திருவாய்மொழி ஒன்பதினாயிரப்படி -3-3–

உன்னை அனுபவிக்கைக்கு விரோதியான பிரக்ருதியை போக்க வேணும் என்று எம்பெருமானை ஆழ்வார் அர்த்திக்க
உமக்கு பிரக்ருதி நம்மோட்டை பரிமாற்றத்துக்கு விரோதி யல்ல -அநு கூலம்-இப்பிரக்ருதியோடே கூட உம்மை அடிமை கொள்ளுகையில்
உள்ள அபி நிவேசத்தாலே அன்றோ இங்கே நிற்கிறது என்று வேதைக சமதி கம்யனான தான் திருமலையில் நின்று அருளுகிற படியைக் காட்டி
அருளக் கண்டு ப்ரீதராய் அவன் திருவடிகளில் எப்பேர்ப்பட்ட அடிமைகளும் செய்ய வேணும் என்று
-அஹம் சர்வம் கரிஷ்யாமி -என்று பாரித்த இளைய பெருமாளை போலே மநோ ரதிக்கிறார் –

————————————————————————————————————

திருவேங்கடம் உடையானுக்கு எல்லா அடிமைகளும் செய்ய வேணும் -என்கிறார் –

ஒழிவு இல் காலம்எல்லாம் உடனாய் மன்னி
வழு இலா அடிமை செய்ய வேண்டும் நாம்
தெழி குரல் அருவித் திருவேங் கடத்து
எழில் கொள் சோதி எந்தை தந்தை தந்தைக்கே.–3-3-1-

ஒழிவு இல் காலம்எல்லாம்-அநந்த காலம் எல்லாம்
உடனாய் -சர்வ தேசத்திலும்
மன்னி-சர்வ அவஸ்தையிலும் –
வழு இலா அடிமை செய்ய வேண்டும் நாம்-சர்வ சேஷ வ்ருத்தியும் பண்ண வேணும் –
நாம் என்கிற பன்மை -திரு உள்ளத்தை யாதல்
மேவும் தன்மையும் ஆக்கினான் -என்று சொல்லப் பட்ட அநு கூல ஜனங்களை யாதல் குறித்து –
தெழி குரல் அருவித் திருவேங் கடத்து-எழில் கொள் சோதி எந்தை தந்தை தந்தைக்கே-
ஸ்ரமஹரமாய் கம்பீரமாக த்வனியா நின்றுள்ள திரு அருவியை உடைய திரு மலையில் நில மிதியாலே
நிறம் பெற்ற தன்னுடைய ஸ் வா பாவிகமான அழகை உடையனாய் -அவ் வழகாலும்
திருமலையில் நின்று அருளின ஸுலப்யத்தாலும்-என்னைத் தோற்பித்து எனக்கு பரம சேஷியான திருவேங்கடம் உடையானுக்கு –

———————————————————————————————————

திரு நாட்டிலே சென்று எம்பெருமானுக்கு அடிமை செய்கை அன்றோ எல்லாருக்கும் பரம ப்ராப்யம் என்னில்
திரு நாட்டில் உள்ள நித்ய ஸூ ரிகளும் ஆசைப் படும்படி முடிவு இல்லாத ஸுந்தர்ய சீலாதிகளை உடைய திருவேங்கடமுடையான்
என்னை தனக்கு அத்யந்த சேஷமாக்கிக் கொண்டான் -ஆனபின்பு அவனுக்கு சர்வ சேஷ வ்ருத்தியும் பண்ண வேணும் -என்கிறார் –

எந்தை தந்தை தந்தைதந்தை தந்தைக்கும்
முந்தை வானவர் வானவர் கோனொடும்
சிந்து பூமகிழும் திரு வேங்கடத்து
அந்தம் இல்புகழ்க் கார்எழில் அண்ணலே.–3-3-2-

ஸ்ரீ சேனாபதி ஆழ்வானோடும் கூட அயர்வறும் அமரர்கள் உபஹாரமாகத் தூவின பூக்கள் நில மிதியில்
குளிர்த்தியாலே செவ்வி பெரும்படியான திருமலையிலே -அண்ணல் -சர்வேஸ்வரன் –

———————————————————————————————————

ஏவம் விதமான ஸ்வ அனுபவ ரூப ஸம்ருத்தியைத் தந்து அருளுமோ -என்னில்
நிரதிசய ஸுந்தர்யத்தையும்-எண்ணில்லாத கல்யாண குணங்களையும் உடைய தன்னை
அசங்க்யேயரான நித்ய சித்த புருஷர்கள் எல்லாருக்கும் புஜிக்க கொடுத்துக் கொண்டு இருக்கிறான் ஒரு பரம உதாரன் அல்லனோ
-அவன் ஆதலால் நமக்குத் தன்னை புஜிக்கத் தரும் என்கிறார் –

அண்ணல் மாயன் அணிகொள்செந் தாமரைக்
கண்ணன் செங்கனி வாய்க்கரு மாணிக்கம்
தெண்ணிறை சுனை நீர்த்திரு வேங்கடத்து
எண் இல் தொல்புகழ் வானவர் ஈசனே. –3-3-3-

திருமலையில் வந்த ஐஸ்வர்யத்தினால் அத்யாச்சார்ய பூதனாய் தானே ஆபரணமாம் படியான அழகிய திருக் கண்களை உடையான்
தெளிந்து நிறைந்து இருந்துள்ள நீரை உடைத்தான் சுனைகளாலே அலங்க்ருதமான திரு மலையிலே –

————————————————————————————————————

அதி நிக்ருஷ்டனான என் பக்கலிலே சங்கத்தை பண்ணினவனுக்கு அயர்வறும் அமரர்களுக்கு
ஆத்ம தானம் பண்ணினான் என்னும் இது ஒரு ஏற்றமோ என்கிறார் –

ஈசன் வானவர்க்கு என்பன் என்றால் அது
தேசமோ திரு வேங்கடத் தானுக்கு?
நீசனேன் நிறைவு ஒன்றுமிலேன் என்கண்
பாசம் வைத்த பரஞ்சுடர்ச் சோதிக்கே.–3-3-4-

அநாதம குணத்துக்கு எல்லாம் ஒரு ஆகாரமாய் -ஆத்மகுண கந்தம் இல்லாதேன் –
என் பக்கலிலே சங்கத்தைப் பண்ணி சம்ச்லேஷிக்கையாலே அது உஜ்ஜவலனாய் இருக்கிறவனுக்கு –

———————————————————————————————————–

திருவேங்கடமுடையான் படிக்கு என்னை விஷயீ கரித்தான் என்றால் தான் குணமாகப் போருமோ-என்கிறார் –

சோதி ஆகி,எல்லா உலகும் தொழும்
ஆதி மூர்த்தி என்றால்அளவு ஆகுமோ,
வேதியர் முழு வேதத்து அமுதத்தைத்
தீது இல் சீர்த் திரு வேங்கடத் தானையே?–3-3-5-

அத்யந்த விலக்ஷணமான ஸுந்தர்யாதி கல்யாண குணங்களை உடையனான தன்னை எனக்கு எனக்கு
புஜிக்கத் தந்தான் என்ற இது அவனுக்கு ஒரு ஏற்றமாகப் போருமோ –
நிக்ருஷ்டத்தைக்கு தமக்கு அப்பால் இல்லாமையால் -எல்லா உலகும் தொழும் என்னவே தம்மையே சொல்லிற்றாம்
வைதிகருடைய தனமான வேதங்கள் எல்லா வற்றாலும் நிரதிசய போக்யமாக ப்ரதிபாதிக்கப் படுகிறவனை –
அவனுடைய சீருக்கு தீது இல்லாமை யாவது -இன்னார் ஆவர் இன்னார் ஆகார் -என்று வரையாமே ஒரு குணம் அன்றிக்கே ஸ்வரூபம் ஆகை –

————————————————————————————————————–

பிரதிபந்த கர்மங்கள் அடிமைக்கு விக்நத்தை பண்ணாவோ என்னில் -அடிமை செய்வோம் என்று இசையவே -தானே வசிக்கும் என்கிறார் –

வேங் கடங்கள் மெய் மேல்வினை முற்றவும்,
தாங்கள் தங்கட்கு நல்லனவே செய்வார்,
வேங்கடத்து உறைவார்க்கு நம என்னல்
ஆம் கடமை அது சுமந் தார்கட்கே.–3-3-6—

ருண த்ரயங்களும் தேஹ உபபாதிகமான பாபங்களும் தானே நசிக்கும்-உத்தர பூர்வாகங்கள் நசிக்கும் -இது சத்யம் என்றுமாம் –
தாங்கள் தங்களுக்கு ப்ராப்யம் என்று இருந்த அடிமைகளை செய்ய அமையும்
திருவேங்கடமுடையானுக்கே சேஷம் -எனக்கு உரியேன் அல்லேன்-என்று ஆத்மாவுக்கு பிராப்தமுமாய் எளியதுமாய் இருக்கிற
இந்த யுக்தி மாத்திரத்திலே உத்யுக்தர் ஆனவர்களுக்கு –

—————————————————————————————————————

நம்முடைய அபி லஷிதமான அடிமைகள் எல்லாம் பெறுகைக்காக திரு வேங்கடமுடையானை
ஆஸ்ரயிக்க வேண்டியது இல்லை -திருமலை தானே தரும் என்கிறார் –

சுமந்து மாமலர் நீர்சுடர் தூபம்கொண்டு.
அமர்ந்து வானவர் வானவர் கோனொடும்
நமன்று எழும்திரு வேங்கடம் நங்கட்குச்
சமன் கொள் வீடு தரும்தடங் குன்றமே.–3-3-7-

சிலாக்கியமான புஷபாத் யுபகரணங்களை சாதரமாகத் தரித்துக் கொண்டு –
பரமை காந்திகளைப் போலே இந்திராதி தேவர்களும் ப்ரயோஜ நாந்தரங்களை மறந்து பூண்டு அடிமை செய்து
உஜ்ஜீவிக்கும் படியான நில மிதியை உடைய திரு வேங்கடமான தடம் குன்றமே நமக்கு தன்னுடைய சேஷத்வம் போலே இருக்கும் சேஷத்வத்தைத் தரும்
சமன் கொள் என்றது -ஆத்மாவுக்கு சத்ருசம் ஆகவுமாம்-

——————————————————————————————————————

கோவர்த்தன உத்தரணாதி களாலே நிரதிசய போக்யனான எம்பெருமானுக்கு கூட பரம ப்ராப்யமான திருமலை தானே
நமக்கு ஓன்று தர வேணுமோ -அது தானே பரம ப்ராப்யம் என்கிறார் –

குன்றம் ஏந்திக் குளிர்மழை காத்தவன்,
அன்று ஞாலம் அளந்த பிரான்,பரன்
சென்று சேர்திரு வேங்கட மாமலை
ஒன்றுமே தொழ நம்வினை ஓயுமே.–3-3-8-

கோவர்த்தன உத்தாரணம் பண்ணி ஆஸ்ரிதருடைய ஆபத்தைப் போக்கும் ஸ்வ பாவனாய் -அவ்வளவு அன்றிக்கே
ஆஸ்ரிதருக்காக லோகத்தை எல்லாம் அளக்கை யாகிற மஹா உபகாரத்தைப் பண்ணின சர்வேஸ்வரன் –
சென்று தனக்கு பரம ப்ராப்யமாகப் பற்றும் திருமலை ஒன்றையுமே அனுபவிக்க ஒரு பிராப்யம் பெற்றிலோம் என்னும் வியசனம் நீங்கும்
ஆஸ்ரயிப்பார்க்கு உண்டான அடிமைக்கு விரோதியை திருமலை தானே போக்கும் என்றுமாம் –

—————————————————————————————————————–

அடிமை தருகைக்கும் அதுக்கு விரோதி நிரசனத்துக்கும் திருமலை எல்லாம் வேண்டா –
-திருமலைக்கு அவயவ பூதனான திருவேங்கடமுடையான் அமையும் என்கிறார் –

ஓயும் மூப்புப் பிறப்பு இறப்புப் பிணி
வீயுமாறு செய்வான் திரு வேங்கடத்து
ஆயன் நாள்மலராம் அடித் தாமரை
வாயுளும் மனத்துள்ளும் வைப்பார்கட்கே.–3-3-9-

ஜென்மாதி சகல துக்கங்களும் ஓயும்
சகல துக்க நிவர்த்தகனாய் திருமலையில் நின்று அருளின சர்வ ஸூ லபனான-
திருவேங்கடமுடையானுடைய நிரதிசய போக்யமான திருவடிகளை மநோ வாக் காயங்களினால் அனுபவிப்பார்க்கு –

——————————————————————————————————————-

தம்முடைய ப்ரீதி ப்ரகரஷத்தாலே எல்லீரும் திருத் தாழ் வரையை ஆஸ்ரயிங்கோள்-என்கிறார் –

வைத்த நாள்வரை எல்லை குறுகிச் சென்று,
எய்த்து, இளைப்பதன் முன்னம் அடைமினோ
பைத்த பாம்பணையான் திரு வேங்கடம்
மொய்த்த சோலை மொய் பூந்தடந் தாள்வரை.–3-3-10-

திருமலைக்கு போகைக்காக ஈஸ்வரன் நியமித்த ஆயுஸ்ஸின் எல்லை அளவில் அணித்ததாகச் சென்று திருமலையை
அனுசந்திக்க ஒண்ணாத படி கலங்கி அவசன்னர் ஆவதற்கு முன்னே ஆஸ்ரயிங்கோள் –
தன்னோட்டை ஸ்பர்ச ஸூ க அதிசயத்தாலே விகசிதமான பணங்களை உடைய திரு வனந்த வாழ்வானைக் காட்டிலும் எம்பெருமானுக்கு
நிரதிசய போக்யமான திருமலையினுடைய செறிந்து இருந்துள்ள திருச் சோலைகளையும் அழகிய பூத்த பொய்கைகளையும் உடைய திருத் தாழ் வரையை –

———————————————————————————————————————-

நிகமத்தில் இது திருவாய் மொழியை அப்யஸிக்க வல்லவர் ஆழ்வார் மநோ ரதித்த படியே
எப்பேர்ப்பட்ட அடிமையையும் செய்யப் பெறுவார் என்கிறார் –

தாள் பரப்பி மண் தாவிய ஈசனை
நீள் பொழிற் குருகூர்ச் சடகோபன் சொல்
கேழ்இல் ஆயிரத்து இப்பத்தும் வல்லவர்
வாழ்வர் வாழ்வு எய்தி ஞாலம் புகழவே.–3-3-11-

ஸ்ரீ வாமனான தன்னுடைய குண சேஷ்டி தாதிகளாலே லோகத்தை அடைய அடிமை கொண்ட திருவேங்கடமுடையானை
பரம்பி இருந்த திருச் சோலையாலே அலங்க்ருதமான திரு நகரியை உடைய ஆழ்வார் அருளிச் செயலான ஒப்பு இல்லாத ஆயிரத்து இப்பத்தும் வல்லவர்
இஜ் ஜகத்தில் உள்ளார் இவனைப் புகழ பெற்று க்ருதார்த்தர் ஆனோம் என்று புகழும் படி
இத் திருவாய்மொழியில் தாம் மநோ ரதித்தால் போலே அடிமை செய்யப் பெறுவர்-

——————————————————————————————————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading