பகவத் தாஸ்யம் வருந்திக் கற்க வேண்டும்படியான அவர்களோட்டை பரிமாற்றத்தால் உறாவின ஆழ்வார்
அவ் உறாவுதல் தீர எம்பெருமானுக்கு அடிமை செய்ய என்றால் அடைத்தேற்றல் அன்றிக்கே அடிமையே தாரகமாய் இருக்கும்
ஸ்ரீ வைஷ்ணவர்கள் ஜென்ம வ்ருத்த ஸ்வ பாவங்களால் குறைய நின்றார்களே யாகிலும்
அவர்கள் எனக்கு நாதர் என்றும் நான் அவர்களுக்கு அடிமை என்றும் அவர்களோட்டை சம்பந்தத்தை அனுபவித்து ப்ரீதர் ஆகிறார் –
எம்மா வீடு -ப்ராப்யத்தின் உடைய பிரதம அவதி -இத் திரு வாய்மொழி சரம அவதி –
———————————————————————————————————–
எம்பெருமானுடைய அழகிலும் குணங்களிலும் தோற்று அடிமை செய்யுமவர்கள் யாரேனும் ஆகிலும்
எனக்கு ஸ்வாமிகள் என்று தச கார்த்தத்தை சங்க்ரஹேண அருளிச் செய்கிறார் –
பயிலும் சுடரொளி மூர்த்தியைப் பங்கயக் கண்ணனைப்
பயில இனிய நம் பாற்கடற் சேர்ந்த பரமனைப்
பயிலும் திருவுடையார் எவரேலும் அவர்கண்டீர்
பயிலும் பிறப்பிடை தோறு எம்மைஆளும் பரமரே.–3-7-1-
பயிலும் சுடரொளி மூர்த்தியைப் பங்கயக் கண்ணனைப்-பயில இனிய நம் பாற்கடற் சேர்ந்த பரமனைப்
அத்யந்த விலக்ஷணமாய் செறிந்து இருந்துள்ள தேஜஸ்ஸையே திரு உடம்பாக உடையனாய் –
இவ்வடிவு அழகிலும் அகப்படாதாரையும் அகப்படுத்திக் கொள்ள வற்றான அழகிய திருக் கண்களையும்
உடையனும் ஆகையால் பயில இனியனுமாய் ஆஸ்ரித அனுக்ரஹ அர்த்தமாக
திருப் பாற் கடலிலே வந்து கண் வளர்ந்து அருளுவதும் செய்து குண வத்தையால் எல்லார்க்கும் மேலாய் உள்ளவனை
பயிலும் திருவுடையார் எவரேலும் அவர்கண்டீர்-
பிரயோஜ நாந்தரங்களைக் கொண்டு அகலாதே நிரதிசய போக்யனான தன்னையே செறிகை யாகிற மஹா சம்பத்தை உடையராய்
ஏதேனும் ஜென்ம வ்ருத்தாதிகளை உடையவரே யாகிலும் அவர் கிடீர் வைஷ்ணவத்வ விரோதியான அபிமான ஹேதுவான
ஜென்ம வ்ருத்தங்களில் குறைய நின்றாரே யாகிலும் உத்தேசியர் என்று கருத்து
பயிலும் பிறப்பிடை தோறு எம்மைஆளும் பரமரே-
ஒன்றின் மேல் ஒன்றாக நிரந்தரமாக வருகிற ஜென்மங்களின் இடம் தோறும் என்னை அடிமை கொள்ளக் கடவ ஸ்வாமிகள் –
————————————————————————————————————
எம்பெருமானுடைய திவ்ய அவயவ ஸுந்தர்ய வசீக்ருத்தரான ஸ்ரீ வைஷ்ணவர்கள் எனக்கு ஸ்வாமிகள் -என்கிறார் –
ஆளும் பரமனைக் கண்ணனை ஆழிப்பிரான் தன்னைத்
தோளும் ஓர் நான்குடைத் தூமணி வண்ணன் எம்மான் தன்னைத்
தாளும் தடக்கையும் கூப்பிப் பணியுமவர் கண்டீர்
நாளும் பிறப்பிடை தோறு எம்மை ஆளுடை நாதரே.–3-7-2-
ஆளக் கடவ ஸ்வாமியான கிருஷ்ணனை -கையும் திரு ஆழியுமான அழகைக் காட்டி அநு கூலரை வாழ்விக்கும் ஸ்வ பாவனாய்
கல்பகத் தரு பணைத்தால் போலே விலக்ஷணமான நான்கு திருத் தோள்களையும் உடையனாய்
பழிப்பற்ற நீல மணி போலே குளிர்ந்து இருக்கும் நிறத்தை உடையனாய் அவ் வழகாலே என்னை அடிமை கொண்டவனை
தன்னை தொழ வென்றால் தடுத்துக் கொடுக்கக் கடவதான அங்கங்களோடு கூடப் பணியுமவர் கண்டீர்
பிறந்த இடம் தோறும் அதிலே வைத்துக் கொண்டு நாடோறும் என்னை அடிமை கொள்ள கடவ நாதர் –
—————————————————————————————————————-
திருத் துழாயாலே அலங்க்ருதனான எம்பெருமானுடைய அழகிலே ஈடுபட்ட ஸ்ரீ வைஷ்ணவர்கள் எனக்கு ஸ்வாமிகள் என்கிறார் –
நாதனை ஞாலமும் வானமும் ஏத்தும் நறுந்துழாய்ப்
போதனைப் பொன்னெடுஞ் சக்கரத்து எந்தை பிரான் தன்னைப்
பாதம் பணிய வல்லாரைப் பணியுமவர் கண்டீர்
ஓதும் பிறப்பிடைதோறு எம்மை ஆளுடை யார்களே.–3-7-3-
நாதனை ஞாலமும் வானமும் ஏத்தும் நறுந்துழாய்ப்-போதனைப் பொன்னெடுஞ் சக்கரத்து எந்தை பிரான் தன்னைப்-
இருந்ததே குடியாக எல்லார்க்கும் நாதனாய் விசேஷஞ்ஞரோடு அவிசேஷஞ்ஞரோடு வாசி இன்றிக்கே எல்லார்க்கும் ஆகர்ஷகமான திருத் துழாய் மாலையாலே
அலங்க்ருதன் ஆவதும் செய்து ஒளியை உடைத்தாய் அறப் பெருத்து இருக்கிற திரு வாழி யின் அழகைக் காட்டி என்னை அடிமை கொண்ட உபகாரகனே
பாதம் பணிய வல்லாரைப் பணியுமவர் கண்டீர்-ஓதும் பிறப்பிடைதோறு எம்மை ஆளுடை யார்களே-
அபிமானத்தை தவிர்ந்து திருவடிகளில் பணியும் மஹாத்மாக்களை பணியுமவர் கிடீர்
-பிறந்தான் -என்ற சொல் மாத்திரம் அமையும் படியான பிறப்பிடை தோறும் என்னை அடிமை கொள்ளக் கடவர்
ஓதும் பிறப்பு-சாஸ்திரங்களில் நிஷேத் யதயா ஓதுகின்ற பிறப்பு என்றுமாம் –
——————————————————————————————————————
திரு அணிகலங்களின் அழகிலே ஈடுபட்டு இருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு அடிமை புக்கு இருக்குமவர்கள் எனக்கு ஸ்வாமிகள் என்கிறார் –
உடை ஆர்ந்த ஆடையன் கண்டிகையன் உடை நாணினன்
புடையார் பொன் நூலினன் பொன்முடியன் மற்றும் பல்கலன்
நடையா உடைத் திரு நாரணன் தொண்டர் தொண்டர் கண்டீர்
இடையார் பிறப்பிடை தோறு எமக்கு எம் பெரு மக்களே.–3-7-4-
திரு வரையிலே பூத்தால் போலே தகுதியான திருப் பரிவட்டம் திருக் கழுத்திலே சாத்துவன-திருவரையில் சாத்தும் கோவை
-திரு யஜ்ஜோபவீதம் திரு அபிஷேகம் முதலான மற்றும் அநேகம் திரு ஆபரணங்களை நித்தியமாக உடையனாய்
ஸ்ரீ மானான நாராயணனுடைய அடியார் அடியார் கிடீர் எங்களுக்கு நிரந்தரமான ஜென்மம் தோறும் ஸ்வாமிகள் –
புடையார் கை -தான் கிடந்த பார்ஸ்வம் தன் ஒளியால் பூர்ணமாகை
——————————————————————————————————————
பிரயோஜ நான்தர பரருடைய அபேக்ஷிதத்தை கொடுக்கும் ஸ்வ பாவனான எம்பெருமானுடைய தன்மையை அனுசந்தித்து கலங்கி
அவற்றை சொல்லுமவர்களுடைய குணத்தை பிதற்றுமவர்கள் இஹ லோக பர லோகங்களில் நம்மை ரக்ஷிக்கும் ஸ்வாமிகள் என்கிறார் –
பெருமக்கள் உள்ளவர் தம் பெருமானை அமரர்கட்கு
அருமை ஒழிய அன்று ஆர்அமுது ஊட்டிய அப்பனைப்
பெருமை பிதற்ற வல்லாரைப் பிதற்றுமவர் கண்டீர்
வருமையும் இம்மையும் நம்மை அளிக்கும் பிராக்களே.–3-7-5-
எம்பெருமானுக்கு அடிமை என்று இசைகையாலே என்றும் உளரான அயர்வறும் அமரர்களுக்கு அதிபதியாய்
இந்த்ராதி தேவர்களுக்கு தாரித்ர்யம் நீங்கும் படி நிரதிசய போக்யமான அம்ருதத்தை புஜிப்பித்த பரம பந்துவை
இம் மஹா உபகாரத்திலே ஈடுபட்டு அக்ரமமாக பேசுபவர்கள் –
——————————————————————————————————————–
கீழ்ச சொன்ன ஸுந்தர்யாதிகளை எல்லாம் திரள நெஞ்சிலே அனுபவிக்குமவர்கள் எனக்கு சர்வகாலமும் ரக்ஷகர் -என்கிறார் –
அளிக்கும் பரமனைக் கண்ணனை ஆழிப் பிரான் தன்னைத்
துளிக்கும் நறுங்கண்ணித் தூமணி வண்ணன் எம்மான்தன்னை
ஒளிக்கொண்ட சோதியை உள்ளத்துக் கொள்ளுமவர் கண்டீர்
சலிப்பின்றி யாண்டு எம்மைச் சன்ம சன்மாந்தரம் காப்பரே.–3-7-6-
அளிக்கும் பரமனைக் கண்ணனை-
ரக்ஷண ஸ்வ பாவத்தில் தனக்கு மேற்பட்டார் இல்லாத கிருஷ்ணனை
ஆழிப் பிரான் தன்னைத்-இத்யாதி –
கையும் திரு ஆழியுமான அழகை காட்டி சேதனரை உஜ்ஜீவிப்பதும் செய்து திரு மேனியின் ஸ் பர்சத்தாலே மதுஸ் யந்திகளான மாலைகளை உடையனாய்
பழிப்பற்ற நீல ரத்னம் போலே சிரமஹரமான திரு நிறத்தை உடையானுமாய்
அத்தாலே என்னை அடிமை கொள்வதும் செய்து வி லக்ஷணமான அழகை உடையவனை நெஞ்சிலே அனுபவிக்குமவர்கள் கிடீர்
சலிப்பின்றி யாண்டு-
நபித்ர்ய மனுவர்த்தந்தே-என்னும் படியாலே ஜெகஜ் ஜனனியான பெரிய பிராட்டியார் சாயல் ஆகையால் குற்றம் கண்டாலும் என்னை விடாத படியாக பரிக்ரஹித்து –
————————————————————————————————————————–
ஆஸ்ரித விஷயத்தில் அவன் பண்ணும் மஹா உபகாரகங்களை அனுசந்தித்து அப்படிகளை பிதற்ற வல்லாரை
பிதற்றுமவர்கள் கிடீர் எனக்கு எற்றைக்கும் ஸ்வாமிகள் என்கிறார் –
சன்ம சன்மாந்தரம் காத்து அடியார்களைக் கொண்டு போய்த்
தன்மை பெறுத்தித் தன் தாளிணைக் கீழ்க் கொள்ளும் அப்பனைத்
தொன்மை பிதற்ற வல்லாரைப் பிதற்றுமவர் கண்டீர்
நன்மை பெறுத்து எம்மை நாள் உய்யக் கொள்கின்ற நம்பரே.–3-7-7-
சன்ம சன்மாந்தரம்-இத்யாதி
ஜென்மங்கள் தோறும் வந்து ரக்ஷித்து ஆஸ்ரிதரைக் கொண்டு போய் பரி பூர்ண ஞானராக்கி தன் திருவடிக் கீழே
நிரந்தர கைங்கர்யம் கொள்ளும் பரம பந்துவை –
தொன்மை பிதற்ற வல்லாரைப்-இத்யாதி
நை சர்க்கிகமான குணங்களில் ஈடுபட்டு பேசுமவர்களை பிதற்றுமவர் கிடீர் பாகவத சேஷத்வ சம்பந்தத்தை
நமக்கு தந்து அத்தை என்றும் நடத்தக் கடவ முதலிகள் –
—————————————————————————————————————————
அவனுடைய சர்வ சம்பதுக்கும் நிதானமான ஸ்ரீயபதித்தவத்தை அனுசந்தித்து இருக்குமவர்கள்
எனக்கு பிறந்த பிறவிகள் எல்லாம் ச சந்தானமாக வந்த்யர் என்கிறார் –
நம்பனை ஞாலம் படைத்தவனைத் திரு மார்பனை
உம்பர் உலகினில் யார்க்கும் உணர்வு அரியான் தன்னைச்
கும்பி நரகர்கள் ஏத்துவரேலும் அவர் கண்டீர்
எம்பல் பிறப்பிடைதோறு எம் தொழு குலம் தாங்களே.–3-7-8-
நம்பனை ஞாலம் படைத்தவனைத்-இத்யாதி
ஏதேனும் திசையிலும் ஆத்மாவுக்கு தஞ்சமாக நம்பப்படுவனுமாய் ஜகத்தை எல்லாம் உண்டாக்குவதும் செய்து
இந்நீர்மைக்கு அடியான ஸ்ரீ யபதியுமாய்-மேலான லோகங்களில் எத்தனையேனும் அளவுடைய ப்ரஹ்மாதிகளுக்கும் உணர முடியாது இருக்கிறவனை –
ஞாலம் படைத்தவனை என்றது கரண களேபரங்களை கொடுத்து ஸ்ருஷ்டிக்கையாலே தஞ்சம் என்னும் இடத்துக்கு உதாஹரணம் –
கும்பி நரகர்கள் -இத்யாதி –
கும்பீ பாகமான நரகத்தை அனுபவியா நின்றே ஏத்தினாரே யாகிலும் அவர்கள் கிடீர்
கும்பி நரகர்கள் என்றது -ஏதேனும் துர்க்கதரே யாகிலும் அவ்விருப்பிலே நமக்கு ப்ராப்யர் என்று கருத்து –
—————————————————————————————————————————–
கையும் திரு வாழி யுமான அழகைக் கண்டு அடிமை புக்கவர்களுடைய அடியார் எனக்கு ஸ்வாமிகள் -என்கிறார் –
குலந்தாங்கு சாதிகள் நாலிலும் கீழ் இழிந்து எத்தனை
நலந்தான் இலாத சண்டாள சண்டாளர்கள் ஆகிலும்
வலந்தாங்கு சக்கரத்து அண்ணல் மணிவண்ணற்கு ஆள் என்று உள்
கலந்தார் அடியார் தம்மடியார் எம் அடிகளே.–3-7-9-
குலந்தாங்கு சாதிகள்-இத்யாதி
சந்தானங்களைத் தரிக்கக் கடவதான ப்ராஹ்மணாதி ஜாதிகள் நாளிலும் கீழ்ப் பட்டு ஒரு நீர்மையும் இன்றிக்கே
ப்ராஹ்மணர்க்கு சண்டாளர் நிக்ருஷ்டர் ஆனால் போலே சண்டாளர்க்கும் கூட நிக்ருஷ்டர் ஆனாலும்
வலந்தாங்கு சக்கரத்து அண்ணல்-இத்யாதி –
சிரமஹரமான திரு நிறத்தை உடையனாய் அதுக்கு மேலே வலவருகே தரியா நின்றுள்ள திரு வாழி யை உடையனாய்
அவ் வழகாலே எல்லாரையும் அடிமை கொண்டவனுக்கு அடிமையே பிரயோஜனம் என்று இருக்குமவர்களுக்கு அசாதாரணமான அடியார் எனக்கு ஸ்வாமிகள் –
—————————————————————————————————————————
ஐஸ்வர்யார்த்திகள் ஐஸ்வர்யத்தில் இனி இல்லை என்ன மேற்பட்ட நிலத்தை ஆசைப்படுமா போலே வட தள சாயியினுடைய ஆச்சர்யமான
படிகளில் ப்ரவணராய் இருந்தவர்களுடைய தாஸ்யத்தை தொடங்கி-தாஸ்யத்தின் உடைய பர்யவஸனா பூமியை ஆசைப்படுகிறார் –
அடி ஆர்ந்த வையம் உண்டு ஆலிலை அன்ன வசஞ்செயும்
படியாதும் இல் குழவிப்படி எந்தை பிரான் தனக்கு
அடியார் அடியார் தம்மடியார் அடியார் தமக்கு
அடியார் அடியார் தம்மடியார் அடியோங்களே.–3-8-10-
திருவடிகளுக்கு அளவான ஜகத்தை திரு வயிற்றில் வைத்துக் கொண்டு அதுக்கு ஈடாக ஆலிலையில் இடம் வலம் கொள்ளும் ஸ்வ பாவனாய்
ஒப்பும் ஒன்றும் இன்றிக்கே இருக்க தன்னுடைய பிள்ளைத் தனத்தால் என்னை அடிமை கொண்டு என்னை உஜ்ஜீவிப்பித்தவனுக்கு –
———————————————————————————————————————-
நிகமத்திலே பாகவத சேஷத்வ ப்ரதிபாதிதமான இத் திருவாய் மொழியை அப்யசித்தவர்கள்
இப் புருஷார்த்தத்துக்கு விரோதியான சம்சாரத்தை கடந்தே விடுவார் -என்கிறார் –
அடி ஓங்கு நூற்றுவர் வீய அன்று ஐவர்க்கு அருள்செய்த
நெடியோனைத் தென் குருகூர்ச் சடகோபன் குற்றேவல்கள்
அடி ஆர்ந்த ஆயிரத்துள் இவை பத்து,அவன் தொண்டர் மேல்
முடிவு ஆரக் கற்கில் சன்மம் செய்யாமை முடியுமே.–3-8-11-
அடி ஓங்கு நூற்றுவர் வீய-இத்யாதி –
ராஜ்யத்தில் வேர் விழுந்த துர்யோதனாதிகள் நூற்றுவரும் முடியும் படி பாண்டவர்களுக்கு பண்ணலாம் பிரசாதங்கள் எல்லாம் பண்ணி
பின்னையும் ஒன்றும் செய்யப் பெற்றிலோம் என்று இருக்கும் ஸ்வ பாவத்தை உடைய எம்பெருமானை
குற்றேவல்கள்-இத்யாதி –
அந்தரங்க வ்ருத்தி ரூபமாய் பாதங்கள் பூர்ணமான ஆயிரம் திரு வாய் மொழியிலும் இத் திரு வாய் மொழி
வைஷ்ணவ சேஷத்வமே புருஷார்த்தம் என்று உபபாதித்தது
இத்தை நெஞ்சிலே படும்படி கற்க சக்தராகில் –
———————————————————————————————————————-
ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-