அருளிச் செய்தார்.

பின்பொரு நாள் கிடாம்பியாச்சானை அழைத்து அருளப்பாடிட்டருளி, ஒரு பாசுரம் சொல்லிக் காணாயென்ன,
அவரும்,
29. ந தர்மநிஷ்டோஸ்மி நசாத்மவேதி நபக்திமாந் த்வச்சரணாரவிந்தே|
அகிஞ்சநோஅநந்யகதி: ஶரண்ய த்வத்பாதமூலம் ஶரணம் ப்ரபத்யே||

[கர்மயோகத்தில் நிலைநிற்பவனல்லேன், ஆத்மஜ்ஞானமுமில்லாதவன்,
உன் திருவடித் தாமரையில் பக்தி யோகமும் இல்லை, கைமுதலற்றவன், வேறு புகலற்றவன்,
ஶரணமடையத்தக்கவனே! உன் திருவடியை ஶரணமடைகின்றேன்] என்றருளிச் செய்ய ,
“நம்மிராமாநுசனை யுடையையாய் வைத்து அநந்ய கதி என்று சொல்லப் பெறாய் காண்” என்றருளிச் செய்தார்.
அதாவது – “எல்லார்க்கும் புகலிடமாய், ஸர்வோத்தாரகமான நம்மிராமாநுசனிருக்கச் செய்தே
உமக்கு ஒரு குறைகளுமில்லை. மார்விலே கைப்பொகட்டு உறங்கும்” என்றருளிச் செய்தார் என்றபடி.

பெருமாள் கோயிலிலே ஒரு வைஷ்ணவனுக்கு ஒரு பிள்ளை பிறந்தானாய்,
அந்தப் பிள்ளை ஐந்து, ஆறு வயஸ்ஸளவும் வார்த்தை சொல்லாமல் ஊமையாயிருந்து,
அநந்தரம் இரண்டு மூன்று ஸம்வத்ஸரம் அவனைக் காணாமல் போக,
சில நாளைக்குப் பின்பு அவன் வார்த்தை சொல்ல வல்லனாய் வந்தவாறே, இந்த ஆஶ்சர்யத்தைக் கேட்கைக்கு,
‘ஊமாய்! நீ இத்தனை நாளும் எங்கு போனாய்?’ என்று சிலர் கேட்க,
அவனும் ‘க்ஷீராப்திக்குப் போனேன்’ என்ன,
அங்கே விஶேஷமேதென்று கேட்க, “திருப்பாற்கடல் நாதன் ஸேனை முதலியாரை அழைத்தருளி,
‘எல்லாரும் நமக்காளாம்படி நீர் போய் அவதரித்து ஜகத்தை யடையத் திருத்தும்?’ என்று நியோகிக்க அப்படியே
ஸேனை முதலியாரும் இளையாழ்வாராய் வந்தவதரித்திருக்கிறாரென்று திருப்பாற்கடல் நாதன் ஸன்னிதியிலே
ஶ்வேத த்வீப வாஸிகள் ப்ரஸங்கம் பண்ணிக் கொண்டு இருக்கிறார்கள்” என்று சொல்லி,
உடனே அந்தப் பிள்ளை அந்தர்த்தாநம் பண்ணிப்போயிற்று.

உடையவர் யாதவப்ரகாஶனோடே ஶாஸ்த்ரபாடம் காலக்ஷேபம் பண்ணிக் கொண்டிருக்கிற நாளிலே,
அந்த ராஜ்யத்து ராஜாவினுடைய பெண்ணை ப்ரஹ்ம ரக்ஷஸ்ஸு பிடித்து நலிய,
அத்தை யாதவ ப்ரகாஶனுக்கு அறிவிக்கப் பண்ண, அவனும் அதிக்ரூரமான மந்த்ரங்களை ஜபித்துக் கொண்டு
இளையாழ்வார் தொடக்கமானாருடனே சென்று அத்தைப் போகச் சொல்ல,
அது முடக்கின காலை நீட்டி, “நீ போகச் சொன்னால் உனக்கு பயப்பட்டு போகேன்” என்று சில வார்த்தைகள் சொல்ல,
“ஆனால் நீ யார் போகச் சொன்னால் போவுதி?” என்ன,
“உன்னுடனே வாசிக்கிறவர்களிலே ஒருவர் அநந்த கருட விஷ்வக்ஸேநாதிகளான
நித்யஸூரிகளில் தலைவரிலே ஓருவராயிருப்பார்” என்று உடையவரைக் காட்டி,
“அவர் போகச் சொன்னால் அவர் திருவடிகளிலே தண்டனிட்டுப் போகிறேன்” என்று சொல்லுகையாலே,
உடையவர் அவதார விஶேஷமென்னுமிடத்தை ப்ரம்ஹ்ரக்ஷஸ்ஸும் வெளியிட்டதிறே.

உடையவரும் ஶாரதா பீடத்துக்கு எழுந்தருளினவளவிலே ஸரஸ்வதியும் எதிரே புறப்பட்டு வந்து,
“இவர் ஸர்வேஶ்வரனுடைய அம்ஶாவதாரமே; தப்பாது” என்று சொல்லி அதி ப்ரீதியோடே,

30-ய ஏஷோஅந்தராதித்யே ஹிரண்யமய: புருஷோத்ருச்யதே ஹிரண்யசமச்ருர்
ஹிரண்யகேச ஆப்ரணகாத் ஸர்வ ஏவ ஸுவர்ண: I
தஸ்ய யதா கப்யாஸம் புண்டரீகமேவக்ஷிணீ II

(ஸுர்யனுக்கு நடுவில் தங்கம் போல் அழகிய உருவையுடைய எந்த இந்தப்பரமபுருஷன் காணப்படுகிறானோ,
அவன் ஸுவர்ணம் போன்று அழகான மீசையையும், கேசங்களையும்,நகம் முதலிய எல்லா அவையங்களையுமுடையவன்.
அவனுக்கு ஸூர்யனால் மலரும் தாமரை போன்ற இருகண்கள் உள )

என்கிற ஶ்ருதி வாக்யத்துக்கு அர்த்தம் அருளிச் செய்யவேணுமென்று உடையவரைக் கேட்க,
உடையவரும் ,
“ஶ்ரீமந் நாராயணனுக்கு அப்போதலர்ந்த செந்தாமரைப் பூப்போலேயிருக்கும் திருக்கண்கள் “ என்றருளிச் செய்ய,
ஸரஸ்வதியும் கேட்டு மிகவும் ஸந்தோஷித்து,
“ அவதார விஶேஷமான தேவரீர் நூற்றுக்காத வழி எழுந்தருளினது அடியேனைக் கடாக்ஷிக்கைக்காக எழுந்தருளிற்றே” என்று
ஶ்ரீபாஷ்யம் முதலான க்ரந்தங்களையும் ஶிரஸாவஹித்து உடையவருக்கு பாஷ்யகாரர் என்று திருநாமம் சாத்தி,
உடையவருடைய அவதார ரஹஸ்யத்தை ஸரஸ்வதியும் வெளியிட்டாளிறே.

கூரத்தாழ்வானும் – உடையவருடைய நியோகத்தாலே பேரருளாளன் விஷயமாக
வரதராஜ ஸ்தவம் அருளிச்செய்து நிறைவேற்றினவுடனே,
ஆழ்வானும் உடையவர் ஸன்னதியிலே ஸமர்ப்பித்து,
“தேவரீருடைய நியமன ப்ரகாரத்திலே வரதராஜ ஸ்தவத்தை தேவப்பெருமாள் திருமுன்பே விண்ணப்பம் செய்தேன்,
திருவுள்ளமுகந்து, அவர் பெருவிசும்பருளும் பேரருளாளராகையாலே அடியேன் கேட்டபடியே,
12. வைகுண்டே து பரே லோகே ஶ்ரீயா ஸார்த்தம் ஜகத்பதி: |
ஆஸ்தே விஷ்ணுரசிந்த்யாத்மா பக்தைர் பாகவதைஸ் ஸஹ|| என்று
சொல்லுகிற பரமபதத்தை ப்ரஸாதித்தோமென்று அருளிச் செய்து,
“நாம் வானிளவரசாகையாலே நமக்கு ஸ்வாதந்த்ரயம் மட்டமாயிருக்கும், நம் முதன்மையிலே அடிமை செய்வாரில்
தலைவரிலே ஒருத்தரான நம்மிராமாநுசனை அநுமதி கொண்டு அவர் தந்தோமென்றால் போய் வாரும்” என்றருளிச்செய்தார்,
அப்படியே தேவரீரும் திருவுள்ளம் பற்றியருளவேணும்” என்று விண்ணப்பம் செய்ய,
உடையவரும், ஆழ்வான் திருவுள்ளத்தையறிந்து அவருடைய வலத்திருச்செவியிலே த்வயத்தையும் ப்ரஸாதித்தருளி,
‘நலமந்தமில்லதோர் நாடு புகுவீர்’ என்றருளிச் செய்ய,
ஆழ்வானும் ‘நான் பெற்ற பேறு நாலூரானும் பெற வேணும்’ என்று விண்ணப்பம் செய்ய,
“க்ருஷ்ணன் கண்டா கர்ணன் பக்கல் பண்ணின விஷயீகாரம் அவனுடன் பிறந்தவனளவும் சென்றாப் போலே
நாம் உம்முடைய பக்கல் பண்ணின விஷயீகாரம் நாலூரானளவும் செல்லத் தட்டில்லை காணும்” என்று அருளிச் செய்தார்.
பின்பிறே கலங்காப் பெருநகரை ப்ராபித்தது.

ஆழ்வானுக்கு பட்டரைக் கொண்டு திருவத்யயன பர்யந்தம் நடத்தி, மற்றை நாள் உடையவர் பட்டரையும் கூட்டிக்கொண்டு
பெரியபெருமாளை ஸேவிப்பதாக எழுந்தருள, அவ்வளவிலே பெருமாளும் பட்டரை அருளப்பாடிட்டருளி,
“உமக்குப் பிதா போனாரென்று வ்யாகுலப் படாதே கிடீர்; நாமுமக்குப் பிதா” என்று
பட்டரை புத்ர ஸ்வீகாரம் பண்ணியருளி,
“நீர் ஒன்றுக்கும் கரையாதே கொள்ளும் காணும். த்ருஷ்டத்தில் உமக்கு ஒரு குறைகளும் வையோம்;
அத்ருஷ்டத்துக்கு நம் இராமநுசனிருக்கக் கரைய வேண்டுவதில்லை.
“நம் பரமாயதுண்டே என்று துணிந்திரும்” என்று அருளிச் செய்தார்.

உடையவர், முதலிகளும் தாமுமாக திவ்யதேஶங்களெல்லாம் ஸேவித்துத் திருகரியிலே எழுந்தருளி
ஆழ்வாரை ஸேவித்துக் கண்ணிநுண்சிறுத்தாம்பு அநுஸந்தாநம் பண்ணிக் கொண்டு நிற்க,
ஆழ்வாரும் மிகவும் உகந்தருளி அர்ச்சமுகேன அருளப்பாடிட்டருளி,
உடையவரைத் திருவடிகளின் கீழே திருமுடியை மடுக்கச் சொல்லி
ஸகலமான ஶ்ரீவைஷ்ணவர்களையும் கோயில் பரிகரம் அனைத்துக் கொத்தையும் அருளப்பாடிட்டருளி,
“நம்மோடு ஸம்பந்தம் வேண்டியிருப்பாரெல்லாரும் நமக்குப் பாதுகமாயிருக்கும் நம்மிராமாநுசனைப் பற்றுங்கோள்.
நம்மிராமாநுசனைப் பற்றுகை நம்மைப் பற்றுகையாயிருக்கும்.
நம்மிராமாநுசனையே நீங்கள் அனைவரும் உடையராய்ப் பிழையுங்கோள்” என்றருளிச் செய்தார்.
அன்று தொடங்கி ஆழ்வார் திருவடிகளுக்கு ‘இராமாநுசம்’ என்று திருநாமம் ஆயிற்று.
தத்பூர்வம் ஶடகோப பதத்வயம் மதுரகவிகள் என்று திருநாமமாயிருக்கும்.
இந்த ஸம்ப்ரதாயத்தை உட்கொண்டாயிற்று அமுதனார் “மாறனடி பணிந்துய்ந்தவன்” என்று அருளிச் செய்தது.

மதுரகவி ஆழ்வார் ஸர்வஜ்ஞராகையாலே ஆழ்வார் திருவுள்ளக் கருத்தை அறிந்து
“மேவினேனவன் பொன்னடி” என்று ஸாபிப்ராயமாக அருளிச் செய்தாரிறே.
தாமரையடி என்னாதே பொன்னடி என்று விஶேஷணமிட்டது –
பொன்னானது ஸகலத் த்ரவ்யங்களிலும் உத்க்ருஷ்டமாய், எல்லாரும் மேல் விழுந்து ஆசைப்படும்படியுமாய்,
பல ப்ரஸாதகமுமாய், ப்ராயிக(ப்ய)முமாய், வ்யக்தி தாரத்மயத்தையிட்டு வர்த்தியாமல்
தன் பக்கல் ருசியுள்ளாரிடமெல்லாம் வர்த்திக்கும்படியாய், ஆண்களோடு பெண்களோடு வாசியறத் தொடரும்படியுமாய்,
கைப்பட்டால் நோக்கிக் கொள்ள வேண்டும்படியுமாய், இழவிலே ப்ராணஹானி வருகைக்கு உடலுமாய் இருக்கையாலேயிறே
இந்த ஆகாரங்களெல்லாம் உடையவர் பக்கலிலே கண்டதிறே.

உடையவர் தாம் 31. “காருண்யாத் குருஷூத்தமோ யதிபதி:”
காருண்யத்தால் ஆசார்யகளுள் சிறந்தவர் எதிராஜர்.என்கிறபடியே
எல்லாரிலும் உத்க்ருஷ்டராய், எழுபத்துநாலு ஸிம்ஹாஸனஸ்தரும் ஆசைப்பட்டு மேல்விழுந்து ஆஶ்ரயிக்கும்படி ஸ்பரூஹணியருமாய்,
மோக்ஷபலப்ரதருமாய், இன்னாரின்னவர்களென்று அவர்களையும் விடாமல், ருசியுடையவர் பக்கலெல்லாம்
ரஹஸ்யார்த்தங்களை வெளியிட்டருளி, அளவிறந்த ஶ்ரீவைஷ்ணவர்களோடு வாசியற வாய்த்த எல்லாரையும் ஈடுபடுத்தி,
க்ருமிகண்டனடியாக வந்த துர்த்தஶையிலே முதலியாண்டான் தொடக்கமானாராலே பேணப்பட்டுத்
தம்முடைய விஶ்லேஷத்தில் ஸ்ரீபாதத்தில் உள்ளவர்கள் பலரும் மூச்சடங்கும் படியாயிறே எழுந்தருளியிருந்தது.
ஆகையால் ஆழ்வார் திருவடிகள் உடையவர் தானேயிறே.

உடையவர் ப்ராயணத்தில் மூச்சடங்கினார்கள் பலருமுண்டிறே.
கணியனூர்ச் சிறியாச்சான் உடையவரைப் பிரிந்து கணியனூரிலே எழுந்தருளிச் சில நாள் கழிந்தவாறே
ஸ்வாசார்யரான உடையவரை ஸேவிக்க வேணுமென்று தேட்டமாயெழுந்தருள,
நடுவழியிலே ஒரு திருநாமதாரி கோயிலில் நின்றும் வரக்கண்டு,
அவனை, எங்கள் ஆசார்யரான எம்பெருமானார் ஸுகமே எழுந்தருளி இருக்கிறாரோ?” என்று கேட்க,
அவனும் உடையவருடைய ப்ரயாணத்தைச் சொல்ல,
“எம்பெருமானார் திருவடிகளே ஶரணம்” என்று மூச்சடங்கினாரிறே.

குமாண்டூர் இளையவில்லி என்கிறவர் திருப்பேரூரிலே எழுந்தருளியிருக்கச் செய்தே,
ஒரு நாள் ராத்ரி ஸ்வப்னத்திலே உடையவர் அநேகமாயிரம் ஆதித்யர்கள் சேர உதித்தாப் போலே
நிரவதிக தேஜோரூபமான திவ்ய விமானத்திலே ஏறியருளி நிற்கப்
பரமபதத்துக்கும் பூமிக்கும் நடுவே நிர்வகாஶமாம்படி பரமபதநாதன், அநந்த கருட விஷ்வக்ஸேனாதிகள் தொடக்கமான
அநேகமாயிரம் நித்யஸூரிகளும், ஆழ்வார் நாதமுனிகள் தொடக்கமான அளவிறந்த முக்தரும் தாமுமாக
ஶங்க காஹளபேரிகள் தொடக்கமான வாத்ய கோஷங்களுடனே வந்து உடையவரை எதிர்கொண்டு முன்னே நடக்கத்
தாமும் பரிகரமும் பின்தொடர்ந்து போகிறதாகக் கண்டு திடுக்கிட்டு எழுந்திருந்து,
அசலகத்தில் வள்ளல் மணிவண்ணனை அழைத்தருளி,
“எங்களாசார்யரான எம்பெருமானார் திவ்யவிமானத்திலே ஏறியருளி, பரமபதநாதன், நித்யஸூரிகளும் தானுமாக
எதிர்கொள்ளப் பரமபதத்துக்கு எழுந்தருளுகிறதாகக் கண்டேன்.
‘தரியேனினி’ என்றருளிச் செய்து ‘எம்பெருமானார் திருவடிகளே ஶரணம்’ என்று மூச்சடங்கினாரிறே.

இப்படி இருந்த இடங்களிலே மூச்சடங்கினார் பலரும் உண்டிறே.
அருகிருந்தாரை ஏற்கவே ஆணையிட்டு விலக்குகையாலும் தர்ஶநார்த்தங்களை ப்ரவர்த்திப்பிக்க வேண்டிப்
பெருமாள் வலியவிட்டு வைக்கையாலும் அருகிருந்த முதலிகள் ஆற்றாமைப் பட்டிருந்தார்கள்.
இப்படித் தம்முடைய விஶ்லேஷத்தில் ஸ்வாஶ்ரிதர் மூச்சடங்கும்படியான வைலக்ஷண்யமுடையராயாயிற்று உடையவர் தாமிருப்பது.

திருவாய்மொழி ப்ரவர்த்தகர்கள்
உடையவர் திருகுருகைப்பிரான் பிள்ளானுக்குத் திருவாய்மொழி ப்ரஸாதிக்கிற போது
“பொலிக பொலிக” வந்தவாறே திருகுருகைப்பிரான் பிள்ளான் ஹர்ஷ புலகிதகாத்ரராய் விஸ்மயாவிஷ்டசித்தராய் எழுந்தருளியிருக்க,
உடையவரும் அத்தைக் கண்டு , ‘இதென்ன வேறுபாடு தோற்றியிராநின்றீர்’ என்று கேட்டருள,
“ஆழ்வார் தேவரீருடைய திரு அவதாரத்தைக் கடாக்ஷித்தருளி ‘கலியும் கெடும் கண்டு கொண்மின்” என்று அருளிச் செய்தார்.
அப்படியே தேவரீரும் உருக்கள்தோறும் நாமே இதுக்கு விஷயமென்று தொட்டுக் காட்டியருளிற்று.

அத்தை எல்லாம் இப்போது நினைத்து ஹர்ஷ்பரவஶனாய், ஆழ்வார் அருளிச் செய்தபடியே ஸர்வோத்தாரகராய்
நாடு அடங்க வாழும்படி திரு அவதரித்த தேவரீரிடத்திலே ஸம்பந்தமும் பெற்று,
தேவரீர் திருப்பவளத்தாலே திருவாய்மொழிக்குப் பொருள் கேட்கும்படிக்கு ஒரு ஸுக்ருதம் நேர்படுவதே! என்று விஸ்மயப்பட்டிருந்தேன்” என்ன,
உடையவர் மிகவும் உகந்தருளி, அன்று ராத்ரி காலத்திலே பிள்ளானை அழைத்தருளி,
அவர் திருக்கையைப் பிடித்துக்கொண்டு பேரருளாளர் ஸன்னதியிலே அழைத்துக்கொண்டு எழுந்தருளித்
தம்முடைய திருவடிகள் இரண்டையும் அவர் முடியிலே வைத்தருளி, “
இத்தையே தஞ்சமாகப் பற்றி விஶ்வஸித்திரும், உம்மை அடைந்தார்க்கும் இத்தையே காட்டிக் கொடும்” என்றருளிச் செய்து, “
நாளை பேரருளாளர் ஸன்னதியிலே தொடங்கி திருவாய்மொழிக்கு, ஶ்ரீ விஷ்ணு புராண ஸங்க்யையிலே
ஆறாயிரம் க்ரந்தமாக வ்யாக்யானம் பண்ணும்” என்று நியமித்தருளினார்.
இத்தால் தம்முடைய உத்தாரகத்வத்தை வெளியிட்டபடியிறே.

உடையவர் தம் திருவடிகளில் ஆஶ்ரயித்த கூரத்தாழ்வானையும், முதலியாண்டானையும்,
அருளாளப் பெருமாள் எம்பெருமானாரையும் கூட்டிக் கொண்டு
திருவாய்மொழிக்கு வ்யாக்யானம் பண்ணிக்கொண்டு இருக்கிற நாளிலே,
ஆசார்யர்கள் எல்லாரும் உடையவர் திருவடிகளிலே மேல் விழுந்து ஆஶ்ரயிக்க,
இந்த வ்ருத்தாந்தத்தைக் கேட்டு அனந்தாழ்வானும், எச்சானும், தொண்டனூர் நம்பியும், மருதூர் நம்பியும்,
உடையவர் திருவடிகளிலே ஆஶ்ரயிக்கவேணுமென்று எழுந்தருள,
அவர்களை அருளாளப் பெருமாள் எம்பெருமானார் திருவடிகளிலே ஆஶ்ரயிப்பித்தருளினார்.

அருளாளப் பெருமாள் எம்பெருமானாரும் போர பயப்பட்டு,
“குருவியின் கழுத்திலே பனங்காயைக் கட்டினாப்போலே செய்தாரித்தனை.
இதுக்கெல்லாம் எனக்கு அதிகாரம் போராது, எம்பெருமானார் ஸர்வோத்தாரகராய்க் கொண்டு
ஜகத்தடைய வாழப் பிறந்தவராகையாலே நமக்கெல்லாம் அவர் திருவடிகளேயாகையாலே,
எம்பெருமானார் திருவடிகளே தஞ்சமென்று விஶ்வஸித்து நிர்ப்பரராய் இருங்கோள்” என்று அருளிச் செய்தார்.

பின்பு உடையவர் அவர்களை அழைத்தருளி, “ நாம் பகவத்ஸம்பந்தம் பண்ணினோமில்லை என்று குறைப்பட்டிராதே கிடீர்கோள்;
அவர் பண்ணினதே நாம் பண்ணினது. உங்கள் பேற்றுக்கு நாமே கடவோம்” என்று அருளிச்செய்து,
திருவடிகளிரண்டையும் நெருக்கி வைத்தருளி, “இத்தையே தஞ்சமாக நினைத்திருங்கோள்” என்று அருளிச்செய்தாரிறே.

உடையவர், முதலிகளும் தாமுமாகத் திருவேங்கடமுடையானை ஸேவிக்கவேணுமென்று
பேரருளாளனை அநுமதி கொண்டு திருப்பதியிலே எழுந்தருளி, “விண்ணோர் வெற்பு” என்கிறபடியே
நித்யஸூரிகள் வந்து பரிமாறுமிடத்தே நாம் கால் கொண்டு மிதிக்கையாவதென்னென்று
அங்கே திருத்தாழ்வரை அடியிலே எழுந்தருளியிருந்து,
“தானே தொழுமத்திசையுற்று நோக்கியே” என்கிறபடியே
திருவேங்கடமுடையானை திசை கைகூப்பி ஸேவித்து மீண்டு எழுந்தருளுவதாக உத்யோகித்தவளவிலே,
அனந்தாழ்வான் தொடக்கமான ஶ்ரீவைஷ்ணவர்கள் எல்லாரும், ‘தேவரீர் ஏறாவிடில் நாங்களும் ஏறோம்;
மற்றையொருவரும் ஏறுவதில்லையாகையாலே தேவரீர் அவஶ்யம் எழுந்தருள வேணுமென்ன’,

உடையவரும் திருமேனி ஶோதனையும் பண்ணிக் கொண்டு,
32. “பாதேநாத் யாரோஹதி” என்று ஶ்ரீவைகுண்டநாதனுடைய நியோகத்தினாலே பாதபீடத்திலே அடியிட்டு ஏறுமாப்போலே
திருவேங்கடமுடையான் அருளப்பாடிட்டருளத் திருமலையிலே ஏறியருளித் திருப்பரியட்டப் பாறையளவாக எழுந்தருளாநிற்க,
“முடியுடைவானவர் முறை முறை எதிர் கொள்ள” என்கிறபடியே
பெரிய திருமலைநம்பி திருவேங்கடமுடையானுடைய தீர்த்த ப்ராஸாதமும் கொண்டு ஶ்ரீவைஷ்ணவஶ்ரீயோடே எதிர்கொள்ள,
உடையவரும் தண்டம் ஸமர்ப்பித்து, தீர்த்தப்ரஸாதமும் ஸ்வீகரித்து,
“தேவரீர் எழுந்தருள வேணுமோ? ஒரு சிறியாரில்லையோ” என்ன,
“நாலு திருவீதியும் ஆராய்ந்து பார்த்தவிடத்திலும் என்னிலும் சிறியாரைக் கண்டிலேன்.
தேவரீரை எதிர்கொள்ளுகைக்குத் திருவேங்கடமுடையான் தானே எதிர் கொள்ள வேணும்,
ஸகலஜன ஜீவாதுவாய், ஸர்வரையும் உத்தரிப்பிக்க வேணுமென்று திரு அவதரித்தருளின தேவரீருடைய
வைபவத்தைப் பார்க்குமளவில் அடியேன் எதிரே விடைகொள்ளுகிறது தகாது ,
ஆகிலும், திருவேங்கடமுடையானுடைய நியோகத்தினாலே விடைகொண்டேனித்தனை” என்று அருளிச் செய்ய,

உடையவரும் போர உகந்து, அவருடனே கூடத் திருவேங்கடமுடையானுடைய ஸன்னிதியிலே எழுந்தருளி,
தண்டம் ஸமர்ப்பித்து நிற்க, அர்ச்சகமுகேந அருளப்பாடிட்டருளி,
“நாம் உமக்கு முன்பே நம் தெற்கு வீட்டிலே தானே உபயவிபூத்யைஶ்வர்யங்களையும் தந்து
ஜகத்தையடையத் திருத்தி வாழ்வித்திரும் என்று நியமித்தோமே, என்ன குறையாக வந்தீர்?” என்ன –
நாயன்தே! “கிடந்ததோர் கிடக்கை” என்றும்,
“பிரானிருந்தமை” என்றும்,
“நிலையார நின்றான்” என்றும் சொல்லுகிறபடியே தேவரீர் நிற்றல், இருத்தல், கிடத்தல் செய்தால் அது மிகவும் ஆகர்ஷகமாயிருக்கும்.
அதில் கிடையழகு கோயிலிலே காட்டியருளிற்று,
நிலையழகு ஹஸ்திகிரியிலே காட்டியருளிற்று,
“அமரர் முனிகணங்கள் விரும்பும் திருவேங்கடத்தானே” என்கிறபடியே திருமலையிலே
குணநிஷ்டருக்கும் கைங்கர்ய நிஷ்டருக்கும் காட்டி கொடுத்துக் கொண்டு இருக்கிற நிலையழகும் கண்டு
அநுபவிக்க வேணுமென்று விடைகொண்டேன் என்ன,

ஆகில், இங்கு வாருமென்று திருவடிகளிலே திருமுடியை மடுக்கச் சொல்லி
“இத்தை மறவாதே நெஞ்சிலே கொண்டு தர்ஶனத்தை நடத்தி வையும், உபய விபூதிக்கும் நீரே கடவீர் .
உம்முடைய அபிமானத்திலே ஒதுங்கினவர்களே நமக்கு வேண்டியவர்கள், எல்லாரையும் நமக்காளாம்படி திருத்தும்,
ஜகத்தை அடையத் திருத்த வேணுமென்றாய்த்து, நாமும்மை நம் முதன்மையில் நின்றும் அழைப்பித்தது,
உம்மோடு ஸம்பந்தமுடையார்க்கு ஒரு குறைகளுமில்லை.

“சூழல் பல பல” என்கிறபடியே நாம் அனேகாவதாரங்கள் செய்தவிடத்தில் ஒருவரும் அகப்படாமல் இழவோடே போனோம்.
அந்த இழவை நீர் தீர்ப்பீரென்று ஆறியிருக்கிறோம். அப்படியே செய்யப்பாரும்” என்றருளிச் செய்தார்.
இத்தால் திருவேங்கடமுடையானும் இவருடைய உத்தாரகத்வத்தை வெளியிட்டானாய்த்து.

அனந்தரம், உடையவரும் முதலிகளுமாக நம்பியை சேவிக்க வேணுமென்று திருக்குறுங்குடிக்கு எழுந்தருளி,
நம்பி ஸன்னிதியிலே தண்டம் ஸமர்ப்பித்து நிற்க, நம்பியும் உடையவரை அருளப்பாடிட்டருளி, –

33-“பஹூநி மே வ்யதீதாநி ஜந்மாநி …” என்கிறபடியே
அர்ஜுனா! உனக்குப்போலே எனக்கும் பல பிறப்புகள் கடந்துவிட்டன.
(ஆயினும் யான் அவற்றை அறிவேன்; நீ அறிய மாட்டாய்.)
எத்தனை ஜன்மம் பிறந்தோமோ தெரியாது. அதிலொருவரும் அகப்பாடுவாரின்றிக்கே,

34.“ஆஸுரிம் யோநிமாபந்நா: மூடா ஜந்மநி ஜந்மநி |
மாம்ப்ராப்யைவ கௌந்தேய ததோ யாந்த்ய தமாம் கதிம் ||”
அர்ஜுனா! அஸுரஸ்வபாவமுள்ள ஜன்மத்தை அடைந்து ஜன்மந்தோறும் மூடர்களாய்
என்னை அடையாமலே அதிலும் கீழான கதிக்குப் போகிறார்கள்.என்கிறபடியே
ஆஸுரப்ரக்ருதிகளாய், அதோகதிகளிலே விழுந்து விட்டார்கள்.
இப்போதே எல்லாரும் உமக்கேயாளாய்த் திரிகின்றார்கள்.
இப்படி இவர்கள் எல்லாரையும் அகப்படுத்திக் கொண்ட விரகெங்ஙனே?
அவ்விரகை நமக்கு ஒன்று நீர் சொல்லவேணுமென்று திருவுள்ளமாயருள,

உடையவரும் “ தேவரீர் கேட்டருளும் அடைவிலே கேட்டருளும் அடைவிலே கேட்டருளினால் விண்ணப்பம் செய்கிறேன்;
தேவரீர் இறுமாப்புக்குச் சொல்லுவதில்லை” என்ன,

நம்பியும் திவ்யாஸ்தானத்தில் நின்றும் கீழேயிறங்கியருளி, தரையிலே ஒரு ஓலியலை விரித்து
அதின் மேலே எழுந்தருளியிருந்து உடையவரைத் தன் ஸிம்ஹாஸனத்திலே எழுந்தருளியிருக்கும்படி பண்ணி,
எல்லாரையும் புறப்படுத்தி அஷ்டகர்ணமாயிருந்து, இனித்தான் சொல்லிக் காணீரென்ன,

உடையவரும்
18. “நிவேஶ்ய தக்ஷிணே ஸ்வஸ்ய விநதாஞ்ஜலி ஸம்யுதம்|
மூர்த்நி ஹஸ்தம் விநிக்ஷிப்ய தக்ஷிணம் ஜ்ஞாநதக்ஷினம் |
ஸவ்யம் து ஹ்ருதி விந்யஸ்ய க்ருபயா வீக்ஷயேத் குரு|
ஸ்வாசார்யம் ஹ்ருதயே த்யாத்வா ஜப்த்வா குரு பரம்பராம் ஏவம் ப்ரபத்ய தேவேஶம் ஆசார்ய: க்ருபயா ஸ்வயம் |
அத்யாபயேந்மந்த்ர ரத்நம் ஸர்ஷிச்சந்தோ’தி தைவதம்||” என்கிறபடியே
ஸகலோப்நிஷத்ஸார ஶ்ரேஷ்டமாய், மந்த்ரரத்நம் என்று திருநாமத்தையுடைய,
த்வயத்தை நம்பியுடைய வலத்திருச்செவியிலே அருளிச் செய்ய,

நம்பியும் அருளிச் செய்தபடி – “நாம் முன்பொரு காலத்திலே பத்ரிகாஶ்ரமத்திலே ஶிஷ்யாசார்யரூபேண நின்று
திருமந்த்ரத்தை வெளியிட்டோம். அவ்விடத்திலே ஶிஷ்யத்வேந நின்றவளவில்
ஆசார்யவஸ்து வ்யக்த்யந்த்ரமாகப் போராமல் நாமேயாய் நின்றோமித்தனை.
மத்வயதிரிக்தரிலே ஒருவன் ஆசார்யனாய் நிற்க, நாம் ஶிஷ்யனாய் நின்று அவன் பக்கலிலே ரஹஸ்யார்த்தம் கேட்கவும்,
ஒரு திறமும் பெற்றதில்லை என்று பெருங்குறையோடே இருந்தோம், அக்குறை உம்மாலே தீரப்பெற்றதே!
இனி நாம் இன்று தொடங்கி இராமாநுசமுடையாரிலே அந்தர்ப்பவிக்கப் பெற்றோம்” என்று அருளிச் செய்து,
‘நாம் வைஷ்ணவ நம்பியானதும் இன்றாய்த்து’ என்று அருளிச் செய்தார்.
இத்தால், நம்பியுடைய ஶிஷ்யத்வம் ஸ்வாதந்த்ரியத்தினுடைய எல்லை நிலமென்று தாத்பர்யம்.
ஸர்வர்க்கும் ப்ரதம குருவான நம்பி உடையவருடைய ஶிஷ்யத்வத்தை ஆசைப்பட்டு பெற்றது –
உத்தாரகத்வேந உக்தமான இவருடைய ஆசார்யத்வத்தை வெளியிட்டபடியிறே.

நடாதூர் அம்மாள் ஸ்ரீபாதத்திலே பத்துப் பன்னிரண்டு ஶ்ரீவைஷ்ணவர்கள் ஶ்ரீபாஷ்யம் வாசிக்கிற காலத்திலே,
பக்தி ப்ரபத்திகள் இரண்டும் துஶ்ஶகத்வ ஸ்வரூப விருத்தத்வ விஶ்வாஸ துர்லபத்வாதிகளாலே பண்ணக் கூடாமல்
வெறுங்கையனான சேதனனுக்கு பேறுண்டாம்படி எங்ஙனே? என்று சிலர் கேட்க,
“இவை யிரண்டும் இல்லாதார்க்கு எம்பெருமானாருடைய அபிமானமே உத்தாரகம்
இத்தை ஒழியப் பேற்றுக்கு வழியில்லை. நான் அறுதியிட்டிருப்பதும் அப்படியே” என்று அருளிச் செய்தார்.

பின்பு தம்முடைய சரமதஶையிலே ஸ்ரீபாதத்து முதலிகள், எங்களுக்கு தஞ்சமேதென்று சதுரராய் கேட்க ,
”உங்களுக்கு பக்தி ப்ரபத்திகள் துஷ்கரங்களாய் ஒழிந்தது; ஸுலபமென்று எம்பெருமானாரைப் பற்றி
அவரே தஞ்சமென்று விஶ்வஸித்திருங்கோள். பேற்றுக்கு குறையில்லை” என்று அருளிச் செய்தார்.

35.“ப்ரயாணகாலே சதுரஸ் ஸ்வஶிஷ்யாந் பதாந்திகஸ்தாந் வரதோ ஹி வீஷய|
பக்திப்ரபத்தீ யதி துஷ்கரே வ: ராமாநுஜார்யம் நமதேத்யவாதீத்||”

தன் சரம காலத்தில் தன் திருவடி வாரத்திலிருந்த நாலு ஶிஷ்யர்களைப் பார்த்து நடாதூர் அம்மாள்
‘பக்தி ப்ரபத்திகள் உங்களுக்கு செயற்கரியவையாகில் எம்பெருமானாரை ஶரணமாக கொள்ளுங்கள்’ என்று
உபதேஶித்தார்.என்று இவ்வர்த்தம் ப்ரஸித்தமிறே.

காராஞ்சியில் ஸோமயாஜியார், எம்பெருமானார் திருவடிகளிலே ஆஶ்ரயித்துச் சில நாள் ஆசார்ய கைங்கர்யம் பண்ணிக் கொண்டிருந்து,
பின்பு தம்முடைய ஊரான காராஞ்சியிலே எழுந்தருளிச் சில நாள் கழித்தவாறே. ஸ்வாசார்யரைத் தேட்டமாய்,
தேவியாருடைய உபாதியினாலே ஸ்வாசார்யருடைய ஸன்னிதிக்கு எழுந்தருளக் கூடாமையாலே,
எம்பெருமானார்க்கு ப்ரதிநிதியாக ஒரு விக்ரஹம் ஏறியருளப் பண்ண,
அந்த ஸம்ஸ்தானம் நன்றாக வகுப்புண்ணாமையாலே அத்தையழித்து வேறே ஏறியருளப் பண்ண,
அன்றைக்கு ராத்ரி இவர் ஸ்வப்னத்திலே உடையவர் எழுந்தருளி,
“நீர் ஏன் இப்படி நம்மை நலிந்து உருவழிக்கிறீர்.
எங்ஙனே இருந்தாலும் நம்முடைய அபிமானமே உத்தாரகமென்று அத்யவஸிக்கமாட்டாத நீரோ
நம் விக்ரஹத்திலே ப்ரதிபத்தி பண்ணப் போகிறீர்” என்று அருளிச் செய்ய,
திடுக்கிட்டு எழுந்திருந்து அப்போது தானே அந்த விக்ரஹத்தையும் சேமத்திலே எழுந்தருளப் பண்ணி,
தேவியாரையும் அறத் துறந்து, அங்கு நின்றும் புறப்பட்டுக் கோயிலேற எழுந்தருளிக்
கண்ணும் கண்ணீருமாய்க் கை கால் பதறி வந்து உடையவர் திருவடிகளிலே
வேரற்ற மரம் போலப் புகல் அற்று விழுந்து பெருமிடறு செய்து அழப் புக்கவாறே

இது ஏதென்று கேட்டருள,
அங்குற்றை வ்ருத்தாந்தத்தை ஸ ப்ரகாரமாக விண்ணப்பம் செய்ய,
உடையவரும் முறுவல் செய்தருளி, “வாரீர் அஜ்ஞாதாவே! உம்முடைய ஸ்தீரீ பாரவஶ்யத்தை அறுக்க வேண்டிச் செய்தோமித்தனை,
நீர் இகழ்ந்தாலும் நாம் உம்மை நெகிழ விடத் தக்கதில்லை.
நீர் எங்கேயிருந்தாலும் நம்முடைய அபிமானத்தாலே உம்முடைய பேற்றுக்குக் குறை வராது.
ஸர்வ பரங்களையும் நம் பக்கலிலே பொகட்டு நிர்ப் பரராய் மார்விலே கை பொகட்டு உறங்கும்” என்று அருளிச் செய்தார் –
என்று நம்முடைய பிள்ளை அருளிச் செய்வர்.

கணியனூர் சிறியாச்சான் ஸசேல ஸ்நான பூர்வகமாக ஆர்த்தியோடே உபாஸன்னராய்ப்
பெரிய திருமண்டபத்திலே முதலிகளெல்லாரையும் திருவோலக்கமாக இருத்தி
ஶ்ரீஶடகோபனையும் திருமுடியிலே வைத்துக் கொண்டு திவ்யாஜ்ஞையிட்டு,

36(ஸத்யம் ஸத்யம் புநஸ் ஸத்யம் யதிராஜோ ஜகத் குரு|
ஸ ஏவ ஸர்வலோகாநாம் உத்தர்த்தா நாத்ர ஸம்ஶய :||)

முக்காலும் சத்யம் செய்து கூறுகிறேன்; யதிராஜரே உலக குருவாவர். எல்லாவற்றையும் உய்விக்க செய்ய வல்லவர் அவரே.
என்று அருளிச் செய்து
“எல்லார்க்கும் எம்பெருமானார் திருவடிகளொழிய வேறொரு தஞ்சமில்லை, த்ரி ப்ரகாரமும் ஸத்யமே சொல்லுகிறேன்,
ப்ரபன்ன குலாந்தர்ப்பூதர்க்கெல்லாம் எம்பெருமானாரே உத்தாரகர், இதில் சற்றும் ஸம்ஶயமில்லை” என்று
திருவோலக்கத்தின் நடுவே கோஷித்தாரிறே.

அருளாளப் பெருமாள் எம்பெருமானார் திருவடிகளிலே ஆஶ்ரயித்த
அனந்தாழ்வானும், எச்சானும், தொண்டனூர் நம்பியும், மருதூர் நம்பியும் உடையவர் திருவடிகளிலே தண்டம் ஸமர்ப்பித்து
“இவ்வாத்மாவுக்கு ஆசார்யன் ஒருவனோ பலரோ, இத்தனை பேருண்டென்று நிஶ்சயித்து அருளிச் செய்ய வேணும்” என்று கேட்க
‘பொன்னாச்சியாரைக் கேளுங்கோள்’ என்று அருளிச் செய்ய,

அவர்களும் அங்கே எழுந்தருளி, “எம்பெருமானார் தேவரீரைக் கேட்கச் சொல்லி அருளிச் செய்தார்.
இவ்வாத்மாவுக்கு ஆசார்யன் ஒருவனோ பலரோ? இத்தனை பேருண்டென்று தேவரீர் நிஶ்சயித்தருளிச் செய்ய வேணும்” என்ன,
அவரும் திருக்குழற்கற்றையை உதறி ஒன்றாக ஒட்ட முடிந்து பொகட்டுக் கொண்டு,
“அடியேனாலே இது நிஶ்சயித்துச் சொல்லக்கூடாது. அபலையான அடியேனுக்குத் தெரியுமோ?
எம்பெருமானார் தாமே அருளிச் செய்ய வேணுமித்தனை” என்று அருளிச் செய்து
தரையிலே கிடந்த காவி நூலை எடுத்துத் தலையிலே வைத்துக் கொண்டு உள்ளே எழுந்து அருளினார்.

இவர்களும் அப்ராப்த மநோரதராய், உடையவர் ஸன்னிதியிலே சென்று தண்டம் ஸமர்ப்பித்து நிற்க,
போன கார்யம் என்னென்று கேட்டருள, அவர் தமக்குத் தெரியாது. எம்பெருமானார் தாமே அருளிச் செய்ய வேணுமத்தனை –
என்று அருளிச் செய்தார் என்ன,

நீங்கள் போனபோது அவர் செய்த வியாபாரம் என்னென்று கேட்க,

திருக் குழற் கற்றையை உதறி ஒன்றாக முடித்துத் தரையிலே கிடந்த காவி நூலை எடுத்துத் தலையிலே வைத்துக் கொண்டு,
எங்களை அனுப்பி உள்ளே எழுந்தருளினார் என்ன,

“அவர் வெறுமனே எழுந்தருளவில்லை. நீங்கள் பண்ணின ப்ரஶ்னத்துக்கு ஸதுத்தரமாகப் பொருள் சொல்லிப் போனார்.
உங்களுக்குத் தெரிந்ததில்லையே” என்றருளிச் செய்ய,

ஆகிலும் அந்த அர்த்தத்தை தேவரீர் வெளியிட்டருள வேணுமென்ன,

உடையவர் அருளிச் செய்தபடி – “அவர், திருக்குழற்கற்றையை உதறினதினாலே –
இவ்வாத்மாவுக்கு ஆசார்யனைப் பார்க்கும்போது ஓரோராகாரத்தாலே பலராயிருக்குமென்றபடி,
ஒன்றாக முடிந்து பொகட்டதாலே – இவனுக்கு ஆசார்யனாய் நின்று பேற்றைப் பண்ணிக் கொடுக்கிறவன் ஒருவனென்றபடி;
தரையிலே கிடந்த காவி நூலை எடுத்ததினாலே பேற்றுக் குடலாக அறுதியிட்ட ஆசார்யனை விசேஷிப்பதாக நினைத்துப்
பேற்றுக்குடலாக அறுதியிட்ட ஆசார்யர் சதுர்த்தாஶ்ரமத்தை ப்ராபித்து காஷாயம் சார்த்தியிருக்கிற எம்பெருமானாரென்று நம்மைச் சொன்னபடி.
தலையிலே வைத்ததினாலே நமக்கு மூர்த்தந்யரான இவர் அனைவர்க்கும் அதிஶயாவஹர் என்னுமிடத்தை வெளியிட்டபடி;
அங்கிராமல் உள்ளே புகுந்ததினாலே இப்படிப்பட்ட ஆசார்யனை ஹ்ருதயத்துக்குள்ளே,
‘பேணிக் கொணர்ந்து புகுதவைத்துக்கொண்டேன் பிறிதின்றி’ என்கிறபடியே பேணியிட்டு வைத்துக்கொண்டு
அநுஸந்தித்துக் கொண்டு இருக்கையே தத் ஸம்பந்திகளுக்கு ஸ்வரூபமென்னும் அர்த்தத்தை வெளியிட்டப்படி”.
ஆகையாலே நீங்களும் இவ்வர்த்தத்திலே நிஷ்ட்டராய்ப் போருங்கோளென்று அருளிச் செய்தார்.
இத்தாலே பொன்னாச்சியாரை யிடுவித்துத் தம்முடைய உபாயதாத்மகமான ஆசார்யத்வத்தை வெளியிட்டபடியிறே.

எம்பாரும் வடுக நம்பியும் உடையவர் ஏகாந்தத்திலே எழுந்தருளி யிருக்கிறவளவிலே
அவர் திருவடிகளிலே சென்று தண்டம் ஸமர்ப்பித்து, மதுரகவியாழ்வார் “தேவுமற்றறியேன்” என்று
ஶேஷித்வ ஶரண்யத்வ ப்ராப்யத்வங்கள் மூன்றையும் ஆழ்வாரிடத்திலே அறுதியிட்டுத்
ததேக நிஷ்ட்டராய் ப்ரதம பர்வத்திலே கண் வையாதே எழுந்தருளியிருந்த நிலை
அடியோங்களுக்கு உண்டாம்படி க்ருபை பண்ணி யருள வேணுமென்ன,

மதுரகவியாழ்வார் ஆழ்வாரிடத்திலே பண்ணின ப்ரதிபத்தி உங்களுக்கு நம் பக்கலிலே உண்டாம்படி பண்ணினோமே
இனி உங்களுக்குச் செய்ய வேண்டும் அம்ஶம் ஏதென்ன,

இந்த ப்ரதிபத்தி யாவதாத்ம பாவியாய் நடக்கும் படி பண்ணியருள வேணுமென்ன,

‘ஆசார்யாபிமான நிஷ்ட்டனாகில் இங்ஙனிருக்க வேண்டாவோ?’ என்று மிகவும் உகந்தருளி,
37. (உபாயோபேய பாவேன தமேவ ஶரணம் வ்ரஜேத்)
உபாயமாகவும், உபேயமாகவும் ஆசார்யனையே ஶரணமடைய வேண்டும்.-என்கிறபடியே
நமக்கிரண்டாகாரமுண்டாகையாலே, இரண்டிடத்திலும் நம் பக்கலிலே இரண்டையும் அறுதியிட்டு
“தேவுமற்றறியேன்” என்றிருக்கக் குறையில்லை. இதுதான் உங்களளவு மாத்ரமன்று,
நம்முடைய ஸம்பந்தி ஸம்பந்திகளுக்கும் இந்த ப்ரதிபத்தியே யாயிற்று கார்யகரமாவதென்று அருளிச் செய்தார்.

“ஆசார்யனுக்கு இங்கிருக்கும் நாள் உபாயத்வமித்தனை போக்கி
ப்ராப்ய பூமியில் உபாயத்வம் கொள்ளும்படி எங்ஙனே?
ப்ராப்யம் கை புகுந்தால் ப்ராபகம் வேண்டுவதில்லையே” என்னில்,
அங்குத்தானும் ஆசார்யனுக்கு உபாயத்வமுண்டு,

ஆகையிறே,
38. தஸ்மை நமோ மது ஜிதங்க்ரி ஸரோஜதத்வ
ஜ்ஞாநாநுராக மஹிமாதிஶயாந்தஶீம்நே|
நாதாய நாதமுநயே அத்ர பரத்ர சாபி
நித்யம் யதீய சரணௌ ஶரணம் மதீயம் ||(ஸ்தோத்ர ரத்னம் 2)

[இவ்வுலகிலும் மேலுலகிலும் எப்போதும் எந்த ஶ்ரீமந்நாதமுனிகளுடைய திருவடிகள் எனக்குப் புகலிடமோ
மதுவை அழித்த எம்பெருமானுடைய திருவடித் தாமரைகளைப் பற்றிய உண்மையறிவினுடையவும் அன்பினுடையவும்
பெருமேன்மையின் முடிவே எல்லையாயிருப்பவரும், எனக்கு நாதராயிருப்பவருமான அந்த நாதமுனிகட்கு நமஸ்காரம்.]
(அத்ர பரத்ர சாபி நித்யம் யதீய சரணௌ ஶரணம் மதீயம்) என்று ஆளவந்தார் அருளிச் செய்தது.

39.(ஸாத்யாபாவே மஹாபாஹோ ஸாதநை: கிம் ப்ரயோஜநம்)
ஸாத்யமில்லாவிடில் ஸாதனங்களால் என்ன பயன்? (வி-பு. 1-19.36) என்கிறபடியே
ப்ராப்ய பூமியிலே எல்லாம் கைப்பட்டு, ஸித்தமாய் ஸாத்யமன்றியிலேயிருக்கையாலே,
ஸாதனங்கொண்டு கார்யமில்லையேயாகிலும்,

40.உபாதத்தே ஸத்தா ஸ்திதி நியமநாத்யைஶ் சிதசிதௌ
ஸ்வ முத்திஶ்ய ஶ்ரீமாநிதி வததி வாகௌபநிஷதீ|
உபாயோபேயத்வே ததிஹ தவ தத்த்வம் ந து குணௌ
அதஸ்த்வாம் ஶ்ரீரங்கேஶய ஶரணமவ்யாஜம் பஜம் ||(ர-ஸ்த 2-88)

[ஹே ஶ்ரீரங்கநாதனே! ‘ஶ்ரீ மந்நாராயணன் – ஸ்ருஷ்டி, ஸ்திதி, நியமனம் முதலிய காரியங்களால்
சேதனாசேதனங்களைத் தனக்காக ஸ்வீகரிக்கிறான்’ என்று உபனிஷத் வாக்யமானது சொல்லுகிறது.
ஆகையால் இவ் விஷயத்தில் உபயத்வமும் உபேயத்வம் உனக்கு முக்யம்; கௌணமல்ல.
ஆகையால் உன்னை நிர் வ்யாஜமான உபாயமாக அடைந்தேன்.] என்கிறபடியே
இரண்டும் ஸ்வரூபமாயிருக்கும்;
அதிலொன்றுக்கு ஸங்கோசமில்லாமையாலே ஓளி விஞ்சிச் செல்லா நிற்கும்.
மற்றையது உள்ளடங்கியிருக்கும்.

இவ்வாகாரம் பகவத் விஷயத்திலன்றோவென்னில்;
ஆசார்ய விஷயத்திலும் அப்படியே கொள்ளகுறையில்லை.
37(உபாயோபேயபாவேந தமேவ ஶரணம் வ்ரஜேத்) என்கையாலே
ப்ராப்யத்வ ப்ராபகத்வங்களிரண்டும் ஆசார்யனுக்கு வடிவாயிருக்குமிறே.
இவை வடிவாகையாலேயிறே 38. (அத்ர பரத்ர சாபி) என்றது.

37. “தமேவ” என்று அவதாரணத்தையிட்டு அந்ய யோக வ்யவச்சேதம் பண்ணுகையாலே
சரம பர்வமும் ஸஹாயாந்தர ஸம்ஸர்க்காஸஹமாயிருக்கும்.
அதாவது
கார்யகாலத்தில் சரம பர்வம் ஸ்வ வ்யதிரிக்தத்தை ஸஹாயமாக அபேக்ஷியாமல் அந்திமோபாயமாயிருக்குமென்றபடி.
பகவத் ஸம்பந்தம் அஞ்சி யிருக்க அடுக்கும்; இது நிஸ் ஸம்ஶயமிறே.
அது ஸம்ஸார பந்த ஸ்திதி மோக்ஷ ஹேதுவாயிருக்கும். பகவத் ஸம்பந்தம் ஆசார்ய ஸம்பந்தத்தை அபேக்ஷித்திருக்கும்.
ஆசார்ய ஸம்பந்தத்துக்கு பகவத் ஸம்பந்தம் வேண்டுவதில்லை.
ஈஶ்வர விஷய ஜ்ஞானத்தை அபேக்ஷியாதென்றபடி.
ஆசார்ய விஷய ஜ்ஞானமுண்டாகிலிறே ஈஶ்வரன் ஸ்வரூப விகாஸத்தைப் பண்ணுவது.
இங்கு அது வேண்டுவதில்லை. இப்படி நிரபாயோபாய பூதரான உடையவரிடத்திலே, “தேவுமற்றறியேன்” என்கிற
ப்ரதிபத்தி தத் ஸம்பந்திகளுக்கெல்லாம் யாவதாத்மபாவியாக நடக்கக் குறையில்லை.

பூர்வாபரர்க்கெல்லாம் உடையவரே உத்தாரகராகில், ஆளவந்தார் நாதமுனிகளிடத்திலே உபாயத்வத்தை அறுதியிட்டபடி
எங்ஙனேயென்னில்,
நாதமுனிகள் – தான் ஆழ்வார் பக்கலிலே பெற்ற ரஹஸ்யார்த்தங்களையும், ஸ்வப்நார்த்தங்களையும்,
பவிஷ்யதாசார்ய விக்ரஹத்தையும் உய்யக்கொண்டார் பக்கலிலே சேர்த்து,
பவிஷ்யத்தான ஆளவந்தாருடைய திரு அவதாரத்தைக் கடாக்ஷித்து
“ஈஶ்வர முனிகளுக்கு ஒரு குமாரர் உண்டாகப் போகிறார், அவருக்கு இந்த ரஹஸ்யார்த்தங்கள் எல்லாத்தையும் வெளியிடும்”
என்று உய்யக்கொண்டார்க்கு அருளிச்செய்ய,
அப்படியே தாமெழுந்தருளியிருக்கையிலே ஆளவந்தார் திரு அவதரிக்கப் பெறாமையாலே
ஶ்ரீபாதத்தில் மணக்கால் நம்பியை நியமிக்க,
அவரும் அப்படியே ஆளவந்தாருக்கு ஸம்ப்ரதாயார்த்தங்களையெல்லாம் வெளியிட,
ஆளவந்தாரும் “நாம் பிறவாதிருக்க முன்னமே தானே கருவிலே திருவுடையேனாம்படி விசேஷ கடாக்ஷம் பண்ணியருளி,
ஸம்ப்ரதாயார்தங்களையும் வெளியிடுவித்து, பவிஷ்யதாசார்ய விக்ரஹத்தையும் காட்டி,
அது தன்னை ஸமகாலத்திலே கண்ணுக்கு இலக்காம்படி பண்ணி யிருக்க,
பின்னும் ஸத்வாரக ஸ்வப்னமுகேந எழுந்தருளி விஷயீகரித்து, இப்படிப் பண்ணின உபகாரங்களுக்கு நம்மால்
செய்யலாவதேதென்று நாதமுனிகளுடைய செயலுக்குத் தோற்று அவர் பக்கலிலே தமக்குண்டான உபகார ஸ்ம்ருதி
யாவதாத்மபாவியாய் நடக்குமென்னுமிடத்தை வெளியிட வேண்டி,
“நாதமுனிகள் அறுதியிட்ட விஷயத்தினளவும் போகவேணுமோ?
தாமறுதியிட்ட விஷயத்தைக் காட்டிக் கொடுத்த இவரே நமக்கு எல்லாம்” என்கைக்காகச் சொன்னாரித்தனை.
நாதமுனிகள் நினைவேயாயிற்று. இவர்க்கு உள்ளோடுகிற நினைவு.
நாதமுனிகளிடத்திலே பேற்றுக் குடலாக உபாயத்வத்தை அறுதி யிட்டாராகில் ஆழ்வாரிடத்திலே
41. ‘ஸர்வம்’ என்று உபாயத்வம் சொல்லக் கூடாதிறே.
ஆகையாலே

41.-மாதா பிதா யுவதயஸ் தநயா விபூதி:
ஸர்வம் யதேவ நியமேந மதந்வயாநாம் |
ஆத்யஸ்ய ந: குலபதேர் வகுளாபிராமம்
ஶ்ரீமத் ததங்க்ரியுகளம் ப்ரணமாமி மூர்த்நா||(ஸ்தோ – ர 5)
[என் வம்ஶத்தவர்களுக்கு எப்போதும் தாயும், தந்தையும், மாதரும், மக்களும், பெருஞ்செல்வமும்,
மற்றுமுள்ள எல்லாமும் எப்போதும் எந்த ஆழ்வாருடைய திருவடியிணையேயோ, நமக்கு முதல்வரும்,
குலபதியுமான அவருடைய, மகிழ மலராலே அலங்கரிக்கப்பட்டதும், வைணவச் செல்வமுடையதுமான
அத்திருவடியிணையைத் தலையால் வணங்குகிறேன்.]

(மதந்வயாநாம் ஸர்வம் ததங்க்ரி யுகளம் ப்ரணமாமி மூர்த்நா) என்று எல்லார்க்கும் தமக்கும்
ஆழ்வார் திருவடிகளே உபாயமாக அறுதியிடுகையாலே, உடையவரே உத்தாரகரென்று அறுதியிட்டபடியிறே அங்கே.
38. (மதீயம் ஶரணம்) என்று தம்மை ஒருவரையும் சொல்லி உபாயத்வத்தைச் சொல்லுகையாலே,
அவர் தமக்கு பண்ணின உபகாரத்துக்குத் தோற்று தத் ஸம்ருத்தி ஸூசகமாகச் சொன்னாரென்னுமிடம் ஸித்தம்.

எம்பார் ஒரு ராத்ரி திருவீதியிலே குணானுபவத்துடனே உலாவி யருளா நிற்க,
பட்டர் பார்த்தருள, எம்பாரை ஸேவித்து – ஆசார்யத்வமும் த்விவிதமாய், தத் விஷய ஸ்வீகாரமும் த்விவிதமாயன்றோ இருப்பது;
எதிலே தேவரீர் அறுதியிட்டிருப்பதென்ன.

எம்பாரும் – க்ருபா மாத்ர ப்ரஸன்னாசார்யனே முக்யன்; பரகத ஸ்வீகாரமே பேற்றுக்கு உடல்.
இவை இரண்டையும் நான் எம்பெருமானாரிடத்திலே அறுதியிட்டிருப்பன்.
நீரும் ‘பெருமாள் நம்மை புத்ர ஸ்வீகாரம் பண்ணியருளினார்: ஆழ்வானுடைய பிள்ளை;
ஸகல வித்யைகளை அப்யஸித்தோம்; நமக்கென்ன குறை’ என்று இறுமாந்திராதே
என்னைப் போலே எம்பெருமானாரிடத்திலே உத்தாரகத்வ ப்ரதிபத்தி பண்ணி
அவரே உத்தாரகரென்று நினைத்திரும் என்று அருளிச் செய்தார்.

பட்டரும் நஞ்சீயருக்குத் திருவாய்மொழி வ்யாக்யானம் அருளிச் செய்து சாத்தினவுடனே
42. ப்ரத்யக்ஷே குரவ: ஸ்துத்யா -ஆசார்யர்கள் நேரில் துதிக்கத் தக்கவர்கள்.-என்கிறபடியே
நஞ்சீயர் பட்டரை மிகவும் கொண்டாடி, அடியேனுடைய தலையிலே தேவரீர் திருவடிகளை ப்ரஸாதித்தருள வேணுமென்ன,
ஏகாந்தத்திலே அழைத்தருளி, திருவடிகளிரண்டையும் ப்ரஸாதித்தருளி,
”இதுவன்று உமக்குத் தஞ்சம். உம்முடைய ப்ரதிபத்திக்காகச் செய்தோமித்தனை.
உமக்கு மெய்யே பேறு கைப்பட வேண்டினால், உமக்கும் நமக்கும் மற்றுமுள்ள எல்லார்க்கும் உத்தாரகரான
எம்பெருமானார் திருவடிகளே பேற்றுக்கு உடலென்ற விஶ்வஸித்துத் ததேக நிஷ்டராய் இரும்.
இல்லையாகில் நித்ய ஸம்ஸாரியாய் விடுவீர்” என்றருளிச் செய்தார்.

இத்தால் “எம்பெருமானாருடைய ஸம்பந்தமே உஜ்ஜீவனத்துக்கு உடல்.
தத் வ்யதிரிக்த விஷயங்களை உஜ்ஜீவனத்துக்கு உடலாக நினைக்கை அஜ்ஞான காரியம்” என்றபடி

இவ்வர்த்தத்தை அமுதனார் அருளிச் செய்தார்-
“இராமானுசன் நிற்க வேறு நம்மை உய்யக் கொள்ள வல்ல தெய்வம் இங்கியாதென்றுலர்ந்து
அவமே ஐயப்படா நிற்பர் வையத்துள்ளோர் நல்லறிவிழந்தே” என்று
“இராமானுசன் – வேறு நம்மை உய்யக்கொள்ளவல்ல தெய்வம்” என்கையால் எம்பெருமானாரை விட்டால்
பின்னை உய்யக்கொள்ளவல்ல தெய்வமாகக் கண்டது எம்பெருமானேயிறே.

இனி சரம பர்வமான எம்பெருமானார் எழுந்தருளியிருக்க, ப்ரதம பர்வமான எம்பெருமானைப் பற்றுகை அஜ்ஞான கார்யமென்றபடி.
ஆஸன்னமான சரம பர்வத்தைக் கைவிட்டு விப்ரக்ருஷ்டமான ப்ரதம பர்வத்தைப் பற்றுகை
அஜ்ஞான கார்யமென்னுமிடத்தை த்ருஷ்டாந்த ஸஹிதமாக அருளிச் செய்தாரிறே.
அருளாளப்பெருமாளெம்பெருமானார் “எட்டவிருந்த குருவை” என்று.

“சரம பர்வத்துக்கு ஆளாகாதவன் ப்ரதம பர்வத்துக்கு ஆளாகான்.
ப்ரதம பர்வத்துக்கு ஆளாகாதவன் சரம பர்வத்துக்கு ஆளாவானிறே” என்று வங்கி புரத்து நம்பி வார்த்தை

“ததீய ஶேஷத்வ ஜ்ஞானமில்லாதவனுக்குத் தச் சேஷத்வ ஜ்ஞானமும் இல்லையாய் விடும்.
பகவத் விஷயத்தில் ஜ்ஞானமில்லாதவன் தத் ப்ராப்த்யர்த்தமாக ஆசார்யோபஸத்தி பண்ணும்.
ஆசார்யாபிமான நிஷ்டன் ப்ரதம பர்வத்தில் கைவையான்” என்றபடி.

அன்றிக்கே,
“ஆசார்ய ஸம்பந்தம் குலைந்தவன் பகவத் க்ருதமான ஸ்வரூப ஸங்கோசத்தை உடையனாம்.
ஈஶவராபிமானத்தைக் குலைத்துக் கொண்ட இவனுக்கு ஆசார்யாபிமானத்திலே ஒதுங்க வேணும்.
சரமோபாய நிஷ்டனுக்கு ஈஶ்வராபிமானம் வேண்டுவதில்லை” என்று இங்ஙனே பொருளாகவுமாம்.

இத்தால் “எம்பெருமானாரோடு ஸம்பந்தமில்லாதவனை ஈஶ்வரன் கை விடும்.
ப்ரதமபர்வமான ஈஶ்வரன் தோஷ தர்சனந்தத்தாலே சேதனனை கை விடும்.
சரமபர்வரான எம்பெருமானார் கைவிடுவதில்லை.
எம்மெருமானாரோடு ஸம்பந்தமுண்டானவனுக்குப் பேற்றுக்கு உடலாக ஈஶ்வரன் கை பார்த்திருக்க வேண்டாவிறே” என்றபடி.

“தேவு மற்றறியேன் – மேவினேன் அவன் பொன்னடி மெய்மையே” என்றிருந்தால்,
பின்னை அங்ஙனல்லது இராதிறே.
‘பொன்னடி’ என்றருளிச் செய்தாரிறே.
இப்படி ஸர்வ ப்ரகாரத்தாலும் ஸர்வர்க்கும் உத்தாரகர் எம்பெருமானாரேயாகக் குறை யில்லை.
இப்படி உத்தாரகரான எம்பெருமானாருடைய அபிமானத்திலே அந்தர்ப்பவியாதார் நித்ய ஸம்ஸாரிகளாய்ப் போருவர்கள்.

எம்பெருமானார் திருவடிகளிலே பொருந்தி வாழும் போது அவருடைய திருநாமத்தை அநுஸந்திக்க வேணுமிறே.
எம்பெருமானாருடைய திருநாமோச்சாரணம் தத்பாத கமல ப்ராவண்ய ஜனகமாக அருளிச் செய்தாரிறே.
அமுதனார் – இராமாநுசன் சரணாரவிந்தம் நாம் மன்னி வாழ நெஞ்சே சொல்லுவோம் அவன் நாமங்களே”
என்று நாம் மன்னி வாழ அவன் நாமங்களைச் சொல்லுவோமென்கையாலே.
அவன் நாமங்களைச் சொல்லாத போது பொருந்தி வாழக் கூடாது என்றபடி.
பொருந்தி வாழும் போது அவன் நாமங்கள் சொல்ல வேணுமென்கையாலே
தந்நாமாநுஸந்தானம் தத் பாத கமல ப்ராவண்ய (ஜநக?)மென்றபடி,

இப்படி எம்பெருமானாருடைய திருநாமத்தை அநுஸந்தித்து அவர் திருவடிகளிலே பொருந்தி வாழுகிறவர்களுக்கு
ப்ராப்ய ப்ராபகங்களிரண்டும் எம்பெருமானார் திருவடிகளேயிறே.
“பேறொன்று மற்றில்லை நின் சரணன்றி அப் பேறளித்தற்கு ஆறொன்றுமில்லை மற்றச் சரணன்றி” என்று
ப்ராப்ய ப்ராபகங்களிரண்டையும் அவர் திருவடிகளிலே அறுதியிட்டாரிறே அமுதனார்.

“பேறொன்று மற்றில்லை நின் சரணன்றி ஆறொன்றுமில்லை” என்று அந்ய யோக வ்யவச்சேதம் பண்ணுகையாலே
சரம பர்வத்திலே ப்ராப்யத்வ ப்ராபகத்வங்களை அறுதியிட்டால்,
ப்ரதம பர்வத்திலே முதல் தன்னிலே வ்யுத்பத்திதானுமில்லையோ என்னும்படி
ததேக நிஷ்டனாய் இருக்கவேணும் என்னுமிடம் தோற்றுகிறது.

இத்தால் ஆசார்யபிமான நிஷ்டனாகில் மறுக் கலசாதபடி இருக்கவேணுமென்றபடி.
இல்லையாகில் இரு கரையர் என்னுமிடம் சொல்லப்படும்.

வடுகநம்பி, திருவோலக்கத்திலே சென்றால் எம்பெருமானாரை நோக்கி தண்டன் ஸமர்ப்பித்து
ஒரு பார்ஶ்வத்திலே கடக்க நிற்பாராய், எம்பெருமானார் வடு கநம்பியை நம்முடைய மதுரகவிகள் என்றருளினாராம்.
ஆழ்வார்க்கும் ஒரு மதுரகவிகளுண்டிறே.
இப்படி இருக்கையாலேயிறே இவர்க்கு ஆழ்வானையும் ஆண்டானையும் இரண்டிட்டுச் சொல்லலாயிற்று.

ஒரு நாள் எம்பெருமானார் வடுக நம்பியை அழைத்தருளி,
‘வடுகா! ஆசார்யாபிமான நிஷ்டன் எத்தைப் போலே இருப்பான்’ என்று கேட்டருள
‘வேம்பின் புழுப் போலே இருப்பன்’ என்றருளிச் செய்தார்.
அதாவது – வேம்பின் புழு வேம்பன்றி யுண்ணாது” என்கிறபடியே ஆசார்யனுடைய அபிமானத்திலே ஒதுங்கி
இருக்கிறவன் பேற்றுக்கு உடலாக அறுதி யிட்டிருப்பது தத் அபிமானத்தை யொழிய
வேறொன்றையும் பேற்றுக்கு உடலாக நினைத்திரான் என்றபடி.

‘கரும்பின் புழு’ என்று சொல்லுகை யன்றிக்கே வேம்பின் புழுவை த்ருஷ்டாந்தமாகச் சொல்லுவானே என்னில்
பரம தயாளுவான ஆசார்யன் தானே- தன் அபிமானத்திலே ஒதுங்கி இருக்கும் ஶிஷ்யனுக்குத்
தன் பக்கல் (உள்ள) வைரஸ்யம் பிறக்கும்படி காதுகனான தஶையிலும்,
‘நான் உன்னை யன்றியிலேன்” என்கிறபடியே ததபிமான ராஹித்யத்தில் ஸத்தையில்லை என்னும்படி
“களை கண் மற்றிலேன்” என்கிறபடியே ததபிமான நிஷ்டனாயிருக்க வேணும் என்னுமிடம் தோற்றுகைக்காகச் சொல்லிற்று.

இத்தால்- எம்பெருமானாருடைய அபிமானத்திலே ஒதுங்கிக் கரண த்ரயத்தாலும் ததேக நிஷ்டனாயிருக்கிறவன்
தத் வயதிரிக்த விஷயங்களில் உத்தாரகத்வ ப்ரதிபத்தி பண்ணியிரான் – என்றபடி.

ஸர்வோத்தாரகமான விஷயத்தைப் பற்றினால் தத் வயதிரிக்தரைக் கொண்டு தேவையில்லையிறே.
“பல்லுயிர்க்கும் விண்ணின் தலை நின்று வீடளிப்பான் எம்மிராமாநுசன்” என்று
எம்பெருமானாரை ஸர்வோத்தாரகராக அறுதியிட்டாரிறே ஸகல வேதஶாஸ்த்ர வித்தமரான அமுதனார்.

நம்பிள்ளை ஒரு நாள் எம்பெருமானார் ஸன்னிதியிலே எழுந்தருளி, நூற்றந்தாதி அநுஸந்தித்துச் சாத்தினவுடனே,
எம்பெருமானார் திருமுக மண்டலத்தை ஸேவித்து, இன்றைக்கு அடியேனுக்கு ஒரு ஹிதமருளிச் செய்யவேணும் என்று
திருமுன்பே அருளிச் செய்து திருமாளிகைக்கு எழுந்தருள,
அன்றைக்கு ராத்ரியிலே எம்பெருமானார் ஸ்வப்ன முகேன எழுந்தருளி திருவடிகளிரண்டையும் நம்பிள்ளை திருமுடியிலே வைத்து,
“உமக்கு ஹிதம் வேணுமாகில் இத்தையே தஞ்சமாக நினைத்திரும்.
உம்மை யண்டினார்க்கும் இதுவே தஞ்சமாக உபதேஶித்துக் கொண்டு போரும்; இதுக்கு மேல் ஹிதமில்லை” என்று அருளிச் செய்ய,

நம்பிள்ளை – நம்முடைய பிள்ளையை அழைத்தருளி அருளிச் செய்ய,
பிள்ளையும் அத்தை அத்யாதரத்தோடே கேட்டருளி தந்நிஷ்டராய் எழுந்தருளியிருந்து,
நம்பிள்ளை சரம தஶையிலே அடியேனுக்கு ஹிதமெதென்று கேட்கிறவளவில்,
“எம்பெருமானார் திருவடிகளுண்டாயிருக்க ஹிதமேதென்று கேட்க வேண்டியிருந்ததோ?
அவருடைய அபிமானத்திலே அந்தர்ப்பூதராயிருக்கிற நமக்கெல்லாம் ஹிதத்துக்குக் கரைய வேண்டா.
எம்பெருமானார் திருவடிகளே தஞ்சமென்று விஶ்வஸித்துத் ததேக நிஷ்டராயிரும்;
நான் பெற்ற பேறு நீரும் பெறுகிறீர்” என்று அருளிச் செய்தார்.

இப்படி எல்லாரும் உத்தாரகத்வேந அறுதியிடும்படி அவதார விஶேஷமாய்,
பரம காருணிகராய் எழுந்தருளி யிருக்கிற எம்பெருமானாருடைய அபிமானத்திலே அந்தர்ப்பூதராய்
அவர் திருவடிகளையே ப்ராப்ய ப்ராபகமாக அறுதியிட்டுத் ததேக நிஷ்டராயிருக்கும் சரமாதிகாரிகளுக்கு
வஸ்தவ்யபூமி – “இராமாநுசனைத் தொழும் பெரியோர் எழுந்திரைத்தாடுமிடம் அடியேனுக்கிருப்பிடம்” என்று
அமுதனார் அருளிச் செய்கையாலே, எம்பெருமானார் பக்கல் ப்ராவண்யம் உடையரான ஜ்ஞாநாதிகர்கள்
களித்து வர்த்திக்கும் இடமே வாஸஸ்தானம் என்றபடி.

இங்கிருக்கும் நாள் அநுபவத்துக்கு விஷயமேதென்னில்,
“உவந்திருந்தேன் அவன் சீரன்றி யானொன்றுமுள் மகிழ்ந்தே” என்கையாலே
எம்பெருமானாருடைய கல்யாண குணங்கள் தானே அநுபவத்துக்கு போக்யத்வேந விஷயம்.

“இராமாநுசன் மிக்க சீலமல்லால் உள்ளாதென் நெஞ்சு” என்கையாலே
எம்பெருமானாருடைய அபரிச்சின்னமான ஶீல குணத்தை நெஞ்சுக்கு விஷயமாக்குகை
சரமாதிகாரிக்கு க்ருத்யம் என்றருளிச் செய்தபடியிறே.

“இராமானுசன் தன் பிறங்கிய சீர் சாரா மனிசரைச் சேரேனெனக்கென்ன தாழ்வினியே” என்கையாலே,
எம்பெருமானாருடைய ஔஜ்வல்ய கல்யாண குணங்களில் ப்ராவண்யமில்லாத கள்ளர் மிண்டரோடே
ஸஹவாஸ மின்றிக்கே இருக்கிறது சரமாதிகாரிக்கு ஏற்றமென்றபடி.

“சேரேனெனக்கென்ன தாழ்வினியே” என்று தத்ஸஹவாஸராஹித்யம் ஆதிக்யாவஹமென்கையாலே
தத் ஸஹவாஸம் அநர்த்தாவஹமென்றபடி.

எம்பெருமானார் திருவடிகளில் ப்ராவண்யமுடையார் அதில்லாத மூர்க்கரோடு ஸஹவாஸம் பண்ணில்
ஸ்வரூபஹானி பிறக்குமிறே.

”இராமாநுசன் புகழன்றி என்வாய் கொஞ்சிப் பரவகில்லாது” என்கையாலே
எம்பெருமானாருடைய கல்யாண குணங்களே சரமாதிகாரிகளுக்கு வாசா அநுஸந்தேயமென்றபடி.

“இராமாநுசன் மன்னு மா மலர்த்தாள் அயரேன்” என்கையாலே,
எம்பெருமானார் திருவடிகளை மறவாதிருக்கை ததபிமான நிஷ்டனுக்கு கர்தவ்யம் என்றபடி.

“அருவினை என்னை எவ்வாறின்றடர்ப்பதுவே” என்கையாலே தத் ஸ்மரணமே, அநிஷ்ட நிவ்ருத்திகரம் என்றபடி
தத் விஸ்மரணம் அநர்த்தாவஹம் என்னுமிடம் அர்த்தாத் ஸித்தம்.

‘உன்தொண்டர்கட்கே அன்புற்றிருக்கும்படி என்னை யாக்கி அங்காட்படுத்தே” என்கையாலே
எம்பெருமானார் திருவடிகளுக்கு அநந்யார்ஹ ஶேஷபூதரான ஶ்ரீவைஷ்ணவர்கள் பக்கலில் பக்தி யிருக்கும்படி
தச் சேஷத்வத்தை எம்பெருமானார் திருமுன்பே ப்ரார்த்திக்கை ததபிமான நிஷ்டனுக்கு ஸ்வரூபம்.

“உன்தன் மெய்யில் பிறங்கிய சீரன்றி வேண்டிலன் யான்……இவ்வருள் நீ செய்யில் தரிப்பன் இராமாநுச” என்கையாலே
எம்பெருமானாருடைய விக்ரஹ குணங்களை ஸத்தா தாரகமாக நினைத்திருக்கை சரமாதிகாரி க்ருத்யம்.

“இராமானுசன் திருநாமம் நம்பவல்லார் திறத்தை” என்று தொடங்கி
“செய்வன் சோர்வின்றியே” என்கையாலே
எம்பெருமானாருடைய திருநாமத்திலே விஶ்வாஸ யுக்தரான ஶ்ரீவைஷ்ணவர்களை மறவாத பாகவதர்கள் பக்கல்
கரண த்ரயத்தாலும் ஸகலவித கைங்கர்யங்களும் வழுவில்லாமல் செய்து போருகை சரமாதிகாரிக்கு ஸ்வரூபம்.

எம்பெருமானாருடைய திருநாமத்தை விஶ்வஸித்துப் பரிஶீலனம் பண்ணாதார்க்குப் பேறு துர்லபமாயிருக்கும்.
“இராமாநுசன் திருநாமம் நம்பிக்கல்லார் அகலிடத்தோர் எது பேறென்று காமிப்பரே” என்று
துர்லபமாக அருளிச் செய்தாரிறே அமுதனார்.

இந்த அர்த்தங்களெல்லாம் எம்பெருமானாருடைய திருமுக மண்டலத்தைப் பார்த்து அருளிச் செய்ய,
அவரும் இதுக்கெல்லாம் இசைந்தெழுந்தருளியிருக்கையாலே இவ்வர்த்தம்
அவிசார்யமாய் ஸுத்ருடமான ஸகல ப்ரமாண ப்ரமேய ப்ரஹ்ம தீர்க்க (?) ரஸோக்தி – அநுஷ்ட்டாந ஸித்தம்.

இவ்வர்த்தம் 36. “ஸத்யம் ஸத்யம் புநஸ்ஸத்யம் யதிராஜோ ஜகத்குரு|
ஸ ஏவ ஸர்வ லோகாநாம் உத்தர்த்தா நாத்ர ஸம்ஶய: ||“,
“இராமானுசன் மன்னுமாமலர்த்தாள் பொருந்தா நிலையுடைப் புன்மையினோர்க்கு ஒன்றும்
நன்மை செய்யாப் பெருந்தேவரைப் பரவும் பெரியோர் தம் கழல் பிடித்தே” என்கையாலே
எம்பெருமானார் திருவடிகளிலே ப்ராவண்யமில்லாதார்க்கு யாவதாத்மபாவி ஸம்ஸாரம் அநுவர்த்திக்கும்.
உடையோருக்கு யாவதாத்மபாவி ஸர்வாபீஷ்டங்களும் ஸித்திக்கும்.

சரமோபாய நிர்ணயம் முற்றிற்று

————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ நாயனாராச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ நாயனாராச்சான் பிள்ளை அருளிச்செய்த ஸ்ரீ சரமோபாய நிர்ணயம் – ப்ரமாணத் திரட்டு

January 17, 2022

1,2,3,4 நாயனாராச்சான் பிள்ளை யருளிய உபோத்காத காரிகைகள்

1-அபயப்ரத பாத தேஶிகோத்பவம்
குருமீடே நிஜமாதரேண சாஹம் |
ய இஹாகில லோக ஜீவநாதர:
சரமோபாய விநிர்ணயம் சகார ||
யாவரொருவருடைய அருளாலே அடியேன் சரமோபாய நிர்ணயத்தைச் சொல்லப் போகிறேனோ,
என் ஆசார்யராய், அபய ப்ரதபாதர் என்னும் திருநாமமுடைய அப்பெரியவாச்சான் பிள்ளையை ஆஶ்ரயிக்கிறேன்.

2-அஸ்மஜ் ஜநக்காருணயஸுதாஸந்து ஷிதாத்மவான் |
கரோமி சரமோபாயநிர்ணயம் மத்பிதா யதா ||
அடியேனுடைய தந்தையாருடைய கருணை அமுதத்தினால் உயிர்ப்பிக்கப்பட்ட ஆத்மாவையுடைய அடியேன்
எந்தையார் அருளிய முறையிலே சரமோபாய நிர்ணயத்தைச் செய்கிறேன்.

3-அஸ்மதுத்தாரகம் வந்தே யதிராஜம் ஜகத்குரும் |
யத்க்ருபாப்ரேரித: குர்மி சரமோபாய நிர்ணயம் ||
உலகனைத்துக்கும் ஆசார்யராய், நமக்கு உத்தாரகரான எதிராசரை வணங்குகிறேன்,
அவருடைய கருணையினால் தூண்டப்பட்டுச் சரமோபாய நிர்ணயத்தைச் செய்கிறேன்.

4-பூர்வாபரகு ரூகதைஶச ஸ்வப்நவ்ருத்தைர் யதீஶபாக் |
க்ரியதேத்ய மயா ஸம்யக் சரமோபாய நிர்ணயம் ||
எம்பெருமானாருக்கு முன்னும் பின்னுமிருந்த ஆசார்யர்களின் ஶ்ரீஸூக்திகளைக் கொண்டும்,
ஸ்வப்ன வ்ருத்தாந்தங்களாலும், சரமோபாயத்வம் உடையவரிடத்திலேயே பொருந்தும் என்று
அடியேனால் நன்கு நிரூபிக்கப்படுகிறது.

5. பெரியவாச்சான் பிள்ளையருளியதாக ஶ்ரீவைஷ்ணவ ஸமயாசார நிஷ்கர்ஷத்தில் எடுக்கப்பட்ட ஶ்லோகம்

விஷ்ணு: ஶேஷீ ததீய: ஶுபகுண நிலயோ விக்ரஹ: ஶ்ரீஶடாரி:
ஶ்ரீமாந் ராமாநுஜார்ய: பதகமலயுகம் பாதி ரம்யம் ததீயம்|
தஸ்மிந் ராமாநுஜார்யே குருரிதி ச பதம் பாதி நாந்யத்ர, தஸ்மாத்
ஶிஷ்டம் ஶ்ரீமத்குரூணாம் குலமித மகிலம் தஸ்ய நாதஸ்ய ஶேஷ:||
[விஷ்ணுவானவர் அனைவர்க்கும் ஶேஷி யாயிருப்பவர்:
நற்குணங்களுக்கு இருப்பிடமான நம்மாழ்வார் அவருடைய திருமேனியாவார்.
கைங்கர்யச் செல்வம் நிறைந்த எம்பெருமானார் அந்த நம்மாழ்வாருடைய அழகிய திருவடித் தாமரையிணையாய் விளங்குகிறார்.
அந்த எம்பெருமானாரிடத்திலேயே ஆசார்ய ஶப்தம் நிறை பொருளுடையதாய் விளங்குகிறது.
வேறெவரிடமும் அப்படி விளக்கவில்லை. ஆகையால், மற்ற ஸதாசார்ய பரம்பரை முழுவதும்
அந்த எம்பெருமானார்க்கு ஶேஷமாயிருப்பது.] (குருகுணாவளி)

6. ஸ ச ஆசார்ய வம்சோ ஜ்ஞேயோ பவதி I
ஆசார்யாணாம் அஸாவஸா வித்யா பகவத்த: II

[பகவானிடமிருந்து தொடங்கி ‘இவர் இவர்’ என்று குருபரம்பரை முழுவதும் அறியப்பட வேண்டும்.]

7. அர்வாஞ்சோ யத்பத ஸரசிஜ த்வந்த்வ மாச்ரித்ய பூர்வே
மூர்த்நா யஸ்யாந்வய முபகதா தேசிக முக்திமாபு: I
ஸோயம் ராமாநுஜ முநிரபி ஸ்வீய முக்திம் கரஸ்தாம்
யத் ஸம்பந்தாத் அமனுத கதம் வர்ண்யதே கூர நாத: II

[பின்னுள்ள ஆசார்யர்கள் எவருடைய திருவடித் தாமரையிணையோடு ஸம்பந்தம் பெற்றும்,
முன்னுள்ள ஆசார்யர்கள் எவருடைய திருமுடியோடு ஸம்பந்தம் பெற்றும் மோக்ஷம் அடைந்தனரோ,
அந்த ராமாநுஜ முனிவரே எவருடைய ஸம்பந்தத்தாலே தனக்கு மோக்ஷம் கைப்பட்டதாகக் கருதினாரோ
அத்தகைய கூரத்தாழ்வான் எப்படி வர்ணிக்கப்படுவார்.]

8-யாவரொரு ஆசார்யர் தம் அடியடைந்தவர்களைத் தன் கருணையினாலேயே ரக்ஷிக்கிறாரோ,
அவரே அளத்தற்கரிய முக்யாசார்யராவார். நல்லோர்களால் அப்படியே சொல்லப்படுகிறதன்றோ.
(ஸோமாசியாண்டான் அருளிய குருகுணாவளி)

9-இலக்குவன் ராமனுடைய வலது கை போன்றவன். (ரா-அ-34-13)

10-எந்த நம்மாழ்வார் கருணை மிக்கவராய், அடியேன் தூங்கும் போது பவிஷ்யதாசார்யரின் சிறந்த விக்ரஹத்தை
எனக்கு காட்டியருளினாரோ, காரியாரின் பிள்ளையான அவரை ஶரணமடைகிறேன். (நாதமுனிகளருளியது)

11-ஆஸ்போடயந்தி பிதர: ப்ரந்ருத்யந்தி பிதாமஹா: |
வைஷ்ணவோ ந: குலே ஜாத: ஸ ந: ஸந்தார யிஷ்யதி ||
‘வைஷ்ணவன் நம் குலத்தில் பிறந்துவிட்டான்; நம்மைக் கரையேற்றுவான்’ என்று பித்ருக்கள்
கைகொட்டி ஆர்ப்பரிக்கிறார்கள்; பிதாமஹர்கள் நடனமாடுகிறார்கள். (வராஹ புராணம்)

12-வைகுண்டம் என்னும் மேலான உலகில், உலகின் தலைவனாய் அளவிட்டறியமுடியாதவனாய்,
(குணநிஷ்டர்களான) பக்தர்களோடும், (கைங்கர்ய நிஷ்டர்களான) பாகவதர்களோடும் கூடியவனாய்,
பெரிய பிராட்டியாருடன் சேர்ந்த நாராயணன் எழுந்தருளியிருக்கிறான்.

13-மத் பக்த ஜந வாத்ஸல்யம் பூஜாயாஞ்சாநுமோதநம்|
ஸ்வயம் பயாச்சநஞ்சைவ மதர்தே டம்ப வர்ஜநம்||
மத் கதா ஶ்ரவணே பக்தி: ஸ்வரநேத்ராங்க விக்ரியா|
மமாநுஸ்மரணம் நித்யம் யஶ்ச மாம் நோபஜீவதி ||
பக்திரஷ்டவிதா ஹ்யேஷா யஸ்மிந் மிலேச்சேபி வாத்ததே |
ஸ விப்ரேந்த்ரோ முநி: ஸ்ரீமாந் ஸ யதி:ஸ ச பண்டித:
தஸ்மை தேயம் ததோ க்ராஹ்யம் ஸ ச பூஜயோ யதாஹ்யஹம் ||
1. என் பக்தர்களிடத்தில் வாத்ஸல்யம்
2. என்னை ஆராதனம் செய்வதை ஆமோதித்தல்
3. தானே என்னைப் பூஜித்ததால் 4. என் விஷயத்தில் ஆடம்பரமற்றிருத்தல்
5. என் கதைகளைக் கேட்பதில் அன்பு,
6. (என் கதைகளைக் கேட்கும் போது) குரல் தழதழத்தும், கண்ணீர் மல்கியும், உடம்பு மயிர்க்கூச்செறிந்து கொண்டுமிருக்கை
7. எப்போதும் என்னை நினைத்திருக்கை,
8. என்னிடம் வேறு ஒரு ப்ரயோஜனத்தையும் கேளாதிருக்கை,
என்னும் இந்த எட்டு விதமான பக்தியானது எந்த மிலேச்சனிடமும் காணப்படுகிறதோ அவனே ப்ராஹ்மண ஶ்ரேஷ்டன்,
அவனே முனிவன், அவனே தனவான், அவனே இந்திரிய நியமனம் செய்தவன், அவனே பண்டிதன்,
அவனுக்கு ஞானத்தை உபதேஶிக்கலாம், அவனிடமிருந்து ஞானோபதேஶமும் பெறலாம்.
அவன் என்னைப்போல் பூஜிக்கத்தக்கவன் ] (காருடம் 219 6-9)

14(அஸ்யா மம ச சேஷம் ஹி விபூதிருபயாத்மிகா)-(விஷ்வக்ஸேந ஸம்ஹிதை)
-உபய விபூதியும் இவளுக்கும் எனக்கும் ஶேஷமயிருப்பது.

15-(யச்ச்ரேயஸ் ஸ்யாந் நிஶ்சிதம் ப்ரூஹி தந்மே ஶிஷ்யஸ் தேஹம் ஶாதி மாம் த்வாம் ப்ரபந்நம் )(கீதை 2-7)
எனக்கு எது நல்லது என்று உன்னால் நிஶ்சயிக்கப் படுகிறதோ, அதை எனக்குச் சொல்லுவாயாக.
நான் உனக்கு ஶிஷ்யன். உன்னை ஶரணமடைந்த என்னை நியமிப்பாயாக. (கீதை 2-7)

16-(தத் வித்தி ப்ரணிபாதேந பரிப்ரஶ்நேந ஸேவயா|
உபதேக்ஷ்யந்தி தே ஜ்ஞாநம் ஜ்ஞாநிநஸ் தத்வதர்சின: ||) (கீதை 4-34)
ஞானிகளை வணங்குவதாலும் நேரே குறிப்பிடாமல் கேட்பதாலும், ஶுஶ்ருஷை செய்வதாலும்
ஆத்மாவைப் பற்றிய அறிவைப் பெறுவாயாக.
உண்மையைக் கண்ட ஞானிகள் உனக்கு அவ்வறிவை உபதேஶிப்பார்கள்.

17-(சக்ராதிதாரணம் பும்ஸாம் பரஸம்பந்த வேதநம் |
பதிவ்ரதா நிமித்தம் ஹி வலயாதி விபூஷணம் || )
சக்கரம் முதலியவைகளை தரிப்பது பரமாத்ம ஸம்பந்தத்தைக் காட்டுகிறது.
வளை முதலிய ஆபரணங்கள் பதி வ்ரதைக்கு அடையாளங்களன்றோ.

18-தன் வலது புறத்தில் அடக்கத்துடனும் அஞ்ஜலியோடும் கூடிய சீடனை இருத்தி,
ஞானத்தைத் தரவல்ல தன் வலதுகையை சீடனின் சிரத்தில் வைத்து,
தன் இடது கையைச் சீடனின் மார்பில் வைத்து, தன் ஆசார்யனை இருதயத்தில் தியானித்து,
குருபரம்பரையை ஜபித்து இவ்வகையாக எம்பெருமானை சரணமடைந்து ரிஷிசந்தஸ் தேவதைகளுடன் கூடிய
மூலமந்த்ரத்தைத் தானே கருணையால் சீடனுக்கு உபதேசம் செய்யக்கடவன்.

19-ஜநகாநாம் குலே கீர்த்திமாஹரிஷ்யதி மே ஸுதா (ரா-பா 67.22)
ஜனக வம்ஶத்திற்கு என் பெண் புகழை உண்டாக்குவாள்.

20-யஶ்ச ராமம் ந பஶ்யேத்து யஞ்ச ராமோ ந பஶ்யதி|
நிந்தித: ஸ வஸேல்லோகே ஸ்வாத்மாப்யேநம் விகர்ஹதே||(ரா-அ 17-14)
[எவனொருவன் ராமனைக் காணாதிருப்பானோ, எவனை ராமனும் காணாதிருக்கிறாரோ அவன் உலகில்
நிந்திக்கப்பட்டவனாய் வாழ்வான்; தன் ஆத்மாவும் இவனை இகழும்]

21-இமௌ ஸ்ம முநிஶார்தூல! கிங்கரௌ ஸமுபஸ்திதௌ|
22-ஆஜ்ஞாபய யதேஷ்டம் வை ஶாஸநம் கரவாவ கிம் ||(ரா -பா 31-4)
[முநிஶ்ரேஷ்டரே! நாங்களிருவரும் (தேவரீருக்குக்) கைங்கரியம் செய்பவர்களாக அருகில் இருக்கிறோம்.
(தேவரீருடைய) இஷ்டப்பட கட்டளையிடவேண்டும்;
(தேவரீருடைய) எந்தக் கட்டளையை நாங்கள் செய்ய வேண்டும்? ]

23-.(விஷ்ணுர் மாநுஷ ரூபேண சாசர வஸுதாதலே )
விஷ்ணுவானவர் மனித வுருவுடன் பூமியில் ஸஞ்சரித்தார். (பாரதம் – வனபர்வம்)

24.(இதாநீமபி கோவிந்த லோகாநாம் ஹிதகாம்யயா |
மாநுஷம் வபுராஸ்தாய த்வாரவத்யாம் ஹி திஷ்டஸி || )
கோவிந்தனே! இப்போதும் உலகங்களுக்கு நன்மைக்காக மனித வுருக்கொண்டு த்வாரகையில் நிற்கிறாய்

25-ஆசார்யஸ்ஸ ஹரிஸ்ஸாக்ஷாத் சரரூபி ந ஸம்ஶய:
ஆசார்யனே நேரே நடமாடும் பரம புருஷன்: இதில் ஐயமில்லை.

26. குருரேவ பரம் ப்ரஹ்ம –,குருவே மேலான ப்ரஹ்மம்; குருவே மேலான தனம்; குருவே மேலான காமம்;
குருவே மேலான ப்ராப்யம்; குருவே மேலான கல்வி; குருவே மேலான ப்ராபகம்;
அப் பரம் பொருளையே உபதேசிப்பதால் குரு அதைக் காட்டிலும் உயர்ந்தவர்.

27.அயம் ஸ கத்யதே ப்ராஜ்ஞை: புராணார்த்த விஶாரதை|
கோபாலோ யாதவம் வம்ஶம் மக்நமப் யுத்த ரிஷ்யதி||(வி-பு. 5-20-49)

[புராணப் பொருள்களிலே பண்டிதர்களான பேரறிவாளர்களாலே அவனே கோபாலனென்று கொண்டாடப்படுகிறான்.
தாழ்ந்து கிடந்த யதுகுலத்தைக் கைதூக்கிவிடப் போகிறான் இவன்]

28-(அனந்த: ப்ரதமம் ரூபம் லக்ஷ்மணஶ்ச தத: பரம் |
பலபத்ரஸ் த்ருதீயஸ்து கலௌ கஶ்சித் பவிஷ்யதி || )
திருவனந்தாழ்வான் முதல் மூர்த்தியாவான். லக்ஷ்மணன் அவனுடைய அடுத்ததான அவதாரமாவான்.
பலராமன் அவனுடைய மூன்றாவது மூர்த்தியாவான்,
நாலாவது மூர்த்தியாகக் கலியுகத்தில் ஒரு மஹாபுருஷர் அவதரிக்கப் போகிறார்.

29. ந தர்மநிஷ்டோஸ்மி நசாத்மவேதி நபக்திமாந் த்வச்சரணாரவிந்தே|
அகிஞ்சநோஅநந்யகதி: ஶரண்ய த்வத்பாதமூலம் ஶரணம் ப்ரபத்யே||

[கர்மயோகத்தில் நிலைநிற்பவனல்லேன், ஆத்மஜ்ஞானமுமில்லாதவன்,
உன் திருவடித் தாமரையில் பக்தி யோகமும் இல்லை, கைமுதலற்றவன், வேறு புகலற்றவன்,
ஶரணமடையத்தக்கவனே! உன் திருவடியை ஶரணமடைகின்றேன்]

30-ய ஏஷோஅந்தராதித்யே ஹிரண்யமய: புருஷோத்ருச்யதே ஹிரண்யசமச்ருர்
ஹிரண்யகேச ஆப்ரணகாத் ஸர்வ ஏவ ஸுவர்ண: I
தஸ்ய யதா கப்யாஸம் புண்டரீகமேவக்ஷிணீ II

ஸுர்யனுக்கு நடுவில் தங்கம் போல் அழகிய உருவையுடைய எந்த இந்தப்பரமபுருஷன் காணப்படுகிறானோ,
அவன் ஸுவர்ணம் போன்று அழகான மீசையையும், கேசங்களையும்,நகம் முதலிய எல்லா அவையங்களையுமுடையவன்.
அவனுக்கு ஸூர்யனால் மலரும் தாமரை போன்ற இருகண்கள் உள.

31. “காருண்யாத் குருஷூத்தமோ யதிபதி:”
காருண்யத்தால் ஆசார்யகளுள் சிறந்தவர் எதிராஜர்.

32. அழிவற்ற செல்வம்.

33. “பஹூநி மே வ்யதீதாநி ஜந்மாநி
அர்ஜுனா! உனக்குப்போலே எனக்கும் பல பிறப்புகள் கடந்துவிட்டன.
(ஆயினும் யான் அவற்றை அறிவேன்; நீ அறிய மாட்டாய்.)

34.“ஆஸுரிம் யோநிமாபந்நா: மூடா ஜந்மநி ஜந்மநி |
மாம்ப்ராப்யைவ கௌந்தேய ததோ யாந்த்ய தமாம் கதிம் ||”
அர்ஜுனா! அஸுரஸ்வபாவமுள்ள ஜன்மத்தை அடைந்து ஜன்மந்தோறும் மூடர்களாய்
என்னை அடையாமலே அதிலும் கீழான கதிக்குப் போகிறார்கள்.

35. “ப்ரயாணகாலே சதுரஸ்ஸ்வஶிஷ்யாந் பதாந்திகஸ்தாந் வரதோ ஹி வீக்‌ஷய|
பக்திப்ரபத்தீ யதி துஷ்கரே வ: ராமாநுஜார்யம் நமதேத்யவாதீத்||”
தன் சரம காலத்தில் தன் திருவடிவாரத்திலிருந்த நாலு ஶிஷ்யர்களைப் பார்த்து நடாதூர் அம்மாள்
‘பக்தி ப்ரபத்திகள் உங்களுக்கு செயற்கரியவையாகில் எம்பெருமானாரை ஶரணமாக கொள்ளுங்கள்’ என்று உபதேஶித்தார்.

36. (ஸத்யம் ஸத்யம் புநஸ் ஸத்யம் யதிராஜோ ஜகத்குரு|
ஸ ஏவ ஸர்வலோகாநாம் உத்தர்த்தா நாத்ர ஸம்ஶய :||)
முக்காலும் சத்யம் செய்து கூறுகிறேன்; யதிராஜரே உலக குருவாவர். எல்லாவற்றையும் உய்விக்க செய்ய வல்லவர் அவரே.

37. (உபாயோபேய பாவேன தமேவ ஶரணம் வ்ரஜேத்)
உபாயமாகவும், உபேயமாகவும் ஆசார்யனையே ஶரணமடைய வேண்டும்.

38. தஸ்மை நமோ மது ஜிதங்க்ரி ஸரோஜதத்வ
ஜ்ஞாநாநுராக மஹிமாதிஶயாந்தஶீம்நே|
நாதாய நாதமுநயே அத்ர பரத்ர சாபி
நித்யம் யதீய சரணௌ ஶரணம் மதீயம் ||(ஸ்தோத்ர ரத்னம் 2)

[இவ்வுலகிலும் மேலுலகிலும் எப்போதும் எந்த ஶ்ரீமந்நாதமுனிகளுடைய திருவடிகள் எனக்குப் புகலிடமோ
மதுவை அழித்த எம்பெருமானுடைய திருவடித்தாமரைகளைப் பற்றிய உண்மையறிவினுடையவும் அன்பினுடையவும்
பெருமேன்மையின் முடிவே எல்லையாயிருப்பவரும், எனக்கு நாதராயிருப்பவருமான அந்த நாதமுனிகட்கு நமஸ்காரம்.]

39. (ஸாத்யாபாவே மஹாபாஹோ ஸாதநை: கிம் ப்ரயோஜநம்)
ஸாத்யமில்லாவிடில் ஸாதனங்களால் என்ன பயன்? (வி-பு. 1-19.36)

40. உபாதத்தே ஸத்தாஸ்திதிநியமநாத்யைஶ் சிதசிதௌ
ஸ்வமுத்திஶ்ய ஶ்ரீமாநிதி வததி வாகௌபநிஷதீ|
உபாயோபேயத்வே ததிஹ தவ தத்த்வம் ந து குணௌ
அதஸ்த்வாம் ஶ்ரீரங்கேஶய ஶரணமவ்யாஜம்பஜம் ||(ர-ஸ்த 2-88)

[ஹே ஶ்ரீரங்கநாதனே! ‘ஶ்ரீ மந்நாராயணன் – ஸ்ருஷ்டி, ஸ்திதி, நியமனம் முதலிய காரியங்களால்
சேதனாசேதனங்களைத் தனக்காக ஸ்வீகரிக்கிறான்’ என்று உபனிஷத் வாக்யமானது சொல்லுகிறது.
ஆகையால் இவ்விஷயத்தில் உபயத்வமும் உபேயத்வம் உனக்கு முக்யம்; கௌணமல்ல.
ஆகையால் உன்னை நிர்வ்யாஜமான உபாயமாக அடைந்தேன்.]

41-மாதா பிதா யுவதயஸ் தநயா விபூதி:
ஸர்வம் யதேவ நியமேந மதந்வயாநாம் |
ஆத்யஸ்ய ந: குலபதேர் வகுளாபிராமம்
ஶ்ரீமத் ததங்க்ரியுகளம் ப்ரணமாமி மூர்த்நா||(ஸ்தோ – ர 5)
[என் வம்ஶத்தவர்களுக்கு எப்போதும் தாயும், தந்தையும், மாதரும், மக்களும், பெருஞ்செல்வமும்,
மற்றுமுள்ள எல்லாமும் எப்போதும் எந்த ஆழ்வாருடைய திருவடியிணையேயோ, நமக்கு முதல்வரும்,
குலபதியுமான அவருடைய, மகிழமலராலே அலங்கரிக்கப்பட்டதும், வைணவச் செல்வமுடையதுமான
அத்திருவடியிணையைத் தலையால் வணங்குகிறேன்.]

42-ப்ரத்யக்ஷே குரவ: ஸ்துத்யா-ஆசார்யர்கள் நேரில் துதிக்கத் தக்கவர்கள்.

சரமோபாய நிர்ணய ப்ரமாணத் திரட்டு முற்றிற்று.

————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ நாயனாராச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

தமிழ் மொழியின் வரலாறு–வி.கோ. சூரியநாராயண சாஸ்திரியார்

January 16, 2022

https://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0452.html

கமழினிய வாங்கிலநற் கலைக ளென்னுங்
கடாம்பொழிந்திட் டஞ்ஞான மரத்தைச்சாடி
யமைதிகொளு மில்லர்தம தரிய வுள்ள
மாங்கனி*று கிரிசரமா யமர்ந்த தேனு
மமிழ்துநிகர் பாஷைகளி னலகில் பாண்பை
யகங்கொணர்ந்து நறும்பொருள்க ளார்ந்து செல்லுந்
தமிழ்மொழியின் வரலாற்றங் கரையின் மாட்டுத்
தனிமகிழ்ந்து விளையாடி யுலவு மன்றே.

பல்லாயிரவாண்டுகட்கு முன்னர் இந்தியா காடடர்ந்து விரிந்ததோர் நிலமாயிருந்தது.
அக்காடுகளில் தீயவிலங்குகள் திரிந்து கொண்டிருந்தன.
ஆசிரியர் நச்சினார்க்கினியரும் அகத்தியனார் தெற்கே வந்தகாலத்துக் காடுகெடுத்து நாடாக்கிப்
பொதியின்க ணிருந்தனரெனத் ‘தொல்காப்பியச் சிறப்புப்பாயிரவுரை’யிற் கூறாநின்றனர்.

தமிழ்ப்பாஷையின் வழிமொழிகளாகித் தனித் தனி இயங்கப் புகுந்தனவற்றுள்
தெலுங்கு, மலையாளம், கன்னடம், துளுவம் ஆகிய நான்கும் தலை நின்றனவாம்.
இக்கருத்தினையே காலஞ் சென்ற திருவனந்தைச் சுந்தரம் பிள்ளை யவர்கள்
தமது ‘மனோன்மணீய’ நாடக நூலில் தமிழ்தெய்வ வணக்கங்கூறுமிடத்து,

“பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத் துடைக்கினுமோர்
எல்லையறு பரம்பொருண்முன் னிருந்தபடி யிருப்பதுபோற்
கன்னடமுங் களிதெலுங்குன் கவின்மலையா ளமுந்துளுவும்
உன்னுதரத் துதித்தெழுந்தே யொன்றுபல வாயிடினும்
ஆரியம்போ லுழகவழக் கழிந்தொழிந்து சிதையாவுன்
சீரிளமைத் திறம்வியந்து செயன்மறந்து வாழ்த்துதுமே”

என்ற இனிய பாஷைகளிற் கூறி வற்புறுத்துதல் காண்க.

தமிழ்நாடென்பது இந்தியா முழுவதும், சுமாத்திரா ஜாவா முதலிய தீவுகளை யுள்ளடக்கிய பெருநிலப் பரப்புமாயிருந்தது.
இதற்குக் ‘குமரிநாடு’ என்பது பெயர்.

முற்காலத்தில் சுவடியை ‘நெடுங்கணக்கு’ என்று கூறுதலும்
எழுத்தறிவிற்கும் ஆசிரியனைக் ‘கணக்காயன்’ என்று கூறுதலுங் காண்க.

“கற்றதூஉ மின்றிக் கணக்காயர் பாடத்தாற்
பெற்றதாம் பேதையோர் சூத்திர – மற்றதனை
நல்லா ரிடைப்புக்கு நாணாது சொல்லித் தன்
புல்லறிவு காட்டி விடும்.”

என்ற ‘நாலடியா’ரினும் இச்சொல் யாங்கூறிய பொருளில் வழங்குதலுணர்க.

” செந்தமிழ் நாடே,
சந்தனப் பொதியச் செந்தமிழ் முனிவனுஞ்
சௌந்தர பாண்டிய னெனுந்தமிழ் நாடனுஞ்
சங்கப் புலவருந் தழைத்தினி திருக்கும்
மங்கலப் பாண்டி வளநா டென்ப”

என்ற சூத்திரத்தாற் செந்தமிழ் நாடு இன்னதென்பது அறிக

‘தொல்காப்பிய’ மொன்றுமே முழு முதலிலக்கண நூலாய்க் குறைபாடின்றி யிதுகாறும் இலங்காநின்றது;
இனியும் இலங்கா நிற்கும்.
இவ்வியற்றமி ழிலக்கணநூல் ‘எழுத்து’, ‘சொல்’, ‘பொருள்’ என்ற மூன்றதிகாரங்களாக வகுக்கப்பட்டுளது.

இனி ஐவகை யிலக்கணங்களாவன ‘எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி’ யென்பன

பொருளணியியல் தன்மையணி முதலாக முப்பத்தைந்தணிகள் கூறப்பட்டுள.
இப்பொருளணிகளிற் பல உவமமென்ற ஓரணியினடியாகவே தோன்றின வென்பது பல்லோர் துணிபு.
ஆசிரியர் தொல்காப்பியனாரும் இத்துணிபினர் போலும். இது வடமொழி அப்பைய தீக்ஷிதரவர்களுக்கும் உடன்பாடாதல்,

“உவமை யென்னுந் தவலருங் கூத்தி
பல்வகைக் கோலம் பாங்குறப் புனைந்து
காப்பிய வாங்கிற் கவினுறத் தோன்றி
யாப்பறி புலவ ரிதய
நீப்பறு மகிழ்ச்சி பூப்ப நடிக்குமே”

என்ற அவரது ‘சித்திரமீமாஞ்சைக்’ கூற்றினான் விளங்கும்.
இனிச் சொல்லணியியலில் மடக்கும் சித்திரமுமாகிய மிறைக்கவிகளின் பாகுபாடுகளும், அவற்றினிலக்கணங்களும் பரக்கக் கூறப்பட்டுள.

வெறுப்புச் சுவையிற் ‘சீ’ யென்றும், வெகுளிச் சுவையிற் ‘போ’ வென்றும், உவகைச் சுவையில் ‘வா’ வென்றும்
கூறப்படுஞ் சொற்களைக் காண்க. ‘ஐ’ யென்பது வியப்பினாலும், ‘ஓ’ வென்பது அவலத்தினாலும்
‘ஐயோ’ வென்பது அச்சத்தினாலும் எழுந்தனவாமா றுணர்க.
இவைகளெல்லாஞ் ‘சுவை வகை’ யானுண்டாகிய சொற்களாம்.

தமிழ்மொழியின் கண்ணே, ‘அடா’ ‘ஏட’ என்ற விரண்டு சொற்களும் பிறரை விளித்தற்கட் பெரிதும் பயன்படுகின்றன.
“ஏட வென்பது தோழன் முன்னிலை” என்று கூறப்பட்டிருத்தலுங் காண்க.

மாம்’ (என்னை) என்பது வடமொழித் தன்மை யொருமை. ‘யாம்’ ‘எம்மை’ யென்பன தமிழ்மொழித் தன்மைப் பன்மை.

தமிழ்மொழியும் வடமொழியுந் தேவபாஷைகளென்றும், இவ்விரண்டும் முறையே
அகத்தியனார்க்கும் பாணிநியார்க்கும் சிவபெருமானால் உபதேசிக்கப்பட்டனவென்றுங் கூறாநிற்பர்.
“ஆதியிற் றமிழ்நூ லகத்தியற் குணர்த்திய, மாதொருபாகனை வழுத்துதும்” எனவும்,
“தழற்புரை நிழற்குவு டந்தமிழ்” எனவும்,
“வடமொழியைப் பாணிநிக்கு வகுத்தருளியதற் கிணையாத், தொடர்புடைய தென்மொழியைத் தொகுகடல் சூழ்வரைப்பதனிற்,
குடமுனிக்கு வற்புறுத்தார் கொல்லேற்றுப் பாகர்” எனவும்,
” இருமொழிக்குங் கண்ணுதலார் முதற்குரவர்” எனவும் முந்தையோர் கூறியிருத்தலையுங் காண்க.

“பின்பு பொன்னிறைந்ததாயும் அழகுடைத்தாயும் முத்துமணி இவற்றால் அணியப்பட்டதாயும்
நகரத்து அரணோடு இணைக்கப்பட்டதாயுமுள்ள பாண்டியர் வாயிற்கதவை வானரர்காள்! போய்க் காண்பீர்” என
வான்மீகி முனிவர் கூறுகின்றமையானும்
வியாத முனிவரும் ‘மகாபாரதத்’ தின் கண்ணே தமிழ்நாட்டின் சிறப்பையும் பாண்டியர் அரசையும் பற்றிக் கூறுகின்றமையானும்,
பாண்டியர் ஆண்ட நாட்டின் தொன்மையும் அவர் பேசிய தமிழ்மொழியின் தொன்மையும் ஓராற்றாற் றெளியப்படுமாறு காண்க.

அடியார்க்கு நல்லார்
“அக்காலத்து அவர் நாட்டுத் தென்பாலி முகத்திற்கு வடவெல்லையாகிய பஃறுளியென்னும்
ஆற்றிற்குங் குமரியென்னு மாற்றிற்கு மிடையே எழுநூற்றுக் காவதநாடும் இவற்றின் நீர்மலி வானென மலிந்த
ஏழ்தெங்க நாடும் ஏழ்மதுரை நாடும், ஏழ்முன்பாலைநாடும், ஏழ்பின்பாலைநாடும் ஏழ் குன்ற நாடும் ஏழ்குண காரை நாடும்,
ஏழ்குறும்பனைநாடும் என்னும் இந்த நாற்பத்தொன்பது நாடும், குமரி கொல்லம் முதலிய பன்மலை நாடும்,
காடும, நதியும் பதியும் தடநீர்க் குமரி வடபெருங்கோட்டின் காறும் கடல் கொண்டொழிதலாற் குமரிப் பௌவமென்றார்” என்று கூறினார்.

எழுநூற்றுக்காவதம் அகன்றுகிடந்த நாற்பத்தொன்பது தமிழ் நாடுகள் கடல்கொள்ளப்பட்டன வென்பது புலனாம்.
இக்காலத்து அளவின்படி ஒரு காவதமென்பது பத்து மைலாக, எழ்நூறு காவதமும் ஏழாயிரமை லெல்லையனவாம்.
‘இந்துமகா சமுத்திரம்’ இருநூற்றைம்பது லக்ஷம் சதுரமைலுள்ளது.
இதனால் அது சிறிது குறையப் பதினாறுலக்ஷம் மைல் நீளமும் பதினாறு லக்ஷம் மைல் அகலமுடைய தென்பது பெறப்படும்.
பெறவே இப்பதினாறு லக்ஷம் மைல் நீளத்தில் ஏழாயிரம் மைலளவு நிலனாயிருந்து கடல் கொள்ளப்பட்டிருத்தல் வேண்டும்.
இனி, ‘மோரீசத்தீவு’க்கும் ‘பம்பாய்’ நகரத்துக்கும் இடையிலுள்ள நீர்ப்பரவை இரண்டாயிரத்தைந்நூறு மைல் நீளமுள்ளதாம்.
மோரீசுத்தீவிற்கும் அதற்குத் தெற்கிலுள்ள ‘கெர்கியூலன்’ என்னுந் தீவிற்கும் இடையிலுள்ள நீளமும் அவ்வளவினதேயாம்.

ஆகவே நீளத்தில் இக்காலத்திலுள்ள குமரிமுனை’யிலிருந்து கெர்கியூலன் தீவின் தெற்கு வரையிலும்,
அகலத்தில் மடகாசிகர்தீவு’ முதற் ‘சுமாத்திரா’, ‘ஜாவா’ முதலியவற்றை யுள்ளடக்கிய சந்தாத்தீவுகள்’ அளவும்
விரிந்துகிடந்த குமரிநாடு கடல் கொள்ளப்பட்ட தென்பது போதரும்.

இக்குமரி நாடுதான், கிழக்கே சந்தாத்தீவுகள் வரையினும், மேற்கே மடகாசிகர் தீவு வரையினும் அகன்று கிடந்ததாகக் கூறப்படும்
‘இலெமுரியா’ என்ற நிலப்பரப்பாம். இந்நிலப்பரப்பு ஒரு காலத்தெழுந்த பெருவெள்ளத்தில் ஆழ்ந்து போயிற்றென்றும்
அவ்வாறு ஆழந்துபோன பெருநிலம் இவ்வுலக முழுவதற்கும் நடுவிற்கிடந்த பெரும்பரப்பாகலான் மக்கள் முதன்முதல்
இந்நிலத்திலிருந்து பின் நாற்றிசையினும் பிரிந்து சென்று வேறுபட்டன ரென்றும்,
அங்ஙனம் இதிலிருந்த தொல்லோர் வழாங்கியது தமிழ்ப் பாஷையா மென்றும்,
பலகாரணங்கள் காட்டி விளக்கி நிறுவினார் மேற்புல் விஞ்ஞானிகள்ளொருவர்.
இது கேட்பதற்கு இனிதாகவும் விஞோதமாகவு மிருக்கின்றது.
அதனானே யாம் மேலெடுத்துக் காட்டிய தமிழ்நூற் பகுதிகளிற்கண்ட விஷயங்களெல்லாம் வலியுறுமாறு காண்க.

I). ஆதிகாலம்: கி.பி. 100–க்கு முற்பட்டகாலம்
(II). இடைக்காலம் (1) முற்பகுதி: கி.பி. 100 முதற் கி.பி. 600 வரையிலுள்ள காலம்.;
(2) பிற்பகுதி; கி.பி. 600 முதற் கி.பி. 1400 வரையிலுள்ள காலம்.
(III). பிற்காலம்: கி.பி. 1400 முதல் இற்றை நாள் வரையிலுள்ள காலம்.

இவ்வாதி காலத்து நூல்களுட் கடல்கொண்டழிந்தனவும் இன்னுங் கண்டுபிடிக்கப் படாதனவும் போக,
இப்போழ்தத்துக் கிடைப்பன தலைச் சங்கத்தார் காலத்துச் செய்யப்பட்ட ‘அகத்தியம்’ என்ற நூலின்கட் சில சூத்திரங்களும்,
இடைச்சங்கத்தார் காலத்துச் செய்யப்பட்ட ‘தொல்காப்பியம்’ என்ற இலக்கணநூலும்
கடைச்சங்கத்தார் காலத்துச் செய்யப்பட்ட ‘எட்டுத் தொகை’ என்ற நூற்றொகையுளடங்கிய எட்டு நூல்களும்
‘பத்துப்பாட்டும்’ ‘பதினெண் கீழ்க்கணக்கு’மாம். எட்டுத்தொகை நூல்களைப் பின்வரும் பாட்டாலுணர்க:

“நற்றிணை நல்ல குறுந்தொகை யைங்குறுநூ
றொத்த பதிற்றுப்பத் தோங்கு பரிபாடல்
கற்றறிந்தார் சொல்லுங் கலியோ டகம்புறமென்
றித்திறத்த வெட்டுத்தொகை”

இதன்மேற் கி.பி. பதினோராம் நூற்றாண்டிலிருந்த குலோத்துங்கச்சோழன வைக்களத்தை யலங்கரிதத்தார்
கம்பர், ஒட்டக்கூத்தர், புகழேந்திப் புலவர் முதலாயினார்.
முன் சங்கத்தார் காலத்திலே ஓர் ஔவையார் இருந்தன ரென்பதன்றி இக்குலோத்துங்கன் காலத்தும் ஓர் ஔவையார் இருந்தனரென்ப.
இருவர் ஔவையாரெனக் கொள்ளலே யேற்புடைத்தாம்.

கம்பர் வடமொழியினின்றும் இராமகதையைக் கற்றுணர்ந்து தமது சுதந்திர யூகமுங் கற்பனா சக்தியுங்காட்டி
விசேஷக்கருத்து நலம் வாய்ப்ப, பத்தழகும் பாங்குடனமைய ஒன்பான் சுவையு மொருங்கே யொழுகப்
பதினாயிரஞ் செய்யுட்களில் ‘இராமாயணம்’ செய்துமுடித்தனர்.
அஃது அவர் பெயரொடுங் கூட்டிக் ‘கம்ப ராமாயணம்’ என்று இன்றும் வழங்குகின்றது.
அஃது என்றும் வழங்கும் என்பதில் ஐயுறவில்லை.
கம்பர் இராமாயணத்தைத் தவிர்த்துச் சில சிறு நூல்களுஞ் செய்துளர்.
அவை இராமாயணம்போல அத்துணை மதிக்கப்படுவன வல்ல.
ஒட்டக்கூத்தர் இராமாயணத்தின் பிற்பகுதியாகிய ‘உத்தரகாண்ட’த்தை இரண்டாயிரஞ் செய்யுட்களில் யாத்து முடித்துக்
கம்ப ராமாயணத்தைப் பூர்த்தி செய்தனர்.

இனிச் சரித்திர சம்பந்தமாகவும் புராண சம்பந்தமாகவும் தமிழ் மொழியின் சம்பந்தமாகவும் மிகப் பேர்படைத் தொளிரும்
மதுரைமா நகரின் கண்ணே புதிதாகத் ‘தமிழ்ச் சங்கம்’ ஒன்று தாபிக்கப்பட்டு நடந்து வருகின்றது.
அதற்கு அங்கமாகப் ‘பாண்டியன் புத்தகசாலை’யும் ‘சேதுபதி செந்தமிழ்க் கலாசாலை’யும் ஏற்படுத்தப் பட்டுன.
முன்னதன்கட்பல அருமையான ஏட்டுப் பிரதிகள் சேமித்து யாவருஞ் சென்றுபார்க்கும்படி வைக்கப்பட்டுன;
அச்சான நூல்களுள்ளும் அநேக மிருக்கின்றன.

——————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ கோதை நாச்சியார் தாலாட்டு–

January 16, 2022

ஸ்ரீ கோதை நாச்சியார் தாலாட்டு : ஒரு முன்னுரை

கொண்டல் வண்ணனைக் குழவியாய்க் கண்டு குதூகலித்துப் பாடிய
விட்டு சித்தரின் மகள் கோதை நாச்சியார் எனப்படும் ஆண்டாள்.
குழல் இனிது, யாழ் இனிது, மழழைச் சொல் அமுதினிது என்று இறைவனைப் பிள்ளையாய்க் கண்டு
ஆனந்தித்துப் பாடிய பெரியாழ்வாழ்வருக்கு – உண்மையான தூண்டுதல் (inspiration)
ஆண்டாள் என்ற இளம் சிட்டிடமிருந்து கிடைத்திருக்க வேண்டும்.

பழந்தமிழ்நூல் வெளியீடுகளுள் பத்துப்பாட்டு, பதிற்றுப் பத்து, பரிபாடல், புறநானூறு முதலிய நூற்பதிப்புகளுக்கு
ஆழ்வார்திருநகரி ஏட்டுப் பிரதிகள் மிகவும் உபயோகமாயிருந்தன என்பது உ.வே.சாவின் கூற்று.
அத்தகைய ஆழ்வார்திருநகரியில் கிடைத்திருக்கும் மற்றுமொரு தமிழ்க் கருவூலம்தான், “கோதை நாச்சியார் தாலாட்டு”.
ஏடுகளில் கண்டபடி 1928-ல் ஆழ்வர்திருநகரி திருஞான முத்திரைக் கோவை பதிப்பாக வெளிவந்திருக்கிறது.

வைணவம் என்பதின் மறு பெயர் அன்பு, பரிவு, காதல் என்பவை.
முதல் மூவருக்கிடையில் இடித்துப் பழகும் தோழனாக நாராணன் இடையில் புகுந்தான்.
வாள் கொண்டு போர் செய்யும் வேல் மாந்தர் கள்ளத் தொழில் செய்த போது, மறைமகன் திருடனாக வந்து வழி மறைத்தான்,
பறைமகன் ஒருவன் பரம் பொருளைத் தொழத்தடையான போது மறை சொல்லும் நூலார் தலை மேல்
தூக்க வைத்தான் நம் பெருமாளான, “நீதி வானவன்!”,
கள்ளமற்ற விட்டு சித்தர் உள்ளம் கவர்ந்து வெண்ணெய் உண்ட வாயனாக வளைய வந்தான்
வீட்டு முற்றத்தில் மணிவண்ணன்,

ஆனால், அவர் மகள்கோதைக்கோ, “மானிடற்கு மணமென்ற பேச்சுப் படின் மரித்திடுவேன்” எனப்
பேச வைத்து மணவாளனாக வந்து உய்யக் கொண்டான்.
இப்படி வீட்டுக் கொல்லையில் வளைய வரும் கன்று போல், கை கொண்டு நெருடும் அன்பர்க்கு கழுத்தை தரும்
பசும் கன்று போல் அன்று முதல் இன்றுவரை வளைய, வளைய வருகிறான்,

“பண்டமெல்லாம் சேர்த்து வைத்துப் பால் வாங்கி மோர் வாங்கிப்,
பெண்டுகளைத் தாய்போற் பிரியமுற ஆதரித்து,
நண்பனாய்,மந்திரியாய், நல்லாசிரியனுமாய்,
பண்பிலே தெய்வமாய்ப் பார்வையிலே சேவகனாய்”

வளைய, வளைய வருகிறான் மாதவன்.
இத்தனைச் சுகம் தரும் வைணவத்தின் மறுபெயர் அன்பு, காதல், பரிவு என்றால் மிகையோ?

எனவே பரிவுடன் வரும் தாலாட்டில் வைணவத்தின் மெல்லிசை, குழல் போல் ஒலிப்பது தவறோ? தவறில்லை
என்று சொல்லித் தாலாட்டுப் பாடினர் முன்னைய மாந்தர்.
கண்ணனுக்குத் தாலாட்டு பலபாடி வைத்து விட்டார் புதுவைப் பட்டர் என்று சொல்லி,
கோதைக்குத் தாலாட்டுப்பாடினர் கொங்கைப் பெண்டிர்!

இத்தாலாட்டு பல வைபவங்கள் கொண்டது.
புதுவை நகர் என்னும் ஸ்ரீவில்லிபுத்தூரின் அழகு முதலில் சொல்லப்படுகிறது.

கரும்பு கலகலெனக் கஞ்ச மலர் விரிக்கக்
கரும்பு குழலூதத் தோகை மயில் விரிக்க 20

மாங்கனிகள் தூங்க மந்தி குதி கொள்ளத்
தேன் கூடு விம்மிச் செழித்து வழிந்தோடச் 21

புன்னையும் பூக்கப் புறத்தே கிளி கூவ
அன்னமும் பேசும் அழகான தென் புதுவை 26

கன்னல் தமிழர் வாழ்வுடன் இணைந்த ஒரு பயிர். கன்னல் மொழிப் பெண்டிர் நிறைந்த தமிழ் மண்ணில்
கன்னல் “கல, கலவென”ப் பேசுவதாகச் சொல்வது ஏற்றுக் கொள்ளத் தக்கதே!
கண்ணன் ஊரில் கரும்புகள் குழல் ஊதுவதும் இயல்பான ஒன்றே!
கோதை பிறந்த ஊர், கோவிந்தன் வாழும் ஊர் என்ற பெருமிதத்தில்
தேன் கூடுகள் கூட நெஞ்சு விம்மி தேன் பாய்ச்சுவது கவிச் சுவையின் உச்சம்!!

அடுத்து, கோதை நாச்சியாரின் திரு அவதாரம்!
கிரேக்க, ரோம பழம் தொன்மங்களை விஞ்சும் தொன்மங்கள் (myth) தமிழில் உண்டு என்பதற்கு
கோதையின் கதை நல்ல உதாரணம். பூமி விண்டு கோதை பிறக்கிறாள். மண்ணின் மாது அவள்.
அப்போது விஷ்ணுசித்தன்

அலர்மகளைத் தானெடுத்துச்செப்பமுடன்
“கண்ணே திருவாய் மலர்ந்தருள்வீர்”!! 35

“அய்யா உமக்கடியேன் அருமை மகளாக்கும்,
மெய்யார்ந்த தாயார் மென்மைத் துளசி” என்றார்!!! 36

சீதை போல் பூமியின் புதல்வியான கோதை,
கண்விழித்துச் சொல்லும் முதற் சொல்,
“மெய்யார்ந்த தாயார் மென்மைத் துளசி” என்பது!

இவள் துளசியின் புதல்வி! காளிதாசன் சொல்லாத கவி நயம் ஒரு எளிய தமிழ்த் தாலாட்டில் கிடைப்பது,
நாம் செய்த பாக்கியம்! வைணவத் தொன்மங்களில், குரு பரம்பரைக் கதைகளில் மிகச் சாதாரணமாக
பக்தனுக்கும், பரம்பொருளுக்கும் உரையாடல் நடக்கும்.
இது, இந்த நூற்றாண்டு “கோபல்ல கிராமம்” வரை கடைபிடிக்கப் படுகிறது
(கோபல்ல கிராமத்தின் மூத்த குடிகள் பரம வைஷ்ணவர்கள்).
அதனால் தான், திருவரங்கத்துயில் பரம்பொருள், “நம் பெருமாள்” என்றழைக்கப் படுகிறார்.
நம் பெருமாள், நம்மாழ்வார், நம் ஜீயர், எம்பெருமானார் என்று இவர்கள் கொண்டாடும் பந்தம் பக்தனைப் பிச்சேற்றுவது!!
அந்தச் சம்பிரதாயம் மாறாமல் விட்டு சித்தர் பெருமாளிடம் போய் பெண்வந்த காரணம் கேட்டுபேரும் வைத்து வருகிறார்.

பெண் கொணர்ந்த விஷ்ணு சித்தன் பெருமாளைத் தானோக்கிப்
‘பெண் வந்த காரணமென் பெருமாளே சொல்லு” மென்றார் 39

அப்போது மணிவண்ணன்

‘அழகான பெண்ணுனக்குச்செப்பமுடன்
வந்த திருக்கோதை நாயகியார் 40

என்று பேருமிட்டு எடுத்துக் குழந்தைதனை
உன்றன் மனைக்கு உகந்துதான் செல்லும்’ என்றார். 41

விட்டு சித்தர், கண்ணனுக்குப் பாடிய வரிகளை ஒரு வைணவ உரிமையுடன் கோதைக்குப் பாடுவதாகச் சொல்வது,
“தொண்டீர்! எல்லீரும் வாரீர், தொழுது, தொழுது நின்றார்த்தும்!” என்ற நம்மாழ்வாரின் எட்டாம் நூற்றாண்டு
வைணவ அறைகூவல் (an address of Vaishnava congress) இன்றளவும் கேட்பதன் அறிகுறியென்றே
கொள்ள வேண்டியுள்ளது. மேலும் அவரே சொல்வது போல்,

“தடங்கடல் பள்ளிப்பெருமான், தன்னுடைப் பூதங்களேயாய் (பூதம்=பக்தன்)
கிடந்தும், இருந்தும், எழுந்தும், கீதம் பலபலபாடி, நடந்தும், பரந்தும், குனித்தும் நாடகம் செய்கின்றனவே” –
கடல் வண்ணனே, பக்தர்கள் உருவில்வந்து நாடகம் ஆடுவதாகச் சொல்வதால், கண்ணனுக்குப் பாடிய சொல்
கோதைக்கும் பொருந்துவது இயல்பானதே. அந்த உரிமையின் குரல் இத்தாலாட்டு முழுவதும் கேட்கிறது.

மாணிக்கங் கட்டிவயிர மிடைக்கட்டி
ஆணிப்பொன் னால்செய்த வண்ணச் சிறுதொட்டில் 44

பேணி யுனக்குப் பிரமன் விடுதந்தான்
மாணிக்கமே தாலேலோ மங்கையரே தலேலோ, 45

ஒரே பாட்டில் ஒரு பிரபஞ்ச பந்தத்தைக் காட்ட முடியுமெனில் அது தாலாட்டில் தான் முடியும் என்பதற்கு
கீழ்க்காணும் வரிகளே சான்று;

அன்னமே தேனே அழகே அரிவையரே
சொன்னமே மானே தோகையரே தாலேலோ. 46

பொன்னே புனமயிலே பூங்குயிலே மாந்துளிரே
மின்னே விளக்கொளியே வேதமே தாலேலோ, 47

இப்படிப் பாசமுடன் வளர்க்கப்படும் குழந்தை நல்லதொரு தமிழ்க் குடியாக வராமல் பின் என்ன செய்யும்?
கம்பனும், வள்ளுவனும், பாரதியும் அணி செய்த தமிழுக்குப் பெண்மை மணம் தந்தவள் ஆண்டாள்.
அவள் இல்லையேல் இன்று மார்கழி நோன்பு இல்லை. ஒரு அழகிய திருப்பாவையில்லை.
நாச்சியார்மொழியில் இல்லாத பெண்மையை வேறெங்கு காணமுடியும்?
கோதை தந்த தமிழுக்கு, தமிழ்சொல்லும் தாலாட்டுதான், இத்தாலாட்டு :

முத்தே பவளமே மோகனமே பூங்கிளியே
வித்தே விளக்கொளியே வேதமே தாலேலோ, 58

“பாமாலை பாடிப் பரமனுக்கு என்னாளும்
பூமாலை சூடிப் புகழ்தளித்த தெள்ளமுதே”!! 59

அஞ்சு வயதில் அவனியில் வந்துதித்த
பிஞ்சாய்ப் பழுத்த பெண்ணமுதே தாலேலோ, 60

பிஞ்சிலே பழுத்த தமிழ் புலவர்கள் இருவர். ஒருவர் கந்தனின் பெண் தோழி! அதாவது ஒளவை!!
இரண்டாவது கண்ணனின் பெண் தோழி ஆண்டாள். இளமையிலேயே மெய்ஞானம் எய்தியவர்கள்.
முன்னவர் உடல் மாற்றம் வேண்டிப் பெற்றார். இரண்டாமவர் எந்த மாற்றமுமின்றி இளமையுடன் அரங்கனுடன் கலந்தார்.
ஒளவை, காரைக்கால் அம்மையார், அக்கம்மா தேவியார் இவர்கள் பெண்ணின் உடல் ஆன்மீகத்திற்குத் தடை
(ஆண் பார்வை தோஷத்தால் 🙂 என்று கருதி பெளதீக உடல் மாற்றம் வேண்டி நின்றனர்.
ஆண்டாளோ, சிங்கத்திற்கு வைத்த உணவை சிறு குறு நரி கொண்டு செல்ல முடியுமோ வென்ற மனோதிடத்தில்,
பாரதி சொல்லிய”ரெளத்திரம் பழகி” அக்கினிக் குஞ்சு போல் வாழ்ந்து நினைத்தை சாதித்தவள்.

வையம் புகழய்யா! மானிடவர் பதியன்று.”
உய்யும் பெருமாள் உயர் சோலை மலையழகர் 95

இவர்கள் தாம்பதி இரண்டாம் பதியரில்லை!!
அவர்கள்* தம் பாட்டில் அனுப்பியே வையும்!!! என்றார் 96*

மணம் கேட்டு வந்தவர்கள் மானிடர்க்குப் பதி என்பவன் இறைவன் ஒருவன்தான்.
நாம் எல்லோரும் அவன் தோட்டத்துக் கோபியர்கள் என்னும் தத்துவத்தை விளம்பும் வரிகள் இவை.
சூடிக் கொடுக்கும் திடம் தமிழ் வரலாற்றில் ஆண்டாள் ஒருவளுக்குக்குத் தான் இருந்திருக்கிறது.
ஒரு பக்தை சூடிக் கொடுத்த மாலையைப் பரிவுடன் ஏற்கிறான் பரந்தாமன்.
இது பக்தியின் சக்தியை அவனிக்குச் சொன்ன முக்தி இரகசியமாகும்.
இது காட்டுத்தீ போல் இந்தியா முழுதும் பரவி, உலக மாந்தரை உய்யக் கொண்டுள்ளது.

அடுத்து மார்கழி நோன்பு பற்றிப் பேசுகிறது தாலாட்டு.

“தூயோமாய் வந்தோம்” என்னும்படிஉள்ளத் தூய்மைக்கு வித்திடுவது நோன்பு ஆகும்.
நோன்பு கழித்த பின் தான் இறைத் தரிசனம் சாத்தியமாகிறது.
அது “நெய்யுண்ணோம், பாலுண்ணோம்” என்னும் விரதம் மட்டுமன்று,
“செய்யாதன செய்யோம், தீக்குறளை சென்றோதோம்” என்பதும் அடங்கும்.
உடலையும்,மனதையும் சுத்தப் படுத்தும் போது இறையொளி சாத்தியப் படுகிறது.

அடுத்து, கோதைக் கல்யாண வைபவம் பேசப்படுகிறது.
எளிமையின் மறு உருவான விட்டு சித்தரின் வாழ்வு பல திருப்பங்கள் கொண்டது.
பூவின் இனம் காணும் பட்டரின் வாய் வழியாய் கவிதையில் இனம் காண வைக்கிறான் பரந்தாமன்.
பிள்ளைத் தமிழை தமிழுக்குத் தரும் உள நோக்குடன்!! பிள்ளைத் தமிழ் பாடினால் போதாது என்று
பர தத்துவம் பேச வைத்து பொற்கிழி கொண்ட பிரானாக்கி,
‘ நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு எல்லோர்க்கும் பெய்யும் மழை” என்பது போல்
கூடல் சனம் அத்தனைக்கும் அன்று வைகுந்த தரிசனம் அளிக்கிறான் இறைவன்.
பின் பிள்ளையற்ற பட்டருக்கு பிள்ளை விடாய் தீர்க்க ஆண்டாளைத் தந்துய்வித்தான்.
கொடுத்த பெண்ணை மணம் பெரும் வயதில் மறைத்து வைத்து,

ஒருமகளை யானுடையேன் உலகளந்த மாயவனாம்
திருமகளைத் தானெடுத்து செங்கண்மால் கொண்டொளித்தாய்!
என்றாழ்வா ருஞ்சொல்ல இரங்கித் திருவரங்கர்சென்றெங்களய்யர்
திருவடியைத் தான்தொழுவார்!

ஆக, யசோதையின் பாவத்தில் பாடிய பட்டர்பிரானை உண்மையான தாயென்றே கருதி
அய்யரவர் திருவடியைத் திருவரங்கன் தொழுகின்றான்.
பாகவதன் திருப்பாதத் தூளியில் சுகம் காணும் பாகவதப் பிரியனான கீதாசிரியன்,
அத்தோடு நில்லாமல் அவர் தம் திருமகள் பாத மலரையும் தொடுகின்றான்.
முன்பு வந்து எல்லோர்க்கும் அருளியது போதாது என்று பட்டர் பிரான் சம்மந்தமுடைய அனைவருக்கும்
மணவாளனாக வந்து மீண்டுமொரு முறை காட்சி யளிக்கின்றான். (வைணவ சம்மந்தம் பரமுக்தி யளிக்கும் என்பது வாக்கு)

நம்மை யுடையவன் நாராயணன் நம்பி 159

செம்மையுடைய திருக்கையால் தாழ்த்தி
அம்மி மிதித்து அருந்ததியும்தான்பார்த்து 160

அரிமுதன் அச்சுதன் அங்கைமேலும் கைவைத்துப்
பொரி முகந்தபடிப் போத்தி மறையோரை…………

நாராணனுக்குப் பெருமை “நம்மை உடைத்தல்” என்று சொல்லும் வரிகளை வேறு எந்த நெறியிலும் காணப்பெறோம்?

செம்மையுடைய திருக்கையால் அம்மிமிதித்து, அங்கைமேல் கைவைத்து பொரி முகர்ந்த சேதி வேறு எங்கேணும் உண்டோ?

பரம் பொருளை “தாழ்த்தி அம்மி மிதி”க்க வைத்த திறம் தமிழுக்கு உண்டு ஆரியத்திற்கு உண்டோ?

“அச்சேதி கேட்டு ஆழ்வார் மனமகிழ்ந்து
இச்சேதி வைபவங்கள் எங்குங் கிடையாது.”

என்று சொல்வதாகப் பேசுகிறது கோதை தாலாட்டு. இதுதான் எவ்வளவு உண்மை!!

ஆண்டாள், “வாரணமாயிரம்” என்று தொடங்கும் பாடல்களில் திருமண வைபவத்தைப் பதிவு செய்கிறாள்.
அதில் விட்டுப் போன சில சேதிகள் (details) இத்தாலாட்டில் இடம் பெறுகிறது.
தாயின் சொல் அமுது என்பது இப்பாட்டில் தெரிகிறது. செந்தமிழ், தாய் சொல் பட்டு மென்மையாகிப் போகிறது.

சீராரு மெங்கள் விஷ்ணு சித்தர்நந் தாவனத்தில்
ஏராருந் துளசி முல்லை யேகமாய்த் தானும்வச்சு 31

வச்ச பயிர்களுக்கு வளரவே நீர் பாய்ச்சி
உச்சிதமாய்ப் பயிர்கள் செய் துகந்திருக்கும் வேளையிலே; 32

என்று கிராமத்து மக்கள் மொழியில் தாலாட்டு போகிறது.

மேலும் சில உதாரணங்கள்:

நோம்பு (நோன்பு);
நோன்பு நேத்தியாய் (நேர்த்தியாய்);
மாயவனைப் போத்தி (போற்றி)ஆரு மனுப்பாமல் (யாரும் அனுப்பாமல்);
மன்றலுஞ் செய்யாமல் வச்சிருந்தால் (வைத்திருந்தால்)
கைத்தலம் பத்திக் கலந்து (கைத்தலம் பற்றி);
சத் புருடன் வாராமல் தாமசமாய்த் தானிருக்க.- தாமசம்? தாமதம்!!
வாத்திமார் புல்லெடுத்து மறைகள் பலஓத !!

நாட்டுப் பாடல்களுக்கான தனி மொழி இத்தாலாட்டிலும் ஒலிக்கிறது.

“ஒருமகளை யானுடையேன் உலகளந்த மாயவனாம்
திருமகளைத் தானெடுத்து செங்கண்மால் கொண்டொளித்தாய்!”

என்று விட்டு சித்தர் அன்று கதறியது இத்தாலாட்டின் வாயிலாக இன்று நம் நெஞ்சைக்கலக்குகிறது.
“அய்யர் இணையடியைத்” என்று சொல்வதிலிருந்து இப் பாடல் இயற்றப் பட்டகாலத்தில்
ஐயங்கார் என்ற ஒரு பிரிவு தோன்றவில்லையென்று தெரிகிறது.
இல்லையெனில் பரம வைஷ்ணவரான விட்டு சித்தரை ஐயங்கார் என்றே இத்தாலாட்டு இயம்பியிருக்கும்.

1928-ல் பதிப்பிக்கப் பட்டு இன்று 73 ஆண்டுகளாகின்றன (2001).
இவ்வோலைச் சுவடிபதிப்பிக்கப் பட்ட காலம் புத்தகத்தில் இல்லை.
ஐயங்கார் என்ற பிரிவு ஆங்கிலேயர்காலத்தில் உருவானது என்று சொல்வர்.
அப்படியெனில் இத்தாலாட்டு ஆங்கிலேயர் வருகைக்கு முன் எழுதப் பட்டிருக்குமோ?

“ஆழி நிறை வண்ணன் முதல் ஆழ்வார்கள் தான் வாழி
கோதையரும் வாழி கோயில்களும் தான் வாழி
சீதையரும் வாழி செக முழுதும் தான் வாழி.

————–

கோதை நாய்ச்சியார் தாலாட்டு

ஸ்ரீவில்லிபுத்தூரில் வாழ்ந்த வைணவ ஆழ்வார்களில் ஒருவரான பெரியாழ்வாரின்
வளர்ப்பு புதல்வியான ஆண்டாள் என்று அழைக்கப்படும் கோதை நாய்ச்சியாரின் வரலாற்றினை 316 செய்யுள் அடிகளுள்
எடுத்துக் கூறுகிறது இந்நூல்.
காப்புச் செய்யுள் திருவரங்கத்தில் கோயில் கொண்டுள்ள அரங்கநாதப் பெருமாள் மீது பாடப்பட்டுள்ளது.
இந்நூல் ஆசிரியர் பெயர் தெரியவில்லை.

காப்பு

சீரார்ந்த கோதையர் மேல் சிறப்பாகத் தாலாட்டப்
பாரோர் புகழ நிதம் பாடவே வேணுமென்று
காராந்த தென் புதுவைக் கண்ணன் திருக் கோயில்
ஏரார்ந்த சேனையர் கோன் இணையடியுங் காப்பாமே.

தென் புதுவை விட்டு சித்தன் திருவடியை நான் தொழுது
இன்பமுடன் தாலாட்டு இசையுடனே யான் கூறத்
தெங்கமுகு மாவாழை சிறந்தோங்கும் சீரங்கம்
நம் பெருமாள் பாதம் நமக்கே துணையாமே.

நூல்

சீரார்ந்த கோயில்களுஞ் சிறப்பான கோபுரமும்
காரார்ந்த மேடைகளுங் கஞ்சமலர் வாவிகளும்
மின்னார் மணி மகுடம் விளங்க வலங்கிருதமாய்ப்
பொன்னாலே தான் செய்த பொற் கோயில் தன்னழகும்
கோபுரத்து வுன்னதமுங் கொடுங்கை நவமணியும் 5

தார்புரத் தரசிலையுஞ் சந்தனத் திருத் தேரும்
ஆராதனத் தழகும் அம் மறையோர் மந்திரமும்
வேத மறையோரு மேன்மைத் தவத்தோருங்
கீத முறையாலே கீர்த்தனங்கள் தாமுழங்கப்
பாவலர்கள் பாமாலை பாடி மணிவண்ணனை 10

ஆவலாய்ப் போற்றி அனுதினமும் தான் துதிக்கக்
கச்சு முலை மாதர் கவிகள் பலர் பாட
அச்சுதனார் சங்கம் அழகாய்த் தொனி விளங்கத்
தித்தியுடன் வீணை செக முழுதுந் தான் கேட்க
மத்தள முழங்க மணியும் அந்தத் தவிலுடனே 15

உத்தமர் வீதி உலாவியே தான் விளங்க
பேரிகையும் எக்காளம் பின்பு சேகண்டி முதல்
பூரிகை நாதம் பூலோகம் தான் முழங்கத்
தும்புருவும் நாரதரும் துய்ய குழலெடுத்துச்
செம்பவள வாயால் திருக்கோயில் தான் பாட 20

அண்டர்கள் புரந்தரனும் அழகு மலரெடுத்துத்
தொண்டர்களும் எண்டிசையுந் தொழுது பணிந்தேத்த
வண்டுகளும் பாட மயிலினங்கள் தாமாடத்
தொண்டர்களும் பாடித் தொழுது பணிந்தேத்தப்
பண்பகரும் பாவலர்கள் பல்லாண் டிசைபாடச் 25

செண்பகப்பூ வாசனைகள் திருக் கோயில் தான் வீச
இந்திரனும் இமையோரும் இலங்கும் மலர் தூவச்
சந்திரனும் சூரியனுஞ் சாமரங்கள் தாம் போடக்
குன்று மணி மாடங்கள் கோபுரங்கள் தான் துலங்கச்
சென்று நெடு வீதியிலே திருவாய் மொழி விளங்க 30

அன்னம் நடைபயில அருவை மடலெழுதச்
செந்நெல் குலை சொரியச் செங்குவளை தான் மலரக்
கரும்பு கலகலெனக் கஞ்ச மலர் விரிக்கச்
சுரும்பு குழலூதத் தோகை மயில் விரிக்க
மாங்கனிகள் தூங்க மந்தி குதி கொள்ள 35

தேன் குடங்கள் விம்மிச் செழித்து வழிந்தோடச்
செந் நெல் விளையச் செக முழுதும் தான் செழிக்கக்
கன்னல் விளையக் கமுக மரம் தான் செழிக்க
வெம் புலிகள் பாயு மாமேரு சிகரத்தில்
அம்புலியைக் கவளமென்று தும்பி வழி மறிக்கும் 40

மும் மாரி பெய்து முழுச் சம்பாத் தான் விளையக்
கம்மாய்கள் தாம் பெருகிக் கவிங்கில மழிந்தோட
வாழை யிடை பழுத்து வருக்கைப் பலாப் பழுத்துத்
தாழையும் பழுத்துத் தலையாலே தான் சொரியப்
புன்னையும் மலரப் புனத்தே கிளிகூவ 45

அன்னமும் பேசும் அழகான தென் புதுவை
தலை யருவி பாயும் தடஞ்சூழ்ந்த முக் குளமும்
மலை யருவி பாயும் வயல் சூழ்ந்த தென் புதுவைப்
பவளமுடன் வச்சிரம் பச்சை மரகதமும்
தவளமொளி முத்துத் தான் கொழிக்கும் தென் புதுவை 50

காவணங்கள் மேவிக் கதிரோன் தனை மறைக்கும்
பூவணங்கள் சூழ்ந்து புதுமை மணங்கமழும்
தென்னை மடல் விரியச் செங்கரும்பு முத்தீனப்
புன்னை முகிழ் விரியப் புதுவை வனந்தனிலே
சீராரு மெங்கள் விட்டு சித்தர் நந்தவனமதனில் 55

இளந்துளசி முல்லை ஏகமாய்த் தானும் வைத்து
வைத்த பயிர்களுக்கு வளரவே நீர் பாய்ச்சி
உச்சிதமாய்ப் பயிர்கள் செய்து உவந்திருக்கும் வேளையிலே
பூமிவிண்டு கேட்கப் புகழ் பெருகு விட்டுசித்தன்
பூமிவிண்ட தலம் பார்த்துப் போனார் காண் அவ்வேளை 60

ஆடித் திருப் பூரத்தில் அழகான துளசியின் கீழ்
நாடி யுதித்த நாயகியைச் சொன்னாரார்
அப்போது விட்டு சித்தன் அலர் மகளைத் தானெடுத்துச்
செப்பமுடன் கண்ணே திருவாய் மலர்ந்தருள்வீர்
அய்யா உமக்கடியேன் அருமை மகளாக்கு 65

மெய்யார்ந்த தாயார் மேன்மைத் துளசி என்றாள்
அப் பேச்சுக் கேட்டு அவரும் பரவசமாய்ச்
செப்பமுடன் பெண்ணேந்தித் திருக் கோயில் தான் புகுந்து
புகுந்து மணிவண்ணன் பொன்னடிக் கீழ்ப் பெண்ணை விட்டு
ஊர்ந்து விளையாடி உலாவியே தான் திரிய 70

பெண் கொணர்ந்த விட்டுசித்தன் பெம்மானைத் தானோக்கி
பெண் வந்த காரணமென் பெம்மானே சொல்லுமென்றார்
அப்போது மணி வண்ணன் அழகான பெண்ணுனக்குச்
செப்பமுடன் வந்த திருக் கோதை நாயகியார்
என்று பேருமிட்டு எடுத்துக் குழந்தைதனை 75

உந்தன் மனைக்கே உவந்து தான் செல்லுமென்றார்
சொன்ன மொழி தப்பாமல் சுந்தரியைத் தானெடுத்துக்
கன்னல் மொழி விரசைக் கையிலே தான் கொடுக்க
அப்போது விரசையரும் அமுது முலை தான் கொடுக்கச்
செப்பமுடன் தொட்டிலிலே சீராய் வளரவிட்டு 80

மாணிக்கங் கட்டி வயிரமிடை கட்டி
ஆணிப் பொன் னால் செய்த வண்ணச் சிறுதொட்டில்
பேணி யுனக்குப் பிரமன் விடுதந்தான்
மாணிக்கமே தாலேலோ மங்கையே தாலேலோ
அன்னமே தேனே அழகே அருமயிலே 85

சொர்னமே! மானே! தோகையரே தாலேலோ
பொன்னே! புனமயிலே! பூங்குயிலே! மான்றுளிரே!
மின்னே! விளக்கொளியே! வேதமே! தாலேலோ,
பிள்ளைகளும் இல்லாத பெரியாழ்வார் தம்மாவல்
பிள்ளை விடாய் தீர்த்த பெண்ணரசே தாலேலோ! 90

மலடி விரசை யென்று வையகத்தோர் சொன்ன
மலடுதனைத் தீர்த்த மங்கையரே தாலேலோ!
பூவனங்கள் சூழும் புதுவைப் புரிதனிலே
காவனத்தில் வந்துதித்த கன்னியரைச் சொன்னாரார்
கண்ணே யென் கண்மணியே! கற்பகமே தெள்ளமுதே! 95

பெண்ணே! திருமகளே! பேதையரே! தாலேலோ!
மானே! குயிலினமே! வண்டினமே! தாருவே!
தேனே! மதனாபி டேகமே! தெள்ளமுதே!
வானோர் பணியும் மரகதமே! மா மகளே!
என் இடுக்கண் நீங்க ஈங்கு வந்த தெள்ளமுதே! 100

பூமலர்கள் சூழும் பூங்கா வனத்துதித்த
மாமகளே! சோதி மரகதமே! தாலேலோ!
வண்டினங்கள் பாடு வாழும் பூங்காவில்
பண்டு பெரியாழ்வார் பரிந்தெடுத்த தெள்ளமுதே!
செந்நெல்கள் முத்தீன்று செழிக்கும் புதுவையினில் 105

அன்னமே! மானே! ஆழ்வார் திருமகளே!
வேதங்க ளோதி வென்று வந்த ஆழ்வார்க்குச்
சீதை போல் வந்த திருமகளைச் சொன்னாரார்
முத்தே! பவளமே! மோகனமே! பூங்கிளியே!
வித்தே! விளக்கொளியே! வேதமே தாலேலோ! 110

பாமாலை யிட்டீர் பரமர்க்கு என்னாளும்
பூமாலை சூட்டப் புகழ்ந்தளித்த தெள்ளமுதே!
அஞ்சு வயதில் அவனியில் வந்துதித்துப்
பிஞ்சாய்ப் பழுத்த பெண்ணமுதே தாலேலோ!
எந்தை தந்தை யென்று யியம்பும் பெரி யாழ்வார்க்கு 115

வந்து விடாய் தீர்த்தாய் மாதே நீ தாலேலோ!
பொய்கை முத லாழ்வார்க்குப் பூ மகளாய் வந்துதித்த
மை விழி சோதி மரகதமே! தாலேலோ!
உலகளந்த மாயன் உகந்து மணம் புணர
தேவாதி தேவர்கள் தெளிந்தெடுத்த தெள்ளமுதோ! 120

சொல்லை நிலையிட்ட சுந்தரராம் ஆழ்வார்க்குச்
செல்வப் பெண்ணாய் வந்த திருமகளைச் சொன்னாரார்
நாரணனை விட்டுவென்று நம்புமெங்க ளாழ்வார்க்குக்
காரணமாய் வந்துதித்த கற்பகத்தைச் சொன்னாரார்
உள்ள முருகி ஊசலிடும் பட்டருக்குப் 125

பிள்ளை விடாய் தீர்த்த பெண்ணரசே தாலேலோ!
பாகவத வர்த்தம் பாடுமெங்க ளாழ்வார்க்குத்
தாக விடாய் தீர்த்த தங்கமே தாலேலோ!
தென் புதுவை வாழுந் திருவிட்டு சித்தனுக்கு
அன்புடனே வந்துதித்த அன்னமே! தாலேலோ! 130

சாத்திரங்கள் ஓதும் சத் புருட ராழ்வார்க்குத்
தோத்திரங்கள் செய்து துலங்க வந்த கண் மணியே!
வாழைகளுஞ் சூழ் புதுவை வாழு மெங்க ளாழ்வார்க்கு
ஏழையாய் வந்துதித்த ஏந்திழையே! தாலேலோ!
கன்னல்களுஞ் சூழ் புதுவை காக்கு மெங்க ளாழ்வார்க்குப் 135

பன்னு தமிழ் என்னாளும் பாட நல்ல நாயகமோ!
பல்லாண்டு பாடும் பட்டர் பிரா னாழ்வார்க்கு
நன்றாக வந்துதித்த நாயகியைச் சொன்னாரார்
எந்தாகந் தீர்த்து வேழேழு தலை முறைக்கும்
வந்தருளுஞ் செல்வ மங்கையரே தாலேலோ! 140

என்றுநிதம் கோதையரை எடுத்து வளர்க்கையிலே
அன்றொருநாள் விட்டு சித்தன் அமுதுமலர் தொடுத்து வைக்கத்
தொடுத்து வைத்த மலரதனைச் சூடியே நிழல் பார்த்து
விடுத்து வைத்துக் கோதையரும் விளையாட்டி லேதிரிய
அப்போது விட்டு சித்தர் அநுட்டான முதல் செய்து 145

எப்போதும் போல் கோவிலுக் கேகவே வேணுமென்று
தொடுத்து வைத்த மாலை தன்னைச் சுவாமிக்கே சாத்தவென்று
எடுத்துமே வாழ்வாரும் நோக்கையில் கிலேசங்கொண்டு
என்னரசி கோதை குழல் போல யிருக்குதென்று
கண்ணாலே கோதையரைக் கட்டியே தானதுக்கிப் 150

பின்பு வனம் புகுந்து பிரியமாய்ப் பூக்கொய்து
அன்புடனே மாயனுக் கலங்கார மாய்ச் சாத்த
அப்போது மணவாள ஆழ்வாரைத் தான் பார்த்து
எப்போது மணங்காணேன் ஏதுகா ணாழ்வாரே!
என்று சொல்ல, ஆழ்வாரும் இருகையுந் தான் கூப்பித் 155

துன்றி வளர் கோதையரும் சூட்டியே தானும் வைத்தாள்
அம் மாலை தள்ளி அழகான பூக் கொணர்ந்து
நன் மாலை கொண்டு நாமுமக்குச் சாத்த வந்தேன்
என்று சொல்ல, மணி வண்ணன் இன்பமாய்த் தான் கேட்டு,
நன்றாக வாழ்வாரே நானுமக்குச் சொல்லுகின்றேன் 160

உன் மகளும் பூச்சூடி ஒருக் கால் நிழல் பார்த்து
பின்பு களைந்து பெட்டியிலே பூ வைப்பாள்
அம்மாலை தன்னை ஆழ்வார் நீ ரெடுத்து வந்து
இம் மாலை சாத்தி யிருந்தீ ரிது வரைக்கும்
இன்று முதல் பூலோக மெல்லாருந் தாமறிய 165

அன்று மலர் கொய்து அழகாகத் தான் தொடுத்துக்
கோதை குழல் சூடிக் கொணர்வீர் நமக்கு நிதம்
கீத மேளத்தோடும் கீர்த்தனங்கள் தன்னோடும்
இன்று முதல் சூடிக் கொடுத்தா ளிவள் பேரும்
நன்றாகத்தான் வாழ்த்தும் நன்மையே தான் பெறுவீர்! 170

என்றுரைக்க மணி வண்ண னேகினர் காண் ஆழ்வாரும்
சென்று வந்த மாளிகையில் சிறப்பா யிருந்து நிதம்
நீராட்டி மயிர் முடித்து நெடு வேற் கண் மை யெழுதிச்
சீராட்டிக் கோதையரைச் சிறப்பாய் வளர்க்கையிலே
ஊரார் உறமுறையார் உற்றார்கள் பெற்றோர்கள் 175

சீரான வாழ்வாரைச் சிறப்பாகப் பெண் கேட்க
அப்போது விட்டு சித்தன் அன்பான கோதையரைச்
செப்பமுடன் மடியில் வைத்துத் திருமாலை தான் கொடுத்து
உனக்குகந்த பிள்ளைக்கு உகந்தே மலர் சூடி
மனைக்கா வலனென்று மகிழ்ந்தேத்தி வாழும் என்றார் 180

அவ் வார்த்தை கேட்டு அழகான கோதையரும்
செவ்வான வார்த்தை யென்று திரும்பியே தானுரைப்பாள்
வையம் புகழய்யா மானிடவர் பதியென்று!
உய்யும் பெருமாள் உயர் சோலை மலை யழகர்
இவர்கள் பதி யன்றி இரண்டாம் பதியில்லை 185

அவர்கள் தமைத் தாமும் அனுப்பியே வையுமென்றார்
இவ் வார்த்தை கேட்டு இனத்தோர்க ளெல்லோரும்
செவ்வான வடிதேடித் தேசத்தே போனார்கள்
போனவுடன் விட்டுசித்தன் புன்னை புன மயிலே
ஞானமுடன் வந்துதித்த நாயகியைச் சொன்னாரார் 190

ஒப்பில்லா நோன்பு உகந்துதா னேற்கவென்று
மணி வண்ணனைத் தேடி மனக் கருத்தை யவர்க்குரைத்துப்
பணி செய்த விருதுகளைப் பாரிப்பாய்த் தான் கேட்க
மகிழ்ந்து மணி வண்ணன் மகிழ்ந்து மறையோர்க்குப்
புகழ்ந்து தான் உத்தரவு பிரியமாய்த் தான் கொடுக்க 195

உத்தரவு வாங்கி உலகெல்லாந் தான் நிறைய
நித்தமோர் நோன்பு நேர்த்தியாய்த் தான் குளித்து
மாயவனை நோக்கி வந்தி மலரெடுத்து
மாயவனைப் போற்றி மணம் புணர வேணுமென்று
மார்கழி நீராடி மகிழ்ந்து திருப்பாவை 200

சீர்கள் குறையாமல் சிறப்பாகத் தான் பாடி
பாடிப் பறைகொண்டு பரமனுக்குப் பூ மாலை
சூடிக் கொடுத்து தொழுது நினைந்திருக்க
மாயவனும் வாரார் மலர் மாலைகளுந் தாராமல்
ஆயன் முகங் காட்டாமல் ஆருமனுப்பாமல் 205

இப்படிச் செய்த பிழையே தென்று நானறியேன்
செப்புங்கள் தோழியரே! திங்கள் முகக் கன்னியரே,
தோழியருந் தாமுரைப்பார் துய்யவட வேங்கடவன்
ஆழியுடன் வந்து அழகாய் மணம் புணர்வான்
என்று சொல்லக் கோதையரு மிதயங் குழைந்து நிதம் 210

அன்றில் குயில் மேகங்கள் அரங்கருக்குத் தூது விட்டார்,
தூதுவிட்டு[ம்] வாராமல் துய்ய வட வேங்கடவன்
எதிரிருந்து கொண்டார் இனி மேல் மனஞ்சகியேன்
என்று மனம் நொந்து இருக்க நிதங் கோதையரும்
சென்று வந்து தோழியர்கள் செப்பவே யாழ்வார்க்கு 215

அச்சேதி கேட்டு ஆழ்வார் நடு நடுங்கிச்
சென்று வந்து பிள்ளை விடாய் தீர்த்த திருமகட்கு
மன்றலுஞ் செய்யாமல் வைத்திருந்தால் மோசம் வரும்
என்று திருமகளை எடுத்துச் சிவிகை வைத்துச்
சென்று திருவரங்கம் சேவிக்க வேணுமென்று 220

நல்ல நாள் பார்த்து நடந்து திருவரங்கம்
எல்லையுங் கிட்டி இருந்து தென் காவிரியில்
நீராட்டஞ் செய்து நொடிப் போதில் செபமுஞ்செய்து
சீராட்ட வந்து திரு மகளைத் தான்தேட
பல்லக்கில் காணாமல் பைந்தொடியுங் காணாமல் 225

எல்லோருங் காணாமல் என் மகளை யாரெடுத்தார்
நின்று மனம் நொந்து நாற்றிசையும் தான் தேடிச்
சென்று திருவரங்கந் திருக் கோயில் தான் புகுந்து
ஒரு மனையா ளுடனேயே உலகளந்த மாயவனும்
திருமகளைத் தானெடுத்து செங்கண்மால் கொண்டொளித்தாய் 230

என்று சொல்ல வாழ்வாரு மிரங்கித் திருவரங்கர்
சென்றுங்களையர் திருவடியைத் தான் தொழுவீர்
அப்போது கோதையரும் அரங்கர் மடியை விட்டு
எப்போது மைய ரிணை யடியைத் தான் தொழுவார்
வாழ்த்தியே அய்யர் மகிழ்ந்து மகள் தனக்கும் 235

வாழ்த்தி யெடுத்து மகிழ்ந்து வரங்கருக்கும்
வாழி முதல் பாடி மங்களமுந் தான் பாடி
ஆழி நீர் வண்ண அழகாய் மணம் புணர்வாய்
என்று சொல்லி யாழ்வாரும் இன்பமாய் அரங்கர் தமை
மன்றல் செய்ய வாருமையா மணவாளா வென்றுரைத்தார் 240

பங்குனி மாதம் பவர்ணமையில் உத்திரத்தில்
அங்குரஞ் செய்து அழகாய் மணம் புணர
வாருமையா வென்று மகிழ்ந்தேத்தி யரங்கரையும்
சீரணிந்த கோதையையுஞ் சிறப்பாகத் தானழைக்க
அப்போது நம்பெருமாள் ஆழ்வாரை விடை கொடுத்து 245

தப்பாமல் நான் வருவேன் சீர் கோதை தன்னோடும்
என்று சொல்ல ஆழ்வாரும் ஏகினார் வில்லிபுத்தூர்
சென்று திரு மாளிகையில் சிறப்பாகத் தானிருந்து
கோதையர்க்கு மன்றல் கோலமாய்ச் செய்ய வென்று
சீதையர்க்கு மன்றல் சிறப்பாகச் செய்ய வென்று 250

ஓலை யெழுதி உலகெல்லா மாளனுப்பி
கரும்பினால் கால் நிறுத்திக் கற்பகத்தால் பந்தலிட்டு
கரும்பினிடை வாழை கட்டிக் கஞ்சமலர் தொங்க விட்டு
பூக்கள் கொணர்ந்து பூம்பந்தல் தான் போட்டு
மாங் கனிகள் தூக்கி வருக்கைப் பலா தூக்கித் 255

தேங்கனிகள் தூக்கிச் சிறப்பா யலங்கரித்து
மேளமுடன் மத்தளமு முரசமுந் தானடிக்கக்
காளமுடன் நாதசுரம் கலந்து பரிமாற
வானவர்கள் மலர் தூவி வந்து அடி பணியக்
கானவர்கள் பூக்கொய்து கலந்து பணிந்தேத்த, 260

இந்திரனும் எண்டிசையும் இறைஞ்சி மலர் தூவச்
சந்திரனுஞ் சூரியனும் சாமரைகள் தாம் போட
இரத்னமணி யாசனமும் இரத்தினக் கம்பளியும்
சித்ரமணி மண்டபமும் செம்பொன் குறடுகளும்,
ஆழ்வார் கிளையும் அயலோர் கிளை யெல்லோரும் 265

ஆழ்வார் திருமகளை அன்பாகப் போற்ற வந்தார்
தூபங் கமழத் தொண்டர்களுந் தாம் பாட
தீபந் துலங்கத் திருவைண வோரிருக்க
வேதந் துலங்க மேன் மேலுஞ் சாத்திரங்கள்
கீத முரைக்கக் கீர்த்தனங்கள் தாமுழங்க, 270

வாத்தியார் புல்லெடுத்து மறைகள் பல வோதிப்,
பூரண கும்பமுதல் பொற்கலசந் தானும் வைத்து
நாரணனைப் போற்றி நான் மறைகள் தாமோத
இப்படிக்கு வாழ்வாரு மெல்லோருங் காத்திருந்தார்
சற்புருடர் வாராமல் தாமதமாய்த் தாமிருக்க, 275

கொற்றப்புள் ளேறிரங்கர் கொடிய வனங்கடந்து
வெற்றிச் சங்கு ஊதி வில்லிபுத்தூர் தன்னில் வந்து
மணவாள ராகி மணவறையில் தானிருந்து
மணஞ்செய்யும் வேளைகண்டு மறையோர்க்குத் தனங்கொடுத்தார்
ஆடைமுத லாபரணம் அணிமுலைப் பாற்பசுக்கள் 280

குடைமுதல் தானங் கொடுத்து நிறைந்த பின்பு
மந்திரக் கோடி யுடுத்து மணமாலை
அந்தரி சூட்டி அழகான கோதையர்க்கு
மத்தளங் கொட்ட வரிசங்கம் நின்றூத
முத்துடைத் தாமம் நிரைதாழ்ந்த பந்தலின் கீழ் 285

கைத்தலம் பற்றிக் கலந்து பெருமாளும்
ஆழ்வாரும் நீர்வார்க்க அழகான கையேந்தி
ஆழ்வார் திருமகளை அழகாகத் தான்வாங்கி
மன்றலுஞ் செய்து மகிழ்ந்து மதுவர்க்கம்
கன்றலு முண்டு கழித்துமே வாங்கிருந்தார் 290

அக்கினி வளர்த்து அழகா யலங்கரித்து
வாய்நல்லார் நல்ல மறையோதி மந்திரத்தால்,
பஞ்சிலை நாணல் படுத்து பரிதிவைத்து
ஓமங்கள் செய்து ஒருக்காலும் நீர்தூவி
காசு பணங்கள் கலந்துதா னங் கொடுத்து 295

தீவலஞ் செய்து திரும்பி மனையில் வந்து
இம்மைக்கு மேழேழ் பிறவிக்கும் பர்த்தாவாய்
நம்மை யுடையவன் நாராயணன் நம்பி
செம்மை யுடைய திருக்கையால் தாள்பற்றி
அம்மி மிதித்து அருந்ததியுந் தான் பார்த்து 300

அரிமுதல் அச்சுதன் அங்கை மேலும் கை வைத்துப்
பொரி முகந்து பம்ப போற்றி மறையோரை
அட்சதைகள் வாங்கி அரங்கர் மணவறையில்
பட்சமுடனிருந்து பாக்கிலையுந் தான் போட்டுக்
கோதையுடன் கூடிக் குங்குமச் சப்பரத்தில் 305

சீதையுடன் கூடிச் சிறப்பாகத் தானிருந்தார்
அச்சேதி கேட்டு ஆழ்வார் மன மகிழ்ந்து
இச்சேதி வைபவங்கள் எங்குங் கிடையாது
என்று பெரியாழ்வார் இளகி மன மகிழ்ந்து
குன்று குடை யெடுத்த கோனை மகிழ்ந்துநிதம், 310

வாழி முதல் பாடி மங்களமுந் தான் பாடி
ஆழி முதல் பாடி ஆழ்வாரும் போற்றி நின்றார்
வாழும் புதுவை நகர் மாமறையோர் தாம் வாழி!
ஆழி நிறை வண்ணன் முதல் ஆழ்வார்கள் தாம்வாழி!
கோதையரும் வாழி! கோயில்களும் தாம்வாழி! 315

சீதையரும் வாழி! செகமுழுதும் தாம்வாழி!

ஸ்ரீ கோதை நாச்சியார் தாலாட்டு முற்றிற்று.

—————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ ஆண்டாள் ஸ்ரீ ஆழ்வார்களுக்கு திருப்பள்ளி எழுச்சி —

January 16, 2022

முதலில் பிள்ளாய் எழுந்திராய்! (திரு-6) என்று ஆரம்பித்து
நாயகப் பெண் பிள்ளாய் ! (திரு-7),
கோதுகலம் உடைய பாவாய்! (திரு-8),
மாமான் மகளே! (திரு-9),
அம்மனாய்! ஆற்ற அனந்தலுடையாய்! அருங்கலமே! (திரு-10),
பொற்கொடியே! புனமயிலே! செல்வப் பெண்டாட்டி! (திரு-11),
நற்செல்வன் நங்காய்!(12),
போதரிக் கண்ணினாய்! பாவாய்!(திரு-13),
நங்காய்! ( திரு-14),
இளங்கிளியே!(திரு-15) என்று வரிசையாக எழுப்புகிறாள்.

புண்ணிய நதிகளில் நீராட ஆண்டாள் ஏன் தன் தோழிகளை அழைக்கிறாள் ?
பக்தி என்ற சிறு விதையை நம் மனதில் விதைக்க, அது முளைவிட்டுக் கொடியாக வளர ஆரம்பிக்கும் போது
அதற்குத் தடங்களாகப் பாவங்களால் பல இடையூறுகள் வரலாம்
இந்த முளைவிட்ட பக்தி செடியைப் பாதுகாத்துப் படரவிட, சான்றோர்களின் நட்பு என்ற ஆதரவு குச்சியை அதனுடன் பிணைக்க வேண்டும்.
அதற்குப் புண்ணிய தீர்த்தங்களுக்குச் செல்ல வேண்டும்.

திருப்பாவையில் ஆறாம் பாசுரத்திலிருந்து பதினைந்தாம் பாசுரம் வரை இல்லினுள்ளே உறங்குகின்ற
பெண் பிள்ளைகளை எழுப்புவதுபோல் அமைந்துள்ளன.
பாசுரங்களுக்கு மேல் பூச்சான பொருளை நோக்கினால் பெண்களை எழுப்புவது போல் தோன்றினாலும்,
மறைமுகமான ஆழ்ந்த பொருளை நுணுகிப் பார்த்தால் ஒவ்வோர் ஆழ்வாரையும் எழுப்பி
அவர்களின் அருள் வேண்டுவதை நாம் உணரலாம்.

”புள்ளும் சிலம்பினகாண் புள்ளரையன் கோயிலில்
வெள்ளை விளி சங்கின் பேரரவம் கேட்டிலையோ
பிள்ளாய் எழுந்திராய் பேய்முலை நஞ்சுண்டு
கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி
வெள்ளத் தரவில் துயிலமர்ந்த வித்தினை
உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்
மெள்ள எழுந்[து] அரியென்ற பேரரவம்
உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்”

இது பெரியாழ்வாரைத் திருப்பள்ளி யுணர்த்தும் பாசுரம்.
பிள்ளாய்! என்பது இதில் விளி. அறிவில்லாதவனைப் பிள்ளை யென்பது.
எம்பெருமானுடைய ஸர்வ ரக்ஷகத்வம் முதலிய திருக் குணங்களை மறந்தே இவ்வாழ்வார்;
மங்களாசாஸனத்தில் ஒருப்பட்டாராதலால் பள்ளை யென்னத் தகுதியுடையாராயினர்.
“ஜ்ஞாந விபாக கார்யமான அஜ்ஞானத்தாலே வருமவை யெல்லாம் அடிக் கழஞ்சு பெறும்” என்ற
ஸ்ரீவசனபூஷண திவ்ய பூஷ ஸூக்தியும் மங்களாசாஸநத்திற்கு அஜ்ஞானத்தையே மூலமாகக் காட்டிற்று.

இவ்வாழ்வார் பெரும்பாலும் நந்தனவனத்திலேயே போது போக்குவராதலால் அவ்விடத்து அடையாளமாகிய
‘புட்களின் சிலம்புதல்’ முன்னே கூறப்பட்டது.

புள்ளரையன் என்று பெரிய திருவடியின் ப்ரஸ்தாவம் செய்திருப்பதில் இப்பெரியாழ்வார்
பெரிய திருவடியின் அம்சமாகத் திருவவதரித்தவர் என்று குருபரம்பரா ப்ரபாவாதிகளிற் கூறியுள்ள
விஷயம் முத்ராலங்காராPதியில் ஸூசிதமாகிறது,

‘வெள்ளை விளிசங்கு’ என்கிற சொல்தொடர் முதன் முதலாகப் பெரியாழ்வாருடைய திருவாக்கில் தோன்றியது.
வெள்ளை விளி சங்கு வெஞ்சுடர் திருச் சக்கரம் ஏந்தும் கையன்
உள்ளவிடம் வினவில் உமக்கு இறை வம்மின் சுவடு உரைக்கேன்
வெள்ளைப் புரவி குரக்கு வெல் கொடிதேர் மிசை முன்பு நின்று
கள்ளப் படை துணையாகி பாரதம் கை செய்யக் கண்டார் உளர் – (பெரியாழ்வார் திருமொழி 4-1-7 காண்க.)
அதனை இங்கு அநுவதித்துக் காட்டுவது ஒருவகையான லிங்கம்.

(பேய்முலை நஞ்சுண்டு) பெரியாழ்வார் திருமொழியில் (சீதக் கடலில்) கண்ணபிரானுடைய சரித்திரங்களில்
பேய்முலை நஞ்சுண்ட கதை முதன் முதலாக அநுஸந்திக்கப்பட்டது.
சீதக் கடலுள் அமுதன்ன தேவகி
கோதை குழலாள் அசோதைக்கு போத்தந்த
பேதை குழவி பிடித்து சுவைத்து உண்ணும்
பாதக் கமலங்கள் காணீரே பவள வாயீர் வந்து காணீரே -1-2-1-

பிறங்கிய பேய்ச்சி முலை சுவைத்து உண்டிட்டு
உறங்குவான் போலே கிடந்த இப்பிள்ளை
மறம் கொள் இரணியன் மார்வை முன் கீண்டான்
குறங்குகளை வந்து காணீரே குவி முலையீர் வந்து காணீரே–1-2-5-என்றது காண்க.

மறுபடியும் அந்தச் சரித்திரத்தை அநுஸந்திக்கையில் சகடாஸுரபங்கத்தையும் கூட்டி யநுஸந்தித்தார்.
நாள்களோர் நாலைந்து திங்கள் அளவிலே
தாளை நிமிர்த்து சகடத்தை சாடிப் போய்
வாள் கொள் வளை எயிறு ஆர் உயிர் வவ்வினான்
தோள்கள் இருந்தவா காணீரே சுரி குழலீர் வந்து காணீரே –1-2-11—என்ற பாசுரங் காண்க.
அதற்குப் பொருந்த இங்கு
“பேய்முலை நஞ்சுண்டு கள்ளச் சகடங் கலக்கழியக் காலோச்சி” என்றது.

“வெள்ளத்தரவில்” என்று தொடங்கிப் பெரியாழ்வார்க்குள்ள ‘விஷ்ணுசித்தர்’ என்னுற்திருநாமமும்
அதற்கு விவரணமான “அரவத்தமளியினோடும்”
“பனிக்கடலில் பள்ளிகோளை” என்ற பாசுரங்களின் தாற்ரியமும் நன்கு ஸூசிதம்.

அரவத்து அமளியினோடும் அழகிய பாற் கடலோடும்
அரவிந்த பாவையும் தானும் அகம்படி வந்து புகுந்து
பரவை திரை பல மோத பள்ளி கொள்கின்ற பிரானை
பரவுகின்றான் விட்டு சித்தன் பட்டினம் காவல் பொருட்டே -5 2-10 –

பனிக்கடலில் பள்ளி கோளைப் பழக விட்டு ஓடி வந்து என்
மனக்கடலில் வாழ வல்ல மாய மணாளா நம்பீ
தனிக்கடலே தனிச் சுடரே தனி உலகே என்று என்று
உனக்கு இடமாய் இருக்க என்னை உனக்கு உரித்து ஆக்கினையே -5 4-9 –

இது ஆறாம் பாசுரமாகும். இப்பாசுரம் பெரியாழ்வாரை எழுப்பும் பாசுரமாகும்.
பொழுது விடிந்ததற்கு அடையாளமாக பறவைகள் எழுந்து ஒலி எழுப்புவது “புள்ளும் சிலம்பின காண்” என்று காட்டப்பட்டுள்ளது.
பறவைகள் பெரும்பாலும் செடி கொடிகள், மரங்கள் நிறைந்த சோலைகள், நந்தவனங்கள் ஆகியவற்றில் தான் குடியிருக்கும்.
பெரியாழ்வாரும் அரங்கனுக்குப் பூமாலை சூட்டுவதற்காகப் பூக்கள் பறிக்க எப்பொழுதும் நந்தவனத்திலேயேதான் இருப்பார்.

“பிள்ளாய் எழுந்திராய்” எனும் சொற்றொடரில் உள்ள ‘பிள்ளாய்’ என்பதும் பெரியாழ்வாரையே குறிக்கிறது.
பிள்ளைகள் என்பவர்கள் ஒன்றும் அறியாதவர்கள்.
நாச்சியாரும் பின்னால் “அறியாத பிள்ளைகளோம்” என்று அருளுவார்.
உயர்வு, தாழ்வு, நல்லது, கெட்டது என்பன அறியாத பருவம்தான் பிள்ளைப் பருவம்.
பெரியாழ்வாரும் பிள்ளைக் குணம் கொண்டு பகவானின் உயர்வையே மறந்து விடுகிறார்!

அவர் மதுரை மாநகரில் பொற்கிழி யறுத்து, நாராயணனின் பரதத்துவத்தை நிலை நாட்டினார்.
அதனால் மனம் மகிழ்ந்த மன்னன் பெரியாழ்வாரைத் தன் பட்டத்து யானை மீது இருத்திப் பவனி வரச் செய்தான்.
அதை காணப் பகவானே வைகுந்தத்திலிருந்து வந்து விட்டார்.
அவரின் திருக்கோலத்தைக் கண்ட பெரியாழ்வார் அப்பகவானுக்குக் கண் எச்சில் பட்டுவிடப் போகிறதே என்று
எண்ணிப் “பல்லாண்டு பல்லாண்டு” என்று
தன்னை மறந்துப்
பகவானின் உயர்வையும் மறந்து
பிள்ளைக் குணத்தால் மங்களாசாசனம் செய்தார். எனவே ’பிள்ளாய்’ என்பது பெரியாழ்வாரையே குறிக்கிறது.

’புள்ளரையன் கோயில்’ என்பது பக்ஷிராஜனான கருடனின் திருக்கோயிலைக் குறிக்கும்.
பெரியாழ்வார் ’பெரிய திருவடி’ என்று போற்றப்படும் கருடாழ்வாரின் அம்சமாகக் கருதப்படுகிறார்.
ஆண்டாள் நாச்சியார் இப்பாசுரத்தில் ”வெள்ளை விளி சங்கு” என்று அருளுகிறார்.
பாண்டிய பட்டர் பெரியாழ்வாரைக் கொண்டாடும் போது,
“பாண்டியன் கொண்டாடப் பட்டர்பிரான் வந்தானென்று ஈண்டிய சங்கம் எடுத்தூத……….”என்று காட்டுவார்.
அப்படிப் பெரியாழ்வார் ஈண்டிய சங்கம் எடுத்தூதியதைத்தான் ’வெள்ளை விரிசங்கம்’ என்று இப்பாசுரமும் காட்டுகிறது.

மேலும் இப்பாசுரத்தில், “பேய்முலை நஞ்சுண்டு, கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி” என்று
பூதனா வதமும், சகடாசூர வதமும் காட்டப்படுகின்றன.
பெரியாழ்வார் கிருஷ்ணாவதாரத்தில் பெரிதும் ஈடுபட்டுத் தம் பாசுரங்களில் இந்த விருத்தாந்தங்களை அனுபவிப்பவர்.
பெரியாழ்வார் திருமொழியில் முதன்முதலில் வருவது ‘பிறங்கிய பேச்சியை சுவைத்திட்டு’ என்பதாகும்.

இப்பாசுரத்தில் உள்ள ‘வெள்ளத்தரவில்’ என்பதைப் பெரியாழ்வார் அருளியுள்ள
‘அரவத்தமளியோடு’ என்பதோடு ஒப்பிட்டுச் சுவைத்து மகிழலாம்.

‘முனிவர்களும் யோகிகளும்’ என்பதும் பெரியாழ்வாரைத்தான் குறிப்பிட்டுக் காட்டுகிறது.
ஏனெனில், முனிவர்கள் மற்றும் யோகிகள் ஆகியோர் பற்றற்றவர்கள். பகவானிடம் எதையும் விரும்பிக் கேட்க மாட்டார்கள்.
பெரியாழ்வாரும் பெருமாளிடம் எதையும் விரும்பிக் கேட்கவில்லை.
பெரியாழ்வார் திருமொழியின் சாராம்சமான கடைசிப் பாசுரத்தில் கூட அவர் எதையும் வேண்டிப் பிரார்த்திக்கவில்லை.

ஆக, ஆறாம் பாசுரத்தில் இப்படிப் பெரியாழ்வார் எழுப்பப்படுகிறார் என்பது தெரிகிறது.

————-

பேய்ப் பெண்ணை எழுப்புதல்-அடுத்துள்ள ஏழாம் பாசுரத்தில், குலசேகராழ்வார் எழுப்பப்படுகிறார்.

“கீசு கீசென்[று] எங்கும் ஆனைச் சாத்தன் கலந்து
பேசின பேச்சரவம் கேட்டிலையோ பேய்ப் பெண்ணே
காசும் பிறப்பும் கலகலப்பக் கை பேர்த்து
வாச நறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால்
ஓசை படுத்தத் தயிரவம் கேட்டிலையோ
நாயகப் பெண்பிள்ளாய்! நாராயணன் மூர்த்தி
கேசவனைப் பாடவும் நீகேட்டே கிடத்தியோ
தேச முடையாய்! திறவேலோ ரெம்பாவாய்”

இது; பெரியாழ்வார்க்கு அடுத்த முந்தினவரான குலசேகராழ்வாரை யுணர்த்தும் பாசுரம்,
‘பேய்ப்பெண்ணே!, நாயகப் பெண்பிள்ளாய்?, தேசமுடையாய்!, என்ற மூன்று விளிகளும்
குலசேகராழ்வாரை வற்புறுத்துவன.
பெருமாள் திருமொழியில் மெய்யில் வாழ்க்கையை என்றவொரு பதிகத்தினால்
தம்மைப் பெரும் பேயராகச் சொல்லிக்கொண்டவர் இவ்வாழ்வார்.

ஏர் மலர்ப்பூங்குழல், ஆலை நீள் கரும்பு, மன்னுபுகழ்க் கௌசலைதன் என்ற பதிகங்களில்
பல பெண்களின் தன்மையை யடைந்து பேசினாருமிவர்.

“கொல்லி காவலன் கூடல் நாயகன்” என்று அரசரான தன்மை தோற்றப் பேசினராதலால்
நாயகப் பெண் பிள்ளாய் என்றது.
அன்றியும், ஒரு ஹாரத்தில் நட்ட நடுவிலுள்ள மணியை ‘நாயகக்கல்’ என்பதுண்டு.
குரு பரம்பரையில் எம்பெருமானாரை நடுநாயகமென்று யதிராஜ ஸப்ததியில் தேசிகன் கூறினர்;
யதிராஜேந நிபத்த நாயக ஸ்ரீ: மஹதீ குரபங்க்தி ஹாசயஷ்டி:” என்கிறார்
அதுபோலவே ஆழ்வார்களுள் குலசேகரர் நடுநாயகமாக வுள்ளவர்.
பொய்கையார் பூதத்தார் பேயார் மழிசையர் மாறன் என முன்னே ஐவர்;
பட்டநாதன் கோதை தொண்டரடிப்பொடிகள் பாண்பெருமாள் கலியன் எனப்பின்னே ஐவர்;
நடுவே குலசேகரர்.
ஆகவே இதுபற்றயும் நாயகப்பெண்பிள்ளாய் என்ற பிறி நன்கு பொருந்தும்.

(தேசமுடையாய்!)
பகவத் கீதையில் (18-43) (சௌர்யம் தேஜோத்ருதிர் தாக்ஷ்யம் — க்ஷாத்ரம் கர்ம ஸ்வபாவஜம்.)
என்று தேஜஸ்ஸு க்ஷத்திரிய தர்மமாகச் சொல்லப்பட்டிருப்பதற்கிணங்க இந்த விளி
இவ்வாழ்பாருடைய க்ஷத்திரியத்வத்தைத் தெரிவிக்கும்.
அன்றியும்,
“தேவத்வமும் நிந்தையானவனுக்கு ஒளிவரும் ஜநிகள் போலே ப்ரஹ்மஜன்மமும் இழுக்கென்பார்க்குப்
பண்டை நாளில் பிறவி உண்ணாட்டுத் தேசிறே” என்ற ஆசார்ய ஹ்ருதய ஸ்ரீ ஸுக்தியின்படியும்,
அதற்கு மூலமான “மண்ணாட்டிலாராகியெவ்விழிவிற்றானாலும்;, ஆழியங்கைப் பேராயற்கு
ஆளாம் பிறப்பு – உண்ணாட்டுத் தேசன்றே” என்ற பெரிய திருவந்தாதிப் பாசுரத்தின்படியும்
பகவத் சேஷத்வத்திற்கு அநுகூலமான பிறப்பே தேஜஸ்ஸென்று நிர்ணயிக்கப்படுகிறது;
அப்படிப்பட்ட பிறப்பை ஊனேறு செல்வத்து என்ற பதிகத்தில் பாசுரந்தோறும் ஓரோ விதமாக விரும்பினவர்
இவ்வாழ்வாரேயாதலால் தேசமுடையார் இவரேயாகத்தகும்.

இப்பாட்டில் “ஆனைச்சாத்தன்” என்ற பதப்பிரயோகம் கவனிக்கத் தக்கது.
இச்சொல் மலையாள பாஷையிலிருந்து திசைச் சொல்லாகத் தமிழில் வழங்குவதென்பர்.
(ஆன சாதம்) என்று மலைநாடர் வலியனென்னும் பறவையை வழங்குவராம்.
இவ்வாழ்வார் மலைநாட்டில் திருவவதாரித்தவராதலால் அத்திசைச்சொல் இங்குட் பரவசமாகவே அமைந்தது போலும்.

காசும் பிறப்பும் என்று ஆபரண விசேஷங்களைப் பற்றின ப்ரஸ்தாவமிருப்பது இவ்வாழ்வாருடைய சரிதையில்
ஆபரண ப்ரஸ்தாவமுள்ளவாற்றை ஒருவாறு நினைப்பூட்டும்.
“ஆரங்கெடப் பரனன்பர் கொள்ளாரென்று அவர்களுக்கே வாரங்கொடு குடப்பாம்பில் கையிட்டவன்” என்ற தனியனும் ஸ்மரிப்பது.

“வாசநறுங் குழ லாய்ச்சியர் மத்தின லோசைபடுத்த தயிரரவம்” என்றது பெருமாள் திருமொழியில்
“கெண்டை யொண்கணை மடவாளொருத்தி கீழையகத்துத் தயிர் கடையக்கண்டு…..
வண்டமர் பூங்குழல் தாழ்ந்துலாவ….. தண் தயிர் நீ கடைந்திட்ட வண்ணம்” என்ற பாசுரத்துச் சொற் சுவைகளை நன்கு நினைப்பூட்டும்.

(நாராணயன் மூர்த்தி கேசவனைப் பாடவும்) திருஷ்ணாவதாரத்தில் குதிரை வடிவாக வந்த கேசியென்னு மஸுரணை
வதஞ்செய்ததனால் கேசவனென்றது.
இவ்வாழ்வார் தமது திருமொழியில் முதன் முதலாக இந்த வரலாற்றையே பேசியநுபவித்தார்
மாவினை வாய் பிளந் துகந்தமாலை என்று.
ஸ்வ ப்ரபந்தத்தை “நலந்திகழ் நாரணனடிக்கீழ் நண்ணுவாரே” என்று நாராயணனைப் பாடித் தலைக் காட்டினார்.

(கேட்டே கிடத்தியோ) இவ்வாழ்வார் நாடோறும் அந்தணர்களைக் கொண்டு ஸ்ரீராமாயண பாராயணஞ் செய்வித்துத்
தாம் கேட்டவர்.
கேட்டு, இருந்தவிடத்திலிராமல் படையெடுத்துஞ்சென்றவர்.

—————

இதில் குலசேகர ஆழ்வார் எழுப்பப்படுகிறார்.
பொழுது விடிந்ததற்கு அடையாளமாக ஆனைச்சாத்தன் என்ற குருவி எழுந்து பேசுவது, அதாவது ஒலிப்பது இப்பாசுரத்தில் கூறப்பட்டுள்ளது.
ஆனைச்சாத்தன் என்பது ‘வலியன்’ என்று வழங்கப்படும் ‘பரத்வாஜப் பக்ஷி’யாகும்.
இக்குருவி மலையாள மொழியில் ‘ஆனை சாதம்’ என்று வழங்கப்படும்.
ஆனைச்சாத்தன் என்பது மலையாள மொழிச் சொல்லின் திரிபாகும். குலசேகர ஆழ்வாரும் மலையாள தேசத்தைச் சார்ந்தவர்.
அவர் மலையாள நாட்டில் உள்ள வஞ்சிக்களம் எனும் ஊரில் அவதரித்தவர் ஆவர்.

’பேய்ப்பெண்ணே!” என்பதும் குலசேகர ஆழ்வாரைக் குறிப்பதாகும்.
அவர்
“பேயரே யெனக்கி யாவரும், யானுமோர் பேயனே யெவர்க்கும் இது பேசியென்,
’ஆய னே!அரங்கா! என்றழைக்கின்றேன், பேயனா யொழிந்தே னெம்பிரானுக்கே” [பெருமாள் திருமொழி 3.8]
என்பது அவர் அருளிச் செயலாகும்.
எனவே நாச்சியார் அவரை ‘பேய்ப்பெண்ணே!’ என்றழைக்கிறார்.

குலசேகராழ்வாரின் அரண்மனையில் எப்பொழுதும் ஸ்ரீவைஷ்ணவர்களே நிறைந்திருப்பார்கள்.
அதை மந்திரிகள் விரும்பவில்லை. எனவே அவர்கள் பெருமாளின் ஆபரணங்களைத் திருடி மறைத்துவிட்டு
அப்பழியைப் பாகவதர்கள் மேல் போட்டுவிட்டார்கள்.
“என்னடியார் அது செய்யார்; பாகவதர்கள் எடுத்திருக்க மாட்டார்கள்” என்று கூறி அதற்காகச் சத்தியம் செய்ய
குலசேகராழ்வார் பாம்புள்ள குடத்திலே கையைவிட்டார். பாம்பு அவரைத் தீண்டாமல் வெளியே வந்து தலையை ஆட்டி
மூன்று முறை சத்தியம் செய்து போயிற்று. பிறகு நகையை மறைத்தவர்கள் மன்னிப்பு கேட்டு நகையைக் கொண்டு வந்து கொடுத்தார்கள்.
இந்த வரலாற்றை நினவூட்டும் விதமாகத்தான் இப்பாசுரத்தில் ‘காசும் பிறப்பும்’ எனும் சொற்றொடர் அமைந்துள்ளது.

காசு மற்றும் பிறப்பு என்பவை ஆயர் பெண்கள் அணிகின்ற அச்சுத்தாலி ஆமைத்தாலி ஆகியவற்றைக் குறிக்கின்றன.
இப்படி ஆபரணங்கள் பேசப்படுவதன் மூலம் குலசேகர ஆழ்வாரே காட்டப்படுகிறார்.
மேலும் ’பிறப்பு’ என்பது குலசேகரர் ‘ஊனேறு செல்வத்து’ பதிகத்தில் திருமலையின் மேல் ஏதேனும் ஒரு பிறப்பை வேண்டியதையும் குறிக்கிறது.

‘நாயகப் பெண்பிள்ளாய்’ எனும் சொற்றொடரும் குலசேகர ஆழ்வாரையே காட்டும்.
ஆழ்வார்கள் வரிசையைப் பார்த்தால் குலசேகர ஆழ்வார் நடு நாயகமாக விளங்கிறார்.
பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், திருமழிசையாழ்வார், நம்மாழ்வார் என முன்னால் ஐந்து ஆழ்வார்களும்,
ஆண்டாள் நாச்சியார், தொண்டரடிப்பொடியாழ்வார், திருப்பாணாழ்வார், பெரியாழ்வார், திருமங்கையாழ்வார் எனப்
பின்னால் ஐந்து ஆழ்வார்களும் இருக்க நடுநாயகமாய் குலசேகராழ்வார் விளங்குகிறார்.

‘பெண்பிள்ளாய்’ என்பதும் இவரையே காட்டும். குலசேகராழ்வார்
‘ஏர்மலர்ப் பூங்குழல்’, ‘ஆலை நீள்கரும்பு’, மற்றும் ‘மன்னுபுகழ் கோசலை’ பதிகங்களில்
தம்மைப் பெண்ணாக வைத்தே அருளிச் செய்திருக்கிறார்.

பெருமானுக்குக் ‘கேசவன்’ எனும் திருநாமம் குதிரை வடிவில் வந்த கேசி என்னும் அரக்கனை அழித்ததால் ஏற்பட்டது.
அத்தகைய கேசி வதத்தை முதன்முதல் பேசியவர் குலசேகர ஆழ்வாரே ஆவார்.

“கேட்டே கிடத்தியோ” என்பதும் குலசேகர ஆழ்வாரையே காட்டுகிறது.
ஒரு சமயம் இராமாயண உபன்யாசத்தில் ஸ்ரீஇராமன் கர தூஷணரோடு தனியாய் யுத்தம் செய்கிறான் என்று சொன்னதைக் கேட்ட
குலசேகரர் உடனே அமைச்சரை அழைத்து, “இராமபிரானுக்குத் துணையாய் நம் சைன்யத்தைத் திரட்டு” என ஆணையிட்டார்.
அப்படி ஓடியவரே இப்போது கேட்டுகொண்டு கிடக்கலாமா? என்று அவர் எழுப்பப்படுகிறார்.

அடுத்து இப்பாசுரத்தில் “தேசமுடையாய்” என்று காட்டப்படுகிறது.
தேசம் என்பது தேஜஸ், பலம், வீர்யம் பொலிவு, போன்ற பொருள்களைத் தரும் இக்குணங்கள் எல்லாம் க்ஷத்திரியருக்கே உரியன.
குலசேகரர் மன்னர். அதுவும் க்ஷத்திரியர் என்பதால் அதுவும் இவருக்கே பொருந்துகிறது.
ஆக ஏழாம் பாசுரத்தில் குலசேகராழ்வார் எழுப்பப்படுகிறார் என்பதை உணர முடிகிறது.

————

”கீழ்வானம் வெள்ளென் றெருமை சிறுவீடு
மேய்வான் பரந்தனகாண் மிக்குள்ள பிள்ளைகளும்
போவான்போ கின்றாரைப் போகாமல் காத்துன்னைக்
கூவுவான் வந்துநின்றோம்; கோது கலமுடைய
பாவாய்! எழுந்திராய்! பாடிப் பறை கொண்டு
மாவாய்ப் பிளந்தானை மல்லரை மாட்டிய
தேவாதி தேவனைச் சென்றுநாம் சேவித்தால்
ஆவாவென் றாராய்ந் தருளேலோ ரெம்பாவாய்”

(ஸ்வாபதேசம்) குலசேகரர்க்கு அடுத்த முந்தினவரான நம்மாழ்வாரை யுணர்த்தும் பாசுரமிது.
கோதுகலமுடைய பாவாய்! என்றவிளி நம்மாழ்வாரை வற்புறுத்தும்.
கோதுகுலமுடைய என்று வழங்கிவரும் பாடம் பரமக்ருபையுடன் மறக்கத்தக்கது.
அப்பாடம் நெடுநாளாகவே நாடெங்கும் பரவியதனாலாய அநர்த்தம் பெரிதுமுண்டு.
ஸ்ரீ பரகாலஸ்வாமி வியாக்கியானம் செய்தருளுமிடத்து குலம் குலமாக வுனக்குப் பரிசர்யை பண்ணும்படி என்றுரைத்திட்டார்.
அது, கோதுகலமுடைய என்கிற (தவறுதலான) பாடத்தில் அபிநிவேசத்தினால் போலும்.
வஸ்துதஸ்து, வடமொழியில் கௌதூஹலம் என்ற சொல் தமிழில் கோதுகலமெனத் திரீந்தது.
இதில் குகரம் நுழைய ப்ரஸக்தியில்லை.
கோதுகலம் உடைக்குட்டனேயோ என்றார் பெரியாழ்வாரும்.)

கோதுகலமாவது ஆசை; ஆசையையுடைய என்றது.-எம்பெருமானிடத்தில் ஆசையையுடைய,
அல்லது எம்பெருமானுடைய ஆசையைத் தன்னிடத்திலே கொண்டுள்ள என்று இருவகையாகவும் பொருள்படும்.

பட்டர் நம்மாழ்வாரைப் பற்றிப் பேசும்போது ரீஷிம் ஜுஷாமஹே க்ருஷ்ணத்ருஷ்ணா தத்வமிவோதிதம் என்று
க்ருஷ்ண குதூஹலமே நம்மாழ்வாராக வடிவெடுத்தது என்றார்.
க்ருஷ்ண த்ருஷ்ணா என்றதும் க்ருஷ்ணனிடத்தில் த்ருஷ்ணை, க்ருஷ்ணனுடைய த்ருஷ்ணை என இருவகையாகவும் விரியும்.
இதனால் தேறின பொருளை
கைம்மா துன்பொழித்தாயென்று கைதலை பூசலிட்டே, மெய்மால யொழிந்தேன் எம்பிரானுமென்மேலானே
என்ற பாசுரத்தினால் நம்மாழ்வார்; தாமே வெளியிட்டருளினர்.
ப்ரியோ ஹி ஜ்ஞாநிதோத்யர்த்தம் அஹம் ஸ ச மம ப்ரிய: என்றபடி.
நானும் எம்பெருமானிடத்துக் குதூகலங் கொண்டேன்,
அவனும் என்னிடத்துக் குதூஹலங் கொண்டான் என்றருளிச் செய்தவர் நம்மாழ்வார்.

பாவாய்! என்ற விளியும் இவர்க்குப் பொருந்தும்.
திருவாய் மொழியில் சூழ்வினை யாட்டியேன் பாவையே என்றும்
என்பாவை போயினித் தண்பழனத் திருக்கோளுர்க்கே என்றும்
பலவிடங்களில் தம்மைப் பாவையாகச் சொல்லிக்கொண்டவர் இவ்வாழ்வார்.

எழுந்திராய் என்ற சொல்லாற்றல் நன்கு நோக்கத்தக்கது;
உட்கார்ந்திருப்பவரையன்றோ எழுந்திரா யென்பது.
மற்றையாழ்வார்களெல்லாரும் அர்ச்சையில் நின்ற திருக் கோலமாகவேயுள்ளார்;
நம்மாழ்வாரொருவரே வீற்றிருந்த திருக்கோலம்.
புத்மாஸநோபவிஷ்டம் என்கிற பூர்வாசார்ய ச்லோக ரத்னமும் இங்கு அநுஸந்தேயம்.

(கீழ்வானம் வெள்ளென்று.) உதயகாலத்தில் கிழக்குவெளுக்கும்.
இங்கும் வகுளுபூஷண பாஸ்கரோதய மாதலாலும்,
அதுதானும் கலியுகத்தின் உதயகாலத்திலாதலாலும் கிழக்கு வெறுத்ததாகச் சொல்லிற்று.

கீழ்வானமென்றபோதே மேல்வானம் நினைவுக்கு வரும்.
நி த்தியவிபூதி மேல் வானமாகும். லீலாவிபூதியானது நம்மாழ்வாருடைய திருவாய்மொழி யவதாரத்தாலே
வையம் மன்னிவீற்றிருந்து விண்ணுமாள்வர் மண்ணூடே இத்யாதிப்படியே தானே பரமபதமாயிற்று.
ஆகவே கீழ்வானமான இவ்விபூதி வெள்ளென்றது.

(எருமை சிறுவீடு மேய்வான்) வீடு என்று மோக்ஷம்; சிறு வீடு என்று கைவல்ய மோக்ஷம்.
இந்த ஸங்கேதமிட்டருளினவர் நம்மாழ்வார்;
திருவாய்மொழியில் (4-1-10) குறுக மிகவுணர்வத்தொடு நோக்கி என்ற பாசுரத்தின் பொருள் கொண்டு இஃது அறியத்தக்கது.

எருமையென்பது தாமஸப்ரக்ருதிகளை.
நம்மாழ்வார் திருவவதாரம் செய்தருள்வதற்கு முன்னே பலரும் தாமஸ ப்ரக்ருதிகளாய் நல்வீடு செல்லாது
சிறுவீடு முதலியவற்றிற் சென்று பாழாயினர் என்பது இங்கு ஸுசிதம்.

(மிக்குள்ள பிள்ளைகளுமித்யாதி.) மற்றைப் பிள்ளைகளையும் போகவொட்டாமல் தடுத்து
இப்பிள்ளை வாசலில் வந்துதுவள்வதனால் இவருக்குண்டான விலக்ஷணமான ஏற்றம் தோற்றுவதுபோல,
மற்றை யாழ்வார்களிற் காட்டில் நம்மாழ்வார்க்குண்டான ப்ரபந்நஜந கூடல்தத்வமாகிற ஏற்றம் தோற்றுவிக்கப் பட்டது.

போவான் போகின்றாரை என்ற பிரயோகம் வெகு ஆச்சரியமானது.
போவதற்காகப் போகிறவர்கள் என்று சொல்லுவதுண்டோ? இல்லை. அப்படியிருக்க ஏன் சொல்லிற்று?
போவதுதானே ஸ்வயம் ப்ரயோஜனமென்று காட்டுவதற்காகவே சொல்லிற்று.
இத்தகைய பிரயோகம் முதன் முதலாக நம்மாழ்வார் திருவாக்கில் தான் வந்தது;
திருவிருத்தத்தில் போவான் வழிக்கொண்ட மேகங்களே! என்றார்.

(உன்னைக் கூவுவான் வந்துநின்றோம்.) கூவிக்கொள்ளும் காலமின்னங் குறுகாதோ
என்னைக் கூவியருளாய் கண்ணனே கூவிக்கொள்ளாய் வந்தந்தோ என்று
பலகாலும் விரும்பினபடியே கூவுவான் வந்து நின்றோமென்கிறாள்,

(மாவாய் பிளந்த தேவாதிதேவனை) இப்போது ஆண்டாள் நோற்பதுபோல
நம்மாழ்வாரும் ஒரு திருவாய் மொழியில் நோன்பு நோற்றார்;
வீற்றிருந்தேழுலகும் என்ற திருவாய் மொழியில் ஏற்ற நோற்றேற்கு என்று முதலிலும்
வண்டமிழ் நூற்க நோற்றேன் என்று முடிவிலும் வருவது காண்க.
அங்ஙனம் நோற்ற திருவாய்மொழியில் தேவாதி தேவனை அநுபவிக்கின்ற ஆழ்வார்
மாவாய் பிளந்தானென்ற விசேஷணத்தையே முதற்பாட்டில் இட்டருளினர்;
வெம்மாபிறந்தான் தன்னை என்றது காண்க.

ப்ரதமப்ரபந்தத்தில் இமையோர் தலைவா! என்றும்;
சரமப்ரபந்தத்தில் அயர்வறுமமரர்களதிபதி என்றும்
தேவாதி தேவனையே முந்துற முன்னம் சேவித்தாராழ்வார்.

(சென்று நாம் சேவித்தால்) வான நாயகனே! அடியேன் தொழவந்தருளே என்று
தேவாதி தேவனை நீர் உம்மிடம் வருமாறு அழைத்தீர்;
அங்ஙனமல்லாமல் அவனிடம் நாம் சென்று சேவிக்கலாம் வாரும் என்றழைக்கிறாள் போலும்.

(ஆவாவென்று) ஆவாவென விரங்கார் அந்தோவலிதே கொல், மாவாய் பிளந்தார் மனம் என்றும்;,
அடியேற்கு ஆவாவென்னாயே என்றும்
நீர் விரும்பினபடியே மாவாய்பிளந்த பெருமான் உமக்கு ஆவாவென்பன் என்று காட்டுகிறபடி

(ஆராய்ந்து) ஆரென்னையாராய்வார் என்ற உம்முடைய குறையும் தீரும் என்று காட்டியபடி.

இது திருப்பாவையின் எட்டாம் பாசுரமாகும். இதன் உள்ளர்த்தத்தை ஆராய்ந்தால் நம்மாழ்வாரை எழுப்புவதை உணர முடிகிறது.
‘கீழ்வானம் வெள்ளென்று’ என்று முதலில் கிழக்கு வெளுத்ததை இப்பாசுரம் காட்டுகிறது.
நம்மாழ்வார் அவதரித்ததை ‘வகுள பூஷண பாஸ்கரோதயம்’ என்பார்கள்.
சூரியன் உதித்து இருள் அகல்வது போல, நம்மாழ்வர் அவதரித்து அஞ்ஞான இருள் அகன்றது இங்கே கூறப்படுகிறது.

‘எருமை சிறுவீடு’ என்று கூறுகிறது பாசுரம். சிறு வீடு என்று ஒன்று இருந்தால் பெருவீடும் இருக்கும்.
சிறு வீடு என்பதைக் கைவல்யானந்தம் என்றும், பெருவீடு என்பதை மோக்ஷம் என்றும் பொருள் கூறுவார்கள்.
ஆத்மாவை அறிந்து ஆனந்தப்பட்டு அங்கேயே நின்றுவிடக் கூடாது;
அதற்கும் மேலே மோக்ஷம் என்ற பெருவீடு ஒன்று இருக்கிறது என்று காட்டியவர் நம்மாழ்வார்.
மேலும் எம்பெருமானிடத்தில்தான் பரமானந்தம். எனவே, பெருவீட்டை ஆலோசிக்க வேண்டும்;
எம்பெருமானைப் பற்றி நிற்க வேண்டும் என்று நம்மாழ்வார் ‘சூழ்ந்த’ [3775] எனும் பாசுரத்தில் அருளிச் செய்கிறார்.

“போவான் போகின்றாரைப் போகாமல் காத்து உன்னைக் கூவுவான்” என்பதும்
நம்மாழ்வாரைக் காட்டி எழுப்புவது போலிருக்கிறது.
வடதேசத்தில் யாத்திரை போய்க்கொண்டிருந்த மதுரகவி ஆழ்வாரைப் போகாமல் காத்துக் குருகூருக்கு
வரவழைத்தது நம்மாழ்வாரின் திருவுளம் அன்றோ?

“அடுத்துக் கூவுவான்” என்பதுவும் நம்மாழ்வாரையே காட்டும்.
நம்மாழ்வாரைக் கூவுவதற்காகவே அதாவது எழுப்புவதற்காகவே மதுரகவி ஆழ்வார் வந்தார்.

மேலும், “கூவிக் கொள்ளும் காலமின்னும் குறுகாதோ?” [3323] என்றும்,
“கூவிக்கொள்ளாய் வந்தந்தோ! [3767] என்றும் கூவுதல் எனும் சொல்லை மிகுதியும் சொன்னவர் நம்மாழ்வாரே ஆவார்.

‘கோதுகலமுடையாய்’ என்பதும் நம்மாழ்வாரையே காட்டுகிறது.
ஏனெனில் கிருஷ்ண குதூகலமே நம்மாழ்வாராக வடிவெடுத்தது.
நானும் அவனிடம் அவனிடம் குதூகலம் கொண்டேன்; அவனும் என்னிடம் குதூகலம் கொண்டான் என்பார் நம்மாழ்வார்.

‘பாவாய்’ என்பதன் உள்பொருளை நோக்கினால் நம்மாழ்வார் தம்மைப் பாவையாய்ச் சொன்னது விளங்கும்.
“சூழ் வினையாட்டியேன் பாவையே” என்றும்,
“என் பாவை போய் இனித் திருக்கோளூர்க்கே” என அருளியவர் நம்மாழ்வார்.

’எழுந்திராய்’ என்று நம்மாழ்வாரைத்தான் எழுப்புகிறர்கள். உட்கார்ந்திருப்பவரைத்தானே எழுப்புவார்கள்.
ஆழ்வார் பெருமக்களில் நம்மாழ்வார் மட்டுமே அமர்ந்த கோலத்தில் இருப்பவர். எனவே அவர் எழுப்பப்படுகிறார்.

’தேவாதிதேவன்’ என்பதற்கு நம்மாழ்வார் தம் திருவாய்மொழியில் முதலிலேயே
“உயர்வற உயர்நலம் உடையவன் யவனவன்” என்பது காட்டப்படுகிறது.

“ஆவாவென்று ஆராய்ந்து”—
நம்மாழ்வார் “ஆர் என்னை ஆராய்வார்” [திருவாய்மொழி—5-4-5] என்று சொன்னவர்.
“தன்னை ஆராய வேண்டும்; பகவானை ஆராய வேண்டும்; அவனை அடையும் வழியை ஆராய வேண்டும்;
அடைந்தபின் ஏற்படும் பயனை ஆராய வேண்டும்; அவனை அடையவிடாமல் தடுக்கும் தடைகளை ஆராய வேண்டும்”
என்ற அர்த்த பஞ்சக ஞானத்தைத் தான் நம்மாழ்வாரின் பாசுரங்கள் அருளுகின்றன.

——————

ஒன்பதாம் பாசுரத்தில் எழுப்பப்படுபவர் திருமழிசை ஆழ்வார் ஆவார்.
“தூமணி மாடத்துச் சுற்றும் விளக்கெரிய
தூபம் கமழத் துயிலணைமேல் கண்வளரும்
மாமான் மகளே! மணிக்கதவம் தாள்திறவாய்!
மாமீர் அவளை எழுப்பீரோ! உன்மகள்தான்
ஊமையோ! அன்றிச் செவிடோ! அனந்தலோ!
ஏமப் பெருந்துயில் மந்திரப் பட்டாளோ?
மாமாயன் மாதவன் வைகுந்தன் என்று
நாமம் பலவும் நவின்றேலோ ரெம்பாவாய்”

(ஸ்வாபதேசம்).
நம்மாழ்வாருக்கு அடுத்த முந்தினவரான திருமழிசைப்பிரானை யுணர்த்தும் பாசுரமிது.
இதில் மாமான் மகளே! என்ற விளி ஒருவகையான தேஹ ஸம்பந்த்தில் நோக்குடையது.
ஆண்டாளுக்கும் திருமழிசை யாழ்வார்க்கும் ஒரு வகையான தேஹஸம்பந்தமுண்டு :
அதாவது – ஸ்ரீதேசிகன் கோதாஸ்துதியில்
“கமலாமிவாந்யாம் கோதாம்” என்றும்
“ஸந்த : பயோதி துஹிதுஸ் ஸஹஜாம் விதுல் த்வாம்” என்றும் அருளிச் செய்தபடியே
ஆண்டாள் ஸாக்ஷாத் ஸ்ரீமஹாலக்ஷ்மியாவள்

“பார்க்கவீ லோகஜநநீ க்ஷ்ரஸாகரஸம்பவா” என்ற அமரகோசத்தின் படியும் இதிஹாஸ புராண வரலாற்றின் படியும்
லக்ஷ்மி (ஆண்டாள்) ப்ருகு குலத்தில் தோன்றியவள்.
திருமழிசைப்பிரானும் ப்ருகு குலத்தில் தோன்றியவரென்பது சரித்திர ஸித்தம்.
இத்தகைய ஸமாந குலஸம்பந்தம் இங்கு நோக்கத்தக்கது.
ரிஷி குலத்திலே பிறந்து பிரம்பன் குடியிலேயானார் அவர்.
ப்ராஹமண குலத்திலே பிறந்து கோபாலர் குலத்திலேயானாள் இவள். இதுவும் ஒற்றுமை நயம்.

(தூமணி மாடத்து) சிறந்த மாணிக்கக் குப்பியினுள்ளேயுள்ளது வெளியில் நிழலிட்டுத் தோன்றும்.
திருமழிசைப்பிரான் “உட்கிடந்த வண்ணமே புறம் பொசிந்து காட்டிடே” என்று வேண்டிக் கொண்டபடியே
உள்ளிருந்த திருமால் அப்படியே வெளியிற் பொசிந்து காட்சி தந்தமையால் இவர் தூமணிமாட மென்னத் தகுதியுடையார்.

(சுற்றும் விளக்கெரிய) விளக்காவது ஞானவொளி.
“சாக்கியங் கற்றோஞ் சமண்கற்றோம் சங்கரனாராக்கிய ஆகமநூல் ஆராய்ந்தோம்,” என்றபடி
இவ்வாழ்வார் ஸகல மதங்களிலும் புக்கு ஸர்வதோமுகமான ஞான விளக்கம் பெற்றவராதலால்
சுற்றும் விளக்கெரிதல் இவர்க்கு அஸாதாரணம்.

“யானறிந்தவாறு – ஆரறிவார்” என்றும்
“என் மதிக்கு விண்ணெல்லாமுண்டோ விலை” என்றும் இவரது பாசுரங்களினாலும் இது ஸித்தம்.

(தூபம் கமழ) சிறந்த ஞானமிருத்தல் மாத்திரம் பயன்படாது; அது நன்கு பரிமளிக்கவேண்டும்.
எம்பெருமானையன்றி வேறொரு தெய்வத்தைத் தொழாதிருத்தலே ஞானத்திற்குப் பரிமளம்.
“மறந்தும் புறந்தொழா மாந்தர்” என்பது இவ்வாழ்வாருடைய திருவாக்காகும்.

(துயிலணை மேல் கண்வளரும்) இவ்வாழ்வாருடைய திருக்கண் செல்வது
சயனத்திருக்கோலமான எம்பெருமான்களின் மீது தான்.
கச்சி வெஃகாவிலும் திருக்குடந்தையிலுமே பெரும்பாலும் இவர் காலம் கழித்தது.
சயனத் திருப்பதிகளையே ஒரு கோர்வையாக வெடுத்துப் பாசுரம் பாடினவரும் இவ்வாழ்வார்;
நாகத்தணைக் குடந்தை வெஃகாத் திருவெவ்வுள் நாகத்தணையரங்கம் பேர் அன்பில் –
நாகத்தணைப் பாற்கடல் கிடக்கு மாதி நெடுமால், அணைப்பார் கருத்தனவான்” என்றது காண்க.

(துயிலணை மேல் கண்வளரும் மாமானுடைய மகளே!)
மகள் என்றதனால் விதேயத்வம் சொன்னபடி.
மகள் சொற்படி தந்தை கேட்பதும் தந்தை சொற்படி மகள் கேட்பதும் வழக்கம்.
மாமான் என்றது மஹா மஹான் என்றபடி.
துயிலணைமேல் கண்வளரும் மாமான் யதோக்தகாரி யெம்பெருமான்;
அப்பெருமாள் இவ்வாழ்வார் சொற்படி கேட்டவர்;
‘கணிகண்ணன் போகின்றான் – நீயுமுயன்றன் பைந் நாகப் பாய் சுருட்டிக்கொள்’ என்ற போது
அப்படியே சுருட்டிக்கொண்டு புறப்பட்டார்;
“உன்றன் பைந்நாகப்பாய் விரித்துக்கொள்” என்ற போதும் அப்படியே.

இனி, துயிலணைமேற் கண்வளரும் மாமான் – ஆராவமுதன்;
அப்பெருமாளும் “எழுந்திருந்து பேசுவாழி கேசனே” என்ற
இவ்வாழ்வாரது வேண்டுகோளின்படி எழுந்திருந்தவர் என்பது ப்ரஸித்தம்.

(உன் மகள் தான் ஊமையோ)
வாய் திறவாமலே ஹஸ்த சேஷ்டை முதலியவற்றால் காரியம் செய்வது ஊமைகளின் பணி.
இவ்வாழ்வாரும் யாத்திரை யடைவில் பெரும்புலியூரென்னும் கிராமத்தில் ஒரு வேதியன் வீட்டு வாசல்
திண்ணையில் சிறிது பொழுது எழுந்தருளியிருக்க அங்கு வேதமோதிக்கொண்டிருந்த அந்தணர்கள்
நீறுபூத்த நெறுப்புப்போலுள்ள ஆழ்வாருடைய மஹிமையைத் தெரிந்துகொள்ளாமல்
அவரைக் கீழ்ச்சாதியராக வெண்ணி வேதாத்யயனம் அவருடைய காதிற்படலாகாது என்று கருதி ஓத்துத் தவிர்ந்திருக்க,
அக்குறிப்பை யறிந்த ஆழ்வார் அவ்விடத்தை விட்டுத் தூரத்திற் சென்று வேறோரகத்து மேடையில் வீற்றிருக்கையில்
அந்த வேதியர்கள் மீண்டும் வேதமோதத் தொடங்கி, விட்ட வாக்கியம் தோன்றாது மயங்கி நிற்க,
ஆழ்வார் அது கண்டு கறுப்பு தெற்களைக் கையுகிராலே இடந்துபோட,
அப்பொருளுள்ள வேதவாக்கியம் அவர்கட்குத்தோன்றிற்று:
அதாவது – “க்ருஷ்ணானாம் வ்ரித்றீணாம் நகநிர்பிந்நம்” என்பது.

உடனே அவர்கள் ப்ரதக்ஷ்ண ப்ரணாமாதிகளால் இவரை உபசரித்து க்ரதார்த்தராயினர் என்பது சரித்திர வரலாறு.
இங்ஙனமாக வாய் திறவாமலே, இங்கிதத்தினால் காட்டினது பற்றி ஊமையோ என்றது.
சொன்ன சொற்களைச் செவி யேற்காதவர் செவிடர்: அந்தச் செவிடும் இவரது சரிதையில ப்ரஸித்தம்:
முன் சொன்ன பெரும்புலியூரில் அந்தணரடிகள் யாகஞ் செய்து கொண்டிருந்த விடத்தில்
இவ்வாழ்வாரை எழுந்தருள்வித்துக் கொண்டு போய்ச் சில மஹான்கள் இவர்க்கு அக்ர மொழிகளை வர்ஷிக்க,
அவற்றை இவ்வாழ்வார் செவியேற்காதிருந்தனர் என்ற வரலாறு காண்க.

(அனந்தலோ) தூக்கமோ என்றபடி, பரமைகாந்திகட்குத் தூக்கமாவது பாஹ்ய விஷயங்களிற் சிறிதும்
நெஞ்சு செல்லாதிருக்கப் பெறுதலே.
“உன்னைத் தெரித்தெழுதி வர்சித்துங் கேட்டும் வணங்கி வழிபட்டும் பூசித்தும் போக்கினென் போது” என்றும்
“தொழிலெனக்குத் தொல்லைமால் தன்னாமமேத்தப் பொழுதெனக்கு மற்றதுவே போதும்” என்று மருளிச்
செய்யு மிவ்வாழ்வார்க்கு இந்த நிலைமையே அனந்தலாகும்.

(ஏமப்பெருந்துயில் மந்திரப் பட்டாளோ)
மற்றையாழ்வார்களிற் காட்டிலும் இவ்வாழ்வாருடைய பரமைகாந்தித்வம் மிக விலக்ஷணம் என்பது இங்கு அறியத்தக்கது.
“பிதிரு மனமிலேன் பிஞ்ஞகன்றன்னோடெதிர்வன், அவனெனக்கு நேரான்” என்னும் படியான
திரு நாவீறு இவர்க்கே அஸாதாரணமன்றோ!
இது தான் பெருந்துயில், எம்பெருமானை யொழிந்த மற்றையோரைக் கண்கொண்டு பாராமையிற் பெருமை.

(மாமாயன்)
“மாயமென்ன மாயமே” என்றும்,
“மாயமாய மாக்கிகனாய் உன்மாயமுற்று மாயமே” என்றும் பலகாலும் எம்பெருமானது மாமாயங்களைப் பேசுகிறவர் இவ்வாழ்வார்.

(மாதவன்) “மாதவனை ஏத்தாதார் ஈனவரே” என்றவரும் இவ்வாழ்வாரே,
“திருவில்லாத் தேவரைத் தேறேன்மின் தேவு” என்றதுங் காணலாம்.

(வைகுந்தன்)
“வைகுந்தச் செல்வனார் சேவடிமேல் பாட்டு” என்றவர் இவ்வாழ்வாரே.
வைகுந்தனது சேவடிமேல் தாம் பாசுரம் பாடினவராகச் சொல்லிக்கொண்டார்.

ஆகவே, மாமாயன், மாதவன், வைகுந்தனென்ற திருநாமங்கள் இவ்வாழ்வார்க்குப் பரம போக்யங்களென்பது ஸூசிதம்.

தூமணி மாடத்தில் எங்கும் விளக்குகள் எரிகின்றன. ஒரே பிரகாசமாய் இருக்கிறது.
திருமழிசை ஆழ்வார் உள்ளத்தில் பகவான் பிரகாசமாய் வீற்றிருக்கிறான்.

திருப்பெரும்புலியூர் அக்ரகாரத்தில் ஒரு யாகம் நடக்கிறது. அந்த யாகத்தில் அக்ர பூஜையை திருமழிசையாழ்வாருக்கு அளிக்கும்போது
அனைவரும் எள்ளி நகையாடினர். தம் பெருமையை எல்லாம் அவர் மறைத்துக் கொண்டு இருந்ததால்
அவர் பெருமை யாருக்கும் தெரியவில்லை. அவர் மிகவும் சாமான்யமாக இருந்ததால் அவரைப் பற்றித் தப்பாகப் பேசினார்கள்.
உடனே திருமழிசையாழ்வார் தம் உள்ளே குடிகொண்டிருந்த பரமாத்மாவைக் காட்டினார்.

‘சுற்றும் விளக்கெரிய’ என்பது சாக்கியம், சைவம், சமணம் எல்லாம் சென்று பின்னர் ஸ்ரீவைஷ்ணவமே பெரிது என்று
இந்த ஆழ்வார் ஞான விளக்கம் பெற்றதைக் குறிக்கும்.
திருமழிசை ஆழ்வாருக்கு பெருமாளின் சயனக் கோலத்தில் மிகுந்த ஈடுபாடு உண்டு.
அதைத்தான் இங்கு ‘துயிலணை மேல் கண் வளர’ என்று காட்டுகிறார்கள்.
அவன் படுத்திருக்கும் திவ்ய தேசங்கள் எல்லாவற்றையும் இவர் ஒரு பாசுரத்தில் அருளிச் செய்துள்ளார்.

“நாகத் தணைக்குடந்தை வெஃகா திருவெவ்வுள்
நாகத் தணையரங்கம் பேரன்பில்—நாகத்
தணைப்பாற் கடல்கிடக்கு மாதி நெடுமால்
அணைப்பார் கருத்தனா வான்”-[நான்முகன் திருவந்தாதி—36]

‘மாமான் மகளே’ என்பது திருமழிசையாழ்வாருக்கும் ஆண்டாள் நாச்சியாருக்கும் உள்ள திருமேனி சம்பந்தம் சொல்லப்படுகிறது.
இவர்களுக்குள் உறவுமுறை உண்டு. மகாலட்சுமியின் திருஉருவமே ஆண்டாள் ஆவார். மகாலட்சுமி பிருகு வம்சத்தில் தோன்றியவர்;
இந்த ஆழ்வாரும் பிருகு வம்சத்தவர். எனவே இருவருக்கும் உள்ள உறவு முறை இங்கு மறைமுகமாய்க் காட்டப்பட்டுள்ளது.

ஊமைகள் சைகைகளால் சாடை காட்டிப் பேசிக் கொள்வார்கள். திருமழிசையாழ்வாரும் ஒருமுறை சைகையாலே கருத்தறிவித்தார்.
அதாவது திருப்பெரும்புலியூரில் வேதபாராயணம் நடக்கும்போது இந்த ஆழ்வார் அங்கு வந்தார்.
உடனே அவர்கள் பாராயணத்தை நிறுத்தி விட்டார்கள். ஆழ்வாரை வரவேற்ற பிறகு தொடர நிறுத்திய இடம் அவர்களுக்கு நினைவுக்கு வரவில்லை.
உடனே ஆழ்வார் கீழே கிடந்த கருகிய நெல்லை எடுத்து நகத்தால் கிள்ளிக் காண்பித்தார்.
உடன் அவர்கள் முதல் காண்டத்தில் “க்ருஷ்ணாநாம் வ்ரீஹீணாம்” என வருவதை நினைவுக்குக் கொண்டு வந்தார்கள்.
இப்படி வாயால் பேசாமல் ஊமைபோல சைகையால் காண்பித்ததால் ‘ஊமையோ’ என்பது திருமழைசையாழ்வார்ருக்குப் பொருந்தும்.

மேலும் அந்தப் பெரும்புலியூரில் ஆழ்வாரை அனைவரும் ஏசினார்கள்.
ஆனால் திருமழிசையாழ்வாரோ காதில் ஏச்சினை விடாத செவிடாய் எதையுமே செவி மடுக்கவில்லை.
எனவே ’செவிடோ’ என்பது இவரையே குறிக்கும்.

‘அனந்தலோ’ என்பது தூக்கத்தை அதாவது பிற விஷயங்களில் நெஞ்சு செல்லாமல் இருப்பதைக் காட்டும்.
திருமழிசையாழ்வாரும்,
“தொழில் எனக்குத் தொல்லை மால் தன் நாமம் ஏத்திப் பொழுது எனக்கு மற்றவை போதும்” என்று வாழ்ந்தவர்.
எனவே ஒன்பதாம் பாசுரத்தில் திருமழிசையாழ்வார் எழுப்பப்படுகிறார்.

———

அடுத்துப் பத்தாவது பாசுரம்:

”நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்
மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார்
நாற்றத் துழாய்முடி நாரா யணன்நம்மால்
போற்றப் பறைதரும் புண்ணியனால் பண்டொருநாள்
கூற்றத்தின் வாய்வீழ்ந்த கும்ப கருணனும்
தோற்றும் உனக்கே பெருந்துயில்தான் தந்தானோ
ஆற்ற அனந்த லுடையாய்! அருங்கலமே!
தேற்றமாய் வந்து திறவேலோ ரெம்பாவாய்”

(ஸ்வாபதேசம்)
திருமழிசை யாழ்வாருக்கு அடுத்த முந்தினவரான பேயாழ்வாரை யுணர்த்தும் பாசுரமிது.
ஓடித் திரியும் யோகிகளாய் ஒருவரோடு ஒருவர் சேராமல் ஸஞ்சரித்துக் கொண்டிருந்த
பொய்கையார் பூதத்தார் பேயார் இம்மூவரையும் ஒன்று சேர்த்து அநுபவிக்கக் கருதிய எம்பெருமான்
ஒரு பெரு மழையை வியாஜமாக்கித் திருக்கோவலிடை கழியில் நெருக்கி யநுபவித்தானென்பது வரலாற்றின் சுருக்கம்.

இப்பேயாழ்வாரைப் பற்றித் திருவரங்கத்தமுதனார் நூற்றந்தாதியில் அருளிச் செய்யுமிடத்து
“மன்னிய போpருள் மாண்டபின் கோவலுள் மாமலராள் தன்னோடு மாயனைக் கண்டமை காட்டும் தமிழ் தலைவன்” என்றார்.
பொய்கையாரும் பூதத்தாரும் இருவிளக்கேற்றியிருளையகற்ற,
இவ் வாழ்வார் “திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன்” என்று தொடங்கிப் பலாநுபவம் செய்தருளினார் என்பர் ஆன்றோர்.
ஆவ்வர்த்தமே யிங்கு முதலடியிற் பொலியும்.

நோற்று –
மற்றையிரண்டு ஆழ்வார்களும் விளக்கேற்றுகையாகிற உபாயாநுஷ்டானஞ் செய்யவே என்றபடி.

சுவர்க்கமாவது ஆனந்தாநுபவம்.
“யஸ்த்வயாஸஹ ஸஸ்வர்க்கோ நிரயோ யஸ் த்வயாவிநா” என்று ஸ்ரீ ராமாயணத்தில் பிராட்டி அருளிச் செய்ததுங் காண்க.

“வாசல் திறவாதார்” என்றது பேயாழ்வார்க்கு மிகவும் பொருத்தமான லிங்கம்.
திருக்கோவ லிடைகழியில் பொய்கையார் முன்னே புகுந்து தாளிட்டுக் கொண்டார்;
பிறகு பூதத்தார் வந்து சேர அவர்க்கு அப்பொய்கையார் வாசல் திறந்தார்.
பிறகு வந்து சேர்ந்த பேயார்க்குப் பூதத்தார் வாசல் திறந்தார்.
இப் பேயார்க்குப் பிறகு ஒருவரும் வந்து புகாமையினால் வாசல் திறக்கவேண்டிற்றில்லை.
ஆகவே வாசல் திறவாதார் என்றது பேயாழ்வார்க்கு மிகப்பொருத்தமாக அமைந்த குறிப்பு.

(நாற்றத்துழாய்முடி நாராயணன்)
இவ்வாழ்வாருடைய பாசுரங்கள் திருத்துழாய் மயமாகவேயிருக்கும்.
திருக்கண்டேனுக்கு அடுத்த பாசுரம் “பொன் தோய்வரை மார்பில் பூந்துழாய்” என்பது.
அதற்கடுத்த பாசுரம் “மலராள் தனத்துள்ளான் தண்டுழாய் மார்வன்” என்பது.
முடிவு பாசுரத்திலும் “தண்டுழாய்த்தார் வாழ் வரை மார்பன்” என்றார்.
இடையிலும் பல பாசுரங்கள் காண்க.

ஒன்பதாவது பாசுரத்தில் (நாமம் பல சொல்லி – யென்பதில்)
நாராயணனையும் திருத்துழாயையும் கண்ணனையும் சேர்த்துப் பாடினார் பேயார். இதுவும் ஒரு சிறந்த பொருத்தம்.

“காண்காணென விரும்பும் கண்கள்” என்று ஒரு நொடிப் பொழுதும் கண்மூடி யிருக்க மாட்டாமையைச்
சொல்லிக் கொண்ட நீர் கும்பகர்ணனுக்கும் மேலாக இன்னமும் துயில் கொள்ளல் தகுதியோ என்கிறாள்
பண்டோருநாளென்று தொடங்கி.

இப்பாட்டில் நட்ட நடுவில் இராமபிரானுடைய திவ்ய சரித்திர மொன்றை ஆண்டாள் அமைத்தது
பேயாழ்வாருடைய திருவந்தாதியில் நட்ட நடுவில்; “அவனே – இலங்காபுரமெரித்தானெய்து” என்றும்
“எய்ததுவும் தென்னிலங்கைக் கோன்வீழ” என்றும் அருளிச் செய்தமைக்கு நன்கு ஒக்கும்.

திருமழிசையாழ்வாரை யுணர்த்தின் கீழ்ப்பாட்டில் அனந்தலோ என்று வெறும் அனந்தலே சொல்லிற்று.
இப் பாட்டில் ஆற்றவனந்தலுடையாய்! என்கிறது –
மழிசையர் கோனுக்கும் இவ்வாழ்வார் ஆசாரியராதலால் விசேஷணமிட்டபடி அனந்தல் என்று
ஹேயமான உறக்கமன்று சொல்லுகிறது.
ழூஉரோவிந்யஸ்த ஹஸ்தாஸ்தே நித்ராயந்தே ஸுநிர்ப்பரா :- என்று பகவச் சாஸ்திரங்களில்
கொண்டாடப்பட்ட ‘அனந்தல்’ பரமை காந்தித்வ ஸீமா பூமியைக் காட்டுமது.

(அருங்கலமே!) எம்பெருமானது திருவருளை மிக அருமையாகப் பெற்ற ஸத் பாத்ரமே ! என்றபடி.
பாசுரம் தொடங்கும் போதே “திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன்” என்று ஆனந்தமாகத் தொடங்கப்பெற்ற
பகவத் பரமக்ருபா பாத்ரபூதர் மற்றொரு ஆழ்வாரில்லையே.

(தேற்றமாய் வந்துதிற) உம்முடைய திருநாமமோ பேயார்;
பேய்த்தனமாக வாராமல் தேறி வந்து திறவும் என்கிறாள்.

இப்பாசுரத்தில் பேயாழ்வார் எழுப்பப்படுகிறார்.
“மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார்” என்பதன் மறைமுக விளக்கமே பேயாழ்வாராகும்.

திருக்கோவிலூர் திவ்யதேசத்தில் சிறியதோர் இடத்தில் மழையின் பொருட்டு பொய்கையாழ்வார் புகுந்து கதவைச் சாத்திக் கொண்டார்.
பின்னர் பூதத்தாழ்வார் வந்து கதவைத் தட்டப் பொய்கையாழ்வார் திறந்தார். அடுத்துப் பேயாழ்வார் வந்து தட்டினார்.
பூதத்தாழ்வார் திறந்தார். பின்னர் யாரும் வரவில்லை; கதவைத் தட்டவில்லை.
யாருக்கும் கதவைத் தட்ட வேண்டிய அவசியம் எழவில்லை. எனவே வாசல்திறவாதார் ஆகிறார் பேயாழ்வார்.

‘நாற்றத் துழாய்’ எனப்படும் திருத்துழாய் மீது அதிகமான பாசுரங்கள் அருளிச் செய்தவர் பேயாழ்வாரே ஆவார்.
“இன்றே கழல்கண்டேன் ஏழ்பிறப்பும் யானறுத்தேன் பொன்தோய் வரைமார்பில் பூந்துழாய்”[மூன்றாந்திருவந்தாதி—2]

“மனத்துள்ளான் மாகடல்நீ ருள்ளான், மலராள் தனத்துள்ளான் தண்டுழாய் மார்பன்”[மூன்றாந்திருவந்தாதி—3]

என்பன அவர் அருளிச் செயல்களாகும்.

முந்தைய பாசுரத்தில் ‘அனந்தலோ’ என்று திருமழிசையாழ்வார் எழுப்பப்பட்டார்.
இதில் ‘ஆற்ற அனந்தலுடையாய்’ என்பது திருமழிசை ஆழ்வாரின் ஆச்சாரியரான பேயாழ்வாரைக் குறிக்கிறது.

திருமழிசையாழ்வார் பகவானின் பெருமை உணராமல் மனம் போன போக்கில் சுற்றி வந்தார்.
அப்போது பேயாழ்வார் ஒரு செடியை வெளியில் வேர் தெரியும்படி நுனிப்பாகத்தைப் பூமியில் நட்டார்.
அதுவும் இல்லாமல் ஓட்டைக் குடத்தைக் கயிற்றில் கட்டிக் கிணற்றில் நீர் எடுத்தார்.
இதைக் கண்ட பேயாழ்வார் “இது என்ன பைத்தியக் காரத்தனம்?” என்று கேட்க,
“பெருமாளின் பெருமை உணராத நீயன்றோ பைத்தியக்காரத்தனம் செய்கிறீர்” என்று அவரைத் திருத்தினார் பேயாழ்வார்.

கும்பகருணன் இப்பாசுரத்தில் பேசப்படுகிறான். ’கும்ப’ என்பது கலசத்தைக் குறிக்கும்; ‘கரணம்’ என்பது காரணமாகும்.
கலசத்தைக் காரணமாகக் கொண்டு பிறந்தவர் அகத்திய முனிவர் ஆவார்.
அகத்திய முனியே தோற்றுப் போகும்படியான நாவன்மை, புலமை கொண்டவர் பேயாழ்வார்.
எனவே அகத்தியர் தோற்று உனக்குத் தன் தமிழ்ப் புலமையைத் தந்துவிட்டாரோ என்றும் பொருள் கொள்ளப்பட்டு
அதுவும் பேயாழ்வாரைக் குறிப்பதாகக் கொள்ளலாம்.

”தேற்றமாய் வந்து கதவைத் திற” என்று வேண்டப்படுகிறது.
அதாவது, ‘அழகாய் வா’ என்றழைக்கிறது.
உன் பெயரே பேயாழ்வார் என்பதால் அச்சப்படப் போகிறார்கள். ‘அழகாய் வா’ என்று பேயாழ்வார் எழுப்பப்படுகிறார்.
இவ்வாறு பத்தாவது பாசுரத்தில் பேயாழ்வார் எழுப்பப்படுகிறார்.

——————–

அடுத்த பதினோராவது பாசுரத்தில் பூதத்தாழ்வார் எழுப்பப்படுகிறார்.

”கற்றுக் கறவை கணங்கள் பலகறந்து
செற்றார் திறலழியச் சென்று செருச்செய்யும்
குற்றமொன் றில்லாத கோவலர்தம் பொற்கொடியே
புற்றர வல்குல் புனமயிலே! போதராய்!
சுற்றத்துத் தோழிமா ரெல்லாரும் வந்துநின்
முற்றம் புகுந்து முகில்வண்ணன் பேர்பாட
சிற்றாதே பேசாதே செல்வப்பெண் டாட்டிநீ
எற்றுக் குறங்கும் பொருளேலோ ரெம்பாவாய்”

(ஸ்வாபதேசம்)
பேயார்க்கு அடுத்த முந்தினவரான பூதத்தாரை யுணர்த்தும் பாசுரமிது.
இதில், குற்ற மொன்றில்லாத கோவலர் தம் பொற்கொடியே! என்ற விளி பூதத்தார்க்கு நன்கு பொருந்தும்.
பல பொருள்களை யுடையதான கோ என்னும் சொல் கோதா என்ற விடத்திற்போல ஸ்ரீ ஸூக்தியைச் சொல்கிறதிங்கு.
கோவலர் – ஸ்ரீ ஸூக்திகளை யருளவல்லவர்களான ஆழ்வார்கள்.
குற்றமொன்றில்லாத என்ற விசேடணம் முதலாழ்வார்கள் மூவர்க்கே பொருந்தும்;
யோநிஜத்வமாகிற வொருகுற்றம் மற்றையாழ்வார்களுக்குண்டு;
அக்குற்ற மொன்றும் இல்லாத கோவலர் முதலாழ்வார்கள்

அவர்களுள் பொற்கொடியே!
கோல்தேடி யோடுங் கொழுந்ததே போன்றதே மால்தேடி யோடும் மனம் என்கிற பாசுரத்தினால்
தம்மை ஒரு கொடியாகச் சொல்லிக்கொண்டவர் பூதத்தாழ்வாரே யாவர்.
எம்பெருமானாகிற உபத்நத்தைத் தேடிச் செல்லுகின்ற கொடி போல்வேன் நான் என்றவர் இவரேயிறே.
கற்றுக் கறவைக் கணங்கள் பல கறந்து என்பது முதலாழ்வார் மூவர்க்கும் பொதுவான வாசகம்.

கற்றுக் கறவை கன்றாகிய கறவை. (கறவை யென்பதனால் ஸ்ரீ ஸூக்தி விவஸ்த்ம்)
மற்றை யாழ்வார்கள் பெரிய பாசுரங்கைள யளித்தார்கள்.
முதலாழ்வார்கள் அங்ஙனன்றிக்கே வெண்பாவகிய மிகச் சிறிய பாசுரங்களை யளித்தார்கள்.
பொய்கையாழ்வாரருளிய திருவந்தாதி கறவைக் கணம்;
பூதத்தாழ்வார் திருவந்தாதியும் சேர்ந்து கறவைக் கணங்கள்;
பேயாழ்வார் திருவந்தாதியும் சேர்ந்து கறவைக் கணங்கள் பல.
க்ரமேண ஏகவசந த்விவசந பஹுவசநங்கள் இணங்கின அழகு காண்க

(செற்றார் திறலழியச் சென்று செருச் செய்யும்)
தேசமெங்கும் திரிந்து பகவத விரோதிகளை நிரஸிக்க வேணுமென்கிற அர்த்தத்தை
எண்டிசையும் பேர்த்தகரம் நான்குடை யான் பேரோதிப் பேதைகாள்!
தீர்த்தகரராமின திரிந்து என்ற பாசுரத்தினால் வெளியிட்டவர் இவ்வாழ்வாரே.

புற்றரவல்குல் என்பது இடையழகை வருணிப்பதாகும்.
ஸ்வாப தேசத்தில் இடையழகாவது பக்தியின் பெருமை.
ஞானம் பக்தி விரக்தி என்ற மூன்றில் பக்தியானது இடைப்பட்டதாதலால் இடையழகென்பது பக்தியின் அழகேயாகும்.
இவ்வாழ்வார் தம்முடைய திருந்தாதியை முடிக்குமிடத்து
என்றனளவன்றால் யானுடையவன்பு என்றே முடித்தார். இதனால் இவரது இடையழகு நன்கு வெளிப்பட்டதாயிற்று.
அன்பிலே தொடங்கி அன்பிலே தலைக்காட்டினார்.

புனமயிலே! என்ற விளியும் இவர்க்கு அழகாகப் பொருந்தும்.
பொழிலிடத்தே வாழும் மயில்; இவ்வாழ்வார் தோன்றிய தலமோ திருக்கடல்மல்லை;
அதனைப் பாடின கலியன் கடி பொழில் சூழ்கடன் மல்லை என்றே பன்முறையும் பாடினர்.
மயில் மேகத்தைக் காண்பதிலே மிகக் குதூஹல முடைத்தாதலால்,
மேகம் நீர்பருக வருமிடமான கடற் கரையிலே மயில்கள் மகிழ்ந்து நிற்கும்.
இவ்வாழ்வார் நின்றவிடமும் கடற கரையிலேயிறே.

(சுற்றுத்துத் தோழிமாரித்யாதி.) இவர்க்குப் பொய்கையாரும் பேயாரும் சுற்றத்தவர்கள்;
மற்றையாழ்வார்கள் தோழிமார்.

(முகில் வண்ணன் பேர் பாட.)
முந்துற முன்னம் முகில் வண்ணன் பேர் பாடினவர் இவ்வாழ்வாரேயாவர்;
உலகேழும் முற்றும் விழுங்கும் முகில் வண்ணன் ஏத்துமென்னெஞ்சு என்ற இவர் பாசுரம் காண்க
புன மயில் முகில் வண்ணனைத் தானே பாடும்.

இப்பாசுரத்தில் “பொற்கொடியே” என்று பூதத்தாழ்வார் குறிப்பிடப்படுகிறார்.
அவர்தான் தம்மைப் பொற்கொடியாகக் கூறிக் கொள்வார்.
“கோல்தேடி ஓடும் கொழுந்து அதே போன்றதே மால்தேடி ஓடும் மனம்” என்பது அவர் அருள் வாக்காகும்.

மேலும் ‘புனமயிலே’ என்பதும் பூதத்தாழ்வாரையே காட்டும்;
பூதத்தாழ்வார் கடற்கரையில் இருக்கும் திருக்கடல்மல்லை [மகாபலிபுரம்] என்னும் திவ்யதேசத்தில் அவதரித்தவர்.
கடற்கரையில் சோலைகள் இருக்கும். “கடிபொழில்சூழ் கடல் மல்லை” என்பது அருள்வாக்கு.
சோலைகளில் மயில் குடியிருக்கும். மேலும் மயில் மேகத்தைக் கண்டால் தோகை விரித்து ஆடும்.
மேகம் நீர் முகந்து கொள்ள கடலுக்குத்தான் வரும். அப்போதும் மயில் ஆடும்.
எனவே ‘புனமயிலே’ என்பது பூதத்தாழ்வாரையே காட்டும்.

மற்றும் பூதத்தாழ்வார் மேக வண்ணன் என்று பெருமானைக் காட்டுவார்.
“உலகேழும் முற்றும் விழுங்கும் முகில்வண்ணன் ஏத்தும் என் நெஞ்சு” என்பது அவர் அருளிச் செயலாகும்.
இப்பாசுரத்திலும் முகில்வண்ணன் எனும் திருநாமம் கூறப்படுகிறது.

“சுற்றத்துத் தோழிமார் எல்லாரும்” என்பதன் மூலம் பேயாழ்வார் காட்டப்படுகிறார்.
எப்படியெனில்,
பொய்கையாழ்வாரும், பூதத்தாழ்வாரும் இவருக்குச் சுற்றமாவார்கள்;
மற்ற ஆழ்வார்கள் எல்லாரும் தோழிகள் ஆவர்.
இவ்வாறு பதினோராவது பாசுரத்தில் பூதத்தாழ்வார் எழுப்பப்படுகிறார்.

————-

அடுத்துப் பன்னிரண்டாவது பாசுரத்தில் பொய்கையாழ்வார் எழுப்பப்படுகிறார்.

“கனைத்திளம் கற்றெருமை கன்றுக் கிரங்கி
நினைத்து முலைவழியே நின்றுபால் சோர
நனைத்தில்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்!
பனித்தலை வீழநின் வாசற் கடைபற்றி
சினத்தினால் தென்னிலங்கைக் கோமானைச் செற்ற
மனத்துக் கினியானைப் பாடவும்நீ வாய்திறவாய்
இனித்தா னெழுந்திராய் ஈதென்ன பேருறக்கம்
அனைத்தில்லத் தாரு மறிந்தேலோ ரெம்பாவாய்”

(ஸ்வாபதேசம்)
பூதத்தாழ்வார்க்கு அடுத்து முந்தினவரான பொய்கை யாழ்வாரை யுணர்த்தும் பாசுரமிது.
தங்காய்! என்ற விளி இவர்க்கு நன்கு பொருந்தும்
உலகில் தங்கையென்று ஸ்ரீ மஹா லக்ஷ்மியையும் தமக்கையென்று மூதேவியையும் வழங்குவர்கள்.
‘சேட்டை தம்மடி யகத்து’ என்ற திருமலைப் பாசுரத்தில், தமக்கைக்கு வாசகமான ஜ்யேஷ்டா என்ற சொல்லால்
மூதேவியைக் குறித்தமை காண்க.
ஸ்ரீ மஹாலக்ஷ்மி தாமரை மலரிற் பிறந்தவள்.
‘வனச மலர்க் கருவதனில் வந்தமைந்தாள் வாழியே’ என்கிறபடியே பொய்கை யாழ்வாரும் தாமரைப் பூவில் தோன்றியவர்
இந்த வொற்றுமைநயம் பற்றி தங்காய்! என விளிக்கத் தகுதியுடையாரிவ் வாழ்வார்.

“நனைத் தில்லஞ் சேறாக்கும்” என்ற விசேடணமும் இவர்க்கு வெகு நேர்த்தியாகப் பொருந்தும்.
ராவணவதாநந்தரம் திருவயோத்திக்கு மீண்டு எழுந்தருளாநின்ற பெருமாளை நோக்கி பரத்வாஜ மஹர்ஷி
“பங்க திக் தஸ்து ஜடிலோ பரதஸ் த்வாம் ப்ரதிக்ஷதே” என்றார்.
இங்கு பரதாழ்வான் சேறு பூசப் பெற்றிருப்பதாகச் சொல்லப்பட்டதன் கருத்து யாது?
இரவும் பகலும் நிச்சலும் அழுதழுது நினைத்தில்லம் சேறாக்கினன் என்றபடி.
“வண்பொன்னின் பேராறுபோல் வருங் கண்ண நீர்கொண்டு
அரங்கன் கோயில் திருமுற்றம் சேறு செய் தொண்டர்” என்றார் குலசேகரப் பெருமாளும்.
அவ்வண்ணமாகவே பொய்கை யாழ்வாரும்
“பழுதே பல பகலும் போயினவென்று அஞ்சியழுதேன்” என்று தாமே பேசினபடியே
அழுதவராதலால் நினைத்தில்லஞ் சேறாக்கின ரென்க.

(கனைத்து)
முதன் முதலாகப் பேசத் தொடங்கும்போது கனைப்பது இயல்பு.
பொய்கையார்க்கு முன்னம் பேசினவர்கள் யாருமில்லை.
இவரே முதன் முதலாகப்பேசத் தொடங்கினவரென்பது இவ்வினையெச்சத்தினால் தோற்றுவிக்கப்படும்.

(இளங்கற்றெருமை) எருமை என்றால் மஹிஷீ;
லக்ஷித லக்ஷணாக்ரமத்தால் தேவ தேவ திவ்ய மஹிஷீ என்றவாறு.
எம்பெருமானுக்கு திவ்ய மஹிஷியான பிராட்டியை யொப்பவர் இவ்வாழ்வார் என்பது ஸூரனை.
“இளங் கன்றுகளையுடைய” என்று விசேஷணமிட்டதனால், மற்றை யாழ்வார்களனைவரும் இவர்க்கு
வத்ஸ ஸ்தாநீயாகளாய் இவர் மாத்ரு ஸ்தாநீயர் என்று காட்டினபடி. ஆழ்வார்களுள் முதல்வரிறே யிவர்.

(கன்றுக்கிரங்கி) இவர் ஸ்ரீ ஸூக்தி யருளிச் செய்யத் தொடங்கினது கன்றுகளான நம் போல்வார்
பக்கலிலுள்ள பரம க்ருபையா லென்கை.

(நினைத்து முலைவழியே நின்று பால்சோர.)
பகவத் குணங்களை நினைத்தவாறே அந்த நினைவு தானே ஊற்றாகப் பால் போன்ற ஸ்ரீ ஸூக்திகள் பெருகப்புக்கன என்ற படி.

(பனித்தலை வீழ நின்வாசல் கடைபற்றி)
இவர் பொய்கையில் தோன்றினவராதலால் இவரது வாசற்கடையைப் பற்றுவார்க்குப் பணித்தலை வீழ ப்ராப்தமே யாகுமிறே.

(சினத்தினா இத்யாதி.)
இது ஸ்ரீராம குண கீர்த்தனம். மஹர்ஷிகளின் ஞானக் கண்ணுக்கும் இலக்காகாத வொரு ஸ்ரீராம சரிதம்
இவ்வாழ்வாருடைய அகக்கண்ணுக்கு இலக்கானமை
“பூமேய மாதவத் தோன்தாள் பணிந்த வாளரக்கன் நீண்முடியைப் பாதமத்தா லெண்ணினான் பண்பு.” என்ற
இவரது பாசுரத்திற் பொலியும்.
அதில் “நாமே யறிகிற்போம் நன்னெஞ்சே!” என்றதற்குப்பொருந்த “மனத்துக் கினியானை” என்றாள். (

இனித் தானெழுந்திராய்) “பழுதே பல பகலும்” என்கிற பாசுரம் பேசின பிறகுங்கூட உறங்கலாமோ? என்கை.

முழுக்ஷப்படியில் ‘பழுதே பல பகலும் போயின வென்று இறந்த நாளைக்குக் கூப்பிடுகிறவனுக்கு உறங்க விரகில்லை”
என்ற ஸ்ரீ ஸூக்தியும் இங்கு அநுஸந்தேயம்.

(அனைத்தில்லத்தாரு மறிந்து) “அறியுமுலகெல்லாம் யானேயு மல்லேன்” என்ற இவ்வாழ்வாரது பாசுரத்தை
அழகாக நினைப்பூட்டுகிறபடி காண்மின்.

இப்பாசுரத்தோடு ஆண்டாளுக்கு முந்தின ஆழ்வார்களை யெல்லாம் உணர்த்திற்றாயிற்று.
“ஆழ்வார்கள் பன்னிருவர்” என்றுமுள்ள ஸம்ப்ர தாயப்படிக்கு ஸ்ரீ மதுர கவிகளும் ஆண்டாளும்
ஆழ்வார் கோஷ்டியில் சேராதவர்களாதலால் இவ்விருவரையும் உணர்த்துவதும் இப்பாட்டிலேயே அறியக் கிடக்கிறது.
எங்ஙனே யென்னில்;
நற்செல்வன் தங்காய்! என்றது நற்செல்வன் தங்கையே! என்று பொருள்படுதலால்
நற்செல்வன் தன்னுடைய கையாக இருப்பவனே! என்றபடியாகும்.
இங்கு நற்செல்வ னென்பது நம்மாழ்வாரை, அவர் திருவாய்மொழி அருளிச் செய்கையில்
மதுரகவிகள் அவருடைய சையின் ஸ்தாநீயராயிருந்து பட்டோலை கொண்டாராதலால் இந்த விளி மதுர கவிகட்குப் பொருந்தும்.

இனி நற்செல்வனென்று எம்பெருமானாரைச் சொல்லிற்றாகி
அவருடைய தங்கையென்று ஆண்டாளையுஞ் சொல்லக் குறையில்லை
“கோதற்ற ஞானத் திருப்பாவை பாடியபாவை தங்கை” என்றும்,
“பெரும்பூதூர் மாமுனிக்குப் பின்னானாள் வாழியே” என்று முள்ளவை காண்க.
ஆண்டாள் தன்னைத் தானே உணர்த்திக் கொள்ளுகை பொருந்துமோவென்று விரஸமாக வினவுவார்க்கு
நாம் விடையளிக்க வல்லோமல்லோம்.
சொற்சுவை அமைந்திருக்கு மழகை அநுபவித்துப் போருகிறோ மத்தனை.

இப்பாசுரத்தில் ஆழ்வார்களில் முதலாழ்வாராகக் கருதப்படும் பொய்கையாழ்வார் எழுப்பப்படுகிறார்.
ஆழ்வார்கள் அருளிச் செய்த நாலாயிரத் திவ்யப் பிரபந்தத்திற்கு முதல் பாசுரம் பொய்கையாழ்வார் அருளிச் செய்த பாசுரமே ஆகும்.

‘கனைத்து’ என்ற சொல்லின் மூலம் இங்கு பொய்கையாழ்வார் காட்டப்படுகிறார்.
முதலில் பேசத் தொடங்கும் முன்னர் தொண்டையைக் கனைப்பது வழக்கமன்றோ?
பொய்கையாழ்வார் காஞ்சிபுரத்தில் திருவெஃகா எனும் திவ்யதேசத்தில் உள்ள பொய்கையில் தாமரை மலரில் அவதரித்தவர்.
“வாசமலர்க்கருவதனில் வந்த மைந்தா வாழியே” என்பது இவரின் வாழித் திருநாமங்களில் ஒன்றாகும்.
தாயார் மகாலட்சுமி தோன்றியதும் தாமரை மலரில்தானே?
எனவே மகாலட்சுமி ஆழ்வாருக்குத் தங்கை முறையாகிறார்.
எனவேதான் நற்செல்வன் தங்காய் என்று அழைப்பதன் மூலம் பொய்கையாழ்வார் காட்டப்படுகிறார்.

இவர் பொய்கையில் அவதரித்தார். பனி போன்று குளிர்ச்சியானது பொய்கை.
‘பனித்தலை வீழ’ என்று காட்டிப் பொய்கையாழ்வார் எழுப்பப்படுகிறார்.

‘இளங்கற்றெருமை’ என்று இப்பாசுரத்தில் பேசப்படுகிறது. இளமையான கன்று என இதற்குப் பொருள் ஆகும்.
இந்த ஆழ்வார் ஆழ்வார்களுக்குள் முதல்வர், இளையவர் என்பது இங்கு இந்தச் சொல் மூலம் கூறப்படுகிறது.
இவ்வாறு பன்னிரண்டாவது பாசுரத்தில் பொய்கையாழ்வார் எழுப்பப் படுகிறார்.

—————-

அடுத்தப் பதின்மூன்றாவது பாசுரத்தில் தொண்டரடிப் பொடியாழ்வார் எழுப்பப்படுகிறார்.

“புள்ளின்வாய் கீண்டானைப் பொல்லா அரக்கனை
கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய்
பிள்ளை களெல்லாரும் பாவைக்களம் புக்கார்
வெள்ளி எழுந்து வியாழன் உறங்கிற்று
புள்ளும் சிலம்பினகாண் போதரிக் கண்ணினாய்
குள்ளக் குளிரக் குடைந்துநீ ராடாதே
பள்ளிக் கிடத்தியோ பாவாய்நீ நன்னாளால்
கள்ளம் தவிர்ந்து கலந்தேலோ ரெம்பாவாய்”

ஸ்வாபதேசம்.)
இது ஆண்டாளுக்கு அடுத்த தொண்டரடிப்பொடி யாழ்வாரை யுணர்த்தும் பாசுரம்.

(போது அரிக் கண்ணினாய்!)
புஷ்பங்களை ஹரிப்பதிலேயே திருஷ்டியைச் செலுத்துபவரே! என்றபடி. புஷ்ப கைங்கரிய பராpறே இவ்வாழ்வார்.
“துளபத்தொண்டாய தொல்சீர்த் தொண்டரடிப்பொடி”
“தொடை யொத்த துளவமுங் கூடையும் பொலிந்து தோன்றிய தோள் தொண்டரடிப்பொடி” என்றவை காண்க.

பாவய்! என்ற விளியும் இவர்க்கு நன்கு பொருந்தும். பதிவ்ரதா சிரோமணியைப் பாவை யென்பர்.
இவ்வாழ்வார் அரங்கனொருவ னுக்கே வாழ்க்கைப்பட்டு வேறொருதிருப்பதி யெம்பெருமானை
நெஞ்சிலும் நினையாதவராதலால் கற்புச் சிறப்பு குறிக்கொள்ளத்தக்கது.
திருவேங்கடமுடையா னெதிரே ஒருவர் “பதின்மர் பாடும் பெருமாள்!” என்று ஏத்த,
அதைக்கேட்ட பெரிய கேள்விஜீயர், ‘சோழியன் கெடுத்தான் காணும்;
அந்த ஏற்றம் நம் பெருமாளுக்கில்லையே; நம்பெருமாளொருவர்க்கே’ என்றார் என்ற ஐதிஹ்யமும் இங்கு நினைக்கத் தக்கது.

(நன்னாளால்)
“மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்” என்ற திருவாக்கிலேயே இச்சொல்லும் வருகின்றது.
தொண்டடிப்பொடிகள் திருவவதரித்தது மார்கழித் திங்களேயாதலால் நன்னாளென்னத் தட்டுண்டோ?

(கள்ளந் தவிர்ந்து)
‘சூதனாய்க் கள்வனாகி’ என்றும்;
‘கள்ளமேகாதல் செய்து’ என்றும்;
‘கள்ளத்தேனானுந் தொண்டாய்’ என்றும் பலகாலும் தமது கள்ளத்தைப் பேசிக்கொண்டாரிவ்வாழ்பார்.
இவரது சரிதையிலும் பொன்வட்டில் விஷயமான கள்ளம் அடிபட்டுக் கிடக்கிறது.
அது தவிர்ந்து பகவத் பாகவத கோஷ்டியில் கலந்த படியை ஈற்றடி தெரிவிக்கின்றது.

பெரியாழ்வார் போலவே இவ்வாழ்வாரும் பெரும்பாலும் பூம்பொழில்வாஸ முடையவராதலால்
அவ்விடத்து அடையாளமாகப் புள்ளும் சிலம்பினகான் என்பது இப்பாட்டிலும் புகுந்தது.

(குள்ளக் குளிரவித்யாதி.) நீராட்டம் முதலிய நித்ய கர்மாநுஷடானங்களையும் தவிர்த்து
சிலகாலம் பள்ளிக்கிடந்தமை இவ்வாழ்வாரது சரிதையிற்காணத்தக்கது.

புள்ளின்வாய் கீண்டானை யென்று தொடங்கிக் கண்ணபிரானுடையவும் இராமபிரானுடையவும்
கீர்த்திமை பாடினபடி சொல்லுகிறது. இவ்வாழ்வர் திருமாலையின் முடிவில்
‘வள வெழுந்தவளமாட மதுரைமா நகரந்தன்னுள், கவளமால் யானை கொன்ற கண்ணனை யரங்கமாலை’ என்று
கண்ணபிரானுடைய கீர்த்திமையையும்,
திருப்பள்ளி யெழுச்சியில் ‘மாமுனி வேள்வியைக் காத்து அவபிரதமாட்டிய வடுதிறலயோத்தி யெம்மரசே யரங்கத்தம்மா!’ என்று
இராமபிரானுடைய கீர்த்தியையும் பாடினமையுணர்க.

‘பிள்ளைகளெல்லாரும்’ என்றது ஆண்டாள் தனக்கு முந்தின ஆழ்வார்களெல்லாரையும் சொன்னபடி.

இப்பாசுரத்தின் முதல் அடி கண்ணனையும், அடுத்த அடி இராமபிரானையும் குறிப்பிட்டுக் காட்டுகின்றன.
தொண்டரடிப்பொடியாழ்வாரும் ‘திருமாலை’ முடிவில்,
“வளவெழுந்த வளமாட மதுரைமா நகரந்தன்னுள்
கவளமால் யானைகொன்ற கண்ணனை அரங்கமாலை” என்று கண்ணனைக் காட்டினார்.

அடுத்து திருப்பள்ளியெழுச்சியில்,
“மாமுனி வேள்வியைக் காத்து அவபிரதமாட்டிய
வடுதிறல் அயோத்தி எம் அரசே அரங்கத்தம்மா” என்று இராமபிரானையும் போற்றுகிறார்.

“வெள்ளி எழுந்தது வியாழன் உறங்கிற்று” என்பதைத் தொண்டரடிப்பொடியாழ்வார்,
“கதிரவன் குணதிசைச் சிகரம்வந் தணைந்தான்
கனைரு ளகன்றது காலையம் பொழுதால்”
என்று காட்டியுள்ளார்.

“புள்ளும் சிலம்பின காண்” என்று பறவைகளின் ஒலி காட்டப்பட்டுள்ளது.
இவரும் பறவைகள் வாழும் சோலைகளிலேயே தங்கி பூப்பறித்து வந்தார்.

‘பாவாய்’ எனும் சொல் தொண்டரடிப்பொடியாழ்வாரைக் குறிப்பதாகும்.
“பாவாய்” என்பதற்குப் பரம ஏகாந்தி என்பது பொருளாகும். இவர் மட்டுமே ஆழ்வார்களில் ஏகாந்தியாவார்.
வேறு தேசத்துப் பெருமாள் எவரையும் பாடாததால் பரம ஏகாந்தியாவார்.
அதாவது ஸ்ரீரங்கத்தில் எழுந்தருளி உள்ள அரங்கனைத் தவிர வேறு எந்தத் திவ்ய தேசத்துப் பெருமாளையும்
இவர் மங்களாசாசனம் செய்யவில்லை.

இப்பாசுரத்தில் வரும் “நன்னாளால்” எனும் சொல் முதல் பாசுரத்தில்
“மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால்” என்று ஆளப்பட்டிருக்கும்.
மார்கழிதான் தொண்டரடிப்பொடியாழ்வார் அவதரித்த மாதமாகும்.

”பள்ளிக் கிடத்தியோ” என்பதும் இந்த ஆழ்வாருக்குப் பொருத்தமே.
இவர் சில காலம் தேவதேவி எனும் தாசியிடம் மயங்கி நீராட்டம், விரதம் மறந்து பள்ளிக்கிடந்தார்.
இவ்வாறு இப்பாசுரத்தில் தொண்டரடிப்பொடியாழ்வார் எழுப்பப்படுகிறார்.

————-

அடுத்துப் பதினான்காவது பாசுரத்தில் திருப்பாணாழ்வார் எழுப்பப்படுகிறார்.

”உங்கள் புழக்கடைத் தோட்டத்து வாவியில்
செங்கழுநீர் வாய்நெகிழ்ந்து ஆம்பல்வாய் கூம்பினகாண்
செங்கல் பொடிக்கூறை வெண்பல் தவத்தவர்
தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதந்தார்
எங்களை முன்னம் எழுப்பவான் வாய்பேசும்
நங்காய்! எழுந்திராய்! நாணாதாய்! நாவுடையாய்
சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்
பங்கயக் கன்ணானைப் பாடேலோ ரெம்பாவாய்”

(ஸ்வாபதேசம்)
தொண்டரடிப் பொடிகளுக்கு அடுத்த திருப்பாணாழ்வாரை யுணர்த்தும் பாசுரமிது.
இதில், நங்காய்! நாணாதாய்! நாவுடையாய்! என்ற மூன்று விளிகளும் பாண் பெருமாளுக்கு நன்கு பொருந்தும்,

நங்கை யென்பது குணபூர்த்தியைச் சொல்லுகிறது.
லோக ஸாரங்க மஹாமுனிகள் வந்து என் தோளின்மீது ஏறிக்கொள்ளுமென்ன,
அத்யந்த பார தந்திரிய ஸ்வரூபத்தை நினைத்து அதற்கு உடன் பட்டமை குணபூர்த்தி,
அங்ஙனம் அந்தணர் தலைவரது தோளின்மீது ஏறியீருக்கச்செய்தேயும் சிறிதும் செருக்குக் கொள்ளாமல்
‘அடியார்க்கென்னை யாட்படுத்த விமலன் என்றே பேசினவராதலால் நாணாதவர். (நாண் – அஹங்காரம்)
‘பாண்பெருமாள் பாடியதோர் பாடல் பத்தும் பழமறையின் பொருளென்று பரவுமின்கள்’ என்று தேசிகன் பணித்தபடி
ஸகல வேதார்த்தங்களையும் பத்துப் பாசுரத்திலே அடக்கிப் பேசின பரம சதுரராதலால் நாவுடைடயார்

“கையினார் சுரிசங்கனலாழியர்” என்று சங்கொடு சக்கர மேந்தின வழகை யநுபவித்தமை பற்றியும்
‘கரியவாகிப் புடைபரந்து மிளிர்ந்து செவ்வரியோடி நீண்டவப் பெரியவாய கண்கள்’ என்று
கண்ணழகில் ஈடுபட்டும் பேசினமை பற்றியும் ‘சங்கொடு சக்கரமேந்துந் தடக்கையன் பங்கயக் கண்ணனைப் பாட என்றாள்.

இவ்வாழ்வார் தமது சாதி நிலைமைக்கு ஏற்ப வாழ்ந்த விடத்தைக்கருதி உங்கள் புழைக்கடை யித்யாதி அருளிச் செய்யப்பட்டது.

இவரது சரிதையில் ஸம்பந்தப்பட்ட லோகஸாரங்க மஹாமுனிகளின் தன்மையைக் காட்டுவது போலுள்ளது
செங்கற் பொடிக்கூறை யித்யாதி.

‘எங்களை முன்ன மெழுப்புவான் வாய் பேசும் நங்காய்’ என்பதில் ஒரு அழகிய பொருள் தொனிக்கும்.
(அதாவது-) எழுப்புவதாவது – தூக்கிக் கொள்வது. எங்களை என்றது பாகவதர்களை யென்றபடி.
பாண்பெருமாளே! உம்முடைய முதற் பாசுரத்தில் ‘அடியார்க் கென்னையாட்படுத்தவிமலன்’ என்ற
சொல் நயத்தை நோக்குங்கால் பாகவதர்களை நீர் தோளில் தூக்கிக் கொண்டாடுபவர் போலத் தெரிகின்றது.
உமது கதையோ அப்படியில்லை. மஹாபாகவதரான லோகஸாரங்க மஹா முனியின் தோளின் மீதேறி நீர் இருந்ததாகவுள்ளது.
ஆகவே, முந்துறமுன்னம் பாகவத சேஷத்வத்தை நீர் சொல்லிக்கொண்டது வாய்பேசு மத்தனையே போலும் என்று விநோதமாகக் கூறுகிறபடி.

‘நங்காய்’ என்பதற்குச் சிறந்த குணம் உடையவள் என்பது பொருளாகும்.
இவரும் உலோக சாரங்க முனிவர் மேல் ஏறி வர உடன்பட்ட குணபூர்த்தி உடையவர்.

‘நாணாதாய்’ என்பதற்கு வெட்கமில்லையா? என்று பொருள்.
ஏனெனில் திருப்பாணாழ்வார் அடியார்க்கு என்னை ஆட்படுத்தவேண்டும் என்று வேண்டியவர்.
“உம்மைப் போய் அடியவர்க்கு ஆட்படுத்தக் கேட்கிறீர்களே? வெட்கமில்லையா” என்று கேட்பது போன்றதாகும்.
மேலும் ஒரு தவ முனிவரின் தோள்கள் மேல் ஏறி வர வெட்கம் இல்லையா என்றும் பொருளாகும்.

அடுத்து ‘நாவுடையாய்’. இதற்கு நாவன்மை படைத்தவர்; சிறந்த நாவீறு மிக்கவர் என்பது பொருள்.
திருப்பாணாழ்வார் பத்தே பாசுரங்கள்தாம் அருளிச் செய்துள்ளார்.
ஆனால் இவற்றை ஒரு தட்டில் வைத்து, மீதி ஆழ்வார் பாசுரங்கள் அனைத்தையும் ஒரு தட்டில் வைத்தால்
இவர் பாசுரங்கள்தாம் கனமாக இருக்கும்.
“பாண்பெருமாள் பாடியதோர் பாடல் பத்து பழமறையின் பொருளென்று பரவுமின்கள்” என்பார் தேசிகன்.

‘சங்கொடு சக்கரம் ஏந்தும்’ என்பதில்
‘கையினார் சுரி சங்கனல்’ என்பதான ஆழ்வார் பாசுரத்தையே நினைவுபடுத்தி ஆண்டாள் இவரை எழுப்புகிறார்.

’பங்கயக் கண்ணானை’ என்பதன் மூலம் இந்த ஆழ்வார்தாம் எம்பெருமானின் கண்ணழகில் அதிகமாக ஈடுபட்டுப் பாடியது காட்டப்படுகிறது.
“கரியவாகிப் புடைபரந்து மிளிர்ந்து செவ்வரியோடி நீண்டவப்
பெரியவாய கண்கள் என்னைப் பேதமை செய்தனவே”-என்பது அவர் அருளிச் செயலாகும்.

‘செங்கல்பொடிக் கூறை’ என்பது முனிவர்களைக் குறிப்பாக இந்த ஆழ்வாரைத்
தம் தோளில் ஏற்றிய சாரங்க முனிவரைக் காட்டுகிறது.

’எங்களை முன்னம் எழுப்புவான்’ என்பது
“அடியார்க்கென்னை ஆட்படுத்த விமலன்” என்று பாடியதால் நீர் பாகவதரைத் தோளில் ஏற்றிவருவீர் என எண்ணினோம்.
ஆனால், நீர் முனிவர் தோள் மீது வருகிறீர் முன்பு சொன்னது என்னவாயிற்று” என வினவுவது போல் உள்ளது.
இவ்விதமாக பதினான்காவது பாசுரத்தில் திருப்பாணழ்வார் எழுப்பப்படுகிறார்.

————————-

அடுத்துப் பதினைந்தாவது பாசுரத்தில் திருமங்கையாழ்வார் எழுப்பப்படுகிறார்.

“எல்லே! இளங்கிளியே! இன்னம் உறங்குதியோ?
சில்லென்ற ழையேன்மின் நங்கையீர்! போதர்கின்றேன்
வல்லையுன் கட்டுரைகள் பண்டேயுன் வாயறிதும்,
வல்லீர்கள் நீங்களே நானேதா னாயாயிடுக
ஒல்லைநீ போதாய் உனக்கென்ன வேறுடையை,
எல்லாரும் போந்தாரோ போந்தார்போந் தெண்ணிக்கொள்
வல்லானை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க
வல்லானை, மாயனைப் பாடேலோ ரெம்பாவாய்”

(ஸ்வாபதேசம்.)
பாண் பெருமாளுக்கு அடுத்தவரும் ஸாவக நிஷ்டருமான திருமங்கையாழ்வாரை யுணர்த்தும் பாசுரமிது.
இவ்வாழ்வார் இரண்டு ஆய்ச்சிகளுக்குப் பரஸ்பர ஸம்வாதமாக
*மானமரு மென்னொக்கி* என்றொரு பதிகம் அருளிச்செய்தவராதலால் இவரை யுணர்த்தும் பாசுரம்
பரஸ்பர ஸம்வாத ரூபமாகவே அமைக்கப்பட்டது.

“கிளிபோல் மிழற்றி நடந்து” மென்கிளிபோல் மிக மிழற்று மென்பேதையே என்று பல பாசுரங்களில்
இவர் தம்மைக் கிளியாகச் சொல்லிக் கொண்டவராதலால் கிளியே! என்ற விளி இவர்க்குப் பொருந்தும்;
அன்றியும்,
சொல்லிற்றையே சொல்லுவது கிளியின் இயல்பு.
அதுபோல இவர் ‘மாறன் பணித்த தமிழ் மறைக்கு மங்கையர்கோன் ஆறங்கம் கூற’ என்றபடி
நம்மாழ்வார் ஸ்ரீஸூக்திகளை யநுசரித்தே அருளிச் செய்பவராதலாலும் கிளியென்றது.

இரண்டாமடி திருமங்கையாழ்வாருடைய விடையளிப்பு. (வல்லையுன் கட்டுரைகள் பண்டே உன்வாயறிதும்.)
இது கலியனை நோக்கி ஆண்டாள் கூறுமது. ‘வாசிவல்லீரிந்தரிர்! வாழ்ந்தேபோம் நீரே’ என்று நீர்
மிகக் கடினமாகப் பேச வல்லீரென்பது எனக்கு,

(பண்டே – நீர் அவதரித்துப் பாசுரம் பேசுவதற்கு முன்னமே) தெரியுங்காணும் என்றாள்.

அதுகேட்ட கலியன் வல்லீர்கள் நீங்களே
‘கொள்ளும் பயனென்றில்லாத கொங்கை தன்னைக் கிழங்கோடும்,
அள்ளிப்பறித்திட்டவன் மார்பிலெறிந்து என்னழலைத் தீர்வேனே’ என்று அற வெட்டிதாகச் சொன்ன
உன் பேச்சு கடினமா? என் பேச்சு கடினமா? நீயே பார்க்கலாம் – என்றார்.

என்றவுடனே *நண்ணாதவாளவுணர் *கண்சோர வெங்குறுதி* முதலிய திருமொழிகளில் தாம் அநுஸந்தித்த
பாகவத சேஷத்வ காஷ்டையை நினைத்து *நானே தானாயிடுக* என்றார்.

“உனக்கென்ன வேறுடையை” என்றது திருமங்கை யாழ்வார்க்கு அஸாதாரணமான
திருமடல் திவ்யப்ரபந்த வக்த்ருவத்தை யுளப்படுத்தியதாகும்.

(எல்லாரும் போந்தராரோ இத்யாதி.) கலியனுக்கு முன்னமே மற்றுமுள்ள ஆழ்வார்கள் அவதரித்து,
பன்னிருவர் என்கிற ஸங்கியை இவரோடு நிரம்பிற்று என்று தெரிவிக்கப்பட்டது.

(வல் ஆனை கொன்றானை – மாயனைப் பாட.)
ஆனையைக் கொன்ற விஷயத்தை ஒரு ஆச்சரியமாக எடுத்துப் பேசினவர் கலியன்.
“ஆவரிவை செய்தறிவார் அஞ்சன மாமலை போலே” என்ற பெரிய திருமொழி காண்க.

அடிக்கடி கலியன் வாய் வெருவுவதும் வல்லானை. கொன்ற வரலாற்றையே;
“கவள யானைகொம் பொசித்த கண்ணனென்னும்” இத்யாதிகள் காண்க.

(மாற்றாரை மாற்றழிக்க வல்லானை மாயனைப் பாட) எம்பெருமான் தன் திறத்தில்; மாறு செய்பவர்களது செருக்கை
வெகு ஆச்சரியமாக அடக்குபவன் என்பதைக் காட்டுகின்ற சரிதைகளுள் கோவர்த்தநோத்தாரண கதை மிகச் சிறந்தது.
மாறுசெய்த இந்திரனுக்கு ஒரு தீங்குமிழைக்காமலே கண்ணன் அவனது கொழுப்பை யடக்கினனிறே.
இக்கதையிலே கலியன் மிக்க வூற்றமுடையவர்;
பெரிய திருமொழியை முடிக்கும் போதும் “குன்றமெடுத்து ஆநிரை காத்தவன் தன்னை” என்றார்;
சரமப் பிரபந்தமாகிய திருநெடுந் தாண்டகத்தை முடிக்கும்போதும் “குன்றெடுத்த தோளினானை” என்றே தலைக் கட்டினார்.

இப்பாசுரம் இருவர் உரையாடுவதுபோல் அமைக்கப்பட்டுள்ளது.
திருமங்கை மன்னனும் இதேபோல் பாசுரங்கள் அமைத்துள்ளார்.
“மானமரு மென்னோக்கி” என்று தொடங்கும் திருச்சாழல் பாசுரங்கள் பாசுரங்களில் இதைப் பார்க்கலாம்.

‘இளங்கிளியே’ எனும் சொல் இந்த ஆழ்வாரைத்தான் குறிக்கிறது. ஆழ்வார்களில் இவர்தான் கடைகோடி. இளமையானவர்.
மேலும் இவர் தம்மைக் கிளி என்றே சொல்லிக் கொள்வார்.
“மென்கிளி போல மிக மிழற்றுமென் பேதையே” என்பது அவர் வாக்கு.
’கிளி போல் மிழற்றி நடந்து’ என்றும் பாடி உள்ளார்.

கிளியானது பிறர் சொன்னதையே தானும் சொல்லும்.
திருமங்கை ஆழ்வாரும் இவருக்கு முன்னால் நம்மாழ்வார் சொன்னதையே சொல்லியிருக்கிறார்.
நம்மாழ்வார் நான்கு மறைகளை நான்கு பிரபந்தங்களில் அருளிச் செய்திருக்கிறார்.
அந்த நான்கு பிரபந்தங்களையும் திருமங்கையாழ்வார் ஆறு அங்கங்களாகப் பாடியுள்ளார்.
“மாறன் பணித்த தமிழ்மறைக்கு மங்கையர்கோன் ஆறங்கம் கூற” என்பது நினைவு கூறத்தக்கது.

“எல்லாரும் போந்தாரோ?” என்பது நோன்பு நோற்க எல்லாரும் போய்விட்டார்களா? எனப் பொருள் தரும்.
ஆனால் எல்லா ஆழ்வார்களும் போய்விட்டார்களா என்று கேட்டால்,
ஆமாம் இவர்தான் கடைசியில் எழுப்பப்படுகிறார் என்பதுதான் விடையாகும்.

”மாற்றாரை மாற்றழிக்க வல்லானை” என்பது செருக்கழித்தலைக் காட்டும்.
ஆழ்வாரும் இந்திரன் செருக்கழித்தலைப் பாடுவார்.
“குன்றமெடுத்து ஆநிரை காத்தவன்” என்பது அவர் அருளிச் செயலாகும்.
திருநெடுந்தாண்டகம் நிறைவுபெறுகையில், ”குன்றெடுத்த தோளினான்” என்பார்.

இவர் வாக்கில் இடம்பெற வேண்டும் என்று ஆசைப்பட்டதால் ஆண்டாள் நாச்சியார் “வல்லீர்கள் நீங்களே” என்கிறார்.
திருமங்கைஆழ்வார் நாவன்மை படைத்தவர்.
“உனக்கென்ன வேறுடையை” என்பது இந்த ஆழ்வார் மற்றவர்களிடமிருந்து எப்படி வேறுபடுகிறார் என்பதைக் கேட்கிறது.
இவர் மட்டுமே மடல் பாடியவர். மேலும் இவர் நீர் மேல் நடப்பது போன்ற பல விசித்திரங்கள் செய்து காட்டியவர்.
எனவேதான் ‘எல்லே’ (என்ன ஆச்சரியம் !) என்று நாச்சியார் வியந்து பாடுகிறர்.

———-

இவ்வாறு ஆறாம் பாசுரத்திலிருந்து பதினைந்தாம் பாசுரம் வரையில் உள்ளே இருக்கும் பாடல்கள்
பெண்களை எழுப்புவதுபோல் தோன்றினாலும்,
ஆழ்வார் பெரு மக்கள்தாம் எழுப்பப்பட்டு அவர்களின் அருள் வேண்டப்படுகிறது எனக் கூறலாம்.

————–———————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்