ஸ்ரீ அழகிய மணவாளன்–ஸ்ரீ கோபுரப்பட்டி ஸ்ரீ பால சயனப் பெருமாள்-

ஸ்ரீ அழகிய மணவாளன்’ எனப் பெயர்பெற்ற அரங்கன் தான் சிறுவன் வடிவில் சென்று பிரசாதம் வழங்கியுள்ளான்
என உணர்ந்து கொண்ட ராமாநுஜர்,“நான் யாரையும் அனுப்பவில்லை.
‘பூதப்ருத்’ என்ற திருநாமத்துக்கு எல்லா உயிர்களுக்கும் உணவளிப்பவன் என்று பொருள்.
‘பூதப்ருதே நம:’ என ஜபம் செய்த உமக்கு ‘பூதப்ருத்’ ஆன அரங்கன், தானே வந்து சத்துள்ள உணவளித்து
மெலிந்திருந்த உங்களை இன்று நல்ல ஆரோக்கியத்துடன் வாழ வைத்திருக்கிறான்!” என அந்த ஏழையிடம் சொல்லி,
அரங்கனின் லீலையை எண்ணி ஆனந்தக் கண்ணீர் சிந்தினார்.
“பூதப்ருதே நம:” என்று விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் ஆறாவது திருநாமத்தை ஜபிக்கும்
அடியார்களுக்கெல்லாம் அரங்கனே நல்ல உணவளித்து அவர்களைச் சத்துள்ளவர்களாக ஆக்கிடுவான்.
இதுவே ராமாநுஜர் காட்டிய சத்துணவுத் திட்டம்.

————

காவேரி-கொள்ளிடத்திற்கு இடையே ரங்கன் அனந்த சயனத்தில் இருப்பது போலவே மாற்றொரு ரங்கன்
பெருவளவன்-கம்பலாறு தீப கற்பத்தில் பள்ளி கொண்டிருக்கிறான்.
பெருவளவனாறு இப்போது பெருவளை வாய்க்காலாக சுருங்கி விட்டது.
கொல்லி மலையிலிருந்து புறப்பட்டு பெருக்கெடுத்து ஓடிய கம்பலாறு தடம் மாறி இன்று தடயம் மட்டுமே மிஞ்சி இருக்கிறது.
தற்சமயம் அங்கு தென்படுவது புள்ளம்பாடி வாய்க்கால் என அழைக்கப் படுகிறது.
கல்வெட்டுக்களில் புதுக்கிடையில் ஜல சயனத்துப் பெருமாள் ஸ்ரீ ஆதி நாயகப் பெருமாள் என்று இந்த ரங்கன்
அறியப்படுவதில் இருந்து பழைய கிடைக்கை திருவரங்கம் என்பதை உணர முடிகிறது.
இத்தலம் இருக்கும் ஊர், அழகிய மணவாளத்திற்கு அருகாமையில் உள்ள கோபுரப்பட்டி.
இந்த இரண்டு சிற்றூர் களுக்கிடையே சரித்திர தொடர்புகள் உண்டு.
இங்கு சலசலத்துக் கொண்டிருக்கும் பெருவள வாய்க்காலின் கரையில் தான் 12,000 பேர்களுக்கு ஒருசேர
ஆடி அமாவாசை அன்று திதி கொடுக்கப் பட்டு ஆதி நாயகப் பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் இன்றும் நடக்கிறது.

மணச்சநல்லூரை கடந்து திருப்பைஞ்சலி செல்லும் வழியில் தற்செயலாக அழகிய மணவாளம் எனும் ஊரில் காரை நிறுத்தினேன்.
அது பல வகையில் மிகப் பெரிய அதிர்ஷ்டம் என்று தான் சொல்ல வேண்டும். அதிகம் வீடுகள் இல்லாத அந்த கிராமத்தில்
பதினெட்டு அடி உயரத்தில் சுந்தர ராஜ பெருமாளின் திருமுக மண்டலம். இரண்டு அடிக்கு கீழே இரு தாயர்களும்.
குறுக்கு வழியில் நடந்து போனால் பத்து நிமிடத்தில் அடையக்கூடிய தொலைவில் தான் கோபுரப்பட்டி.
அளக்கும் படியை தலைக்கு வைத்து பால சயனத்தில் ரங்கன். ஆதி நாயகப் பெருமாள் எனும் திரு நாமம்.

திருவரங்க சரித்திரத்தின் ஏடுகளில் இடம் பெற்றவை இவ்விரு ஊர்களும்.
1323ல் உலுக் கான் படையெடுப்பில் ரங்கனை காக்கும் பணியில் உயிர் நீத்த பன்னிரண்டு ஆயிரம் வீர வைஷ்ணவர்களுக்கு
இங்கிருக்கும் ஓடைக் கரையில்தான் ஒவ்வொரு ஆடி அமாவாசை அன்று ஒரு சேர திதி கொடுக்கப் படுகிறது.
அது மட்டும் இந்த சிற்றூர்களின் புகழுக்கு காரணமல்ல. இங்கு தான் சுல்தான் படைகளின் வெறியாட்டத்திலிருந்து
தப்பி வந்தவர்கள் குடியேறி நாற்பத்தி எட்டு வருடங்களுக்கு பின்னால் மிக அசாத்தியமான கார்யங்களை செய்தார்கள்.
தம் முன்னோர்களின் அர்பணிப்புகளை நினைத்தும் வருவோரிடம் எடுத்துரைத்தும் இன்றும் பெருமை கொள்கிறது இக்கிராமங்கள்.

யார் இந்த 12,000 பேர்? எதற்காக ஒரே நாளில் பிதுர் கிரியை?
இதை அறிய சுமார் 700 ஆண்டுகள் பின் நோக்கி செல்ல வேண்டும். வாருங்கள், போவோம்.

1323ம் வருடம்-திரு அரங்கம் அரண்டு கிடக்கிறது. புயலென சீறிப் பாய்ந்து வரும் டெல்லி சுல்தானின் படைகள்
வழி எங்கும் எதிரிப் போர் வீரர்கள் மட்டுமல்லாது சாதாரண மக்களையும் ரத்த வெறி கொண்டு வேட்டையாடி,
ரத்தினங்களை கொள்ளையடித்து, மாபெரும் நகரங்களை நிர்மூலமாக்கி, தீக்கிரையிட்டு இடும் காடுகளாக்கி
இப்போது ரங்க செல்வத்தை குறி வைத்து வந்து கொண்டிருப்பதாக செய்திகள் வந்ததே அதற்கு காரணம்.

ரங்கன் கோவில் வாசலில் கூட்டம். பிள்ளை லோகாச்சார்யர் தலைமை.
‘குலசேகரன் வழியின் மேல் கல் சுவர் எழுப்பி கருவறையில் பள்ளி கொண்டிருக்கும் ரங்கனை மறைத்து விடுவோம்.
நான், உற்சவர் அழகிய மணவாளனை எடுத்துக் கொண்டு தெற்கு நோக்கி செல்கிறேன்.
விருப்பம் இருப்பவர்கள் என்னுடன் வரலாம். சிறு குழுவாக புறப்படுவோம். நிலைமை சரியானவுடன் அரங்கம் திரும்புவோம்.
என்ன சொல்கிறீர்கள்?’. ‘வாழ்வோ, சாவோ எதுவாயினும் சரி, ரங்கனை பிரியோம், ரங்கத்தை விட்டு செல்ல மாட்டோம்’ என
சூளுரைத்து ஒரு கூட்டம் சேருகிறது. (கட கட வென்று பெரிதாகி அடுத்த சில தினங்களில் 12,000 பேர் அங்கேயே தங்கி விடுகின்றனர்).
‘சரி, இந்த இரு பிரிவிலும் சேராத குடும்பங்கள்
திருப்பாச்சில், கோவர்த்தனக்குடி, திருவரங்கப்பட்டி, அழகிய மணவாளம், கோவிந்தபுரம் ஆகிய பகுதிகளில் குடியேரட்டும்’ என முடிவாகிறது.

ரங்கன் கோவிலை காக்கும் பணியில் போரிட்டு மடிந்த அந்த 12,000 பேருக்கே
ஆடி அமாவாசை அன்று பெருவளை வாய்க்காலின் கரையில் ஒன்றாக திதி கொடுக்கப்படுகிறது. எப்பேர்பட்ட தியாகம் !

1311ல் மதுரை, சிதம்பரம், ஸ்ரீரங்கத்தை சூறையாடினானே கில்ஜியின் பிரதிநிதியான மாலிக் கபூர்
அவன் இயற் பெயர் என்ன தெரியுமா? – சந்த் ராம்.
திருவரங்கத்தை தாக்கி செல்வத்தையெல்லாம் கொள்ளை அடிக்கிறான். அதில் ரங்கன் சிலையும் உண்டு.
டில்லி சுல்தானுக்கு நாடு பிடிக்கும் ஆசையெல்லாம் கிடையாது. அவனுக்கு தெரியும்,
ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் இருந்து ஒரு ராஜ்ஜியத்தை ஆள முடியாதென்று.
அவனுடைய நோக்க மெல்லாம் பொக்கிஷங்களை சூறையாடுவது தான். மாலிக் கபூர் டில்லி திரும்புகிறான்.
(நிற்க. இக்கட்டுரை பூலோக வைகுந்தமான ரங்கத்தை மட்டுமே மையமாக வைத்து எழுதப்பட்டது.
ஆகவே, மாலிக் கபூர் மற்றும் உல்லு கான் தரை மட்டமாக்கிய காஞ்சி, மதுரை போன்றவை இதில் சேர்க்கப்படவில்லை).
அலாஉதின் கில்ஜி அவற்றை பங்கிட்டு கொடுக்கும் போது ஒரு சிற்றரசனிடம் ரங்கன் சிலை சேருகிறது.
அவனுடைய புதல்வி சுரதானிக்கு ரங்கனை மிகவும் பிடித்து விடுகிறது.

இங்கு, திருக்கரம்பனூர் பெண் ஒருத்தி ரங்கனை காணாமல் உணவு உட்கொள்வதில்லை எனும் விரதத்தை மேற்கொண்டு வருகிறாள்.
சுல்தானியப் படைகளுடன் சென்று உளவறிந்து ரங்கம் திரும்பி செய்தி சொல்கிறாள்.
நாட்டியத்தில் தேர்ச்சி பெற்ற குழுவொன்று டில்லி செல்கிறது. பாதுஷா அவர்களின் திறமைகளில் மகிழ்ந்து நிறைய பரிசுகள் கொடுக்கிறார்.
அவர்கள், அவை வேண்டாம் ரங்கன் சிலைதான் வேண்டும் என்று சொல்கிறார்கள். பாதுஷாவும் அதற்கு அனுமதி தருகிறார்.
அந்தப் புரத்தில் நுழையும் அந்நாட்டிய பெண்கள், சுரதானி ரங்கன் பிரேமையில் இருப்பதை கண்டு
அவளுக்கு மயக்க மருந்து கலந்து கொடுத்து சிலையை கவர்ந்து செல்கின்றனர். மயக்கம் தெளிந்த சுரதானி அழுது புலம்புகிறாள்.
பாதுஷா நாட்டியக் குழுவை பிடித்து சிலையை மீட்டு வரச் சொல்கிறார். இதை முன்பே ஊகித்திருந்த அவர்கள் மாற்று வழியில் செல்கின்றனர்.
ரங்கம் வரை வந்த சுரதானி சிலையை காணாமல் மனமொடிந்து உயிர் விடுகிறாள்.
அதன் பின் ரங்கன் சிலை திருவரங்கம் திரும்புகிறது.
சுரதானியின் நினைவாக அவள் ஓவியம் இரண்டாவது பிரகாரத்தின் வடகிழக்கு மூலையில் தீட்டப்பட்டு
இன்றும் அவள் துளுக்க நாச்சியாராக வணங்கப் படுகிறாள்.

(இச்சம்பவத்தை வைணவத்தை சீரமைத்த பிரதம ஆச்சார்யர் ராமனுஜரோடு இணைத்தும் கூட கதைகள் உண்டு.
ஆனால், அவர் வாழ்ந்த காலத்தில் டில்லி சுல்தானோ, தென்னக படையெடுப்போ கிடையாது).

அபரஞ்சி தங்கத்தால் ஆன அழகிய மணவாள உற்சவ விக்ரஹத்தையும், பொக்கிஷங்களையும் பத்திரமாக எடுத்துக் கொண்டு
ஒரு குழு ரங்கத்தை விட்டு போய்விட்டதென அறிந்த சுல்தான் படை உபதளபதி கண்ணில் பட்டவர்களையெல்லாம்
வெட்டி வீழ்த்துமாறு கட்டளை இட்டு அக்கூட்டத்தை பிடித்து வரவும் ஏற்பாடு செய்தான்.
நிலைமையின் விபரீதத்தை உணர்ந்த எம்பெருமான் அடியார்களில் ஒருத்தியான வெள்ளாயி அவன் முன்னே
பல மணி நேரங்கள் ஆடி அவனை மயக்கி, தனியில் காதல் மொழி பேசி, போதை கொள்ள வைத்து பின்னர்
கிழக்கு கோபுரத்திற்கு மேலே கூட்டிச் சென்று கீழே தள்ளி கொன்று தானும் குதித்து தன் இன்னுயிரை மாய்த்துக் கொண்டாள்.
நாற்பத்தியெட்டு ஆண்டுகளுக்கு பின் ரங்கத்தில் முதல் முறையாக, வெற்றி வீரனாக காலடி எடுத்து வைத்த
விஜய நகர அரசன் கம்பணா அவள் செய்த த்யாகத்தையும் வீர சாகசத்தையும் போற்றி
அந்த எம்பெருமான் அடியாளின் நினைவாக அக்கோபுரத்துக்கு அவள் பெயரையே சூட்டினான்.

இவையெல்லாம் நடந்து முடிந்து பன்னிரண்டு ஆண்டுகளுக்கு பின்னரே
காக்கத்திய மன்னன் பிரதபருத்திரனை அடக்கும் பொருட்டு உல்லு கான் தலைமையில் ஒரு பெரும் படை
வாரங்கல் கோட்டையை தாக்கி அப்போரில் வெற்றில் பெற்ற களிப்பில் மீண்டும் தமிழகத்தில் நுழைந்தது.

பிள்ளை லோகாசார்யரும், ஸ்வாமி வேதாந்த தேசிகரும் இச்சமயத்தில் தான் ரங்கனை காக்கும் பணியில் ஈடு பட்டனர்.
வேதாந்த தேசிகருக்கு அடுத்ததாக வருபவரே மணவாள மாமுனிகள்.

சுதர்சன ஆச்சார்யர்’தேசிகரே, யாம் பெற்ற செல்வங்கள் மூன்று. அதோ, தூணுக்கு பின்னால் இருளில்
மறைந்து நிற்கிறார்களே இரு சிறுவர்கள், அவர்கள் எம் புதல்வர்கள்.
மூன்றாவது, என் வஸ்திரத்தில் ஒளித்து வைத்திருக்கும் சுருதப் பிரகாசிகை*. இம்மூன்றையும் நீங்கள் தான் காப்பாற்ற வேண்டும்’
என்று கேட்டுக் கொள்கிறார். அவரது உயிர் கூட்டை விட்டு பிரிந்து ரங்கனின் திருவடிகளை அடைகிறது.

*சுருதப் பிரகாசிகை : பிரம்ம சூத்திரத்துக்கு ராமானுஜர் வடமொழியில் எழுதிய உரை தான் ஸ்ரீ பாஷ்யம்.
அந்நூலுக்கு நடாதூர் அம்மாள் எழுதிய விளக்கம் தான் சுருதப் பிரகாசிகை.
ரங்கனுக்கு நைவேத்யம் செய்யப்படும் பாலை சூடு சரியாக இருக்கிறதா என்று கொஞ்சம் தொண்டையில் இட்டுப் பார்ப்பாராம் அவர்.
அதன் காரணமாகவே அவருக்கு அப்பெயர் வந்ததாம்.

ஸ்வாமி தேசிகர் சுதர்சன ஆச்சார்யருக்கு ஈமக் கிரியைகளை செய்ய முடியாமல் போனதே என்ற வருத்தத்துடன்
அந்த இரு இளம் தளிர்களை தம்முடன் கூட்டிக் கொண்டு சுல்தான் படைகளின் கண்ணில் படாமல் நடந்தே
கொங்கு நாட்டின் சத்யமங்கல காட்டுப் பகுதிக்குள் சென்று விட்டார்.
அவர் ரங்கன் தரிசனத்திற்கு மேல்கோட்டை வருவதற்கு இன்னும் பல வருடங்கள் ஆகும்.

ரங்கன், மதுரையை கடந்து, திருக்குருகூர் (நம்மாழ்வார், மணவாள மாமுனிகள் அவதாரத் தலம்) வழியாக
நாகர்கோவில் சென்றடைந்து, பின் திரு அனந்தன் புரம் எழுந்தருளி, கோழிக்கூட்டில் நம்மாழ்வாரை சந்தித்து,
திரு நாராயண புரம் (மேல்கோட்டை) – சத்தியமங்கலம் – திரு நாராயண புரம் வந்தடைந்து,
இதோ இப்போது நாம் அறியா பாதை வழியே திருமலைக் காடுகளில் புகுந்து விட்டார்.
பத்தொன்பது ஆண்டுகளுக்கு பின்னர் கண்டுபிடிக்கப்பட்டு, இன்னும் பல இடங்களில் தங்கி 1371ல் தான்
மறுபடி அரங்கம் எழுந்தருளப் போகிறார்.

இந்த கடைசி பத்து ஆண்டுகள் ஒரு பிரசித்தி பெற்ற சாம்ராஜ்யத்தின் ஏடுகளில் மிக முக்கிய மானவை.
அதில் சில தாள்கள் (ஓலைகள்) கங்கா தேவியால் எழுதப்பட்டு 1916ல் திரு அனந்தன் புரத்தின் ஒரு நூலகத்தில்
வேறு ஏடுகளுக்கு இடையே கிடைக்கப் பெற்றவை. யார் இந்த கங்கா தேவி? அந்த ஓலைகளில் என்ன எழுதப்பட்டிருந்தது?

ஹரிஹரனும், புக்கனும். அவர்கள் தோற்றுவித்த சாம்ராஜ்ஜியம் தான் விஜய நகரம்.
அவர்களின் குருவான வித்யாரண்யர் தான் அந்த சாராத பீட ஆச்சார்யர்.
அவர் பெயராலேயே – வித்யா நகரம் – ஸ்தாபிக்கப்பட்டு பின்னாளில் அது மருவி மிகப் பொருத்தமாக விஜய நகரம் ஆயிற்று
ஹரிஹரன் தான் அதன் முதல் மன்னன். அவன் இறந்ததும் புக்கன் ராஜ்ஜிய பாரத்தை தன் தோள்களில் ஏற்றுக் கொண்டான்.
அவனுடைய புதல்வனே கம்பணன். முள்வாய் (முல்பாகல்) பட்டண அரசன்.
அவனுடைய சர்வ சைன்யாதி பதியே கோபணா.
இவர்கள் தான் பின்னாளில் அரங்கத்தை மீட்டு அழகிய மணவாளனை மறுபடி அவன் இருப்பிடம் கொண்டு சேர்க்கப் போகிறவர்கள்.
இவர்களின் வீர சாகசங்களை மதுர காவியமாக படைத்தவளே கங்கா தேவி, கம்பணனின் மனைவி.

இன்றைக்கு சுமார் அறுநூற்று ஐம்பது வருடங்களுக்கு முன்னால் கம்பணாவின் மனைவி கங்கா தேவியினால்
‘மதுரா விஜயம்’ நூலில் எழுதப்பட்டவை. அவள் எழுதிய ஏடுகள் 1916ம் ஆண்டு திரு அனந்தன் புரத்தில்
ஒரு தனியார் நூலகத்தில் வேறு முக்கியமில்லாத ஓலைகளுக்கு இடையே கண்டு எடுக்கப் பட்டவை.
கங்கா தேவி தன் கணவனுடனேயே போர்க்களம் சென்று தன் கண்ணால் கண்டதை வீர கம்பராய சரித்திரமாக தொடுத்ததுதான் ‘மதுரா விஜயம்’.

அகிலாண்டேஸ்வரி மீனாக்ஷி பேச ஆரம்பித்தாள்.
கம்பணா , இதோ இந்த குறுவாளை பெற்றுக்கொள். இது விஸ்வகர்மாவினால் சிவபிரானிடம் கொடுக்கப்பட்டது.
அவர் இதனை பாண்டியர்களிடம் கொடுத்தார்.
அவர்களும் இதை வைத்துக்கொண்டு காலத்தால் அழிக்க முடியாத கீர்த்தியை அடைந்தார்கள்.
ஆனால், அவர்கள் புகழ் மங்குவதை உணர்ந்த அகத்திய மாமுனி இக்குறுவாளை உனக்கு கொடுத்துள்ளார்.
நீ, இயல்பிலேயே தைர்யசாலி. இவ்வாள் உன்னிடம் இருந்தால் நீ பராக்ரமசாலியாவாய்.
இதை தரித்திருக்கும் வரையில் எந்த ஆபத்தும் உன்னை அணுகாது. உனக்கு தோல்வி ஏற்படாது.
கடவுளர்கள் கூட உன்னை எதிர்க்க முடியாது. நீ, உடனே மதுரைக்கு புறப்படு.
அன்று வட மதுரையில் கண்ணன் கம்சனை கொன்றது போல் நீ அந்த யவன அரசனை கொல்வாய்.
துருக்கியர்களை விரட்டியடித்து தர்மத்தை நிலை நிறுத்துவாய். அவர்கள் ரத்தத்தை ஆறாய் ஓடவைப்பாய்.
சேதுக்கரைக்கு சென்று ஜய ஸ்தம்பம் நாட்டுவாய். தமிழ் பேசும் நாட்டை ஆளத் தொடங்குவாய்.
உன் ஆட்சியில் காவேரி பழக்கப்பட்ட யானை போல் அமைதியாய் ஓடுவாள். ஜய விஜயீ பவ’.

கருணை பொங்கும் அகன்ற விழிகளுடன் கம்பணாவை ஆசிர்வதித்த படியே அந்த சர்வேஸ்வரி அவன் புறக் கண்களிலிருந்து
மறைந்து ஹ்ருதயத்துக்குள் உறைந்தாள். சுற்றிலும் இருள் சூழினும் தன் அகத்தினுள்ளே பிரகாசத்தை உணர்ந்தான் கம்பணா.

371. பரிதாபி ஆண்டு, வைகாசி திங்கள் 17ம் நாள். ரங்க நகரம் விழாக்கோலம் பூண்டிருந்தது.
நாற்பத்தியெட்டு வருடங்களுக்கு முன்னால் தன் இருப்பிடத்திலிருந்து அவசரஅவசரமாய் வெளியேறிய அழகிய மணவாளன்
காவிரியின் தென்கரையை அடைந்து, பின் தொண்டைமான் காட்டிற்குள் புகுந்து, திருக்கோஷ்டியூர், திருமால் இருஞ்சோலை,
யானைமலை, மதுரை, திருக்குருகூர், நாகர்கோவில், திருஅனந்தன்புரம், கோழிக்கூடு, திருநாராயணபுரம்,
திருமலைக் காடுகள், திருமலை, செஞ்சி, அழகிய மணவாளம் வழியாக தென் தேசங்களை பிரதக்ஷணம் செய்து
இப்போது காவிரியின் வடகரை கடந்து ரங்கத்திற்குள் மீண்டும் பிரவேசிக்கிறார்.
கேட்க வேண்டுமா ரங்கத்தினர் உற்சாகத்திற்கு? வீட்டு வாசல்கள் தெளிக்கப்பட்டு மாக்கோலங்கள். வாழைகள்.
மாவிலைத் தோரணங்கள். பூ மாலைகள். மேள தாளத்துடன் மங்கல இசை. விண்ணைப் பிளக்கும் வேத கோஷங்கள்.
தமிழ் மறை பிரபந்தங்கள். போரில் வெற்றி கண்ட கம்பண, கோபணருக்கு ஜய கோஷங்கள்.
வீதியெங்கும் மகிழ்ச்சி கூத்தாடல்கள். பல்லக்கில் நெஞ்சு நிறைந்து பவனி வரும் ரங்கனுக்கும்,
அதை சுமக்கும் விஜய நகர அரசன், படைத் தளபதிகளுக்கு ஆரத்திகள், அவர்கள் அனைவரின் மீதும் வாரி இறைக்கப் படும் பூக்கள்,
கொட்டும் முரசுகளின் பேரொலிகள் என திருவரங்கம் அதிர்ந்து கொண்டிருந்தது.

இக்கொண்டாட்டங்களை எல்லாம் பார்த்துக் கொண்டும், குழுமி இருந்த ஜன சமுத்திரத்தின் ‘ரங்கா, ரங்கா’
(அரை நூற்றாண்டுகளுக்கு முன்னால் இதே ரங்கா, ரங்கா முழக்கத்தோடு அவனுக்காக உயிர் துறந்த
ரங்க வீரர்களின் வம்சா வழி வந்தவர்களே இவர்கள்) எனும் சந்தோஷ கூச்சல்களை கேட்டுக் கொண்டும்,
அவர்களின் ஊடே புன்னகை தவழும் முகத்துடன் ஊர்வலமாய் சென்று தன் சாம்ராஜ்ஜிய பீடத்தில்
ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக புளகாங்கிதமாய் எழுந்தருளினார் அரங்கன்.
(காணாமல் போன நாச்சியார் உற்சவ பேரங்கள் இப்போது எப்படி வந்தன?
இவ்விக்ரஹங்கள் வேறு. இவை, அழகிய மணவாளர் திருமலையில் தங்கி இருந்த போது சந்திரகிரி அரசர் யாதவராயரால் செய்து வைக்கப் பட்டவை).

இச்சமயத்தில்தான் விஜய நகரத்தார் போரில் வெற்றி பெற்றதை ஸ்வாமி வேதாந்த தேசிகரிடம் நேரில் கூறி
அவரை திருவரங்கம் அழைத்து வந்திருந்தனர். எவர் முன்னிலையில் நாற்பத்தியெட்டு ஆண்டுகளுக்கு முன்னால்
மூலவரை மறைக்கும் வகையில் குலசேகரன் வாயிலில் சுவர் எழுப்பப்பட்டதோ, நூறு பிராயத்தை கடந்திருந்த அவரே
இப்போது முன் நின்று அக்கற்தடுப்பை தகர்த்து ரங்கனை மீண்டும் உலகத்தாருக்கு வெளிப்படுத்தினார்.
அரங்கனை முதன் முறையாய் தரிசித்தவர்கள் பரவசமாகி ‘ரங்கா, ரங்கா’ என கூக்குரலிட்டனர்.
பலரின் விழிகளில் ஆனந்தக் கண்ணீர். பிறகு, ரங்கனுக்கு முறைப்படி வெகு விமர்சையாக பூஜைகள் நடந்தது.
ஸ்வாமி தேசிகர், சுல்தானுக்கு எதிரான போரில் விஜய நகர படைகளுக்கு தலைமை வகித்து வெற்றி கண்ட
கோபணரை போற்றி ஒரு ஸ்லோகம் எழுதினர். அது கல்லில் பொறிக்கப்பட்டு இன்றும் காணக் கிடைக்கிறது.

ரங்கன் மட்டும் அல்ல, நாச்சியாரும் கூட, தற்காலத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டவரும்,
வில்வ மரத்தின் கீழே புதைக்கப்பட்டு இப்போது வெளியே எடுக்கப்பட்டவருமாக இருவராயினர்.
மறுபடி விவாதம். கடைசியில், இருவரையுமே வைத்துக் கொள்ளலாம் என முடிவாயிற்று.

கோபுரப்பட்டி பால சயனப் பெருமாள்: இப்பகுதி ‘மேல் தலைக்காவிரி பூம்பட்டினம்’, ‘ராஜராஜ வள நாடு’, ‘புராதன புரி’
என்று பல்வேறு பெயர்களால் அறியப்பட்டது. 1342ல், வீர வள்ளாலன் கண்ணூர் கொப்பத்தை முற்றுகை இட்ட போதும்,
பின்னர் 1498ல் இலங்கை உலகன் என்ற தோழப்பானாலும் திருப்பணிகள் செய்யப் பட்டுள்ளது.
இக்கோவில் மூலவர் புதுக்கிடையில் ஜலசயனத்து பெருமாள் என்று கல்வெட்டுக்கள் மூலம் அறியப்படுவதால்
பழைய கிடை திருவரங்கம் என தெளிவாகிறது.

——————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் —

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading