Archive for the ‘Puraanankal’ Category

ஸ்ரீ.வில்லிபாரதம் – மூன்றாம் பாகம் -38. பத்தாம் போர்ச் சருக்கம்- ஸ்ரீ.உ.வே.சே.கிருஷ்ணமாசாரியர் ஸ்ரீ உ.வே.வை.மு.கோபாலகிருஷ்ணமாசாரியர் உரைகள்

September 23, 2023

வலியில் அன்று தந்தை செற்ற மைந்தனுக்கு
வந்த பேர்
நலிவு எலாம் அகற்றும் நாமம்; நால்-இரண்டு
எழுத்துடன்
பொலியும் நாமம்; மறைகள் சொன்ன பொருள்
விளக்கும் நாமம்-முன்
கலியன் எங்கள் மங்கை ஆதி கண்டுகொண்ட
நாமமே.கடவுள் வாழ்த்து

அன்று – முன்னொருகாலத்தில், வலியில் – கடுமையாக,
தந்தைசெற்ற –  பிதாவான இரணியனாற் கோபித்துவருத்தப்பட்ட, மைந்தனுக்கு –
இளம்பிள்ளையான பிரகலாதனுக்கு, வந்த பேர் நலிவு எலாம் – நேர்ந்த
பெருந்துன்பங்களையெல்லாம், அகற்றும் – நீக்கியருளின, நாமம் – திருநாமமும்,-
நால் இரண்டு எழுத்துடன்-எட்டு எழுத்துக்களோடு, பொலியும் –  விளங்குகிற,
நாமம் – திருநாமமும்,- மறைகள் சொன்ன பொருள் – வேதங்கள் சொல்லிய
அருத்தங்களையெல்லாம், விளக்கும் – விளங்கத்தெரிவிக்கிற, நாமம் –
திருநாமமும்,-முன் – முன்பு, கலியன் – கலியனென்னும் பெயருடையவரும், எங்கள்
மங்கை ஆதி-திருமங்கை யென்னும் ஊருக்குத் தலைவருமாகிய எங்கள்
திருமங்கையாழ்வார், கண்டுகொண்ட – அறிந்து கொண்ட, நாமம்ஏ –
திருநாமமேயாம்;

       தன்மகனான பிரகலாதன் தன்கட்டளைப்படி தன்பெயரைச் சொல்லிக்
கல்விகற்காமல் நாராயணநாமம் சொல்லிவரவே, தந்தையான  இரணியன்
மிகக்கோபங்கொண்டு பாம்புகளையும் யானைகளையும் நெருப்பையும் விஷத்தையும்
காற்றையும் மற்றும்பலவுபாயங்களையும் கொண்டு அம்மகனை மிகவும்வருத்த, அவன்
நாராயணநாமோச்சாரணபலத்தால் சிறிதும் துன்பமுறாமல் அந்த
அபாயங்களெல்லாவற்றினின்றும் நீங்கினான் என்பது-பிரசித்தம்.
நம்பெருமாளெட்டெழுத்தின் பெருமை நவிலுமதோ சம்பரன் மாயப்புரோகிதர்
சூழ்வினை தாரணிவாள், வெம்படை மாசுணம் மாமத வேழம்விடம் தழல் கால்,
அம்பரமேமுதலானவை பாலனுக்கு அஞ்சினவே” என்றார்
திருவரங்கத்துமாலையிலும். “ஸர்வமஷ்டாக்ஷராந்தஸ்த்தம்” என்றும்,
“ஸர்வவேதாந்தஸாரார்த்த:”என்றும்நூல்களிற் கூறப்படுதல்பற்றி, ‘மறைகள் சொன்ன
பொருள் விளக்கு நாமம்” என்றார்.

     கலியன்-மிடுக்குடையவன்; கலி-வலிமை. இவர் பெருமாளைக்
கொள்ளையிடும்பொழுது, சகலவஸ்திராபரணங்களையுங் கவர்ந்த பின்
திருவடிவிரலிலுள்ள திருவாழியைப் பல்லாற் கடித்துவாங்கின மிடுக்கால், இவரைத்
திருமால் கலியனென்று பேரிட்டு அழைத்தனர். எங்கள் என்றபன்மை –
தன்னைச்சேர்ந்தவர்களையுங் கூட்டியது. ‘எங்கள்மங்கையாதி’ என்றதனால்,
வில்லிபுத்தூராரது ஸ்ரீவைஷ்ணவஅபிமானமும் திருமங்கைமன்னன்பாசுரத்தில்
இவர்க்குள்ள ஈடுபாடும் விளங்கும். திருமங்கையாழ்வார் – ஸ்ரீவைஷ்ணவ
சம்பிரதாயத்தில் சிறந்த பக்தர்களாக வழங்கப்படுகிற ஆழ்வார்கள் பதின்மருள்
ஒருவர்; சோழநாட்டில் திருமங்கையென்ற தலத்தில் பிறந்தவர்; இவர் ஒரு
சோழராசனிடத்தில் மந்திரியாயிருந்து அவனது திறைப்பொருளையெல்லாம்
பாகவதாராதநம்பண்ணிச் செலவுசெய்து மற்றும் அந்தக்கைங்கரியத்தை நடத்தும்
பொருட்டு வழிபறித்துப் பொருள்தேடிவருகையில், திருமால் இவருக்குத்
திருவருள்செய்யக்கருதித் தாம் பிராட்டியுடனே கலியாணக்கோலங்கொண்டு மிகுந்த
ஆபரணங்களோடும் திரண்ட செல்வத்தோடும் அவ்வழியிலே செல்ல, இவர்
கூட்டத்தோடு சென்று அவர்களை வளைத்துவழிபறித்துப் பொருள்களை யெல்லாங்
கட்டிவைத்து எடுக்கத்தொடங்க, அது எடுக்க முடியாமையாலே,
அவ்வெம்பெருமானைநோக்கி ‘நீ என்ன மந்திரவாதம் பண்ணினாய்’ என்றுசொல்லி
வருத்திக்கேட்க, அப்பொழுது ஸ்ரீமந்நாராயணன் ‘அந்தமந்திரத்தை
உனக்குச்சொல்லுகிறேன் வா’ என்று தனக்குரிய அஷ்டாக்ஷரமகாமந்திரத்தை
இவருக்கு உபதேசித்தருளிக் காட்சிகொடுக்க, இவரும் பெருமாளைச் சேவித்து
ஞானக்கண்பெற்று “வாடினேன்………நாடினேன் நாடி நான் கண்டுகொண்டேன்
நாராயணா வென்னும் நாமம்” என்று தொடங்கிப் பெரியதிருமொழி முதலிய
திவ்வியபிரபந்தங்களைப் பாடிப் பெருமையுற்றுப் பேறு பெற்றனரென்பது வரலாறு.

     இதுமுதல் பதினாறு கவிகள் – ஈற்றுச்சீரொன்று விளச்சீரும் மற்றவை
மாச்சீர்களுமாகிய எழுசீராசிரியவிருத்தங்கள்.   

வர சங்கமும், தாரையும், சின்னமும், பொன்
மணிக் காளமும்,
முரசங்களும், துந்துபியும், எங்கும் எழ விம்ம,
முழ விம்மவே,
கரை சிந்து, திரை சிந்து, நுரை சிந்து, விரை சிந்து,
கணம் என்னவே,
அரசன் பெருஞ் சேனை வெள்ளம் புறப்பட்டது,
அணியாகவே.2.-இரண்டுகவிகள் – தருமன்தன்சேனையோடு போர்க்களங்குறுக,
முந்தியவியூகமாகவே சேனை அணிவகுப்படுதல்.

இதுமுதல் நான்கு கவிகள் – குளகம்.

     (இ-ள்.) தருமராசன் மதலை-யமதருமராசனது புத்திரனான யுதிட்டிரன்,
பஞ்சசயனம் நின்று-படுக்கைமெத்தையில் நின்று, எழுந்த பின்-துயிலொழிந்து
எழுந்தபின்பு, காலையில் கடன் ஆன கருமம் கழித்து-உதயகாலத்திற் செய்யத்தக்க
கடமைகளாகிய (சந்தியாவந்தநம் முதலிய வைதிகத்) தொழில்களைச் செய்து
முடித்து, நேமி அம் பெருமனோடு சென்று தக்க பெற்றி பேசி –
சக்கராயுதத்தையுடைய அழகியபெருமையயுடைய தலைவனான கண்ணபிரானிடம்
போய் அவனோடு (அன்றைக்குச்செய்யத்) தக்க தன்மைகளைப்பற்றிப் பேசி,
வெற்றியின் பொரு மகீபர் சூழ-சயத்தையுடைய போர்செய்யவல்ல அரசர்கள்
(தன்னைச்) சூழ்ந்து வர, நின்ற இளைஞரோடு போத-கூடநின்ற தம்பிமார்களோடு
புறப்பட,-(எ-று.)- “ஆகவத்துள் அணிய” என அடுத்தகவியோடு தொடரும்.

     பஞ்சசயனம்-அன்னத்தூவி, இலவம்பஞ்சு, செம்பஞ்சு, மயில் தூவி,
வெண்பஞ்சு என்னும் இவ்வைந்துபொருளாற் செய்யப்பட்ட மெத்தை;“சிறுபூளை
செம்பஞ்சு வெண்பஞ்சு சேணம், உறுதூவி சையையோ ரைந்து” என்றார்,
முன்னோரும்; இனி, திருப்பாவையில்,“மெத்தென்றபஞ்சசயனத்தின் மேலேறி”
என்றவிடத்து,
‘பஞ்சவிதமானபடுக்கையாவது-அழகு, குளிர்த்தி, மார்த்தவம்,
பரிமளம், தாவள்யம் ஆக இவை; அஞ்சுஉருவிட்டுச் செய்த படுக்கை யென்றுமாம்:
பஞ்சாலேசெய்தபடுக்கை யென்னவுமாம்’ என்று பெரியவாச்சான்பிள்ளை
வியாக்கியானமிட்டருளியுள்ளார். பெருமன்-பெருமான் என்பதன் குறுக்கல்

திரண்டு பல் இயங்கள் தேவர் செவி புதைக்க, வானிடைப்
புரண்டு எழுந்த தூளி கண் புதைக்க, மெய் பதைக்கவே,
முரண் தொடங்கு சேனை வந்து முன்னர் நாளை யூகமே
அரண் தொடங்கு யூகமாக ஆகவத்துள் அணியவே,

பல் இயங்கள் – அநேகவாத்தியங்கள், திரண்டு-(தம்மிற்) கூடி
(முழங்கி), தேவர் செவி புதைக்க-தேவர்களுடைய காதுகளை அடைக்கவும்,
வானிடை புரண்டு எழுந்த தூளி-ஆகாசத்தில் துள்ளியெழுந்த புழுதிகள், கண்
புதைக்க-(தேவர்களது இமையாக்) கண்களை மறைக்கவும், மெய் பதைக்க-
(போர்செய்வதற்கு) உடம்பு பதறவும்,-முரண்தொடங்கு சேனை-போரைச்
செய்யத்தொடங்குகிற (தங்கள்) சேனை, ஆகவத்துள்வந்து-போர்க்களத்தில் வந்து,
முன்னர் நாளை யூகமே அரண் தொடங்கு யூகம் ஆக அணிய-முந்தியநாளில்
(செய்த பதும) வியூகமே (அன்றைக்குக்) காவலைச்செய்யும் வியூகமாகும்படி
அணிவகுத்துநிற்க,-(எ-று.)-“வீடுமன்எனும்மன்(4) தேரிலேறினான்” (5) என
அடுத்தகவிகளோடு தொடரும்.

       தருமன்சேனை ஒன்பதாநாளிற்போலவே,பத்தாநாளிலும் பதுமவியூகமாகப்
படைவகுக்கப்பட்டதென்க. மெய்பதைக்க – செவிபுதைத்தலாலும் கண்புதைத்தலாலும்
தேவர் உடல் வருந்த என்றலும் ஒன்று.  

வீடுமன் எனும் தடக் கை வீர மன்னும், வெஞ் சுடர்க்
காடு மன்னு பரிதியைக் கரம் குவித்து இருந்த பின்,
தோடு மன் வலம்புரித் துலங்கு தாம நிருபனும்,
நீடு மன்னர் பலரும், வாயில் இரு புறத்தும் நிற்கவே,4.-இரண்டு கவிகள்-வீடுமன் நித்தியக்கடனை முடித்துத்
தன் தேரிலேறினமையைக் கூறும்.   

(அப்பொழுது), வீடுமன் எனும்-பீஷ்மன் என்கிற, தட கை வீரம்
மன்உம்-பெரியகைகளையுடைய வீரத்தன்மையுள்ள அரசனும், வெம்சுடர் காடு
மன்னு பரிதியை – உஷ்ணமான ஒளிகளின் தொகுதி பொருந்திய சூரியனை, கரம்
குவித்து இருந்தபின்-கைகூப்பித்தொழுது [சந்தியாவந்தனம் முதலியன முடித்து]
இருந்தபின்பு,-தோடு மன் – இதழ்கள் நிறைந்த, வலம்புரி- நஞ்சாவட்டை
மலர்களாகிய, துலங்கு – விளங்குகிற, தாமம்-மாலையையுடைய, நிருபன்உம்-
துரியோதனராசனும், நீடு மன்னர் பலர்உம்-பெரிய மற்றும்பல
அரசர்களும், வாயில் இரு புறத்துஉம் நிற்க,- (எ-று.)-“நீடுதேரிலேறினான்”
எனஅடுத்த கவியோடு முடியும்.

     வீடுமன்னெனும், ன்-விரித்தல். பரிதியைக் கரங்குவித்திருத்தல்-
உபஸ்தாநமும்,ஸூர்யநமஸ்காரமுமாம். திரிபு என்னுஞ்சொல்லணி
காண்க.   

வனைந்து இலங்கு கழலும், முத்து வடமும்,
வாகு வலயமும்,
புனைந்த செம் பொன் மவுலியோடு பொற்பின்மீது
பொற்பு எழ,
‘முனைந்து அடங்க இன்று நாம் முடித்தும், வெய்ய
போர்!’ எனா
நினைந்து, தன் பனைப் பதாகை நீடு தேரில் ஏறினான்.

வனைந்து இலங்கு – அணியப்பட்டு விளங்குகிற, கழல்உம் –
வீரக்கழலும், முத்துவடம்உம் – முத்தாரங்களும், வாகுவலயம்உம் –
தோள்வளைகளும், புனைந்த செம் பொன் மவுலியோடு – தரித்த
செம்பொன்னலாகிய கிரீடமும், பொற்பின்மீது பொற்பு எழ – (தனதுஉடம்பின்)
அழகின் மேல் அழகியதாய்ப்பொருந்த, 
‘இன்று- இன்றைக்கு, நாம்-, அடங்க-
(பகை)ஒழியும்படி, முனைந்து –  உக்கிரமாக முயன்று, வெய்ய போர் முடித்தும் –
கொடியபோரை முடித்துவிடுவோம்,’ எனா நினைந்து-என்று எண்ணி, தன் –
தனது,பனை பதாகை நீடு தேரில் – பனைக்கொடியையுடைய உயர்ந்த
தேரின்மேல்,ஏறினான்-;  (எ-று.)

       “அழகின்மே லழகுபெற அணியனைத்து மணிந்தருளி” என்றார்,
கலிங்கத்துப்பரணியிலும். பத்தாநாளில் தான் அழிவதாக முன்னே
சொல்லியுள்ளானாதலால், இவ்வாறு நினைத்தான். முனைந்து –
பொருது எனினுமாம்.     

சுற்று அறாத வில்லினன்; தொடை மிடைந்த தூணியன்;
கொற்ற வாகை வாளினன்; கூர வீர வேலினன்;
மற்றும் ஆயுதங்களோடும், மன்னரோடும், வார் முரசு
எற்றும் ஆரவத்தினோடும், அடு களத்தின் எய்தினான்.6.-வீடுமன் போர்க்களஞ் சேர்தல்.

சுற்று அறாத – கட்டு நீங்காத, வில்லினன் – வில்லையுடையவனும்,
தொடை மிடைந்த – அம்புகள் நெருங்கிய, தூணியன் – புட்டிலை யுடையவனும்,
கொற்றம் வாகை வாளினன்- வெற்றிக்குஅடையாளமானவாகைப் பூமாலையைச்
சூடின வாளையுடையவனும், கூர வீரம் வேலினன் -கூர்மையையுடைய
வீரத்தன்மைக்குஉரிய வேலாயுதத்தை யுடையவனுமாய், மற்றும்ஆயுதங்களோடு
உம்- வேறு பல படைக்கலங்களுடனும், மன்னரோடுஉம்-எல்லாஅரசர்களோடும்,
வார் முரசு எற்றும் ஆரவத்தினோடுஉம்-தோற்கயிற்றாற்கட்டிய
பேரிகைகள் அடிக்கப்படும் முழக்கத்தோடும், அடு களத்தின் எய்தினான் –
போர்செய்தற்குரிய களத்தில் சேர்ந்தான் (வீடுமன்); (எ-று.)-தொடை –
தொடுக்கப்படுவது; அம்பு.

தானும் முன் அணிந்தவாறு தானையை நிறுத்தி, அச்
சேனை மன்னன் வந்து நின்ற நிலைமை கண்டு,
செங் கண் மால்,
‘வானின் நின்று இழிந்த கங்கை மைந்தனுக்கு வான் உலாம்
யானம் இன்று அளித்தி’ என்று விசயனோடு இசைக்கவே,7.-முன்னைநாள்வியூகமே வீடுமனும் வகுத்துநிற்க,
ஸ்ரீக்ருஷ்ணன் அருச்சுனனிடம் இன்றுவீடுமனுக்குவிமானமளிப்பாயெனல்.

இதுமுதல் ஆறுகவிகள் – குளகம்.

     (இ-ள்.) அ சேனை மன்னன் – அந்தச்சேனைத்தலைவனான வீடுமன்,-
தான்உம் – (பாண்டவர்கள்போலவே) தானும், முன் அணிந்த ஆறு-முந்தின நாளிற்
படைவகுத்தவிதமாகவே [சருவதோபத்திரவியூகமாக], தானையை நிறுத்தி – (தன்)
சேனையை (அணிவகுத்து) நிற்கச்செய்து, வந்து நின்ற – (எதிரில்) வந்து நின்ற,
நிலைமை-நிலைமையை, கண்டு-,-செம் கண் மால்-சிவந்த திருக்கண்களையுடைய
கண்ணபிரான், விசயனோடு – அருச்சுனனுடனே, ‘வானினின்று இழிந்த கங்கை
மைந்தனுக்கு-ஆகாயத்தினின்று இறங்கிய கங்கையின் குமாரனான வீடுமனுக்கு,
வான் உலாம் யானம் – மேலுலகத்துக்குச் செல்லும் விமானத்தை, இன்று –
இன்றைத்தினத்தில், அளித்தி – கொடுப்பாய்,’  என்று இசைக்க – என்றுசொல்ல,-
(எ-று.)- “விசயன் (8) என்ற போது (11)” என மேற்கவிகளோடு தொடரும்.

     வானுலாம் யான மளித்தல்-இறந்து தேவவிமானமேறிச்சுவர்க்கஞ் செல்லும்படி
செய்தல். ‘வானினின்று இழிந்த’ என்றதைக் கங்கைக்கு அடைமொழியாக்கினால்,
பகீரதன் கங்கை கொணர்ந்த சரித்திரத்தையும், மைந்தனுக்கு அடைமொழியாக்கினால்
சாபத்தால பிரபாசவசு பீஷ்மனான வரலாற்றையும் குறிக்கும். யாநம் – வாகனம்;
வடசொல்.         

போரின் அண்டர் பகையை முன்பு பொருது
வென்ற வின்மையான்,
மூரி வெங் கொடிக் குரங்கு முன் நடக்கும் மேன்மையான்,
வாரிதம் கொள் மேனியான், வனம் புகுந்து வருதலான்,
யாரும் இன்று இராமன் என்ன இசைய நின்ற விசயனே,8.-அருச்சுனன்சிறப்பு. 

முன்பு – முன்னொருகாலத்தில், அண்டர் பகையை-
தேவர்களுக்குப்பகைவர்களை, போரின் பொருது – யுத்தத்தில் தாக்கி,
வென்ற – சயித்த,வின்மையான்-வில்லின் திறத்தாலும், முன் – (தனதுதேரின்)
முன்னிடத்தில், மூரிவெம் கொடி-வலிமையுடைய பயங்கரமான துவசத்தில்,
குரங்கு நடக்கும் -அனுமான் பொருந்திய, மேன்மையான் – பெருமையாலும்,-
வாரிதம் கொள் -மேகத்தையொத்த, மேனியான் – திருமேனியினாலும்,-வனம்
புகுந்து வருதலான் -காட்டிற்சேர்ந்து (வசித்து) வந்ததனாலும், யார்உம் இன்று
இராமன் என்ன -யாவரும் இக்காலத்தில் (இவன்) இராமபிரான் என்று
சொல்லுதற்கு, இசைய நின்ற -ஏற்றபடி நின்ற, விசயன் – அருச்சுனன்,- (எ-று.)-
“என்றபோது” என மேற்பதினோராங்கவியோடு இயையும்.

     விஷ்ணுவின் அவதாரமான ஸ்ரீராமமூர்த்திக்கும் அருச்சுனனுக்கும் சில
ஒற்றுமைநயங்காட்டி உவமைகூறினார். இராமனுக்கு, அண்டர்பகையை  வெல்லுதல்-
இராவணாதி இராக்கதரை அழித்தல்; அருச்சுனனுக்கு, அண்டர்பகையை வெல்லுதல்
– நிவாதகவசகாலகேயர்களை வதைத்தல். அனுமக் கொடியும், நீலமேனியும்-
இருவர்க்கும் உண்டு, இராமனுக்கு வனம்புகுதல்-பதினான்குவருஷமும்,
அருச்சுனனுக்கு வனம்புகுதல்-பன்னிரண்டு வருஷமுமாம்; இனி, இரண்டாமடிக்கு –
இராமனுக்கு ஆகும்பொழுது, வலிய கொடிய நீண்ட குரங்கின்சேனை
முன்னேசெல்லப்பெற்ற பெருமையால் என்று உரைப்பினும் அமையும்; கொடி –
நீளம். வாரிதம் – வடசொல்;  நீரைக் கொடுப்ப தென்று பொருள்.

சிலை, பதாகை, இவுளி, தேர், செழுங் கனல் அளித்தன;
வலவன் யார் எனில் குறிப்பொடு என்னை ஆள வந்த நீ;
தல மகீபர் அல்ல; தேவர் தானவர் எதிர்ப்பினும்,
கொலை படாமல் ஏவர் போவர்? குன்று எடுத்த கோவலா!9.-இரண்டுகவிகள்-வீரவாதமாக அருச்சுனன் கண்ணனோடு கூறுவன.

குன்று-கோவர்த்தனமலையை, எடுத்த-(குடையாக) எடுத்துப்பிடித்த,
கோவலா-பசுக்களைக் காத்தலில் வல்லவனே!  சிலை-(எனது) காண்டீவவில்லும்,
பதாகை-குரங்குக்கொடியும், இவுளி-(வெள்ளைக்) குதிரைகளும், தேர்-(சிறந்த)
தேரும், செழுகனல் அளித்தன-சிறந்த அக்கினிதேவனால் கொடுத்தருளப்
பட்டவையாம்; வலவன் யார் எனில்-(எனக்குத்)  தேர்ப்பாகன் யாரென்றால்,
குறிப்பொடு என்னை ஆள வந்த நீ-திருவுள்ளக்கருத்தோடு
என்னைப்பாதுகாத்தருளுதற்குஎழுந்தருளின நீயாவாய்; (ஆதலால்) தலம் மகீபர்
அல்ல-நிலவுலகத்து அரசர்கள் மாத்திரமேயல்ல; தேவர் தானவர் எதிர்ப்பின்உம்-
(மற்றையுலகத்திலுள்ள) தேவர்களும் அசுரர்களும் (ஒருங்கேவந்து) எதிர்த்தாலும்,
கொலை படாமல் ஏவர் போவர்-(என்னால்) கொல்லுதல் படாமல் யாவர்
தப்பிப்போவார்?  (எ-று.)-எவரையும் தப்பாமற் கொல்லவல்லேனென்பதாம்.

பதாகை-பெருங்கொடி. மகீபர் அல்ல – திணைவழுவமைதி; ‘அல்லர்’ எனப்
பாடங்கொள்ளின், வழாநிலையாம்: இனி, அல்ல என்பதை, வேறு இல்லை உண்டு
என்பனபோல, இருதிணையைம்பால் மூவிடத்துக்கும் பொது வென்றலும் ஒன்று:
இது, புதியன புகுதல். பி.-ம்: அளித்தனன்.

எந்தை ஆக; துணைவர் ஆக; தனயர் ஆக; எந்தைதன்
தந்தை ஆக; நீ உரைக்கில், யாரையும் தறிப்பன் யான்-
முந்தை ஆரணங்களுக்கும் முடிவில் நின்ற பொருளை என்
சிந்தை ஆர முற்றுவித்து, வினை அறுத்த செம்மலே!’

முந்தை-பழமையான, ஆரணங்களுக்கு-வேதங்களுக்கெல்லாம்,
முடிவில்-முடிவாகிய உபநிஷத்துக்களில், நின்ற-பொருந்திய, பொருளை-அர்த்தத்தை,
என் சிந்தை ஆர-எனது மனம் கொள்ளும்படி, முற்றுவித்து-முடிய உபதேசித்து,
வினை அறுத்த-(எனது) கருமத்தை ஒழித்த, செம்மலே-பெருமையிற் சிறந்தவனே!
எந்தை ஆக-என் தந்தையாயினும் ஆகுக; துணைவர் ஆக-(எனது)
உடன்பிறந்தவராயினும் ஆகுக; தனயர் ஆக-பிள்ளைகளாயினும் ஆகுக;
எந்தைதன் தந்தை ஆக-எனது பாட்டனாயினும் ஆகுக; யாரைஉம்-(வந்து
எதிர்ப்பவர்) எல்லோரையும், நீ-, உரைக்கில்-அழிக்கச்சொன்னால், யான் தறிப்பன்-
நான்  அழித்திடுவேன்; (எ-று.) 

     கீழ், சுற்றத்தாரிடத்துப் பாசபந்தத்தால் ”யான்மலைவுறேனினி” என்றவன்,
பின்பு கீதோபதேசத்தால் பற்றற்றுப் பகவானது கட்டளையையே
பிரதானமாகக்கொண்டு இங்ஙனம் கூறினான். உற்றஉறவினரையும் ஒரு பொருளாகக்
கொள்ளாமல் எம் பெருமானையே உறுதுணையாகக்கொண்ட உறுதி இதில்
விளங்கும். ஆரணங்களுக்கு முடிவில் நின்ற பொருளை மனம்நிரம்ப விளைவித்தல்
என்றது, வேதாந்தசாரார்த்தமான கீதையைத் தனக்கு உபதேசித்தருளியதை. ஆக-
வியங்கோள்.         

என்ற போது, உவந்து, தேவவிரதன் நின்ற எல்லையில்
குன்றம் அன்ன தேர் கடாவி, அருகு அணைந்த
கொற்றவர்
ஒன்றுபட்ட சேனையோடு யாவரும் உடன்று போய்,
நின்ற சேனை நிருபன்மேல் நிரைத்து வாளி தூவவே,11.-சேனையோடு வீடுமன்வந்துநிற்க, அருச்சுனனைச் சார்ந்துநின்ற
மன்னர் அவன்மீது அம்புகளைத் தூவுதல்.

என்றபோது-என்று (அருச்சுனன்கண்ணனிடம்) சொன்ன பொழுது,-
குன்றம் அன்ன தேர் கடாவி அருகு அணைந்த கொற்றவர் யாவர்உம்-
மலையையொத்த (தம்தம்) தேரைச் செலுத்திக்கொண்டு அருச்சுனனருகில் வந்த
அரசர்களெல்லோரும், ஒன்று பட்ட சேனையோடு-தம்முடன்
கூடியசேனைகளுடனே, தேவவிரதன் வந்து நின்ற எல்லையில்-பீஷ்மன்
(போர்க்களத்தில்) வந்துநின்ற இடத்திலே, உடன்று போய்-பகைமை கொண்டு
சென்று, நின்ற சேனை நிருபன்மேல்-(எதிரில்) நின்ற சேனைத்தலைவனான
அவ்வீடுமன்மேல்,  வாளி நிரைத்து தூவ-அம்புகளை வரிசையாகச் செலுத்த,-
(எ-று.)- “பலரும் எய்தவாளி மெய்படப்பட” என அடுத்த கவியோடு தொடரும்.
யாவரும் முடன்று-விரித்தல்.

பலரும் எய்த வாளி மெய் படப் படப் பனித்து, நாப்
புலர நொந்து, கங்கை மைந்தன் இதயமும் புழுங்கினான்,-
மலருகின்ற வார் பனிக்கு உடைந்து, சால மாழ்கி, நீடு
அலரும் அந்த நிறம் அழிந்த அம்புசாதம் என்னவே.12.-அப்போது வீடுமன் தளர்ச்சியுறுதல்.

பலர்உம்-(அவ்வரசர்கள்) அநேகரும், எய்த-பிரயோகித்த, வாளி-
அம்புகள்,மெய் பட பட-(தன்) உடம்பிலே மிகுதியாகத் தைக்க, கங்கை மைந்தன்-
வீடுமன்,பனித்து-வருந்தி, நாபுலர-(அவ்வருத்த மிகுதியால்) நாக்கு உலர,
நொந்து-,-மலருகின்ற வார் பனிக்கு உடைந்து-பரவுகிற மிகுந்த பனிக்கு வருந்தி,
சால மாழ்கி-மிகுதியாக வாடி, நீடு அலரும் அந்த நிறம் அழிந்த-பெரிதாக
மலர்ந்துவிளங்குகிறதனக்குரிய நிறம் கெட்ட, அம்பு சாதம் என்ன- தாமரை
போல. (உடம்பு மெலிந்து),இதயமஉம் புழுங்கினான் – மனமுந் தவித்தான்; (எ-று.)

     எப்பொழுதும் மிக அழகிதாக விளங்குந்தன்மையதான தாமரை
பனிக்காலத்தில் வாடுதல்போல, எப்பொழுதும் பலபராக்கிரமங்களையுடைய
வீடுமன் அப்பொழுது பகைவர் எய்த அம்புகளால் மெலிந்தனனென்பதாம்.
காலவித்தியாசத்தாலாகும் தீங்கை நன்கு விளக்குவது, இவ்வுவமை.
இதயம்=ஹ்ருதயம். அம்புஜாதம் – நீரிற் பிறப்பது; வடசொல். மலருகின்ற
வார்பனி-மூடுபனி. நீடு-பகுதியே வினையெச்சப்பொருள்பட்டது. 

துன்னிமித்தமும் பல தொடர்ந்து செய்ய, வெய்ய ஆம்
அந் நிமித்தம் நல் நிமித்தம் ஆகும் என்று அகம் தெளிந்து,
உன்னி, மித்திரர்க்கு நாளும் உதவி செய்யும் உறுதியோன்,
வில் நிமித்த வாளியால், அவ் வாளிகள் விலக்கினான்.13.-வீடுமன் மன்னரெய்த அம்புகளை விலக்குதல்.

 (அச்சமயத்தில்),  துன்னிமித்தம்உம் பல – அநேக துர்நிமித்தங்களும்,
தொடர்ந்து செய்ய- தொடர்ச்சியாக உண்டாக, (அதுகண்டு), மித்திரர்க்கு நாள்உம்
உதவி செய்யும்உறுதியோன் – சினேகிதர்களுக்கு எந்நாளிலும் உபகாரஞ்செய்யும்
உறுதிக்குணத்தையுடைய வீடுமன், வெய்ய ஆம் அ நிமித்தம் நல்நிமித்தம் ஆகும்
என்று உன்னி – கொடியனவாகிய அந்தத்தீ நிமித்தங்களை
நல்லநிமித்தங்களாகுமென்று கருதி, அகம் தெளிந்து-மனம்தெளிவடைந்து, வில்
நிமித்தம் வாளியால் – வில்லைக் கருவியாகவுடைய (தான்) எய்யும் அம்புகளால்,
அ வாளிகள் விலக்கினான் – (பகைவரது) அந்த அம்புகளை விலகச்செய்தான்;
(எ-று.)

     நிமித்தம் – பின்வரும்பயனை முன்னே தெரிவிக்குங் குறி: அது –
துர்நிமித்தமென்றும், சந்நிமித்த மென்றும் இருவகைப்படும். துர்நிமித்தம் –
தீநிமித்தம்;பின்வருந்தீமையைத் தெரிவிக்குங் குறி. சந்நிமித்தம்- நல்நிமித்தம்;
பின்வரும்நன்மையைத் தெரிவிக்குங் குறி. துர்நிமித்தம் – ஆடவர்க்கு இடக்கண்
இடத்தோள் இவை துடித்தல் முதலியன. தனக்கு விரைவில் நேரும் அபாயத்தை
முன்னர்த் தெரிவிக்கிற தீநிமித்தங்களைச் சுபநிமித்தங்களாக வீடுமன் கருதியது,
உலகவாழ்க்கையில் பற்றுஅற்றதனாலும், உயர்ந்த மறுமைக்கதியை அடையும்
உவப்பினாலும், நீதி நெறிதவறாத பாண்டவர்வெற்றிபெறுதல் நியாய மென்ற
கருத்தினாலு மென்க. அம்புதொடுத்தற்கு வில் கருவி யாதலால், ‘வில் நிமித்தவாளி’
எனப்பட்டது. மித்ரன் என்னும் வடசொல்லுக்கு-அளவறிந்து காப்பவனென்று
காரணப்பொருள் உரைப்பர்.  

துருபதேயர், மகத நாடர், வெங் குலிங்கர், சோனகர்,
கருநடேசர், சிங்களர், கடார பூபர், கௌசலர்,
தருமராசன் மதலை சேனை முதுகிட, சரங்கள் போய்
ஒருவர் போல அனைவர்மேலும் உருவ, எய்து
உறுக்கினான்14.-மாற்றரசர் வென்னிட வீடுமன் எய்தல். 

தருமராசன் மதலை சேனை – தருமபுத்திரனது சேனையிலே,
துருபதேயர் – துருபதநாட்டரசர்களும், மகதநாடர்-மகததேசத்தரசர்களும், வெம்
குலிங்கர் – கொடிய குலிங்கதேசத்தரசர்களும், சோனகர் – சோனகநாட்டரசர்களும்,
கருநட ஈசர் – கர்ணாடகதேசத்தரசர்களும், சிங்களர்-சிங்களதேசத்தரசர்களும்,
கடார பூபர் – கடாரதேசத்தரசர்களும்,  கௌசலர்-கோசலதேசத்தரசர்களும், முதுகு
இட – புறங்கொடுக்கும்படி, ஒருவர் போல அனைவர் மேல்உம் சரங்கள் போய்
உருவ-ஒருத்தர்மேற் போலவே எல்லார்மேலும் அம்புகள் சென்று ஊடுருவும்படி,
எய்து-உறுக்கினான் – தொடுத்துக் கோபித்தான், (வீடுமன்); (எ-று.)

     வெய்து உறுக்கினான் எனப் பிரித்து, கடுமையாகச் சினங்கொண்டான்
எனினுமாம். துருபதேயர், கௌசலர் – தத்திதாந்த நாமம். கருநடம், சிங்களம் –
கர்ணாடம், ஸிம்ஹளம் என்னும் வட  சொற்களின் திரிபுகள். பி-ம்: மச்சநாடர்
வெங்கலிங்கர். கருநடேசர் சிஞ்சியர்.     

முடி துணிந்து பின்பு வீழ, முன் நடந்து உடற்றுவார்
அடி துணிந்து விழ, இருந்து அலங்கல் வில் வணக்குவார்,
கொடி துணிந்து, வில் துணிந்து, கோல் தொடுத்த கையுடன்
தொடி துணிந்து, சோரி வெள்ள நதியினூடு சுழலுவார்.15.-இதுவும் அடுத்த கவியும் – வீடுமனாலெய்யப்பட்ட
மன்னவ ரடைந்த நிலைமையைக் கூறும்.

தருமன்சேனைவீரர்கள் வீடுமனம்புகளால்), முடி துணிந்து பின்பு
வீழ-(தம்) தலை அறுபட்டுப் பின்னே விழுந்திட, முன் நடந்து உடற்றுவார்-
முன்னேசென்று போர்செய்பவர்களும், அடி துணிந்து விழ-(தம்)கால்கள்
அறுந்துவிழ,இருந்து-கீழிருந்து கொண்டு, அலங்கல் வில்வணக்குவார் –
போர்மாலையைச் சூடிய (தம்) வில்லை வளைப்பவர்களும், கொடி துணிந்து –
(தம்)துவசம் அறுபட்டு, வில் துணிந்து – வில் அறுபட்டு, கோல் தொடுத்த கை
தொடியுடன் துணிந்து – அம்பையெய்கிற கை தொடியென்னும் வளையோடு
துணிபட்டு, சோரி வெள்ளம் நதியினூடு சோருவார்-இரத்தப்பெருக்காகிய ஆற்றிலே
தளர்ந்துவிழுபவர்களும் ஆனார்கள்: (எ-று.)

     முன் இரண்டடிகள், தலையும் கால்களும் அறுபட்டபின்பும் முண்டங்கள்
முன்தொடர்ச்சியால் சிறிதுபொழுது தொழில்செய்தலைக் கூறி அம்முகமாக
அவர்களது வீராவேசத்தை விளக்கும். கொடிதுணிந்து வில்துணிந்து கைதுணிந்து
சோருவார்-சினைவினை முதல்கொண்டது. கையுடன் தொடிதுணிந்து – உருபு
பிரித்துக் கூட்டப்பட்டது. வில்லையுங் கோல்தொடுத்த கையையும் உடன்
கூறியதற்குஏற்ப, கொடி – கொடிபோல மெல்லிதாய் நீண்டுள்ள வில் நாணி
என்றலும்பொருந்தும்; மேல் 22 – ஆம் கவியில் ”கைவரிவிலற்று நெடுநாணி
நடுவற்றுவளர்கைத் தலமுமற்று விழவே” என்பதைக் காண்க. (பி – ம்:)
நதியினூடு சுழலுவார்.   

மருத்து எறிந்த பூழி என்ன வந்தவா மடங்குவார்;
உருத்து எறிந்த உருமின் நொந்த உரகம் என்ன உட்குவார்;
ஒருத்தர் ஓட, ‘என் இது!’ என்று, அநேகர் அஞ்சி ஓடுவார்;-
விருத்தன் வில் வளைத்த ஆண்மை விசயனுக்கும்
இசையுமோ?

(இன்னும் தருமன்சேனையார்), மருத்து எறிந்த பூழி என்ன-
காற்றினால் வீசியெறியப்பட்ட புழுதிபோல, வந்த ஆ மடங்குவார் – வந்த வழியே
திரும்புவார்கள்; உருத்து எறிந்த-உக்கிரமாய் இடித்த, உருமின் – இடியினால்,
நொந்த – வருந்திய, உரகம் என்ன – பாம்புகள்போல, உட்குவார் – அஞ்சி
ஒடுங்குவார்கள்; ஒருத்தர் ஓட – (முன்பு) ஒருவர் பயந்து ஓட, அநேகர் – (மற்றும்)
பலர், இது என் என்று – இது என்ன அபாயகாரணமென்று கருதி, அஞ்சி ஓடுவார்
– பயந்து ஓடுவார்கள்; (இங்ஙனம் ஆகும் படி), விருத்தன வில் வளைத்த ஆண்மை
– (யாவரினும்) மூத்தவனான வீடுமன் வில்லைவளைத்துப் போர்செய்த பராக்கிரமம்,
விசயனுக்குஉம் இசையும்ஓ – அருச்சுனனுக்கும் பொருந்துமோ? [பொருந்தாது];
( எ – று.)

வில்லின்திறத்தில் அனைவரினும் பேர்பெற்ற அருச்சுனனும் செய்யமுடியாத
விற்போரை வயோவிருத்தனான வீடுமன் அப்பொழுது செய்தன னென்பதாம்.
காற்றினால் மேலெழுப்பப்பட்ட புழுதிகள் மீண்டும் பூமியிலே அடங்குதல்போல,
மிகவிசையாக மேல் வந்த வீரர்கள் வீடுமனிடம் தோற்று வந்தவழியே மீண்டன
ரென்பது, முதலடியின் கருத்து. வருத்தன் – வடசொல்; கிழவன்

வெம் புய விசால வடமேரு ஒர் இரண்டு உடைய
வீடுமனை, நீடு முனைவாய்,
அம்புதம் எழுந்து பொழிகின்ற வழி ஓடிவரும் அனிலம்
என வந்து, அணுகினார்-
செம்பியனும், மா கிருபனும், செறி துரோணனொடு,
சேயொடு, செயத்திரதனும்,
தம்பியரும், மாமனும், சயிந்தரொடு, வெய்ய பகதத்தனொடு,
சல்லியனுமே.17.-சோழராசனும் கிருபன் முதலியோரும் வீடுமனுக்கு உதவியாக
வருதல்.

அப்பொழுது), நீடு முனைவாய் – பெரிய அப்போர்க்களத்திலே,
செம்பியன்உம் – சோழனும், மா – சிறந்த, கிருபன்உம் – கிருபாசாரியனும் செறி –
வலிமைமிகுந்த, துரோணனொடு-துரோணாசாரியனும் சேயொடு-அவன்மகனான
அசுவத்தாமனும், செயத்திரதன்உம் – சைந்தவனும், தம்பியர்உம்-(துரியோதனன்)
தம்பிமார்களும், மாமன்உம் – (அவர்கள்) மாமனான சகுனியும், சயிந்தரொடு 
சிந்துதேசத்தரசர்களும், வெய்ய- கொடிய, பகதத்தனொடு – பகதத்தனும்,
சல்லியனும் -, (என்னும் இவர்கள்), – அம்புதம் எழுந்து பொழிகின்ற வழி ஓடி
வரும் அணிலம்  என – மேகம் வானத்திலெழும்பி மழைபொழிகிற இடத்திலே
(அதற்கு உதவியாக) ஓடி வருகிற காற்றுபோல, வெம் புயம் விசாலம் வட மேரு
ஓர் இரண்டு உடைய வீடுமனை – வலிய தோள்களாகிய பெரியவடதிசையிலுள்ள
மேருமலைகளிரண்டையுடைய பீஷ்மனை, வந்து அணுகினார் – வந்து
சேர்ந்தார்கள்;  (எ – று.)

     மழையோடு பல திசைக்காற்றுங் சேர்ந்து உலகத்தைவருத்தத்
தொடங்கினாற்போல, வீடுமனோடு பல அரசர்கள் கூட எதிர்ச் சேனையை
அழிக்கத் தொடங்கினரென்பதாம். மேரு இரண்டு – இல்பொருளுவமை. மேரு
எவ்விடத்திலுள்ள தென்றால், நமக்கு வடக்கிலுள்ள தென வேண்டுதலின், அதனை
‘வடமேரு’ என விளங்கக் கூறினார். அம்புதம் – நீரைக்கொடுப்பது; வடசொல்.
முன்னே சயத்திரதன் என வந்ததனால், பின்னே சயிந்தர் என்றது, அவன் ஒழிந்த
சிந்துநாட்டரசர்களை : சயிந்தர் = ஸைந்தவர்.

     இதுமுதல் இருபத்தொருகவிகள் – பெரும்பாலும் முதலைந்து சீரும்
விளங்காய்ச்சீர்களும், ஆறாவது தேமாச்சீரும், ஏழாவது புளிமாச்சீரும் ஆகிய
கழிநெடிலடி நான்கு கொண்ட எழுசீராசிரிய விருத்தங்கள்.   

மனம் செய் வலி கூர் கச துரங்கம பதாதி இரதத்துடன்
வளைந்து பலரும்,
தனஞ்சய மடங்கல் எதிர் சாபமும் வளைத்து, எதிர்
சரங்களும் உகைத்து, அமர் செய்தார்;
கனம் சலதி மொண்டுகொடு எழுந்தனைய வண்ணன்,
ஒரு கார்முகம் வணக்கி, ஒரு நூறு
இனம் சரம் ஒர்ஓர் தொடையில் ஏவி, அவர் ஏவு சரம்
யாவும் எதிரே விலகினான்.18.-வீடுமனுக்குத் துணையாக வந்தவரெய்த அம்புகளை அருச்சுனன்
விலக்குதல்.

பலர்உம் – (இவ்வாறு) பலஅரசர்களும், மனம் செய்வலி கூர்-
மனத்திற்பொருந்திய வலிமை [தைரியம்] மிகுந்த, கச துரங்கம பதாதி இரதத்துடன்-
மிகுந்த யானை குதிரை காலாள் தேர் என்னும் நால்வகைச் சேனைகளுடனே,
வளைத்து – சூழ்ந்து கொண்டு, தனஞ்சய(ன்) மடங்கல்எதிர்-அருச்சுனனாகிய
சிங்கத்தி னெதிரே, சாபம்உம் வளைத்து – வில்லையும் வளைத்து, எதிர்
சரங்கள்உம் உகைத்து – அவன்மேல் அம்புகளையும் செலுத்தி, அமர்செய்தார் –
போரைச் செய்தார்கள்; (அப்பொழுது), கனம் சலதி மொண்டு கொடு எழுந்து
அனைய வண்ணன் – மேகம் கடல்நீரை முகந்துகொண்டு எழுந்தாற்போன்ற
கருநிறத்தையுடைய அருச்சுனன், ஒருகார் முகம் வணங்கி – (காண்டீவமென்னும்
தனது) ஒருவில்லை வளைத்து, ஒரு நூறு இனம் சரம் ஒர் ஓர் தொடையில் ஏவி –
ஒவ்வொரு நூறுதொகுதியான அம்புகளை ஒவ்வொருதொடுக்குந்தரத்திலும்
பிரயோகித்து-(அந்த அம்புகளால்), அவர் ஏவுசரம் யாஉம் எதிர்ஏ விலகினான் –
அப்பகைவர்கள் (தன்மேல்) ஏவிய அம்புகளையெல்லாம் எதிரிலே
விலகச்செய்தான்; (எ-று.)

     விலக்கினான் என்ற பிறவினை, சந்தவின்பத்திற்கேற்ப, தொகுத்தல் பெற்றது.
‘மனஞ்செய்வலிகூர்’ என்ற அடைமொழி இரதத்துக்குப்பொருந்தாதாதலின்,
சதுரங்கசேனையில் இரதத்தை இறுதியில் வைத்தார். சலதி-நீர் தங்குமிடம். பி-ம்:
தனஞ்சயன் மடங்கவெதிர்

தேர் உதய பானு என நின்ற விசயன்தன் எதிர் தெவ்வர்
பனி என்ன அகல,
தார் உதயம் ஆம் நிருபர் வேலை சுவற, தனது தண்டு
தனி கொண்டு குதியா,
ஓர் உதவி இன்றி முடியோடு அவர் சிரங்களும் உடைந்து,
முதுகிட்டு உடையவே,
மாருத சகாயன் என, மாருதன் என, கடவுள் மாருத
சுதன் கடுகினான்.19.-ஒருபக்கத்தில் அருச்சுனன் பகைவெல்ல,
மற்றொருசார் வீமன் தண்டு கொண்டு விரைதல்.

தேர் உதய பானு என நின்ற-தேரோடுஉதித்தலையுடைய
சூரியன்போல விளங்கிநின்ற, விசயன் தன்-அருச்சுனனது, எதிர் –
எதிரிலே, தெவ்வர்-பகைவர்கள், பனி என்ன-மூடுபனி போல, அகல-(இருந்த
இடந்தெரியாது) நீங்க,-(மற்றொருபக்கத்தில்) கடவுள் மாருத சுதன் – வாயுதேவனது
குமாரனான வீமசேனன், தார் உதயம் ஆம் நிருபர் வேலை சுவற-
முன்னணிச்சேனையிலே விளங்கித்தோன்றுதலையுடைய அரசர்களாகிய
கடல்வற்றும்படி, தனது தண்டு கொண்டு தனிகுதியா – தன்னுடைய
கதாயுதத்தை எடுத்துக் கொண்டு தனியே[ஒப்பில்லாமல் அல்லது வேறு
உதவியில்லாமல்] (தேரினின்று) குதித்து, அவர்-அப்பகைவர்கள், ஓர்உதவி
இன்றி-(தம்மைக்காத்தற்குத்) துணைவருபவர் ஒருவரும்இல்லாமல், முடியோடு
சிரங்கள்உம் உடைந்து – கீரிடங்களோடு தலைகளும்உடைபட்டு, முதுகுஇட்டு-
புறங்கொடுத்து, உடைய-அழியும்படி, மாருத சகாயன்என-காற்றைத்
துணைவனாகவுடைய அக்கினி போலவும், மாருதன் என -காற்றுப்போலவும்,
கடுகினான்-விரைந்து வந்தான்; (எ-று.)

     அக்கினியை உவமைகூறுதற்கேற்பக் கடல்வற்றுதலும், வாயுவை உவமை
கூறுதற்கேற்பக் கடுகிவருதலுங் கூறினார். மேல் 21-ஆம் கவியில் ‘முந்துபடைவீரர்’
என வருதலை நோக்கி, தார் என்பதற்கு – முற்சேனையென்று
பொருளுரைக்கப்பட்டது. இனி, தார் உதயம் மா எனப் பிரித்து, போர்மாலையோடு
எதிரிலே தோன்றுதலையுடையசிறந்த நிருப ரெனினுமாம். மாருதசகாயன்- பஹு
வ்ரீஹிஸமாஸம்பெற்ற வடசொல்தொடர். மாருதசுதன் ஓருதவியின்றிக்
கடுகினான்என்று இயைத்து உரைப்பினுமாம்.

ஏறி வரு தேருடன் எடுத்து எறிதரும், சிலரை; இரு
பணைகள் பற்றி, இறுகச்
சீறி வரும் யானையொடு எடுத்து எறிதரும், சிலரை;
ஐந்து கதியும் சிவணவே
மாறி வரு வாசியொடு எடுத்து எறிதரும், சிலரை;-
வஞ்சினமும் வெஞ் சினமுடன்
கூறி வரும் வாள் அரசர் ஏறி அணி நின்ற ரத குஞ்சர
துரங்கம் விழவே.20.-வீமனுடைய வீரச்செயல். 

(வீமன்), வெம் சினமுடன் – கடுங்கோபத்தோடு, வஞ்சினம்உம் கூறி
வரும்-வீரவாதங்களையுஞ் சொல்லிவருகிற, வாள் அரசர் – கொடியபகையரசர்கள்,
ஏறி-,அணி நின்ற-ஒழுங்காக நின்ற, ரதகுஞ்சர துரங்கம்-தேர் யானை குதிரைகள்,
விழ-கீழ் விழும்படி, ஏறிவருதேருடன் எடுத்துசிலரை எறி தரும்-ஏறிவருகிற
தேரோடு கையால்தூக்கிச் சில அரசரை எறிவான்; இரு பணைகள் இறுக பற்றி-
இரண்டுதந்தங்களையும் (தன்கைகளால்) உறுதியாகப்பிடித்து, சீறி வரும்
யானையொடு எடுத்து சிலரை எறிதரும்-கோபித்துவருகிற யானையோடு
தூக்கிச்
சில அரசரை
எறிவான்; ஐந்து கதிஉம் சிவண – ஐவகை நடைகளும்பொருந்த,
மாறிவரு-எதிர்ப்பட்டுவருகிற, வாசியொடு-குதிரையுடனே, எடுத்து-தூக்கி, சிலரை
எறிதரும்-சிலஅரசரை எறிவான்; (எ-று.)

     இனி, ‘வஞ்சினமும்……..விழ’ என்பதை அடுத்தகவியில் ‘நொந்து’என்பதோடு
இயைப்பினும் அமையும். வஞ்சினம்-சபதம். ஐந்துகதி-நான்காம் போர்ச்சருக்கம்,
30-ஆம் பாடலினுரையிற் காண்க.  

முந்து படை வீரர் மிக நொந்து கதை வீமன் எதிர்
முதுகிடுதல் கண்டு, முனியா,
ஐந்து உறழும் நூறுபடி ஆயிரவர், வின்மையில்
அருச்சுனனை ஒத்த அடலோர்,
உந்து உரக கேதனன் உரைப்ப, முகில் ஏழும் உடன்
ஊழி இறுதிப் பொழிவபோல்,
வந்து, வடி வாளி மழை சிந்தினர், பராக்கிரம வாசி,
இபம், மா இரதரே.1.-தன்சேனை வீமனுக்குப் புறங்கொடுத்தது கண்ட
துரியோதனன்கட்டளையால் ஐந்துலட்சம்வீரர் வீமனை யெதிர்த்தல்.

 முந்து படை வீரர்-(போருக்கு)முற்பட்டுவந்த சேனை வீரர்கள், கதை
வீமன் எதிர்-(சந்துருகாதிநியென்னுங்) கதாயுதத்தையுடைய வீமசேனனது எதிரிலே,
மிக நொந்து-மிகுதியாக வருந்தி, முதுகு இடுதல்-புறங்கொடுத்தலை, கண்டு –
பார்த்து, உந்து உரக கேதனன்-உயர்ந்தபாம்புக்கொடியையுடைய துரியோதனன்,
முனியா – கோபங்கொண்டு, உரைப்ப – (அவ்வீம அருச்சுனரை எதிர்க்கும்படி
கட்டளை) கூற,-ஐந்து உறழும் நூறு படி ஆயிரவர்-ஐந்தினாற்பெருக்கப்பட்ட
நூறென்னும் அளவையுடைய
ஆயிரமென்னுந்தொகையுடையவர்களும்
[ஐந்துலக்ஷம்பேரும்], வின்மையில் அருச்சுனனை ஒத்த அடலோர் – விற்போர்
வல்லமையில் அருச்சுனனைப்போன்ற
வலிமையையுடையவர்களுமாகிய,
பராக்கிரமம் வாசி இபம் மா இரதர்-பகைவெல்லும்ஆற்றலையுடையகுதிரை யானை
பெருந்தேர் என்பவற்றில் ஏறிய வீரர்கள்,-முகில் ஏழ்உம்-ஏழுமேகங்களும், உடன்-
ஒருசேர, ஊழி இறுதி-கால்பாந்தகாலத்தில் பொழிவ போல் – (வந்து) மழை
பொழிவனபோல, வந்து-(திரண்டு எதிர்த்து) வந்து, வடி வாளி மழை சிந்தினர் –
கூர்மையான அம்பின்மழையைப் பொழிந்தார்கள்; (எ-று.)

     பராக்கிரமம்-பர ஆக்கிரமம் எனப் பிரியும்; பரர்-பகைவர், (அவர்களை)
ஆக்கிரமித்தல்-வென்றுவசப்படுத்தல்; இது-வீரர்க்கு அடைமொழி. உறழ்தல்-
பெருக்கல். உந்துதல்-உயர்தல், ஏறுதல். ஊழி-பிரமனாயுள்; அல்லது, பிரமனது
தினம். பிரமனதுநாள் ஒவ்வொன்றன் பகலிறுதியிலும் பிராமனாயுளிறுதியிலும்,
ஏழுமேகங்களும் விரைந்து ஒருங்கு எழுந்து அளவிறந்த மழைபொழிந்து
உலகங்களை யழிக்கு மென்பது நூற்கொள்கை. பொழிவ=பொழிவது: விவகாரம்.

வெவ் வனம் எரிக்கடவுள் உண்டிட வணக்கும் ஒரு வில்லியும்,
அவ் வில்லொடு எதிர் போய்,
அவ் அவர் தொடுத்து விடும் அம்புகள் எனைப் பலவும் அவ்
அவை தொடுத்து விலகி,
கை வரி வில் அற்று, நெடு நாணின் நடு அற்று, வளர்
கைத்தலமும் அற்று விழவே,
வை வரி வடிக் கணைகள் ஏவினன், மணித் திகிரி வலவன்
விடு தேரில் வருவோன்.22.-அருச்சுனன் சென்று எதிரிகள் பொழியும் அம்புமழையை
விலக்குதல்.

மணி – அழகிய, திகிரி – சக்கராயுதத்தையுடைய, வலவன்-பாகனாகிய
கண்ணபிரான், விடு – விசையாகச் செலுத்துகிற, தேரில்-இரதத்திலே, வருவோன் –
வருபவனும், வெம்வனம்-கொடியகாண்டவவனத்தை, எரி கடவுள் உண்டிட –
அக்கினிதேவன் புசிக்க, வணக்கும் – (தான்) வளைத்த, ஒரு வில்லிஉம்-
ஒப்பற்றவில்லையுடையவனுமான அருச்சுனனனும், அ வில்லொடு-
(காண்டீவமென்னும்) அந்த வில்லுடனே, எதிர்போய்-எதிரிற்சென்று, அ அவர்
தொடுத்து விடும் அம்புகள் எனை பலஉம்-அந்தந்தப் பகைவீரர்கள் (வில்லில்)
தொடுத்து விடுகிற அம்புகள் எல்லாவற்றையும், அ வகை தொடுத்து-அவர்கள்
தொடுக்கும் வகையாகவே எதிரம்பு தொடுத்து, விலகி-விலக்கி, (அவர்கள்), கை
வரி வில் நடு அற்று – கையிற்பிடித்த கட்டமைந்த விற்கள் நடுவில் துணிபட்டு,
நாணின் நடு அற்று – வில்நாணியின் நடுவிடமும் துணிபட்டு, வளர் கை தலம்உம்
அற்று – வளர்ந்துள்ள கைகளினிடங்களும் துணிபட்டு, விழ – கீழ்விழும்படி, வை
வரி வடி கணைகள் – கூர்மையான நீண்ட வடிக்கப்படுதலையையுடைய அம்புகளை,
ஏவினன் – (அவர்கள்மேல்) செலுத்தினான்; (எ-று.)

     அருச்சுனன்  பகைவரெய்த அம்புமழையை விலக்கி மற்றும் பல
பாணங்களைச் செலுத்தி அவர்களது வில்லையும் வில்நாணியையும் கைகளையும்
அறுத்துத்தள்ளின னென்பதாம். மிகப் பசித்து அந்தணவடிவத்தோடுவந்த அக்கினி
பகவானுக்கு அருச்சுனன் காண்டவவனத்தை அதிலுள்ளசராசரங்களுடனே
விருந்தளித்தபொழுது, அந்த அக்கினியினிடத்தினின்று காண்டீவமென்னும்
வில்லைப் பெற்று, அதினின்று தொடுத்த அம்புகளால், அப்பூஞ்சோலையிலுள்ள
பிராணிகள் தப்பி வெளியிற்செல்லாதபடி அவற்றையெல்லாம் கொன்று தள்ளியும்,
அவ்வனத்துக்குஉரிய இந்திரனால் ஏவப்பட்டுவந்து ஏழுமேகங்களும் பொழிந்த
அடைமழையைச் சரக்கூடுகட்டித்தடுத்தும் பின்னும் தேவேந்திரன்
பெருங்கோபங்கொண்டு தேவர்களுடன்வந்து எதிர்க்க அவர்களை விற்போரில்
வென்றும் அருச்சுனன் திறங்காட்டின னென்பது, கீழ்க் காண்டவதகனச்சருக்கத்து
வரலாறாம். விலகி-விகாரம். 

தருமன் முதல் ஐவரையும் வென்றிடுதும்!’ என்று,
துச்சாதனனொடு ஐவர் இளையோர்
பொரு முனையின் வீடுமன் முன் நின்றவர்கள் அல்லது,
புகன்ற நரபாலர் எவரும்
பரும மத மா புரவி தேர்கொடு பறந்தனர், படாதவர்-
கெடாத கதையும்,
செரு முனை சராசனமும், உடைய இருவோரும் நனி சீறி,
அமர் செய்த பொழுதே,23.-வீமார்ச்சுனர்பொர, யாவரும் பறந்துபோதல்.

கெடாத – அழியாத, கதைஉம் – (சத்துருகாதினியென்னும்)
கதாயுதத்தையும், செரு முனை – போரை உக்கிரமாகச் செய்கின்ற, சராசனம் உம் –
காண்டீவவில்லையும், உடைய-,இருவோர்உம் – (வீம அருச்சுனர்) இரண்டுபேரும்,
நனி சீறி – மிகக்கோபித்து, அமர் செய்த பொழுது – போர் செய்த அச்சமயத்தில்,-
தருமன் முதல் ஐவரைஉம் வென்றிடுதும் என்று – தருமபுத்திரன் முதலிய
பஞ்சபாண்டவரையும் சயித்திடுவோமென்று (வீரவாதங்) கூறி, பொரு முனையின் –
போர்செய்யுமிடத்திலே, வீடுமன் முன் – பீஷ்மனுக்குமுன்னே, துச்சாதனனொடு
நின்றவர்கள் – துச்சாதனனுடன் வந்து நின்றவர்களாகிய, ஐவர் இளையோர்
அல்லது – அவன் தம்பிமார் ஐந்து பேர்மாத்திரமேயல்லாமல், புகன்ற நரபாலர்
எவர்உம்-(மற்றும் வீரவாதம்) கூறிய அரசர்களெல்லோரும், படாதவர் –
இறவாதவர்களாய், பருமம் மதம் மா புரவி தேர்கொடு – அலங்காரத்தையுடைய
மதயானைகளும் குதிரைகளும் தேர்களு மாகிய (தங்கள்) வாகனங்களைக்
கொண்டு, பறந்தனர் – (அஞ்சி) ஓடினார்கள்; (எ-று.)-யாவரும் பயந்து ஓடிப்
பிழைத்தனரென்பதாம். புகன்ற-சிறப்பித்துக்கூறப்பட்ட எனினுமாம். பருவம் –
பருமையுமாம்.

விண்ணவரில் உற்று எழுவர் கண்டு களி கூர, விறல்
வீடுமன் விருப்பினுடனே,
கண் இணை நெருப்பு எழ உடன்று, ‘இனி நமக்கும் இது
காலம்!’ என, மாலை புனையும்
வண்ண வரி வில் தலை வணக்கி,விதமான பல வாளிகள்
தெரிந்து, தருமற்கு
எண்ணும் இரதத் தலைவர் அனைவரையும் விட்டிலன்,
இமைப்பொழுதின் எய்தனன் அரோ.24.-வீடுமன் தருமபுத்திரனுக்குத் துணையானதேர்வீரர்களைக்
கடுமையாக எதிர்த்தல்.

(அப்பொழுது), விறல் வீடுமன் – பராக்கிரமத்தையுடைய பீஷ்மன்,
விண்ணவரில் எழுவர் உற்று கண்டு களி கூர (-) (போர்காணும்) தேவர்களில்
ஏழுவசுக்கள்
(அவர்களினத்தவனான – தனது போர்த்திறத்தைக்)
கவனித்துப்பார்த்துக் களிப்புமிகும்படி, விருப்பினுடன்-போர் விருப்பத்தோடு, கண்
இணை நெருப்பு எழ உடன்று – இரண்டுகண்களிலும் தீப்பொறி கிளம்பப்
பெருங்கோபங்கொண்டு, இனி நமக்குஉம் இது காலம் என – இனிமேல் நமக்கும்
(போர்முடித்தற்குக்) காலம் இதுவே யென்றுகருதி,மாலை புனையும் வண்ணம் வரி
வில் தலை வணக்கி – போர்மாலையைத்தரித்த அழகியகட்டமைந்த
வில்லின்கோடியை வளைத்து, விதம் ஆன பல வாளிகள் தெரிந்து –
பலவகைப்பட்ட அநேக அம்புகளை ஆராய்ந்து எடுத்து, தருமற்கு எண்ணும்
இரதம்தலைவர் அனைவரைஉம்-தருமபுத்திரனுக்கு (த் துணைவராக) மதிக்கப்பட்ட
தேர் வீரர்களெல்லாரையும், விட்டிலன் – (ஒருவரையும்) விடாதவனாய், இமை
பொழுதின் எய்தனன் – ஒருகணப்பொழுதிலே அம்பு செலுத்தி யெதிர்த்தான்; (எ-
று.) -அரோ – ஈற்றசை,

     அஷ்டவசுக்களுள் பிரபாசன் வீடுமனாதலால், அவனொழிந்தோரை ‘எழுவர்’
என்றது. தனக்கு அழிவுகாலம் அருகிலிருத்தலால், அதற்குமுன் தனது போர்த்திறம்
முழுவதையும் காட்டக்கருதின னென்பார், ‘இனி நமக்கும் இதுகாலமென’  என்றார்.

எத்தனை முடித் தலைகள், எத்தனை புயக் கிரிகள், எத்தனை
கரக் கமலம், வேறு
எத்தனை உடற் சுமைகள், எத்தனை உறுப்பின் நிணம்,
எத்தனை கொடிக் குடர்களோடு
எத்தனை நிணத் தடிகள், எத்தனை நரப்பு வகை, எத்தனை
எலுப்பு நிரை, மேல்
எத்தனை மணித் தொடைகள், எத்தனை மலர்க் கழல்கள்,-
இற்றன களத்தினிடையே!25.-மூன்றுகவிகள்-வீடுமன்செய்த கடும்போரினால் அரசர்கள்
அங்கமற்று இறந்தமை கூறும்.

(அவ்வாறு வீடுமன் உக்கிரமாகப் போர்செய்த பொழுது), களத்தின்
இடை-போர்க்களத்திலே, இற்றன – துணிபட்டனவான, முடி தலைகள்-
கிரீடத்தையுடைய தலைகள், எதனை-எவ்வளவு! புயம் கிரிகள்-மலைபோலுந்
தோள்கள், எத்தனை-! கரம் கமலம்-தாமரைமலர்போலும் கைகள், எத்தனை-!
வேறு- இன்னும் உடல் சுமைகள்-பருத்த உடம்புகள், எத்தனை-!உறுப்பின்
நிணம் – உடம்பிலுள்ளகொழுப்புகள், எத்தனை-! கொடி குடர்கள்உம்-
கொடிபோலச்சுற்றிய குடல்களும், எத்தனை-! நிணம் தடிகள்-கொழுத்துள்ள
தசைத்திரள்கள், எத்தனை-! நரம்புவகை-நரம்புகளின்வகைகள், எத்தனை-! எலும்பு
நிரை-எலும்புகளின் வரிசைகள், எத்தனை-! மேல் இன்னும், மணிதொடைகள்-
அழகியதுடையென்னும் உறுப்புகள், எத்தனை-! மலர் கழல்கள்-தாமரைமலர்போன்ற
கால்கள், எத்தனை-! (எ-று.)

       மிகப்பல வீரர்கள் தலைமுதலியன சின்னபின்னப்பட்டு அழிந்தன
ரென்பதாம்.தொடையெனினும், துடையெனினும் ஒக்கும். நரம்புவகை, எலுப்பு
நிரை-மென்றொடர் வன்றொடராயின. பி. ம்: குடல்களோடு. 

விரிந்தன, உரங்களும்; வெகுண்டன, மனங்களும்;
விழுந்தன, பசுங் குருதிநீர்;
நெரிந்தன, எலும்புகள்; அழிந்தன, கொழுந் தசை;
நிமிர்ந்தன, நரம்பின் விசியும்;
சரிந்தன, பெருங் குடர்; துணிந்தன, சிரம்; கடை
தவழ்ந்தன, நெடும் புருவமும்;
எரிந்தன, முகங்களும்; எழுந்தன சிரங்களும்; இறந்தனர்,
கடுங் கண் இளையோர்.

(மற்றும் வலவீரர்களது), உரங்கள்உம்-மார்புகளும், விரிந்தன-
பிளந்தன; மனங்களும்-, வெகுண்டன – கோபங்கொண்டன; பசு குருதி நீர்-புதிய
இரத்தப்பெருக்குகள், விழுந்தன-கீழ்ப்பாய்ந்தன; எலும்புகள்-, நெரிந்தன-
நொருங்கின; கொழு தசை-கொழுத்த சதைகள், அழிந்தன-; நரம்பின் விசிஉம்-
நரம்புகளின் கட்டுக்களும், நிமிர்ந்தன – நெக்கு விட்டன; பெரு குடர் – பெரிய
குடல்கள், சரிந்தன-; சிரம்-தலைகள், துணிந்தன – அறுபட்டன; நெடு புருவம்உம்-
நீண்ட புருவங்களும், கடை தவழ்ந்தன – நுனி நெறித்தன; முகங்களும்-, எரிந்தன-
தீந்துபோயின; சிரங்கள்உம்- தலைகளும், எழுந்தன-(உடலினின்று துணிபட்டு)
மேலெழுந்தன; (இவ்வாறு போரில் வீடுமனம்புகளால்), கடுங் கண் இளையோர்-
பயங்கரமான கண்களையுடைய வீரர்கள், இறந்தனர்-; (எ-று.)

   வெகுண்டனமனங்களும், கடைதவழ்ந்தனநெடும்புருவமும் என்ற இரண்டும்-
அவர்கள்கொண்ட கோபத்தையும், மற்றவை அவர்கள் பலவகையாக அழிந்ததையும்
விளக்கும். எரிந்தனமுகங்களும் என்பதற்கு-முகங்கள் கோபாக்கினியாற் கொதித்தன
எனினும் அமையும். கடுங்கண் என்றது, கோபக்கண்களை; இனி, கடுமையான
தன்மையுமாம். பி-ம்: முகங்களுமிடிந்தனமனங்களும். 

சோமகரில், மச்சரில், தென்னரில், துளுவரில், துருபதேயரில்,
வளவரில்,
தே மருவு அலங்கல் குலிங்கரில், சேரரில், சிஞ்சியரில்,
வெஞ் சமர் விடா
மா மகுடவர்த்தனரில், மண்டலிகரில், பட்டவர்த்தனரில்,
மற்று இவ் உரவோன்
ஏ மரு கணைக்கு இலக்கு ஆகாத மன்னவர்கள் எம்
மன்னர் என்று மொழிவாம்?

சோமகரில் – சோமககுலத்தவரிலும், மச்சரில்-மத்ஸ்ய தேசத்தவரிலும்,
தென்னரில் – பாண்டியநாட்டவரிலும், துளுவரில்-துளுவதேசத்தவரிலும்,
துருபதேயரில்-துருபதேசத்தவரிலும், வளவரில்-சோழநாட்டவரிலும், தேன் மருவு
அலங்கல்- தேன்பொருந்தின போர்மாலையையுடைய, குலிங்கரில் – குலிங்க
தேசத்தவரிலும், சேரரில்-சேரநாட்டவரிலும், சிஞ்சியரில் – சிஞ்சி நாட்டவரிலும்,
வெம் சமர் விடா- கொடிய போரை நீங்காத, மா மகுடவர்த்தனரில் –
பெரியமகுடவர்த்தனர்களிலும், மண்டலிகரில்-மண்டலீகர்களிலும், பட்டவர்த்தனரில்
பட்டவர்த்தனர்களிலும், இ உரவோன் ஏமருகணைக்கு இலக்கு ஆகாத
மன்னவர்கள்-(வீடுமனாகிய) இவ்வீரன் மிகுந்தகளிப்போடுஎய்த அம்புகளுக்குக்
குறியாகாமல் தப்பின அரசர்கள், எ மன்னர் என்று மொழிவாம்-எந்த அரசரென்று
(யாம்)  கூறுவோம்? (எ-று.)-மற்று- அசை.

எனவே, ஒருவரும் தவறாமல் எல்லாரும் வீடுமனம்புக்கு
இலக்காயினரென்பதாம். ஏமருதல்-மிகுகளிப்புறுதல்; ஏமா என்னும் பகுதி
விகாரப்பட்டு வினைத்தொகையில்வந்தது. இனி, ஏமரு-(காண்பவர்) திகைத்தற்குக்
காரணமான என்றுங் கொள்ளலாம்: ஏ மரு-எய்யுந்தொழில் மருவுகின்ற என்றலும்
ஒன்று. பின்னே துருபதேயர் என வருதலால், முன்னே சோமகர் என்றது –
அக்குலத்தவருள் துருபததேசத்தவரொழிந்தவரையே குறிக்கும்; இனி, துருபதேயர்
என்பதை-த்ரௌபதேயர் என்பதன் விகாரமாகக்கொண்டு, திரௌபதீபுத்திரரான
உபபாண்டவர் ஐவரென உரைத்தல், முன்னும் பின்னும்வந்த நாட்டவரினத்தோடு
பொருந்தாதாம். கீழ் இச்சருக்கத்தின் பதினான்காங் கவியையுங் காண்க. முன்வந்த
பல நாடுகளின் சேர்த்தியால், சிஞ்சியென்பது – ஒருநாடென்று கொள்ளப்பட்டது.
தென்னர்-தென்னாட்டவர்.

     இது-கீழ்க்கூறிய விருத்தவகையில் சிறிது ஓசைவேறுபட்டது.

வெம் புய விசால வடமேரு ஒர் இரண்டு உடைய
வீடுமனை, நீடு முனைவாய்,
அம்புதம் எழுந்து பொழிகின்ற வழி ஓடிவரும் அனிலம்
என வந்து, அணுகினார்-
செம்பியனும், மா கிருபனும், செறி துரோணனொடு,
சேயொடு, செயத்திரதனும்,
தம்பியரும், மாமனும், சயிந்தரொடு, வெய்ய பகதத்தனொடு,
சல்லியனுமே28.-அதுகண்டு ஸ்ரீக்ருஷ்ணன் சொல்ல, அருச்சுனன்
வீடுமனுடன் பொர வில்வளைத்தல்.

(இவ்வாறு), நீடு கங்கைமைந்தன்-பெரிய வீடுமன், மேல் எழுந்து –
மேன்மேற் கிளர்ந்துவந்து, தம் படையை அடு –  தம்பக்கத்துச்
சேனையைஅழிக்கிற, மேன்மை-சிறப்பை, கண்டு-, மன்றல் கமழ் கார் முகுந்தன் –
(திருமேனியில்) திவ்வியபரிமளம் வீசப்பெற்ற கருநிறமுடைய கண்ணபிரான், இரங்கி
– மனமிரங்கி, வெகுளா – கோபங்கொண்டு,-ஞாலம் உண்ட செம் பவளம் வாய்
மலர்ந்து – (பிரளயகாலத்தில்) உலகங்களை அமுதுசெய்கிற சிவந்த
பவழம்போன்ற(தன்) திருவாய்மலரைத் திறந்து,இவனைகொண்டு நாம் முரண்
தொடங்க இதுஏ காலம் என்று – இச்சிகண்டியை எதிர்கொண்டு நாம் போரைத்
தொடங்குதற்கு இதுவே சமயமென்று சொல்லி, வெம் புரவி கால் கொள் சந்தனம்
கடவ – வேகமானகுதிரைகளையும் சக்கரங்களையும் கொண்ட தேரை
(வீடுமனெதிரில்) செலுத்த,- தனஞ்சயன்உம்-அருச்சுனனும்,  கோலம் வெம் சரங்கள்
அடைவுஏ தெரிந்து கொண்டு-அழகியகொடிய அம்புகளை முறையே
ஆராய்ந்தெடுத்தது, சிலை கோலினன்-(போர் செய்ய) வில்வளைத்தான் (எ-று.)

பிரளயகாலத்தில் திருமால் உலகங்களைத் திருவயிற்றில் வைத்துக் கொண்டு
பாதுகாக்கின்றமைபற்றி. ‘ஞாலமுண்டவாய்’ என்றார். சந்தனம்=ஸ்யந்தநம்.
இவனைக்கொண்டு – கதையை உட்கொண்டுவந்த சுட்டு.

     இதுமுதற் பத்துக்கவிகள் – இச்சருக்கத்து 17-ஆம் கவி போன்ற
விருத்தவகையிற் சேர்ந்தனவேயாகும்.   

ஓதம் வந்து எழுந்தது என, மேகம் நின்று அதிர்ந்தது என,
ஊழியும் பெயர்ந்தது எனவே,
மாதிரங்களும் செவிடுபோய், அகண்டமும் பொதுளி,
வாய் பிளந்தது அண்ட முகடும்-
சீதரன், செழுந் துளப மாதவன், தயங்கு அருண சீத
பங்கயம் கொள் திருவின்
நாதன், வெஞ் சமம் கருதி, ஊதுகின்ற சங்கின் முழு நாதம்
வந்து எழுந்த பொழுதே.29.-ஸ்ரீக்ருஷ்ணணுடைய பாஞ்சசன்னியமுழக்கம்.

சீதரன் – ஸ்ரீதரனென்னும் ஒருதிருநாமமுடையவனும், செழு
துளபம்- சிறந்த திருத்துழாய்மாலையையணிந்த, மாதவன்-மாதவனென்னும்
ஒருதிருநாமமுடையவனும், தயங்கு – விளங்குகிற, அருணம்-செந்நிறமுடைய, சீதம்-
குளிர்ந்த, பங்கயம்-தாமரைமலரை, கொள்-(இடமாகக்) கொண்ட திருவின்-
இலக்குமியினது, நாதன் – கணவனும் ஆகிய கண்ணபிரான், வெம் சமம் கருதி –
கொடியபோரை உத்தேசித்து, ஊதுகின்ற-(அப்பொழுது தன் திருவாய்மலரில்வைத்து)
ஊதின, சங்கின்-(பாஞ்சசன்னிய மென்னுந் திவ்விய) சங்கத்தினது, முழு நாதம் –
போரொலிமுழுவதும், வந்து எழுந்த பொழுது – வெளிப்பட்டு மிகுந்தபொழுது,
ஓதம் வந்து எழுந்தது என – கடல்கள் பொங்கிவந்ததென்று சொல்லவும், மேகம்
நின்று அதிர்ந்தது என – மேகங்கள் நிலை பெற்று இடிமுழங்கிற்று என்று
சொல்லவும், ஊழிஉம்பெயர்ந்தது என-கல்பகாலம் மாறிற் றென்று சொல்லவும்,
மாதிரங்கள்உம் செவிடு போய் – எல்லாத்திசையிலுள்ளவர்களும் செவிடுபட்டு,
அகண்டம்உம் பொதுளி-எல்லாவுலகங்களும் தாக்கி, அண்டம் முகடுஉம் வாய்
பிளந்தது-அண்டகோளத்தின் மேல்முகடும் (அதிர்ச்சியால்) வெடித்தது; (எ-று.) 

     மாதிரம் – ஆகுபெயர். ஸ்ரீதரன்-திருமகளைத் திருமார்பில் தரிப்பவன்:
மாதவன்-திருமகள்கணவன். பின்னே ‘திருவின் நாதன்’ என வந்ததனால், மாதவன்
என்னும் பெயர் – இடுகுறி மாத்திரமாய் நின்றது; இனி, (வாமனாவதாரத்தில்)
பெருந்தவமுடையா னெனினுமாம். அருணசீதபங்பஜம் – வடமொழித்தொடர்

தூரியம் கறங்க, நரபாலர் சங்கு இனங்கள் அணிதோறும்
நின்று நின்று குமுற,
தேர்களும் துரங்கமொடு வேழமும், கலந்து வருசேனை
மண்டலங்களுடனே,
பேர் பெறும் சிகண்டி தலையாக முன்பு கொண்டு, ‘உலகு
பேரும் அன்றும் இன்றுகொல்?` என,
போர் தொடங்கி, வென்றி புனை வீடுமன் தடங் கண்
எதிர் போயினன், தனஞ்சயனுமே.30.-அருச்சுனன் சிகண்டியை முன்னிட்டுக்கொண்டு போர் தொடங்கி
வீடுமனெதிரிற் போதல்.

தூரியம் கறங்க – வாத்தியங்கள் முழங்கவும், நரபாலர் சங்கு
இனங்கள் – அரசர்களது சங்கங்களின் கூட்டங்கள், அணி தோறுஉம்-
அப்படைவகுப்பினிடந்தோறும், நின்று நின்று குமுற – மிகுதியாகப் பொருந்தி
ஆரவாரிக்கவும், தேர்கள்உம் துரங்கமொடு  வேழம்உம் கலந்து வரு சேனை
மண்டலங்களுடனே – இரதங்களும் குதிரைகளும் யானைகளும் கூடிவருகிற
சேனைக்கூட்டங்களுடனே, தனஞ்சயன்உம் – அருச்சுனனும், பேர்பெறும் சிகண்டி
தலை ஆக முன்பு கொண்டு – பிரசித்திபெற்ற சிகிண்டியைத் தலைமையாக
முன்னேநிறுத்தி, உலகு பேரும் அன்றுஉம் இன்றுகொல் என – ‘உலகங்கள்
அழியும் அந்த உகாந்தகாலமும் இன்றைக்கோ?’ என்று (யாவரும்) அஞ்சும்படி,
போர் தொடங்கி – யுத்தத்தைச் செய்யத்தொடங்கி, வென்றி புனை வீடுமன் தட
கண் எதிர்போயினன் – சயத்தைக்கொண்ட பீஷ்மனது பெரிய கண்களி னெதிரிற்
சென்றான்; (எ-று.)-பேர்பெறும் – வீடுமனைக் கொல்லப் பிறந்தவனென்று
புகழ்பெற்ற என்க.

காதி வெங் கொடும் பகழி ஏவு திண் சிகண்டி தலை
காணலும், குனிந்து நகையா,
‘ஆதி அம்பை இன்று பகை மீள வந்தது!’ என்று, தனது
ஆயுதம் துறந்து, விரை தேர்-
மீது கங்கை மைந்தன் ஒருதான் வெறுங் கை நின்றளவில்,
மேல் நடந்து சென்று பொரு துச்-
சாதனன் சரங்கள் பல தூவினன், பரிந்து, எதிரி
சாபமும் துணிந்து விழவே.31.-சிகண்டியைக்கண்டதும் ஆயுதத்தைப்போகட்டு வீடுமன் நிற்க,
எதிரிசாபம்முதலியன துணியும்படி துச்சாதனன் அம்புதூவுதல்.

காதி-எதிர்த்து, வெம் கொடு பகழிஏவு திண்சிகண்டி-மிகக்கொடிய
அம்புகளைச் செலுத்துகிற வலிமையையுடைய சிகண்டியினது, தலை-முகத்தை,
காணலும்-பார்த்தமாத்திரத்திலே,-கங்கை மைந்தன்-வீடுமன்,-குனிந்து-(இயற்கையில்
ஆண்மையில்லாத அவனோடு போர் செய்ய நாணித்) தலைகுணிந்து, நகையா-
சிரித்து, ‘ஆதி அம்பை பகை-முன்பு அம்பையினாலாகிய பகைமை, இன்று மூள
வந்தது-இப்பொழுது பலிக்கவந்தது’, என்று – என்று எண்ணி, தனது ஆயுதம்
துறந்து-தன்னுடைய ஆயுதங்களைக் கீழேபோகட்டு, விரை தேர் மீது-
துரிதமாகச்செல்லும் (தனது) தேரின்மேல், ஒரு தான்-தான் தனியாய், வெறு கை
நின்ற அளவில்-வெறுங்கையோடு நின்றபொழுதில்,-பொரு துச்சாசனன்-போர்
செய்யவல்ல துச்சாதனன், பரிந்து-(வீடுமனுக்காகப்) பரிவு கொண்டு, மேல் நடந்து
சென்று – அச்சிகண்டியின்மேல் எதிர்த்துப்போய், எதிரி சாபம்உம் துணிந்து விழ-
அப்பகைவனது வில்லும் அறுபட்டுவிழ, பல சரங்கள் தூவினன் –
அநேகபாணங்களைப் பிரயோகித்தான்; (எ-று.)

சாபமும் என்ற எச்சவும்மையால், அவனது இதயமும்தேரும் பிளத்தல்
விளங்கும்; அடுத்த கவியிலுங் காண்க. சிகண்டி தலை காணலும்-சிகண்டியை
எதிரிற் கண்டவுடனே என்றுமாம். ஒரு தான்-ஒப்பில்லாத தான் என்றுமாம்.
எதிரி-எதிர்ப்பவன். (பி-ம்:) பகழிமோது. மீளவந்தது.

சாக நின்றிலன் துருபதேயன், நெஞ்சம் இன்றி, வரி சாபம்
இன்றி, வண் கொடி கொள் தேர்
வாகம் இன்றி, வந்த வழி மீள, நின்ற சந்தனு குமாரனும்
சரங்கள் விடவே,
யூகமும் பிளந்து, சுரராசன் மைந்தன் முந்து இரதம் ஊருகின்ற
செங் கண் நெடுமால்,
மேகமும் கருங் கடலும் நீலமும் கலந்த, திரு மேனியும்
சிவந்தது அறவே.32.-சிகண்டி வந்தவழி மீள,
வீடுமன் ஸ்ரீக்ருஷ்ணனது திருமேனியும் புண்படச் சரம்விடுதல்.

(அப்பொழுது) துருபதேயன்-துருபதராச குமாரனானசிகண்டி,
நெஞ்சம் இன்றி-மனமழிந்து, வரி சாபம் இன்றி-கட்டமைந்த வில் இல்லாமல், வண்
கொடி கொள் தேர் வாகம் இன்றி-அழகியகொடியைக்கொண்ட தேராகிய வாகன
மில்லாமல், சாகநின்றிலன்-இறக்க நிற்காதவனாய், வந்த வழி மீள-வந்தவழியே
திரும்பிச்செல்ல, (பின்பு), நின்ற-, சந்தனுகுமாரன்உம்-சந்தனுராசபுத்திரனான
வீடுமனும், சரங்கள்விட-அம்புகளைச்செலுத்த,-யூகம்உம்-(பாண்டவரது)
படைவகுப்பும், பிளந்து-முறிபட்டு, சுரராசன் மைந்தன் முந்தி ரதம் ஊருகின்ற
செம்கண் நெடுமால் – தேவேந்திரகுமாரனான அருச்சுனனுக்கு
முன்நின்றுதேர்செலுத்துகிற சிவந்தகண்களையுடைய சிறந்த கண்ணபிரானது,
மேகம்உம் கரு கடல்உம் நீலம்உம்  கலந்த திரு மேனிஉம்-மேகத்தின் தன்மையும்
கரியகடலின்
தன்மையும்நீலரத்தினத்தின் தன்மையும் பொருந்தின அழகிய
வடிவமும், அறசிவந்தது-மிகச் செந்நிறம் பெற்றது;

     அங்ஙனமானது, வீடுமன் விசையாக விட்ட அம்புமழைபட்டு
இரத்தங்குழம்பியதனா லென்க. பிளந்து-பிளக்க எனத் திரிக்க. சாகநின்றிலன்
என்றது, இன்னும் சிறிதுபொழுது சிகண்டி அங்கு நின்றிருந்தால் துச்சாதனனாற்
கொல்லப்பட்டேயிருப்பானென்பதை நன்குவிளக்கும். துருபதேயன்-வடமொழித்
தத்திதாந்தநாமம். தேர்வாகம்-தேர்க்கு திரையுமாம்.  

போன திண் சிகண்டிதனை மீளவும் கொணர்ந்து, ‘பல
பூசலும் கடந்து இரதம்மேல்
நீ நில்; அஞ்சல்; நின் கணையும் ஏவுக!’ என்று, வெஞ்
சமரில் நேர் நடந்து சென்று, விசயன்,
கூனல் அங்கி தந்த சிலை கோலி, அம்பொடு அம்பு பல
கூட நெஞ்சு அழன்று உதையினான்,
வேனில் அம்பு முன்பு துதையாது இலங்கும் அம் பொன்
வரை மேனி எங்கணும் புதையவே.33.-அருச்சுனன் சிகண்டியையிட்டுவந்துமுன்னேநிறுத்தி,
அவனம்புகளோடு
தன் அம்புகளை வீடுமன் மேனியிற் செலுத்துதல்.

(அப்பொழுது), விசயன்-அருச்சுனன், போன திண் சிகண்டிதனை-
(அவ்வாறு) புறங்கொடுத்துச்சென்ற வலிய சிகண்டியை, மீளஉம் கொணர்ந்து –
மறுபடியும் அழைத்துக்கொண்டு வந்து, (அவனை நோக்கி), ‘நீ-,அஞ்சல்-
பயப்படாதே; பொரு பூசல் உம் கடந்து-செய்தற்குரிய போரையும் மிகுதியாகச்
செய்யக்கருதி, இரதம்மேல்-தேரின்மேலே, நில் – (தைரியங்கொண்டு) எதிர்த்து நில்;
கணைஉம் ஏவுக-உனது அம்புகளையும்செத்துவாயாக’, என்று-என்றுசொல்லி,
(அவனை முன் நிறுத்தி), வெம் சமரில்-கொடிய அப்போரிலே, நேர் நடந்து
சென்று-(தானும் வீடுமனை) எதிர்த்துப் போய், அங்கி தந்த கூன் நல் சிலை கோலி
– அக்கினி கொடுத்த வளைத்தற்குரிய அழகிய (தனது காண்டீவ) வில்லை
வளைத்து, அம்பொடு அம்பு பல கூட-(சிகண்டிவிடும்) அம்புகளுடனே (தனது பல)
அம்புகளும் சேர,-வேனில் அம்பு முன்பு துதையாது இலங்கும் –
வசந்தகாலத்துக்குரிய (மன்மதனது) பாணங்கள் முன்பு ஒரு பொழுதும்
பதியப்பெறாமல்
விளங்குகிற, அம் பொன் வரை மேனி எங்கண் உம்-அழகிய
பொன்மயமான மேருமலை போன்ற (வீடுமனது சிவந்த) உடம்புமுழுவதிலும்,
புதைய-தைத்து அழுந்தும்படி, நெஞ்சு அழன்று உதையினான்-மனத்திற்
கோபங்கொண்டு செலுத்தினான்; (எ-று.)

     துரியோதனாதியர்மேலுள்ள கோபம், அவர்கள்சேனைத்தலைவனான
வீடுமன்மேலும் சென்ற தென்க. இங்கே, திண்சிகண்டியென்றது-இகழ்ச்சி. ஈற்றடி –
வீடுமன் எப்பொழுதும் சிறிதும் காமவசப்படாதவ னென்பதை விளங்கும். வேனில்
என்பதைக் காலவாகுபெயராய், அக்காலத்துக்குரிய மன்மதனுக்குக் கொள்ளினும்
அமையும். பி – ம்: பலபூசலும். உகையினான். 
 

தோளும், நெஞ்சமும், சிரமும், மார்பமும், தொடங்கி
நிலைதோறும் வந்து வந்து உருவவே,
சாளரம் கொள் அங்க வழி ஓடுகின்ற இந்து முக சாயகம்
கை கொண்டு பிடியா,
‘நாள் அறிந்து எதிர்ந்து பொருவோனும் மைந்தன் அன்று;
முதல் நாமமும் சிகண்டி; இவன் எய்
வாளி ஒன்றும் இங்கு எமை உறா; தனஞ்சயன் செய் பெரு
வாழ்வு இது!’ என்று அறிந்து மகிழா,34.-வீடுமன் தன்னுடலிற்புதைந்தவை
அருச்சுனனம்பின் வலிமையாலென்று தெரிந்து மகிழ்தல்.

இதுவும், மேற்கவியும் – குளகம்.

     (இ-ள்.) தோள்உம் நெஞ்சம்உம் சிரம்உம் மார்பம்உம்-, தொடங்கி – (என்னும்
இவ்வுறுப்புக்கள்) முதலாக, நிலை தோறுஉம் – உயிர்நிலைகளிலெல்லாம், வந்து
வந்து உருவ – (அம்புகள்) மிகுதியாக வந்து ஊடுருவிச்செல்ல, சாளரம் கொள் –
(முழுவதும் பலதுளைபட்டுப்) பலகணியின் தன்மையை அடைந்த, அங்கம்வழி-(தன்)
உடம்புவழியாக, ஓடுகின்ற-(அப்பாற்) செல்லுகிற, இந்து முகம் சாயகம் –
சந்திரன்போன்ற வடிவமுள்ள [அர்த்த சந்திர] பாணங்களை, கை கொண்டு பிடியா
– (தன்) கைகளாற் பிடித்து, (அவற்றில் பதிந்துள்ள அருச்சுனன்பெயரைப் பார்த்து),
‘நாள் அறிந்து – (நாம் முன்புசொன்ன பத்தாம்போர்) நாளையறிந்து,
எதிர்ந்து பொருவோன்உம் – நம்மை எதிரிட்டுப் போர்செய்பவனும், மைந்தன்-
(நமது வமிச) புத்திரனான அருச்சுனனே; நன்று-(இவன்கையால் நாம் அழிவது)
நல்லதே; (ஆனால்), முதல் நாமம்உம் சிகண்டி தலைமையான
பேர்மாத்திரத்துக்குமே சிகண்டி (எதிரில் உள்ளான்); இவன் எய் வாளி ஒன்றுஉம்
இங்கு எமை உறா – இச் சிகண்டி தொடுக்கிற அம்புக ளொன்றும் இங்கு எம்மைச்
சேரமாட்டா; இது தனஞ்சயன் செய் பெரு வாழ்வு – இவ்வாறு என்னுடம்பை
ஊடுருவும்படி அம்புதொடுத்தல் அருச்சுனன் செய்யும் பெருஞ்சிறப்பேயாம்’ என்று
அறிந்து -,மகிழா – மகிழ்ச்சிகொண்டு, (எ-று.)- “கூறினன்” என அடுத்த கவியோடு
முடியும்.

     ‘இவனெய்வாளியொன்றும் இங்கு எமை உறா’ என்றதனால், வீடுமனைக்
கொல்லுதற்கு வியாஜமாக நிற்பதுமாத்திரம் சிகண்டிக்கு உண்டேயொழிய, அவனது
அம்புகளுக்கு வீடுமனது தெய்வயாக்கையைத்துளைக்கும்
ஆற்றலில்லையெனவிளங்குகிறது. கீழ் முதற்போர்ச்சருக்கத்தின் பதினோராங்கவியை
இங்கே காண்க. பொருவோன்உம் மைந்தன் அன்றுஎனஎடுத்து-போர் செய்பவனும்
இயற்கையாண்மை யுடையவனல்லனென்றும், முதல்நாமம்உம் சிகண்டி-என்
உடம்பிற்பதியும் பாணங்களில் முதற்பெயரே சிகண்டி [அவற்றின்மேல்
அருச்சுனன்பெயரும் பின் உள்ளது] என்றும் உரைப்பினுமாம்

‘நாம வெங் கொடுங் கணையின் நாமும் நொந்தனம், சமரம்;
நாளும் இன்று; முந்த இனி நீர்
போம், அடங்க, நும் தமையன் நீள் பதம் பொருந்தி, உறு
போர் அறிந்துகொண்டு பொருவீர்!
ஆம் அது அன்றி என் செயினும் ஆவது ஒன்றும் இன்று;
அருகு சேர் தனி ஆண்மை பொன்றல்!’ என்று,
அருகு சேர் கோ மடங்கல் தம்பியர்களாகி நின்ற மைந்தரொடு
கூறினன், பனங்கொடியனே.35.-வீடுமன் துரியோதனன்தம்பிமாரை ‘உங்களாலொன்றும் இங்குச்
செய்யலாகாது: மேல்ஆகவேண்டுவதை ஆய்க’ என்று கூறுதல்.

(அப்பொழுது), பனங்கொடியன் – பனைக்கொடியையுடைய
வீடுமன்,அருகு சேர் – (தன்) அருகிற் பொருந்திய, கோமடங்கல் தம்பியர்கள்
ஆகி நின்றமைந்தரொடு- இராசசிங்கமாகிய துரியோதனனது தம்பிமார்களாய்ப்
பொருந்தியவீரர்களுடனே, ‘நாமம் வெம் கொடு கணையின் – அச்சத்தைத்தருகிற
மிகவுங்கொடிய அம்புகளால் நாம்உம் சமரம் நொந்தனம் – நாமும்போரில்
வருந்தினோம்; நாள்உம் இன்று-(நமக்கு அபாயத்தை விளைக்கிற) தினமும்
இன்றைக்கே; இனி – இனி மேல், நீர் அடங்க – நீங்களெல்லோரும், முந்த போம் –
விரைவாகச் செல்லுங்கள்; நும் தமையன் நீள் பதம் பொருந்தி – உங்கள்
தமையனான துரியோதனனது சிறந்த இடத்தை யடைந்து, உறு போர் அறிந்து
கொண்டு-இனிச்செய்யவேண்டும் போரைத்தெரிந்துகொண்டு, பொருவீர் –
போர்செய்யுங்கள்; அது ஆம் அன்றி – அங்ஙனஞ் செய்வது தகுதியாகுமே
யல்லாமல், என் செயின்உம் ஆவது ஒன்றுஉம் இன்று – (நீங்கள்) என்ன முயற்சி
செய்தாலும் (எனதுஅபாயத்தைத் தடுப்பதற்குத்) தக்கவழி ஓன்றும் இல்லை;
(ஆதலால்), தனி ஆண்மை பொன்றல் – தனியே உங்கள் பராக்கிரமம்
அழிவடையவேண்டாம்’, என்று கூறினன்-; (எ-று.)

   வீடுமனுக்கு உதவியாகப் போர்செய்யவந்த துரியோதனன் தம்பிமாரை நோக்கி
வீடுமன் ‘இனி நீங்கள் எனக்கு உதவிசெய்து பொருதலிற் பயனில்லை; நான் இன்று
அழிவது நிச்சயம்; இனிச்செய்ய வேண்டுவதைப்பற்றி உங்கள் தமையனோடு
ஆலோசித்துச் செய்யுங்கள்; இப்பொழுது அருச்சுனனையெதிர்த்து
வீணாய்வலிமைகெடாதிர்’ என்று அறிவுகூறினான். தனது சேனைத்தலைமை
யொழிந்ததை ‘நாளுமின்று’ என்றதனாலும், ‘தனி’ என்றதனாலும், வீடுமன்
விளக்கினான். பதம்-பாதமென்றலுமாம். பொன்றல் – எதிர்மறைவியங்கோள்.
கோமடங்கல் – அரசரிற்சிறந்தவன்; பகையை எளிதில் ஒழிப்பவன். பனை + கொடி=
பனங்கொடி; [நன், உயிர், 53.] நாளும் இன்று என்பதற்கு – (நாம்வாழும்) நாளும்
(இனி) இல்லை எனினும் அமையும்.

கோடு கொண்ட செம் பவள நாதம் வந்து வந்து செவி கூட,
முன்பு நின்ற நிலையே
நாடி, நெஞ்சு அழிந்து, திருநாமம் அன்புடன் தனது நா
குழன்று கொண்டு நவிலா,
ஓடுகின்ற அம்பு ஒழிய நீடு உடம்பு அடங்க முனை ஊர
நின்ற அம்பு ஓர் அணையா,
வீடுமன் கிடந்த கிடை தேவர் கண்டு உவந்தனர்கள்; மேல்
விழுந்தது, அம் பொன் மலரே.36,-அம்பாகிய அணையில் வீடுமன்சாயத்
தேவர்கள் கற்பகமலர்மாரிபொழிதல்.

செம் பவளம் – சிவந்தபவழம்போன்ற (கண்ணபிரானது)
திருவாய்மலரிலே, கொண்ட – வைத்து ஊதப்பட்ட, கோடு –
(பாஞ்சசன்னியமென்னும்) சங்கத்தினது, நாதம்-ஒலி, வந்து வந்து செவி கூட –
மிகுதியாகவந்து (தனது) காதுகளிலே பொருந்த,-வீடுமன்-,-முன்பு நின்ற நிலைஏ
நாடி – எதிரில் [அருச்சுனனது தேரின் முன்னே]  (கண்ணபிரான்) எழுந்தருளி
நின்ற நிலைமையையே நெஞ்சிற்கொண்டு [தியானித்து], நெஞ்சு அழிந்து –
மனமுருகி, திருநாமம் – (அக்கண்ணபிராணது) திருப்பெயர்களை, அன்புடன் –
பக்தியோடு, தனது நா குழன்று நவிலா கொண்டு – தனது நாக்குத் தழுதழுக்கச்
சொல்லிக்கொண்டு, ஓடுகின்ற அம்பு ஒழிய நீடு உடம்பு அடங்க முனை ஊர நின்ற
அம்பு ஓர் அணை ஆ – (ஊடுருவி அப்பால்) ஓடுகிற அம்புகள் ஒழிய(த் தனது)
நீண்ட உடம்புமுழுவதிலும் ஒருமுனை பொருந்த நின்ற அம்புகளையே
ஒருபடுக்கையாகக்கொண்டு, கிடந்த – (அந்த அம்பாகிய அணையில்)
விழுந்துகிடந்த, கிடை – கிடக்கையை, தேவர் கண்டு – தேவர்கள் பார்த்து,
உவந்தனர்கள் – மகிழ்ந்தார்கள்; அம் பொன் மலர் – (அங்ஙனம் மகிழ்ந்த
தேவர்களாற் சொரியப்பட்ட) அழகிய பொன்மயமான (கற்பக) மலர்த்தொகுதி,
மேல்விழுந்தது; – (அந்த வீடுமன்) மேல் விழுந்தது; (எ-று.)

     தன் உடம்பை ஊடுருவி நீங்கின அம்புகள் ஒழிய, மார்பில்தைத்து
முதுகின்வழி புறப்பட்டு நிற்கும் அம்புகளின்மேல் விழுந்திட்டனனென்பது,
மூன்றாமடியின் கருத்து. பக்திமிகுதியாலும், சோர்வினாலும், நாக்குழறும், அம்பு
அணை – ஸரதல்பம். முன்பு நின்றநிலை – யோகநிலையென்பாருமுளர். கிடை –
கிடைக்கும் நிலை. குழன்று – குழல என்னும் எச்சத்திரிபு; குழல் – பகுதி. கோடு –
வளைந்துள்ளது. முனை – நுனி. 

‘போரில் எஞ்சினன் குருகுலேசன்!’ என்று கண்ட புருகூதன்
மைந்தனும், புனை துழாய்
வீரனும், துனைந்து வரு தேரினின்று இழிந்து, இரு கண்
வீழும் அம்பினில் முழுகினார்;
சேர வந்து இரண்டு வகை ஆகி வெங் களம் குறுகு
சேனையும் திரண்டு அலறவே,
யாரும் நெஞ்சு அழிந்தனர்கள்; யாரும் நொந்து நைந்தனர்கள்;
யாரும் நின்று இரங்கினர்களே.37- போரிலே வீடுமன் எஞ்சியதுகண்டு யாவரும் வருந்துதல்.

‘குருகுல ஈசன் – குருகுலத்தலைவனான வீடுமன், போரில் எஞ்சினன்
– யுத்தத்தில் அழிந்தான்’, என்று-, கண்ட-பார்த்தறிந்த, புருகூதன் மைந்தன்உம் –
இந்திரகுமாரனான அருச்சுனனும் புனை துழாய் வீரன்உம் – தரித்த
திருத்துழாய்மாலையையுடைய கண்ணபிரானும், துனைந்து வரு தேரினின்று இழிந்து
– விரைந்து வருகிற தேரினின்று இறங்கிவந்து, இரு கண் வீழும் அம்பினில்
முழுகினார் – (தமது) இரண்டு கண்களினின்றும் விழுகிற நீரில் மூழ்கினார்கள்
[மிகக்கண்ணீர்விட்டார்கள்]; இரண்டு வகை ஆகி வெம் களம் குறுகு சேனைஉம் –
இரண்டுபகுப்பாய்க் கொடிய போர்க்களத்தையடைந்துள்ள சேனைகளும், சேர
திரண்டு வந்து – ஒருசேரக் கூடி (வீடுமன் விழுந்தவிடத்து) வந்து, அலற – அழுது
கதற, யார்உம் – (இருதிறத்திலும்) எல்லோரும், நெஞ்சு அழிந்தனர்கள்-மனம்
அழிந்தார்கள்; யார்உம்-,நொந்து நைந்தனர்கள் – வருந்தி மெலிந்தார்கள்; யார்உம்-
,நின்று இரங்கினார்கள் – (திகைத்துநின்று) விசனமுற்றார்கள்; (எ-று.)

     அழிந்தவனாகிய வீடுமன் அம்பினில் மூழ்கியதுபோலவே, அழித்தவராகிய
கிருஷ்ண அருச்சுனரும் அம்பினில் மூழ்கினாரென ஒரு சமத்காரம் தோன்றக்
கவிகூறினார். பாண்டவதுரியோதனாதியரென்னும் இருவகையார்க்கும் வீடுமன்
மூத்தபாட்டனாதலால், இவனழிவுக்கு எல்லோரும் இரங்குவாராயினர். புருஹு தன் –
வடசொல்; புரு – மிகுதியாக, ஹூதன் – (யாகங்களில்) அழைக்கப்படுபவன்
என்றும்; புரு-புரு என்னும் அசுரனை, ஹூதன் – கொன்றவன் என்றும்
பொருள்படும். பி-ம்: அம்பினால். திரண்டுவரவே

ஆகம் எங்கும் தங்கும் அம்பின் அணைமேல் வீழ்வான்
யோகம் கொண்டே உயிரை ஓடாவண்ணம் நிறுவி,
‘மாகம் சூழும் பரிதி வடபால் எய்தும் அளவும்
நாகம் காணேன்’ என்ன, ஞானத்தோடே வைக,38.-வீடுமன் உத்தராயணகாலம் வருமளவும் உயிர்விடேனென
யோகத்தாலுயிரை வைத்துக்கொண்டிருத்தல்.

இதுவும், மேற்கவியும் – குளகம்.

     (இ-ள்.) ஆகம்எங்கும் தங்கும் – (தன்) உடம்பு முழுவதிலும் பொருந்திய,
அம்பின் – அம்புகளாகிய, அணை மேல்-படுக்கையின் மேல் வீழ்வான் –
விழுபவனாகிய வீடுமன, ‘மாகம் சூழும் பரிதி – வானத்தை வலம் வருகிற சூரியன்,
வடபால் எய்தும் அளவுஉம் – வடபுறத்தை அடையுமளவும் [உத்தராயணம்
வருமளவும்],  நாகம் காணேன் – மேலுலகத்தை அடையமாட்டேன்’, என்ன –
என்று எண்ணி உயிரை ஓடா வண்ணம் யோகம் கொண்டு நிறுவி – தன் உயிரை
(உடம்பைவிட்டு) நீங்காதபடி யோகவலிமையால் நிறுத்தி, ஞானத்தோடே வைக-
நல்லறிவோடு தங்க,-(எ-று.)-”எவரும்,…அன்னான்பாதஞ்
சென்னிமேற்கொண்டழுதார்” என வருங்கவியோடு முடியும்.

     ஆடிமாசம்முதல் மார்கழிமாசம்வரையிலும் தக்ஷிணாயமாகிய ஆறு மாசம்
தேவர்களுக்கு இரவு: தைமாசம் முதல் ஆனிமாசம் வரையிலும் உத்தராயணமாகிய
ஆறுமாசம் அவர்களுக்குப் பகல்; ஆக, மனிதமானத்தால் ஒரு வருஷம்
தேவமானத்தால் ஒருநாளாம்: தேவர்களுக்கு இரவாகிய தக்ஷிணாயநத்தில்
இறந்தவர்களுக்கு நற்கதியில்லை யென்றும், உயர்கதிபெறுபவர் உத்தராயணத்திலே
இறப்பரென்றும் நூற்கொள்கை யாதலால் வீடுமன், தக்ஷிணாயநத்தில் உயிர்விடாமல்
உத்தராயணத்தை எதிர்நோக்கி உயிர்த்திருப்பவனானான். சூரியன் வடபுறமாக
ஒதுங்கிச் சஞ்சரிக்குங்காலம் உத்தராயணம்; தென்புறமாகச் சஞ்சரிக்குங் காலம்
தக்ஷிணாயநம். யோகமாவது-இயமம் முதலிய எட்டு இலக்கணங்களோடு நின்று
செய்யுந் தவம். யோகம் வல்லார்க்கு வேண்டின பொழுது உயிரைவிடும்
உறுதிநிலைகைகூடுதலால், ‘யோகங்கொண்டே உயிரை நிறுவி’ என்றார்.
வேண்டியபொழுதுஉயிர் விடும்படி வீடுமனுக்குத் தந்தையால் வரம்
கொடுக்கப்பட்டிருந்ததென்றும்நூல்கள் கூறும்: மேல் 43-ஆம்பாட்டில் “வரத்தின்
பயனுலுயிரைநிறுத்தும்மன்னன்” என்று இந்நூலாசிரியருங் கூறுவர். பி.ம்: இரவி.

     இதுமுதற் பதினாறுகவிகள்-எல்லாச்சீரும் மாச்சீராகிய கழிநெடிலடி
நான்குகொண்ட அறுசீராசிரியவிருத்தங்கள்.        

இங்கும் தருமன் முதலா உள்ள மன்னர் எவரும்,
அங்கும் துரியோதனனை ஆதியான அரசர்,
பொங்கும் கடலால் உலகம் பொன்றும் அன்று போலே
சிங்கம் அன்னான் பாதம் சென்னிமேல் கொண்டு அழுதார்.39.-தருமன் முதலானாரும் துரியோதனன் முதலானாரும்
வீடுமன்பாதத்தைச் சென்னியிற்கொண்டுஅழுதல்.

இங்குஉம்-இந்தப்பக்கத்திலும், தருமன் முதல் ஆ உள்ள மன்னர்
எவர்உம்-யுதிட்டிரன் முதலாகவுள்ள அரசர்களெல்லோரும், அங்குஉம்-
எதிர்ப்பக்கத்திலும், துரியோதனனை ஆதி ஆன அரசர்- துரியோதனனை
முதலாகவுடைய அரசர்களும், பொங்கும் கடலால் உலகம் பொன்றும் அன்று
போல-பொங்குகின்ற கடலினால் உலகங்களழியும் அந்தயுகாந்த காலத்திற்
(பிராணிகள் வருந்துவது) போல, சிங்கம் அன்னான் பாதம்சென்னி மேல்கொண்டு
அழுதார்-சிங்கத்தை யொத்தவனான வீடுமனது திருவடிகளைத் தலைமேல்
வைத்துக்கொண்டு புலம்பினார்கள்; (எ-று.)    

     பாதம் சென்னிற்மேற் கொண்டு – திருவடிமீது முடிபடும்படி சாஷ்டாங்கமாக
விழுந்து தண்டனிட்டு என்க. நற்குணநற்செய்கைகளையுடைய பாண்டவர் பக்கல்
அபிமானத்தால் ‘இங்கும்’ என்றும், தீக்குணம் தீச்செய்கைகளையுடைய எதிரிகள்
பக்கல் வெறுப்பால் ‘அங்கும்’ என்றும் கவி கூறினார். பி – ம்: பொங்குங்கனலால்

மறமும், வாகு வலியும், வல் வில் முதல் எப் படையின்
திறமும், தேசும், வாழ்வும், சீரும், கேள்விச் செலவும்,
நிறமும், உண்மை அறிவும், நெறியும், புகழும், திகழ் பேர்
அறமும், பொன்றும் நின்னோடு, ஐயா! அந்தோ, அந்தோ!40. இதுவும், மேற்கவியும்-ஒருதொடர்; இருதிறத்தாரும் புலம்பல்.

ஐயா-தலைவனே! மறம்உம்-பராக்கிரமமும், வாகுவலிஉம் –
தோள்வலிமையும்,  வல் வில் முதல் எ படையின் திறம்உம்-வலியவில் முதலிய
எல்லா ஆயுதங்களின் வல்லமையும், தேசுஉம்-ஒளியும்,வாழ்வுஉம்-(மதிப்போடு)
வாழ்தலும,்சீர்உம்-சிறப்பும், கேள்வி செலவுஉம் – நூற்கேள்விகளின்படி ஒழுகும்
ஒழுக்கமும், நிறம்உம்- பெருமையும், உண்மை அறிவுஉம்-தத்துவஞானமும்,
நெறிஉம்-நீதிவழியும், புகழ்உம்-கீர்த்தியும், திகழ் பேர் அறம்உம்- விளங்குகிற
சிறந்ததருமமும், (என்னும் இவையெல்லாம்), நின்னோடு பொன்றும்-(உலகத்தில்)
உன்னுடனே அழியும்; அந்தோ அந்தோ-! (எ-று.)

     உன்போலப் பராக்கிரமம் முதலியன உடையார் ஒருவரும் இனி
உலகத்திலில்லை யென்பதாம், தேசு-க்ஷத்திரியதேஜஸ். அந்தோ அந்தோ,
அடுக்கு-இரக்கம். நிறம்-நற்குணமுமாம்.   

தந்தை இன்பம் எய்த, தவமே இன்பமாகச்
சிந்தை தெளியும் ஞானச் செல்வா! செஞ் சேவகனே!
முந்தை மரபுக்கு எல்லாம் முதல்வா! ஞாலம் முழுதும்,
எந்தை! ஆள வைப்பார் இனி யார்? கோவே!’ என்றார்.

 தந்தை இன்பம் எய்த-பிதாவாகிய சந்தனு (இரண்டாவது மணஞ்
செய்து) இன்பமடையும்பொருட்டு, தவம்ஏ இன்பம் ஆக சிந்தை தெளியும்-
துறவறவொழுக்கத்தையே உலகவின்பமாகக்கருதி மனந்தெளிந்த, ஞானம் செல்வா-
தத்துவஞானமாகிய செல்வத்தையுடையவனே! செம் சேவகனே-நீதிதவறாத வீரனே!
முந்தை – பழமையான, மரபுக்கு எல்லாம் – குருகுலத்திற்பிறந்த எங்கள்
எல்லோர்க்கும், முதல்வா-மூத்தவனே!எந்தை-எமது வமிச பிதாவே!
கோவே-தலைவனே! ஞாலம் முழுது உம் ஆள வைப்பார் இனி யார்-
பூமிமுழுவதையும் (எங்களை) அரசாளும்படி (முடிசூட்டி) வைப்பவர் இனி
வேறுயாவர் உளர்? என்றார்-என்றுசொல்லி (இருதிறத்தாரும்) புலம்பினார்கள்;(எ-று.)

     “போகமுந்தரும மேயானமெய்ப்புனிதன்” என்றார், ஆறாம் போர்ச்சருக்கத்தும்.
எந்தை-அண்மைவிளி; அன்புபற்றிவந்த மரபுவழுவமைதி.   

சரத்தின் சயனம் பஞ்ச சயனங்களினும் இனிது; என்
சிரத்தின் தாழ்வு தீர்ப்பாய்; திண் தோள் விசயா!’ என்ன,
வரத்தின் பயனால் உயிரை நிறுத்தும் மன்னன் மகிழ,
உரத்தின் அம்பால் முடியை உயரும்வண்ணம் உயர்த்தான்.43.-அருச்சுனன் வீடுமன்சொற்படி அம்புகளால் அவன் முடியைத்
தாழாது உயரும்படி செய்தல்.

(பின்பு அருச்சுனனை நோக்கி), வரத்தின் பயனால் உயிரை நிறுத்தும்
மன்னன்-(தந்தைகொடுத்த) வரத்தின் பலத்தால் உயிரை (உடம்பு விட்டு நீங்காதபடி
யோகங்கொண்டு) நிறுத்தியுள்ள பீஷ்மராசன், ‘திண்தோள் விசையா –
வலியதோள்களையுடைய அருச்சுனனே! சரத்தின் சயனம்-(உனது) அம்புகளாலாகிய
படுக்கை, பஞ்ச சயனங்களின்உம் இனிது – ஐவகைப் பொருள்களால் அமைந்த
மெத்தையினும் (எனக்கு) இனிமையாகவுள்ளது; என் சிரத்தின் தாழ்வு தீர்ப்பாய் –
எனதுதலை தாழ்ந்திருத்தலை நீக்குவாய்[தலைக்கு உயரஞ்செய்வாய்]’, என்ன-என்று
சொல்ல,-(உடனே அருச்சுனன்), மகிழ-(அவ்வீடுமன்) மகிழும்படி, உரத்தின்
அம்பால்- வலிமையையுடைய (தனது)அம்புகளால், முடியை உயரும் வண்ணம்
உயர்த்தான்- (அவ்வீடுமனது) சிரசைஉயர்ந்திருக்கும்படி தலையணை செய்தான்;
(எ-று.)

மீண்டும் மூன்று அம்புகளைத் தொடுத்து வீடுமன்தலையை அருச்சுனன்
உயர்த்தினா னென முதனூல் கூறும். சுத்தவீரர்கள் போரிற்பட்டபுண்ணைப்
பொருளாகக் கருதா ராதலாலும், வீடுமன் துன்பத்தையே இன்பமாக நினைக்கும்
இயல்புடையவனாதலாலும், ‘சரத்தின் சயனம் பஞ்சசயனங்களிலும் இனிது’ என்றான்.

சொரியும் கண்ணீர் துடைத்து, துரியோதனனை நோக்கி,
‘வரியும் சாபக் கன்னன், மன்னர்க்கு உரும்ஏறு அன்னான்,
தெரியும் காலத்தவனைச் சேனைத் தலைவன் ஆக்கி,
புரியும் போரும் நாளைப் புரிமின்’ என்று புகன்றான்.44.-வீடுமன் துரியோதனனுடைய கண்ணீரைத் துடைத்துக்
கன்னனைச் சேனாபதியாக்கிப் பொரக் கூறுதல்.

(பின்புவீடுமன்), சொரியும் கண் நீர் துடைத்து – (துரியோதனனது)
கண்களினின்று பெருகுகிற நீரைப் போக்கி [சமாதானப்படுத்தி], துரியோதனனை
நோக்கி-, ‘மன்னர்க்கு உரும் ஏறு அன்னான் – பகையரசர்களுக்குப்
பேரிடியையொத்தவனும் [தவறாது அழிவுசெய்பவனும்], தெரியும் காலத்தவன் –
ஆராய்கிறகாலத்தையுடையவனும் ஆகிய, வரியும் சாபம் கன்னனை – கட்டமைந்த
வில்லையுடைய கர்ணனை, சேனை தலைவன் ஆக்கி – (இனிச்)
சேனாபதியாகவைத்துக் கொண்டு, புரியும்போர்உம்-செய்யவேண்டிய யுத்தத்தையும்,
நாளை புரிமின் – நாளைமுதல் செய்யுங்கள்’,என்று புகன்றான் – என்றுசொன்னான்;
(எ-று.)

     ஒன்பதாநாளிரவில் துரியோதனாதியர் கூடிய பொழுது கர்ணன் சொன்னதை,
துச்சாதனன் தமையன்சொற்படி வீடுமனிடம் தெரிவிக்க, அப்போது ”ஒருநாளுநீவிர்
பொறுமின்களும்மை யுலகாளுவிக்கவருவோர், வருநாடொடங்கியமர்செய்து
தெவ்வைமடிவிப்பர்…… வாழ்திர்” என்று கூறியதற்கு ஏற்ப, வீடுமன் இங்ஙன்
கூறுகின்றானென்க. தெரியுங்காலத்தவன் என்பதற்கு – தான்வந்து
போர்செய்யும்பொருட்டு எனது அழிவு காலத்தை எதிர்நோக்கியிருப்பவ னென்றும்,
பகைவெல்லும் அரசர்க்கு அவசியம் அறியவேண்டிய காலநிலைமையை
அறியுந்தன்மைய னென்றுங் கருத்துக் கொள்ளலாம். இது பரிகாசமாகக்
கூறியதென்னலாம். வீடுமன் இவ்வார்த்தை சொல்லும்பொழுது பத்தாநாள்
சூரியாஸ்தமனகாலம் சமீபத்தி லிருந்ததனால், ‘நாளைப்புரிமின்’ என்றான். 

கோயில் தருமன் செய்ய, கூர் வெஞ் சரமே அணையா,
நோய் இல் அயர்வும் மெய்யில் நுழைய, காலம் நோக்கி,
‘வீயின், முத்தி இல்லை’ என்ன இருந்தான்-விருந்தா,
சேயின் முனிவர் கேள்வித் தெள் ஆர் அமுதம், நுகர்வான்.45.-யுதிட்டிரன் வீடுமனுக்குத்  தங்குமிடம் அமைக்க, அங்கு அவன்
உத்தராயணகாலத்தை நோக்கியிருத்தல்

சேயின் – முருகக்கடவுள்போல், முதிய கேள்வி தெள் ஆர் அமுதம்
–  பழமையானநூற்கேள்வியாகிய தெளிவான அரிய அமிருதத்தை, விருந்து ஆய
நுகர்வான் – புதிதுபுதிதாக அமுதுசெய்பவனாகிய வீடுமன்,-தருமன் கோயில்
செய்ய-(தனக்குத்) தங்குமிடத்தை யுதிட்டிரன் ஒழுங்காக அமைக்க, கூர் வெம்சரம்ஏ
அணைஆ – கூர்மையானகொடிய அம்புகளையே படுக்கையாகக்கொண்டு, நோய்
இல் அயர்வுஉம் மெய்யில் நுழைய-பிணியில்லாமலே தளர்ச்சியும் உடம்பில்தோன்ற,
வீயின் முத்திஇல்லை என்ன – (தக்ஷிணாயநமாகிய இப்பொழுது) இறந்தால்
முத்திகிடையாதென்று கருதி, காலம் நோக்கி – (உத்தராயணம்வருங்)  காலத்தை
எதிர்நோக்கி, இருந்தான் – பிழைத்திருந்தான்; (எ-று.)

     சுப்பிரமணியமூர்த்தி கல்வி கேள்விகளில் மிகச்சிறந்தவரென்பது பிரசித்தம்
நோயில்யாவும் என்றும் படிக்கலாம்: அங்ஙனம் படிப்பின், நோய் இல் –
துன்பந்தராமல், யாவும் – அம்புகளெல்லாம் மெய்யினுழைய என்க: சுத்தவீரனும்
பற்றற்றவனுமான வீடுமன், தன் உடம்பில் அம்புகள் பதிந்த வருத்தத்தைப்
பொருளாகக் கருதாமல், அப்புண்களை ஆற்றும் பொருட்டு நல்லவைத்தியர்கள்
சிறந்தமருந்து முதலியவற்றோடு வந்ததையும் மறுத்து, அத்துன்பத்தையே
இன்பமாகப் பாவித்த மனத்தூய்மை தோன்ற, ‘நோயில் யாவுமெய்யினுழைய’
என்றார்; இத்தன்மை முதனூலால் நன்குவிளங்கும்: இதற்கு, நோயில் என்பதில்,
இல்என்னும் பகுதியே வினையெச்சத்தன்மை பட்ட தென்றாவது, இன்றி என்பது
இல்என விகாரப்பட்டதென்றாவது இலக்கணமறிக: திருமாலையில் “காவலில்
புலனைவைத்து” என்றவிடத்து, இல் என்பதற்கு-இல்லாதபடி யென்று
ஸ்ரீபெரியவாச்சான்பிள்ளை வியாக்கியான மிட்டருளி யிருத்தல்காண்க. அமிருதம்
நாவுக்கு இனிமை தருதல்போல, நூற்கேள்வி செவிக்கு இனிமை தருதலால்,
‘கேள்வித் தெள்ளா ரமுதம்” என்றது.

இன்று உன் மைந்தன் பட்டான்’ என்று தந்தைக்கு
இசைப்பான்
சென்று, பரிதி மேலைத் திக்கின் எல்லை சேர்ந்தான்;
அன்று அவ் வருணன் அன்பால் அழுத செந்நீர் ஆறாய்
மன்ற எங்கும் பரந்தது ஒக்கும், செக்கர் வானம்.46.-சூரியாஸ்தமன வருணனை.

இன்று உன் மைந்தன் பட்டான் என்று-இன்றைக்கு உனது மகன்
அழிந்தா னென்று, தந்தைக்கு இசைப்பான் – (வீடுமனது) தந்தையாகிய
வருணனுக்குக் கூறும்பொருட்டு, பரிதி- சூரியன், சென்று-போய், மேலை திக்கின்
எல்லை சேர்ந்தான் – மேற்குத்திக்கின் இடத்தை யடைந்தான் [அஸ்தமித்தான்];
(அப்பொழுது), செக்கர் வானம் – (அத்திசையில் காணப்படும்) செவ்வானம், அன்று
வருணன் அன்பால் அழுத செந்நீர் ஆறு ஆய் எங்கு உம் பரந்தது ஒக்கும்-
அப்பொழுது அவ்வருணன் (மகனிடத்து) அன்பினால் அழுத சிவந்த கண்ணீர்
ஆறாகி எவ்விடத்தும் பரவியதை யொக்கும்; (எ-று.)-மன்ற-தெளிவையுணர்த்துவதோர்
இடைச்சொல்; ஐயச்சொற்களும், உவமைச்சொற்களும், துணிபுச்சொற்களும்
கூட்டிச்சொல்லுதலும் தற்குறிப்பேற்றவணியின் இலக்கண மாதலால், ‘மன்ற’ என்ற
துணிபுச் சொல்லைக் கொடுத்தார்:  தற்குறிப்பேற்றவணி.

     வீடுமனது தந்தையானசந்தனு வருணனது அவதார மென்பது, முன்
கூறப்பட்டது. அதிகசோகத்தால் உடம்பிலுள்ள இரத்தமே கண்ணீராகப் பெருகிய
தென்பார், ‘அன்பாலழுத செந்நீர்’ என்றார்போலும். ‘தங்கண், உள்ளநீரெல்லாமாறி
யுதிரநீரொழுக நின்றான்’ என்றார் கம்பரும் கும்பகருணன் வதைப்படலத்து. இனி,
புதுநீர் வெள்ளம் செந்நிறமுடைத்தாயிருக்குந் தன்மைபற்றி அச்செம்மையை
வருணன் கண்ணற்புதிதாய்வருகிற நீர்ப்பெருக்குக்கு ஏற்றிக் கூறிய தெனினும்
அமையும்.

பாண்டு மன்னன் புதல்வர் படையும் பாடி புக்கது;
ஆண்டு பாடி புக்கது, அரவத் துவசன் படையும்;
‘ஈண்டு முதல்வன் பட்டது எந்தைக்கு உரைமின்’ என்று,
தாண்டு மான் தேர் மைந்தன் சஞ்சயனை விடுத்தான்.47.-இருசேனையும் பாசறைபுக, வீடுமனிறந்ததைச் சஞ்சயன்மூலமாகத்
துரியோதனன் தன்தந்தைக்குத் தெரிவித்தல்.

ஆண்டு-அப்பொழுது, பாண்டு மன்னன் புதல்வர் படைஉம்-
பாண்டவர்களது சேனையும், பாடி புக்கது-படைவீட்டை யடைந்தது; அரவம்
துவசன் படைஉம்-துரியோதனன்சேனையும், பாடி புக்கது-படைவீட்டை யடைந்தது;
(அப்பொழுது), தாண்டுமான் தேர் மைந்தன்-தாவிப் பாயுங்குதிரைகளைப்பூட்டிய
தேரையுடைய குமாரனான துரியோதனன், ஈண்டு முதல்வன் பட்டது எந்தைக்கு
உரைமின் என்று-இப்பொழுது நமதுகுலத்துப் பெரியவனான வீடுமன் அழிந்ததை
என்தந்தைக்கு [திருதராஷ்டிரனுக்கு]ச் சொல்லு மென்று, சஞ்சயனை விடுத்தான் –
சஞ்சயமுனிவனை அனுப்பினான்;  (எ-று.)

     ஸஞ்சயன்-வடசொல்; இவன் கவல்கணனென்பவனது குமாரன்; ஆதலால்,
இவனுக்குக் காவல்கணி யென்று ஒருபெயரும் வடமொழியில் வழங்கும்; இவன்,
திருதராஷ்டிரனுக்கு மிகவும் இஷ்டனான நண்பன்; இவன் அவனுக்குச்
சிலசமயங்களில் தேர் செலுத்துதலும் உண்டு. இவன் நாள்தோறும் பகலில் போரில்
நடக்கிறசெய்தியை அறிந்துபோய் இரவில் திருதராட்டிரனுக்குச் சொல்லிவந்தான். 

முனியும் நகரில் சென்று, முகுரானனனுக்கு உரைப்ப,
கனியும் அன்பின் வெள்ளம் கண்ணீர் ஆகிச் சொரிய,
‘இனி என் மைந்தர்க்கு உறுதி இல்லை!’ என்று என்று ஏங்கி,
பனி வெண் மதியம் கண்ட பங்கயம்போல் ஆனான்.48.-அதுகேட்ட திருதராஷ்டிரன் கண்ணீர்வடியவாடுதல்.

(அவ்வாறே), முனிஉம்-சஞ்சயனும், நகரில் சென்று-அஸ்தினபுரத்திற்
போய், முகுரானனனுக்கு உரைப்ப-திருதராட்டிரனுக்குச் செய்திசொல்ல,
(அதுகேட்டவுடனே அவன்), கனியும் அன்பின்-(வீடுமனிடத்து) நெஞ்சுருகிய
அன்பினால், கண்ணீர் வெள்ளம் ஆகி சொரிய-, இனி என் மைந்தர்க்கு உறுதி
இல்லை என்று என்று – இனிமேல் என்பிள்ளைகளுக்கு வலிமையில்லையென்று
பலமுறைசொல்லி, ஏங்கி-விசனப்பட்டு, பனிவெண் மதியம் கண்ட பங்கயம்போல்
ஆனான்-குளிர்ந்த வெண்ணிறமான சந்திரனைப் பார்த்த தாமரைமலர்போ
லாயினான் [வாடி மெலிந்தான்];

     முகுராநநன் என்ற வடமொழிப்பெயர்க்கு-கண்ணாடிபோன்ற முகமுடையவ
னென்று பொருள். முகுரம்-கண்ணாடி, ஆநநம்-முகம். கண்ணாடி தான்
பிறராற்காணப்பட்டுப் பிறரைத் தான் காணும் உணர்ச்சி யில்லாதது போல, தான்
பிறராற் காணப்பட்டுப் பிறவிக்குருடனாதலாற் பிறரைத் தான் காணாத
முகத்தையுடையவனென்றவாறு; இனி, கண்ணாடி போல விளக்கமுடைய
முகமுடையனென்றுமாம். ”வயக்குறு மண்டிலம் வடமொழிப்பெயர் பெற்ற,
முகத்தவன்” என்றார் கலித்தொகையிலும். பி-ம்: என்றென்றிரங்கி

மண்மேல் விழுந்தான்; எழுந்தான்; ‘மானம் போனது!’ என்றான்;
கண்மேல் எற்றி, ‘இன்றே கண்ணும் இழந்தேன்!’ என்றான்;
‘விண்மேல் உள்ளோர் செல்வம் வீறு பெற்றது!’ என்றான்;
புண்மேல் அயில் உற்றென்னப் புலந்தான்,
முதல்வன் புதல்வன்.49.-திருதராஷ்டிரன் பெருஞ்சோகமடைந்து கதறுதல்.

(பின்பு), முதல்வன் புதல்வன் – (குருகுலத்துப்)
பெரியவனானவீடுமனுக்கு(த்தம்பி) மகனான திருதராஷ்டிரன், மண்மேல் விழுந்தான்-
தரையிலே விழுந்திட்டான்;  எழுந்தான்-; மானம் போனது என்றான் – (எனது)
பெருமையழிந்தது என்று சொன்னான்; கண்மேல் ஏற்றி-(தன்) கண்மேல் (கையால்)
மோதிக்கொண்டு, இன்றுஏ கண்உம் இழந்தேன் என்றான்-இன்றைக்கே (நான்)
கண்ணையுமிழந்தே னென்று கூறினான்; விண்மேல் உள்ளோர் செல்வம் –
தேவலோகத்திலுள்ளோரது ஐசுவரியம், வீறுபெற்றது – (வீடுமன் இனி
அனுபவிக்கப்பெறுதலால்) சிறப்புப்பெற்றது, என்றான் – என்றுஞ் சொன்னான்;
புண்மேல் அனல் உற்று என்ன புலர்ந்தான்-புண்ணின் மேல் நெருப்புப்பட்டாற்
போல மிகவருந்தினான்; (எ-று.)

     முன்னமே தன்மக்கள்சிலர் இறந்ததனால் மனம்வருந்திய திருதராட்டிரன்
இப்பொழுது குலத்தலைவனும் சேனாபதியும் தன்னைவளர்த்த தந்தையுமான
வீடுமனும் அழிந்த செய்தியைக் கேட்டு அவ்வருத்தத்தின்மேல்
மிக்கவருத்தமுற்றானென்பதாம். நான்காமடி – துன்பத்தின்மேல் துன்பமடைதற்கு
உவமை; ”புண்ணிலாம்பெரும்புழையிற் கனல்நுழைந்தாலென” எனக் கம்பர்
கூறியதுங் காண்க. இனி, முதல்வன் புதல்வன் என்பதற்கு – யாவர்க்கும்
முதல்வனாகிய திருமாலினது அவதாரமான வியாசமுனிவனுக்கு மகனாகிய
திருதராட்டிர னென உரைத்தலுமொன்று. இரண்டாமடியால், வீடுமனைத்
திருதராட்டிரன் தனக்குக் கண்ணாகக் கருதியிருந்தமை விளங்கும். பி-ம்:
அயலுற்றென்ன.      

செங் கண் அரவக் கொடியோன், ‘சேனாபதியாய் நாளை
இங்கு முனையில் நிற்பார் யார்?’ என்று எண்ணும் எல்லை,
அங்கர் பூபன், ‘யானே அமரில் தலைவன் ஆகி,
கங்கை மைந்தன் சொன்ன பரிசே காப்பன்’ என்றான்.50.-இனிச்சேனாபதியாகுபவர் யாரென்று துரியோதனன் எண்ணுகையில்,
கர்ணன் தான் சேனாபதியாவே னெனல்.

செம் கண் அரவம் கொடியோன் – (கோபத்தாற்) சிவந்த
கண்களையுடைய துரியோதனன், ‘இங்கு – இப்பக்கத்தில், சேனாபதி ஆய் –
சேனைத்தலைவனாய், நாளை – நாளைக்கு, முனையில்-போர்க்களத்தில், நிற்பார்-
நிற்கவல்லவர்,யார்?’என்றுஎண்ணும் எல்லை – என்று ஆலோசிக்கும் பொழுது,-
அங்கர் பூபன் – அங்க நாட்டாரரசனான கர்ணன், ‘யானே-,அமரார் வானத்து
அமர-பகைவர்கள் மேலுலகத்துச் செல்லும்படி, கங்கை மைந்தன் சொன்ன பரிசுஏ –
வீடுமன்சொன்னபடியே, காப்பன் – (சேனைத்தலைவனாய் நம்சேனையைக்)
காப்பேன்,’ என்றான்-என்றுசொன்னான்; (எ-று.) 

     கங்கைமைந்தன் சொன்னதை, கீழ் நாற்பத்துநான்காங்கவியிற் காண்க.
கர்ணன்வீடுமனிடஞ் சென்று அவனைக் கண்டு பேசித் தான் சேனாபதியாகும்படி
அவனிடம் விடைபெற்றுவந்தானென இங்கே முதனூல் கூறும். அமரார் – (தம்மை)
விரும்பிச் சேராதவர். பி – ம்: அமரிற்றலைவனாகி.    

தானாதிகனே! நீ வெஞ் சமரில் சேனைத் தலைவன்
ஆனால், அரசாய் நிற்பார் யார்?’ என்று அவனை விலக்கி,
‘மீன் ஆர் கொடியோன்தன்னை வென்ற வேதக் கொடியோய்!
சேனாபதியாக!’ என்றான், தீ வாய் நாகக் கொடியோன்.51.-தனக்குத் துணையாக நிற்பவர் ஒருவருமில்லையென்று
அக்கர்ணனைத்துரியோதனன்
விலக்கித் துரோணனைச் சேனாபதியாகெனல்.

(அதுகேட்டு), தீ வாய் நாகம் கொடியோன்- விஷாக்கினியை உமிழும்
வாயையுடைய பாம்பைக் கொடியிலுடைய துரியோதனன், (கர்ணணை நோக்கி),
‘தான அதிகனே – ஈகையால் மேம்பட்டவனே! நீ-, வெம்சமரில் –
கொடியயுத்தத்தில், சேனை தலைவன் ஆனால்-சேனாதிபதியாய் விட்டால், அரசு
ஆய் நிற்பார் யார் – (என்னுடன் பிரதான) அரசனாய்நிற்பவர் வேறுயாவர்?
[எவருமில்லையே என்றபடி],’ என்று-என்றுசொல்லி, அவனை விலக்கி –
அக்கர்ணனை (ச்சேனைத்தலைமை பூணுதலினின்றி) விலக்கி (துரோணனை
நோக்கி), ‘மீன் ஆர் கொடியோன்தன்னை-மீன்பொருந்தின கொடியையுடைய
மன்மதனையும், வென்ற-(போர்த்திறத்தில்) சயித்த, வேதம் கொடியோய்-
வேதமெழுதிய கொடியை யுடையவனே! சேனாபதி ஆக-(நீ)
சேனைத்தலைவனாகுக,’ என்றான்-என்று பிரார்த்தித்தான்; (எ-று.)

     காமமுதலிய குற்றங்களை ஒழித்தவனென்றும், மன்மதனை வென்ற
சிவபிரானோ டொத்தவனென்றும் மூன்றாமடிக்குக் கருத்துக்கொள்ளல் சாலும்.
உயர்ந்த சாதியில் சிறந்தகுலத்திற்பிறந்த வனாதலாலும், பிராய அறிவு
ஒழுக்கங்களில்முதிர்ச்சியுடையவனாதலாலும், அஸ்திரசஸ்திர வித்தைகளில் சிறந்த
அநேகர்க்கும்ஆசிரிய னாதலாலும், துரோணன்
சேனைத்தலைவனாக்கப்பட்டான்.

சிலை ஆசிரியன் வேந்தர் வேந்தன் சேனைக்கு எல்லாம்
தலையாய், மன்னர் யாரும் தன்னை வந்து சூழ,
கொலை ஆர் பகழி வெள்ளம் மார்பம்தோறும் கோத்து,
தொலையா வெம் போர் தொலைக்கத் துணிந்தான்;
எவரும் துயின்றார்.52.-துரோணன் சேனாபதியாயிருத்தற்கு உடம்பட, யாவருந் துயிலுதல்.

சிலை ஆசிரியன்-வில்லாசிரியனாகிய துரோணன், வேந்தர்
வேந்தன்சேனை தனக்கு தலைஆய்-துரியோதனனதுசேனைக்குத் தலைவனாய்,
மன்னர்யார்உம் தன்னை வந்து சூழ – அரசர்களெல்லோரும் தன்னை
வந்துசூழ்ந்திட,-கொலை ஆர்-கொல்லுதல் தொழில் மிக்க, பகழி வெள்ளம் –
பாண வருஷத்தை,மார்பம் தோறுஉம்-(பகைவீரர்களது) மார்பிலெல்லாம், கோத்து-
தொடுத்து,தொலையாவெம் போர்-நீங்காத கொடிய போரை,  தொலைக்க-
செய்துமுடிக்க, துணிந்தான்-நிச்சயித்தான்; (பின்பு அவ்விரவில்), எவர்உம்
துயின்றார்-எல்லோரும்உறங்கினார்கள்; (எ-று.)-பி-ம்: சேனைக்கெல்லாம்

வருணன் மைந்தன் பாடு வருணற்கு உரைத்து, மீளத்
தருண மைந்தன் விசயம் சதமகத்தோன் கேட்ப,
இருள் நிறைந்த கங்குல் ஏங்கி முன்னே ஓட,
அருணன் பொன்-தேர் தூண்ட, அருக்கன் குணபால்
அடைந்தான்.53.-சூரியோதய வருணனை.

அருக்கன் – சூரியன், வருணன் மைந்தன் பாடு வருணற்கு
உரைத்து-வருணனுக்குக்குமாரனானவீடுமன் அழிந்ததை (முந்தினநாள்மாலையில்)
வருணனுக்குச் சொல்லி, மீள – பின்பு, தருணம் மைந்தன் விசயம் சதமகத்தோன்
கேட்ப – இளமையையுடைய மகனான அருச்சுனனது வெற்றியை (அவன்
தந்தையான) இந்திரன் கேட்க(ச்சொல்லும்படி), இருள் நிறைந்த கங்குல் ஏங்கி
முன்னேஓட)-இருட்டு நிறைந்த இராத்திரி பயந்து முன்னே ஓட பொன் தேர்
அருணன் தூண்ட-(தனது) அழகியதேரை அருணன் செலுத்த, குணபால்
அடைந்தான் – கீழ்திசையைச்சேர்ந்தான்; (எ-று.)

     தற்குறிப்பேற்றவணி. கீழ் நாற்பத்தாறாங்கவியிற் கூறியதை இப்பாட்டின்
முதலில் அனுவதித்தார். சதமகத்தோன்-நூறு (அசுவமேத) யாகங்களைச் செய்தவன்.
கேட்ப, ஓட, தூண்ட, அடைந்தான் என்க.     

——————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

 

ஸ்ரீ.வில்லிபாரதம் – இரண்டாம் பாகம் -11. சூதுபோர்ச் சருக்கம்- ஸ்ரீ.உ.வே.சே.கிருஷ்ணமாசாரியர் ஸ்ரீ உ.வே.வை.மு.கோபாலகிருஷ்ணமாசாரியர் உரைகள்

September 17, 2023

தாமரை அனைய செங் கண் தரணிபன் இராயசூய
மா மகம் முற்றி, தங்கள் மா நகர் புகுந்த பின்னர்,
நா மரு பனுவல் மாலை நாக ஏறு உயர்த்த செல்வக்
கோமகன், இளைஞரோடும், குறித்தது கூறலுற்றாம்:-கவிக்கூற்று.

தாமரை அனைய – செந்தாமரை மலர்போன்ற, செம் கண்-
சிவந்த கண்களையுடைய, தரணிபன் – யுதிஷ்டிரமகாராஜன் (செய்த),
இராயசூயம் மா மகம் – இராயசூயமென்று பெயர் கொண்ட பெரிய யாகத்தை,
முற்றி – நிறைவேற்றி, தங்கள் மா நகர் புகுந்த பின்னர் – (துரியோதனன்
முதலியோர்) தம் தமது பெரியநகரத்தைச் சேர்ந்த பின்பு,- நா மரு –
(கவிகளின்) நாக்கிற் பொருந்திய, பனுவல் மாலை – பிரபந்தங்களாகிய
மாலையைச் சூடியவனும், நாகம் ஏறு உயர்த்த-பெரிய பாம்புக்கொடியை உயர
எடுத்துள்ளவனும், செல்வம் கோ மகன் – செல்வத்திற்குஉரிய
திருதராஷ்டிரமகாராஜனது புதல்வனுமாகிய துரியோதனன், இளைஞரோடும்
குறித்தது – (தன்னுடைய) தம்பிமார்களோடு ஆலோசித்து நடத்திய செய்தியை,
கூறல் உற்றாம் – சொல்லத்தொடங்கினோம்; (எ – று.)

     இதனால், கவி தாம் இச்சருக்கத்திற் சொல்லப் போகின்ற விஷயத்தை
இன்னதெனத் தொகுத்துரைத்தார்; இது ‘தொகுத்துச் சுட்டல்’என்னும் உத்தி.
தனது தந்தையாகிய பாண்டுமகாராஜாபித்ருலோகத்திலிருந்து நாரதமகாரிஷி
மூலமாகச் சொல்லியனுப்பியபடி யுதிஷ்டிரராஜன் இப்பெருவேள்வியைச்
செய்துமுடித்தனனென அறிக.  ‘தங்கள் மாநகர் புகுந்தபின்னர்’ என்றது,
கவிதாம் கூறப்போகின்ற வரலாற்றின் தொடக்கத்திற்கு எல்லை கூறியவாறு;
அநுவாதமன்று.  துரியோதனனிடத்துச் சன்மானம் பெறுதற்காகக் கவிகள்
பலவகைத் தோத்திரப் பிரபந்தங்களை அவன் மீது பாடுவரென்க;  அவ்வாறு
பாடப்பட்ட செய்யுட் கோவைகள் அன்போடு சூட்டப்படுகிற
மாலைபோலிருத்தலால், ‘பனுவன்மாலை’ எனப்பட்டன.  திருதராஷ்டிரன்
மூத்தவனாதலால் அரசிற்கு உரியவனென்ற காரணம்பற்றி, ‘செல்வக்கோ’
எனப்பட்டான்;  இனி, செல்வம் என்பதை கோமகனுக்கு அடைமொழியாக்கி,
செல்வச்சிறப்புள்ள ராஜகுமாரன் எனினுமாம்.  “வரம்பிலா நிதிகள்யாவுங்,
கானலங் கடல் சூழ்வையங் காவலன் காவலென்றான்” என்று கீழ்
இராயசூயச்சருக்கத்துக் கூறியவாறு தருமபுத்திரனது கட்டளைப்படி ராயசூய
யாகத்தில் தநாத்யட்சனாயிருந்ததனாலும், துரியோதனனை ‘செல்வக்கோமகன்’
எனத்தகும்;  அச்சமயத்தில் தருமனது செல்வப்பெருக்கு முழுவதையும்
நன்றாகக் கண்டு பொறாமை கொண்டவனென்க.  அன்றியும், துரியோதனன்
ராஜராஜனும் கையில் தநரேகையுடையவனுமாதல் காண்க.  யாகத்திற்கு வந்த
துரியோதனன் முதலியோர் தருமபுத்திரனது விருப்பத்தின்படி அவ்யாகத்திற்கு
வேண்டிய பல தொழில்களைப் புரிந்தார்களாதலால், ‘மகத்தைமுற்றி’ எனப்
பிறவினையாகக் கொள்ளப்பட்டது;  தன்வினையாகக் கொண்டால், யாகமானது
நிறைவேற எனப்பொருள்படுமாறு ‘முற்றி’ என்பதை எச்சத்திரிபாகக்
கொள்ளவேண்டும்.

    தாமரையனைய செங்கண் தரணிபன் – செந்தாமரைக்கண்ணனும்
(கொடியவர் பலர் ஒருங்கு நிறைந்ததனாலாகிய பூமிபாரத்தைத் தீர்த்துப்)
பூமிதேவியைக் காக்கத் திருவவதாரஞ் செய்துள்ளவனுமான கண்ணபிரான்,
இராயசூயமாமகம் முற்றி – (தருமபுத்திரனது) சிறந்த ராயசூயயாகத்தை
நிறைவேற்றி, தங்கள் மாநகர் புகுந்தபின்னர் – தங்கட்கு உரிய சிறந்தநகரமாகிய
துவாரகாபுரிக்குச் சென்ற பின்பு, துரியோதனன் தனது தம்பிமாரோடும்
ஆலோசித்துச்செய்த காரியத்தை இனிச் சொல்லத் தொடங்கினோம் என்று
இச்செய்யுளுக்குப் பொருளுரைப்பின், கண்ணன் பாண்டவர்களுக்கு உதவியாக
அவர்களுடைய இந்திரப்பிரஸ்த நகரத்திலில்லாத சமயம் பார்த்துத்
துரியோதனாதியர் சூழ்ச்சி செய்யலாயின ரென்பது போதரும்.  இப்பொருளில்,
‘தங்கள்’ என்பது மரியாதைப்பன்மை யென்னவேண்டும்.  மேல் 17, 18, 19-
ஆஞ் செய்யுள்களையுங் காண்க.  முன்னிரண்டடி – கீழ் இராயசூயச்சருக்கத்து
151 – ஆஞ் செய்யுளில் “கருமுகிலனையமேனியங் கருணைக்
கண்ணனுங்கிளையுடன் துவரைத், திருநகரடைந்தான் சென்று
வன்றிறல்கூர்சேதிபப்பெரும்பகை செகுத்தே” என்றதன் அநுவாதமாம்.
தருமபுத்திரனது ராயசூயயாகம் இனிது நிறைவேறுவதற்குக் கண்ணன்
பலபடியாலும் உதவியமை பிரசித்தம்.

     கண்கள் சிவந்திருத்தல், உத்தமபுருஷ லஷணம். செவ்வரிபரந்திருத்தலால்,
கண்களுக்குச் செந்தாமரைமலர் உவமை.  தரணிபன் – பூமியைக் காப்பவன்;
இராயசூயம் என்ற யாகப் பெயரின் காரணம்: – அரசனால் சோமலதையைப்
பிழிந்து செய்யப்படுவதென்றும், ராஜா என்னும் பெயருள்ள சோமலதை
நொருக்கப்படுகிற தென்றும் வடநூல்களிற் காண்க. இது – எல்லா அரசர்களையும்
வென்று அவர்களிடங்கொண்ட பொருளைச் செலவிட்டுச் செய்வதொரு
பெருவேள்வி.

     ஏறு – ஆண்மைப்பெயர்;  சிறந்ததையும் பெரியதையும் ஏறென்றல், மரபு.
ஏறாகிய நாகம் எனக் கூட்டுக.  உயர்த்த மகன் என இயையும்.  நாகம் –
நகத்தில் [மரத்தில் அல்லது மலையில்] வாழ்வது என்று பொருள்பெறும்.
நாகவேறு என்பது – இங்கே, அதன்வடிவத்தை யெழுதிய துவசத்துக்குத்
தானியாகுபெயர்.  தனது கொடுமைக்கு அடையாளமாகத் துரியோதனன்
பாம்பைத் தனது கொடியிற்கொண்டனன்; அது – அவனது நன்றியறிவின்மைக்கும்,
எப்பொழுதும் வக்கிரகதியிற் செல்லுந் தன்மைக்கும், நாவிரண்டுடைமைக்கும்
அறிகுறியாகின்றது.  குறித்தது – பெயர்;  இங்கு, இச்சொல் – குறித்துச்செய்த
செயலுக்கு இலக்கணை. கூறலுற்றாம் – கவிகளுக்குரிய இயற்கைத் தனித்
தன்மைப்பன்மை.

     இதுமுதல் ஐம்பத்தொரு கவிகள் – பெரும்பாலும் ஒன்று நான்காஞ்சீர்கள்
விளச்சீர்களும், மற்றைநான்கும் மாச்சீர்களுமாகிய கழிநெடிலடிநான்குகொண்ட
அறுசீராசிரியவிருத்தங்கள்.  இவற்றில் மூன்று ஆறாஞ்சீர்கள் தேமாச்சீர்
களாகவே நிற்கும்.        

கணை வரும் வரி வில் வாழ்க்கைக் கடுங் கனல்
அனைய தோற்றத்
துணைவரும் தானும், கங்கா சுதனும், மற்று எவரும், சூழ,-
இணை வரும் அரசர் இல்லா இகல் அரிஏறு போல்வான்-
கிணை வரும் ஓதை மூதூர்க் கிளர் நெடும் புரிசை புக்கான்.–துரியோதனன் தம்பியரோடும்மற்றுமுள்ளாரோடும்
அத்தினாபுரி சேர்தல். 

இணை வரும் அரசர் இல்லா – (தனக்கு) ஒப்பாக அமைகிற
அரசரொருவரையும் பெறாத [எல்லா அரசர்களைக் காட்டிலும் உயர்ந்த] இகல்
அரி ஏறு போல்வான்-வலிமையுள்ள ஆண் சிங்கத்தை யொத்தவனாகிய
துரியோதனன்,-கணை வரும் –  அம்புகள் (தம்மிடத்தினின்றும்) வெளிவரப்
பெற்ற, வரி வில் – கட்டமைந்தவிற்களினாற் செய்யும் போர்த்தொழிலாகிய,
வாழ்க்கை – வாழ்க்கையையும், கடுங்கனல் அனைய தோற்றம் – கொடிய
நெருப்புப்போன்ற [உக்கிரமான] தோற்றத்தையுமுடைய, துணைவரும்-(தனது)
தம்பிமார்களும், தானும்-தானுமாக, – கங்கா சுதனும் – கங்கையின் புத்திரனான
வீடுமனும், மற்று எவரும் – பற்றுமுள்ள கர்ணன் முதலியவர்களும், சூழ-
(தன்னைச்) சூழ்ந்துவர,- கிணைவரும் ஓதை-மருதப்பறையினின்று எழுகின்ற
ஓசையையுடைய, முது ஊர் – பழமையான அத்தினாபுரியினது, கிளர்நெடும்
புரிசை-விளங்குகின்ற நீண்ட மதிலின் உட்பக்கத்தில், புக்கான் – சென்று
சேர்ந்தான்; (எ – று.)

    இச்செய்யுள் – “அராவவெங்கொடியோ னாதியாவுள்ள வரசருந்
தந்நகரடைந்தார்” என்று கீழ்ச்சருக்கத்தில் வந்துள்ளதன் அநுவாதம்;
தொடர்ச்சி தோன்றக் கூறியது:  கூறியதுகூறலன்று.  வாழ்க்கை –
மகிழ்ச்சியாகச் செய்யுந் தொழில்.  எப்பொழுதும் மாறாத சினத்தையுடையரா
யிருத்தலால், துரியோதனனது துணைவர்க்கு ‘கடுங்கனலனைய தோற்றம்’ என்ற
அடைமொழி கொடுக்கப்பட்டது.  அரியேறுபோல்வான் – தன்னையெதிர்த்த
அரசர்களாகிய யானைகளை அழிக்கவல்ல சிங்கம் போன்றவனென்க.
மிருகராஜனாகிய சிங்கம்போலத் தனது திறத்தினால் ராஜ ராஜனாயுள்ளவ
னென்றவாறுமாம்.  கிணை – மருதநிலப்பறை. ”புரிசை” என்ற மதிலின் பெயர்,
இங்கு அரண்மனைக்கு இலக்கணையென்க.  துணைவரும் தானும் புக்கான் –
சிறப்பினால் ஒருமை முடிபைக்கொண்ட பால்வழுவமைதி: [நன் – பொது-27.]
அனைய-குறிப்புப்பெயரெச்சம்:  அன் – இடைச்சொற்பகுதி.

     வீடுமனை கங்காசுதன் என்றதன் விவரம்:-  முன்னொரு காலத்தில்
தேவர்கள் யாவரும் கூடிய பிரமதேவனது சபையிற் சென்று கங்காநதியின்
பெண்தெய்வம் வணங்கியபொழுது, அங்குவந்திருந்த வருணன், அவளழகை
உற்றுநோக்கிக் காதல்கொண்டான்; கங்கையும் அவன்மீது காதல்கொண்டு
எதிர்நோக்கினாள்; அதனையறிந்த நான்முகக் கடவுள், வருணனைப் பூமியில்
மானுடப் பிறப்பெடுக்கவும் கங்கையை மானுடமகளாய் அவளைச் சிலநாள்
மணந்திருக்கவும் சபித்திட்டான்:  அங்ஙனமே வருணன் குருகுலத்திற்
சந்தனுவாய்ப் பிறந்தான்;  கங்கையும் ஓர் மனிதமகளாகி ‘யான் எந்தத்
தீச்செயல் செய்யினும் மறுக்கலாகாது’ என்னுங் கோட்பாட்டினோடு அவனை
மணஞ்செய்துகொண்டாள்.  இது நிற்க:  பிரபாசனென்னும் வசு, தன்
மனைவியின் சொல்லைக்கேட்டு, வசிட்டனிடமுள்ள காமதேனுவைக்
கொள்ளைகொள்ள எண்ணினான்;  மற்றையேழு வசுக்களும் அவனுக்கு
உதவிசெய்யவே, எண்மரும் இரவிற்சென்று பசுவைக் கவர்ந்தனர்;
அதனையறிந்த வசிஷ்டமகாமுனிவன், அஷ்டவசுக்களையும் மானுடசன்ம
மெடுக்கவும், அவர்களுள் மனைவி சொற்கேட்ட பிரதானனான பிரபாசனைப்
பூமியிற் பலநாள் வாழ்ந்து பெண்ணின்ப மற்றிருக்கவும் சாபங்கொடுத்தான்.
எட்டுவசுக்களும் சந்தனுவுக்குக் கங்கையின்வயிற்றிற் பிறந்தனர்.  முதலிற்
பிறந்த ஏழு குழந்தைகளையும் பிறந்த அப்பொழுதே தாய் கங்காநதியில்
எடுத்தெறிந்து விட்டாள், எட்டாவது பிள்ளை பிறந்தவுடனே தந்தை
‘இக்குழந்தையைக் கொல்லலாகாது’ என்று மறுக்க, கங்கை கணவனை விட்டு
நீங்கினள்.  அவ்வெட்டாவது மகனே இவ்வீடுமன்.  

சென்றுழி, எவரும் தம்தம் செழு மனை எய்தி, வாசம்
துன்றிய அமளி, கங்குல் துயில் புரிந்து, எழுந்த பின்னை,
நின்ற வெம் பரிதித் தோற்றம் தொழுது, தம் நியமம் முற்றி,
வன் திறல் அரசன் கோயில் மன் அவை வந்து சேர்ந்தார்.-மறுநாள் துரியோதனனதுசபையில் யாவரும்
வந்துசேர்தல்.

எவரும் – (துரியோதனனுடன் வந்த) அரசர்களெல்லாரும்,
சென்றஉழி – (அவ்வத்தினாபுரியைப்) போய்ச் சேர்ந்த பின்பு, தம்தம்
செழுமனை எய்தி-தங்கள் தங்களுடைய வளமுள்ள வீடுகளை யடைந்து,-வாசம்
துன்றிய – வாசனைமிக்குள்ள, அமளி – மலர்ப்படுக்கையில், கங்குல் –
இரவிலே, துயில் புரிந்து – தூங்குவதைச் செய்து, எழுந்த பின்னை –
கண்விழித்து எழுந்தபிறகு, நின்ற வெம் பரிதி தோற்றம் தொழுது –
(கீழ்த்திசையிற்) பொருந்திய வெப்பமுள்ள சூரியனுடைய உதயத்தை [உதயஞ்
செய்த சூரியனை] வணங்கி, தம் நியமம் முற்றி – தாங்கள் (காலையிற்)
செய்யவேண்டிய கடமைகளையெல்லாஞ் செய்து முடித்து,-வல் திறல் அரசன்
கோயில் – மிக்கவலிமையுள்ள துரியோதன ராஜனது அரண்மனையிலுள்ள, மன்
அவை – ராஜசபையை, வந்துசேர்ந்தார் – வந்து அடைந்தார்கள்; (எ – று.)

    ராயசூயயாகம் முடிந்ததும் இந்திரப்பிரத்தத்திலிருந்து துரியோதனனோடு
வந்த அரசர்களெல்லோரும், அத்தினாபுரியையடைந்து தம்தம் மாளிகையிற்
சென்று இரவில் துயின்று, மறுநாட்காலையில் துயிலுணர்ந்து காலைக்கடன்
முடித்து மீண்டு ராஜசபையைச் சேர்ந்தன ரென்றவாறு.  சூரியோதயகாலத்தில்
தவறாமற் செய்யவேண்டிய சந்தியாவந்தநம், உபஸ்தாநம், சூரிய நமஸ்காரம்
முதலிய வைதிகநித்தியகர்மாநுஷ்டாநங்களை அவ்வரசர்கள் செய்துமுடித்தமை,
மூன்றாமடியினால் விளக்கப்பட்டது.

     சென்றுழி – பெயரெச்சத்தின் அகரவீறு தொகுத்தல்.  கோ இல்-கோவில்
என வரற்பாலது கோயிலென வந்தது, இலக்கணப்போலி:  தத்தம் – தாம்தாம்
என்பதன் விகாரமாகிய தந்தம் என்பதன் வலித்தல்.  வன்திறல் –
ஒருபொருட்பன்மொழி;  மிக்க திறமென்க.  கோயில் – அரண்மனை;
ராஜகிருகம்.  மன் – பெருமை; அதனையுடையவனுக்கு, பண்பாகுபெயர்

இறைஞ்சிய வேந்தர்க்கு எல்லாம் இருப்பு அளித்து,
எதிர்ந்த வேந்தர்
நிறம் செறி குருதி வேலான் நினைவினோடு இருந்தபோதில்,
அறம் செறி தானம், வண்மை, அளவிலாது அளித்து, நாளும்
புறம் சுவர் கோலம் செய்வான் பூபதிக்கு உரைக்கலுற்றான்:துரியோதனன் மன்னவர்கட்குஆசனமளித்துக்
கவலையுடன் இருக்க, கர்ணன் ஒன்று சொல்லத்
தொடங்குதல்.

எதிர்ந்த வேந்தர் – (தன்னை) எதிர்த்துவந்த அரசர்களது,
நிறம் – மார்பில், செறி – நிறைந்துள்ள, குருதி – இரத்தம் தோயப்பெற்ற,
வேலான் – வேலாயுதத்தை யுடையவனான (துரியோதனன்)-இறைஞ்சிய
வேந்தர்க்கு எல்லாம் – (அப்பொழுது வந்து தன்னை) வணங்கிய
அரசர்களெல்லார்க்கும், இருப்பு அளித்து – ஆசனங் கொடுத்து,
நினைவினோடு இருந்தபோதில் – (மனதிற் சிந்தையோடு) இருந்த சமயத்தில்-
அறம் செறிதானம்-தருமமார்க்கம் நிரம்பிய தானத்தையும், வண்மை-
தியாகத்தையும், நாளும்-தினந்தோறும், அளவு இலாது அளித்து-
எல்லையில்லாமற் கொடுத்து, புறம் சுவர் கோலம் செய்வான் – சுவரினது
வெளிப்புறத்தை அலங்காரஞ்செய்பவனாகிய கர்ணன், பூபதிக்கு –
அத்துரியோதன மகாராஜனுக்கு, உரைக்கல் உற்றான் – சொல்லத்
தொடங்கினான்; (எ – று).-அதனை, அடுத்த கவியிற் காண்க.

    ‘நிறஞ்செறி’ என்பதை வேலுக்கு அடைமொழியாக்கி, மார்பிற் புகுகின்ற
வேலையுடையவ னெனக் கூறலுமாம்.  இனி, முன்னிரண்டடியை
யாற்றுநீர்ப்பொருள்கோளாகக்கொண்டு தன்னை வணங்கிய அரசர்கட்கெல்லாம்
(பூமியில்) இருக்குமாறு இராச்சியங்கொடுத்து, எதிர்த்தவர்களுடைய மார்பிற்
சென்று தைத்த இரத்தந்தோய்ந்த வேலாயுதத்தையுடையவ னென்று இறைஞ்சினார்க்கு இருப்பளித்தலும் இறைஞ்சாது எதிர்ந்தாரை மார்புபிளத்தலும்
ஆகிய நன்மை தீமை இரண்டையும் வேலே செய்கின்றதெனக் கூறினும்
பொருந்தும்.  ஒருபொருட்பன்மொழியாகக்கொள்ளக்கூடிய தானம் வண்மை
என்ற இரண்டையும் ஒருங்கே கூறியதனால், தக்கவர்க்கு அளிப்பது
தானமெனவும், இன்னாரினையாரெனப் பாராது யாவர்க்கும் கொடுப்பது
வண்மையெனவும் சிறிது பொருள் வேறுபாடு காண்க.

     புகழ்பெற வேண்டுமென்ற விருப்பத்தினாற் கர்ணன் டம்பத்துக்காக
ஈகைத்தன்மையை மேற்கொண்டுள்ளானாதலால், அவனை ‘புறஞ்சுவர் கோலஞ்
செய்வான்’ என்றார்;  கர்ணன் உடம்பிற்குப் புகழைத்தருவதாகிய ஈகைக்
குணத்தை மேற்கொண்டு உயிர்க்கு உறுதியைத் தருகிற மனத்தூய்மை முதலிய
நற்குணங்களை மேற்கொள்ளாதிருப்பதற்கு, சுவரினுட்புறம் பழுது பட்டிருக்க
வெளிப்புறத்தைச் சித்திரிப்பது ஏற்ற உவமையாதல் காண்க:  இவ்வாறு
உபமானமுகத்தால் உபமேயத்தைப் பெறவைப்பது பிறிதுமொழிதலணியாம்;
இது ஒட்டணியெனவும்பெயர்பெறும்.  ஆழ்வார்களுடைய
அருளிச்செயல்களின் சொற்பொருட் கருத்துக்களைத் தமது நூலிற்
சிற்சிலவிடத்து எடுத்தாள்வது இவ்வாசிரியரது வழக்கமாதலால், ‘மறஞ்சுவர்
மதிளெடுத்து மறுமைக்கே வறுமைபூண்டு, புறஞ்சுவ ரோட்டைமாடம் புரளும்
போதறிய மாட்டீர், அறஞ்சுவராகிநின்ற அரங்கனார்க் காட்செய்யாதே,
புறஞ்சுவர் கோலஞ்செய்துபுட்கவ்வக் கிடக்கின்றீரே” என்ற
தொண்ரடிப்பொடியாழ்வாரது திருமாலைச் செய்யுளின் சொற்கருத்துக்களை
அடியொற்றி, ‘புறஞ்சுவர் கோலஞ் செய்வான்’ என்றார்.

     இருப்பு – இருத்தல்; ‘பு’ விகுதிபெற்ற தொழிற்பெயர்;  ஆகுபெயராய்,
இருக்கும் ஆசனத்தைக் குறித்தது.  புறஞ்சுவர் – சுவர்ப்புறம் என்பது
முன்பின்னாகத் தொக்க ஆறாம் வேற்றுமைத்தொகை; இலக்கணப்போலி.  சுவர்
கோலஞ்செய்வான்-“விகாரத்தியல்பு.”  பூபதி – பூமிக்கு அரசன்

தாது அவிழ் குவளை மாலைத் தருமன் மா
மதலை பெற்ற
மேதகு வேள்விச் செல்வம் வேந்தரில்
யாவர் பெற்றார்?
ஏது அளவு, அவன்தன் வாழ்க்கை? யார் இனி எதிர்
உண்டு?’ என்று
பாதக நினைவைத் தானும் பகர்ந்தனன், பரிவு கூர.-கர்ணன் வார்த்தை.

தாது அவிழ் – மகரந்தப்பொடிகளோடு மலரப்பெற்ற, குவளை
மாலை – குவளைமலர்மாலையைத் தரித்த, தருமன் மா மதலை –
தருமபுத்திரன், பெற்ற – அடைந்த, மேதகு வேள்வி செல்வம் – மேன்மையான
இயாசசூய யாகத்தைச் செய்து முடித்தலாகிய சிறப்பை, வேந்தரில் யாவர்
பெற்றார் – அரசர்களுள் எவர்தாம் பெற்றவர்? [எவரும் இல்லை யென்றபடி];
அவன் தன் வாழ்க்கை அளவு ஏது – அத்தருமபுத்திரனது செல்வ வாழ்க்கைக்கு
அளவுதான் உண்டோ? யார் இனி எதிர் உண்டு – இனி எவர்தாம்
(அத்தருமபுத்திரனுக்கு) எதிராகவுள்ளவர்?’ என்று-பரிவு கூர-
(துரியோதனனிடத்து) அன்பு மிகுதலினால், பாதகம் நினைவை – பாவத்துக்குக்
காரணமான (தனது) எண்ணத்தை, தானும்- (கர்ணன்) தானும், பகர்ந்தனன் –
சொன்னான்; (எ – று.)

     தாது – தேனுமாம்.  தருமத்தினின்று தவறியவர்க்குத் தக்க தண்டனை
செய்து தருமத்தைக் காத்தலால், யமனுக்குத் தர்மனென்று பெயர்.
கொடியவர்க்கு ஏற்ற தண்டனை செய்து நல்லவர்களை நன்கு பாதுகாக்கிற
நடுவுநிலைமையில் தந்தையாகிய யமனினும் மைந்தனாகிய யுதிஷ்டிரன்
மிகப்பலமடங்கு மேம்பட்டவனென்ற சிறப்புத்தோன்ற, ‘தருமன் மாமதலை’
என்றார்.  பாண்டவர்க்குக் குவளைப் பூமாலை உரியதாதலால், “தாதவிழ்
குவளைமாலை” எனத் தருமனுக்கு அடைமொழி கொடுக்கப்பட்டது.
முன்னாளில் இராயசூயயாகஞ் செய்து முடித்த அரசர்கள் பலருளராயினும்
மயனாற்கட்டியமைக்கப்பட்ட மண்டபச்சிறப்பும், வீமன் முதலிய
தம்பியர்திக்விஜயஞ்செய்து கொணர்ந்த திறைப்பொருட் சிறப்பும், வியாசன்
கண்ணன் முதலியோர் உடனிருந்து யாதோரிடையூறுமின்றி வேள்வியை இனிது
முடித்த மேன்மையும் முதலியனவாகப் பலவகை மேம்பாடுகள் தருமபுத்திரன்
செய்த யாகத்தில் மிக்கிருந்தனவாதலால், அது கண்டு பொறாமை கொண்ட
கர்ணன் அவ்வாறே பொறாமைகொண்டிருந்த துரியோதனனை நோக்கிக்
கூறினனென்க.  அறநெறியிற் சிறிதுந் தவறாது நடக்குந் தருமபுத்திரனைப்
பலவகையாலும் வருத்துதற்குக் காரணமாதலால், அவன் நினைவு ‘பாதக
நினைவு’ எனப்பட்டது.  தானும், உம்மை – கதைத் தொடர்ச்சி நோக்கி
இறந்தது தழுவிய எச்சப்பொருளது;  சிந்தையோடிருந்த துரியோதனனுக்குக்
கர்ணன் பாதக நினைவைப்பகர்ந்தன னென்க:  இனிச் சகுனிமுதலியோர்
கூறுவதையுந் தழுவி நிற்றலால் எதிரதுதழுவியதுமாம்.  ‘பரிவுகூர’ என்பதற்கு.
(தன் மனத்து) வருத்தம் மிக என்றும், (துரியோதனன் மனத்து) வருத்தம் மிக
என்றும் பொருள் கூறவும் இடனுண்டு.  கூர-செயவெனெச்சம்

விதரண வினோதன் சொன்ன வார்த்தையும்,
வேந்தர் வேந்தன்
இதயமும் ஒன்றாய் நின்ற இயற்கையைச்
சகுனி கண்டு,
‘புதை நக மடங்கல், நாளும் புறம் செலாது,
ஒடுங்குமானால்,
மத கரி விடுமோ?’ என்றான்-வசை இசையாகக்
கொள்வான்.-சகுனி வார்த்தை.

வசை இசை ஆக கொள்வான் – (பிறர்கூறும்) வசை
மொழிகளையே (தனக்குப்) பெரும்புகழாகக் கருதுபவனாகிய சகுனி, –
விதரணம் வினோதன் சொன்ன வார்த்தையும் – ஈகையையே
பொழுதுபோக்காகவுடையவனான கர்ணன் சொல்லிய வார்த்தையும்,
வேந்தர்வேந்தன் இதயமும்-ராஜராஜனாகிய துரியோதனனது மனக்கருத்தும்,
ஒன்று ஆய் நின்ற இயற்கையை – (மாறுபடாமல்) ஒரேவிதமாய்
ஒற்றுமைப்பட்டிருந்த தன்மையை, கண்டு-பார்த்து,-‘புதை நகம் மடங்கல்-
(யானை முதலிய விலங்குகளைக் கொல்லுதற் பொருட்டு) வெளிநீட்டாமல்
உள்ளேயே சுருக்கிக்கொண்டுள்ள நகங்களையுடைய ஆண்சிங்கமானது,
நாளும்-எப்பொழுதும், புறம் செலாது ஒடுங்கும் ஆனால்-வெளியேசெல்லாமல்
(மலைக்குகைகளிற்) பதுங்கிக்கிடந்தால், மதம் கரி விடுமோ-(அதன்முன்
அஞ்சியழிதற்கு உரிய) மதங்கொண்டுள்ள ஆண் யானை அதனை
எதிர்க்காதொழியுமோ? [எதிர்க்குமன்றோ?,’ என்றபடி] என்றான்-என்று
கூறினான்;  (எ – று.)

    தக்கசாதனங்களைப் பெற்றிருத்தலால் தருமபுத்திரனை வலியழித்து
இருந்த இடந்தெரியாது அடக்கவல்ல நீ இவ்வாறு அடங்கியிருந்தால்
தருமபுத்திரன் உன்னுடைய தகுதிதெரியாது உன்னிலும் மேம்படுகின்றானென்னும்
பொருள்பட நிற்றலால், பின்னிரண்டடி – பிறிதுமொழிதலணியாம். தனது
நகங்களை உள்வாங்கவும் வெளிநீட்டவும் வல்லதாகையால், சிங்கம்
‘புதைநகமடங்கல்’ எனப்பட்டது:  இனி, ‘புதைநகம்’ என்பதற்கு-(யானை முதலிய
விலங்குகளின் உடம்பிற்சென்று) அழுந்துகின்ற நகம் எனினுமாம்.  சகுனி
தன்மருமகனான துரியோதனனை மனத்தளர்வின்றி உற்சாகமடைவிக்கவும்,
வீரத்தால் வெல்லமுடியாத தருமனைத் தான் செய்யுஞ் சூதுவழியாற் கெடுக்குமாறு
துரியோதனனைத் தன்வழியே இசை விக்கவுங் கருதி, தருமனை யானை யென்று
தாழ்த்தியும், துரியோதனனைச் சிங்கமென்று சிறப்பித்தும் இங்ஙனம் முகமன்
கூறினனென்க.  துரியோதனனுக்கு ‘ராஜராஜன்’ என்று ஒரு பெயருள்ளதனால்,
இங்கே ‘வேந்தர்வேந்தன்’ என்றது. சகுனி – காந்தாரதேசத்து அரசன் சுபல
னென்பவனது புத்திரன்:  திருதராட்டிரனது மனைவியாகிய காந்தாரியுடன்பிறந்தவ
னாதலால், துரியோதனாதியர்க்கு மாமன்; சூதாடுவதில் மிகவல்லவன்; பழிக்குச்
சிறிதும் அஞ்சாது பிறர் கூறும் பழிமொழியையே தனக்குப்
பெரும்புகழாகப்பாவித்து அவ்வசை மிகுமாறு தீவழியிலேயே நடப்பவனென்பார்,
சகுனிக்கு ‘வசையிசையாகக் கொள்வான்’ என்று ஒரு பெயர் கூறினார்.
ஒற்றுமைப்பட்டு வாழவேண்டிய துரியோதனாதியரையும் பாண்டவரையும்
அங்ஙனம் வாழவொட்டாது பேதப்படுத்தி அத்தீச்செயல் காரணமாகச் சகுனி
மேம்படக் கருதுகின்றமை காண்க.

     கர்ணன் – இடையெழுவள்ளல்களில் ஒருவனாதலால், ‘விதரண
வினோதன்’ என்றார்;  (மற்றையோர்-அக்குரூரன், அந்திமான், அரிச்சந்திரன்,
சந்திமான், சிசுபாலன், தந்தவக்கிரன் என்பர்) மடங்கல் – பிடரிமயிர்
மடங்கப்பெற்றதென ஆண்சிங்கத்திற்குக் காரணக்குறி.  கரீ – கரத்தையுடையது
எனக் காரணப்பொருள்படும்:  கரம் – கை:  இங்கே, துதிக்கை.  ஈற்றடியில்,
முரண்தொடைகாண்க.   

சொல்லிடை நஞ்சு கக்கும் துன் மதி உடைய தம்பி,
வில் இடை நின்று, தம்முன் வெம் மனம்
களிக்கச் சொன்னான்-
‘அல் இடை நிறைந்ததேனும், அமுத வெண்
கிரணத் திங்கள்
எல்லிடை இரவி முன்னர் எவ்வுழி நிகர்க்கும்?’ என்றே.துச்சாசனன் வார்த்தை.

சொல் இடை நஞ்சு கக்கும் துன்மதி உடைய தம்பி –
சொல்லுஞ்சொற்களிலே விஷஞ்சொரியும்படியான [மிகக் கொடிய
சொற்களையுடைய] தீய அறிவுள்ள தம்பியாகிய துச்சாசனன்,-வில் இடைநின்று
– (துரியோதனனுக்கு எதிரில்) விற்கிடை தூரத்தில் நின்றுகொண்டு, ‘அல்லிடை
நிறைந்தது ஏனும்-இராக்காலத்தில் ஒளிமிக்கு விளங்குவதாயினும், வெள்அமுதம்
கிரணம் திங்கள் – வெண்மையாகிய அமிருதமயமான ஒளியையுடைய சந்திரன்;
எல்லிடை – பகற்காலத்தில், இரவி முன்னர் – சூரியனது எதிரில், எ உழி
நிகர்க்கும் – எவ்வாறு ஒத்திருக்கும்?’ என்று-, தம்முன் வெம் மனம் களிக்க –
தமையனாகிய துரியோதனனது கொடிய மனம் மகிழ்ச்சியடையுமாறு,
சொன்னான்-; (எ – று.)- ஏ – ஈற்றசை.

    இராக்காலத்திலே நட்சத்திரக்கூட்டங்களிடையிற் சந்திரன் ஒளி
மிக்குத்தோன்றினாலும் பகற்காலத்திலே சூரியனொருவனுக்கு முன் ஒளி
மழுங்குதல்போல, தருமபுத்திரன் பல சிற்றரசர்களிடையில் மிக்க மேம்பாடு
பெற்று விளங்கினாலும் ராஜராஜனான துரியோதனனாகிய உனக்கு முன்னே
சிறிதும் மேன்மை பெற்று விளங்கானென்பது, பின்னிரண்டடிகளின் கருத்து;
உபமானமே உபமேயக்கருத்தை விளக்கிநிற்றலால், பிறிதுமொழிதலணி. நாம்
அடங்கியிருக்கிற இச்சமயத்தில் தருமபுத்திரன் சிறப்புற்று விளங்கினாலும், நாம்
வெம்மையோடு எழுமிடத்து அவன் அடங்கியேவிடுவ னென்ற குறிப்பு, இது.
‘சொல்லிடைநஞ்சு கக்குந் துன்மதியுடைய’ என்ற அடைமொழியினால், ‘தம்பி’
என்றது-எல்லாத் தம்பிமார்களினும் மிக்க கொடுமையையுடையவனான
துச்சாசனனைக் குறித்தது:  ஆகவே, துரியோதனன், கர்ணன், சகுனி,
துச்சாசனன் என்ற துஷ்டசதுஷ்டர்கள் கீழ் 5 – ஆஞ் செய்யுள் தொடங்கி
முறையே கூறப்பட்டுள்ளவாறு காண்க.  வில் இடை – ஒருவில் கிடத்தற்கு
உரிய இடம்; அது, நான்கு முழதூரமுள்ளது.  சந்திரன் அமிருத கிரண
னாதனாலால், ‘அமுத வெண் கிரணத்திங்கள்’ எனப்பட்டான்.  கிரணம் –
தற்சமவடசொல்.  தம்பி, தாம்-பகுதி, பி – முறைப்பெயர்விகுதி.  முன் –
காலவாகு பெயர்.

தமையனும் தம்பி சொன்ன தன்மையை உணர்ந்து, நீதி
அமைதரு தந்தை கேட்ப, அவன் பெருந்தாதை கேட்ப,
கமை பெறு விதுரன் கேட்ப, கார்முகக் கன்னன் கேட்ப,
இமையவன் துரோணன் கேட்ப, யாவரும்
கேட்ப, சொல்வான்:துரியோதனன் பேசத்தொடங்குதல்.

தமையனும்- (அத்துச்சாசனனுக்கு) அண்ணனாகிய
துரியோதனனும், தம்பி சொன்ன தன்மையை உணர்ந்து – தனது தம்பியாகிய
துச்சாசனன் சொன்ன வகையை அறிந்து,-நீதி அமைதருதந்தை கேட்ப –
நியாயமார்க்கம் பொருந்தப்பெற்ற (தனது) பெற்ற தந்தையான திருதராஷ்டிரன்
கேட்கவும்,-அவன் பெருந்தாதை கேட்ப – அத்திருதராட்டிரனது பெரிய
தந்தையாகிய வீடுமன் கேட்கவும், கமை பெறு விதுரன் கேட்ப –
பொறுமையைக் கொண்டுள்ள விதுரன் கேட்கவும்,-கார்முகம் கன்னன் கேட்ப –
விற்போரில்வல்ல கர்ணன் கேட்கவும்,- இமையவன் துரோணன்கேட்ப –
(பூமியில்) தேவன்போல விளங்குகின்றவனான துரோணாசாரியன் கேட்கவும்,-
யாவரும் கேட்ப – மற்றும் அங்கு வந்துள்ளவர்களெல்லாரும் கேட்கவும்,-
சொல்வான் – கூறுபவனானான்;  (எ – று.)-அதனை, அடுத்த மூன்று
கவிகளிற்காண்க.

    இயற்கையில் திருதராட்டிரன் தன் தம்பிமக்களான பாண்டவரிடத்தும்
அன்புகொண்டு நடந்துவந்தானாதலால், அவனை ‘நீதி யமைதருதந்தை’
என்றார்;   அன்றி, ராஜநீதியில் தவறாது நடத்தலால் அவ்வாறு கூறினா
ரென்றலு மொன்று.  இனி, நீதி அமைதரு – நியாயம் அடங்கிவிடப்பெற்ற
[நீதியொழிந்த] என்றலுமொன்று.  அத்திருதராட்டிரனது தந்தையாகிய
விசித்திரவீரியனுக்கு மூத்தவனாதலால், வீடுமன் அவனுக்குப்
பெரியதந்தையாவன்.

     விதுரன் – அம்பிகையாலேவியனுப்பப்பட்ட தாதிப்பெண்ணினிடத்து
வியாசனுக்குப் பிறந்தவன்:  விற்போர்த்திறத்தில் மற்றையாவரினும்
மிகவல்லவன்:  “ஞானகஞ்சுகவிதுரன்” என்று சிறப்பித்துக் கூறும்படி
தத்துவஜ்ஞாநம் அமையப்பெற்றவன்:  இவனை யமதருமராஜனது
அமிசமென்றும், பரமபாகவதர்களில் ஒருவனென்றும் நூல்கள் கூறும்.

     கன்னன் – கர்ணகுண்டலங்களோடு பிறந்தமைபற்றியது;  காதின்
வழியே பிறந்ததனால் வந்த பெயரென்றுங் கூறுவர்;  கர்ணம் – காது.
பாண்டவர்கள் தாயான குந்திதேவி கன்னிகையாயிருந்தபொழுது தனக்குத்
துருவாசமுனிவ ருபதேசித்த மந்திரத்தைப் பரீட்சித்தறிதற் பொருட்டுச்
சூரியனை நினைத்து அம்மந்திரத்தை உச்சரிக்க, உடனே அத்தேவன் வந்து
அவளுக்கு அநுக்கிரகித்ததனால், அவளிடம் பிறந்த புத்திரன் இவன்;
இவனைப் பிறந்தபொழுதே பழிக்கு அஞ்சி மிதக்கும் மரப்பெட்டியொன்றில்
வைத்துப் பூட்டிக் கங்கையாற்றில் விட்டிட, அதனைத் திருதராட்டிரனது
தேர்ப்பாகனான அதிரதனென்பவன் கண்டு எடுத்துத் திறந்து பார்த்துக்
கொண்டுபோய்த் தன் மனைவியான ராதையுந்தானுமாக வசுசேன னென்று
பெயரிட்டு வளர்த்தான்.  இவனுக்கு கர்ணனென்ற பெயர், ஆகாசவாணி
யிட்டது.  “ஆதபன் இவனை யாரும் கன்னனென் றழைக்க என்றான்” எனக்
கிருட்டிணன் தூதுசருக்கத்து வருதல் காண்க.  பின்பு இவன் துரியோதனனுக்குப்
பிராணசினேகிதனாகி அவனருளால் அங்கதேசத்துக்கு அரசனாயினான்.

     துரோணன்-துரோண கும்பத்தினின்று தோன்றியவன்.  பரத்து வாச
முனிவனது குமாரன்;  கிருபாசார்ய னுடன்பிறந்தவளான கிருபியின் கணவன்;
அசுவத்தாமனது தந்தை;  சகல சாஸ்திரங்களையும் தன் பிதாவினிடங் கற்றுப்
படைத்தொழிலைப் பரசுராமனிடத்து ஏழு நாளிற் பயின்றவன்;
துரியோதனாதியர்க்கும் பாண்டவர்க்கும் அஸ்திர சஸ்திரங்களைக் கற்பித்த
ஆசிரியன்.  இமையவன் – இமையில் மூடாமையாகிய விசேஷம் பெற்றவன்.
அன்றி, இமயமலையில் வாழ்பவன் என, தேவசாதியானுக்குக் காரணக்குறி.
இங்கு, துரோணனை ‘இமையவன்’ என்றது, பூமியில் தேவர்போல விளங்குகிற
காரணம்பற்றிப் பூசுரரென்று வழங்கப்படுகிற அந்தணரது சாதியிற்
பிறந்தவனாதலால். ‘கேட்ப’ என்ற சொல் ஒரே பொருளில் பலமுறை வந்தது –
சொற்பொருட்பின்வருநிலையணி. ‘யாவரும்’ என்றது – கிருபனையும்
அசுவத்தாமாவையும், மற்றும் அங்கு வந்துள்ள அரசர்களையுங் குறிக்கும்.

    கார்முகம் – போர்தொழிற்குச் சிறந்தது என்று பொருள்படும்.  கர்ணனது
வில், ‘காலப்ருஷ்டம்’ என்று பெயர்பெறும். 

இந்திரன் முதலா உள்ள இமையவர் சிறப்புச் செய்ய,
சுந்தரப் பொன்-தோள் வேந்தர் தொழில் புரிந்து
ஏவல் செய்ய,
மந்திர முனிவர் வேள்வி மறை நெறி முறையின் செய்ய,
தந்திர வெள்ளச் சேனைத் தருமனே தலைவன் ஆனான்;மூன்றுகவிகள் – ஒருதொடர்:துரியோதனன் வார்த்தை.

இந்திரன் முதல் ஆ உள்ள இமையவர் – இந்திரன் முதலான
தேவர்கள், சிறப்பு செய்ய – பெருமைப்படுத்தவும், சுந்தரம் பொன் தோற்
வேந்தர் – அழகிய பொன்னாபரணங்களைத் தரித்த தோள்களையுடைய
(நிலவுலகத்து) அரசர்கள், ஏவல் தொழில் புரிந்துசெய்ய – (தான்) ஏவிய
தொழில்களை விரும்பிச் செய்யவும், மந்திரம் முனிவர் –
வேதமந்திரங்களில்வல்ல முனிவர்கள், வேள்வி மறைநெறி முறையின் செய்ய –
ராஜசூய யாகத்தை வேதவிதிப்படியே தவறில்லாமற் செய்யவும், (இவ்வாறு),
தந்திரம் வெள்ளம் சேனை தருமனே – கூட்டமான வெள்ள மென்னும்
பெருந்தொகையுள்ள சேனைகளையுடைய தருமபுத்திரனே, தலைவன் ஆனான்
– சிறப்புப் பெற்று விளங்கினான்; (எ – று.)

    விண்ணுலகத்தாரான தேவர்களும் மண்ணுலகத்தாரான அரசர்களும்
இரண்டிடத்திலுமிருப்பவரான முனிவர்களும் தருமபுத்திரனது கருத்தின்படியே
இராஜசூயயாகத்தை இனிதுமுடித்ததனால், அத்தருமபுத்திரன் மண்ணிலும்
விண்ணிலும் புகழ் படைத்து ‘ஸம்ராட்’ என்னும் பட்டம்பெற்று மேன்மையுற்று
விளங்கின னென்றவாறாம்.

    ‘இமையவர்சிறப்புச் செய்ய’ என்றது, யாககாலத்தில் தேவர்கள்
அவ்வப்பொழுது தம்தமக்கு உரிய அவிர்ப்பாகங்களைப் பெற்றுப் பெருமைப்
படுத்தியதைக் குறிக்கும்.  ‘முனிவர்’ என்றது – நாரதர் முதலிய
தேவவிருடிகளையும், வியாசன் முதலிய இவ்வுலகத்து இருடியரையும் குறிக்கும்.
‘தந்திரவெள்ளச்சேனை’ என்பதற்கு – போர்நூலில் தேர்ச்சிபெற்ற
வெள்ளக்கணக்கான சேனையென்றும், வெள்ளக்கணக்கான காலாட் படைகளும்
[தந்திரம் – காலாள்] மற்றச்சேனைகளும் என்றும் பொருள் கூறுவாரு முளர்.
வெள்ளம் – ஓர் பெருந்தொகை; மிகப்பல அகௌகிணி கொண்டது.
(யானையொன்றும், தேரொன்றும், குதிரைமூன்றும், காலாளைந்தும் கொண்டது –
பத்தி யெனப்படும்; அப்பத்தி மூன்றுபங்கு கொண்டது – சேனாமுகம்;
சேனாமுகம் மூன்று – குல்மம்.  குல்மம் மூன்று – கணம்; கணம் மூன்று –
வாகினி. வாகினி மூன்று – பிரதனை; பிரதனைமூன்று – சமூ. சமூமூன்று –
அநீகினி; அநீகினி பத்து – அகௌகிணி; அகௌகிணி எட்டுப்பங்கு
கொண்டது – ஏகம்; ஏகம் எட்டு – கோடி; கோடியெட்டு – சங்கம்; சங்கம்
எட்டு – விந்தம்;  விந்தம் எட்டு – குமுதம்; குமுதம் எட்டு – பதுமம்;
பதுமம்எட்டு – நாடு; நாடுஎட்டு – சமுத்திரம்; அந்தச்சமுத்திரம்
எட்டுப்பங்குகொண்டது – வெள்ளம் எனக் காண்க.) ‘தந்தையே மைந்தனாகப்
பிறக்கின்றான்’ என்னும் நூல் வழக்குப்பற்றி, தருமபுத்திரனைத் தருமனென்றே
கூறினார்.

    இந்திரன் – பரமைசுவரியமுடையவ னென்றும், மந்திரம் – (தன்னைக்)
கருதி ஜபிப்பவர்களைக் காப்பதென்றும், முநி – மநநசீலன் [மநநம்-கடவுளைத்
தியானித்தல்) என்றும் பொருள்படும். பொன் – ஆபரணத்துக்கு
கருவியாகுபெயர்.  இனி, ‘சுந்தரம் பொன் தோள் வேந்தர்’ – அழகிய
வீரலட்சுமி பொருந்தப்பெற்ற தோள்களையுடைய அரசர்களெனினுமாம்

இனி, அவன், சில் நாள் செல்லின், எம்மனோர்
வாழ்வும் கொள்ளும்;
துனை வரும் புரவித் திண் தேர்த் துணைவரும் சூரர் ஆனார்;
முனை வரு கூர் முள் வேலை முளையிலே களையின் அல்லால்,
நனி வர வயிர்த்தபோது நவியமும் மடியும் அன்றே?

துனை வரும் புரவி திண் தேர் துணைவரும் – வேகமாகச்
செல்லுகிற குதிரைகள்பூட்டிய வலியதேரையுடைய (அவனது) தம்பிமார்களும்,
சூரர் ஆனார் – பராக்கிரமசாலிக ளாய் விட்டார்கள்; அவன் – அத்தருமன்,-
இனி சில நாள் செல்லின் – இன்னும் சிலநாள் சென்றால், எம்மனோர் வாழ்வும்
கொள்ளும் – எமது செல்வவாழ்க்கையையும் பறித்துக் கொள்வான்;  கூர்முனை
வரு முள் வேலை – கூர்நுனிபொருந்திய முட்களையுடைய வேலமரத்தை,
முளையிலே களையின் அல்லால் – சிறுசெடியாயிருக்கையிலே பிடுங்கி
யெறிந்துவிட்டா லல்லாமல், நனி வர வயிர்த்தபோது – (நாட்சென்று) மிகுதியாக
வயிரங்கொண்டபோது, (அம்மரத்தைக்களைய நினைத்து
வெட்டத்தொடங்கினால்), நவியமும் மடியும் அன்றே – கோடாலிப் படையும்
(கூர்மழுங்கி) வாய்மடிந்து விடுமன்றோ; (எ – று.)-அன்றே – தேற்றம்;
ஈற்றசையுமாம்.

    தருமபுத்திரனும் தலைவனாய்த் தம்பியரும் சூரராய்வருதலால்,
இப்பொழுதே நாம் அவர்களை வலியடக்கமுயன்றால் முடியுமேயன்றி, இன்னும்
நாட்செல்லவிட்டால் அப்பாண்டவர்கள் மேலும் வலிமைமிக்கு நம்மையே
யழிப்பரென்றவாறு;  “எதிர்த்த பகையை இளைதாயபோழ்தே,
கதித்துக்களையின் முதிராது” என்பது பழமொழி.  பகை தோன்றினால் அதனை
முதிரவொட்டாமல் தோன்றிய அப்பொழுதே களைதல்வேண்டும்;
முதிரவிட்டால் பிறகு அது வலிப்பட்டுத் தன்னையே வருத்தும் என்பது,
பின்னிரண்டடியின் கருத்து; பிறிதுமொழிதலணி.  “இளைதாக
முண்மரங்கொல்க ளையுநர், கைகொல்லுங் காழ்த்தவிடத்து” என்றார்
திருவள்ளுவரும்.

    சில+நாள்=சின்னாள்: “பலசில” என்னுஞ் சூத்திரவிதி.  நாங்கள் என்ற
பொருளில் ‘எம்மனோர்’ என்றது – ஒப்பில்போலி.  வாழ்வு – வாழ்க்கைக்குக்
காரணமான செல்வம் முதலியவற்றிற்கு ஆகுபெயர்.  உம் – தாங்கள்
பெருமைப்படுவதோடு என்ற பொருளைத் தருவதால், இறந்தது தழுவிய எச்சம்.
வயிர்த்தல் – வயிரமேறுதல்.  நவியமும், உம்மை – உயர்வுசிறப்பு

போது உற விரைந்து, மற்று அப் புரவலன் செல்வம் யாவும்
பேதுறக் கவர்ந்திலேனேல், பின்னை யார் முடிக்க வல்லார்?
மோதுறப் பொருதே ஆதல், மொழி ஒணா வஞ்சம் ஒன்று
தீது உறப் புரிந்தே ஆதல், கொள்வதே சிந்தை’ என்றான்.

அ புரவலன் செல்வம் யாவும் – அந்தத் தருமபுத்திரனது
செல்வங்களெல்லாவற்றையும், போதுஉற – (மேன்மைப்படத் தொடங்கிய)
இக்காலத்திலேயே, விரைந்து – விரைவு கொண்டு, பேதுஉற-(அவன்)
திகைப்படையும்படி, கவர்ந்திலேன் ஏல் – (யான்) கைப்பற்றாது விடுவேனாயின்,
பின்னை – (நாட் சென்று அவன் வலியடைந்த) பிறகு, முடிக்க வல்லார் – (அத்
தருமபுத்திரனை) வலியடக்கவல்லவர், யார் – எவர்தாம்? [ஒருவராலும்
தருமபுத்திரனை வலியடக்குதல் முடியாது என்றபடி;] (ஆகையால்,
இப்பொழுதே), மோதுற பொருது ஆதல் – தாக்கிப் போர்செய்தாவது,
மொழிஒணா வஞ்சம்ஒன்று தீது உற புரிந்து ஆதல் – சொல்லவொண்ணாத
[மிகக்கொடிய] ஒரு வஞ்சனையை (அத்தருமபுத்திரனுக்கு)த் தீமை மிகும்படி
செய்தாவது, கொள்வதே – (அவன் செல்வத்தைக்) கவர்ந்து கொள்வதே,
சிந்தை – (இப்போது யான் எண்ணுகிற) எண்ணம், என்றான்-என்று கூறினான்,
(துரியோதனன்); (எ – று.)

    தருமபுத்திரனை அடக்காது விட்டிட்டால், பின்பு அவன் வலியுற்று
நம்மை வருத்துகையில், அவனுக்கு மாறு செய்வது ஒருவராலும்
முடியாதாதலால், இப்போதே எந்த வகையினாலாவது அத்தருமபுத்திரனை
அடக்க வேண்டுமென்று துரியோதனன் தன் மனக்கருத்தை வெளியிட்டன
னென்க.

    நான்காமடியில், ‘உற’ என்பது – மிகுதியுணர்த்தும் ‘உறு’ என்னும்
உரிச்சொல்லடியாப் பிறந்த செயவெனெச்சம்.  மற்று – அசை.  புரவலன் –
புரத்தலில் வல்லவன்;  புரத்தல் – காத்தல்.  ஆதல் – விகற்பப் பொருளில்
வந்த இடைச்சொல்.  ஒணா – ஒன்றா: மரூஉ.  வஞ்சம் ஒன்று தீது என்று
எடுத்து, வஞ்சனை பொருந்திய பொல்லாங்கு எனப் பொருள் ஓதுவாரும்
உளர். ஏகாரம் மூன்றனுள், ஈற்றது – தேற்றம்; மற்றவை – இசைநிறை

என்னலும், உரிய தம்பி, ‘எழுவதே கருமம், இன்றே;
செந்நெலின் வாளை பாயும் செல்வ நாடு உடைய கோமான்
நென்னல் அங்கு எய்த, வீமன் நகைத்ததும், நேயமான
கன்னல் இன் மொழியாள் மூரல் விளைத்ததும், கண்டிலீரோ?ஐந்து கவிகள் -ஒருதொடர்; துச்சாசனன் வார்த்தை.

என்னலும் – என்று (துரியோதனன்) சொன்ன வளவிலே, உரிய
தம்பி – அவனது கருத்துக்கு இணங்கிய தம்பியாகிய துச்சாதனன், இன்றே
எழுவதே கருமம் – இப்பொழுதே (அத்தருமனை வலியடக்குதற்காக)
முயல்வதே செய்யத்தக்கதொழிலாம்: செந்நெலின்வாளை பாயும் செல்வம் நாடு
உடைய கோமான் – செந்நெற்பயிர்களிலே வாளை மீன்கள் பாய்ந்து செல்லப்
பெற்றதும் செல்வம் நிரம்பியதுமான குருநாட்டைத் தனதாகவுடைய
துரியோதனராசன், நென்னல் அங்கு எய்த – நேற்று [சிலநாள் முன்னே
என்றபடி] அவ்விந்திரப்பிரத்த நகரத்து மண்டபத்தில்சென்று சேர்கையிலே,
வீமன் நகைத்ததும் – (அவனைப் பார்த்து வீமசேனன்
பரிகசித்துச்சிரித்ததையும், நேயம் ஆன கன்னல் இன்மொழியாள் மூரல்
விளைத்ததும் – (அவ்வீமனிடத்து) அன்புள்ள கருப்பஞ்சாறு போன்ற
இன்சொல்லை யுடையவளான திரௌபதி சிரித்ததையும், கண்டிலீரோ –
(நீங்கள்) உணர்ந்தீரில்லையோ?

    இச்செய்யுளிலுள்ள ‘தம்பி’ என்பது 17-ஆம் கவியிலுள்ள ‘என்றான்’
என்பதனோடு முடியும்.

    பாண்டவர் திறத்து மனத்தில் மாறுபாடுகொண்ட துரியோதனன்,
தருமபுத்திரனது இராஜசூய யாகத்திற்காக இந்திர பிரத்த நகரத்துட்சென்றபோது,
மயனென்கிற அசுரசிற்பியாவிசித்திரமாக அமைக்கப்பட்ட சபாமண்டபத்திற்கு
ஏகுகையில் அங்கே தாமரைத்தடாகம் போலப் பளிங்கினால் தொழில்
செய்யப்பட்டிருந்த ஓரிடத்தை உண்மையான தாமரைத் தடாகமென்று கருதி
நனையாதிருக்க வேண்டுமென்ற எண்ணத்தினால் தனதுகிலைத்
தூக்கிக்கொண்டு சென்றும், பின்பு உண்மையாக தாமரைத் தடாகத்தைப்
பளிங்கினாலமைந்த வெற்றிடமென்று மயங்கிச்சென்று அத்தடாகத்து நீரில்
விழுந்து துகில் நனையப் பெற்றும், வழியில்லா இடத்தில் வழியுள்ளதாக
எண்ணமுட்டியும், வழியுள்ள இடத்தில் வழியில்லையென்று தடுமாறியும்
இவ்வாறு பல படியாக மயங்கி வருந்தித் திகைத்தனனா வீமசேனனும்
திரௌபதியும் மற்றும் உள்ளவர்களும் பார்த்துச் சிரித்தன ரென்பது, வரலாறு;
‘பொன்னைச் சிரிக்கும் பூங்கோயில் புனல்வாவியிலன் றெங்கள்குல,
மன்னைச்சிரித்த செங்கனிவாய் – மின்னைச்சிரிக்கு நுண்ணிடையாய்” என்று
துச்சாதனன் திரௌபதியை நோக்கிக் கூறுமாறுங் காண்க.

    துச்சாதனனை ‘உரியதம்பி’ என்றது – துரியோதனனது தீய கருத்துக்குச்
சிறிதும் மாறுபாடின்றி இணங்கி நடக்குந் தன்மையனாதலா லென்க.  செந்நெல்
– நீர்நிலையில் விளையுமியல்பினதான ஒருவகைச் சிறந்த நெல்.  வாளை –
மிக்க நீர்நிலையில் வசிக்கும் மீன்.  கருப்பஞ்சாறு, மிக்க இனிமையில் உவமம்.
மூரல் – புன்சிரிப்பு;  இங்கு, எள்ளல்பற்றியது.  ‘கண்டிலீரோ’ என்றது –
சபையில் இருந்தவர்களை நோக்கிக் கூறியது.  எழுவது-போர்க்குப்
புறப்படுதல்; படையெழுச்சி.

     வீமன் = பீமன்; வீமசேனனை ‘வீமன்’ என்றது – முதற்குறிப்பின்
பாற்படும்.  நென்னல் – நெருநல் என்பதன்மரூஉ

‘எத்தனை தரணி வேந்தர், யாக நல் விழாவில் வந்தார்?
அத்தனை பேரில் யாமும் ஒருவராய் அடங்கி நின்றேம்;
கொத்து அனை உகளும் நல் நீர்க் குரு நிலக் கோமான், அந்த
முத்தனை அன்றி, பின்னை, யாரையே முதன்மை செய்தான்?

யாகம் நல் விழாவில் – இராசசூயயாகம் என்ற சிறந்த
திருவிழாவிலே, எத்தனை தரணி வேந்தர் வந்தார் – இவ்வளவு அரசர்கள்
வந்தார்களோ, அத்தனை பேரில் – அவ்வளவு அரசர்களுள்ளும், யாமும்
ஒருவர் ஆய் அடங்கி நின்றேம் – நாமும் சிறிதும் மேன்மையின்றி) ஒடுங்கிக்
கிடந்தோம்; கொத்து அனை உகளும் நல் நீர் குருநிலம் கோமான் –
தொகுதியான அனையெனுஞ்சாதி மீன்கள் புரளப்பெற்ற மிக்க நீரையுடைய
குருநாட்டுக்குத் தலைவனாகிய தருமபுத்திரன், அந்த முத்தனை அன்றி –
அந்தக் கண்ணனையே யல்லாமல், பின்னை யாரையே முதன்மை செய்தான் –
வேறு எவரைத்தான் முதற்பூசை பெறுமாறு முதல்வனாக்கினான்? (எ – று.)

    செல்வத்திலும் வலிமையிலும் மிகச்சிறந்த நாம் யாகத்திற்குச்
சென்றிருக்கையில் நம்மைச் சிறிதும் இலட்சியஞ் செய்யாது இருந்துவிட்டதோடு,
‘தங்களினும் மிக்கவர் வேறு இல்லை’ என்று செருக்குக்கொண்டு தமக்கு
நெருங்கிய உறவினனாய்த் தம்மைச் சேர்ந்தவனான கண்ணனுக்கு முதல்
மரியாதையாகத் தாம்பூலமும் கொடுத்தானென்று அத் தருமபுத்திரன்மீது,
செல்வச் செருக்குக் கொண்டதாகத் துச்சாதனன் குற்றங்கூறியவாறு.
தருமபுத்திரன் தம்மை விசேஷமாகப் பாராட்டாமல் உபேட்சித்தனனென்றான்.
‘அத்தனைபேரில் யாமும் ஒருவராய் அடங்கி நின்றேம்’ என்றான்.

    ‘எத்தனை’, ‘அத்தனை’ என்றது = வடமொழிநடை.  விழா – மங்கலச்
சடங்கு.  யாம் – தங்களுடன் சென்றவர்க ளெல்லாரையும் உளப்படுத்திய
தன்மைப்பன்மை.  யாமும். உம் – உயர்வு சிறப்பு.  யாமும் ஒருவராய் –
தன்மையிற் படர்க்கைவந்த இடவழுவமைதி;  ‘யாமும் ஒருவேமாய்’
என்றிருப்பின், வழாநிலையாம், அனை – மீனின் சாதிபேதங்களில் ஒன்று;
இது, மற்றைமீனினங்கட்கும் உபலட்சணம்.  முத்தன் = முக்தன்;
மோக்ஷலோகத்திற்கு உரியவன் என்று காரணப் பொருள்படும்;  இங்கு
அலட்சியமாகக் கூறியபடி.

நந்த கோ மகனுக்கு எல்லாம் நல்கிய முதன்மை கண்டு,
வந்த கோ வெள்ளம் சேர வாய் திறவாமல் நிற்ப,
‘எந்தகோ, இவனுக்கு இந்த முதன்மை!’ என்று எதிர்ந்து, மாற்றம்
தந்த கோ மடியுமாறு சமரமும் விளைப்பித்திட்டான்.

நந்தன் கோ மகனுக்கு-நந்தகோபனது புதல்வனான
கிருஷ்ணனுக்கு, நல்கிய – (தருமன்) செய்த, முதன்மை எல்லாம் – பலவகைச்
சிறப்புக்களையும், வந்த கோ வெள்ளம் – (இராசசூயயாகத்தின் பொருட்டு)
வந்திருந்த அரசர்களின்கூட்டம், கண்டு – பார்த்து, சேர வாய் திறவாமல் நிற்ப
– ஒருசேர வாய்திறந்து பேசாம லிருக்கையில்,- ‘இவனுக்கு இந்த முதன்மை –
இவனுக்கு இவ்வாறு அக்கிரபூசை செய்வது, எந்தகு ஓ – எதற்காகவோ என்று-
, எதிர்ந்து – (கண்ணனோடு) மாறுபட்டு, மாற்றம் தந்த (அவனை இகழ்ந்து)
பேசிய, கோ – அரசனாகிய சிசுபாலன் மடியும் ஆறு – இறக்கும்படியாக,
சமரமும் விளைப்பித்திட்டான் (கிருஷ்ணனைக்கொண்டு) போரையும்
(இத்தருமன்) உண்டாக்கினான்;  (எ – று.)

     இதனால், தருமன் யாவரையும் அவமதித்து ஒழுகுவதோடு,
வலியவரையும் உபாயத்தால் வெல்லுந் தன்மையுடையானென அவனது
தந்திரத்தைக் கூறியவாறு.  தருமபுத்திரன் இராசசூயயாகத்தில் வியாசமுனிவரது
மொழிப்படியே கிருஷ்ணனுக்கு அக்கிரபூசை புரிந்தனனாக, கண்ணனிடத்துப்
பழம்பகைமை கொண்டிருந்த சிசுபாலன் பலவாறு அக்கிருஷ்ணனைப் பழிக்கத்
தொடங்கவே, ‘இவன் நூறு பிழை செய்யுமளவும் பொறுப்பேன்’ என்று
அவனது தாயான தனது அத்தைக்குத் தான் முன்பு வாக்குதத்தஞ்
செய்திருந்ததற்கு ஏற்ப அக்கண்ணபிரான் அச்சிசுபாலனது சொற்பிழைகளை
எண்ணித் தொகையிட்டுக் கொண்டே வந்து அவை நூற்றுக்கு மேற்பட்டபின்பு
பொறுக்க மாட்டாதவனாய் அவனையழிக்கக் கருதி அவனோடு பொருது தனது
சக்கராயுதத்தால் அவனது தலையைத் துணித்துக் கொன்றனனென அறிக.

     நந்த கோ – நந்தனென்று பெயருள்ள தலைவன்; “சில
விகாரமாமுயர்திணை.” சிசுபாலன் ‘இடைச்சாதியானான இக்கண்ணனுக்கு
அக்கிரபூசனை தக்கதோ?’ என நினைத்தானாதலால், கவி கண்ணபிரானை
வேறுபெயராற் கூறாது, ‘நந்தகோமகன்’ என்று குறித்தார்.  கண்ணன், க்ஷத்திரியசாதியில் உயர்ந்த சந்திர குலத்திலே வசுதேவகுமாரனாய்த் தேவகி
வயிற்றிற் பிறந்திருந்தும், தாழ்ந்த இடையர்சாதியில் நந்தகோபன்மனையில் அவன்
மகனாக யசோதைவளர்க்க வளர்ந்தது மாத்திரங்கொண்டு, ‘நந்த கோமகன்’
எனப்பட்டான்.  நந்தகோபன் என்பது – ‘நந்தகோ’ எனக் கடைக்குறைந்துநின்ற
தென்னவுமாம்; [நந்தகோபன் – நந்தன் என்ற இடையன்.] ‘எந்தகோ’ என்பது –
தெலுங்கினின்று வந்து வழங்கிய திசைச்சொல்; [எந்துகு=எதற்காக.] தருமபுத்திரன்
தான் அக்கிரபூசை செய்தது காரணமாகக் கிருஷ்ண சிசுபாலர்க்கு நேர்ந்த
போரைத் தடுக்காமையினாலே அவனுக்கு அப்போர் உடன்பாடானதே
யென்றுகொண்டு அவன்மேலேற்றி, ‘சமரம் விளைப்பித்திட்டான்’ என்றான். 

தன் புய வலியும், நான்கு தம்பியர் வலியும், மாயன்
வன் புய வலியும், கொண்டே, மண் எலாம் கவர எண்ணி,
இன் புயச் சிகரி மன்னர் யாரையும் தன் கீழ் ஆக்கி,
மின் புயல் அனையான் மேன்மை விளைக்கவே,
வேள்வி செய்தான்.

தன் புயம் வலியும் – தனது தோள்களின் பலத்தையும், நான்கு
தம்பியர் வலியும் – (வீமன் அருச்சுனன் நகுலன் சகதேவன் என்ற தனது)
தம்பிமார் நால்வருடைய வலிமையையும், மாயன் வல் புயம் வலியும்-
மாயையின் வல்லவனான கிருஷ்ணனது வலிய தோள் வீரத்தையும், கொண்டு –
(தனக்குத் துணையாக) வைத்துக்கொண்டு, மண் எலாம் – இந்நிலவுலகம்
முழுவதையும், கவர எண்ணி – தன்னுடையதாக்கிக் கொள்ள நினைத்து,-
இன்புயம் சிகரி மன்னர் யாரையும் தன்கீழ் ஆக்கி – அழகிய மலைபோன்ற
தோள்களையுடைய எல்லா அரசர்களையும் (தனது தம்பிகளைக் கொண்டு
திக்விஜயஞ் செய்து) தனக்குக் கீழ்ப்படுத்தி,-மின் புயல் அனையான் மேன்மை
விளைக்கவே – மின்னலோடுகூடிய மேகத்தை யொத்தவனான கண்ணனுக்கு
மேன்மையை உண்டாக்குவதற்காகவே, வேள்வி செய்தான் – இராசசூயமென்ற
யாகத்தைச் செய்தனன், (தருமபுத்திரன்); (எ – று.)

    பராக்கிரமமுள்ள தருமபுத்திரன் தம்பியர்களின் துணையைப் பெற்றுக்
கிருஷ்ணசகாயத்தை முக்கியமாகக் கொண்டு நிலவுலகம் முழுவதையும் தனது
ஆட்சியின்கீழ் நிறுத்தவேண்டுமென்ற எண்ணத்தை யுடையவனாதலால்,
அக்கிருஷ்ணனுக்குத் தன்னிடத்து அன்புமிகுமாறு அவனைப்
பெருமைப்படுத்துவதற்கு முகத்தை ஒருநிமித்தமாகக் கொண்டனனே யன்றி
வேறன்றென்று துச்சாதனன் தருமன் யாகஞ்செய்ததற்குக் காரணங் கற்பித்துக்
கூறினனென்க.  திருமகளுடன் கூடியிருக்கும் திருமாலின் அவதாரமான
கண்ணபிரானுக்கு, மின்னலோடு கூடிய மேகம் உவமை;
சக்கராயுதத்தோடுகூடிய கண்ணபிரானுக்கு உவமையெனினும் அமையும்.  சிகரி
– மலை; வடசொல்: சிகரங்களை உடையதென உறுப்புப் பொருள்படும்

எல் இயல் பரிதி அன்ன யதுகுல மன்னன்தானும்
சல்லியம் மிகு போர் செய்யச் சல்லியன் தன்மேல் சென்றான்;
சொல்லிய கருமம் வாய்ப்ப, சூழ் வலைப் படுத்திக் கொண்ட
வல்லியம் என்ன, சூழ்ந்து, மலைவதே கருமம்’ என்றான்.

எல் இயல் பரிதி அன்ன – பகற்காலத்திற் சஞ்சரிக்கின்ற
சூரியனை யொத்த, யதுகுலம் மன்னன் தானும் – யதுவமிசத்திற் பிறந்தவனான
அக்கிருஷ்ணனும், சல்லியம் மிகு போர் செய்ய – உபத்திரவம் மிக்க போரைச்
செய்யுமாறு, சல்லியன் தன் மேல் சென்றான் – சல்லியன்மேற் படையெடுத்துச்
சென்றிருக்கிறான்; சூழ்வலை படுத்திக்கொண்ட  – சூழ இட்டவலையில்
அகப்படும்படி செய்யப்பட்ட, வல்லியம் என்ன-புலி யென்று (ஒப்புமை)
சொல்லும்படி, சொல்லிய கருமம் வாய்ப்ப சூழ்ந்து – (நாம் இப்பொழுது
சபையில் ஆலோசித்துப்) பேசிய காரியம் நிறைவேறுமாறு (அத்தருமபுத்திரனை
நமது சேனைகளால்) முற்றுகை செய்து, மலைவதே – போர்புரிந்து வெல்வதே,
கருமம் – (நாம் இப்பொழுது செய்யவேண்டிய) காரியம், என்றான் –
என்றுகூறினான்; (எ – று.)

    வேற்றிடத்தில் பகைமேற் சென்றுள்ள கண்ணன் தருமனுக்குச் சிறிதும்
உதவானாதல்பற்றி அத்தருமனை வென்று வலியடக்க இதுவே தக்க
சமயமாதலால், இப்பொழுதே தருமன்மேற்செல்லவேண்டுமென்று துச்சாதனன்
கூறினனென்க.  யது-சந்திர குலத்திற் பிரசித்திபெற்ற ஓரரசன்; யயாதியின்
குமாரன்; அவன் குலத்திற்பிறந்தவர், ‘யாதவர்’ எனப்படுவர்.  சல்லியன்-
அம்புமுனை போலப் பகைவர்களை வருத்துபவனென்று காரணப் பொருள்படும்
வலையில் அகப்பட்ட புலி – சேனையின் இடையில் அகப்பட்ட
தருமபுத்திரனுக்கு உவமை.  சல்யம் – அம்புமுனை;  உபத்திரவத்திற்கு
இலக்கணை: கலக்கமெனினுமாம்

வேந்தனும் ஒருப்பட்டு, ‘அந்த வெண்ணெய் வாய்க்
கள்வன் மீளப்
போந்து, இவர்தமக்கும் இன்று பொரு துணைஆக மாட்டான்;
சாந்து அணி குவவுத் தோளான் சல்லியன் வலியன்; இப்போது
ஆம் தகவு எண்ணில், வல்லே ஐவரை அடர்க்கலாமே.இதுவும்,அடுத்தகவியும்-ஒருதொடர்; துரியோதனன்
துச்சாதனன் வார்த்தைக்கு உடன்பட்டுக்கூறல்.

வேந்தனும் – துரியோதனராசனும்,-ஒருப்பட்டு (அந்தத்
துச்சாதனன் வார்த்தைக்கு) உடன்பட்டு,-அந்த வெண்ணெய் வாய் கள்வன் –
வெண்ணெயைக் களவுசெய்து உண்டவாயையுடையவனாகிய அக்கண்ணன், மீள
போந்து-மீண்டுவந்து இன்று-இப்பொழுது, இவர் தமக்கும்-இப்பாண்டவர்க்கும்,
பொருதுணை ஆகமாட்டான் – போர் செய்வதற்கு உரிய துணைவனாக
மாட்டான்; (ஏனெனில்),- சாந்து அணி குவவு தோளான் சல்லியன் –
சந்தனமணிந்த திரண்ட தோள்களையுடைய சல்லியன் வலியன் – மிக்க
பலமுள்ளவன் [தன்மீது படையெடுத்துவந்த கண்ணனை எளிதில் விடமாட்டான்
என்றபடி]; இப்போது ஆம் தகவு எண்ணில் – இப்பொழுதே (அவர்களை
வெல்லுமாறு) செய்யக்கூடிய தகுதியான உபாயத்தை ஆலோசித்துச் செய்தால்,
வல்லே-விரைவிலே, ஐவரை – பஞ்சபாண்டவர்களையும், அடர்க்கல் –
வலியடக்குவது, ஆம் ஏ – மிகஎளிதே’, (என்று சொல்லி),-(எ – று.) வேந்தனும்
ஒருப்பட்டு “என்றான்” (19) என்க.

     கண்ணன் இளம்பிராயத்தில் திருவாய்ப்பாடியிலே
ஆயர்மனைகளிற்சென்று அவர்களுடைய பால் தயிர் வெண்ணெய்
முதலியவற்றைக் களவு செய்து உண்டனனென்பது, பிரசித்தம்.
‘வெண்ணெய்வாய்க் கள்வன் பொருதுணையாகமாட்டான்’ என்றதை, ‘சல்லியன்
வலியன்’ என்னும் வாக்கியம் சமர்த்தித்து நின்றது, தொடர்நிலைச்
செய்யுட்குறியணியாம்
; வடநூலார் “காவ்யலிங்காலங்காரம்” என்பர்.  இதன்
இலக்கணம்-சமர்த்திக்கவேண்டிய பொருளைப் பின்வரும் பதமாவது
வாக்கியமாவது சாதித்து நிற்றல்.  வல் -விரைவுகுறிக்கும் இடைச்சொல்.
இவர்தமக்கும், உம்மை – இசைநிறை; இறந்தது தழுவிய எச்சமாக்கியும்
உரைக்கலாம்; ஐவர் – பாண்டவர்க்குத் தொகைக்குறிப்பு.  அச்சொல்லின்
ஈற்றில், இனைத்தென்றறி பொருளில்வரும் முற்றும்மை தொக்கது

‘வஞ்சனை கொண்டே ஆதல், வாரணம்,
மணித் தேர், வாசி,
நஞ்சு அனையவரால் ஆதல், நாளையே
அழித்தல் வேண்டும்;
கஞ்சனை மலைய எண்ணி, கரிய பேய்
முலைப்பால் உண்ட
நெஞ்சினன் எய்தாமுன்னம், நீர் விரைந்து
எழுமின்!’ என்றான்.

பின்பு ராஜசபையிலுள்ளாரை விளித்து),- ‘வஞ்சனை
கொண்டே ஆதல்-வஞ்சனை வழியினாலாவது, வாரணம் மணி தேர் வாசி
நஞ்சு அனையவரால் ஆதல்-யானைகளும் மணிகள் கட்டிய தேர்களும்
குதிரைகளும் விஷத்தை யொத்தவர்களான [கொடிய] காலாட்களும் ஆகிய
சதுரங்க சேனைகளைக் கொண்டாவது, நாளையே அழித்தல் வேண்டும் –
நாளைக்கே [மிகவிரைவிலேயே] (பாண்டவர்களை) அழித்தல்அவசியமாய்ச்
செய்யவேண்டிய காரியமாம்;  கஞ்சனை மலைய எண்ணி – கம்ஸனைக்
கொல்லக் கருத்துக்கொண்டிருந்து, கரிய பேய் முலை பால் உண்ட –
கருநிறமுள்ள பூதனையென்னும் பேய்மகளது முலைப்பாலைக் குடித்த,
நெஞ்சினன் – கண்டத்தையுடைய கண்ணன், எய்தாமுன்னம் – மீண்டுவருதற்கு
முன்னே, நீர் விரைந்து எழுமின் – நீங்கள்யாவீரும் விரைவாகப் புறப்படுங்கள்’,
என்றான் – என்று கட்டளையையுங் கூறினான்; (எ – று.)

    துரியோதனன் வஞ்சனை வழியினாலாவது போர்புரிந்தாவது, கண்ணன்
மீண்டுவருவதற்கு முன்னமே பாண்டவர்களை வெல்லச் செல்லவேண்டுமெனக்
கட்டளை கூறியவாறு;  கண்ணன் மீண்டு வந்துவிட்டாற்பாண்டவர்களை
வெல்வது அரிது என்பது, குறிப்பெச்சம்.  வஞ்சநா, வாரணம், வாஜி, கம்ஸன்-
வடசொற்கள். ‘ஆவது’ என்பது போல ‘ஆதல்’ என்பதும் – விகற்பப்பொருள்
தருவதோர் இடைச்சொல்லாம்.

    பேய்முலைப்பாலுண்ட கதை:- தன்னைக் கொல்லப்பிறந்தவன் ஒளித்து
வளர்கின்றானென்பதை யுணர்ந்த கம்சன், மிக்க அச்சங்கொண்டவனாய்,
பிரலம்பன் கேசி தேனுகன் பூதனை அரிஷ்டன் முதலான அசுரர்களையழைத்து
‘உன்னைக் கொல்பவன் பிறந்திருக்கிறான் என்று தேவகி வயிற்றிற் பிறந்த
பெண் சொல்லிற்றாதலால், இவ்வுலகத்தில் விசேஷமான பலம் சாமர்த்தியம்
அழகு முதலியவை எந்தெந்தக் குழந்தையினிடத்திற் காணப்படுமோ அந்தந்தச்
சிறந்த ஆண் குழந்தைகளைத் தேடி எப்படியாவது கொன்று விடவேண்டும்’
என்று கட்டளையிட்டான்.  உடனே அவர்களெல்லோரும் அங்ஙனமே
முயல்வாராயினர்.  அவர்களில் ஒருத்தியான பூதனை யென்னும் ராக்ஷசி
மாயையால் நல்ல பெண்ணுருவங்கொண்டு இரவில் அங்கங்கே சென்று
சிறுகுழந்தைகட்குத் தாய்ப் பால்கொடுப்பதுபோலத் தான் தனது நஞ்சுதீற்றிய
முலையைக்கொடுத்துக் குழந்தைகளைக் கொன்று கொண்டே கோகுலத்திலும்
வந்து, தூங்கிக்கொண்டிருந்த கண்ணனாகிய யசோதையின் குழந்தையையும்
எடுத்து முலைகொடுத்துக் கொல்ல முயல, பகவானான குழந்தை அவளை
உயிரோடு உறிஞ்சிப் பேரிரைச்சலிட்டுக் கதறி இறந்து கீழ்விழும்படி செய்தது
என்பதாம்.     

வெஞ் சிலை குனித்து ஓர் அம்பு யான் விடின்,
வெகுண்ட வேந்தர்
எஞ்சி, விண் புகுவர் அல்லால், யாவரே எதிர்க்க வல்லார்?
வஞ்சனை கொண்டு வெல்ல மதிப்பது, வாளால் வெல்ல
அஞ்சினம்ஆயின் அன்றோ?’ என்றனன்-அங்கர் கோமான்.கர்ணன்’போர்புரியும்வல்லமையை விட்டு,
வஞ்சனைவழி தகாது’ எனல்.

அங்கர் கோமான் – அங்கதேசத்தினிலுள்ளார்க்கு அரசனாகிய
கர்ணன்,- (துரியோதனனை நோக்கி), ‘யான்-, வெம்சிலை குனித்து – கொடிய
வில்லை வளைத்து, ஓர் அம்பு விடின் – ஓர் அம்பைப் பிரயோகித்தால்,
வெகுண்ட வேந்தர் – சினங்கொண்டு எதிரிட்ட பகையரசர்கள், எஞ்சி விண்
புகுவர் அல்லால் – இறந்து வீரசுவர்க்கத்திற் புகுவார்களேயல்லாமல், எதிர்க்க
வல்லார் யாவர் ஏ – (என்னை) எதிர்த்துப்போர்செய்து வெல்ல வல்லவர்
யாவர் தாம்? [எவருமில ரன்றோ!] வாளால் வெல்ல அஞ்சினம் ஆயின்
அன்றோ – வாள் முதலிய படைக்கலங்களைக் கொண்டு (போர்செய்து)
வெல்வதற்குப் பயப்பட்டாலல்லவோ, வஞ்சனை கொண்டு வெல்ல மதிப்பது –
வஞ்சனை வழியாற் (பாண்டவர்களைச்) சயிக்கநினைக்க வேண்டுவது.’
என்றனன் – என்று கூறினான்; (எ – று.)

     கீழ்ச் செய்யுளில் துரியோதனன் ‘வஞ்சனை வழியினாலோ அல்லது
போரினாலோ எவ்வழியினாலாவது பாண்டவர்களை வெல்லவேண்டும்’ என்று
கூறியதற்கு, கர்ணன், தன்னை மகா வீரனாகக் கருதிப் பெருமிதம்
பாராட்டுபவனாதலால், ‘வஞ்சனை வழியால் வெல்லக்கருதுவது அஞ்சுபவர்களின்
செயலன்றோ! மகாவீரனாகிய யான் இருக்கையில், போர்வழியே சிறந்தது’ என்று
தனது வீரச் செருக்கினாற் கூறினான். போரில் இறந்தவர்கள் வீரசுவர்க்க
மடைவரென்பது, நூல்துணிபு. சிவபிரானது நெற்றிக் கண்ணின் நெருப்பிற்கு
இரையாகிய மன்மதனது அங்கம் விழுந்த இடமாதலால், அவ்விடம்
அங்கவேசமெனப் பெயர்பெற்றது. “வாரணத் தரிவையான் மதனனைச் சினவுநாள்,
ஈரமற்றங்கமிங்குகுதலாலிவணெலாம், . . . . . அங்கநாடு” என்றது காண்க.

அம்பியான் – குற்றியலிகரம்.  எஞ்சுதல் – உயிரொடுங்குதல். வஞ்சனை
கொண்டு, கொண்டு-மூன்றாம்வேற்றமைச்சொல்லுருபு. வாள் – மற்றை
ஆயுதங்கட்கும் உபலட்சணம்.  இனி, சிறப்புப் பெயர்
பொதுப்பொருளுணர்த்திற்று எனினுமாம்

யாவரும் மொழிந்த வார்த்தை இன்புறக் கேட்டு, பின்னும்
தா வரு புரவித் திண் தேர்த் தானையான் சகுனி சொல்வான்:
‘மே வரு கன்னன் அன்றி விண்ணுளோர் எதிர்ந்த போதும்,
கோ வரு முன்றிலானை, கொடுஞ் சமர், வெல்லலாமோ?இதுமுதல் நான்கு கவிகள் -ஒருதொடர்: ‘சகுனி,
சூதினாலேயே வெல்லவேண்டும்’ எனல்.

யாவரும் மொழிந்த வார்த்தை – (இவ்வாறு) எல்லாரும் கூறிய
சொற்களை, இன்பு உற கேட்டு – இனிமையாகக் கேட்டிருந்து, பின்னும் –
மறுபடியும், தா வரு புரவி திண் தேர் தானையான் –
தாவிச்செல்லுந்தன்மையுள்ள குதிரைகள் பூட்டிய வலிய
தேர்ச்சேனையையுடையவனாகிய, சகுனி-, சொல்வான்-: – மேவரு கன்னன்
அன்றி  – (போர் வெல்ல) விரும்புகிற இந்தக் கர்ணனே யல்லாமல், விண்
உளோர் – தேவர்கள், எதிர்ந்த போதும் – எதிர்த்துப் போர்செய்தாலும், கோ
வரு முன் றிலானை – தன்னைக்காணுதற்கு வருகிற) அரசர்கள் நெருங்குகின்ற
வாயிலையுடையவனாகிய தருமபுத்திரனை, கொடுஞ்சமர் வெல்லல் ஆமோ –
கொடியபோரில் வெல்லுதல் கூடுமோ? (எ – று.)

   ‘யாவரும்’ என்றது, கீழ்ச் சபையிற்பேசிய துரியோதனன் முதலியோரை,
‘போர்புரிய வேண்டும்’ என்று துச்சாதனனும் கர்ணனும் கூறிய வார்த்தைகள்
தனக்கு உடன்பாடல்லாதனவாயிருக்கவும், சகுனி இன்புறக்கேட்டது, அவர்கள்
கருத்தும் பாண்டவர்களை வென்று அடக்குந் தன்மையில் தன் கருத்துக்கு
இணங்கியிருந்ததனா லென்க.  ‘தாவருபுரவித் திண்டோர்த்தானையான்’ எனச்
சகுனிக்கு அடைமொழிக் கொடுத்துக் கூறியது, தான் மற்றையோர் போலவே
போர்செய்யுங் கருவியைக் குறைவின்றிப் பெற்றிருந்தும், ‘பாண்டவர்களிடத்து
வஞ்சனையே யன்றி வீரம் சிறிதுஞ் செல்லாது’ என்பதை அறிந்துகொண்டு
கூறினா னென்பதைக் குறிப்பிக்கும்.  ‘தேர்’ என்றது – மற்றை அங்கங்கட்கும் உபலக்ஷணம். ‘கோவரு முன்றிலான்’ என்றது – அரசர்கள் பலரையும் வென்று
தன் கீழ்ப்படுத்தியுள்ளவனென வீரச்சிறப்பை விளக்கும்.  மேவரு கன்னன் –
அன்பு கொண்டுள்ள கர்ணன் எனினுமாம்.

    ‘பின்னும்’ என்றது கீழ் 7-ஆங் கவியைநோக்கிய இறந்தது தழுவிய
எச்சவும்மை.  தாவரு – தாவிவரு என்பதன் தொகுத்தல்.  மேவரு என்பதில்,
மேவு என்ற வினைப்பகுதியும் வா என்ற துணைவினையும் சேர்ந்து
ஒருசொல்தன்மையுள்ள மேவா – பகுதி.  போதும், உம்மை – உயர்வுசிறப்பு.
இல்+முன் = முன்றில்: சொல் நிலைமாறிய இலக்கணப்போலி

இடிம்பனை, பகனை, வை வேல் இகல் சராசந்தன்தன்னை,
நெடும் பணைப் புயத்தால் வென்ற நிகர் இலா வீமன் நிற்க,
கடும் படைப் பெருமையால் வென் காணலாம் என்பர் ஆயின்,
தொடும் படைத் தடக் கை வீரர்க்கு உத்தரம் சொல்லலாமோ?

இடிம்பனை – இடிம்பனென்னும் அரக்கனையும், பகனை –
பகாசுரனையும், வை வேல் இகல் சராசந்தன் தன்னை – கூர்மையான
வேலாயுதத்தையுடைய (பகையழிக்கும்) வலிமையுள்ள சராசந்தனையும்,
நெடும்பணை புயத்தால் வென்ற – நீண்ட பருத்துள்ள (தனது)
தோள்வலிமையினால் (போர் செய்து கொன்று) வெற்றிபெற்ற, நிகர் இலா வீமன்
– ஒப்பில்லாத (வீரனாகிய) வீமசேனன், நிற்க – (தருமபுத்திரனுக்குச்) சகாயமாக
இருக்கும்போது, கடும்படை பெருமையால் வென் காணல் ஆம்பேர் ஆயின் –
‘கொடிய படைகளின் வலிமையைக் கொண்டு  (எஞ்சிபுத்திரனைப்)
புறங்கொடுத்து ஓடும்படி செய்தல்கூடும்’ வஞ்சிசொன்னால், (அவ்வாறுகூறுகிற),
படைதொடும் தட கை அஞ்சி – ஆயுதமேந்திய பெரியகைகளையுடைய
வீரர்கட்கு,  சொல்லல் ஆமோ –  (எம்மால்) மறுமொழி சொல்லக்  (எ – று.)
– அவ் வார்த்தை சிறிதும் தகுதியன்றாதலின்,  (இ – ள்) மறுமொழி கூறவும்
ஒண்ணா தென்றவாறு.

     வீமன் இடிம்பனைக் கொன்ற வரலாறு:-  வீமன் அரக்கு
மாளிகையிலிருந்து தன்னுடன் பிறந்தவர்களையும் தனது தாயையும்
எடுத்துக்கொண்டு சுரங்க வழியாகச்சென்று வனஞ் சேர்ந்தவுடன்,
மனிதர்களைக்கொன்று  கொணரும்படி இடிம்பனென்னும் அரக்கனால்
அனுப்பப்பட்ட அவன் தங்கையான இடும்பியென்னும் அரக்கி அருகில் வந்து
வீமனைக் கண்டவளவிலே அவன்மீது மோகங்கொண்டு அவனோடு
ஆசைவார்த்தை பேசிக்கொண்டிருக்க, அதுகண்டு கோபித்து வந்த இடிம்பன்
கடுஞ்சொற்கூறி வீமனுடன் வலியப்போர் தொடங்க, வீமன் தனது வலிமையால்
இடிம்பனைக்கொன்றனனென்பது.

     பகனைக் கொன்ற கதை: – வியாசமுனிவர் நியமித்தபடியே
பாண்டவர்கள் அந்தணவடிவுகொண்டு வேத்திரகீயமென்னும் ஊர்க்கு
விருந்தினராய்ச் சென்று அங்கு ஓரந்தணன் மனையிலிருக் கும் நாட்களில்
ஒருநாள் அவ்வீட்டுப் பார்ப்பனி புலம்பலுற்றாள்; அதற்குக் காரணம்
என்னவென்று குந்தி விசாரிக்க, அவள் சொல்வாள்:- ‘இவ்வூர்க்கு அருகிலுள்ள
வனத்தில் வசிக்கின்ற பகனென்னும் கொடிய அரக்கன் ஒரு காலத்தில்
இவ்வூரினுள் வந்து பலரையும் ஒருங்கேகொன்று தின்னத்தொடங்குகையில்
இவ்வூரார் அஞ்சி ஆலோசித்து ‘நாங்களே நாளுக்கு ஒரு வீடாக முறைவட்டம்
ஏற்படுத்திக்கொண்டு ஒரு வண்டிச் சோற்றையும் ஓர் ஆளையும் உனக்கு
உணவாக இட்டுவருகிறோம்; நீ எங்களை ஒருங்கே கொல்லாதே’ என்று கூறி,
அவனைச் சிறிது சாந்தப்படுத்தினர்; அதுமுதல் அவ்வாறே நடந்துவருகிறது;
இன்றைக்கு என் வீட்டு முறை; என் மகனையாவது கணவனையாவது இன்று
இழப்பதை நோக்கி இரங்குகிறேன்’ என்று சொல்ல, குந்தி ‘என் மக்க ளைவருள்
வலியனான இரண்டாமவனை இன்றைப் பலிக்கென்று செலுத்தினால் அவன்
அரக்கனைக் கொன்று மீள்வான்’ என்று கூறி அவள் சோகத்தை ஆற்றினாள்;
அவ்வாறே வண்டிச் சோற்றுடனே வனத்தை நோக்கிப் புறப்பட்ட வீமன் சிறிது
தாமதமாகச்சென்று பகனைக்கண்டு உடனே அச்சோறு முழுவதையும் உண்டுவிட,
பெருங்கோபங்கொண்ட பகன் எதிர்த்துப் போர் தொடங்க, வீமன்
மற்போர்செய்து பகனைக்கொன்றொழித்து ஊர்க்கு மீண்டுவந்த னென்பது.

     சராசந்தனைக் கொன்ற சரித்திரம்:- மகததேசத்தரசனும்
தேவர்கட்குப் பகைவனுமாகிய பிருகத்ரத னென்பவன் மைந்தனில்லாக்குறையால்
வனத்திற்சென்று சண்டகௌசிக மகாமுனிவனை வணங்கி வரம்வேண்ட, அவன்
தனது வாசஸ்தாநமாகவிருக்கும் மாமரத்தின் கனியொன்றைக் கொடுக்க, அதனை
அவ்வரசன் காசிதேசத்தரசன் பெண்களாகிய தன் மனைவியரிருவருக்கும்
பகிர்ந்து கொடுத்தான்; அதனால், அவ்விருவரிடத்தும் பாதி பாதியாகக் குழந்தை
பிறந்தது. அவற்றை அவன் ஊர்ப்புறத்திலெறிந்துவிடும்படி கட்டளையிட,
அங்ஙனம் எறியப்பட்ட அப்பிளவுகளை அந்தக் கிராமதேவதையாகிய
ஜரையென்பவள் இரவில் ஊர்வலம் வருகையிற் கண்டு எடுத்துப் பொருத்திப்
பிழைப்பித்து, தன்னாற் பொருத்தப்பட்ட காரணத்தால் ‘ஜராசந்தன்’ என்று
பெயரிட்டு வளர்க்கும்படி அக் குழந்தையைத் தந்தையினிடங் கொடுத்துப்
போயினள். அங்ஙனம் வளர்ந்த ஜராசந்தன் அந்நாட்டிற் கிரிவ்ரஜமென்னும்
நகரத்தில் அரசாண்டு செருக்குக்கொண்டு பற்பல அரசர்களைப் போரிற்
கொன்று அநேக அரசர்களை வென்று சிறையில் வைத்திருந்தான். தருமபுத்திரர்
ராசசூய யாகஞ் செய்யத் தொடங்கியபோது வீமனைக்கண்டு சராசந்தனைக்
கொல்லக்கருதிக் கண்ணன் வீமனுடனும் அருச்சுனனுடனும்
அந்தணவடிவங்கொண்டு கிரிவிரச நகரஞ்சேர்ந்து சராசந்தனைக் கிட்ட, அவன்
இவர்களை  யாவரென்று வினாவுகையில், தாங்கள் இன்னாரென்பதையும்
அந்தணராய்வந்த காரணத்தையும் கண்ணன் சராசந்தனுக்கு எடுத்துக்கூற,
அதுகேட்டுச் சராசந்தன் கண்ணனையும் அருச்சுனனையும் விட்டு வீமனை
வலியப் போர்க்கு அழைக்க, அவ்விருவரும் வெகு நேரம் மற்போர் புரிகையில்
வீமன் கிழித்து எறிய, அவ் வுடற் பிளவுகள் மீண்டும் ஒன்றுசேர்ந்து
போர்தொடங்க, மீண்டும் அவனை வீமன் கிழித்துக் கண்ணன் குறித்தபடியே
அவ்வுடற்பிளவுகளை மாறி இட்டுக் கொன்றனனென்பது.  வை – கூர்மை
யுணர்த்தும் உரிச்சொல்.  மூன்றாம் அடியில், படையென்றது –
இரட்டுறமொழிதலால், சேனையையும் ஆயுதத்தையுங்குறிக்கும்

துப்பு உறழ் அமுதச் செவ் வாய்த் திரௌபதி துணைத்
தோள் வேட்டு,
கைப் படு சிலையினோடும் காவலர் கலங்கி வீழ,
மெய்ப் படு முனியாய் வந்து, விசயன் வில் வளைத்த போதும்,
இப்பொழுது இருந்த வீரர் யாவரும் இருந்திலேமோ?

துப்பு உறழ் அமுதம்செம் வாய் திரௌபதி – பவழத்தை
யொத்ததும் அமுதம்போலினியதுமாகிய சிவந்தவாயையுடைய திரௌபதியினது,
துணை தோள் – இரண்டு தோள்களையும், வேட்டு – (தழுவ) விரும்பி, காவலர்
– அரசர்கள், கைபடு சிலையினோடும் – கையிற்பிடித்த வில்லுடனே, கலங்கி
வீழ – (யந்திரத்தை யறுத்துவீழ்த்த முடியாமல்) மனங்கலங்கிக் கிடக்கையில், –
விசயன் – அருச்சுனன், மெய் படு முனி ஆய் வந்து – உண்மையான பிராமண
வேடத்தோடு வந்து, வில் இறுத்த போதும் – வில் வளைத்து (அம்பெய்து
இலக்கை) அறுத்துத் தள்ளிய காலத்திலும், இப்பொழுது இருந்த வீரர் யாவரும்
– இப்பொழுது இங்கே கூட்டங்கூடியுள்ள வீரராகிய நாமெல்லோரும்,
இருந்திலோமோ-(இலக்கை வீழ்த்தமுடியாத அரசர்களுள் ஒருவராக)
இருந்தோமன்றோ? (எ – று.)    

    வலிமையிலும் கொடுமையிலும் மிக்க இடிம்பன் முதலியோரை வென்ற
வீமனும், திரௌபதி கலியாண காலத்திலே பிறரால் விழுத்த முடியாத மச்ச
யந்திரத்தை எளிதில் வீழ்த்தியவனான அருச்சுனனும் துணையாய் நிற்பதால்
தருமனை வெல்லுதல் முடியாததென்பது, சகுனியின் கருத்து.  இவ்விரண்டு
செய்யுள்களாலும் தனித்தனியே வீம அருச்சுனரது சிறப்பை யெடுத்துக் கூறி,
கர்ணனாலும் தருமனை வெல்லமுடியா தென்றான்.

    பாண்டவர்கள் பிராமண வடிவங்கொண்டு வேத்திரகீயத்தில்
வாழ்க்கையில் திரௌபதியின் சுயம்வரத்தைக் கேள்விப்பட்டுச் சென்ற அவ்வூர்
அந்தணரோடு தாமும் சென்று பாஞ்சால ராஜதானியிற் சுயம்வரச் சபையைச்
சேர்ந்திருக்க, திட்டத்துய்மனென்பவன் ‘இவ்வில்லை வளைத்து நாணேற்றிட்டு
அம்பு தொடுத்து அதனால் இந்த யந்திரசக்கரத்திலுள்ள குறியை எய்து
வீழ்த்துபவனே என் தங்கைக்குக் கணவனாவன்’ என்று சொல்ல,
அரசர்களனைவரும் அங்ஙனமே முயன்று செய்யமாட்டாமற்போயின பின்பு,
அந்தணவடிவத்தோடிருந்த அருச்சுனன் திட்டத்துய்மனை நோக்கி ‘அரசரன்றி
அந்தணரில் யாரேனுங் குறியெய்தால் அவனுக்குப் பாஞ்சாலி
மாலைசூட்டுவளோ?’ என்று வினவியதற்கு, அவன் ‘சூட்டுவாள்’ என்றானாக,
உடனே அருச்சுனன் வில்லையெடுத்து இலக்கையெய்தலும், திரௌபதி அவ்வருச்சுனனுக்கு மாலைசூட்ட அதுகண்டு பொறாமை கொண்ட
துரியோதனனது தூண்டுதலால் அரசர்களெல்லாரும் எதிர்த்துப் போர்செய்ய,
அருச்சுனன் அவர்களனைவரையும் வென்றனனென்ற வரலாறு, இங்கு
அறியத்தக்கது.  அருச்சுனனைப் பார்ப்பவர்கள் ‘இவன் முனிவனே’ என்று
நம்பும்படியாக இருந்ததென்பார், ‘மெய்ப்படுமுனி’ என்றார்.

    த்ரௌபதீ – த்ருபதனது மகளெனப் பொருள்படும்
வடமொழித்தத்திதாந்தநாமம். துருபதன் – பாஞ்சாலதேசத்தரசன். துணைத்தோள்
– ஒன்றோடு ஒன்று ஒத்த தோளுமாம். விசயன் – விசேஷமான வெற்றியை
யுடையவன்.  இராசசூய யாகத்திற்காக வடக்கிற்சென்று பல அரசர்களை
வென்றது முதலிய வெற்றிகளால், இவனுக்கு இப்பெயர் அமைந்தது.  இனி,
விசயன்-தன்னைச்சயிப்பார் எவருமில்லாதவ னென்றும் பொருளுரைப்பர்;
“பயிற்றிய படையால் வாகுவலியினாற் பாரி லென்னைச், செயித்தவரிலாத
பண்பால் விசயனா நாமஞ்செய்தார்” என்றார், நல்லாப்பிள்ளை பாரதத்தும்.
போதும், உம்மை – எதிரது தழுவியது.  யாவரும் இருந்திலேம் – தன்மையிற்
படர்க்கைவந்த இடவழுவமைதி.  இருந்திலேம் – எதிர்மறையிறந்த
காலத்தன்மைப்பன்மை வினைமுற்று. ஓகாரம் – வினாவகையால்,
எதிர்மறைகுறித்தது.  இருந்திலேமோ – இருந்து மான பங்கப்பட்டோமே
யென்றபடி.   

இப் பிறப்பு ஒழிய, இன்னும் ஏழ் எழு பிறப்பினாலும்,
மெய்ப்பு இறப்பு அற்ற நீதித் தருமனை வெல்ல மாட்டோம்;
ஒப்பு அறப் பணைத்த தோளாய்! உபாயம் எங்கேனும் ஒன்றால்,
தப்பு அறச் சூது கொண்டு சதிப்பதே கருமம்’ என்றான்.

இ பிறப்பு ஒழிய – இந்தப் பிறப்பில் வெல்ல முடியாதென்ற
மாத்திரமே யல்லாமல், இன்னும் ஏழ் எழு பிறப்பினாலும்-இன்னும் ஏழேழு
(பிறப்புக்கள் பிறந்தால்) பிறவிகளிலும், மெய்ப்பு இறப்பு அற்ற நீதி தருமனை –
மெய்பேசுதலினின்று சிறிதுந் தவறுதலில்லாத நியாயவழியில் நடக்கின்ற
தருமபுத்திரனை, வெல்லமாட்டோம்-; ஒப்பு அற பணைத்த தோளாய் –
(தமக்குச்) சமானமில்லாதபடி பருத்திருக்கின்ற தோள்களையுடையவனான
துரியோதனனே! எங்கு ஏனும் ஒன்று உபாயத்தால் – ஏதேனும்
ஒருபாயஞ்செய்து அதனால், (அத்தருமனை), தப்பு அற – தப்பவொண்ணாதபடி,
சூதுகொண்டு சதிப்பதே – சூதாட்டத்தைக் கொண்டு அழிப்பதே, கருமம்-
இப்பொழுது செய்யவேண்டிய காரியம், என்றான் – என்று கூறி முடித்தான்,
(சகுனி); (எ – று.)

    தருமபுத்திரன் துணைவலிமையுடையனாதலால் அவனைப் போரில்
வெல்லுதல் அருமையானது; அவன் எப்பொழுதும் நியாயத்திற்குக் கட்டுப்பட்டு
நேர்மையான வழியிலேயே நடப்பவனாதலால், அவனுக்குத் தெரியாத
சூதுவழியைக் கொண்டே அவனைச் சயிக்கவேண்டுமெனச் சகுனி கூறினனென்க.
ஏழ்எழு – உம்மைத் தொகையானால் பதினான்கும், பண்புத்தொகையானால்
நாற்பத்தொன்பதுமாம். ‘ஏழெழு பிறப்பினாலும்’ என்றது – பல பிறப்புகள்
எடுத்தாலும் என்றபடி: இனி, (வினைப்பயன் தொடர்கிற) எழுமையினையுடைய
ஏழுவகைப் பிறப்புக்களிலும் எனினுமாம்.  ஏழு பிறப்பாவன – தேவர், மனிதர்,
நீர்வாழ்வன, ஊர்வன, பறவை, விலங்கு, தாவரம் என்பவை.  எழுபிறப்பு –
பண்புத்தொகை; வினைத்தொகையாக்கி, (எழுவகையாகத்) தோன்றும் பிறப்பு
என்றும் பொருள் கூறலாம்.

    இப்பிறப்பொழிய இன்னும் ஏழெழுபிறப்பினாலும் – உலக
வழக்குநவிற்சியணி.  மெய்ப்பு – மெய் என்ற வினைத்தன்மையடைந்த
பகுதியினடியாகப் பிறந்த தொழிற்பெயர்.  இறப்பு – கடத்தல். ‘மெய்ப்பிறப்புற்ற’
என்றபாடம் மெய்யையே பேசுகின்ற பிறப்பை யடைந்துள்ள என்று பொருள்படும்:
‘சத்தியவிரதன்’ என்பது, தருமபுத்திரனுக்கு ஒருபெயர். இரண்டாமடியில்,
மெய்ம்மையே வெற்றிக்குக் காரணமென்பது தொனிக்குமாறு அறிக

தன் பெரு மாமன் சொல்ல, தரணிபன் தம்பிதானும்,
‘வன் பெருஞ் சேனைகொண்டு மலைவதற்கு அவர்கள் அஞ்சார்;
இன் பெரு நேயம் மிக்க இவன் மொழிப்படியே, மாயப்
புன் பெருஞ் சூதுகொண்டு, பொருவதே புந்தி’ என்றான்.துச்சாதனன் சகுனியின்வார்த்தைக்கு உடன்பட்டுக்
கூறுதல்.

தன் பெரு மாமன் சொல்ல – தனது சிறந்த மாமனாகிய சகுனி
(இவ்வாறு) சொல்ல,-தரணிபன் தம்பிதானும் – துரியோதனராஜனது தம்பியாகிய
துச்சாதனனும்,- ‘அவர்கள் – அப் பாண்டவர்கள், வல் பெருஞ்
சேனைகொண்டு மலைவதற்கு – வலிமையுள் சேனைகளைக் கொண்டு
போர்புரிதற்கு, அஞ்சார் – சிறிதும் பயப்படமாட்டார்கள்;  (ஆகையால்), இன்
பெரு நேயம் மிக்க இவன் மொழி படியே – (நம்மிடத்து) இனிமையான மிக்க
அன்பு கொண்டுள்ள இந்த நல்லம்மானது வார்த்தையின்படியே, மாயம் புல்
பெருஞ் சூதுகொண்டு பொருவதுஏ – வஞ்சனையுள்ள இழிவான பெரிய
சூதாட்டத்தினாற் சயிப்பதே, புந்தி -(இப்பொழுது செய்யவேண்டிய) தகுதியான
காரியம்.’ என்றான் – என்று கூறினான்; (எ – று.)

    இப்பொழுதே படையெடுத்துச் சென்று தருமனை வெல்ல வேண்டு
மென்று முன்பு கூறியுள்ள துச்சாதனன், காரணங்காட்டிக் கூறிய சகுனியின்
வார்த்தையைக் கேட்ட பின்பு ‘தருமனைப் போரினால் வெல்ல விரகில்லை’
என்று உணர்ந்து கொண்டு, தானும் அவ்வார்த்தைக்கு இணங்கிச் சூதாடுவதே எளிதில் வெல்லத்தக்க வகையென்று கூறினனென்க.  பகைவருடைய
செல்வத்தை எளிதிற் கவர்தற்குச் சிறந்த உபாயமாயிருத்தலால், ‘பெருஞ்சூது’
என்றான்.  ‘புல்’ என்ற அடைமொழி சூதின் இழிவை விளக்கும்.  புந்தி – புத்திஎன்பதன் மெலித்தல்.     

கோமகன் நெஞ்சும் நாவும் குளிர்ந்து, பேர் உவகை கூர்ந்து,
மாமனை, ‘தவிசின் கண்ணே வருதி!’ என்று இருத்திக்கொண்டு,
‘பா மரு பனுவல் மாலைப் பாண்டவர்தம்மை நின் கைக்
காமரு சூதால் வெல்லும் கருத்து எனக்கு உரைத்தி’ என்றான்.-பாண்டவரைச் சூதில்வெல்லும்வகையைக் குறித்துத்
துரியோதனன் சகுனியை வினாவுதல்.

கோ மகன் – திருதராஷ்டிரராஜனது புதல்வனாகிய
துரியோதனன்,-நெஞ்சும் நாவும் குளிர்ந்து – (தனது) மனமும் நாக்கும்
குளிரப்பெற்று, பேர் உவகை கூர்ந்து – மிகவும் மகிழ்ச்சி அதிகரிக்கப் பெற்று,
மாமனை – (தனது) மாமனாகிய அந்தச் சகுனியை (நோக்கி), தவிசின் கண்ணே
வருதி – ‘இந்த ஆசனத்திலே வருவாயாக,’ என்று – என்று சொல்லி,
இருத்திக்கொண்டு – (தனது ஆசனத்தில் தன்னுடன் ஒருசேர) இருக்க
வைத்துக் கொண்டு,- ‘பாமரு பனுவல் மாலை பாண்டவர் தம்மை-
(பாவலர்கள்பாடிய) பாட்டுக்களின் வடிவமாக அமைந்துள்ள பிரபந்தங்களாகிய
மாலைகளைச் சூடிய பாண்டவர்களை, நின் கை காமரு சூதால் வெல்லும் –
உனது கையா லாடுகிற அழகிய சூதாட்டத்தினாற் சயித்தற்கு உரிய, கருத்து –
ஆலோசனையை, எனக்கு-, உரைத்தி-சொல்வாய்.’ என்றான் – என்றுகூறி
வேண்டினான்;(எ – று.)

    ‘பாண்டவர்களை வெல்வது எவ்வாறு?’ என்று பெருங்
கவலைகொண்டிருந்த துரியோதனன், சூதாட்டத்தினாற் பாண்டவர்களை
வென்று விடலா மென்ற சகுனியின் வார்த்தையைக் கேட்டவுடனே
வெல்லும்வழி யேற்பட்டதனால் ஒருவாறு தேறி, தனக்கு அவனிடம் உண்டான
மகிழ்ச்சி தோன்ற அவனைத் தனது ஆசனத்தில் இருக்க வைத்துக்கொண்டு,
‘நாம் எளிதில் வெல்லுதற்கு உரிய சூதை ஆடும்படி பாண்டவர்களைத்
தூண்டும் உபாயம் யாது?’ என்று ஆலோசித்துக் கூறுமாறு அச்சகுனியையே
வேண்டின னென்க.  தான் இராசசூயயாகத்திற்குச் சென்றபோது
அங்குத்தருமபுத்திரனது செல்வச் சிறப்பைக் கண்டதனாலும், வீமன் முதலியோர்
தன்னைப்பரிகசித்ததனாலும், அதுமுதற் பொறாமையும் கோபமுங்கொண்டு
நெஞ்சுலர்ந்து நாக்கு வறள வருந்துகின்ற துரியோதனன், சகுனியின்
வார்த்தையைக் கேட்ட பின்பு, இனிமேல் அப்பாண்டவர்களை
வெல்லலாமென்ற எண்ணத்தினால் அக்கவலை சிறிதுமாற, நெஞ்சும் நாவுங்
குளிரப்பெற்றனனென்க.  நீயே சூதாடவேண்டுமென்பான் ‘நின்கைச் சூது’
என்றும், சூதாட்டமே தனது வெற்றிக்குக் காரணமாகுமென்று நினைத்து,
‘காமருசூது’ என்றும் கூறினான்.

    ‘குளிர்ந்து’ என்ற சினைவினை, ‘என்றான்’ என்னும் முதலின் வினையைக்
கொண்டு முடிந்தது;  [நன் – வினை – 26.] காமர் – அழகு;  உ – சாரியை;
இனி, காம மருவி என்பதன் விகார மெனினுமாம்.

மன்ன! நின் செல்வக் கோயில், மண்டபம்
ஒன்று, “தேவர்
பொன்னுலகினுக்கும் இல்லை!” என்பது ஓர்
பொற்பிற்று ஆக,
பன்னு நூல் சிற்பம் குன்றாப் பல் தொழில்
வினைஞர்தம்மால்,
நல் நில விரிவு உண்டாக, நாளையே
இயற்றுவிப்பாய்.இதுமுதல் மூன்று கவிகள் -ஒருதொடர்: சகுனி
தருமபுத்திரனைச் சூதாடுவிக்கும் உபாயங் கூறுதல்.
 

மன்ன – (குருநாட்டுக்கு)  அரசனே! (நீ), – நின் செல்வம்
கோயில் – (உனது) செல்வச் சிறப்பையுடைய அரண்மனையில், – தேவர்
பொன் உலகினுக்கும் இல்லை என்பது ஓர் பொற்பிற்று  ஆக –
தேவர்களுடைய சுவர்க்கலோகத்திலும் (இதனையொத்தது) இல்லையென்று
(கண்டவர்) சொல்லும்படியான ஒப்பற்ற அழகையுடையதாகுமாறு, மண்டபம்
ஒன்று – ஒரு மண்டபத்தை, சிற்பம் பன்னும் நூல் குன்றா பல்தொழில்
வினைஞர் தம்மால் – சிற்பத் தொழிலைக் கூறுஞ் சாஸ்திரங்களின்
முறைமைக்குச் சிறிதும் மாறுபடாத பலவகை வேலைத்திறத்தில் வல்லவர்களான
தொழிலாளிகளைக் கொண்டு, நல் நிலம் விரிவு உண்டாக நாளையே
இயற்றுவிப்பாய் – மிக்க இடத்தின் பரப்பு அமையும்படி [மிகப் பெரியதாக]
விரைவிற் செய்விப்பாய்; (எ – று.)

     ‘தேவர்’ என்பதை முதல்வேற்றுமையாகக் கொண்டு ‘என்பது’
என்றதனோடு இயைத்து, தேவர்களும் இம்மண்டபத்தைக் கண்டு நமது
சுவர்க்கலோகத்திலும் இதைப் போன்ற மண்டபம் இல்லையென்று
கூறும்படியாக என்று உரை கூறுவாருமுளர்.  நூல்பன்னு சிற்பம் என்று
கூட்டியுரைப்பினுமாம்.  சில்பம் – வேலைத்திறம்.  தேவலோகத்திலுள்ள யாவும்
பொன்னாயிருக்குமென்பது நூல்துணிபாதலால், அவ்வுலகம் பொன்னுலகு
எனப்படும்.  பொன்னுலகினுக்கு – உருபுமயக்கம்.  உம்மை-உயர்வு சிறப்பு.
பொற்பிற்று – ஒன்றன்பாற் குறிப்பு வினையாலணையும் பெயர்.
பல+தொழில்=பஃறொழில்; பலவென்பது பிறவர அகர மேக, பின்பு
தனிக்குறிலின்பின் நின்ற நிலைமொழியீற்று லகரம் அல்வழியில் தகரம்வர
ஆய்தமாகத் திரிந்தது; [நன் – உயிர் – 20: மெய்-25.] இது, ஆய்தக்குறுக்கம்;
[நன்-எழுத்து-42.] மாத்திரை – கால்; [நன்-எழுத்து – 44.] நாளை –
எதிர்காலங் குறிப்பதோரிடைச்சொல்; ஏ – பிரிநிலை.

மண்டபம் காண, எம்முன் வருக!” என்று அழைத்து வந்தால்,
கண்டு, கண் களித்து, மற்று அக் காவலர் இருந்த போதில்,
“புண்டர விசால நெற்றிப் புரவல! பொழுது போக,
அண்டரும் விரும்பும் வன் சூது ஆடுதும்; வருக!’ என்பேம்.

 (மண்டபம் கட்டிமுடித்தபின்பு), “மண்டபம் காண – (யான்
புதிதாகக் கட்டுவித்த) மண்டபத்தைக் காணுமாறு, எம்முன் – எமது
தமையனான தருமபுத்திரன், வருக-வரவேண்டும், என்று – என்று சொல்லி,

அழைத்து வந்தால் – (தூதர்கள் மூலமாக நீ அவனை இவ்வூர்க்கு)
அழைத்துக்கொண்டு வந்தால்,-அக்காவலர் – (அவ்வாறே மண்டபத்தைக்
காணவேண்டுமென்று வரும்) அந்தப் பாண்டவர்கள், கண்டு களித்து இருந்த
போதில் – (மண்டபத்தைத் தமது) கண்ணாரக் கண்டு மகிழ்ந்திருக்குஞ்
சமயத்தில்,-‘புண்டரம் விசாலம் நெற்றி புரவல – புண்டரமணிந்த விசாலமான –
நெற்றியையுடைய அரசனே! அண்டரும் விரும்பும் வல் சூது – தேவர்களும்
(ஆடுதற்கு) விரும்புகிற வலிய சூதாட்டத்தை, பொழுதுபோக ஆடுதும் –
பொழுது போக்காக ஆடுவோம்;  வருக – (நீ) வருவாயாக,’ என்பேம் – என்று
(தருமனை நோக்கிச்) சொல்வோம்; (எ – று.)-மற்று – அசை.

    பாண்டவர்களுள் மூத்தவனாய்ப் பிரதானனாயிருத்தல்பற்றி, ‘எம்முன்
வருக’ என்று அழைக்க வேண்டுவதாயிற்று.  அவ்வொருவனை அழைக்கவே,
அவன் தம்பியரான மற்றை நால்வரையும் அழைத்தலும் அடங்கும்.  ‘எம்முன்’
என்ற சொல் – மற்றவர்களையும் குறிப்பது, உபலட்சணத்தின் பாற்படும்;
[உபலட்சணமாவது – ஒருசொல் தன் இனத்தையும் காட்டுவது.]
பாண்டவரையும், ‘காவலர்’ என்றது – அரச குலத்தில் பிறந்ததனா லென்க.
மிக்க அழகுடைய பொருளைக் கண்களாற் காணும்போது அங்ஙனம்
காணுதல்பற்றி மனத்தில் நிகழும் மிக்க மகிழ்ச்சியை உபசார வழக்காக
அக்கண்களின்மே லேற்றி, ‘கண்டு கண்களித்து’ என்றார்.  புண்டரம் –
நெற்றியில் குறுக்காகவேனும் நேராகவேனும் இடுங்குறி;  குறுக்காக இடுங் குறி
– திர்யக்புண்ட்ரம் எனவும், நேராக இடுங்குறி – ஊர்த்துவபுண்டரம் எனவும்
சொல்லப்படும்.  இனி, புண்ட்டரம் – இரேகை என்றுகொண்டு,
உத்தமவிலக்கணமாகிய நல்வரைகளையுடைய பரந்த நெற்றி என்றும் உரை
கூறலாம்.  ஒவ்வொருவரும் தாம் செய்யுந் தொழிலைப் பாராட்டிக் கூறுதல்
இயல்பு ஆதலாலும், தருமபுத்திரனுக்கு அதன்மீது விருப்புண்டாக்க
வேண்டியிருத்தலாலும், சகுனி ‘அண்டரும்விரும்பும் வன் சூது’ என்று
அவ்வாட்டத்தைக் கொண்டாடிக் கூறுவோ மென்றான்.  ஆடுதும்-தருமனை
உளப்படுத்திய தன்மைப்பன்மை;  இதில் ‘தும்’ என்ற விகுதி – எதிர்
காலங்காட்டிற்று [நன் – பத – 18.] என்பேம் – துரியோதனன் முதலியோரைக்
கூட்டிய உளப்பாட்டுத் தன்மைப்பன்மை.  அழைத்து-நாம் அழைத்து
[அழைக்க], வந்தால்-(அவன்) வந்தால் என்றும் பொருள் கொள்ளலாம்.

அதிர் முரசு உயர்த்த கோவும், “ஐ!” எனத் துணியும்; பின்னை,
மதி மருள் இயற்கைத்து ஆகும் மாய வெஞ் சூதுதன்னால்,
விதி எனப் பொருது, வாழ்வும், மேதகும் அரசும், தங்கள்
பதி முதல் பலவும், தோற்கும்படி செகுத்திடுவல்’ என்றான்.

 (சூதாட அழைத்தால்),-அதிர் முரசு உயர்த்த கோவும் –
ஒலிக்கின்ற முரச மெழுதிய கொடியை உயர எடுத்துள்ள அரசனாகிய
தருமபுத்திரனும், ஐ என துணியும்-‘அழகியது’ என்று சொல்லி (அங்கீகரித்து)ச்
சூதாடத்துணிவான்; பின்னை – பின்பு,-(நான்),-மதி மருள் இயற்கைத்து ஆகும்
மாயம் வெம்சூது தன்னால்-புத்தி மயங்குதற்குக் காரணமான இயல்பை
உடையதாகிய வஞ்சனைக்குணமுள்ள கொடிய சூதாட்டத்தினால், விதி என
பொருது – ஊழ்வினையென்று சொல்லும்படி போராடி,- தங்கள் –
அப்பாண்டவர்களுடைய, வாழ்வும்-வாழ்வுக்குக் காரணமான செல்வத்தையும்,
மேதகும் அரசும் – மேலான அரசாட்சியையும், பதி முதல் பலவும் – தேசம்
முதலாகிய பலபொருள்களையும், தோற்கும்படி-, செகுத்திடுவல் –
(அப்பாண்டவர்களை) அழித்து விடுவேன், என்றான் – என்று கூறினான்;
(எ- று.)

    ஊழ்வினையைச் சூதுக்கு உவமையாக்கியது, ‘தவறாது தருமனை
யகப்படுத்தி வருத்தப் போவதனா லென்க. ஊழ் மிக்கவலியுள்ளதாவதை
“ஊழிற் பெருவலி யாவுள” என்ற திருக்குறளினாலும் அறிக.  அதிர்-
முரசத்துக்கு இயற்கையடைமொழி.  முரசு – அதன் வடிவமெழுதிய கொடிக்குத்
தானியாகுபெயர்.  தருமன் மங்கலகரமாகவும் வெற்றிக்கு அறிகுறியாகவும்
முரசத்தைக் கொடியிற் கொண்டனன் போலும்.  ஐயெனல் – அங்கீகார
வார்த்தை.  அரசு -அரசாளுந்தன்மை.  செகுத்திடுவல் – வெல்வேன்;
தன்மையொருமைவினைமுற்று.  கோவும் துணியும் – செய்யுமென் முற்று,
ஆண்பாலுக்கு வந்தது

இன்னதே கருமம்!’ என்று என்று, இளைஞரும்
        விழைந்து சொன்னார்;
அன்னதே கருமம் ஆக, அவர் வழி ஒழுகும் நீரான்,
“தன்னதே ஆகும், இந்தத் தலம்’ எனும் கருத்தால், மாமன்
சொன்னதே துணிந்து, மார்பும் தோள்களும் பூரித்திட்டான்.
சகுனியின் வார்த்தைக்குத் துரியோதனன் மகிழ்தல்.

இளைஞரும் – (அருகிலிருந்த துரியோதனனது)
தம்பிமார்களும், இன்னதே கருமம் என்று என்று விழைந்து சொன்னார் –
‘(சகுனி கூறுகிற) இதுவே (இப்பொழுது நாம் செய்யத்தக்க) காரியம்’ என்று
பலமுறை விரும்பிச் சொன்னார்கள்; அவர்வழி யொழுகும் நீரான்-
அத்தம்பிமார்களின் கருத்தின்படியே நடக்குந் தன்மையுடையவனாகிய
துரியோதனனும்,-அன்னதே கருமம் ஆக – அதனையே தான்
செய்தொழிலாகக் கொண்டால், இந்த தலம் தன்னதே ஆகும் –
இவ்வுலகமுழுவதும் தன்னுடையதேயாய்விடும், எனும் கருத்தால் – என்னும்
எண்ணத்தினால், மாமன் சொன்னதே துணிந்து – மாமனாகிய சகுனி கூறிய
உபாயத்தையே நன்றென்று கடைப்பிடித்து, மார்பும் தோள்களும் பூரித்திட்டான்
– (மிக்க மகிழ்ச்சியினால்) மார்பும் தோள்களும் பூரிக்கப் பெற்றான்; (எ – று.)

     என்று என்று சொன்னார் – தனித்தனி கூறினா ரென்றுமாம்.
‘இளைஞர்வழி யொழுகும் நீரான்’ என்றது, துரியோதனன் தான் சிறிதும் பாரபுத்தியில்லாமல் அற்பபுத்தியையுடைய சிறுவர்களாகிய
தம்பிமார்களின் கருத்தின்படியே நடக்கின்றவ னென இகழ்ந்தவாறு.  நீரான் –
நீர்மையென்ற பண்புப்பெயரின் விகாரமான நீர்-பகுதி.  துரியோதனன்
‘இனிச்சூதாடி அவர்களது இராச்சியத்தைக் கவர்வது திண்ணம்’ என்று
துணிவுகொண்டு, பெற்றவன் போலவே மகிழ்ந்து பூரித்தன னென்க.
ஏகாரங்கள் – பிரிநிலைப் பொருளன.  நீரான் மார்பும் தோள்களும்
பூரித்திட்டான் – உயர்திணை தொடர்ந்த சினைப்பெயர்கள் உயர்திணை
முடிபையே கொண்ட திணைவழுவமைதி; [நன் – பொது – 26.] பூரித்தல் –
பருத்தல்.

வில்லினால் உயர்ந்த வென்றி விதுரனை நோக்கி, கொற்ற
மல்லினால் உயர்ந்த பொன்-தோள் வலம்புரி மாலை வேந்தன்
வல்லினால் உபாயம் செய்ய மாதுலன் உரைத்தது எல்லாம்
சொல்லினான்; அவனும் கேட்டு, சொல் எதிர் சொல்லலுற்றான்:துரியோதனன்சகுனியினுபாயத்தை விதுரனிடம் சொல்ல,
அன்னான் மாறுகூறல்.

கொற்றம் – வெற்றியை யுடையவையும், மல்லினால் உயர்ந்த –
மற்போரினால் மேன்மைபெற்று விளங்குகின்றவையுமாகிய, பொன் தோள் –
அழகிய தோள்களில், வலம்புரி மாலை – நஞ்சாவட்டைப் பூமாலையை
யணிந்த, வேந்தன் – துரியோதனராஜன்,- வில்லினால் உயர்ந்த வென்றி
விதுரனை-வில்வித்தையால் மேம்பாடடைந்தவனும் வெற்றியை
யுடையவனுமாகிய விதுரனை, நோக்கி – பார்த்து,- வல்லினால் உபாயம்
செய்ய-சூதாட்டத்தினால் (தருமபுத்திரனது இராச்சியத்தைத்) தந்திரமாகக்
கவரும்படி, மாதுலன் உரைத்தது எல்லாம் – (தன்) மாமனாகிய சகுனி
சொன்னது முழுவதையும், சொல்லினான்-; அவனும் – அவ்விதுரனும், கேட்டு-,
சொல் எதிர் சொல்லல் உற்றான்-(அத்துரியோதனனது) வார்த்தைக்கு
எதிர்மொழி கூறத் தொடங்கினான்; (எ – று.)

     “வெற்றி விதுரன் கைவில்லிருக்க மேதினியில், மற்றவனை வெற்றி
கொள்ளுமாறுண்டோ” என்னும்படி விதுரன் வில் தொழிலில் மிகத்
தேர்ந்தவனாதலால், ‘வில்லினாலுயர்ந்த வென்றி விதுரன்’ என்றார்.
“வில்விதுரன்” என்று பலவிடங்களிலும் பயிலும்.  அரசர்கட்கு உரிய
போர்த்தொழிலைக் கைவிட்டு இழி தொழிலாகிய மாயச்சூதில் மனம் வைத்த
துரியோதனனை ‘கொற்றமல்லினாலுயர்ந்த பொற்றோள் வேந்தன்’ என்றது –
பிறகுறிப்பின்பாற்பட்ட இகழ்ச்சி யென்னலாம்.  வலம்புரி – வலப்பக்கமான
முறுக்கை யுடைய இதழ்களை யுடையது என நஞ்சாவட்டைக்குக் காரணக்குறி.
நஞ்சாவட்டை-துரியோதனனுக்கு அடையாளப் பூமாலையாம்.  வல் –
சூதாடுகருவி: அதனாலாகிய ஆட்டத்துக்கு ஆகுபெயர்.  மாதுலன் –
தாயினுடன் பிறந்தவனெனப்பொருள்படும்.  உரைத்ததெல்லாம் –
ஒருமைப்பன்மைமயக்கம்.  ‘சொல்லெதிர் சொல்லலுற்றான்’ என்ற தொடர் –
இரட்டுற மொழிதலென்னும் உத்தியால், சொல்லுக்கு மாறாக உத்தரஞ்சொல்லினா
னெனவுமாம்.  எதிர் சொல்லுதல்-மறுமொழி கூறுதல்;  மறுமொழி – விடை,
மாறானமொழி.

வையமும் அரசும் வாழ்வும் வாங்குகை கருத்தே ஆயின்,
பொய் அடர் சூதுகொண்டு, புன்மையின் கவர வேண்டா;
ஐய! நின் தந்தை ஓலை ஐவருக்கு எழுதி விட்டால்,
மெய்யுற மறுத்துச் சொல்லார்; வேண்டின தருவர் அன்றேமூன்றுகவிகள் – விதுரன் வார்த்தை.

இதுமுதல் ஐந்து கவிகள் – ஒருதொடர். 

     (இ – ள்.)  ஐய – ஐயனே! வையமும் – பூமியையும், அரசும் –
அரசாட்சியையும், வாழ்வும் – செல்வவாழ்க்கையையும், வாங்குகை –
(தருமபுத்திரனிடத்திலிருந்து) கவர்ந்து கொள்வது, கருத்து ஆயின் – (உனது)
எண்ணமானால், பொய் அடர் சூதுகொண்டு – பொய்ம்மைமிக்க
சூதாட்டத்தினால், புன்மையின் கவரவேண்டாம் – தாழ்ந்த வழியாற்
கவர்ந்துகொள்ளவேண்டாம்;  (மற்றுக் கவர்தற்குத் தக்க உபாயம்
எதுவென்றால்)-, நின் தந்தை – உனது தந்தையான திருதராட்டிரன், ஐவருக்கு
ஓலை எழுதி விட்டால் – (வையமும் அரசும் வாழ்வும் உனக்கே உரியனவாகத்
தந்திடுமாறு) பஞ்சபாண்டவர்கட்குத் திருமுகம் எழுதியனுப்பினால், மெய் உற –
உண்மையாக, மறுத்து சொல்லார் – (மாட்டோமென்று) மாறு கூறாதவர்களாய்,
வேண்டின தருவர் – (நீ) விரும்பியவை யெல்லாவற்றையும் தந்திடுவார்கள்  (எ
– று.)- அன்றே ஈற்றசை;  தேற்றமுமாம்:  அப்பொழுதே யென்றுங் கூறலாம். 

     “சூது….வெம் பொய்யினுக்கு அருந்துணை புன்மைக்கு ஈன்ற தாய்”
என்பவாதலால், ‘பொய்யடர்சூது’ எனப்பட்டது.  புன்மையின் கவர்தல் –
வழியல்லாத வழியாற் பெறுதல்.  மைந்தன் முறையாகின்ற துரியோதனனை
விதுரம் ‘ஐய’ என்று விளித்தது, அன்புபற்றிய மரபுவழுவமைதி.  வேண்டின –
பலவின்பாற்பெயர்.         

தந்தைதன் ஏவலாலே தருமனும் தம்பிமாரும்
இந்த மண் ஆடல் கைவிட்டு, எரி கெழு கானம் சேர்வர்;
முந்துற நுமதே ஆகும், முழுதும் வாழ்வு; எழுதும் செம் பூண்
பைந் தொடை அரசர் கேட்டால், பாவமும் பழியும் ஆகா.

தந்தைதன் ஏவலாலே – (தமக்குப்பெரிய) தந்தையாகிய
திருதராட்டிரனது கட்டளையினால், தருமனும் தம்பிமாரும் -, இந்த மண்
ஆடல் கைவிட்டு-இப்பூமியை அரசாளுதலை விட்டிட்டு, எரி கெழு கானம்
சேர்வர் – தீ நிரம்பிய காட்டைச் சேர்வர்:  வாழ்வு முழுதும் முந்துற நுமதே
ஆகும் – (அப்பாண்டவர்களது) வாழ்க்கைகளெல்லாம் விரைவாக
உங்களுடையதேயாகி விடும்;  (ஆதலால்), எழுதும்-(சூதைவிட்டுத் தந்தையைக்
கொண்டு ஓலை) எழுதுவியுங்கள்; செம் பூ பைந்தொடை அரசர் கேட்டால் –
(நீங்கள் அவ்வாறு எழுதுவித்து இராச்சியங்கொள்வதை) அழகிய பூக்களினால் தொடுக்கப்பட்ட புதிய மாலைகளை யணிந்த அரசர்கள்
கேட்பாராயின், பாவமும் பழியும் ஆகா – பாவமும் பழியும் நேருமென்று
கொள்ளப்படமாட்டா; (எ – று.) 

     இராமபிரான் போலவே பாண்டவர்களும் தங்கட்கு உரிய பொருளை
யிழந்தாயினும் தந்தை சொல்லைப் பாதுகாக்குந் தன்மையுடையாரென்பது,
முன்னிரண்டடியால் விளங்கிற்று.  இங்ஙனம் கூறியதனால், தருமபுத்திரனுக்கு
எழுதவேண்டிய திருமுகத்தில் பாண்டவர்கள் நாட்டைவிடுதலும் காட்டுக்குச்
செல்லுதலும் குறிக்கவேண்டிய பொருள்களெனக் குறிப்பித்தபடியாம்.
தருமபுத்திரன் மூத்தவனும் இயற்கையிற் பல நற்குணங்களை
யுடையவனுமாயிருத்தல்பற்றி, இராச்சியத்தைக் கொடுத்துவிட்டு
அந்நாட்டிலேயே யிருந்தால் ஒருகால் ஜனங்கள் அத்தருமன்மீது
அன்புகொண்டு அவனையே அரசனாகப் பாராட்டக்கூடு மாதலால், அதற்குச்
சிறிதும் இடமில்லாதபடி நாட்டைத்துறந்து காட்டுக்குச் செல்லுதல் அவசியம்
வேண்டுவதாயிற்று.  ‘முழுதும்’ என்பதற்கு – உங்கள் நாட்டோடு
பாண்டவர்நாடுஞ் சேர்ந்து எல்லாம் என்றுபொருள் கூறலாம்.  இனி, எழுதும்
பைந்தொடை, செம்பூந்தொடை எனத் தனித்தனியியைத்து, எழுதும் –
சித்திரவேலை செய்யப்பட்ட, பைந்தொடை – பசும்பொன்னாற்செய்த
ஆரங்களையும், செம்பூந்தொடை – அழகிய மலர்களினால் தொடுக்கப்பட்ட
மாலைகளையும் அணிந்த அரசரெனவும்;  கவிகளால் எழுதப்படுகிற அழகிய
மலர்மாலை போலச் சிறந்த பாமாலையையுடைய அரசரெனவும் பொருள்
கூறினும் பொருந்தும்.  சூதாடிக்கவர்தலினும் தந்தையின் ஓலை மூலமாகக்
கவர்வது, குற்றமற்றவழி யென்பது, விதுரன் கருத்து. 

     கைவிட்டு, கை – தமிழுபசருக்கம்.  முழுது – எஞ்சாமைப்பொருள்பட
வருவதோர் உரிச்சொல்:  “முழுதென்கிளவி எஞ்சாப் பொருட்டே” என்பது,
தொல்காப்பியம்.  ‘ஆகா’ – ஆகாது என்பதன் விகாரம்

தீதினால் வரித்து, நெஞ்சம் தீயவர் ஆடும் மாயச்
சூதினால் வென்று கொள்கை தோற்றமும் புகழும் அன்று;
போதில் நான்முகனும், மாலும், புரி சடையவனும், கேள்வி
ஆதி நான்மறையும், உள்ள அளவும், இவ் வசை அறாதே!’

நெஞ்சம் தீயவர் -மனத்திற் குற்றமுள்ளவர்களாகிய கீழோர்,
தீதினால் – (தம்முடைய) இயற்கைத் தீய குணத்தால், வரித்து – விரும்பி,
ஆடும் – ஆடுகின்ற, மாயம் சூதினால்-வஞ்சனையையுடைய சூதாட்டத்தினால்,
வென்று-(நீங்கள் பாண்டவர்களைச்) சயித்து, கொள்கை – (அவர்களது
இராச்சியத்தைப்) பறித்துக் கொள்வது, தோற்றமும் புகழும் அன்று –
பெருமைக்கும் புகழுக்கும் காரண மாகாது; (அன்றியும்),- போதில் நான்முகனும்
– தாமரை மலரில்வசிக்கின்ற பிரமனும், மாலும் – திருமாலும், புரி சடையவனும்
– திரித்துவிட்ட சடையையுடையவனான சிவபிரானும் கேள்வி ஆதி நால்
மறையும் – (எழுதாக்கிளவியாய்) உபதேச கிரமத்திலே வருகின்ற பழமையாகிய
நான்குவேதங்களும், உள்ள அளவும் – இருக்கிறவரையிலும், இ வசை
அறாதே-(சூதாட்டத்தினாற்கவர்ந்தா ரென்கிற) இந்தப்பழி (உங்கட்கு) நீங்கவே
மாட்டாது; (எ – று.)-ஈற்றுஏகாரம் – தேற்றம்.

ஒருநாளும் அழியாது எந்நாளும்பழிநிலைத்திருக்கு மென்பதற்கு,
‘திரிமூர்த்திகளும் வேதங்களும் உள்ளவளவும்’ என்றான்.  தீதினால் வரித்து –
கொடியவஞ்சனையினாற் கட்டுப்படுத்தி என்றலுமாம்.  மோசக்கருத்தினால்
(பாண்டவர்களை) வரவழைத்து எனினுமாம்.  பிரமன் திருமாலின்
நாபிக்கமலத்தில்தோன்றியவனும்நான்கு திசையையும் நோக்கிய
நான்குமுகங்களையுடையவனு மாதலால்,’போதினான்முகன்’ எனப்பட்டான்.
மால் – (அடியார்கள் பக்கல்) அன்பு, (திருமகளிடத்துக்) காதல்
இவற்றையுடையவன்.  புரிசடை – கட்டுவதற்கு உரிய சடையுமாம்.
சிவபிரானதுசடைமுடி, கபர்த்தமென்று பெயர்பெறும். ஆக்கல் அளித்தல்
அழித்தல்என்னும் முத்தொழிலின் முறைபற்றி, ‘நான்முகனும் மாலும்
சடையவனும்’ என்று அடுக்கினார். ஸ்வரங்களையே பிரதானமாகக் கொண்டுள்ள
வேதங்கள்எழுதிப்படிக்க முடியாமல் குரு சிஷ்ய கிரமத்திற் கேட்டோதியே
யறியப்படுகின்ற முதனூலாதலால் ‘கேள்வியாதி நான்மறை’ என்றார்.
ஆதிநான்மறை – லௌகிக சப்தங்கட்கெல்லாம் முதற்காரணமான
வேதங்கள்எனினுமாம். நான்மறை – ருக், யஜு ர் ஸாமம், அதர்வணம் என்பன.
தைத்திரியம்.  பௌடியம், தலவகாரம், ஸாமம் என்றலு மொன்று

என்று அவன் உரைப்பக் கேட்டே, எரி எழும் மனத்தன் ஆகி,
‘ஒன்றிய கேண்மைத் தந்தைக்கு ஒரு புடை வாரம் உண்டோ?
வன் திறல் மைந்தர் வாழ்வு வாங்கி, இன்று எமக்குத் தந்தால்,
புன் தொழில் வசையே அன்றி, புகழ்கொலோ புகல்வது? அம்மா!இதுவும், அடுத்த கவியும்-சினங்கொண்ட
துரியோதனன் வார்த்தை.

என்று – இவ்வாறாக, அவன்உரைப்ப-அவ்விதுரன் சொல்ல,
கேட்டு-,(துரியோதனன்), எரி எழு மனத்தன் ஆகி- (அவ்விதுரனது
சொற்களாற்) கோபாக்கினிபற்றியெரிகிற மனமுடையவனாய், (அவ்விதுரனை
நோக்கி), ‘ஒன்றிய கேண்மை தந்தைக்கு-(இருதிறத்தாரிடத்திலும்) ஒத்த
உறவுரிமையையுடைய தந்தையாகிய திருதராட்டிரனுக்கு, ஒருபுடை வாரம்
உண்டோ – (எங்களிருதிறத்தாருள்) ஒருபக்கத்தில் பட்சபாதமாக அன்பு
கொள்ளத்தக்கதோ? இன்று – இப்பொழுது, வல் திறல் மைந்தர் வாழ்வு –
மிக்கவலிமையுடைய மைந்தர்களாகிய பாண்டவர்களுடைய செல்வத்தை, வாங்கி
– (ஓலையெழுதிக்) கவர்ந்து, எமக்கு தந்தால் – எங்கட்குக்கொடுத்தால்,
புகல்வது – (அப்பொழுது யாவராலுஞ்) சொல்லப்படுவது, புல் தொழில்
வசையே அன்றி – இவ்விழிதொழிலினால் நேர்ந்த பழிப்பேயல்லாமல்,
புகழ்கொலோ – கீர்த்தியாமோ? (எ – று.)-அம்மா-அசைநிலை. பட்சபாதஞ்
செய்தலின் கொடுமையைக் குறித்து வியந்தவாறுமாம்.

     பாண்டவரை வருவித்துச் சூதாடிவென்றுஅவ்வழியில் அவர்களிராச்சியத்தை
நமக்கு உரியதாக்குதல் பழிப்பில்லாத நேர்வழியாகுமே யன்றி,
எங்களிருதிறத்தாரிடத்திலும் ஒத்த அன்பினனாயிருக்கவேண்டிய தந்தையாகிய
திருதராட்டிரனைக்கொண்டு ஒரு காரணமுமின்றி இராச்சியத்தைக்
கொடுத்துவிடும்படி பாண்டவர்க்கு ஓலையெழுதுவித்து அவர்களது
இராச்சியத்தைப் பறித்துக்கொள்ளுதல் ‘திருதராட்டிரன் பட்சபாதமாக
ஒருதிறத்துப் புதல்வரிடத்தினின்று இராச்சியத்தைக் கவர்ந்து மற்றொருதிறத்துப்
புதல்வர்க்குக் கொடுத்தான்’ என்ற பெரும்பழிக்குக் காரணமாய் நிற்கு மாதலால்,
அவ்வழி சிறந்ததாகாது எனத் துரியோதனன் விதுரன்மொழியைமறுத்து
இகழ்ந்து கூறியவாறு.  திருதராட்டிரன் தன்மக்களாகிய
துரியோதனாதியரிடத்துப்போலவே மிக்க இளமையிலேயே தமது தந்தையை
யிழந்தவர்களாகிய தன் தம்பி மக்களான பாண்டவரிடத்தும் ஒத்த
அன்பினனாதலால், ‘ஒன்றிய கேண்மைத் தந்தை’ எனப்பட்டான்.
துரியோதனாதியர் பாண்டவர் என்ற இரு திறத்தாரையும் ஒரு நிகராகக்கருதாது
ஒருதிறத்தாருடைய அரச வாழ்க்கையைப் பறித்து மற்றொரு திறத்தார்க்குக்
கொடுத்தல் ஒருபுடைவாரமாதல் காண்க.  ஒருபுடை வாரம்-பட்சபாதம்.

     எரி – கோபத்திற்கு இலக்கணை. வல்திறல் – ஒருபொருட்பன் மொழி.
வாழ்வு – காரியவாகுபெயர்.  ‘எமக்கு’ – தம்பியரையுங் கூட்டிய
உளப்பாட்டுத்தன்மைப்பன்மை.  புகழ்கொல்ஓ, கொல் –
வினாப்பொருளையுணர்த் தியதனால், ஓகாரம் – அசைநிலை.

நினக்கு இது தொழிலால்; என்றும் நேயமும்
அவர்கள்மேலே;
“எனக்கு உயிர்த் தந்தை நீ” என்று யான் உனை
மகிழ்ந்து காண்பன்;
உனக்கும் உன் கிளைக்கும், நாளும், உண்டியும்
வாழ்வும் இங்கே;
மனக் கருத்து அங்கே’ என்றான்-மாசுணத்
துவசன் மாதோ.

 நினக்கு – உனக்கு,  இது -இவ்வாறு பட்சபாதமாகச்
சொல்வதே, தொழில் – தொழிலாகும்;  என்றும் – எப்பொழுதும், நேயமும் –
அன்பும், அவர்கள்மேலே-அப்பாண்டவர்க ளிடத்திலே யாகும்;  யான் -, நீ
எனக்கு உயிர் தந்தை என்று – ‘நீ எனக்கு உயிர்க்கு ஒப்பான தந்தையாவாய்’
என்று நினைத்து,-உனை – உன்னை, மகிழ்ந்து காண்பன் – மகிழ்ச்சி பாராட்டி
(அன்போடு) நோக்குவேன்; (இவ்வாறு நான் நின்னிடத்து
அன்புகொண்டிருக்கவும்), – உனக்கும்-, உன் கிளைக்கும் – உன்னுடைய
சுற்றத்தார்கட்கும், நாளும் – நாள்தோறும், உண்டியும் – உணவும், வாழ்வும் –
இனிதாக வாழ்தலும், இங்கே – இவ்விடத்தில்: மனம் கருத்து – மனத்திற்
கொள்ளும் (அன்பான) எண்ணமோ, அங்கே – அப்பாண்டவர்க
ளிடத்திலேயாகும், என்றான் – என்று கூறினான் (யாவனெனில்)-, மாசுணம்
துவசன் – பாம்புக்கொடியை யுடையவனாகிய துரியோதனன்; (எ – று) மாது,
ஓ – ஈற்றசைகள். 

     ‘நீ எங்களிடத்திலே உணவும் வாழ்க்கையும் பெற்றிருந்தும், எங்கட்கு
அநுகூலமாகப் பேசாமல் எங்களைப் பழித்தும் எதிரிகளான பாண்டவர்களைப்
புகழ்ந்தும், நாங்கள் தொடங்கிய காரியத்தை நிறைவேறவொட்டாது தடைசெய்து
உண்டவீட்டுக்கு இரண்டகம் நினைத்துப் பேசுவது எமக்குத் தந்தையாகிய
உனக்குச் சிறிதும் தகுதியன்று’ எனத் துரியோதனன் விதுரனைப் பழித்துக்
கூறியவாறு விதுரன் இராச்சியத்தைச் சூதாட்டத்தினாற் கைப்பற்றலாகாதென்று
தடுத்துக்கூறியதோடு நில்லாமல் இராச்சியத்தை வேறு வகையாகக்
கைக்கொள்ளுமாறு உபாயங்கூறியிருக்கவும், துரியோதனன் அவனை இவ்வாறு
பழித்துக்கூறியது, தான் செய்யத்தொடங்கிய காரியத்தை மேன்மேலும்
ஊக்கத்தோடு செய்து முடிக்கவொட்டாதபடி தடுத்தற்கு விதுரன் ஒரு
வியாகுலமாகக் கூறியதேயன்றித் தன்னிடத்து உள்ளூர அன்பினாற்
கூறியதனதென்று அதனைக் கருதியதனா லென்க.  இங்குத் துரியோதனனை
‘மாகிணத்துவசன்’ என்றது – பாம்புக்கு உதவும் பால் நஞ்செயாவதுபோலத்
துரியோதனனுக்கு விதுரன் செய்த உபதேசம் அவ்வளவும் நல்லறிவு
உண்டாதற்குக் காரணமாகாமல் கோபத்தினால் தீயறிவு உண்டாதற்கே
காரணமாயிற்று என்றவாறு. என்றும், நாளும் – உம்மைகள் முற்றுப்பொருளன.
நேயமும், உம்மை – எச்சப்பொருளது.  மற்றவை – எண்ணும்பொருளன.
கிளை – உறவினர்க்கு உவமையாகுபெயர்.  உண்ண – உண்ணப்படுவது;
உண் – து – சாதியை, இ – செயப்படுபொருள்விகுதி. 

மைந்தன் அங்கு உரைத்த மாற்றம் மனத்தினை ஈர, பின்னும்
வெந் திறல் விதுரன் உற்று விளம்புவன் என்ப மாதோ:
‘புந்தியில் மறு இலாதோய்! “புதல்வரில் ஒரு சார் அன்பு
தந்தையர்க்கு இல்லை’ என்றாய்; யானும், அத்
தந்தை அன்றோ?இதுமுதல் நான்குகவிகள் – ஒருதொடர்; விதுரன்
சினத்தோடு துரியோதனனுக்கு நல்லறிவு கூறுதல். 
 

அங்கு – அப்பொழுது, மைந்தன் தனக்கு மைந்தன்
முறையாகின்ற துரியோதனன் உரைத்த சொல்லிய, மாற்றம் – மாறான
வார்த்தை, மனத்தினை ஈர – (தன்) மனத்தை வருத்த,-வெம் திறல் விதுரன் –
மிக்க வலிமையுள்ளவனாகிய விதுரன், உற்று – மனம்பொருந்தி, பின்னும்
விளம்புவன் – மற்றும் கூறுவானாயினான்;- புந்தியில் மறு இலாதோய்-மனத்திற்
குற்றமற்றவனான துரியோதனனே! (நீ),-‘தந்தையர்க்கு-தகப்பன்
முறையிலிருப்பவர்க்கு, புதல்வரில் – (இருதிறத்துப்) புதல்வர்களுள், ஒருசார் –
ஒருதிறத்தாரிடத்து, அன்பு-, இல்லை-, என்றாய் – என்று சொன்னாய்; யானும்
– நானும், அ தந்தை அன்றோ – அவ்வாறேநும் (இரு திறத்தார்க்கும்) தந்தை
முறையாகுபவ னன்றோ! (எ – று.)

     நீ “தந்தைக்கு ஒருபுடைவார முண்டோ” என்று கூறியது எனக்கும் ஒக்கு
மாதலால், யானும் பட்சபாதமாகக் கூறமாட்டேனென்று கொள்ளவேண்டியதா
யிருக்க.  என்னை மாத்திரம் ‘நேயமும் அவர்கள் மேலே, மனக்கருத்தும்
அங்கே’ என இவ்வாறு பழித்துக்கூறுவது, உனது வார்த்தைக்கே முன்னும்
பின்னும் முரணாகின்றது என விதுரன் துரியோதனனுக்கு எடுத்துக் காட்டியபடி.
இதனால், விதுரன் தான் பட்சபாதமாகக் கூற வகையில்லை யெனச்
சாதித்தவாறு காண்க.  தன்மனம் வருந்துமாறு துரியோதனன் பலபடிசொல்லவும்
அதனைப்பொறுத்து அத்துரியோதனனுக்கு மீளவும் நன்மை உபதேசிக்கத்
தொடங்கிய விதுரனது மனவுறுதியுடைமையைப் பாராட்டிக் கூறுவார் வெந்திறல்
விதுரன்’ என்றார். 

     ஈர்கல் – அறுத்தல், பிளத்தல், இலக்கணையால் விருத்துதலைக் குறித்தது.
அன்றி, மனமாகிய மரத்தைக் கொடுஞ்சொ  ளாகிய வாள் அறுக்க என்று
கொண்டால் என்ப ஈற்றசை;  சீவகசிந்தாமணியுரையில்இவ்வாறே கூறியுள்ளார்.
விதுரன் துரியோதனனை ‘புந்தியில் மறுவிலாதோய்’ என விளித்தது,
தந்தைமுறையாகின்ற தன்னைப் பழித்துக்கூறியதையும் மாறுபடக் கூறியதையும்
பற்றிய இகழ்ச்சிக் குறிப்பு: இது, எதிர்மறையிலக்ககணையெனவும், பிறகுறிப்பு
எனவும் சொல்லப்படும். உனக்கு இவ்வகைத்தீக்குணம் வசவாசதோஷத்தால்
வந்தது என்பது தோன்ற ‘புந்தியின் மறுவிலாதோய்’ என விளித்ததுமாம். என்றாய்+யானும்=என்றாயனும்; தனிக்குறிலைச் சாராத யகரம், அல்வழியில் யகரம்வரக் கெட்டது

நீங்களும் அவரும், நேய நெறிமுறை தவறாது, என்றும்
வாங்கு நீர் உததி ஆடை மண்ணின்மேல் வாழ்தல் உற்றால்,
பாங்கு அலா அரசர் எல்லாம் பணிந்து, நும் வாயில் நிற்பர்;
ஓங்கிய புகழும் வாழ்வும் ஒருப்பட வளரும் அன்றே.

நீங்களும்-, அவரும் – அப்பாண்டவர்களும், என்றும் நேயம்
நெறி முறை தவறாது – எப்பொழுதும் அன்பிற்கு உரிய வழியின் முறைமையில்
தவறாமல் [மிக்க அன்புகொண்டு], வாங்கு நீர் விகுதி ஆடை மண்ணின்மேல்
வாழ்தல் உற்றால் – வளைவான சூழ்ந்துள்ள நீர் நிறைந்த சமுத்திரத்தை
ஆடையாகக்கொண்டுள்ள இந்நிலவுலகத்தில் (ஒருமித்து) வாழ்ந்தால்,- பாங்கு
அவர் அரசர் எல்லாம் – (தம்மோடு) இணக்கம்கொண்டிராத [நும்மிடத்துப்
பகைமைகொண்டுள்ள] அரசர்களெல்லாரும், பணிந்து – வணங்கி, நும் வாயில்
நிற்பர் – உங்களுடைய அருளைப் பெறுதற்காகத்) தலைவாசலிலே
காத்துக்கொண்டிருப்பார்கள்; (உங்கட்கு), – ஓங்கிய – மிகவும் அதிகமான,
புகழும் – கீர்த்தியும், வாழ்வும் – செல்வவாழ்க்கையும், ஒருப்பட – ஒருசேர,
வளரும் – விருத்தியடையும்; (எ – று.) அன்றே – ஈற்றசை; தேற்றமுமாம். 

     இச்செய்யுள், ஒற்றுமையுடன் வாழ்தலா லுண்டாகும் நன்மையை
எடுத்துக்காட்டியதாம்.  ‘எத்தால் வாழலாம், ஒத்தால் வாழலாம்’ என்பது
பழமொழி.  உததி – நீர்தங்குமிடம் எனக் காரணப்பொருள்படும்: அது – ‘நீர்’
என முன்வந்ததனால் இங்குக் காரணங்கருதாது பெயர்மாத்திரமாய் நின்றது;
“அடியளந்தான் தாஅயதெல்லாம்” என்றவிடத்துப் போல.  பூமியைச்சூழ்ந்துள்ள
கடலை, நிலமகளுடுத்த ஆடையாக உருவகப்படுத்திக் கூறுதல், கவிசமயம்.
பாங்கு – நண்புரிமை. இல்வாய்-வாயில் என இலக்கணப்போலி

உங்களின் அவரும் நீரும் உளம் பிரிந்து,
எதிர்த்தீர் ஆனால்,
‘தங்களின் எதிர்ந்தார் அம்மா, குருகுலத்
தலைவர்!’ என்னா,
பொங்கு அளி நிகழும் கஞ்சப் புரவலன்
ஒழிவு கண்ட
திங்களின் உயர்ச்சி போலத் தெவ்வரும்
திகழ்வர் அன்றே.

அவரும் – அப்பாண்டவர்களும், நீரும் – நீங்களும், உளம்
பிரிந்து மனம்வேறுபட்டு, உங்களின் எதிர்த்தீர் ஆனால் –
(குருகுலத்தவர்களாகிய) உங்களுள்ளே போர்புரிந்தீர்களானால், -தெவ்வரும்-
(உங்களுடைய) பகைவர்களும்,- ‘குருகுலம் தலைவர் – குருகுலத்தில் தோன்றிய
அரசர்களாகிய பாண்டவர்களும் துரியோதனாதியர்களும், தங்களின் எதிர்ந்தார்
– தங்களுள்ளே மாறுபாடுகொண்டு போர்புரியலானார்கள்:  அம்மா –
ஆச்சரியம்!’ – என்னா – என்று சொல்லி,- பொங்கு அளி நிகழும்-
களிப்புக்கொள்ளுகின்ற வண்டுகள் மொய்த்தற்கு இடமான, கஞ்சம்-
தாமரைமலர்க்கு, புரவலன் – தலைவனாகிய சூரியனது, ஒழிவு – நீக்கத்தை,
கண்ட-, திங்களின் – சந்திரனது, உயர்ச்சி போல-சிறந்த தோற்றம்போல,
திகழ்வர் – விளங்குவார்கள்; (எ – று.)- அம்மா என்பது, மிக்க
மனவொற்றுமையுடன் வாழவேண்டிய குருகுலவேந்தர் ஒற்றுமைகெட்டு மனம்
மாறுபட்டுப் போர்க்கும் எழும் அதிசயத்தைப்பற்றிய வியப்பிடைச்சொல். 

     சூரியனுக்குமுன்னே ஒளிமழுங்கிக்கிடந்தசந்திரன் அச்சூரியன் மறைந்த
சமயத்தில் மிக்கஒளியுடன்விளங்கித் தோன்றுமாறுபோல, குருகுலத்தவராகிய
நீங்கள் மிக்கமனவொற்றுமையுடனிருந்த காலத்து வலியடங்கி ஒடுங்கிக்கிடந்த
பகையரசர்கள் நீங்கள் ஒற்றுமையின்றி மாறுபாடுகொண்டுபோர் புரிந்தால் ‘இனி
ஒற்றுமையிழந்த குருகுலத்தவரை எளிதில் வெல்லலாம்’ என்ற கருத்தாற்
செருக்குக்கொண்டு தலையெடுப்பர் என்று, ஒற்றுமையின்மையால் விளையுங்
கேட்டை விளக்கியவாறு; உவமையணி. 

     கஞ்சம்-நீரில் தோன்றுவது எனக்காரணப்பொருள்படும்.
கணவனைக்கண்டபோது முகமலர்ந்தும் பிரிந்த சமயத்தில் மனம் வருந்தி
வாடியும் நிற்கும் பதிவிரதையான மனைவியைப்போல, சூரியனைக் காணுங்
காலைவேளையில் மலர்ந்தும் சூரியன் காணப்படாமல்நிற்கும் இரவிலே
குவிந்தும் நிற்பதால் தாமரைக்குச் சூரியனைத் தலைவனாகக் கூறுதல் கவிமரபு.
தெவ் – பகைமை; அதனையுடையவர் – தெவ்வர்.  

ஆதலால், உறுதி சொன்னேன்; ஆம் முறை தெரிந்து கோடி!
ஏதிலார்போல, யானும், இனி உனக்கு யாதும் சொல்லேன்;
தீது அலாது உணரா வஞ்சச் சிந்தையார் பரிந்து கூறும்
கோது அலாது உனக்கு இங்கு ஏலாது’ என, சில கூறினானே.

ஆதலால் – ஒற்றுமையால் நன்மையும் ஒற்றுமையில்லாமையால்
தீமையும் உண்டாவதனால், (உனக்கு), உறுதி – நன்மையைத்தரத்தக்க செயலை,
சொன்னேன்-; ஆம் முறை தெரிந்து கோடி – தகுதியான நல்ல வழியைத்
தெரிந்துகொள்வாயாக;  இனி – இனிமேல், யானும் – , ஏதிலார் போல –
யாதொரு தொடர்புமில்லாதவர்போலவே, உனக்கு-, யாதும் – ஒன்றையும்,
சொல்லேன்-;உனக்கு-, இங்கு-இப்பொழுது, தீது அலாது-, உணரா –
(நன்மையைச் சிறிதும்) அறியாத, வஞ்சம் சிந்தையார் – வஞ்சனையுள்ள
மனத்தையுடையராகிய தீயோர், பரிந்து கூறும் – (உன்னிடத்து) அன்பு கொண்டு
கூறுகிற, கோது அலாது – பயனில்லாத சொல் (உடன்பாடாகுமே) அல்லாமல்,
ஏலாது – (யான் கூறும் நன்மொழி உனக்கு) உடன்பாடாகத் தோன்றாது, என –
என்று, சில – சிலவார்த்தைகளை, கூறினான் – (விதுரன்) சொன்னான்; 

     நன்மை தீமைகளை யாராய்ந்து கூறிய எனதுநன்மொழிகளைக் கேட்டுப்
பகுத்தறிவுடன் நல்வழியில் நடந்தால் உனக்கு நன்மையுண்டாகும்;
இவ்வுறுதிமொழியைக்கேளாது அவமதித்து நடந்தாயானால், பயனில்லாத
அற்பரதுசொல் உன்மனத்திற்கு ஏற்குமேயன்றிப் பயனுள்ளசொல் ஏலாதென்பது
பெறப்படும்.  ஆகவே உறவுமுறையில்லாத நொதுமலரைப்போல உபேக்ஷை
கொண்டிருப்பேனே யன்றி, இனி ஒன்றுங் கூறேன் என்று தனது மனக்கருத்தை
விதுரன் வெளியிட்டன னென்க. இனி, ஏதிலார்போல என்பதற்கு –
கெடுமதிகூறும் பகைவரைப்போல என்று பொருளுரைத்து, உனக்குத் தீயோர்
கூறுங் கெடுமொழி நன்மொழியாயும் யான்கூறும் உறுதிமொழி தீமொழியாயும்
இருப்பதனால், யானும் நீ மனமுவந்து ஏற்றுக்கொள்ளுதற்கு உரிய
கெடுமதியையுரைப்பே னானாற் பகைவரோடொத்தவ னாவேனாதலால் அது
கூறேனென்று விதுரன் சொல்லின னெனினும் அமையும். ‘மன்னவர் செவியழன்
மடுத்ததாமென, நன்னெறி தருவதோர் நடுவுநீதியைச் சொன்னவரமைச்சர்கள்
துணைவர் மேலையோர், ஒன்னலர் விழைந்தவாறுரைக்கின்றார்களே’ என்ற
கந்தபுராணம், இப்பொருளில் மேற்கோளாகத்தக்கது.  கோது – அசாரம்.

நிறுத்து அறம் வளர்ப்போன் நெஞ்சில் நீதியும்,
குரவர் ஏவல்
மறுத்து எதிர் உரைக்கும் என்பால் வடுவும், நீ
வரைந்து கண்டாய்;
செறுத்தவர் ஆவி கொள்வாய்! அடியனேன்
செய்தது எல்லாம்
பொறுத்தருள்!’ என்ன, கையால் போற்றினன்,
முறுவல் செய்தான்.துரியோதனன் விதுரனை நோக்கிக் கூறிய நிட்டூர
வார்த்தை.

செறுத்தவர் ஆவிகொள்வாய்-பகைமை கொண்டவர்களின்
உயிரைக் கவரும் வல்லமையுடைய விதுரனே! அறம் நிறுத்து வளர்ப்போன்
நெஞ்சில் நீதியும் -தருமத்தை நிலைநிறுத்தி மேன்மேல் வளரச்செய்பவனான
தருமபுத்திரனுடைய மனத்தில் நீதியமைந்திருப்பதையும், குரவர் ஏவல் மறுத்து
எதிர் உரைக்கும் என்பால் வடுவும் – பெரியோர்களுடைய கட்டளைப்பேச்சை
மறுத்து எதிர்மொழி சொல்லுகின்ற என்னிடத்துக் குற்றம் நிறைந்திருப்பதையும்,
நீ-, வரைந்து கண்டாய் – வரையறுத்து அறிந்தாய்; அடியனேன் செய்ததுஎல்லாம்
– (உனது) அடியனாகிய நான் செய்த பிழைகளெல்லாவற்றையும், பொறுத்தருள் –
பொறுத்தருள்வாயாக, என்ன – என்றுசொல்லி, கையால் போற்றினன் – கை
கூப்பி வணங்கி, முறுவல் செய்தான் – (பரிகாசக்குறிப்புத்தோன்றச்) சிரித்தான்,
(துரியோதனன்); (எ – று.) 

     இவ்வாறு துரியோதனன் விதுரனை மேம்படுத்திச் சொல்லி வணங்கியது,
பழித்தற்பொருளை விளக்கும்.  ஆகவே, இச்செய்யுள் – வஞ்சப்
புகழ்ச்சியணி
யின் பாற் படும்.  முறுவல் – சிரிப்பு; ‘எள்ளலிளமை பேதைமை
மடனென், றுள்ளப்பட்ட நகை நான்கென்ப’ என்று தொல்காப்பியத்திற் கூறிய
நகைவகை நான்கனுள் இது, எள்ளலாம். (எள்ளல் – இகழ்ச்சி.) “ஓலை ஐவருக்கு
எழுதி விட்டால் மெய்யுற மறுத்துச்சொல்லார்” என்றும், “தீதிலாதுணரா வஞ்சச்
சிந்தையார் பரிந்துகூறுங், கோதலா துனக்கிங்கு ஏலாது” என்றும் விதுரன்
கூறியதனால், ‘நிறுத்தறம் வளர்ப்போன் நெஞ்சில் நீதியும்… என்பால் வடுவும்
நீ வரைந்து கண்டாய்’ என்றான்.  கொள்வாய் என்பதில், வடுவும் நீ வரைந்து
கண்டாய்’ என்றான். கொள்வாய் என்பதில், வகரவிடைநிலை – காலங்காட்டாது,
தன்மையை விளக்கும். செய்தது எல்லாம் – ஒருமைப் பன்மை மயக்கம். நிறுத்து
– சீர்தூக்கி; வரையறுத்து என்றலுமாம்.  வடு – மாறாத பெருங்குற்றத்திற்கு
இலக்கணை.  

செழுந் திரு விரும்பும் மார்பன் செப்பிய
கொடுமை கேட்டு,
விழும் திரள் மாலைத் திண் தோள் விதுரனும்
வெகுண்டு, முன்னித்
தொழும் தகை மௌலி வேந்தன் சூழ்ச்சியிற்கு
இசைவுறாமல்,
எழுந்து, தன் கோயில் புக்கான்-இகல் அரிஏறு
போல்வான்.விதுரன் விலகிப்போதல்.

இகல் அரி ஏறு போல்வான் -வலிமையுள்ள
ஆண்சிங்கத்தையொத்தவனாகிய, திரள் மாலை விழும் திண் தோள் விதுரனும்-
திரண்ட மலர்மாலைகள் தொங்கப்பெற்ற வலியதோள்களையுடைய விதுரனும்,-
செழுந் திரு விரும்பும் மார்பன் – சிறந்த வீரலட்சுமி விரும்பிவசித்தற்கு
இடமான மார்பையுடைய துரியோதனன், செப்பிய – சொன்ன, கொடுமை –
கொடுமையான வார்த்தைகளை, கேட்டு-, வெகுண்டு – கோபங்கொண்டு,
முன்னி-சிறிது ஆலோசித்து, தொழும் தகை மௌலி வேந்தன் சூழ்ச்சியிற்கு –
(பலரால்) வணங்கப்படுகின்ற மேம்பாட்டையுடையவனும் கிரீடத்தைத்
தரித்தவனுமான துரியோதன ராஜனது ஆலோசனைக்கு, இசைவு உறாமல் –
உடன்படாமலே, எழுந்து – எழுந்திருந்து, தன் கோயில் புக்கான் – தனது
சிறந்த கிருகத்துக்குச்சென்று சேர்ந்தான். (எ – று.)

     துரியோதனன் மகாவீரனாதலால் ‘செழுந்திரு விரும்பும்மார்பன்’
எனப்பட்டான்.  உலகத்தில் அரசராய்த்தோன்றுகிறவர் யாவரும் காத்தல்
தொழிற்கடவுளான திருமாலின் அமிசமாவரென்ற நூல் துணிபுபற்றி,
ராஜராஜனான துரியோதனனை ‘செழுந்திரு விரும்பும் மார்பன்’ என்றதாகவுங்
கொள்ளலாம்.  ‘இகலரியேறு போல்வான்’ என்ற தொடர், கீழ் 3-ஆஞ்
செய்யுளில் துரியோதனனைக் குறித்து நின்றது.  தொழும் தகை மௌலி
வேந்தன் – (தன்னைக்) கைகூப்பி வணங்கிய தன்மையையுடைய வணங்காமுடி
மன்னனான துரியோதனனது எனினுமாம்.  சூழ்ச்சியிற்கு – இன்சாரியை.
கொடுமை-மொழிகட்குப் பண்பாகுபெயர்

புரிவு இலா மொழி விதுரன் போகலும், புரிவில் ஒன்றும்
சரிவு இலா வஞ்ச மாயச் சகுனியும், தம்பிமாரும்,
விரிவு இலா மனத்தோடு எண்ணும் விசாரமே
விசாரம் ஆக,
வரி விலான், ‘விரைவின், ஈண்டு ஓர் மண்டபம்
சமைக்க!’ என்றான்.துரியோதனன், மண்டபங்கட்டச் சொல்லுதல்.

புரிவு இலா மொழிவிதூரன்-(தனக்கு) விருப்பமில்லாத
சொற்களைக்கூறிய விதுரன், போகலும் – (அவ்விடத்தை விட்டுச்)
சென்றவுடனே,- புரிவில் ஒன்றும் சரிவு இலா வஞ்சம் மாயம் சகுனியும் –
(தனது) செய்தொழிலிற் சிறிதும் பின்வாங்குதலில்லாத மிக்க
வஞ்சனையையுடைய சகுனியும், தம்பிமாரும் -(துச்சாதனன் முதலிய தனது)
தம்பியரும், விரிவு இலா மனத்தோடு எண்ணும்-விசாலமின்றிச் சுருங்கிய
மனத்தினால் எண்ணுகின்ற, விசாரமே-ஆலோசனையே, விசாரம் ஆக –
(அக்காலத்துக்குத் தக்க) ஆலோசனையாக முடிய, வரி விலான்-கட்டமைந்த
வில்லையுடையவனாகிய துரியோதனன், ‘ஈண்டு – இவ்விடத்தில், விரைவின் –
விரைவிலே, ஓர் மண்டபம் சமைக்க – ஒரு மண்டபத்தைக் கட்டியமைப்பீராக,’
என்றான்-என்று (அந்தச் சபையில் வந்திருந்த அரசர்கட்குக்)
கட்டளையிட்டான்; (எ – று.)    

     புரிவு இலா மொழி விதூரன் -மாறுபாடில்லாமல் [நேராக] சொன்ன
சொற்களையுடைய விதுரன் எனவும், புரிவில் ஒன்றும் சரிவு இலா –
(துரியோதனனிடத்துக் கொண்ட) அன்பிற் சிறிதும் தளர்தலில்லாத எனவுங்
கொள்ளலாம்.  விரிவிலா மனம் – வருங் காரியங்களைக் காரணகாரியத்
தொடர்ச்சியாக ஆராயுத் திறமில்லாத மனம்.  விசாரம் – ஆலோசனை.
நீண்ட ஓர் மண்டபம் என்று பிரித்துப் பொருள் கூறலுமாம்.
நீண்ட+ஓர்=நீண்டோர்: பெயரெச்சத்தின் அகரவீறு தொகுத்தல்.  விதூரன் –
நீட்டல் விகாரம்.  வஞ்சம் மாயம் – ஒருபொருட்பன்மொழி

பெருந்தகை ஏவல் மாற்றம் பிற்பட, முற்பட்டு ஓடி,
இருந்த தொல் வேந்தர் தம்தம் இருக்கையின்
இயன்ற எல்லாம்
அருந் திறல் மள்ளராலும், அணி மணித் தேரினாலும்,
பொருந்தவே கொணர்வித்து, ஆங்கண் பொற்
சுவர் இயற்றினாரே.இதுவும், அடுத்த கவியும் – மண்டபங்கட்டியதைக் கூறும்.

இருந்த தொல் வேந்தர் -(அச்சபையில்) வந்திருந்த நெடு
நாள் பழகிய நட்புரிமையையுடைய அரசர்கள், பெருந்தகை ஏவல் மாற்றம்
பிற்பட – பெருமைக்குணமுடையவனான துரியோதனனது கட்டளைச் சொல்
பின்னிடும்படி, முற்பட்டு ஓடி – விரைந்து சென்று, தம்தம் இருக்கையின்
இயன்ற எல்லாம் – தங்கள் தங்கள் இருப்பிடங்களிற் பொருந்திய எல்லாப்
பொருள்களையும், அரும் திறல் மள்ளராலும் – மிக்க வலிமையமைந்த
வேலையாட்களைக் கொண்டும், அணி மணி தேரினாலும் – அழகிய மணிகள்
கட்டிய தேர்களில் ஏற்றியும், பொருந்தவே – கொணர்வித்துத்
தகுதியாகக்கொண்டு சேர்த்து,- ஆங்கண்-அவ்விடத்தில் [அல்லது
அப்பொழுது,] பொன் சுவர் இயற்றினார் – பொன்னினாற்சுவரை
யெழுப்பினார்கள்; (எ – று.) 

     முதலடியில், துரியோதனன் வார்த்தையாகிய காரணத்தைப் பின்னும்
அதன் காரியமாகிய அரசர்கள் செல்லுதலை முன்னும் நிகழ்ந்தனவாக விரைவு
தோன்றக் கூறியது, முறையிலுயர்வுநவிற்சியணி.  வேந்தர் பொற்சுவ
ரியற்றினார்-ஏவுதற்கருத்தாவின் வினை;  சிற்பிகளைக்கொண்டு இயற்றின
ரென்க.  பெருந்தகை – ராஜராஜ னென்றவாறு: பண்புத்தொகைப்
புறத்துப்பிறந்த அன்மொழித்தொகை.  பிற்படமுற்பட்டு – தொடைமுரண். இருக்கை – இருப்பிடத்திற்குத் தொழிலாகுபெயர். இயன்ற – பலவின்பால்
வினையாலணையும்பெயராகவேனும் பெயரெச்சமாகவேனும் கொள்ளத்தக்கது.
ஆங்கண் – அக்கண் என்பது நீட்டலும் மெலித்தலும் பெற்றது.

சங்கை இல் சிற்ப நுண் நூல் தபதியர் தகவு கூர,
செங் கையின் அமைத்த கோலச் சித்திரத் தூணம் நாட்டி,
அம் கையில் அருண ரத்நத்து அணிகொள் உத்தரமும் ஏற்றி,
கங்கையின் உயர்ந்த முத்தின் கற்றையால்
முற்றும் வேய்ந்தார்.

சங்கை இல் சிற்பம் நுண்நூல் தபதியர் – சந்தேகமில்லாமல்
நுட்பமான சிற்பசாஸ்திரத்தில் வல்லவர்களாகிய சிற்பிகள்,-தகவு கூர – அழகு
மிகும்படி, செம் கையின் அமைத்த – செவ்விய [பழகித்தேர்ந்த] (தமது)
கைகளினாற் செய்த, கோலம் சித்திரம் தூணம் – அழகிய சித்திர
வேலைத்திறமமைந்த தூண்களை, நாட்டி – நிறுத்தி, அங்கு – அவ்விடத்து,
ஐயில் அருணம் ரத்நத்து – அழகிய சிவந்த ரத்நங்கள் பதிக்கப்பெற்ற, அணி
கொள் உத்திரமும் – அழகுகொண்ட உத்திரங்களையும், ஏற்றி-, கங்கையின்
உயர்ந்த முத்தின் கற்றையால் – கங்கையில் தோன்றிய சிறந்த முத்துக்களின்
தொகுதியினால், முற்றும் வேய்ந்தார் – (மேலிடம்) முழுவதையும் மூடினார்கள்;
(எ – று.) 

     இவ்வாறு செல்வமிகுதி தோன்றக்கூறுதல், வீறுகோளணி யெனப்படும்.
இச்செய்யுளில், முதலெழுத்து நீங்க இரண்டு முதலிய சில எழுத்துக்கள்
ஒன்றிநின்று பொருள் வேறுபட்டு வந்தது – திரிபு என்னுஞ் சொல்லணி.
சங்கையில், சிற்ப நுண்ணூல் என்ற இரண்டும் – தபதியர்க்கு அடைமொழி.
அயில்=ஐயில் – அழகு என்று பொருள்; திரிபுநோக்கி அகரத்திற்கு
ஐகாரம்போலியாய் வந்தது.  இனி, ஐ – அழகு: இல் – சாரியை என்பாருமுளர்.
அம் கையில் என்று பிரித்து அழகிய கைகளினால் என்றுகொண்டால், திரிபு
என்னும் அணிக்கு இடமில்லையாம்.  ஸங்கா, ஸல்பம், ஸ்தபதி, சித்ரம் ஸ்தூணா,
அருணரத்நம், கங்கா, முக்தா – வடசொற்கள்.  முக்தா – (இப்பியினின்று)
விடுபட்டதெனப் பொருள்படுங் காரணக்குறி. 

ஓவியம் சிறக்கத் தீட்டி, ஒண் கொடி நிரைத்து, செஞ் சொற்
காவிய மக்கட்கு எல்லாம் கருத்துறு கவினிற்று ஆகி,
வாவிய புரவித் திண் தேர் மன்னவன் நினைவுக்கு ஏற்ப,
ஏவிய வினைஞர் தம்மால் இயல்புறச் சமைந்தது அன்றே.அந்த மண்டபத்தின் சிறப்பு.

அம்மண்டபமானது), ஓவியம்சிறக்க தீட்டி – சித்திரங்களைச்
(சுவர்களிற்) சிறப்பாக எழுதப்பெற்று, ஒள் கொடி நிரைத்து – விளங்குகிற
கொடிச்சீலைகளை (மேலே) வரிசையாகக் கட்டப்பெற்று, செம் சொல் காவியம்
மக்கட்கு எல்லாம் கருத்து உறு கவினிற்று ஆகி – இனிய சொற்களினாற்
காவியஞ்செய்யவல்ல புலவர்கட்கெல்லாம் (வருணிக்குமாறு) மனஞ்சென்று
பதியும்படியான அழகையுடையதாய்,- வாவிய புரவி திண் தேர் மன்னவன்
நினைவுக்கு ஏற்ப – தாவிச்செல்லுங் குதிரைகள் பூட்டிய வலிய
தேர்களையுடைய துரியோதனராஜனது எண்ணத்திற்குத் தகுதியாக, ஏவிய
வினைஞர்தம்மால் – கட்டளையிடப்பட்ட சிற்பவேலைக்காரர்களால், இயல்புஉற
சமைந்தது – தகுதியாகக் கட்டப்பெற்று நிறைவேறிற்று; (எ – று.)-அன்றே –
ஈற்றசை.

      காவியமியற்றும் புலவர்கள் இம்மண்டபத்தின் சிறப்பைப் பார்த்த
மாத்ரித்திலே இதனிடத்துக் கருத்துஊன்றி மிகவும் விவரித்து வருணித்துப்
பாடுமாறு பலவகைச் சிறப்புக்களையும் பெற்றுள்ளதென்பது இரண்டாமடியின்
விவரம்.  செஞ்சொல் – அரியபொருளை எளிதில் உள்ளபடி நன்குகாட்டவல்ல
செவ்வியையுடைய சொல்; தொனிப் பொருளையுடைய சொல்லுமாம்.  காவ்யம்-
கவியினாற் செய்யப்படும் நூல்.  கவினிற்று – ‘கவின்’ என்னும்
பகுதியினடியாப்பிறந்த ஒன்றன்பாற் குறிப்புவினையாலணையும் பெயர்;  று –
விகுதி, இன் – சாரியை

‘மன் அவைக்கு ஆன பைம் பொன் மண்டபம்
சமைந்தது’ என்று,
தன் அவைக்கு உரியோர் சொல்ல, சகுனியும்
தானும் நோக்கி,
‘சொல் நவைக்கு ஏற்றது’ என்று, தொழுதகு
தாதைதன்பால்,
மின்னை வைத்து ஒளிரும் வேலான் மேவினன்,
விளம்பலுற்றான்:துரியோதனன், மண்டபத்தின் சிறப்பைப் பற்றித்
திருதராட்டிரனிடங் கூறுதல்.

‘மன் அவைக்கு ஆன பைம்பொன் மண்டபஞ்சமைந்தது –
அரசர்களது சபைக்குத் தகுந்த பசும்பொன்மயமான மண்டபம் கட்டப்பட்டுச்
சித்தமாயிற்று,’ என்று-, தன் அவைக்கு உரியோர் சொல்ல – தனது சபைக்கு
உரியவர்கள் தெரிவிக்க,-மின்னை வைத்து ஒளிரும் வேலான் – மின்னலை
யொத்து விளங்குகின்ற வேலாயுதத்தையுடையவனாகிய துரியோதனன்,-
சகுனியும் தானும் நோக்கி – சகுனியும் தானுமாக (அம்மண்டபத்தினழகைப்)
பார்த்து, சொன்னவைக்கு ஏற்றது என்று – (‘நாம் ஆலோசித்துச்)
சொன்னவற்றிற்குத் தக்கபடி அமைந்துள்ளது’ என்று வியந்து கூறி, தொழுதகு
தாதை தன்பால் – (தன்னால்) வணங்கத்தக்க (தனது) தந்தையான
திருதராட்டிரனிடத்து, மேவினன் – சென்று சேர்ந்தவனாய், விளம்பல் உற்றான்-
கூறத் தொடங்கினான்;  (எ – று.)  – அதனை அடுத்த கவியிற் காண்க. 

     மன் அவை – ராஜசபை.  ‘தன் அவைக்குஉரியோர்’ என்றது, கீழ் 44-
ஆஞ் செய்யுளில் ‘இருந்த தொல் வேந்தர்’ என்றபடி அவன் சபையிலே
யிருந்தவர்களும் அவனாற்கட்டளையிடப் பெற்றவர்களுமான அரசர்களை.
“வைத்து” என்றது, உவமவாசகமாய் நின்றது.  ‘சொல் நவைக்கு ஏற்றது’ என்று
எடுத்து, (தன்வருணனையைச் சரிவர எடுத்துக் கூறுவதற்கு உரிய
சொல்லில்லாமையாற்) சொல்லைப் பழுதுபடச்செய்வது அம்மண்டபம்
என்றுமாம்.  மேவினன் – முற்றெச்சம். 

அரும் பெறல் ஐய! கேட்டி! அடியனேன்
கருத்து முற்ற,
கரும் புயல் தவழும் சென்னிக் கதிர் மணிக்
கூடம் ஒன்று
பெரும் புகழ் நகரின் ஈண்டுச் சமைத்தனன்;
பெருமை காண
வரும்படி, தூது ஒன்று ஏவு, உன் மைந்தரை,
விரைவின்’ என்றான்.பாண்டவரை வருவிக்கத் தூதரையனுப்பவேண்டுமெனல்.

பெறல் அரும் ஐய -பெறுதற்கு அரிய தந்தையே! கேட்டி –
(யான் சொல்வதைக்) கேட்பாயாக:-அடியேன் கருத்து முற்ற – எனது எண்ணம்
நிறைவேறும்படி, கரும் புயல் தவழும் சென்னி கதிர் மணி கூடம் ஒன்று-
கருமையாகிய மேகங்கள் தவழப் பெற்ற சிகரத்தையுடைய ஒளி பொருந்திய
இரத்தினமயமான ஒரு மண்டபத்தை, பெரும் புகழ் நகரின் ஈண்டு சமைத்தனன்
– மிக்க கீர்த்தியுடைய இந்நகரத்தில் இப்பொழுது (யான் புதிதாகக்) கட்டி
முடித்தேன்;  பெருமை காண – (அம்மண்டபத்தின்) சிறப்புக்களைக் காணுதற்கு,
உன் மைந்தரை-உனது (தம்பியின்) புதல்வர்களாகிய பாண்டவர்களை, வரும்படி
– (இவ்விடத்துக்கு) வருமாறு, விரைவின் – விரைவிலே, தூது ஒன்று ஏவு –
(அவர்கட்கு) ஒரு தூதனை அனுப்புவாயாக,’ என்றான் – என்று கூறினான்,
(துரியோதனன்);

     துரியோதனன் தனது துராலேராசனைக்குத் துணைபுரியுமாறு
வேண்டுகின்றானாதலால், தனது தந்தையை ‘அரும்பெறலைய’ என்று புனைந்து
விளித்தான்.  ‘உன்மைந்தர்’ – நீ கூறிய கட்டளைப்படியே தவறாது நடக்கும்
மைந்தரென்ற குறிப்பு:  ஆனது பற்றியே, தான் தூது ஏவாமல் ‘நீ தூது ஏவு’
என்றான்.  வெல்லவேண்டுமென்று மனம்பதறுதலால் ‘விரைவின் தூதுஏவு’
என்று தூண்டினான்.  ‘அடியனேன்கருத்து’ என்றது – மண்டபவியாஜமாகப்
பாண்டவர்களை வருவித்துச் சகுனியைக்கொண்டு சூதாடுவித்து அவர்களது
பொருள்களையெல்லாம் கவரவேண்டுமென்பது.  ‘கரும் புயல் தவழுஞ்சென்னி’
– தொடர்புயர்வுநவிற்சியணி; இது,மண்டபத்தினது மிக்க உயர்வை
விளக்கும்.  கரும்புயல் – நீர்கொண்ட காளமேகம்.  தூது –
உயர்திணைப்பொருள் தரும் அஃறிணைச்சொல்.  மைந்தரை =
மைந்தர்க்கு: உருபுமயக்கம். 

மகன் மொழி நயந்து கேட்டு, வாழ்வு உறு தந்தைதானும்
மிக நயந்து உருகி, ‘நல்ல விரகினால் வெல்லல் உற்றீர்!
அகம் நெடும் போர் செய்தாலும், ஐவரை அடர்க்க ஓணாது!
சகுனியை அன்றி, வேறு ஆர் தரவல்லார், தரணி?’ என்றான்.அதற்குத் திருதராட்டிரன் மகிழ்ந்து கூறுதல்.

வாழ்வு உறு தந்தை தானும் -செல்வ வாழ்க்கை பொருந்திய
தந்தையாகிய திருதராட்டிரனும், மகன்மொழி நயந்து கேட்டு – (தனது)
குமாரனாகிய துரியோதனனது வார்த்தைகளை விரும்பிக்கேட்டு, மிகநயந்து
உருகி – மிகவும் மகிழ்ந்து மனமுருகி, (அத்துரியோதனனை நோக்கி), ‘நல்ல
விரகினால் வெல்லல் உற்றீர் – தகுதியான உபாயத்தினால் (பாண்டவர்களைச்)
சயிக்கத்தொடங்கினீர்கள்;  அகம் நெடும் போர் செய்தாலும் – துன்பத்திற்கு
இடமான பெரியபோரைச் செய்தாலும், ஐவரை அடர்க்க ஒணாது -(அவர்கள்
மிக்க வலிமையை யுடையவர்களாதலால்) அப்பாண்டவர்களைவரையும் வென்று
அடக்க (உங்களால்) முடியாது;  (இவ்வாறான பின்பு), தரணி – பூமியை,
சகுனியை அன்றி வேறு ஆர் தர வல்லார் – சகுனியையேயல்லாமல் வேறு
யாவர்தாம் (உங்களுக்குத்) தரவல்லவர்?’ என்றான் – என்று கூறினான்;
(எ -று.) 

     என்றது-பாண்டவர்கள் வலியராதலால்,சகுனியைக்கொண்டு சூது
வழியாக வென்றுவிடுதலே தகுதி யென்றவாறு.  கம் – சுகம்; அதற்கு –
மாறானது அகம் – துன்பம்; வடசொல்: ‘அகனெடும் போர்’ என்ற பாடத்திற்கு,
அகன்ற நீண்ட போரென்று பொருளாகும்.  அர்க்கொணாது – அகரவீறு
தொகுத்தல்.  ஒணாது – ஒன்றாது என்பதன் மரூஉ.  

விழி இலா வென்றி வேந்தன் விதுரனை அழைத்து,
‘நீ போய்
மொழியில், ஆர் உலகில் மற்று உன் மொழியினை
மறுக்க வல்லார்?
பழி இலா இசை கொள் நீதிப் பாண்டவர் வந்து,
உன் மைந்தர்
வழியில் ஆய் ஒழுகும்வண்ணம் மருட்டி, நீ
கொணர்தி!’ என்றான்.திருதராட்டிரன், தூது செல்லுமாறு விதுரனுக்குக்
கட்டளையிடுதல்.

விழி இலா வென்றி வேந்தன்- கண்ணில்லாத
வெற்றியையுடைய திருதராட்டிரன்,- விதுரனை அழைத்து-, ‘நீ போய்
மொழியில் – நீ (தூது) சென்று சொன்னால், உலகில் உன் மொழியினை
மறுக்கவல்லார் ஆர் – இவ்வுலகத்தில் உனதுவார்த்தையைத் தடுத்து
மாறுகூறவல்லவர் யாருளர்? (ஆகையால்), [பாண்டவர்களும் கேட்டு
அதன்படியே நடப்பார்கள் என்றபடி:]; பழி இலா இசை கொள் நீதி பாண்டவர்
– பழிப்பில்லாத கீர்த்தியைக் கொண்டவர்களும் நீதிநெறி தவறாதவர்களுமான
பாண்டவர்கள், வந்து – இங்குவந்து, உன் மைந்தர் வழியில் ஆய் ஒழுகும்
வண்ணம் – உனதுமக்களாகிய துரியோதனாதியர் விரும்பியுள்ள வழியில்
நடந்திடுமாறு, மருட்டி – (உனது சொல்திறத்தால் அவர்களை) மருளச்செய்து
இசைவித்து, நீ கொணர்தி – நீ இங்கே அழைத்து வருவாயாக,’ என்றான்-;
(எ- று.) 

     அக்கிரமவழியிற் செல்லுந் தனதுமைந்தர்க்கு உடந்தையாய் நற்புத்தி
சிறிதுமின்றித் தம்பிமைந்தரைக்கெடுக்கக் கூறப்புகுந்தானாதலின், இங்கு
அத்திருதராட்டிரனை ஊனக்கண்ணோடு ஞானக்கண்ணுமில்லாதவ னென்பார்,
‘விழியிலாவேந்தன்’ என்றார்.  இங்கு, ‘விழியிலா’ என்ற அடைமொழி இவ்வாறு
ஒருகருத்தை உட்கொண்டிருப்பது, கருத்துடையடைமொழியணியின்பாற்படும்.
இரண்டாமடி – விதுரனது சொல்வன்மையை விளக்கும்.  விதுரனுக்குத்
துரியோதனாதியரிடத்து அன்பு உண்டாகுமாறு ‘உன்மைந்தர்’ எனத்
தொடர்புபடுத்திக் கூறினான்.  மருட்டி, மருள் என்பதன் பிறவினையான்
மருட்டு – பகுதி.  மருட்டுதல் – மயக்குதல்

தம்பியர் விழைவால் கூடம் சமைத்த பேர் அழகு காண,
இம்பர் வந்து, எமையும் எய்தி, ஏகுக விரைவின்!’ என்ன,
பைம் பொனின் ஓலைமீது பண்புற எழுதி, ‘இன்னே
எம்பியும் ஏகுக!’ என்றான்; ஏவலின், அவனும் போனான்.விதுரன் திருதராட்டிரனது ஓலைகொண்டு தூது
செல்லுதல்.

தருமபுத்திரனே), ‘(நீ) – தம்பியர் – உனது தம்பியராகிய
துரியோதனாதியர், விழைவால் – விருப்பத்துடனே, சமைத்த – கட்டிமுடித்த,
கூடம் – மண்டபத்தினது, பேர் அழகு – மிக்க அழகை, காண – காணும்படி,
விரைவின் – விரைவாக, இம்பர் வந்து – இந்நகரத்திற்குவந்து, எமையும் எய்தி
– என்னையும் அடைந்து (பார்த்து), ஏகுக – செல்லக்கடவாய்’, என்ன – என்று,
பைம்பொனின் ஓலைமீது பண்புஉற எழுதி – பசும்பொன்னாற்செய்த ஓலையில் அழகாக எழுதுவித்து, (அவ்வோலையைக்கொடுத்து), எம்பியும்
இன்னே ஏகுக என்றான் – எனது தம்பியாகிய நீ இப்பொழுதே
(தருமனிடத்துச்) செல்லக்கடவாய்’ என்று கட்டளையிட்டான்;  ஏவலின் –
அக்கட்டளையினால், அவனும் – அவ்விதுரனும்;  போனான் –
(தருமபுத்திரனது நகரமாகிய இந்திரப்பிரத்த நகரத்தை நோக்கிச்)
செல்வானாயினான்; (எ – று.)

     விரும்பிக் காணத்தக்க பேரழகுடைய தென்பான் ‘சமைத்த பேரழகு
காண’ என்றும், மண்டபங்காணுதற்கு வராவிடினும் தன்னைப்பார்க்கவாவது
தவறாது வரவேண்டுமென்பான் ‘எமையும் எய்தி’ என்றும் எழுதினான்.  எழுதி
– இங்கு, ஏவுதற்கருத்தாவின் வினை.  எமையும்: உம்மை – இறந்தது தழுவிய
எச்சவும்மை.  இன்னே – விரைவுகுறிக்கும் இடைச்சொல்.  எம்பி-
முன்னிலையிற் படர்க்கைவந்த இடவழுவமைதி.  உம்மை – இசைநிறை.
எய்துதல் – சந்தித்தல்.  எமை=எம்மை; தனித்தன்மைப்பன்மை

கார் எனக் களிறு சுற்ற, காற்று எனப் புரவி ஈண்ட,
தேரினுக்கு ஒருவன்தன்னைச் சிலம்பு எனத் தேர்கள் சூழ,
வீரரில் பலரும் போற்ற, விதுரனும், இரண்டு நாளால்,
பாரினுக்கு உயிரே போலும் பாண்டவர் நகரி சேர்ந்தான்.விதுரன் இந்திரப்பிரத்தநகரஞ் சேர்தல்.

தேரினுக்கு ஒருவன் -தேர்வீரரிற்சிறந்தவனான விதுரனும்,-
தன்னை-, கார் என களிறு சுற்ற – மேகங்கள் போல யானைகள் சூழ்ந்து
வரவும், காற்று என புரவி ஈண்ட – காற்றுப்போலக் குதிரைகள் நெருங்கி
வரவும், சிலம்பு என தேர்கள் சூழ-மலைகளைப்போலத் தேர்கள் சுற்றிவரவும்,
வீரரிற் பலரும் போற்ற – காலாள்வீரர்களிற் பலபேர் புகழ்ச்சி கூறிவரவும்,
(இவ்வாறு), இரண்டு நாளால் – இரண்டுதினத்தில், பாரினுக்கு உயிரே போலும்
பாண்டவர் நகரி – உலகத்துக்கு உயிரைப்போன்றவர்களான பாண்டவர்கள்
வசிக்கின்ற இந்திரப்பிரத்தநகரத்தை, சேர்ந்தான்-; (எ – று.) 

     கருநிறத்திலும் மதமழை சொரிதலிலும் முழக்கத்திலும் யானைக்குக்
கார்மேகமும், விரைந்து செல்லுதலிற் குதிரைக்குக் காற்றும், வலிமையிலும்
பெருந்தோற்ற முடைமையிலும் தேர்க்கு மலையும் உவமை. உவமையணி.
தேரினுக்கு ஒருவன் – தேர்வீரர்களுட்சிறந்த அதிரதவீர னென்றபடி.
ஒருவன்- ஒப்பற்றவன், அத்வீதீயன், ஏகவீரன்.  நாளால் – உருபுமயக்கம்.
‘பாரினுக்குஉயிரேபோலும் பாண்டவர்’ – உலகத்துமக்கள் யாவரும்
இப்பாண்டவர்களைநற்குணச்சிறப்பினால் தம்தம் உயிர்போலவே நன்குமதித்துப்
பாராட்டினரென்றவாறாம். இந்த அடைமொழியை நகரிக்கு இயைத்தால்,
உடம்பினுள்உயிர் சிறந்த தாவது போல, இவ்வுலகத்துள் இந்திரப்பிரத்தநகரம்
சிறந்தது என்று கருத்துப்படும்.  உயிரே,  ஏ – தேற்றத்தோடு உயர்வு
சிறப்பு.      

புரியும் ஒண் கதிர் கவினுறு பொலிவினால் பொன்னுலகு
ஆம் என்ன,
அரிய பைம்பொனின் மணிகளின் நிறைந்த சீர் அளகை
மாநகர் என்ன,
தெரியும் அன்புடன் அறம் குடி இருப்பது ஓர் தெய்வ
வான் பதி என்ன,
விரியும் வெண் கொடிப் புரிசை சூழ் வள நகர், விழி
களித்திட, கண்டான்.விதுரன் இந்திரப்பிரத்தநகரத்தைக் காணுதல்.

புரியும் ஒள் கதிர் -வீசுகின்ற ஒள்ளிய கிரணமும், கவின் –
அழகும், உறு – நிறைந்த, பொலிவினால் – சிறந்த தோற்றத்தை யுடைமையால்,
பொன் உலகு ஆம் என்ன – பொன்மயமான சுவர்க்கலோகம் போலவும்,-
அரிய பைம்பொன் இன் பணிகளின் – அருமையான பசும்பொன்னினாலாகிய
இனிய வேலைத்திறங்களையுடைமையால், நிறைந்த சீர் அளகை மாநகர் என்ன
– நிரம்பிய செல்வத்தையுடைய சிறந்த அளகாபுரி போலவும்,- (தருமம்
சிறிதுந்தவறாத கருணைக்கடலான தருமபுத்திரன் அரசு வீற்றிருக்கப்பெற்றதனால்),
தெரியும் அன்புடன் அறம் குடி இருப்பது ஓர் தெய்வம் வான்பதி என்ன –
விளக்கமாகத்தெரிகின்ற [மிகுதியான] அன்பினுடனே தருமதேவதை நிலையாகத்
தங்கி வசித்திருக்கப்பெற்றதொரு தெய்வத்தன்மையுள்ள சிறந்த நகரம் போலவும்
(இருக்கிற), விரியும் வெள் கொடி புரிசை சூழ் – (காற்றடிக்கும் போது அசைந்து
நீண்டு) பரவிவிளங்கும் வெண்ணிறமான துவசங்கள் நாட்டப்பெற்ற மதில்கள்
சூழ்ந்ததும், வளம்நகர் – எல்லாவளங்களையு முடையதுமான (இந்திர்பிரத்த)
நகரத்தை, விழிகளித்திட கண்டான் – (தன்) கண்கள் களிப்படையுமாறு
பார்த்திட்டான்;  (எ – று.) 

     துரியோதனாதியரது தூண்டுதலின் படி திருதராட்டிரனேவிய கட்டளையைச்
சிரமேற்கொண்டு தொன்றுதொட்டு இராசதானியான சிறந்த அத்தினாபுரியை
விட்டுக் காண்டவப்பிரத்தமென்னுங்கடுங்காட்டிற் சேர்ந்த தனது
அருமைத்தமையன்மக்களாகிய பாண்டவர்க்குப் பகவானருளால் அங்கு
இவ்வகையான அற்புத திவ்விய நகரம் அமைந்த திறத்தைக் குறித்து விதுரன்
அந்நகர்ச்சிறப்பைக் காணுந்தோறும் மனத்தில் மேன்மேற்கொள்ளும்
ஆனந்தத்தின் மிகுதிவிளங்க, ‘வளநகர் விழிகளி்த்திடக் கண்டான்’
என்றனரென்க.  அருட்குக்காரணமாகிற அன்பு, அறத்துக்கு இன்றியமையாத
தாதலால், ‘அன்புடன் அறங்குடியிருப்பது’ எனப்பட்டது.  தருமபுத்திரன்
அரசாளுதலால் எல்லாத் தருமங்களுங் குறைவற நடக்கப்பெற்ற
நகரமென்பதுபற்றி, தருமதேவதை குடியிருக்கிற திவ்வியநகரம் இதற்கு உவமை கூறப்பட்டது; கீழ் இந்திரப்பிரத்தச்சருக்கத்தில் “அருளுடையறத்தின்வாழ்வா
மந்நகர்” என்றது, இங்கு ஒப்புநோக்கத்தக்கது.  வான்பதி-விண்ணுலகத்திலுள்ள
நகரமுமாம்.  வெண்ணிறமான கொடி-நீதிதவறாத களங்கமற்ற அரசாட்சிக்கும்
கீர்த்திக்கும் அறிகுறி. 

     பொன்னுலகு தேவராசனான இந்திரனுடையது.  ஆம்-அசை.  என்ன –
உவமவுருபு.  இதில் ஓர் உபமேயத்துக்குப் பல உபமானங்கள் காட்டியது,
பலபொருளுவமையணி.  புரியும் ஒண் கதிர் – மதிள் கோபுரம் மாட மாளிகை
முதலியவற்றி லமைந்த பொன்மணிகளி னுடையவை.  புரிதல் – செய்தல்.
புரியும் – விரும்பப்படுகிற எனினுமாம். 

     அரியபைம்பொன் – மாற்றும் விலையும்உயர்ந்த பொன்.  அளகாபுரி-
தநாதிபதியான குபேரனுடையது;  கைலாசகிரியிலுள்ளது. நவநிதிகளையுமுடைய
தாதலின், ‘நிறைந்தசீரளகைமாநகர்’ எனப்பட்டது.  சீர் – அழகு என்றும், புகழ்
என்றும் பொருள்கொள்ளினுமாம்.  ‘விழிகளித்திடக்கண்டான்’ – மனத்தின்
தொழிலைக் கண்ணின்மேலேற்றிக் கூறிய உபசாரவழக்கு.  ‘பைம்பொனின்
மணிகளின்’ என்ற பாடத்துக்கு – பசும்பொன்னினாலும் இரத்தினங்களினாலும்
என்று பொருள் காண்க.  இதுமுதல் நான்கு கவிகளில் இந்திரப்பிரத்த
நகரவருணனை கூறுகின்றார். 

     இதுமுதல் 37 கவிகள் – இச்சருக்கத்தின்முதற்கவிபோன்ற
அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தங்கள்

ஊடு எலாம் நறும் பொய்கை; நீள் வாவியின் உடம்பு எலாம்
மலர்; பூவின்
தோடு எலாம் எழு சுரும்பினம்; மதுகரச் சொல் எலாம்
செழுங் கீதம்;
பாடு எலாம் இளஞ் சோலை; மென் பொங்கரின் பணை எலாம்
குயில் ஓசை;
நாடு எலாம் நெடும் புனல் வயல்; கழனியின் நடுவு எலாம்
விளை செந்நெல்;-மூன்றுகவிகள் – இந்திரப்பிரத்த நகர்வளங் கூறும்.

ஊடு எலாம் – (அந்நகரத்தின்) உள்ளிடங்களிலெல்லாம், நறும்
பொய்கை – நறுமணமுள்ள [நன்னீரையுடைய] குளங்களும்.-நீள் வாவியின்
உடம்பு எலாம் – பெரிய அக்குளங்களின் இடம் முழுவதிலும், மலர் (தாமரை
அல்லி ஆம்பல் குவளை நெய்தல் முதலிய) நீர்ப்பூக்களும்,-பூவின் தோடு
எலாம் – அம்மலர்களின் இதழ்களிலெல்லாம், எழு சுரும்பு இனம் –
மேலெழுந்து மொய்க்கின்ற வண்டுகளின் கூட்டங்களும்,-மதுகரம் சொல்
எலாம்-அவ்வண்டுகளின் வாயொலிகளிலெல்லாம், செழுங்கீதம் – சிறப்பான
இசைப்பாட்டுக்களும்,-பாடு எலாம் – (அக்குளங்களின்) பக்கங்களிலெல்லாம்,
இளஞ் சோலை – இளமரச்சோலைகளும்,-மெல் பொங்கரின் பணைஎலாம் –
மென்மையான அச்சோலைகளிலுள்ள மரக்கிளைகளி லெல்லாம், குயில் ஓசை –
குயில்களின்குரலும்,-நாடு எலாம் – அவ்விந்திரப்பிரத்த நாடு முழுவதிலும்,
நெடும் புனல் வயல் – மிகுதியான நீ்ர்பாயப்பெற்ற கழனிகளும்,- கழனியின் நடு
எலாம் – அக்கழனிகளின் நடுவிடம் முழுவதிலும், விளை செந்நெல் –
விளைகின்ற செந்நெற் பயிர்களும், (உள்ளன:) (எ – று,)- வினைமுற்று வருவித்து
முடிக்கப்பட்டது.  இனி, ‘பொய்கை’ முதலியவற்றை இரண்டாம் வேற்றுமைத்
தொகையாகக்கொண்டு, பொய்கை முதலியவற்றை விதுரன் விழிகளித்திடக்
கண்டான் என முன்செய்யுளிலிருந்து வினைகூட்டி முடிப்பினுமாம்;  அடுத்த
இரண்டுசெய்யுள்களிலும் இங்ஙனங் காண்க: அங்ஙனங் கொள்ளுமிடத்து ‘கீதம்’
‘ஓசை’ இவற்றிற்கு ஏற்ப, அவற்றைக் கேட்டானென்ற கருத்து அமைக்கப்படும்.

    இச்செய்யுளில் முன்னிரண்டடிகளிலும் மூன்றாமடியிலும் நான்காமடியிலும்
தனித்தனி பொருள்கட்குத் தொடர்ச்சியமையக் கூறியது,
ஒற்றைமணிமாலையணியென்னும் ஏகாவளியலங்காரமாம்; அடுத்தசெய்யுளிலும்
இதுகாண்க, பின்பின்னாகவருவனவற்றிற்கு முன்முன்னாக வந்தவற்றை
விசேஷணங்களாகவேனும் விசேஷ்யங்களாகவேனுஞ் சொல்லுதல், இதன்
இலக்கணம்.

    தீ்ர்த்தத்தின் இனிமையையும் அதிலுள்ள நீ்ர்ப்பூக்களின்
சுகந்தத்தையுங்கருதி, ‘நறும்பொய்கை’ எனப்பட்டது.  இனி, நறுமை –
நன்மையுமாம்.  ‘பொய்கை’ என்ற சொல்லுக்கு-‘மானிடராக்காத நீ்ர்நிலை’
என்று பொருளுரைத்தனர் சீவகசிந்தாமணியுரையில் ஆசிரியர்
நச்சினார்க்கினியர்; அஃது இவ்விடத்துக்கும் பொருந்தும்; இந்த
இந்திரப்பிரத்தநகரம் மனிதசிற்பிகளாற் கைத்தொழிலாச் செய்யப்ட்டதன்றித்
தேவசிற்பியான விசுவகர்மாவினால் மாநஸநிர்மாணமாக நினைத்தமாத்திரத்தில்
நிருமிக்கப்பட்டதாதலால்: அதனை, கீழ் இந்திரப்பிரத்தச்சருக்கத்து “திரங்குடி
புகுந்த கல்விச் சிற்பவித்தகன் தன் நெஞ்சாற், கரங்குடி புகாமற் செய்த
கடிநகர்” என்றதனால் அறிக.  செந்நெல் – நீரில்விளைவதொரு சிறந்த
தானியம்.  அதன் விளைவுகூறவே, கழனிகளில் நிறைந்த
நீர்வளச்சிறப்புக்கூறியவாறு.  ‘வாவியின் உடம்பு’ என்றது, அதன் இடத்தை;
உடம்பு – உருவம்.  சுரும்பு இனம் – வண்டுவகைகளென்றலுமாம்; சுரும்பு,
வண்டு, தேன், மிஞிறு என்ற சாதிபேதங்களெல்லாம் இதில் அடங்கும்.
பொன்வண்டு, பொறிவண்டு, கருவண்டு, தேன்வண்டு, என்றும் கூறுவர்.
மதுகரம் – தேனை ஈட்டுவது என்ற காரணப் பொருள்படும்.  ‘சொல்’ என்றது-
இங்கு, குரலென்றமாத்திரமாய் நின்றது.  செழுங்கீதம் – ஸ்வரபுஷ்டியுள்ள
இனிய இசை, மரங்களின இளமையை அவற்றின் தொகுதியாகிய
சோலையின்மேலேற்றி, ‘இளஞ்சோலை’ என்றார்.  மென்மை – இங்கு,
கண்ணுக்கு இனிமை.  பொங்கர் என்ற சொல் – (உயர்ந்து) விளங்குவது என்று
காரணப்பொருள்பெறும்; அர் – பெயர்விகுதி. விளைதல் – செழித்துவளர்தல்,
தானியம் முதிர்தல்.

அருகுஎலாம் மணி மண்டபம்; அவிர் ஒளி அரங்கு எலாம்
சிலம்பு ஓசை;
குருகு எலாம் வளர்பழனம்; அப் புள் எலாம் கூடல்,
இன்புற ஊடல்;
முருகு எலாம் கமழ் துறை எலாம் தரளம்; வெண் முத்து எலாம்
நிலா வெள்ளம்;
பருகலாம் புனல் நதிஎலாம், நீர்எலாம், பங்கயப் பசுங் கானம்;

அருகு எலாம் – (அந்நகரத்தில் ஒன்றுக்கு ஒன்று)
சமீபமாகவுள்ள இடங்கள்தோறும், அணிமண்டபம் – அழகிய மண்டபங்களும்,-
அவிர் ஒளி அரங்கு எலாம் – விளங்குகின்ற ஒளியையுடைய
(அம்மண்டபங்களிலுள்ள) கூத்தாடுமிடங்களிலெல்லாம், சிலம்பு ஓசை –
(நர்த்தனஞ் செய்கின்ற மகளிரது) காற்சிலம்புகளின் ஓசையும்,-பழனம் எலாம் –
கழனிகளி லெல்லாம், வளர் குருகு – செழுமையாய் வளர்கின்ற
நீர்வாழ்பறவைகளும்,-அப்புள் எலாம் – அந்தப்பறவைகளி னிடங்களிலெல்லாம்,
கூடல் இன்புஉற ஊடல் – (ஆணும்பெண்ணும் ஒன்றோடொன்று) சேர்தலும்
அப்புண்ாச்சியின்பம் மிகுமாறு அவை தம்முட் சிறு கோபங் கொள்ளுதலும்,-
முருகு எலாம் கமழ் துறை எலாம் – பலவகை நறுமணங்களும் மணக்கப்பெற்ற
நீர்த்துறைகளிலெல்லாம், தரளம் – முத்துக்களும்,-வெள்முத்து எலாம்-
வெண்ணிறமான அம்முத்துக்களி லெல்லாம், நிலா வெள்ளம் – சந்திரகாந்தி
போன்ற குளிர்ச்சியான வெள்ளொளியின் தொகுதியும்,-நதி எலாம் –
(அந்நகரத்தைச் சார்ந்து பெருகுகிற) யாறுமுழுவதிலும், பருகல் ஆம் புனல் –
குடிப்பதற்கு ஏற்ற நன்னீரும்,-நீ்ர் எலாம் – அந்நீரிலெங்கும், பங்கயம்
பசுங்கானம்-பசுமை நிறமான தாமரைக் கொடிகளின் தொகுதியும், (உள்ளன);
(எ- று.)

முடிபும் அணியும் – மேற்கூறியன.  மணிமண்டபம் என்று எடுத்து,
இரத்தினங்கள் பதித்துச்செய்யப்பட்ட மண்டப மெனினுமாம்.  இங்கு, முத்து –
சங்கினின்று தோன்றுபவை.  பருகலாம் புனல் – “உணற்கினியவின்னீர்.”
‘நதியெலாம்’ என்றவிடத்து ‘எலாம்’ என்றது – பொருட்பன்மை குறியாமல்,
ஒருபொருளின் பல இடம் குறித்தது: பங்கஜம் – சேற்றில் முளைப்பது எனத்
தாமரைக்குக் காரணவிடுகுறி: பங்கம் – சேறு; ஜம்-தோன்றுவது.
‘பருகெலாம்புனல்’ என்ற பாடத்துக்கு, எலாம் பருகு புனல் – அனைத்து
உயிர்களும் உண்ணுதற்கு ஏற்ற நீர் நிரம்பியுள்ளன என்று பொருளாம்.
‘குருகெலாம் வளர்பழனம்’ என்றவிடத்து, “ஏற்றபொருளுக்கு இயையும்
மொழிகளை மாற்றி ஓரடியுள் வழங்கியது” மொழிமாற்றுப்பொருள்கோள்,
குருகு – அன்னப் பறவையுமாம்; “நீரொழியப்பா லுண்குருகிற் றெரிந்து” என்ற
நாலடியாரிற்போல.  பழனம் – மருதநிலம், வயல்.  ஊடலாவது – ஆண்பாலும்
பெண்பாலும் இணங்கி நின்ற நிலையில் இவ்வின்பத்தை மிகுவித்தற்பொருட்டு
ஒருவர் மீது ஒருவர் சினத்தல்: இது, பெண்பாலாரிடத்து மிகும்.  “ஊடுதல்
காமத்திற்கின்பமதற்கின்பங், கூடி முயங்கப் பெறின்” என்பவாதலால், ‘கூடலின்
புறவூடல்’ எனப்பட்டது.  கானம் – காநநம் என்ற வடசொல்லின் விகாரம்;
காடு: இங்கு, தொகுதியென்ற மாத்திரமாய் நின்றது.

ஆனகம் பல முழங்க வந்து எதிர் பணிந்து, ஆதுலர்க்கு
அமுது அன்ன
போனகம் பரிந்து இடு நெடுஞ் சாலையே, புகுந்த மா
மறுகு எல்லாம்;
‘வானகம்தனை அமையும்!’ என்று, உம்பரும் மண்ணின்மேல்
வர எண்ணும்
ஞான கஞ்சுகன் நகரியை எங்ஙனே நாம் வியப்பது மன்னோ?

புகுந்த மா மறுகு எல்லாம் – (அந்நகரினுள்ளே விதுரன்
உட்புகுந்து செல்கின்ற பெரிய அரசத்தெருக்களிலெல்லாம்,-பல ஆனகம்
முழங்க அநேக துந்துபிவாத்தியங்கள் மிகஒலிக்க, எதிர் வந்து பணிந்து –
(விருந்தினரை) எதிர்கொண்டுவந்து வரவேற்று வணங்கி, ஆதுலர்க்கு –
வறியவரான அவ்விருந்தாளிகளுக்கு, அமுது அன்ன போனகம்-தேவாமிருதம்
போன்ற [மிக இனிய] உணவை, பரிந்துஇடும் – (அவரவர்) அன்புகொண்டு
அளிக்கப்பெற்ற, நெடுஞ் சாலையே-பெரிய அன்னசாலைகளே (உள்ளன);
உம்பரும் – தேவர்களும், வானகந்தனை அமையும் என்று – (தங்கட்கு
உறைவிடமான) சுவர்க்கலோகத்தை (இதில் நாம் உறைந்திருந்தது)
போதுமென்று வெறுத்து, மண்ணின்மேல் வர எண்ணும் –
இந்நிலவுலகத்தினிடத்து (இந்நகரத்துக்குத் தாம்) வந்திடுமாறு கருதுதற்குக்
காரணமான, ஞானகஞ்சுகன் நகரியை-ஞானத்தையே (தனக்குக்) கவசமாகக்
கொண்டுள்ளவனாகிய தருமபுத்திரனது இந்திரப் பிரத்த நகரத்தை, நாம்
வியப்பது – நாம் கொண்டாடிக் கூறுவது, எங்ஙனே-எவ்வாறு? (எ – று.) மன்,
ஓ – ஈற்றசை.

    தேவர்களும், கொடையால் மிக்க இந்நகரத்தை வாழிடமாகக் கொள்ள
வானுலகத்தை வெறுத்து இங்கு வரவிரும்புகின்றாரானால், இது நம்மாற்
கொண்டாடுந்தரத்ததோ என்றவாறு. தேவலோகத்து இராசதானியான அமராவதி
நகரத்தினும் செல்வவளமும் இன்பச்சிறப்பும் அழகும் மிக்கது, இந்திரப்பிரத்த
நகரமென்றபடி.  ஆநகம் – வடசொல்; வெற்றிமுரசு, மங்கலமுரசு, கொடைமுரசு
என்ற மூன்றுவகையில் இங்குக் குறித்தது, கொடைமுரசு. ஆதுலர் – வடசொல்.
அன்புடைமை விருந்தோம்புவார்க்கு இன்றியமையாதாதலால், ‘பரிந்துஇடும்’
எனப்பட்டது.  மறுகு-நெடுந்தெரு.  உம்பர் – மேலிடத்தின் பெயர்:
தேவர்களைக் குறித்தது;  இடவாகுபெயர்.  எண்ணும் நகரி – பெயரெச்சம்;
காரியப்பொருளது.  கஞ்சுகம் – மெய்ப்பை, சட்டை.  ஞானகஞ்சுகள் –
‘தருமமேஜயம்’ என்றாற் போன்ற நல்லுணர்வைத் தனக்குப் பாதுகாவலாகக்
கொண்டுள்ளவன்; தத்துவஞானத்தாற் போர்க்கப்பட்டவன்:  அதாவது
மெய்யுணர்வு நிரம்பியவன்.  எங்ஙன் – எங்ஙனம்: ஏ-அசை. ‘புகுந்த மாமறுகு
எல்லாம்’ என்பதற்கு-யார் எந்தத்தெருவிற்சென்றாலும் அந்தத்தெருவிலெல்லாம்
என உரைப்பினும் அமையும்.  நாம் என்றது – இங்குக் கவிக்கூற்றிற்கு உரிய
இயற்கைத் தனித்தன்மைப்பன்மை

வந்தனன், சிலை விதுரன்’ என்று ஓடி, முன் வந்தவர்
உரையாமுன்,
தந்தை தன் தனி வரவு அறிந்து, இளைஞரும் தருமனும்
எதிர் கொண்டார்;
சிந்தை அன்புடன் தொழத் தொழ, மைந்தரைச் செங்கையால்
தழீஇக் கொண்டே,
அம் தண் அம்புலி கண்ட பைங் கடல் என, அவனும் மெய்
குளிர்ந்திட்டான்.பாண்டவர் விதுரனையெதிர்கொள்ள, அவன்
அவர்களைத்தழுவி மகிழ்தல்.

சிலை விதுரன் வந்தனன் என்று – ‘வில்வித்தையில் மிக
வல்லவனான விதுரன் (இந்நகரத்துக்கு) வந்தான்’ என்று ஓடி முன் வந்தவர்
உரையாமுன்-ஓடி விரைந்துவந்த தூதர்கள் செய்தி கூறுதற்கு முன்னே [செய்தி
கூறியவுடனே விரைவாக என்றபடி], தருமனும் இளைஞரும் – தருமபுத்திரனும்
அவனது தம்பியரான வீமன் முதலியோர்களும், தந்தையின் தனி வரவு
அறிந்து-தங்கள் சிறிய தந்தையான அவ்விதுரனது ஒப்பற்றவருகையை
யுணர்ந்து, எதிர்கொண்டார் – எதிர்சென்று வரவேற்று, சிந்தை அன்புடன்
தொழ தொழ – மனத்தில் நிறைந்த அன்புடனே (அவனை) அனைவரும்
நமஸ்கரிக்க,-அவனும் – அவ்விதுரனும், மைந்தரை -(தனது)
தமையன்மக்களான அந்தப் பஞ்சபாண்டவர்களை, செம் கையால்
தழீஇக்கொண்டு – (தனது) சிவந்த கைகளினால் அணைத்துக்கொண்டு, அம்
தண் அம்புலி கண்ட பைங்கடல் என மெய் குளிர்ந்திட்டான் – அழகிய
குளிர்ந்த சந்திரனைக் கண்ட பசுமையான கடல் (மகிழ்ந்து பொங்குமாறு போல)
மகிழ்ந்து உடம்பு பூரித்தான்;  (எ – று.)

     ‘ஓடி முன்வந்தவர் உரையாமுன்னே வரவறிந்து எதிர்கொண்டார்’ என்று
காரணத்திற்கு முன்னே காரியம் நிகழ்ந்ததாகக் கூறியது,
மிகையுயர்வுநவிற்சியணி யெனப்படும். (காரியத்தை முன்னும் காரணத்தைப்
பின்னும் நிகழ்வனவாகச் சொல்லுதல், இவ்வணியின் இலக்கணம்.)  இது
காரியவிரைவைச் சொல்வதாகும்.  பாண்டவர்க்கு விதுரனிடத்து உள்ள
பித்ருபக்தியும் விதுரனுக்கு அவர்களிடத்து உள்ள புத்ரவாத்ஸல்யமும் விளங்க,
சிறிய தந்தையென்றும் தமையன்மைந்த ரென்றுங் கூறாது ‘தந்தை’, ‘மைந்தர்’
என்றே கூறினார்.  உண்மையாக அகத்தில் நிகழாதிருக்கையிற் புறத்தே
காட்டப்படும் பொய்அன்பன்றி மனப்பூர்வமாக நிகழ்ந்த அன்பு என்பார்
‘சிந்தையன்பு’ என்றார்.  ‘தொழத்தொழ’ என்ற அடுக்கு, தொழுபவரது
பன்மைபற்றி வந்தது.  ‘தழுவி’ என்ற சொல், ‘தழீஇ’ என விகாரப்பட்டு
அளபெடுத்தது; சொல்லிசையளபெடை.  சந்திரனைக் கண்டவளவிலே கடல்
பொங்கும் இயல்பு பிரசித்தம்;  “தண்ணென் கதிர்வரவாற் பொங்குங்கடல்.”
திருப்பாற்கடல்கடைந்தகாலத்து அதனினின்று சந்திரன் தோன்றியதனாலும்,
நாள்தோறும் சந்திரோதயமாகின்றமை கடலினின்று தோன்றுவதுபோலக்
காணப்படுதலாலும், கடலுக்கும் சந்திரனுக்கும் பிதாபுத்ர சம்பந்தம் கூறப்படும்:
உபமானத்தில் உள்ள அத்தன்மை, இங்கு உபமேயத்துக்கு ஏற்குமாறு காண்க;
மைந்தரைக்கண்டு தந்தை மகிழ்தல், உபமேயம்.  ஆகவே,
‘மெய்குளிர்ந்திட்டான்’ என்பதற்கு – உடம்பின் அந்தக்கரணமாய்ச் சிறந்த
உறுப்பாகிற மனம் களித்தான் என்ற அளவோடு நில்லாது, அம் மகிழ்ச்சி
மிகுதியால் உடல் பூரித்தான் என்கின்ற வரை கருத்து நிகழும்.  பசுமை கருமை
நீலம் என்கிற நிறங்களுக்கு ஒன்றோடொன்று உள்ள சிறிது வேறுபாட்டைப்
பாராட்டாது அபேதமாகக்கூறுங் கவிசமயம்பற்றி,  ‘பைங்கடல்’ எனப்பட்டது. 

கொண்டு தந்தையைத் தாமும், வண் கொடி மதில் கோபுர
நெடு வீதி
அண்டர் ஆலயம் எனத் தகு கோயில் சென்று அடைந்தபின்,
அடல் வேந்தர்
வண்டு தாமரை மலர் எனச்  சுழலும்  மா  மலர்  அடி
பணிந்து ஏத்த,
கண்டு, வாழ்வுடன் அவர்க்கு அருள் புரிந்து, தன் கருத்தினால்
விடை ஈந்தான்.பாண்டவர் விதுரனைஉபசரித்தல்.

தாமும் –  அப்பாண்டவர்கள் தாமும், தந்தையை கொண்டு –
விதுரனை அழைத்துக்கொண்டு, வள் கொடி மதில் கோபுரம் நெடு வீதி
அண்டர் ஆலயம் என தகு கோயில் சென்று அடைந்தபின் – பெரிய
துவசங்கள் நாட்டப்பெற்ற மதில்களையும் கோபுரங்களையும் பெரிய
வீதிகளையுமுடைய தேவலோகமென்று சொல்லத்தக்க தமது அரண்மனைக்குப்
போய்ச்சேர்ந்தபின்பு, அடல் வேந்தர்-வலிமையையுடைய அப்பாண்டவரரசர்கள்,
வண்டு தாமரைமலர் என சுழலும் மா மலர் அடி பணிந்து ஏத்த – வண்டுகள்
தாமரைமலரென்று எண்ணி நெருங்கி வந்து சுழன்று மொய்க்கும்படியான
(விதுரனது) திருவடித்தாமரைகளை வணங்கி உபசரிக்க,-கண்டு – (அதனை)
நோக்கி, அவர்க்கு வாழ்வுடன் அருள் புரிந்து – அம்மைந்தர்கட்கு
ஆசிர்வாதத்தோடு அநுக்கிரகஞ் செய்து, தன் கருத்தினால் விடை ஈந்தான் –
தனது மனப்பூர்வமான அன்பினால் (பாண்டவர்கட்கும் உட்காருமாறு) அநுமதி
தந்தான்; (எ – று.)

     இனி, இச்செய்யுளுக்கு-பாண்டவர்கள் விதுரனுடன் தங்கள் அரண்மனை
சேர்ந்த பின்பு பல அரசர்கள் விதுரனைத் திருவடி தொழுது துதிக்க விதுரன்
அவர்கட்கெல்லாம் ஆசீ்ர்வாத அநுக்கிரகஞ்செய்து, பாண்டவர்களும்
தானுமாகத் தனியேயிருந்து பேச வேண்டுமென்று அரசர்கட்கு விடைகொடுத்து
அனுப்பினான் என்று உரைத்தலும் பொருந்தும்; அடுத்த செய்யுளில், ‘தானும்
மைந்தரோரைவரு மொருபுடை தனித்திருந்துழி……………………. மொழிகின்றான்’
என்பது காண்க.  தாமும் – அம்மைந்தர் தாமும் என்றபடி.  ‘தாமும்’ என்ற
இறந்தது தழுவிய எச்சவும்மை, கதைத் தொடர்ச்சி பற்றியது.  ஆலயம் –
இருப்பிடம்.  ‘வண்டு தாமரைமலரெனச்சுழலும் அடி’ என்ற விடத்து
மயக்கவணிகாண்க.  பாதத்துக்கும் தாமரைமலர்க்கும் செம்மை மென்மை
அழகுகளில் ஒப்புமை.  மீண்டும் ‘மாமலர்’ என்றது, அடிக்குச் சாதியடையாய்
நிற்கும்.  வாழ்வு=வாழ்த்து.  வாழ்வுடன் அருள்புரிந்து – வாழ்வு உண்டாகுமாறு
அநுக்கிரகஞ் செய்து என்றுமாம்.  ‘வண்கொடி’ என்றது – மதில் கோபுரம் வீதி
அண்டராலயம் கோயில் என்றவற்றிற்கெல்லாம் அடைமொழியாகலாம்

தானும், மைந்தர் ஓர் ஐவரும், ஒரு புடை தனித்து
இருந்துழி வண்டு
தேன் நுகர்ந்து இசை முரல் பசுந் தொடையலான்
திருத்தக மொழிகின்றான்:
‘கோன் உவந்து, தன் திருமுகம் எழுதி, ‘நீ கொணர்க
மைந்தரை!’ என்ன
யானும் வந்தனன், ஏவலால்; அழைத்ததற்கு ஏதுவும்
உளது அன்றே.நான்குகவிகள் – விதுரன்தான்வந்த காரியங் கூறுதல்

இதுமுதல் ஐந்துகவிகள் – ஒருதொடர்.

    (இ – ள்.) வண்டு தேன் நுகர்ந்து இசை முரல் பசுந்தொடையலான்
– வண்டுகள் (மலர்களிலுள்ள) தேனைக் குடித்து(க் களித்து) இசைபாடுதற்கு
இடமான பசிய [புதிய] மலர் மாலையைத் தரித்துள்ளவனாகிய விதுரன்,
தானும் மைந்தர் ஓர் ஐவரும் ஒரு புடை தனித்து இருந்த உழி – தானும்
தன்மக்களாகிய பஞ்சபாண்டவர்களுமாக ஓரிடத்தில் (வேறுயாவரும்
உடனின்றித்) தனிப்பட வீற்றிருக்கையில், திரு தக மொழிகின்றான் –
அழகிதாகச் சொல்கின்றான்,-‘கோன் – திருதராஷ்டிரமகாராஜன், நுவன்று
தன் திருமுகம் எழுதி – (பத்திரிகையிலெழுதவேண்டிய செய்தியைத் தான்)
சொல்லித் தனதாகப் பத்திரிகை எழுதுவித்து, (என்னிடம் கொடுத்து),
மைந்தரை நீ கொணர்க என்ன  -‘பிள்ளைகளை [பாண்டவர்களை]
அழைத்துக்கொண்டு வருவாயாக’ என்று (எனக்குக்) கட்டளையிட,
ஏவலால்-அத்தமையனார் கட்டளையால், யானும் வந்தனன்-நானும்
(உங்களை அழைத்ததற்கு) வந்தேன்; அழைத்ததற்கு ஏதுவும் உளது –
(அவன் இப்பொழுது உங்களை) அழைத்தற்குக் காரணமும் உண்டு;
(எ-று,)–அக்காரணம், அடுத்த மூன்று கவிகளில் விளங்கும்.  அன்றே –
ஈற்றசை: தேற்றமெனினுமாம்.

     விதுரன் பாண்டவரிடம் தனித்திருந்து, திருதராட்டிரன் உம்மை
யழைத்துவருமாறு சொல்லிப் பத்திரிகையெழுதி என்னைத் தூதனாக
அனுப்பினனென்றானென்பதாம்.  இருந்துழி=இருந்த உழி: பெயரெச்சவீறு
தொகுத்தல்,  திரு தக -அழகு அமைய: சிறந்தகருத்துப் பொருந்த,
கம்பீரமாக எனினுமாம்.  கோன் -சந்தர்ப்பத்தினாற் சிறப்பாய்த்
திருதராட்டிரனை யுணர்த்திற்று.  பத்திரிகையை’திருமுகம்’ என்றல் மரபு;
வடமொழியிலும், ‘ஸ்ரீமுகம்’ எனப்படும். சிறந்தவாயினாற்
சொல்லப்படுஞ் சொற்களடங்கிய தென்றவாறு.

நீ புரிந்த நல் வேள்வியின் கடன் கழித்து, யாவரும்
நெடு மாடக்
கோபுரம்  திகழ்  மூதெயில்  வளநகர்க்  கோயில்
புக்கனம் ஆக,
‘நூபுரம் திகழ் இணை அடி அரம்பையர் நோக்க அருங்
கவின் கொண்ட
மா புரந்தரன் இவன்’ என இருந்தனன், வலம்புரி மலர்த் தாரான்.

 நீ புரிந்த நல் வேள்வியின் கடன் கழித்து – நீசெய்த சிறந்த
(ராஜசூய) யாகத்திற்கு உரிய முறைமையாகிய சடங்குகள் நிறைவேறியபின்பு,
யாவரும்-நாங்களெல்லாரும், நெடுமாடம் கோபுரம் திகழ்-உயர்ந்த உபரிகை
வீடுகளும் கோபுரங்களும் விளங்கப்பெற்றதும், முது எயில்-பழமையான
[தொன்றுதொட்டு அழியாதுள்ள] மதில்கள் சூழ்ந்ததும், வளம்-செல்வவளம்
நிறைந்ததுமான, நகர் – (அத்தினாபுரியினது, கோயில் – அரண்மனையை
புக்கனம் ஆக – சென்றுசேர்ந்தோமாக, – வலம்புரி மலர் தாரான்-
நந்தியாவர்த்த மலர்மாலையைத் தரித்தவனான துரியோதனன்,-‘நூபுரம் திகழ்
இனை அடி-சிலம்பென்னும் அணிவிளங்குதற்குக் காரணமான இரண்டு
கால்களையுடைய, அரம்பையர்-தேவமாதர்களாலும், நோக்கு அரு-பார்த்து
அநுபவித்து எல்லை காணமுடியாத, கவின் – பேரழகை, கொண்ட –
தன்னிடத்து உடைய, மா புரந்தரன்-சிறந்த இந்திரன், இவன்-,’ என-என்று
(காண்பவர்) வருணித்துக் கூறும்படி, இருந்தனன் – (சபையில்) வீற்றிருந்தான்;

     இப்பொழுது உள்ள இந்திரன் தேவமாதர்களால் நோக்கி
எல்லைகாணப்படும் அழகுடையான்; அங்ஙனமன்றி, அவர்களாற்
பார்த்துமுடியாத பேரழகுடையானொரு மகேந்திர னிவனென்று ஒப்புமை
விசேடித்துச் சொல்லும்படி மிக்க சிறப்பாக அரசுவீற்றிருந்தனன்
துரியோதனனென அவனது அழகையும் அரசு வீற்றிருத்தற் சிறப்பையும்
வருணித்தவாறு.  இனி, அரம்பையர் நோக்கு அருங் கவின் கொண்ட –
அரம்பையர்களாற் காதலித்துப் பார்க்கப்படுகிற அருமையான [பிறர்க்கில்லாத]
அழகைக் கொண்ட, சிறந்த இந்திரனென்றலும் அமையும்.  கழித்து=கழிய
எனக்கொண்டு, எச்சத்திரிபுமாம்.  கழித்தியாவரும்-குற்றியலிகரம்.  மாடம் –
மண்டபமுமாம்.  யாவரும் புக்கனமாக – தன்மையிற் படர்க்கைவந்த
இடவழுவமைதி; [நன்-பொது-29.] ‘நூபுரம் திகழ் இணையடி’ என்பதற்கு –
நூபுரத்தினால் விளங்குகிற பாதமென்று பொருள்கொள்ளுதலினும், நூபுரம்
விளங்குதற்குக் காரணமான பாதமென்று கொள்வது, அக்காலின்
இயற்கையழகை விளக்குவதாய்ச் சிறக்கும்.  ‘இணையடி’ என்ற விடத்து ‘இணை
என்பது அடிக்கு வெறும் இயற்கையடைமொழியெனக் கொள்ளுதலினும்,
(தமக்குவேறு ஒப்புமையில்லாமையால்) தம்மில் ஒன்றற்கு ஒன்று நிகரான
பாதமென்று கொள்வது விசேடமாம்.  அரம்பை – தேவலோகத்து
அப்ஸருஸ்ஸீதிரீகளில் ஒருத்தியின் பெயராதலால், அம்மாதர்கள் ‘அரம்பையர்’
எனப்படுவர்; அரம்பை முதலியோர் அல்லது அரம்பை போல்வார் என்று
பொருள் காண்க.    

தம்பிமாரொடும்,  தகை  இலாத்  துன்மதிச்
சகுனிதன்னொடும் எண்ணி,
‘கும்ப மா மணி நெடு முடி நிரைத்த வண்
கூடம் ஒன்று அமைக்க’ என்ன,
“அம்பு ராசி சூழ் மண்தலத்து அரசு எலாம்
அடங்கு பேர் அவைத்துஆக,
உம்பர் ஆலயம் நிகர்” எனச் சமைத்தனர்,
ஒட்ப நூல் உணர்வுற்றார்.

(அங்ஙனம் சபையில் வீற்றிருந்த துரியோதனன்)
தம்பிமாரொடும் – (தனது) தம்பிமார்களுடனும், தகை இலா துன்மதி
சகுனிதன்னொடும் – பெருந்தன்மையில்லாத துர்ப்புத்தியையுடைய
சகுனியுடனும், எண்ணி – ஆலோசித்து, கும்பம் மா மணி நெடு முடி நிரைத்த
வள் கூடம் ஒன்று அமைக்க என்ன-‘(மேலே) கலசம் வைக்கப்பெற்றவையும்
சிறந்த இரத்தினங்கள் பதித்தவையுமான உயர்ந்த சிகரங்கள் வரிசையாய்
அமைக்கப்பெற்ற அழகிய ஒரு மண்டபத்தைச் செய்வீராக’ என்று(சிற்பிகளுக்குக்)
கட்டளையிட, ஒட்பம் நூல் உணர்வுற்றார் – சிறந்த (சிற்ப)
சாஸ்திரத்தையறிந்தவர்களான ஸ்தபதிகள்,- அம்புராசி சூழ் மண் தலத்து அரசு
எலாம் அடங்கு பேர் அவைத்து ஆக – நீர்த்தொகுதியாகிய கடலினாற்
சூழப்பட்ட நிலவுலகத்திலேயுள்ள அரசர்களனைவரும் அடங்கத்தக்க பெரிய
சபையையுடையதாக, உம்பர் ஆலயம் நிகர் என சமைத்தனர் – தேவலோகம்
(இதற்கு) உவமையென்று கூறும்படி (ஒரு சபாமண்டபத்தைக்) கட்டிச் சித்தஞ்
செய்தார்கள்; (எ – று.) 

     சபையில் வீற்றிருந்த துரியோதனன், சகுனி கர்ணன் துச்சாதனன்
என்பவரோடும் ஆலோசித்து ஓர் மண்டபம் சிறப்புற அமைக்கும்படி
சிற்பிகட்குக் கட்டளையிட, மிகவும் விசாலமான இடமமையத் தேவலோகத்துச்
சுதர்மைக்கு ஒப்பான பெருஞ்சபா மண்டபத்தை அன்னார் இயற்றினரென்பதாம்.
அமைக்கென்ன – வியங்கோளின் அரகவீறு தொகுத்தல். மண்டலம் என்று
எடுத்து, பூமண்டலம் என்றுங் கொள்ளலாம்; வட்டமான இடம். இங்கு
‘உம்பராலயம்’ என்றது – சுவர்க்க லோகத்துத் தேவசபையாகிய சுதர்மையை
யாகலாம். ‘உம்பராலயம் நிகர்என’ என்பதற்கு – தேவலோகசபைக்கு
(இம்மண்டபம்) உவமையாமென்று சொல்லும்படி யென்றும் பொருள்கொள்ளலாம்;
உபமேயத்தினும் உபமானம் சிறந்ததாயிருத்தல் வேண்டுமென்பது, அலங்கார
நூலார் துணிபு.  ஒட்பம் – ஒளி:  பண்புப்பெயர்; ஒள் – பகுதி, பம் – விகுதி:
‘மை’ விகுதி பெறுகையில், ஒண்மையென நிற்கும். இங்கு ‘ஒட்பநூல்’ என்றது –
சிறப்பாய், சிற்பசாஸ்திரத்தைக் குறித்தது. மூன்றாமடி – அச்சபாமண்டபத்தின்
பரப்பை விளக்கிற்று.   

பெற்ற தந்தையோடு உள் உறும் உணர்வுஎலாம்
பேசி, மண்டபம்தன்னில்
கொற்றவன் குடி புகும்பொழுது, உன்னையும் கூட்டி
மன் அவை முன்னர்,
மற்ற மாதுலன் நெஞ்சமோ, வஞ்சமோ, மாயமோ,
வகுத்து, ஆங்கு,
கற்ற சூது நின்னுடன் பொரு நினைவினன்; கருத்து
இனித் தெரியாதே?

கொற்றவன் – வெற்றியையுடையவனான துரியோதனன், பெற்ற
தந்தையோடு உள் உறும் உணர்வு எலாம் பேசி – (தன்னைப்) பெற்ற
தந்தையான திருதராட்டிரனுடனே (தன்) மனத்திற் பொருந்திய எண்ணங்களை
யெல்லாஞ்சொல்லி ஆலோசித்து, மண்டபந்தன்னில் குடிபுகும் பொழுது –
அம்மண்டபத்திற் பிரவேசஞ்செய்யும் பொழுது, மற்ற மாதுலன் – (பங்காளிகளும்
பகையாளிகளுமான அத்துரியோதனாதியர்க்கு) மாமனான சகுனி, உன்னையும்
கூட்டி – உன்னையும் அங்கு வருவித்து, மன் அவை முன்னர் – (அங்குக்
கூடுகிற) ராஜசபையின் முன்னிலையிலே, நெஞ்சமோ வஞ்சமோ மாயமோ
வகுத்து – (தான்) மனத்திற் கருதிய ஆலோசனையையோ வஞ்சனையையோ
மாயையையோ செய்து, ஆங்கு – அவ்விடத்தில் [அச்சமயத்தில்], கற்ற சூது
நின்னுடன் பொரும் நினைவினன் – (தான்) பயின்று தேர்ந்துள்ள சூதாட்டத்தை
உன்னுடன் ஆடவேண்டுமென்னும் ஆலோசனையுடையனா யிருக்கிறான்; இனி
கருத்து தெரியாதே – இனி [இவ்வளவு சொன்ன பின்பு] (அவர்களுடைய)
எண்ணம் (உனக்குத்) தெரியாததன்றே;(எ – று.)

    ‘தெரியாதே’ என்பதில், ஏகாரம் – வினாவகையால் எதிர்மறைப்பொருள்
குறித்தது; ஆகவே, இரண்டு எதிர்மறை உடன்பாட்டையுணர்த்தித் தேற்றக்
கருத்தை விளக்க, தெரிந்ததேயாமென்றதாயிற்று.  நினது இராச்சியம் முதலிய
செல்வங்களை யெல்லாங் கவர்ந்துகொள்ள வேண்டுமென்பது அவர்கள்
கருத்து எனக் குறிப்பித்தவாறாம்.  ஏகாரத்தை ஈற்றசையாகக்கொண்டு,
(அவர்களாலோசனை இது); இனி, இவ்விஷயத்தில் உனது) கருத்து (எனக்குத்)
தெரியாது என்று உரைப்பினமாம்.  இனி அவர்கள் கருத்து எனக்குத்தெரியாது
என்று உரைப்பின் விதுரன் பொய் கூறியவனாவன்; இவ்வளவு கூறிவிட்டபின்பு
‘அவர்கள் கருத்து எனக்குத் தெரியாது’ என்றால், சந்தர்ப்பமுமன்று.
கொற்றவன் – ராஜராஜ னென்றபடி.  நெஞ்சம்-தானியாகு பெயராய், மனத்திற்
கருதிய சூழ்ச்சியைக் குறித்தது; என்றது – தந்திரமென்றவாறு, இதனினுங்
கொடியது, வஞ்சம்; அதனினுங் கொடியது, மாயம்.  மாயம் – மாயா என்ற
வடசொல் விகாரப்பட்டது; இது, மந்திரபலத்தாற் செய்யப்படுவது. 

திருதராட்டிரன்  திருமுகம்  இது’  என,  சென்று
இறைஞ்சினன் வாங்கி,
விரதம் ஆக்கம் என்று அறிந்து, அறம் பேணுவான்
வினைஞர் கைக் கொடுத்திட்டான்;
இரத மாற்றம் அங்கு எழுதிய படியினால் இயம்பலும்,
அது கேட்டு,
வரதனால் பணிப்புறு தொழில் யாவர், நாம் மறுக்க?’
என்று உரைசெய்தான்.விதுரன்கொடுத்த திருமகத்தைத் தருமன் வாங்கிச்
செய்தியுணர்தல்.

திருதராட்டிரன் திருமுகம் இதுஎன – திருதராஷ்டிரன் அளித்த
பத்திரகை இது வென்றுசொல்லி (விதுரன்) கொடுக்க,-விரதம் ஆக்கம் என்று
அறிந்து அறம் பேணுவான் – (வாய்மை அருளுடைமை முதலிய)
விரதங்களைத் தவறாது அனுட்டித்தலே (இம்மைமறுமைகளில்)
நன்மைவிளைப்பது என்று (தனது உண்மையுணர்வினால்) உணர்ந்து தருமத்தை
மிக்கவிருப்பத்தோடு குறிக்கொண்டு காத்து ஒழுகுபவனான தருமபுத்திரன்,-
சென்று இணைஞ்சினன் வாங்கி – அருகிற்சென்று வணங்கி (இரு கையாலும்)
வாங்கி, வினைஞர் கை கொடுத்திட்டான்-(தன்னிடந்) தொழில்செய்பவர் கையிற்
கொடுத்தான்; (அதனை வாங்கிக் கொண்ட ஏவலாளர்), அங்கு
எழுதியபடியினால்-அப்பத்திரிகையில் எழுதியுள்ளபடி, இரதம் மாற்றம்
இயம்பலும் – இனிமையான வார்த்தையை வாசித்தவளவில்,-(தருமபுத்திரன்),
அது கேட்டு, வரதனால் பணிப்பு உறு தொழில் மறுக்க – ‘கடவுளாற் கட்டளை யிடப்பட்ட செயலை நிகழவொட்டாதபடி தடுத்தற்கு, நாம் யாவர்?- நாம் யார்?’
என்று-,உரை செய்தான்-(தன்மெய்யுணர்வுக்கு ஏற்றபடி) கூறினான்; (எ – று.)

    தெய்வசங்கற்பத்தால் நன்மையோ தீமையோ எது விளைவதானாலும்
அதனை மறுக்க நம்மாலாமோ என்று ஆஸ்திகந் தலையெடுத்த வார்த்தையைக்
கூறினன், யுதிஷ்டிர னென்க.  இனி, வரதனென்பதற்குத் த்ருதராட்டிரனது
கட்டளைப்படியன்றித் தமக்கு என ஒரு சுதந்திர மில்லையென்னுங் கருத்தால்
‘வரதனாற்பணிப்புறு தொழில்யாவர் நாம்மறுக்க’ என்று யுதிஷ்டிரன்
கூறினனென்க.

    திருதராஷ்ட்ரன் என்ற பெயர்-தரிக்கப்ட்ட இராச்சியத்தை யுடையவனென்று
பொருள்படும்; அரசாள்பவனென்று கருத்து; விசித்திரவீரியனது புதல்வருள்
மூத்தவனாய் அரசுக்கு உரியவனாதல்பற்றி, இவனுக்கு இப்பெயர் ஏற்கும்.
சிறப்புடையனவான அருளுடைமையும், வாய்மையும், இங்கு ‘விரதம்’ என்று
குறிக்கப்பட்டன.  ‘தருமமே ஜயம்’ ‘சத்தியமே ஜயம்’ என்று கருதி
அருளுடையனாய் வாய்மை தவறாது அறத்தை அநுட்டிப்பவனாதலால், தருமன்
‘விரதமாக்கமென்று அறிந்து அறம்பேணுவான்’ எனப்பட்டான். இனி, விரதமென்ற
சொல்லுக்கு – நீக்கமென்று ஒரு பொருளிருத்தல் கொண்டு, இத்தொடர்க்கு –
செல்வம் நீங்குந் தன்மையதென்று (செல்வ நிலையாமையை) அறிந்து அவாவை
மேற்கொள்ளாது வைராக்கியத்தையே மேற்கொண்டு தருமத்தைப் பரிபாலிப்பவ
னென்றலுமொன்று.  வினைஞர் – தொழிலாளர்; இது – இங்கே,
சந்தர்ப்பத்தினால், ஓலை வாசிக்கும் தொழிலாளர் மேல் நின்றது.  வரதன்
என்ற சொல்லுக்கு-வேண்டுவார் வேண்டும் வரங்களை யளிப்பவ னென்பது
பொருள்.  பணிப்பு உறுதல் – நியமிக்கப்படுதல்.  யாவர்என்பதில், வினா –
எதிர்மறை குறித்தது.  யாவர் நாம்-தன்மையிற் படர்க்கைவந்த இடவழுவமைதி.
இரதம்-ரஸம் என்ற வடசொல்லின் விகாரம். 

மூத்த தாதைதன் ஓலையும், இளையவன் மொழியும்,
ஒத்தமை நோக்கி,
வார்த்தை வேறு மற்று ஒன்றையும் உரைத்திலன்,
மனுநெறி வழுவாதோன்;
‘சேர்த்த நாக வெங் கொடியவன் கொடிய வன் சிந்தையின்
நிலை தோன்ற,
கோத்த கோவை நன்று ஆயினும் தகுவதோ,
குருகுலம்தனக்கு?’ என்றான்.தருமன் துரியோதனனதுசூழ்ச்சியைப் பழித்தல்

மனு நெறி வழுவாதோன் – மநுதருமசாஸ்திர முறைமை (சிறிதுந்)
தவறாதவனான தருமபுத்திரன்,-மூத்த தாதைதன் ஓலையும் இளையவன்
மொழியும் ஒத்தமை நோக்கி – (தனது) பெரிய தந்தையான
திருதராஷ்டிரனனுப்பிய பத்திரிகையும் சிறிய தந்தையான விதுரன் சொன்ன
வார்த்தையும் (தம்மில்) ஒத்திருந்த தன்மையை யுணர்ந்து,-வார்த்தைவேறு மற்று
ஒன்றையும் உரைத்திலன் – (நியாயத்துக்கு) மாறான வார்த்தை வேறொன்றையுஞ் சொல்லாதவனாய்,- ‘சேத்த நாகம் வெம்கொடியவன் – (கோபத்தாற் கண்) சிவந்த
சர்ப்பத்தின் வடிவமெழுதிய பயங்கரமான துவசத்தை யுடையவனாகிய
துரியோதனன், கொடிய வல் சிந்தையின் நிலை தோன்ற – (தனது) மிக்க கொடிய
மனத்தின் இயல்பு விளங்குமாறு [தனது கடுஞ்சிந்தைக்கு ஏற்றபடி], கோத்த –
தொடர்ச்சியாக ஆலோசித்த, கோவை – ஆலோசனைத் தொடர், நன்று
ஆயினும் – (அவனுக்கு) நல்லதாயிருந்தாலும், குருகுலம் தனக்கு தகுவதோ –
குருகுலத்தின் பெருமைக்குத் தகுமோ?-;(எ – று.)

    வஞ்சனையாக வருவித்துச் சூதாடிப் பொருள் கவருங் கருத்து துஷ்டரது
துராலோசனைக்கு ஏற்றதாயினுங் குடிப்பழியன்றோ வென்றன னென்க.
குருகுலம்-சந்திர வம்சத்திற் பிரசித்தி பெற்ற குருவென்னும் அரசனது மரபு;
‘வேறு மற்றொன்றையும்’ என்ற விடத்து ‘மற்று’ என்பதை அசையென்ன
லுமாம்.  மனுநெறி-மநுவென்னும் அரசனியற்றிய தரும சஸ்திரத்திற்கூறிய நீதி.
சேத்த-செம்மையென்ற பண்பினடி விகாரப்பட்டு வினைத்தன்மையடைந்த ‘சே’
– பகுதி.  ஓ – எதிர்மறை.  ‘கொடியவன் கொடியவன் சிந்தை’ என்ற விடத்து,
‘மடக்கு’ என்னுஞ் சொல்லணி காண்க.

    இச்செய்யுளில் ‘மனுநெறிவழுவாதோன்’ என்ற விசேஷ்யம் – எப்பொழுதும்
தகுதியில்சொற் சொல்லாது தக்கமொழியே பேசத் தக்கவனென்ற கருத்தையும்,
‘நாகவெங்கொடியவன்’ என்ற அடைகொளி – தான் தனது கொடியில்
விஷப்பாம்பை அறிகுறியாகக் கொண்டமைக்கு ஏற்பத் தீக்குணந்தீச்செயல்களை
யுடையனாய் நல்லோர்க்குப் பொல்லாங்கு விளைப்பவனென்ற கருத்தையும்
உட்கொண்டிருத்தலால், கருத்துடையடைகொளியணி. கோபங்கொண்டு
கடுஞ்சொற் கூறத்தக்க சமயத்திலும் அங்ஙனம் ஒன்றுங் கூறினானில்லை
யென்பார், ‘வார்த்தைவேறு மற்றொன்றையு முரைத்திலன்’ என்றனரென்க.
கொடிய, வல் – ஒருபொருட்பன்மொழி

அடியும், ஆண்மையும், வலிமையும், சேனையும், அழகும்,
வென்றியும், தம்தம்
குடியும், மானமும், செல்வமும், பெருமையும், குலமும்,
இன்பமும், தேசும்,
படியும், மா மறை ஒழுக்கமும், புகழும், முன் பயின்ற
கல்வியும், சேர
மடியுமால்; மதி உணர்ந்தவர் சூதின்மேல் வைப்பரோ
மனம்? வையார்.மூன்றுகவிகள் – தருமன்வார்த்தை: சூதாடுதலின் குற்றம்,

அடியும்-தலைமையும், ஆண்மையும்-பராக்கிரமமும்,
வலிமையும் – பலமும், சேனையும்-, அழகும்-, வென்றியும் – ஜயமும், தம்தம்
குடியும் – தம்தமது குடிப்பிறப்பின் மேன்மையும், மானமும்-, செல்வமும்-,
பெருமையும்-, குலமும் – வம்சமும், இன்பமும்-, தேசும் – ஒளியும், படியும் –
நற்குணமும், மா மறை ஒழுக்கமும்.  சிறந்த வேதங்களிற்கூறிய விதிமுறைப்படி
யொழுகும் ஸதாசாரமும், புகழும்-கீ்ர்த்தியும், முன்பயின்ற கல்வியும்-முன்னமே
தொடங்கி நெடுநாள் பழகித் தேர்ந்த வித்தையும், (ஆகிய இவையெல்லாம்), –
சேர மடியும் – (சூதாடுவார்க்கு) ஒரு சேர அழியும்: ஆல் – ஆதலால், மதி
உணர்ந்தவர் – அறிவினால் (அறிய வேண்டுபவற்றை) அறிந்தவர்கள்,
சூதின்மேல் மனம் வைப்பரோ-சூதினடத்து விருப்பத்தைச் செலுத்துவார்களோ?
வையார் – செலுத்தார்; (எ – று.)

     அடி – முதன்மை: அனைவரும் அக்கிரபூஜை செய்யும் சிறப்பு.  இனி
‘அடி’ – (மேற்சொல்லப்படும் ஆண்மை முதலியவற்றிற் கெல்லாம்)
மூலகாரணமான நல்வினை யென்றலும் ஒன்று.  ஆண்மை – ஆண் தகைமை:
ஆடவர்க்கு உரிய திறம்: பௌருஷம், வீரம்.  ஆண்மை எனப்பிரியும்.  ஆள்
மை எனப்பிரித்து, ஆளுதல் தன்மையெனக் கொண்டால், அரசாளுந்திறமென்று
பொருள்படும்.  குடி – இடவாகுபெயராய், நாடுமாம்; “படைகுடி கூழமைச்சு
நட்பரணாறு, முடையா னரசரு ளேறு” என்ற திருக்குறளின் உரையில்,
பரிமேலழகர் ‘ஈண்டுக் குடி யென்றது, அதனையுடைய நாட்டினை’ என்றமை
காண்க.  மானமாவது – எப்பொழுதும் தம் நிலையில் தாழாமையும்?
ஊழ்வினையால் தாழ்வு வந்தவிடத்து உயிர்வாழாமையுமாம்.  பெருமை –
செயற்கரியன செய்தல் முதலிய பெரியாரது தன்மை.  குலம் – தான் பிறந்த
குலத்தின் சிறப்புமாம்.  திருக்குறளில் “நின்ற ஒளியோடொழுகப்படும்”
என்றவிடத்து ‘ஒளி – உறங்கா நிற்கவும் தான் உலகங் காக்கின்ற அவர்
கடவுட்டன்மை’ என்றும், “ஒளி யொருவற்குள்ளவெறுக்கை” என்றவிடத்து
‘ஒளி-தான் உளனாயகாலத்து மிக்குத்தோன்றுத லுடைமை’ என்றும்
பரிமேலழகர் உரைத்தவை, இங்கு ‘தேசு’ என்றவிடத்து அறியத்தக்கன;
“உறங்குமாயினு மன்னவன் றன்னொளி, கறங்கு தெண்டிரை வையகங்
காக்குமால்” என்பது சீவகசிந்தாமணி.  தேசு – தேஜஸ் என்ற வடசொல்லின்
சிதைவு.  தேசு – தேககாந்தியுமாம்.

     படி – பண்பு; நிலைமையும், வடிவின்தோற்றமும், இனி, ‘படியும்’
என்பதை எதிர்காலப்பெயரெச்சமாகக் கொண்டு, ஒழுக்கத்துக்கு
அடைமொழியாக்கி, படிந்த [அமைந்த]வைதிகாசார மெனினுமாம்.  ‘முன்பயின்ற
கல்விமடியும்’ என்றதனால், இனிக்கல்வியுண்டாகாதென்பது போதரும்.  “பழகிய
செல்வமும் பண்புங்கெடுக்குங், கழகத்துக் காலை புகின்,” உடை
செல்வமூணொளி கல்வியென் றைந்தும், அடையாவா மாயங்கொளின்” என்ற
திருக்குறட்பாக்களும், “உருவழிக்கு முண்மை யுயர்வழிக்கும் வண்மைத்,
திருவழிக்கு மானஞ் சிதைக்கும்-மருவு மொருவரோ டன்பழிக்கு மொன்றல்ல
சூது, பொருவரோ தக்கோர் புரிந்து” என்ற நளவெண்பாவும் இங்கு
நோக்கத்தக்கவை.  “உடைசெல்வம்” என்ற தொடக்கத்துக் குறளின் உரையில்
பரிமேலழகர் ‘காலமும் கருத்தும் பெறாமையின், இவையுளவாகா வென்பதாம்’
என்றது நோக்குக.  ‘முன் பயின்ற’ என்ற அடைமொழியைப் பிறவற்றிற்கும்
கூட்டலாம்.  “பழகிய செல்வமும்” என்ற தொடக்கத்துக் குறளின் உரையில்,’
பழகிய என்பது, பண்புடனும் இயையும்: தான் செய்துகொள்ளும் அறம்
முதலியவே யன்றி, முன்னோரைத் தொடங்கி வருகின்ற செல்வமும் முன்செய்த
நல்வினையின் பயனாய பண்பும் இலவா மென்பதாம்’ என்று பரிமேலழகர்
கூட்டிப் பொருள் கொண்டதுபோல. இவற்றால்சூது சிறுமை பலசெய்து
அவற்றான் இருமையுங்கெடுத்தல் கூறப்பட்டது.

     ‘மனம்’ என்றது – மத்திமதீபமாய், முன்நின்ற ‘வைப்பரோ’ என்றதனோடும்,
பின்நிற்கும் ‘வையார்’ என்பதனோடும் இயையும். வற்புறுத்துதற் பொருட்டு
‘வைப்பரோ மனம் வையார்’ என வினாவும் விடையுமாகிய
இரண்டுவாய்பாட்டாலும் கூறினார்.

குழகர் ஆய் இள மடந்தையர்க்கு உருகுவோர், குறிப்பு
இலாமையின், நாளும்
பழகுவார்,  மிகச்  சிந்தை  நோய்  தாங்களே
படுக்குமாறு உணராமல்;
அழகு பேர் அறிவாகவே கொண்டவர், அறத்
தொழில் புரியாமல்,
கழகம் ஆடவும் பெறுவரோ? இதனினும் கள் உணல்
இனிது அன்றே!

குழகர் ஆய் இள மடந்தையர்க்கு உருகுவோர் – யௌவன
பருவமுடையவராயிருந்து இளமையையுடைய மகளிர்க்காக
மனமுருகுகின்றவர்கள் [காமுகர்],–குறிப்பு இலாமையின் – ஆலோசனை
யில்லாமையினால், சிந்தை நோய் தாங்களே படுக்கும் ஆறு உணராமல் –
மனக்கவலையில் தாமே (தம்மை) அகப்படுத்திக் கொள்ளுகிற
வகையைத்தெரிந்து கொள்ளமாட்டாமல், நாளும் மிகபழகுவார் – எந்நாளிலும்
(சூதாட்டத்தில்) மிகுதியாகப் பழகுவார்கள்; பேர் அறிவே அழகு ஆக
கொண்டவர் – சிறந்த அறிவையே (தமக்கு) அழகாகக்கொண்ட
பெரியோர்களோவென்றால்,-தொழில் புரியாமல் – தருமகாரியங்களைச்
செய்யாமல், கழகம் ஆடவும் பெறுவரோ – சூதாடுவார்களோ? இதனினும் –
இந்தச் சூதாட்டத்தினும், கள் உணல் – கட்குடிப்பது, இனிது அன்றே –
இனியதன்றோ; (எ – று,)

    அறிவில்லாத கீழ்மக்கள், சூதாட்டத்தினால் தங்களுக்குத் தாங்களே
துன்பமூட்டிக்கொள்ளுதலை அறியுந்திறமில்லாமல், ஆடுங்காலத்திலுண்டாகும்
சிறுமனமகிழ்ச்சியையே பெறாப் பேறாகப் பாராட்டி,
சிற்றின்பத்திலழுந்தியதுபோலவே இச் சூதாட்டத்திலும் மிகப்பழகுவார்கள்;
அறிவுடையவர்களோ, சூதாட்டத்தினால் விளையுந் தீங்கைத் தமது
பேரறிவினால் நன்கு உணர்ந்து, அச்சூதாட்டத்தை மிகவெறுத்துத்
தருமகாரியங்களையே மேற்கொண்டொழுகுவர் என்றவாறு.  திருவள்ளுர்
குறளில் ‘பெண்வழிச் சேறல்,’ ‘வரைவின் மகளிர்,’ ‘கள்ளுண்ணாமை’ ‘சூது’
என்ற அதிகாரங்களை ஒன்றன்பின் ஒன்றாக நிறுத்தியதும், அவற்றுள்
வரைவின் மகளிரென்னும் அதிகாரத்தின் இறுதியில் “இருமனப்பெண்டிருங்
கள்ளுங் கவறுந், திரு நீக்கப்பட்டார் தொடர்பு” என்றதும், அக்குறளினுரையில்
பரிமேலழகர் ‘ஒத்தகுற்றத்தவாகலின், கள்ளும் சூதும் உடன் கூறப்பட்டன;
வடநூலாரும், இக்கருத்தான், விதனமென உடன் கூறினார்” என்றதும், இங்கு
உணரத்தக்கவை.  சூதாடுதலைக் கட்குடித்தலினும் கொடியதாகக் கூறியது,
கள்ளுண்ணுதலில் உண்டாகும் பொல்லாங்குகள் குடிப்பவரளவிலேயே யடங்கி
நிற்றலும், சூதாடுதலில் விளையும் பொல்லாங்குகள் தம்மையேயன்றிப்
பிறரையுஞ் சார்தலும், பொய்முதலிய பெரும்பாவங்கட்கு இடமாயிருத்தலும்
பற்றி யென்க; அன்றியும், மதுபானம் போர்க்கு எழுவது முதலிய
சிலகாலங்களில் நன்மைபயத்தலையும், சூதாடுதல் எக்காலத்திலும்
நன்மைபயவாமையையும் நோக்குக.  இங்குச் சூதாட்டத்தின் பொல்லாங்கினாற்
கட்குடித்தலை இனியதாகக் கூறியது-அகமலர்ச்சியணி; இதனை, வடநூலார்
உல்லாஸாலங்காரமென்பர்: ஒன்றன் குணத்தையாவது குற்றத்தையாவது
கொண்டு மற்றென் றற்கு அவை உள்ளனவாகச் சொல்லுதல், இதன்
இலக்கணம்.  குழகு-மகளிர் மனத்தைக் கவருங் கட்டழகு: அதனையுடையவர்-
குழகர்.  மடந்தையர் – மடந்தைப்பருவமுடையவர்; அப்பருவத்துக்கு
வயதெல்லை-பதின்மூன்றுமுதற் பத்தொன்பது வரையிலும்.  மிகப் பழகுவார்
என இயையும்.  மிகச் சிந்தை நோய் படுக்குமாறு எனஇயைப்பினுமாம்

மேதகத் தெரி ஞானநூல் புலவரும், வேத்து நூல்
அறிந்தோரும்,
பாதகத்தில் ஒன்று என்னவே, முன்னமே, பலபடப்
பழித்திட்டார்;
தீது அகப்படு புன் தொழில் இளைஞரின் சிந்தனை
சிறிது இன்றி,
தோதகத்துடன் என்னையோ, சகுனிதன் சூதினுக்கு
எதிர்?’ என்றான்.

மேதக தெரி ஞானம் நூல் புலவரும்-மேன்மையாக [மிகுதியாக]
அறிந்த தத்துவநூ லுணர்ச்சியையுடைய வித்துவான்களும், வேந்து நூல்
அறிந்தோரும் – அரசநீதியைக் கூறும் சாஸ்திரங்களைக் கற்றுவல்லவர்களும்,-
(சூதாடுதலை), பாதகத்தில் ஒன்று என்னவே – பெரும்பாவத் தொழில்களுள்
ஒன்றென்றே, முன்னமே பலபட பழித்திட்டார் – முற்காலத்திலேயே
பலவகையாக நிந்தித்து விலக்கியுள்ளார்கள்; (அவ்வாறிருக்கவும்), தீது அகப்படு
புல் தொழில் இளைஞரின் – குற்றத்திற்கு உள்ளாகிற இழிதொழில்களையுடைய
சிறுவர்கள்போல, சிறிது சிந்தனை இன்றி – சிறிதேனும் ஆலோசனையில்லாமல்,
தோதகத்துடன் – வஞ்சனைக் கருத்தோடு, சகுனி-, தன் சூதினுக்கு
என்னையோ எதிர் என்றான்-தான் ஆடுகின்ற சூதாட்டத்துக்கு என்னைத்தானா
எதிரில் நின்று ஆடுபவனென்று கொண்டான்; (எ – று,)

     தான் வஞ்சனைக்கருத்துடன் ஆடுகின்ற சூதாட்டத்துக்குச் சிறிதும்
வஞ்சகக்குணமில்லாத என்னை எதிராகக்கொள்வது சகுனிக்குக் கொஞ்சமேனுந்
தக்கதன் றென்பது, தருமபுத்திரன் கருத்து.  சூதாடல் பெரும்பாவ மென்பது
வைதிக நூலார்க்கும் லௌகிக நூலார்க்கும் ஒத்தகொள்கையா மென்பது,
முன்னிரண்டடியின் தாற்பரியம்.  பெருந்தன்மை சிறிதுமில்லாமல் வஞ்சனைக்
கருத்தோடு சூதாட எண்ணிய சகுனிக்குப் புன்றொழிலிளைஞர்
உவமையாக்கப்பட்டனர்.  ‘என்றான்’ என்பதற்குத் துரியோதன னென்பதைத்
தோன்றாவெழுவாயாகக் கொண்டு, சகுனிதன் – சகுனியினுடைய, சூதினுக்குத்
துரியோதனன் என்னைத்தானா ஈடாக்கினானென்றும் உரைகூறலாம்.  ஞான
நூல் – தத்துவஞானத்தை யுணர்த்தும் வேதாந்த சாஸ்திரம்; கடவுளைத்தியானஞ்
செய்து பயனுளதாகக் கழிக்கவேண்டிய பொழுதைச் சூதுசதுரங்க மாடி வீணே
போக்குதல் தகுதியன் றென்பது வேதாந்திகளின் கொள்கை.

     மேதக – ‘மேதகு’ என்ற பகுதியினடியாப் பிறந்த செயவெனெச்சம்.
வேந்து + நூல் = வேத்துநூல்;  வேற்றுமையில் மென்றொடர் வன்றொடராயிற்று.
[நன்: உயிர்-34.] வேத்துநூல் – அரசநீதி கூறும் காமந்தகம், சுக்ரநீதி
முதலாயின.  இரண்டாமடியிலுள்ள ஏகாரமிரண்டனுள், முன்னது – பிரிநிலை;
பின்னது – தெளிவு.  இளைஞரின், இன் – ஐந்தனுருபு, ஒப்பு.  என்னையோ
என்றது, சூது பெருங்குற்ற மென்று அறிந்த என்னை எதிராகக் கொள்வது
தகுதியன்று என்னும் பொருளைத் தந்துநிற்றலால், ஓகாரம் –
ஒழியிசைப்பொருளது.    

தன் கருத்தினில் நிகழ்ந்தவாறு இம் முறை தருமன்
மைந்தனும் கூறி,
‘என் கருத்தினால் பெறுவது என்? விதியினை யாவரே
எதிர் வெல்வார்?
மன் கருத்தையும், அவன் திருவுளம் நிகர் மகன்
கருத்தையும், நோக்கி,
நின் கருத்தை நீ உரை’ என, விதுரனும் நிகழ்ந்தன
உரைக்கின்றான்:நின்கருத்தைக்கூறு’ என்றுவிதுரனைத் தருமன்
வினாவுதல்.

தருமன் மைந்தன் – தருமபுத்திரனும், இ முறை – இவ்விதமாக,
தன் கருத்தினில் நிகழ்ந்த ஆறு – தனது மனத்திலே தோன்றியபடியே, கூறி –
(தன்னுடைய அபிப்பிராயத்தைச்) சொல்லி,-‘என் கருத்தினால் பெறுவது என் –
என்னுடைய எண்ணத்தினால் யாது நடக்கும்? [ஒன்றும் நடவாது]; விதியினை
யாவரே எதிர் வெல்வார் – ஊழ்வினையை எதிர்த்துச்சயிப்பவர் யாவருளர்?
[எவரும் இலர்: எல்லாம் விதியின்படியே நடக்குமென்றபடி] மன் கருத்தையும்
– திருதராஷ்டிர மகாராசனது எண்ணத்தையும், அவன் திருஉளம் நிகர் மகன்
கருத்தையும் – அவனது மனக்கருத்துக்கு ஒத்து நடக்கிற அவன் மகனான
துரியோனனது எண்ணத்தையும், நோக்கி – ஆராய்ந்து பார்த்து, நின் கருத்தை
நீ உரை – (இப்போது செய்யத்தக்கது இன்னது என)உனது அபி்பிராயத்தை நீ
எடுத்துக் கூறுவாயாக,’ என-என்று கேட்க,-விதுரனும்-, நிகழ்ந்தன –
(அத்தினாபுரியில்) நடந்த வரலாறுகளை, உரைக்கின்றான் –
சொல்வானாயினான்; (எ – று.)

    இளமையிலே குந்திக்குத் துருவாசமுனிவ னுபதேசித்திருந்த மந்திரத்தின்
மகிமையால் எதிர்வந்த யமதருமராசனது அருளாற் பிறந்தவனாதலால்,
யுதிஷ்டிரன் ‘தருமன் மைந்தன்’ எனப்பட்டான்.  ‘தன் கருத்தின்படி ஒன்றும்
நடவாது’ என்ற சிறப்புப்பொருளை, ‘விதியினை யாவரே எதிர்வெல்வார்’ என்ற
பொதுப்பொருள் சாதித்து நிற்றலால், இரண்டாமடி – வேற்றுப்பொருள்
வைப்பணி.
  நிகழ்ந்தன’ என்பதற்கு – (தன் கருத்தில்) தோன்றியவற்றை
என்பாருமுளர்.  ‘எதிர்வெல்வார்’ என்பதில், எதிர் என்ற பகுதியே வினையெச்சப் பொருள்பட்டு நின்றது; “வரிப்புனைபந்து” என்னுமிடத்திற்போல

இங்கு நீ எனக்கு இயம்பிய யாவையும், யானும்
அன்னவர் கேட்ப,
அங்கு நீர்மையின் மொழிந்தனன்; என் மொழி
யார்கொலோ மதிக்கிற்பார்?
பொங்கு நீருடைப் பூதலத் தலைவ! கேள்; புனைந்த
நின் இதயத்துத்
தங்கு நீர்மையின் புரிக!’ எனப்புதல்வனைத் தந்தையும்
தகச் சொன்னான்.விதுரனது உத்தரம்.

இங்கு-, நீ-, எனக்கு என்னிடத்தில், இயம்பியசொல்லிய,
யாவையும் – எல்லாவற்றையும், யானும்-, அங்கு – அவ்விடத்தில், அன்னவர்
கேட்ப – அந்தத் துரியோதனன் முதலியோர் கேட்கும்படி, நீர்மையின்
மொழிந்தனன் – தக்கவகையாகச் சொன்னேன்; என்மொழி யார்கொலோ
மதிக்கிற்பார் – (அங்கே) என்வார்த்தையை எவர்தாம் நன்குமதித்துக்
கேட்டவர்? [எல்லோரும் அலட்சியஞ் செய்தன ரென்றபடி]; பொங்கும் நீர்
உடை பூ தலம் தலைவ-பொங்குமியல்புள்ள கடலை ஆடையாகக்கொண்ட
பூமிக்குத் தலைவனே! கேள்-கேட்பாயாக; புனைந்த நின் இதயத்து தங்கும்
நீர்மையின் புரிக – (கல்வி கேள்விகளினாற்) சிறப்படைந்துள்ள உனது
மனத்தில் தோன்றும் விதமாகவே செய்வாயாக,’ என-என்று, புதல்வனை-
மைந்தன் முறையாகின்ற தருமபுத்திரனை நோக்கி, தந்தையும்-(சிறிய)
தகப்பன்முறையான விதுரனும், தக-தகுதியாக, சொன்னான்-; (எ – று.)

    ‘நின்கருத்தை நீ உரை’ என்று கீழ்த் தருமன் வினாவியதற்கு, விதுரன்
தன் எண்ணத்தை உள்ளபடி கூறாமல் முன்பு அத்தினாபுரியில் நிகழ்ந்த
செய்தியை எடுத்துச்சொல்லி ஒருவாறு தன்கருத்தைக் குறிப்பித்து ‘உன்
விருப்பத்தின்படியே செய்’ எனக் கூறி முடித்தது – ஐவரை அழைத்துவரும்படி
தூதுவந்த தான் அதற்கு மாறாகத் தன்கருத்தை நேரேசொல்வது, தன்னைத்
தூதனுப்பிய திருதராஷ்டிரனுக்குத் தான் வஞ்சனை செய்ததாய் முடியும் என்று
கருதியதனா லென்க; இவ்வாறு தூதனிலக்கணத்திற்கு மாறுபடாமற்
கூறினமையைப் பாராட்டி ‘தந்தையுந் தகச்சொன்னான்’ என்றார்.  தான் கூறிய
உறுதிமொழியை மதியாது அலட்சியஞ் செய்தமையைக் குறித்து ‘யார்கொலோ
மதிக்கிற்பார்’ என விதுரன் குறைகூறின னென்க;  இவ்வாறு விதுரன் கூறியது,
‘தருமனும் தன்மொழிப்படியே நடப்பானோ? நடவானோ?’ என்ற
ஐயக்கருத்தையும் தொனிப்பிக்கும்.  விதுரன் தருமபுத்திரனிடத்து நன்கு
மதிப்புடைய னாதலின், ‘புனைந்தநின்னிதயம்’ என்றான்; அன்றி,
துரியோதனாதியர் தாம் கேளாவிட்டாலும் நீயாவது கேட்டு அதன்படி
நடக்கவேண்டு மென்று கூறுவான், யுதிஷ்டிரனைமேம்படுத்தி ‘புனைந்த
நின்னிதயம்’ எனக் கூறினானுமாம். இனி, ‘புதைந்து நின்னிதயத்துத், தங்கு நீர்மையில்’ என்றும் பாடம்.

     ‘இனி’ என்றது, இந்திரப்பிரத்தத்தை.  ‘அங்கு’ என்றது, அத்தினாபுரியை.
இங்கு – இப்பொழுதுமாம்.  யானும் மன்னவர் அகட்ப என்று பிரித்தும்
உரைக்கலாம்.  நீர்மையின் மொழிதல் – இனிது கூறுதல்; நீர்மை – நீரின்
தன்மை, இனிமை.  ‘மதிக்கிற்பார்’ – இயல்பினால் இறந்தகாலம் எதிர்காலமாகச்
சொல்லப்பட்ட காலவழுவமைதி.  ‘பொங்கு நீர்’ எனவே, கடலாயிற்று

அன்று தாழ் புனல் துறையினில் கழு நிரைத்து, அரிய
வஞ்சனை செய்தான்;
குன்றுபோல் உயர் வாழ் மனைக் கொடுந் தழல் கொளுத்தி,
வன் கொலை சூழ்ந்தான்;
வென்று சூதினில் யாவையும் கவரவே, விரகினால்
அழைத்திட்டான்;
என்றுதான் நமக்கு அன்புடைத் துணைவனாய் இருந்தது,
அவ் இகலோனே?இரு கவிகள் -ஒருதொடர்; வீமசேனன் வார்த்தை.

துரியோதனன்), – அன்று – (நாம் சிறுவராயிருந்த)
அக்காலத்தில், தாழ் புனல் துறையினில் – ஆழமான (கங்கையின்)
நீர்த்துறையில், கழு நிரைத்து – கழுக்களை வரிசையாக நிறுத்தி, (என்னைக்
கொல்லுமாறு), அரிய வஞ்சனை செய்தான் – (பிறராற்செய்வதற்கு)
அருமையான வஞ்சகத்தைச் செய்தான்; (பின்னையும்), குன்றுபோல் உயர் வாழ்
மனை கொடுந் தழல் கொளுத்தி – மலை போல உயர்ந்துள்ளதாகிய (நாம்)
வாழ்ந்த மாளிகையிற் கொடியநெருப்பிட்டு கொளுத்தி, வல் கொலை சூழ்ந்தான்
– (நம்மைக் கொல்லுமாறு) வலிய கொலைத்தொழிலை ஆலோசித்தான்;
(இப்பொழுதும்), சூதினில் வென்று யாவையும் கவரவே விரகினால்
அழைத்திட்டான் – சூதாட்டத்தில் (நம்மை) வென்று (அவ்வழியாக)
நமதுபொருள் முழுவதையும் கவரும் பொருட்டாகவே (புதமண்டபத்தைக்
காணவேண்டுமென்கிற வியாஜத்தினால்0 தந்திரமாக அழைத்திருக்கிறான்; அ
இகலோன் – (எப்பொழுதும் நம்மிடத்துப்) பகை பாராட்டு கின்றவனான
அத்துரியோதனன், நமக்க அன்பு உடை துணைவன் ஆய் இருந்தது –
நம்மிடத்து அன்புள்ள சகோதரனாய் வாழ்ந்தத, என்றுதான் –
எக்காலத்தில்தான்?  [ஒருபோதுமில்லை யென்றபடி]. (எ – று.)

     (70) துரியோதனன் கழுநிரைத்து வஞ்சனைசெய்த கதை:-
ஒருநாள் துரியோதனன் கங்கைத்துறையில் இரும்பினாலும் செம்மரத்தாலும்
கூரிய கழுக்களை நீரின்மேல் தோன்றாதபடி உள்நாட்டச்செய்து, கூமனை
‘நீரில்விளையாடலாம், வா’ என்று வஞ்சனையாக அழைத்துப்போய்
‘இங்கிருந்து நீ நீரிற் குதிக்கின்றனையா? பார்ப்போம்’ என்ன, அப்பொழுது
கண்ணன் கருவண்டினுருவங் கொண்டு கழுமுனைதோறும் உட்கார்ந்திருக்க,
வீமன் அதனை நோக்கி, ‘இது என்ன நீரோட்டத்தில் வண்டுகள்
உட்கார்ந்திருக்கின்றனவே!’ என்று உற்றுப்பார்க்க, அவற்றின்கீழ்
வசிகள்நாட்டியிருக்கக் கண்டு தான் அவைநாட்டியிராத இடம்பார்த்துக்
குதித்துக் கரையேறி மீண்டனனென்பதாம்.

     இரண்டாமடியிற் குறித்த கதை:-அத்தினாபுரியிலே தருமபுத்திரனுக்கு
இளவரசு முடிசூட்டியமை கண்டு அழுக்காறு கொண்ட துரிதோனனுடைய
கருத்துக்கு இணங்கிய திருதராட்டிரன், புரோசனனென்னுந் துர்மந்திரியுடன்
சதியாலோசனை செய்து வாரணாவதமென்னும் நகரத்தில் அரக்குமாளிகை
யொன்று கட்டிமுடித்துப் பாண்டவர்களை அடிதல் வசிக்கச்செய்து ஓரிரவில்
அம்மாளிகையில் தீப்பற்றவைத்து அவர்களை ஒழித்துவிடுவ தென்று நிச்சயித்து, அவ்வமைச்சனைக்கொண்டே அந்நகரத்தை விசேஷமாக
அலங்கரிப்பித்து, ஒருநாள் தருமபுத்திரனை நோக்கி ‘நீ உனது தம்பியர்
நால்வருடன் வாரணாவதத்துச்சென்று தனியே வாழ்வாய்’ என்று
கட்டளையிட்டு, அப்புரோசனனையே துணையாக்கி அவனோடும் அவனுக்கு
அடங்கிய பரிவாரத்தோடும் அனுப்ப, பாண்டவரும் குந்தியும்
வாரணாவதத்திற்சென்று தங்கட்கென்று புதிதாகச் செய்யப்பட்ட மாளிகையில்
வசித்திருந்தனர்;  அங்ஙனம் வசிக்கும் நாட்களில் பாண்டவர்கள்
அரக்குமாளிகையின் தன்மையையும், புரோசனனது செய்கைகளையும்
உற்றுநோக்கிச் சங்கைகொண்டிருக்கையில், விதுரனா லனுப்பப்பட்ட
சிற்பியொருவன் வீமனிடம் வந்து, திருதராட்டிரனது கட்டளையின்படி
புரோசனன் வஞ்சனையாக இந்தமாளிகையைக் கட்டும்பொழுது அவனது
சூழ்ச்சியை யுணர்ந்த விதுரனுடைய ஏவலால் தான் இம்மாளிகையினுள்ளே ஒரு
புறத்தில்நீண்ட சுரங்க வழியொன்றை நெடுந்தூரத்திலுள்ள ஒருவனத்திற் சென்று
சேரும்படி எவருமறியாமல் அமைத்துள்ள தந்திரத்தைத் தெரிவித்து,
அவ்வழிக்குத் துவாரம் ஒரு தூணின் கீழ் உள்ளதென்பதையுங் குறிப்பாகச்
சொல்லிச்செல்ல, பின்பு ஒருநாளிரவில் வீமன் புரோசனனை
அம்மாளிகையிலேயே படுக்கச்சொல்லி அவன் நன்றாகத் தூங்கியபின்
அவ்வீட்டில் தானே நெருப்புப் பற்றவைத்துவிட்டுத் தன்னுடன்
பிறந்தவர்களையும் தாயாரையும் சுரங்கவழியாக ஒரு வனத்திற் சேர்த்தான்.
துரியோதனன் கட்டளைப்படி பாண்டவர்க்கு விஷங்கலந்த தேனைக் கொடுத்து
அவர்களைக் கொல்ல வந்த ஐந்துவேடர்களும் அவர்கள் தாயும் அந்நாளில்
அவ்வரக்கு மாளிகையில் தங்கித் தீப்பட்டு இறந்தன ராதலால், பொழுது
விடிந்தபின்பு அங்குவந்து பார்த்த ஊராரெல்லாரும், பாண்டவரும் குந்தியுமே
எரிபட்டு இறந்தன ரென்று இரங்கினார்கள்.  அவ்வாறே நாடெங்கும் பரவி
உலகம் முழுவதும் வருத்தமடைய, துரியோதனாதியர் மாத்திரமே மனமகிழ்ச்சி
கொண்டனர் என்பதாம்.  ஏகாரம் இரண்டனுள், முன்னது – தேற்றம்; பின்னது
– ஈற்றசை.  கொளுத்தி – கொளுந்து என்பதன் பிறவினையான் கொளுத்து –
பகுதி.    

முளையிலே உயிர் கொல்வது ஓர் கடுவிடம் முற்றி, வன்
காழ் ஏறி,
விளையில் ஏது செய்யாது? மற்று அவருடன் விழையும் நண்பு
இனி வேண்டா;
வளையில், ஏதமே புரிந்து, மேல் மலைந்திடும்; வன் படை
கொடு மோதிக்
களையிலே நமக்கு இருப்பு உளது’ என்றனன்-காற்று அருள்
கூற்று அன்னான்.இரு கவிகள் -ஒருதொடர்; வீமசேனன் வார்த்தை.

முளையிலே உயிர் கொல்வது ஓர் கடு விடம் – முளைக்கும்
பருவத்திலேயே உயிரை வதைப்பதாகிய ஒரு கொடிய நச்சுமரம், முற்றி வல்
காழ் ஏறி செய்யாது – எந்தக் கேட்டைத்தான் செய்ய மாட்டாது? (அதுபோலவே
கொடிய துரியோதனனும் பலவகையாகத் துன்பஞ்செய்வான்; ஆதலால்).
அவருடன் விழையும் நண்பு இனிவேண்டாம் – அவருடன் விரும்பிக்கொள்ளுஞ்
சிநேகம் நமக்கு இனிமேல் வேண்டுவதன்று; வளையில் – (நாம் அத்துரியோ
தனனுக்கு) அடங்கிப் பணிவாக நடந்துகொண்டால், (அத்துரியோதனன்), ஏதமே
புரிந்து – (நமக்குத்) துன்பத்தையேசெய்து, மேல் மலைந்திடும் – (அவ்வளவோடு
நில்லாது) மேலும் போர் செய்தும் வருத்துவான்; (ஆதலின், அவனோடு
நட்புப்பாராட்டாமல்), வல் படைகொடு மோதி களையிலே – கொடிய
ஆயுதங்களினாற் போர்செய்து (அப்பகையை) ஒழித்தால் மாத்திரமே, நமக்கு
இருப்பு உளது – நாம் உயிரோடு வாழ்தல் வேண்டும்,’ என்றனன் – என்று
கூறினான்: (யாவனெனில்),- காற்று அருள் கூற்று அன்னான் – வாயுதேவன்
பெற்ற  (பகைவர்க்கு) யமன்போன்றவனாகிய வீமசேனன்; (எ – று.)

     முதலில் என்னைக்கொல்லுமாறு ஆற்றிலே கழுநாட்டியும், பிறகு
நம்மெல்லாரையுமே கொல்லுமாறு நாம் வாழ்ந்தமனையில் தீயிடச்
சூழ்ச்சிசெய்தும், இப்போதும் நமதுசெல்வவாழ்க்கை முழுவதையும் பறிக்கும்
வகையாக மண்டபமென்ற வியாஜம்வைத்து அழைத்தும், கேட்டிற்கே
மேன்மேற் பலப்படியாகத் துரியோதனன் முயல்கின்றனனாதலால் அவனுக்கு
இப்பொழுது சிறிதும் இடங்கொடாமல் அவனைக் கொன்றால்தான் நாம்
உயிர்தப்பிப் பிழைக்கலாமென வீமன் தனது கருத்தை வெளியிட்டான்:
இதனால், துரியோதனன் விருப்பப்படி மண்டபத்தைக் காணச் செல்லுதல்
தக்கதன்றென வீமன் மறுத்தவாறு.

     (71) இளமைப்பருவத்திலேயே நம்மைக்கொல்ல முயன்ற துரியோதனன்
படைவலியும் துணைவலியும் மிக்குக் காளைப்பருவமடைந்து அரசனாயிருக்கிற
இப்போது மற்று எந்தக்கேட்டைத்தான் செய்யா னென்ற உபமேயப்
பொருளைத் தருதலால், ‘முளையிலே உயிர்கொல்வதோர் கடுவிடம் முற்றி
வன்காழேறி, விளையிலேது செய்யாது’ என்பது பிறிதுமொழிதலணி:
இத்தொடர் மொழியை,  கீழ்வந்த பதினோராஞ்செய்யுளின்
பின்னிரண்டடிகளோடு ஒப்பிடுக.  இத்தொடர் ‘அவருடன் விளையும் நண்பு
இனி வேண்டாம்’  என்பதைச் சாதித்துநிற்பது –
தொடர்நிலைச்செய்யுட்குறியணி. இவ்விரண்டணியும் அரிசியும்
எள்ளும்போல வேறுபாடு தோன்றச் சேர்ந்து வந்தது – சேர்வையணியாம்.

     மற்று – அசைநிலை; வினைமாற்றுமாம்.  ‘முற்றிவன்காழேறி’ என
வருதலால், ‘விடம்’ என்பதற்கு – நச்சுமரமெனப் பொருள் கொள்ளப்பட்டது;
இது ஆகுபெயரின் பாற்படும்.  ‘காற்றருள் கூற்றன்னான்’ – பிராஸம்.
நினைத்தபடியே பின்னிடாமற் போர்செய்து கொன்று வெல்லுந்திறமுடையா
னென்பது தோன்ற, வீமனை ‘கூற்றன்னான்’ என்றார்; பண்புந்தொழிலும்பற்றிய
உவமை.  அந்த யமன் சூரியன்பெற்ற புதல்வன்: இந்த வீமனாகிய யமனோ
வாயுபெற்ற புதல்வன்:  இந்த வேறுபாடேயன்றி, பல பராக்கிரமங்களில்
இவ்விருவர்க்கும் ஏற்றத்தாழ்வில்லை யென்பது, ‘காற்றருள் கூற்றன்னான்’
என்பதனாற் போதரும்.  ‘இருப்பு’ என்பதற்கு – குடியிருத்தலெனவும்,
உரியபொருளெனவும் உரை கூறுவாருமுளர்

தேறலார்தமைத் தேறலும், தேறினர்த் தேறலாமையும், என்றும்
மாறலாருடன் மலைதலும், மாறுடன் மருவி வாழ்தலும், முன்னே
ஆறு அலாதன அரசருக்கு’ என்று கொண்டு, அரச
நீதியில் சொன்னார்;
கூறலாதன சொல்வது என்? செல்வது என், கொடியவன்
அருகு?’ என்றான்.அருச்சுனன் வார்த்தை.

பின்பு அருச்சுனன் தருமபுத்திரனை நோக்கி), ‘தேறலார்தமை
தேறலும் – தெளியப்படாதவர்களை நம்புதலும், தேறினர் தேறலாமையும்-
தெளியப்பட்டவர்களை(ப் பின்பு) நம்பாதிருத்தலும், என்றும் மாறு அலாருடன்
மலைதலும் – ஒருநாளும் (தம்மோடு) பகைக்குந் தன்மையில்லாத நண்ப(ரைப்
பகைவரென்று கொண்டு அவ)ரோடு பொருதலும், மாறுடன் மருவி வாழ்தலும் –
பகைவருடனே நட்புக்கொண்டு கலந்து வாழ்தலும், (ஆகிய இச்செயல்கள்),
அரசருக்கு ஆறு அலாதன – அரசர்கட்கு முறைமையல்லாத காரியங்களாம்,
என்றுகொண்டு – என்று, முன்னே-முற்காலத்திலேயே, அரசநீதியில் சொன்னார்
– அரசர்கட்கு உரிய நீதி நூல்களில் (ஆன்றோர்) கூறியுள்ளார்;  கூறலாதன –
(அரசர்கட்கு உரியனவென்று) சொல்லாமல் விலக்கியுள்ளவற்றை, சொல்வது –
(அரசநீதியை நன்கு உணர்ந்த நீ இப்பொழுது செய்யவேண்டிய காரியமாக)
எடுத்துச்சொல்வது, என் – யாது காரணம்பற்றி? கொடியவன் அருகு செல்வது
என் – (நம்மிடத்துக்) கொடும் பகைமைகொண்டுள்ளவனாகிய துரியோதனனை
(உரியநண்பனாகக் கருதி நாம்) அவனருகிற் செல்வது எதற்காக? என்றான்-
என்று கூறினான்; (எ – று.)

     அரசன் ஒருவனைப் பலவகையாலும் சோதித்து ‘தக்கவன்’ என்று
துணிந்தபின்பே அவனைத் தன்னிடத்து வினைசெய்பவனாகக் கொள்ள
வேண்டும்;  அவ்வாறு ஆராய்ந்து தெளியப்படாத ஒருவனை
வினைசெய்பவனாகக் கொண்டாலோ, அவ்வினைகெடத் தான்கெடுவதோடு
தன்குலத்துப் பிறந்தாரும் பகைவர்கைப்பட்டுக் கீழாய்விடுவர்:  அவ்வாறே
சோதித்து அறிந்து தெளிந்தவனிடத்துத் தொழிலைவைத்துப் பின்பு ஒருதவறுங்
காணாதிருக்கையில் ஐயுற்றால் அதனை அவன் அறிந்து ‘இனி இத்தொழில்
நமக்குநிலை யாது’ என்று எண்ணித் தான்கொண்ட தொழிலைநெகிழ்த்தி
விடப்பகைவரால் எளிதிற் பிரிக்கப்பட்டு விலகிச்செல்வன்: ஆகவே,
தேறலார்தமைத் தேறலும், தேறினர்தமைத் தேறாமையுங் கூடாவென்க; “தேரான்
பிறனைத் தெளிந்தான் வழிமுறை, தீராவிடும்பைதரும்,” “தேரான்தெளிவுந்
தெளிந்தான்கணையுறவும், தீராவிடும்பைதரும்” என்ற திருக்குறட்பாக்களினால்
முதலடியின் கருத்து விளங்கும்.  இனி, தேறலார்தமைதேறலும் – நம்புதற்குத்
தகுதியல்லாத அயோக்கியர்களை நம்புதலும், தேறினர் தேறலாமையும் –
யோக்கியரென்று கொண்டவர்களை நம்பா தொழிதலும் என்றுமாம்.  ‘மாறுடன்
மருவிவாழ்தல்’ என்பதே இங்குச் சந்தர்ப்பத்துக்கு ஏற்றதாயினும், அதன் இனமாக
மற்றவற்றையும் உடன்கூட்டி யுரைத்தார்.  “நட்புப்பிரித்தல் பகைநட்ட
லொற்றிகழ்தல் பக்கத்தார் யாரையு மையுறுதல் – தக்கார், நெடுமொழி கோறல்
குணம் பிறிதாதல், கெடுவது காட்டுங் குறி” என்ற நீதி நெறிவிளக்கச்செய்யுள்
இங்கு அறியத்தக்கது.

    தேறினர்த் தேறலாமை – உயர்திணையிடத்து இரண்டனுருபு தொக்கு
வலிமிக்கது: “இயல்பின் விகாரம்.” மாறு – பகைவர்க்குப் பண்பாகுபெயர்.
என்றுகொண்டு, கொண்டு – அசை. கூறு – முதனிலைத்தொழிற்பெயர்.
‘கூறலாதன’ – கூறலாகாதன என்பதன் தொகுத்தல் விகாரமுமாம்: கூறலாதன
என்றது – ‘வரதனாற் பணிப்புறு தொழில் மறுக்க நாம் யாவர்’ எனவும்,
‘சூதாட்டம் அறிவுடையோர்செய்கையன்று, பாதகத்தில் ஒன்று’ எனவும்,
‘விதியினை யாவரே எதிர் வெல்வார்’ எனவும் துரியோதனன் பக்கல் செல்ல
வேண்டுவது அவசியமென்பது தோன்றத் தருமன் கூறியவற்றை

விசையன் இவ் வகை மொழிந்ததும், முந்துறு வீமன்
மாற்றமும் கேட்டே,
இசை பெறும் பெயர் நகுலனும் தம்பியும், ‘ஏகுதல்
தகாது’ என்றார்;
‘வசை அறும் புகழ்த் துணைவர் இன்று உரைத்ததே வார்த்தை
ஆயினும், பெற்ற
அசைவு இல் அன்புடைத் தந்தை சொல் மறுப்பதோ?’
என்றனன், அறம் செய்வான்.நகுலசகதேவர்களும்வீமார்ச்சுனர்களின்
விருப்பத்தின்படியே சொல்லத் தருமன் தன் கருத்தை
வெளியிடுதல்.

இ வகை விசையன் மொழிந்ததும் – இவ்வாறு அருச்சுனன்
கூறியதையும், முந்துறு வீமன் மாற்றமும் – முன்னதாகப் பேசிய
வீமசேனனுடைய வார்த்தையையும், கேட்டு -,-இசை பெறும் பெயர் – புகழ்
பெற்ற பெயரை யுடையவர்களாகிய, நகுலனும்-, தம்பியும் – (அவனது)
தம்பியாகிய சகதேவனும், ஏகுதல் தகாது என்றார் – ‘(அத்தினாபுரிக்குத்
துரியோதனனது விருப்பத்தின்படியே) போவது தகுதியன்று’ என்றே
கூறினார்கள்;  அறம் செய்வான் – (அவற்றைக் கேட்ட) தருமத்தையே
செய்பவனாகிய யுதிஷ்டிரன், ‘வசை அறும் புகழ் துணைவர்

     இன்று உரைத்ததே வார்த்தை – குற்றமற்ற புகழையுடைய தம்பிமார்கள்
நால்வரும் இப்பொழுது சொன்னதே (ஏற்ற) வார்த்தையாகக் கொள்ளத் தக்கது;
ஆயினும்-, ‘பெற்ற அசைவு இல் அன்பு உடை தந்தை சொல் மறுப்பதோ –
தான்கொண்ட (நம்மிடத்துக்) குறைதலில்லாத [உறுதியான] அன்பையுடைய
பெரியதந்தையாகிய திருதராட்டிரனது கட்டளைச் சொல்லை
மறுப்பதுதகுதியோ?’ என்றனன்-; (எ – று.)

     ‘முந்துறு வீமன்’ – (பேசுதலிலே) முற்பட்ட வீமனென்றும், (அடுத்துப்
பேசிய அருச்சுனன் முதலிய மூவர்க்கும்) முன் பிறந்த வீமனென்றும்
பொருள்கொள்ளலாம்.  ‘உரைத்ததே வார்த்தை’ என்னுமிடத்தில், உரைத்தது
வார்த்தையென்பது இயல்பிலே அமைந்திருக்கவும் புதிதாக விதித்தது, ‘மிகவும்
பயனுடையதாம்’ என்ற கருத்தை விளக்குவதால், விதியணியாம். ஆயினும்,
உம்மை – சிறப்பு;  மற்றவை – எண்ணுப்பொருளன.

ஆவி யார் நிலைபெறுபவர், நீதி கூர் அரிய வான்
புகழ் அன்றி?
பாவியானது அங்கு அணுகுறாது ஒழியினும் பலித்திடும்,
நினைவு இன்றி;
மேவிஆளுடை ஐயன் வந்திருக்கவும், வேரி வண்டு
எழும் மன்றல்
காவி ஆர் தொடைக் காவலன் ஏவல் நாம் மறுப்பது
கடன் அன்றே!தருமன் சொற்படிஅத்தினாபுரத்துக்குச் செல்லச்
சேனைத்தலைவரும் அரசரும் வந்து கூடுதல்.

இரண்டு கவிகள் ஒரு தொடர்:

ஆவி யார்நிலை பெறுபவர் நீதிகூரரியவான் புகழன்றிப்
பாவி யானதங் கணுகுறா தொழியினும்பலித்திடு நினைவின்றி
மேவி யாளுடை யையன்வந் திருக்கவும்வேரிவண் டெழுமன்றற்
காவி யார்தொடைக் காவல னேவனாமறுப்பது கடனன்றே.

     (இ -ள்.) (74) (பின்னும் தருமபுத்திரன்),-‘நீதி கூர் அரிய வான் புகழ்
அன்றி – நியாயவழியாற் பெறுகின்ற அருமையான சிறந்த கீர்த்தியையே
யல்லாமல், ஆவி நிலை பெறுபவர் – உயிரை நிலையாயிருக்கப் பெறுபவர்,
யார் – எவர்? [ஒருவருமில்லை யென்றபடி]: அங்கு அணுகுறாது ஒழியினும் –
(நாம்) அவ்வத்தினாபுரத்திற்குச் செல்லாதிருந்தாலும்,  பாவியானது –
(விதியினால்) நேரக்கூடியது, நினைவு இன்றி – (நமது) எண்ணப்படியல்லாமல்
[நமக்குத் தெரியாமலே], பலித்திடும் – நேர்ந்தே தீரும்;  (ஆகையால்), ஆள்
உடை ஐயன் மேவி வந்து இருக்கவும் – (நம்மை) அடிமையாகவுடைய சிறிய
தந்தையாகிய விதுரன் (அத்தினாபுரிக்கு நம்மை அழைத்துச் செல்லுமாறு)
விரும்பி வந்திருக்கையிலும், வேரி வண்டு எழு மன்றல் காவி ஆர் தொடை
காவலன் – தேனையுண்ணுகின்ற வண்டுகள் (தன்னிடத்துப்)
பறந்துவருவதற்குக்காரணமான நறுமணமுள்ள குவளைமலர் நிரம்பியிருக்கப்
பெற்ற மாலையை யணிந்த திருதராஷ்டிர மஹாராஜனது, ஏவல்-கட்டளையை,
நாம் – (மாறுகூறாமல் அடங்கிநடக்க வேண்டிய) நாம், மறுப்பது-(உடன்படாமல்)
மறுத்துச்சொல்வது, கடன் அன்று – முறைமையன்று; (அதனால்), (எ – று.)

     (74) நம்மை வருமாறு கட்டளையிட்டவனோ, நமது பெரிய தகப்பன்;
நம்மை அழைத்துச் செல்ல வந்தவனோ சிறிய தகப்பன்; இவ்வொன்றே நாம்
செல்லுதற்குத் தக்ககாரணமாயிருக்க, இவ்விரண்டும் ஒருங்கே நேர்ந்தபோது
நாம் போகாமலிருப்பது பழிக்கே காரணமாம்;  அவ்வத்தினாபுரிக்குச் செல்வது,
தீங்குக்குக் காரணம் என்போமானால், ஊழ்வலியால் நேரக்கூடியவை நாம்
அங்குச் செல்லாமற்போனாலும் பலித்தே தீரும்: ஆகவே, ‘பெரியோர்கள்
கட்டளையை மறுத்தார்கள்’ என்ற பழிக்கு உள்ளாகாமல் இப்பொழுது
செய்வதே தகுதியெனத்தருமன் தன் கருத்தை வெளியிட்டன னென்க.  “ஒன்றா
வுலகத் துயர்ந்த புகழல்லாற், பொன்றாது நிற்பதொன்றில்’ என்றபடி பூதவுடம்பு
அழியப் புகழுடம்பு அழியாது நிலைநிற்றலால் ‘வான்புக ழன்றி ஆவி யார்
நிலை பெறுவர்’ என்றான்.  புகழ் நிலைபெறுதலாவது – தான் இறந்த பின்பும்
தன்பெயர் அழியாது நிலைநிற்றல்.  பாவி-வடசொல்.  பாவியானது பலித்திடும்
– “வருகுவது தானே வரும்”.  ‘வேரிவண்டு எழுமன்றல் காவி ஆர் தொடை’
என்பதற்கு – தேன்வண்டுகள் நறுமணம்மேலெழப்

நாளை ஏகுதும், எந்தை வாழ் அத்தினா நகர்க்கு’
எனத் தருமன்தன்
காளை ஏவலின், முரசு அறைந்து, எங்கணும் காவலர்
குழூஉக் கொண்டார்;
வேளை ஏறிய அரும் படைத் தலைவரும், மேல்
வரும் புனலூடு
வாளை ஏறு தண் பழன நாட்டு எறி படை மன்னரும்,
வந்துற்றார்.தருமன் சொற்படிஅத்தினாபுரத்துக்குச் செல்லச்
சேனைத்தலைவரும் அரசரும் வந்து கூடுதல்.

இரண்டு கவிகள் ஒரு தொடர்:

நாளை யேகுது மெந்தைவா ழத்தினாநகர்க்கெனத் தருமன்றன்
காளை யேவலின் முரசறைந் தெங்கணுங்காவலர்குழூஉக்கொண்டார்
வேளை யேறிய வரும்படைத் தலைவருமேல்வரும் புனலூடு
வாளை யேறுதண் பழனநார் டெறிபடைமன்னரும் வந்துற்றார்.

     (இ -ள்.) (75) எந்தை வாழ் அத்தினாநகர்க்கு – எமது தந்தை
[திருதராஷ்டிரன்] வசிக்கின்ற அத்தினபுரத்திற்கு, நாளை ஏகுதும்-நாளைக்குச்
செல்வோம்’ என-என்று (தன் கருத்தை வெளியிட்டு (ப் பின்பு காவலாளர்க்கு)க்
கட்டளையிட, தருமன் தன் காளை ஏவலின் – அந்தத் தருமபுத்திரனது
கட்டளையினால், காவலர் – காவற்காரர்கள், எங்கணும் முரசு அறைந்து
குழூஉக்கொண்டார் – எல்லா விடங்களிலும் கூட்டமாகக் கூடிப் பறையறைந்து
தெரிவித்தார்கள்; வேளை ஏறிய அரும்படைத் தலைவரும் – பல காலமாகப்
பழகிய [மிக்க அனுபவமுடைய] அருமையாகிய சேனைத்தலைவர்களும், மேல்
வரும் புனலூடு – மிக்குப் பெருகுகின்ற நீர்வெள்ளத்தினிடத்தே,
வாளை-வாளைமீன்கள், ஏறு- எதிராகச்செல்லுகின்ற, தண் பழனம் நாடு –
குளிர்ந்த வயல்களையுடைய அயல்நாடுகளிலுள்ளவர்களான, எறி படைமன்னரும்
– (பகைவர்மேல்) வீசியெறிதற்கு உரிய ஆயுதங்களை ஏந்திய அரசர்களும்,
வந்து உற்றார் – வந்து கூடினார்கள்; (எ – று.)

     (75) ‘எந்தைவாழ் அத்தினாநகர்’ என்றதில், நாம் துரியோதனாதியரைப்
பார்த்துப் போகாதிருந்தாலும், நமது தந்தையைப் பார்த்தாவது செல்ல
வேண்டுமென்ற பொருள் தொனிக்கும்;  “பாலைப் பார்த்தோ, பானையைப்
பார்த்தோ” என்பது, பழமொழி.  காளை – இளவெருது போன்றவன்,
உவமையாகுபெயர்:  நடைவலிமை காம்பீரியங்களில் உவமம்.  முரசறைந்து
செய்திதெரிவித்தல், மரபு.  ‘காவலர்’ என்றது – இங்கே, ஊரைக் காவல்
செய்துகொண்டு உரிய காலத்திற் பறையறைந்து திரியும் ஏவலாளரைக்
குறிக்கும்;  ‘மன்னரும்வந்துற்றார்’ என நான்காமடியில் வருதலால், ‘காவலர் என்றதற்கு-காவலாளரென்று பொருள் கொள்ளப்பட்டது:
முரசறைந்து எங்கணுங் காவலர் குழூஉக்கொண்டார்-காவலர் எங்கணும்
குழூஉக்கொண்டு முரசறைந்தார் என விகுதி பிரித்துக் கூட்டுக.  வேளை ஏறிய
– மன்மதனைக் காட்டிலும் அழகு மிக்க என்றும் உரைக்கலாம்.  வாளை –
மீன் வகையி லொன்று.  புதுவருவாய் நன்னீரை யெதிர் கொள்ளுதல், மீனின்
இயல்பு.        

மாதுரங்கமம், மணி நெடுந் தேர், மத வாரணம், வய வீரர்,
சாதுரங்கமும், தந்திரத் தலைவரும், தரணி மன்னரும், சூழ,
மீது உரம் கவின் கெழு பெருஞ் சேனை சூழ் வேந்தன்
மா நகர் உற்ற
போது, உரங்கமும் நெளிந்தன, பல் தலை பொறாமையின்
இரு-நான்கும்.திரண்ட சேனைகளின்வருணனை.

மா துரங்கமம் – பெரிய குதிரைகளும், மணி நெடுந்தேர் –
மணிகள் கட்டிய பெரியதேர்களும், மதம் வாரணம் – மதங்கொண்ட
யானைகளும், வய வீரர் – வலிமையையுடைய காலாள் வீரர்களும், (ஆகிய),
சாதுரங்கமும்-சதுரங்க சேனைகளும், தந்திரம் தலைவரும் –
சேனைத்தலைவர்களும், தரணி மன்னரும் – பூமியைக் காக்கின்ற
அரசர்களும்,- மீது உரம் கவின் கெழு – மேலான பலமும் அழகும் நிறைந்த,
பெருஞ்சேனை-மிக்கசேனைகள், சூழ-சூழப்பெற்ற, வேந்தன் –
யுதிஷ்டிரராஜனது, மாநகர் – பெரிய இந்திரப் பிரத்தநகரத்தில், சூழ் உற்ற
போது-சுற்றிலும் [எல்லாப் பக்கங்களிலும்] வந்து நிறைந்தபோது, இருநான்கு
உரங்கம்உம் – (பூமியைத்தாங்குகின்ற) அஷ்ட மகாநாகங்களும், பொறாமையின்
– (அப்பாரத்தைச்) சுமக்கமாட்டாமையினால், பல தலையும் நெளிந்தன –
(தமது) பலதலைகளும் நெளியப்பெற்றன; (எ – று.)

    அஷ்டமஹாநாகங்கள் தலைநெளிந்தன வெனக்கூறியது, அதிசயோக்தி
யலங்காரம்; இது, சேனைத்தொகுதியின் மிகுதியை விளக்கும்.
அஷ்டமஹாநாகங்களாவன – வாசுகி, அநந்தன், தக்ஷகன், சங்கபாலன்,
குளிகன், பதுமன், மகாபதுமன், கார்க்கோடகன் என்பன;  இவை, முறையே
கிழக்கு முதலிய எட்டுத் திக்குக்களிலும், கீழ்இருந்து பூமியைத் தாங்குவன.
இனி, மா – குதிரையும், துரங்கமம் மணி நெடுந் தேர் – குதிரைகள் கட்டிய
அழகிய பெரிய தேர்களும் என்றும் பொருள் கூறலாம்.  துரங்கமம் –
விரைந்துசெல்வது எனக் குதிரைக்குக் காரணக்குறி.  தந்திரம் – சேனை.
சாதுரங்கம், உரங்கம் – சதுரங்கம், உரகம் என்பவற்றின் விகாரங்கள்; உரகம் –
(கால்களில்லாமையால்) மார்பினால் ஊர்ந்துசெல்வது எனப் பாம்பிற்குக்
காரணக்குறி.  பல+தலை=பஃறலை.  ‘உரங்கமு நெளிந்தன பஃறலை –
உரங்கமும் பஃறலையும் நெளிந்தன என உம்மைபிரித்துக் கூட்டுக.  இனி,
உரங்கமும் – ஆதிசேஷனும், இரு நான்கும் – மற்றை அஷ்டநாகங்களும்
எனினும் பொருந்தும்.  ஆதிசேஷன், நடுவிலேயிருந்து பூமியைத் தாங்குவன்.

ஐந்து பூதமே நிகர் என, புலன்கள் ஓர் ஐந்துமே எதிர் என்ன,
ஐந்து காவுமே பொரு என, பணி முடி ஐந்துமே நேர் என்ன,
ஐந்து வாளியே உறழ்வுஎன, வேள்வி ஓர் ஐந்துமே ஒப்பு என்ன,
ஐந்து வாசமே தரம் என, ஐவரும், ஐந்து தேர்மேற் கொண்டார்,பாண்டவரைவரும்ஐந்துதேரின்மேல் ஏறுதல்.

ஐந்து பூதமே நிகர் என – பஞ்சபூதங்களும் ஒப்பென்று
சொல்லும்படியும், புலன்கள் ஓர் ஐந்துமே எதிர் என்ன – ஐம்புலன்களும்
ஒப்பென்று சொல்லும்படியும், ஐந்து காவுமே பொருவு என – (தேவலோகத்துப்)
பஞ்ச தருக்களும் ஒப்பென்று சொல்லும்படியும், பணி முடி ஐந்துமே நேர்
என்ன – நாகத்தினது ஐந்துதலைகளும் ஒப்பென்று சொல்லும்படியும், ஐந்து
வாளியே உறழ்வு என – (மன்மதனது) பஞ்சபாணங்களும் ஒப்பென்று
சொல்லும்படியும், வேள்வி ஓர் ஐந்துமே ஒப்பு என்ன – பஞ்ச
மஹாயஜ்ஞங்களும்  ஒப்பென்று சொல்லும்படியும், ஐந்து வாசமே தரம் என –
ஐந்துமுகவாசப் பொருள்களும் ஒப்பென்று சொல்லும்படியும், ஐவரும் –
பஞ்சபாண்டவர்களும், ஐந்து தேர் மேல் கொண்டார் – ஐந்து தேர்களின்மீது
ஏறிக்கொண்டார்கள்;  (எ – று.)

    உலகத்துக்கு இன்றியமையா திருத்தலாற் பஞ்சபூதங்களையும், மெய்வாய்
கண் மூக்குச்செவி யென்ற பஞ்சேந்திரியங்கட்கும் உரிய விஷயமாய் நிற்றலால்
ஐம்புலன்களையும், வேண்டியவற்றை வேண்டியபடியே கொடுக்கின்றமையாற்
பஞ்சதேவதருக்களையும், “ஐவருக்குமோருயிரே” ஆதலால் நாகத்தின்
ஐந்துதலைகளையும், கட்டழகுடைமைபற்றி மகளிர்க்கன்றி ஆடவர்க்கும்
அவாவையுண்டாக்குதலால் மன்மதனது பஞ்சபாணங்களையும், தேவர்
முதலியோர்க்குத் திருப்திசெய்வித்தலாற் பஞ்ச மஹாயஜ்ஞங்களையும்,
மிக்ககளிப்பைத் தருதலால் முகவாசப் பொருள்க ளைந்தையும் பஞ்ச
பாண்டவர்க்கு உவமைகூறின ரென்க;  பலபடப்புனைந்த உவமையணி.
பேராற்றலுடைமைபற்றிப் பஞ்சமகாபூதங்களையும், இன்றியமையாச்சிறப்புப்பற்றி
ஐம்புலன்களையும், தவறாது வெல்லும் வல்லமைபற்றி ஐந்து வாளிகளையும்,
வைதிகர்களால் மேற்கொள்ளப்படுஞ் சிறப்புப்பற்றி ஐந்து வேள்விகளையும்,
அனைவராலும் விரும்பப்படுந் தகுதிபற்றி ஐந்து வாசங்களையும்
பஞ்சபாண்டவர்க்கு உவமை கூறியதாகவுங்கொள்ளலாம்.  ‘ஐந்து’ என்றசொல்
பலமுறை அடுக்கிவந்தது – சொற்பொருட்பின்வருநிலையணியும்.  ஒப்புமை
குறிக்கும் வெவ்வேறு பலசொற்கள் வந்தது – பொருட்பின்வருநிலையணியுமாம்.

    ஐந்துபூதம் – நிலம், நீர், தீ, காற்று, வானம் என்பன.  புலன்கள் – சுவை,
ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என ஐந்து.  தேவதருக்கள் – மந்தாரம், பாரிஜாதம்,
ஸந்தாநம், கற்பகம், அரிசந்தனம் என்பவை.  பஞ்சபாணம் – தாமரைமலர்,
மாமலர், அசோகமலர், முல்லைமலர், கருங்குவளைமலர் என இவை.
பஞ்சமஹாயாகங்கள்- பிரமயஜ்ஞம், தேவயஜ்ஞம், பித்ருயஜ்ஞம், மனுஷ்யயஜ்ஞம்,
பூதயஜ்ஞம் என்ற ஐம்பெருவேள்விகள்; (வேதமோதுதல் – பிரமயஜ்ஞம்;
ஓமம்வளர்த்தல் – தேவயஜ்ஞம்; பிரஜையைப்பெறுதல் – பித்ருயஜ்ஞம்;
விருந்தோம்புதல் – மநுஷ்யயஜ்ஞம்; பலியீதல் – பூதயஜ்ஞம்.) முகவாசங்க
ளைந்தாவன – தக்கோலம், இலவங்கம், ஏலம், கற்பூரம், சாதிக்காய் என்பனவாம்.
கா – சோலை; இங்கு, மரத்துக்கு இலக்கணை. 

விழியின், நெஞ்சின், வால் நெருப்பின், நீடு உததியின், விதி
படைப்பினின், தோன்றி,
பொழியும் வெண்கதிர் ஐவகை மதியும் அப்பொழுது
உதித்தன என்ன,
மொழியும் ஐந்து பொன் தனிக் குடை நிழற்றின; முழு
மதி வடிவின்கண்
இழியும் வெண் சுடர்க் கற்றையின் சாமரம் இரட்டின,
இருபாலும்.பாண்டவர்களது குடைகள்,சாமரங்களின் வருணனை.

விழியின் – (அத்திரிமுனிவரது) கண்ணிலும், நெஞ்சின் –
((திருமாலினது) மனத்திலும், வால் நெருப்பின் – பரிசுத்தமான அக்கினியிலும்,
நீடு உததியின் – பெரிய திருப்பாற்கடலிலும், விதிபடைப்பினில் – பிரமதேவனதுசிருஷ்டியிலும், (ஆக ஐந்திடங்களிலும்), தோன்றி – பிறந்து,
வெள் கதிர்பொழியும் – வெண்மையாகிய நிலாவொளியை வீசுகிற, ஐவகை
மதியும் – ஐந்துசந்திரர்களும், அப்பொழுது உதித்தன என்ன – (பாண்டவர்கள்
அத்தினபுரத்திற்குப் புறப்படும்) அச்சமயத்தில் (ஒருங்கே) உதயமாயின’ என்று
சொல்லும்படி, மொழியும் ஐந்து பொன் தனி குடை நிழற்றின –
சிறப்பித்துக்கூறப்படுகின்ற அழகிய ஒப்பற்ற ஐந்து குடைகள் (பாண்டவ
ரைவர்க்கும்) நிழலைச் செய்தன;  இரு பாலும் – (அப்பாண்டவர்களது)
இரண்டு பக்கங்களிலும்,- முழுமதி வடிவின்கண் இழியும் வெள் சுடர்
கற்றையின் – அந்தப் பூர்ணசந்திர பிம்பத்தினின்று கீழிறங்குகிற
வெண்மையாகிய நிலாத்தொகுதிபோல, சாமரம் இரட்டின – சாமரங்கள்
வீசப்பெற்றன;  (எ – று.)

     பாண்டவரைவரும் ஐந்து தேரின்மேலேறிச் செல்லுகையில் ஒருங்கே
அவர்கள்மீது பிடிக்கப்பட்ட ஐந்து வெண்கொற்றக் குடைகட்கு ஒரே காலத்தில்
தோன்றி விளங்குகின்ற ஐந்து சந்திரர்களையும், அக்குடைகளின் இரு
பக்கங்களிலும் வீசப்படுகின்ற வெண்சாமரங்கட்கு அச்சந்திரனிடத்தினின்று
இழியும் நிலாத்தொகுதியையும் ஒப்பாமெனக் குறித்தார்;
தன்மைத்தற்குறிப்பேற்றவணி.

     தேவர்களை இருதிணையாலுங் கூறலா மாதலால், ‘ஐவகைமதியும்
உதித்தன’ என அஃறிணையாற் கூறினார்.  அத்திரி – பிரமதேவனது
மாநஸபுத்திரர்;  நவப்பிரமாக்களி லொருவர்; (மற்றையோர் – பிருகு,
புலஸ்தியர், கிரது, அங்கிரசு, மரீசி, தக்ஷர், வசிஷ்டர், நாரதர்.)

    அத்திரிமுனிவரது விழியினின்று சந்திரன் தோன்றிய வரலாறு:-
உபப்பிரமராகிய அத்திரிமுனிவர் இந்திரியநிக்கிரகஞ் செய்து மூவாயிரம்
வருடந்தவம்புரிகையில் தேஜோரூபியாகிய அவரது கண்களிலிருந்து பத்துத்
திக்குக்களிலும் பேரொளிவீசிக்கொண்டு நீர் பெருகவே, அந்தக்கருப்பத்தைத்
திக்தேவிகள் பதின்மரும் தாங்கத்தொடங்கிய பின்பு தங்களால் பொறுக்க
முடியாமல் சந்திரரூபமான அந்தக்கருப்பத்தோடு பூமியில்விழ, அப்பால்
நான்முகக் கடவுள் அச்சந்திரனை வேதமயமான தேரின் மீது ஏற்ற,
ஸப்தரிஷிகள் முதலானவர்கள் வேதவாக்கியங்களைக் கொண்டு துதித்ததனால்
அச்சந்திரன் மிக்க ஒளிபெற்று உலகத்துக்குப் பேரொளியைத் தருபவனாயின
னென்பதாம்.  சந்திரன் திருமாலின் மனத்திலிருந்து தோன்றினானென்பது,
வேதத்திலுங் கூறப்பட்டிருக்கின்றது;  “(திண்சுடராழியரங்கேசர்
திக்குத்திருச்செவியின், மண்கழலிற் சத்யலோகஞ்சிரத்தின் மருத்துயிரில்,
தண்கதிருள்ளத்தில்வானுந்தியிற் செந்தரணிகண்ணில், ஒண்கன
லிந்திரன்வாழ் முகப்போதி லுதித்தனரே” என்ற திருவரங்கத்து மாலையையுங்
காண்க.) பாற்கடல்கடைந்தபோது அதனினின்று சந்திரன்
தோன்றியமை பிரசித்தம்.
  சந்திரன் அத்திரிமுனிவரது விழியிலும்
திருமாலின் மனத்திலும் நெருப்புமுகத்திலும் திருப்பாற்கடலிலும்
தோன்றியமையை, கீழ் ஆதிபருவத்திலும் “அத்திரிப்
பெயரந்தணனம்பகந்தனிலுஞ், சித்திரக்கனன் முகத்திலும் பிறந்தொளி
சிறந்தோன்,” எங்கண்மாதவ னிதயமா மலர்வரு முதயத், திங்கள், “அம்புராசியி
னாரமுதுடனவதரித்தோன்” எனக் கூறியுள்ளார்.  சந்திரன் பிரமசிருஷ்டிக்கு
உட்பட்டவனாதலால் ‘விதிபடைப்பினிற்றோன்றி’ என்றார்.  இங்குக்கூறிய
ஐவகைப்பிறப்பிடங்களுள் நெருப்பினின்று தோன்றிய வரலாறு
வந்தவிடத்துக்
 கண்டுகொள்க.  இனி, வான் நெருப்பின் –
ஆகாயத்திலிருக்குஞ் சூரியனிடத்தினின்று என்று பொருள் கொள்ளுதலும்
ஒன்று; சந்திரன் கிருஷ்ணபட்சத்தில் நாடோறும் ஒவ்வொருகலையாகக்
குறைந்து கடைசியாக ஒற்றைக்கலையாய் நின்று அமாவாசியையன்று
சூரியனோடு சேர்ந்து பின்பு அவனிடத்திலிருந்து வெளிப்படுவதாலும்,
அன்றியும் சூரியனிடத்திலிருந்தே ஒளியைப்பெறுவதாலும் இவ்வாறு
கூறப்பட்டது என்க; (சூரியனுக்கு ‘சித்ரபாநு’ என ஒருபெயருள்ளதனால்,
“சித்திரக் கனல் முகத்து” என்றதற்கும் – விசித்திரமான சோதியையுடைய
சூரியனிடத்தினின்று எனப்பொருள் காணலாம்.)  

மைத் திறத்தின் நின்று அதிர்வன; முதிர்வன வரைத்
திறத்தினும் ஓங்கும்
மெய்த் திறத்தன; எழு திறத்தினும் மிக விடுவன, மததாரை;
எத் திறத்தினும் பொரு தொழில் புரிவன; ஏழ் உறுப்பு
உறத் தாழ்ந்த
முத் திறத்தன; எண் நலப் பிறப்பின-மூரி வெங் களி யானை.இனி ஆறுகவிகளால்,சதுரங்கசேனைகளை
வருணிக்கின்றார்: இதுவும், அடுத்த கவியும் – யானைகளின்
வருணனை.

மூரி வெம் களி யானை-வலிய கொடிய மதக்களிப்பையுடைய
யானைகள்,- மை திறத்தின் நின்று அதிர்வன-மேகங்களின்
வருக்கம்போல்நின்று முழங்குவனவும், முதிர்வன வரை திறத்தினும் –
மிகப்பெரியவையான மலைக்கூட்டங்களைப் பார்க்கிலும், ஓங்கு மெய் திறத்தன-
உயர்ந்து வளர்ந்த உடம்பின் தோற்றத்தையுடையனவும், எழுதிறத்தினும் மதம்
தாரை மிக விடுவன – ஏழு வகையுறுப்புக்களாலும்  மதநீர்ப்பெருக்கை
மிகச்சொரிவனவும், எதிறத்தினும் பொரு தொழில் புரிவன – எல்லா
வுறுப்புக்களாலும் போர்த்தொழிலைச்செய்வனவும், ஏழு உறுப்பு உற தாழ்ந்த –
ஏழு அவயவங்கள் நன்றாகத்தாழ்ந்து நிலத்திற் படியப் பெற்றனவும்,
முத்திறத்தன எண் நலம் பிறப்பின – மூவகையான நன்கு மதிக்கத்தக்கநல்ல
பிறப்பையுடையனவுமா யிருந்தன; (எ – று.)

    யானைக்கு, மேகம் – கருநிறத்திலும், கர்ச்சித்தலிலும் தாரை
பொழிதலிலும் உவமை.  மததாரைகள் விடும் ஏழு உறுப்பாவன –
கன்னமிரண்டும், கண்ணிரண்டும், துதிக்கைத் துளையிரண்டும்,
கோசமொன்றுமாம்.  எத்திறத்தினும் பொருதொழில்புரிதலாவது-கால்களினால்
மிதித்தும், துதிக்கையினால் அறைந்தும் பற்றியும் இழுத்தும், தந்தங்களினாற்
குத்தியும், மத்தகத்தால் முட்டியும், வாலால் வீசியடித்தும் போர்செய்தல்;
“கோடுகைம்முதலா வொன்பதுறுப்பினுங் கோறல்வல்ல, நீடுயர்மா” என்பர்,
மேற் பதினாறாம் போர்ச்சருக்கத்திலும். ஏழுறுப்பு உறத்தாழ்தல் – கால்
நான்கும் வாலொன்றுங், கையொன்றும், கோசமொன்றும் நிலத்திற்படியுமாறு
தாழ்ந்திருத்தல்.  அரசயானையின் இலக்கணத்தில் ‘காலொரு நான்குந்
தனிக்கையுங் கோசமும், வாலுறுப்போ டேழு மாநிலந்தோய்ந்து” என்று வருதல்
காண்க.  வரைத்திறத்தினும் முதிர்வன – மலைவகைகளிலும் வலிமை மிக்கன.
ஓங்கும் மெய்த்திறத்தன – உயர்ந்த உடம்பின் தோற்றத்தையுடையன என்றும்
பொருள் கொள்ளலாம்.  ஏழுமுழம் உயர்ந்திருத்தல், உத்தமகஜலக்ஷணம்.

     முத்திறத்தன யானை – கிரிசரம், நதிசரம், வனசரம் என்பன: “கிரிசரம்
வனசரம் நதிசரமென்றிவை, நிலைபெறுநிலமென நிறுத்தி சினோரே” என்ற
பன்னிருபாட்டியலாலும், ‘கிரிசரம் வனசரம் நதிசர மடுத்துப், பெறுமே யானை
பிறந்த நிலப்பெயர்” என்ற பிங்கலந்தை திவாகரங்களினாலும்,
இலக்கணவிளக்கவுரையாலும் அறிக.  இவற்றுள், கிரிசரம் – மலையிற் பிறந்தது.
நதிசரம் – யாற்றுச்சார்பிற் பிறந்தது; வனசரம்-காட்டிற் பிறந்தது.  இனி, வேறும்
யானையின் மூன்றுவகை– பத்ரம், மந்த்ரம், ம்ருகம் என்பன; இவற்றின்
இலக்கணம் வருமாறு: தேனின் நிறம் போன்ற நிறமுள்ள தந்தமும்
மிக்கவலிமையும் ஒத்த அவயவமும் வட்டமான வடிவமும் அழகிய முகமும்
அவயவச்சிறப்பு முடையது, பத்ரம்.  பருத்த வயிறும் சிங்கநோக்கும் பருத்த
தோலுள்ள கழுத்துத் துதிக்கைகளும் நடுத்தரமான அவயவமும் நீண்டஉடம்பும்
உடையது, மந்த்ரம்: பருத்ததல்லாத கழுத்து மருப்புக் காது துதிக்கைகளும்
பருத்த கண்களும் குறுகிய உதடு குறிகளும் குறிய உடம்பும் உடையது, ம்ருகம்.  பத்ரத்துக்கு உயரம் ஏழு முழமும், நீளம் எட்டு முழமும்,
வயிற்றின் சுற்றளவு பத்து முழமுமாம்; மந்த்ரத்துக்கு இவ்வளவினும் ஒவ்வொரு
முழம் குறைவும் ம்ருகத்திற்கு அதனளவினும் ஒவ்வொரு முழம் குறைவுமாகும்.
பத்ரத்துக்கும் மந்த்ரத்துக்கும் நீளம் ஓரளவு என்பதும் உண்டு.  பத்ரத்தின்
மதநீர் பகமையாகவும், மந்த்ரத்தின் மதநீர் மஞ்சள் நிறமாகவும், ம்ருகத்தின்
மதநீர் கருமையாகவும் இருக்கும்.  இனி, களிற்றியானை பிடியானை
குட்டியானையென்றும், மூன்றுவகை மதத்தையுடைய யானையென்றும்
யானையின் முத்திறத்தைக் கூறுதல் தகுதியன்று. ‘முத்திறத்தன வெண்ணிலப்
பிறப்பின’ என்ற பாடத்துக்கு-மூவகையாக எண்ணப்படுகிற நிலங்களிற்
பிறத்தலையுடையன என்று பொருள்.  மததாரா – வடசொற்றொட

வன் தபோதனரினும் மிகு பொறையன, வலன்
உயர்வன, எண் கோ
என்ற போதகத் தானையின் பெருமையை
எங்ஙனம் புகல்கிற்பாம்!
நின்ற போது உடல் முகிலிடை மறைந்தது; நிரை
நிரை நெறிப்பட்டுச்
சென்றபோது, வெம் படைக் கடல் செய்தது ஓர்
சேதுபந்தனம் போலும்!

வல் தபோதனரினும் மிகு பொறையன – முதிர்ந்த தவத்தையே
செல்வமாக வுடையவர்களான முனிவர்களைக் காட்டிலும் மிக்கபொறுமை
யுடையனவும், வலன் உயர்வன-வெற்றியினால் மேம்பட்டனவுமாகிய, எண் கோ
என்ற போதகம் தானையின்-மதிக்கப்படுகின்ற மலையென்று சொல்லத்தக்க
யானைச்சேனைகளினுடைய பெருமையை,-எங்ஙனம் புகல்கிற்பாம் – (யாம்)
எவ்வாறு வருணித்துச் சொல்லவல்லோம்? நின்றபோது – (இவ்யானைகள்
எழுந்து) நிற்குஞ் சமயத்தில், உடல் முகிலிடை மறைந்தது – (அவற்றின்)
உடம்பு மேகமண்டலத்தினிடையிலே மறையுந்தன்மையுள்ளது; நிரை நிரை
நெறிபட்டு சென்றபோது – வரிசை வரிசையாக ஒழுங்குபட்டுச்
செல்லுஞ்சமயத்தில், (அவ்யானை வரிசையின் தோற்றம்), வெம்படை கடல்
செய்தது ஓர் சேதுபந்தனம் போலும் – கொடிய சேனாசமுத்திரத்திற்
கட்டியதாகிய ஓர் அணைக்கட்டை யொத்திருக்கும்; எ – று.)

     பிறர்செய்த தீங்குக்கு அப்பொழுதே மாறுசெய்ய வல்லமை
பெற்றிருந்தும் அவ்வாறு செய்யாமல் அப்பொழுது பொறுத்துக்கொள்ளும்
யானையின் பொறுமைக்கு, முனிவர்களின் பொறுமையை உவமை கூறினார்.
துறவறத்தார்க்கு உரிய விரதங்களுள் வெகுளாமை ஒன்றாத லுணர்க.  நாட்டு
மானிடர் செல்வத்தைப் பேணிக் காப்பதுபோல முனிவர்கள் தவத்தைச்
செல்வமாகப் பாவித்துப் பேராதரத்தோடு பாதுகாத்தலால், அவர்கட்கு
‘தபோதனர்’ என்று ஒரு பெயர்.  ‘எண் கோ என்ற’ என்பதற்கு அஷ்டகுல
பர்வதங்களென்று சொல்லத் தக்க என்றும், அஷ்டதிக்கஜங்க ளென்று
சொல்லத்தக்க என்றும், வெண்கோ என்ற என்று எடுத்து – ஐராவதம் என்று
சொல்லத்தக்க என்றும் பொருள் கூறலாம்.  கோ – மலை; யானைக்கு
இலக்கணை.  ‘வென்ற’ என்று பிரித்து உரைப்பது, மோனைத்தொடைக்குச்
சிறவாது. போதகம் – பத்து வருஷத்து யானைக்கன்று.  போதகத்து ஆனை என்று
பிரித்தால, போதகமாகிய யானையென்க.  புகல்கிற்பாம் – கவிகளுக்கு உரிய
இயற்கைத் தனித்தன்மைப் பன்மை.  யானை எழுந்து நின்ற சமயத்தில்
அவற்றின் உடல் மேகமண்டலத்தே மறையுமெனத் தொடர்புயர்வு
நவிற்சியணி
 படக் கூறினார்;  இதனால் யானையின்மிக்க உயர்ச்சி விளங்கும்.
உடல் மறைந்தது – சாதியொருமை.  (சாதியொருமையாவது ஒரு சொல்
ஒருமையீறு தோன்ற நின்றும், தோன்றாதுநின்றும் பன்மைப் பொருள்
உணர்த்துவது; இதனை, வடநூலார் ‘ஜாத்யேகவசநம்’ என்பர்.) மற்றை
மூவகைச் சேனைகளும் கடல்போலப் பரந்திருக்க அவற்றின் நடுவே
வரிசையாய் ஒழுங்குபட்டுள்ள யானைகளுக்குக் கடலினிடையிற் கட்டப்பட்ட
சேது உவமையாமென்க.  தண்டகாரண்யத்திற் சீதையை யெடுத்துக்கொண்டு
போன இராவணன் இலங்கையில் அவளைச் சிறைவைத்திருத்தலைத் தூது
சென்று மீண்ட அநுமானால் அறிந்த இராமபிரான் அவ்விராவணனையழித்தற்காக
இலங்கை சேர்தற்பொருட்டு இடையிலுள்ள தென்கடலைக் கடக்கவேண்டிய
சமயத்தில், அப்பெருமானுடைய அநுமதியால் வாநரங்கள் மலைகளை யெடுத்துக்
கொண்டு வந்து போகட்டுக் கடலினிடையே அணைகட்டின என்ற வரலாறு
பிரசித்தம்.       

சுற்றும் நீளமும் உயரமும் நிகர்ப்பன; சுழியின்
மிக்கன; தீமை
அற்று  மேதகு  நிறத்தன;  கவினுடை
அவயவத்தன ஆகி,
எற்று மா மணி, முரசமும், சங்கமும், எனும் குரல்
மிகுத்து, இப் பார்
முற்றும், மாதிரத்து அளவும், ஐங் கதியினால் முடிப்பன,
இமைப்போதில்;இதுமுதல் மூன்றுகவிகள் -குதிரைகளின் வருணனை.

அச்சேனையிலுள்ள குதிரைகள்),-சுற்றும் நீளமும் உயரமும்
நிகர்ப்பன – சுற்றளவும் நீளமும் உயரமும் (இலக்கணத்திற்கு) ஒத்தனவும்,
சுழியின் மிக்கன – சுழியினால் மேம்பட்டனவும் [மேம்பட்ட
சுழிகளையுடையனவும்], தீமை அற்று மேதகு நிறத்தன – குற்றங்களொழிந்து
மேன்மையான நல்ல நிறத்தையுடையனவும், கவின் உடை அவயவத்தன ஆகி
– அழகையுடைய உறுப்புக்களை யுடையனவுமாக இருந்து, எற்று மா
மணிமுரசமும் சங்கமும் எனும் குரல் மிகுத்து – அடிக்கப்படுகின்ற பெரிய
அழகிய முரசவாத்தியமும் சங்கும் ஒப்பாகச் சொல்லத்தக்க குரலோசை
மிக்கனவாய்,- இ பார் முற்றும் – இவ்வுலக முழுவதையும், மாதிரத்து அளவும்
– திக்குக்களின் எல்லையையும், ஐங் கதியினால் – (தமது) ஐவகை
நடைவிகற்பங்களினால், இமைபோதில் – ஒரு நிமிஷத்திற்குள், முடிப்பன –
சுற்றி வருந் தன்மையையுடையன;  (எ – று.)

    உத்தமமான குதிரைகட்கு உயரத்தினளவு – நூற்றெட்டு விரற்கிடையும்,
நீளத்தினளவு – நூற்றுத்தொண்ணூற்றிரண்டு விரற்கிடையும், வயிற்றின் சுற்றளவு
– நூற்றுப் பதினொரு விரற்கிடையுமாம்:  இது வடநூலுட் கண்டது: இனி,
உயரம் நூறு விரற்கிடையென்று கூறுதலுமுண்டு.  மிக்கசுழிகள் – முகம் தலை
நாசி மார்பு என்ற இவ்வுறுப்புக்களிற் பொருந்திய இரட்டைச் சுழிகளும்,
நடுநெற்றி பின்புறம் இவற்றிற் பொருந்திய ஒற்றைச் சுழிகளுமாகிய, ‘த்ருவம்’
என்னும் பெயருடைய பத்துச்சுழிகளோடு, கழுத்தில்வலமாகச் சுழிந்திருக்குந்
தேவமணியும்: இவை, குதிரையின் நல்லிலக்கணமாதலை, “அணிகிளர்கழுத்தில்
வலஞ்சுழிந்திருந்தா லறிந்தவ ரதனையே தெய்வ, மணியென விசைப்பர் முகந்
தலை நாசி மார்ப மிந்நான்கு மிவ்விரண்டு, பணிதருசுழியு நுதனடுப்
பின்னைப்பக்கமு மொவ்வொருசுழியுந், துணிதரவிருப்ப திலக்கணமுளது”
என்பதனாலும் அறிக. தீமையற்று மேதகு நிறத்தன – புலி கரடி கழுதை செந்நாய்
பூனை நரி காகம் புகை என்னும் இவற்றைப்போன்ற நிறமுடையனவன்றி, சந்திரன்
பால் மாதுளம்போது செம்பஞ்சி வண்டு முகில் கோரோசனை பொன்
முதலியவற்றைப் போன்ற நிறமுடையவை.

    குதிரைகளின் ஐங்கதிகள் – “விக்கிதம் வற்கிதம் வெல்லுமுபகண்டம்,
மத்திமம் சாரியோ டைந்து” என்று சொல்லப்பட்ட இவை: இவ்வாறன்றி,
ஆஸ்கந்திதம், தோரிதகம், ரேகிதம், வல்கிலுதம், ப்லுதம் எனவும்படும்.  இனி,
ஸிம்ஹகதி மயூரகதி வாநரகதி வியாக்கிரகதி குஞ்சரகதி என்றலும் பிறவாறு
கூறுதலுமுண்டு.     

ஆளின் நெஞ்சமும், வார்த்தையும், செங் கையும்,
ஆசனத்தொடு தாளும்,
கோளில் இன்புறக் குறிப்பன; எவற்றினும் குறைகள்
அற்றன ஆகி,
யாளி, குஞ்சரம், வானரம், முதலிய இயக்கினால்,
விசும்பு எங்கும்
தூளி கொண்டிட மிடைந்து வந்தன-நெடுந் துரகதம்,
பல கோடி.

பல கோடி நெடுந் துரகதம். பலகோடிக்கணக்கான பெரிய
குதிரைகள்,-ஆளின் – (தம்மீது) ஏறிநடத்துபவரது, நெஞ்சம்உம் –
எண்ணத்தையும், வார்த்தையும் – சொற்களையும், செம் கையும் – சிவந்த
கைகளினாற்செய்யுங் குறிப்பையும், ஆசனத்தொடு – (தம்மீது ஏறி)
வீற்றிருத்தலிலுண்டாகுஞ் சைகையையும், தாளும் – கால்களினாற் செய்யுங்
குறிப்பையும், கோளில் இன்பு உற குறிப்பன – (தம்முடைய) அறிவால்
(நடத்துபவர்) மகிழும்படி தெரிந்துகொள்வனவும், எவற்றினும் குறைகள் அற்றன
ஆகி – (குதிரைகட்குக் கூறியுள்ள குணம் செயல் குறி என்கிற) எல்லா
வகையிலுங்குறைபாடில்லாதனவுமாய்,- யாளி குஞ்சரம் வானரம் முதலிய
இயக்கினால்-சிங்கம் யானை குரங்கு முதலியவற்றின் நடைபோன்ற நடையினாலே,
விசும்பு எங்கும் தூளி கொண்டிட – ஆகாய முழுவதும் புழுதி எழுந்து
பரவும்படி, மிடைந்து வந்தன – நெருங்கிச் சென்றன; (எ – று.)

     தம்மை நடத்துபவரது மனக்கருத்து முதலியவற்றை யெல்லாம் உணர்ந்து
அவர்க்கு மகிழ்ச்சியுண்டாகுமாறு நடக்குந் தன்மையன் எனக் குதிரைகளின்
நல்லறிவையும் பழக்கத்தையும் பாராட்டிக் கூறினார்; “அசைவில் தொடையடி
கசை குசை யுரநினை வறியு முணர்வின” என்பர் மேற்
பதினாறாம்போர்ச்சருக்கத்தும்.

    வார்த்தை-சொல்லாகுபெயர்.  கை, ஆசனம், தாள் – அவற்றில் உண்டாகுஞ்
சைகைகட்குக் காரணவாகுபெயர்.  கோள்-முதனிலை திரிந்த தொழிற்பெயர்.
யாளி – சிங்கம்.  ‘முதலிய’ என்றதனால், மயூரகதி வியாக்கிரகதி என்ற
இரண்டையும் கொள்க.

     இயக்கு – ‘இயங்கு’ என்ற முதனிலை திரிந்த தொழிற்பெயர்:  இயங்குதல்
– செல்லுதல்.  வார்த்தா, ஆஸநம், வாநரம், தூளீ, துரகதம், கோடி –
வடசொற்கள்.  குஞ்சரம் – காட்டுப்புதர்களில் மகிழ்ந்து சஞ்சரிப்பது என்றும்,
துதிக்கையையுடையது என்றும் உறுப்புப்பொருள்படும் வடசொல்: (குஞ்சம் –
காட்டுப்புதரும், துதிக்கையும்.)   

வடிவுடைச்  சில  குரகதம்  மரகத  வண்ணம்
மிக்கன ஆகி,
படியினில் சிறிது அமைவுற மிதித்தில, பவன
வெங் கதிபோல;
முடிவில் இப்படிமிசை வரக் கருதியே முனிவரன்
உயிர்க்கு எல்லாம்
அடி படைத்தது; படைத்தது, இங்கு இவற்றினுக்கு
அவயவம் குறையாமல்.

வடிவு உடை சில குரகதம் – அழகிய உருவத்தையுடைய சில
குதிரைகள், மரகதம் வண்ணம் மிக்கன ஆகி – மரகதரத்தினம் போன்ற
பசுநிறம் மிகுந்தனவாய்,- பவனம் வெம் கதிபோல – வாயுவினது மிக்க
வேகம்போல, படியினில் சிறிது அமைவுற மிதித்தில – பூமியிற் சிறிதேனும்
கால்பொருந்த மிதித்துச் சென்றனவில்லை; முனிவரன் – பிரமதேவன், உயிர்க்கு
எல்லாம் – எல்லாப் பிராணிகட்கும், அடிபடைத்தது – கால்களைச்
சிருட்டித்தது, முடிவு இல் இப்படிமிசை வர கருதியே-அழிதலில்லாத இந்தப்
பூமியின்மேல் (அவ்வுயிர்கள்) நடந்து செல்வதை நினைத்தேயாம்; இங்கு
இவற்றினுக்கு படைத்தது – இச் சேனையிலுள்ள இக்குதிரைகளுக்கு (க்
கால்களை)ச் சிருட்டித்ததோ, (பூமியின்மேல் நடந்து செல்வதற்காகவன்று):
அவயவம் குறையாமல் – உறுப்புக்கள் குறைபாடில்லாமல் அழகாயிருத்தற்
பொருட்டே; ( எ – று.)

    உலகத்திற் சாதாரணமாய்ப் பிராணிகட்கெல்லாம் பிரமதேவன்
கால்களைப்படைப்பது, பூமியில் நடந்துசெல்லுதற்காகவேயாம்; தருமபுத்திரனது
சேனையிலுள்ள குதிரைகட்குக்கால்கள் படைத்ததோ, அவயவக்குறைவில்லாது
அழகாக இருத்தற் பொருட்டன்றி அவ்வடிகளால் நடத்தற்காக அன்று என
வருணித்தவாறு: இதனால், இக்குதிரைகள் கால்கள் தரையிற்படுதல் தெரியாதபடி
மிக்கவேகத்துடன் பறந்து செல்வன என்றபடியாம்.  குதிரைக்குக் கால்கள்
நடத்தற்பொருட்டே அமைந்திருக்கவும் அவ்வுண்மையை விலக்கி,
அங்கவீனப்படாமைப்பொருட்டுப் படைக்கப்பட்டனவென வேறொரு தன்மையை ஏற்றிக்கூறியதனால், இது – ஒன்றில் ஒரு தன்மையை நீக்கி மற்றொரு
தன்மையை ஏற்றிக்கூறும் அபநுதியணியாம்;  இது, ஒழிப்பணி யெனவும்படும்.

     குரகதம் – குளம்புகளினால் நடந்துசெல்வது எனக் குதிரைக்குக்
காரணக்குறி.  பிரளயகாலந்தோறும் அழிந்து படைப்புக் காலந்தோறும் தோன்றி
இவ்வாறு யாற்றுநீர்வெள்ளம்போன்று நித்தியமாயிருத்தலால், ‘முடிவில் இப்படி’
என்றார்.  அன்றி, நெடுங்காலம் அழியாது நிற்றலால், உபசாரம்பற்றி இவ்வாறு
கூறினாரெனினுமாம்.  இனி முடிவுஇல் – முடிவு இல்லாத [எல்லை
காணவொண்ணாத மிகப்பெரிய] இப்படி என்றுமாம்.  பின்வரும் ‘படைத்தது’
என்பதற்கும், முன்வந்த ‘அடி’ என்றதே-செயப்படுபொருள்.  குரகதம், மரகதம்,
வர்ணம், பவநம், கதி, முநிவரன், அவயவம் – வடசொற்கள்.

நீடு மால் வரை அடங்கலும் நிலைபெற நிற்கும் மால்
வரை; மண் மேல்
ஓடும் மால் வரை இவை!’ என, தனித்தனி ஊர்ந்த தேர்
பல கோடி,
‘நாடு,  மால்  வரை,  கடல்,  வனம்,  எனும் நிலன்
நாலுமே ஒன்றாகக்
கூடுமால்; வரை இல்’ எனப் பரந்தனர், கொடிய வெம்
படை வீரர்.தேர் பதாதிகளின் வருணனை.

நீடும் மால் வரை அடங்கலும் – (உலகத்திலுள்ள) நீண்ட
பெரிய மலைகளெல்லாம், நிலை பெறநிற்கும் மால் வரை – (ஓரிடத்தே)
நிலையாகநிற்கும் பெரியமலைகளாம்; (அவ்வாறன்றி) இவை – இவைகளோ,
மண்மேல் ஓடும் மால் வரை – பூமியின்மீது ஓடுகின்ற பெரிய மலைகளாகும்,’
என – என்று (கண்டோர்) சொல்லும்படி, தனி தனி ஊர்ந்ததேர் –
தனித்தனியே விரைந்துசெல்லுகின்ற தேர்கள், பலகோடி – பல
கோடிக்கணக்கினவாம்; ‘நாடு – நாடும் [மருதநிலமும்], மால்வரை –
பெரியமலையும் [குறிஞ்சி நிலமும்], கடல் – கடலும் [நெய்தனிலமும்], வனம் –
காடும் [முல்லைநிலமும்], எனும் – என்று சொல்லப்படுகின்ற, நிலன் நாலுமே –
நான்குவகை நிலங்களும், (இக்காலாட்படைத் தொகுதியால்), ஒன்று ஆககூடும்
– (இனி) ஒன்றுசேர்ந்துவிடும்: ஆல் – ஆதலால், வரைஇல் – (நான்குநிலம்
என்று சொல்வதற்கு உரிய) எல்லை அழிந்துவிடும்,’ என – என்று
சொல்லும்படி, (ஒரு பெருங்கூட்டமாக), கொடிய வெம்படைவீரர் –
மிகக்கொடிய ஆயுதங்களையேந்திய காலாள்வீரர்கள், பரந்தனர் – (எங்கும்)
பரவினார்கள்; (எ – று.)

     தேர்கள மலைபோலுள்ளன என்ற கருத்தை, ‘நிற்கும் மலைகள் அவை,
இவைகளோ ஓடும் மலைகள்’ எனக் கூறினார்.  இவ்வாறு உபமானமாகிய
மலையினும் உபமேயமாகிய தேர்க்குச் செல்லுதலாகிய சிறப்புக்கூறித் தேரினை
மலையாகக்கொண்டு கூறியிருத்தலால், முன்னிரண்டடி சிறப்புருவகவணியாம்.
‘இவை’ என்பது, தேர்களைச் சுட்டிநின்றது.  கோடி=மிகப்பல என்பதற்கு ஒன்று
காட்டியவாறு.

     மருதம் முதலாக நிலங்கள் நால்வகையினவா யிருந்தாலும்
காலாட்படைகள் பெருங்கூட்டமாகத் திரண்டு எங்கும் ஒருசேரப்பரவிச்
செல்லுதலால் அந்நிலங்களின் வேற்றுமை யுணரமுடியாதவாறு எல்லாம்
ஒன்றுபோலவே தோன்றின எனப் பதாதிச்சேனைகளின் மிகுதியைப்
பின்னிரண்டடிகளினால் விளக்கினார்;  உயர்வு நவிற்சியணி.  கொடிய வெம்-
ஒருபொருட்பன்மொழி.  ஐவகை நிலங்களுட் பிராணிசஞ்சார மில்லாத
பாலைநிலத்தை விலக்கி, ‘நிலம்நான்கு’ என்றார்;  ‘நானிலம்’ என்றே இந்தப்
பூமிக்கு ஒரு பெயரிருத்தலும் காண்க.  நால்வகை நிலங்களும் தம்தம் தன்மை
திரிந்து பாலையாகின்றனவேயன்றி இயற்கையிற் பாலையெனத் தனியே
ஒருநிலமில்லை யென்ப.  நாடு வரை கடல் வனம் என்ற பெயர்ச்செவ்வெண்,
‘நால்’ என்னுந் தொகை பெற்றது;  இதிலுள்ள உம்மை -முற்றுப்பொருளது.

அதிர் முழக்கின கரு முகில் ஏழுடை அண்டர் கோன்
அகல் வானுக்கு
எதிர் முழக்கு என முழங்கின, தனித் தனி, இன் இயம்,
இடம்தோறும்;
முதிர் முழக்கு இபம் அவற்றினும் மும் மடி முழங்கின;
அவைதாமும்
பிதிர் முழக்கு என, முழங்கின, வலம்புரி; உரகரில்
பிழைத்தோர் யார்?வாச்சியப் பேரொலியின்வருணனை.

அதிர் முழக்கின – பேரொலியையுடைய இடி முழக்கத்தைச்
செய்கின்ற, கரு முகில் ஏழ்உடை – கருநிறமான ஏழு மேகங்களையுடையதாகிய,
அண்டர்கோன் அகல் வானுக்கு-தேவர்கட்கெல்லாந் தலைவனாகிய இந்திரனது
அகன்ற வானத்தை, எதிர் முழக்கு என – எதிர்க்கின்ற ஒலியென்னும்படி,
(மேககர்ச்சனையினும் மிக்கனவாக), இன் இயம் இடந்தோறும் தனித்தனி
முழங்கின – இனியவாத்தியங்கள் (சேனைகளின்) இடங்களிலெல்லாம்
வெவ்வேறாகப் பேரொலி செய்தன; முதிர் முழக்கு இபம் – மிக்க
பிளிறுதலையுடைய யானைகள், அவற்றினும் – அவ்வாத்திய
கோஷங்களைப்பார்க்கிலும், மும் மடி முழங்கின – மூன்றுபங்கு அதிகமாக
ஒலித்தன; அவைதாமும் பிதிர் முழக்கு என – அந்த யானையின் பிளிறுதலும்
சிற்றொலி யென்னும்படி, வலம்புரி முழங்கின – வலம்புரிச்சங்குகள்
ஒலிசெய்தன; (இவ்வாறு பேரொலியுண்டானதனால்), உரகரில் பிழைத்தோர் யார்
– நாகலோகத்தாரில் உயிர்தப்பிப்பிழைத்தவர் யாவருளர்? [எவருமில்லை
யென்றபடி]; (எ – று.)

    வாத்தியகோஷத்தை வருணிக்கத் தொடங்கியவர், ஒலியொற்றுமை பற்றி
யானைகளின் பிளிறலையும் உடன்கூறினார்.  முகில் முழக்கத்தினும் மிகுதியாக
வாத்தியங்களும், அவற்றினும் அதிகமாக யானைகளும், அவற்றினும் மிக
அதிகமாக வலம்புரிச்சங்குகளும் முழங்கின என வாச்சியப் பேரொலியின்
மிகுதியை வருணித்தார்;  மேன்மேலுயர்ச்சியணி:  ஒன்றினும் ஒன்று சிறந்த
பலவற்றைச் சேர்த்துக் கூறுதல், இவ்வணியின் இலக்கணம்.  ‘அதிர்முழக்கின’
என்பதற்கு – (கேட்பவர்கள்) அஞ்சிநடுங்கத்தக்க முழக்கத்தை யுடையனவான என்றும், ‘கரு முகில்’ என்பதற்கு – கருக்கொண்ட காளமேகமென்றும், வானுக்கு
எதிர் முழக்கு என என்பதற்கு – ‘சுவர்க்கலோகத்து வாத்தியவொலிக்குப்
பிரதித்தொனி’ யென்று சொல்லும்படி என்றும் பொருள்கூறலாம். முகில்ஏழ் –
சம்வர்த்தம், ஆவர்த்தம், புட்கலாவர்த்தம், சங்கிருதம், துரோணம், காளமுகி,
நீலவர்ணம் என்பன. பிதிர்என்பது – துகள்: அது, இங்கே சிறுமைக்கு ஆயிற்று.
வலம்புரி – வலப்பக்கமாக உட்சுழிந்திருக்குஞ் சங்கு; இடம்புரிச்சங்கம் ஆயிரம்
சூழப்பெற்றது, இது.  இடியோசைக்கு அஞ்சுதல் சர்ப்பசாதியாரின் இயல்பு
ஆதலால், அவ்விடியோசையினும் பலமடங்கு மிக்க இவ்வாத்தியகோஷத்தைக்
கேட்டு அந்நாகசாதியார் உயிரொடுங்குதல் திண்ண மென்பார், ‘உரகரிற்
பிழைத்தோர் யார்’ என்றார்.  ‘வலம்புரி’ எனத் தனியே யெடுத்துக்கூறியதனால்,
‘இயம்’ என்றது – அவை யொழிந்த மற்றவற்றை யென்க.  இபம், உரகர் –
வடசொற்கள்.  ‘முழக்கு’ ‘முழங்கின’ என்ற சொற்கள் ஒருபொருளிலேயே
பலமுறை வந்தது – சொற்பொருட்பின்வருநிலையணி.

எடுத்த நீள் கொடி ஆடை வான் அகல் வெளி எங்கணும்
நெருங்கி, கீழ்ப்
படுத்த வானமே வானமா மறைந்தது, மீதுறப் பகிர் அண்டம்;
அடுத்த பூ நதி, வான் நதிக்கு இலது என, அன்புடன் உபகாரம்
கொடுத்த மீன் என, கால் பொரப் பரந்து போய்க் குளித்தன
குளிர் தோயம்.கொடிச்சீலைகளின் வருணனை.

எடுத்த நீள் கொடி ஆடை – (அச்சேனையில்) உயர
எடுக்கப்பட்ட கொடிச்சீலைகள்,-வான் அகல் வெளி எங்கணும் நெருங்கி மீது
உற – ஆகாயத்தின் பரந்தவெளியிட முழுவதிலும் நெருக்கமாய் மேலே
பொருந்த, கீழ் படுத்த வானமே வானம் ஆய்-அவற்றிற்குக் கீழே பொருந்திய
ஆகாயம் மாத்திரமே (பூமியிலுள்ளார்க்கு) ஆகாயமாகத் தோன்ற, பகிரண்டம்
மறைந்தது – (இக்கொடிச்சீலைகளின்) மேற்புறத்திற் பொருந்திய ஆகாயம்
(இவ்வுலகத்தார்க்குத் தெரியாது) மறைந்து விட்டது; (இவ்வாறு வானத்தில்
நெருங்கிய கொடிச்சீலைகள்),- ‘அடுத்த பூ நதி – (மீன்) பொருந்தியுள்ள
இவ்வுலகத்துக் கங்காநதியானது, வான் நதிக்கு இலது என –
ஆகாசகங்காநதிக்கு (த் தன்னிடத்திலிருப்பது போல மீன்) இல்லையென்று
கருதி, அன்புடன் உபகாரம் கொடுத்த மீன் – அன்புடனே உபஹாரமாக
அனுப்பிய மீன்களாகும்,’ என – என்று சொல்லும்படி, கால் பொர பரந்து
போய் – காற்றுவீசுதலினால் (அக்கொடிகள் ஆகாயத்திற்) பரவிச்சென்று, குளிர்
தோயம் – (அவ்வாகாச கங்காநதியினது) குளிர்ந்தநீரில், குளித்தன – படிந்தன;
( எ – று.)

     வானம் – வெற்றிடம்.  கொடிச்சீலைகள் ஆகாயத்திற் காற்றினாற் பரவி
நெருங்கிப் பந்தரிட்டாற்போலாக, அக்கொடிச்சீலை கட்கு மேற்புறத்திலுள்ள
ஆகாயம் நிலவுலகத்தார்க்குப் புலப்படாது கீழ்ப்புறத்திலுள்ள ஆகாயம்
மாத்திரமே புலப்படுவதாயிற்று என்பது, முன்னிரண்டடியின் கருத்து.
இவ்வருணனை, கொடிகளின் மிகுதியை விளக்குந் தொடர்புயர்வுநவிற்சியணியாம்:
பின்னிரண்டடிகளில், வானத்தில் ஆகாசகங்கா நதியளவுஞ் சென்று காற்றினால்
மோதப்பட்டு அசையுங் கொடிச்சீலைகள், மீன்களை மிகுதியாகவுடைய
பூலோகத்துக் கங்காநதியானது அம்மீன்களை யுடையதல்லாத ஆகாசகங்காநதிக்கு
உபஹாரமாக அனுப்பிய மீன்கள் போலு மெனக்குறித்தார்;
தன்மைத்தற்குறிப்பேற்றவணி.

     உபஹாரம் என்றது – பெரியோர்க்குக் கொடுக்குங் காணிக்கைப்பொருள்
என்று பொருள்படும்:  அது திரிந்துவந்தது.  கொடியாடை – த்வஜ படம்.
மீன் – சாதியொருமை ஆதலால், ‘இலது’ என்ற ஒருமைமுற்றைக் கொண்டது.
அடுத்த பூ நதி – இந்நகரத்தையடுத்துப் பூமியிலுள்ள நதி எனினுமாம்.
பஹிரண்டம், பூநதி, நதீ, மீநம், தோயம் – வடசொற்கள்

அழுந்த மேல் இடு சேனையால் மிகவும் நொந்து, அமரருக்கு
உரை செய்ய,
செழுந்  தராதல  மடந்தை  பொன்னுலகிடைச்
செல்லுகின்றதுபோல், மேல்
எழுந்த தூளிகள், இடை விடாது, எங்கணும் எழுந்து எழுந்து,
எதிர் ஓடி,
விழுந்த தூளியும் தடுத்தன, நிலன் உற, விசும்பு உறும்படி நின்றே.தூளிகளின் வருணனை.

செழுந் தராதலம் மடந்தை – செழிப்புள்ள பூமி தேவியானவள்,
அழந்த மேல் இடு சேனையால்-(தான்) அழுந்தும்படி மிகுதியாகத்
தன்மீதுபொருந்திய சேனைத்தொகுதியினால், மிகவும் நொந்து – மிகவும்
வருந்தி, அமரருக்கு உரைசெய்ய – தேவர்கட்கு (த் தன் வருத்தத்தை)க் கூறி
முறையிடுதற்காக, பொன் உலகிடை செல்லுகின்றது போல் – பொன்மயமான
தேவலோகத்துக்குப் போகின்ற தன்மைபோல, மேல் எழுந்த – மேலே
கிளம்பிய, தூளிகள் – புழுதிகள்,- எங்கணும் இடைவிடாது எழுந்து எழுந்து
எதிர் ஓடி-எல்லாவிடங்களிலும் இடைவிடாமல் மிகுதியாக எழுந்து மேலே
எதிர்முகமாகச்சென்று, விசும்பு உறும்படி நின்று – ஆகாயத்திற்பொருந்தும்படி
நின்றுகொண்டு, நிலன் உற விழுந்த தூளியும் தடுத்தன – (அத்தூளிகட்கு
முன்னமே ஆகாயத்திற் சென்று மீண்டு) தரையிற்பொருந்தும்படி விழுகிற
தூளியையும் (விழவொட்டாது) தடுத்தன; (எ – று.)

     சேனைகள் மிக்குச்செல்லுதலினால் மேலே புழுதிகள் மிகுதியாக
எழுந்ததை, பூமிதேவி மிக்கபாரம் பொறுக்கமாட்டாது தன் குறையை
முறையிடுமாறு மேலுலகத்திற்குச்செல்வதாகக் குறித்தார்;
தன்மைத்தற்குறிப்பேற்றவணி. மேன்மேலும் மிகுதியாகப் புழுதிகள் எழுந்து
மேற்சென்று கொண்டே யிருத்தலினால், புழுதிகள் மீண்டு விழுவதற்கு
இடமில்லாமற் போயிற்றென்க.  இதனால் சேனையின் மிகுதி தொனிக்கும்.
பூமிதேவி மிக்கபாரத்தினால் வருந்தும்போது தன்குறையைத் தேவர்களிடத்துச்
சென்று முறையிடுதலைப் புராணங்களிற் காணலாம்.    

முன்னர் மாருத மதலையும் சேனையும் முடுகி வன்பொடு போத,
பின்னர் வாசவன் மதலையும் தானையும் பெருந் தகவுடன் போத;
‘அந் நராதிபர் இருவரும் இருபுறத்து அரும் படையுடன் செல்ல,
மன்னர் ஆதிபன் தாரகா கணத்திடை மதி எனப் புறப்பட்டான்.சேனைகளுடன்தம்பியர்நால்வரும் நான்குபக்கத்திலும்
வரத் தருமபுத்திரன் புறப்படுதல்.

மாருதன் மதலையும் – வாயுகுமாரனான வீமசேனனும்,
சேனையும் – [அவனது] சேனைகளும், முடுகி – விரைந்து, முன்னர் – முன்னே
[முன்னணியாக], வன்பொடு போத – வலிமையுடன் செல்லவும்,- வாசவன்
மதலையும் – இந்திரகுமாரனான அருச்சுனனும், தானையும் – [அவனது]
சேனைகளும், பின்னர் – பின்னே [பின்னணியாக], பெருந் தகவுடன் போத –
பெருந்தகையுடன் [கம்பீரமாகச்] செல்லவும்,- அ நராதிபர் இருவரும் – (நகுல
சகதேவர் என்கிற) அந்த அரசர்களிருவரும், அரும்படையுடன் – (தமது)
அருமையான சேனைகளோடு, இரு புறத்து செல்ல – இரண்டு பக்கங்களிலும்
[புறவணியாகச்] செல்லவும்,- (அவர்கட்குநடுவே),- மன்னர் ஆதிபன் –
அரசர்கட்கெல்லாந் தலைவனான தருமபுத்திரன், தாரகா கணத்திடை மதிஎன –
நட்சத்திரக்கூட்டத்தின் நடுவில் (விளங்குஞ்) சந்திரன்போல, புறப்பட்டான்-;
(எ- று.)

    தருமபுத்திரன் யாவரினும் பிரதானனாய்ச் சிறத்தலால் அவனுக்குச்
சந்திரனையும், மற்றையோர்க்கு நட்சத்திரங்களையும் உவமை கூறினார்;
தம்பியர் நால்வரையும் பெரிய தாரகைகளாகவும், சேனைகளைச் சிறிய
தாரகைகளாகவும் கருதுக.  மாருதன்+மதலை=மாருதமதலை;  “சிலவிகாரமா
முயர்திணை.” அம் நராதிபர் என்றுபிரித்து – அழகிய அரசர்களெனவும்
பொருள் கொள்ளலாம்.  நர+அதிபன்=நராதிபன்; தீர்க்கசந்தி பெற்ற வடமொழித்
தொடர்.  நான்காம் அடியில், ஆதிபன்-அதிபன் என்பதன் நீட்டல்.  இனி,
மன் நராதிபன் என்று கொண்டு, பெருமைபெற்ற அரசனென்றலு மொன்று.
தாராகணம் – வடமொழித்தொடர்.

அம் கண் மாநிலத்து அரசர்தம் மகளிர் பேர் அரும்
பிடிமிசை போத,
செங் கண் மாமயில் யாகபத்தினியும் வண் சிவிகையின்
மிசை போத,
வெங் கண் மா மணி முரசு உயர்த்தருளிய மெய் தவா
மொழி வேந்தன்
தங்கள் மா நகர் கடந்து, வண் சாயையும் தபனனும்
எனச் சென்றான்.அரசமகளிரும் திரௌபதியும்உடன்செல்லுதல்.

அம் கண் மா நிலத்து அரசர்தம் மகளிர் – அழகிய
இடமகன்ற பெரிய நிலவுலகத்திலுள்ள ராஜஸ்திரீகள்,  பேர் அரும் பிடிமிசை
போத – பெரிய அருமையான பெண்யானைகளின்மே லேறி உடன் வருமாறு,
செம்கண் மா மயில் யாகபத்தினியும் – செவ்வரிபரந்த கண்களை யுடையவளும்
அழகிய மயில் போன்ற சாயலையுடையவளும் யாகத்திற்கு உரிய
பட்டமகிஷியுமாகிய திரௌபதியும், வள் சிவிகையின் மிசை போத – சிறந்த
தண்டிகையின் மீது ஏறி உடன்செல்ல,-வெம் கண் மா மணி முரசு
உயர்த்தருளிய – (பகைவர்க்குக்) கொடிய கண்களையுடைய பெரிய அழகிய
முரசத்தின் வடிவமெழுதிய கொடியை உயரநாட்டியவனாகிய, மெய் தவா
மொழி வேந்தன் – உண்மை தவறாத சொற்களைச் சொல்பவனாகிய
யுதிஷ்டிரராஜன்,-தங்கள் மா நகர் கடந்து – தங்களது (இந்திரப்பிரத்த)
நகரத்தை விட்டு, வள் சாயையும் தபனனும் என – அழகிய சாயாதேவியும்
சூரியனும் போல, சென்றான்-; (எ – று.)

    அரசர்களையெல்லாம் வென்று பிரதாபத்தினால் விளங்குந்
தருமபுத்திரனுக்குச் சூரியனையும், அத்தருமனைப் பின்பற்றிச் செல்லும்
அவனது மனைவியாகிய திரௌபதிக்கு அச்சூரியனை விடாது
தொடர்ந்துகொண்டே செல்லும் சாயாதேவியையும் உவமை கூறினார்;
கீழ்ச்செய்யுளில் தருமபுத்திரனுக்குச் சந்திரனை உவமை கூறியவர்
இச்செய்யுளிற் சூரியனையும் உவமைகூறியது, “அரசன்
தண்ணளியுடையவனாய்த் தன்னாட்டுக்குடிகளை மகிழ்வித்தலில் அமுத
கிரணங்களினால் உலகத்தாரை மகிழ்விக்குஞ் சந்திரனையும்,
பிரதாபமுடையவனாய்த் தீயோரைக்கடிந்து தருமத்தை நிலைநிறுத்துதலில்
இருளையொழித்து விளக்கத்தை யுண்டாக்கி விளங்குஞ் சூரியனையும்
ஒத்திருத்தல் வேண்டும்”  என்பது அரசநீதியாதலா லென்க.
‘அரசர்தம்மகளிர்’ என்றது, தருமபுத்திரனுடன் வந்த அரசர்களது மனைவியரை.
மகளிர் பெண்யானை மேலும் சிவிகையின்மேலும் ஏறிச்செல்லுதல், மரபு.
‘பத்நீ’ – வைதிக காரியங்களில் தனது கணவனுடனிருந்து உதவுபவளென்று
பொருள்படும்;  தருமர் இராசசூயயாகஞ் செய்யும்போது துணைவியா
யிருந்ததனால், திரௌபதியை ‘யாகபத்தினி’ என்றார்.  சூரியனுக்குச் சாயை,
ஸம்ஜ்ஞை என இருவர் மனைவியர்.  தபநன் – (தனது
ஆயிரங்கிரணங்களாலும்) தபிப்பவன் [காய்பவன்] எனப்பொருள்படும்
வடசொல்.

     பிடி – பெண்யானை;  “பிடியென் பெண்பெயர் யானைமேற்றே” என்பது
தொல்காப்பியம்.  ஆண்யானை ‘களிறு’ எனப்படும்.  முரசத்திற்கு ‘கண்’
என்றது, அடிக்குமிடத்தை.  ‘தவா’ என்னும் ஈறுகெட்ட
எதிர்மறைப்பெயரெச்சத்தில், ‘தபு’ என்ப

ஏவின, பல்லியும்; இடத்திலே வரத்
தாவின, குக்கிலும்; தருமன்தன் எதிர்
வாவின, நெடுங் கலை; வரத நூல் வலோர்
ஓவினர், உரைக்கவும் உணர்கலாமையால்.தருமபுத்திரனுக்கு நேர்ந்தஅபசகுனங்கள்.

தருமன்தன் எதிர் – தருமபுத்திரனது எதிரில், பல்லியும் –
கௌளிகளும், ஏவின – (துர்நிமித்தமாக ஒலித்துச் செல்லவேண்டாமென்பதைக்
குறிப்பால்) தெரிவித்தன; குக்கிலும் – செம்போத்துக்களும், இடத்திலே வர
தாவின – (வலப்பக்கத்திலிருந்து) (இடப்பக்கத்திலே தாவிச்சென்றன; நெடுங்
கலை-பெரிய கலைமான்கள், வாவின – தாவிக்கொண்டு எதிரிட்டன;  வரதம்
நூல்வலோர் – நன்மையைத்தரக்கூடிய சகுன சாஸ்திரங்களில் வல்ல
நிமித்திகர்கள், உரைக்கவும் – (இவ்வாறு நேரிட்ட தீநிமித்தங்களின்
தன்மையைத் தாம்) எடுத்துச் சொல்லிக்கொண்டிருக்கையிலும்,
உணர்கலாமையால் – (தருமபுத்திரன் அவற்றை) அறிந்து நடவாமையினால்,
ஓவினர் – (அறிவுகூறுதலை) ஒழிந்தார்கள்;  (எ – று.)

    தருமபுத்திரன் தீச்சகுனங்களின் தன்மையைத் தான்
அறிந்தவனாயிருந்தும் நிமித்திகர்கள் அப்பொழுது நேர்ந்த துர்நிமித்தங்களை
யெடுத்துக் கூறவும் அறியாதவன்போன்று சென்றது, தனதுபெரியதந்தையின்
சொல்லை மறுக்கலாகாதென்னுங் கடப்பாட்டினா லென்க.
தீப்பயன்விளைத்தற்கு உரிய இடத்திலிருந்து பல்லிகள் கொட்டியதையே,
பல்லிகள் ஏவினவாகக் குறித்தார்.  பல்லியும் குக்கிலும் – உம்மைகள் முறையே
எதிரதும் இறந்ததுந் தழுவியன.  பின்னர்நேரக்கூடிய நன்மைதீமைகளைச்
சகுனங்களின் மூலமாக முன்னமே அறிந்துகொள்ளுதற்குக்
கருவியாயிருத்தலால், அச்சாஸ்ரதித்தை ‘வரதநூல்’ என்றார்.  இனி, ‘மாக
நூல்வலோர்’ என்ற பாடத்திற்கு-ஆகாயத்திற்கிடக்குங் கிரகங்களின்
சஞ்சாரங்களைப்பற்றிக் கூறும் நூலாகிய சோதிடத்தில் வல்லவர்கள் என்பது
பொருள்.  ஓவினர், ஒருவு என்பதன் மரூஉவாகிய.  ஓவு – பகுதி.
உரைக்கவும், உம்மை – உயர்வுசிறப்பு.

     இது முதல் முப்பத்து நான்குகவிகள்-பெரும்பாலும் மூன்றாஞ் சீரொன்று
மாச்சீரும், மற்றைமூன்றும் விளச்சீர்களுமாகிய அளவடி நான்கு கொண்ட
கலிவிருத்தங்கள்.       

மடந்தையர் அளகமும், மாந்தர் மாலையும்,
உடைந்து உகு கட கரி மதமும், உன்னியே,
தடம்தொறும் முரல் அளி, தமரின் நண்புஉறத்
தொடர்ந்து, உடன் வர வர, சோலை எய்தினார்.யாவரும் ஒருசோலையிற்சேர்தல்.

தடம்தொறும்-(வழியிலுள்ள) தடாகங்கள்தோறும் முரல் –
(மலர்களில்மொய்த்து) ரீங்காரஞ்செய்கிற, அளி – வண்டுகள்,-மடந்தையர்
அளகமும் – மகளிரது கூந்தலையும், மாந்தர் மாலையும் – ஆடவர்கள்
அணிந்துள்ள மலர்மாலைகளையும், கரிகடம் உடைந்து உகுமதமும் –
யானைகளின் கன்னங்களிலிருந்து வெளிப்பட்டு மிக்குச்சொரிகிற மதநீரையும்,
உன்னி – (தாங்கள் சென்றடைய) நினைத்து, தமரின் நண்புஉற தொடர்ந்து
உடன் வரவர – சுற்றத்தார்போல நட்பு மிகுதியாக உண்டாகப் பின் தொடர்ந்து
நெருங்கி வர,-(சென்று),-சோலை எய்தினார்-(பாண்டவர்கள் தங்கள்சேனையோடு
வழியிலிருந்ததொரு) சோலையிற்சென்று சேர்ந்தார்கள்; (எ – று.)

    மலர்களிற்போலவே மகளிரது கூந்தலிலும் யானைகளின் மதநீரிலும்
நறுமணமிகுதியால் வண்டுகள் மொய்க்குமென்க.  பழகிய மணத்தைவிட்டுப்
புதுமணத்தை விரும்பித்தொடர்தல், வண்டுகட்கு இயற்கை.  ‘மடந்தையர்’
என்றது, பருவப்பெயராகாமல் மகளிரென்ற மாத்திரமாய் நின்றது.  முன்னெற்றி
மயிரைக் குறிக்கிற அளகம் என்றசொல், கூந்தலெனப் பொதுப்பொருளை
யுணர்த்திற்று.  ‘மடந்தையர்’ என முன்வந்ததனால், ‘மாந்தர்’ என்னும்
பொதுப்பெயர் – பெண்பாலையொழித்து ஆண் பாலைக்குறித்தது;
ஒன்றொழிபொதுச்சொல்.  வரவர, அடுக்கு மிகுதிப்பொருளது

சம்பகம், பாடலம், தமால நாள்மலர்,
வம்பு எழ மிலைச்சுவார்; வாவி ஆடுவார்;
செம் பலவு, ஆமிரம், கதலித் தீம் கனி,
உம்பரின் அமிழ்துஎன, உடன் அருந்துவார்.இரண்டுகவிகள் -சேனையிலுள்ளார் சோலையில்
நீர்விளையாட்டு நிகழ்த்தியபின், பாண்டவர்கள் சேனையோடு
மருதநிலங் கடத்தல்கூறும்.

[இவ்விரண்டும் – ஒருதொடர்; ஒருங்கு உரை உரைக்கப்படுகின்றது.]

     (இ -ள்.) (அச்சேனையிலுள்ளவர்கள்),-(92) சம்பகம் – சண்பக
மரங்களும், பாடலம் – பாதிரிமரங்களும், தமாலம் – பச்சிலை மரங்களும்
ஆகிய இவற்றினுடைய, நாள் மலர் – அன்றுமலர்ந்த [புதிய] மலர்களை
(ப்பறித்து.) வம்புஎழ மிலைச்சுவார் – வாசனை வீசுமாறு சூடிக்கொள்வார்கள்;
வாவி ஆடுவார் – (அங்குள்ள) குளங்களில் நீராடுவார்கள்; செம் பலவு –
செவ்விய பலாமரங்களும், ஆமிரம் – மாமரங்களும், கதலி – வாழை
மரங்களும் ஆகிய இவற்றினது, தீம் கனி – இனிய பழங்களை, உம்பரின்
அமிழ்து என – தேவாமிருதத்தைப்போல, உடன் அருந்துவார் – பலர்
கூடியுண் பார்கள்;  (எ – று.)

     (92) ‘சம்பகம். . . . . . . . மிலைச்சுவார்’ என்பது – பூக்கொய்தலையும்,
‘வாவியாடுவார்’ என்பது – புனல்விளையாட்டையும், பின்னிரண்டடிகள் –
உண்டாட்டையுங் கூறுவனவாம்;  மேல்வருவனவற்றையும், இவ்வாறே
ஆராய்ந்துகொள்க; பூக்கொய்தல் முதலியன கூறுதல்,
பெருங்காப்பியத்தினிலக்கணமாம்.  பலாப்பழம், மாம்பழம், வாழைப்பழம் என்ற
இவற்றை, ‘முக்கனி’ என்றுகூறுதல் மரபு.  பலவு – ‘பலா’ என்னும் குறியதன்
கீழ் ஆக் குறுகி உகரமேற்றது.  தீங்கனி – உரிச்சொற்றொடர்; தீம் கனி
எனப்பிரியும்.  உம்பர் – இடவாகுபெயர்.  உடனருந்துவார் என்பதற்கு – தமது
மனைவிமார்களோடு இருந்து உண்பார்கள் எனவும் பொருள் கூறலாம்.
இச்செய்யுளிற்கூறிய சம்பகம் முதலியனவும், அடுத்த செய்யுளிற்கூறும் கமுகு
முதலியனவும் – மருதநிலத்துக் கருப்பொருள்கள். (மருதம் – நாடும்
நாடுசார்ந்த இடமும்.)   

பச்சிளங் கமுகின் மென் பாளை சூடுவார்;
அச் செழுங் காய் கனி கவர்ந்து அருந்துவார்;
கொச்சை அம் கடைசியர் குழுமி வாழ்த்தவே,
வச்சிரம் போல்பவர் மருதம் நீங்கினார்.இரண்டுகவிகள் -சேனையிலுள்ளார் சோலையில்
நீர்விளையாட்டு நிகழ்த்தியபின், பாண்டவர்கள் சேனையோடு
மருதநிலங் கடத்தல்கூறும்.

[இவ்விரண்டும் – ஒருதொடர்; ஒருங்கு உரை உரைக்கப்படுகின்றது.]

     (இ -ள்.) (93) பச இளங் கமுகின் மெல் பாளை சூடுவார் – பசிய
இளமையாகிய பாக்குமரங்களின் பாளைகளைக்கொய்து அணிந்து கொள்வார்கள்;
அ செழுங் காய்கனி கவர்ந்து அருந்துவார்-அந்தப்பாக்கு மரங்களின்
செழுமையான காய்களையும் பழங்களையும் பறித்து உண்பார்கள்; (இவ்வாறு
தம்சேனையிலுள்ளார் மகிழ்ந்து வர), வச்சிரம் போல்பவர் –
வச்சிரரத்தினம்போலச் சிறந்த பாண்டவர்கள், கொச்சை அம் கடைசியர் குழுமி
வாழ்த்த – நிரம்பாச்சொற்களையுடைய அழகிய மருதநிலத்து மகளிர்
கூட்டங்கூடி வாழ்த்துக்கூற, மருதம் நீங்கினார் – மருதநிலத்தைக் கடந்து
சென்றார்கள்;  (எ – று.)

     (93) கமுகு – க்ரமுகம் என்னும் வடசொல்லின் விகாரம்.  கடைசியர் –
மருதநிலத்து மகளிர்: (ஆடவர், ‘கடையர்’ எனப்படுவர்.) வச்சிரரத்தினத்தைப்
பாண்டவர்கட்கு உயர்வுத்தன்மையில் உவமையாகக் கொள்ளுதலன்றி,
உடல்வலிமைக்கும் உவமையாகக் கொள்ளலாம்.  

தடா நிறை வெண்ணெயும், தயிரும் கொண்டு, எதிர்
அடா, முடை நாறுதோள் ஆயர் கைதொழ,
படா முதல் முல்லையின் பரிமளம் கொளா,
கடா மலை வயவர் தண் கானம் எய்தினார்.பாண்டவர்கள்முல்லைநிலத்திற் சார்தல்.

கடாம் மலை வயவர் – மதமொழுகப்பெற்ற யானைச்
சேனையையுடைய பாண்டவர்கள்,-முடை நாறு தோள் ஆயர் – முடைநாற்றம்
வீசுகிற தோள்களையுடைய இடையர்கள், தடா நிறை வெண்ணெயும் தயிரும்
கொண்டு – மிடாக்களில் நிறைந்த வெண்ணெயையும் தயிரையும் (உபஹாரமாக)
எடுத்துக்கொண்டு, எதிர் அடா – எதிர்கொண்டுவந்து, கைதொழ – (தம்மைக்)
கை கூப்பி வணங்க,- படா முதல் முல்லையின் பரிமளம் கொளா – அழியாத முதன்மைபெற்ற முல்லைமலர்களின் நறுமணத்தை நுகர்ந்துகொண்டு,
தண் கானம் எய்தினார் – குளிர்ச்சியான முல்லை நிலத்தைச் சேர்ந்தார்கள்;
(எ- று.)

அரசர்கள் வருகையில் ஆங்காங்குள்ளார் தமக்கு உரிய பொருள்களைக்
காணிக்கையாகக்கொண்டு எதிர்கொள்ளும் மரபின்படி இடையர்கள்
வெண்ணெய் முதலிய முல்லைநிலத்துக் கருப்பொருள்களைக் கொணர்ந்து
எதிர்கொண்டன ரென்க.  (இவ்வாறே காளிதாஸமகாகவியும்-
இடையர்வெண்ணெயைக்காணிக்கையாகக் கொண்டு திலீபராசனை
எதிர்கொண்டாரென ரகுவம்சத்திற் கூறியுள்ளார்.) தடா – பெரும்பானை.
அடா, கொளா – ‘செய்யா’ என்னும் வாய்பாட்டு உடன்பாட்டு இறந்தகால
வினையெச்சம்.  முடை – பால் வெண்ணெய் இவற்றில் அளைவதனால்
நேர்வது.  ஆய் – சாதிப்பெயர்.  இந்நிலத்திற்கு முல்லைக்கொடி
சிறந்துநிற்றலால், ‘படாமுதல்முல்லை’ என்றார்.  முல்லை – அதன் மலர்க்கு
முதலாகுபெயர்.  முல்லை நிலம் – காடும், காடுசார்ந்த இடமும்.  படா –
ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்.  கடாம் – கடம் என்பதன் நீட்டல்.
‘கடம்’ என்னும் கன்னத்தின்பெயர் அதனினின்று பெருகும் மதநீர்க்கு –
இடவாகுபெயர்.  ‘கடாமலை’ எனவே, யானையாயிற்று;  அடையடுத்த
உவமவாகுபெயர்.  ‘கடாமலையைவர்’ என்றும் பாடம்.

தேன்இனம் செறிதரு தெரியல் வேலினான்-
தான் இரங்கு அருள் மிகு தருமன் ஆதலால்,
கானில் அங்கு உறைதரு கலைகளோடு இள
மான்இனம் பேர்கலா, மருங்கு வைகுமால்.இதுமுதல் மூன்றுகவிகள் -முல்லை நிலத்து
நிகழ்ச்சியைக் கூறும்.

தேன் இனம் செறிதரு தெரியல் வேலினான் – வண்டுகளின்
கூட்டம் நெருங்கி மொய்க்கப்பெற்ற மலர்மாலையை யணிந்தவனும்
வேலாயுதத்தை யுடையவனுமாகிய யுதிஷ்டிரராஜன், தான்-, இரங்கு அருள் மிகு
தருமன் ஆதலால் – (உயிர்களிடத்து) இரங்குகின்ற கருணைமிக்க
தருமமுடையவனாதலால்,-கானில் அங்கு உறைதரு கலைகளோடு –
அங்குக்காட்டில் வசிக்கிற ஆண்மான்களுடனே, இள மான் இனம்-இளம்
பெண்மான்களின் கூட்டம், பேர்கலா – (அஞ்சிப்) பெயர்ந்து
அப்பாற்செல்லாமல், மருங்கு வைகும் – (அத்தருமனது) சமீபத்திலேயே
நிற்கும்; (எ – று.)-ஆல் – அசை.

    யமதருமராசனது புதல்வனாதல்பற்றி யுதிஷ்டிரனுக்கு வழங்கும் ‘தருமன்’
என்ற பெயர்க்கு, ‘தருமமுள்ளவன் என வேறொரு காரணப் பொருள்
கற்பித்துக்கூறியது – பிரிநிலைநவிற்சியணியின் பாற்படும்.  ‘தருமபுத்திரனும்
அவன் வழிபட்டு நடக்குஞ் சேனைகளும் பிராணிகளைக்கொல்லாத
நல்லியல்புடைமையை மிருகங்களும் அறிந்தன’ என்று தருமபுத்திரனது
அருட்சிறப்பை விளக்கினார்: ரகுவம்சத்தில், காளிதாசமகாகவியும், ‘திலீபனது
தேரைப் பார்த்துக்கொண்டே மான்கள் வழியின் அருகிலேயே நின்றன’ எனக்
கூறியமை காண்க.  எளிதில்மருளுந் தன்மையன வாதல்பற்றி மான்களை எடுத்துக்
கூறினார். தெரியல்-விளங்குதல்; விளங்குகின்ற மாலைக்குத் தொழிலாகுபெயர்.
வேல் – மற்றை ஆயுதங்கட்கும் உபலக்ஷணம்.  சிவபெருமானுக்கும்,
யமனுக்கும், முருகக்கடவுட்கும் வேல் ஆயுத மாதலால், அது,
கவிகளாற்சிறப்பாக எடுத்து உரைக்கப்படும்.  கலை-ஆண்மான்.  பேர்கலா –
ஈறுகெட்ட எதிர்மறை வினையெச்சம்; முற்றெச்சமெனினும் இழுக்காது

செரு இளங் காளையர் சேனையின் திறம்
வெருவு இளம் பொதுவியர் விழைந்து காண்பபோல்,
மரு விளங்கு இதழி நீள் வனமும், மா மலர்க்
கருவிளங் கண்கொடு, கலந்து கண்டவே.

செரு இளங் காளையர்-போரிற்சிறந்த இளவெருது போன்ற
பாண்டவர்களது, சேனையின் திறம் – சேனையின் திறம் – சேனையின்
வகையை, வெருவு இளம் பொதுவியர் விழைந்து காண்ப போல் –
அஞ்சுந்தன்மையுள்ள இளமையையுடைய இடைச்சியர்கள் விரும்பிக்
காண்பதுபோல,-மரு விளங்கு இதழி நீள் வனமும் – வாசனையோடு
கூடிவிளங்குகின்ற கொன்றைமரங்கள் (நிறைந்த) பெரிய காடுகளும்
[முல்லைநிலமும்], கருவிள மாமலர் கண் கொடு – காக்கணஞ் செடியினது
பெரிய மலர்களாகிய கண்களைக் கொண்டு, கலந்து கண்ட – பொருந்திப்
பார்த்தன;  (எ – று.)

    பாண்டவர்கள் சேனையுடன் சென்ற முல்லைநிலத்திலே காக்கணம் பூ
மலர்ந்துள்ளதை, கொன்றை மரங்கள் அடர்ந்த அந்த முல்லைநிலம் தனது
கண்களால் அச்சேனையின் திறத்தை நோக்குவதாகக் குறித்தார்:
தற்குறிப்பேற்றவணி. இவ்வணி ‘கருவிளமா மலர்க்கண்’ என்ற
உருவகவணியைஅங்கமாகக் கொண்டுவந்தது.  முன்னிரண்டடி – உவமையணி.
‘இனி’ ‘இதழிநீள்வனம்’ என்பதைக் கொன்றைமரக்காடு என்றே கொண்டு,
‘அந்நிலத்திலுள்ள இடைச்சியர்கள் அச்சத்தால் மரங்களில் மறைந்து நின்று
சேனையின் திறத்தைக் காண்பதுபோல, கொன்றை மரங்களும்
கருவிளஞ்செடியோடு சேர்ந்து நின்று அக்கருவிளமலராகிய கண்களினால்
நோக்கின’ என்று கருத்துக் கூறுவாருமுளர்; அக்கருத்தில் உபமான
உபமேயங்கள் நன்கு இயையாமையை உய்த்துணர்க.  கருவிளமலர்
கண்களுக்கு உவமையாதலை “புல்லியகொம்புதானோர் கருவிளைபூத்ததேபோ,
லொல்கியோர் கொம்புபற்றி யொருகணால் நோக்கி நின்றாள்” என்னுஞ்
சிந்தாமணியாலும் அறிக.

     காளையர்- உவமைபற்றிவந்தபெயர்:  இது ஆகுபெயரன்று: ‘அர்’ என்ற
பலர்பால் விகுதியைப்பெற்றுவந்ததனால்.  மருதத்திற்கும் குறிஞ்சிக்கும்
இடையிலுள்ளதனால், அந்நடுநிலமான முல்லை நிலத்தில் வாழ்கிற சாதியர்க்கு,
‘இடையர்’ என்றும், ‘பொதுவர்’ என்றும் பெயர்களாயின; இடை, பொது
என்பவை- ஒருபொருளன. பொதுவியர் – பெண்பன்மை.  மகளிர்க்கு உரிய
நாற்குணங்களுள் அச்சமும் ஒன்றாதலால், ‘வெருவிளம்பொதுவியர்’என்றார்.
காண்ப – பலர்பால் எதிர்காலவினைமுற்று:  காண்பர் என்று பொருள்:  இனி,
‘காண்பது’ என்பதன் தொகுத்தலெனக் கொள்ளினுமாம்.  கொன்றை, கருவிளை
– முல்லைநிலத்துக்கருப்பொருள்கள்.  கண்ட – பலவின்பால்முற்று;  ‘கண்டதே’
என்றும் பாடம்.  ஈற்றடி – முற்றுமோனை.  கருவிளை+கண்=கருவிளங்கண்.
வேற்றுமையில் ஐகெட்டு அம்முச்சாரியை பெற்றது; [நன்-உயிர்-52]   

புழை நெடுந் தடக் கை வெம் போதகங்களை
மழை முகில் என, களி மயில்கள் ஆடின-
தழல் எழு கானகம் தண்ணெனும்படி
செழு மத அருவியின் திவலை வீசவே.

தழல் எழு கானகம் தண்ணெனும்படி – நெருப்புப்பற்றி
யெரிகிற அந்தக்காடும் குளிரும்படி,  செழு மதம் அருவியின் திவலை வீச-
செழுமையாகிய [மிக்க] மதநீர்ப்பெருக்கின் துளிகளைச் சொரிதலினால்,-
புழைநெடுந்தட கை வெம் போதகங்களை – துளை பொருந்திய நீண்ட பெரிய
துதிக்கையையுடைய கொடிய யானைகளை, மழை முகில் என – மழைபெய்யுங்
காளமேகமென்று கருதி, களி மயில்கள் – களிப்புடைய மயில்கள், ஆடின –
கூத்தாடின;  (எ – று.)-ஏ – ஈற்றசை.

    மேகத்தைக் கண்டு களிக்கும் இயல்புடைய மயில்கள், மதநீரை
மழையென்றும் அந்நீரைச்சொரியுங் கரிய யானைகளை மழை பொழியும்
மேகமென்றுங் கருதிக் கூத்தாடினவென்க; மயக்கவணி. மயில் -முல்லை
நிலத்திற்கு உரிய பறவை. (குறிஞ்சிக்கும் உரியது.)

வன நெறி கடந்து போய், மன்னவர்க்கு எலாம்
தினகரன் எனத் தகு செய்ய கோலினன்,
இனமுகில் தவழ்தலின், இரங்கு பேர் இசைத்
தனித வண் கிரி நெடுஞ் சாரல் எய்தினான்.தருமன் சேனையுடன்குறிஞ்சிநிலஞ் சேர்தல்.

மன்னவர்க்கு எலாம் தினகரன் என தகு செய்ய கோலினன் –
அரசர்களெல்லாருள்ளும் (விளக்கத்தாற்) சூரியனென்று சொல்லத்தக்கவனுஞ்
செங்கோலுடையவனுமாகிய தருமபுத்திரன்,- வனம் நெறி கடந்து போய் –
(இவ்வாறு) முல்லை நிலத்தின் வழியைக் கடந்து சென்று,-இனம் முகில்
தவழ்தலின்-கூட்டமான மேகங்கள் (தன்மீது) படிந்து செல்லுதலினால், இரங்கு
பேர் இசை தனிதம் – ஒலிக்கின்ற பேரிடிமுழக்கத்தை யுடைய, வள் கிரி –
பெரிய மலையினது, நெடுஞ் சாரல் – விசாலமான தாழ்வரையை, எய்தினான்-
போய்ச் சேர்ந்தான்; (எ – று.)

     இதனால், பாண்டவர்கள் மலையும் மலைசார்ந்த இடமுமாகிய குறிஞ்சி
நிலத்தையடைந்தமையைக் கூறினர். மன்னவர்க்கெலாந் தினகரன் = ராஜ
மார்த்தாண்டன்; கிரகங்களுட் சூரியன் ஒளியினால் மிக்குவிளங்குதல்போல
அரசர்களுள் தருமபுத்திரன் பெரும்புகழுடன் விளங்குவ னென்க.  திநகரன் –
(தனதுசேர்க்கையாற்) பகலை யுண்டாக்குபவன்.  தனிதம்-ஸ்தநிதம்:
மேககர்ச்சனை.  சாரல் – சார்ந்த இடத்திற்குத் தொழிலாகுபெயர்.   

குன்று உறை கட கரிக் குழாங்கள், சேனையின்
ஒன்றிய களிறு கண்டு, உட்கி, ஓடின;
துன்றிய புற இபச் சுவடு கண்டு, உடன்
சென்றில, வெகுண்டு, இவன் சேனை யானையே.இதுமுதல் மூன்றுகவிகள் -குறிஞ்சிநிலத்து நிகழ்ச்சியைக்
கூறும்.

குன்று உறை – மலைகளிலே வசிக்கின்ற, கட கரி குழாங்கள்-
மதயானைகளின் கூட்டங்கள், சேனையின் ஒன்றிய களிறு கண்டு –
(தருமபுத்திரனது) சேனையிலே திரளாகப்பொருந்திய  யானைகளைப் பார்த்து,
உட்கி – அச்சங்கொண்டு, ஓடின-; இவன் சேனை யானை – இந்தத்
தருமபுத்திரனது சேனையிலேயுள்ள யானைகள், துன்றிய புறம் இபம் சுவடு
கண்டு-நெருங்கிய வேற்று யானைகளின் அடிச்சுவடுகளைப் பார்த்து, வெகுண்டு
– கோபங்கொண்டு, உடன் சென்றில – (சேனைகளோடு) தொடர்ந்து செல்லாது
தனிப்பட்டன; (எ – று.)

    நாட்டுயானைகளும் காட்டுயானைகளும் ஒன்றையொன்று கண்டபொழுது
பகைக்குந் தன்மையவாதலால், நாட்டு யானைகள் கூட்டமாகவரக்கண்டு
காட்டுயானைகள் ஓடுதலும் அக்காட்டு யானைகளின் அடிவைப்புக்களைக்
கண்டு நாட்டுயானைகள் வெகுண்டு சேனையோடு செல்லாமையும் நிகழ்ந்தன
வென்க.  மலை யானைகள் அஞ்சியோடின வென்றதனால், தருமன்
சேனையானைகள் அக்காட்டு யானைகளினும் வலியன வென்பது போதரும்.
புறவு இபம் என்றுபிரித்து-குறிஞ்சிநிலத்து யானைகள் என்று பொருள் கூறினும்
பொருந்தும்.  இனி ஒருசாரார் இச்செய்யுட்கு வேறு வகையாகக் கருத்து
வருணிக்குமாறு:- குன்றுறை கடகரிக் கூட்டங்கள் தருமனது யானைகளைக்கண்டு
வெருவி யோடி விட்டன; அந்தயானைகளினுடைய அடிகளழுந்திய சுவடுகள்
புறங்காட்டிய சுவடுகளாயிருந்தமையால், அஞ்சி முதுகிட்ட அவைகளைத்
தொடர்ந்து பின்போதல் வீரமன்றெனக் கருதித் தருமனது யானைகள் போகாது
நின்றுவிட்டன; இதனால், வெருவிப்புறங்கொடுத்த வேந்தரைத் தருமன்
முதலாயினோர் தொடராரென்பது நன்கு வலியுறுத்தப்பட்டு, அன்னோர்
வீரத்தையும் மேன்மையையும் விளக்குமென்பது.  யானை – குறிஞ்சி
நிலக்கருப்பொருள்.  இபம் – வடசொல். சென்றில – எதிர்மறை யிறந்த
காலப்பலவின்பால்வினைமுற்று. 

வாளியின் வரும் பரிமாவின் வண் குரத்
தூளிகள் விசும்புறத் துன்றி ஓங்கலால்,
ஆளிகள் சிகரம் என்று அதிர்ந்து பாய்வன,
மீளியர் வேலின்வாய் வீழ்ந்து மாய்ந்தவே.

வாளியின் வரும்-அம்புபோல விசையாய்வருகின்ற, பரிமாவின்
– குதிரைகளினது, வள் குரம்-அழகிய குளம்புகளினால் எழுப்பப்படுகின்ற,
தூளிகள் – புழுதிகள், விசும்பு உற துன்றி ஓங்கலால் – ஆகாயத்திற் பொருந்த
நெருங்கியெழுவதனால்,- ஆளிகள் – (மலையில்வசிக்கின்ற) சிங்கங்கள், சிகரம்
என்று-(திரண்டெழுந்த அத்தூளிகளைத் தாங்கள் பாய்ந்து செல்வதற்குஉரிய)
மலைச் சிகரமென்று எண்ணி, அதிர்ந்து பாய்வன – கர்ச்சித்துக் கொண்டு
பாய்வனவாய், மீளியர் வேலின் வாய் வீழ்ந்து மாய்ந்த – (அத்தூளிகளால்
மறைக்கப்பட்டுநின்ற) சேனாவீரர்கள் கையிலேந்திய வேலாயுதத்தின் முனையில்
விழுந்து (தாமே) இறந் தொழிந்தன; (எ – று.) – இதனால், ஆராய்ச்சியின்றி
மனம்போன படி தொழில்செய்பவர் கேடுறுவரென்பது, தோன்றும்.

    குதிரைகள் மிக்கவிரைவுடன் நேராய்ச்செல்வதற்கு, அம்பு உவமையாம்.
பரிமா- இருபெயரொட்டுப் பண்புத்தொகை.  ஆளி – யாளியென்பதன் மரூஉ:
இதற்குச் சிங்கமென்று பொருள் கொள்வதன்றி, யானையைக் கொல்லவல்லதும்
துதிக்கையையுடையதுமாகிய, ஓர்மிருகவிசேடமெனக் கூறுவதுமுண்டு.  யாளி –
குறிஞ்சிநிலக்கருப்பொருள்களிலொன்று.  குரம், தூளீ, ஸிகரம் – வடசொற்கள்.
பாய்வன – முற்றெச்சம்.  மீளி – ஆண்பாற் சிறப்புப்பெயர்.  மாய்ந்த – ‘அன்’
சாரியை பெறாத பலவின்பால் வினைமுற்று.  குதிரைகளின் காற்குளம்பினால்
உயர வெழுந்த தூளிகளை யாளிகள் மலைச்சிகரமென்று மயங்கிய
வெனக்கூறியது-மயக்கவணி. அச்சேனை வீரர்களேந்திய வேற்படைகள்
சிங்கத்தை எளிதில் மாய்க்குமாறு மிக்க கூர்மையுடையனவென்பது, ஈற்றடியில்
விளங்கிற்று.     

கார் தவழ் கொடு முடிக் கான மால் வரை
வார் தவழ் முலை அரமாதரார் செவி,
தார் தவழ் தடம் புயத் தரணி மன்னவர்
தேர் தவழ் ஓதையின், செவிடு பட்டவால்.

கார் தவழ் கொடுமுடி – மேகங்கள் தவழ்ந்துசெல்லப்பெற்ற
சிகரங்களையுடைய, கானம் மால் வரை – காடுகள் சூழ்ந்த பெரிய
மலைகளிலே வசிக்கின்ற, வார் தவழ் முலை அரமாதரார் – கச்சையணிந்த
தனங்களையுடைய அரமகளிரது, செவி-காதுகள்,- தார் தவழ் தடம்புயம் –
மாலைகள் அசையப்பெற்ற பெரிய தோள்களையுடைய, தரணிமன்னவர் –
நிலவுலகத்து அரசர்களது, தேர் – தேர்கள், தவழ் – விரைந்து செல்லுதலினா
லுண்டான, ஓதையின் – பேராரவாரத்தினால், செவிடுபட்ட-செவிடுகளாயின; (எ
– று.)- ஆல் – ஈற்றசை.

     ஐவரும் பிறருமாகிய அரசர்களது தேர்கள் ஓடும்போது தோன்றிய
பேரோசையினால், மலையரமகளிரது செவிகள் செவிடாயினவென்க;
தொடர்புயர்வுநவிற்சியணி.  மிக்க பேரோசையினாற்காதுகள் செவிடுபடுதல்,
இயல்பு.  அரமாதர்-அமரமாதர் அல்லது அரம்பை+மாதர் என்பதன் விகாரம்.
வரையரமகளிர் – மலையில் வசிக்குந் தெய்வப் பெண்கள்.  

வரை நிலம் கழிந்து, எறி மகர வாரிதித்
திரை நிலம் புகுந்தனன், சேனை சூழ்வர-
புரை நிலம் கடந்து அறம் புரியும் நீர்மையான்,
உரை நிலம் கடந்த சீர் உரைகொள் பேரினான்.தருமபுத்திரன் சேனையுடன்நெய்தனிலத்தைச் சேர்தல்.

புரை நிலம் கடந்து – குற்றத்திற்கு (த் தான்) இடமாவதை
நீங்கி [குற்றமற்றவனாய்], அறம் புரியும் – தருமத்தையே செய்கின்ற,
நீர்மையான் – தன்மையுடையவனும், உரை நிலம் கடந்த சீர் உரை கொள்
பேரினான் – வாக்கின் எல்லைக்கு அடங்காத [வாயினால் அளவிட்டுச்
சொல்லமுடியாத] சிறந்த புகழ் மொழியைக்கொண்ட பெரும் பேரை
யுடையவனுமாகிய தருமபுத்திரன்.-சேனை சூழ்வர-சதுரங்க சேனைகளும்
(தன்னைச்) சூழ்ந்துவர, வரை நிலம் கழிந்து – குறிஞ்சி நிலத்தைவிட்டு நீங்கி,
எறி திரை மகரம் வாரிதி நிலம் – மோதுகின்ற அலைகளையும் சுறா
மீன்களையுமுடைய கடலைச் சார்ந்ததான (நெய்தல்) நிலத்தில், புகுந்தனன் –
பிரவேசித்தான்; (எ – று.)

     வாரிதி – நீர்தங்குமிடமெனக் கடலுக்குக் காரணக்குறி; வடசொல்.  சுறாமீன்கள் கடலிலேயே வாழ்வன;’மகராலயம்’ எனக்கடலுக்கு ஒரு
பெயரிருத்தலுங் காண்க.  கடலும், கடல்சார்ந்த இடமும் – நெய்தல்

ஒளி நலம் திகழ் வளை உறங்கு நல் நிழல்,
களி நறுஞ் சுரும்பு இமிர், கண்டல் வேலி சூழ்
புளினமும், கானலும், பொற்ப நோக்கினான்-
நளினமும் புறந்தரு நயன வேந்தனேதருமன்நெய்தனிலச்சிறப்பை நோக்குதல்.

நளினமும் புறந்தரும் நயனம் – செந்தாமரை மலரும்
[அழகிற்குத்தோற்றுப்] பின்னிடும்படியான [தாமரையினும் மிக அழகிய]
கண்களையுடைய, வேந்தன் – யுதிஷ்டிரராசன்,- ஒளி நலம் திகழ் வளை
உறங்கும் நல்நிழல் – மிக்கவொளி விளங்குகின்ற சங்குகள் தூங்கப்பெற்ற நல்ல
நிழலையுடையனவும், களி சுரும்பு இமிர் – (தேனுண்டதனாற்) களித்தலையுடைய
வண்டுகள் ரீங்காரஞ்செய்து மொய்க்கப்பெற்றவுமாகிய, நறும் கண்டல் –
வாசனையையுடைய தாழை மரங்கள், வேலி சூழ் – வேலி போற் சூழப்பெற்ற,
புளினமும்-மணற்குன்றுகளையும், கானலும்-கடற்கரைச் சோலைகளையும், பொற்பு
நோக்கினான்-இனிமையாகப் பார்த்தான்; (எ – று.)

     சங்கு, தாழை, மணற்குன்று, கானல் – இவை, நெய்தனிலத்திற்கு உரியன.
வளை – உட்சுழிந்திருப்பது எனச் சங்குக்குக் காரணக்குறி.  நளினமும், உம் –
உயர்வுசிறப்பு.  கண்களுக்குச் செந்தாமரைமலருவமை, செம்மை மென்மை
அழகுகளில்.   

பெருங் கட மலைக்குலம் பெயர்த்தும் வந்தன,
மருங்கு அடர் பேர் அணை வகுக்கவே’ எனா,
இருங் கட களிறு, தேர், எண் இல் சேனை, கண்டு,
அருங் கடல் வாய் திறந்து, அலறி ஆர்த்ததே.கடலொலியின் வருணனை.

அருங் கடல் – (அளவிடுதற்கு) அருமையான சமுத்திரமானது,-
இருங் கடம் களிறு தேர் எண் இல் சேனை கண்டு – பெரிய
மதயானைகளையும் தேர்களையுமுடைய கணக்கில்லாத (தருமபுத்திரனது)
சேனையைப் பார்த்து,- ‘மருங்கு அடர்பேர் அணைவகுக்க – தன்னிடத்தே
நெருங்கிய பெரிய சேதுவைக் கட்டுவதற்காக, பெருங் கடம் மலைகுலம்
பெயர்த்தும் வந்தன – பெருங்காடுகளையுடைய மலைகளின் கூட்டம் மீண்டும்
வந்துள்ளன,’ எனா – என்றுகருதி, வாய்திறந்து அலறி ஆர்த்தது –
வாய்விட்டுக் கதறிப் பேரொலிசெய்தது; (எ – று.)

    தருமபுத்திரனது சேனையிலுள்ள யானைகளையும் தேர்களையும் கண்டு,
கடல், மீண்டும் தன்னைத் தூர்த்து அணைகட்டுதற்கு மலைகள் வந்தனவெனக்
கருதிக் கதறியழுத தென்க.  கடல் இயல்பாகப் பேரொலிசெய்வதை, தன்மீது
அணைகட்டுவதாக வெண்ணிக் கதறியதெனக் கூறியது, ஏதுத்தற்குறிப்பேற்றவணி;
இவ்வணி, களிறுகளையும் தேர்களையும் மலைகளென்று கருதியதாகிய
மயக்கவணியை அங்கமாகக் கொண்டு வந்தது. பெருந்தோற்றத்தினால்
யானைகட்கும் தேர்கட்கும் மலை உவமையாம். இராமபிரான் முன்னாளிற்
சேனைகளைக்கொண்டு கடலிற் சேது பந்தனஞ்செய்ததை நினைத்து, ‘பெயர்த்தும்’
என்றார்.  முதலடியில், கடம் – காடு.  இரண்டாமடியில், ஏகாரம் – தேற்றம்;
நான்காமடியில், ஏகாரம் ஈற்றசை. எனா – ‘செய்யா’ என்னும் வாய்பாட்டு
உடன்பாட்டு இறந்தகால வினையெச்சம்.

நல் நெடுந் துறை எலாம் நாளிகேரமோடு
இன் நெடும் பனங் கனி எடுத்து அருந்தினார்;
புன்னையின் புது மலர் புனைந்து, கைதையின்
மென் நிழல் வைகினார்;-விலாச வீரரே.அங்குச் சேனாவீரர்கள்உண்டாடுதல் முதலியன.

விலாசம் வீரர் – உற்சாகமாயிருக்குந் தன்மையுள்ள சேனா
வீரர்கள்,-நல் நெடுந் துறை எலாம் – (அந்நெய்தனிலத்திலுள்ள) நல்ல பெரிய
நீர்த்துறைகளிலெல்லாம், நாளிகேரமோடு – (மிகுதியாகவிருக்கின்ற)
தேங்காய்களையும், இன் நெடும் பனங்கனி – இனிய பெரிய பனம்
பழங்களையும், எடுத்து-, அருந்தினார்-புசித்தார்கள்; புன்னையின் புதுமலர்
புனைந்து-புன்னைமரத்தினது புதிய [அன்று மலர்ந்த] பூக்களை (க்கொய்து)
சூடி, கைதையின் மெல் நிழல் வைகினார் – தாழைமரங்களின் இனியநிழலிலே
தங்கி இளைப்பாறினார்கள்; (எ – று.)

    ‘அருந்தினார்’ என்றதனால் உண்டாட்டும், ‘மலர்புனைந்து’ என்றதனால்
பூக்கொய்தலும் கூறப்பட்டன.  நீரும் மணலும் நிறைந்துள்ள இடங்களில்
தெங்கு செழித்துவளருந் தன்மையது.  தெங்கு, பனை, புன்னை, தாழை –
நெய்தனிலக் கருப்பொருள்கள்.  நாளிகேரம் என்ற தற்சம வடசொல்,
அப்பாஷையில் மரத்தையேயன்றி அம்மரத்தின் காய்களையுங் குறிக்குமாதலால்
இங்கு ஆகுபெயரன்று.  இயற்பெயரேயாம்: பனை+கனி=பனங்கனி;
வேற்றுமையில் ஈற்று ஐகெட்டு அம்முச்சாரியை பெற்றது; (நன்: உயிர் – 52.)
விலாஸவீரர் – வடசொற்றொடர்.   

நா நலம் புனல் கெழு நாடும், கானமும்,
ஏனல் அம் புனக்கிரி இடமும், நெய்தல் அம்
கானலும், இவ் வகை கடந்து, காவலன்
தூநலம் திகழ் பதி தோன்ற, எய்தினார்.பாண்டவர்கள்அத்தினாபுரியை நெருங்குதல்.

பாண்டவர்கள்),-நா நலம் புனல்கெழு நாடும் – நாவுக்கு
இனிமையான நீர்நிறைந்த மருத நிலத்தையும், கானமும்-முல்லை நிலத்தையும்,
அம் ஏனல் புனம் கிரி இடமும் – அழகிய தினைக்கொல்லைகளையுடைய
குறிஞ்சி நிலத்தையும், அம் கானல் நெய்தலும் – அழகிய
கடற்கரைச்சோலைகளையுடைய நெய்தனிலத்தையும், இ வகை கடந்து –
இவ்வாறே தாண்டிச்சென்று,-காவலன் தூ நலம் திகழ் பதி தோன்ற –
துரியோதனராசனது பரிசுத்தமாகிய அழகுமிக்க அத்தினாபுரி எதிரிற்காணப்பட,
எய்தினார் – அருகிற்சேர்ந்தார்கள்; (எ – று.)

     கீழ்ப் பலசெய்யுள்களில் வகுத்துக்கூறியதை, இச்செய்யுளில் முதல்
மூன்றடிகளால் தொகுத்துக்கூறினார்.  ‘தண்ணந்துறைவன்’ என்னுமிடத்திற்போல,
‘ஏனலம்புனம்’ ‘நெய்தலங்கானல்’ என்னுமிடங்களில், அம்-சாரியை யெனினுமாம்.
ஏனல்-குறிஞ்சி நிலக்கருப்பொருள். கிரியிடம் – மலை சார்ந்த இடம்; எனவே
குறிஞ்சியாயிற்று.  கிரி-வடசொல்.     

அத்தினபுரிதனக்கு அருகு வால் வளை
முத்துஇனம் நிலவு எழ, முகைக்கும் தாமரைத்
தொத்தின பொய்கையும், சுரும்பு அறா மலர்க்
கொத்தின சோலையும், குறுகி, வைகினார்.பாண்டவர்கள்அந்நகரத்தின் புறச்சோலையில் தங்குதல்.

பாண்டவர்கள்), – அத்தினாபுரி தனக்கு அருகு –
அத்திநபுரிக்குச் சமீபத்தில், – வால் வளை முத்து இனம் நிலவு
எழவெண்மையான சங்குகள் ஈன்ற முத்துக்கூட்டங்களினால் நிலாவொளி
யுண்டாக, (அதனால்), முகைக்கும் – (பகலில்) குவியுந் தன்மையுள்ள, தாமரை
தொத்தின – தாமரைமலர்களின் கூட்டங்களையுடைய, பொய்கைஉம் –
தாடகத்தையும்,- சுரும்பு அறா மலர் கொத்தின சோலைஉம் – வண்டுகள்
நீங்காத பூங்கொத்துக்களையுடைய சோலையையும், குறுகி – கிட்டி, வைகினார்
– தங்கினார்கள்; (எ – று.)

    பாண்டவர்கள் தாமரைத் தடாகங்களையுடைய புறநகர்ச், சோலையில்
தங்கின ரென்றவாறு.  முத்துக்களின் ஒளியை நிலவொளியாகக்கருதிப்
பகற்காலத்திலுமுட்படத் தாமரைமலர் குவிந்து நிற்குமென்றது – மயக்கவணி.
தாமரைமலர் சூரியனைக் கண்டால் மலருமெனவும், இரவில் சந்திரனைக்
கண்டால் குவியுமெனவுங் கூறுதல், கவிசமயம்.  மலர்ந்த பின்னும் கூம்புதல்,
நீர்ப்பூக்களின் இயல்பு.  இங்கு, முத்துக்கள் – சங்கினின்று உண்டானவை.
“தந்தி வராகமருப் பிப்பி பூகந் தழை கதலி, நந்து சலஞ்சல மீன்றலை கொக்கு
நளின மின்னார், கந்தரஞ் சாலி கழை கன்னலாவின்பல் கட்செவி கா, ரிந்து
வுடும்பு கராமுத்தமீனு மிருபதுமே” என்பதனால், முத்துப்பிறக்குமிடங்கள்
இன்னவையென அறிக.  தொத்தின கொத்தின – குறிப்புப்பெயரெச்சங்கள்.
அறா – ஈறுகெட்ட எதிர்மறைப்பெயரெச்சம்.  

மொட்டின பரு மணி முடிகொள் தேர்ப் பரி,
வெட்டின பரிகளும், வெம்மை ஆறின;
மட்டின பரிமள மரங்கள் யாவையும்
கட்டின, கழை பொரு கவள யானையே.குதிரைகள்இளைப்பாறுதலும், யானைகள்
கட்டப்படுதலும்.

மொட்டின – மொட்டென்னும் உறுப்பையுடையனவாய், பரு
மணி முடி கொள் – பருத்த மணிகளிழைத்துச் செய்யப்பட்ட சிகரத்தைக்
கொண்டுள்ள, தேர் – தேர்களிற்கட்டிய, பரி – குதிரைகளும், வெட்டின
பரிகளும் – (தேரிலே கட்டப்படாமல்) வேறாக வந்த (ஏறு) குதிரைகளும்,
வெம்மை ஆறின – (நடந்துவந்ததனாலுண்டான) வெப்பம் [இளைப்புத்]
தீர்ந்தன; கழைபொரு – மூங்கிலினாலாகிய குத்துக்கோலைச்
சீறுந்தன்மையனவான, கவளம் யானை – கவளத்தையுண்ணும் யானைகள், –
மட்டின பரிமளம் மரங்கள் யாவையும் – தேனையுடையனவாகிய நறுமணமுள்ள
மரங்களிலெல்லாம், கட்டின – கட்டப்பட்டன; (எ – று.)

     மொட்டு – தாமரைமலரின் வடிவமாகச்செய்து தேரின்முன்னிடத்து
வைக்கப்படுவதோ ருறுப்பு; இதனைக் கொடிஞ்சியென்று கூறுதலுமுண்டு.  முடி
– (தேரின்) தலையிடம்.  இனி, ‘தேர்ப்பரிவெட்டின பரிகளும் வெம்மையாறின’
என்பதற்கு-தேர் – தேரினின்று, பரி – குதிரைகள், வெட்டின –
அவிழ்க்கப்பட்டன; பரிகளும் – (தேரினின்று அவிழ்க்கப்பட்டனவும் தனியே
மனிதர்கள் ஏறிச்செலுத்தினவுமான) குதிரைகளெல்லாம், வெம்மையாறின
என்றும் பதவுரை கூறலாம்.  மட்டு – தேன்.  தேவதாரு சந்தனம் முதலிய
நறுமணமுள்ள மரங்களில் யானைகளைக் கட்டுதல் மரபாதலால், ‘பரிமள
மரங்கள் யாவையும் கட்டின…………யானை’ என்றார்; “தேவதாரத்தும் சந்தினும்
பூட்டின சிலமா” என்றார் பிறரும்.  கட்டின – செயப்பாட்டுவினைப்பொருளில்
வந்த செய்வினை; செயப்படுபொருளைச் செய்ததுபோலக் கூறியது. கழைபொரு
யானை – “பரிக்கோல் யாவுந் தூரத்தே, காணினு நின்று கொதிப்பது” என்பர்
மேலும். கவளம் – கபளம்; யானையுணவு; வடசொல். 

தரித்தனர், வீரரும், தம்தம் மாதரும்;
சரித்தன, சும்மைகள் தங்கு பண்டியும்;
பரித்தன நல் நிறப் படங்கு வீடுகள்
விரித்தனர், இடம்தொறும் வேந்தர் எய்தினார்.யாவரும் இளைப்பாறுதல்.

வீரரும் – சேனாவீரர்களும், தம் தம் மாதரும்-
அவரவர்களுடைய மனைவியர்களும், தரித்தனர் – இளைப்பாறினார்கள்;
சும்மைகள் தங்கு பண்டியும் – பாரங்களையேற்றியுள்ள வண்டிகளும், சரித்தன
– சாய்த்துவிடப்பட்டன; வேந்தர்-அரசர்கள்,-இடம் தொறும் –
(அச்சோலையின்) பலவிடங்களிலும், நல் நிறம் பரித்தன படங்கு வீடுகள்
விரித்தனர் – அழகிய நிறங்களைப் பெற்றுள்ளனவான கூடாரமாகிய வீடுகளைப்
பரப்பியமைத்துக் கொண்டவர்களாய், எய்தினார் – (அவற்றிற்) சேர்ந்து
தங்கினார்கள்; (எ – று.)

     பண்டிகள் சரித்தல் – இழுக்கும் பிராணிகளை யவிழ்த்து நுகம் தரையிற்
படும்படி பண்டிகளைச் சாய்த்துவிடுதல்; இனி, சரித்தன – சுமைகளை யிறக்கப்
பெற்றன எனவுங் கூறலாம்.  சும்மை = சுமை: விரித்தல்.  அரசர்கள்
வேற்றுநாட்டுக்குச் செல்லும்பொழுது ஆங்காங்குத் தங்கி வசிக்கும்படி
வஸ்திரங்களினால் மாளிகைகள்போல அறைகள் முதலியன அமைத்துக்
கூடாரங் கட்டிக்கொள்ளும் மரபு, பின்னிரண்டடிகளிற் கூறப்பட்டது.
விரித்தனர் – முற்றெச்சம்.

கை வரு தண்டுடைக் காளை, வெஞ் சிலை
தைவரு செங் கையான், தாரை வெம் பரி
மெய் வரு குமரன், வேல் விடலை, வேந்தனோடு,
ஐவரும் அமர்ந்தனர், ஆண்மை ஏறு அனார்.110.- பாண்டவரைவரும்இளைப்பாறுதல்.

கை வரு தண்டு உடை காளை – கையிற்பிடித்த
கதாயுதத்தையுடைய இளவெருதுபோன்றவனாகிய வீமனும், வெம்சிலை தைவரு
செம் கையான்  – கொடிய வில்லைப்பிடித்த சிவந்த கையையுடையவனான
அருச்சுனனும், தாரை வெம் பரி மெய் வரு குமரன் – ஐவகை
நடைகளையுடைய வேகமுள்ள குதிரையை நடத்துவதில் உண்மையான
அறிவுபொருந்திய இளவீரனாகிய நகுலனும், வேல் விடலை – வேலாயுதத்தைத்
தாங்கிய சகதேவனும், வேந்தனோடு – யுதிஷ்டிரராஜனும், (ஆகிய), ஆண்மை
ஏறு அனார் ஐவரும் – வீரத்தன்மையில் ஆண்சிங்கத்தை யொத்தவர்களாகிய
பாண்டவரைவரும், அமர்ந்தனர் – (அங்குத்) தங்கியிருந்தார்கள்;

     வீமன் கதாயுதத்திலும், அருச்சுனன் விற்போரிலும், நகுலன் குதிரைத்
தொழிலிலும், சகதேவன் தேற்போரிலும் வல்லவராதலால், அவ்வவர்கட்கு
ஏற்குமாறு அடைமொழி கொடுத்துக்கூறினார்.  வீமசேனனது கதாயுதம்
சத்துருகாதினி யென்றும், அருச்சுனனது வில் காண்டீவமென்றும் பெயர்
பெறும்.  கைவரு – மிகப் பழகிய எனினுமாம்.  தண்டு – தண்டம் என்பதன்
விகாரம்.  தைவருதல் – தடவுதல்; தைவா – பகுதி.  குமரன் –
குமாரனென்றதன் குறுக்கல்: மன்மதனையும் குற்சித ரூபமுடையவனென்னும்படி
மிக்க கட்டழகுள்ளவனென்று பொருள்படும்; முருகக்கடவுளைக் குறிக்கும்
இப்பெயர், அவனைப்போன்ற வீரனுக்கு உவமையாகுபெயர்.  விடலை –
ஆண்பாற் சிறப்புப்பெயர். 

மறத்து இருந் தானையான் வஞ்சம் எண்ணினான்,
அறத்து இருந்திலன்’ எனா அஞ்சி, அந்த ஊர்
புறத்து இருந்தது என, புனிதன் பாசறை
நிறத்து இருந்தது; பிற நிகர்ப்ப இல்லையே.111.- பாசறை வருணனை. 

மறத்து இருந் தானையான் – (தன்னிடத்து மிகுதியாக)
அதருமத்தைக்கொண்ட பெரியசேனையை யுடையவனாகிய துரியோதனன்,
வஞ்சம் எண்ணினான் – (நியாயவழியிற்செல்லும் பாண்டவர்களை) மோசஞ்
செய்ய எண்ணினவனாகி, அறத்து இருந்திலன் – தருமவழியில்
(மனம்பொருந்தி) நடக்கவில்லை’, எனா – என்று, அஞ்சி – (அவனது அருகிற்
செல்வதற்குப்) பயந்து, அந்த ஊர் – (புறப்பட்டு) அங்குவந்த இந்திரப்பிரத்த
நகரமானது, புறத்து இருந்தது – (அத்துரியோதனனது நகரத்திற்கு)
வெளியிடத்தில் தங்கிவிட்டது, என – என்று சொல்லும்படி, புனிதன் பாசறை -பரிசுத்தனாகிய தருமபுத்திரனது படைவீடு, நிறத்து இருந்தது – மேன்மையுடன்
விளங்கியிருந்தது; (இவ்வாறு வருணித்துச் சொல்வதன்றி), பிற நிகர்ப்ப இல்லை
– வேறே ஈடாகச்சொல்லும்படி ஒப்பானபொருள் எவையுமில்லை; (எ – று.)

    இந்திரப்பிரத்தநகரத்தை ஆண்டுகொண்டிருந்த யுதிஷ்டிர ராஜன்
தன்சேனையோடும் புறப்பட்டுவந்து அத்திநாபுரத்திற்கு வெளியிலுள்ள
சோலையிற் பாசறையமைத்துத் தங்கியிருந்த தோற்றத்தை, புறப்பட்டுவந்த
இந்திரப்பிரத்தநகரம் வஞ்சனைக் கருத்தும் அக்கிரமச்செய்கையுமுடையவனான
துரியோதனனது நகரத்தினுட் செல்ல விருப்பங்கொள்ளாமல் வெளியிலேயே
தங்கியதுபோலுமென வருணித்தார்: தன்மைத்தற்குறிப்பேற்றவணி.
அப்பாசறையிலிருந்தவர்கள் யாவரும் இந்திரப்பிரத்தநகரத்தவர்களாதலினால்,
அப்பாசறை, இந்திரப்பிரத்தநகரமாகவே கொள்ளப் பட்டதென்க.  இனி,
துரியோதனனது அக்கிரமச் செய்கைக்கு அஞ்சி, அவனது ஆளுகைக்கு
உள்நில்லாது அத்திநபுரமே வெளியில் வந்திட்டதென வருணித்தவாறுமாம்.
‘அந்தவூர்ப்புறத்திருந்தது’ என்ற பாடத்திற்கு, வஞ்சி யென்று பிரித்து, அதற்குத்
தருமதேவதையெனப் பொருள் கொண்டு, அறநெறியினின்று வழுவாத
தருமபுத்திரன் பாசறையில் தங்கியிருந்ததை, துரியோதனனைக்
கொடுங்கோலுடைய னெனக்கொண்டு அவனது நகரத்திற்கு வெளியிலேயே
தருமதேவதை தங்கிவிட்டதுபோலு மென வருணித்ததாகக் கொள்ளலுமாம்.
மறம் – அறமென்பதன் எதிர் மொழி: (செய்யத்தகாதது இதுவென
நூல்களினால்) மறுக்கப்பட்டதெனப் பொருள்படும்.  அறம் –
(செய்யவேண்டியது இதுவென நூல்களினால்) வரையறுக்கப்பட்டதெனப்
பொருள்படும்.  பாசறை – சேனையுடன் சென்றோர் உறையுமிடம்.  நிகர்ப்ப –
பலவின்பாற்பெயர்.    

மீண்டவர், வரி சிலை விதுரன் ஏவலால்,
பாண்டவர் வரவு, முன் பணிந்து, கூறவே,
மாண்டவர் குறிப்புறா மாய வஞ்சகம்
பூண்டவர் களித்து, மெய் புளகம் ஏறினார்.பாண்டவர்வரவுகேட்டுத்துரியோதனாதியர் மகிழ்தல்.

மீண்டவர்-திரும்பிவந்ததூதர்கள்,- வரிசிலை வி துரன்
ஏவலால்-கட்டமைந்த வில்லையுடைய விதுரனது கட்டளையினால், பாண்டவர்
வரவு – பாண்டவர்கள் (புறநகர்ச்சோலையில்) வந்துள்ளதை, முன் பணிந்து
கூற- (திருதராஷ்டிரனுக்கு) எதிரில் (வந்து) வணங்கிச்சொல்ல,- (அதுகேட்டு),
மாண்டவர் குறிப்புறா மாயம் வஞ்சகம் பூண்டவர் – மாட்சிமைப் பட்ட
பெரியோர்கள் (தமது மனத்தினால்) நினைக்கவும் மாட்டாத மாயமான வஞ்சகச்
செயலை மேற்கொண்டவர்களாகிய துரியோதனாதியர், களித்து – மகிழ்ச்சி
கொண்டு, மெய் புளகம் ஏறினார் – உடம்பில் மயிர்ச்சிலிர்ப்பு மிகப்
பெற்றார்கள்; (எ – று.)

    இத்தூதர்கள், பாண்டவர் செய்தியை யுணர்ந்துவருமாறு
துரியோதனாதியரால் அனுப்பப்பட்டுச் சென்றவ ராதலால், இங்கு ‘மீண்டவர்’
எனப்பட்டனர்.  தருமபுத்திரன் முதலியோர் வந்த செய்தியைக் கேள்வியுற்ற
துரியோதனாதியர் ‘இனிச் சூதாடி அவரை எளிதில் வென்றுவிடலாம்’ என்ற
கருத்தினால் மிக்க மகிழ்ச்சிகொண்டு மயிர்சிலிர்க்கப்பெற்றன ரென்க.
மாண்டவர் – மாட்சிமைப்பட்டவர்; மாண் – பகுதி.  (இச்சொல் இறந்தவரென்

தேசு அறை இடங்களும், தேம் கொள் கானமும்,
மூசு அறை மதுகரம் மொய்த்த சோலையும்,
வீசு அறல் வன நதி விதமும், மேல்கொளப்
பாசறை இருந்தவா பகரல் ஆகுமோ113.- பாசறையின் சிறப்பு.

தேசு அறை இடங்களும்-ஒளிவீசுகின்ற பளிக்கறையினிடங்களும்,
தேன் கொள் கானமும் – தேனை மிகுதியாகக்கொண்ட காட்டினிடங்களும்,
மூசு அறை மதுகரம் மொய்த்த சோலையும் -நெருங்கிய ஆரவாரிக்கிற
வண்டுகள் மொய்க்கப் பெற்ற பூஞ்சோலைகளும்,வீசு அறல்வனம் நதிவிதமும்
– அலை வீசுகின்ற நீரையுடைய காட்டாறுகளின்வகைகளும், மேல் கொள –
தன்னிடத்துப் பொருந்தும்படி, பாசறை இருந்தஆ(று) – (தருமபுத்திரனது)
அந்தப்படைவீடு இருந்த தன்மை, பகரல் ஆகுமோ- (என்னால் வருணித்துச்)
சொல்லுந் தன்மையுடையதோ? (எ – று.)

     இது, கவிக்கூற்று.  அழகியகாடும் பூஞ்சோலையும் காட்டாறும்
பொருந்தியுள்ள இடத்திலே பளிக்கறைகளையுடைய பாடிவீடுகளை
யமைத்துக்கொண்டு பாண்டவர்கள் உல்லாசமாகத் தங்கியிருந்தன ரென்க.
‘தேசு அறை’ என்றமையால், ‘பளிக்கறை’ யென்று கொள்ளப்பட்டது; அன்றி,
மணி பொன் முதலியன நிறைந்திருந்தமைபற்றி, ‘தேசறை’ என்றாருமாம்.  தேசு
– தேஜஸ் என்ற வடசொல்லின் சிதைவு.  தேன்+கொள்; தேங்கொள்:
தேன்மொழி வலிவர ஈறுபோய் இனமெலிமிக்கது.  அறல் – நீர்: நறுமண
லுமாம். ஆ – விகாரம். ஓகாரம் – எதிர்மறை. 

விருந்துறு சேனை வெவ் வீரர் இன் அமுது
அருந்தினர் மெய் குளிர்ந்து, அசைவு தீர்தலும்;
‘வருந்தினர் இவர் துயில் வதிய வேண்டும்’ என்று,
இருந் தபனனும் இவர்க்கு இரவு நல்கினான்.114.- சூரியாஸ்தமனம்.

விருந்து உறு சேனை வெம் வீரர் – புதிதாக அங்கு வந்து
தங்கிய கொடிய சேனைவீரர்கள், இன் அமுது அருந்தினர் – இனிய அமிருதம்
போன்ற உணவை யுண்டு, மெய் குளிர்ந்து – உடம்பு குளிரப்பெற்று, அசைவு
தீர்தலும் – அயர்ச்சி (சிறிது) நீங்கியவளவில்,- இருந் தபனனும் – பெருமையுள்ள
சூரியனும், ‘இவர் வருந்தினர் – இச்சேனைவீரர் (வழிகடந்து)
இளைப்படைந்தார்கள்: (ஆதலால்), துயில் வதிய வேண்டும் – (இவ்விளைப்புத்தீர)
நித்திரைசெய்ய வேண்டும்,’ என்று – என்று கருதி, இவர்க்கு –
இச்சேனைவீரர்கட்கு, இரவு நல்கினான் – (தான்) இராப்பொழுதை
உண்டாக்கினான்; (எ – று.)

     சூரியன் இயல்பிலே அஸ்தமிக்க இரவுதோன்றியதை, சேனை வீரர்களின்
இளைப்பைக் கண்டு அவர்கள் நித்திரைசெய்து இளைப்புத்
தீர்த்துக்கொள்ளுதற்பொருட்டு அஸ்தமித்து இரவை யுண்டாக்கியதாகக்
காரணங்கற்பித்துக் கூறியது – ஏதுத்தற்குறிப்பேற்றவணியாம். ‘இவர்க்கு
இரவுநல்கினான்’ என்ற தொடர் – இப்பாண்டவர்கட்கு இரத்தற்கு உரிய
வறுமையைக் கொடுத்தானென்று ஒரு பொருள்பட்டு அமங்கலமாகி, இனிப்
பாண்டவர் இராச்சியம் முதலிய செல்வங்களையெல்லாம் இழந்து
வறுமைப்படுவதைக் குறிப்பிக்கு மென்னலாம்.  விருந்து – புதுமை.  அமுது –
அமிருதம்போ லினிய உணவுக்கு உவமையாகுபெயர்.  அருந்துதல்-உண்பன
தின்பன நக்குவன பருகுவன என்றவற்றின் பொதுவினை

மண் வளர் பெரும் புகழ் மன்னர் ஐவரும்,
பண் வளர் நல் இசைப் பல மகீபரும்,
கண் வளர் பாளையம் காண எண்ணியே,
விண் வளர் குபேரனும் விழைந்து தோன்றினான்.115.- சந்திரோதயம்.

மண் வளர் பெரும் புகழ் மன்னர் ஐவரும்-பூமியிற் பரந்த
பெருங்கீர்த்தியையுடைய அரசர்களாகிய பாண்டவர் ஐவரும், பண் வளர் நல்
இசை பல மகீபரும்-இசைப்பாட்டிற் பாடப்பட்டு மிகுகின்ற நல்ல கீர்த்தியுடைய
(மற்றும் அப்பாண்டவர்களுடன் வந்த) பல அரசர்களும், கண் வளர் –
தூங்குவதற்கு இடமான பாளையம் – படைவீட்டை, காண-பார்த்தற்கு, எண்ணி-
,-விண் வளர் குபேரனும் – ஆகாயத்திற் கலைவளர்க்கின்ற  சந்திரனும்,
விழைந்து தோன்றினான் – விரும்பி உதயமாயினான்; (எ – று.)

    சந்திரன் இயல்பிலுதித்ததை, பாண்டவர்களும் மற்றையரசர்களும் நித்திரை
செய்கின்ற படைவீட்டின் சிறப்பைக் காணக்கருதி உதித்ததாகக் காரணங்கற்பித்துக்
கூறியதனால், இதுவும் – ஏதுத்தற்குறிப்பேற்றவணியே. புகழைக்குறித்துப்
புலவர்பாடிய கவிகளையாழிலமைத்துப் பண்ணுக்கு இயையப்பாடுதல் மரபாதலால்,
‘பண்வளர் நல்லிசை’ என்று விசேடித்துக்கூறினார். மஹீபர்-பூமியைக் காப்பவர்;
மஹீ – பூமி.  பாளையம், பாசறை, படைவீடு, பாடிவீடு என்பன – ஒருபொருளன;
சேனைதங்குமிட மென்பது, பொருள்.

    ஸோமன், இந்து என்ற வடமொழிகளும், மதி என்ற தென்மொழியும்
சந்திரனுக்கேயன்றிக் குபேரனுக்கும் பரியாயநாமமாக வழங்குதல்பற்றி,
சந்திரனை ‘குபேரன்’ என்றார்.  சந்திரனை ‘குபேரன்’ என்ற சொல்லாற்
குறித்தது, லக்ஷிதலக்ஷணை யென்க.  (குபேரன் – ஸோமன், இந்து, மதி.
ஸோமன், இந்து, மதி=சந்திரன்).  கீழ்க் காண்டவதகனச்சருக்கத்தில்
“மதியுமம்மதி முடித்தவனும்” என்றவிடத்தும், மேல் நிரைமீட்சிச்சருக்கத்தில்,
“குடதிசை மகவான் வாளி குணதிசைவருணன்வாளி, வடதிசை மறலிவாளி
தென்திசைமதியின்வாளி, அடலுறவிமைப்பினேவி” என்றவிடத்தும் ‘மதி’
என்பது குபேரனுக்கு வழங்கப்பட்டுள்ளது.  இவ்வகை வழக்குப்பற்றி,
பிற்காலத்து நிகண்டில் ‘கலையினனுடுவின் வேந்தன் கலாநிதியொடு குபேரன்”
எனச்சந்திரன்பெயர்களிற் குபேரனென்பதைச் சேர்த்தும், “புருடவாகனனே
சோமன் புட்பக விமான முள்ளோன்” எனக் குபேரன் பெயர்களில்
ஸோமனென்பதைச் சேர்த்தும் கூறினர்.  ‘குபேரன்’ – குற்சிதமான
உடம்பையுடையவன்.  அப்பெயர் க்ஷயரோகத்தால் உடல்குன்று பவனான
சந்திரனுக்கும் காரணவகையால் ஏற்குமென்பதையுமுணர்க.  சந்திரன் குலத்
தோரை “குபேரன் குலத்தோர்” என்றார், கீழ் இராயசூயச் சருக்கத்தும்

மருள் மிகு சுரும்புஇனம் மணந்த சோலையின்
இருள்களின் இடை இடை எறித்த வெண் நிலா,
அருளுடை மைந்தர் தோள் அணைந்த மங்கையர்
புரி குழல் நெகிழ்ந்த வெண் போது போலுமே.116.-இதுமுதல் மூன்றுகவிகள் -நிலாத்தோற்றத்தின்
வருணனை.

 மருள் மிகு சுரும்பு இனம் மணந்த சோலையின் – (மது
உண்டதனால்) மயக்கம்மிகுந்த வண்டுகளின் கூட்டம் மொய்க்கப்பெற்ற அந்தச்
சோலையிலே, இருள்களின் இடை இடை-(மரங்களினது) நிழல்களினிடை
யிடையே, எறித்த – துண்டு துண்டாகக் காணப்படுகின்ற, வெள் நிலா –
வெண்மையாகிய நிலாவொளியானது,-அருள் உடை மைந்தர் தோள்
அணைந்த-(தம்மிடத்துக்) காதலையுடைய ஆடவர்களது தோள்களைத் தழுவிய,
மங்கையர்-இளமகளிரது, புரி குழல்-சுருண்ட கூந்தலினின்று, நெகிழ்ந்த-சரிந்த,
வெள் போது-வெண்மையான மலர்களை, போலும்-ஒத்திருக்கும்; (எ – று.)

    சோலையிலுள்ள மரங்களின்கீழ்க் கருநிறமாகக் காணப்படும்
நிழல்களினிடையிடையே தோன்றுகின்ற நிலா, கணவரோடு புணர்ந்த மகளிரது
அவிழ்ந்தகூந்தலி னிடையிடையே நெகிழ்ந்து தோன்றுகின்ற மல்லிகை முதலிய
வெண்மலர்களை யொக்குமென வருணித்தார்; தற்குறிப்பேற்றவுவமையணி.
மரங்களின் இருண்ட நிழற்கு மகளிர்கருங்கூந்தலும், வெண்ணிலாவுக்கு
வெண்மலர்களும் ஒப்பு.  இரண்டாமடியில், இருள் நிலா என மாறுபட்ட
சொற்கள்வந்தது, முரண்தொடை

கானிடை, சில சில கடி கொள் தேன் உமிழ்
தூ நிற முல்லைகள் மலர்ந்து தோன்றுமால்-
வானிடை முறை முறை வளரும் மா மதி
மேனியின் அமிழ்து உமிழ் விந்து என்னவே.

கானிடை-அச்சோலையினிடத்திலே,-கடி கொள்தேன் உமிழ் தூ
நிறம் சிலசில முல்லைகள்-வாசனையைக்கொண்ட தேனைக் கக்குகின்ற
வெண்ணிறமான சிற்சில முல்லைமலர்கள்,-வானிடை முறை முறை வளரும் மா
மதி மேனியின் உமிழ் அமிழ்து விந்து என்ன-ஆகாயத்திலே (சுக்கிலபட்சத்தில்
நாடோறும்) ஒவ்வொருகலையாக வளருந்தன்மையுள்ள சிறந்த சந்திரனது
உடம்பிலிருந்து சொரிந்த அமிருதத்தின் துளிகள்போல, மலர்ந்துதோன்றும்-
மலர்ந்து காணப்படும்; (எ – று.)-ஆல்-ஈற்றசை.

    சோலையிலுள்ள முல்லைக்கொடிகளில் நிலவெறித்தபோது அலர்ந்து
காணப்படும் வெண்மலர்களை, அமுதகிரணனான சந்திரனிடத்தினின்று சிந்திக்
காணப்படுகின்ற அமுதத்துளிகளாகக் குறித்தார்; தன்மைத் தற்குறிப்பேற்றவணி.
அமுதுவெண்ணிறமுடையதாதலை, “அமுதினின் விளர்த்து” என்பதனாலும்
அறிக.  கடி-உரிச்சொல்:  இங்கு, வாசனையென்னும் பொருளில் வந்தது.
‘தூநிறம்’ என்றது, வெண்ணிறத்தை.  சுக்கிலபட்சமாகிய வளர்பிறையிற் சந்திரன்
நாடோறும் ஒவ்வொருகலையாக வளர்தலால், ‘முறைமுறை வளருமாமதி’
என்றார்.  அமிழ்து, விந்து-அம்ருதம், பிந்து என்ற வடசொற்களின் விகாரம்;
ஈற்றடியில், மேனியின் – உடம்பிலுள்ள, அமிழ்து-அமிருதத்திலிருந்து, உமிழ்-
பெருகுகிற, விந்து என்ன – துளிபோல எனப் பதவுரை கூறுதலுமாம்.

பொரு இல் வெண் துகில்கொடு பொதிந்தது என்னவே,
பரி நெடுந் தேர்மிசைப் பால் நிலா எழ,
கிரண வெண் படைக்கு எதிர் கெடாமல் நின்ற பேர்
இருள் என விளங்கின, யானை வெள்ளமே.

பரி நெடுந் தேர் – (பாண்டவர் சேனையிலுள்ள) குதிரைகள்
பூட்டிய பெரிய தேர்கள், மிசை பால் நிலா எழ – தம் மீது வெண்ணிறமான
நிலாப் படிந்து தோன்றுவதனால், பொருவு இல் வெள் துகில் கொடு
பொதிந்ததுஎன்ன – ஒப்பில்லாதவெண்ணிறமாகிய வஸ்திரங்களினால்
மூடப்பட்டனபோலவும், – யானைவெள்ளம் – (அந்நிலவிலும்
கருநிறமாகவேதோன்றும்)யானைகளின் கூட்டம், கிரணம் வெள் படைக்கு
எதிர் – (சந்திரனது)கிரணங்களாகிய வெண்ணிறமுள்ள ஆயுதங்கட்கு எதிரில்,
கெடாமல் நின்ற -அழியாது நிலைநின்ற, பேர் இருள் என – பெரிய இருள்
போலவும்,விளங்கின-; (எ – று.)

தேர்களின்மீது முழுவதும் வெண்ணிலாப் படிந்து தோன்றுவதை
அத்தேர்கள் வெண்ணிறத்துகிலுறையினால் மூடப்பட்டனவாகவும், நிலாவிலும்
கருநிறமாகத்தோன்றும் யானைகளைச் சந்திர கிரணங்கட்கு எதிரிலே
சிதையாது நின்ற இருட்கூட்டமாகவும் குறித்தார்: இவையும்
தன்மைத்தற்குறிப்பேற்றவணிகளே. பகையொழிக்கும் படைபோலச்
சந்திரகிரணங்கள் இருளை யொழித்தற்குக் கருவியாயிருத்தலால்,
அக்கிரணங்களைப் படையெனக் கொண்டார்; ஆயினும், இங்கு,
இருளையொழித்தல் தொழில் நிகழ்வதற்குப் படைகள் உபகாரப்படாம
லிருத்தலால், ‘கிரணவெண்படை’ என்றது – திரிபணியாம்: (உருவகவணியன்று;
உருவகவணியில் உபமேயம் உபமானமாந்தன்மையை யடைந்து
பின்வருந்தொழிற்கு உபகாரப்பட்டுநிற்கும்: “வீமனாகிய மந்தரம் சேனைக்கடலைக்
கலக்கியது” என்றவிடத்து வீமனென்ற உபமேயம் மந்தரமென்ற
உபமானத்தன்மையைப் பெற்றுக் கடலைக் கலக்குதலாகிய பின்வருந் தொழிற்கு
உபகாரப்பட்டு நிற்றல் காண்க.) (பின்னிரண்டடிகளை)
இல்பொருளுவமையணியெனினும் இழுக்காது.  படை – சேனையுமாம். ‘தேர்’
என்பது சாதியொருமையாதலால், ‘பொதிந்தது’ என்னும் ஒருமைமுடிபைக்
கொண்டது.  என்ன, என – தற்குறிப்பேற்றவுருபுகள்

பரியன கந்துகம் பரிந்து, மா மதக்
கரி சில பாகையும் கை கடந்தன;
அரிவையர் பலர் துயில் அனந்தலோடு, தம்
சுரி குழல் மேகலை சோர, ஓடினார்.119.-மதயானைகளின் செயல்.

 மா மதம் கரி சில-(அச்சேனையிலுள்ள) மிக்கமதத்தையுடைய
சிலயானைகள், பரியன கந்துகம் பரிந்து – பெரியவையாகிய கட்டுத்தறிகளை
முறித்துக்கொண்டு, பாகையுங் கை கடந்தன – பாகர்களுக்கும் அடங்காது
மீறியோடின;  (அதனால்), அரிவையர் பலர் – (உடன்சென்று
அங்குத்தங்கியிருந்த) பலமகளிர், துயில் அனந்தலோடு – உறக்கமயக்கத்துடனே,
தம் சுரி குழல் மேகலை சோர – தமது சுருண்ட கூந்தலும் மேகலையென்ற
ஆபரணமும் சரிந்துவிழும்படி, ஓடினார் – (அச்சங்கொண்டு) ஓடலானார்கள்;
(எ – று.)

    கட்டுத்தறியை முறித்தலும், பாகர்கட்கு அடங்காது மீறி நடத்தலும்
மதயானைகளின் இயற்கை;  “தூணும் விலங்குமுறிப்பது பாகுபரிக்கோல் யாவுந்
தூரத்தே, காணினு நின்றுகொதிப்பது” என்பர் மேற் பதினாறாம்
போர்ச்சருக்கத்தும்.  பரியன – பலவின்பாற் குறிப்புவினையாலணையும் பெயர்.
கந்துகம் – ஸ்கந்தம் என்ற வடசொல்லின் விகாரமென்க.  பாகு –
உயர்திணைப்பொருள் தரும் அஃறிணைச்சொல்; உம் – உயர்வுசிறப்பு.
அரிவையர் என்ற சிறப்புப்பெயர் – இங்கு, மகளிரென்ற மாத்திரமாய் நின்றது:
அப்பருவத்துக்கு வயதெல்லை-இருபதுமுதல் இருபத்தைந்தளவும்.  அனந்தல் –
குறைத்தூக்கம்.  சுரி குழல் – நுனிசுருண்ட கூந்தல்.  மேகலை – மாதரிடையில்
அணிந்துகொள்ளும் எழுகோவையணி; (இங்ஙனமாதலை, “எண்கோவை காஞ்சி
யெழுகோவை மேகலை, பண்கொள்கலயம் பதினாறு – கண்கொள், பருமம்
பதினெட்டு முப்பத்திரண்டு, விரிசிகை யென்றுணரற் பாற்று” என்பதனாலுணர்க;)
எண்கோவை யென்றலுமுண்டு

நீடுறு தருக்களின் நிரைத்த மா அதன்
கோடுஇற எறிந்து கைக்கொள்ளும் ஓதையால்,
மாடு உறு பொங்கர்வாய் வதிந்த புள் வெரீஇ,
பேடொடு சேவல் மெய் பிரிந்து, தேடுமால்.120.-இதுவும் அது.

நீடுறு தருக்களில் நிரைத்த மா – பெரிய மரங்களில்
வரிசையாகக்கட்டப்பட்ட யானைகள்,- அதன் கோடு இற எறிந்து –
(தம்மைக்கட்டப்பெற்ற) அந்தந்த மரத்தின் கிளைகளை ஒடியும்படி முறித்து,
கைகொள்ளும் – துதிக்கையிற்கொள்ளுதலாலுண்டாகிற, ஓதையால் –
ஓசையினால்,- மாடு உறு பொங்கர்வாய் வதிந்தபுள்-அருகிற் பொருந்திய
சோலைகளில் தங்கியுள்ள பறவைகள்,-வெரீஇ – அஞ்சி, பேடொடு சேவல்
மெய் பிரிந்து – (ஒன்றாய்க்கூடியிருந்த) பெண்பறவைகளோடு
ஆண்பறவைகளும் (தம்மிற்) பிரிந்துபோய், நேடும் – (பிறகு ஒன்றை யொன்று)
தேடும்; (எ – று.)-ஆல் – ஈற்றசை.

    ஆணும்பெண்ணுமாய்க் கூடியிருந்த பறவைகள், அச்சேனையின்
யானைகள் மரங்களை முறித்த ஓசையைக் கேட்டு அஞ்சிப்பிரிந்துத் தனித்தனி
பறந்து பிரிந்து பிறகு ஒன்றையொன்று தேடுவனவாயின வென்க.
ஒலியைக்கேட்டு அஞ்சிப்பறத்தல், பறவைகளின் இயல்பு:  வெரீஇ=வெருவி:
சொல் விகாரப்பட்டு அளபெடுத்ததனால்.  சொல்லிசையளபெடை.  பேடு,
சேவல் என்பன – முறையே, பறவைகளின் பெண்மை ஆண்மைப்
பெயர்களாம்.     

ஊதையின் மரன் அசைவுற, பொறா வடம்
மோதுறு முளையுடன், முடுகு வேட்டமாய்,
தீது அறு பரி சில செல்வன் பாசறை
மாதிரம் உற, பல வாளி போதுமால்.121.-குதிரைகளின் செயல்.

 தீது அறு சில பரி – (அச்சேனையிலுள்ள) குற்றமற்ற சில
குதிரைகள்,-ஊதையின் மரன் அசையுற-பெருங்காற்றினால் மரங்கள் அசைய,
பொறா – (அந்த விசையைப்) பொறாமல், – வடம் மோதுறு முளையுடன் –
கயிறுகொண்டு கட்டப்பட்ட முளைத்தறிகளுடனே, முடுகு வேட்டம் ஆய் –
விரைவான ஓட்டங்கொண்டு, செல்வன் பாசறை மாதிரம் உற –
செல்வச்சிறப்புடையவனாகிய தருமபுத்திரனது படைவீட்டின் பக்கங்களிற்
பொருந்தும்படி, பல வாளி போதும் – பலதரம் வட்டமாகச் சுழன்று
செல்லலாயின; (எ – று.)-ஆல் – அசை.

    பெருங்காற்றினால் மரங்கள் அசைய வெருண்டு குதிரைகள் முளையோடு
பிடுங்கிக்கொண்டு ஓடலாயின வென்க.  மரன்-மரம்-மகரனரம்
மாறிவருஞ்சொல்.  பொறா – ஈறுகெட்ட எதிர்மறை வினையெச்சம்;
பொறாதனவாய் என்று பொருள் கொண்டால், எதிர்மறைப்பலவின்பால்
முற்றெச்சமாம்.  வாளி – குதிரைகள் வட்டமாயோடும் ஓட்டம்: மண்

ஆடுவர் சிலர் சிலர்; ஐவர் வான் புகழ்
பாடுவர், சிலர் சிலர்; பாயல் இன்புறக்
கூடுவர், சிலர் சிலர்; கோதை மாதரோடு
ஊடுவர், சிலர் சிலர்;-ஓகை வீரரே.122.-வீரர்களின் செயல்.

ஓகை வீரர் -(அப்பாசறையில் தங்கியுள்ள) மகிழ்ச்சியை
யுடையவர்களாகிய வீரர்களில்,-சிலர் சிலர் – சிற்சிலபேர், ஆடுவர் –
(மகிழ்ச்சியினாற்) கூத்தாடுவார்கள்: சிலர் சிலர் – மற்றுஞ்சிலர், ஐவர் வான்
புகழ்பாடுவர் – பஞ்சபாண்டவரது சிறந்த கீர்த்திப்பாக்களை
யெடுத்துப்பாடுவார்கள்; சிலர் சிலர்-வேறுசிலர், பாயல் இன்புஉற கூடுவர் –
படுக்கையிலே இன்பமுண்டாகும்படி (தமக்குஉரிய மகளிரோடு) கூடுவார்கள்;
சிலர்சிலர்-பின்னுஞ்சிலர், கோதை மாதரோடு ஊடுவர் – மாலை யணிந்த
மனைவியரோடு பிணங்குவார்கள்; (எ – று.)

     புகழ் – அதனையுணர்த்தும் பாடலுக்கு ஆகுபெயர்.  சிலர் சிலர் –
அடுக்கு, அசைநிலை.  “மாதர் காதல்” என்ற தொல்காப்பியவுரியியல்
சூத்திரத்தின்படி விருப்பத்தையுணர்த்தும் ‘மாதர்’ என்னும் உரிச்சொல். அதற்கு
இடமாகிய மகளிரை யுணர்த்திற்று.  ஓகை – உவகை யென்பதன் மரூஉ.
‘கோதை மாதரோடு’ என்றது – மத்திமதீபமாய், முந்தினவாக்கியத்தோடும்
இயையும். 

பஞ்சவர் வாழ்வுறு பதம் பொறாமையின்,
வஞ்சகம் இயற்றுவான் மனம்கொல் என்னவே,
மிஞ்சிய குளிர் மதிமேல் பொறாது, இகல்
செஞ் சுடரவன் குணதிசையில் தோன்றினான்.123.-சூரியோதயம்.

பஞ்சவர் வாழ்வுறு பதம் பொறாமையின் – பாண்டவரெவரும்
வாழ்கிற நிலைமைக்கு மனம்பொறாததனால், வஞ்சகம் இயற்றுவான் –
(அப்பாண்டவர்கட்குத்) தீமையையியற்றத் துணிந்தவனாகிய துரியோதனனது,
மனம் என்ன-மனம்போல்,-மிஞ்சிய குளிர் மதிமேல் பொறாது – மிகக்
குளிர்ச்சியையுடைய சந்திரன்மீது பொறாமைகொண்டு, இகல் -(அவனிடத்து)
மாறுபாடு கொண்ட, செம்சுடரவன் – செந்நிறமான கிரணங்களையுடைய சூரியன்,
குணதிசையில் தோன்றினான் – கிழக்குத்திக்கில் உதயமாயினான்; (எ – று.)

     சூரியன் இயல்பிலேயுதித்ததை, சந்திரன்மீது பகைமை கொண்டு
உதித்ததாகக்  குறித்தார்: ஏதுத்தற்குறிப்பேற்றவணி. தருமபுத்திரன் மிகச்
சிறப்புற்று வாழ்தலை பொறாது வஞ்சனையாக அவனது செல்வச்
சிறப்புக்களையெல்லாங் கவர்ந்து அவனது உயர்ச்சியை அறக்கெடுக்க விரும்பி
முயலுந் துரியோதனனது மனம், சந்திரனை ஒளிரவொட்டாமல் மழுங்கச்செய்து
உதயமாகின்ற சூரியனுக்கு ஏற்ற உவமையாம். பதம் = பதவி.  கொல் – அசை,
ஏ – இசைநிறை.  மிஞ்சிய-விஞ்சிய என்பதன் மரூஉ.  குணக்கு+திசை =
குணதிசை: திசைப்பெயர், ஈற்றுஉயிர்மெய்யுங் ககரவொற்றுங் கெட்டது

துயில் உணர்ந்து, பைந் தொடையல் மார்பினான்
வெயில் எழுந்து தன் விரதம் உற்றபின்,
பயில் பெருஞ் சனம் பாசறைப் படுத்து,
எயில் வளைந்த மா நகரி எய்தினான்.124.-பாண்டவர்கள்அத்தினாபுரி சேர்தல். 

பைந் தொடையல் மார்பினான் – பசுமையான (குவளைமலர்)
மாலையைத் தரித்த மார்பையுடையவனாகிய தருமபுத்திரன்,- துயில் உணர்ந்து-
தூக்கம்விட்டெழுந்திருந்து,- வெயில் எழுந்து – சூரியன் உதயமாக, தன் விரதம்
உற்றபின்-தனது விரதாநுட்டானங்களைச்செய்து முடித்த பின்பு,- பயில் பெருஞ்
சனம் பாசறை படுத்து – (தன்னுடன் வந்த மிக்க ஜநக்கூட்டத்தை) அந்தப்
பாசறையிலேயே இருக்கவிட்டு, எயில்வளைந்த மா நகரி எய்தினான்-
மதில்சூழ்ந்த பெரிய அத்தினாபுரியைச்சென்று சேர்ந்தான்;

    ‘தொடையல்மார்பினான்’ என்றது-மற்றைப் பாண்டவர் நால்வர்க்கும்,
திரௌபதிக்கும், ‘சனம்’ என்றது – பதாதியரொழிந்த மற்றை மூவகைச்
சேனைகட்கும் உபலட்சணம்.  சேனைகளைப் பாண்டவர்கள் உடன்
அழைத்துக்கொண்டு செல்லாதது, அவ்வளவு பெருஞ்சேனைகட்கு
அத்தினபுரியில் தங்க இடம்போதாதாதலாலும் அச்சேனைகளினால்
நகரத்திற்குஉபத்திரவமுண்டாகுமென்னுங் கருத்தினாலு மென்க.  எழுந்து=எழ:
எச்சத்திரிபு: இங்கு ‘விரதம்’ என்றது, காலைக்கடனை.

இரு மருங்கினும் இளைஞர் நால்வரும்,
தரும வல்லியும் தானும் ஆகவே,
அரு மடங்கல்ஏறு அனைய ஆண்மையான்
குரவன் இன்புறும் கோயில் நண்ணினான்.பாண்டவர்கள்திருதராஷ்டிரனது அரண்மனையிற்
சேர்தல்.
 

மடங்கல் ஏறு அனைய அரு ஆண்மையான் – ஆண் சிங்கம்
போன்ற அருமையான பராக்கிரமத்தை யுடையவனாகிய தருமபுத்திரன்,-இரு
மருங்கினும்-(தனது) இரண்டுபக்கத்திலும், இளைஞர் நால்வரும் – (தனது)
தம்பியர் நான்குபேரும் (உடன்வர), (அவர்கட்குநடுவே), தருமவல்லியும் தானும்
ஆக – பூங்கொடி போன்ற (தனது) தருமபத்தினியாகிய திரௌபதியும் தானுமாக,
குரவன் இன்பு உறும் கோயில் நண்ணினான் – (தனது) பெரிய தந்தையாகிய
திருதராட்டிரன் இனிது வாழ்கின்ற அரண்மனையைச் சென்று சேர்ந்தான்;
(எ – று.)

     கணவன் செய்யுந் தருமகாரியங்கட்கு உடனிருந்து உதவுதல் காரணமாக
மனைவிக்குத்  தருமபத்தினியெனப்  பெயருள்ளதனால், யுதிஷ்டிரனது
மனைவியாகிய திரௌபதியை ‘தருமவல்லி’ என்றார், தருமவல்லி என்பது –
அடையடுத்த உவமவாகுபெயர்.  வல்லீ – பூங்கொடி: வடசொல்.  கணவன்
தரும தரு, மனைவி அத்தருவைக் கொள்கொம்பாகக்கொண்ட தருமவல்லி என
நயங் காண்க.  கற்பகதரு, காமவல்லி என்றாற்போல, தருமவல்லியுந் தானும்
நண்ணினான் – ஆண்பாலும் பெண்பாலும் கலந்து சிறப்பினால்
ஆண்பால்முடிபைப்பெற்ற பால்வழுவமைதி; [நன் – பொது-27.] ஆண்மை-
பௌருஷம்.  ‘குரவ:’ என்ற வடமொழிப்பன்மைப்பெயர் தமிழில் ‘குரவர்’ எனத்
திரிந்து வருவதற்கு ஏற்ப, ஒருமையில் ‘குரவன்’ எனக் கொள்வர்.

சிந்தை அன்புற, செல்வ வாயிலோர்,
வந்த மைந்தர்தம் வரவு கூறவே,
முந்தை ஏவலால் மொழிய, உள் புகுந்து,
அந்த மீளி சேவடி வணங்கினார்.126.- பாண்டவர்கள்திருதராட்டிரனை வணங்குதல்.

செல்வம் வாயிலோர் – செல்வச்சிறப்பையுடைய
அவனரண்மனை வாயிலிலுள்ள காவலாளர்கள், சிந்தை அன்புஉற வந்த
மைந்தர்தம் வரவுகூற – (தமது) மனத்திலே (பெரியதந்தையாகிய
திருதராட்டிரனைக் காணவேண்டுமென்று) ஆவல் மிகுதி யாகப்பொருந்த
(அங்கு) வந்துசேர்ந்த (தம்பியின்) குமாரர்களாகிய பாண்டவரது வருகையை
(அத்திருதராட்டிரனுக்குச்) சொல்ல, (உடனே). முந்தை ஏவலால் –
அப்பெரியதந்தை கட்டளையிட்டபடியே, மொழிய – (மீண்டுவந்து
உள்ளேவரலாமென்ற செய்தியைச்) சொல்ல,- (பாண்டவர்கள்)- உள் புகுந்து-,
அந்த மீளி சே அடி வணங்கினார்-அரசனான அந்தத் திருதராட்டிரனது
சிவந்த பாதங்களை வணங்கினார்கள்; (எ – று.)

    பாண்டவர் வருகையை வாயில் காவலோர் திருதராட்டிரனுக்குக்கூறி,
அவன் உள்ளேவரலாமென்றுகூறிய அனுமதியைத் தெரிவிக்க, பாண்டவர் உள்ளேசென்று அப்பெரிய தந்தையை வணங்கினார்கள்.
மீளி – ஆண்பாற் சிறப்புப்பெயர்:  இச்சொல்லுக்கு – திண்ணியனென்ற
பொருளும் உண்டு; “கராசலம் பதினாயிரம் பெறுவலிக் காயமொன்றினிற்
பொற்றோ, ளிராசகுஞ்சரம் பிறந்திடும் விழிப்புலனில்லைமற்றதற் கென்றான்”
என்றும், “வலியுடை விழியின்மைந்தன்” என்றும் கீழ்ச் சம்பவச்சருக்கத்திற்
கூறியபடி திருதராஷ்டிரன் பதினாயிரம் யானை பலங்கொண்டவனாதலால்,
மீளியெனத் தகுவன்.  ‘முந்தை ஏவலால் மொழிய’ – பெரியதந்தை
கட்டளையிட எனினுமாம்.   

தம்பி மைந்தரைத் தழுவி, ‘நும்மை இன்று
எம்பி காண நல்வினை இயன்றிலான்;
உம்பிமாரொடும் ஒத்து வாழ்க, நீர்,
நம்பி!’ என்று, நல் நயம் விளம்பினான்.127.- திருதராட்டிரன்அன்புதோன்றச் சில கூறுதல். 

(திருதராட்டிரன்),- தம்பி மைந்தரை தழுவி- (தனது) தம்பியாகிய
பாண்டுவின் மக்களை (பாண்டவர்களை)க் கட்டியணைத்து, ‘இன்று – (நீவிர்
பராக்கிரமத்தோடு சிறப்பாக விளங்கும்) இக்காலத்தில், எம்பி – எனது
தம்பியாகிய பாண்டு, நும்மை-(மக்களாகிய) உங்களை, காண – கண்டுமகிழ்தற்கு,
நல்வினை இயன்றிலான் – புண்ணியம் அமையாதவனாயினான்; (அது நிற்க:) –
நீர் – நீங்களைவரும், நம்பி – விசுவாசம் வைத்து, உம்பிமாரொடும் – உங்கள்
தம்பிமார்களாகிய துரியோதனாதியருடனே, ஒத்து வாழ்க – மனமொன் றுபட்டு
வாழ்வீர்களாக’ என்று-, தன் நயம் – தனக்கு நன்மைதருவனவான
தந்திரமொழிகளை, விளம்பினான் – சொன்னான்; (எ – று.)

    இராசசூயயாகஞ்செய்து பலவகைச் சிறப்புக்களையும் பெற்றிருக்கும்
இந்நிலையிலே புத்திரரான பாண்டவர்களைக் கண்டு களிக்குமாறு
பாக்கியஞ்செய்யாமல் தன் தம்பியாகிய பாண்டு இளமையிலேயே
இறந்துபோனதைக் குறித்து இரங்கிக்கூறுவான், ‘நும்மை இன்று எம்பி காண
நல்வினையியன்றிலான்’ என்றான்.  வீமன் முதலிய நால்வரும் துரியோதனனுக்கு
இளையராயிருக்கவும், இங்கே துரியோதனாதியரைத் திருதராட்டிரன் ‘உம்பிமார்’
என்றது, யாவரினும் பெரியவனான தருமபுத்திரனையே பிரதானமாக்கிக்கூறுவதனா
லென்க. பாண்டவர்களும் துரியோதனாதியரும் ஒத்துவாழ்வது, தனது மக்களாகிய
நூற்றுவர் க்ஷேமமாயிருப்பதற்குக் காரணமாய்த் தனக்கு நன்மை யாகுதல்பற்றி,
அவ்வார்த்தை, ‘தன் நயம்’ எனப்பட்டது.  துரியோதனாதியர் தீங்குசெய்யினும்
அதனை நீங்கள் பாராட்டி வேறுபடாது அவர்களிடத்தில்
மனவொற்றுமையுடனே யிருக்கவேண்டுமென்ற தனது உட்கோளைத்
திருதராட்டிரன் பின்னிரண்டடிகளினால் வெளியிட்டான்.  நல்வினை –
ஸு க்ருதம்.   

பாவை தன் செழும் பணிவு கூறலும்,
‘மேவி வாழ்க!’ எனா, மெய் களிக்கவே,
‘தேவி தன்னுழைச் செல்க!’ என்றுகொண்டு
ஏவி, மைந்தரோடு இவை விளம்பினான்:128.- திரௌபதியைத்திருதராட்டிரன் வாழ்த்திக்
காந்தாரியிடம் அனுப்புதல்.

பாவை-சித்திரப்பிரதிமைபோன்ற அழகிய திரௌபதியானவள்,
தன் செழும் பணிவு – தனது மிக்க வணக்கத்தை, கூறலும் –
(திருதராட்டிரனுக்குச்) சொன்னவளவில்,-  (அவன்  அத்திரௌபதியைக்
குறித்து), மெய் களிக்க மேவி வாழ்க எனா – ‘சரீரத்தில் ஆரோக்கியமுண்டாக
(வெகுகாலம்) பொருந்திவாழ்வாயாக’ என்று வாழ்த்தி, (பின்பு), தேவி தன்னுழை
செல்க என்று கொண்டு ஏவி-‘பட்டமகிஷியாகிய காந்தாரியினிடத்திற்
போயிருப்பாயாக’ என்று கட்டளையிட்டு, (திரௌபதியை அனுப்பிவிட்டு),-
மைந்தரோடு இவை விளம்பினான்-(பாண்டவரிடம்) இவ்வார்த்தைகளைக்
கூறுபவனானான்; (எ – று.)- அவற்றை, அடுத்த ஐந்து கவிகளிற் காண்க.

    திருதராட்டிரன் பிறவிக்குருட னாதலால், திரௌபதி தான் வணங்குவதைக்
கூறவேண்டுவதாயிற்றென்க. இனி, பாவை தன் – திரௌபதியினது, செழும்பணிவு
– மிக்கவணக்கத்தை, கூறலும் – (அங்குள்ளோர் திருதராட்டிரனுக்கு)
எடுத்துக்கூறலும் எனப் பதவுரை கூறினும் பொருந்தும். பாவை –
உவமையாகுபெயர். வாழ்கெனா – வியங்கோளின் அகரவீறு தொகுத்தல். 

கருமம், நீதி, சீர், கல்வி, மந்திரம்,
பெருமை, ஆண்மை, தாள், பீடு, நீடு பேர்,
தருமம், யாவும், நும் தன்மைஆதலால்,
அருமை இன்றியே அரசு செல்லுமே.129.-இதுமுதல் ஐந்து கவிகள் -திருதராட்டிரன் கூறிய
முகமன்.

இதுமுதல்  ஆறுகவிகள் – ஒருதொடர்

     (இ -ள்.) கருமம் – செய்தொழில்திறமும், நீதி – நியாயமும், சேர் கல்வி
– மிக்க கல்வியறிவும், மந்திரம் – ஆலோசனைத்திறமும், பெருமை -பெருந்
தன்மையும், ஆண்மை – பராக்கிரமும், தாள் – முயற்சியும், பீடு நீடு பேர் –
கௌரவமிக்க புகழும், தருமம் – தருமமும், யாவும் . ஆகிய இவையெல்லாம்,
நின் தன்மை ஆதலால் – (உனது) இயற்கைக் குணங்களாதலினால்,- அரசு –
(உனது) அரசாட்சி, அருமை இன்றியே-அருமைப்பாடு இல்லாமலே, செல்லும் –
(குறைவின்றி இனிதாக) நடக்கும்; (எ – று.)- ஈற்று ஏகாரம் – தேற்றம்.

    நீதி சேர் கல்வி என்று எடுத்து – அரசுநீதியைப் பற்றித்தெரிவிக்கின்ற
கல்வி யென்று பொருள் கூறினுமாம்.  ‘நீதிசீர்கல்வி’ என்ற பாடம் – நீதியும்
சிறந்த கல்வியும் என்று பொருள்படும்.  தருமம் – மறுமைக்குச் சாதகமாய்
இப்பிறப்பிற்செய்யும் நற்றொழில்.  அரசு செல்லுமே – அரசு இனிதாகச்
செல்லுகின்றதன்றோ? என வினாவாகப் பொருள் கூறினும் பொருந்தும்.

இகல் எறிந்து, நீள் இராயசூய மா
மகம் உழந்ததும், வண்மை செய்ததும்,
திகை அடங்கலும் திறை கொணர்ந்ததும்,
தொகுதி கொண்ட நும் துணைவர் கூறினார்.

நீ-, இகல் எறிந்து – (தம்பிமார்களைக்கொண்டு திக் விஜயம்
செய்யத்தொடங்கிப்) பகைவர்களை அழித்துச்சயித்து, திகை அடங்கலும் திறை
கொணர்ந்ததும் – எல்லாத்திக்குக்களிலுமிருந்து  திறைப்பொருள் கவர்ந்து
கொண்டுவந்ததையும், (பின்பு), இராயசூயம் மா மகம் உழந்ததும் –
இராசசூயமென்கிற பெரியயாகத்தைச் சிரமப்பட்டுச் செய்ததையும், வண்மை
செய்ததும் – (அந்த யாகத்தில்) தியாகஞ் செய்ததையும், (ஆகிய உனது
சிறப்புக்களையெல்லாம்), தொகுதி கொண்ட நின் துணைவர்-மிக்ககூட்டமான
உனது தம்பிமார்கள், கூறினார் – (எனக்குச்) சொல்லியுள்ளார்; (எ – று.)

    இகல் – பகைமை: அதனையுடைய பகைவர்க்குப் பண்பாகுபெயர். திகை –
அதிலுள்ளார்க்கு, இடவாகுபெயர். ‘பாடத்தின் முறைமையினும் பொருண்முறைமை
சிறந்தது’ என்னும் மீமாஞ்சகர் கொள்கைபற்றி, ‘இகலெறிந்து திகையடங்கலுந்
திறை கொணர்ந்ததும்’ என்று கூட்டிப் பொருளுரைக்கப்பட்டது. துரியோதனாதியர்
நூற்றுவராதலால், ‘தொகுதிகொண்ட நின் துணைவர்’என்றான்

எண் திசாமுகத்து எல்லை எங்கணும்
கொண்டது ஆகும், முன் குருகுலத்து உளோர்;
துண்டியாமல், நும் துணைவர் தம்மொடும்,
பண்டு போல, மண் பரவ, வைகுவீர்.

எண் திசா முகத்து எல்லை எங்கணும் – எட்டுத்
திக்குக்களையுடைய(நிலவுலகத்து) எல்லை முழுவதும், முன் குருகுலத்து
உளோர் -பழமையாய்வருகின்ற குருகுலத்தைச் சேர்ந்த அரசர்கள், கொண்டது
ஆகும் -கைப்பற்றி அரசாண்டதாகும்; (அதுபோலவே),- துண்டியாமல் –
(அவ்விராச்சியத்தை உங்களது என்றும் துரியோதனாதியரது என்றும்)
வேறுபாடு காட்டாமல், நும் துணைவர்தம்மொடும்-உமது உடன்பிறந்தோராகிய
துரியோதனாதியரோடும், பண்டுபோல-முன்போலவே, மண் பரவ –
இந்நிலவுலகத்திலுள்ளோர் புகழும்படி, வைகுவீர் – ஒற்றுமைப்பட்டு
வாழ்வீர்களாக; (எ – று.)

    பரம்பரையாகவருங் குருகுலத்தாரது ஏகசக்ராதிபத்தியத்தைக் கெடுத்து
விடாமல் ஒற்றுமைப்பட்டு  ஆளவேண்டுமெனத் திருதராஷ்டிரன்
கூறினனென்க.  இனி, இச்செய்யுட்கு – ‘நீங்கள் துரியோதனாதியரோடு
மனவொற்றுமைகொண்டு பிரியாமல் வாழ்வீர்களாக; அவ்வாறு வாழ்ந்தால்,
இவ்வுலக முழுவதும் பழமையாகிய குருகுலத்து அரசர்களாகிய உங்களாற்
கைப்பற்றப்பட்டதாய்விடும்’ என்னும் கருத்துப்படப் பொருள் கூறினும்
பொருந்தும்.  பண்டு  – பழமைகுறிக்கும் இடைச்சொல்.  மண் –
இடவாகுபெயர்.   

சேண் இருந்து, நும் சீர் செவிப்படுத்து,
யாணர் அன்பு கூர் இனிமை அன்றியே,
பூண் நலம் பெறும் பொற்பொடு உங்களைக்
காணுமாறு செங் கண் படைத்திலேன்!’

சேண் இருந்து – தூரத்தேயிருந்து, நும் சீர் செவிப்படுத்து-
உங்கள்சிறப்புக்களைக் கேள்வியுற்று, யாணர் அன்பு கூர் இனிமை அன்றி-
புதிய[அவ்வப்போது உண்டாகின்ற] அன்பின் மிகுதியினால் (தோன்றும்)
மகிழ்ச்சியை(க்கொள்வதே) யல்லாமல், – பூண் நலம் பெறும் பொற்பொடு-
ஆபரணங்களினால் இனிதாகப் பொருந்திய இயற்கையழகுடனே கூடிய,
உங்களை-,- காணும் ஆறு – நேரே கண்டு களிக்கும்படி, செம் கண்
படைத்திலேன் – நல்ல [பார்க்குந்  தன்மையுள்ள] கண்களைப்
பெற்றேனில்லை;

    உங்கள் சிறப்புக்களைப் பிறர்சொல்லச் செவியினாற்கேட்டறிந்து
மகிழ்கின்றேனேயல்லாமல் கண்ணினால் நேரிற்காணும் பாக்கியம்
பெற்றிலேனேயென்று அப்பாண்டவரைத் தன்வசப்படுத்தி வஞ்சித்தற்காக,
அன்புடையான்போலத் திருதராஷ்டிரன் பசப்புமொழி கூறினனென்க:
இத்தன்மை, அடுத்த செய்யுளினால் நன்கு விளங்கும்.
படுத்து+யாணர்=படுத்தியாணார்; குற்றியலிகரம்.  யாணர் – புதுமையுணர்த்தும்
உரிச்சொல்.  ‘பூணலம் பெறும்’ என்று செயற்கையழகையும், ‘பொற்பொடு’
என்று இயற்கையழகையுங் குறித்தபடி.  மூன்றாமடிக்கு, பூண் – மேற்கொண்ட,
நலம் – நற்குணத்தையும், பெறும் – (இயற்கையாகப்) பெற்றுள்ள, பொற்பொடு –
அழகையும் அடைந்துள்ள எனப்பதவுரை கூறினுமாம். 

நேயம் உண்டுபோல் நெஞ்சொடு இன்ன சொல்
தூய மைந்தரைச் சொல்லி, ‘நீவிர் போய்,
யாயையும் பணிந்து, எந்தை தாள் மலர்ச்
சேய பங்கயம் சேர்மின்’ என்னவே.

நேயம் உண்டுபோல்-(பாண்டவரிடத்துத் தனக்கு) அன்பு
உள்ளதுபோல், நெஞ்சொடு – வஞ்சனைக்கருத்துடனே, இன்னசொல் –
இவ்வார்த்தைகளை, தூய மைந்தரை சொல்லி – பரி சுத்தர்களாகிய அப்பாண்டவர்களைக் குறித்துக்கூறி,- ‘நீவிர் – நீங்கள், போய் –
(இங்கு நின்றுஞ்) சென்று, யாயையும் பணிந்து-(உங்கட்குத்) தாய்முறையாகிற
காந்தாரியையும் வணங்கி, எந்தை சேய பங்கயம் மலர் தாள் சேர்மின்-
எனக்குப் பெரியதந்தையாகிய வீடுமனது செந்தாமரைமலர்போன்ற பாதங்களைச்
சேர்ந்து வணங்குங்கள்,’ என்ன – என்று (திருதராட்டிரன்) கட்டளையிட,- (எ –
று.)- ‘சென்று . . . . . .பரிந்திறைஞ்சினார்’ என்று அடுத்த கவியோடு
தொடர்ந்து முடியும்.

    பாண்டவரை நோக்கித் திருதராட்டிரன் காந்தாரியை வணங்கி விட்டு
வீடுமனைச் சென்று பணியுமாறு கூறினான்.  நெஞ்சொடு நேயம் உண்டுபோல்
என்று இயைத்து, மனத்தில் அன்பு இருப்பதுபோல (ப் பாவனைசெய்து)
என்றும் கூறலாம்: இப்பொருளில், நெஞ்சொடு – உருபுமயக்கம்.  சேய –
‘செம்மை’ என்னும் பண்புப்பெயரினடியாப் பிறந்த குறிப்புப்பெயரெச்சம்:
போய்+யாய் = போயாய்: தனிக்குறிலைச் சாராதயகரம் யகரம்வரக் கெட்டது
[“யரழமுன்னர்” என்ற சூத்திரத்து ‘மேல்’ என்ற மிகையைக்காண்க.] யாயையும்,
உம்மை – இறந்தது தழுவியது.

இருந்த மைந்தரும் ஏவலோடு சென்று,
அருந்ததிக்கு நேர் அன்னைதன்னையும்
பரிந்து இறைஞ்சினார்; பயில வாழ்த்தினாள்,
திருந்து பூணினாள், சிறுவர் தம்மையே.134.- பாண்டவர்கள்காந்தாரியை வணங்குதலும் அவள்
வாழ்த்துதலும்.

இருந்த மைந்தரும்-(திருதராட்டிரனெதிரில்) இருந்த
பாண்டவர்களும், ஏவலோடு சென்று – (அத்திருதராட்டிரனது) கட்டளைப்படியே
போய், அருந்ததிக்கு நேர் அன்னைதன்னையும் – அருந்ததியை யொத்த [சிறந்த
பதிவிரதையாகிய] (தமக்குத்) தாய் முறையான காந்தாரியையும், பரிந்து
இறைஞ்சினார் – அன்பு கொண்டு வணங்கினார்கள்; திருந்து பூணினாள் –
தொழில்திருந்திய ஆபரணங்களையுடையவளாகிய இந்தக்காந்தாரியும், சிறுவர்
தம்மை – மக்கள் முறையான அப்பாண்டவர்களை, பயில-நன்றாக,
வாழ்த்தினாள்-; (எ – று.)

     அருந்ததி – வசிஷ்டமுனிவரது பத்தினி: பதிவிரதாதருமத்திற் சிறத்தலால்,
கற்புடைமகளிர்க்கு உவமை கூறப்படுவள்: ஏனையோரினும் இவட்குச் சிறப்பு
மற்றையிடங்களில் மாத்திரமேயன்றி நட்சத்திரநிலையிலும் கணவனை
விட்டுப்பிரியாது உடனிருத்தல்.  “மதியளித்ததொல்குலத்தவன் விழியிலா
மகனெனத் தமர் சொல்ல, விதியளித்ததென் றுளமகிழ்ந்தனள்
வடமீனெனத்தகுங்கற்பாள்,”“இமைத்தகண்ணினை மலர்ந்தினிநோக்கலேன்
யானொருவரையென்று, சமைத்தபட்டமொன்றினிற் பொதி பெதும்பை” என்ற
சம்பவச்சருக்கச் செய்யுள்கள் இங்குக் காணத்தக்கன. திருந்து பூண் – வேலைத்திறமமைந்த  ஆபரணம்.  ‘இருந்த மைந்தரும் மேவலோடுசென்று’ என
விரித்தல்விகாரங்கொண்ட பாடம், ஓசைநயஞ் சிறக்கும்.  

முந்த வந்து, தாள் முளரி கைதொழும்
அம் தண் வல்லியும், ஐவர் மைந்தரும்,
வந்து நிற்றலும், மகிழ்வொடு உன்னினாள்,
‘குந்தி செய் தவம் கூரும்!’ என்னவே.135.- குந்தியின்பாக்கியத்தைக் காந்தாரி கருதுதல்.

முந்த வந்து – (தனக்கு) எதிரில்வந்து, தான் முளரி – (தனது)
தாமரைமலர்போன்ற  பாதங்களை, கைதொழும் – கைகூப்பி வணங்கிய, அம்
தண் வல்லியும் – அழகிய குளிர்ந்த பூங்கொடி போன்ற  திரௌபதியும், ஐவர்
மைந்தரும் – பஞ்ச பாண்டவர்களும், வந்து நிற்றலும் – (ஒருங்கே) வந்துநின்ற
வளவில்,- (காந்தாரி),- குந்தி செய் தவம் கூரும் என்ன – ‘குந்தி (முற்பிறப்பிற்)
செய்த நல்வினை மிக்கதாகும்’ என்று, மகிழ்வொடு உன்னினாள் –
மகிழ்ச்சியோடு கருதினாள்; (எ – று.)

     தன் மக்களாகிய துரியோதனாதியரினும் பாண்டவர் மிகச் சிறந்து
விளங்குதலால், தனது தவத்தினும் குந்தியின் தவம் மிக்கதெனக் காந்தாரி
மதித்தனளென்க: இது, அழுக்காறு; தாள்முளரி – முன்பின்னாகத் தொக்க
உவமைத்தொகை.  முளரி – முட்களுள்ள அரையையுடையதெனத்
தாமரைக்குக் காரணக்குறி; (அரி=அரை – தண்டின் சுற்றுப்புறம்.)

வேயை வென்ற தோள் மின்னை அங்கு வைத்து,
யாயையும் பணிந்து, எழில் கொள் தோளினார்
போய், அகண்டமும், போற்று கங்கையாள்
சேயை, அன்புடன் சென்று, இறைஞ்சினார்.136.-பாண்டவர்கள் வீடுமனைவணங்குதல்.

எழில் கொள் தோளினார் – அழகைக்கொண்ட
தோள்களையுடையவர்களான பாண்டவர்கள்,-வேயை வென்ற தோள் மின்னை
– மூங்கிலைச் சயித்த [மூங்கிலினும் அழகிய] தோள்களை யுடையவளான
மின்னல்போன்ற திரௌபதியை, அங்கு வைத்து – அந்தக் காந்தாரியினகத்தில்
இருக்கும்படி விட்டிட்டு, யாயையும் பணிந்து – தாயாகிய அக்காந்தாரியை
வணங்கி விடையையும்பெற்று,- அகண்டமும் போய் போற்று
கங்கையாள்சேயை – எல்லாவுலகத்தாரும் சென்றுவணங்கித் துதிக்கின்ற
கங்காதேவியின் குமாரனான வீடுமனை, அன்புடன் சென்று இறைஞ்சினார்-
அன்போடு போய்  வணங்கினார்கள்; (எ – று.)

     யாயையும் பணிந்து என்பதற்கு – தமது பெற்றதாயாகிய குந்தியையும்
வணங்கி (விடைபெற்று) என்பாருமுளர். பசுமை யிலும் நெய்ப்பிலும்
திரண்டுருண்டு நீண்டவடிவத்திலும் இள மூங்கில் – திரௌபதியின் தோள்கட்கும்,
விளக்கத்திலும் ஒல்கியொசிதலிலும் மின்னல் – அவளது மேனிக்கும் உவமையாம்.
சேய் – செந்நிறம்பற்றி வந்தபெயர்; முருகக்கடவுளைக் குறிக்கும் இப்பெயர் –
உவமையாகுபெயராய் அக்கடவுள் போன்ற வீரம் அழகு முதலிய
குணங்களையுடைய ஏனையோர்க்கும் வழங்கும். மின். உவமவாகுபெயர்.
அகண்டம் – வடசொல்

வேந்து அழைத்ததும், விதுரன் ஏவலின்
போந்து அழைத்ததும், புகல வந்ததும்,
தாம் தழைக்கவே, தந்தை தந்தை முன்,-
தேம் தழைத்த தார்ச் செல்வர்-கூறினார்.137.- பாண்டவர்கள் தாம்வந்த காரணத்தை
வீடுமனிடஞ் சொல்லுதல்.
 

தேன் தழைத்த தார் செல்வர் – தேன் மிக்குப் பொருந்திய
மலர்மாலையையணிந்த செல்வச்சிறப்பையுடையவர்களாகிய பாண்டவர்கள், –
வேந்து அழைத்ததும் – திருதராட்டிரமகாராசன்  (தன்னிடத்திற்கு வரும்
பொருட்டுத் தங்கட்குத்) திருமுகம் விடுத்ததையும், ஏவலின் விதுரம் போந்து
அழைத்ததும் – (அத்திருதராட்டிரனது) கட்டளையினால் விதுரன்
(இந்திரப்பிரத்தத்திற்கு) வந்து (திருமுகங்கொணர்ந்து கொடுத்துத் தங்களை
நேரில்) அழைத்ததையும், புகல வந்ததும் – (அங்ஙனம் விதுரன்) சொல்லத்
(தாங்கள்) வந்ததையும், தாம்-, தந்தை தந்தை முன் – பாட்டனாகிய
வீடுமனிடத்தில், தழைக்க கூறினார் – விவரமாகச் சொன்னார்கள்; (எ – று.)

    இலக்கணையால், முதலிலுள்ள ‘அழைத்ததும்’ என்பது, திருமுகம்
விடுத்ததை யுணர்த்திற்று.  தந்தைதந்தை – தந்தைக்குத் தந்தை; பிதாமகன்.

புள் அலங்கலார் புரிவு உரைத்திட,
கொள்ளை வன் திறல் குருகுலேசனும்,
‘கள்ள வஞ்சர் வெங் கருவி செய்யினும்,
உள்ளது உண்டு’ எனா, உண்மை கூறினான்.138.- அதற்கு வீடுமன் கூறுதல்.

புள்  அலங்கலார் – வண்டுகள் மொய்க்கும் மலர்
மாலையையணிந்த பாண்டவர்கள், புரிவு உரைத்திட – (தாங்கள் வந்த)
செய்தியைச் சொல்ல,- (அதைக்கேட்டு), கொள்ளை வல்திறல் குருகுல ஈசனும்
– மிகவும் வலிய சாமர்த்தியத்தையுடைய குருகுலத்தாரில் தலைவனான
வீடுமனும், ‘கள்ளம் வஞ்சர் – திருட்டுத்தனமாகத் தீங்குசெய்யுங்
கருத்துடையவர்கள், வெம் கருவி செய்யினும் – (தீமைநேரும்படி) கொடிய
உபாயங்களைச்செய் தாலும், உள்ளது உண்டு – விதியினால் அனுபவிக்கவேண்டிய
நன்மை வந்தேதீரும்,’ எனா – என்றும், உண்மை கூறினான் – தத்துவத்தை
யெடுத்துரைத்தான்; (எ – று.)

    பாண்டவர்கள் இராச்சியம் முதலியவற்றை யிழந்து மிகவருந்தும்படி
துரியோதனாதியர்கள் பலவகையாக முயற்சிசெய்தும் முடிவிலே பாண்டவர்களே
துரியோதனாதியர்களை வென்று அரசு பெற்று இனிதுவாழ்வாரென்பது,
வீடுமனுட்கோள்: அவ்வாறே மேல் நிகழ்தல் காண்க.  ‘வெங்கருவி செய்யினும்’
என வந்ததனால், ‘உள்ளது’ என்பதற்குத் தீமையெனப் பொருள்கொள்ளாமல்
வரக் கூடிய நன்மையென்றே பொருள் கொள்ளப்பட்டது. பின்னிரண்டடியிற்கூறிய
பொதுப்பொருள் ‘துரியோதனாதியர் என்ன தீங்கு செய்தாலும் நுமக்கு ஒன்றும்
குறைவுவராது’ என்னுஞ் சிறப்புப் பொருளைத் தெரிவித்தது,
பிறிதுமொழிதலணியாம். ‘புள்’ என்ற பொதுப்பெயர், சிறப்பாய்
வண்டையுணர்த்திற்று; இது, ஒருவகை இலக்கணை. அலங்கல் – தொங்கியசைவது
என மாலைக்குக் காரணக்குறி.  புரிவு – அன்போடு, உரைத்தலும் – (தமது
செய்தியைத்) தெரிவித்தவுடனே எனக் கூறலுமாம். குருகுல+ஈசன்=குருகு லேசன்:
குணசந்திபெற்ற வடமொழித்தொடர்; ‘அ ஆ முன் இ ஈ வரின்
அவ்விரண்டுங்கெட ஓர் ஏகாரந் தோன்றும்.

தாதை தாதையைத் தாம் அகன்று, பின்
கோதை வெஞ் சிலைக் குருவை, மைந்தனை,
கீத நான்மறைக் கிருபனை, செழும்
பாதநம் செய்தார், பரிவொடு ஏகியே.139.- பாண்டவர்கள் துரோணன்முதலியோரை வணங்குதல்.

தாம் – அப்பாண்டவர்கள்,-தாதை தாதையை அகன்று –
பாட்டனாகிய வீடுமனை விட்டுப்பிரிந்து,- பரிவொடுஏகி – அன்போடு சென்று,
பின்-பின்பு, கோதை வெம் சிலை குருவை – மாலையையணிந்த
கொடியவில்லையுடைய ஆசிரியனாகிய துரோணனையும், மைந்தனை –
(அவனது) குமாரனாகிய அசுவத்தாமனையும், கீதம் நால் மறை கிருபனை –
சுவரங்களையுடைய நான்கு வேதங்களிலும் வல்லவனான கிருபாசாரியனையும்,
செழும் பாதநம் செய்தார் – சிறப்பாக [மனப்பூர்வமாக] வணக்கஞ்செய்தார்கள்:
(எ – று.)

     ‘கோதை’ என்பதைச் சிலைக்கேனும் குருவுக்கேனும் அடைமொழியாக்
கொள்ளலாம்.  குரு – அஜ்ஞாநமாகிய இருளைப் போக்குபவ னென்று
பொருள்படும் வடசொல். (கு-இருள், ரு – ஒழிப்பவன்). கிருபன் – கௌதம
முனிவனது பௌத்திரன்;  துரோணன் மனைவியான கிருபிக்கு உடன்பிறந்தவன்;
துரியோதனாதியர்க்கும் பாண்டவர்க்கும் முதல் வில்லாசிரியன்;
நாணற்காட்டிற்பிறந்த இவனை அங்கு வேட்டையாடவந்த சந்தநுமகாராசன் கண்டு
கிருபையினால் எடுத்து வளர்த்தமைபற்றி, இவனுக்கு இப்பெயர் வந்தது. பாதநம் –
பதநம் என்ற வடசொல்லின் நீட்டல்; கீழ்வீழ்ந்து வணங்குத லென்பது பொருள்.
இனி, செழு – செழுமையாகிய [அழகிய], பாதம் – பாதங்களில், நம் –
வணக்கத்தை, செய்தார் எனப் பதவுரை கூறினுமாம். 

சதுர மா மறைத் தலைவர்தங்களால்
எதிர் மொழிந்த பேர் ஆசி எய்தியே,
மதுர மன்றல் நாள்மாலை மன்னரும்
விதுரன் மந்திரம் மீள மன்னினார்.140.-துரோணன் முதலியஅந்தணரிடத்து ஆசிபெற்றுப்
பாண்டவர்கள் விதுரன்மாளிகை சேர்தல்.

மதுரம் மன்றல் நாள் மாலை மன்னரும் – இனிய
வாசனையுள்ள அன்றுமலர்ந்த [புதிய] மலர்மாலையைத் தரித்த அரசர்களாகிய
பாண்டவர்களும்,-மா சதுரம் மறை தலைவர் தங்களால் – சிறந்த நான்கு
வேதங்கட்கும் உரியவரான [பிராமணராகிய] துரோணன் முதலியோரால், எதிர்
மொழிந்த-எதிரிற்கூறப்பட்ட, பேர் ஆசி எய்தி – சிறந்த ஆசீர்வாதங்களைப்
பெற்று, மீள-பின்பு, விதுரன் மந்திரம் மன்னினார் – விதுரனது மாளிகையிற்
சென்று சேர்ந்தார்கள்; (எ – று.)

    ‘மறைத்தலைவர்’ என்றது-கீழ்ச்செய்யுளில் வந்த துரோணன் அசுவத்தாமன்
கிருபன் என்ற மூவரையுங் குறிக்கும்.  சதுரம் – வடசொற்றிரிபு. இனி, சதுரம்
மாமறை என்பதற்கு-சதுரப்பாட்டையுடைய பெரியவேதம் என்றும் பொருள்
கொள்ளலாம்.  எதிர் மொழிந்த பேர் ஆசி – (பாண்டவர் வணங்கும்போது
அவர்கட்கு) எதிரிலே கூறிய வாழ்த்து என்றும், (அவர்களது வணக்கத்திற்கு)
ஈடாகச்செய்த வாழ்த்து என்றும் இருவகையாகப் பொருள்படும். மதுரம் –
தேனுமாம். மூன்றாமடி – முற்றுமோனை.  மந்திரம், வடசொல்.  

தமது இல் மெய்யுறத் தம்மது ஆகவே
அமிழ்து அருந்தி, அங்கு அவர் இருந்த பின்-
திமிர நாசனன், செய்ய மேனியன்,
கமல நாயகன், கடலில் மூழ்கினான்.141.-பாண்டவர்விதுரன்மாளிகையிற் புசித்திருக்க, சூரியன்
அஸ்தமித்தல்.

அவர் – அப்பாண்டவர், தமதின் – தம்முடைய கிருகம்
போலவே (விதுரனது கிருகத்தைப்பாவித்து), தம்மது அமிழ்து ஆகவே –
(விதுரனுடைய அன்னமாயிருந்தாலும் வேறுபாடு கருதாமல்) தம்முடைய
அன்னமாகவே, மெய் உற அருந்தி – மனப்பூர்வமாகப் பாவித்து
(அவ்விதுரனிட்ட அன்னத்தை) உண்டு, அங்கு இருந்த பின் – அவ்விதுரனது
மாளிகையில் தங்கியிருந்தவளவில்,-திமிரம் நாசனன்-இருளை யொழிப்பவனும், செய்ய மேனியன் – சிவந்த உருவத்தையுடையவனும், கமலம் நாயகன் –
தாமரைக்குத் தலைவனுமாகிய சூரியன், கடலில் மூழ்கினான் – மேல் கடலில்
முழுகுபவனானான் [அஸ்தமிப்பவனானானென்றபடி];  (எ – று.)

     விதுரன் துரியோதனனிடத்திலே பழகுபவனாயிருந்தும் நன்னெறியிற்
செல்வது காரணமாகப் பாண்டவரிடத்தில் ஆதி தொடங்கியே மிக்க
அன்புடையவனாய் அரக்குமாளிகையினின்று தப்புவித்தல்
முதலியபேருபகாரங்களை அப்பாண்டவர்க்குச் செய்து வந்தனனாதலால்,
அவர்கள் அவ்விதுரனிடத்து அன்புகூர்ந்து அவன் வீட்டிற் சிறிதும் வேறுபாடு
கருதாது உணவுண்டு மகிழ்ந்தனரென்பது, முன்னிரண்டடியில் விளக்கப்பட்டது.

    தமதின்-தமது – ‘தாம்’ என்பதனடியாப்பிறந்த ஒன்றன்பாற்
குறிப்புவினையாலணையும் பெயர்; இன் – ஐந்தாம்வேற்றுமையுருபு, ஒப்புப்
பொருளது.  சூரியனைக் காண்கிற பகற்பொழுதிலே அலர்ந்தும் காணாத
இராப்பொழுதிலே குவிந்தும் நிற்றலால், தாமரைக்குச் சூரியனைத் தலைவனாகக்
கூறுதல், கவிசமயம்.  பார்ப்பதற்குக் கடலில் மூழ்குவதுபோலத் தோன்றுதலால்,
சூரியன் அஸ்தமித்தலை, கடலின் மூழ்குதலாகக் கூறினார்.  திமிரநாஸநன்,
கமலநாயகன் – வடசொற்றொடர்கள். 

தினகரன் கரம் திகழ் கமண்டலம்,
பனிகொள் செக்கர் தம் படமது ஆகவே,
இனிய வந்தனைக்கு எறியும் வேலை சேர்
புனிதர் ஒத்தது-அப் புன்கண் மாலையே.142. – மாலைப்பொழுதின்வருணனை.

(இ -ள்.) அ புன் கண் மாலை – அந்தக்காலத்தில் தோன்றிய
அற்பமான இடத்தையுடைய [சற்றுநேரம்மாத்திரமேயிருக்கக் கூடிய]
மாலைப்பொழுதானது,- தினகரன் கரம் திகழ் கமண்டலம் (ஆக) – சூரியன்
(தனது) கையில்விளங்குகிற ஜலபாத்திரமாகவும், பனி கொள் செக்கர் –
குளிர்ச்சியைக்கொண்ட செவ்வானம், தம்படமது ஆக – தமது (அரையில்
கட்டிய) காஷாய வஸ்திரமாகவும் (காணப்பட),-இனிய வந்தனைக்கு –
நன்மையாகிய சந்தியாவந்தனஞ் செய்தற்பொருட்டு, எறியும் வேலை சேர் –
(அலை) வீசுகின்ற மேல்சமுத்திரத்தைச் சேர்கிற, புனிதர் – பரிசுத்தராகிய
துறவறத்தோரை, ஒத்தது-; (எ – று.)

    மேற்குத்திசையிற்சென்று சூரியன் அஸ்தமிக்குஞ்சமயத்திலே செவ்வானம்
மிக்குப்பரவ, மாலைப்பொழுது தோன்றுவதை காவிவஸ்திரமுடுத்த
துறவறமுடையோர் கமண்டலத்தையேந்திக் கொண்டு சந்தியாவந்தனஞ்
செய்தற்பொருட்டு மேல்கடற்கரைக்குச் செல்வதாகக்குறித்தார்;
உருவகவணியைஅங்கமாக் கொண்டுவந்த தன்மைத்தற்குறிப்பேற்றவணி.
துறவிகள் காஷாய முடுத்தவராய்க் கையிற்கமண்டலமேந்திச்
சந்தியாவந்தனஞ்செய்யுமாறு நீர்நிலையை நோக்கிச்செல்லுதல், இயல்பு. சூரியன்
அஸ்தமிக்குஞ்சமயத்தில் வெப்பம் மாறிக் குளிர்தொடங்குமாதலால் அப்போது
தோன்றுஞ் செவ்வானம், ‘பனிகொள் செக்கர்’ எனப்பட்டது.  படமது, அது –
பகுதிப்பொருள்விகுதி. ‘சந்தியாவந்தனஞ் செய்யாதுவிட்டால், பெரும்பாவம்
விளையும்’ என்பது தருமசாஸ்திரங்களின் கொள்கையாதலால், அவ்வாறு பாவம்
உண்டாகாது செய்யப்படுஞ் சந்தியாவந்தனத்தை, ‘இனிய வந்தனை’ என்றார்.
‘புன்கண்மாலை’ என்பதற்கு – (காமுகர்க்கு) வருத்தத்தைச் செய்யும்
மாலைப்பொழுது எனப்பொருள் கூறுவாருமுளர்.  திநகரன், கரம், கமண்டலூ,
படம், வந்தநா, வேலா – வடசொற்கள்.  

காய்ந்த மெய்ச் செழுங் கதிரவன் கரம்
ஏய்ந்த அப் பதத்து எழில் எறித்தலால்,
ஆய்ந்து, பத்தி கொண்டு, அடர் பசும் பொனால்
வேய்ந்தது ஒக்குமால், வேந்தன் மாடமே.143.-செவ்வானத்தில் விதுரனதுமாளிகையின் தோற்றம்.

வேந்தன் மாடம் – அந்த விதுரனது மாளிகை,-காய்ந்த –
(பகற்பொழுதில்) உஷ்ணமாக ஒளிவீசின,  மெய் – உருவத்தையுடைய,
செழுங்கதிரவன் – செழித்த சூரியனது, கரம் – கிரணங்கள், ஏய்ந்த –
பொருந்திய, அ பதத்து – அந்தச்செவ்வானத்தினின்று, எழில் எறித்தலால் –
அழகிய செவ்வொளி வீசுதலினால்,-ஆய்ந்து – ஆராய்ந்து, பத்திகொண்டு –
வரிசை வரிசையாக, அடர் பசும் பொனால் வேய்ந்தது – நெருங்கிய
பசும்பொன் தகட்டினால் வேயப்பட்டதை, ஒக்கும்-; (எ – று.)ஆல்-ஈற்றசை.

    அஸ்தமநசமயத்திலே சூரியகிரணம் வானத்தில் தங்கியுள்ள
மேகங்களிற்பட்டுச் செவ்வான முண்டாக அந்தச் சிவந்த ஒளி விதுரனது
மாளிகையின் மேற்புறத்தில் பட்டு விளங்குதல், செம்பொன்தகட்டினால்
வரிசையாக அம்மாளிகை வேயப்பட்டதென்னும்படி யிருந்ததென
வருணித்தவாறு; இதுவும், தன்மைத்தற்குறிப்பேற்றவணியே.  சூரியன் ஆயிரங்
கிரணங்களையுடையவனாதலால், அவனை ‘செழுங்கதிரவன்’ என்றார்.  பதம் –
ஸ்தாநம்: பத்தி – வரிசை: வடசொற்கள்.  விசித்திரவீரியமகாராசனது
பத்தினிகளுள் அம்பிகையினால், தனக்கு ஈடாக அனுப்பப்பட்ட தாதிப்
பெண்ணிடத்திலே சந்தநுமகாராசனது பத்தினியான சத்தியவதியின் கட்டளைக்கு
உட்பட்ட வியாசமுனிவனது அருளினாற் பிறந்தவனான விதுரன்,
திருதராஷ்டிரனுக்கும் பாண்டுவுக்கும் தம்பியாக அச்சத்தியவதியினால்
ராஜகுலத்திலே வைத்து வளர்க்கப்பட்டு அரசர்க்கு உரிய மேன்மைகளை
யெல்லாம் அடைந்தனனாதலால், ‘வேந்தன்’ எனப்பட்டான்.  இனி,
வேந்தன்மாடம் – தருமராஜன் வீற்றிருந்த (விதுர) கிருக மெனினுமாம்

‘மன் குலத்துஉளோர் வஞ்சகம் செயார்;
என் குலத்துஉளோர் என்கொல், ஈது?’ என,
தன் குலத்துஉளோர் தமை விலக்கவோ,
நன் குலத்து உளோன் உதயம் நண்ணினான்?144.-சந்திரோதயம்.

‘மன் குலத்து உளோர் – அரச வமிசத்திற் பிறந்தவர்கள்,
வஞ்சகம் செயார் – (ஒருபோதும்) வஞ்சனைத்தொழிலைச் செய்யமாட்டார்கள்;
என்குலத்து உளோர் ஈது என்கொல்-எனது வம்சத்திற் பிறந்தவர்களான
துரியோதனாதியர்மாத்திரம் இவ்வாறு வஞ்சனைத்தொழில் செய்யத்
தொடங்கியது என்ன விபரீதமோ? என – என்று எண்ணி, தன் குலத்து
உளோர்தமை விலக்கவோ – தனது குலத்தவர்களான அத்துரியோதனாதியரை
(அவ்வஞ்சனைத்தொழில் செய்யவொட்டாது) (விலக்குவதற்காகவோ, நல்
குலத்து உளோன்-சிறந்த அந்தக் (குரு) குலத்துக்கு முதல்வனான சந்திரன்,
உதயம் நண்ணினான் – உதயமானான்; (எ – று.)

    சந்திரன் குளிர்ந்தகிரணத்தோடு அப்பொழுது உதயமானதை, தன்
குலத்தவரான துரியோதனாதியர் பாண்டவரிடத்துப் பொறாமையினால்
அவர்கட்குத்தீங்குசெய்யுமாறு மிக்கஉக்கிரங்கொண்டதைத் தணித்தற்கென்று
உதித்ததாகக் காரணங்கற்பித்து வருணித்தார்;  ஏதுத்தற்குறிப்பேற்றவணி.
வினாப்பொருளதாகிய ஓகாரம் – தற்குறிப்பேற்றவுருபாய் நின்றது.  தமது
குலத்திற் பிறந்த சிறுவர்கள் மிக்க உக்கிரமாக மாறுபாடு கொண்டால்
அப்பொழுது அக்குலத்துப் பெரியோர் இடைநின்று அவ்வுக்கிரத்தைத்
தணிக்கும் இயல்பு, இங்குக் கருதத்தக்கது.  அரசகுலத்திற் பிறந்தவர்கட்கு
வெளிப்படையாக வீரங்காட்டிப் பொருதுவெல்லுதல் முறைமையேயன்றிச் சூது
வழியாக வெல்லுதல் முறைமை யன்றென்பது, ‘மன்குலத்துளோர்
வஞ்சகஞ்செயார்’ என்பதன் கருத்து.  என்கொல் = ‘என்’ என்பதே
வினாப்பொருளைத் தருதலால், கொல் – அசைநிலை.  ஈது – சுட்டு நீண்டது.
உதயம் – உதயகிரி:  கிழக்கிற் சூரியசந்திரர் தோன்றுவதை உதயகிரியில்
தோன்றுவதாகக் கூறுதல், கவிசமயம். 

குருகுலாதிபன் கொடிய நெஞ்சமே
இருள் நிறைந்தது’ என்று யாம் வெறுக்கவோ?
மரபில் ஆதியாம் மதியும், எண்ணின், உள்
கரியன் என்னுமா காணல் ஆனதே.இருகவிகள் – சந்திரனதுவருணனையையும்
துரியோதனனது கொடுமையையும் கூறும்.

எண்ணின் – ஆலோசிக்குமிடத்து,-மரபில் ஆதி ஆம் மதியும்
– (குரு) வமிசத்திற்கு மூலபுருஷனாகிய சந்திரனும், உள் கரியன் என்னும் ஆ
– (தனது) உள்ளிடத்திலே [நடுவிடத்திற்] களங்க முடையவன்’ என்று
சொல்லும்படியாக, காணல் ஆனதே – பிரத்தியட்சமாகக் காணும்படியிருந்ததே;
(ஆகவே), ‘குருகுல அதிபன் கொடிய நெஞ்சமே – (அந்தச்சந்திரவமிசத்தில்
தோன்றிய) குருகுலத்தரசனான துரியோதனனது கொடுமையுள்ள மனம்
மாத்திரமே, இருள் நிறைந்தது – இருட்டு [குற்றம்] நிறைந்துள்ளது,’ என்று-,
யாம் வெறுக்கஓ – நாம் வெறுக்கக்கடவோமோ? [வெறுப்பது தகுதியன்று
என்றபடி]; (எ – று.)

     இது – கவிக்கூற்று.  குலத்துமூலபுருஷனாகிய சந்திரன் உட்
கறுப்புடையனாயிருத்தலால், அவ்வமிசத்தில் தோன்றிய துரியோதனனுக்கும் இருள்
மனமுண்டாயிற் றென்றார்; ‘உள்கரியன்’ என்ற தொடர் சிலேடைவகையால்
மனத்திற்குற்ற முடையவனென்று பொருள்படுதலோடு நடுவிடத்திற்
களங்கமுடையவனென்றும் பொருள் படும்; ஆகவே, இது சிலேடையணியை
அங்கமாகக் கொண்டுவந்த ஏதுவணியாம். ‘நெஞ்சம் இருள் நிறைந்தது,’
‘உட்கரியன்’ என்ற தொடர்களை, திருக்குறளில் “அகங்குன்றி மூக்கிற்கரியார்”
என்றார்போலக் கொள்க.  குருகுலாதிபன் – தீர்க்க சந்தி பெற்ற
வடமொழித்தொடர். நெஞ்சமே, ஏகாரம் – பிரிநிலை. வெறுக்க –
வியங்கோள்வினைமுற்று: ஓகாரம்-எதிர்மறை.  என்று+யாம் = என்றியாம்:
குற்றியலிகரம்.  ஈற்றுஏகாரம் – தேற்றம்

உள் நிலாவு பேர் ஒளி மழுங்கு நீள்
வெண் நிலாவினால், வெளுத்த, எங்கணும்;-
கண் இலான் மகன் கடுமை அஞ்சி, இம்
மண்ணில் ஆர், வெளா வடிவம் எய்தினார்?

(சந்திரன்), உள் நிலாவு பேர்ஒளி மழுங்கி-(தனது) நடுவிற்
பொருந்திய பேரொளி (களங்கத்தினாற்) குறையப் பெற்று, நீள்
வெள்நிலாவினால் எங்கணும் வெளுத்த – நீண்ட வெண்மையாகிய (தனது)
காந்தியினால் (தனது) உடம்பு முழுவதும் வெண்ணிறமாய்க் காணப்பட்டது
[உடம்பு முழுவதும் வெண்ணிறவொளியைப் பெற்றிருந்தது என்றபடி]; கண்
இலான்மகன் கடுமை அஞ்சி – பிறவிக்குருடனான திருதராட்டிரனது மகனாகிய
துரியோதனனது கொடுஞ்செய்கைக்குப் பயந்து, இ மண்ணில் – இவ்வுலகத்தில்,
ஆர் வளொ வடிவம் எய்தினார் – எவர்தாம் வெளுக்காத
உருவத்தைப்பெற்றவர்? [எல்லாரும்  வெளுத்துத்தோன்றினார்கள்];

     இதுவும் – கவிக்கூற்று.  இயற்கையில் சந்திரன் வெண்ணிறமுடையனா
யிருத்தற்கு, துரியோதனள் கொடுமைக்கு அஞ்சியதால் வெளுத்ததாகக் காரணம்
புனைந்துகூறினார்; ஏதுத்தற்குறிப்பேற்றவணி.  முன்னிரண்டடிகளைப்
பின்னிரண்டடிகள் சாதித்து நிற்பது – வேற்றுப்பொருள்வைப்பணி: இன்ன
அணியெனத்துணிந்து கூறமுடியாமல் இவ்விரண்டணிகளும் ஒருங்கே நின்று
ஐயமூட்டுதலால்,- இச்செய்யுள் ஐயக்கலவையணியின்பாற்படும்: இவ்வாறு
வருவதனை, வடநூலார், ‘ஸந்தேஹஸங்கரம்’ என்பர்.  அச்சத்தினால்
உடம்புவெளுத்தல், இயற்கை.  வெளுத்த – வெளுத்தது: தொகுத்தல்.
‘வெளுத்ததெங்கணும்’ என்பதும் பாடம். வளொ – ஈறுகெட்ட
எதிர்மறைப்பெயரெச்சம். முந்தின செய்யுளின் தொடர்ச்சியினால், இச்செய்யுளின்
முன்னிரண்டடிக்கு ‘சந்திரன்’ என்ற எழுவாய் வருவிக்கப்பட்டது.  இனி,
இச்செய்யுளின் முன்னிரண்டடிக்கு- ‘நீள் வெள் நிலாவினால் – நீண்ட
வெண்மையாகிய நிலாவினாலே, உள் நிலாவு பேர் ஒளி  மழுங்கி –
இந்நகரத்தினுள்ளே விளங்குகின்ற பேரொளி குறைந்து, எங்கணும் வெளுத்த –
எல்லாவிடங்களும் வெண்ணிறமாகத் தோன்றின, என்று பொருள்கூறி, ‘சந்திரனது
நிலாவினால் அனைத்தும் வெளுத்தன; அவ்வாறே சந்திரனது வமிசத்தவனான
துரியோதனனால் அவனைச்சார்ந்த யாவரும் அறிவு வெளுத்தார்கள்
[நல்லறிவிழந்தார்கள்]’ என எடுத்துக்காட்டுவமையணிபடக் கருத்து
விரித்துரைப்பர் ஒருசாரார்.

விந்தை வாழ்வு கூர் விறல் மிகுத்த தோள்
முந்தை ஓதை மா முரசு உயர்த்தவன்
சிந்தை காமுற, தெரிவை வந்து, இளந்
தந்தை கோயிலில் தானும் நண்ணினாள்.147.- தருமனது விருப்பத்தின்படிதிரௌபதியும் விதுரனது
மாளிகையை வந்தடைதல்.

விந்தை வாழ்வு கூர் விறல் மிகுந்த தோள் – வீர லட்சுமி
வசிக்கப்பெற்ற வலிமையை மிகுதியாகக்கொண்டுள்ள தோள்களையுடையவனும்,
முந்தை ஓதை மா முரசு உயர்ந்தவன் – முதன்மையான [கம்பீரமான]
ஓசையையுடைய பெரிய முரச வாத்தியத்தின் உருவத்தை யெழுதிய கொடியை
உயரநாட்டியவனுமான தருமபுத்திரனது, சிந்தை – மனம், காமுற –
விருப்பங்கொள்ள (அவ்விருப்பத்தின்படியே), தெரிவை தானும் – திரௌபதியும்,
இளந்தந்தை கோயிலில்-(அத்தருமனுக்குச்) சிற்றப்பனான விதுரனது
அரண்மனையில், வந்து நண்ணினாள்-வந்துசேர்ந்தாள்; 

    வீரலஷ்மிக்கு விந்தியமலை உறைவிடமாதலால் அவளுக்கு ‘விந்தை’
என்று ஒருபெயர்; வடமொழியில் ‘விந்த்யவாஸிநீ’ என வழங்குதல் காண்க.
விந்தை = துர்க்கை.  முந்தையோதை-முரசுக்கு அடைமொழி.  முந்தை, ஐ –
சாரியை.  தானும், உம்மை-இறந்தது தழுவியது.  

மங்குல் சுற்றும் மா மண்டபத்திடைக்
கங்குலில் தடங் கண் துயின்றபின்,
பொங்கு உலைப்படும் பொன்-தசும்பென,
செங் குலக் கதிர்த் திகிரி தோன்றவே,148.- சூரியோதய வருணனை.

இதுவும் அடுத்த கவியும் – குளகம்.

     (இ -ள்.)  (பாண்டவர்களும் திரௌபதியும்),- மங்குல் சுற்றும்-மேகங்கள்
வந்து சூழப்பெற்ற [மிகவுயர்ந்த], மா மண்டபத்திடை – விதுரன்
மாளிகையிலுள்ளதொரு பெரிய மண்ட பத்தில், கங்குலில் – அவ்விராப்பொழுதில்,
தடம் கண் துயின்ற பின் – பெரியகண்களை மூடிக்கொண்டு நித்திரைசெய்த
பின்பு,- பொங்கு உலை படும் பொன் தசும்பு என-எரிகின்ற உலைக்களத்திற்
பொருந்தியவொரு பொற்குடம்போல, செம் குலம் கதிர் திகிரி தோன்ற – சிவந்த
தொகுதியாகிய கிரணங்களையுடைய சூரியன் உதயமாக, (எ – று.)- ‘தூயவன்
கண்படையுணர்ந்து’ என, அடுத்த கவியோடு  தொடரும்.

     திகிரி – சக்கரம்: அதுபோலவே வட்டவடிவமுடைய சூரியனுக்கு
உவமையாகுபெயர்.  சூரியனுக்குப் பொற்குடமும், அவனைச் சுற்றி விளங்குங்
கிரணங்கட்கு அப்பொற்குடத்தின் சுற்றுப்பக்கமெல்லாம் எரியும் உலைக்கனலும்
ஒப்பா மென அறிக; தற்குறிப்பேற்றவணி.  மண்டபம் மேகமண்டலத்திலும்
உயர்ந்திருத்தலால், மேகங்கள் சூழ்ந்து செல்லவேண்டியதாயிற்று.
மங்குல்சுற்றுமா மண்டபம் – தொடர்புயர்வுநவிற்சியணி; மேகத்திற்கும்
மண்டபத்திற்கும் தொடர்பு இல்லாதிருக்கவும் சம்பந்தங் கற்பித்துக் கூறியமை
காண்க.    

பாயல் மன்னு கண்படை உணர்ந்து, உளம்
தூயவன் பொலஞ் சுடர் பணிந்தபின்,
சாயை அன்ன தன் தம்பிமாரொடும்,
சீயம் என்னவே, திகழ வைகினான்.149.- தருமபுத்திரன்தம்பியருடன் காலைக்கடன்கழித்து
இனிதிருத்தல்.

உளம் தூயவன்-பரிசுத்தமான மனத்தையுடையவனாகிய
தருமபுத்திரன்,-பாயல் மன்னு கண்படை உணர்ந்து-படுக்கையிற் பொருந்திய
நித்திரை தெளிந்து எழுந்து, பொலம் சுடர் பணிந்த பின்-அழகிய கிரணங்களை
யுடையவனான சூரியனை நமஸ்கரித்தபின்பு, [காலைக்கடன்கழித்த பின்பு],-
சாயைஅன்ன தன் தம்பிமாரொடும் – (விடாது தொடர்கின்ற) நிழலையொத்த
(வீமன் முதலிய) தம்பிமார் நால்வருடனும், சீயம் என்ன – சிங்கம்போல, திகழ
வைகினான்-(தனது) பெருமிதந் தோன்ற (விதுரனது மாளிகையில்)
தங்கியிருந்தான்; (எ – று.)

     கண்படை – கண்படுதல்: தூங்குதல்.  பொலஞ் சுடர் – பண்புத்தொகைப்
புறத்துப்பிறந்த அன்மொழித்தொகை: அடையடுத்த ஆகுபெயருமாம்.  விடாது
தொடர்தலில் வீமன் முதலியோர்க்குச் சாயை உவமை.  சாயை – சாயா என்ற
வடசொல் ஆவீறு ஐயாயிற்று.  சீயம் – ஸிம்ஹம் என்ற வடசொல்லின் சிதைவு.

முனிவரர்க்கு எலாம் முதன்மை ஆகவே,
தனதனின் பெருந் தானம் உய்த்திடும்;
பனுவல் வித்தகப் பாவலர்க்கு எலாம்
கனம் எனத் தரும், கனக மாரியே.150.-தருமபுத்திரனதுகொடைச்சிறப்பு.

(அப்பொழுது தருமபுத்திரன்),-முனிவரர்க்கு எலாம் – சிறந்த
பிராமணர்கட்கெல்லாம், முதன்மை ஆக – மிகவுஞ்சிறப்பாக, தனதனின்-
குபேரனைப்போல, பெரு தானம் உய்த்திடும் – மிக்க தானங்களைச்
செய்வானாயினான்; (அன்றியும்), பனுவல் வித்தகம்பாவலர்க்கு எலாம்-
நூல்களில் தேர்ந்த அறிவையுடைய கவிபாடுதலில்வல்ல புலவர்கட்கெல்லாம்,
கனகம் மாரி – பொன் மழையை, கனம் என தரும்-மேகம் போலப்
பொழிவானுமாயினான்;

    செல்வமிகுதிபற்றிக் குபேரனும், கைம்மாறுகருதாது கொடுத்தல் பற்றி
மேகமும், தருமபுத்திரனுக்கு உவமை. குபேரன் ஈகைக்குணமுடையானென்பதை,
அவனுக்கு வழங்கும் ‘தநதன் [பொருளைக் கொடுப்பவன்]’ என்ற அவன்பெயரே
வற்புறுத்தும்;  “தநதேந ஸமஸ் த்யாகே” “த்யாகேச தநதோயதா” என்றார்
ஸ்ரீவால்மீகி பகவானும். ‘கநம்’ என்ற வடமொழிப்பொதுப்பெயர் – சிறப்பாக
இங்கே பொன்மழைபொழியுந் தன்மையதான ‘புட் கலாவர்த்தம்’ என்ற
மேகத்தைக் குறிக்கு மென்னலாம். உய்த்திடும், தரும்-செய்யுமென்முற்றுக்கள்
ஆண்பாலுக்கு வந்தன

கண்டு கண்டு, தன் கழல் வணங்கும் மா
மண்டலேசரும், மாலை மன்னரும்,
கொண்டு வாழ்வுற, குரகதம், குடை,
தண்டு, சாமரம், தந்தி, நல்குமே.151.-இதுவும் அது.

பின்னும் அத்தருமபுத்திரன்), கண்டு கண்டு தன் கழல்
வணங்கும் – (ஆதரத்தோடு) பலமுறை கண்டு தனது பாதங்களை வணங்குகிற,
மா மண்டல ஈசரும் – பெரிய மண்டலாதிபதிகளும், மாலை மன்னரும் –
மலர்மாலையணிந்த குறுநில மன்னர்களும், கொண்டு வாழ்வு உற –
பெற்றுவாழும்படி, (அவர்கட்கு), குரகதம் – குதிரைகளையும், குடை –
குடைகளையும், தண்டு – பல்லக்குகளையும், சாமரம் – சாமரங்களையும், தந்தி
– யானைகளையும், நல்கும் – கொடுப்பானாயினான்; (எ – று.)

    மண்டலேசர் – குணசந்திபெற்ற வடமொழித்தொடர்: இவர், நாற்பது
கிராமத்தை யாள்பவர்.  தண்டு-த்வஜதண்டமும், கதாயுதமுமாம்.  சாமரம்-
சமரமென்னும் மானின் வால்மயிரினாற் செய்யப்பட்டதோர் இராசசின்னம்.
தந்தீ – தந்தத்தையுடையது; வடமொழித் தத்திதாந்தநாமம்.  

பூந் தண் மா மலர்ப் பூவை கொங்கை தோய்,
ஏந்து தோளினான் இவண் இருந்துழி,
பாந்தளம்அம் கொடிப் பார் மகீபனைச்
சேர்ந்த மன்னர்தம் செயல் விளம்புவாம்152.-கவிக்கூற்று.

பூ தண் மா மலர் பூவை – அழகிய குளிர்ந்த சிறந்த தாமரை
மலரில் வசிக்கின்ற இலக்குமிபோன்ற திரௌபதியினது, கொங்கை – தனங்கள், தோய் – அழுந்தப்பெற்ற, ஏந்து தோளினான் –
உயர்ந்த தோள்களையுடையவனான தருமபுத்திரன், இவண் இருந்துழி –
இவ்வாறு விதுரன் மாளிகையில் வீற்றிருந்தபோது, பாந்தள் அம் கொடி பார்
மகீபனை சேர்ந்த மன்னர் தம்-பாம்புக்கொடியையுடைய நிலவுலகத்தரசனான
துரியோதனனைச் சேர்ந்த அரசர்கள் செய்த, செயல்-செய்கையை,
விளம்புவாம்-இனி எடுத்துச் சொல்வோம்; (எ – று.)

     விதுரன் மாளிகையில் தருமனிருந்தானாக, துரியோதனனைச் சார்ந்த
மன்னரின் செய்கையைக் கூறுவோ மென்பதாம். சபையினழகைக்காணுதலென்று
வியாஜம் வைத்துத் துரியோதனன் அங்கு வரவழைத்துச் சூதாடத்தூண்டுதலும்
தருமன் அதற்கு உடன்படாமையுமே அடுத்து நிகழ்வனவாயினும், தருமனைத்
துரியோதனன் கருத்தை யொட்டிச் சூதாடச் செய்தலைச் சகுனி முதலியோர்
செய்தது முக்கியமென்று, ‘மகீபனைச் சேர்ந்த மன்னர் செயல் விளம்புவா’
மென்கிறார். பூவை – நாகணவாய்ப்பறவை. ‘மலர்ப் பூவை’ என்ற தொடர் –
அடையடுத்த உவமவாகுபெயராய்த் திருமகளைக் குறித்து, பின்பு அவள்
போன்ற திரௌபதியைக் குறித்தலால்,- இருமடியாகுபெயர். ‘நிலவுலகத்தை
ஆளும் மன்னவர் திருமாலின் அமிசமுள்ளவர்’ என்ற நூற்கொள்கைக்குஏற்ப,
‘பூ…தோளினான்’ என்பதற்கு – இலக்குமியின் தனங்கள் தோயப்பெற்ற
தோள்களையுடைய தருமபுத்திரன் என்றே பொருள் கூறினுமாம்.  இனி
வீரலக்ஷ்மி பொருந்தப்பெற்ற தோள்களையுடைய தருமபுத்திர னெனினும்
இழுக்காது.  ‘பாந்தளங்கொடி’ – அம் – சாரியை; “நெய்தலம்பறை”
என்றவிடத்துப்போல.  ‘பார்மகீபன்’ என்றவிடத்து, முன் ‘பார்’ என
வந்ததனால், மகீபனென்றது-அரசனென்ற மாத்திரமாய் நின்றது:
“அடியளந்தான்றாஅயது” என்றாற்போல.  விளம்புவாம் – கவிகளுக்குரிய
இயற்கைத்தனித்தன்மைப்பன்மை.  இவண் – இவ்விடத்தில்: இவ்வண்ணம்

தானும், மாமனும், குறித்த தம்பிமாரும், அங்கர்தம்
கோனும், மாசு இல் தந்தை தந்தை, கொடுமரக் கை விதுரனும்,
வான் உலாவு புகழ் படைத்த மைந்தனும், துரோணனும்,
ஏனையோரும் வந்து கூடி, இனிது இருந்த எல்லையே.153.-துரியோதனனதுசபாமண்டபத்தில் எல்லாரும் திரளுதல்.

இதுவும், அடுத்த கவியும் – குளகம்.

     (இ -ள்.) தானும் – துரியோதனன்தானும், மாமனும் – (இவனது)
மாமனாகிய சகுனியும், குறித்த தம்பிமாரும் – (துச்சாதனன் முதலாகக்)
கூறப்பட்ட தம்பியர் தொண்ணூற்றொன்பதின்மரும், அங்கர்தம் கோனும் –
அங்கதேசத்தார்க்கு அரசனாகிய கர்ணனும், மாசு இல்தந்தை – குற்றமற்ற
தந்தையாகிய திருதராட்டிரனும், தந்தை – (அத்திருதராட்டிரனுக்குத்) தந்தை
முறையாகின்ற வீடுமனும், கொடு மரம் கை விதுரனும் – வில்தொழிலில் தேர்ந்த
கையையுடைய விதுரனும், துரோணனும்-, வான் உலாவுபுகழ் படைத்த
மைந்தனும் – தேவலோகத்தளவும் பரவிய கீர்த்தியைப் பெற்றவனும்
(அத்துரோணனது) புதல்வனுமாகிய அசுவத்தாமனும், ஏனையோரும் –
(கிருபன்முதலிய) மற்றையோரும், வந்து-, கூடி – ஒன்று சேர்ந்து, இனிது இருந்த
எல்லை – இன்பமாக வீற்றிருந்தபொழுதில்,-(எ-று.)- ‘கொற்றவன் பணிக்க
அணுகினான்’ என, அடுத்தகவியோடு தொடர்ந்து முடியும்.

     ஆசு இல் தந்தை யென்றும் பிரிக்கலாம்; பொருள் இதுவே, கொடு மரம்
– வளைவான மரமென, வில்லுக்கு ஒருபெயர்.  துரோணன் – பரத்வாஜ
முனிவரது குமாரன்:  கிருபாசாரிய ருடன்பிறந்தவளான கிருபியின் கணவன்;
அசுவத்தாமனது தந்தை; சகல சாஸ்திரங்களையும் தன்பிதாவினிடம் கற்றுப்
படைத்தொழிலைப் பரசுராமரிடத்து ஏழுநாளிற் பயின்றவன்;
துரியோதனாதியர்க்கும் பாண்டவர்க்கும் அஸ்திரசாஸ்திரங்களைக் கற்பித்த
ஆசிரியன்.  வைதிக விரதாநுஷ்டாநஞ் செய்துகொண்டிருக்கையில்
தேவர்களாலேவி யனுப்பப்பட்ட மேநகையின் கட்டழகைக் கண்டு காதல்
கொண்ட பரத்துவாச முனிவனது விருப்பத்தால் ஒரு துரோணகும்பத்திற்
பிறந்தமை பற்றி, இவனுக்குத் துரோணனென்று பெயர்.  துரோணகும்பம் –
பதக்களவு கொண்ட பாத்திரம்;  பதக்கு – இரண்டு மரக்கால்.

     இதுமுதல் முப்பத்தேழு கவிகள் – பெரும்பாலும் ஈற்றுச் சீரொன்று
விளச்சீரும், மற்றையாறும் மாச்சீர்களுமாக வந்த கழிநெடிலடி நான்கு கொண்ட
எழுசீராசிரிய விருத்தங்கள்;இனி, ஈற்றுச்சீரொன்று விளச்சீரும்,
மற்றைமூன்றும் காய்ச்சீருமாக வந்த அளவடி நான்குகொண்ட
கலிவிருத்தங்களாகக் கொள்ளினும் இழுக்காது.

‘மண்டபத்தின் அழகு காண, மன்னர் ஐவர்தம்மை நீ
கொண்டு, இமைப்பின் வருக’ என்று கொற்றவன் பணிக்கவே,
வண்டு சுற்று மாலை மார்பன் வண் பிராதிகாமி, வான்
அண்டர் கற்பம் என இருந்த அரசர்தம்மை அணுகினான்.154.-துரியோதனன் கட்டளையிட,பிராதிகாமி
பாண்டவரையழைக்க ஏகுதல்.

மண்டபத்தின் அழகு காண – (புதிதாகக்கட்டிய)
மண்டபத்தினது அழகியகாட்சியைக் காணுமாறு, மன்னர் ஐவர் தம்மை –
அரசர்களான பாண்டவ ரைவரையும், நீ-, கொண்டு இமைப்பின் வருக –
அழைத்துக்கொண்டு கணப்பொழுதில் வருவாயாக,’ என்று-, கொற்றவன்
பணிக்க – துரியோதனராசன் (பிராதிகாமிக்குக்) கட்டளையிட,-வண்டு சுற்று
மாலை மார்பன் வள்பிராதிகாமி – வண்டுகள் சூழ்ந்து மொய்க்கப்பெற்ற மலர் மாலையையணிந்த மார்பையுடையவனாகிய சிறந்த அந்தப்பிராதிகாமியும், வான்
அண்டர் கற்பம் என இருந்த அரசர் தம்மை – வானுலகத்திலுள்ள தேவர்களது
ஐந்து கற்பகவிருட்சம்போல (விதுரனது மாளிகையிலே ஈகைக்குணத்தோடு)
வீற்றிருந்த பாண்டவர்களை, அணுகினான் – நெருங்கிச்சேர்ந்தான்; (எ – று.)

     கீழ்77-ஆஞ் செய்யுளிலும் பாண்டவர்கட்குக் கற்பகவிருட்சத்தை
உவமை கூறினார்.  ஐந்து தேவதருக்களுள் ஒன்றன் பெயராகிய ‘கல்பம்’
என்பது, இங்கே பொதுவாய்த் தேவதருக்களைந்தையும் குறிக்கும்.  இமைப்பு –
இயல்பாக மனிதர் ஒருகால் கண்ணிமைத்தற்கு வேண்டுங் காலம்;  இது,
‘மாத்திரை’ எனவும் படும்.  பிராதிகாமி – துரியோதனனது சாரதி

சென்று யாகபதி கழல்-திருப் பதம்
பணிந்து, கீழ்
நின்று, வாய் புதைத்து, ‘அறங்கள் நிலைபெறும்
சொல் நீதியாய்!
வென்றி வீரன், “மண்டபத்தின் விரிவு காண
வேண்டும், நீ”
என்று கூறி, ஏவினான், இங்கு என்னை’
என்று இயம்பினான்.155.-பிராதிகாமி துரியோதனனதுகட்டளையைத் தெரிவித்தல்.

(பிராதிகாமியானவன்),-சென்று – (பாண்டவர்களிருந்த
இடத்திற்குப்) போய், யாகபதி கழல்திருப்பதம் பணிந்து –
இராசசூயயாகஞ்செய்த அரசனாகிய தருமபுத்திரனது வீரக்கழலையணிந்த சிறந்த
பாதங்களை வணங்கி, நீள் நின்று – தூரத்தில் நின்று, வாய் புதைத்து –
(கையினாலே தனது) வாயைப் பொத்திக்கொண்டு, (தருமபுத்திரனை நோக்கி),
‘அறங்கள் நிலைபெறும் சொல் நீதியாய் – தருமங்கள் நிலைபெறுதற்கேற்ற
சொற்களையும் நீதியையுமுடைய அரசனே! வென்றி வீரன் – வெற்றியையுடைய
வீரனாகிய துரியோதனராஜன், மண்டபத்தின் விரிவு நீ காண வேண்டும் என்று
கூறி – ‘(தான் கட்டிய புது) மண்டபத்தினது பரப்பினழகை நீ பார்க்கவேண்டும்’
என்று சொல்லி, (உன்னை அழைத்து வருமாறு), இங்கு என்னை ஏவினான் –
இவ்விடத்திற்கு என்னை அனுப்பினான்,’ என்று இயம்பினான்-என்று (தான்
வந்த காரணத்தை) விண்ணப்பஞ் செய்தான்; (எ – று.)

     கழல் – வீரர்கள் தமது வீரத்திற்கு அறிகுறியாகக் காலில் அணிவதோர்
ஆபரணம். பெரியோரிடம் தூரநின்று வாய் பொத்திப்பேசுதல், பணிவுக்
குறிப்பு.     

ராயசூய பன்னிதன்னை, ‘எந்தை இல்லில் யாயொடும்
போய் இருந்து வருக’ என்று, புரை இலா மனத்தினான்
சீயம் அன்ன துணைவரோடு சென்று புக்கு, நன்றி இல்
பேய் இருந்தது என இருந்த பீடு-இலானை எய்தினான்.156.-தருமபுத்திரன்திரௌபதியைக் காந்தாரியிடம்
அனுப்பிவிட்டுத் தான் துரியோதனனது சபையைச் சேர்தல்.

(அதுகேட்டு),-புரை இலா மனத்தினான் – குற்றமற்ற
மனத்தையுடையவனாகிய தருமபுத்திரன்,- ராயசூயபன்னிதன்னை – (தான்)
செய்த இராசசூயயாகத்திற் பத்தினியாயிருந்த திரௌபதியை நோக்கி, ‘எந்தை
இல்லில் – எனது தகப்பனாகிய திருதராட்டிரனது அரண்மனையில், யாயொடும்
– தாயாகிய காந்தாரியினிடத்தில், போய் இருந்து வருக-,’ என்று – என்று
கட்டளையிட்டு, சீயம் அன்ன துணைவரோடு – சிங்கத்தையொத்த
[வீரத்தன்மையிற் சிறந்த] தம்பிமார்களுடனே, சென்று புக்கு – (துரியோதனனது
சபையிற்) சென்று புகுந்து, நன்றி இல் பேய் இருந்தது என இருந்த பீடு
இலானை – நன்மை சிறிதுமில்லாத பேய் இருந்தாற்போன்று இருந்த
பெருந்தன்மையில்லாதவனாகிய துரியோதனனை, எய்தினான் – அடைந்தான்;
(எ – று.)

    அறிவின்றிப் பிறர்க்குத் தீமைசெய்யத் துணிந்ததனால், துரியோதனனுக்குப்
பேயை உவமை கூறினார்.  ராயசூயபன்னி தன்னை, சென்றுபுக்கு நன்றியில்,
இருந்ததெனவிருந்த – பிராசமென்னுஞ் சொல்லணி. ராஜஸூயபத்நீ –
வடசொற்றொடர்:  வடமொழி, முதலில் இகரம் பெறாது நின்றது; சிந்தாமணியில்
“ராசமாபுரி,” “ரவிகுல திலகன்” என்றவை போல. யாயொடும் – உருபுமயக்கம்.
தருமனைக்கூறியது, தம்பியர் நால்வர்க்கும் உபலக்ஷணம்: மேல்வருமிடங்களிலும்
தக்கபடி இவ்வாறு கொள்க

மன் இருந்த பேர் அவைக்கண் வந்து,
முந்தை வரிசையால்,
முன் இருந்த தாதை, வம்ச முதல்வன், ஞான
விதுரன், என்று,
இன்(ன) இருந்த தலைவர் தாள் இறைஞ்சி, முன்னர்
இட்டது ஓர்
மின் இருந்த ஆசனத்தின்மீது இருந்து,
வினவினான்.157.-தருமன் பெரியோர்களைவணங்கி ஆசனத்தில்
வீற்றிருத்தல்.

(தருமபுத்திரன்),- மன் இருந்த பேர் அவைக்கண் வந்து –
துரியோதனராசனிருந்த பெரிய சபையினிடத்தில் வந்து சேர்ந்து, முந்தை
வரிசையால்-பழமையான முறைமைப்படியே,- முன் இருந்த – பிரதானமாக
வீற்றிருந்த, தாதை – பெரிய தகப்பனாகிய திருதராட்டிரனும், வம்சம் முதல்வன் –
(தான் பிறந்த) குலத்திற் பெரியோனாகிய வீடுமனும், ஞானம் விதுரன் – அறிவிற்
சிறந்த விதுரனும், என்று இன்ன இருந்த தலைவர் – என்று இவ்வகையான
அச்சபையிலிருந்த பெரியோர்களது, தாள் – பாதங்களை, இறைஞ்சி – வணங்கி,
முன்னர் இட்டது ஓர் மின் இருந்த ஆசனத்தின் மீது – முன்னே
போகட்டிருந்ததாகிய ஒளிவிளங்குகின்ற ஒரு ஆசனத்தின்மேல், இருந்து –
வீற்றிருந்து, வினவினான் – வியந்து சொல்வானாயினான்; (எ – று.)- அதனை
அடுத்த கவியிற் காண்க.

    பெரியோர்களைக் கண்டால் வணங்குதல் தொன்றுதொட்டு வரும்
மரபாதலால், அவ்வாறே, தருமபுத்திரனும், திருதராட்டிரன் முதலிய பெரியோரைவணங்கின னென்க.  ‘இன்னிருந்த’-பெயரெச்சத்தின் அகரவீறு –
தொகுத்தல். ‘இன்ன தலைவர்’ ‘இருந்த தலைவர்’ எனத் தனித்தனி இயையும்.
இனி, இன்இருந்த-இனிமையாக வீற்றிருந்த எனினுமாம்;  இனிமையென்ற
பண்புப்பெயர்ஈறுபோய் இடை இகரமுங் கெட்டு, ‘இன்’ என நின்றதென்க;
‘இன்னிசை’என்றவிடத்துப்போல.  ‘வினைப்பகுதி வேண்டிய பொருளை
விளைக்கும்” என்பது இலக்கண நூலாரது கொள்கையாதலால், வினவுதல் –
இங்கு, வியந்துகூறுத லென்னும் பொருளைத் தந்தது

இந்த மண்டபம் சமைந்த இனிமைதன்னை
என் சொல்வேன்!
முந்தை மண்டபங்களுக்கும் முதன்மையான
தேவர் ஊர்
அந்த மண்டபத்தும் இல்லை, அதனை
அன்றி மண்ணின்மேல்
எந்த மண்டபத்தும் இல்லை, இதனின் உள்ள
எழில்அரோ!’158.-துரியோதனன் கட்டியமண்டபத்தைத்
தருமன் வியந்து கூறல்.

இதுவும், அடுத்த கவியும் – ஒரு தொடர்.

     (இ -ள்.) இந்த மண்டபம் சமைந்த இனிமை தன்னை என்சொல்வேன் –
இந்த மண்டபங் கட்டப்பட்ட அழகை [அழகாக அமைந்துள்ளதை]க் குறித்து
எவ்வாறு புகழ்வேன் (யான்)? இதனின் உள்ள எழில் – இம்மண்டபத்திலுள்ள
அழகு,-முந்தை மண்டபங்களுக்கும் முதன்மை ஆன-பழைய எல்லாச்
சபாமண்டபங்களுள்ளுஞ் சிறந்ததாகிய, தேவர் ஊர் அந்தமண்டபத்தும் –
தேவலோகத்திலுள்ள அந்தச் (சுதன்மையென்னுஞ்) சபாமண்டபத்திலும்,
இல்லை-; அதனை அன்றி – அந்தத் தேவலோகத்து மண்டபத்தையே
யல்லாமல், மண்ணின்மேல் எந்த மண்டபத்தும் – இப் பூவுலகத்திலுள்ள எந்த
மண்டபங்களிலும், இல்லை-;(எ – று.)-அரோ-ஈற்றசை.

    தேவலோகத்துச் சுதன்மையினும், இவ்வுலகத்து எல்லா மண்டபங்களினும்
இம்மண்டபமே சிறந்ததென, துரியோதனன் நூதனமாகக் கட்டிய சபையைத்
தருமன் வியந்தன னென்க.  இனிமை – கண்ணுக்கு இனிமை: அதாவது-அழகு.
தேவலோகத்துச் சுதன்மை தோன்றிய பின்பே மற்றையிடங்களிற்
சபாமண்டபங்கள் தோன்றின வென்பான், அதற்கு ‘முந்தை மண்டபங்களுக்கு
முதன்மையான’ என்று அடைமொழி கொடுத்தனனென்னலுமாம்.  முதலடியிற்
கூறிய விஷயத்தை மற்றை மூன்றடிகளும் சாதித்து நிற்றலால்,
தொடர்நிலைச்செய்யுட்குறியணி. அந்த – உலகறிசுட்டு

என வியந்து, தருமராசன் இனிது இயம்ப, யாளி, வெஞ்
சின விலங்கல், என்னுமாறு சேரவந்த இளைஞரும்,
மனு விளங்கு முறைமையான் வணங்கி, மன்னர் மன்னன்முன்
தனதன் அங்கு இருப்பது அன்ன தவிசின்மீது வைகினார்.159.-தம்பியர் நால்வரும்அங்கு வீற்றிருத்தல்.

என-என்று, தருமராசன்-தருமபுத்திரன், வியந்து இனிது
இயம்ப-(அம் மண்டபத்தைக் குறித்து) வியந்து இனிமையாகக் கூறுகையில்,-
யாளி வெம்சினம் விலங்கல் என்னும் ஆறு – யாளியென்னுங்
கொடுங்கோபத்தையுடைய மிருகத்தை உவமை சொல்லும்படி, சேரவந்த –
தருமபுத்திரனோடு வந்த, இளைஞரும் -(அத்தருமனது) தம்பிமாராகிய வீமன்
முதலிய நால்வரும், மனு விளங்கு முறைமையான் வணங்கி-மநுதரும
சாஸ்திரத்திற் கூறியுள்ள முறைமைப்படியே (அச்சபையில் வீற்றிருந்த
திருதராட்டிரன் முதலிய பெரியோரை) வணங்கி, மன்னர் மன்னன் முன் –
அரசர்க்கரசனான துரியோதனனது எதிரில், தனதன் இருப்பது அன்ன
தவிசின்மீது – குபேரனது ஆசனத்தையொத்த ஆசனங்களின்மேல், வைகினார்
– வீற்றிருந்தார்கள்;  (எ – று.)

    தருமராசன் – யமன்:  இங்கு, தந்தையின் பெயர் மைந்தனுக்கு
வழங்கியது;  மைந்தனுக்கும் அப்பெயர் ஏற்கும்.  யாளி – கோபத்திலும்,
பராக்கிரமத்திலும், பெருமிதத்திலும் வீமன் முதலியோர்க்கு உவமை.  விலங்கல்
– குறுக்காக உடம்பு அமையப்பெற்றது எனக் காரணப்பெயர்: ‘திர்யக்’ என்னும்
வடமொழியின் பொருள் கொண்டது.  மனு – மநுவென்பவனாற் செய்யப்பட்ட
நூலுக்குக் கருத்தாவாகுபெயர்.  இருப்பது – ஒன்றன்பால் வினையாலணையும்
பெயர்;  இரண்டாம் வேற்றுமைத்தொகை.  அங்கு-அசை;  குபேரனுக்கு உரிய
அளகாபுரியில் என்னவுமாம்.

புரை கொள் பாவமே நிறைந்து, புண்ணியம் குறைந்து, நீள்
நரகின் ஊழிகாலம் வாழ்தி! நாகர் வாழ்வின் உள்ளதும்
தரணிமீது பெறுக!’ என்று, தந்தது ஒக்கும், வான் உளோர்-
அரவஏறு உயர்த்த வீரன் அன்று இருந்த பெருமையே.160.-துரியோதனன் அச்சபையில்வீற்றிருந்த சிறப்பு.

அரவம் ஏறு உயர்த்த வீரன் அன்று இருந்த பெருமை –
சிறந்த அரவக்கொடியை உயர எடுத்த வீரனாகிய துரியோதனன் அப்பொழுது
(அச்சபையில்) வீற்றிருந்த சிறப்பு,- ‘(உன்னிடத்தில்), புரைகொள் பாவமே
நிறைந்து – குற்றத்தைக் கொண்ட தீவினையே மேலிட, புண்ணியம் குறைந்து –
நல்வினை குறைந்துவிட்டதனால், நீள் நரகின் ஊழி காலம் வாழ்தி-துன்பம்
மிகுந்துள்ள நரகத்தில் (நீ) நெடுங்காலம் வசித்துத் துன்பமடையப் போகிறாய்:
(ஆதலால், சிறிது காலமாவது), நாகர் வாழ்வின்உள்ளதும் தரணிமீது பெறுக –
தேவலோகத்திலுள்ள இன்பத்தையும் இப் பூமியிலேயே பெற்றுவாழ்வாயாக,’
என்று-, வான் உளோர்-தேவர்கள், தந்தது – (தங்களது உலகத்திலுள்ள
சிறப்பைத் துரியோதனனுக்குக்) கொடுத்ததை, ஒக்கும்-; (எ – று.)

   தேவர்கள் இனித்துரியோதனன் அடையப்போகின்ற கொடுநரகத்திற்கு
மனமிரங்கி, ‘சிறிதுகாலமாவது இவன் தேவலோகத்து இன்பத்தை
இப்பூமியிலேயே அடைவானாக’ என்று அவனுக்கு அவ்வின்பத்தை அருளோடு
கொடுத்தாற்போலுமென, இயற்கையில் துரியோதனன் மிக்கமேன்மையோடு
வீற்றிருந்த சிறப்பை வருணித்தவாறு;  தற்குறிப்பேற்றவணி: இதனால்,
துரியோதனனது அப்போதைய சிறப்பு, தேவலோகச் சிறப்பை யொத்திருந்த
தென்க.  ‘ஒக்கும்’ என்பது – தற்குறிப்பேற்றவுருபாய் வந்தது.  ‘பாவமே
நிறைந்து புண்ணியங் குறைந்து’ என மாறுபட்ட சொற்கள் வந்தது
தொடைமுரண்.  கம் – சுகம்; அதற்கு எதிர் – அகம், துக்கம்: அதில்லாதது –
நாகம்: அதில் வாழ்பவர் – நாகர் எனத் தேவர்க்குக் காரணக்குறி.  நரகு –
நரகம் என்ற வடசொல்லின் விகாரம்.  வாழ்தி – முன்னிலையொருமையெதிர்
காலமுற்று: இ – காலங்காட்டும்விகுதி, த் – எழுத்துப்பேறு.  தந்தவன் பெயர்.

மாயம் ஒன்றும் எண்ணலா மனத்தின் மிக்க மாமனும்
நீயும், இன்று, சூதுகொண்டு நிகழ் விலாசம் அயர்விரோ-
ஆய வென்றி ஐயன் இல்லில் அமுதம் அன்ன போனகம்
போய் அருந்தும் அளவும், இங்கு இருந்து போது போகவே?’161.-துரியோதனன் தருமனைச்சூதாடத் தூண்டுதல்.

(துரியோதனன் தருமனை நோக்கி),-‘ஆய வென்றி ஐயன்
இல்லில் – பொருந்திய வெற்றியையுடைய (நமது) தந்தையின் மாளிகையில்,
போய்-, அமுதம் அன்ன போனகம் அருந்தும் அளவும்-தேவாமிருதத்தை
யொத்த இனியவுணவை உண்ணப்போகின்ற வரையிலும், இங்கு இருந்து –
இச்சபையிலிருந்து, போது போக – காலம் இனிது கழியுமாறு,-மாயம் ஒன்றும்
எண்ணலா மனத்தின் மிக்க மாமனும் – வஞ்சனை சிறிதும் எண்ணாத
மனத்தையுடைமையால் மேம்பட்டவனும் (எனது) மாமனுமாகிய சகுனியும்,
நீயும்-, இன்று – இப்பொழுது, சூதுகொண்டு நிகழ் விலாசம் அயர்விரோ-சூதாடு
கருவியைக் கொண்டு செய்கிற விளையாட்டை [சூதாட்டத்தை] ஆடுகிறீர்களா?’
(எ – று.)-‘என்று வினாவினன்’ என எழுவாயோடு வினையும் வருவித்து
முடிக்க.

     இச்செய்யுள் தருமனைநோக்கித் துரியோதனன் கூறிய வார்த்தையென்பது,
மேல் 163-ஆஞ் செய்யுளில், தருமன் “தாதுகொண்டு தேனிரங்கு தாமமார்ப”
என்று விளிப்பதனாற் புலனாகும்.  துரியோதனன், சகுனியைக்கொண்டு
தருமனை வஞ்சிக்கவேண்டுமென்று கருதுகின்றானாதலால், அச்சகுனியின்மேல்
தருமன் சிறிதும் ஐயங்கொள்ளாதிருக்க வேண்டுமென்று அவனை ‘மாயமொன்று
மெண்ணலா மனத்தின் மிக்கமாமன்’ எனப்புனைந்து கூறினன்.
விலாசம்=விலாஸம்: விநோதமென்பது பொருள்.  அயர்விர் – ‘அயர்’ என்னும்
பகுதியினடியாப் பிறந்த முன்னிலைப்பன்மை எதிர்காலவினைமுற்று.  ஓகாரம் –
வினா.              

மீது எடுத்த வஞ்சர் ஆகி வெகுளி செய்தல், பிறர் பெருங்
கோது எடுத்து உரைத்தல், நண்புகொண்டு அயிர்த்தல்,
கொடிய வெஞ்
சூது எடுத்து விழைதல், உற்ற சூள் பிழைத்தல், இன்னவே
தீது எடுத்த நூலில் முன்பு தீய” என்று செப்பினார்162, -இவ்விரண்டுகவிகளும்- தருமன்
சூதாட உடன்படாமை தெரிவிப்பன.

(அதுகேட்டுத் தருமபுத்திரன்), (162) மீது எடுத்த வஞ்சர் ஆகி
வெகுளி செய்தல் – அதிகமாகப் பொருந்திய வஞ்சனையை யுடையவர்களாய்க்
கோபங்கொள்ளுதலும், பிறர் பெருங்கோது எடுத்து உரைத்தல்-பிறரது
பெருங்குற்றங்களை எடுத்துத் தூற்றுதலும், நண்பு கொண்டு அயிர்த்தல் –
(ஒருவரை முதலில்) நட்புக்கொண்டு பிறகு சந்தேகித்தலும், கொடிய வெம் சூது
எடுத்து விழைதல் – மிகக்கொடிய சூதாடுதலை மேலாகக்கொண்டு
விரும்புதலும், உற்ற சூள் பிழைத்தல் – சொன்ன உறுதிமொழி தவறுதலும்,
இன்ன – (ஆகிய) இச்செயல்களை, முன்பு-முற்காலத்திலேயே, தீது எடுத்த
நூலில்-பாவங்களை யெடுத்துக் கூறுகின்ற தருமசாஸ்திரங்களில், தீய என்று
செப்பினார் – தீமையானவையென்று சொன்னார்கள், (பெரியோர்; அவ்வாறு
கூறியிருக்கவும்), –

     (162) சூதாட்டத்தைத் தீதென்று இகழ்ந்து சொல்லத்தொடங்கிய
தருமபுத்திரன் அதற்கு இனமாயுள்ள மற்றைச் சில குற்றமான செயல்களையும்
உடன் கூறினான்; இது – ஒப்புமைக்கூட்டவணி.   கொடியவெம் –
ஒருபொருட்பன்மொழி.  சூள்-சபதம்.  இன்ன – பலவின்பாற்பெயர்; ஏ –
இசைநிறை.     

‘வாது கொண்டு காதல் கூரும் மாமனோடு வஞ்சனைச்
சூதுகொண்டு பொருது அழிந்து, தோல்வி எய்த வேண்டுமோ?
தாதுகொண்டு தேன் இரங்கு தாம மார்ப! நெஞ்சில் நீர்
ஏது கொண்டது? அது நுமக்கு அளிப்பன், இம்பர்’ என்னவே,163.-இவ்விரண்டுகவிகளும்- தருமன்
சூதாட உடன்படாமை தெரிவிப்பன.

(அதுகேட்டுத் தருமபுத்திரன்), (163) ‘தாது கொண்டு தேன்
இரங்கு தாமம் மார்ப – மகரந்தப்பொடிகளைப் பூசிக்கொண்டு வண்டுகள்
ஒலிக்கின்ற (நந்தியாவட்டப்) பூமாலையையணிந்த மார்பையுடைய
துரியோதனனே!- (163) காதல் கூரும் மாமனோடு – (உன்னிடத்தில்) அன்புமிக்க
மாமனான சகுனியுடனே, வஞ்சனை சூது கொண்டு வாதுகொண்டு பொருது –
வஞ்சனைக்கிடமான சூதாட்டத்தினால் (நான்) மாறுபட்டுப் போர்செய்து,
அழிந்து – (பொருள்களையெல்லாம்) இழந்து, தோல்வி எய்த வேண்டுமோ –
தோல்வியை யடையவேண்டுமென்பது (உனது) கருத்தோ? நீர் – நீங்கள்,
நெஞ்சில் – (உங்கள்) மனத்தில், ஏதுகொண்டது – எப்பொருளைப்
பெறவேண்டுமென்று கருதுகின்றீர்களோ, அது – அப்பொருளை, நுமக்கு –
உங்கட்கு, இம்பர் – இப்பொழுதே [இவ்விடத்திலேயே], அளிப்பன் –
கொடுப்பேன்.’ என்ன – என்றுகூற, (எ – று.) – ‘மன்னனுரையுணர்ந்து’ என
அடுத்த கவியோடு தொடரும்.

     (163) வாது – வாதம்.  மோதுபோரில் வீரவாதம் நிகழ்வதுபோலச்
சூதுபோரிற் பொய்ம்மையினால் வாக்குவாதம் நிகழுமென்க.  சகுனி
வஞ்சனைக்கிடமான சூதாட்டத்தில் மிகவும் வல்லவனாதல்பற்றி அவனோடு,
சூதாடித் தீயவழியால் இழவாமல் வேண்டுமென்று கேட்ட பொருள்களை
மனப்பூர்வமாகக் கொடுத்து இழத்தலே நன்று என்று தருமன் தனக்குச்
சூதாடுங்கருத்து இல்லாமையை நன்கு வெளியிட்டன னென்க.  தன்னை
எவ்வாற்றாலாயினும் பொருளையிழந்து கெடுமாறு செய்வதே துரியோதனாதியரது
கருத்து என்பதை, ‘நெஞ்சில் நீர் ஏதுகொண்டது’ என்ற வினாவினால்
விளக்கினான், கீழ்த் தன்னை நோக்கிச் சூதாடுமாறு தூண்டியவன் துரியோதனனே
யாதலால் தருமன் முதன்முதல் அவனை விளிப்பான் ‘தாமமார்ப’ என்று
ஒருமையாகவும், சகுனி முதலிய மற்றையோர்க்கும் தன்னைப்
பொருளிழப்பிக்கவேணுமென்ற கருத்து உள்ளதென்பதை அறிந்தவனாதலின்
அவர்களையுங் கூட்டி, ‘நீர்,’ ‘நுமக்கு’ எனப் பன்மையாகவுங் கூறினான்.
‘வாதுகொண்டு காதல்கூரும் மாமனோடு’ என்பதற்கு – (என்மீது மனத்தில்)
விரோதங்கொண்டு (வெளிக்கு) அன்பு மிக்குள்ளவன்போல நடிக்கிற சகுனியுடனே
என்றும் பொருளுரைக்கலாம். ‘காதல் கூரும் மாமனோடு வாது கொண்டு
பொருது’ என்ற தொடரில், நெருங்கிய உறவினர்களிடத்தில் மனவொற்றுமைப்பட்டு
நண்புகொண்டிருத்தல் தகுதியேயன்றி ஒற்றுமைகெட்டு மாறுபட்டுச் சூதாடுதல்
தகுதியன்று என்ற கருத்தும் தோன்றும்.  கூரும் – ‘கூர்’ என்ற
உரிச்சொற்பகுதியினடியாப்பிறந்த பெயரெச்சம். அளிப்பன் – தன்மையொருமை
வினைமுற்று;  அன் – விகுதி.     

ஒப்பு இலாத வேள்வி மன்னன் உரை உணர்ந்து, சகுனியும்,
‘தப்பு இலாத கவறு உருண்ட தாயம் எங்கும் ஒக்குமால்;
வைப்பில் ஆண்மை அன்றி, வேறு வஞ்சம் இல்லை;
உண்டு எனச்
செப்பில், ஆர்கொல் இவனை ஆட வருக என்று செப்புவார்?164.-இதுமுதல் நான்கு கவிகள் -சகுனியின் வார்த்தை.

ஐந்து கவிகள்-ஒரு தொடர்.

     (இ – ள்.) ஒப்பு இலாத வேள்வி மன்னன் உரை உணர்ந்து – (தனக்கு)
ஒப்பாக (ஒருவரையும்) பெறாத இராசசூயயாகஞ்செய்து முடித்தவனான
தருமபுத்திரனது வார்த்தையைக் கேட்டறிந்து,- சருனியும்-, (சபையோரை
நோக்கிக் கூறுவான்):- தப்பு இலாத கவறு உருண்ட தாயம் – தவறுகட்குச்
சிறிதும் இடமில்லாத சூதாடுகருவி [பாச்சிகை] உருண்டதனால் வருந் தாயம்,
எங்கும் ஒக்கும் – இருதிறத்தார்க்கும் ஒத்ததே; வைப்பில் – (காய்களை)
வைப்பதில், ஆண்மை அன்றி – அறிவின் திறமுண்டல்லாமல், (சூதாட்டத்திலே),
வேறு வஞ்சம் இல்லை – மாறுபாடான கபடம் சிறிதும் இல்லையே!
(அப்படியிருக்க), உண்டு என செப்பில் – (சூதாட்டத்தில் வஞ்சனை) உண்டு
என்று (தருமபுத்திரன்) கூறினால், இவனை ஆட வருக என்று ஆர் செப்புவார் –
இவனை நோக்கி ‘சூதாடவா’ என்று எவர்தாம் அழைப்பவர்? (ஒருவரும்
அழைத்தே யிருக்கமாட்டார்); (எ – று.) – இரண்டாமடியினீ்ற்றில், ஆல் – அசை. 

     இதுவும், அடுத்த கவியும் – சகுனிதருமனைப் படர்க்கையாகக் கொண்டு
சபையோரை முன்னிலைப்படுத்திக் கூறியன. 

     ‘சூது வஞ்சனைக்கு இடமானது’ என்று கூறியதருமபுத்திரனுடைய
மனக்கருத்தை மாற்றும்பொருட்டு, சகுனி ‘நான் ஆடும்போது விழும் பந்தயங்கள்
எவ்வாறு கொள்ளப்படுமோ, அவ்வாறு தான் தருமன் ஆடும்போதும் விழும்
பந்தயங்கள் கொள்ளப்படும்; ஆகையால், பாச்சிகைகளின் மூலமாய் விழும்
பந்தயங்கட்கு ஏற்பக் காய்களைத் தக்கபடி அறைகளில் அடைக்குந்
திறத்தினாலேயே வெற்றியை யடையவேண்டிய இச்சூதாட்டத்தில் யாவரும்
பார்க்க ஆடும்போது வஞ்சகஞ்செய்ய வழியேது? இப்படி வஞ்சகமில்லாத இவ்
வாட்டத்தில் தனக்கு விருப்பமில்லாத காரணத்தால் இது வஞ்சனையுளதென்று
போக்குச் சொன்னால், இவனை வலிவிற் சூதாட இழுப்பார் ஒருவருமில்லை
என்று வஞ்சனைக்கருத்துச் சிறிதும் இல்லாதவன்போல் வெகு தந்திரமாகக்
கூறின னென்க.  கவறு – சூதாடு கருவி; பாச்சிகை.  தாயம் – பாச்சிகையை
யுருட்டும்போது விழும் பந்தயங்கள். உருண்ட – காரணப்பொருட் பெயரெச்சம்.
வைப்பு – தொழிற்பெயர். ஆர்கொல், கொல்-அசை.  “கல்வி
தறுகணிசைமைகொடையெனச்சொல்லப்பட்ட பெருமித நான்கே” என்பவாதலால்,
அறிவின்றிறம் ‘ஆண்மை’ எனப்பட்டது.  

வேணும் ஆகில், வேணும்; அன்றி, விரகு எனக் கழன்று தான்
நாணும் ஆகில், “விடுதியே நடக்க’ என்று நவிலுவீர்;
பூணும் ஆகில், இனிமையோடு பொருது, மற்று இருந்த நீர்
காணுமாறு நானும் இன்று கற்றவாறு இயற்றலாம்.

வேணும் ஆகில் வேணும் -(சூதாடுவதில் இவனுக்கு) விருப்ப
முண்டானால் (எனக்கும்) விருப்பமுண்டு;  அன்றி – விருப்பமில்லாமல், விரகு
என கழன்று தான் நாணும் ஆகில் – (இது) வஞ்சனையுளதென்று ஒதுங்கித்
தான் (சூதாடப்) பின் வாங்குவானானால், விடுதியே நடக்க என்று நவிலுவீர் –
‘(நினது) இருப்பிடத்திற்குச் செல்வாயாக’ என்று (தருமபுத்திரனைநோக்கிச்)
சொல்லுங்கள்; பூணும் ஆகில்-(அவன்) சம்மதித்து ஆடுவானானால், நானும்-,
இனிமையோடு பொருது – இனிமையாக விளையாடி, இருந்த நீர் காணும் ஆறு
– இங்கிருக்கிற நீங்களெல்லோரும் காணும்படி, இன்று – இப்பொழுது, கற்ற
ஆறு-(எனக்கு உள்ள) சாமர்த்தியத்திற்கு ஏற்ப, இயற்றல் ஆம்-(சூதாட்டத்தை)
நடத்தலாம்; (எ – று.)-மற்று – அசை. 

     வேணும்-வேண்டும் என்பதன் மரூஉ: இது, இருதிணைஐம்பால்
மூவிடங்கட்கும் பொதுவான ஒருவகை வியங்கோள் வினைமுற்று.  விடுதி –
சிலநாள் தங்கும் இடம்.  நாணுதல் – மனத்திற் கூச்சங் கொள்ளுதல்; எனவே, பின்வாங்குதலாயிற்று.  மற்று – பிறிது
என்னும்பொருளது.         

நீடுகின்ற தரும நீதி நிருப! கேள்: விழைந்து, நாம்
ஆடுகின்ற சூதில் வெற்றி, அழிவு, நம்மில் ஒக்குமால்;
வாடுகின்ற மிடியர் போல வஞ்சம் என்று உரைத்து, நீ
ஓடுகின்றது, ஒட்டுகின்ற ஒண் பொருட்கு உலோபியோ?

(தருமனை முன்னிலையாக்கிச் சகுனி பின்னுங்கூறுவான்,)- நீதி
நீடுகின்ற தரும நிருப – நீதிமிக்க தருமராஜனே! கேள் – (நான் சொல்வதைக்)
கேட்பாயாக:-நாம் விழைந்து ஆடுகின்ற சூதில் – நாம் விரும்பி
ஆடப்போகின்ற சூதாட்டத்தில், வெற்றி அழிவு – வெற்றியும் தோல்வியும்,
நம்மில் ஒக்கும் – நம்மிருவர்க்கும் சமமானவையேயாம்; நீ-,வஞ்சம் என்று
உரைத்து-(சூதாட்டம்) வஞ்சகத்தை யுடையதென்று சொல்லி, வாடுகின்ற மிடியர்
போல ஓடுகின்றது – வாடி வருந்துகின்ற தரித்திரர்போல் அஞ்சியோடுவதற்குக்
காரணம், ஒட்டுகின்ற ஒள் பொருட்கு உலோபியோ – பந்தயம்வைத்தற்கு உரிய
சிறந்தபொருளுக்கு உலோபியாயிருப்பதோ? (எ – று.)-ஆல் – அசை. 

     இதுவும், அடுத்த கவியும், சகுனி தருமனை முன்னிலைப்படுத்திக்
கூறியன.

    சூதாடுகையில் வெற்றி தோல்விகள் ஒருதலை யன்றாதலால், நம்மிருவருள்
அவை யார்க்கேனும் உண்டாகலாம்; ஆகையால், நான் வஞ்சனை வழியால்
உன்பொருளைக் கவர்தற்குச் சிறிதும் வழியில்லையே! அப்படியிருக்க, பந்தயம்
வைக்கப் பொருளில்லாத வறியவன்போல் நீ பின்வாங்கிச் செல்வானேன்? நீ
உலோபியோ? என்று, தருமனுக்குச் சூதாட்டத்தில் ஆவேச முண்டாகுமாறு
சகுனி மேன்மேலும் கூறுவானாயினான். மிடி-வறுமை. அதனையுடையவர் –
மிடியர். ஒட்டுதல்-பந்தயம் வைத்தல். லோபீ-வடசொல்; செல்வத்தை இறுகப்
பிடிக்குந்தன்மையுள்ளவன். இனி, உலோபி-லோபஞ்செய்து எனினுமாம்

‘யான் எறிந்த கவறு வெல்லின், இசைவு எனக்கு அளித்தி; நீ-
தான் எறிந்த கவறு வெல்லின், அதின் இரட்டி தருகுவேன்;
தேன் எறிந்து, தேன் நுகர்ந்து, தேன் எடுக்கும், மாலையாய்!
ஆன் எறிந்த கொலைஞர் போல அஞ்சல்! வருதி, ஆடவே!’

தேன் எறிந்து தேன் நுகர்ந்து தேன் எடுக்கும் மாலையோய் –
வண்டுகள் மோதித் தேனைக்குடித்து (க் கூட்டிற் கொண்டு சேர்த்தற்காக)த்
தேனையெடுத்துக்கொண்டு போகப் பெற்ற மலர் மாலையை யணிந்த
தருமராசனே!-யான் எறிந்த கவறு வெல்லின் – நான் உருட்டியாடிய கவற்றிற்
சயித்தால், இசைவு எனக்கு இழத்தி – (நீ) பந்தயமாக உடன்பட்டு வைத்த
பொருளை (எனக்கு)த் தோற்பாய்; நீ தான் எறிந்த கவறு வெல்லின் – நீ உருட்டியாடிய கவற்றிற் சயித்தால், அதன் இரட்டி தருகுவன் –
நீ பந்தயமாகவைத்த பொருளினும் இருமடங்கான பொருளை (உனக்கு)க்
கொடுப்பேன்; ஆன் எறிந்த கொலைஞர் போல – பசுவைக்கொன்ற
கொலைப்பாதகரைப் போல, அஞ்சல் – அஞ்சவேண்டா, ஆட வருதி –
சூதாடுதற்கு (உடன்பட்டு) வருவாயாக; (எ – று.)

     தான் தோற்றால் இழக்கவேண்டிய பொருள் சிறிதும், வென்றாற்
பெறவேண்டிய பொருள் பெரிதுமானால் தருமன் இதன் பொருட்டுச்
சூதாடவிரும்பி வரக்கூடுமென்று, சகுனி, இவ்வாறு மோசஞ்செய்ய ஆசை
காட்டின னென்க. சகுனி, சூதாட்டத்திற் குற்றமில்லையென்று தருமனுக்குவிளக்கி
அவனை வருமாறு வற்புறுத்தற்பொருட்டு, ‘ஆனெறிந்த கொலைஞர்போல
அஞ்சல்’ எனக் கூறினான். ஆனெறிந்தகொலை – கோஹத்தி எனப்படும்:
அவர்கட்குப் பெரும்பாதகமும் கடுந்தண்டனையும் தருமசாஸ்திரங்களில்
விதிக்கப்பட்டிருத்தல் காண்க.  தருமனஞ்சுதற்கு மிடிய ரஞ்சுதலையும்
ஆனெறிந்த கொலைஞரஞ்சுதலையும் ஒப்புமைகூறினால் அவ்வளவில் தருமன்
அச்சமொழிவனென்பது, சகுனியின் உட்கோள்: மாலை மலர்களிலுள்ள
தேனின்மிகுதி, மூன்றாமடியில் நன்கு விளங்கிற்று.

     இசைவு – தொழிலாகுபெயர்.  இரட்டி – இரண்டு என்பது, மென்றொடர்
வன்றொடராகி இகரவிகுதிபெற்ற பெயர்.  ‘தருகுவன்’ என்றதன்மையொருமை
வினைமுற்றில், கு – வேண்டாவழிச்சாரியை.  ‘தேன்’ என்ற சொல்
பலமுறைவந்தது – சொற்பின் வருநிலையணி.  மூன்றாமடியில், பொருளினால்
வந்த முரண்தொடை காண்க.  அஞ்சல் – எதிர்மறையேவலொருமைமுற்று

என்று மாமன் உற்று உரைப்ப, இவைதமக்கு அவ்
அவையில் வேறு
ஒன்றும் மாறு உரைத்திடாது, உதிட்டிரன் இருக்கவும்,
வென்று மாறு அடக்கும் வாகை விசயனும் வெகுண்டு, உளம்
கன்றுமாறு உரைத்தனன் சொல், கன்னன் என்னும் மன்னனே:168.-அருச்சுனனும் மனம்வருந்தும்படி தருமனை
நோக்கிக் கர்ணன் சில கூறத்தொடங்குதல்.

என்று – இவ்வாறாக, மாமன் – (துரியோதனனது) மாமனாகிய
சகுனி, உற்று உரைப்ப – (தருமனும் துரியோதனனும் பேசுகையில் நடுவே)
வந்துசொல்ல, இவை தமக்கு – இவ்வார்த்தைகட்கெல்லாம், அ அவையில் –
அந்தச் சபையிலே, உதிட்டிரன் – தருமபுத்திரன், மாறு வேறு ஒன்றும்
உரைத்திடாது – மாறாக வேறொருவார்த்தையையும் கூறாமல், இருக்கவும் –
சும்மா இருந்துவிடவும்,-கன்னன் என்னும் மன்னன் – கர்ணனென்னும் அரசன்,
வென்று மாறு அடர்க்கும் வாகை விசயனும் வெகுண்டு உளம் கன்றும் ஆறு –
வெற்றிகொண்டு பகைவர்களை வலியடக்குகிற வெற்றிமாலை யணிந்த
அருச்சுனனும் கோபங்கொண்டு மனம்வெதும்பும்படி, உரைத்தனன் – (சிலகொடுஞ்சொற்கள்) கூறுவானாயினான்; (எ – று.)-அவற்றை அடுத்த கவியிற்
காண்க.

    இருக்கவும் உரைத்தனன் என இயையும்.  உதிட்டிரன் = யுதிஷ்டிரன்:
போரிற் பின்வாங்காது உறுதியாய் நிற்பவன் எனக் காரணப்பொருள்படும்.
உதிட்டிரன்னிருக்கவும், னகரமெய் – விரித்தல். மாறு – மாறானசொற்களுக்கும்,
மாற்றார்க்கும் பண்பாகு பெயர். வாகையென்னும் மரத்தின்பெயர்,
அதன்மலரினா லமைக்கப்பட்ட மாலைக்கு இருமடியாகுபெயர்: இது, போரில்
வெற்றி கொண்டவர் அணிவது. விசயனும், உம்மை-இறந்தது தழுவியது;
“மோதுபோரிலெங்ஙனுய்தி யிளைஞரோடு முடுகுதேர், மீதுபோ
யுன்னகரிதன்னின் விரைவினெய்துக” என்று அடுத்த செய்யுளில் வருகின்ற
கர்ணன் வார்த்தை தருமபுத்திரனுக்கேயன்றி அருச்சுனனுக்கும் மனவருத்தத்தை
யுண்டாக்கக்கூடிய தாதல் காண்க.  கொல் – அசை; (பகைவரைக்) கொல்கின்ற
என வினைத்தொகையாய், கர்ணனுக்கு அடைமொ

போது போகுமாறு இருந்து பொருதும்; வருதி!” என்னவும்,
சூது போரும் அஞ்சியே, தொலைந்து, உளம் துளங்குவாய்!
மோது போரில் எங்ஙன் உய்தி? இளைஞரோடும் முடுகு தேர்-
மீது போய், உன் நகரிதன்னில் விரைவின் எய்துக!’ என்னவே,169.-கர்ணன் வார்த்தை.

இதுவும், அடுத்த கவியும் – குளகம்.

     (இ-ள்.) (கர்ணன் தருமபுத்திரனை நோக்கி), போது போகும் ஆறு இருந்து
பொருதும் வருதி என்னவும் – ‘பொழுது இனிது கழியும்படி இருந்து சூதாடுவோம்
வருவாயாக’ என்று (துரியோதனன் உன்னை) அழைக்கவும், (நீ), சூது போரும்
அஞ்சியே உளம் தொலைந்து துளங்குவாய் – சூதாடுதற்கும் அஞ்சி மனம்
வருந்தி நடுங்குகின்றாய்; (இப்படி சூதுபோர்க்கே மனம் வருந்தி நடுங்குகின்ற
நீ), மோது போரில் – (ஆயுதங்களால்) தாக்கிச் செய்யப் படுகின்ற போரிலே,
எங்ஙன் உய்தி – எவ்வாறு பிழைப்பாய்? (இவ்வாறு ஒருவகைப் போர்க்கும்
தகுதியற்ற நீ), இளைஞரோடும் – உன் தம்பிமார்களோடும், முடுகு தேர்மீது
போய் – விரைந்து செல்லுகின்ற தேரின்மீது ஏறிப்போய், உன் நகரிதன்னின் –
உனது (இந்திரப்பிரத்த) நகரத்தில், விரைவின் எய்துக – விரைவிலே
சேர்வாயாக, என்ன – என்றுகூற,- (எ – று.)- ‘விசயன் வில்லெடுத்தனன்’ என
அடுத்த கவியோடு தொடர்ந்து முடியும்.

    பிராணாபாயத்திற்குச் சிறிதும் இடமில்லாது செல்வக் கேட்டிற்குமாத்திரம்
இடமான இவ்விளையாட்டுச் சூதுக்கே அஞ்சிப் பின்வாங்குகிற நீ
செல்வக்கேட்டோடு பிராணாபாயத்திற்குங் காரணமான மோதுபோரைத்
தைரியத்தோடு செய்யத் திறமற்றவ னென்பது திண்ணம்; இவ்வாறு நீ க்ஷத்திரிய
தருமமாகிய இருவகைப் போரிலும் பின்வாங்குவதனால் இவ்வரச மண்டபத்தில்
நில்லாது உனக்கு ஏற்ற தம்பிமாரோடு ஊரிற்புக்கொளித்துக் கொண்டிருத்தலே
நினக்குத் தகுதியென ரோஷமுண்டாகுமாறு தருமனை நோக்கிக் கர்ணன்
கூறினனென்க. ‘துளங்குவாய்’ என்பதை விளியாகவும், முன்னிலையொருமை
வினையாலணையும் பெயராகவுங் கொள்ளலாம். 

இல் எடுத்து, விரகினோடும் எமை அழைத்து, மாயை கூர்
வல் எடுத்து வருதலால், மறுத்தனன், மகீபனும்;
சொல் எடுத்து வைத வாய் துணிப்பன்’ என்று கன்னன்மேல்
வில் எடுத்தனன், பொறாமல்,-வீர வாளி விசயனே.170.-அருச்சுனன் கர்ணன் மீதுவெகுண்டு
கூறி எய்ய வில்லெடுத்தல்
.

வாளி வீரம் விசயன் – அம்புசெலுத்தி வீரங்காட்டுகின்ற
அருச்சுனனானவன்,-(கர்ணனை நோக்கி), ‘விரகினோடும் – (எங்களை)
ஏமாற்றும் உபாயத்துடனே, இல் எடுத்து-(புதிதாக மண்டபங்கட்டி, எமை
அழைத்து – (மண்டபங்காணவேண்டுமென்ற வியாசத்தினால்) எங்களை
வரவழைத்து, மாயை கூர் வல் எடுத்து வருதலால் – மிக்க மோசத்திற்கு
இடமான சூதாடு கருவியை (ஆடுமாறு) எடுத்துக்கொண்டு வருதலினால்,
மகீபனும் மறுத்தனன் – (எனது தமையனான) யுதிஷ்டிரராஜனும் (வேண்டா
என்று) தடுத்துக் கூறினான்; (இதனால், அத்தருமன் போர்க்கு அஞ்சியவனாவது
எப்படி)? சொல் எடுத்து வைத வாய் துணிப்பன் – தகாத சொற்கொண்டு
(க்ஷத்திரிய தருமத்திற் சிறிதும் பின்வாங்காதவனான எனது தமையனைப்)
பழித்த (உனது) நாவைத் துணித்துவிடுவேன்,’ என்று-, பொறாமல் – மனம்
பொறாமல் [உக்கிரத்துடனே], கன்னன்மேல் வில் எடுத்தனன் – கர்ணன்மேல்
(அம்பு தொடுக்குமாறு) வில்லைக் கையிலேந்தினான்;

     ‘சொல் எடுத்து வைத வாய் துணிப்பன்’ என்பதற்கு – தருமபுத்திரனது
பேச்சை யெடுத்துக்கொண்டு வைத நாவைத் துணிப்பேன் என்றும் கூறலாம்.
வாய்-நாவுக்கு இலக்கணை

ஏதிலாரின், எம்பி! நீ இருக்க’ என்று இருத்தி, ‘முன்
காதில் ஆர் என்னுடன் முனைந்து, கண் விழிக்க
வல்ல பேர்?
ஓதில், ஆண்மை குன்றும்’ என்று, உருத்து எழுந்து,
‘மாய நின்
சூதில் ஆடல் புரிதும்’ என்று, தருமனும் தொடங்கினான்.171.-தருமன்அருச்சுனனையடக்கிச் சூதாட
உடன்படுதல்
.

(அப்பொழுது), தருமனும் – தருமபுத்திரனும், (அருச்சுனனை
நோக்கி), ‘எம்பி – எனது தம்பியே! நீ-, ஏதிலா ரின் – யாதொரு
சம்பந்தமுமில்லாத அயலார்போல, இருக்க – சும்மா இருப்பாயாக;’ என்று –
என்றுசொல்லி, முன் இருத்தி – தன் எதிரில் (அவனை) அடங்கியிருக்கச் செய்து,-
(பிறகு), ‘காதில் – (நான்) போர்புரிவேனானால், என்னுடன் முனைந்து கண்
விழிக்க வல்ல பேர் ஆர் – என்னோடு எதிர்த்துநின்று அஞ்சாமற் போர்புரிய
வல்லமையுள்ள வீரர் யாவருளர்? (ஆயினும்), ஓதில் – (எம்மைக்குறித்து யாமே)
புகழ்ந்து கூறினால், ஆண்மை குன்றும் – வீரத்தன்மை குறைந்துபோகும்;
(ஆகையால் ஒன்றும் கூறவேண்டியதில்லை)’, என்று – என்றுஞ் சொல்லி,
(அப்பால்), உருத்து எழுந்து – ரோஷங்கொண்டு எழுந்து, (சகுனியைநோக்கி), –
‘நின் மாயம் சூதில் – உனது வஞ்சகத் தன்மையுள்ள சூதாட்டத்தை, ஆடல்
புரிதும் – ஆடுவோம்,’ என்று – என்று கூறி, தொடங்கினான் – (சூதாடத்)
தொடங்கிவிட்டான்; (எ -று.)

தருமன் ‘யான் போர்த்திறமையில்லாமற் சும்மாவிருக்கிறேனென்று
நினையாதே; யான் போர்புரியத்தொடங்கினால் எனக்கு முன் அஞ்சாது
எதிர்நின்று பொருபவர் ஒருவரு மிலர்: ஆயினும், நமது ஆண்மையை நாமே
சிறப்பித்துக்கொள்வது இழிவாகுமென்று நினைத்தே நான் அமைந்திருக்கிறேன்.
ஆதலால், நீயும் இவ்வாறு அமைந்திருப்பதே தகுதி எனக்கூறி அருச்சுனனை
அடங்கியிருக்கச் செய்து, பின்னும் தமக்கும் துரியோதனாதியர்க்கும்
வாக்குவாதம் நிகழாதவாறு சூதுபோரையே தொடங்கிவிட்டனனென்பதாம்.
‘காதி லா ரென்னுடன் முனைந்து கண்விழிக்க வல்ல பே ரோதி
லாண்மைகுன்றும்’ என்று தருமன் கூறியதை, கீழ்க் கர்ணன் கூறிய சூதுபோர்
மோதுபோர் என்ற இரண்டையும் பற்றிய வீரவாதமாகக் கொள்ளினுமாம்.
“தன்னை வியப்பிப்பான் தற்புகழ்தல் தீச்சுடர், நன்னீர் சொரிந்து
வளர்த்தற்றால், தன்னை, வியவாமை யன்றே வியப்பாவது’ என்பவாதலால்,
‘ஓதிலாண்மை குன்றும்’ எனப்பட்டது.

    எம்பி-என்தம்பியென்பதன் மரூஉ; அண்மைவிளியாதலின் இயல்பாயிற்று.
இருக்க – வியங்கோள் வினைமுற்று.  ‘காதில் காது என்ற
வினைப்பகுதியினடியாகப் பிறந்த எதிர்காலவினையெச்சம். கண்ணிமைத்தல்
அச்சக்குறி யாதலால், கண்விழித்தலென்பது , இலக்கணையால், அதற்குமாறாக
அச்சமின்மையைக் குறிக்கும்.  ஆடல்-‘ஆடு’ என்ற முதனிலையின்
தொழிற்பெயர்.  புரிதும்-சகுனியையுளப்படுத்திய தன்மைப்பன்மை; தும்-
தன்மைப்பன்மைவினைமுற்று விகுதி: இங்கு எதிர்காலங்காட்டிற்று.  சூதில் –
உருபுமயக்கம்.  முன்-கால முன்னுமாம்

நின்னை வெல்லின், ஒட்டம் யாவும் நீ கொடுக்க; நீ இவன்-
தன்னை வெல்லின், யான் விரைந்து தருவன்’
என்று, ‘தருமனைப்
பின்னை வெல்ல ஒணாது’ எனப் பிணிப்புடன் மருட்டினான்-
மின்னை வெல்லும் வெய்ய சோதி வேல் இராசராசனே.172.-துரியோதனன்சகுனிக்காகத் தான்
பந்தயம்வைக்க உடன்படுதல்
,

மின்னை வெல்லும் சோதி வெய்ய வேல் இராசராசன்-
மின்னலைச் சயித்து விளங்குகின்ற ஒளியையுடைய கொடிய வேலாயுதத்தைக்
கொண்டுள்ள அரசர்க்கரசனான துரியோதனன்,-(தருமபுத்திரனை நோக்கி),-
‘நின்னை வெல்லின் – (இந்தச் சகுனி) உன்னைச் சயித்தால், ஒட்டம் யாவும் –
பந்தயங்களெல்லாவற்றையும், நீ கொடுக்க – நீ (எனக்குத்) தரக்கடவை; நீ-
,இவன் தன்னை வெல்லின் – இந்தச் சகுனியைச் சயித்தால், (அப்பொழுது),
யான் விரைந்து தருவன் – யானே விரைந்து (எனது  பொருள்களை உனக்குக்)
கொடுக்கடவேன்’, என்று-என்று (பந்தயம் வைப்பதில்) நியமஞ்செய்து,-பின்னை
தருமனை வெல்ல ஓணாதுஎன – ‘(ஆனால்) இனித் தருமபுத்திரனைச்
(சூதாட்டத்திற்) சயிக்கமுடியாது’ என்று சொல்லி, பிணிப்புடன் மருட்டினான் –
(சூதாடும்படி தருமனுக்கு மனத்தில்) உறுதியான எண்ணம் உண்டாகுமாறு
மதிமயங்கும் சொற்களையுங் கூறினான்; (எ – று.)

     தருமன் சூதாடுகையில் அவனுக்கு எதிராகத் தன் பொருட்டுச் சகுனி
சூதாடுவனென்பது, துரியோதனனது வார்த்தையின் கருத்து.  ‘தருமனைப்
பின்னைவெல்லொணாது’ என்று சூதாட்டத்தில் தருமபுத்திரனுக்கு மிக்க
திறமுள்ளதாகத் துரியோதனன் புகழ்ந்து கூறியது, அத்தருமன் சூதாடுதலில்
மிக்க உற்சாகங்கொண்டு பின்வாங்காமல் மேல்விழுந்து சூதாடுதற்கு வருமாறு
அவனைத் தூண்டுதற் பொருட்டென்க. தருமனை முன்னிலையாக்கிச் சில
கூறியவன் பின்பு உடனே அவனைப் படர்க்கையாக்கி இது கூறினான்.

     ஒட்டம் – பந்தயமாக வைக்கப்படும் பொருள்; அம்-
செயப்படுபொருள்விகுதி; கொடுக்க – வியங்கோள் வினைமுற்று.  இவன்
தன்னை, தன் – சாரியை.  தருவன் – தன்மையொருமைவினைமுற்று.
வெல்லொணாது – வெல்லவொன்றாது என்பதன் மரூஉ.  வெய்ய – ‘வெம்மை’
என்ற பண்புப்பகுதியின், குறிப்புப்பெயரெச்சம்.  ராஜராஜன் – துரியோதனனுக்கு
ஒருபெயர்.  ‘வேல்’ என்பது – உபலக்ஷணத்தால், பலவகை ஆயுதங்களையுங்
குறிக்கும்.     

அவிர் பசும்பொன் மீளி யாளி ஆசனத்து இழிந்து, பூந்
தவிசில் ஒன்றிடப் புகுந்து, தருமன் வைக, மாமனும்
நவிர் அறும் திசைப் புறத்து நல் நிலம் குறித்து, நீள்
புவி பெறும் கருத்தினோடு இருந்தனன், பொருந்தவே173.-தருமனும் சகுனியும் சூதாடும்பொருட்டு
ஆசனத்திலிருத்தல்
,

 தருமன்-, அவிர் பசும்பொன் மீளி யாளி ஆசனத்து இழிந்து –
விளங்குகின்ற பசும்பொன்மயமான வலிய சிங்கந்தாங்குவதாகச் செய்யப்பட்ட
சிங்காதனத்தினின்று இறங்கி, பூந்தவிசில் ஒன்றிட புகுந்து வைக – அழகியதோர்
ஆசனத்திற் பொருந்தித் தங்கியிருக்க, மாமனும் – (துரியோதனனது) மாமனாகிய
சகுனியும்,-நீள் புவி பெறும் கருத்தினோடு – (தருமபுத்திர னது) பெரிய
இராச்சியத்தை அடைய வேண்டுமென்ற எண்ணத்துடன், நல் நிலம் குறித்து –
வெற்றித் தானத்தை ஆராய்ந்தறிந்து, நவிர் அறும்திசைப் புறத்து – குற்றமற்ற
அத்திக்கின் பக்கமாக, பொருந்த இருந்தனன்-;(எ – று.)

    தருமபுத்திரன் சூதாடுமாறு தான் முன்னிருந்த மிக்க உயரமான
சிங்காதனத்தினின்றும் இறங்கி ஓராசனத்தில் முதலில் தங்கியிருக்க, சகுனி
தருமபுத்திரனது இராச்சியத்தைக் கவர வேண்டுமென்ற எண்ணத்தினால் அவன்
தோல்வியடையும்படி தான் வெற்றித்தானத்தை அறிந்து அத்திசைப்புறமாகத்
தங்கியிருந்தனனென்றவாறு.  வாதிபிரதிவாதிகளாக இருவர் மாறுபட்டுத்
தொழில் செய்யும் பொழுது தாம் இருவரும் இருக்கும் நில வெல்லையைச்
சதுரமாகவும், அச்சதுக்கத்தில் மேஷம் முதலிய பன்னிரண்டு ராசிகளும்
முறையே இருப்பனவாகவும், கொண்டு, எதிரியுள்ள இடத்திற்குத் தானுள்ள
இடம், 4, 7, 9, 11 – இத்தானங்களுள் ஒன்றாய் அமையுமாறு இருந்து தொழில்
செய்தால் வெற்றியுண்டாகுமென்பது சோதிட நூல்களிற் காண்க

கவள யானை பணையின் யாளி கால் வகுத்த பலகையில்,
பவளமான, நீலமான, கருவி முன் பரப்பினார்;
தவளமான கவறு கை தரித்து, மெய் தரித்த தார்
துவள, மான நிருபர் தம்மில் ஆடவே தொடங்கினார்.174.-தருமபுத்திரனும் சகுனியும்சூதாடத் தொடங்குதல்.

மானம் நிருபர் – பெருமையையுடைய (தருமன் சகுனி என்ற)
அரசரிருவரும்,-கவளம் யானை பணையில் – கவளத்தையுண்ணுகின்ற
யானையின் தந்தத்தாற் செய்யப்பட்டதும், யாளி கால் வகுத்த – சிங்கத்தின்
உருவந் தோன்றச் சித்தரித்த கால்களையுடையதுமாகிய, பலகையின் –
(காய்களை நிறுத்துமாறு அறைகள் அமைந்துள்ள) பலகையின் மேல், பவளம்
ஆன நீலம் ஆன கருவி – பவளநிறமாயும் நீலநிறமாயுமிருக்கிற காய்களை,
முன் பரப்பினார் – முன்னே பரப்பிவைத்தவர்களாய்,-தவளம் ஆன கவறு கை
தரித்து – வெண்ணிறமான பாச்சிகைகளைக் கையிற்கொண்டு, மெய் தரித்த தார்
துவள – (தமது) உடம்பிலணிந்துள்ள மாலைகள் புரண்டசைய, தம்மில் ஆடவே
தொடங்கினார் – தங்களில் ஆடத் தொடங்கினார்கள்; (எ – று.)

    சிங்கந்தாங்கிய கால்கள் அமைந்ததாய் யானைத் தந்தங் கொண்டு
செய்யப்பட்ட அறை கீறிய சூதுபலகையின் மேல் ஒரு பக்கத்திற் செந்நிறமான
காய்களையும் மற்றொருபக்கத்தில் நீல நிறமான காய்களையும் பரப்பித்
தருமனும் சகுனியும் வெண்ணிறப்பாச்சிகை கொண்டு உருட்டி ஆடத்தொடங்கின
ரென்க: தன்மைநவிற்சியணி.  ஆடுகையில் மாலையசைதல், இயல்பு.
‘யானைப்பணை’ என்பது, ஓசைநயம்நோக்கி, ‘யானை பணை’ என இயல்பாய்
நின்றது.  கருவி-காய்கள்.  கவறு-பாச்சிகை.  பவளம் – ப்ரவாளம் என்ற
வடசொல்லின் விகாரம், பவளமான நீலமான கருவி யென் பதற்கு – பவழத்தாற்
செய்யப்பட்டவையும் நீலரத்தினத்தாற் செய்யப்பட்டவையுமான காய்க ளெனினும்
அமையும்.     

ஈரம் வைத்த சிந்தை மன்னன், இசைவு எனக்
கழுத்தின் முத்து
ஆரம் வைத்து, ‘நீயும் மாறு அழைக்க’ என்ன, மாமன்மேல்
வாரம் வைத்த நெஞ்சினானும், ‘வருக!’ என்று, ‘மா மணிச்
சாரம் வைத்த வலயம் ஒன்று’ தானும் முன்னர் வைக்கவே,175.-இதுமுதல் ஐந்து கவிகள் -தருமன் பல
பொருள்களையும் சூதாடியிழந்தமையைக் கூறும்
,

இரண்டு கவிகள் – ஒரு தொடர்.

     (இ -ள்.) ஈரம் வைத்த சிந்தை மன்னன் – அருள்கொண்ட
மனத்தையுடையவனான யுதிஷ்டிரராசன், கழுத்தின் முத்து ஆரம் இசைவு என
வைத்து – (தான்) கழுத்திலணிந்திருந்த முத்து மாலையைப் பந்தயமாக வைத்து,
(துரியோதனனை நோக்கி,) நீயும்மாறு அழைக்க என்ன – ‘நீயும் இதற்கு
எதிரான பந்தயத்தை வருவித்து வைப்பாயாக’ என்று சொல்ல,-மாமன்மேல்
வாரம் வைத்த நெஞ்சினானும்-மாமனாகிய சகுனியிடத்து அன்புகொண்ட
மனத்தையுடையவனாகிய துரியோதனனும், சாரம்  மாமணி வைத்த வலயம்
ஒன்று வருக என்று – ‘சிறந்த பெரிய இரத்தினமிழைத்துச் செய்யப்பட்ட ஒரு
தோள்வளையைக் கொண்டுவா’ என்று (ஒருவனை) ஏவி (வரவழைத்து),
தானும்-, முன்னர் வைக்க – (தருமபுத்திரனுக்கு) எதிரிலே (பந்தயமாக) வைக்க,-
(எ – று.)-‘மாமன்வெல்ல’ என, அடுத்த கவியோடு குளகமாகத் தொடரும்.
இசைவு – மனமிசைந்துவைத்த பந்தயத்துக்கு ஆகுபெயர்.  ஸாரம் – வடசொல்;
சிறந்ததென்பது பொருள். வலயம் – பாஹு வலயம்.

இருவரும் கவற்றினால் எறிந்தபோது, எறிந்தவாறு
ஒருவரும் குறிக்கலா உபாயமாய் இருத்தலான்,
மரு வரும் புயத்து அலங்கல் மாமன் வெல்ல, மன்னர் உள்
வெரு வரும் களிற்றினானும் மேல் விருப்பம் மிஞ்சினான்.

இருவரும்-(தருமன் சகுனி என்ற) இருவரும், கவற்றினால்
எறிந்தபோது – பாச்சிகையை யுருட்டியாடுகையில்,-மருவரும் அலங்கல் புயத்து
மாமன்-வாசனை வீசுகின்ற மலர்மாலையையணிந்த தோள்களையுடைய சகுனி,
எறிந்த ஆறு-(பாச்சிகையை) உருட்டியாடிய வகை, ஒருவரும் குறிக்கலா
உபாயம் ஆய் இருத்தலான் -எவரும் தெரிந்துகொள்ள முடியாத
தந்திரமாயிருந்ததனால், வெல்ல- (அத்தருமபுத்திரனைச்) சயித்துவிட,
மன்னர்உள் வெருவரும் களிற்றினானும்-பகையரசர்கள் மனத்தில் அஞ்சுதற்குக்
காரணமான யானைச்சேனையையுடையவனாகிய தருமபுத்திரனும், மேல்
விருப்பம் மிஞ்சினான் – மேன்மேலும் சூதாடுதலில் ஆசை மிக்கவனானான்;
(எ- று.)

     முதலில் தோற்றவர்கள் அடுத்த ஆட்டங்களில் வெல்வோமென்று
எண்ணுதலும், முதலில் வென்றவர்கள் இனிப் பின்னும் வெல்லலாமென்று
கருதுதலும், சூதாட்டங்களில் இயல்பு.  இரண்டாமடி, சகுனியின் சூதாடுந்
திறமையை விளக்கும்.  உள் – உள்ளிடம்; அகத்துறுப்பு: அந்தக்கரணம்.  மன்
அருள் வெருவரும் களிற்றினானும் என்று கொண்டு, மிக்க அருளையும்
(பகைவர்) அஞ்சுகின்ற யானைச்சேனையையுமுடைய தருமனும்
என்றுமாம்

வைத்த ஆரம் அவன் எடுக்க, மாயவன் கொடுத்த நல்
மெய்த் தவாத தேர் குறித்து, மீளவும் பரப்பினான்;
மொய்த்த வாச மாலை மார்பின் முடி மகீபன் மகிழ்தர,
பொய்த்த ஆடல் வல்ல மீளி, பொருது, வென்றி புனையவே,

நான்கு கவிகள் – ஒருதொடர்.

     (இ -ள்.) வைத்த ஆரம் அவன் எடுக்க – (தருமபுத்திரன் பந்தயமாக)
வைத்த முக்தாஹாரத்தை அந்தச் சகுனியானவன் வென்று கைப்பற்றிக்கொள்ள, –
(தருமபுத்திரன்), மாயவன் கொடுத்த நல் மெய்த்த வாதம் தேர் குறித்து –
கிருஷ்ணபகவான் (தமக்குக்) கொடுத்திருந்த சிறந்த உருவங்கொண்ட
காற்றுப்போன்ற தேரைப் பந்தயமாகவைத்து, மீளவும் பரப்பினான் – பின்பும்
ஆடுமாறு (காய்களைப்) பரப்பிவைத்தான்; பொய்த்த ஆடல் வல்ல மீளி –
வஞ்சனைக்கு இடமான சூதாட்டத்தில் மிக்கதேர்ச்சியுள்ள வீரனாகிய சகுனி,
மொய்த்த வாசம் மாலை மார்பின் முடி மகீபன் மகிழ்தர – (வண்டுகள்)
மொய்க்கப்பெற்ற வாசனையையுடைய (நஞ்சாவட்டைப்பூ) மாலையை யணிந்த
மார்பையுடையவனும் கிரீடாதிபதியுமான துரியோதன ராஜன் மனங்களிக்கும்படி,
பொருது வென்றி புனைய-சூதாடி வெற்றியையுடைய (தேரைக் கைப்பற்ற), –
(எ – று.) – ‘மாறுசெப்பி’ என அடுத்த கவியோடு தொடரும்.

    திரௌபதியைப் பாண்டவர்கள் மணஞ்செய்து கொண்ட பின்னர்க்
கண்ணன் அவர்கட்குத் தேர்முதலியவற்றை வெகுமானமாக அனுப்பினனென
வியாசபாரதம் கூறும்.  அர்ச்சுனன் சுபத்திரையை மணந்து கொண்ட பொழுது
ஸ்த்ரீதனமாகத் தேர் முதலியவற்றைக் கொடுத்ததாகவும் அப்பாரதத்திற்
கூறப்பட்டுள்ளது.  தேர் மிகவிரைந்து செல்லுந் தன்மைய தாதலால், அதற்குக்
கட்புலனாகும் வடிவத்தைக்கொண்ட காற்றை உவமை கூறினார்;
இல்பொருளுவமை.  வாதம்-வடசொல்.  நிலைமொழி வடமொழியாதலின்,
‘வாததேர்’ என வருமொழிமுதல் வலி இயல்பாயிற்று: “இடையுரி
வடசொலினியம்பிய கொளாதவும்,. . . . . நெறியே”.  சந்தம் நோக்கியது
எனினுமாம்.  இனி, மெய் தவாததேர் எனப்பிரித்து, உருக்குலைதலில்லாத தேர்
என்றும் பொருள் கூறலாம்.  

தேர் கொடுத்த பின்னும், மாறு செப்பி, உள்ள தேர் மதக்
கார் கொடுத்தும், எண்இலாத கவன மாக் கொடுத்தும், அப்
பார் கொடுத்தும், அரசு கூர் பதம் கொடுத்தும், உரிய தம்
ஊர் கொடுத்தும், அதனின் உள்ளம் ஒழிவுறாமல் ஓடவே.

தருமபுத்திரன்), தேர்கொடுத்த பின்னும் – அந்த இரதத்தைத்
தோற்றபின்பும், மாறு செப்பி-வெவ்வேறுபந்தயஞ் சொல்லி, உள்ள – மற்றும்
தன்னிடத்திலுள்ள, தேர்-தேர்களையும், மதம் கார்-மதநீர்சொரிகிற மேகம்போன்ற
யானைகளையும், கொடுத்தும் – தோற்று இழந்தும், எண் இலாத கவனம் மா
கொடுத்தும் – கணக்கில்லாதனவான வேகத்தையுடைய குதிரைகளைத்தோற்றும்,
அ பார் கொடுத்தும் – (தனக்குத் தாயபாகமாகக் கிடைத்த) அந்தத் தேசத்தைத்
தோற்றிழந்தும், அரசு கூர் பதம் கொடுத்தும் – (தான்) அரசாளுகிற
அரசவுரிமையைத் தோற்றிழந்தும், தம் உரிய ஊர் கொடுத்தும் – உரிமையுள்ள
தமது இந்திரப்பிரத்த நகரத்தைத் தோற்றிழந்தும், அதனின் உள்ளம் ஒழிவுறாமல்
ஓட – அந்தச் சூதாட்டத்தில் (தனது) மனம் ஆசைவிடாமல் தொடர,-(எ -று.)-
‘அளிக்க’ என அடுத்த கவியோடு தொடரும்.

     மதக்கார் – அடையடுத்த உவமையாகுபெயர்.  கவனம்=கமநம்; வடசொல்
‘மா’ என்ற பொதுப்பெயர்-‘கவனம்’ என்ற அடைமொழியால், சிறப்பாகக்
குதிரையை யுணர்த்திற்று.    

வெங் கிராத வனம் எரித்த விசயனுக்கு விஞ்சையன்
அங்கு இரா மகிழ்ந்து அளித்த ஆடல் மாவும், அளக நீள்
பொங்கு இரா மணம் சிறந்த போக மாதர் பலரும், அன்று
இங்கு இரா, நரேசன், உற்ற இசைவினால் அளிக்கவே,

(பின்னும்), வெம் கிராத வனம் எரித்தவிசயனுக்கு – கொடிய
வேடர்கள் சஞ்சரித்தற்கு உரிய காண்டவவனத்தை (அக்கினி பகவானைக்
கொண்டு) எரிந்தழியச்செய்த அருச்சுனனுக்கு, விஞ்சையன் –
(சித்திரரதனென்னும்) கந்தர்வராசன், அங்கு இரா மகிழ்ந்து அளித்த-அங்கே
[கங்கைக்கரையிலே] (திரௌபதி சுயம்வரத்துக்காகப் பாண்டவர் சென்றபோது)
இராப்பொழுதில் மகிழ்ச்சிகொண்டு கொடுத்த, ஆடல் மாவும்-வலிமையுள்ள
(ஐந்நூறு) குதிரைகளையும்,-பொங்கு இரா மணம்சிறந்த நீள் அளகம் போக
மாதர் பலரும்-மிக்க இருள்போற் கருநிறமான வாசனை சிறந்த நீண்ட
கூந்தலையுடைய இன்பத்திற்கு உரிய பல மகளிரையும்,- இங்கு மன்று-
இந்தச்சபையிலே, இரா-இருந்து கொண்டு, நரேசன்-யுதிஷ்டிரராசன், உற்ற
இசைவினால் அளிக்க-மிக்கமனப்பூர்த்தியோடு பந்தயமாகவைத்து இழந்துவிட,-
(எ – று.) ‘குருகு லேசன் மொழிய’ என அடுத்த கவியோடு தொடர்ந்து
முடியும்.  ‘இங்கு’ – அசை; இப்பொழுது எனினுமாம்.

     கிராதவனமென்றது, வேடர்முதலிய துஷ்டர்கள் மிகுதியாக வசித்திருந்த
காண்டவவனத்தை.  அருச்சுனன்அக்கினியைக் கொண்டு காண்டவவனத்தையெரித்த கதை:- இந்திரப்பிரத்த நகரத்தைச் சார்ந்ததொரு
பூஞ்சோலையிற் கிருஷ்ணார்ச்சுனர்கள் உல்லாசமாக வசித்திருக்கையில் ஒருநாள்
அக்கினிபகவான் அந்தண வடிவங் கொண்டுவந்து ‘எனக்கு மிகப்பசிக்கின்றது:
உணவிடுக’ என்றுவேண்ட, அவ்விருவரும் ‘நீ வேண்டியபடி உணவிடுவோம்’
என்று வாக்குதத்தஞ்செய்ய, உடனே தீக்கடவுள் நிஜரூபங்கொண்டு ‘இந்திரனது
காவற்காடாய் எவர்க்கும் அழிக்கவொண்ணாதபடி நிலவுலகத்திலிருக்கிற
காண்டவவனத்தை அதிலுள்ள சராசரங்களுடனே எனக்குவிருந்திடவேண்டும்’
என்ன, அவர்கள் அங்கே புக்கு ஒதுங்கியிருக்கின்ற அசுரர்கள் முதலிய
துஷ்டர்களை யழித்தருள வேண்டுமென்னும் நோக்கத்தால் இசைந்து ‘நீ
இதனைப் புசி’ என்றவுடனே, அக்கினிதேவன் அருச்சுனனுக்கு நான்கு வெள்ளைக்
குதிரைகள் பூட்டிய தேரையும், வானரத்துவசத்தையும், காண்டீவவில்லையும்,
இரண்டு அக்ஷயதூணீரங்களையும் கொடுத்துக் காண்டவவனத்திற்
பற்றியெரிகையில், அவ்வனத்தினின்று தப்பியோடுகிற பிராணிகளை அருச்சுனன்
அம்பெய்து கொன்று அத்தழலில் விழுத்திவர, காண்டவவனம் தீப்பற்றியெரிகிற
செய்தியை யுணர்ந்த தேவேந்திரன் அத்தீயை யவிக்கும்படி பலமேகங்களை
யேவ, அம்மேகங்கள் வந்துபொழிந்த சோனைமாரியில் ஒரு துளியும் தீயின்மேல்
விழுந்திடாவண்ணம் அருச்சுனன் சரக் கூடங்கட்டித் தடுத்துவிட, இந்திரன்
பின்னும் தேவசேனையுடனே வந்து போர்செய்யவும் அருச்சுனன் அவர்களையும்
வெல்லவே, அக்கினி பகவான் அவ்வன முழுவதையும் எரித்துத் திருப்தியடைந்து
கிருஷ்ணார்ச்சுனர்களை வாழ்த்திச் சென்றன னென்பதாம்.

     விஞ்சையன் விசயனுக்கு ஆடன்மா வளித்த கதை:
பாண்டவர்கள் வேத்திரகீயத்தில் வசித்திருந்தபோது திரௌபதியின்
சுயம்வரத்தைக் கேள்வியுற்று அங்குநின்றும் பிரயாணப்பட்டுச்செல்லுகையில்
அர்த்தராத்திரியிலே கங்கையைச் சார்ந்து அதன் துறையிலிறங்குமளவில்,
அங்குப் பலமகளிருடனே ஜலக்கிரீடை செய்து கொண்டிருந்த
சித்திரரதனென்னும் மறுபெயரையுடைய அங்காரபர்ணனென்னும் கந்தருவ
ராசன், இவர்கள் வருகை தான் ஏகாந்தமாகச் செய்துகொண்டிருக்கிற
புனல்விளையாட்டுக்குத் தடையாதலை நோக்கிச் சினங்கொண்டவனாய்,
இவர்களை ‘இங்கு வரலாகாது’ என்று தடுத்து வீரவாதங்கூறி மாயப்போர்
தொடங்க, அப்போரில் முன்நின்ற அருச்சுனன் ஆக்நேயாஸ்திரத்தால் அவன்
மாயைகளை ஒழித்ததோடு அவனது தேரையும் கரியாக்கி அவனது அம்புகளையும்
உடல்வலிமையையும் ஒடுங்கச்செய்து அவனைத் தலைமயிர் பற்றி யிழுத்துவந்து
தருமபுத்திரனது பாதத்தில் விட, கருணைக் கடலான தருமபுத்திரன் அவன்
மனைவியான கும்பீநசியின் வேண்டுகோளினால் அருள்கொண்டு அவனைவிடுக்க,
அவன் இவர்களைப் பாண்டவரென்று அறிந்தவனாய்த் தன்பிழையைப்
பொறுக்கும்படி வேண்டிச் சரணமடைந்து அபயமளிக்கப்பெற்ற பின்பு
நட்புப்பூண்டு அருச்சுனனிடத்திலிருந்து ஆக்நேயாஸ்திரத்தை உபதேசம் பெற்று
அதற்கு ஈடாகத் தானறிந்த மாயவித்தையை அருச்சுனனுக்குக்
கற்றுக்கொடுத்ததுமன்றி ஒவ்வொருவர்க்கும் நூறு நூறு குதிரையாக
உத்தமவிலக்கணமுடைய சிறந்த ஐந்நூறு குதிரைகளைப் பெற்றுக்கொள்ளும்படி
வேண்ட, ‘வேண்டும்பொழுது பெற்றுக்கொள்ளுகிறோம்; உனக்கு மங்கள
முண்டாகுக’ என்று சொல்லி அருச்சுனன் அக்குதிரைகளை
அச்சித்திரரதனிடத்திலேயே விட்டிருந்தன னென்பதாம்.  இவ்விஞ்சையன்
பெயரை ‘சித்திராங்கதன்’ எனக் கொள்ளுதல் தகுதியன்று; திரௌபதி
மாலையிட்ட சருக்கத்தில் அவனை ‘சித்திரத்தேரோன்’ என்றதையும்
வடநூல்களையும் உற்றுநோக்குக.  அவ்வாறு அவ்வித்தியாதரனிடத்திலிருந்த
குதிரைகளை இப்பொழுது தருமன் பந்தயமாக வைத்தனனென அறிக. 

    விஞ்சையன்-மாலிகாஞ்சநம் முதலிய மாயவித்தைகளை யுடையவன்.
ஆடல் = அடல்: நீட்டல்.  இனி ஆடல்மா – கூத்தாடிக்கொண்டு
செல்லுந்தன்மையுள்ள குதிரையெனினுமாம்; அன்றியும், உத்தம
விலக்கணமுடைய சிறந்தகுதிரை ‘ஆடன்மா’ எனப்படும்.  மா –
பால்பகாவஃறிணைப்பெயர்.  மூன்றாமடியில், ‘இரா’ என்றது, இருளுக்கு
இலக்கணை.  நான்காமடியில், ‘இரா’ – செய்யா என்னும் வாய்பாட்டு
உடன்பாட்டு இறந்தகாலவினையெச்சம்.  மூன்றாமடியினீற்றில், அன்று என்று
எடுத்து, அப்பொழுது எனினுமாம்

யாவையும் கொடுத்து இருப்ப, ‘இளைஞரோடு மெய்த் தவக்
கோவையும் குறிக்க’ என்று, குருகுலேசன் மொழியவே,
ஈவையும் குறித்து, வெற்றி எய்த எய்த இவர்கள்தம்
வீவையும் குறித்து, வென்ற மேன்மையான் விளம்புவான்:180.-தங்களையேபந்தயப் பொருளாக வைத்து ஆடுமாறு
தருமனைக் கேட்கும்படி துரியோதனன் சகுனியைத்
தூண்டுதல்.

யாவையும் கொடுத்து இருப்ப – (இவ்வாறு தருமபுத்திரன்
எல்லாப்பொருள்களையும்  தோற்றிருக்கையில், ‘இளைஞரோடும் – தம்பிமார்
நால்வருடனே, மெய் தவம் கோவையும் – சத்திய விரதத்தையுடைய
தருமராசனாகிய தன்னையும், குறிக்க – பந்தயமாக வைக்கும்படி சொல்வாயாக,’
என்று-, குருகுல ஈசன் – குருகுலத்திற் பிறந்த தலைவனாகிய துரியோதனன்,
மொழிய – (சகுனியிடத்திற்) சொல்ல,-வென்றி மேன்மையான்-வெற்றியினால்
மேம்பட்டவனாகிய அச்சகுனி, இவர்கள் தம்வீவையும் குறித்து –
இப்பாண்டவர்களது நாசத்தையும் உத்தேசித்து, ஈவையும் குறித்து வெற்றி எய்த
எய்த – (துரியோதனன் குறித்த) இப்பந்தயப் பொருள்களையும் குறித்து
மேன்மேல் வெற்றிபெறுமாறு, விளம்புவான் – (தருமபுத்திரனை நோக்கிச்)
சொல்வானாயினான்; (எ – று.)-அதனை, அடுத்த கவியின் முன்னிரண்டடிகளிற்
காண்க.

     சகுனி தருமபுத்திரனது பொருள்களையெல்லாம் வென்றதும், துரியோதனன்,
‘இனிச் சூதாட்டத்தை நிறுத்திவிடக்கூடும்’, என்ற எண்ணத்தினால் அவ்வாறு
நிறுத்திவிடாதிருக்கும்படி ‘பாண்டவர்களாகிய தங்களையே பந்தயப் பொருளாக
வைக்குமாறு கேட்பாய்’ எனச் சகுனிக்குக் குறிப்பாகக் கூறினனென்க. எய்த்த அ
கோவையும் என்று பிரித்து – சூதாடித்தோற்ற அந்தத் தருமராசனையும் என்றும்
உரைக்கலாம்.  ஈவை – இவையென்பதன் ‘நீட்டல்; (இதன் ஒருமையாகிய ‘இது’
என்பது ‘ஈது’ எனச்சுட்டு நீண்டுவருதல் கருதத்தக்கது.) பாண்டவர்களைப்
பந்தயப்பொருள்களாகக் கொண்டதனால், ‘ஈவை’ என அஃறிணையாகக்
கூறினார்.  எய்த எய்த – அடுக்கு, மிகுதிப்பொருளது.  பாண்டவர்களது
பொருள்களையே யன்றி அவர்களின் நாசத்தையும் எனப்பொருள்படுவதால்,
‘வீவையும்’ என்ற உம்மை-இறந்தது தழுவிய எச்சப்பொருளது.   வீவு –
தொழிற்பெயர்; வீ – பகுதி, வு – தொழிற்பெயர் விகுதி

உன்னையும் குறித்து வன்பு உரைத்த தம்பிமார்இனம்
தன்னையும் குறித்து, இசைந்து தருக; வந்து பொருக!’ என,
பின்னையும் குறிப்பு உறாது, பொருது, கை பிழைக்க, மேல்
‘என்னை உம் குறிப்பு?’ எனா, முன், விரகினால் இயம்பினான்181.- தருமன்தங்களையே பந்தயப்பொருளாகக்கொண்டு
ஆடித் தோற்க, சகுனி மீண்டு்ங் கூறுதல்.

(சகுனி தருமனை நோக்கி), ‘உன்னை குறித்துஉம் – உன்னையே
பந்தயப்பொருளாக வைத்தும், வன்பு உரைத்த தம்பிமார் இளந்தன்னை
குறித்துஉம் – சாமர்த்தியம் பேசின தம்பிமார் கூட்டத்தையும் [நான்கு
தம்பிமார்களையும்] பந்தயப் பொருளாக வைத்தும், இசைந்து தருக – மன
மொப்பி நியமனஞ் செய்வாயாக; வந்து பொருக – வந்து சூதாடுவாயாக,’ என –
என்று (துரியோதனனது எண்ணத்தின்படியே) சொல்ல,-பின்னையும் – (பல
பொருள்களையுந்தோற்ற) பின்பும், (தருமராசன்), குறிப்பு உறாது – சிறிதும்
ஆலோசனை யில்லாமல், பொருது – (தங்களையே பந்தயப் பொருளாகக்
கொண்டு சகுனியுடனே) சூதாடி, கைபிழைக்க – (தங்களையும்) தோற்க,-மேல் –
அதன்பின்பு, (சகுனி), முன் – (தருமராசனுக்கு) எதிரில், உம் குறிப்பு என்னை
எனா – ‘உமது எண்ணம் இனி என்ன?’ என்று (இகழ்ச்சிதோன்றக்) கூறி,
விரகினால் இயம்பினான் – தந்திரமாக (மற்றும்) சொல்வானாயினான்; (எ – று.)-
அதனை, அடுத்தகவியிற் காண்க.

    ‘எல்லாப் பொருள்களையும் தோற்றுவிட்டதோடு உங்களையும்
தோற்றுவிட்டதனால், இனி ஆடும்பொருள் ஒன்றுமில்லையே!’ என்று இகழ்ச்சி
தோன்றுமாறு கூறி, மற்றும் ரோஷத்துடன் திரௌபதியையும் பந்தயம்
வைக்குமாறு கூறுகின்றானாதலால், ‘விரகினாலியம்பினான்’ என்றார்.  மேல் உம்
குறிப்பு என்னை எனா முன் விரகினால் இயம்பினான் என்பதற்கு-‘இனி உமது
கருத்து என்ன?’ என்று (தருமன்) கேளாதமுன்னமே [கேட்காதிருக்கையிலேயே]
(சகுனி) வஞ்சனையினால் (வலியச்) சொல்பவ னானான் என உரைப்பினும்
அமையும்; மேல் உம் குறிப்பு என்னை – இன்னமும் உங்கள் உத்தேசமென்ன?
என்றபடி.  பல சமயங்களில் வீமன் முதலியோர் தமது சாமர்த்தியங்களை
வீரவாதமாக எடுத்துக் கூறுந் தன்மைய ராதலால், அவர்கள் ‘வன்புரைத்த
தம்பிமார்’ எனப்பட்டார்; என்றது, ‘நுணலுந் தன்வாயாற் கெடும்’ என்றபடி,
தங்கள் செருக்கு மொழியாலே இவ்வாறு அவர்கள் அழிந்தனரென்ற குறிப்பு.
‘கைபிழைக்க’ என்பதில், கை – தமிழுபசர்க்கம்;  கைத்திறமையாலாடும்
ஆட்டத்தில் அத்திறமின்றித் தோற்ற என்றவாறுமாம்.  பொருகென –
தொகுத்தல்.

மெய் வரும் திறத்தில் உம்மை வெல்லுமாறு வேறலால்,
ஐவரும் திருந்த எங்கள் அடிமையின்னர் ஆயினீர்;
மை வருங் தடங் கண் வேள்வி மாதுதன்னை ஒட்டி, நீ
கைவரும் கவற்றின், இன்னம் எறிக!’ என்று கழறினான்.182.-திரௌபதியைப் பந்தயம் வைக்கும்படி சகுனி கூறுதல்.

பின்னும் சகுனி தருமபுத்திரனை நோக்கி), ‘மெய்வரும்
திறத்தின் நும்மை – உண்மையிலே பழகுந்தன்மையுள்ள உங்களை, வெல்லும்
ஆறு – வெல்லவேண்டியபடியாக முறைமையாகவே], வேறலால் – (நாங்கள்)
சயித்துவிட்டதனால், ஐவரும் நீங்கள் ஐந்துபேரும், திருந்த எங்கள்
அடிமையின்னர் ஆயினீர் – நன்றாக எங்களுக்கு அடிமைகளாய் விட்டீர்கள்;
மை வரும் தட கண் வேள்வி மாது தன்னை ஒட்டி – மை தீட்டிய பெரிய
கண்களையுடைய யாகபத்தினியாகிய திரௌபதியைப் பந்தயமாக வைத்து, நீ-,
கைவரும் கவற்றின் இன்னம் எறிக – நன்றாகக் கைதேர்ந்த பாச்சிகையினால்
இன்னமும் ஆடுவாயாக,’ என்று கழறினான் – என்று கூறினான்; (எ – று.)

     கீழ்ப் பாண்டவர் தங்களையே பந்தயம் வைத்துச் சூதாடுமாறு தூண்டியது
போலவே, மிச்சமாய்நின்ற திரௌபதியையும் பந்தயம் வைத்துச் சூதாடுமாறு
சகுனி தருமனைத் தூண்டின னென்க.  இச் செய்யுள் சகுனியின்
வார்த்தையென்பதை, மேல் 187 – ஆஞ் செய்யுளில் ‘சகுனிசொல்லை’ என
வருவதனாலுமுணர்க.  சூதாடுதற்குப் பந்தயப்பொருள் வைக்குமாறு சகுனியே
கேட்பதாக வியாச பாரதத்திலும் வருகின்றது:  இதுபற்றியே, கீழ் 180 – ஆஞ்
செய்யுளில், துரியோதனன் தானே கேளாமல் பாண்டவர்கள் தங்களையே
பணையமாக வைக்குமாறு தருமனைக் கேட்கச் சகுனிக்குக் குறிப்பித்ததாகக்
கூறியுள்ளார்.  இச்சூதுபோர்வென்றியை வென்றியன்றென மறுக்கமாட்டி
ரென்றற்கு ‘மெய்வருந் திறத்தினும்மை வெல்லுமாறு வேறலால்’ என்றான்.
‘மெய்வரும் திறத்தின்’ என்பதற்கு – உண்மையான வழியிலேயே [சிறிதும்
வஞ்சனையில்லாமலே] என்றும் கூறலாம்;  அப்பொழுது, ‘வேறலால்’
என்பதனோடு இயையும்.  இகழ்ச்சிதோன்றவும், ரோஷமுண்டாகுமாறும், ஆசை
தூண்ட முகஸ்துதியாகவும், ‘கைவருங் கவற்றினின்னமெறிக’ என்றான்.
கழறுதல் – வன்மையாகக் கூறுதல். ஐவரும் ஆயினீர் – முன்னிலையிற்
படர்க்கைவந்த இடவழுவமைதி. ‘ஐவரும்’ என்றிருப்பின், வழாநிலையாம்.
அடிமையின்னர் – அடிமையினர்: னகரமெய் – விரித்தல்; இன் – சாரியை.

அன்ன போதில், அருள் விதூரன், அந்தனைப் புகன்று எழா,
‘நின் அபோதம் அன்றி, வேறு நிருபர்தாம் நினைப்பரோ?
‘இன்ன போதுமோ, நமக்கு? இயற்கை அன்று இது’ என்று, நீ
சொன்ன போது, நேய மைந்தர் சொன்ன சொல் மறுப்பரோ?183.-இது முதல் நான்கு கவிகள் – குளகம்; அதுகேட்டுவிதுரன்
மனம் பொறாமல் திருதராட்டிரனிடத்துச் சிலகூறுதல்.

அன்ன போதில் – (அவ்வாறு சகுனி கூறிய) அச்சமயத்தில்,
அருள் விதூரன் – அருளையுடையவனாகிய விதுரன்,-அந்தனை புகன்று எழா
– குருடனான திருதராஷ்டிரனைப் பழிக்கும் படி எழுந்து, (அவனைநோக்கி), –
நின் அபோதம் அன்றி – உனது அறிவின்மையால் (இவ்வாறான முறைகேடு
நடக்கின்றதே) அல்லாமல், வேறு நிருபர் – (அறிவுள்ள) மற்றையரசர்கள்,
நினைப்பரோ – (இவ்வாறான அக்கிரமச் செயலை) நினைத்தலேனுஞ்
செய்வார்களோ? (இவ்வாறான செயலை நினைக்கவும் மாட்டார்கள் என்றபடி);
இன்ன நமக்கு போதுமோ – இத்தன்மையான செயல்கள் (குருகுலத்தாரான)
நமக்கு அடுக்குமோ? இது இயற்கை அன்று என்று-‘ இது (நமக்குச்) சிறிதும்
தக்க தன்று’ என்று, நீசொன்னபோது-நீ (உன் மக்கட்கு) அறிவுகூறினால்
அப்பொழுது, நேயம் மைந்தர்-(உன்னிடத்து) அன்புள்ள உனது மக்கள்
(துரியோதனாதியர்), சொன்னசொல் மறுப்பரோ- (நீ) சொன்னசொல்லைத்
தடுத்து மாறு செய்வார்களோ? (எ-று,) – தாம்-அசை.. இச்செய்யுளிலுள்ள
‘விதூரன் என்ற எழுவாய், மேல் 186-ஆஞ்செய்யுளில் வரும் ‘பேசினான்’
என்ற முற்றைக் கொண்டு முடியும்.

     இதுவரையில் மனம்பொறுத்திருந்த விதுரன், மகாபதிவிரதையும்
பாண்டவர்க்கேயுரிய பத்தினியும் பட்டமகிஷியாய் அந்தப்புரத்திலே யிருக்குந்
தன்மையளுமான திரௌபதியையும் பந்தயம் வைக்குமாறு சொன்னசொல்
தன்மனத்தை வருத்தவே, நிஷ்டுரமாக இவ்வாறு கூறத்தொடங்குவானாயினான்.
இவ்வளவு அக்கிரமச்செயல்கள் நடக்கவும் திருதராட்டிரன் மாறுகூறாமல்
வாளாவிருந்தன னாதலால், தருமன் சூதாடுதற்கு முதற்காரணமாயிருந்த
அத்திருதராட்டிரனையே விதுரன் பழித்துக்கூறத்தொடங்கினானென அறிக.
இப்பொழுது விதுரன் பாண்டவர்க்கு நேர்ந்த துன்பத்திற்கு
மனமிரங்கிக்கூறுகின்றானாதலால், அவனை ‘அருள் விதூரன்’ என்றார்.
அந்தன் – வடசொல். புகன்று = புகல எச்சத்திரிபு. எழா – ‘செய்யா’ எள்னும்
வாய்பாட்டு உடன்பாட்டு இறந்தகால வினையெச்சம். ந+போதம் = அபோதம் :
வடசொல். இன்ன – பலவின்பாற்குறிப்பு வினையாலணையும் பெயர்.
விதூரன் – நீட்டல் விகாரம்.    

திருகு நெஞ்சின் வஞ்சர் ஆகி, இளைஞர் தீமை செய்தகால்
உருகுகின்ற தாதை நீ உடன்படுத்து இருப்பதோ?
மிருகம் அன்று; பறவை அன்று; இரக்கம் இன்றி மேவு நின்
அருகு வந்து அணைந்தது, எங்கள் அறிவிலாமை ஆகுமே!

இளைஞர் – (உனது) மைந்தர்கள், திருகும் நெஞ்சின் வஞ்சர்
ஆகி – மாறுபாடுகொண்ட மனத்திலே வஞ்சனைக் கருத்தையுடையவர்களாய்,
தீமை செய்த கால் – (பாண்டவர்கட்குப்) பொல்லாங்கு செய்தபொழுதில்,
உருகுகின்ற தாதை நீ – (அப்பாண்டவரிடத்து உண்மையன்புக்கு)
உருகுபவன்போலப் பாவனைகாட்டுகிற பெரிய தந்தையாகிய நீ, உடன்படுத்து
இருப்பதோ – (அப்பொல்லாங்குக்குச்) சம்மதித்திருப்பது தகுதியோ? மிருகம்
அன்று – (நீ) மிருகமுமல்லை; பறவை அன்று – பறவையுமல்லை;  இரக்கம்
இன்றி மேவும் நின் அருகு வந்து அணைந்தது – (மனிதனாயிருந்தும்)
இரக்கமில்லாமலிருக்கிற உனது சமீபத்தில் [நாங்கள் வந்து சேர்ந்திருப்பதற்குக்]
காரணம், எங்கள் அறிவு இலாமை ஆகுமே – எங்களது புத்தியில்லாமையேயாம்
[உன்மீது குற்றஞ் சொல்வதிற் பயனில்லை யென்றபடி]; (எ – று.)

     நீ இருதிறத்துப் புதல்வரிடத்திலும் பட்சபாதமில்லாமல் ஒரு நிகராக
இருந்து நியாயப்படி செல்ல வேண்டியிருக்க, அவ்வாறு நடவாமல்
பகுத்தறிவில்லாத மிருகபட்சிகள் போலச் சிறிதும் விவேகமின்றி இரக்கங்
கொள்ளாதிருப்பதனால், நாங்கள் உன்னைச் சேர்ந்திருப்பது எங்களது
அறிவீனமேயாகும் என்று தம்மைப் பழித்துக் கூறும்முகத்தால் விதுரன்
திருதராட்டிரனைப் பழித்தனனென்க.  இச்செய்யுளி னீற்றடி – ஒருவரது
நிந்தையால் மற்றொருவரது நிந்தையை வெளிப்படுத்துகிற
வஞ்சப்பழிப்பணியின்பாற்படும்.  மிருகம் அன்று பறவை அன்று என்பதற்கு
– (இவ்வாறு இரக்கங் கொள்ளாமலிருப்பது) மிருகங்களினியற்கையுமன்று,
பட்சிகளினியற்கையுமன்று [மிருகபக்ஷிகளும் இரக்கங்கொள்ளுகின்றன] எனப்
பொருள் கூறுவாருமுளர்.  செய்தகால் – பெயரெச்சத்தொடர்: ஆதலின், வலி
இயல்பு.  பறப்பது – பறவை; ஐ – வினைமுதற்பொருள்விகுதி.  ஓகாரம் –
எதிர்மறை.  ம்ருகம் – வடசொல்.  ‘எங்கள்’ என்ற தன்மைப்பன்மை, வீடுமன்
முதலிய நல்லோர் பலரை உளப்படுத்தியது. 

பின் பிறந்த தம்பி மைந்தர் பீடு அழிந்து இரங்கவே,
முன் பிறந்த தமையன் மைந்தர் மொய்ம்பினால்
அடர்ப்பரோ?
அன்பு இறந்ததேனும், நீதி அழிய நீ நடத்தினால்,
என் பிறந்து முடியும் மண்ணில், எண் இல்
காலம், இன்னுமே?

பின் பிறந்த தம்பி மைந்தர் பீடு அழிந்து இரங்க-பின்னே
பிறந்த தம்பியினது புதல்வர்கள் [பாண்டவர்கள்] (முழுவதுந்தோற்றதனாற்)
பெருமைகெட்டு வருந்தும்படி, முன் பிறந்த தமையன் மைந்தர் மொய்ம்பினால்
அடர்ப்பரோ – முன்னே பிறந்த தமையனது புதல்வர்கள் [துரியோதனாதியர்]
(வஞ்சத்தினால்) வலியத்துன்பஞ் செய்து வருத்துவார்களோ? [இவ்வாறு
வருத்துவது முன்பு எங்குங்கண்டதில்லை யென்றபடி]; அன்பு இறந்தது ஏனும் –
(உனது தம்பியின் குமாரர்களிடத்து உனக்கு) அன்பு நீங்கிற்றாயினும், நீதி
அழிய-நியாயம் தவறும்படி, நீ நடத்தினால் – (நியாயவழியில் நடக்கவேண்டிய)
நீயே (இவ்வாறு முறைகேடாக) நடத்தினால், மண்ணில்-இவ்வுலகத்தில், இன்னும்
எண் இல் காலம் – இனிமேல் அளவில்லாத பலகாலங்களிலே, என் பிறந்து
முடியும் – (இன்னும்) என்னென்ன தீங்குகள் தாம் உண்டாகுமோ! (எ – று.)

    பாண்டவரிடத்து அன்புகொண்டு இப்பொழுதுநேரும் அக்கிரமச்செய்கையை
விலக்கவேண்டுமென்று (கீழ்க்கவியில்) திருதராட்டிரனுக்குக்கூறிய விதுரன்,
இச்செய்யுளால், அவர்களிடத்து அன்பில்லாவிடினும் நீதிமுறையையாவது
பார்க்கவேண்டுமெனக் கூறுகின்றன னென அறிக.  ‘நீதிமுறை தவறாது
நடக்கவேண்டிய உன்னாலேயே இவ்வளவு காலத்திற்குள்ளாகவே இவ்வகைப்
பெருந்தீங்குகள் உண்டாகுமானால், பல கற்பகாலங்கழியவேண்டிய
இவ்வுலகத்தில் இனி என்ன தீங்குதான் உண்டாகமாட்டாது!’ எனத்
திருதராஷ்டிரனது கொடுமையை அவனுக்கு எடுத்துக் காட்டியவாறு. தருமம்
இரண்டு கால்களையூன்றிநிற்கிற இந்தத் துவாபரயுகத்திலேயேநீ இவ்வாறு
நீதியழியநடத்தினால் இனி வருங் கலிகாலத்தில் என்னதான் நிகழுமோ
வென்றவாறுமாம். இனி, ஈற்றடிக்கு – இவ்வாறு நீ நடத்துவதனால்
உலகமழியுமளவும் உனக்கு அழியாத மிக்க அபகீர்த்தி யுண்டாகி
நிலைநிற்குமெனக் கருத்துக் கூறலுமாம்.  ‘பின்பிறந்த,’ ‘முன் பிறந்த’ என்பவை –
இயற்கை யடைமொழிகள்; இனம்விலக்க வந்தனவல்ல

வருமம் மிஞ்ச இவனை வென்ற வஞ்சம் அன்றி,
மற்று, ‘இவன்
தரும வஞ்சிதனை இசைந்து பொருதும்’ என்கை தருமமோ?
கருமம் அன்று; உனக்கு நாச காலம் வந்ததுஆகலின்,
பெரும! தஞ்சம் இன்றி, நெஞ்சு பேரும்’ என்று பேசினான்.

பெரும – பெருமையுடையவனே! மருமம் மிஞ்ச – நெஞ்சிலே
(பகைமை) அதிகப்பட, இவனை வென்றவஞ்சம் அன்றி – இத்தருமபுத்திரனைச்
சயித்த மோசத்தோடு நில்லாமல், இவன் தருமவஞ்சிதனை இயைந்து பொருதும்
என்கை-இவனது தரும பத்தினியையும் (பந்தயமாக) உடன்பட்டுச் சூதாடுவோம்
என்று சொல்லுதல், தருமமோ – நீதியாகுமோ? கருமம் அன்று – (இது)
செய்யத்தக்க காரியமன்று; உனக்கு நாசகாலம் வந்தது ஆகலின் – உனக்குக்
கேடுகாலம்கிட்டிவிட்டதனால், தஞ்சம் இன்றி நெஞ்சு பேரும் –
பெருந்தன்மையில்லாமல் (உனது) மனம் மாறுபடுகின்றது, என்று-, பேசினான்-
பேசிமுடித்தான்; (எ – று.)

    துரியோதனாதியர் செய்வனவெல்லாம் திருதராஷ்டிரனது உடன்பாடு
பெற்றே யாதலால், விதுரன் திருதராஷ்டிரனையே அக்கிரமஞ்செய்பவனாக
இங்குக் கூறுகின்றான்;  “முற்பகல் கண்டான் பிறன்கேடு தன்கேடு, பிற்பகற்
கண்டுவிடும்’ என்றபடி திருதராட்டிரனைச் சார்ந்தவர்கள் பாண்டவர்கட்குச்
செய்யுந் தீமைகளெல்லாம் உடனே செய்பவர்கட்குத் தீமையாய் முடியும்
என்பது விதுரனது உட்கோள். “விதியே மதியாய்விடும்” “கேடு வரும் பின்னே
மதிகெட்டுவரும் முன்னே”, “விநாஸகாலே விபரீத புத்தி:” என்பன –
இச்செய்யுளின் பின்னிரண்டடிகளுக்கு மேற்கோளாகத்தக்கவை.  மர்மம் –
உயிர்நிலை; வடசொல்:  இது, இங்கு மனம் என்ற பொருளில் வந்தது.  இனி
மருமம் மிஞ்ச என்பதற்கு – மிக்க இரகசியமாக எனினுமாம்.  மற்று – அசை.
வஞ்சி – ஒரு கொடி:  இதனை மாதர்கட்கு உவமைகூறுதல், மரபு: மெல்லியதாய்
ஒல்கி ஒசியும் வடிவில் உவமம்.  இங்கு, வஞ்சி – உவமையாகுபெயர். பொருதும்
– தன்மைப்பன்மைமுற்று.    

விதுரன் நொந்து, நீதி கூற, விழி இலாமை அன்றியே,
வெதிரனும்கொல் என்னுமாறு விழியிலானும் வைகினான்;
சதுர் புரிந்த சகுனி சொல்லை எதிர் புரிந்து, தருமனும்,
அதிர வஞ்சம் முதிர வந்த அருள் இலானொடு ஆடினான்.187.-சகுனியின்விருப்பத்தின்படியே தருமன் சூதாடுதல்.

விதுரன்-, நொந்து – மனம் வருந்தி, நீதி கூற – (இவ்வாறு)
நீதிமொழிகளை யெடுத்துச்சொல்லவும்,-விழி இலானும் – பிறவிக் குருடனான
திருதராட்டிரனும், விழி இலாமை அன்றியே – கண்ணில்லாமையேயன்றி, வெதிர்
எனும் கொல் – செவிடும் ஆவேனோ, என்னும் ஆறு – என்று (தன்னைச்)
சொல்லும்படி, வைகினான் – (ஒன்றும்பேசாது) இருந்துவிட்டான்;  (இங்ஙன
மிருக்கையில்), – சதிர் புரிந்த சகுனிசொல்லை – சாதுரியமாகச் சூதாடிவந்த
சகுனியினது வார்த்தையை, தருமனும்-, எதிர்புரிந்து – எதிரில் உடன்பட்டு,-
அதிர வஞ்சம் முதிர வந்த -(கண்டவரெல்லாம்) நடுங்கும்படி (தன்னிடத்தில்)
வஞ்சனை அதிகப்பட வந்துள்ளவனாகிய, அருள் இலானொடு –
இரக்கமில்லாதவனான அந்தச் சகுனியோடு, ஆடினான் – (மீண்டும்) சூதாடத்
தொடங்கினான்; (எ – று.)

     விதுரன் இடித்துக் கட்டுரை கூறவும் திருதராட்டிரன் சிறிதும்
செவிகொடாதிருந்ததனால், கண்ணில்லாமையோடு செவியுமில்லாதவனென
வருணித்துக்கூறுமா றிருந்தது அவன் நிலைமையென்பது முன்னிரண்டடியின்
கருத்து, பதிரன்-செவிடன் என்ற பொருளதான இது, பெதிரன், வெதிரன்
எனத்திரியும்:  வெதிரனது தன்மை, வெதிரெனப்பட்டது.  அன்றியும்,
உறுப்புக்குறையுற்றோரை அஃறிணையாற் கூறலுமுண்டு.  ‘வெதிரனுங்கொல்’
என்ற பாடம் சிறக்கும்.  உம்மை – இறந்தது தழுவிய எச்சம்.  ‘பெதிரனுங்கொ
லென்னுமாறு பெரிய தாதை வைகினான்’ என்று பாடமோதுவாருமுளர்.  சதிர்
புரிந்த – சதுரப்பாடாகப் பேசிய எனினுமாம்.  அருளிலான் – இரக்கமற்ற
பெரும்பாவி யென்றப

காயம் முற்றும் வஞ்சமே கலந்தது அன்ன கள்வன்மேல்
நேயம் உற்று நின்று, தானும் நிகர் பிடித்தது என்னவே,
மாயம் உற்ற கவறும், அந்த மாமன் வல்லபத்திலே
தாயம் உற்று, இடம் கொடாது, தருமனைச் சதித்ததே.188.-அவ்வாட்டத்திலும் தருமன்தோற்றல்.

மாயம் உற்ற கவறும் – மாயத்தன்மை பொருந்திய பாச்சிகையும்,
தானும் நிகர் பிடித்தது என்ன – தானும் தனக்குச் சமானமான துணைவனைத்
தேடிப்பிடித்த தென்னும்படி, காயம் முற்றும் வஞ்சமே கலந்தது அன்ன
கள்வன்மேல் நேயம் உற்று நின்று – (தனது) உடம்புமுழுதும் வஞ்சகமே
நிறைந்திருந்தாற் போன்ற கள்ளத்தன்மையுடையோனாகிய சகுனியினிடத்தில்
அன்பு நிறைந்து நின்று,- அந்த மாமன் வல்லபத்திலே – அந்தச் சகுனி மாமனது
சாமர்த்தியத்தால், தாயம் உற்று – நல்லபந்தயம் அமையுமாறு உருண்டு, தருமனை
இடம் கொடாது சதித்தது – தருமபுத்திரன் வெல்லும்படி சிறிதும் இடங்கொடாமல்
முற்றிலும் கெடுத்துவிட்டது;  (எ – று.)

    சகுனிசொற்படியே தருமபுத்திரன் திரௌபதியைப் பந்தயம் வைத்துத்
தோற்றானென்பது, கருத்து.  இச்செய்தியை வெளிப்படையாகக் கூறுதற்கு
வாய்கூசிக் கவி இவ்வாறு சூதின்மேலேற்றி மறைபொருளாகக் கூறிப்
பெறவைத்தனர்.  பிறிதினவிற்சியணியின்பாற்படும்.  பாண்டவர்களை
எவ்வழியினால் வெல்லலாமென ஆராய்ந்து விரும்பிச் சகுனி மேற்கொண்ட
சூதானது, தானும் ‘எவரைச் சேர்ந்திருந்தாற் பிறர்க்குப் பெருந்தீங்குகளைச்
சிறிதுந்தடையின்றிச் செய்து மகிழ்ச்சிகொண்டாடலாம்?’ என்று வெகுகாலம்
தேர்ந்து அச்சகுனியையே தனக்குத் தக்கதுணைவனென்று நிச்சயித்து
அவனோடு உரிமைகொண்ட தென்னுமாறிருந்த தென்பது, ‘தானும் நிகர்
பிடித்ததென்ன’ என்பதன் கருத்து.  தானும் என்ற உம்மை – சகுனி தனக்குத்
தக்கதென்று நாடித் தன்னை மேற்கொண்டாற்போலவே யென்ற பொருளைத்
தந்ததனால், இறந்தது தழுவிய எச்சமாம்.  காயமுற்றும் வஞ்சமே கலந்ததன்ன
கள்வன் – “துர்ச்சனருக்கு அங்கமுழுதும் விடமேயாம்”. 

இன்ன தாயம் வேண்டும்’ என்று எறிந்தபோது, மற்று அவன்
சொன்ன தாயமே புரண்டு சோர்வு இலாமல் வருதலின்,
தன்னது ஆய அரசு, வாழ்வு, தரணி மன்னன் நல்கினான்;
அன்னது ஆயபோதும், நெஞ்சு அசைந்திலான், அசஞ்சலன்.189.-தருமன்எல்லாப்பொருள்களையும் இழந்தும் சிறிதுங்
கலங்காமை.

மற்றவன் – பாண்டவர்க்கு எதிரியாகிய சகுனி, இன்ன தாயம்
வேண்டும் என்று எறிந்த போது – ‘(இப்பொழுது) இந்தப்பந்தயம் விழவேண்டும்’
என்று (பாச்சிகையை) உருட்டியாடியபோது, சொன்ன தாயமே புரண்டு சோர்வு
இலாமல் வருதலின் – (அச்சகுனி) கருதிக்கூறிய பந்தயமாகவே உருண்டு
தவறாமல் விழுந்ததனால், தரணி மன்னன் – நிலவுலகத்துக்கு அரசனாகிய
தருமபுத்திரன், தன்னது ஆய அரசு வாழ்வு நல்கினான் – தனக்கு உரிமையுள்ள
அரசாட்சியையும் செல்வவாழ்க்கையையும் (கீழ்க்கூறி வந்தபடியே தோற்று)
இழந்துவிட்டான்; அன்னது ஆயபோதும் – (எல்லாவற்றையும் இழந்த)
அந்நிலைமை (தனக்கு) நேர்ந்த அக்காலத்திலும், அசஞ்சலன் – உறுதியான
மனமுடையனாகிய தருமபுத்திரன், நெஞ்சு அசைந்திலான் – சிறிதும்
மனங்கலங்காதிருந்தான்; (எ- று.)

     இதனால், எல்லாம் வினைப்பயனென்றே கருதிச் சுகதுக்கங்களை ஒரு
நிகராகப் பாவிப்பவன் தருமபுத்திரனென்பது போதரும்;  கீழ்ப் பொதுவாகத்
தருமபுத்திரன் தோற்றானென்று கூறி வந்து, அதன் காரணத்தை இச்செய்யுளில்
விவரித்தார்.  அசஞ்சலன் – வடசொல்

முரசினை உயர்த்த கோமான் மொழிந்தன முழுதும் தோற்று,
பரசுவது ஒன்றும் இல்லாப் பான்மையோடு இருந்த காலை,
விரை செறி அலங்கல் சோர, மெய் குலைந்து, உள்ளம் வெம்பி,
அரசவை இருந்தோர் தம்மில் அருளினால் அழிந்து நொந்தார்.190.-தருமன்முழுவதுந்தோற்றதைக் கண்டு சபையிலுள்ளோர்
வருந்துதல்.

முரசினை உயர்த்த கோமான் – முரசக்கொடியை
உயரவெடுத்தவனான தருமபுத்திரன், மொழிந்தன முழுதும் தோற்று – (பந்தயமாக)
எடுத்துக்கூறிய எல்லாப்பொருள்களையும் (சூதில்) இழந்து, பரவுவது ஒன்றும்
இல்லா பான்மையோடு இருந்த காலை – (மறுபடியும்) பந்தயமாகக் குறித்தற்கு
உரிய பொருள் ஒன்றுமில்லாத தன்மையோடு இருந்த சமயத்திலே,- அரசு அவை
இருந்தோர் – அவ்விராச சபையில் வந்திருந்தவர்கள்,- தம்மில் – தங்களுக்குள்,
அருளினால் – (தருமபுத்திரன் மீதுள்ள) இரக்கத்தினால், விரைசெறி அலங்கல்
சோர – (தாம் அணிந்துள்ள) வாசனை நெருங்கிய மாலைகள் தளர்ந்துவிழும்படி,
மெய்குலைந்து – உடல் நடுங்கி, உள்ளம் வெம்பி – மனம் தவித்து, அழிந்து
நொந்தார் – மிகவும் வருந்தினார்கள்; (எ – று.)

    இரண்டாம் அடி – பந்தயம் வைத்தற்கு ஏதேனுமிருந்தால் தருமபுத்திரன்
இன்னும் சூதாடுவனென்பது தோன்ற நின்றது; கீழ்ச்செய்யுளின் ஈற்றடியும்
இக்கருத்தை விளக்குவ தென்னலாம்.  மெய்குலைதலும், மனம் வெம்புதலும் –
சோகக்குறிகள். பரவுதல் – சொல்லுதல்.  இதுமுதல் இருபத்தொரு கவிகள் – இச்சருக்கத்தின் இரண்டாங்கவிபோன்ற அறுசீராசிரிய விருத்தங்கள்

குரு மரபு உடைய வேந்தன் கொடியன்! ஓ
கொடியன்!’ என்பார்;
‘மருமகன் உயிருக்கு இந்த மாமனோ
மறலி!’ என்பார்;
‘தருமன் இத்தனை நாள் செய்த தருமமும்
பொய்யோ?’ என்பார்;
‘உருமினும் கொடிய வீமன் உருத்து இனி
எழுமோ?’ என்பார்;191.-இதுமுதல் மூன்றுகவிகள் -சபையிலுள்ளவர்கள்
இரங்கிக் கூறுவன.

(சபையிலிருந்த அரசர்களிற் சிலர்),-‘குரு மரபு உடைய
வேந்தன் – குருவமிசத்திற் பிறந்த துரியோதனராசன், ஓ கொடியன் கொடியன்
– மிகவும் கொடியவன்! கொடியவன்!!’ என்பார் – என்று சொல்வார்கள்; (சிலர்),
மருமகன் உயிருக்கு இந்த மாமன் மறலியோ – ‘மருமகனாகிய துரியோதனனது
உயிர்க்கு இந்தச் சகுனி யமன்தானோ!’ என்பார்-; (சிலர்), தருமன் இத்தனை
நாள் செய்த தருமமும் பொய்யோ – ‘தருமபுத்திரன் இவ்வளவு காலமாகச்
செய்துவந்த தருமமெல்லாம் பொய்த்து விடுமோ!’ என்பார்-;(சிலர்), உருமினும்
கொடிய வீமன் உருத்து இனி எழுமோ – ‘இடியைப்பார்க்கிலுங்
கொடுமையுடையவனாகிய வீமசேனன் கோபங்கொண்டு இனிப் (போர்க்குப்)
புறப்படுவான் போலும்,’ என்பார்-; (எ – று.)

    ‘குருமரபுடையவேந்தன்’ என்றதனால், தூய்மையான அக்குலத்திற்
பிறந்தவ ரொருவரும் இவ்வாறு கொடுமையுடனிருத்தற்குக் காரணமில்லையே
யென்று குறித்தவாறாம்.  மருமகன் – உடன்பிறந்தவள் மகன்.  சகுனி இவ்வாறு
மாயச்சூதாடித் தருமனைத் தோற்கச் செய்தது துரியோதனனது நாசத்துக்குக்
காரணமாகுமென்று கருதி, ‘மருமகனுயிருக்கு இந்த மாமன் மறலியோ’
என்றார்கள்.  காலக்கொடுமையினால் இப்பொழுது தருமபுத்திரனது தருமம்
பொய்த்ததுபோலத் தோன்றினும், விரைவில் தவறாது பலிக்கு மென்பது,
மூன்றாமடியின் கருத்து.  இனி, தருமனுக்கு ஒரு நற்பயனும் விளையாது
பழுதுபட்டதனால் அத்தருமன் செய்தனவாகக்கூறிய தருமங்களும்
பொய்தானோ? உண்மையாகச் செய்திருந்தால் பயனளித்தலில்
தவறமாட்டாவன்றோ! எனக் கருத்துக்கூறுவாரு முளர்.  பொய்யோ – (இங்ஙனம்
நன்மை விளையாது தீமைவிளைத்துப்) பொய்யாகக்கடவதோ? எனினுமாம்:
அங்ஙனமாகக் கடவதன்றே யென்றவாறு.  இதுவரையில் தருமனுடைய சொற்குக்
கட்டுப்பட்டு அடங்கியிருந்த வீமன் இப்பேரவமானத்திற்குச் சிறிதும்
மனம்பொறாது சினங் கொண்டு போர்க்கு எழக்கூடு மென்பது, நான்காமடியின்
கருத்து. பலகூறி வருந்துகிற அரசர்கட்கு ஈற்றடி ஒரு சமாதான மாகுமென்க;
இவ்வாறே அடுத்த செய்யுளிலுங்காண்க. ‘ஓ கொடியன்’ என்னுமிடத்தில், ஓகாரம் –
கொடுமையின் மிகுதி விளக்கும். ‘கொடியன் கொடியன் என்ற அடுக்கு – இழிப்புப்
பற்றியது.  மறல்=மறம்; கொடுமை. அதனையுடையவனென யமனுக்குக்
காரணக்குறி.  ஓகாரம் – தற்குறிப்பேற்றவுருபு. தருமமும், உம்மை – உயர்வுசிறப்பு.
ஓகாரம் – எதிர்மறையோடு இரக்கப் பொருளது.  வீமன் – செய்யுமென்முற்று,
ஆண்பாலுக்கு வந்தது;  [நன் – வினை 29.] எழுமோ, ஓகாரம் – ஊகித்தற்
பொருளது.       

‘பாந்தள் ஏறு உயர்த்த வேந்தன் பார்த்திலன்,
உறவும்’ என்பார்;
‘மாய்ந்தவே,  அறமும்,  தேசும், மனுநெறி
வழக்கும்!’ என்பார்;
‘பூந் தழல் பிறந்த பாவை புண்ணியம்
பொய்யாது!’ என்பார்;
‘சேந்தனன் இருகண், பாரீர், தேவர்கோன்
மதலை!’ என்பார்.

(சிலர்), – ‘பாந்தள் ஏறு உயர்த்த வேந்தன் – சிறந்த பாம்பின்
வடிவமெழுதிய கொடியை உயரவெடுத்தவனாகிய துரியோதனன், உறவும்
பார்த்திலன் – (பாண்டவர்கட்கும் தனக்கும் உள்ள) உறவுமுறையையும் சிறிதும்
எண்ணினானில்லை’, என்பார்-; (சிலர்), அறமும் தேசும் மனுநெறி வழக்கும்
மாய்ந்த – ‘தருமமும் நன்குமதிப்பும் மநுதர்மசாஸ்திரத்திற் கூறிய நெறிப்படியே
நடத்தலும் (தருமனுக்குப்) பயன்தாராதொழிந்தன,’ என்பார்-: (அவற்றைக்கேட்ட
சிலர்), பூ தழல் பிறந்த பாவை புண்ணியம் பொய்யாது – ‘அழகிய
யாகாக்கினியிற் பிறந்தவளாகிய சித்திரப் பிரதிமை போன்ற (அழகையுடைய)
திரௌபதியினது பதிவிரதா தருமம் தவறாது [எதிரிகளை அழித்தே விடும்],’
என்பார்-; (சிலர்), தேவர் கோன் மதலை – ‘தேவேந்திரனது குமாரனாகிய
அருச்சுனன், இருகண் சேந்தனன் – (கோபத்தால் தனது) இரண்டுகண்களும்
சிவக்கப்பெற்றான்; பாரீர் – (இதனைப்) பாருங்கள்,’ என்பார்-; (எ – று.)

    துரியோதனன் சகுனியைக் கொண்டு மாயச்சூதினால் தருமபுத்திரனது
பொருள்களெல்லாவற்றையுங் கவர்ந்து கொண்டதுமன்றி, அப்பாண்டவர்களை
மனைவியுடனே தனக்கு அடிமையாகவுஞ் செய்தன னாதலால், ‘பாந்தளே
றுயர்த்தவீரன் பார்த்திலன் உறவும்’ என்றார்.  இனி இரண்டாமடிக்கு – அறமும்
தேசும் மனு நெறிவழக்குமுடைய பாண்டவர்கட்கு இவ்வாறு பெருந்தீங்கு
சம்பவித்ததனால், இனி உலகத்தில் அறம் முதலிய நற்பொருள்கள்
நிலைநில்லாது அழிந்தேவிடு மெனக் கருத்துக் கூறலுமாம்; அறம் முதலியன
துரியோதனனிடத்துச் சிறிதும் இல்லையாயினவென்றுங் கருத்துக்கொள்ளலாம்.

    திரௌபதியை ‘பூந்தழற்பிறந்தபாவை’ என்றதன் விவரம்:- குருகுல
குமாரர்கட்கு வில்லாசிரியனாகிய துரோணன் தன்மாணாக்கனான
அருச்சுனனைக்கொண்டு பாஞ்சாலதேசத்தரசனான துருபதனைப்
பேரவமானப்படுத்த, அதனால் துரோணன்மீது மிக்க வைரங்கொண்ட
அத்துருபதன் அவனைக்கொல்லுதற்கு ஒரு மகனையும், அருச்சுனனது
திறமையைக் கண்டு வியந்ததனால் அவனுக்கு மணஞ்செய்வித்தற்கு ஒருமகளையும்
பெற விரும்பியவனாய், யாசன் உபயாசன் என்னும் முனிவர்களைக்கொண்டு
புத்திர காமயாகஞ் செய்விக்க, அவ்வேள்விப்பயனால் அவ்வோமத்தீயினின்று
ஒரு குமாரனும் ஒரு குமாரியும் தோன்றினர்;  அக்குமாரியே, திரௌபதி.
‘பூந்தழற்பிறந்த பாவை’ என்றது – கருப்பத்திற் பிறவாதவளெனத் திரௌபதியினது
உற்பத்திச் சிறப்பை யுணர்த்தும்.  யாகாக்கினியாதலின், ‘பூந்தழல்’ என்றார்.
மாய்ந்த – ‘அன்’ சாரியை பெறாத பலவின்பால் வினைமுற்று.  மநு – அவனாற்
செய்யப்பட்ட நூலுக்குக் கருத்தாவாகுபெயர்.  தேவர் கோன்மதலை இருகண்
சேந்தனன் – “உயர்திணை தொடர்ந்த பொருள் முதலாறும், அதனோடு
சார்த்தினத்திணை முடிபின” என்பது விதி.  சேந்தனன் – சிவந்தனன் என்பதன்
மரூஉ.        

பழியுடைத்  தந்தை  ஒன்றும்  பகர்கலாது
இருக்கும்’ என்பார்;
‘விழியுடையவரை அன்றோ மேன்மையோர்
வெறுப்பது?’ என்பார்;
‘அழியுமே இவனால், மைந்தர் அரும் பெருஞ்
செல்வம்’ என்பார்;
‘வழிவழியாக  நிற்கும்  வசை,  இவன்
புரிந்தது!’ என்பார்.

சிலர்),- பழி உடை தந்தை ஒன்றும் பகர்கலாது இருக்கும் –
‘பழியையுடைய தந்தையாகிய திருதராட்டிரன் (இவ்வாறு முறைகேடு நிகழவும்
தனதுமகனாகிய துரியோதனனைத் தடுத்து) ஒன்றும் பேசாமல் இருக்கின்றான்
(இது என்ன (கொடுமை!)’, என்பார்-; (அதுகேட்ட சிலர்), விழி உடையவரை
அன்றோ மேன்மையோர் வெறுப்பது – ‘கண்களை யுடையவர்களை யல்லவோ
மேன்மக்கள் வெறுத்துக் கூறுவது [கண்ணில்லாக் குருடன் மீது குறைகூறுவதிற்
பயனில்லையே]’ என்பார்-; (சிலர்), இவனால் – ‘(இக்கொடுமைக்கு இயைந்து
நின்ற) இத்திருதராட்டிரனால், மைந்தர் அரும்பெருஞ் செல்வம் – (இவனது)
மக்களான துரியோதனாதியரது (பெறுதற்கு) அரிய பெருஞ் செல்வம், அழியுமே
– அழிந்தேவிடும்,’ என்பார்;  (சிலர்), இவன் புரிந்தது – ‘இந்தத்
திருதராஷ்டிரன் செய்தது, வழி வழி ஆக நிற்கும் வசை – தலைமுறை
தலைமுறையாக [என்றும் அழியாது] தொடர்ந்து நிலைநிற்கும்
அபகீர்த்தியாகும்,’ என்பார்-; (எ – று.)

     இவை, தனது மக்கள்செய்த முறைகேட்டைத் தடுக்காது நின்ற
திருதராட்டிரன்மேல் அவையிலுள்ளோர் குற்றங்கூறியனவாம். ‘விழியுடையவர்’
என்றது, ஊனக்கண்ணோடு ஞானக்கண்ணையும் பெற்றிருப்பவரென்ற
பொருளைக் காட்டுமென்னலாம்.  மேன்மையோர் வெறுப்பது – தொழிற்பெயர்
வினைமுற்றுத் தன்மையை யடைந்து பயனிலையாய் வந்தது. அழியுமே,
ஏகாரம் – தேற்றம்; இனி, கெட்டுவிடுமே! எனில், இரக்கப் பொருளது. இவன்
புரிந்ததாகிய வசை வழிவழியாக நிற்கும் என இயைத்துப் பொருள்
கூறினுமாம்; இவன் (இங்ஙனம்) புரிந்ததனால் வசை வழி வழியாக நிற்கும்
என்றலும் ஏற்கும்.    

இன்னன, தரணி வேந்தர் இருந்துழி இருந்து, கூற,
மன்னனும், தம்பிதானும், மாமனும், மாறா வண்மைக்
கன்னனும்,  தம்மின்  எண்ணி,  கங்கை  மா
மகனை நோக்கி,
பன்னக  துவசன்,  கேட்டோர்  பலரும் மெய்
பனிக்க, சொல்வான்:194.-துரியோதனன்வீடுமனைநோக்கிக் கூறத்தொடங்குதல்.

இன்னன – இவைபோன்ற பல வார்த்தைகளை, தரணி வேந்தர்
– (அச்சபையில் வந்திருந்த) நிலவுலகத்தையாளும் அரசர்கள், இருந்தஉழி
இருந்து கூற – தாம் இருந்தவிடங்களில் இருந்தபடி சொல்லிக்கொண்டிருக்க,-
மன்னனும் – துரியோதன ராசனும், தம்பி தானும் – அவன் தம்பியான
துச்சாதனனும், மர்மனும் – (அவர்கட்கு) மாமனாகிய சகுனியும், மாறா வண்மை
கன்னனும் – நீங்காத ஈகைத்தன்மையை யுடைய கர்ணனும், (ஆகிய துஷ்ட
சதுஷ்டர்கள் ஒருங்கு கூடி), தம்மின் எண்ணி – தமக்குள் ஆலோசித்து,-
(பிறகு), பன்னகதுவசன் – (அவர்களுள் ஒருவனாகிய) பாம்புக்கொடியை
யுடையவனான துரியோதனன், – கேட்டோர் பலரும் மெய் பனிக்க –
கேட்டவர்களெல்லாரும் உடம்பு நடுங்கும்படி, கங்கை மா மகனை நோக்கி –
கங்கையின் குமாரனாகிய வீடுமனைப் பார்த்து, சொல்வான் – (சிலவார்த்தை)
கூறுவானாயினான்;  (எ – று.)- அவற்றை, அடுத்த கவியிற் காண்க.

     இங்ஙனம் அந்தந்த அரசர்கள் தாம்தாம் இருந்த இடத்திலிருந்தபடி
தமக்குட் சொல்லிக்கொண்டிருந்தார்களே யன்றி எவரும் எழுந்து
துரியோதனனுக்கு மாறாக ஒன்றுஞ்செய்ய மாட்டிற்றிலரென்பது, முதலடியில்
விளங்கிற்று.  ‘எண்ணி’ என்னும் வினையெச்சம் துரியோதனன் முதலிய
நால்வரது வினையாயினும், அவர்களுள் ஒருவனான துரியோதனனது
வினையாகிய ‘சொல்வான்’ என்பதைக் கொண்டு முடிந்தது; இவ்வகை முடிபை
இலக்கியங்களிற் காணலாம்: அன்றி, எண்ணி – எண்ண என எச்சத்திரிபுமாம்.
பந்நகம் என்ற சொல், பத் ந க ம் என்றுபிரிந்து – கால்களினால் நடவாதது
[மார்பினால் ஊர்ந்துசெல்வது] என்றும் பந்நம் கம் என்று பிரிந்து – வளைந்து
செல்வது என்றும் காரணப்பொருள் பெறும்.

தண்ணிய தருமன் செய்த பாவமோ? சகுனி செய்த
புண்ணிய நெறியோ? அந்தப் பொதுமகள் யாக சாலை
நண்ணிய தவறோ? மற்றை நால்வரும் தகைமை கூர
எண்ணிய மதியோ? எண்ணின், இங்ஙனம்
விளைந்தது’ என்றான்.195.-துரியோதனனதுசெருக்குமொழி.

எண்ணின் – ஆலோசிக்கு மிடத்து,- தண்ணிய தருமன் செய்த
பாவமோ – மிக்க எளிமையையுடைய தருமபுத்திரன் (முற்பிறவியிற்) செய்த
தீவினையோ! (அன்றி), சகுனி செய்த புண்ணியம் நெறியோ – சகுனி (பூர்வ
ஜந்மத்திற்) செய்த நல் வினைப்பயன் தானோ! (அல்லது), அந்த பொது மகள்
யாகசாலை நண்ணிய தவறோ – (ஐவருக்கும்) பொதுவான மனைவியாகிய அந்தத்
திரௌபதி (தருமபத்தினியாக) யாகசாலையிற் சென்றிருந்த குற்றந்தானோ!
(அல்லாமல்), மற்றை நால்வரும் தகைமை கூர எண்ணிய மதியோ –
(தருமனொழிந்த வீமன் முதலிய) மற்றைத் தம்பியர் நால்வரும் பெருமிதம்
மிகுதியாகத்தோன்ற(த் தங்களை) மதித்த எண்ணந்தானோ! இங்ஙனம்
விளைந்தது – இவ்வாறு (முற்றுந் தோற்கும்படி) பலித்துவிட்டது!’ என்றான் –
என்று துரியோதனன் தனது வெற்றி தோன்றக் கூறினான்; (எ – று.)

    தண்ணிய தருமன் – தண்மையை [குளிர்ந்த அருளை] யுடைய தருமன்
எனினுமாம்.  தரும புத்திரன் செய்த ராசசூய யாகத்திற்குத் தான் சென்றபோது
மயனாற்சமைக்கப்பட்ட பளிங்கு மண்டபத்தில் தடுமாறிய தன்னை, திரௌபதியும்
வீமன் முதலிய நால்வரும் சிரித்துப் பரிகசித்தது தன் மனத்திலுறுத்த,
துரியோதனன் அது காரணமாகவே இப்படிச் சூதாடி வெல்லுமாறு
ஆலோசித்தனனாதலால், திரௌபதியையும் வீமன் முதலிய நால்வரையும்
இவ்வாறு இகழ்ந்து கூறினனென்க. திரௌபதி பாண்டவரைவர்க்கும் உரிய
மனைவியா யிருப்பதுகொண்டு, அவளை, வேசையென்று பொருள்படுகின்ற
‘பொதுமகள்’ என்ற பெயரினால் இழித்துக் கூறினான்.  ஓகாரங்கள் – விகற்பப்
பொருளன.        

தகா மொழி தலைவன் கூற, தவத்தினால் உயர்ந்த கோவும்,
நகா, ‘மரபு இயற்கை அன்று, நம்மில் நாம் புன்மை கூறல்;
மிகாது, இனி நிகழ்ந்த செற்றம் விடுக!’ என, செவியில் சற்றும்
புகாது, உளம் வெகுளி கூர, புரிந்தனன், போதம் இல்லான்.196.-வீடுமன் நீதிகூற,கேளாமல் துரியோதனன்
கோபம் மிகுதல்
,

தலைவன் – துரியோதனராசன், தகா மொழி கூற –
(இவ்வாறு) தகாத வார்த்தைகளை யெடுத்துச் சொல்ல, தவத்தினால் உயர்ந்த
கோவும் – தவத்தினாற் சிறந்த வீடுமனும், நகா – பரிகசித்து, ‘நம்மில் நாம்
புன்மை கூறல் – நமக்குள் நாமே (ஒருத்தர் மேல் ஒருத்தர்) இழிவாகச்
சொல்வது, மரபு இயற்கை அன்று – (நமது) குலத்திற்குத் தகுதியன்று; நிகழ்ந்த
செற்றம் இனிமிகாது விடுக – இப்பொழுது உண்டான கோபத்தை இனிமேலும்
வளராதபடி விட்டுவிடுவாயாக,’ என – என்று (நன்மதி) சொல்லவும்,-போதம்
இல்லான் – அறிவில்லாதவனாகிய துரியோதனன், செவியில் சற்றும் புகாது –
(அவ்வார்த்தைகள் தனது) காதுகளிற் சிறிதும் நுழையாமல், உளம் வெகுளி கூர
புரிந்தனன் – மனதிற் கோபத்தை மிகுதியாகக் கொண்டான்; (எ – று.)

    பாண்டவர்களும் நமது குலத்தைச் சேர்ந்தவராதலின், அவர்களை
இழித்துக் கூறுதல் தகுதியன்றென்பது, இரண்டாமடியின் கருத்து. வீடுமனை ‘தவத்தினாலுயர்ந்த கோ’ என்றது, இளமையிலேயே தான் மணந்து
கொள்வதில்லை என்றும், முடிசூடுவதில்லை என்றும் பிரதிஜ்ஞை செய்து
ஒழித்தற்கரிய மண்ணாசை பெண்ணாசைகளை யொழித்துத் தனது ஆயுளளவும்
பிரமசரியத்தையே மேற்கொண்டிருப்பதனா லென்க. நகா கூறல் என இயையும்;
நகா என என்று இயைத்துப் பொருள் கூறலு மொன்று. மூத்தோர் கூறிய
சொல்லுக்குச் செவி கொடாததனால், துரியோதனனை ‘போதமில்லான்’ என்றார்.

இரங்கி நின்று உருகும் நெஞ்சின் இளைய தன் பிதாவை நோக்கி,
அரம் கடி சமர வேலான் அழல் பொழி உருமின் சொல்வான்:
‘உரம் குடி இருந்த தோளான் உரிமையின் எமக்குத் தோற்ற
துரங்கமும், களிறும், தேரும், துறை துறை கவரச் சொற்றி;197.-இதுமுதல் மூன்றுகவிகள் -ஒரு தொடர்:
துரியோதனன் விதுரனைநோக்கிக் கூறுவன.

(பிறகு),-அரம் கடி சமரம் வேலான் – அரத்தினால் அராவிக்
கூர்செய்யப்பட்டபோர்க்கு உரியவேலாயுதத்தையுடையவனாகிய துரியோதனன்,-
இரங்கி. நின்று உருகும் நெஞ்சின்-(கீழ் நடந்த செயலுக்காக) இரக்கங் கொண்டு
உருகுகின்ற மனத்தையுடையவனாகிய, தன் இளைய பிதாவை-தனது சிறிய
தந்தையான விதுரனை, நோக்கி-பார்த்து,-அழல்பொழிஉருமின் சொல்வான்-
நெருப்பைக் கக்குகின்ற இடிபோல (மிகக்கொடுமையாக)ச் சில வார்த்தை
கூறுவானாயினான்:-உரம் குடி இருந்ததோளான் – வலிமைபொருந்திய
தோள்களையுடையவனாகிய தருமபுத்திரன், உரிமையின் எமக்கு தோற்ற-
(சூதாடி) முறைமையாகவே எமக்குத் தோற்றுவிட்ட, துரங்கமும்-
குதிரைகளையும், களிறும்-யானைகளையும், தேரும் – தேர்களையும், துறை
துறை-அந்தந்த இடங்களிலிருந்து, கவர-கவர்ந்து கொண்டுவரும்படி, சொற்றி
(நமது ஏவலாளர்க்குக்) கட்டளை கூறுவாய்; (எ – று.)

    துரியோதனன் தருமனுடைய சதுரங்கசேனைகளையும் கவர்ந்து வர
ஏவலாளர்களுக்குக் கட்டளையிடும்படி கூறுகிறான். மிக்க கொடுமையுடைமையால்,
துரியோதனன் வார்த்தைக்கு இடி உவமை கூறப்பட்டது. ‘உரிமையின் எமக்குத்
தோற்ற’ என்பதற்கு – எமக்கு உரியவையாகும்படி தோற்ற என்றுமாம்.
‘துரங்கமும் களிறும் தேரும்’ என்றது – உபலக்ஷணத்தாற் காலாட்படையையுங்
குறிக்கும்.  சொற்றி-ஏவலொருமை வினைமுற்று; சொல்-பகுதி, ற்-எழுத்துப்பேறு,
இ – விகுதி: பகுதியீற்றுலகரம் றகரமானது – சந்தி.  அரம் கடி வேல் –
“அரந்துடைத்தவைவேல்” என்றார் சிந்தாமணியாரும்

தொல்லை மா நகரும், நாடும், தோரணம் நாட்டச் சொற்றி;
எல்லை இல் நிதிகள் எல்லாம் இம்பரே எடுக்கச் சொற்றி;
நல் எழில் மடவார் தம்மை நம் பதி எய்தச் சொற்றி;
சொல்லிய இளைஞர் தாமும் தொண்டினராகச் சொற்றி

தொல்லை மாநகரும் நாடும்-(நமது) பழைமையாகிய பெரிய
நகரங்களிலும் நாடுகளிலும், தோரணம் நாட்ட-தோரணங்கட்டி யலங்கரிக்கும்படி,
சொற்றி-; எல்லை இல் நிதிகள் எல்லாம்- (பாண்டவர்களுடைய) அளவில்லாத
எல்லாச் செல்வங்களையும், இம்பரே – இவ்வத்தினாபுரிக்கே [இப்பொழுதே],
எடுக்க – எடுத்து வரும்படி, சொற்றி-; நல் எழில் மடவார் தம்மை – (தருமன்
பந்தயமாகக் குறித்து இழந்த) நல்ல அழகையுடைய மகளிர்களையெல்லாம், நம்
பதி எய்த – நமது அத்தினாபுரியில் வந்து சேருமாறு, சொற்றி-; சொல்லிய
இளைஞர் தாமும் – (தருமன் பந்தயமாகக் குறித்துக்) கூறிய (வீமன் முதலிய
அவனது) தம்பிமார் நால்வரையும், தொண்டினர் ஆக – (நமக்கு)
அடிமைகளாகுமாறு, சொற்றி-; (எ- று.)

    நாடு நகரங்களைத் தோரணங்கட்டி யலங்கரிக்கச் சொன்னது, தான்பெற்ற
வெற்றியைக் கொண்டாடுதற் பொருட்டென்க.  இம்பர் – இரட்டுறமொழிதல்.
துரியோதனன், தனக்கு மூத்தோனாகிய தருமனை அடிமையாகச் சொல்வதற்கு
வாய்கூசி, இளைஞராகிய வீமன் முதலியோரையே தொண்டினராக்கச்
சொல்லினன்; அன்றியும், துரியோதனன் தான் ராஜசூயயாகத்திற்குச்
செல்லுகையிற் பளிங்கு மண்டபத்தில் இடறிவிழுந்தபோது தன்னைப் பரிகசித்த
வீமன் முதலிய நால்வரிடத்தே மிக்க கறுக்கொண்டுள்ளா னென்பதையும்
அறிக. இனி, இளமையையுடைய வீரரென்று பாண்டவரைவரையுமே
குறித்ததாகக் கொள்ளலுமாம்.  தொல்லை-பண்புப் பெயர்; ஐ – விகுதி.
தோரணம், நிதி – வடசொற்கள்.

இவர்தமக்கு உரியள் ஆகி, யாக பத்தினியும் ஆன,
துவர் இதழ்த் தவள மூரல் சுரிகுழல்தன்னை, இன்னே,
உவர் அலைப் புணரி ஆடை உலகுடை வேந்தர் காண,
கவர்தரப் புகறி’ என்றான்-கண் அருள் சிறிதும் இல்லான்.

இவர் தமக்கு உரியள் ஆகி – இப்பாண்டவரைவர்க்கும் உரிய
மனைவியாகி, யாகபத்தினியும்ஆன-ராஜசூயயாகத்திற்கு உரிய பத்தினியாகவும்
அமைந்த, துவர் இதழ் தவளம் மூரல் சுரி குழல் தன்னை – பவழம்போலச்
சிவந்த அதரத்தையும் வெண்மையாகிய பற்களையும் நுனி சுருண்ட
கூந்தலையுமுடைய திரௌபதியை, அலை உவர் புணரி ஆடை உலகு உடை
வேந்தர் காண – அலைகளையுடைய உவர்க்கடலை ஆடையாகக் கொண்ட
இந்நிலவுலகத்தின் அரசர்கள் காணுமாறு, இன்னே-இப்பொழுதே, கவர்தர-
வலியப்பிடித்து இழுத்துக்கொண்டு வரும்படி, புகறி-கட்டளை கூறுவாய்,
என்றான்-;(யாவனெனில்,-) கண் அருள் சிறிதும் இல்லான் – கண்ணோட்டஞ்
சிறிதுமில்லாதவனாகிய துரியோதனன்;

    ஐவர்க்கும் பொதுமகளாயுள்ளவள் யாகபத்தினியாகக்கொள்ளுதற்குச்
சிறிதுந் தக்கவளல்ல ளென்பான், அத்திரௌபதிக்கு ‘இவர் தமக்குரியளாகி
யாகபத்தினியுமான’ என அடைமொழி கவளமூரற்சுரிகுழல் – அன்
மொழித்தொகைப் பன்மொழித் தொடர்.  துவர் – பவழமும், செந்நிறமும்.
துவரிதழ்த் தவளமூரல் – முரண்தொடை.  புணரி -(நதிகளோடு) புணர்வது
எனக் கடலுக்குக் காரணக்குறி.  உவர்ப்புணரி – லவணசமுத்திரம்.  புகறி, புகல்
– பகுதி.  கண்ணோட்டத்தால் தோன்றுவதாதலால் தாட்சிணியத்தை
‘கண்ணருள்’ என்றார்.      

அறம் தரும் மைந்தன்தன்னை அறன் அலாது இயற்றி, நம்பி!
திறம் தரு செல்வம் யாவும் தீமையின் கவர்தல் உற்றாய்;
மறம் தரு வலியும் அன்று; மணம் தரு வாழ்வும் அன்று;
நிறம் தரு புகழும் அன்று; நெறி தரு மதியும் அன்றே.200.-இதுமுதல் மூன்றுகவிகள் -ஒரு தொடர்:
விதுரன் மறுத்துக் கூறியன
,

அதுகேட்டு விதுரன் துரியோதனனை நோக்கிக் கூறுவான்);-
‘நம்பி – சிறந்தவனே! அறம் தரு மைந்தன் தன்னை – அறக்கடவுள் பெற்ற
புதல்வனாகிய தருமபுத்திரனை, அறன் அலாது இயற்றி – தருமவிரோதமாகிய
சூதாடுதலைப் புரியும்படி செய்து, திறம்தரு செல்வம் யாவும் தீமையின் கவர்தல்
உற்றாய் – (அவனது) பலவகைப்பட்ட செல்வங்களையும் தீயவழியாற் கவரத்
தொடங்கினாய்; (இவ்வாறு நீ தொடங்கியது), மறம் தரு வலியும் அன்று –
வீரத்தைத் தருகிற சாமர்த்தியமு மன்று; [இது சுத்த வீரர்க்குச் சிறிதுந்தகாது
என்றபடி]; மணம்தரு வாழ்வும் அன்று-மங்களகரமான வாழ்க்கையுமன்று; நிறம்
தரு – பெருமையைத் தருகிற, புகழும் அன்று-; நெறி தரு மதியும் அன்று –
தருமசாஸ்திரங்களிற் கூறிய புத்தியுமன்று; (எ – று.)

     ‘நீ மாயச்சூதாட்டத்தில் வென்றதையே மிகவும் பாராட்டுகிறாய்; இது
வீரத்திற்கும் புகழுக்கும் நீதிநெறிக்கும் முற்றும் மாறுபட்டதாய், நினது
நாசத்திற்கே காரணமாயுள்ளது’ என்று கூறி விதுரன் துரியோதனனுக்கு
அவனதுசெயல் தகாததென எடுத்துக் காட்டின னென்க. அறம் – அறக்கடவுட்கு
ஆகுபெயர்; யமனுக்கு ‘தர்மராஜன்’ என்று ஒரு பெயரிருத்தலுங் காண்க. நம்பி
– ஆண்பாற் சிறப்புப்பெயர்; அண்மைவிளியாதலின், இயல்பு. துரியோதனனை
நம்பியென விளித்தது, மூர்க்கனாகிய அவனைத் தன் வசப்படுத்தும்
பொருட்டாகும்: அடுத்த செய்யுளில் “கடவுளர் கற்பம் வாழ்வாய்” என்று
வாழ்த்துவதும் இதுபற்றியே.  துரியோதனனுடைய செயல் மிக்க கொடுமை
யமைந்ததென்பதற்கு, ‘அறனலாதியற்றி’ என்றதனோடு அமையாமல், ‘தீமையிற்
கவர்தலுற்றாய்’ என்றுங் கூறினான். திறம் தரு – மேன்மையமைந்த
என்றலுமாம்.       

திருத் தக மொழிந்த எல்லாம் செய்தனை எனினும், செவ்வி
மருத் தகு தெரியல் மாலை மாசு இலா மன்னர் முன்னர்,
உருத் தகு கற்பினாளை உரை அலாது உரைக்கும் மாற்றம்
கருத்தினில் நினையல், கண்டாய்; கடவுளர் கற்பம் வாழ்வாய்.

திரு தக – (உனக்குச்) சிறப்பு உண்டாம்படி, மொழிந்த
எல்லாம் – (நீ எனக்குக் கட்டளையாகக்) கூறியவற்றை யெல்லாம், செய்தனை
எனினும் – செய்து முடித்தாயானாலும்,-செவ்வி மரு தகு தெரியல் மாலை –
அழகையுடைய நறுமணம் வீசுகிற விளங்குகின்ற மாலையையணிந்த, மாசு இலா
மன்னர் – குற்றமற்ற அரசர்கட்கு, முன்னர்-எதிரில், உரு தகு கற்பினாளை-
அழகிய உருவத்தையும் சிறந்த பதிவிரதா தருமத்தையு முடையவளான
திரௌபதியைக் குறித்து, உரை அலாது உரைக்கும் மாற்றம்-சொல்லத்தகாத
சொற்களைச் சொல்லுதலை மாத்திரம், கருத்தினில் நினையல்-மனத்தில்
எண்ணாதிருப்பாயாக; (அவ்வாறு இருப்பாயாயின்), கடவுளர் கற்பம் வாழ்வாய்-
தேவர்களது ஆயுளளவும் அழியாது [நீடுழிகாலம்] வாழ்ந்திருப்பாய்; (எ-று.)-
கண்டாய்-முன்னிலையசை; தேற்றமுமாம்.

    தருமபுத்திரனது எல்லாப் பொருள்களையும் நீ கைப்பற்றினாலும்,
மகாபதிவிரதையாகிய திரௌபதியைக் குறித்து இழிசொற்கள் கூறுதலை
மாத்திரம் தவிர்ந்திடு; இதனால், உனக்கு மிக்க க்ஷேமமுண்டாகும் என்று
விதுரன் துரியோதனனுக்கு அறிவு கூறின னென்க.  திருத்தக-உனக்குச்
செல்வம் மிகும்படி யெனினுமாம்.  ‘மொழிந்தவெல்லாம்’ என்றது, கீழ் 197 –
ஆங் கவி முதல் கூறியவற்றை.  ‘செய்தனையெனினும்’ என்பதிலுள்ள உம்மை
– அவ்வாறு செய்தலும் தகாததே யென்ற பொருளைக் காட்டும்.  உருத் தகு
கற்பினாள் – (கண்டவர்) அஞ்சத்தக்க [மிக்க] கற்பையுடையவளான திரௌபதி
யெனக் கூறினுமாம்.  கற்பாவது – கணவனைத் தெய்வமாக மதித்து அவனை
வழிபட்டு நடக்குந் தன்மை: கன்னிகையாயிருக்கும்போது தாய் தந்தை
முதலியோராலும் விவாகமான பின்னர்க் கணவன் முதலியோராலும்
கற்பிக்கப்படுவதாதலின், இது இப்பெயரதாயிற்று.  நினையல்-‘அல்’ ஈற்று
எதிர்மறை யொருமையேவல்.  கற்பம்=கல்பம்; வடசொல்: நெடுங்காலவெல்லை.
தேவர்கள் அமரராதலின், அவர்களது வாழ்ச்சியான கற்பகாலம் ஆயுள்
நெடுமைக்கு எடுத்துக் கூறப்பட்டது.  தெரியல் – தொழிலாகுபெயர்

விண்ணில் அங்கு அருகித் தோன்றும் மேதகு
வடமீன் அன்றி,
மண்ணில் அங்கு உவமை சொல்ல மடந்தையர்
யாரும் இல்லா,
பண் நலம் கடந்த மென் சொல், பாவையைப் பழிக்க,
நீ இன்று
எண்ணின், முன் கேட்ட வார்த்தைக்கு ஏற்றது உன்
எண்ணம்’ என்றான்.

விண்ணில் அருகி தோன்றும் மேதகு வடமீன் அன்றி –
வானத்தில் வடக்குத்திக்கில் அருமையாகக் காணப்படுகின்ற மேன்மை
பொருந்திய அருந்ததீ நக்ஷத்திரமல்லாமல், மண்ணில் உவமை சொல்ல
மடந்தையர் யாரும் இல்லா – நிலவுலகத்தில் ஒப்பாக எடுத்துக்கூறுதற்கு
மகளிரொருவரையும் கிடைக்கப் பெறாத [எல்லாமகளிரினுஞ் சிறந்த], பண்
நலம் கடந்த மெல்சொல் பாவையை – இராகத்தின் இனிமையை வென்ற
மென்மையான சொற்களையுடைய சித்திரப்பாவை போன்றவளாகிய
திரௌபதியை? நீ பழிக்க – நீ வசை கூறுவதை, இன்று எண்ணின் – இப்போது
ஆலோசித்தால், உன் எண்ணம் – உனது எண்ணமானது, முன்கேட்ட
வார்த்தைக்கு ஏற்றது – (நான்) முன்பு கேள்விப்பட்டுள்ள விஷயத்திற்கு
ஒத்துள்ளது, என்றான்-என்று கூறினான் (விதுரன்); (எ – று.) ‘அங்கு’ என்பது
இரண்டும் அசை.

     பல ஆடவரை மணஞ் செய்தவிடத்தும் திரௌபதியின் கற்பிற்கு ஒரு
குறைவில்லையென்பது விளங்க, அவளுக்கு அருந்ததியை உவமை கூறினான்.
அருந்ததீ நக்ஷத்திரம் வடக்கில் விளங்குதலால் ‘வடமீன்’ எனப்பட்டது;
அதனை, இங்ஙனம் அறிக; – வடக்கில் ஸப்தருஷிமண்டல மென்ற நட்சத்திரக்
கூட்டமொன்று இருக்கின்றது; அதில் நான்கு நட்சத்திரங்கள் நீண்ட சதுரமாய்ப்
பெட்டிப் பண்டிபோ லிருக்கின்றன; அவற்றின் முன்புறத்து அடியில்
நடுவளைந்த ஏர்க்கால்போல் மூன்று நட்சத்திரங்கள் உள்ளன; இவற்றில் நடு
நட்சத்திரம்.  வசிஷ்ட நட்சத்திரம்; அதனடியிற் கிட்டினதாய் நுட்பநோக்கினாற்
காணத்தக்கதொரு நட்சத்திர முண்டு; அதுதான் அருந்ததி நட்சத்திரம்.  இந்த
நட்சத்திரம் மிக நுண்ணிதாய்க் காணப்படுதல் மாத்திரமேயன்றி மரணகாலங்
கிட்டியவர்க்குக் கட்புலனாகாதிருத்தலாலும், அதற்கு ‘அருகித்தோன்றும்’ என்ற
அடைமொழி கொடுக்கப்ட்டது; இதனை “உலக்குநா ளணித்தாயினர்க்கொளிக்கு
மீனொக்கும்” என்பதனாலும் அறிக.  மின்னுவது மீன் எனக் காரணப் பெயர்.
கேட்டவார்த்தை, மேலே விளக்கப்படும்.  பண் நலங்கள் தந்த என்றும்
பிரிக்கலாம்.        

கேட்ட சொல் வினவும் நாககேதனன் கேட்ப, மீண்டும்,
வாட்டம் இல் அன்பினோடு மனம் கனிந்து உருகி வீழ,
நாட்டமும் நல் நீர் மல்க, நா அமிழ்து ஊற, பின்னும்
கோட்டம் இல் சிந்தையானும் குரிசிலுக்கு உரைக்கலுற்றான்:203.-துரியோதனன்கேட்டுக்கொண்டபடி விதுரன்
அவனுக்கு ஒருவிஷயம்கூறத்தொடங்குதல்
.

கேட்ட சொல் வினவும் – ‘(முன்பு நீ) கேட்ட வார்த்தை
(யாது?’) என்று வினாவின, நாககேதனன் – அரவக் கொடியோனாகிய
துரியோதனன், மீண்டும் கேட்ப – மறுபடியும் கேட்டறியும்படி,-கோட்டம் இல்
சிந்தையானும் – கோணுதலில்லாத மனத்தையுடையவனாகிய விதுரனும்,-மனம்
கனிந்து உருகி வீழ – (தனது) நெஞ்சு நெகிழ்ந்து உருகிக் கரையவும்,
நாட்டமும் நல் நீர் மல்க – கண்களும் மிகுதியாக நீரைச் சொரியவும், நா
அமிழ்து ஊற – நாக்கில் இனியநீர் சுரக்கவும்,-குரிசிலுக்கு –
அத்துரியோதனராஜனுக்கு, வாட்டம் இல் அன்பினோடு-குறைதலில்லாத
[நிறைந்த] அன்புடனே, பின்னும் உரைக்கல் உற்றான் – பின்னும் சொல்லத்
தொடங்கினான்; (எ – று.)-அதன் விவரத்தை, அடுத்த நான்கு கவிகளிற்
காண்க.

    நாககேதனன் கேட்ப, கோட்டமில் சிந்தையான், வீழ, மல்க, ஊற,
குரிசிலுக்கு அன்பினோடு உரைக்கலுற்றான் என இயையும்.  துரியோதனன்
திரௌபதியைப் பழித்துச் சபையிற்கொணரும்படி கூறியது தனது கருத்துக்கு
மாறாதலாற் கோபங்கொள்ள வேண்டியவனாயிருந்தும், விதுரன் அவ்வாறு
கோபங்கொள்ளாது “இத்தீச் செயலினால் இத்துரியோதனனுக்குத் தீங்கு
நேரிடுமே!” என்று இரக்கங்கொண்டு கூறலாயின னென்க.  மனங்கனிந்து உருகி
வீழ்தலும் நாட்டம் நீர்மல்குதலும் – இரக்கக்குறி; நா அமிழ்து ஊறியது,
சொல்லப்போகிற விஷயத்திலுள்ள ஊற்றமிகுதியாலென்க.  பாண்டவர்
துரியோதனாதியர் என்னும் இரு திறத்தாரிடத்திலும் ஒரு நிகரான
அன்பையுடையவனாய்ப் பக்ஷபாத மில்லாதவனாதலின், விதுரனை ‘கோட்டமில்
சிந்தையான்’ என்றார்.  நாட்டம் – நாடுதற் கருவி: எனவே, கண்: அம் –
கருவிப் பொருள் விகு

தானவர் ஆகி, உம்மை, தனித்தனி இறந்தோர் யாரும்,
மானவர் ஆகி, இம்மை வந்தனர், இம்பர்’ என்றே,
தான் அவர் பொறை பொறாமல், தராதலம் என்னும் செங் கண்
மான் நவ ராக வேத மலர் முனிதனக்குச் சொன்னாள்:204.-இதுமுதல் ஐந்துகவிகள் -விதுரன் வார்த்தை.

உம்மை – முற்பிறப்பில், தானவர் ஆகி – அசுரர்களாகப்
பிறந்து, தனி தனி இறந்தோர் யாரும்-(திருமாலாற் கொல்லப்பட்டுத்)
தனித்தனியே இறந்தவர்களனைவரும், இம்மை – இப்பிறப்பில், மானவர் ஆகி –
மனிதர்களாய்ப் பிறந்து, இம்பர் – இவ்வுலகத்தில், வந்தனர்-வந்து
நிறைந்தார்கள்,’ என்று-,-தராதலம் என்னும் செம் கண் மான்-பூமிதேவியென்கிற
செவ்வரி பரந்த கண்களையுடையமான் போன்ற தெய்வமகள், தான் அவர்
பொறைபொறாமல்-தான் அவர்களாலுண்டான பாரத்தைச் சுமக்கமாட்டாமல்,
அவராகம் வேதம் மலர் முனிதனக்கு – ஆசையற்றவனும் வேதத்தை
யோதுபவனுமாகிய தாமரை மலரில் தோன்றிய பிரம தேவனிடத்தில்,
சொன்னாள் – முறையிட்டாள்; (எ – று.)

    “பூமிதேவி மிகுந்த பாரத்தினால் துன்பமுற்று மகாமேருபர்வதத்திலிருக்கின்ற
தேவசபையிற் சேர்ந்து பிரமதேவன் முதலான தேவர்கட்கெல்லாம் வந்தனஞ்
செய்து, ‘ஓ தேவர்களே! முன்பு மகாசமர்த்தரான ஸ்ரீ விஷ்ணுவினாலே
சங்கரிக்கப்பட்ட காலநேமி முதலியபல அசுரர்களும் இப்பொழுது பூலோகத்தில்
ராஜவம்சங்களிலே பிறந்து இரவும் பகலும் பிரஜைகளைத் துன்பப்படுத்திக்
கொண்டு கொடுமைசெய்து திரிகிறார்கள். அவர்களை நான் எண்ணச்
சக்தியற்றிருக்கிறேன். பல பராக்கிரமங்க ளுடையவர்களாயும் மிக்க
செருக்குடையவர்களாயு மிருக்கிற அசுரேந்திரருடைய திரளான சேனைகள்
என்மே லிருப்பதனாலே நான் வெகுவான பாரத்தைச் சுமக்கும்
வருத்தமுடையளாய் என்னையுஞ் சுமக்கச்சக்தியற்றவளா யிருக்கின்றேன். இந்தச்
சங்கதியை உங்களுக்கு விண்ணப்பஞ் செய்தேன். ஆதலால், நீங்கள் என்மேல் அன்புகூர்ந்து நான் மெலிவடைந்து பாதாளஞ் சேராதபடி என்சுமையை
இறக்கியருள வேண்டும்’ என்று விஜ்ஞாபனம்  செய்தாள்” என இச்செய்யுட்கு
விவரங்காண்க.  தேவசபையிலே பூமிதேவி பொதுவாக எல்லாத்
தேவர்களையும் நோக்கிக் கூறியிருக்கவும், தலைமை பற்றி “மலர்முனி தனக்குச்
சொன்னாள்” என்று இந் நூலாசிரியர் கூறினார்; ஆயினும், எல்லாத்
தேவர்களையும் நோக்கிப் பூமிதேவி கூறினாளென்பதே இவ்வாசிரியர்
கருத்தென்பது, “நான்முகன்றானு மேனை நாகரு நாகர் கோனும்” என வரும்
அடுத்த கவியினால் விளங்கும்.  அசுரர்களில் இன்னார் இன்ன அரசராகப்
பிறந்தனரென்ற விவரம், வியாஸபாரதத்தில் அம்சாவதரணபர்வத்திற் பரக்கக்
கூறப்பட்டிருக்கின்றது.  திருமாலின் நாபீ கமலத்தில் தோன்றித் தனது நான்கு
முகங்களினாலும் நான்கு வேதங்களையும் எப்பொழுதும் பாராயணஞ் செய்து
கொண்டிருப்பவனாதலால், பிரமதேவனை ‘வேதமலர் முனி’ என்றார். 

     தாநவர், மாநவர் – (முறையே காசியபமுனிவரது மனைவியராகிய) தநு,
மநு என்பவர்களது சந்ததியார் எனப் பொருள்படும் வடமொழித்
தந்திதாந்தநாமம்.  அவராகம் – ஆசையின்மையென்று பொருள்.  நவராகம்
என்று எடுத்து, புதுமையான செந்நிறத்தையுடைய வென்று உரைத்து, மலர்க்கு
அடைமொழியாக்கினுமாம்.  பொறை – பொறுக்கப்படுவது; சுமை;  ஐ –
செயப்படுபொருள் விகுதி

நான்முகன்தானும், ஏனை நாகரும், நாகர் கோனும்,
பால் முகந்து எறியும் வேலைப் பாம்பு-அணைப்
பள்ளி கொள்ளும்
தேன் முகம் களிக்கும் பச்சைச் செவ்வி வண் துளப மாலை
மால் முகம் கண்டு, கூற, வந்தவா மாலும் கேட்டான்.

நான்முகன் தானும் – நான்கு முகங்களை யுடையவனான
பிரமதேவனும், நாகர்கோனும் – தேவேந்திரனும், ஏனை நாகரும்- மற்றைத்
தேவர்களும்,-பால் முகந்து எறியும் வேலை பாம்பு அணை பள்ளி கொள்ளும்
– (அலைகள்) பாலையெடுத்து எரிகின்ற பாற்படலில் ஆதிசேஷ சயனத்திலே
சயனித்து யோகநித்திரை செய்கிறவனும், தேன் முகம் களிக்கும் பச்சை செவ்வி
வள் துளபம் மாலை – வண்டுகள் (தேனுண்டு) வாயினால் மகிழ்ந்து ரீங்காரஞ்
செய்வதற்கு இடமான பசுநிறமுள்ள அழகிய சிறந்த துளசிமாலையை
யணிந்தவனுமான, மால் – திருமாலை, முகம் கண்டு – தங்களுடைய எதிரிலே
தரிசிக்கப்பெற்று, வந்த ஆ(று) – தாங்கள் வந்த வரலாற்றை, கூற-எடுத்துச்
சொல்ல, மாலும் – அத்திருமாலும், கேட்டான்-; (எ – று.)

     அப்போது சதுர்முகன் தேவர்களை நோக்கி, ‘ஓ தேவர்களே! பூமிதேவி
சொன்னதெல்லாம் சத்தியந்தான், வாருங்கள்; திருப்பாற்கடற் கரைக்குப்
போவோம்: அங்கே போய் ஸ்ரீய:பதிக்குத் தண்டன் சமர்ப்பித்து இவையெல்லாம்
விண்ணப்பஞ் செய்வோம், அப்படி நாம் செய்தால் ஸர்வ ஸ்வரூபியான
அவ்வெம்பெருமான் பூமியின் நிமித்தம் அவதாரஞ்செய்து தருமத்தை
நிலைநாட்டியருளுவன்’ என்று இப்படிச்சொல்லி, அத் தேவர்களையுங்
கூட்டிக்கொண்டு திருப்பாற்கடலுக்குச் சென்று யோகநிஷ்டையிலுள்ள மனசோடு
ஸ்ரீ கருடதுவசனைத் தோத்திரஞ் செய்ய, ஸ்ரீய:பதி, பிரமன் செய்த
ஸ்தோத்திரத்தைத் திருவுள்ளம்பற்றி உகப்போடு விசுவரூபங்காட்டி ‘ஓ
நான்முகனே! நீ தேவர்களோடுகூட என்னிடத்தில் எதைப் பெறக்
கருதிவந்தனையோ, அதைச் சொல்லக்கடவாய்; அது கையிற் கிடைத்ததாகவே
நினை’ என்று அருளிச் செய்ய, பிரமதேவன் அப்போது மீண்டுந் துதித்துப்
பூமிதேவியின் குறையை எடுத்துக் கூறினார் என இச்செய்யுட்கு விவரங் காண்க.
துளபம் – துளஸீ என்ற வடசொல்லின் சிதைவு. 

மின் இடை விளங்கும் மேக மேனியான், அவனி மானை,
‘நின்னிடை வந்து தோன்றும் நிருபர் ஆனவரை எல்லாம்,
முன், இடை, கடை, ஒன்று இன்றி, முற்றும், வெம் முரண்
கொள் காலன்-
தன்னிடை விடுதும்’ என்று சாற்றியே, தளர்வு தீர்த்தான்.

மின் இடை விளங்கும் மேகம் மேனியான்-மின்னல் தன்னிடத்தே
விளங்கப்பெற்ற காளமேகம்போன்ற திருமேனியையுடையவனான அத்திருமால்,-
அவனிமானை – பூமிதேவியை நோக்கி,-‘நின்னிடை வந்து தோன்றும்
நிருபரானவரை எல்லாம்-உன்னிடத்து வந்து பிறந்துள்ள (துஷ்ட)
அரசர்களையெல்லாம், முன் இடை கடை ஒன்று இன்றி-முதல் இடை கடை
என்ற மூன்று தலைமுறையினும் ஒன்றுமில்லாமலே, முற்றும் – முழுவதும்
[எல்லாரையும் ஸமூலமாக], வெம் முரண் கொள் காலன் தன்னிடை விடுதும்-
கொடிய மாறுபாடு கொண்ட யமனிடத்தில் அனுப்பி விடுவோம்
[சங்கரிப்போம்]:’ என்று சாற்றி-என்று சொல்லித் தேற்றி, தளர்வு தீர்த்தான்-
(அப்பூமிதேவியின்) வருத்தத்தைப் போக்கினான்; (எ – று.)

    பிரமதேவன் விண்ணப்பித்ததனாற் பூமிதேவியின் குறையையறிந்த
திருமால் தானே பூமியில் வசுதேவனது மனைவியாகிய தேவகியின் கருப்பத்தில்
தோன்றித் துஷ்டநிக்கிரகஞ் செய்து பாரத்தைப் போக்குவதாக வாக்களித்து
அப்பூமிதேவியின் குறையைப் போக்கின னென்றவாறு; ஸ்ரீ மகாலக்ஷ்மியை
மார்பிற் கொண்ட கருநிறமுள்ள திருமாலுக்கு, மின்னலைத் தன்னிடத்தே
கொண்ட காளமேகம் உவமை.  இனி, மின் – மின்னல்போன்ற
பேரொளியையுடைய பீதாம்பரம், இடை விளங்கும் – (தனது) இடையிலே
விளங்கப்பெற்ற, மேகமேனியான் எனக் கூறுவர் ஒரு சாரார்.  மின்னிடை
என்பதை உவமைத்தொகைப் புறத்துப்பிறந்த அன்மொழித் தொகை
யெனக்கொண்டு, மின்னல்போன்ற இடையையுடையவளான திருமகள்
(மார்பிலே) விளங்கப்பெற்ற மேகமேனியனான திருமால் எனினுமாம்.  அவநி –
வடசொல்: (அரசர்களாற்) பாதுகாத்தற்கு உரியது உன உறுப்புப்பொருள்
காண்க.  மருண்ட பார்வையில், மான் மகளிர்க்கு உவமை கூறப் படும்.  மான்- இங்கு, உவமவாகுபெயர்.  முன்னிடை கடையொன்றின்றி –
முன்னும் நடுவும் பின்னுமாகிய சந்ததிகளிலொன்று மில்லாமல். ‘சாற்றியத்தளர்வு
தீர்த்தான்’ என்பதும் பாடம்.   

அந்த வன் திகிரியானும் நம்மில் ஓர் அரசன் ஆகி,
வந்து அவதரித்தான்’ என்று, மண் எலாம் வார்த்தை ஆனது;
‘எந்த வல் வினையால் எவ்வாறு எய்தும்?’ என்று,
இதற்கே சால
நொந்து, கண் துயில் பெறாதே, நோதகப் புரிந்தேன் மன்னோ.

அந்த வல் திகிரியானும் – அவ்வாறு அருளிச் செய்த வலிய
சக்கராயுதத்தையுடையவனான திருமாலும், நம்மில் ஓர் அரசன் ஆகிவந்து
அவதரித்தான் – நமக்குள்ளே ஓரரசனாக வந்து பிறந்திருக்கிறான்,’ என்று-,
மண் எலாம் வார்த்தை ஆனது – உலக முழுதும் வதந்தி உண்டாயிருக்கின்றது;
எந்த வல்வினையால் எ ஆறு எய்தும் – எந்தக்கொடிய தீச்செயலினால் என்ன
தீங்கு நேரிடுமோ? என்ற இதற்கே-என்ற இது பற்றியே, சால நொந்து –
மிகவும் மனம்நொந்து, கண் துயில்பெறாது – கண்ணுறங்குவது மின்றி, நோதக
புரிந்தேன் – வருந்திக் கொண்டிருக்கிறேன்; (எ – று,)-மணன், ஓ –
ஈற்றசைகள்.

    ‘துஷ்டநிக்கிரக சிஷ்டபரிபாலனஞ் செய்தற்பொருட்டே தேவகியின்
வயிற்றிற் கண்ணனாய்த் திருவவதரித்த திருமால் இவ்வாறு
பலமுறைகேடுகளைப்புரியும் உன்னை யழிப்பது திண்ணம்; இதுபற்றியே, யான்
அல்லும் பகலும் கவல்கின்றேன்’ என்ற விஷயத்தை விதுரன்
சிறிதுமறைபொருளாகக் கூறினனென்க.  இங்கு ‘திகிரியான்’ என்றது – தவறாது
கொடியவர்களை யழிப்பானென்ற கருத்தையுட்கொண் டிருத்தலால்,
கருத்துடை யடைகொளியணியாம். கடவுட்டன்மையையுடைய திருமால்
மனிதனாகப் பிறந்தானாதலால், ‘அவதரித்தான்’ என்றார்.  அவதாரமென்பது –
உயர்ந்த நிலையிலிருப்பவன் தனது சங்கற்பத்தால் தாழ்ந்த நிலைக்கு
வருதலைக் குறிக்கும். என்றிதற்கே – தொகுத்தல்.   

ஒரு திறத்து அவனி முற்றும் ஒருமையால் புரக்கும் நீவிர்
இரு திறத்தவரும், நும்மில் இகலுறும் மனத்திர் ஆனால்,
வரு திறத் தானை வேந்தர் வகைபடக் குழூஉக்கொண்டு ஓடி,
பொருது, இறப்பதற்கே, சற்றும் புரிவிலீர்! புரிகின்றீரே.’

சற்றும் புரிவு இலீர் – சிறிதும் ஆலோசனையில்லாதவர்களே!-
அவனி முற்றும் – பூமிமுழுவதையும், ஒரு திறத்து ஒருமையால் புரக்கும் –
ஒருபகுதியாக ஒற்றுமையால் அரசாளுதற்கு உரிய, நீவிர் இருதிறத்தவரும் –
நீங்கள் இரண்டு திறத்தாரும், நும்மில் இகல் உறு மனத்திர் ஆனால் –
உங்களுக்குள்ளே பகைமை கொண்ட மனமுடையவர்களானால், வரு திறம்
தானை வேந்தர் – (உங்களிரு திறத்தார்க்கும் துணையாக) வருகின்ற
நால்வகைப்பட்ட சேனையையுடைய அரசர்கள், வகைபட குழுஉக்கொண்டு –
அணி யணியாகக் கூட்டங்கொண்டு, ஓடி பொருது இறப்பதற்கே – விரைந்து
போர்செய்து மடிவதற்காகவே, புரிகின்றீர்-முயல்கின்றவர்களே யாவீர்கள்;
(எ -று.)

     நீங்கள் இருதிறத்தாரும் ஒற்றுமைப்பட்டு வாழாமல் மனம் வேறுபட்டுப்
பகைமைகொள்வது, உங்களுடைய கேட்டோடு நில்லாமல் உங்களுக்கு
நண்பர்களாயுதவுகின்ற உலகத்தரசர் பலருடைய கேட்டிற்கும் காரணமாம்;
இவ்வாறு சற்றும் ஆராய்ச்சியில்லாமற் செய்வது சிறிதுந்தகுதியன்று என்று
கருத்து.  யானை தன் தலைமீது மண்ணைப் போகட்டுக்கொள்வது போலத்
தாமே தங்களுடைய கேட்டிற்கு முயலுதலால், ‘சற்றும்புரிவிலீர்’ என
விளித்தான்; இனி, முன்னிலைப்பன்மையெதிர்மறை முற்றெச்சமாக்கொண்டு,
சிறிதும் அன்பற்றவர்களாய் எனினுமாம்.  மனத்திர் – முன்னிலைப் பன்மைக்
குறிப்புவினையாலணையும்பெயர்.  குழூஉ – இயற்கையளபெடை.  

என்று அவன் உரைப்ப, தானும் எறிந்து கை, நகை கொண்டாடி,
அன்று அவன் இதயம் வெம்ப, அவமதி பலவும் கூறி,
நின்றவன் ஒருவன்தன்னை, ‘நீ நனி விரைவின் ஓடிச்
சென்று, அவண் இருந்த கோலத் தெரிவையைக்
கொணர்தி’ என்றான்.209.-துரியோதனன் விதுரனையெள்ளித் திரௌபதியைக்
கொணரப் பிராதிகாமிக்குக் கட்டளையிடுதல்.

ன்று அவன் உரைப்ப-இவ்வாறு அவ்விதுரன் கூற, தானும்-
துரியோதனனும், கையெறிந்து நகை கொண்டாடி-கைகொட்டிப் பரிகசித்துச்
சிரித்து, அன்று அவன் இதயம் வெம்ப அவமதி பலவும் கூறி- அப்பொழுது
அவ்விதுரனது மனம் கொதிக்கும்படி அவமதிப்பான வார்த்தைகள்
பலவற்றையும் எடுத்துச் சொல்லி,-நின்றவன் ஒருவன் தன்னை-அங்கு நின்ற
ஒருத்தனை நோக்கி, ‘நீ-, நனி விரைவின் ஓடிச்சென்று-மிகவும்
விரைந்தோடிப்போய், அவண் இருந்த கோலம் தெரிவையை-அங்கே
[காந்தாரியின் வீட்டில்] இருக்கின்ற அழகிய திரௌபதியை, கொணர்தி-
கொண்டு வருவாய், ‘என்றான்-என்று கட்டளையிட்டான்;

     ‘ஒருவன்’ என்றது, தேர்ச்சாரதியாகிய பிராதிகாமியை, விதுரன்
வார்த்தைகளை அஸம்பாவிதமான கட்டுக்கதையெனக் கொண்டு துரியோதனன்
கை கொட்டிச் சிரித்துப்பரிகசித்தனனென்க.  

பெருந்தகை ஏவலோடும் பிராதிகாமியும் அங்கு ஏகி,
வருந்திய மனத்தன் ஆகி, மாசு அறு மரபின் வல்லி
இருந்துழி எய்துறாமல், இடைவழிநின்றும் மீள
விரைந்தனன் ஓடி வந்து, வேந்தனுக்கு ஏற்பச் சொன்னான்:210.-பிராதிகாமிதிரௌபதியினிடஞ் செல்லாமலே
மீண்டுவந்து துரியோதனனிடத்துக் கூறத்தொடங்குதல்,

பெருந் தகை ஏவலோடும்-பெருந்தன்மையையுடையவனான
துரியோதனன் கட்டளையினால், பிராதிகாமியும்-,அங்கு ஏகி-(திரௌபதியிருக்கிற)
அவ்விடத்திற்குப் போகத்தொடங்கி, வருந்திய மனத்தன் ஆகி –
(திரௌபதியைப்பற்றிய அந்தத் துரியோதனன் கட்டளைக்கு) வருந்திய
மனமுடையவனாய், மாசு அறு மரபின் வல்லி இருந்த உழி எய்துறாமல்-
குற்றமற்ற நல்ல குலத்திற் பிறந்த பூங்கொடி போன்றவளான திரௌபதி இருந்த
இடத்திற் செல்லாமல், இடைவழி நின்று-நடுவழியிற் சற்று நேரம் நின்று, மீள
விரைந்தனன் ஓடி வந்து – திரும்பவும் விரைந்தோடி வந்து, வேந்தனுக்கு ஏற்ப
சொன்னான்-துரியோதனராசனுக்கு ‘இவன் சொல்வது உண்மையே’ என்று
எண்ண முண்டாகும்படி கூறுவானாயினான்; (எ – று.)-அதனை, அடுத்த
கவியிற் காண்க.

பிராதிகாமியானவன் துரியோதனன் கருத்தின்படி அக்கிரமஞ் செய்தற்கு
அஞ்சித் திரௌபதியினிடஞ் செல்லாமலே திரும்பித் தனது ஆலோசனையினாற்கற்பனை செய்து கேட்டோர் நம்புமாறு சிலவார்த்தை
கூறலாயின னென்க. பிராதிகாமி இடைவழியிற் சற்றுநேரம் நின்றது,
திரௌபதியினிடம் போய்வருவதற்கு உரிய காலங் கழிவதற்பொருட்டு,
துரியோதனனை ‘பெருந்தகை’என்றது, இகழ்ச்சி.  பெருமையாகிய
தகுதியையுடையவ னென, இச்சொல்-அன்மொழித்தொகை.  ‘ஏவலோடும்’
என்றவிடத்து, ‘ஓடு’ உருபு-கருவிப்பொருளில் வந்தது.

‘என்னைத் தோற்று, மனு நெறி கூர் இசையோன்
தன்னைத் தோற்றனனோ?
தன்னைத் தோற்று, தனது மனத் தளர்வால்,
என்னைத் தோற்றனனோ?
முன்னைத் தோற்ற தோற்ற பொருள் முற்றும் கவரும்
முறை அன்றி,
பின்னைத் தோற்ற பொருள் கவரப் பெறுமோ? நினைக்கப்
பெறாது’ என்றாள்.211.-பிராதிகாமியின்வார்த்தை.

இதுவும், அடுத்த கவியும் – ஒருதொடர்.

     (இ -ள்.) ‘மனு நெறி கூர் இசையோன் – மநுதர்மசாஸ்திரத்திற் கூறியபடி
ஒழுகுவதனால் மிக்க கீர்த்தியுடையவனான தருமபுத்திரன், என்னை தோற்று –
(முன்னே சூதில்) என்னை (ப்பந்தயமாகவைத்து)த் தோற்றிழந்து, தன்னை
தோற்றனனோ – (பிறகு) தன்னை(ப் பந்தயமாக்கி)த் தோற்றிழந் தானோ?
(அன்றி), தன்னை தோற்று – (முதலிலே) தன்னைத் தோற்றுவிட்டு, (பிறகு),
தனது மனம் தளர்வால் என்னைத் தோற்றனனோ – தனக்கு நேர்ந்த
மனவருத்தத்தினால் என்னை (ப்பந்தயமாக்கி)த் தோற்றிழந்தானோ? முன்னை
தோற்று தோற்ற பொருள் முற்றும் கவரும் முறை அன்றி – முதலில்
(சூதாட்டத்தில்) தோல்வியடைந்து இழந்த பொருள்களையெல்லாம்
(வென்றவர்கள்) கவர்ந்துகொள்ளும் முறைமை யல்லாமல் (கவர்ந்து கொள்ளுதல்
முறையேயன்றி), பின்னை தோற்ற பொருள் கவர பெறுமோ – (தன்னைத்
தோற்றுவிட்ட) பின்பு (பந்தயமாக வைத்து) இழந்த பொருளைக் கவர்தல்
கூடுமோ? நினைக்க பெறாது – (அப்பொருளைக் கைப்பற்ற வேண்டுமென்று)
எண்ணுதலும் தகுதியன்றே!’ என்றாள் – என்று (திரௌபதி) கூறினாள்; (எ – று.)

    தருமபுத்திரன் சூதாடித் தன்னைத்தோற்றபின்பு திரௌபதியைத் தோற்ற
செய்தியை அருகிலிருந்து கண்ட பிராதிகாமி, ‘தருமபுத்திரன் தன்னைத் தோற்ற
பிறகு இழந்த திரௌபதியைத் துரியோதனன் கவர்தல் நியாயமன்று’ என்று
அறிந்தவனாதலால், ‘தருமபுத்திரன் தன்னைத் தோற்பதற்கு முன்னே பந்தயம்
வைத்து இழந்த பொருள்களைத் துரியோதனன் கவர்தல் முறைமையாகுமே
யன்றி, தன்னைத்தோற்ற பிறகு தன்னுரிமையை யிழந்த தருமபுத்திரன்
என்னைத் தோற்றிருந்தால் என்னை வைத்தாடுதற்கே அத்தருமபுத்திரனுக்கு
உரிமையில்லாமையால் அவ்வாறு பந்தயமாக வைத்து ஆடின ஆட்டமே
செல்லாது; அப்பொழுது என்னைத் துரியோதனன் கவர்ந்து செல்லுதற்கும்
நியாயமில்லை: ஆகையால், தருமன் தன்னைத் தோற்று என்னைத்
தோற்றானோ? அன்றி, என்னைத் தோற்றுத் தன்னைத்தோற்றானோ? என்ற
விஷயம் முதன்முதல் தெரியவேண்டும்’ எனத் திரௌபதி வினாவியதாகக்
கற்பித்துக் கூறின னென்க.  இவ்வாறு தான் கூறினால், துரியோதனன் தான்
செய்வது முறைமையன்றென்று உணர்ந்து பின்வாங்கித் திரௌபதியை
ராஜசபையில் அழைத்து மானபங்கஞ் செய்யாது விட்டிடக்கூடுமென்பது,
பிராதிகாமியின் உட்கோள்.

     இதுமுதல் முப்பது கவிகள் – மூன்றாஞ்சீரும் ஆறாஞ்சீரும் காய்ச்சீர்களும்,
மற்றைநான்கும் மாச்சீர்களுமாகி வந்த கழிநடிலடி நான்குகொண்ட
அறுசீராசிரியவிருத்தங்கள்

செல்வப் பாவை திருவுள்ளம் இது’ என்று,
அந்தத் தேர்ப்பாகன்
சொல்ல, பாவி தரியாமல், துச்சாதனனை
முகம் நோக்கி,
‘அல்லல் பான்மை பெற்று அழிந்த ஐவர்க்கு ஒருத்தி
ஆகிய அம்
மல்லல் பானல் விழியாளை மன் பேர் அவையின்
அழை’ என்றான்.212.-அதுகேட்ட துரியோதனன்திரௌபதியைக்
கொணரும்படி துச்சாதனனுக்குக் கட்டளையிடுதல்
.

செல்வம் பாவை திருவுள்ளம் இது என்று-‘சிறப்புப் பொருந்திய
சித்திரப்பாவைபோலழகிய திரௌபதியின் மனக்கருத்து இதுவாகும்’ என்று
அந்த தேர்ப்பாகன் சொல்ல-(பிராதிகாமியென்னும்) தேர்ப்பாகன் (தன்
கற்பனையைத் திரௌபதியின் வார்த்தையாகக்) கூற,-(அதுகேட்டு), பாவி –
கொடும்பாதகனான துரியோதனன், தரியாமல்-மனம் பொறாமல், துச்சாதனனை
முகம் நோக்கி – துச்சாதனனது முகத்தைப் பார்த்து, ‘அல்லல்பான்மை பெற்று
– துன்பப்படும் விதியை யடைந்து, அழிந்த-அழிவடைந்த, ஐவர்க்கு – பாண்டவரைவர்க்கும் (பொதுவாக), ஒருத்தி ஆகிய-தானொருத்தியே
மனைவியாயிருக்கின்ற, அ மல்லல் பானல் விழியாளை – வளமுள்ள
கருங்குவளை மலர்போன்ற கண்களையுடையவளாகிய அத்திரௌபதியை, மன்
பேர் அவையின் அழை-அரசர்கள் நிறைந்துள்ள (இந்தப்) பெரிய சபையில்
(இப்பொழுது) அழைத்து வா,’ என்றான் – என்று கட்டளையிட்டான்; (எ – று.)

    ஐவர்க்கும் பொதுவான மனைவியாயிருக்கிற அவள் பலபேர் கூடிய
ராஜசபையில் நாணமின்றி வருதற்கு உரியவளே யென்பான், ‘ஐவர்க்கும்
ஒருத்தியாகிய அம்மல்லற்பானல் விழியாளை மன்பேரவையின் அழை’
என்றான்.  செல்வப்பாவை – செல்வத்தில் பிறந்து செல்வத்தில் வளர்ந்து
செல்வத்தில் வாழ்க்கைப்பட்ட அருமையான பெண் என்றவாறுமாம்.
துஸ்ஸாஸனன் – கொடிய கட்டளையையுடையா னெனப் பொருள்படும்
வடசொல்.  துச்சாதனனை முகம் நோக்கி – துச்சாதனனைமுகத்தைப் பார்த்து
என இரண்டு செயப்படுபொருள் வந்த செய்வினை.  இனி துச்சாதனனை
முகத்தின்கண் நோக்கி யென்றாவது, (உருபுமயக்கமாகத்) துச்சாதனனது
முகத்தை நோக்கி யென்றாவது கொள்வது, தமிழ்நடை. “முதலை ஐ யுறிற்
சினையைக் கண்ணுறும், அது முதற்காயின் சினைக்கு ஐயாகும்”.  பான்மை-
விதி.  மல்லல் – வளப்பமுணர்த்தும் உரிச்சொல்; “மல்லல் வளனே” என்பது
தொல்காப்பியம். பானல் – நீலோற்பலம்: அதன் மலர்க்கு, முதலாகுபெயர். 

நோன் தாள் வெங் கண் கட களிற்று நுழை வேல்
அரசன் நுவறலுமே,
ஆன்றார் கேட்கின் செவி புதைக்கும் அழல் கால் வெஞ்
சொல்,அறன் இல்லான்,
தோன்றா நயனத் துணைவனைப்போல் துணைக்கண்
துகிலின் சூழ்ந்திருந்த
ஈன்றாள் இல்லத்து இருந்தாளை இகலோடு எய்தி,
இவை சொல்வான்:213.-துச்சாதனன்திரௌபதியிருந்த இடத்தை
அணுகிக் கூறத் தொடங்குதல்
.

நோன் தாள் வெம் கண் கடம் களிறு நுழை வேல் அரசன் –
வலிய கால்களையும் கொடுமையையும் மதநீர்ப் பெருக்கையுமுடைய
யானைகளினுடம்பில் தைத்துச்செல்லுந் தன்மையுள்ள வேலாயுதத்தை
யேந்தியவனாகிய துரியோதனன், ஆன்றார் கேட்கின் செவி புதைக்கும் அழல்
கால் வெம்சொல் – பெரியோர் கேட்டால் காதுகளைப் பொத்திக்கொள்ளுதற்குக்
காரணமானதும் நெருப்பைக் கக்குவதுபோன்றதுமான கொடிய கட்டளைச்
சொல்லை, நுவறலுமே – சொன்னவுடனே,-அறன் இல்லான் – தருமநெறி
சிறிதுமில்லாதவனாகிய துச்சாதனன்,-தோன்றா நயனம் துணைவனை போல் –
தெரியாத கண்களையுடைய [குருடனான] (தனது) கணவனாகிய
திருதராட்டிரனைப்போலவே, துணைகண் துகிலின் சூழ்ந்து இருந்த-தனது
இரண்டு கண்களையும் வஸ்திரத்தினாற் சுற்றிக் கட்டிக்கொண்டு தானும் குருட்டுத்
தன்மையை அடைந்திருக்கின்ற, ஈன்றாள் – (தனது) பெற்றதாயாகிய காந்
தாரியினது, இல்லத்து – அந்தப்புரத்திலே, இருந்தாளை – இருந்தவளாகிய
திரௌபதியை, இகலோடு எய்தி – மனக்கறுவுடனே சென்று கிட்டி, இவை
சொல்வான் – இவ்வார்த்தைகளைக் கூறுவானாயினான்; (எ – று.)-அவற்றை
அடுத்த மூன்று கவிகளிற் காண்க.

     இனி, முதலிரண்டடிகளில், அரசன் நுவறலும் வெஞ்சொல்லையுடைய
அறனில்லான் என்று நேராகவே கூட்டிப் பொருள் கொள்ளலுமாம்.
திருதராட்டிரனுக்கு மணஞ் செய்வித்தற் பொருட்டு வீடுமன் இட்ட
கட்டளையினால் தூதர் காந்தாரதேசத்து அரசனான சுபலனிடத்திற் சென்று
அவன் மகளாகிய காந்தாரியைத் திருதராட்டிரனுக்குத் தரும்படி மணம் பேச,
அச்சுபலனும் திருதராட்டிரன் கண்ணில்லாதவனாயினும் அவனது
நற்குடிப்பிறப்பையும் புகழையும் நல்லொழுக்கத்தையும் ஆராய்ந்து மணம்நேர,
காந்தாரி தனது சுற்றத்தார் மூலமாகத் தனது தாய் தந்தையர்
திருதராட்டிரனுக்குத் தன்னை அளிக்க நிச்சயித்திருப்பதையும் அவன்
கண்ணில்லாதவ னென்பதையும் கேட்டறிந்து, விதியினாற் கிடைத்த அக்
கணவன் திறத்தில் மனமுவந்தவளாய்ப் பதிவிரதா தருமத்தை மேற்கொண்டு,
கட்புலனால்வரு மின்பத்தைத் தன் கணவன் போலவே தானும்
அனுபவியாதிருத்தல் வேண்டி ஆடையை பலமடிப்பாக மடித்து அதனால் தன்
கண்களை மறைத்துக் கட்டிக்கொண்டு கண்பார்வை யிலளாயின ளென்பது
வரலாறு.  வெம் கண்-பயங்கரமான கண்க ளெனினுமாம்.  ‘களிற்று நுழை
வேல்’ என – வேலின் மிக்க கூர்மையை விளக்கியவாறாம்.  நுவறலும் –
நுவல்-பகுதி, து, அல்-சாரியைகள், உம் வினையெச்ச விகுதி: மற்றவை – சந்தி.
ஈற்றடி – முற்றுமோனை. 

தானே சூது பொருது அழிந்து, தலைவன்தனக்கு
உன் பதியான
கோனே சொல்லி, யாவையும் முன் கொடுத்தான்;
கொடுத்தபின், ‘இசைவு’
யானே’ என்றும், ‘வீமன் முதல் இளையோர்’ என்றும்,
‘என் வேள்வி
மானே’ என்றும், குறித்து, இழந்தான்; வழக்கால்
வென்றோம்; வருவாயே.214.-இதுமுதல் மூன்றுகவிகள் -துச்சாதனன் வார்த்தை.

உன் பதி ஆன கோனே-உனது கணவனாகிய தருமபுத்திரனே,
தானே சூது பொருது அழிந்து-தானாகவே சூதாடித் தோற்று, தலைவன்
தனக்கு-அரசனாகிய துரியோதனனுக்கு, சொல்லி யாவையும் முன் கொடுத்தான் –
பந்தயமாகக் குறிப்பிட்டு எல்லாப்பொருள்களையும் முதலிற்கொடுத்துவிட்டான்;
கொடுத்தபின்-(அவ்வாறு எல்லாப் பொருள்களையும் தோற்றுக்) கொடுத்த
பின்பு – இசைவு-(தான்) மனமொப்பிய பந்தயப்பொருள், யானேயென்றும்-, வீமன்
முதல் இளையோர் என்றும் – வீமன் முதலிய தம்பிமார் நால்வரு மென்றும், என்
வேள்வி மானே என்றும் – எனது யாகபத்தினியாகிய திரௌபதியேயென்றும்,
குறித்து – குறிப்பிட்டுவைத்து, இழந்தான்-(எல்லாரையும்) இழந்து விட்டான்;
வழக்கால் வென்றோம் – முறைமையாகவே (நாங்கள் சூதாட்டத்திற்)
சயித்துவிட்டோம்; (ஆதலால்), வருவாய் – (எங்கட்கு அடிமைப்பட்ட நீ எம்
விருப்பின்படி இராசசபைக்கு) வரக்கடவாய்; (எ – று.)

    ‘தானாகவே சூதாடி எல்லாப் பொருள்களையும் இழந்து பின்னர்த்
தருமபுத்திரன் பிராயத்தில் மூத்தவனான தன்னை முதலிலும், பிறகு வயசின்
கிரமப்படியே வீமன் முதலிய தம்பிமாரையும், அதன் பின்பு யாவரினும்
இளையவளான உன்னையும் பந்தயமாக வைத்து முறைப்படியாகவே
தோற்றனனாதலால், உன் பர்த்தாக்களான பாண்டவர்கள் போலவே நீயும்
எங்கட்கு அடிமையாகியே விட்டாய்; ஆதலால், எங்களுடைய கட்டளைக்குக்
கீழ்ப்படிந்து வர வேண்டியதே’ எனத் துச்சாதனன், திரௌபதி கூறியதாகப்
பிராதிகாமி கூறிய ஆட்சேபத்திற்குப் போலிச் சமாதானங் கூறித்
திரௌபதியைத் தன்னுடன் ராஜசபைக்கு வருமாறு அழைத்தனனென்க.
தம்பிமாரை முதலில் வைத்திழந்த பின்பே தருமன் தன்னையும்,
திரௌபதியையும் பந்தயம் வைத்திழந்ததாக முதனூலாகிய வியாசபாரதத்திற்
கூறியிருக்கவும் இவ்வாசிரியர் இவ்வாறு கூறியது, ‘பின்னோன் வேண்டும்
விகற்பங்கூறி’ என்ற வழி நூலிலக்கணம் பற்றி என்க.

     தானே, ஏகாரம் – பிரிநிலை: பிறர் தூண்டுதலில்லாமலென்றபடி, மற்றை
ஏகாரங்கட்கும் ஏற்றபெற்றி கண்டுகொள்க.  வென்றோம் – உளப்பாட்டுத்
தன்மைப்பன்மை

பொன்னைச் சிரிக்கும் பூங் கோயில், ‘புனல் வாவி இல்’
என்று எங்கள் குல
மன்னைச் சிரித்த செங் கனி வாய் மாறாது இரங்கி,
அழுது அரற்ற,
மின்னைச் சிரிக்கும் நுண் இடையாய்! வேந்தர்க்கு எதிர், உன்
மெய்க் கணவன்-
தன்னைச் சிரிக்க இருக்கின்ற சளம் நீ காணில் தரியாயே.

மின்னைச் சிரிக்கும் நுண் இடையாய் – மின்னலைப்
பரிகசிக்கின்ற நுண்ணிய இடையையுடையவளே! பொன்னை சிரிக்கும் பூ
கோயில் – பொன்னின் நிறத்தைச் சிரிக்கின்ற [பொன்னைக் காட்டிலும் மிக்க
பேரொளியைக் கொண்ட] அழகிய (இந்திரப் பிரத்தத்துச்) சபாமண்டபத்தில்,
(பளிங்கினால் தொழில் செய்யப்பட்ட ஓரிடத்தைத் தடாகமெனப் பிரமித்துத்
துரியோதனன் தனது துகிலைத் தூக்கிக் கொண்டு சென்றபோது), புனல்வாவி
இல் என்று-‘நீரையுடைய வாவியானது (இங்கு) இல்லையே!’ என்று சொல்லி,
எங்கள் குலம் மன்னை சிரித்த-எங்கள் குலத்திற் பிறந்த அரசனான
துரியோதனனைச் சிரித்து இகழ்ந்த, செம் கனிவாய் – கோவைப்பழம் போலச்
சிவந்த உனது வாயே, மாறாது இரங்கி அழுது அரற்ற – (இப்பொழுது) ஓயாமல்
வருந்திக் கதறியழும்படி, வேந்தர்க்கு எதிர் – பல அரசர்கள் முன்னிலையில்,
உன்மெய் கணவன் தன்னை சிரிக்க இருக்கின்ற – உனக்கு உரிய கணவனாகிய
தருமபுத்திரனை (நாங்கள்) சிரித்து இகழும்படியிருக்கின்ற, சலம் – (அவனது)
இழிந்த நிலைமையை, நீ காணில் – நீ பார்த்தால், தரியாயே
– பொறுக்கமாட்டாயே! (எ – று.)

    இந்திரப்பிரத்தத்தில் எங்கள் தலைவனான துரியோதனனைச் சிரித்த
உன்னுடைய வாயானது இப்போது உனது தலைவனைக் கண்டு அழுது
அரற்றுமாறு நாங்கள் அவனைப்பரிகசித்துச் சிரித்தால் நீ மனம்
பொறுக்கமாட்டாயே? அப்பொழுது செய்த வினையின் விளைவை இப்பொழுது
நீ அனுபவித்தே தீரவேண்டும் என்பது கருத்து.  திரௌபதியின் வாயில் முதலிற்
சிரிப்பும் பின்பு அழுகையுங் கூறியிருப்பது, ஒன்றிற் பல நிகழ்வனவாகக் கூறும்
முறையிற்படர்ச்சியணியாம்;முதலடியிலும் மூன்றாமடியிலும் ‘சிரிக்கும்’ என்பது
– உவமவாசகமாய் நின்றது.  திரௌபதி துரியோதனனைச் சிரித்த வரலாறு,
கீழ் 13 – ஆங் கவியின் உரையில் விரித்துக் கூறப்பட்டது. இல் – இல்லை
என்ற எதிர்மறைக் குறிப்பு வினைமுற்றின் விகாரம்.  சலம்-வஞ்சனை; இங்கு,
வஞ்சனையால் நேர்ந்த இழிந்த நிலைமைக்கு இலக்கணை.  தரியாயே-‘தரியாய்’
என்ற உதிர்மறை முற்றோடு எதிர்மறைப் பொருளதான ஏகாரஞ் சேர்ந்து
தரித்தே தீரவேண்டு மென்ற ஓருடன்பாட்டுப்பொருளை வற்புறுத்திற்று

தலத்துக்கு இயையாது ஐவரையும் தழுவித்
தழுவி, தனித்தனியே
நலத்துப் பொய்யே மெய் போல நடிக்கும் செவ்வி
நலன் உடையாய்!
குலத்தில் பிறந்தாய் ஆம் ஆகில், கூசாது,
என்பின் போதுக!’
எனப் பெலத்தில் செங் கை மலர் தீண்டிப் பிடித்தான்,
சூழ்ச்சி முடித்தானே.

தலத்துக்கு இயையாது-உலகவழக்கத்திற்கு மாறாக, ஐவரையும்
தனி தனியே தழுவி தழுவி-பாண்டவரைவரையும் ஒவ்வொருவராக
ஆலிங்கனஞ் செய்துகொண்டு, பொய் நலத்து மெய்போல நடிக்கும்-
பொய்ம்மையாகிய அன்பை மெய்யன்புபோலக் காட்டுகிற, செவ்வி நலன்
உடையாய்-மிக்க அழகையுடையவளே! (இவ்வாறு நடிப்பதனால், நீ), குலம்
துப்பு இறந்தாய் ஆம் – நல்ல குலத்திற்கு உரிய ஒழுக்கம் தவறினவளாயினாய்;
ஆகில்-ஆகவே, கூசாது-பின்வாங்காமல், என்பின் போதுக-என்பின்னே
வரக்கடவாய், என-என்று சொல்லி, (துச்சாதனன்), பெலத்தின்-பலாத்காரமாக,
செம் கை மலர் தீண்டி பிடித்தான்-(திரௌபதியினது) செந்தாமரை மலர்போன்ற
கையைத் தொட்டுப் பிடித்திழுக்கலாயினான்; (அதனால்), சூழ்ச்சி முடித்தானே-
(தாங்கள்) எண்ணிய ஆலோசனையை முடித்தவனாயினான்;(எ – று.)

    ஒருத்தியே ஐவரை ஒருசேர மணம்புணர்தல் உலகவழக்கத்திற்கு மாறான
தென்பான் ‘தலத்துக்கு இயையாது’ என்றும், ‘எனக்கு உன்னிடத்தில் தான்
மிக்க அன்பு’ ‘எனக்கு உன்னிடத்தில்தான் மிக்க அன்பு’ என்று
ஒவ்வொருவரிடத்தும் இரகசியத்திற் கூறி மயக்கும் இயல்புடைய
பொதுமகளென்பான் ‘ஐவரையும் தழுவித்தழுவித் தனித்தனியே நலத்துப்
பொய்யே மெய்போல நடிக்கும்’ என்றும், அதற்கேற்ப அழகுடையாளென்பான்
‘செவ்வி நலனுடையாய்’ என்றும் கூறினான். செவ்வி நலன்-
ஒருபொருட்பன்மொழி.  ஒருத்தியே ஐவரையும் மணம்புணர்ந்து பதிவிரதா
தருமங் குலைந்து நாணமற்றிருக்கிற நீ என்பின்னே வருதற்குப் பின்வாங்கக்
காரணமில்லையே யென்பது, ‘குலத்துப்பு இறந்தாய் ஆம், ஆகிற் கூசாது
என்பின்போதுக’ என்பதன் கருத்து; இனி ‘குலத்துப் பிறந்தாயாம் ஆகில்’
என்று பிரித்து-நல்ல குலத்திற் பிறந்தவளா யிருந்தால் என்று கூறுவது, ‘என்
பின் போதுக’ என்பதனோடுமுரணுமாறு அறிக.  இகழ்ச்சிக்குறிப்பாய் அங்ஙனங்
கூறினனென்றலுமொன்று.  ‘சூழ்ச்சி’ என்றது, முதலில் துஷ்டசதுட்டர்கள்
ஒருங்கேகூடிச்செய்த சதியாலோசனையை. பாண்டவர்கட்குப்
பேரவமானஞ்செய்தலே துரியோதனாதியரது சூழ்ச்சியின் முடிவாதலின், அதற்குக்
கடையெல்லையாக அவர்கள் மனைவியைச் சபையிலிழுத்துக் கொண்டு வரவே
சூழ்ச்சி முடிந்ததாமென்ப.  பிடித்தான் சூழ்ச்சி முடித்தான்-ப்ராசம்.
பெலம் = பலம்: வடசொல். ‘குலத்துப்பிறந்தாயாம்’ என்ற விடத்தில், ‘ஆம்’
என்பது-தேற்ற முணர்த்தும்; அன்றி, செய்யுமென்முற்று முன்னிலைக்குச்
செல்லாமையுணர்க.  

சிலை வாய் அங்கை அவன் தீண்ட, செல்லாள் ஆகி,
அல்லல் உழந்து,
உலைவாய் அழல்போல் நெடிது உயிரா, உள்ளம் தளரா,
உடல் நடுங்கா,
கொலைவாய் எயினர் கொல்லும் நிலம் குறித்துச் செறித்த
கொடிய நெடு
வலைவாய் ஒருதான் அகப்பட்ட மான்போல், மாமி
மருங்கு உற்றாள்.217.-துச்சாதனனாற் கைபிடித்துஇழுக்கப்பட்ட
திரௌபதி காந்தாரியினருகிற்சார்தல்
.

சிலை வாய் அம் கை அவன்தீண்ட-வில் பொருந்திய அழகிய
கையையுடையவனான அத்துச்சாதனன் இழுக்கவும்,-(திரௌபதியானவள்),-
செல்லாள் ஆகி-(அவன் பின்னே) போகாதவளாய், அல்லல் உழந்து-
துன்பத்தால் வருந்தி, உலைவாய் அழல் போல் நெடிது உயிரா-(கொல்லனது)
உலைக்களத்து நெருப்புப்போல் (உஷ்ணமாகப்) பெருமூச்சுவிட்டு, உள்ளம்
தளரா-மனஞ் சோர்ந்து, உடல் நடுங்கா-உடம்பு நடுங்கி,-கொலைவாய் எயினர்-
கொல்லுதலைத் தமது சாதித் தொழிலாகக் கொண்ட வேடர்கள், கொல்லும்
நிலம் குறித்து-(மிருகங்களை அகப்படுத்திக்) கொல்லுதற்கு வாய்ப்பான
இடத்தை ஆராய்ந்தறிந்து, செறுத்த-(அங்குக்) கட்டிய, கொடிய நெடு
வலையாய்-கொடுமையான நெடிய வலையிலே, ஒருதான் அகப்பட்ட-
தன்னந்தனியே அகப்பட்டுக்கொண்ட, மான்போல்-, (துச்சாதனன் கையில்
அகப்பட்டவளாய்), மாமிமருங்கு உற்றாள்  (தனக்கு) மாமியார் முறைமையான
காந்தாரியின் பக்கத்திற் சென்று சேர்ந்தாள்; (எ-று.)

     வேடருடைய வலையிற் சிக்கிய மான் வெருண்டு தப்பும் வழியின்றிப்
பதைபதைப்பதுபோல, துச்சாதனன் கையிற் சிக்கிய திரௌபதியும் தப்பியோடும்
வகையின்றி மனம்மருகி மிக வருந்தி உழன்று பின்னர்க் காந்தாரியைச் சார்ந்தன
ளென்றவாறு.  உவமையணி.  அங்கை – அகம் கை என்று பிரிந்து, உள்ளங்கை
யென்றும் பொருள் படும்; “அகமுனர்ச் செவிகைவரின் இடையன கெடும்”
என்பது, நன்னூல்.  உயிரா, தளரா, நடுங்கா-‘செய்யா’ என்னும் வாய்பாட்டு
உடன்பாட்டு இறந்தகால வினையெச்சங்கள்.  எயினர்-குறிஞ்சி நிலமாக்கள்;
(அந்நிலத்துமகளிர், ‘எயிற்றியர்’ எனப்படுவர்.) ‘சிலைவா யணங்கை’ என்ற
பாடத்துக்கு, வில்லிலக்கை யெய்ததனால் பாண்டவர் மனைவியாகப் பெற்ற
திரௌபதியை யென்பது பொருள்

பூ வார் குழலி தளர்வொடு தன் புறம் சேர் பொழுதும்
சிறிது இரங்காள்,
‘நீ வா’ என்றே அருகு இருத்தி, நெடுங் கண் பொழியும்
நீர் துடையாள்’
‘மேவார் அல்லர்; தமர் அழைத்தால், மேல் உன்
கருத்து விளம்பிவர,
பாவாய்! அஞ்சாது ஏகு!’ என்றாள்-பல பாதகரைப் பயந்தாளே.218.-துச்சாதனன் பின்னேபோமாறு
காந்தாரி திரௌபதிக்குக்கூறல்
.

பூ வார் குழலி – மலர்களையணிந்த நீண்ட கூந்தலையுடைய
வளாகிய திரௌபதி, தளர்வொடு – வருத்தத்துடனே, தன் புறம் சேர்பொழுதும்
– தன்புறத்தில் வந்து சார்ந்தபொழுதிலும், சிறிது இரங்காள் – சிறிதும்
மனமிரங்காதவளாகியும், நீ வா என்றே அருகு இருத்தி நெடும் கண் பொழியும்
நீர் துடையாள் – ‘நீ (இங்கே) வருவாயாக’ என்று (அன்புகொண்டழைத்துத்
திரௌபதியைத்) தன்னருகிலிருக்கச்செய்து (அவளது) நீண்ட கண்களிலிருந்து
சொரிகிற துன்பக் கண்ணீரைத் துடைத்துத்தேற்றாதவளாகியுமிருந்துகொண்டு,
‘பாவாய்-திரௌபதியே! மேவார் அல்லர்-(உன்னை அழைப்பவர்) பகைவரல்லர்:
தமர் – சுற்றத்தவரேயாவர்; அழைத்தால் – (இவ்வாறு சுற்றத்தவர்)
அழைக்கும்போது, மேல் உன்கருத்து விளம்பி வர அஞ்சாது ஏகு – இனிமேல்
உனது எண்ணத்தைச் சொல்லி வருமாறு சிறிதும் அச்சங்கொள்ளாது
செல்வாயாக’, என்றாள்-; (யாவளெனில்),- பல பாதகரை பயந்தாள்-பல(நூறு)
பெரும்பாவிகளைப் பெற்றவளாகிய காந்தாரி: (எ – று.)

    துச்சாதனன் வலியப் பிடித்திழுத்தபோதே அவனைத் தடுத்துத்
திரௌபதியைப் பாதுகாத்தற்குஉரிய முறையில் நிற்பவளான காந்தாரி,
அப்போது அவ்வாறு செய்யாதிருந்ததுமன்றி, அவள் தன்னிடம் வந்தபிறகும்
அன்புகாட்டி அவளைத் தேற்றாமல் விட்டிட்டதோடு, ‘அவன் பின்னேபோ’
என்றுஞ்சொன்ன கொடுமையை நினைந்து, அக்காந்தாரியை ‘பலபாதகரைப்
பயந்தாள்’ என்றார்; மக்கட்கு ஏற்ற தாய் என்க. பல புதல்வரைப் பெற்றோர்க்கு
இரக்கமென்பது இயல்பாயிருக்கவும், நூறு பிள்ளைகளைப் பெற்ற இவட்கு
இவ்வாறு கொடுமை யமைந்திருப்பதற்குக் காரணம், நற்புதல்வரைப்பெறாது பல
கொடும்பாவிகளைப் பெற்றதேயா மென்றவாறு. இத்தொடர்,
கருத்துடையடைகொளியணி, காந்தாரி தான் மிக்க பதிவிரதையாயிருந்தும் தன்
மருமகளாகிய திரௌபதியினிடத்து இரக்கங் கொள்ளாமலும் அவளது கண்ணீரைத்
துடையாமலுமிருந்து ‘தமரழைத்தால் உன்கருத்தைவிளம்பிவர ஏகு’ என்று கூறி
அறத்திற்கு மாறாக நடந்தது, அவள் தன் மக்களிடத்துக் கொண்ட மிக்க
அன்பினாலென்க.  பூ ஆர் குழலி என்று பிரித்து-பூக்களை மிகுதியாக
அணிந்துள்ள கூந்தலை யுடையவளென்றும் பொருள் கொள்ளலாம்.  பொழுதும்,
உம்மை – இழிவுசிறப்பு.  ‘சிறிதும்’ என்ற இழிவுசிறப்பும்மை, விகாரத்தால்
தொக்கது.  மேவார் – சேராதவர்: எனவே பகைவராயிற்று; எதிர்மறைப் பலர்பால்
வினையாலணையும் பெயர்.  

தண் தார் விடலை தாய் உரைப்ப, தாய் முன் அணுகி,
தாமரைக் கைச்
செண்டால் அவள் பைங் குழல் பற்றி, தீண்டான்
ஆகிச் செல்கின்றான்;
வண்டு ஆர் குழலும் உடன் குலைய, மானம் குலைய,
மனம் குலைய,
‘கொண்டார் இருப்பர்’ என்று நெறிக் கொண்டாள்,
அந்தோ! கொடியாளே.219.-துச்சாதனன் திரௌபதியைஇழுத்துக்
கொண்டு போதல்
.

தாய் உரைப்ப-தனது தாயாகிய காந்தாரி (அவ்வாறு)
சொல்லிவிடவே,-தண் தார் விடலை-குளிர்ந்த மாலையை அணிந்த துச்சாதனன்,
தாய்-தாவிச்சென்று, முன் அணுகி-(திரௌபதியின்) எதிரில்போய், தாமரை
கைசெண்டால் – தாமரை மலர்போன்ற (தனது) கையிற்கொண்ட – செண்டினாலே,
அவள் பைங் குழல் பற்றி-அந்தத்திரௌபதியினது கரியகூந்தலைப்
பிடித்துக்கொண்டு, தீண்டான் ஆகி செல்கிறான் – (அவளுடம்பைத்)
தொடாதவனாகவேபோகின்றவனானான்:(அப்பொழுது), கொடியாள் – பூங்கொடி
போன்றவளான திரௌபதி, வண்டு ஆர் குழல் உடன் குலையஉம் – வண்டுகள்
மொய்க்கப்பெற்ற தனது கூந்தல் ஒருசேர அவிழ்ந்து புரளவும், மானம் குலைய –
(தனது) மானம் அழிந்திடவும், மனம் குலைய – மனமும் நிலைகலங்கவும்,
கொண்டார் இருப்பர் என்று – ‘(தன்னை) மணந்துகொண்ட கணவர்கள்
(அச்சபையில்) இருப்பார்கள்’ என்று எண்ணி, நெறிகொண்டாள்-(அத்துச்சாதனன்
செல்கின்ற) வழியே (தானும்) செல்லலானாள்; அந்தோ-ஐயோ! (எ – று.) –
‘அந்தோ’ என்பது, இரக்கக்குறிப்பிடைச்சொல்; கவி இரங்கிக் கூறியது.

    காந்தாரி தனக்கு அநுகூலமாகச் சொல்லவே, துச்சாதனன் தனது
தாயின்புறத்தி லொதுங்கியிருந்த திரௌபதியினருகிற் போய்த் தனது கைகளினால்
அவள் கூந்தலைப் பற்றியிழுத்துக் கொண்டு செல்ல, அத்திரௌபதியும், தனது
கணவர்கள் அச்சபையிலிருப்பதனால் அவர்கள் தன்னைக் காக்கக்கூடு மென்று
ஓரெண்ணங்கொண்டு அத்துச்சாதனனுடன்சென்றனளென்பதாம். விடலை –
ஆண்மகன், இளமகன், திண்ணியன்; ஆண்பாற் சிறப்புப் பெயர்.  ‘தாய்’ என்ற
சொல் இரண்டனுள், பின்னது-இறந்தகால வினையெச்சம். செண்டு –
ஒருவகையாயுதம்: மாட்டி யிழுத்தற்கு 
உரிய தென்ப. இனி, பூச்செண்டு என்று
கொண்டு துச்சாதனன் தனது கையைப் பூஞ்செண்டினுருவமமையுமாறு குவித்துத்
திரௌபதியின்குழலைப் பற்றின னென்பாருமுளர். ‘பைங்குழல்பற்றத்
தீண்டாளாகிச் செல்கின்றாள்’ என்ற பாடம்-‘தனது கூந்தலைப் பற்றி
யிழுத்துக்கொண்டு செல்ல (த்திரௌபதி தான் தீட்டுடைமையால்)
தீண்டக்கூடாதவளாயிருந்தும் [ரஜஸ்வலையாயிருந்தும்] (அத்துச்சாதனனுடன்)
செல்பவளாய்’ என்று பொருள்படும். ‘கொடியாள்’ என்பதற்கு-கொடுமைக்கு
இலக்கானவளென்றும் பொருள்கொள்ளலாம். ‘குழலும்’ என்ற உம்மையைப்
பிரித்து ‘குலைய’ என்பதனோடு கூட்டுக. முன் நணுகி என்று பிரித்தும்
உரைக்கலாம்.   

சூழும் கனல்வாய் உரும் அன்றி, துளிவாய்
முகிலும் மகிதலத்து
வீழும் கொல்லோ? உற்பாதம் விரவிற்று’
என்றே வெரூஉக்கொள்ள,
தாழும் பெரிய கரிய குழல் தாரோடு அலைய,
தழீஇக் கொண்டு,
வாழும் சுரும்பு சுழன்று அரற்ற, மண்மேல்
இழுத்து வருகின்றான்.220.-இதுவும் அது.

‘சூழும் கனல் வாய் உரும் அன்றி – பரவுந்தன்மையுள்ள
நெருப்புப் பொருந்திய இடி வீழ்வதே யல்லாமல், துளிவாய் முகிலும் மகிதலத்து
வீழும்கொல்ஓ – மழைத்துளிகள் பொருந்திய மேகமும் பூமியில் விழக்
கடவதோ! உற்பாதம் விரவிற்று – துர் நிமித்தம் உண்டாயிற்று: என்று-,
வெரூஉக் கொள்ள – (கண்டவர் யாவரும்) அச்சங்கொள்ளும்படி, தாழும்
பெரிய கரிய குழல் – நீண்டு தொங்குகின்ற பெரிய கருநிறமுடைய
(திரௌபதியின்) கூந்தல், தாரோடு அலைய – மாலையுடனே அவிழ்ந்து
கீழ்விழுந்து புரளவும், தழீஇக்கொண்டு வாழும் சுரும்பு சுழன்று அரற்ற –
(அக்கூந்தலி லணிந்துள்ள மாலையைச்) சார்ந்து வாழ்கின்ற வண்டுகள் சுழன்று
கொண்டு ஒலிக்கவும், மண்மேல் இழுத்து வருகின்றான் – நிலத்திலே
(அத்திரௌபதியை) இழுத்துக்கொண்டு வருவானாயினான்; (எ – று.)

    துச்சாதனன் திரௌபதியை இழுத்துச் சென்றபோது அவள் கூந்தல்
கீழ்விழுந்து புரண்ட தன்மை, மேகம் கீழ்விழுந்து புரள்வதாகிய உற்பாதமாகக்
கருதுமாறிருந்த தெனக் குறித்தார்.  வானத்து மேகங்களினின்று நிலத்தில்
இடிவீழ்வது, இயற்கையே; மேகம் வீழ்வதோ உற்பாதமாகக் கொள்ளப்படும்.
உற்பாதமாவன – உலகத்திற்குப் பின்வருந் தீங்கைத் தமது நிகழ்ச்சியால்
முன்னமே விளக்குவன:  அவை – மேகம் வீழ்தல், தூமகேதுவென்னும்
வால்நட்சத்திரம் தோன்றுதல், வானத்தினின்று கொள்ளிக்கட்டை வீழ்தல்,
இரத்தமழை பொழிதல் போல்வன.  பூமாலையுடனே கூடிய கருங்கூந்தல்
குலைந்து வீழ்ந்ததை மின்னலோடு கூடிய மேகம் விழுந்ததென மயங்கியதாகக்
கூறியது – மயக்கவணியாம்.  பூமாலைக்கு மின்னலும், கருங்கூந்தலுக்குக் கார்
மேகமும் உவமை.  “தாருங் குழலும் மின்னுடனே தலஞ்சேர் கொண்ட
லெனவீழ” என்பர் மேலும்.

     மகிதலம் – பூமியினது இடம் என உடைமையும் உடையதும் வேறாகாத
ஒற்றுமைக்கிழமைப் பொருள்பட விரியும் ஆறனுருபுத்தொகை. வீழுங்கொல்லோ,
கொல்-அசை; ஓ – இரக்கம்.  வெரூஉக் கொள்ள, தழீஇக்கொண்டு –
வெருவுகொள்ள, தழுவிக்கொண்டு: சொல் விகாரப்பட்டு அளபெடுத்ததனால்,
சொல்லிசையளபெடைகள். 

தழலோ என்னும் கற்புடைய தனி நாயகிதன்
தாம நறுங்
குழலோ, உரகக் கொடி வேந்தன் குலமோ, குலைந்தது,
இவண்!’ என்பார்;
‘நிழலோ, புவிக்கு நெருப்பு அன்றோ, நெறி ஒன்று இல்லா
நீடு பொலங்
கழலோன் மதி வெண் குடை?’ என்பார்; கையால் கண்ட
கண் புடைப்பார்;221.-இதுமுதல்ஐந்து கவிகள் – திரௌபதியின்
நிலையைக்கண்ட அந்நகரத்துச் சனங்கள்
வருந்துதலைக்கூறும்.

சிலர்), ‘தழலோ என்னும் கற்பு உடைய – நெருப்புத்தானோ
என்று சொல்லத்தக்க [மிகப் பரிசுத்தமான] பதிவிரதா தருமத்தையுடைய, தனி
நாயகிதன்- (வேறு துணையின்றித்) தனிப்பட்டவளாகிய (பாண்டவர்களின்)
மனைவியான திரௌபதியினது, தாமம் நறுங்குழலோ – மலர்மாலையைச் சூடிய
நறுமணம் வீசுகின்ற கூந்தல்தானோ (குலைந்தது!) உரகம் கொடி வேந்தன்
குலமோ இவண் குலைந்தது – பாம்புக்கொடியையுடையவனாகிய
துரியோதனராசனது வமிசமன்றோ இப்பொழுது குலைந்து விட்டது!’, என்பார் –
என்று சொல்லுவார்; (சிலர்), ‘நெறி ஒன்று இல்லா நீடுபொலம் கழலோன் –
சிறிதும் நன்னெறியிற் செல்லுதலில்லாத நீண்ட பொன்னாற் செய்த வீரக்கழலை
யணிந்தவனாகிய துரியோதனனது, மதிவெள் குடை – பூர்ண சந்திரன் போன்ற
வெண்கொற்றக் குடையானது, புவிக்கு – பூமியிலுள்ளார்க்கு, நிழலோ –
நிழலைத் தருவதாகுமோ? நெருப்பு அன்றோ – நெருப்பாய்
வாட்டுகின்றதன்றோ?’ என்பார்-; (சிலர்), கண்ட கண் கையால் புடைப்பார் –
(திரௌபதிக்கு நேர்ந்த அந்தக் கொடுமையைக்) கண்ட (தங்கள்) கண்களைக்
கைகளினால் மோதிக்கொள்வார்கள்;

    திரௌபதி இப்பொழுது கூந்தலை விரித்தது, துரியோதனாதியர்கள்
விரைவில் வேரோடழிதற்குக் காரணமா மென்பது முதலிரண்டடிகளின் கருத்து.
உலகுக்கு இனிய நிழலைத்தந்து தாபத்தைத் தணிக்கவேண்டிய துரியோதனனது
வெண்கொற்றக்குடை அவ்வாறின்றி அதற்குமாறாகக் கொடுமையை விளைத்துத்
தபிப்பதனால், ‘நிழலோ புவிக்கு நெருப்பன்றோ. . . . . . . கழலோன்
மதிவெண்குடை’ என்றார்.  இப்படிப்பட்ட மகாசோகத்துக்குக் காரணமான
செயலைத் தங்கள் கண்களாற் பார்க்க நேர்ந்த கொடுமைபற்றி, இவ்வருத்தத்தை
ஏன் கண்டீர்கள்?’ என்று தண்டித்தல்போல, அக்கண்களைத் தமது கைகளால்
மோதுவாராயின ரென்க.  கூந்தலின் குலைவை மறுத்து வேந்தன்குலம்
குலைந்ததாகக் கூறியது, அபநுதியலங்காரம். நீதிநெறி தவறாத அரசாட்சியைக்
குடையென்றல் மரபு.  குடைக்குச் சந்திரனுவமை, வட்டவடிவத்தோடு
வெண்ணிறமாய் விளங்குதற்கு.   குடை – அதுபோலத் தாபந் தணிக்கிற
அதிகாரத்திற்கு உவமையாகுபெயர்.  மிக்க தூய்மையினாலும், நினைத்த
மாத்திரத்தில் எரித்தழிக்குந் திறத்தினாலும், மாதர்களின் கற்பிற்கு அக்கினியை
உவமை கூறுதல் மரபு.  தனி நாயகி என்பது – ஒப்பற்ற தலைவியென்றும்
பொருள்படும்.  ‘புவிக்கு’ என்பது முன்னுள்ள ‘நிழலோ’ என்றதனோடும்,
பின்னுள்ள ‘நெருப்பன்றோ’ என்பதனோடும் சென்றியைவது – இடை நிலைத்
தீவகம்.  தழலோ, ஓகாரம் – சிறப்பு.  குழலோ, நிழலோ – ஓகாரங்கள் –
எதிர்மறைப்பொருளன.  குலமோ, ஓகாரம் – தெரிநிலை. நெருப்பன்றோ –
இதில் அன்று ஓ என்ற இரண்டு எதிர்மறைகள் ஒருங்குசேர்ந்து ஓர்
உடன்பாட்டுப் பொருளை வற்புறுத்தித் தேற்றக்கருத்தை விளக்கும்.  குலம்
குலைந்தது – தெளிவினால் எதிர்காலம் இறந்தகாலமாகச் சொல்லப்பட்ட
காலவழுவமைதி.     

காட்டும் திறல் வெஞ் சிலை விசயன் கையால் வகிர்ந்து, கடி
கொள் மலர்
சூட்டும் பனிச்சை, இவண் புழுதித் துகள் ஏறியது’ என்று
அழுது நைவார்;
‘மீட்டும் தடாமல், ‘ஏகு’ என்று விட்டாள்; மைந்தர் இட்ட
வினை கேட்டும், கொடியள் காந்தாரி; கிளையோடு இன்றே
கெடும்’ என்பார்;

(சிலர்), ‘திறல் காட்டும் வெம் சிலை விசயன்-(தனது)
பராக்கிரமத்தை(ப் பலசமயங்களிற்) காட்டியுள்ள கொடிய வில்லையேந்தியவனான
அருச்சுனன்,கையால் வகிர்ந்து கடிகொள்மலர் சூட்டும் – (தனது)
கையினாற்கோதிநறுமணமுள்ள மலர் மாலையைச் சூட்டப் பெற்ற, பனிச்சை –
(திரௌபதியினது)கூந்தல், இவண் புழுதி துகள் ஏறியது – இப்பொழுது
மண்புழுதி படியப்பெற்றதே!’ என்று அழுது நைவார் – என்று சொல்லிப்
புலம்பிவருந்துவார்கள்; (சிலர்), ‘காந்தாரி-, மைந்தர் இட்ட வினை கேட்டும் –
(தனது)புதல்வர் செய்த தீச்செய்கையைக் கேட்டறிந்தும், மீட்டும் – பின்பும்,
தடாமல் -(துச்சாதனன் கொடுமையைத்) தடுக்காமல், ஏகு என்று விட்டாள் –
(திரௌபதியை நோக்கி) ‘நீ போ’ என்று சொல்லி அனுப்பிவிட்டாள்; கொடியள்-
(ஆதலாற்) கொடியவள்; கிளையோடு இன்றே கெடும் – (இவ்வாறுபெருந்தீங்கைச்
செய்ததனால் இவள்) சுற்றத்தாரோடும் இப்பொழுதேஅழிந்துவிடுவாள்’, என்பார்-;
(எ – று.)

    துரோணாசாரியர்க்குக் குருதட்சிணை செலுத்துதற்பொருட்டுத் துருபதன்
விஷயத்திலும், சித்திரரதனென்ற வித்தியாதரவேந்தன் திறத்திலும், திரௌபதியின்
சுயம்வர காலத்திலும், காண்டவமென்னும் வனத்தை எரிக்குமாறு
அக்கினிதேவனுக்கு அளிக்கையில் வந்தெதிர்ந்த தேவர் திறத்திலும்,
தருமபுத்திரன் இராசசூயயாகஞ் செய்தற்பொருட்டுத் திறைப்பொருள் கொணருமாறு
திசைகளை வென்ற போதும், மற்றும் பலவேளைகளிலும் அருச்சுனன் வில்
திறமையைக் காட்டியது காண்க.  இவ்வாறு மகா வீரனான அர்ச்சுனன் கோதி
முடித்த கூந்தற்கும் புழுதிபடியுமாறு நேர்ந்த விபரீதத்தை நினைந்து அழுது
நைவாராயினர். இங்ஙனம் திரௌபதியின் துன்பத்திற்குக் காரணமாயிருந்த
துரியோதனாதியர்கள் அருச்சுனனது வில்வீரத்தினால் விரைவிலழிவுறுவ ரென்பது,
‘காட்டுந்திறல் வெஞ்சிலை’ என்ற அடைமொழியினாற் குறிப்பிக்கப்பட்டவாறு.
‘அருச்சுனனாற் கோதி முடிக்கப்பட்ட திரௌபதியின் கூந்தலில் இப்பொழுது
புழுதிபடிந்துள்ளது’ என ஒரு பொருளிற் பல தன்மை நிகழ்ந்தனவாகக் கூறியது,
முறையிற்படர்ச்சியணியின் பாற்படும்.  தன் மைந்தர் செய்த கொடுமையை
அறிந்திருந்தும் திரௌபதியைச் சபைக்குப் போகுமாறு கூறிய காந்தாரி
அக்கொடுமைக்கு உடன்பட்டவளேயாவளாதலால் ‘கொடியள்’ என்றும், ‘அளவு
கடந்து செய்த புண்ணிய பாவங்கள் மறுபிறப்பிலன்றி இப்பிறப்பிலேயே பயனை
விளைக்கும்’ என்பது நூல் துணிபாதலால், அளவு கடந்து செய்த
பொல்லாங்குடைமைபற்றி, அதன் பயனாக ‘காந்தாரி கிளையோடு இன்றே கெடும்’
என்றும் கூறினார்.  ‘வீறார் கற்பின் மின்னனையாளை விறன்மைந்தர்,
ஏறாமன்றிலேற்றவு மாமன் றென்னாதாள், ஊறாவன்பிற் கண்ணறை
மன்னனொருதேவி, யாறாவெள்ளத்துன்புற வன்றே வடியிட்டாள்’ என மேல்
நான்காம்போர்ச் சருக்கத்தில் (செ:41) வருவது, இங்கு நோக்கத்தக்கது.

     கடி – உரிச்சொல்.  பனிச்சை – மகளிர் கூந்தலின் வகை ஐந்திலொன்று;
கூந்தலின் வகை ஐந்தாவன – மயிரை உச்சியில் முடித்தலாகிய முடியும், சுருட்டி
முடித்தலாகிய குழலும், மயிரை முடிந்து விடுதலாகிய தொங்கலும், பின்னி
விடுதலாகிய பனிச்சையும், பின்னே செருகுதலாகிய சுருளுமாம். பனிச்சை –
இங்குச் சிறப்புப்பொருளைத் தராமல், பொதுவாகக் கூந்தலென்ற மாத்திரமாய்
நின்றது.  புழுதித்துகள் – ஒருபொருட்பன்மொழி.  இன்றே, ஏகாரம் – தேற்றத்
தோடு விரைவு.  கெடும் – செய்யுமென்முற்று, பெண்பாலுக்கு வந்தது.

இரும்போ நெஞ்சம்? மாமன் இதற்கு இசைந்தான் ஒக்க
இருந்து!’ என்பார்;
‘பெரும் போர் அரசர் பெண்ணுடனே பிறந்தும், சீறப்
பெறார்!’ என்பார்;
‘பொரும் போர் வீமன் பொறுத்தாலும், பொன்-தேர் விசயன்
பொறான்’ என்பார்;
‘அரும் போர் அரசர், ‘தகாது’ என்றால் வருமோ, இந்த
அழிவு!’ என்பார்.

சிலர்), ‘இ மாமன் – (திரௌபதியினது) மாமனாராகிய இந்தத்
திருதராஷ்டிரன், ஒக்க இருந்து – உடனிருந்து, இதற்கு – (துரியோதனாதியர்
செய்த) இந்தத்துராலோசனைக் கெல்லாம், இசைந்தான் – உடன்பட்டான்:
(ஆதலால்), நெஞ்சு இரும்போ – (இவனது) மனம் இரும்புதானோ?’ என்பார்-;
(சிலர்), ‘பெரும்போர் அரசர் – மிக்க போர்த்திறத்தையுடைய அரசர்கள்,
பெண்ணுடனே பிறந்துஉம் – பெண்ணுடனே பிறந்தவர்களாயிருந்தும், சீற
பெறார் – (இக்கொடுமையைச் செய்யுந் துரியோதனாதியர் திறத்திற்) சிறிதுஞ்
சினங்காட்டாதிருக்கின்றார்களே!’ என்பார்-; (சிலர்), போர் பொரும் வீமன்
பொறுத்தாலும் – போர் செய்யும் வலிமையுள்ள வீமசேனன் (மாறுசெய்யாது
ஒருகால்) பொறுத்துக் கொண்டிருந்தானானாலும், பொன் தேர் விசயன் பொறான்
– அழகிய தேரினையுடைய அருச்சுனன் சிறிதும் பொறுக்கமாட்டான், என்பார்-;
(சிலர்), ‘அரும்போர் அரசர் தகாது என்றால் – அருமையான
போர்த்திறத்தையுடைய (இச்சபையிலுள்ள) அரசர்கள் ‘(இவ்வாறு சூதாடுதல்)
தக்கதன்று’ என்று மறுத்துக் கூறியிருந்தால், இந்த அழிவுவருமோ – இந்தக் கேடு
நேரிடுமோ?’ என்பார்-; (எ – று.)

     ‘மாமன்’ என்றது-திரௌபதிக்கு மாமனார் முறையான திருதராஷ்டிரனை.
இளமையிலே தந்தையையிழந்த பாண்டவர்கள் திறத்திலே திருதராஷ்டிரன்
பேரன்புகொண்டு பாதுகாத்து வந்து அவர்களை மிக்கச் சிறப்பினராகுமாறு
செய்திருந்தும், இப்போது ஒருபால் அன்பு ஓடிக் குணக்கேடரான தனது
மைந்தர்க்கு வசப்பட்டு அவர்களது துராலோசனைகட்கெல்லாம் தான்
உடந்தையாய் நின்று தருமாத்துமாக்களான அப்பாண்டவர்களைச் சூதாடுமாறு
புரிந்து இதனோடு நில்லாமல் மருமகளான திரௌபதியைத் தனது மக்கள்
பேரவமானஞ் செய்வதை அறிந்த பிறகும் தடுக்காமல் அதற்கும்
உடன்பட்டதனால், அவனது மனத்தை ‘இரும்போ’ எனப்பழித்துக் கூறினார்.
‘இ மா மனிதற்கு’ என்று பிரித்துப் பொருள் கொள்ளுதலு மொன்று.
ஆணோடு பெண்ணோடு பிறக்க வில்லையா என்பது உலகவழக்கு.  தான்
தனியே ஒருத்தனாகப் பிறந்தவன் பிறரது கஷ்ட நிஷ்டூரங்களை யறிதல்
அருமை; பலருடன் பிறந்தவர்களோ தம்மோடு குடல்துவக்குடைய உடன்
பிறந்தார்க்கு வருத்தம் நேர்ந்தபொழுது அது தமது மனத்திற்பதிய
வருந்துவார்களாதலால், அத்தகையார் பிறர்க்குத் துன்பம் நேர்ந்தவிடத்தும்
அப்பிறரது கஷ்டநிஷ்டூரங்களையும் உணர்தற்கு வல்லவராவர்.
அத்தன்மையர்பலர் கூடியிருக்கும் இச்சபையிலே இயல்பிற் சுதந்திரமற்றுத்
தனக்கு நேரும் துன்பத்தை நீக்கிக்கொள்ளும் வல்லமையில்லாத பெண்ணாய்ப்
பிறந்துள்ள திரௌபதியை ஒருமூடன் இவ்வாறு வருத்துகையில் மாறாகச்
சீறித்தமது பலத்தால் இவ்வக்கிரமத்தைத் தடுக்கவேண்டியிருக்க, இவர்கள்
ஒன்றுஞ் செய்யாது அடங்கி வாளாவிருக்கின்றார்களே!  இதென்ன விபரீதம்
என்பது இரண்டாமடியின் கருத்து.  திரௌபதி பெண்ணாதலால், ‘ஆணோடு
பிறந்தும்’ என்பதைத் தவிர்த்து ‘பெண்ணுடனே பிறந்தும்’ என்று கூறினார்கள்;
இது – உலகவழக்குநவிற்சியணி. ‘பெரும் போரரசர்’, என்றது மாறுசெய்ய
வல்லவர் என்ற கருத்தை யுட்கொண்டது;  கருத்துடையடைமொழியணி.
இனி இரண்டாமடிக்கு – பெரிய போர்த் தொழிற்கு உரிய துரியோதனாதியர்
தாங்களும் ஒரு பெண்ணுடன் பிறந்தவர் களாயிருந்தும் ஒரு பெண்ணை
[திரௌபதியை] இவ்வாறு சினந்து வருத்துதற்குத் தகாதவராவரென்பார் என்று
பொருள் கூறுதலும் ஒன்று; துரியோதனாதியர் நூற்றுவரோடு துச்சளையென்ற
ஒருத்தி பிறந்தன ளாதலால், அவர்கள் பெண்ணுடனே பிறந்தவராவர்.
இப்பொருளில் துரியோதனாதியரை ‘பெரும்போரரசர்’ என்றது, தமக்குச் சரியான
ஆடவரிடத்தில் வீரங்காட்டிப் போர் செய்யாமல் அபலையான ஒரு
பெண்திறத்திற் பகைமை பாராட்டிக் கொடுமை செய்கின்றார்களே! இவர்களது
வீரம் எற்றுக்கு? என்ற பழிப்பை விளக்கும்.  பிறந்தும், உம்மை – சிறப்பு.

    பாண்டவரைவருள் உடல்வலிமையில் வீமசேனனும் விற்போர்த்திறத்தில்
அருச்சுனனும் சிறந்தவர்க ளாதலால், இவ்விருவருள் ஒருத்தராவது மனம்
பொறாது புழுங்கிச்சீறி உக்கிரங்கொண்டு பகையழிக்கக்கூடு மென்று, சிலர்
தமது மனத்திற்சிறிது தேறியவாறு.  ‘வீமன் பொறுத்தாலும்’ என்ற விடத்து,
உம்மை-அவன் சிறிதும் பொறுக்க மாட்டானென்பதை விளக்கும்.  காண்டவ
தகனகாலத்தில் அக்கினிதேவன் கொடுத்த வாநரத்துவசமமைந்து
வெண்குதிரைகள் பூட்டியதேரையுடையவ னாதலால், அருச்சுனனை
‘பொற்றேர்விசயன்’ என்றான்;  இத்தொடரில், காண்டவவனத்தை இனிதாகப்
புசிக்குமாறு அக்கினிதேவனுக்கு அளித்தபோது தேவர்களையெல்லாம்
புறங்கண்டு ஓடச்செய்த அருச்சுனனுக்கு நராதமரான துரியோதனாதியரை
யழித்தல் ஒரு பெரிதன்று என்ற கருத்துந் தொனிக்கும்.  சபையிலுள்ள
அரசர்களெல்லாரும் துரியோதனனுக்கு உடந்தையாயிராமல் ஒன்று சேர்ந்து
ஆதியிலேயே ‘இவ்வாறு அக்கிரமச் செயலைச் செய்தல் தகாது’ என்று ஒரே
குரலாகச் சூதாடுதலையே தடுத்திருந்தால், தனிப்பட்ட துரியோதனனால்
இத்தகைய கொடுஞ்செயல் நேர்ந்திராதென்பது ஈற்றடியின் கருத்து;  இனி,
போர்செய்யும் பாண்டவர் சூதாடுதல் எமக்குத்தகாதென்று மறுத்திருந்தால்,
இத்தகைய அழிவு நேருமோ? என்ற கருத்துப்படப் பொருள் கூறுவாருமுளர்.

என்னே, குடியில் பிறந்தாருக்கு இருப்பு அன்று இவ் ஊர்
இனி!’ என்பார்;
‘முன்னே ஓடி முறையிட்டால், முனியும்கொல்லோ,
எமை?’ என்பார்;
பின்னே இரங்கி, அழுது அழுது, பேதுற்று, இன்னல்
பெரிது உழைப்பார்;
‘அன்னே! துன்பம் களைந்து, இன்பம் ஆவாய்!’ என்றே
அருள் புரிவார்;

சிலர்), ‘என்னே-இது என்ன விபரீதம்! குடியில் பிறந்தார்க்கு –
நல்லகுடியிற் பிறந்துள்ளவர்கட்கு, இனி-இனிமேல், இ ஊர் இருப்பு அன்று –
இந்தஅத்தினாபுரம் வசித்தற்குத் தக்க இட மன்று,’ என்பார்-; (சிலர்), ‘ஓடி-
விரைந்துசென்று, முன்னே முறையிட்டால்-(யாம் துச்சாதனனது) எதிரில்
(‘திரௌபதியைநீ இவ்வாறாகச் செய்வது தகுதியன்று’ என்று)
முறையிடுவோமாயின், எமைமுனியும்கொல் ஓ – (அத்துச்சாதனன்) எங்களைக்
கோபித்துக் கொள்வானோ?’என்பார்-; (சிலர்), பின்னே இரங்கி அழுது அழுது
பேதுற்று இன்னல் பெரிது உழப்பார் – திரௌபதியின் பின்னே சென்று
இரக்கங்கொண்டு கதறியழுது மனங்கலங்கி மிகவுந் துன்பப்படுவார்கள்; (சிலர்),
‘அன்னே-தாயே! துன்பம் களைந்து இன்பம் ஆவாய்-(விரைவில்) இத்துன்பம்
ஒழிந்து இன்பமடைவாய்,’ என்று-, அருள் புரிவார்-கருணைகொண்டு கூறுவார்கள்;
(எ – று.)

    “கொடுங்கோன்மன்னர் வாழுநாட்டிற், கடும்புலிவாழுங்காடு நன்றே”
என்பவாதலால், கொடுங்கோல்மன்னனான துரியோதனனது அத்தினாபுரியில்
வாழ்ந்தால் குலமகளிரைப் பிறர் தீண்டுதல் முதலிய பலவகை முறைகேடுகள்
நிகழக்கூடுமென்று அஞ்சி அவ்வூரார், ‘குடியிற் பிறந்தாருக்கு இருப்பன்று
இவ்வூர்’ என்பாராயினர்.  என்னே-இரக்கக்குறிப்பு.  காந்தாரியின்
அந்தப்புரத்திலிருந்து துரியோதனன் புதிதாகக் கட்டிய மண்டபத்திற்குத்
துச்சாதனன் திரௌபதியை இழுத்துக்கொண்டு செல்லும்போது கண்ட
ஜனங்களின்செய்தி கூறுவன இப்பாடல்களெல்லா மென அறிக.  அப்பொழுது
திரௌபதிக்கு நேர்ந்த துன்பங்கள் யாவும் இன்பமாய் மாறவேண்டுமென்று
தமது வேண்டுகையைச் சனங்கள் ஈற்றடியால் தெரிவித்தனர். அன்னே –
அன்னையென்பதன் ஈறுதிரிந்த விளி.  முன்னே – (துரியோதனனது) எதிரிலே
யென்றலுமாம்.  

என்னே, குடியில் பிறந்தாருக்கு இருப்பு அன்று இவ் ஊர்
இனி!’ என்பார்;
‘முன்னே ஓடி முறையிட்டால், முனியும்கொல்லோ,
எமை?’ என்பார்;
பின்னே இரங்கி, அழுது அழுது, பேதுற்று, இன்னல்
பெரிது உழைப்பார்;
‘அன்னே! துன்பம் களைந்து, இன்பம் ஆவாய்!’ என்றே
அருள் புரிவார்;

(சிலர்), ‘என்னே-இது என்ன விபரீதம்! குடியில் பிறந்தார்க்கு –
நல்லகுடியிற் பிறந்துள்ளவர்கட்கு, இனி-இனிமேல், இ ஊர் இருப்பு அன்று –
இந்தஅத்தினாபுரம் வசித்தற்குத் தக்க இட மன்று,’ என்பார்-; (சிலர்), ‘ஓடி-
விரைந்துசென்று, முன்னே முறையிட்டால்-(யாம் துச்சாதனனது) எதிரில்
(‘திரௌபதியைநீ இவ்வாறாகச் செய்வது தகுதியன்று’ என்று)
முறையிடுவோமாயின், எமைமுனியும்கொல் ஓ – (அத்துச்சாதனன்) எங்களைக்
கோபித்துக் கொள்வானோ?’என்பார்-; (சிலர்), பின்னே இரங்கி அழுது அழுது
பேதுற்று இன்னல் பெரிது உழப்பார் – திரௌபதியின் பின்னே சென்று
இரக்கங்கொண்டு கதறியழுது மனங்கலங்கி மிகவுந் துன்பப்படுவார்கள்; (சிலர்),
‘அன்னே-தாயே! துன்பம் களைந்து இன்பம் ஆவாய்-(விரைவில்) இத்துன்பம்
ஒழிந்து இன்பமடைவாய்,’ என்று-, அருள் புரிவார்-கருணைகொண்டு கூறுவார்கள்;
(எ – று.)

    “கொடுங்கோன்மன்னர் வாழுநாட்டிற், கடும்புலிவாழுங்காடு நன்றே”
என்பவாதலால், கொடுங்கோல்மன்னனான துரியோதனனது அத்தினாபுரியில்
வாழ்ந்தால் குலமகளிரைப் பிறர் தீண்டுதல் முதலிய பலவகை முறைகேடுகள்
நிகழக்கூடுமென்று அஞ்சி அவ்வூரார், ‘குடியிற் பிறந்தாருக்கு இருப்பன்று
இவ்வூர்’ என்பாராயினர்.  என்னே-இரக்கக்குறிப்பு.  காந்தாரியின்
அந்தப்புரத்திலிருந்து துரியோதனன் புதிதாகக் கட்டிய மண்டபத்திற்குத்
துச்சாதனன் திரௌபதியை இழுத்துக்கொண்டு செல்லும்போது கண்ட
ஜனங்களின்செய்தி கூறுவன இப்பாடல்களெல்லா மென அறிக.  அப்பொழுது
திரௌபதிக்கு நேர்ந்த துன்பங்கள் யாவும் இன்பமாய் மாறவேண்டுமென்று
தமது வேண்டுகையைச் சனங்கள் ஈற்றடியால் தெரிவித்தனர். அன்னே –
அன்னையென்பதன் ஈறுதிரிந்த விளி.  முன்னே – (துரியோதனனது) எதிரிலே
யென்றலுமாம்.      

பறை வன் களிற்றுப் பல் புரவிப் பைம் பொன் தடந்
தேர்ப் பாஞ்சாலர்க்கு
இறைவன் பாவை, யாம் காண இவையோ படுவது!’
என்று உரைப்பார்;
‘பொறை வண் சிந்தைத் தருமனுக்குப் பொய்ச் சூது அறிந்தும்
பொர, என்ன
குறை வந்தது? தன் விதி வலியால் குறைந்தான், யாவும்
கொடுத்து’ என்பார்.

சிலர்), ‘பறை வல் களிறு – பிளிறுகின்ற வலிய யானைகளையும்,
பல புரவி – பல குதிரைகளையும், பைம் பொன் தட தேர் – பசிய
பொன்மயமான பெரியதேர்களையு முடையவனான, பாஞ்சாலர்க்கு இறைவன் –
பாஞ்சால தேசத்தார்க்கு அரசனாகிய துருபதனுடைய, பாவை – அழகிய
மகளாகிய திரௌபதி, யாம் காண-நாங்கள் கண்ணாற்காணும்படி, இவையோ
படுவது-இத்துன்பங்கள் படுதலாகுமோ? (படுதல் தகாதென்றபடி);’ என்று
உரைப்பார்-; (சிலர்) ‘பொறை வள் சிந்தை தருமனுக்கு-பொறுமையும் உதார
எண்ணத்தையுமுடைய தருமபுத்திரனுக்கு,-‘சூது-சூதானது, பொய் – பொய்க்கு
இடமானது’ (என்று), அறிந்தும் – தெரிந்திருந்தும், பொர – (அப்பொய்ச்சூதை)
ஆடும்படி, என்ன குறை வந்தது-(புத்திக்குக் குறைவு நேரிட்டதே! இது)
எவ்வளவு குறைவாய் விட்டது! [மிகவும் அறிவு குறைந்து விட்டது என்றபடி]:
தன் விதிவலியால்-தன்னுடைய ஊழ்வினையின் வலிமையால், யாவும் கொடுத்து –
[தனது] எல்லாப் பொருள்களையும் (சூதில் பந்தயம் வைத்துத்) தோற்றிழந்து,
குறைந்தான்-மிக்க ‘தாழ்வை அடைந்து விட்டான்’ என்பார்-; (எ – று.)

      களிறு, புரவி, தேர் என்பன – காலாட்படைக்கும் உபலக்ஷணம்.
சதுரங்கசேனைகளையுமுடைய பாஞ்சாலதேசத்தரசனது புத்திரி
இத்துன்பங்களைப் படத்தக்கவளல்லள் என்ற இவ்வாக்கியத்தில்
ராஜபுத்திரியாயிருத்தலும் பெருந்துன்பத்தை யனுபவித்தலுமென்ற
தகாதவற்றிற்குச் சேர்க்கையைக் கூறுதலாகிற தகுதியின்மையணி தோன்றும்:
இது, வடமொழியில் விஷமாலங்கார மெனப்படும்.  எல்லா நீதிகளையு
முணர்ந்த தருமபுத்திரன் ‘சூதாடுதல் தவறு’ என்பதை உணர்ந்திருந்தும் சூதாட
இசைந்தது ஊழ்வினைப்பயனே யென்பது, பின்னிரண்டடியின் கருத்து.  பறை
வன்களிறு என்பதற்கு – பறைகளை (முதுகிலேற்றப்பட்ட) வலிய யானைகள்
என்று கூறுவாரு முளர்.  இவையோ, ஓகாரம்-இரக்கம்.  குறை – மதிக்குறை,
அறிவுகேடு.  தருமனுக்கு என்ன குறை வந்தது என இயையும். 

நெடு மா நகரில் சனம் அனைத்தும், நேயம் பெறக் கண்டு,
இவை கூற,
வடு மா மரபிற்கு உறத் தேடும் மன் பேர் அவையின்
முன் புக்காள்-
கொடு மா மலர்க் கண் புனல் சோர, குலைந்தே கிடந்த
குழல் சோர,
தடுமாறு உள்ளம் தனி சோர, தலை நாள் அளித்த
தழல் போல்வாள்.226.-திரௌபதி ராஜசபையைச்சேர்தல்.

நெடு மா நகரில் – மிகப்பெரிய அத்தினாபுரியிலுள்ள, சனம்
அனைத்தும் – மனிதர்களெல்லாரும், கண்டு – (திரௌபதியின் நிலைமையைப்)
பார்த்து, நேயம் பெற இவை கூற – (அவளிடத்து) அன்புமிகுவதனால்
இவ்வாறான வார்த்தைகளைச் சொல்ல, தலைநாள் அளித்த தழல்போல்வாள் –
முற்காலத்தில் (தன்னைப்) பெற்ற யாகாக்கினியைப் போல்பவளாகிய
திரௌபதி,-மா மலர் கண் கொடு புனல் சோர – பெரிய தாமரை  மலர்போன்ற
(தனது) கண்களிலே பொருந்தி நீர் பெருகவும், குலைந்தேகிடந்தகுழல் சோர –
(துச்சாதனன் பிடித்திழுக்கையில்) அவிழ்ந்துவிட்ட கூந்தல் விழுந்து புரளவும்,
தடுமாறு உள்ளம் தனி சோர – கலக்கங் கொண்ட மனம் தனியே
[துணையின்றிச்] சோர்வடையவும், மா மரபிற்கு வடு உற தேடும் மன் பேர்
அவையின் முன் – (தனது) பெரிய வமிசத்துக்குப் பழிமொழியை மிகுதியாக
உண்டாக்குகின்ற துரியோதனராசனது பெரிய சபைக்கு முன்னாக, புக்காள் –
போய்ச் சேர்ந்தாள்; (எ – று.)

    மகாபதிவிரதையாகிய திரௌபதியைத் தீண்டக்கூடாத காலத்தில்
அநியாயமாய்ப் பலர் முன்னிலையில் மானபங்கமுண்டாகுமாறு சபைக்குப்
பிடித்திழுத்துக் கொண்டு வரும்படி கட்டளையிட்டன னாதலால், துரியோதனனை,
‘வடு மாமரபிற்கு உறத்தேடும் மன்’ என்றார்; மகாபாதகனைப் பெறுவது
குலத்திற்கே வசைக்கிடனா மென்க.  வடு – புண்பட்டதனாலான தழும்பு: இங்கு
நெடுநாள் நிற்கும் பழிக்கு இலக்கணை. ‘இவை’ என்றது – கீழ் ஐந்து கவிகளிற்
கூறியவற்றைக் குறிக்கும்.  கொடும்புன லெனப் பண்புத்தொகையாக இயைத்து,
(நூற்றுவருடைய குடியைக் கெடுத்தற்குக் காரணமாகுமாறு) கொடிய துயர்க்கண்ணீர் என்றும்பொருள் கூறலாம்:  எளியாரைக் காணரமின்றி வலியார் வருத்த
அவ்வெளியார் அதற்குமாறுசெய்ய வலியற்றவராய் அழுத கண்ணீர், முறைமை
தவறிய அவ்வலியாரை வருத்துமென்க.  “ஏழை யழுதகண்ணீர் கூரிய
வாளொக்கும் “, “துணையிலர். . . . . ., மாற்றத்தாற் செற்றாரென வலியார் –
ஆட்டியக்கால், ஆற்றாதவரழுத கண்ணீரவை யவர்க்குக், கூற்றமாய்
வீழ்ந்துவிடும்”, “மனு நெறி முறையின் வழக்கிழந்தவர்தாம், மனமுற மறுகிநின்
றழுத கண்ணீர், முறையுறத் தேவர் மூவர் காக்கினும், வழிவழியீர்வதோர்
வாளாகும்மே”, “அல்லற்பட்டாற்றா தழுத கண்ணீரன்றோ செல்வத்தைத்
தேய்க்கும் படை” என்பன இங்குக் காணத்தக்கவை.  ‘சோர’ என்ற சொல்
ஒருபொருளிலேயே பலமுறை வந்தது – சொற்பொருட்பின்வருநிலையணி.
திரௌபதி கற்பு நெறியில் மிகத்தூய ளாதலால் அவட்கு வேள்வித்தீயை
உவமை கூறினார்;  காரியமாகிய திரௌபதிக்கு அவள் தோற்றத்திற்குக்
காரணமான தழலை உவமைகூறியது ஏற்கும்.  கொடு=கொண்டு.  மலர் –
கருங்குவளையுமாம்.   

நாணே முதலாம் நாற்குணனும், நண்ணும் கற்பும்,
நயந்து அணிந்த
பூணே அனையாள் அழுது அரற்றி, புன் பேர் அவையில்
புகும் சோகம்
காணேம்’ என்று, நிலன் நோக்கி, கதிர் வேல் நிருபர்
இருந்து இரங்க,
கோணே நேர்பாடாய்  இருந்தான்,  குருடு என்று
உரைக்கும் கொடியோனே.227.-அச்சமயத்தில்எல்லாவரசரும் இரங்கித்தலை கவிழ,
திருதராட்டிரன் வாளாவிருத்தல்.

(மகளிர்க்குஉரிய), நாணே முதல்ஆம் நால்குணனும் – நாணம்
முதலாகிய நான்கு குணங்களையும், நண்ணும் கற்பும் – உறுதியாகப் பொருந்திய
கற்புநிலையையும், நயந்து  அணிந்த – விரும்பி (ஆபரணங்களைப்போல)
மேற்கொண்ட, பூணே அனையாள் – (உலகத்திற்கே) ஆபரணம்போலச்
சிறந்தவளாகிய திரௌபதி, அழுது அரற்றி – கதறியழுது கொண்டு, புல்பேர்
அவையில் புகும் – இழிவான அந்தப் பெரிய ராசசபையிலே புகும்போது
உண்டான, சோகம் – வருத்தத்தை, காணேம் – (கண்ணினாற்) காண மாட்டோம்,’
என்று – என்றுசொல்லி, கதிர் வேல் நிருபர் – ஒளியையுடைய
வேற்படையையேந்திய அரசர்கள், நிலம் நோக்கி இருந்து இரங்க –
(தலைகவிழ்ந்து) பூமியைப் பார்த்துக் கொண்டேயிருந்து வருந்த,- குருடு என்று
உரைக்கும் கொடியோன் – குருடனென்று சொல்லப்படுகின்ற கொடும்பாவியான
திருதராஷ்டிரன், கோணே நேர்பாடு ஆய் இருந்தான் – கோணலையே
நேராகக்கருதிச் சும்மா இருந்தான்; (எ – று.)

    திரௌபதி மிக்க அலங்கோலமாகப் பெருந்துக்கத்துடன் வருங்காட்சியைப்
பார்த்துச் சகிக்க முடியாதிருத்தலால், அவையிலுள்ள நிருபர் அவளைக் காணாது
தலைகவிழ்ந்து நிலம்நோக்குபவராயிருக்க, தனது புதல்வன் செய்த
பொல்லாங்குகளெல்லாம் மிகச் சரியானவையென்று அவற்றை அங்கீகரித்துக்
குருடான திருதராட்டிரன் கோணேநேர்பாடா யிருந்தானென்பதாம்.
‘மற்றையரசர்கள் நேர்மையை வளைவாகக் கொண்டனர் [நேராயிருப்பதை விட்டுத்
தலை குனிந்தனர்]; திருதராட்டிரனோ கோணலை நேராகக் கொண்டான்
[முறைகேடானதை நியாயமென எண்ணியிருந்தான்] எனச்சொற்போக்கில்
ஒருநயந்தொனித்தல் காண்க.  நாணம் மடம் அச்சம் பயிர்ப்பு என
மகடூஉக்குணம் நான்காம்; அவற்றுள் நாணமாவது – செய்யத்தகாதவற்றில்
உள்ளமொடுங்குதல்; மடமாவது – எல்லாம் அறிந்தும் ஒன்றும் அறியாது
போலிருத்தல்;  கொளுத்தக்கொண்டு கொண்டது விடாமையெனவும் படும்;
அச்சமாவது – புதியதைக் கண்டவிடத்து அஞ்சுதல்; பயிர்ப்பாவது – தன்
கணவனல்லாத ஆடவரது ஆடை முதலியன தன்மேற்பட்டால் அருவருத்தல்.
உலகத்து மகளிர்க்கெல்லாம் ஆபரணம்போலச் சிறந்து நிற்றலால் திரௌபதி,
‘பூணேயனையாள்’ எனப்பட்டாள். துஷ்டசதுஷ்டர் கூடியிருத்தலாலும், இவ்வாறு
முறைகேடான செய்கையைத் தமது பெருவலியால் நிகழவொட்டாது தடுக்காத
அரசர்கள் பலரும் நிறைந்திருத்தலாலும், அச் சபை ‘புன்பேரவை’ எனப்பட்டது.
குருடு – இழிப்பினால், உயர்திணையை அஃறிணையாகக்கூறிய திணைவழுவமைதி. 

மேகம் குருதி பொழிந்து, அகல் வான் மீனும் பகலே
மிக விளங்கி,
கம்பமும் உற்று, உற்பாதம், போது, யாவும் புரிந்தனவால்;
நாகம் புனை பொன் துவசனுடன் நவிலாநின்ற நால்வருமே
சோகம்  பிறவாது  இருந்தார்;  மற்று ஒழிந்தார்
யாரும் சோகித்தார்.228.-துஷ்டசதுஷ்டர்கள் தவிரயாவரும் துயருறுதல்.

மேகம் குருதி பொழிந்து – மேகங்கள் இரத்த மழையைப்
பெய்தும், அகல் வான் மீனும் பகலே மிக விளங்கி – பரந்த ஆகாயத்திலே
நட்சத்திரங்களும் பகற்காலத்திலேயே மிகுதியாக ஒளிவிட்டும், பூ கம்பமும்
உற்று – பூமி நடுங்குதலுண்டாகியும், (இவ்வாறு), உற்பாதம் யாவும் – பலவகை
உற்பாதங்களும், போது – அப்பொழுது, புரிந்தன – நிகழ்ந்தன;  நாகம்புனை
பொன் துவசனுடன் நவிலாநின்ற நால்வரும் – பாம்பினுருவத்தை யெழுதிய
அழகிய துவசத்தையுடையவனான துரியோதனனோடு சேர்த்துக் கூறப்படுகிற
(துச்சாதனன் கர்ணன் சகுனி ஆகிய) நான்கு பேரும், சோகம் பிறவாது
இருந்தார் – சிறிதும் துக்கங்கொள்ளாதிருந்தார்கள்;  மற்று ஒழிந்தார் யாரும் –
இவர்களை யொழிந்த (அச்சபையிலிருந்த) மற்றையோர் யாவரும், சோகித்தார்
– துயருற்று வருந்தினார்கள்; (எ – று.)-ஆல் – ஈற்றசை.

    மேகங்கள் இரத்தமழை பொழிதலும், இரவில் விளங்கவேண்டிய
நட்சத்திரங்கள் பகலிலே விளங்குதலும், பூகம்பமுண்டாதலும் முதலியன – இனி
விரைவில் நேரக்கூடிய பெரும் பொல்லாங்குகளை முன்னரே அறிவிக்குந் தீ
நிமித்தங்களாம்.  துரியோதனனுடன் சேர்த்து நால்வர் என்பது ‘நாகம் புனை
பொற்றுவசனுடன் நவிலா நின்ற நால்வரும்’ என்பதன் கருத்து. போதியாவும் –
குற்றியலிகரம். மேகம், பூகம்பம், உத்பாதம், நாகம், த்வஜம், சோகம் –
வடசொற்கள்.  நால்வருமே, ஏகாரம் – பிரிநிலை.  மற்றொழிந்தார், மற்று –
அசை.  ‘பகலே விளங்கி’என வந்ததனால், ‘உற்பாதம் போதியாவும் புரிந்தன’
என்பதற்கு – (இவ்வாறு) தீ நிமித்தங்கள் பகற்காலமெல்லாம் நிகழ்ந்தன
வென்னலாகாது.  

வீமன் கதைமேல் கை வைக்க, விசயன் சிலைமேல்
விழி வைக்க,
தாமம் புனை தோள் இளையோரும் தம்தம் கருத்தில்
சினம் மூட்ட,
தூமம் படு செந் தழல் அவியச் சோனை மேகம்
சொரிவதுபோல்,
நாமம் தருமன் எனத் தக்கோன் இளையோர் ஆற,
நவிலுற்றான்:229.-வீமன் முதலிய தம்பிமார்மிக்கசினங்கொள்ள,
தருமபுத்திரன் அவர்களைச் சாந்தப்படுத்தத் தொடங்குதல்.

(திரௌபதியைத் துச்சாதனன் அலங்கோலமாக இழுத்து
வருவதைக் கண்டபோது),- வீமன் – வீமசேனன், கதைமேல் கை வைக்க –
(தனது சத்துருக்காதினி யென்னுங்) கதாயுதத்தின்மேற் கையை வைக்கவும்,-
விசயன் – அருச்சுனன், சிலைமேல் விழி வைக்க-(தனது காண்டீவமென்னும்)
வில்லின்மேல் நோக்கம் வைக்கவும்,- தாமம் புனை தோள் இளையோரும் –
மலர் மாலையணிந்த தோள்களையுடைய மற்றைத்தம்பியராகிய நகுல
சகதேவர்களிருவரும், தம் தம் கருத்தில் சினம் மூட்ட – தம் தம் மனத்திலே
கோபத்தை மிகுதியாகக் கொள்ளவும்,- தூமம் படு செம் தழல் அவிய சோனை
மேகம் சொரிவதுபோல்-புகையமைந்த சிவந்த அக்கிணி தணியுமாறு விடாப்
பெருமழையை மேகங்கள் பொழிவதுபோல, நாமம் தருமன் என தக்கோன் –
தருமனென்று பெயர் கூறத்தக்க தகுதியையுடையவனாகிய (அவர்களது
மூத்தோனான) யுதிஷ்டிரன், இளையோர் ஆற – அந்தத் (தனது) தம்பியர்
நால்வரும் (மனத்திற்) சினந்தணியும்படி, நவில் உற்றான் – சொல்லத்
தொடங்கினான்: (எ – று,)- அதனை, அடுத்த கவியிற் காண்க.

     வீமன் கதைமேற் கைவைத்ததும், விசயன் சிலைமேற் கை வைத்ததும் –
திரௌபதிக்குப் பெருந்தீங்கிழைத்த பகைவரை அவற்றால் அழிப்போமென்று
குறிப்பித்தவாறாம்.  மற்றை நால்வரைப் போலவே தானும் சினங்கொள்ள
வேண்டிய இச்சமயத்திலும் தருமபுத்திரன் தான் பொறுத்ததோடு நில்லாமல்,
மற்றையோரையும் பொறுப்பித்து இவ்வாறு தரும குணத்தை மேற்
கொண்டிருத்தலால், ‘நாமம் தருமனெனத்தக்கோன்’ என்றார்; இதுவும், கீழ் 95-
ஆஞ் செய்யுளிற் கூறியதுபோன்ற பிரிநிலைநவிற்சியணியாம்.  தழலைச்
சோனைமாரி சொரிந்து தணிப்பது போலத் தம்பிமாரது சினத்தைத் தருமனது
சாந்தமொழிகள் தணித்து அடக்குமென்க.  உவமையணி.  சோனை –
விடாப்பெருமழை.  பீமன், கதா, விஜயன், தாமம், தூமம், நாமம், தாமன் –
வடசொற்கள்.

தேம் போது அனைத்தும் மெய் சாயும், சில போது;
அலரும், சிலபோது;
வேம் போது, அங்கு வாழ்வ எலாம் வெங்
கானுடனே வேவாவோ?
ஆம்போது, ஆகும்; அது அன்றி, ஆய பொருள்கள்,
அம் முறையே,
போம்போது, அனைத்தும் போம்; முன்னம் பொறுத்தீர்;
இன்னம் பொறும்’ என்றான்.230.- தருமபுத்திரன் தனதுதம்பிமாரைச்
சாந்தப்படுத்துதல்.

 (தருமன் தனது தம்பியரை நோக்கி),- ‘தேம்போது அனைத்தும்
– தேன்பொருந்திய (மற்றை) மலர்களெல்லாம், மெய்சாயும் – வாடிக்கிடக்கின்ற,
சிலபோது – சில சமயங்களிலே, சிலபோது-சில சாதி மலர்கள், அலரும்-
மலர்வனவாயிருக்கும்; [அது போலவே நாமெல்லோரும் வருந்தும்
இச்சமயத்தில் துரியோதனாதியர்கள் மகிழ்கின்றார்கள்]; (ஆயினும்),- ஆம்
போது ஆகும் – நல்வினை பலிக்கும்பொழுது (பொருள்கள் தாமே) வந்து
சேரும்; வெம் கான் வேம் போது-கொடிய காடு தீப்பற்றி எரியும் பொழுது,
அங்கு வாழ்வ எலாம் – அவ்வனத்தில் வாழ்கின்ற பிராணிகளெல்லாம், உடனே
வேவாவோ-அக்காட்டோடு ஒரு சேர அழிந்து விடுமன்றோ! அ முறையே-
அம்முறையிலே, அது அன்றி-உண்டாகும் போது உண்டாவதல்லாமல், ஆய
பொருள்கள் போம் போது – அங்ஙனம் உண்டாகிய பொருள்கள்
(தீவினைப்பயனால்) அழியவேண்டிய காலத்தில், அனைத்தும் போம்-எல்லாம்
போய் விடும்; (ஆகையால்), முன்னம் பொறுத்தீர் – முன்பு பல சமயங்களிற்
பொறுத்திருந்தீர்கள்: இன்னம் பொறும்-இன்னும் சிறிது காலம் (நமக்கு
நல்லகாலம் வரும்வரையில்) பொறுத்திருங்கள், என்றான்-என்று கூறித்
தேற்றினான்; (எ – று.)

     நாமும் நமக்காக உலகத்தார் பலரும் வருந்துகிற இச் சமயத்தில்
பகைவர்களாகிய துரியோதனாதியர் முகமலர்ந்து மனங்களிப்பது இயல்பே
யென்ற கருத்தை விளக்குதலால், முதலடி – பிறிதுமொழிதலணியாம். பின்
மூன்றடிகளில்-சிறப்புப் பொருளைச் சமர்த்திக்கப் பொதுப்பொருள் கொண்டு
வந்த வேற்றுப்பொருள்வைப்பணியும், பிறிதுமொழிதலும், கலந்துவந்தன.
ஆகூழினால் வளருந் தன்மையுடைய பொருள்களெல்லாம் போகூழ்
வருங்காலத்தில் இருந்த இடந் தெரியாது அழிந்தொழிந்துவிடுதல் திண்ணமே;
ஆகவே, துரியோதனாதியர் இப்பொழுது நல்லகாலமிருந்து மேன் மேல்
வளர்வாரானாலும் விரைவிலேயே போங்காலம் நேர்ந்து பொன்றி விடுவார்கள்:
அங்ஙனம்  அவர்கட்கு அழிவு காலம் நேர்கிற வரையில் நாம் பொறுத்திருக்க
வேண்டு மென்றவாறாம்.  “நல்லாள், உடன்படின் தானேபெருகும்
கெடும்பொழுதிற், கண்டனவுங் காணாக் கெடும்”, “ஆம்பொருள்க ளாகுமது
யார்க்குமழிக்கொண்ணா, போம்பொருள்கள் போகுமது பொறியின்வகை
வண்ணம்”, “ஆகுவ தாகுங் காலத் தழிவது மழிந்து சிந்திப், போகுவ தயலே
நின்று போற்றினும் போதல் செய்யும்” என்றவை இங்கு நோக்கத்தக்கன.  இனி
இரண்டாமடியிற் கூறிய உபமானத்தால், யான் துன்பமனுபவிக்கின்றபோது
என்னைச் சேர்ந்தவர்களாகிய நீங்களும் துன்பமனுபவிக்கின்றீர் என உபமேயம்
அழைத்து, அதனையும் பிறிதுமொழிதலணியென்பாருமுளர். கங்கையிற் கழுமரம்
நாட்டியும் விஷமூட்டியும் வீமனைக் கொல்லத் துணிந்த காலத்திலும்,
அரக்குமாளிகையி லிட்டுப்பாண்டவர்களையெல்லாம் கொல்லத் துணிந்த
காலத்திலும், மற்றும் பல சமயங்களிலும் பொறுத்தார்களாதலால் ‘முன்னம்
பொறுத்தீர்’ என்றும் “காலங்கருதியிருப்பர் கலங்காது, ஞாலங்கருதுபவர்”
என்றபடி தாம் வெல்லுதற்கு ஏற்ற காலம் வாய்க்குமளவும், அதனை
எதிர்பார்த்துப் பொறுத்திருக்க வேண்டுமென்பது அரசநீதியாதலால்,
‘இன்னம்பொறும்’ என்றும் தருமன் கூறினான். பொறுத்தீர் –
பொறுத்திருந்தவர்களே! என விளியாகக் கொள்ளுதலும் ஒன்று. 

     போது – மலரும்பருவத்து அரும்பு.  தேன்+போது = தேம்போது; (நன்-
மெய்-11).  மெய்சாயும்-அலரும்; முன்னம், இன்னம் என மாறுபட்ட சொற்கள்
வந்தவை-தொடைமுரண். வேவா-‘வே’ என்ற வினைப்பகுதியினடியாப்பிறந்த
எதிர்மறைப் பலவின்பால் வினைமுற்று.  வேவாவோ – இரண்டு எதிர்மறைகள்
ஒருங்குசேர்ந்து ஓருடன்பாட்டுப்பொருளை வற்புறுத்தின.  ஆம், போம் –
செய்யுமென்னும் வாய்பாட்டுச்சொற்கள் ஈற்றுயிர்மெய் சென்றன; (நன்:வினை –
22)   

வாரும் கண்ணீர் வளர் கொங்கை வரைமேல் அருவி
என வீழ,
தாரும் குழலும் மின்னுடனே தலம் சேர் கொண்டல்
என வீழ,
கூரும் துயரினுடன் வீழ்ந்து, ‘கோ கோ!’ என்று
கோச் சபையில்,
சோரும் கொடியை முகம் நோக்கி, துச்சாதனன் மெய்
சுடச் சொன்னான்:231.- திரௌபதியின் மிக்கதுயரம்.

வாரும் கண் நீர்-வழிகிற கண்ணீரானது, வளர் கொங்கை
வரைமேல் – மேன்மேல் வளர்கின்ற தனங்களாகிய மலையின் மீது, அருவி
என-நீர் அருவி போல,வீழ-பெருகவும்,-தாரும் குழலும்-(சூடிய) மலர்
மாலையும் கூந்தலும், மின்னுடனே தலம் சேர் கொண்டல் என வீழ –
மின்னலோடு தரையில்படிகின்ற மேகம் போலக் கீழே விழவும்,- கோ
சபையில்-அரச சபையில், கூரும் துயரினுடன் வீழ்ந்து-மிகுகின்ற
துன்பத்துடனே (பூமியில்)விழுந்து புரண்டு, கோ கோ என்று சோரும் –
கோவென்று கதறியழுதுவருந்துகிற, கொடியை-பூங்கொடி போன்றவளான
திரௌபதியினது, முகன்-முகத்தை, நோக்கி-பார்த்து,-துச்சாதனன்-, மெய்சுட –
(அவளது) உடம்பு கொதிக்குமாறு, சொன்னான்-(மிக்க கொடுமையாகக்)
கூறுபவனானான்; (எ – று.)-அதனை, அடுத்த கவியிற் காண்க.

    திரௌபதியின் கொங்கைகட்கு வரையும், அவற்றின் மேல் வழியுங்
கண்ணீர்ப்பெருக்குக்கு மலைமீது பெருகும் நீரருவியும், கூந்தலுக்கு மேகமும், அக்கூந்தலிற் சூடியுள்ள மலர்மாலைக்கு மேகத்தில் தோன்றிய மின்னலும்
உவமைகளா மெனக் காண்க.  முதலடி – உருவகத்தை அங்கமாகக்கொண்ட
உவமையணியும், இரண்டாமடி-இல்பொருளு வமையணியுமாம்.  தார்-மின்,
குழல் – மேகம் என முறையே சென்று இயைவது –
முறைநிரனிறைப்பொருள்கோள்; இதனை, அணிநூலார்,
முறைநிரனிறையணியென்பர். மனம் வெதும்பும்போது உடம்பும்
வெதும்புமாதலால், ‘மெய்சுட’ என்றார்.  கோ கோவென்று – இரக்கவொலிக்
குறிப்பிடைச்சொல்.    

மன் வந்து இருந்த சங்கத்து, உன் மாமன் இருந்தான்;
ஐவரும் உன்
முன் வந்திருந்தார், முன் கொண்ட முறையால் முயங்கும்
முடி வேந்தர்;
மின் வந்தனைய நுண் இடையாய்! விழி நீர் சொரிந்து,
மெலிய, உனக்கு
என் வந்ததுகொல்? பொதுமகளிர்க்கு அரிதோ, விழி நீர்?
எளிது!’ என்றான்.232.- துச்சாதனன் கூறியகடுமொழி.

அப்பொழுது துச்சாதனன் திரௌபதியை நோக்கி), ‘மின்
வந்து அனைய நுன் இடையாய்-மின்னல் வந்து பொருந்தினாற் போன்ற
நுண்ணிய இடையையுடையவளே! மன் வந்து இருந்த சங்கத்து-(பல அரசர்கள்)
வந்து கூடியுள்ள  இச் சபையில், உன் மாமன் இருந்தான்-உனது மாமனாராகிய
திருதராட்டிரன் இருக்கின்றான்; (அன்றியும்), முன் கொண்ட முறையால் முடி
வேந்தர் ஐவரும் – முன்னே (உன்னை) விவாகஞ் செய்து கொண்ட
முறைப்படியே (உன்னைத்) தழுவுகிற கிரீடாதிபதிகளான பாண்டவரைவரும்,
உன்முன் வந்து இருந்தார் – உன்னெதிரில் வந்திருக்கின்றார்கள்; (இவ்வாறு
உன்னைத்சேர்ந்தவர்கள் அருகிலிருக்கையில்), விழி நீர் சொரிந்து மெலிய
உனக்கு என் வந்தது கொல் – கண்ணீர் சொரிந்து அழும்படி உனக்கு
(இப்பொழுது) என்ன கதியின்மை நேரிட்டதோ? (ஒன்றும் நேரவில்லையாதலால்
அழக் காரணமில்லையே!) பொது மகளிர்க்கு- (பல- ஆடவரும் இன்பநுகருமாறு)
பொதுவாயிருக்கின்ற வேசையர்க்கு, விழிநீர் – (நினைத்தபோதே) கண்ணீர்
(பெருக்குதல்), அரிதோ, அருமையானதோ? எளிது-எளிமையானதே,’ என்றான்-;
(எ – று.)

     இங்கு உனக்கு ஏதாவது ஆபத்து நேர்ந்தால் உன்னை
அவ்வாபத்தினின்றும் பாதுகாப்பதற்கு உனது மாமனாரும் உனது கணவர்களும்
இருக்கையில், நீ புலம்பி வீணே பாசாங்கு செய்ய வேண்டா எனத் துச்சாதனன்
கடுமையாகக் கூறினனென்க. ‘உன்மாமன்’ என்றது, விதுரனை என்றலுமாம்.
வற்புறுத்துதற்கு, ‘அரிதோ? எளிது,’ என வினாவும் விடையுமாகிய இரண்டு
வாய் பாட்டாலுங் கூறினான்.  பாண்டவரைவரும் திரௌபதிக்கு ஓரோராண்டு
ஓரொரு தலைவராய்க் கொழுநராயினமையால், ‘முறையால் முயங்கு
முடிவேந்தரைவரும்’ என்றான்.  திரௌபதி காரணமின்றி அழுகின்றா ளென்னுஞ்
சிறப்புப் பொருளை ‘பொதுமகளிர்க்கு விழிநீர் அரிதோ? எளிது’ என்று ஈற்றடியிற்
கூறிய பொதுப் பொருள் சமர்த்தித்து நின்றது –
வேற்றுப்பொருள்வைப்பணி
யாம். மாமன் இருந்தான், ஐவரும் வந்திருந்தார் –
இயல்பினால் நிகழ்காலம் இறந்தகாலமாகச் சொல்லப்பட்ட  காலவழுவமைதி

பொல்லா வசையே, புகழ் பூணாப் புல்லன் புகல,
இதற்கு ஒன்றும
சொல்லாது இருந்த பேர் அவையைத் தொழுதாள்,
அழுதாள், சோர்வுற்றாள்;
‘மல்  ஆர்  திண்  தோள்  மாமாவோ!
மந்தாகினியாள் மதலாயோ!
எல்லா நெறியும் உணர்ந்தவருக்கு, இதுவோ மண்ணில்
இயல்பு?’ என்றாள்.233.- அதுகேட்டுத் திரௌபதிமுறையிடுதல்.

பொல்லா வசையே புகழ் பூண் ஆ – பொல்லாத (மிகக்கொடிய)
பழிப்பையே  (தனக்குப்) புகழும் ஆபரணமுமாகக் கொண்டு, புல்லன் –
அற்பனான துச்சாதனன், புகல – (இவ்வாறு கடுமையாகச்) சொல்ல,- இதற்கு
ஒன்றும் சொல்லாது இருந்த பேர் அவையை – இந்த [துச்சாதனனது] வசை
மொழியைக் குறித்து ஒன்றும் பேசாதிருந்த பெருஞ்சபையோரை நோக்கி,
(திரௌபதி), அழுதாள் – புலம்பி, சோர்வுற்றாள் – ஏக்கமுற்றவளாய் நின்று,
தொழுதாள் – கைகூப்பி வணங்கிக்கொண்டு,- ‘மல் ஆர் திண் தோள்
மாமாவோ – மற்போர்க்கு இயைந்த வலிய தோள்களையுடைய மாமனே!
மந்தாகினியாள் மதலாயோ – கங்கா தேவியின் புத்திரனே! எல்லாம் நெறியும்
உணர்ந்தவருக்கு – நீதி நெறிகளெல்லாவற்றையுங் கற்றுத் தேர்ந்தவர்களாகிய
உங்கட்கு, இது-, மண்ணில் – இந் நிலவுலகத்தில், இயல்புஓ-இயற்கையான
நற்குணமாகுமோ?’ என்றாள் – என்று கூறினாள்; (எ – று.)

     ‘இது’ என்றது, தருமபுத்திரன் தன்னைத்தோற்ற பின்பு பந்தயமாக
வைத்ததனால் முறைமையாகச் சயிக்கப்படாத என்னைத் தீண்டக்கூடாத
காலத்திற் பலர்கூடிய சபையிலே துச்சாதனன் வசைமொழிகூறி இழுத்துக்கொண்டு
வருகையிலும் ஒன்றும் பேசாது மௌனமாயிருத்தலைக் குறிக்கும். கல்வி ஒழுக்கம்
முதலிய புகழ்க்குக் காரணமான மேன்மைகளைச் சிறிதும் பெறாது
இழிகுணத்தையே பாராட்டி மிகக்கொண்டானாதலால், ‘பொல்லாவசையே புகழ்
பூணா’ என்றார்; “இசையினும் பெருக நன்றெனத் தனதியற்கையால்
மிகவளர்த்திடும், வசை” என்பது, ஒப்புநோக்கத்தக்கது. வசையே, ஏகாரம் –
பிரிநிலையோடு தேற்றம்.  இனி, புகழ்பூணா புல்லன் – கீர்த்தியை
மேற்கொள்ளாத அற்பனாகிய துச்சாதனன், பொல்லாவசையே புகல – பொல்லாத
நிந்தை மொழிகளையே எடுத்துக்கூற என்றும் பதவுரை கூறலாம். தொழுதாள்,
அழுதாள்,’ சோர்வுற்றாள் – முற்றெச்சங்கள். திருமாலின் திருவடித் தீர்த்தமானது
வானத்திற் பாய்கையில் மந்தாகினி என்றும், பூமியிற்பாய்கையில் கங்கை
யென்றும், பாதலத்திற் பாய்கையில் போகவதி யென்றும் பெயர் பெறும்.
மாமாவோ – விளியுருபாக ஈறுகெட்டு அயல்நீண்டு, புலம்பலில் ஓகாரம்
மிக்குவந்தது,” “புலம்பின் ஓவுமாகும்” என்பது நன்னூல். மதலாயோ-மதலையென்பதன் விளி: ஈற்று ஐகாரம் ‘ஆ’ய் எனத்திரிந்து.  புலம்பலில் ஓகாரம்
பெற்றுவந்தது.  ‘மந்தாகினியாண் மதலாயோ’ என்றது வீடுமனை.
உணர்ந்தவருக்கு-முன்னிலைப் படர்க்கை.   

இன்னல் படு சொல் பாஞ்சாலி இரக்கம்தனைக் கண்டு,
இரக்கம் உறா,
‘மன்னற்கு இளையோய்! தவறு உரைத்தல் வழக்கோ,
வடமீன் அனையாளை?’
என்னக் கழறி, ‘நீ உரைத்த எல்லாம் அரசற்கு
இயம்பு’ என்றான்-
முன்னர்ப் புகலும் குருகுலத்தோர் முதல் ஆம்
வாய்மை மொழியோனே.234.- வீடுமன் கூறுதல்.

முன்னர் புகலும் குருகுலத்தோர்-சிறப்பாகப் பேசப்படுகிற
குருகுலத்தோருள், முதல் ஆம் – பெரியவனும், வாய்மை மொழியோன் –
சத்தியமான பேச்சையுடையவனுமாகிய வீடுமன், இன்னல்படும் சொல் பாஞ்சாலி
இரக்கந்தனை கண்டு – துன்பத்தைத் தெரிவிக்கின்ற சொற்களையுடைய
திரௌபதியினது புலம்புதலைக்  கண்டு, இரக்கம் உறா – இரக்கங்கொண்டு,-
(துச்சாதனனை நோக்கி), மன்னற்கு இளையோய் – துரியோதனராசனுக்குத்
தம்பியே! வடமீன் அனையாளை – அருந்ததியை யொத்த பதிவிரதையாகிய
திரௌபதியைக் குறித்து, தவறு உரைத்தல் – (‘பொது மகள்’ என்று) இழிவாகச்
சொல்வது, வழக்கோ-நீதி முறைமையாகுமோ, என்ன கழறி – என்று சொல்லி,-
(திரௌபதியை நோக்கி), ‘நீ உரைத்த எல்லாம் – நீ முன்னே கூறிய
செய்திகளையெல்லாம், அரசற்கு இயம்பு – (இப்பொழுது) திருதராஷ்டிர
மகாராஜன் முன்னிலையிற் சொல்வாய்,’ என்றான்-; (எ – று.)

     இதனால் வீடுமன் துச்சாதனனது தீச்செய்கையைத் தவிரக் கூறி,
திரௌபதிக்குத் தேறுதலாகுமாறு அரசனிடத்துக் குறை தெரிவித்துக் கொள்ளச்
சொல்லினனென்க.  திருதராட்டிரன் அரசனாய்ப் பெரியோனாதலால்,
அவனிடத்திற்கூறுமாறு வீடுமன் திரௌபதிக்குச் சொல்லின னென்க.

     பீஷ்மன் ‘உரைத்தவெல்லாம்’ என்று குறித்தது, கீழ் 211-ஆஞ் செய்யுளில்
திரௌபதி வார்த்தையாகப் பிராதிகாமி கூறியவற்றை.  பாஞ்சாலி – பாஞ்சால
தேசத்தரசனான துருபதனது மகள்.  இரக்கமுறா என்றான் என இயையும்;
இனி, இரக்கமுறா மன்னற் கிளையோய் என இயைத்து, சற்றும் மனமிரங்காத
துச்சாதனனே! என்றும் பொருள் கூறலாம்.  உரைத்த – பலவின்பாற் பெயர்.
வீடுமன் வயோவ்ருத்தனும் சீலவ்ருத்தனுமாவனென்பது, ஈற்றடியினால்
விளக்கப்பட்டது.  ‘தருமபுத்திரனே திரௌபதியின் ஆட்சேபத்திற்குச்
சமாதானஞ் சொல்லத்தக்கவன்’ என்று வீடுமன் கூறியதாக வியாசபாரதத்திற்கு
ஏற்ப, ‘மன்னற்கு இயம்பு’ என்பதற்கு – யுதிஷ்டிரராஜனிடத்திற் சொல் எனப்
பொருள்கூறுதல் சிறக்கும்.     

மன் தோற்றனன் வெஞ் சூது ஆகில், வழக்கால் கொண்மின்;
மன் அவையில்
முன் தோற்றனனோ, என்னையும்? தான் முன்னே இசைந்து
தனைத் தோற்ற
பின் தோற்றனனோ? கரியாகப் பெரியோர் உண்மை
பேசுக!’ என,
மின் தோற்றனைய நுண் இடையாள், விழி நீர்
வெள்ளமிசை வீழ்ந்தாள்.235.-திரௌபதி சபையோரைநோக்கி நீதி கூறுமாறு
வேண்டுதல்.

மின் தோற்று அனைய நுண் இடையாள் – மின்னலும்
தோற்றுவிட்டாற் போன்றிருக்கிற [மின்னலினுஞ் சிறந்த] நுண்ணிய
இடையையுடையவளான திரௌபதி,-‘மன்வெம் சூது வழக்கால் தோற்றனன்
ஆகில் – தருமராசன் கொடிய சூதாட்டத்தில் (என்னை) முறைமைப்படியே
(பந்தயம் வைத்துத்) தோல்வியடைந்திருந்தால், கொண்மின்-(உமது
விருப்பத்தின்படியே என்னையும் அடிமை) கொள்ளுங்கள்; மன் அவையில் –
ராஜசபையிலே, தான் – அந்தத் தருமபுத்திரன், என்னையும் முன்
தோற்றனனோ – (மற்றைப் பொருள்களோடு) என்னையும் (தன்னைத்
தோற்பதற்கு) முன்னமே தோற்று விட்டானோ? (அன்றி), முன்னே தனைஇசைந்து
தோற்றபின்-முதலில் தன்னைப் பந்தயமாகக் குறிப்பிட்டுத் தோற்றபின்பு,
தோற்றனனோ-(என்னைத்) தோற்றுவிட்டானோ? பெரியோர் கரியாக
உண்மைபேசுக-(இங்கு உள்ள) பெரியோர்கள் (இவ்விஷயத்தில்) சாட்சியாக
உண்மை சொல்லுக,’ என – என்றுகூறி,  விழிநீர் வெள்ளம் மிசை வீழ்ந்தாள்
-(தனது) கண்ணீர்ப் பெருக்கின்மேல் விழுந்து வருந்தினாள்; (எ -று.)

     கீழ்ப் பிராதிகாமி திரௌபதியின் பேச்சாகக் கற்பித்துக் கூறியது
சரியாகுமாறு திரௌபதியும், சபையோரை நோக்கி, ‘பெரியோர்களே!
தருமபுத்திரன் தன்னைத் தோற்ற பின்பு என்னைத் தோற்றானோ? என்னைத்
தோற்றபின்பு தன்னைத்தோற்றானோ? இவ்விஷயத்தைப்பற்றி நீங்கள் உண்மை
கூறுங்கள்;  தருமபுத்திரன் தன்னைத் தோற்பதற்கு முன்னமே என்னைத்
தோற்றிருப்பின் என்னை அடிமையாகக்கொள்வதில் எனக்கு ஆட்சேபமில்லை;
தருமபுத்திரன் தன்னைத் தோற்ற பிறகு ஐவர்க்கும் பொதுவாகிய என்னைத்
தோற்றிருப்பின், அடிமையாகிய தான் என்னைப் பந்தயம் வைத்து இழப்பதற்கு
உரிமையில்லான்; அப்போது என்னை அடிமையாக்கச் சிறிதும் முறைமையில்லை’
எனத் தன் கருத்தை வெளியிட்டன ளென்க. முன்பு தன்னைத் தோற்றுப்
பிறர்க்கு அடிமையாய் விட்டவனுக்கு மண் பெண் பொன் முதலியவற்றின்
உரிமையில்லை யென்னுங் கோட்பாட்டினால் இங்ஙனங்கூறின ளென்க.
‘கொண்மின்’ என்றது, துரியோதனாதியரை நோக்கியது. ‘மன்வெம் சூது
தோற்றனன் ஆகில் வழக்கால், கொண்மின்’ என்பதற்கு-தருமராசன் கொடிய
சூதாட்டத்தில் தோல்வியடைந்திருந்தால் (அவனது பொருள்களை) நியாயப்படி
(நீங்கள்) கைக்கொள்ளுங்கள் என்று பொதுப்படவுரைத்த தாகப்பொருள்
கூறலுமாம்.  தோற்று-எச்சத்திரிபாக, தோற்றாலெனப் பொருள் தந்தது; இனி,
தோற்ற தனைய என்பதன் தொகுத்தலெனவும், ‘தோன்று’ என்ற முதனிலை திரிந்த
தொழிற்பெயராக்கொண்டு மின்னல் தோன்றுதலையொத்துத் தோன்றுகின்ற
எனவும் பொருள் கொள்ளலாம்.  

மையோடு அரிக் கண் மழை பொழிய, வாடும் கொடியின்
மொழிக்கு ஆகார்;
வெய்யோன் எண்ணம் தனக்கு ஆகார்; விறல் வேல்
வேந்தர் வெரூஉக்கொண்டு,
பொய்யோ  அன்று,  மெய்யாக,  புனை
ஓவியம்போல் இருந்தாரை,
ஐயோ! அந்தக் கொடுமையை யாம் உரைக்கும் பொழுதைக்கு
அதி பாவம்!236.- சபையோர்மௌனமாயிருந்தமைக்குக் கவி இரங்கிக்
கூறுதல்.

விறல் வேல் வேந்தர் – (அந்தச்சபையிலுள்ள)
பராக்கிரமமுள்ளாரான வேலாயுதத்தையேந்திய அரசர்கள்,-வெரூஉக் கொண்டு-
(துரியோதனனிடத்து) அச்சங்கொண்டிருப்பதனால், மையோடு அரிகண் மழை
பொழிய-மையையும் செவ்வரியையுமுடைய கண்களிலிருந்து மழைபோல
நீர்பெருக, வாடும் கொடியின்-வாடுகின்றவளாகிய பூங்கொடி போன்ற
திரௌபதியினது, மொழிக்கு-வினாமொழிக்கு, ஆகார்-(சரியானபடி)
விடைகூறத்திறமற்றவர்களாயும்,-(நடந்த உண்மை வேறுவகையாக
யிருப்பதனால்), வெய்யோன் எண்ணம் தனக்கு ஆகார்-கொடியோனாகிய
துரியோதனனது எண்ணத்திற்கு உடன்பட்டுக் கூறாதவர்களாயும்,-பொய்யோ
அன்று மெய் ஆக புனை ஓவியம் போல் இருந்தார்-பொய்யேயன்று
உண்மையாகவே அழகாக எழுதிய சித்திரப்பாவைபோல(ச் சிறிது அசைதலுமின்றி)
இருந்தார்கள்;  ஐயோ-! அந்த கொடுமையை-அந்தக் கொடுமையைக் குறித்து,
யாம்-, உரைக்கும் பொழுதைக்கு – எடுத்துச்சொன்னாலும் அப்பொழுது,
அதிபாவம்-(நமக்குப்) பெரும்பாவம் உண்டாகும்; (எ – று.)

    கொடும்பாவியாதலால், துரியோதனனை ‘வெய்யோன்’ என்றே கூறினார்.
சபையிலிருந்த அரசர்களெல்லாரும் துரியோதனனிடத்து அச்சத்தால்
முறைப்படி திரௌபதிக்குச் சார்பாகப் பேசுவதற்கு அஞ்சியும், மனச்சாட்சிக்கு
மாறாயிருத்தலால் துரியோதனனுக்குச் சார்பாகப் பேசுவதற்குப் பின்வாங்கியும்,
ஒருவழியிலுந் துணியாமல், எழுது சித்திரம்போலத் திகைப்புற்றிருந்தார்க
ளென்க.  ஒரு பெண் துணையின்றித் தனியே நின்று பலர்கூடிய ராஜசபையில்
நீதிகூறுமாறு குறையிரந்துவேண்டி அழுது புலம்புகையிலும், துரியோதனனுக்கு
அஞ்சி நடுவுநிலைமைகுன்றி நீதியெடுத்துக் கூறாது மௌனமாயிருந்தது
பெரும்பாதகமென்பதை, ஈற்றடியினால் விளக்கினார். ஒருவனது பாபச்செயலைப்
பிறன் எடுத்துரைத்தால், அவ்வாறு உரைப்போனையும் அப்பாவத்திற் பாதிபங்கு
சேருமென்பது, அறநூற் கொள்கை.  ‘விறல் வேல்வேந்தர்’ என்றது – தாங்கள்
ஆயுதங்களையேந்திய வீரராயிருந்தும் துரியோதனனுக்கு அஞ்சித் தக்க
சமயத்தில் நியாயமெடுத்துக் கூறாமல் வாளாவிருந்தமைபற்றிய இகழ்ச்சிக் குறிப்பு.

    பொய்யோ, ஓகாரம் – தெரிநிலை. இருந்தாரை, பொழுதைக்கு என்பவற்றில்,
ஐகாரம்-சாரியை.  பொழுதைக்கு=பொழுதில்; உருபுமயக்கம். இனி, இருந்தாரை
அந்தக் கொடுமையை உரைக்கும் பொழுதில் என இரண்டு செயப்படுபொருள்
வந்த செய்வினையாகக் கொள்ளினும் இழுக்காது;  இவ்வாறு கூறும்பொழுது,
விறல் வேந்தராகிய இருந்தாரை என்க: இருந்தவரது கொடுமையையென்பது
கருத்து.  இருந்தார் ஐயையோ! என்று எடுத்து உரைப்பினுமாம். மை ஓடு
அரி கண் என்று எடுத்து – மையையும் படர்ந்த செவ்வரியையுமுடைய
கண்களென்று பதவுரை கூறினுமாம்

அல் ஆர் கூந்தல் விரித்த மயில் அனையாள் அரற்ற,
அதற்கு ஒன்றும்
சொல்லாது, ஊமர் கணம் போலத் தொல் போர்
வேந்தர் சூழ்ந்திருப்ப,
மல் ஆர் தடந் தோள் விகருணன் ஆம் வாய்மைக் கடவுள்,
‘வாள் வேந்தீர்!
பொல்லா நெறியில் அனைவீரும் போகாவண்ணம் புகல்வீரே!237.-இதுமுதல் மூன்று கவிகள் -விகர்ணன் சபையோரை
நோக்கிக் கூறுவன.

இதுமுதல் மூன்றுகவிகள் – ஒருதொடர்.

     (இ -ள்.) அல் ஆர் கூந்தல் விரித்த மயில் அனையாள் – இருளை
யொத்த (கருநிறமான) கூந்தலை விரித்துக் கொண்டுள்ளவளும் மயில்போன்ற
சாயலையுடையவளுமான திரௌபதி, அரற்ற-இவ்வாறு முறையிட்டுக் கதறிப்
புலம்பலும், அதற்கு ஒன்றும் சொல்லாது – அத்திரௌபதியின் வினாவுக்கு
(த்தக்க தென்றாவது தகாத தென்றாவது) ஒன்றும் மறுமொழி கூறாமல்,
ஊமர்கணம்போல – ஊமைகளின் கூட்டம்போல, தொல்போர் வேந்தர் சூழ்ந்து
இருப்ப – பழமையான குலத்தில் தோன்றிய போர் செய்தற்கு உரிய அரசர்கள்
சூழ்ந்திருக்க,-மல் ஆர் தட தோள் விகருணன் ஆம் வாய்மை கடவுள் –
மற்போர் செய்தற்கு உரிய பெரிய தோள்களையுடையவனும் சத்தியத்தையே
பேசுந் தெய்வத்தன்மையுடையவனுமான விகர்ணனென்பவன்,- (அச்சபையோரை
நோக்கி), ‘வாள் வேந்தீர் – வாட்படையையுடைய அரசர்களே! அனைவீரும் –
நீங்களெல்லீரும், பொல்லா நெறியில் போகாவண்ணம் – பொல்லாத
(மிகத்தீயதாகிய) நரகநெறியிற் செல்லாதிருத்தற் பொருட்டு, புகலீர் – நீதியையே
கூறுங்கள்;  (எ – று.)

     நீதியை யெடுத்துக் கூறாதொழிவீராயின் உங்கட்கு நரகம் நேர்வது
திண்ணமென்று கூறியவாறாம்.  இராவணன் தம்பியருள் விபீஷணன்போல,
துரியோதனன் தம்பிமாருள் விகர்ணன் நீதிகளை நன்கு உணர்ந்து
நடுவுநிலையோடு நியாயவழியைப் பேசுகின்ற நற்குணமுடையவன்.  இவனது
சத்தியகுணத்தை நன்குமதித்து ‘விகருணனாம் வாய்மைக் கடவுள்‘என்றார்.
விகருணன் ‘வாள் வேந்தீர்’ என்று அரசரைச் சிறப்பித்து விளித்தது, ‘நீங்கள்
துரியோதனனுக்கு அஞ்சி நடுவுநிலைமைகுன்றி மௌனமாயிராதீர்கள்’ என்று
குறிப்பித்தவாறாம்.  இச்செய்யுளிலுள்ள ‘வாய்மைக் கடவுள்’ என்றது, மேல்
240-ஆங் கவியிலுள்ள ‘சொன்னான்’ என்பதைப் பயனிலையாகக்
கொண்டுமுடியும்.  புகலீர் – உடன்பாட்டு ஏவற்பன்மை வினைமுற்று

‘முறையோ!’ என்று என்று, அவனிதலம் முழுதும் உடையான்
முடித் தேவி
நிறையோடு அழிந்து, வினவவும், நீர், நினைவுற்று இருந்தீர்;
நினைவு அற்றோ?
இறையோன் முனியும் என நினைந்தோ? இருந்தால், உறுதி
எடுத்து இயம்பல்
குறையோ? கண் கண்டது நாளும் குலத்துப் பிறந்தோர் கூறாரோ?

அவனி தலம் முழுதும் உடையான் – இந்நிலவுலகம்
முழுவதற்கும் உரியவனான தருமபுத்திரனது, முடி தேவி-பட்ட மகிஷியாகிய
திரௌபதி, முறையோ என்று என்று – ‘(என்னை அடிமை யெனக்கொண்டு
இவ்வாறு சபையிலிழுத்துவருவது), முறைமை யாகுமோ?’ என்று பலதரஞ்சொல்லி,
நிறையோடு அழிந்து வினவவும்-(தன்மனத்தை நல்வழியில்) நிறுத்தின கற்பு
நிலைமையோடு மனம் வருந்தி நியாயம் விசாரிக்கவும்,-நீர் நினைவு உற்று
இருந்தீர்-நீங்கள் (விடை கூறுவதற்குச்) சங்கைகொண்டிருக்கின்றீர்கள்: (இவ்வாறு
நீதிகூறாமலிருத்தற்குக் காரணம்), நினைவு அற்றோ-ஞாபக மில்லாமையினாலோ?
(அன்றி), இறையோன் முனியும் என நினைந்தோ-(நியாயம் திரௌபதிக்கே
அநுகூலமாயிருத்தல்பற்றி அவளுக்கு அநுகூலமாகக் கூறினால்) துரியோதனராசன்
கோபங் கொள்வன் என்று அஞ்சித்தானோ?  இருந்தால் உறுதி எடுத்து
இயம்பல் குறையோ – நியாயமிருந்தால் உள்ள நியாயத்தை எடுத்துக்கூறுதல்
குற்றமாகுமோ? குலத்துப் பிறந்தோர் கண் கண்டது நாளும் கூறாரோ-நல்ல
குலத்திற் பிறந்தவர்கள் (தாம்) பிரதியக்ஷயமாய்க் கண்டதை எப்பொழுதும்
கூறாது விடுவார்களோ? (எ- று.)

    என்றது-நற்குலத்திற் பிறந்தவரான அச்சபையிலிருந்த அரசர்களை,
துரியோதனனுக்கு அஞ்சி மௌனமாயிராது நீதி கூற வேண்டுவது அவசியமென
வற்புறுத்தியவாறு, பாண்டவர் துரியோதனாதியர் ஆகிய நூற்றைவருள்ளும்
தருமன் வயதில் மூத்தவனாதலாலும் திக்குவிசயஞ் செய்து ராஜசூயயாகம்
முடித்து ‘ஸம்ராட்’ என்னும் பட்டப் பெயரைச் சூடியவனாதலாலும், ‘அவனிதல
முழுதுமுடையான்’ எனப்பட்டான்.  நிறை – மகளிர் மனத்தைக் கற்புவழியில்
நிறுத்துந் தன்மை.  ‘நினைவற்றிருந்தீர் நிறைவற்றோ’ என்பதும் பாடம்

தன் நேர் இல்லா நெறித் தருமன் தன என்று
உரைக்கத்தக்க எலாம்
முன்னே தோற்று, தங்களையும் முறையே
தோற்று, முடிவுற்றான்;
சொல் நேர் உரைக்கு, ‘தான் பிறர்க்குத்
தொண்டாய்விட்டு, சுரிகுழலைப்
பின்னே தோற்க உரிமையினால் பெறுமோ?’
என்று பேசீரோ?’

தன் நேர் இல்லா நெறி தருமன் – தனக்கு ஒப்பாக
ஒருவரையும் பெறாதவனும் நல்லொழுக்கத்தை யுடையவனுமான தருமபுத்திரன்,
தன என்றுஉரைக்க தக்க எலாம்-தன்னுடையனவென்று சொல்லத்தக்க
எல்லாப்பொருள்களையும், முன்னே தோற்று-முதலில் தோற்றிழந்து,
தங்களையும் முறையே தோற்று-தங்களைவரையும் முறையே பந்தயமாக
வைத்துத் தோற்று, முடிவு உற்றான்-(தனது நல்லுணர்வு) ஒழியப் பெற்றான்;
தான் பிறர்க்கு தொண்டு ஆய் விட்டு-(தருமன்) தான் (இவ்வாறு எல்லாவற்றையும்
தோற்றுப்) பிறர்க்கு அடிமையாய்விட்டு, பின்னே-பிறகு, நேர் சொல் உரைக்கு –
எதிரில் நின்று (சகுனி) கூறிய வார்த்தைக்கு (இசைந்து), சுரிகுழலை-நுனிசுருண்ட
கூந்தலையுடைய திரௌபதியை, தோற்க-(பந்தயமாக வைத்துத்) தோற்பதற்கு
உரிமையினால் பெறுமோ – நீதிப்படி உரிமையைப் பெறுவனோ? என்று –
என்பதாக, பேசீரோ – (நீங்கள்) நியாயமெடுத்துக் கூறமாட்டீர்களோ? (எ – று.)

     இதனால், ஆராய்ந்து முறைமைப்படி பார்த்தால் திரௌபதி
வெல்லப்பட்டவளாகா ளென்று சபையிலிருந்த அரசர்க்கு விகர்ணன் தன்
கருத்தை எடுத்துக் காட்டியவாறாம்.

    ‘தன்னேரில்லா நெறித்தருமன்’ என்றது, அறநெறியை நன்குணர்ந்தவனான
இத்தருமனுக்கும் திரௌபதியைப் பந்தயம் வைக்கத் தனக்கு உரிமை
யில்லையெனும் உணர்ச்சி தீநட்பினால் இல்லாமற் போயிற்றேயென்ற
இரக்கத்தைக் குறிப்பிக்கும்.  ‘நேர் சொல் உரை’ என்றது ‘மைவருந் தடங்கண்
வேள்விமாது தன்னையொட்டி நீ, கைவருங் கவற்றினின்னமெறிக’ என்று கீழ்
182-ஆஞ் செய்யுளிற் சகுனியின் வார்த்தையாக வந்ததைச் சுட்டும்.  ஆகவே,
திரௌபதியைப் பந்தயம் வைத்தது, சகுனியின் தூண்டுதலினாலன்றிச்
சுயபுத்தியினாலன் றென்றதாம்.  இங்ஙனம் தன்னைத் தோற்றபிறகு தன்
மனைவியைப் பந்தயம் வைத்தற்குத் தருமனுக்கு உரிமையில்லையாகவே அத்
திரௌபதியைத் துரியோதனன் கைக்கொள்ளவும் முறையில்லை யென்க.

     இனி, ‘முடிவுற்றான்’ என்பதற்கு – (எல்லாவற்றையும் தோற்று வேறே
பந்தயம் வைத்தற்குப்) பொருளொன்றுமில்லாதவனாயினா னென்றும், சூதாடுதல்
முடியப்பெற்றானென்றும், சொல்நேர் உரைக்குத் தான் பிறர்க்குத் தொண்டு
ஆய் என்று இயைத்து – (தான்) சொல்லிய சத்தியமான வார்த்தைக்குக்
கட்டுப்பட்டுத்தான் பிறர்க்குத் தொண்டனாய் என்றும், உரைக்கு என்பதை ‘கு’
விகுதிபெற்ற தன்மையொருமை யெதிர்கால வினைமுற்றாகக் கொண்டு, சொல்
நேர் உரைக்கு – (யான்) நேரான வார்த்தை சொல்வேன் என்றும்
உரைப்பாருமுளர்.  தன – பலவின்பாற்குறிப்பு வினையாலணையும்பெயர்.
சுரிகுழல் – வினைத்தொகையன்மொழி.  தருமன் பெறுமோ என இயையும்;
பெறும் – செய்யுமென்முற்று, ஆண்பாலுக்கு வந்தது.  ‘சொன்னேருரைக்கிற்
றான்பிறர்க்குத் தொண்டாய் விட்டுஞ் சுரிகுழலைப், பின்னே தோற்க
வுரிமையினாற் பெறுமோ வொன்றும் பேசீரோ’ என்றும் பாடமுண்டு.

என்னா, மன்னர் முகம் நோக்கி, எல்லார்
இதயங்களும் மகிழச்
சொன்னான்; எவரும், ‘தக்கோன்’ என்று அவனுக்கு ஒரு பேர்
சூட்டினர்; பின்,
நல் நா மனத்தோடு அழல் மூள, நயனம் சிவக்க,
நஞ்சின் வடிவு
அன்னான் இளவல் முகம் நோக்கி, அருக்கன்
குமரன் அறைகின்றான்:240.-நீதியைக் கூறியவிகர்ணனைக் கர்ணன் சினந்து
கூறலுறல்.

என்னா-என்று, மன்னர் முகம் நோக்கி – அரசர்களது முகத்தைப்
பார்த்து, எல்லார் இதயங்களும் மகிழ-(அச் சபையிலிருந்த) எல்லாருடைய
மனமும் மகிழும்படியாக, சொன்னான் – (நீதி) எடுத்துக் கூறினான்; (அப்பொழுது),
எவரும் – அதுகேட்ட எல்லோரும், தக்கோன் என்று அவனுக்கு ஒருபேர்
சூட்டியபின் – ‘யோக்கியன்’ என்று அவ்விகர்ணனுக்கு ஒரு சிறப்புப் பெயரைச்
சூட்டிய பிறகு,- அருக்கன் குமரன் – சூரிய குமாரனான கர்ணன்,-நல் நா
மனத்தோடு அழல் மூள -(தனது) அழகிய நாக்கிலும் மனத்திலும் கோபாக்கினி
மிகுதியாக வுண்டாகவும், நயனம் சிவக்க – கண்கள் சிவப் பேறவும், – நஞ்சின்
வடிவு அன்னான் இளவல் முகம் நோக்கி – விஷமே ஒரு வடிவு எடுத்தாற்
போன்றவனான [மிகக் கொடிய] துரியோதனனது தம்பியாகிய விகர்ணனது
முகத்தைப் பார்த்து, அறைகின்றான் – கூறுபவனானான்; (எ – று.)-அதனை,
அடுத்த இரண்டு கவிகளிற் காண்க.

     ‘எல்லார்’ என்றதும் ‘எவரும்’ என்றதும் துஷ்டசதுஷ்டரொழிந்த
மற்றவர்களையே குறிக்கும்.  ராஜராஜனும் தனது தமையனுமான
துரியோதனனுக்கே மாறாகப் பிறரெவரும் அஞ்சி எடுத்துக்கூறாத நீதியை
நடுவுநிலைமைகுன்றாமற் சிறிதும் பின்வாங்காது அத் துரியோதனனது
முன்னிலையிலேயே எடுத்துக்கூறிய பெருந்தகைமைபற்றி, விகர்ணனுக்கு
எல்லாரும் ஒரே மனமாய் ‘தக்கோன்’ என்று ஒரு பெரும்பெயர் சூட்டினரென்க;
இதனால், அவ்விகர்ணன் வார்த்தைக்கு அச்சபையோர் யாவரும்
உடன்பட்டனரென்பது போதரும்.  தனது உயிர்நண்பனான துரியோதனனது
கருத்துக்கு விகர்ணன் பேச்சு மாறாயிருந்ததனால், கர்ணன்
பரிந்துரைப்பானாயினான்.  மூன்றாமடி-கர்ணனது கோபமிகுதியை விளக்கும்.
துரியோதனனுக்கு நஞ்சு-மிக்க கொடுமையில் உவமம்;  நிறம் பற்றிய
உவமையெனக் கொள்ளலுமொன்று.  ‘சொன்னான்’ என்பதற்கு-கீழ் 237-ஆங்
கவியில் வந்த ‘விகருணனாம் வாய்மைக் கடவுள்’ என்றது, எழுவாயாம்.
முகம், ஹ்ருதயம், மநஸ், நயநம், அர்க்கன், குமாரன்-வடசொற்கள்.  நாமனம்
– உம்மைத்தொகை.  மனத்தோடு உருபுமயக்கம்.  ‘நஞ்சின் வடிவன்னான்’
என்றதை அருக்கன் குமரனுக்கு அடைமொழியாக்குதலு மொன்று. ‘சூட்டினர்பின்’
என்பதும் பாடம்.   

இருக்கின்ற தரணிபரில் நின் அறிவால் உயர்ந்தனையோ? இராச
நீதி குருக்கொண்டு முதிர்ந்தனையோ? நின் ஒழிந்தால், வழக்கு
ஒருவர் குறிப்பார் அற்றோ?
‘மருக் கொண்ட தொடை முடியாய்! மொழிக!’ என நின்னுடன்
கேட்கவந்தார் உண்டோ?
உரைக்கும்போது எவருடனும் உணர்ந்தன்றோ உரைப்பது?’ என
உருத்தான் மன்னோ.241.-இதுவும்,அடுத்தகவியும்-கர்ணன் விகர்ணனை நோக்கிக்
கூறியன.

மூன்றுகவிகள் – ஒருதொடர்.

     (இ -ள்.) (கர்ணன் விகர்ணனை நோக்கி), – இருக்கின்ற தரணியரின் –
(இச்சபையில்) இருக்கின்ற அரசர்களெல்லாரைக்காட்டிலும், இன் அறிவால்
உயர்ந்தனையோ – (நீ) நல்லறிவினாற் சிறப்புற்றிருக்கின்றாயோ? இராசநீதி –
அரசநீதியில், குரு கொண்டு முதிர்ந்தனையோ – பெருமை
பெற்றுவிளங்குகின்றாயோ? நினை ஒழிந்தால் – நின்னை விட்டால், வழக்கு
குறிப்பார் ஒருவர் அற்றோ – இந்த நீதியை எடுத்துப் பேசுபவர்
வேறொருவருமில்லை யென்று நினைத்துக் கூறுகின்றாயோ? மரு கொண்ட
தொடைமுடியாய் மொழிக என நின்னுடன் கேட்க வந்தார் உண்டோ –
‘நறுமணம் மிக்க மாலையைத் தரித்த முடியையுடைய அரசனே! நீதிமொழியை
யெடுத்துக் கூறுவாயாக’ என்று உன்னிடத்திற் கேட்க வந்தார்
யாரேனுமுளரோ? உரைக்கும்போது எவருடனும் உணர்ந்தன்றோ உரைப்பது –
ஒன்று கூறத்தொடங்கும்போது பலருடனும் ஆலோசித்தன்றோ
உரைக்கவேண்டுவது?’ என – என்று, உருத்தான் – கோபித்துக் கூறினான்;  (எ
– று.) – மன், ஓ – ஈற்றசை.

    எல்லாவரசரினும் அறிவிற்குறைந்த சிறுவனாயும் இராசநீதி
முற்றுமுணராதவனாயுமிருக்கிற நீ, உன்னைத் தனியே ஒருவருங்
கேளாதிருக்கையில் ‘நாம் நீதி கூறாவிடின் வேறொருவரும் நீதிகூறுபவரில்லை’
என்று தன்னைத் தானே நன்குமதித்து வேறொருவருடனும் சிறிதுங் கலந்து
ஆலோசியாமல் நீதிகூறத் துணிந்தது ஸாஹஸத் தொழிலாமெனக் கர்ணன்
விகர்ணனைக் கடுமையாக மறுத்துக் கூறினனென்க.  ஓகாரங்கள் –
எதிர்மறைப்பொருளன.  குரு என்ற வடசொல் – இங்கு மிகுதி என்ற
பொருளைத் தரும்: பண்பியின் பெயர் பண்புக்கு வந்த இலக்கணை.  நின்
அறிவால் என்று பிரித்து உரைத்தல், மோனைத்தொடைக்குச் சிறவாது.
‘மருக்கொண்ட தொடைமுடியாய்’ என்பதை, முதலில் எடுத்துக் கூறலுமாம்.
நின்னுடன் = நின்னிடத்தில்; வேற்றுமை மயக்கம்.  மொழிகென – தொகுத்தல்.
‘உரைக்கும்போ தெவ்வுரையு முணர்ந்தன்றோ’ என்றும் பாடமுண்டு.

     இதுமுதல் இருபத்தைந்து கவிகள் – பெரும்பாலும் முதல் நான்குசீர்கள்
காய்ச்சீர்களும், மற்றையிரண்டும் மாச்சீர்களுமாகி வந்த கழிநெடிலடி
நான்குகொண்ட அறுசீராசிரியவிருத்தங்கள்.     

தான் படைத்த பொருள் அனைத்தும் தம்பியர்களுடன்
தோற்று, தனையும் தோற்றான்;
மீன் படைத்த மதி முகத்தாள் இவன் படைத்த தனம்
அன்றி வேறேகொல்லோ?
வான் படைத்த நெடும் புரிசை மா நகரும் தனது இல்லும்
வழங்கும் ஆயின்,
யான் படைத்த மொழி அன்றே? எங்கணும், ‘இல்’ எனப
பட்டாள் இல்லாள் அன்றோ?

பின்னும் கர்ணன் விகர்ணனை நோக்கி.-)-‘(தருமபுத்திரன்),
தான் படைத்த பொருள் அனைத்தும் – தான் அடைந்துள்ள
பொருள்களையெல்லாம், தம்பியர்களுடன் தோற்று-தம்பி மார்களோடுந்
தோற்று, தனையும் தோற்றால்-தன்னையுந்தோற்று விட்டா னென்றால், மீன்
படைத்த மதி முகத்தாள் – இரண்டு மீன்கள் பொருந்தியதொரு
சந்திரனைப்போன்ற முகத்தையுடையவளாகிய திரௌபதி, இவன் படைத்த
தனம் அன்றி வேறே கொல்ஓ – இத்தருமன் அடைந்துள்ள பொருள்களிற்
சேர்ந்தவளாவளேயன்றி வேறாகத் தனிப்பட்டவளாவளோ?  (அன்றியும்), வான்
படைத்த நெடும்புரிசை மாநகரும் தனது இல்லும் வழங்கும் ஆயின் –
ஆகாயத்தை யளாவியுள்ள நீண்ட மதிள்கள் சூழ்ந்த பெரிய
இந்திரப்பிரத்தநகரத்தையும் தனது இல்லையும் கொடுத்து விட்டதாக
(அத்தருமன்) கூறினானாயின், (மனைவியும் அடங்கிவிட்டவளாவளன்றோ?)
எங்கணும் – எல்லா நூல்களிலும், இல்லாள் இல் எனப்பட்டாள் அன்றோ –
மனைவி ‘இல்’ என்ற பெயரினாற் கூறப்பட்டுள்ளாளல்லளோ? (இது), யான்
படைத்த மொழி அன்றே – யான் புதிதாக உண்டாக்கிக்கூறிய மொழியல்லவே!’
(என்று மறுத்துக் கூறினான்;) (எ – று.)

    ‘தருமபுத்திரன் தன்னைத்தோற்றபின்பு திரௌபதியைப் பந்தயம்
வைத்தற்கு உரிமையில்லானென்பது யாவர்க்கும் அங்கீகாரமாயினுமாகுக:
தருமன் எப்பொழுது எல்லாப்பொருள்களையும் பந்தயம் வைத்துத் தோற்றே
னென்றானோ, அப்பொழுதே அப்பந்தயப்பொருளில் தருமனது சொத்தாகிய
திரௌபதியும் அடங்குவள்; அன்றியும், எனது நகரத்தையும் இல்லையும்
பந்தயம் வைத்தேனென்று தருமன் கூறியபோதும், நகரமென்ற மாத்திரத்திலேயே
அதற்குட்பட்டுள்ள வீடும் அடங்குமாதலின், தனியே கூறப்பட்ட ‘இல்’ என்னும்
மொழி அவன் மனைவியாகிய திரௌபதியையே குறிக்குமென்பதிற் சிறிதுந்
தடையில்லையே! ‘இல்’ என்னுஞ்சொல் மனைவியைக் குறிக்குமென்பது யான்
கட்டிக் கூறியதன்று: இம்மொழி இப்பொருளில் வருவது, யாவர்க்கும்
ஒப்பமுடிந்ததே:  ஆதலின், திரௌபதி வெல்லப்படாதவ ளென்று நீ கூறியது,
சிறிதும் பொருத்தமின்றாம்’ எனச் சில போலிநியாயங்களினாற் கர்ணன்
விகர்ணனை மருட்டின னென்க.

     ‘இல்’ என்பது வீட்டையேயன்றி மனைவியையுங் குறிப்பதாதலை,
“இல்லவளுரிமை பன்னி குடும்பினி யில்லே யில்லாள்”, “புகழ்புரிந்தில்லிலோர்க்கு”
என்பன முதலியவற்றால் அறிக. (வடமொழியில் ‘க்ருஹம்’ என்பது – வீட்டையும்
மனைவியையுங் குறித்தல், இங்கே கருதத்தக்கது.) எதிரெதிராக ஆடும்போது
பந்தயமாக இருவரும் மனமொப்பிய பொருள்களே வெல்லப்பட்டனவாகவும்
தோற்கப்பட்டனவாகவும் கொள்ளத்தக்கனவாதலால், அவ்வாறு தருமன் சகுனி
என்ற இருவரில் ஒருவருடைய மனத்தாலும் முன்னர் எண்ணப்படாமலேயிருந்து
தருமனுக்கு உரிமையில்லாத காலத்தில் இருவரும் திரௌபதியைப் பந்தயமாக
மனமொப்பி யிருக்கவும், ‘தருமன் தன்னைத் தோற்கு முன்னமே திரௌபதியை
இழந்தவனாவன்’ என்று கர்ணன் சாதிப்பது போலிச்சாதனையே யென்பதை
நுண்ணிதின் ஆய்ந்தறிக.  மீன் படைத்த மதிமுகத்தாள் – இல்பொருளுவமை.
உருவத்திலும் பிறழ்ச்சியிலும் கண்ணுக்கு மீனும், வட்டவடிவத்திலும் ஒளியிலும்
கண்டோரை மகிழ்வித்தலிலும் முகத்திற்குச் சந்திரனும் உவமை.  நான்கடியிலும்
‘படைத்த’ என்றசொல் வெவ்வேறு பொருளில் வந்தது சொற்பின்வருநிலையணி.
தோற்றான் என்று எடுத்தும் உரைக்கலாம்.  ‘தம்பியர்களுடனே யத்தருமன்
றோற்றான்’ என்றும் பாடம். 

பொல்லா வசையே, புகழ் பூணாப் புல்லன் புகல,
இதற்கு ஒன்றும்
சொல்லாது இருந்த பேர் அவையைத் தொழுதாள்,
அழுதாள், சோர்வுற்றாள்;
‘மல் ஆர் திண் தோள் மாமாவோ! மந்தாகினியாள்
மதலாயோ!
எல்லா நெறியும் உணர்ந்தவருக்கு, இதுவோ மண்ணில்
இயல்பு” என்றாள்.243.-கர்ணன் சபையோரைநோக்கிக் கூறியது.

இந்த விகர்ணன்),-மை கோது இல் கலை உடையன் –
குற்றமற்ற அசாரமில்லாத (சாரமான) சாஸ்திரங்களையுணர்ந்தவன்; மதி உடையன்
– சூட்சமமான புத்தியையுடையவன்; பொறை உடையவன் – பொறுமையை
யுடையவன்; அரசர் எல்லாம்-(இச்சபையிலுள்ள) எல்லாவரசர்களும், வரிசை ஆக
– சிறப்பாக, தக்கோன் என்று உரைத்த பெயர் – ‘இவன் தகுதியுடையோன்’
என்று கூறிய சிறப்புப்பெயர், இவன் தனக்கே தக்கது – இந்த விகர்ணனுக்கே
தகும்! அம்மா – ஆச்சரியம்! மகி தலத்து வேந்தர் ஆகி தொக்கோர் –
இந்நிலவுலகத்தில் அரசர்களாகி நிறைந்தோர்களில், உங்களை போல் மிக்கோர்
வேறு உண்டோ-உங்களைப்போல பெருமை பெற்றவர் வேறு யாரேனுமுளரோ?
(நீங்கள்), யான் நுவன்ற மொழிக்கு எதிர் மொழி உண்டு ஆம் ஆகில்
சொல்லுவீர் – நான் கூறின வார்த்தைக்கு மாறாக நீதிவார்த்தையுண்டானால்
எடுத்துக் கூறுங்கள்,’ (என்று கர்ணன் சபையோரை நோக்கிக் கூறினான்;)
(எ – று.)- அம்மா – வியப்பிடைச்சொல்:  இங்கு தகுதியற்ற விகர்ணனுக்கு
‘தக்கோன்’ என்ற பெயரைச் சூட்டிய அரசர்களது அறிவீனத்தை நோக்கி
இழித்தற் குறிப்பாக வந்ததென்க.  மற்று – அசை.

    ‘கலையுடையன்’ முதலியன – பிறகுறிப்பினால், எதிர்மறைப்பொருள்
விளக்கும்.  இனி, ‘கலையுடையன், மதியுடையன், பொறை யுடையன்;
(ஆதலினால்), தக்கோன் என்று அரசரெல்லாம் வரிசையாக உரைத்த பெயர்
என்றும் பொருள் கொள்ளலாம்.  தகுதியற்றவனுக்கு இவ்வாறு ‘தக்கோன்’ என்று
பெரும்பட்டப்பெயரைச் சூட்டிய சபையோர்களை இழித்துக் கூறுவான், ‘மிக்கோர்,
மற்றுங்களைப் போல் வேறுண்டோ? மகிதலத்து வேந்தராகித் தொக்கோர்’
என்றான்;  இதுவும், எதிர்மறையிலக்கணையின் பாற்படும் பிறகுறிப்பே. தான்
கூறியதே தேர்ந்த நீதியென்று, துரபிமானங் கொண்டவனாதலால், இதற்கு
மாறுகூறுதல் ஒருவர்க்கும் இயலாதென்ற கருத்துப்பட, ‘எதிர்மொழியுண்டாமாகிற்
சொல்லுவீர்’ என்றான். மை-இல், கோது இல் என இயையும், தொக்கோர் –
இயல்பாகிய அண்மை விளியாகவுங் கொள்ளலாம். 

என்ன வெகுண்டிடுகின்ற எல்லைதனில் எழு உறழ்
தோள் இராசராசன்,
தன் அனைய கொடுங் கோபத் தம்பியை, ‘இன்று உம்பிதனைத்
தக்கோன் என்ற
மன் அவையின் எதிரே, இம் மானம் இலா ஐவரையும்,
வழக்கு வார்த்தை
சொன்ன கிளிமொழியினையும், துகில் உரிதி’ என உருமின்
சொன்னான் மன்னோ.244.-பாண்டவர் திரௌபதிஎன்ற இவர்களின் துகிலை
உரியுமாறு துரியோதனன் துச்சாதனனுக்குக் கட்டளையிடுதல்.

என்ன-இவ்வாறு கூறி, வெகுண்டிடுகின்ற எல்லைதனில்-
(கர்ணன்) சினங்கொண்ட இச்சமயத்தில்,-எழு உறழ்தோள் இராசராசன்-
தூண்களையொத்த தோள்களை யுடைய அரசர்க்கரசனான துரியோதனன்,- தன்
அனைய கொடுங்கோபம் தம்பியை-தன்னைப்போலவே கொடுமையான
கோபத்தையுடைய தம்பியாகிய துச்சாதனனைப் பார்த்து,-‘இன்று-இப்பொழுது,
உம்பிதனை தக்கோன் என்ற மன் அவையின் எதிரே-உனது தம்பியாகிய
விகர்ணனை யோக்கியனென்று கூறிய இந்த ராஜசபையின் முன்பாகவே, மானம்
இலா இ ஐவரையும் – மானங்கெட்டவர்களான இந்தப் பாண்டவரைவரையும்,
வழக்கு வார்த்தைசொன்ன கிளிமொழியினையும் – வியவகாரம் பேசின
கிளிபோன்ற வார்த்தையுடையவளாகிய திரௌபதியையும், துகில்உரிதி-
வஸ்திரங்களை உரித்து விடுவாயாக,’ என – என்று உருமின் சொன்னான் –
இடியோசைபோல (க் கொடுமையாக)க் கட்டளையிட்டான்; (எ – று.) மன், ஓ –
ஈற்றசை.

     துரியோதனன் பாண்டவர்கட்குச் செய்யவேண்டுமென்று நினைக்கும்
பொல்லாங்குகட்கெல்லாம் உடன்பட்டு அவ்வாறே தன்னாலியன்றமட்டுஞ்
செய்துதீர்க்க முயல்பவனாதலால், துச்சாதனனை ‘தன்னனைய கொடுங்கோபத்
தம்பி’ என்றார்.  துரியோதனன் தன் எண்ணத்திற்கு மாறாகக் கூறிய
விகர்ணனை ‘தம்பி’ என்று பொதுவாகக் கூறுதற்கும் விருப்பமில்லாதவனாய்
‘உம்பி’ என்றா னென்னலாம்.  அரசர்கள் அநியாயங்கூறினமையால்,
அவர்கட்கும் ஒரு மானபங்கமுண்டாம்படி அவர்கள் விருப்பத்திற்கு மாறாக
அவ்வரசர்களது முன்பாகவே தருமபுத்திரன் முதலியோ ரது ஆடையை
உரியுமாறு துரியோதனன் கூறினான்.  ‘வழக்கு வார்த்தை சொன்ன கிளிமொழி’
என்றதனால், அவள் கொடு வழக்கு உரைத்ததற்கு இதுவே பயனென்றவாறாம்.
கர்ணகடூரமாயிருத்தலாலும், அச்சந்தருதலாலும், பேரொலிபடுதலாலும்,
துரியோதனன் கட்டளைக்கு இடி உவமை.  ஐவரையும், கிளிமொழியினையும்,
துகிலை உரிதி – இரண்டு செயப்படுபொருள்வந்த செய்வினை.  கிளி மொழி –
உவமைத்தொகையன்மொழி, உறழ் – உவம வுருபு.

     இனி, என்று கூறிக் கர்ணன் தான் கோபங்கொண்ட சமயத்தில்
(அக்கோபந்தணியுமாறு) துரியோதனனது தம்பியாகிய துச்சாதனனைப் பார்த்து
இவ்வாறு கட்டளையிட்டதாகப் பொருள் கூறலுமாம்; துகிலுரியுமாறு கர்ணனே
துச்சாதனனுக்குக் கட்டளையிட்டதாக வியாசபாரதம் கூறுதலால், இப்பொருள்
சாலும்.     

இத் தகவு இல் மொழி செவியின் எரி வாளி என மூழ்க,
இருந்த வேந்தர்
தம்தம் மனம் மடிந்து உருக, தருமன் மதிமுகம் நோக்கி,
தம்மின் நோக்கி,
வித்தக வெங் கதை நோக்க விறல் வீமன், விசயனும் தன்
வில்லை நோக்க,
ஒத்தமனனுடை இளையோர் உருப்பம் அடக்கினன், உண்மைக்கு
உறுதி போல்வான்.245.-சினங்கொண்டவீமார்ச்சுனர்களைத் தருமன் தணித்தல்.

இ தகவு இல் மொழி – தகுதியற்ற இந்தக் கட்டளை வார்த்தை,
எரி வாளி என செவியில் மூழ்க-நெருப்புப்பற்றி யெறிகின்ற அம்பு போலத்
தங்கள் காதுகளில் நுழைந்து வருத்த,-இருந்த வேந்தர்-அங்கிருந்த அரசர்கள்,
தம் தம் மனம் மடிந்து உருக-தம் தமது மனம் தளர்ந்து உருகும்போது,-
தருமன் முகம் மதி நோக்கி – தருமபுத்திரனது மதிபோன்ற முகத்தைப்
பார்த்தும் தம்மில் நோக்கி – தாம் ஒருவரை யொருவர் பார்த்துக் கொண்டும்,
விறல் வீமன்-பராக்கிரமசாலியான வீமசேனன், வித்தகம் வெம் கதை நோக்க-
(தான்) மிகத்தேர்ந்ததாகிய கொடிய (சத்துருகாதிநியென்னுந் தனது) கதாயுதத்தை
நோக்கவும்,-விசயனும்-அர்ச்சுனனும், தன் வில்லை நோக்க-(காண்டீவமென்னுந்)
தனது வில்லை நோக்கவும்,-(அக்குறிப்பைக் கண்டு),- உண்மைக்கு உறுதிபோல்
வான்-சத்தியத்திற்கு ஆதாரம்போல்பவனான தருமபுத்திரன், ஒத்த மனன்
உடைஇளையோர் உருப்பம் அடக்கினன் – தன்னோடுமாறுபடாத
மனமுடையவர்களான தனது தம்பியரது கோபத்தை (க் குறிப்பால்) தணித்தான்;
(எ – று.)

     தருமனது கருத்தை அறியும்படி அவனது முகத்தையும், ‘நாம் என்ன
செய்யத் தக்கது? இப்பொழுது பகையைச்சங்கரித்துவிடுவோமா?’ என்று
ஆலோசிக்குமாறு தம்மில் ஒருவர் மற்றொருவரையும் வீமார்ச்சுனர்
நோக்குவாராயினரென்க.  ஒத்தமனனுடையோர் உருப்ப மடக்கினன் என்று
பிரித்து-ஒத்த கருத்துடையவர்களான நகுலசகதேவர்கள் கோபிக்கவும்
(அத்தம்பியர் நால்வரையும்) கோபந் தணியுமாறு சாந்தப்படுத்தினானெனக்
கூறலுமொன்று. எரிவாளி – ஆக்கிநேயாஸ்திர மெனினுமாம்.  தத்தம் – தந்தம்
என்பதன் எதுகை நோக்கிய வலித்தல்.  முகமதி – முன்பின்னாகத்தொக்க
உவமைத்தொகை.  ‘இளையோருருப்ப வடக்கினன்’ என்பதும் பாடம். 

தருக, துகில்!’ என எழுந்து, தங்களை வன்பொடு
துச்சாதனன் சொலாமுன்,
‘வருக!’ என, வரை மார்பின் வாங்காத உத்தரியம்
வாங்கி ஈந்தார்;
அருகு அணுகி, மடவரலை அஞ்சாமல் துகில் உரிவான்
அமைந்த போதில்,
இருகை நறு மலர் தகைய, எம்பெருமான் இணை அடிக்கே
இதயம் சேர்த்தாள்.246.-பாண்டவர்கள் தமது உத்தரீயங்களைத் தாமே கொடுக்க,
துச்சாதனன் திரௌபதியைத் துகிலுரிய நெருங்குதல்.

துச்சாதனன் -, (துரியோதனனது கட்டளைப்படியே), எழுந்து-
எழுந்து வந்து, துகில் தருக என தங்களை வன்பொடு சொலாமுன்-
‘வஸ்திரத்தைத் தாருங்கள்’ என்று தங்களை நோக்கிக் கடுமையாகக்
கூறாதமுன்னமே,-(பாண்டவர்கள்), வருகஎன-(அவனை) வாவென்று அழைத்து,
வரை மார்பின் வாங்காத உத்தரியம் வாங்கி ஈந்தார்-மலையை யொத்த தமது
மார்பிலிருந்த முன்னொரு நாளும் எடுத்திராத உத்தரீயங்களைக் களைந்து
கொடுத்தார்கள்;  (உடனே துச்சாதனன்),-மடவரலை அருகு அணுகி –
திரௌபதியைச் சமீபித்து, அஞ்சாமல் – சிறிதுங்கூச்சங் கொள்ளாமல், துகில்
உரிவான் அடர்ந்த போதில்-அவளது ஆடையைக் கவரும்படி நெருங்கிய
போதில்,-(அவள்), இரு கை நறுமலர் குவிய – நறுமணமிக்க தாமரைமலர்
போன்ற (தனது) இரண்டு கைகளும் குவிந்து அஞ்சலி செய்து நிற்க,
எம்பெருமான் இணை அடிக்கே இதயம் வைத்தாள் – எம்பெருமானது இரண்டு
திருவடிகளிலே தனது மனத்தைச் செலுத்தித் தியானித்தாள்; (எ – று.)

    துச்சாதனன் தமது ஆடையைக் கவரவருவதைக் கண்ட பாண்டவர்கள்
அவன் வந்து வலியக்களைவதற்கு முன்னமே கௌரவமாகத் தாமே கொடுத்து
விடுவது நலமெனக் கருதித் தாமே தமது உத்தரீயங்களைக் களைந்து
கொடுத்தன ரென்க.  உத்தரீயம் – வடசொல்: மேலாடையென்று பொருள்படும்;
(அரையாடை, அந்தரீயம் எனப்படும்.) மார்பிற்கு மலையுவமை-தோற்றத்திலும்
பிறராற் சலிப்படையாத வீரத்திலும், பெரும்பரப்பிலுமாம்.  இனி, வரைமார்பு-
உத்தமரேகைகளையுடைய மார்புமாம்.  “வரையகல் மார்பிடை வரையு
மூன்றுள” என்றதுங் காண்க.  ‘வாங்காத உத்தரியம் வாங்கி’ என்ற தொடர்,
இது வரையில் ஒருநாளுங் களைந்திராத உத்தரீயத்தை இப்பொழுது
களையும்படி யாயிற்றே! என்ற இரக்கத்தைக் குறிப்பிக்கும்.  வாங்காத
உத்தரியம் வாங்கி – தொடைமுரண்.  துச்சாதனன் தனது துகிலையுரியத்
தொடங்கியபோது தன்னைப் பாதுகாக்க வேண்டிய கணவர் ஒருவர்க்கு
ஐவராயிருந்தும் மாற்றார்க்கு அடிமைப்பட்டுப் பரதந்திரராய்த் தன் திறத்தில்
துணைபுரிய வலியற்று வாளா கிடப்பதைக் கண்டு திரௌபதி, கூப்பிய கையளாய்,
ஸ்ரீய:பதியும் அபாரகருணாநிதியும் ஆச்ரிதவத்ஸலனும் அகதிகட்கு
அருள்புரிபவனும் ஆபத்பந்துவுமான ஸ்ரீ கிருஷ்ணனது திருவடித்தாமரை
களிடத்துத் தன் கருத்தைச் செலுத்தித் துதிப்பவளாயின ளென்பது,
பின்னிரண்டடியின் கருத்து.  ‘இருகை நறுமலர் குவிய’ என்பதற்கு-
நறுமணமுள்ள தாமரை மலர்போன்ற இரண்டு கைகளும் (ஆடைகுலையாதபடி
இறுக்கிப்பிடித்தற் பொருட்டுக்) குவியவென்று உரைத்தலுமொன்று; அடுத்த
செய்யுளில் “வேறானதுகில் தகைந்த கை” என வருதல் காண்க.  ‘இருகை
நறுமலர் தகைய’ என்று பாடமோதுவாருமுளர்.  மடவரல்-மடமையினது
வருதலையுடையவள்;  வேற்றுமைத் தொகைப்புறத்துப் பிறந்த
அன்மொழித்தொகை.  உரிவான்-வானீற்று எதிர்காலவினையெச்சம். இணையடி
– உபயபாதம்.  அடிக்கு – வேற்றுமைமயக்கம்.   

ஆறாகி இரு தடங் கண் அஞ்சன வெம் புனல் சோர,
அளகம் சோர,
வேறான துகில் தகைந்த கை சோர, மெய் சோர, வேறு
ஓர் சொல்லும்
கூறாமல், ‘கோவிந்தா! கோவிந்தா!’ என்று அரற்றி,
குளிர்ந்து நாவில்
ஊறாத அமிழ்து ஊற, உடல் புளகித்து, உள்ளம்
எலாம் உருகினாளே.247.-திரௌபதி எம்பெருமானையேரக்ஷகனாகக்கொண்டு
முறையிடுதல்.

(திரௌபதி),-இரு தட கண் அஞ்சனம் வெம்புனல் ஆறு ஆகி
சோர – (தனது) பெரிய இரண்டு கண்களிலிருந்து (கரைந்து விழுகிற)
மையுடனே உஷ்ணமான சோகபாஷ்பம் ஆறாய்ப்பெருகவும், அளகம் சோர –
கூந்தல் அவிழ்ந்து புரளவும், வேறு ஆன துகில் தகைந்த கை சோர –
(துச்சாதனன் வலிய இழுத்ததனால்) அவிழ்ந்து குலைகிற வஸ்திரத்தைப்
பிடித்திருந்த கை நெகிழ்ந்திடவும், மெய்சோர – உடம்பு தளர்ச்சியடையவும்,-
வேறு ஓர் சொல்லும் கூறாமல்-, கோவிந்தா கோவிந்தா என்று அரற்றி-
‘கோவிந்தா!’ என்று பலதரம் கதறிக்கூறி முறையிட்டு, (அதனால்) குளிர்ந்து-
உடம்பு குளிர்ந்து, நாவில் ஊறாத அமிழ்து ஊற – நாக்கில் இதற்குமுன்
சுரந்திராத அமிருதரஸம் சுரக்க, உடல் புளகித்து – (தனது) உடம்பில் மயிர்
சிலி்ர்க்கப் பெற்று, உள்ளம் எலாம் – மனம் முழுதும், உருகினாள் – கரைந்து
உருகினாள்; (எ – று.)

    கீழ்ச்செய்யுளின் பின்னிரண்டடிகளினால் தொகுத்துச்சுட்டியதை,
இக்கவியினால் வகுத்துக் காட்டுகின்றார்.  துச்சாதனன் துகிலுரியத்
தொடங்கியபோது திரௌபதியானவள் தனக்கு நேரும் மானபங்கத்தைச்
சிந்தித்து மையைக் கரைத்துக்கொண்டு கண்ணீர் ஆறாய்ப்பெருகவும்,
துச்சாதனன் பிடித்திழுத்து வந்தபோது அவிழ்ந்த கூந்தல் அவ்வாறே விரிந்து
புரளவும், அவன் வலிய அவிழ்த்த ஆடையைத் தன்னாலானவரையும் தகைந்து பார்த்தும் முடியாமல் தளர்ந்து அச்செயலொழிந்து தரைமேற் கை குவியவும்,
தன்வசந் தப்பிப் பரவசமாய், தத்துவஞானமுதிக்கப் பெற்றவளாதலின்
பர்த்தாக்களாவது பிறதெய்வங்களாவது உதவுவார்களென்ற கருத்தைவிட்டு
‘பெரிய ஆபத்காலத்தில் உதவுபவன் திருமாலே’ என்று துணிந்து,
அப்பெருமானது திருநாமத்தையே பலதரங்கூவி விளித்து, அவ்வாறு நாமத்தை
உச்சரிக்கும் போது மெய்ப்பாட்டினால் உடம்பு  குளிரப்பெற்று
நாவில்அமிர்தமூற, பக்தியின் மேலீட்டினால் உடல் புளகமுற, மனம் நெக்கு
உருகுவாளாயின ளென்றவாறு.  ‘மகத்தான ஆபத்து நேருங்காலத்தில்
பகவானாகிய திருமால் தியானிக்கத்  தகுந்தவனென்று வஸிஷ்டமுனிவர்
கூறியுள்ளதை நினைத்துத் திருமாலைக் குறித்துத் திரௌபதி
முறையிடுபவளானாள்’ என்று வியாசபாரதம் கூறும்.

    எம்பெருமானுக்குப் பல திருநாமங்களிருக்கவும் கோவிந்தனென்ற
இப்பெயரால் விளித்தது, இந்திரன் விடாப்பெருமழையைப்  பொழிவித்தபோது
தம்மாலும் தம்மைப் பாதுகாத்தற்கு உரிய இடையராலும் காக்க முடியாமல்
தவித்து அலைகிறநிலையிலே பசுக்களையெல்லாம் யாதொரு குறைவுமின்றிக்
கோவர்த்தனமலையைக்கொண்டு உனது பேரருளினாற் காப்பாற்றியது
போலவே, என்னாலும் என்னைப் பாதுகாக்கவேண்டிய பர்த்தாக்களாலும்
பாதுகாக்க முடியாமல் தவித்து அநந்யகதியாய் உன்னையே சரணமாக
நம்பியிருக்கிற என்னை நீ பேரருள்கொண்டு காக்கவேண்டுமென்ற குறிப்பு.
(இனி அரைகுலையத் தலைகுலைய அலமாக்கும் படியாக முடிசூடின
பேரைச்சொல்லிக் கூப்பிடுகிறாள்; ‘கோவிந்த-தன் ஆச்ரிதரை நோவுபட
விட்டிருக்கு மவனையோ நான் ஆச்ரயித்தது?’ கோவிந்த-நீ
கோவிந்தாபிஷேகம் பண்ணிக் கோப்தாவாயிருக்க, ஒருவர் கூறை
எழுவருக்குப்படி யிருப்பதென்?’ ‘கோவிந்த – நீ ஆஸ்ரித ரக்ஷணத்திலே
தீக்ஷித்திருக்க, “க்ருஷ்ணா” ஸ்ரயா” என்றிருக்கிற என்னை க்ருபை பண்ணா
தொழிவதென்?” ‘கோவிந்த – நாராயணா என்று உன் சிறு பேரையோ நான்
சொல்லிற்று? உன்னிலும் அதிகமான உன்பேரையன்றோ நான் சொல்லிற்று!’
‘கோவிந்த – என்னுடைய ரட்சணத்துக்கு மலையெடுக்க வேணுமோ?
கண்ணாலே நோக்க அமையாதோ’ என்ற வ்யாக்யான வாக்கியங்கள் இங்குக்
காணத்தக்கன:) கோவிந்தன் – கோ – பசுக்களை, விந்தன்-காப்பாற்றினவன்
என்று பொருள்.

    திருமாலின் திருநாமத்தை உச்சரித்ததனால், இதற்கு முன் கண்டிராத
இனிய ரஸம் நாவிற்சுரப்பதாயிற்று; இதனை “குருகூர் நம்பி யென்னக்கால்,
அண்ணிக்குமமுதூறு மென்னாவுக்கே” “சிந்திக்கத் தித்திக்கும்” என்றாற்போலக்
கொள்க.  ஊறாத அமிழ்தூற – தொடைமுரண்.  ‘உள்ளம் எலாம்’ என்றது,
‘வெயிலெல்லாம்’ என்றதுபோல வந்த ஒருமைப்பன்மைமயக்கம்; இனி, மனம்
புத்தி சித்தம் அகங்காரம் என்று உள்ளுறுப்பு நான்காதல்பற்றி வந்த
பன்மையாகவுமாம்.  திரௌபதி உள்ளம் உருகினாள் – “உயர் திணை
தொடர்ந்த பொருள் முதலாறும், அதனொடுசார்த்தினத்திணைமுடிபின”
என்பது விதி.        

அரு மறை சொல்லிய நாமம் ஆயிரமும் உரை தழைக்க
அமரர் போற்றும்
திருமலர்ச் செஞ் சேவடியோன் திருச் செவியில் இவள் மொழி
சென்று இசைத்த காலை,
மரு மலர் மென்குழல் மானின் மனம் நடுங்கா வகை, மனத்தே
வந்து தோன்றி,
கரிய முகில் அனையானும், பிறர் எவர்க்கும் தெரியாமல்,
கருணை செய்தான்.248.-கிருஷ்ணபகவான்திரௌபதிக்கு அருள்புரிதல்.

அமரர் – தேவர்கள், அரு மறை சொல்லிய நாமம் ஆயிரமும்
– அரிய வேதங்களிற் கூறியுள்ள (தனது) ஆயிரந்திரு நாமங்களைக்
கொண்டும், உரை தழைக்க போற்றும் – (தங்கள்) வார்த்தைகள் செழிக்கும்படி
எடுத்துத் துதிக்கப்பெற்றவனான, திருமலர் செம் சிறு அடியோன் – அழகிய
தாமரை மலர்போன்ற சிவந்த சிறிய திருவடிகளை யுடையவனான கண்ணபிரானது,
திருசெவியில் – அழகியகா துகளில், இவள் மொழி சென்று இசைத்த காலை –
இந்தத்திரௌபதியினது (“கோவிந்தா” என்று கதறிக் கூறிய) மொழி வந்து
கேட்டபொழுதில்,- கரியமுகில் அனையானும் – காளமேகத்தை யொத்த
அக்கண்ணபிரானும்,- மரு மலர் மெல் குழல் மானின்-நறுமணம் வீசுகின்ற
மலர்மாலையை யணிந்த மெல்லிய கூந்தலையுடைய மான்போன்றவளான
திரௌபதியினது, மனம்-, நடுங்கா வகை – கலங்காதபடி, மனத்தே வந்து
தோன்றி – (அவளது) மனத்தி லெழுந்தருளிக் காட்சிதந்து, பிறர் எவர்க்கும்
தெரியாமல்-, கருணைசெய்தான் – (மானங்குலையாதபடி ஆடை வளருமாறு)
அநுக்கிரகித்தான்; (எ – று.)

    பரம்பொருளான திருமாலின் அவதாரமாகிய கண்ணபிரான் எங்குமுள
னாதலால், திரௌபதி இரங்கித் தன்னையழைத்த பொழுது அதனைச்
செவியேற்றுத் துவாரகையிலிருந்தபடியே அவளது மனத்தில் வந்து எழுந்தருளி
அருள்புரிந்தன னென்க; இதனை, முதலையின் வாய்ப்பட்ட கஜேந்திராழ்வான்
ஆதிமூலமே யென்று கூவியழைத்தபொழுது திருமால் பரமபதத்திலிருந்து
கொண்டே கருடாரூடனாயும் எழுந்தருளிக் காட்சிதந்து அக்கஜேந்
திராழ்வானுக்கு  அனுக்கிரகித்ததுபோலக் கொள்க.  அருமறை சொல்லிய
நாமமாயிரம்-வேதப்பிரதிபாத்யமான ஸஹஸ்ரநாமங்கள்.  மனத்தே வந்து
தோன்றுதல் – எம்பெருமான் மாநஸஞானத்துக்குப் பிரத்யட்சமாதலால்,
ஞானக்கண்ணுக்குப் புலனாதல்.  இச்செய்யுளினால், அடியவர்க்கெளியவனா
யிருத்தலாகிய பகவானது சௌலப்பியம் விளங்குதல் காண்க.  இனி,
முதலடியில் – (திரௌபதி) ஆயிரநாமங்களையும் உரைத்து அழைக்க என்று
பொருள் கொள்ளுதல், ‘வேறோர் சொல்லுங்கூறாமற் கோவிந்தா கோவிந்தா
வென்றரற்றி’ என்றதனோடு மாறுபடும்.  அன்றி, ‘வேறோர் சொல்லுங் கூறாமல்’
என்றற்கு – எம்பெருமானது திருநாமங்களை யன்றி வேறொருசொல்லையுஞ்
சொல்லாமலென்ற பொதுப்படப் பொருள்கொண்டால், அங்ஙனம் உரைக்கலாம்.
‘அமரர்’ என்றது, பரமபதத்தில் வாழும் நித்யசூரிகளை.  ‘சீரடியோன்’ என்றும்
பாடமுண்டு. மான் – உவமவாகுபெயர். 

உடுத்த துகில் உணர்வுஇல்லான் உரிந்திடவும், மாளாமல்,
ஒன்றுக்கு ஒன்று, ஆங்கு
அடுத்த நிறம் பற்பல பெற்று, ஆயிரம் ஆயிரம்
கோடி ஆடையாகக்
கொடுத்தருள, உரிந்தன பட்டு இருந்த பெருந் தனிக் கூடம்
கொள்ளாது, ஓடி,
எடுத்தனர், பற்பல வீரர்; உரிந்தோனும் சலித்து, இரு கை
இளைத்து நின்றான்!249.- திரௌபதிக்குஆடைசுரக்க, துச்சாதனன்
கைசலித்தல்.

உணர்வு இலான் உரிந்திடவும் – அறிவுகேடனான துச்சாதனன்
விடாமல் அவிழ்த்துக் கொண்டிருக்கவும், (களையக்களைய), உடுத்த துகில் –
(அத்திரௌபதி) தரித்திருந்த ஆடையானது, மாளாமல் – முடிவுபெறாமல்,-
ஒன்றுக்கு ஒன்று ஆங்கு அடுத்த நிறம் பல்பல பெற்று, ஒன்றற்கொன்று
வெவ்வேறாகப் பொருந்திய பலபல நிறங்களைப் பெற்று, ஆயிரம் கோடி
ஆடை ஆக – மிகப்பல ஆயிரக்கணக்கான நூதன வஸ்திரமாக (வளரும்படி),
கொடுத்தருள – (எம்பெருமான்) அநுக்கிரகிக்க.- உரிந்தன பட்டு –
(துச்சாதனனால்) அவிழ்க்கப்பட்ட பட்டாடைகள், இருந்த தனிபெருங் கூடம்
கொள்ளாது – (அரசர்கள்) இருந்த ஒப்பற்ற  பெரிய  சபா  மண்டபமும்
இடங்கொள்ளாமையால், பற்பல வீரர் ஓடி எடுத்தனர்-மிகப்பலவீரர்கள்
(அவ்வாடைகளை) விரைந்தெடுத்துக் கொண்டிருந்தார்கள்; உரிந்தோனும் –
அவ்வாடையைக் களைகின்ற துச்சாதனனும், இரு கை சலித்து இளைத்து
நின்றான் – தனது இருகைகளும் ஓய்ந்து இளைப்படைந்து நின்றிட்டான்;
(எ -று.)

துச்சாதனன் ஓய்ந்தனனேயன்றி ஆடை சுரத்தல் ஓய்ந்திலது என்றவாறு.
இவ்வாறு பலநிறமான ஆடைகள் மேன்மேற் சுரக்கின்ற இப்புதுமையைத்
தெய்வாநுக்கிரகத்தால் நிகழ்ந்ததென வுணர்ந்து துகிலுரிதலை விட்டிராமல்
தன்னாலான வரையிலும் மேன்மேலுங் களைந்தன னாதலின், துச்சாதனனை
‘உணர்விலான்’ என்றார்.  கோடியாடை – புதுவஸ்திரம்.

கங்கை மகன் முதலான காவலர் மெய் உளம் நடுங்கி,
கண்ணீர் சோர,
செங் கை மலர் குவித்து, ‘இவளே கற்பினுக்கும் மரபினுக்கும்
தெய்வம்!’ என்றார்.
அம் கண் அகல் வானோரும், ஆனகமும் வலம்புரியும்
அதிர, தங்கள்
பைங் கனக தருவின் மலர் மழை பொழிந்து, கருணையினால்
பரிவு கூர்ந்தார்.50.- வீடுமன் முதலியோர்திரௌபதியை நன்குமதித்தலும்,
வானவர் பூமழை பொழிதலும்.

கங்கைமகன் முதலான காவலர் – கங்கையின் குமாரனான
வீடுமன் முதலிய அரசர்கள்,-மெய் உற நடுங்கி – உடம்பு மிகவும் நடுங்கி, கண்
நீர் சோர – (தமது) கண்களினின்று நீர் பெருக, செம் கை மலர் குவித்து –
செந்தாமரைமலர்போன்ற (தமது) கைகளைக் கூப்பி,-இவளே கற்பினுக்கும்
மரபினுக்கும் தெய்வம் – ‘இந்தத் திரௌபதியே கற்புநிலைக்கும் குலத்திற்கும்
தெய்வம் போல்வாள்,’ என்றார் – என்று (அவளை) நன்கு மதித்துக்
கூறினார்கள்; அம் கண் அகல் வானோரும் – அழகிய இடத்தையுடைய
விசாலமான வானுலகத்திலுள்ளவர்களாகிய தேவர்களும்,-ஆனகமும் –
துந்துபிவாத்தியமும், வலம்புரியும் – வலம்புரிச் சங்குகளும், அதிர –
ஆரவாரிக்க, தங்கள் பைங்கனக தருவின் மலர் மழை பொழிந்து – தங்களது
பசிய பொன்மயமான கற்பக மரங்களின் மலர்களை மழைபோலச் சொரிந்து,
கருணையினால் – கருணையோடு, பரிவு கூர்ந்தார் – அன்புமிகுந்தார்கள்;
(எ – று.)

    திரௌபதியைச் சாதாரணமானவனென்று எண்ணியிருந்த வீடுமன்
முதலியோர், இப்பொழுது கண்கூடாக நிகழ்ந்த புதுமையைக் கண்டு அவளது
மகிமையை யுணர்ந்து, அத்திரௌபதியைத் தெய்வமாகவே கருதிக்
கைகுவித்தனர். அவர்கள் மெய்ந்நடுங்கினது, திரௌபதி கேட்ட
வினாக்களுக்குத் தாங்கள் தகுதியான  விடைகூறாமல் மேளனமாயிருந்த
குற்றத்தைப்பற்றிய  அநுதாபத்தினா லென்க.  தனது கற்புநிலையால் தானே
மானங் காத்துக் கொண்டதனால், திரௌபதியை  ‘கற்பினுக்குத் தெய்வம்’
என்றும், துச்சாதனன்செய்த தீச்செயலால் தனது குலத்திற்கு வசைமொழி
சிறிதும் நிகழாது புகழை மிகுவித்துநிற்றலால் ‘மரபினுக்குந் தெய்வம்’ என்றுங்
கூறினார்; “தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற, சொற்காத்துச்
சோர்விலாள் பெண்” என்ற திருக்குறள் இங்குக் கருதத்தக்கது.
பதிவிரதாதருமத்தின் சிறப்பைக் கண்ட கொண்டாட்டத்தினால், வானவர்கள்
தமது உலகத்து வாத்தியங்களை முழக்கிப் பூமழை பொழிவாராயினர்.
அங்கண் – அப்பொழுது எனினுமாம்.  வானோரும் உம்மை –
உயர்வுசிறப்போடு  இறந்தது தழுவியது.  ஆநகம் – தேவதுந்துபி.
தேவலோகத்திலுள்ளவை யாவும் பொன்மயமானவை யென்பது நூல்
துணிபாதலால், ‘கனகதரு’ எனப்பட்டது.  கநகதரு – வடசொற்றொடர்.
மலர்மழை-புஷ்பவர்ஷம்.

அழுது அழுது, கொடும் புலிவாய் அகப்பட்ட
மான்பிணைபோல் அரற்றாநின்ற,
எழுத அரிய, மடப் பாவை தங்கள் முகங்களை
நோக்கி, இரங்கி வீழ்ந்த
பொழுது, மனம் புகை மூள, பூந் தடங் கண் அனல் மூள,
போரில் மூளப்
பழுது படா அடல் ஆண்மைப் பவன குமரன் தடக் கை
படைமேல் வைத்தான்.251.- திரௌபதியின்வருத்தத்தை நோக்கி வீமசேனன்
ஆயுதமெடுத்தல்.
 

கொடும் புலிவாய் அகப்பட்ட மான்பிணைபோல் – கொடிய
புலியினிடத்து அகப்பட்டுக்கொண்ட பெண்மான்போல, (மிக அஞ்சி), அழுது
அழுது அரற்றாநின்ற-மிகுதியாகப் புலம்பிக் கதறிக்கொண்டிருக்கிற, எழுது அரிய
மடம் பாவை – இளமையுடையவளான எழுதுதற்கு அரிய [மிகவும் அழகிய]
சித்திரப் பிரதிமை போன்ற திரௌபதி, தங்கள் முகங்களை நோக்கி இரங்கி
வீழ்ந்த பொழுது – (பர்த்தாக்களாகிய) தங்களுடைய முகங்களைப்
பார்த்துக்கொண்டே வருந்திக் கீழ்விழுந்த சமயத்தில், (அது நோக்கி),- பழுதுபடா
அடல் ஆண்மை பவனகுமரன் – (ஒருபொழுதும்) தோல்வி யடையாத பல
பராக்கிரமங்களையுடைய வாயுகுமாரனான வீமசேனன், (கோபத்தினால்), மனம்
புகை மூள – மனத்திற் புகையெழவும், பூ தட கண் அனல் மூள – தாமரை
மலர்போன்ற (தனது) பெரிய கண்களில் தீப்பொறியுண்டாகவும்,- போரில்
மூள-யுத்தஞ் செய்யுமாறு, படைமேல் தட கை வைத்தான்-கதாயுதத்தின்மேல்
(தனது) பெரிய கைகளை வைத்திட்டான்;  (எ – று.)

    துச்சாதனனுக்குப் புலியும், திரௌபதிக்குப் பிணைமானும் உவமை. தங்கள்
முகங்களை நோக்கியது, இச்சமயத்திலாவது நீங்கள் பகைவர்களை யழிக்க
முயலவேண்டாவோ? என்ற குறிப்பு.  வீமசேனன் திரௌபதியின்
பெருவருத்தத்தைக் கண்டு மிக்க சினங்கொண்டு மனம் புகைந்து கண்களில்
தீப்பொறி பறக்கப் போர் செய்யக் கருதித் தனது கதாயுதத்திற்
கைவைத்தனனென்க.  பவநகுமரன்-வடமொழித்தொடர். ‘மூள’ என்னுஞ்
செயவெனெச்சம் மூன்றனுள் – முன்னைய இரண்டும் –
உடனிகழ்ச்சிப்பொருளனவாய் நிகழ்காலத்தையும், ஈற்றது-காரியப்பொருளதாய்
எதிர்காலத்தையுங் குறிக்கும்.  ‘மூள’ என்ற சொல் ஒரே பொருளில் பலமுறை
வந்தது-சொற்பொருட்பின்வருநிலையணி. 

அருள் ஆரும் தருமபதி, ‘ஆகாது’ என்று எமைப் பலகால்
அடக்க, யாமும்
இருளால் வெம் பரிதி வடிவு ஒளிப்பதுபோல், அமர்
புரியாது இருக்கின்றேமால்;
மருளால் மெய்ம் மயங்கி ஒரு வலியுடையோர்தமைப் போல
மதத்த நீங்கள்
பொருளாக இருந்தனமோ? நூற்றுவரும் வருக! எதிர்
பொருக!’ என்றான்.252.-வீமசேனன் மிக்கசினத்தால் துரியோதனாதியரைப்
போர்க்கு அழைத்தல்.

(வீமன் துரியோதனாதியரை நோக்கி),-‘அருள் ஆரும் தரும
பதி-கருணைநிறைந்த தருமராஜன், ஆகாது என்று எமை பலகால் அடக்க-
‘(கோபித்தல்) தகாது’ என்று சொல்லி எங்களைப் பலமுறை அடக்கியதனால்,-
யாமும்-நாங்களும்,-வெம்பரிதி இருளால் வடிவு ஒளிப்பதுபோல்-உஷ்ண
கிரணனான சூரியன் இராப்பொழுதில் (தனது) வடிவம் மறைவதுபோல (எமது
வலிமை வெளிக்குத் தோன்றாது அடங்கி), அமர்புரியாது இருக்கின்றேம்-
(உங்களுடன்) போர் புரிந்து உங்களை யழிக்காமல் வாளா இருக்கின்றோம்;
(இவ்வாறன்றி), மருளால் மெய் மயங்கி அறியாமையினால் உண்மையை மாறாக
மயங்கி, ஒரு வலி உடையோர் தமைபோல மதித்து-(உங்களை) ஒப்பற்றவீர
முடையவராகக் கருதி, நீங்கள் பொருள் ஆக இருந்தனமோ-உங்களை ஒரு
பொருளாகக்கொண்டு போர் செய்யாதிருந்தோமோ? நூற்றுவரும் எதிர் வருக
பொருக – நீங்கள் நூறுபேரும் (இப்போது எனது) எதிரில் வந்து போர்
செய்வீர்களாக,’ என்றான்-; (எ – று.) இரண்டாமடியில், ஆல் – ஈற்றசை.

    ‘நாங்கள் போர்புரிந்து உங்களை இதுவரையிலும் அழிக்காதிருந்தது,
தருமபுத்திரனது கட்டளைக்குக் கட்டுப்பட்டேயல்லாமல் உங்களை
வலிமையுடையோரென்று பிரமித்து உங்களை ஒருபொருளாகவெண்ணி அஞ்சி
யன்று;  இப்பொழுது அவ்விஷயம் தெற்றென விளங்குமாறு நீங்கள்
நூற்றுவரும் ஒருங்கு சேர்ந்து என்னொருவன் முன்னே போர்க்கு வாருங்கள்’
என வீமன் துரியோதனாதியரை அறைகூவினனென்க.  இராப்பொழுதென்ற
காரணத்தாற் சூரியன் தான் மறைந்து விடுவதுபோல, எங்கள் தமையனான
தருமபுத்திரனது கட்டளையென்ற காரணத்தினால் நாங்கள் எங்களது
பராக்கிரமத்தை வெளிக்காட்டாது அடங்கியிருக்கின்றோ மென்பது,
இரண்டாமடியின் கருத்து.  இயற்கையில் ஆயிரங்கிரணங்களை யுடையனாய்ப்
பேரொளியையுடைய சூரியனும் கடவுள் கட்டளைக்குக்கட்டுப்பட்டு
இராப்பொழுதில் தான் மறைந்து விடுவதுபோல, இயற்கையிற்
பராக்கிரமசாலிகளாய் மகா வீரரான நாங்களும் மூத்தோர் சொற்குக்
கீழ்ப்படியவேண்டுமென்ற தரும சாஸ்திரத்தின் கட்டளைக்குக் கட்டுப்பட்டு
அடங்கியிருக்கின்றோ மென்றது, உவமையாற் பெறப்படும்.  தருமனது
கட்டளைக்கு இருளும், சூரியனது ஒளிக்குத் தங்களது பராக்கிரமமும் உவமை.
இனி, சூரியன் இயற்கையால் அஸ்தமித்து மறைவது இருளினால் மறைவதாக
மேல் நோக்கில் தோன்றுவது போல, நாங்கள் தருமனது கட்டளைக்குக்
கீழ்ப்படிந்து அடங்கி இருப்பது நுமது வீரத்திற்குப் பின்வாங்கி
அடங்கியிருப்பதுபோலத் தோன்றும்; ஆயினும், சூரியன் தனது
ஆயிரங்கிரணங்களோடு உதயமாகுங் காலத்தில் மிக்குப் பரவியிருக்கும் இருள்
இருந்த இடமுந் தெரியாது அழிந்தொழிவதுபோல, நாங்களும் உக்கிரங்கொண்டு
எங்கள் பராக்கிரமத்துடன் போர்க்கு எழுந்தால் பெருவீரர்களென
அகங்காரங்கொண்டுள்ள பெருந்திரளான நீங்களும் எங்கள் முன்னிலையில்
இருந்த இடமுந் தெரியாது அழிந்தொழிவீர்களெனக் கருத்துக் கூறினுமாம்;
இவ்வுரையில் இருளுக்குத் துரியோதனாதியரும், சூரியனுக்குப் பாண்டவர்களும்
உவமையாவர்;  உவமையணி. மருள்-ஒன்றை மற்றொன்றாக நினைக்கும்
விபரீத ஞானம்;  திரிபுணர்ச்சி.

    ‘உடையோர் தமைப்போல’ – போல – ஒப்பில்போலி. நூற்றுவர் –
தொகைக்குறிப்பு; இங்கு, முன்னிலைப்படர்க்கை; உம்மை – முற்றுப் பொருளது.
வருக எதிர்பொருக-பிராசம்.   

கொந்து அளக மலர் சரியக் கூப்பிடுவாள் கொடுங் கற்பும்,
கூறை மாளா
மந்திரமும், அடல் வீமன் மானம் இலாது உரைக்கின்ற
வலியும், காண,
தந்தை விழி இருள்போலத் தகு மனத்தோனும் துச்சாதனனை
நோக்கி, ‘பைந்தொடியைக் கொணர்ந்து, இனி என் மடியின்மிசை
இருத்துக!’ எனப் பணித்திட்டானே.253.-திரௌபதியைத் தன்மடிமீதுஇருத்துமாறு துரியோதனன்
துச்சாதனனுக்குக் கட்டளையிடுதல்.

தந்தை விழி இருள்போல தகும் மனத்தோனும் – தகப்பனாகிய
திருதராட்டிரன் கண்குருடாயிருப்பது போல அஞ்ஞான இருளைக் கொண்ட
மனத்தையுடையனாகிய துரியோதனனும்,-துச்சாதனனை நோக்கி-, ‘கொந்து
அளகம் மலர் சொரிய – தொகுதியான கூந்தல் அவிழ்ந்துகுலைதலினால்
(அதில் அணிந்த) மலர்கள் கீழேசிந்த, கூப்பிடுவாள்-கதறியழுபவளாகிய
திரௌபதியினது, கொடுங்கற்பும் – மிக உக்கிரமான பதிவிரதா தருமத்தையும்,
கூறை மாளா மந்திரமும் – (அவளது) ஆடை அவிழ்க்க அவிழ்க்கக்
குறைவுபடாமல் மேன்மேல் வளர்கிற இரகசியத்தையும், அடல் வீமன் மானம்
இலாது உரைக்கின்ற வலியும்-வலிமையையுடைய வீமசேனன் மானமில்லாமற்
கூறுகின்ற மிடுக்கையும், காண – (பின்னும்) காணும்படி,-பைந்தொடியைக்
கொணர்ந்து இனி என் மடியின் மிசை இருத்துக – பைம்பொன்னாற் செய்த
வளையல்களை யணிந்த திரௌபதியை இழுத்துக்கொண்டு வந்து எனது
தொடைமேல் இருக்கச் செய்வாய்,’ என பணித்திட்டான் – என்று
கட்டளையிட்டான்; (எ – று.)

    மேன்மேல் தெய்வாநுக்கிரகத்தால் ஆடை வளர்ந்தமையொன்றைக்
கொண்டே திரௌபதியினது மேன்மைகளை யெல்லாம் அறிந்து அவள்
திறத்தில் யாதொரு தீமையையுஞ் செய்யாதிருக்க வேண்டியதாக, அவ்வாறு
இராமல் மேன்மேல் தீங்கையே புரிகின்றா னாதலால், துரியோதனன் தானும்
தந்தைபோலவே குருடனாவன்:  அவன் ஊனக்கண்குருடன், இவன்
ஞானக்கண் குருடன் என்றபடி.  திரௌபதியின் கற்புநிலையைப் பின்னும்
பரிசோதிக்கக் கருதியும், ஆடையுரிந்த காலத்து அதனை மேன்மேலும் சுரக்கச்
செய்ததுபோல இப்பொழுது நான் செய்யும் இதற்கு அத்திரௌபதி என்ன
பரிகாரஞ் செய்வாளெனக் காண நினைத்தும், வீரவாதம் பேசும் வீமன் நான்
இவ்வாறு செய்தால் என்ன செய்வானெனக் காணவெண்ணியும், துரியோதனன்
திரௌபதியைத் தன் தொடைமீது இருத்துமாறு துச்சாதனனுக்குக்
கட்டளையிட்டன னென்க. தன் மானத்தைத் தான் காக்குமாறு தெய்வாநுக்கிரகம்
பெறுதற்குக் காரணமாயிருத்தலால், திரௌபதியின் கற்பு ‘கொடுங்கற்பு’
எனப்பட்டது. “குலமகட்குத் தெய்வங் கொழுநனே” ஆதலால், “தெய்வந்
தொழாஅள்கொழுநற்றொழு”வது கற்புடை மகட்குக் கடமையாயிருக்க, இவள்
அங்ஙனம் தனது துயர் தீர்த்தற் பொருட்டுத் தன் கணவர்களைக் கூப்பிடாது
பிறனொருவனை [கோவிந்தனை]க் கூப்பிடுகிறாள்; இது என்ன கற்புடைமை!
என்று ஏசுவான், ‘கொடுங்கற்பு’ என்றானுமாம். அடிமைப்பட்டதனாலும்,
மனைவிக்கு நேர்ந்த அவமானத்தைத் தீர்க்கமுடியாமல் வாளாவிருந்ததனாலும்,
அப்பொழுது வீமன் கூறுகின்ற வார்த்தையை மானமிலா துரைக்கின்றதாகக்
கொண்டான். இருத்துகென – தொகுத்தல். 

என்ற பொழுது, அருந்ததிக்கும் எய்தாத
கற்புடையாள்-இடி ஏறுண்ட
வன் தலை வெம் பணி போல நடுநடுங்கி, மாயனையும்
மறவாள் ஆகி,
‘புன் தொழிலோன் யான் இருக்கக் காட்டிய தன் தொடை
வழியே புள வாய் குத்தச்
சென்றிடுக, ஆர் உயிர்!’ என்று, எவரும் வெருவுறச்
சபித்தாள்-தெய்வம் அன்னாள்.254.-திரௌபதிதுரியோதனனுக்குச் சாபமிடுதல்.

என்ற பொழுது – என்று (துரியோதனன் துச்சாதனனுக்குக்)
கட்டளையிட்ட வளவில்,-அருந்ததிக்கும் எய்தாத கற்பு உடையாள்-
அருந்ததியென்பவட்கும் வாய்க்காத மிக்க கற்புடையவளும்,-தெய்வம்
அன்னாள் – தெய்வத்தை யொத்தவளுமாகிய திரௌபதி, இடிஏறு உண்ட வல்
தலை வெம்பணிபோல நடுநடுங்கி – பேரிடியைக் கேட்கப் பெற்ற வலிய
தலையையுடைய கொடிய சர்ப்பம்போலப் பதைபதைத்து, மாயனையும் மறவாள்
ஆகி – ஸ்ரீ கிருஷ்ண பகவானையும் மனத்திற்கொண்டு தியானிப்பவளாய்,-‘புல்
தொழிலோன் – இழிதொழிலுடையவனாகிய துரியோதனன், யான் இருக்க –
நான் இருக்குமாறு, காட்டிய – சுட்டிக்காட்டின, தன் தொடை வழியே – தனது
தொடையின் வழியாகவே, புள்வாய் குத்த – வாயலகினாற் பறவைகள்
குத்துமாறு, ஆர் உயிர் சென்றிடுக – அருமையான உயிர் ஒழிவானாக,’ என்று-,
எவரும் வெருவுற சபித்தாள் – கேட்பவர்களெல்லாரும் அஞ்சும்படி
சபித்திட்டாள்; (எ – று.)

     ஐவரைக் கணவராகப் பெற்றும் கற்பு நிலைமைக்குக் குறைவு வாராமற்
சமயத்தில் மானபங்கம் நேராது காத்துக் கொண்ட சிறப்பினை யுடையளாதலால்,
திரௌபதியை ‘அருந்ததிக்கு மெய்தாத கற்புடையாள்’ என்றார்;
நஹிநிந்தாந்யாயத்தால் [நஹிநிந்தாந்யாயமாவது – ஒரு பொருளைத் தாழ்த்திக்
கூறுமிடத்து அப்பொருளின் தாழ்ச்சியில் தாற்பரியமாகாமல் அவ்விடத்துக்கு
முக்கியமான பொருளின் மேன்மையைக் கூறுதலிலே கருத்துண்டாதல்]
அருந்ததியின் குறைவைக் காட்டாமல், இத்தொடர்மொழி திரௌபதியின்
மேன்மையை மாத்திரம் உணர்த்தும்.  ஆடை வளரப் பெற்ற தெய்விகத்தன்மை
யுடைமையால் ‘தெய்வமன்னாள்’ என்றார்;  திரௌபதியை இங்கு இவ்வாறு
மேம்படுத்திக் கூறியது இவள் இப்பொழுது துரியோதனனுக்கு இடுஞ் சாபம்
தவறாது பலிக்குமென்றற்கு.  இடியேறு-பேரிடி.  இடியொலியைக் கேட்ட
மாத்திரத்தில் நாகங்கள் அஞ்சி யொடுங்குதல் போல, திரௌபதியும்
துரியோதனனது கர்ணகடூரமான கொடுஞ்சொற்களைக் கேட்டமாத்திரத்தில்
அஞ்சி நடுங்கினளென்க.  கிருஷ்ணானுக்கிரகத்தினாலேயே தன் மானத்தைக்
காத்துக்கொண்டாளாதலின், கிருஷ்ணசகாயமிருந்தால் தனது தொழில் இனிது
முற்றுப்பெறு மெனக் கருதி, சாபமிடும்போதும் கிருஷ்ணனை மறவாது
தியானித்தனளென்க. மாயன் – எவராலும் அறியவொண்ணாத
மாயைகளையுடையவன்.  மாயையாவது – கூடாததையுங் கூட்டுவிக்கும் திறம்
[அகடிதகடநாஸாமர்த்தியம்].  பலர் கூடிய சபையிற் சிறிதும் நாணமின்றிப் பிறர்
மனைவியான அபலையினிடத்துத் தன்வீரத்தைக் காட்டத்தொடங்கினனாதலால்
துரியோதனனை, ‘புன் தொழிலோன்’ என இகழ்ந்து கூறினார்.  துரியோதனன்
தனது துகிலை யொதுக்கி இடத்தொடையைக்காட்டி அதில் இருக்குமாறு
குறிப்பாலுணர்த்த, திரௌபதி சபித்தனள் என முதனூல் கூறும்.  சென்றிடுக –
வியங்கோள்: வைதற்பொருளின்கண் வந்தது.   

அரசவையில் எனை ஏற்றி, அஞ்சாமல் துகில் தீண்டி,
அளகம் தீண்டி,
விரை செய் அளி இனம் படி தார் வேந்தர் எதிர்,
தகாதனவே விளம்புவோரை,
பொரு சமரில் முடி துணித்து, புலால் நாறு வெங்
குருதி பொழிய,
வெற்றி முரசு அறையும் பொழுதல்லால், விரித்த குழல் இனி
எடுத்து முடியேன்!’ என்றாள்.255.-திரௌபதியின் சபதம்.

பின்னும் திரௌபதி), ‘அரசு அவையில் – ராஜசபையிலே,
எனை ஏற்றி – என்னைக் கொண்டுவந்து,-விரை செய் அளி இனம் படிதார்
வேந்தர் எதிர் – நறுமணம் வீசப்பெற்றதும் வண்டுகளின் கூட்டம் மொய்க்கப்
பெற்றதுமான மலர்மாலையையணிந்த அரசர்கட்கு எதிரிலே,-அஞ்சாமல்-சிறிதுங்
கூச்சங்கொள்ளாமல், அளகம் தீண்டி-(எனது) தலைமயிரைப் பிடித்திழுத்தும்,
துகில் தீண்டி-(எனது) ஆடையைத் தொட்டு அவிழ்த்தும் (இந்த
அக்கிரமத்தோடு நில்லாமல்), தகாதனவே விளம்புவோரை – சொல்லத் தகாத
கொடுஞ்சொற்களையுங் கூறுகின்றவர்களான துரியோதனாதியரை, பொரு சமரில்
முடிதுணித்து – (இனி) தாக்கிச்செய்யும் போரிலே தலைகளையறுத்து,
புலால்நாறு வெங்குருதி பொழிய-தீ நாற்றம் வீசப்பெற்ற கொடிய இரத்தம்
பெருகிக்கொண்டிருக்க, வெற்றி முரசு அறையும்-ஐயபேரிகையை முழக்குகிற,
பொழுது-அக்காலத்தில், அல்லால்-முடிப்பேனேயல்லாமல், விரித்த குழல் இனி
எடுத்து முடியேன்-அவிழ்க்கப்பட்டு விரிந்துள்ள (எனது) கூந்தலை அதற்கு
முன்பு எடுத்து முடிக்கமாட்டேன்,’ என்றாள் – என்று பிரதிஜ்ஞை செய்தாள்;
(எ – று.)

    அளகந்தீண்டுதலும் துகில் தீண்டுதலும்-துச்சாதனனுக்கு மாத்திரமும்,
தகாதனவிளம்புதல் – துரியோதனன் முதலிய பலர்க்கும் உரிய வினையாம்.
துரியோதனாதியர் உயிரொழிந்து அவர்கள் மனைவியர் கூந்தலை
விரிக்கிறவரையில் யான் இவ்வாறே தலைவிரிகோலமாயிருப்பேனென்பது,
திரௌபதியின் சபதமாம்.  செய்யுளாதலின், ‘துகில் தீண்டி யளகந் தீண்டி’ என
முறைபிறழக்கூறினார்.  

பாஞ்சாலிக்கு அரசவையில் பழுது உரைத்தோன் உடல் எனது
படையாம் மேழி
போம் சாலின் நிணம் சொரிய, துணைவரொடு குலம் மாள,
பொருவேன் யானே;
தீம் சாலி விளை பழனத் திருநாட்டீர்! கேண்மின்’ என,
செந் தீ மூள
வேம் சாலின் நறு நெய்போல், வெஞ்சினத்தான்
வஞ்சினமும் விளம்புவானே:256.-இதுவும்,அடுத்தகவியும்-ஒருதொடர்;
வீமசேனனது சபதம்.

செம் தீ மூள – செந்நிறமான நெருப்பு மூண்டு எரிவதனால்,
வேம்-கொதிப்படைந்த, சாலின்-கடாரத்திற் காய்கிற, நறுநெய்போல்-
நறுமணமுள்ள நெய்போல, வெம் சினத்தான் – வெவ்விய கோபத்தை
யுடையவனான வீமசேனன்,-(சபையிலுள்ள அரசர்களை நோக்கி), ‘தீம் சாலி
விளை பழனம் திருநாட்டீர்-இனிய செந்நெற்பயிர்கள் விளைகின்ற வயல்கள்
சூழ்ந்த அழகிய நாடுகளையுடைய அரசர்களே’ கேண்மின்-(யான் சொல்வதைக்
கேட்பீராக,’ என-என்று கூறி, வஞ்சினமும் விளம்புவான்-சபதவார்த்தைகளைக்
கேட்பவனானான்; – பாஞ்சாலிக்கு – திரௌபதியின் திறத்தில், அரசவையில்-
ராஜ சபையில், பழுது உரைத்தோன்-தீ மொழிகளைக் கூறியவனான
துரியோதனனது, உடல்-உடம்பிலே, எனது படை ஆம் மேழி போம் சாலின் –
எனது ஆயுதமாகிய கலப்பை பிளந்துசெல்லுகின்ற வழியினின்று, நிணம்
சொரிய – கொழுப்புக்கள் வெளிப்படும்படி, துணைவரொடு – (அவனது)
தம்பிமாருடனே, குலம் மாள – (திருதராட்டிரனது) வமிசம் அடியோடு
அழியுமாறு, யானே பொருவேன் – நானொருவனே போர்செய்வேன்; (எ – று.)

    துரியோதனாதியர் நூற்றுவரையும் தானொருவனே கொல்வதாக
வீமசேனன் சபதஞ்செய்தன னென்க.  துரியோதனனது உடம்பாகிய வயலில்
தனது கதாயுதமாகிய கலப்பையைக் கொண்டு தொழில் செய்து,
அவ்வாயுதத்தாற்புண்பட்ட இடமாகிய உழுபடைச்சாலினின்று நிணமாகிய
கலங்கனீரைப் பெருகச் செய்வேனென்றன னென்க.  மேழியும் சாலுங்
கூறினதற்கு ஏற்ப, மற்றவற்றை உருவகப்படுத்திக் கூறாமையால், இது ஏகதேச
உருவகவணி
யாம்.  இரண்டாமடியில், சால் – கலப்பை உழுது செல்லும்
வழியும், நான்காமடியில் பெருந்தாழியுமாம்.  யானே, ஏகாரம் – பிரிநிலை.
வீமனது கோபத்திற்கு-கொதிக்கும் நெய் உவமை.  சினத்தான்-பெயர்;
சினத்தையுடையவனாய் என முற்றெச்சமாகக் கொள்ளுதலுமொன்று.  சினத்தால்
என மூன்றாம் வேற்றுமையாகக் கொண்டால் ‘வீமசேனன்’ என்ற எழுவாய்
வருவிக்க.       

வண்டு ஆரும் குழல் பிடித்துத் துகில் உரிந்தோன் உடல்
குருதி வாரி அள்ளி,
உண்டு ஆகம் குளிர்வதன்முன் இக் கரத்தால் புனல்
உண்ணேன்; ஒருகால் என் கைத்
தண்டால் வெம் புனல் எற்றி, மீது எழுந்து விழும் திவலை
தண்ணீர் ஆகக்
கொண்டு, ஆவி புரந்திடுவன்; இது விரதம் எனக்கு!’
எனவும் கூறினானே.

 (அன்றியும்),-வண்டு ஆரும் குழல் பிடித்து – வண்டுகள்
மொய்க்கப்பெற்ற (திரௌபதியினது) கூந்தலைப் பிடித் திழுத்து வந்து, துகில்
உரிந்தோன் – (அவளது) ஆடையையவிழ்த்தவனாகிய துச்சாதனனது, உடல் –
உடம்பினின்று பெருகுகிற, குருதிவாரி-இரத்தநீர்ப் பெருக்கை, அள்ளி உண்டு –
(கையினால்) அள்ளியெடுத்துக் குடித்து, ஆகம் குளிர்வதன் முன்-(எனது) உடம்பு
குளிர்ச்சியடைதற்கு முன்னம் (எனது கோபந் தணிவதற்கு முன்னே என்றபடி),
இ கரத்தால் புனல் உண்ணேன் – இந்த (எனது) கைகளால் நீரைப்பருகேன்;
ஒருகால்-ஒரு வேளை (தாகம் எடுத்து அவசியமாகநீர்பருக நேர்ந்தபொழுது),
என் கை தண்டால் – எனது கையிலேந்தியுள்ள கதாயுதத்தினால், வெம் புனல்
எற்றி – விருப்பத்திற்கிடமான நீரை மோதி, (அப்பொழுது), மீது எழுந்து விழும் –
மேலெழுந்து தெரித்துவிழுகின்ற, திவலை-நீர்த்துளிகளை, தண் நீர் ஆக
கொண்டு – (குடித்தற்கு உரிய) குளிர்ந்த நீராகக் கொண்டு பருகி, ஆவி
புரந்திடுவன் – (எனது) உயிரைக் காத்துக் கொள்வேன்;  எனக்கு இது விரதம் –
எனக்கு இதுவே செய்தொழில்,’ எனவும் கூறினான்-என்றும் சபதஞ்செய்தான்;
(எ – று.)

    துரியோதனனைப்போலத் துச்சாதனனும் திரௌபதியின் விஷயத்திற்
பெருந்தீங்குகளை நேரே செய்தன னாதலால், அத்துச்சாதனனைக் குறித்தும்
வீமன் கடுங்கோபங்கொண்டு தனியே சபதஞ்செய்கின்றான்.
துச்சாதனனைக்கொன்று அவனுடம்பினிரத்தத்தைக் குடிப்பதற்கு முன்னம்
கதையாற்புடைத்து அங்குத்தெறித்த நீரைப் பிராணாதாரமாகப் பருகுவதன்றி,
கையால் நீரையெடுத்துப் பருகுவ தில்லையென்று வீமன் சபதஞ் செய்தவாறு.
வாரி என்பதை வினையெச்சமாகக்கொண்டு பொருள் கூறினுமாம்

பகலவன்தன் மதலை உயிர் பகைப் புலத்துக் கவர்வன்’
எனப் பார்த்தன் சொன்னான்;
நகுலனும், மற்று ‘என் கரத்தால் சௌபல நாயகன் உயிர்க்கு
நாசம்’ என்றான்;
‘சகுனிதனை இமைப்பொழுதில்,’ சாதேவன், ‘துணித்திடுவேன்
சமரில்’ என்றான்;
இகல் நிருபர் இவர் மொழி கேட்டு, ‘எளிதோ, இக் கொடும்
பழி? என்று ஏங்கினாரே.258.-அருச்சுனன் நகுலன்சகதேவன் இவர்களின் சபதம்.

பார்த்தன்-அருச்சுனன், ‘பகை புலத்து – பகைவர்கள்
நெருங்கியுள்ள போர்க்களத்தில், பகலவன்தன் மதலை உயிர் – சூரியனது
மகனாகிய கர்ணனது உயிரை, கவர்வன்-கவர்வேன்,’ என சொன்னான்-என்று
சபதங்கூறினான்; நகுலனும்-, ‘என் கரத்தால்-எனது கையினால், சௌபலன்
நாயகன் உயிர்க்கு நாசம் – சுபலனது பேரனாகிய [சகுனியின் மகனாகிய]
உலூகனென்பவனது உயிர்க்கு நாசமுண்டாகக் கடவது’, என்றான்-; சாதேவன்-,
‘சமரில்-போர்க்களத்தில், சகுனிதனை இமைப்பொழுதில் துணித்திடுவேன்-
சகுனியை ஒருமாத்திரைப்பொழுதில் தலைதுணித்துக்கொல்வேன்’, என்றான்-:
(அப்பொழுது), இகல் நிருபர் – (சபையிலிருந்த) பராக்கிரமசாலிகளான
அரசர்கள், இவர் மொழிகேட்டு-இவர்களது சபத வார்த்தையைக் கேட்டு, ‘இ
கொடும் பழி எளிதோ-துரியோதனாதியர் செய்த இக்கொடுமையான
நிந்தனைச்செயல் அற்பமானதோ? [அன்று; மிகப்பெரிதாகும்: ஆகையால், வீமன்
முதலியோர் இவ்வாறு சபதஞ் செய்தது தகுதியே]’, என்று – என்று சொல்லி,
ஏங்கினார் – ஏக்கங்கொண்டு வருந்தினார்கள்;

    துரியோதனன் துஷ்டகாரியஞ்செய்தற்குப் பெருந்துணையாய் நின்றதனால்,
‘கர்ணனைப் போரிற்கொல்வேன்’ என்று அருச்சுனனும், தமக்கு நேர்ந்த
இவ்வளவு பெருந்தீங்குக்கும் பிரதானனாய் நிற்றலால் ‘சகுனியைக்கொல்வேன்’
என்று சகதேவனும், மற்றெல்லாரிடத்திலுங் காட்டில் மாயச்சூதாடி வென்ற
இச்சகுனியினிடத்திலேயே மிக்க கறுவுள்ளதனால் அச்சகுனியைக் கொல்வதோடு
நில்லாமல் அவன் வமிசத்தையே கருவறுக்குமாறு ‘அவன் புதல்வனைக்
கொல்வேன்’ என்று நகுலனும் சபதமொழி கூறினரென்க. சகதேவன் சகுனியைக்
கொல்லுமாறு சபதங்கூறியபின்னரே நகுலன் இவ்வாறு சபதஞ்செய்ததாக முதனூல்
கூறும்.  ‘துரியோதனாதியரது தீச்செயல்கள் மிகவுங்கொடியனவாகையால்,
மகாசாதுக்களும் மிக்க பொறுமையுள்ளவர் களுமான பாண்டவர்களும்
மனம்பொறாது சபத மொழிகள் கூறவேண்டுவதாயிற்று;  துரியோதனாதியர்கள்
இவ்வளவு முறைகேடான பெருந்தீங்குகளைச் செய்து தமக்கே நாசத்தைத்
தேடிக்கொண்டார்களே! அந்தோ!!’ என்று அரசர்கள் இரங்கிக்கூறின ரென்க.

     பகலவன் – திநகரன் என்ற வடமொழியின் பொருளது. பார்த்தன் –
பிருதையின் மகன்;  தத்திதாந்தநாமம்:  (பிருதை-குந்தி.) இது அருச்சுனனுக்குப்
பெரும்பாலுஞ்சிறப்பாய் வழங்கும்; காரணவிடுகுறி. தாய்க்கு இளையமகனிடத்தில்
அன்புமிகுதி என்ற பொதுநியாயம், இதற்கு காரணமாகலாம். ‘ஸௌபலன்’
என்ற வடமொழி சுபலனது புதல்வனென்று பொருள்படுவதுபோல, சுபலனது
பேரனென்று பொருள்படுவதற்கும் உரியதாதலாலும், சகுனியைக் கொல்வேனெனச்
சகதேவன் சபதஞ்செய்ததாக வந்துள்ளதனாலும், சகுனியின் புதல்வனான
உலூகனென்பவனைக்கொல்வே னென்று நகுலன் சபதஞ்செய்ததாக முதனூலிற்
கூறியுள்ளதனாலும், இச்சொல்லுக்கு இவ்வாறு பொருளுரைக்கப்பட்டது. இனி,
ஸௌபல நாயகனுயிர்க்கு – சௌபலனாகிய தலைவனது (சகுனியினது)
உயிர்போன்ற புதல்வனுக்கு என்றும் உரைக்கலாம்.  மற்று – அசை

மேகங்கள் வழங்காமல், விண் அதிர்ந்திட்டு, ஊர் கோளும்
வெயிலைச் சூழ்ந்து,
பூகம்பம் பிறந்து, உடுவும் அரும் பகலே விழுந்து, உடனே,
பொய்கை வாடி,
யாகம் செய் நெடுஞ் சாலை இன் பாலும் செந்நீர் ஆய்,
இருந்த வேந்தர்
ஆகங்கள் ஒளி மழுங்கிற்று-‘அவிதா!’ என்று, அணங்கு
அனையாள் அழுதபோதே.259.-திரௌபதி புலம்பியபோதுநிகழ்ந்த உற்பாதங்கள்.

அணங்கு அனையாள் – தெய்வப்பெண் போன்றவளான
திரௌபதியானவள், அவிதா என்று அழுதபோது – ‘அவிதா’ என்று கதறியழுத
சமயத்தில்,-உடனே – ஒருசேர,- (அதன்பயனாக), மேகங்கள் வழங்காமல் விண்
அதிர்ந்திட்டு – மேகங்கள் (வானத்திற்) சஞ்சரியாமலிருக்கையிலேயே வானம்
இடித்தும், ஊர்கோள் வெயிலை சூழ்ந்தும் – பரிவேடம் சூரியனைச் சுற்றித்
தோன்றியும் [ஊர்கோள் சூரியனைச்சுற்றி மண்டல மிட்டும்], பூகம்பம் பிறந்து –
பூமி நடுங்குதலுண்டாகியும், உடு அரும்பகலே விழுந்தும் – நட்சத்திரங்கள்
கடும்பகற் பொழுதிலேயே உதிர்ந்தும், பொய்கை வாடி – குளங்கள்
நீர்வற்றியும், யாகம் செய் நெடும் சாலையின் பாலும் செந்நீர் ஆய் –
யாகங்களைச் செய்கின்ற பெரிய (யாக) சாலையினது பக்கங்களிலெல்லாம்
சிவந்த இரத்தமாயும், (இவ்வாறு உற்பாதங்கள் தோன்றவே), இருந்த வேந்தர் –
(அவற்றையெல்லாம்) பார்த்துக்கொண்டிருந்த (சபையிலுள்ள) அரசர்களுடைய,
ஆகங்கள் – உடம்புகள், ஒளி மழுங்கிற்று – ஒளி குறையப் பெற்றன; (எ – று.)

    வானத்தில் மேகங்கள் தோன்றாதிருக்கையிலேயே இடிமுழக்கந்
தோன்றுதலும், சூரியமண்டலமிடுதலும், பூகம்பமுண்டாதலும், பகற்பொழுதில்
நக்ஷத்திரம் விழுதலும், காரணமின்றிப் பொய்கைநீர் வற்றுதலும்,
யாகசாலையினிடங்களிலெல்லாம் இரத்தம் நிறைதலும் – உற்பாதங்களாம்;
இவ்வாறு ஒன்றன்மேலொன்றாகப் பலவுற்பாதங்கள் ஒருங்கே தோன்றுவதைக்
காணவே, சபையிலுள்ள அரசர்கள் மனத்திற் பேரச்சங்கொண்டு உடலொளி
குறைந்தன ரென்றவாறு.  ஊர்கோள் – சூரியனிடத்திலேனும்
சந்திரனிடத்திலேனும் சுற்றி மண்டலமாகத் தோன்றுவது; இது
பரிவேஷமெனப்படும்.  சந்திரனிடத்து உண்டாகும் ஊர்கோள் நன்மையைத்
தருவதெனவும், சூரியனிடத்து உண்டாகும் ஊர்கோள் தீமையைத்
தெரிவிக்கின்ற உற்பாதமா மெனவும் நூல்கள் கூறும்.  வெயில் – ஆகுபெயராற்
சூரியனை யுணர்த்திற்று.  பொய்கை வாடி என்பதற்கு – நீர்நிலைகளிலுள்ள
பூங்கொடிகள் மலர்களெல்லாம் வாடியும் என்றும் உரைக்கலாம்;
இப்பொருளில், பொய்கையென்பது – அதிலுள்ளவற்றிற்கு இடவாகுபெயர்.
பாலும் செந்நீர் ஆய் – (ஓமத் திரவியமாகிய) பாலும் இரத்தமாய் என்றுமாம்.

     ஆகங்கள் ஒளிமழுங்கிற்று – ஒருமைப்பன்மை மயக்கம்; ஆகங்களினது
ஒளி மழுங்கிற்று எனினும் அமையும்.  அவிதா – பிராகிருதபாஷையிலுள்ள
‘அவிஹ’ என்ற இரக்கக் குறிப்பிடைச்சொல், வடமொழிச் சாயையில் ‘அவித’
என்று திரிந்து வருகின்றது; இச்சொல், காளிதாசமகாகவியினது நாடகங்களிற்
பயில்கின்றது.  இச்சொல் நீட்டல் விகாரம் பெற்றது; ஐயோ என்னும்
முறைப்பாட்டைக் குறிப்பிக்கும்.  பெருந்தேவனார் பாரதத்தில் “அங்கர்
கோன்வாய்தலபிதாவென விட்டான்,” “வாயிலபிதாவிட்டமாமறை யோனை”
என்றனவும், அதன் வசனத்தில் ‘பிராமணனும் கன்னன் தன்
கோயில்வாயிற்சென்று ‘அபிதாவெனக் கூறி’ என்றதுங் காண்க.  ஆய்=ஆகி:
எச்சத்திரிபு.  மேகம், பூகம்பம் உடு, யாகம், ஸாலா – வடசொற்கள்

உற்பாதம் பெரிது!’ என நெஞ்சு உகுவாரும், ‘என் ஆம், இவ்
ஊர்?’ என்று அஞ்சி,
நிற்பாரும், போம் வழிமேல் நினைவாரும், பலர் ஆகி
நிகழ்ந்த காலை-
கற்பால் மிக்கு, உயர் வேள்விக் கனல் சுமந்த மடவரலை,
கண் இலாதோன்
பொற் பாதம் பணிந்து ஏத்தி, ‘அபராதம் புரிந்த எலாம்
பொறுத்தி!’ என்றான்.260.- திருதராஷ்டிரன்திரௌபதியைப் பொறுக்குமாறு
வேண்டுதல்.

பலர் – (அங்குள்ள அரசர்கள்) பலரும், உற்பாதம் பெரிது
என நெஞ்சு உகுவாரும் – ‘(கேடு விளைதலைக் குறிப்பிக்கின்ற) தீநிமித்தங்கள்
மிகப்பல’ என்று மனமுருகுபவர்களும், இ ஊர் என் ஆம் என்று அஞ்சி
நிற்பாரும்-‘இனி இந்த அத்தினாபுரம் யாதாய் முடியுமோ?’ என்று
அச்சங்கொண்டு நிற்பவர்களும், மேல் போம் வழி நினைவாரும் ஆகி – இனி
நடக்கக்கூடியதைச்  சிந்திப்பவர்களுமாய், நிகழ்ந்த – இருந்த, காலை –
சமயத்தில்,-கண்இலாதோன் – கண்ணில்லாத (குருடனாகிய) திருதராட்டிரன்,
கற்பால் மிக்கு உயர் வேள்வி கடன் சுமந்த மடமயிலை – பதிவிரதா
தருமத்தால் மிகச் சிறந்தவளும் இராசசூய யாகத்திற்கு உரிய யாகபத்தினியா
யிருந்தவளுமாகிய இளமையான மயில்போன்ற சாயலையுடைய திரௌபதியினது,
பொன் பாதம் – அழகிய பாதங்களை, பணிந்து ஏத்தி – வணங்கித் துதித்து,
புரிந்த அபராதம் எலாம் பொறுத்தி -‘(என் மக்கள் உன்திறத்திற்) செய்த
குற்றங்களை யெல்லாம் பொறுத்தருள்வாயாக,’ என்றான் – என்று வேண்டினான்;
(எ – று.)

    அரசர்கள் பலரும் பலவுற்பாதங்களைக் கண்டதனால் மனம் நடுங்கி
‘இவ்வூர்க்கு என்னகேடு வருமோ’ என்று கூறுபவர்களும், ‘இனி யாது
நிகழும்?’ என ஆராய்பவருமா யிருக்கும்பொழுது, விதுரன் மொழியாலும்
காந்தாரியின் பேச்சாலும் பலவகையுற் பாதங்கள் நிகழ்ந்த செய்தியை யுணர்ந்த
திருதராட்டிரன் திரௌபதியை நல்வார்த்தை சொல்லிச் சினந்தணியுமாறு
வேண்டுகின்றனனென, முதனூலை யொட்டிக் கருத்து விரித்துரைக்க.  ‘மேல்
போம் வழி நினைவாரும்’ என்றது, இவ்வாறு உற்பாதங்கள் பல
தோன்றியதனால், திரௌபதிகாரணமாகப் பாண்டவர்க்கும் துரியோதனா
தியர்க்கும் பெரும்போர்நிகழ, அதன்மூலமாக உலகத்துப் பல அரசர்களும்
மடியவேண்டி வருமென இங்ஙனமாகக் கருதின ரென்ற பொருளைத்
தெரிவிக்கும்; இனி, தாம் இங்கு நேரக்கூடிய ஆபத்துக்கு இலக்காகாமல் தப்பி
வெளிச் செல்லுமாறு கருத்துக் கொள்வாரும் என்று பொருளுரைப்பாரு முளர்.
வேதத்தில் அதிகாரமுள்ள முதல்மூன்று வருணத்தவர்கட்கு ஏற்பட்டிருக்கும்
கடன்கள் மூன்றில் யாகமும் ஒன்றாதலால், ‘வேள்விக்கடன்’ என்றார்;
(‘வேள்வியால் தேவர் கடனையும், புதல் வரைப்பெறுதலால் பிதிரர் கடனையும்,
வேதமோதுதலால், இருடியர்கடனையும் கழிக்கின்றான்’ என்ற வேதநூற்
பொருள் இங்கு அறியத்தக்கது).  தருமபுத்திரன் இராசசூய யாகஞ்செய்த போது
திரௌபதி தான் யாகபத்தினியாயிருந்து உதவின ளாதலால், அவள், ‘வேள்விக்
கடன் முமநீதமடமயில்’ எனப்பட்டாள். திரௌபதிக்கு மாமனாராகிய
திருதராஷ்டிரன் அவளை வணங்கியதாகக் கூறியது பொருத்தமின்றா மாதலால்
‘பொற்பதம் பணிந்தேத்தி’ என்பதற்கு நல்வார்த்தை சொல்லிச் சமாதானப்படுத்தி
யென்று கருத்துக் கொள்ளுதலே சாலும்; இதுவே முதனூலுக்கும் ஒத்ததாம். இனி,
தெய்வத் தன்மையைக் காட்டினாளாதலாலும், யாகபத்தினியாயிருந்த மேன்மையை
யுடையவளாதலாலும், தான் செய்வது இன்னதெனத் தெரியாது
திகைக்தனனாதலாலும், திருதராஷ்டிரன் திரௌபதியைப் பணிந்தேத்தின னென்றே
கொள்ளுதலு மொன்று.  உத்பாதம், பாதம், அபராதம் – வடசொற்கள்

உத்தமம் ஆம் குல மயிலே! என் சிறுவர் அறியாமல்,
உனக்கு நேரே,
மைத்துனர் ஆம் முறையால், இவ் வழக்கு அலாதன செய்தார்,
மதி இலாமல்;
எத்தனை தாழ்வு இவர் புரிந்தார் என்றாலும், அவை ஒன்றும்
எண்ணாது, இன்னே,
‘பித்தர் மொழி’ எனக் கருதி, மறந்தருள்!’ என்று, ஒரு
கோடி பிதற்றினானே.261.- இதுவும் அது.

பின்னும் திருதராட்டிரன் திரௌபதியை நோக்கி), ‘உத்தமம்
ஆம்குலம் மயிலே-சிறந்ததாகிய குலத்திற்பிறந்தவளான மயில் போன்றவளே!
என்சிறுவர்-எனது புதல்வரான துரியோதனாதியர், மைத்துனர் ஆம் முறையால்
-மைத்துன ரென்கிற உறவு முறையைக் கொண்டு, அறியாமல் – (தாம்
செய்வனஇன்னவை யென்று) தெரியாமல், இ வழக்கு அலாதன-முறைகேடான
இத்தீச்செயல்களை, உனக்கு நேரே செய்தார்-; மதி இலாமல் இவர் எத்தனை
தாழ்வுபுரிந்தார் என்றாலும்-அறிவில்லாமையால் இத்துரியோதனாதியர்
எவ்வளவு[மிகுதியாக] அபராதங்களைச் செய்தாரானாலும், அவை ஒன்றும்
எண்ணாது-அவற்றில் ஒன்றையும் மனத்திற் கொள்ளாமல், பித்தர்மொழி என
கருதி -பைத்தியம் பிடித்தவர் கூறிய சொல்லாகும் என்று நினைத்து; இன்னே
மறந்தருள்-இப்பொழுதே (நீ) மறந்து விடுவாயாக, என்று-என இவ்வாறு,
ஒருகோடி பிதற்றினான்-மிகப்பலவாக வாய்வந்தபடியெல்லாங் கூறினான்;
(எ -று.)

மைத்துனர் – கணவருடன் பிறந்தவரும், மனைவியுடன் பிறந்தவரும்,
அத்தைமக்களுமாவர்.  இங்கே கணவனுடன் பிறந்தவர்.  மைத்துன
முறைமையாற்பரிகசிக்கப்படுபவர் ஆடவர்களே யாதல் உலக வழக்கா
யிருக்கவும், அதற்குமாறாகப் பெண்ணைப் பரிகசித்த துரியோதனாதியரது
குற்றத்தைத்தணிக்கவேண்டுகிற திருதராஷ்டிரன் திரௌபதியின்மனம்
இரங்குமாறுமைத்துன முறையாற் பரிகாசஞ்செய்ததாகப் போலிச்சமாதானங்
கூறினானெனஅறிக.  ஒருகோடி-மிகப்பலவெண்ணிற்கு ஒன்று காட்டியவாறு.
திருதராஷ்டிரன் இதுவரையிலும் நன்மொழியொன்றும் கூறாதிருந்து விட்டு
இப்போது கூறுவனவெல்லாம் பொருந்தாத பயனில்லாத வெற்றுமொழி
யாகுதலால், ‘பிதற்றினான்’ என்றார்.

மை வரையும் தடங் கண்ணாள் மனச் சோகம் பல முகத்தால்
மாற்றி, மைந்தர்
ஐவரையும் தனித்தனியே முகம் கொண்டு, கொடுங் கோபம்
அகற்றி, ‘நீங்கள்
மெய் வரையும் பொரு புயத்தீர்! வல்-போரில் இழந்த வியன்
நிலமும், தேரும்,
கைவரையும், பரிமாவும், செல்வமும், யாவையும்,
மீண்டும் கைக்கொள்வீரே.262.- சூதில்தோற்றபொருள்களை மீண்டும் பெறுமாறு
பாண்டவர்க்குத் திருதராட்டிரன் அநுமதி தருதல்.

இதுமுதல் மூன்று கவிகள் – ஒருதொடர்.

     (இ -ள்.) (திருதராட்டிரன்),-மை வரையும் தட  கண்ணாள் மனம்
சோகம்-மையெழுதப்பெற்ற பெரிய கண்களையுடையவளான திரௌபதியினது
மனவருத்தத்தை, பல முகத்தால் மாற்றி-பல வகைகளால் தணித்து, மைந்தர்
ஐவரையும்-தம்பியின் குமாரரான  பஞ்சபாண்டவர்களையும், தனி தனியே
முகங்கொண்டு – தனித் தனியே நல்வார்த்தை சொல்லி, கொடுங்கோபம்
அகற்றி-(அவர்கள் கொண்ட) மிக்க கோபத்தைத் தணித்து, (அவர்களை
நோக்கிக் கூறுவான்:)-மெய் வரையும் பொரு புயத்தீர்-உண்மையாக
மலைகளையும் பொருது வெல்லுகின்ற (மலைகளைக்காட்டிலும் திண்ணிய வான)
தோள்களையுடையவர்களே! நீங்கள்-,வல்போரில் இழந்த-சூதுபோரில்
தோற்றிழந்த, வியல் நிலமும்-பெரிய இராச்சியத்தையும், தேரும்- தேர்களையும்,
கை வரையும்-துதிக்கையையுடைய மலைபோன்ற யானைகளையும், பரிமாவும்-
குதிரைகளையும், செல்வமும்-பொருள்களையும், யாவையும்-மற்றுமுள்ள
எல்லாவற்றையும், மீண்டும் கைக்கொள்வீர்-திரும்பவும் (எனது அனுமதியின்
படியே) கைப்பற்றிக் கொள்ளுங்கள்; (எ – று.)

    திரௌபதி வருத்தம் பொறாமல் அழுகின்றதனால்  இட்ட மை கரைந்து
விழுவதுபற்றி, ‘மைவரையுந் தடங்கண்ணாள்’ என்றாருமாம்; (வரைதல்-
நீக்குதல்.) முகங்கொள்ளுதல்-பராமுகமாயிராதவாறு நல்வார்த்தை சொல்லித்
தன்திறத்தில் இனியமுகத்துடன் இருக்கும்படி செய்து கொள்ளுதல்.
உற்பாதங்கள் தோன்றியதை விதுரன் காந்தாரி இவர்கள் முகத்தால் அறிந்த
திருதராஷ்டிரன் அஞ்சித் திரௌபதியைப் பலவகையாகத் தேற்றி, அவளைத்
தன்னிடத்து வரங்கேட்குமாறு வேண்ட, திரௌபதியும் அதற்கு இணங்கி,
தருமபுத்திரனும் அவனுக்குத் தன்னிடத்துப்பிறந்த மகனான ப்ரதிவிந்த்யனும்
அடிமையும் அடிமைப் புதல்வனுமாகாதவாறு ஒருவரமும், மற்றைப்
பாண்டவர்கள் அடிமையினின்று நீங்குமாறு மற்றொரு வரமும் என
க்ஷத்ரியஸ்திரீ கேட்பதற்கு உரிய இரண்டுவரங்களையுங் கேட்டுக்கொள்ள,
அவ்வாறே கொடுத்த பின்பு, சூதாட்டத்தில் அப்பாண்டவர்கள் இழந்த
இராச்சியம் முதலிய பலவகைச் சிறப்புக்களையும் திருதராஷ்டிரன் அளித்துப்
பாண்டவர்களைச் சமாதானப்படுத்தி விடைகொடுத்து ஊர்க்கு அனுப்பினனென
முதனூல் கூறும்.  மெய் வரையும் என்பதற்கு – சத்தியத்திற்கு
எல்லையாயிருக்கின்ற எனப் பொருள் கூறின், ‘வரையும்’ என்ற பெயரெச்சம் –
புயத்தைத் தொடராது, புயத்தை யுடையவர்க்கு அடைமொழியாகும்; இவ்வாறு
பொருள் கூறினால், இச் செய்யுள் திரிபு என்னுஞ் சொல்லணி கொண்டதாம்.

கோமன்றில் அருந்ததியைக் கொண்டு, இனி நீர் நில்லாமல்,
குறுக ஊரே
போம்’ என்று, வரவழைத்து, தழீஇக்கொண்டு, ‘என் கண்மலரே
போல்வான் எம்பி;
யாம் என்றும், அவன் என்றும், இரண்டு இல்லை; விளையாட்டு
என்று இருந்தேன்; இவ்வாறு
ஆம் என்பது எனக்கு ஒருவர் உரைத்திலரால்; யானும்
முதல் அறிந்திலேனே.263.- திருதராட்டிரன் பாண்டவர்க்கு முகமன் கூறுதல்.

நீர் – நீங்கள். கோ மன்றில் – இராசசபையிலிருக்கின்ற,
அருந்ததியை – (கற்பினால்) அருந்ததியை யொத்தவளான திரௌபதியை,
கொண்டு – உடன் அழைத்துக் கொண்டு, நில்லாமல் – இங்கேயிராமல்,  இனி
– இப்பொழுதே, ஊரே குறுக போம் – (உமது) ஊரை அடையுமாறு விரைந்து
செல்லுங்கள்’, என்று – என்று (பாண்டவர்களைத் தனது அருகில்) வருமாறு
கூப்பிட்டு, தழீஇக்கொண்டு – கட்டியணைத்துக் கொண்டு, (பின்னும்
கூறுவான்:)- ‘எம்பி – எனது தம்பியாகிய பாண்டு, என் கண்மலரே போல்வான்
– எனக்குக் கண்ணையே யொத்திருந்தான்; யாம் என்றும் அவன் என்றும்
இரண்டு இல்லை – யான் வேறு என்றும் (தம்பியாகிய) அப்பாண்டுவேறு
என்றும் (யான்) நினைத்ததில்லை; (நான் உங்களையும் அவ்வாறே எனது
புத்திரர் போலவே கருதியிருக்கின்றேன்; ஆயினும் நீங்கள் சூதாடும்போது,)
விளையாட்டு என்று இருந்தேம் – விளையாட்டாக ஆடுகின்றீர்களென்றே
எண்ணியிருந்தேன்; இ ஆறு ஆம் என்பது எனக்கு ஒருவர் உரைத்திலர் –
இவ்வாறு பெருந்தீங்கு நேரிடுமென்பதைப்பற்றி ஒருவரும் எனக்கு
அறிவித்தாரில்லை; யாமும் முதல் அறிந்திலேம் – நானும் முன்னம் தெரிந்து
கொண்டிலேன்; (எ – று.)- அறிந்தால் தடுத்திருப்பேனென்பது குறிப்பெச்சம்.

    பாண்டுவும் நானும் சிறிதும் வேற்றுமை யில்லாதிருந்தோம்; அவ்வாறே
நும்மிடத்தும் எனது மைந்தரிடத்திற்கொள்ளும் பேரன்பைக் கொண்டி
ருக்கின்றேன்; ஆகையால், உமக்குத் துன்பத்தை யுண்டாக்க வேண்டுமென்பது,
எனக்கு விருப்பமன்று.  உனது மைந்தரும் நீவிரும் விநோதமாகச்
சூதாடுகின்றீரென்று கருதியதனால், நீங்கள் சூதாடுவதை நான் விலக்கவில்லை.
இவ்வாறு பெரும் பொல்லாங்குக்குக் காரணமாம்படி சூதாடுகின்றீரென்பது
எனக்குத் தெரிந்திருந்தால், நான் உங்களை ஆடவொட்டாது முன்னமே
தடுத்திருப்பேன்; போனது போகட்டும்.  நுமது மனைவியை அழைத்துக்கொண்டு
இப்பொழுதே நும்மூர்க்குச் செல்லுங்கள் எனத் திருதராட்டிரன் பாண்டவரைத்
தேற்றி விடைகொடுப்பானாயினனென்க. இப்பொழுது நீவிர் இங்கு இருப்பீராயின்
துரியோதனாதியர் உமது பொருளை மீண்டுங் கவர முயலுவரென்று குறிப்பிப்பான்,
‘இனி நில்லாமற் குறுக வூரேபோம்’ என்றான். திருதராஷ்டிரன் தனது
கண்களைப்பற்றியே கூறுவதனாலும், அவனது கண் குருட்டுக்கண்ணாதலாலும்,
‘கண் மலர்’ என்பது உவமை கருதியதன்று;  உலகவியற்கைபற்றிக் கூறிய தென்க.
அருந்ததி – உவமையாகுபெயர்.  ஊரே, ஏகாரம் – பிரிநிலை. இலரால், ஆல் –
ஈற்றசை. அறிந்திலேம் – தன்மைப் பன்மை எதிர்மறையிறந்தகாலவினைமுற்று:
ஏகாரம் – இரக்கம்.  ‘யாம்’ என்ற எழுவாயிரண்டும் தனித்தன்மைப்பன்மை. 

என் மைந்தர் இவர்; நீங்கள் அவன் மைந்தர் என
நினையேன்; இவரே எம்பி-
தன் மைந்தர்; உங்களையே என் மைந்தர் என வளர்த்தேன்;
சம்பு நாட்டு
மன் மைந்தர் உங்களைப்போல் வேறுபடாது, இத்தனை நாள்,
வளர்ந்தார் உண்டோ?
வில் மைந்தர் நடக்க!’ என விடை கொடுத்தான்-விரகினுக்கு ஓர்
வீடு போல்வான்.264.-இதுவும் அது.

இவர் என் மைந்தர் – இத் துரியோதனாதியர் எனது
புதல்வர்கள்: நீங்கள் அவன் மைந்தர் – (பாண்டவராகிய) நீங்கள்
அப்பாண்டுவினதுபுதல்வர்கள்,’ என-என்று, நினையேன் – (வேறுபாடுதோன்ற
நான்)நினையாமல், இவரே எம்பிதன் மைந்தர் (என)-துரியோதனாதியரையே
எனதுதம்பியின் புதல்வர் (என்று எண்ணியும்), உங்களையே என் மைந்தர்
என-உங்களையே என் மைந்தர் என்று எண்ணியும், வளர்த்தேன் – (நான்
இதுவரையில் உங்களை) வளர்த்து வந்தேன்;  சம்பு நாடு மன் மைந்தர் –
இந்த ஜம்புத்வீபத்தில் தோன்றிய அரசகுமாரர்களில், உங்களை போல் –
உங்களைப்போல, இத்தனை நாள் வேறுபடாது வளர்ந்தார் – இவ்வளவு
காலம் மனம் மாறுபடாமல் வளர்ந்தவர்கள், உண்டோ – எவரேனும்
இருக்கின்றார்களோ? வில் மைந்தர் – வில்லில் வல்ல (எனது) புதல்வராகிய
நீங்கள், நடக்க – (நுமது இந்திரப்பிரத்த நகரத்துக்குச்) செல்வீர்களாக,’ என
– என்று சொல்லி, விடை கொடுத்தான் – (பாண்டவர்கட்கு)
விடைகொடுத்தனுப்பினான்: (யாவனெனில்), – விரகினுக்கு ஓர் வீடு போல்வான்
– தந்திரங்கட்கெல்லாம் இருப்பிடம் போன்றவனான திருதராஷ்டிரமகாராஜன்;
(எ – று.)

    கீழ்ச்செய்யுளில் தான் தனது தம்பியினிடத்தில் ஒற்றுமையா யிருந்ததைக்
கூறியதிருதராஷ்டிரன், இச் செய்யுளின் முதலிரண்டடிகளால், தன் தம்பி
மைந்தரானபாண்டவரிடத்துத் தன் மைந்தரிடத்தினும் தான் மிக்க அன்பு
கொண்டிருப்பதையெடுத்துக் கூறுகின்றான்.  பாண்டவர் மிகவும் பரிபவப்
பட்டமையாற் சினங்கொண்டு ஒருகால் தன் மைந்தரை அடக்கக்கூடுமென்று
அஞ்சிய திருதராட்டிரன், அப்பாண்டவர் சினந்தணிந்து மகிழ்ந்து
அடங்கியிருக்குமாறு, ‘சம்பு நாட்டு மன்மைந்த ருங்களைப்போல் வேறுபடா
தித்தனைநாள் வளர்ந்தாருண்டோ?’ எனப் புனைந்து கூறுகின்றான்;
இனிமேலும் நீங்கள் முன்போலவே வேறுபடாதிருக்க வேண்டுமென்பது
குறிப்பு. ஜம்பூ – நாவல்: அதனை யுடைமைபற்றி, இந்தப்பூமிக்கு ஜம்பூத்வீபம்
என்று பெயர்.  அதனை இங்கு ‘சம்புநாடு’ என்றார்.  பாண்டவரிடத்து
அன்புள்ளவன் போல நடித்தும் அவர்களைச் சிறப்பித்தும் இங்ஙன் சூழ்ச்சி
கொண்டு கூறுகின்றானாதலால், திருதராஷ்டிரனை ‘விரகினுக்கோர் வீடு
போல்வான்’ என்றார்.  வின்மைந்தர் – முன்னிலைப் படர்க்கை; அண்மை
விளியில் வந்த இயல்பு எனக்கொண்டு ‘மைந்தீர்!’ எனப்பொருள் கொள்ளவுமாம்.

படை கொடுத்தான்; இவன் இழந்த பார் கொடுத்தான்; அரசு
ஆளப் பண்டுபோல் வெண்-
குடை கொடுத்தான்; குருகுலத்தே குலம் கொடுத்தான்;
ஐவருக்கும் குலத்தே கொண்ட
தடை கொடுத்தான்; அகப்பட்டும் தலையழிக்க நினையாமல்,
தானே அம்ம!
விடை கொடுத்தான்; இனி விடுமோ? வயப் புலியை வால்
உருவி விடுகின்றீரே!இதுமுதல் மூன்று கவிகள் -ஒருதொடர்: பாண்டவர்கள்
தமது இராச்சியத்தைப் பெற்றுச்செல்வதைக் கண்ட சகுனியின்
துர்ப்போதனை.

இவன் – இத்திருதராஷ்டிரன், இழந்த – (தருமபுத்திரன்) சூதாடித்
தோற்ற, படை – சேனைகளையெல்லாம், கொடுத்தான் – (அத்தருமபுத்திரனுக்கு
மீண்டும்) கொடுத்தான்; பார் கொடுத்தான்- இராச்சியத்தையும் கொடுத்தான்;
பண்டுபோல் அரசு ஆள – முன்போலவே இராச்சியத்தை யாளுமாறு,
வெள்குடை கொடுத்தான் – வெண்கொற்றக் குடையும் கொடுத்திட்டான்;
ஐவருக்கும் – பஞ்ச பாண்டவருக்கும், குருகுலத்தே குலம் கொடுத்தான் –
குருகுலத்திற் பிறந்தவரென நற்குடிப்பிறப்பையும் ஒத்துக்கொண்டான்;  குலத்தே
கொண்ட – குருகுலத்தாரிடத்தில் நேர்ந்த, தடை – (அடிமைத்தன்மையாற்)
கீழ்மையுண்டானதை, கொடுத்தான் – போக்கினான்; அகப்பட்டும் –
(பாண்டவர்கள் நமது கையிற்) சிக்கியிருக்கவும், தலையழிக்க நினையாமல் –
(அவர்களை) அடியோடு கெடுப்பதற்குவேண்டிய ஆலோசனைகளைச் செய்யாமல்,
தானே – தானாகவே [அவர்கள் கேளாதிருக்கும்பொழுதே வலிவிலே], விடை
கொடுத்தான் – விடைகொடுத்து அனுப்பியும் விட்டான்; அம்ம-! வய புலியை
வால் உருவி விடுகின்றீரே – வலிமை பொருந்திய புலிகளை வால் தடவி
விடுகின்றீர்களே;  இனி விடுமோ – இனி (அப்புலிகள் நும்மீது கறுக்கொண்டு
உம்மைக் கொல்லாமல்) சும்மாவிடுமோ? (எ – று.) அம்ம – வியப்பிடைச்சொல்;
பாண்டவர்கள் நமது கையில் அகப்பட்டதனால் அவர்களை முற்றவும் அழிக்க
வேண்டியிருக்க, அவ்வாறு செய்யாமல் அவர்கட்கு வேண்டியவற்றை யெல்லாம்
அளித்த அறிவீனத்தைப் பற்றி வியந்தவாறு.  ஈற்று ஏகாரம் – இரக்கம்.

    பாண்டவர்கள் சூதாடித்தோற்ற நால்வகைப்பட்ட சேனைகளையும்
இராச்சியத்தையும் திருதராஷ்டிரன் கொடுத்ததோடு துரியோதனாதியர்கள்
கவர்ந்த அரசசின்னங்களை யெல்லாமும் மீட்டும் பெறுமாறு அவர்கட்கு
அளித்தானாதலின், ‘பண்டுபோல் வெண்குடை கொடுத்தான்’ என்றும்,
பாண்டவர்கள் யமதருமராஜன் முதலியவர்கட்குப் பிறந்தார்களாகவும்
திருதராஷ்டிரன் ‘எம்பிமைந்தர்’ என்பது போலச் சிலகூறின னாதலால் ‘குலங்
கொடுத்தான்’ என்றும், குருகுலத்து அரசர்களென்றபேர் நீங்குமாறு
அடிமைகளாய்விட்ட பாண்டவர்களை அவ் வடிமைத் தன்மையினின்று நீக்கினா
னாதலால் ‘ஐவருக்குங் குலத்தே கொண்ட தடைகொடுத்தான்’ என்றும் சகுனி
கூறின னென்க.  ‘இழந்த’ என்ற பெயரெச்சம்-‘படை’, ‘பார்’ ‘வெண்குடை’
என்பவற்றோடு இயையும்.  ‘குடை’ என்பது, அரசசின்னங்கட்கெல்லாம்
உபலட்சணம்.  பாண்டவர்களைப் பலவகையாலுந் தாழ்வு படுத்தி மீண்டும்
அவர்களை உயர்ந்த நிலையில் வைக்கின்றீர்க ளாதலால், இனி அவர்கள்
உங்களைத் தவறாது கொல்வரென்ற கருத்தைத் தெரிவித்தலால், ‘வயப்புலியை
வாலுருவிவிடுகின்றீர்; இனி விடுமோ?’ என்ற வாக்கியம் –
பிறிதுமொழிதலணி
யாம். கொடுத்தவன் திருதராஷ்டிரனொருவனே யாதலால்
‘கொடுத்தான்’ என ஒருமையாகவும், துரியோதனாதியர் அருகிலிருந்தும்
அவ்வாறு செய்ய வொட்டாது அவனைத் தடுக்காமலிருந்தது மாத்திரத்தைக்
கொண்டு அவ்வாறு அவன் கொடுத்தது உங்கட்கும் உடன்பாடே யாயிருந்த
தன்றோ? என்பான் ‘விடுகின்றீர்’ எனப் பன்மையாகவுங் கூறினான்.   

‘யாது ஒரு கருமமேனும் எண்ணியே
துணிக’ என்றும்,
‘காதலின் துணிந்து செய்தால், எண்ணுதல் கடன்
அன்று’ என்றும்,
ஓது நூல் புலவர் சொன்னார்; உமக்கு உள உணர்வு
அற்று அன்றே;
பேதுற அடர்த்தும், பின்னை உருகி, நீர்
பிழை செய்தீரே.

யாது ஒரு கருமம் ஏனும் – (ஒருவர் செய்வது) எந்தக்
காரியமாயிருந்தாலும், (செய்வதற்கு முன்பு), எண்ணியே – ஆராய்ந்து பார்த்தே,
துணிக-(தம்மனத்திற்கு ஒத்ததாயின் அந்தக்காரியத்தைத்) துணிந்து செய்க,
என்றும்-, (‘அங்ஙன் ஆராய்ந்து பின் துணிந்து செய்யாமல்), காதலின்-(அந்தக்
காரியத்தின்மீதுள்ள) ஆசையினால், துணிந்து செய்தால்-துணிவு கொண்டு
(ஒருகாரியத்தைச்) செய்தால், (பிறகு), எண்ணுதல்-(அதைப்பற்றிச்) சிந்தித்தல்,
கடன் அன்று-முறைமையன்று’, என்றும்-, நூல் ஓது புலவர் சொன்னார்-
சாஸ்திரங்களைக் கற்றறிந்த பெரியோர்கள் சொல்லியிருக்கிறார்கள்; உமக்கு
உள உணர்வு – உங்களுக்குள்ள அறிவானது, அற்று அன்றே-
அப்படிப்பட்டதன்று [அந்தச் சாஸ்திர முறைமைக்கு ஒத்திருக்கவில்லையே!] நீர்
பேது உற அடர்த்தும் – நீங்கள் (பாண்டவர்க்குப்) பெருந்துன்பமுண்டாகுமாறு
(அவர்களைச்) சயித்திருந்தும், பின்னை-மறுபடியும், உருகி-மனமிரங்கி,
பிழைசெய்தீரே-தவறான காரியத்தைச் செய்து விட்டீர்கள் (எ – று.)- ஈற்று
ஏகாரம் – இரக்கம்.

     ஒரு காரியத்தைச் செய்துவிட்டபின்பு ஆராய்தற்கு இடமில்லையாதலால்,
ஒவ்வொரு காரியத்தையும் செய்வதற்கு முன்னமே ஆராய்ந்து பார்க்கவேண்டும்;
இவ்வாறிருக்கவும், நீங்கள் மிகவும் வருந்திப் பேராலோசனை செய்து அரிதிற்
சூதுவழி கொண்டு சயித்துப் பின்பு பாண்டவர்களிடத்திற் பேரருள் கொண்டு
சிறிதும் ஆலோசனையின்றி அவர்களை அடிமைத்திறத்தினின்று நீக்கி
அவர்கட்கு அரசாட்சியையும் அளித்துவிட்டீர்களே! முன்னம் உங்களால் மிகவும்
அவமதிக்கப்பட்ட அப்பாண்டவர்கள் நீவிர் செய்த அபகாரங்களையெல்லாம்
மறவாது மனத்திற் கறுக்கொண்டு இனி உங்கட்குப் பெருங்கேடு
புரிவார்களென்பதைக் குறித்து நீங்கள் சிறிதும் ஆலோசனை கொள்ளவில்லையே!
இனி யாது செய்யத் தக்கது? எனச் சகுனி அநுதாபத்தாற் கூறுகின்றனனென்க.
“எண்ணித்துணிக கருமந் துணிந்தபின், எண்ணுவ மென்ப திழுக்கு” என்ற
திருக்குறள் இங்கு உணரத்தக்கது.  ‘பாண்டவர்களை முன்னமே
அடர்க்காதிருந்திருக்கவேண்டும்; அடர்த்த பின்பு அன்புகொண்டு
உருகாதிருக்கவேண்டும்; அடர்த்துப் பின்பு உருகுதல் எவ்வாற்றாலும் தக்கதன்று’
என்பது – ‘பேதுற வடர்த்தும் பின்னை யுருகி நீர் பிழை செய்தீர்’ என்பதன்
கருத்து. உமக்கு உள் உணர்வு அற்று அன்றே என்பதற்கு-உமக்குள்ள உணர்வு
கெட்டல்லவோ எனவும் பொருள் கொள்ளலாம்;  முன்னையபொருளில், அற்று
என்பது-‘அ’ என்னுஞ் சுட்டிடைச்சொற்பகுதியி னடியாப்பிறந்த ஒன்றன்பாற்
குறிப்புவினையாலணையும் பெயர்: இப்பொருளில், ‘அறு’ என்னும்
வினைப்பகுதியினடியாப் பிறந்த இறந்தகால வினையெச்சம்.

     இது முதல் இச்சருக்கம் முடியுமளவும் பத்தொன்பது கவிகள் –
இச்சருக்கத்தின் 2-ஆங் கவிபோன்ற அறுசீராசிரிய விருத்தங்கள்

தீயினால் சுட்ட செம் புண் ஆறும்; அத்
தீயின் தீய
வாயினால் சுட்ட மாற்றம் மாறுமோ?
வடுவே அன்றோ?
பேயினால் புடையுண்டாரோ? மறப்பரோ,
பெரியோர்?’ என்றான்-
வீயினால் தொடுத்த தண் தார் வேந்தர்க்கு
வேந்தன் மாமன்.

தீயினால் சுட்ட செம் புண் ஆறும்-நெருப்பினாற்
சுட்டதனாலாகிய செந்நிறமான புண்ணானது ஆறிப்போய் வடுத்தீர்ந்துவிடும்; அ
தீயின் தீய வாயினால் சுட்ட மாற்றம் மாறுமோ – அத்தீயைக்காட்டிலுங்
கொடிய வாயினாற் சுடுவதுபோன்ற கொடுஞ்சொற்கள் மறைந்துவிடுமோ?
வடுவே அன்றோ – ஒருபொழுதும் மறையாத வடுவாகவே யிருக்குமன்றோ?
பேயினால் புடையுண்டாரோ – (நீங்கள் செய்த தவறுகளையெல்லாம்
மறப்பதற்குப் பாண்டவர்கள்) பேயினால் புடைக்கப்பட்டுத் தம்
வசமிழந்திருப்பவர்களோ? பெரியோர் மறப்பரோ-(நீங்கள் செய்த
பெரும்பிழைகளைப்) பெருமைபெற்ற பாண்டவர்கள் மறந்துவிடுவார்களோ?’
என்றான்-என்று கூறினான்:  (யாவனெனில்,) வீயினால் தொடுத்த தண் தார் –
(நந்தியாவர்த்த) மலர்களால் தொடுக்கப் பட்ட குளிர்ந்த மாலையையணிந்த,
வேந்தர்க்கு வேந்தன் – ராஜராஜனான துரியோதனனது, மாமன் – மாமனாகிய
சகுனி; (எ – று.)

    ‘நீங்கள் பாண்டவர்கள் திறத்திற் கூறிய தீச்சொல்லோ மிகவும் கொடியது:
ஒருநாளும் மறக்கற்பாலதன்று; இத்தகைய கொடுஞ்சொல்லை மனத்திற்கொள்ளாது
மறக்கவேண்டுமென்றால், தம் வயந்தப்பிய பேயர்க்கன்றி நல்லறிவுடையார்க்கு
இயலாது; பாண்டவர்கள் பெருந்தன்மையராதலால், மனத்திற்கொள்ளாரென்று
நினைத்தற்கும் வழியில்லை; “சிறியோர் பெரும்பிழை செய்தனராயின்,
பெரியோரப்பிழை பொறுத்தலும் அரிதே” யன்றோ! ஆகவே, இப்பொழுது
நீங்களே உங்கட்குக் கேட்டினைத் தேடிக் கொண்டவர்களாய் விட்டீர்களே!’ என,
இரக்கந்தோன்றுமாறு சகுனி கூறின னென்க.  “தீயினாற் சுட்டபு ணுள்ளாறு
மாறாதே, நாவினாற் சுட்ட வடு” என்ற திருக்குறள் இங்கு உணரத்தக்கது.
தீயினாற் சுட்ட செம்புண்ணாகிற உபமானத்தினும் வாயினாற் சுட்ட மாற்றமாகிற
உபமேயத்துக்கு ஆறாமல் வடுவாயிருத்தலாகிற சிறப்பைக் கூறியிருத்தலால்,
முன்னிரண்டடி – வேற்றுமையணி. மாற்றம் ஆறுமோ என்றும் பிரிக்கலாம்.
‘வீ’ என்ற மலர்ப்பொதுபெயர்-இங்கே சிறப்பாய் நஞ்சாவட்டை மலரை
உணர்த்திற்று.  

சகுனி சொல் மருகன் கேட்டு, தம்பியும், அங்கர் கோவும்,
முகம் முகம் நோக்கி, எண்ணி, ‘எம்பி நீ மொழிக!’ என்றான்;
துகிலினை உரிந்த வன் கைச் சூரனும், தருமராசன்
மகனுடன், வெகுளி தோன்ற, வழக்குற மொழிதலுற்றான்:268.-அதுகேட்ட துரியோதனனதுகட்டளைப்படி துச்சாதனன்
தருமனை நோக்கிக் கூறத்தொடங்குதல்.

சகுனி சொல் – (இவ்வாறு சொன்ன) சகுனியின் வார்த்தையை,
மருகன்-(அவனது) மருமகனாகிய துரியோதனன், கேட்டு-, தம்பியும்
அங்கர்கோவும் முகம்முகம் நோக்கி – தம்பியாகிய துச்சாதனனும்
அங்கதேசத்தார்க்கு அரசனான கர்ணனும் என்ற இவர்களது  முகத்தைத்
தனித்தனி உற்றுப்பார்த்து, எண்ணி-ஆலோசித்து, (பின்பு துச்சாதனனை
நோக்கி), ‘எம்பி- எனது தம்பியே! நீ -, மொழிக-(‘சூதில் இழந்த இராச்சியம்
முதலியவற்றைக் காரணமின்றிப் பெற்றுச்செல்வது தகுதியன்று’ எனத்
தருமபுத்திரனிடத்துச்) சொல்வாயாக,’ என்றான்-என்று கட்டளை யிட்டான்;
துகிலினை உரிந்த வல் கை சூரனும்-(திரௌபதியினது) வஸ்திரத்தை அவிழ்த்த
வலிய கையையுடைய சூரனாகிய துச்சாதனனும், தருமராசன் மகனுடன் –
யமதருமராசனது புதல்வனாகிய யுதிஷ்டிரனிடத்தில், வெகுளி தோன்ற –
(தனக்கு அவன் மீது உள்ள) கோபம் வெளிப்படும்படி [உக்கிரமாக], வழக்கு
உற-வியவகாரம் தோன்றுமாறு, மொழிதல் உற்றான்-சொல்லத்தொடங்கினான்;
(எ – று.)-அதனை, அடுத்த இரண்டு கவிகளிற் காண்க.

    துச்சாதனன்கை அபலையான திரௌபதியின் ஆடையையுரிந்ததனால்
அதனை ‘வன்கை’ எனப்பழித்தும், இவ்வாறான கொடுஞ்செயலில் மிக்கவல்லமையுள்ளவனென்பார் அவனை ‘வீரன்’ என்று வஞ்சப்புகழ்ச்சியாற்
கூறியும் அவனது கொடுமையை விளக்கினார். வெகுளி தோன்ற –
(தருமபுத்திரனுக்குக்) கோபமுண்டாகுமாறு என்றுமாம். திருதராட்டிரனது
அநுமதிப்படியே தருமபுத்திரன் மீண்டும் பெற்ற இராச்சியத்தைக்குறித்து
‘சூதாடித்தோற்றதை நீங்கள் எவ்வாறு பெறலாம்?’ என இவ்வாறாகத் துச்சாதனன்.
கூறுகின்றா னாதலின், ‘வழக்குறச் சொன்னான்’ என்றது.  வழக்காவது-ஒரு
பொருளை எனதெனதென்றிருப்பார் அப்பொருள் விஷயமாகக் கூறுவது

‘சரதம் என்று உண்மையாகச் சபையில் நீ இசைந்து தோற்ற
இரதமும், களிறும், மாவும், யாவையும், மீண்டும் தாரோம்;
சுரத மென் கொடியும் நீரும் தொண்டு ஒழிந்து, உரியீர் ஆமின்;
விரதம் உன் அறத்துக்கு என்றும் பொய்கொலோ?
மெய்யே அன்றோ?269.- இதுவும், அடுத்த கவியும்- ஒருதொடர்:
துச்சாதனன் வார்த்தை.

(துச்சாதனன் தருமபுத்திரனை நோக்கி),-உன் அறத்துக்கு
விரதம் என்றும் பொய்கொல் ஓ – நீ மேற்கொண்டுள்ள தருமத்துக்கு ஏற்ற
விரதமாயிருப்பது பொய்தானா? மெய்யே அன்றோ-உண்மையே யல்லவா?
சரதம் என்று-(நான் தோற்றது) நிச்சயமென்று சொல்லி, நீ-, இசைந்து-
மனமொப்பி, சபையில் உண்மைஆக தோற்ற -(பலபேர் கூடிய) சபையில்
முறைப்படியே (சூதாடித்) தோற்ற, இரதமும்-தேர்களையும், களிறும்-
யானைகளையும், மாவும்-குதிரைகளையும், யாவையும் – மற்றும்
எல்லாவற்றையும், மீண்டும்-மறுபடியும், தாரோம்-கொடுக்கமாட்டோம்;
(வேண்டுமானால்), சுரதம் மெல் கொடியும்-போகத்திற்கு உரிய மெல்லிய கொடி
போன்றவளான திரௌபதியும், நீரும்-நீங்கள் ஐவீரும், தொண்டு ஒழிந்து-
அடிமைத்தன்மையினின்றும் நீங்கி, உரியீர் ஆமின்-சுதந்திரமுடையவராகுங்கள்;
(எ – று.)

     நீ பொய் பேசுவதையே விரதமெனக் கொண்டிருந்தால் தோற்றிழந்த
இராச்சியத்தைப் பறித்துக்கொண்டுவிடலாம்:  எப்பொழுதும் சத்தியவிரதனா
யிருப்பதனால், பலருங்கூடிய சபையில் முறைப்படி சூதாடித் தோற்ற
இராச்சியத்தைக் கைப்பற்றுதற்கு வகையில்லையே! அன்றியும் இராச்சியத்தைச்
சூதாடிச் சயித்தவர் நாங்களே யாதலால், இந்த இராச்சியத்தை நாங்கள்
உடன்பட்டுக் கொடுத்தால் மாத்திரம் உங்களுடையதாகுமேயன்றி எமது தந்தை
கொடுக்க நீங்கள் பெற்றுக் கொள்ளுதற்கு நுமக்கு உரிமையில்லை;
இராச்சியத்தைப் பெறுவதிலுள்ள பேராசையாற் பெற்றுக்கொள்வோ மென்றாலும்,
நாங்கள் கொடுக்கமாட்டோம்;  இப்பொழுது வேண்டுமானால், எமது
தந்தைக்காக, உங்களை அடிமைத்தன்மையினின்று மாத்திரம் நீக்கி
உரிமைபெற்றவர்களாகச் செய்கிறோமென்று துச்சாதனன் கூறியதாக விரித்துப்
பொருள் காண்க.  தருமபுத்திரனுக்கு ‘சத்தியவிரதன்’ என்று ஒரு பெயரிருத்தல்,
இங்கு அறியத்தக்கது.  போகமாதென்று பழிப்பான், ‘சுரதமென் கொடி’ என்றான். தருமபுத்திரனொருவனே தோற்று இழந்தவனாதலால் ‘நீ’ என்று ஒருமையாகவும்,
உரிமையைப்பெறுதல் ஐவருமாதலால் ‘நீர்’ என்று பன்மையாகவும் கூறினான்

உற்பாதம் பெரிது!’ என நெஞ்சு உகுவாரும், ‘என் ஆம், இவ்
ஊர்” என்று அஞ்சி,
நிற்பாரும், போம் வழிமேல் நினைவாரும், பலர் ஆகி
நிகழ்ந்த காலை-
கற்பால் மிக்கு, உயர் வேள்விக் கனல் சுமந்த மடவரலை,
கண் இலாதோன்
பொற் பாதம் பணிந்து ஏத்தி, ‘அபராதம் புரிந்த எலாம்
பொறுத்தி!’ என்றான்.

உரிமைஉம் – (அடிமைத்தன்மையினின்று நீங்கிச்)
சுதந்திரமாயிருத்தலையும், தந்தை தன் அருளால் பெற்றீர் -(எமது) பிதா
(நும்மிடத்துக்) கொண்டதயையினால் (நீங்கள்) அடைந்தீர்கள்; (ஆகையால்),
தம்பிமாரும் -(உனது) தம்பியாகிய (வீமன் முதலிய) நால்வரும், பைந்தொடி
தானும்-பசும்பொன்னாற்செய்த வளையலை யணிந்தவளான திரௌபதியும்,
நீயும்-, பதி பெயர்ந்து – இவ்வூரை விட்டுச்சென்று, உயர்ந்த வேயின் வெம்
தழல் அனையகானின்-ஓங்கி வளர்ந்த மூங்கிலையுடையதும் கொடிய
தீப்போலும் வெம்மை மிக்குள்ளதுமாகிய காட்டிலே, வெளிப்படாது உறை மின்
– மறைந்து வசியுங்கள்.  இந்த மாதரணி கைவிட்டு – இந்தப் பெரிய பூமியை
அரசாளுதலைவிட்டு, இன்றே எழுமின்-இப்பொழுதே புறப்பட்டு, ஏகுமின்-
வெளிச்செல்லுங்கள்,என்றான்-என்று (பாண்டவர்களை நோக்கித் துச்சாதனன்)
கூறினான்; (எ – று.)

    ‘நீங்கள் அடிமையாயிருந்தால் இங்கேயேயிருந்து எமக்குப் பணிவிடை
செய்யவேண்டும்: எமது தந்தையின் அருளால் அவ்வடிமைத்தன்மையினின்று
நீங்கிவிட்டபடியால், இனி நீங்கள் எங்களிராச்சியத்தில் நில்லாது
காட்டிற்குப்போய் வசியுங்கள்.  இந்த எமது இராச்சியத்தில் நீங்கள்
இருப்பதுங்கூடாது’ என்று துச்சாதனன் தமது ஆலோசனைப்படியே
கூறினனென்க.  ‘பாண்டவர்கள் காட்டிற் பெருந்துன்பத்திற்கு
இலக்காகவேண்டும்’ என்று தாம் கொண்ட கொடிய விருப்பத்திலுள்ள
ஊற்றமிகுதியால், துச்சாதனன் ‘எழுமின் ஏகுமின்’ என்பதற்குமுன் ‘கானின்
உறைமின்’ என்றான்.   எழுமின் ஏகுமின் – எழுந்து ஏகுமின்;  முற்று – எச்ச
மாயிற்று.  “வினைமுற்றே வினையெச்சமாகலும்” என்பது விதி.  பைந்தொடி –
பண்புத்தொகையன்மொழி.  ‘உரிமையும்’ என்ற உம்மை-இழிவுசிறப்பு.  

என்றலும், தந்தை, மைந்தன் இயம்பிய வாய்மை கேட்டு,
நின்றவா நில்லா வஞ்ச நெஞ்சினன் ஆகி, மீண்டும்,
வென்றி கொள் அரசனோடும், வெஞ் சிலை விதுரனோடும்,
ஒன்றிய அமைச்சரோடும், உறுவன உசாவலுற்றான்.271.-அச்சொல்லைக் கேட்டுத்திருதராட்டிரன் ஆலோசித்தல்

என்றலும்-என்று (துச்சாதனன்) கூறியவுடனே, தந்தை-
(அவனது) தகப்பனாகிய திருதராஷ்டிரன், மைந்தன்இயம்பிய வாய்மை கேட்டு-தனது குமாரனாகிய அத்துச்சாதனன் கூறிய
வார்த்தையைக்கேட்டு, நின்ற ஆ (று) நில்லா வஞ்சம் நெஞ்சினன் ஆகி-
நின்றபடியாக (ஒருநிலையில்) நிற்காமல் மாறுபடுகின்ற வஞ்சனையுள்ள
மனத்தையுடையவனாய், மீண்டும்-மறுபடியும், வென்றி கொள் அரசனோடும்-
வெற்றிபொருந்திய அரச குலத்தவனான வீடுமனுடனும், வெம் சிலை
விதுரனோடும்-கொடிய வில்வித்தையிற் சிறந்தவனான விதுரனுடனும், ஒன்றிய
அமைச்சரோடும்-(மற்றும் அங்குப்) பொருந்திய மந்திரிமார்களோடும், உறுவன
– அப்போது செய்யத்தகுவனவற்றை, உசாவல் உற்றான் – விசாரிப்பவனானான்;
(எ – று.)

    சகுனியின் துராலோசனையால் துரியோதன னேவிய மொழிப்படியே
துச்சாதனன் தருமனை வெருட்டிக்கூறியதைக் கேட்டபொழுது, திருதராட்டிரன்
பாண்டவர்கட்கு இராச்சியத்தை மீட்டுங் கொடுத்தலில் விருப்பமில்லாதவனாகி,
அப்பொழுதைக்கு ஏற்ப ஆலோசனை கூறுமாறு வீடுமன் முதலியோரை
வினாவினனென்க.  முதலில் துரியோதனாதியரது துராலோசனைக்கு உட்பட்டுப்
புதுமண்டபங் காணவேண்டுமென்ற ஒருவியாஜத்தாற் பாண்டவரை வரவழைத்து
அவர்கள் சூதாடித் தோற்கத் திரௌபதியைத் தம் புதல்வர் பரிபவிக்கும்
வரையிலும் சம்மதித்திருந்தும், பின்பு வெருவி மனம் மாறுபட்டுப் பாண்டவர்
திறத்தில் அன்பு கொண்டு அவர்கட்கு  உரிமையையும் அளித்ததோடு
அரசாட்சியையுங் கொடுத்தும், பிறகு துச்சாதனன் வார்த்தையைக் கேட்டு
மீண்டும் மனநிலைமாறி வஞ்சகத்தன்மைமேலிட்டுப் பாண்டவரிடத்தினின்று
தான்கொடுத்த இராச்சியத்தை எவ்வாறு மீட்டும் வாங்கிவிடலாமென்று
இப்போது ஆலோசித்தும் நிற்கின்றனனாதலால், திருதராஷ்டிரனை
‘நின்றவாநில்லா  வஞ்சநெஞ்சினன்’ என்றார்.  ‘நின்றவாநில்லாநெஞ்சு’ –
அஸ்திரசித்தம்;  “நின்றவாநில்லாநெஞ்சினை”, என்ற தொடர்
பெரியதிருமொழியிலும் வந்துள்ளது.  ‘வென்றி கொளரசன்’ என்பது-
துரியோதனனைக் குறிப்பாகக் கொள்ளுதல் சிறப்பன்று.

மேல் வரு கருமம் எண்ணா, வெகுளியால் மிக்க, வீரர்
நால்வரும் எம்மனோர்கள் நவின்றன சிறிதும் கேளார்;
சேல் வரும் பழன நாட! செயல் அறிந்து எண்ணி, வேத்து
நூல் வரு முறை சொல்’ என்றான்-நோன் சிலை
நூலின் மிக்கோன்.272.-துரோணனது மறுமொழி.

நோன் சிலை நூலில் மிக்கோன் – வலிய வில்லின் வித்தையிற்
சிறந்தவனாகிய துரோணன்,- (திருதராஷ்டிரனை நோக்கி), ‘சேல்வரும் பழனம்
நாட – கயல்மீன்கள் மிகுதியாகச்சஞ்சரிக்கப்பெற்ற [நீர்வளத்தையுடைய]
கழனிகளைக் கொண்ட குரு நாட்டிற்கு உரிய தலைவனே! மேல் வரு கருமம்
எண்ணா – இனிமேல் வரக்கூடிய காரியத்தை ஆராய்ந்தறிதலில்லாத,
வெகுளியால் மிக்க-மிக்ககோபத்தையுடைய, வீரர் நால்வரும்-(சகுனி கர்ணன் துரியோதனன் துச்சாதனன் என்ற) நான்கு வீரர்களும், எம் அனோர்கள்
நவின்றன-எங்களைப்போன்றவர்கள் சொல்வனவற்றை, சிறிதும் கேளார்-;
(ஆதலால்), (நீயே), செயல் எண்ணி அறிந்து-செய்ய வேண்டியதை
(இன்னதென) ஆராய்ந்தறிந்து, வேதம்நூல் வரும் முறை-வேதங்களிலும்
(அவற்றின் வழியாகச் செய்யப்பட்ட) நீதிநூல்களிலுங் கூறியுள்ள முறைப்படியே,
சொல்-சொல்வாயாக’, என்றான்-; (எ – று.)

     சகுனி முதலியோர் எங்களுடையசொற்களை மதியாது இகழ்வராதலால்,
நாங்கள் இப்பொழுது சொல்வதிற் பயனில்லை; ஆகையால், அவர்களது
நன்மையையே கருதும் நீயே நூன்முறைமை வழுவாது கூறினாயானால்,
அவர்கள் மறுக்காது அங்ஙனமே ஒழுகுவர்; ஆகவே, இப்போது நீயே
ஆலோசித்துக்கூறுவது தக்கது எனத்துரோணன் மறுமொழி கூறியவாறு.  சகுனி
முதலிய நால்வரும் பாண்டவரிடத்துப் பெருஞ்சினங்கொண்டு அவர்கட்குத்
தீமைபுரிதற் பொருட்டு ஒன்றுசேர்ந்து ஒருதன்மையான அபிப்பிராயத்தை
முடிவிற் கொள்வராதலாலும், அதுபற்றியே ‘துஷ்டசதுஷ்டர்’ என்று பேர்
பெறுவராதலாலும், ‘வெகுளியான் மிக்கவீரர் நால்வரும்’ என்றார்; ஆகவே,
‘நால்வர்’ என்றது-இங்குத்தொகைக்குறிப்பு.  நவின்றன-பெயர்.  வேதநூல்-

வில் மகன் உரைக்க, ஏனை அமைச்சரும், விதுரன்தானும்,
‘மன் முறை தவறின், இன்றே வசையும் வந்து
இசையும்’ என்றார்;
கல் மன நெடுங் குன்று அன்னான் கருதி, அக் கணத்தே, மீள,
தன் மனை, யாவர் நெஞ்சும் சருகு என, தழைக்க, சொன்னான்:விதுரனும் மற்றைஅமைச்சர்களும் துரோணன்
மொழிக்குஇணங்க, திருதராஷ்டிரன்
கூறத்தொடங்குதல்.

வில் மகன் உரைக்க – வில்வித்தையிற் சிறந்தவனான
துரோணன் இவ்வாறு கூற,- (அப்போது), ஏனை அமைச்சரும் – மற்ற
மந்திரிகளும், விதுரன் தானும்-விதரனும், (திருதராஷ்டிரனை நோக்கி), ‘மன்
முறை தவறின்-(நீ ஆராய்ந்து சொல்லுகையில்) அரசமுறைமை
தவறிக்கூறுவாயாயின், இன்றே – இப்பொழுதே, வசையும் – பழிப்பும், வந்து
இசையும்-வந்துசேரும்,’ என்றார்-; மனம் கல் நெடும் குன்று அன்னான் –
(தனது) மனம் கல்மயமான நீண்ட மலை போன்று வலிமையா
யிருக்கப்பெற்றவனான திருதராஷ்டிரன்,-அ கணத்தே-அந்தக்ஷணத்திலேயே,
கருதி-ஆராய்ந்து  பார்த்து,- மீள-மறுபடியும், யாவர் நெஞ்சும் சருகு என-
எல்லாருடைய மனமும் சருகுபோல வாடவும், தழைக்க-(தன்மனம்)
கிளர்ச்சியடையவும், தன்மனை – யுதிஷ்டிரனை நோக்கி, சொன்னான்-
சொல்பவனானான்; (எ – று.)- அதனை, அடுத்தகவியிற் காண்க. விதுரனும் மற்ற அமைச்சர்களும் துரோணனது சொல்லை அநுசரித்துத் தாமும்
‘நீ தான் இப்பொழுது ஆராய்ந்து ஆலோசனை சொல்லத்தக்கவன்;
எங்களுடையபேச்சை நால்வரும் அங்கீகரிக்கமாட்டார்கள்; ஆனால், நீ
சொல்லுகிற மொழி நீதிக்குச் சிறிதும் மாறுபடாதிருக்குமாறு ஆராய்ந்து சொல்’
என்றுகூற, திருதராஷ்டிரன் தன்மனம் போனபடி சிறிதும் நியாயத்திற்குக்
கட்டுப்படாமற் கூறத்தொடங்கின னென்றவாறு.  தான்பெற்ற புதல்வரைக்
காட்டிலும் பேரன்புடன் வளர்த்த பஞ்சபாண்டவர் திறத்தில் இப்போது சிறிதும்
அருளில்லாது நிர்த்தாட்சிணியமாகக் கூறுகின்றானாதலால், அவனை ‘மனம்
கற்குன்றன்னான்’ என்றார்.  தன்மன்-தர்மன்: தர்மபுத்திரன்.

உன் உணர்வு உனக்கே உள்ளது; உன் பெருந் துணைவர் ஆன
கொல் நுனை வேலோர் வென்று கொண்டன
கொடுத்தல் ஒல்லார்;
பின்னுற உரிமை யாவும் பெறுதி; நின் பெருமைக்கு ஏற்ப,
முன் உளோர் பலரும் செய்த முறைமையே முன்னுக’ என்றான்.274.- திருதராஷ்டிரன்தருமபுத்திரனுக்கு இட்ட கட்டளை.

(திருதராஷ்டிரன் தருமபுத்திரனை நோக்கி), ‘உன் உணர்வு
உனக்கே உள்ளது – உன்னுடைய நல்லுணர்வு உன்னொருவனுக்கே உள்ளதாகும்;
உன்பெருந் துணைவர் ஆன கொல்நுனை வேலோர் – உனது பெரிய
சகோதரர்களும் (பகைவரைக்) கொல்லவல்ல கூர்மையான வேலாயுதத்தை
யுடையவர்களுமாகிய துரியோதனாதியர், வென்று கொண்டன – (தாம் சூதாடி)
வென்று கொண்ட பொருள்களை, கொடுத்தல் – கொடுப்பதற்கு, ஒல்லார் –
உடன்படார்; (ஆதலால்), நின்பெருமைக்கு ஏற்ப – உனதுகௌரவத்திற்குத்
தக்கபடியாக, முன் உளோர் பலரும் செய்த முறைமையே  முன்னுக – பூர்விகர்
பலரும்செய்த முறைப்படியே (செய்யுமாறு) எண்ணுவாயாக; பின் உற உரிமை
யாவும் பெறுதி – பிறகு உனக்கு உரிய இராச்சியம் முதலிய
பொருள்களையெல்லாம் பெறுவாயாக,’ என்றான் – என்று கூறினான்; (எ – று.)

     நீயே உண்மையறிவு முதிர்ந்துள்ளவ னாதலால், பெரியோர்
மொழிப்படியே நடப்பாய்: எனது மைந்தரோ எனது மொழிப்படி இராச்சியத்தை
மீளக்கொடுத்தற்குச் சம்மதிக்கின்றிலர்: ஆதலால், நீ சிறிதுகாலம் காட்டில் வசித்து
மீண்டு உனக்கு உரியபொருள்களை யெல்லாம் பெறலா மெனத் திருதராட்டிரன்
கூறின னென்க.  உன்னுணர்வு உனக்கே உள்ளது – உன்னைப்போன்ற
விவேகிகள் இவ்வுலகத்துப் பிறரில்லை யென்றவாறு.  இனி, உன் உணர்வு
என்பதை வினைத்தொகையாகக் கொண்டு, உன்னுகின்ற உணர்வு எனப்
பொருள்கூறி, பந்தயம் வைத்துத் தோற்ற பொருள்கள் தனக்கு
உரியனவாகாமையை நீயே நன்கறியுந் திறமுடையாயாதலால், அவற்றை
வென்றவர் (துரியோதனாதியர்) மீளக் கொடாமையைக் குற்றமென்று
கொள்ளாதிருக்கவேண்டுமெனக் கூறியதாகக் கருத்து விரித்துரைத்தலுமொன்று.
இப்பொழுது இராச்சியமெல்லாம் என்வயத்தனவன்றித் துரியோதனாதியர் வயத்தி
லிருப்பதால் அவர்கள் உடன்பட்டுக் கொடுத்தால்தான் நீங்கள் பெற்றுக்
கொள்ளலாமே யல்லாமல் அவர்கள் மீளக் கொடுத்தற்கு உடன்படாதிருக்கையில்
யான் என்செய்யலா மென்பான், ‘வென்று கொண்டனகொடுத்தலொல்லார்’
என்றும், உனது இராச்சியத்தை அன்னியர்கள் கவர்ந்துகொள்ளாது உனது
தம்பியரே ஆள்கின்றன ராதலால் நீ வருந்துதற்கு நிமித்தமில்லை யென்பான்
‘உன் பெருந்துணைவர்’ என்றும், நீ வனவாசஞ்செய்யென்று நேரே கூறுதற்குப்
பின்வாங்கி மறைபொருளாக ‘நின் பெருமைக்கு ஏற்ப முன்னுள்ளோர்
பலருஞ்செய்த முறைமையே முன்னுக’ என்றுங் கூறினான்; ‘முன்னுள்ளோர் பலர்’
என்றது, இராமன் நளன் அரிச்சந்திரன் முதலியோரை.  ‘நீ காடு செல்’ என்று
கூறவேண்டியிருக்க அவ்வாறு கூறாது ‘நின் . . . . .முன்னுக’ எனக் கூறியது –
பிறிதினவிற்சியணி. உனக்கே, முறைமையே – ஏகாரங்கள், பிரிநிலை,
முன்னுகென்றான் – தொகுத்தல். 

அரசன் மற்று உரைத்த மாற்றம் அந்தணன் உணர்ந்து, செல்வ
முரசு அதிர் அயோத்தி மூதூர் முன்னவன் கதையும் கூறி,
‘உரைசெய்தபடியே உங்கள் உலகினை இழந்து, சில நாள்
வரை செறி கானில் வைகி, வருவதே வழக்கும்’ என்றான்.275.- திருதராஷ்டிரனதுகருத்தைத் துரோணன்
தருமனுக்கு விரித்துக் கூறுதல்.

அந்தணன் – பிராமணவருணத்தவனாகிய துரோணன்,-அரசன்
உரைத்த மாற்றம் உணர்ந்து – திரதராஷ்டிரமகாராசன் கூறிய வார்த்தையின்
பொருளை யறிந்து, (பின்பு தருமபுத்திரனைநோக்கி), முரசு அதிர் செல்வம்
அயோத்தி முது ஊர் முன்னவன் கதையும் கூறி – முரசவாத்திய
மொலிக்கப்பெற்ற செல்வச் சிறப்புள்ள அயோத்தி யென்கிற பழமையான ஊரில்
திருவவதரித்த முதல்வனான [திருமாலின் அவதாரமாகிய] இராமபிரானது
கதையையும் எடுத்துச்சொல்லி, ‘உரை செய்தபடியே.  (உனது பெரிய தந்தை)
கூறிய மொழிப்படியே, சிலநாள் – கொஞ்சகாலம், உங்கள் உலகினை இழந்து –
உங்களது இராச்சியத்தை விட்டிட்டு, வரை செறி கானில் வைகி – மலைகள்
நெருங்கிய காடுகளில் தங்கி வசித்து, வருவதே – மீண்டுந் திரும்பிவருவதே,
வழக்கும் – (இப்பொழுது செய்யவேண்டிய) முறைமையும் ஆகும்’, என்றான் –
என்று கூறினான்; (எ – று.)- மற்று – அசை.

    ‘அயோத்தியில் தசரதகுமாரனாய்த் திருவவதரித்த இராமபிரான் தனது
தந்தையின் சொற்படியே தான் ஆளுதற்குஉரிய இராச்சியத்தைத் தன் பெரிய
தம்பியாகிய பரதனுக்குக்கொடுத்து விட்டு மற்றொரு தம்பியாகிய
இலக்குமணனுடனும் தனது மனைவியாகிய சீதையுடனும் பதினான்கு வருடம்
வனவாசஞ்செய்து மீண்டுவந்து அரசுபுரிந்தனன்’ என்ற கதையைத் துரோணன்
கூறி ‘நீயும் அவ்வாறே உனது தந்தையின் சொற்படியே உன்
பெருந்துணைவராகிய துரியோதனாதியர்க்கு உனது இராச்சியத்தைக்
கொடுத்துவிட்டு, உனது தம்பியரோடும் மனைவியோடும் காட்டிற் சில
வருஷங்கள் தங்கியிருந்து பின்னர் மீண்டுவந்து இராச்சியத்தை அரசாளலாம்’
எனத் தருமனுக்குத் திருதராஷ்டிரனது சொல்லை விளங்க உரைத்தன னென்க.
‘முன்னுளோர் பலருஞ் செய்த முறைமையே முன்னுக’ என்று திருதராஷ்டிரன்
கூறினனாதலால், அதன் பொருள் விளங்குமாறு இராமபிரானது சரித்திரத்தைத்
துரோணன் எடுத்துக் காட்டினன்.

    திரௌபதிக்குத் திருதராஷ்டிரன் கொடுத்த இரண்டு வரங்களால் தமது
அடிமைத் தன்மையினின்று நீங்கிச் சூதிலிழந்த இராச்சியத்தையும் பெற்ற
பாண்டவர்கள் தமது இந்திரப்பிரத்த நகரத்தை நோக்கிச் செல்வதைக் கண்டு
துச்சாதனன் மனம் பொறாமல் துரியோதனனிடத்து முறையிடவே, பின்பு துஷ்ட
சதுஷ்டர்கள் ஒருங்குசேர்ந்து திருதராஷ்டிரனிடத்தைச் சார அவர்களுள்
துரியோதனன் பலவாறு அத்தந்தையினிடத்துக் குறைகூறி முடிவில் அவனாற்
பிராதிகாமியைக்கொண்டு பாண்டவர்களை மீண்டுஞ் சூதாடுமாறு அழைப்பிக்க,
அப்பொழுது தருமபுத்திரன் சகுனியின் மாயையை யறிந்திருந்தும்
அதற்குஉடன்பட்டு ‘இராமபிரான் பொன்மயமான மான் அஸம்பாவிதமென்பதை
யுணர்ந்திருந்தும் அப்பொன்மானைப் பிடிக்க விரும்பினானன்றோ! ஆகையால்,
விதி வலிது’ என்று கூறித் தம்பியரோடு திரும்பிவர, சகுனி ‘இச்சூதாட்டத்தில்
தோற்றவர் தமது  இராச்சியத்தை விட்டு மான்றோல் தரித்துக்கொண்டு
பன்னிரண்டு வருஷம் வனவாசமும், ஒருவருஷம் தன்னைச் சார்ந்த
சனங்களால் அறியப்படாமலிருத்தலாகிற அஜ்ஞாதவாசமுஞ் செய்யவேண்டும்;
இவ்வாறு அஜ்ஞாதவாசஞ்  செய்யும்போது அறியப்பட்டால், மீண்டும்
பன்னிரண்டுவருடம் வனவாசஞ் செய்யவேண்டியதே: இவ்வாறு வசித்துப்
பதின்மூன்று வருஷங் கழித்து வந்தால், இராச்சியத்தைப் பெறலாம்’ என்ற
ஏற்பாட்டுடன் சூதாடச்சொல்ல, வீடுமன் துரோணன் முதலியோர் பலரும்
தடுக்கவும் கேளாமல் தருமன் அந்நிபந்தனைக்கு உடன்பட்டுச் சூதாடித்
தோற்க, பின்பு பாண்டவர்களெல்லாரும் பலவாறாகப் பிரதிஜ்ஞை செய்து
திருதராட்டிரன் முதலியோரிடத்து விடைப்பெற்றுக் காடு சென்றனரென
இவ்விடத்து முதனூல் கூறும்.   

அரிவையோடு அகன்று, நீவிர் ஐவரும் அடவி எய்தி,
சுரர் தினம் ஈர்-ஆறு அங் கண் துன்னுதிர்;
மன்னும் நாட்டில்
ஒருவரும் அறியாவண்ணம் ஒரு தினம் உறைதிர்; உங்கள்
பெரு விறல் அரசும் வாழ்வும் பின்னுறப் பெறுதிர்’ என்றான்.

நீவிர் ஐவரும் – நீங்கள் ஐந்துபேரும், அரிவை யோடு –
திரௌபதியுடன் கூட, அகன்று-(நாட்டை) விட்டுப் புறப்பட்டு, அடவி எய்தி-
காட்டைச் சேர்ந்து,-அங்கண்-அவ்விடத்தில், சுரர்தினம் ஈர் ஆறு –
தேவர்களுடைய பன்னிரண்டு நாள் [பன்னிரண்டு வருஷகாலம்], துன்னுதிர்
-வசிப்பீர்களாக: (பின்பு), மன்னும் நாட்டின் – (பலவகை வளங்களும்)
பொருந்தியநாட்டிலே,ஒருவரும் அறியாவண்ணம் – ஒருத்தர்க்கும் தெரியாதபடி,
ஒரு தினம் – ஒருநாள் [ஒரு வருஷகாலம்],உறைதிர்-வசிப்பீர்களாக; பின் உற –
(இவ்வாறு பதின்மூன்று வருஷமும்) கழித்தபிறகு,உங்கள்-உங்களுடைய, பெரு
விறல் அரசும் – மிக்க பராக்கிரமத்துடனாளப்படுகிற இராச்சியத்தையும், வாழ்வும்
– செல்வ வாழ்க்கையையும், பெறுதிர்-பெற்றுக் கொள்வீர்களாக, என்றான்-
என்றுவிவரித்துக் கூறினான், (துரோணன்); (எ – று.)

    துரோணன், கீழ்ச்செய்யுளில் ‘உங்களுலகினையிழந்து சின்னாள் வரை
செறிகானில் வைகிவருவதேவழக்கு’ எனக் கூறியதை இச்செய்யுளால் விவரித்துக்
கூறுகின்றான். தவணை கூறும்பொழுது’பன்னிரண்டு வருஷம் வனவாசமும் ஒரு
வருஷமும் அஜ்ஞாத வாசமுஞ் செய்துவந்தால், பிறகு இராச்சியத்தையும்
செல்வத்தையும் பெறலாம்’ என்று கூறினால், கேட்பதற்கு
அஞ்சத்தக்கதாகஇருக்குமென்று கருதி, அங்ஙனங்கூறாமல் ‘இப்பொழுது
நீங்கள் வனவாசஞ் செய்யவேண்டியதுதேவமானத்தாற் பன்னிரண்டு தினமும்,
அஜ்ஞாதவாசஞ் செய்யவேண்டியது தேவமானத்தால் ஒரு தினமுமே:
நெடுங்காலமல்ல’ எனப் பாண்டவர்கட்கு தேறுதலுண்டாகுமாறு
திருதராஷ்டிரன் கருத்தின்படியேகூறினனென்க.  மனிதர்க்கு ஒருவருஷம்
தேவர்கட்கு ஒருதினமா மென்பது நூற்றுணிபு.  அரிவை-பெண்; இங்கே,
திரௌபதி.  நீவிர் ஐவரும்-முன்னிலையிற் படர்க்கை வந்த இடவழுவமைதி:
‘நீவிரைவிரும்’ என்றிருப்பின், வழாநிலையாம். துன்னுதிர், உறைதிர், பெறுதிர்
-ஏவற்பன்மைமுற்றுக்கள். அடவீ, ஸு ரர்,திநம் – வடசொற்கள்.

மறைந்து உறை நாளில் நும்மை மற்றுளோர், ‘ஈண்டு
உளார்’ என்று
அறிந்திடின், மீண்டும் இவ்வாறு அரணியம்
அடைதிர்’ என்றான்;
பிறந்த இம் மாற்றம் கேட்டு, பிதாமகன்
முதலாய் உள்ளோர்,
‘சிறந்தது ஒன்று இதனின் இல்லை; இசைத்ததே
செய்மின்’ என்றார்.277.-வீடுமன் முதலியோர்அவ்வார்த்தைக்கு உடன்பட்டுக் கூறுதல்.

(பின்னும்), ‘மறைந்து உறை நாளின்-(நீங்கள்) மறைந்து வசிக்கிற
[அஜ்ஞாதவாச] காலத்தில், நும்மை-உங்களை, மற்று உளோர்-பிறர், ஈண்டு
உளார் என்று அறிந்திடின்-இங்கேயிருக்கிறார்களென்று (நிச்சயமாக)
அறிந்துவிட்டால், மீண்டும்-மறுபடியும், இஆறு அரணியம் அடைதிர்-இந்தப்
பிரகாரமே காட்டுக்குப் போகக்கடவீர்கள்,’என்றான்-என்றுங்கூறினான்
(துரோணன்):  பிறந்த-(துரோணன் வாயினின்று) வந்த, இமாற்றம்-இந்த
வார்த்தையை, பிதாமகன் முதல் ஆய் உள்ளோர் கேட்டு,-(பாண்டவர்கட்குப்)
பெரியபாட்டனான பீஷ்மன் முதலியோர் கேட்டுணர்ந்து, இதனின் சிறந்தது
ஒன்று இல்லை – இவ்வாறுசெய்வதனினும் சிறந்த செயலொன்றுமில்லை;
இசைந்ததே செய்ம்மின்-(திருதராஷ்டிரன்) உடன்பட்ட இதையே செய்யுங்கள்’,
என்றார் – என்று(பாண்டவர்க்குக்) கூறினார்கள்; (எ – று.)

    கீழ்ச்செய்யுளில் ‘ஒருவருமறியாவண்ணம் ஒருதினமுறைதிர்’ என்று கூறிய
அஜ்ஞாத வாசத்தின்தன்மையை இச்செய்யுளில் துரோணன் விவரித்துக்
கூறினான்; அஜ்ஞாதவாசத்திலே ‘பிறர் இவர்கள்பாண்டவர்’ என்று உங்களை
அறிந்து விடுவாராயின், அப்பொழுது நீங்கள் மீண்டும் முன்போலவே
பன்னிரண்டு வருஷம் வனவாசமும், ஒருவருஷம் அஜ்ஞாதவாசமுஞ்
செய்யவேண்டுமென நிபந்தனை கூறியவாறு. கீழ்த் துரியோதனன்
தருமபுத்திரனை வென்ற போது இராச்சியத்தைவிட்டிட்டுக்
காட்டுக்கேசென்றுவிடவேண்டுமென்று கூறியதனினும் பன்னிரண்டு வருஷம்
வனவாசமும் ஒரு வருஷம் அஜ்ஞாதவாசமும்செய்தால் மீண்டும்
இராச்சியத்தைப் பெறலாமென்ற இது, பாண்டவர்களின் நன்மையை
உத்தேசித்துக் கூறியதாயிருத்தலால், ‘சிறந்ததொன்றிதனினில்லை’ எனப்
பீஷ்மன் முதலியோர்கொண்டாடிக் கூறுவாராயின ரென்க.  நாளின் உம்மை
என்றும் பிரிக்கலாம்.  இசைந்ததேசெய்ம்மின் என்பதற்கு-‘இசைந்ததே-(இது)
பொருத்த முடையதே; செய்ம்மின் – (இவ்வாறேநீங்கள்) செய்யுங்கள்’
என்றும், ‘இசைந்து-(நீங்கள்) மனமொப்பி, அதே-(துரோணன் கூறிய)
அதனையே, செய்ம்மின்’ என்றும் பொருள் கூறலாம்

சுரி குழல் குலைய நின்ற திரௌபதி, சுருதி முந்நூல்
வரபதி மொழிந்த மாற்றம் கேட்டலும், வணங்கி, ‘ஐவர்
அரசரும், எனது மைந்தர் ஐவரும், யானும், மீண்டும்
உரிமை இன்று எய்த, வெஞ் சூது ஆடுதல் உறுதி’ என்றாள்.278.-அடிமைத்தன்மையினின்றுநீங்குமாறு சூதாட
வேண்டுமென்று திரௌபதி கூறுதல்.

 சுரி குழல் அலைய நின்ற திரௌபதி – (நுனி) சுருண்ட கூந்தல்
அவிழ்ந்தலைந்து கொண்டிருக்க(அங்கே) நின்ற திரௌபதி, – சுருதி முந்நூல்
வரம் பதி மொழிந்த மாற்றம்கேட்டலும்-வேதத்திற்கு உரியவனும்
பூணூலையணிந்தவனும் சிறந்த (அந்தண) குலத்தில் தோன்றியதலைவனுமான
துரோணாசாரியன் கூறிய வார்த்தையைக் கேட்டவுடனே, வணங்கி-, ‘ஐவர்
அரசரும் – (எனதுகணவர்களாகிய) அரச குலத்துத் தோன்றிய பாண்டவரைவரும்,
எனது மைந்தர் ஐவரும் – எனதுபுதல்வர்கள் ஐந்து பேரும், யானும் – நானும்,
இன்று – இப்பொழுது, உரிமைஎய்த – (அடிமைநீங்கிச்) சுதந்திரத்தைப் பெறுமாறு,
மீண்டும்-மறுபடியும், வெம்சூது ஆடுதல் – கொடிய சூதை யாடுவது,உறுதி –
நன்மையைத் தரக்கூடியதாம்,’ என்றாள் -; ( எ – று.)

    திருதராஷ்டிரன் சொற்படி இராச்சியத்தை மீளக் கொடுத்தற்கு இசையாத
துரியோதனாதியர்,பாண்டவர்களை அடிமையினின்று நீக்குவதற்கும்
உடன்படாதவரேயாவ ராதலாலும், அடிமையாகிய பாண்டவர்கள் தமது
தலைவரிடத்தில் பணிவிடை செய்வதே முறைமையாகுமாதலாலும்,
திருதராஷ்டிரராசனதுகட்டளைப்படியே அடிமையாகிய பாண்டவர்கள்
வனத்திற்குச் சென்றாலும் குறித்தகாலங்கழித்து மீண்டுவந்தபோது அடிமையாகிய
உங்கட்குச் செல்வத்தில் உரிமையில்லை: உங்கட்குத் தலைவர்களானஎங்களிடத்து
அடிமை செய்துகொண்டிருப்பதே உங்கள் கடமையாகுமன்றி, நீங்கள் இராச்சியம்
முதலியசெல்வ வாழ்க்கைகளைப் பெற விரகில்லை;  நாங்கள் சம்மதித்து
உங்களை அடிமையாதலினின்றும்விடுவிக்க வில்லையே! எனத் துரியோதனாதியர்
கூறுவர்களாதலாலும், திரௌபதி தங்களைஅடிமையினின்று நீக்குமாறு
சூதாடவேண்டுமெனக் கூறினளென்க. யுதிஷ்டிரனுக்குப்ரதிவிந்த்யனென்பவனும்,
வீமசேனனுக்கு ஸு தஸோமனென்பவனும், அருச்சுனனுக்கு
ஸ்ருதகீர்த்தியென்பவனும், நகுலனுக்கு ஸதாநீகனென்பவனும், சகாதேவனுக்கு
ஸ்ருதஸேநனென்பவனுமெனத்திரௌபதியினிடத்தில் ஐவர்க்கும் ஐந்துமக்கள்
தோன்றினர்;  இவர்கள்உபபாண்டவரெனப்படுவர்.  ‘எனது மைந்தரைவர்’
என்றது, மற்றும் சுபத்திரை முதலியோரிடத்துப்பிறந்திருந்த அபிமந்யு
முதலியவரையும் உபலட்சணத்தாற் குறிக்குமென்னலாம்.  மூன்றிழை
சேர்த்துஓரிழையானது மூன்றுகொண்டது ஒரு வடமாக, அங்ஙனம் மூன்று
வடங்கொண்டு பூணூல் செய்யப்படுவதனால், அது’முந்நூல்’ என்றும்,
‘முப்புரிநூல்’ என்றும் சொல்லப்படும். ஸ்ருதி, வரபதி – வடசொற்கள்

தையல் அங்கு உரைத்த மாற்றம் தருமனும் கேட்டு, ‘நாங்கள்
கையறு தொண்டர் ஆகிக் கான் புகல் வழக்கும் அன்றால்;
ஐயுறாது ஒருகால் இன்னம் ஆடுதும், அருஞ் சூது’ என்றான்;
மெய்யுற இருந்த வேந்தர், மீளவும் காணலுற்றார்.279.-திரௌபதி கூறியபடி தருமன்மறுசூதாட
மன்னவர் காணுதல்.

தருமனும் – தருமபுத்திரனும், அங்கு-அப்பொழுது தையல்
உரைத்த மாற்றம் கேட்டு – திரௌபதிகூறிய வார்த்தையைக் கேட்டு,-
‘(நாங்கள்-, கை அறு தொண்டர் ஆகி கான் புகல் -சுவாதந்தரியமற்ற
அடிமைகளாயிருந்துகொண்டு காட்டிற்குச் செல்லுதல், வழக்கும் அன்று –
முறைமையுமன்று;  ஆல் – ஆதலால், ஐயுறாது – மங்கலங்காது, இன்னம் –
இன்னமும், ஒருகால் -ஒருதரம், அருஞ் சூது – (வெல்லுவதற்கு அரிய)
சூதை, ஆடுதும் – ஆடுவோம்,’ என்றான் – என்று கூறிச்சூதாடத்
தொடங்கினான்; (அப்பொழுது), மெய் உற இருந்த வேந்தர் –
சாட்சியாகவிருந்தஅரசர்கள், மீளவம் – மறுபடியும், காணல் உற்றார் –
(அச் சூதாட்டத்தைப்) பார்க்கலானார்கள்;(எ – று.)

    ‘நாங்கள் மீண்டுவந்த பிறகு இராச்சியத்தைக் கொடுப்பதற்குத்
துரியோனாதியர்கள் ஏதாவதுபோக்குச் சொல்லக்கூடு மென்பது மாத்திரமன்று;
அடிமைகள் தலைவரது விருப்பின்படி ஊழியஞ்செய்து கொண்டிருக்க வேண்டுமே
யன்றி,சுதந்திரமுள்ளவர் போலத் தங்கள் மனத்திற்கு விருப்பமானதொரு
காட்டிற்குச் செல்லுதல்நீதிமுறைமைக்குத் தக்கதன்றாதலால், சூதாடி எமது
அடிமைத்தன்மையைப் போக்கிக்கொள்வதே, இப்பொழுது நாங்கள்
செய்யவேண்டிய காரியம்’ என்று சொல்லித் தருமன் மீண்டுஞ்சூதாடத்தொடங்க,
முன்பு சூதாடும்போது சபையிலிருந்த அரசர்களெல்லாரும் மீண்டும்
சாட்சியாகப்பார்க்கலானார்க ளென்பதாம். ஐயுறாது – ஐயமுறாது
என்பதன்தொகுத்தல்.

சத்திய விரதன்தானும் தன் பெருந்தேவி சொல்ல,
பத்தியால் வணங்கி, மாயன் பன்னிரு நாமம் ஏத்தி,
ஒத்த வெண் கவறு வாங்க, சகுனி, ‘யாது ஒட்டம்?’ என்றான்;
புத்தியால் அவனும், ‘யான் செய் புண்ணியம்
அனைத்தும்’ என்றான்தருமபுத்திரன்திரௌபதியின் மொழிப்படியே
திருமாலின் நாமங்களைச்சொல்லுதலும், தன் புண்ணியங்களைப்
பந்தயம் வைத்தலும்.

தன் பெருந் தேவி சொல்ல – தனது சிறந்த பட்ட
மகிஷியாகிய திரௌபதி (‘சூதாடும்போதுதிருமாலின் துவாதச நாமங்களைச்
சொல்லியேத்தி ஆடவேண்டும்’ என்று தருமனுக்குச்) சொல்ல,(அவ்வாறு),-
சத்தியவிரதன் தானும் – உண்மை பேசுதலையே விரதமாகக்
கொண்டவனானதருமபுத்திரனும்,-பத்தியால் வணங்கி – பக்தியோடு
(திருமாலைக்குறித்து) நமஸ்கரித்து, மாயன்பன்னிருநாமம் ஏத்தி – திருமாலினது
துவாதசநாமங்களையும் எடுத்துத் துதித்து, ஒத்தவெள்கவறுவாங்க-
ஒன்றற்கொன்று சமமான வெண்ணிறமுள்ள பாச்சிகைகளை (ஆடுமாறு
தன்கையில்)எடுக்க,-(அப்பொழுது),-சகுனி-? ஓட்டம் யாது என்றான் – (‘இந்த
ஆட்டத்தில் நீ வைக்கும்)பந்தயம் என்ன?’ என்று வினவினான்; அவனும் –
அத்தருமபுத்திரனும், புத்தியால் – ஆலோசனையோடு,யான் செய் புண்ணியம்
அனைத்தும் – (‘இப்பொழுது யான் வைக்கும் பந்தயமாவது) நான்
(இதுவரையிலுஞ்) செய்துள்ள எல்லாப் புண்ணியங்களுமே’, என்றான்-என்று
கூறினான்; (எ – று.)

     ‘யான் சயித்தால் நாங்கள் அடிமையினின்று நீங்கினவர்களாவோம்; நீ
சயித்தால், துரியோதனன் எனது புண்ணியமெல்லாவற்றையும் பெறக்கடவன்’
என்று தருமன் பந்தயம் வைத்தனனென்க.  வெற்றிபெறவிரும்புபவர்
கடவுளை முன்னிட்டுக் கொண்டே காரியத்தைத் தொடங்கவேண்டுமென்பது
இச்செய்யுளின்முன்னிரண்டடிகளிற் போதரும்.  திரௌபதியின் சொற்படியே
சூதாடத் தொடங்கியபோது சகுனிபந்தயமென்ன எனக்கேட்டதற்கு, உடனே
தருமன் தனது ஆலோசனைத்திறத்தால் விடை கூறின னென்பார்,’புத்தியால்’
என்றார்.  திருமாலின் பன்னிரு நாமங்களாவன-கேசவன், நாராயணன்,
மாதவன், கோவிந்தன், விஷ்ணு, மதுஸூதநன், த்ரிவிக்ரமன், வாமநன், ஸ்ரீதரன்,
ஹ்ருஷீகேசன், பத்மநாபன், தாமோதரன் என்பன. ஸத்யவ்ரதன், தேவீ, பக்தி,
நாமம், புத்தி, புண்யம்-வடசொற்கள்

உருட்டிய கவறு, நேமி உடையவன் அருளினாலே,
மருட்டிய சகுனி எண்ணின் வழிப்படாது உருண்ட காலை,
இருட்டிய விழியான் மைந்தன் இதயமும் இருண்டு சோர,
தெருட்டிய உணர்வின் மிக்கோன் செப்பிய யாவும் வென்றான்.281.-தருமபுத்திரன் வெல்லுதல்.

உருட்டிய – (தருமபுத்திரன்) உருட்டியாடிய, கவறு –
பாச்சிகையானது, நேமி உடையவன் அருளினாலே- (சுதரிசன மென்னுஞ்)
சக்கரத்தை ஆயுதமாகக்கொண்டுள்ள திருமாலினது திருவருளினால்,
மருட்டியசகுனி எண்ணின் வழிப்படாது – மாயஞ் செய்த சகுனியினது
விருப்பப்படி உருண்டு விழாமல், உருண்டகாலை – (தருமனது
விருப்பத்தின்படியே) உருண்டு விழுந்த சமயத்தில்,-தெருட்டிய உணர்வின்
மிக்கோன்- தெளிந்த அறிவுமிக்குள்ளவனாகிய தருமபுத்திரன்,-இருட்டிய
விழியான் மைந்தன் இதயம்உம் இருண்டுசோர-இருளின் தன்மையை
யடைந்துள்ள கண்களையுடையவனான [குருடனான] திருதராட்டிரனது
புதல்வனாகியதுரியோதனனது மனமும் மயங்கித் தளரும்படி, செப்பிய யாவும்-
பந்தயமாகக் குறிக்கப்பட்டஎல்லாவற்றையும், வென்றான்-சயித்தான்; (எ – று.)

     கடவுளருளை முன்னிட்டுக்கொண்டு ஒரு காரியஞ் செய்பவர் வெற்றி
பெறுவரென்பது, இதனாற் பெறப்படும். பஞ்சபாண்டவரும் திரௌபதியும்
புதல்வரைவரும் முதலியவர்களின் அடிமை எதிரிகள் வைத்த
பந்தயப்பொருளாகவும், தனது புண்ணியம் தனது பந்தயப்பொருளாகவுங்
கொண்டு தருமன் சூதாடித்திருமாலருளால்வென்றன னென்பதாம்.

    தெருட்டிய=தெருண்ட; தன்வினைப்பொருளில் வந்த பிறவினை; இனி,
திரௌபதியினால்தெளிவிக்கப்பட்ட எனினுமாம். 

வென்று, தன் இளைஞரோடும், மேதகு புதல்வரோடும்,
மன்றல் அம் தெரிவையோடும், மற்றுளோர் தங்களோடும்,
அன்று தன் குரவர் பொன்-தாள் அன்புடன் வணங்கி, கானம்
சென்றனன் என்ப மன்னோ-செழு நிலம் உடைய கோமான்.282.-தம்பிமார் முதலியவருடன்தருமபுத்திரன் திருதராட்டிரன்
முதலியோரிடம் விடைபெற்றுக் காட்டிற்குச் செல்லுதல்.

செழுநிலம் உடைய கோமான் – பலவகைவளங்களும்
நிறைந்த பூமிக்குத் தலைவனானயுதிஷ்டிரராஜன், வென்று (அந்த மறுசூதில்
தான்) ஜயித்து, தன் இளைஞரோடும் – தனது தம்பிய ராகிய (வீமன்முதலிய)
நால்வருடனும், மேதகு புதல்வரோடும் – மேன்மையை அடைந்துள்ள
புத்திரர்களுடனும், மன்றல்அம்தெரிவையோடும் – (தம்மால்)
மணஞ்செய்துகொள்ளப்பட்ட அழகிய திரௌபதியுடனும், மற்றுஉளோர்
தங்களோடும் – மற்றும் தன்னைச்சேர்ந்த பரிவாரங்களுடனும்,-அன்று –
அப்பொழுது,-தன்குரவர் பொன் தாள் – (திருதராஷ்டிரன் முதலியவர்களான)
தனதுபெரியோரது அழகிய திருவடிகளை,அன்புடன் வணங்கி – அன்போடு
நமஸ்கரித்து, கானம் சென்றனன் – காட்டுக்குச் சென்றான்; (எ -று.)

    தருமபுத்திரன், வனவாசஞ்செய்யுமாறு கருதி, திருதராட்டிரன் வீடுமன்
விதுரன் துரோணன் அசுவத்தாமன்கிருபன் முதலிய பெரியோரிடத்து
விடைபெற்று, விதுரனது விருப்பத்தின்படியே தாயான குந்திதேவியைஅவ்விதுரன்
மாளிகையிலேயே விட்டிட்டு, தானும் தன் தம்பியர் நால்வரும், தமது
மனைவியானதிரௌபதியும், தமது புரோகிதராகிய தௌமியமுனிவருமாகக்
காட்டுக்குச் சென்றன னென்ற வரலாற்றைமுதனூலால் அறிக. திரௌபதியின்
வேண்டுகோளின்படி தருமன் ஆடிய மறுசூதால் திரௌபதியின்புதல்வர்கள்
தாஸபுத்திரர் [அடிமைகளின் பிள்ளைகள்] என்று பிறர் எடுத்துச்
சொல்லக்கூடியசிறுமொழியினின்றும் நீங்கி மேன்மைப்பட்டார்களாதலால்,
அவரை ‘மேதகு புதல்வர்’என்றாரென்னலாம். என்ப, மன், ஓ – ஈற்றசைக

ஒழிவு செய் கருணை நால்வர் உள்ளமும் ஒழிய, ஏனை
வழுவு அறு மன்னர் உள்ளம் மம்மரோடு அயர்ந்து விம்ம,
குழைவினால் நுகர்தல் இன்றி, கொற்ற மா நகரி மாக்கள்
தழல் என உயிர்த்து, மாழ்கி, தனித் தனி புலம்பலுற்றார்.283.-அப்பொழுதுதுஷ்டசதுஷ்டர்கள் தவிர,
மற்றையாவரும் வருந்துதல்.

கருணை ஒழிவு செய் நால்வர் உள்ளமும் ஒழிய – கருணையை
நீங்கியுள்ள துஷ்டசதுஷ்டர்களது மனம்தவிர, வழு அறு ஏனைமன்னர்
உள்ளம் – குற்றமற்ற மற்றையரசர்களது மனம், மம்மரோடு அயர்ந்துவிம்ம –
மயக்கங் கொண்டு தளர்ந்துபுலம்பவும்,-குழவி பால் நுகர்தல் இன்றி-
குழந்தைகளும்பாலுண்ணாதுதவிர்ந்திருக்கவும், கொற்றம் மா நகரி மாக்கள் –
வெற்றிபொருந்திய பெரியஅவ்வத்தினாபுரியிலுள்ள ஜனங்கள், தழல் என
உயிர்த்து மாழ்கி – நெருப்புப்போல (உஷ்ணமாக)ப்பெருமூச்செறிந்து வருந்தி,
தனி தனி புலம்பல் உற்றார் – தனித்தனியே புலம்புவாராயினர்; (எ – று.)

     அறிவு நிரம்பாத குழந்தைகளும் வருத்தமிகுதியாற் பாலுண்ணாதிருந்தன
எனவே, மற்றையோரது வருத்தம்சொல்லாமலேயமையுமென்பது கருத்து.
இதனை, “பான்மறந்தன பசுங்குழவி” என்பதனோடு ஒப்பிடுக. தமதுநகரத்து
அரசன் வெற்றிபெற்றிருக்கவும் அந்நகரத்துச் சனங்கள் அவனது
கொடுங்கோன்மை யால் அவனிடத்து வெறுப்புற்றிருந்தனரென்பது தோன்ற
‘கொற்றமாநகரிமாக்கள் தழலெனவுயிர்த்துமாழ்கி’ என்றார். 

நாட்டிடை எல்லை, பொன்-தாள் நறு மலர் சிவக்க ஏகி,
காட்டிடை புகுந்த போதும், கலக்கம் அற்று, உவகை
கூர்ந்தான்-
கூட்டிடை இன்பத் துன்பக் கொழும் பயன் துய்த்து, மாறி,
வீட்டிடை புகுதும்போது, மெய்ம்மகிழ் விபுதர் போல்வான்.284.-தருமபுத்திரனது குணத்தின்சிறப்பு.

கூட்டிடை – இந்தவடம்பில், இன்பம் துன்பம் கொழும் பயன்
துய்த்து – மிக்க இன்பத்தின்பயனையும் துன்பத்தின் பயனையும் அநுபவித்து,
மாறி – (கருமவசப்பட்டிருக்கும்அந்நிலைமையினின்று)நீங்கி, வீட்டிடை
புகுதும்போது-முத்தியுலகத்திற் சென்று சேரும் பருவத்தை யடைந்துள்ள,
மெய்மகிழ் – உண்மையாக மகிழ்கின்ற, விபுதர்-முக்தர்களை, போல்வான் –
ஒப்பவனானதருமபுத்திரன்.-நாட்டிடை எல்லை-நாட்டினிடத்திலுள்ள
எல்லைமுழுவதும், நறுமலர் பொன்தாள்-வாசனையுள்ள தாமரை
மலர்போன்ற (தனது) அழகிய பாதங்கள், சிவக்க – (அடிவைத்துஊன்றுதலாற்)
செந்நிறமடைய, ஏகி – நடந்துசென்று, காட்டிடை புகுந்த போதும்-
காட்டிற்குச்சென்றபொழுதும், கலக்கம் அற்று – (மனத்திற்) கலக்கம்ஒழிந்து,
உவகை கூர்ந்தான் -மகிழ்ச்சி மிக்கவனானான்;  (எ – று.)

     யானை முதலிய வாகனங்களின் மீது ஊர்ந்து செல்லுந் தருமபுத்திரன்
இப்பொழுது கால்களால் நடந்துசென்றானென்பதாம்.  இதற்குமுன் இவ்வாறு
நடந்துசெல்லும் பயிற்சியில்லாமையால், பாதங்கள்செந்நிறமடைந்தன.
மோட்சத்தைப்பெறும் பக்குவ நிலைமையை யடைந்த பெரியோர் தமக்குப்
பரகதிஎப்பொழுது கிடைக்குமென்று எதிர்பார்த்துக்கொண்டு கடவுளைத்
தியானித்தலால் எப்பொழுதும்நிரம்பிய நெஞ்சத்தராய் இவ்வுலகத்து
இன்பதுன்பங்களை ஒருபொருட்டாக மனத்திற்கொள்ளாமலிருப்பது போல,
தருமபுத்திரனும் இவ்வுலக இன்பதுன்பங்களை ஒரு பொருட்டாக
நினையாதிருந்ததனால், அவனை, ‘கூட்டிடை இன்பதுன்பக்கொழும்பயன்றுய்த்து
மாறி, வீட்டிடைப்புகுதும்போது மெய்ம் மகிழ்விபுதர் போல்வான்’ என்றார்;
இவ்வாறு இருப்பவர் ‘ஜீவந்முக்தர்’எனப்படுவர்; “அரசரோடிருந் துலகவரசாட்சி
புரிந்திடினு மங்கையேற்றுத், தெருவுதோறலைந் திரந்துதின்றிடினு மிளம்
பருவத் தெரிவைமாரைப், பிரியாமலிருந்திடினு பிரிந்து தவம்
புரிந்திடினும்பேசிற்றெல்லாம், விரிசீவன்முக்தருக்கிங்குடம்பாடேயன்றி யொன்றும்
விரோதமில்லை”என்பதனால் அவர்களின் தன்மை இன்னதென்பதை யுணர்க.
பறவைகள் சிலகாலம் தங்குவதற்கு ஏற்றகூடுபோல, இவ்வுடம்பு, உயிர் சிலகாலம்
கூடியிருத்தற்கு இடமாய் நிற்றலால், ‘கூடு’ என்றேகுறிக்கப்பட்டது

————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ விஷ்ணு தர்மம் –நான்காம் பாகம் —

June 4, 2023

ப்ரததாதி பலம் ந்ருணாம்। த்ரிபிர் மாைஸஸ் த்ரிர் அவஸ்தாஸ்।
௮௩।௰௨௧
த்ரிவிதாத் பாதகாந் ந்ருப। த்ரீணி நாமாநி ேதவஸ்ய। ௮௩।௰௨௨
ேமாசயந்தி த்ரிவார்ஷிைக:। யதஸ் தேதா வ்ரதம் இதம்। ௮௩।௰௨௨
த்ரிக்ரமம் ஸமுதாஹ்ருதம்। ஸர்வபாபப்ரஸமநம்। ௮௩।௰௨௩
ேகஸவாராதநம் பரம்। ஸ்ருணுஷ்வ ச மஹீபால। ௮௩।௰௨௩
வ்ரதம் விஷ்ணுபதத்ரயம்। ஸர்வபாபப்ரஸமநம்। ௮௪।௰௰௧
யஜ் ஜகாத புரா ஹரி:। ப்ராேசதஸாய தக்ஷாய। ௮௪।௰௰௧
தக்ஷஸ் சாஹ விவஸ்வேத। விவஸ்வாந் அலஸித்ராய। ௮௪।௰௰௨
அலஸித்ேரா அஸிதாய ச। அஸிேதந ஸமாக்யாதம்। ௮௪।௰௰௨
அல்பாயாஸம் மஹாபலம்। தத் இதம் ஸ்ரூயதாம் ஸம்யக்। ௮௪।௰௰௩
வ்ரதம் விஷ்ணுபதத்ரயம்। தக்ஷ: ப்ரஜாபதி: பூர்வம்। ௮௪।௰௰௩
விஷ்ணும் ஆராத்ய ப்ருஷ்டவாந்। பஹுஸஸ் து விபந்நாயாம்।
௮௪।௰௰௪
ஸ்ருஷ்டாவ் அரிநிஸூதந। பகவந் ஸர்வகக்ருத்வம்। ௮௪।௰௰௪
மமாதிஷ்டம் ஸ்வயம்புவா। ப்ரஹ்மணா ேதவேதேவஸ। ௮௪।௰௰௫
தவாேதேஸந ேகஸவ। விபந்நா ச ஜகந்நாத। ௮௪।௰௰௫
மம ஸ்ருஷ்டி: க்ருதா க்ருதா। பூர்வகர்மவிபாேகந। ௮௪।௰௰௬
வ்யாகுலஸ் சாஸ்மி ேசதஸா। யதா ச ேதவ முச்ேயய। ௮௪।௰௰௬
அஸ்மாத் ஸம்ஸாரஸம்கடாத்। விஷயாஸங்கவிஷமாத்। ௮௪।௰௰௭
தந் மமாஜ்ஞாபயாச்யுத। இத்ய் ஏவம் உக்ேதா தேக்ஷண। ௮௪।௰௰௭
ேதவேதேவா ஜநார்தந:। ஆசஷ்ட து:கக்ஷயதம்। ௮௪।௰௰௮
வ்ரதம் விஷ்ணுபதத்ரயம்। ஸர்வாரம்பவிநிஷ்பத்தி । ௮௪।௰௰௮

காரகம் பாபநாஸநம்। ஸம்ஸாேராச்ேசதகம் தீைரர்। ௮௪।௰௰௯
ஆசீர்ணம் ஸ்திரபுத்திபி:। தத் அஹம் தவ ராேஜந்த்ர। ௮௪।௰௰௯
வ்ரதாநாம் உத்தேமாத்தமம்। கதயாமி ஸமாசஷ்ட। ௮௪।௰௧
யதா பூர்வம் மமாஸித:। ஆஷாேட மாஸி பூர்வாஸு। ௮௪।௰௧
ததாஷாடாஸு பார்திவ। ஸமப்யர்ச்ய ஜகந்நாதம்। ௮௪।௰௧௧
அச்யுதம் நியத: ஸுசி:। புஷ்ைபர் ஹ்ருத்ையஸ் ததா தூைபர்।
௮௪।௰௧௧
கந்ைத: ஸாகருசந்தைந:। யதாவிபவதஸ் சாந்ையர்। ௮௪।௰௧௨
அந்ைநர் வாேஸாபிர் ஏவ ச। க்ஷரஸ்ேநஹஸ்திதம் ீ தத்வத்। ௮௪।௰௧௨
ைபஷ்டம் விஷ்ணுபதத்வயம்। ஸமப்யர்ச்ய யதாந்யாயம்। ௮௪।௰௧௩
ேகஸவஸ்யாக்ரேதா ந்யேஸத்। யவாம்ஸ் ச தத்யாத் விப்ராய।
௮௪।௰௧௩
பூகதி: ப்ரீயதாம் இதி। நக்தம் புஞ்ஜதீ ராேஜந்த்ர। ௮௪।௰௧௪
ஹவிஷ்யாந்நம் ஸுஸம்ஸ்க்ருதம்। தேதாத்தராஸ்வ் ஆஷாடாஸு।
௮௪।௰௧௪
ஸ்ராவேண மாஸி மாநவ:। தைதவாப்யர்ச்ய ேகாவிந்தம்। ௮௪।௰௧௫
தத்வத் விஷ்ணுபதத்வயம்। விப்ராய ச யவாந் தத்யாத்। ௮௪।௰௧௫
ப்ரீணயித்வா ச பூகதிம்। நக்தம் பூஞ்ஜதீ ராேஜந்த்ர। ௮௪।௰௧௬
நேரா ேயாஷித் அதாபி வா। ப்ராப்ேத பாத்ரபேத மாஸி। ௮௪।௰௧௬
பூர்வபத்ரபதாஸு ச। தைதவாப்யர்ச்ய ேகாவிந்தம்। ௮௪।௰௧௭
தத்வத் விஷ்ணுபதத்வயம்। விப்ராய ச யவாந் தத்த்வா। ௮௪।௰௧௭
ப்ரீணயித்வா புேவாகதிம்। புஞ்ஜதீ ேகாரஸப்ராயம்। ௮௪।௰௧௮
நேரா ேயாஷித் அதாபி வா। தத்வத் ஆஸ்வயுேஜ தாநம்। ௮௪।௰௧௮

தத்வத் ேகாவிந்தபூஜநம்। பதத்வயஸ்ய பூஜாம் ச। ௮௪।௰௧௯
ப்ரீணநம் ச புேவாகேத:। தைதவ நக்தம் புஞ்ஜதீ । ௮௪।௰௧௯
ேகாரஸம் ெமௗநம் ஆஸ்தித:। ஸ்த்ரீ வா ராேஜந்த்ர பூர்வாஸு।
௮௪।௰௨
ததா பத்ரபதாஸு ைவ। பால்குேந பல்குநீபூர்வா। ௮௪।௰௨
பவதீஹ யதா ந்ருப। த்ரிவிக்ரமம் ததா ேதவம்। ௮௪।௰௨௧
பூர்ேவாக்தவிதிநார்சேயத்। பதத்வயம் ச ேதவஸ்ய। ௮௪।௰௨௧
ஸம்யக் அப்யர்ச்ய பார்திவ। ஹிரண்யம் தக்ஷிணாம் தத்த்வா।
௮௪।௰௨௨
ஸ்வர்கதி: ப்ரீயதாம் இதி। நக்தம் புஞ்ஜதீ ராேஜந்த்ர। ௮௪।௰௨௨
வஹ்நிபாகவிவர்ஜிதம்। ஏஷ ஏேவாத்தராேயாேக। ௮௪।௰௨௩
ைசத்ேர மாேஸ விதி: ஸ்ம்ருத:। ஏதஜ் ஜகாத ேகாவிந்த:। ௮௪।௰௨௩
புரா தக்ஷாய ப்ருச்சேத। ஸர்வபாபஹரம் புண்யம்। ௮௪।௰௨௪
வ்ரதம் விஷ்ணுபதத்ரயம்। யேதாக்தம் ஏதத் ேயா பக்ேதா। ௮௪।௰௨௪
கேராதி ந்ருபஸத்தம। ஸர்வகாமாந் அவாப்ேநாதி। ௮௪।௰௨௫
ேகஸவஸ்ய வேசா யதா। அபுத்ேரா லபேத புத்ரம்। ௮௪।௰௨௫
அபதிர் லபேத பதிம்। ஸமாகமம் ப்ேராஷிைதஸ் ச। ௮௪।௰௨௬
ததா ப்ராப்ேநாதி பாந்தைவ:। த்ரவ்யம் ஐஸ்வர்யம் ஆேராக்யம்।
௮௪।௰௨௬
ெஸௗபாக்யம் சாருரூபதாம்। ப்ராப்நுவந்த்ய் அகிலாந் ஏதாந்। ௮௪।௰௨௭
பூஜயித்வா பதத்ரயம்। யாந் யாந் காமாந் நர: ஸ்த்ரீ வா। ௮௪।௰௨௭
ஹ்ருதேயநாபிவாஞ்சந்தி। தாம்ஸ் தாம்ஸ் சாப்ேநாதி நிஷ்காேமா।

விஷ்ணுேலாகம் ச கச்சதி। பூர்வம் க்ருத்வாபி பாபாநி। ௮௪।௰௨௮
நர: ஸ்த்ரீ வா நராதிப। பதத்ரயவ்ரதம் சீர்த்வா। ௮௪।௰௨௯
முச்யேத ஸர்வகில்பிைஷ:। விஷ்ேணார் ஆராதநார்தாய। ௮௪।௰௨௯
யாநி தாநாநி ஸத்தம। ேதயாநி தாந்ய் அேஸஷாணி। ௮௫।௰௰௧
மமாசŠவ த்விேஜாத்தம। ேயந ைசவ விதாேநந। ௮௫।௰௰௧
தாநம் பும்ஸ: ஸுகாவஹம்। ப்ரீணநாய ச க்ருஷ்ணஸ்ய। ௮௫।௰௰௨
தந் மமாக்யாஹி விஸ்தராத்। க்ருேதாபவாஸ: ஸம்ப்ராஸ்ய।
௮௫।௰௰௨
பஞ்சகவ்யம் நேரஸ்வர। க்ருதக்ஷராபிேஷகம் ீ ச। ௮௫।௰௰௩
க்ருத்வா விஷ்ேணா: ஸமாஹித:। ஸமப்யர்ச்ய ச ேகாவிந்தம்।
௮௫।௰௰௩
புஷ்பாதிபிர் அரிம்தம। உதங்முகீம் அர்சயித்வா। ௮௫।௰௰௪
ததா க்ருஷ்டிம் பயஸ்விநீம்। ஸபுத்ராம் வஸ்த்ரஸம்வதாம் ீ । ௮௫।௰௰௪
ஸிதயஜ்ேஞாபவதிநீ ீம்। ஸ்வர்ணஸ்ருங்கீம் ஸுபாகாராம்। ௮௫।௰௰௫
ஹிரண்ேயாபரிஸம்ஸ்திதாம்। ஹிரண்யம் வாசயித்வாக்ேர। ௮௫।௰௰௫
ப்ராஹ்மணாேயாபபாதேயத்। இமாம் த்வம் ப்ரதிக்ருஹ்ணஷ்வீ ।
௮௫।௰௰௬
ேகாவிந்த: ப்ரீயதாம் இதி। ஸம்யக் உச்சார்ய தம் விப்ரம்। ௮௫।௰௰௬
ேகாவிந்தம் ந்ருப கல்பேயத்। அநுவ்ரேஜச் ச கச்சந்தம்। ௮௫।௰௰௭
பதாந்ய் அஷ்ெடௗ நராதிப। அேநந விதிநா ேதநும்। ௮௫।௰௰௭
ேயா விப்ராய ப்ரயச்சதி। ேகாவிந்தப்ரீணநாத் ராஜந்। ௮௫।௰௰௮
விஷ்ணுேலாகம் ச கச்சதி। ஸப்தாவராம்ஸ் ததா பூர்வாந்। ௮௫।௰௰௮
ஸப்தாத்மாநம் ச மாநவ:। ஸப்தஜந்மக்ருதாத் பாபாந்। ௮௫।௰௰௯

ேமாசயத்ய் அவநீபேத। பேத பேத ச யஜ்ஞஸ்ய। ௮௫।௰௰௯
ேகாஸவஸ்ய ஸ மாநவ:। பலம் ஆப்ேநாதி ராேஜந்த்ர। ௮௫।௰௧
தக்ஷாையவம் ஜெகௗ ஹரி:। ஸர்வகாமஸம்ருத்தஸ்ய। ௮௫।௰௧
ஸர்வகாேலஷு பார்திவ। பவத்ய் அெகௗகாபஹரா। ௮௫।௰௧௧
யாவத் இந்த்ராஸ் சதுர்தஸ। ஸர்ேவஷாம் ஏவ பாபாநாம்। ௮௫।௰௧௧
க்ருதாநாம் அவிஜாநதா। ப்ராயஸ்சித்தம் இதம் ஸஸ்தம்। ௮௫।௰௧௨
அநுதாேபாபவ்ரும்ஹிதம்। இŠவாகுைநஷா ராேஜந்த்ர। ௮௫।௰௧௨
பூர்வம் தத்தா மஹாத்மநா। தத: ஸ ேலாகாந் அமலாந்। ௮௫।௰௧௩
ப்ராப்தவாந் அவநீபதி:। தைதவாந்ையர் மஹீபாைலர்। ௮௫।௰௧௩
த்விஜைவஸ்யாதிபிஸ் ததா। ேலாகா: காமதுகா: ப்ராப்தா। ௮௫।௰௧௪
தத்த்ேவத்ருக்விதிநா ந்ருப। திலேதநும் ப்ரவŠயாமி। ௮௫।௰௧௪
ேகஸவப்ரீணநாய யா। தத்தா பவதி யஸ் சாஸ்யா। ௮௬।௰௰௧
நேரந்த்ர விதிர் உத்தம:। பலம் ஆப்ேநாதி ராேஜந்த்ர। ௮௬।௰௰௧
தத்வத் வா விதிவத் ததா। யாம் தத்த்வா ப்ரஹ்மஹா ேகாக்ந:।
௰௮௬।௧௩௯
பித்ருக்ேநா குருதல்பக:। ஆகாரதாஹீகரத:। ௮௬।௰௰௨
ஸர்வபாபரேதா அபி வா। மஹாபாதகயுக்ேதா ேயா। ௮௬।௰௰௨
யுக்ேதா யஸ் ேசாபபாதைக:। ஸ முச்யேத அகிைல: பாைபர்।
௮௬।௰௰௩
விஷ்ணுேலாகம் ஸ கச்சதி। ஸ்வநுலிப்ேத மஹீப்ருஷ்ேட। ௮௬।௰௰௩
வஸ்த்ராஜிநஸமாவ்ருேத। ேதநும் திலமயம்ீ க்ருத்வா। ௮௬।௰௰௪
ஸர்வரத்ைந: ஸமந்விதாம்। ஸுவர்ணஸ்ருங்கீம் ெரௗப்யகுராம்।
௮௬।௰௰௪

கந்தக்ராணவதீம் ஸுபாம்। ம்ருஷ்டாந்நஜிஹ்வாம் குர்வதீ। ௮௬।௰௰௫
குடாஸ்யாம் ஸூத்ரகம்பலாம்। இக்ஷுபாதாம் தாம்ரப்ருஷ்டாம்।
௮௬।௰௰௫
குர்யாந் முக்தாபேலக்ஷணாம்। ப்ரஸஸ்தபத்ரஸ்ரவணாம்। ௮௬।௰௰௬
பலதந்தவதீம் ஸுபாம்। ஸ்ரக்தாமபுச்சாம் குர்வதீ। ௮௬।௰௰௬
நவநீதஸ்தநாந்விதாம்। பைலர் மேநாஹைரர் பைக்ஷர்। ௮௬।௰௰௭
மணிமுக்தாபலாந்விதாம்। திலத்ேராேணந குர்வதீ। ௮௬।௰௰௭
ஆடேகந து வத்ஸகம்। ஸுபவஸ்த்ரயுகச்சந்நாம்। ௮௬।௰௰௭
சாருச்சத்த்ரஸமந்விதாம்। ஈத்ருக்ஸம்ஸ்தாநஸம்பந்நாம்। ௮௬।௰௰௮
க்ருத்வா ஸ்ராத்தஸமந்வித:। காம்ஸ்ேயாபேதாஹநாம் தத்யாத்।
௮௬।௰௰௮
ேகஸவ: ப்ரீயதாம் இதி। ஸம்யக் உச்சார்ய விதிநா। ௮௬।௰௰௮
தத்த்ைவேதந நராதிப। ஸர்வபாபவிநிர்முக்த:। ௮௬।௰௰௯
பிதரம் ஸபிதாமஹம்। ப்ரபிதாமஹம் ததா பூர்வம்। ௮௬।௰௰௯
புருஷாணாம் சதுஷ்டயம்। ஆத்மாநம் தநயம் ெபௗத்ரம்। ௮௬।௰௧
தததஸ் து சதுஷ்டயம்। தாரயத்ய் அவநீபால। ௮௬।௰௧
திலேதநுப்ரேதா நர:। யஸ் ச க்ருஹ்ணாதி விதிவத்। ௮௬।௰௧
தஸ்யாப்ய் ஏவம்விதாந் குலாந்। சதுர்தஸ ததா ைசவ। ௮௬।௰௧௧
தததஸ் சாநுேமாதகா:। தீயமாநாம் ப்ரபஸ்யந்தி। ௮௬।௰௧௧
திலேதநும் ச ேய நரா:। ேத அப்ய் அேஸஷாகநிர்முக்தா:। ௮௬।௰௧௨
ப்ரயாந்தி பரமாம் கதிம்। ப்ரஸாந்தாய ஸுஸலாய ீ । ௮௬।௰௧௨
ததாமத்ஸரிேண புத:। திலேதநும் நேரா தத்யாத்। ௮௬।௰௧௩
ேவதஸ்நாதாய தர்மிேண। த்ரிராத்ரம் யஸ் திலாஹாரஸ்। ௮௬।௰௧௩

திலேதநும் ப்ரயச்சதி। தத்த்ைவகராத்ரம் ச புநஸ்। ௮௬।௰௧௪
திலாந் அத்தி நேரஸ்வர। தாதுர் விஸுத்தபாபஸ்ய। ௮௬।௰௧௪
தஸ்ய புண்யவேதா ந்ருப। சாந்த்ராயணாத் அப்யதிகம்। ௮௬।௰௧௫
ஸஸ்தம் தத் திலபக்ஷணம்। திலாபாேவ ததா தத்யாத்। ௮௬।௰௧௫
க்ருதேதநும் யதவ்ரத:। கல்பயித்வா யதாந்யாயம்। ௮௭।௰௰௧
திலேதந்வா யதவ்ரத:। ேயந பூப விதாேநந। ௮௭।௰௰௧
தத் இைஹகமநா: ஸ்ருணு। வாஸுேதவம் ஜகந்நாதம்। ௮௭।௰௰௧
புருேஷஸம் அஜம் விதும்। ஸர்வபாபநிஹந்தாரம்। ௮௭।௰௰௨
க்ருதக்ஷராபிேஷசநாத் ீ । ஸம்பூஜ்ய பூர்வவத் புஷ்ப । ௮௭।௰௰௨
கந்ததூபாதிபிர் நர:। அேஹாராத்ேராஷிேதா பூத்வா। ௮௭।௰௰௨
தத்பர: ப்ரயத: ஸுசி:। பரேமஸம் அேதா நாம்நா। ௮௭।௰௰௩
அபிஷ்டூய க்ருதார்சிஷா। கவ்யஸ்ய ஸர்பிஷ: கும்பம்। ௮௭।௰௰௩
புஷ்பமால்யாதிபூஷிதம்। காம்ஸ்ேயாபதாநஸம்யுக்தம்। ௮௭।௰௰௪
ஸிதவஸ்த்ரயுேகந ச। ஹிரண்யகர்பஸஹிதம்। ௮௭।௰௰௪
மணிவித்ருமமுக்திைக:। இக்ஷுயஷ்டிமயாந் பாதாந்। ௮௭।௰௰௪
குராந் ெரௗப்யமயாம்ஸ் ததா। ெஸௗவர்ேண சாக்ஷிணீகுர்யாச்।
௮௭।௰௰௫
ஸ்ருங்ேக சாகருகாஷ்டேஜ। ஸப்ததாந்யமேய பார்ஸ்ேவ। ௮௭।௰௰௫
பத்த்ேரார்ணாநி ச கம்பலம்। குர்யாத் துருஷ்ககர்பூெரௗ। ௮௭।௰௰௬
க்ராணம் பலமயாந் ஸ்தநாந்। மணிரத்நஸுவர்ணாநாம்। ௮௭।௰௰௬
ஸம்யக்கல்பநயா க்ருதாம்। தத்வச் சர்கரயா ஜிஹ்வாம்। ௰௮௭।௧௪௰
குடக்ஷரமயம் ீ முகம்। ெக்ஷௗமஸூத்ேரண லாங்கூலம்। ௮௭।௰௰௭

ேராமாணி ஸிதஸர்ஷைப:। தாம்ரபாத்ரமயம் ப்ருஷ்டம்। ௮௭।௰௰௭
குர்யாச் ச்ரத்தாஸமந்வித:। ஈத்ருக்ஸ்வரூபாம் ஸம்கல்ப்ய। ௮௭।௰௰௭
க்ருதேதநும் நராதிப। தத்வத்கல்பநயா ேதந்வா। ௮௭।௰௰௮
க்ருதவத்ஸம் ப்ரகல்பேயத்। தம் ச விப்ரம் மஹாபாக। ௮௭।௰௰௮
மநைஸவ க்ருதார்சிஷம்। கல்பயித்வா ததஸ் தஸ்ைம। ௮௭।௰௰௯
ப்ரயத: ப்ரதிபாதேயத்। ஏதாம் மேமாபகாராய। ௮௭।௰௰௯
க்ருஹ்ணஷ்வீ த்வம் த்விேஜாத்தம। ப்ரீயதாம் மம ேதேவேஸா।
௮௭।௰௧
க்ருதாக்ருசி: புருேஷாத்தம:। இத்ய் உதாஹ்ருத்ய விப்ராய। ௮௭।௰௧
தத்யாத் ேதநும் நேராத்தம। மணிமுக்தாஸுவர்ணாநாம்। ௮௭।௰௧
ஸம்யக்கல்பநயா க்ருதாம்। தத்த்ைவகராத்ரம் ஸ்தித்வா ச। ௰௮௭।௧௪௧
க்ருதாஹாேரா நராதிப। முச்யேத ஸர்வபாேபப்யஸ்। ௮௭।௰௧௧
ததா தாநபலம் ஸ்ருணு। க்ருதக்ஷரவஹா ீ நத்ேயா। ௮௭।௰௧௧
யத்ர பாயஸகர்தமா:। ேதஷு ேலாேகஷு ேலாேகஸ। ௮௭।௰௧௨
ஸ புண்ேயஷூபஜாயேத। பிதுர் ஊர்த்ேவந ேய ஸப்த। ௮௭।௰௧௨
புருஷா: ஸப்த ேய அப்ய் அத:। தாம்ஸ் ேதஷு ந்ருப ேலாேகஷு।
௮௭।௰௧௩
ஸ நயத்ய் அஸ்தகல்மஷ:। ஸகாமாநாம் இயம் வ்யுஷ்டி:। ௮௭।௰௧௩
கதிதா ந்ருபஸத்தம। விஷ்ணுேலாகம் நரா யாந்தி। ௮௭।௰௧௪
நிஷ்காமா க்ருதேதநுதா:। க்ருதம் அக்நிர் க்ருதம் ேஸாமஸ்। ௮௭।௰௧௪
தந்மயா: ஸர்வேதவதா:। க்ருதம் ப்ரயச்சதா தத்தா। ௮௭।௰௧௫
பவந்த்ய் அகிலேதவதா:। ஜலேதநும் ப்ரவŠயாமி। ௮௭।௰௧௫
ப்ரீயேத தத்தயா யயா। ேதவேதேவா ஹ்ருஷீேகஸ:। ௮௮।௰௰௧

ஸர்ேவஸ: ஸர்வபாவந:। ஜலகும்பம் நரவ்யாக்ர। ௮௮।௰௰௧
ஸுவர்ணரஜதாந்விதம்। ரத்நகர்பம் அேஸைஷஸ் து। ௮௮।௰௰௨
க்ராம்ையர் தாந்ைய: ஸமந்விதம்। ஸிதவஸ்த்ரயுகச்சந்நம்। ௮௮।௰௰௨
தூர்வாபல்லவேஸாபிதம்। குஷ்டம் மாம்ஸம்ீ உஸரம்ீ ச। ௮௮।௰௰௩
வாலகாமலைகர் யுதம்। ப்ரியங்குபாத்ரஸஹிதம்। ௮௮।௰௰௩
ஸிதயஜ்ேஞாபவதிநம் ீ । ஸச்சத்த்ரம் ெஸௗபாநத்கம்। ௮௮।௰௰௪
தர்பவிஸ்தரஸம்ஸ்திதம்। சதுர்பி: ஸம்வ்ருதம் பூப। ௮௮।௰௰௪
திலபாத்ைரஸ் சதுர்திஸம்। ஸ்தகிதம் ததிபாத்ேரண। ௮௮।௰௰௫
க்ருதெக்ஷௗத்ரவதா முேக। உேபாஷித: ஸமப்யர்ச்ய। ௮௮।௰௰௫
வாஸுேதவம் ஜேநஸ்வரம்। புஷ்பதூேபாபஹாைரஸ் து। ௮௮।௰௰௬
யதாவிபவம் ஆத்ருத:। ஸம்கல்ப்ய ஜலேதநும் ச। ௮௮।௰௰௬
கும்பம் ஸமபிபூஜ்ய ச। பூஜேயத் வத்ஸகம் தத்வத்। ௮௮।௰௰௭
க்ருதம் ஜலமயம் புத:। ஏவம் ஸம்பூஜ்ய ேகாவிந்தம்। ௮௮।௰௰௭
ஜலேதநும் ஸவத்ஸகாம்। ஸிதவஸ்த்ரதர: ஸாந்ேதா। ௮௮।௰௰௮
வதராேகா ீ விமத்ஸர:। தத்யாத் விப்ராய ராேஜந்த்ர। ௮௮।௰௰௮
ப்ரீத்யர்தம் ஜலஸாயிந:। ஜலஸாயீ ஜகத்ேயாநி:। ௮௮।௰௰௯
ப்ரீயதாம் மம ேகஸவ:। இதி ேசாச்சார்ய பூநாத। ௮௮।௰௰௯
விப்ராய ப்ரதிபாத்யதாம்। அபக்வாந்நாஸிநா ஸ்ேதயம்। ௮௮।௰௧
அேஹாராத்ரம் அத:பரம்। அேநந விதிநா தத்த்வா। ௮௮।௰௧
ஜலேதநும் ஜநாதிப। ஸர்வாஹ்லாதாந் அவாப்ேநாதி। ௮௮।௰௧௧
ேய திவ்யா ேய ச மாநுஷா:। ஸரீராேராக்யம் ஆபாதா । ௮௮।௰௧௧
ப்ரஸம: ஸார்வகாமிக:। ந்ருணாம் பவதி தத்தாயாம்। ௮௮।௰௧௨

ஜலேதந்வாம் ந ஸம்ஸய:। அத்ராபி ஸ்ரூயேத பூப। ௮௮।௰௧௨
புத்கேலந மஹாத்மநா। ஜாதிஸ்மேரண யத் கீதம்। ௮௮।௰௧௩
இஹாப்ேயத்ய புரா கில। ஸ புத்கல: புரா விப்ேரா। ௮௮।௰௧௩
யமேலாககேதா முநி:। ததர்ஸ யாதநா ேகாரா:। ௮௮।௰௧௪
பாபகர்மக்ருதாம் கில। தீப்தாக்நிதீŠணஸஸ்த்ேராத்தா:। ௮௮।௰௧௪
க்வாதைதலகதாஸ் ததா। உஷ்ணக்ஷாரநதீபாதா। ௮௮।௰௧௫
ைபரவா: புருஷர்ஷப। வ்ரணா: க்ஷாரநிபாேதாக்ரா:। ௮௮।௰௧௫
கும்பபாகமஹாபயா ீ :। தா த்ருஷ்ட்வா யாதநா விப்ரஸ்। ௮௮।௰௧௬
சகார பரமாம் க்ருபாம்। ஆஹ்லாதம் ேத ததா ஜக்மு:। ௮௮।௰௧௬
பாபாஸ் ததநுகம்பிதா:। தம் த்ருஷ்ட்வா நாரகா: ேகசித்। ௮௮।௰௧௭
ேகசித் ததவேலாகிந:। ததா ஸ்வஸ்தம் விேலாக்ையவ। ௮௮।௰௧௭
முநிர் நாரகமண்டலம்। தர்மராஜம் ஸ பப்ரச்ச। ௮௮।௰௧௮
ேதஷாம் ப்ரஸமகாரணம்। தஸ்ைம சாசஷ்ட ராேஜந்த்ர। ௮௮।௰௧௮
ததா ைவவஸ்வேதா யம:। ஆஹ்லாதேஹதும் விப்ராய। ௮௮।௰௧௯
ப்ருச்சேத ப்ருதிவபேத ீ । தவாநுபாவாத் ஏேதஷாம்। ௮௮।௰௧௯
நாரகாணாம் த்விேஜாத்தம்। ஸம்ப்ரவ்ருத்ேதா அயம் ஆஹ்லாத:।
௮௮।௰௨
காரணம் யச் ச்ருணுஷ்வ தத்। த்வயாப்யர்ச்ய ஜகந்நாதம்। ௮௮।௰௨
ஸர்ேவஸம் ஜலஸாயிநம்। ஜலேதநு: புரா தத்தா। ௮௮।௰௨௧
விதிவந் முநிபுங்கவ। அஸ்மாத் து ஜந்மேநா அதீேத। ௮௮।௰௨௧
த்ருதீேய த்விஜ ஜந்மநி। தஸ்ய தாநஸ்ய ேத வ்யுஷ்டிர்। ௮௮।௰௨௨
இயம் ஆஹ்லாததாயிநீ। ேயந த்வம் தபஸா யுக்ேதா। ௮௮।௰௨௨

மாநவாநாம் அேகாசரம்। ஸம்ப்ராப்ேதா அஸி மஹாப்ரஜ்ஞ। ௮௮।௰௨௩
ஸர்வஸாஸ்த்ரவிஸாரத। ேய த்வாம் பஸ்யந்தி ஸ்ருண்வந்தி।
௮௮।௰௨௩
ேய ச த்யாயந்தி பாபிந:। ஸ்ருேணாஷி யாம்ஸ் த்வம் விப்ேரந்த்ர।
௮௮।௰௨௪
யாம்ஸ் ச த்யாயஸி பஸ்யஸி। நிர்வ்ருதி: பரமா ேதஷாம்। ௮௮।௰௨௪
ஸர்வாஹ்லாதப்ரதாயிநீ। ஸத்ேயா பவதி மாத்ர த்வம்। ௮௮।௰௨௫
த்விேஜந்த்ர குரு விஸ்மயம்। ஆஹ்லாதேஹதுஜநநம்। ௮௮।௰௨௫
நாஸ்தி விப்ேரந்த்ர தாத்ருஸம்। ஜலேதநுர் யதா ந்ருணாம்। ௮௮।௰௨௬
ஜந்மாந்ய் ஏேகாநஸப்ததி:। ந தாேகா ந க்லேமா நார்திர்। ௮௮।௰௨௬
ந ேமாேஹா விப்ர ஜாயேத। அபி ஜந்மஸஹஸ்ேரஷு। ௮௮।௰௨௭
ஜலேதநுப்ரதாயிநாம்। ஏகஜந்மக்ருதம் வாஞ்சா। ௮௮।௰௨௭
த்ரிஜந்ேமாத்தம் ஸமாஹ்ருதா। ஸப்தஜந்மக்ருதம் பாபம்। ௮௮।௰௨௮
ஹந்தி தத்தாம்புெகௗர் ந்ருணாம்। ஸ த்வம் கச்ச க்ருஹீத்வார்கம்।
௮௮।௰௨௮
அஸ்மத்ேதா த்விஜஸத்தம। ேயஷாம் ஸமாஸ்ரய: க்ருஷ்ேணா।
௮௮।௰௨௯
ந நியம்யா ஹி ேத மயா। க்ருஷ்ண: ஸம்பூஜிேதா ையஸ் து।
௮௮।௰௨௯
ேய க்ருஷ்ணார்தம் உேபாஷிதா:। ையஸ் ச நித்யம் ஸ்ம்ருத: க்ருஷ்ேணா।
௮௮।௰௩
ந ேத மத்விஷேயாபகா:। நம: க்ருஷ்ணாச்யுதாநந்த। ௮௮।௰௩
வாஸுேதேவத்ய் உதீரிதம்। ையர் பாவபாவிைதர் விப்ர। ௮௮।௰௩௧

ேத மத்விஷேயாபகா:। தாநம் ததத்பிர் ையர் உக்தம்। ௮௮।௰௩௧
அச்யுத: ப்ரீயதாம் இதி। ஸ்ரத்தாபுர:ஸைரர் விப்ர। ௮௮।௰௩௨
ந ேத மத்விஷேயாபகா:। உத்திஷ்டத்பி: ஸ்வபத்பிஸ் ச। ௮௮।௰௩௨
வ்ரஜத்பிஸ் ச ஜநார்தந:। ைய: ஸம்ஸ்ம்ருேதா த்விஜஸ்ேரஷ்ட।
௮௮।௰௩௩
ந ேத மத்விஷேயாபகா:। க்ஷுதஸ்கலிதபத்யாதாவ் ீ । ௮௮।௰௩௩
அஸஹத்பிஸ் ச ேவதநாம்। க்ருஷ்ேணத்ய் உதீரிதம் ையஸ் ச।
௮௮।௰௩௪
ந ேத மத்விஷேயாபகா:। ஸர்வாபாதாஸு ேய க்ருஷ்ணம்। ௮௮।௰௩௪
ஸ்மரந்த்ய் உச்சாரயந்தி ச। தத்பாவபாவிதா விப்ர। ௮௮।௰௩௫
ந ேத மத்விஷேயாபகா:। ஸ ஏவ தாதா ஸர்வஸ்ய। ௮௮।௰௩௫
தந்நிேயாககரா வயம்। ஜநஸம்யமேநாத்யுக்தா:। ௮௮।௰௩௬
ேஸா அஸ்மத்ஸம்யமேநா ஹரி:। இத்தம் நிஸாம்ய வசநம்।
௮௮।௰௩௬
யமஸ்ய வதேதா முநிம்। ஊசுஸ் ேத நாரகா: ஸர்ேவ। ௮௮।௰௩௭
வஹ்நிஸஸ்த்ராஸ்த்ரபரவீ :। நம: க்ருஷ்ணாய ஹரேய। ௮௮।௰௩௭
விஷ்ணேவ ஜிஷ்ணேவ நம:। ஹ்ருஷீேகஸாய ேதவாய। ௮௮।௰௩௮
ஜகத்தாத்ேர அச்யுதாய ச। நம: பங்கஜேநத்ராய। ௮௮।௰௩௮
நம: பங்கஜநாபேய। ஜநார்தநாய ஸ்ரீஸாய। ௮௮।௰௩௯
ஸ்ரீபேத பதவாஸேஸ ீ । ேகாவிந்தாய நேமா நித்யம்। ௮௮।௰௩௯
நமஸ் ேசாததிஸாயிேந। நம: கராலவக்த்ராய। ௮௮।௰௪
ந்ருஸிம்ஹாயாதிநாதிேந। ஸார்ங்கிேண ஸிதகட்காய। ௮௮।௰௪
ஸங்கசக்ரகதாத்ருேத। நேமா வாமநரூபாய। ௮௮।௰௪௧

க்ராந்தேலாகத்ரயாய ச। வராஹரூபாய ததா। ௮௮।௰௪௧
நேமா யஜ்ஞாங்கதாரிேண। வ்யாப்தாேஸஷதிகந்தாய। ௮௮।௰௪௨
ஸாந்தாய பரமாத்மேந। வாஸுேதவ நமஸ் துப்யம்। ௮௮।௰௪௨
நம: ைகடபஸூதந। ேகஸவாய நேமா வ்யாபிந்। ௮௮।௰௪௩
நமஸ் ேத அஸ்து மஹீதர। நேமா அஸ்து வாஸுேதவாேயத்ய்।
௮௮।௰௪௩
ஏவம் உச்சாரிேத தத:। ஸஸ்த்ராணி குண்டதாம் ஜக்முர்। ௮௮।௰௪௪
அநலஸ் சாப்ய் அஸஸமத் ீ । அபஜ்யந்த ச யந்த்ராணி। ௮௮।௰௪௪
ஸமுத்ேபதுர் அேயாமுகா:। ஸம்ஸுஷ்கா: க்ஷாரஸரித:। ௮௮।௰௪௫
பதித: கூடஸால்மலி:। ப்ரகாஸதாமஸதத்த்வம் ீ । ௮௮।௰௪௫
நரகஸ் சாகதஸ் து ஸ:। விவாந் பபஞ்ஜ பவேநா அப்ய்। ௮௮।௰௪௬
அஸிபத்ரவநம் தத:। நிருத்ஸாஹா ஜடதிேயா। ௮௮।௰௪௬
பபூவுர் யமகிம்கரா:। ஆஸந் கந்தாம்புவாஹிந்ய:। ௮௮।௰௪௭
பூயேஸாணிதநிம்நகா:। வெவௗ ஸுகந்தீபவேநா। ௮௮।௰௪௭
மந:ப்ரீதிகரஸ் தத:। ேவணுவணாஸ்வநயுதாந் ீ । ௮௮।௰௪௮
கீதஸப்தாம்ஸ் ச ஸுஸ்ருவு:। தம் தாத்ருஸம் அதாலŠய।
௮௮।௰௪௮
ந்ருப ைவவஸ்வேதா யம:। நரகஸ்ய விபர்யாஸம்। ௮௮।௰௪௯
ஸம்க்ஷுத்தஹ்ருதயஸ் தத:। ததர்ஸ நாரகாந் ஸத்ேயா। ௮௮।௰௪௯
திவ்யஸ்ரகநுேலபநாந்। ஜாஜ்வல்யமாநாம்ஸ் ேதேஜாபிர்। ௮௮।௰௫
அமலாம்பரவாஸஸ:। நேமா நேமா அஸ்து க்ருஷ்ணாய। ௮௮।௰௫
ேகாவிந்தாயாவ்யயாத்மேந। வாஸுேதவாய ேதவாய। ௮௮।௰௫௧
விஷ்ணேவ ப்ரபவிஷ்ணேவ। இத்ய் ஏவம் வாதிநஸ் தத்ர। ௮௮।௰௫௧

ப்ரஜாஸம்யமேநா யம:। க்ஷணபாபசயாம்ஸ் ீ தாம்ஸ் து। ௮௮।௰௫௨
பாத்யார்க்யாதிபிர் அர்சயந்। பூஜயித்வா ச தாந் ஆஹ। ௮௮।௰௫௨
ஸ க்ருஷ்ணாய க்ருதாஞ்ஜலி:। ஸமாஹிதமநா பூத்வா। ௮௮।௰௫௩
தர்மராேஜா நேரஸ்வர। விஷ்ேணார் ேதவாதிேதவஸ்ய। ௮௮।௰௫௩
ஜகத்தாது: ப்ரஜாபேத:। ப்ரணாமம் ேய அபி குர்வந்தி। ௮௮।௰௫௪
ேதஷாம் அபி நேமா நம:। ஸர்வஸ்ய ஸர்வஸம்ஸ்தஸ்ய। ௮௮।௰௫௪
ஸர்வாதாரஸ்ய ேயாகிந:। ேய விஷ்ேணா: ப்ரணதாஸ் ேதப்ேயா।
௮௮।௰௫௫
நம: ஸத்ய: புந: புந:। தஸ்ய யஜ்ஞவராஹஸ்ய। ௮௮।௰௫௫
விஷ்ேணார் அமிதேதஜஸ:। ப்ரணாமம் ேய அபி குர்வந்தி। ௮௮।௰௫௬
ேதஷாம் அபி நேமா நம:। ஏவம் ேத ஸம்ஸ்துதாஸ் ேதந। ௮௮।௰௫௬
தர்மராேஜந நாரகா:। விமாநாநி ஸமாரூடா। ௮௮।௰௫௭
ந்ருத்தகாந்தர்வவந்தி ைவ। புத்கேலா அபி மஹாபுத்திர்। ௮௮।௰௫௭
த்ருஷ்ட்ைவதத் அகிலம் ந்ருப। ஜாதிஸ்மேரா அபவத் பூப। ௮௮।௰௫௮
கண்வேகாத்ேர மஹாமுநி:। ஸம்ஸ்ம்ருத்ய யமவாக்யாநி। ௮௮।௰௫௮
விஷ்ேணார் மாஹாத்ம்யம் ஏவ ச। ஜலேதந்வாஸ் ச மாஹாத்ம்யம்।
௮௮।௰௫௯
ஸம்ஸ்ம்ருத்ையதத் அகாயத। அேஹா துருத்தரா விஷ்ேணார்।
௮௮।௰௫௯
மாேயயம் அதிகஹ்வரீ। யயா ேமாஹிதசித்தஸ் தம்। ௮௮।௰௬
ந ேவத்தி பரேமஸ்வரம்। ஜேவா ீ வாஞ்சதி கீடத்வம்। ௮௮।௰௬
யூகாமத்குணேயாநித:। தஸ்மாச் ச ஸலபாதீநாம்। ௮௮।௰௬௧

ேயாநிம் தஸ்மாச் ச பக்ஷிணாம்। ததஸ் ச பஸுதாம் ப்ராப்ய।
௮௮।௰௬௧
நரத்வம் அபிவாஞ்சதி। விமுக்திேஹதுகீ தந்யா। ௮௮।௰௬௨
நரேயாநி: க்ருதாத்மநாம்। ந ப்ராப்நுவந்தி ஸம்ஸாேர। ௮௮।௰௬௨
விப்ராந்தமநேஸா கதிம்। ஜவா ீ மாநுஷ்யதாம் அந்ேய। ௮௮।௰௬௩
ஜந்மநாம் அயுைதர் அபி। விஷ்ணுமாயாபரீதாஸ் ேத। ௮௮।௰௬௩
ப்ராப்யாபி ந தரந்தி ேய। தத் ஈத்ருக்துர்லபம் ப்ராப்ய। ௰௮௮।௧௪௨
முக்தித்வாரம் அேசதஸ:। பதந்தி பூய: ஸம்ஸாேர। ௮௮।௰௬௪
விஷ்ணுமாயாவிேமாஹிதா:। துஸ்தராபி து ஸாத்யாெஸௗ।
௮௮।௰௬௪
மாயா க்ருஷ்ணஸ்ய ேமாஹநீ। சித்யேத யாமேநாந்யஸ்ேத।
௮௮।௰௬௫
முைதவ ஹி ஜநார்தேந। அஸம்த்யஜ்ய ச கார்ஹஸ்த்யம்। ௮௮।௰௬௫
அதப்த்ைவவ ததா தப:। சிந்தந்தி ைவஷ்ணவம்ீ மாயாம்। ௮௮।௰௬௬
ேகஸவார்பிதமாநஸா:। அவிேராேதந விஷயாம்। ௮௮।௰௬௬
புஞ்ஜந் விஷ்ணுவ்யபாஸ்ரய:। க்ருத்வா மநஸ் தரத்ய் ஏதாம்।
௮௮।௰௬௭
விஷ்ேணார் மாயாம் ஸுதுஸ்தராம்। ஈத்ருக்பஹுபலாம் பக்திம்।
௮௮।௰௬௭
ஸர்வதாதரி ேகஸேவ। மாயயா தஸ்ய ேதவஸ்ய। ௮௮।௰௬௮
ந குர்வந்தி விேமாஹிதா:। முைதேவாக்தம் முதாயாதம்। ௮௮।௰௬௮
முதா தத் விதிேசஷ்டிதம்। முைதவ ஜந்ம தந் நஷ்டம்। ௮௮।௰௬௯
யத்ர நாராதிேதா ஹரி:। ஆராதிேதா ஹி ய: பும்ஸாம்। ௮௮।௰௬௯

ஐஹிகாமுஷ்மிகம் பலம்। ததாதி பகவாந் ேதவ:। ௮௮।௰௭
கஸ் தம் ந ப்ரதிபூஜேயத்। ஸம்வத்ஸராஸ் ததா மாஸா। ௮௮।௰௭
விபலா திவஸாஸ் ச ேத। நராணாம் விஷயாந்தாநாம்। ௮௮।௰௭௧
ேயஷு நாராதிேதா ஹரி:। ேயா ந வித்தர்த்திவிபைவர்। ௮௮।௰௭௧
ந வேஸாபிர் ந பூஷைண:। துஷ்யேத ஹ்ருதேயைநவ। ௮௮।௰௭௨
கஸ் தம் ஈஸம் ந பூஜேயத்। ஜலேதந்வாஸ் ச மாஹாத்ம்யம்।
௮௮।௰௭௨
நிஸாம்யாபத்ருஸம் ீ நரா:। தாம் ந யச்சந்தி ேய ேதஷாம்। ௮௮।௰௭௩
விேவக: குத்ர திஷ்டதி। கர்மபூெமௗ ஹி மாநுஷ்யம்। ௮௮।௰௭௩
ஜந்மநாம் அயுைதர் அபி। ஸ்வர்காபவர்கபலதம்। ௮௮।௰௭௪
கதாசித் ப்ராப்யேத நைர:। ஸம்ப்ராப்ய தந் ந ையர் விஷ்ணுஸ்।
௮௮।௰௭௪
ேதாஷிேதா நாம்புேதநுகா। தத்தா ச ஸம்யக் ேத முஷ்டா। ௮௮।௰௭௫
ஜந்மநி ஸுபஹூநி ேபா:। ஊர்த்வபாஹுர் விெரௗம்ய் ஏஷ। ௮௮।௰௭௫
த்ருஷ்டேலாகத்வேயா அஸ்மி ேபா:। ஆராதயத ேகாவிந்தம்।
௮௮।௰௭௬
ஜலேதநும் ப்ரயச்சத। து:ஸேஹா நாரேகா வஹ்நிர்। ௮௮।௰௭௬
அவிஷஹ்யாஸ் ச யாதநா:। ஜ்ஞாநம் மைமதத் ஆலம்ப்ய। ௮௮।௰௭௭
க்ருஷ்ேண பவத ஸுஸ்திரா:। அேதஸிேக ேதஸிேகா அஹம்।
௮௮।௰௭௭
அத்ர மார்ேக மேயாதிதம்। விம்ருஷ்ய ஸத்யம் இத்ய் ஏதந்। ௮௮।௰௭௮
மந: க்ருஷ்ேண நிேவஸ்யதாம்। ப்ராத: க்ருஷ்ேணதி ேதேவதி।
௮௮।௰௭௮

ேகாவிந்ேததி ச ஜல்பதாம்। மத்யாஹ்ேந சாபராஹ்ேந ச। ௮௮।௰௭௯
ேயா அவஸாத: ஸ உச்யதாம்। அேநகவிஷயாலம்பி। ௮௮।௰௭௯
யச் சித்தம் தஜ் ஜநார்தேந। குருத்வம் ஆலம்பநவத்। ௮௮।௰௮
ஸம்ஸ்ம்ருத: புண்யேதா ஹி ஸ:। முைதவ ஜிஹ்வா க்ருஷ்ேணதி।
௮௮।௰௮
ேகஸேவதி ச வŠயதி। முதா ச சித்தம் தத்காமி। ௮௮।௰௮௧
யதி ஸ்யாத் கிம் அேதா அதிகம்। மேயாக்தம் ஏதத் பஹுேஸா।
௮௮।௰௮௧
விநஷ்ேட து ஸரீரேக। மநுஷ்யத்வம் விநா விஷ்ணுர்। ௮௮।௰௮௨
துர்லேபா ேவா பவிஷ்யதி। ஏதா: புத்கலகாதாஸ் ேத। ௮௮।௰௮௨
யமவாக்யம் தேவாதிதம்। ஜலேதந்வாஸ் ச மாஹாத்ம்யம்। ௮௮।௰௮௩
விஷ்ணுஸம்பூஜநஸ்ய ச। வ்ரதாநி ேஸாபவாஸாநி। ௮௮।௰௮௩
ஸர்வகாமப்ரதாநி ேத। வ்ரதம் அந்யந் மஹாபாக। ௮௮।௰௮௪
ஸர்வகாமப்ரதம் ஸ்ருணு। பவிஷ்யம் சாபரம் பூப। ௮௮।௰௮௪
மைமதச் ச்ேராதும் அர்ஹஸி। யத் ப்ரŠயதி மஹீபால:। ௮௯।௰௰௧
பரிக்ஷித் ஸ்வபுேராஹிதம்। பரீக்ஷித: புேராதாஸ் து। ௮௯।௰௰௧
த்விேஜா ெகௗரமுேகா ந்ருப। பவிஷ்யதி ஸமீகஸ்ய। ௮௯।௰௰௨
ஸிஷ்ய: பரமஸம்மத:। ஸ ச ராஜா ஜகத்தாதுர்। ௮௯।௰௰௨
ேதவேதவஸ்ய ஸார்ங்கிந:। ஸைதவாராதேந யத்நம்। ௮௯।௰௰௩
பக்தியுக்த: கரிஷ்யதி। புேராதஸம் ெகௗரமுகம்। ௮௯।௰௰௩
ப்ரணிபத்ய ஸ பார்திவ:। ப்ரŠயத்ய் ஆராதநார்தாய। ௮௯।௰௰௪
ேதவேதவஸ்ய சக்ரிண:। பகவந் பவபேதா ீ அஹம்। ௮௯।௰௰௪
அபவாய தேதா பவாந்। ஆராதயிதும் இச்சாமி। ௮௯।௰௰௫

ஸர்ேவச்சாபூரகம் ஹரிம்। ஸம்குருஷ்வ மஹாபாக। ௮௯।௰௰௫
ப்ரஸாதம் மம ஸுவ்ரத। க்ருஷ்ணாராதநகாமஸ்ய। ௮௯।௰௰௬
மநேஸா ேதஸிேகா பவ। ஆராதேநந ேயேநேஸா। ௮௯।௰௰௬
ஜகதாம் ஈஸ்வேரஸ்வர:। விஷ்ணுர் ஆராத்யேத பும்பி:। ௮௯।௰௰௭
ஸம்ஸாராப்திபரிக்ஷைத:। தந் மேமாபதிஸ ப்ரஹ்மந்। ௮௯।௰௰௭
ப்ரஸாதப்ரவணம் மந:। க்ருத்வா ஸைதவார்திமதாம்। ௮௯।௰௰௮
ஸரண்யம் ஸரணம் குரு:। ஏவம் ஸ ேதந பூபால। ௮௯।௰௰௮
பூபாேலந ர்ஷிபுங்கவ:। ேகஸவாராதநார்தாய। ௮௯।௰௰௯
ஸம்யக் ப்ருஷ்ட: ப்ரவŠயதி। நமஸ்க்ருத்ய ஜகத்தாத்ேர। ௮௯।௰௰௯
ேதவேதவாய ஸார்ங்கிேந। பரேமஸஸுேரஸாய। ௮௯।௰௧
ஹ்ருஷீேகஸாய ேவதேஸ। வரார்திநாம் அேமாகாய। ௮௯।௰௧
பரஸ்ைம ஹரிேமதேஸ। ஸர்வகல்யாணபூதாய। ௮௯।௰௧௧
ஸங்கசக்ரகதாத்ருேத। வராஸிசர்மாவிதேத। ௮௯।௰௧௧
க்ரூரஸாந்தாத்மமூர்தேய। யத்யத்பூேதாபகாராய। ௮௯।௰௧௨
தத்தத்ரூபவிகாரிேண। பரமாண்வந்தபர்யந்த । ௮௯।௰௧௨
ஸஹஸ்ராம்ஸாணுமூர்தேய। ஜடராந்தாயுதாஸாந்த । ௮௯।௰௧௩
ஸ்திதப்ரஹ்மாண்டதாரிேண। ஸ்ேவதாதிதீர்கஹ்ரஸ்வாதி । ௮௯।௰௧௩
கடிநாதிவிகல்பநா। ேயாகிசிந்த்ேய ஜகத்தாம்நி। ௮௯।௰௧௪
யத்ர நாஸ்த்ய் அகிலாத்மநி। தம் அஜம் ஸாஸ்வதம் நித்யம்।
௮௯।௰௧௪
பரிணாமவிவர்ஜிதம்। ேயாகிபிஸ் சிந்த்யேத மூர்திர்। ௮௯।௰௧௫
யத்ர தத்ராகிலாத்மநி। தத்ர தத்ராத்மேநா நித்யம்। ௮௯।௰௧௫

பரிணாமவிவர்ஜிதம்। ப்ரணம்ய ஜகதாம் ஈஸம்। ௮௯।௰௧௬
அநந்தம் பரத: பரம்। பரம் பராணாம் ஸ்ரஷ்டாரம்। ௮௯।௰௧௬
புராணம் புருஷம் ப்ரபும்। வரம் வேரண்யம் வரதம்। ௮௯।௰௧௭
ஸ்தூலஸூŠமஸ்வரூபிணம்। அேஸஷஜகதாம் மூலம்। ௮௯।௰௧௭
அநாதிநிதநஸ்திதிம்। பராபரஸ்வரூபஸ்தம்। ௮௯।௰௧௮
அவிகாரஸ்வரூபிணம்। யஸ்ேயாபசாரத: ஸ்வர்கம்। ௮௯।௰௧௮
ஸ்வரூபம் வ்யதிரிச்யேத। ஜ்ஞாநஜ்ேஞயஸ்ய முநிபிர்। ௮௯।௰௧௯
ஜ்ஞாநவித்பிர் மஹாத்மபி:। தஸ்ைம பார்திவமுக்யாய। ௮௯।௰௧௯
ரகுவர்யமஹாத்மேந। ஸ்ரூயதாம் ஸ முநிஸ்ேரஷ்ேடா। ௮௯।௰௨
யத் வŠயதி பரீக்ஷிேத। ேதவகீநாம ராேஜந்த்ர। ௮௯।௰௨
ேதவகஸ்யாபவத் ஸுதா। அநபத்யா தபஸ் ேதேப। ௮௯।௰௨௧
புத்ரார்தம் கில பாமிநீ। பார்யா ஸா வஸுேதவஸ்ய। ௮௯।௰௨௧
ஸத்யதர்மபராயணா। ந சாதுஷ்யத ேகாவிந்தஸ்। ௮௯।௰௨௨
ததஸ் தாம் ஆஹ பார்கவ:। கிமர்தம் தப்யேத பத்ேர। ௮௯।௰௨௨
தப: பரமதுஸ்சரம்। ேகா அர்தஸ் தவாபிலஷிேதா। ௮௯।௰௨௩
கந்தும் குத்ர தேவப்ஸிதம்। அபுத்ராஹம் த்விஜஸ்ேரஷ்ட। ௮௯।௰௨௩
பத்யுர் ேம நாஸ்தி ஸம்ததி:। ஸாஹம் ஆராத்ய ேகாவிந்தம்।
௮௯।௰௨௪
புத்ரம் இச்சாமி ேஸாபநம்। தபஸ் தாவத் கரிஷ்யாமி। ௮௯।௰௨௪
பரேமண ஸமாதிநா। யாவத் ஆராதிேதா விஷ்ணுர்। ௮௯।௰௨௫
தாஸ்யத்ய் அபிமதம் மம। ேகாவிந்தாராதேந யத்ேநா। ௮௯।௰௨௫
யதி ேத குலநந்திநி। தத் இதம் வ்ரதம் ஆஸ்தாய। ௮௯।௰௨௬
ேதாஷயாஸு ஜநார்தநம்। ப்ரதேம கார்த்திகஸ்யாஹ்நி। ௮௯।௰௨௬

ஸம்ப்ராப்ேத ேதவகாத்மேஜ। பஞ்சகவ்யஜலஸ்நாத:। ௮௯।௰௨௭
பஞ்சகவ்யக்ருதாஸந:। பாணபுஷ்ைப: ஸமப்யர்ச்ய। ௮௯।௰௨௭
வாஸுேதவம் அஜம் விபும்। தத்த்வா ச சந்தநம் தூபம்। ௮௯।௰௨௮
பரமாந்நம் நிேவதேயத்। க்ருேதந வாசேயத் விப்ரம்। ௮௯।௰௨௮
க்ருஹ்ணயாச் ீ ச தேதா வ்ரதம்। அத்யப்ரப்ருத்ய் அஹம் மாஸம்।
௮௯।௰௨௮
விரத: ப்ராணிநாம் வதாத்। அஸத்யவசநாத் ஸ்ைதந்யாந்। ௮௯।௰௨௯
மதுமாம்ஸாதிபக்ஷணாத்। ஸ்வபந் விபுத்யந் கச்சம்ஸ் ச। ௮௯।௰௨௯
ஸ்மரிஷ்யாம்ய் அஹம் அச்யுதம்। பராபவாதைபஸூந்யம்। ௮௯।௰௩
பரபடாகரம் ீ ததா। ஸச்சாஸ்த்ரேதவதாயஜ்வி । ௮௯।௰௩
நிந்தாம் அந்யஸ்ய வா புவி। ந வŠயாமி ஜகத்ய் அஸ்மிந்।
௮௯।௰௩௧
பஸ்யந் ஸர்வகத ஹரிம்। இத்ய் அந்யச் சாபி ஸக்ேநாதி। ௮௯।௰௩௧
யந் நிர்ேவாடும் யஸஸ்விநி। குர்வதீ நியமம் தஸ்ய। ௮௯।௰௩௨
த்யாேகா தர்மாய யஸ்ய ச। க்ருத்ைவவம் புரேதா விஷ்ேணார்।
௮௯।௰௩௨
நிவ்ருத்திம் பாபத: ஸுேப। ைநேவத்யம் ஸ்வயம் அஸ்நீயாந்।
௮௯।௰௩௩
ெமௗநீநித்யம் உதங்முக:। மார்கஸர்ேஷீ ததா மாஸி। ௮௯।௰௩௩
ஜாதிபுஷ்ைபர் ஜநார்தநம்। ஸமப்யர்ச்ய ஸுேப தூபம்। ௮௯।௰௩௪
சந்தநம் ஸம்நிேவத்ய ச। பரமாந்நம் ச ேதவாய। ௮௯।௰௩௪
விப்ராய ச புநர் க்ருதம்। தத்த்வா தைதவ க்ருஹ்ணயாந் ீ । ௮௯।௰௩௫
நியமம் சாஸ்ய ேராசேத। தைதவ நக்தம் புஞ்ஜதீ । ௮௯।௰௩௫

ைநேவத்யம் குலநந்திநி। ஸர்ேவஷ்வ் ஏவ து மாேஸஷு। ௮௯।௰௩௬
பஞ்சகவ்யாதிகம் ஸமம்। புஷ்பதூேபாபஹாேரஷு। ௮௯।௰௩௬
விேஸேஷா தக்ஷிணாஸு ச। ஸ்நாநப்ராஸநேயா: ஸாம்யம்।
௮௯।௰௩௭
ததா ைவ நக்தேபாஜேந। அர்சேயத் ப்ரதிமாஸம் ச। ௮௯।௰௩௭
ைய: புஷ்ைபஸ் தாநி ேம ஸ்ருணு। ேய ச தூபா: ப்ரதாதவ்யா।
௮௯।௰௩௮
ைநேவத்யாந்நம் ச யத் யதா। பாணஸ்ய ஜாதிகுஸுைமஸ்। ௮௯।௰௩௮
தைதவ ச குருண்டைக:। குந்தாதிமுக்தைக ரக்த । ௮௯।௰௩௯
கரவைரஸ்ீ ச ேதவகி। ஸ்ேவைதஸ் தேதா மாலிகயா। ௮௯।௰௩௯
ததா மல்லிகயா தத:। ததிபிண்ட்யாத ேகதக்யா। ௮௯।௰௪
பத்மரக்ேதாத்பேலந ச। க்ரேமணாப்யர்சிேதா விஷ்ணுர்। ௮௯।௰௪
ததாதி மநேஸப்ஸிதம்। கார்த்திேக மார்கஸீர்ேஷ ச। ௮௯।௰௪
தூப: ெபௗேஷ ச சந்தநம்। மாகபால்குநைசத்ேரஷு। ௮௯।௰௪௧
தத்யாத் விஷ்ேணாஸ் ததாகரும்। ைவஸாகாதிஷு மாேஸஷு।
௮௯।௰௪௧
த்ரிஷு ேதவகி பக்தித:। கர்பூரம் ேதவேதவாய। ௮௯।௰௪௨
குக்குலம் ஸ்ராவணாதிஷு। கார்த்திகாதிஷு மாேஸஷு। ௮௯।௰௪௨
பரமாந்நம் ஸுேப த்ரிஷு। காஸாரம் மாகபூர்ேவஷு। ௮௯।௰௪௩
யவாந்நம் ச ததஸ் த்ரிஷு। க்ருதம் திலாஞ் ஜலகடாந்। ௮௯।௰௪௩
ஹிரண்யம் அதவாஜிநம்। ப்ரதிமாஸம் ததா தத்யாத்। ௮௯।௰௪௪
ப்ராஹ்மணாய ஸுபவ்ரேத। யேதாக்தம் நியமாநாம் ச। ௮௯।௰௪௪
க்ரஹணம் ப்ரதிமாஸிகம்। குர்வஞ் ஜகத்பதிர் விஷ்ணு:। ௮௯।௰௪௫

ப்ரீயதாம் இதி மாநவ:। ேயாஷித் அப்ய் அமலப்ரஜ்ேஞ। ௮௯।௰௪௫
வ்ரதம் ஏதத் யதாவிதி। கேராதி யா ஸா ஸகலாந்। ௮௯।௰௪௬
அவாப்ேநாதி மேநாரதாந்। வ்ரேதநாராதிேதா விஷ்ணுர்। ௮௯।௰௪௬
அேநந ஜகத: பதி:। ததாத்ய் அபிமதாந் காமாந்। ௮௯।௰௪௭
அல்பகாேலந பாமிநி। தந்யம் யஸஸ்யம் ஆயுஷ்யம்। ௮௯।௰௪௭
ெஸௗபாக்யாேராக்யதம் ததா। வ்ரதம் ஏதத் ப்ரியதமம்। ௮௯।௰௪௮
வ்ரேதப்ேயா அவ்யக்தஜந்மந:। வ்ரேதநாேநந ஸுத்தாநாம்। ௮௯।௰௪௮
அப்ேதைநேகந ேகஸவ:। ஸுகத்ருஸ்ேயா ந ஸம்ேதேஹா। ௮௯।௰௪௯
தீேபைநவாக்ரத: ஸ்தித:। காயவாங்மநேஸா ஸுத்திம்। ௮௯।௰௪௯
கேராத்ய் ஏதந் மஹாவ்ரதம்। ஸுத்தாநாம் சாமேலா ேதேவா। ௮௯।௰௫
த்ருஸ்ய ஏவ ஜநார்தந:। தஸ்மிந்ந் ஏகாக்ரசித்தாநாம்। ௮௯।௰௫
ப்ராணிநாம் வரவர்ணிநி। விப்ரா ஏவ ப்ரயத்ேநந। ௮௯।௰௫௧
முக்திபாேஜா விபூதய:। யதா கல்பதரும் ப்ராப்ய। ௮௯।௰௫௧
யத் யத் இச்சதி ேசதஸா। தத் தத் பலம் அவாப்ேநாதி। ௮௯।௰௫௨
ததா ஸம்ப்ராப்ய தம் விபும்। ஸுத்திவ்ரதம் இதம் தஸ்மாந்।
௮௯।௰௫௨
மஹாபாதகநாஸநம்। ஆராதநாய க்ருஷ்ணஸ்ய। ௮௯।௰௫௩
குரு ேதவகி பாவநம்। தஸ்மிம்ஸ் சீர்ேண ஹ்ருஷீேகஸஸ்।
௮௯।௰௫௩
துப்யம் தாஸ்யதி தர்ஸநம்। த்ருஷ்ேட சாபிமதம் யத் ேத। ௮௯।௰௫௪
தத் அேஸஷம் பவிஷ்யதி। ேதவகீபார்கவஸ்ையதச்। ௮௯।௰௫௪
ஸ்ருத்வா வாக்யம் நராதிப। ஸுத்திகாமா சசாராத। ௯௰।௰௰௧
ஸர்வகாமப்ரதம் வ்ரதம்। வ்ரேதநாராதிதஸ் ேதந। ௯௰।௰௰௧

ததா ேதவ்யா ஜநார்தந:। தெதௗ தர்ஸநம் ஈேஸஸ:। ௯௰।௰௰௨
ஸங்கசக்ரகதாதர:। த்ருஷ்ேட தஸ்மிந்ந் அேஸேஷேஸ। ௯௰।௰௰௨
ஜகத்தாதரி ேகஸேவ। க்ருத்வா ப்ரணாமம் ஆேஹதம்। ௯௰।௰௰௩
பக்திநம்ராத ேதவகீ। ஜகதாம் ஈஸ்வேரேஸஸ। ௯௰।௰௰௩
ஜ்ஞாந ஜ்ேஞய பவாவ்யய। ஸமஸ்தேதவதாேதவ। ௯௰।௰௰௪
வாஸுேதவ நேமா அஸ்து ேத। ப்ரதாநபும்ேஸார் அஜேயார்। ௯௰।௰௰௪
ய: காரணம் அகாரணம்। அவிேஸஷ்யம் அஜம் ரூபம்। ௯௰।௰௰௫
தவ தஸ்ைம நேமா அஸ்து ேத। த்வம் ப்ரதாநம் புமாம்ஸ் ைசவ।
௯௰।௰௰௫
காரணாகாரணாத்மக:। ஸத் அஸச் சாகிலம் ேதவ। ௯௰।௰௰௬
ேகேநாக்ேதந தவ ஸ்தவ:। ப்ரஸதீ ேதவ ேதவாநாம்। ௯௰।௰௰௬
அரிஸாதந வாமந। ேலாபாபிபூதா யத் அஹம்। ௯௰।௰௰௭
வரயாமி ப்ரயச்ச தத்। அதிதிஸ் த்வம் மஹாபாேக। ௯௰।௰௰௭
புவம் ப்ராப்தா ஸுராரணி। பர்தா ச ேத கஸ்யேபா அயம்। ௯௰।௰௰௮
ேதயஸ் தவ வேரா மயா। அபுத்ராஸ்மி ந ேம பர்துர்। ௯௰।௰௰௮
அஸ்தி ேகஸவ ஸம்ததி:। ப்ரஸதீ ேதஹி ேம புத்ரம்। ௯௰।௰௰௯
அரிதுர்தாரெபௗருஷம்। பவிஷ்யத்ய் அசிராத் ேதவி। ௯௰।௰௰௯
மதம்ேஸந ஸுதஸ் தவ। ஹந்தவ்யா தாநவாஸ் ேதந। ௯௰।௰௧
ஸத்தர்மபரிபந்திந:। த்வாம் அஹம் ஜகத்தாதாரம்। ௯௰।௰௧
உதாேராருபராக்ரமம்। தாரயிஷ்யாமி கர்ேபண। ௯௰।௰௧௧
கதம் அச்யுத ஸம்ஸ ேம। தேவாதேர அவதாரம் ைவ। ௯௰।௰௧௧
புராபி பலிபந்தேந। குர்வதா வித்ருதா: ஸப்த। ௯௰।௰௧௨

ேலாகாஸ் த்வம் சாத்மமாயயா। ததா ஸாம்ப்ரதம் அப்ய் ஏதாம்ல்।
௯௰।௰௧௨
ேலாகாந் ஸஸ்தாணுஜங்கமாந்। தாரயிஷ்யாம்ய் அதாத்மாநம்।
௯௰।௰௧௩
த்வாம் ச ேதவகி லீலயா। இத்ய் ஏவம் உக்த்வா தாம் ேதவம்ீ ।
௯௰।௰௧௩
ேதவகீம் பகவாந் ப்ரபு:। திேராபபூவ ேகாவிந்ேதா। ௯௰।௰௧௪
பூர்புவ:ப்ரபேவா விபு:। அவாப ச தேதா கர்பம்। ௯௰।௰௧௪
ேதவகீவஸுேதவத:। அஜாயத ச விஸ்ேவஸ:। ௯௰।௰௫௧
ஸ்ேவநாங்ேகந ஜநார்தந:। நீேலாத்பலதலஸ்யாமம்। ௯௰।௰௧௫
தாம்ராயதவிேலாசநம்। சதுர்பாஹும் உதாராங்கம்। ௯௰।௰௧௬
ஸ்ரீவத்ஸாங்கிதவக்ஷஸம்। தம் ஜாதம் ேதவகீேதவம்। ௯௰।௰௧௬
நிதாநம் ஸர்வேதஜஸாம்। ப்ரணிபத்யாபிதுஷ்டாவ। ௯௰।௰௧௭
ஸம்ப்ரஸ்துதபேயாதரா। அபாேலா பாலரூேபண। ௯௰।௰௧௭
ேயேநஸ த்வம் இஹாஸ்தித:। த்வத்ரூபம் ப்ரணிபத்யாஹம்।
௯௰।௰௧௮
யத் ப்ரவமி ீ நிேபாத தத்। நமஸ் ேத ஸர்வபூேதஸ। ௯௰।௰௧௮
நமஸ் ேத மதுஸூதந। நமஸ் ேத புண்டரீகாக்ஷ। ௯௰।௰௧௯
நமஸ் ேத அஸ்து ஜநார்தந। நமஸ் ேத ஸார்ங்கசக்ராஸி । ௯௰।௰௧௯
கதாபரிகபாணேய। உேபந்த்ராயாப்ரேமயாய। ௯௰।௰௨
ஹ்ருஷீேகஸாய ைவ நம:। நேமா அஸ்து ேத அணுரூபாய। ௯௰।௰௨
ப்ருஹத்ரூபாய ைவ நம:। அேஸஷபூதரூபாய। ௯௰।௰௨௧
ததாரூபாய ேத நம:। அநிர்ேதஸ்யவிேஸஷாய। ௯௰।௰௨௧

துப்யம் ஸர்வாத்மேந நம:। ஸர்ேவஸ்வராய ஸர்வாய। ௯௰।௰௨௨
ஸர்வபூதாய ேத நம:। நேமா அஸ்து ேத வாஸுேதவ। ௯௰।௰௨௨
நேமா அஸ்து கமேலக்ஷண। அேஸஷபூதரூபாய। ௯௰।௰௨௩
ததாபூதாய ேத நம:। நேமா அஸ்து ேத அஸ்வரூபாய। ௰௯௰।௧௪௪
ததாரூபாய ேத நம:। அநிர்ேதஸ்யவிேஸஷாய। ௰௯௰।௧௪௪
துப்யம் ஸர்வாத்மேந நம:। நேமா அஸ்து ேத வாஸுேதவ।
௰௯௰।௧௪௪
நமஸ் ேத புஷ்கேரக்ஷண। நேமா அஸ்து ேத ஸதாசிந்த்ய। ௰௯௰।௧௪௪
ேயாகிசிந்த்ய ஜகத்பேத। விஷ்ேணா நேமா அஸ்து ேத க்ருஷ்ண।
௯௰।௰௨௩
நமஸ் ேத புருேஷாத்தம। நேமா நாராயண ஹேர। ௯௰।௰௨௪
நமஸ் ேத அஸ்து ஸதாச்யுத। நேமா நமஸ் ேத ேகாவிந்த। ௯௰।௰௨௪
நமஸ் ேத கருடத்வஜ। ஸ்ரீஸ ஸ்ரீவத்ஸ ேயாகீஸ। ௯௰।௰௨௫
ஸ்ரீகாந்ேதஸ நேமா அஸ்து ேத। நீேலாத்பலதலஸ்யாம। ௯௰।௰௨௫
தம்ஷ்ட்ேராத்த்ருதவஸும்தர। ஹிரண்யாக்ஷரிேபா ேதவ। ௯௰।௰௨௬
நமஸ் ேத யஜ்ஞஸூகர। ந்ருஸிம்ஹ ஜய விஸ்வாத்மந்। ௯௰।௰௨௬
ைதத்ேயார:ஸ்தலதாரக। நேமா நமஸ் ேத அஸ்து ஸதா। ௯௰।௰௨௭
விேக்ஷபத்வஸ்ததாரக। மாயாவாமநரூபாய। ௯௰।௰௨௭
துப்யம் ேதவ நேமா நம:। த்ரிவிக்ரம நமஸ் துப்யம்। ௯௰।௰௨௮
த்ைரேலாக்யக்ராந்தி துர்ஜய। க்ருக்யஜு:ஸாமபூதாய। ௯௰।௰௨௮
ேவதாஹரணகர்மேண। ப்ரணேவாத்கீதவசேஸ। ௯௰।௰௨௯
மஹாஸ்வஸிரேஸ நம:। நி:க்ஷத்ரிேயார்வகரணீ । ௯௰।௰௨௯
விகராலபராக்ரம। ஜாமதக்ந்ய நமஸ் துப்யம்। ௯௰।௰௩

கார்தவர்யாஸுதஸ்கர ீ । ெபௗலஸ்த்யகுலநாஸாய। ௯௰।௰௩
ஸாதுமார்கவிசாரிேண। நலேஸதுக்ருேத துப்யம்। ௯௰।௰௩௧
நேமா ராகவரூபிேண। ஸாம்ப்ரதம் மத்ப்ரஸந்நாய। ௯௰।௰௩௧
ஸம்பூதாய மேமாதேர। ஸ்வமாயாபாலரூபாய। ௯௰।௰௩௨
நம: க்ருஷ்ணாய ைவ ஹேர। யாவந்தி தவ ரூபாணி। ௯௰।௰௩௨
யாவத்யஸ் ச விபூதய:। நமாமி க்ருஷ்ண ஸர்ேவப்யஸ்। ௯௰।௰௩௩
ேதப்யஸ் தாப்யஸ் ச ஸர்வதா। ஸ்வரூபேசஷ்டிதம் யத் ேத।
௯௰।௰௩௩
யத் ேதவத்ேவ விேசஷ்டிதம்। யச் ச திர்யங்மநுஷ்யத்ேவ। ௯௰।௰௩௪
ேசஷ்டிதம் தந் நமாம்ய் அஹம்। பரேமஸ பேரேஸஸ। ௯௰।௰௩௪
திர்யகீஸ நேரஸ்வர। ஸர்ேவஸ்வேரஸ்வேரேஸஸ। ௯௰।௰௩௫
நமஸ் ேத புருேஷாத்தம। ஏவம் ஸ்துதஸ் தயா ேதவ்யா। ௯௰।௰௩௫
ேதவக்யா மதுஸூதந:। பாலரூபீ ஜகாைதவம்। ௯௰।௰௩௬
வஸுேதவஸ்ய ஸ்ருண்வத:। ஸம்யக் ஆராதிேதேநாக்தம்। ௯௰।௰௩௬
யத் ப்ரஸந்ேநந ைவ ஸுேப। தத் க்ருதம் ஸகலம் பூேயா। ௯௰।௰௩௭
யத் வ்ருேணாஷி ததாமி தத்। அவதாேர தைதவாஸ்மிந்। ௯௰।௰௩௭
வர்ஷாணாம் அதிகம் ஸதம்। ஸ்தாஸ்யாமி நரதாம் ப்ராப்ேதா।
௯௰।௰௩௮
துஷ்டைதத்யநிபர்ஹண:। தத் த்வம் வரய பத்ரம் ேத। ௯௰।௰௩௮
வரம் யந் மநேஸச்சஸி। தாஸ்யாம்ய் அஹம் அஸம்திக்தம்।
௯௰।௰௩௯
யத்ய் அபி ஸ்யாத் ஸுதுர்லபம்। யதி ேதவ ப்ரஸந்நஸ் த்வம்।
௯௰।௰௩௯

ப்ரததாஸி மேமப்ஸிதம்। வ்ருேணாமி தத் அஹம் நித்யம்। ௯௰।௰௪
தவ ேகஸவ தர்ஸநம்। தேவத்ருக்ரூபம் ஆேலாக்ய। ௯௰।௰௪
ஹார்தப்ரஸ்ருதேலாசநா। நாலம் விேயாகம் ஸம்ேஸாடும்। ௯௰।௰௪௧
தவாஹம் மதுஸூதந। தாக்ஷாயணீத்வம் அதிதி:। ௯௰।௰௪௧
ஸம்பூதா வஸுதாதேல। நித்யம் ஏவ ஜகத்தாத்ரி। ௯௰।௰௪௨
ப்ரஸாதம் ேத கேராம்ய் அஹம்। ஷஷ்ேட ஷஷ்ேட ததா பேக்ஷ।
௯௰।௰௪௨
திேந அஸ்மிந்ந் ஏவ பாமிநி। த்வம் மாம் த்ரŠயஸ்ய் அஸம்திக்தம்।
௯௰।௰௪௩
ப்ரஸாதஸ் ேத க்ருேதா மயா। அேநைநவ மஹாபாேக। ௯௰।௰௪௩
பாலரூேபண ஸம்வ்ருத:। தவ தர்ஸநம் ஏஷ்யாமி। ௯௰।௰௪௪
யத்ர ேத ஸ்ேநஹவந் மந:। தஸ்மிந் காேல ச ேலாகாஸ் த்வாம்।
௯௰।௰௪௪
பூஜயிஷ்யந்தி ேதவகி। மாம் ச புஷ்பாதிபிர் ேதவி। ௯௰।௰௪௫
தேவாத்ஸங்கவ்யவஸ்திதம்। ஸம்பூஜிேதா அஹம் ேலாகாநாம்।
௯௰।௰௪௫
தஸ்மிந் காேல ஸுேதாஷித:। ப்ரதாஸ்யாமி ஜகத்தாத்ரி। ௯௰।௰௪௬
யதாபிலஷிதம் வரம்। அபுத்ராணாம் வராந் புத்ராந்। ௯௰।௰௪௬
அதநாநாம் ததா தநம்। ஸுபாந் தாராந் அதாராணாம்। ௯௰।௰௪௭
ஸேராகாணாம் அேராகதாம்। ஸுகதிம் கதிகாமாநாம்। ௯௰।௰௪௭
வித்யாம் வித்யார்திநாம் அபி। ப்ரதாஸ்யஸி மஹாபாேக। ௯௰।௰௪௮
மத்ப்ரஸாேதாபவ்ரும்ஹிதா। ப்ரஸாதிதா ஹி மர்த்யாநாம்। ௯௰।௰௪௮

யத் த்வம் தாஸ்யஸி ேஸாபேந। தத் ேதஷாம் மத்ப்ரஸாேதந।
௯௰।௰௪௯
பவிஷ்யதி ந துர்லபம்। த்வாம் அப்யர்ச்ேயாபசாேரண। ௯௰।௰௪௯
ஸ்நாபயித்வா க்ருேதந மாம்। ஸர்வகாமாந் அவாப்ஸ்யந்தி। ௯௰।௰௫
காேல ஷட்பக்ஷஸம்ஜ்ஞிேத। த்வதங்கஸ்தம் ச மாம் பாலம்। ௯௰।௰௫
ஸம்ஸ்மரிஷ்யந்தி பக்தித:। ப்ரதிமாஸம் ச ேத பூஜாம்। ௰௯௰।௧௪௫
அஷ்டம்யாம் ய: கரிஷ்யதி। மம ைசவாகிலாந் காமாந்। ௯௰।௰௫௧
ஸம்ப்ராப்ேநாத்ய் அபகல்மஷ:। ஏவம் பூர்வம் ஹ்ருஷீேகேஸா।
௯௰।௰௫௧
ேதவக்யா: ப்ரதெதௗ வரம்। தஸ்மாத் க்ருஷ்ணாஷ்டமீபும்ஸாம்।
௯௰।௰௫௨
அேஸஷாெகௗகஹாரிண।ீ தஸ்யாம் ஹி பூஜித: க்ருஷ்ேணா।
௯௰।௰௫௨
ேதவகீ ச ஸமாதிநா। பாபாபேநாதம் குருேத। ௯௰।௰௫௩
ததாதி ச மேநாரதாந்। தத் ஏஷ புஷ்டிகாமாநாம்। ௯௰।௰௫௩
ந்ருணாம் புண்யார்திநாம் அபி। உபவாேஸா மஹீபால। ௯௰।௰௫௪
ஸஸ்த: ேகஸவேதாஷத:। ஸ்ராவேண ஸுக்லபேக்ஷ து। ௯௰।௰௫௪
த்வாதஸ்யாம் ப்ரீயேத ந்ருப। ேகாப்ரதாேநந ேகாவிந்ேதா। ௯௧।௰௰௧
யத் பூர்வம் கதிதம் தவ। ெபௗஷஸுக்ேல து தத்வச் ச। ௯௧।௰௰௧
த்வாதஸ்யாம் க்ருதேதநுகாம்। க்ருதார்சி: ப்ரீணநாயாலம்। ௯௧।௰௰௨
ப்ரதத்யாத் பலதாயிநீம்। தைதவ மாகத்வாதஸ்யாம்। ௯௧।௰௰௨
ப்ரதத்தா திலெகௗர் ந்ருப। ேகஸவம் ப்ரீணயத்ய் ஆஸு। ௯௧।௰௰௩
ஸர்வகாமாந் ப்ரயச்சதி। ஜ்ையஷ்ேட மாஸி ஸிேத பேக்ஷ। ௯௧।௰௰௩

த்வாதஸ்யாம் ஜலேதநுகா। தத்தா யதாவத் விதிநா। ௯௧।௰௰௪
ப்ரீணயத்ய் அம்புஸாயிநம்। லவணம் மார்கஸர்ேஷீ து। ௯௧।௰௰௪
க்ருஷ்ணம் அப்யர்ச்ய ேயா நர:। ப்ரயச்சதி த்விஜாக்ர்யாய। ௯௧।௰௰௫
ஸ ஸர்வரஸதாயக:। ஸர்வேபாகமஹாேபாகாந்। ௯௧।௰௰௫
ப்ராஜிஷ்மந்ேதா மேநாரமாந்। ேலாகாந் அவாப்ேநாதி ந்ருப। ௯௧।௰௰௬
ப்ரஸந்ேந கருடத்வேஜ। ெபௗஷமாேஸ து ேயா தத்யாத்। ௯௧।௰௰௬
க்ருதம் விப்ராய பார்திவ। ஸமப்யர்ச்யாச்யுதம் ேஸா அபி। ௯௧।௰௰௭
ஸர்வகாமாந் அவாப்நுயாத்। மாகமாேஸ து ஸம்பூஜ்ய। ௯௧।௰௰௭
மாதவம் ப்ராஹ்மணாய ய:। ப்ரயச்சதி திலாம்ல் ேலாகாந்। ௯௧।௰௰௮
ஸம்ப்ராப்ேநாத்ய் அபிவாஞ்சிதாந்। பால்குேந புண்டரீகாக்ஷம்।
௯௧।௰௰௮
ய: ஸமப்யர்ச்ய யச்சதி। ஸப்ததாந்யம் நரஸ்ேரஷ்ட। ௯௧।௰௰௯
ஸ ஸர்வஸ்ேயஸ்வேரா பேவத்। ைசத்ேர சித்ராணி வஸ்த்ராணி।
௯௧।௰௰௯
ய: ப்ரயச்சதி ேகஸவம்। பூஜயித்வா ஸ ைவ ேபாகாந்। ௯௧।௰௧
விசித்ராம்ல் லபேத நர:। ைவஸாேக விஷ்ணும் அப்யர்ச்ய। ௯௧।௰௧
யவேகாதூமேதா நர:। ேலாகாந் ஐந்த்ராந் ஸமாஸாத்ய। ௯௧।௰௧௧
ேமாதேத விகதஜ்வர:। துர்நிவர்த்யம் அஹம் மந்ேய। ௯௧।௰௧௧
சஞ்சலம் ஹி மேநா யத:। ஜ்ையஷ்ேட அப்யர்ச்ய ஹ்ருஷீேகஸம்।
௰௯௧।௧௪௬
உதகும்பப்ரேதா ஹி ய:। ஸ பராம் நிர்வ்ருதிம் யாதி। ௯௧।௰௧௨
ஸப்த ஜந்மாந்தராணி ைவ। ஆஷாடமாேஸ ச ஹரிம்। ௯௧।௰௧௨
ய: ஸமப்யர்ச்ய யச்சதி। விப்ராய சந்தநம் ேஸா அபி। ௯௧।௰௧௩

பரமாஹ்லாதபாஜநம்। ேயா ந்ருஸிம்ஹம் ஸமப்யர்ச்ய। ௯௧।௰௧௩
ப்ராஹ்மணாய ப்ரயச்சதி। ஸ்ராவேண நவநீதம் து। ௯௧।௰௧௪
ஸ ஸ்வர்கம் ஸுக்ருதீவ்ரேஜத்। சத்த்ரம் ச ேயா பாத்ரபேத। ௯௧।௰௧௪
வாஸுேதவாபிபூஜக:। ப்ரயச்சதி த்விஜாக்ர்யாய। ௯௧।௰௧௫
ஸ ச்சத்த்ராதிபதிர் பேவத்। குடஸர்கரயா யுக்தம்। ௯௧।௰௧௫
ேமாதகம் ச ப்ரயச்சதி। தைதவாஸ்வயுேஜ அப்யர்ச்ய। ௯௧।௰௧௬
ேயா அநந்தம் ேஸா அமேரா பேவத்। நாராயணம் ஸமப்யர்ச்ய।
௯௧।௰௧௬
ய: ப்ரயச்சதி கார்த்திேக। தீபகம் விப்ரேகேஹஷு। ௯௧।௰௧௭
விமாநம் ேஸா அதிேராஹதி। காம்யாந்ய் ஏதாந்ய் அேஸஷாணி।
௯௧।௰௧௭
ய: ஸம்பூஜ்ய ஜகத்பதிம்। தாநாநி யச்சதி நர:। ௯௧।௰௧௮
ஸ ஸம்பூர்ணமேநாரத:। ஸர்வஸ்ேரஷ்ட: ஸமஸ்தாநாம்। ௯௧।௰௧௮
பந்தூநாம் ஆஸ்ரேயா பேவத்। ஏவம் ஸர்வாணி தாநாநி। ௯௧।௰௧௮
ப்ரீணநாயாச்யுதஸ்ய ய:। ப்ரயச்சதி ஸ ஸர்ேவஷாம்। ௯௧।௰௧௯
பலாநாம் புவி பாஜநம்। தஸ்மாந் நேரந்த்ர விப்ேரப்ய:। ௯௧।௰௧௯
ப்ரீணநாய ஜகத்குேரா:। ப்ரயச்ைசதாநி தாநாநி। ௯௧।௰௨
யச் சாந்யத் தயிதம் தவ। யதீச்சஸி புந: ப்ராப்தும்। ௯௧।௰௨
பூதிம் அப்ரம்ஸநீம் ந்ருப। ததாராதய ேகாவிந்தம்। ௯௧।௰௨௧
நாந்யதா ஸ்யுர் விபூதய:। ஏவம் வஸிஷ்ேடந ததா। ௯௧।௰௨௧
மாந்தாதா ந்ருப ேபாதித:। ஸஹ பத்ந்யா மஹீபால:। ௯௧।௰௨௨
பரிேதாஷம் பரம் யெயௗ। ஜகாத ச முதா யுக்த:। ௯௧।௰௨௨
ப்ரணிபத்ய புேராஹிதம்। ஸஹ பத்ந்யா நரஸ்ேரஷ்ட:। ௯௧।௰௨௩

ஸமுத்தாய வராஸநாத்। திக் திக் வ்ருைதவ யாதாநி। ௯௧।௰௨௩
மைமதாநி திநாந்ய் அேஹா। அநாஸஜ்ய மந: க்ருஷ்ேண। ௯௧।௰௨௪
விஷயாஸக்தேசதஸ:। தா நிஸாஸ் ேத ச திவஸாஸ்। ௯௧।௰௨௪
ேத ர்தவஸ் ேத ச வத்ஸரா:। நராணாம் ஸபலா ேயஷு। ௯௧।௰௨௫
சிந்திேதா பகவாந் ஹரி:। சிந்த்யமாந: ஸமஸ்தாநாம்। ௯௧।௰௨௫
பாபாநாம் ஹாணிேதா ஹி ஸ:। ஸமுத்ஸ்ருஜ்யாகிலம் சிந்த்யம்।
௯௧।௰௨௬
ேஸா அச்யுத: கிம் ந சிந்த்யேத। கஷ்டம் முஷ்ேடா அஸ்மி ஸிஷ்ேடஷு।
௯௧।௰௨௬
வித்யமாேநஷு மந்த்ரிஷு। பராங்முகாநாம் ேகாவிந்ேத। ௯௧।௰௨௭
யத் ப்ராப்தம் பரமம் வய:। ஏவம் விநிந்த்ய ேஸா அத்மாநாம்।
௯௧।௰௨௭
மாந்தாதா ப்ருதிவபதி ீ :। சகாராராதேந யத்நம்। ௯௧।௰௨௮
ேதவேதவஸ்ய ஸார்ங்கிதிண:। தம் ஆராத்ய ச விஸ்ேவஸம்।
௯௧।௰௨௮
உேபந்த்ரம் அஸுேரஸ்வர। ப்ராப ஸித்திம் பராம் பூர்வம்। ௯௧।௰௨௯
தக்ஷ: ப்ராேசதேஸா யதா। ததா த்வம் அபி ராேஜந்த்ர। ௯௧।௰௨௯
ஸர்வபாேவந ேகஸவம்। ஸமாராதய ேகாவிந்தம்। ௯௧।௰௩
தம் ஆராத்ய ந ஸததி ீ । ஏவம் ஸ ைதத்யராேஜந்த்ர:। ௯௧।௰௩
ப்ரஹ்ராேதநாவேபாதித:। பலிர் ஆராதேந யத்நம்। ௯௧।௰௩௧
சக்ேர சக்ரப்ருதஸ் ததா। புஷ்ேபாபஹாைரர் தூைபஸ் ச। ௯௧।௰௩௧
ததா ைசவாநுேலபைந:। வாேஸாபிர் பூஷைண: ஸம்யக்। ௯௧।௰௩௨

ப்ராஹ்மணாநாம் ச தர்பைண:। ஜைபர் ேஹாைமர் வ்ரைதஸ் ைசவ।
௯௧।௰௩௨
யேதாக்தம் புருஷர்ஷப। ஸஹ பத்ந்யா தைதவ த்வம்। ௯௧।௰௩௩
ஸமாராதய ேகஸவம்। பகவம்ஸ் சஞ்சலம் சித்தம்। ௯௧।௰௩௩
மநுஷ்யாணாம் அஹர்நிஸம்। விஷயாஸங்கதுர்துஷ்டம்। ௯௨।௰௰௧
பாபாையவ ப்ரவர்தேத। ெமௗேநந வாசிகம் பாபம்। ௯௨।௰௰௧
பும்பிர் ப்ரஹ்மந் நிவர்த்யேத। ஸாரீரம் அப்ய் அகரணாத்। ௯௨।௰௰௨
ஸுநிவர்த்யம் மதம் மம। யத் த்வ் ஏதந் மாநஸம் பாபம்। ௯௨।௰௰௨
மநுஷ்ையஸ் தந் மஹாமேத। துர்நிவர்த்யம் அஹம் மந்ேய।
௯௨।௰௰௩
சஞ்சலம் ஹி மேநா யத:। தத் அஹம் ஸ்ேராதும் இச்சாமி। ௯௨।௰௰௩
மநுஷ்ையர் துர்விசிந்திைத:। யத் ஸ்மர்தவ்யம் ச ஜப்யம் ச। ௯௨।௰௰௪
மாநஸாகப்ரஸாந்தேய। த்வத்யுக்ேதா அயம் அநுப்ரஸ்ந:। ௯௨।௰௰௪
ஸாத்வ் ஏதத் பவேதாதிதம்। சஞ்சலத்வாத் தி சித்தாநாம்। ௯௨।௰௰௫
மாநஸம் பஹு பாதகம்। பூெமௗ த்ருணம் அஸம்க்யாதம்। ௯௨।௰௰௫
யதா ச திவி தாரகா:। ததா பாபம் அஸம்க்ேயயம்। ௯௨।௰௰௬
ேசதஸா க்ரியேத து யத்। பரதாரபரத்ரவ்ய । ௯௨।௰௰௬
பரஹிம்ஸாஸு மாநஸம்। அஹர்நிஸம் மநுஷ்யாணாம்। ௯௨।௰௰௭
ஸாதத்ேயந ப்ரவர்தேத। யத்ய் அஸ்ேயாபஸேமா ராஜந்। ௯௨।௰௰௭
புவி ந க்ரியேத ந்ருபி:। தந் நாஸ்தி நரேகாத்தாேரா। ௯௨।௰௰௮
வர்ஷேகாடீஸைதர் அபி। தத் அஸ்ய ப்ரஸமாயாலம்। ௯௨।௰௰௮
ப்ராயஸ்சித்தம் நராதிப। ஸ்ருணுஷ்வ ேயந சித்ேதாத்தம்। ௯௨।௰௰௯
ஸத்ய: பாபம் வ்யேபாஹதி। ஓம் நேமா வாஸுேதவாய। ௯௨।௰௰௯

புருஷாய மஹாத்மேந। ஹிரண்யேரதேஸ அசிந்த்ய । ௯௨।௰௧
ஸ்வரூபாயாதிேவதேஸ। விஷ்ணேவ ஜிஷ்ணேவ நித்யம்। ௯௨।௰௧
ஸாந்தாயாநகரூபிேண। ஸர்வஸ்தித்யந்தகரண । ௯௨।௰௧௧
வ்ரதிேந பதவாஸேஸ ீ । நாராயணாய விஸ்வாய। ௯௨।௰௧௧
விஸ்ேவஸாேயஸ்வராய ச। நம: கமலகிஞ்ஜல்க । ௯௨।௰௧௨
ஸுவர்ணமுகுடாய ச। ேகஸவாயாதிஸூŠமாய। ௯௨।௰௧௨
ப்ரஹ்மமூர்திமேத நம:। நம: பரமகல்யாண । ௯௨।௰௧௩
கல்யாணாயாத்மேயாநேய। ஜநார்தநாய ேதவாய। ௯௨।௰௧௩
ஸ்ரீதராய ஸுேமதேஸ। மஹாத்மேந வேரண்யாய। ௯௨।௰௧௪
நம: பங்கஜநாபேய। ஸ்ம்ருதமாத்ராககாதாய। ௯௨।௰௧௪
க்ருஷ்ணாயாக்லிஷ்டகர்மேண। நேமா நதாய நம்ேரைஸர்। ௯௨।௰௧௫
அேஸைஷர் வாஸவாதிபி:। நேமா மாயாவிேந துப்யம்। ௯௨।௰௧௫
ஹரேய ஹரிேமதேஸ। ஹிரண்யகர்பகர்பாய। ௯௨।௰௧௬
ஜகத: காரணாத்மேந। ேகாவிந்தாயாதிபூதாய। ௯௨।௰௧௬
ஸ்ராதீநாம் மஹாத்மேந। நேமா பூதாத்மபூதாய। ௯௨।௰௧௭
ஆத்மேந பரமாத்மேந। அச்யுதாய நேமா நித்யம்। ௯௨।௰௧௭
அநந்தாய நேமா நம:। தாேமாதராய ஸுசேய। ௯௨।௰௧௮
யஜ்ேஞஸாய நேமா நம:। நேமா மாயாபடச்சந்ந । ௯௨।௰௧௮
ஜகத்தாம்ேந மஹாத்மேந। ஹ்ருஷீேகஸாய ேசஸாய। ௯௨।௰௧௯
ஸர்வபூதாத்மரூபிேண। தயாலேவ நேமா நித்யம்। ௯௨।௰௧௯
கபிலாய ஸுேமதேஸ। ஸம்ஸாரஸாகேராத்தார । ௯௨।௰௨
ஜ்ஞாநேபாதப்ரதாயிேந। அகுண்டமதேய தாத்ேர। ௯௨।௰௨

ஸர்கஸ்தித்யந்தகர்மணி। கராலெஸௗம்யரூபாய। ௯௨।௰௨௧
ைவகுண்டாய நேமா நம:। யதா ஹி வாஸுேதேவதி। ௯௨।௰௨௧
ப்ேராக்ேத நஸ்யதி பாதகம்। ததா விலயம் அப்ேயது। ௯௨।௰௨௨
மைமதத் துர்விசிந்திதம்। யதா ந விஷ்ணுபக்ேதஷு। ௯௨।௰௨௨
பாபம் ஆப்ேநாதி ஸம்ஸ்திதிம்। ததா விநாஸம் அப்ேயது। ௯௨।௰௨௩
மைமதத் துர்விசிந்திதம்। ஸ்ம்ருதமாத்ேரா யதா விஷ்ணு:। ௯௨।௰௨௩
ஸர்வம் பாபம் வ்யேபாஹதி। ததா ப்ரணாஸம் அப்ேயது। ௯௨।௰௨௪
மைமதத் துர்விசிந்திதம்। யதா ஸர்வத்ரேகா விஷ்ணுஸ்। ௯௨।௰௨௪
தத்ர ஸர்வம் ச ஸம்ஸ்திதம்। உபயாது ததா நாஸம்। ௯௨।௰௨௫
மமாகம் சித்தஸம்பவம்। பாபம் ப்ரணாஸம் மம ஸம்ப்ரயாது।
௯௨।௰௨௫
யந் மாநஸம் யச் ச கேராமி வாசா। ஸாரீரம் அப்ய் ஆசரிதம் ச யந் ேம।
௯௨।௰௨௬
ஸ்ம்ருேத ஜகத்தாதரி வாஸுேதேவ। ப்ரயாந்து ேதாஷா மம நாஸம் ஆஸு।
௯௨।௰௨௬
ராகாதய: காரணகாரேணேஸ। விஜ்ஞாநதீபாமலமார்கத்ருஸ்ேய।
௯௨।௰௨௭
ஸ்ம்ருேத ஜகத்தாதரி வாஸுேதேவ। பவந்து பத்ராணி ஸமஸ்தேதாஷா:।
௯௨।௰௨௭
ப்ரயாந்து நாஸம் ஜகேதா அகிலஸ்ய। மயாத்ய பக்த்யா பரேமஸ்வேரேஸ।
௯௨।௰௨௮
ஸ்ம்ருேத ஜகத்தாதரி வாஸுேதேவ। ேய பூதேல ேய திவி ேய அந்தரிேக்ஷ।
௯௨।௰௨௮

ரஸாதேல ப்ராணிகணாஸ் ச ேகசித்। பவந்து ேத ஸித்தியுேஜா மயாத்ய।
௯௨।௰௨௯
ஸ்ம்ருேத ஜகத்தாதரி வாஸுேதேவ। புஷ்யந்து ைமத்ரீம் விரமந்து ராகாத்।
௯௨।௰௨௯
உஜ்ஜந்து ேலாபம் க்ஷமிேணா பவந்து। ஆப்ரஹ்மவ்ருக்ஷாந்தரகா மயாத்ய।
௯௨।௰௩
ஸ்ம்ருேத ஜகத்தாதரி வாஸுேதேவ। ேய ப்ராணிந: குத்ரசித் அத்ர ஸந்தி।
௯௨।௰௩
ப்ரஹ்மாண்டமத்ேய பரதஸ் ச ேகசித்। ேத யாந்து ஸித்திம் பரமாம் மயாத்ய।
௯௨।௰௩௧
ஸ்ம்ருேத ஜகத்தாதரி வாஸுேதேவ। அஜ்ஞாநிேநா ஜ்ஞாநவிேதா பவந்து।
௯௨।௰௩௧
ப்ரஸாந்திபாஜ: ஸதேதாக்ரசித்தா:। குர்வந்து பக்திம் பரமாம் அநந்ேத।
௯௨।௰௩௨
மத்ஸ்ேதாத்ரதுஷ்டஸ்ய ஹேர: ப்ரஸாதாத்। ஸ்ருண்வந்தி ேய ேம படதஸ்
ததாந்ேய। ௯௨।௰௩௨
பஸ்யந்தி ேய மாம் இதம் ஈரயந்தம்। ேதவாஸுராத்யா மநுஜாஸ் திரஸ்ேசா।
௯௨।௰௩௩
பவந்து ேத அப்ய் அச்யுதேயாகபாஜ:। ேய சாபி மூகா விகேலந்த்ரியத்வாச்।
௯௨।௰௩௩
ஸ்ருண்வந்தி ேநா ைநவ விேலாகயந்தி। பஸ்வாதய: கீடபிபலிகாஸ் ீ ச।
௯௨।௰௩௪
பவந்து ேத அப்ய் அச்யுதேயாகபாஜ:। நாமஸ்வ் அநந்தஸ்ய ச கீர்திேதஷு।
௯௨।௰௩௪

யத் அத்ர புண்யம் ஜகத: ப்ரஸூேத:। ேதநாவிேவேகாபஹதாத்மேபாதா।
௯௨।௰௩௫
பவந்து பும்ஸாம் மதய: ஸுஸலா ீ :। ேய து:கிதாஸ் ேத ஸுகிேநா பவந்து।
௯௨।௰௩௫
த்ேவஷாந்விதா ைமத்ரகுேணாபபந்நா:। ஸத்யார்ஜவாத்யாஸ் த்வ் அந்ருதா
விமாயா। ௯௨।௰௩௬
மத்ஸம்ஸ்தவாராதிதக்ருஷ்ணத்ருஷ்டா:। நஸ்யந்து து:காநி ஜகத்ய் அைபது।
௯௨।௰௩௬
ேலாபாதிேகா ேதாஷகுண: ப்ரஜாப்ய:। யதாத்மநி ப்ராதரி சாத்மேஜ ச।
௯௨।௰௩௭
ததா ஜநஸ்யாஸ்து ஜேந அபி ஹார்தம்। ஸம்ஸாரைவத்ேய
அகிலேதாஷஹாநி । ௯௨।௰௩௭
விசக்ஷேண நிர்வ்ருதிேஹதுபூேத। ஸம்ஸாரபந்தா: ஸிதிலீபவந்து।
௯௨।௰௩௮
ஹ்ருதி ஸ்திேத ஸர்வஜநஸ்ய விஷ்ெணௗ। ஏதத் படந் பார்திவ
ஸர்வபாைபர்। ௯௨।௰௩௮
விமுச்யேத விஷ்ணுபர: ஸைதவ। ப்ராப்ேநாதி ஸித்திம் விபுலம் மஹர்த்திம்।
௯௨।௰௩௯
ந சாப்ய் அநர்ேதஷு மதிம் கேராதி। உத்திஸ்ய ஸத்த்வாநி ச யாநி யாநி।
௯௨।௰௩௯
ஸ்ேதாத்ரம் படந்ேத க்ருபயா மநுஷ்யா:। ஸர்வாணி தாந்ய் அப்ரதிகா பவந்தி।
௯௨।௰௪
ப்ரயாந்தி ஸித்திம் பகவத்ப்ரஸாதாத்। தஸ்மாத் த்வையதத் ஸததம்
நிஸாஸு। ௯௨।௰௪

திேநஷு ைசேவஸ்வர மாதவஸ்ய। ஸம்கீர்தநம் கார்யம் அேஸஷபாப ।
௯௨।௰௪௧
விேமாக்ஷேஹேதார் அபவாய ைசவ। இதி ஸகலஜேநாபகாரகாரீ।
௯௨।௰௪௧
ஹரிசரணாப்ஜவிநிஷ்டஸுத்தபுத்தி:। படதி கலு மஹீப ேயா மநுஷ்ய:।
௯௨।௰௪௨
ஸ லயம் உைபதி ஹெரௗ ஹ்ருதாகிலாக:। இதம் ச ஸ்ருணு பூபால।
௯௨।௰௪௨
நஸ்யேத துர்விசிந்திதம்। ேயேநாபாேயந ைவ பும்ஸாம்। ௯௩।௰௰௧
ேயாஷிதாம் வாப்ய் அஸம்ஸயம்। பரதாரபரத்ரவ்ய । ௯௩।௰௰௧
ஜவஹிம்ஸாதிேக ீ ஸதா। ப்ரவர்தேத ந்ருணாம் சித்தம்। ௯௩।௰௰௨
தத் ஏதத் அபிஸம்ஸ்மேரத்। விஷ்ணேவ விஷ்ணேவ நித்யம்।
௯௩।௰௰௨
விஷ்ணேவ விஷ்ணேவ நம:। ஜிஷ்ணேவ ஜிஷ்ணேவ ஸர்வம்।
௯௩।௰௰௩
ஜிஷ்ணேவ ஜிஷ்ணேவ நம:। நமாமி விஷ்ணும் புத்திஸ்தம்। ௯௩।௰௰௩
அஹம்கார கதம் ஹரிம்। சித்தஸ்தம் ஈஸம் அவ்யக்தம்। ௯௩।௰௰௪
அநந்தம் அபராஜிதம்। விஷ்ணும் ஈட்யம் அேஸேஷஸம்। ௯௩।௰௰௪
அநாதிநிதநம் விபும்। விஷ்ணுஸ் சித்தகேதா யந் ேம। ௯௩।௰௰௪
விஷ்ணுர் புத்திகதஸ் ச யத்। யச் சாஹம்காரேகா விஷ்ணுர்।
௯௩।௰௰௫
யத் விஷ்ணுர் மயி ஸம்ஸ்தித:। கேராதி கர்த்ருபூேதா அெஸௗ।
௯௩।௰௰௫
ஸ்தாவரஸ்ய சரஸ்ய ச। தத் பாபம் நாஸம் ஆயாது। ௯௩।௰௰௬

தஸ்மிந்ந் ஏவ விசிந்திேத। த்யாேதா ஹரதி ய: பாபம்। ௯௩।௰௰௬
ஸ்வப்ேந த்ருஷ்ட: ஸுபாவஹ:। தம் உேபந்த்ரம் அஹம் விஷ்ணும்।
௯௩।௰௰௭
ப்ரணேதா அர்திஹரம் ஹரிம்। ஜகத்ய் அஸ்மிந் நிராதாேர। ௯௩।௰௰௭
மஜ்ஜமாேந தமஸ்ய் அத:। ஹஸ்தாவலம்பதம் விஷ்ணும்। ௯௩।௰௰௮
ப்ரணேதா அஸ்மி பராத்பரம்। ஸர்ேவஸ்வேரஸ்வர விேபா। ௯௩।௰௰௮
பரமாத்மந்ந் அேதாக்ஷஜ। ஹ்ருஷீேகஸ ஹ்ருஷீேகஸ। ௯௩।௰௰௯
ஹ்ருஷீேகஸ நேமா அஸ்து ேத। ந்ருஸிம்ஹாநந்த ேகாவிந்த।
௯௩।௰௰௯
பூதபாவந ேகஸவ। துருக்தம் துஷ்க்ருதம் த்யாதம்। ௯௩।௰௧
ப்ரஸமாக்ர்ய நேமா அஸ்து ேத। யந் மயா சிந்திதம் துஷ்டம்। ௯௩।௰௧
ஸ்வசித்தவஸவர்திநா। நரகாவஹம் அத்யுக்ரம்। ௯௩।௰௧௧
தச் சமம் நய ேகஸவ। ப்ரஹ்மண்யேதவ ேகாவிந்த। ௯௩।௰௧௧
பரமார்த பராயண। ஜகந்நாத ஜகத்தாத:। ௯௩।௰௧௨
பாபம் ப்ரஸமயாச்யுத। யச் சாபராஹ்ேந பூர்வாஹ்ேந। ௯௩।௰௧௨
மத்யாஹ்ேந ச ததா நிஸி। காேயந மநஸா வாசா। ௯௩।௰௧௩
க்ருதம் பாபம் அஜாநதா। ஜாநதா வா ஹ்ருஷீேகஸ। ௯௩।௰௧௩
புண்டரீகாக்ஷ மாதவ। நாமத்ரேயாச்சாரணதஸ்। ௯௩।௰௧௪
தத் ப்ரயாது மம க்ஷயம்। ஸாரீரம் ேம ஹ்ருஷீேகஸ। ௯௩।௰௧௪
புண்டரீகாக்ஷ மாநஸம்। பாபம் ப்ரஸமயாத்ய த்வம்। ௯௩।௰௧௫
வாக்க்ருதம் மம மாதவ। யத் வ்ரஜந் யத் ஸ்வபந் புஞ்ஜந்। ௯௩।௰௧௫
யத் உத்திஷ்டந் யத் ஆஸ்தித:। க்ருதவாம்ஸ் சாபி யச் சாஹம்।
௯௩।௰௧௬

காேயந மநஸா கிரா। மஹத் ஸ்வல்பம் அதிஸ்தூலம்। ௯௩।௰௧௬
குேயாநிநரகாவஹம்। தத் யாது ப்ரஸமம் ஸர்வம்। ௯௩।௰௧௭
வாஸுேதவஸ்ய கீர்தநாத்। பரம் ப்ரஹ்ம பரம் தாம। ௯௩।௰௧௭
பவித்ரம் பரமம் ச யத்। தஸ்மிந் ஸம்கீர்திேத விஷ்ேணா:। ௯௩।௰௧௮
பேத பாபம் ப்ரணஸ்யது। ஸூரேயா யத் ப்ரேவŠயந்தி ஹ்ய்।
௯௩।௰௧௮
அபுநர்பவகாங்க்ஷிண:। மமாகிலம் தஹ த்வம் ஹி। ௯௩।௰௧௯
தத் விஷ்ேணா: பரமம் பதம்। யத் ப்ராப்ய ந நிந்வர்தந்ேத। ௯௩।௰௧௯
கந்தஸ்பர்ஸாதிவர்ஜிதம்। பாபம் ப்ரணாஸயத்வ் அத்ய। ௯௩।௰௨
தத் விஷ்ேணா: பரமம் பதம்। ஸதஸத் யத் ததா வ்யக்தா । ௯௩।௰௨
வ்யக்தரூபம் அஜாஜரம்। ப்ரணமாமி ஜகத்தாம। ௯௩।௰௨௧
தத் விஷ்ேணா: பரமம் பதம்। ஸாரீேர மாநேஸ ைசவ। ௯௩।௰௨௧
பாேப வாக்ேஜ ச பார்திவ। க்ருேத ஸம்யங் நேரா பக்த்யா। ௯௩।௰௨௨
பேடச் ச்ரத்தாஸமந்வித:। முச்யேத ஸர்வபாேபப்ய:। ௯௩।௰௨௨
க்ருஷ்ணநாமப்ரகீர்தநாத்। உச்சார்யமாேந ைசதஸ்மிந்। ௯௩।௰௨௨
ேதவேதவஸ்ய ஸம்ஸ்தேவ। விலயம் பாபம் ஆயாதி। ௯௩।௰௨௩
பாண்டம் ஆமம் இவாம்பஸி। தஸ்மாத் ஸம்சிந்திேத பாேப। ௯௩।௰௨௩
ஸமநந்தரம் ஏவ ேத। ஜப்தவ்யம் ஏதத் பாபஸ்ய। ௯௩।௰௨௪
ப்ரஸமாய மஹீபேத। ஸம்ஸாரார்ணவமக்ேநந। ௯௩।௰௨௪
புருேஷண மஹாமுேந। விஷயாஸக்தசித்ேதந। ௯௪।௰௰௧
யத் கார்யம் தத் வதஸ்வ ேம। ப்ராம்யதாம் ஸம்கேட துர்ேக।
௯௪।௰௰௧

ஸம்ஸாேர விஷையஷிணாம்। ஸ்வகர்மபிர் மநுஷ்யாணாம்।
௯௪।௰௰௨
உபகாரகம் உச்யதாம்। க்ஷீப்ேத மநஸ்ய் அநாயத்ேத। ௯௪।௰௰௨
வ்ருத்ேத ேலாபாதிேக கேண। ஸரணம் யந் மநுஷ்யாணாம்। ௯௪।௰௰௩
தத் ஆசŠவ மஹாமுேந। ஸம்ஸாராணவேபாதாய। ௯௪।௰௰௩
ஹரேய ஹரிேமதேஸ। நமஸ்க்ருத்ய ப்ரவŠயாமி। ௯௪।௰௰௪
நராணாம் உபகாரகம்। ஸம்யக் ஆராதிேதா பக்த்யா। ௯௪।௰௰௪
ேவதபாரகுேரார் குரு:। க்ருஷ்ணத்ைவபாயந: ப்ராஹ। ௯௪।௰௰௫
யச் சிஷ்யாய ஸுமந்தேவ। புரா கில துராசாேரா। ௯௪।௰௰௫
துர்புத்திர் அஜிேதந்த்ரிய:। க்ஷத்ரபந்துர் அபூத் பாப:। ௯௪।௰௰௬
பரமர்மாவகட்டக:। மாதாபித்ேரார் அஸுஸ்ரூஷுர்। ௯௪।௰௰௬
த்ேராக்தா பந்துஜநஸ்ய ச। குருேதவத்விஜாதீநாம்। ௯௪।௰௰௭
நிந்தாஸு ஸதேதாத்யத:। ேமாஷ்டா விஸ்வஸதாம் நித்யம்। ௯௪।௰௰௭
அப்ரீதி: ப்ரீதிம் இச்சதாம்। க்ருஜூநாம் அந்ருஜு: க்ஷுத்ர:। ௯௪।௰௰௮
பரஹிம்ஸாபராயண:। ஸ பாந்தைவ: பரித்யக்தஸ்। ௯௪।௰௰௮
ததாந்ைய: ஸாதுவ்ருத்திபி:। அவ்ருத்திமாந் அவிஸ்வாஸ்ேயா।
௯௪।௰௰௯
ம்ருகயாஜவேநா ீ அபவத்। அஹந்ய் அஹநி சக்ராங்காந்। ௯௪।௰௰௯
ஏணகாதீம்ஸ் ததா ம்ருகாந்। ஹத்வாத்மேபாஷணம் சக்ேர। ௯௪।௰௧
வ்யாதவ்ருத்திரேதா அதம:। ஏதயா தஸ்ய துஷ்டஸ்ய। ௯௪।௰௧
குவ்ருத்த்யா பாபேசதஸ:। ஜகாம ஸுமஹாந் கால:। ௯௪।௰௧௧
குர்வேதா தாரேபாஷணம்। ஏகதா து முநிஸ் ேதந। ௯௪।௰௧௧
நிதாேக விஜேந வேந। ம்ருகயாம் அடதா த்ருஷ்ேடா। ௯௪।௰௧௨

வர்த்மந: ப்ரச்யுத: பதி। க்ஷுத்க்ஷாமகண்ட: ஸுஸ்ராந்த:। ௯௪।௰௧௨
ஸுஷ்கஜிஹ்வாஸ்யதாலுக:। த்ருட்பரீேதா அதிவிப்ராந்த:। ௯௪।௰௧௩
காம்திக்பூேதா அல்பேசதந:। ஸ்வாஸாயாஸஸ்லைதர் அங்ைக:।
௯௪।௰௧௩
க்ருச்ச்ராத் ஆத்மாநம் உத்வஹந்। ஸூர்யாம்ஸுதாபாத் ப்ரகலத் ।
௯௪।௰௧௪
ஸ்ேவதார்த்ரசரேணா ந்ருப। தஸ்மிந் த்ருஷ்ேட ததஸ் தஸ்ய।
௯௪।௰௧௪
க்ஷத்ரபந்ேதார் அஜாயத। காருண்யம் தாருணஸ்யாபி। ௯௪।௰௧௫
வ்யாதவ்ருத்திபரிக்ரஹாத்। தம் உேபத்ய ச பூபால। ௯௪।௰௧௫
க்ஷத்ரபந்து: ஸ தாபஸம்। உவாச விப்ரப்ரவரம்। ௯௪।௰௧௬
விமார்ேக வர்தேத பவாந்। ைநஷ பந்தா த்விஜஸ்ேரஷ்ட। ௯௪।௰௧௬
விபிேநா அயம் மஹாடவி:। மாம் அந்ேவஹி த்வராயுக்ேதா। ௯௪।௰௧௭
மா விபத்திம் ஸேமஷ்யஸி। நிஸாம்ய தத் வச: ஸ்ராந்த:। ௯௪।௰௧௭
க்ஷத்ரபந்ேதார் மஹாநுநி:। அநுவவ்ராஜ ராேஜந்த்ர। ௯௪।௰௧௮
ஜலாஸாஜநிேதாத்யம:। கிம்சித் பூபாகம் ஆஸாத்ய। ௯௪।௰௧௮
ததர்ஸ ச மஹாமுநி:। ஹம்ஸகாரண்டவாகீர்ணம்। ௯௪।௰௧௯
ப்ேராத்புல்லநலிநம் ஸர:। ஸாரஸாபிருதம் ரம்யம்। ௯௪।௰௧௯
ஸூபதீர்தம் அகர்தமம்। பத்ேமாத்பலயுதம் சாரு। ௯௪।௰௨
பூர்ணம் ஸ்வச்ேசந வாரிணா। ஸுஸதவநஷண்ைடஸ் ீ ச। ௯௪।௰௨
ஸமந்தாத் பரிேவஷ்டிதம்। தத்க்ஷணாத் த்ருட்பரீதாநாம்। ௯௪।௰௨௧
சக்ஷுேஷா ஹ்லாதகாரிணம்। த்ருஷ்ட்ைவவ ஸ முநிஸ் தத்ர।
௯௪।௰௨௧

ததாமலஜலம் ஸர:। ஸூர்யாம்ஸுதப்ேதா கர்மார்ேதா। ௯௪।௰௨௨
நிபபாத ததம்பஸி। தத்ராஸ்வாஸ்ய க்ருதாஹ்லாத:। ௯௪।௰௨௨
பெபௗ வாரி நராதிப। உஜ்ஜவயந் ீ முநிவேரா। ௯௪।௰௨௩
ஜிஹ்வாதாலு ஸைந: ஸைந:। ேஸா அபி க்ஷத்ரியதாயாேதா।
௯௪।௰௨௩
முநித்ராணபராயண:। விஹாய ஸஸரம் சாபம்। ௯௪।௰௨௪
உஜ்ஜஹார பிஸாந்ய் அத। தெதௗ ச தஸ்ைம ராேஜந்த்ர। ௯௪।௰௨௪
க்ஷுதிதாய தபஸ்விேந। யெயௗ ச த்ருப்திம் விப்ேரா அபி। ௯௪।௰௨௫
பிஸநாலாம்புபக்ஷணாத்। தம் ஆஸ்வஸ்தம் க்ருதாஹாரம்। ௯௪।௰௨௫
உபவிஷ்டம் ஸுஸதேல ீ । ந்யக்ேராதஸாகாஸம்சந்ேந। ௯௪।௰௨௬
நிஷ்பங்ேக ஸரஸஸ் தேட। ஸம்வாஹயாம் ஆஸ ச தம்। ௯௪।௰௨௬
க்ஷத்ரபந்து: ஸைந: ஸைந:। பாதஜங்ேகாருப்ருஷ்ேடஷு। ௯௪।௰௨௬
ேதந ஸம்வாஹிேதா முநி:। ஜெஹௗ ஸ்ரமம் அமித்ரக்ந। ௯௪।௰௨௭
வாக்யம் ேசதம் உவாச ஹ। கஸ் த்வம் பத்ரமுகாத்ேயஹ। ௯௪।௰௨௭
மம ப்ராணபரிக்ஷேய। ஹஸ்தாவலம்பேதா தாத்ரா। ௯௪।௰௨௮
ஜநிேதா விபிேந வேந। விப்ரஷ்டமார்ேகா மூேடா அஹம்। ௯௪।௰௨௮
க்ஷுத்பிபாஸாஸ்ரமாதுர:। த்ராதஸ் த்வயா மஹாபாக। ௯௪।௰௨௯
கஸ் த்வம் அத்ர வேந அஜேந। க்ஷுத்பிபாஸாஸ்ரமார்தஸ்ய।
௯௪।௰௨௯
யஸ் த்ராணம் விபிேந வேந। கேராதி புருஷவ்யாக்ர। ௯௪।௰௩
தஸ்ய ேலாகா மதுஸ்ச்யுத:। ஸ த்வம் ப்ரூஹி மஹாபாக। ௯௪।௰௩
மமாப்யுத்தாரகாரக:। ேயஷாம் ப்ரக்யாதயஸஸாம்। ௯௪।௰௩௧
ஸமுத்பந்ந: குேல பவாந்। ஹர்யஸ்வஸ்ய குேல ஜாத:। ௯௪।௰௩௧

புத்ரஸ் சித்ரரதஸ்ய ச। விமதிர் நாம நாம்நாஹம்। ௯௪।௰௩௨
ஹந்தும் அப்யாகேதா ம்ருகாந்। பித்ரர்தம் ம்ருகேயயம் ேத। ௯௪।௰௩௨
லŠயார்தம் வா மஹாமேத। ஆஹாரார்தம் உதாேஹா அத்ர।
௯௪।௰௩௩
ம்ருகயா வ்யஸநம் து ேத। வ்ருத்திர் ஏஷா மம ப்ரஹ்மந்। ௯௪।௰௩௩
பரித்யக்தஸ்ய பாந்தைவ:। ப்ருத்ையர் அந்ையஸ் ச நஷ்ேட அர்ேத।
௯௪।௰௩௪
நிர்தநஸ்யாமிஷாஸிந:। கிமர்தம் த்வம் பரித்யக்ேதா। ௯௪।௰௩௪
ப்ருத்யஸ்வஜநபந்துபி:। பாதகீகீகட: க்ஷுத்ைரர்। ௯௪।௰௩௫
உபஜப்த: பேரண வா। இத்ய் உக்த: ேஸா அபவந் ெமௗநீ। ௯௪।௰௩௫
பஸ்யந் ேதாஷம் ந்ருபாத்மநி। அதுஷ்டாம்ஸ் சாத்மேநா ப்ருத்யாந்।
௯௪।௰௩௬
விசிந்த்யாதீவ துர்மநா:। அேவŠய தம் ஸாத்வஸிநம்। ௯௪।௰௩௬
க்ஷத்ரபந்தும் மஹாமுநி:। த்யாத்வா சிரம் அதாபஸ்யத்। ௯௪।௰௩௭
க்ஷத்ரபந்தும் ஸ்வேதாஷிணம்। ஸம்த்யக்தபந்துேலாேக ச। ௯௪।௰௩௭
தஸ்மிந் துர்வ்ருத்தேசதஸி। க்ருபாம் சகார ஸ முநி:। ௯௪।௰௩௮
க்ஷத்ரபந்ெதௗ தயாபர:। உவாச ச முநிர் பூய:। ௯௪।௰௩௮
க்ஷத்ரபந்தும் க்ருபாலுக:। உபகாரிணம் உக்ேரண। ௯௪।௰௩௯
கர்மணா தம் விதூஷிதம்। அபி ஸக்ேநாஷி ஸம்யந்தும்। ௯௪।௰௩௯
அகார்யப்ரஸ்ருதம் மந:। ப்ராணி படாநிவ்ருத்திம் ீ ச। ௯௪।௰௪
கர்தும் க்ேராதாதிஸம்யமம்। அபி ைமத்ரீம் ஜேந கர்தும்। ௯௪।௰௪
ஸக்ேநாஷி த்வம் முைதவ யா। ஐஹிகாமுஷ்மிகீவரீ। ௯௪।௰௪௧
க்ரியமாணா மஹாபலா। ந ஸக்ேநாமி க்ஷமாம் கர்தும்। ௯௪।௰௪௧

ைமத்ரீம் மம ேசதஸி। ப்ராணிநாம் அவதாத் ப்ரஹ்மந்। ௯௪।௰௪௨
நாஸ்தி தாராதிேபாஷணம்। அநாயத்தம் ச ேம சித்தம்। ௯௪।௰௪௨
விஷயாந் ஏவ தாவதி। ததப்ராப்ெதௗ ச ஸர்ேவஷாம்। ௯௪।௰௪௩
க்ேராதாதீநாம் ஸமுத்பவ:। ேஸா அஹம் ந ைமத்ரீம் ந க்ஷாந்திம்।
௯௪।௰௪௩
ந ஹிம்ஸாதிவிவர்ஜநம்। கர்தும் ஸக்ேநாமி யத் கார்யம்। ௯௪।௰௪௪
ததந்யத் உபதிஸ்யதாம்। ேதைநவம் உக்ேதா விப்ேரா அெஸௗ।
௯௪।௰௪௪
தம் உேபŠயம் அமந்யத। ததாப்ய் அதிக்ருபாலுத்வாத்। ௯௪।௰௪௫
க்ஷத்ரபந்தும் அபாஷத। யத்ய் ஏதத் அகிலம் கர்தும்। ௯௪।௰௪௫
ந ஸக்ேநாஷி ப்ரவஹி ீ ேம। ஸ்வல்பம் அந்யந் மேயாக்தம் ஹி।
௯௪।௰௪௬
கரிஷ்யதி பவாந் யதி। அஸக்யம் உக்தம் பவதா। ௯௪।௰௪௬
சஞ்சலத்வாத் தி ேசதஸ:। வாக்ஷரீரவிநிஷ்பாத்யம்। ௯௪।௰௪௭
யச் சக்யம் தத் உதீரய। உத்திஷ்டதா ப்ரஸ்வபதா। ௯௪।௰௪௭
ப்ரஸ்திேதந கமிஷ்யதா। ேகாவிந்ேததி ஸதா வாச்யம்। ௯௪।௰௪௮
க்ஷுதப்ரஸ்கலிதாதிஷு। கார்யம் வர்த்மநி மூடாநாம்। ௯௪।௰௪௮
ேக்ஷமமார்ேக அவதாரணம்। ஹிதம் ச வாச்யம் ப்ருஷ்ேடந। ௯௪।௰௪௯
ஸத்ரூணாம் அபி ஜாநதா। ஏதத் தேவாபகாராய। ௯௪।௰௪௯
பவிஷ்யத்ய் அநுபாலிதம்। யத்ய் அந்யத் உபஸம்ஹர்தும்। ௯௪।௰௫
ந ஸக்ேநாஷி மஹீபேத। இத்ய் உக்த்வா ப்ரயெயௗ விப்ரஸ்। ௯௪।௰௫
ேதந வர்த்மநி தர்ஸிேத। ேஸா அபி தச் சாஸநம் ஸர்வம்। ௯௪।௰௫௧
க்ஷத்ரபந்துஸ் சகார ஹ। ேகாவிந்ேததி க்ஷுேத கச்சந்। ௯௪।௰௫

ப்ரஸ்தாநஸ்கலிதாதிஷு। உதீரயந்ந் அவாபாக்ர்யாம்। ௯௪।௰௫௨
ரதிம் தத்ர ஸைந: ஸைந:। தத: காேலந மஹதா। ௯௪।௰௫௨
க்ஷத்ரபந்துர் மமார ைவ। அஜாயத ச விப்ரஸ்ய। ௯௪।௰௫௩
குேல ஜாதிஸ்மேரா ந்ருப। தஸ்ய ஸம்ஸ்மரேதா ஜாதீ:। ௯௪।௰௫௩
ஸதேஸா அத ஸஹஸ்ரஸ:। நிர்ேவத: ஸுமஹாஞ் ஜஜ்ேஞ।
௯௪।௰௫௪
ஸம்ஸாேர அத்ராதிது:கேத। ஸ சிந்தயாம் ஆஸ ஜகத்। ௯௪।௰௫௪
ஸர்வம் ஏதத் அேசதநம்। அஹம் ஏேகா அத்ர ஸம்ஜ்ஞாவாந்।
௯௪।௰௫௪
ேகாவிந்ேதாதீரிதம் ஹி யத்। யச் சாத்வநி விமூடாநாம்। ௯௪।௰௫௫
க்ருதம் வர்த்மாவதாரணம்। ஹிதம் உக்தம் ச ப்ருஷ்ேடந। ௯௪।௰௫௫
தஸ்ய ஜாதிஸ்ம்ருதி: பலம்। ேஸா அஹம் ஜாதிஸ்மேரா பூய:।
௯௪।௰௫௫
கரிஷ்யாம்ய் அதிஸம்கேட। ததா ஸம்ஸாரசக்ேர அஸ்மிந்। ௯௪।௰௫௬
ேயந ப்ராப்ஸ்யாமி நிர்வ்ருதிம்। யஸ்ேயாச்சாரணமாத்ேரண।
௯௪।௰௫௬
ஜாதா ஜாதிஸ்ம்ருதிர் மம। தம் ஏவாராதயிஷ்யாமி। ௯௪।௰௫௭
ஜகதாம் ஈஸ்வரம் ஹரிம்। யந்மயம் பரமம் ப்ரஹ்ம। ௯௪।௰௫௭
தத் அவ்யக்தம் ச யந்மயம்। யந்மயம் வ்யக்தம் அப்ய் ஏதத்।
௯௪।௰௫௮
பவிஷ்யாமி ஹி தந்மய:। யத்ய் அநாராதிேத விஷ்ெணௗ। ௯௪।௰௫௮
மைமதஜ் ஜந்ம யாஸ்யதி। த்ருவம் பந்தவேதா முக்திர்। ௯௪।௰௫௯
ைநவ ஜாதூபபத்யேத। அேஹா து:கம் அேஹா து:கம்। ௯௪।௰௫௯

அேஹா து:கம் அதீவ ஹி। ஸ்வரூபம் அதிேகாரஸ்ய। ௯௪।௰௬
ஸம்ஸாரஸ்யாதிதுர்லபம்। விண்மூத்ரபூயகலிேல। ௯௪।௰௬
கர்பவாேஸ அதிபடநாத் ீ । அஸுசாவ் அதிபபத்ேஸ ீ । ௯௪।௰௬௧
து:கம் அத்யந்தது:ஸஹம்। து:கம் ச ஜாயமாநாநாம்। ௯௪।௰௬௧
காத்ரபங்காதிபடநாத் ீ । வாேதந ப்ேரர்யமாணாநாம்। ௯௪।௰௬௨
மூர்சாகார்ய் அதிபதிதம் ீ । பாலத்ேவ நிர்விேவகாநாம்। ௯௪।௰௬௨
பூதேதவாத்மஸம்பவம்। ெயௗவேந வார்த்தேக ைசவ। ௯௪।௰௬௩
மரேண சாதிதாருணம்। ஸேதாஷ்ணத்ருஷ்ணாக்ஷுத்ேராக ீ । ௯௪।௰௬௩
ஜ்வராதிபரிவாரித:। ஸர்வைதவ புமாந் ஆஸ்ேத। ௯௪।௰௬௪
யாவஜ் ஜந்மாந்தஸம்ஸ்திதி:। து:காதிஸயபூதம் ஹி। ௯௪।௰௬௪
யத் அந்ேத வாஸுகம் ந்ருணாம்। தஸ்யாநுமாநம் ைநவாஸ்தி।
௯௪।௰௬௫
கார்ேயைணவாநுமீயேத। க்ருஷ்யமாணஸ்ய புருைஷர்। ௯௪।௰௬௫
யத் யமஸ்யாதிது:ஸஹம்। து:கம் தத்ஸம்ஸ்ம்ருதிப்ராப்தம்।
௯௪।௰௬௬
கேராதி மம ேவபதும்। கும்பபாேக ீ தப்தகும்ேப। ௯௪।௰௬௬
மஹாெரௗரவெரௗரேவ। காலஸூத்ேர மஹாயந்த்ேர। ௯௪।௰௬௭
ஸூகேர கூடஸால்மெலௗ। அஸிபத்ரவேந து:கம்। ௯௪।௰௬௭
அப்ரதிஷ்ேட ச யந் மஹத்। விடாலவக்த்ேர ச ததா। ௯௪।௰௬௮
தமஸ்ய் உக்ேர ச து:ஸஹம்। ஸஸ்த்ராக்நியந்த்ரேவேகஷு।
௯௪।௰௬௮
ஸேதாஷ்ணாதிஷு ீ தாருணம்। ததஸ் ச முக்தஸ்ய புநர்। ௯௪।௰௬௯
ேயாநிஸம்க்ரமேணஷு யத்। கர்பஸ்தஸ்ய ச யத் து:கம்। ௯௪।௰௬௯

அதிது:ஸஹம் உல்வணம்। புநஸ் ச ஜாயமாநஸ்ய। ௯௪।௰௭
ஜந்ம ெயௗவநஜம் ச யத்। து:காந்ய் ஏதாந்ய் அஸஹ்யாநி। ௯௪।௰௭
ஸம்ஸாராந்தர்விவர்திபி:। புருைஷர் அநுபூயந்ேத। ௯௪।௰௭௧
ஸுகப்ராந்திவிேமாஹிைத:। ந ைவ ஸுககலா காசித்। ௯௪।௰௭௧
தத்ராஸ்த்ய் அத்யந்தது:கேத। ஸம்ஸாரஸம்கேட தீவ்ேர। ௯௪।௰௭௨
உேபதாநாம் கதாசந। விஷயாஸக்தசித்தாநாம்। ௯௪।௰௭௨
மநுஷ்யாணாம் கதா மதி:। ஸம்ஸாேராத்தாரேண வாஞ்சாம்। ௯௪।௰௭௩
கரிஷ்யதி ஹி சஞ்சலா। ேகாவிந்தநாம்நா ஸததம்। ௯௪।௰௭௩
ஸமுச்சாரணஸம்பவம்। ஜாதிஸ்மரத்வம் ஏதந் ந:। ௯௪।௰௭௪
கிம் வ்ருைதவ ப்ரயாஸ்யதி। ேஸா அஹம் முக்திப்ரதாநார்தம்।
௯௪।௰௭௪
அநந்தம் அஜம் அவ்யயம்। தச்சித்தஸ் தந்மேயா பூத்வா। ௯௪।௰௭௫
ேதாஷயிஷ்யாமி ேகஸவம்। ஆத்மாநம் ஆத்மைநவம் ஸ। ௯௪।௰௭௫
ப்ேராக்த்வா ஜாதிஸ்மேரா த்விஜ:। துஷ்டாவ வாக்பிர் இஷ்டாபி:।
௯௪।௰௭௬
ப்ரணத: புருேஷாத்தமம்। ப்ரணிபத்யாக்ஷரம் விஸ்வம்। ௯௪।௰௭௬
விஸ்வேஹதும் நிரஞ்ஜநம்। யத் ப்ரார்தயாம்ய் அவிகலம்। ௯௪।௰௭௭
ஸகலம் தத் ப்ரயச்சது। கர்தாரம் அக்ருதம் விஷ்ணும்। ௯௪।௰௭௭
ஸர்வகாரணகாரணம்। அேணார் அணயாம்ஸம் ீ அஜம்। ௯௪।௰௭௮
ஸர்வவ்யாபிநம் ஈஸ்வரம்। பராத் பரதரம் யஸ்மாந்। ௯௪।௰௭௮
நாஸ்தி ஸர்ேவஸ்வராத் பரம்। தம் ப்ரணம்யாச்யுதம் ேதவம்।
௯௪।௰௭௯
ப்ரார்தயாமி யத் அஸ்து தத்। ஸர்ேவஸ்வராச்யுதாநந்த। ௯௪।௰௭௯

பரமாத்மஞ் ஜநார்தந। ஸம்ஸாராப்திமஹாேபாத। ௯௪।௰௮
ஸமுத்தர மஹார்ணவாத்। வ்ேயாமாநிலாக்ந்யம்புதராஸ்வரூப।
௯௪।௰௮
தந்மாத்ரஸர்ேவந்த்ரியபுத்திரூப। அந்த:ஸ்திதாத்மந் பரமாத்மரூப।
௯௪।௰௮௧
ப்ரஸதீ ஸர்ேவஸ்வர விஸ்வரூப। தம் ஆதிர் அந்ேதா ஜகேதா அஸ்ய
மத்யம்। ௯௪।௰௮௧
ஆேதஸ் த்வம் ஆதி: ப்ரலயஸ்ய சாந்த:। த்வத்ேதா பவத்ய் ஏதத் அேஸஷம்
ஈஸ। ௯௪।௰௮௨
த்வய்ய் ஏவ சாந்ேத லயம் அப்யுைபதி। ப்ரதீபவர்த்யந்தகேதா அக்நிர் அல்ேபா।
௯௪।௰௮௨
யதாதிகேக்ஷ விததம் ப்ரயாதி। தத்வத் விஸ்ருஷ்ேடர் அமராதிபிந்ைநர்।
௯௪।௰௮௩
விகாஸம் ஆயாஸி விபூதிேபைத:। யதா நதீநாம் பஹேவா அம்புேவகா:।
௯௪।௰௮௩
ஸமந்தேதா அப்திம் பகவந் விஸந்தி। த்வய்ய் அந்தகாேல ஜகத் அச்யுேததம்।
௯௪।௰௮௪
ததா லயம் கச்சதி ஸர்வபூேத। த்வம் ஸர்வம் ஏதத் பஹுைதக ஏவ।
௯௪।௰௮௪
ஜகத்பேத கார்யம் இவாப்யுேபதம்। யத் அஸ்தி யந் நாஸ்தி ச தத் த்வம் ஏவ।
௯௪।௰௮௫
ஹேர த்வதந்யத் பகவந் கிம் அஸ்தி। கிம்த்வ் ஈஸ மாயா பவேதா நிேஜயம்।
௯௪।௰௮௫
ஆவிஷ்க்ருதாவிஷ்க்ருதேலாகஸ்ருஷ்ேட। யயாஹம் ஏேஷா அந்யதேமா
மேமதி। ௯௪।௰௮௬

மதீயம் அஸ்யாபிவதந்தி மூடா:। தயா விமூேடந மயாபநாப।
௯௪।௰௮௬
ந யத் க்ருதம் தத் க்வசித் அஸ்தி கிம்சித்। பூம்யம்பராக்நிஸலிேலஷு ேதவ।
௯௪।௰௮௭
ஜாக்ரத்ஸுஷுப்தாதிஷு து:கிேதந। ந ஸந்தி தாவந்தி ஜலாந்ய் அபட்யீ ।
௯௪।௰௮௭
ஸர்ேவஷு நாதாப்திஷு ஸர்வகாலம்। ஸ்தந்யாநி யாவந்தி மயாதிேகாேர।
௯௪।௰௮௮
பதாநி ீ ஸம்ஸாரமஹாஸமுத்ேர। ஸம்பச் சிலாநாம் ஹிமவந்மேஹந்த்ர ।
௯௪।௰௮௮
ைகலாஸேமர்வாதிஷு ைநவ தாத்ருக்। ேதஹாந்ய் அேநகாந்ய்
அநுக்ருஹ்ணேதா ேம। ௯௪।௰௮௯
ப்ராப்தாஸ்திஸம்பந் மஹதி யேதஸ। த்வய்ய் அர்பிதம் நாத புந: புநர் ேம।
௯௪।௰௮௯
மந: ஸமாக்ஷிப்ய ஸுதுர்தேரா அபி। ராேகா ஹி வஸ்யம் குருேத தேதா
அநு। ௯௪।௰௯
ேலாபாதய: கிம் பகவந் கேராமி। ஏகாக்ரதாமூல்யபேலந லப்யம்।
௯௪।௰௯
பெவௗஷதம் த்வம் பகவந் கிைலக:। மந: பராயத்தம் இதம் பேவ அஸ்மிந்।
௯௪।௰௯௧
ஸம்ஸாரது:காத் கிம் அஹம் கேராமி। ந ஸந்தி ேத ேதவ புவி ப்ரேதஸா।
௯௪।௰௯௧
ந ேயஷு ஜாேதா அஸ்மி ததா விநஷ்ட:। அத்தா மயா ேயஷு ந ஜந்தவஸ் ச।
௯௪।௰௯௨

ஸம்பக்ஷிேதா ையஸ் ச ந ஜந்துஸம்ைக:। ஸிம்ேஹந பூத்வா பஹேவா
மயாத்தா। ௯௪।௰௯௨
வ்யாக்ேரண பூத்வா பஹேவா மயாத்தா:। ததாந்யரூைபர் பஹேவா மயாத்தா:।
௯௪।௰௯௩
ஸம்பக்ஷிேதா அஹம் பஹுபிஸ் ததஸ் ச। உத்க்ராந்திது:காந்ய்
அதிது:ஸஹாநி। ௯௪।௰௯௩
ஸஹஸ்ரேஸா யாந்ய் அநுஸம்ஸ்மராமி। ைத: ஸம்ஸ்ம்ருைதஸ் தத்
க்ஷணம் ஏவ ேதவ। ௯௪।௰௯௪
தடித் யதா ேம ஹ்ருதயம் ப்ரயாதி। ததஸ் ச து:காந்ய் அநிவாரணாநி।
௯௪।௰௯௪
யந்த்ராக்நிஸஸ்த்ெரௗகஸமுத்பவாநி। பவந்தி யாந்ய் அச்யுத நாரகாநாம்।
௯௪।௰௯௫
தாந்ய் ஏவ ேதஷாம் உபமாநமாத்ரம்। து:காந்ய் அஸஹ்யாநி ச கர்பவாேஸ।
௯௪।௰௯௫
விண்மூத்ரமத்ேய அதிநிபடிதஸ்ய ீ । பவந்தி யாநி ச்யவதஸ் ச கர்பாத்।
௯௪।௰௯௬
ேதஷாம் ஸ்வரூபம் கதிதும் ந ஸக்யம்। து:காநி பாேலஷு மஹந்தி நாத।
௯௪।௰௯௬
ெகௗமாரேக ெயௗவநிநஸ் ச பும்ஸ:। ஜ்வராதிஸாராக்ஷிருகாதிகாநி।
௯௪।௰௯௭
ஸமஸ்தது:காலய ஏவ வ்ருத்த:। கேராதி கர்மாச்யுத தத்க்ஷேணந।
௯௪।௰௯௭
பாபம் நர: காயமேநாவேசாபி:। யஸ்யாப்தலைக்ஷர் அபி நாந்தம் ஏதி।
௯௪।௰௯௮

ஸஸ்த்ராதியந்த்ராக்நிநிபடேநஷு ீ । து:காநி யாநீஷ்டவிேயாகஜாநி।
௯௪।௰௯௮
பவந்தி ஸம்ஸாரவிஹாரபாஜாம்। ப்ரத்ேயகஸஸ் ேதஷு நரா விநாஸம்।
௯௪।௰௯௯
இச்சந்த்ய் அஸூநாம் மமதாபிபூதா:। ேஸாகாபிபூதஸ்ய மமாஸ்ரு ேதவ।
௯௪।௰௯௯
யாவத்ப்ரமாணம் ந ஜலம் பேயாதா। தாவத்ப்ரமாணம் ந ஜலம் பேயாதா।
௯௪।௧
முஞ்சந்த்ய் அேநைகர் அபி வர்ஷலைக்ஷ:। மந்ேய தரித்ரீ
பரமாணுஸம்க்யாம்। ௯௪।௧
உைபதி பித்ேரார் கணநாமேஸஷம்। மித்ராண்ய் அமித்ராண்ய் அநுஜவிபந்தூந் ீ ।
௯௪।௧௰௧
ஸம்க்யாதம் ஈேஸா அஸ்மி ந ேதவேதவ। ேஸா அஹம் ப்ருஸார்த:
கருணாம் குரு த்வம்। ௯௪।௧௰௧
ஸம்ஸாரகாத்ேர பதிதஸ்ய விஷ்ேணா। மஹாத்மநாம் ஸம்ஸ்ரயம்
அப்யுேபேதா। ௯௪।௧௰௨
ைநவாவஸதத்ய் ீ அதிதுர்கேதா அபி। பராயணம் ேராகவதாம் ஹி ைவத்ேயா।
௯௪।௧௰௨
மஹாப்திமக்நஸ்ய ச ெநௗர் நரஸ்ய। பாலஸ்ய மாதாபிதெரௗ ஸுேகார ।
௯௪।௧௰௩
ஸம்ஸாரகிந்நஸ்ய ஹேர த்வம் ஏக:। ப்ரஸதீ ஸர்ேவஸ்வர ஸர்வபூத।
௯௪।௧௰௩
ஸர்வஸ்ய ேஹேதா பரமார்தஸார। மாம் உத்தராஸ்மாத் உருது:கபங்காத்।
௯௪।௧௰௪

ஸம்ஸாரகர்தாத் ஸ்வபரிக்ரேஹண। தர்மாத்மநாம் அவிகலாம் த்வயி நாத
பக்திம்। ௯௪।௧௰௪
ஸ்ரத்தாவதாம் ஸததம் உத்வஹதாம் வேரண்ய। கார்யம் கியந் மம
விமூடதிேயா அதமஸ்ய। ௯௪।௧௰௫
பூத்வா க்ருபாலுர் அமலாம் அஜ ேதஹி புத்திம்। ஜ்ஞாத்வா யயாகிலம்
அஸாரம் அஸாரம் ஏவ। ௯௪।௧௰௫
பூேதந்த்ரியாதிகம் அபாரம் அமுக்திமூலம்। மாயாந்தேரயம் அசலாம் தவ
விஸ்வரூப। ௯௪।௧௰௬
ஸம்ேமாஹிதம் ஸகலம் ஏவ ஜகத் யையதத்।
ப்ரஹ்ேமந்த்ரருத்ரமருதஸ்விதிவாகராத்யா। ௯௪।௧௰௬
ஜ்ஞாதும் ந யம் பரமகுஹ்யதமம் ஸமர்தா:। ந த்வாம் அலம் ஸ்துதிபேதஷ்வ்
அஹம் ஈஸிதாரம்। ௯௪।௧௰௭
ஸ்ேதாஷ்யாமி ேமாஹகலுஷால்பமதிர் மநுஷ்ய:। யஸ்மாத் இதம் பவதி யத்ர
ஜகத் தேததம்। ௯௪।௧௰௭
யஸ்மிம்ல் லயம் வ்ரஜதி யஸ் ச ஜகத்ஸ்வரூப:। தம்
ஸர்கஸம்ஸ்திதிவிநாஸநிமித்தபூதம்। ௯௪।௧௰௮
ஸ்ேதாதும் பவந்தம் அலம் ஈஸ ந கஸ்சித் அஸ்தி। மூேடா அயம் அல்பமதிர்
அல்பஸுேசஷ்டிேதா அயம்। ௯௪।௧௰௮
க்லிஷ்டம் மேநா அஸ்ய விஷையர் ந மயி ப்ரஸங்கி। இத்தம் க்ருபாம் குரு
மயி ப்ரணேத கிேலஸ। ௯௪।௧௰௯
த்வாம் ஸ்ேதாதும் அம்புஜபேவா அபி ஹி ேதவ ேநஸ:। யஸ்ேயாதேர ஸகல
ஏவ மஹீத்ரசந்த்ர । ௯௪।௧௰௯
ேதேவந்த்ரருத்ரமருதஸ்விதிவாகராக்நி । பூம்யம்புவாயுககநம் ஜகதாம்
ஸமுஹாம்। ௯௪।௧௧

ஸ்ேதாஷ்யாமி தம் ஸ்துதிபைத: கதைமர் பவந்தம்।
யஸ்யாக்நிருத்ரகமேலாத்பவவாஸவாத்ைய:। ௯௪।௧௧
ஸ்வாம்ஸாவதாரகரேணஷு ஸதாங்க்ரியுக்மம்। அப்யர்ச்யேத வத ஹேர ஸ
கதம் மயாத்ய। ௯௪।௧௧௧
ஸம்பூஜித: பரம் உைபஷ்யஸி ேதாஷம் ஈஸ। ந ஸ்ேதாதும் அச்யுத பவந்தம்
அஹம் ஸமர்ேதா। ௯௪।௧௧௧
ைநவார்சைநர் அலம் அஹம் தவ ேதவ ேயாக்ய:। சித்தம் ச ந த்வயி
ஸமாஹிதம் ஈஸ ேதாைஷர்। ௯௪।௧௧௨
ஆக்ஷிப்யேத கதய கிம் நு கேராமி பாப:। தத் த்வம் ப்ரஸதீ பகவந் குரு மய்ய்
அநாேத। ௯௪।௧௧௨
விஷ்ேணா க்ருபாம் பரமகாருணிக: கில த்வம்। ஸம்ஸாரஸாகரநிமக்நம்
அநந்த தீநம்। ௯௪।௧௧௩
உத்தர்தும் அர்ஹஸி ஹேர புருேஷாத்தேமா அஸி। இத்தம் ேதந நரவ்யாக்ர।
௯௪।௧௧௩
ஸ்துேதா பக்திமதா தத:। ஸம்ஸாரபந்தபேதந ீ । ௯௪।௧௧௪
க்ருஷ்ண: ப்ரத்யக்ஷதாம் யெயௗ। ஸ தம் ப்ரத்யக்ஷம் ஈஸாநம்।
௯௪।௧௧௪
அநந்தம் அபராஜிதம்। ேதவேதவம் உவாேசதம்। ௯௪।௧௧௫
அநாதிநிதநம் ஹரிம்। ஸிரஸா தரணம்ீ கத்வா। ௯௪।௧௧௫
யதவாக்காயமாநஸ:। பராபேரஸ்வரம் விஷ்ணும்। ௯௪।௧௧௬
ஜிஷ்ணும் ஆத்யம் அேநாபமம்। திவ்யாக்ஷரபதாநந்த। ௯௪।௧௧௬
ப்ரஸந்ேநா பகவாந் யதி। தத் ேதவ ேதஹி தீநாய। ௯௪।௧௧௭
மஹ்யம் ஏகம் இமம் வரம்। வரம் வரய மத்தஸ் த்வம்। ௯௪।௧௧௭
யத் ேத மநஸி வர்தேத। வரார்திநாம் த்விஜஸ்ேரஷ்ட। ௯௪।௧௧௮

நாபலம் மம தர்ஸநம்। ஜந்மஸம்பச்சிதா ேதவ। ௯௪।௧௧௮
பாபஸம்பந் மமாகிலா। ப்ரயாது நாஸம் ஈேஸஸ। ௯௪।௧௧௯
த்வத்ப்ரஸாதாத் அேதாக்ஷஜ। பக்திபாவபேரணாத்ய। ௯௪।௧௧௯
மந்மேயந த்விேஜாத்தம। ய: ஸ்துேதா அஸ்மி க்ஷயம் பாபம்। ௯௪।௧௨
ேதைநவாகிலம் ஆகதம்। அஸ்மத்ேதா வரேயஹாத்ய। ௯௪।௧௨
த்விஜவர்யாபரம் வரம்। மயி பக்திமதாம் அத்ர। ௯௪।௧௨௧
ேலாேக கிம்சிந் ந துர்லபம்। தந்ேயா அஸ்மி ஸர்வநாேதந। ௯௪।௧௨௧
யத்க்ருேதா மய்ய் அநுக்ரஹ:। தத் ஏகம் ஏவ த்வத்ேதா அஹம்।
௯௪।௧௨௨
வரம் இச்சாமி ேகஸவ। நிர்தூதஸர்வபாேபப்ேயா। ௯௪।௧௨௨
நாத புண்யக்ஷயாந் மம। த்வத்பரஸ்யாஸ்து ேகாவிந்த। ௯௪।௧௨௩
மா புநர் ேதஹஸம்பவ:। யத் அக்ஷரம் யத் அசலம்। ௯௪।௧௨௩
வ்யாபி ஸூŠமம் ச யத் பரம்। விேஸஷார் அவிேஸஷம் ச।
௯௪।௧௨௪
கச்ேசயம் தத் பதம் தவ। ஏவம் பவிஷ்யதீத்ய் உக்த்வா। ௯௪।௧௨௪
ப்ரஸாதஸுமுகஸ் தத:। பூபால தம் த்விஜஸ்ேரஷ்டம்। ௯௪।௧௨௫
கேதா அந்தர்தாநம் ஈஸ்வர:। தத்ப்ரஸாதாத் த்விஜ: ேஸா அபி।
௯௪।௧௨௫
தந்மயஸ் தத்வ்யபாஸ்ரய:। ப்ரக்ஷணகர்மபந்தஸ் ீ து। ௯௪।௧௨௬
ப்ரயாத: பரமம் பதம்। ஏவம் அக்ஷீணபாேபா அபி। ௯௪।௧௨௬
ஜகதாம் ஈஸ்வேரஸ்வரம்। வ்யபாஸ்ரிேதா ஹரிம் யாதி। ௯௪।௧௨௭
பாபமுக்த: பரம் பதம்। ஏதத் த்வயா நாவ்ரதிேந। ௯௪।௧௨௭
ந சாஸுஸ்ரூஷேவ பரம்। ஆக்ேயயம் ராஜஸார்தூல। ௯௪।௧௨௮

யஸ் ச நார்சயேத ஹரிம்। விஷ்ணுபக்தாய தாந்தாய। ௯௪।௧௨௮
வ்ரதிேந புண்யஸலிேந ீ । கதநீயம் இதம் பூப। ௯௪।௧௨௯
ரஹஸ்யம் பரமம் ஹேர:। பஹுேஸா பவதா ப்ேராக்தம்। ௯௪।௧௨௯
ஸாம்ப்ரதம் ச யத் ஈரிதம்। ஸ்ேராதும் இச்சாமி விப்ேரந்த்ர। ௯௫।௰௰௧
தத் விஷ்ேணா: பரமம் பதம்। யத்ஸ்வரூபம் யதாதாரம்। ௯௫।௰௰௧
யத்ப்ரமாணம் யதாத்மகம்। ஸர்வதாது: பதம் தந் ேம। ௯௫।௰௰௨
ஸ்ேராதும் இச்சா ப்ரவர்தேத। ஸாத்வ் ஏதத் பவதா ப்ருஷ்டம்।
௯௫।௰௰௨
ப்ருஷ்டம் ஆத்மஜ்ஞாநஸமாஸ்ரிதம்। தத் கத்யமாநம் ஏகாக்ர:।
௯௫।௰௰௩
ஸ்ருணு விஷ்ேணா: பரம் பதம்। யத் தத் ப்ரஹ்ம யத: ஸர்வம்।
௯௫।௰௰௩
யத் ஸர்வம் ஸர்வஸம்ஸ்திதி:। அக்ராஹ்யகம் அநிர்ேதஸ்யம்।
௯௫।௰௰௪
தத் ஏவ பகவத்பதம்। தத்ஸ்வரூபம் ச ராேஜந்த்ர। ௯௫।௰௰௪
ஸ்ருணுஷ்ேவஹ ஸமாஹித:। விஷ்ேணா: பதஸ்யாவ்யயஸ்ய।
௯௫।௰௰௫
ப்ரஹ்மேணா கதேதா மம। ப்ரதாநாதிவிேஸஷாந்தம்। ௯௫।௰௰௫
யத் ஏதத் பட்யேத ஜகத்। சராசரஸ்ய தஸ்யாத்யம்। ௯௫।௰௰௬
பரம் ப்ரஹ்ம விலக்ஷணம்। ஜந்மஸ்வப்நாதிரூபாதி । ௯௫।௰௰௬
து:காதிரஹிதம் ச யத்। ேநாபசர்யம் அநிர்ேதஸ்யம்। ௯௫।௰௰௭
ஸ்வப்ரதிஷ்டம் ச தத் பரம்। க்ஷணக்ேலஸாஸ் ீ து ஸம்ஸார ।
௯௫।௰௰௭

விமுக்திபதம் ஆஸ்ரிதா:। ேயாகிநஸ் தத் ப்ரபஸ்யந்தி। ௯௫।௰௰௮
ஸமர்தா ைநவ ேசாதிதும்। தத் ஸர்வம் ஸர்வபாவஸ்தம்। ௯௫।௰௰௮
விேஸேஷண விவர்ஜிதம்। பஸ்யதாம் அப்ய் அநிர்ேதஸ்யம்।
௯௫।௰௰௯
யேதா வாக்விஷேய ந தத்। குர்வந்த்ய் ஆலம்பநத்ேவந। ௯௫।௰௰௯
யத்ப்ராப்த்யர்தம் ச ேதவதா:। ப்ரஹ்ம ப்ரகாஸேத ேதஷாம்। ௯௫।௰௧
தத் வேரைணவ ஸர்வகம்। ப்ரதாநாதிவிேஸஷாந்தம்। ௯௫।௰௧
யத்ைரதத் அகிலம் ஜகத்। தஸ்யாநந்தஸ்ய க: ஸக்த:। ௯௫।௰௧௧
ப்ரமாணம் கதிதும் நர:। ஸூŠமாணாம் தத் பரம் ஸூŠமம்।
௯௫।௰௧௧
ஸ்தூலாநாம் தந் மஹத்தரம்। ஸர்வவ்யாப்ய் அபி ராேஜந்த்ர।
௯௫।௰௧௨
தூரஸ்தம் சாந்திேக ச தத்। பராங்முகாநாம் ேகாவிந்ேத। ௯௫।௰௧௨
விஷயாக்ராந்தேசதஸாம்। ேதஷாம் தத் பரமம் ப்ரஹ்ம। ௯௫।௰௧௩
தூராத் தூரதேர ஸ்திதம்। ந ப்ராப்நுவந்தி கச்சந்ேதா। ௯௫।௰௧௩
யேதா ஜந்மாயுைதர் அபி। ஸம்ஸாராத்வநி ராேஜந்த்ர। ௯௫।௰௧௪
தேதா தூரதேர ஹி தத்। தந்மயத்ேவந ேகாவிந்ேத। ௯௫।௰௧௪
ய நரா ந்யஸ்தேசதஸ:। விஷயத்யாகிநஸ் ேதஷாம்। ௯௫।௰௧௫
விஜ்ேஞயம் ச ததந்திேக। ஸர்வத: பாணிபாதாந்தம்। ௯௫।௰௧௫
ஸர்வேதா அக்ஷிஸிேராமுகம்। ஸர்வத: ஸ்ருதிமல் ேலாேக।
௯௫।௰௧௬
ஸர்வம் ஆவ்ருத்ய திஷ்டதி। ஸர்ேவந்த்ரியகுநாபாஸம்। ௯௫।௰௧௬
ஸர்ேவந்த்ரியவிவர்ஜிதம்। அஸக்தம் ஸர்வப்ருச் ைசநந்। ௯௫।௰௧௭

நிர்குணம் குணேபாக்த்ரு ச। அவிபக்தம் ச பூேதஷு। ௯௫।௰௧௭
விபக்தம் இவ ச ஸ்திதம்। பூதபர்த்ரு ச தஜ் ஜ்ேஞயம்। ௯௫।௰௧௮
க்ரஸிஷ்ணு ப்ரபவிஷ்ணு ச। ஜ்ேயாதிஷாம் அபி தஜ் ஜ்ேயாதிஸ்।
௯௫।௰௧௮
தமஸ: பரம் உச்யேத। ஜ்ஞாநம் ஜ்ேஞயம் ஜ்ஞாநகம்யம்। ௯௫।௰௧௯
ஹ்ருதி ஸர்வஸ்ய் அதிஷ்டிதம்। தச் சாத்ேயா ஜகதாம் ஈஸ:।
௯௫।௰௧௯
பேரஸ: பரேமஸ்வர:। பராபரஸ்வரூேபண। ௯௫।௰௨
விஷ்ணு: ஸர்வஹ்ருதி ஸ்தித:। யஜ்ேஞஸம் யஜ்ஞபுருஷம்। ௯௫।௰௨
ேகசித் இச்சந்தி தத்பரம்। ேகசித் விஷ்ணும் ஹரிம் ேகசித்। ௯௫।௰௨௧
ேகசித் ேகஸவஸம்ஜ்ஞிதம்। ேகசித் ேகாவிந்தநாமாநம்। ௯௫।௰௨௧
புண்டரீகாக்ஷம் அச்யுதம்। ேகசிஜ் ஜநார்தநம் த்வ் அந்ேய। ௯௫।௰௨௨
வதந்தி புருேஷாத்தமம்। ேகசித் விரிஞ்சிம் ப்ராஹ்மணம்। ௯௫।௰௨௨
அப்ஜேயாநிம் ததாபேர। ஸர்வம் ஈஸம் அஜம் ருத்ரம்। ௯௫।௰௨௩
ஸூலிநம் சாபேர ந்ருப। வருணம் ேகசித் ஆதித்யம்। ௯௫।௰௨௩
இந்த்ரம் அக்நிம் அதாபேர। யமம் தேநஸம் அபேர। ௯௫।௰௨௪
ேஸாமம் அந்ேய ப்ரஜாபதிம்। ஹிரண்யகர்பம் கபிலம்। ௯௫।௰௨௪
ேக்ஷத்ரஜ்ஞம் காலம் ஈஸ்வரம்। ஸ்வபாவம் அந்தராத்மாநம்।
௯௫।௰௨௫
ஆத்மாநம் புத்திரூபிணம்। வதந்தி நாமபிஸ் சாந்ையர்। ௯௫।௰௨௫
அநாமாநம் அரூபிணம்। ஸ்ரூயதாம் து நரவ்யாக்ர। ௯௫।௰௨௫
ேவதேவதாந்தநிஸ்சய:। யஜ்ேஞேஸா யஜ்ஞபுருேஷா। ௯௫।௰௨௬
புண்டரீகாக்ஷஸம்ஜ்ஞித:। தத் விஷ்ேணா: பரமம் ப்ரஹ்ம। ௯௫।௰௨௬

யேதா நாவர்தேத புந:। ஸ ஏவ ருத்ரஸ் சந்த்ேரா அக்நி:। ௯௫।௰௨௭
ஸூர்ேயா ைவஸ்ரவேணா யம:। ப்ரஹ்மா ப்ரஜாபதி: கால:। ௯௫।௰௨௭
ஸ்வபாேவா புத்திர் ஏவ ச। ேக்ஷத்ரஜ்ஞாக்யஸ் தைதவாந்யா:।
௯௫।௰௨௮
ஸம்ஜ்ஞாபி: ப்ேராச்யேத புைத:। ஸம்ஜ்ஞா து தஸ்ய ைநவாஸ்தி।
௯௫।௰௨௮
ந ரூபம் நாபி கல்பநா। ஸ ஸர்வபூதாநுகத:। ௯௫।௰௨௯
பரமாத்மா ஸநாதந:। ஆக்யாதம் பவதா ப்ரஹ்மந்ந்। ௯௫।௰௨௯
ஏதத் ப்ரஹ்ம ஸநாதநம்। யஸ்மாத் உத்பத்யேத க்ருத்ஸ்நம்।
௯௬।௰௰௧
ஜகத் ஏதச் சராசரம்। கிம்து ெகௗதுகம் அத்ராஸ்தி। ௯௬।௰௰௧
மம பார்கவநந்தந। தத் அஹம் ஸ்ேராதும் இச்சாமி। ௯௬।௰௰௨
த்வத்த: ஸம்ேதஹம் உத்தமம்। யத் ஏதத் பவதாக்யாதம்। ௯௬।௰௰௨
ப்ரஹ்ம ப்ரஹ்மவிதாம் வர। பரிணாேமா ந தஸ்யாஸ்தி। ௯௬।௰௰௩
நிர்குணம் ஸர்வகம் யத:। ஸநாதநாத் ஸர்வகதாத்। ௯௬।௰௰௩
பரிணாமவிவர்ஜிதாத்। கதம் ஸம்ஜாயேத க்ருத்ஸ்நம்। ௯௬।௰௰௪
தஸ்மாத் அபகுணாத் அபி। த்விவிதம் காரணம் பூப। ௯௬।௰௰௪
நிேபாத கதேதா மம। நிமித்தகாரணம் பூர்வம்। ௯௬।௰௰௫
த்விதீயம் பரிணாமி ச। யதா கும்பஸ்ய கரேண। ௯௬।௰௰௫
குலால: ப்ரதமம் ந்ருப। காரணம் பரிணாமாக்யம்। ௯௬।௰௰௬
ம்ருத்த்ரவ்யம் அபரம் ஸ்ம்ருதம்। தர்மாதர்மாதயஸ் தத்வஜ்।
௯௬।௰௰௬
ஜகத்ஸ்ருஷ்ேடர் மஹீபேத। காரணம் பரிணாமாக்யம்। ௯௬।௰௰௭

நிமித்தாக்யம் து தத் பரம்। காரணம் காலககேந। ௯௬।௰௰௭
யதா ஸம்நிதிமாத்ரத:। அவிகாரிதயா ப்ரஹ்ம। ௯௬।௰௰௮
ததா ஸ்ருஷ்ேடர் நேரஸ்வர। அஜ்ஞாநபடலாச்சைநர்। ௯௬।௰௰௮
ஏகேதஸாத்மவ்ருத்திபி:। அநாத்மேவதிபிர் ஜைவர் ீ । ௯௬।௰௰௯
நிஜகர்மநிபந்தைந:। குர்வத்பிர் ந்ருபேத கர்ம। ௯௬।௰௰௯
கர்த்ருத்வம் உபசாரத:। க்ரியேத ஸர்வபூதஸ்ய। ௯௬।௰௧
ஸர்வகஸ்யாவ்யயாத்மந:। யத: ஸம்பந்தவாந் ஏபிர்। ௯௬।௰௧
அேஸைஷ: ப்ராணிபி: ப்ரபு:। கர்த்ருத்வம் உபசாேரண। ௯௬।௰௧௧
ததஸ் தஸ்யாபி பூபேத। ேபதாேபதஸ்வரூேபண। ௯௬।௰௧௧
தத்ர ப்ரஹ்ம வ்யவஸ்திதம்। தேயா: ஸ்வரூபம் ந்ருபேத। ௯௬।௰௧௨
ஸ்ரூயதாம் உபேயார் அபி। அநாதிஸம்பந்தவத்யா। ௯௬।௰௧௨
ேக்ஷத்ரஜ்ஞ: ேக்ஷத்ரவித்யயா। வ்யாப்த: பஸ்யத்ய் அேபேதந।
௯௬।௰௧௩
ப்ரஹ்ம தத் த்ய் ஆத்மநி ஸ்திதம்। பஸ்யத்வ் ஆத்மாநம் அந்யத்ர।
௯௬।௰௧௩
யாவத் ைவ பரமாத்மந:। தாவத் ஸம்ப்ராம்யேத ஜந்துர்। ௯௬।௰௧௪
ேமாஹிேதா நிஜகர்மணா। ஸம்க்ஷநாேஸஷகர்மா ீ து। ௯௬।௰௧௪
பரம் ப்ரஹ்ம ப்ரபஸ்யதி। அேபேதநாத்மந: ஸுத்தம்। ௯௬।௰௧௫
ஸுத்தத்வாத் அக்ஷேயா அக்ஷயம்। ேபதஸ் ச கர்மஜநித:। ௯௬।௰௧௫
ேக்ஷத்ரஜ்ஞபரமாத்மேநா:। ஸம்க்ஷணகர்மபந்தஸ்ய ீ । ௯௬।௰௧௬
ந ேபேதா ப்ரஹ்மணா ஸஹ। உபாஸ்ேயாபாஸ்யகதயா। ௯௬।௰௧௬
ேபேதா ையர் அபி கத்யேத। ெதௗ ஹி ஸுத்த்யர்தம் இச்சந்தி।
௰௯௬।௧௪௭

மலாநாம் தத் உபாஸநம்। பேரா அஸாவ் அபேரணாத்மா। ௰௯௬।௧௪௭
ஸம்த்யக்தமமேதந து। உபாஸ்யேத ததா ேஸா அபி। ௰௯௬।௧௪௭
தத்பாவம் ப்ரதிபத்யேத। கர்மிணாம் கர்மேபேதந। ௰௯௬।௧௪௭
ேபதாத் ஏவாதேயா யத:। கர்மக்ஷயாத் அேஸஷாணாம்। ௯௬।௰௧௭
ேபதாநாம் ஸம்க்ஷயஸ் தத:। அவித்யா து க்ரியா ஸர்வா। ௯௬।௰௧௭
வித்யா ஜ்ஞாநம் ப்ரசக்ஷேத। கர்மணா ஜாயேத ஜந்துர்। ௯௬।௰௧௮
வித்யயா து விமுச்யேத। அத்ைவதம் பரமார்ேதா ஹி। ௯௬।௰௧௮
த்ைவதம் தத்ேபத உச்யேத। உபயம் ப்ரஹ்மேணா ரூபம்। ௯௬।௰௧௯
த்ைவதாத்ைவதவிேபதத:। தேயா: ஸ்வரூபம் வதேதா। ௯௬।௰௧௯
நிேபாத மம பார்திவ। ேதவதிர்யங்மநுஷ்யாக்யஸ்। ௯௬।௰௧௯
தைதவ ந்ருப தாரக:। சதுர்விேதா ஹி ேபேதா ேயா। ௯௬।௰௨
மித்யாஜ்ஞாநநிபந்தந:। அஹம் அந்ேயா அபரஸ் சாயம்। ௯௬।௰௨
அமீசாத்ர ததாபேர। விஜ்ஞாநம் ஏதத் தத் த்ைவதம்। ௯௬।௰௨௧
யத் அந்யச் ச்ரூயதாம் பரம்। மேமத்யஹமிதிப்ரஜ்ஞா । ௯௬।௰௨௧
வியுக்தம் அவிகல்பவத்। அவிகாரம் அநாக்ேயயம்। ௯௬।௰௨௨
அத்ைவதம் அபி பூபேத। அேபேதந தவாக்யாதம்। ௯௬।௰௨௨
யத் ஏதத் ப்ரஹ்ம ஸாஸ்வதம்। ஜ்ஞாநஜ்ேஞையக்யஸத்பாவம்।
௯௬।௰௨௩
தத் ஏவாத்ைவதஸம்ஜ்ஞிதம்। யஸ் ச த்ைவேத ப்ரபஞ்ச: ஸ்யாந்।
௯௬।௰௨௩
நிவர்த்ேயாபயேசதஸ:। மேநாவ்ருத்திமயம் த்ைவதம்। ௯௬।௰௨௪
அத்ைவதம் பரமார்தத:। மநேஸா வ்ருத்தயஸ் தஸ்மாத்। ௯௬।௰௨௪
தர்மாதர்மநிமித்தஜா:। நிேராதவ்யாஸ் தந்நிேராதாத்। ௯௬।௰௨௫

த்ைவதம் ைநேவாபபத்யேத। மேநாத்ருஸ்யம் இதம் த்ைவதம்।
௯௬।௰௨௫
யத் கிம்சித் ஸசராசரம்। மநேஸா ஹ்ய் அமதீபாேவ। ௯௬।௰௨௬
த்ைவதாபாவாத் தத் ஆப்நுயாத்। மேநா ஹி விஷயம் யத்வத்।
௯௬।௰௨௬
ஆதத்ேத தத்வத் ஏவ தத்। பவத்ய் அபாஸ்தவிஷயம்। ௯௬।௰௨௭
க்ராஹிதர்ேம ச ஜாயேத। அக்ராஹி தச் ச வித்ருதம்। ௯௬।௰௨௭
ேயாகிநாம் விஷயம் ப்ரதி। நிேராேத ேயாகஸாமர்த்யாத்। ௯௬।௰௨௮
ப்ரஹ்மக்ராஹ்ய் ஏவ ஜாயேத। க்ராஹ்யம் ச பரமம் ப்ரஹ்ம।
௯௬।௰௨௮
ேயாகிசித்தஸ்ய பார்திவ। ஸமுஜ்ஜிதக்ராஹ்யவ்ருத்திர்। ௯௬।௰௨௯
அமலஸ்ய மலம் மஹத்। க்ஷீணக்ேலஸாஸ் து ஸம்ஸார ।
௯௬।௰௨௯
விமுக்திபதம் ஆஸ்ரிதா:। ேய அபி கர்மாணி குர்வந்தி। ௯௬।௰௩
பகவந்தம் அபாஸ்ரிதா:। க்ரியாேயாகபரா ராஜந்। ௰௯௬।௧௪௮
காமாகாங்க்ஷாவிவர்ஜிதா:। ப்ரஹ்மநிஷ்டா த்யாநபரா। ௰௯௬।௧௪௮
ப்ரஹ்மண்ய் ஏவ வ்யவஸ்திதா:। ேத அபி தத்பாவம் ஆயாந்தி।
௰௯௬।௧௪௮
விமுக்திபதம் ஆஸ்ரிதா:। ேயாகிநஸ் தம் ப்ரபஸ்யந்தி। ௰௯௬।௧௪௮
ஸமர்தா ைநவ ேசாதிதும்। கர்மேணா பாவநா ேயயம்। ௯௬।௰௩
ஸா ப்ரஹ்மபரிபந்திநீ। கர்மபாவநயா துல்யம்। ௯௬।௰௩௧
விஜ்ஞாநம் உபபத்யேத। தாத்ருக் பவேதா விஜ்ஞப்திர்। ௯௬।௰௩௧
யாத்ருஸீ கர்மபாவநா। க்ஷேய தஸ்யா: பரம் ப்ரஹ்ம। ௯௬।௰௩௨

ஸ்வயம் ஏவ ப்ரகாஸேத। ஏவம் ஏதந் மயா பூப। ௯௬।௰௩௨
யதாவத் கதிதம் தவ। த்ைவதாத்ைவதஸ்வரூேபண। ௯௬।௰௩௩
யதா ப்ரஹ்ம வ்யவஸ்திதம்। யதாவத் கர்மநிஷ்டாநாம்। ௯௬।௰௩௩
தத்ப்ராப்தி: கதிதம் ததா। ஸ்வரூபம் ப்ரஹ்மணஸ் ேசாக்தம்।
௰௯௬।௧௪௯
உபயத்ராபி ேத ப்ருதக்। வாஸுேதவமயஸ்யாந்யத்। ௯௬।௰௩௪
கிம் பூய: கதயாமி ேத। ஆக்யாதம் பகவந் ஸம்யக்। ௯௬।௰௩௪
பரம் ப்ரஹ்ம த்வயா மம। விஷ்ணுர் ஏவ ஜகத்தாதா। ௯௭।௰௰௧
ேயாகிநாம் வர்தேத யத:। உபாயஸ் தஸ்ய ய: ப்ராப்ேதா। ௯௭।௰௰௧
விஷ்ேணார் ஈஸஸ்ய பார்கவ। அத்ைவதத்ைவதரூபஸ்ய। ௯௭।௰௰௨
தந் ேம விஸ்தரேதா வத। ேயந ஜந்மஜராம்ருத்யு । ௯௭।௰௰௨
மஹாக்ராஹபவார்ணவம்। த்வத்வாக்யநாவம் ஆருஹ்ய। ௯௭।௰௰௩
முக்திதீரம் அவாப்நுயாம்। தந் மம ப்ரூஹி தத்த்ேவந। ௯௭।௰௰௩
ப்ராப்நுயாம் ேயந தத் பதம்। பந்த: கர்மமேயா ஹ்ய் அத்ர। ௰௯௭।௧௫௰
யதாமுக்திவிகாதக்ருத்। தஸ்யாபகமேந யத்ந:। ௯௭।௰௰௪
கார்ய: ஸம்ஸாரபருணா ீ । ஸுவர்ணாதிமஹாதாந । ௯௭।௰௰௪
புண்யதீர்தாவகாஹைந:। ஸாரீைரஸ் ச ததா க்ேலைஸ:। ௯௭।௰௰௫
ஸாஸ்த்ேராக்ைதஸ் தச்சேமா பேவத்। ேதவதாஸ்துதிஸச்சாஸ்த்ர ।
௯௭।௰௰௫
ஸ்ரவைண: புண்யதர்ஸைந:। குருஸுஸ்ரூஷணாச் ைசவ। ௯௭।௰௰௬
பாபபந்த: ப்ரணஸ்யதி। ப்ரபாகூபதடாகாநி। ௯௭।௰௰௬
ேதவதாயதநாநி ச। காரயந் புருஷவ்யாக்ர। ௯௭।௰௰௭
பாபபந்தாத் ப்ரமுச்யேத। ேயாகிநாம் அத ஸுஸ்ரூஷாம்। ௯௭।௰௰௭

தைதவாவஸதாந் ந்ருப। குர்வந் பூர்தாஸ்ரிதம் சாந்யத்। ௯௭।௰௰௮
பாபபந்தாத் ப்ரமுச்யேத। விஷ்ணு: க்ருஷ்ேணா வாஸுேதேவா।
௯௭।௰௰௮
ேகாவிந்த: புஷ்கேரக்ஷண:। இத்யாதி வ்யாஹரந் நித்யம்। ௯௭।௰௰௯
பாபபந்தாத் ப்ரமுச்யேத। விஸ்ேவா விஸ்ேவஸ்வேரா விஸ்வ ।
௯௭।௰௰௯
விதாதா தாம ஸாஸ்வதம்। விஷ்ணுர் இத்யாதி ச ஜபந்। ௯௭।௰௧
பாபபந்தாத் ப்ரமுச்யேத। பத்மநாேபா ஹ்ருஷீேகஸ:। ௯௭।௰௧
ேகஸேவா மதுஸூதந:। இத்யாதி வ்யாஹரந் நித்யம்। ௯௭।௰௧௧
பாபபந்தாத் ப்ரமுச்யேத। நாராயணஸ் சக்ரதேரா। ௯௭।௰௧௧
விஸ்வரூபஸ் த்ரிவிக்ரம:। இத்யாதி வ்யாஹரந் நித்யம்। ௯௭।௰௧௨
பாபபந்தாத் ப்ரமுச்யேத। விஷ்ெணௗ ப்ரதிஷ்டிதம் விஸ்வம்। ௯௭।௰௧௨
விஷ்ணுர் விஸ்ேவ ப்ரதிஷ்டித:। விஷ்ணுர் விஸ்ேவஸ்வேரா விஸ்வம்।
௯௭।௰௧௩
இதி பாவாத் ப்ரமுச்யேத। ஏவம் ஸம்ஸாந்தபாபஸ்ய। ௯௭।௰௧௩
புண்யவ்ருத்திமேதா ந்ருப। இச்சா ப்ரவர்தேத பூம்ேஸா। ௯௭।௰௧௪
முக்திதாயிஷு கர்மஸு। முக்திதாயநி ீ கர்மாணி। ௯௭।௰௧௪
நிஷ்காேமந க்ருதாநி து। பவந்தி ேதாஷக்ஷயகா:। ௰௯௭।௧௫௧
புண்யபந்தாத் ப்ரமுச்யேத। நித்யைநமித்திகாநீஹ। ௰௯௭।௧௫௧
கர்மாண்ய் உக்தாநி யாநி ைவ। ேதஷாம் நிஷ்காமகாரணாத்। ௯௭।௰௧௫
புண்யபந்த: ப்ரஸாம்யதி। அேநகஜந்மஸம்ஸார । ௯௭।௰௧௫
சிதஸ்யாபி த்ருடாத்மந:। கர்மபந்தஸ்ய ைஸதில்ய । ௯௭।௰௧௬
காரணம் சாபரம் ஸ்ருணு। அஹிம்ஸா நாதிமாநித்வம்। ௯௭।௰௧௬

அதம்பித்வம் அமத்ஸரம்। திதிக்ஷா ஸமதர்ஸித்வம்। ௯௭।௰௧௭
ைமத்ர்யாெதௗ தண்டஸம்யம:। க்ருஜுத்வம் இந்த்ரியஜய:। ௯௭।௰௧௭
ெஸௗசம் ஆசார்யபூஜநம்। புண்யஸ்தவாதிபடநம்। ௯௭।௰௧௮
அைபஸுந்யம் அகத்தநம்। விஷயாந் ப்ரதி ைவராக்யம்। ௯௭।௰௧௮
அநஹம்காரம் ஏவ ச। அகாமித்வம் மந:ஸ்ைதர்யம்। ௯௭।௰௧௯
அத்ேராஹ: ஸர்வஜந்துஷு। அவிவாதஸ் ததா மூைடர்। ௯௭।௰௧௯
அமூைட: ப்ரஸ்நஸத்கதா। விவிக்தேதேஸ அபிரதிர்। ௯௭।௰௨
மஹாஜநவிவர்ஜநம்। ஸத்பி: ஸஹாஸ்ய ஸததம்। ௯௭।௰௨
ேயாகாப்யாேஸா மிேதாக்திதா। ஸ்த்ரீபர்த்ேஸாத்ஸவஸம்லாப ।
௯௭।௰௨௧
விவர்ஜநம் அேவக்ஷணம்। பரேயாஷித்விலாஸாநாம்। ௯௭।௰௨௧
காவ்யாலாபவிவர்ஜநம்। கீதவாதிதந்ருத்ேதஷு। ௯௭।௰௨௨
ம்ருதங்ேகஷ்வ் அபேரஷு ச। அஸக்திர் மநேஸா ெமௗநம்। ௯௭।௰௨௨
ஆத்மதத்த்வாவேலாகநம்। தப: ஸம்ேதாஷ: ஸத்ேயஷு। ௯௭।௰௨௩
ஸ்திதிர் ேலாபவிவர்ஜநம்। ததா பரிக்ரேஹா ராஜந்। ௯௭।௰௨௩
மாயாவ்யாஜவிவர்ஜநம்। அஸ்ருங்மாம்ஸாதிபூதத்வாந்। ௯௭।௰௨௪
நிஜேதஹஜுகுப்ஸநம்। ஸர்வாண்ய் ஏதாநி பூதாநி। ௯௭।௰௨௪
விஷ்ணுர் இத்ய் அசலா மதி:। தத்ைரவாேஸஷபூேதேஸ। ௯௭।௰௨௫
பக்திர் அவ்யபிசாரிண।ீ ஏேத குணா மயாக்யாதா। ௯௭।௰௨௫
மேநாநிர்வ்ருதிகாரகா:। ைஸதில்யேஹதவஸ் ைசேத। ௯௭।௰௨௬
கர்மபந்தஸ்ய பூர்திவ। ஏபி: ஸாந்திம் கேத சித்ேத। ௯௭।௰௨௬
த்யாநாக்ருஷ்ட: ஸ்திேதா ஹரி:। ஸமம் நயதி கர்மாணி। ௯௭।௰௨௭

ஸிதமிஸ்ராஸிதாநி ைவ। பூயஸ் ச ஸ்ருணு ஸாஸ்த்ரார்தம்।
௯௭।௰௨௭
ஸம்ேக்ஷபாத் வதேதா மம। யதா ஸம்ப்ராப்யேத முக்திர்। ௯௭।௰௨௮
மநுேஜந்த்ர முமுக்ஷுபி:। நித்யைநமித்திகாநாம் து। ௯௭।௰௨௮
நிஷ்காமஸ்ய ஹி யா க்ரியா। நிஸித்தாநாம் ஸகாமாநாம்। ௯௭।௰௨௯
தைதவாகரணம் ந்ருப। ஸர்ேவஸ்வேர ச ேகாவிந்ேத। ௯௭।௰௨௯
பக்திர் அவ்யபிசாரிண।ீ ப்ரயச்சதி ந்ருணாம் முக்திம்। ௯௭।௰௩
மா ேத பூத் அத்ர ஸம்ஸய:। ஆக்யாதம் ஏதத் அகிலம்। ௯௭।௰௩
யத் ப்ருஷ்ேடா அஸி மயா த்விஜ। ஜாயேத ஸமகாமாநாம்। ௯௮।௰௰௧
ப்ரஸம: கர்மணாம் யதா। கிம்த்வ் அத்ர பவதா ப்ேராக்தா। ௯௮।௰௰௧
ப்ரஸாந்தி: ஸர்வகர்மணாம்। நாத்யந்தநாஸ: ஸாந்தாநாம்। ௯௮।௰௰௨
உத்பேவா பவிதா புந:। நிஜகாரணம் ஆஸாத்ய। ௯௮।௰௰௨
ஸ்ேதாகஸ்யாக்ேநர் யதா த்ருணம்। தத் ஆசŠவ மஹாபாக।
௯௮।௰௰௨
ப்ரஸாதஸுமுேகா மம। ஸம்க்ஷேயா ேயந பவதி। ௯௮।௰௰௩
மூேலாத்வர்ேதந கர்மணாம்। ந கர்மணாம் க்ஷேயா பூப। ௯௮।௰௰௩
ஜந்மநாம் அயுைதர் அபி। கர்மக்ஷயம் க்ருேத ேயாகாத்। ௯௮।௰௰௪
ேயாகாக்நி: க்ஷபேயத் பரம்। தம் ேயாகம் மம விப்ரர்ேஷ। ௯௮।௰௰௪
ப்ரணதஸ்யாபியாசத:। த்வம் ஆசŠவ க்ஷேயா ேயந। ௯௮।௰௰௫
ஜாயேத அகிலகர்மணாம்। ஹிரண்யகர்ேபா பகவாந்। ௯௮।௰௰௫
அநாதிர் முநிபி: புரா। ப்ருஷ்ட: ப்ேராவாச யம் ேயாகம்। ௯௮।௰௰௬
தம் ஸமாேஸந ேம ஸ்ருணு। அநாதிகாலப்ரஸ்ருதா। ௯௮।௰௰௬
யதா வித்யா மஹீபேத। ததா தத்க்ஷயேஹதுத்வாத்। ௯௮।௰௰௭

ேயாேகா வித்யாமேயா அவ்யய:। தம் பரம்பரயா ஸ்ருத்வா। ௯௮।௰௰௭
முநேயா அத்ர தயாலவ:। ப்ரகாஸயந்தி பூதாநாம்। ௯௮।௰௰௮
உபகாரசிகீர்ஷவ:। ேதவா மஹர்ஷேயா ராஜம்ஸ்। ௯௮।௰௰௮
ததா ராஜர்ஷேயா அகிலா:। ஸ்ேரேயா அர்திந: புரா ஜக்மு:। ௯௮।௰௰௯
ஸரணம் கபிலம் கில। ேத தம் ஊசுர் பவாந் நித்யம்। ௯௮।௰௰௯
தயாலு: ஸர்வஜந்துஷு। ேஸா அஸ்மாந் உத்தர ஸம்மக்நாந்। ௯௮।௰௧
இத: ஸம்ஸாரகர்தமாத்। யச் ச்ேரய: ஸர்வவர்ணாநாம்। ௯௮।௰௧
ஸ்த்ரீணாம் அப்ய் உபகாரகம்। யஸ்மாத் பரதரம் நாந்யச்। ௯௮।௰௧௧
ஸ்ேரயஸ் தத் ப்ரூஹி ந: ப்ரேபா। ஆதாவ் அந்ேத ச மத்ேய ச।
௯௮।௰௧௧
ந்ருணாம் யத் உபகாரகம்। அபி கீடபதம்காநாம்। ௯௮।௰௧௨
தந் ந: ஸ்ேரய: பரம் வத। இத்ய் உக்த: கபில: ஸர்ைவர்। ௯௮।௰௧௨
ேதைவர் ேதவர்ஷிபிஸ் ததா। நாஸ்தி ேயாகாத் பரம் ஸ்ேரய:।
௯௮।௰௧௩
கிம்சித் இத்ய் உக்தவாந் புரா। யதா ஜந்மாயுைத: க்ேலஸா:। ௯௮।௰௧௩
ஸ்ைதர்யம் ேசதஸ்ய் உபாகதா:। தச்சாந்தேய ததா ேயாேகா।
௯௮।௰௧௪
பஹுஜந்மார்ஜிேதா பேவத்। ஸ ஏவாப்யஸதாம் ந்ருணாம்। ௯௮।௰௧௪
தீவ்ரஸம்ேவகிேசதஸாம்। ஆஸந்நதாம் ப்ரயாத்ய் ஆஸு। ௯௮।௰௧௫
விஷ்ணு: ஸம்ந்யஸ்தகர்மணாம்। ப்ராஹ்மணக்ஷத்ரியவிஸாம்।
௯௮।௰௧௫
ஸ்த்ரீஸூத்ரஸ்ய ச பாவநம்। ஸாந்தேய கர்மணாம் நாந்யத்।
௯௮।௰௧௬

ேயாகாத் அஸ்தி ஹி முக்தேய। அப்யஸ்தம் ஜந்மபிர் ைநைக:।
௯௮।௰௧௬
ஸுபஜாதிபேவஷு யத்। ேயாகஸ்வரூபம் தத் ேதஷாம்। ௯௮।௰௧௭
ஸ்த்ரீஸூத்ரத்ேவ வ்யவஸ்திதம்। ேயாகாப்யாேஸா ந்ருணாம் ேயஷாம்।
௯௮।௰௧௭
நாஸ்தி ஜந்மாந்தராஹ்ருத:। ேயாகஸ்ய ப்ராப்தேய ேதஷாம்।
௯௮।௰௧௮
ஸூத்ரைவஸ்யாதிக: க்ரம:। ஸ்த்ரீத்வாச் சூத்ரத்வம் அப்ேயதி।
௯௮।௰௧௮
தேதா ைவஸ்யத்வம் ஆப்நுயாத்। ததஸ் ச க்ஷத்ரிேயா விப்ர:।
௯௮।௰௧௯
க்ரியாஹீநஸ் தேதா பேவத்। அநூசாநஸ் ததா யஜ்வ।ீ ௯௮।௰௧௯
கர்மந்யாஸீ தத: பரம்। தேதா ஜ்ஞாநித்வம் அப்ேயத்ய। ௯௮।௰௨
ேயாகீமுக்திம் க்ரமால் லேபத்। ேயஷாம் து ஜாதிமாத்ேரண। ௯௮।௰௨
ேயாகாப்யாஸஸ் திேராஹித:। ஆஸ்ேத தத்ைரவ முச்யந்ேத।
௯௮।௰௨௧
ஜாதிேஹெதௗ க்ஷயம்கேத। அஸத்கர்ம க்ருதம் பூர்வம்। ௯௮।௰௨௧
அஸஜ்ஜாதிப்ரதாயி யத்। தஸ்மிந் ேயாகாக்நிநா தக்ேத। ௯௮।௰௨௨
தஸ்ய ஜாேதர் பலம் குத:। யதா வாேதரித: கக்ஷம்। ௯௮।௰௨௨
தஹத்ய் ஊர்த்வஸிேகா அநல:। ஸர்வகர்மாணி ேயாகாக்நிர்।
௯௮।௰௨௩
பஸ்மஸாத் குருேத ததா। யதா தக்ததுஷம் பஜம்ீ । ௯௮।௰௨௩
அபஜத்வாந் ீ ந ஜாயேத। ேயாகதக்ைதஸ் ததா க்ேலைஸர்। ௯௮।௰௨௪
நாத்மா ஸம்ஜாயேத புந:। அத்ருஷ்டா த்ருஷ்டதத்த்வாநாம்। ௯௮।௰௨௪

ேயாகிநாம் ேயாகவிச்யுதி:। ேயஷாம் பவதி ேயாகித்வம்। ௯௮।௰௨௫
ப்ராப்நுவந்தீஹ ேத புந:। ஸஜ்ஜாதிப்ராபகம் கர்ம। ௯௮।௰௨௫
க்ருதம் ேதந ததாத்மநா। ஜாதிம் ப்ரயாந்தி விப்ராத்யா। ௯௮।௰௨௬
ேயாககர்மாநுரஞ்ஜிதா:। தத்ராப்ய் அேநகஜந்ேமாத்த । ௯௮।௰௨௬
ேயாகாப்யாஸாநுரஞ்ஜிதா:। ேதைநவாப்யாஸேயாேகந। ௯௮।௰௨௭
ஹ்ரியந்ேத தத்த்வவித்யயா। ைஜகீஷவ்ேயா யதா விப்ேரா। ௯௮।௰௨௭
யதா ைசவாஸிதாதய:। ஹிரண்யநாேபா ராஜந்யஸ்। ௯௮।௰௨௮
ததா ைவ ஜநகாதய:। பூர்வாப்யஸ்ேதந ேயாேகந। ௯௮।௰௨௮
துலாதாராதேயா விஸ:। ஸம்ப்ராப்தா: பரமாம் ஸித்திம்। ௯௮।௰௨௯
ஸூத்ரா: ைபலவகாதய:। ைமத்ேரயீஸுலபா கார்கீ। ௯௮।௰௨௯
ஸாண்டிலீ ச தபஸ்விநீ। ஸ்த்ரீத்ேவ ப்ராப்தா: பராம் ஸித்திம்।
௯௮।௰௩
அந்யஜந்மஸமாதித:। தர்மவ்யாதாதேயா அப்ய் அந்ேய। ௯௮।௰௩
பூர்வாப்யாஸாஜ் ஜுகுப்ஸிேத। வர்ணாவரத்ேவ ஸம்ப்ராப்தா:।
௯௮।௰௩௧
ஸம்ஸித்திம் ஸ்ரவணீததா। பூர்வாப்யஸ்தம் ச தத் ேதஷாம்।
௯௮।௰௩௧
ேயாகஜ்ஞாநம் மஹாத்மநாம்। ஸுப்ேதாத்திதப்ரத்யயவத்। ௯௮।௰௩௨
உபேதஸாதிநா விநா। தஸ்மாத் ேயாக: பரம் ஸ்ேரேயா। ௯௮।௰௩௨
விமுக்திபலேதா ஹி ய:। விமுக்ெதௗ ஸுகம் அத்யந்தம்। ௯௮।௰௩௩
ஸம்ேமாஹஸ் த்வ் இதரத் ஸுகம்। ஏதத் ேத ஸர்வம் ஆக்யாதம்।
௯௮।௰௩௩
மயா மநுஜகுஞ்ஜர। ஸ்ேரய: பரதரம் ேயாகாத்। ௯௮।௰௩௪

கிம்சித் அந்யந் ந வித்யேத। கதிதம் ேயாகமாஹாத்ம்யம்। ௯௮।௰௩௪
பவதா முநிஸத்தம। ஸ்வரூபம் து ந ேம ப்ேராக்தம்। ௯௯।௰௰௧
ஸ்ேராதும் இச்சாமி தத் த்ய் அஹம்। த்ைவவித்யம் ந்ருப ேயாகஸ்ய।
௯௯।௰௰௧
பரம் சாபரம் ஏவ ச। தச் ச்ருணுஷ்வ வதாம்ய் ஏஷ। ௯௯।௰௰௨
வாச்யம் ஸுஸ்ரூஷதாம் ஸதாம்। ேயா தத்யாத் பகவஜ்ஜ்ஞாநம்।
௯௯।௰௰௨
குர்யாத் வா தர்மேதஸநாம்। க்ருத்ஸ்நாம் வா ப்ருதிவம்ீ தத்யாந்।
௯௯।௰௰௩
ந தத்துல்யம் கதம்சந। க்ஷயிஷ்ணூந்ய் அபராணஹீ । ௯௯।௰௰௩
தாநாநி மநுஜாதிப। ஏகம் ஏவாக்ஷயம் ஸஸ்தம்। ௯௯।௰௰௪
ஜ்ஞாநதாநம் அநுத்தமம்। தாநாந்ய் ஏகபலாநீஹ। ௯௯।௰௰௪
த்ைரேலாக்ேய தததா ஸதாம்। ஜ்ஞாநம் ப்ரயச்சதா ஸம்யக்।
௯௯।௰௰௫
கிம் ந தத்தம் பேவந் ந்ருப। ஜ்ஞாநாந்ய் அந்யாந்ய் அஸாராணி।
௯௯।௰௰௫
ஸில்பிநீவ நேரஸ்வர। ஏகம் ஏவ பரம் ஜ்ஞாநம்। ௯௯।௰௰௬
யத் ேயாகப்ராப்திகாரகம்। அஹம் வக்தா பவாஞ் ஸ்ேராதா।
௯௯।௰௰௬
வாச்ேயா ேயாேகா விமுக்தித:। ப்ராணிநாம் உபகாராய। ௯௯।௰௰௭
ஸம்பத் ஏஷா குணாதிகா। பேரண ப்ரஹ்மணா ஸார்தம்। ௯௯।௰௰௭
ஏகத்வம் யந் ந்ருபாத்மந:। ஸ ஏவ ேயாேகா விக்யாத:। ௯௯।௰௰௮
கிம் அந்யத் ேயாகலக்ஷணம்। அபரம் ச பரம் ைசவ। ௯௯।௰௰௮

த்ெவௗ ேயாெகௗ ப்ருதிவபேத ீ । தேயா: ஸ்வரூபம் வŠயாமி।
௯௯।௰௰௯
தத் இைஹகமநா: ஸ்ருணு। ஸத்தாமாத்ரம் பரம் ப்ரஹ்ம। ௯௯।௰௰௯
விஷ்ண்வாக்யம் அவிேஸஷணம்। துர்விசிந்த்யம் யத: பூர்வம்।
௯௯।௰௧
தத்ப்ராப்த்யர்தம் அேதாச்யேத। வாதாலீசஞ்சலம் சித்தம்। ௯௯।௰௧
அநாலம்பநம் அஸ்திதி। ஸூŠமத்வாத் ப்ரஹ்மேணா ராஜந்ந்।
௯௯।௰௧௧
அக்ராஹ்ய் அக்ராஹ்யதர்மிண:। ஸம்யக் அப்யஸ்யேதா அஜஸ்ரம்।
௯௯।௰௧௧
உபவ்ரும்ஹிதஸக்திமத்। ஜந்மாந்தரஸைதர் வாபி। ௯௯।௰௧௨
ப்ரஹ்மக்ராஹ்ய் அபிஜாயேத। யத்ய் அந்தராய ேதாேஷண। ௯௯।௰௧௨
நாபகர்ேஷா நராதிப। ேயாகிேநா ேயாகரூடஸ்ய। ௯௯।௰௧௩
தாலாக்ராத் பதநம் யதா। ஜ்ஞாநம் ப்ரயச்சதாம் ஸம்யக்। ௯௯।௰௧௩
கிம் வதது பேவந் ந்ருப। தத் ஆப்ேநாதி பரம் ப்ரஹ்ம। ௰௯௯।௧௫௨
க்ேலேஸந மஹதா ந்ருப। ஜந்மாப்யாஸாந்தேராத்ேதந। ௯௯।௰௧௪
விஜ்ஞாேநந ஸேமதித:। விஷ்ண்வாக்யம் ப்ரஹ்ம துஷ்ப்ராபம்।
௯௯।௰௧௪
விஷயாக்ருஷ்டேசதஸா। மநுஷ்ேயேணதி தத்ப்ராப்தாவ்। ௯௯।௰௧௫
உபாயம் அபரம் ஸ்ருணு। ஸுரூபாம் ப்ரதிமாம் விஷ்ேணா:।
௯௯।௰௧௫
ப்ரஸந்நவதேநக்ஷணாம்। க்ருத்வாத்மந: ப்ரீதிகரீம்। ௯௯।௰௧௬
ஸுவர்ணரஜதாதிபி:। தஸ்யாஸ் ச லக்ஷணம் பூப। ௯௯।௰௧௬

ஸ்ருணுஷ்வ கதேதா மம। யத்த்ரவ்யா யத்ஸ்வரூபா ச। ௯௯।௰௧௭
கர்தவ்யா த்யாநகர்மணி। ஸுவர்ணரூப்யதாம்ைரஸ் து। ௯௯।௰௧௭
ஆரகூடமயம்ீ ததா। ைஸலதாரும்ருதா வாபி। ௯௯।௰௧௮
ேலக்யஜாம் வாபி காரேயத்। கார்யஸ் து விஷ்ணுர் பகவாந்।
௯௯।௰௧௮
ெஸௗம்யரூபஸ் சதுர்புஜ:। ஸலிலாத்மாதேமகாப:। ௯௯।௰௧௯
ஸ்ரீமாஞ் ஸ்ரீவத்ஸபூஷித:। ஆபத்தமகுட: ஸ்ரக்வ।ீ ௯௯।௰௧௯
ஹாரபாரார்பிேதாதர:। ஸ்வேக்ஷண சாருசிபுக:। ௯௯।௰௨
ஸுலலாேடந ஸுப்ருணா। ஸ்ேவாஷ்ேடந ஸுகேபாேலந। ௯௯।௰௨
வதேநந விராஜதா। கண்ேடந ஸுபேலேகந। ௯௯।௰௨௧
வராபரணதாரிணா। நாநாரத்நாநதார்தாப்யாம்। ௯௯।௰௨௧
ஸ்ரவணாப்யாம் அலம்க்ருத:। புஷ்டஸ்லிஷ்டாயதபுஜஸ்। ௯௯।௰௨௨
தநுதாம்ரநகாங்குலி:। மத்ேயந த்ரிவலீபங்க । ௯௯।௰௨௨
பூஷிேதந ச சாருணா। ஸுபாத: ஸூருயுகல:। ௯௯।௰௨௩
ஸுகடீகுல்பஜாநுக:। வாமபார்ஸ்ேவ கதாேதவ।ீ ௯௯।௰௨௩
சக்ரம் ேதவஸ்ய தக்ஷிேண। ஸங்ேகா வாமகேர ேதேயா। ௯௯।௰௨௪
தக்ஷிேண பத்ம ஸுப்ரபம்। ஊர்த்வத்ருஷ்டிம் அேதாத்ருஷ்டிம்।
௯௯।௰௨௪
திர்யக்த்ருஷ்டிம் ந காரேயத்। நிமீலிதாேக்ஷா பகவாந்। ௯௯।௰௨௫
ந ப்ரஸஸ்ேதா ஜநார்தந:। ெஸௗம்யா து த்ருஷ்டி: கர்தவ்யா।
௯௯।௰௨௫
கிம்சித் ப்ரஹஸிேதவ ச। கார்யஸ் சரணவிந்யாஸ:। ௯௯।௰௨௫
ஸர்வத: ஸுப்ரதிஷ்டித:। சரணாந்தரஸம்ஸ்தா ச। ௯௯।௰௨௬

பிப்ரதீரூபம் உத்தமம்। கார்யா வஸும்தரா ேதவ।ீ ௯௯।௰௨௬
தத்பாததலதாரிண।ீ யாத்ருக்விதா வா மநஸ:। ௯௯।௰௨௬
ஸ்ைதர்யலம்ேபாபபாதிகா। ந்ருஸிம்ஹவாமநாதீநாம்। ௯௯।௰௨௭
தாத்ருஸம்ீ காரேயத் புத:। ப்ரஹ்ம தஸ்யாம் ஸமாேராப்ய। ௯௯।௰௨௭
மநஸா தந்மேயா பேவத்। தாம் ஆர்சேயத் தாம் ப்ரணேமத்। ௯௯।௰௨௮
தாம் ஸ்மேரத் தாம் விசிந்தேயத்। தாம் அர்சயம்ஸ் தாம் ப்ரணமம்ஸ்।
௯௯।௰௨௮
தாம் ஸ்மரம்ஸ் தாம் ச சிந்தயந்। விஸத்ய் அபாஸ்தேதாஷஸ் து।
௯௯।௰௨௯
தாம் ஏவ ப்ரஹ்மரூபிணம்ீ । ஸம்கல்பநக்ரியாரூட:। ௯௯।௰௨௯
ஸ்வரூேபண ந்ருபாத்மந:। குர்வதீ பாவநாம் தத்ர। ௯௯।௰௩
தத்பாேவாத்பத்திகாரணாத்। நாந்யத்ர மநஸாேநயா। ௯௯।௰௩
புத்திர் ஈஷத் அபி க்வசித்। யைமஸ் ச நியைமஸ் ைசவ। ௯௯।௰௩
பூதாத்மா ப்ருதிவஸ்வர ீ । மூர்திம் பகவத: ஸம்யக்। ௯௯।௰௩௧
பூஜேயத் தந்மய: ஸதா। யமாம்ஸ் ச நியமாம்ஸ் ைசவ। ௯௯।௰௩௧
ஸ்ேராதும் இச்சாமி பார்கவ। ையர் தூதகல்மேஷா ேயாகீ। ௧௰௰।௰௰௧
முக்திபாக் உபஜாயேத। அஹிம்ஸா ஸத்யம் அஸ்ேதயம்। ௧௰௰।௰௰௧
ப்ரஹ்மசர்யாபரிக்ரெஹௗ। யமாஸ் தைவேத கதிதா। ௧௰௰।௰௰௨
நியமாந் அபி ேம ஸ்ருணு। ஸம்ேதாஷெஸௗசஸ்வாத்யாயாஸ்।
௧௰௰।௰௰௨
தபஸ் ேசஸ்வரபாவநா। நியமா: ெகௗரவஸ்ேரஷ்ட। ௧௰௰।௰௰௩
ேயாகஸம்ஸித்திேஹதவ:। ஏபிர் மூலகுைண: ஸத்பிர்। ௧௰௰।௰௰௩
விஷ்ேணார் பக்திமதஸ் ததா। ஸ்ரத்ததாநஸ்ய சாந்யாநி। ௧௰௰।௰௰௪

ேயாகாங்காநி நிேபாத ேம। மத்யமப்ராணம் அசலம்। ௧௰௰।௰௰௪
ஸுகதாயி ஸுபம் ஸுசி। ேயாகஸம்ஸித்தேய பூப। ௧௰௰।௰௰௫
ேயாகிநாம் ஆஸநம் ஸ்ம்ருதம்। ப்ராணாயாமஸ் த்ரிதா வாேயா:।
௧௰௰।௰௰௫
ப்ராணஸ்ய ஹ்ருதி தாரணம்। கும்பேரசகபூராக்யாஸ்। ௧௰௰।௰௰௬
தஸ்ய ேபதாஸ் த்ரேயா ந்ருப। ஏேத நிேபாத மாத்ராஸ் து।
௧௰௰।௰௰௬
நாலம்பநகுணாந்விதா:। ஸாலம்பநஸ் சதுர்ேதா அந்ேயா। ௧௰௰।௰௰௭
பாஹ்யாந்தர்விஷய: ஸ்ம்ருத:। இந்த்ரியாணாம் ஸ்வவிஷயாத்।
௧௰௰।௰௰௭
புத்தி: ப்ரத்ேயகஸஸ் து யத்। கேராத்ய் ஆஹரணம் ஜ்ேஞய:।
௧௰௰।௰௰௮
ப்ரத்யாஹார: ஸ பண்டிைத:। ஸுேப ஹ்ய் ஏகத்ர விஷேய।
௧௰௰।௰௰௮
ேசதேஸா யச் ச தாரணம்। நிஸ்சலத்வாத் து ஸா ஸத்பிர்।
௧௰௰।௰௰௯
தாரேணத்ய் அபிதீயேத। ெபௗந:புந்ேயந தத்ைரவ। ௧௰௰।௰௰௯
விஷேய ைஸவ தாரணா। த்யாநாக்யா லபேத ராஜந்। ௧௰௰।௰௧
ஸமாதிம் அபி ேம ஸ்ருணு। அர்தமாத்ரம் ச யத் க்ராஹ்ேய। ௧௰௰।௰௧
சித்தம் ஆதாய பார்திவ। அர்தஸ்வரூபவத் பாதி। ௧௰௰।௰௧௧
ஸமாதி: ேஸா அபிதீயேத। கதிதாநி தைவதாநி। ௧௰௰।௰௧௧
ேயாகாங்காநி க்ருைதஸ் து ைய:। உத்கர்ேஷா ஜாயேத வ்யஸ்ைத:।
௧௰௰।௰௧௨

ஸமஸ்ைதர் ேஹயஸம்க்ஷய:। ேயாகாங்காந்ய் அங்கபூதாநி।
௧௰௰।௰௧௨
த்யாநஸ்ையதாந்ய் அேஸஷத:। த்யாநம் அப்ய் அவநீபால। ௧௰௰।௰௧௩
ேயாகஸ்யாங்கத்வம் அர்சதி। த்யாநம் ஏகவ்ரதாநாம் து। ௧௰௰।௰௧௩
குஸலாகுஸேலஷு தத்। அர்ேதஷ்வ் ஆஸக்திம் அப்ேயதி। ௧௰௰।௰௧௪
ஸர்வைதவ நேரஸ்வர। ஸுபாவ்யாவர்திதம் த்யாநம்। ௧௰௰।௰௧௪
அவிேவகஸ்ய ஜாயேத। ஸம்ஸாரது:கதம் ராஜந்ந்। ௧௰௰।௰௧௫
அஸுபாலம்பி தத் யத:। தத் ஏவாக்ருஷ்ய துஷ்ேடப்ேயா। ௧௰௰।௰௧௫
விஷேயப்ய: ஸுபாஸுபம்। ஸர்வஸம்ஸாரகாந்தார । ௧௰௰।௰௧௬
பாரம் அப்ேயதி மாநவ:। து:கதாகப்ரஸமேந। ௧௰௰।௰௧௬
யா சிந்தாஹர்நிஸம் ந்ருணாம்। தத்த்யாநம் அவிஸுத்தார்தம்।
௧௰௰।௰௧௭
ஸுகதாநாம் அபாலேந। கதம் ஸம்ஸாரபந்ேதா அயம்। ௧௰௰।௰௧௭
அஸ்மாந் முக்தி: கதம் த்வ் இதி। மேநாவ்ருத்திர் மநுஷ்யாணாம்।
௧௰௰।௰௧௮
த்யாநம் ஏதச் சுபம் த்விதா। ஸுத்தம் அப்ய் ஏதத் அகிலம்। ௧௰௰।௰௧௮
ேலாபகார்யதயாநயா। ஸுகாபிலாேஷா யந்முக்ெதௗ। ௧௰௰।௰௧௯
பந்துது:காதிபடநாத் ீ । அவாஞ்சிதபலம் ேலாபம்। ௧௰௰।௰௧௯
அேலாபாம்ஸவிவர்ஜிதம்। ஸுபாஸுபபலம் த்யாநம்। ௧௰௰।௰௨
அரக்தம் த்விஷ்டம் இஷ்யேத। த்ருஷ்டாநுமாநாகமிகம்। ௧௰௰।௰௨
த்யாநஸ்யாலம்பநம் த்ரிதா। ந ஹி நிர்விஷயம் த்யாநம்। ௧௰௰।௰௨௧
மூடவ்ருத்திர் இேவஷ்யேத। ப்ராக் ஸ்தூேலஷு பதார்ேதஷு।
௧௰௰।௰௨௧

தத: ஸூŠேமஷு பண்டித:। த்யாநம் குர்வதீ தத்பஸ்சாத்। ௧௰௰।௰௨௨
பரமாெணௗ மஹீபேத। த்யாநாப்யாஸபரஸ்ையவம்। ௧௰௰।௰௨௨
ேஹயாலம்பநபாதேந। தச்சாந்தேய தத்விபக்ஷ । ௧௰௰।௰௨௩
பாவநாம் ஏவ பாவேயத்। தச்சித்தஸ் தந்மேயா ஜ்ஞாநீ। ௧௰௰।௰௨௩
பவத்ய் அஸ்மாந் ந ேதாஷவத்। குர்வதாலம்பநம் ீ காேல। ௧௰௰।௰௨௪
கஸ்மிம்ஸ்சித் அபி பார்திவ। ஆப்ரஹ்மஸ்தம்பபர்யந்த । ௧௰௰।௰௨௪
ஜகதந்தர்வ்யவஸ்திதா:। ப்ராணிந: கர்மஜநித । ௧௰௰।௰௨௫
ஸம்ஸ்காரவஸவர்திந:। யதஸ் தேதா ந ேத த்யாேந। ௧௰௰।௰௨௫
த்யாநிநாம் உபகாரகா:। அவித்யாந்தர்கதா: ஸர்ேவ। ௧௰௰।௰௨௬
ேத ஹி ஸம்ஸாரேகாசரா:। பஸ்சாத் உத்பூதேபாதாஸ் ச। ௧௰௰।௰௨௬
த்யாதா ைநேவாபகாரகா:। ைநஸர்கிேகா ந ைவ ேபாதஸ்। ௧௰௰।௰௨௭
ேதஷாம் அப்ய் அந்யேதா யத:। தஸ்மாத் தத் அமலம் ப்ரஹ்ம।
௧௰௰।௰௨௭
நிஸர்காத் ஏவ ேபாதவத்। த்ேயயம் த்யாநவிதாம் ஸம்யக்। ௧௰௰।௰௨௮
யத் விஷ்ேணா: பரமம் பதம்। ந தத் யஜ்ைஞர் ந தாேநந। ௧௰௰।௰௨௮
ந தேபாபிர் ந தத் வ்ரைத:। பஸ்யந்த்ய் ஏகாக்ரமநேஸா। ௧௰௰।௰௨௯
த்யாேநைநவ ஸநாதநம்। தச் ச விஷ்ேணா: பரம் ரூபம்। ௧௰௰।௰௨௯
அநிர்ேதஸ்யம் அஜம் ஸ்திரம்। யத: ப்ரவர்தேத ஸர்வம்। ௧௰௰।௰௩
லயம் அப்ேயதி யத்ர ச। அநித்ரம் அஜம் அஸ்வப்நம்। ௧௰௰।௰௩
அரூபாநாம ஸாஸ்வதம்। ேயாகிநஸ் தம் ப்ரபஸ்யந்தி। ௧௰௰।௰௩௧
ஜ்ஞாநத்ருஸ்யம் ஸநாதநம்। நிர்தூதபுண்யபாபா ேய। ௧௰௰।௰௩௧
ேத விஸந்த்ய் ஏவம் ஈஸ்வரம்। தச் ச ஸர்வகதம் ப்ரஹ்ம।
௧௰௰।௧௫௩

விஷ்ணு: ஸர்ேவஸ்வேரஸ்வர:। பரமாத்மா பர: ப்ேராக்த:। ௧௰௰।௰௩௨
ஸர்வகாரணகாரணம்। அநந்தஸக்திம் ஈேஸஸம்। ௧௰௰।௰௩௨
ஸ்வப்ரதிஷ்டம் அேநாபமம்। ேயாகிநஸ் தம் ப்ரபஸ்யந்தி। ௧௰௰।௰௩௩
பகவந்தம் ஸநாதநம்। யத்ர ஸர்வம் யத: ஸர்வம்। ௧௰௰।௰௩௩
ய: ஸர்வம் ஸர்வதஸ் ச ய:। ேயாகிநஸ் தம் ப்ரபஸ்யந்தி। ௧௰௰।௰௩௪
பகவந்தம் ஸநாதநம்। ஸர்காதிகாரணம் யஸ்ய। ௧௰௰।௰௩௪
ஸ்வபாவாத் ஏவ ஸக்தய:। ேயாகிநஸ் தம் ப்ரபஸ்யந்தி। ௧௰௰।௰௩௫
பகவந்தம் ஸநாதநம்। நிர்தூதபுண்யபாபா யம்। ௧௰௰।௰௩௫
விஸந்த்ய் அவ்யயம் ஈஸ்வரம்। ேயாகிநஸ் தம் ப்ரபஸ்யந்தி।
௧௰௰।௰௩௬
பகவந்தம் ஸநாதநம்। தத்ர ேயாகவத: ஸம்யக்। ௧௰௰।௰௩௬
புருஷஸ்ய நேரஸ்வர। யத் உக்தம் லக்ஷணம் தந் ேம। ௧௰௰।௰௩௭
கதத: ஸ்ேராதும் அர்ஹஸி। ப்ரஹ்மண்ய் ஏவ ஸ்திதம் சித்தம்।
௧௰௰।௰௩௭
ஸர்வத: ஸம்நிவர்திதம்। நாந்யாலம்பநஸாேபக்ஷம்। ௧௰௰।௰௩௮
ேயாகிந: ஸித்திகாரகம்। ஸம்ஸ்தாநம் அவிகாேரண। ௧௰௰।௰௩௮
ேசதேஸா ப்ரஹ்மஸம்ஸ்திெதௗ। நிவாத இவ தீபஸ்ய। ௧௰௰।௰௩௯
ேயாகிந: ஸித்திலக்ஷணம்। ஏவம் ஏகாக்ரசித்தஸ்ய। ௧௰௰।௰௩௯
புண்யாபுண்யம் அேஸஷத:। ப்ரயாதி ஸம்க்ஷயம் க்ருேத। ௧௰௰।௰௪
ேதஹாரம்பகேர ந்ருப। ேதஹாரம்பகரஸ்யாபி। ௧௰௰।௰௪
கர்மண: ஸம்க்ஷயாவஹ:। ேயா ேயாக: ப்ருதிவபாலீ । ௧௰௰।௰௪௧
ஸ்ருணு தஸ்யாபி லக்ஷணம்। யத் தத் ப்ரஹ்ம பரம் ப்ேராக்தம்।
௧௰௰।௰௪௧

விஷ்ண்வாக்யம் அஜம் அவ்யயம்। ேசதஸ: ப்ரலயஸ் தத்ர। ௧௰௰।௰௪௨
ேயாக இத்ய் அபிதீயேத। ேயாகேஸவாநிேராேதந। ௧௰௰।௰௪௨
ப்ரலீேந தத்ர ேசதஸி। புருஷ: காரநாபாவாத்। ௧௰௰।௰௪௩
ேபதம் ைநவாநுபஸ்யதி। பராத்மேநார் மநுஷ்ேயந்த்ர। ௧௰௰।௰௪௩
விபாேகா ஜ்ஞாநகல்பித:। க்ஷேய தஸ்யாத்மபரேயார்। ௧௰௰।௰௪௪
விபாகாபாக ஏவ ஹி। பரமாத்மாத்மேநார் ேயா அயம்। ௧௰௰।௰௪௪
அவிபாக: பரம்தப। ஸ ஏவ பரேமா ேயாக:। ௧௰௰।௰௪௫
ஸமாஸாத் கதிதஸ் தவ। யதா கமண்டெலௗ பிந்ேந। ௧௰௰।௰௪௫
தத்ேதாயம் ஸலிேல கதம்। வ்ரஜத்ய் ஐக்யம் தைதைவதத்।
௧௰௰।௰௪௬
உபயம் காரணக்ஷயாத்। யதாக்நிர் அக்ெநௗ ஸம்க்ஷிப்த:। ௧௰௰।௰௪௬
ஸமாநத்வம் அநுவ்ரேஜத்। ததாக்யஸ் தந்மேயா பூத்வா। ௧௰௰।௰௪௭
க்ருஹ்யேத ந விேஸஷத:। ஏவம் ப்ரஹ்மாத்மேநார் ேயாகாத்।
௧௰௰।௰௪௭
அகத்வம் உபபந்நேயா:। ந ேபத: கலஸாகாஸ । ௧௰௰।௰௪௮
நபேஸார் இவ ஜாயேத। ப்ரக்ஷீணாேஸஷகர்மா து। ௧௰௰।௰௪௮
யதா ப்ரஹ்மமய: புமாந்। ததா ஸ்வரூபம் அஸ்ேயாக்ேதர்। ௧௰௰।௰௪௯
ேகாசேர ேநாபபத்யேத। கடத்வம்ேஸ கடாகாஸம்। ௧௰௰।௰௪௯
ந பிந்நம் நபேஸா யதா। ப்ரஹ்மணா ேஹயவித்வம்ேஸ। ௧௰௰।௰௫
விஷ்ண்வாக்ேயந புமாம்ஸ் ததா। பிந்ேந த்ருெதௗ யதா வாயுர்।
௧௰௰।௰௫
ைநவாந்ய: ஸஹ வாயுநா। க்ஷணபுண்யாகபந்தஸ் ீ து। ௧௰௰।௰௫௧
ததாத்மா ப்ரஹ்மணா ஸஹ। தத: ஸமஸ்தகல்யாண । ௧௰௰।௰௫௧

ஸமஸ்தஸுகஸம்பதாம்। ஆஹ்லாதம் அந்யம் அதுலம்। ௧௰௰।௰௫௨
கம் அப்ய் ஆப்ேநாதி ஸாஸ்வதம்। ப்ரஹ்மஸ்வரூபஸ்ய ததா ஹ்ய்।
௧௰௰।௰௫௨
ஆத்மேநா நித்யைதவ ஸ:। வ்யுத்தாநகாேல ராேஜந்த்ர। ௧௰௰।௰௫௩
ஆஸ்ேத ேஹயதிேராஹித:। ஆதர்ஸஸ்ய மலாபாவாத்। ௧௰௰।௰௫௩
ைவமல்யம் காஸேத யதா। ஜ்ஞாநாக்நிதக்தேஹயஸ்ய। ௧௰௰।௰௫௪
ேஸா அஹ்லாேதா ஹ்ய் ஆத்மநஸ் ததா। யதா ந க்ரியேத ஜ்ேயாத்ஸ்நா।
௧௰௰।௰௫௪
மலப்ரக்ஷாலநாதிநா। ேதாஷப்ரஹாணம் ந ஜ்ஞாநம்। ௧௰௰।௰௫௫
ஆத்மந: க்ரியேத ததா। யேதாதுபாநகரணாத்। ௧௰௰।௰௫௫
க்ரியேத ந ஜலாம்பரம்। ஸைதவ நீயேத வ்யக்திம்। ௧௰௰।௰௫௬
அஸத: ஸம்பவ: குத:। யதா ேஹயகணத்வம்ஸாத்। ௧௰௰।௰௫௬
அவேபாதாதேயா குணா:। ப்ரகாஸ்யந்ேத ந ஜந்யந்ேத। ௧௰௰।௰௫௭
நித்யா ஏவாத்மேநா ஹிேத। ஜ்ஞாநைவராக்யம் ஐஸ்வர்யம்।
௧௰௰।௰௫௭
தர்மஸ் ச மநுேஜஸ்வர। ஆத்மேநா ப்ரஹ்மபூதஸ்ய। ௧௰௰।௰௫௮
நித்யம் ஏவ சதுஷ்டயம்। ஏதத் அத்ைவதம் ஆக்யாதம்। ௧௰௰।௰௫௮
ஏஷ ேயாகஸ் தேவாதித:। அயம் விஷ்ணுர் இதம் ப்ரஹ்ம।
௧௰௰।௰௫௯
தைததத் ஸத்யம் உத்தமம்। புநஸ் ச ஸ்ரூயதாம் ஏஷ। ௧௰௰।௰௫௯
ஸம்ேக்ஷபாத் கதேதா மம। நாநாத்ைவகத்வவிஜ்ஞாந । ௧௰௰।௰௬
ஸ்வரூபம் அவநீபேத। ஆத்மா ேக்ஷத்ரஜ்ஞஸம்ஜ்ேஞா அயம்।
௧௰௰।௰௬

ஸம்யுக்த: ப்ராக்ருைதர் குைண:। ைதர் ஏவ விகைத: ஸுத்த:।
௧௰௰।௰௬௧
பரமாத்மா நிகத்யேத। த்ேயயம் ப்ரஹ்ம புமாந் த்யாதா। ௧௰௰।௰௬௧
உபாேயா த்யாநஸம்ஜ்ஞித:। யஸ் த்வ் ஏதத் கரேணஷ்வ் ஆஸ்ேத।
௧௰௰।௰௬௨
தத்வர்ேக கா விபாகதா। ஸம்ேக்ஷபாத் அபி பூபால। ௧௰௰।௰௬௨
ஸம்ேக்ஷபந் அபரம் ஸ்ருணு। புத்ராய யத் பிதா ப்ரூயாத்। ௧௰௰।௰௬௩
ஸ்வஸிஷ்யாயாதவா குரு:। ந வாஸுேதவாத் பரம் அஸ்தி கிம்சிந்।
௧௰௰।௰௬௩
ந வாஸுேதவாத் கதிதம் பரம் ச। ஸத்யம் பரம் வாஸுேதேவா அமிதாத்மா।
௧௰௰।௰௬௪
நேமா நேமா வாஸுேதவாய நித்யம்। தஸ்மாத் தம் ஆராதய சிந்தேயஸம்।
௧௰௰।௰௬௪
அப்யர்சயாநந்தம் அதந்த்ரிதாத்மா। ஸம்ஸாரபாரம் பரம் ஈப்ஸமாைநர்।
௧௰௰।௰௬௫
ஆராதநீேயா ஹரிர் ஏக ஏவ। ஆராதிேதா அர்தாந் தநகாங்க்ஷகாநாம்।
௧௰௰।௰௬௫
தர்மார்திநாம் தர்மம் அேஸஷதர்மீ। ததாதி காமாம்ஸ் ச மேநாநிவிஷ்டாந்।
௧௰௰।௰௬௬
ேமாக்ஷார்திநாம் முக்தித ஏவ விஷ்ணு:। மைமதத் கதிதம் ஸம்யக்।
௧௰௰।௰௬௬
ஆத்மவித்யாஸ்ரிதம் முேந। யத் த்வ் அந்யச் ச்ேராதும் இச்சாமி।
௧௰௧।௰௰௧
தத் ப்ரஸந்ேநா வதஸ்வ ேம। ேயயம் முக்திர் பகவதா। ௧௰௧।௰௰௧

ப்ேராக்தா வர்ணக்ரமாந் மம। தத்ேரச்சாமி முேந ஸ்ேராதும்।
௧௰௧।௰௰௨
வர்ணாத் வர்ேணாத்தேராச்ச்ரயம்। ஸூத்ேரா ைவஸ்யத்வம் அப்ேயதி।
௧௰௧।௰௰௨
கதம் ைவஸ்யஸ் ச பார்கவ। க்ஷத்ரியத்வம் த்விஜஸ்ேரஷ்ட।
௧௰௧।௰௰௩
ப்ராஹ்மணத்வம் கதம் தத:। விப்ரத்வாந் முக்திேயாக்யத்வம்।
௧௰௧।௰௰௩
யதா யாதி மஹாமுேந। தத் அஹம் ஸ்ேராதும் இச்சாமி। ௧௰௧।௰௰௪
த்வத்ேதா பார்கவநந்தந। த்வத்யுக்ேதா அயம் அநுப்ரஸ்ந:। ௧௰௧।௰௰௪
குருவர்ய ஸ்ருணுஷ்வ தம்। மேயாச்யமாநம் அகிலம்। ௧௰௧।௰௰௫
வர்ணாநாம் உபகாரகம்। ஸூத்ரதர்மாந் அேஸேஷண। ௧௰௧।௰௰௫
குர்வஞ் ஸூத்ேரா யதாவிதி। ைவஸ்யத்வம் ஏதி ைவஸ்யஸ் ச।
௧௰௧।௰௰௬
க்ஷத்ரியத்வம் ஸ்வகர்மக்ருத்। விப்ரத்வம் க்ஷத்ரிய: ஸம்யக்।
௧௰௧।௰௰௬
த்விஜதர்மபேரா ந்ருப। விப்ரஸ் ச முக்திலாேபந। ௧௰௧।௰௰௭
யுஜ்யேத ஸத்க்ரியாபர:। ஸர்ேவஷாம் ஏவ வர்ணாநாம்। ௧௰௧।௰௰௭
ஸ்வதர்மம் அநுவர்ததாம்। ஸேதாச்ச்ரிதிர் ந்யூநக்ருேதா। ௧௰௧।௰௰௮
ஹாநிஸ் ேசாத்க்ருஷ்டகர்மண:। ேதஷாம் ச ப்ராஹ்மணாதீநாம்।
௧௰௧।௰௰௮
வர்ணதர்மாந் அநுக்ரமாத்। ஸமுச்ச்ரிதிப்ரதாந் ராஜந்। ௧௰௧।௰௰௯
கதேதா ேம நிஸாமய। அநஸூயா தயா க்ஷாந்தி:। ௧௰௧।௰௰௯

ெஸௗசம் மங்கலம் அஸ்ப்ருஹா। அகார்பண்யம் அநாயாஸஸ்।
௧௰௧।௰௧
ததாந்ய: ஸார்வவர்ணிக:। அஷ்டாவ் ஏேத குணா: பும்ஸாம்। ௧௰௧।௰௧
பரத்ேரஹ ச பூதேய। பவந்தி குருஸார்தூல। ௧௰௧।௰௧௧
ப்ருதக்தர்மாம்ஸ் ச ேம ஸ்ருணு। யஜ்ஞாத்யயநதாநாநி। ௧௰௧।௰௧௧
ப்ரஹ்மக்ஷத்ரவிஸாம் ந்ருப। ஸாதாரணாநி ேதஷாம் து। ௧௰௧।௰௧௨
ஜவிகாகர்ம ீ கத்யேத। யாஜநாத்யாபைநர் விப்ரஸ்। ௧௰௧।௰௧௨
ததா ஸஸ்தப்ரதிக்ரைஹ:। ப்ருத்யாதிபரணம் குர்யாத்। ௧௰௧।௰௧௩
யஜ்ஞாம்ஸ் ச விபேவ ஸதி। ப்ருத்யாதிபரேண நாலம்। ௧௰௧।௰௧௩
ஸ்வவ்ருத்த்யா ஹி யதா த்விஜ:। ததா ஜேவத் ீ ஸமாலம்ப்ய।
௧௰௧।௰௧௪
வ்ருத்திம் க்ஷத்ரியைவஸ்யேயா:। ஸம்த்யேஜத ஸமஸ்தாம்ஸ் தாந்।
௧௰௧।௰௧௪
ந குர்யாத் வ்ருத்திஸம்கரம்। ஆபத்காேல அபி விப்ரஸ்ய। ௧௰௧।௰௧௫
ஸூத்ரகர்ம ந ஸஸ்யேத। ப்ரஜாநாம் பாலநம் ஸம்யக்। ௧௰௧।௰௧௫
விதி: ப்ரதமகல்பித:। ராஜந்யஸ்ய மஹீபால। ௧௰௧।௰௧௬
ஸஸ்த்ராஜேவந ீ வா ப்ருதி:। ததுத்பந்ைநர் தைந: குர்யாத்। ௧௰௧।௰௧௬
ஸமஸ்தா: க்ஷத்ரியக்ரியா:। தஸ்யாப்ய் ஆபதி ைவஸ்யஸ்ய।
௧௰௧।௰௧௭
யா வ்ருத்தி: ஸா விதீயேத। வாணிஜ்யம் ைவஸ்யஜாதஸ்ய।
௧௰௧।௰௧௭
பஸூநாம் பாலநம் க்ருஷி:। தத்யாத் யேஜச் ச விதிவத்। ௧௰௧।௰௧௮
ததுத்பந்நதேநந ஸ:। த்விஜாதிஜநஸுஸ்ரூஷாம்। ௧௰௧।௰௧௮

க்ரயவிக்ரயைஜர் தைந:। ஸூத்ேரா யேஜத் பாகயஜ்ைஞர்। ௧௰௧।௰௧௯
தத்யாத் இஷ்டாநி சார்திநாம்। தஸ்ைம ஸுஸ்ரூஷேவ ேதயம்।
௧௰௧।௰௧௯
ஜர்ணவஸ்த்ரம் ீ உபாநெஹௗ। சத்த்ராதிகம் ததா குர்யாத்। ௧௰௧।௰௨
ஸம்யக்தர்ேமாபபாதநம்। சதுர்ணாம் அபி வர்ணாநாம்। ௧௰௧।௰௨
தர்மஸ் ேத கதிேதா மயா। ஸ்ருணுஷ்வ ச மஹீபால। ௧௰௧।௰௨௧
தர்மம் ஆஸ்ரமிணாம் அத:। க்ருேதாபநயந: பூர்வம்। ௧௰௧।௰௨௧
ப்ரஹ்மசாரீ குேரார் க்ருேஹ। குருஸுஸ்ரூஷணம் குர்யாத்।
௧௰௧।௰௨௨
ைபக்ஷாந்நக்ருதேபாஜந:। நிேவத்ய குரேவ ைபக்ஷம்। ௧௰௧।௰௨௨
அத்தவ்யம் ததநுஜ்ஞயா। குேரார் புக்தவத: பஸ்சாந்। ௧௰௧।௰௨௩
நாதிஸ்வாதுமுதாவதா। வஹ்நிஸுஸ்ரூஷணம் க்ருயாத்। ௧௰௧।௰௨௩
ேவதாஹரணம் ஏவ ச। குேரார் அர்ேத ஸதா ேதாயம்। ௧௰௧।௰௨௪
ஸமிதாஹரணம் ததா। புஷ்பாதீநாம் ச குர்வதீ। ௧௰௧।௰௨௪
ஸுப்ேத தஸ்மிஞ் ஸயதீ ச। ஸயேந ச ஸமுத்திஷ்ேடத்। ௧௰௧।௰௨௫
தம் வ்ரஜந்தம் அநுவ்ரேஜத்। ஆஹூதஸ் ச பேடத் ேதந। ௧௰௧।௰௨௫
தந்மநா நாந்யேதாமுக:। வ்ரதாநி சரதா ஸம்யக்। ௧௰௧।௰௨௬
க்ராஹ்ேயா ேவேதா யதாத்மநா। தண்டவத்ப்லவநம் ஸ்நாேந।
௧௰௧।௰௨௬
ஸஸ்தம் நாஸ்யாங்கேஸாதநம்। அதீத்ய ேவதாந் ேவெதௗ வா।
௧௰௧।௰௨௬
ேவதம் வாபி யதாக்ரமம்। அவிப்லுதப்ரஹ்மசர்ேயா। ௧௰௧।௰௨௭

க்ருஹஸ்தாஸ்ரமம் ஆவேஸத்। யேதஷ்டாம் தக்ஷிணாம் தத்த்வா।
௧௰௧।௰௨௭
குரேவ குருநந்தந। தேதா அநுஜ்ஞாம் ஸமாஸாத்ய। ௧௰௧।௰௨௮
க்ருஹஸ்தாஸ்ரமம் ஆவேஸத்। ேதைநவாந்தம் வ்ரேஜத் ப்ராஜ்ஞஸ்।
௧௰௧।௰௨௮
தச்சுஸ்ரூஷணதத்பர:। வாநப்ரஸ்தாஸ்ரமம் தஸ்மாச்। ௧௰௧।௰௨௯
சதுர்தம் வாபி ஸம்ஸ்ரேயத்। யதாக்ரமம் வா குர்வதீ। ௧௰௧।௰௨௯
விதிவத் தாரஸம்க்ரஹம்। ததஸ் த்வ் அேராகிகுலஜாம்। ௧௰௧।௰௨௯
துல்யாம் பத்நீம் ஸமுத்வேஹத்। க்ருஹஸ்தாஸ்ரமவ்ருத்த்யர்தம்।
௧௰௧।௰௩
அவ்யங்காம் விதிநா ந்ருப। ஆக்யாதவர்ணதர்ேமண। ௧௰௧।௰௩
தநம் லப்த்வா மஹீபேத। குர்வதீ ஸ்ரத்தயா யுக்ேதா। ௧௰௧।௰௩௧
நித்யைநமித்திகீ: க்ரியா:। அப்யாகதாதிதீந் பந்தூந்। ௧௰௧।௰௩௧
ப்ருத்யாதீந் ஆதுராம்ஸ் ததா। ேதாஷேயச் சக்திேதா அந்ேநந।
௧௰௧।௰௩௨
வயாம்ஸ்ய் அந்த்யபஸூந் அபி। க்ருதாவ் உபகமஸ் ைசவ। ௧௰௧।௰௩௨
க்ருஹஸ்தஸ்யாபி ஸப்தித:। தர்ேமா தர்மப்ருதாம் ஸ்ேரஷ்ட।
௧௰௧।௰௩௩
யஜ்ேஞாச்சிஷ்டம் ச ேபாஜநம்। ஹவ்ேயந ப்ரீணேயத் ேதவாந்।
௧௰௧।௰௩௩
பித்ருந் கவ்ேயந ஸக்தித:। மநுஷ்யாந் அந்நபாேநந। ௧௰௧।௰௩௪
ஸ்வாத்யாேயந ர்ஷிதர்பணம்। குர்யாச் ச ப்ரீணநம் நித்யம்। ௧௰௧।௰௩௪
பூதாநாம் பலிகர்மணா। ப்ரஜாபதிம் ஸுேதாத்பத்த்யா। ௧௰௧।௰௩௫
ஹார்ேதந ஸகலம் ஜநம்। ஸுேபந கர்மணாத்மாநம்। ௧௰௧।௰௩௫

உபேதேஸந சாத்மஜாந்। அநுஜவிஜநம் ீ வ்ருத்யா। ௧௰௧।௰௩௬
க்ருஹஸ்தஸ் ேதாஷேயத் ஸதா। தைதவாபரமாேநப்ய:। ௧௰௧।௰௩௬
ப்ரேதயம் க்ருஹேமதிநா। அந்நம் பிக்ஷார்திேநா ேய ச। ௧௰௧।௰௩௭
பரிவ்ராட்ப்ரஹ்மசாரிண:। ஏவம் க்ருஹாஸ்ரேம ேதவா:। ௧௰௧।௰௩௭
பிதேரா முநயஸ் ததா। ஸர்வகாமாந் ப்ரயச்சந்தி। ௧௰௧।௰௩௮
மநுஷ்யாஸ் ச ஸுபூஜிதா:। க்ருஹஸ்தஸ் து யதா பஸ்ேயத்।
௧௰௧।௰௩௮
வலீபலிதம் ஆத்மந:। அபத்யஸ்ய ததாபத்யம்। ௧௰௧।௰௩௯
ததாரண்யம் ஸமாஸ்ரேயத்। பித்ருேதவாதிதீநாம் து। ௧௰௧।௰௩௯
ஸ்ம்ருதம் தத்ராபி பூஜநம்। தைதவாரண்யேபாகஸ் ச। ௧௰௧।௰௪
தேபாபிஸ் சாத்மகர்ஷணம்। ப்ரஹ்மசர்யம் மஹீஸய்யா। ௧௰௧।௰௪
ேஹாமஸ் த்ரிஷவணாப்லுதி:। ெமௗநாதிகரணம் ஸஸ்தம்। ௧௰௧।௰௪௧
ஜடாவல்கலதாரணம்। க்ரீஷ்ேம பஞ்சதேபாபிஸ் ச। ௧௰௧।௰௪௧
வர்ஷாஸ்வ் அப்ராவகாஸிைக:। ஜலஸய்யா ச ேஹமந்ேத। ௧௰௧।௰௪௨
பாவ்யம் வநநிேகதைந:। இங்குைதரண்டைதேலந। ௧௰௧।௰௪௨
காத்ராப்யங்காநி ேசஷ்யேத। ஸ்யாமாகநீவாரமயம்। ௧௰௧।௰௪௩
பலமூைலஸ் ச ேபாஜநம்। அப்ரேவஸஸ் ததா க்ராேம। ௧௰௧।௰௪௩
வாநப்ரஸ்தவிதி: ஸ்ம்ருத:। வாநப்ரஸ்தஸ்ய ேத ப்ேராக்தம்। ௧௰௧।௰௪௪
தர்மலக்ஷணம் ஆதித:। ஆஸ்ரமணம் த்வ் அபரம் பிேக்ஷா:। ௧௰௧।௰௪௪
ஸ்ருணுஷ்வ கதேதா மம। க்ராைமகராத்ரிர் வஸதிர்। ௧௰௧।௰௪௫
நகேர பஞ்சராத்ரிகா। ஸர்வஸங்கபரித்யாக:। ௧௰௧।௰௪௫
க்ஷாந்திர் இந்த்ரியஸம்யம:। விகாலைபக்ஷசரணம்। ௧௰௧।௰௪௬

அநாரம்பஸ் ததா ந்ருப। ஆத்மஜ்ஞாநாவேபாேதச்சா। ௧௰௧।௰௪௬
ப்ரஹ்மசர்யம் ஸமாதிநா। ஆத்மாவேலாகநம் ைசவ। ௧௰௧।௰௫௭
பிேக்ஷா: ஸஸ்தாநி பார்திவ। சதுர்தஸ் ைசஷ கதிதஸ்। ௧௰௧।௰௪௭
தவ பிேக்ஷார் மயாஸ்ரம:। க்ரமாத் விமுக்திகாமாநாம்। ௧௰௧।௰௪௮
புருஷாணாம் அயம் விதி:। ஏவம் து வர்ணதர்ேமண। ௧௰௧।௰௪௮
ததா சாஸ்ரமகர்மநா। நிேஜந ஸம்பூஜ்ய ஹரிம்। ௧௰௧।௰௪௯
ஸித்திம் ஆப்ேநாதி மாநவ:। ப்ரஹ்மசாரீ க்ருஹஸ்தஸ் ச। ௧௰௧।௰௪௯
பிக்ஷுர் ைவகாநஸஸ் ததா। குர்வந்ேதா நிஜகர்மாணி। ௧௰௧।௰௫
விஷ்ணும் ஏவ யஜந்தி ேத। யேதா ஹி ேதவதா: ஸர்வா। ௧௰௧।௰௫
ப்ரஹ்மாத்யா: குருநந்தந। அம்ஸபூதா ஜகத்தாதுர்। ௧௰௧।௰௫௧
விஷ்ேணார் அவ்யக்தஜந்மந:। விஸ்ேவ ேதவா யேதா விஷ்ணுர்।
௧௰௧।௰௫௧
விஷ்ணு: பித்ருகேணா யத:। ேதவா யஜ்ஞபுஜஸ் ேசேஸா। ௧௰௧।௰௫௨
யத: பாபஹேரா ஹரி:। விஸ்ேவ பூதாநி பூதாநி। ௧௰௧।௰௫௨
யேதா விஷ்ணுஸ் ததர்ஷய:। தத: ஸர்வாஸ்ரமாணாம் ஹி।
௧௰௧।௰௫௩
பூஜ்ய ஏேகா ஜநார்தந:। ஸர்ேவஸ்வரம் ஸர்வமயம் ஸமஸ்த ।
௧௰௧।௰௫௩
ஸம்ஸாரேஹதுக்ஷயகாரேணஸம்। வரம் வேரண்யம் வரதம் வரிஷ்டம்।
௧௰௧।௰௫௪
விஷ்ணும் க்ரியாவாந் யஜேத மநுஷ்ய:। யஸ்ேயாதேர ஜகத் இதம்
பரமாணுபூதம்। ௧௰௧।௰௫௪

சந்த்ேரந்த்ரருத்ரமருதஸ்விவஸுப்ரேஜைஸ:। ஸர்ைவ: ஸேமதம்
அமிதாத்மதேநாஸ் தம் ஏகம்। ௧௰௧।௰௫௫
அப்யர்ச்ய விஷ்ணும் அபிவாஞ்சிதம் அஸ்த்ய் அலப்யம்। ஆராத்ய யம்
புவநபாவநம் அச்யுதாக்யம்। ௧௰௧।௰௫௫
ஐஸ்வர்யம் ஈப்ஸிதம் அவாப பதி: ஸுராணாம்। த்ைரேலாக்யஸாரம்
அமரார்சிதபாதபத்மம்। ௧௰௧।௰௫௬
ஏகம் தம் ஏவ ஹரிம் அர்சயதார்சநீயம்। யஸ்யாங்க்ரிபத்மகலிதாம்பஸி ேதவ
ைதத்ய । ௧௰௧।௰௫௬
யக்ஷாதிபி: ஸகலபாபம் அேபாஹ்ய ஸித்தி:। ஸம்ப்ராப்யேத
மரணஜந்மஜராபஹந்த்ரீ। ௧௰௧।௰௫௭
விஷ்ேணார் அஜாத் கதய ேகா அப்யதிகஸ் தேதா அஸ்தி।
கமலஜஹரஸூர்யசந்த்ரஸக்ைர:। ௧௰௧।௰௫௭
ஸததம் அபிஷ்டுதம் ஆத்யம் ஈஸிதாரம்। ஸகலபுவநகார்யகாரேநஸம்।
௧௰௧।௰௫௮
புருஷதநும் ப்ரணேதா அஸ்மி வாஸுேதவம்। ஸ்ருதம் பகவேதா ரூபம்।
௧௰௧।௰௫௮
அத்ைவேத யத் த்வேயாதிதம்। விஷ்ேணார் ப்ருகுகுலஸ்ேரஷ்ட।
௧௰௨।௰௰௧
யச் ச த்ைவேத மஹாத்மந:। அவித்யாபிந்நத்ருக்புத்தி:। ௧௰௨।௰௰௧
புருேஷா முநிபுங்கவ। த்ைவதபூேத ஜகத்ய் அஸ்மிந்ந்। ௧௰௨।௰௰௨
அத்ைவதம் பாவேயத் கதம்। க்ேராதேலாபாதேயா ேதாஷா। ௧௰௨।௰௰௨
ேய முக்ேத: பரிபந்திந:। விநிவ்ருத்திரூபா ேயந। ௧௰௨।௰௰௩
ேதஷாம் ேயந வேதர் ஹ தம்। ஸர்ேவஸ்வேரஸ்வேரஸஸ்ய।
௧௰௨।௰௰௩

யச் ச ரூபம் ஹேர: பரம்। தச் சாஹம் ஸ்ேராதும் இச்சாமி।
௧௰௨।௰௰௪
த்வத்ேதா ப்ருகுகுேலாத்வஹ। ஸம்யக் ப்ருஷ்டம் இதம் பூப।
௧௰௨।௰௰௪
பவதா குஹ்யம் உத்தமம்। த்ைவதாத்ைவதகதாலாப । ௧௰௨।௰௰௫
ஸம்பந்தாத் உபகாரகம்। புரா தர்மக்ருேஹ ஜஜ்ேஞ। ௧௰௨।௰௰௫
சதுர்மூர்திர் நேரஸ்வர। ேதவேதேவா ஜகத்தாதா। ௧௰௨।௰௰௬
பரமாத்மா ஜநார்தந:। ஜகத: பாலநார்தாய। ௧௰௨।௰௰௬
துர்வ்ருத்தநிதநாய ச। ஸ்ேவச்சயா பகவாந் விஷ்ணு:। ௧௰௨।௰௰௭
ஸம்பவத்ய் ஏவ பூதேல। ஸ்வர்ேக வாபி பூேலாேக வா। ௧௰௨।௰௰௭
புவர்ேலாேக அதவா விபு:। யத்ர வா ேராசேத தத்ர। ௧௰௨।௰௰௮
சிகீர்ஷுர் ஜகேதா ஹிதம்। துரீயாம்ேஸந தர்மஸ்ய। ௧௰௨।௰௰௮
பகவாந் பூதபாவந:। யதாவதாரம் க்ருதவாம்ஸ்। ௧௰௨।௰௰௯
ததா தச்சரிதம் ஸ்ருணு। நேரா நாராயணஸ் ைசவ। ௧௰௨।௰௰௯
ஹரி: க்ருஷ்ணஸ் தைதவ ச। விஷ்ேணார் அம்ஸாம்ஸகா ஹ்ய் ஏேத।
௧௰௨।௰௧
சத்வாேரா தர்மஸூநவ:। ேதஷாம் நாராயணநெரௗ। ௧௰௨।௰௧
கந்தமாதநபர்வேத। ஆத்மந்ய் ஆத்மாநம் ஆதாய। ௧௰௨।௰௧௧
ேதபேத பரமம் தப:। த்யாயமாநாவ் அெநௗபம்யம்। ௧௰௨।௰௧௧
ஸ்வகாரணம் அகாரணம்। வாஸுேதவம் அநிர்ேதஸ்யம்। ௧௰௨।௰௧௨
அப்ரதர்க்யம் அஜம் பரம்। ேயாகயுக்ெதௗ மஹாெமௗநம்। ௧௰௨।௰௧௨
ஆஸ்திெதௗ குருேதஜெஸௗ। தேயாஸ் தப:ப்ரபாேவண। ௧௰௨।௰௧௨
ந ததாப திவாகர:। வெவௗ சாஸங்கிேதா வாயு:। ௧௰௨।௰௧௩

ஸுகஸ்பர்ேஸா ஹ்ய் அஸர்கர:। ஸிஸிேரா அபவத் அத்யர்தம்।
௧௰௨।௰௧௩
ஜ்வலந்ந் அபி விபாவஸு:। ஸிம்ஹவ்யாக்ராதய: ெஸௗம்யாஸ்।
௧௰௨।௰௧௪
ேசரு: ஸஹ ம்ருைகர் கிெரௗ। தேயார் ெகௗரவபாரார்தா। ௧௰௨।௰௧௪
ப்ருதிவ ீப்ருதிவபேத ீ । சசால பூதராஸ் ேசலுஸ்। ௧௰௨।௰௧௫
சுக்ஷுபுஸ் ச மஹாப்தய:। ேதவாஸ் ச ஸ்ேவஷு திஷ்ண்ேயஷு।
௧௰௨।௰௧௫
நிஷ்ப்ரேபஷு ஹதப்ரபா:। பபூவுர் அவநீபால। ௧௰௨।௰௧௬
பரமம் ேக்ஷாபம் ஆகதா:। ேதவராஜஸ் தத: ஸக்ர:। ௧௰௨।௰௧௬
ஸம்த்ரஸ்தஸ் தபஸஸ் தேயா:। யுேயாஜாப்ஸரஸ: ஸுப்ராஸ்।
௧௰௨।௰௧௭
தேயார் விக்நசிகீர்ஷயா। ரம்ேப திேலாத்தேம குண்ேட। ௧௰௨।௰௧௭
க்ருதாசி லலிதாவதி। உம்ேலாேச ஸுப்ருப்ரம்ேலாேச। ௧௰௨।௰௧௮
ெஸௗரேப அபி மேதாத்தேத। அலம்புேஷ மிஸ்ரேகஸி। ௧௰௨।௰௧௮
புண்டரீேக வரூதிநி। விேலாபநீயம் பிப்ராணா। ௧௰௨।௰௧௯
வபுர் மந்மதேபாதநம்। கந்தமாதநம் ஆஸாத்ய। ௧௰௨।௰௧௯
குருத்வம் வசநம் மம। நரநாராயெணௗ தத்ர। ௧௰௨।௰௧௯
தேபாதீக்ஷாந்விெதௗ த்விெஜௗ। தப்ேயேத தர்மதநெயௗ। ௧௰௨।௰௨
தப: பரமதுஸ்சரம்। தாவ் அஸ்மாகம் வராேராஹா:। ௧௰௨।௰௨
குர்வாெணௗ பரமம் தப:। கர்மாதிஸயது:கார்தி । ௧௰௨।௰௨௧
ப்ரதாவயதிநாஸெகௗ। தத் கச்சத ந ப: ீ கார்யா। ௧௰௨।௰௨௧
பவதீபிர் இதம் வச:। ஸ்மர: ஸஹாேயா பவிதா। ௧௰௨।௰௨௨

வஸந்தஸ் ச வராங்கநா:। ரூபம் ச வ: ஸமாேலாக்ய। ௧௰௨।௰௨௨
மதேநாத்தீபநம் பரம்। கந்தர்பவஸம் அப்ேயதி। ௧௰௨।௰௨௩
விவஸ: ேகா ந மாநவ:। இத்ய் உக்தா ேதவராேஜந। ௧௰௨।௰௨௩
மதேநந ஸமம் ததா। ஜக்முர் அப்ஸரஸ: ஸர்வா। ௧௰௨।௰௨௪
வஸந்தஸ் ச மஹீபேத। கந்தமாதநம் ஆஸாத்ய। ௧௰௨।௰௨௪
பும்ஸ்ேகாகிலகுலாகுலம்। சகார மாதேவா ரம்யம்। ௧௰௨।௰௨௫
ப்ேராத்புல்லவநபாதபம்। ப்ரவெவௗ தக்ஷிண: ஸத்ேயா। ௧௰௨।௰௨௫
மலயாநுகேதா அநில:। ப்ருங்கமாலாருதரைவர்। ௧௰௨।௰௨௬
ரமணயம்ீ அபூத் வநம்। கந்தஸ் ச ஸுரபி: ஸத்ேயா। ௧௰௨।௰௨௬
வநராஜிஸமுத்பவ:। கிம்நேராரகயக்ஷாணாம்। ௧௰௨।௰௨௭
பபூவ க்ராணதர்பண:। வராங்கநாஸ் ச தா: ஸர்வா। ௧௰௨।௰௨௭
நரநாராயணாவ் க்ருஷீ। விேலாபயிதும் ஆரப்தா। ௧௰௨।௰௨௮
வராங்கலலிைத: ஸ்மிைத:। ஜகுர் மேநாஹரம் காஸ்சிந்। ௧௰௨।௰௨௮
நந்ருதுஸ் சாத்ர சாபரா:। அவாதயம்ஸ் தைதவாந்யா। ௧௰௨।௰௨௯
மேநாஹரதரம் ந்ருப। ஹாைவர் பாைவ: ஸ்மிைதஸ் த்ராைஸஸ்।
௧௰௨।௰௨௯
ததாந்யா வல்குபாஷிைத:। தேயா: ேக்ஷாபாய தந்வங்க்யஸ்। ௧௰௨।௰௩
சக்ருர் உத்யமம் அங்கநா:। ததாபி ந தேயா: கஸ்சிந்। ௧௰௨।௰௩
மநஸ: ப்ருதிவபேத ீ । விகாேரா அபவத் அத்யாத்ம । ௧௰௨।௰௩௧
பாரஸம்ப்ராப்தேசதேஸா:। நிவாதஸ்ெதௗ யதா தீபாவ்। ௧௰௨।௰௩௧
அகம்ெபௗ ந்ருப திஷ்டத:। வாஸுேதவார்பேண ஸ்வச்ேச। ௧௰௨।௰௩௨
தைதவ மநஸீ தேயா:। பூர்யமாேணா அபி சாம்ேபாபிர்। ௧௰௨।௰௩௨

புவம் அந்யாம் மேஹாததி:। யதா ந யாதி ந யெயௗ। ௧௰௨।௰௩௩
ததா தந்மாநஸம் க்வசித்। ஸர்வபூதஹிெதௗ ப்ரஹ்ம। ௧௰௨।௰௩௩
வாஸுேதவமயம் பரம்। மந்யமாெநௗ ந ராகஸ்ய। ௧௰௨।௰௩௪
த்ேவஷஸ்ய ச வஸம்கெதௗ। ஸ்மேரா அபி ந ஸஸாகாத। ௧௰௨।௰௩௪
ப்ரேவஷ்டும் ஹ்ருதயம் தேயா:। வித்யாமயம் தீபயுதம்। ௧௰௨।௰௩௫
அந்தகாரம் இவாலயம்। புஷ்ேபாஜ்ஜ்வலாம்ஸ் தருவராந்। ௧௰௨।௰௩௫
வஸந்தம் தக்ஷிணாநிலம்। தாஸ் ைசவாப்ஸரஸ: ஸர்வா:। ௧௰௨।௰௩௬
கந்தர்பம் ச மஹாமுநீ। யச் சாரப்தம் தபஸ் தாப்யாம்। ௧௰௨।௰௩௬
ஆத்மாநம் கந்தமாதநம்। தத்ருஸாேத அகிலம் ரூபம்। ௧௰௨।௰௩௭
ப்ரஹ்மண: புருஷர்ஷப। தாஹாய நாநேலா வஹ்ேநர்। ௧௰௨।௰௩௭
நாப:க்ேலதாய சாம்பஸ:। தத்த்ரவ்யம் ஏவ தத்த்ரவ்ய । ௧௰௨।௰௩௮
விகாராய ந ைவ யத:। தேதா விஜ்ஞாநவிஜ்ஞாத । ௧௰௨।௰௩௮
பரப்ரஹ்மஸ்வரூபேயா:। மதுகந்தர்பேயாஷித்ஸு। ௧௰௨।௰௩௯
விகாேரா நாபவத் தேயா:। தேதா குருதரம் யத்நம்। ௧௰௨।௰௩௯
வஸந்தமதெநௗ ந்ருப। சக்ராேத தாஸ் ச தந்வங்க்யஸ்। ௧௰௨।௰௪
தத்ேக்ஷாபாய புந: புந:। அத நாராயேணா ைதர்ய । ௧௰௨।௰௪
காம்பர்ேயாதார்யமாநஸ ீ :। ஊேரார் உத்பாதயாம் ஆஸ। ௧௰௨।௰௪௧
தாம் வேராருபலாம் ததா। த்ைரேலாக்யஸுந்தரீரத்நம்। ௧௰௨।௰௪௧
அேஸஷம் அவநீபேத। குணலாகவம் அப்ேயதி। ௧௰௨।௰௪௨
யஸ்யா: ஸம்தர்ஸநாத் அநு। தாம் விேலாக்ய மஹீபால। ௧௰௨।௰௪௨
சகம்ேப மாதவாநிலம்। வஸந்ேதா விஸ்மயம் யாத:। ௧௰௨।௰௪௩
ஸம்யாத: ஸம்ஸ்மரம் ஸ்மர:। ரம்பாதிேலாத்தமாத்யாஸ் ச।
௧௰௨।௰௪௩

விலக்ஷா ேதவேயாஷித:। ந ேரஜுர் அவநீபால। ௧௰௨।௰௪௪
தல்லக்ஷஹ்ருதேயக்ஷணா:। தத: காேமா வஸந்தஸ் ச। ௧௰௨।௰௪௪
பார்திவாப்ஸரஸஸ் ச தா:। ப்ரணம்ய பகவந்ெதௗ ெதௗ। ௧௰௨।௰௪௫
துஷ்டுவுர் முநிஸத்தெமௗ। ப்ரஸததுீ ஜகத்தாதா। ௧௰௨।௰௪௫
யஸ்ய ேதவஸ்ய மாயயா। ேமாஹிதா: ஸ்ம விஜாநீேமா। ௧௰௨।௰௪௬
நாந்தரம் வந்த்யநிந்த்யேயா:। ப்ரஸததுீ ஸ ேநா ேதேவா। ௧௰௨।௰௪௬
யஸ்ய ரூபம் இதம் த்விதா। தாம பூதஸ்ய ேலாகாநாம்। ௧௰௨।௰௪௭
அநாேதர் அத்ர திஷ்டதி। நரநாராயெணௗ ேதெவௗ। ௧௰௨।௰௪௭
ஸார்ங்கசக்ராயுதாவ் உெபௗ। ஆஸ்தாம் ப்ரஸாதஸுமுகாவ்।
௧௰௨।௰௪௮
அஸ்மாகம் அபராதிநாம்। நிதாநம் ஸர்வவித்யாநாம்। ௧௰௨।௰௪௮
ஸர்வபாேபந்தநாநல:। நாராயேணா ேநா பகவாந்। ௧௰௨।௰௪௯
ஸர்வபாபம் வ்யேபாஹது। ஸார்ங்கசக்ராயுத: ஸ்ரீமாந்। ௧௰௨।௰௪௯
ஆத்மஜ்ஞாநமேயா அநக:। நர: ஸமஸ்தபாபாநி। ௧௰௨।௰௫
ஹத்வாத்மா ஸர்வேதஹிநாம்। ஜடாகலாபபந்ேதா அயம்। ௧௰௨।௰௫
அநேயார் அக்ஷயாத்மேநா:। ெஸௗம்யா ச த்ருஷ்டி: பாபாநி।
௧௰௨।௰௫௧
ஹந்து ஸர்வாணி ந: ஸுபா। ப்ரஸததுீ நேரா அஸ்மாகம்। ௧௰௨।௰௫௧
ததா நாராயேணா அவ்யய:। அபராத: க்ருேதா அஸ்மாபிர்। ௧௰௨।௰௫௨
யேயார் அவ்யக்தஜந்மேநா:। க்வ மூர்திர் ஐஸ்வர்யகுைணர்।
௧௰௨।௰௫௨
யுக்தா திவ்ையர் மஹாத்மேநா:। க்வ ந: ஸரீரகாணத்ருக் ீ । ௧௰௨।௰௫௩
மிஸ்ரகர்மசிதாநி ைவ। ததாப்ய் அவித்யாதுஷ்ேடந। ௧௰௨।௰௫௩

மநஸா ய: க்ருேதா ஹி வாம்। அஸ்மாபிர் அபராேதா அயம்।
௧௰௨।௰௫௪
க்ஷம்யதாம் ஸுமஹாத்யுதீ। ஸரணம் ச ப்ரபந்நாநாம்। ௧௰௨।௰௫௪
தவாஸ்மீதி ச வாதிநாம்। ப்ரஸாதம் பித்ருஹந்த்ருணாம்। ௧௰௨।௰௫௫
அபி குர்வந்தி ஸாதவ:। ஏஷ ஏவ வேரா அஸ்மாகம்। ௧௰௨।௰௫௫
அவிேவகாஹ்ருேதா மஹாந்। த்ைரேலாக்யவந்த்ெயௗ யந்நாெதௗ।
௧௰௨।௰௫௬
விேலாபயிதும் ஆகதா:। ப்ரஸதீ ேதவ விஜ்ஞாந । ௧௰௨।௰௫௬
கநமூடத்ருஸாம் அபி। பவந்தி ஸந்த: ஸததம்। ௧௰௨।௰௫௭
ஸத்தர்மந்யவதாரகா:। த்ருஷ்ட்ைவதந் ந: ஸமுத்பந்நம்। ௧௰௨।௰௫௭
யதா ஸ்த்ரீரத்நம் ஈத்ருஸம்। த்வயி நாராயேணாத்பந்நா। ௧௰௨।௰௫௮
ஸ்ேரஷ்டா பாரவதீமதி:। ேதந ஸத்ேயந ஸத்யாத்மந்। ௧௰௨।௰௫௮
பரமாத்மந் ஸநாதநம்। நாராயண ப்ரஸேததி ீ । ௧௰௨।௰௫௯
ஸர்வேலாகபராயண। ப்ரஸந்நபுத்ேத ஸாந்தாத்மந்। ௧௰௨।௰௫௯
ப்ரஸந்நவதேநக்ஷண। ப்ரஸதீ ேயாகிநாம் ஈஸ। ௧௰௨।௰௬
நர ஸர்வகதாச்யுத। நமஸ்யாேமா நரம் ேதவம்। ௧௰௨।௰௬
ததா நாராயணம் ஹரிம்। நேமா நராய நம்யாய। ௧௰௨।௰௬௧
நேமா நாராயணாய ச। ப்ரஸந்நாநாம் அநாதாநாம்। ௧௰௨।௰௬௧
அபராதவதாம் ப்ரபு:। ஸம் கேராது நேரா அஸ்மாகம்। ௧௰௨।௰௬௨
ஸம் நாராயண ேதஹி ந:। ஏவம் அப்யர்தித: ஸ்துத்யா। ௧௰௨।௰௬௨
ராகத்ேவஷாதிவர்ஜித:। ப்ராேஹஸ: ஸர்வபூதாநாம்। ௧௰௨।௰௬௩
ஸாத்ேயா நாராயேணா ந்ருப। ஸ்வாகதம் மதேவ காம। ௧௰௨।௰௬௩

பவேதா அப்ஸரஸாம் அபி। யத் கார்யம் ஆகதாநாம் வ। ௧௰௨।௰௬௪
இஹாஸ்மாபிஸ் தத் உச்யதாம்। யூயம் ஸம்ஸித்தேய நூநம்।
௧௰௨।௰௬௪
அஸ்மாகம் வலஸத்ருணா। ஸம்ப்ேரஷிதாஸ் தேதா அஸ்மாகம்।
௧௰௨।௰௬௫
ந்ருத்தேகயாதிதர்ஸிதம்। ந வயம் ந்ருத்தகீேதந। ௧௰௨।௰௬௫
நாங்கேசஷ்டாதிபாஷிைத:। லுப்யாேமா விஷேதா மந்ேய। ௧௰௨।௰௬௬
விஷயா தாருணாத்மகா:। ஸப்தாதிஸங்கதுஷ்டாநி। ௧௰௨।௰௬௬
யதா நாக்ஷாணி ந: ஸுபா:। ததா ந்ருத்தாதேயா பாவா:। ௧௰௨।௰௬௭
கதம் ேலாபப்ரதாயிந:। ேத ஸித்தா: ஸ்ம ந ைவ ஸாத்யா। ௧௰௨।௰௬௭
பவதீநாம் ஸ்மரஸ்ய ச। மாதவஸ்ய ச ஸக்ேரா அபி। ௧௰௨।௰௬௮
ஸ்வாஸ்த்யம் யாத்வ் அவிஸங்கித:। ேயா அெஸௗ பரஸ்மாத் பரம:।
௧௰௨।௰௬௮
புருஷாத் பரேமஸ்வர:। பரமாத்மா ஹ்ருஷீேகஸ:। ௧௰௨।௰௬௯
ஸ்தாவரஸ்ய சரஸ்ய ச। உத்பத்திேஹதுர் அந்ேத ச। ௧௰௨।௰௬௯
யஸ்மிந் ஸர்வம் ப்ரலீயேத। ஸ ஸர்வவாஸிேதவத்வாத்। ௧௰௨।௰௭
வாஸுேதேவத்ய் உதாஹ்ருத:। வயம் அம்ஸாம்ஸகாஸ் தஸ்ய।
௧௰௨।௰௭
சதுர்வ்யூஹஸ்ய மாயிந:। ததாேதஸிதவர்த்மேநா। ௧௰௨।௰௭௧
ஜகத்ேபாதாய ேதஹிந:। தம் ஸர்வபூதம் ஸர்ேவஸம்। ௧௰௨।௰௭௧
ஸர்வத்ர ஸமதர்ஸிந:। பஸ்யந்த: குத்ர ராகாதீந்। ௧௰௨।௰௭௨
கரிஷ்யாேமா விேபதகாந்। வஸந்ேத மயி ேசந்த்ேர ச। ௧௰௨।௰௭௨
பவதீஷு ததா ஸ்மேர। யதா ஸ ஏவ விஸ்வாத்மா। ௧௰௨।௰௭௩

ததா த்ேவஷாதய: கதம்। தந்மயாந்ய் அவிபக்தாநி। ௧௰௨।௰௭௩
யதா ஸர்ேவஷு ஜந்துஷு। ப்ருதிவ்ய் ஆபஸ் ததா ேதேஜா। ௧௰௨।௰௭௪
வாயுர் ஆகாஸம் ஏவ ச। தேதந்த்ரியாண்ய் அஹம்காேரா। ௧௰௨।௰௭௪
புத்திஸ் ச ந ப்ருதக் யத:। ஸமத்ருஷ்டிர் யத: குத்ர। ௧௰௨।௰௭௫
ராகத்ேவெஷௗ ப்ரவர்தத:। ஆத்மா சாயம் அேபேதந। ௧௰௨।௰௭௫
யத: ஸர்ேவஷு ஜந்துஷு। ஸர்ேவஸ்வேரஸ்வேரா விஷ்ணு:।
௧௰௨।௰௭௬
குத்ர ராகாதயஸ் தத:। ப்ரஹ்மாணம் இந்த்ரம் ஈஸாநம்। ௧௰௨।௰௭௬
ஆதித்யாந் மருேதா அகிலாந்। விஸ்ேவேதவாந் க்ருஷீந் ஸாத்யாந்।
௧௰௨।௰௭௭
வஸூந் பித்ருகணாம்ஸ் ததா। யக்ஷராக்ஷஸபூதாதீந்। ௧௰௨।௰௭௭
நாகஸர்பஸரீஸ்ருபாந்। மநுஷ்யபக்ஷிேகாரூப । ௧௰௨।௰௭௮
கஜஸிம்ஹஜேலசராந்। மக்ஷிகாமஸகாதம்ஸாஞ்। ௧௰௨।௰௭௮
ஸலபாந் அலஸாந் க்ருமீந்। குல்மவ்ருக்ஷலதாவல்லி । ௧௰௨।௰௭௯
த்வக்ஸாரத்ருணஜாதிஜாந்। யச் ச கிம்சித் அத்ருஸ்யம் வா।
௧௰௨।௰௭௯
த்ருஸ்யம் வா த்ரிதஸாங்கநா:। மந்யத்வம் ரூபம் ஏகஸ்ய। ௧௰௨।௰௮
தத் ஸர்வம் பரமாத்மந:। ஜாநமாந: கதம் விஷ்ணும்। ௧௰௨।௰௮
ஆத்மாநம் பரமம் ச யத்। ராகத்ேவெஷௗ ததா ேலாபம்। ௧௰௨।௰௮௧
க: குர்யாத் அமராங்கநா:। ஸர்வபூதஸ்திேத விஷ்ெணௗ। ௧௰௨।௰௮௧
ஸர்வேக ஸர்வதாதரி। நிபாத்யதாம் ப்ருதக்பூேத। ௧௰௨।௰௮௨
குத்ர ராகாதிேகா கண:। ஏவம் அஸ்மாஸு யுஷ்மாஸு। ௧௰௨।௰௮௨
ஸர்வபூேதஷு சாபலா:। தந்மயத்ைவகபூேதஷு। ௧௰௨।௰௮௩

ராகாத்யவஸர: குத:। ஸம்யக்த்ருஷ்டிர் இயம் ப்ேராக்தா। ௧௰௨।௰௮௩
ஸமஸ்ைதக்யாவேலாகிநீ। ப்ருதக்விஜ்ஞாநம் அத்ைரவ। ௧௰௨।௰௮௪
ேலாகஸம்வ்யவஹாரவத்। பூேதந்த்ரியாந்த:கரண । ௧௰௨।௰௮௪
ப்ரதாநபுருஷாத்மகம்। ஜகத் யத் ஏதத் அகிலம்। ௧௰௨।௰௮௫
ததா ேபத: கிமாத்மக:। பவந்தி லயம் ஆயாந்தி। ௧௰௨।௰௮௫
ஸமுத்ேர ஸலிேலார்மய:। ந வாரிேபதேதா பிந்நாஸ்। ௧௰௨।௰௮௬
தைதைவக்யாத் இதம் ஜகத்। யதாக்ேநர் அர்சிஷ: பதா ீ :। ௧௰௨।௰௮௬
பிங்கலாருணதூஸரா:। பவந்தி நாக்நிேபேதந। ௧௰௨।௰௮௭
தைததத் ப்ரஹ்மேணா ஜகத்। பவதீபிஸ் ச யத் ேக்ஷாபம்। ௧௰௨।௰௮௭
அஸ்மாகம் ஸ புரம்தர:। காரயத்ய் அஸத் ஏதச் ச। ௧௰௨।௰௮௮
விேவகாதாரேசதஸாம்। பவத்ய: ஸ ச ேதேவந்த்ேரா। ௧௰௨।௰௮௮
ேலாகாஸ் ச ஸஸுராஸுரா:। ஸமுத்ராத்ரிவேநாேபதா। ௧௰௨।௰௮௯
மத்ேதஹாந்தரேகாசரா:। யேதயம் சாருஸர்வாங்கீ। ௧௰௨।௰௮௯
பவதீநாம் மேயாருத:। தர்ஸிதா தர்ஸயிஷ்யாமி। ௧௰௨।௰௯
ததாத்ைரவாகிலம் ஜகத்। ப்ரயாது ஸக்ேரா மா கர்வம்। ௧௰௨।௰௯
இந்த்ரத்வம் கஸ்ய ஸுஸ்திரம்। யூயம் ச மா ஸ்மயம் யாத।
௧௰௨।௰௯௧
ஸந்தி ரூபாந்விதா: ஸ்த்ரிய:। கிம் ஸுரூபம் குரூபம் வா। ௧௰௨।௰௯௧
யதா ேபேதா ந த்ருஸ்யேத। தாரதம்யம் ஸுரூபத்ேவ। ௧௰௨।௰௯௨
ஸததம் பிந்நதர்ஸிநாம்। பவதீநாம் ஸ்மயம் மத்வா। ௧௰௨।௰௯௨
ரூெபௗதார்யகுேணாத்பவம்। மேயயம் தர்ஸிதா தந்வ।ீ ௧௰௨।௰௯௩
ததஸ் தச்சமம் இச்சதா। யஸ்மாந் மதூேரார் உத்பூதா। ௧௰௨।௰௯௩

இயம் இந்தீவேரக்ஷணா। உர்வஸீ நாம கல்யாண।ீ ௧௰௨।௰௯௪
பவிஷ்யதி தேதா அப்ஸரா:। தத் இயம் ேதவராஜாய। ௧௰௨।௰௯௪
நீயதாம் வரவர்ணிநீ। பவத்யஸ் ேதந சாஸ்மாகம்। ௧௰௨।௰௯௫
ப்ேரஷிதா: ப்ரீதிம் இச்சதா। வக்தவ்யஸ் ச ஸஹஸ்ராேக்ஷா।
௧௰௨।௰௯௫
நாஸ்மாகம் ேபாககாரணாத்। தபஸ்சர்யா ந சாப்ராப்ய । ௧௰௨।௰௯௬
பலம் ப்ராப்தும் அபப்ஸிதம் ீ । ஸந்மார்கம் அஸ்ய ஜகேதா। ௧௰௨।௰௯௬
தர்ஸயிஷ்யந் கேராம்ய் அஹம்। தேபா நேரண ஸஹிேதா।
௧௰௨।௰௯௭
ஜகத: பாலேநாத்யத:। யதி கஸ்சித் தவாபாதாம்। ௧௰௨।௰௯௭
கேராதி த்ரிதேஸஸ்வர। தம் அஹம் வாரயிஷ்யாமி। ௧௰௨।௰௯௮
நிர்வ்ருேதா பவ வாஸவ। கர்தாஸி ேசத் த்வம் ஆபாதாம்। ௧௰௨।௰௯௮
அதுஷ்டஸ்ேயஹ கஸ்யசித்। தவாபி ஸாஸ்ைததத் அஹம்।
௧௰௨।௰௯௯
ப்ரவர்திஷ்யாம்ய் அஸம்ஸயம்। ஏதஜ் ஜ்ஞாத்வா ந ஸம்தாபஸ்।
௧௰௨।௰௯௯
த்வயா கார்ேயா ஹி மாம் ப்ரதி। உபகாராய ஜகதாம்। ௧௰௨।௧
அவதீர்ேணா அஸ்மி வாஸவ। யா ேசயம் உர்வஸீ மத்த:। ௧௰௨।௧
ஸமுத்பூதா புரம்தர। த்ேரதாக்நிேஹதுபூேதயம்। ௧௰௨।௧௰௧
ஐலம் ப்ராப்ய பவிஷ்யதி। இத்ய் உக்ேத அப்ஸரஸ: ஸர்வா:।
௧௰௨।௧௰௧
ப்ரணிபத்யாதிவிஸ்மிதா:। ஊசுர் நாராயணம் ேதவம்। ௧௰௩।௰௰௧
தத்தர்ஸநகுதூஹலா:। உக்ேதா பகவதா ேயா அயம்। ௧௰௩।௰௰௧

உபேதேஸா ஹிதார்திநாம்। ப்ேராக்த: ஸ ஸர்ேவா விஜ்ஞாேதா।
௧௰௩।௰௰௨
மாஹாத்ம்யம் விதிதம் ச ேத। யத் த்வ் ஏதத் பவதா ப்ேராக்தம்।
௧௰௩।௰௰௨
ப்ரஸந்ேநநாவ்யயாத்மநா। தர்ஸிேதயம் விஸாலாக்ஷ।ீ ௧௰௩।௰௰௩
தர்ஸயிஷ்யாமி ேவா ஜகத்। தந்நாத ஸர்வபாேவந। ௧௰௩।௰௰௩
ப்ரபந்நாநாம் ஜகத்பேத। தர்ஸயாத்மாநம் அகிலம்। ௧௰௩।௰௰௪
தர்ஸிேதயம் யேதார்வஸீ। யதி ேதவாபராத்ேதஷு। ௧௰௩।௰௰௪
நாஸ்மாஸு குபிதம் தவ। மநஸ் தஜ் ஜகதம் ஈஸ। ௧௰௩।௰௰௫
தர்ஸயாத்மாநம் ஆத்மநா। பஸ்யேதஹாகிலாம்ல் ேலாகாந்।
௧௰௩।௰௰௫
மம ேதேஹ ஸுராங்கநா:। மதும் மதநம் ஆத்மாநம்। ௧௰௩।௰௰௬
யச் சாந்யத் த்ரஷ்டும் இச்சத। இத்ய் உக்த்வா பகவாந் ேதவஸ்।
௧௰௩।௰௰௬
ததா நாராயேணா ந்ருப। உச்ைசர் ஜஹாஸ ஸ்வநவத்। ௧௰௩।௰௰௭
தத்ராபூத் அகிலம் ஜகத்। ப்ரஹ்மா ப்ரஜாபதி: ஸக்ர:। ௧௰௩।௰௰௭
ஸஹ ருத்ைர: பிநாகத்ருக்। ஆதித்யா வஸவ: ஸாத்யா। ௧௰௩।௰௰௮
விஸ்ேவேதவா மஹர்ஷய:। நாஸத்யதஸ்ராவ் அநிலா:। ௧௰௩।௰௰௮
ஸர்ேவ ஸர்ேவ ததாக்நய:। யக்ஷகந்தர்வஸித்தாஸ் ச। ௧௰௩।௰௰௯
பிஸாசா: கிம்நேராரகா:। ஸமஸ்தாப்ஸரேஸா வித்யா:। ௧௰௩।௰௰௯
ஸாங்கா ேவதாஸ் ததுக்தய:। மநுஷ்யா: பஸவ: கீடா:। ௧௰௩।௰௧
பக்ஷிண: பாதபாஸ் ததா। ஸரீஸ்ருபாஸ் ச ேய ஸூŠமா। ௧௰௩।௰௧

யச் சாந்யஜ் ஜவஸம்ஜ்ஞிதம் ீ । ஸமுத்ரா: ஸகலா: ைஸலா:।
௧௰௩।௰௧௧
ஸரித: காநநாநி ச। த்வபாந்ய் ீ அேஸஷாணி ததா। ௧௰௩।௰௧௧
நதா: ஸர்வஸராம்ஸி ச। நகரக்ராமபூர்ணா ச। ௧௰௩।௰௧௨
ேமதிநீேமதிநீபேத। ேதவாங்கநாபிர் ேதவஸ்ய। ௧௰௩।௰௧௨
ேதேஹ த்ருஷ்டம் மஹாத்மந:। நக்ஷத்ரக்ரஹதாராபி:। ௧௰௩।௰௧௨
ஸமேவதம் நபஸ்தலம்। தத்ருஸுஸ் தா: ஸுசார்வங்க்யஸ்।
௧௰௩।௰௧௩
தஸ்யாந்தர் விஸ்வரூபிண:। ேநார்த்வம் ந திர்யங் நாதஸ் ச।
௧௰௩।௰௧௩
யதாந்தஸ் தஸ்ய த்ருஸ்யேத। தம் அநந்தம் அநாதிம் ச। ௧௰௩।௰௧௪
ததஸ் தாஸ் துஷ்டுவு: ப்ரபும்। மதேநந ஸமம் ஸர்வா। ௧௰௩।௰௧௪
மதுநா ச ஸுராங்கநா:। ஸஸாத்வஸா பக்திமத்ய:। ௧௰௩।௰௧௫
பரம் விஸ்மயம் ஆகதா:। பஸ்யாம நாதிம் தவ ேதவ நாந்தம்।
௧௰௩।௰௧௫
ந மத்யம் அவ்யாக்ருதரூபபாரம்। பராயணம் த்வா ஜகதாம் அநந்தம்।
௧௰௩।௰௧௬
நதா: ஸ்ம நாராயணம் ஆத்மபூதம்। மஹீதிவம் வாயுஜலாக்நயஸ் த்வம்।
௧௰௩।௰௧௬
ஸப்தாதிரூபஸ் ச பராபராத்மந்। த்வத்ேதா பவத்ய் அச்யுத ஸர்வம் ஏதத்।
௧௰௩।௰௧௭
அேபதரூேபா அஸி விேபா த்வம் ஏபி:। த்ரஷ்டாஸி ரூபஸ்ய ரஸஸ்ய
ேவத்தா। ௧௰௩।௰௧௭
ஸ்ேராதா ச ஸப்தஸ்ய ஹேர த்வம் ஏக:। ஸ்ப்ரஷ்டா பவாந் ஸ்ப்ரஸவேதா
அகிலஸ்ய। ௧௰௩।௰௧௮

க்ராதாஸி கந்தஸ்ய ப்ருதக்ஷரீரீ। ஸுேரஷு ஸர்ேவஷு ந ேஸா அஸ்தி
கஸ்சிந்। ௧௰௩।௰௧௮
மநுஷ்யேலாேக ச ந ேஸா அஸ்தி கஸ்சித்। பஸ்வாதிவர்ேக ச ந ேஸா
அஸ்தி கஸ்சித்। ௧௰௩।௰௧௯
ேயா நாம்ஸபூதஸ் தவ ேதவேதவ। ப்ரஹ்மாத்யுேபந்த்ரப்ரமுகாநி
ெஸௗம்ேயஷ்வ்। ௧௰௩।௰௧௯
இந்த்ராக்நிரூபாணி ச வர்யவத்ஸு ீ । ருத்ராந்தகாதீநி ச ெரௗத்ரவத்ஸு।
௧௰௩।௰௨
ரூேபஷு ரூபாணி தேவாத்தமாநி। ஸமுத்ரரூபம் தவ ைதர்யவத்ஸு।
௧௰௩।௰௨
ேதஜஸ்விரூேபஷு ரவிஸ் ததாக்நி:। க்ஷமாதேநஷு க்ஷிதிரூபம் அக்ர்யம்।
௧௰௩।௰௨௧
ரூபம் தவாக்ர்யம் பலவத்ஸு வாயு:। மநுஷ்யரூபம் தவ ராஜேஸஷு।
௧௰௩।௰௨௧
மூேடஷு ஸர்ேவஸ்வர பாதேபா அஸி। தர்பாந்விேதஷ்வ் அச்யுத தாநவஸ்
த்வம்। ௧௰௩।௰௨௨
ஸநத்ஸுஜாதஸ் ச விேவகவத்ஸு। ரஸஸ்வரூேபண ஜேல ஸ்திேதா அஸி।
௧௰௩।௰௨௨
கந்தஸ்வரூேபா பவேதா தரித்ர்யம்। த்ருஸ்யஸ்வரூபஸ் ச ஹுதாஸேந
த்வம்। ௧௰௩।௰௨௩
ஸ்பர்ஸஸ்வரூேபா பகவாந் ஸமீேர। ஸப்தாத்மகம் ேத நபஸி ஸ்வரூபம்।
௧௰௩।௰௨௩
மந்தவ்யரூேபா மநஸி ப்ரேபா த்வம்। ேபாதவ்யரூபஸ் ச விேபா த்வம் ஏக:।
௧௰௩।௰௨௪

ஸர்வத்ர ஸர்ேவஸ்வர ஸர்வபூத:। பஸ்யாம ேத நாபிஸேராஜமத்ேய।
௧௰௩।௰௨௪
ப்ரஹ்மாணம் ஏதம் ச ஹரம் ப்ருகூட்யம்। தத்ராஸ்விெநௗ கர்ணகெதௗ
ஸமஸ்தாண்। ௧௰௩।௰௨௫
அவஸ்திதாந் பாஹுஷு ேலாகபாலாந்। க்ராேண அநிலம் ேநத்ரகெதௗ
ரவந்தூீ । ௧௰௩।௰௨௫
ஜிஹ்வா ச ேத நாத ஸரஸ்வதீயம்। பாெதௗ தரித்ரீம் ஜடரம் ஸமஸ்தாம்ல்।
௧௰௩।௰௨௬
ேலாகாந் ஹ்ருஷீேகஸ விேலாகயாம:। ஜங்ேக வியத் பாதகராங்குலீஷு।
௧௰௩।௰௨௬
பிஸாசரேக்ஷாரகஸித்தஸங்காந்। பும்ஸ்த்ேவ ப்ரஜாநாம் பதிர் ஓஷ்டயுக்ேம।
௧௰௩।௰௨௭
ப்ரதிஷ்டிதாஸ் ேத க்ரதவ: ஸமஸ்தா:। ஸர்ேவஷ்டயஸ் ேத தஸேநஷு
ேதவ। ௧௰௩।௰௨௭
தம்ஷ்ட்ருஆஸு வித்யா பவதஸ் சதஸ்ர:। ேராமஸ்வ் அேஸஷாஸ் தவ
ேதவஸங்கா। ௧௰௩।௰௨௮
வித்யாதரா நாத கராங்க்ரிேரகா:। ஸாங்கா: ஸமஸ்தாஸ் தவ ேதவ ேவதா:।
௧௰௩।௰௨௮
ஸமாஸ்திதா பஹுஷு ஸம்திபூதா:। வராஹரூபம் தரணத்ருதஸ் ீ ேத।
௧௰௩।௰௨௮
ந்ருஸிம்ஹரூபம் ச ஸடாகராலம்। பஸ்யாம ேத வாஜிஸிரஸ் தேதாச்ைசஸ்।
௧௰௩।௰௨௯
த்ரிவிக்ரேம யஸ் ச தவாப்ரேமய:। அமீஸமுத்ராஸ் தவ ேதவ ேதேஹ।
௧௰௩।௰௨௯

ேமர்வாதய: ைஸலவராஸ் தவாமீ। இமாஸ் ச கங்காப்ரமுகா: ஸ்ரவத்ேயா।
௧௰௩।௰௩
த்வபாந்ய் ீ அேஸஷாணி வநாநி ைசவ। ஸ்துவந்தி ைசேத முநயஸ் தேவஸ।
௧௰௩।௰௩
ேதேஹ ஸ்திதாஸ் த்வந்மஹிமாநம் அக்ர்யம்। த்வாம் ஈஸிதாரம் ஜகதாம்
அநந்தம்। ௧௰௩।௰௩௧
யஜ்ேஞஸம் அர்சந்தி ச யஜ்விேநா அமீ। த்வத்ேதா ந ெஸௗம்யம் ஜகதீஹ
கிம்சித்। ௧௰௩।௰௩௧
த்வத்ேதா ந ெரௗத்ரம் ச ஸமஸ்தமூர்ேத। த்வத்ேதா ந ஸதம்ீ ந ச
ேகஸேவாஷ்ணம்। ௧௰௩।௰௩௨
ஸர்வஸ்வரூபாதிஸயீ த்வம் ஏக:। ப்ரஸதீ ஸர்ேவஸ்வர ஸர்வபூத।
௧௰௩।௰௩௨
ஸநாதநாத்மந் பரேமஸ்வேரஸ। த்வந்மாயயா ேமாஹிதமாநஸாபிர்।
௧௰௩।௰௩௩
யத் ேத அபராத்தம் தத் இதம் க்ஷமஸ்வ। கிம் வாபராத்தம் தவ ேதவ
மூைடர்। ௧௰௩।௰௩௩
யந் மாயயா ேநா ஹ்ருதயம் ததாபி। பாபாவஸம் கிம் ப்ரணதார்திஹாரிந்।
௧௰௩।௰௩௪
மேநா ஹி ேநா விங்கலதாம் உைபதி। ந ேத அபராத்தம் யதி வாபராத்தம்।
௧௰௩।௰௩௪
அஸ்மாபிர் உந்மார்கவிவர்தநீபி:। தத் க்ஷம்யதாம் ஸ்ருஷ்டிகரஸ் தைவவ।
௧௰௩।௰௩௫
ேதவாபராதம் ஸ்ருஜேதா விேவகாந்। நேமா நமஸ் ேத ேகாவிந்த।
௧௰௩।௰௩௫
நாராயண ஜநார்தந। த்வந்நாமஸ்மரணாத் பாபம்। ௧௰௩।௰௩௬

அேஸஷம் ந: ப்ரணஸ்யது। தேதா அநந்த நமஸ் துப்யம்। ௧௰௩।௰௩௬
விஸ்வாத்மந் விஸ்வபாவந। த்வந்நாமஸ்மரணாத் பாபம்। ௧௰௩।௧௫௫
அேஸஷம் ந: ப்ரணஸ்யது। நேமா நமஸ் ேத ைவகுண்ட। ௧௰௩।௧௫௫
ஸ்ரீவத்ஸாங்காப்ஜேலாசந। வேரண்ய யஜ்ஞபுருஷ। ௧௰௩।௧௫௫
ப்ரஜாபாலக வாமந। நேமா அஸ்து ேத அப்ஜநாபாய। ௧௰௩।௧௫௫
ப்ரஜாபதிக்ருேத ஹேர। த்வந்நாமஸ்மரணாத் பாபம்। ௧௰௩।௰௩௭
அேஸஷம் ந: ப்ரணஸ்யது। ஸம்ஸாரார்ணவேபாதாய। ௧௰௩।௰௩௭
நமஸ் துப்யம் அேதாக்ஷஜ। த்வந்நாமஸ்மரணாத் பாபம்। ௧௰௩।௰௩௮
அேஸஷம் ந: ப்ரணஸ்யது। நம: பரஸ்ைம ஸ்ரீஸாய। ௧௰௩।௰௩௮
வாஸுேதவாய ேவதேஸ। ஸ்ேவச்சயா குணேபாக்த்ருத்ேவ।
௧௰௩।௰௩௯
ஸர்காந்தஸ்திதிகாரிேண। உபஸம்ஹார விஸ்வாத்மந்। ௧௰௩।௰௩௯
ரூபம் ஏதத் ஸமந்தத:। வர்தமாநம் ந ேநா த்ரஷ்டும்। ௧௰௩।௰௪
ஸமர்தம் சக்ஷுர் ஈஸ்வர। ப்ரலயாக்நிஸஹஸ்ரஸ்ய। ௧௰௩।௰௪
ஸமா தீப்திஸ் தவாச்யுத। ப்ரமாேணந திேஸா பூமிர்। ௧௰௩।௰௪௧
ககநம் ச ஸமாவ்ருதம்। ந வித்ம: க்வ நு வர்தாேமா। ௧௰௩।௰௪௧
பவாந் ைநேவாபலŠயேத। ஸர்வம் ஜகத் இைஹகஸ்தம்। ௧௰௩।௰௪௨
பிண்டிதம் லக்ஷயாமேஹ। கிம் வர்ணயாேமா ரூபம் ேத। ௧௰௩।௰௪௨
கிம் ப்ரமாணம் இதம் ஹேர। மாஹாத்ம்யம் கிம்து ேத ேதவ।
௧௰௩।௰௪௩
ஜிஹ்வாயா யந் ந ேகாசரம்। வக்த்ராணாம் அயுேதநாபி। ௧௰௩।௰௪௩
புத்தீநாம் அயுதாயுைத:। குணாநாம் வர்ணநம் நாத। ௧௰௩।௰௪௪
தவ வக்தும் ந ஸக்யேத। தத் ஏதத் தர்ஸிதம் ரூபம்। ௧௰௩।௰௪௪

ப்ரஸாத: பரம: க்ருத:। சந்தேதா ஜகதாம் ஈஸ। ௧௰௩।௰௪௫
தத் ஏதத் உபஸம்ஹர। இத்ய் ஏவம் ஸம்ஸ்துதஸ் தாபிர்। ௧௰௩।௰௪௫
அப்ஸேராபிர் ஜநார்தந:। திவ்யஜ்ஞாேநாபபந்நாநாம்। ௧௰௩।௰௪௬
தாஸாம் ப்ரத்யக்ஷம் ஈஸ்வர:। விேவஸ ஸர்வபூதாநி। ௧௰௩।௰௪௬
ஸ்ைவர் அம்ைஸர் பூதபாவந:। தம் த்ருஷ்ட்வா ஸர்வபூேதஷு।
௧௰௩।௰௪௬
லீயமாநம் அேதாக்ஷஜம்। விஸ்மயம் பரமம் ஜக்மு:। ௧௰௩।௰௪௭
ஸமஸ்தா ேதவேயாஷித:। ஸ ச ஸர்ேவஸ்வர: ைஸலாந்। ௧௰௩।௰௪௭
பாதபாந் ஸாகராந் புவம்। ஜலம் அக்நிம் ததா வாயும்। ௧௰௩।௰௪௮
ஆகாஸம் ச விேவஸ ஹ। காேல திŠவ் அத ஸர்வாத்மா।
௧௰௩।௰௪௮
மநுஷ்யாத்மந்ய் அதாபி ச। ஆத்மரூப: ஸ்தித: ஸ்ேவந। ௧௰௩।௰௪௯
மஹிம்நா பாவயஞ் ஜகத்। ேதவதாநவரக்ஷாம்ஸி। ௧௰௩।௰௪௯
யக்ஷவித்யாதேராரகாந்। மநுஷ்யபஸுகீடாதீந்। ௧௰௩।௰௫
ம்ருகபŠயந்தரிக்ஷகாந்। ேய அந்தரிேக்ஷ ததா பூெமௗ। ௧௰௩।௰௫
திவி ேய ேய ஜலாஸ்ரயா:। தாந் ப்ரவிஸ்ய ஸ விஸ்வாத்மா।
௧௰௩।௰௫௧
புநஸ் தத் ரூபம் ஆஸ்தித:। நேரண ஸார்சம் யத் தாபிர்। ௧௰௩।௰௫௧
த்ருஷ்டபூர்வம் அரிம்தம। தா: பரம் விஸ்மயம் கத்வா। ௧௰௩।௰௫௧
ஸர்வாஸ் த்ரிதஸேயாஷித:। ப்ரேணமு: ஸாத்யஸா: பாண்டு ।
௧௰௩।௰௫௨
வதநா ந்ருபஸத்தம। நாராயேணா அபி பகவாந்। ௧௰௩।௰௫௨
ஆஹ தாஸ் த்ரிதஸாங்கநா:। நீயதாம் உர்வஸீ பத்ரா। ௧௰௩।௰௫௩

யத்ராஸ்ேத த்ரிதேஸஸ்வர:। பவதீநாம் ஹிதார்தாய। ௧௰௩।௰௫௩
ஸர்வபூேதஷ்வ் அஸாவ் இதி। ஜ்ஞாநம் உத்பாதிதம் பூேயா।
௧௰௩।௰௫௪
லயம் பூேதஷு குர்வதா। தத் கச்சத ஸமஸ்ேதா அயம்। ௧௰௩।௰௫௪
பூதக்ராேமா மதம்ஸக:। அஹம் அப்ய் ஆத்மபூதஸ்ய। ௧௰௩।௰௫௫
வாஸுேதவஸ்ய ேயாகிந:। யஸ்மாத் பரதரம் நாஸ்தி। ௧௰௩।௰௫௫
ேயா அநந்த: பரிபட்யேத। தம் அஜம் ஸர்வபூேதஸம்। ௧௰௩।௰௫௬
ஜாநீத பரமம் பதம்। அஹம் பவத்ேயா ேதவாஸ் ச। ௧௰௩।௰௫௬
மநுஷ்யா: பஸவஸ் ச ேய। ஏதத் ஸர்வம் அநந்தஸ்ய। ௧௰௩।௰௫௭
ேதவேதவஸ்ய விஸ்த்ருதி:। ஏதஜ் ஜ்ஞாத்வா ஸமம் ஸர்கம்।
௧௰௩।௰௫௮
ஸேதவாஸுரமாநுஷம்। ஸபஸ்வாதிகணம் ைசவ। ௧௰௩।௰௫௮
த்ரஷ்டவ்யம் த்ரிதஸாங்கநா:। இத்ய் உக்தஸ் ேதந ேதேவந।
௧௰௩।௰௫௮
ஸமஸ்தாஸ் தா: ஸுரஸ்த்ரிய:। ப்ரணம்ய ெதௗ ஸமதநா:।
௧௰௩।௰௫௯
ஸவஸந்தாஸ் ச பார்திவ। ஆதாய ேசார்வஸம்ீ பூேயா। ௧௰௩।௰௫௯
ேதவராஜம் உபாகதா:। ஆசக்யுஸ் ச யதாவ்ருத்தம்। ௧௰௩।௰௬
ேதவராஜாய தத் ததா। ததா த்வம் அபி ராேஜந்த்ர। ௧௰௩।௰௬
ஸர்வபூேதஷு ேகஸவம்। சிந்தயந் ஸமதாம் கச்ச। ௧௰௩।௰௬௧
ஸமைதவ ஹி முக்தேய। ஜாநந்ந் ஏவம் அேஸேஷஷு। ௧௰௩।௰௬௧
பூேதஷு பரேமஸ்வரம்। வாஸுேதவம் கதம் ேதாஷாம்ல்। ௧௰௩।௰௬௨
ேலாபாதீந் ந ப்ரஹாஸ்யஸி। ஸர்வபூதாநி ேகாவிந்தாத்। ௧௰௩।௰௬௨

யதா நாந்யாநி பூபேத। ததா ைவராதேயா பாவா:। ௧௰௩।௰௬௩
க்ரியதாம் குத்ர பார்திவ। இஹ பஸ்யஞ் ஜகத் ஸர்வம்। ௧௰௩।௰௬௩
வாஸுேதவாத்மகம் ந்ருப। ஏதத் ஏவ ஹி க்ருஷ்ேணந। ௧௰௩।௰௬௪
ரூபம் ஆவிஷ்க்ருதம் ததா। பரமஸ்மாத் அபி மஹத்। ௧௰௩।௰௬௪
ரூபம் யத் கதிதம் தவ। ஜந்மாதிபாவரஹிதம்। ௧௰௩।௰௬௫
தத் விஷ்ேணா: பரமம் பதம்। ஸம்ேக்ஷேபண ச பூபால। ௧௰௩।௰௬௫
ஸ்ரூயதாம் யத் வதாமி ேத। யந் மெதௗ புருஷ: க்ருத்வா।
௧௰௩।௰௬௬
பரம் நிர்வாணம் க்ருச்சதி। ஸர்வம் விஷ்ணு: ஸமஸ்ெதௗ ஹி।
௧௰௩।௰௬௬
பாவாபாெவௗ ச தந்மெயௗ। ஸதஸத் ஸர்வம் ஈேஸேஸா।
௧௰௩।௰௬௭
வாஸுேதவ: பரம் பதம்। பவஜலதிகதாநாம் த்வந்த்வவாதாஹதாநாம்।
௧௰௩।௰௬௭
ஸுததுஹித்ருகலத்ரத்ராணபாரார்திதாநாம்। விஷமவிஷயேதாேய மஜ்ஜதாம்
அப்லவாநாம்। ௧௰௩।௰௬௮
பவதி ஸரணம் ஏேகா விஷ்ணுேபாேதா நராணாம்। இத்ய் உக்தம் தவ
தர்மஜ்ஞ। ௧௰௩।௰௬௮
விஷ்ேணார் மாஹாத்ம்யம் உத்தமம்। ஸ்வரூபம் ச ஜகத்தாதுர்।
௧௰௪।௰௰௧
ஆராதநவிநிஸ்சய:। ஆராதிதாத் பலம் யச் ச। ௧௰௪।௰௰௧
ேகஸவாத் ப்ராப்யேத நைர:। கதிதஸ் ச மஹாபாக। ௧௰௪।௰௰௨
தாநாநாம் விஸ்தராத் விதி:। ேயாகத்ைவதம் ச கதிதம்। ௧௰௪।௰௰௨
அத்ைவதம் த்ைவதம் ஏவ ச। அத்ைவதபாவேநாபாேயா। ௧௰௪।௰௰௩

விஸ்தராச் ச தேவாதித:। ஸம்ேக்ஷபவிஸ்தராப்யாம் ச। ௧௰௪।௰௰௩
ஸர்வம் ஏதத் தேவாதிதம்। ேதவேதவஸ்ய மாஹாத்ம்யம்। ௧௰௪।௰௰௪
ஸர்வகஸ்யாவ்யயாத்மந:। ஸ ஏஷ ஸர்வப்ரவர:। ௧௰௪।௰௰௪
ஸர்வபூதஸ் ச மாதவ:। ஸர்வம் அத்ர ச ஸர்வஸ்மிந்ந்। ௧௰௪।௰௰௫
ஏஷ ஏவ ப்ரதிஷ்டித:। த்ரியுகம் புண்டரீகாக்ஷம்। ௧௰௪।௰௰௫
அபவர்கமஹாஹ்ரதம்। ஸமுத்பத்ய பராஹ்லாதம்। ௧௰௪।௰௰௬
அநந்தம் ப்ரதிபத்யேத। ஸ்ருதம் ஏதந் மயா பூர்வம்। ௧௰௪।௰௰௬
விஸ்தேரண த்வேயாதிதம்। யத் த்வ் ஏதத் த்ரியுேகத்ய் உக்தம்।
௧௰௪।௰௰௭
தஸ்ய நிர்வசநம் வத। சதுர்யுேகந காலஸ்ய। ௧௰௪।௰௰௭
பரிஸம்க்யா யதா த்விஜ। த்ரியுேகந ததா விஷ்ேணா:। ௧௰௪।௰௰௮
க்ரியேத கிம் விேஸஷணம்। க்ருதம் த்ேரதா த்வாபரம் ச। ௧௰௪।௰௰௮
கலிஸ் ேசதி சதுர்யுகம்। யதா ஜகதி விக்யாதம்। ௧௰௪।௰௰௯
ததா த்ரியுகதா குத:। ஸாது ப்ருஷ்ேடா அஸ்மி பூபால। ௧௰௪।௰௰௯
பவதா த்ரியுகாஸ்ரிதம்। விேஸஷணம் அநந்தஸ்ய। ௧௰௪।௰௧
கததஸ் தந் நிஸாமய। காஷ்டா பார்திவ விஜ்ேஞயா। ௧௰௪।௰௧
நிேமஷா தஸ பஞ்ச ச। காஷ்டாத்ரிம்ஸத் கலா ஜ்ேஞயா। ௧௰௪।௰௧௧
முஹூர்தம் தாவதீ: கலா:। த்ரிம்ஸந்முஹூர்தா பூபால। ௧௰௪।௰௧௧
ததாேஹாராத்ரம் உச்யேத। தத்ஸம்க்யாைதர் அேஹாராத்ைரர்।
௧௰௪।௰௧௨
மாஸ: பார்திவஸத்தம। அயநம் தக்ஷிணம் மாஸா:। ௧௰௪।௰௧௨
ஷண் மாஸாஸ் ச தேதாத்தரம்। அயநத்விதயாக்யஸ் ச। ௧௰௪।௰௧௩

கால: ஸம்வத்ஸர: ஸ்ம்ருத:। தக்ஷிணம் த்வ் அயநம் ராத்ரிர்।
௧௰௪।௰௧௩
ேதவாநாம் உத்தரம் திநம்। ஸம்வத்ஸேரண ேதவாநாம்। ௧௰௪।௰௧௪
அேஹாராத்ரம் இேஹாச்யேத। ஸதத்ரேயண வர்ஷாணாம்। ௧௰௪।௰௧௪
ஷஷ்ட்யா ச ப்ருதிவபேத ீ । மநுஷ்யஸம்க்யயா வர்ஷம்। ௧௰௪।௰௧௫
ேதவாநாம் அபி கண்யேத। இதி திவ்ேயந மாேநந। ௧௰௪।௰௧௫
சதுர்யுகவிகல்பநாம்। கத்யமாநாம் மயா ராஜந்। ௧௰௪।௰௧௬
யதாவச் ச்ேராதும் அர்ஹஸி। சத்வாரி து ஸஹஸ்ராணி। ௧௰௪।௰௧௬
வர்ஷாணாம் க்ருதம் உச்யேத। தஸ்ய தாவச்சதீஸம்த்யா। ௧௰௪।௰௧௭
ஸம்த்யாம்ஸஸ் ச ததாவித:। த்ேரதா த்ரீணி ஸஹஸ்ராணி।
௧௰௪।௰௧௭
திவ்யாப்தாநாம் நரர்ஷப। தஸ்ய தாவச்சதீஸம்த்யா। ௧௰௪।௰௧௮
ஸம்த்யாம்ஸஸ் ச ததாவித:। த்வாபரம் த்ேவ ஸஹஸ்ேர து।
௧௰௪।௰௧௮
வர்ஷாணாம் அபிதீயேத। தஸ்ய தாவச்சதீஸம்த்யா। ௧௰௪।௰௧௯
ஸம்த்யாம்ஸஸ் ச ததாவித:। கலி: ஸஹஸ்ரம் ஏகம் து। ௧௰௪।௰௧௯
திவ்யாப்தாநாம் நரர்ஷப। தஸ்ய தாவச்சதீஸம்த்யா। ௧௰௪।௰௨
ஸம்த்யாம்ஸஸ் ச ததாவித:। க்ருதம் நாமயுகம் பூர்வம்। ௧௰௪।௰௨
யத்ர தர்ம: ஸநாதந:। க்ருதம் ஏவ ச கர்தவ்யம்। ௧௰௪।௰௨௧
தஸ்மிந் காேல ந்ருேபப்ஸிதம்। ந தத்ர தர்மா: ஸதந்தி ீ । ௧௰௪।௰௨௧
ந ச க்ஷயந்தி ீ ைவ ப்ரஜா:। தத: க்ருதயுகம் நாம। ௧௰௪।௰௨௨
குணத: ப்ேராச்யேத யுகம்। ேதவதாநவகந்தர்வா। ௧௰௪।௰௨௨
யக்ஷராக்ஷஸபந்நகா:। நாஸந் க்ருதயுேக ராஜந்। ௧௰௪।௰௨௩

ந ததா க்ரயவிக்ரய:। ந ஸாமயஜுர்ருக்வர்ணா:। ௧௰௪।௰௨௩
க்ரியா நாஸச்ீ ச மாநவ।ீ நாபிஸம்தாய ச பலம்। ௧௰௪।௰௨௪
கஸ்சித் தர்ேம ப்ரவர்தேத। ந தஸ்மிந் யுகஸம்ஸர்ேக। ௧௰௪।௰௨௪
வ்யாதேயா ேநந்த்ரியக்ஷய:। நாஸூயா நாபி ருதிதம்। ௧௰௪।௰௨௫
ந தர்ேபா நாபி ைபஸுநம்। ந விக்ரஹ: குதஸ் தந்த்ரீ। ௧௰௪।௰௨௫
ந த்ேவேஷா நாபி தம்பநம்। ந பயம் நாபி ஸம்தாேபா। ௧௰௪।௰௨௬
ந ேசர்ஷ்யா நாபி மத்ஸர:। தத: பரமகம் ப்ரஹ்ம। ௧௰௪।௰௨௬
யா கதிர் ேயாகிநாம் பரா। ஆத்மா ச ஸர்வபூதாநாம்। ௧௰௪।௰௨௭
ஸுக்ேலா நாராயணஸ் ததா। தஸ்மிந்ந் ஆத்மநி ேலாகாநாம்।
௧௰௪।௰௨௭
ஸர்வேலாகமேய அச்யுேத। ஸ்ேவச்சயா ெஸௗக்ல்யம் ஆபந்ேந।
௧௰௪।௰௨௮
ஸர்வம் பவதி நிர்மலம்। ப்ராஹ்மணா: க்ஷத்ரியா ைவஸ்யா:।
௧௰௪।௰௨௮
ஸூத்ராஸ் ச க்ருதலக்ஷணா:। க்ருேத யுேக பவந்தீஹ। ௧௰௪।௰௨௯
ஸ்வகர்மநிரதா: ப்ரஜா:। ஸ்வம் ஆஸ்ரமம் ஸ்வம் ஆசாரம்।
௧௰௪।௰௨௯
ஸம்யக்ஜ்ஞாநஸமந்விதம்। ஜகத் பவதி ராேஜந்த்ர। ௧௰௪।௰௩
ஸத்யப்ராயம் தேபாரதம்। ஏகேவதஸமாயுக்தா। ௧௰௪।௰௩
ஏகமந்த்ரவிதிக்ரியா:। ப்ருதக்தர்மாஸ் த்வ் ஏகேவதா। ௧௰௪।௰௩௧
தர்மம் ஏகம் அநுவ்ரதா:। சதுராஸ்ரமயுக்ேதந। ௧௰௪।௰௩௧
கர்மணா காலேயாகிநா। அகாமபலஸம்ேயாகாத்। ௧௰௪।௰௩௨
ப்ராப்நுவந்தி பராம் கதிம்। ஆத்மேயாகஸமாயுக்ேதா। ௧௰௪।௰௩௨

தர்ேமா அயம் க்ருதலக்ஷண:। க்ருேத யுேக சதுஷ்பாதஸ்। ௧௰௪।௰௩௩
சதுர்வர்ண்யஸ்ய ஸாஸ்வத:। ஏதத் க்ருதயுகம் நாம। ௧௰௪।௰௩௩
த்ைரகுண்யபரிவர்ஜிதம்। த்ேரதாம் அபி நிேபாத த்வம்। ௧௰௪।௰௩௪
யாத்ருக்ரூபம் ப்ரவர்தேத। பாேதந ஹ்ரஸேத தர்ேமா। ௧௰௪।௰௩௪
ரக்ததாம் யாதி சாச்யுத:। ஸத்யப்ரவ்ருத்தாஸ் ச நரா:। ௧௰௪।௰௩௫
க்ரியாதர்மபராயணா:। தேதா யஜ்ஞா: ப்ரவர்தந்ேத। ௧௰௪।௰௩௫
தர்மாஸ் ச விவிதா: க்ரியா:। த்ேரதாயாம் பாவஸம்கல்பா:। ௧௰௪।௰௩௬
க்ரியாதாநபேலாதயா:। ப்ரசரந்தி தேதா வர்ணாஸ்। ௧௰௪।௰௩௬
தேபாதாநபராயணா:। ஸ்வகர்மஸ்தா: க்ரியாவந்த:। ௧௰௪।௰௩௭
ஸமத்வாத் ரஜஸாந்விதா:। த்வாபேர அபி யுேக தர்ேமா। ௧௰௪।௰௩௭
த்விபாேகாந: ப்ரவர்தேத। விஷ்ணு: பதத்வம் ீ அப்ேயதி। ௧௰௪।௰௩௮
சதுர்தா ேவத ஏவ ச। தேதா அந்ேய ச சதுர்ேவதாஸ்। ௧௰௪।௰௩௮
த்ரிேவதாஸ் ச ததாபேர। த்விேவதாஸ் ைசகேவதாஸ் ச। ௧௰௪।௰௩௯
அந்ருசஸ் ச ததாபேர। ஏவம் ஸாஸ்த்ேரஷு பிந்ேநஷு। ௧௰௪।௰௩௯
பஹுதா நீயேத க்ரியா। தேபாதாநப்ரவ்ருத்தா ச। ௧௰௪।௰௪
ராஜஸீ பவதி ப்ரஜா। அல்பாயுேஷா நரா ேவத:। ௧௰௪।௰௪
ஸுமஹாம்ஸ் ேசதி துஸ்தர:। கேராதி பஹுதா ேவதாந்। ௧௰௪।௰௪௧
வ்யாஸரூபீ ததா ஹரி:। ஸத்த்வஸ்ய சாப்ய் அவிஜ்ஞாநாத்।
௧௰௪।௰௪௧
ஸத்த்ேவ கஸ்சித் வ்யவஸ்தித:। ஸத்த்வாத் ப்ரச்யவமாநாநாம்।
௧௰௪।௰௪௨
வ்யாதேயா பஹேவா அபவந்। காமாஸ் ேசாபத்ரவாஸ் ைசவ।
௧௰௪।௰௪௨

ததா ைதவதகாரிதா:। ையர் அர்த்யமாநா: ஸுப்ருஸம்। ௧௰௪।௰௪௩
தபஸ் தப்யந்தி மாநவா:। தநகாமா: ஸ்வர்ககாமா। ௧௰௪।௰௪௩
யஜ்ஞாம்ஸ் தந்வந்தி சாபேர। ஏவம் த்வாபரம் ஆஸாத்ய। ௧௰௪।௰௪௪
ப்ரஜா: க்ஷயந்த்ய் ீ அதர்மத:। பாேதைநேகந ராேஜந்த்ர। ௧௰௪।௰௪௪
தர்ம: கலியுேக அபி ஹி। தாமஸம் யுகம் ஆஸாத்ய। ௧௰௪।௰௪௫
க்ருஷ்ேணா பவதி ேகஸவ:। வ்ரதாசாரா: ப்ரஸாம்யந்தி। ௧௰௪।௰௪௫
தர்மயஜ்ஞக்ரியாஸ் ததா। ஈதேயா வ்யாதயஸ் தந்த்ரீ। ௧௰௪।௰௪௬
ேதாஷா: க்ேராதாதயஸ் ததா। உபத்ரவாஸ் ச வர்தந்ேத। ௧௰௪।௰௪௬
மநஸ்தாபாஸ் ச ஸம்கதா:। யுேகஷ்வ் ஆவர்தமாேநஷு। ௧௰௪।௰௪௬
ேலாேகா வ்யாவர்தேத புந:। ேலாேக க்ஷீேண க்ஷயம் யாந்தி।
௧௰௪।௰௪௭
பாவா ேலாகப்ரவர்தகா:। யுகத்வயக்ருதாந் தர்மாந்। ௧௰௪।௰௪௭
ப்ரார்தநா ந ச குர்வேத। ஏதத் கலியுகம் பூப। ௧௰௪।௰௪௭
யத்ர ஜாேதா அஸி பார்திவ। நாத்ராவதாரம் குருேத। ௧௰௪।௰௪௮
க்ருஷ்ணாம்ேஸந ஸ்வரூபிணா। க்ருதாதிஷு ஜகத் பாதி। ௧௰௪।௰௪௮
ைதத்ேயப்ேயா ரூபத்ருத் தரி:। கெலௗ த்வ் அந்யம் ஸமாவிஸ்ய।
௧௰௪।௰௪௯
பூர்ேவாத்பந்நம் பிபர்தி தம்। ப்ரத்யக்ரரூபத்ருக் ேதேவா। ௧௰௪।௰௪௯
த்ருஸ்யேத ந கெலௗ ஹரி:। க்ருதாதிஷ்வ் ஏவ ேதைநஷ। ௧௰௪।௰௫
த்ரியுக: பரிபட்யேத। கேலர் அந்ேத ச ஸம்ப்ராப்ேத। ௧௰௪।௰௫
கல்கிநம் ப்ரஹ்மவாதிநம்। அநுப்ரவிஸ்ய குருேத। ௧௰௪।௰௫௧
வாஸுேதேவா ஜகத்ஸ்திதிம்। பூர்ேவாத்பந்ேநஷு பூேதஷு। ௧௰௪।௰௫௧
ேதஷு ேதஷு கெலௗ ப்ரபு:। க்ருத்வா ப்ரேவஸம் குருேத। ௧௰௪।௰௫௨

யத் அபிப்ேரதம் அச்யுத:। ஸ்ேவச்சாஸுக்ேல ஜகச் சுக்லம்। ௧௰௪।௰௫௨
ரக்ேத ரக்தம் ச ஜாயேத। பேதீ ச பததாம் ீ அஸ்மிந்। ௧௰௪।௰௫௩
க்ருஷ்ேண சாத்ராஸிதம் ந்ருப। ஏஷ ஏவ ஜகத்ேதேவா। ௧௰௪।௰௫௩
ஜகத்ஸ்ரஷ்டா ஜகத்குரு:। யத்ரூப ஏவ ேதேவா அயம்। ௧௰௪।௰௫௪
தத்ரூபம் ஜாயேத ஜகத்। சதுர்யுகம் ந: கதிதம்। ௧௰௪।௰௫௪
ஸம்ேக்ஷபாத் பவதாகிலம்। கலிம் விஸ்தரேதா ப்ரூஹி। ௧௰௫।௰௰௧
யத்ர ஜாேதா அஸ்மி பார்கவ। பகவத்ய் அமேல விஷ்ெணௗ।
௧௰௫।௰௰௧
க்ரீடயா க்ருஷ்ணதாம் கேத। கிமாஹாரா: கிமாசாரா। ௧௰௫।௰௰௨
பவிஷ்யந்தி ப்ரஜாஸ் ததா। ப்ராஹ்மணா: க்ஷத்ரியா ைவஸ்யா:।
௧௰௫।௰௰௨
ஸூத்ராஸ் ச த்விஜ கீத்ருஸா:। பவிஷ்யந்தி கெலௗ ப்ராப்ேத।
௧௰௫।௰௰௩
தந் மமாசŠவ விஸ்தராத்। தப: பரம் க்ருதயுேக। ௧௰௫।௰௰௩
த்ேரதாயாம் யஜ்ஞ ஏவ ஹி। ப்ரதாநம் த்வாபேர தாநம்। ௧௰௫।௰௰௪
ஸத்யம் ஏவ கெலௗ யுேக। க்ருேத யுேக மந:ஸுத்திர்। ௧௰௫।௰௰௪
அஸ்த்ய் ஏவாயத்நதஸ் தப:। தேபா நிஷ்பாத்யேத பூப। ௧௰௫।௰௰௫
ேயாகஸம்ஸாதநம் பரம்। ராகாதிேதாஷதுஷ்ேடந। ௧௰௫।௰௰௫
மநஸா யத் தேபா ந்ருப। க்ரியேத க்ேலஸநாஸாய। ௧௰௫।௰௰௬
தத் தேபா ந விமுக்தேய। த்ேரதாயாம் து க்ரியாயஜ்ஞாந்। ௧௰௫।௰௰௬
மேநாயஜ்ஞாம்ஸ் தேதா நரா:। விதந்வேத ஸ்தூலதர:। ௧௰௫।௰௰௭
பந்தா தர்மஸ்ய ஸ ப்ரேபா। த்வாபேர நாதிவித்வத்தா। ௧௰௫।௰௰௭
யதா த்ேரதாயுேக அபவத்। தத: ஸ்தூலதர: பந்தா। ௧௰௫।௰௰௮

தாநாத்மா க்ரியேத நைர:। ந வித்வத்தா ந ஸுத்தார்ேதா। ௧௰௫।௰௰௮
ந ஸுத்திர் மநஸ: கெலௗ। யேதா அத: ஸத்யம் ஏைவகம்।
௧௰௫।௰௰௯
ஏகாந்ேதேநாபகாரகம்। யதா ஸத்யம் ததா க்ஷாந்திர்। ௧௰௫।௰௰௯
அஹிம்ஸா ச கெலௗ யுேக। பேராபதாபாத் விரதிர்। ௧௰௫।௰௧
நராணாம் உபகாரிகா। தஸ்மிந் ேகாேர யுேக ப்ராப்ேத। ௧௰௫।௰௧
க்ருஷ்ேண க்ருஷ்ணத்வம் ஆகேத। யாத்ருக்ரூபம் ஜகத் இதம்।
௧௰௫।௰௧௧
பவதீஹ ஸ்ருணுஷ்வ தத்। ராஜாேநா ப்ராஹ்மணா ைவஸ்யா:।
௧௰௫।௰௧௧
ஸூத்ராஸ் ச மநுேஜஸ்வர। வ்யாஜதர்மபராஸ் ைசவ। ௧௰௫।௰௧௨
தர்மைவதம்ஸிகா ஜநா:। ஸத்யம் ஸம்க்ஷிப்யேத ேலாேக। ௧௰௫।௰௧௨
நைர: பண்டிதமாநிபி:। ஸத்யஹாந்யா ததஸ் ேதஷாம்। ௧௰௫।௰௧௩
ஸ்வல்பம் ஆயுர் பவிஷ்யதி। ஆயுஷ: ப்ரக்ஷயாத் வித்யாம்।
௧௰௫।௰௧௩
ந ஸŠயந்த்ய் உபஸிக்ஷிதும்। வித்யாஹீநாந் அபுத்தீம்ஸ் தாம்ல்।
௧௰௫।௰௧௪
ேலாேபா அப்ய் அபிபவிஷ்யதி। ேலாபக்ேராதபரா மூடா:। ௧௰௫।௰௧௪
காமவஸ்யாஸ் ச மாநவா:। பத்தைவரா பவிஷ்யந்தி। ௧௰௫।௰௧௫
பரஸ்பரவேதப்ஸவ:। ப்ராஹ்மணா: க்ஷத்ரியா ைவஸ்யா:। ௧௰௫।௰௧௫
ஸம்கீர்யந்த: பரஸ்பரம்। ஸூத்ரதுல்யா பவிஷ்யந்தி। ௧௰௫।௰௧௬
தப:ஸத்யவிநாக்ருதா:। அந்த்யா மத்யா பவிஷ்யந்தி। ௧௰௫।௰௧௬
மத்யாஸ் சாந்தாவஸாயிந:। ஈத்ருேஸா பவிதா ேலாக:। ௧௰௫।௰௧௭

க்ருஷ்ேண க்ருஷ்ணத்வம் ஆகேத। வஸ்த்ராணாம் ப்ரவரா ஸாண।ீ
௧௰௫।௰௧௭
தாந்யாநாம் ேகாரதூஷக:। பார்யாமித்ராஸ் ச புருஷா। ௧௰௫।௰௧௮
பவிஷ்யந்தி கெலௗ யுேக। மத்ஸ்யாமிேஷண ஜவந்ேதா ீ । ௧௰௫।௰௧௮
துஹந்தஸ் சாப்ய் அஜாவிகா:। ேகாஷு நஷ்டாஸு புருஷா।
௧௰௫।௰௧௯
பவிஷ்யந்தி ததா ந்ருப। ஸரித்தீேரஷு குத்தாைலர்। ௧௰௫।௰௧௯
வாபயிஷ்யந்தி ெசௗஷதீ:। தாஸ் சாப்ய் அல்பபலாஸ் ேதஷாம்।
௧௰௫।௰௨
பவிஷ்யந்தி யுகக்ஷேய। அநிஷ்க்ராந்தாஸ் து ஸம்பந்தா:। ௧௰௫।௰௨
ஸ்வேகாத்ராத் புருஷர்ஷப। அநிஷ்க்ராந்தாநி ஸ்ராத்தாநி। ௧௰௫।௰௨௧
பவிஷ்யந்தி ச ேகஹத:। ந வ்ரதாநி சரிஷ்யந்தி। ௧௰௫।௰௨௧
ப்ராஹ்மணா ேவதநிந்தகா:। ந யŠயந்தி ந ேஹாஷ்யந்தி। ௧௰௫।௰௨௨
ேஹதுவாதவிகூலிந:। ப்ராயஸ: க்ருபணாநாம் ச। ௧௰௫।௰௨௨
ததா பந்திமதாம் அபி। விதவாநாம் ச வித்தாநி। ௧௰௫।௰௨௩
ஹரிஷ்யந்தி பலாந்விதா:। அந்யாேயாபாத்தவித்ேதஷு। ௧௰௫।௰௨௩
கரிஷ்யந்தி நரா: ஸ்ப்ருஹாம்। ேவஸ்யாலாவண்யபாேவஷு।
௧௰௫।௰௨௪
ஸ்ப்ருஹாம் ேயாஷித் கரிஷ்யதி। கந்யாம் ந யாசிதா கஸ்சிந்।
௧௰௫।௰௨௪
ந ச கந்யாப்ரேதா நர:। கந்யா வரஸ் ச ச்சந்ேதந। ௧௰௫।௰௨௫
க்ருஹீஷ்யந்தி பரஸ்பரம்। பார்யா ந பதிஸுஸ்ரூஷாம்। ௧௰௫।௰௨௫
ததா காசித் கரிஷ்யதி। நரா ேதவத்விஜாம்ஸ் த்யக்த்வா। ௧௰௫।௰௨௬

பவிஷ்யந்த்ய் அந்யேதாமுகா:। யஜ்ஞபாகபுேஜா ேதவா। ௧௰௫।௰௨௬
ேய ேவதபடிதா த்விஜா:। ப்ரஹ்மாத்யாஸ் தாந் பரித்யஜ்ய। ௧௰௫।௰௨௭
நரா: காலபலாத்க்ருதா:। ேஹதுவாதபரா ேதவாந்। ௧௰௫।௰௨௭
கரிஷ்யந்த்ய் அபராம்ஸ் ததா। ேய யவாந்நா ஜநபதா। ௧௰௫।௰௨௭
ேகாதூமாந்நாஸ் தைதவ ச। தாந் ேதஸாந் ஸம்ஸ்ரயிஷ்யந்தி।
௧௰௫।௰௨௮
நரா: கலியுேக ந்ருப। ந ஸ்ராத்ைதஸ் ச பித்ரும்ஸ் சாபி। ௧௰௫।௰௨௮
தர்பயிஷ்யந்தி மாநவா:। பஹு மம்ஸ்யந்தி ேத ஸ்நாநம்। ௧௰௫।௰௨௯
நாபி ெஸௗசபரா நரா:। ந விஷ்ணுபக்திப்ரவணம்। ௧௰௫।௰௨௯
நராணாம் ந்ருப மாநஸம்। பவிதா து யுேக ப்ராப்ேத। ௧௰௫।௰௩
க்ருஷ்ேண கார்ஷ்ண்ேயாபலக்ஷிேத। விநிந்தாம் ப்ரதேம பாேத।
௧௰௫।௰௩
கரிஷ்யந்தி ஹேரர் நரா:। யுகாந்ேத து ஹேரர் நாம। ௧௰௫।௰௩௧
ைநவ கஸ்சித் க்ருஹீஷ்யதி। தந்யாஸ் ேத புருஷவ்யாக்ர। ௧௰௫।௰௩௧
பாபாம்ேபாதாவ் அபாபிந:। ேய நாமாபி கெலௗ விஷ்ேணார்।
௧௰௫।௰௩௨
க்ருஹீஷ்யந்த்ய் அக்ஷயாத்மந:। த்யாயந் ஹரிம் க்ருதயுேக।
௧௰௫।௰௩௨
த்ேரதாத்வாபரேயார் யஜந்। யத் ஆப்ேநாதி கெலௗ நாம்நா। ௧௰௫।௰௩௩
தத் ஏவ பரிகீர்தயந்। ஹரிர் ஹரதி பாபாநி। ௧௰௫।௰௩௩
நாம பக்த்யா யதீரிதம்। வாஸுேதேவதி ந ஜநஸ்। ௧௰௫।௰௩௪
தத் ஏேவாச்சாரயிஷ்யதி। பஹுபாஷண்டஸம்கீர்ேண। ௧௰௫।௰௩௪

ஜகத்ய் அஸ்மிந் கெலௗ யுேக। க்ருஷ்ணாேயதி நேமா அஸ்த்வ் அத்ர।
௧௰௫।௰௩௫
ஸுக்ருதீயதி வŠயதி। ேஹதுவாதபைலர் ேமாஹம்। ௧௰௫।௰௩௫
குஹைகஸ் ச ஜேந ததா। பாஷண்டிந: கரிஷ்யந்தி। ௧௰௫।௰௩௬
சாதுராஸ்ரம்யதூஷகா:। பாஷண்டபூதம் அத்யர்தம்। ௧௰௫।௰௩௬
ஜகத் ஏதத் அஸத்க்ருதம்। பவிஷ்யதி ததா பூப। ௧௰௫।௰௩௭
வ்ருதாப்ரவ்ரஜிேதாத்கடம்। ந து த்விஜாதிஸுஸ்ரூஷாம்। ௧௰௫।௰௩௭
ந ஸ்வதர்மாநுபாலநம்। கரிஷ்யந்தி ததா ஸூத்ரா:। ௧௰௫।௰௩௮
ப்ரவ்ரஜ்யாலிங்கிேநா வ்ருதா। உத்ேகாசா: ெஸௗகதாஸ் ைசவ।
௧௰௫।௰௩௮
மஹாயாநரதாஸ் ததா। பவிஷ்யந்த்ய் அத பாஷண்டா:। ௧௰௫।௰௩௯
காபிலா பிக்ஷவஸ் ததா। வ்ருத்தா: ஸ்ராவகநிர்க்ரந்தா:। ௧௰௫।௰௩௯
ஸித்தபுத்ராஸ் ததாபேர। பவிஷ்யந்தி துராத்மாந:। ௧௰௫।௰௪
ஸூத்ரா: கலியுேக ந்ருப। நி:ெஸௗசா வக்ரமதய:। ௧௰௫।௰௪
பரபாகாந்நேபாஜநா:। பவிஷ்யந்தி துராத்மாந:। ௧௰௫।௰௪௧
ஸூத்ரா: ப்ரவ்ரஜிதாஸ் ததா। ஏேத சாந்ேய ச பஹவ:। ௧௰௫।௰௪௧
பாஷண்டா: புருஷர்ஷப। ப்ராஹ்மணா: க்ஷத்ரியா ைவஸ்யா।
௧௰௫।௰௪௨
பவிஷ்யந்தி ததா பேர। ராஜஸுல்கஹரா: க்ஷுத்ரா। ௧௰௫।௰௪௨
க்ருஹஸ்தபரிேமாஷகா:। முநிேவஷாக்ருதிச்சந்நா। ௧௰௫।௰௪௩
வாணிஜ்யம் உபஜவிகா ீ :। ந த்விஜாந் ந கெலௗ ேதவாந்। ௧௰௫।௰௪௩
பூஜயிஷ்யந்தி மாநவா:। ம்ேலச்சபாஷாநிபந்ைதஸ் து। ௧௰௫।௰௪௪
ேஹதுவாைதர் விகூலிதா:। ஏவம் ேதஷ்வ் அதிதுஷ்ேடஷு। ௧௰௫।௰௪௪

விமார்கபதிவர்திந:। பவிஷ்யந்த்ய் அபேர துஷ்டாஸ்। ௧௰௫।௰௪௫
ேதஷாம் மார்காநுயாயிந:। அஸம்ஸ்க்ருேதாக்திவக்தாேரா। ௧௰௫।௰௪௫
ேவதஸாஸ்த்ரவிநிந்தகா:। ஜகதுந்மார்ககர்தாேரா। ௧௰௫।௰௪௬
பவிஷ்யந்தி ததா நரா:। தச்சீலவர்திபிர் பூப। ௧௰௫।௰௪௬
மநுஷ்ைய: பரிபூரிேத। ஜகத்ய் அத்ர ததா ந்ருணாம்। ௧௰௫।௰௪௭
ஸ்வல்பம் ஆயுர் பவிஷ்யதி। பரமாயுஸ் ச பவிதா। ௧௰௫।௰௪௭
ததா வர்ஷாணி ேஷாடஸ। தத: ப்ராணாந் ப்ரஹாஸ்யந்தி। ௧௰௫।௰௪௮
க்ருஷ்ேண க்ருஷ்ணத்வம் ஆகேத। பஞ்சேம வாத ஷஷ்ேட வா।
௧௰௫।௰௪௮
வர்ேஷ கந்யா ப்ரஸூயேத। ஸப்தவர்ஷாஷ்டவர்ஷா வா। ௧௰௫।௰௪௯
ப்ரஜாஸ்யந்தி நராஸ் ததா। அல்பத்ரவ்யா வ்ருதாலிங்கா। ௧௰௫।௰௪௯
ஹிம்ஸாரதிபராயணா:। ஹர்தாேரா ந து தாதாேரா। ௧௰௫।௰௫
பவிஷ்யந்தி கெலௗ நரா:। ஸுக்லாதாநபரா: க்ஷுத்ரா:। ௧௰௫।௰௫
பரபாகாஸிேநா த்விஜா:। ைவஸ்யாஸ் ததா து ராஜாேநா। ௧௰௫।௰௫௧
ந து க்ஷத்ரியவம்ஸஜா:। ஸூத்ரா பிக்ஷவதா விப்ரா:। ௧௰௫।௰௫௧
ஸுஸ்ரூஷாவிபணாஸ்ரிதா:। பவிஷ்யந்தி ந்ருபஸ்ேரஷ்ட। ௧௰௫।௰௫௨
க்ருஷ்ேண க்ருஷ்ணத்வம் ஆகேத। ந ஸிஷ்ேயா ந குரு: கஸ்சிந்।
௧௰௫।௰௫௨
ந புத்ேரா ந பிதா ததா। ந பார்யா ந பதிர் பூப। ௧௰௫।௰௫௩
பவிதா தத்ர ஸம்குேல। ஏதத் காலஸ்வரூபம் ேத। ௧௰௫।௰௫௩
ஸதாநீக மேயாதிதம்। விஷ்ணுபக்தாந் நரஸ்ேரஷ்ட। ௧௰௫।௰௫௪
ந நராந் பாதேத கலி:। ேய அஹர்நிஸம் ஜகத்தாதுர்। ௧௰௫।௰௫௪
வாஸுேதவஸ்ய கீர்தநம்। குர்வந்தி தாந் நரவ்யாக்ர। ௧௰௫।௰௫௫

ந கலிர் பாதேத நராந்। ேய தந்மநஸ்காஸ் திஷ்டந்தி। ௧௰௫।௰௫௫
ப்ரயாந்த: ஸம்ஸ்திதாஸ் ததா। ஸ்வபந்தஸ் ச நரவ்யாக்ர।
௧௰௫।௰௫௬
தாந் கலிர் ந ப்ரபாதேத। ஸர்வத்ர பகவாந் விஷ்ணுர்। ௧௰௫।௰௫௬
ேகாவிந்த: ேகஸேவா ஹரி:। யஸ்ய பாேவா ந தம் பூப। ௧௰௫।௰௫௭
கதாசித் பாதேத கலி:। ந கெலௗ கலிேசஷ்ேடா அெஸௗ। ௧௰௫।௰௫௭
மூேடஷு ந ஸ முஹ்யேத। பகவத்ய் அச்யுேத நித்யம்। ௧௰௫।௰௫௮
ேயந பாவ: ஸமர்பித:। கலிப்ரபாேவா துஷ்ேடாக்தி:। ௧௰௫।௰௫௮
பாஷண்டாநாம் தேதாக்தய:। ந க்ராமந்ேத மநஸ் தஸ்ய। ௧௰௫।௰௫௯
யஸ்ய ேசதஸி ேகஸவ:। கெலௗ க்ருதயுகம் தஸ்ய। ௧௰௫।௰௫௯
கலிஸ் தஸ்ய க்ருேத யுேக। யஸ்ய ேசதஸி ேகாவிந்ேதா। ௧௰௫।௰௬
ஹ்ருதேய யஸ்ய நாச்யுத:। அநிஷ்ட்வாபி மஹாயஜ்ைஞர்। ௧௰௫।௰௬
அக்ருத்வாபி பித்ருஸ்வதாம்। க்ருஷ்ணம் அப்யர்ச்ய யத் பக்த்யா।
௧௰௫।௰௬௧
ைநநம் ஸ்ேவாமரணம் தேபத்। யஸ்யாக்ரதஸ் ததா ப்ருஷ்ேட।
௧௰௫।௰௬௧
கச்சதஸ் திஷ்டேதா அபி வா। ேகாவிந்ேத நியதம் ேசத:। ௧௰௫।௰௬௨
க்ருதக்ருத்ய: ஸைதவ ஸ:। ஏதத் விதித்வா பூபால। ௧௰௫।௰௬௨
ஸர்ேவ ஸர்ேவஸ்வேர ஹெரௗ। தந்மநா பவ தச்சித்தஸ்। ௧௰௫।௰௬௩
தந்மநா நாவஸததி ீ । பரமார்தம் அேஸஷஸ்ய। ௧௰௫।௰௬௩
ஜகத: ப்ரபவாவ்யயம்। ஸரண்யம் ஸரணம் கச்சந்। ௧௰௫।௰௬௪
ேகாவிந்தம் நாவஸததி ீ । கலிகல்மஷகக்ஷாக்நிம்। ௧௰௫।௰௬௪
நிர்வாணம் பதம் அவ்யயம்। ஸர்வகாரணம் அவ்யக்தம்। ௧௰௫।௰௬௫

விஷ்ணும் த்யாயந் ந ஸததி ீ । யத்ர ஸர்வமேய த்யாேத। ௧௰௫।௰௬௫
த்ேயயம் அந்யந் ந வித்யேத। யத்ரார்சிேத அர்சநீயஸ் ச। ௧௰௫।௰௬௬
ஜாயேத தம் நமாம்ய் அஹம்। ஜகத்ஸ்ரஷ்டாரம் இேஸஸம்।
௧௰௫।௰௬௬
அநாதிம் பரத: பரம்। ஸர்வாஸ்பதம் ஸர்வபூதம்। ௧௰௫।௰௬௭
கச்சந் ஸர்வாத்மநா ஹரிம்। ஹரத்ய் அகம் அேஸஷம் ேயா।
௧௰௫।௰௬௭
ஹரிர் இத்ய் அபிஸம்ஸ்துத:। அேஸஷாகஹரம் விஷ்ணும்।
௧௰௫।௰௬௮
ஹரிவர்ணம் ஹரிம் நம:। யத்கீர்தநாத் அக: ஸுத்த:। ௧௰௫।௰௬௮
ஸ்ம்ருேத யத்ராஸுசி: ஸுசி:। தம் ஆத்மநி ஸ்திதம் பூப। ௧௰௫।௰௬௯
புண்டரீேகக்ஷணம் நம:। அபவித்ர: பவித்ேரா வா। ௧௰௫।௰௬௯
ஸர்வாவஸ்தகேதா அபி வா। ய: ஸ்மேரத் புண்டரீகாக்ஷம்। ௧௰௫।௰௭
ஸ பாஹ்யாப்யந்தர: ஸுசி:। யத்ய் அப்ய் உபஹத: பாைபர்। ௧௰௫।௰௭
யதி வாத்யந்ததுஷ்க்ருைத:। ததாபி ஸம்ஸ்மரந் விஷ்ணும்। ௧௰௫।௰௭௧
ஸ பாஹ்யாப்யந்தர: ஸுசி:। கலாவ் அத்ராதிேதாஷாட்ேய। ௧௰௫।௰௭௧
விஷயாஸக்தமாநஸ:। க்ருத்வாபி பாபம் ேகாவிந்தம்। ௧௰௫।௰௭௨
த்யாயந் பாைபர் விமுச்யேத। தத் த்யாநம் யத்ர ேகாவிந்த:।
௧௰௫।௰௭௨
ஸா கதா யத்ர ேகஸவ:। தத் கர்ம யத் ததர்தீயம்। ௧௰௫।௰௭௩
கிம் அந்ையர் பஹுபாஷிைத:। ைநதத் பிதா தநூஜாய। ௧௰௫।௰௭௩
ந ஸிஷ்யாய குருர் ந்ருப। பரமார்தபதம் ப்ரூயாத்। ௧௰௫।௰௭௪
யத் ஏதத் ேத மேயாதிதம்। ஸம்ஸாேர ப்ரமதா லப்யம்। ௧௰௫।௰௭௪

புத்ரதாரதநம் வஸு। ஸுஹ்ருதஸ் ச ததிவாந்ேய। ௧௰௫।௰௭௫
ேநாபேதேஸா ந்ருேபத்ருஸ:। கிம் புத்ரதாைரர் வித்ைதர் வா।
௧௰௫।௰௭௫
ந மித்ேர ேக்ஷத்ரபாந்தைவ:। உபேதஷ்டா பேரா பந்துர்। ௧௰௫।௰௭௬
ஈத்ருேஸா ேயா விமுக்தேய। ேயா ைநகாக்ரமநா விஷ்ணாவ்।
௧௰௫।௰௭௬
இதி ஜ்ஞாத்வாபி பார்திவ। ஸ நூநம் அச்யுதஸ்ையவ। ௧௰௫।௰௭௭
நாநுக்ராஹ்ேயா அத்ர பாபக்ருத்। த்விவிேதா பூதஸர்ேகா அயம்।
௧௰௫।௰௭௭
ைதவ ஆஸுர ஏவ ச। விஷ்ணுபக்திபேரா ைதேவா। ௧௰௫।௰௭௮
விபரீதஸ் ததாஸுர:। உபேதஸப்ரதாேநந। ௧௰௫।௰௭௮
ஸம்பூதித்ரய ஆஸுர:। ைநவ விஷ்ணுபேரா பூப। ௧௰௫।௰௭௯
பவத்ய் அக்ஷீணகல்மஷ:। உபேதேஸஷு ேஸா அத்யந்தம்।
௧௰௫।௰௭௯
ஸம்ரம்பீ யுக்திேயாஜிதம்। ேஹதுவாதாஸ்ரிேதா மூேடா। ௧௰௫।௰௮
ததாத்ய் உத்தரம் அக்ஷயம்। ஸ்நாதஸ்ய ேதவகார்ேயஷு। ௧௰௫।௰௮
ததாபத்ஸு கதாஸு ச। ஆஸுரஸ்யாபி தந்மாத்ரா। ௧௰௫।௰௮௧
ஜாயேத ந்ருபேத மதி:। இதி மத்வாதிஸத்பாவம்। ௧௰௫।௰௮௧
ரஹஸ்யம் பரம் ஈரிதம்। த்வயாச்யுதாந் மதிர் பூப। ௧௰௫।௰௮௨
நாபேநயா கதம்சந। அப்ராப்ய வாஞ்சதி ரதிம்। ௧௰௫।௰௮௨
ஸர்வைதவ ந்ருணாம் மந:। இைஹவாச்யுதஸம்ஸர்கி। ௧௰௫।௰௮௩
யதி தத் கிம் ப்ரஹீயேத। தத் அலம் தவ ராஜ்ேயந। ௧௰௫।௰௮௩
பலேகாஸாதிபிஸ் ததா। சிந்திைதர் அச்யுதஸ் சிந்த்ேயா। ௧௰௫।௰௮௪

யத்பாவி ந ததந்யதா। ஏதத் பவித்ரம் ஆேராக்யம்। ௧௰௫।௰௮௪
தந்யம் து:ஸ்வப்நநாஸநம்। ஸுகப்ரீதிகரம் ந்ருணாம்। ௧௰௫।௰௮௫
பததாம் நிர்வ்ருதிப்ரதம்। ேயஷாம் க்ருேஹஷு லிகிதம்। ௧௰௫।௰௮௫
ஏதத் ஸ்தாஸ்யதி நித்யதா। ந தத்க்ருஹாணி ைதேவாத்தா।
௧௰௫।௰௮௬
பாதிஷ்யந்ேத ஹ்ய் உபத்ரவா:। கிம் தீர்ைத: கிம் ப்ரதாைநர் வா।
௧௰௫।௰௮௬
கிம் யஜ்ைஞ: கிம் உேபாஷிைத:। அஹந்ய் அஹந்ய் ஏதத் ஏவ।
௧௰௫।௰௮௭
தந்மயத்ேவந ஸ்ருண்வத:। ய ததாதி திலப்ரஸ்தம்। ௧௰௫।௰௮௭
ஸுவர்ணஸ்ய ச மாஸகம்। ஸ்ருேணாதி ஸ்ேலாகம் ஏகம் ச।
௧௰௫।௰௮௮
தர்மஸ்யாஸ்ய ஸமம் ஹி தத்। அத்யாயபாரணம் சாஸ்ய।
௧௰௫।௰௮௮
ேகாப்ரதாநாஹ் விஸிஷ்யேத। ஸ்ருண்வம்ஸ் சாஸ்ய தஸாத்யாயாந்।
௧௰௫।௰௮௯
ஸத்ய: பாைப: ப்ரமுச்யேத। ராத்ர்யா யத் ஏந: குருேத। ௧௰௫।௰௮௯
திவேஸந ச மாநவ:। ஸ்ேராதும் வாஞ்சா ஸமஸ்தம் தத்। ௧௰௫।௰௯
பார்திவஸ்ய வ்யேபாஹதி। கபிலாநாம் ஸேத தத்ேத। ௧௰௫।௰௯
யத் பேவஜ் ஜ்ேயஷ்டபுஷ்கேர। நேரந்த்ர விஷ்ணுதர்மாணாம்।
௧௰௫।௰௯௧
ததாவாப்ேநாதி பாரேண। ப்ரவ்ருத்ெதௗ ச நிவ்ருத்ெதௗ ச। ௧௰௫।௰௯௧
தர்மம் தர்மப்ருதாம் வர। நாஸ்த்ய் அந்யத் விஷ்ணுதமாணாம்।
௧௰௫।௰௯௨

ஸத்ருஸம் ஸாஸ்த்ரம் உத்தமம்। ைமத்ரீம் கேராதி பூேதஷு।
௧௰௫।௰௯௨
பக்திம் அத்யந்தம் அச்யுேத। ஸ்ருத்வா தர்மாந் இமாந் ேவத்தி।
௧௰௫।௰௯௩
அேபேதநாத்மேநா ஜகத்। படந்ந் அநுதிநம் தர்மாந்। ௧௰௫।௰௯௩
ஏதாஞ் ஸ்ருண்வம்ஸ் ததாபி வா। பக்த்யா மதிமதாம் ஸ்ேரஷ்ட।
௧௰௫।௰௯௪
ஸர்வபாைப: ப்ரமுச்யேத। ேநாபஸர்ேகா ந சாநர்ேதா। ௧௰௫।௰௯௪
ந ெசௗராக்நிபயம் க்ருேஹ। தஸ்மிந் பவதி பூபால। ௧௰௫।௰௯௫
யத்ைரதத் புஸ்தகம் ஸ்திதம்। ந கர்பஹாரிணீபதிர் ீ । ௧௰௫।௰௯௫
ந ச பாலக்ரஹா க்ருேஹ। யத்ைரதத் பூபேத தத்ர। ௧௰௫।௰௯௬
ந பிஸாசாதிகாத் பயம்। ஸ்ருண்வந் விப்ேரா ேவதவித் ஸ்யாத்।
௧௰௫।௰௯௬
க்ஷத்ரிய: ப்ருதிவபதி ீ :। க்ருத்திம் ப்ரயாதி ைவஸ்யஸ் ச। ௧௰௫।௰௯௭
ஸூத்ரஸ் சாேராக்யம் க்ருச்சதி। யஸ் ைசதாந் நியதாந் தர்மாந்।
௧௰௫।௰௯௭
பேடச் ச்ரத்தாஸமந்வித:। விஷ்ெணௗ மந: ஸமாேவஸ்ய। ௧௰௫।௰௯௮
ஸர்வத்ர ஸமதர்ஸந:। தஸ்ய பாபம் ததா ேராகாந்। ௧௰௫।௰௯௮
து:ஸ்வப்நாத்யாபிசாருகாந்। யச் சாந்யத் துரிதம் கிம்சித்। ௧௰௫।௰௯௯
தத் ஸர்வம் ஹந்தி ேகஸவ:। ேஹமந்ேத ய இமாந் தர்மாஞ்।
௧௰௫।௰௯௯
ஸ்ருேணாதி வஸுதாதிப। ஸ்ரத்தாஸமந்வித: ஸம்யக்। ௧௰௫।௧
ேஸா அக்நிஷ்ேடாமபலம் லேபத்। ஸிஸிேர ச நரவ்யாக்ர। ௧௰௫।௧
ய: ஸ்ருேணாதி யதாவிதி। புண்டரீகஸ்ய யஜ்ஞஸ்ய। ௧௰௫।௧௰௧

ஸ ப்ராப்ேநாதி பலம் நர:। மதுமாதவஸம்ஜ்ேஞ து। ௧௰௫।௧௰௧
ய: ஸ்ருேணாதி நரஸ் த்வ் இமாந்। ேஸா அஸ்வேமதக்ரேதார் பூப।
௧௰௫।௧௰௨
ப்ராப்ேநாத்ய் அவிகலம் பலம்। ஸ்ருண்வந்ந் ஏதாந் நிதாேக ச।
௧௰௫।௧௰௨
தர்மாந் தர்மப்ருதாம் வர। வாஜேபயஸ்ய யஜ்ஞஸ்ய। ௧௰௫।௧௰௩
பலம் ப்ராப்ேநாத்ய் அஸம்ஸயம்। வர்ஷாஸு ேசமாந் ேயா தர்மாந்।
௧௰௫।௧௰௩
ஸம்ஸ்ருண்வந் வஸுதாதிப। ராஜஸூயக்ரேதா: புண்யம்। ௧௰௫।௧௰௪
அகிலம் ஸமவாப்நுயாத்। ஸரத்காேல ச ஸம்ஸ்ருண்வந்। ௧௰௫।௧௰௪
தர்மாந் ஏதாந் நரர்ஷப। ப்ராப்ேநாதி ேகாஸவபலம்। ௧௰௫।௧௰௫
ஸம்யக் ஸ்ரத்தாஸமந்வித:। க்ருதுஷ்வ் ஏேதஷ்வ் ஏதத் ஏவ।
௧௰௫।௧௰௫
படதாம் அபி பார்திவ। பலம் பவதி துஷ்ேடஷு। ௧௰௫।௧௰௬
க்ரேஹஷ்வ் ஏேத ஸுபப்ரதா:। கபிலாநாம் ஸதஸ்ேயாக்தம்।
௧௰௫।௧௰௬
யத் பலம் ஜ்ேயஷ்டபுஷ்கேர। பூேயா பூயஸ் தத் ஆப்ேநாதி। ௧௰௫।௧௰௭
பாரேண பாரேண கேத। பக்த்யா படதி யஸ் ைசதாந்। ௧௰௫।௧௰௭
ேதவஸ்ய புரேதா ஹேர:। ேஸா அர்சயத்ய் அவநீபால। ௧௰௫।௧௰௮
ஜ்ஞாநயஜ்ேஞந ேகஸவம்। ஸர்வாபாதாஸ் ததா பாபம்। ௧௰௫।௧௰௮
அகிலம் மநுேஜஸ்வர। விஷ்ணுதர்மா வ்யேபாஹந்தி। ௧௰௫।௧௰௯
ஸம்ஸ்ம்ருதா: படிதா: ஸ்ருதா:। ஏதத் ேத ஸர்வம் ஆக்யாதம்।
௧௰௫।௧௰௯

ரஹஸ்யம் பரமம் ஹேர:। நாத: பரதரம் கிம்சிச்। ௧௰௫।௧௧
ஸ்ராவ்யம் ஸ்ருதிஸுகாவஹம்। அத்ேராக்தவிதியுக்தஸ்ய। ௧௰௫।௧௧
புருஷஸ்ய விபஸ்சித:। ந துர்லபம் நரவ்யாக்ர। ௧௰௫।௧௧௧
பரமம் ப்ரஹ்ம ஸாஸ்வதம்। ௧௰௫।௧௧௧

———————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஸுவ்ன பகவான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ விஷ்ணு தர்மம் –மூன்றாம் பாகம் —

June 3, 2023

ஸ்ருத்வா தஸ்ய து ேதவர்ேஷர்। வாக்யம் வாக்யவிஸாரத:।
௬௮।௰௰௬
ப்ேராவாச பகவாந் விஷ்ணுர்। நாரதம் ஜகேதா கதி:। ௬௮।௰௰௬
ஹந்த ேத கதயிஷ்யாமி। முேந திவ்யாம் அநுஸ்ம்ருதிம்। ௬௮।௰௰௭
மரேண யாம் அநுஸ்ம்ருத்ய। ப்ராப்ேநாதி பரமாம் கதிம்। ௬௮।௰௰௭
ஓம்காரம் ஆதித: க்ருத்வா। மாம் அநுஸ்ம்ருத்ய மந்மநா:। ௬௮।௰௰௮
ஏகாக்ரப்ரயேதா பூத்வா। இதம் மந்த்ரம் உதீரேயத்। ௬௮।௰௰௮
அவ்யக்தம் ஸாஸ்வதம் ேதவம்। அநந்தம் புருேஷாத்தமம்। ௬௮।௰௰௯
ப்ரபத்ேய ப்ராஞ்ஜலிர் விஷ்ணும்। அச்யுதம் பரேமஸ்வரம்। ௬௮।௰௰௯
புராணம் பரமம் விஷ்ணும்। அத்புதம் ேலாகபாவநம்। ௬௮।௰௧
ப்ரபத்ேய புண்டரீகாக்ஷம்। ஈஸம் பக்தாநுகம்பிநம்। ௬௮।௰௧
ேலாகநாதம் ப்ரபந்ேநா அஸ்மி। அக்ஷரம் பரமம் பதம்। ௬௮।௰௧௧
பகவந்தம் ப்ரபந்ேநா அஸ்மி। பூதபவ்யபவத்ப்ரபும்। ௬௮।௰௧௧
ஸ்ரஷ்டாரம் ஸர்வபூதாநாம்। அநந்தபலெபௗருஷம்। ௬௮।௰௧௨
பத்மநாபம் ஹ்ருஷீேகஸம்। பபத்ேய ஸத்யம் அவ்யயம்। ௬௮।௰௧௨
ஹிரண்யகர்பம் பூகர்பம்। அம்ருதம் விஸ்வேதாமுகம்। ௬௮।௰௧௩
ஆபாஸ்வரம் அநாத்யந்தம்। ப்ரபத்ேய பாஸ்கரத்யுதிம்। ௬௮।௰௧௩
ஸஹஸ்ரஸிரஸம் ேதவம்। ைவகுண்டம் தார்Šயவாஹநம்।
௬௮।௰௧௪
ப்ரபத்ேய ஸூŠமம் அசலம்। வேரண்யம் அபயப்ரதம்। ௬௮।௰௧௪
நாராயணம் நரம் ஹம்ஸம்। ேயாகாத்மாநம் ஸநாதநம்। ௬௮।௰௧௫
ஸரண்யம் ஸர்வேலாகாநாம்। ப்ரபத்ேய த்ருவம் ஈஸ்வரம்। ௬௮।௰௧௫
ய: ப்ரபு: ஸர்வேலாகாநாம்। ேயந ஸர்வம் இதம் ததம்। ௬௮।௰௧௬

சராசரகுருர் ேதவ:। ஸ ேநா விஷ்ணு: ப்ரஸததுீ । ௰௬௮।௰௧௬௧௧௰
யஸ்மாஜ் ஜாத: புரா ப்ரஹ்மா। பத்மேயாநி: பிதாமஹ:। ௬௮।௰௧௭
ப்ரஸததுீ ஸ ேநா விஷ்ணு:। பிதா மாதா பிதாமஹ:। ௬௮।௰௧௭
ய: புரா ப்ரலேய ப்ராப்ேத। நஷ்ேட ேலாேக சராசேர। ௬௮।௰௧௮
ஏகஸ் திஷ்டதி ேயாகாத்மா। ஸ ேநா விஷ்ணு: ப்ரஸததுீ । ௬௮।௰௧௮
சதுர்பிஸ் ச சதுர்பிஸ் ச। த்வாப்யாம் பஞ்சபிர் ஏவ ச। ௰௬௮।௧௰௯
ஹூயேத ச புநர் த்வாப்யாம்। ஸ ேநா விஷ்ணு: ப்ரஸததுீ ।
௰௬௮।௧௰௯
பர்ஜந்ய: ப்ருதிவ ீஸஸ்யம்। காேலா தர்ம: க்ரியா பலம்। ௬௮।௰௧௯
குணாகர: ஸ ேநா பப்ருர்। வாஸுேதவ: ப்ரஸததுீ । ௬௮।௰௧௯
ேயாகாவாஸ நமஸ் துப்யம்। ஸர்வாவாஸ வரப்ரத। ௬௮।௰௨
யஜ்ஞகர்ப மஹாபாக। பஞ்சயஜ்ஞ நேமா அஸ்து ேத। ௬௮।௰௨
சதுர்மூர்ேத ஜகத்தாம। லŠம்யாவாஸ வரப்ரத। ௬௮।௰௨௧
ஸர்வாவாஸ நமஸ் ேத அஸ்து। ஸாக்ஷிபூத ஜகத்பேத। ௬௮।௰௨௧
அேஜய கண்டபரேஸா। விஸ்வமூர்ேத வ்ருஷாகேப। ௬௮।௰௨௨
த்ரிகர்ேத பஞ்சகாலஜ்ஞ। நமஸ் ேத ஜ்ஞாநஸாகர। ௬௮।௰௨௨
அவ்யக்தாத் அண்டம் உத்பந்நம்। அவ்யக்தாத்ய: பர: ப்ரபு:। ௬௮।௰௨௩
யஸ்மாத் பரதரம் நாஸ்தி। தம் அஸ்மி ஸரணம் கத:। ௬௮।௰௨௩
சிந்தயந்ேதா ஹி யம் நித்யம்। ப்ரஹ்ேமஸாநாதய: ப்ரபும்। ௬௮।௰௨௪
நிஸ்சயம் நாதிகச்சந்தி। தம் அஸ்மி ஸரணம் கத:। ௬௮।௰௨௪
ஜிேதந்த்ரியா மஹாத்மாேநா। ஜ்ஞாநத்யாநபராயணா:। ௬௮।௰௨௫
யம் ப்ராப்ய ந நிவர்தந்ேத। தம் அஸ்மி ஸரணம் கத:। ௬௮।௰௨௫

ஏகாம்ேஸந ஜகத் ஸர்வம்। ேயா அவஷ்டப்ய விபு: ஸ்தித:। ௬௮।௰௨௬
அக்ராஹ்ேயா நிர்குண: ஸாஸ்தா। தம் அஸ்மி ஸரணம் கத:।
௬௮।௰௨௬
திவாகரஸ்ய ெஸௗம்யம் ஹி। மத்ேய ஜ்ேயாதிர் அவஸ்திதம்।
௬௮।௰௨௭
ேக்ஷத்ரஜ்ஞம் இதி யம் ப்ராஹு:। ஸ மஹாத்மா ப்ரஸததுீ । ௬௮।௰௨௭
அவ்யக்தம் அநவஸ்தாேநா। துர்விஜ்ேஞய: ஸநாதந:। ௬௮।௰௨௮
ஆஸ்தித: ப்ரக்ருதிம் புங்க்ேத। ஸ மஹாத்மா ப்ரஸததுீ । ௬௮।௰௨௮
ேக்ஷத்ரஜ்ஞ: பஞ்சதா புங்க்ேத। ப்ரக்ருதிம் பஹுபிர் குைண:।
௬௮।௰௨௯
மேநாகுணாம்ஸ் ச ேயா புங்க்ேத। ஸ மஹாத்மா ப்ரஸததுீ ।
௬௮।௰௨௯
ஸாம்க்யா ேயாகாஸ் ச ேய சாந்ேய। ஸித்தாஸ் ைசவ மஹர்ஷய:।
௬௮।௰௩
யம் விதித்வா விமுச்யந்ேத। ஸ மஹாத்மா ப்ரஸததுீ । ௬௮।௰௩
நமஸ் ேத ஸர்வேதாபத்ர। ஸர்வேதா அக்ஷிஸிேராமுக। ௬௮।௰௩௧
நிர்விகார நமஸ் ேத அஸ்து। ஸாக்ஷிபூத ஹ்ருதி ஸ்தித। ௬௮।௰௩௧
அதீந்த்ரிய நமஸ் துப்யம்। லிங்ேகப்யஸ் த்வம் ப்ரமீயேஸ। ௬௮।௰௩௧
ேய து த்வாம் நாபிஜாநந்தி। ஸம்ஸாேர ஸம்ஸரந்தி ேத। ௬௮।௰௩௨
ராகத்ேவஷவிநிர்முக்தம்। ேலாபேமாஹவிவர்ஜிதம்। ௬௮।௰௩௨
அஸரீரம் ஸரீரஸ்தம்। ஸமம் ஸர்ேவஷு ேதஹிஷு। ௬௮।௰௩௨
அவ்யக்தம் புத்த்யஹம்காெரௗ। மஹாபூேதந்த்ரியாணி ச। ௬௮।௰௩௩
த்வயி தாநி ந ேதஷு த்வம்। ேதஷு த்வம் தாநி ந த்வயி। ௬௮।௰௩௩

ஸ்ரஷ்டா ேபாக்தாஸி கூடஸ்ேதா। குணாநாம் ப்ரபுர் ஈஸ்வர:।
௬௮।௰௩௪
அகர்தா ேஹதுரஹித:। ப்ரபு: ஸ்வாத்மந்ய் அவஸ்தித:। ௬௮।௰௩௪
நமஸ் ேத புண்டரீகாக்ஷ। புநர் ஏவ நேமா அஸ்து ேத। ௬௮।௰௩௫
ஈஸ்வேரா அஸி ஜகந்நாத। கிம் அத: பரம் உச்யேத। ௬௮।௰௩௫
பக்தாநாம் யத் திதம் ேதவ। தத் த்யாய த்ரிதேஸஸ்வர। ௬௮।௰௩௫
மா ேம பூேதஷு ஸம்ேயாக:। புநர் பவது ஜந்மநி। ௬௮।௰௩௬
அஹம்காேரண புத்த்யா வா। ததா ஸத்த்வாதிபிர் குைண:। ௬௮।௰௩௬
மா ேம தர்ேமா ஹ்ய் அதர்ேமா வா। புநர் பவது ஜந்மநி। ௬௮।௰௩௭
விஷையர் இந்த்ரிையர் வாபி। மா ேம பூயாத் ஸமாகம:। ௬௮।௰௩௭
ப்ருதிவம்ீ யாது ேம க்ராணம்। யாது ேம ரஸநா ஜலம்। ௬௮।௰௩௮
சக்ஷுர் ஹுதாஸநம் யாது। ஸ்பர்ேஸா ேம யாது மாருதம்।
௬௮।௰௩௮
ஸப்ேதா ஹ்ய் ஆகாஸம் அப்ேயது। மேநா ைவகாரிகம் ததா।
௬௮।௰௩௯
அஹம்காரஸ் ச ேம புத்திம்। த்வயி புத்தி: ஸேமது ச। ௬௮।௰௩௯
விேயாக: ஸர்வகரைணர்। குைணர் பூைதஸ் ச ேம பேவத்। ௬௮।௰௪
ஸத்த்வம் ரஜஸ் தமஸ் ைசவ। ப்ரக்ருதிம் ப்ரவிஸந்து ேம। ௬௮।௰௪
நிஷ்ேகவலம் பதம் ைசவ। ப்ரயாமி பரமம் தவ। ௬௮।௰௪௧
ஏகீபாவஸ் த்வையவாஸ்து। மா ேம ஜந்ம பேவத் புந:। ௬௮।௰௪௧
நேமா பகவேத தஸ்ைம। விஷ்ணேவ ப்ரபவிஷ்ணேவ। ௬௮।௰௪௨
த்வந்மநஸ் த்வத்கதப்ருஆணஸ்। த்வத்பக்தஸ் த்வத்பராயண:।
௬௮।௰௪௨

த்வாம் ஏவாநுஸ்மேர ேதவ। மரேண ப்ரத்யுபஸ்திேத। ௬௮।௰௪௨
பூர்வேதஹக்ருதா ேய ேம। வ்யாதயஸ் ேத விஸந்து மாம்। ௬௮।௰௪௩
ஆர்தயந்து ச து:காநி। ப்ரவிமுஞ்சாமி யத் க்ருணம்। ௬௮।௰௪௩
உபதிஷ்டந்து ேம ேராகா। ேய மயா பூர்வஸம்சிதா:। ௬௮।௰௪௪
அந்ருேணா கந்தும் இச்சாமி। தத் விஷ்ேணா: பரமம் பதம்। ௬௮।௰௪௪
அஹம் பகவதஸ் தஸ்ய। மம சாெஸௗ ஸுேரஸ்வர:। ௬௮।௰௪௫
தஸ்யாஹம் ந ப்ரணஸ்யாமி। ஸ ச ேம ந ப்ரணஸ்யதி। ௬௮।௰௪௫
நேமா பகவேத தஸ்ைம। ேயந ஸர்வம் இதம் ததம்। ௬௮।௰௪௬
தம் ஏவ ச ப்ரபந்ேநா அஸ்மி। மம ேயா யஸ்ய சாப்ய் அஹம்।
௬௮।௰௪௬
இமாம் அநுஸ்ம்ருதிம் நித்யம்। ைவஷ்ணவம்ீ பாபநாஸநீம்। ௬௮।௰௪௭
ஸ்வபஞ் ஜாக்ரத் பேடத் யஸ் து। த்ரிஸம்த்யம் வாபி ய: ஸ்மேரத்।
௬௮।௰௪௭
மரேண சாப்ய் அநுப்ராப்ேத। யஸ் த்வ் இமாம் ஸமநுஸ்மேரத்।
௬௮।௰௪௮
அபி பாபஸமாசார:। ேஸா அபி யாதி பராம் கதிம்। ௬௮।௰௪௮
அர்சயந்ந் அபி ேயா ேதவம்। க்ருேஹ வாபி பலிம் தேதத்। ௬௮।௰௪௯
ஜுஹ்வத் அக்நிம் ஸ்மேரத் வாபி। லபேத ஸ பராம் கதிம்। ௬௮।௰௪௯
ெபௗர்ணமாஸ்யாம் அமாவாஸ்யாம்। த்வாதஸ்யாம் ச விேஸஷத:।
௬௮।௰௫
ஸ்ராவேயச் ச்ரத்ததாநம்ஸ் து। ேய சாந்ேய மாம் உபாஸ்ரிதா:।
௬௮।௰௫
நம இத்ய் ஏவ ேயா ப்ரூயாந்। மத்பக்த: ஸ்ரத்தயாந்வித:। ௬௮।௰௫௧

தஸ்ய ஸ்யுர் அக்ஷயா ேலாகா:। ஸ்வபாகஸ்யாபி நாரத। ௬௮।௰௫௧
கிம் புநர் ேய யஜந்ேத மாம்। ஸாதேவா விதிபூர்வகம்। ௬௮।௰௫௨
த்யாயந்தி ச யதாந்யாயம்। ேத யாந்தி பரமாம் கதிம்। ௬௮।௰௫௨
அஸ்வேமதஸஹஸ்ராணாம்। ய: ஸஹஸ்ரம் ஸமாசேரத்। ௬௮।௰௫௩
நாெஸௗ தத் பதம் ஆப்ேநாதி। மத்பக்ைதர் யத் அவாப்யேத।
௬௮।௰௫௩
இஷ்டம் தத்தம் தேபா அதீதம்। வ்ரதாநி நியமாஸ் ச ேய। ௬௮।௰௫௪
ஸர்வம் ஏதத் விநாஸாந்தம்। ஜ்ஞாநஸ்யாந்ேதா ந வித்யேத।
௬௮।௰௫௪
தஸ்மாத் ப்ரேதயம் ஸாதுப்ேயா। தர்ம்யம் ஸத்த்வாபயம்கரம்।
௬௮।௰௫௫
தாநாதீந்ய் அந்தவந்தீஹ। மத்பக்ேதா நாந்தம் அஸ்நுேத। ௬௮।௰௫௫
ேயா தத்யாத் பகவஜ்ஜ்ஞாநம்। குர்யாத் வா தர்மேதஸநாம்।
௬௮।௰௫௬
க்ருத்ஸ்நாம் வா ப்ருதிவம்ீ தத்யாந்। ந து துல்யம் கதம்சந।
௬௮।௰௫௬
காந்தாரவநதுர்ேகஷு। க்ருச்ச்ேரஷ்வ் ஆபத்ஸு ஸம்ப்ரேம। ௬௮।௰௫௭
தஸ்யுபி: ஸம்நிருத்தஸ் ச। நாமபிர் மாம் ப்ரகீர்தேயத்। ௬௮।௰௫௭
வராேஹா ரக்ஷது ஜேல। விஷேமஷு ச வாமந:। ௬௮।௰௫௮
ராேமா ராமஸ் ச ராமஸ் ச। த்ராயந்தாம் தஸ்யுேதாஷத:। ௰௬௮।௧௧௧
அடவ்யாம் நாரஸிம்ஹஸ் து। ஸர்வத: பாது ேகஸவ:। ௬௮।௰௫௮
பத்த: பரிகரஸ் ேதந। ேமாக்ஷாய கமநம் ப்ரதி। ௬௮।௰௫௯
ஸக்ருத் உச்சாரிதம் ேயந। ஹரிர் இத்ய் அக்ஷரத்வயம்। ௬௮।௰௫௯

ஜந்மாந்தரஸஹஸ்ராணி। தேபாஜ்ஞாநஸமாதிபி:। ௰௬௮।௧௧௨
நராணாம் க்ஷீணபாபாநாம்। க்ருஷ்ேண பக்தி: ப்ரஜாயேத। ௰௬௮।௧௧௨
கத்வா கத்வா நிவர்தேந। சந்த்ரஸூர்யாதேயா க்ரஹா:। ௰௬௮।௧௧௨
அத்யாபி ந நிவர்தந்ேத। த்வாதஸாக்ஷரசிந்தகா:। ௰௬௮।௧௧௨
ந வாஸுேதவாத் பரம் அஸ்தி மங்கலம்। ந வாஸுேதவாத் பரமம் பவித்ரம்।
௰௬௮।௧௧௨
ந வாஸுேதவாத் பரம் அஸ்தி ைதவதம்। ந வாஸுேதவம் ப்ரணிபத்ய ஸததி ீ ।
௰௬௮।௧௧௨
தஸ்மாந் மாம் ஏவ ேதவர்ேஷ। த்யாயஸ்வாதந்த்ரித: ஸதா। ௬௮।௰௬
அவாப்ஸ்யஸி தத: ஸித்திம்। பதம் த்ரŠயஸி ச த்ருவம்। ௬௮।௰௬
ஏவம் ஸ ேதவேதேவந। நாரத: ப்ரதிேபாதித:। ௬௮।௰௬௧
சகார ேகஸேவ பக்திம்। தஸ்மாத் த்வம் குரு பூபேத। ௬௮।௰௬௧
ய: பேடத் பரயா பக்த்யா। ஸ கச்ேசத் விஷ்ணுஸாம்யதாம்।
௰௬௮।௧௧௩
ஏதத் புண்யம் பாபஹரம்। தந்யம் து:ஸ்வப்நநாஸநம்। ௰௬௮।௧௧௩
பாபம் ப்ரணஸ்யேத ேயந। புண்யம் ேயந விவர்தேத। ௬௯।௰௰௧
யஜ் ஜபந் ஸுகதிம் யாதி। ஸ்ருண்வம்ஸ் ச மம தத் வத। ௬௯।௰௰௧
கஸ்சித் ஆஸத்ீ த்விஜத்ேராக்தா। பிஸுந: க்ஷத்ரியாதம:। ௬௯।௰௰௨
பரபடாருசிர் ீ துஷ்ட:। ஸ்வபாவாத் ஏவ நிர்க்ருண:। ௬௯।௰௰௨
பரிபூதா: ஸதா ேதந। பித்ருேதவத்விஜாதய:। ௬௯।௰௰௩
பரதாேரஷு ைசவாஸ்ய। பபூவாபிரதம் மந:। ௬௯।௰௰௩
ஸ த்வ் ஆயுஷி பரிக்ஷீேண। ஜஜ்ேஞ ேகாேரா நிஸாசர:। ௬௯।௰௰௪
ேதந ைவ கர்மேதாேஷண। ஸ்ேவந பாபக்ருதாம் வர:। ௬௯।௰௰௪

க்ரூைரர் ஏவ தேதா வ்ருத்திம்। ராக்ஷஸத்ேவ விேஸஷத:। ௬௯।௰௰௫
சகார கர்மபி: பாப:। ஸர்வப்ராணிவிஹிம்ஸக:। ௬௯।௰௰௫
தஸ்ய பாபரதஸ்ையவம்। ஜக்முர் வர்ஷஸதாநி ைவ। ௬௯।௰௰௬
ேதந ைவ கர்மேதாேஷண। நாந்யா வ்ருத்திர் அேராசத। ௬௯।௰௰௬
யத் யத் பஸ்யதி ஸத்த்வம் ஸ। தத் தத் ஆதாய ராக்ஷஸ:। ௬௯।௰௰௭
சகாத புருஷவ்யாக்ர। பாஹுேகாசரம் ஆகதம்। ௬௯।௰௰௭
ஏவம் தஸ்யாதிதுஷ்டஸ்ய। குர்வத: ப்ராணிநாம் வதம்। ௬௯।௰௰௮
ஜகாம ஸுமஹாந் கால:। பரிணாமம் ததா வய:। ௬௯।௰௰௮
ஸ ததர்ஸ தபஸ்யந்தம்। தாபஸம் ஸம்ஸ்ரிதவ்ரதம்। ௬௯।௰௰௯
ஊர்த்வபாஹும் மஹாபாகம்। க்ருதரக்ஷம் ஸமந்தத:। ௬௯।௰௰௯
தம் த்ருஷ்ட்வா ஸ து துர்புத்திர்। ப்ராஹ்மணம் ராக்ஷஸாதம:।
௬௯।௰௧
ஸமப்யதாவத் ேவேகந। ஸமாதாதும் சிகாதிஷு:। ௬௯।௰௧
ேதந ரக்ஷா ச யா திக்ஷு। ப்ராஹ்மேணநாபவத் க்ருதா। ௬௯।௰௧௧
தயா நிரஸ்தம் தத் ரேக்ஷா। நிபபாதாவிதூரத:। ௬௯।௰௧௧
பகவந் கீத்ருஸம்ீ ரக்ஷாம்। ஸ சகார த்விேஜாத்தம:। ௬௯।௰௧௨
யயா நிர்தூதவர்ேயா ீ அெஸௗ। நிரஸ்ேதா ரஜநீசர:। ௬௯।௰௧௨
ஏகாக்ரசித்ேதா ேகாவிந்ேத। தஜ் ஜபம்ஸ் தத்பராயண:। ௬௯।௰௧௩
தபஸ் சசார விப்ேரா அெஸௗ। ப்ரவிஷ்ேடா விஷ்ணுபஞ்ஜரம்।
௬௯।௰௧௩
விஷ்ணுபஞ்ஜரம் இச்சாமி। ஸ்ேராதும் தர்மப்ருதாம் வர। ௬௯।௰௧௪
ஸதா ஸர்வபேயப்யஸ் து। ரக்ஷா யா பரமாபவத்। ௬௯।௰௧௪
த்ரிபுரம் ஜக்நுஷ: பூர்வம்। ப்ரஹ்மணா விஷ்ணுபஞ்ஜர:। ௬௯।௰௧௫

ஸம்கரஸ்ய குருஸ்ேரஷ்ட। ரக்ஷணாய நிரூபித:। ௬௯।௰௧௫
வாகீேஸந து ஸக்ரஸ்ய। பலம் ஹந்தும் ப்ரயாஸ்யத:। ௬௯।௰௧௬
தஸ்ய ரூபம் ப்ரவŠயாமி। தந் நிேபாத மஹீபேத। ௬௯।௰௧௬
விஷ்ணு: ப்ராச்யாம் ஸ்திதஸ் சக்ரீ। விஷ்ணுர் தக்ஷிணேதா கதீ।
௬௯।௰௧௭
ப்ரதீச்யாம் ஸார்ங்கத்ருக் விஷ்ணுர்। விஷ்ணு: கட்கீமேமாத்தேர।
௬௯।௰௧௭
ஹ்ருஷீேகேஸா விேகாேணஷு। தச்சித்ேரஷு ஜநார்தந:। ௬௯।௰௧௮
க்ேராடரூபீஹரிர் பூெமௗ। நரஸிம்ேஹா அம்பேர மம। ௬௯।௰௧௮
க்ஷுராந்தம் அமலம் சக்ரம்। ப்ரமத்ய் ஏதத் ஸுதர்ஸநம்। ௬௯।௰௧௯
அஸ்யாம்ஸுமாலா து:ப்ேரக்ஷா। ஹந்து ப்ேரதநிஸாசராந்। ௬௯।௰௧௯
கதா ேசயம் ஸஹஸ்ரார்சிர்। உத்வமத்பாவேகால்வணா। ௬௯।௰௨
ரேக்ஷாபூதபிஸாசாநாம்। டாகிணநாம் ீ ச நாஸநீ। ௬௯।௰௨
ஸார்ங்கவிஸ்பூர்ஜிதம் ைசவ। வாஸுேதவஸ்ய மத்ரிபூந்। ௬௯।௰௨௧
திர்யங்மநுஷ்யகூஷ்மாண்ட । ப்ேரதாதீந் ஹந்த்வ் அேஸஷத:।
௬௯।௰௨௧
கட்கதாராஜ்வலஜ்ஜ்ேயாத்ஸ்நா । நிர்தூதா ேய ஸமாஹதா:। ௬௯।௰௨௨
ேத யாந்து ெஸௗம்யதம் ஸத்ேயா। கருேடேநவ பந்நகா:। ௬௯।௰௨௨
ேய கூஷ்மாண்டாஸ் ததா யக்ஷா। ேய ைதத்யா ேய நிஸாசரா:।
௬௯।௰௨௩
ப்ேரதா விநாயகா: க்ரூரா। மநுஷ்யா ஜம்பகா: ககா:। ௬௯।௰௨௩
ஸிம்ஹாதேயா ேய பஸேவா। தந்தஸூகாஸ் ச பந்நகா:। ௬௯।௰௨௪

ஸர்ேவ பவந்து ேத ெஸௗம்யா:। க்ருஷ்ணஸங்கரவாஹதா:।
௬௯।௰௨௪
சித்தவ்ருத்திஹரா ேய ேம। ேய ஜநா: ஸ்ம்ருதிஹாரகா:। ௬௯।௰௨௫
பெலௗஜஸாம் ச ஹர்தாரஸ்। சாயாவிப்ரம்ஸகாஸ் ச ேய। ௬௯।௰௨௫
ேய ேசாபேபாகஹர்தாேரா। ேய ச லக்ஷணநாஸகா:। ௬௯।௰௨௬
கூஷ்மாண்டாஸ் ேத ப்ரணஸ்யந்து। விஷ்ணுசக்ரரயாஹதா:।
௬௯।௰௨௬
புத்திஸ்வாஸ்த்யம் மந:ஸ்வாஸ்த்யம்। ஸ்வாஸ்த்யம் ஐந்த்ரியகம் ததா।
௬௯।௰௨௭
மமாஸ்து ேதவேதவஸ்ய। வாஸுேதவஸ்ய கீர்தநாத்। ௬௯।௰௨௭
ப்ருஷ்ேட புரஸ்தாந் மம தக்ஷிேணாத்தேர। விேகாணகஸ் சாஸ்து ஜநார்தேநா
ஹரி:। ௬௯।௰௨௮
தத் ஈட்யம் ஈஸாநம் அநந்தம் ஈஸ்வரம்। ஜநார்தநம் ப்ரணிபதிேதா ந ஸததி ீ ।
௬௯।௰௨௮
யதா பரம் ப்ரஹ்ம ஹரிஸ் ததா பரம்। ஜகத்ஸ்வரூபஸ் ச ஸ ஏவ ேகஸவ:।
௬௯।௰௨௯
க்ருேதந ேதநாச்யுதநாமகீர்தநாத்। ப்ரணாஸம் ஏது த்ரிவிதம் மமாஸுபம்।
௬௯।௰௨௯
இத்ய் அஸாவ் ஆத்மரக்ஷார்தம்। ந்யஸ்தவாந் விஷ்ணுபஞ்ஜரம்।
௭௰।௰௰௧
ேதநாஸாத்ய: ஸ துஷ்டாநாம்। பபூவ ந்ருப ரக்ஷஸாம்। ௭௰।௰௰௧
ஏதயாரக்ஷயா ரேக்ஷா। நிர்தூதம் புவி பாதிதம்। ௭௰।௰௰௨
ஜப்யாவஸாேந விப்ேரா அெஸௗ। ததர்ஸ விகெதௗஜஸம்। ௭௰।௰௰௨
த்ருஷ்ட்வா ச க்ருபயாவிஷ்ட:। ஸமாஸ்வாஸ்ய நிஸாசரம்। ௭௰।௰௰௩

பப்ரச்சாகமேந ேஹதும்। தம் சாசஷ்ட யதாததம்। ௭௰।௰௰௩
கதயித்வா ச தத் ஸர்வம்। ராக்ஷஸ: புநர் அப்ரவத்ீ। ௭௰।௰௰௩
ப்ரஸதீ விப்ரவர்ய த்வம்। நிர்விண்ணஸ்யாதிபாபிந:। ௭௰।௰௰௪
பாபப்ரஸமநாயாலம்। உபேதஸம் ப்ரயச்ச ேம। ௭௰।௰௰௪
பஹூநி பாபாநி மயா। க்ருதாநி பஹேவா ஹதா:। ௭௰।௰௰௫
க்ருதா: ஸ்த்ரியஸ் ச ேம பஹ்வ்ேயா। விதவா ஹதபுத்ரிகா:।
௭௰।௰௰௫
அநாகஸாம் ச ஸத்த்வாநாம்। அேநகாநாம் க்ஷய: க்ருத:। ௭௰।௰௰௫
ேஸா அஹம் இச்சாமி விப்ரர்ேஷ। ப்ரஸாதாத் தவ ஸுவ்ரத।
௭௰।௰௰௬
பாபஸ்யாஸ்ய க்ஷயம் கர்தும்। குரு ேம தர்மேதஸநாம்। ௭௰।௰௰௬
கதம் க்ரூரஸ்வபாவஸ்ய। ஸதஸ் தவ நிஸாசர। ௭௰।௰௰௭
ஸஹைஸவ ஸமாயாதா। ஜிஜ்ஞாஸா தர்மவர்த்மநி। ௭௰।௰௰௭
த்வாம் அத்தும் ஆகத: க்ஷிப்ேதா। ரக்ஷயா க்ருதயா த்வயா। ௭௰।௰௰௮
தத்ஸம்ஸ்பர்ஸாச் ச ேம ப்ரஹ்மந்। ஸாத்வ் ஏதந் மநஸி ஸ்திதம்।
௭௰।௰௰௮
கா ஸா ரக்ஷா ந தாம் ேவத்மி। ேவத்மி நாஸ்யா: பராயணம்।
௭௰।௰௰௯
கிம்த்வ் அஸ்யா: ஸம்கம் ஆஸாத்ய। நிர்ேவதம் ப்ராபிதம் பரம்।
௭௰।௰௰௯
ஸ க்ருபாம் குரு தர்மஜ்ஞ। மய்ய் அநுக்ேராஸம் ஆவஹ। ௭௰।௰௧
யதா பாபாபேநாேதா ேம। பவத்ய் ஆர்ய ததா குரு। ௭௰।௰௧
இத்ய் ஏவம் உக்த: ஸ முநி:। ஸதயஸ் ேதந ரக்ஷஸா। ௭௰।௰௧௧

ப்ரத்யுவாச மஹாபாக। விம்ருஸ்ய ஸுசிரம் ததா। ௭௰।௰௧௧
யத் த்வம் ஆத்ேதாபேதஸார்தம்। நிர்விண்ண: ஸ்ேவந கர்மணா।
௭௰।௰௧௨
யுக்தம் ஏதந் ந பாபாநாம்। நிவ்ருத்ேதர் உபகாரகம்। ௭௰।௰௧௨
கரிஷ்ேய யாதுதாநாநாம்। ந த்வ் அஹம் தர்மேதஸநாம்। ௭௰।௰௧௩
தாம்ஸ் த்வம் ப்ருச்ச த்விஜாந் ெஸௗம்ய। ேய ைவ ப்ரவசேந ரதா:।
௭௰।௰௧௩
ஏவம் உக்த்வா யெயௗ விப்ரஸ்। சிந்தாம் ஆப ச ராக்ஷஸ:। ௭௰।௰௧௪
கதம் பாபாபேநாத: ஸ்யாத்। இத்ய் அெஸௗ வ்யாகுேலந்த்ரிய:।
௭௰।௰௧௪
ந ததா காதேத ஸத்த்வாந்। க்ஷுதா ஸம்படிேதா ீ அபி ஸந்। ௭௰।௰௧௫
ஷஷ்ேட ஷஷ்ேட ததா காேல। ஜந்தும் ஏகம் அபக்ஷயத்। ௭௰।௰௧௫
ஸ கதாசித் க்ஷுதாவிஷ்ட:। பர்யடந் விபிேந வேந। ௭௰।௰௧௬
ததர்ஸாத பலாஹாரம்। அக்ரத: ெகௗஸிகம் த்விஜம்। ௭௰।௰௧௬
தம் ஜக்ராஹ ச பக்ஷார்தம்। ஷஷ்ேட காேல புபுக்ஷித:। ௭௰।௰௧௭
குேரார் அர்ேத பலாஹாரம்। ஆகதம் ப்ரஹ்மசாரிணம்। ௭௰।௰௧௭
க்ருஹீேதா ரக்ஷஸா ேதந। ஸ ததா முநிதாரக:। ௭௰।௰௧௮
நிராேஸா ஜவிேத ீ ப்ராஹ। ஸாமபூர்வம் நிஸாசரம்। ௭௰।௰௧௮
ேபா பத்ரமுக யத்கார்யம்। க்ருஹீேதா அஹம் இஹ த்வயா।
௭௰।௰௧௯
தத் ப்ரவஹி ீ யதாதத்த்வம்। அயம் அஸ்ம்ய் அநுஸாதி மாம்।
௭௰।௰௧௯
ஷஷ்ேட காேல மமாஹார:। க்ஷுதிதஸ்ய த்வம் ஆகத:। ௭௰।௰௨

நி:ஸூகஸ்யாதிபாபஸ்ய। நிர்க்ருணஸ்ய த்விஜத்ருஹ:। ௭௰।௰௨
யத்ய் அவஸ்யம் த்வயாத்யாஹம்। பக்ஷணேயா ீ நிஸாசர। ௭௰।௰௨௧
ஆயாஸ்யாமி தத் அத்ையவ। நிேவத்ய குரேவ பலம்। ௭௰।௰௨௧
குருமூேல தத் ஆகத்ய। யத் பலக்ரஹணம் க்ருதம்। ௭௰।௰௨௨
மமாத்ர நிஷ்டாம் ப்ராப்தஸ்ய। தத் பாபாய நிேவதிதம்। ௭௰।௰௨௨
ஸ த்வம் முஹூர்தமாத்ரம் மாம்। அத்ைரவ ப்ரதிபாலய। ௭௰।௰௨௩
நிேவத்ய குரேவ யாவத்। இஹாகச்சாம்ய் அஹம் பலம்। ௭௰।௰௨௩
ஷஷ்ேட காேல ந ேம ப்ரஹ்மந்। கஸ்சித் க்ரஹணம் ஆகத:। ௭௰।௰௨௪
ப்ரமுச்யேத நிேபாைததத்। இதி ேம பாபஜவிகாம் ீ । ௭௰।௰௨௪
ஏக ஏவாத்ர ேமாக்ஷஸ்ய। தவ ேஹது: ஸ்ருணுஷ்வ தம்। ௭௰।௰௨௫
முஞ்சாம்ய் அஹம் அஸம்திக்தம்। யதி தத் குருேத பவாந்। ௭௰।௰௨௫
குேரார் யந் ந விேராதாய। யந் ந தர்ேமாபேராதகம்। ௭௰।௰௨௬
தத் கரிஷ்யாம்ய் அஹம் ரேக்ஷா। யந் ந வ்ரதஹரம் மம। ௭௰।௰௨௬
மயா நிஸர்கேதா ப்ரஹ்மஞ்। ஜாதிேதாஷாத் விேஸஷத:। ௭௰।௰௨௭
நிர்விேவேகந பாேபந। பாபம் கர்ம ஸதா க்ருதம்। ௭௰।௰௨௭
ஆ பால்யாந் மம பாேபஷு। ந புண்ேயஷு ரதம் மந:। ௭௰।௰௨௮
தத்பாபஸம்சயாந் ேமாக்ஷம்। ப்ராப்நுயாம் ேயந தத் வத। ௭௰।௰௨௮
யாநி பாபாநி கர்மாணி। பாலத்வாச் சரிதாநி ேம। ௭௰।௰௨௯
துஷ்டாம் ேயாநிம் இமாம் ப்ராப்ய। தந்முக்திம் கதய த்விஜ। ௭௰।௰௨௯
யத்ய் ஏதத் த்விஜபுத்ர த்வம்। மமாக்யாஸ்யஸ்ய் அேஸஷத:। ௭௰।௰௩
தத் க்ஷுதார்தாத் ஸமார்தஸ் த்வம்। நியதம் ேமாக்ஷம் ஆப்ஸ்யஸி।
௭௰।௰௩

ந ைசதத் பாபஸேலா ீ அஹம்। அத்ய த்வாம் க்ஷுத்பிபாஸித:।
௭௰।௰௩௧
ஷஷ்ேட காேல ந்ருஸம்ஸாத்மா। பக்ஷயிஷ்யாமி நிர்க்ருண:। ௭௰।௰௩௧
ஏவம் உக்ேதா முநிஸுதஸ்। ேதந ேகாேரண ரக்ஷஸா। ௭௰।௰௩௨
சிந்தாம் அவாப மஹதீம்। அஸக்தஸ் தத் உதீரிதும்। ௭௰।௰௩௨
விம்ருஸ்ய ஸுசிரம் விப்ர:। ஸரணம் ஜாதேவதஸம்। ௭௰।௰௩௩
ஜகாம ஜ்ஞாநதாநாய। ஸம்ஸயம் பரமம் கத:। ௭௰।௰௩௩
யதி ஸுஸ்ரூஷிேதா வஹ்நிர்। குேரா: ஸுஸ்ரூஷணாத் அநு।
௭௰।௰௩௪
வ்ரதாநி வா ஸுசீர்ணாநி। ஸப்தார்சி: பாது மாம் தத:। ௭௰।௰௩௪
ந மாதரம் ந பிதரம்। ெகௗரேவண யதா குரும்। ௭௰।௰௩௫
யதாஹம் அவகச்சாமி। ததா மாம் பாது பாவக:। ௭௰।௰௩௫
யதா குரும் ந மநஸா। கர்மணா வசஸாபி வா। ௭௰।௰௩௬
அவஜாநாம்ய் அஹம் ேதந। பாது ஸத்ேயந பாவக:। ௭௰।௰௩௬
இத்ய் ஏவம் ஸபதாந் ஸத்யாந்। குர்வதஸ் தஸ்ய தத் புந:। ௭௰।௰௩௭
ஸப்தார்சிஷா ஸமாதிஷ்டா। ப்ராதுராஸத்ீ ஸரஸ்வதீ। ௭௰।௰௩௭
ஸா ேசாவாச த்விஜஸுதம்। ராக்ஷஸக்ரஹணாகுலம்। ௭௰।௰௩௭
மா ைபர் த்விஜஸுதாஹம் த்வாம்। ேமாக்ஷயாம்ய் அதிஸம்கடாத்।
௭௰।௰௩௮
யத் அஸ்ய ரக்ஷஸ: ஸ்ேரேயா। ஜிஹ்வாக்ேர அஹம் ஸ்திதா தவ।
௭௰।௰௩௯
தத் ஸர்வம் கதயிஷ்யாமி। தேதா ேமாக்ஷம் அவாப்ஸ்யஸி। ௭௰।௰௩௯
அத்ருஸ்யா ரக்ஷஸா ேதந। ப்ேராக்த்ேவத்தம் தம் ஸரஸ்வதீ। ௭௰।௰௪

அதர்ஸநம் இதா ேஸா அபி। த்விஜ: ப்ராஹ நிஸாசரம்। ௭௰।௰௪
ஸ்ரூயதாம் தவ யச் ச்ேரயஸ்। ததாந்ேயஷாம் ச பாபிநாம்। ௭௰।௰௪௧
ஸமஸ்தபாபஸுத்த்யர்தம்। புண்ேயாபசயதம் ச யத்। ௭௰।௰௪௧
ப்ராதர் உத்தாய ஸததம்। மத்யாஹ்ேந அஹ்ந: க்ஷேய அபி வா।
௭௰।௰௪௨
அயம் ஸஸ்த: ஸதா ஜாப:। ஸர்வபாேபாபஸாந்தித:। ௭௰।௰௪௨
ஹரிம் க்ருஷ்ணம் ஹ்ருஷீேகஸம்। வாஸுேதவம் ஜநார்தநம்।
௭௰।௰௪௩
ப்ரணேதா அஸ்மி ஜகந்நாதம்। ஸ ேம பாபம் வ்யேபாஹது। ௭௰।௰௪௩
விஸ்ேவஸ்வரம் அஜம் விஷ்ணும்। அப்ரேமயபராக்ரமம்। ௭௰।௰௪௪
ப்ரணேதா அஸ்மி ப்ரஜாபாலம்। ஸ ேம பாபம் வ்யேபாஹது। ௭௰।௰௪௪
விஷ்ணும் அச்யுதம் ஈஸாநம்। அநந்தம் அபராஜிதம்। ௭௰।௰௪௫
ப்ரணேதா அஸ்மி மஹாத்மாநம்। ஸ ேம பாபம் வ்யேபாஹது।
௭௰।௰௪௫
சராசரகுரும் நாதம்। ேகாவிந்தம் ேஸஷஸாயிநம்। ௭௰।௰௪௬
ப்ரணேதா அஸ்மி பரம் ேதவம்। ஸ ேம பாபம் வ்யேபாஹது।
௭௰।௰௪௬
ேகாவர்தநதரம் தீரம்। ேகாப்ராஹ்மணஹிேத ஸ்திதம்। ௭௰।௰௪௭
ப்ரணேதா அஸ்மி கதாபாணிம்। ஸ ேம பாபம் வ்யேபாஹது। ௭௰।௰௪௭
ஸங்கிநம் சக்ரிணம் ஸாந்தம்। ஸார்ங்கிணம் ஸ்ரக்தரம் பரம்।
௭௰।௰௪௮
ப்ரணேதா அஸ்மி பதிம் லŠம்யா:। ஸ ேம பாபம் வ்யேபாஹது।
௭௰।௰௪௮
தாேமாதரம் உதாராக்ஷம்। புண்டரீகாக்ஷம் அவ்யயம்। ௭௰।௰௪௯

ப்ரணேதா அஸ்மி ஸ்துதம் ஸ்துத்ைய:। ஸ ேம பாபம் வ்யேபாஹது।
௭௰।௰௪௯
நாராயணம் நரம் ெஸௗரிம்। மாதவம் மதுஸூதநம்। ௭௰।௰௫
ப்ரணேதா அஸ்மி தராதாரம்। ஸ ேம பாபம் வ்யேபாஹது। ௭௰।௰௫
ேகஸவம் ேகஸிஹந்தாரம்। கம்ஸாரிஷ்டநிஸூதநம்। ௭௰।௰௫௧
ப்ரணேதா அஸ்மி சதுர்பாஹும்। ஸ ேம பாபம் வ்யேபாஹது।
௭௰।௰௫௧
ஸ்ரீவத்ஸவக்ஷஸம் ஸ்ரீஸம்। ஸ்ரீதரம் ஸ்ரீநிேகதநம்। ௭௰।௰௫௨
ப்ரணேதா அஸ்மி ஸ்ரிய: காந்தம்। ஸ ேம பாபம் வ்யேபாஹது।
௭௰।௰௫௨
யம் ஈஸம் ஸர்வபூதாநாம்। த்யாயந்தி யதேயா அக்ஷரம்। ௭௰।௰௫௩
வாஸுேதவம் அநிர்ேதஸ்யம்। தம் அஸ்மி ஸரணம் கத:। ௭௰।௰௫௩
ஸமஸ்தாலம்பேநப்ேயா அயம்। ஸம்ஹ்ருத்ய மநேஸா கதிம்।
௭௰।௰௫௪
த்யாயந்தி வாஸுேதவாக்யம்। தம் அஸ்மி ஸரணம் கத:। ௭௰।௰௫௪
ஸர்வகம் ஸர்வபூதம் ச। ஸர்வஸ்யாதாதம் ஈஸ்வரம்। ௭௰।௰௫௫
வாஸுேதவம் பரம் ப்ரஹ்ம। தம் அஸ்மி ஸரணம் கத:। ௭௰।௰௫௫
பரமாத்மாநம் அவ்யக்தம்। யம் ப்ரயாந்தி ஸுேமதஸ:। ௭௰।௰௫௬
கர்மக்ஷேய அக்ஷயம் ேதவம்। தம் அஸ்மி ஸரணம் கத:। ௭௰।௰௫௬
புண்யபாபவிநிர்முக்தா। யம் ப்ரவிஸ்ய புநர்பவம்। ௭௰।௰௫௭
ந ேயாகிந: ப்ராப்நுவந்தி। தம் அஸ்மி ஸரணம் கத:। ௭௰।௰௫௭
ப்ரஹ்மா பூத்வா ஜகத் ஸர்வம்। ஸேதவாஸுரமாநுஷம்। ௭௰।௰௫௮

ய: ஸ்ருஜத்ய் அச்யுேதா ேதவஸ்। தம் அஸ்மி ஸரணம் கத:।
௭௰।௰௫௮
ப்ரஹ்மத்ேவ யஸ்ய வக்த்ேரப்யஸ்। சதுர்ேவதமயம் வபு:। ௭௰।௰௫௯
ஸூதம் ப்ரேபா புரா ஜஜ்ேஞ। தம் அஸ்மி ஸரணம் கத:। ௭௰।௰௫௯
ப்ரஹ்மரூபதரம் ேதவம்। ஜகத்ேயாநிம் ஜநார்தநம்। ௭௰।௰௬
ஸ்ரஷ்ட்ருத்ேவ ஸம்ஸ்திதம் ஸ்ருஷ்ெடௗ। ப்ரணேதா அஸ்மி ஸநாதநம்।
௭௰।௰௬
ய: பாதி ஸ்ருஷ்டம் ச விபு:। ஸ்திதாவ் அஸுரஸூதந:। ௭௰।௰௬௧
தம் ஆதிபுருஷம் விஷ்ணும்। ப்ரணேதா அஸ்மி ஸநாதநம்। ௭௰।௰௬௧
த்ருதா மஹீஹதா ைதத்யா:। பரித்ராதாஸ் ததாமரா:। ௭௰।௰௬௨
ேயந தம் விஷ்ணும் ஆத்ேயஸம்। ப்ரணேதா அஸ்மி ஸநாதநம்।
௭௰।௰௬௨
யஜ்ைஞர் யஜந்தி யம் விப்ரா। யஜ்ேஞஸம் யஜ்ஞபாவநம்। ௭௰।௰௬௩
தம் யஜ்ஞபுருஷம் விஷ்ணும்। ப்ரணேதா அஸ்மி ஸநாதநம்।
௭௰।௰௬௩
வர்ணாஸ்ரமாந் ஸ்திதாவ் ஆத்ேயா। ய: ஸ்தாபயதி வர்த்மநி।
௭௰।௰௬௪
தம் ஆதிபுருஷம் விஷ்ணும்। ப்ரணேதா அஸ்மி ஸநாதநம்। ௭௰।௰௬௪
கல்பாந்ேத ருத்ரரூேபா ய:। ஸம்ஹரத்ய் அகிலம் ஜகத்। ௭௰।௰௬௫
தம் ஆதிபுருஷம் விஷ்ணும்। ப்ரணேதா அஸ்மி ஜநார்தநம்। ௭௰।௰௬௫
பாதாலவதீீபூராதீம்ஸ்। ததா ேலாகாந் பிபர்தி ய:। ௭௰।௰௬௬
தம் அந்தபுருஷம் விஷ்ணும்। ப்ரணேதா அஸ்மி ஜநார்தநம்। ௭௰।௰௬௬
ஸம்பக்ஷயித்வா ஸகலம்। யதா ஸ்ருஷ்டம் இதம் ஜகத்। ௭௰।௰௬௭

ேயா ந்ருத்யத்ய் அதிெரௗத்ராத்மா। ப்ரணேதா அஸ்மி ஜநார்தநம்।
௭௰।௰௬௭
ஸுராஸுரா: பித்ருகணா। யக்ஷகந்தர்வராக்ஷஸா:। ௭௰।௰௬௮
யஸ்யாம்ஸபூதா ேதவஸ்ய। ஸர்வகம் தம் நமாம்ய் அஹம்।
௭௰।௰௬௮
ஸமஸ்தேதவா: ஸகலா। மாநுஷாணாம் ச ஜாதய:। ௭௰।௰௬௯
யஸ்யாம்ஸபூதா ேதவஸ்ய। ஸர்வகம் தம் நமாம்ய் அஹம்।
௭௰।௰௬௯
வ்ருக்ஷகுல்மாதேயா யஸ்ய। ததா பஸும்ருகாதய:। ௭௰।௰௭
ஏகாம்ஸபூதா ேதவஸ்ய। ஸர்வகம் தம் நமாம்ய் அஹம்। ௭௰।௰௭
யஸ்மாந் நாந்யத் பரம் கிம்சித்। யஸ்மிந் ஸர்வம் மஹாத்மநி।
௭௰।௰௭௧
ய: ஸர்வம் அவ்யேயா அநந்த:। ஸர்வகம் தம் நமாம்ய் அஹம்।
௭௰।௰௭௧
யதா ஸர்ேவஷு பூேதஷு। ஸ்தாவேரஷு சேரஷு ச। ௭௰।௰௭௨
விஷ்ணுர் ஏவ ததா பாபம்। மமாேஸஷம் ப்ரணஸ்யது। ௭௰।௰௭௨
யதா விஷ்ணுமயம் ஸர்வம்। யத் ஸர்ேவந்த்ரியேகாசரம்। ௭௰।௰௭௩
யச் ச ஜ்ஞாநபரிச்ேசத்யம்। பாபம் நஸ்யது ேம ததா। ௭௰।௰௭௩
ப்ரவ்ருத்தம் ச நிவ்ருத்தம் ச। கர்ம விஷ்ணுமயம் யதா। ௭௰।௰௭௪
அேநகஜந்மகர்ேமாத்தம்। பாபம் நஸ்யது ேம ததா। ௭௰।௰௭௪
யந் நிஸாயாம் ததா ப்ராதர்। யச் ச மத்யாபராஹ்ணேயா:। ௭௰।௰௭௫
ஸம்த்யேயாஸ் ச க்ருதம் பாபம்। கர்மணா மநஸா கிரா। ௭௰।௰௭௫
திஷ்டதா வ்ரஜதா யச் ச। ஸய்யாஸநகேதந ச। ௭௰।௰௭௬

க்ருதம் யத் அஸுபம் கர்ம। காேயந மநஸா கிரா। ௭௰।௰௭௬
அஜ்ஞாநேதா ஜ்ஞாநேதா வா। வாஸுேதவஸ்ய கீர்தநாத்। ௭௰।௰௭௭
தத் ஸர்வம் விலயம் யாது। ேதாயஸ்தம் லவணம் யதா। ௭௰।௰௭௭
பரதாரபரத்ரவ்ய । வாஞ்சாத்ேராேஹாத்பவம் ச யத்। ௭௰।௰௭௮
பரிபேடாத்பவம் ீ நிந்தாம்। குர்வேதா யந் மஹாத்மநாம்। ௭௰।௰௭௮
யச் ச ேபாஜ்ேய ததா ேபேய। யச் ச கண்டூயநாதிஷு। ௭௰।௰௭௯
தத் யாது விலயம் ேதாேய। யதா லவணபாஜநம்। ௭௰।௰௭௯
யத் பால்ேய யச் ச ெகௗமாேர। யத் பாபம் ெயௗவேந மம। ௭௰।௰௮
வய:பரிணெதௗ யச் ச। யச் ச ஜந்மாந்தேரஷு ேம। ௭௰।௰௮
தந் நாராயணேகாவிந்த । ஹரிக்ருஷ்ேணஸகீர்தநாத்। ௭௰।௰௮௧
ப்ரயாது விலயம் ேதாேய। யதா லவணபாஜநம்। ௭௰।௰௮௧
விஷ்ணேவ வாஸுேதவாய। ஹரேய ேகஸவாய ச। ௭௰।௰௮௨
ஜநார்தநாய க்ருஷ்ணாய। நேமா பூேயா நேமா நம:। ௭௰।௰௮௨
இதம் ஸாரஸ்வதம் ஸ்ேதாத்ரம்। அேஸஷாகவிநாஸநம்। ௭௰।௰௮௩
படதாம் ஸ்ருண்வதாம் ைசவ। ஸர்வபாபவிநாஸநம்। ௭௰।௰௮௩
இதம் ய: ப்ராதர் உத்தாய। ப்ரணிபத்ய ஜநார்தநம்। ௭௰।௰௮௪
ஜபத்ய் ஏகமநா: பாபம்। ஸமஸ்தம் ஸ வ்யேபாஹதி। ௭௰।௰௮௪
யஸ் து ஸம்வத்ஸரம் பூர்ணம்। ஸாயம் ப்ராத: ஸமாஹித:।
௭௰।௰௮௫
ஜபத்ய் ஏதந் நர: புண்யம்। க்ருத்வா மநஸி ேகஸவம்। ௭௰।௰௮௫
ஸாரீரம் மாநஸம் வாக்ஜம்। ஜ்ஞாநேதா அஜ்ஞாநேதா அபி வா।
௭௰।௰௮௬
க்ருதம் ேதந து யத் பாபம்। ஸப்த ஜந்மாந்தராணி ைவ। ௭௰।௰௮௬

மஹாபாதகம் அல்பம் வா। ததா யச் ேசாபபாதகம்। ௭௰।௰௮௭
ஸகலம் நாஸயத்ய் ஏதத்। ததாந்யத் புண்யம் க்ருச்சதி। ௭௰।௰௮௭
விப்ராய ஸுவிஸிஷ்டாய। திலபாத்ராணி ேஷாடஸ। ௭௰।௰௮௮
அஹந்ய் அஹநி ேயா தத்யாத்। படத்ய் ஏதச் ச தத் ஸமம்। ௭௰।௰௮௮
அவிப்லுதமதிஸ் சாந்ேத। ஸம்ப்ராப்ய ஸ்மரணம் ஹேர:। ௭௰।௰௮௯
விஷ்ணுேலாகம் அவாப்ேநாதி। ஸத்யம் ஏதந் மேயாதிதம்। ௭௰।௰௮௯
யைதநம் படதி நித்யம்। ஸ்தவம் ஸாரஸ்வதம் புமாந்। ௰௭௰।௧௧௪
அபி பாபஸமாயுக்ேதா। ேமாக்ஷம் ப்ராப்ேநாத்ய் அஸாவ் அபி।
௰௭௰।௧௧௪
யைததத் ஸத்யம் உக்தம் ேம। நாத்ரால்பம் அபி ைவ ம்ருஷா।
௭௰।௰௯
ராக்ஷஸக்ரஸ்தஸர்வாங்கம்। ததா மாம் ஏஷ முஞ்சது। ௭௰।௰௯
ஏவம் உச்சாரிேத முக்த:। ஸ ததா ேதந ரக்ஷஸா। ௭௰।௰௯௧
அகாேமந த்விேஜா பூயஸ்। தம் ஆஹ ரஜநீசரம்। ௭௰।௰௯௧
ஏதத் பத்ரமுகாக்யாதம்। தவ பாதகநாஸநம்। ௭௰।௰௯௨
விஷ்ேணா: ஸாரஸ்வதம் ஸ்ேதாத்ரம்। யஜ் ஜகாத ஸரஸ்வதீ।
௭௰।௰௯௨
ஹுதாஸேநந ப்ரஹிதா। மம ஜிஹ்வாக்ரஸம்ஸ்திதா। ௭௰।௰௯௩
ஜகாேதமம் ஸ்தவம் விஷ்ேணா:। ஸர்வபாபப்ரஸாந்திதம்। ௭௰।௰௯௩
அேநைநவ ஜகந்நாதம்। த்வம் ஆராதய ேகஸவம்। ௭௰।௰௯௪
தத: பாபாபேநாதம் து। ஸ்துேத ப்ராப்ஸ்யஸி ேகஸேவ। ௭௰।௰௯௪
அஹர்நிஸம் ஹ்ருஷீேகஸம்। ஸ்தேவநாேநந ராக்ஷஸ। ௭௰।௰௯௫

ஸ்ெதௗஹி பக்திம் பராம் க்ருத்வா। தத: பாபாத் விேமாŠயேஸ।
௭௰।௰௯௫
ஸ்துேதா ஹி ஸர்வபாபாநி। நாஸயிஷ்யத்ய் அஸம்ஸயம்।
௭௰।௰௯௬
பக்த்யா ராக்ஷஸஸார்தூல। ஸர்வபாபஹேரா ஹரி:। ௭௰।௰௯௬
தத: ப்ரணம்ய தம் விப்ரம்। ப்ரஸாத்ய ச நிஸாசர:। ௭௰।௰௯௭
ஸாலக்ராமம் மஹாராஜ। தைதவ தபேஸ யெயௗ। ௭௰।௰௯௭
தத்ராஹர்நிஸம் ஏைவதஜ்। ஜபஞ் ஜப்யம் நராதிப। ௭௰।௰௯௮
ேதவக்ரியாரதிர் பூத்வா। தபஸ் ேதேப ஸ ராக்ஷஸ:। ௭௰।௰௯௮
ஆராத்ய ச ஜகந்நாதம்। ஸ தத்ர புருேஷாத்தமம்। ௭௰।௰௯௯
ஸர்வபாபவிநிர்முக்ேதா। விஷ்ணுேலாகம் அவாப்தவாந்। ௭௰।௰௯௯
ததா த்வம் அபி ராஜர்ேஷ। ஸர்வபாபப்ரஸாந்திதம்। ௭௰।௧
ஆராதய ஹ்ருஷீேகஸம்। ஜபந் ஸாரஸ்வதம் ஸ்தவம்। ௭௰।௧
ய ஏதத் பரமம் ஸ்ேதாத்ரம்। வாஸுேதவஸ்ய மாநவ:। ௭௰।௧௰௧
படிஷ்யதி ஸ ஸர்ேவப்ய:। பாேபப்ேயா ேமாக்ஷம் ஆப்ஸ்யதி। ௭௰।௧௰௧
ப்ரஹ்மந்ந் அஸாேர ஸம்ஸாேர। ேராகாதிவ்யாப்தமாநஸ:। ௭௧।௰௰௧
ஸப்தாதிலுப்த: புருஷ:। கிம் குர்வந் நாவஸததி ீ । ௭௧।௰௰௧
ஸ்ேவ மஹிம்நி ஸ்திதம் ேதவம்। அப்ரேமயம் அஜம் விபும்। ௭௧।௰௰௨
ேஸாகேமாஹவிநிர்முக்தம்। விஷ்ணும் த்யாயந் ந ஸததி ீ । ௭௧।௰௰௨
அப்ராணசிதிகம் ப்ரஹ்ம। ேவதாந்ேதஷு ப்ரகாஸிதம்। ௭௧।௰௰௩
ஆத்யம் புருஷம் ஈஸாநம்। விஷ்ணும் த்யாயந் ந ஸததி ீ । ௭௧।௰௰௩
அஸநாத்ையர் அஸம்ஸ்ப்ருஷ்டம்। ேஸவிதம் ேயாகிபி: ஸதா।
௭௧।௰௰௪

ஸர்வேதாஷவிநிர்முக்தம்। விஷ்ணும் த்யாயந் ந ஸததி ீ । ௭௧।௰௰௪
தாமத்ரயவிநிர்முக்தம்। ஸுப்ரபாதம் ஸுநிர்மலம்। ௭௧।௰௰௫
நிஷ்கலம் ஸாஸ்வதம் ேதவம்। விஷ்ணும் த்யாயந் ந ஸததி ீ ।
௭௧।௰௰௫
க்ஷராக்ஷரவிநிர்முக்தம்। ஜந்மம்ருத்யுவிவர்ஜிதம்। ௭௧।௰௰௬
அபயம் ஸத்யஸம்கல்பம்। விஷ்ணும் த்யாயந் ந ஸததி ீ । ௭௧।௰௰௬
அம்ருதம் ஸாதநம் ஸாத்யம்। யம் பஸ்யந்தி மநீஷிண:। ௭௧।௰௰௭
ஜ்ேஞயாக்யம் பரமாத்மாநம்। விஷ்ணும் த்யாயந் ந ஸததி ீ । ௭௧।௰௰௭
அதுலம் ஸுகதர்மாணம்। வ்ேயாமேதஹம் ஸநாதநம்।
௰௭௧।௰௰௮௧௧௫
தர்மாதர்மவிநிர்முக்தம்। விஷ்ணும் த்யாயந் ந ஸததி ீ ।
௰௭௧।௰௰௮௧௧௫
வ்யாஸாத்ையர் முநிபி: ஸர்ைவர்। த்யாநேயாகபராயைண:। ௭௧।௰௰௯
அர்சிதம் பாவகுஸுைமர்। விஷ்ணும் த்யாயந் ந ஸததி ீ । ௭௧।௰௰௯
விஷ்ண்வஷ்டகம் இதம் புண்யம்। ேயாகிநாம் ப்ரீதிவர்தநம்। ௭௧।௰௧
ய: பேடத் பரயா ப்ரீத்யா। ஸ கச்ேசத் விஷ்ணுஸாத்ம்யதாம்। ௭௧।௰௧
ஏதத் புண்யம் பாபஹரம்। தந்யம் து:ஸ்வப்நநாஸநம்। ௭௧।௰௧௧
படதாம் ஸ்ருண்வதாம் ைசவ। விஷ்ேணார் மாஹாத்ம்யம் உத்தமம்।
௭௧।௰௧௧
குர்வந் பக்திம் ஹ்ருஷீேகேஸ। மாநேவா ப்ருகுநந்தந। ௭௨।௰௰௧
நிர்வாணம் ஸமவாப்ேநாதி। யாத்ருஸம் தத் வதஸ்வ ேம। ௭௨।௰௰௧
த்ருஸ்யந்ேத புருஷா பக்திம்। உத்வஹந்ேதா ஜநார்தேந। ௭௨।௰௰௨
ததாப்ய் அேநகேதஹார்தி । மநஸ்தாபாதுரா முேந। ௭௨।௰௰௨

ஸ்ம்ருதமாத்ர: ஸுேரந்த்ரஸ்ய। ேயா அர்திஹா மதுஸூதந:। ௭௨।௰௰௩
தஸ்யாபி கர்மாபிரதா। து:கபாஜ: கதம் நரா:। ௭௨।௰௰௩
ைகஸ் ச தாைநர் ஜகத்ஸ்வாமீ। ஸ்வாமீநாராயேணா ந்ருணாம்।
௭௨।௰௰௪
உபகாராய பக்தாநாம்। ஜாயேத ஸ மஹாமுேந। ௭௨।௰௰௪
த்வத்யுக்ேதா அயம் அநுப்ரஸ்ேநா। மஹாராஜ ஸ்ருணுஷ்வ தம்।
௭௨।௰௰௫
யதா ப்ருஷ்டம் இதம் ஸம்யக்। கத்யமாநம் யதாகிலம்। ௭௨।௰௰௫
ப்ருதிவம்ீ ரத்நஸம்பூர்ணாம்। ய: க்ருஷ்ணாய ப்ரயச்சதி। ௭௨।௰௰௬
தஸ்யாப்ய் அந்யமநஸ்கஸ்ய। ஸுலேபா ந ஜநார்தந:। ௭௨।௰௰௬
நாராத்யேத அச்யுேதா தாைநர்। ந ேஹாைமர் பாவவர்ஜிைத:।
௭௨।௰௰௭
ஐகாத்ம்யம் புருைஷர் யாதி। தந்மையர் ஏவ மாதவ:। ௭௨।௰௰௭
ஸ்ரூயேத ச புராக்யாேதா। ராேஜாபரிசேரா வஸு:। ௭௨।௰௰௮
இயாஜ ஸுபஹூந் யஜ்ஞாஞ்। ஸ்ரத்தாபூேதந ேசதஸா। ௭௨।௰௰௮
ஸ விப்ரஸாபாத் ராஜர்ஷி:। கஸ்மிம்ஸ்சித் காரணாந்தேர। ௭௨।௰௰௯
ஆகாஸசாரீ ஸஹஸா। ப்ரவிேவஸ ரஸாதலம்। ௭௨।௰௰௯
ரஸாதலம் அநுப்ராப்தஸ்। ததாபி ஜகத: ப்ரபும்। ௭௨।௰௧
துஷ்டாவ தந்மேயா பூத்வா। திவ்ையர் மந்த்ைரர் ஜநார்தநம்। ௭௨।௰௧
ேதவாநாம் ஏஷ யஜ்ஞாம்ைஸர்। யஜ்வ ீபக்ஷவிவர்தந:। ௭௨।௰௧௧
ேசதிராட் இதி ைதத்யாநாம்। மதிர் ஆஸத்ீ ரஸாதேல। ௭௨।௰௧௧
அேநந விவிைதர் யஜ்ைஞஸ்। தர்பிதஸ் த்ரிதேஸஸ்வர:। ௭௨।௰௧௨

ஜகாந ைதத்யாந் வத்ேயா அயம்। ப்ராப்ேதா அஸ்மத்ேகாசரம் ரிபு:।
௭௨।௰௧௨
இதி ஸம்மந்த்ர்ய ேத ைதத்யாஸ்। ேசதிராஜஜிகாம்ஸவ:। ௭௨।௰௧௩
தத்ஸமீபம் அநுப்ராப்தா। க்ருஹீதவிவிதாயுதா:। ௭௨।௰௧௩
பரமாமர்ஷஸம்யுக்தாஸ்। ததஸ் ேத ேசதிபுங்கவம்। ௭௨।௰௧௪
ஹந்தும் ந ேஸகு: ஸஸ்த்ைரஸ் து। யத்நவந்ேதா அபி பார்திவம்।
௭௨।௰௧௪
ஸ சாபி வஸுர் ஆஸநீ :। ேகஸவார்பிதமாநஸ:। ௭௨।௰௧௫
ஜஜாப மந்த்ரம் ஓம்காரம்। ப்ரணவம் த்வாதஸாக்ஷரம்। ௭௨।௰௧௫
ததர்ஸ ச ஸ விஸ்ேவஸம்। த்யாநாவஸ்திதமாநஸ:। ௭௨।௰௧௬
க்ருத்வாந்யவிஷயத்யாகி। சித்தம் அத்யந்தநிஸ்சலம்। ௭௨।௰௧௬
ப்ராக் ஈஸம் அக்ஷரம் த்யாநம்। ஜ்ஞாநம் ஜ்ேஞயம் ஜகத்குரும்।
௭௨।௰௧௭
ஸம்சிந்த்ய வாஸுேதவாக்யம்। அநிர்ேதஸ்யம் பராயணம்। ௭௨।௰௧௭
தேதா அந்தர்யாமிருேபண। ப்ராக்ருேதந ச ஸம்ஸ்திதம்। ௭௨।௰௧௮
ப்ரஹ்மவிஷ்ணுஸிவாநாம் ச। ஸ்வரூைப: ஸம்ஸ்திதம் த்ரிதா।
௭௨।௰௧௮
புநஸ் ச ேதவகந்தர்வ । ஸித்தாதிமநுஜாதிஷு। ௭௨।௰௧௯
ஸ்தாவராந்ேதஷு பூேதஷு। ஸர்ேவஷ்வ் ஏவ ஸமாஸ்திதம்।
௭௨।௰௧௯
திŠவ் அம்பரதராபூப்ருத் । ேதாயவாய்வநலாதிஷு। ௭௨।௰௨
த்ருஸ்யாத்ருஸ்ேயஷு ைசேவஸம்। சிந்தயாம் ஆஸ பார்திவ:।
௭௨।௰௨

ஸர்வத்ர த்ருஷ்ட்வா தம் ேதவம்। ஆத்மந்ய் அபி ச ஸர்வகம்।
௭௨।௰௨௧
ஸர்வம் ச தந்மயம் த்ருஷ்ட்வா। விரராம ஸமாதித:। ௭௨।௰௨௧
இந்த்ரியாணந்த்ரியார்ேதஷு ீ । பூர்வவத் ஸ நராதிப:। ௭௨।௰௨௨
விநிேவஸ்ய தேதா அபஸ்யத்। அஸுராந் உத்யதாயுதாந்। ௭௨।௰௨௨
தாந் ஸ த்ருஷ்ட்வா க்ருஹீதார்க்ய। ஏைககஸ்ையவ பார்திவ:।
௭௨।௰௨௩
பாத்யபூர்ேவண விதிநா। பூஜயாம் ஆஸ பக்திமாந்। ௭௨।௰௨௩
ப்ரஸாதம் குரு பத்ரம் ேவா। பகவாஞ் ஜகத: பதி:। ௭௨।௰௨௪
வாஸுேதேவா பவாந் ப்ராப்ேதா। மமாநுக்ரஹகாம்யயா। ௭௨।௰௨௪
இத்ய் ஏவம் ேசதிராேஜா அஸாவ்। ஏைககஸ்ய ச தாநவாந்। ௭௨।௰௨௫
பூஜயாம் ஆஸ பாத்யாதி। நிேவத்ய வசஸா ததா। ௭௨।௰௨௫
ேத அபி தம் ேசதிராஜாநம்। பப்ரச்சுர் அஸுராஸ் ததா। ௭௨।௰௨௬
க்வ வாஸுேதேவா அத்ர வயம்। ப்ராப்தா தாக்ஷாயணஸுதா ீ :।
௭௨।௰௨௬
இத்ய் ஏவம் வதேதா ைதத்யாந்। ஸ ஜகாத புநர் வஸு:। ௭௨।௰௨௭
ப்ரணாமநம்ேரா ராேஜந்த்ர। ஸர்வதர்ஸீ மஹாமதி:। ௭௨।௰௨௭
வாஸுேதேவா ஜகத் ஸர்வம்। யச் ேசங்கம் யச் ச ேநங்கதி। ௭௨।௰௨௮
ப்ரஹ்மாதிஷு த்ருணாந்ேதஷு। ஸ ஏைவேகா ஜகத்குரு:। ௭௨।௰௨௮
அஹம் பவந்ேதா ேதவாத்யா। மநுஷ்யா: பஸவஸ் ச ேய। ௭௨।௰௨௯
ேத அபி ேதவா ஜகத்தாதுர்। வ்யதிரிக்தா ந ேகஸவாத்। ௭௨।௰௨௯
ேதைநவ மாயா விததா। ைவஷ்ணவ ீபிந்நதர்ஸநீ। ௭௨।௰௩
தயா ஸ்வாங்ேகஷு ேதேவா அெஸௗ। ப்ரதர்ஸயதி ஸர்வஸ:। ௭௨।௰௩

தத் யூயம் அஹம் அந்ேய ச। யச் ச ஸ்தாவரஜங்கமம்। ௭௨।௰௩௧
வாஸுேதவாத்மகம் ஸர்வம்। இதி மத்வா நேமா அஸ்து வ:। ௭௨।௰௩௧
இத்ய் உக்தாஸ் ேதந ேத ைதத்யா। ந ஸக்தா மநுேஜஸ்வரம்।
௭௨।௰௩௨
யத்நவந்ேதா அபி தம் ஹந்தும்। ப்ரயயு: ஸ்வாந் அதாலயாந்। ௭௨।௰௩௨
தத: புேராஹிதம் ஸர்ேவ। காவ்யம் நீதிவிஸாரதம்। ௭௨।௰௩௩
ஸேமத்ய ேத யதாவ்ருத்தம்। ஸர்வம் அஸ்ைம ந்யேவதயந்। ௭௨।௰௩௩
அஸ்மாகம் அத்யந்தரிபுர்। அயம் ப்ராப்ேதா ரஸாதலம்। ௭௨।௰௩௪
ேதவாநாம் உபக்ருத் ப்ரஹ்மந்। யஜ்வா ேசதிபதிர் வஸு:। ௭௨।௰௩௪
அஸ்மத்பக்ஷக்ஷயாையஷ। ேதவாநாம் பக்ஷவர்தந:। ௭௨।௰௩௫
தத்ர யத் ப்ரதிபத்தவ்யம்। தந் ேநா ப்ரூஹி மஹாமேத। ௭௨।௰௩௫
ஸ்வேகாசரம் அரி: ப்ராப்த:। ஸத்ருபேக்ஷாபகாரக:। ௭௨।௰௩௬
ந ஹந்தவ்ய இதீதம் ேகா। நீதிமாந் ப்ரவதிஷ்யதி। ௭௨।௰௩௬
தஸ்மாத் ப்ரக்ருஹ்ய திவ்யாநி। ஸர்வாஸ்த்ராண்ய் அமரார்தநா:।
௭௨।௰௩௭
நிபாதயத தம் கத்வா। ேசதிராஜம் ஸ்வேகாசேர। ௭௨।௰௩௭
ஸர்வம் ஏதந் மஹாபாக। தஸ்மிந்ந் அஸ்மாபிர் உத்யைத:। ௭௨।௰௩௮
க்ருதம் ந ஸகிேதா ஹந்தும்। நிர்யத்ேநா அபி ஹி பார்திவ:। ௭௨।௰௩௮
கிம் தத் ேயாகபலம் தஸ்ய। கிம் வா ஜபபலம் முேந। ௭௨।௰௩௯
தபேஸா வா முநிஸ்ேரஷ்ட। விஸ்தராத் தத் வதஸ்வ ந:। ௭௨।௰௩௯
நித்யம் ஸம்சிந்தயத்ய் ஏஷ। ேயாகயுக்ேதா ஜநார்தநம்। ௭௨।௰௪
ஸாஸ்ய ரக்ஷா பரா மந்ேய। ேகா ஹிநஸ்த்ய் அச்யுதாஸ்ரயம்।
௭௨।௰௪

கீர்தித: ஸம்ஸ்ம்ருேதா த்யாத:। பூஜித: ஸம்ஸ்துதஸ் ததா। ௭௨।௰௪௧
ஐஹிகாமுஷ்மிகீம் ரக்ஷாம்। கேராதி பகவாந் ஹரி:। ௭௨।௰௪௧
யத் துர்லபம் யத் அப்ராப்யம்। மநேஸா யந் ந ேகாசேர। ௭௨।௰௪௨
தத் அப்ய் அப்ரார்திதம் த்யாேதா। ததாதி மதுஸூதந:। ௭௨।௰௪௨
ஸரீராேராக்யம் அர்தாம்ஸ் ச। ேபாகாம்ஸ் ைசவாநுஷங்கிகாந்।
௭௨।௰௪௩
ததாதி த்யாயதாம் நித்யம்। அபவர்கப்ரேதா ஹரி:। ௭௨।௰௪௩
யத் இதம் ேசதிராஜாநம்। ஹந்தும் இச்சத தாநவா:। ௭௨।௰௪௪
தத் அஸ்ய ேகஸவாச் சித்தம்। உபாேயநாபநீயதாம்। ௭௨।௰௪௪
ததஸ் ேத தத்வச: ஸ்ருத்வா। தாநவா: குருபுங்கவ। ௭௨।௰௪௫
ப்ரஹ்மரூபப்ரதிச்சந்நா। ஜக்முர் யத்ர ஸ்திேதா வஸு:। ௭௨।௰௪௫
தத்ருஸுஸ் ேத மஹாத்மாநம்। ப்ரணதம் ேசதிபுங்கவம்। ௭௨।௰௪௬
க்ருதபூஜம் ஜகத்தாதுர்। வாஸுேதவஸ்ய பார்திவம்। ௭௨।௰௪௬
ஸம்ஸ்துதாவ் உத்யதம் ஸாந்தம்। ஸர்வத்ர ஸமதர்ஸிநம்। ௭௨।௰௪௭
க்ருஷ்ணார்பிதமேநாவ்ருத்திம்। ஜாநுப்யாம் அவநிம்கதம்। ௭௨।௰௪௭
தத: ஸம்ஸ்ருண்வதாம் ேதஷாம்। துஷ்டாவ மதுஸூதநம்। ௭௨।௰௪௮
தந்நாமஸ்மரேணாத்பூத । புலகஸ் ேசதிபுங்கவ:। ௭௨।௰௪௮
ஜகாத யம் ஸ ராஜர்ஷி:। ஸ்தவம் க்ருஷ்ணஸ்ய ெஸௗநக। ௭௨।௰௪௯
ஸ்ருண்வதாம் தாநேவந்த்ராணாம்। தந் ேம பாபஹரம் வத। ௭௨।௰௪௯
ஸ்ருணு யத் ேதவேதவஸ்ய। விஷ்ேணார் அத்புதகர்மண:। ௭௨।௰௫
ஸ்ேதாத்ரம் ஜகாத ராஜாெஸௗ। ரஸாதலதலம் கத:। ௭௨।௰௫
ஸ்ெதௗமி ேதவம் அஜம் நித்யம்। பரிணாமவிவர்ஜிதம்। ௭௨।௰௫௧

அவ்ருத்திக்ஷயம் ஈஸாநம்। அச்யுதம் பரத: பரம்। ௭௨।௰௫௧
கல்பநாக்ருதநாமாநம்। அநிர்ேதஸ்யம் அஜம் விபும்। ௭௨।௰௫௨
மூலேஹதும் அேஹதும் த்வாம்। வாஸுேதவம் நமாம்ய் அஹம்।
௭௨।௰௫௨
பரமார்தபைரர் ஈஸஸ்। சிந்த்யேத ய: ப்ரஜாகைர:। ௭௨।௰௫௩
தம் வாஸுேதவம் ஈேஸஸம்। நமாம்ய் அத்ய குணம் பரம்। ௭௨।௰௫௩
யஸ்மாத் இதம் யத்ர ேசதம்। இதம் ேயா விஸ்வம் அவ்யயம்।
௭௨।௰௫௪
தம் வாஸுேதவம் அமலம்। நமாமி பரேமஸ்வரம்। ௭௨।௰௫௪
ஜ்ேஞயம் ஜ்ஞாதாரம் அஜரம்। ேபாக்தாரம் ப்ரக்ருேத: ப்ரபும்। ௭௨।௰௫௫
புருஷஸ்வரூபிணம் ேதவம்। நேதா அஸ்மி புருஷம் பரம்। ௭௨।௰௫௫
ப்ரதாநாதிவிேஸஷாந்த । ஸ்வரூபம் அஜம் அவ்யயம்। ௭௨।௰௫௬
ஸ்தூலஸூŠமமயம் ஸர்வம் । வ்யாபிநம் தம் நமாம்ய் அஹம்।
௭௨।௰௫௬
ஸ்ரஷ்டா பாலயிதா சாந்ேத। யஸ் ச ஸம்ஹாரகாரக:। ௭௨।௰௫௭
த்ரயமயம் ீ தம் த்ரிகுணம்। நேதா அஸ்மி புருேஷாத்தமம்। ௭௨।௰௫௭
ஆப்ரஹ்மஸ்தாவராந்ேத ச। ேயா ஜகத்ய் அத்ர ஸம்ஸ்தித:। ௭௨।௰௫௮
வ்யக்தரூபீ ச தம் ேதவம்। நேதா அஹம் விஷ்ணும் அவ்யயம்।
௭௨।௰௫௮
நேமா நேமா அஸ்து ேத ேதவ। ஜகதாம் ஈஸ்வேரஸ்வர। ௭௨।௰௫௯
பரமார்த பராசிந்த்ய। விதாத: பரேமஸ்வர। ௭௨।௰௫௯
த்வம் ஆதிர் அந்ேதா மத்யம் ச। ஜகேதா அஸ்ய ஜகத்பேத। ௭௨।௰௬
ஜகத் த்வயி ஜகச் ச த்வம்। ஜகத் த்வத்ேதா ஜகந்மய। ௭௨।௰௬

தவாக்நிர் ஆஸம் வஸுதாங்க்ரியுக்மம்। நப: ஸிரஸ் சந்த்ரரவ ீச ேநத்ேர।
௭௨।௰௬௧
ஸமஸ்தேலாகா ஜடரம் புஜாஸ் ச। திஸஸ் சதஸ்ேரா பகவந் நமஸ் ேத।
௭௨।௰௬௧
யத் பூகதம் யத் ககநாந்தராேல। யத் வா நபஸ்ய் அகிலேலாககம் ச।
௭௨।௰௬௨
யத் ஸ்தூலம் ஸூŠமம் பரதஸ் தேதா அபி। யத் அஸ்தி யந் நாஸ்தி ச தத்
த்வம் ஈஸ। ௭௨।௰௬௨
ேவதாஸ் ச ேவத்யம் ச பகவாந் அநந்ேதா। ேவதாந்தேவத்யஸ் ச
ஸமஸ்தேஹேதா। ௭௨।௰௬௩
வதந்தி தத் த்வா முநய: பேரஸம்। த்வயி ப்ரஸந்ேந பரமார்தத்ருஸ்ேய।
௭௨।௰௬௩
நேமா ஹ்ருஷீேகஸ தவாப்ரேமய। நமஸ் ச துப்யம் பரமார்தஸார।
௭௨।௰௬௪
விஷ்ேணா நமஸ் ேத அஸ்து பராபேரஸ। க்ருஷ்ணாச்யுதாநந்த ஜகந்நிவாஸ।
௭௨।௰௬௪
நேமா அஸ்து துப்யம் பரேமஸ்வராய। நமஸ் ததாந்த:காரணஸ்திதாய।
௭௨।௰௬௫
ப்ரதாநபூதாய நமஸ் ச துப்யம்। வ்யக்தஸ்வரூேபண ச ஸம்ஸ்திதாய।
௭௨।௰௬௫
ஸம்ஹ்ருத்ய விஸ்வம் ஜலஸாயிேந நேமா। நமஸ் ச ேத ைகடபஸூதநாய।
௭௨।௰௬௬
ஸ்வநாபிபத்ேமாதரஸாயிேந ச। ப்ரஹ்மஸ்வரூேபாபநதாய ைசவ।
௭௨।௰௬௬

ஸ்ரஷ்ட்ேர நம: பாலயித்ேர ஸ்திெதௗ ச। ஸர்ேவஸ துப்யம்
புருேஷாத்தமாய। ௭௨।௰௬௭
ருத்ராய சாந்ேத க்ஷயேஹதேவ ேத। நேதா அஸ்மி ஸம்ஹாரகராய
விஷ்ேணா। ௭௨।௰௬௭
ஜய ப்ரபந்நார்திஹராப்ரேமய। ஜயாக்நிவஸ்வஸ்விமய ப்ரேஜஸ।
௭௨।௰௬௮
ருத்ேரந்த்ரசந்த்ரஸ்துத ேதவேதவ। ஜயாமராணாம் அரிஸாதநாய।
௭௨।௰௬௮
ஜிதம் த்வயா ஸர்வக ஸர்வஸாரம்। ஸர்வாத்மபூதாகில ேவதேவத்ய।
௭௨।௰௬௯
ஜிதம் ஜிதாக்ஷாமலசித்தத்ருஸ்ய। சராசராதார தராதேரட்ய। ௭௨।௰௬௯
யஜ்ஞாஸ்ரேயா யஜ்ஞபுமாந் அேஸஷ। ேதேவஸ மர்த்யாஸுரயஜ்ஞேபாக்த:।
௭௨।௰௭
த்வம் ஈட்யமாேநா அபிமதம் ததாஸி। தராதேரஸாச்யுத வாஸுேதவ।
௭௨।௰௭
நமஸ் ேத ேதவேதவ த்வம்। யதா பாஸ்ய் அகிலம் ஜகத்। ௭௨।௰௭௧
ஸ்திெதௗ ததா ஸமஸ்ேதப்ேயா। ேதாேஷப்ேயா மாம் ஸமுத்தர।
௭௨।௰௭௧
க்ருஷ்ணாச்யுத ஹ்ருஷீேகஸ। ஸர்வபூேதஸ ேகஸவ। ௭௨।௰௭௨
மஹாத்மம்ஸ் த்ராஹி மாம் பக்தம்। வாஸுேதவ ப்ரஸதீ ேம।
௭௨।௰௭௨
இதி ஸ்ேதாத்ராவஸாேந தம்। ேசதிராஜம் தேதா அஸுரா:। ௭௨।௰௭௩
ஜஹஸு: ஸதலாேக்ஷபம்। ப்ேராசுஸ் ச த்விஜரூபிண:। ௭௨।௰௭௩
ப்ராஜ்ஞ: கில ப்ரஜாபாலஸ்। ேசதிராட் ஸம்ஸ்ருேதா புவி। ௭௨।௰௭௪

தஸ் அஸ்ய ஜ்ஞாநம் அகிலம்। விபரீதார்தம் ஈத்ருஸம்। ௭௨।௰௭௪
க்வ வாஸுேதவ: க்வ பவாந்। இமாம் அந்த்யாம் தஸாம் கத:।
௭௨।௰௭௫
ேயா பவாந் விப்ரஸாேபந। ரஸாதலதலாஸ்ரய:। ௭௨।௰௭௫
பவிஷ்யதி ஸ்ம்ருேதா ேதவஸ்। த்ராதா கில தவாச்யுத:। ௭௨।௰௭௬
ேயா அஸாவ் ஆப்யாய்யேத விப்ைரர்। அத்வேரஷு ஹவி:ஸ்ரைவ:।
௭௨।௰௭௬
ேயா அந்யத்ரஸ் த்ராணகாேமா வா। யஜ்ஞபாகம் அபப்ஸேத ீ । ௭௨।௰௭௭
ஸ த்ராதா தவ ேகாவிந்ேதா। பவிஷ்யத்ய் அதிவிஸ்மய:। ௭௨।௰௭௭
யதா த்வம் பகவத்பக்ேதா। விப்ரஸாபாந் நிபாதித:। ௭௨।௰௭௮
ததா ஸ வாஸுேதவஸ் ேத। க்வ கேதா அல்பஸ்ருேதா அவ்யய:।
௭௨।௰௭௮
ந வாஸுேதேவா ந ஹரிர்। ந ேகாவிந்ேதா ந ேகஸவ:। ௭௨।௰௭௯
ஸாபம் ததத்ஸு விப்ேரஷு। பரித்ராணபேரா பேவத்। ௭௨।௰௭௯
ஸ த்வம் ஆர்தப்ரலாேபப்ேயா। விரமாத்ய யதீச்சஸி। ௭௨।௰௮
குபுத்திம் ஏதாம் ஸம்த்யஜ்ய। ஸ்வெபௗருஷபேரா பவ। ௭௨।௰௮
ந வயம் புண்டரீகாக்ஷம்। நாநந்தம் நாச்யுதம் ஹரிம்। ௭௨।௰௮௧
ஸம்ஸ்ரிதா ந ச ஸதாம ீ :। ஸ்வெபௗருஷம் உபாஸ்ரிதா:। ௭௨।௰௮௧
யத்ய் அஸ்மத்வசநம் வரீ। ந ேமாேஹந விஸங்கேஸ। ௭௨।௰௮௨
ததாஸ்ரயஸ்வ ஸ்வம் வர்யம் ீ । பரித்யஜ்ய விமூடதாம்। ௭௨।௰௮௨
இத்ய் உதீரிதம் ஆகர்ண்ய। ஸ ேதஷாம் ேசதிபுங்கவ:। ௭௨।௰௮௩
அஜ்ஞாநபடலச்சந்நாந்। ஹ்ருதேயந ஸுேஸாச தாந்। ௭௨।௰௮௩

உவாச ேசதிராேஜா ைவ ஹ்ருதேய க்ருதமத்ஸர:। அேஹா ேமாேஹா அயம்
ஏேதஷாம்। ௰௭௨।௧௧௬
அஹம்காரஸமுத்பவ:। ேயந ஸர்ேவஸ்வேர விஷ்ணாவ்। ௭௨।௰௮௪
ஏேதஷாம் ஆவ்ருதா மதி:। ப்ரகாஸம் ச ஸ தாந் ஆஹ। ௭௨।௰௮௪
தாநவாந் ப்ரீதிபூர்வகம்। பாபதஸ் தத்பரித்ராணம்। ௭௨।௰௮௫
சிகீர்ஷுர் வஸுதாதிப:। ைமவம் ேபா பகவத்பக்திம்। ௭௨।௰௮௫
குருத்வம் த்விஜஸத்தமா:। ஸம்ஸாராப்ெதௗ மநுஷ்யாணாம்।
௭௨।௰௮௬
ஏக: ேபாேதா ஜநார்தந:। யூயம் வயம் தைதவாந்ேய। ௭௨।௰௮௬
தஸ்ய ஸர்ேவ விபூதய:। ப்ரஹ்மாதிஸ்தாவராந்தம் ஹி। ௭௨।௰௮௭
தஸ்ய ேதவஸ்ய விஸ்த்ருதி:। ஸுகது:கமேயா ந்ருணாம்। ௭௨।௰௮௭
விபாக: கர்மணாம் ச ய:। ஸம்ஸுத்திேஹது: ஸ்வச்சந்தாத்। ௭௨।௰௮௮
ேஸா அபி விப்ரா: ப்ரவர்தேத। பரீக்ஷாம் ச ஜகந்நாத:। ௭௨।௰௮௮
கேராத்ய் அத்ருடேசதஸாம்। நராணாம் அர்தவித்வம்ஸ । ௭௨।௰௮௯
நிகாேஸஷு ஜநார்தந:। அல்பயத்ேநந சாயாந்தி। ௭௨।௰௮௯
விமுக்திம் ேகஸவாஸ்ரயாத்। தத்விகாதாய ஸக்ராத்யா। ௭௨।௰௯
யதந்ேத விக்நேஹதுபி:। யதா ஜநார்தேந பக்திம்। ௭௨।௰௯
வஹந் ஸததி ீ மாநவ:। நிர்விண்ணேசதா: ைஸதில்யம்। ௭௨।௰௯௧
மநஸ: குருேத ததா। ேதவாநாம் மஹதீஸங்கா। ௭௨।௰௯௧
பக்தியுக்தா ஜநார்தேந। முக்திபாேஜா பவிஷ்யந்தீத்ய்। ௭௨।௰௯௨
அதஸ் ேத பரிபந்திந:। ப்ராேயா பவந்தி ேகாவிந்ேத। ௭௨।௰௯௨
பக்திவ்யாகாதேஹதவ:। விக்நாஸ் சித்தவிகாதா ஹி। ௭௨।௰௯௩
விமுக்திபரிபந்திந:। ஸத்யம் ஸேதந விக்நாநாம்। ௭௨।௰௯௩

ஸஹஸ்ேரண ததா தப:। விக்நாயுேதந ேகாவிந்ேத। ௭௨।௰௯௪
ந்ருணாம் பக்திர் நிவார்யேத। ஸ்வம் சாபி கர்ம புருஷ:। ௭௨।௰௯௪
ஸுபாஸுபம் உபாகதம்। புங்க்ேத கிம் அத்ர ேதவஸ்ய। ௭௨।௰௯௫
கர்ஹ்யேத ேயந ேகஸவ:। மர்யாதாம் ச க்ருதாம் ேதந। ௭௨।௰௯௫
ேயா பிநத்தி ஸ மாநவ:। ந விஷ்ணுபக்ேதா மந்தவ்ய:। ௭௨।௰௯௬
ஸாது தர்மார்சேநா ஹரி:। ந புஷ்ைபர் ந ச தூேபந। ௭௨।௰௯௬
ேநாபஹாராநுேலபைந:। ேதாஷம் ப்ரயாதி ேகாவிந்த:। ௭௨।௰௯௭
ஸ்வகர்மாப்யர்சிேதா யதா। ப்ராஹ்மணா ேதவேதேவந। ௭௨।௰௯௭
முகாத் ஸ்ருஷ்டா மஹாத்மநா। ேதவாநாம் அபி ஸம்பூஜ்ய।
௭௨।௰௯௮
பூமிேதவா த்விேஜாத்தமா:। அநுவ்ருத்தி: ஸதா கார்யா। ௭௨।௰௯௮
ேதஷாம் வர்ைணர் அநுவ்ரைத:। ேத பூஜ்யாஸ் ேத நமஸ்கார்யாஸ்।
௭௨।௰௯௮
ேதாஷணயாஸ்ீ ச யத்நத:। ேதஷு துஷ்ேடஷ்வ் அேஸஷாணாம்।
௭௨।௰௯௯
ேதவாநாம் ப்ரீதிர் உத்தமா। ேதஷாம் மயா யத் அஜ்ஞாநாஜ்।
௭௨।௰௯௯
ஜ்ஞாநாத் வா க்ருதம் அப்ரியம்। ேதநாபி துஷ்ட ஏவாஹம்। ௭௨।௧
விஷ்ேணார் அம்ஸா த்விேஜாத்தமா:। க்ரியாவாந் மம ேபாேதா அயம்।
௭௨।௧
பூதலாத் ேயா ரஸாதேல। பதிதஸ்யாதிபேமீ அஸ்மிந்। ௭௨।௧௰௧
துருத்தாேர பவார்ணேவ। ரஸாதலதேலாத்தாரம்। ௭௨।௧௰௧

ந ஹி வாஞ்சாம்ய் அஹம் த்விஜா:। ஸம்ஸாரகர்தாத் உத்தாரம்।
௭௨।௧௰௨
வ்ருேணாம்ய் ஆராதநாத் தேர:। யதாஹம் நாபிவாஞ்சாமி। ௭௨।௧௰௨
ேபாகாந் ஆராத்ய ேகஸவம்। ேதந ஸத்ேயந விஷ்ணுர் ேம। ௭௨।௧௰௩
ஸர்வேதாஷாந் வ்யேபாஹது। யதா ந மாதா ந பிதா। ௭௨।௧௰௩
நாத்மா ந ஸுஹ்ருத: ஸுதா:। க்ருஷ்ணாலாபாத் ப்ரியதராஸ்।
௭௨।௧௰௪
ததா மாம் பாது ேகஸவ:। யதா விஷ்ணுமயம் ஸர்வம்। ௭௨।௧௰௪
ஏதத் பஸ்யாம்ய் அஹம் ஜகத்। ததா மம மேநாேதாஷாந்। ௭௨।௧௰௫
அேஸஷாந் ஸ வ்யேபாஹது। ஜாதா விஷ்ணுவிேலாேமஷு।
௭௨।௧௰௫
பவத்ஸ்வ் அபி தயா மம। யதா ேதநாத்ய ஸத்ேயந। ௭௨।௧௰௬
பவந்த: ஸந்து தந்மயா:। யதா நாஹம் பவத்த்ேவஷாந்। ௭௨।௧௰௬
ந ஸம்ஹர்ஷாத் ப்ரவம்ய்ீ அஹம்। க்ருபையவ ததா ஸர்ேவ।
௭௨।௧௰௭
பவந்த: ஸந்து தந்மயா:। ேயா ேயா ந பக்ேதா ேகாவிந்ேத। ௭௨।௧௰௭
தத்ர தத்ர க்ருபா யதா। மமாரிவர்ேக அபி ததா। ௭௨।௧௰௮
பக்திர் ேவா அஸ்து ஜநார்தேந। ஏவம் உச்சாரிேத ேதஷாம்। ௭௨।௧௰௮
ைதத்யாநாம் தத்க்ஷணாத் ததா। தஸ்மிந் ராஜந்ய் அபூந் ைமத்ரீ।
௭௨।௧௰௯
ததாந்ேயஷு ச ஜந்துஷு। ேதவேதேவ அப்ய் அபூத் பக்திர்। ௭௨।௧௰௯
பாேவா நஷ்டஸ் ததாஸுர:। ஸ்வரூபதாரிணஸ் ைசநம்। ௭௨।௧௧
ப்ரணம்யாஸுரபுங்கவா:। ப்ரத்யூசு: பார்திவம் விஷ்ணு । ௭௨।௧௧

பக்தம் ஸத்ப்ரஹ்மசாரிணம்। ேசதிபூபால பத்ரம் ேத। ௭௨।௧௧
பவேதா அதுலவிக்ரம। ஸம்ஸாேர த்வத்ஸைம: ஸங்க:। ௭௨।௧௧௧
புண்யபாஜாம் ப்ரவர்தேத। வயம் ஸ்வஜாதிேதாேஷண। ௭௨।௧௧௧
ேதவபக்ஷவிேராதிந:। பவந்தம் ஆகதா ஹந்தும்। ௭௨।௧௧௨
ேதவப்ரீணநதத்பரம்। யதா ந ஸக்திேதா ஹந்தும்। ௭௨।௧௧௨
அஸ்மாபிஸ் த்வம் நிராயுத:। விஷ்ணுத்யாநமஹாரக்ஷா । ௭௨।௧௧௩
கக்ஷாந்தரகத: ப்ரேபா। த்யாஜயத்பிஸ் ததா பக்திம்। ௭௨।௧௧௩
ேகஸவாத் இதி தர்ஸிதம்। ைவபல்யம் அதிபுண்ேயஷு। ௭௨।௧௧௪
விஷ்ணுஸுஸ்ரூஷணா ந்ருணாம்। ஸ த்வம் ேதவாதிேதவஸ்ய।
௭௨।௧௧௪
விஷ்ேணார் அமிதேதஜஸ:। அநுக்ராஹ்ேயா யதா ேதயம்। ௭௨।௧௧௫
அச்யுேத நிஸ்சலா மதி:। திஷ்ட்யா க்ேராதாபிபூதாநாம்। ௭௨।௧௧௫
அஸ்மாகம் த்வந்நிவர்ஹேண। மதிர் ஜாதா யத: ப்ராப்தா। ௭௨।௧௧௬
த்வத்ஸங்காத் துர்லபா மதி:। குருஷ்வ ச ப்ரஸாதம் த்வம்। ௭௨।௧௧௬
ப்ரணதாநாம் நேரஸ்வர। ஸத்ராவ் அபி க்ருபாஸலம் ீ । ௭௨।௧௧௭
யந் ேநா துஷ்டம் அபூந் மந:। திஸாம் ைவமல்யம் விமலம்। ௭௨।௧௧௭
சக்ஷுஷஸ் ேசாபபாதிதம்। பவதா துஷ்டதாம் ஏதாம்। ௭௨।௧௧௮
ஆஸுரீம் அபமார்ஜதா। துஷ்டா: ஸ்ம வர்ஷபூகாநி। ௭௨।௧௧௮
யத் யாதாநி வ்ருைதவ ந:। விஷயாக்ஷிப்தசித்தாநாம்। ௭௨।௧௧௯
க்ருஷ்ேண பக்திம் அகுர்வதாம்। கர்மபூெமௗ மநுஷ்யாணாம்। ௭௨।௧௧௯
தத் ஏவ விபலம் திநம்। யத் அச்யுதகதாலாப । ௭௨।௧௨
த்யாநார்சாரஹிதம் கதம்। இத்ய் உக்த்வா ேத அஸுரா பூய:। ௭௨।௧௨

ப்ரஸாத்ய ச ததா வஸும்। விஷ்ெணௗ பக்திபரா யாதாஸ்। ௭௨।௧௨௧
தீவ்ரஸம்ேயாகிேநா அலயந்। ஸ சாபி ேசதிராட் தஸ்மாத்। ௭௨।௧௨௧
ேதவேதேவந சக்ரிணா। பாதாலாத் உத்த்ருத: பஸ்சாத்। ௭௨।௧௨௨
ஸம்ஸாரகஹநாத் அபி। இத்ய் ஏதத் ஸர்வம் ஆக்யாதம்। ௭௨।௧௨௨
யந் மாம் த்வம் பரிப்ருச்சஸி। யதாவஸதந்தி ீ நரா। ௭௨।௧௨௩
பக்திமந்ேதா அபி ேகஸேவ। த்ருடா ஜநார்தேந பக்திர்। ௭௨।௧௨௩
யைதவாவ்யபிசாரிண।ீ ததா கியத் ஸ்வர்கஸுகம்। ௭௨।௧௨௪
ைஸவ நிர்வாணேஹதுகீ। இத்ய் ஏதத் அஸுைர: ஸார்தம்। ௭௨।௧௨௪
ஸம்வாதம் ய: புரா வேஸா:। படிஷ்யத்ய் அகிலம் பக்த்யா। ௭௨।௧௨௫
ஸ தல்ேலாகம் உைபஷ்யதி। ஜகத்ப்ரபும் ேதவேதவம்। ௭௨।௧௨௫
அேஸேஷஸம் ஜநார்தநம்। ப்ரணிபத்யாஹம் ஏதம் த்வாம்। ௭௩।௰௰௧
யத் ப்ருச்சாமி தத் உச்யதாம்। ையர் உபாைய: ப்ரதாைநர் வா।
௭௩।௰௰௧
நராணாம் அமரார்சித:। ப்ரீதிமாந் புண்டரீகாேக்ஷா। ௭௩।௰௰௨
பவத்ய் ஆசŠவ தந் மம। ேய ஸ்வதர்ேம ஸ்திதா வர்ணா। ௭௩।௰௰௨
விப்ராத்யா: குருநந்தந। விதர்ேமஷு ந வர்தந்ேத। ௭௩।௰௰௩
ப்ரீதிமாம்ஸ் ேதஷு ேகஸவ:। ப்ரஹ்மசாரிக்ருஹஸ்தாத்யா। ௭௩।௰௰௩
ந ச்யவந்த்ய் ஆஸ்ரமாச் ச ேய। ஸ்வதர்மேதா ஹரிஸ் ேதஷாம்।
௭௩।௰௰௪
ப்ரீதிமாந் ஏவ ஸர்வதா। ேய ந தம்ேபந வர்தந்ேத। ௭௩।௰௰௪
நரா பூேதஷ்வ் அேலாலுபா:। த்யக்தக்ராம்யாதிஸம்காஸ் ச। ௭௩।௰௰௫
ேதஷு ப்ரீதி: பரா ஹேர:। தாதாேரா நாபஹர்தார:। ௭௩।௰௰௫
பரஸ்வாநாம் அமாயிந:। ேய நராஸ் ேதஷு ேகாவிந்த:। ௭௩।௰௰௬

புத்ேரஷ்வ் இவ ஸதா ஹித:। ேயஷாம் நராணாம் ந மதிர்। ௭௩।௰௰௬
ஜிஹ்வா வாஸத்யம் உஜ்ஜதி। ேத ப்ரியா வாஸுேதவஸ்ய। ௭௩।௰௰௭
ேய ச த்விஜபராயணா:। கர்மணா மநஸா வாசா। ௭௩।௰௰௭
ேய ந ஹிம்ஸாநுவர்திந:। ேத நரா வாஸுேதவஸ்ய। ௭௩।௰௰௮
ப்ரியா: பாண்டுகுேலாத்வஹ। ஸர்வேதேவஷு ேய விஷ்ணும்।
௭௩।௰௰௮
ஸர்வபூேதஷ்வ் அவஸ்திதம்। மந்யந்ேத வாஸுேதவஸ்ய। ௭௩।௰௰௯
ேத ப்ரியா: புத்ரவத் ஸதா। ப்ரஹ்மாத்யம் ஸ்தாவராந்தம் ச। ௭௩।௰௰௯
பூதக்ராமம் ஜநார்தநாத்। ேய ச பஸ்யந்த்ய் அேபேதந। ௭௩।௰௧
ேத விஷ்ேணா: ஸததம் ப்ரியா:। ேதவேவதத்விஜாதீநாம்। ௭௩।௰௧
நிந்தாயாம் ேய ந மாநவா:। ப்ரீதிபாேஜா பவந்தீஷ்டாஸ்। ௭௩।௰௧௧
ேத ஸதா ஸார்ங்கதந்விந:। ப்ரியாணாம் அத ஸர்ேவஷாம்। ௭௩।௰௧௧
ேதவேதவஸ்ய ஸ ப்ரிய:। ஆபத்ஸ்வ் அபி ஸதா யஸ்ய। ௭௩।௰௧௨
பக்திர் அவ்யபிசாரிண।ீ தஸ்மாத் ப்ரியத்வம் க்ருஷ்ணஸ்ய। ௭௩।௰௧௨
வாஞ்சதா நிஜதர்மைஜ:। குைணர் ஆத்மா ஸதா ேயாஜ்ேயா। ௭௩।௰௧௩
ந தூேர குணிேநா ஹரி:। ேயஷாம் ந க்ருத்தி: பாரக்ேய। ௭௩।௰௧௩
தாேர த்ரவ்ேய ச ேசதஸ:। ஹிம்ஸாயாம் ச மநுஷ்யாணாம்। ௭௩।௰௧௪
ேத க்ருஷ்ேணநாவேலாகிதா:। ேவதா: ப்ரமாணம் ஸ்ம்ருதேயா।
௭௩।௰௧௪
ேயஷாம் ஸந்மார்கேஸவிநாம்। பேராபகாரஸக்தாநாம்। ௭௩।௰௧௫
ேத க்ருஷ்ேணநாவேலாகிதா:। கலிகல்மஷேதாேஷண। ௭௩।௰௧௫
ேயஷாம் ேநாபஹதா மதி:। பாஷண்டாநுகதா ைநவ। ௭௩।௰௧௬

ேத க்ருஷ்ேணநாவேலாகிதா:। ேயஷாம் க்ேலேஸா குேரார் அர்ேத।
௭௩।௰௧௬
ேதவவிப்ேராத்பேவா அபி வா। ந விவித்ஸாஸமுத்பூதஸ்। ௭௩।௰௧௭
ேத க்ருஷ்ேணநாவேலாகிதா:। ஸ்வபந்த: ஸம்ஸ்திதா யாந்தஸ்।
௭௩।௰௧௭
திஷ்டந்தஸ் ச ஜநார்தநம்। ேய சிந்தயந்த்ய் அவிரதம்। ௭௩।௰௧௮
ேத க்ருஷ்ேணநாவேலாகிதா:। யதாத்மநி ததாபத்ேய। ௭௩।௰௧௮
ேயஷாம் அத்ேராஹிணீமதி:। ஸமஸ்தஸத்த்வஜாேதஷு। ௭௩।௰௧௯
ேத க்ருஷ்ேணநாவேலாகிதா:। ேதவபூஜாம் அநுதிநம்। ௭௩।௰௧௯
குருவிப்ரார்தஸத்க்ரியாம்। ேய குர்வந்தி நரா வித்தி। ௭௩।௰௨
ேத க்ருஷ்ேணநாவேலாகிதா:। ஸுவர்ணம் ரத்நம் அதவா। ௭௩।௰௨
பாரக்யம் விஜேந வேந। விேலாக்ய ைநதி ேயா ேலாபம்। ௭௩।௰௨௧
தம் அைவஹி ஹேர: ப்ரியம்। ேதவாந் பித்ரும்ஸ் ததாபந்நாந்।
௭௩।௰௨௧
அதிதீஞ் ஜாமேயா அத்வகாந்। ேயா பிபர்தி விஜாநீஹி। ௭௩।௰௨௨
தம் நரம் பகவத்ப்ரியம்। ந க்ேராதம் ஏதி க்ருத்ேதப்ய:। ௭௩।௰௨௨
ஸஹேத ேயா நிராக்ரியாம்। தம் விஜாநீஹி பர்தவ்யம்। ௭௩।௰௨௩
ேதவேதவஸ்ய ஸார்ங்கிந:। பரேலாகப்ரதீகார । ௭௩।௰௨௩
கரணாய ஸேதாத்யமம்। குர்வந்ந் ஆலŠயதாம் ஏதி। ௭௩।௰௨௪
ேகஸேவநாவேலாகித:। நாத்மஸம்ஸ்தவம் அந்ேயஷாம்। ௭௩।௰௨௪
ந நிந்தாம் சார்தலிப்ஸயா। கேராதி புருஷவ்யாக்ர। ௭௩।௰௨௫
யஸ்ய நாராயேணா ஹ்ருதி। ஸர்வபூததயாம் ஸத்யம்। ௭௩।௰௨௫
அக்ேராதம் தர்மஸலதாம் ீ । பஜந்ேத புருஷா ேதேவ। ௭௩।௰௨௬

ேகாவிந்ேத ஹ்ருதேய ஸ்திேத। ந கெலௗ ந பரத்ரவ்ேய। ௭௩।௰௨௬
பரதாராஸ்ரிதா மதி:। நராணாம் ஜாயேத ராஜந்। ௭௩।௰௨௭
ேகாவிந்ேத ஹ்ருதயஸ்திேத। க்ஷமாம் கேராதி க்ருத்ேதஷு। ௭௩।௰௨௭
தயாம் மூேடஷு மாநவ:। முதம் ச தர்மஸேலஷு ீ । ௭௩।௰௨௮
ேகாவிந்ேத ஹ்ருதேய ஸ்திேத। யதா பிேபத்ய் அதர்மாேதர்। ௭௩।௰௨௮
தர்மாதீம்ஸ் ச யேதச்சதி। ததா குருவரஸ்ேரஷ்ட। ௭௩।௰௨௯
நர: க்ருஷ்ேணந வக்ஷித ீ :। புத்ரதாரக்ருஹேக்ஷத்ர । ௭௩।௰௨௯
த்ரவ்யாேதர் மமதாம் நர:। நாயாஸ்யதி ஜகந்நாேத। ௭௩।௰௩
ஹ்ருஷீேகேஸ பராங்முேக। கெலௗ க்ருதயுகம் ேதஷாம்। ௭௩।௰௩
க்ேலஸாஸ் ேதஷாம் ஸுகாதிகா:। ேயஷாம் ஸரீரக்ரஹேண।
௭௩।௰௩௧
ஹரிஸுஸ்ரூஷேண மதி:। யதா ேநச்சதி பாபாநி। ௭௩।௰௩௧
யதா புண்யாநி வாஞ்சதி। ஜ்ேஞயஸ் ததா மநுஷ்ேயண। ௭௩।௰௩௨
ஹ்ருதேய அஸ்ய ஹரி: ஸ்தித:। பரமார்ேத மதி: பும்ஸாம்। ௭௩।௰௩௨
அஸாேர து பவார்ணேவ। கதம் பவதி ராேஜந்த்ர। ௭௩।௰௩௩
விஷ்வக்ேஸந பராங்முேக। ஸ்ரத்ததாேநா தயாஸலீ :। ௭௩।௰௩௩
ஸமேலாஷ்டாஸ்மகாஞ்சந:। பரார்ேத மாநவ: க்ருஷ்ேண। ௭௩।௰௩௪
ப்ரஸந்ேந ந்ருப ஜாயேத। வஹேதா அபி ஸதா க்ருஷ்ேண। ௭௩।௰௩௪
பக்திம் அவ்யபிசாரிணம்ீ । பாணிஷ்வ் அஸமத்ருக்புத்ேத:। ௭௩।௰௩௫
ஸுலேபா ைநவ ேகஸவ:। ேய தாம்பிகா பிந்நவ்ருத்தா। ௭௩।௰௩௫
ேய ச தர்மத்வேஜாச்ச்ரயா:। துர்லேபா பகவாந் ேதவஸ்। ௭௩।௰௩௬
ேதஷாம் ஸுயததாம் அபி। காமேலாபாஸ்ரிதம் ேயஷாம்। ௭௩।௰௩௬

சித்தம் க்ேராதாதிதூஷிதம்। ேதஷாம் ஜந்மஸஹஸ்ேர அபி। ௭௩।௰௩௭
ந மதி: ேகஸவாஸ்ரயா। ேஹயாம் க்ருஷ்ணாஸ்ரயாம் வ்ருத்திம்।
௭௩।௰௩௭
மந்யந்ேத ேஹதுஸம்ஸ்ரிதா:। அவிேயாபஹதஜ்ஞாநா। ௭௩।௰௩௮
ேய அஜ்ஞாேந ஜ்ஞாநமாநிந:। ேவதவாதவிேராேதந। ௭௩।௰௩௮
கூடயுக்திம் அபாஸ்ரிதா:। ேய ேகஸவஸ் தத்த்ருதேய। ௭௩।௰௩௯
ந கதாசித் ப்ரியாதிதி:। மாநுஷம் தம் மநுஷ்யத்ேவ। ௭௩।௰௩௯
மந்யமாநா: குபுத்தய:। கர்மாணி ேய அஸ்ய நிந்தந்தி। ௭௩।௰௪
ந ேதஷாம் நிஷ்க்ருதிர் ந்ருணாம்। ேகசித் வதந்தி தம் ேதவம்। ௭௩।௰௪
மநுஷ்யம் சால்பேமதஸ:। திர்யக்த்வம் சாபேர விஷ்ணும்। ௭௩।௰௪௧
மாயயா தஸ்ய ேமாஹிதா:। ேதவத்வம் அபி க்ருஷ்ணஸ்ய। ௭௩।௰௪௧
யஸ்ய நிந்தா மஹாத்மந:। ஸ்துதிம் தஸ்ய கதம் ஸக்தா:। ௭௩।௰௪௨
கர்தும் ஈஸஸ்ய மாநவா:। வ்யாபித்வம் ஸாஸ்வதத்வம் ச। ௭௩।௰௪௨
ஜந்மபாவவிவர்ஜிதம்। யதாஸ்ய ப்ேராச்யேத காஸ்ய। ௭௩।௰௪௩
ஸ்துதிர் அர்ேத ததா ஸ்திெதௗ। ஸர்ேவஸ்வேரஸ்வர: க்ருஷ்ண:।
௭௩।௰௪௩
ப்ேராச்யேத யதி பண்டித:। ததாபி ஸ்வல்பம் ஏேவாக்தம்। ௭௩।௰௪௪
பூதார்ேத கதமா ஸ்துதி:। ஆப்ரஹ்மஸ்தம்பபர்யந்ேத। ௭௩।௰௪௪
ஸம்ஸாேர யஸ்ய ஸம்ஸ்திதி:। நிந்தாபி தஸ்ய ந ந்ருபி:। ௭௩।௰௪௫
கர்தும் ஈஸஸ்ய ஸக்யேத। யதா காணாஸ் ச கூண்டாஸ் ச।
௭௩।௰௪௫
மூேடா துர்புத்திர் ஆதுர:। ஸர்வகத்வாத் ஸ ஏைவகஸ்। ௭௩।௰௪௬
ததாெஸௗ நிந்த்யேத கதம்। ஸ்ரஷ்டா பாலயிதா ஹர்தா। ௭௩।௰௪௬

ஜகேதா அஸ்ய ஜகச் ச ஸ:। யஷ்டா யாஜயிதா யாஜ்ய:। ௭௩।௰௪௭
ஸ ஏவ பகவாந் ஹரி:। தாதா தாநம் ததாதாதா। ௭௩।௰௪௭
கர்தா கார்யம் ததா க்ரியா:। ஹந்தா காதயிதா ஹிம்ஸ்ேயா। ௭௩।௰௪௮
ஹார்யம் ஹர்தா ச ய: ஸ்வயம்। ஸர்வகாரணபூதஸ்ய। ௭௩।௰௪௮
தஸ்ேயஸஸ்ய மஹாத்மந:। க: கேராதி ஸ்துதிம் விஷ்ேணார்।
௭௩।௰௪௯
நிந்தாம் வா ப்ருதிவபேத ீ । தஸ்மாத் ஸர்ேவஸ்வேரா விஷ்ணுர்।
௭௩।௰௪௯
ந ஸ்ேதாதும் ந ச நிந்திதும்। ஸக்யேத ஸர்வபூதத்வாச்। ௭௩।௰௫
ேசாக்ஷாேசாக்ஷஸ்வரூபிணா। ஸ்துேத: பாதாத் யேதா நாந்யத்।
௭௩।௰௫
உத்க்ருஷ்டம் உபலப்யேத। தஸ்யாப்ய் உச்சாரேணேநேஸா। ௭௩।௰௫௧
ந ஸ்ேதாதும் ஸக்யேத ஹரி:। பூதார்தவாதஸ்துதேய। ௭௩।௰௫௧
ந நிந்தாைய விதீயேத। யேதா அத: ஸர்வபூதஸ்ய। ௭௩।௰௫௨
கா நிந்தா தஸ்ய கா ஸ்துதி:। ேயந ஸர்வாத்மநா தத்ர। ௭௩।௰௫௨
ஹ்ருதயம் ஸம்நிேவஸிதம்। அபி ெமௗநவதஸ் தஸ்ய। ௭௩।௰௫௩
ஸுலேபா அயம் ஜநார்தந:। தஸ்மாத் த்வம் குருஸார்தூல। ௭௩।௰௫௩
ஸ்வதர்மபரிபாலநம்। குரு விஷ்ணும் ச ஹ்ருதேய। ௭௩।௰௫௪
ஸர்வவ்யாபிநம் ஈஸ்வரம்। தந்மநா பவ தத்பக்தஸ்। ௭௩।௰௫௪
தத்யாஜீதம் நமஸ்குரு। விஷ்ேணார் ஏவம் ப்ரியத்வம் த்வம்।
௭௩।௰௫௫
ஆஸு யாஸ்யஸி பார்திவ। யம் ஸ்துவந் ஸ்தவ்யதாம் ஏதி।
௭௩।௰௫௫

வந்த்யமாநஸ் ச வந்த்யதாம்। தம் ஈஸ்வேரஸ்வரம் விஷ்ணும்।
௭௩।௰௫௬
ஹ்ருதேய ஸம்நிேவஸய। ஸம்பூஜ்ய யம் பூஜ்யதேமா। ௭௩।௰௫௬
பவத்ய் அத்ர ஜகத்த்ரேய। தம் ஈஸ்வேரஸ்வரம் விஷ்ணும்। ௭௩।௰௫௭
ஹ்ருதேய குரு பார்திவ। ஸ்வவர்ணகர்மாபிரத:। ௭௩।௰௫௭
குரு சித்ேத ஜநார்தநம்। ஏஷ ஸாஸ்த்ரார்தஸத்பாவ:। ௭௩।௰௫௮
கிம் உக்ைதர் பஹுவிஸ்தைர:। யஸ்மிந் ப்ரஸந்நசித்தஸ் த்வம்।
௭௩।௰௫௮
யஸ்மிந் ேகாபம் உைபஷி ச। தாவ் உபாவ் அபி தத்பூெதௗ। ௭௩।௰௫௯
சிந்தயந் ஸித்திம் ஏஷ்யஸி। யத்ர யத்ர ஸ்திதம் ேசத:। ௭௩।௰௫௯
ப்ரீத்யா ஸ்ேநேஹந வா தவ। தம் தம் சிந்தய ேகாவிந்தம்। ௭௩।௰௬
மநஸ: ஸ்ைதர்யகாரணாத்। ஸ்வபந் விபுத்த்யந்ந் உத்திஷ்டந்। ௭௩।௰௬
ஸ்திேதா புஞ்ஜந் பிபந் வ்ரஜந்। ஸர்வகம் ஸர்வகர்தாரம்। ௭௩।௰௬௧
விஷ்ணும் ஸர்வத்ர சிந்தய। யதாக்நிஸம்காத் கநகம்। ௭௩।௰௬௧
அபேதாஷம் ப்ரஜாயேத। ஸம்ஸ்லிஷ்டம் வாஸுேதேவந। ௭௩।௰௬௨
மநுஷ்யாணாம் ததா மந:। யஜ்விேநா யம் நமஸ்யந்தி। ௭௩।௰௬௨
யம் நமஸ்யந்தி ேதவதா:। ேயாகிேநா யம் நமஸ்யந்தி। ௭௩।௰௬௩
தம் நமஸ்யம் நமாம்ய் அஹம்। பூயஸ் ச ஸ்ருணு ராேஜந்த்ர।
௭௩।௰௬௩
யஜ் ஜகாத ஜநார்தந:। நாகபர்யங்கஸயேந। ௭௪।௰௰௧
ப்ருஷ்ட: க்ஷீராப்திகந்யயா। புரா ஸயாநம் ேகாவிந்தம்। ௭௪।௰௰௧
ப்ராவ்ருட்காேல மேஹாதெதௗ। ேஸஷேபாகிமஹாேபாேக। ௭௪।௰௰௨
வச்யம்புகணஸதேல ீ ீ । வக்ஷ:ஸ்தலஸ்திதா ேதவ।ீ ௭௪।௰௰௨

ஜகந்மாதா ஜகத்பதிம்। அநந்யாஸக்தத்ருஷ்டிம் ச। ௭௪।௰௰௩
கிம் அப்ய் ஏகாக்ரமாநஸம்। ஸ்ரீவத்ஸவ்க்ஷஸம் லŠமீ:। ௰௭௪।௧௧௭
கரஸம்வாஹநாத்ருதா। ேயாகநித்ராவஸாநஸ்தம்। ௭௪।௰௰௩
அச்யுதம் ஜகத: பதிம்। பப்ரச்ச புண்டரீகாக்ஷம்। ௭௪।௰௰௪
புண்டரீககரா ஹரிம்। ஸ்ருஷ்டம் ஜகத் இதம் ஸர்வம்। ௭௪।௰௰௪
பஹுஸஸ் ேசாபஸம்ஹ்ருதம்। த்வயா ஜகத்பேத சாத்ர। ௭௪।௰௰௫
கிம் கஸ்சித் தயிதஸ் தவ। ேதவாந் மநுஷ்யாந் கந்தர்வாந்। ௭௪।௰௰௫
யக்ஷவித்யாதராஸுராந்। ஸ்ருஷ்ட்வா ஸ்ருஷ்டாந் நிர்க்ருணத்வாத்।
௭௪।௰௰௬
உபஸம்ஹரேத பவாந்। கஸ்சித் ஏேதஷு பூேதஷு। ௭௪।௰௰௬
ேதவாதிஷு தவாச்யுத। த்ேவேஷா அஸ்தி ப்ரீதிர் அதவா। ௭௪।௰௰௭
ஸம: ஸர்வத்ர வா பவாந்। ஸேமா அஸ்மி ஸர்வபூேதஷு। ௭௪।௰௰௭
ந ேம த்ேவஷ்ேயா அஸ்தி ந ப்ரிய:। ததாபி குணக்ருஹ்ேயா அஹம்।
௭௪।௰௰௮
ப்ரத்ேயகஹ்ருதயஸ்தித:। அந்தராத்மநி ஸர்வஸ்ய। ௭௪।௰௰௮
ேலாகஸ்யாஹம் அவஸ்தித:। புண்யாபுண்யக்ருெதௗ ேதஷு।
௭௪।௰௰௯
ப்ரீதித்ேவெஷௗ ஸுேப மம। புண்யம் ப்ரீத்யநுபாேவந। ௭௪।௰௰௯
ஸாது புத்திஷு வர்தேத। த்ேவஷாநுபாேவநாபுண்யம்। ௭௪।௰௧
பலதம் ேதஷு பாமிநி। ஸ்ரூயதாம் ச மஹாபாேக। ௭௪।௰௧
நேரஷு ஸுபசாரிஷு। ஸததம் ேயஷு ேம ப்ரீதிஸ்। ௭௪।௰௧௧
ததாப்ரீதிர் வராநேந। ப்ரலேயாத்பத்திதத்த்வஜ்ஞா। ௭௪।௰௧௧
ஆத்மஜ்ஞாநபராஸ் ச ேய। ஏேத ஸ்வகர்மணா பத்ேர। ௭௪।௰௧௨

மம ப்ரீதிபதம் கதா:। வாங்மந:காயிகீம் ஹிம்ஸாம்। ௭௪।௰௧௨
ேய ந குர்வந்தி குத்ரசித்। ஸர்வைமத்ரா நரா லŠமி। ௭௪।௰௧௩
தயிதாஸ் ேத ஸதா மம। ஸ்வகீயத்ரவ்யஸம்துஷ்டா। ௭௪।௰௧௩
நிவ்ருத்தாஸ் ெசௗர்யகர்மண:। ஸத்யஸலதயாயுக்தா ீ । ௭௪।௰௧௪
நரா மம ஸதா ப்ரியா:। மாத்ருஸ்வஸ்ருஸுதாதுல்யாந்। ௭௪।௰௧௪
பரதாராம்ஸ் ச ேய நரா:। மந்யந்ேத ேத ச ேம லŠமி। ௭௪।௰௧௫
த்ருடம் ப்ரியதமா: ஸதா। ந காமாந் ந ச ஸம்ரம்பாந்। ௭௪।௰௧௫
ந த்ேவஷாத் ேய ச பாமிநி। ஸம்த்யஜந்தி ஸ்வகம் கர்ம। ௭௪।௰௧௬
ேத அதீவ தயிதா மம। விஸ்வாஸ்யா: ஸர்வபூதாநாம்। ௭௪।௰௧௬
அஹிம்ஸ்ராஸ் ச தயாலவ:। த்யக்தாந்ருதகதா ேதவி। ௭௪।௰௧௭
மநுஷ்யா தயிதா மம। தர்மலப்தாம்ஸ் து ேய ேபாகாந்। ௭௪।௰௧௭
புஞ்ஜேத நாதிகீகடா:। பரேலாகாவிேராேதந। ௭௪।௰௧௮
ேத மமாதிப்ரியா நரா:। ந ேலாேப ந ச கார்பண்ேய। ௭௪।௰௧௮
ந ஸ்ேதேய ந ச மத்ஸேர। ேயஷாம் மதிர் மநுஷ்யாணாம்। ௭௪।௰௧௯
ேத அதீவ தயிதா மம। தர்மலப்ேதஷு தாேரஷு। ௭௪।௰௧௯
க்ருதுகாலாபிகாமிந:। க்ருஹஸ்தகர்மாபிரதா। ௭௪।௰௨
நராஸ் ேத தயிதா மம। பரரந்த்ேரஷு ஜாத்யந்தா:। ௭௪।௰௨
பரதாேரஷ்வ் அபும்ஸகா:। பராபவாேத ேய மூகா। ௭௪।௰௨௧
தயிதாஸ் ேத நரா மம। பராபவாதம் நிந்தாம் ச। ௭௪।௰௨௧
பரமர்மாவகட்டநம்। ேய ந குர்வந்தி புருஷாஸ்। ௭௪।௰௨௨
ேத ேதவி மம வல்லபா:। ஸத்யாம் ஸ்லŠணாம் நிராபாதாம்।
௭௪।௰௨௨
மதுராம் ப்ரீதிதாயிநீம்। ேய வாசம் ஈரயந்தி ஸ்ம। ௭௪।௰௨௩

ேத மநுஷ்யா மம ப்ரியா:। ேய ப்ராஹ்மணார்ேத ஸம்த்யஜ்ய।
௭௪।௰௨௩
ஸத்ய: ஸ்வம் அபி ஜவிதம் ீ । யதந்ேத பரயா பக்த்யா। ௭௪।௰௨௪
ேத ேதவி தயிதா மம। ஸாக்ஷாத் ேதவம் இவாயாந்தம்। ௭௪।௰௨௪
யா பதிம் நித்யம் அர்சதி। பாதெஸௗசாதிபிர் நாரீ। ௭௪।௰௨௫
தஸ்யா நாஹம் ஸுதுர்லப:। பூர்ணசந்த்ரம் இேவாத்யதம்। ௭௪।௰௨௫
பர்தாரம் யா க்ருஹாகதம்। ஹ்ருஷ்டா பஸ்யதி தாம் வித்தி।
௭௪।௰௨௬
தயிதாம் ேயாஷிதம் மம। ேத பக்தா ேய ஸதா விப்ராந்। ௭௪।௰௨௬
பூஜயந்த்ய் அப்திஸம்பேவ। யதாவிபவேதா பக்த்யா। ௭௪।௰௨௭
ஸ்வகர்மாபிரதா நரா:। ஸ்ருதிஸ்ம்ருத்யுதிதம் தர்மம்। ௭௪।௰௨௭
மநஸாபி ந ேய நரா:। ஸமுல்லங்க்ய ப்ரவர்தந்ேத। ௭௪।௰௨௮
ேத பக்தா மம பாமிநி। ப்ரஹ்மரூபதரஸ்யாஸ்யாந்। ௭௪।௰௨௮
மம ேவதா விநி:ஸ்ருதா:। மந்வாதிரூபிணஸ் ைசவ। ௭௪।௰௨௯
ஸமஸ்தா: ஸ்ம்ருதய: ஸ்ம்ருதா:। ஸ்ருதி: ஸ்ம்ருதிர் மைமவாஜ்ஞா।
௭௪।௰௨௯
தாம் உல்லங்க்ய யேஜச் சுேப। ஸர்வஸ்ேவநாபி மாம் ேதவி। ௭௪।௰௩
நாப்ேநாத்ய் ஆஜ்ஞாவிகாதக்ருத்। ய: ஸ்வதர்மாந் ந சலதி। ௭௪।௰௩
ஹிம்ஸாெதௗ ேயா ந ஸஜ்யேத। வஹதஸ் தஸ்ய மத்பக்திம்।
௭௪।௰௩௧
ஸைதவாஹம் ந துர்லப:। ஏதத் ேதவி மயாக்யாதம்। ௭௪।௰௩௧
யத் ப்ருஷ்ேடா அஹம் இஹ த்வயா। ப்ரியாணாம் மம ஸர்ேவஷாம்।
௭௪।௰௩௨

ஸ்ருணு ேயா அதிதரம் ப்ரிய:। ப்ராஹ்மண: க்ஷத்ரிேயா ைவஸ்ய:।
௭௪।௰௩௨
ஸூத்ரஸ் ச வரவர்ணிநி। ஸ்வதர்மாத் அசலந் ேதவி। ௭௪।௰௩௩
தயாவாந் ஸர்வஜந்துஷு। ஸத்யவாச் ெசௗசஸம்பந்ேநா। ௭௪।௰௩௩
ந த்ேராஹீந ச மத்ஸரீ। வாங்மந:கர்மபி: ஸாந்ேதா। ௭௪।௰௩௪
தயித: ஸததம் மம। ஏவம் ஸ்ரீர் ேதவேதேவந। ௭௪।௰௩௪
ப்ராக் உக்தா ஹரிேமதஸா। தவாபி ஹி நரஸ்ேரஷ்ட। ௭௪।௰௩௫
யதாவத் கதிதம் மயா। ஸம்வாதம் ஏதத் ேதவஸ்ய। ௭௪।௰௩௫
ஸஹ லŠம்யா ஜகத்பேத:। ய: ஸ்ருேணாதி ஸ பாேபப்ய:। ௭௪।௰௩௬
ஸமஸ்ேதப்ய: ப்ரமுச்யேத। பூேயா அகிலம் ஜகத்தாதுர்। ௭௪।௰௩௬
வாஸுேதவஸ்ய பார்கவ। ஸம்யகாராதநாயாலம்। ௭௫।௰௰௧
க்ரியாேயாகம் ப்ரவஹி ீ ேம। யத் பலம் ேகஸவஸ்யார்சாம்। ௭௫।௰௰௧
ப்ரதிஷ்டாப்ய லேபந் நர:। யச் ச ேதவகுலம் விஷ்ேணா:। ௭௫।௰௰௨
காரயித்வா பலம் லேபத்। யத் தீபதூபபுஷ்பாணாம்। ௭௫।௰௰௨
கந்தாநாம் ச நிேவதேந। த்வஜாதிதாேந யத் புண்யம்। ௭௫।௰௰௩
யத் புண்யம் கீதவாதிேத। ததா பவித்ரபடேந। ௭௫।௰௰௩
ஜயஸப்தாத்யுதீரேண। ஸம்மார்ஜநாெதௗ யத் புண்யம்। ௭௫।௰௰௪
நமஸ்காேர ப்ரதக்ஷிேண। ஸர்ணஸ்புடிதஸம்ஸ்கார ீ । ௭௫।௰௰௪
கரேண சாபி யத் பலம்। தந் ேம விஸ்தரத: ஸர்வம்। ௭௫।௰௰௫
பகவந் வக்தும் அர்ஹஸி। ையஸ் ேசாபவாைஸர் பகவாந்। ௭௫।௰௰௫
நைரர் ஆராத்யேத ஹரி:। ேதஷாம் பலம் ச யத் க்ருத்ஸ்நம்।
௭௫।௰௰௬

தந் மமாசŠவ விஸ்தராத்। ஸம்ேக்ஷபாத் பூர்வம் ஏைவதத்।
௭௫।௰௰௬
பவத: கதிதம் மயா। விஸ்தேரண மஹாராஜ। ௭௫।௰௰௭
ஸ்ரூயதாம் ப்ருவேதா மம। அதிதிர் நாம ேதவாநாம்। ௭௫।௰௰௭
மாதா பரமதுஸ்சரம்। தபஸ் சசார வர்ஷாணாம்। ௭௫।௰௰௮
ஸஹஸ்ரம் ப்ருதிவபேத ீ । ஆராதநாய க்ருஷ்ணஸ்ய। ௭௫।௰௰௮
வாக்யதா வாயுேபாஜநா। ைதத்ையர் நிராக்ருதாந் த்ருஷ்ட்வா।
௭௫।௰௰௯
தநயாந் குருநந்தந। வ்ருதாபுத்ராஹம் அஸ்மீதி। ௭௫।௰௰௯
நிர்ேவதாத் ப்ரணதா ஹரிம்। துஷ்டாவ வாக்பிர் இஷ்டாபி:। ௭௫।௰௧
பரமார்தாவேபாதிநீ। ஸரண்யம் ஸரணம் விஷ்ணும்। ௭௫।௰௧
ப்ரணதா பக்தவத்ஸலம்। ேதவைதத்யந்ருபஸ்வாப । ௰௭௫।௧௧௮
வ்ேயாமவாய்வாதிரூபிணம்। நம: ஸ்ம்ருதார்திநாஸாய। ௭௫।௰௧
நம: புஷ்கரமாலிேந। நம: பரமகல்யாண । ௭௫।௰௧௧
கல்யாணாயாதிேவதேஸ। நம: பங்கஜேநத்ராய। ௭௫।௰௧௧
நம: பங்கஜநாபேய। நம: பங்கஜஸம்பூதி । ௭௫।௰௧௨
ஸம்பவாயாத்மேயாநேய। ஸ்ரிய: காந்தாய தாந்தாய। ௭௫।௰௧௨
தாந்தத்ருஸ்யாய சக்ரிேண। நம: ஸங்காஸிஹஸ்தாய। ௭௫।௰௧௩
நம: கநகேரதேஸ। ததாத்மஜ்ஞாநவிஜ்ஞாந । ௭௫।௰௧௩
ேயாகசித்தாத்மேயாகிேந। நிர்குணாய விேஸஷாய। ௭௫।௰௧௪
ஹரேய ப்ரஹ்மரூபிேண। ஜகத் ப்ரதிஷ்டிதம் யத்ர। ௭௫।௰௧௪
ஜகதா ேயா ந த்ருஸ்யேத। நம: ஸ்தூலாதிஸூŠமாய। ௭௫।௰௧௫
தஸ்ைம ேதவாய ஸங்கிேந। யம் ந பஸ்யந்தி பஸ்யந்ேதா। ௭௫।௰௧௫

ஜகத் அப்ய் அகிலம் நரா:। அபஸ்யத்பிர் ஜகத் யச் ச। ௭௫।௰௧௬
த்ருஸ்யேத ஸ்வஹ்ருதி ஸ்தித:। பஹிர்ஜ்ேயாதிஷி லŠேயா ேயா।
௭௫।௰௧௬
லŠயேத ஜ்ேயாதிஷ: பர:। யஸ்மிந்ந் ஏதத் யதஸ் ைசதத்।
௰௭௫।௧௧௯
யஸ் ைசதத் அகிலம் ஜகத்। தஸ்ைம ஸமஸ்தஜகதாம்। ௭௫।௰௧௭
ஆதாராய நேமா நம:। ஆத்ய: ப்ரஜாபதிபதிர்। ௭௫।௰௧௭
ய: பித்ருணாம் பர: பதி:। பதி: ஸுராணாம் யஸ் தஸ்ைம। ௭௫।௰௧௮
நம: க்ருஷ்ணாய ேவதேஸ। ய: ப்ரவ்ருத்ைதர் நிவ்ருத்ைதஸ் ச।
௭௫।௰௧௮
கர்மபிர் விபுர் இஜ்யேத। ஸ்வர்காபவர்கபலேதா। ௭௫।௰௧௯
நமஸ் தஸ்ைம கதாத்ருேத। யஸ் சிந்த்யமாேநா மநஸா। ௭௫।௰௧௯
ஸத்ய: பாபம் வ்யேபாஹதி। நமஸ் தஸ்ைம விஸுத்தாய। ௭௫।௰௨
பரஸ்ைம ஹரிேமதேஸ। யம் ப்ரவிஸ்யாகிலாதாரம்। ௭௫।௰௨
ஈஸாநம் அஜம் அவ்யயம்। ந புநர் ஜந்மமரேண। ௭௫।௰௨௧
ப்ராப்நுவந்தி நமாமி தம்। ேயா யஜ்ேஞ யஜ்ஞபரைமர்। ௭௫।௰௨௧
இஜ்யேத யஜ்ஞஸம்ஸ்திதி:। தம் யஜ்ஞபுருஷம் விஷ்ணும்। ௭௫।௰௨௨
நமாமி ப்ரபும் ஈஸ்வரம்। கீயேத ஸர்வேவேதஷு। ௭௫।௰௨௨
ேவதவித்பிர் விதாம் கதி:। யஸ் தஸ்ைம ேவதேவத்யாய। ௭௫।௰௨௩
விஷ்ணேவ ஜிஷ்ணேவ நம:। யேதா விஸ்வம் ஸமுத்பூதம்। ௭௫।௰௨௩
யஸ்மிம்ஸ் ச லயம் ஏஷ்யதி। விஸ்ேவாத்பவப்ரதிஷ்டாய। ௭௫।௰௨௪
நமஸ் தஸ்ைம மஹாத்மேந। ப்ரஹ்மாதிஸ்தம்பபர்யந்தம்। ௭௫।௰௨௪
விநா ேயந ததாம் இமாம்। மாயாம் நாலம் ஸமுத்தர்தும்। ௭௫।௰௨௫

தம் உேபந்த்ரம் நமாம்ய் அஹம்। யம் ஆராத்ய விஸுத்ேதந।
௭௫।௰௨௫
மநஸா கர்மணா கிரா। ஹரத்ய் அவித்யாம் அகிலாம்। ௰௭௫।௧௨௰
தம் உேபந்த்ரம் நமாம்ய் அஹம்। விஷாதேதாஷேராஷாத்ையர்।
௰௭௫।௧௨௰
ேயா அஜஸ்ரம் ஸுகது:கைஜ:। ந்ருத்யத்ய் அகிலபூதஸ்தஸ்।
௰௭௫।௧௨௰
தம் உேபந்த்ரம் நமாம்ய் அஹம்। ேயா அந்நேதாயஸ்வரூபஸ்ேதா।
௰௭௫।௧௨௰
பிபர்த்ய் அகிலம் ஈஸ்வர:। விஸ்வம் விஸ்வபதிம் விஷ்ணும்।
௭௫।௰௨௬
தம் நமாமி ப்ரஜாபதிம்। மூர்தம் தேமா அஸுரமயம்। ௭௫।௰௨௬
தத்வதாத் விநிஹந்தி ய:। ராத்ரிஜம் ஸூர்யரூபீ ச। ௭௫।௰௨௭
தம் உேபந்த்ரம் நமாம்ய் அஹம்। கபிலாதிஸ்வரூபஸ்ேதா। ௭௫।௰௨௭
யஸ் சாஜ்ஞாநமயம் தம:। ஹந்தி ஜ்ஞாநப்ரதாேநந। ௭௫।௰௨௮
தம் உேபந்த்ரம் நமாம்ய் அஹம்। யஸ்யாக்ஷிணீசந்த்ரஸூர்ெயௗ।
௭௫।௰௨௮
ஸர்வேலாகஸுபாஸுபம்। பஸ்ேயேத கர்ம ஸததம்। ௭௫।௰௨௯
தம் உேபந்த்ரம் நமாம்ய் அஹம்। யஸ்மிந் ஸர்ேவஸ்வேர ஸர்வம்।
௭௫।௰௨௯
ஸத்யம் ஏதந் மேயாதிதம்। நாந்ருதம் தம் அஜம் விஷ்ணும்। ௭௫।௰௩
நமாமி ப்ரபவாவ்யயம்। யைததத் ஸத்யம் உக்தம் ேம। ௭௫।௰௩
பூயஸ் சாேதா ஜநார்தந:। ஸத்ேயந ேதந ஸகலா:। ௭௫।௰௩௧
பூர்யந்தாம் ேம மேநாரதா:। ஏவம் ஸ்துேதா அத பகவாந்। ௭௫।௰௩௧

வாஸுேதவ உவாச தாம்। அத்ருஸ்ய: ஸர்வபூதாநாம்। ௭௫।௰௩௨
தஸ்யா: ஸம்தர்ஸேந ஸ்தித:। மேநாரதாம்ஸ் த்வம் அதிேத।
௭௫।௰௩௨
யாந் இச்சஸ்ய் அபிபூரிதாந்। தாம்ஸ் தாந் ப்ராப்ஸ்யஸி தர்மஜ்ேஞ।
௭௫।௰௩௩
மத்ப்ரஸாதாத் அஸம்ஸயம்। ஸ்ருணுஷ்வ ச மஹாபாேக। ௭௫।௰௩௩
வரம் யஸ் ேத ஹ்ருதி ஸ்தித:। தம் ப்ரயச்சாமி நியதம்। ௭௫।௰௩௪
மாத்ர கார்யா விசாரணா। மத்தர்ஸநம் ஹி விபலம்। ௰௭௫।௧௨௨
ந கதாசித் பவிஷ்யதி। யதி ேதவ ப்ரஸந்நஸ் த்வம்। ௭௫।௰௩௪
பக்தாயா பக்தவத்ஸல। த்ைரேலாக்யாதிபதி: புத்ரஸ்। ௭௫।௰௩௫
தத் அஸ்து மம வாஸவ:। ஹ்ருதராஜ்ேயா ஹ்ருதஸ் சாஸ்ய।
௭௫।௰௩௫
யஜ்ஞபாேகா மஹாஸுைர:। த்வயி ப்ரஸந்ேந வரத। ௭௫।௰௩௬
தம் ப்ராப்ேநாது ஸுேதா மம। ஹ்ருதம் ராஜ்யம் ந து:காய। ௭௫।௰௩௬
மம புத்ரஸ்ய ேகஸவ। ஸபத்நாத் ஆயதிப்ரம்ேஸா। ௭௫।௰௩௭
பாதாம் ந: குருேத ஹ்ருதி। க்ருத: ப்ரஸாேதா ஹி மயா। ௭௫।௰௩௭
தவ ேதவி யேதப்ஸித:। ஸ்வாம்ேஸந ைசவ ேத கர்ேப। ௭௫।௰௩௮
ஸம்பவிஷ்யாமி கஸ்யபாத்। தவ கர்பஸமுத்பூத:। ௭௫।௰௩௮
ஸுதஸ் ேத ேய ஸுராரய:। தாந் அஹம் நிஹநிஷ்யாமி। ௭௫।௰௩௯
நிர்வ்ருதா பவ நந்திநி। ப்ரஸதீ ேதவேதேவஸ। ௭௫।௰௩௯
நமஸ் ேத விஸ்வபாவந। நாஹம் த்வாம் உதேரேணஸ। ௭௫।௰௪
ேவாடும் ஸŠயாமி ேகஸவ। யஸ்மிந் ப்ரதிஷ்டிதம் விஸ்வம்।
௭௫।௰௪

ேயா விஸ்வம் ஸ்வயம் ஈஸ்வர। தத் அஹம் ேநாதேரண த்வாம்।
௭௫।௰௪௧
ேவாடும் ஸŠயாமி துர்தரம்। ஸத்யம் ஆத்த மஹாபாேக। ௭௫।௰௪௧
மயி ஸர்வம் இதம் ஜகத்। ப்ரதிஷ்டிதம் ந மாம் ஸக்தா। ௭௫।௰௪௨
ேவாடும் ேஸந்த்ரா திெவௗகஸ:। கிந்த்வ் அஹம் ஸகலாம்ல் ேலாகாந்।
௭௫।௰௪௨
ஸேதவாஸுரமாநுஷாந்। ஜங்கமாஜங்கமம் ஸர்வம்। ௭௫।௰௪௩
த்வாம் ச ேதவி ஸகாஸ்யபாம்। தாரயிஷ்யாமி பத்ரம் ேத। ௭௫।௰௪௩
தவ கர்பஸேயா அதிேத। ந ேத க்லாநிர் ந ேத ேகேதா। ௭௫।௰௪௩
கர்பஸ்ேத பவிதா மயி। தாக்ஷாயணி ப்ரஸாதம் ேத। ௭௫।௰௪௪
கேராம்ய் அந்ைய: ஸுதுர்லபம்। கர்பஸ்ேத மயி புத்ராணாம்। ௭௫।௰௪௪
தவ ேயா அரிர் பவிஷ்யதி। ேதஜஸஸ் தஸ்ய ஹாநிம் ச। ௭௫।௰௪௫
கரிஷ்ேய மா வ்யதாம் க்ருதா:। ஏவம் உக்த்வா தத: ஸத்ேயா।
௭௫।௰௪௫
கேதா அந்தர்தாநம் ஈஸ்வர:। ஸாபி காேலந தம் கர்பம்। ௭௫।௰௪௬
அவாப குருஸத்தம। கர்பஸ்திேத தத: க்ருஷ்ேண। ௭௫।௰௪௬
சசால ஸகலா க்ஷிதி:। சகம்பிேர மஹாைஸலா। ௭௫।௰௪௭
ஜக்மு: ேக்ஷாபம் அதாப்தய:। யேதா யேதா அதிதிர் யாந்தீ। ௭௫।௰௪௭
ததாதி லலிதம் பதம்। ததஸ் தத: க்ஷிதி: ேகதாந்। ௭௫।௰௪௮
நநாம வஸுதாதிப। ைதத்யாநாம் அபி ஸர்ேவஷாம்। ௭௫।௰௪௮
கர்பஸ்ேத மதுஸூதேந। பபூவ ேதஜேஸா ஹாநிர்। ௭௫।௰௪௯
யேதாக்தம் பரேமஷ்டிநா। நிஸ்ேதஜேஸா அஸுராந் த்ருஷ்ட்வா।
௭௫।௰௪௯

ஸமஸ்தாந் அஸுேரஸ்வர:। ப்ரஹ்ராதம் அத பப்ரச்ச। ௭௬।௰௰௧
பலிர் ஆத்மபிதாமஹம்। தாத நிஸ்ேதஜேஸா ைதத்யா। ௭௬।௰௰௧
நிர்தக்தா இவ வஹ்நிநா। கிம் ஏேத ஸஹைஸவாத்ய। ௭௬।௰௰௨
ப்ரஹ்மதண்டஹதா இவ। துரிஷ்டம் கிம் நு ைதத்யாநாம்। ௭௬।௰௰௨
கிம் க்ருத்யா ைவரிநிர்மிதா। நாஸாையஷாம் ஸமுத்பூதா। ௭௬।௰௰௩
ேயந நிஸ்ேதஜேஸா அஸுரா:। இத்ய் ஆஸுரவரஸ் ேதந। ௭௬।௰௰௩
ப்ருஷ்ட: ெபௗத்ேரண பார்திவ। சிரம் த்யாத்வா ஜகாேததம்। ௭௬।௰௰௪
அஸுேரந்த்ரம் ததா பலிம்। சலந்தி கிரேயா பூமிர்। ௭௬।௰௰௪
ஜஹாதி ஸஹஜாம் த்ருதிம்। ஸத்ய: ஸமுத்ரா: க்ஷுபிதா। ௭௬।௰௰௫
ைதத்யா நிஸ்ேதஜஸ: க்ருதா:। ஸூர்யாதேயா யதா பூர்வம்।
௭௬।௰௰௫
ததா கச்சந்தி ந க்ரஹா:। ேதவாநாம் ச பரா லŠமீ:। ௭௬।௰௰௬
காரைணர் அநுமீயேத। மஹத் ஏதந் மஹாபாேஹா। ௭௬।௰௰௬
காரணம் தாநேவஸ்வர। ந ஹ்ய் அல்பம் இதி மந்தவ்யம்। ௭௬।௰௰௭
த்வயா கார்யம் ஸுரார்தந। இத்ய் உக்த்வா தாநவபதிம்। ௭௬।௰௰௭
ப்ரஹ்ராத: ேஸா அஸுேராத்தம:। அத்யந்தபக்ேதா ேதேவஸம்।
௭௬।௰௰௮
ஜகாம மநஸா ஹரிம்। ஸ த்யாநபதகம் க்ருத்வா। ௭௬।௰௰௮
ப்ரஹ்ராத: ஸ்வம் மேநா அஸுர:। விசாரயாம் ஆஸ தேதா। ௭௬।௰௰௯
யேதா ேதேவா ஜநார்தந:। ஸ ததர்ேஸாதேர அதித்யா:। ௭௬।௰௰௯
ப்ரஹ்ராேதா வாமநாக்ருதிம்। அந்த:ஸ்தாந் பிப்ரதம் ஸப்த। ௭௬।௰௧
ேலாகாந் ஆதிப்ரஜாபதிம்। தத் அந்தஸ் ச வஸூந் ருத்ராந்। ௭௬।௰௧

அஸ்விெநௗ மருதஸ் ததா। ஸாத்யாந் விஸ்ேவ ததாதித்யாந்।
௭௬।௰௧௧
கந்தர்ேவாரகராக்ஷஸாந்। விேராசநம் ஸதநயம்। ௭௬।௰௧௧
பலிம் சாஸுரநாயகம்। ஜம்பம் குஜம்பம் நரகம்। ௭௬।௰௧௨
பாணம் அந்யாம்ஸ் ததாஸுராந்। ஆத்மாநம் உர்வககநம் ீ । ௭௬।௰௧௨
வாயும் அம்ேபா ஹுதாஸநம்। ஸமுத்ராத்ரித்ருமஸரித் । ௭௬।௰௧௩
ஸராம்ஸி பஸேவா ம்ருகாந்। வேயாமநுஷ்யாந் அகிலாம்ஸ்।
௭௬।௰௧௩
தைதவ ச ஸரீஸ்ருபாந்। ஸமஸ்தேலாகஸ்ரஷ்டாரம்। ௭௬।௰௧௪
ப்ரஹ்மாணம் பவம் ஏவ ச। க்ரஹநக்ஷத்ரதாராஸ் ச। ௭௬।௰௧௪
தக்ஷாத்யாம்ஸ் ச ப்ரஜாபதீந்। ஸம்பஸ்யந் விஸ்மயாவிஷ்ட:।
௭௬।௰௧௫
ப்ரக்ருதிஸ்த: க்ஷணாத் புந:। ப்ரஹ்ராத: ப்ராஹ ைதத்ேயந்த்ரம்।
௭௬।௰௧௫
பலிம் ைவேராசநிம் ததா। வத்ஸ ஜ்ஞாதம் மயா ஸர்வம்। ௭௬।௰௧௬
யதர்தம் பவதாம் இயம்। ேதஜேஸா ஹாநிர் உத்பந்நா। ௭௬।௰௧௭
தச் ச்ருணு த்வம் அேஸஷத:। ேதவேதேவா ஜகத்ேயாநிர்। ௭௬।௰௧௭
அேயாநிர் ஜகதாதிக்ருத்। அநாதிர் ஆதிர் விஸ்வஸ்ய। ௭௬।௰௧௮
வேரண்ேயா வரேதா ஹரி:। பராபராணாம் பரம:। ௭௬।௰௧௮
பர: பரவதாம் அபி। ப்ரபு: ப்ரமாணம் மாநாநாம்। ௭௬।௰௧௯
ஸப்தேலாககுேரார் குரு:। ஸ்திதிம் கர்தும் ஜகந்நாத:। ௭௬।௰௧௯
ேஸா அதித்யா கர்பதாம் கத:। ப்ரபு: ப்ரபூணாம் பரம: பராணாம்।
௰௭௬।௧௨௩

அநாதிமத்ேயா பகவாந் அநந்த:। த்ைரேலாக்யம் அம்ேஸந ஸநாதம் ஏஷ।
௭௬।௰௨
கர்தும் மஹாத்மாதிதிேஜா அவதீர்ண:। ந யஸ்ய ருத்ேரா ந ச பத்மேயாநிர்।
௭௬।௰௨
ேநந்த்ேரா ந ஸூர்ேயந்துமரீசிமிஸ்ரா:। ஜாநந்தி ைதத்யாதிப யத் ஸ்வரூபம்।
௭௬।௰௨௧
ஸ வாஸுேதவ: கலயாவதீர்ண:। ேயா அெஸௗ கலாம்ேஸந ந்ருஸிம்ஹரூப।ீ
௭௬।௰௨௧
ஜகாந பூர்வம் பிதரம் அேஸஷ:। ய: ஸர்வேயாகீஸமேநாநிவாஸ:।
௭௬।௰௨௨
ஸ வாஸுேதவ: கலயாவதீர்ண:। யம் அக்ஷரம் ேவதவிேதா விதித்வா।
௭௬।௰௨௨
விஸந்தி தம் ஜ்ஞாநவிதூதபாபா:। யஸ்மிந் ப்ரவிஷ்டா ந புநர் பவந்தி।
௭௬।௰௨௩
தம் வாஸுேதவம் ப்ரணமாமி ேதவம்। பூதாந்ய் அேஸஷாணி யேதா பவந்தி।
௭௬।௰௨௩
யேதார்மயஸ் ேதாயநிேதர் அஜஸ்ரம்। லயம் ச யஸ்மிந் ப்ரலேய ப்ரயாந்தி।
௭௬।௰௨௪
தம் வாஸுேதவம் ப்ரணமாம்ய் அசிந்த்யம்। ந யஸ்ய ரூபம் ந பலம்
ப்ரபாேவா। ௭௬।௰௨௪
ந ச ஸ்வபாவ: பரமஸ்ய பும்ஸ:। விஜ்ஞாயேத ஸர்வபிதாமஹாத்ையஸ்।
௭௬।௰௨௫
தம் வாஸுேதவம் ப்ரணமாம்ய் அசிந்த்யம்। ரூபஸ்ய சக்ஷுர் க்ரஹேண த்வக்
ஏஷா। ௭௬।௰௨௫

ஸ்பர்ஸக்ரஹீத்ரீ ரஸநா ரஸஸ்ய। ஸ்ேராத்ரம் ச ஸப்தக்ரஹேண நராணாம்।
௭௬।௰௨௬
க்ராணம் ச கந்தக்ரஹேண நியுக்தம்। ந க்ராணசக்ஷு:ஸ்ரவணாதிபிர் ய:।
௭௬।௰௨௬
ஸர்ேவஸ்வேரா ேவதிதும் அவ்யயாத்மா। ஸக்யஸ் தம் ஈட்யம் மநைஸவ
ேதவம்। ௭௬।௰௨௭
க்ராஹ்யம் நேதா அஹம் ஹரிம் ஈஸிதாரம்।
ேயைநகதம்ஷ்ட்ராக்ரஸமுத்த்ருேதயம்। ௭௬।௰௨௭
தராசலா தாரயதீஹ ஸர்வம்। க்ரஸ்த்வா ஸ ேஸேத ஸகலம் ஜகத் யஸ்।
௭௬।௰௨௮
தம் ஈட்யம் ஈஸம் ப்ரணேதா அஸ்மி விஷ்ணும்। அம்ஸாவதீர்ேணந ச ேயந
கர்ேப। ௭௬।௰௨௮
ஹ்ருதாநி ேதஜாம்ஸி மஹாஸுராணாம்। நமாமி தம் ேதவம் அநந்தம் ஈஸம்।
௭௬।௰௨௯
அேஸஷஸம்ஸாரதேரா: குடாரம்। ேதேவா ஜகத்ேயாநிர் அயம் மஹாத்மா।
௭௬।௰௨௯
ஸ ேஷாடஸாம்ேஸந மஹாஸுேரந்த்ர। ஸுேரந்த்ரமாதுர் ஜடரம்
ப்ரவிஷ்ேடா। ௭௬।௰௩
ஹ்ருதாநி வஸ் ேதந பேல வபூம்ஷி। தாத ேகா அயம் ஹரிர் நாம।
௭௬।௰௩
யேதா ந பயம் ஆகதம்। ஸந்தி ேம ஸதேஸா ைதத்யா। ௭௬।௰௩௧
வாஸுேதவபலாதிகா:। விப்ரசித்தி: ஸிபி: ஸங்குர்। ௭௬।௰௩௧
அய:ஸங்குஸ் தைதவ ச। அய:ஸிரா அஸ்வஸிரா। ௭௬।௰௩௨
பங்ககாேரா மஹாஹநு:। ப்ரதாபீ ப்ரகஸ: ஸம்பு:। ௭௬।௰௩௨
குர்குராக்ஷஸ் ச துர்ஜய:। ஏேத சாந்ேய ச ேம ஸந்தி। ௭௬।௰௩௩

ைதேதயா தாநவாஸ் ததா। மஹாபலா மஹாவர்யா ீ । ௭௬।௰௩௩
பூபாரதரணக்ஷமா:। ேயஷாம் ஏைககஸ: க்ருஷ்ேணா। ௭௬।௰௩௪
ந வர்யார்ேதந ீ ஸம்மித:। ெபௗத்ரஸ்ையதத் வச: ஸ்ருத்வா। ௭௬।௰௩௪
ப்ரஹ்ராேதா ைதத்யபுங்கவ:। திக் திக் இத்ய் ஆஹ ஸ பலிம்।
௭௬।௰௩௫
ைவகுண்டாேக்ஷபவாதிநம்। விநாஸம் உபயாஸ்யந்தி। ௭௬।௰௩௫
மந்ேய ைதேதயதாநவா:। ேயஷாம் த்வம் ஈத்ருேஸா ராஜா। ௭௬।௰௩௬
துர்புத்திர் அவிேவகவாந்। ேதவேதவம் மஹாபாகம்। ௭௬।௰௩௬
வாஸுேதவம் அஜம் விபும்। த்வாம் க்ருேத பாபஸம்கல்பம்। ௭௬।௰௩௭
ேகா அந்ய ஏவம் வதிஷ்யதி। ய ஏேத பவதா ப்ேராக்தா:। ௭௬।௰௩௭
ஸமஸ்தா ைதத்யதாநவா:। ஸப்ரஹ்மகாஸ் ததா ேதவா:। ௭௬।௰௩௮
ஸ்தாவராந்தாஸ் ச பூதய:। த்வம் சாஹம் ச ஜகச் ேசதம்। ௭௬।௰௩௮
ஸாத்ரித்ருமநதீநதம்। ஸமுத்ரத்வபேலாகாஸ் ீ ச। ௭௬।௰௩௯
யச் ேசங்கம் யச் ச ேநங்கதி। யஸ்யாதிவந்த்யவந்த்யஸ்ய। ௭௬।௰௩௯
வ்யாபிந: பரமாத்மந:। ஏகாம்ஸாம்ஸகலாஜந்ம। ௭௬।௰௪
கஸ் தம் ஏவம் ப்ரவŠயதி। க்ருேத விநாஸாபிமுகம்। ௭௬।௰௪
த்வாம் ஏகம் அவிேவகிநம்। துர்புத்திம் அஜிதாத்மாநம்। ௭௬।௰௪௧
வ்ருத்தாநாம் ஸாஸநாதிகம்। ேஸாச்ேயா அஹம் யஸ்ய ைவ ேகேஹ।
௭௬।௰௪௧
ஜாதஸ் தவ பிதாதம:। யஸ்ய த்வம் ஈத்ருஸ: புத்ேரா। ௭௬।௰௪௨
ேதவேதவாவமந்யக:। திஷ்டத்வ் அேநகஸம்ஸார । ௭௬।௰௪௨
ஸம்ஹ்ருதாகவிநாஸநீ। க்ருஷ்ேண பக்திர் அஹம் தாவத்। ௭௬।௰௪௩
அேவŠேயா பவேதா ந கிம்। ந ேம ப்ரியதர: க்ருஷ்ணாத்। ௭௬।௰௪௩

அபி ேதேஹா அயம் ஆத்மந:। இதி ஜாநாத்ய் அயம் ேலாேகா।
௭௬।௰௪௪
பவாம்ஸ் ச திதிஜாதம:। ஜாநந்ந் அபி ப்ரியதரம்। ௭௬।௰௪௪
ப்ராேணப்ேயா அபி ஹரிம் மம। நிந்தாம் கேராஷி ச கதம்। ௭௬।௰௪௫
அகுர்வந் ெகௗரவம் மம। விேராசநஸ் தவ குருர்। ௭௬।௰௪௫
குருஸ் தஸ்யாப்ய் அஹம் பேல। மமாபி ஸர்வஜகதாம்। ௭௬।௰௪௬
குருர் நாராயேணா குரு:। நிந்தாம் கேராஷி தஸ்மிம்ஸ் த்வம்।
௭௬।௰௪௬
க்ருஷ்ேண குருகுேரார் குெரௗ। யஸ்மாத் தஸ்மாத் இைஹஸ்வர்யாத்।
௭௬।௰௪௭
அசிராத் ப்ரம்ஸம் ஏஷ்யஸி। மா ேதேவா மா ஜகந்நாேதா। ௭௬।௰௪௭
பேல மாெஸௗ ஜநார்தந:। பவத்வ் அஹம் அேவŠயஸ் ேத।
௭௬।௰௪௮
ப்ரீதிமாந் அத்ர ேம குரு:। ஏதாவந்மாத்ரம் அப்ய் அத்ர। ௭௬।௰௪௮
நிந்ததா ஜகேதா குரும்। நாேபக்ஷிதா வயம் யஸ்மாத்। ௭௬।௰௪௯
தஸ்மாச் சாபம் ததாமி ேத। யதா ேம ஸிரஸஸ் ேசதாத்। ௭௬।௰௪௯
இதம் குருதரம் பேல। த்வேயாக்தம் அச்யுதாேக்ஷபி। ௭௬।௰௫
ராஜ்யப்ரஷ்டஸ் ததா பத। யதா ந க்ருஷ்ணாத் அபரம்। ௭௬।௰௫
பரித்ராணம் பவார்ணேவ। ததாசிேரண பஸ்ேயயம்। ௭௬।௰௫௧
பவந்தம் ராஜ்யவிச்யுதம்। இதி ைதத்யபதி: ஸ்ருத்வா। ௭௬।௰௫௧
குேரார் வசநம் அப்ரியம்। ப்ரஸாதயாம் ஆஸ குரும்। ௭௬।௰௫௨
ப்ரணிபத்ய புண: புந:। ப்ரஸதீ தாத மா ேகாபம்। ௭௬।௰௫௨
குரு ேமாஹஹேத மயி। பலாவேலபமத்ேதந। ௭௬।௰௫௩

மையதத் வாக்யம் ஈரிதம்। ேமாேஹாபஹதவிஜ்ஞாந:। ௭௬।௰௫௩
பாேபா அஹம் திதிேஜாத்தம। யச் சப்ேதா அஸ்மி துராசாரஸ்।
௭௬।௰௫௪
தத் ஸாது பவதா க்ருதம்। ராஜ்யப்ரம்ஸம் வஸுப்ரம்ஸம்। ௭௬।௰௫௪
ஸம்ப்ராப்ஸ்யாமீதி ந த்வ் அஹம்। விஷண்ேணா அஸ்மி யதா தாத।
௭௬।௰௫௫
தைவவாவிநேய க்ருேத। த்ைரேலாக்யராஜ்யம் ஐஸ்வர்யம்। ௭௬।௰௫௫
அந்யத் வா நாதிதுர்லபம்। ஸம்ஸாேர துர்லபாஸ் தாத। ௭௬।௰௫௬
குரேவா ேய பவத்விதா:। தத் ப்ரஸதீ ந ேம ேகாபம்। ௭௬।௰௫௬
கர்தும் அர்ஹஸி ைதத்யப। த்வத்ேகாபேஹதுதுஷ்ேடா அஹம்।
௭௬।௰௫௭
பரிதப்ேய ந ஸாபத:। வத்ஸ ேகாேபந ேமாேஹா ேம। ௭௬।௰௫௭
ஜநிதஸ் ேதந ேத மயா। ஸாேபா தத்ேதா விேவகஸ் ச। ௭௬।௰௫௮
ேமாேஹநாபஹ்ருேதா மம। யதி ேமாேஹந ேம ஜ்ஞாநம்। ௭௬।௰௫௮
நாக்ஷிப்தம் ஸ்யாந் மஹாஸுர। தத் கதம் ஸர்வகம் ஜ்ஞாநந்।
௭௬।௰௫௯
ஹரிம் கம்சிச் சாபாம்ய் அஹம்। ேயா அயம் ஸாேபா மயா தத்ேதா।
௭௬।௰௫௯
பவேதா அஸுரபுங்கவ। பாவ்யம் ஏேதந நூநம் ேத। ௭௬।௰௬
தஸ்மாத் த்வம் மா விஷீததா:। அத்யப்ரப்ருதி ேதேவேஸ। ௭௬।௰௬
பகவத்ய் அச்யுேத ஹெரௗ। பேவதா பக்திமாந் ஈஸ:। ௭௬।௰௬௧
ஸ ேத த்ராதா பவிஷ்யதி। ஸாபம் ப்ராப்ய ச மாம் வரீ। ௭௬।௰௬௧
ஸம்ஸ்மேரதா: ஸ்ம்ருதஸ் த்வயா। ததா ததா யதிஷ்யாமி। ௭௬।௰௬௨

ஸ்ேரயஸா ேயாŠயேத யதா। ஏவம் உக்த்வா ஸ ைதத்ேயந்த்ேரா।
௭௬।௰௬௨
விரராம மஹாமதி:। அஜாயத ஸ ேகாவிந்ேதா। ௭௬।௰௬௩
பகவாந் வாமநாக்ருதி:। அவதீர்ேண ஜகந்நாேத। ௭௬।௰௬௩
தஸ்மிந் ஸர்வம் அஸஸமத் ீ । யத் ஆஸுரம் அபூத் து:கம்। ௭௬।௰௬௪
ேதவாநாம் அதிேதஸ் ததா। வவுர் வாதா: ஸுகஸ்பர்ஸா। ௭௬।௰௬௪
நீரஜஸ்கம் அபூந் நப:। தர்ேம ச ஸர்வபூதாநாம்। ௭௬।௰௬௫
ததா மதிர் அஜாயத। ேநாத்ேவகஸ் சாப்ய் அபூத் ேதேஹ। ௭௬।௰௬௫
மநுஜாநாம் ஜேநஸ்வர। ததா ஹி ஸர்வபூதாநாம்। ௭௬।௰௬௬
பூம்யம்பரதிெவௗகஸாம்। தம் ஜாதமாத்ரம் பகவாந்। ௭௬।௰௬௬
ப்ரஹ்மா ேலாகபிதாமஹ:। ஜாதகர்மாதிகா: க்ருத்வா। ௭௬।௰௬௭
க்ரியாஸ் துஷ்டாவ பார்திவ। ஜயாத்ேயஸ ஜயாேஜய। ௭௬।௰௬௭
ஜய ஸர்வாத்மகாத்மக। ஜய ஜந்மஜராேபத। ௭௬।௰௬௮
ஜயாநந்த ஜயாச்யுத। ஜயாஜித ஜயாேஸஷ। ௭௬।௰௬௮
ஜயாவ்யக்த ஸ்திேத ஜய। பரமார்தார்த ஸர்வஜ்ஞ। ௭௬।௰௬௯
ஜ்ஞாந ஜ்ேஞயாத்மநி:ஸ்ருத। ஜயாேஸஷஜகத்ஸாக்ஷிஞ்। ௭௬।௰௬௯
ஜய கர்தர் ஜகத்குேரா:। ஜகேதா ஜகதந்ேத அந்த। ௭௬।௰௭
ஸ்திெதௗ பாலயிதா ஜய। ஜயாகில ஜயாேஸஷ। ௭௬।௰௭
ஜயாகிலஹ்ருதி ஸ்தித। ஜயாதிமத்யாந்தமய। ௭௬।௰௭௧
ஸர்வஜ்ஞாநமேயாத்தம। முமுக்ஷுபிர் அநிர்ேதஸ்ய। ௭௬।௰௭௧
ஸ்வயம்த்ருஷ்ட ஜேயஸ்வர। ேயாகிபிர் முக்திபலத। ௭௬।௰௭௨
தமாதிகுணபூஷைண:। ஜயாதிஸூŠம துர்ஜ்ேஞய। ௭௬।௰௭௨

ஜகத் ஸ்தூல ஜகந்மய। ஜய ஸ்தூலாதிஸூŠம த்வம்। ௭௬।௰௭௩
ஜயாதீந்த்ரிய ேஸந்த்ரிய। ஜய ஸ்வமாயாேயாகஸ்த। ௭௬।௰௭௩
ேஸஷேபாகஸயாக்ஷர। ஜையகதம்ஷ்ட்ராப்ராந்தாந்த। ௭௬।௰௭௪
ஸமுத்த்ருதவஸும்தர। ந்ருேகஸரிஞ் ஜயாராதி । ௭௬।௰௭௪
வக்ஷ:ஸ்தலவிதாரண। ஸாம்ப்ரதம் ஜய விஸ்வாத்மந்। ௭௬।௰௭௫
மாயாவாமந ேகஸவ। நிஜமாயாபடச்சந்ந। ௭௬।௰௭௫
ஜகத்தாதர் ஜநார்தந। ஜயாசிந்த்ய ஜயாேநக । ௭௬।௰௭௬
ஸ்வரூைபகவித ப்ரேபா। வர்தஸ்வ வர்திதாேநக । ௭௬।௰௭௬
விகாரப்ரக்ருேத ஹேர। த்வய்ய் ஏஷா ஜகதாம் ஈஸ। ௭௬।௰௭௭
ஸம்ஸ்திதா தர்மபத்ததி:। ந த்வாம் அஹம் ந ேசஸாேநா। ௭௬।௰௭௭
ேநந்த்ராத்யாஸ் த்ரிதஸா ஹேர। ஜ்ஞாதும் ஈஸா ந முநய:। ௭௬।௰௭௮
ஸநகாத்யா ந ேயாகிந:। த்வந்மாயாபடஸம்வேதீ । ௭௬।௰௭௮
ஜகத்ய் அத்ர ஜகத்பேத। கஸ் த்வாம் ேவத்ஸ்யதி ஸர்ேவஸம்।
௭௬।௰௭௯
த்வத்ப்ரஸாதம் விநா நர:। த்வம் ஏவாராதிேதா யஸ்ய। ௭௬।௰௭௯
ப்ரஸாதஸுமுக: ப்ரேபா। ஸ ஏவ ேகவலம் ேதவ। ௭௬।௰௮
ேவத்தி த்வாம் ேநதேரா ஜந:। தத் ஈஸ்வேரஸ்வேரஸாந। ௭௬।௰௮
விேபா வர்தஸ்வ பாவந। ப்ரபாவாயாஸ்ய விஸ்வஸ்ய। ௭௬।௰௮௧
விஸ்வாத்மந் ப்ருதுேலாசந। ஏவம் ஸ்துேதா ஹ்ருஷீேகஸ:। ௭௬।௰௮௧
ஸ ததா வாமநாக்ருதி:। ப்ரஹஸ்ய பாவகம்பரம்ீ । ௭௬।௰௮௨
உவாசாப்ஜஸமுத்பவம்। ஸ்துேதா அஹம் பவதா பூர்வம்। ௭௬।௰௮௨
இந்த்ராத்ைய: கஸ்யேபந ச। மயா ச வ: ப்ரதிஜ்ஞாதம்। ௭௬।௰௮௩
இந்த்ரஸ்ய புவநத்ரயம்। பூயஸ் சாஹம் ஸ்துேதா அதித்யா। ௭௬।௰௮௩

தஸ்யாஸ் சாபி ப்ரதிஸ்ருதம்। யதா ஸக்ராய தாஸ்யாமி। ௭௬।௰௮௪
த்ைரேலாக்யம் ஹதகண்டகம்। ேஸா அஹம் ததா கரிஷ்யாமி।
௭௬।௰௮௪
யேதந்த்ேரா ஜகத: பதி:। பவிஷ்யதி ஸஹஸ்ராக்ஷ:। ௭௬।௰௮௫
ஸத்யம் ஏதத் ப்ரவமி ீ ேத। தத: க்ருஷ்ணாஜிநம் ப்ரஹ்மா। ௭௬।௰௮௫
ஹ்ருஷீேகஸாய தத்தவாந்। யஜ்ேஞாபவதம்ீ பகவாந்। ௭௬।௰௮௬
தெதௗ தஸ்ைம ப்ருஹஸ்பதி:। ஆஷாடம் அததத் தண்டம்। ௭௬।௰௮௬
மரீசிர் ப்ரஹ்மண: ஸுத:। கமண்டலும் வஸிஷ்டஸ் ச। ௭௬।௰௮௭
ெகௗஸ்யம் ேவதம் அதாங்கிரா:। அக்ஷஸூத்ரம் ச புலஹ:। ௭௬।௰௮௭
புலஸ்த்ய: ஸிதவாஸஸீ। உபதஸ்துஸ் ச தம் ேவதா:। ௭௬।௰௮௭
ப்ரணவஸ்வரபூஷணா:। ஸாஸ்த்ராண்ய் அேஸஷாணி ததா।
௭௬।௰௮௮
ஸாம்க்யேயாேகாக்தயஸ் ச யா:। ஸ வாமேநா ஜடீ தண்டீ। ௭௬।௰௮௮
சத்த்ரீ த்ருதகமண்டலு:। ஸர்வேதவமேயா பூப। ௭௬।௰௮௯
பேலர் அத்வரம் அப்யயாத்। யத்ர யத்ர பதம் பூப। ௭௬।௰௮௯
பூபாேக வாமேநா தெதௗ। ததாதி பூமிர் விவரம்। ௭௬।௰௯
தத்ர தத்ராதிபடிதா ீ । ஸ வாமேநா ஜடகதிர்। ௭௬।௰௯
ம்ருது கச்சந் ஸபர்வதாம்। ஸாப்தித்வபவத ீ ீம் ஸர்வாம்। ௭௬।௰௯௧
சாலயாம் ஆஸ ேமதிநீம்। தத: ஸம்ஸயம் ஆபந்நா:। ௭௬।௰௯௧
ஸர்ேவ ைதேதயதாநவா:। ஸபர்வதவநாம் உர்வம்ீ । ௰௭௬।௧௨௪
த்ருஷ்ட்வா ஸம்க்ஷுபிதாம் பலி:। பப்ரச்ேசாஸநஸம் ஸுக்ரம்।
௭௭।௰௰௧
ப்ரணிபத்ய க்ருதாஞ்ஜலி:। ஆசார்ய ேக்ஷாபம் ஆயாதி। ௭௭।௰௰௧

ஸாப்திபூப்ருத்தரா மஹீ। கஸ்மாச் ச நாஸுராந் பாகாந்। ௭௭।௰௰௨
ப்ரதிக்ருஹ்ணந்தி வஹ்நய:। இதி ப்ருஷ்ேடா அத பலிநா। ௭௭।௰௰௨
காவ்ேயா ேவதவிதாம் வர:। உவாச ைதத்யாதிபதிம்। ௭௭।௰௰௩
சிரம் த்யாத்வா மஹாமதி:। அவதீர்ேணா ஜகத்ேயாநி:। ௭௭।௰௰௩
கஸ்யபஸ்ய க்ருேஹ ஹரி:। வாமேநேநஹ ரூேபண। ௭௭।௰௰௪
பரமாத்மா ஸநாதந:। ஸ நூநம் யஜ்ஞம் ஆயாதி। ௭௭।௰௰௪
தவ தாநவபுங்கவ। தத்பதந்யாஸவிேக்ஷாபாத்। ௭௭।௰௰௫
இயம் ப்ரசலிதா மஹீ। கம்பந்ேத கிரயஸ் சாமீ। ௭௭।௰௰௫
க்ஷுபிதா மகராலயா:। ைநநம் பூதபதிம் பூமி:। ௭௭।௰௰௬
ஸமர்தா ேவாடும் ஈஸ்வரம்। ஸேதவாஸுரகந்தர்வ । ௭௭।௰௰௬
யக்ஷராக்ஷஸபந்நகா। அேநைநவ த்ருதா பூமிர்। ௭௭।௰௰௭
ஆேபா அக்நி: பவேநா நப:। தாரயத்ய் அகிலாந் ேதவ । ௭௭।௰௰௭
மநுஷ்யாதீந் மஹாஸுர। இயம் அஸ்ய ஜகத்தாதுர்। ௭௭।௰௰௭
மாயா க்ருஷ்ணஸ்ய கஹ்வரீ। தார்யதாரகபாேவந। ௭௭।௰௰௮
யயா ஸம்பிண்டிதம் ஜகத்। தத்ஸம்நிதாநாத் அஸுரா। ௭௭।௰௰௮
ந பாகார்ஹா: ஸுரத்விஷ:। புஞ்ஜேத சாஸுராந் பாகாந்। ௭௭।௰௰௯
அமீேத ந தவாக்நய:। ஸுக்ரஸ்ய வசநம் ஸ்ருத்வா। ௭௭।௰௰௯
ஹ்ருஷ்டேராமாப்ரவத்ீ பலி:। தந்ேயா அஹம் க்ருதபுண்யஸ் ச।
௰௭௭।௧௨௫
யந் ேம யஜ்ஞபதி: ஸ்வயம்। யஜ்ஞம் அப்யாகேதா ப்ரஹ்மந்। ௭௭।௰௧
மத்த: ேகா அந்ேயா அதிக: புமாந்। யம் ேயாகிந: ஸேதாத்யுக்தா:।
௭௭।௰௧

பரமாத்மாநம் அவ்யயம்। த்ரஷ்டும் இச்சந்தி ேதேவா அெஸௗ।
௭௭।௰௧௧
மதத்வரம் உைபஷ்யதி। ேஹாதா பாகப்ரேதா யஸ்ய। ௭௭।௰௧௧
யம் உத்காதா ச காயதி। தம் அத்வேரஸ்வரம் விஷ்ணும்। ௭௭।௰௧௨
மத்த: ேகா அந்ய உைபஷ்யதி। ஸர்ேவஸ்வேரஸ்வேர விஷ்ெணௗ।
௭௭।௰௧௨
மமாத்வரம் உபாகேத। யந் மயா சார்ய கர்தவ்யம்। ௭௭।௰௧௩
தந் மமாேதஷ்டும் அர்ஹஸி। யஜ்ஞபாகபுேஜா ேதவா। ௭௭।௰௧௩
ேவதப்ராமாண்யேதா அஸுர। த்வயா து தாநவா ைதத்யா। ௭௭।௰௧௪
யஜ்ஞபாகபுஜ: க்ருதா:। அயம் ச ேதவ: ஸத்த்வஸ்த:। ௭௭।௰௧௪
கேராதி ஸ்திதிபாலநம்। நிஸ்ருஷ்ேடஸ் சாயம் அந்ேத ச। ௭௭।௰௧௫
ஸ்வயம் அத்தி ப்ரஜா: ப்ரபு:। த்வயாநுபந்தீபவிதா। ௭௭।௰௧௫
நூநம் விஷ்ணு: ஸ்திெதௗ ஸ்தித:। விதித்ைவதந் மஹாபாக।
௭௭।௰௧௬
குரு யத் ேத மேநாகதம்। த்வயாஸ்ய ைதத்யாதிபேத। ௭௭।௰௧௬
ஸ்வல்பேக அபி ஹி வஸ்துநி। ப்ரதிஜ்ஞா ைநவ ேவாடவ்யா।
௭௭।௰௧௭
வாச்யம் ஸாம ததாபலம்। க்ருதக்ருத்யஸ்ய ேதவஸ்ய। ௭௭।௰௧௭
ேதவார்தம் ைசவ குர்வத:। நாலம் தாதும் தநம் ேதேவத்ய்। ௰௭௭।௧௨௬
ஏவம் வாச்யம் து யாசத:। க்ருஷ்ணஸ்ய ேதவபூத்யர்தம்। ௭௭।௰௧௮
ப்ரவ்ருத்தஸ்ய மஹாஸுர। ப்ரஹ்மந் கதம் அஹம் ப்ரூயாம்।
௭௭।௰௧௮
அந்ேயநாபி ஹி யாசித:। நாஸ்தீதி கிமு ேதேவந। ௭௭।௰௧௯

ஸம்ஸாராெகௗகஹாரிணா। வ்ரேதாபவாைஸர் விவிைதர்। ௭௭।௰௧௯
ய: ப்ரதிக்ராஹ்யேத ஹரி:। ஸ ேசத் வŠயதி ேதஹீதி। ௭௭।௰௨
ேகாவிந்த: கிம் அேதா அதிகம்। யதர்தம் உபஹாராட்யா। ௭௭।௰௨
தமெஸௗசகுணாந்விைத:। யஜ்ஞா: க்ரியந்ேத ேதேவஸ:। ௭௭।௰௨௧
ஸ மாம் ேதஹீதி வŠயதி। தத் ஸாது ஸுக்ருதம் கர்ம। ௭௭।௰௨௧
தப: ஸுசரிதம் ச ந:। யந் மயா தத்தம் ஈேஸஸ:। ௭௭।௰௨௨
ஸ்வயம் ஆதாஸ்யேத ஹரி:। நாஸ்தீத்ய் அஹம் குேரா வŠேய।
௭௭।௰௨௨
தம் அப்ய் ஆகதம் ஈஸ்வரம்। யதி தத் வஞ்ச்யேத ப்ராப்ேத। ௭௭।௰௨௩
நூநம் அஸ்மத்வித: பைல:। யஜ்ேஞ அஸ்மிந் யதி யஜ்ேஞேஸா।
௭௭।௰௨௩
யாசேத மாம் ஜநார்தந:। நிஜமூர்தாநம் அப்ய் அத்ய। ௭௭।௰௨௪
தத் தாஸ்யாம்ய் அவிசாரிதம்। நாஸ்தீதி யந் மயா ேநாக்தம்। ௭௭।௰௨௪
அந்ேயஷாம் அபி யாசதாம்। வŠயாமி கதம் ஆயாேத। ௭௭।௰௨௫
தத் அநப்யஸ்தம் அச்யுேத। ஸ்லாக்ய ஏவ ஹி தீராணாம்। ௭௭।௰௨௫
தாநாத் ஆபத்ஸமாகம:। நாபாதாகாரி யத் தாநம்। ௭௭।௰௨௬
தத் அங்கமலவத் கதம்। மத்ராஜ்ேய நாஸுகீகஸ்சிந்। ௭௭।௰௨௬
ந தரித்ேரா ந சாதுர:। நாத்ருஷிேதா ந ேசாத்விக்ேநா। ௭௭।௰௨௭
ந ஸ்ரகாதிவிவர்ஜித:। ஹ்ருஷ்டதுஷ்ட: ஸுகந்தீச। ௭௭।௰௨௭
த்ருப்த: ஸர்வஸுகாந்வித:। ஜந: ஸர்ேவா மஹாபாக। ௭௭।௰௨௮
கிமுதாஹம் ஸதா ஸுகீ। ஏதத் விஸிஷ்டபாத்ேராத்தம்। ௭௭।௰௨௮
தாநபஜபலம் ீ மம। விதிதம் ப்ருகுஸார்தூல। ௭௭।௰௨௯
மையதத் த்வத்ப்ரஸாதத:। ஏதத் விஜாநேதா தாந । ௭௭।௰௨௯

பஜம்ீ பததி ேசத் குேரா। ஜநார்தேந மஹாபாத்ேர। ௭௭।௰௩
கிம் ந ப்ராப்தம் தேதா மயா। மத்ேதா தாநம் அவாப்ேயேஸா। ௭௭।௰௩
யதி புஷ்ணாதி ேதவதா:। உபேபாகாந்வயகுணம்। ௭௭।௰௩௧
தாநம் ஸ்லாக்யதரம் தத:। மத்ப்ரஸாதபேரா நூநம்। ௭௭।௰௩௧
யஜ்ேஞநாராதிேதா ஹரி:। ேதநாப்ேயதி ந ஸம்ேதேஹா। ௭௭।௰௩௨
தர்ஸநாத் உபகாரக்ருத்। அத ேகாேபந வாப்ேயதி। ௭௭।௰௩௨
ேதவபாேகாபேராதிநம்। மாம் நிஹந்தும் அேதா அபி ஸ்யாத்। ௭௭।௰௩௩
வத: ஸ்லாக்யதேரா அச்யுதாத்। யந்மயம் ஸர்வம் ஏேவதம்। ௭௭।௰௩௩
நாப்ராப்ய யஸ்ய வித்யேத। ஸ மாம் யாசிதும் அப்ேயதி। ௭௭।௰௩௪
நாநுக்ரஹம் க்ருேத ஹரி:। ய: ஸ்ருஜத்ய் ஆத்மபூ: ஸர்வம்। ௭௭।௰௩௪
ேசதைஸவாபஹந்தி ச। ஸ மாம் ஹந்தும் ஹ்ருஷீேகஸ:। ௭௭।௰௩௫
கதம் யத்நம் கரிஷ்யதி। ஏதத் விதித்வா து குேரா। ௭௭।௰௩௫
தாநவிக்நபேரண ேம। ைநவ பாவ்யம் ஜகந்நாேத। ௭௭।௰௩௬
ேகாவிந்ேத ஸமுபஸ்திேத। இத்ய் ஏவம் வததஸ் தஸ்ய। ௭௭।௰௩௬
ப்ராப்தஸ் தத்ர ஜகபதி:। ஸர்வேதவமேயா அசிந்த்ேயா। ௭௭।௰௩௭
மாயாவாமநரூபத்ருக்। தம் த்ருஷ்ட்வா யஜ்ஞவாடாந்த: । ௭௭।௰௩௭
ப்ரவிஷ்டம் அஸுரா: ப்ரபும்। ஜக்மு: ப்ரபாவத: ேக்ஷாபம்। ௭௭।௰௩௮
ேதஜஸா தஸ்ய நிஷ்ப்ரபா:। ேஜபுஸ் ச முநயஸ் தத்ர। ௭௭।௰௩௮
ேய ஸேமதா மஹாத்வேர। பலிஸ் ைசவாகிலம் ஜந்ம। ௭௭।௰௩௯
ேமேந ஸபலம் ஆத்மந:। தத: ஸம்ேக்ஷாபம் ஆபந்ேநா। ௭௭।௰௩௯
ந கஸ்சித் கிம்சித் உக்தவாந்। ப்ரத்ேயேகா ேதவேதேவஸம்। ௭௭।௰௪
பூஜயாம் ஆஸ ேசதஸா। அதாஸுரபதிம் ப்ரஹ்வம்। ௭௭।௰௪

த்ருஷ்ட்வா முநிவராம்ஸ் ச தாந்। ேதவேதவபதி: ஸாக்ஷாத்। ௭௭।௰௪௧
விஷ்ணுர் வாமநரூபத்ருக்। துஷ்டாவ யஜ்ஞம் வஹ்நிம்ஸ் ச।
௭௭।௰௪௧
யஜமாநம் அத ர்த்விஜ:। யஜ்ஞகராதிகாரஸ்தாந்। ௭௭।௰௪௨
ஸதஸ்யாந் த்ரவ்யஸம்பதம்। தத: ப்ரஸந்நம் அகிலம்। ௭௭।௰௪௨
வாமநம் ப்ரதி தத்க்ஷணாத்। யஜ்ஞவாடஸ்திதம் வரம்ீ । ௭௭।௰௪௩
ஸாது ஸாத்வ் இத்ய் உதீரயந்। ஸ சார்கம் ஆதாய பலி:। ௭௭।௰௪௩
ப்ேராத்பூதபுலகஸ் ததா। பூஜயாம் ஆஸ ேகாவிந்தம்। ௭௭।௰௪௪
ப்ராஹ ேசதம் வேசா அஸுர:। ஸுவர்ணரத்நஸம்காதம்। ௭௭।௰௪௪
கஜாஸ்வம் அமிதம் ததா। ஸ்த்ரிேயா வஸ்த்ராண்ய் அலம்காராந்।
௭௭।௰௪௫
காேவா க்ராமாம்ஸ் ச புஷ்கலாந்। ஸர்வஸ்வம் ஸகலாம் உர்வம்ீ ।
௭௭।௰௪௫
பவேதா வா யத் ஈப்ஸிதம்। தத் ததாமி வ்ருணுஷ்வ த்வம்। ௭௭।௰௪௬
மமார்தீஸததம் ப்ரிய:। இத்ய் உக்ேதா ைதத்யபதிநா। ௭௭।௰௪௬
ப்ரீதிகர்வாந்விதம் வச:। ப்ராஹ ஸஸ்மிதகம்பரம்ீ । ௭௭।௰௪௭
பகவாந் வாமநாக்ருதி:। மமாக்நிஸரணார்தாய। ௭௭।௰௪௭
ேதஹி ராஜந் பதத்ரயம்। ஸுவர்ணக்ராமரத்நாதி। ௭௭।௰௪௮
தத் அர்திப்ய: ப்ரதீயதாம்। த்ரிபி: ப்ரேயாஜநம் கிம் ேத। ௭௭।௰௪௮
பைத: பதவதாம் வர। ஸதம் ஸதஸஹஸ்ரம் வா। ௭௭।௰௪௯
பதாநாம் மார்கதாம் பவாந்। ஏதாவதா ைதத்யபேத। ௭௭।௰௪௯
க்ருதக்ருத்ேயா அஸ்மி மார்கதாம்। அந்ேயஷாம் அர்திநாம் வித்தம்।
௭௭।௰௫

இச்சயா தாஸ்யேத பவாந்। ஏதச் ச்ருத்வா து கதிதம்। ௭௭।௰௫
வாமநஸ்ய மஹாத்மந:। வாசயாம் ஆஸ தத் தஸ்ைம। ௭௭।௰௫௧
வாமநாய பதத்ரயம்। பாெணௗ து பதிேத ேதாேய। ௭௭।௰௫௧
வாமேநா பூதபாவந:। ஸர்வேதவமயம் ரூபம்। ௭௭।௰௫௨
தர்ஸயாம் ஆஸ தத்க்ஷணாத்। சந்த்ரஸூர்ெயௗ ச நயேந। ௭௭।௰௫௨
த்ெயௗ: ஸிரஸ் சரெணௗ க்ஷிதி:। பாதாங்குல்ய: பிஸாசாஸ் ச।
௭௭।௰௫௩
ஹஸ்தாங்குல்யஸ் ச குஹ்யகா:। விஸ்ேவேதவாஸ் ச ஜாநுஸ்தா।
௭௭।௰௫௩
ஜங்ேக ஸாத்யா: ஸுேராத்தமா:। யக்ஷா நேகஷு ஸம்பூதா। ௭௭।௰௫௪
ேரகாஸ்வ் அப்ஸரஸ: ஸ்திதா:। த்ருஷ்டிர் திஷ்ணாந்ய் அேஸஷாணி।
௭௭।௰௫௪
ேகஸா: ஸூர்யாம்ஸவ: ப்ரேபா। தாரகா ேராமகூபாணி। ௭௭।௰௫௫
ேராமாணி ச மஹர்ஷய:। பாஹேவா விதிஸஸ் தஸ்ய। ௭௭।௰௫௫
திஸ: ஸ்ேராத்ரம் மஹாத்மந:। அஸ்விெநௗ ஸ்ரவெணௗ தஸ்ய।
௭௭।௰௫௬
நாஸா வாயுர் மஹாபல:। ப்ரஸாதஸ் சந்த்ரமா ேதேவா। ௭௭।௰௫௬
மேநா தர்ம: ஸமாஸ்ரித:। ஸத்யம் அஸ்யாபவத் வாண।ீ ௭௭।௰௫௭
ஜிஹ்வா ேதவ ீஸரஸ்வதீ। க்ரீவாதிதிர் ேதவமாதா। ௭௭।௰௫௭
வித்யாஸ் தத்வலயஸ் ததா। ஸ்வர்கத்வாரம் அபூந் ைமத்ரம்।
௭௭।௰௫௮
த்வஷ்டா பூஷா ச ைவ ப்ருெவௗ। முகம் ைவஸ்வாநரஸ் சாஸ்ய।
௭௭।௰௫௮
வ்ருஷெணௗ து ப்ரஜாபதி:। ஹ்ருதயம் ச பரம் ப்ரஹ்ம। ௭௭।௰௫௯

பும்ஸ்த்வம் ைவ கஸ்யேபா முநி:। ப்ருஷ்ேட அஸ்ய வஸேவா ேதவா।
௭௭।௰௫௯
மருத: ஸர்வஸம்திஷு। ஸர்வஸூக்தாநி தஸநா। ௭௭।௰௬
ஜ்ேயாதீம்ஷி விமலப்ரபா:। வக்ஷ:ஸ்தேல ததா ருத்ேரா। ௭௭।௰௬
ைதர்ேய சாஸ்ய மஹார்ணவ:। உதேர சாஸ்ய கந்தர்வா। ௭௭।௰௬௧
மருதஸ் ச மஹாபலா:। லŠமீர் ேமதா த்ருதி: காந்தி:। ௭௭।௰௬௧
ஸர்வவித்யாஸ் ச ைவ கடி:। ஸர்வஜ்ேயாதீம்ஷி யாநீஹ। ௭௭।௰௬௧
தபஸ் ச பரமம் மஹத்। தஸ்ய ேதவாதிேதவஸ்ய। ௭௭।௰௬௨
ேதஜ: ப்ேராத்பூதம் உத்தமம்। ஸ்தெநௗ குெக்ஷௗ ச ேவதாஸ் ச।
௭௭।௰௬௨
ஜாநூ சாஸ்ய மஹாமகா:। இஷ்டய: பஸுபந்தாஸ் ச। ௭௭।௰௬௩
த்விஜாநாம் ேசஷ்டிதாநி ச। தஸ்ய ேதவமயம் ரூபம்। ௭௭।௰௬௩
த்ருஷ்ட்வா விஷ்ேணார் மஹாபலா:। உபஸர்பந்தி ைதேதயா:।
௭௭।௰௬௪
பதம்கா இவ பாவகம்। ப்ரமத்ய ஸர்வாந் அஸுராந்। ௭௭।௰௬௪
பாதஹஸ்ததைலர் விபு:। க்ருத்வா ரூபம் மஹாகாயம்। ௭௭।௰௬௫
ஸ ஜஹாராஸு ேமதிநீம்। தஸ்ய விக்ரமேதா புமிம்। ௭௭।௰௬௫
சந்த்ராதித்ெயௗ ஸ்தநாந்தேர। நேபா விக்ரமமாணஸ்ய। ௭௭।௰௬௬
ஸக்திேதேஸ ஸ்திதாவ் உெபௗ। பரம் விக்ரமமாணஸ்ய। ௭௭।௰௬௬
ஜாநுமூேல ப்ரபாகெரௗ। விஷ்ேணார் ஆஸ்தாம் மஹீபால। ௭௭।௰௬௭
ேதவபாலநகர்மணி। ஜித்வா ேலாகத்ரயம் க்ருத்ஸ்நம்। ௭௭।௰௬௭
ஹத்வா சாஸுரபுங்கவாந்। புரம்தராய த்ைரேலாக்யம்। ௭௭।௰௬௮
தெதௗ விஷ்ணுர் உருக்ரம:। ஸுதலம் நாம பாதாலம்। ௭௭।௰௬௮

அதஸ்தாத் வஸுதாதலாத்। பேலர் தத்தம் பகவதா। ௭௭।௰௬௯
விஷ்ணுநா ப்ரபவிஷ்ணுநா। அத ைதத்ேயஸ்வரம் ப்ராஹ। ௭௭।௰௬௯
விஷ்ணு: ஸர்ேவஸ்வேரஸ்வர:। யத் த்வயா ஸலிலம் தத்தம்। ௭௭।௰௭
க்ருஹீதம் பாணிநா மயா। கல்பப்ரமாணம் தஸ்மாத் ேத। ௭௭।௰௭௧
பவிஷ்யத்ய் ஆயுர் உத்தமம்। ைவவஸ்வேத ததாதீேத। ௭௭।௰௭௧
பேல மந்வந்தேர தத:। ஸாவர்ணேக ச ஸம்ப்ராப்ேத। ௭௭।௰௭௨
பவாந் இந்த்ேரா பவிஷ்யதி। ஸாம்ப்ரதம் ேதவராஜாய। ௭௭।௰௭௨
த்ைரேலாக்யம் அகிலம் மயா। தத்தம் சதுர்யுகாநாம் ைவ। ௭௭।௰௭௩
ஸாதிகா ஹ்ய் ஏகஸப்ததி:। நியந்தவ்யா மயா ஸர்ேவ। ௭௭।௰௭௩
ேய தஸ்ய பரிபந்திந:। ேதநாஹம் பரயா பக்த்யா। ௭௭।௰௭௪
பூர்வம் ஆராதிேதா பேல। ஸுதலம் நாம பாதாலம்। ௭௭।௰௭௪
தம் ஆஸாத்ய மேநாரமம்। வஸாஸுர மமாேதஸம்। ௭௭।௰௭௫
யதாவத் பரிபாலயந்। தத்ர திவ்யவேநாேபேத। ௭௭।௰௭௫
ப்ராஸாதஸதஸம்குேல। ப்ேராத்புல்லபத்மஸரஸி। ௭௭।௰௭௬
ஸ்ரவச்சுத்தஸரித்வேர। ஸுகந்திதூபஸம்பாேத। ௭௭।௰௭௬
வராபரணபூஷித:। ஸ்ரக்சந்தநாதிதிக்தாங்ேகா। ௭௭।௰௭௭
ந்ருத்யகீதமேநாரைம:। உபபுஞ்ஜந் மஹாேபாகாந்। ௭௭।௰௭௭
விவிதாந் தாநேவஸ்வர। மமாஜ்ஞயா காலம் இமம்। ௭௭।௰௭௮
திஷ்ட ஸ்த்ரீஸதஸம்வ்ருத:। யாவத் ஸுைரஸ் ச விப்ைரஸ் ச।
௭௭।௰௭௮
ந விேராதம் கரிஷ்யஸி। தாவத் ஏதாந் மஹாேபாகாந்। ௭௭।௰௭௯
அவாப்ஸ்யஸ்ய் அஸுேராத்தம। யதா ச ேதவவிப்ராணாம்। ௭௭।௰௭௯

விருத்தாந்ய் ஆசரிஷ்யஸி। பந்திஷ்யந்தி ததா பாஸா। ௭௭।௰௮
வாருணாஸ் த்வாம் அஸம்ஸயம்। ஏதத் விதித்வா பவதா। ௭௭।௰௮
மயாஜ்ஞப்தம் அேஸஷத:। ந விேராத: ஸுைர: கார்ேயா। ௭௭।௰௮௧
விப்ைரர் வா ைதத்யஸத்தம। இத்ய் ஏவம் உக்ேதா ேதேவந। ௭௭।௰௮௧
விஷ்ணுநா ப்ரபவிஷ்ணுநா। பலி: ப்ராஹ மஹாராஜ। ௭௭।௰௮௨
ப்ரணிபத்ய க்ருதாஞ்ஜலி:। தத்ராஸேதா ேம பாதாேல। ௭௭।௰௮௨
பகவந் பவதாஜ்ஞயா। கிம் பவிஷ்யத்ய் உபாதாநம்। ௭௭।௰௮௩
உபேபாேகாபபாதகம்। ஆப்யாயிேதா ேயந ேதவ। ௭௭।௰௮௩
ஸ்மேரயம் த்வாம் அஹம் ஸதா। தாநாந்ய் அவிதிதத்தாநி। ௰௭௭।௧௨௭
ஸ்ராத்தாந்ய் அஸ்ேராத்ரியாணி ச। ஹுதாந்ய் அஸ்ரத்தயா யாநி।
௭௭।௰௮௪
தாநி தாஸ்யந்தி ேத பலம்। அதக்ஷிணாஸ் ததா யஜ்ஞா:। ௭௭।௰௮௪
க்ரியாஸ் சாவிதிநா க்ருதா:। பலாநி தவ தாஸ்யந்தி। ௭௭।௰௮௫
அதீதாந்ய் அவ்ரதாநி ச। பேலர் வரம் இதம் தத்த்வா। ௭௭।௰௮௫
ஸக்ராய த்ரிவிதம் ததா। வ்யாபிநா ேதந ரூேபண। ௭௭।௰௮௬
ஜகாமாதர்ஸநம் ஹரி:। ஸஸாஸ ச யதா பூர்வம்। ௭௭।௰௮௬
இந்த்ரஸ் த்ைரேலாக்யம் ஊர்ஜிதம்। ஸிேஷவ ச பராந் காமாந்।
௭௭।௰௮௭
பலி: பாதாலம் ஆஸ்ரித:। இத்ய் ஏதத் ேதவேதவஸ்ய। ௭௭।௰௮௭
விஷ்ேணார் மாஹாத்ம்யம் உத்தமம்। வாமநஸ்ய பேடத் யஸ் து।
௭௭।௰௮௮
ஸர்வபாைப: ப்ரமுச்யேத। பலிப்ரஹ்ராதஸம்வாதம்। ௭௭।௰௮௮
மந்த்ரிதம் பலிஸுக்ரேயா:। பலிவிஷ்ண்ேவாஸ் ச கதிதம்। ௭௭।௰௮௯

ய: ஸ்மரிஷ்யதி மாநவ:। நாதேயா வ்யாதேயா வாஸ்ய। ௭௭।௰௮௯
ந ச ேமாஹாகுலம் மந:। பவிஷ்யதி குருஸ்ேரஷ்ட। ௭௭।௰௯
பும்ஸஸ் தஸ்ய கதாசந। ச்யுதராஜ்ேயா நிஜம் ராஜ்யம்। ௭௭।௰௯
இஷ்டப்ராப்திம் விேயாகவாந்। அவாப்ேநாதி மஹாபாக। ௭௭।௰௯௧
நர: ஸ்ருத்வா கதாம் இமாம்। பாதாேல நிவஸந் வரஸ்ீ । ௭௭।௰௯௧
ததா ைவேராசநிர் பலி:। காேமாபேபாகஸம்ப்ராப்த்யா। ௭௮।௰௰௧
முதம் ப்ராப பராம் விபு:। அலம்புஷா மிஸ்ரேகஸீ। ௭௮।௰௰௧
புண்டரீகாத வாமநா। க்ருதாசீேமநகா ரம்பா। ௭௮।௰௰௨
நந்ருதுஸ் தஸ்ய ஸம்நிெதௗ। ப்ரஜகுர் ேதவகந்தர்வா। ௭௮।௰௰௨
விஸ்வாவஸுபுேராகமா:। துஷ்டுவுஸ் ச மஹாபாக। ௭௮।௰௰௩
பலிம் ஸித்தா: ஸசாரணா:। தஸ்மிந் ஸம்கீதகீதா து। ௭௮।௰௰௩
வணாேவணுரவாகுேல ீ । ஸ்ரகாதிபூஷிேதா ைதத்ய:। ௭௮।௰௰௪
பெபௗ பாநம் அநுத்தமம்। ஸர்காரஸவமாத்விகாம்। ௭௮।௰௰௪
புஷ்பாஸவபலாஸவம்। திவ்யா: ப்ரஸந்நாஸ் ச ஸுராஸ்। ௭௮।௰௰௫
ததர்ஹாணி மதூநி ச। பராவதம்ஸாந் மதுராம்ல்। ௭௮।௰௰௫
லவணாம்ஸ் திக்தகாண் கடூந்। கஷாயாம்ஸ் ச மஹாராஜ। ௭௮।௰௰௬
ஸும்ருஷ்டாந்ய் அபராணி ச। ஸுஹ்ருட்ஸுஜநஸம்பந்தி । ௭௮।௰௰௬
ப்ருத்யவர்கஸமந்வித:। புபுேஜ பாதாலகதஸ்। ௭௮।௰௰௭
ததா ைவேராசநிர் பலி:। ப்ராஸாதா: காஞ்சநா: ஸர்ேவ। ௭௮।௰௰௭
ஸுவர்ணமணிமண்டிதா:। ஸ்பாடிகாமலேஸாபாநா। ௭௮।௰௰௮
முக்தாஹாரஸேதாஜ்ஜ்வலா:। ேதஷு ஸர்ேவஷு ைதேதயா।
௭௮।௰௰௮

பேல: ஸம்பந்திபாந்தவா:। ந்ருத்யவாத்யாதிமுதிதா। ௭௮।௰௰௯
புபுஜுர் விஷயாந் ப்ரியாந்। பலிஸ் ச பகவாந் ைதத்ேயா। ௭௮।௰௰௯
ைதத்ேயாரகஸைதர் வ்ருத:। உபகீயமாேநா புபுேஜ। ௭௮।௰௧
யேதஷ்டம் விஷயாந் ப்ரியாந்। பத்நீவிந்த்யாவலீ நாம। ௭௮।௰௧
தஸ்ய ைதத்யபேதர் அபூத்। ஸர்வலக்ஷணஸம்பூர்ணா। ௭௮।௰௧௧
ஸ்ரீர் இவாப்ஜம் விநாபரா। ந ேதவ ீநாபி கந்தர்வ।ீ ௭௮।௰௧௧
நாப்ஸரா ந ச மாநுஷீ। தஸ்யா ரூேபண ஸத்ருஸீ। ௭௮।௰௧௨
பபூவ மநுேஜஸ்வர। ஸா து பநாயதஸ்ேராண ீ ।ீ ௭௮।௰௧௨
ம்ருத்வங்கீமதுரஸ்வரா। கேநாந்நதகுசா ஸுப்ரூ:। ௭௮।௰௧௩
ஸஸ்மிதாயதேலாசநா। ம்ருத்வல்பபாணிபாதாப்ஜா। ௭௮।௰௧௩
ஸுமத்யா கஜகாமிநீ। ஸுேகஸீ ஸுமுகீஸ்யாமா। ௭௮।௰௧௪
ஸர்ைவர் ேயாஷித்குைணர் யுதா। தநயா ேமருஸாவர்ேணர்। ௭௮।௰௧௪
ெதௗஹித்ரீ ம்ருகேமாகிந:। வபுஷா ரூபஸம்பதா। ௭௮।௰௧௫
ெபௗதநா ம்ருகேலாசநா। பத்நீஸஹஸ்ரத்விதேய। ௰௭௮।௧௨௮
ப்ரதாநா தஸ்ய ஸாபவத்। தயா து ரமதஸ் தஸ்ய। ௭௮।௰௧௫
ரமணேயீ ரஸாதேல। ஸக்திர் ஆஸத்ீ அநுதிநம்। ௭௮।௰௧௬
விேவகப்ரதிேலாமிநீ। கதாசித் ரமதஸ் தஸ்ய। ௭௮।௰௧௬
ைதத்யராஜஸ்ய பார்திவ। தீŠணாம்ஸுர் மத்யமாம் வதீீம்। ௭௮।௰௧௭
யெயௗ ைவஷுவதீம் ரவி:। யதா யதா ச விஷுவம்। ௭௮।௰௧௭
பாஸ்கர: ப்ரதிபத்யேத। ததா ததா ஹேரஸ் சக்ரம்। ௭௮।௰௧௮
பாதாேல பரிவர்தேத। ஸ்ரவந்தி ேயாஷிதாம் கர்பாஸ்। ௭௮।௰௧௮
தஸ்ய தாராம்ஸுதாபிதா:। ஸஹஸா ைதத்யபத்நீநாம்। ௭௮।௰௧௯

யாஸு பும்ஸாம் ஸமுத்பவ:। நிஸ்ேதஜேஸா ைதத்யபடா। ௭௮।௰௧௯
பவந்தி ச மஹீபேத। தத் த்ருஷ்ட்வா ஸஹஸாயாந்தம்। ௭௮।௰௧௯
ஆதித்யஸதேதஜஸம்। ஜ்வாலாமாலாஸுது:ப்ேரŠயம்। ௭௮।௰௨
விஷ்ணுசக்ரம் ஸுதர்ஸநம்। ஹாஹாக்ருதம் அபூத் ஸர்வம்। ௭௮।௰௨
பாதாலம் அரிஸூதந। ேஜபுர் ேய முநயஸ் தத்ர। ௭௮।௰௨
ஸார்கபாத்ரா மேஹாரகா:। பபூவு: ப்ரணதாஸ் சாந்ேய। ௭௮।௰௨௧
ஸித்தகந்தர்வசாரணா:। ைவக்லவ்யம் சாகதா: ஸர்வா:। ௭௮।௰௨௧
ஸ்த்ரிய: பரபுரம்ஜய। தத் த்ருஷ்ட்வா வ்யாகுலீபூதம்। ௭௮।௰௨௧
பாதாலம் அஸுராஸ் தத:। ேய தஸ்து: ெபௗருஷபராஸ்। ௭௮।௰௨௨
ேத ஹதா: ஸதேநமிநா। ப்ராம்யதா ேதந சக்ேரண। ௭௮।௰௨௨
ஸப்தேலாகவிசாரிணா। ஸமஸ்தஜகதாதார । ௭௮।௰௨௩
கரமுக்ேதந ேவகிநா। தந் நிஷூதிதைதத்ெயௗகம்। ௭௮।௰௨௩
ைதத்யஸ்த்ரீகர்பஹாநிதம்। ஸ்ருத்வா சக்ரம் மஹாசக்ேரா। ௭௮।௰௨௪
நிஸ்சக்ராம க்ருஹாத் பலி:। ஆ: கிம் ஏதத் இதீத்ய் உக்த்வா। ௭௮।௰௨௪
ஸ து மத்யமேஹாத்தத:। விமலம் கட்கம் ஆதாய। ௭௮।௰௨௫
ஸதசந்த்ரம் ச பாநுமத்। நிர்யாந்தம் அத ேவேகந। ௭௮।௰௨௫
தம் உதாரபராக்ரமம்। வித்யாவலீ நாம ஸுபா। ௭௮।௰௨௬
ததார தயிதம் பதிம்। உவாச ச பரிஷ்வஜ்ய। ௭௮।௰௨௬
க்ேராததாம்ேரக்ஷணம் பலிம்। கல்யாணீகுணேதாஷஜ்ஞா। ௭௮।௰௨௭
ப்ரணயாந் ம்ருதுபாஷிண।ீ ைதத்யராஜ ந ேகாபஸ்ய। ௭௮।௰௨௭
வஸம் ஆகந்தும் அர்ஹஸி। விம்ருஸ்ய தஜ்ஜ்ஞ: ஸாமாதீந்।
௭௮।௰௨௮
ப்ரயுஞ்ஜதீ பலாபலம்। கிம் ஏதத் கஸ்ய வா குத்ர। ௭௮।௰௨௮

ிம்நிமித்தம் இஹாகதம்। சக்ரம் இத்தம் விசார்ய த்வம்। ௭௮।௰௨௯
க்ேராதம் யாஹி ப்ரஸாம்ய வா। ஏதத் கில ஜகத்தாதுஸ்। ௭௮।௰௨௯
சக்ரம் விஷ்ேணா: ஸுதர்ஸநம்। ப்ரதிஷண்மாஸம் அப்ேயதி। ௭௮।௰௩
ைதத்யகர்பவிநாஸநம்। புங்கர்பாந் நிகிலாந் ஏதத்। ௭௮।௰௩
தாநவாநாம் மஹாஸுர। விநாஸயத்ய் அநந்தராம்। ௭௮।௰௩௧
ஸர்வதுஷ்டநிபர்ஹணம்। கேராதி து:கம் அதுலம்। ௭௮।௰௩௧
காதநாத் ப்ரதிபக்ஷஜம்। புருஷாணாம் ந ஸர்வத்ர। ௭௮।௰௩௨
ஸம்ஸ்திதா ஜகத: பேத:। மயி த்வயி ததாந்யத்ர। ௭௮।௰௩௨
யதா விஷ்ணுர் வ்யவஸ்தித:। தஸ்ையதச் சக்ரம் ஆயாந்தம்। ௭௮।௰௩௩
புருஷ: ேகா ந பூஜேயத்। யஸ்யாதிேக்ஷபஜா ராஜம்ஸ்। ௭௮।௰௩௩
தவ த்ைரேலாக்யவிச்யுதி:। தஸ்ய சக்ரம் ஜகந்மூர்ேத:। ௭௮।௰௩௪
ஸமுைபஷி ருஷா கதம்। ஸத்ருேஸ புருேஷ க்ேராதம்। ௭௮।௰௩௪
நர: குர்வதீ ைதத்யப। ந து ஸர்ேவஸ்வேர விஷ்ெணௗ। ௭௮।௰௩௫
யத்ர ஸர்வம் ப்ரதிஷ்டிதம்। தத் ப்ரஸதீ மஹாபாக। ௭௮।௰௩௫
ஸமுைபஹி ஜகத்பதிம்। ஸரண்யம் ஸரணம் விஷ்ணும்। ௭௮।௰௩௬
யம் ப்ரணம்ய ந ஸததி ீ । யஸ்மிந் ப்ரஸந்ேந த்ைரேலாக்யம்।
௭௮।௰௩௬
த்வத்த: ப்ராப்த: ஸசீபதி:। ப்ரஷ்டஸ் ச யததிேக்ஷபாத்। ௭௮।௰௩௭
தம் த்வம் ஸரணம் ஆவ்ரஜ। யத்ர ஸர்ேவஸ்வேர ஸர்வம்। ௭௮।௰௩௭
ஸர்வபூேத ஜகத் ஸ்திதம்। தஸ்ய சக்ரம் உைபஹி த்வம்। ௭௮।௰௩௮
விநயாத் அஸுராதிப। ஸர்வகாரணபூதஸ்ய। ௭௮।௰௩௮
ேதவேதவஸ்ய சக்ரிண:। கஸ் சக்ரம் அதிவர்ேதத। ௭௮।௰௩௯

மர்த்யதர்மா மஹாஸுர। சக்ரம் அத்ர ஜகத்தாது:। ௭௮।௰௩௯
கேராதி ஸ்திதிபாலநம்। விபக்ஷாஸுரஸம்பூதி । ௭௮।௰௪
கர்பவிஸ்ரம்ஸநாத் ப்ரேபா। ப்ரஸாத்ய சக்ரநாமாநம்। ௭௮।௰௪
ேகாவிந்தம் ஜகேதா குரும்। ஸ்ேரயேஸ ஸர்வதர்மஜ்ஞ। ௭௮।௰௪௧
ஸரணம் வ்ரஜ ேகஸவம்। ஸம்ஸ்மரஸ்வ ச ைதத்ேயந்த்ர। ௭௮।௰௪௧
ப்ரஹ்ராதம் ஸ்வபிதாமஹம்। ப்ரஷ்டராஜ்ேயந பவதா। ௭௮।௰௪௨
ஸ்மர்தவ்ேயா அஹம் இதி ப்ரேபா। ஸ வ்யாஜஹார பகவாம்ஸ்।
௭௮।௰௪௨
தவாநுக்ரஹகாம்யயா। ஸம்ஸ்மர்யதாம் மஹாபாக। ௭௮।௰௪௩
ஸர்வதர்மப்ருதாம் வர:। விஷ்ணுபக்ேதா மஹாபாஹு:। ௭௮।௰௪௩
ஸ ேத ஸ்ேரேயா அபிதாஸ்யதி। ஏதத் வசநம் ஆகர்ண்ய। ௭௮।௰௪௩
ததா ைவேராசநிர் பலி:। யெயௗ ததார்கம் ஆதாய। ௭௮।௰௪௪
விஷ்ேணாஸ் சக்ரஸ்ய பூஜக:। ஸ ததர்ஸ ஸமாயாந்தம்। ௭௮।௰௪௪
அநந்தகரஸங்கிநம்। சக்ரம் அக்ஷயசக்ரஸ்ய। ௭௮।௰௪௫
விஸ்வஸ்ய பரிபாலகம்। ஸஸ்மார ச பலி: ஸர்வம்। ௭௮।௰௪௫
ப்ரஹ்ராதவசநம் ந்ருப। ஜகாத யச் ச ேகாவிந்த:। ௭௮।௰௪௬
ப்ரஸாதஸுமுக: ப்ரபு:। பக்திநம்ரஸ் தேதா பூத்வா। ௭௮।௰௪௬
பூதபவ்யபவத்ப்ரேபா:। துஷ்டாவ வாஸுேதவஸ்ய। ௭௮।௰௪௭
சக்ரம் அவ்யக்தமூர்திந:। ஜ்வாலாமாலாகராலாந்தம்। ௭௮।௰௪௭
உத்யதிந்துஸமப்ரபம்। மத்யாஹ்நார்கஸமாபாஸம்। ௭௮।௰௪௮
ேதஜஸ: பிண்டஸம்ஸ்திதம்। தம் த்ருஷ்ட்வா ேதஜஸா ராஸிம்।
௭௮।௰௪௮
உபஸம்கம்ய சா விபும்। உவாச ைதத்யஸார்தூல:। ௭௮।௰௪௯

ப்ரணிபத்ய க்ருதாஞ்ஜலி:। அநந்தஸ்யாப்ரேமயஸ்ய। ௭௮।௰௪௯
விஸ்வமூர்ேதர் மஹாத்மந:। நமாமி சக்ரிணஸ் சக்ரம்। ௭௮।௰௫
கரஸங்கி ஸுதர்ஸநம்। ஸஹஸ்ரம் இவ ஸூர்யாணாம்। ௭௮।௰௫
ஸம்காதம் வித்யுதாம் இவ। காலாக்நிம் இவ யச் சக்ரம்। ௭௮।௰௫௧
தத் விஷ்ேணா: ப்ரணமாம்ய் அஹம்। துஷ்டராஹுகலச்ேசத ।
௭௮।௰௫௧
ேஸாணிதாருணதாரகம்। தந் நமாமி ஹேரஸ் சக்ரம்। ௭௮।௰௫௨
ஸதேநமி ஸுதர்ஸநம்। யஸ்யாரேகஷு ஸக்ராத்யா। ௭௮।௰௫௨
ேலாகபாலா வ்யவஸ்திதா:। ததந்தர் வஸேவா ருத்ராஸ்। ௭௮।௰௫௩
தைதவ மருதாம் கணா:। தாராயாம் த்வாதஸாதித்யா:। ௭௮।௰௫௩
ஸமஸ்தாஸ் ச ஹுதாஸநா:। தாராஜாேல அப்தய: ஸர்ேவ। ௭௮।௰௫௪
நாபிமத்ேய ப்ரஜாபதி:। ஸமஸ்தேநமிஷ்வ் அகிலா। ௭௮।௰௫௪
யஸ்ய வித்யா: ப்ரதிஷ்டிதா:। யஸ்ய ரூபம் அநிர்ேதஸ்யம்। ௭௮।௰௫௫
அபி ேயாகிபிர் உத்தைம:। யத் ப்ரமத் ஸுரஸங்காநாம்। ௭௮।௰௫௫
ேதஜஸ: பரிப்ரும்ஹணம்। ைதத்ெயௗஜஸாம் ச நாஸாய। ௭௮।௰௫௬
தந் நமாமி ஸுதர்ஸநம்। ப்ரமந் மதமஹாேவக । ௭௮।௰௫௬
விப்ராந்தாகிலேகசரம்। தந் நமாமி ஹேரஸ் சக்ரம்। ௰௭௮।௧௨௯
அநந்தாரம் ஸுதர்ஸநம்। நக்ஷத்ரவத்வஹ்நிகண । ௰௭௮।௧௨௯
வ்யாப்தம் க்ருத்ஸ்நம் நபஸ்தலம்। தந் நமாமி ஹேரஸ் சக்ரம்।
௰௭௮।௧௩௰
கரஸங்கி ஸுதர்ஸநம்। ஸ்வபாவேதஜஸா யுக்தம்। ௰௭௮।௧௩௰
யத் அர்காக்நிமயம் மஹத்। விேஸஷேதா ஹேரர் கத்வா। ௭௮।௰௫௭

ஸர்வேதவமயம் கரம்। துர்வ்ருத்தைதத்யமதநம்। ௭௮।௰௫௭
ஜகத: பரிபாலகம்। தந் நமாமி ஹேரஸ் சக்ரம்। ௭௮।௰௫௮
ைதத்யசக்ரஹரம் பரம்। கேராது ேம ஸதா ஸர்ம। ௭௮।௰௫௮
தர்மதாம் ச ப்ரயாது ேம। ப்ரஸாதஸுமுேக க்ருஷ்ேண। ௭௮।௰௫௯
தஸ்ய சக்ரம் ஸுதர்ஸநம்। ஸ்வபாவேதஜஸா யுக்தம்। ௭௮।௰௫௯
மத்யாஹ்நார்கஸமப்ரபம்। ப்ரஸதீ ஸம்யுேக அரிணாம்। ௰௭௮।௧௩௧
ஸுதர்ஸநஸுதர்ஸநம்। வித்யுஜ்ஜ்வாலாமஹாகக்ஷம்। ௭௮।௰௬
தஹாந்தர் மம யத் தம:। ஜஹி ேநா விஷயக்ராஹி। ௭௮।௰௬
மேநா க்ரஹவிேசஷ்டிதம்। விஸ்ேபாடயாகிலாம் மாயாம்। ௭௮।௰௬௧
குருஷ்வ விமலாம் மதிம்। ஏவம் ஸம்ஸ்தூயமாநம் தத்। ௭௮।௰௬௧
வஹ்நிபிண்ேடாபமம் மஹத்। பபூவ ப்ரகடம் சக்ரம்। ௭௮।௰௬௨
ைதத்யசக்ர்பேதஸ் ததா। ததர்ஸ ஸ மஹாபாஹு:। ௭௮।௰௬௨
ப்ரபாமண்டலதுர்த்ருஸம்। அக்நிஜ்வாலாகதம் தாம்ரம்। ௭௮।௰௬௩
தப்தசக்ரம் இவாபரம்। ப்ரமதஸ் தஸ்ய சக்ரஸ்ய। ௭௮।௰௬௩
நாபிமத்ேய மஹீபேத। த்ைரேலாக்யம் அகிலம் ைதத்ேயா। ௭௮।௰௬௪
த்ருஷ்டவாந் பூர்புவாதிகம்। ேமர்வாதீந் அகிலாஞ் ைஸலாந்। ௭௮।௰௬௪
கங்காத்யா: ஸரிதஸ் ததா। க்ஷீராப்திப்ரமுகாம்ஸ் சாப்தீந்। ௭௮।௰௬௫
த்வபாஞ்ீ ஜம்ப்வாதிஸம்ஜ்ஞிதாந்। ைவமாநிகாந் ஸகந்தர்வாந்।
௭௮।௰௬௫
ஸூர்யாதீம்ஸ் ச ததா க்ரஹாந்। நக்ஷத்ரதாரகாகாஸம்। ௭௮।௰௬௬
ஸக்ராதீம்ஸ் ச திெவௗகஸ:। ருத்ராதித்யாம்ஸ் ச மருதாம்।
௭௮।௰௬௬
ஸாத்யாநாம் ச மஹீபேத। ஸம்நிதாநம் நிரீŠயாெஸௗ। ௭௮।௰௬௭

ைதத்யாநாம் விஸ்மிேதா அபவத்। தத: ப்ரணம்யார்திஹரம் ஸுராணாம்।
௭௮।௰௬௭
அபாரஸாரம் பரமாயுதம் ஹேர:। நேமா நமஸ் ேத அஸ்த்வ் இதி ைதத்யராஜ:।
௭௮।௰௬௮
ப்ேராவாச பூேயா அபி நேமா நமஸ் ேத। யந் ேநா அஸுபம் ேசதஸி
வாயுேவக। ௭௮।௰௬௮
யந் ேநா அஸுபம் வாசி ஹுதாஸேநாத்த। யச் சாஸுபம் காயக்ருதம்
ஹேரஸ் தத்। ௭௮।௰௬௯
வராயுதம் த்வம் ப்ரஸமம் நயாஸு। ப்ரஸதீ ஸத்காரக்ருதம் மமாகம்।
௭௮।௰௬௯
ப்ரயாது ேத நாஸம் அநந்தவர்யீ । ஸதாம் ச ஸந்மார்கவதாம் மநாம்ஸி।
௭௮।௰௭
ஸ்திரீபவந்த்வ் அச்யுதபாதயுக்ேம। ஏவம் ஸ்துேத ததஸ் தஸ்மிந்।
௭௮।௰௭
விஷ்ணுசக்ேர ஸுதர்ஸேந। புஷ்பவ்ருஷ்டிர் பேலர் மூர்த்நி। ௭௯।௰௰௧
நிபபாதாந்தரிக்ஷத:। பரிஹ்ருத்ய ச ைதத்ேயந்த்ரம்। ௭௯।௰௰௧
யெயௗ சக்ரம் யேதச்சயா। ப்ரமத் ஏவ ச ைதத்யாநாம்। ௭௯।௰௰௧
யெயௗ தத்பயம் ஆவஹத்। ததஸ் தத் அத்புதம் த்ருஷ்ட்வா।
௰௭௯।௧௩௨
சக்ரஸ்யாகமநம் ஹேர:। பூர்வவத்ஸ்மரணம் ப்ராப்ய। ௭௯।௰௰௨
ஸஸ்மார ஸ்வபிதாமஹம்। கச்சதா பூர்வம் ஆர்ேயண। ௭௯।௰௰௨
ஸ்மர்தவ்ேயா அஹம் இதீரிதம்। தம் ஸ்மரிஷ்யாமி ைதத்ேயந்த்ரம்।
௭௯।௰௰௩
ஸ ந: ஸ்ேரேயா அபிதாஸ்யதி। இத்ய் ஏதத் அதிஸம்ஸ்ம்ருத்ய।
௭௯।௰௰௩

பலிர் ஆத்மபிதாமஹம்। ஸஸ்மார ைதத்யாதிபதிம்। ௭௯।௰௰௪
ப்ரஹ்ராதம் பகவத்ப்ரியம்। ஸம்ஸ்ம்ருதஸ் ச ஸ பாதாலம்। ௭௯।௰௰௪
ஆஜகாம மஹாமதி:। சக்ேராத்யதகர: ஸாக்ஷாத்। ௭௯।௰௰௫
பகவாந் இவ ேகஸவ:। தம் ஆகதம் அேதாத்தாய। ௭௯।௰௰௫
யதாவத் ஸ மஹாமதி:। அபிவாத்ய பலிர் பக்த்யா। ௭௯।௰௰௬
நிேவத்யார்கம் அபாஷத। தாதாம்ஹ்ரிதர்ஸநாத் அத்ய। ௭௯।௰௰௬
பாவிேதா அஸ்ம்ய் அபகல்மஷ:। திவஸ் ச்யுேதா அப்ய் அஹம் மந்ேய।
௭௯।௰௰௭
ஸக்ராத் ஆத்மாநம் உத்தமம்। த்ைரேலாக்யஹரணாத் உக்ரம்।
௭௯।௰௰௭
யத் து:கம் ஹ்ருதேய மம। தச் சாந்தம் பாதஸம்பர்கம்। ௭௯।௰௰௮
உேபத்ய பவேதா மம। இதி ஸம்ஸ்தூய தத்த்வா ச। ௭௯।௰௰௮
வராஸநம் உதாரதீ:। பர்யுபாஸத ராேஜந்த்ேரா। ௭௯।௰௰௯
ைதத்யாநாம் ஸ்வபிதாமஹம்। தம் உபாஸநம்ீ அநக:। ௭௯।௰௰௯
ப்ரஹ்ராேதா ைதத்யபுங்கவ:। ப்ரத்யுவாச மஹாத்மாநம்। ௭௯।௰௧
பலிம் ைவேராசநிம் ந்ருப। பேல ப்ரூஹி யதர்தம் ேத। ௭௯।௰௧
ஸ்ம்ருேதா அஹம் அரிஸூதந। தேவாபகாரேண வித்தி। ௭௯।௰௧௧
தர்ேம மாம் ஸதேதாத்யதம்। தாேதநாஹம் புரா ஜ்ஞப்ேதா। ௭௯।௰௧௧
ப்ரஷ்டராஜ்ேயந ேத பேல। ஸம்ஸ்மர்தவ்ேயா அஸ்ம்ய் அஸம்திக்தம்।
௭௯।௰௧௨
ஸ்ேரேயா வŠயாம்ய் அஹம் ததா। ேஸா அஹம் ராஜ்யபரிப்ரஷ்ேடா।
௭௯।௰௧௨
விஷயாஸக்திஹ்ருஷித:। இந்த்ரிையர் அவஸஸ் தாத। ௭௯।௰௧௩

யத் கார்யம் தத் ப்ரஸாதி மாம்। யதி மத் வசநம் தாத। ௭௯।௰௧௩
ஸ்ரத்ததாஸி ஹிதம் பேல। தம் ேதவேதவம் அநகம்। ௭௯।௰௧௪
ப்ரயாஹி ஸரணம் ஹரிம்। ஸப்தாதிஷ்வ் அநுரக்தாநி। ௭௯।௰௧௪
தவாக்ஷாண்ய் அஸுராதிப। ஸப்தாதயஸ் ச ேகாவிந்ேத। ௭௯।௰௧௫
ஸந்த்ய் ஏவ வ்யவஹாரத:। கீதைகர் கீயதாம் விஷ்ணுர்। ௭௯।௰௧௫
மேநாஹாரிபிர் ஆத்மந:। அந்யாலம்பநதஸ் சித்தம்। ௭௯।௰௧௬
ஆக்ருஷ்யாதத்ஸ்வ ேகஸேவ। கந்தாந் உதாராந் பக்ஷாம்ஸ் ச।
௭௯।௰௧௬
ஸ்ரேஜா வாஸாம்ஸி சாஸுர। ப்ரயச்ச ேதவேதவாய। ௭௯।௰௧௭
தச்ேசஷாண்ய் உபயுஞ்ஜ ச। யத்ர யத்ர ச ேத ப்ரீதிர்। ௭௯।௰௧௭
விஷேய திதிேஜஸ்வர। தத் தம் அச்யுதம் உத்திஸ்ய। ௭௯।௰௧௮
விப்ேரப்ய: ப்ரதிபாதய। ஸர்வபூேதஷு ேகாவிந்ேதா। ௭௯।௰௧௮
பஹுரூேபா வ்யவஸ்தித:। இதி மத்வா மஹாபாேஹா। ௭௯।௰௧௯
ஸர்வபூதஹிேதா பவ। ஆத்மாநம் அச்யுதம் வித்தி। ௭௯।௰௧௯
ஸத்ரும் ச ரிபும் ஆத்மந:। இதிஜ்ஞாநவத: ேகாபஸ்। ௭௯।௰௨
தவ குத்ர பவிஷ்யதி। ஸப்தாதேயா ேய விஷயா। ௭௯।௰௨
விஷயீ யஸ் ச புருஷ:। தத் அேஸஷம் விஜாநீஹி। ௭௯।௰௨௧
ஸ்வரூபம் பரமாத்மந:। பரமாத்மா ச பகவாந்। ௭௯।௰௨௧
விஷ்வக்ேஸேநா ஜநார்தந:। தத்பக்திமாந் பாகவேதா। ௭௯।௰௨௨
நால்பபுண்ேயா ஹி ஜாயேத। பகவச்சாஸநாலம்ப।ீ ௭௯।௰௨௨
பகவச்சாஸநப்ரிய:। பகவத்பக்திம் ஆஸ்தாய। ௭௯।௰௨௩
வத்ஸ பாகவேதா பவ। பகவாந் பூதக்ருத் பவ்ேயா। ௭௯।௰௨௩

பூதாநாம் ப்ரபேவா ஹி ய:। பாேவந தம் பஜஸ்ேவஸம்। ௭௯।௰௨௪
பவபங்ககரம் ஹரிம்। பஜஸ்வ பாேவந விபும்। ௭௯।௰௨௪
பகவந்தம் மேஹஸ்வரம்। தேதா பாகவேதா பூத்வா। ௭௯।௰௨௫
பவபந்தாத் விேமாŠயேஸ। ஸர்வபூேத மநஸ் தஸ்மிந்। ௭௯।௰௨௫
ஸமாதாய மஹாமேத। ப்ராப்ஸ்யேஸ பரமாஹ்லாத । ௭௯।௰௨௬
காரிணம்ீ பரமாம் கதிம்। யத்ராநந்தபரம் ஜ்ஞாநம்। ௭௯।௰௨௬
ஸர்வது:கவிவர்ஜிதம்। தத்ர சித்தம் ஸமாேவஷ்டும்। ௰௭௯।௧௩௩
ந ஸக்ேநாதி பவாந் யதி। ததப்யாஸபரஸ் தஸ்மிந்। ௭௯।௰௨௭
குரு ேயாகம் திவாநிஸம்। தத்ராப்ய் அஸாமர்த்யவத:। ௭௯।௰௨௭
க்ரியாேயாேகா மஹாத்மநா। ப்ரஹ்மணா ய: ஸமாக்யாதஸ்।
௭௯।௰௨௮
தந்மநா: ஸததம் பவ। கேராஷி யாநி கர்மாணி। ௭௯।௰௨௮
தாநி ேதேவ ஜகத்பெதௗ। ஸமர்பயஸ்வ பத்ரம் ேத। ௭௯।௰௨௯
தத: கர்ம ப்ரஹாஸ்யஸி। க்ஷணகர்மா ீ மஹாபாேஹா। ௭௯।௰௨௯
ஸுபாஸுபவிவர்ஜித:। லயம் அப்ேயதி ேகாவிந்ேத। ௭௯।௰௩
தத் ப்ரஹ்ம பரமம் மஹத்। ேபாக்தும் இச்சஸி ைதத்ேயந்த்ர। ௭௯।௰௩
கர்மணாம் அத ேசத் பலம்। ததஸ் தம் அர்சேயேஸஸம்। ௭௯।௰௩௧
தத: கர்மபேலாதய:। ேயா அர்தம் இச்சதி ைதத்ேயந்த்ர। ௭௯।௰௩௧
ஸ ஸமாராத்ய ேகஸவம்। நி:ஸம்ஸயம் அவாப்ேநாதி। ௭௯।௰௩௨
துந்துமாேரா யதா ந்ருப:। அத்ரிேகஹஸமுத்பூதம்। ௭௯।௰௩௨
தத்தாத்ேரயஸ்வரூபிணம்। ராஜ்யம் ஆராத்ய ேகாவிந்தம்। ௭௯।௰௩௩
கார்தவர்யஸ்ீ ததாப்தவாந்। தர்மம் க்ருஷ்ணப்ரஸாேதந। ௭௯।௰௩௩
முத்கேலா ஜாஜலி: குணி:। ப்ராபுர் அந்ேய ததா காமாந்। ௭௯।௰௩௪

நேரந்த்ரா நஹுஷாதய:। ஜநக: ஸுத்வேஜா நாம। ௭௯।௰௩௪
ஜநக: ஸமிதித்வஜ:। தர்மத்வஜஸ் ததா முக்திம்। ௭௯।௰௩௫
ேகஸவாராதநாத் கத:। ததாந்ேய முநேயா ைதத்ய। ௭௯।௰௩௫
ராஜாநஸ் ச ஸஹஸ்ரஸ:। ப்ராபுர் முக்திம் மஹாபாகா:। ௭௯।௰௩௬
க்ருத்வா பக்திம் ஜநார்தேந। யதா ஹி ஜ்வலிேதா வஹ்நிஸ்।
௭௯।௰௩௬
தேமாஹாநிம் ததர்திநாம்। ஸதஹாநிம் ீ ததாந்ேயஷாம்। ௭௯।௰௩௭
ஸ்ேவதம் ஸ்ேவதாபிலாஷிணாம்। கேராதி க்ஷுதிதாநாம் ச। ௭௯।௰௩௭
ேபாஜ்யபாகம் தேதாத்கடம்। தைதவ காமாந் பூேதஸ:। ௭௯।௰௩௮
ஸ ததாதி யேதப்ஸிதாந்। தத் ஏதத் அகிலம் ஜ்ஞாத்வா। ௭௯।௰௩௮
யத் தேவஷ்டம் ஸ்ருணுஷ்வ தத்। கல்பத்ருமாத் இவ ஹேரர்।
௭௯।௰௩௯
யத் ேத மநஸி வர்தேத। ஏதத் ப்ரஹ்ராதவசநம்। ௭௯।௰௩௯
நிஸாம்ய திதிேஜஸ்வர:। ப்ரத்யுவாச மஹாபாகம்। ௭௯।௰௪
ப்ரணிபத்ய பிதாமஹம்। ஸம்ப்ராப்தஸ்யாம்ருதஸ்ேயவ। ௭௯।௰௪
தவ வாக்யஸ்ய நாஸ்தி ேம। த்ருப்திர் ஏதத் அஹம் தாத। ௭௯।௰௪௧
ஸ்ேராதும் இச்சாமி விஸ்தராத்। அக்ஷீணகர்மா புருேஷா। ௭௯।௰௪௧
மரேண ஸமுபஸ்திேத। கீத்ருஸம் ேலாகம் ஆயாதி। ௭௯।௰௪௨
ய: ஸம்ஸ்மரதி ேகஸவம்। யதா ச வாஸுேதவஸ்ய। ௭௯।௰௪௨
ஸ்மரணம் தாத மாநைவ:। முமூர்ஷுபி: ப்ரகர்தவ்யம்। ௭௯।௰௪௩
தந் மமாசŠவ விஸ்தராத்। கிம் ஜப்யம் கீத்ருஸம் ரூபம்। ௭௯।௰௪௩
ஸ்மர்தவ்யம் ச ஹேரஸ் ததா। கதம் த்ேயயம் ச வித்வத்பிஸ்।
௭௯।௰௪௪

தத் ஆசŠவ யதாததம்। ஸாது வத்ஸ த்வயா ப்ரஸ்ந:। ௭௯।௰௪௪
ஸுகுஹ்ேயா அயம் உதாஹ்ருத:। தபஸாம் தாத ஸர்ேவஷாம்।
௭௯।௰௪௫
தேபா நாநஸநாத் பரம்। கத்யேத ச மஹாபாேஹா। ௭௯।௰௪௫
ஸம்வாேதா அயம் புராதந:। பகீரதஸ்ய ராஜர்ேஷர்। ௭௯।௰௪௬
ப்ரஹ்மணஸ் ச ப்ரஜாபேத:। அதீத்யாமரேலாகம் ச। ௭௯।௰௪௬
கவாம் ேலாகம் ச மாநத। க்ருஷிேலாகம் ச ேயா அகச்சத்। ௭௯।௰௪௭
பகீரத இதி ஸ்ருத:। தம் த்ருஷ்ட்வா ஸ வச: ப்ராஹ। ௭௯।௰௪௭
ப்ரஹ்மா ேலாகபிதாமஹ:। கதம் பகீரதாகாஸ் த்வம்। ௭௯।௰௪௮
இமம் ேதஸம் துராஸதம்। ந ஹி ேதவா ந கந்தர்வா। ௭௯।௰௪௮
ந மநுஷ்யா பகீரத। ஆயாந்த்ய் அதப்ததபஸ:। ௭௯।௰௪௯
கதம் ைவ த்வம் இஹாகத:। நி:ஸங்கம் அந்நம் அததம் ப்ராஹ்மேணப்ய:।
௭௯।௰௪௯
ஸதம் ஸஹஸ்ராணி ஸைதவ தாயம்। ப்ராஹ்மணம் வ்ரதம் நித்யம்
ஆஸ்தாய வித்வந்। ௭௯।௰௫
ந த்வ் ஏவாஹம் தஸ்ய பலாத் இஹாகாம்। தைஸகராத்ராந் தஸ
பஞ்சராத்ராந்। ௭௯।௰௫
ஏகாதைஸகாதஸகாம்ஸ் தைதவ। ஜ்ேயாதிஷ்ேடாமாநாம் ச ஸதம் யத்
இஷ்டம்। ௭௯।௰௫௧
பேலந ேதநாபி ந சாகேதா அஹம்। யச் சாவஸம் ஜாஹ்நவதீீரநித்ய:।
௭௯।௰௫௧
ஸதம் ஸமாஸ் தப்யமாநஸ் தேபா அஹம்। ப்ரதாய
தத்ராஸ்வதரீஸஹஸ்ரம்। ௭௯।௰௫௨

பேலந தஸ்யாபி ந சாகேதா அஹம்। தஸ ேதநுஸஹஸ்ராணி।
௭௯।௰௫௨
மணிரத்நவிபூஷிதா:। தஸார்புதாநி சாஸ்வாநாம்। ௭௯।௰௫௩
அயுதாநி ச விம்ஸதி:। புஷ்கேரஷு த்விஜாதிப்ய:। ௭௯।௰௫௩
ப்ராதாம் காஸ் ச ஸஹஸ்ரஸ:। ஸுவர்ணசந்த்ேராத்தமதாரிணநாம் ீ ।
௭௯।௰௫௩
கந்ேயாத்தமாநாம் அததம் ஸ்ரக்விணநாம் ீ । ஷஷ்டிம் ஸஹஸ்ராணி
விபூஷிதாநாம்। ௭௯।௰௫௪
ஜாம்பூநைதர் ஆபரைணர் ந ேதந। தஸார்புதாந்ய் அததம் ேகாஸேவ யாஸ்
த்வ்। ௭௯।௰௫௪
ஏைககேஸா தஸ கா ேலாகநாத। ஸமாநவத்ஸா: பயஸா ஸமந்விதா:।
௭௯।௰௫௫
ஸுவர்ணகாம்ஸ்ேயாபதுஹா ந ேதந। அஹந்ய் அஹநி விப்ேரஷு।
௭௯।௰௫௫
ஏைககம் த்ரிம்ஸேதா அததம்। க்ருஷ்டீநாம் க்ஷீரதாத்ரீணாம்।
௭௯।௰௫௬
ேராஹிணநாம் ீ ஸதாநி ச। ேதாக்த்ரீணாம் ைவ கவாம் ைசவ।
௭௯।௰௫௬
ப்ரயுதாநி தைஸவ து। ப்ராதாம் தஸகுணம் ப்ரஹ்மந்। ௭௯।௰௫௭
ந ச ேதநாஹம் ஆகத:। ேகாடீஸ் ச காஞ்சநஸ்யாஷ்ெடௗ। ௭௯।௰௫௭
ப்ராதாம் ப்ரஹ்மந் தஸ த்வ் அஹம்। ஏைககஸ்மிந் க்ரெதௗ ேதந।
௭௯।௰௫௮
பேலநாஹம் ந சாகத:। வாஜிநாம் ஸ்யாமகர்ணாநாம்। ௭௯।௰௫௮
ஹரிதாநாம் பிதாமஹ। ப்ராதாம் ேஹமஸ்ரஜாம் ப்ரஹ்மந்।
௭௯।௰௫௯

ேகாடீர் தஸ ச ஸப்த ச। ஈஷாதந்தாந் மஹாகாயாந்। ௭௯।௰௫௯
காஞ்சநஸ்ரக்விபூஷிதாந்। பத்நீவத: ஸஹஸ்ராணி। ௭௯।௰௬
ப்ராயச்சம் தஸ ஸப்த ச। அலம்க்ருதாநாம் ேதேவஸ। ௭௯।௰௬
திவ்ைய: கநகபூஷைண:। ரதாநாம் காஞ்சநாங்காநாம்। ௭௯।௰௬௧
ஸஹஸ்ராண்ய் அததம் தஸ। ஸப்த சாந்யாநி யுக்தாநாம்। ௭௯।௰௬௧
வாஜிபி: ஸமலம்க்ருைத:। தக்ஷிணாவயவா: ேகசித்। ௭௯।௰௬௧
ேதைவர் ேய ஸம்ப்ரகீர்திதா:। வாஜேபேயஷு தஸஸு। ௭௯।௰௬௨
ப்ராதாம் ேதநாபி நாகத:। ஸக்ரதுல்யப்ரபாவாநாம்। ௭௯।௰௬௨
ஈஜ்யயா விக்ரேமண ச। ஸஹஸ்ரம் நிஷ்ககண்டாநாம்। ௭௯।௰௬௩
ப்ரததந் தக்ஷிணாம் அஹம்। விஜித்ய ந்ருபதீந் ஸர்வாந்। ௭௯।௰௬௩
மைகர் இஷ்ட்வா பிதாமஹ। அஷ்டாப்ேயா ராஜஸூேயப்ேயா।
௭௯।௰௬௪
ந ச ேதநாஹம் ஆகத:। ஸ்ேராதஸ் ச யாவத் கங்காயாம்। ௭௯।௰௬௪
சிந்நம் ஆஸஜ்ீ ஜகத்பேத। தக்ஷிணாபி: ப்ரவ்ருத்தாபிர்। ௭௯।௰௬௫
மம நாகம் ச தத்க்ருேத। வாஜிநாம் ச ஸஹஸ்ேர த்ேவ। ௭௯।௰௬௫
ஸுவர்ணமணிபூஷிேத। வாரணாநாம் ஸதம் சாஹம்। ௭௯।௰௬௬
ஏைககஸ்ய த்ரிதாததம்। வரம் க்ராமஸதம் சாஹம்। ௭௯।௰௬௬
ஏைககஸ்ய த்ரிதாததம்। தபஸ்வ ீநியதாஹார:। ௭௯।௰௬௬
ஸமம் ஆஸ்தாய வாக்யத:। தீர்ககாலம் ஹிமவதி। ௭௯।௰௬௭
கங்காயாஸ் ச துருத்ஸஹாம்। மூர்த்நா தாராம் மஹாேதவ:।
௭௯।௰௬௭
ஸிரஸா யாம் அதாரயத்। ந ேதநாப்ய் அஹம் ஆகச்சம்। ௭௯।௰௬௮

பேலேநஹ பிதாமஹ। ஸம்யாேக்ஷைபர் அயஜம் ேதவேதவ।
௭௯।௰௬௮
ததா க்ரதூநாம் அயுைதஸ் சாபி யத்த:। த்ரேயாதஸத்வாதஸாைஹஸ் ச
ேதவ। ௭௯।௰௬௯
ஸபுண்டரீைகர் ந ச ேதஷாம் பேலந। அஷ்ெடௗ ஸஹஸ்ராணி ககுத்மிநாம்
அஹம்। ௭௯।௰௬௯
ஸுக்லர்ஷபாணாம் அதம் ப்ராஹ்மேணப்ய:। பத்நீஸ் ைசஷாம் அததம்
நிஷ்ககண்டீஸ்। ௭௯।௰௭
ேதஷாம் பேலேநஹ ந சாகேதா அஸ்மி। ஹிரண்யரத்நரசிதாந்।
௭௯।௰௭
அததம் ரத்நபர்வதாந்। தநதாந்யஸஹஸ்ராம்ஸ் ச। ௭௯।௰௭௧
க்ராமாஞ் ஸதஸஹஸ்ரஸ:। ஸதம் ஸதாநாம் க்ருஷ்டீநாம்। ௭௯।௰௭௧
அததம் சாப்ய் அதந்த்ரித:। இஷ்ட்வாேநைகர் மஹாயஜ்ைஞர்।
௭௯।௰௭௨
ப்ராஹ்மேணப்ேயா தேநந ச। ஏகாதஸாைஹர் அயஜம் ஸுதக்ஷிைணர்।
௭௯।௰௭௨
த்விர் த்வாதஸாைஹர் அஸ்வேமைதஸ் ச ேதவ। ப்ருஹத்பிர்
த்வாதஸாைஹஸ் ச। ௭௯।௰௭௩
அஸ்வேமைத: பிதாமஹ। அர்காயைண: ேஷாடஸபிஸ் ச ப்ரஹ்மம்ஸ்।
௰௭௯।௧௩௫
ேதஷாம் பேலேநஹ ந சாகேதா அஸ்மி। நிஷ்க்ராமகம் சாப்ய் அததம்
ேயாஜநாநாம்। ௭௯।௰௭௩
த்விர் விஸ்தீர்ணம் காஞ்சநபாதபாநாம்। வநம் சூதாநாம் ரத்நவிபூஷிதாநாம்।
௭௯।௰௭௪

ந ைசவ ேதஷாம் ஆகேதா அஹம் பேலந। துராயணம் து வ்ரதம்
அப்ரத்ருஷ்யம்। ௭௯।௰௭௪
அக்ேராதேநா அகரவம் த்ரிம்ஸேதா அப்தாந்। ஸதம் கவாம் அஷ்ட ஸதாநி
சாஹம்। ௭௯।௰௭௫
திேந திேந ப்ராததம் ப்ராஹ்மேணப்ய:। பயஸ்விநீநாம் அத ேராஹிணநாம் ீ ।
௭௯।௰௭௫
தைதவ சாப்ய் அநடுஹாம் ேலாகநாத। ப்ராதாம் நித்யம் ப்ராஹ்மேணப்ய:
ஸுேரஸ। ௭௯।௰௭௬
ேநஹாகதஸ் ேதந பேலந சாஹம்। த்ரிம்ஸதம் விதிவத் வஹ்நீந்।
௭௯।௰௭௬
அயஜம் யச் ச நித்யஸ:। அஷ்டாபி: ஸர்வேமைதஸ் ச। ௭௯।௰௭௭
ந்ருேமைதர் த்விகுைணஸ் ததா। தஸபிர் விஸ்வஜித்பிஸ் ச।
௭௯।௰௭௭
ஸ்ேதாைபர் அஷ்டாதேஸாத்தைர:। ந ைசவ ேதஷாம் ேதேவஸ।
௭௯।௰௭௮
பேலநாஹம் இஹாகமம்। ஸரவ்யாம் பாஹுதாயாம் ச। ௭௯।௰௭௮
கயாயாம் அத ைநமிேஷ। கவாம் ஸதாநாம் அயுதம்। ௭௯।௰௭௯
அததம் ந ச ேதந ைவ। உத்க்ராந்திகாேல ேகாவிந்தம்। ௭௯।௰௭௯
ஸ்மரந்ந் அநஸநஸ்தித:। த்யக்தவாந் அஸ்மி யத் ேதஹம்। ௭௯।௰௮
ேதேநத்ருக் ப்ராப்தவாந் பலம்। ஏவம் ஏதத் இதீத்ய் ஆஹ। ௭௯।௰௮
ப்ரஹ்மா ேலாகபிதாமஹ:। பகீரதம் மஹீபாலம்। ௭௯।௰௮௧
புண்யேலாகநிவாஸிநம்। தத் ஏதத் உக்தம் தபஸாம்। ௭௯।௰௮௧
ஸமஸ்தாநாம் மஹாமேத। குைணர் அநஸநம் ப்ரஹ்மா। ௭௯।௰௮௨
ப்ரதாநதரம் அப்ரவத்ீ। த்யஜத்ய் அநஸநஸ்ேதா ஹி। ௭௯।௰௮௨

ப்ராணாந் ய: ஸம்ஸ்மரந் ஹரிம்। ஸ யாதி விஷ்ணுஸாேலாக்யம்।
௭௯।௰௮௩
யாவத் இந்த்ராஸ் சதுர்தஸ। அதீதாநாகதாநீஹ। ௭௯।௰௮௩
குலாநி புருஷர்ஷப। புநாத்ய் அநஸநம் குர்வந்। ௭௯।௰௮௪
ஸப்த ஸப்த ச ஸப்த ச। ஸ்ேலாகாஸ் சாத்ர மஹாபாேஹா।
௭௯।௰௮௪
ஸ்ரூயந்ேத யாந் பகீரத:। ஜகாத ப்ரஹ்மேணா ேலாகம்। ௭௯।௰௮௫
உேபத: ப்ருதிவபதி ீ :। ப்ரஹ்ம ப்ரஹ்மமயம் விஷ்ேணார்। ௭௯।௰௮௫
ய: பதம் பரமாத்மந:। ஸம்ஸ்மரம்ஸ் த்யஜதி ப்ராணாந்। ௭௯।௰௮௬
ஸ விஷ்ணும் ப்ரவிஸத்ய் அஜம்। ய: க்ஷீணகர்மா ேபாேகந।
௭௯।௰௮௬
தபஸா வாபி ஸம்ஸ்மரந்। கேராதி காலம் காேலந। ௭௯।௰௮௭
ந பரிச்ேசத்யேத ஹி ஸ:। அக்ஷீணகர்மா மரேண। ௭௯।௰௮௭
ஸம்ஸ்மரந் ேதவம் அச்யுதம்। யதா த்வம் ஏவ ேதவாநாம்। ௭௯।௰௮௮
ேலாேக ேபாகாந் உபாஸ்நுேத। க்ஷுதிேத அபி குேல கஸ்சிஜ்।
௭௯।௰௮௮
ஜாேயயம் கர்மண: க்ஷேய। மநுஷ்ேயா ேயந ஸர்ேவஸம்। ௭௯।௰௮௯
சிந்தேயயம் ஸதா ஹரிம்। தச்சிந்தயாதுநாேஸஷ । ௭௯।௰௮௯
புண்யபாபவிவர்ஜித:। மரேண தந்மநஸ் தத்ர। ௭௯।௰௯
லயம் ஏத்ய தம் ஆப்நுயாத்। கர்மபூெமௗ ஸமஸ்தாநாம்। ௭௯।௰௯
கர்மணாம் உத்தேமாத்தமம்। யத் அந்தகாேல புருைஷ:। ௭௯।௰௯௧
ஸ்மர்யேத புருேஷாத்தம:। இத்ய் ஏதாந் ஆஹ ராஜர்ஷி:। ௭௯।௰௯௧

ஸ்ேலாகாந் ஆத்ேயா பகீரத:। விஷ்ணுஸம்ஸ்மரணாத் ப்ராப்ய।
௭௯।௰௯௨
ேலாகாந் அநஸேந ம்ருத:। ஏவம் அத்யந்தஸஸ்தாநாம்। ௭௯।௰௯௨
கர்மணாம் அஸுேரஸ்வர। நாந்யத் உத்க்ருஷ்டம் உத்திஷ்டம்।
௭௯।௰௯௩
தஜ்ஜ்ைஞர் அநஸநாத் பரம்। தஸ்யாஹம் லக்ஷணம் வŠேய।
௭௯।௰௯௩
யச் ச ஜப்யம் முமூர்ஷுபி:। யாத்ருக்ரூபஸ் ச பகவாம்ஸ்। ௭௯।௰௯௪
சிந்தநீேயா ஜநார்தந:। ஆஸந்நம் ஆத்மந: காலம்। ௭௯।௰௯௪
ஜ்ஞாத்வா ப்ராஜ்ேஞா மஹாஸுர। நிர்தூதமலேதாஷஸ் ச। ௭௯।௰௯௫
ஸ்நாேதா நியதமாநஸ:। ஸமப்யர்ச்ய ஹ்ருஷீேகஸம்। ௭௯।௰௯௫
புஷ்பதூபாதிபிஸ் தத:। ப்ரணிபாைத: ஸ்தைவ: புண்ையர்। ௭௯।௰௯௬
த்யாநேயாைகஸ் ச பூஜேயத்। தத்த்வா தாநம் ச விப்ேரப்ேயா।
௭௯।௰௯௬
விகலாதிப்ய ஏவ ச। ஸபாப்ரபாப்ராஹ்மெணௗக । ௭௯।௰௯௭
ேதெவௗகாத்யுபேயாகி ச। பந்துபுத்ரகலத்ெரௗக । ௭௯।௰௯௭
ேக்ஷத்ரதாந்யதநாதிஷு। மித்ரவர்ேக ச ைதத்ேயந்த்ர। ௭௯।௰௯௮
மமத்வம் விநிவர்தேயத்। மித்ராந் அமித்ராந் மத்யஸ்தாந்। ௭௯।௰௯௮
பராந் ஸ்வாம்ஸ் ச புந: புந:। அப்யர்தேநாபசாேரண। ௭௯।௰௯௯
க்ஷாமேயத் குக்ருதம் ஸ்வகம்। ததஸ் ச ப்ரயத: குர்யாத்। ௭௯।௰௯௯
உத்ஸர்கம் ஸர்வகர்மணாம்। ஸுபாஸுபாநாம் ைதத்ேயந்த்ர। ௭௯।௧
வாக்யம் ேசதம் உதாஹேரத்। பரித்யஜாம்ய் அஹம் ேபாகாம்ஸ்।
௭௯।௧

த்யஜாமி ஸுஹ்ருேதா அகிலாந்। ேபாஜநாதி மேயாத்ஸ்ருஷ்டம்।
௭௯।௧௰௧
உத்ஸ்ருஷ்டம் அநுேலபநம்। ஸ்ரக்பூஷணாதிகம் ேகயம்। ௭௯।௧௰௧
தாநம் ஆதாநம் ஏவ ச। ேஹாமாதய: பதார்தா ேய। ௭௯।௧௰௨
யாஸ் ச நித்யக்ரியா மம। ைநமித்திகாஸ் ததா காம்யா। ௭௯।௧௰௨
வர்ணதர்மாஸ் தேதாஜ்ஜிதா:। குணதர்மாதேயா தர்மா। ௭௯।௧௰௩
யாஸ் ச காஸ்சிந் மம க்ரியா:। பத்ப்யாம் கராப்யாம் விஹரந்।
௭௯।௧௰௩
குர்வந் வா கர்ம ந த்வ் அஹம்। கரிஷ்ேய ப்ராணிநாம் படாம் ீ ।
௭௯।௧௰௪
ப்ராணிந: ஸந்து நிர்பயா:। நபஸி ப்ராணிேநா ேய து। ௭௯।௧௰௪
ேய ஜேல ேய ச பூதேல। க்ஷிேதர் அந்தரகா ேய ச। ௭௯।௧௰௫
ேய ச பாஷாணஸம்புேட। ேய தாந்யாதிஷு வஸ்த்ேரஷு। ௭௯।௧௰௫
ஸயேநஷ்வ் ஆஸேநஷு ச। ேத ஸ்வபந்து விபுத்யந்து। ௭௯।௧௰௬
ஸுகம் மத்ேதா பயம் விநா। ந ேம அஸ்தி பாந்தவ: கஸ்சித்।
௭௯।௧௰௬
விஷ்ணும் முக்த்வா ஜகத்குரும்। மித்ரபேக்ஷ ச ேம விஷ்ணுர்।
௭௯।௧௰௭
அதஸ் ேசார்த்வம் ததாக்ரத:। பார்ஸ்வேதா மூர்த்நி ப்ருஷ்ேட ச।
௭௯।௧௰௭
ஹ்ருதேய வாசி சக்ஷுஷி। ஸ்ேராத்ராதிஷு ச ஸர்ேவஷு। ௭௯।௧௰௮
மம விஷ்ணு: ப்ரதிஷ்டித:। இதி ஸர்வம் ஸமுத்ஸ்ருஜ்ய। ௭௯।௧௰௮
த்யாத்வா ஸர்வத்ர சாச்யுதம்। வாஸுேதேவத்ய் அவிரதம்। ௭௯।௧௰௯

நாம ேதவஸ்ய கீர்தயந்। தக்ஷிணாக்ேரஷு தர்ேபஷு। ௭௯।௧௰௯
ஸயதீ ப்ராச்சிராஸ் தத:। உதச்சிரா வா ைதத்ேயந்த்ர। ௭௯।௧௧
சிந்தயஞ் ஜகத: பதிம்। விஷ்ணும் ஜிஷ்ணும் ஹ்ருஷீேகஸம்। ௭௯।௧௧
ேகஸவம் மதுஸூதநம்। நாராயணம் நரம் க்ருஷ்ணம்। ௭௯।௧௧௧
வாஸுேதவம் ஜநார்தநம்। வாராஹம் யஜ்ஞபுருஷம்। ௭௯।௧௧௧
புண்டரீகாக்ஷம் அச்யுதம்। வாமநம் ஸ்ரீதரம் ஸ்ரீஸம்। ௭௯।௧௧௨
ந்ருஸிம்ஹம் அபராஜிதம்। பத்மநாபம் அஜம் ெஸௗரிம்। ௭௯।௧௧௨
தாேமாதரம் அேதாக்ஷஜம்। ஸர்ேவஸ்வேரஸ்வரம் ஸுத்தம்। ௭௯।௧௧௩
அநந்தம் ராமம் ஈஸ்வரம்। சக்ரிணம் கதிநம் ஸார்ங்கிம்। ௭௯।௧௧௩
ஸங்கிநம் கருடத்வஜம்। கிரீடெகௗஸ்துபதரம்। ௭௯।௧௧௪
ப்ரணமாம்ய் அஹம் அவ்யயம்। அஹம் அத்ர ஜகந்நாேத। ௭௯।௧௧௪
மயி சாஸ்து ஜநார்தந:। ஆவேயார் அந்தரம் மாஸ்து। ௭௯।௧௧௫
ஸமீரநபேஸார் இவ। அயம் விஷ்ணுர் அயம் ெஸௗரிர்। ௭௯।௧௧௫
அயம் க்ருஷ்ண: புேரா மம। நீேலாத்பலதலஸ்யாம:। ௭௯।௧௧௬
பத்மபத்த்ேராபேமக்ஷண:। ஏஷ பஸ்யது மாம் ஈஸ:। ௭௯।௧௧௬
பஸ்யாம்ய் அஹம் அேதாக்ஷஜம்। யேதா ந வ்யதிரிக்ேதா அஹம்।
௭௯।௧௧௭
யந்மேயா அஹம் யதாஸ்ரய:। இத்தம் ஜபந்ந் ஏகமநா:। ௭௯।௧௧௭
ஸ்மரந் ஸர்ேவஸ்வரம் ஹரிம்। ஆஸநீ : ஸுகது:ேகஷு। ௭௯।௧௧௮
ஸேமா மித்ராஹிேதஷு ச। ஓம் நேமா வாஸுேதவாேயத்ய்।
௭௯।௧௧௮
ஏதத் வா ஸததம் வதந்। யத் ேவாதீரயிதும் நாம। ௭௯।௧௧௯
ஸமர்தஸ் தத் உதீரயந்। த்யாேயத ேதவேதவஸ்ய। ௭௯।௧௧௯

ரூபம் விஷ்ேணார் மேநாரமம்। ப்ரஸாந்தேநத்ரப்ரூவக்த்ரம்। ௭௯।௧௧௯
ஸங்கசக்ரகதாதரம்। ஸ்ரீவத்ஸவக்ஷஸம் ைசவ। ௭௯।௧௨
சதுர்பாஹும் கிரீடிநம்। பதாம்பரதரம் ீ விஷ்ணும்। ௭௯।௧௨
சாருேகயூரதாரிணம்। சிந்தேயச் ச ததா ரூபம்। ௭௯।௧௨௧
மந: க்ருத்ைவகநிஸ்சயம்। யாத்ருேஸ வா மந: ஸ்ைதர்யம்। ௭௯।௧௨௧
ரூேப பத்நாதி சக்ரிண:। தத் ஏவ சிந்தயந் நாம। ௭௯।௧௨௨
வாஸுேதேவதி கீர்தேயத்। இத்தம் ஜபந் ஸ்மரந் ேவத்தம்। ௭௯।௧௨௨
ஸ்வரூபம் பரமாத்மந:। ஆ ப்ராேணாபரமாத் வரஸ்ீ । ௭௯।௧௨௩
தச்சித்தஸ் தத்பராயண:। நிர்விகல்ேபந மநஸா। ௭௯।௧௨௩
ய: ஸ்மேரத் புருேஷாத்தமம்। ஸர்வபாதகயுக்ேதா அபி। ௭௯।௧௨௪
புருஷ: புருஷர்ஷப। ப்ரயாதி ேதவேதேவேஸ। ௭௯।௧௨௪
லயம் ஈட்யதேம அச்யுேத। யதாக்நிஸ் த்ருணஜாலாநி। ௭௯।௧௨௪
தஹத்ய் அநிலஸம்கத:। ததாநஸநஸம்கல்ப:। ௭௯।௧௨௫
பும்ஸாம் பாபம் அஸம்ஸயம்। விஷ்ேணா: ஸம்ஸ்மரேண ப்ராப்ய।
௭௯।௧௨௫
ேலாகம் அநஸேந ம்ருத:। ஏவம் அத்யந்தஸஸ்தாநாம்। ௰௭௯।௧௩௬
கர்மணாம் அஸுேரஸ்வர। நாஸ்தி ஸத்யாத் பேரா தர்ேமா।
௰௭௯।௧௩௬
நாஸ்த்ய் அதர்ம ததாந்ருதாத்। நாஸ்தி வித்யாஸமம் சக்ஷுஸ்।
௭௯।௧௨௬
தேபா நாநஸநாத் பரம்। நாஸ்தி ஜ்ஞாநஸமம் தாநம்। ௭௯।௧௨௬
ந ஸம்ேதாஷஸமம் ஸுகம்। ந ைசேவர்ஷ்யாஸமம் து:கம்। ௭௯।௧௨௭
தேபா நாநஸநாத் பரம்। நாஸ்த்ய் அேராகஸமம் தந்யம்। ௭௯।௧௨௭

நாஸ்தி கங்காஸமா ஸரித்। நாஸ்தி விஷ்ணுஸமம் த்ேயயம்।
௭௯।௧௨௮
தேபா நாநஸநாத் பரம்। உத்க்ராந்திகாேல பூதாநாம்। ௭௯।௧௨௮
முஹ்யந்ேத சித்தவ்ருத்தய:। ஜராவ்யாதிவிதீநாநாம்। ௭௯।௧௨௯
கிமு வ்யாத்யாதிேதாஷத:। அத்யந்தவயஸா வ்ருத்த்யா। ௭௯।௧௨௯
வ்யாதிநா சாதிபடிதீ :। யதி ஸ்தாதும் ந ஸக்ேநாதி। ௭௯।௧௩
க்ஷிதிஸ்ேத தர்பஸம்ஸ்தேர। தத் கிம் அந்ேயா அப்ய் உபாேயா அஸ்தி।
௭௯।௧௩
ந வாநஸநகர்மணி। விபல்யம் ேயந நாப்ேநாதி। ௭௯।௧௩௧
தந் ேம ப்ரூஹி பிதாமஹ। நாத்ர பூமிர் ந ச குஸா:। ௭௯।௧௩௧
ஸம்ஸ்தரஸ் ச ந காரணம்। சித்தஸ்யாலம்பநீபூேதா। ௭௯।௧௩௨
விஷ்ணுர் ஏவாத்ர காரணம்। புஞ்ஜந்ந் அபுஞ்ஜந் கச்சம்ஸ் ச। ௭௯।௧௩௨
ஸ்வபம்ஸ் திஷ்டந்ந் அதாபி வா। உத்க்ராந்திகாேல ேகாவிந்தம்।
௭௯।௧௩௩
ஸம்ஸ்மரம்ஸ் தந்மேயா பேவத்। கிம் ஜைப: கிம் புவா க்ருத்யம்।
௭௯।௧௩௩
கிம் குைஸர் ைதத்யஸத்தம। ததாபி குர்வேதா யஸ்ய। ௭௯।௧௩௪
ஹ்ருதேய ந ஜநார்தந:। தஸ்மாத் ப்ரதாநமந்த்ேராக்தம்। ௭௯।௧௩௪
வாஸுேதவஸ்ய கீர்தநம்। தந்மயத்ேவந ைதத்ேயந்த்ர। ௭௯।௧௩௫
தஸ்ேயாபாயஸ் ச விஸ்தர:। இத்ய் ஏதத் கதிதம் ஸர்வம்। ௭௯।௧௩௫
ப்ருஷ்ேடா அஹம் யத் த்வயா பேல। உத்க்ராந்திகாேல ஸ்மரணம்।
௭௯।௧௩௬
கிம் பூய: கதயாமி ேத। க்ரியாேயாகஸ் த்வயா பூர்வம்। ௭௯।௧௩௬

மேமாக்ேதா ய: பிதாமஹ। தம் அஹம் ஸ்ேராதும் இச்சாமி। ௮௰।௰௰௧
பலம் சாஸ்ய யதாததம்। ேதவார்சாம் ேதவதாகாேர। ௮௰।௰௰௧
தந்மயத்ேவந பூஜயம்। யதாவச் ேசதேஸா பூமிம்। ௮௰।௰௰௨
கேராதி நியேதா ஹி ஸ:। தபஸா ப்ரஹ்மசர்ேயண। ௮௰।௰௰௨
புண்யஸ்வாத்யாயஸம்ஸ்தைவ:। க்ரியாேயாக: ஸ வித்வத்பிர்।
௮௰।௰௰௩
ேயாகிநாம் ஸமுதாஹ்ருத:। தத்ராஹம் ஸ்ேராதும் இச்சாமி।
௮௰।௰௰௩
க்ரியாேயாகஸ்திேதா நர:। யத் பலம் ஸமவாப்ேநாதி। ௮௰।௰௰௪
காரயித்வா ஹேரர் க்ருஹம்। ேதவார்சாம் காரயித்வா வா। ௮௰।௰௰௪
யத் புண்யம் புருேஷா அஸ்நுேத। ஸம்பூஜயித்வா விதிவத்। ௮௰।௰௰௫
அநுலிப்ய ச யத் பலம்। காநி மால்யாநி ஸஸ்தாநி। ௮௰।௰௰௫
காநி நார்ஹந்தி ேகஸேவ। ேக தூபா: க்ருஷ்ணதயிதா:। ௮௰।௰௰௬
ேக வர்ஜ்யாஸ் ச ஜகத்பேத:। உபஹாேர பலம் கீம் ஸ்யாத்। ௮௰।௰௰௬
கிம் பலம் கீதவாதிேத। க்ருதக்ஷராதிநா ீ யச் ச। ௮௰।௰௰௭
ஸ்நாபிேத ேகஸேவ பலம்। யச் ேசாபேலபேந தாத। ௮௰।௰௰௭
பலம் அப்யுக்ஷிேத ச யத்। வாஸுேதவக்ருேஹ ஸர்வம்। ௮௰।௰௰௮
தத் அேஸஷம் வதஸ்வ ேம। ஸாது வத்ஸ யத் ஏதத் த்வம்।
௮௰।௰௰௮
வாஸுேதவஸ்ய ப்ருச்சஸி। ஸுஸ்ரூஷணவிெதௗ புண்யம்।
௮௰।௰௰௯
தத் இைஹகமநா: ஸ்ருணு। ப்ரஹ்மணா கில ேதவாநாம்। ௮௰।௰௰௯

க்ருஷீணாம் ச மஹாத்மநாம்। ஸுஸ்ரூஷணபலம் விஷ்ேணா:।
௮௰।௰௧
ப்ேராக்தம் ைதத்யபேத புரா। ேதப்ய: ஸகாஸாந் மநுநா। ௮௰।௰௧
ப்ராப்தம் ஸ்வாேராசிேஷண து। ஸ்வாேராசிஷ: ஸ்வபுத்ராய। ௮௰।௰௧௧
தத்தவாந் க்ருதசக்ஷுேஷ। க்ருதசக்ஷுஸ் ச பர்கேவ। ௮௰।௰௧௧
ஸுக்ரஸ் தஸ்மாத் அவாப ச। மமாக்யாதம் ச ஸுக்ேரண। ௮௰।௰௧௨
யதாவத் ஸுமஹாத்மநா। ஸுஸ்ரூஷேவ மஹாபாக। ௮௰।௰௧௨
ைதத்யாசார்ேயண தீமதா। தத் ஏதச் ச்ரூயதாம் தாத। ௮௰।௰௧௩
க்ரியாேயாகாஸ்ரிதம் பலம்। ஜ்ஞாநேயாகஸ் து ஸம்ேயாகஸ்।
௮௰।௰௧௩
சித்தஸ்ையவாத்மநா து ய:। யஸ் து பாஹ்யார்தஸாேபக்ஷ:। ௮௰।௰௧௪
ஸ க்ரியாேயாக உச்யேத। பரமம் காரணம் ேயாேகா। ௮௰।௰௧௪
விமுக்ேதர் திதிேகஸ்வர। க்ரியாேயாகஸ் ச ேயாகஸ்ய। ௮௰।௰௧௫
பரமம் தாத ஸாதநம்। யத் த்வ் ஏதத் பவதா ப்ருஷ்டம்। ௮௰।௰௧௫
பலம் அந்விச்சதா பலம்। ேதவாலயாதிகரேண। ௮௰।௰௧௬
தத் இைஹகமநா: ஸ்ருணு। யஸ் து ேதவாலயம் விஷ்ேணார்।
௮௰।௰௧௬
தார்வம் ைஸலமயம் ததா। காரேயந் ம்ருந்மயம் வாபி। ௮௰।௰௧௭
ஸ்ருணு தஸ்ய பேல பலம்। அஹந்ய் அஹநி யஜ்ேஞந। ௮௰।௰௧௭
யஜேதா யந் மஹாபலம்। ப்ராப்ேநாதி தத் பலம் விஷ்ேணார்।
௮௰।௰௧௮
ய: காரயதி மந்திரம்। குலாநாம் ஸதம் ஆகாமி। ௮௰।௰௧௮
ஸமதீதம் ததா ஸதம்। காரயந் பகவத்தாம। ௮௰।௰௧௯

நயத்ய் அச்யுதேலாகதாம்। ஸப்தஜந்மக்ருதம் பாபம்। ௮௰।௰௧௯
ஸ்வல்பம் வா யதி வா பஹு। விஷ்ேணார் ஆலயவிந்யாஸ ।
௮௰।௰௨
ப்ராரம்பாத் ஏவ நஸ்யதி। ஸப்தேலாகமேயா விஷ்ணுஸ்। ௮௰।௰௨
தஸ்ய ய: குருேத க்ருஹம்। ப்ரதிஷ்டாம் ஸமவாப்ேநாதி। ௮௰।௰௨௧
ஸ நர: ஸப்தெலௗகிகீம்। ப்ரஸஸ்தேதஸபூபாேக। ௮௰।௰௨௧
ய: ஸஸ்தம் பவநம் ஹேர:। காரயத்ய் அக்ஷயாம்ல் ேலாகாந்।
௮௰।௰௨௨
ஸ நர: ப்ரதிபத்யேத। இஷ்டகாசயவிந்யாேஸா। ௮௰।௰௨௨
யாவந்த்ய் க்ருக்ஷாணி திஷ்டதி। தாவத்வர்ஷஸஹஸ்ராணி।
௮௰।௰௨௩
தத்கர்துர் திவி ஸம்ஸ்திதி:। ப்ரதிமாம் லக்ஷணவதீம்। ௮௰।௰௨௩
ய: காரயதி மாநவ:। ேகஸவஸ்ய ஸ தல்ேலாகம்। ௮௰।௰௨௪
அக்ஷயம் ப்ரதிபத்யேத। ஷஷ்டிம் வர்ஷஸஹஸ்ராணாம்। ௮௰।௰௨௪
ஸஹஸ்ராணி ஸ ேமாதேத। ஸ்வர்ெகௗகஸாம் நிவாேஸஷு।
௮௰।௰௨௫
ப்ரத்ேயகம் அரிஸூதந। ப்ரதிஷ்டாப்ய ஹேரர் அர்சாம்। ௮௰।௰௨௫
ஸுப்ரஸஸ்ேத நிேவஸேந। புருஷ: க்ருதக்ருத்யத்வாந்। ௮௰।௰௨௬
ைநநம் ஸ்ேவாமரணம் தேபத்। ேய பவிஷ்யந்தி ேய அதீதா।
௮௰।௰௨௬
ஆகல்பாத் புருஷா: குேல। தாம்ஸ் தாரயதி ஸம்ஸ்தாப்ய। ௮௰।௰௨௭
ேதவஸ்ய ப்ரதிமாம் ஹேர:। அநுஸஸ்தா: கில புரா। ௮௰।௰௨௭
யேமந யமகிம்கரா:। பாேஸாத்யதாயுதா ைதத்ய। ௮௰।௰௨௮

ப்ரஜாஸம்யமேந ரதா:। விஹரத்வம் யதாந்யாயம்। ௮௰।௰௨௮
நிேயாேகா ேம அநுபால்யதாம்। நாஜ்ஞாபங்கம் கரிஷ்யந்தி। ௮௰।௰௨௯
பவதாம் ஜந்தவ: க்வசித்। ேகவலம் ேய ஜகத்தாதும்। ௮௰।௰௨௯
அநந்தம் ஸமுபாஸ்ரிதா:। பவத்பி: பரிஹர்தவ்யாஸ்। ௮௰।௰௩
ேதஷாம் நாஸ்த்ய் அத்ர ஸம்ஸ்திதி:। ேய து பாகவதா ேலாேக।
௮௰।௰௩
தச்சித்தாஸ் தத்பராயணா:। பூஜயந்தி ஸதா விஷ்ணும்। ௮௰।௰௩௧
ேத வஸ் த்யாஜ்யா: ஸுதூரத:। யஸ் திஷ்டந் ப்ரஸ்வபந் கச்சம்ஸ்।
௮௰।௰௩௧
தத்திஷ்டந் ஸ்கலிேத க்ஷுேத। ஸம்கீர்தயதி ேகாவிந்தம்। ௮௰।௰௩௨
ேத வஸ் த்யாஜ்யா: ஸுதூரத:। நித்யைநமித்திைகர் ேதவம்। ௮௰।௰௩௨
ேய யஜந்தி ஜநார்தநம்। நாவேலாக்ய பவத்பிஸ் ேத। ௮௰।௰௩௩
தத்ேதேஜா ஹந்தி ேவா கதிம்। ேய தூபபுஷ்பவாேஸாபிர்। ௮௰।௰௩௩
பூஷைணஸ் சாபி வல்லைப:। அர்சயந்தி ந ேத க்ராஹ்யா। ௮௰।௰௩௪
நரா: க்ருஷ்ணாஸ்ரேயாத்ததா:। உபேலபநகர்தார:। ௮௰।௰௩௪
ஸம்மார்ஜநபராஸ் ச ேய। க்ருஷ்ணாலேய பரித்யாஜ்யம்। ௮௰।௰௩௫
ேதஷாம் த்ரிபுருஷம் குலம்। ேயந சாயதநம் விஷ்ேணா:। ௮௰।௰௩௫
காரிதம் தத்குேலாத்பவம்। பும்ஸாம் ஸதம் நாவேலாக்யம்। ௮௰।௰௩௬
பவத்பிர் துஷ்டசக்ஷுஷா। ேயநார்சா பகவத்பக்த்யா। ௮௰।௰௩௬
வாஸுேதவஸ்ய காரிதா। நராயுதம் தத்குலஜம்। ௮௰।௰௩௭
பவதாம் ஸாஸநாதிகம்। பவதாம் ப்ரமதாம் அத்ர। ௮௰।௰௩௭
விஷ்ணுஸம்ஸ்ரயமுத்ரயா। விநாஜ்ஞாபங்கக்ருந் ைநவ। ௮௰।௰௩௮
பவிஷ்யதி நர: க்வசித்। வத்ஸ ைவவஸ்வதஸ்ையதா:। ௮௰।௰௩௮

ஸ்ருத்வா காதா மரீசிநா। புருகுத்ஸாய கதிதா:। ௮௰।௰௩௯
பார்திேவந்த்ராய தீமேத। ஏதாம் மஹாபலாம் ேயா அர்சாம்। ௮௰।௰௩௯
விஷ்ேணாஹ் காரயேத நர:। தவாக்யாதம் மஹாபாேஹா। ௮௰।௰௪
க்ருஹகாரயிதுஸ் ச யத்। யஜ்ஞா நராணாம் பாெபௗக । ௮௰।௰௪
க்ஷாலகா: ஸர்வகாமதா:। தைதேவஜ்ேயா ஜகத்தாது:। ௮௰।௰௪௧
ஸர்வயஜ்ஞமேயா ஹரி:। ஸ்தாபிதாம் ப்ரதிமாம் விஷ்ேணா:।
௮௰।௰௪௧
ஸம்யக் ஸம்பூஜ்ய மாநவ:। யம் யம் ப்ரார்தயேத காமம்। ௮௧।௰௰௧
தம் தம் ஆப்ேநாத்ய் அஸம்ஸயம்। ய: ஸ்நாபயதி ேதவஸ்ய।
௮௧।௰௰௧
க்ருேதந ப்ரதிமாம் ஹேர:। ப்ரஸ்ேத ப்ரஸ்ேத த்விஜாக்ர்யாணாம்।
௮௧।௰௰௨
ஸ ததாதி கவாம் ஸதம்। கவாம் ஸதஸ்ய விப்ராணாம்। ௮௧।௰௰௨
யத் தத்தஸ்ய பேவத் பலம்। க்ருதப்ரஸ்ேதந தத் விஷ்ேணார்।
௮௧।௰௰௩
லேபத் ஸ்நாேநாபேயாகிநா। பூரித்யும்ேநந ஸம்ப்ராப்தா। ௮௧।௰௰௩
ஸப்தத்வபாீ வஸும்தரா। க்ருதாடேகந ேகாவிந்த । ௮௧।௰௰௪
ப்ரதிமாஸ்நாபநாத் கில। ப்ரதிமாஸம் ஸிதாஷ்டம்யாம்। ௮௧।௰௰௪
க்ருேதந ஜகத: பதிம்। ஸ்நாபயித்வா ஸமஸ்ேதப்ய:। ௮௧।௰௰௫
பாேபப்ேயா விப்ரமுச்யேத। த்வாதஸ்யாம் பஞ்சதஸ்யாம் ச। ௮௧।௰௰௫
கவ்ேயந ஹவிஷா ஹேர:। ஸ்நாபநம் ைதத்யஸார்தூல। ௮௧।௰௰௬
மஹாபாதகநாஸநம்। ஜ்ஞாநேதா அஜ்ஞாநேதா வாபி। ௮௧।௰௰௬
யத் பாபம் குருேத நர:। தத் க்ஷாலயதி ஸம்த்யாயாம்। ௮௧।௰௰௭

க்ருேதந ஸ்நாபயந் ஹரிம்। ஸர்வயஜ்ஞமேயா விஷ்ணுர்। ௮௧।௰௰௭
ஹவ்யாநாம் பரமம் க்ருதம்। தேயார் அேஸஷபாபாநாம்। ௮௧।௰௰௮
க்ஷாலக: ஸம்கேமா அஸுர। ேயஷு க்ஷரவஹா ீ நத்ேயா। ௮௧।௰௰௮
ஹ்ரதா: பாயஸகர்தமா:। தாம்ல் ேலாகாந் புருஷா யாந்தி। ௮௧।௰௰௯
க்ஷீரஸ்நாநகரா ஹேர:। ஆஹ்லாதம் நிர்வ்ருதிம் ஸ்வாஸ்த்யம்।
௮௧।௰௰௯
ஆேராக்யம் சாருரூபதாம்। ஸப்த ஜந்மாந்ய் அவாப்ேநாதி। ௮௧।௰௧
க்ஷீரஸ்நாநகேரா ஹேர:। தத்யாதீநாம் விகாராணாம்। ௮௧।௰௧
க்ஷீரத: ஸம்பேவா யதா। தைதவாேஸஷகாமாநாம்। ௮௧।௰௧௧
க்ஷீரஸ்நாபநேதா ஹேர:। யதா ச விமலம் ஜ்ஞாநம்। ௮௧।௰௧௧
யதா நிர்வ்ருதிகாரகம்। ததாஸ்ய நிர்மலம் ஜ்ஞாநம்। ௮௧।௰௧௨
பவத்ய் அதிபலப்ரதம்। க்ரஹாநுகூலதாம் புஷ்டிம்। ௮௧।௰௧௨
ப்ரியத்வம் சாகிேல ஜேந। கேராதி பகவாந் விஷ்ணு:। ௮௧।௰௧௩
க்ஷீரஸ்நாபநேதாஷித:। ஸர்ேவா அஸ்ய ஸ்நிக்ததாம் ஏதி। ௮௧।௰௧௩
த்ருஷ்டமாத்ர: ப்ரஸததி ீ । க்ருதக்ஷீேரண ேதேவேஸ। ௮௧।௰௧௪
ஸ்நாபிேத மதுஸூதேந। அத்ராப்ய் உதாஹரந்தீமம்। ௮௧।௰௧௪
ஸம்வாதம் ேகஸவாஸ்ரிதம்। ஸாண்டில்யா ஸஹ ைகேகய்யா:।
௮௧।௰௧௫
ஸுமநாயா: ஸுராலேய। ஸ்வர்ேக அதிேஸாபநாம் த்ருஷ்ட்வா।
௮௧।௰௧௫
ைகேகயம்ீ பதிநா ஸஹ। ப்ராஹ்மணீஸாண்டிலீ நாம। ௮௧।௰௧௬
பர்யப்ருச்சத விஸ்மிதா। ஸதஸ: ஸந்தி ைகேகயி। ௮௧।௰௧௬
ேதவா: ஸ்வர்கநிவாஸிந:। ேதவபத்ந்யஸ் தைதைவதா:। ௮௧।௰௧௭

ஸித்தா: ஸித்தாங்கநாஸ் ததா। ந ேதஷாம் ஈத்ருேஸா கந்ேதா।
௮௧।௰௧௭
ந காந்திர் ந ஸுரூபதா। ந வாஸஸாம் ச ேஸாேபயம்। ௮௧।௰௧௮
யதா ேத பதிநா ஸஹ। ைநவாபரணஜாதாநி। ௮௧।௰௧௮
ேதஷாம் ப்ராஜந்தி ைவ ததா। யதா தவ யதா பத்யுஸ்। ௮௧।௰௧௯
தவ ஸ்வர்கநிவாஸிந:। ஸ்வஸ்ததா ேசதஸஸ் ேசயம்। ௮௧।௰௧௯
யுவேயார் அதிரிச்யேத। ஸக்ராத்யாநாம் அபஸாநாம் ீ । ௮௧।௰௨
க்ஷயாதிஸயவர்ஜித:। தப:ப்ரபாேவா தாநம் வா। ௮௧।௰௨
கர்ம வா ேஹாமஸம்ஜ்ஞிதம்। யுவேயார் யந் மமாசŠவ। ௮௧।௰௨௧
தத் ஸர்வம் வரவர்ணிநி। யஜ்ைஞர் யஜ்ேஞஸ்வேரா விஷ்ணுர்।
௮௧।௰௨௧
ஆவாப்யாம் யத் து ேதாஷித:। ஸ்வர்கப்ராப்திர் இயம் தஸ்ய।
௮௧।௰௨௨
கர்மண: பலம் உத்தமம்। ஸுரூபதாம் மந:ப்ரீதி। ௮௧।௰௨௨
பஸ்யதாம் சாருேவஷதாம்। யத் ப்ருச்சஸி மஹாபாேக। ௮௧।௰௨௩
தத் அப்ய் ஏஷா வதாமி ேத। தீர்ேதாதைகஸ் ததா ஸ்நாைந:। ௮௧।௰௨௩
ஸ்நாபிேதா அயம் ஜநார்தந:। ேதந காந்திர் அதீத்ையதாந்। ௮௧।௰௨௪
ேதவாம்ஸ் த்ரிபுவேநஸ்வராந்। மந:ப்ரஸாத: ெஸௗம்யத்வம்। ௮௧।௰௨௪
ஸாரீரா யா ச நிர்வ்ருதி:। யத் ப்ரியத்வம் ச ஸர்வஸ்ய। ௮௧।௰௨௫
தத் க்ருதஸ்நாநஜம் பலம்। யாந்ய் அபஷ்டாநி ீ வாஸாம்ஸி। ௮௧।௰௨௫
யச் சாபஷ்டம் ீ விபூஷணம்। ரத்நாநி யாந்ய் அபஷ்டாநி ீ । ௮௧।௰௨௬
யத் ப்ரியம் சாநுேலபநம்। ேய தூபா யாநி மால்யாநி। ௮௧।௰௨௬
தயிதாந்ய் அபவம்ஸ் ததா। மம பர்துஸ் தைதவாஸ்ய। ௮௧।௰௨௭

மம ராஜ்யம் ப்ரஸாஸத:। தாநி ஸர்வாணி ஸர்வஜ்ேஞ। ௮௧।௰௨௭
ஸர்வகர்தரி ேகஸேவ। தத்தாநி தத்ஸமுத்ேதா அயம்। ௮௧।௰௨௮
கந்தபூஷாத்மேகா குண:। ஆஹாரா தயிதா ேய ச। ௮௧।௰௨௮
பவித்ராஸ் ச நிேவதிதா:। ேத ேலாககர்த்ேர Šருணாய। ௮௧।௰௨௯
த்ருப்திஸ் தத்குணஸம்பவா। ஸ்வர்ககாேமந ேம பர்த்ரா। ௮௧।௰௨௯
மயா ச ஸுபதர்ஸேந। க்ருதம் ஏதத் அேதா நாபூத்। ௮௧।௰௩
ஆவேயார் பவஸம்க்ஷய:। ேய த்வ் அகாமாம் நரா: ஸம்யக்। ௮௧।௰௩
ஏதத் குர்வந்தி ேஸாபேந। ேதஷாம் ததாதி விஸ்ேவேஸா। ௮௧।௰௩௧
பகவாந் முக்திம் அச்யுத:। ஏவம் அப்யர்ச்ய ேகாவிந்தம்। ௮௧।௰௩௧
ஸர்வபூேதஸ்வேரஸ்வரம்। ப்ராப்ேநாத்ய் அபிமதாந் காமாந்। ௮௧।௰௩௨
ைதத்யாஹ ஸுமநா யதா। சந்தநாகருகர்பூர । ௮௧।௰௩௨
குங்குேமாஸரபத்மைக ீ :। அநுலிப்ேதா ஹரிர் பக்த்யா। ௮௧।௰௩௩
வராந் ேபாகாந் ப்ரயச்சதி। காேலயகம் துங்ககம் ச। ௮௧।௰௩௩
பத்மசந்தநம் ஏவ ச। ந்ருணாம் பவந்தி ேராகாய। ௮௧।௰௩௪
தத்தாநி புருேஷாத்தேம। தஸ்மாத் ஏபிர் ந ேகாவிந்த:। ௮௧।௰௩௪
பூஜநீேயா மஹாஸுர। யாந்ய் ஆத்மந: ஸேதஷ்டாநி। ௮௧।௰௩௫
தாநி ஸஸ்தாந்ய் உபாகுரு। தைதவ ஸுபகந்தா ேய। ௮௧।௰௩௫
தூபாஸ் ேத ஜகத: பேத:। வாஸுேதவஸ்ய தர்மஜ்ைஞர்। ௮௧।௰௩௬
நிேவத்யா தாநேவஸ்வர। ந ஸல்லகீஜம் நாெக்ஷௗலம்। ௮௧।௰௩௬
ந ஸுக்தாஸவஸம்ப்ருதம்। தத்யாத் க்ருஷ்ணாய தர்மஜ்ேஞா।
௮௧।௰௩௭
தூபாந் ஆராதேநாத்யத:। மாலதீமல்லிகா ைசவ। ௮௧।௰௩௭
யூதிகாதாதிமுக்தகா। பாடலா கரவரஸ்ீ ச। ௮௧।௰௩௮

ஜவா பாரந்திர் ஏவ ச। குப்ஜகஸ் தகரஸ் ைசவ। ௮௧।௰௩௮
கர்ணிகார: குரண்டக:। சம்பேகா ேராதக: குந்ேதா। ௮௧।௰௩௯
பாேணா வர்வரமாலிகா:। அேஸாகதிலகா ேராத்ராஸ்। ௮௧।௰௩௯
ததா ைசவாடரூஷக:। அமீபுஷ்பப்ரகாராஸ் து। ௮௧।௰௪
ஸஸ்தா: ேகஸவபூஜேந। பில்வபத்ரம் ஸமீபத்ரம்। ௮௧।௰௪
பத்ரம் ப்ருங்காரகஸ்ய ச। தமாலபத்ரம் ச பேல। ௮௧।௰௪௧
ஸைதவ பகவத்ப்ரியம்। துலஸகாலதுலஸ ீ ீ । ௮௧।௰௪௧
பத்ரம் ப்ருங்கரஜஸ்ய ச। ேகதகீபத்ரபுஷ்பம் ச। ௮௧।௰௪௨
ஸத்யஸ் துஷ்டிகரம் ஹேர:। பத்மாந்ய் அம்புஸமுத்தாநாம்। ௮௧।௰௪௨
ரக்தநீேல தேதாத்பேல। ஸிேதாத்பலம் ச க்ருஷ்ணஸ்ய। ௮௧।௰௪௩
தயிதாநி ஸதாஸுர। நார்கம் ேநாந்மத்தகம் காம்சித்। ௮௧।௰௪௩
தைதவ கிரிகர்ணிகாம்। ந கண்டகாரிகாபுஷ்பம்। ௮௧।௰௪௪
அச்யுதாய நிேவதேயத்। ெகௗடஜம் ஸால்மலீபுஷ்பம்। ௮௧।௰௪௪
ைஸரீஷம் ச ஜநார்தேந। நிேவதிேத பயம் ேராகம்। ௮௧।௰௪௫
நி:ஸ்வதாம் ச ப்ரயச்சதி। ேயஷாம் ந ப்ரதிேஷேதா அஸ்தி। ௮௧।௰௪௫
கந்தவர்ணாந்விதாநி ச। தாநி புஷ்பாணி ேதயாநி। ௮௧।௰௪௬
விஷ்ணேவ ப்ரபவிஷ்ணேவ। ஸுகந்ைதஸ் ச ஸுராமாம்ஸீ ।
௮௧।௰௪௬
கர்பூராகருசந்தைந:। ததாந்ையஸ் ச ஸுைபர் த்ரவ்ையர்। ௮௧।௰௪௭
அர்சேயஜ் ஜகத: பதிம்। துகூலபடுெகௗேஸய । ௮௧।௰௪௭
வார்க்ஷகர்பாஸிகாதிபி:। வாேஸாபி: பூஜேயத் விஷ்ணும்। ௮௧।௰௪௮

ைதேதேயந்த்ராத்மந: ப்ரிைய:। பŠயாணி யாந்ய் அபஷ்டாநி ீ ।
௮௧।௰௪௮
ேபாஜ்யாந்ய் அபிமதாநி ச। பலம் ச வல்லபம் யத் ஸ்யாத்। ௮௧।௰௪௯
தத் தத் ேதயம் ஜநார்தேந। ஸுவர்ணமணிமுக்தாதி। ௮௧।௰௪௯
யச் சாந்யத் அதிவல்லபம்। தத் தத் ேதவாதிேதவாய। ௮௧।௰௫
ேகஸவாய நிேவதேயத்। ஆத்மாநம் ேகஸவம் மத்வா। ௮௧।௰௫
யத் யத் தஸ்ையவ ேராசேத। தத் தத் அவ்யக்தரூபாய। ௮௧।௰௫௧
ேகஸவாய நிேவதேயத்। சக்ரவர்தீமஹாவர்ேயா ீ । ௮௧।௰௫௧
மாந்தாதா யுவநாஸ்வஜ:। ஸஸாஸ ஸ மஹாபாஹு:। ௮௨।௰௰௧
ஸப்தத்வபாம்ீ வஸும்தராம்। அகாயந்த ச யா காதா। ௮௨।௰௰௧
ேய புராணவிேதா ஜநா:। மாந்தாதரி மஹாபாேஹா। ௮௨।௰௰௨
ெயௗவநாஸ்ேவ ஸமாஸ்ரிதா:। யாவத் ஸூர்ய உேததி ஸ்ம।
௮௨।௰௰௨
யாவச் ச ப்ரதிதிஷ்டதி। ஸர்வம் தத் ெயௗவநாஸ்வஸ்ய। ௮௨।௰௰௩
மாந்தாது: ேக்ஷத்ரம் உச்யேத। ஸ ெயௗவநகத: ஸம்ராட்। ௮௨।௰௰௩
ஸப்தத்வபவத ீ ீம் மஹீம்। ஸஸாஸ தர்ேமண புரா। ௮௨।௰௰௪
சக்ரவர்தீமஹாபல:। நாந்யாயக்ருந் ந சாஸக்ேதா। ௮௨।௰௰௪
ந தரித்ேரா ந கீகட:। தஸ்யாபூத் புருேஷா ராஜ்ேய। ௮௨।௰௰௫
ஸம்யக்தர்மாநுஸாஸிந:। சதஸ்ேரா கதயஸ் தஸ்ய। ௮௨।௰௰௫
ெயௗவநாஸ்வஸ்ய தீமத:। பபூவுர் அப்ரதிஹதா। ௮௨।௰௰௬
ஹதாராதிபலஸ்ய ைவ। தஸ்ய பக்திர் அதீவாபூந்। ௮௨।௰௰௬
நிஸர்காத் ஏவ பூபேத:। வாஸுேதேவ ஜகத்தாம்நி। ௮௨।௰௰௭
ஸர்வகாரணகாரேண। தஸ்ய ர்த்திம் மஹிமாநம் ச। ௮௨।௰௰௭

விேலாக்ய ப்ருதிவபேத ீ :। ந ேகவலம் ஜநஸ்யாபூத்। ௮௨।௰௰௮
தஸ்யாப்ய் அத்யந்தவிஸ்மய:। ஸ சிந்தயாம் ஆஸ ந்ருப:। ௮௨।௰௰௮
ஸம்ருத்த்யா விஸ்மிதஸ் தயா। கதம் ஸ்யாத் ஸம்பத் ஏஷா ேம।
௮௨।௰௰௯
புநர் அப்ய் அந்யஜந்மநி। ஏவம் ஸுபஹுேஸா ராஜா। ௮௨।௰௰௯
ைதத்ேயந்த்ர ஸுமஹாபல:। சிந்தயந்ந் அபி தந்மூலம்। ௮௨।௰௧
ந சாஸந்ீ நிஸ்சயாந்வித:। யதா ந நிஸ்சயம் ராஜா। ௮௨।௰௧
ஸ யெயௗ யுவநாஸ்வஜ:। ததா பப்ரச்ச தர்மஜ்ஞாந்। ௮௨।௰௧௧
ஸ விப்ராந் ஸமுபாகதாந்। வஸிஷ்டப்ரமுகாந் வத்ஸ। ௮௨।௰௧௧
விவிக்தாந்த:புரஸ்தித:। ப்ரணிபத்ய மஹாபாஹுர்। ௮௨।௰௧௨
க்ருஹீதாஸநஸத்க்ரியாந்। யதி ஸாநுக்ரஹா புத்திர்। ௮௨।௰௧௨
பவதாம் மயி ஸத்தமா:। தத் அஹம் ப்ரஷ்டும் இச்சாமி। ௮௨।௰௧௩
கிம்சித் தத் வக்தும் அர்ஹத। ஸேமத்யாகிலவிஜ்ஞாநம்। ௮௨।௰௧௩
ஸம்யக்ெதௗதாந்தராத்மபி:। பவத்பிர் யத்ய் அஹம் ந ஸ்யாம்।
௮௨।௰௧௪
விமலஸ் தந் மஹாத்புதம்। யத் யதா தந் மயா ப்ருஷ்டா। ௮௨।௰௧௪
பவந்ேதா மத்ப்ரஸாதிதா:। வக்தும் அர்ஹந்தி வித்வாம்ஸ:। ௮௨।௰௧௫
ஸர்வஸ்ையேவாபகாரிண:। யஸ் ேத மநஸி ஸம்ேதஹஸ்। ௮௨।௰௧௫
தம் ப்ருச்சாத்ய மஹீபேத। கதிஷ்யாேமா யதாந்யாயம்। ௮௨।௰௧௬
யத் ேத ஸாம்ஸயிகம் ஹ்ருதி। வயம் ஹி நரஸார்தூல। ௮௨।௰௧௬
பவதா பரிேதாஷிதா:। ஸம்யக் ப்ரஜா: பாலயதா। ௮௨।௰௧௭
ஸப்தத்வேபீ மஹீதேல। ஸுதுஷ்ேடா ப்ராஹ்மேணா அஸ்நீயாச்।
௮௨।௰௧௭

ிந்த்யாத் வா தர்மஸம்ஸயம்। ஹிதம் ேவாபதிேஸத் தர்மம்।
௮௨।௰௧௮
அஹிதாத் வா நிவர்தேயத்। விவக்ஷும் அத பூபாலம்। ௮௨।௰௧௮
பார்யா தஸ்ையவ தீமத:। ப்ரணாமபூர்வம் ஆேஹதம்। ௮௨।௰௧௯
விநயாத் ப்ரணயாந்விதம்। ந ஸ்த்ரீணாம் அவநீபால। ௮௨।௰௧௯
வக்தும் ஈத்ருக் இேஹஸ்யேத। ததாபி பூபேத வŠேய। ௮௨।௰௨
ஸம்பத் ஈத்ருக் ஸுதுர்லபா। பூேயா அபி ஸம்ஸயம் ப்ரஷ்டும்।
௮௨।௰௨
அலம் ஈஸ பவாந் க்ருஷீந்। ந த்வ் அஹம் புருஷவ்யாக்ர। ௮௨।௰௨௧
ஸதாந்த:புரசாரிண।ீ ஸ ப்ரஸாதம் யதி பவாந்। ௮௨।௰௨௧
கேராதி மம பார்திவ। தந் மதீயம் க்ருஷீந் ப்ரஷ்டும்। ௮௨।௰௨௨
ஸம்ஸயம் பார்திவார்ஹஸி। ப்ரூஹி ஸுப்ரு மதம் யத் ேத।
௮௨।௰௨௨
ப்ரஷ்டவ்யா யந் மயா த்விஜா:। பூேயா அஹம் ஆத்மஸம்ேதஹம்।
௮௨।௰௨௩
ப்ரŠயாம்ய் ஏதாந் த்விேஜாத்தமாந்। ஸ்ரூயந்ேத ப்ருதிவபாலீ ।
௮௨।௰௨௩
ந்ருப ேய ச புராதநா:। ேதஷாம் ந ஸம்பத் பூபால। ௮௨।௰௨௪
யதா தவ கிலாபவத்। தத் ஈத்ருக்ஸம்பதாம் தாம। ௮௨।௰௨௪
த்வம் அேஸஷக்ஷிதீஸ்வர:। ேயந கர்மவிபாேகந। ௮௨।௰௨௫
தத் வதந்து மஹர்ஷய:। அஹம் ச பவேதா பார்யா। ௮௨।௰௨௫
ஸர்வஸமந்திந ீ ீபுவி। விதிநா ேகந தபஸா। ௮௨।௰௨௬
நியுக்தா பவேதா க்ருேஹ। அதீவ கர்மணா ேயந। ௮௨।௰௨௬

தத்விஜ்ஞாேந குதூஹலம்। தாரதம்யதேயஸித்வம்। ௮௨।௰௨௬
அந்ேயஷ்வ் அபி ஹி வித்யேத। நிரஸ்தாதிஸயத்ேவந। ௮௨।௰௨௭
நூநம் நால்ேபந கர்மணா। தத் அந்யஜந்மசரிதம்। ௮௨।௰௨௭
நரநாத நிஜம் பவாந்। முநீந் ப்ருச்சது யா சாஹம்। ௮௨।௰௨௮
யந் மயா ச புரா க்ருதம்। ஸ தேதாக்தஸ் தயா ராஜா। ௮௨।௰௨௮
பத்ந்யா விஸ்மிதமாநஸ:। முநீநாம் புரேதா பார்யாம்। ௮௨।௰௨௯
ப்ரஸம்ஸந் வாக்யம் அப்ரவத்ீ। ஸாது ேதவி மதம் யந் ேம। ௮௨।௰௨௯
த்வயா தத் இதம் ஈரிதம்। ஸத்யம் முநிவச: பும்ஸாம்। ௮௨।௰௩
அர்தம் ைவ க்ருஹிணீயதா। மமாப்ய் ஏதத் அபிப்ேரதம்। ௮௨।௰௩
இமாந் ப்ரஷ்டும் மஹாமுநீந்। யத் த்வயாபிஹிதம் பத்ேர। ௮௨।௰௩௧
மத்ஸ்வபாவாநுயாதயா। ேஸா அஹம் ஏதந் மஹாபாேக। ௮௨।௰௩௧
ப்ரŠயாம்ய் ஏதாந் மஹாமுநீந்। ைநஷாம் அவிதிதம் கிம்சித்।
௮௨।௰௩௨
த்ரிஷு ேலாேகஷு வித்யேத। ஏவம் உக்த்வா ப்ரியாம் பார்யாம்।
௮௨।௰௩௨
ப்ரணிபத்ய ச தாந் க்ருஷீந்। யதாவத் ஏதத் அகிலம்। ௮௨।௰௩௩
பப்ரச்சாஸுரஸத்தம। பகவந்ேதா மமாேஸஷம்। ௮௨।௰௩௩
ப்ரஸாதாஹ்ருதேசதஸ:। கதயந்து யதாவ்ருத்தம்। ௮௨।௰௩௪
யந் மயா ஸுக்ருதம் க்ருதம்। ேகா அஹம் ஆஸம் புரா விப்ரா:।
௮௨।௰௩௪
கிம் ச கர்ம மயா க்ருதம்। கிம் வாநயா ஸுசார்வங்க்யா। ௮௨।௰௩௫
மம பத்ந்யா க்ருதம் த்விஜா:। ேயநாவேயார் இயம் ஸ்பதிர் ீ । ௮௨।௰௩௫
மர்த்யேலாேக ஸுதுர்லபா। சத்வாரஸ் சாப்ரதிஹதா। ௮௨।௰௩௬

கதேயா மம கச்சத:। அேஸஷா பூப்ருேதா வஸ்யா:। ௮௨।௰௩௬
ேகாஸஸ்யாந்ேதா ந வித்யேத। பலம் ைசவாப்ரதிஹதம்। ௮௨।௰௩௭
ஸரீராேராக்யம் உத்தமம்। அதிபாதி ச ேம காந்த்யா। ௮௨।௰௩௭
பார்ேயயம் அகிலம் ஜகத்। மமாபி வபுஷஸ் ேதேஜா। ௮௨।௰௩௮
ந கஸ்சித் ஸஹேத த்விஜா:। ேஸா அஹம் இச்சாமி விஜ்ஞாதும்।
௮௨।௰௩௮
தைதேவயம் அநிந்திதா। நிஜாநுஷ்டாநம் அகிலம்। ௮௨।௰௩௯
யஸ்யாேஸஷம் இதம் பலம்। இதி ப்ரஷ்டா நேரந்த்ேரண। ௮௨।௰௩௯
ஸமஸ்தாஸ் ேத தேபாதநா:। வஸிஷ்டம் ேசாதயாம் ஆஸு:। ௮௨।௰௪
கத்யதாம் இதி பூப்ருத:। ேசாதித: ேஸா அபி தர்மஜ்ைஞர்। ௮௨।௰௪
ைமத்ராவருணிர் ஆத்மவாந்। ேயாகம் ஆஸ்தாய ஸுசிரம்। ௮௨।௰௪௧
யதாவத் யதமாநஸ:। ஜ்ஞாதவாந் ந்ருபேதஸ் தஸ்ய। ௮௨।௰௪௧
பூர்வேதஹவிேசஷ்டிதம்। ஸ தம் ஆஹ முநிர் பூபம்। ௮௨।௰௪௧
விதிதார்ேதா மஹாஸுர। மாந்தாதாரம் மஹாபுத்திம்। ௮௨।௰௪௨
ஸபத்நீகம் இதம் வச:। ஸ்ருணு பூபால ஸகலம்। ௮௨।௰௪௨
யஸ்ேயதம் கர்மண: பலம்। தவ ராஜ்யாதிகம் ஸுப்ரூர்। ௮௨।௰௪௩
ேயயம் சாஸந்ீ மஹீபேத। த்வம் ஆஸீ: ஸூத்ரஜாதீய:। ௮௨।௰௪௩
பரஹிம்ஸாபராயண:। வாக்க்ரூேரா தண்டபாருஷ்ேயா। ௮௨।௰௪௪
நி:ஸ்ேநஹ: ஸர்வஜந்துஷு। தேதயம் பவேதா பார்யா। ௮௨।௰௪௪
பூர்வம் அப்ய் ஆயேதக்ஷணா। த்ேவஷ்யா பபூவ தச்சித்தா। ௮௨।௰௪௫
தவ ஸுஸ்ரூஷேண ரதா। பதிவ்ரதா மஹாபாகா। ௮௨।௰௪௫
பர்த்ஸ்யமாநாப்ய் அநிஷ்டுரா। த்வத்வாக்யாத் அநு ஸர்ேவஷு।
௮௨।௰௪௬

வரகர்மஸு ீ ேசாத்யதா। ைநஷ்டுர்யாத் அஸஹாயஸ்ய। ௮௨।௰௪௬
த்யஜ்யமாநஸ்ய பந்துபி:। க்ஷயம் ஜகாம ேயா அர்ேதா அபூத்।
௮௨।௰௪௭
ஸம்சித: ப்ரபிதாமைஹ:। தஸ்மிந் க்ஷீேண க்ருஷிபரஸ்। ௮௨।௰௪௭
த்வம் ஆஸீ: ப்ருதிவபேத ீ । ஸாபி கர்மவிபாேகந। ௮௨।௰௪௮
க்ருஷிர் விபலதாம் கதா। தேதா நி:ஸ்வம் பரிக்ஷீணம்। ௮௨।௰௪௮
பேரஷாம் ப்ருத்யதாம் கதம்। தத்யாஜ ஸாத்வ ீேவயம் த்வாம்।
௮௨।௰௪௯
த்யஜ்யமாநாபி பார்திவ। அநயா ச ஸமம் ஸாத்வ்யா। ௮௨।௰௪௯
விஷ்ேணார் ஆவஸேத த்வயா। க்ருதம் ஸுஸ்ரூஷணம் வரீ। ௮௨।௰௫
பரிவ்ராட்ப்ரஹ்மசாரிணாம்। பக்ேநஹ: ஸர்வகாேமப்யஸ்। ௮௨।௰௫
தந்மயஸ் த்வம் ததர்பண:। அநந்யகதிர் ஏகஸ்தஸ்। ௮௨।௰௫௧
தஸ்மிந்ந் ஆயதேந ஹேர:। தத்வ்ருத்திலிப்ஸு: ஸுஸ்ரூஷாம்।
௮௨।௰௫௧
ஜநரஞ்ஜநேஹதுக:। க்ருதவாந் ேயாகிநாம் வரீ। ௮௨।௰௫௨
க்ருஷ்ணஸ்ய ஜகத: பேத:। வாஸுேதவாஜிேர நித்யம்। ௮௨।௰௫௨
க்ருதம் ஸம்மார்ஜநம் த்வயா। தைதவாப்யுக்ஷணம் வரீ। ௮௨।௰௫௩
நித்யம் ைசவாநுேலபநம்। பத்ந்யாநயா ச தர்மஜ்ஞ। ௮௨।௰௫௩
யஷ்மச்சித்தாநுவ்ருத்தயா। அஹந்ய் அஹநி தத் கர்ம। ௮௨।௰௫௩
யுவேயார் ந்ருப குர்வேதா:। தத்ர ைசதந்மயத்ேவந। ௮௨।௰௫௪
பாபஹாநிர் அஜாயத। விஷ்ேணா: கார்யம் மயா கார்யம்। ௮௨।௰௫௪
ேயாகிஸுஸ்ரூஷணம் ததா। ந ப்ரபாதம் ப்ரபாதம் து। ௮௨।௰௫௫
சிந்ேதயம் அபவந் நிஸி। ஏவம் ஆயதநம் ரம்யம்। ௮௨।௰௫௫

இத்ய் ஏவம் ச ஸுகாவஹம்। ஸ்ைதர்யம் ந ைசவம் ஏதத் ஸ்யாத்।
௮௨।௰௫௬
இத்ய் ஆஸத்ீ ேத மந: ஸதா। ேயாகிநாம் ஸுகதம் த்வ் ஏவம்।
௮௨।௰௫௬
கர்ைமவம் ைநவம் இத்ய் அபி। தவ சித்தம் அபூத் தத்ர। ௮௨।௰௫௭
ேயாகிகர்மண்ய் அஹர்நிஸம்। ஏவம் தந்மநஸஸ் தத்ர। ௮௨।௰௫௭
க்ருேதாத்ேயாகஸ்ய பார்திவ। ப்ருத்யாவஸாயிந: ஸம்யக்। ௮௨।௰௫௮
யேதாக்தாதிககாரிண:। ஸ்மரத: புண்டரீகாக்ஷம்। ௮௨।௰௫௮
கார்ேயணாதித்ருடாத்மந:। நி:ேஸஷம் உபஸாந்தம் தத்। ௮௨।௰௫௯
பாபம் ேயாகிநிேஷவணாத்। தேதா அதிகம் புரஸ் தஸ்மாத்। ௮௨।௰௫௯
ஆதராத் அநுேலபநம்। ஸம்மார்ஜநம் ச பஹுஸ:। ௮௨।௰௬
ஸபத்நிேகந ேத க்ருதம்। தத்ராகதஸ் ச ெஸௗவரீ:। ௮௨।௰௬
புருஜிந் நாம பூபதி:। மஹாைஸந்யபரீவார:। ௮௨।௰௬௧
ப்ரபூதகஜவாஹந:। ஸர்வஸம்பதுேபதம் தம்। ௮௨।௰௬௧
ஸர்வாபரணபூஷிதம்। வ்ருதம் பார்யாஸஹஸ்ேரண। ௮௨।௰௬௨
த்ருஷ்ட்வா ஸ்ரக்சந்தேநாஜ்ஜ்வலம்। ஸ்ப்ருஹா க்ருதா த்வயா தத்ர।
௮௨।௰௬௨
சாருெமௗலிநி பார்திேவ। ஸர்வகாமப்ரதம் கர்ம। ௮௨।௰௬௨
ேதவேதவஸ்ய குர்வதா। ேதைநதத் அகிலம் ராஜ்யம்। ௮௨।௰௬௩
அேஸஷத்வபவத் ீ தவ। ேதஜஸ் ைசவாதிகம் யத் ேத। ௮௨।௰௬௩
தைததச் ச்ருணு பார்திவ। ேயாகப்ரபாேவாபலப்தம்। ௮௨।௰௬௪
கதயாம்ய் அகிலம் தவ। தத்ைரவாவஸேத தீப:। ௮௨।௰௬௪
ப்ரஸாந்த: ஸ்ேநஹஸம்க்ஷயாத்। நிஜேபாஜநைதேலந। ௮௨।௰௬௫

புந: ப்ரஜ்வாலிதஸ் த்வயா। அநயா ேசாத்தரீயாந்த । ௮௨।௰௬௫
சீரவர்த்யுபவ்ரும்ஹித:। தவ பத்ந்யா ஸ ஜஜ்வால। ௮௨।௰௬௬
காந்திர் அஸ்யாஸ் தேதா அதிகா। தவாப்ய் அகிலபூபால । ௮௨।௰௬௬
மந:ேக்ஷாபகரம் தத:। ேதேஜா நேரந்த்ர ந ஸ்யாச் ச। ௮௨।௰௬௭
கிம் ஆராத்ய ஜநார்தநம்। ஏவம் நேரந்த்ர ஸூத்ரத்வாத்। ௮௨।௰௬௭
விஷ்ணுகர்மபராயண:। தந்மயத்ேவந ஸம்ப்ராப்ேதா। ௮௨।௰௬௮
மஹிமாநம் அநுத்தமம்। கிம் புநர் ேயா நேரா பக்த்யா। ௮௨।௰௬௮
விஷ்ணுஸுஸ்ரூஷணாத்ருத:। கேராதி ஸததம் பூஜாம்। ௮௨।௰௬௯
நிஷ்காேமா நாந்யமாநஸ:। ஸ த்வம் க்ருத்திம் இமாம் லப்த்வா।
௮௨।௰௬௯
ஸர்வேலாேகஸ்வேரஸ்வரம்। பூஜயாச்யுதம் ஈேஸஸம்। ௮௨।௰௭
தம் ஆராத்ய ந ஸததி ீ । புஷ்ைபர் தூைபஸ் ததா கந்ைதர்। ௮௨।௰௭
தீபவஸ்த்ராநுேலபைந:। ஆராதயாச்யுதம் தத்வத்। ௮௨।௰௭௧
ேவஸ்மஸம்மார்ஜநாதிபி:। யத் யத் இஷ்டதமம் கிம்சித்। ௮௨।௰௭௧
யத் யத் அத்யந்ததுர்லபம்। தத் தத் தாத்த்வா ஜகத்தாத்ேர। ௮௨।௰௭௨
ைவகுண்டாய ந ஸததி ீ । ஸுகந்தாகருகர்பூர । ௮௨।௰௭௨
சந்தநாேக்ஷாதகும்குைம:। வாேஸாபிர் விவிைதர் தூைப:। ௮௨।௰௭௩
புஷ்பஸ்ரக்சாமைரர் த்வைஜ:। அந்ேநாபஹாைரர் விவிைதர்। ௮௨।௰௭௩
க்ருதக்ஷராபிேஷசைந ீ :। கீதவாதிதந்ருத்யாத்ையஸ்। ௮௨।௰௭௪
ேதாஷயஸ்வாச்யுதம் ந்ருப। புண்யராத்ரிஷு ேகாவிந்தம்। ௮௨।௰௭௪
ந்ருத்யகீதரேவாஜ்ஜ்வைல:। பூப ஜாகரைணர் பக்த்யா। ௮௨।௰௭௫

ேதாஷயாச்யுதம் அவ்யயம்। ஏவம் ஸம்ேதாஷ்யேத பக்த்யா।
௮௨।௰௭௫
பகவாந் பவபங்கக்ருத்। பூப பாகவைதர் பூத । ௮௨।௰௭௬
பவ்யக்ருத் ேகஸேவா நைர:। ேயஷாம் ந வித்தம் ைதர் பக்த்யா।
௮௨।௰௭௬
மார்ஜநாத்யுபேலபைந:। ேதாஷிேதா பகவாந் விஷ்ணுர்। ௮௨।௰௭௭
ததாத்ய் அபிமதம் பலம்। ேதவகர்மாஸமர்தாணாம்। ௮௨।௰௭௭
ப்ராணிநாம் ஸ்ம்ருதிஸம்ஸ்தைவ:। ேதாஷிேதா அபிமதாந் காமாந்।
௮௨।௰௭௮
ப்ரயச்சதி ஜநார்தந:। ைநஷ வித்ைதர் ந ரத்ெநௗைக:। ௮௨।௰௭௮
புஷ்பதூபாநுேலபைந:। ஸத்பாேவைநவ ேகாவிந்தஸ்। ௮௨।௰௭௯
ேதாஷம் ஆயாதி ஸம்ஸ்ம்ருத:। த்வையகாக்ரமநஸ்ேகந। ௮௨।௰௭௯
க்ருஹஸம்மார்ஜநாதிகம்। க்ருத்வால்பம் ஈத்ருஸம் ப்ராப்தம்। ௮௨।௰௮
ராஜ்யம் அத்யந்ததுர்லபம்। ப்ராப்ேதாபகரேணா யஸ் த்வம்। ௮௨।௰௮
ஏகாக்ரமதிர் அச்யுதம்। ேதாஷயிஷ்யஸி ேநந்த்ேரா அபி। ௮௨।௰௮௧
பவிதா ேதந ேத ஸம:। தஸ்மாத் த்வம் அநயா ேதவ்யா। ௮௨।௰௮௧
ஸஹாத்யந்தவிநீதயா। ேகஸவாராதேந யத்நம்। ௮௨।௰௮௨
குரு தர்மப்ருதாம் வர। தத: ப்ராப்ஸ்யஸி பக்த்ையவ। ௮௨।௰௮௨
யத் தேபாபி: ஸுதுர்லபம்। ஏதந் முேநர் வஸிஷ்டஸ்ய। ௰௮௨।௧௩௭
நிஸாம்ய வசநம் ந்ருப:। பார்யாஸஹாய: ஸ ததா। ௮௩।௰௰௧
ஸம்ப்ரஹ்ருஷ்டதநூருஹ:। க்ருதகார்யம் இவாத்மாநம்। ௮௩।௰௰௧
மந்யமாேநா அஸுேராத்தம। உவாச ப்ரணேதா பூத்வா। ௮௩।௰௰௨
மாந்தாதா வாருணிம் வச:। யதாமரத்வம் ஸம்ப்ராப்ய। ௮௩।௰௰௨

யதா வா ப்ரஹ்ம ஸாஸ்வதம்। பரம் நிர்வாணம் ஆப்ேநாதி। ௮௩।௰௰௩
ததாஹம் வசஸா தவ। க்ருதக்ருத்ய: ஸுகீ சாஸ்மி। ௮௩।௰௰௩
நிர்வ்ருதிம் பரமாம் கத:। அஜ்ஞாநதமஸாசந்ேந। ௮௩।௰௰௪
யத் ப்ரதீபஸ் த்வையதித:। அஹம் ஏஷா ச தந்வங்கீ। ௮௩।௰௰௪
விபூதிப்ரம்ஸபருெகௗ ீ । ஆட்யாவ் ஆபாதிெதௗ ப்ரஹ்மந்ந்। ௮௩।௰௰௫
இஹாத்ய வசஸா தவ। ஸம்பதாம் கதிதம் பஜம்ீ । ௮௩।௰௰௫
ஆவேயார் பவதா முேந। ததுப்தாவ் உத்யதாவ் ஆவாம்। ௮௩।௰௰௬
விஜாநீஹி த்விேஜாத்தம। ந ரத்ைநர் ந ச வித்ெதௗைகர்। ௮௩।௰௰௬
ந ச புஷ்பாநுேலபைந:। ஆராத்யேத ஜகந்நாேதா। ௮௩।௰௰௭
பாவஸூந்ையர் ஜநார்தந:। பாஹ்யார்தநிரேபைக்ஷஸ் ச। ௮௩।௰௰௭
மநைஸவ மேநாகதி:। நி:ஸ்ைவர் ஆராத்யேத ேதேவா। ௮௩।௰௰௮
விஷ்ணு: ஸர்ேவஸ்வேரஸ்வர:। ஸர்வம் ஏதந் மயா ஜ்ஞாதம்।
௮௩।௰௰௮
யத் த்வம் ஆத்த மஹாமுேந। யத் த்வாம் ப்ருச்சாமி தந் ேம த்வம்।
௮௩।௰௰௯
ப்ரஸாதஸுமுேகா வத। காநி வ்ரதாநி ையர் ேதேவா। ௮௩।௰௰௯
நைர: ஸ்த்ரீபிஸ் ச ேகஸவ:। ேதாஷம் ஆராதிேதா அப்ேயதி। ௮௩।௰௧
ைகஸ் ச தாைநர் மஹாமுேந। ரஹஸ்யாநி ச ேதவஸ்ய। ௮௩।௰௧
ப்ரீதேய யாநி சக்ரிண:। தாந்ய் அேஸஷாணி ேம ப்ரூஹி। ௮௩।௰௧௧
க்ருஷ்ணாராதநகாங்க்ஷிண:। ஸ்ருணு பூபால ையர் விஷ்ணுர்।
௮௩।௰௧௧
நைரர் ஆராத்யேத வ்ரைத:। நாரீபிஸ் சாதிேகாேர அஸ்மிந்। ௮௩।௰௧௨
பதிதாபிர் பவார்ணேவ। ஸமப்யர்ச்ய ஜகந்நாதம்। ௮௩।௰௧௨

வாஸுேதவம் ஸமாதிநா। ஏகம் அஸ்நாதி ேயா பக்தம்। ௮௩।௰௧௩
த்விதீயம் ப்ராஹ்மணாத்மகம்। கேராதி ேகஸவப்ரீத்ைய। ௮௩।௰௧௩
கார்த்திகம் மாஸம் ஆத்மவாந்। பூர்ேவ வயஸி யத் ேதந। ௮௩।௰௧௩
ஜ்ஞாநேதா அஜ்ஞாநேதா அபி வா। பாபம் ஆசரிதம் தஸ்மாந்।
௮௩।௰௧௪
முச்யேத நாத்ர ஸம்ஸய:। அேநைநவ விதாேநந। ௮௩।௰௧௪
மார்கஸர்ேஷீ அபி மாதவம்। ஸமப்யர்ச்ையகபக்தம் ைவ। ௮௩।௰௧௫
வர்ணிப்ேயா ய: ப்ரயச்சதி। பகவத்ப்ரீணநார்தாய। ௮௩।௰௧௫
பலம் தஸ்ய ஸ்ருணுஷ்வ ேம। மத்ேய வயஸி யத் பாபம்। ௮௩।௰௧௫
ேயாஷிதா புருேஷண வா। க்ருதம் தஸ்மாச் ச ேதேநாக்ேதா।
௮௩।௰௧௬
விேமாக்ஷ: பரமாத்மநா। ததா ைசைவகபக்தம் ைவ। ௮௩।௰௧௬
வர்ணாக்ேரப்ய: ப்ரயச்சதி। புண்டரீகாக்ஷம் அப்யர்ச்ய। ௮௩।௰௧௭
ெபௗஷமாேஸ மஹீபேத। தத்ப்ரீணநாய யத் பாபம்। ௮௩।௰௧௭
வார்த்திேக ேதந ைவ க்ருதம்। ஸ தஸ்மாந் முச்யேத ராஜந்।
௮௩।௰௧௮
புமாந் ேயாஷித் அதாபி வா। த்ைரமாஸிகவ்ரதம் இதம்। ௮௩।௰௧௮
ய: கேராதி நேரஸ்வர। ஸ விஷ்ணுப்ரீணநாத் பாைபர்। ௮௩।௰௧௯
லகுபிர் விப்ரமுச்யேத। த்விதீேய வத்ஸேர ராஜந்। ௮௩।௰௧௯
முச்யேத ேசாபபாதைக:। தத்வத் த்ருதீேய அபி க்ருதம்। ௮௩।௰௨
மஹாபாதகநாஸநம்। வ்ரதம் ஏதந் நைர: ஸ்த்ரீபிஸ்। ௮௩।௰௨
த்ரிபிர் மாைஸர் அநுஷ்டிதம்। த்ரிபி: ஸம்வத்ஸைரர் ஏவ। ௮௩।௰௨௧

———————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஸுவ்ன பகவான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ விஷ்ணு தர்மம் –இரண்டாம் பாகம் —

June 3, 2023

பரிஷ்வஜ்ய மஹாபாஹும்। ஸமாஸ்வாஸ்ய ச பால்குநம்। ௩௬।௰௰௧
ப்ர்வாச பகவாந் ேதவ:। ப்ரஹ்ருஷ்ேடநாந்தராத்மநா। ௰௩௬।௩௭
யஸ் த்வாம் ேவத்தி ஸ மாம் ேவத்தி। யஸ் த்வாம் அநு ஸ மாம் அநு।
௩௬।௰௰௨
அேபேதநாத்மநா ேவத்மீ। த்வாம் அஹம் பாண்டுநந்தந। ௩௬।௰௰௨
மமாம்ஸத்வம் மஹாபாேஹா। ஜகத: பாலேநச்சயா। ௩௬।௰௰௩
புேவா பாராவதாரார்தம்। ப்ருதக் பார்த மயா க்ருதம்। ௩௬।௰௰௩

ேதவைதத்ேயாரகா யக்ஷா। கந்தர்வா: கிம்நராப்ஸரா:। ௩௬।௰௰௪
ராக்ஷஸாஸ் ச பிஸாசாஸ் ச। பஸுபக்ஷிஸரீஸ்ருபா:। ௩௬।௰௰௪
வ்ருக்ஷகுல்மாதய: ைஸலா:। ஸர்வபூதாநி சார்ஜுந। ௩௬।௰௰௫
மைமவாம்ஸாநி பூதாநி। வித்தி ஸர்வாண்ய் அரிம்தம। ௩௬।௰௰௫
பகவந் ஸர்வபூதாத்மந்। ஸர்வபூேதஷு ைவ பவாந்। ௩௬।௰௰௬
பரமாத்மஸ்வரூேபண। ஸ்திதம் ேவத்மி தத் அவ்யயம்। ௩௬।௰௰௬
ேக்ஷத்ேரஷு ேயஷு ேயஷு த்வம்। சிந்தநீேயா மயாச்யுத। ௩௬।௰௰௭
ேசதஸ: ப்ரணிதாநார்தம்। தந் மமாக்யாதும் அர்ஹஸி। ௩௬।௰௰௭
யத்ர யத்ர ச யந் நாம। ப்ரீதேய பவத: ஸ்துெதௗ। ௩௬।௰௰௮
ப்ரஸாதஸுமுேகா நாத। தந் மமாேஸஷேதா வத। ௩௬।௰௰௮
ஸர்வக: ஸர்வபூேதா அஹம்। ந ஹி கிம்சித் மயா விநா। ௩௬।௰௰௯
சராசேர ஜகத்ய் அஸ்மிந்। வித்யேத குருஸத்தம। ௩௬।௰௰௯
ததாபி ேயஷு ஸ்தாேநஷு। சிந்தநீேயா அஹம் அர்ஜுந। ௩௬।௰௧
ஸ்ேதாதவ்ேயா நாமபிர் ையஸ் து। ஸ்ரூயதாம் தத் வதாமி ேத।
௩௬।௰௧
புஷ்கேர புண்டரீகாக்ஷம்। கயாயாம் ச கதாதரம்। ௩௬।௰௧௧
ேலாஹதண்ேட ததா விஷ்ணும்। ஸ்துவம்ஸ் தரதி துஷ்க்ருதம்।
௩௬।௰௧௧
Šவாமாச்ேய குமாரம்। ேநபாேல ேலாகபாவநம்। ௰௩௬।௩௮
ராகவம் சித்ரகூேட து। ப்ரபாேஸ ைதத்யஸூதநம்। ௩௬।௰௧௨
வ்ருந்தாவேந ச ேகாவிந்தம்। மா ஸ்துவந் புண்யபாக் பேவத்।
௩௬।௰௧௨
மந்ேதாதபாேந ைவகுண்டம்। மாஹந்த்ேர சாச்யுதம் விபும்। ௰௩௬।௩௯

ஜயம் ஜயந்த்யாம் தத்வச் ச। ஜயந்தம் ஹஸ்திநாபுேர। ௩௬।௰௧௩
வாராஹம் கர்தமாேல து। காஸ்மீேர சக்ரபாணிநம்। ௩௬।௰௧௩
ஜநார்தநம் ச குப்ஜாம்ேர। மதுராயாம் ச ேகஸவம்। ௩௬।௰௧௪
குப்ஜேக ஸ்ரீதரம் தத்வத்। கங்காத்வாேர ஸுேராத்தமம்। ௩௬।௰௧௪
ஸாலக்ராேம மஹாேயாகிம்। ஹரிம் ேகாவர்தநாசேல। ௩௬।௰௧௫
பிண்டாரேக சதுர்பாஹும்। ஸங்ேகாத்தாேர ச ஸங்கிநம்। ௩௬।௰௧௫
வாமநம் ச குருேக்ஷத்ேர। யமுநாயாம் த்ரிவிக்ரமம்। ௩௬।௰௧௬
வநமாலம் ச கிஷ்கிந்தாயாம்। ேதவம் ைரவதேக த்விஜ। ௰௩௬।௪௰
காஸஜேல ீ மஹாேயாகம்। ேதவம் சாமிதேதஜஸம்। ௰௩௬।௪௰
ைவஸாகயூேப அஜிதம்। விரஜாயாம் விப்ரக்ஷயம்। ௰௩௬।௪௰
விஸ்ேவஸ்வரம் ததா ேஸாேண। கபிலம் பூர்வஸாகேர। ௩௬।௰௧௬
ஸ்ேவதத்வபபதிம் ீ சாபி। கங்காஸாகரஸம்கேம। ௩௬।௰௧௭
பூதரம் ேதவிகாநத்யாம்। ப்ரயாேக ைசவ மாதவம்। ௩௬।௰௧௭
நரநாராயணாக்யம் ச। ததா பதரிகாஸ்ரேம। ௩௬।௰௧௮
ஸமுத்ேர தக்ஷிேண ஸ்தவ்யம்। பத்மநாேபதி பால்குந। ௩௬।௰௧௮
த்வாரகாயாம் ததா க்ருஷ்ணம்। ஸ்துவம்ஸ் தரதி துர்கதிம்। ௩௬।௰௧௯
ராமம் நாம மேஹந்த்ராத்ெரௗ। ஹ்ருஷீேகஸம் ததார்புேத। ௩௬।௰௧௯
அஸ்வதீர்ேத ஹயக்ரீவம்। விஸ்வரூபம் ஹிமாசேல। ௩௬।௰௨
ந்ருஸிம்ஹம் க்ருதெஸௗேச ச। விபாஸாயாம் த்விஜப்ரியம்। ௩௬।௰௨
ைநமிேஷ யஜ்ஞபுருஷம்। ஜம்பூமார்ேக ததாச்யுதம்। ௩௬।௰௨௧
அநந்தம் ைஸந்தவாரண்ேய। தண்டேக ஸாங்கதாரிணம்। ௩௬।௰௨௧
உத்பலாவர்தேக ெஸௗரிம்। நர்மதாயாம் ஸ்ரிய: பதிம்। ௩௬।௰௨௨

தாேமாதரம் ைரவதேக। நந்தாயாம் ஜலஸாயிநம்। ௩௬।௰௨௨
ஸர்வேயாேகஸ்வரம் ைசவ। ஸிந்துஸாகரஸம்கேம। ௩௬।௰௨௩
ஸஹ்யாத்ெரௗ ேதவேதேவஸம்। ைவகுண்டம் மாகேத வேந।
௩௬।௰௨௩
ஸர்வபாபஹரம் விந்த்ேய। உட்ேரஷு புருேஷாத்தமம்। ௩௬।௰௨௪
ஹ்ருதேய சாபி ெகௗந்ேதய। பரமாத்மாநம் ஆத்மந:। ௩௬।௰௨௪
வேட வேட ைவஸ்ரவணம்। சத்வேர சத்வேர ஸிவம்। ௩௬।௰௨௫
பர்வேத பர்வேத ராமம்। ஸர்வத்ர மதுஸூதநம்। ௩௬।௰௨௫
நரம் பூெமௗ ததா வ்ேயாம்நி। ெகௗந்ேதய கருடத்வஜம்। ௩௬।௰௨௬
வாஸுேதவம் ச ஸர்வத்ர। ஸம்ஸ்மரஞ் ஜ்ேயாதிஷாம் பதிம்।
௩௬।௰௨௬
அர்சயந் ப்ரணமம்ஸ் து த்வம்। ஸம்ஸ்மரம்ஸ் ச தநம்ஜய। ௩௬।௰௨௭
ஏேதஷ்வ் ஏதாநி நாமாநி। நர: பாைப: ப்ரமுச்யேத। ௩௬।௰௨௭
ஸ்தாேநஷ்வ் ஏேதஷு மந்நாம்நாம்। ஏேதஷாம் ப்ரீணநம் நர:।
௩௬।௰௨௮
த்விஜாநாம் ப்ரீணநம் க்ருத்வா। ஸ்வர்கேலாேக அபிஜாயேத।
௩௬।௰௨௮
நாமாந்ய் ஏதாநி ெகௗந்ேதய। ஸ்தாநாந்ய் ஏதாநி சாத்மவாந்।
௩௬।௰௨௯
ஜயம் ைவ பஞ்சபஞ்சாஸத்। த்ரிஸந்த்யம் மத்பராயண:। ௩௬।௰௨௯
த்ரீணி ஜந்மாநி யத் பாபம்। அவஸ்தாத்ரிதேய க்ருதம்। ௩௬।௰௩
தத் க்ஷாலயத்ய் அஸம்திக்தம்। ஜாயேத ச ஸதாம் குேல। ௩௬।௰௩
த்விஷ்காலம் வா ஜபந்ந் ஏவ। திவாராத்ெரௗ ச யத் க்ருதம்। ௩௬।௰௩௧

தஸ்மாத் விமுச்யேத பாபாத்। ஸத்பாவபரேமா நர:। ௩௬।௰௩௧
ஜப்தாந்ய் ஏதாநி ெகௗந்ேதய। ஸக்ருச்ச்ரத்தாஸமந்விதம்। ௩௬।௰௩௨
ேமாசயந்ேத நரம் பாபாத்। யத் தத்ைரவ திேந க்ருதம்। ௩௬।௰௩௨
தந்யம் யஸஸ்யம் ஆயுஷ்யம்। ஜயம் குரு குேலாத்வஹ। ௩௬।௰௩௩
க்ரஹாநுகூலதாம் ைசவ। கேராத்ய் ஆஸு ந ஸம்ஸய:। ௩௬।௰௩௩
உேபாஷிேதா மத்பரம:। ஸ்தாேநஷ்வ் ஏேதஷு மாநவ:। ௩௬।௰௩௪
க்ருதாயதநவாஸஸ் ச। ப்ராப்ேநாத்ய் அபிமதம் பலம்। ௩௬।௰௩௪
உத்க்ராந்திர் அப்ய் அேஸேஷஷு। ஸ்தாேநஷ்வ் ஏேதஷு ஸஸ்யேத।
௩௬।௰௩௫
அந்யஸ்தாநாச் சதகுணம்। ஏேதஷ்வ் அநஸநாதிகம்। ௩௬।௰௩௫
யஸ் து மத்பரம: காலம்। கேராத்ய் ஏேதஷு மாநவ:। ௩௬।௰௩௬
ேதவாநாம் அபி பூஜ்ேயா அெஸௗ। மம ேலாேக மஹீயேத। ௩௬।௰௩௬
யந் ந தாபாய ைவ பும்ஸாம்। பவத்ய் ஆமுஷ்மிகம் க்ருதம்। ௩௭।௰௰௧
தாபாய யச் ச பவதி। தத் ஆசŠவ மஹாமுேந। ௩௭।௰௰௧
உபவாஸப்ரபாவம் ச। க்ருஷ்ணாராதநகாங்க்ஷிண:। ௩௭।௰௰௨
கதேயஹ மம ப்ரஹ்மந்। ந ச த்ருப்யாமி கத்யேத। ௩௭।௰௰௨
ஸ்ரூயதாம் தால்ப்ய யத் ப்ருஷ்டா:। ெகௗதுகாத் பவதா வயம்।
௩௭।௰௰௩
ஆமுஷ்மிகம் ந தாபாய। யச் ச தாபாய ஜாயேத। ௩௭।௰௰௩
உேபாஷிதப்ரபாவம் ச। க்ருஷ்ணாராதநகாங்க்ஷிண:। ௩௭।௰௰௪
கதயாமி யதாவ்ருத்தம்। பூர்வம் ஏவ மஹாமேத। ௩௭।௰௰௪
ைவதிஸம் நாம நகரம்। ப்ரக்யாதம் இஹ ஸத்தம। ௩௭।௰௰௫
தத்ர ைவஸ்ேயா அபவத் பூர்வம்। வரபத்ர ீ இதி ஸ்ருத:। ௩௭।௰௰௫

பார்யாஜாமாத்ருதுஹித்ரு । புத்ரெபௗத்ரஸ்நுஷாந்வித:। ௩௭।௰௰௬
ப்ரபூதப்ருத்யவர்கஸ் ச। பஹுவ்யாபாரகாரக:। ௩௭।௰௰௬
புத்ரெபௗத்ராதிபரண । வ்யாஸக்தமதிர் ஏவ ச। ௩௭।௰௰௭
பரேலாகம் ப்ரதி மதிஸ்। தஸ்ய சாத்யந்ததுர்முகா। ௩௭।௰௰௭
சகாராநுதிநம் ேஸா அத। ந்யாயாந்யாையர் தநார்ஜநம்। ௩௭।௰௰௮
ஸர்வத்ராந்யத்ர நி:ஸ்ேநஹ:। பரஸ்ேவ சாதிதர்ஷுல:। ௩௭।௰௰௮
ந ஜுேஹாத்ய் உதிேத காேல। ந ததாத்ய் அதித்ருஷ்ணயா। ௩௭।௰௰௯
பபூவ ேசாத்யமஸ் தஸ்ய। புத்ராதிபரேண பர:। ௩௭।௰௰௯
நித்யைநமித்திகாநாம் ச। ஹாநிம் சக்ேர ஸ்வகர்மணாம்। ௩௭।௰௧
த்ருஷ்ணாபிபூேதா விப்ரர்ேஷ। ஸ்வவர்கபரணாத்ருத:। ௩௭।௰௧
காேலந கச்சதா ேஸா அத। ம்ருேதா விந்த்யாடவதேட ீ । ௩௭।௰௧௧
யாதநாேதஹப்ருத் ப்ேரேதா। க்ரீஷ்மகாேல அபவந் முேந। ௩௭।௰௧௧
தம் ததர்ஸ மஹாபாேகா। திவ்யஜ்ஞாநஸமந்வித:। ௩௭।௰௧௨
ேவதேவதாந்தவித் வித்வாந்। பிபேதா ீ நாம ைவ த்விஜ:। ௩௭।௰௧௨
பாஸ்கரஸ்யாம்ஸுபிர் தீப்ைதர்। தஹ்யந்தம் அநிவாரைண:। ௩௭।௰௧௩
ப்ரதப்தவாலுகாமத்ேய। த்ருஷா சாத்யந்தபடிதம் ீ । ௩௭।௰௧௩
க்ஷுத்க்ஷாமகண்டம் ஸுஷ்காஸ்யம்। ஸ்தப்ேதாத்வ்ருத்தவிேலாசநம்।
௩௭।௰௧௪
நிஷ்க்ராந்தஜிஹ்வம் அங்ேகஷு। விஸ்ேபாைட: ஸர்வதஸ் சிதம்।
௩௭।௰௧௪
நிஸ்வாஸாயாஸேகேதந। விரலாஸ்யம் அநாதரம்। ௩௭।௰௧௫
ஸ்ராந்தம் மக்ஷிகயாகீர்ணம்। துர்தக்தம் சாதிதாருணம்। ௰௩௭।௪௧
நிேஜந கர்மணா பத்தம்। அஸமர்தம் பலாயேந। ௩௭।௰௧௫

தம் தாத்ருஸம் அேதா த்ருஷ்ட்வா। கார்தேபேயா மஹாமுநி:।
௩௭।௰௧௬
பிபதீ : ப்ராஹ விப்ரர்ஷி:। காருண்யஸ்திமிதம் வச:। ௩௭।௰௧௬
ஜாநந்ந் அபி ததா ப்ராப்தம்। ததநுஷ்டாநஜம் பலம்। ௩௭।௰௧௭
ஜந்ேதாஸ் தஸ்ேயாபகாராய। ஸர்வேதா ஹ்லாதயந்ந் இவ। ௩௭।௰௧௭
அத: ஸூர்யாம்ஸுபிஸ் தப்ைதர்। பஹுபிர் யாநபாம்ஸுபி:। ௩௭।௰௧௮
உபர்ய் அர்ககைரர் உக்ைரஸ்। த்ருஷா சார்தஸ் ததா க்ஷுதா। ௩௭।௰௧௮
அந்ையஸ் ததாதிபிர் ேகாைரர்। அவிஷஹ்ையர் அவாரைண:।
௩௭।௰௧௯
கதேயஹ யதாதத்த்வம்। ஏகாகீ தஹ்யேஸ கதம்। ௩௭।௰௧௯
தஸ்ையதத் வசநம் ஸ்ருத்வா। பிபதஸ்ய ீ ஸேவதநம்। ௩௭।௰௨
யாதநாஸ்த உவாேசதம்। க்ருச்ச்ராத் உச்ச்வாஸ்ய மஸ்தகம்। ௩௭।௰௨
ப்ரஹ்மந் நாேலாசிதம் பூர்வம்। கதம் அந்ேத பவிஷ்யதி। ௩௭।௰௨௧
அஸாஸ்வேத ஸாஸ்வததீஸ்। ேதந தஹ்யாமி துர்மதி:। ௩௭।௰௨௧
தநாபணக்ருஹேக்ஷத்ர । புத்ரதாரஹிேத ரத:। ௩௭।௰௨௨
நாத்மேநா அஹம் ஹிதாரம்ப।ீ ேதந தஹ்யாமி துர்மதி:। ௩௭।௰௨௨
இதம் கரிஷ்ேய க்ருத்ேவதம்। கரிஷ்யாம்ய் அபரம் த்வ் இதம்।
௩௭।௰௨௩
இதீச்சாஸதஸேரா அஹம்। ேதந தஹ்யாமி துர்மதி:। ௩௭।௰௨௩
ஜுேஹாமி யதி தந் நாஸ்தி। ததாமி யதி ஸததி ீ । ௩௭।௰௨௪
குடும்பம் இதி மூேடா அஹம்। ேதந தஹ்யாமி துர்மதி:। ௩௭।௰௨௪
ஸேதாஷ்ணவர்ஷாபிபவம் ீ । ேலாபாத் ேஸாட்:அம் மயாஸுபம்।
௩௭।௰௨௫

தத் ஏவ ஹி ந தர்மார்தம்। ேதந தஹ்யாமி துர்மதி:। ௩௭।௰௨௫
பித்ருேதவமநுஷ்யாணாம்। அதத்த்வாேபாஷிதா ஹி ேய। ௩௭।௰௨௬
ேத அந்யத்ர க்வாபி வர்தந்ேத। தஹ்யாம்ய் ஏேகா அத்ர துர்மதி:।
௩௭।௰௨௬
புத்ரப்ருத்யகலத்ேரஷு। மம த்வ் ஆத்ருதமாநஸ:। ௩௭।௰௨௭
க்ருத்வா கர்மாண்ய் அஸாதூநி। தஹ்யாம்ய் ஏேகா அத்ர துர்மதி:।
௩௭।௰௨௭
ம்ருேத மயி தேந தஸ்மிந்ந்। அந்யாேயாபார்ஜிேத மயா। ௩௭।௰௨௮
நூநம் மேமதி வர்தந்ேத। தஹ்யாம்ய் ஏேகா அத்ர துர்மதி:। ௩௭।௰௨௮
ந ஹி ந: பூஜிதா ேகஹாந்। நிர்கதா த்விஜஸத்தமா:। ௩௭।௰௨௯
ஸ்வவர்கஹிதகாமஸ்ய। ேதந தஹ்யாம்ய் அஹர்நிஸம்। ௩௭।௰௨௯
யந் ேம ந பூஜிதா ேதவா:। குடும்பம் ேபாஷீதம் பரம்। ௩௭।௰௩
ஏகாகீேதந தஹ்யாமி। ேய புஷ்டாஸ் ேத அந்யேதா கதா:। ௩௭।௰௩
நித்யைநமித்திகம் கர்ம। க்ருேத ேயஷாம் ந ம க்ருதம்। ௩௭।௰௩௧
ஏகாகீேதந தஹ்யாமி। ைதர் மந்ேய க்வாபி ரம்யேத। ௩௭।௰௩௧
யந் ேம பரிஜநஸ்யார்ேத। க்ருதம் கர்ம ஸுபாஸுபம்। ௩௭।௰௩௨
ஏகாகீேதந தஹ்யாமி। கதாஸ் ேத பலேபாகிந:। ௩௭।௰௩௨
தாரா: புத்ராஸ் ச ப்ருத்யாஸ் ச। பாபவ்யாப்த்யா மையதிதா:। ௩௭।௰௩௩
ஏகாகீேதந தஹ்யாமி। கதாஸ் ேத பலேபாகிந:। ௩௭।௰௩௩
புத்ரதாராதிப்ருத்யார்ேத। மயாந்யாயார்தஸம்சயா:। ௩௭।௰௩௪
க்ருதாஸ் ேதநாத்ர தஹ்யாமி। புஞ்ஜேத அப்ய் அந்யேதா கதா:।
௩௭।௰௩௪
க்ருதம் பாபம் மயா புக்தம்। அந்ையஸ் தத்கர்மஸம்சிதம்। ௩௭।௰௩௫

தஹ்யாம்ய் ஏேகா அஹம் அத்யந்தம்। த்யக்தஸ் ைத: பலேபாகிபி:।
௩௭।௰௩௫
யந் மமத்வாபிபூேதந। மயா தநம் உபார்ஜிதம்। ௩௭।௰௩௬
அந்யஸ்ய ேத அத்ய கஸ்யாபி। ேகவலம் மம துஷ்க்ருதம்। ௩௭।௰௩௬
அந்தர்து:ேகந தக்ேதா அந்தர்। பஹிர் தஹ்யாமி பாநுநா। ௩௭।௰௩௭
நாந்தர்து:கம் ந வா பாநு:। பாபம் ஏவ த்விதா ஸ்திதம்। ௩௭।௰௩௭
கம்சித் கர்மஸமுத்தாரம்। பஸ்யஸ்ய் அஸுகஸாகராத்। ௩௭।௰௩௮
மம ேயநாஹம் ஆஹ்லாதம்। ஆப்நுயாம் முநிஸத்தம। ௩௭।௰௩௮
அல்பகாலிகம் உத்தாரம்। தவ பஸ்யாம்ய் அஸம்ஸயம்। ௩௭।௰௩௯
ப்ரக்ஷீணப்ராயம் ஏதத் ேத। ஸுக்ருதம் சாஸ்தி ேத பரம்। ௩௭।௰௩௯
அதீேத தஸேம ஜந்மந்ய்। அச்யுதாராதேநச்சயா। ௩௭।௰௪
ஸுகர்மஜயதாம் பத்ர। த்வாதஸம்ீ த்வம் உேபாஷித:। ௩௭।௰௪
தவ தஸ்யா: ப்ரபாேவண। பாபம் அத்யந்ததுர்ஜயம்। ௩௭।௰௪௧
அல்ைபர் அேஹாபி: ஸம்க்ஷணம் ீ । நவபாத்ேர யதா ஜலம்। ௩௭।௰௪௧
யத் அந்ய: க்ஷபேயத் வர்ைஷஸ்। தத் திைநர் பவத: க்ஷயம்। ௩௭।௰௪௨
கதம் பாபம் அயம் தஸ்யா:। ப்ரபாேவா அத்யந்ததுர்லப:। ௩௭।௰௪௨
ஸமம் பாபஸ்ய குருேத। ஜயம் ஸுக்ருதகர்மண:। ௩௭।௰௪௩
ஸத்கர்மஜயதா ஹ்ய் ஏஷா। தேதா ைவ த்வாதஸீ ஸ்ம்ருதா।
௩௭।௰௪௩
யச் ைசதத் ேவதநார்ேதந। பவதா பரிேதவிதம்। ௩௭।௰௪௪
தத் ததா நாத்ர ஸம்ேதேஹா। மமதா பாபேஹதுகீ। ௩௭।௰௪௪
பாபம் அத்ர க்ருதம் ப்ேரத்ய। பத்ர தாபாய ஜாயேத। ௩௭।௰௪௫

ஆஹ்லாதாய ததா புண்யம்। இஹ புண்யக்ருதாம் ந்ருணாம்।
௩௭।௰௪௫
வரபத்ரம் ீ ஸமாஸ்வாஸ்ய। யயாவ் இத்தம் மஹாமுநி:। ௩௭।௰௪௬
ேஸா அப்ய் அல்ேபைநவ காேலந। தேதா ேமாக்ஷம் அவாப்தவாந்।
௩௭।௰௪௬
ஏவம் தால்ப்ய பேர ேலாேக। யத் அத்ராஸுக்ருதம் க்ருதம்। ௩௭।௰௪௭
தத் தாபாய ஸுகாேயாக்தம்। யத் அத்ைரவ ஸுபம் க்ருதம்। ௩௭।௰௪௭
உபவாஸப்ரபாவஸ் ச। கதிதஸ் ேத மஹாமுேந। ௩௭।௰௪௮
ேயநால்ைபர் ஏவ திவைஸர்। பூரி பாபம் க்ஷயம் கதம்। ௩௭।௰௪௮
தஸ்மாந் நேரண புண்யாய। பதிதவ்யம் ந பாதேக। ௩௭।௰௪௯
உபவாஸாஸ் ச கர்தவ்யா:। ஸைதவாத்மஹிைதஷிணா। ௩௭।௰௪௯
ஸம்ஸாராஸாரதாம் ஜ்ஞாத்வா। விஷயாம்ஸ் சாதிதர்ஷுலாந்।
௩௮।௰௰௧
கர்தவ்யம் யந் மஹாபாக। புருேஷண தத் உச்யதாம்। ௩௮।௰௰௧
ஸம்ஸாராஸாரதாம் ஜ்ஞாத்வா। விஷயாம்ஸ் சாதிதர்ஷுலாந்।
௩௮।௰௰௨
க்ருத்திஸ் ேதஷ்வ் ஏவ ஸம்த்யாஜ்யா। தத்த்யாேகா குணவாந் ந்ருணாம்।
௩௮।௰௰௨
ேயஷாம் அப்தஸஹஸ்ராணாம்। ஸஹஸ்ைரர் அபி ேநா நர:।
௩௮।௰௰௩
ேபாகாத் த்ருப்திம் ஸமாப்ேநாதி। கஸ் ைதர் ேபாைகர் விரஜ்யேத।
௩௮।௰௰௩
யாவேதா வாஞ்சேத ேபாகாந்। அஹந்ய் அஹநி மாநவ:। ௩௮।௰௰௪

ேதஷாம் ஸஹஸ்ரபாேக அபி। தால்ப்ய ப்ராப்திம் ந விந்ததி।
௩௮।௰௰௪
அத ேசத் தந் அவாப்ேநாதி। ஸஹஸ்ரகுணிதாந் நர:। ௩௮।௰௰௫
ததாப்ய் அத்ருப்த ஏவாந்தம்। அந்தகாேல கமிஷ்யதி। ௩௮।௰௰௫
த்ருப்தேய ேய ந ஸம்ப்ராப்தா:। ப்ராப்யந்ேத ேய ந வாஞ்சிதா:।
௩௮।௰௰௬
புத்திமாந் இந்த்ரியார்ேதஷு। ேதஷ்வ் அஸங்கீஸதா பேவத்।
௩௮।௰௰௬
ேயஷாம் த்ருப்திர் ந ேபாேகந। த்யாகஸ் ைசேவாபகாரக:। ௩௮।௰௰௭
உேபாஷிதவிதாேநந। ேபாகாந்த்யாகஸ் தேதா வர:। ௩௮।௰௰௭
க்ருச்ச்ரசாந்த்ராயணாதீநி। நைரஸ் தஸ்மாந் முமுக்ஷுபி:। ௩௮।௰௰௮
நிஷ்காைமர் தால்ப்ய கார்யாணி। பலாய ச பேலப்ஸுபி:। ௩௮।௰௰௮
அத்ராப்ய் உதாஹரந்தீமம்। முநேயா முநிஸத்தம। ௩௮।௰௰௯
தஸ்ராப்யாம் ஸஹ ஸம்வாதம்। ஐலஸ்ய ச மஹாத்மந:। ௩௮।௰௰௯
ஐல: புரூரவா: பூர்வம்। பபூவ மநுேஜஸ்வர:। ௩௮।௰௧
சகேம யம் மஹாபாகம்। உர்வஸீ ஸுரஸுந்தரீ। ௩௮।௰௧
ஸம்த்யஜ்ய த்ரிதஸாவாஸம்। ரூெபௗதார்யகுணாந்விதம்। ௩௮।௰௧௧
ேபேஜ தம் உர்வஸீ தால்ப்ய। புதஸ்ய தநயம் ந்ருபம்। ௩௮।௰௧௧
நாஸத்யதஸ்ெரௗ ரூேபண। ேதவாநாம் அதிெகௗ தத:। ௩௮।௰௧௨
உர்வஸேலாபநம் ீ தஸ்ய। ரூபம் த்ரஷ்டும் ஸமுத்ஸுெகௗ। ௩௮।௰௧௨
ப்ரதிஷ்டாநம் புரம் தஸ்ய। புதபுத்ரஸ்ய தீமத:। ௩௮।௰௧௩
ஜக்மது: ஸுமஹாபாெகௗ। தஸ்ய த்வாஸ்தம் அேதாசது:। ௩௮।௰௧௩

க்ஷத்ேதா அஸ்மத்வசநாத் ஐலம்। ப்ரூஹி த்வம் வஸுதாதிபம்।
௩௮।௰௧௪
த்ரஷ்டும் தவாஸ்விெநௗ ப்ராப்ெதௗ। ரூபஸம்பத்குணம் ண்ர்ப।
௩௮।௰௧௪
தேதஹ்ய் அத்ர மஹாபாக। இஹாஸ்மாந் ஸம்ப்ரேவஸய। ௩௮।௰௧௪
ஆஸ்சர்யபூதம் ேலாேகஷு। உர்வஸேலாபநம் ீ வபு:। ௩௮।௰௧௫
தத் ெகௗதுகம் ந குருேத। கஸ்ய பார்திவபுங்கவ। ௩௮।௰௧௫
ஆவாம் ஸமாகெதௗ தஸ்மாத்। த்வாம் த்ரஷ்டும் மநுேஜாத்தம।
௰௩௮।௪௨
த்வாஸ்தஸ் தேததி தாவ் ஆஹ। ப்ரவிேவஸ ச ஸத்வரம்। ௩௮।௰௧௬
ஆசசேக்ஷ ச தத் ராஜ்ேஞ। நாஸத்யவசநம் த்விஜ। ௩௮।௰௧௬
தச் ச்ருத்வா வசநம் ராஜா। த்வாஸ்தம் ஆஹ முஹூர்தகம்। ௩௮।௰௧௭
விலம்ப்யதாம் மஹாபாெகௗ। ெதௗ ப்ரூஹி வசநாந் மம। ௩௮।௰௧௭
வ்யாயாமைதலஸம்ஸர்க । மலிேநா ந விபூஷித:। ௩௮।௰௧௮
ப்ரஸாதநம் ச க்ருத்வாஹம்। நிஷ்க்ரமாமி த்வராந்வித:। ௩௮।௰௧௮
நிஷ்க்ரம்ய ஸ தேதா த்வாஸ்ேதா। யேதாக்தம் பூப்ருதகிலம்।
௩௮।௰௧௯
ஸமாசஷ்ட தேதா தால்ப்ய। ெதௗ ச பூயஸ் தம் ஊசது:। ௩௮।௰௧௯
அப்ரஸாதிதம் ஏவாஸு। பவந்தம் வஸுதாதிப। ௩௮।௰௨
பஸ்யாவஸ் தவ பூேயா அபி। த்வாம் த்ரŠயாவ: ப்ரஸாதிதம்।
௩௮।௰௨
இத்ய் உக்ேதா நிர்கதஸ் தூர்ணம்। பவநாத் அவநீபதி:। ௩௮।௰௨௧
ைதலாப்யக்ததநுர் தால்ப்ய। வ்யாயாமபரிதாநத்ருக்। ௩௮।௰௨௧

ஸ ப்ரணாமம் தேயா: க்ருத்வா। கிம்சிந் நதஸிரா ந்ருப:। ௩௮।௰௨௨
ப்ேராவாச யந் மயா கார்யம்। பவேதாஸ் தத் இேஹாச்யதாம்।
௩௮।௰௨௨
ஸப்தத்வபவத ீ ீப்ருத்வ।ீ புத்ரதாரபலம் தநம்। ௩௮।௰௨௩
யச் சாந்யத் அபி தத் ஸர்வம்। யுவேயார் ேம நிேவதிதம்। ௩௮।௰௨௩
இத்ய் உதாஹ்ருதம் ஆகர்ண்ய। ந்ருபேதர் அஸ்விநாவ் அபி। ௩௮।௰௨௪
அங்ேகாபாங்காதிகம் ஸர்வம்। ஸநைகஸ் தாவ் அபஸ்யதாம்।
௩௮।௰௨௪
ஸிேராலலாடபாஹும் ஸ । நயநாதிவிேலாகநம்। ௩௮।௰௨௫
க்ருத்வா ச தம் மஹீபாலம்। ஊசதுஸ் தாவ் இதம் ஸுெரௗ।
௩௮।௰௨௫
ப்ரவிஸ்ய ஸ்நாஹி பூபால। யதார்ைதஸ் ச விபூஷைண:। ௩௮।௰௨௬
விபூஷிதம் து பூயஸ் த்வாம்। த்ரŠயாேவா அவாம் நேரஸ்வர।
௩௮।௰௨௬
தேததி ேசாக்த்வா ஸ ந்ருப:। ப்ரவிேவஸ மஹாமுேந। ௩௮।௰௨௭
சக்ேர ச ஸகலம் ஸம்யக்। ஸ்நாத்வா ேதஹப்ரஸாதநம்। ௩௮।௰௨௭
ஸ்நாேதா அநுலிப்த: ஸ்ரக்தாரீ। ஸுவஸ்த்ர: ஸுவிபூஷித:। ௩௮।௰௨௮
நாஸத்யதஸ்ரேயா: பார்ஸ்வம்। இயாய வஸுதாதிப:। ௩௮।௰௨௮
பூேயா அபி ெதௗ யதா பூர்வம்। அங்ேகாபாங்கவிேலாகநம்। ௩௮।௰௨௯
சக்ரதுர் ந்ருபேதஸ் தஸ்ய। ஸ்மிதபிந்ெநௗஷ்டஸம்புெடௗ। ௩௮।௰௨௯
ெதௗ ஸஹாெஸௗ ஸமாலŠய। ஸ ததா வஸுதாதிப:। ௩௮।௰௩
ஹாஸஸ்ய காரணம் ேதவ । பிஷெஜௗ தாவ் அப்ருச்சத। ௩௮।௰௩
ப்ருச்சந்தம் ந தேதா தால்ப்ய। ந்ருபதிம் ஹாஸ்யகாரணம்। ௩௮।௰௩௧

யத் ஊசதுர் மஹாபாெகௗ। தச் ச்ருணுஷ்வ வதாமி ேத। ௩௮।௰௩௧
ஸ்ருணு பூபால ஸகலம்। ஹாஸகாரணம் ஆவேயா:। ௩௮।௰௩௨
யுஷ்மத்தர்ஸநஸம்பூதம்। க்ஷணாபசயேஹதுகம்। ௩௮।௰௩௨
அஸ்நாதஸ்யாபவத் பூப। யாத்ருஸீ ேத ஸுரூபதா। ௩௮।௰௩௩
ஸாம்ப்ரதம் தாத்ருஸீ ேநயம்। பூஷிதஸ்யாபி பூஷைண:। ௩௮।௰௩௩
ஸ்நாத: ஸ்ரக்தாமதாரீ த்வம்। ஸ்வநுலிப்த: ஸுபூஷித:। ௩௮।௰௩௪
ததாப்ய் அஸ்நாத ஏவ ப்ராச்। ேஸாபேநா அபூந் ந ஸாம்ப்ரதம்।
௩௮।௰௩௪
கிம்து தத்காரணம் ேயந। வ்யாயாமமலிநாம்பர:। ௩௮।௰௩௫
ேஸாபேநா அஹம் அபூத் பூர்வம்। இதாநீம் ந விபூஷித:। ௩௮।௰௩௫
திவ்ேயந சக்ஷுஷா பூப। காலஸ்யாஸ்ய ச தஸ்ய ச। ௩௮।௰௩௬
வய:பரிணதிம் ஸூŠமாம்। பஸ்யாேவா அபசயப்ரதாம்। ௩௮।௰௩௬
யதா ஹி நாடிகா பூர்ணா। கலத்ய் அவிரதம் ந்ருப। ௩௮।௰௩௭
ந்ருணாம் பரிணதஸ் தத்வச்। ஸரீரக்ரஹணாத் அநு। ௩௮।௰௩௭
ஜந்மேதா அநந்தரம் பால்யம்। ெபௗகண்டத்வம் தத: பரம்। ௩௮।௰௩௮
ெயௗவநம் மத்யேதஹித்வம்। வார்த்தகம் ச ஜரா ந்ருணாம்। ௩௮।௰௩௮
ஸ்தூலத்ருஷ்ட்யா து பஸ்யந்தி। ந து ேத ஸூŠமதர்ஸிந:।
௩௮।௰௩௮
நிேமஷஸதபாகஸ்ய। ஸஹஸ்ராம்ஸ: க்ஷேணா ந்ருப। ௩௮।௰௩௯
தஸ்யாப்ய் அயுதபாகாம்ேஸா। பவத்ய் அபசேயா ந்ருணாம்। ௩௮।௰௩௯
ஸூŠமாதிஸூŠமாபசய।ீ பவத்ய் ஏஷ புமாந் ந்ருப। ௩௮।௰௪
பரிணாமம் க்ரமாத் யாதி। த்ருப்திம் வாரி பிபந்ந் இவ। ௩௮।௰௪
தத் அஹர் ஜாதபால்யஸ்ய। பாலஸ்யாபசேயா ஹி ஸ:। ௩௮।௰௪௧

ப்ரதிக்ஷணாம்ஸயா வ்ருத்திர்। பாலத்வம் ஹீயேத தயா। ௩௮।௰௪௧
ெபௗகண்ேட ெயௗவேந ைசவ। வார்த்தேக ச மஹாமேத। ௩௮।௰௪௨
ஹாநிக்ரம: ஸ ஏேவாக்ேதா। ேயா பால்ேய கதிதஸ் தவ। ௩௮।௰௪௨
காந்திர் யா ந்ருப பாலஸ்ய। ேபாகண்டஸ்ய ஹி ஸா குத:। ௩௮।௰௪௩
தத்காந்திெஸௗகுமார்யாத்ைய:। ஸூந்யம் ஏவ ஹி ெயௗவநம்।
௩௮।௰௪௩
காந்த்யாதிஸம்பேதா ஹாநி:। பரமா ந்ருப வார்த்தேக। ௩௮।௰௪௪
தத்ராப்ய் அநுக்ஷணம் ஹாநிர்। ஹாநிர் ஆ ம்ருத்யுேதா ந்ருப।
௩௮।௰௪௪
ஏவம் ப்ரதிக்ஷணாம்ஸாம்ேஸா। ந்ருணாம் அபசயப்ரத:। ௩௮।௰௪௫
குர்வத: கிமு காலஸ் ேத। மஹாஸ்நாநப்ரஸாதநம்। ௩௮।௰௪௫
அஸ்மத்த்ருஷ்ேடா பவாந் யாவத்। ப்ரவிஷ்ேடா நிஜமந்திரம்।
௩௮।௰௪௬
தாவத் தாநிம் அநுப்ராப்த:। கிமு யாமார்தஸம்ஸ்தித:। ௩௮।௰௪௬
யாத்ருேஸா அத்ய பவாம்ஸ் தாத்ருக்। த்வம் ந ரூபீ நேரஸ்வர।
௩௮।௰௪௭
பரஸ்வ: ஸஸ்தநம் ைநவ। சதுர்ேத அஹ்நி ச தந்மய:। ௩௮।௰௪௭
ஏவம் ஸமஸ்தபூதாநி। ஸ்தாவராணி சராணி ச। ௩௮।௰௪௮
ப்ரதிக்ஷணாம்ஸாபசயம்। ப்ராப்நுவந்தி மஹீதேல। ௩௮।௰௪௮
தஸ்மாந் ந ெகௗதுகம் கார்யம்। பவதா து நேரஸ்வர। ௩௮।௰௪௯
யத் ேத ரூபம் அபூத் பூர்வம்। அப்ரஸாதிதேஸாபநம்। ௩௮।௰௪௯
ராஜா புரூரவா பூய:। ஸ்ருத்வா வாக்யம் இதம் தேயா:। ௩௮।௰௫
சிந்தயித்வா வச: ப்ராஹ। ஸம்ேவேகாத்கம்பிமாநஸ:। ௩௮।௰௫

அேஹா பவத்ப்யாம் கதிதம்। அநவஸ்திதஸம்ஸ்திதம்। ௩௮।௰௫௧
ஸ்வரூபம் ஜகேதா ேதெவௗ। ேயந த்ரஸ்ேதா அஸ்மி ஸாம்ப்ரதம்।
௩௮।௰௫௧
அஜ்ஞாநதிமிராந்தாநாம்। மத்விதாநாம் பவத்விதா:। ௩௮।௰௫௨
ப்ரதீபபூதா: ஸம்ேதேஹா। வித்யேத நாத்ர கஸ்சந। ௩௮।௰௫௨
ஸதாபசயேதாேஷண। துஷ்டகாைய: ஸுேராத்தெமௗ। ௩௮।௰௫௩
யத் கார்யம் புருைஷஸ் தச் ச। கத்யதாம் ஹிதகாம்யயா। ௩௮।௰௫௩
அதிமூேடா அத்ருேவ காேய। ஸதாபசயதர்மிணி। ௩௮।௰௫௪
நரஸ் ததுபேபாக்யாநி। த்ருவாணி பரிமார்கதி। ௩௮।௰௫௪
ஆஸநம் ஸயநம் யாநம்। பரிதாநம் க்ருஹாதிகம்। ௩௮।௰௫௫
வாஞ்சத்ய் அேஹா அதிேமாேஹந। ஸுஸ்திரம் ஸ்வயம் அஸ்திர:।
௩௮।௰௫௫
மூேடா அத்ருவம் த்ருவமதி:। கிம் ஆத்மாநம் ந புத்யேத।
௰௩௮।௰௫௬௪௩
பால்யாத் ெபௗகண்டதாம் கத்வா। ய: புநர் ெயௗவநம் கத:। ௩௮।௰௫௬
புவ: ைஸலம் ஸமாரூட:। ஸமாரூடஸ் தேதா த்ருமம்। ௩௮।௰௫௭
ஆேராஹணம் ஸ கிம் அந்யத்। க்ருக்ஷபதீ : கரிஷ்யதி। ௩௮।௰௫௭
பால்யாத் ெபௗகண்டதாம் யாேதா। ெயௗவநாத் வ்ருத்ததாம் கத:।
௩௮।௰௫௮
வேயா அவஸ்தா தத: காந்யா। யத் ேபாகாய ஸ்திேரச்சக:। ௩௮।௰௫௮
தஸ்மாத் ஏதந் மநுஷ்ேயண। விசார்யாத்மஹிைதஷிணா। ௩௮।௰௫௯
ஸ்ேரயஸ்ய் ஆமுஷ்மிேக யத்ந:। கர்தவ்ேயா அஹர்நிஸம் ந்ருப।
௩௮।௰௫௯

ேபாேகஷ்வ் அஸக்தி: ஸததம்। தைதவாத்மாவேலாகநம்। ௩௮।௰௬
ஸ்ேரய: பரம் மநுஷ்யாணாம்। கபில: ப்ராஹ பார்திவ:। ௩௮।௰௬
ஸர்வத்ர ஸமதர்ஸித்வம்। நிர்மமத்வம் அஸங்கிதா। ௩௮।௰௬௧
ஸ்ேரய: பரம் மநுஷ்யாணாம்। ப்ராஹ பஞ்சஸிேகா முநி:। ௩௮।௰௬௧
ஆகர்பஜந்மபால்யாதி । வேயா அவஸ்தாதிேவதநம்। ௩௮।௰௬௨
ஸ்ேரய: பரம் மநுஷ்யாணாம்। அங்காரிஷ்ேடா அப்ரவந்ீ ந்ருப:।
௩௮।௰௬௨
அத்யாத்மிகாதிது:காநாம்। அத்யந்தாதிப்ரதிக்ரியா। ௩௮।௰௬௩
ஸ்ேரய: பரம் மநுஷ்யாணாம்। ஜநேகா ஹ்ய் ஆஹ ேமாக்ஷவித்।
௩௮।௰௬௩
அபிந்நேயார் ேபதகர:। ப்ரத்யேயா ய: பராத்மேநா:। ௩௮।௰௬௪
ஹிரண்யகர்பஸ் தச்சாந்திம்। ஸ்ேரய: பரமம் அப்ரவத்ீ। ௩௮।௰௬௪
கர்தவ்யம் இதி யத் கர்ம। க்ருக்யஜு:ஸாமஸம்ஜ்ஞிதம்। ௩௮।௰௬௫
க்ரியேத தத் பரம் ஸ்ேரேயா। ைஜகீஷவ்ேயா அப்ரவந்ீ முநி:।
௩௮।௰௬௫
ஹாநிம் ஸர்வவிதித்ஸாநாம்। ஆத்மந: ஸுகேஹதுகீம்। ௩௮।௰௬௬
ஸ்ேரய: பரம் மநுஷ்யாணாம்। ேதவேலா அப்ய் ஆஹ தத்த்வவித்।
௩௮।௰௬௬
யத் யத் த்யஜதி காமாநாம்। தத் ஸுகஸ்யாபிபூர்யேத। ௩௮।௰௬௭
ஏதத் ஏவ பரம் ஸ்ேரேயா। விஜ்ஞாநம் ஹிதகாமிநாம்। ௩௮।௰௬௭
காமாநுஸாரீ புருஷ:। காமாந் அநு விநஸ்யதி। ௩௮।௰௬௮
அஸ்ேரயஸம் பரம் ைசதத்। யத் பூபாலாதிகாமிதா। ௩௮।௰௬௮
ஏவம் விஜ்ஞாததத்த்வார்த:। ஸநேகா ேயாகிநாம் வர:। ௩௮।௰௬௯

நேரந்த்ர ப்ராஹ விப்ராணாம்। பரமார்தபரம்பரம்। ௩௮।௰௬௯
க்ரியாகலாபபலதம்। க்ருக்யஜு:ஸாமஸம்ஜ்ஞிதம்। ௩௮।௰௭
அமுஷ்மிந் மத்யமம் ஸ்ேரய:। ப்ராஹு: ஸப்த ர்ஷேயா ந்ருப। ௩௮।௰௭
இைஹவ பலதம் காம்யம்। கர்ம யத் க்ரியேத நைர:। ௩௮।௰௭௧
தத் ஆஹுர் அபரம் ஸ்ேரேயா। க்ருசீகச்யவநாதய:। ௩௮।௰௭௧
த்ேவ கர்மணீநரஸ்ேரஷ்ட। ப்ரஹ்மணா ஸமுதாஹ்ருேத। ௩௮।௰௭௨
ப்ரவ்ருத்தாக்யம் நிவ்ருத்தம் ச। ஸ்வர்கமுக்திபேல ஹி ேத। ௩௮।௰௭௨
ப்ரவ்ருத்தம் அபி ேமாக்ஷாய। கர்ம பார்திவ ஜாயேத। ௩௮।௰௭௩
கர்ம ஸ்வரூபேதா ப்ரஷ்டம்। அநாகாங்Šய பலம் க்ருதம்। ௩௮।௰௭௩
ஸாமாந்யம் சாபரம் ஸ்ேரய:। ஸர்வவர்ணாஸ்ரேமஷு யத்। ௩௮।௰௭௪
தச் ச்ருணுஷ்வ மஹீபால। வதேதா மம தத்த்வத:। ௩௮।௰௭௪
ஸத்யம் வக்தவ்யம் நித்யம் ைமத்ேரண பாவ்யம்। கார்யம் ச த்யாஜ்யம்
நித்யம் ஆயாஸகாரி। ௩௮।௰௭௫
ேலாேக அமுஷ்மிந் யத் திதம் ச ததாஸ்மிம்ஸ்। தஸ்மிந்ந் ஆத்மா
ேயாஜநீேயா அநுதீைர:। ௩௮।௰௭௫
தீர்தஸ்நாைந: ேஸாபவாைஸர் அஜஸ்ரம்। பாத்ேர தாைநர் ேஹாமஜாைபஸ்
ச நித்யம்। ௩௮।௰௭௬
ஸுத்திர் ேநேயா ேதவதாப்யர்சைநஸ் ச। ஸுத்ேதா அப்ய் ஆத்மா
ஸங்கேதாஷாத் அஸுத்த:। ௩௮।௰௭௬
ஸுத்தம் வஸ்த்ரம் ஸங்கேதாஷாத் அஸுத்தம்। பூய: ஸுத்திம்
ேஸாத்யமாநம் பர்யாதி। ௩௮।௰௭௭
ஏதஜ் ஜ்ஞாத்வா ந ப்ரமாேதா மநுஷ்ைய:। ஸுத்ேத ஹ்ய் ஆத்மந்ய்
ஆத்மவித்பிர் விேதய:। ௩௮।௰௭௭

இத்ய் உக்த்வா ெதௗ நேரந்த்ரம் ெதௗ। ேதந சார்க்யாதிநா ப்ருதக்।
௩௮।௰௭௮
ஸம்யக் ஸம்பூஜிெதௗ யாெதௗ। நாக ப்ருஷ்டம் அதாஸ்விெநௗ।
௩௮।௰௭௮
ஸ சாப்ய் அநித்யதாம் ஏவம்। அவகம்ய நேரஸ்வர:। ௩௮।௰௭௯
நிஷ்காேமா அநுதிநம் ஏவ। அவகம்ய நேரஸ்வர:। ௩௮।௰௭௯
நிஷ்காேமா அநுதிநம் யஜ்ைஞர்। இயாஜ புருேஷாத்தமம்। ௩௮।௰௭௯
ேபாகாஸங்கி மேநா தால்ப்ய। யதாஸத்ீ தஸ்ய பூபேத:। ௩௮।௰௮
தத் ஏவ பகவத்த்யாந । பரம் சக்ேர மஹாமுேந। ௩௮।௰௮
தத்யாஜார்ேதஷு மமதாம்। அஹம்காரம் ததாத்மநி। ௩௮।௰௮௧
ஸமதாம் ஸர்வபூேதஷு। ஸம்ப்ராப ப்ருதிவபதி ீ :। ௩௮।௰௮௧
யஸ்யாத்மந்ய் அபி விப்ரர்ேஷ। நாஹம்மாேநா அஸ்தி குத்ரசித்।
௩௮।௰௮௨
மதாவேலேபா பூபாெதௗ। தஸ்ய ஸ்யாத் இதி கா கதா। ௩௮।௰௮௨
ஏவம் தால்ப்ய மநுஷ்ேயண। ஸமதாம் அநுதிஷ்டதா। ௩௮।௰௮௩
ஸர்வேபாேகஷு ஸம்த்யாஜ்ேயா। த்ேயயஸ் ச புருேஷாத்தம:।
௩௮।௰௮௩
குத்ர திஷ்டதி ேகாவிந்ேதா। பாஹ்யநிவ்ருதேசதஸி। ௩௮।௰௮௪
தஸ்மாந் நி:ஸங்கசித்ேதந। ஸக்யஸ் சிந்தயிதும் ஹரி:। ௩௮।௰௮௪
ப்ரீதித்ேவஷாதயஸ் த்யக்த்வா। மஹர்ேஷ யஸ்ய ேசதஸா।
௩௮।௰௮௫
ப்ரியாதிதிஸ் தத்த்ருதேய। விஷ்ணுர் ேமாக்ஷபலப்ரத:। ௩௮।௰௮௫
கார்யாரம்ேபஷு ஸர்ேவஷு। து:ஸ்வப்ேநஷு ச ஸத்தம। ௩௯।௰௰௧

அமங்கல்ேயஷு ஸர்ேவஷு। யஜ் ஜப்தவ்யம் தத் உச்யதாம்। ௩௯।௰௰௧
ேயநாரம்பாஸ் ச ஸித்ஹ்யந்தி। து:ஸ்வப்நம் ேசாபஸாம்யதி।
௩௯।௰௰௨
அமங்கலாநாம் ஸர்ேவஷாம்। ப்ரதிகாதஸ் ச ஜாயேத। ௩௯।௰௰௨
ஜநார்தநம் பூதபதிம் ஜகத்குரும்। ஸ்மரந் மநுஷ்ய: ஸததம் மஹாமுேந।
௩௯।௰௰௩
துஷ்டாந்ய் அேஸஷாண்ய் அபஹந்தி ஸாதயத்ய்। அேஸஷகார்யாணி ததா
யதீச்சதி। ௩௯।௰௰௩
ஸ்ருணுஷ்வ சாந்யத் வதேதா மமாகிலம்। வதாமி யத் ேத த்விஜவர்ய
மங்கலம்। ௩௯।௰௰௪
ஸர்வார்தஸித்திம் ப்ரததாதி ய: ஸதா। நிஹந்த்ய் அேஸஷாணி ச பாதகாநி।
௩௯।௰௰௪
ப்ரதிஷ்டிதம் யத்ர ஜகச் சராசரம்। ஜகச் ச ேயா ேயா ஜகதஸ் ச ேஹது:।
௩௯।௰௰௫
ஜகச் ச பாத்ய் அத்தி ச ய: ஸ ஸர்வதா। மமாஸ்து மங்கல்யவிவ்ருத்தேய
ஹரி:। ௩௯।௰௰௫
வ்ேயாமாம்புவாய்வக்நிமஹீஸ்வரூைபர்। விஸ்தாரவாந் ேயா அணுதேரா
அணுபாகாத்। ௩௯।௰௰௬
ஸ ஸ்தூலஸூŠம: ஸதேதஸ்வேரஸ்வேரா। யஸ்மாத் பரஸ்தாத் புருஷாத்
அநந்தாத்। ௩௯।௰௰௬
அநாதிமத்யாத் அகிலம் ந கிம்சித்। ஸ ேஹதுேஹது: பரேமஸ்வேரஸ்வேரா।
௩௯।௰௰௭
ஹிரண்யகர்பாச்யுதருத்ரரூப।ீ ஸ்ருஜத்ய் அேஸஷம் பரிபாதி ஹந்தி।
௩௯।௰௰௮

குணாஸ்ரயீ ேயா பகவாந் ஸ ஸர்வதா। பர: ஸுராணாம் பரேமா
அஸுராணாம்। ௩௯।௰௰௮
பேரா முநீநாம் பரேமா யதீநாம்। பர: ஸமஸ்தஸ்ய ச ய: ஸ ேதேவா।
௩௯।௰௰௯
த்யாேதா யதீநாம் அபகல்மைஷர் ேயா। ததாதி முக்திம் பரேமஸ்வேரஸ்வர:।
௩௯।௰௧
மேநாபிர் ஆத்ய: புருஷ: ஸ ஸர்வதா। ஸுேரந்த்ரைவவஸ்வதவித்தபாம்புப ।
௩௯।௰௧
ஸ்வரூபரூபீ பரிபாதி ேயா ஜகத்। ஸ ஸுத்தஸத்த்வ: பரேமஸ்வேரஸ்வேரா।
௩௯।௰௧௧
யந்நாமகீர்தநேதா விமுச்யேத। அேநகஜந்மார்ஜிதபாபஸம்சைய:।
௩௯।௰௧௨
பாேபந்தநாக்நி: ஸ ஸைதவ நிர்மேலா। ேயேநாத்த்ருேதயம் தரணீ
ரஸாதலாத்। ௩௯।௰௧௨
அேஸஷஸத்த்வஸ்திதிகாரணாத் இதம்। பிபர்தி விஸ்வம் ஜகத: ஸ
மூலவாந்। ௩௯।௰௧௩
பாேதஷு ேவதா ஜடேர சராசரம்। ேராமஸ்வ் அேஸஷா முநேயா முேக மகா:।
௩௯।௰௧௪
யஸ்ேயஸ்வேரஸஸ்ய ஸ ஸர்வதா ப்ரபுர்। ஸமஸ்தயஜ்ஞாங்கமயம் வபுர்
விேபார்। ௩௯।௰௧௪
யஸ்யாங்கம் ஈேஸஸ்வரஸம்ஸ்துதஸ்ய। வராஹரூேபா பகவாந் ஸ
ஸர்வதா। ௩௯।௰௧௫
விேக்ஷாப்ய ஸர்ேவாததிேதாயஸம்பதம்। ததார தாத்ரீம் ஜகதஸ் ச
ேயாத்பவ:। ௩௯।௰௧௬

யஜ்ேஞஸ்வேரா யஜ்ஞபுமாந் ஸ ஸர்வதா।
பாதாலமூேலஸ்வரேபாகிஸம்ஹெதௗ। ௩௯।௰௧௬
விந்யஸ்ய பாெதௗ ப்ருதிவம்ீ ச பிப்ரத:। யஸ்ேயாபமாநம் ந பபூவ ேஸா
அச்யுேதா। ௩௯।௰௧௭
விகர்கரம் யஸ்ய ச ப்ரும்ஹேதா முஹு:। ஸநந்தநாத்ையர்
ஜநேலாகஸம்ஸ்திைத:। ௩௯।௰௧௮
ஸ்ருதம் ஜேயத்யுக்திபைர: ஸ ஸர்வதா। ஏகார்ணவாத் யஸ்ய மஹீயேஸா
மஹீம்। ௩௯।௰௧௮
ஆதாய ேவேகந ஸமுத்பதிஷ்யத:। நுதம் வபுர் ேயாகிவைர: ஸ ஸர்வதா।
௩௯।௰௧௯
ஹேதா ஹிரண்யாக்ஷமஹாஸுர: புரா। புராணபும்ஸா பரேமண ேயந।
௩௯।௰௨
வராஹரூப: ஸ பதி: ப்ரஜாபேதர்। தம்ஷ்ட்ராகராலம் ஸுரபதிநாஸநம் ீ ।
௩௯।௰௨
க்ருத்வா வபுர் திவ்யந்ருஸிம்ஹரூபிணம்। த்ராதம் ஜகத் ேயந ஸ ஸர்வதா
ப்ரபுர்। ௩௯।௰௨௧
ைதத்ேயந்த்ரவக்ஷ:ஸ்தலதாரதாருைண:। கேராருைஹ: ஸத்ருருஜாநுகாரிபி:।
௩௯।௰௨௨
சிச்ேசத ேலாகஸ்ய பயாநி சாவ்யேயா। தந்தாந்ததீப்தித்யுதிநிர்மலாணி।
௩௯।௰௨௨
சகார ஸர்வாணி திஸம் முகாநி। நிநாதவித்ராஸிததாநேவா ஹ்ய் அெஸௗ।
௩௯।௰௨௩
யந்நாமஸம்கீர்தநேதா மஹாபயாத்। விேமாக்ஷம் ஆப்ேநாதி ந ஸம்ஸயம்
நர:। ௩௯।௰௨௪

ஸமஸ்தேலாகார்திஹேரா ந்ருேகஸரீ। ஸடாகலாபப்ரமணாநிலஹதா:।
௩௯।௰௨௪
ஸ்புடந்தி யஸ்யாம்புதரா: ஸமந்தத:। ஸ திவ்யஸிம்ஹ:
ஸ்புரிதாகுேலக்ஷேணா। ௩௯।௰௨௫
யதீக்ஷணஜ்ேயாதிஷி ரஸ்மிமண்டலம்। ப்ரலீநம் ஏவ ந ரராஜ பாஸ்வத:।
௩௯।௰௨௬
குத: ஸஸாங்கஸ்ய ஸ ஸிம்ஹரூபத்ருங்। த்ரவந்தி ைதத்யா: ப்ரணமந்தி
ேதவதா। ௩௯।௰௨௬
நஸ்யந்தி ரக்ஷாம்ஸ்ய் அபயாந்தி சாரய:। யத்கீர்தநாத் ேஸா
அத்புதரூபேகஸரீ। ௩௯।௰௨௭
அேஸஷேதேவஸநேரஸ்வேரஸ்வைர:। ஸதா ஸ்துதம் யச் சரிதம்
மஹாத்புதம்। ௩௯।௰௨௮
ஸ ஸர்வேலாகார்திஹேரா மஹாஹரிர்। க்ருக்காரிதம் ேயா
யஜுஷாதிஸாந்திமத்। ௩௯।௰௨௮
ஸாமத்வநித்வஸ்தஸமஸ்தபாதகம்। சக்ேர ஜகத் வாமநக: ஸ ஸர்வதா।
௩௯।௰௨௯
யத்பாதவிந்யாஸபவித்ரதாம் மஹீ। யெயௗ வியத் க்ருக்யஜுஷாம் உதீரணாத்।
௩௯।௰௩
ஸ வாமேநா திவ்யஸரீரத்ருக் ஸதா। யஸ்மிந் ப்ரயாேத ஸுரபூப்ருேதா
அத்வரம்। ௩௯।௰௩
நநாம ேகதாத் அவநி: ஸஸாகரா। ஸ வாமந: ஸர்வஜகந்மய: ஸதா।
௩௯।௰௩௧
மஹாத்யுெதௗ ைதத்யபேதர் மஹாத்வரம்। யஸ்மிந் ப்ரவிஷ்ேட க்ஷுபிதம்
மஹாஸுைர:। ௩௯।௰௩௨

ஸ வாமேநா அந்தஸ்திதஸப்தேலாகத்ருங்। ஸமஸ்தேதேவஷ்டிமயம்
மஹாத்யுதிர்। ௩௯।௰௩௨
ததார ேயா ரூபம் அதீந்த்ரியம் ப்ரபு:। த்ரிவிக்ரமாக்ராந்தஜகத்த்ரய: ஸதா।
௩௯।௰௩௩
ஸங்ைக: ஸுராணாம் திவி பூதேல ஸ்திைதஸ்। ததா மநுஷ்ையர் ககேந ஸ
ஸர்வதா। ௩௯।௰௩௪
ஸ்துத: க்ரமாத் ய: ப்ரதேத ஸ ஸர்வதா। க்ராந்த்வா தரித்ரீம் ககநம் ததா
திவம்। ௩௯।௰௩௪
மருத்பேதர் ய: ப்ரதெதௗ த்ரிவிஷ்டபம்। ஸ ேதவேதேவா
புவேநஸ்வேரஸ்வேரா। ௩௯।௰௩௫
அநுக்ரஹம் சாபி பேலர் அநுத்தமம்। சகார யஸ் ேசந்த்ரபேதாபலக்ஷணம்।
௩௯।௰௩௬
ஸுராம்ஸ் ச யஜ்ஞஸ்ய புஜ: ஸ ஸர்வதா। ரஸாதலாத் ேயந புரா
ஸமாஹ்ருதா:। ௩௯।௰௩௬
ஸமஸ்தேவதா வரவாஜிரூபிணா। ஸ ைகடபாரிர் மதுஸூதேநா மஹாந்।
௩௯।௰௩௭
நி:க்ஷத்ரியாம் யஸ் ச சகார ேமதிநீம்। அேநகேஸா பாஹுவநம் ததாசிநத்।
௩௯।௰௩௮
ய: கார்தவர்யஸ்ய ீ ஸ பார்கேவாத்தேமா। நிஹத்ய வாலிம் ச கபஸ்வரம் ீ ஹி
ேயா। ௩௯।௰௩௮
நிபத்ய ேஸதும் ஜலெதௗ தஸாநநம்। ஜகாந சாந்யாந் ரஜநீசராந் அெஸௗ।
௩௯।௰௩௯
சிேக்ஷப பால: ஸகடம் பபஞ்ஜ ேயா। யமலார்ஜுெநௗ கம்ஸம் அரிம் ஜகாந।
௩௯।௰௪

மமர்த சாணூரமுகம் ஸ ஸர்வதா। ப்ராத: ஸஹஸ்ராம்ஸுமரீசிநிர்மலம்।
௩௯।௰௪
கேரண பிப்ரத் பகவாந் ஸுதர்ஸநம்। ெகௗேமாதகீம் சாபி கதாம் அநுத்தமாம்।
௩௯।௰௪௧
ஹிேமந்துகுந்தஸ்படிகாப்ரேகாமலம்। முகாநிலாபூரிதம் ஈஸ்வேரஸ்வர:।
௩௯।௰௪௨
மத்யாஹ்நகாேல ச ஸ ஸங்கம் உத்தமம்। ததாபராஹ்ேந
ப்ரவிகாஸிபங்கஜம்। ௩௯।௰௪௨
வக்ஷ:ஸ்தேலந ஸ்ரியம் உத்வஹத் விபு:।
விஸ்தாரிபத்ேமாத்பலபத்ரேலாசேநா। ௩௯।௰௪௩
ஸர்ேவஷு காேலஷு ஸமஸ்தேதேஸஷ்வ்। அேஸஷகார்ேயஷு
தேதஸ்வேரஸ்வர:। ௩௯।௰௪௪
ஸர்ைவ: ஸ்வரூைபர் பகவாந் அநாதிமாந்। ஏதத் படந் தால்ப்ய
ஸமஸ்தபாைபர்। ௩௯।௰௪௪
விமுச்யேத விஷ்ணுபேரா மநுஷ்ய:। ஸித்யந்தி கார்யாணி ததாஸ்ய
ஸர்வாண்ய்। ௩௯।௰௪௫
அர்தாந் அவாப்ேநாதி ததா யேதஷ்டம்। து:ஸ்வப்நம் ப்ரஸமம் உைபதி
பட்யமாேந। ௩௯।௰௪௫
ஸ்ேதாத்ேர அஸ்மிஞ் ஸ்ரவணவிெதௗ ஸேதாத்திதஸ்ய। ப்ராரம்ேபா த்ருதம்
உபயாதி ஸித்திம் ஈஸ:। ௩௯।௰௪௬
பாபாநி க்ஷபயதி சாஸ்ய வாஸுேதவ:। மங்கல்யம் பரமம் இதம்
ஸதார்தஸித்திம்। ௩௯।௰௪௬
நிர்விக்ந த்வ் அதிகபலம் ஸதா ததாதி। கிம் ேலாேக தத் இஹ பரத்ர சாஸ்தி
பும்ஸாம்। ௩௯।௰௪௭

யத் விஷ்ணுப்ரவணதியா ந தால்ப்ய ஸாத்யம்। ேதேவந்த்ரஸ் த்ரிபுவநம்
அர்தம் ஏகபிங்க:। ௩௯।௰௪௭
ஸர்வர்த்திம் த்ரிபுவநகாம் ச கார்தவர்யீ :। ைவேதஹ: பரமபதம் ப்ரஸாத்ய
விஷ்ணும்। ௩௯।௰௪௮
ஸம்ப்ராப்த: ஸகலபலப்ரேதா ஹி விஷ்ணு:। ஸர்வாரம்ேபஷு தால்ப்ையதத்।
௩௯।௰௪௮
து:ஸ்வப்ேநஷு ச பண்டித:। ஜேபத் ஏகமதிர் விஷ்ெணௗ। ௩௯।௰௪௯
ததாமங்கல்யதர்ஸேந। ஸமம் ப்ரயாந்தி துஷ்டாநி। ௩௯।௰௪௯
க்ரஹபடாஸ்ீ ச தாருணா:। கர்மாரம்பாஸ் ச ஸித்யந்தி। ௩௯।௰௫
புண்யம் ஆப்ேநாதி ேசாத்தமம்। ஹரிர் ததாதி பத்ராணி। ௩௯।௰௫
மங்கல்யஸ்துதிஸம்ஸ்துத:। கேராத்ய் அகிலரூைபஸ் ச। ௩௯।௰௫௧
ரக்ஷாம் அக்ஷதஸக்தித்ருக்। குர்வதீ கிம் புமாந் ஸ்தாநம்। ௩௯।௰௫௧
க: புமாந் ப்ரஹ்மேணா பலம்। ப்ரஹ்மணஸ் ச கதம் ேபேதா। ௪௰।௰௰௧
ஜ்ேஞேயா அபிந்நபலப்ரத:। ஸ்வகர்மணா தநம் லப்த்வா। ௪௰।௰௰௧
நித்யைநமித்திகா: க்ரியா:। குர்வதீ ஸுத்திம் ஆஸ்தாய। ௪௰।௰௰௨
ஸ்ேவச்சயா ச ததா பர:। த்யக்த்வா ராகாதிகாந் ேதாஷாந்। ௪௰।௰௰௨
ஸம: ஸர்வத்ர ைவ பேவத்। ஸர்வத்ர ைமத்ரீம் குர்வதீ। ௪௰।௰௰௩
தத்யாத் இஷ்டாநி சார்திநாம்। குர்யாத் தீேநஷு கருணாம்। ௪௰।௰௰௩
து:ஸலாந் ீ பரிவர்ஜேயத்। முதிதாம் தர்மஸேலஷு ீ । ௪௰।௰௰௪
பாவநாம் முநிஸத்தம। ஏகத்ர வா ஜகந்நாேத। ௪௰।௰௰௪
பாவநாம் புருேஷாத்தேம। நி:ேஸஷார்தமலாேபதாம்। ௪௰।௰௰௫
ஸுத்தாம் குர்வதீ பண்டித:। ஸரீரபாஹ்யதாம் ஸஸ்வத்। ௪௰।௰௰௫
திம்ஸாம் குர்வதீ ந க்வசித்। நிந்தாவமாநம் அந்ேயஷாம்। ௪௰।௰௰௬

யச் சாந்யத் உபகாதகம்। ஸரீரவாங்மந:ஸுத்திம்। ௪௰।௰௰௬
குர்வதீ ச ஸதாத்மந:। பூதாநாம் உபகாரஸ் ச। ௪௰।௰௰௭
தேபாபிஸ் சாத்மகர்ஷணம்। ஏஷ தர்ம: ஸமாேஸந। ௪௰।௰௰௭
தால்ப்யாக்யாேதா மயா தவ। அதர்மஸ் சாயம் ஏேவாக்ேதா। ௪௰।௰௰௮
விபரீேதா மநீஷிபி:। ஏேத யத்ர குணா: பூர்வம்। ௪௰।௰௰௮
கதிதா ஜ்ஞாநஸம்யுதா:। ப்ரஹ்மண: ஸாஸ்ரய: ஸுத்த। ௪௰।௰௰௯
உபசாராத் தத் ஏவ ஸ:। ஏகஸ்ையவ ஸதஸ் தஸ்ய। ௪௰।௰௰௯
ப்ரஹ்மேணா த்விஜஸத்தம। நாம்நாம் பஹுத்வம் ேலாகாநாம்।
௪௰।௰௧
உபகாரகரம் ஸ்ருணு। நிமித்தஸக்தேயா நாம்ேநா। ௪௰।௰௧
ேபததஸ் ததுதீரணாத்। விபிந்நாந்ய் ஏவ ஸாத்யந்ேத। ௪௰।௰௧௧
பலாநி குருநந்தந। யச்சக்தி நாம தத் தஸ்ய। ௪௰।௰௧௧
தத் தஸ்மிந்ந் ஏவ வஸ்துநி। ஸாதகம் புருஷவ்யாக்ர। ௪௰।௰௧௨
ெஸௗம்யக்ரூேரஷு வஸ்துஷு। வாஸுேதவாச்யுதாநந்த । ௪௰।௰௧௨
ஸத்யாஜ்யபுருேஷாத்தைம:। பரமாத்ேமஸ்வராத்ையஸ் ச। ௪௰।௰௧௩
ஸ்துேதா நாமபிர் அவ்யய:। நிமித்தபாவம் பகவாந்। ௪௰।௰௧௩
விமுக்ேதர் யாத்ய் அேதாக்ஷஜ:। ததாந்யகார்யஸம்ஸித்ெதௗ। ௪௰।௰௧௪
யத் யத் தத் தந் நிஸாமய। தநக்ருத் தர்மக்ருத் தர்மீ। ௪௰।௰௧௪
தர்மாத்மா விஸ்வக்ருச் சுசி:। ஸுசிஷத் விஷ்ணுர் அப்ஜாக்ஷ:।
௪௰।௰௧௫
புஷ்கராேக்ஷா ஹ்ய் அேதாக்ஷய:। ஸுசிஸ்ரவா: ஸிபிவிஷ்ேடா।
௪௰।௰௧௫
யஜ்ேஞேஸா யஜ்ஞபாவந:। நாம்நாம் இத்ய் ஏவம் ஆதீநாம்। ௪௰।௰௧௫

ஸமுச்சாரணேதா நர:। தர்மம் மஹாந்தம் ஆப்ேநாதி। ௪௰।௰௧௬
பாபபந்தக்ஷயம் ததா। ததார்தப்ராப்தேய ப்ரஹ்மந்। ௪௰।௰௧௬
ேதவநாமாநி ேம ஸ்ருணு। ேயஷாம் ஸமுச்சாரணேதா। ௪௰।௰௧௭
வித்தம் ஆப்ேநாதி பக்திமாந்। ஸ்ரீத: ஸ்ரீஸ: ஸ்ரீநிவாஸ:। ௪௰।௰௧௭
ஸ்ரீதர: ஸ்ரீநிேகதந:। ஸ்ரிய: பதி: ஸ்ரீபரம:। ௪௰।௰௧௮
ஸ்ரீமாஞ் ஸ்ரீவத்ஸலாஞ்ச்சந:। ந்ருஸிம்ேஹா துஷ்டதாமேநா। ௪௰।௰௧௮
ஜேயா விஷ்ணுஸ் த்ரிவிக்ரம:। ஸ்துத: ப்ரயச்சேத சார்தம்। ௪௰।௰௧௯
ஏவம் ஆதிபிர் அச்யுத:। காம்ய: காமப்ரத: காந்த:। ௪௰।௰௧௯
காமபாலஸ் ததா ஹரி:। ஆநந்ேதா மாதவஸ் ைசவ। ௪௰।௰௨
காமஸம்ஸித்தேய ந்ருப। ராம: பரஸுராமஸ் ச। ௪௰।௰௨
ந்ருஸிம்ேஹா விஷ்ணுர் ஏவ ச। விக்ரமஸ் ைசவம் ஆதீநி। ௪௰।௰௨௧
ஜப்யாந்ய் அரிஜிகீஷுபி:। வித்யாம் அப்யஸதா நித்யம்। ௪௰।௰௨௧
ஜப்தவ்ய: புருேஷாத்தம:। தாேமாதரம் பந்தகேதா। ௪௰।௰௨௨
நித்யம் ஏவ ஜபந் நர:। ேகஸவம் புண்டரீகாக்ஷம்। ௪௰।௰௨௨
புஷ்கராக்ஷம் ததா ஜேபத்। ேநத்ரபாதாஸு ஸர்வாஸு। ௪௰।௰௨௩
ஹ்ருஷீேகஸம் பேயஷு ச। அச்யுதம் சாம்ருதம் ைசவ। ௪௰।௰௨௩
ஜேபத் ஔஷதகர்மணி। ப்ராஜிஷ்ணும் அக்நிஹாெநௗ ச। ௪௰।௰௨௪
ஜேபத் ஆலம்பேந ஸ்திதம்। ஸம்க்ராமாபிமுகம் கச்சந்। ௪௰।௰௨௪
ஸம்ஸ்மேரத் அபராஜிதம்। பாதாலநரஸிம்ஹம் ச। ௪௰।௰௨௫
ஜலப்ரதரேண ஸ்மேரத்। சக்ரிணம் கதிநம் ைசவ। ௪௰।௰௨௫
ஸார்ங்கிநம் கட்கிநம் ததா। ேக்ஷமார்ேத ப்ரஸவந் ராஜந்। ௪௰।௰௨௬
திக்ஷு ப்ராச்யாதிஷு ஸ்மேரத்। அஜிதம் சாதிகம் ைசவ। ௪௰।௰௨௬

ஸர்வம் ஸர்வஸ்வரம் ததா। ஸம்ஸ்மேரத் புருேஷா பக்த்யா।
௪௰।௰௨௭
வ்யவஹாேரஷு ஸர்வதா। நாராயணம் ஸர்வகாலம்। ௪௰।௰௨௭
க்ஷுதப்ரஸ்கலிதாதிஷு। க்ரஹநக்ஷத்ரபடாஸு ீ । ௪௰।௰௨௮
ேதவபாதாடவஷு ீ ச। அஸ்யுைவரிநிேராேதஷு। ௪௰।௰௨௮
வ்யாக்ரஸிம்ஹாதிஸம்கேட। அந்தகாேர ச தீவ்ேர ச। ௪௰।௰௨௯
நரஸிம்ஹம் அநுஸ்மேரத்। தரத்ய் அகிலதுர்காணி। ௪௰।௰௨௯
தாபார்ேதா ஜலஸாயிநம்। கருடத்வஜாநுஸ்மரணாத்। ௪௰।௰௨௯
ஆபத்ப்ேயா முச்யேத நர:। ஜ்வரதுஷ்டஸிேராேராக । ௪௰।௰௩
விஷவர்யம் ீ ப்ரஸாம்யதி। ஸ்நாேந ேதவார்சேந ேஹாேம।
௰௪௰।௰௩௰௪௪
ப்ரணிபாேத ப்ரதக்ஷிேண। கீர்தேயத் பகவந்நாம। ௪௰।௰௩௧
வாஸுேதேவதி தத்பர:। ஸ்தகேந வித்ததாந்யாேதர்। ௪௰।௰௩௧
அபத்யாேந ச துஷ்டேஜ। குர்வதீ தந்மநா பூத்வா। ௪௰।௰௩௨
அநந்தாச்யுதகீர்தநம்। நாராயணம் ஸார்ங்கதரம்। ௪௰।௰௩௨
ஸ்ரீதரம் புருேஷாத்தமம்। வாமநம் கட்கிநம் ைசவ। ௪௰।௰௩௩
து:ஸ்வப்ேநஷு ச ஸம்ஸ்மேரத்। ஏகார்ணவாஹிபர்யங்க । ௪௰।௰௩௩
ஸாயிநம் ச நர: ஸ்மேரத்। வாய்வக்நீக்ருஹதாஹாய। ௪௰।௰௩௪
ப்ரவ்ருத்தாவ் உபலŠய ச। வித்யார்தீேமாஹவிப்ராந்தி । ௪௰।௰௩௪
ேவகாகூர்ணிதமாநஸ:। மநுஷ்ேயா முநிஸார்தூல। ௪௰।௰௩௫
ஸதாஸ்வஸிரஸம் ஸ்மேரத்। பலபத்ரம் ஸம்ருத்த்யர்தீ। ௪௰।௰௩௫
ஸரகர்மணி ீ கீர்தேயத்। ஜகத்ஸூதிம் அபத்யார்தீ। ௪௰।௰௩௬
ஸ்துவந் பக்த்யா ந ஸததி ீ । ஜப்தவ்யம் ஸுப்ரஜாக்யம் து। ௪௰।௰௩௬

ேதவேதவஸ்ய ஸத்தம। தம்பத்ேயார் ஆத்மஸம்பந்ேத। ௪௰।௰௩௭
விவாஹாக்ேய புந: புந:। ஸ்ரீஸம் ஸர்வாப்யுதயிேக। ௪௰।௰௩௭
கர்மணி ஸம்ப்ரகீர்தேயத்। அரிஷ்டாந்ேதஷ்வ் அேஸேஷஷு। ௪௰।௰௩௮
விேஸாகம் ச ஸதா ஜேபத்। மருத்ப்ரதாபாக்நிஜல । ௪௰।௰௩௮
பந்தநாதிஷு ம்ருத்யுஷு। ஸ்வாதந்த்ர்யபரதந்த்ேரஷு। ௪௰।௰௩௯
வாஸுேதவம் ஜேபத் புத:। ஸர்வார்தஸக்தியுக்தஸ்ய। ௪௰।௰௩௯
ேதவேதவஸ்ய சக்ரிண:। யத் வாபிேராசேத நாம। ௪௰।௰௪
தத் ஸர்வார்ேதஷு கீர்தேயத்। ஸர்வார்தஸித்திம் ஆப்ேநாதி। ௪௰।௰௪
நாம்நாம் ஏகார்ததா யத:। ஸர்வாண்ய் ஏதாநி நாமாநி। ௪௰।௰௪௧
பரஸ்ய ப்ரஹ்மேணா அநக। ஏவம் ஏதாநி நாமாநி। ௪௰।௰௪௧
ேதவேதவஸ்ய கீர்தேயத்। யம் யம் காமம் அபித்யாேயத்। ௪௰।௰௪௨
தம் தம் ஆப்ேநாத்ய் அஸம்ஸயம்। ஸர்வாந் காமாந் அவாப்ேநாதி।
௪௰।௰௪௨
ஸமாராத்ய ஜகத்குரும்। தந்மயத்ேவந ேகாவிந்தம்। ௪௰।௰௪௨
இத்ய் ஏதத் தால்ப்ய நாந்யதா। தந்மேயா வாஞ்சிதாந் காமாந்।
௪௰।௰௪௩
யத் அவாப்ேநாதி மாநவ:। நிமித்தஸக்தி: ஸா தஸ்ய। ௪௰।௰௪௩
ந ேபேதா தால்ப்ய மாநஸ:। வாங்மந:காயிகம் த்ேவஷம்। ௪௰।௰௪௪
யச் ச குர்வந் ப்ரயாத்ய் அத:। ஸ்வரூபஸக்தி: ஸா தஸ்ய। ௪௰।௰௪௪
மதிேபதக்ருதம் ந தத்। ஸ ஸாக்ேதா நிர்குண: ஸுத்ேதா। ௪௰।௰௪௫
ப்ரஹ்மபூேதா ஜகத்குரு:। கர்மபிர் நாமபிர் ஜேவா ீ । ௪௰।௰௪௫
த்ருஸ்யேத தால்ப்ய ைநகதா। யதா ச கங்காஸலிலம்। ௪௰।௰௪௬
ஸிதம் அத்யந்தநிர்மலம்। ஏகஸ்வரூபம் அத்யாத்மம்। ௪௰।௰௪௬

புண்யாபுண்யவிேபதிபி:। ப்ராந்திஜ்ஞாநாந்விைதர் மிஸ்ரம்। ௪௰।௰௪௭
ஸிதாஸிதவிேசஷ்டிைத:। த்ருஸ்யேத ைநகதா தால்ப்ய। ௪௰।௰௪௭
ப்ராணிபிர் பிந்நபுத்திபி:। தாபார்தாஸ் தாபஸமநம்। ௪௰।௰௪௭
அதிப்ரீத்யதிஸதலம் ீ । கபேதாஷாந்விைதர் நாதி । ௪௰।௰௪௮
ப்ரீதியுக்ைதர் நிரம்ஸுபி:। ஸ்த்ரீேயாக்யம் ஏதந் ேநதீதி। ௪௰।௰௪௮
ப்ரீத்யப்ரீதிஸமந்விைத:। மத்யஸ்தபுத்த்யா ைசவாந்ேய। ௪௰।௰௪௯
நாதிஸதாதிதாபிபி ீ :। பவித்ரம் இத்ய் ஏதத் இதி। ௪௰।௰௪௯
புண்யபுத்த்யா ததாபைர:। ம்ருஷ்டம் ஏதத் இதீத்ய் அந்ையர்। ௪௰।௰௫
மத்ஸ்யாட்யம் இதி சாபைர:। துல்யபுத்த்யாபி ைசவாந்ையர்। ௪௰।௰௫
ேஹயபுத்த்யா ததாபைர:। நாதிேவகாதிேவகம் ச। ௪௰।௰௫௧
ஹ்ருஷ்ேடாத்விக்ைநஸ் ததாபைர:। கிம் ஏேதேநதி ைசவாந்ைய:।
௪௰।௰௫௧
பரதாராபிலாஷிபி:। தால்ப்ய ஸம்த்ருஸ்யேத சாந்ையர்। ௪௰।௰௫௨
ஜந்துபிர் பாயகாதைர:। தத் ஏவ பூயம் பஸ்யந்தி। ௪௰।௰௫௨
ப்ேரதாத்யா ஹ்ருதிபாபிந:। ஏைதஸ் சாந்ையஸ் ச பஹுபிர்। ௪௰।௰௫௨
விேஸைஷர் பஹுஜந்துபி:। விேஸஷவத் கர்மேபதாத்। ௪௰।௰௫௩
ஏகம் ஏவ ஹி த்ருஸ்யேத। ைநேத கங்காம்பேஸா ேபதா:। ௪௰।௰௫௩
ப்ரீத்யப்ரீதிப்ரதாயிந:। ப்ராணிநாம் ேசதேஸா ேபதாத்। ௪௰।௰௫௪
தால்ப்ையேத கர்மேயாநய:। ஸமஸ்தகர்மணா தால்ப்ய। ௪௰।௰௫௪
ஸம்க்ஷேய பயம் ஏத்ய் அெஸௗ। விேஸஷகாரணாபாவாத்। ௪௰।௰௫௫
விேஸஷாபாவ ஏவ ஹி। விஷ்ண்வாக்யம் ஏவம் தத் ப்ரஹ்ம।
௪௰।௰௫௫

ஸுத்தம் அத்யந்தநிர்மலம்। அேபதம் பஹுதா பிந்நம்। ௪௰।௰௫௬
த்ருஸ்யேத கர்மேபதிபி:। ேயாகிபிர் த்ருஸ்யேத ஸுத்தம்। ௪௰।௰௫௬
ராகாத்யுபஸமாமைல:। ராகிபிர் விஷயாகாரம்। ௪௰।௰௫௭
தத் ஏவ ப்ரஹ்ம த்ருஸ்யேத। கர்மமார்காஸ்ரிைத: கர்ம । ௪௰।௰௫௭
ேபாக்த்ருத்ேவ ச தேதஷ்யேத। கிம் அப்ய் அஸ்தீதி ைசவாந்ையர்।
௪௰।௰௫௮
அவிேவகிபிர் உச்யேத। ஸர்வம் ஏதத் தத் ஏேவதி। ௪௰।௰௫௮
வதந்த்ய் அத்ைவதவாதிந:। ப்ரத்யக்ஷம் த்ருஸ்யம் ஏேவதி। ௪௰।௰௫௯
வதந்த்ய் அந்ேய துருக்திபி:। வதந்த்ய் அந்ேய தத் ஏவாஹம்।
௪௰।௰௫௯
நாஸ்தீத்ய் அந்ேய வதந்தி தத்। திர்யங்மநுஷ்யேதவாக்யம்। ௪௰।௰௬
தத் அந்ையர் அபிதீயேத। வந்த்யபுத்த்யா து தத் ைகஸ்சித்। ௪௰।௰௬
த்ேயயபுத்த்யா ததாபைர:। கம்யபுத்த்யா ததாந்ையஸ் ச। ௪௰।௰௬௧
லப்யபுத்த்யா ச ஜந்துபி:। க்ருஹ்யேத தத் பரம் ப்ரஹ்ம। ௪௰।௰௬௧
ரிபுபுத்த்யா ததாபைர:। ஆத்மபுத்ரஸுஹ்ருத்பர்த்ரு । ௪௰।௰௬௨
பரபுத்த்யா ததாபைர:। பரபுத்த்யா ச ைநகதா। ௰௪௰।௪௫
ப்ராணிபி: கர்மைவஷம்ய । பிந்நபுத்திபிர் அவ்யயம்। ௪௰।௰௬௩
தத் ப்ரஹ்ம க்ருஹ்யேத தால்ப்ய। பரமார்தம் நிேபாத ேம। ௪௰।௰௬௩
பூேதந்த்ரியாந்த:கரண । ப்ரதாநபுருஷாத்மகம்। ௪௰।௰௬௪
அபரம் ப்ரஹ்மேணா ரூபம்। பரம் தால்ப்ய நிஸாமய। ௪௰।௰௬௪
அேஹயம் அக்ஷரம் ஸுத்தம்। அஸம்பூதிநிரஞ்ஜநம்। ௪௰।௰௬௫
விஷ்ண்வாக்யம் பரமம் ப்ரஹ்ம। யத் ைவ பஸ்யந்தி ஸூரய:।
௪௰।௰௬௫

யைததத் பவதா ப்ேராக்தம்। தர்மார்தாேதஸ் து ஸாதநம்। ௪௧।௰௰௧
பத்நீந்ருணாம் முநிஸ்ேரஷ்ட। ேயாஷிதஸ் ச ததா நர:। ௪௧।௰௰௧
தச் ச்ேராதும் இச்ேச விப்ரர்ேஷ। விதவா ஸ்த்ரீ ந ஜாயேத। ௪௧।௰௰௨
உேபாஷீேதந ேயநாக்ர்யா। பத்ந்யா ச ரஹிேதா நர:। ௪௧।௰௰௨
அஸூந்யஸயநா நாம। த்விதீயாம் ஸ்ருணு தாம் மம। ௪௧।௰௰௩
யாம் உேபாஷ்ய ந ைவதவ்யம்। ப்ரயாதி ஸ்த்ரீ த்விேஜாத்தம।
௪௧।௰௰௩
பத்நீவியுக்தஸ் ச நேரா। ந கதாசித் ப்ரஜாயேத। ௪௧।௰௰௪
ேஸேத ஜகத்பதி: க்ருஷ்ண:। ஸ்ரியா ஸார்தம் யதா த்விஜ। ௪௧।௰௰௪
அஸூந்யஸயநா நாம। ததா க்ராஹ்யா ஹி ஸா திதி:। ௪௧।௰௰௫
க்ருஷ்ணபக்ஷத்விதீயாயாம்। ஸ்ராவேண த்விஜஸத்தம। ௪௧।௰௰௫
இதம் உச்சாரேயந் நாம। ப்ரணம்ய ஜகத: பதிம்। ௪௧।௰௰௬
ஸ்ரீவத்ஸதாரிணம் ஸ்ரீஸம்। பக்த்யாப்யர்ச்ய ஸ்ரியா ஸஹ। ௪௧।௰௰௬
ஸ்ரீவத்ஸதாரிஞ் ஸ்ரீகாந்த। ஸ்ரீதாம ஸ்ரீபேத அச்யுத। ௪௧।௰௰௭
கார்ஹஸ்த்யம் மா ப்ரணாஸம் ேம। யாது தர்மார்தகாமதம்। ௪௧।௰௰௭
அக்நேயா மா ப்ரணஸ்யந்து। மா ப்ரணஸ்யந்து ேதவதா:। ௪௧।௰௰௮
பிதேரா மா ப்ரணஸ்யந்து। மத்ேதா தாம்பத்யேபதத:। ௪௧।௰௰௮
லŠம்யா ப்ரயுஜ்யேத ேதவ। ந கதாசித் யதா பவாந்। ௪௧।௰௰௯
ததா கலத்ரஸம்பந்ேதா। ேதவ மா ேம விபித்யதாம்। ௪௧।௰௰௯
லŠம்யா ந ஸூந்யம் வரத। யதா ேத ஸயநம் ஸதா। ௪௧।௰௧
ஸய்யா மமாப்ய் அஸூந்யாஸ்து। தைதவ மதுஸூதந। ௪௧।௰௧
ஏவம் ப்ரஸாத்ய பூஜாம் ச। க்ருத்வா லŠம்யாஸ் ததா ஹேர:।
௪௧।௰௧௧

பலாநி தத்யாச் சய்யாயாம்। அபஷ்டாநி ீ ஜகத்பேத:। ௪௧।௰௧௧
நக்தம் ப்ரணம்யாயதேந। ஹவிர் புஞ்ஜதீ வாக்யத:। ௪௧।௰௧௨
ப்ராஹ்மணாய த்விதீேய அஹ்நி। ஸக்த்யா தத்யாச் ச தக்ஷிணாம்।
௪௧।௰௧௨
ஏவம் கேராதி ய: ஸம்யக்। நேரா மாஸசதுஷ்டயம்। ௪௧।௰௧௩
தஸ்ய ஜந்மத்ரயம் தால்ப்ய। க்ருஹபங்ேகா ந ஜாயேத। ௪௧।௰௧௩
அஸூந்யஸயநஸ் சாெஸௗ। தர்மகர்மார்தஸாதக:। ௪௧।௰௧௪
பவத்ய் அவ்யாஹைதஸ்வர்ய:। புருேஷா நாத்ர ஸம்ஸய:। ௪௧।௰௧௪
நாரீ ச தால்ப்ய தர்மஜ்ஞா। வ்ரதம் ஏதத் யதாவிதி। ௪௧।௰௧௫
யா கேராதி ந ஸா ேஸாச்யா। பந்துவர்கஸ்ய ஜாயேத। ௪௧।௰௧௫
ைவதவ்யம் துர்பகத்வம் வா। பர்த்ருத்யாகம் ச ஸத்தம। ௪௧।௰௧௬
நாப்ேநாதி ஜந்மத்ரிதயம்। ஏதச் சீர்த்வா பதிவ்ரதா। ௪௧।௰௧௬
உபவாஸாஸ்ரிதம் ஸம்யக்। ேலாகத்வயபலப்ரதம்। ௪௨।௰௰௧
கதிதம் பவதா ஸர்வம்। யத் ப்ருஷ்ேடா அஸி மயா த்விஜ। ௪௨।௰௰௧
அந்யத் இச்சாம்ய் அஹம் ஸ்ேராதும்। தத் பவாந் ப்ரப்ரவதுீ ேம।
௪௨।௰௰௨
ஸம்ஸாரேஹதும் முக்திம் ச। ஸம்ஸாராந் முநிஸத்தம। ௪௨।௰௰௨
அவித்யாப்ரபவம் கர்ம। ேஹதுபூதம் த்விேஜாத்தம। ௪௨।௰௰௩
ஸம்ஸாரஸ்யாஸ்ய தந்முக்தி:। ஸம்ேக்ஷபாச் ச்ரூயதாம் மம।
௪௨।௰௰௩
ஸ்வஜாதிவிஹிதம் கர்ம। ேலாபத்ேவஷவிவர்ஜிதம்। ௪௨।௰௰௪
குர்வத: க்ஷயேத ீ பூர்வம்। மந்யுபந்தஸ் ச ேநஷ்யேத। ௪௨।௰௰௪
அபூர்வஸம்பவாபவாத்। க்ஷயம் யாத்ய் ஆதிகர்மணி। ௪௨।௰௰௫

தால்ப்ய ஸம்ஸாரவிச்ேசத:। காரணாபாவஸம்பவ:। ௪௨।௰௰௫
பவத்ய் அஸம்ஸயம் சாந்யச்। ஸ்ரூயதாம் அத்ர காரணம்। ௪௨।௰௰௬
ஸம்ஸாராந் முச்யேத தால்ப்ய। ஸமாஸாத் வதேதா மம। ௪௨।௰௰௬
க்ருஹீதகர்மணா ேயந। பும்ஸாம் ஜாதிர் த்விேஜாத்தம। ௰௪௨।௰௰௭௪௬
தத்ப்ராயஸ்சித்தபூதம் ைவ। ஸ்ருணு கர்மக்ஷயாவஹம்। ௪௨।௰௰௭
ப்ராஹ்மணக்ஷத்ரியவிஸாம்। ஸூத்ராந்த்யாநாம் ச ஸத்தம। ௪௨।௰௰௮
ஸ்வஜாதிவிஹிதம் கர்ம। ராகத்ேவஷாதிவர்ஜிதம்। ௪௨।௰௰௮
ஜாதிப்ரதஸ்ய க்ஷயதம்। தத் ஏவாத்யஸ்ய கர்மண:। ௪௨।௰௰௯
ஜ்ஞாநகாரணபாவம் ச। தத் ஏவ ப்ரதிபத்யேத। ௪௨।௰௰௯
புமாம்ஸ் சாதிகதஜ்ஞாேநா। ேபதம் நாப்ேநாதி ஸத்தம। ௪௨।௰௧
ப்ரஹ்மணா விஷ்ணுஸம்ஜ்ேஞந। பரேமணாவ்யயாத்மநா। ௪௨।௰௧
ஏதத் ேத கதிதம் தால்ப்ய। ஸம்ஸாரஸ்ய ஸமாஸத:। ௪௨।௰௧௧
காரணம் பவமுக்திஸ் ச। ஜாயேத ேயாகிேநா யதா। ௪௨।௰௧௧
இதி தால்ப்ய: புலஸ்த்ேயந। யதாவத் ப்ரதிேபாதித:। ௪௩।௰௰௧
ஆராதயாம் ஆஸ ஹரிம்। ேலேப காமாம்ஸ் ச வாஞ்சிதாந்। ௪௩।௰௰௧
ததா த்வம் அபி ைதத்ேயந்த்ர। ேகஸவாராதநம் குரு। ௪௩।௰௰௨
ஆராத்ய தம் ஜகந்நாதம்। ந கஸ்சித் அவஸததி ீ । ௪௩।௰௰௨
இதி ஸுக்ரவச: ஸ்ருத்வா। ப்ரஹ்லாேதா மதுஸூதநம்। ௪௩।௰௰௩
ஆராத்ய ப்ராப்தவாந் க்ருத்ஸ்நம்। த்ைரேலாைகஸ்வர்யம் ஊர்ஜிதம்।
௪௩।௰௰௩
ஏதந் மேயாக்தம் ஸகலம்। தவ பூமிப ப்ருச்சத:। ௪௩।௰௰௪
அநாராத்யாச்யுதம் ேதவம்। க: காமாந் ப்ராப்நுேத நர:। ௪௩।௰௰௪

அம்பரீேஸா நரபதிர்। விஷ்ேணார் மாஹாத்ம்யம் உத்தமம்। ௪௩।௰௰௫
ஸ்ருத்வா பபூவ ஸததம்। ேகஸவார்பிதமாநஸ:। ௪௩।௰௰௫
ஏவம் த்வம் அபி ெகௗரவ்ய। யதி முக்திம் அபஷ்யஸி ீ । ௪௩।௰௰௬
ேபாகாந் வா விலுபாந் ேதவாத்। தஸ்மாத் ஆராதயாச்யுதம்। ௪௩।௰௰௬
ததாதி வாஞ்சிதாந் காமாந்। ஸகாைமர் அர்சிேதா ஹரி:। ௪௩।௰௰௭
முக்திம் ததாதி ேகாவிந்ேதா। நிஷ்காைமர் அபிபூஜித:। ௪௩।௰௰௭
பகவாந் அவதீர்ேணா அபூந்। மர்த்யேலாகம் ஜநார்தந:। ௪௩।௰௰௮
பாராவதரணார்தாய। புேவா பூதபதிர் ஹரி:। ௪௩।௰௰௮
மாநுஷத்ேவ ச ேகாவிந்ேதா। மம பூர்வபிதாமைஹ:। ௪௩।௰௰௯
சகார ப்ரீதிம் அதுலாம்। ஸாமாந்யபுருேஷா யதா। ௪௩।௰௰௯
ஸாரத்யம் க்ருதவாம்ஸ் ைசவ। ேதஷாம் ஸர்ேவஸ்வேரா ஹரி:।
௪௩।௰௧
நிஸ்தீர்ேணா ேயந பஷ்ெமௗேகா ீ । குருைஸந்யமேஹாததி:। ௪௩।௰௧
உபகாரீ மஹாபாக:। ஸ ேதஷாம் ஸர்வவஸ்துஷு। ௪௩।௰௧௧
ேகஸவ: பாண்டுபுத்ராணாம்। ஸுதாநாம் ஜநேகா யதா। ௪௩।௰௧௧
தந்யாஸ் ேத க்ருதபுண்யாஸ் ச। மம பாண்டுஸுதா மதா:। ௪௩।௰௧௨
விவிஸுர் ேய பரிஷ்வங்ேக। ேகாவிந்தபுஜபஞ்ஜரம்। ௪௩।௰௧௨
ராஜ்யேஹேதார் அரீஞ் ஜக்நுர்। அகஸ்மாத் பாண்டுநந்தநா:। ௪௩।௰௧௩
ஸப்தேலாைககநாேதந। ேய அபவந்ந் ஏகஸாயிந:। ௪௩।௰௧௩
ஆத்மாநம் அவகச்சாமி। பகவந் தூதகல்மஷம்। ௪௩।௰௧௪
ஜாதம் நிர்தூதபாேப அஸ்மிந்। குேல விஷ்ணுபரிக்ரேஹ। ௪௩।௰௧௪
ஏவம் ேதவவரஸ் ேதஷாம்। ப்ரஸாதஸுமுேகா ஹரி:। ௪௩।௰௧௫

ப்ருச்சதாம் கச்சித் ஆசஷ்ேட। கிம்சித் குஹ்யம் மஹாத்மநாம்।
௪௩।௰௧௫
குஹ்யம் ஜநார்தநம் யாம்ஸ் து। தர்மபுத்ேரா யுதிஷ்டிர:। ௪௩।௰௧௬
பப்ரச்ச தர்மாந் அகிலாம்ஸ்। தந் மமாக்யாதும் அர்ஹஸி। ௪௩।௰௧௬
தர்மார்தகாமேமாேக்ஷஷு। யத் குஹ்யம் மதுஸூதந:। ௪௩।௰௧௭
ேதஷாம் அேவாசத் பகவாஞ்। ஸ்ேராதும் இச்சாமி தத் த்வ் அஹம்।
௪௩।௰௧௭
பஹூநி தர்மகுஹ்யாநி। தர்மபுத்ராய ேகஸவ:। ௪௩।௰௧௮
புரா ப்ேராவாச ராேஜந்த்ர। ப்ரஸாதஸுமுேகா ஹரி:। ௪௩।௰௧௮
ஸரதல்பகதாத் பஷ்மாத் ீ । தர்மாஞ் ஸ்ருத்வா யுதிஷ்டிர:। ௪௩।௰௧௯
ப்ருஷ்டவாந் யஜ் ஜகந்நாதம்। தந் ேம நிகதத: ஸ்ருணு। ௪௩।௰௧௯
பஞ்சேமநாஸ்வேமேதந। யதா ஸ்நாேதா யுதிஷ்டிர:। ௪௪।௰௰௧
ததா நாராயணம் ேதவம்। ப்ரஸ்நம் ஏதம் அப்ருச்சத। ௪௪।௰௰௧
பகவந் ைவஷ்ணவா தர்மா:। கிம்பலா: கிம்பராயணா:। ௪௪।௰௰௨
கிம் க்ருத்யம் அதிக்ருத்ையேத। பவேதாத்பாதிதா: புரா। ௪௪।௰௰௨
யதி ேத பாண்டுஷு ஸ்ேநேஹா। வித்யேத மதுஸூதந। ௪௪।௰௰௩
ஸ்ேராதவ்யாஸ் ேசந் மயா தர்மாஸ்। ததஸ் தாந் கதயாகிலாந்।
௪௪।௰௰௩
பவித்ராஸ் ைசவ ேய தர்மா:। ஸர்வபாபப்ரணாஸநா:। ௪௪।௰௰௪
தவ வக்த்ரச்யுதா ேதவ। ஸர்வதர்ேமஷ்வ் அநுத்தமா:। ௪௪।௰௰௪
யாஞ் ஸ்ருத்வா ப்ரஹ்மஹா ேகாக்ந:। பித்ருக்ேநா குருதல்பக:।
௪௪।௰௰௫
ஸுராேபா வா க்ருதக்நஸ் ச। முச்யேத ஸர்வகில்பிைஷ:। ௪௪।௰௰௫

ஏதந் ேம கதிதம் ஸர்வம்। ஸபாமத்ேய அரிஸூதந। ௪௪।௰௰௬
வஸிஷ்டாத்ையர் மஹாபாைகர்। முநிபிர் பாவிதாத்மபி:। ௪௪।௰௰௬
தேதா அஹம் தவ ேதேவஸ। பாதமூலம் உபாகத:। ௪௪।௰௰௭
தர்மாந் கதய தாந் ேதவ। யத்ய் அஹம் பவத: ப்ரிய:। ௪௪।௰௰௭
ஸ்ருதா ேம மாநவா தர்மா। வாஸிஷ்டாஸ் ச மஹாமேத। ௪௪।௰௰௮
பராஸரக்ருதாஸ் ைசவ। ததாத்ேரயஸ்ய தீமத:। ௪௪।௰௰௮
ஸ்ருதா கார்க்யஸ்ய ஸங்கஸ்ய। லிகிதஸ்ய யமஸ்ய ச। ௪௪।௰௰௯
ஜாபாேலஸ் ச மஹாபாேஹா। முேநர் த்ைவபாயநஸ்ய ச। ௪௪।௰௰௯
உமாமேஹஸ்வராஸ் ைசவ। ஜாதிதர்மாஸ் ச பாவநா:। ௪௪।௰௧
குேணஸ் ச குணபாேஹாஸ் ச। காஸ்யேபயாஸ் தைதவ ச। ௪௪।௰௧
பஹ்வாயநக்ருதாஸ் ைசவ। ஸாகுேநயாஸ் தைதவ ச। ௪௪।௰௧௧
அகஸ்த்யகீதா ெமௗத்கல்யா:। ஸாண்டில்யா: ெஸௗரபாஸ் ததா।
௪௪।௰௧௧
ப்ருேகார் அங்கிரஸஸ் ைசவ। கஸ்யேபாத்தாலகாஸ் ததா। ௪௪।௰௧௨
ெஸௗமந்தூக்ராயணாக்ராஸ் ச। ைபலஸ்ய ச மஹாத்மந:। ௪௪।௰௧௨
ைவஸம்பாயநகீதாஸ் ச। பிஸங்கமக்ருதாஸ் ச ேய। ௪௪।௰௧௩
ஐந்த்ராஸ் ச வாருணாஸ் ைசவ। ெகௗேபரா வாத்ஸ்யெபௗணகா:।
௪௪।௰௧௩
ஆபஸ்தம்பா: ஸ்ருதா தர்மாஸ்। ததா ேகாபாலகஸ்ய ச। ௪௪।௰௧௪
ப்ருக்வங்கிர:க்ருதாஸ் ைசவ। ெஸௗர்யா ஹாரீதகாஸ் ததா। ௪௪।௰௧௪
யாஜ்ஞவல்க்யக்ருதாஸ் ைசவ। ததா ஸப்தர்ஷயஸ் ச ேய। ௪௪।௰௧௪
ஏதாஸ் சாந்யாஸ் ச விவிதா:। ஸ்ருதா ேம தர்மஸம்ஹிதா:। ௪௪।௰௧௫
பகவஞ் ஸ்ேராதும் இச்சாமி। தவ வக்த்ராத் விநி:ஸ்ருதாந்। ௪௪।௰௧௫

ஏவம் உக்த: ஸ பார்ேதந। ப்ரத்யுவாச ஜநார்தந:। ௪௪।௰௧௬
பஹுமாநாச் ச ப்ரீத்யா ச। தர்மபுத்ரம் யுதிஷ்டிரம்। ௪௪।௰௧௬
இஷ்டஸ் த்வம் ஹி மஹாபாேஹா। ஸதா மம யுதிஷ்டிர। ௪௪।௰௧௭
பரமார்தம் தவ ப்ரூயாம்। கிம் புநர் தர்மஸம்ஹிதாம்। ௪௪।௰௧௭
பரமஜ்ஞாநிபி: ஸித்ைதர்। யுஞ்ஜத்பிர் அபி நித்யஸ:। ௪௪।௰௧௮
ப்ரஸாந்தஸ்ேயவ தீபஸ்ய। கதிர் மம துரத்யயா। ௪௪।௰௧௮
ஸர்வேவதமயம் ப்ரஹ்ம। பவித்ரம் க்ருஷிபி: ஸ்துதம்। ௪௪।௰௧௯
கதயிஷ்யாமி ேத ராஜந்। தர்மம் தர்மப்ருதாம் வர। ௪௪।௰௧௯
ஏவம் உக்ேத து க்ருஷ்ேணந। க்ருஷேயா அமிதேதஜஸ:। ௪௪।௰௨
ஸமாஜக்மு: ஸபாமத்ேய। ஸ்ேராதுகாமா ஹேரர் கிரம்। ௪௪।௰௨
ேதவகந்தர்வக்ருஷேயா। குஹ்யகாஸ் ச மஹாயஸா:। ௰௪௪।௪௭
வாலகில்யா மஹாத்மாேநா। முநய: ஸம்மிதவ்ரதா:। ௰௪௪।௪௭
பாவநாந் ஸர்வதர்ேமப்ேயா। ரஹஸ்யாந் த்விஜஸத்தம। ௰௪௪।௪௭
ைவஷ்ணவாந் அகிலாந் தர்மாந்। ய: பேடத் பாபநாஸநாந்। ௪௪।௰௨௧
பேவயுர் அக்ஷயாஸ் தஸ்ய। ேலாகா: ஸத்புண்யபாகிந:। ௪௪।௰௨௧
க்ருஷ்ணத்ருஷ்டிஹதம் சாஸ்ய। கில்பிஷம் ஸம்ப்ரணஸ்யதி।
௪௪।௰௨௨
ைவஷ்ணவஸ்ய ச யஜ்ஞஸ்ய। பலம் ப்ராப்ேநாதி மாநவ:। ௪௪।௰௨௨
ெகௗதூஹலஸமாவிஷ்ட:। பப்ரச்ேசதம் யுதிஷ்டிர:। ௪௫।௰௰௧
யமேலாகஸ்ய சாத்வாநம்। அந்தரம் மாநுஷஸ்ய ச। ௪௫।௰௰௧
கீத்ருஸம் கிம்ப்ரமாணம் வா। கதம் வாந்தம் ஜநார்தந। ௪௫।௰௰௨
தரந்தி புருஷா: க்ருஷ்ண। ேகேநாபாேயந ஸம்ஸேம। ௪௫।௰௰௨

தஸ்ய தத் வசநம் ஸ்ருத்வா। விஸ்மிேதா மதுஸூதந:। ௪௫।௰௰௩
ப்ரத்யுவாச மஹாத்மாநம்। தர்மபுத்ரம் யுதிஷ்டிரம்। ௪௫।௰௰௩
ஸாது ஸாதுர் அயம் ப்ரஸ்ந:। ஸ்ரூயதாம் ேபா யுதிஷ்டிர। ௪௫।௰௰௪
ஷடஸதிஸஹஸ்ராணி ீ । ேயாஜநாநாம் நராதிப। ௪௫।௰௰௪
யமேலாகஸ்ய சாத்வாநம்। அந்தரம் மாநுஷஸ்ய ச। ௪௫।௰௰௫
தாம்ரபாத்ரம் இவாதப்தம்। ஸூலவ்யாமிஸ்ரகண்டகம்। ௪௫।௰௰௫
த்வாதஸாதித்யஸம்காஸம்। ைபரவம் துரதிக்ரமம்। ௪௫।௰௰௬
ந தத்ர வ்ருக்ஷா ந ச்சாயா। பாநீயம் ேகதநாநி ச। ௪௫।௰௰௬
யத்ர விஸ்ரமேத ஸ்ராந்த:। புருேஷா அத்வாநேகா ந்ருப। ௪௫।௰௰௭
யாம்ையர் தூைதர் நீயமாேநா। யமஸ்யாஜ்ஞாகைரர் பலாத்। ௪௫।௰௰௭
அவஸ்யம் ச மஹாராஜ। ஸ கந்தவ்ேயா மஹாபத:। ௪௫।௰௰௮
நைர: ஸ்த்ரீபிஸ் ததா திர்ைய:। ப்ருதிவ்யாம் ஜவஸம்ஜ்ஞைக ீ :।
௪௫।௰௰௮
ஏகவிம்ஸச் ச நரகா। யமஸ்ய விஷேய ஸ்ம்ருதா:। ௪௫।௰௰௯
ேய து துஷ்க்ருதகர்மாணஸ்। ேத பதந்தி ப்ருதக் ப்ருதக்। ௪௫।௰௰௯
நரேகா ெரௗரேவா நாம। மஹாெரௗரவ ஏவ ச। ௪௫।௰௧
க்ஷுரதாரா மஹாெரௗத்ர:। ஸூகரஸ் தால ஏவ ச। ௪௫।௰௧
வஜ்ரகும்ேபா மஹாேகார:। ஸால்மேலா அத விேமாஹந:। ௪௫।௰௧௧
கீடாத: க்ருமிபக்ஷஸ் ச। ஸால்மலிஸ் ச மஹாத்ரும:। ௪௫।௰௧௧
ததா பூயவஹ: பாபா। ருதிராந்ேதா மஹத்தம:। ௪௫।௰௧௨
அக்நிஜ்வாேலா மஹாநாத:। ஸம்தாம்ஸ: ஸுநேபாஜந:। ௪௫।௰௧௨
ததா ைவதரணீேசாஷ்ணா। அஸிபத்த்ரவநம் ததா। ௪௫।௰௧௨
விஷ்ேணாஸ் தத் வசநம் ஸ்ருத்வா। பபாத புவி பாண்டவ:। ௪௫।௰௧௩

ஸ ஸம்ஜ்ஞஸ் ச முஹூர்ேதந। பூய: ேகஸவம் அப்ரவத்ீ। ௪௫।௰௧௩
பதஸ்ீ சாஸ்மி மஹாபாேஹா। ஸ்ருத்வா மார்கஸ்ய விஸ்தரம்।
௪௫।௰௧௪
ேகேநாபாேயந தம் மார்கம்। தரந்தி புருஷா: ஸுகம்। ௪௫।௰௧௪
ப்ராஹ்மேணப்ய: ப்ரதாநாநி। நாநாரூபாணி பார்திவ। ௪௫।௰௧௫
ேயா தத்யாச் ச்ரத்தயா யுக்த:। ஸுகம் யாதி மஹாபதம்। ௪௫।௰௧௫
உபாநஹப்ரதா யாந்தி। ஸுகம் சாயாஸு ச்சத்த்ரதா:। ௪௫।௰௧௬
ந ேதஷாம் அஸுபம் கிம்சிச்। ஸூலாதி ந ச கண்டகா:। ௪௫।௰௧௬
உபாநெஹௗ ேயா ததாதி। பாத்ரபூேத த்விேஜாத்தேம। ௪௫।௰௧௭
அஸ்வதர்ய: ப்ரதாதாரம்। உபதிஷ்டந்தி தம் நரம்। ௪௫।௰௧௭
வித்ருஷ்ணாஸ் சாம்புதாதாரஸ்। தர்பிதாஸ் சாந்நதாஸ் ததா।
௪௫।௰௧௮
ஔப்ராவ்ருதா வஸ்த்ரதாஸ் ச। நக்நா ைவ யாந்த்ய் அவஸ்த்ரதா:।
௪௫।௰௧௮
ஹிரண்யதா: ஸுகம் யாந்தி। புருஷா: ஸ்வாப்யலம்க்ருதா:। ௪௫।௰௧௯
ேகாப்ரதா யாந்தி ச ஸுகம்। விமுக்தா: ஸர்வகில்பிைஷ:। ௪௫।௰௧௯
பூமிதா: ஸுகம் அதந்ேத। ஸர்வகாைம: ஸுதர்பிதா:। ௪௫।௰௨
யாந்தி ைசவாபரிக்லிஷ்டா। நரா: ஸய்யாஸநப்ரதா:। ௪௫।௰௨
தத: ஸுகதரம் யாந்தி। விமாேநஷு க்ருஹப்ரதா:। ௪௫।௰௨௧
க்ஷீரப்ரதா ஹி திவ்யாபி:। ஸஸர்பிபிஸ் தைதவ ச। ௪௫।௰௨௧
ேகாப்ரதாதா லேபத் த்ருப்திம்। தஸ்மிந் ேதேஸ ஸுதுர்லபாம்।
௪௫।௰௨௨
ஆராமேராபீ ச்சாயாஸு। ஸதலாஸு ீ ஸுகம் வ்ரேஜத்। ௪௫।௰௨௨

ஸுகந்திகந்திேநா யாந்தி। கந்தமால்யப்ரதா நர:। ௪௫।௰௨௩
அதத்ததாநா கச்சந்தி। பத்ப்யாம் யாேநந யாநதா:। ௪௫।௰௨௩
தீபப்ரதா: ஸுகம் யாந்தி। தீபயந்தஸ் ச தத்பதம்। ௪௫।௰௨௩
விமாைநர் ஹம்ஸயுக்ைதஸ் து। யாந்தி மாேஸாபவாஸிந:। ௪௫।௰௨௪
சக்ரவாகப்ரயுக்ேதந। பஞ்சராத்ேராபவாஸிந:। ௪௫।௰௨௪
தேதா பர்ஹிணயுக்ேதந। ஷட்ராத்ரம் உபவாஸிந:। ௪௫।௰௨௪
த்ரிராத்ரம் ஏகபக்ேதந। க்ஷபேயத் யஸ் து பாண்டவ। ௪௫।௰௨௫
அநந்தரம் ச ேயா அஸ்நீயாத்। தஸ்ய ேலாகா யதா மம। ௪௫।௰௨௫
பநீயம் பரேலாேகஷு। பாவநம் பரமம் ஸ்ம்ருதம்। ௪௫।௰௨௬
பாநீயஸ்ய ப்ரதாேநந। த்ருப்திர் பவதி ஸாஸ்வதீ। ௪௫।௰௨௬
பாநீயஸ்ய குணா திவ்யா:। ப்ேரதேலாேக ஸுகாவஹா:। ௪௫।௰௨௬
தத்ர புண்ேயாதகா நாம। நதீேதஷாம் ப்ரவர்தேத। ௪௫।௰௨௭
ஸதலம் ீ ஸலிலம் தத்ர। பிபந்தி ஹ்ய் அம்ருேதாபமம்। ௪௫।௰௨௭
ேய ச துஷ்க்ருதகர்மாண:। பூயம் ேதஷாம் ப்ரவர்தேத। ௪௫।௰௨௮
ஏஷா நதீமஹாராஜ। ஸர்வகாமதுகா ஸுபா। ௪௫।௰௨௮
அத்வநி கிந்நகாத்ரஸ் து। த்விேஜா ய: க்ஷுத்த்ருஷ்ணாந்வித:।
௪௫।௰௨௯
ப்ருச்சந் ஸதாந்நதாதாரம்। அப்ேயதி க்ருஹம் ஆஸயா। ௪௫।௰௨௯
தம் பூஜய ப்ரயத்ேநந। ேஸா அதிதிர் ப்ராஹ்மண: ஸ்ம்ருத:। ௪௫।௰௨௯
பிதேரா ேதவதாஸ் ைசவ। க்ருஷயஸ் ச தேபாதநா:। ௰௪௫।௫௰
பூஜிதா: பூஜிேத தஸ்மிந்। நிராேஸ து நிராஸகா:। ௰௪௫।௫௰
தம் ஏவ கச்சந்தம் அநுவ்ரஜந்தி। ேதவாஸ் ச ஸர்ேவ பிதரஸ் தைதவ।
௪௫।௰௩

தஸ்மிந் த்விேஜ பூஜிேத பூஜிதாஸ் ேத। கேத நிராேஸ ப்ரதியாந்தி நாஸம்।
௪௫।௰௩
அஹந்ய் அஹநி தாதவ்யம்। ப்ராஹ்மேணப்ேயா யுதிஷ்டிர। ௰௪௫।௫௧
ஆகமிஷ்யதி யத் பாத்ரம்। தத் பாத்ரம் தாரயிஷ்யதி। ௰௪௫।௫௧
ந ததா ஹவிேஷா ேஹாைமர்। ந புஷ்ைபர் நாநுேலபைந:। ௪௬।௰௰௧
அக்ெநௗ வா ஸுஹுேத ராஜந்। யதா ஹ்ய் அதிதிபூஜேந। ௪௬।௰௰௧
கபிலாயாம் து தத்தாயாம்। யத் பலம் ஜ்ேயஷ்டபுஷ்கேர। ௪௬।௰௰௨
தத் பலம் பாண்டவஸ்ேரஷ்ட। விப்ராணாம் பாதெஸௗசேந। ௪௬।௰௰௨
த்விஜபாேதாதகக்லிந்நா। யாவத் திஷ்டதி ேமதிநீ। ௪௬।௰௰௩
தாவத் புஷ்கரபாத்ேரஷு। பிபந்தி பிதேரா ஜலம்। ௪௬।௰௰௩
ேதவமால்யாபநயநம்। த்விேஜாச்சிஷ்டாபமார்ஜநம்। ௪௬।௰௰௪
ஸ்ராந்தஸம்வாஹநம் ைசவ। தீநஸ்ய பரிபாலநம்। ௪௬।௰௰௪
ஏைககம் பாண்டவஸ்ேரஷ்ட। ேகாப்ரதாநாத் விஸிஷ்யேத। ௪௬।௰௰௪
பாதெஸௗசம் ததாப்யங்கம்। தீபம் அந்நம் ப்ரதிஸ்ரயம்। ௪௬।௰௰௫
ததந்தி ேய மஹாராஜ। ேநாபஸர்பந்தி ேத யமம்। ௪௬।௰௰௫
ஸ்வாகேதநாக்நய: ப்ரீதா। ஆஸேநந ஸதக்ரது:। ௪௬।௰௰௬
பிதர: பாதெஸௗேசந। அந்நாத்ேயந ப்ரஜாபதி:। ௪௬।௰௰௬
அபயஸ்ய ப்ரதாேநந। பேவத் ப்ரீதிர் மமாதுலா। ௰௪௬।௫௨
ேயஷாம் தடாகாநி பஹூதகாநி। ப்ரபாஸ் ச கூபாஸ் ச ப்ரதிஸ்ரயாஸ் ச।
௪௬।௰௰௭
அந்நப்ரதாநம் மதுரா ச வாண।ீ யமஸ்ய ேத நிர்வசநா பவந்தி।
௪௬।௰௰௭
ஸவ்ருஷம் ேகாஸதம் ேதந। தத்தம் பவதி ஸாஸ்வதம்। ௪௬।௰௰௮

பாபம் கர்ம ச யத் கிம்சித்। ப்ரஹ்மஹத்யாஸமம் பேவத்। ௪௬।௰௰௯
ேஸாசேயத் கபிலாம் தத்த்வா। ஏதத் ைவ நாத்ர ஸம்ஸய:। ௪௬।௰௰௯
ப்ராஸாதா யத்ர ெஸௗவர்ணா। வேஸார்தாரா ச ஸ்யந்தேத। ௪௬।௰௧
கந்தர்வாப்ஸரேஸா யத்ர। தத்ர கச்சந்தி ேகாப்ரதா:। ௪௬।௰௧
ப்ரயச்சேத ய: கபிலாம் ஸவத்ஸாம்। காம்ஸ்ேயாபேதாஹாம்
கநகாக்ரஸ்ருங்கீம்। ௪௬।௰௧௧
யாந் யாந் ஹி காமாந் அபிவாஞ்சேத அெஸௗ। தாம்ஸ் தாந் அவாப்ேநாத்ய்
அமலாம்ஸ் ச ேலாகாந்। ௪௬।௰௧௧
யாவத் வத்ஸஸ்ய த்ெவௗ பாெதௗ। ஸிரஸ் ைசவ ப்ரத்ருஸ்யேத।
௪௬।௰௧௨
தாவத் ெகௗ: ப்ருதிவ ீஜ்ேஞயா। யாவத் கர்பம் ந முஞ்சதி। ௪௬।௰௧௨
தஸ்மிந் காேல ப்ரதாதவ்யா। விதிநா யா மேயாதிதா। ௪௬।௰௧௨
அந்தரிக்ஷகேதா வத்ேஸா। யாவத் ேயாந்யாம் ப்ரத்ருஸ்யேத।
௪௬।௰௧௩
தாவத் ெகௗ: ப்ருதிவ ீஜ்ேஞயா। யாவத் கர்பம் ந முஞ்சதி। ௪௬।௰௧௩
யாவந்தி தஸ்ய ேராமாணி। தாவத்வர்ஷாணி மாநவ:। ௪௬।௰௧௪
ஹம்ஸயுக்ேதந யாேநந। யுக்ேதநாப்ஸரஸாம் கைண:। ௰௪௬।௫௩
கந்தர்வாப்ஸரேஸாத்கீைத:। ஸ்வர்கேலாேக மஹீயேத। ௪௬।௰௧௪
திலேதநும் ப்ரவŠயாமி। யஸ் சாஸ்யா விதிர் உத்தம:। ௪௬।௰௧௫
ஸுவர்ணநாபிம் ய: க்ருத்வா। ஸுகூரம் க்ருஷ்ணமார்கணாம்।
௪௬।௰௧௫
குதபப்ரஸ்தரஸ்தாம் து। திலாம் க்ருத்வா ப்ரயத்நத:। ௪௬।௰௧௬

திைல: ப்ரஸ்தாதி தாம் தத்யாத்। ஸர்வரத்ைநர் அலம்க்ருதாம்।
௪௬।௰௧௬
ஸஸமுத்ரத்ருமா ைசவ। ஸைஸலவநகாநநா। ௪௬।௰௧௭
சதுரந்தா பேவத் தத்தா। ப்ருதிவ ீநாத்ர ஸம்ஸய:। ௪௬।௰௧௭
க்ருஷ்ணாஜிேந திலாம் க்ருத்வா। க்ருஷ்ணாம் வா யதி ேவதராம்।
௪௬।௰௧௮
ராஜேதஷு து பாத்ேரஷு। ேகாேணஷு மதுஸர்பிஷீ। ௰௪௬।௫௪
ப்ரீயதாம் தர்மராேஜதி। யத் வா மநஸி வர்தேத। ௪௬।௰௧௮
யாவஜ் ஜவக்ருதம் ீ பாபம்। ேதந தாேநந பூயேத। ௪௬।௰௧௮
தநம் ப்ராப்ேநாதி புண்ேயந। ெமௗேநநாஜ்ஞாம் ப்ரயச்சதி। ௪௭।௰௰௧
உபேபாகம் து தாேநந। ஜவிதம் ீ ப்ரஹ்மசர்யயா। ௪௭।௰௰௧
அஹிம்ஸயா பரம் ரூபம்। தீக்ஷயா குலஜந்ம ச। ௪௭।௰௰௨
பலமூலாஸநாத் ராஜ்யம்। ஸ்வர்க: பர்ணாஸேநா பேவத்। ௪௭।௰௰௨
பேயாபக்ஷ திவம் யாந்தி। ஸ்நாேநந த்ரவிணாதிகா:। ௪௭।௰௰௩
ஸாகம் ஸாதயேதா ராஜ்யம்। நாகப்ருஷ்டம் அநாஸநாத்। ௪௭।௰௰௩
ஸ்தண்டிேல ச ஸயாநஸ்ய। க்ருஹாணி ஸயநாநி ச। ௪௭।௰௰௪
சீரவல்கலதாரிணாம்। வஸ்த்ராண்ய் ஆபரணாநி ச। ௪௭।௰௰௪
ஸயநாஸநயாநாநி। ேய கதா ஹி தேபாவநம்। ௪௭।௰௰௫
அக்நிப்ரேவஸீ நியதம்। ப்ரஹ்மேலாேக மஹீயேத। ௪௭।௰௰௫
ரஸாநாம் ப்ரதிஸம்ஹாராத்। ெஸௗபாக்யம் அபிஜாயேத। ௪௭।௰௰௬
ஆமிஷப்ரதிேஷதாத் து। பவத்ய் ஆயுஷ்மதீப்ரஜா। ௪௭।௰௰௬
உதவாஸம் வேஸத் யஸ் து। நாகாநாம் அதிேபா பேவத்। ௪௭।௰௰௭
ஸத்யவாதீநரஸ்ேரஷ்ட। ேதவைதஹ் ஸஹ ேமாதேத। ௪௭।௰௰௭

கீர்திர் பவதி தாேநந। ஆேராக்யம் சாப்ய் அஹிம்ஸயா। ௪௭।௰௰௮
த்விஜஸுஸ்ரூஷயா ராஜ்யம்। த்விஜத்வம் சாபி புஷ்கலம்। ௰௪௭।௫௫
த்விஜஸுஸ்ரூஷயா ராஜ்யம்। திவ்யரூபம் அவாப்நுேத। ௪௭।௰௰௮
அந்நபாநப்ரதாேநந। காமேபாைகஸ் து த்ருப்யேத। ௪௭।௰௰௯
தீபாேலாகப்ரதாேநந। சக்ஷுஷ்மாஞ் ஜாயேத நர:। ௪௭।௰௰௯
கந்தமால்யப்ரதாேநந। துஷ்டிர் பவதி புஷ்கலா। ௪௭।௰௧
ேகஸஸ்மஸ்ரூந் தாரயேதா ஹ்ய்। அக்ரா பவதி ஸம்ததி:। ௪௭।௰௧
வாெக்ஷௗசம் மநஸ: ெஸௗசம்। யச் ச ெஸௗசம் ஜலாஸ்ரயம்।
௪௭।௰௧௧
த்ரிபி: ெஸௗைசர் உேபேதா ய:। ஸ ஸ்வர்கீநாத்ர ஸம்ஸய:।
௪௭।௰௧௧
தாம்ராயஸாநாம் பண்டாநாம்। தாதா ரத்நாதிேபா பேவத்। ௪௭।௰௧௨
லபேத து பரம் ஸ்தாநம்। பலவாந் புஷ்யேத ஸதா। ௪௭।௰௧௨
தாந்யம் க்ரேமணார்ஜிதவித்தஸம்சயம்। விப்ேர ஸுஸேலீ ேத ப்ரயச்சேத ய:।
௪௮।௰௰௧
வஸும்தரா தஸ்ய பேவத் ஸுதுஷ்டா। தாரா வஸூநாம் ப்ரதிமுஞ்சதீஹ।
௪௮।௰௰௧
புஷ்ேபாபேபாகம் ச பேலாபேபாகம்। ய: பாதபம் ஸ்பர்ஸயேத த்விஜாய।
௪௮।௰௰௨
ஸ ஸ்ரீஸம்ருத்தம் பஹுரத்நபூர்ணம்। லபத்ய் அதிஷ்டாநவரம் ஸம்ருத்தம்।
௪௮।௰௰௨
இந்தநாநி ச ேயா தத்யாத்। த்விேஜப்ய: ஸிஸிராகேம। ௪௮।௰௰௩
காயாக்நிதீப்திம் ெஸௗபாக்யம்। ஐஸ்வர்யம் சாதிகச்சதி। ௪௮।௰௰௩

சத்த்ரப்ரதாேநந க்ருஹம் வரிஷ்டம்। ரதம் தேதாபாநஹஸம்ப்ரதாநாத்।
௪௮।௰௰௪
துர்யப்ரதாேநந கவாம் தைதவ। ேலாகாந் அவாப்ேநாதி புரம்தரஸ்ய।
௪௮।௰௰௪
ஸ்வர்கீயம் அப்ய் ஆஹ ஹிரண்யதாநம்। ததா வரிஷ்டம் கநகப்ரதாநம்।
௪௮।௰௰௪
ைநேவஸிகம் ஸர்வகுேணாபபந்நம்। ப்ரயச்சேத ய: புருேஷா த்விஜாய।
௪௮।௰௰௫
ஸ்வாத்யாயசாரித்ரகுணாந்விதாய। தஸ்யாபி ேலாகா: ப்ரவரா பவந்தி।
௪௮।௰௰௫
ேயா ப்ரஹ்மேதயாம் ப்ரததாதி கந்யாம்। பூமிப்ரதாநம் ச கேராதி விப்ேர।
௪௮।௰௰௬
ஹிரண்யதாநம் ச ததா விஸிஷ்டம்। ஸ ஸக்ேரா ேலாகம் லபேத துராபம்।
௪௮।௰௰௬
ஸுசித்ரவஸ்த்ராபரேணாபதாநம்। தத்யாந் நேரா ய: ஸயநம் த்விஜாய।
௪௮।௰௰௭
ரூபாந்விதாம் தக்ஷவதீம் மேநாஜ்ஞாம்। பார்யாம் அயத்ேநாபசிதாம் லேபத்
ஸ:। ௪௮।௰௰௭
லவணஸ்ய து தாதாரஸ்। திலாநாம் ஸர்பிஷஸ் ததா। ௪௮।௰௰௮
ேதஜஸ்விேநா அபிஜாயந்ேத। ேபாகிநஷ் சிரஜவிந ீ :। ௪௮।௰௰௮
ஸ்வர்ேக அப்ஸேராபி: ஸஹ புக்தேபாகஸ்। ததஸ் ச்யுத: ஸலவத ீ ீம் ஸ
பார்யாம்। ௰௪௮।௫௬
ரூபாந்விதாம் தக்ஷவதீம் ஸுரக்தாம்। ஸுேகந தர்ேமண ததாபி காேல।
௰௪௮।௫௬

தஸ்ையவ ஸார்தம் ஸுரேலாகம் ஏதி। தஸ்ையவ சாந்யத் புநர் ஏதி ஜந்ம।
௰௪௮।௫௬
கீத்ருக்விதாஸ்வ் அவஸ்தாஸு। தத்தம் தாநம் ஜநார்தந। ௪௯।௰௰௧
இஹேலாேகஷ்வ் அநுபேவத்। புருஷஸ் தத் ப்ரவஹி ீ ேம। ௪௯।௰௰௧
கர்பஸ்தாஸ்யாதவா பால்ேய। ெயௗவேந வார்த்தேக அபி வா।
௪௯।௰௰௨
அவஸ்தாம் க்ருஷ்ண கதய। பரம் ெகௗதூஹலம் ஹி ேம। ௪௯।௰௰௨
வ்ருதாஜந்மாநி சத்வாரி। வ்ருதாதாநாநி ேஷாடஸ। ௪௯।௰௰௩
அபுத்ராணாம் வ்ருதா ஜந்ம। ேய ச தர்மபஹிஷ்க்ருதா:। ௪௯।௰௰௩
பரபாகம் ச ேய அஸ்நந்தி। பரதாரரதாஸ் ச ேய। ௪௯।௰௰௩
பர்ய் அஸ்தாநம் வ்ருதா தாநம்। ஸேதாஷம் பரிகீர்திதம்। ௪௯।௰௰௪
ஆரூடபதிேத ைசவ। அந்யாேயாபார்ஜிதம் ச யத்। ௪௯।௰௰௪
வ்யர்தம் சாப்ராஹ்மேண தாநம்। பதிேத தஸ்கேர ததா। ௪௯।௰௰௫
குேராஸ் சாப்ரீதிஜநேக। க்ருதக்ேந க்ராமயாஜேக। ௪௯।௰௰௫
ப்ரஹ்மபந்ெதௗ ச யத் தத்தம்। யத் தத்தம் வ்ருஷலீபெதௗ। ௪௯।௰௰௬
ேவதவிக்ரயிேண ைசவ। யஸ்ய ேசாபபதிர் க்ருேஹ। ௪௯।௰௰௬
ஸ்த்ரீநிர்ஜிேதஷு யத் தத்தம்। வ்யாலக்ராேஹ தைதவ ச। ௪௯।௰௰௭
பரிசாரேக ச யத் தத்தம்। வ்ருதாதாநாநி ேஷாடஸ। ௪௯।௰௰௭
தேமாவ்ருதஸ் து ேயா தத்யாத்। பயாத் க்ேராதாத் தைதவ ச।
௪௯।௰௰௮
வ்ருதா தாநம் து தத் ஸர்வம்। புங்க்ேத கர்பஸ்த ஏவ து। ௪௯।௰௰௮
ேஸர்ஷ்யாமந்யுமநாஸ் ைசவ। தம்பார்தம் சார்தகாரணாத்। ௪௯।௰௰௯
ேயா ததாதி த்விஜாதிப்ய:। ஸ பாலத்ேவ தத் அஸ்நுேத। ௪௯।௰௰௯

ய: ஸுத்தி: ப்ரயேதா பூத்வா। ப்ரஸந்நமாநேஸந்த்ரிய:। ௰௪௯।௫௮
ப்ரததாதி த்விஜாதிப்ேயா। ெயௗவநஸ்தஸ் தத் அஸ்நுேத। ௰௪௯।௫௮
ேதேஸ ேதேஸ ச பாத்ேர ச। ேயா ததாதி த்விஜாதிஷு। ௪௯।௰௧
மநஸா பரிதுஷ்ேடந। ெயௗவநஸ்தஸ் தத் அஸ்நுேத। ௪௯।௰௧
தஸ்மாத் ஸர்வாஸ்வ் அவஸ்தாஸு। ஸர்வதாநாநி பார்திவ। ௪௯।௰௧௧
தாதவ்யாநி த்விஜாதிப்ய:। ஸ்வர்கமர்கம் அபப்ஸதா ீ । ௪௯।௰௧௧
த்ைரேலாக்ய க்ருஷ்ண பூதாநாம்। ஸர்வேலாகாத்மேகா ஹ்ய் அஸி।
௫௰।௰௰௧
ந்ருணாம் யதுவரஸ்ேரஷ்ட। துஷ்யேஸ ேகந கர்மணா। ௫௰।௰௰௧
ப்ராஹ்மைண: பூஜிைதர் நித்யம்। பூஜிேதா அஹம் ந ஸம்ஸய:।
௫௰।௰௰௨
நிர்பர்த்ஸிைதஸ் ச நிர்பக்நஸ்। தஸ்யாஹம் ஸர்வகர்மஸு।
௫௰।௰௰௨
விப்ராபரா கதிர் மஹ்யம்। யஸ் தாந் பூஜயேத ந்ருப। ௫௰।௰௰௩
தம் அஹம் ேதந ரூேபண। ப்ரபஸ்யாமி யுதிஷ்டிர। ௫௰।௰௰௩
காணா: குப்ஜாஸ் ச கஞ்ஜாஸ் ச। தரித்ரா வ்யாதிதாஸ் ச ேய।
௫௰।௰௰௪
நாவமந்ேயத் த்விஜாந் ப்ராஜ்ேஞா। மம ரூபம் ஹிதம் ததா। ௫௰।௰௰௪
பஹேவா அபி ந ஜாநந்ேத। நரா ஜ்ஞாநபஹிஷ்க்ருதா:। ௫௰।௰௰௫
யதாஹம் த்விஜரூேபண। சராமி ப்ருதிவதேல ீ । ௫௰।௰௰௫
ேய ேகசித் ஸாகராந்தாயாம்। ப்ருதிவ்யாம் கீர்திதா த்விஜா:। ௫௰।௰௰௬
தத் ரூபம் ஹி பரம் மஹ்யம்। ேயா அர்சேயத் அர்சேயத் து ஸ:।
௫௰।௰௰௬

தத்ரூபாந் க்நந்தி ேய விப்ராந்। விகர்மஸு ச யுஞ்ஜந்தி। ௫௰।௰௰௭
அப்ேரஷேண ப்ேரஷயந்ேதா। தாஸத்வம் காரயந்தி ஹி। ௫௰।௰௰௭
ம்ருதாம்ஸ் தாந் கரபத்த்ேரந। யமதூதா மஹாபலா:। ௫௰।௰௰௮
நிக்ருந்தந்தி யதா காஷ்டம்। ஸூத்ரமார்ேகண ஸில்பிந:। ௫௰।௰௰௮
ேய ைசவாஸ்லŠணயா வாசா। தர்ஜயந்தி நராதமா:। ௫௰।௰௰௯
வதந்தி க்ேராதநி:ஸ்பர்ஸம்। பாேதநாபிஹநந்தி ச। ௫௰।௰௰௯
ம்ருதாம்ஸ் தாந் யமேலாேகஷு। நிஹத்ய தரணதேல ீ । ௫௰।௰௧
உர: பாேதந சாக்ரம்ய। க்ேராதஸம்ரக்தேலாசந:। ௫௰।௰௧
அக்நிவர்ைணஸ் ச ஸம்தம்ைஸர்। ஜிஹ்வாம் உத்தரேத யம:। ௫௰।௰௧
பாபாஸ் ச நாரேக வஹ்ெநௗ। தாஸ்யந்ேத யமகிம்கைர:। ௰௫௰।௫௯
ேய து விப்ராந் நிரீக்ஷந்தி। பாபா: பாேபந சக்ஷுஷா। ௫௰।௰௧௧
அப்ரஹ்மண்யா: ஸ்ருேதர் பாஹ்யா। நித்யம் ப்ரஹ்மத்விேஷா நரா:।
௫௰।௰௧௧
ேதஷாம் ேகாரா மஹாகாயா। வஜ்ரதுண்டா பயாநகா:। ௫௰।௰௧௨
உத்தரந்தி முஹூர்ேதந। சக்ஷு: காகா யமாஜ்ஞயா। ௫௰।௰௧௨
யஸ் தாடயதி விப்ராம்ஸ் து। க்ஷதம் குர்யாத் ஸேஸாணிதம்।
௫௰।௰௧௩
அஸ்திபங்கம் ச ய: குர்யாத்। ப்ராைணர் வாபி விேயாஜேயத்।
௫௰।௰௧௩
ப்ரஹ்மக்ந: ேஸா அநுபூர்ேவண। நரேக வஸுதாதிப। ௫௰।௰௧௪
கீைலர் விநிஹத: பாேபா। மீராயாம் பச்யேத ப்ருஸம்। ௫௰।௰௧௪
ஸுபஹூநி ஸஹஸ்ராணி। வர்ஷாணாம் க்ேலஸபாக் பேவத்।
௫௰।௰௧௫

ரவாந் முஞ்சதி துர்புத்திர்। ந தஸ்ைம நிஷ்க்ருதி: ஸ்ம்ருதா। ௫௰।௰௧௫
தஸ்மாத் விப்ரா நரஸ்ேரஷ்ட। நமஸ்கார்யாஸ் ச நித்யஸ:। ௫௰।௰௧௬
அந்நபாநப்ரதாைநஸ் து। பூஜார்ஹா: ஸததம் த்விஜா:। ௫௰।௰௧௬
ஆமந்த்ரயித்வா ேயா விப்ராந்। கந்ைதர் மால்ையஸ் ச மாநவ:।
௫௰।௰௧௭
தர்பேயச் ச்ரத்தயா யுக்த:। ஸ மாம் அர்சயேத ஸதா। ௫௰।௰௧௭
ஸ மாம் ப்ரஸாதேயச் ைசவ। ஸ ச மாம் பரிேதாஷேயத்। ௫௰।௰௧௭
தேபாதமாந்விேதஷ்வ் ஏவ। நித்யம் பூஜாம் ப்ரேயாஜேயத்। ௰௫௰।௬௰
ேய ப்ராஹ்மணா: ேஸா அஹம் அஸம்ஸயம் ந்ருப। ேதஷ்வ் அர்சிேதஷ்வ்
அர்சிேதா அஹம் யதாவத்। ௫௰।௰௧௮
ேதஷ்வ் ஏவ துஷ்ேடஷ்வ் அஹம் ஏவ துஷ்ேடா। ைவரம் ச ைதர் யஸ்ய
மமாபி ைவரம்। ௫௰।௰௧௮
ஸுகந்திதூபாதிபிர் அப்யர்ச்ய விப்ரம்। தம் அச்யுதம் நார்சயேத ஸைதவ।
௰௫௰।௬௧௰௰௧
ேயா பக்ஷேதாயாதிபிர் அந்நபாைநர்। அநுேலபாசமநப்ரதாைந:।
௰௫௰।௬௧௰௰௩
ய: பூஜேயத் ேபாஜயித்வா த்விஜாக்ர்யாந்। ஸம்பூஜயித்வா பரிேதாஷேயச் ச।
௰௫௰।௬௧௰௰௫
அர்க்யாதிநா ேய அபிபூஜ்ய। பூஜயந்தி ஸதாச்யுதம்। ௰௫௰।௬௧௰௰௭
ேதைநவ மாம் ஏவ ஸதா। பூஜயந்தி ந ஸம்ஸய:। ௰௫௰।௬௧௰௰௮
விரூபாஸ் ச ஸுரூபாஸ் ச। விஜநாந் நிஷ்கலாந் அபி।
௰௫௰।௬௧௰௰௯
க்ருபயா பாவிதாத்மாேநா। ேய அர்சயந்தி த்விேஜாத்தமாந்।
௰௫௰।௬௧௰௧௰

அநஸூயா ஹிதாத்மாேநா। விப்ராந் ஆராதேத க்வசித்। ௰௫௰।௬௧௰௧௧
அஸம்ஸயம் ஸதா பக்த்யா। மாம் ஏவார்சயேத ஹி ஸ:।
௰௫௰।௬௧௰௧௨
தத: பவித்ரம் அதுலம்। ந புண்யம் அதிகம் தத:। ௰௫௰।௬௧௰௧௩
யஸ் சந்தைந: ஸாகருகந்தமால்ையர்। அப்யர்சேயத் தாருமயம்ீ மமார்சாம்।
௫௰।௰௧௯
நாெஸௗ மமார்சாம் அர்சயேத அர்சயந் ைவ। விப்ரார்சநாத் அர்சித ஏவ
சாஹம்। ௫௰।௰௧௯
விப்ரப்ரஸாதாந் மத ஏவ சாஹம்। விப்ரப்ரஸாதாத் அஸுராஞ் ஜயாமி।
௫௰।௰௨
விப்ரப்ரஸாதாத் புருேஷாத்தமத்வம்। விப்ரப்ரஸாதாத் அஜிேதா அஸ்மி
நித்யம்। ௫௰।௰௨
ஸாயம் ப்ராதஸ் ச ய: ஸம்த்யாம்। உபாஸ்ேத அஸ்கந்நமாநஸ:।
௫௧।௰௰௧
ஜபந் ஹி பாவநீம் ேதவம்ீ । காயத்ரீம் ேவதமாதரம்। ௫௧।௰௰௧
ஸ தயா பாவிேதா ேதவ்யா। ப்ராஹ்மண: பூதகில்பிஷ:। ௫௧।௰௰௨
ந ஸேதத் ீ ப்ரதிக்ருஹ்ணாந:। ப்ருதிவம்ீ து ஸஸாகராம்। ௫௧।௰௰௨
ேய சாந்ேய தாருணா: ேகசித்। க்ரஹா: ஸூர்யாதேயா திவி। ௫௧।௰௰௩
ேத சாஸ்ய ெஸௗம்யா ஜாயந்ேத। ஸிவா: ஸிவதமாஹ் ஸதா।
௫௧।௰௰௩
யத்ரதத்ரகதம் ைசநம்। தாருணா: பிஸிதாஸநா:। ௫௧।௰௰௪
ேகாரரூபா மஹாகாயா। ந கர்ஷந்தி த்விேஜாத்தமம்। ௫௧।௰௰௪
யாவந்தஸ் ச ப்ருதிவ்யாம் ஹி। சீர்ணேவதவ்ரதா த்விஜா:। ௫௧।௰௰௫
அசீர்ணவ்ரதேவதா வா। விகர்மபதம் ஆஸ்ரிதா:। ௫௧।௰௰௫

ேதஷாம் து பாவநார்தம் ஹி। நித்யம் ஏவ யுதிஷ்டிர। ௫௧।௰௰௬
த்ேவ ஸம்த்ேய ஹ்ய் உபதிஷ்ேடத। தத் அஸ்கந்நம் மஹாவ்ரதம்।
௫௧।௰௰௬
நாஸ்தி கிம்சிந் நரவ்யாக்ர। துஷ்க்ருதம் ப்ராஹ்மணஸ்ய து। ௫௧।௰௰௭
யத்ர ஸ்தித: ஸதாத்யாத்ேம। த்ேவ ஸம்த்ேய ஹ்ய் உபதிஷ்டதி।
௫௧।௰௰௭
பூர்ணாஹுதிம் வா ப்ராப்ேநாதி। ஜுஹுேத ச த்ரேயா அக்நய:।
௫௧।௰௰௮
தஹந்தி துஷ்க்ருதம் தஸ்ய। அக்நேயா நாத்ர ஸம்ஸய:। ௫௧।௰௰௮
ஏவம் ஸர்வஸ்ய விப்ரஸ்ய। கில்பிஷம் நிர்தஹாம்ய் அஹம்।
௫௧।௰௰௯
உேப ஸம்த்ேய ஹ்ய் உபாஸிநஸ்। தஸ்மாத் ஸர்வஸுசிர் த்விஜ:।
௫௧।௰௰௯
ைதேவ பித்ர்ேய ச யத்ேநந। நிேயாக்தவ்ேயா அஜுகுப்ஸித:। ௫௧।௰௧
ஜுகுப்ஸிதஸ் து தச் ச்ராத்தம்। தஹத்ய் அக்நிர் இேவந்தநம்। ௫௧।௰௧
புராணம் மாநவா தர்மா:। ஸாங்ேகா ேவதஸ் சிகித்ஸிதம்। ௫௨।௰௰௧
ஆஜ்ஞாஸித்தாநி சத்வாரி। ந ஹந்தவ்யாநி ேஹதுபி:। ௫௨।௰௰௧
ஹத்வா ஹ்ய் ஏதாநி ஸம்மூட:। கல்பம் தமஸி பச்யேத। ௫௨।௰௰௧
ந ப்ராஹ்மணம் பரீேக்ஷத। ஸ்ராத்தகாேல ஹ்ய் உபஸ்திேத।
௫௨।௰௰௨
ஸுமஹாந் பரிவாேதா ஹி। ப்ராஹ்மணாநாம் பரீக்ஷேண। ௫௨।௰௰௨
காணா: குண்டாஸ் ச ஷண்டாஸ் ச। தரித்ரா வ்யாதிதாஸ் ததா।
௫௨।௰௰௩

ஸர்ேவ ஸ்ராத்ேத நிேயாக்தவ்யா। மிஸ்ரிதா ேவதபாரைக:। ௫௨।௰௰௩
அக்ஷயம் து பேவச் ச்ராத்தம்। ஏதத் தர்மவிேதா விது:। ௫௨।௰௰௩
ப்ராஹ்மேணா ஹி மஹத் பூதம்। ஜந்மநா ஸஹ ஜாயேத। ௫௨।௰௰௪
ேலாகா ேலாேகஸ்வராஸ் சாபி। ஸர்ேவ ப்ராஹ்மணபூஜகா:। ௫௨।௰௰௪
ப்ராஹ்மணா: குபிதா ஹந்யுர்। பஸ்ம குர்யுஸ் ச ேதஜஸா। ௫௨।௰௰௫
ேலாகாந் அந்யாந் ஸ்ருேஜயுஸ் ச। ேலாகபாலாம்ஸ் ததாபராந்।
௫௨।௰௰௫
ப்ராஹ்மணா ஹி மஹாத்மாேநா। விரஜா: ஸ்வர்கஸம்க்ரமா:।
௫௨।௰௰௬
ப்ராஹ்மணாநாம் பரீவாதாத்। அஸுரா: ஸலிேலஸயா:। ௫௨।௰௰௬
அேபய: ஸாகேரா ையஸ் து। க்ருத: ேகாபாந் மஹாத்மபி:। ௫௨।௰௰௭
ேயஷாம் ேகாபாக்நிர் அத்யாபி। தண்டேக ேநாபஸாம்யதி। ௫௨।௰௰௭
ஏேத ஸ்வர்கஸ்ய ேநதாேரா। பூமிேதவா: ஸநாதநா:। ௫௨।௰௰௮
ஏபிஸ் சாதிக்ருத: பந்தா। ேதவயாந: ஸ உச்யேத। ௫௨।௰௰௮
ேத பூஜ்யாஸ் ேத நமஸ்கார்யாஸ்। ேதஷு ஸர்வம் ப்ரதிஷ்டிதம்।
௫௨।௰௰௯
ேத ைவ ேலாகாந் இமாந் ஸர்வாந்। தாரயந்தி பரஸ்பரம்। ௫௨।௰௰௯
ப்ரமாணம் ஸர்வேலாகாநாம்। நியதா ப்ரஹ்மசாரிண:। ௫௨।௰௧
தாந் அபாஸ்ரித்ய திஷ்டந்ேத। த்ரேயா ேலாகா: ஸநாதநா:। ௫௨।௰௧
கூடஸ்வாத்யாயதபேஸா। ப்ராஹ்மணா: ஸம்ஸிதவ்ரதா:। ௫௨।௰௧௧
வித்யாஸ்நாதா வ்ரதஸ்நாதா। அநபாஸ்ரித்யஜவிந ீ :। ௫௨।௰௧௧
ஆஸவிஷா ீ இவ க்ருத்தா। உபசர்யா ஹி ப்ராஹ்மணா:। ௫௨।௰௧௨
தபஸா தீப்யமாநாஸ் ேத। தேஹயு: ஸாகராந் அபி। ௫௨।௰௧௨

ப்ராஹ்மேணஷு ச துஷ்ேடஷு। துஷ்யந்ேத ஸர்வேதவதா:। ௫௨।௰௧௩
ப்ராஹ்மணாநாம் நமஸ்காைர:। ஸூர்ேயா திவி விராஜேத। ௫௨।௰௧௩
ப்ராஹ்மணாநாம் பரீவாதாத்। பேதயுர் அபி ேதவதா:। ௫௨।௰௧௩
துரி ேய நாவஸதந்தி ீ । ப்ரணேதீ யஜ்ஞவஹ்நய:। ௫௨।௰௧௪
ேபாஜநாச்சாதைநர் தாைநஸ்। தாரயந்தி தேபாதநா:। ௫௨।௰௧௪
ேத கதி: ஸர்வபூதாநாம்। அத்யாத்மகதிசிந்தகா:। ௫௨।௰௧௫
ஆதிமத்யாவஸாநாநாம்। ஜ்ஞாநாநாம் சிந்நஸாம்ஸயா:। ௫௨।௰௧௫
பராபரவிேஸஷஜ்ஞா। ேநதார: பரமாம் கதிம்। ௫௨।௰௧௬
அவத்யா ப்ராஹ்மணாஸ் தஸ்மாத்। பாேபஷ்வ் அபி ரதா: ஸதா।
௫௨।௰௧௬
யஸ் ச ஸர்வம் இதம் ஹந்யாத்। ப்ராஹ்மணம் வாபி தத்ஸமம்।
௫௨।௰௧௭
ேஸா அக்நி: ேஸா அர்ேகா மஹாேதஜா। விஷம் பவதி ேகாபித:।
௫௨।௰௧௮
பூதாநாம் அக்ரபுக் விப்ேரா। வர்ணஸ்ேரஷ்ட: பிதா குரு:। ௫௨।௰௧௮
ந ஸ்கந்தேத ந வ்யதேத। ந ச நஸ்யதி கர்ஹிசித்। ௫௨।௰௧௯
வரிஷ்டம் அக்நிேஹாத்ராத் தி। ப்ராஹ்மணஸ்ய முேக ஹுதம்।
௫௨।௰௧௯
அவித்ேயா வா ஸவித்ேயா வா। ப்ராஹ்மேணா மம ைதவதம்।
௫௨।௰௨
ப்ரணதஸ்ீ சாப்ரணதஸ்ீ ச। யதாக்நிர் ைதவதம் மஹத்। ௫௨।௰௨
ஏவம் வித்வாந் அவித்வாந் வா। ப்ராஹ்மேணா ைதவதம் மஹத்।
௰௫௨।௬௩
ஸ்மஸாேநஷ்வ் அபி ேதஜஸ்வ।ீ பாவேகா ைநவ துஷ்யதி। ௫௨।௰௨க

ஹவ்யகவ்யவ்யேபேதா அபி। ப்ராஹ்மேணா ைநவ துஷ்யதி।
௫௨।௰௨௧
ஸர்வதா ப்ராஹ்மணா: பூஜ்யா:। ஸர்வதா ைதவதம் மஹத்। ௫௨।௰௨௨
தஸ்மாத் ஸர்வப்ரயத்ேநந। ரேக்ஷத் ஆபத்ஸு ப்ராஹ்மணாந்।
௫௨।௰௨௨
ஸக்ேரா அபி ஹி த்விேஜந்த்ராணாம்। பிேபதி விபுதாதிப:। ௫௨।௰௨௨
தாநம் ேதவா: ப்ரஸம்ஸந்தி। இதி தர்மவிேதா விது:। ௫௩।௰௰௧
நாநாதாநவிதிம் தஸ்மாச்। ஸ்ருணுஷ்வ ஸுஸமாஹித:। ௫௩।௰௰௧
ஹிரண்யதாநம் ேகாதாநம்। ப்ருதிவதாநம் ீ ஏவ ச। ௫௩।௰௰௨
ஏதாநி ைவ பவித்ராணி। தாரயந்தி பரத்ர ச। ௫௩।௰௰௨
யத் யத் இஷ்டதமம் ேலாேக। யச் சாஸ்தி தயிதம் க்ருேஹ।
௫௩।௰௰௩
தத் தத் குணவேத ேதயம்। தத் ஏவாக்ஷயம் இச்சதா। ௫௩।௰௰௩
ஸுவர்ணதாநம் ேகாதாநம்। ப்ருதிவதாநம் ீ ஏவ ச। ௫௩।௰௰௪
ஏதத் ப்ரயச்சமாேநா ைவ। ஸர்வபாைப: ப்ரமுச்யேத। ௫௩।௰௰௪
யத் ததாஸி விஸிஷ்ேடப்ேயா। யச் சாஸ்நாஸி திேந திேந। ௫௩।௰௰௫
தத் ேத வித்தம் அஹம் மந்ேய। ேஸஷம் கஸ்யாபி ரக்ஷஸி।
௫௩।௰௰௫
துல்யநாமாநி ஸஸ்தாநி। த்ரீணி துல்யபலாநி ச। ௫௩।௰௰௬
நித்யம் ேதயாநி ராேஜந்த்ர। காவ: ப்ருத்வ ீஸரஸ்வதீ। ௫௩।௰௰௬
தத்வஜ் ஜலம் அமித்ரக்ந। தத் துல்யபலநாமத:। ௫௩।௰௰௭
தத்த்வா த்ருப்திம் அவாப்ேநாதி। யத்ரதத்ராபிஜாயேத। ௫௩।௰௰௭

ஸம்கல்பவிஹிேதா ேயா அர்ேதா। ப்ராஹ்மேணப்ய: ப்ரதீயேத।
௫௩।௰௰௮
அர்திப்ேயா ஹ்ய் அர்தேஹதுப்ேயா। மநஸ்வ ீேதந ஜாயேத।
௫௩।௰௰௮
ஸதேத ீ த்விஜமுக்யாய। ேயா அர்திேந ந ப்ரயச்சதி। ௫௩।௰௰௯
அமர்ேத ஸதி துர்புத்திர்। நரகாேயாபபத்யேத। ௫௩।௰௰௯
ேதநேவா அநடுஹஸ் ைசவ। சத்த்ரம் வஸ்த்ரம் உபாநெஹௗ। ௫௩।௰௧
ேதயாநி யாசமாேநப்ய:। பாநம் அந்நம் தைதவ ச। ௫௩।௰௧
ஏவம் தாநம் ஸமுத்திஷ்டம்। வ்யுஷ்டிமத் தாரகம் பரம்। ௫௩।௰௧
ஏஷ ேத விஹிேதா யஜ்ஞ:। ஸ்ரத்தாபூத: ஸதக்ஷிண:। ௫௩।௰௧௧
விஸிஷ்ட: ஸ ச யஜ்ேஞஷு। தததாம் அநஸூயயா। ௫௩।௰௧௧
தாநவித்பி: க்ருத: பந்தா। ேயந யாந்தி மநீஷிண:। ௫௩।௰௧௨
ையர் தாைநஸ் தர்பயிஷ்யந்தி। ஸ்ரத்தாபூைதர் த்விேஜாத்தமாந்।
௫௩।௰௧௨
யதா ஹி ஸுக்ருேத ேக்ஷத்ேர। பலம் விந்ததி ேக்ஷத்ரிக:। ௫௩।௰௧௩
ஏவம் தத்த்வா ப்ராஹ்மேணப்ேயா। தாதா பலம் உபாஸ்நுேத।
௫௩।௰௧௩
ப்ராஹ்மணாஸ் ைசவ வித்யந்ேத। ஸத்யவந்ேதா பஹுஸ்ருதா:।
௫௩।௰௧௪
ந ததாதி ச தாநாநி। ேமாகம் தஸ்ய தநார்ஜநம்। ௫௩।௰௧௪
உத்தாேயாத்தாய ேபாத்தவ்யம்। கிம் அத்ய ஸுக்ருதம் மயா।
௫௩।௰௧௫
தத்தம் வா தாபிதம் வாபி। ேவாத்ஸாஹ்யம் அபி வா க்ருதம்।
௫௩।௰௧௫

உத்தாேயாத்தாய தாதவ்யம்। ப்ராஹ்மேணப்ேயா யுதிஷ்டிர। ௫௩।௰௧௬
ஆகமிஷ்யதி யத் பாத்ரம்। தத் பாத்ரம் தாரயிஷ்யதி। ௫௩।௰௧௬
யச் ச ேவதமயம் பாத்ரம்। யச் ச பாத்ரம் தேபாமயம்। ௫௩।௰௧௭
அஸம்கீர்ணம் ச யத் பாத்ரம்। தத் பாத்ரம் தாரயிஷ்யதி। ௫௩।௰௧௭
அத்யாயம் தபேஸா வŠேய। தந் ேம நிகதத: ஸ்ருணு। ௫௪।௰௰௧
தபேஸா ஹி பரம் நாஸ்தி। தபஸா விந்தேத பலம்। ௫௪।௰௰௧
க்ருஷயஸ் தப ஆஸ்தாய। ேமாதந்ேத ைதவைத: ஸஹ। ௫௪।௰௰௨
தபஸா ப்ராப்யேத ஸ்வர்கம்। தபஸா ப்ராப்யேத யஸ:। ௫௪।௰௰௨
ஆயு:ப்ரகர்ஷம் ேபாகாம்ஸ் ச। தபஸா விந்தேத நர:। ௫௪।௰௰௩
ஜ்ஞாநம் விஜ்ஞாநம் ஆஸ்திக்யம்। ெஸௗபாக்யம் ரூபம் உத்தமம்।
௫௪।௰௰௩
தபஸா லப்யேத ஸர்வம்। மநஸா யத் யத் இச்சதி। ௫௪।௰௰௪
நாதப்ததபேஸா யாந்தி। ப்ரஹ்மேலாகம் கதாசந। ௫௪।௰௰௪
யத் கார்யம் கிம்சித் ஆஸ்தாய। புருஷஸ் தப்யேத தப:। ௫௪।௰௰௫
ஸர்வம் தத் ஸமவாப்ேநாதி। பரத்ேரஹ ச மாநவ:। ௫௪।௰௰௫
ஸுராப: பாரதாரீ ச। ப்ரூணஹா குருதல்பக:। ௫௪।௰௰௬
தபஸா தரேத ஸர்வம்। ஸர்வதஸ் ச விமுச்யேத। ௫௪।௰௰௬
அபி ஸர்ேவஸ்வர: ஸ்தாணுர்। விஷ்ணுஸ் ைசவ ஸநாதந:। ௫௪।௰௰௭
ப்ரஹ்மா ஹுதாஸந: ஸக்ரஸ்। தபஸ்யந்தி ஸநாதநா:। ௫௪।௰௰௭
ஷடஸதிஸஹஸ்ராணி ீ । முநீநாம் ஊர்த்வேரதஸாம்। ௫௪।௰௰௮
தபஸா திவி ேமாதந்ேத। ஸேமதா ைதவைத: ஸஹ। ௫௪।௰௰௮
தபஸா ப்ராப்யேத ராஜ்யம்। ஸக்ர: ஸர்வஸுேரஸ்வர:। ௫௪।௰௰௯

தபஸா பாலயந் ஸர்வம்। அஹந்ய் அஹநி வ்ருத்ரஹா। ௫௪।௰௰௯
ஸூர்யாசந்த்ரமெஸௗ ேதெவௗ। ஸர்வேலாகஹிேத ரெதௗ। ௫௪।௰௧
தபைஸவ ப்ரகாேஸேத। நக்ஷத்ராணி க்ரஹாஸ் ததா। ௫௪।௰௧
ந சாஸ்தி தத் ஸுகம் ேலாேக। யத் விநா தபஸா கில। ௫௪।௰௧௧
தபைஸவ ஸுகம் ஸர்வம்। இதி தர்மவிேதா விது:। ௫௪।௰௧௧
விஸ்வாமித்ரஸ் ச தபஸா। ப்ராஹ்மணத்வம் உபாகத:। ௰௫௪।௬௪
ஸர்வம் ச தபஸாப்ேயதி। ஸர்வம் ச ஸுகம் அஸ்நுேத। ௫௪।௰௧௨
தபஸ் தப்யதி ேயா அரண்ேய। முநிர் மூலபலாஸந:। ௫௪।௰௧௨
க்ருசம் ஏகாம் அபி படந்। ஸ யாதி பரமாம் கதிம்। ௫௪।௰௧௨
தஸ்மாத் தப: ஸமாஸ்தாய। ப்ரார்தேயத் யத் அபப்ஸிதம் ீ । ௰௫௪।௬௫
ஸத்யம் ஏவ பரம் ப்ரஹ்ம। ஸத்யம் ஏவ பரம் தப:। ௫௫।௰௰௧
ஸத்யம் ஏவ பேரா யஜ்ஞ:। ஸத்யம் ஏவ பரம் ஸ்ருதம்। ௫௫।௰௰௧
ஸத்யம் ேதேவஷு ஜாகர்தி। முக்தி: ஸத்யதேரா: பலம்। ௫௫।௰௰௧
தேபா யஸஸ் ச புண்யம் ச। பித்ருேதவர்ஷிபூஜநம்। ௫௫।௰௰௨
ஆத்ேயா விதிஸ் ச வித்யா ச। ஸர்வம் ஸத்ேய ப்ரதிஷ்டிதம்।
௫௫।௰௰௨
ஸத்யம் யஜ்ஞஸ் ததா ேவதா। மந்த்ரா ேதவ ீஸரஸ்வதீ। ௫௫।௰௰௩
வ்ரதசர்யா ததா ஸத்யம்। ஓம்கார: ஸத்யம் ஏவ ச। ௫௫।௰௰௩
ஸத்ேயந வாயுர் அப்ேயதி। ஸத்ேயந தபேத ரவி:। ௫௫।௰௰௪
ஸத்ேயந சாக்நிர் தஹதி। ஸ்வர்கம் ஸத்ேயந கச்சதி। ௫௫।௰௰௪
ஸத்ேயந சாப: க்ஷிபதி। பர்ஜந்ய: ப்ருதிவதேல ீ । ௫௫।௰௰௪
பாரணம் ஸர்வேவதாநாம்। ஸர்வதீர்தாவகஹநஹ்। ௫௫।௰௰௫

ஸத்யம் ச வதேதா ேலாேக। தத் ஸமம் ஸ்யாந் ந ஸம்ஸய:।
௫௫।௰௰௫
அஸ்வேமதஸஹஸ்ரம் ச। ஸத்யம் ச துலயா த்ருதம்। ௫௫।௰௰௬
அஸ்வேமதஸஹஸ்ராத் தி। ஸத்யம் ஏதத் விஸிஷ்யேத। ௫௫।௰௰௬
முநய: ஸத்யநிரதா। முநய: ஸத்யவிக்ரமா:। ௰௫௫।௬௬
முநய: ஸத்யப்ரபதா:। பராம் ஸித்திம் இேதா கதா:। ௰௫௫।௬௬
ஸத்ேயந ேதவா: ப்ரீயந்ேத। பிதேரா ப்ராஹ்மணாஸ் ததா। ௫௫।௰௰௭
ஸத்யம் ஆஹு: பரம் தர்மம்। தஸ்மாத் ஸத்யம் ந ேலாபேயத்।
௫௫।௰௰௭
முநய: ஸத்யநிரதாஸ்। தஸ்மாத் ஸத்யம் விஸிஷ்யேத। ௫௫।௰௰௮
ஸ்வர்ேக ஸத்யபரா நித்யம்। ேமாதந்ேத ேதவதா இவ। ௫௫।௰௰௮
அப்ஸேராகணஸம்கீர்ைணர்। விமாைநர் உபயாந்தி ேத। ௫௫।௰௰௯
வக்தவ்யம் ஹி ஸதா ஸத்யம்। ந ஸத்யாத் வித்யேத பரம்।
௫௫।௰௰௯
ஏதத் ப்ரமாணம் ய: குர்யாத்। ஸர்வயஜ்ஞபலம் லேபத்। ௰௫௫।௬௭
அகாேத விமேல ஸுத்ேத। ஸத்யதீர்ேத ஹ்ரேத ஸுேப। ௫௫।௰௧
ஸ்நாதவ்யம் மநஸா யுக்ைத:। ஸ்நாநம் தத் பரமம் ஸ்ம்ருதம்।
௫௫।௰௧
ஆத்மார்ேத ச பரார்ேத வா। புத்ரார்ேத வாபி பார்திவ। ௫௫।௰௧௧
ேய அந்ருதம் நாபிபாஷந்ேத। ேத நரா: ஸ்வர்ககாமிந:। ௫௫।௰௧௧
அபி ேசதம் புரா கீதம்। தர்மவித்பிர் யுதிஷ்டிர। ௫௫।௰௧௨
ய: ஸத்யவாதீபுருேஷா। நாந்ருதம் பரிபாஷேத। ௫௫।௰௧௨

ஸம்ப்ராப்ய விரஜாம்ல் ேலாகாந்। உஷித்வா ஸாஸ்வதீ: ஸமா:।
௫௫।௰௧௩
ஸுசீநாம் ஸ்ரீமதாம் ேகேஹ। ஜாயேத ஸுமஹாமதி:। ௫௫।௰௧௩
வித்யாேராக்யஸுைகஸ்வர்ையர்। யுக்ேதா ேயாகபேரா பேவத்।
௰௫௫।௬௮
ஆதித்யசந்த்ராவ் அநலாநிெலௗ ச। த்ெயௗர் பூமிர் ஆேபா ஹ்ருதயம் யமஸ்
ச। ௫௫।௰௧௪
அஹஸ் ச ராத்ரிஸ் ச உேப ச ஸம்த்ேய। தர்மஸ் ச ஜாநாதி நரஸ்ய
வ்ருத்தம்। ௫௫।௰௧௪
தஸ்மாந் ந வாச்யம் அந்ருதம் ஹி ஸத்பிர்। ஏவம்விைதர் தர்மவிேதா
வதந்தி। ௫௫।௰௧௫
ஸத்யம் வதம்ஸ் ேதஜஸா தீப்யமாேநா। ந ஹீயேத தர்மயேஸா
அர்தகாைம:। ௫௫।௰௧௫
ஏஷ வாணக்ருேதா ீ தர்ேமா। ைவதிேகா தர்மநிஸ்சேய। ௫௫।௰௧௬
ஏவம் ஏதத் யதாந்யாயம்। ஸத்யாத்யாேய ப்ரகீர்திதம்। ௫௫।௰௧௬
தத் ப்ரமாணம் புத: குர்யாந்। ந ஸத்யாத் வித்யேத பரம்। ௫௫।௰௧௬
ஸர்ேவஷாம் ஏவ வர்ணாநாம்। ப்ரவŠயாமி யுதிஷ்டிர। ௫௬।௰௰௧
உேபாஷிைதஸ் ச ெகௗந்ேதய। யத் ப்ரேயாஜ்யம் யதாவிதி। ௫௬।௰௰௧
பலம் யத் உபவாஸஸ்ய। தந் நிேபாத ச பாண்டவ। ௫௬।௰௰௨
அவாப்ேநாதி யதா காமாந்। உபவாஸபராயண:। ௫௬।௰௰௨
மையேத ந்ருபேத காம்யா। விஹிதா ஹிதம் இச்சதா। ௫௬।௰௰௩
உபவாஸா மநுஷ்யாணாம்। மய்ய் ஏவார்பிதேசதஸாம்। ௫௬।௰௰௩
பஞ்சமீம் ைசவ ஷஷ்டீம் ச। ெபௗர்ணமாஸம்ீ ச பாண்டவ। ௫௬।௰௰௪

உேபாஷ்ய ரூபவாந் தந்ய:। ஸுபகஸ் ைசவ ஜாயேத। ௫௬।௰௰௪
அஷ்டமீம் ைசவ ெகௗந்ேதய। ஸுக்லபேக்ஷ சதுர்தஸம்ீ । ௫௬।௰௰௫
உேபாஷ்ய வ்யாதிரஹிேதா। வர்யவாம்ஸ் ீ ைசவ ஜாயேத। ௫௬।௰௰௫
மார்கஸர்ஷம் ீ து ேயா மாஸம்। நித்யம் ஏகாஸேநா பேவத்।
௫௬।௰௰௬
க்ருஷிபாகீபேவத் ராஜந்। பஹுபுத்ரஸ் ச ஜாயேத। ௫௬।௰௰௬
ெபௗஷமாேஸ து ராேஜந்த்ர। பக்ேதைநேகந ய: க்ஷேபத்। ௫௬।௰௰௭
ஸுபேகா தர்ஸநீயஸ் ச। ஜ்ஞாநபாகீ ச ஜாயேத। ௫௬।௰௰௭
பித்ருந் உத்திஸ்ய மாகம் து। ய: க்ஷேபத் ஏகேபாஜநம்। ௫௬।௰௰௮
மாேஸந புருஷவ்யாக்ர। ேஸா அநந்த்யம் பலம் அஸ்நுேத। ௫௬।௰௰௮
பகைதவதமாஸம் து। ய: க்ஷேபத் ஏகேபாஜநம்। ௫௬।௰௰௯
ஸ்த்ரீஷு வல்லபதாம் யாதி। வஸ்யாஸ் சாஸ்ய பவந்தி தா:।
௫௬।௰௰௯
ைசத்ரம் து புருஷவ்யாக்ர। ய: க்ஷேபத் ஏகேபாஜநம்। ௫௬।௰௧
மாேஸந புருஷவ்யாக்ர। ெமௗநந் து பலம் அஸ்நுேத । ௰௫௬।௬௯
பகைதவதமாஸம் து। ய: க்ஷேபத் ஏகேபாஜந:। ௰௫௬।௬௯
ஸ்த்ரீஷு வல்லபதாம் யாதி। வஸ்யாஸ் சாஸ்ய பவந்தி தா:।
௰௫௬।௬௯
ைசத்ரம் து புருஷவ்யாக்ர। ய: க்ஷேபத் ஏகேபாஜந:। ௰௫௬।௬௯
ஸுவர்ணமணிமுக்தாட்ேய। குேல மஹதி ஜாயேத। ௰௫௬।௰௧௰௬௯
நிஸ்தேரத் ஏகபக்ேதந। ைவஸாகம் ேயா நராதிப। ௰௫௬।௰௧௧௬௯
நேரா வா யதி வா நாரீ। ஜ்ஞாதீநாம் ஸ்ேரஷ்டதாம் வ்ரேஜத்।
௫௬।௰௧௧

ஜ்ேயஷ்டமாஸம் அபாநீயம்। ஏகபக்ேதந ய: க்ஷேபத்। ௫௬।௰௧௨
ஐஸ்வர்யம் புருஷவ்யாக்ர। ஸ்த்ரீபாகீேசாபஜாயேத। ௫௬।௰௧௨
ஆஷாடம் பரதஸ்ேரஷ்ட। ஏகபக்ேதந ய: க்ஷேபத்। ௫௬।௰௧௩
ஸூரஸ் ச பஹுதாந்யஸ் ச। பஹுபுத்ரஸ் ச ஜாயேத। ௫௬।௰௧௩
ஸ்ராவணம் து நரவ்யாக்ர। பக்ேதைநேகந ய: க்ஷேபத்। ௫௬।௰௧௪
யத்ர யத்ேராபபத்ேயத। தத்ர ஸ்யாஜ் ஜ்ஞாதிவர்தந:। ௫௬।௰௧௪
மாஸம் பாத்ரபதம் ராஜந்ந்। ஏகபக்ேதந ய: க்ஷேபத்। ௫௬।௰௧௫
தநாட்ேயா வர்யவாம்ஸ் ீ ைசவ। ஐஸ்வர்யம் ப்ரதிபத்யேத। ௫௬।௰௧௫
ய: க்ஷேபத் ஏகபக்ேதந। மாஸம் ஆஸ்வயுஜம் நர:। ௫௬।௰௧௬
தநவாந் வாஹநாட்யஸ் ச। பஹுபுத்ரஸ் ச ஜாயேத। ௫௬।௰௧௬
கார்த்திகம் து நேரா மாஸம்। நித்யம் ஏகாஸேநா பேவத்। ௫௬।௰௧௭
ஸூரஸ் ச பஹுபார்யஸ் ச। கீர்திமாம்ஸ் ைசவ ஜாயேத। ௫௬।௰௧௭
ஏேத மாஸா நரஸ்ேரஷ்ட। ஏகபக்ேதந கீர்திதா:। ௫௬।௰௧௮
திதீநாம் நியமாம்ஸ் ைசவ। தாஞ் ஸ்ருணுஷ்வ நராதிப। ௫௬।௰௧௮
பேக்ஷ பேக்ஷ சதுர்தம் து। பக்தம் ய: க்ஷபேயந் நர:। ௫௬।௰௧௯
விபுலம் தநம் ஆப்ேநாதி। பகவாந் அக்நிர் அப்ரவத்ீ। ௫௬।௰௧௯
மாேஸ மாேஸ சதுர்தம் து। பக்தம் ஏகம் து ய: க்ஷேபத்। ௫௬।௰௨
க்ருஷிபாகீயேஸாபாகீ। ேதஜஸ்வ ீசாபி ஜாயேத। ௫௬।௰௨
பேக்ஷ பேக்ஷ த்ரிராத்ரம் து। ய: க்ஷேபந் நரபுங்கவ। ௫௬।௰௨௧
கேண ேகாேஷ புேர க்ராேம। மாஹாத்ம்யம் ப்ரதிபத்யேத। ௫௬।௰௨௧
மாேஸ மாேஸ த்ரிராத்ரம் து। பக்ேதைநேகந ய: க்ஷேபத்। ௫௬।௰௨௨
கணாதிபத்யம் லபேத। நி:ஸபத்நம் அகண்டகம்। ௫௬।௰௨௨

யஸ் து ஸாயம் ததா கல்யம்। புங்க்ேத ைநவாந்தரா பிேபத்।
௫௬।௰௨௩
அஹிம்ஸாநிரேதா நித்யம்। ஜுஹ்வாேநா ஜாதேவதஸம்। ௫௬।௰௨௩
ஷட்பிர் ஏவ து வர்ைஷஸ் து। ஸித்யேத நாத்ர ஸம்ஸய:। ௫௬।௰௨௪
அக்நிஷ்ேடாமஸ்ய யஜ்ஞஸ்ய। பலம் ப்ராப்ேநாதி மாநவ:। ௫௬।௰௨௪
அஷ்டேமந து பக்ேதந। ராஜந் ஸம்வத்ஸரம் நேயத்। ௫௬।௰௨௫
கவாமயஸ்ய யஜ்ஞஸ்ய। பலம் ப்ராப்ேநாதி மாநவ:। ௫௬।௰௨௫
ஹம்ஸஸாரஸயுக்ேதந। விமாேநந ஸ கச்சதி। ௫௬।௰௨௬
பூர்ணம் வர்ஷஸஹஸ்ரம் து। ஸ்வர்கேலாேக மஹீயேத। ௫௬।௰௨௬
ஆர்ேதா வா வ்யாதிேதா வாபி। கச்ேசத் அநஸநம் து ய:। ௫௬।௰௨௭
பேத பேத யஜ்ஞபலம்। தஸ்ய மந்நாமகீர்தநாத்। ௫௬।௰௨௭
திவ்யக்ருக்ஷப்ரயுக்ேதந। விமாேநந ஸ கச்சதி। ௫௬।௰௨௮
ஸதம் அப்ஸரஸாம் ைசவ। ரமயந்தீஹ தம் நரம்। ௫௬।௰௨௮
ஸஹஸ்ரஸதஸம்யுக்ேத। விமாேந ஸூர்யவர்சேஸ। ௫௬।௰௨௯
ஆரூடஸ்த்ரீஸதாகீர்ேண। விஹரந் ஸுகம் ஏதேத। ௫௬।௰௨௯
ந க்ருத்ேதா வ்யாதிேதா நார்த:। ப்ரஸந்நமநேஸந்த்ரிய:। ௫௬।௰௩
கச்ேசத் அநஸநம் யஸ் து। தஸ்யாபி ஸ்ருணு யத் பலம்। ௫௬।௰௩
ஸதம் வர்ஷஸஹஸ்ராணாம்। ஸ்வர்கேலாேக மஹீயேத। ௫௬।௰௩௧
ஸ்வஸ்த: ஸபலஸம்கல்ப:। ஸுகீவிகதகல்மஷ:। ௫௬।௰௩௧
ஸ்த்ரீஸஹஸ்ரஸமாகீர்ேண। ஸுப்ரேப ஸுகம் ஏதேத। ௫௬।௰௩௧
யாவந்தி ேராமகூபாநி। தஸ்ய காத்ேரஷு பாரத। ௫௬।௰௩௨
தாவத்வர்ஷஸஹஸ்ராணி। திவ்யாநி திவி ேமாதேத। ௫௬।௰௩௨

நாஸ்தி ேவதாத் பரம் ஸாஸ்த்ரம்। நாஸ்தி மாத்ருஸேமா குரு:।
௫௬।௰௩௩
ந தர்மாத் பரேமா லாபஸ்। தேபா நாநஸநாத் பரம்। ௫௬।௰௩௩
ப்ராஹ்மேணப்ய: பரம் நாஸ்தி। திவி ேசஹ ச பாவநம்। ௫௬।௰௩௪
உபவாைஸஸ் ததா துல்யம்। தேபா ஹ்ய் அந்யந் ந வித்யேத।
௫௬।௰௩௪
உேபாஷ்ய விதிவத் ேதவாஸ்। த்ரிதிவம் ப்ரதிேபதிேர। ௫௬।௰௩௫
முநயஸ் ச பராம் ஸித்திம்। உபவாைஸர் அவாப்நுவந்। ௫௬।௰௩௫
திவ்யம் வர்ஷஸஹஸ்ரம் து। விஸ்வாமித்ேரண தீமதா। ௫௬।௰௩௬
க்ஷாந்தம் ஏேகந பக்ேதந। ேயந விப்ரத்வம் ஆகத:। ௫௬।௰௩௬
ச்யவேநா ஜமதக்நிஸ் ச। வஸிஷ்ேடா ெகௗதேமா ப்ருகு:। ௫௬।௰௩௭
ஸர்ேவ ஹ்ய் ஏேத திவம் ப்ராப்தா:। க்ஷமாவந்ேதா பஹுஸ்ருதா:।
௫௬।௰௩௭
விதிநாேநந ராேஜந்த்ர। ேயா மயா பரிகீர்தித:। ௫௬।௰௩௭
பேடத ேயா ைவ ஸ்ருணுயாச் ச பக்த்யா। ந வித்யேத தஸ்ய நரஸ்ய பாபம்।
௫௬।௰௩௮
உபத்ரைவர் முச்யேத ஸர்வாங்கிைகர்। ந சாபி பாைபர் அபிபூயேத நர:।
௫௬।௰௩௮
ப்ராஹ்மணத்வம் ஸுதுஷ்ப்ராபம்। நிஸர்காத் ப்ராஹ்மேணா பேவத்।
௫௭।௰௰௧
க்ஷத்ரிேயா வாதவா ைவஸ்ேயா। நிஸர்காத் ஏவ ஜாயேத। ௫௭।௰௰௧
துஷ்க்ருேதந து துஷ்டாத்மா। ஸ்தாநாத் ப்ரஸ்யதி மாநவ:। ௫௭।௰௰௨
ஸ்ேரஷ்டம் ஸ்தாநம் ஸமாஸாத்ய। தஸ்மாத் ரேக்ஷத பண்டித:।
௫௭।௰௰௨

யஸ் து விப்ரத்வம் உத்ஸ்ருஜ்ய। க்ஷத்ரியத்வம் நிேஷவேத। ௫௭।௰௰௩
ப்ராஹ்மண்யாத் ஸ பரிப்ரஷ்ட:। க்ஷத்ரேயாந்யாம் ப்ரஸூயேத।
௫௭।௰௰௩
ைவஸ்யகர்மாணி வா குர்வந்। ைவஸ்யேயாெநௗ ப்ரஜாயேத।
௫௭।௰௰௪
ஸூத்ரகர்மாணி குர்வாண:। ஸூத்ரத்வம் உபபத்யேத। ௫௭।௰௰௪
ஸ தத்ர துர்கதிம் ப்ராப்ய। ஸ்தாநாத் ப்ரஷ்ேடா யுதிஷ்டிர। ௫௭।௰௰௫
ஸூத்ரேயாநிம் அநுப்ராப்ேதா। யதி தர்மம் ந ேஸவேத। ௫௭।௰௰௫
மாநுஷ்யாத் ஸ பரிப்ரஷ்டஸ்। திர்யக்ேயாெநௗ ப்ரஜாயேத। ௫௭।௰௰௬
அதர்மேஸவநாந் மூடஸ்। தேமாபஹதேசதந:। ௫௭।௰௰௬
ஜாத்யந்தரஸஹஸ்ராணி। தத்ைரவ பரிவர்தேத। ௫௭।௰௰௭
தஸ்மாத் ப்ராப்ய ஸுபம் ஸ்தாநம்। ப்ரமாதாந் ந து நாஸேயத்।
௫௭।௰௰௭
ஸூத்ராந்ேநநாவேஸேஷண। ேயா ம்ரிேயஜ் ஜடேர த்விஜ:। ௫௭।௰௰௮
ஆஹிதாக்நிஸ் ததா யஜ்வா। ஸ ஸூத்ரகதிபாக் பேவத்। ௫௭।௰௰௮
க்ஷத்ராந்ேநநாவேஸேஷண। க்ஷத்ரத்வம் உபபத்யேத। ௫௭।௰௰௯
ைவஸ்யாந்ேநநாவேஸேஷண। ைவஸ்யத்வம் உபபத்யேத। ௫௭।௰௰௯
தாம் ேயாநிம் லபேத விப்ேரா। புக்த்வாந்நம் யஸ்ய ைவ ம்ருத:।
௫௭।௰௰௯
ப்ராஹ்மணத்வம் ஸுபம் ப்ராப்ய। துர்லபம் ேயா அவமந்யேத। ௫௭।௰௧
ேபாஜ்யாேபாஜ்யம் ந ஜாநாதி। ஸ பேவத் க்ஷத்ரிேயா த்விஜ:। ௫௭।௰௧
கர்மணா ேயந ேமதாவ।ீ ஸூத்ேரா ைவஸ்ேயா அபிஜாயேத। ௫௭।௰௧௧
தத் ேத வŠயாமி நிகிலம்। ேயந வர்ேணாத்தேமா பேவத்। ௫௭।௰௧௧

ஸூத்ரகர்ம யேதாத்திஷ்டம்। ஸூத்ேரா பூத்வா ஸமாசேரத்। ௫௭।௰௧௨
யதாவத் பரிசர்யாம் து। த்ரிஷு வர்ேணஷு நித்யதா। ௫௭।௰௧௨
குருேத அவிமநா யஸ் து। ஸ ஸூத்ேரா ைவஸ்யதாம் வ்ரேஜத்।
௫௭।௰௧௨
க்ஷத்ரியத்வம் யதா ைவஸ்யஸ்। தத் வŠயாம்ய் அநுபூர்வஸ:।
௫௭।௰௧௩
ெசௗக்ஷ: பாபஜநத்ேவஷ்டா। ேஸஷாந்நக்ருதேபாஜந:। ௫௭।௰௧௩
அக்நிேஹாத்ரம் உபாதாய। ஜுஹ்வாநஸ் ச யதாவிதி। ௫௭।௰௧௪
ஸ ைவஸ்ய: க்ஷத்ரியகுேல। ஜாயேத நாத்ர ஸம்ஸய:। ௫௭।௰௧௪
க்ஷத்ரிேயா ப்ரஹ்மேயாந்யாம் து। ஜாயேத ஸ்ருணு தத் யதா।
௫௭।௰௧௫
ததாதி யஜேத யஜ்ைஞர்। விதிவச் சாப்ததக்ஷிைண:। ௫௭।௰௧௫
அதீேத ஸ்வர்கம் அந்விச்சம்ஸ்। த்ேரதாக்நிஸரண: ஸதா। ௫௭।௰௧௫
ஆர்தஹஸ்தப்ரேதா நித்யம்। ப்ரஜா தர்ேமண பாலயந்। ௫௭।௰௧௬
க்ருதுகாேல து ஸ்வாம் பார்யாம்। அபிகச்சந் விதாநத:। ௫௭।௰௧௬
ஸர்வாதித்யம் த்ரிவர்கஸ்ய। தீயதாம் புஜ்யதாம் இதி। ௫௭।௰௧௭
ஸூத்ராணாம் யாசகாநாம் ச। நித்யம் ஸித்திம் இதி ப்ருவந்। ௫௭।௰௧௭
ேகாப்ராஹ்மணஸ்ய சார்தாய। ரேண சாபிமுேகா ஹத:। ௫௭।௰௧௮
த்ேரதாக்நிமந்த்ரபூதாத்மா। க்ஷத்ரிேயா ப்ராஹ்மேணா பேவத்।
௫௭।௰௧௮
விதிஜ்ஞ: க்ஷத்ரியகுேல। யாஜக: ஸ து ஜாயேத। ௫௭।௰௧௮
ப்ராப்யேத அவிகல: ஸ்வர்ேகா। வர்ைண: ஸத்பதம் ஆஸ்திைத:।
௫௭।௰௧௯

ப்ராஹ்மணத்வம் ஸுதுஷ்ப்ராபம்। க்ருச்ச்ேரணாஸாத்யேத நைர:।
௫௭।௰௧௯
தஸ்மாத் ஸர்வப்ரயத்ேநந। ரேக்ஷத் ப்ராஹ்மண்யம் உத்தமம்।
௫௭।௰௧௯
ஸுவர்ணம் பரமம் தாநம்। ஸுவர்ணம் தக்ஷிணா பரா। ௫௮।௰௰௧
ஏதத் பவித்ரம் பரமம்। ஏதத் ஸ்வஸ்த்யயநம் மஹத்। ௫௮।௰௰௧
தஸ பூர்வாபராந் வம்ஸாந்। ஆத்மாநம் ச விஸாம்யேத। ௫௮।௰௰௨
அபி பாபஸதம் க்ருத்வா। தத்த்வா விப்ேரஷு தாரேயத்। ௫௮।௰௰௨
ஸுவர்ணம் ேய ப்ரயச்சந்தி। நரா: ஸுத்ேதந ேசதஸா। ௫௮।௰௰௩
ேதவதாஸ் ேத ப்ரயச்சந்தி। ஸமஸ்தா இதி ந: ஸ்ருதம்। ௫௮।௰௰௩
அக்நிர் ஹி ேதவதா: ஸர்வா:। ஸுவர்ணம் ச ஹுதாஸந:। ௫௮।௰௰௪
தஸ்மாத் ஸுவர்ணம் தததா। தத்தா: ஸர்வாஸ் ச ேதவதா:। ௫௮।௰௰௪
அக்ந்யபாேவ ச குர்வந்தி। வஹ்நிஸ்தாேநஷு காஞ்சநம்। ௫௮।௰௰௫
ஸர்வேவதப்ரமாணஜ்ஞா। ேவதஸ்ருதிநிதர்ஸநாத்। ௫௮।௰௰௫
ேய த்வ் ஏநம் ஜ்வாலயித்வாக்நிம்। ஆதித்ேயாதயநம் ப்ரதி। ௫௮।௰௰௬
தத்யுர் ைவ வ்ரதம் உத்திஸ்ய। ஸர்வாந் காமாந் அவாப்நுயு:।
௫௮।௰௰௬
ஸுவர்ணத: ஸ்வர்கேலாேக। காமாந் இஷ்டாந் உபாஸ்நுேத।
௫௮।௰௰௭
விரஜாம்பரஸம்வதீ:। பரியாதி யதஸ் தத:। ௫௮।௰௰௭
விமாேநநார்கவர்ேணந। பாஸ்வேரண விராஜதா। ௫௮।௰௰௮
அப்ஸேராகணஸம்கீர்ேண। பாஸ்வதா ஸ்ேவந ேதஜஸா। ௫௮।௰௰௮
ஹம்ஸபர்ஹிணயுக்ேதந। காமேகந நேராத்தம:। ௫௮।௰௰௯

திவ்யகந்தவஹ: ஸ்வர்ேக। பரிகச்ேசத் இதஸ் தத:। ௫௮।௰௰௯
தஸ்மாத் ஸ்வஸக்த்யா தாதவ்யம்। காஞ்சநம் மாநைவர் புவி।
௫௮।௰௧
ந ஹ்ய் அத: பரமம் ேலாேக। ஸத்ய: பாபவிேமாசநம்। ௫௮।௰௧
ஸுவர்ணஸ்ய து ஸுத்தஸ்ய। ஸுவர்ணம் ய: ப்ரயச்சதி। ௫௮।௰௧௧
பஹூந்ய் அப்தஸஹஸ்ராணி। ஸ்வர்கேலாேக மஹீயேத। ௫௮।௰௧௧
ேலாகாம்ஸ் து ஸ்ருஜதா பூர்வம்। காவ: ஸ்ருஷ்டா: ஸ்வயம்புவா।
௫௯।௰௰௧
ப்ரீத்யர்தம் ஸர்வபூதாநாம்। தஸ்மாத் தா மாதர: ஸ்ம்ருதா:। ௫௯।௰௰௧
தாஸ் து தத்த்வா ெஸௗரேபய:ீ। ஸ்வர்கேலாேக மஹீயேத। ௫௯।௰௰௨
தஸ்மாத் தா வர்ணயிஷ்யாமி। தாநம் சாஸாம் யதாவிதி। ௫௯।௰௰௨
யாத்ருஸீ விதிநா ேயந। தாதவ்யா யாத்ருஸாய ச। ௫௯।௰௰௩
த்விஜாய ேபாஷணார்தம் து। ேஹாமேதநுக்ருேத ந ைவ। ௫௯।௰௰௩
ப்ரதமா ெகௗரகபிலா। த்விதீயா ெகௗரபிங்கலா। ௰௫௯।௭௰
த்ருதீயா ரக்தகபிலா। சதுர்தீநீலபிங்கலா। ௰௫௯।௭௰
பஞ்சமீஸுக்லபிங்காக்ஷீ। ஷஷ்டீ து ஸுக்லபிங்கலா। ௰௫௯।௭௰
ஸப்தமீசித்ரபிங்காக்ஷீ। அஷ்டமீபப்ருேராஹிண।ீ ௰௫௯।௭௰
நவமீஸ்ேவதபிங்காக்ஷீ। தஸமீஸ்ேவதபிங்கலா। ௰௫௯।௭௰
தாத்ருஸா ேய அப்ய் அநட்வாஹ:। கபிலாஸ் ேத ப்ரகீர்திதா:।
௰௫௯।௭௰
ப்ராஹ்மேணா வாஹேயத் தாம்ஸ் து। நாந்ேயா வர்ண: கதாசந।
௰௫௯।௭௰

ேதநும் தத்த்வா ஸுவ்ரதாம் ேஸாபதாநாம்। கல்யாணவத்ஸாம் ச பயஸ்விநீம்
ச। ௫௯।௰௰௪
யாவந்தி ேராமாணி பவந்தி ேதந்வா। துஹ்ேயத காமாந் ந்ருப வர்ஷாணி
தாவத்। ௫௯।௰௰௪
ப்ரயச்சேத ய: கபிலாம் ஸவத்ஸாம்। காம்ஸ்ேயாபேதாஹாம்
கநகாக்ரஸ்ருங்கீம்। ௫௯।௰௰௫
ைதஸ் ைதர் குைண: காம்துகா ஹி பூத்வா। நரம் ப்ரதாதாரம் உைபதி ஸா
ெகௗ:। ௫௯।௰௰௫
ேகாஸஹஸ்ரம் து ேயா தத்யாத்। ஸர்வகாைமர் அலம்க்ருதம்।
௫௯।௰௰௬
பராம் வ்ருத்திம் ஸ்ரியம் ப்ராப்ய। ஸ்வர்கேலாேக மஹீயேத।
௫௯।௰௰௬
தஸ ேசாபயத: ப்ேரத்ய। மாதாமஹபிதாமைஹ:। ௫௯।௰௰௭
கச்ேசத் ஸுக்ருதிநாம் ேலாகாந்। காேவா தத்த்வா யதாவிதி। ௫௯।௰௰௭
தாயாதலப்ைதர் அர்ைதர் ேயா। கவா: க்ரீத்வா ப்ரயச்சதி। ௫௯।௰௰௮
தஸ்யாபி சாக்ஷயா ேலாகா। பவந்தீஹ பரத்ர ச। ௫௯।௰௰௮
ேயா த்யூேதந தநம் ஜித்வா। க்ரீத்வா காவ: ப்ரயச்சதி। ௫௯।௰௰௯
ஸ கச்ேசத் விரஜாம்ல் ேலாகாந்। ேகாப்ரதாநபலார்ஜிதாந்। ௫௯।௰௰௯
ப்ரதிக்ருஹ்ய து ேயா தத்யாத்। காவ: ஸுத்ேதந ேசதஸா। ௫௯।௰௧
ஸ கத்வா துர்கமம் ஸ்தாநம்। அமைர: ஸஹ ேமாதேத। ௫௯।௰௧
யஸ் சாத்மவிக்ரயம் க்ருத்வா। காேவா தத்யாத் யதாவிதி। ௫௯।௰௧௧
ஸ கத்வா விரஜாம்ல் ேலாகாந்। ஸுகம் வஸதி ேதவவத்। ௫௯।௰௧௧
ஸம்க்ராேம யஸ் தநும் த்யக்த்வா। காவ: க்ரீத்வா ப்ரயச்சதி।
௫௯।௰௧௨

ேதஹவிக்ரயமூல்யஸ் தா:। ஸாஸ்வதா: காமேதாஹநா:। ௫௯।௰௧௨
ரூபாந்விதா: ஸலவேயாபபந்நா ீ :। ஸர்வா: ப்ரஸஸ்தா ஹி ஸுகந்தவத்ய:।
௫௯।௰௧௩
யதா ஹி கங்கா ஸரிதாம் வரிஷ்டா। ததார்ஜுநீநாம் கபிலா வரிஷ்டா।
௫௯।௰௧௩
அந்தர்ஜாதா: ஸுக்ரயஜ்ஞாநலப்தா:। ப்ராணாம்ஸ் த்யக்த்வா ேஸாதகா:
ேஸாத்வஹாஸ் ச। ௫௯।௰௧௪
க்ருச்ச்ேராத்ஸ்ருஷ்டா: ேபாஷணாயாப்யுேபதா। த்வாைரர் ஏைதர்
ேகாவிேஸஷா வரிஷ்டா:। ௫௯।௰௧௪
திஸ்ேரா ராத்ர்யஸ் சாப்ய் உேபாஷ்ேயஹ தாதா। த்ருப்தா கா ைவ
தர்பிேதப்ய: ப்ரயச்ேசத்। ௫௯।௰௧௫
வத்ைஸ: பதா ீ : ேஸாபதாநாஸ் த்ர்யஹம் ச। தத்த்வா கா ைவ ேகாரைஸர்
வர்திதவ்யம்। ௫௯।௰௧௫
ேலாேக ஜ்ேயஷ்டா ேலாகவ்ருத்தாந்தவ்ருத்தா। ேவைதர் கீதா:
ேஸாமநிஷ்யந்தபூதா:। ௫௯।௰௧௬
ெஸௗம்யா: புண்யா: காமதா: ப்ராணதாஸ் ச। காேவா தத்த்வா ஸர்வதா
ஸந்தி ஸந்த:। ௫௯।௰௧௬
ந ைசவாஸாம் தாநமாத்ரம் ப்ரஸஸ்தம்। பாத்ரம் காேலா ேகாவிேஸேஷா
விதிஸ் ச। ௫௯।௰௧௭
த்ருஷ்ட்வா காவ: பாவகாதித்யபூதா:। ஸ்வாத்யாயாட்ேய பாத்ரவர்ேய
விஸிஷ்ேட। ௫௯।௰௧௭
ைவதாநஸ்தம் ஸத்யவாக்யம் க்ருதஜ்ஞம்। ேகாஷு க்ஷாந்தம் ேகாஸரண்யம்
ஸுவ்ருத்தம்। ௫௯।௰௧௮
ஸஸ்தம் பாத்ரம் ேகாப்ரதாநஸ்ய பூேமஸ்। ததா ஸுவர்ணஸ்ய ச
ஸர்வகாலம்। ௫௯।௰௧௮

பிக்ஷாதாநம் சாதிகம் ஸம்ப்ரஸஸ்தம்। பாேதாதாநம் சாந்நதாநம் ததா ச।
௰௫௯।௭௧
பிக்ஷேத பஹுப்ருத்யாய। ஸ்ேராத்ரியாயாஹிதாக்நேய। ௫௯।௰௧௯
தாதவ்யா ெகௗ: ப்ரயத்ேநந। ஏகாப்ய் அதிபலா ஹி ஸா। ௫௯।௰௧௯
தாம் ேசத் விக்ரீணேத ராஜந்। வசஸா கலுஷீக்ருதாம்। ௫௯।௰௨
நாெஸௗ ப்ரஸஸ்யேத விப்ேரா। ப்ராஹ்மேணா ைநவ ஸ ஸ்ம்ருத:।
௫௯।௰௨
தஸ்யாதர்மப்ரவ்ருத்தஸ்ய। லுப்தஸ்யாந்ருதவாதிந:। ௫௯।௰௨௧
ஹவ்யகவ்யவ்யேபதஸ்ய। ந ேதயா ெகௗ: கதம்சந। ௫௯।௰௨௧
ஜர்ணாம் ீ ைசேவாபபுக்தாம் ச। ஜரத்கூபம் இவாபலாம்। ௫௯।௰௨௨
தம: ப்ரவிஸேத தாதா। த்விஜம் க்ேலேஸந ேயாஜயந்। ௫௯।௰௨௨
துஷ்டா: க்ருஸாஸ் ைசவ பாலயதீஸ் ச। ைநதாத்ருஸா தாநேயாக்யா பவந்தி।
௫௯।௰௨௩
க்ேலைஸர் விப்ரம் ேயா அபைல: ஸம்யுநக்தி। கச்ேசத் ஸ திர்யக்
விபலாம்ஸ் ச ேலாகாந்। ௫௯।௰௨௩
அநட்வாஹம் ஸுவ்ரதம் ேயா ததாதி। ஹலஸ்ய ேவாடாரம் அநந்தவர்யம் ீ ।
௫௯।௰௨௪
யுகம்தரம் பலவந்தம் யுவாநம்। ப்ராப்ேநாதி ேலாகாந் தஸேதநுதஸ்ய।
௫௯।௰௨௪
ப்ரயச்சேத ய: புருேஷா த்விஜாய। ஸ்வாத்யாயசாரித்ரகுணாந்விதாய।
௫௯।௰௨௫
பேலந யுக்தம் வ்ருஷபம் து நீலம்। ஷடாங்கவம் ப்ரீதிகரம் ஸுரூபம்।
௫௯।௰௨௫
யுவாநம் பலிநம் ஸ்யாமம்। ஸேதந ஸஹ யூதபம்। ௫௯।௰௨௬

கேவந்த்ரம் ப்ராஹ்மேணந்த்ராய। பூரிஸ்ருங்கம் அலம்க்ருதம்।
௫௯।௰௨௬
வ்ருஷபம் ேய ப்ரயச்சந்தி। ஸ்ேராத்ரியாயாஹிதாக்நேய। ௫௯।௰௨௭
ேத கத்வா தத்கவாம் ேலாகம்। ேதவேலாகாந் மஹத்தரம்। ௰௫௯।௭௨
தத்ர ஸ்தித்வா து ஸுசிரம்। ஸர்வகாைம: ஸுதர்பிதா:। ௰௫௯।௭௨
ஐஸ்வர்ேய ேத அபிஜாயந்ேத। ஜாயமாநா: புந: புந:। ௫௯।௰௨௭
ஸதக்ஷிணாம் காஞ்சநரூப்யஸ்ருங்கீம்। காம்ஸ்ேயாபேதாஹாம்
கநேகாத்தரீயாம்। ௫௯।௰௨௮
ேதநும் திலாநாம் கநேகாத்தரீயாம்। ேலாகா வஸூநாம் அசலா பவந்தி।
௫௯।௰௨௮
திலாலாேப து ேயா தத்யாத்। க்ருதேதநும் யதவ்ரத:। ௫௯।௰௨௯
ஸ துர்காத் தாரிேதா ேதந்வா। ப்ரஹ்மேலாேக மஹீயேத। ௫௯।௰௨௯
க்ருதாலாேப து ேயா தத்யாஜ்। ஜலேதநும் யதவ்ரத:। ௫௯।௰௩
ஸ ஸர்வம் தரேத துர்கம்। ஜலம் திவ்யம் ஸமஸ்நுேத। ௫௯।௰௩
ப்ராஹ்மணாஸ் ைசவ காவஸ் ச। குலம் ஏகம் த்விதாக்ருதம்।
௫௯।௰௩௧
ஏகத்ர மந்த்ராஸ் திஷ்டந்தி। ஹவிர் ஏகத்ர திஷ்டதி। ௫௯।௰௩௧
உபகம்ய து ேயா தத்யாத்। காவ: ஸுத்ேதந ேசதஸா। ௫௯।௰௩௨
யாவந்தி தாஸாம் ேராமாணி। தாவத் ஸ்வர்ேக மஹீயேத। ௫௯।௰௩௨
ஸ்ருணு த்வம் ேம கவாம் ேலாகா। யாத்ருஸா யத்ர வா ஸ்திதா:।
௫௯।௰௩௩
மேநாஜ்ஞா ரமணயாஸ்ீ ச। ஸர்வகாமதுகா: ஸதா। ௫௯।௰௩௩
புண்யா: பாபஹராஸ் ைசவ। கவாம் ேலாகா ந ஸம்ஸய:। ௫௯।௰௩௪

அத்யந்தஸுகிநஸ் தத்ர। ஸர்வபாபவிவர்ஜிதா:। ௫௯।௰௩௪
ப்ரேமாதந்ேத மஹாஸ்தாேந। நரா விகதகல்மஷா:। ௫௯।௰௩௫
ேத வ்ரஜந்ேத விமாேநஷு। க்ரஹா திவி கதா இவ। ௫௯।௰௩௫
ஏவம் ையர் தத்தஸத்காரா:। ஸுரப்யஸ் சார்சிதா: ஸதா। ௫௯।௰௩௬
காமரூபா மஹாத்மாந:। பூதா விகதகில்பிஷா:। ௫௯।௰௩௬
துல்யப்ரபாவா ேதைவஸ் ேத। ேமாதந்ேத அப்ஸரஸாம் கைண:।
௫௯।௰௩௭
கந்தர்ைவர் உபகீயந்ேத। ேகாஸரண்யா ந ஸம்ஸய:। ௫௯।௰௩௭
ப்ரஹ்மண்யா: ஸாதுவ்ருத்தாஸ் ச। தயாவந்ேதா அநுகம்பிந:।
௫௯।௰௩௮
க்ருணிந: ஸுபகர்மாேணா। ேமாதந்ேத ேத அமைர: ஸஹ। ௫௯।௰௩௮
யைதவ ஸலிேல மத்ஸ்ய:। ஸலிேலந ஸேஹாஹ்யேத। ௫௯।௰௩௯
ேகாபி: பாபக்ருதம் கர்ம। த்ருடம் ஏவ மேயாஹ்யேத। ௫௯।௰௩௯
மாதர: ஸர்வபூதாநாம்। ப்ரஜாஸம்ரக்ஷேண ஸ்ம்ருதா:। ௫௯।௰௪
ப்ரஹ்மணா ேலாகஸாேரண। காவ: பாபபயாபஹா:। ௫௯।௰௪
தாஸு தத்தாஸு ராேஜந்த்ர। கிம் ந தத்தம் பேவத் இஹ। ௫௯।௰௪௧
க்ருஸாய து விேஸேஷண। வ்ருத்திக்லாநாய ஸதேத ீ । ௫௯।௰௪௧
பூதாேநந ஸமம் தாநம்। ந பூதம் ந பவிஷ்யதி। ௬௰।௰௰௧
இதி தர்மவித: ப்ராஹுஸ்। தந் ேம நிகதத: ஸ்ருணு। ௬௰।௰௰௧
ஷஷ்டிம் வர்ஷஸஹஸ்ராணி। ஸ்வர்ேக வஸதி பூமித:। ௬௰।௰௰௨
ஆச்ேசத்தா சாநுமந்தா ச। தாந்ய் ஏவ நரேக வேஸத்। ௬௰।௰௰௨
அதிதாநம் து ஸர்ேவஷாம்। பூமிதாநம் இேஹாச்யேத। ௬௰।௰௰௩
அசலா ஹ்ய் அக்ஷயா பூமி:। ஸர்வாந் காமாந் ப்ரயச்சதி। ௬௰।௰௰௩

பூமித: ஸ்வர்கம் ஆருஹ்ய। ஸாஸ்வதீர் ஏததி ஸமா:। ௬௰।௰௰௪
புநஸ் ச ஜந்ம ஸம்ப்ராப்ய। பேவத் பூமிபதிர் த்ருவம்। ௬௰।௰௰௪
யதா பூமி: ஸதா ேதவ।ீ தாதாரம் குருேத பதிம்। ௬௰।௰௰௫
ஏவம் ஸதக்ஷிணா தத்தா। குருேத ெகௗர் ஜநாதிபம்। ௬௰।௰௰௫
அபி பாபக்ருதம் ப்ராப்ய। ப்ரதிக்ருஹ்ணதீ பூமிதம்। ௬௰।௰௰௬
மஹீம் ததந் பவித்ரீ ஸ்யாத்। புண்யா ஹி ஜகதீயத:। ௬௰।௰௰௬
நாம ைவ ப்ரியதத்ேததி। குஹ்யம் ஏதத் ஸநாதநம்। ௬௰।௰௰௭
தத் அஸ்யா: ஸததம் ப்ரீத்ைய। கீர்தநீயம் ப்ரயச்சதா। ௬௰।௰௰௭
யத் கிம்சித் குருேத பாபம்। புருேஷா வ்ருத்திகர்ஷித:। ௬௰।௰௰௮
அபி ேகாசர்மமாத்ேரண। பூமிதாேநந ஸுத்யதி। ௬௰।௰௰௮
ஸுவர்ணம் ரஜதம் தாம்ரம்। மணிமுக்தாவஸூநி ச। ௬௰।௰௰௯
ஸர்வாந் ஏதாந் மஹாப்ராஜ்ஞ। ததாதி வஸுதாம் ததந்। ௬௰।௰௰௯
தேபா யஜ்ஞா: ஸ்ருதம் ஸலம் ீ । அேலாப: ஸத்யவாதிதா। ௬௰।௰௧
குருைதவதபூஜா ச। நாதிக்ரமந்தி பூமிதம்। ௬௰।௰௧
பர்துர் நி:ஸ்ேரயேஸ யுக்தாஸ்। த்யக்தாத்மாேநா ரேண ஹதா:।
௬௰।௰௧௧
ப்ரஹ்மேலாககதா: ஸந்ேதா। நாதிக்ராமந்தி பூமிதம்। ௬௰।௰௧௧
பலக்ருஷ்டாம் மஹீம் தத்த்வா। ேஸாதகாம் ஸபலாந்விதாம்।
௬௰।௰௧௨
ேஸாதகம் வாபி ஸரணம்। ப்ராப்ேநாதி மம ஸம்பதம்। ௬௰।௰௧௨
ரத்ேநாபகீக்ருணாம் வஸுதாம்। ேயா ததாதி த்விஜாதேய। ௬௰।௰௧௩
முக்த: ஸ கலுைஷ: ஸர்ைவ:। ஸ்வர்கேலாேக மஹீயேத। ௬௰।௰௧௩

இக்ஷுபி: ஸம்ததாம் பூமிம்। யவேகாதூமஸாட்பலாம்। ௬௰।௰௧௪
ேய ப்ரயச்சந்தி விப்ேரப்ேயா। ேநாபஸர்பந்தி ேத யமம்। ௬௰।௰௧௪
ஸர்வகாமதுகாம் ேதநும்। ஸர்வஸஸ்யஸமுத்பவாம்। ௬௰।௰௧௫
ேயா ததாதி த்விேஜந்த்ராய। ப்ரஹ்மேலாகம் ஸ கச்சதி। ௬௰।௰௧௫
பூமிதாநம் நர: குர்வந்। முச்யேத மஹேதா பயாத்। ௬௰।௰௧௬
ந பூேயா பூமிதாநாத் தி। தாநம் அந்யத் விஸிஷ்யேத। ௬௰।௰௧௬
புண்யாம் ஸர்வரஸாம் பூமிம்। ேயா ததாதி நரர்ஷப। ௬௰।௰௧௭
ந தஸ்ய ேலாகா: க்ஷயந்ேத ீ । பூமிதஸ்ய மஹாத்மந:। ௬௰।௰௧௭
யதா ஜநித்ரீ புஷ்ணாதி। க்ஷீேரண ஸ்வஸுதம் ந்ருப। ௬௰।௰௧௮
ஏவம் ஸர்வகுணா பூமிர்। தாதாரம் அநுபுஷ்யதி। ௬௰।௰௧௮
அக்நிஷ்ேடாமாதிபிர் யஜ்ைஞர்। இஷ்ட்வா விபுலதக்ஷிைண:।
௬௰।௰௧௯
ந தத் பலம் அவாப்ேநாதி। யத் தத்த்வா வஸுதாம் ந்ருப। ௬௰।௰௧௯
ம்ருத்ேயார் ஹி கிம்கரா தண்டா ஹ்ய்। அக்நிதாபா: ஸுதாருணா:।
௬௰।௰௨
ேகாராஸ் ச வாருணா: பாஸா। ேநாபஸர்பந்தி பூமிதம்। ௬௰।௰௨
பிதர: பித்ருேலாகஸ்தா। ேதவேலாேக திெவௗகஸ:। ௬௰।௰௨௧
ஸம்தர்பயந்தி தாதாரம்। பூேம: ப்ரபவதாம் வர। ௬௰।௰௨௧
க்ருஸாய க்ருஸப்ருத்யாய। வ்ருத்திக்ஷீணாய ஸதேத ீ । ௬௰।௰௨௨
பூமிம் வ்ருத்திகாரீம் தத்த்வா। ஸத்த்ரீ பவதி மாநவ:। ௬௰।௰௨௨
ஸிம்ஹாஸநம் ததா ச்சத்த்ரம்। வராஸ்வா வரவாரணா:। ௬௰।௰௨௩
பூமிதாநஸ்ய புஷ்பாணி। பலம் ஸ்வர்கம் தைதவ ச। ௬௰।௰௨௩
ஆதித்யா இவ தீப்யந்ேத। ேதஜஸா திவி மாநவா:। ௬௰।௰௨௪

ேய ப்ரயச்சந்தி வஸுதாம்। ப்ராஹ்மணாயாஹிதாக்நேய। ௬௰।௰௨௪
யதா பஜாநி ீ ேராஹந்தி। ப்ரகீர்ணாநி மஹீதேல। ௬௰।௰௨௫
ததா காமாதிேராஹந்தி। பூமிதாநகுணார்ஜிதா:। ௬௰।௰௨௫
ஆஸ்ேபாடயந்தி பிதர:। ப்ரவல்கந்தி பிதாமஹா:। ௬௰।௰௨௬
பூமிேதா ந: குேல ஜாத:। ஸ ந: ஸம்தாரயிஷ்யதி। ௬௰।௰௨௬
ஆதித்யா வஸேவா ருத்ரா ஹ்ய்। அஸ்விெநௗ வஸுபி: ஸஹ।
௬௰।௰௨௭
ஸூலபாணிஸ் ச பகவாந்। அபிநந்தந்தி பூமிதம்। ௬௰।௰௨௭
ஸ ந: குலஸ்ய புருஷ:। ஸ ேநா பந்து: ஸ ேநா கதி:। ௬௰।௰௨௮
ஸ தாதா ஸ ச விக்ராந்ேதா। ேயா ததாதி வஸும்தராம்। ௬௰।௰௨௮
தாதாரம் அநுக்ருஹ்ணாதி। யதா தத்ேதந ேராசேத। ௬௰।௰௨௯
பூர்வதத்தாம் ஹரந் பூமிம்। நரகாேயாபபத்யேத। ௬௰।௰௨௯
விந்த்யாடவஷ்வ்ீ அேதாயாஸு। ஸுஷ்கேகாடரவாஸிந:। ௬௰।௰௩
க்ருஷ்ணஸர்பா ஹி ஜாயந்ேத। ேய ஹரந்தி வஸும்தராம்। ௬௰।௰௩
பதந்த்ய் அஸ்ரூணி ருததாம்। தீநாநாம் அவஸததாம் ீ । ௬௰।௰௩௧
ப்ராஹ்மணாநாம் ஹ்ருதம் ேக்ஷத்ரம்। ஹந்யாத் த்ரிபுருஷம் குலம்।
௬௰।௰௩௧
ஸாதுப்ேயா பூமிம் ஆக்ஷிப்ய। ந பூதிம் விந்தேத க்வசித்। ௬௰।௰௩௨
தத்த்வா ஹி பூமிம் ஸாதுப்ேயா। விந்தேத பூதிம் உத்தமாம்। ௬௰।௰௩௨
பூர்வதத்தாம் த்விஜாதிப்ேயா। யத்நாத் ரக்ஷ யுதிஷ்டிர। ௬௰।௰௩௩
மஹீம் மஹீப்ருதாம் ஸ்ேரஷ்ட। தாநாச் ச்ேரேயா அநுபாலநம்।
௬௰।௰௩௩
யத்ைரஷ: பட்யேத ஸ்ராத்ேத। பூமிதாநஸ்ய ஸம்ஸ்தவ:। ௬௰।௰௩௪

ந தத்ர ரக்ஷஸாம் பாேகா। நாஸுராணாம் கதம்சந। ௬௰।௰௩௪
அக்ஷயம் து பேவச் ச்ராத்தம்। பித்ருணாம் நாத்ர ஸம்ஸய:। ௬௰।௰௩௫
தஸ்மாத் விஸ்ராவேயத் ஏநம்। ஸ்ராத்ேதஷு ப்ராஹ்மணாந் ஸதா।
௬௰।௰௩௫
ஏவம் ஏதத் யேதாத்திஷ்டம்। பித்ருணாம் தத்தம் அக்ஷயம்। ௬௰।௰௩௬
பூமிதாநம் மஹாராஜ। ஸர்வபாபாபஹம் ஸுபம்। ௬௰।௰௩௬
அக்நிஷ்ேடாமாதிபிர் யஜ்ைஞர்। இஷ்ட்வா விபுலதக்ஷிைண:। ௬௧।௰௰௧
ந தத் பலம் அவாப்ேநாதி। ஸம்க்ராேம யத் அவாப்நுயாத்। ௬௧।௰௰௧
இதி யஜ்ஞவித: ப்ராஹுர்। யஜ்ஞகர்மவிஸாரதா:। ௬௧।௰௰௨
தஸ்மாத் தத் ேத ப்ரவŠயாமி। யத் பலம் ஸஸ்த்ரஜவிநாம் ீ ।
௬௧।௰௰௨
தர்மலாேபா அர்தலாபஸ் ச। யேஸாலாபஸ் தைதவ ச। ௬௧।௰௰௩
ய: ஸூேரா வத்யேத யுத்ேத। விம்ருதந் பரவாஹிநீம்। ௬௧।௰௰௩
தஸ்ய தர்மார்தகாமாஸ் ச। யஜ்ஞாஸ் ைசவாப்ததக்ஷிணா:। ௬௧।௰௰௩
பரம் ஹ்ய் அபிமுகம் ஹத்வா। தத்யாநம் ேயா அதிேராஹதி।
௬௧।௰௰௪
விஷ்ணுக்ராந்தம் ஸ யஜத। ஏவம் யுத்யந் ரணாஜிேர। ௬௧।௰௰௪
அஸ்வேமதாந் அவாப்ேநாதி। சதுரஸ் ேதந கர்மணா। ௬௧।௰௰௪
யஸ் து ஸஸ்த்ரம் அநுத்ஸ்ருஜ்ய। வர்யவாந் ீ வாஹிநீமுேக।
௬௧।௰௰௫
ஸம்முேகா வர்தேத ஸூர:। ஸ ஸ்வர்காந் ந விவர்தேத। ௬௧।௰௰௫
ராஜாநம் ராஜபுத்ரம் வா। ேஸநாபதிம் அதாபி வா। ௬௧।௰௰௬

ஹந்யாத் க்ஷத்ேரண ய: ஸூரஸ்। தஸ்ய ேலாேகா அக்ஷேயா த்ருவ:।
௬௧।௰௰௬
யாவந்தி தஸ்ய ஸஸ்த்ராணி। பிந்தந்தி த்வசம் ஆஹேவ। ௬௧।௰௰௭
தாவேதா லபேத ேலாகாந்। ஸர்வகாமதுேகா அக்ஷயாந்। ௬௧।௰௰௭
வராஸநம் ீ வரஸய்யா ீ । வரஸ்தாநஸ்திதி ீ : ஸ்திரா। ௬௧।௰௰௮
கவார்ேத ப்ராஹ்மணார்ேத வா। ஸ்வாம்யர்ேத து க்ருதம் ச ைய:।
௬௧।௰௰௮
ேத கச்சந்த்ய் அமலம் ஸ்தாநம்। யதா ஸுக்ருதிநஸ் ததா। ௬௧।௰௰௮
அபக்நம் ய: பரம் ஹந்யாத்। பக்நம் ச பரிரக்ஷதி। ௬௧।௰௰௯
யஸ்மிந் ஸ்திேத பலாயந்தி। ேஸா அபி ப்ராப்ேநாதி ஸ்வர்கதிம்।
௬௧।௰௰௯
ஊர்த்வம் திர்யக் ச யஸ் சார்வாக்। ப்ராணாந் ஸம்த்யஜேத யுதி।
௬௧।௰௧
ஹதாஸ்வஸ் ச பேதத் யுத்ேத। ஸ ஸ்வர்காந் ந நிவர்தேத। ௬௧।௰௧
யஸ்ய சிஹ்நீக்ருதம் காத்ரம்। ஸரஸக்த்ய்ருஷ்டிேதாமைர:। ௬௧।௰௧௧
ேதவகந்யாஸ் து தம் வரம்ீ । ரமயந்தி ரமந்தி ச। ௬௧।௰௧௧
வராப்ஸர:ஸஹஸ்ராணி। ஸூரம் ஆேயாதேந ஹதம்। ௬௧।௰௧௨
த்வரிதாந்ய் அபிதாவந்தி। மம பர்தா மேமதி ச। ௬௧।௰௧௨
ஹதஸ்யாபிமுகஸ்யாெஜௗ। பதிதஸ்யாநிவர்திந:। ௬௧।௰௧௩
ஹ்ரியேத யத் பைரர் த்ரவ்யம்। நரேமதபலம் து தத்। ௬௧।௰௧௩
பூேயா கதிம் ப்ரவŠயாமி। ரேண ேய அபிமுகா ஹதா:। ௬௧।௰௧௪
ஸக்யம் த்வ் இஹ ஸம்ருத்ைதஸ் து। யஷ்டும் க்ரதுஸைதர் நைர:।
௬௧।௰௧௫

ஆத்மேதஹம் து விப்ரார்ேத। த்யக்தும் யுத்ேத ஸுதுஷ்கரம்।
௬௧।௰௧௫
யாம் யஜ்ஞஸம்ைகஸ் தபஸா ச விப்ரா:। ஸ்வர்ைகஷிணஸ் தத்ர சைய:
ப்ரயாந்தி। ௬௧।௰௧௬
க்ஷேணந தாம் ஏவ கதிம் ப்ரயாந்தி। மஹாஹேவ ஸ்வாம் தநும்
ஸம்த்யஜந்த:। ௬௧।௰௧௬
ஸர்வாம்ஸ் ச ேவதாந் ஸஹ ஷட்பிர் அங்ைக:। ஸாம்க்யம் ச ேயாகம் ச
வேந ச வாஸம்। ௬௧।௰௧௭
ஏதாந் குணாந் ஏக ஏவாதிேஸேத। ஸம்க்ராமதாம்ந்ய் ஆத்மதநும் த்யேஜத் ய:।
௬௧।௰௧௭
இமாம் கிரம் சித்ரபதாம் ஸுபாக்ஷராம்। ஸுபாஷிதாம் வ்ருதபிதாம்
திெவௗகஸாம்। ௬௧।௰௧௮
சமூமுேக ய: ஸ்மரேத த்ருடஸ்ம்ருதிர்। ந ஹந்யேத ஹந்தி ச ேஸா அரேண
ரிபூந்। ௬௧।௰௧௮
ஏஷ புண்யதம: ஸ்வர்க்ய:। ஸுயஜ்ஞ: ஸர்வேதாமுக:। ௬௧।௰௧௯
ஸர்ேவஷாம் ஏவ வர்ணாநாம்। க்ஷத்ரியஸ்ய விேஸஷத:। ௬௧।௰௧௯
பூயஸ் ைசவ ப்ரவŠயாமி। பஷ்மவாக்யம் ீ அநுத்தமம்। ௬௧।௰௨
யாத்ருஸாய ப்ரஹர்தவ்யம்। யாத்ருஸம் பரிவர்ஜேயத்। ௬௧।௰௨
ஆததாயிநம் ஆயாந்தம்। அபி ேவதாந்தகம் ரேண। ௬௧।௰௨௧
ஜிகாம்ஸந்தம் ஜிகாம்ஸயாந் ீ । ந ேதந ப்ரஹ்மஹா பேவத்। ௬௧।௰௨௧
ஹதாஸ்வஸ் ச ந ஹந்தவ்ய:। பாநீயம் யஸ் ச யாசேத। ௬௧।௰௨௨
வ்யாதிேதா துர்பலஸ் ைசவ। ரதஹீநஸ் தைதவ ச। ௬௧।௰௨௨
பக்நதந்வாச்சிநகுண:। ப்ராேணப்ஸு: க்ருபணம் ப்ருவந்। ௬௧।௰௨௩

விமுக்தேகேஸா தாேவத் ேயா। யஸ் ேசாந்மத்தாக்ருதிர் பேவத்।
௬௧।௰௨௩
பர்ணஸாகாத்ருணக்ராஹீ। தவாஸ்மீதி ச ேயா வேதத்। ௬௧।௰௨௪
ப்ராஹ்மேணா அஸ்மீதி யஸ் சாஹ। பாேலா வ்ருத்ேதா நபும்ஸக:।
௬௧।௰௨௪
தஸ்மாத் ஏதாந் பரிஹேரத்। யேதாத்திஷ்டாந் ரணாஜிேர। ௬௧।௰௨௫
ஹேதா ந ஹந்யேத ஸத்பிர்। ஹதா ஏவ ஹி பரவீ :। ௬௧।௰௨௫
அமாம்ஸபக்ஷேண ராஜந்। ேயா தர்ம: குருபுங்கவ। ௬௨।௰௰௧
தந் ேம ஸ்ருணு யதாதத்யம்। யஸ் சாஸ்ய விதிர் உத்தம:। ௬௨।௰௰௧
மாஸி மாஸ்ய் அஸ்வேமேதந। ேயா யேஜத ஸதம் ஸமா:। ௬௨।௰௰௨
ந ச காததி ேயா மாம்ஸம்। ஸமம் ஏதத் யுதிஷ்டிர। ௬௨।௰௰௨
ஸதா யஜதி ஸத்த்ேரண। ஸதா தாநம் ப்ரயச்சதி। ௬௨।௰௰௩
ஸதா தபஸ்வ ீபவதி। மதுமாம்ஸவிவர்ஜநாத்। ௬௨।௰௰௩
ஸர்வேவதா ந தத் குர்யு:। ஸர்வதாநாநி ைசவ ஹி। ௬௨।௰௰௪
ேயா மாம்ஸரஸம் ஆஸ்வாத்ய। ஸர்வமாம்ஸாநி வர்ஜேயத்।
௬௨।௰௰௪
துஷ்கரம் ஹி ரஸஜ்ேஞந। மாம்ஸஸ்ய பரிவர்ஜநம்। ௬௨।௰௰௫
சதுர்வ்ரதம் இதம் ஸ்ேரஷ்டம்। ப்ராணிநாம் ம்ருத்யுபருணாம் ீ ।
௬௨।௰௰௫
ததா பவதி ேலாேக அஸ்மிந்। ப்ராணிநாம் ஜவிைதஷிணாம் ீ ।
௬௨।௰௰௬
விஸ்வாஸ்யஸ் ேசாபகம்யஸ் ச। ந ஹி ஹிம்ஸாருதிர் யதா।
௬௨।௰௰௬

துஷ்டராம்ஸ் தரேத ம॥॥ஆம்। மாம்ஸஸ்ய பரிவர்ஜநாத்। ௰௬௨।௭௪
ப்ராணா யதாத்மேநா அபஷ்டா ீ । பூதாநாம் அபி ேத ததா। ௬௨।௰௰௭
ஆத்ெமௗபம்ேயந கந்தவ்யம்। புத்திமத்பிர் மஹாத்மபி:। ௬௨।௰௰௭
அஹிம்ஸா பரேமா தர்ம:। ஸத்யம் ஏவ ச பாண்டவ। ௬௨।௰௰௮
அஹிம்ஸா ைசவ ஸத்யம் ச। தர்ேமா ஹி பரம: ஸ்ம்ருத:। ௬௨।௰௰௮
ந ஹி மாம்ஸம் த்ருணாத் காஷ்டாத்। உபலாத் வாபி ஜாயேத।
௬௨।௰௰௯
ஜவாத் ீ உத்பத்யேத மாம்ஸம்। தஸ்மாத் கர்ஹந்தி தத் புதா:।
௰௬௨।௭௫
யதி ைவ காதேகா ந ஸ்யாந்। ந ததா காதேகா பேவத்। ௬௨।௰௰௯
ேலாபாத் வா புத்திேமாஹாத் வா। ேயா மாம்ஸாந்ய் அத்தி மாநவ:।
௬௨।௰௧
நிர்க்ருண: ஸ ஹி மந்தவ்ய:। ஸத்தர்மபரிவர்ஜித:। ௬௨।௰௧
ஸ்வமாம்ஸம் பரமாம்ேஸந। ேயா வர்தயிதும் இச்சதி। ௬௨।௰௧௧
உத்விக்நவாேஸ வஸதி। யத்ரதத்ராபிஜாயேத। ௬௨।௰௧௧
தேநந க்ராயேகா ஹந்தி। உபேபாேகந காதக:। ௬௨।௰௧௨
காதேகா வதபந்தாப்யாம்। இத்ய் ஏஷ த்ரிவிேதா வத:। ௬௨।௰௧௨
பக்ஷயித்வா து ேயா மாம்ஸம்। பஸ்சாத் அபி நிவர்தேத। ௬௨।௰௧௩
தஸ்யாபி ஸுமஹாந் தர்ேமா। ய: பாபாத் விநிவர்தேத। ௬௨।௰௧௩
வரம் ஏகஸ்ய ஸத்த்வஸ்ய। தத்யாத் அக்ஷயதக்ஷிணாம்। ௰௬௨।௭௬
ந து விப்ரஸஹஸ்ரஸ்ய। ேகாஸஹஸ்ரம் ஸகாஞ்சநம்। ௰௬௨।௭௬
ேயா தத்யாத் காஞ்சநம் ேமரும்। க்ருத்ஸ்நாம் வாபி வஸும்தராம்।
௰௬௨।௭௬

அபக்ஷணம் ச மாம்ஸஸ்ய। ந து துல்யம் யுதிஷ்டிர। ௰௬௨।௭௬
இதம் அந்யத் ப்ரவŠயாமி। புராணம் க்ருஷிநிர்மிதம்। ௬௨।௰௧௩
ஸ்ரூயேத ச புராகல்ேப ஹ்ய்। க்ருஷீணாம் வ்ரீஹய: பஸு:।
௬௨।௰௧௪
யஜந்ேத ேயந ைவ யஜ்ஞாந்। க்ருஷய: புண்யகர்மிண:। ௬௨।௰௧௪
க்ருஷிபி: ஸம்ஸயம் ப்ருஷ்ேடா। வஸூ ராஜா தத: புரா। ௬௨।௰௧௫
அபŠயம் பŠயம் இதி ைவ। மாம்ஸம் ஆஹ நராதிப। ௬௨।௰௧௫
ஆகாஸாந் ேமதிநீம் ப்ராப்தஸ்। தத: ஸ ப்ருதிவபதி ீ :। ௬௨।௰௧௬
ஏதத் ஏவ புநஸ் ேசாக்த்வா। விேவஸ தரணதலம் ீ । ௬௨।௰௧௬
ெகௗமுதம் து விேஸேஷண। ஸுக்லபேக்ஷ நராதிப। ௬௨।௰௧௭
வர்ஜேயத் ஸர்வமாம்ஸாநி। தர்ேமா ஹ்ய் அத்ர விதீயேத। ௬௨।௰௧௭
சதுேரா வார்ஷிகாந் மாஸாந்। ேயா மாம்ஸம் பரிவர்ஜேயத்। ௬௨।௰௧௮
சத்வாரி பத்ராண்ய் ஆப்ேநாதி। கீர்திர் ஆயுர் யேஸா பலம்। ௬௨।௰௧௮
அப்ய் ஏகம் இஹ ேயா மாஸம்। ஸர்வமாம்ஸாநி வர்ஜேயத்।
௬௨।௰௧௯
அதீத்ய ஸர்வது:காநி। ஸுகம் ஜேவந் ீ நிராமய:। ௬௨।௰௧௯
ேயா ஹி வர்ஷஸதம் பூர்ணம்। தபஸ் தப்ேயத் ஸுதாருணம்।
௬௨।௰௨
அப்ய் ஏகம் வர்ஜேயந் மாஸம்। மாம்ஸம் ஏதத் ஸமம் மதம்। ௬௨।௰௨
ேயா வர்ஜயதி மாம்ஸாநி। மாஸம் பக்ஷம் அதாபி வா। ௬௨।௰௨௧
ஸ ைவ ஹிம்ஸாநிவ்ருத்தஸ் து। ப்ரஹ்மேலாேக மஹீயேத।
௬௨।௰௨௧
ஸர்வகாலம் து மாம்ஸாநி। வர்ஜிதாநி மஹர்ஷிபி:। ௬௨।௰௨௨

மந்வா க்ஷுேபண ஸ்ேவேதந। தைதேவŠவாகுநாபி ச। ௬௨।௰௨௨
ப்ருகுணா நலராமாப்யாம்। திலீபரகுெபௗரைவ:। ௬௨।௰௨௩
ஆயுஷா ைசவ கார்க்ேயண। ஜநைகஸ் சக்ரவர்திபி:। ௬௨।௰௨௩
துந்துமாராம்பரீஷாப்யாம்। நஹுேஷண ச தீமதா। ௬௨।௰௨௪
காதிநா புருகுத்ேஸந। குருணா புருணா ததா। ௬௨।௰௨௪
முசுகுந்ேதந மாந்தாத்ரா। ஸகேரண மஹாத்மநா। ௬௨।௰௨௫
ஸிபிநா சாஸ்வபதிநா। வரேஸநாதிபிஸ் ீ ததா। ௬௨।௰௨௫
ஸம்ஜேயநாத பஷ்ேமண ீ । புஷ்கேரணாத பாண்டுநா। ௬௨।௰௨௬
ஸுவர்ணஷ்டீவிநா ைசவ। துஷ்வந்தந்ருகேராஹிைத:। ௬௨।௰௨௬
ஏைதஸ் சாந்ையஸ் ச பஹுபி:। ஸர்ைவர் மாம்ஸம் ந பக்ஷிதம்।
௬௨।௰௨௭
ஸரத்ெகௗமுதிகம் மாஸம்। தத: ஸ்வர்கம் கதா ந்ருபா:। ௬௨।௰௨௭
ஸர்வகாமஸம்ருத்தாஸ் ேத। வஸந்தி திவி ஸம்ஸ்திதா:। ௬௨।௰௨௭
ப்ரஹ்மேலாேக ச பூஜ்யந்ேத। ஜ்வலமாநா: ஸ்ரியாவ்ருதா:। ௬௨।௰௨௮
உபாஸ்யமாநா காந்தர்ைவ:। ஸ்த்ரீஸஹஸ்ரஸமந்விதா:। ௬௨।௰௨௮
தத் ஏவம் உத்தமம் தர்மம்। அஹிம்ஸாலக்ஷணம் ஸுபந்। ௬௨।௰௨௯
ேய ரக்ஷந்தி மஹாத்மாேநா। நாகப்ருஷ்ேட வஸந்தி ேத। ௬௨।௰௨௯
மது மாம்ஸம் ச ேய நித்யம்। வர்ஜயந்தீஹ மாநவா:। ௬௨।௰௩
ஜந்மப்ரப்ருதி மத்யம் ச। ஸர்ேவ ேத முநய: ஸ்ம்ருதா:। ௬௨।௰௩
ஆபந்நஸ் சாபேதா முச்ேயத்। பத்ேதா முச்ேயத பந்தநாத்। ௬௨।௰௩௧
வ்யாதிேதா முச்யேத ேராகாத்। து:காந் முச்ேயத து:கித:। ௬௨।௰௩௧
யஸ் ைசநம் படேத நித்யம்। ப்ரயத்நாத் பரதர்ஷப। ௬௨।௰௩௨
ேகாரம் ஸம்தரேத துர்கம்। ஸ்வர்கவாஸம் ச விந்ததி। ௬௨।௰௩௨

திர்யக்ேயாநிம் ந கச்ேசச் ச। ரூபவாம்ஸ் ைசவ ஜாயேத। ௬௨।௰௩௨
ஏதத் ேத கதிதம் ராஜந்। மாம்ஸஸ்ய பரிவர்ஜநம்। ௬௨।௰௩௩
ப்ரவ்ருத்ெதௗ ச நிவ்ருத்ெதௗ ச। ப்ரமாணம் க்ருஷிஸத்தைம:।
௬௨।௰௩௩
ேகாப்ராஹ்மணஹிதார்தாய। சாதுர்வர்ண்யஹிதாய ச। ௬௩।௰௰௧
அஸிஷ்டநிக்ரஹார்தாய। ஸிஷ்டாநாம் ரக்ஷணாய ச। ௬௩।௰௰௧
யுதிஷ்டிரஸ்ய ராஜர்ேஷர்। ஏவம் நாராயேணா அப்ரவத்ீ। ௬௩।௰௰௧
பஞ்ச ரூபாணி ராஜாேநா। தாரயந்த்ய் அமிெதௗஜஸ:। ௬௩।௰௰௨
அக்ேநர் இந்த்ரஸ்ய ேஸாமஸ்ய। யமஸ்ய வருணஸ்ய ச। ௬௩।௰௰௨
தாந் ந ஹிம்ேஸந் ந சாக்ேராேஸந்। நாக்ஷிேபந் நாப்ரியம் வேதத்।
௬௩।௰௰௩
ேதவா மாநுஷரூேபண। சரந்தி ப்ருதிவம்ீ இமாம்। ௬௩।௰௰௩
இந்த்ராத் ப்ரபுத்வம் ஜ்வலநாத் ப்ரதாபம்। க்ெரௗர்யம் யமாத் ைவஸ்ரவணாத்
ப்ரபாவம்। ௬௩।௰௰௪
ஸத்த்வஸ்திதிம் ராமஜநார்தநாபாம்। ஆதாய ராஜ்ஞ: க்ரியேத ஸரீரம்।
௬௩।௰௰௪
ந சாபி ராஜா மந்தவ்ேயா। மநுஷ்ேயா அயம் இதி ப்ரேபா। ௬௩।௰௰௫
மஹதீேதவதா ஹ்ய் ஏஷா। நரரூேபண திஷ்டதி। ௬௩।௰௰௫
ஸ்வயம் இந்த்ேரா நேரா பூத்வா। ப்ருதிவம்ீ அநுஸாஸதி। ௬௩।௰௰௬
ந ஹி பாலயிதும் ஸக்ேதா। மநுஷ்ய: ப்ருதிவம்ீ இமாம்। ௬௩।௰௰௬
யத் ப்ரஜாபாலைந: புண்யம்। ப்ராப்நுவந்தீஹ பார்திவா:। ௬௩।௰௰௭
ந தத் க்ரதுஸஹஸ்ேரண। ப்ராப்நுவந்தி த்விேஜாத்தமா:। ௬௩।௰௰௭
அதீதஹுததப்தஸ்ய। கர்மண: ஸுக்ருதஸ்ய ச। ௬௩।௰௰௮

ஷஷ்டம் லபதி பாகம் து। ப்ரஜா தர்ேமண பாலயந்। ௬௩।௰௰௮
க்ராமாதிபத்யம் நகராதிபத்யம்। ேதஸாதிபத்யம் ப்ருதிவபதித்வம் ீ ।
௬௩।௰௰௯
ந ப்ராப்நுவந்தீஹ மநுஷ்யமாத்ரா। ேய ேதவதாநாம் ந பவந்தி பாகா:।
௬௩।௰௰௯
ந தத் அஸ்தி வ்ரதம் ேலாேக। யத் ராஜ்ஞஸ் சரிேதாபமம்। ௬௩।௰௧
ந தத் ேவதரஹஸ்யம் வா। யத் ராஜ்ஞ: பலேதா அதிகம்। ௬௩।௰௧
ஏவம்வ்ருத்தாஸ் து ராஜாேநா। ேதவபாகா ந மாநுஷா:। ௬௩।௰௧
சதுர்ேவத்யம் ஹுதச॥ந। ேயா ஹிம்ேஸத நராதிப:। ௰௬௩।௭௭
தண்டஸ்ையேத பயாத் பதா ீ । ந காதந்தி பரஸ்பரம்। ௰௬௩।௭௭
ஜ॥தண்டபயாத் ேக॥।। ந துர்வந்தி ஹி பாதகம்। ௰௬௩।௭௭
யமதண்டபயாத் அந்ேய। ந துர்வந்தி பரஸ்பரம்। ௰௬௩।௭௭
நாபேதா ீ யஜேத காம்ஸ்சந் । நாபேதா ீ தண்டம் இச்சதி। ௰௬௩।௭௭
ய ஏவ ேதவா ஹந்தாரஸ்। தாம்ல் ேலாேகா அர்சயேத ப்ருஸம்।
௬௩।௰௧௧
ஹந்தா ஸக்ரஸ் ச ருத்ரஸ் ச। ஹந்தா ைவஸ்ரவேணா யம:।
௬௩।௰௧௧
வருேணா வாயுர் ஆதித்ய:। பர்ஜந்ேயா அக்நிர் ப்ருஹஸ்பதி:। ௬௩।௰௧௧
ஏதாந் ேதவாந் நமஸ்யந்தி। ப்ரதாபப்ரணதா ஜநா:। ௬௩।௰௧௨
ந ப்ரஹ்மாணம் ந தாதாரம்। ந பூஷாணம் கதம்சந। ௬௩।௰௧௨
தண்டக்ரஸ்தம் ஜகத் ஸர்வம்। வஸ்யத்வம் அநுகச்சதி। ௬௩।௰௧௩
நாயம் க்லீபஸ்ய ேலாேகா அஸ்தி। ந பர: பார்திேவாத்தம। ௬௩।௰௧௩
ந ஹி பஸ்யாமி ஜவந்தம் ீ । ராஜந் கம்சித் அஹிம்ஸயா। ௬௩।௰௧௪

உதேக ஜந்தேவா நித்யம்। ப்ருதிவ்யாம் ச பேலஷு ச। ௬௩।௰௧௪
ந ஹத்வா லிப்யேத ராஜா। ப்ரஜா தர்ேமண பாலயந்। ௬௩।௰௧௪
யதி தண்ேடா ந வித்ேயத। துர்விநீதாஸ் தேதா நரா:। ௬௩।௰௧௫
ஹந்யு: பஸூந் மநுஷ்யாம்ஸ் ச। யாஜ்ஞியாநி ஹவிம்ஷி ச।
௬௩।௰௧௫
வ்ருகவத் க்ஷபேயயுஸ் ச। ேயா யஸ்ய பலவத்தர:। ௰௬௩।௭௮
தஸ்மாத் ப்ராணிஹிேத தண்ேட। ஹிம்ஸாேதாேஷா ந பாதேத।
௰௬௩।௭௯
ைநேவாஸ்த்ரா ந பலீவர்தா। நாஸ்வாஸ்வதரகர்தபா:। ௬௩।௰௧௬
யுக்தா வேஹயுர் யாநாநி। தண்டஸ் ேசந் ேநாத்யேதா பேவத்।
௬௩।௰௧௬
ஸத்யம் கிைலதத் யத் உவாச ஸக்ேரா। தண்ட: ப்ரஜா ரக்ஷதி ஸாதுவ்ருத்த:।
௬௩।௰௧௭
யஸ்யாக்நய: ப்ரதிமாஸஸ்ய பதா ீ :। ஸம்தர்ஜிதா தண்டபயாஜ் ஜ்வலந்தி।
௬௩।௰௧௭
யத்ர ஸ்யாேமா ேலாஹிதாேக்ஷா। தண்டஸ் சரதி பாபஹா। ௬௩।௰௧௮
ப்ரஜாஸ் தத்ர ந முஹ்யந்ேத। ேநதா ேசத் ஸாது பஸ்யதி। ௬௩।௰௧௮
தண்டநீெதௗ ஸுநீதாயாம்। ஸர்ேவ ஸித்யந்த்ய் உபக்ரமா:। ௬௩।௰௧௯
தண்டஸ் ேசந் ந ப்ரவர்ேதத। விநஸ்ேயயுர் இமா: ப்ரஜா:। ௬௩।௰௧௯
வ்ருகவத் பக்ஷேயயுஸ் ச। ேயா யஸ்ய பலவத்தர:। ௬௩।௰௨
காகாத்யாஸ் ச புேராதாஸம்। ஸ்வா ைசவாவலிேஹத் தவி:। ௬௩।௰௨
ஸ்வாம்யம் ச ந ஸ்யாத் கஸ்மிம்ஸ்சித்। ப்ரவர்ேததாதேராத்தரம்।
௬௩।௰௨௧
சாதுர்வர்ண்யவிேமாக்ஷாய। துர்விநீதபயாய ச। ௬௩।௰௨௧

தண்ேடந நியேதா ேலாேகா। தர்மஸ்தாநம் ச ரக்ஷதி। ௬௩।௰௨௨
ஸர்ேவா தண்டஜிேதா ேலாேகா। துர்லேபா ஹி ஸுசிர் ஜந:।
௬௩।௰௨௨
தண்டஸ்ய ஹி பயாத் பதா ீ । நராஸ் திஷ்டந்தி ஸாஸேந। ௬௩।௰௨௩
தி அபி ேபாகாய கல்பந்ேத। தண்ேடேநாபரிபடிதா ீ :। ௬௩।௰௨௩
குருர் ஆத்மவதாம் ஸாஸ்தா। ஸாஸ்தா ராஜா துராத்மநாம்। ௬௩।௰௨௪
இஹப்ரச்சந்நபாபாநாம்। ஸாஸ்தா ைவவஸ்வேதா யம:। ௬௩।௰௨௪
பாபாநாம் அத மூடாநாம்। பரத்ரவ்யாபஹாரிணாம்। ௬௩।௰௨௫
பரதாரரதா ேய ச। ேய ச பாதகஸம்ஜ்ஞிதா:। ௬௩।௰௨௫
ேதஷாம் து ஸாஸநார்தாய। மையதத் ஸமுதாஹ்ருதம்। ௬௩।௰௨௫
ப்ராஹ்மண்யம் துஷ்கரம் ஜ்ஞாத்வா। தஸ்ய தண்டம் நிபாதேயத்।
௬௩।௰௨௬
கர்மாநுரூேபா தண்ட: ஸ்யாத்। ேகாஹிரண்யாதிேகா பேவத்।
௬௩।௰௨௬
அவத்ேயா ப்ராஹ்மேணா ராஜந்। ஸ்த்ரீ வ்ருத்ேதா பால ஏவ ச।
௬௩।௰௨௬
யஸ் சேரத் அஸுபம் கர்ம। பாபம் ராஜவிகர்ஹிதம்। ௬௩।௰௨௭
பாதேகஷு ச வர்ேதத। நிக்ரஹம் தஸ்ய காரேயத்। ௬௩।௰௨௭
ஸிரேஸா முண்டநம் க்ருத்வா। ேகாமேயநாநுேலபேயத்। ௬௩।௰௨௮
கரயாேநந நகரம்। டிண்டிேமந து ப்ராமேயத்। ௬௩।௰௨௮
ராஜநிர்திஷ்டதண்டஸ்ய। ப்ராயஸ்சித்தம் ந வித்யேத। ௬௩।௰௨௮
ஏஷ ேத கதிேதா தண்ேடா। ப்ராஹ்மணஸ்ய யுதிஷ்டிர। ௬௩।௰௨௯

க்ஷத்ரியஸ்ய து ேயா தண்டஸ்। தம் வŠயாம்ய் அநுபூர்வஸ:।
௬௩।௰௨௯
பரத்ரவ்யாதிஹரேண। பரதாராபிமர்தேந। ௬௩।௰௩
பாதேகஷு ச ஸர்ேவஷு। ேயா ஹி வர்ேதத க்ஷத்ரிய:। ௬௩।௰௩
தஸ்ய தண்டம் ப்ரவŠயாமி। தந் ேம நிகதத: ஸ்ருணு। ௬௩।௰௩
ஹஸ்தபாதபரிச்ேசதம்। கர்ணநாஸாவகர்தநம்। ௬௩।௰௩௧
ஸர்வஸ்வஹரணம் க்ருத்வா। பரராஷ்ட்ராய ப்ேரஸேயத்। ௬௩।௰௩௧
ராஜ்யம் காங்ேக்ஷத ேயா மூேடா। ராஜபத்நீம் அதாபி வா। ௬௩।௰௩௨
ஸைரஸ் து ராஜா வித்ேயத। ஸக்திசக்ரகதாதிபி:। ௬௩।௰௩௨
க்ஷத்ரியஸ்ய து துஷ்டஸ்ய। தண்ட ஏஷ விதீயேத। ௬௩।௰௩௩
ைவஸ்யஸ்யாபி ச ேயா தண்டஸ்। தம் ப்ரவŠயாமி பாரத।
௬௩।௰௩௩
பாதேகஷ்வ் ஏவ க்ரூேரஷு। யஸ் து ைவஸ்ய: ப்ரவர்தேத। ௬௩।௰௩௪
பரதாேர பரத்ரவ்ேய। தஸ்ய நிக்ரஹம் ஆதிேஸத்। ௬௩।௰௩௪
ஸூலாயாம் ேபதநம் தஸ்ய। வ்ருக்ஷஸாகாவலம்பநம்। ௬௩।௰௩௫
ஏதத் ைவஸ்யஸ்ய நிர்திஷ்டம்। ஸூத்ரஸ்யாப்ய் அநுபூர்வஸ:।
௬௩।௰௩௫
ஸூேல ஸூத்ரஸ்ய ேயா துஷ்டஸ்। தஸ்ையகஸ்ய வத: ஸ்ம்ருத:।
௬௩।௰௩௬
குஞ்ஜேரணாபிமர்ேதத। மீநீயாம் அத பாசேயத்। ௬௩।௰௩௬
ஏதச் சூத்ரஸ்ய நிர்திஷ்டம்। நாந்ேயா தண்ேடா விதீயேத। ௬௩।௰௩௬
ைநகஸ்யார்ேத குலம் ஹந்யாந்। ந ராஷ்ட்ரம் ந ச க்ராமகம்।
௬௩।௰௩௭

தநேலாபாந் ந ேமாக்தவ்ேயா। ராகாத் வா ஸாஸநம் விநா। ௰௬௩।௮௰
ஏகம் ஸுஸிஷ்டிதம் க்ருத்வா। ேஸஷம் ேகாஸம் ப்ரேவஸேயத்।
௬௩।௰௩௭
யுதிஷ்டிரஸ்ய ராஜர்ேஷர்। ஏவம் நாராயேணா அப்ரவத்ீ। ௬௩।௰௩௮
ஸமாேஸந யதாந்யாயம்। தண்டநீதிம் அநுத்தமாம்। ௬௩।௰௩௮
உத்தமாதமகார்ேயஷு। ஸேமஷு விஷேமஷு ச। ௬௩।௰௩௯
ராஜதர்மாம்ஸ் து பஸ்ேயத। விஷ்ணுநா ஸமுதாஹ்ருதாந்। ௬௩।௰௩௯
ஏதாந் தர்மாஞ் ஜகந்நாத:। பாண்டுபுத்ராய ப்ருச்சேத। ௬௪।௰௰௧
ஜகாத புருஷவ்யாக்ர। கிம் அந்யச் ச்ேராதும் இச்சஸி। ௬௪।௰௰௧
பகவந் வஹதாம் பக்திம்। ேதவேதேவ ஜநார்தேந। ௬௪।௰௰௨
யத் பலம் கதிதம் தஜ்ஜ்ைஞஸ்। தந் ேம விஸ்தரேதா வத। ௬௪।௰௰௨
யத் பலம் வஹதாம் பக்திம்। அச்யுேத பவதி ப்ரேபா। ௬௪।௰௰௩
ந தத் வர்ணயிதும் ஸக்யம்। ஹரி: ஸர்ேவப்ஸிதப்ரத:। ௬௪।௰௰௩
யாத்ருக் ஸத்த்வம் மநுஷ்யாணாம்। தாத்ருக் ஆராத்ய ேகஸவம்।
௬௪।௰௰௪
பலம் இச்சந்தி தாத்ருச் ச। லப்யேத ைதர் நேரஸ்வர। ௬௪।௰௰௪
முக்திகாமா நரா முக்திம்। ஸ்வர்கம் ேதவத்வம் ஈப்ஸவ:। ௬௪।௰௰௫
கந்தர்வயக்ஷஸித்தாநாம்। வ்ருண்வந்த்ய் அந்ேய ஸேலாகதாம்।
௬௪।௰௰௫
வர்ேஷஷ்வ் அபப்ஸேவா ீ விஷ்ணும்। பாதாேலஷு ததாபேர।
௬௪।௰௰௬
ேபாகாந் அபப்ஸேவா ீ விஷ்ணும்। ேதாஷயண்தி நராதிப। ௬௪।௰௰௬
ததாபேர நைரஸ்வர்யம்। ஆேராக்யம் குணவத் புவி। ௬௪।௰௰௭

ப்ரார்தயந்த்ய் அச்யுதம் ேதவம்। ஆராத்ய ஜகேதா கதிம்। ௬௪।௰௰௭
தர்ேமாபேதஸாத் அசலாம்। வஹந் பக்திம் ஜநார்தேந। ௬௪।௰௰௮
ஸஸரீேரா கத: ஸ்வர்கம்। தர்மபுத்ேரா யுதிஷ்டிர:। ௬௪।௰௰௮
தைதவ ஜநக: க்ருஷ்ேண। விநிேவஸ்ய ஸ்வமாநஸம்। ௬௪।௰௰௯
அவாப பரமாம் ஸித்திம்। வஸு: ப்ராயாத் த்ரிபிஷ்டபம்। ௬௪।௰௰௯
அந்ேய ச ேய ேய முநேயா। ேய ேய ச வஸுதாதிபா:। ௬௪।௰௧
அவாபுர் அதுலாந் காமாம்ஸ்। ேத ேத ஸம்ேதாஷ்ய ேகஸவம்।
௬௪।௰௧
அநாராத்ய ஜகந்நாதம்। ஸர்வபாபஹரம் ஹரிம்। ௬௪।௰௧௧
ஸத்கதி: ேகந ஸம்ப்ராப்தா। ேபாகாஸ் சாபி மேநாரமா:। ௬௪।௰௧௧
த்ெரௗணிப்ரஹ்மாஸ்த்ரநிர்தக்தஸ்। தவ ராஜந் பிதாமஹ:। ௬௪।௰௧௨
விஷ்ேணா: கார்யமநுஷ்யஸ்ய। தர்ஸநாத் உத்தித: புந:। ௬௪।௰௧௨
நாமஸம்கீர்தநாத் யஸ்ய। பாபம் அந்ையர் உபத்ரைவ:। ௬௪।௰௧௩
ஸமம் விநாஸம் ஆயாதி। ேதவ: ேகா அப்யதிகஸ் தத:। ௬௪।௰௧௩
ராஷ்ட்ரஸ்ய ஸரணம் ராஜா। பிதெரௗ பாலகஸ்ய ச। ௬௪।௰௧௪
தர்ம: ஸமஸ்தமர்த்யாநாம்। ஸர்வஸ்ய ஸரணம் ஹரி:। ௬௪।௰௧௪
முக்திேஹதும் அநாத்யந்தம்। அஜம் அக்ஷயம் அச்யுதம்। ௬௪।௰௧௫
நமஸ்யந் ஸர்வேலாகஸ்ய। நமஸ்ேயா ஜாயேத நர:। ௬௪।௰௧௫
ந ஹி தஸ்ய குணா: ஸர்ேவ। ஸர்ைவர் முநிகைணர் அபி। ௬௪।௰௧௬
வக்தும் ஸக்யா வியுக்தஸ்ய। ஸத்த்வாத்ையர் அகிைலர் குைண:।
௬௪।௰௧௬
ஸ்ருதம் மயா யதா பூர்வம்। ஆர்யேகா ேம யுதிஷ்டிர:। ௬௪।௰௧௭
ஸஸரீேரா கத: ஸ்வர்கம்। ஜிதம் ஆத்மீயகர்மபி:। ௬௪।௰௧௭

யத் த்வ் ஏதத் பகவாந் ஆஹ। ஸ யதா பாண்துபூர்வஜ:। ௬௪।௰௧௮
தர்ேமாபேதஸாத் ேகாவிந்தம்। ஆராதயத தத் வத। ௬௪।௰௧௮
புரா ஸாஸதி தர்மஜ்ேஞ। தர்மபுத்ேர யுதிஷ்டிேர। ௬௪।௰௧௯
தஸ்ையவ ைவஸ்வேதவாந்ேத। சண்டாேலா அப்யாகமத் கில।
௬௪।௰௧௯
ஸமுேபத்ய க்ருஹம் தஸ்ய। தர்மபுத்ரஸ்ய விஸ்மித:। ௬௪।௰௨
உவாச ஸ்வபேசா த்வா:ஸ்தம்। ப்ரஸ்ரயாவநதஸ்தித:। ௬௪।௰௨
கஸ்ையதத் பவநம் திவ்யம்। மணிரத்நவிபூஷிதம்। ௬௪।௰௨௧
ஸுத்தஸ்படிகேஸாபாநம்। மணிகாஞ்சநேதாரணம்। ௬௪।௰௨௧
அஷ்டாஸதிஸஹஸ்ராணி ீ । ப்ராஹ்மணாநாம் திேந திேந। ௬௪।௰௨௨
யுதிஷ்டிரம் க்ருேத பூபம்। புஞ்ஜேத கஸ்ய ேவஸ்மநி। ௬௪।௰௨௨
கதம் ஏதந் ந ஜாநீேஷ। சந்த்ரபிம்பம் இவாபரம்। ௬௪।௰௨௩
யுதிஷ்டிரஸ்ய பவநம்। ேதவராஜக்ருேஹாபமம்। ௬௪।௰௨௩
அபலஸ்ய பலம் ராஜா। பாலஸ்ய ருதிதம் பலம்। ௬௪।௰௨௪
பலம் மூர்கஸ்ய ைவ ெமௗநம்। தஸ்கரஸ்யாந்ருதம் பலம்। ௬௪।௰௨௪
கச்ச ஜல்ப ஸ்வராஜாநம்। ப்ரதீஹார வேசா மம। ௬௪।௰௨௫
து:கார்த: கார்யவாந் ராஜம்ஸ்। சண்டாேலா த்வாரி திஷ்டதி। ௬௪।௰௨௫
ேகநாபி ேஹதுமாத்ேரண। பவந்தம் துஷ்டம் ஆகத:। ௰௬௪।௮௧
இத்ய் உக்ேதா தர்மராஜஸ்ய। ப்ரதீஹாேரா யேதாதிதம்। ௬௪।௰௨௬
நிேவதயாம் ஆஸ ததா। தர்மராேஜா அப்ரவத்ீ இதம்। ௬௪।௰௨௬
கிம் ரூபம் கீத்ருஸம் ஸலம் ீ । ேகா அஸ்யார்த: கிம் ப்ரேயாஜநம்।
௬௪।௰௨௭

ப்ரூஹி த்வா:ஸ்த யதாவந் ேம। நரஸ் திஷ்டதி கீத்ருஸ:। ௬௪।௰௨௭
காகேகாகிலக்ருஷ்ணாங்ேகா। பக்நநாஸாருேணக்ஷண:। ௬௪।௰௨௮
யவமத்ய: க்ருஸக்ரீேவா। வக்ரபாேதா மஹாஹநு:। ௬௪।௰௨௮
ப்ரூஹி கச்ச துராசாரம்। சண்டாலம் பாபகர்மிணம்। ௬௪।௰௨௯
ேதவகார்யஸ்ய ேவலாயாம்। துதஸ் த்வம் ப்ரத்யுபஸ்தித:। ௬௪।௰௨௯
சண்டாலபதிெதௗ த்ருஷ்ட்வா। நர: பஸ்ேயத பாஸ்கரம்। ௬௪।௰௩
ஸ்நாதஸ் த்வ் ஏதாவ் அதாேலாக்ய। ஸைசலஸ்நாநம் அர்ஹதி।
௬௪।௰௩
இத்ய் ஆஜ்ஞப்ேத தேதாக்தஸ் து। சண்டாலஸ் ேதந ைவ தத:।
௬௪।௰௩௧
ப்ரத்யுவாச ப்ரதீஹாரம்। ஈஷந் மந்யுபரிப்லுத:। ௬௪।௰௩௧
கிம் ேதவகார்ேயண நராதிபஸ்ய। க்ருத்வா ஹி மந்யும் விஷயஸ்திதாநாம்।
௬௪।௰௩௨
தத் ேதவகார்யம் ஸ ச யஜ்ஞேஹாேமா। யத் அஸ்ருபாதா ந பதந்தி
ராஷ்ட்ேர। ௬௪।௰௩௨
இதம் வசநம் அவ்யக்ரம்। ப்ரதீஹார த்வரா மம। ௰௬௪।௮௨
நிேவதய ஸ்வராேஜந்த்ரம்। யேதஷ்டம் ஸ கேராது ைவ। ௰௬௪।௮௨
இத்ய் உக்த: ஸத்வரம் கத்வா। தர்மராஜம் ததா ததம் । ௰௬௪।௮௨
கதயாம் ஆஸ தத் ஸர்வம்। சாண்டாேலந யத் ஈரிதம்। ௰௬௪।௮௨
ஸுேஸாபநம் இதம் வாக்யம்। ந பேவத் அந்த்யஜாதிஷு। ௰௬௪।௮௨
சிந்தயித்வா தேதா ராஜா। நிர்ஜகாம யுதிஷ்டிர:। ௰௬௪।௮௨
இத்ய் ஏதத் வசநம் ஸ்ருத்வா। நிர்ஜகாம யுதிஷ்டிர:। ௬௪।௰௩௩
ப்ரத்யுவாச ச சண்டாலம்। ஈஷந் ேகாபஸமந்வித:। ௬௪।௰௩௩

குதஸ் ேத பயம் உத்பந்நம்। ேயந த்வம் க்ருஹம் ஆகத:। ௬௪।௰௩௪
ஆவாதாகாரணம் ஸர்வம்। யதாவத் கதயஸ்வ ேம। ௬௪।௰௩௪
தத் அஹம் ேத ப்ரதிஜ்ஞாய। சண்டகர்மகரக்ஷணம்। ௬௪।௰௩௫
அபாஸ்ய ேதவகார்யார்தம்। ப்ரவிஸ்யாம்ய் அந்தரம் புந:। ௬௪।௰௩௫
ந புஞ்ஜேத ப்ராஹ்மணா ேம। ஸர்வாஸ் ேசாத்விஜேத ஜந:।
௬௪।௰௩௬
ப்ராணிஹிம்ஸா ச ேநா வ்ருத்திர்। ேதவ புஷ்ணாதி ேம அந்ருதம்।
௬௪।௰௩௬
அேநகஜந்மஸாஹஸ்ரீம்। ப்ராப்ய ஸம்ஸாரபத்ததிம்। ௬௪।௰௩௭
மாநுஷ்ேய குத்ஸிதாம் ஜாதிம்। ஆபந்ேநா முஷிேதா அஸ்மி ேபா:।
௬௪।௰௩௭
கர்மபூமிம் இமாம் ராஜந்। ப்ரார்தயந்தி திெவௗகஸ:। ௬௪।௰௩௮
தாம் ஸம்ப்ராப்ய வ்ருதாஜந்மா। முஷ்ேடா அஸ்மி குருஸத்தம।
௬௪।௰௩௮
து:ேக து:காதிகாந் பஸ்ேயத்। ஸுேக பஸ்ேயத் ஸுகாதிகாந்।
௬௪।௰௩௯
ஆத்மாநம் ேஸாகஹர்ஷாப்யாம்। ஸத்ருப்யாம் இவ நார்பேயத்।
௬௪।௰௩௯
ேஸா அஹம் இச்சாமி விஜ்ஞாதும்। அதிதுஷ்க்ருதகர்மக்ருத்। ௬௪।௰௪
வக்தும் அர்ஹஸி தர்மஜ்ஞ। க: பாபிஷ்டதேரா மயா। ௬௪।௰௪
அத்வாநம் உபரி ஸ்ராந்தம்। ப்ராஹ்மணம் க்ருஹம் ஆகதம்। ௬௪।௰௪௧
அநர்சயித்வா ேயா புங்க்ேத। ஸ பாபிஷ்டதரஸ் த்வயா। ௬௪।௰௪௧
மாதரம் பிதரம் ைசவ। விகலம் ேநத்ரதுர்பலம்। ௬௪।௰௪௨

ேயா நாப்யுத்தரேத புத்ர:। ஸ பாபிஷ்டதரஸ் த்வயா। ௬௪।௰௪௨
ேகாதநஸ்ய த்ருஷார்தஸ்ய। ஜலார்தம் பரிதாவத:। ௬௪।௰௪௩
விக்நம் ஆசரேத யஸ் து। ஸ பாபிஷ்டதரஸ் த்வயா। ௬௪।௰௪௩
விவாஹயித்வா ய: கந்யாம்। குலஜாம் ஸலமண்டநாம் ீ । ௬௪।௰௪௪
விநா த்யஜதி ேதாேஷண। ஸ பாபிஷ்டதரஸ் த்வயா। ௬௪।௰௪௪
ஆஸாகாரஸ் த்வ் அதாதா ேயா। தாதுஸ் ச ப்ரதிேஷதக:। ௬௪।௰௪௫
தத்தம் ச ய: கீர்தயதி। ஸ பாபிஷ்டதரஸ் த்வயா। ௬௪।௰௪௫
பஹுப்ருத்ையர் தரித்ைரஸ் ச। தநம் ஸந்தம் த்விேஜாத்தைம:।
௬௪।௰௪௬
யாசிேதா ந ப்ரயச்ேசத் ய:। ஸ பாபிஷ்டதரஸ் த்வயா। ௬௪।௰௪௬
ப்ராஹ்மண: க்ஷத்ரிேயா வாபி। ைவஸ்ய: ஸூத்ேரா அபி வா நர:।
௬௪।௰௪௭
ஸ்வதர்மம் ஸம்த்யேஜத் யஸ் து। ஸ பாபிஷ்டதரஸ் த்வயா।
௬௪।௰௪௭
க்ருதார்ேதா அஹம் கமிஷ்யாமி। யேஸாதர்மம் அவாப்நுஹி।
௬௪।௰௪௮
துஷ்ேடா அஸ்ம்ய் அஹம் ஸ்வயா ேயாந்யா। மத்த: ப்ேராக்தாஸ்
த்வயாதமா:। ௬௪।௰௪௮
ேதவதாநாம் க்ருஷீணாம் ச। பித்ருணாம் ச க்ருதம் மயா। ௬௪।௰௪௯
ஸாம்ப்ரதம் ேதஸகாேலா அயம்। த்வம் ஏவாத்ர பவாதிதி:। ௬௪।௰௪௯
சண்டாேலா அஹம் மஹாராஜ। பதிேதா ேலாகவர்ஜித:। ௬௪।௰௫
கதம் நிஹீேநா வர்ேணப்ேயா। ேபாŠயாமி பவேதா க்ருேஹ।
௬௪।௰௫
சண்டாேலா பவ பாேபா வா। ஸத்ருர் வா பித்ருகாதக:। ௬௪।௰௫௧

ேதஸகாலாப்யுேபதம் த்வாம்। பரணயம்ீ ஹி ேவத்ம்ய் அஹம்।
௬௪।௰௫௧
தஸஸூநாஸமம் சக்ரம்। தஸசக்ரஸேமா த்வஜ:। ௬௪।௰௫௨
தஸத்வஜஸமா ேவஸ்யா। தஸேவஸ்யாஸேமா ந்ருப:। ௬௪।௰௫௨
தஸ ஸூநாஸஹஸ்ராணி। குருேத ேயா ஹி ெஸௗநிக:। ௬௪।௰௫௩
ேதந துல்ய: ஸ்ம்ருேதா ராஜா। ேகாரஸ் தஸ்ய ப்ரதிக்ரஹ:। ௬௪।௰௫௩
நாநாேகாத்ராதிசரணா। புஞ்ஜேத ப்ராஹ்மணா மம। ௬௪।௰௫௪
ந ேத வதந்தி வாக்துஷ்டம்। யைததத் கீர்திதம் த்வயா। ௬௪।௰௫௪
ேலாபாத்மாேநா ந ஜாநீயுர்। ப்ராஹ்மணா ராஜகில்பிஷம்। ௬௪।௰௫௫
வரம் ஸ்வமாம்ஸம் அத்தவ்யம்। ந து ராஜப்ரதிக்ரஹம்। ௬௪।௰௫௫
ராஜகில்பிஷதக்தாநாம்। ப்ராஹ்மணாநாம் யுதிஷ்டிர। ௬௪।௰௫௬
சிந்நாநாம் இவ பஜாநாம் ீ । புநர்ஜந்ம ந வித்யேத। ௬௪।௰௫௬
ராஜப்ரதிக்ரேஹா ேகாேரா। மத்வாஸ்வாேதா விேஷாபம:। ௬௪।௰௫௭
புேதந ப்ரதிஹர்தவ்ய:। ஸ்வமாம்ஸஸ்ேயவ பக்ஷணம்। ௬௪।௰௫௭
அதீத்ய சதுேரா ேவதாந்। ஸர்வஸாஸ்த்ரார்ததத்த்வவித்। ௬௪।௰௫௮
நேரந்த்ரபவேந புங்க்த்வா। விஷ்டாயாம் ஜாயேத க்ருமி:। ௬௪।௰௫௮
நிந்தேஸ ஸர்வராஜாேநா। ந சாத்மாநம் ப்ரஸம்ஸஸி। ௬௪।௰௫௯
ைதர்யவாந் ஆத்மேநா அநிந்த்ேயா। நாஸ்வாஸார்தம் ச ப்ருச்சஸி।
௰௬௪।௮௪
விமுக்தக்ேராதஹர்ஸஸ் ச। ேகா அப்ய் அத்ர ப்ரதிபாஸி ந:।
௰௬௪।௮௪
அநிந்த்ேயா நிந்த்யரூேபண। மஹாத்மா த்வம் ஹி ேம மத:।
௰௬௪।௮௪

ேகா பவாந் ப்ரூஹி ஸத்யம் ேம। கிமர்தம் இஹ சாகத:। ௰௬௪।௮௪
பவாந் உேபந்த்ர: ஸக்ேரா வா। ஸர்ேவா வா த்வம் பிநாகத்ருக்।
௰௬௪।௮௪
அதவா நிந்த்யரூேபண। பிதா நஸ் த்வம் இஹாகத:। ௬௪।௰௫௯
ஜ்ஞாேதா அஸ்மி ப்ருதிவபாலீ । துஷ்டஸ் ச தவ தர்ஸநாத்। ௬௪।௰௬
நந்தந்து பூமிபாகாஸ் ேத। ேயஷு த்வம் ப்ருதிவபதி ீ :। ௬௪।௰௬
நிர்ஜித்ய பரைஸந்யாநி। க்ஷிதிம் தர்ேமண பாலய। ௬௪।௰௬௧
ஸ்வல்பம் அப்ய் அஸ்து ேத ேவலாம்। மா ேகாவிந்ேதாஜ்ஜிதம் மந:।
௬௪।௰௬௧
கிம் ேம ராஜ்ேயந ேபாஸ் தாத। விஷையர் ஜவிேதந ீ வா। ௬௪।௰௬௨
ேயா அஹம் ஸூநாஸஹஸ்ைரஸ் து। தஸபி: பரிேவஷ்டித:।
௬௪।௰௬௨
மா விஷாதம் நரஸ்ேரஷ்ட। ஸமுைபஹி யுதிஷ்டிர। ௬௪।௰௬௩
யஜ்ேஞஸ்வரம் யஜ்ஞமூர்திம்। த்வம் ச விஷ்ணும் ஸமாஸ்ரித:।
௬௪।௰௬௩
ேயஷாம் ந விஷேய விப்ரா। யஜ்ைஞர் யஜ்ஞபதிம் ஹரிம்। ௬௪।௰௬௪
யஜந்தி பூபுஜஸ் ேதஷாம்। ஏதத் ஸூேநாதிதம் பலம்। ௬௪।௰௬௪
ேயஷாம் பாஷண்டஸம்கீர்ணம்। ந ராஷ்ட்ரம் ப்ராஹ்மேணாத்கடம்।
௬௪।௰௬௫
ேத து ஸூநாஸஹஸ்ராணாம்। தஸாநாம் பாகிேநா ந்ருபா:।
௬௪।௰௬௫
ேயஷாம் ந யஜ்ஞபுருஷ:। காரணம் புருேஷாத்தம:। ௬௪।௰௬௬
ேத து பாபஸமாசாரா:। ஸூநாபாெபௗகபாகிந:। ௬௪।௰௬௬

த்வம் து மத்ப்ரபவஸ் தாத। விஷ்ணுபக்தஸ் தைதவ ச। ௬௪।௰௬௭
இஷ்டிர் ைவஸ்வாநரீ பாபம்। உபஹம்ஸ்யதி ேத அகிலம்। ௬௪।௰௬௭
அவஸ்யம் விஷேய கஸ்சித்। ப்ராஹ்மண: ஸம்ஸ்ரிதவ்ரத:।
௬௪।௰௬௮
இஷ்டிம் ைவஸ்வாநரீம் க்ல்ப்தாம்। நிர்வேபத் அப்தபர்யேய।
௬௪।௰௬௮
தஸ்ய ஷட்பாகமாத்ேரண। த்வம் பாபம் நிர்தஹிஷ்யஸி। ௬௪।௰௬௮
ஸ த்வம் வரய பத்ரம் ேத। வரம் யந் மநேஸச்சஸி। ௬௪।௰௬௯
ஸம்யக் ஸ்ரத்தாஸமாசாராத்। அஹம் ஆராதிதஸ் த்வயா। ௬௪।௰௬௯
அத பாதகபதஸ்ீ த்வம்। ஸர்வபாேவந பாரத। ௬௪।௰௭
விமுக்தாந்யஸமாரம்ேபா। நாராயணபேரா பவ। ௬௪।௰௭
பர: பராணாம் ஆத்ேயா அெஸௗ। ஜ்ேஞேயா த்ேயேயா ஜநார்தந:।
௬௪।௰௭௧
ததர்தம் அபி கர்மாணி। குர்வந் பாபம் வ்யேபாஹதி। ௬௪।௰௭௧
ேலாபாதிவ்யாப்தஹ்ருதேயா। யத் பாபம் குருேத நர:। ௬௪।௰௭௨
விலயம் யாதி தத் ஸர்வம்। அச்யுேத ஹ்ருதேய ஸ்திேத। ௬௪।௰௭௨
ஸமாயாலம் ஜலம் வஹ்ேநஸ்। தமேஸா பாஸ்கராதய:। ௬௪।௰௭௩
க்ஷாந்தி: கேலர் அெகௗகஸ்ய। நாமஸம்கீர்தநம் ஹேர:। ௬௪।௰௭௩
ப்ரஸந்ேநா யதி ேம தாத। வரார்ேஹா யதி சாப்ய் அஹம்। ௬௪।௰௭௪
வரம் தத் ஏகம் ஏைவதம்। ப்ராப்தும் இச்சாம்ய் அஹம் பித:। ௬௪।௰௭௪
ஜாக்ரத்ஸ்வப்நஸுஷுப்ேதஷு। ேயாகஸ்தஸ்ய ஸதா மம। ௬௪।௰௭௫
யா காசிந் மநேஸா வ்ருத்தி:। ஸா பவத்வ் அச்யுதாஸ்ரயா। ௬௪।௰௭௫
யா யா ஜாேயத ேம புத்திர்। யாவஜ் ஜவாம்ய் ீ அஹம் பித:। ௬௪।௰௭௬

ஸா ஸா சிநத்து ஸம்ேதஹாந்। க்ருஷ்ணாப்ெதௗ பரிபந்திந:।
௬௪।௰௭௬
யதா ேகாவிந்தம் ஆராத்ய। ஸஸரீர: ஸுராலயம்। ௬௪।௰௭௭
ப்ராப்நுயாம் இதி ேம தாத। ப்ரயச்ச ப்ரவரம் வரம்। ௬௪।௰௭௭
ஏவம் ஏதத் அேஸஷம் ேத। மத்ப்ரஸாதாத் பவிஷ்யதி। ௬௪।௰௭௮
நாஸ்தி ேகாவிந்தபக்தாநாம்। வாஞ்சிதம் புவி துர்லபம்। ௬௪।௰௭௮
இதி தர்ேமாபேதேஸந। ஸர்வேதவவரம் ஹரிம்। ௬௪।௰௭௯
ஆராத்ய பாண்டேவா யாத:। ஸஸரீர: ஸுராலயம்। ௬௪।௰௭௯
பூயஸ் ச ஸ்ருணு ராேஜந்த்ர। ஜநேகந மஹாத்மநா। ௬௫।௰௰௧
யத் கீதம் வஹதா பக்திம்। ஜ்ஞாநம் ஆஸாத்ய ேகஸேவ। ௬௫।௰௰௧
ஸர்வத்ர ஸமத்ருஷ்டிம் தம்। ஜநகம் மிதிேலஸ்வரம்। ௬௫।௰௰௨
பஸ்யந்தம் அச்யுதமயம்। ஸர்வம் ச ஸசராசரம்। ௬௫।௰௰௨
த்விஜரூபம் ஸமாஸ்தாய। ேதவேதேவா ஜநார்தந:। ௬௫।௰௰௩
உபதஸ்ேத மஹாபாகம்। ப்ரத்யுவாச ச பார்திவம்। ௬௫।௰௰௩
ராஜஞ் ஜநக பத்ரம் ேத। யத் ப்ரவமி ீ நிேபாத தத்। ௬௫।௰௰௪
குருஷ்வ ச மஹாபுத்ேத। யதி ஸாது மதம் தவ। ௬௫।௰௰௪
ப்ருதிவம்ீ ப்ருதிவபாலீ :। பாலயித்வா பிதா தவ। ௬௫।௰௰௫
ஸ்வர்கம் கதஸ் ததா ப்ராதா। ஸம்யக் ஸத்யத்வேஜா ந்ருப:।
௬௫।௰௰௫
த்வம் புநர் நிரபமாந ீ :। ஸர்வத்ர ஸமதர்ஸந:। ௬௫।௰௰௬
ரிபுமித்ராதிவர்ேகஷு। கதம் ஏதத் பவிஷ்யதி। ௬௫।௰௰௬
மித்ேரஷு மித்ரவந் ந த்வம்। நாஹிேதஷ்வ் அரிவத் பவாந்। ௬௫।௰௰௭
மத்யஸ்தபாக் ந ைசவ த்வம்। தேதாதாஸநவ்ருத்திஷு ீ । ௬௫।௰௰௭

ஸப்தாதேயா ேய விஸயாஸ்। ேத ைவராக்யபலா ந்ருப। ௬௫।௰௰௮
நீத்யா விஹீநஸ் து பவாந்। கதம் ராஜ்யம் கரிஷ்யதி। ௬௫।௰௰௮
ஸர்ைவர் நீதிம் ஸமாஸ்தாய। யதா ேத ப்ரபிதாமைஹ:। ௬௫।௰௰௯
க்ருதம் ராஜ்யம் ததா பூப। குரு மாதிஜேடா பவ। ௬௫।௰௰௯
தவ ப்ரஜ்ஞா மதா ஹ்ய் ஏஷா। மம ேமாேஹா மஹீபேத। ௬௫।௰௧
த்ரிவர்கஸாதநம் ப்ரஜ்ஞா। ந தர்மாதிவிேராதிநீ। ௬௫।௰௧
ஸம்யக் ஆஹ பவாந் விப்ர। வாச்யம் ஏவம் பவத்விைத:। ௬௫।௰௧௧
மமாபி ஸ்ரூயதாம் வாக்யம்। பவேதா யதி ேராசேத। ௬௫।௰௧௧
யதா ஸர்வகேதா விஷ்ணு:। பரமாத்மா ப்ரஜாபதி:। ௬௫।௰௧௨
ததா மித்ராதிமத்யஸ்த । ஸம்ஜ்ஞா ேகஷு நிபாத்யதாம்। ௬௫।௰௧௨
பிதா மாதா ததா ப்ராதா। யதா நாந்யஜ் ஜநார்தநாத்। ௬௫।௰௧௩
பித்ருமாத்ருமயம்ீ ஸம்ஜ்ஞாம்। ததா குத்ர கேராம்ய் அஹம்।
௬௫।௰௧௩
ேஸா அஹம் ப்ரவமி ீ யத் வாக்யம்। தந் நிேபாத த்விேஜாத்தம।
௬௫।௰௧௪
அேநகரூபரூேபா அயம்। விஷ்ணுர் ஏவாகிலம் ஜகத்। ௬௫।௰௧௪
விஷ்ணு: பிதா ேம ஜகத: ப்ரதிஷ்டா। விஷ்ணுர் மாதா விஷ்ணுர் ஏவாக்ரேஜா
ேம। ௬௫।௰௧௫
விஷ்ணுர் கதிர் விஷ்ணுமயஸ் ததாஸ்மி। விஷ்ெணௗ ஸ்திேதா அஸ்ம்ய்
அக்ஷகதஸ் ச விஷ்ணு:। ௬௫।௰௧௫
ேயா ேம மமத்ேவாபகத: ஸ விஷ்ணுர்। யஸ் சாரிபூேதா மம ேஸா அபி
விஷ்ணு:। ௬௫।௰௧௬

திவம் வியத் பூ: ககுபஸ் ச விஷ்ணுர்। பூதாநி விஷ்ணுர் புவநாநி விஷ்ணு:।
௬௫।௰௧௬
பஸ்யாமி விஷ்ணும் ந பரம் தேதா அந்யச்। ஸ்ருேணாமி விஷ்ணும் ந பரம்
தேதா அந்யத்। ௬௫।௰௧௭
ஸ்ப்ருஸாமி விஷ்ணும் ந பரம் தேதா அந்யஜ்। ஜிக்ராமி விஷ்ணும் ந பரம்
தேதா அந்யத்। ௬௫।௰௧௭
ரஸாமி விஷ்ணும் ந பரம் தேதா அந்யந்। மந்ேய ச விஷ்ணும் ந பரம் தேதா
அந்யத்। ௬௫।௰௧௮
ஜிக்ராமி விஷ்ணும் ந பரம் தேதா அந்யச்। நமாமி விஷ்ணும் ந பரம் தேதா
அந்யத்। ௰௬௫।௮௫
புத்யாமி விஷ்ணும் ந பரம் தேதா அந்யத்। ஸர்வம் ஹி விஷ்ணுர் ந பரம்
தேதா அந்யத்। ௬௫।௰௧௮
விஷ்ணு: ஸமஸ்தம் ந பரம் தேதா அஸ்தி। விஷ்ணு: ஸமஸ்தம் ந பரம் ச
ேதவ:। ௬௫।௰௧௯
விஷ்ணு: ஸ்தாரீயாந் ந பரம் தேதா அஸ்தி। விஷ்ணுர் லகீயாந் ந பரம் தேதா
அஸ்தி। ௰௬௫।௮௬
விஷ்ணுர் கரீயாந் ந பரம் தேதா அந்யத்। யதா ந விஷ்ணுவ்யதிரிக்தம்
அந்யச்। ௬௫।௰௧௯
ஸ்ருேணாமி பஸ்யாமி ததா ஸ்ப்ருஸாமி। ஸத்ேயந ேதேநாபஸமம்
ப்ரயாந்து। ௬௫।௰௨
ேதாஷா விமுக்ேத: பரிபந்திேநா ேய। ந ேம அஸ்தி பந்துர் ந ச ேம அஸ்தி
ஸத்ருர்। ௬௫।௰௨
ந பூதவர்ேகா ந ஜேநா மதந்ய:। த்வம் சாஹம் அந்ேய ச ஸரீரேபைதர்।
௬௫।௰௨௧

விபிந்நம் ஈஸஸ்ய ஹேர: ஸ்வரூபம்। மூர்தாமூர்திவிேஸஷம் து।
௬௫।௰௨௧
பஸ்யதஸ் தந்மயம் த்விஜ। க்ேராதஹர்ஷாதேயா பாவா:। ௬௫।௰௨௨
ஸ்தாஸ்யந்தி ஹ்ருதேய கதம்। ஸ த்வம் ப்ரஸதீ ேமாேஹா அயம்।
௬௫।௰௨௨
அத ேசந் மம ஸுவ்ரத। ததாபி மா ருஷம் கார்ஷீர்। ௬௫।௰௨௩
அசிகித்ஸ்யா ஹி ேமாஹிதா:। பஹுரூபஸ் தேதா ரூபம்। ௬௫।௰௨௩
ஸங்கசக்ரகதாதரம்। தர்ஸயாம் ஆஸ ஸுப்ரீேதா। ௬௫।௰௨௪
ஜநகாய ஜநார்தந:। ததஸ் தத்தர்ஸநாத் பூபம்। ௬௫।௰௨௪
ஸிரஸா ப்ரணதம் ப்ரபு:। ஆத்ய: ப்ரஜாபதிபதி:। ௬௫।௰௨௫
ப்ரத்யுவாசாச்யுேதா ஹரி:। வரம் வரய பூபால। ௬௫।௰௨௫
பரிதுஷ்ேடா அஸ்மி ேத அநக। மய்ய் அர்பிதமேநாபுத்ேத:। ௬௫।௰௨௬
ஸைதவாஹம் ந துர்லப:। யதி ேதவ ப்ரஸந்ேநா அஸி। ௬௫।௰௨௬
ஸம்யக் ஆராதிேதா மயா। தத் வ்ருேணாமி வரம் பக்திஸ்। ௬௫।௰௨௭
த்வய்ய் ஏவாஸ்து ஸதா மம। ஏவம் பவிஷ்யதீத்ய் உக்த்வா।
௬௫।௰௨௭
கேதா அந்தர்தாநம் ஈஸ்வர:। ேஸா அபி ேலேப லயம் விஷ்ெணௗ।
௬௫।௰௨௮
பக்த்யா ேயாகிஸுதுர்லபம்। இதி க்ருஷ்ேண நரவ்யாக்ர। ௬௫।௰௨௮
குர்வந் பக்திம் நர: ஸதா। ப்ராப்ேநாதி புருஷவ்யாக்ர। ௬௫।௰௨௯
முக்திம் சாப்ய் அதிதுர்லபாம்। ஜகத்தாதுர் அநந்தஸ்ய। ௬௫।௰௨௯
வாஸுேதவஸ்ய பார்கவ। மமாவதாராந் அகிலாஞ்। ௬௬।௰௰௧

ஸ்ேராதும் இச்சா ப்ரவர்தேத। யதா யதா ஹி க்ருஷ்ணஸ்ய।
௬௬।௰௰௧
கேதயம் கத்யேத த்வயா। ஜாயேத மநஸ: ப்ரீதிர்। ௬௬।௰௰௨
உத்பூதபுலகஸ் ததா। மந:ப்ரீதிர் அநாயாஸாத்। ௬௬।௰௰௨
அபுண்யசயஸம்க்ஷய:। ப்ராப்யேத புருைஷர் ப்ரஹ்மஞ்। ௬௬।௰௰௩
ஸ்ருண்வத்பிர் பகவத்கதாம்। ஸ குருஷ்வாமலமேத। ௬௬।௰௰௩
ப்ரஸாதப்ரவணம் மந:। அவதாராந் ஸுேரஸஸ்ய। ௬௬।௰௰௪
விஷ்ேணார் இச்சாமி ேவதிதும்। ஜகத்குரும் ஜகத்ேயாநிம்। ௬௬।௰௰௪
அநந்தம் உதேகஸயம்। நாராயணம் புராகல்ேப। ௬௬।௰௰௫
ப்ருஷ்டவாந் கமேலாத்பவ:। விநிர்ஜக்முர் முேகப்யஸ் து। ௬௬।௰௰௫
ப்ரஹ்மேணா வ்யக்தஜந்மந:। ஓம்காரப்ரவணா ேவதா। ௬௬।௰௰௬
ஜக்முஸ் ேத ச ரஸாதலம்। ஏகார்ணேவ ஜகத்ய் அஸ்மிந்। ௬௬।௰௰௬
ப்ரஹ்மண்ய் அமிதேதஜஸி। க்ருஷ்ணநாபிஹ்ரேதாத்பூத । ௬௬।௰௰௭
கமேலாதரஸாயிநி। ேபாகிஸய்யாஸய: க்ருஷ்ேணா। ௬௬।௰௰௭
த்விதீயாம் தநும் ஆத்மந:। க்ருத்வா மீநமயம்ீ ஸத்ய:। ௬௬।௰௰௮
ப்ரவிேவஸ ரஸாதலம்। ேவதமூர்திஸ் தேதா ேவதாந்। ௬௬।௰௰௮
ஆநிந்ேய ப்ரஹ்மேணா அந்திகம்। மதுைகடபாப்யாம் ச புநர்।
௬௬।௰௰௯
ேபாகிஸய்யாகேதா ஹரி:। ஹ்ருதாந் ஹயஸிரா பூத்வா। ௬௬।௰௰௯
ேவதாந் ஆஹ்ருதவாந் ரஸாத்। ஆஹ்ருேதஷ்வ் அத ேவேதஷு।
௬௬।௰௰௯
ேதவேதவம் பிதாமஹ:। துஷ்டாவ ப்ரணேதா பக்த்யா। ௬௬।௰௧
தஸ்ய சாவிர் பெபௗ ஹரி:। அதாமரகுரும் விஷ்ணும்। ௬௬।௰௧

அநந்தம் அஜம் அவ்யயம்। உவாச ப்ரகடீபூதம்। ௬௬।௰௧௧
ப்ரணிபத்யாப்ஜஸம்பவ:। நம: ஸூŠமாதிஸூŠமாய। ௬௬।௰௧௧
நமஸ் துப்யம் த்ரிமூர்தேய। பஹுரூபாதிமத்யாந்த। ௬௬।௰௧௨
பரிணாமவிவர்ஜித। ஜகதீஸஸ்ய ஸர்வஸ்ய। ௬௬।௰௧௨
ஜகத: ஸர்வகாமத। அஹம் ஆத்மபேவா ேதவ। ௬௬।௰௧௩
த்வயாத்யேக்ஷா நிரூபித:। ேஸா அஹம் இச்சாமி தம் ஜ்ஞாதும்।
௬௬।௰௧௩
ஆத்மாநம் ப்ரபவாவ்யயம்। விஸ்வஸ்ய ச விரூபஸ்ய। ௬௬।௰௧௪
ஸ்தாவரஸ்ய சரஸ்ய ச। யதி ேத அநுக்ரஹக்ருதா। ௬௬।௰௧௪
மயி புத்திர் ஜநார்தந। தந் மாம் பக்த இதி ஜ்ஞாத்வா। ௬௬।௰௧௫
கதயாத்மாநம் அச்யுத। கதயாமி தவாத்மாநம்। ௬௬।௰௧௫
அநாக்யாேகாதரம் பரம்। ந வாசாம் விஷேய ேயா அஸாவ்।
௬௬।௰௧௬
அவிேஸஷணலக்ஷண:। ப்ரஸாதஸுமுக: ேஸா அஹம்। ௬௬।௰௧௬
இமம் யச்சாமி ேத வரம்। அநாக்யாதஸ்வரூபம் மாம்। ௬௬।௰௧௭
பவாஞ் ஜ்ஞாஸ்யதி ேயாகத:। பக்ேதா மாம் தத்த்வேதா ேவத்தி।
௬௬।௰௧௭
மயி பக்திஸ் ச ேத பரா। மஜ்ஜிஜ்ஞாஸா பரா ப்ரஹ்மம்ஸ்। ௬௬।௰௧௮
ேதந ஜாதா மதிஸ் தவ। ஏவம் உக்தஸ் தேதா ப்ரஹ்மா। ௬௬।௰௧௮
விஷ்ணுநா ப்ரபவிஷ்ணுநா। விஷ்ேணா: ஸ்வரூபம் ஜிஜ்ஞாஸுர்।
௬௬।௰௧௯
யுேயாஜாத்மாநம் ஆத்மநா। ஸ ததர்ஸாதிஸூŠமம் ச। ௬௬।௰௧௯
ஸூŠமஜ்ேயாதிஷ்ய் அஜம் விபும்। நியுதார்தார்தமாத்ேரண। ௬௬।௰௨

வ்யாப்தாேஸஷசராசரம்। ஆத்மாநம் இந்த்ரருத்ரார்க । ௬௬।௰௨
சந்த்ராஸ்விவஸுமாருதாந்। காதீந்ய் அத ச ஸப்தாதீந்। ௬௬।௰௨௧
தத்ருேஸ ச ஸ தந்மயாந்। ேய வ்யக்தா ேய ததாவ்யக்தா। ௬௬।௰௨௧
பாவா ேய சாபி ெபௗருஷா:। தாம்ஸ் ச தத்ராதிஸூŠேமா அபி।
௬௬।௰௨௨
த்ருஷ்டவாந் அகிலாந் விபு:। தத: ப்ரணம்ய ேதேவஸம்। ௬௬।௰௨௨
அஜம் ஆர்திஹரம் ஹரிம்। பிதாமஹ: ப்ரஹ்வதநுர்। ௬௬।௰௨௩
வாக்யம் ஏதத் உவாச ஹ। ஜ்ஞாதம் ஸ்வரூபம் அஜ்ஞாத । ௬௬।௰௨௩
ஸ்வரூப பகவம்ஸ் தவ। மயா ந யத் வாக்விஷேய। ௬௬।௰௨௪
தத்ரஸ்தம் சாகிலம் ஜகத்। தந்ேயா அஸ்ம்ய் அநுக்ருஹீேதா அஸ்மி।
௬௬।௰௨௪
ஸ்வரூபம் யந் மயா தவ। பகவஞ் ஜ்ஞாதம் அஜ்ஞாதம்। ௬௬।௰௨௫
அநந்தாஜ நேமா அஸ்து ேத। யதி ப்ரஸாதம் ேதவ த்வம்। ௬௬।௰௨௫
ப்ரகேராஷி மமாபரம்। பரமம் சாவதாேரஷு। ௬௬।௰௨௬
யத் ரூபம் தத் வதஸ்வ ேம। ேகஷு ேகஷு மயா ஜ்ேஞய:।
௬௬।௰௨௬
ஸ்தாேநஷு த்வம் அேதாக்ஷஜ। ஸம்பூதேயா மமாசŠவ। ௬௬।௰௨௭
யா பவிஷ்யந்தி ேத புவி। ேதவேலாேக ந்ருேலாேக வா। ௬௬।௰௨௭
பாதாேல ேக அந்யேதா அபி வா। ஸம்பூதேயா யாஸ் து பவாந்।
௬௬।௰௨௮
கரிஷ்யதி வதஸ்வ தா:। த்வம் கர்தா ஸர்வபூதாநாம்। ௬௬।௰௨௮
ஸம்ஹர்தா ேசஸ்வேரஸ்வர:। தவாபி கர்தா நாந்ேயா அஸ்தி।
௬௬।௰௨௯

ஸ்ேவச்சயா க்ரீடேத பவாந்। அஹம் ேவத்மி பவந்தம் ஹி।
௬௬।௰௨௯
ந தவாந்ேயா அஸ்தி ேவதிதா। யந் மாம் த்வம் ப்ருச்சஸி ப்ரஹ்மந்।
௬௬।௰௨௯
அவதாராஸ்ரிதம் பரம்। தத் ேத ஸம்யக் ப்ரவŠயாமி। ௬௬।௰௩
நிேபாத மம ஸுவ்ரத। மம ப்ரக்ருத்யா ஸம்ேயாக:। ௬௬।௰௩
ஸ்ேவச்சயா ஸம்ப்ரவர்தேத। ேதேவஷு ந்ருஷு திர்யக்ஷு। ௬௬।௰௩௧
ஸ்தாவேரஷு சேரஷு ச। மமாவதாரா: கார்யார்தம்। ௬௬।௰௩௧
ஜகதஸ் ேசாபகாரிண:। யதா யதா ஹி தர்மஸ்ய। ௬௬।௰௩௧
க்லாநி: ஸமுபஜாயேத। அப்யுத்தாநம் அதர்மஸ்ய। ௬௬।௰௩௨
ததாத்மாங்கம் ஸ்ருஜாம்ய் அஹம்। பரித்ராணாய ஸாதூநாம்।
௬௬।௰௩௨
விநாஸாய ச துஷ்க்ருதாம்। தர்மஸம்ஸ்தாபநார்தாய। ௬௬।௰௩௩
ஸம்பவாமி யுேக யுேக। பூர்ேவாத்பந்ேநஷு பூேதஷு। ௬௬।௰௩௩
ந்ருேதவாதிஷு சாப்ய் அஹம்। அநுப்ரவிஸ்ய தர்மஸ்ய। ௬௬।௰௩௪
கேராமி பரிபாலநம்। ப்ரவிஸ்ய ச ததா பூர்வம்। ௬௬।௰௩௪
தநும் தர்மப்ருதாம் வர। ஜகேதா அஸ்ய ஜகத்ஸ்ருஷ்டிம்। ௬௬।௰௩௫
கேராமி ஸ்திதிபாலநம்। ேதவத்ேவ ேதவிகா ேசஷ்டா। ௬௬।௰௩௫
திர்யக்த்ேவ மம தாமஸீ। இச்சயா மாநுஷத்ேவ ச। ௬௬।௰௩௬
விசராமி ந்ருேசஷ்டயா। ப்ரதிக்ஷணம் ச பூேதஷு। ௬௬।௰௩௬
ஸ்ருஜாமி ஜகத: ஸ்திதிம்। கேராமி வித்யமாேநஷு। ௬௬।௰௩௭
தர்மஸம்ஸ்தாபேநஷு ச। யத் ைவ தர்ேமாபகாராய। ௬௬।௰௩௭
யச் ச துஷ்டநிவர்ஹணம்। சரிதம் மாநுஷாதீநாம்। ௬௬।௰௩௮

தத் ைவ ஜாநீஹி மத்க்ருதம்। யச் ச ப்ருச்சஸி மாம் ப்ரஹ்மந்।
௬௬।௰௩௮
கா: கா: ஸம்பூதயஸ் தவ। தா: ஸ்ருணுஷ்வ ஸமாேஸந। ௬௬।௰௩௯
யா பவிஷ்யந்தி ஸாம்ப்ரதம்। மத்ஸ்ேயந பூத்வா பாதாலாத்।
௬௬।௰௩௯
தவ ேவதா: ஸமுத்த்ருதா:। மதுைகடபாப்யாம் ச ஹ்ருதா। ௬௬।௰௪
தத்தாஸ்வஸிரஸா மயா। த்வம் அப்ய் அத்ர மஹாபாக। ௬௬।௰௪
மதம்ஸ: கமேலாதராத்। மந்நாபிஸம்பவாஜ் ஜாத:। ௬௬।௰௪௧
ப்ரஜாஸ்ருஷ்டிகர: பர:। ஏகார்ணவம் ச யத் இதம்। ௬௬।௰௪௧
ப்ரஹ்மந் பஸ்யஸ்ய் அேஸஷத:। அஸ்மிந் வஸுமதீம் ேதவம்ீ ।
௬௬।௰௪௨
மக்நாம் பாதாலம் ஆகதாம்। ேவதபாேதா யூபதம்ஷ்ட்ர:। ௬௬।௰௪௨
க்ரதுதந்தஸ் சிதீமுக:। அக்நிஜிஹ்ேவா தர்பேராமா। ௬௬।௰௪௩
ப்ரஹ்மஸர்ேஷா ீ மஹாதபா:। அேஹாராத்ேரக்ஷணதேரா। ௬௬।௰௪௩
ேவதாங்கஸ்ருதிபூஷண:। ஆஜ்யநாஸ: ஸ்ருவஸ்துண்ட:। ௬௬।௰௪௪
ஸாமேகாஷஸ்வேரா மஹாந்। ப்ராக்வம்ஸகாேயா த்யுதிமாந்।
௬௬।௰௪௪
நாநாதீக்ஷாபிர் ஆசித:। தக்ஷிணாஹ்ருதேயா ேயாகீ। ௬௬।௰௪௫
மஹாஸத்த்ரமேயா மஹாந்। உபகர்ேமஷ்டிருசிர:। ௬௬।௰௪௫
ப்ரவர்காவர்தபூஷண:। நாநாச்சந்ேதாகதிபேதா। ௬௬।௰௪௬
ப்ரஹ்ேமாக்திகர்மவிக்ரம:। பூத்வா யஜ்ஞவராேஹா அஹம்।
௬௬।௰௪௬
இதி ப்ரஹ்மந் ரஸாதலாத்। ப்ருதிவம்ீ உத்தரிஷ்யாமி। ௬௬।௰௪௭

ஸ்தாபையஷ்யாமி ச ஸ்திெதௗ। பர்வதாநாம் நதீநாம் ச। ௬௬।௰௪௭
த்வபாத ீ ீநாம் ச யா ஸ்திதி:। தாம் ச தத்வத் கரிஷ்யாமி। ௬௬।௰௪௮
ைஸலாதீநாம் அநுக்ரமாத்। ஹிரண்யாக்ஷம் ச துர்வ்ருத்தம்।
௬௬।௰௪௮
கஸ்யபஸ்யாத்மஸம்பவம்। ேதைநவ காதயிஷ்யாமி। ௬௬।௰௪௯
ரூேபணாஹம் ப்ரஜாபேத। உத்பாத்ய ப்ருதிவம்ீ ஸம்யக்। ௬௬।௰௪௯
ஸ்தாபயித்வா யதா புரா। ஸ்ருஷ்டிம் தத: கரிஷ்யாமி। ௬௬।௰௫
த்வாம் ஆவிஸ்ய ப்ரஜாபதிம்। ஜாநாஸி காபிலம் ரூபம்। ௬௬।௰௫
ப்ரதமம் ெபௗருஷம் மம। ஸர்வவித்யாப்ரேணதாரம்। ௰௬௬।௮௮
த்வயா ேவேதஷு தர்ஸிதம்। ரவிமண்டலமத்யஸ்தம்। ௰௬௬।௮௮
அக்ேநர் யத் பரமம் பதம்। தத உத்ஸ்ருஜ்ய ரூபாணி। ௰௬௬।௮௮
அமராதிவிேபதத:। வ்யாபயிஷ்யாமி ேலாகாம்ஸ் து। ௬௬।௰௫௧
பூேலாகாதீம் அேஸஷத:। ஸ்ருஷ்டம் ஜகத் இதம் ேதவ । ௬௬।௰௫௧
மாநுஷ்யாதிவிேஸஷணம்। ஹிரண்யகஸிபுர் ைதத்யஸ்। ௬௬।௰௫௨
தாபயிஷ்யதி விக்ரமாத்। வ்யம்ஸயித்வா வராம்ஸ் தஸ்ய। ௬௬।௰௫௨
ைதஸ் ைதர் ேஹதுபிர் ஆத்மவாந்। ந்ருஸிம்ஹரூபம் க்ருத்வாஹம்।
௬௬।௰௫௩
காதயிஷ்யாமி தம் ரிபும்। க்ஷராப்ெதௗ ீ கூர்மரூேபா அஹம்।
௬௬।௰௫௩
ேதவாநாம் கமேலாத்பவ। மந்தரம் தாரயிஷ்யாமி। ௬௬।௰௫௪
ப்ருஷ்ேடநாம்ருதமந்தேந। ஹரிஷ்யதி ச ேதவாநாம்। ௬௬।௰௫௪
யஜ்ஞபாகாந் யதா பலி:। ததாஹம் வாமேநா பூத்வா। ௬௬।௰௫௫
கத்வா தஸ்ய மஹாத்வரம்। வஞ்சயித்வாஸுரபதிம்। ௬௬।௰௫௫

கரிஷ்யாமி த்ரிபிஷ்டபம்। பலிம் சாபி கரிஷ்யாமி। ௬௬।௰௫௬
பாதாலதலவாஸிநம்। அத்ேரர் தத்த்வா வரம் ைசவ। ௬௬।௰௫௬
தஸ்ய புத்ரத்வம் ஆகத:। தத்தாத்ேரேயா பவிஷ்யாமி। ௬௬।௰௫௭
நிஹம்ஸ்யாமி ததாஸுராந்। ஸத்த்வாநாம் உபகாராய। ௬௬।௰௫௭
ப்ரதாநபுருஷாந்தரம்। தர்ஸயிஷ்யாமி ேலாேகஷு। ௬௬।௰௫௮
காபிலம் ரூபம் ஆஸ்தித:। கார்தவர்யாதிபிஸ் ீ சாந்ையஸ்। ௬௬।௰௫௮
சதுர்தஸபிர் அந்விதா:। பவிஷ்யந்தி மதம்ேஸந। ௬௬।௰௫௯
த்ேரதாயாம் சக்ரவர்திந:। ததஸ் ச பார்கேவா ராேமா। ௬௬।௰௫௯
க்ருஹீதபரஸுர் த்விஜ:। பூத்வா க்ஷத்ரியஹீநாம் ச। ௬௬।௰௬
கரிஷ்யாமி வஸும்தராம்। புநஸ் ச ராகேவா ராேமா। ௬௬।௰௬
பூத்வா தஸரதாத்மஜ:। பத்த்வா மேஹாததிம் கர்தா। ௬௬।௰௬௧
ராக்ஷஸாநாம் குலக்ஷயம்। உத்தீர்ய ச பரம் பாரம்। ௬௬।௰௬௧
லங்காம் ஆஸாத்ய துர்ஜயாம்। நிஹத்ய ராவணம் வரம்ீ । ௰௬௬।௮௯
வரதாேநந தர்பிதம்। மாயாவிநாம் மஹாவர்யம் ீ । ௰௬௬।௮௯
ரக்ஷஸாம் வநஸாயிநாம்। லŠமணாநுசேரா ராம:। ௰௬௬।௮௯
கரிஷ்யாமி குலக்ஷயம்। அஷ்டாவிம்ஸதிேம ப்ராப்ேத। ௰௬௬।௮௯
த்வாபேர கம்ஸம் உச்ச்ரிதம்। ேகஸிநம் ேதநுகம் ைசவ। ௬௬।௰௬௨
ஸகுநிம் பூதநாம் ததா। அரிஷ்டம் ச ஹநிஷ்யாமி। ௬௬।௰௬௨
முரும் நரகம் ஏவ ச। நிஸும்பம் ஸஹயக்ரீவண்। ௬௬।௰௬௨
ததாந்யாம்ஸ் சாஸுேரஸ்வராந்। ஹநிஷ்யாமி ஸுதுர்வ்ருத்தாம்ல்।
௬௬।௰௬௩
ேலாகாநாம் ஹிதகாம்யயா। ப்ரவர்ஷதி ஸ ேதேவந்த்ேர। ௬௬।௰௬௩

மேஹாபங்கவிேராதிேத। ேகாவர்தநம் கிரிவரம்। ௬௬।௰௬௪
தாரயிஷ்யாமி பாஹுநா। பாராக்ராந்தாம் இமாம் உர்வம்ீ । ௬௬।௰௬௪
தநம்ஜயஸஹாயவாந்। காதயித்வாகிலாந் பூபாம்ல்। ௬௬।௰௬௫
லக்வம்ீ கர்தாஸ்மி ஸத்தம। ப்ராப்ேத கலியுேக க்ருத்ஸ்நம்।
௬௬।௰௬௫
உபஸம்ஹ்ருத்ய ைவ குலம்। த்வாரகாம் ப்லாவயிஷ்யாமி।
௬௬।௰௬௬
உத்ஸ்ரŠயாமி மநுஷ்யதாம்। த்விதீேயா ேயா மமாம்ஸஸ் து।
௬௬।௰௬௬
ராேமா அநந்த: ஸ லாங்கலீ। ேஸா அபி ஸம்த்யஜ்ய வஸுதாம்।
௬௬।௰௬௭
ரஸாதலம் உேபஷ்யதி। தத: கலியுேக ேகாேர। ௬௬।௰௬௭
ஸம்ப்ராப்ேத அப்ஜஸமுத்பவ। ஸுத்ேதாதநஸுேதா புத்ேதா।
௬௬।௰௬௮
பவிஷ்யாமி விமத்ஸர:। ெபௗத்தம் தர்மம் உபாஸ்ரித்ய। ௬௬।௰௬௮
கரிஷ்ேய தர்மேதஸநாம்। நராணாம் அத நாரீணாம்। ௬௬।௰௬௯
தயாம் பூேதஷு தர்ஸயந்। ரக்தாம்பரா ஹ்ய் ஆஞ்ஜிதாக்ஷா:।
௬௬।௰௬௯
ப்ரஸாந்தமநஸஸ் தத:। ஸூத்ரா தர்மம் ப்ரவŠயந்தி। ௬௬।௰௭
மயி புத்தத்வம் ஆகேத। ஏடூகசிஹ்நா ப்ருதிவ।ீ ௬௬।௰௭
ந ேதவக்ருஹபூஷிதா। பவித்ரீ ப்ராயேஸா ப்ரஹ்மந்। ௬௬।௰௭௧
மயி புத்தத்வம் ஆகேத। ஸ்கந்ததர்ஸநமாத்ரம் ஹி। ௬௬।௰௭௧
பஸ்யந்த: ஸகலம் ஜகத்। ஸூத்ரா: ஸூத்ேரஷு தாஸ்யந்தி।
௬௬।௰௭௨

மயி புத்தத்வம் ஆகேத। அல்பாயுஷஸ் தேதா மர்த்யா। ௬௬।௰௭௨
ேமாேஹாபஹதேசதஸ:। நரகார்ஹாணி கர்மாணி। ௬௬।௰௭௩
கரிஷ்யந்தி ப்ரஜாபேத। ஸ்வாத்யாேயஷ்வ் அவஸதந்ேதா ீ । ௬௬।௰௭௩
ப்ராஹ்மணா: ெஸௗசவர்ஜிதா:। அந்த்யப்ரதிக்ரஹாதாநம்। ௬௬।௰௭௪
கரிஷ்யந்த்ய் அல்பேமதஸ:। ந ஸ்ேராஷ்யந்தி பிது: புத்ரா:। ௬௬।௰௭௪
ஸ்வஸ்ரூஸ்வஸுரேயா: ஸ்நுஷா:। ந பார்யா பர்துர் ஈஸஸ்ய।
௬௬।௰௭௫
ந ப்ருத்யா விநயஸ்திதா:। வர்ணஸம்கரதாம் ப்ராப்ேத। ௬௬।௰௭௫
ேலாேக அஸ்மிந் தஸ்யுதாம் கேத। ப்ராஹ்மணாதிஷு வர்ேணஷு।
௬௬।௰௭௬
பவிஷ்யத்ய் அதேராத்தரம்। தர்மகஞ்சுகஸம்வதாீ । ௬௬।௰௭௬
விதர்மருசயஸ் ததா। மாநுஷாந் பக்ஷயிஷ்யந்தி। ௬௬।௰௭௭
ம்ேலச்சா: பார்திவரூபிண:। தத: கலியுகஸ்யாந்ேத। ௬௬।௰௭௭
ேவேதா வாஜஸேநயக:। தஸ பஞ்ச ச ைவ ஸாகா:। ௬௬।௰௭௮
ப்ரமாேணந பவிஷ்யதி। தேதா அஹம் ஸம்பவிஷ்யாமி। ௬௬।௰௭௮
ப்ராஹ்மேணா ஹரிபிங்கல:। கல்கீவிஷ்ணுயஸ:புத்ேரா। ௬௬।௰௭௯
யாஜ்ஞவல்க்யபுேராஹித:। ம்ேலச்சாந் உத்ஸாதயிஷ்யாமி। ௬௬।௰௭௯
க்ருஹீதாஸ்த்ர: குஸாயுத:। ஸ்தாபயிஷ்யாமி மர்யாதாஸ்। ௬௬।௰௮
சாதுர்வர்ண்ேய யேதாதிதா:। ததாஸ்ரேமஷு ஸர்ேவஷு। ௬௬।௰௮
ப்ரஹ்மசாரிவ்ரதாதிகா:। ஸ்தாபயித்வா தத: ஸர்வா:। ௬௬।௰௮௧
ப்ரஜா: ஸத்தர்மவர்த்மநி। கல்கிரூபம் பரித்யஜ்ய। ௬௬।௰௮௧
திவம் ஏஷ்யாம்ய் அஹம் புந:। தத: க்ருதயுகம் பூய:। ௬௬।௰௮௧

பூர்வவத் ஸம்ப்ரவர்த்ஸ்யேத। வர்ணாஸ்ரமாஸ் ச தர்ேமஷு।
௬௬।௰௮௨
த்ேவஷு ஸ்தாஸ்யந்தி ஸத்தம। ஏவம் ஸர்ேவஷு கல்ேபஷு।
௬௬।௰௮௨
ஸர்வமந்வந்தேரஷு ச। மமாவதாரா: ஸதேஸா। ௬௬।௰௮௩
ேய பவந்தி ஜகத்திதா:। ஸம்கர்ஷணாத்மஜஸ் ைசவ। ௬௬।௰௮௩
கல்பாந்ேத ச ரஸாதலாத்। ஸமுத்பத்ஸ்ேயத் ததா ருத்ர:। ௬௬।௰௮௪
காலாக்நிர் இதி ய: ஸ்ருத:। தத: க்ஷயம் கரிஷ்யாமி। ௬௬।௰௮௪
ஜகத் ஸ்தாவரஜங்கமம்। பூயஸ் ைசவ ஹி ஸ்வப்ஸ்யாமி।
௬௬।௰௮௫
ஜகத்ய் ஏகார்ணேவ ஸ்திேத। த்வத்ரூபீ ச தேதா பூத்வா। ௬௬।௰௮௫
ஜகத் ஸ்ரŠயாம்ய் அஹம் புந:। ஏதத் ஸம்ேக்ஷபேதா ப்ரஹ்மந்।
௬௬।௰௮௫
மயாக்யாதம் யதாததம்। அம்ஸாவதரணம் ஸர்வம்। ௬௬।௰௮௬
மத்த: ஸம்ேக்ஷபத: ஸ்ருணு। யத் த்ருஸ்யம் யச் ச ைவ ஸ்ப்ருஸ்யம்।
௬௬।௰௮௬
யத் க்ேரயம் ரஸ்யேத ச யத்। யச் ச்ரவ்யம் யச் ச மந்தவ்யம்।
௬௬।௰௮௭
ேபாதவ்யம் சாஹம் அம்ஸக:। யத் து புத்ேத: பரதரம்। ௬௬।௰௮௭
அநாக்ேயயம் அேநாபமம்। தத் அஹம் ப்ரஹ்ம நிர்த்வந்த்வம்।
௬௬।௰௮௮
யத் ைவ பஸ்யந்தி ஸூரய:। இதம் ஜந்மரஹஸ்யம் ேம। ௬௬।௰௮௮
ேயா நர: கீர்தயிஷ்யதி। ஸுலேபா அஹம் பவிஷ்யாமி। ௬௬।௰௮௯
தஸ்ய ஜந்மநி ஜந்மநி। படந்ந் ஏதத் ப்ரஹ்மஹா து। ௬௬।௰௮௯

ஸுராேபா குருதல்பக:। ஸ்ேதயீ க்ருதக்ேநா ேகாக்நஸ் ச। ௬௬।௰௯
ஸர்வபாைப: ப்ரமுச்யேத। கர்பிணீஜநேயத் புத்ரம்। ௬௬।௰௯
கந்யா விந்ததி ஸத்பதிம்। லபந்ேத அபிமதாந் காமாந்। ௬௬।௰௯௧
நராஸ் தாம்ஸ் தாந் யேதப்ஸிதாந்। இதி ேதவாதிேதேவந। ௬௬।௰௯௧
ப்ரஹ்மேணா வ்யக்தஜந்மந:। ரஹஸ்யம் இதம் ஆக்யாதம்। ௬௬।௰௯௨
தவாபி கதிதம் மயா। விஷ்ணு: ஸர்வகேதா அநந்த:। ௬௬।௰௯௨
ஸர்வம் தத்ர ப்ரதிஷ்டிதம்। ஸ ச ஸர்வம் இதம் ராஜந்। ௬௬।௰௯௩
ந தேதா வித்யேத பரம்। ஏதத் பவித்ரம் படிதம்। ௬௬।௰௯௩
ததா து:ஸ்வப்நநாஸநம்। ஜாதிஸ்மரத்வம் ப்ரஜ்ஞாம் ச। ௬௬।௰௯௪
ததாதி படதாம் ந்ருணாம்। மயா ஹி ேதவேதவஸ்ய। ௬௬।௰௯௪
விஷ்ேணார் அமிதேதஜஸ:। ஸ்ருதா: ஸம்பூதய: ஸர்வா। ௬௭।௰௰௧
கததஸ் தவ ஸுவ்ரத। யதி ப்ரஸந்ேநா பகவாந்। ௬௭।௰௰௧
அநுக்ராஹ்ேயா அஸ்மி வா யதி। தத் அஹம் ஸ்ேராதும் இச்சாமி।
௬௭।௰௰௨
ந்ருணாம் து:ஸ்வப்நநாஸநம்। ஸ்வப்நா ஹி ஸுமஹாபாக। ௬௭।௰௰௨
த்ருஸ்யந்ேத ேய ஸுபாஸுபா:। பலாநி ேத ப்ரயச்சந்தி। ௬௭।௰௰௩
தத்குணாந்ய் ஏவ பார்கவ। யத் யத் புண்யம் பவித்ரம் ச। ௬௭।௰௰௩
ந்ருணாம் அதிஸுபப்ரதம்। து:ஸ்வப்ேநாபஸமாயாலம்। ௬௭।௰௰௪
தந் ேம விஸ்தரேதா வத। இதம் ஏவ மஹாராஜ। ௬௭।௰௰௪
ப்ருஷ்டவாம்ஸ் ேத பிதாமஹ:। பஷ்மம் ீ தர்மப்ருதாம் ஸ்ேரஷ்டம்।
௬௭।௰௰௫
தர்மபுத்ேரா யுதிஷ்டிர:। ேதவவ்ரதம் மஹாப்ராஜ்ஞம்। ௬௭।௰௰௫

ஸர்வஸாஸ்த்ரவிஸாரதம்। விநேயேநாபஸம்கம்ய। ௬௭।௰௰௬
பர்யப்ருச்சத் யுதிஷ்டிர:। து:ஸ்வப்நதர்ஸநம் ேகாரம்। ௬௭।௰௰௬
அேவŠய பரதர்ஷப। ப்ரயத: கிம் ஜேபஜ் ஜப்யம்। ௬௭।௰௰௭
விபுத்த: கிம் அநுஸ்மேரத்। பிதாமஹ மஹாபுத்ேத। ௬௭।௰௰௭
புத்ேதர் ேபேதா மஹாந் அயம்। தத் அஹம் ஸ்ேராதும் இச்சாமி।
௬௭।௰௰௮
ப்ரூஹி ேம வததாம் வர। ஸ்ருணு ராஜந் மஹாபாேஹா। ௬௭।௰௰௮
வர்தயிஷ்யாமி ேத அகிலம்। து:ஸ்வப்நதர்ஸேந ஜப்யம்। ௬௭।௰௰௯
யத் ைவ நித்யம் ஸமாஹிைத:। அத்ராப்ய் உதாஹரந்தீமம்। ௬௭।௰௰௯
இதிஹாஸம் புராதநம்। கேஜந்த்ரேமாக்ஷணம் புண்யம்। ௬௭।௰௧
க்ருஷ்ணஸ்யாக்லிஷ்டகர்மண:। ஸர்வரத்நமய: ஸ்ரீமாம்ஸ்। ௬௭।௰௧
த்ரிகூேடா நாம பர்வத:। ஸுத: பர்வதராஜஸ்ய। ௬௭।௰௧௧
ஸுேமேரார் பாஸ்கரத்யுேத:। க்ஷீேராதஜலவச்யக்ைரர் ீ । ௬௭।௰௧௧
ெதௗதாமலஸிலாதல:। உத்தித: ஸாகரம் பித்த்வா। ௬௭।௰௧௨
ேதவர்ஷிகணேஸவித:। அப்ஸேராபி: ஸமாகீர்ண:। ௬௭।௰௧௨
ஸ்ரீமாந் ப்ரஸ்ரவணாகுல:। கந்தர்ைவ: கிம்நைரர் யைக்ஷ:। ௬௭।௰௧௩
ஸித்தசாரணபந்நைக:। வித்யாதைர: ஸபத்நிைக:। ௬௭।௰௧௩
ஸம்யைதஸ் ச தபஸ்விபி:। ம்ருைகர் த்வைபர் ீ த்விைஜஸ் ைசவ।
௰௬௭।௯௨
வ்ருத: ெஸௗவர்ணராஜைத:। பும்நாைக: கர்ணிகாைரஸ் ச। ௬௭।௰௧௪
புஷ்பிைதர் உபேஸாபித:। சூதநீபகதம்ைபஸ் ச। ௬௭।௰௧௪
சந்தநாகருசம்பைக:। ஸாைலஸ் தாைலஸ் தமாைலஸ் ச। ௬௭।௰௧௫

குடைஜஸ் சார்ஜுைநஸ் ததா। ஏவம் பஹுவிைதர் வ்ருைக்ஷ:।
௬௭।௰௧௫
ஸர்வத: ஸமலம்க்ருத:। நாநாதாதூஜ்ஜ்வைல: ஸ்ருங்ைக:। ௬௭।௰௧௬
ப்ரஸ்ரவத்பி: ஸமந்தத:। ம்ருைக: ஸாகாம்ருைக: ஸிம்ைஹர்।
௬௭।௰௧௬
மாதம்ைகஸ் ச ஸதாமைத:। ஜவம்ஜ ீ வகஸம்குஷ்டம் ீ । ௬௭।௰௧௭
சேகாரஸிகிநாதிதம்। தஸ்ையகம் காஞ்சநம் ஸ்ருங்கம்। ௬௭।௰௧௭
ேஸவேத யத் திவாதர:। நாநாபுஷ்பஸமாகீர்ணம்। ௬௭।௰௧௮
நாநாகந்தஸமாகுலம்। த்விதீயம் ராஜதம் ஸ்ருங்கம்। ௬௭।௰௧௮
ேஸவேத யந் நிஸாகர:। பாண்டுராம்புதஸம்காஸம்। ௬௭।௰௧௯
துஷாரசயஸம்நிபம்। வஜ்ேரந்த்ரநீலைவடூர்ய । ௬௭।௰௧௯
ேதேஜாபிர் பாஸயந் நப:। த்ருதீயம் ப்ரஹ்மஸதநம்। ௬௭।௰௨
ப்ரக்ருஷ்டம் ஸ்ருங்கம் உத்தமம்। ந தத் க்ருதக்நா: பஸ்யந்தி। ௬௭।௰௨
ந ந்ருஸம்ஸா ந நாஸ்திகா:। நாதப்ததபஸ: ைஸலம்। ௬௭।௰௨௧
தம் ைவ பஸ்யந்தி மாநவா:। தஸ்ய ஸாநுமத: ப்ருஷ்ேட। ௬௭।௰௨௧
ஸர: காஞ்சநபங்கஜம்। காரண்டவஸமாகீர்ணம்। ௬௭।௰௨௨
ராஜஹம்ேஸாபேஸாபிதம்। மத்தப்ரமரஸம்குஷ்டம்। ௬௭।௰௨௨
புல்லபங்கஜேஸாபிதம்। குமுேதாத்பலகல்ஹார । ௬௭।௰௨௩
புண்டரீேகாபேஸாபிதம்। உத்பைல: ஸதபத்த்ைரஸ் ச। ௬௭।௰௨௩
காஞ்சைந: ஸமலம்க்ருதம்। பத்த்ைரர் மணிதலப்ரக்ைய:। ௬௭।௰௨௪
புஷ்ைப: காஞ்சநஸம்நிைப:। குல்ைம: கீசகேவணூநாம்। ௬௭।௰௨௪
ஸமந்தாத் பரிவாரிதம்। தஸ்மிந் ஸரஸி துஷ்டாத்மா। ௬௭।௰௨௪

விரூேபா அந்தர்ஜலாஸய:। ஆஸத்ீ க்ராேஹா கேஜந்த்ராணாம்।
௬௭।௰௨௫
துராதர்ேஷா மஹாபல:। அத தந்ேதாஜ்ஜ்வலமுக:। ௬௭।௰௨௫
கதாசித் கஜயூதப:। ஆஜகாமாஸிதாப்ராப:। ௬௭।௰௨௬
கேரணுபரிவாரித:। மதஸ்ராவ ீமஹாெரௗத்ர:। ௬௭।௰௨௬
பாதசாரீவ பர்வத:। வாஸயந் மதகந்ேதந। ௬௭।௰௨௭
கிரிம் ஐராவேதாபம:। ஸ கேஜா அஞ்ஜநஸம்காேஸா। ௬௭।௰௨௭
மதாச் சலிதமாநஸ:। கந்தஹஸ்தீதி விக்யாத:। ௬௭।௰௨௮
ஸர: ஸமபிகம்ய தத்। த்ருஷித: ஸ ஜலம் ப்ராப்ய। ௰௬௭।௯௪
குஸுமாகரஸதலம் ீ । அபிபத் ஸஹஸா ராஜந்। ௰௬௭।௯௪
கேரணுபரிவாரித:। ஸலீலம் பங்கஜவேந। ௰௬௭।௯௪
யூதமத்யகேதா அவ்ரஜத்। க்ருஹீதஸ் ேதந ெரௗத்ேரண। ௬௭।௰௨௮
க்ராேஹணாவ்யக்தமூர்திநா। பஸ்யந்தீநாம் கேரணூநாம்। ௬௭।௰௨௯
க்ேராஸந்தீநாம் ச தாருணம்। க்ரியேத பங்கஜவேந। ௬௭।௰௨௯
க்ராேஹணாதிபலீயஸா। கஜஸ் சாகர்ஷேத தீரம்। ௰௬௭।௯௫
க்ராஹஸ் சாகர்ஷேத ஜலம்। தேயார் த்வந்த்வ மஹாயுத்தம்।
௰௬௭।௯௬
திவ்யவர்ஷஸஹஸ்ரிகம்। வாருைண: ஸம்யத: பாைஸர்। ௰௬௭।௯௬
நி:ப்ரயத்நகதி: க்ருத:। ேவஷ்ட்யமாந: ஸுேகாைரஸ் து। ௬௭।௰௩
பாைஸர் நாேகா த்ருைடஸ் ததா। விஸ்புர்ஜ்ய ச யதாஸக்தி। ௬௭।௰௩
விக்ருஸ்ய ச மஹாரவாந்। வ்யதித: ஸம்நிருத்ஸாேஹா। ௬௭।௰௩௧
க்ருஹீேதா ேகாரகர்மணா। பரமாபதம் ஆபந்ேநா। ௬௭।௰௩௧
மநஸாசிந்தயத் தரிம்। ஸ து நாகவர: ஸ்ரீமாந்। ௬௭।௰௩௨

நாராயணபராயண:। தம் ஏவ பரமம் ேதவம்। ௬௭।௰௩௨
கத: ஸர்வாத்மநா ததா। ஏகாக்ரம் சிந்தயாம் ஆஸ। ௬௭।௰௩௩
விஸுத்ேதநாந்தராத்மநா। ஜந்மஜந்மாந்தராப்யாஸாத்। ௬௭।௰௩௩
பக்திமாந் கருடத்வேஜ। ஆத்யம் ேதவம் மஹாத்மாநம்। ௬௭।௰௩௪
பூஜயாம் ஆஸ ேகஸவம்। நவேமகப்ரதீகாஸம்। ௬௭।௰௩௪
ஸங்கசக்ரகதாதரம்। ஸஹஸ்ரஸுபநாமாநம்। ௬௭।௰௩௫
ஆதிேதவம் அஜம் பரம்। திக்பாஹும் ஸர்வமூர்தாநம்। ௬௭।௰௩௫
பூபாதம் ககேநாதரம்। ஆதித்யசந்த்ரநயநம்। ௰௬௭।௯௮
ஸமக்ரம் ேலாகஸாக்ஷிணம்। பகவந்தம் ப்ரஸந்ேநா அஹம்।
௰௬௭।௯௮
விஷ்ணும் அப்ரதிெமௗஜஸம்। ப்ரக்ருஹ்ய புஷ்கராக்ேரண। ௰௬௭।௯௯
காஞ்சநம் கமேலாத்தமம்। ஆபத்விேமாக்ஷம் அந்விச்சந்। ௬௭।௰௩௬
கஜ: ஸ்ேதாத்ரம் உைதரயத்। ஓம் நேமா மூலப்ரக்ருதேய। ௬௭।௰௩௬
அஜிதாய மஹாத்மேந। அநாஸ்ரிதாய ேதவாய। ௰௬௭।௧௰௰௰௰௧
நி:ஸ்ப்ருஹாய நேமா நம:। நம ஆத்யாய பஜாய ீ । ௰௬௭।௧௰௰௰௰௨
ஸிவாய ச ப்ரஸாந்தாய। ஆர்ேஷயாய ப்ரவர்திேந। ௰௬௭।௧௰௰௰௰௩
நிஸ்சலாய யஸஸ்விேந। அநந்தராய ைசகாய। ௰௬௭।௧௰௰௰௰௪
ஸநாதநாய பூர்வாய। அவ்யக்தாய நேமா நம:। ௰௬௭।௧௰௰௰௰௫
புராணாய நேமா நம:। நேமா குஹ்யாய கூடாய। ௰௬௭।௧௰௰௰௰௬
குணாயாகுணவர்திேந। அதர்க்யாயாப்ரேமயாய। ௰௬௭।௧௰௰௰௰௮
அநந்தாய நேமா நம:। நேமா ேதவாதிேதவாய। ௰௬௭।௧௰௰௰௧௰
அப்ரபாய நேமா நம:। நேமா ஜகத்ப்ரஸ்திதாய। ௰௬௭।௧௰௰௰௧௨

ேகாவிந்தாய நேமா நம:। நேமா அஸ்து பத்மநாபாய। ௰௬௭।௧௰௰௰௧௩
ஸாம்க்யேயாேகாத்பவாய ச। விஸ்ேவஸ்வராய ேதவாய।
௰௬௭।௧௰௰௰௧௪
ஸிவாய ஹரேய நம:। நேமா அஸ்து தஸ்ைம ேதவாய।
௰௬௭।௧௰௰௰௧௫
நிர்குணாய குணாத்மேந। நாராயணாய விஸ்வாய। ௰௬௭।௧௰௰௰௧௬
ேதவாநாம் பரமாத்மேந। நேமா நம: காரணவாமநாய। ௰௬௭।௧௰௰௰௧௭
நாராயணாயாமிதவிக்ரமாய। ஸ்ரீஸார்ங்கசக்ராஸிகதாதராய। ௬௭।௰௩௭
நேமா அஸ்து தஸ்ைம புருேஷாத்தமாய। ஆத்யாய ேவதநிலயாய
மேஹாதராய। ௬௭।௰௩௭
ஸிம்ஹாய ைதத்யநிதநாய சதுர்புஜாய।
ப்ரஹ்ேமந்த்ரருத்ரமுநிசாரணஸம்ஸ்துதாய। ௬௭।௰௩௮
ேதேவாத்தமாய வரதாய நேமா அச்யுதாய।
நாேகந்த்ரேபாகஸயநாஸநஸுப்ரியாய। ௬௭।௰௩௮
ேகாக்ஷரேஹமஸுகந ீ ீலகேநாபமாய। பதாம்பராய ீ மதுைகடபநாஸநாய।
௬௭।௰௩௯
விஸ்வாய சாருமுகுடாய நேமா அக்ஷராய। பக்திப்ரியாய
வரதீப்தஸுதர்ஸநாய। ௰௬௭।௧௰௧
நாபிப்ரஜாதகமலஸ்தசதுர்முகாய। க்ஷீேராதகார்ணவநிேகதயேஸாதநாய।
௬௭।௰௪
நாநாவிசித்ரமுகுடாங்கதபூஷணாய। ஸர்ேவஸ்வராய வரதாய நேமா வராய।
௬௭।௰௪
விஸ்வாத்மேந பரமகாரணகாரணாய। புல்லாரவிந்தவிமலாயதேலாசநாய।
௬௭।௰௪௧

ேதேவந்த்ரதாநவபரீக்ஷிதெபௗருஷாய। ேயாேகஸ்வராய விஜயாய நேமா
வராய। ௬௭।௰௪௧
ேலாகாயநாய த்ரிதஸாயநாய। ப்ரஹ்மாயநாயாத்மபவாயநாய।
௬௭।௰௪௨
தர்மாயநாையகஜலாயநாய। மஹாவராஹாய ஸதா நேதா அஸ்மி।
௬௭।௰௪௨
அசிந்த்யம் அவ்யக்தம் அநந்தரூபம்। நாராயணம் காரணம் ஆதிேதவம்।
௬௭।௰௪௩
யுகாந்தேஸஷம் புருஷம் புராணம்। தம் வாஸுேதவம் ஸரணம் ப்ரபத்ேய।
௬௭।௰௪௩
ேயாேகஸ்வரம் சாருவிசித்ரெமௗலிம்। ஆஜ்ேஞயெமௗக்யம் ப்ரக்ருேத:
பரஸ்தம்। ௰௬௭।௧௰௪
ேக்ஷத்ரஜ்ஞம் ஆத்மப்ரபவம் வேரண்யம்। தம் வாஸுேதவம் ஸரணம்
ப்ரபத்ேய। ௰௬௭।௧௰௪
அத்ருஸ்யம் அச்ேசத்யம் அநாதிமத்யம்। மஹர்ஷேயா ப்ரஹ்மவித:
ஸுேரஸம்। ௬௭।௰௪௪
வதந்தி யம் ைவ புருஷம் ஸநாதநம்। தம் வாஸுேதவம் ஸரணம் ப்ரபத்ேய।
௬௭।௰௪௪
யத் அக்ஷரம் ப்ரஹ்ம வதந்தி ஸர்வகம்। நிஸாம்ய யம் ம்ருத்யுமுகாத்
ப்ரமுச்யேத। ௬௭।௰௪௫
தம் ஈஸ்வரம் த்ருப்தம் அேநாபைமர் குைண:। பராயணம் விஷ்ணும் உைபமி
ஸாஸ்வதம்। ௬௭।௰௪௫
கார்யம் க்ரியாகாரணம் அப்ரேமயம்। ஹிரண்யநாபம் வரபத்மநாபம்।
௬௭।௰௪௬

மஹாபலம் ேவதநிதிம் ஸுேராத்தமம்। வ்ரஜாமி விஷ்ணும் ஸரணம்
ஜநார்தநம்। ௬௭।௰௪௬
விசித்ரேகயூரமஹார்ஹநிஷ்கம்। ரத்ேநாத்தமாலம்க்ருதஸர்வகாத்ரம்।
௬௭।௰௪௭
பதாம்பரம் ீ காஞ்சநபக்திசித்ரம்। மாலாதரம் ேகஸவம் அப்யுைபமி।
௬௭।௰௪௭
பேவாத்பவம் ேவதவிதாம் வரிஷ்டம்। ேயாகாத்மாநம் ஸாம்க்யவிதாம்
வரிஷ்டம்। ௬௭।௰௪௮
ஆதித்யசந்த்ராஸ்விவஸுப்ரபாவம்। ப்ரபும் ப்ரபத்ேய அச்யுதம் ஆத்மபூதம்।
௬௭।௰௪௮
ஸ்ரீவத்ஸாங்கம் மஹாேதவம்। ேவதகுஹ்யம் அநுத்தமம்। ௬௭।௰௪௯
ப்ரபத்ேய ஸூŠமம் அசலம்। பக்தாநாம் அபயப்ரதம்। ௬௭।௰௪௯
ப்ரபவம் ஸர்வேலாகாநாம்। நிர்குணம் பரேமஸ்வரம்। ௬௭।௰௫
ப்ரபத்ேய முக்தஸம்காநாம்। யதீநாம் பரமாம் கதிம்। ௬௭।௰௫
பகவந்தம் ஸுராத்யக்ஷம்। அக்ஷரம் புஷ்கேரக்ஷணம்। ௬௭।௰௫௧
ஸரண்யம் ஸரணம் பக்த்யா। ப்ரபத்ேய ப்ராஹ்மணப்ரியம்। ௬௭।௰௫௧
த்ரிவிக்ரமம் த்ரிேலாேகஸம்। ஆத்யம் ஏகம் அநாமயம்। ௬௭।௰௫௨
பூதாத்மாநம் மஹாத்மாநம்। ப்ரபத்ேய மதுஸூதநம்। ௬௭।௰௫௨
ஆதிேதவம் அஜம் ஸம்பும்। வ்யக்தாவ்யக்தம் ஜநார்தநம்। ௰௬௭।௧௰௫
ேக்ஷத்ரஜ்ஞம் புருஷம் யஜ்ஞம்। த்ரிகுணாதீதம் அவ்யயம்। ௬௭।௰௫௩
நாராயணம் அணயாம்ஸம் ீ । ப்ரபத்ேய பரேமஸ்வரம்। ௬௭।௰௫௩
ஏகாய ேலாகத்ரயாய। பரத: பரமாத்மேந। ௬௭।௰௫௪
நம: ஸஹஸ்ரஸிரேஸ। அநந்தாய மஹாத்மேந। ௬௭।௰௫௪

வேரண்யம் அநகம் ேதவம்। க்ருஷேயா ேவதபாரகா:। ௬௭।௰௫௫
கீர்தயந்தி ச யம் ஸர்ேவ। தம் ப்ரபத்ேய ஸநாதநம்। ௬௭।௰௫௫
நமஸ் ேத புண்டரீகாக்ஷ। பக்தாநாம் அபயப்ரத। ௬௭।௰௫௬
ஸுப்ரஹ்மண்ய நமஸ் ேத அஸ்து। த்ராஹி மாம் ஸரணாகதம்।
௬௭।௰௫௬
பக்திம் தஸ்யாநுஸம்சிந்த்ய। நாகஸ்யாேமாகஸம்ஸ்தவம்। ௬௭।௰௫௭
ப்ரீதிமாந் அபவத் ராஜஞ்। ஸங்கசக்ரகதாதர:। ௬௭।௰௫௭
ஸாம்நித்யம் கல்பயாம் ஆஸ। தஸ்மிந் ஸரஸி மாதவ:। ௬௭।௰௫௭
க்ராஹக்ரஸ்தம் கஜம் தம் ச। ஸம்க்ருஹ்ய ஸலிலாஸயாத்।
௬௭।௰௫௮
உஜ்ஜஹாராப்ரேமயாத்மா। தரைஸவாரிஸூதந:। ௬௭।௰௫௮
ஸ்தலஸ்தம் தாரயாம் ஆஸ। க்ராஹம் சக்ேரண மாதவ:। ௬௭।௰௫௯
ேமாக்ஷயாம் ஆஸ ச கஜம்। பாேஸப்ய: ஸரணாகதம்। ௬௭।௰௫௯
ஸ ஹி ேதவலஸாேபந। ஹூஹூ கந்தர்வஸத்தம:। ௬௭।௰௬
கஜத்வம் அகமத் க்ருஷ்ணாந்। ேமாக்ஷம் ப்ராப்ய திவம் கத:। ௬௭।௰௬
ஸாபாத் விமுக்த: ஸத்யஸ் ச। கேஜா கந்தர்வதாம் கத:। ௬௭।௰௬
க்ராேஹா அபி யக்ஷதாம் யாேதா। ய: க்ருஷ்ேணந நிபாதித:।
௬௭।௰௬௧
தஸ்யாபி ஸாபேமாேக்ஷா அெஸௗ। ைஜகீஷவ்யக்ருேதா அபவத்।
௬௭।௰௬௧
ப்ரீதிமாம்ஸ் த்ராதி ேகாவிந்த:। ஸத்ய: ஸம்ஸாரஸாகராத்। ௬௭।௰௬௨
க்ருத்ேதா அபி நிக்நந் ேதவத்வம்। அராதீநாம் ப்ரயச்சதி। ௬௭।௰௬௨

ெதௗ ச ஸ்வம் ஸ்வம் வபு: ப்ராப்ய। ப்ரணிபத்ய ஜநார்தநம்।
௬௭।௰௬௩
கந்தர்வராட் ததா யக்ஷ:। பராம் நிர்வ்ருதிம் ஆகெதௗ। ௬௭।௰௬௩
இதம் ைசவ மஹாபாேஹா। ேதவேதேவா அப்யபாஷத। ௬௭।௰௬௪
த்ருஷ்ட்வா முக்ெதௗ கஜக்ரெஹௗ। பகவாந் மதுஸூதந:। ௬௭।௰௬௪
ேயா க்ராஹம் நாகராஜம் ச। மாம் ைசவ ப்ரணிதாநவாந்। ௬௭।௰௬௫
ஸ்மரிஷ்யதி ஸரஸ் ேசதம்। யுவேயார் ேமாக்ஷணம் ததா। ௬௭।௰௬௫
குல்மம் கீசகேவணூநாம்। தம் ச ைஸலவரம் ததா। ௬௭।௰௬௬
அஸ்வத்தம் பாஸ்கரம் கங்காம்। ைநமிஷாரண்யம் ஏவ ச। ௬௭।௰௬௬
ஸம்ஸ்மரிஷ்யந்தி ேய மர்த்யா:। ஸம்யக் ஸ்ேராஷ்யந்தி வாபி ேய।
௬௭।௰௬௭
ந ேத து:ஸ்வப்நபாபஸ்ய। ேபாக்தாேரா மத்பரிக்ரஹாத்। ௬௭।௰௬௭
ஸர்வபாைப: ப்ரேமாŠயந்ேத। கல்யாணாநாம் ச பாகிந:। ௬௭।௰௬௮
பவிஷ்யந்தி ததா புண்யாம்। கதிம் யாஸ்யந்தி மாநவா:। ௬௭।௰௬௮
து:ஸ்வப்நம் ச ந்ருணாம் ேதஷாம்। ஸுஸ்வப்நம் ச பவிஷ்யதி।
௬௭।௰௬௮
ெகௗர்மம் மாத்ஸ்யம் ச வாராஹம்। வாமநம் தார்Šயம் ஏவ ச।
௬௭।௰௬௯
நாரஸிம்ஹம் ததா ரூபம்। ஸ்ருஷ்டிஸம்ஹாரகாரகம்। ௬௭।௰௬௯
ஏதாநி ப்ராதர் உத்தாய। ஸம்ஸ்மரிஷ்யந்தி ேய நரா:। ௬௭।௰௭
ஸர்வபாபவிநிர்முக்தாஸ்। ேத யாந்தி பரமாம் கதிம்। ௬௭।௰௭
ஏவம் உக்த்வா து ராேஜந்த்ர। ேதவேதேவா ஜநார்தந:। ௬௭।௰௭௧
அஸ்ப்ருஸத் கஜகந்தர்வம்। க்ராஹயக்ஷம் ச தம் ததா। ௬௭।௰௭௧

ேதந ஸ்ப்ருஷ்டாவ் உெபௗ ஸத்ேயா। திவ்யமால்யாம்பராந்விெதௗ।
௬௭।௰௭௨
விமாேந அபிமேத ப்ராப்ய। ஜக்மதுஸ் த்ரிதஸாலயம்। ௬௭।௰௭௨
தேதா ேதவபதி: க்ருஷ்ேணா। ேமாக்ஷயித்வா கேஜாத்தமம்। ௬௭।௰௭௩
க்ருஷிபி: ஸ்தூயமாேநா ஹி। குஹ்ையர் ேவதபதாக்ஷைர:। ௬௭।௰௭௩
கத: ஸ பகவாந் விஷ்ணுர்। துர்விஜ்ேஞயகதி: ப்ரபு:। ௬௭।௰௭௩
கேஜந்த்ரேமாக்ஷணம் த்ருஷ்ட்வா। ஸர்ேவ ேசந்த்ரபுேராகமா:।
௬௭।௰௭௪
ப்ரஹ்மாணம் அக்ரத: க்ருத்வா। ஸர்ேவ ப்ராஞ்ஜலேயா அபவந்।
௬௭।௰௭௪
வவந்திேர மஹாத்மாநம்। ப்ரபும் நாராயணம் ஹரிம்। ௰௬௭।௧௰௭
விஸ்மேயாத்புல்லநயநா:। ப்ரஜாபதிபுர:ஸரா:। ௰௬௭।௧௰௭
ய இதம் ஸ்ருணுயாந் நித்யம்। ப்ராதர் உத்தாய மாநவ:। ௰௬௭।௧௰௭
ப்ராப்நுயாத் பரமாம் ஸித்திம்। து:ஸ்வப்நஸ் தஸ்ய நஸ்யதி।
௰௬௭।௧௰௭
கேஜந்த்ரேமாக்ஷணம் புண்யம்। ஸர்வபாபப்ரேமாசநம்। ௬௭।௰௭௫
ஸ்ராவேயத் ப்ராதர் உத்தாய। ஸர்வபாைப: ப்ரமுச்யேத। ௬௭।௰௭௫
ஸ்ரத்தயா ஹி குருஸ்ேரஷ்ட। ஸ்ம்ருேதந கதிேதந ச। ௬௭।௰௭௬
கேஜந்த்ரேமாக்ஷேணேநஹ। தீர்கம் ஆயுர் அவாப்நுயாத்। ௬௭।௰௭௬
மயா ேத கதிதம் திவ்யம்। பவித்ரம் பாபநாஸநம்। ௬௭।௰௭௭
கீர்தயஸ்வ மஹாபாேஹா। மஹாது:ஸ்வப்நநாஸநம்। ௬௭।௰௭௭
கீர்த்யமாநம் ச விப்ேரப்ய:। ஸ்ருணு பக்த்யா யேதாதிதம்। ௰௬௭।௧௰௮
கேஜந்த்ரேமாக்ஷணம் ஸ்ருத்வா। குந்தீபுத்ேரா யுதிஷ்டிர:। ௬௭।௰௭௮

பஷ்மாத் ீ பகீரதீபுத்ராத்। பூஜயாம் ஆஸ ேகஸவம்। ௬௭।௰௭௮
ேய சாபி பாண்டுபுத்ரஸ்ய। ஸமீபஸ்தா த்விேஜாத்தமா:। ௬௭।௰௭௯
ேத அபி பஷ்மஸ்ய ீ பார்ஸ்வஸ்தம்। வாஸுேதவம் ப்ரேணமிேர।
௬௭।௰௭௯
வரம் வேரண்யம் வரபத்மநாபம்। நாராயணம் ப்ரஹ்மநிதிம் ஸுேரஸம்।
௬௭।௰௮
தம் ேதவகுஹ்யம் புருஷம் புராணம்। வவந்திேர ப்ரஹ்மவிதாம் வரிஷ்டம்।
௬௭।௰௮
ஏதத் புண்யம் மஹாராஜ। நராணாம் பாபகர்மணாம்। ௬௭।௰௮௧
து:ஸ்வப்நதர்ஸேந ேகாேர। ஸ்ருத்வா பாபாத் ப்ரமுச்யேத। ௬௭।௰௮௧
பக்திமாந் புண்டரீகாேக்ஷ। கேஜா து:காத் விேமாசித:। ௬௭।௰௮௧
ததா த்வம் அபி ராேஜந்த்ர। ப்ரபத்ய ஸரணம் ஹரிம்। ௬௭।௰௮௨
விமுக்த: ஸர்வபாேபப்ய:। ப்ராப்ஸ்யேஸ பரமாம் கதிம்। ௬௭।௰௮௨
மஹாமேத மஹாப்ராஜ்ஞ। ஸர்வஸாஸ்த்ரவிஸாரத। ௬௮।௰௰௧
அக்ஷீணகர்மபந்தஸ் து। புருேஷா த்விஜஸத்தம। ௬௮।௰௰௧
மரேண யஜ் ஜபஞ் ஜப்யம்। யச் ச பாவம் அநுஸ்மரந்। ௬௮।௰௰௨
பரம் பதம் அவாப்ேநாதி। தந் ேம வத மஹாமுேந। ௬௮।௰௰௨
ஸ்ரீவத்ஸாங்கம் ஜகத்பஜம்ீ । அநந்தம் ேலாகபாவநம்। ௬௮।௰௰௩
புரா நாராயணம் ேதவம்। நாரத: பர்யப்ருச்சத। ௬௮।௰௰௩
பகவந் பூதபவ்ேயஸ। ஸ்ரத்ததாைநர் ஜிேதந்த்ரிைய:। ௬௮।௰௰௪
கதம் பக்ைதர் விசிந்த்ேயா அஸி। மரேண ப்ரத்யுபஸ்திேத। ௬௮।௰௰௪
கிம் வா ஜப்யம் ஜேபந் நித்யம்। கல்யம் உத்தாய மாநவ:। ௬௮।௰௰௫
ஸ்வபந் விபுத்யந் த்யாயம்ஸ் ச। தந் ேம ப்ரூஹி ஸநாதந। ௬௮।௰௰௫

———————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஸுவ்ன பகவான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ விஷ்ணு தர்மம் –முதல் பாகம் —

June 3, 2023

நாராயணம் நமஸ்க்ருத்ய। நரம் ஸைவ நரோத்தமம்।
தேவம்ீ ஸரஸ்வதீம் ஸைவ। ததோ ஜயம் உதீரயேத்।
த்வை பாயந ஒவ்ஷ்ட புடநி:ஸ்ருதம் அப்ரேமயம்। புண்யம் பவித்ரம் அத பாப ஹரம் ஸுபம் ச।
யோ பாரதம் ஸமதிகச்சதி வாச்யமாநம்। கிம் தஸ்ய புஷ்கர ஜலைர் அபிஷே சநேந।
நமோ வ்யாஸாய குரவே । ஸர்வஜ்ஞாய மஹர்ஷேய।
பாராஸர்யாய ஸாந்தாய। நமோ நாராயணாய தே ।
க்ருதாபிஷேகம் தநயம்। ராஜ்ஞ: பாரீக்ஷிதஸ்ய ஹ। ௧।௰௰௧
த்ரஷ்டும் அப்யாயயு: ப்ரீத்யா। ெஸௗநகாத்யா மஹர்ஷய:। ௧।௰௰௧
தாந் ஆகதாந் ஸ ராஜர்ஷி:। பாத்யார்க்யாதிபிர் அர்சிதாந்। ௧।௰௰௨
ஸுகோபவிஷ்டாந் விஸ்ராந்தாந்। க்ருத ஸம்ப்ரஸ்ந ஸத் கதாந்। ௧।௰௰௨
தத்கதாபி: க்ருதாஹ்லாத:। ப்ரணிபத்ய க்ருதாஞ்ஜலி:। ௧।௰௰௩
ஸதாநீகோ அத பப்ரச்ச। நாராயண கதாம் பராம்। ௧।௰௰௩
யம் ஆஸ்ரித்ய ஜகந்நாதம்। மம பூர்வ பிதாமஹா:। ௧।௰௰௪
விபக்ஷாபஹ்ருதம் ராஜ்யம்। அவாபு: புருேஷாத்தமா:। ௧।௰௰௪
த்ெரௗணி ப்ரஹ்மாஸ்த்ர நிர்தக்ேதா। மம ேயந பிதாமஹ:। ௧।௰௰௫
பரீக்ஷித் ப்ராண ஸம்ேயாகம்। ேதவேதேவந லம்பித:। ௧।௰௰௫
தஸ்ய ேதவஸ்ய மாஹாத்ம்யம்। ேதவர்ஷி ஸித்தமநுைஜ:। ௧।௰௰௬
ஸ்ருதம் ஸுபஹுேஸா மயா। ஸ்துதஸ் யாஸேஷ ஜந்மந:। ௧।௰௰௬
க: ஸ்ேதாதும் ஈஸஸ் தம் அஜம்। யஸ்ைய தத் ஸசராசரம்। ௧।௰௰௭
அவ்யயஸ் யாப்ரேமயஸ்ய। ப்ரஹ்மாண்டம் உதரே ஸயம்। ௧।௰௰௭
ருத்ர: க்ராேத உத்பவோ யஸ்ய। ப்ரஸாதாச் ச பிதாமஹ:। ௧।௰௰௮

தஸ்ய ேதவஸ்ய க: ஸக்த:। ப்ரவக்தும் வா விபூதய:। ௧।௰௰௮
ேஸா அஹம் இச்சாமி ேதவஸ்ய। தஸ்ய ஸர்வாத்மந: ப்ரேபா:।
௧।௰௰௯
ஸ்ேராதும் ஆராதநம் ேயந। நிஸ்தேரயம் பவார்ணவம்। ௧।௰௰௯
ேகேநாபாேயந மந்த்ைரர் வா। ரஹஸ்ைய: பரிசர்யயா। ௧।௰௧
தாைநர் வ்ரேதாபவாைஸர் வா। ஜப்ையர் ேஹாைமர் அதாபி வா।
௧।௰௧
ஆராதித: ஸமஸ்தாநாம்। க்ேலஸாநாம் ஹாநிேதா ஹரி:। ௧।௰௧௧
ஸக்ய: ஸமாராதயிதும்। தந் ந: ஸம்ஸத ஸத்தமா:। ௧।௰௧௧
வித்யாநாம் அபி ஸா வித்யா। ஸ்ருதாநாம் அபி தச் ச்ருதம்। ௧।௰௧௨
ரஹஸ்யாநாம் ரஹஸ்யம் தத்। ேயந விஷ்ணு: ப்ரஸததி ீ । ௧।௰௧௨
மந்த்ராணாம் பரேமா மந்த்ேரா। வ்ரதாநாம் தந் மஹாவ்ரதம்। ௧।௰௧௩
உேபாஷிதம் ஹி தச் ச்ேரஷ்டம்। ேயந துஷ்யதி ேகஸவ:। ௧।௰௧௩
ஸா ஜிஹ்வா யா ஹரிம் ஸ்ெதௗதி। தச் சித்தம் யத் ததர்பணம்।
௧।௰௧௪
தாவ் ஏவ ேகவெலௗ ஸ்லாக்ெயௗ। ெயௗ தத்பூஜாகெரௗ கெரௗ।
௧।௰௧௪
ஸுஜந்ம ேதஹம் அத்யந்தம்। தத் ஏவாேஸஷஜந்மஸு। ௧।௰௧௫
யத் ஏவ புலேகாத்பாஸி। விஷ்ேணார் நாமாபிகீர்தநாத்। ௧।௰௧௫
ஸா ஹாநிஸ் தந் மஹச் சித்ரம்। ஸா சாந்தஜடமூகதா। ௧।௰௧௬
யந் முஹூர்தம் க்ஷணம் வாபி। வாஸுேதேவா ந சிந்த்யேத। ௧।௰௧௬
நூநம் தத் கண்டஸாலூகம்। அதவா ப்ரதிஜிஹ்விகா। ௧।௰௧௭

ேராேகா வாந்ேயா ந ஸா ஜிஹ்வா। யா ந வக்தி ஹேரர் குணாந்।
௧।௰௧௭
ஸந்த்ய் அேநகா பிலாஸ் தத்வச்। ஸ்ேராத்ரம் அப்ய் அல்பேமதஸாம்।
௧।௰௧௮
தத்த்வாவதாநம் யச் சப்ேத। விைநவ ஹரிஸம்ஸ்துதிம்। ௧।௰௧௮
தர்மார்தகாமஸம்ப்ராப்ெதௗ। புருஷாணாம் விேசஷ்டிதம்। ௧।௰௧௯
ஜந்மந்ய் அவிபலா ைஸகா। யா ேகாவிந்தாஸ்ரயா க்ரியா। ௧।௰௧௯
துர்கஸம்ஸாரகாந்தாரம்। அபாரம் அபிதாவதாம்। ௧।௰௨
ஏக: க்ருஷ்ணநமஸ்காேரா। முக்திதீரஸ்ய ேதஸிக:। ௧।௰௨
ஸர்வரத்நமேயா ேமரு:। ஸர்வாஸ்சர்யமயம் நப:। ௧।௰௨௧
ஸர்வதீர்தமயீ கங்கா। ஸர்வேதவமேயா ஹரி:। ௧।௰௨௧
ஏவம் ஆதிகுேணா ேபாக:। க்ருஷ்ணஸ்யாத்புதகர்மண:। ௧।௰௨௨
ஸ்ருேதா ேம பஹுேஸா ஸித்ைத:। கீயமாநஸ் ததாபைர:। ௧।௰௨௨
ேஸா அஹம் இச்சாமி தம் ேதவம்। ஸர்வேலாகபராயணம்। ௧।௰௨௩
நாராயணம் அேஸஷஸ்ய। ஜகேதா ஹ்ருத்ய் அவஸ்திதம்। ௧।௰௨௩
ஆராதயிதும் ஈஸாநம்। அநந்தம் அமிெதௗஜஸம்। ௧।௰௨௪
ஸம்கரம் ஜகத: ப்ராணம்। ஸ்ம்ருதமாத்ராகஹாரிணம்। ௧।௰௨௪
தந் மமாத்ய முநிஸ்ேரஷ்டா:। ப்ரஸாதயிதும் இச்சத:। ௧।௰௨௫
உபேதஸப்ரதாேநந। ப்ரஸாதம் கர்தும் அர்ஹத। ௧।௰௨௫
தஸ்ையதத் வசநம் ஸ்ருத்வா। பக்திம் உத்வஹேதா ஹேர:। ௧।௰௨௬
பரிேதாஷம் பரம் ஜக்முர்। முநய: ஸர்வ ஏவ ேத। ௧।௰௨௬
ஸர்ேவ ச ேத முநிஸ்ேரஷ்டா। ப்ருகுஸ்ேரஷ்டம் ச ெஸௗநகம்।
௧।௰௨௭

யதார்தம் பகவம்ஸ் தஸ்ைம। கத்யதாம் இத்ய் அேசாதயந்। ௧।௰௨௭
ஸர்வஜ்ஞாநநிதி: ஸ்பதஸ்ீ । த்வம் அத்ர ப்ருகுநந்தந। ௧।௰௨௮
த்ைரேலாக்யஸர்வஸம்ேதஹ । தேமாதீபஸ் தேபாதந। ௧।௰௨௮
ஏவம் உக்ேதா முநிவைர:। ப்ரீத்யா தஸ்ய ச பூபேத:। ௧।௰௨௯
பக்த்யா ச ேதவேதவஸ்ய। ப்ரவணக்ருதமாநஸ ீ :। ௧।௰௨௯
க்ருத்ேவாத்தரீயபர்யங்கம்। ஸிதிலம் பகவாந் அத। ௧।௰௩
ப்ரத்யுவாச மஹாபாக:। ெஸௗநகஸ் தம் மஹீபதிம்। ௧।௰௩
யத் ப்ருச்சஸி மஹீபால। க்ருஷ்ணஸ்யாராதநம் ப்ரதி। ௧।௰௩௧
வ்ரேதாபவாஸஜப்யாதி। தத் இைஹகமநா: ஸ்ருணு। ௧।௰௩௧
அநாதிமத் பரம் ப்ரஹ்ம। ஸர்வேஹயவிவர்ஜிதம்। ௧।௰௩௨
வ்யாபி யத் ஸர்வபூேதஷு। ஸ்திதம் ஸதஸத: பரம்। ௧।௰௩௨
ப்ரதாநபும்ேஸார் அஜேயார்। யத: ேக்ஷாப: ப்ரவர்தேத। ௧।௰௩௩
நித்யேயார் வ்யாபிேநாஸ் ைசவ। ஜகதாெதௗ மஹாத்மேநா:। ௧।௰௩௩
தத்ேக்ஷாபகத்வாத் ப்ரஹ்மாண்ட । ஸ்ருஷ்டிேஹதுர் நிரஞ்ஜந:।
௧।௰௩௪
அேஹதுர் அபி ஸர்வாத்மந:। ஜாயேத பரேமஸ்வர:। ௧।௰௩௪
ப்ரதாநபுருஷத்வம் ச। தைதேவஸ்வரலீலயா। ௧।௰௩௫
ஸமுைபதி ததஸ் ைசவ। ப்ரஹ்மத்வம் சந்தத: ப்ரபு:। ௧।௰௩௫
தத: ஸ்திெதௗ பாலயிதா। விஷ்ணுத்வம் ஜகத: க்ஷேய। ௧।௰௩௬
ருத்ரத்வம் ச ஜகந்நாத:। ஸ்ேவச்சயா குருேத அவ்யய:। ௧।௰௩௬
தத் ஏகம் அக்ஷரம் தாம। பரம் ஸதஸேதார் மஹத்। ௧।௰௩௭
ேபதாேபதஸ்வரூபஸ்தம்। ப்ரணிபத்ய பரம் பதம்। ௧।௰௩௭

ப்ரவŠயாமி யதா பூர்வம்। மத்பித்ரா கதிதம் மம। ௧।௰௩௮
தஸ்யாபி கில தத்பித்ரா। தஸ்ைம சாஹ கிேலாஸநா:। ௧।௰௩௮
ேதநாபி ப்ருகும் ஆராத்ய। ப்ராப்தம் ஆராதநம் ஹேர:। ௧।௰௩௯
ஸகாஸாத் ப்ரஹ்மண: ப்ராப்தம்। ப்ருகுணாபி மஹாத்மநா। ௧।௰௩௯
மரீசிமிஸ்ைரஸ் ச புரா। பரம் ஏதந் மஹர்ஷிபி:। ௧।௰௪
ப்ராப்தம் ஸகாஸாத் ேதவஸ்ய। ப்ரஹ்மேணா வ்யக்தஜந்மந:। ௧।௰௪
ேயாகம் ப்ரஹ்மா பரம் ப்ராஹ। மஹர்ஷீணாம் யதா ப்ரபு:। ௧।௰௪௧
ஸமஸ்தவ்ருத்திஸம்ேராதாத்। ைகவல்யப்ரதிபாதகம்। ௧।௰௪௧
ததா ஜகத்பதிர் ப்ரஹ்மா। ப்ரணிபத்ய மஹர்ஷிபி:। ௧।௰௪௨
ஸர்ைவ: கிேலாக்ேதா பகவாந்। ஆத்மேயாநி: ப்ரஜாஹிதம்। ௧।௰௪௨
ேயா ேயாேகா பவதா ப்ேராக்ேதா। மேநாவ்ருத்திநிேராதஜ:। ௧।௰௪௩
ப்ராப்தும் ஸக்ய: ஸ த்வ் அேநைக:। ஜந்மபிர் ஜகத: பேத। ௧।௰௪௩
விஷயா துர்ஜயா ந்ருணாம்। இந்த்ரியாகர்ஷணா: ப்ரேபா। ௧।௰௪௪
வ்ருத்தயஸ் ேசதஸஸ் சாபி। சபலா சாதிதுர்தரா:। ௧।௰௪௪
ராகாதய: கதம் ேஜதும்। ஸக்யா வர்ஷஸைதர் அபி। ௧।௰௪௫
ந ேயாகேயாக்யம் ஹி மேநா। பவத்ய் ஏபிர் அநிர்ஜிைத:। ௧।௰௪௫
அல்பாயுஷஸ் ச புருஷா। ப்ரஹ்மந் க்ருதயுேக அப்ய் அமீ। ௧।௰௪௬
த்ேரதாயாம் த்வாபேர ைசவ। கிமு ப்ராப்ேத கெலௗ யுேக। ௧।௰௪௬
பகவம்ஸ் த்வம் உபாயஜ்ஞ:। ப்ரஸந்ேநா வக்தும் அர்ஹஸி। ௧।௰௪௭
அநாயாேஸந ேயேநமம்। உத்தேரம பவார்ணவம்। ௧।௰௪௭
து:காம்புமக்நா: புருஷா:। ப்ராப்ய ப்ரஹ்ம மஹாப்லவம்। ௧।௰௪௮
உத்தேரயுர் பவாம்ேபாதிம்। ததா த்வம் அநுசிந்தய। ௧।௰௪௮

ஏவம் உக்தஸ் ததா ப்ரஹ்மா। க்ரியாேயாகம் மஹாத்மநாம்। ௧।௰௪௯
ேதஷாம் க்ருஷீணாம் ஆசஷ்ட। நராணாம் ஹிதகாம்யயா। ௧।௰௪௯
ஆராதயத விஸ்ேவஸம்। நாராயணம் அதந்த்ரிதா:। ௧।௰௫
பாஹ்யாலம்பநஸாேபக்ஷாஸ்। தம் அஜம் ஜகத: பதிம்। ௧।௰௫
இஜ்யாபூஜாநமஸ்கார । ஸுஸ்ரூஷாபிர் அஹர்நிஸம்। ௧।௰௫௧
வ்ரேதாபவாைஸர் விவிைதர்। ப்ராஹ்மணாநாம் ச தர்பைண:। ௧।௰௫௧
ைதஸ் ைதஸ் சாபிமைத: காைமர்। ேய ச ேசதஸி துஷ்டிதா:। ௧।௰௫௨
அபரிச்ேசத்யமாஹாத்ம்யம்। ஆராதயத ேகஸவம்। ௧।௰௫௨
தந்நிஷ்டாஸ் தத்கததியஸ்। தத்கர்மாணஸ் ததாஸ்ரயா:। ௧।௰௫௩
தத்த்ருஷ்டயஸ் தந்மநஸ:। ஸர்வஸ்மிந் ஸ இதி ஸ்தித:। ௧।௰௫௩
ஸமஸ்தாந்ய் அத கர்மாணி। தத்ர ஸர்வாத்மநாத்மநி। ௧।௰௫௪
ஸம்ந்யஸ்யத்வம் ஸ வ: கர்தா। ஸமஸ்தாவரணக்ஷயம்। ௧।௰௫௪
ஏதத் தத் அக்ஷரம் ப்ரஹ்ம। ப்ரதாநபுருஷாவ் உெபௗ। ௧।௰௫௫
யேதா யஸ்மிந் யதா ேசாெபௗ। ஸர்வவ்யாபிந்ய் அவஸ்திெதௗ।
௧।௰௫௫
பர: பராணாம் பரம:। ஸ ஏக: புருேஷாத்தம:। ௧।௰௫௬
யஸ்யாபிந்நம் இதம் ஸர்வம்। யச் ேசங்கம் யச் ச ேநங்கதி। ௧।௰௫௬
தம் ஆராத்ய ஜகந்நாதம்। ேமாக்ஷகாரணம் அவ்யக்தம்। ௧।௰௫௭
அசிந்த்யம் அபரிக்ரஹம்। க்ரியாேயாேகந முச்யேத। ௧।௰௫௭
இதி ேத ப்ரஹ்மண: ஸ்ருத்வா। ரஹஸ்யம் க்ருஷிஸத்தமா:। ௧।௰௫௮
நராணாம் உபகாராய। ேயாகஸாஸ்த்ராணி சக்ரிேர। ௧।௰௫௮
க்ரியாேயாகபராணஹீ । முக்திகார்யாண்ய் அேநகஸ:। ௧।௰௫௮
ஆராத்யேத ஜகந்நாேதா। யதநுஷ்டாநதத்பைர:। ௧।௰௫௯

பரமாத்மா ஹ்ருஷீேகஸ:। ஸர்ேவஸ: ஸர்வபாவந:। ௧।௰௫௯
தாநி ேத ந்ருபஸார்தூல। ஸர்வபாபஹராண்ய் அஹம்। ௧।௰௬
வŠயாமி ஸ்ரூயதாம் அந்யத்। ரஹஸ்யம் இதம் உத்தமம்। ௧।௰௬
ஸம்ஸாரார்ணவமக்நாநாம்। விஷயாக்ராந்தேசதஸாம்। ௧।௰௬௧
உத்தாரம் இச்சதாம் தஸ்மாத்। ப்ருஸம் யந் நாந்தைரர் அபி। ௧।௰௬௧
விஷ்ணுேபாதம் விநா நாந்யத்। கிம்சித் அஸ்தி பராயணம்। ௧।௰௬௧
உத்திஷ்டம்ஸ் சிந்தய ஹரிம்। வ்ரஜம்ஸ் சிந்தய ேகஸவம்। ௧।௰௬௨
புஞ்ஜம்ஸ் சிந்தய ேகாவிந்தம்। ஸ்வபம்ஸ் சிந்தய மாதவம்। ௧।௰௬௨
ஏவம் ஏகாக்ரசித்தஸ் த்வம்। ஸம்ஸ்ரிேதா மதுஸூதநம்। ௧।௰௬௩
ஜந்மம்ருத்யுஜராக்ராஹம்। ஸம்ஸாராம்பஸ் தரிஷ்யஸி। ௧।௰௬௩
அநந்தம் ஈட்யம் புருஷம் புராணம்। ஜகத்விதாதாரம் அஜம் ஜநித்ர்யம்।
௧।௰௬௪
ஸமாஸ்ரிதா ேய ஹரிம் ஈஸிதாரம்। ேதஷாம் பேவா நாஸ்தி ஹி
முக்திபாஜாம்। ௧।௰௬௪
ஸ்ரூயதாம் குருஸார்தூல। ஸம்வாேதா அயம் அநுத்தம:। ௨।௰௰௧
அம்பரீஷஸ்ய ராஜர்ேஷ:। ஸஹ ேதேவந சக்ரிணா। ௨।௰௰௧
அம்பரீேஷா மஹீபால:। பாலயந்ந் ஏவ ேமதிநீம்। ௨।௰௰௨
உத்விக்ந ஏவ த்வந்த்வாந்தம்। அபப்ஸு ீ : புருஷர்ஷப:। ௨।௰௰௨
ேதவேதவாத் ஸ ேகாவிந்தாத்। அபப்ஸுர் ீ த்வந்த்வஸம்க்ஷயம்।
௨।௰௰௩
தபஸ் ேதேப நிராஹாேரா। க்ருணந் ப்ரஹ்ம ஸநாதநம்। ௨।௰௰௩
தஸ்ய காேலந மஹதா। பக்திம் உத்வஹத: பராம்। ௨।௰௰௪
துேதாஷ பகவாந் விஷ்ணு:। ஸர்வேலாகபதி: ப்ரபு:। ௨।௰௰௪

ஸ ரூபம் ஐந்த்ரம் ஆஸ்தாய। தம் உவாச மஹீபதிம்। ௨।௰௰௫
ேமககம்பரநிர்ேகாேஷா ீ । வாரேணந்த்ரகதிஸ் ததா। ௨।௰௰௫
ராஜர்ேஷ வத யத் கார்யம்। தவ ேசதஸ்ய் அவஸ்திதம்। ௨।௰௰௬
வரேதா அஹம் அநுப்ராப்ேதா। வரம் வரய ஸுவ்ரத। ௨।௰௰௬
ஏவம் உக்தஸ் தேதா ராஜா। விேலாக்ய ச புரம்தரம்। ௨।௰௰௭
ப்ரத்யுவாசார்க்யம் உத்யம்ய। ஸ்வாகதம் ேத அஸ்த்வ் இதி ப்ரேபா।
௨।௰௰௭
நாஹம் ஆராதயாமி த்வாம்। தவ பத்ேதா அயம் அஞ்ஜலி:। ௨।௰௰௮
வரார்திநாம் த்வம் வரத:। ப்ரயச்சாபிமதாந் வராந்। ௨।௰௰௮
வரார்தாய த்வயாந்ையஸ் ச। க்ரியேத ந்ருபேத தப:। ௨।௰௰௯
ஸ கிம் அர்தம் த்வம் அஸ்மத்ேதா। ந க்ருஹ்ணாஸ்ய் அபிவாம்சிதம்।
௨।௰௰௯
ந வரார்தம் அயம் யத்நஸ்। த்வத்ேதா ேதவபேத மம। ௨।௰௧
விஷ்ேணார் ஆராதநார்தாய। வித்தி மாம் த்வம் க்ருேதாத்யமம்। ௨।௰௧
அஹம் ஹி ஸர்வேதவாநாம்। த்ைரேலாக்யஸ்ய தேதஸ்வர:। ௨।௰௧௧
பாலயந்தி மைமவாஜ்ஞாம்। ஆதித்யாத்யா: ஸதா ஸுரா:। ௨।௰௧௧
ஆதித்யா வஸேவா ருத்ரா। நாஸத்ெயௗ மருதாம் கணா:। ௨।௰௧௨
ப்ரஜாநாம் பதய: ஸாத்யா। விஸ்ேவேதவா மஹர்ஷய:। ௨।௰௧௨
குர்வந்த்ய் ஏேத மைமவாஜ்ஞாம்। ஸித்தகந்தர்வபந்நகா:। ௨।௰௧௩
மத்ேதா ஹி ேகா அந்ேயா வரத:। ப்ரதிக்ருஹ்ணஷ்வீ வாஞ்சிதம்।
௨।௰௧௩
த்வம் இந்த்ர: ஸத்யம் ஏைவதத்। ேதவஸ் த்ரிபுவேநஸ்வர:। ௨।௰௧

த்வயாபி ப்ராப்தம் ஐஸ்வர்யம்। யதஸ் தம் ேதாஷயாம்ய் அஹம்।
௨।௰௧௪
த்ைரேலாக்யம் தவ ேதேவஸ। வேஸ யஸ்ய மஹாத்மந:।
௰௰௨।௰௧௫௧
ஸப்ேதாதேர ஸயா ேலாகாஸ்। தம் ஈஸம் ேதாஷயாம்ய் அஹம்।
௨।௰௧௫
யஸ்ய த்வம் அமைர: ஸர்ைவ:। ஸமேவதா: ஸுேரஸ்வர। ௨।௰௧௬
ேதஹப்ராப்ேதா அந்தரஸ்ேதா ைவ। தம் நமாமி ஜநார்தநம்। ௨।௰௧௬
நிேமேஷா ப்ரஹ்மேணா ராத்ரிர்। உந்ேமேஷா யஸ்ய வாஸர:। ௨।௰௧௭
தம் ஈட்யம் ஈஸம் அஜரம்। ப்ரணேதா அஸ்மி ஜநார்தநம்। ௨।௰௧௭
ேயா ஹர்தா ஜகேதா ேதவ:। கர்தா பாலாயிதா ச ய:। ௨।௰௧௮
த்ரயஸ்யாஸ்ய ச ேயா ேயாநிஸ்। தம் விஷ்ணும் ேதாஷயாம்ய் அஹம்।
௨।௰௧௮
ஹிரண்யகஸிபு: பூர்வம்। ஹிரண்யாக்ஷஸ் ச ேத ரிபு:। ௨।௰௧௯
தவாநுகம்பயா ேயந। ஹெதௗ ைதத்ெயௗ நேதா அஸ்மி தம்। ௨।௰௧௯
பலிநாபஹ்ருதம் ஸக்ர। தத்தம் ேயந புரா தவ। ௨।௰௨
த்ைரேலாக்யராஜ்யம் தம் பத்த்வா। தம் நமாமி ஜநார்தநம்। ௨।௰௨
ப்ரஸதீ ஸக்ர கச்ச த்வம்। அஹம் அப்ய் அத்ர ஸம்ஸ்தித:। ௨।௰௨௧
தபஸ் தப்ஸ்ேய ஜகந்நாதம்। த்ரஷ்டும் நாராயணம் ஹரிம்। ௨।௰௨௧
ஏவம் உக்தஸ் ததஸ் ேதந। ஸக்ரரூபீ ஜநார்தந:। ௨।௰௨௨
புநர் அப்ய் ஆஹ தம் ேகாபாத்। பார்திவம் தபஸி ஸ்திதம்। ௨।௰௨௨
யதி மத்வசநாத் அத்ய। ந பவாம்ஸ் த்யŠயேத தப:। ௨।௰௨௩
வஜ்ரம் ேத ப்ரஹரிஷ்யாமி। புத்யஸ்ைவதத் யதீச்சஸி। ௨।௰௨௩

நாப்ய் அல்பம் அபராதம் ேத। கேராமி த்ரிதேஸஸ்வர। ௨।௰௨௪
ததாபி வதேயாக்யம் மாம்। மந்யேஸ ேசத் க்ஷிபாயுதம்। ௨।௰௨௪
ஸ்ரூயேத கில ேகாவிந்ேத। பக்திம் உத்வஹதாம் ந்ருணாம்। ௨।௰௨௫
ஸம்ஸாரார்ணாவபதாநாம் ீ । த்ரிதஸா: பரிபந்திந:। ௨।௰௨௫
தாபேஸா அஹம் க்வ நி:ஸங்க:। க்வ ச ேகாபஸ் தேவத்ருஸ:।
௨।௰௨௬
விஜ்ஞாதம் ஏதத் ேகாவிந்த । பக்திவிக்ேநாபபாதிதம்। ௨।௰௨௬
பவந்தி பஹேவா விக்நா। நேர ஸ்ேரய:பராயேண। ௨।௰௨௭
ேகாவிந்தபக்த்யப்யதிகம்। ஸ்ேரயஸ் சாந்யந் ந வித்யேத। ௨।௰௨௭
ஸ த்வம் ப்ரஹர வா மா வா। மயி வஜ்ரம் புரம்தர। ௨।௰௨௮
நாஹம் உத்ஸ்ருஜ்ய ேகாவிந்தம்। அந்யம் ஆராதயாமி ேபா:। ௨।௰௨௮
ந சாபி வஜ்ரம் வஜ்ரீ வா। த்வம் ச நாந்ேய ஸுராஸுரா:। ௨।௰௨௯
ஸக்தா நிஹந்தும் ஈஸாேந। ஹ்ருதயஸ்ேத ஜநார்தேந। ௨।௰௨௯
கிம் ச ேநா பஹுேநாக்ேதந। நாஹம் வŠயாம்ய் அத: பரம்। ௨।௰௩
யேதப்ஸிதம் குருஷ்வ த்வம்। கரிஷ்ேய அஹம் அபப்ஸிதம் ீ । ௨।௰௩
ஏவம் உக்த்வா ஸுரபதிம்। பார்திவ: ஸ புநஸ் தப:। ௨।௰௩௧
சசார ெமௗநம் ஆஸ்தாய। ேதநாதுஷ்யத ேகஸவ:। ௨।௰௩௧
ஸம்தர்ஸயாம் ஆஸ தத:। ஸ்வம் வபு: ைகடபார்தந:। ௨।௰௩௨
சதுர்புஜம் உதாராங்கம்। ஸங்கசக்ரகதாதரம்। ௨।௰௩௨
கிரீடஸ்ரக்தரம் ஸ்பஷ்டம்। நீேலாத்பலதலச்சவிம்। ௨।௰௩௩
ஐராவதஸ் ச கருடஸ்। தத்க்ஷணாத் ஸமத்ருஸ்யத। ௨।௰௩௩
ஸ ச ராஜவேரா ேதவம்। பதவாஸஸம் ீ அச்யுதம்। ௨।௰௩௪
விேலாக்ய பக்திஸிரஸா। ஸஹைஸவ மஹீம் யெயௗ। ௨।௰௩௪

ப்ரத்யுவாச ச பூபால:। ப்ரணிபத்ய க்ருதாஞ்ஜலி:। ௨।௰௩௫
ேராமாஞ்சிததநு: ஸ்ேதாத்ரம்। பத்மநாபம் தேதா அஸ்துவத்। ௨।௰௩௫
ஆதிேதவ ஜயாேஜய। ஜய ஸர்காதிகாரக। ௨।௰௩௬
ஜயாஸ்பஷ்டப்ரகாஸாண்ட। ப்ருஹந்மூர்ேத ஜயாக்ஷர। ௨।௰௩௬
ஜய ஸர்வகதாசிந்த்ய। ஜய ஜந்மஜராபஹ। ௨।௰௩௭
ஜய வ்யாபிஞ் ஜயாேபத। ஸர்வபூேதஷ்வ் அவஸ்தித। ௨।௰௩௭
ஜய யஜ்ஞபேத நாத। ஹவ்யகவ்யாஸநாவ்யய। ௨।௰௩௮
ஜய விஜ்ஞாதஸித்தாந்த। மாயாேமாஹக ேகஸவ। ௨।௰௩௮
ேலாகஸ்தித்யர்தம் அநக। வராஹ ஜய பூதர। ௨।௰௩௯
ந்ருஸிம்ஹ ஜய ேதவாரி । வக்ஷ:ஸ்தலவிதாரண। ௨।௰௩௯
ேதவாநாம் அரிபதாநாம் ீ । ஆர்திநாஸந வாமந। ௨।௰௪
ஜய க்ராந்தஸமஸ்ேதார்வ ீ। நப:ஸ்வர்ேலாகபாவந। ௨।௰௪
ஜிதம் ேத ஜகதாம் ஈஸ। ஜிதம் ேத ஸர்வ ஸர்வத। ௰௰௨।௨
ஜிதம் ேத ஸர்வபூேதஸ। ேயாகித்ேயய நேமா அஸ்து ேத। ௨।௰௪௧
நேமா அஸ்த்வ் அவ்யபேதஸ்யாய। நம: ஸூŠமஸ்வரூபிேண।
௨।௰௪௨
நமஸ் த்ரிமூர்தேய துப்யம்। விஸ்வமூர்ேத நேமா அஸ்து ேத। ௨।௰௪௨
ப்ரஹ்மாத்ையஸ் சிந்த்யேத ரூபம்। யத் தத் ஸதஸத: பரம்। ௨।௰௪௩
விேஸைஷர் அவிேஸஷ்யாய। தஸ்ைம துப்யம் நேமா நம:। ௨।௰௪௩
புருஷாக்யம் தேதா ரூபம்। நிர்குணம் குணேபாக்த்ரு ச। ௨।௰௪௪
ப்ரக்ருேத: பரத: ஸூŠமம்। தந் நமஸ்யாமி ேத ஹேர। ௨।௰௪௪
அவ்யக்தாதிவிேஸஷாந்தம்। அதிஸூŠமதமம் மஹத்। ௨।௰௪௫

ப்ராக்ருதம் தவ தத் ரூபம்। தஸ்ைம ேதவ நமாம்ய் அஹம்। ௨।௰௪௫
ரூைபர் நாநாவிைதர் யஸ் ச। தத்ரூபாந்தரேகாசரம்। ௨।௰௪௬
லீலயா வ்யவஹாரஸ் ேத। தஸ்ைம ேதவாத்மேந நம:। ௨।௰௪௬
ப்ரஸதீ விஷ்ேணா ேகாவிந்த। ஸங்கசக்ரகதாதர। ௨।௰௪௭
தராதராரவிந்தாக்ஷ। வாஸுேதவ மேஹஸ்வர। ௨।௰௪௭
இத்தம் ஸ்துேதா ஜகந்நாத:। ப்ேராக்தவாந் இதி ேகஸவ:। ௨।௰௪௮
அம்பரீஷம் ப்ருதிவஸம் ீ । ஜகத் ஸம்நாதயந் கிரா। ௨।௰௪௮
அம்பரீஷ ப்ரஸந்ேநா அஸ்மி। பக்த்யா ஸ்ேதாத்ேரண சாநக। ௨।௰௪௯
வரம் வ்ருணஷ்வீ தர்மஜ்ஞ। யத் ேத மநஸி வர்தேத। ௨।௰௪௯
ஏஷ ஏவ வர: ஸ்லாக்ேயா। யத் த்ருஷ்ேடா அஸி ஜகத்பேத। ௨।௰௫
த்வத்தர்ஸநம் அபுண்யாநாம்। ஸ்வப்ேநஷ்வ் அபி ஹி துர்லபம்। ௨।௰௫
பால்யாத் ப்ரப்ருதி யா ேதவ। த்வயி பக்திர் மமாச்யுத। ௨।௰௫௧
ேவத்தி தாம் பகவாந் ஏவ। ஹ்ருதிஸ்த: ஸர்வேதஹிநாம்। ௨।௰௫௧
த்வத்ப்ரஸாதாந் மேமஸாந। ராஜ்யம் அவ்யாஹதம் புவி। ௨।௰௫௨
ேகாஸதண்ெடௗ ததாதீவ। ஸரீராேராக்யம் உத்தமம்। ௨।௰௫௨
ஸ்த்ரிேயா அந்நபாநஸாமர்த்யா। ஹாநி: ஸ்வல்பாபி நாஸ்தி ேம।
௨।௰௫௩
பலம் நாகஸஹஸ்ரஸ்ய। தாரயாம்ய் அரிஸூதந। ௨।௰௫௩
ஸம்ததிர் நிப்ருதா ப்ருத்யா। ஸாநுராகாஸ் ச ேம ஜநா:। ௨।௰௫௪
தர்மஹாநிஸ் ச ேதேவஸ। ந ஹி ேம பாலேந புவ:। ௨।௰௫௪
யத் யத் இச்சாம்ய் அஹம் தத் தத்। ஸர்வம் அஸ்தி ஜகத்பேத।
௨।௰௫௫
ஏேதைநவாநுமாேநந। ப்ரஸந்ேநா பகவாந் இதி। ௨।௰௫௫

ஜ்ஞாதம் மயா ஹி ேகாவிந்ேத। நாப்ரஸந்ேந விபூதய:। ௨।௰௫௬
ஏவம் ஸர்வஸுகாஹ்லாத । மத்யஸ்ேதா அபி ச ேகஸவ। ௨।௰௫௬
புநராவ்ருத்திது:காநாம்। த்ராஸாத் உத்விக்நமாநஸ:। ௨।௰௫௭
மயி ப்ரஸாதாபிமுகம்। மநஸ் ேத யதி ேகஸவ। ௨।௰௫௭
தந் மாம் அகாேத ஸம்ஸாேர। மக்நம் உத்தர்தும் அர்ஹஸி। ௨।௰௫௭
ஸுகாநி தாநி ைநவாந்ேத। ேயஷாம் து:கம் ந தத் ஸுகம்। ௨।௰௫௮
யத் அந்ேத து:கம் ஆகாமி। கிம்பாகஸ்ையவ பக்ஷணம்। ௨।௰௫௮
ஸ ப்ரஸாதம் குரு குேரா। ஜகதாம் த்வம் ஜநார்தந। ௨।௰௫௯
ஜ்ஞாநதாேநந ேயேநமாம்। வாகுராந் நிஸ்தேரமஹி। ௨।௰௫௯
இத்ய் உக்தஸ் தஸ்ய ேகாவிந்த:। கதயாம் ஆஸ ேயாகவித்। ௨।௰௬
ேயாகம் நிர்பஜம்ீ அத்யந்த । து:கஸம்ேயாகேபஷஜம்। ௨।௰௬
உபதிஷ்ேட தேதா ேயாேக। ப்ரணிபத்யாச்யுதம் ந்ருப:। ௨।௰௬௧
புந: ப்ராஹ மஹாபாஹுர்। விநயாவநத: ஸ்தித:। ௨।௰௬௧
ேதவேதவ த்வயா ேயாேகா। ய: ப்ேராக்ேதா மதுஸூதந। ௨।௰௬௨
ைநஷ ப்ராப்ேயா மயா நாந்ையர்। மாநைவர் அஜிேதந்த்ரிைய:।
௨।௰௬௨
விஷயா துர்ஜயா: பும்பிர்। இந்த்ரியாகர்ஷிண: ஸதா। ௨।௰௬௩
இந்த்ரியாணாம் ஜயம் ேதஷு। க: ஸக்தாநாம் கரிஷ்யதி। ௨।௰௬௩
அஹம் மேமதி சாக்யாதி। துர்ஜயம் சஞ்சலம் மந:। ௨।௰௬௪
ராகாதய: கதம் ேஜதும்। ஸக்யா ஜந்மாந்தைரர் அபி। ௨।௰௬௪
ேஸா அஹம் இச்சாமி ேதேவஸ। த்வத்ப்ரஸாதாத் அநிர்ஜிைத:।
௨।௰௬௫

ராகாதிபிர் அமர்த்யத்வம்। ப்ராப்தும் ப்ரக்ஷீணகல்மஷ:। ௨।௰௬௫
யத்ய் ஏவம் முக்திகாமஸ் த்வம்। நரநாத ஸ்ருணுஷ்வ தத்। ௨।௰௬௬
க்ரியாேயாகம் ஸமஸ்தாநாம்। க்ேலஸாநாம் ஹாநிகாரகம்। ௨।௰௬௬
மந்மநா பவ மத்பக்ேதா। மத்யாஜீமாம் நமஸ்குரு। ௨।௰௬௭
மாம் ஏைவஷ்யஸி யுக்த்ைவவம்। ஆத்மாநம் மத்பராயண:। ௨।௰௬௭
மத்பாவநா மத்யஜநா। மத்பக்தா மத்பராயணா:। ௨।௰௬௮
மம பூஜாபராஸ் ைசவ। மயி யாந்தி லயம் நரா:। ௨।௰௬௮
ஸர்வபூேதஷு மாம் பஸ்ய। ஸமவஸ்திதம் ஈஸ்வரம்। ௨।௰௬௯
கர்தாஸி ேகந ைவரத்வம்। ஏவம் ேதாஷாந் ப்ரஹாஸ்யஸி। ௨।௰௬௯
ஜங்கமாஜங்கேம ஜ்ஞாேத। மய்ய் ஆத்மநி ததா தவ। ௨।௰௭
ராகேலாபாதிநாேஸந। பவித்ரீ க்ருதக்ருத்யதா। ௨।௰௭
பக்த்யாதிப்ரவணஸ்யாபி। சஞ்சலத்வாந் மேநா யதி। ௨।௰௭௧
மய்ய் அநாஸாதவத் பூப। குரு மத்ரூபிணம்ீ தநும்। ௨।௰௭௧
ஸுவர்ணரஜதாத்ையஸ் த்வம்। ைஸலம்ருத்தாருேலகஜாம்। ௨।௰௭௨
பூஜாமஹர்ைஹர் விவிைத:। ஸம்பூஜய ச பார்திவ। ௨।௰௭௨
தஸ்யாம் சித்தம் ஸமாேவஸ்ய। த்யாஜயாந்யாந் வ்யபாஸ்ரயாந்।
௨।௰௭௩
பூஜிதா ைஸவ ேத பக்த்யா। த்யாதா ைசேவாபகாரிண।ீ ௨।௰௭௩
கச்சம்ஸ் திஷ்டந் ஸ்வபந் புஞ்ஜம்ஸ்। தாம் ஏவாக்ேர ச ப்ருஷ்டத:।
௨।௰௭௪
உபர்ய் அதஸ் ததா பார்ஸ்ேவ। சிந்தயாந்தஸ் ததாத்மந:। ௨।௰௭௪
ஸ்நாைநஸ் தீர்ேதாதைகர் ஹ்ருத்ைய:। புஷ்பகந்தாநுேலபைந:।
௨।௰௭௫

வாேஸாபிர் பூஷைணர் பŠையர்। கீதவாத்ையர் மேநாஹைர:।
௨।௰௭௫
யச் ச யச் ச ந்ருேபஷ்டம் ேத। கிம்சித் ேபாஜ்யாதி ேதந தாம்। ௨।௰௭௬
பக்திநம்ேரா நரஸ்ேரஷ்ட। ப்ரீணயார்சாம் க்ருதாம் மம। ௨।௰௭௬
ராேகணாக்ருஷ்யேத ேசேதா। கந்தர்வாபிமுகம் யதி। ௨।௰௭௭
மயி புத்திம் ஸமாேவஸ்ய। காேயதா மம தாம் கதாம்। ௨।௰௭௭
கதாயாம் ரமேத ேசேதா। யதி தத்பாவநா மம। ௨।௰௭௮
ஸ்ேராதவ்யா ப்ரீதியுக்ேதந। அவதாேரஷு யா கதா। ௨।௰௭௮
ஏவம் மய்ய் அர்பிதமநாஸ்। ேசதேஸா ேய வ்யபாஸ்ரயா:। ௨।௰௭௯
ேஹயாஸ் தாந் அகிலாந் பூப। பரித்யŠயஸ்ய் அபர்ீ பவ। ௨।௰௭௯
அக்ஷீணராகேதாேஷா அபி। மத்க்ரியா பரம: பரம்। ௨।௰௮
பதம் ஆப்ஸ்யஸி மா ைபஸ் த்வம்। மய்ய் அர்பிதமநா பவ। ௨।௰௮
மயி ஸம்ந்யஸ்ய ஸர்வம் த்வம்। ஆத்மாநம் யத் தவாஸ்தி ச।
௨।௰௮௧
மதர்தம் குரு கர்மாணி। மா ச தர்மவ்யதிக்ரமம்। ௨।௰௮௧
ராஜ்யம் குரு நரஸ்ேரஷ்ட। நிேவத்ய ப்ருதிவம்ீ மம। ௨।௰௮௨
தத்வ்யாகாதபரா ேய ச। ஜஹி தாந் அவநீபேத। ௨।௰௮௨
ஏேதைநேவாபேதேஸந। வ்யாக்யாதம் அகிலம் தவ। ௨।௰௮௩
க்ரியாேயாகம் ஸமாஸ்தாய। மய்ய் அர்பிதமநா பவ। ௨।௰௮௩
மத்திதாய ஜகந்நாத। க்ரியாேயாகாஸ்ரிதம் மம। ௨।௰௮௪
விஸ்தேரேணதம் ஆக்யாஹி। ப்ரஸந்நஸ் த்வம் ஹி து:கஹா।
௨।௰௮௪

த்வாம் க்ருேதந ஹி ேநா வக்தும்। ஸமர்ேதா அந்ேயா ஜகத்குேரா।
௨।௰௮௫
குஹ்யம் ஏதத் பவித்ரம் ச। தத் ஆசŠய ப்ரஸதீ ேம। ௨।௰௮௫
ஆக்யாஸ்யத்ய் ஏதத் அகிலம்। வஸிஷ்டஸ் ேத புேராஹித:। ௨।௰௮௬
மத்ப்ரஸாதாத் அவிகலம்। ஸ ச ேவத்ஸ்யத்ய் அேஸஷத:। ௨।௰௮௬
இத்ய் உக்த்வாந்தர்தேத ேதவ:। ஸர்வேலாேகஸ்வேரா ஹரி:। ௨।௰௮௭
ஸ ச ராஜா வநாத் பூேயா। நிஜம் அப்யாகமத் புரம்। ௨।௰௮௭
ராஜ்யஸ்தஸ் து மஹீபால:। ப்ரணிபத்ய புேராஹிதம்। ௩।௰௰௧
வஸிஷ்டம் பரிபப்ரச்ச। விஷ்ேணார் ஆராதநம் ப்ரதி। ௩।௰௰௧
ேதவேதேவந பகவந்ந்। ஆதிஷ்ேடா அஸி மஹாத்மநா। ௩।௰௰௨
க்ரியாேயாகாஸ்ரிதம் ஸர்வம்। வ்யாக்யாஸ்யதி பவாந் கில। ௩।௰௰௨
ஸ த்வாம் ப்ருச்சாம்ய் அஹம் ஸர்வம்। க்ரியாேயாேகந ேகஸவம்।
௩।௰௰௩
ஸம்ேதாஷயிதும் ஈஸாநம்। யதா ஸŠயாமி தத் வத। ௩।௰௰௩
ேதவப்ரஸாதாத் அகிலா। மமாபி ஸ்ம்ருதிர் ஆகதா। ௩।௰௰௪
ஜ்ஞாநம் ஏதத் அேஸஷம் ேத। கதயாமி நிேபாத தத்। ௩।௰௰௪
பக்திமாந் அபவத் ைதத்ேயா। ஹிரண்யகஸிேபா: ஸுத:। ௩।௰௰௫
நாராயேண மஹாப்ரஜ்ஞ:। ஸர்வேலாகபராயேண। ௩।௰௰௫
ஸ பப்ரச்ச ப்ருகுஸ்ேரஷ்டம்। ஸுக்ரம் ஆத்மபுேராஹிதம்। ௩।௰௰௫
பகவந் ந்ருஸிம்ஹரூபஸ்ய। விஷ்ேணாஸ் தாதம் ஜிகாம்ஸத:।
௩।௰௰௬
த்ருஷ்டம் ேதேஹ மயா ஸர்வம்। த்ைரேலாக்யம் பூர்புவாதிகம்।
௩।௰௰௬

ப்ரஹ்மா ப்ரஜாபதிஸ் ேசந்த்ேரா। ருத்ைர: பஸுபதி: ஸஹ। ௩।௰௰௭
வஸேவா அஷ்ெடௗ ததாதித்யா। த்வாதஸாஹ:க்ஷபா மஹீ। ௩।௰௰௭
திேஸா நபஸ் தாரெகௗகம்। நக்ஷத்ரக்ரஹஸம்குலம்। ௩।௰௰௮
அஸ்விெநௗ மருத: ஸாத்யா। விஸ்ேவேதவாஸ் தத ர்ஷய:। ௩।௰௰௮
வர்ஷாசலாஸ் ததா நத்ய:। ஸப்த ஸப்த குலாசலா:। ௩।௰௰௯
ஸமுத்ரா: ஸப்த க்ருதவ:। காந்தாராணி வநாநி ச। ௩।௰௰௯
நகரக்ராமதருபி:। ஸமாேவதம் ச பூதலம்। ௩।௰௰௯
ஏதச் சாந்யச் ச யத் கிம்சித்। ேதவர்ஷிபித்ருமாநவம்। ௩।௰௧
ஸதிர்யகூர்த்வபாதாலம்। தஸ்ய த்ருஷ்டம் தெநௗ மயா। ௩।௰௧
ேஸா அஹம் தம் அஜரம் ேதவம்। துஷ்டைதத்யநிவர்ஹணம்। ௩।௰௧௧
ஆராதயிதும் இச்சாமி। பகவம்ஸ் த்வதநுஜ்ஞயா। ௩।௰௧௧
அநுக்ராஹ்ேயா அஸ்மி யதி ேத। மமாயம் பக்திமாந் இதி। ௩।௰௧௨
தந் மேமாபதிஸாத்ய த்வம்। மஹத் ஆராதநம் ஹேர:। ௩।௰௧௨
அநுக்ராஹ்ேயா அஸி ேதவஸ்ய। நூநம் அவ்யக்தஜந்மந:। ௩।௰௧௩
ஆராதநாய ைதத்ேயந்த்ர। யத் ேத தத்ப்ரவணம் மந:। ௩।௰௧௩
யதி ேதவபதிம் விஷ்ணும்। ஆராதயிதும் இச்சஸி। ௩।௰௧௪
பகவந்தம் அநாத்யந்தம்। பவ பாகவேதா அஸுர। ௩।௰௧௪
ந ஹ்ய் அபாகவைதர் விஷ்ணுர்। ஜ்ஞாதும் ஸ்ேதாதும் ச தத்த்வத:।
௩।௰௧௫
த்ரஷ்டும் வா ஸக்யேத மர்த்ைய:। ப்ரேவஷ்டும் குத ஏவ ஹி। ௩।௰௧௫
ஜந்மபிர் பஹுபி: பூதா। நராஸ் தத்கதேசதஸ:। ௩।௰௧௬
பவந்தி ைவ பாகவதாஸ்। ேத விஷ்ணும் ப்ரவிஸந்தி ச। ௩।௰௧௬
அேநகஜந்மஸம்ஸார । சிேத பாபஸமுச்சேய। ௩।௰௧

நாக்ஷீேண ஜாயேத பும்ஸாம்। ேகாவிந்தாபிமுகீமதி:। ௩।௰௧௭
ப்ரத்ேவஷம் யாதி ேகாவிந்ேத। த்விஜாந் ேவதாம்ஸ் ச நிந்ததி। ௩।௰௧௮
ேயா நரஸ் தம் விஜாநீயாத்। அஸுராம்ஸஸமுத்பவம்। ௩।௰௧௮
பாஷண்ேடஷு ரதி: பும்ஸாம்। ேஹதுவாதாநுகூலதா। ௩।௰௧௯
ஜாயேத விஷ்ணுமாயாம்ப: । பதிதாநாம் துராத்மநாம்। ௩।௰௧௯
யதா பாபக்ஷய: பும்ஸாம்। ததா ேவதத்விஜாதிஷு। ௩।௰௨
விஷ்ெணௗ ச யஜ்ஞபுருேஷ। ஸ்ரத்தா பவதி ேத யதா। ௩।௰௨
யதா ஸ்வல்பாவேஸஷஸ் து। நராணாம் பாபஸம்சய:। ௩।௰௨௧
பவந்தி ேத பாகவதாஸ்। ததா ைதத்யபேத நரா:। ௩।௰௨௧
ப்ராம்யதாம் அத்ர ஸம்ஸாேர। நராணாம் கர்மதுர்கேம। ௩।௰௨௨
ஹஸ்தாவலம்பேதா ஹ்ய் ஏேகா। பக்திப்ரீேதா ஜநார்தந:। ௩।௰௨௨
ஸ த்வம் பாகவேதா பூத்வா। ஸர்வபாபஹரம் ஹரிம்। ௩।௰௨௩
ஆராதய பரம் பக்த்யா। ப்ரீதிம் ஏஷ்யதி ேகஸவ:। ௩।௰௨௩
கிம்லக்ஷணா பாகவதா। பவந்தி புருஷா குேரா। ௩।௰௨௪
யச் ச பாகவைத: கார்யம்। தந் ேம கதய பார்கவ। ௩।௰௨௪
கர்மணா மநஸா வாசா। ப்ராணிநாம் ேயா ந ஹிம்ஸக:। ௩।௰௨௫
பாவபக்தஸ் ச ேகாவிந்ேத। ைதத்ய பாகவேதா ஹி ஸ:। ௩।௰௨௫
ேயா ப்ராஹ்மணாம்ஸ் ச ேவதாம்ஸ் ச। நித்யம் ஏந்வாநுமம்ஸ்யதி।
௩।௰௨௬
ந ச த்ேராக்தா பரம் வாேத। ைதத்ய பாகவேதா ஹி ஸ:। ௩।௰௨௬
ஸர்வாந் ேதவாந் ஹரிம் ேவத்தி। ஸர்வேலாகாம்ஸ் ச ேகஸவம்।
௩।௰௨௭

ேதப்யஸ் ச நாந்யம் ஆத்மாநம்। ைதத்ய பாகவேதா ஹி ஸ:। ௩।௰௨௭
ேதவம் மநுஷ்யம் அந்யம் வா। பஸுபக்ஷிபிபலிகாந் ீ । ௩।௰௨௮
தருபாஷாணகஷ்டாதி। பூம்யம்ேபாககநம் திஸ:। ௩।௰௨௮
ஆத்மாநம் வாபி ேதேவஸாந்। நாதிரிக்தம் ஜநார்தநாத்। ௩।௰௨௯
ேயா பேஜத விஜாநீஷ்வ। தம் ைவ பாகவதம் நரம்। ௩।௰௨௯
ஸர்வம் பகவேதா பாேவா। யத் பூதம் பவஸம்ஸ்திதம்। ௩।௰௩
இதி ேயா ைவ விஜாநாதி। ஸ து பாகவேதா நர:। ௩।௰௩
பவபதிம்ீ ஹரத்ய் ஏஷ। பக்திபாேவந பாவித:। ௩।௰௩௧
பகவாந் இதி பாேவா ய:। ஸ து பாகவேதா நர:। ௩।௰௩௧
பாவம் ந குருேத யஸ் து। ஸர்வபூேதஷு பாபகம்। ௩।௰௩௨
கர்மணா மநஸா வாசா। ஸ து பாகவேதா நர:। ௩।௰௩௨
பாஹ்யார்தநிரேபேக்ஷா ேயா। பக்ேதா பகவத: க்ரியாம்। ௩।௰௩௩
பாேவந நிஷ்பாதயதி। ஜ்ேஞேயா பாகவதஸ் து ஸ:। ௩।௰௩௩
நாரேயா யஸ்ய ந ஸ்நிக்தா। ந ேசாதாஸீ ந வ்ருத்தய:। ௩।௰௩௪
பஸ்யத: ஸர்வம் ஏேவதம்। விஷ்ணும் பாகவேதா ஹி ஸ:। ௩।௰௩௪
ஸுதப்ேதேநஹ தபஸா। யஜ்ைஞர் வா பஹுதக்ஷிைண:। ௩।௰௩௫
தாம் கதிம் ந நரா யாந்தி। யாம் ைவ பாகவதா கதா:। ௩।௰௩௫
ேயாகச்யுைதர் பாகவைதர்। ேதவராஜ: ஸதக்ரது:। ௩।௰௩௬
அர்வாங் நிரீŠயேத யஜ்ஞீ। கிமு ேய ேயாகபாரகா:। ௩।௰௩௬
யஜ்ஞநிஷ்பத்தேய ேவதா। யஜ்ேஞா யஜ்ஞபேத: க்ருேத। ௩।௰௩௭
தத்ேதாஷணாய பாேவந। தஸ்மாத் பாகவேதா பவ। ௩।௰௩௭
ேயந ஸர்வாத்மநா விஷ்ெணௗ। பக்த்யா பாேவா நிேவஸித:। ௩।௰௩௮

ைதத்ேயஸ்வர க்ருதார்தத்வாச்। ஸ்லாக்ேயா பாகவேதா ஹி ஸ:।
௩।௰௩௮
அபி ந: ஸ குேல தந்ேயா। ஜாயேத குலபாவந:। ௩।௰௩௯
பகவாந் பக்திபாேவந। ேயந விஷ்ணுர் உபாஸித:। ௩।௰௩௯
ய: காரயதி ேதவார்சாம்। ஹ்ருதயாலம்பநம் ஹேர:। ௩।௰௪
ஸ நேரா விஷ்ணுஸாேலாக்யம்। உைபதி தூதகல்மஷ:। ௩।௰௪
யஸ் ச ேதவாலயம் பக்த்யா। விஷ்ேணா: காரயதி ஸ்வயம்। ௩।௰௪௧
ஸ ஸப்தபுருஷாம்ல் ேலாகாந்। விஷ்ேணார் நயதி மாநவ:। ௩।௰௪௧
யாவந்த்ய் அப்தாநி ேதவார்சா। ஹேரஸ் திஷ்டதி மந்திேர। ௩।௰௪௨
தாவத்வர்ஷஸஹஸ்ராணி। விஷ்ணுேலாேக ஸ ேமாதேத। ௩।௰௪௨
ேதவார்சா லக்ஷேணாேபதா। தத்க்ருஹம் ஸததம் திவி। ௩।௰௪௩
நிஷ்காமம் ச மேநா யஸ்ய। ஸ யாத்ய் அக்ஷரஸாத்ம்யதாம்। ௩।௰௪௩
புஷ்பாண்ய் அதிஸுகந்தீநி। மேநாஜ்ஞாநி ச ய: புமாந்। ௩।௰௪௪
ப்ரயச்சதி ஹ்ருஷீேகேஸ। தத்பாவகதமாநஸ:। ௩।௰௪௪
தூபாம்ஸ் ச விவிதாம்ஸ் தாம்ஸ் தாந்। கந்தாட்யம் சாநுேலபநம்।
௩।௰௪௫
தீபாவல்யுபஹாராம்ஸ் ச। யச் சாபஷ்டம் ீ அதாத்மந:। ௩।௰௪௫
நர: ேஸா அநுதிநம் யஜ்ஞம்। கேராத்ய் ஆராதநம் ஹேர:। ௩।௰௪௬
யஜ்ேஞேஸா பகவாந் விஷ்ணுர்। மைகர் அபி ஹி ேதாஷ்யேத।
௩।௰௪௬
பஹூபகரணா யஜ்ஞா। நாநாஸம்பாரவிஸ்தரா:। ௩।௰௪௭
ப்ராப்யந்ேத ேத தநயுைதர்। மநுஷ்ையர் நால்பஸம்சைய:। ௩।௰௪௭
பக்த்யா ச புருைஷ: பூஜா। க்ருதா தூர்வாங்குைரர் அபி। ௩।௰௪௮

ஹேரர் ததாதி ஹி பலம்। ஸர்வயஜ்ைஞ: ஸுதுர்லபம்। ௩।௰௪௮
யாநி புஷ்பாணி ஹ்ருத்யாநி। தூபகந்தாநுேலபநம்। ௩।௰௪௯
தயிதம் பூஷணம் யச் ச। ேய ச ெகௗேஸயவாஸஸீ। ௩।௰௪௯
யாநி சாப்யவஹாராணி। பŠயாணி ச பலாநி ச। ௩।௰௫
ப்ரயச்ச தாநி ேகாவிந்ேத। பேவதாஸ் ைசவ தந்மநா:। ௩।௰௫
ஆத்யந்தம் யஜ்ஞபுருஷம்। யதாஸக்த்யா ப்ரஸாதய। ௩।௰௫௧
ஆராத்ய யாதி தம் ேதவம்। தஸ்மிந்ந் ஏவ நேரா லயம்। ௩।௰௫௧
புண்ையஸ் தீர்ேதாதைகர் கந்ைதர்। மதுநா ஸர்பிஷா ததா। ௩।௰௫௨
க்ஷீேரண ஸ்நாபேயத் ஈஸம்। அச்யுதம் ஜகத: பதிம்। ௩।௰௫௨
ததிக்ஷீரஹ்ரதாந் புண்யாம்ஸ்। தேதா ேலாகாந் மதுச்யுத:। ௩।௰௫௩
ப்ரயாஸ்யஸ்ய் அஸுரஸ்ேரஷ்ட। நிர்வ்ருதிம் சாபி ஸாஸ்வதீம்।
௩।௰௫௩
ஸ்ேதாத்ைரர் கீைதஸ் ததா வாத்ையர்। ப்ராஹ்மணாநாம் ச தர்பைண:।
௩।௰௫௪
மநஸஸ் ைசகதாேயாகாத்। ஆராதய ஜநார்தநம்। ௩।௰௫௪
ஆராத்ய தம் விேதஹாநாம்। புருஷா: ஸப்தஸப்ததி:। ௩।௰௫௫
ைஹஹயா: பஞ்சபஞ்சாஸத்। அம்ருதத்வம் உபாகதா:। ௩।௰௫௫
ஸ த்வம் ஏபி: ப்ரகாைரஸ் தம்। உபவாைஸஸ் ச ேகஸவம்। ௩।௰௫௬
ேதாஷயாத்ேயா ஹி துஷ்ேடா அெஸௗ। விஷ்ணுர் த்வந்த்வப்ரஸாந்தித:।
௩।௰௫௬
உபவாைஸர் ஹ்ருஷீேகஸ:। கதம் துஷ்யதி பார்கவ। ௪।௰௰௧
பரிஹாராம்ஸ் ததாசŠவ। ேய த்யாஜ்யாஸ் ேசாபவாஸிநாம்। ௪।௰௰௧
யத் யத் கார்யம் யதா ைசவ। ேகஸவாராதேந நைர:। ௪।௰௰௨

தத் ஸர்வம் விஸ்தராத் ப்ரஹ்மந்। யதாவத் வக்தும் அர்ஹஸி।
௪।௰௰௨
ஸ்ம்ருத: ஸம்பூஜிேதா தூப । புஷ்பாத்ையர் தயிைதர் ஹரி:। ௪।௰௰௩
ேபாகிநாம் உபகாராய। கிம் புநஸ் ேசாபவாஸிநாம்। ௪।௰௰௩
உபாவ்ருத்தஸ் து பாேபப்ேயா। யஸ் து வாேஸா குைண: ஸஹ।
௪।௰௰௪
உபவாஸ: ஸ விஜ்ேஞய:। ஸர்வேபாகவிவர்ஜித:। ௪।௰௰௪
ஏகராத்ரம் த்விராத்ரம் வா। த்ரிராத்ரம் அதவாபரம்। ௪।௰௰௫
உபவாஸீ ஹரிம் யஸ் து। பக்த்யா த்யாயதி மாநவ:। ௪।௰௰௫
தந்நாமஜாபீ தத்கர்ம । ரதிஸ் தத்கதமாநஸ:। ௪।௰௰௬
நிஷ்காேமா ைதத்ய ஸ ப்ரஹ்ம। பரம் ஆப்ேநாத்ய் அஸம்ஸயம்।
௪।௰௰௬
யம் ச காமம் அபித்யாயந்। ேகஸவார்பிதமாநஸ:। ௪।௰௰௭
உேபாஷ்யதி தம் ஆப்ேநாதி। ப்ரஸந்ேந கருடத்வேஜ। ௪।௰௰௭
கத்யேத ச புரா விப்ர:। புலஸ்த்ேயா ப்ரஹ்மவாதிநா। ௪।௰௰௮
தால்ப்ேயந ப்ருஷ்ேடா அகதயத்। யைததத் அரிஸூதந। ௪।௰௰௮
ப்ராஹ்மைண: க்ஷத்ரிையர் ைவஸ்ைய:। ஸூத்ைர: ஸ்த்ரீபிஸ் ததா முேந।
௪।௰௰௯
ஸம்ஸாரகர்தபங்கஸ்ைத:। ஸுகதி: ப்ராப்யேத கதம்। ௪।௰௰௯
அநாராத்ய ஜகந்நாதம்। ஸர்வதாதாரம் அச்யுதம்। ௪।௰௧
நிர்வ்யலீேகந சித்ேதந। க: ப்ரயாஸ்யதி ஸத்கதிம்। ௪।௰௧
விஷயக்ராஹி ைவ யஸ்ய। ந சித்தம் ேகஸவார்பிதம்। ௪।௰௧௧
ஸ கதம் பாபபங்காங்கீ। நேரா யாஸ்யதி ஸத்கதிம்। ௪।௰௧௧

யதி ஸம்ஸாரது:கார்த:। ஸுகதிம் கந்தும் இச்சஸி। ௪।௰௧௨
ததாராதய ஸர்ேவஸம்। ஜகத்தாதாரம் அச்யுதம்। ௪।௰௧௨
புஷ்ைப: ஸுகந்ைதர் ஹ்ருத்ையஸ் ச। தூைப: ஸாகருசந்தைந:।
௪।௰௧௩
வாேஸாபிர் பூஷைணர் பŠையர்। உபவாஸபராயண:। ௪।௰௧௩
யதி ஸம்ஸாரநிர்ேவதாத்। அபிவாஞ்சஸி ஸத்கதிம்। ௪।௰௧௪
ததாராதய ேகாவிந்தம்। யச் ேசஷ்டம் தவ ேசதஸி। ௪।௰௧௪
புஷ்பாணி யதி ேத ந ஸ்யு:। ஸஸ்தம் பாதபபல்லைவ:। ௪।௰௧௫
தூர்வாங்குைரர் அபி ப்ரஹ்மம்ஸ்। ததபாேவ அர்சயாச்யுதம்। ௪।௰௧௫
ஸுகந்திபுஷ்பதீபாத்ையர்। ய: குர்யாத் ேகஸவாலேய। ௰௰௪।௩
ஸர்வதீர்தபலம் தஸ்ய। ஸம்பேவத் ேகஸவார்சயா। ௰௰௪।௩
ஸபாஹ்யாப்யந்தரம் யஸ் து। மார்ஜேயத் அச்யுதாலயம்। ௰௰௪।௩
ஸபாஹ்யாப்யந்தரம் தஸ்ய। காேயா நிஷ்கல்மேஷா பேவத்। ௰௰௪।௩
புஷ்பபத்ராம்புபிர் தூைபர்। யதாவிபவம் அச்யுத:। ௪।௰௧௬
பூஜிதஸ் துஷ்டிம் அதுலாம்। பக்த்யாயாத்ய் ஏகேசதஸாம்। ௪।௰௧௬
ய: ஸதாயதேந விஷ்ேணா:। குருேத மார்ஜநக்ரியாம்। ௪।௰௧௭
ஸ பாம்ஸுபூேமர் ேதஹாச் ச। ஸர்வபாபம் வ்யேபாஹதி। ௪।௰௧௭
யாவந்த்ய: பாம்ஸுகணிகா। மார்ஜ்யந்ேத ேகஸவாலேய। ௪।௰௧௮
திநாநி திவி தாவந்தி। திஷ்டத்ய் அஸ்தமேலா நர:। ௪।௰௧௮
அஹந்ய் அஹநி யத் பாபம்। குருேத த்விஜஸத்தம। ௪।௰௧௯
ேகாசர்மமாத்ரம் ஸம்மார்ஜ்ய। ஹந்தி தத் ேகஸவாலேய। ௪।௰௧௯
யஸ் ேசாபேலபநம் குர்யாத்। விஷ்ேணார் ஆயதேந நர:। ௪।௰௨

ேஸா அபி ேலாகம் ஸமாஸாத்ய। ேமாதேத ச ஸதக்ரேதா:। ௪।௰௨
ம்ருதா தாதுவிகாைரர் வா। வர்ணைகர் ேகாமேயந வா। ௪।௰௨௧
உபேலபநக்ருத் யாதி। விமாநம் மணிசித்ரிதம்। ௪।௰௨௧
உதகாப்யுக்ஷணம் விஷ்ேணார்। ய: கேராதி ததா க்ருேஹ। ௪।௰௨௨
ேஸா அபி கச்சதி யத்ராஸ்ேத। பகவாந் யாதஸாம் பதி:। ௪।௰௨௨
புஷ்பப்ரகரம் அத்யர்தம்। ஸுகந்தம் ேகஸவாலேய। ௪।௰௨௩
உபலிப்ேத நேரா தத்த்வா। ந துர்கதிம் அவாப்நுயாத்। ௪।௰௨௩
விமாநம் அதிவித்ேயாதி। ஸர்வரத்நமயம் திவி। ௪।௰௨௪
ஸமாப்ேநாதி நேரா தத்த்வா। தீபகம் ேகஸவாலேய। ௪।௰௨௪
யஸ் து ஸம்வத்ஸரம் பூர்ணம்। திலபாத்ரப்ரேதா நர:। ௪।௰௨௫
த்வஜம் து விஷ்ணேவ தத்யாத்। ஸமம் ஏதத் பலம் த்விஜ। ௪।௰௨௫
விதுந்வந் ஹந்தி வாேதந। தாதுர் அஜ்ஞாநத: க்ருதம்। ௪।௰௨௬
பாபம் ேகதுர் க்ருேஹ விஷ்ேணார்। திவாராத்ரம் அஸம்ஸயம்।
௪।௰௨௬
கீதவாத்யாதிபிர் ேதவம்। ய உபாஸ்ேத ஜநார்தநம்। ௪।௰௨௭
காந்தர்ைவர் கீதந்ருத்ைய: ஸ। விமாநஸ்ேதா நிேஷவ்யேத। ௪।௰௨௭
ஜாதிஸ்மரத்வம் ேமதாம் ச। தைதேவாபரேம ஸ்ம்ருதிம்। ௪।௰௨௮
ப்ராப்ேநாதி விஷ்ண்வாயதேந। புண்யாக்யாநகதாகர:। ௪।௰௨௮
உேபாஷித: பூஜிேதா வா। த்ருஷ்ேடா வா நமிேதா அபி வா। ௰௰௪।௪
ப்ரதம்ப ஹரேத பாபம்। ேகா ந ேஸேவத் தரிம் தத:। ௰௰௪।௪
ேவதவாதக்ரியாயஜ்ஞ । ஸ்நாநதீர்தபலம் பரம்। ௰௰௪।௪
அஷ்டாங்கப்ரணிபாேதந। ப்ரணிபத்ய ஹரிம் லேபத்। ௰௰௪।௪
ப்ரகம்ய ஹ்ருதா ஸிரஸா। பாதபத்ேம மஹீதேல। ௰௰௪।௪

நிஷ்கல்மேஷா பேவத் ஸத்ேயா। ந நாடீ பாதபாம்ஸுநா। ௰௰௪।௪
ஏகஸ்ய க்ருஷ்ணஸ்ய க்ராஜத: ப்ரணாேமா। தஸாஸ்வேமதாவப்ருேதந
துல்ய:। ௰௰௪।௪
தஸாஸ்வேமைத: புநர் ஏதி ஜந்ம। க்ருஷ்ணப்ரணாமீந புநர்பவாய।
௰௰௪।௪
ஏவம் ேதேவஸ்வேரா பக்த்யா। ேயந விஷ்ணுர் உபாஸித:। ௪।௰௨௯
ஸ ப்ராப்ேநாதி கதிம் ஸ்லாக்யாம்। யாம் யாம் இச்சதி ேசதஸா।
௪।௰௨௯
ேதவத்வம் மநுைஜ: ைகஸ்சித்। கந்தர்வத்வம் ததாபைர:। ௪।௰௩
வித்யாதரத்வம் அபைரர்। ஆராத்யாப்தம் ஜநார்தநம்। ௪।௰௩
ஸக்ர: க்ரதுஸேதேநஸம்। ஆராத்ய கருடத்வஜம்। ௪।௰௩௧
ேதேவந்த்ரத்வம் கதஸ் தஸ்மாந்। நாந்ய: பூஜ்யதம: க்வசித்। ௪।௰௩௧
ேதேவப்ேயா அபி ஹி பூஜ்யஸ் து। ஸ்வகுருர் ப்ரஹ்மசாரிண:।
௪।௰௩௨
தஸ்யாபி யஜ்ஞபுருேஷா। விஷ்ணு: பூஜ்ேயா த்விேஜாத்தம। ௪।௰௩௨
ஸ்த்ரியஸ் ச பர்தாரம் க்ருேத। பூஜ்யம் அந்யந் ந ைதவதம்। ௪।௰௩௩
பர்துர் க்ருஹஸ்தஸ்ய ஸத:। பூஜ்ேயா யஜ்ஞபதிர் ஹரி:। ௪।௰௩௩
ைவகாநஸாநாம் ஆராத்யஸ்। தேபாபிர் மதுஸூதந:। ௪।௰௩௪
த்ேயய: பரிவ்ராஜகாநாம்। வாஸுேதேவா மஹாத்மநாம்। ௪।௰௩௪
ஏவம் ஸர்வாஸ்ரமாணாம் ஹி। வாஸுேதவ: பராயணம்। ௪।௰௩௫
ஸர்ேவஷாம் ைசவ வர்ணாநாம்। தம் ஆராத்யாப்நுயாத் கதிம்। ௪।௰௩௫
ஸ்ருணுஷ்வ கதத: காம்யாம்। உபவாஸாம்ஸ் ததாபராந்। ௪।௰௩௬
தத் தம் ஆஸ்ரித்ய யாந் காமாந்। குர்வேதப்ஸிதம் ீ ஆத்மந:। ௪।௰௩௬

ஏகாதஸ்யாம் ஸுக்லபேக்ஷ। பால்குேந மாஸி ேயா நர:। ௪।௰௩௭
ஜேபத் க்ருஷ்ேணதி ேதவஸ்ய। நாம பக்த்யா புந:புந:। ௪।௰௩௭
ேதவார்சேந சாஷ்டஸதம்। க்ருத்ைவதத் து ஜேபச் சுசி:। ௪।௰௩௮
ப்ராத: ப்ரஸ்தாநகாேல ச। உத்தாேந ஸ்கலிேத க்ஷுேத। ௪।௰௩௮
பாஷண்டபதிதாம்ஸ் ைசவ। தைதவாந்த்யாவஸாயிந:। ௪।௰௩௯
நாலேபத ததா க்ருஷ்ணம்। அர்சேயச் ச்ரத்தயாந்வித:। ௪।௰௩௯
இதம் ேசாதாஹேரத் க்ருஷ்ேண। மந: ஸம்தாய தத்பர:। ௪।௰௩௯
க்ருஷ்ண க்ருஷ்ண க்ருபாலுஸ் த்வம்। அகதீநாம் கதிர் பவ। ௪।௰௪
ஸம்ஸாராந்தர்நிமக்நாநாம்। ப்ரஸதீ மதுஸூதந। ௪।௰௪
ஏவம் ப்ரஸாத்ேயாபாவாஸம்। க்ருத்வா நியதமாநஸ:। ௪।௰௪௧
பூர்வாஹ்ந ஏவ சாந்ேயத்யுர்। கவ்யம் ஸம்ப்ராஸ்ய ைவ ஸக்ருத்।
௪।௰௪௧
ஸ்நாேதா அர்சயித்வா க்ருஷ்ேணதி। புநர் நாம ப்ரகீர்தேயத்। ௪।௰௪௧
வாரிதாராத்ரயம் ைசவ। விக்ஷிேபத் ேதவபாதேயா:। ௪।௰௪௨
ைசத்ரைவஸாகேயாஸ் ைசவ। தத்வஜ் ஜ்ேயஷ்ேட து பூஜேயத்।
௪।௰௪௨
மர்த்யேலாேக கதிம் ஸ்ேரஷ்டாம்। தால்ப்ய ப்ராப்ேநாதி ைவ நர:।
௪।௰௪௩
உத்க்ராந்திகாேல க்ருஷ்ணஸ்ய। ஸ்மரணம் ச ததாப்நுேத। ௪।௰௪௩
ஆஷாேட ஸ்ராவேண ைசவ। மாேஸ பாத்ரபேத ததா। ௪।௰௪௪
தைதவாஸ்வயுேஜ ேதவம்। அேநந விதிநா நர:। ௪।௰௪௪
உேபாஷ்ய ஸம்பூஜ்ய ததா। ேகஸேவதி ச கீர்தேயத்। ௪।௰௪௫
ேகாமூத்ரப்ராஸநாத் பூர்வம்। ஸ்வர்கேலாககதிம் வ்ரேஜத்। ௪।௰௪௫

ஆராதிதஸ்ய ஜகதாம்। ஈஸ்வரஸ்யாவ்யாயாத்மந:। ௪।௰௪௬
உத்க்ராந்திகாேல ஸ்மரணம்। ேகஸவஸ்ய ததாப்நுயாத்। ௪।௰௪௬
க்ஷீரஸ்ய ப்ராஸநம் யஸ் து। விதிம் ேசமம் யேதாதிதம்। ௪।௰௪௭
கார்த்திகாதி யதாந்யாயம்। குர்யாந் மாஸசதுஷ்டயம்। ௪।௰௪௭
ேதைநவ விதிநா ப்ரஹ்மந்। விஷ்ேணார் நாம ப்ரகீர்தேயத்। ௪।௰௪௮
ஸ யாதி விஷ்ணுஸாேலாக்யம்। விஷ்ணும் ஸ்மரதி ச க்ஷேய।
௪।௰௪௮
ப்ரதிமாஸம் த்விஜாதிப்ேயா। தத்யாத் தாநம் யேதச்சயா। ௪।௰௪௯
சாதுர்மாஸ்ேய ச ஸம்பூர்ேண। புண்யம் ஸ்ரவணகீர்தநம்। ௪।௰௪௯
கதாம் வா வாஸுேதவஸ்ய। தத்கீதீர் வாபி காரேயத்। ௪।௰௫
ஏவம் ஏதாம் கதிம் ஸ்ேரஷ்டாம்। ேதவநாமாநுகீர்தநாத்। ௪।௰௫
கதிதம் பாரணம் யத் ேத। கார்ஷ்ணம் மாஸசதுஷ்டயம்। ௪।௰௫௧
ஆதிபத்யம் ததா ேபாகாம்ஸ்। ேதந ப்ராப்ேநாதி மாநுஷாந்। ௪।௰௫௧
த்விதீேயந ததா ேபாகாந்। ஐந்த்ராந் ப்ராப்ேநாதி மாநவ:। ௪।௰௫௨
விஷ்ேணார் ேலாகம் த்ருதீேயந। பாரேணந ததாப்நுயாத்। ௪।௰௫௨
ஏவம் ஏதத் ஸமாக்யாதம்। கதிப்ராபகம் உத்தமம்। ௪।௰௫௩
விதாநம் த்விஜஸார்தூல। க்ருஷ்ணதுஷ்டிப்ரதம் ந்ருணாம்। ௪।௰௫௩
ஸுகதித்வாதஸம்ீ ஏதாம்। ஸ்ரத்ததாநஸ் து ேயா நர:। ௪।௰௫௪
உேபாஷ்ய ச ததா நாரீ। ப்ராப்ேநாதி த்ரிவிதாம் கதிம்। ௪।௰௫௪
ஏஷா தந்யா பாபஹரா। திதிர் நித்யம் உபாஸிதா। ௪।௰௫௫
ஆராதநாய ஸிஷ்ைடஷா। ேதவேதவஸ்ய சக்ரிண:। ௪।௰௫௫
பஞ்சதஸ்யாம் ச ஸுக்லஸ்ய। பால்குநஸ்ையவ ஸத்தம। ௫।௰௰

பாஷண்டபதிதாம்ஸ் ைசவ। தைதவாந்த்யாவஸாயிந:। ௫।௰௰௧
நாஸ்திகாந் பிந்நவ்ருத்தீம்ஸ் ச। பாபிநஸ் சாப்ய் அநாலபந்। ௫।௰௰௨
நாராயேண கதமநா:। புருேஷா நியேதந்த்ரிய:। ௫।௰௰௨
திஷ்டந் வ்ரஜந் ப்ரஸ்கலிேத। க்ஷுேத வாபி ஜநார்தநம்। ௫।௰௰௩
கீர்தேயத் தத்க்ரியாகாேல। ஸப்தக்ருத்வ: ப்ரகீர்தேயத்। ௫।௰௰௩
லŠம்யா ஸமந்விதம் ேதவம்। அர்சேயச் ச ஜநார்தநம்। ௫।௰௰௪
ஸம்த்யாவ்யுபரேம ேசந்து । ஸ்வரூபம் ஹரிம் ஈஸ்வரம்। ௫।௰௰௪
ராத்ரிம் ச லŠமீம் ஸம்சிந்த்ய। ஸம்யக் அர்க்ேயந பூஜேயத்।
௫।௰௰௫
நக்தம் ச புஞ்ஜதீ நரஸ்। ைதலக்ஷாரவிவர்ஜிதம்। ௫।௰௰௫
தைதவ ைசத்ரைவஸாக । ஜ்ேயஷ்ேடஷு முநிஸத்தம। ௫।௰௰௬
அர்சயதீ யதாப்ேராக்தம்। ப்ராப்ேத ப்ராப்ேத து தத்திேந। ௫।௰௰௬
நிஷ்பாதிதம் பேவத் ஏகம்। பாரணம் தால்ப்ய பக்தித:। ௫।௰௰௭
த்விதீயம் சாபி வŠயாமி। பாரணம் த்விஜஸத்தம। ௫।௰௰௭
ஆஷாேட ஸ்ராவேண மாஸி। ப்ராப்ேத பாத்ரபேத ததா। ௫।௰௰௮
தைதவாஸ்வயுேஜ அப்யர்ச்ய। ஸ்ரீதரம் ச ஸ்ரியா ஸஹ। ௫।௰௰௮
ஸம்யக் சந்த்ரமேஸ தத்த்வா। புஞ்ஜதார்க்யம் ீ யதாவிதி। ௫।௰௰௯
த்விதீயம் ஏதத் ஆக்யாதம்। த்ருதீயம் பாரணம் ஸ்ருணு। ௫।௰௰௯
கார்த்திகாதிஷு மாேஸஷு। தைதவாப்யர்ச்ய ேகஸவம்। ௫।௰௧
பூத்யா ஸமந்விதம் தத்யாச்। ஸஸாங்காயார்ஹநம் நிஸி। ௫।௰௧
புஞ்ஜதீ ச ததா ப்ேராக்தம்। த்ருதீயம் இதி பாரணம்। ௫।௰௧௧
ப்ரதிபூஜாஸு தத்யாச் ச। ப்ராஹ்மேணப்யஸ் ச தக்ஷிணாம்। ௫।௰௧௧
ப்ரதிமாஸம் ச வŠயாமி। ப்ராஸநம் காயேஸாதநம்। ௫।௰௧௨

சதுர: ப்ரதமாந் மாஸாந்। பஞ்சகவ்யம் உதாஹ்ருதம்। ௫।௰௧௨
குேஸாதகம் தைதவாந்யத்। உக்தம் மாஸசதுஷ்டயம்। ௫।௰௧௩
ஸூர்யாம்ஸுதப்தம் தத்வச் ச। ஜலம் மாஸசதுஷ்டயம்। ௫।௰௧௩
கீதவாத்யாதிகம் பாட்யம்। ததா க்ருஷ்ணஸ்ய வா கதாந்। ௫।௰௧௪
காரியதீ ச ேதவஸ்ய। பாரேண பாரேண கேத। ௫।௰௧௪
ஏவம் ஸம்பூஜ்ய விதிவத்। ஸபத்நீகம் ஜநார்தநம்। ௫।௰௧௫
நாப்ேநாதீஷ்தவிேயாகாதீந்। புமாந் ேயாஷித் அதாபி வா। ௫।௰௧௫
ஜநார்தநம் ஸலŠமீகம்। அர்சேயத் ப்ரதமம் தத:। ௫।௰௧௬
ஸஸ்ரீகம் ஸ்ரீதரம் பக்த்யா। த்ருதீேய பூதிேகஸெவௗ। ௫।௰௧௬
யாவந்த்ய் ஏதத்விதாேநந। பாரேணநார்சதி ப்ரபும்। ௫।௰௧௭
தாவந்தி ஜந்மாந்ய் அஸுகம்। நாப்ேநாதீஷ்டவிேயாகஜம்। ௫।௰௧௭
ேதவஸ்ய ச ப்ரஸாேதந। மரேண ப்ராப்ய தத்ஸ்ம்ருதிம்। ௰௰௫।௰௧௮௬
குேல ஸதாம் ஸ்பததேந ீ । ேபாகபுஜ் ஜாயேத நர:। ௫।௰௧௮
நாரிம் ப்ராப்ேநாதி ந வ்யாதிம்। நரகம் ச ந பஸ்யதி। ௰௰௫।௫
துர்கமம் யமமார்கம் ச। ேநக்ஷேத த்விஜஸத்தம। ௰௰௫।௫
ஸ்ேராதும் இச்சாம்ய் அஹம் தாத। யமமார்கம் ஸுதுர்கமம்। ௫।௰௧௯
யதா ஸுேகந ஸம்யாந்தி। மாநவாஸ் தத் வதஸ்வ ேம। ௫।௰௧௯
ப்ரதிமாஸம் து நாமாநி। க்ருஷ்ணஸ்ையதாநி த்வாதஸ। ௫।௰௨
க்ருேதாபவாஸ: ஸுஸ்நாத:। பூஜயித்வா ஜநார்தநம்। ௫।௰௨
உச்சாரயந் நேரா அப்ேயதி। ஸுஸுேகைநவ தத்பதம்। ௫।௰௨
தேதா விப்ராய ைவ தத்யாத்। உதகும்பம் ஸதக்ஷிணம்। ௫।௰௨௧
உபாநத்வஸ்த்ரயுக்மம் ச। சத்த்ரம் கநகம் ஏவ ச। ௫।௰௨௧

யத் ைவ மாஸகதம் நாம। தத்ப்ரீதிஸ் சாபி ஸம்வேதத்। ௫।௰௨௨
ஸம்வத்ஸராந்ேத அப்ய் அதவா। ப்ரதிமாஸம் த்விஜாந் புத:। ௫।௰௨௨
வாசேயத் உதகும்பாத்ையர்। தாைந: ஸர்வாந் அநுக்ரமாத்। ௫।௰௨௨
ேகஸவம் மார்கஸர்ேஷீ து। ெபௗேஷ நாராயணம் ததா। ௫।௰௨௩
மாதவம் மாகமாேஸ து। ேகாவிந்தம் பால்குேந ததா। ௫।௰௨௩
விஷ்ணும் ைசத்ேர அத ைவஸாேக। தைதவ மதுஸூதநம்। ௫।௰௨௪
ஜ்ேயஷ்ேட த்ரிவிக்ரமம் ேதவம்। ஆஷாேட வாமநம் ததா। ௫।௰௨௪
ஸ்ராவேண ஸ்ரீதரம் ைசவ। ஹ்ருஷீேகேஸதி சாபரம்। ௫।௰௨௫
நாம பாத்ரபேத மாஸி। கீயேத புண்யகாங்க்ஷிபி:। ௫।௰௨௫
பத்மநாபம் சாஸ்வயுேஜ। தாேமாதரம் அத: பரம்। ௫।௰௨௬
கார்த்திேக ேதவேதேவஸம்। ஸ்துவம்ஸ் தரதி துர்கதிம்। ௫।௰௨௬
இஹ ைவ ஸ்வஸ்ததாம் ப்ராப்ய। மரேண ஸ்மரணம் தத:। ௫।௰௨௭
யாம்யக்ேலஸம் அஸம்ப்ராப்ய। ஸ்வர்கேலாேக மஹீயேத। ௫।௰௨௭
தேதா மாநுஷ்யம் ஆஸாத்ய। நிராதங்ேகா கதஜ்வர:। ௫।௰௨௮
தநதாந்யவதி ஸ்பேதீ । ஜந்ம ஸாதுகுேல அர்ஹதி। ௫।௰௨௮
உபவாஸவ்ரதாநீஹ। ேகஸவாராதநம் ப்ரதி। ௬।௰௰௧
மமாசŠவ மஹாபாக। பரம் ெகௗதூஹலம் ஹி ேம। ௬।௰௰௧
காமாந் யாந் யாந் நேரா பக்ேதா। மநேஸச்சதி ேகஸவாத்। ௬।௰௰௨
வ்ரேதாபவாஸநாத் ப்ரீதஸ்। தாம்ஸ் தாந் விஷ்ணு: ப்ரயச்சதி।
௬।௰௰௨
ரத்நபர்வதம் ஆருஹ்ய। யதா ரத்நம் மஹாமுேந। ௬।௰௰௩
ஸத்த்வாநுரூபம் அதத்ேத। ததா க்ருத்ஸ்நாந் மேநாரதாந்। ௬।௰௰௩

மார்கஸர்ஷம் ீ து ேயா மாஸம்। ஏகபக்ேதந ய: க்ஷேபத்। ௬।௰௰௪
குர்வந் ைவ விஷ்ணுஸுஸ்ரூஷாம்। ஸ ேதேஸ ஜாயேத ஸுேப।
௬।௰௰௪
ெபௗஷமாஸம் ததா தால்ப்ய। ஏகபக்ேதந ய: க்ஷேபத்। ௬।௰௰௫
ஸுஸ்ரூஷணபர: ெஸௗேரர்। ந ேராகீஸ ச ஜாயேத। ௬।௰௰௫
மாகமாஸம் த்விஜஸ்ேரஷ்ட। ஏகபக்ேதந ய: க்ஷேபத்। ௬।௰௰௬
விஷ்ணுஸுஸ்ரூஷணபர:। ஸ குேல ஜாயேத ஸதாம்। ௬।௰௰௬
க்ஷபேயத் ஏகபக்ேதந। ஸுஸ்ரூஷுர் யஸ் ச பால்குநம்। ௬।௰௰௭
ெஸௗபாக்யம் ஸ்வஜநாநாம் ஸ। ஸர்ேவஷாம் ஏதி ேஸாந்நதிம்।
௬।௰௰௭
ைசத்ரம் விஷ்ணுபேரா மாஸம்। ஏகபக்ேதந ய: க்ஷேபத்। ௬।௰௰௮
ஸுவர்ணமணிமுக்தாட்யம்। ஸ கார்ஹஸ்த்யம் அவாப்நுயாத்।
௬।௰௰௮
ய: க்ஷேபத் ஏகபக்ேதந। ைவஸாகம் பூஜயந் ஹரிம்। ௬।௰௰௯
நேரா வா யதி வா நாரீ। ஜ்ஞாதீநாம் ஸ்ேரஷ்டதாம் வ்ரேஜத்। ௬।௰௰௯
க்ருஷ்ணார்பிதமநா ஜ்ேயஷ்டம்। ஏகபக்ேதந ய: க்ஷேபத்। ௬।௰௧
ஐஸ்வர்யம் அதுலம் ஸ்ேரஷ்டம்। புமாந் ஸ்த்ரீ வாபிஜாயேத। ௬।௰௧
ஆஷாடம் ஏகபக்ேதந। ேயா நேயத் விஷ்ணுதந்மநா:। ௬।௰௧௧
பஹுதாந்ேயா பஹுதேநா। பஹுபுத்ரஸ் ச ஜாயேத। ௬।௰௧௧
க்ஷபேயத் ஏகபக்ேதந। ஸ்ராவணம் விஷ்ணுதத்பர:। ௬।௰௧௨
தநதாந்யஹிரண்யாட்ேய। குேல ஸ ஜ்ஞாதிவர்தந:। ௬।௰௧௨
ஏகாஹாேரா பாத்ரபதம்। யஸ் ச க்ருஷ்ணபராயண:। ௬।௰௧௩
தநாட்யம் ஸ்பதம்ீ அசலம்। ஐஸ்வர்யம் ப்ரதிபத்யேத। ௬।௰௧௩

நயம்ஸ் சாஸ்வயுஜம் விஷ்ணும்। பூஜேயத் ஏகேபாஜந:। ௬।௰௧௪
தநவாந் வாஹநாட்யஸ் ச। பஹுபுத்ரஸ் ச ஜாயேத। ௬।௰௧௪
கார்த்திேக ைசகதா புங்க்ேத। யஸ் ச விஷ்ணுபேரா நர:। ௬।௰௧௫
ஸூரஸ் ச க்ருதவித்யஸ் ச। பஹுபுத்ரஸ் ச ஜாயேத। ௬।௰௧௫
யஸ் து ஸம்வத்ஸரம் பூர்ணம்। ஏகபக்ேதா பேவந் நர:। ௬।௰௧௬
அஹிம்ஸ: ஸர்வபூேதஷு। வாஸுேதவபராயண:। ௬।௰௧௬
நேமா அஸ்து வாஸுேதவாேயத்ய்। அஹஸ் சாஷ்டஸதம் ஜேபத்।
௬।௰௧௭
அதிராத்ரஸ்ய யஜ்ஞஸ்ய। தத: பலம் அவாப்நுயாத்। ௬।௰௧௭
தஸ வர்ஷஸஹஸ்ராணி। ஸ்வர்கேலாேக மஹீயேத। ௬।௰௧௮
தத்க்ஷயாத் இஹ சாகத்ய। மாஹாத்ம்யம் ப்ரதிபத்யேத। ௬।௰௧௮
ப்ராஹ்மண: க்ஷத்ரிேயா ைவஸ்ய:। ஸ்த்ரீ ஸூத்ேரா வா யேதாதிதாந்।
௬।௰௧௯
உபவாஸாந் இமாந் குர்வந்। பலாந்ய் ஏதாந்ய் அவாப்நுயாத்। ௬।௰௧௯
ஜகத்பதிம் ஜகத்ேயாநிம்। ஜகந்நிஷ்டம் ஜகத்குரும்। ௬।௰௨
ஜயம் ஸரணம் அப்ேயத்ய। ந ஜைந: ேஸாச்யேத ஜந:। ௬।௰௨
யஸ்ய நாம்நி ஸ்ம்ருேத மர்த்ய:। ஸமுத்க்ராந்ேதர் அநந்தரம்। ௬।௰௨௧
ப்ராப்ேநாதி ஸாஸ்வதம் ஸ்தாநம்। தத: பூஜ்யதேரா ஹி ஸ:। ௬।௰௨௧
நாதிர் ந மத்யம் ைநவாந்ேதா। யஸ்ய ேதவஸ்ய வித்யேத। ௬।௰௨௨
அநாதித்வாத் அமத்யத்வாத்। அநந்தத்வாச் ச ேஸா அவ்யய:। ௬।௰௨௨
பராபரம் ஸுக்ருதவதாம் பராம் கதிம்। ஸ்வயம்புவம் ப்ரபவந் நிதாநம்
அவ்யயம்। ௬।௰௨௩

ஸநாதநம் யத் அம்ருதம் அச்யுதம் த்ருவம்। ப்ரவிஸ்ய தம் ஹரிம் அமரத்வம்
அஸ்நுேத। ௬।௰௨௩
ஸ்ருணு தால்ப்ய பரம் காம்யம்। வ்ரதம் ஸம்ததிதம் ந்ருணாம்।
௭।௰௰௧
யம் உேபாஷ்ய ந விச்ேசத:। பித்ருபிண்டஸ்ய ஜாயேத। ௭।௰௰௧
க்ருஷ்ணாஷ்டம்யாம் ைசத்ரமாேஸ। ஸ்நாேதா நியதமாநஸ:। ௭।௰௰௨
க்ருஷ்ணம் அப்யர்ச்ய பூஜாம் ச। ேதவக்யா: குருேத து ய:। ௭।௰௰௨
நிராஹாேரா ஜபந் நாம। க்ருஷ்ணஸ்ய ஜகத: பேத:। ௭।௰௰௩
உபவிஷ்ேடா ஜபஸ்நாந । க்ஷுதப்ரஸ்கலிதாதிஷு। ௭।௰௰௩
பூஜாயாம் சாபி க்ருஷ்ணஸ்ய। ஸப்த வாராந் ப்ரகீர்தேயத்। ௭।௰௰௪
பாஷண்டிேநா விகர்மஸ்தாந்। நாலேபச் ைசவ நாஸ்திகாந்। ௭।௰௰௪
ப்ரபாேத து புந: ஸ்நாேதா। தத்த்வா விப்ராய தக்ஷிணாம்। ௭।௰௰௫
புஞ்ஜதீ க்ருதபூஜஸ் து। க்ருஷ்ணஸ்ையவ ஜகத்பேத:। ௭।௰௰௫
ைவஸாகஜ்ேயஷ்டேயாஸ் ைசவ। பாரணம் ஹி த்ரிமாஸிகம்।
௭।௰௰௬
உேபாஷ்ய ேதவேதேவஸம்। க்ருேதந ஸ்நாபேயத் தரிம்। ௭।௰௰௬
ஆஷாேட ஸ்ராவேண ைசவ। மாேஸ பாத்ரபேத ததா। ௭।௰௰௭
உேபாஷிேத த்விதீயம் ைவ। பாரணம் பூர்வவத் து தத்। ௭।௰௰௭
தைதவாஸ்வயுஜம் சாதிம்। க்ருத்வா மாஸத்ரயம் புத:। ௭।௰௰௮
உேபாஷ்ய ஸ்நாபேயத் ேதவம்। ஹவிஷா பாரேண கேத। ௭।௰௰௮
ெபௗேஷ மாேக பால்குேந ச। நரஸ் தத்வத் உேபாஷித:। ௭।௰௰௯
சதுர்ேத பாரேண பூர்ேண। க்ருேதந ஸ்நாபேயத் தரிம்। ௭।௰௰௯
ஏவம் க்ருேதாபவாஸஸ்ய। புருஷஸ்ய ததா ஸ்த்ரிய:। ௭।௰௧

ந ஸம்தேத: பரிச்ேசத:। கதாசித் அபிஜாயேத। ௭।௰௧
க்ருஷ்ணாஷ்டமீம் இமாம் யஸ் து। நேரா ேயாஷித் அதாபி வா।
௭।௰௧௧
உேபாஷ்யதீஹ ஸாஹ்லாதம்। ந்ருேலாேக ப்ராப்ய நிர்வ்ருத்திம்।
௭।௰௧௧
புத்ரெபௗத்ரஸம்ருத்திம் ச। ம்ருத: ஸ்வர்ேக மஹீயேத। ௭।௰௧௨
இத்ய் ஏதத் கதிதம் தால்ப்ய। மயா க்ருஷ்ணாஷ்டம்ஈவ்ரதம்। ௭।௰௧௨
ப்ராவ்ருட்காேல து நியமாஞ்। ஸ்ருணு காம்யாந் இமாந் மம। ௭।௰௧௩
ப்ராவ்ருட்காேல யதா ேஸேத। வாஸுேதவ: பேயாநிெதௗ। ௭।௰௧௪
ேபாகிேபாேக நிஜாம் மாயாம்। ேயாகநித்ராம் ச மாநயந்। ௭।௰௧௪
விஸிஷ்டா ந ப்ரவர்தந்ேத। ததா யஜ்ஞாதிகா: க்ரியா:। ௭।௰௧௫
ேதவாநாம் ஸா பேவத் ராத்ரிர்। தக்ஷிணாயநஸம்ஜ்ஞிதா। ௭।௰௧௫
யதா ஸ்வபிதி ேகாவிந்ேதா। யஸ் து மாஸம் சதுஷ்டயம்। ௭।௰௧௬
அத:ஸாயீ ப்ரஹ்மசாரீ। ேகஸவார்பிதமாநஸ:। ௭।௰௧௬
நேமா நேமா அஸ்து க்ருஷ்ணாய। ேகஸவாய நேமா நம:। ௭।௰௧௭
நேமா அஸ்து நரஸிம்ஹாய। விஷ்ணேவ ச நேமா நம:। ௭।௰௧௭
இதி ப்ராதஸ் ததா ஸாயம்। ஜேபத் ேதவக்ரியாபர:। ௭।௰௧௮
ஸமயத்ய் அதிதுஷ்பாரம்। துரிதம் ஜந்மஸம்சிதம்। ௭।௰௧௮
மது மாம்ஸம் ச ேயா மாஸாஞ்। சதுரஸ் தாந் நிரஸ்யதி। ௭।௰௧௯
ேதவக்ரியாரதிர் விஷ்ேணார்। அநுஸ்மரணதத்பர:। ௭।௰௧௯
ேஸா அபி ஸ்வர்கம் ஸமப்ேயதி। ச்யுதஸ் தஸ்மாத் து ஜாயேத।
௭।௰௨
அேராகீ தநதாந்யாட்ய:। குலஸம்ததிமாந் நர:। ௭।௰௨

ஸமஸ்தமந்திராணாம் ச। ய: ஸுப்ேத மதுஸூதேந। ௭।௰௨௧
நிர்வ்ருத்திம் குருேத ேஸா அபி। ேதேவா ைவமாநிேகா பேவத்।
௭।௰௨௧
அேநைநவ விதாேநந। நேரா விஷ்ணுக்ரியாபர:। ௭।௰௨௨
ஏகாஹாேரா பேவத் யஸ் து। ஸர்வபாைப: ப்ரமுச்யேத। ௭।௰௨௨
ஸுப்ேத ச ஸர்வேலாேகேஸ। நக்தேபாஜீபேவத் து ய:। ௭।௰௨௩
ஸர்வபாபவிநிர்முக்த:। ஸ்வர்கேலாேக அமேரா பேவத்। ௭।௰௨௩
ஸஸ்தம் த்வ் அநந்தரம் பும்ஸாம்। ததஸ் ைசேவகேபாஜநம்। ௭।௰௨௪
நக்தேபாஜநதுல்யம் து। ேநாபவாஸபலம் க்வசித்। ௭।௰௨௪
ைதலாபங்கம் ச ேயா மாஸாம்ஸ்। சதுரஸ் தாந் நிரஸ்யதி। ௭।௰௨௫
ேஸா அப்ய் அங்கலாவண்யகுணம்। ஆேராக்யம் ச நேரா லேபத்।
௭।௰௨௫
யஸ் த்வ் ஏதாநி ஸமஸ்தாநி। மாஸாந் ஏதாந் நரஸ் சேரத்। ௭।௰௨௬
ஸ விஷ்ணுேலாகம் ஆஸாத்ய। விஷ்ேணார் அநுசேரா பேவத்।
௭।௰௨௬
சதுர்பி: பாரணம் மாைஸர்। நிஷ்பாத்யம் ஹரிதத்பைர:। ௭।௰௨௭
ப்ராஹ்மணாந் ேபாஜேயத் தத்யாத்। ததஸ் ேதப்யஸ் ச தக்ஷிணாம்।
௭।௰௨௭
பூஜேயச் ச ஜகந்நாதம்। ஸர்வபாபஹரம் ஹரிம்। ௭।௰௨௮
ப்ரீயஸ்வ ேதவ ேகாவிந்ேதத்ய்। ஏவம் ைசவ ப்ரஸாதேயத்। ௭।௰௨௮
இதி தால்ப்ய ஸமாக்யாதம்। சாதுர்மாஸ்ேய ஹி யத் வ்ரதம்। ௭।௰௨௯
ேதவேதவஸ்ய ஸுப்தஸ்ய। த்வாதஸம்ீ ஸ்ருணு சாபராம்। ௭।௰௨௯
யஸ்யாம் அநந்தஸ்மரணாத்। அநந்தபலபாக் பேவத்। ௭।௰௨௯

மாஸி ப்ேராஷ்டபேத ஸுக்ேல। த்வாதஸ்யாம் ஜலஸாயிநம்। ௮।௰௰௧
ப்ரணம்யாநந்தம் அப்யர்ச்ய। புஷ்பதூபாதிபி: ஸுசி:। ௮।௰௰௧
பாஷண்டாதிபிர் ஆலாபம்। அகுர்வந் நியதாத்மவாந்। ௮।௰௰௨
விப்ராய தக்ஷிணாம் தத்த்வா। நக்தம் புங்க்ேத து ேயா நர:। ௮।௰௰௨
திஷ்டந் வ்ரஜந் ஸ்வபம்ஸ் ைசவ। க்ஷுதப்ரஸ்கலிதாதிஷு। ௮।௰௰௩
அநந்தநாமஸ்மரணம்। குர்வந்ந் உச்சாரணம் ததா। ௮।௰௰௩
அேநைநவ விதாேநந। மாஸாந் த்வாதஸ ைவ க்ரமாத்। ௮।௰௰௪
உேபாஷ்ய பாரேண பூர்ேண। ஸமப்யர்ச்ய ஜகத்குரும்। ௮।௰௰௪
கீதவாத்ேயந ஹ்ருத்ேயந। ப்ரீணயந் வ்யுஷ்டிம் அஸ்நுேத। ௮।௰௰௪
அநந்தம் கீதவாத்ேயந। யத: பலம் உதாஹ்ருதம்। ௮।௰௰௫
ேதநாநந்தம் ஸமப்யர்ச்ய। தத் ஏவ லபேத பலம்। ௮।௰௰௫
ஏவம் ய: புருஷ: குர்யாத்। அநந்தாராதநம் ஸுசி:। ௮।௰௰௬
நாரீ வா ஸ்வர்கம் அப்ேயத்ய। ேஸா அநந்தபலம் அஸ்நுேத। ௮।௰௰௬
ஏவம் தால்ப்ய ஹ்ருஷீேகேஸா। நைரர் பக்த்யா யதாவிதி। ௮।௰௰௭
பலம் ததாத்ய் அஸுலபம்। ஸலிேலநாபி பூஜித:। ௮।௰௰௭
ந விஷ்ணுர் வித்ததாேநந। புஷ்ைபர் வா ந பைலஸ் ததா। ௮।௰௰௮
ஆராத்யேத ஸுஸுத்ேதந। ஹ்ருதேயைநவ ேகவலம்। ௮।௰௰௮
ராகாத்யேபதம் ஹ்ருதயம்। வாக் துஷ்டா நாந்ருதாதிநா। ௮।௰௰௯
ஹிம்ஸாதிரஹித: காய:। ேகஸவாராதநத்ரயம்। ௮।௰௰௯
ராகாதிதூஷிேத சித்ேத। நாஸ்பதீமதுஸூதந:। ௮।௰௧
கேராதி ந ரதிம் ஹம்ஸ:। கதாசித் கர்தமாம்பஸி। ௮।௰௧
ந ேயாக்யா ேகஸவஸ்துத்ைய। வாக் துஷ்டா சாந்ருதாதிநா। ௮।௰௧௧

தமேஸா நாஸநாயாலம்। ேநந்ேதார் ேலகா கநாவ்ருதா। ௮।௰௧௧
ஹிம்ஸாதிதூஷித: காய:। ேகஸவாராதேந குத:। ௮।௰௧௨
ஜநசித்தப்ரஸாதாய। ந நபஸ் திமிராவ்ருதம்। ௮।௰௧௨
தஸ்மாச் ச்ரத்தஸ்வ பாேவந। ஸத்யபாேவந ச த்விஜ। ௮।௰௧௩
அஹிம்ஸேகந ேகாவிந்ேதா। நிஸர்காத் ஏவ ேதாஷித:। ௮।௰௧௩
ஸர்வஸ்வம் அபி க்ருஷ்ணாய। ேயா தத்யாத் குடிலாஸய:। ௮।௰௧௪
ஸ ைநவாராதயத்ய் ஏநம்। ஸத்பாேவநார்சயாச்யுதம்। ௮।௰௧௪
ராகாத்யேபதம் ஹ்ருதயம்। குரு த்வம் ேகஸவார்பிதம்। ௮।௰௧௫
தத: ப்ராப்ஸ்யஸி து:ப்ராப்யம்। அயத்ேநைநவ ேகஸவம்। ௮।௰௧௫
பகவந் கதித: ஸம்யக்। காம்ேயா அயம் ேகஸவம் ப்ரதி। ௮।௰௧௬
ஆராதநவிதி: ஸர்ேவா। பூய: ப்ருச்சாமி தத் வத। ௮।௰௧௬
குேல ஜந்ம ததாேராக்யம்। தநர்த்திஸ் ேசஹ துர்லபா। ௮।௰௧௭
த்ரிதயம் ப்ராப்யேத ேயந। தந் ேம வத மஹாமுேந। ௮।௰௧௭
மாதாமஹம் காண்வம் உதாரவர்யம் ீ । மஹர்ஷிம் அப்யர்ச்ய குலப்ரஸூதிம்।
௮।௰௧௮
பப்ரச்ச பும்ஸாம் அத ேயாஷிதாம் ச। துஷ்வந்தபுத்ேரா பரத: ப்ரணம்ய।
௮।௰௧௮
யதாவத் ஆசஷ்ட தேதா மஹாத்மா। ஸ ராஜவர்யாய யதா குேலஷு।
௮।௰௧௯
ப்ரயாந்தி ஸூதிம் புருஷா: ஸ்த்ரியஸ் ச। யதா ச ஸம்யக் ஸுகிேநா பவந்தி।
௮।௰௧௯
ெபௗேஷ ஸிேத த்வாதஸேம அஹ்நி ஸார்ேக। ததார்க்ஷேயாேக ஜகத:
ப்ரஸூதிம்। ௮।௰௨

ஸம்பூஜ்ய விஷ்ணும் விதிேநாபவாஸீ। ஸ்ரக்கந்ததூபாந்நவேராபஹாைர:।
௮।௰௨
க்ருஹ்ணதீ மாஸம் ப்ரதிமாஸபூஜாம்। தாநாதியுக்தம் வ்ரதம் அப்தம் ஏகம்।
௮।௰௨௧
தத்யாச் ச தாநம் த்விஜபுங்கேவப்யஸ்। தத் உச்யமாநம் விநிேபாத பூப।
௮।௰௨௧
க்ருதம் திலாந் வ்ரீஹியவம் ஹிரண்யம்। யவாந்நம் அம்ப:கரகாந்நபாநம்।
௮।௰௨௨
சத்த்ரம் பேயா அந்நம் குடபாணிதாட்யம்। ஸ்ரக்சந்தநம் வஸ்த்ரம்
அநுக்ரேமண। ௮।௰௨௨
மாேஸ ச மாேஸ விதிேநாதிேதந। தஸ்யாம் திெதௗ ேலாககுரும் ப்ரபூஜ்ய।
௮।௰௨௩
அஸ்நீத யாந்ய் ஆத்மவிஸுத்திேஹேதா:। ஸம்ப்ராஸநாநீஹ நிேபாத தாநி।
௮।௰௨௩
ேகாமூத்ரம் அம்ேபா க்ருதம் ஆமஸாகம்। தூர்வா ததி வ்ரீஹியவாம்ஸ்
திலாம்ஸ் ச। ௮।௰௨௪
ஸூர்யாம்ஸுதப்தம் ஜலம் அம்பு தார்பம்। க்ஷரம்ீ ச
மாஸக்ரமேஸாபயுஞ்ஜ்யாத்। ௮।௰௨௪
குேல ப்ரதாேந தநதாந்யபூர்ேண। விேவகவத்ய் அஸ்தஸமஸ்தது:ேக।
௮।௰௨௫
ப்ராப்ேநாதி ஜந்மாவிகேலந்த்ரியஸ் ச। பவத்ய் அேராேகா மதிமாந் ஸுகீ ச।
௮।௰௨௫
தஸ்மாத் த்வம் அப்ய் ஏதத் அேமாகவித் ேயா। நாராயணாராதநம் அப்ரமத்த:।
௮।௰௨௬

குருஷ்வ விஷ்ணும் பகவந்தம் ஈஸம்। ஆராத்ய காமாந் அகிலாந் உைபதி।
௮।௰௨௬
யதா ச ஸுக்லத்வாதஸ்யாம்। நக்ஷத்ரம் ஸ்ரவணம் பேவத்। ௯।௰௰௧
ததா ஸா து மஹாபுண்யா। த்வாதஸீ விஜயா ஸ்ம்ருதா। ௯।௰௰௧
தஸ்யாம் ஸ்நாத: ஸர்வதீர்ைத:। ஸ்நாேதா பவதி மாநவ:। ௯।௰௰௨
ஸம்பூஜ்ய வர்ஷபூஜாயா:। ஸகலம் பலம் அஸ்நுேத। ௯।௰௰௨
ஏகம் ஜப்த்வா ஸஹஸ்ரஸ்ய। ஜப்தஸ்யாப்ேநாதி யத் பலம்। ௯।௰௰௩
தாநம் ஸஹஸ்ரகுணிதம்। ததா ைவ விப்ர ேபாஜநம்। ௯।௰௰௩
யத் ேக்ஷமம் அபி ைவ தஸ்யாம்। ஸஹஸ்ரம் ஸ்ராவேண து தத்।
௰௰௯।௭
அந்யஸ்யாம் ஏவ தித்யாம்। ஸுபாயாம் ஸ்ராவணம் யதா। ௰௰௯।௭
ேஹாமஸ் தேதாபவாஸஸ் ச। ஸஹஸ்ராக்யபலப்ரத:। ௯।௰௰௩
ேராஹிண்யாஸ் ச யதா க்ருஷ்ண । பேக்ஷ அஷ்டம்யாம் த்விேஜாத்தம।
௧௰।௰௰௧
ஜயந்தீநாம ஸா ப்ேராக்தா। ஸர்வபாபஹரா திதி:। ௧௰।௰௰௧
யத் பால்ேய யச் ச ெகௗமாேர। ெயௗவேந வார்த்திேக ச யத்।
௧௰।௰௰௨
ஸப்தஜந்மக்ருதம் பாபம்। ஸ்வல்பம் வா யதி வா பஹு। ௧௰।௰௰௨
தத் க்ஷாலயதி ேகாவிந்தம்। தஸ்யாம் அப்யர்ச்ய பக்தித:। ௧௰।௰௰௩
ேஹாமஜப்யாதிதாநாநாம்। பலம் ச ஸதஸம்மிதம்। ௧௰।௰௰௩
ஸம்ப்ராப்ேநாதி ந ஸம்ேதேஹா। யச் சாந்யந் மநேஸச்சதி। ௧௰।௰௰௪
உபவாஸஸ் ச தத்ேராக்ேதா। மஹாபாதகநாஸந:। ௧௰।௰௰௪
ஏகதஸ்யாம் ஸுக்லபேக்ஷ। யதா ர்க்ஷம் ைவ புநர்வஸு:। ௧௧।௰௰௧

நாம்நா ஸாதிஜயாக்யாதா। திதீநாம் உத்தமா திதி:। ௧௧।௰௰௧
ேயா ததாதி திலப்ரஸ்தம்। த்ருஷ்காலம் வத்ஸரம் நர:। ௧௧।௰௰௨
உபவாஸம் ச தஸ்யாம் ய:। கேராத்ய் ஏதத் ஸமம் ஸ்ம்ருதம்।
௧௧।௰௰௨
தஸ்யாம் ஜகத்பதிர் ேதவ:। ஸர்வ: ஸர்ேவஸ்வேரா ஹரி:। ௧௧।௰௰௩
ப்ரத்யக்ஷதாம் ப்ரயாத்ய் அல்பம்। ததாநந்தபலம் ஸ்ம்ருதம்। ௧௧।௰௰௩
ஸகேரண ககுத்ஸ்ேதந। தும்துமாேரண காதிநா। ௧௧।௰௰௪
தஸ்யாம் ஆராதித: க்ருஷ்ேணா। தத்தவாந் நிகிலாம் புவம்। ௧௧।௰௰௪
அயேந ேசாத்தேர ப்ராப்ேத। ய: ஸ்நாபயதி ேகஸவம்। ௧௨।௰௰௧
க்ருதப்ரஸ்ேதந பாபம் ஸ:। ஸகலம் ைவ வ்யேபாஹதி। ௧௨।௰௰௧
கபிலாம் விப்ரமுக்யாய। ததாத்ய் அநுதிநம் ஹி ய:। ௧௨।௰௰௨
க்ருதஸ்நாநம் ச ேதவஸ்ய। தஸ்மிந் காேல ஸமம் ஹி தத்। ௧௨।௰௰௨
ஸ்நாப்யமாநம் ச பஸ்யதி। ேய க்ருேதேநாத்தராயேண। ௧௨।௰௰௩
ேத யாந்தி விஷ்ணுஸாேலாக்யம்। ஸர்வபாபவிவர்ஜிதா:।
௰௧௨।௰௰௩௰௧௩।௮
ைமத்ேரயீ ப்ராஹ்மணீபூர்வம்। யாஜ்ஞவல்க்யம் அப்ருச்சத। ௧௩।௰௰௧
ப்ரணிபத்ய மஹாபாகம்। ேயாேகஸ்வரம் அகல்மஷம்। ௧௩।௰௰௧
பாபப்ரஸமநாயாலம்। யத் புண்யஸ்ேயாபவ்ரும்ஹகம்। ௧௩।௰௰௨
மேநாரதப்ரதம் யச் ச। தத் வ்ரதம் கத்யதாம் மம। ௧௩।௰௰௨
காநி தாநாநி ஸஸ்தாநி। ஸ்நாநாநி ச யதவ்ரத। ௧௩।௰௰௩
ப்ரஸஸ்தாஸ் திதய: காஸ் ச। ப்ராஸநாநி ச ஸம்ஸ ேம। ௧௩।௰௰௩
ஸர்வதாநாநி ஸஸ்தாநி। யாந்ய் உத்திஸ்ய ஜநார்தநம்। ௧௩।௰௰௪
தீயந்ேத விப்ரமுக்ேயப்ய:। ஸ்ரத்தாபூேதந ேசதஸா। ௧௩।௰௰௪

தா ஏவ திதய: ஸஸ்தா। யாஸ்வ் அப்யர்ச்ய ஜநார்தநம்। ௧௩।௰௰௫
க்ரியந்ேத ஸ்ரதயா ஸம்யக்। உபவாஸவ்ரதா: ஸதா। ௧௩।௰௰௫
ப்ராப்யேத விவிைதர் யஜ்ைஞர்। யத் பலம் ஸாத்வஸாதுபி:। ௧௩।௰௰௬
உபவாைஸஸ் தத் ஆப்ேநாதி। ஸமப்யர்ச்ய ஜநார்தநம்। ௧௩।௰௰௬
மேநாரதாநாம் ஸம்ப்ராப்தி । காரகம் பாபநாஸநம்। ௧௩।௰௰௭
ஸ்ரூயதாம் மம தர்மஜ்ேஞ। வ்ரதாநாம் உத்தமம் வ்ரதம்। ௧௩।௰௰௭
யத் க்ருத்வா ந ஜேடா நாந்ேதா। பதிேரா ந ச து:கித:। ௧௩।௰௰௮
ந ைசேவஷ்டவிேயாகார்திம்। கஸ்சித் ப்ராப்ேநாதி மாநவ:। ௧௩।௰௰௮
ந சாப்ரிேயா அஸ்ய ேலாகஸ்ய। ந தரித்ேரா ந துர்கதி:। ௧௩।௰௰௯
ஸப்த ஜந்மாநி பவதி। ஸர்வபாைப: ப்ரமுச்யேத। ௧௩।௰௰௯
விஷ்ணுவ்ரதம் இதம் க்யாதம்। பாஷிதம் விஷ்ணுநா ஸ்வயம்। ௧௩।௰௧
ெபௗஷஸுக்லத்விதீயாதி। க்ருத்வா திநசதுஷ்டயம்। ௧௩।௰௧௧
ஷண்மாஸபாரணப்ராயம்। க்ருஹ்ணயாத் ீ பரமம் வ்ரதம்। ௧௩।௰௧௧
பூர்வம் ஸித்தார்தைக: ஸ்நாநம்। தத: க்ருஷ்ணதிைல: ஸ்ம்ருதம்।
௧௩।௰௧௨
வசயா ச த்ருதீேய அஹ்நி। ஸர்ெவௗஷத்யா தத: பரம்। ௧௩।௰௧௨
நாம்நா க்ருஷ்ணாச்யுதாக்ேயந। ததாநந்ேதந பூஜேயத்। ௧௩।௰௧௩
தைதவ ச சதுர்ேத அஹ்நி। ஹ்ருஷீேகேஸந ேகஸவம்। ௧௩।௰௧௩
ேதவம் அப்யர்ச்ய புஷ்ைபஸ் ச। பத்த்ைரர் தூபாநுேலபைந:। ௧௩।௰௧௩
உத்கச்சதஸ் ச பாேலந்ேதார்। தத்யாத் அர்க்யம் ஸமாஹித:। ௧௩।௰௧௪
புஷ்ைப: பத்த்ைர: பைலஸ் ைசவ। ஸர்வதாந்ையஸ் ச பக்தித:।
௧௩।௰௧௪
திநக்ரேமண ைசதாநி। சந்த்ரநாமாநி கீர்தேயத்। ௧௩।௰௧௫

ஸஸிசந்த்ரஸஸாங்ேகந்து । ஸம்ஜ்ஞாநி ப்ரஹ்மவாதிநி। ௧௩।௰௧௫
நக்தம் புஞ்ஜதீ மதிமாந்। யாவத் திஷ்டதி சந்த்ரமா:। ௧௩।௰௧௬
அஸ்தம்கேத ந புஞ்ஜதீ । வ்ரதபங்கபயாச் சுேப। ௧௩।௰௧௬
ஏவம் ஸர்ேவஷு மாேஸஷு। ஜ்ேயஷ்டாந்ேதஷு யஸஸ்விநி।
௧௩।௰௧௭
கர்தவ்யம் ைவ வ்ரதஸ்ேரஷ்டம்। த்விதீயாதிசதுர்திநம்। ௧௩।௰௧௭
விப்ராய தக்ஷிணாம் தத்யாத்। பஞ்சம்யாம் ச ஸ்வஸக்தித:। ௧௩।௰௧௮
ஏவம் ஸமாபேயந் மாைஸ:। ஷட்பி: ப்ரதமபாரணம்। ௧௩।௰௧௮
பாரணந்ேத ச ேதவஸ்ய। ப்ரீணநம் பக்தித: ஸுேப। ௧௩।௰௧௯
யதாஸக்த்யா து கர்தவ்யம்। வித்தஸாட்யம் விவர்ஜேயத்। ௧௩।௰௧௯
ஆஷாடாதித்விதீயம் து। ஷண்மாேஸந தேபாதேந। ௧௩।௰௨
பாரணம் ைவ ஸமாக்யாதம்। வ்ரதஸ்யாஸ்ய ஸுபப்ரதம்। ௧௩।௰௨
வ்ரதம் ஏதத் திலீேபந। துஷ்வந்ேதந யயாதிநா। ௧௩।௰௨௧
ததாந்ைய: ப்ருதிவபாைலர் ீ । உபவாஸவிதாநத:। ௧௩।௰௨௧
சரிதம் முநிமுக்ையஸ் ச। க்ருசீகச்யவநாதிபி:। ௧௩।௰௨௧
ஸுரம்பயா ஸுைகேகய்யா। ஸாண்டில்யா தூம்ரபிங்கயா। ௧௩।௰௨௨
ஸுேதஷ்ணயாதவா ரிண்யா। மதிமத்யா க்ருதாஸயா। ௧௩।௰௨௨
ஸாவித்ர்யா ெபௗர்ணமாஸ்யா ச। ைவரிண்யா ச ஸுபத்ரயா।
௧௩।௰௨௩
ப்ராஹ்மணக்ஷத்ரியவிஸாம்। இதி ஸ்த்ரீபிர் அநுஷ்டிதம்। ௧௩।௰௨௩
உர்வஸ்யா ரம்பயா ைசவ। ெஸௗரேபய்யா ததா வ்ரதம்। ௧௩।௰௨௪
வராப்ஸேராபிர் தர்மஜ்ேஞ। சரிதம் தர்மவாம்சயா। ௧௩।௰௨௪

ப்ரதேம பாதபூஜா ஸ்யாத்। த்விதீேய நாபிபூஜநம்। ௧௩।௰௨௫
த்ருதீேய வக்ஷஸ: பூஜா। சதுர்ேத ஸிரேஸா ஹேர:। ௧௩।௰௨௫
ஏதச் சீர்த்வா ஸமஸ்ேதப்ய:। பாேபப்ய: ஸ்ரத்தயாந்வித:। ௧௩।௰௨௬
முச்யேத ஸகலாம்ஸ் ைசவ। ஸம்ப்ராப்ேநாதி மேநாரதாந்। ௧௩।௰௨௬
வ்ரதாநாம் உத்தமம் ஹ்ய் ஏதத்। ஸ்வயம் ேதேவந பாஷிதம்।
௧௩।௰௨௭
பாபப்ரஸமநம் ஸஸ்தம்। மேநாரதபலப்ரதம்। ௧௩।௰௨௭
யம் ச காமம் அபித்யாயந்। க்ரியேத நியதவ்ரைத:। ௧௩।௰௨௮
வ்ரதம் ஏதந் மஹாபாேக। தம் து பூரயேத ந்ருணாம்। ௧௩।௰௨௮
மேநாரதாந் பூரயதி। ஸர்வபாபம் வ்யேபாஹதி। ௧௩।௰௨௯
அவ்யாஹேதந்த்ரியத்வம் ச। ஸப்த ஜந்மாநி யச்சதி। ௧௩।௰௨௯
மாேக ஸ்நாதஸ்ய யத் புண்யம்। ப்ரயாேக பாபநாஸநம்। ௧௩।௰௩
ஸகலம் தத் அவாப்ேநாதி। ஸ்ருத்வா விஷ்ணுவ்ரதம் த்வ் இதம்।
௧௩।௰௩
ஸாக்ஷாத் பகவதா ப்ேராக்தம்। பரமம் பாபநாஸநம்। ௰௧௩।௯
ஸுக்லபேக்ஷ து ெபௗஷஸ்ய। ஸம்ப்ராப்தித்வாதஸம்ீ ஸ்ருணு।
௧௪।௰௰௧
யாம் உேபாஷ்ய ஸமாப்ேநாதி। ஸர்வாந் ஏவ மேநாரதாந்। ௧௪।௰௰௧
பாஷண்டாதிபிர் ஆலாபம்। அகுர்வந் விஷ்ணுதத்பர:। ௧௪।௰௰௨
பூஜேயத் ப்ரணேதா ேதவம்। ஏகாக்ரமதிர் அச்யுதம்। ௧௪।௰௰௨
ெபௗஷாதிபாரணம் மாைஸ:। ஷட்பிர் ஜ்ேயஷ்டாந்தகம் ஸ்ம்ருதம்।
௧௪।௰௰௩
ப்ரதேம புண்டரீகாக்ஷம்। நாம ேதவஸ்ய கீயேத। ௧௪।௰௰௩

த்விதீேய மாதவாக்யம் து। விஸ்வரூபம் து பால்குேந। ௧௪।௰௰௪
புருேஷாத்தமாக்யம் ச தத:। பஞ்சேம சாச்யுேததி ச। ௧௪।௰௰௪
ஷஷ்ேட ஜேயதி ேதவஸ்ய। குஹ்யம் நாம ப்ரகீர்த்யேத। ௧௪।௰௰௫
பூர்ேவஷு ஷட்ஸு மாேஸஷு। ஸ்நாநப்ராஸநேயாஸ் திலா:।
௧௪।௰௰௫
ஆஷாடாதிஷு மாேஸஷு। பஞ்சகவ்யம் உதாஹ்ருதம்। ௧௪।௰௰௬
ஸ்நாேந ச ப்ராஸேந ைசவ। ப்ரஸஸ்தம் பாபநாஸநம்। ௧௪।௰௰௬
ப்ரதிமாஸம் ச ேதவஸ்ய। க்ருத்வா பூஜாம் யதாவிதி। ௧௪।௰௰௭
விப்ராய தக்ஷிணாம் தத்யாச்। ஸ்ரத்ததாந: ஸ்வஸக்தித:। ௧௪।௰௰௭
பாரணாந்ேத ச ேதவஸ்ய। ப்ரீணநம் பக்திபூர்வகம்। ௧௪।௰௰௮
க்ருவதீ ஸக்த்யா ேகாவிந்ேத। ஸத்பாவாப்யர்சேநா யத:। ௧௪।௰௰௮
நக்தம் புஞ்ஜதீ ச ததஸ்। ைதலக்ஷாரவிவர்ஜிதம்। ௧௪।௰௰௯
ஏகாதஸ்யாம் உஷித்ைவவம்। த்வாதஸ்யாம் அதவா திேந। ௧௪।௰௰௯
ஏதாம் உஷித்வா தர்மஜ்ேஞ। ப்ரீணநம் ேதவதத்பர:। ௧௪।௰௧
ஸர்வகாமாந் அவாப்ேநாதி। ஸர்வபாைப: ப்ரமுச்யேத। ௧௪।௰௧
யத: ஸர்வம் அவாப்ேநாதி। யத் யத் இச்சதி ேசதஸா। ௧௪।௰௧௧
தேதா ேலாேகஷு விக்யாதா। ஸம்ப்ராப்தித்வாதஸதி ீ ைவ। ௧௪।௰௧௧
க்ருதாபிலஷிதா ஹ்ய் ஏஷா। ப்ராரப்தா தர்மதத்பைர:। ௧௪।௰௧௨
பூரயத்ய் அகிலாந் காமாந்। ஸம்ஸ்ருதா ச திேந திேந। ௧௪।௰௧௨
தஸ்மிந்ந் ஏவ திேந புண்ேய। ேகாவிந்தத்வாதஸம்ீ ஸ்ருணு। ௧௫।௰௰௧
யஸ்யாம் ஸம்யக் அநுஷ்டாநாத்। ப்ராப்ேநாத்ய் அபிமதம் பலம்।
௧௫।௰௰௧

ெபௗஷமாேஸ ஸிேத பேக்ஷ। த்வாதஸ்யாம் ஸமுேபாஷித:।
௧௫।௰௰௨
ஸம்யக் ஸம்பூஜ்ய ேகாவிந்தம்। நாம்நா ேதவம் அேதாக்ஷஜம்।
௧௫।௰௰௨
புஷ்பதூேபாபஹாராத்ையர்। உபவாைஸ: ஸமாஹித:। ௧௫।௰௰௨
ேகாவிந்ேததி ஜபந் நாம। புநஸ் தத்கதமாநஸ:। ௧௫।௰௰௩
விப்ராய தக்ஷிணாம் தத்யாத்। யதாஸக்தி தேபாதேந। ௧௫।௰௰௩
ஸ்வபந் விபுத்த: ஸ்கலிேதா। ேகாவிந்ேததி ச கீர்தேயத்। ௧௫।௰௰௪
பாஷண்டாதிவிகர்மஸ்ைதர்। ஆலாபம் ச விவர்ஜேயத்। ௧௫।௰௰௪
ேகாமூத்ரம் ேகாமயம் வாபி। ததி க்ஷீரம் அதாபி வா। ௧௫।௰௰௫
ேகாேதஹத: ஸமுத்பந்நம்। ஸம்ப்ராஸ்நீதாத்மஸுத்தேய। ௧௫।௰௰௫
த்விதீேய அஹ்நி புந: ஸ்நாதஸ்। தைதவாப்யர்ச்ய தம் ப்ரபும்।
௧௫।௰௰௬
ேதைநவ நாம்நா ஸம்ஸ்தூய। தத்த்வா விப்ராய தக்ஷிணாம்।
௧௫।௰௰௬
தேதா புஞ்ஜதீ ேகாேதஹ । ஸம்பூேதந ஸமந்விதம்। ௧௫।௰௰௬
ஏவம் ஏவாகிலாந் மாஸாந்। உேபாஷ்ய ப்ரயத: ஸுசி:। ௧௫।௰௰௭
தத்யாத் கவாஹ்நிகம் பக்த்யா। ப்ரதிமாஸம் ஸ்வஸக்தித:। ௧௫।௰௰௭
பாரிேத ச புநர் வர்ேஷ। யதாஸக்தி கவாஹ்நிகம்। ௧௫।௰௰௮
தத்த்வா பரகேவ பூய:। ஸ்ருணு யத் பலம் அஸ்நுேத। ௧௫।௰௰௮
ஸுவர்ணஸ்ருங்கா: பஞ்ச கா:। ஷஷ்டம் ச வ்ருஷபம் நர:। ௧௫।௰௰௯
ப்ரதிமாஸம் த்விஜாக்ேரப்ேயா। யத் தத்த்வா பலம் அஸ்நுேத।
௧௫।௰௰௯

தத் ஆப்ேநாத்ய் அகிலம் ஸம்யக்। வ்ரதம் ஏதத் உேபாஷித:। ௧௫।௰௧
தம் ச ேலாகம் அவாப்ேநாதி। ேகாவிந்ேதா யத்ர திஷ்டதி। ௧௫।௰௧
ேகாவிந்தத்வாதஸம்ீ ஏதாம்। உேபாஷ்ய திவி தாரகா:। ௧௫।௰௧௧
வித்ேயாதமாநா த்ருஸ்யந்ேத। ேலாைகர் அத்யாபி ேஸாபேந।
௧௫।௰௧௧
உபவாஸவ்ரதாநாம் து। ைவகல்யம் யந் மஹாமுேந। ௧௬।௰௰௧
தாநகர்மக்ருதம் தஸ்ய। விபாேகா வத யாத்ருஸ:। ௧௬।௰௰௧
யஜ்ஞாநாம் உபவாஸாநாம்। வ்ரதாநாம் ச யதவ்ரேத। ௧௬।௰௰௨
ைவகல்யாத் பலைவகல்யம்। யாத்ருஸம் தச் ச்ருணுஷ்வ ேம।
௧௬।௰௰௨
உபவாஸாதிநா ராஜ்யம்। ஸம்ப்ராப்யம் ேத ததா வஸு। ௧௬।௰௰௩
ப்ரஷ்ைடஸ்வர்யா நிர்தநாஸ் ச। பவந்தி புருஷா: புந:। ௧௬।௰௰௩
ரூபம் தேதாத்தமம் ப்ராப்ய। வ்ரதைவகல்யேதாஷத:। ௧௬।௰௰௪
காணா: குண்டாஸ் ச பூயஸ் ேத। பவந்த்ய் அந்தாஸ் ச மாநவா:।
௧௬।௰௰௪
உபவாஸாந் நர: பத்நீம்। நாரீ ப்ராப்ய ததா பதிம்। ௧௬।௰௰௫
விேயாகம் வ்ரதைவகல்யாத்। உபயம் தத் அவாப்நுேத। ௧௬।௰௰௫
ேய த்ரவ்ேய ஸத்ய் அதாதாரஸ்। ததாந்ேயநாஹிதாக்நய:। ௧௬।௰௰௬
குேல ச ஸதி து:ஸலா ீ । ெதௗஷ்குலா: ஸலிநஸ் ீ ச ேய। ௧௬।௰௰௬
வஸ்த்ராநுேலபைநர் ஹீநா। பூஷைணஸ் சாதிரூபிண:। ௧௬।௰௰௭
விரூபரூபாஸ் ச ததா। ப்ரஸாதநகுணாந்விதா:। ௧௬।௰௰௭
ேத ஸர்ேவ வ்ரதைவகல்யாத்। பலைவகல்யம் ஆகதா:। ௧௬।௰௰௮

குணிேநா அபி ஹி ேதாேஷண। ஸம்யுக்தா: ஸம்பவந்தி ேத।
௧௬।௰௰௮
தஸ்மாந் ந வ்ரதைவகல்யம்। யஜ்ஞைவகல்யம் ஏவ வா। ௧௬।௰௰௯
உபவாேஸ ச கர்தவ்யம்। ைவகல்யாத் விகலம் பலம்। ௧௬।௰௰௯
கதம்சித் யதி ைவகல்யம்। உபவாஸாதிேக பேவத்। ௧௬।௰௧
கிம் தத்ர வத கர்தவ்யம்। அச்சித்ரம் ேயந ஜாயேத। ௧௬।௰௧
அகண்டத்வாதஸம்ீ ஏதாம்। அேஸேஷஷ்வ் ஏவ கர்மஸு। ௧௬।௰௧௧
ைவகல்யப்ரஸமாயாலம்। ஸ்ருணுஷ்வ கதேதா மம। ௧௬।௰௧௧
மார்கஸர்ேஷீ ஸிேத பேக்ஷ। த்வாதஸ்யாம் நியத: ஸுசி:। ௧௬।௰௧௨
க்ருேதாபவாேஸா ேதேவஸம்। ஸமப்யர்ச்ய ஜநார்தநம்। ௧௬।௰௧௨
பஞ்சகவ்யஜலஸ்நாத:। பஞ்சகவ்யக்ருதாஸந:। ௧௬।௰௧௩
யவவ்ரீஹிப்ருதம் பாத்ரம்। தத்யாத் விப்ராய பக்தித:। ௧௬।௰௧௩
இதம் ேசாச்சாரேயத் பக்த்யா। ேதவஸ்ய புரேதா ஹேர:। ௧௬।௰௧௩
ஸப்த ஜந்மாநி யத் கிம்சித்। மயா கண்டவ்ரதம் க்ருதம்। ௧௬।௰௧௪
பகவம்ஸ் த்வத்ப்ரஸாேதந। தத் அகண்டம் இஹாஸ்து ேம। ௧௬।௰௧௪
யதாகண்டம் ஜகத் ஸர்வம்। த்வம் ஏவ புருேஷாத்தம। ௧௬।௰௧௫
ததாகிலாந்ய் அகண்டாநி। வ்ரதாநி மம ஸந்து ைவ। ௧௬।௰௧௫
ஏவம் ஏவாநுமாஸம் ைவ। சாதுர்மாஸ்யவிதி: ஸ்ம்ருத:। ௧௬।௰௧௬
சதுர்பிர் ஏவ மாைஸஸ் து। பாரணம் ப்ரதமம் ஸ்ம்ருதம்। ௧௬।௰௧௭
ப்ரீணநம் ச ஹேர: குர்யாத்। பாரிேத பாரேண தத:। ௧௬।௰௧௭
ைசத்ராதிஷு ச மாேஸஷு। சதுர்ஷ்வ் அந்யம் து பாரணம்। ௧௬।௰௧௮
தத்ராபி ஸக்துபாத்ராணி। தத்யாச் ச்ரத்தாஸமந்வித:। ௧௬।௰௧௮
ஸ்ராவணாதிஷு மாேஸஷு। கார்த்திகாந்ேதஷு பாரணம்। ௧௬।௰௧௯

யத்நாத் து க்ருதபாத்ராணி। தத்யாத் விப்ராய பக்தித:। ௧௬।௰௧௯
ஏவம் ஸம்யக் யதாந்யாயம்। அகண்டத்வாதஸம்ீ நர:। ௧௬।௰௨
யத் உேபாஷ்யத்ய் அகண்டம் ஸ। வ்ரதஸ்ய பலம் அஸ்நுேத। ௧௬।௰௨
ஸப்த ஜந்மஸு ைவகல்யம்। யத் வ்ரதஸ்ய க்வசித் க்ருதம்। ௧௬।௰௨௧
கேராத்ய் அவிகலம் ஸர்வம்। அகண்டத்வாதஸவ்ரதம் ீ । ௧௬।௰௨௧
தஸ்மாத் ஏஷாதியத்ேநந। நைர: ஸ்த்ரீபிஸ் ச ஸுவ்ரேத। ௧௬।௰௨௨
அகண்டத்வாதஸீ ஸம்யக்। உேபாஷ்யா பலகாம்க்ஷிபி:। ௧௬।௰௨௨
ஏவம் புரா யாஜ்ஞவல்க்ய:। ப்ருஷ்ட: பத்ந்யா மஹாமுநி:। ௧௭।௰௰௧
ஆசஷ்ட புண்யபலதம்। உபவாஸவிதிம் பரம்। ௧௭।௰௰௧
ததா த்வம் அபி விப்ரர்ேஷ। ேகஸவாராதேந ரத:। ௧௭।௰௰௨
வ்ரேதாபவாஸபரேமா। பேவதா நாந்யமாநஸ:। ௧௭।௰௰௨
புநஸ் ைசதந் மஹாபாக। ஸ்ரூயதாம் கதேதா மம। ௧௭।௰௰௩
ப்ேராக்தம் நேரண ேதவாநாம்। திதிமாஹாத்ம்யம் உத்தமம்। ௧௭।௰௰௩
விஜயாதிஜயா ைசவ। ஜயந்தீபாபநாஸநீ। ௧௭।௰௰௪
தேதாத்தராயணம் ஸஸ்தம்। ஸர்வதா ேகஸவார்சேந। ௧௭।௰௰௪
யத் அந்யகாேல வர்ேஷண। ேகஸவால் லப்யேத பலம்। ௧௭।௰௰௫
ஸக்ருத் ஏவார்சிேத க்ருஷ்ேண। தத் ஏதாஸ்வ் அபி லப்யேத।
௧௭।௰௰௫
விஜயாதிஜயா ைசவ। ஜயந்தீபாபநாஸநீ। ௧௭।௰௰௬
தேதாத்தராயணம் ைசவ। யச் சஸ்தம் ேகஸவார்சேந। ௧௭।௰௰௬
தத் ஸர்வம் கதேயஹாத்ய। திதிமாஹாத்ம்யம் உத்தமம்। ௧௭।௰௰௭
யத்ர ஸம்பூஜித: க்ருஷ்ண:। ஸர்வபாபம் வ்யேபாஹதி। ௧௭।௰௰௭

ஏகாதஸ்யாம் ஸிேத பேக்ஷ। புஷ்யர்க்ஷம் யத்ர ஸத்தம। ௧௭।௰௰௮
திெதௗ பவதி ஸா ப்ேராக்தா। விஷ்ணுநா பாபநாஸநீ। ௧௭।௰௰௮
தஸ்யாம் ஸம்பூஜ்ய ேகாவிந்தம்। ஜகதாம் ஈஸ்வேரஸ்வரம்। ௧௭।௰௰௯
ஸப்தஜந்மக்ருதாத் பாபாந்। முச்யேத நாத்ர ஸம்ஸய:। ௧௭।௰௰௯
யஸ் ேசாபவாஸம் குருேத। தஸ்யாம் ஸ்நாேதா த்விேஜாத்தம।
௧௭।௰௧
ஸர்வபாபவிநிர்முக்ேதா। விஷ்ணுேலாேக மஹீயேத। ௧௭।௰௧
தாநம் யத் தீயேத கிம்சித்। ஸமுத்திஸ்ய ஜநார்தநம்। ௧௭।௰௧௧
ேஹாேமா வா க்ரியேத தஸ்யாம்। அக்ஷயம் லபேத பலம்। ௧௭।௰௧௧
ஏகா க்ருக் ேதவபுரேதா। ஜப்தா ஸ்ரத்தாவதா ததா। ௧௭।௰௧௨
க்ருக்ேவதஸ்ய ஸமஸ்தஸ்ய। ஜபதா யச்சேத பலம்। ௧௭।௰௧௨
ஸாமேவதபலம் ஸாம। யஜுர்ேவதபலம் யஜு:। ௧௭।௰௧௩
ஜப்தம் ஏகம் முநிஸ்ேரஷ்ட। ததாத்ய் அத்ர ந ஸம்ஸய:। ௧௭।௰௧௩
தாரகா திவி ராஜந்ேத। த்ேயாதமாநா த்விேஜாத்தம। ௧௭।௰௧௪
ஸமப்யர்ச்ய திதாவ் அஸ்யாம்। ேதவேதவம் ஜநார்தநம்। ௧௭।௰௧௪
யத: பாபம் அேஸஷம் ைவ। நாஸயத்ய் அத்ர ேகஸவ:। ௧௭।௰௧௫
புஷ்யர்ைக்ஷகாதஸீ ப்ரஹ்மம்ஸ்। ேதேநாக்தா பாபநாஸநீ। ௧௭।௰௧௫
ததாந்யத் அபி தர்மஜ்ஞ। ஸ்ரூயதாம் கதேதா மம। ௧௮।௰௰௧
பதத்வயம் ஜகத்தாதுர்। ேதவேதவஸ்ய ஸார்ங்கிண:। ௧௮।௰௰௧
ஸம்வத்ஸர: பாதபடம்ீ । தத்ர ந்யஸ்தம் பதத்வயம்। ௧௮।௰௰௨
வாஸுேதேவந விப்ேரந்த்ர। பூதாநாம் ஹிதகாம்யயா। ௧௮।௰௰௨
வாமம் அஸ்ய பதம் ப்ரஹ்மந்। உத்தராயணஸம்ஜ்ஞிதம்। ௧௮।௰௰௩

ேதவாத்ைய: ஸகைலர் வந்த்யம்। தக்ஷிணம் தக்ஷிணாயநம்। ௧௮।௰௰௩
தஸ்மிந் ய: ப்ரயத: ஸம்யக்। ேதவேதவஸ்ய மாநவ:। ௧௮।௰௰௪
கேராத்ய் ஆராதநம் தஸ்ய। ேதாஷம் ஆயாதி ேகஸவ:। ௧௮।௰௰௪
கதம் ஆராதநம் தஸ்ய। ேதவேதவஸ்ய ஸார்ங்கிண:। ௧௮।௰௰௫
க்ரியேத முநிஸார்தூல। தந் மமாக்யாதும் அர்ஹஸி। ௧௮।௰௰௫
உத்தேர த்வ் அயேந தால்ப்ய। ஸ்நாேதா நியதமாநஸ:। ௧௮।௰௰௬
க்ருதக்ஷராதிநா ீ ேதவம்। ஸ்நாபேயத் தரணதரம் ீ । ௧௮।௰௰௬
சாருவஸ்த்ேராபஹாைரஸ் ச। புஷ்பதூபாநுேலபைந:। ௧௮।௰௰௭
ஸமப்யர்ச்ய தத: ஸம்யக்। ப்ராஹ்மணாநாம் ச தர்பைண:। ௧௮।௰௰௭
பதத்வயவ்ரதம் ஸம்யக்। க்ருஹ்ணயாத் ீ விஷ்ணுதத்பர:। ௧௮।௰௰௭
ஸ்நாேதா நாராயணம் வŠேய। புஞ்ஜந் நாராயணம் ததா। ௧௮।௰௰௮
புங்க்த்வா நாராயணம் சாஹம்। கச்சந் நாராயணம் தத:। ௧௮।௰௰௮
ஸ்வபந் விபுத்த: ப்ரணமந்। ேஹாமம் குர்வம்ஸ் ததார்சநம்। ௧௮।௰௰௯
நாராயணஸ்யாநுதிநம்। கரிஷ்ேய நாமகீர்தநம்। ௧௮।௰௰௯
யாவத் அத்யதிநாத் ப்ராப்தம்। க்ரமேஸா தக்ஷிணாயநம்। ௧௮।௰௧
ஸ்கலிேத அஹம் க்ஷுேத ைசவ। ேவதநார்ேதா அதவா ஸதா। ௧௮।௰௧
தாவந் நாராயணம் வŠேய। ஸர்வம் ஏேவாத்தராயணம்। ௧௮।௰௧
யாவஜ் ஜவவதம் ீ கிம்சித்। ஜ்ஞாநேதா அஜ்ஞாநேதா அபி வா। ௧௮।௰௧௧
கரிஷ்ேய அஹம் ததா ைசவ। கீர்தயிஷ்யாமி தம் ப்ரபும்। ௧௮।௰௧௧
யதா ததாந்ருதம் கிம்சித்। அத வŠயாமி துர்வச:। ௧௮।௰௧௨
அஜ்ஞாநாத் அதவா ஜ்ஞாநாத்। கீர்தயிஷ்யாமி தம் ப்ரபும்। ௧௮।௰௧௨
ஷண்மாஸம் ஏஷ ேம ஜாேபா। நாராயணமய: பர:। ௧௮।௰௧௩

தம் ஸ்மரந் மரேண யாதி। யாம் கதிம் ஸாஸ்து ேம கதி:। ௧௮।௰௧௩
ஷண்மாஸாப்யந்தேர ம்ருத்யுர்। யத்ய் அகஸ்மாத் பேவந் மம।
௧௮।௰௧௪
தந் மயா வாஸுேதவாய। ஸ்வயம் ஆத்மா நிேவதித:। ௧௮।௰௧௪
பரமார்தமயம் ப்ரஹ்ம। வாஸுேதவமயம் பரம்। ௧௮।௰௧௫
யம் அந்ேத ஸம்ஸ்மரந் யாதி। ஸ ேம விஷ்ணு: பரா கதி:। ௧௮।௰௧௫
யதா ப்ராதஸ் ததா ஸாயம்। மத்யாஹ்ேந வா ம்ரிேய ஹ்ய் அஹம்।
௧௮।௰௧௬
ஷண்மாஸாப்யந்தேர ந்யாஸ:। க்ருேதா வ்ரதமேயா மயா। ௧௮।௰௧௬
ததா குரு ஜகந்நாத। ஸர்வேலாகபராயண। ௧௮।௰௧௭
நாராயண யதா நாந்யம்। த்வத்ேதா யாமி ம்ருேத கதிம்। ௧௮।௰௧௭
ஏவம் உச்சார்ய ஷண்மாஸ । பாரணம் ப்ரவரம் வ்ரதம்। ௧௮।௰௧௮
தாவந் நிஷ்பாதேயத் யாவத்। ஸம்ப்ராப்தம் தக்ஷிணாயநம்। ௧௮।௰௧௮
ததஸ் ச ப்ரீணநம் குர்யாத்। யதாஸக்த்யா ஜகத்குேரா:। ௧௮।௰௧௯
ேபாஜேயத் ப்ராஹ்மணாந் ஸம்யக்। தத்யாத் ேதப்யஸ் ச தக்ஷிணாம்।
௧௮।௰௧௯
ஏவம் வ்ரதம் இதம் தால்ப்ய। ய: பாரயதி மாநவ:। ௧௮।௰௨
நாரீ வா ஸர்வபாேபப்ய:। ஷண்மாஸாத் விப்ர முச்யேத। ௧௮।௰௨
ஷண்மாஸாப்யந்தேர சாஸ்ய। மரணம் யதி ஜாயேத। ௧௮।௰௨௧
ப்ராப்ேநாத்ய் அநஸநஸ்ேயாக்தம்। யத் பலம் தத் அஸம்ஸயம்।
௧௮।௰௨௧
பதத்வயம் ச க்ருஷ்ணஸ்ய। ஸம்யக் ேதந ததார்சிதம்। ௧௮।௰௨௨
ஹேரர் நாம ஜபந் பக்த்யா। ஸ புரா ந ஜேநஸ்வர। ௰௧௮।௧௰

பகவாந் உஜ்ஜெகௗ விஷ்ணு:। புரா கார்க்யாய ப்ருச்சேத। ௧௮।௰௨௨
பால்குநாமலபக்ஷஸ்ய। ஏகாதஸ்யாம் உேபாஷித:। ௧௯।௰௰௧
நேரா வா யதி வா நாரீ। ஸமப்யர்ச்ய ஜகத்குரும்। ௧௯।௰௰௧
ஹேரர் நாம ஜேபத் பக்த்யா। ஸப்த வாராந் நேரஸ்வர। ௧௯।௰௰௨
உத்திஷ்டந் ப்ரஸ்வபம்ஸ் ைசவ। ஹரிம் ஏவாநுகீர்தேயத்। ௧௯।௰௰௨
தேதா அந்யதிவேஸ ப்ராப்ேத। த்வாதஸ்யாம் ப்ரயேதா ஹரிம்।
௧௯।௰௰௩
ஸ்நாத்வா ஸம்யக் தம் அப்யர்ச்ய। தத்யாத் விப்ராய தக்ஷிணாம்।
௧௯।௰௰௩
ஹரிம் உத்திஸ்ய ைசவாக்ெநௗ। க்ருதேஹாமக்ருதக்ரிய:। ௧௯।௰௰௪
ப்ரணிபத்ய ஜகந்நாதம்। இதி வாணம்ீ உதீரேயத்। ௧௯।௰௰௪
பாதாலஸம்ஸ்தா வஸுதா। யம் ப்ரஸாத்ய மேநாரதாந்। ௧௯।௰௰௫
அவாப வாஸுேதேவா அெஸௗ। ப்ரததாது மேநாரதாந்। ௧௯।௰௰௫
யம் அப்யர்ச்யாதிதி: ப்ராப்தா। ஸகலாம்ஸ் ச மேநாரதாந்। ௧௯।௰௰௬
புத்ராம்ஸ் ைசேவப்ஸிதாந் ேதவ:। ப்ரததாது மேநாரதாந்। ௧௯।௰௰௬
ப்ரஷ்டராஜ்யஸ் ச ேதேவந்த்ேரா। யம் அப்யர்ச்ய ஜகத்பதிம்। ௧௯।௰௰௭
மேநாரதாந் அவாபாக்ர்யாந்। ஸ ததாது மேநாரதாந்। ௧௯।௰௰௭
ஏவம் அப்யர்ச்ய பூஜாம் ச। நிஷ்பாத்ய ஹரேய தத:। ௧௯।௰௰௮
புஞ்ஜதீ ப்ரயத: ஸம்யக்। ஹவிஷ்யம் மநுஜர்ஷப। ௧௯।௰௰௮
பால்குநம் ைசத்ரைவஸாெகௗ। ஜ்ேயஷ்டமாஸம் ச பார்திவ।
௧௯।௰௰௯
சதுர்பி: பாரணம் மாைஸர்। ஏபிர் நிஷ்பாதிதம் பேவத்। ௧௯।௰௰௯
ரக்தபுஷ்ைபஸ் து சதுேரா। மாஸாந் குர்வதீ சார்சநம்। ௧௯।௰௧

தேஹச் ச குக்குலம் ப்ராஸ்ய। ேகாஸ்ருங்கக்ஷாலநம் ஜலம்। ௧௯।௰௧
ஹவிஷ்யாந்நம் ச ைநேவத்யம்। ஆத்மநஸ் ைசவ ேபாஜநம்। ௧௯।௰௧௧
ததஸ் ச ஸ்ரூயதாம் அந்யத்। ஆஷாடாெதௗ து யா க்ரியா। ௧௯।௰௧௧
ஜாதீபுஷ்பாணி தூபஸ் ச। ஸஸ்த: ஸர்ஜரேஸா ந்ருப। ௧௯।௰௧௨
ப்ராஸ்ய தர்ேபாதகம் சாத்ர। ஸால்யந்நம் ச நிேவதநம்। ௧௯।௰௧௨
ஸ்வயம் தத் ஏவ சாஸ்நீயாச்। ேஸஷம் பூர்வவத் ஆசேரத்। ௧௯।௰௧௩
கார்த்திகாதிஷு மாேஸஷு। ேகாமூத்ரம் காயேஸாதநம்। ௧௯।௰௧௩
ஸுகந்தம் ேசச்சயா தூபம்। பூஜாப்ருங்காரேகண ச। ௧௯।௰௧௪
காஸாரம் சாத்ர ைநேவத்யம்। அஸ்நீயாத் தச் ச ைவ ஸ்வயம்।
௧௯।௰௧௪
ப்ரதிமாஸம் ச விப்ராய। தாதவ்யா தக்ஷிணா ததா। ௧௯।௰௧௫
ப்ரீணநம் ேசச்சயா விஷ்ேணா:। பாரேண பாரேண கேத। ௧௯।௰௧௫
யதாஸக்தி யதாப்ரீதி। வித்தஸாட்யம் விவர்ஜேயத்। ௧௯।௰௧௬
ஸத்பாேவைநவ ேகாவிந்த:। பூஜித: ப்ரீயேத யத:। ௧௯।௰௧௬
பாரணாந்ேத யதாஸக்த்யா। ஸ்நாபித: பூஜிேதா ஹரி:। ௧௯।௰௧௭
ப்ரீணிதஸ் ேசப்ஸிதாந் காமாந்। ததாத்ய் அவ்யாஹதாந் ந்ருப।
௧௯।௰௧௭
ஏஷா தந்யா பாபஹரா। த்வாதஸீ பலம் இச்சதாம்। ௧௯।௰௧௮
யதாபிலஷிதாந் காமாந்। ததாதி மநுேஜஸ்வர। ௧௯।௰௧௮
பூரயத்ய் அகிலாந் பக்த்யா। யதஸ் ைசஷா மேநாரதாந்। ௧௯।௰௧௯
மேநாரதத்வாதஸயம் ீ । தேதா ேலாேகஷு விஸ்ருதா। ௧௯।௰௧௯
உேபாஷ்ையதாம் த்ரிபுவநம்। ப்ராப்தம் இந்த்ேரண ைவ புரா। ௧௯।௰௨
அதித்யா ேசப்ஸிதா: புத்ரா। தநம் ேசாஸநஸா ந்ருப। ௧௯।௰௨

ெதௗம்ேயந சாப்ய் அத்யயநம்। அந்ையஸ் சாபிமதம் பலம்। ௧௯।௰௨௧
ராஜர்ஷிபிஸ் ததா விப்ைர:। ஸ்த்ரீபி: ஸூத்ைரஸ் ச பூபேத। ௧௯।௰௨௧
யம் யம் காமம் அபித்யாேயத்। வ்ரதம் ஏதத் உேபாஷித:।
௰௧௯।௰௨௨௧௧
தம் தம் ஆப்ேநாத்ய் அஸம்திக்தம்। விஷ்ேணார் ஆராதேநாத்யத:।
௰௧௯।௰௨௨௧௧
அபுத்ேரா லபேத புத்ரம்। அதேநா லபேத தநம்। ௧௯।௰௨௩
ேராகாபிபூதஸ் சாேராக்யம்। கந்யா ப்ராப்ேநாதி ஸத்பதிம்। ௧௯।௰௨௩
ஸமாகமம் ப்ரவஸிைதர்। உேபாஷ்ையதாம் அவாப்நுேத। ௧௯।௰௨௪
ஸர்வாந் காமாந் அவாப்ேநாதி। ம்ருத: ஸ்வர்ேக ச ேமாதேத।
௧௯।௰௨௪
நாபுத்ேரா நாதேநா ேநஷ்ட । விேயாகீந ச நிர்குண:। ௧௯।௰௨௫
உேபாஷ்ையதத் வ்ரதம் மர்த்ய:। ஸ்த்ரீ ஜேநா வாபி ஜாயேத।
௧௯।௰௨௫
ய ஏவ வ்ரதஸம்சீர்ேணா। விஷ்ணுேலாேக மஹீயேத। ௰௧௯।௧௨
ஸ்வர்கேலாேக ஸஹஸ்ராணி। வர்ஷாணாம் மநுஜாதிப। ௧௯।௰௨௬
ேபாகாந் அபிமதாந் புக்த்வா। ஸ்வர்கேலாேக அபிகாங்க்ஷிதாந்।
௧௯।௰௨௬
இஹ புண்யவதாம் ந்ருணாம்। தநிநாம் ஸாதுஸலிநாம் ீ । ௧௯।௰௨௭
க்ருேஹஷு ஜாயேத ராஜந்। ஸர்வவ்யாதிவிவர்ஜித:। ௧௯।௰௨௭
அேஸாகபூர்ணிமாம் சாந்யாம்। ஸ்ருணுஸ்வ வதேதா மம। ௨௰।௰௰௧
யாம் உேபாஷ்ய நர: ேஸாகம்। நாப்ேநாதி ஸ்த்ரீ ததாபி வா। ௨௰।௰௰௧
பால்குநாமலபக்ஷஸ்ய। பூர்ணிமாஸ்யாம் நேரஸ்வர। ௨௰।௰௰௨

ம்ருஜ்ஜேலந நர: ஸ்நாத்வா। தத்த்வா ஸிரஸி ைவ ம்ருதம்। ௨௰।௰௰௨
ம்ருத்ப்ராஸநம் ததா க்ருத்வா। க்ருத்வா ச ஸ்தண்டிலம் ம்ருதா।
௨௰।௰௰௩
புஷ்ைப: பத்ைரஸ் ததாப்யர்ச்ய। பூதரம் நாந்யமாநஸ:। ௨௰।௰௰௩
தரணம்ீ ச ததா ேதவம்ீ । அேஸாேகத்ய் அபிதீயேத। ௨௰।௰௰௩
யதா விேஸாகாம் தரணம்ீ । க்ருதவாம்ஸ் த்வம் ஜநார்தந:। ௨௰।௰௰௪
ததா மாம் ஸர்வபாேபப்ேயா। ேமாசயாேஸஷதாரிணி। ௨௰।௰௰௪
யதா ஸமஸ்தபூதாநாம்। தாரணம் த்வய்ய் அவஸ்திதம்। ௨௰।௰௰௫
ததா விேஸாகம் குரு மாம்। ஸகேலச்சாவிபூதிபி:। ௨௰।௰௰௫
த்யாதமாத்ேர யதா விஷ்ெணௗ। ஸ்வாஸ்த்யம் யாதாஸி ேமதிநி।
௨௰।௰௰௬
ததா மந: ஸ்வஸ்ததாம் ேம। குரு த்வம் பூததாரிணி। ௨௰।௰௰௬
ஏவம் ஸ்துத்வா ததாப்யர்ச்ய। சந்த்ராயார்க்யம் நிேவத்ய ச। ௨௰।௰௰௭
உேபாஷிதவ்யம் நக்தம் வா। ேபாக்தவ்யம் ைதலவர்ஜிதம்। ௨௰।௰௰௭
அேநைநவ ப்ரகாேரண। சத்வார: பால்குநாதய:। ௨௰।௰௰௮
உேபாஷ்யா ந்ருபேத மாஸா:। ப்ரதமம் தத் து பாரணம்। ௨௰।௰௰௮
ஆஷாடாதிஷு மாேஸஷு। தத்வத் ஸ்நாநம் ம்ருதம்புநா। ௨௰।௰௰௯
தத் ஏவ ப்ராஸநம் பூஜா। தைதேவந்ேதாஸ் ததார்ஹணம்। ௨௰।௰௰௯
சதுர்ஷ்வ் அந்ேயஷு ைசேவாக்தம்। ததா ைவ கார்த்திகாதிஷு। ௨௰।௰௧
பாரணம் த்ரிதயம் ைசவ। சாதுர்மாஸிகம் உச்யேத। ௨௰।௰௧
ப்ரதமம் தரணீநாம। ஸ்துத்ைய மாஸசதுஷ்டயம்। ௨௰।௰௧௧
த்விதீேய ேமதிநீவாச்யா। த்ருதீேய ச வஸும்தரா। ௨௰।௰௧௧
பாரேண பாரேண வஸ்த்ர । பூஜயா பூஜேயந் ந்ருப। ௨௰।௰௧௨

தரணம்ீ ேதவேதவம் ச। க்ருதஸ்நாேநந ேகஸவம்। ௨௰।௰௧௨
வஸ்த்ராபாேவ து ஸூத்ேரண। பூஜேயத் தரணம்ீ ததா। ௨௰।௰௧௩
க்ருதாபாேவ ததா க்ஷீரம்। ஸஸ்தம் வா ஸலிலம் ஹேர:। ௨௰।௰௧௩
பாதாலமூலகதயா। சீர்ணம் ஏதந் மஹாவ்ரதம்। ௨௰।௰௧௪
தரண்யா ேகஸவப்ரீத்ைய। தத: ப்ராப்தா ஸமுந்நதி:। ௨௰।௰௧௪
ேதேவந ேசாக்தா தரண।ீ வராஹவபுஷா ததா। ௨௰।௰௧௫
உபவாஸப்ரஸந்ேநந। ஸமுத்த்ருத்ய ரஸாதலாத்। ௨௰।௰௧௫
வ்ரேதநாேநந கல்யாணி। ப்ரணேதா ய: கரிஷ்யதி। ௨௰।௰௧௬
தஸ்ய ப்ரஸாதம் அப்ய் அஹம்। கேராமி தவ ேமதிநி। ௰௨௰।௧௩
தைதவ குருேத பூஜாம்। பக்த்யா மம ஸுேபா ஜந:। ௰௨௰।௧௩
தைதவ தவ கல்யாணி। ப்ரணேதா ய: கரிஷ்யதி। ௰௨௰।௧௩
வ்ரதம் ஏதத் உபாஸ்ரித்ய। பாரணம் ச யதாவிதி। ௨௰।௰௧௬
ஸர்வபாபவிநிர்முக்த:। ஸப்த ஜந்மாந்தராண்ய் அெஸௗ। ௨௰।௰௧௭
விேஸாக: ஸர்வகல்யாண । பாஜேநா மதிமாஞ் ஜந:। ௨௰।௰௧௭
ஸர்வத்ர பூஜ்ய: ஸததம்। ஸர்ேவஷாம் அபராஜித:। ௨௰।௰௧௮
யதாஹம் ஏவம் வஸுேத। பவிதா நிர்வ்ருேத: பதம்। ௨௰।௰௧௮
ததா த்வம் அபி கல்யாணி। பவிஷ்யஸி ந ஸம்ஸய:। ௰௨௰।௧௪
ஏவம் ஏதந் மஹாபுண்யம்। ஸர்வபாேபாபஸாந்திதம்। ௨௰।௰௧௯
விேஸாகாக்யம் வ்ரதம் தந்யம்। தத் குருஷ்வ மஹீபேத। ௨௰।௰௧௯
ஸ்த்ரீணாம் தர்மம் த்விஜஸ்ேரஷ்ட। உபவாஸம் பவந் மம। ௨௧।௰௰௧
கதேயஹ யதாதத்த்வம்। உபவாஸவிதிஸ் ச ய:। ௨௧।௰௰௧
ெகௗமாரேக க்ருஹஸ்தாயா। விதவாயாஸ் ச ஸத்தம। ௨௧।௰௰௨

தர்மம் ப்ரப்ரூஹ்ய் அேஸேஷண। பகவந் ப்ரீதிகாரகம்। ௨௧।௰௰௨
ஸ்ரூயதாம் அகிலம் ப்ரஹ்மந்। யத்ய் ஏதத் அநுப்ருச்சஸி। ௨௧।௰௰௩
உபகாராய ச ஸ்த்ரீணாம்। த்ரிஷு ேலாேகஷ்வ் அநுத்தமம்। ௨௧।௰௰௩
ப்ரஸ்நம் ஏதத் புரா ேதவ।ீ ைஸலராஜஸுதா பதிம்। ௨௧।௰௰௪
பப்ரச்ச ஸங்கரம் ப்ரஹ்மந்। ைகலாஸஸிகேர ஸ்திதம்। ௨௧।௰௰௪
குமாரிகாபிர் ேதேவஸ। க்ருஹஸ்தாபிஸ் ச ேகஸவ:। ௨௧।௰௰௫
விதவாபிஸ் ததா ஸ்த்ரீபி:। கதம் ஆராத்யேத வத। ௨௧।௰௰௫
ஸாது ஸாத்வி த்வயா ப்ருஷ்டம்। ஏதந் நாராயணாஸ்ரிதம்। ௨௧।௰௰௬
உபவாஸாதி யத் தத்த்வம்। ஸ்ரூயதாம் அஸ்ய ேயா விதி:। ௨௧।௰௰௬
ேயாக்யம் பதிம் ஸமாஸாத்ய। நாரீ தர்மம் அவாப்நுேத। ௨௧।௰௰௭
து:ஸேலீ அபி ஹி காமார்ேத। நாரீ ப்ராப்ேநாதி பர்தரி। ௨௧।௰௰௭
அநாராத்ய ஜகந்நாதம்। ஸர்வேலாேகஸ்வரம் ஹரிம்। ௨௧।௰௰௮
கதம் ஆப்ேநாதி ைவ நாரீ। பதிம் ஸலகுணாந்விதம் ீ । ௨௧।௰௰௮
ஸுகலத்ரப்ரதம் தஸ்மாத்। வ்ரதம் அச்யுததுஷ்டிதம்। ௨௧।௰௰௯
கர்தவ்யம் லக்ஷணம் தஸ்ய। ஸ்ரூயதாம் வரவர்ணிநி। ௨௧।௰௰௯
யச் சீர்த்வா ஸர்வநாரீணாம்। ஸ்ேரஷ்டம் ஆப்ேநாத்ய் அஸம்ஸயம்।
௨௧।௰௧
ஐஹிகம் ச ஸுகம் ப்ராப்ய। ஸ்வர்ேக புங்க்ேத ஸுகாந்ய் அபி। ௨௧।௰௧
அநுஜ்ஞாம் ப்ராப்ய பித்ருேதா। மாத்ருதஸ் ச குமாரிகா। ௨௧।௰௧௧
பூஜேயச் ச ஜகந்நாதம்। பக்த்யா பாபஹரம் ஹரிம்। ௨௧।௰௧௧
த்ரிஷூத்தேரஷு ஸ்வ்ருேக்ஷஷு। பதிகாமா குமாரிகா। ௨௧।௰௧௨
மாதவாக்யம் து ைவ நாம। ஜேபந் நித்யம் அதந்த்ரிதா। ௨௧।௰௧௨

ப்ரியங்குணா ரக்தபுஷ்ைபர்। பந்தூககுஸுைமஸ் ததா। ௨௧।௰௧௩
ஸமப்யர்ச்ய தேதா தத்யாத்। ரக்தம் ஏவாநுேலபநம்। ௨௧।௰௧௩
ஸர்ெவௗஷத்யா ஸ்வயம் ஸ்நாத்வா। ஸமப்யர்ச்ய ஜகத்பதிம்।
௨௧।௰௧௪
நேமா அஸ்து மாதவாேயதி। ேஹாமேயந் மதுஸர்பிஷீ। ௨௧।௰௧௪
ஸ ேதவம் உத்தராேயாேக। ஸமப்யர்ச்ய ஜநார்தநம்। ௨௧।௰௧௫
ேஸாபநம் பதிம் ஆப்ேநாதி। ப்ேரத்ய ஸ்வர்கம் ச கச்சதி। ௨௧।௰௧௫
அதிபால்ேய ச யத் கிம்சித்। தயா பாபம் அநுஷ்டிதம்। ௨௧।௰௧௬
தஸ்மாச் ச முச்யேத ேதவி। ஸுகிநீைசவ ஜாயேத। ௨௧।௰௧௬
அப்ேதைநேகந தந்வங்கி। தூதபாபா யத் இச்சதி। ௨௧।௰௧௭
தத் ஏவ ப்ராப்நுயாத் பத்ேர। நாராயணபராயணா। ௨௧।௰௧௭
ஷண்மாஸம் ப்ரீணநம் கார்யம்। பக்த்யா ஸக்த்யா ச ைவ ஹேர:।
௨௧।௰௧௮
பாரணாந்ேத மஹாபேக। ததா ப்ராஹ்மணதர்பணம்। ௨௧।௰௧௮
கார்ஹஸ்த்ேய அவஸ்திதா நாரீ। பக்த்யா ஸம்பூஜேயத் பதிம்।
௨௨।௰௰௧
ஸ ஏவ ேதவதா தஸ்யா:। பூஜ்ய: பூஜ்யதரஸ் ச ஸ:। ௨௨।௰௰௧
தஸ்மிம்ஸ் துஷ்ேட பேரா தர்மஸ்। தஸ்ையவ பரிசர்யயா। ௨௨।௰௰௨
ேதாஷம் ஆயாதி ஸர்வாத்மா। பரமாத்மா ஜநார்தந:। ௨௨।௰௰௨
ைநவ தஸ்யா: ப்ருதக் யஜ்ேஞா। ந ஸ்ராத்தம் நாப்ய் உேபாஷிதம்।
௨௨।௰௰௩
பர்த்ருஸுஸ்ரூஷேணைநவ। ப்ராப்ேநாதி ஸ்த்ரீ யேதப்ஸிதம்।
௨௨।௰௰௩

ேதைநவ ஸாப்ய் அநுஜ்ஞாதா। தஸ்ய ஸுஸ்ரூஷணாத் அநு।
௨௨।௰௰௪
ேதாஷேயஜ் ஜகதாம் ஈஸம்। அநந்தம் அபராஜிதம்। ௨௨।௰௰௪
வ்ரைதர் நாநாவிைதர் ேதவி। ஐஹிகாமுஷ்மிகாப்தேய। ௨௨।௰௰௫
விஷ்ணுவ்ரதாதிபிர் திவ்ையஸ்। ததா தாைநர் மேநா அநுைக:।
௨௨।௰௰௫
க்ருதக்ஷராபிேஷைகஸ் ீ ச। ப்ராஹ்மணாநாம் ச தர்பைண:। ௨௨।௰௰௬
மேநாஜ்ைஞர் விவிைதர் தூைப:। புஷ்பவஸ்த்ராநுேலபைந:। ௨௨।௰௰௬
கீதவாத்ையஸ் ததா ஹ்ருத்ையர்। உபவாைஸஸ் ச பாமிநி। ௨௨।௰௰௭
ஏவம் ஆராத்ய ேகாவிந்தம்। அநுஜ்ஞாதா யதாவிதி। ௨௨।௰௰௭
பதிநா ஸகலாந் காமாந்। அவாப்ேநாதி ந ஸம்ஸய:। ௨௨।௰௰௭
பதிநா த்வ் அநநுஜ்ஞாதா। கிம்சித் புண்யம் கேராதி யா। ௨௨।௰௰௮
விபலம் தத் அேஸஷம் ைவ। தஸ்யா: ைஸலவராத்மேஜ। ௨௨।௰௰௮
ந ச ப்ரஸாதம் குருேத। பகவாந் மதுஸூதந:। ௨௨।௰௰௯
நாநுஜ்ஞாதா து யா நாரீ। பதிநார்சதி ேகஸவம்। ௨௨।௰௰௯
யா து பர்த்ருபரா நாரீ। நாராயணம் அதந்த்ரிதா। ௨௨।௰௧
பக்த்யா ஸம்பூஜேயத் ேதவம்। ேதாஷம் ஆயாதி ேகஸவ:। ௨௨।௰௧
யா து பர்த்ரா பரித்யக்தா। ததா யா ம்ருதபர்த்ருகா। ௨௨।௰௧௧
பாஷண்டாநுகேதா வாபி। யஸ்யா பர்தா மேஹஸ்வர। ௨௨।௰௧௧
ப்ராேயா ததாதி நாநுஜ்ஞாம்। விஷ்ேணார் ஆராதேந ததா। ௨௨।௰௧௨
கதம் ஆராதநம் கார்யம்। விஷ்ேணாஸ் தத் வத ஸம்கர। ௨௨।௰௧௨
யா து பர்த்ரா பரித்யக்தா। ஸா ஸம்பூஜ்ய நிஜம் பதிம்। ௨௨।௰௧௩
மநஸா தந்மநஸ்கா ச। தஸ்ையவ ஹிதகாரிண।ீ ௨௨।௰௧௩

ந நிந்தாகரணீதஸ்ய। ஸ்ேரேயா அபித்யாயிநீததா। ௨௨।௰௧௪
தஸ்ையவ ஸர்வகாேலஷு। ஸர்வகல்யாணம் இச்சதி। ௨௨।௰௧௪
ஆராதேயஜ் ஜகந்நாதம்। ஸர்வதாதாரம் அச்யுதம்। ௨௨।௰௧௫
க்ருேதாபவாஸா புஷ்பாதி। நிேவத்ய ஸகலம் தத:। ௨௨।௰௧௫
பர்துர் மேநாரதாவாப்திம்। ப்ரார்தேயத் ப்ரதமம் வரம்। ௨௨।௰௧௬
ஸ்வயம் யதாபிலஷிதம்। ப்ரார்தேயத் தம் வரம் தத:। ௨௨।௰௧௬
ஏவம் பர்த்ருபரித்யக்தா। ேயாஷித் ஆராதநம் ஹேர:। ௨௨।௰௧௭
குர்வாணா ஸகலாந் காமாந்। அவாப்ேநாதி ந ஸம்ஸய:। ௨௨।௰௧௭
பர்தா கேராதி யச் சஸ்யா:। கிம்சித் புண்யம் அஹர்நிஸம்। ௨௨।௰௧௮
தஸ்ய புண்யஸ்ய ஸம்பூர்ணம்। அர்தம் ப்ராப்ேநாதி ஸா ஸுேப।
௨௨।௰௧௮
யத் து ஸா குருேத புண்யம்। விநா ேதாேஷண ேயாஜ்ஜிதா। ௨௨।௰௧௯
தத் தஸ்யா: ஸகலம் ேதவி। தஸ்யார்தம் ந லேபத் பதி:। ௨௨।௰௧௯
பர்தர்ய் ஏவம் ப்ரவஸிேத। த்யக்தா ச பதிநா ஸுேப। ௨௨।௰௨
குர்வதாராதநம் ீ நாரீ। உபவாஸாதிநா ஹேர:। ௨௨।௰௨
ஏதத் தேவாக்தம் யத் ப்ருஷ்டம்। த்வயாஹம் கிரிநந்திநி। ௨௨।௰௨௧
விதவாநாம் அேதா தர்மம்। ஸ்ரூயதாம் விஷ்ணுதுஷ்டிதம்। ௨௨।௰௨௧
ம்ருேத பர்தரி ஸாத்வ ீஸ்த்ரீ। ப்ரஹ்மசர்யவ்ரேதாதிதா। ௨௨।௰௨௨
ஸ்நாதா ப்ரதிதிநம் தத்யாத்। ஸ்வபர்த்ருஸலிலாஞ்ஜலிம்। ௨௨।௰௨௨
குர்யாத் யாநுதிநம் பக்த்யா। ேதவாநாம் அபி பூஜநம்। ௨௨।௰௨௩
அதிேதஸ் தர்பணம் தத்வத்। அக்நிேஹாத்ரம் அமந்த்ரகம்। ௨௨।௰௨௩
பூர்ததர்மாஸ்ரிதம் சாந்யத்। குர்யாந் நித்யம் அதந்த்ரிதா। ௨௨।௰௨௪

நித்யகர்ம க்ருேத சாஸ்யா। ேநஷ்டம் கர்ம விதீயேத। ௨௨।௰௨௪
விஷ்ேணார் ஆராதநம் ைசவ। குர்யாந் நித்யம் உேபாஷிதா। ௨௨।௰௨௫
தாநாதி விப்ரமுக்ேயப்ேயா। தத்யாத் புண்யவிவ்ருத்தேய। ௨௨।௰௨௫
உபவாஸாம்ஸ் ச விவிதாந்। குர்யாச் சாஸ்த்ேராதிதாந் ஸுேப।
௨௨।௰௨௫
ேலாகாந்தரஸ்தம் பர்தாரம்। ஆத்மாநம் ச வராநேந। ௨௨।௰௨௬
தாரயத்ய் உபயம் நாரீ। ேயத்தம் தர்மபராயணா। ௨௨।௰௨௬
புத்ைரஸ்வர்யஸ்திதா நாரீ। உபவாஸாதிநா ஹரிம்। ௨௨।௰௨௭
யா ேதாஷயதி ஸித்திம் ஸா। புத்ேரப்ேயா அபி ப்ரயச்சதி। ௨௨।௰௨௭
ஸுபாம்ல் ேலாகாம்ஸ் ததா பர்துர்। ஆத்மநஸ் ச யேதப்ஸிதாந்।
௨௨।௰௨௮
ஸகலம் பூரயத்ய் அஸ்தம்। பாபம் நயதி சாகிலம்। ௨௨।௰௨௮
ஆத்மநஸ் ைசவ பர்துஸ் ச। நாரீ பரமிகாம் கதிம்। ௨௨।௰௨௯
ததாத்ய் ஆராத்ய ேகாவிந்தம்। ஸபுத்ரா விதவா ச யா। ௨௨।௰௨௯
தஸ்மாத் ஏபிர் விதாைநஸ் து। ஸர்வகாலம் து ேயாஷித:। ௨௨।௰௩
ேகஸவாராதநம் கார்யம்। ேலாகத்வயபலப்ரதம்। ௨௨।௰௩
ேய நரா ம்ருதபத்நிகாஸ்। ைதர் அப்ய் ஏதத் அேஸஷத:। ௨௨।௰௩௧
பூர்ததர்மாஸ்ரிதம் கார்யம்। நித்யகர்ம ச ேகவலம்। ௨௨।௰௩௧
புத்ைரஸ்வர்யஸ்திைத: ஸம்யக்। ப்ரஹ்மசர்யகுணாந்விைத:। ௨௨।௰௩௨
விஷ்ேணார் ஆராதநம் கார்யம்। தீர்தஸ்ைதர் அதவா க்ருேஹ।
௨௨।௰௩௨
ப்ராஹ்மண: க்ஷத்ரிேயா ைவஸ்ய:। ஸ்த்ரீ ஸூத்ரஸ் ச வராநேந।
௨௨।௰௩௩

அநாராத்ய ஹ்ருஷீேகஸம்। நாப்ேநாதி பரமாம் கதிம்। ௨௨।௰௩௩
ஐஸ்வர்யம் ஸம்ததிம் ஸ்ேரஷ்டாம்। ஆேராக்யம் த்ரவ்யஸம்பதம்।
௨௨।௰௩௪
ததாதி பகவாந் விஷ்ணுர்। கதிம் அக்ர்யாம் ஸுேதாஷித:। ௨௨।௰௩௪
ஏவம் ைஸலஸுதா ப்ேராக்தா। ஸ்வயம் ேதேவந ஸம்புநா। ௨௨।௰௩௫
ப்ருஷ்ேடந ஸம்யக் கதிதம்। பவேதா அபி மஹாமுேந। ௨௨।௰௩௫
ஸர்வவர்ைணஸ் ததா ஸ்த்ரீபிர்। அந்ையர் அபி ஜைநர் ஹரி:।
௨௨।௰௩௬
ஆராதநீேயா நாதுஷ்ேட। விஷ்ெணௗ ஸம்ப்ராப்யேத கதி:। ௨௨।௰௩௬
ந துர்கதிம் ெரௗரவாதீந்। நரகாம்ஸ் ச ந கச்சதி। ௨௨।௰௩௭
யம் ஆராத்ேயஸ்வரம் வந்த்யம்। கஸ் தம் விஷ்ணும் ந பூஜேயத்।
௨௨।௰௩௭
தஸ்மாத் அமுஷ்மிகாந் க்ேலஸாந்। நரேக யாஸ் ச யாதநா:। ௨௨।௰௩௮
ஸைதேவாத்விஜதா தால்ப்ய। ஸமாராத்ேயா ஜநார்தந:। ௨௨।௰௩௮
பகவந் யாதநா ேகாரா:। ஸ்ரூயந்ேத நரேகஷு யா:। ௨௩।௰௰௧
தாஸாம் ஸ்வரூபம் அத்யுக்ரம்। யதாவத் வக்தும் அர்ஹஸி। ௨௩।௰௰௧
ஸ்ருணு தால்ப்யாதிேகாராணாம்। யாதநாநாம் மேயாதிதம்। ௨௩।௰௰௨
ஸ்வரூபம் நாரைகர் யத் து। நரேகஷ்வ் அநுபூயேத। ௨௩।௰௰௨
ேயாஜநாநாம் ஸஹஸ்ராணி। ெரௗரேவா நரேகா த்விஜ। ௨௩।௰௰௩
அங்காரபூர்ணமத்ேயா அெஸௗ। ஜ்வாலாமாலாபரிஷ்க்ருத:। ௨௩।௰௰௩
தந்மத்ேய பதிேதா யாதி। ேயாஜநாநி ஸஹஸ்ரஸ:। ௨௩।௰௰௪
ஸத்யஹாந்யாந்ருதீயாதி। தத்ர பாபரதிர் நர:। ௨௩।௰௰௪
ெரௗரவாத் த்விகுணஸ் ைசவ। மஹாெரௗவரஸம்ஜ்ஞித:। ௨௩।௰௰௫

தப்ததாம்ரபுடாங்கார । ஜ்வலத்பாவகஸம்வ்ருத:। ௨௩।௰௰௫
பேராபதாபிநஸ் தத்ர। பதந்தி நரேக நரா:। ௨௩।௰௰௬
நாஸ்சர்யம் த்விஜஸார்தூல। வர்ஷலக்ஷயுதாநி ச। ௨௩।௰௰௬
காலஸூத்ேரண ச்சித்யந்ேத। சக்ராரூடாஸ் ச மாநவா:। ௨௩।௰௰௭
காலாங்குலிஸ்ேதந ஸதா। ஆபாததலமஸ்தகாத்। ௨௩।௰௰௭
காலஸூத்ர இதி க்யாேதா। ேகார: ஸ நரேகாத்தம:। ௨௩।௰௰௮
தத்ராபி வஞ்சகா யாந்தி। ேய ைசேவாத்ேகாசஜவிந ீ :। ௨௩।௰௰௮
தப்தகும்பஸ் தைதவாந்ேயா। நரேகா ப்ருஸதாருண:। ௨௩।௰௰௯
ைதலகும்ேபஷு பச்யந்ேத। தத்ராப்ய் அக்நிப்ருேதஷு ேத। ௨௩।௰௰௯
ேதவேவதத்விஜாதீநாம்। ேய நிந்தாம் குர்வேத ஸதா। ௨௩।௰௧
ஸம்ஸ்ருண்வந்தி ச ேய மூடா। ேய ச மத்ஸரிேணா அதமா:। ௨௩।௰௧
கரம்பவாலுகாகும்ப । ஸம்ஜ்ஞம் ச நரகம் ஸ்ருணு। ௨௩।௰௧௧
பரதாரரதா ேய து। பதந்தி நரேக அதமா:। ௨௩।௰௧௧
ஹ்ருதம் ையஸ் ச ஜலம் ேத அபி। தஸ்மிந் யாந்தி நராதமா:।
௨௩।௰௧௨
ேகாநிபாேநஷு விக்நாநி। மூடா ேய சாபி குர்வேத। ௨௩।௰௧௨
கரம்பவாலுகாகும்ப । நரேக ேத பதந்தி ைவ। ௨௩।௰௧௨
அந்ேத தமஸி துஷ்பாேர। ஸதார்திபரிகம்பிதா ீ :। ௨௩।௰௧௩
ப்ராம்யந்ேத மாநவா காத்ைர:। ஸமஸ்ைத: ஸ்புடிதாஸ்திபி:। ௨௩।௰௧௩
ேகாவத: ஸ்த்ரீவத: பாைப:। க்ருதம் ையஸ் ச கவாந்ருதம்। ௨௩।௰௧௪
ேத தத்ராதிமஹாபேமீ । பதந்தி நரேக நரா:। ௨௩।௰௧௪
உத்பாட்யேத ததா ஜிஹ்வா। ஸம்தம்ைஸர் ப்ருஸதாருைண:।
௨௩।௰௧௫

ஆக்ரிஸகாநாம் துஷ்டாநாம்। ஸைதவாபத்தபாஷிணாம்। ௨௩।௰௧௫
கரபத்ைரஸ் ச பாட்யந்ேத। யமஸ்ய புருைஷஸ் ததா। ௨௩।௰௧௬
பரதாரபரத்ரவ்ய । ஹிம்ஸகா: புருஷாதமா:। ௨௩।௰௧௬
ஆயஸம்ீ ச ஸிலாம் தப்தாம்। அேஸஷாங்ைகஸ் ததா நரா:। ௨௩।௰௧௭
பரதாரரதா ஏவம்। ஸமாலிங்கந்தி பாபிந:। ௨௩।௰௧௭
ஸர்வாங்ைகர் விக்ருைதர் ரக்தம்। உத்கிரந்ேதா அதிபடிதா ீ :। ௨௩।௰௧௮
யந்த்ேரஷ்வ் அந்ேயஷு பட்யந்ேத ீ । ஜந்துபடாகரா ீ நரா:। ௨௩।௰௧௮
வ்ருைக: ஸம்பŠயேத ப்ருஷ்டம்। நராணாம் பாபகாரிணாம்।
௨௩।௰௧௯
ஜநஸ்ய ப்ருஷ்டமாம்ஸம் ையர்। பக்ஷிதம் பாபகாரிபி:। ௨௩।௰௧௯
அஸிபத்ரவைநர் ேகாைரஸ்। சித்யந்ேத பாபகர்மிண:। ௨௩।௰௨
ஸத்பாவப்ரவணா ையஸ் து। பக்நா விஸ்ரம்பிேநா ஜநா:। ௨௩।௰௨
அேயாமுைக: கைகர் பக்நா:। கண்டகண்டம் ததாபைர:। ௨௩।௰௨௧
வ்ரஜந்தி பாபகர்மாண:। ஸ்வஸ்ருகாைலஸ் ததாபைர:। ௨௩।௰௨௧
ஸூஷாயாம் அபி தாஸ்யந்ேத। ஜ்வலதக்நிசயாவ்ருதா:। ௨௩।௰௨௨
பாஷாணேபஷ்யம் பிஷ்யந்ேத। ததாந்ேய பாபகர்மிண:। ௨௩।௰௨௨
ேதவதாதிதிப்ருத்யாணாம்। அதத்த்வா புஞ்ஜேத து ேய। ௨௩।௰௨௩
ம்ருஷாகதாஸ் ததாைவக்யம்। த்ரபுஷா ஸஸேகந ீ ச। ௨௩।௰௨௩
ப்ரயாந்தி புருஷாஸ் ைதைல:। க்வாத்யந்ேத அந்ேய புந: புந:। ௨௩।௰௨௩
வர்ணதர்மபரித்யாேக। ைநக்யம் ேய புருஷா கதா:। ௨௩।௰௨௪
ேத அபி பாபஸமாசாரா। வர்ணஸம்கரகாரிண:। ௨௩।௰௨௪
ஸ்வரூபம் நாரகஸ்யாக்ேந:। ஸ்ருணுஷ்வ கதயாமி ேத। ௨௩।௰௨௫

முக்தஸ் தேதா அந்யவஹ்நிஸ்த:। ேஸேத ஸம்ப்ராப்ய நிர்வ்ருதிம்।
௨௩।௰௨௫
ஸஸ்த்ரதாராஸ் தைதைவதா। ம்ருணாலப்ரஸ்தரம் நர:। ௨௩।௰௨௬
மந்யேத நாரைக: ஸஸ்த்ைரர்। விக்ஷேதா த்விஜஸத்தம। ௨௩।௰௨௬
ஹிமகண்டசயாசந்ேநா। நிவாதம் மந்யேத நர:। ௨௩।௰௨௭
விமுக்ேதா நாரகாச் சீதாத்। ப்ரகாஸம் தமஸஸ் தம:। ௨௩।௰௨௭
ப்ேராதா குேதஷு பிந்நாங்கா। ஆர்தா ராவவிராவிண:। ௨௩।௰௨௮
ஸூேலஷு ேலாேஹஷ்வ் அபேர। த்ரிஸூேலஷு ததாபேர। ௨௩।௰௨௮
யாஜ்ேயாபாத்யாயதாம்பத்ய । ஸுஹ்ருந்மித்ரஸுதாதிஷு। ௨௩।௰௨௯
க்ருேதா ேபேதா துராசாைரர்। ையர் அலீேகாக்திபாஷிபி:। ௨௩।௰௨௯
ஆயஸா: கண்டகாஸ் தீŠணா। நரேக கூடஸால்மெலௗ। ௨௩।௰௩
ேதஷு ப்ேராதா துராத்மாந:। பரதாரபுேஜா நரா:। ௨௩।௰௩
க்ருமிகீடஜெலௗகாதி । தீŠணதம்ஷ்ட்ராஸ்யவிக்ஷதா:। ௨௩।௰௩௧
ப்ராம்யந்ேத சாந்ததாமிஸ்ேர। வ்ருதாமாம்ஸாஸிேநா ஹி ேய।
௨௩।௰௩௧
ஏதாம்ஸ் சாந்யாம்ஸ் ச நரகாஞ்। ஸதேஸா அத ஸஹஸ்ரஸ:।
௨௩।௰௩௨
கர்மாந்தரம் ஜேநா புங்க்ேத। பரிணாமாம்ஸ் ச ேசதஸ:। ௨௩।௰௩௨
யாத்ருக் கர்ம மநுஷ்யாணாம்। தாத்ருக் விஷயரூபவத்। ௨௩।௰௩௩
பரிணாமம் மேநா யாதி। ஸுபாஸுபமயம் த்விஜ। ௨௩।௰௩௩
அதீவபஷணாந் ீ இத்தம்। ஸஸ்த்ராக்நிபயதாந் நர:। ௨௪।௰௰௧
கதம் ந கச்ேசந் நரகாந்। ஏதந் ேம வக்தும் அர்ஹஸி। ௨௪।௰௰௧
அேஹா அதிகஷ்டபாபாநாம்। விபாேகா நரகஸ்திைத:। ௨௪।௰௰௨

புருைஷர் புஜ்யேத ப்ரஹ்மம்ஸ்। தந்ேமாக்ஷம் வத ஸத்தம। ௨௪।௰௰௨
புண்யஸ்ய கர்மண: பாக:। புண்ய ஏவ த்விேஜாத்தம। ௨௪।௰௰௩
ேசதஸ: பரிணாேமாத்த:। ஸ்வர்கஸ்ைதர் புஜ்யேத நைர:। ௨௪।௰௰௩
தைதவ பாக: பாபாநாம்। புருைஷர் நரகஸ்திைத:। ௨௪।௰௰௪
புஜ்யேத தாவத் அகிலம்। யாவத் பாபம் க்ஷயம் கதம்। ௨௪।௰௰௪
யதா து பாபஸ்ய ஜய:। க்ஷயேத ீ ஸுக்ருதம் ததா। ௨௪।௰௰௫
ஸுபஸ்ய கர்மேணா வ்ருத்ெதௗ। க்ஷயம் ஆயாத்ய் அேஸாபநம்।
௨௪।௰௰௫
ஜேய யேதத புருஷஸ்। தஸ்மாத் ஸுக்ருதகர்மண:। ௨௪।௰௰௬
பாபம் கர்ம விநா ைநவ। நரகப்ராப்திர் இஷ்யேத। ௨௪।௰௰௬
ஜயாய த்வாதஸீ ஸஸ்தா। ந்ருணாம் ஸுக்ருதகர்மணாம்। ௨௪।௰௰௭
யாம் உேபாஷ்ய த்விஜஸ்ேரஷ்ட। ந யாதி நரகம் நர:। ௨௪।௰௰௭
பால்குநாமலபக்ஷஸ்ய। ஏகாதஸ்யாம் உேபாஷித:। ௨௪।௰௰௮
த்வாதஸ்யாம் து த்விஜஸ்ேரஷ்ட। பூஜேயந் மதுஸூதநம்। ௨௪।௰௰௮
ஏகாதஸ்யாம் ஸமுத்திஷ்டம்। விஷ்ேணார் நாமாநுகீர்தநம்। ௨௪।௰௰௯
பூஜாயாம் வாஸுேதவஸ்ய। குர்வதீ ஸுஸமாஹித:। ௨௪।௰௰௯
நேமா நாராயணாேயதி। வாச்யம் ச ஸ்வபதா நிஸி। ௰௨௪।௰௧௰௧௫
க்ேராத: ப்ரபஞ்ச ஈர்ஷ்யா ச। தம்ேபா ேலாபஸ் ச வர்ஜித:। ௨௪।௰௧
காேமா த்ேராேஹா மதஸ் சாபி। மாநமாத்ஸர்யம் ஏவ ச। ௨௪।௰௧௧
ஸர்வம் ஏதத் பரித்யஜ்ய। விஷ்ணுபக்ேதந ேசதஸா। ௨௪।௰௧௧
அஸாரதாம் ச ேலாேக அஸ்மிந்। ஸம்ஸாேர பாவேயந் மதிம்।
௨௪।௰௧௨

காமம் க்ேராதம் ச ேலாபம் ச। தம்பம் ஈர்ஷ்யாம் ச வர்ஜேயத்।
௰௨௪।௧௫
மாநத்ேராஹாதிேதாஷாம்ஸ் ச। ஸர்வாந் தநமேதாத்பூதாந்। ௰௨௪।௧௫
பாவேயத் விஷ்ணுபக்தாம்ஸ் ச। ஸம்ஸாராஸாரதாம் ததா। ௰௨௪।௧௫
ஏவம் பாவிதசித்ேதந। ப்ராணிநாம் ஹிதம் இச்சதா। ௰௨௪।௧௫
தைதவ குர்யாத் த்வாதஸ்யாம்। நாம்நாம் உச்சாரணம் த்விஜ।
௨௪।௰௧௨
யவபாத்ராணி பூர்வம் து। தத்யாந் மாஸசதுஷ்டயம்। ௨௪।௰௧௩
ஆஷாடாதித்விதீயம் து। பாரணம் யந் மஹாமேத। ௨௪।௰௧௩
தத்ராபி க்ருதபாத்ராணி। தத்யாச் ச்ரத்தாஸமந்வித:। ௨௪।௰௧௩
கார்த்திகாதிஷு மாேஸஷு। மாகந்ேதஷு ததா திலாந்। ௨௪।௰௧௪
விப்ராய தத்யாத் பாத்ரஸ்தாந்। ப்ரதிமாஸம் உேபாஷித:। ௨௪।௰௧௪
நாமத்ரயம் அேஸேஷஷு। மாஸி மாஸி திநத்வயம்। ௨௪।௰௧௫
தைதேவாச்சாரேயத் தத்யாத்। த்வாதஸ்யாம் ச யவாதிகம்। ௨௪।௰௧௫
ப்ரணம்ய ச ஹ்ருஷீேகஸம்। க்ருதபூஜ: ப்ரஸாதேயத்। ௨௪।௰௧௫
விஷ்ேணா நமஸ் ேத ஜகத: ப்ரஸூேத। ஓம் வாஸுேதவாய நேமா நமஸ்
ேத। ௨௪।௰௧௬
நாராயண த்வாம் ப்ரணேதா அஸ்ம்ய் அசிந்த்ய। ஜேயா அஸ்து ேம
ஸாஸ்வதபுண்யராேஸ:। ௨௪।௰௧௬
ப்ரஸதீ புண்யம் ஜயம் ஏது விஷ்ேணா। ஓம் வாஸுேதவ ர்த்திம் உைபது
புண்யம்। ௨௪।௰௧௭
நாராயேணாம் பூதிம் உைபது புண்யம்। ப்ரயாது சாேஸஷம் அகம் விநாஸம்।
௨௪।௰௧௭

விஷ்ேணா புண்ேயாத்பேவா ேம அஸ்து। வாஸுேதவாஸ்து ேம ஸுபம்।
௨௪।௰௧௮
நாராயணாஸ்து தர்ேமா ேம। ஜஹி பாபம் அேஸஷத:। ௨௪।௰௧௮
அேநகஜந்மஜநிதம்। பால்யெயௗவநவார்த்திேக। ௨௪।௰௧௯
புண்யம் விவ்ருத்திம் ஆயாது। யாது பாபம் து ஸம்க்ஷயம்। ௨௪।௰௧௯
ஆகாஸாதிஷு ஸப்தாெதௗ। ஸ்ேராத்ராெதௗ மஹதாதிஷு। ௨௪।௰௨
ப்ரக்ருெதௗ புருேஷ ைசவ। ப்ரஹ்மண்ய் அபி ச ஸ ப்ரபு:। ௨௪।௰௨
யைதக ஏவ ஸர்வாத்மா। வாஸுேதேவா வ்யவஸ்தித:। ௨௪।௰௨
ேதந ஸத்ேயந ேம பாபம்। நரகார்திப்ரதம் க்ஷயம்। ௨௪।௰௨௧
ப்ரயாது ஸுக்ருதஸ்யாஸ்து। மமாநுதிவஸம் ஜய:। ௨௪।௰௨௧
பாபஸ்ய ஹாநி: புண்யம் ச। வ்ருத்திம் அப்ேயத்ய் அநுத்தமாம்।
௨௪।௰௨௧
ஏவம் உச்சார்ய விப்ராய। தத்த்வா யத் கதிதம் தவ। ௨௪।௰௨௨
புஞ்ஜதீ க்ருதக்ருத்யஸ் து। பாரேண பாரேண கேத। ௨௪।௰௨௨
பாரணாந்ேத ச ேதவஸ்ய। ப்ரீணநம் ஸக்திேதா த்விஜ। ௨௪।௰௨௩
குர்வதாகிலபாஷண்ைடர் ீ । ஆலாபம் ச விவர்ஜேயத்। ௨௪।௰௨௩
இத்ய் ஏதத் கதிதம் தால்ப்ய। ஸுக்ருதஸ்ய ஜயாவஹா। ௨௪।௰௨௪
த்வாதஸீ நரகம் ம்ருத்ேயா। யாம் உேபாஷ்ய ந பஸ்யதி। ௨௪।௰௨௪
நாக்நேயா ந ச ஸஸ்த்ராணி। ந ச ேலாஹமூகா: ககா:। ௨௪।௰௨௫
நாரகாஸ் தம் ப்ரபாதந்ேத। மதிர் யஸ்ய ஜநார்தேந। ௨௪।௰௨௫
நாேமாச்சாரணமாத்ேரண। விஷ்ேணா: க்ஷீேணா அகஸம்சய:।
௨௪।௰௨௬
பவத்ய் அபாஸ்தபாபஸ்ய। நரேக கமநம் குத:। ௨௪।௰௨௬

நேமா நாராயண ஹேர। வாஸுேதேவதி கீர்தேயத்। ௨௪।௰௨௭
ந யாதி நரகம் மர்த்ய:। ஸம்க்ஷீணாேஸஷபாதக:। ௨௪।௰௨௭
தஸ்மாத் பாஷண்டிஸம்ஸர்கம்। அகுர்வந் த்வாதஸம்ீ இமாம்।
௨௪।௰௨௮
உேபாஷ்ய புண்ேயாபசய।ீ ந யாதி நரகம் நர:। ௨௪।௰௨௮
பாஷண்டிபிர் அஸம்ஸ்பர்ஸம்। அஸம்பாஷணம் ஏவ ச। ௨௫।௰௰௧
விஷ்ேணார் ஆராதநபைரர்। நைர: கார்யம் உேபாஷிைத:। ௨௫।௰௰௧
கிம் ப்ரூஹி லக்ஷணம் ேதஷாம்। யாத்ருஸாந் வர்ஜேயத் வ்ரதீ।
௨௫।௰௰௨
கதம்சித் யதி ஸம்லாப । தர்ஸநஸ்பர்ஸநாதிகம்। ௨௫।௰௰௨
உேபாஷிதாநாம் பாஷண்ைடர்। நராணாம் விப்ர ஜாயேத। ௨௫।௰௰௩
கிம் தத்ர வத கர்தவ்யம்। ேயநாகண்டம் வ்ரதம் பேவத்। ௨௫।௰௰௩
ஸ்ருதிஸ்ம்ருத்யுதிதம் தர்மம்। வர்ணாஸ்ரமவிபாகஜம்। ௨௫।௰௰௪
உல்லங்க்ய ேய ப்ரவர்தந்ேத। ஸ்ேவச்சயா கூடயுக்திபி:। ௨௫।௰௰௪
விகர்மாபிரதா மூடா। யுக்திப்ராகல்ப்யதுர்மதா:। ௨௫।௰௰௫
பாஷண்டிநஸ் ேத து:ஸலா ீ । நரகார்ஹா நராதமா:। ௨௫।௰௰௫
தாம்ஸ் து பாஷண்டிந: பாபாந்। விகர்மஸ்தாம்ஸ் ச மாநவாந்।
௨௫।௰௰௬
ைவடாலவ்ரதிகாம்ஸ் ைசவ। நித்யம் ஏவ து நாலேபத்। ௨௫।௰௰௬
ஸம்பாஷ்ையதாஞ் ஸுசிஷதம்। சிந்தேயத் அச்யுதம் புத:। ௨௫।௰௰௭
இதம் ேசாதாஹேரத் ஸம்யக்। க்ருத்வா தத்ப்ரவணம் மந:। ௨௫।௰௰௭
ஸாரீரம் அந்த:கரேணாபகாதம்। வாசஸ் ச விஷ்ணுர் பகவாந் அேஸஷம்।
௨௫।௰௰௮

ஸமம் நயத்வ் அஸ்து மேமஹ ஸர்ம। பாபாத் அநந்ேத ஹ்ருதி
ஸம்நிவிஷ்ேட। ௨௫।௰௰௮
அந்த:ஸுத்திம் பஹி:ஸுத்திம்। ஸுத்ேதா அந்தர் மம ேயா அச்யுத:।
௨௫।௰௰௯
ஸ கேராத்வ் அமேல தஸ்மிஞ்। ஸுசிர் ஏவாஸ்மி ஸர்வதா।
௨௫।௰௰௯
பாஹ்ேயாபகாதாத் அநேகா। ேபாத்தா ச பகவாந் அஜ:। ௨௫।௰௧
ஸுத்திம் நயத்வ் அநந்தாத்மா। விஷ்ணுஸ் ேசதஸி ஸம்ஸ்தித:।
௨௫।௰௧
ஏதத் ஸம்பாஷ்ய ஜப்தவ்யம்। பாஷண்டிபிர் உேபாஷிைத:। ௨௫।௰௧௧
நம: ஸுசிஷேதத்ய் உக்த்வா। ஸூர்யம் பஸ்ேயத வக்ஷிைத ீ :।
௨௫।௰௧௧
ஸ்ரூயேத ச புரா மர்த்யா:। ஸ்ேவச்சயா ஸ்வர்ககாமிந:। ௨௫।௰௧௨
பபூவுர் அநகா: ஸர்ேவ। ஸ்வதர்மபரிபாலநாத்। ௨௫।௰௧௨
ேதவாஸ் ச பலிேநா மர்த்ையர்। வர்ணகர்மண்ய் அநுவ்ரைத:।
௨௫।௰௧௩
யஜ்ஞாத்யயநதாேநஷு। வர்தமாைநஸ் ச மாநைவ:। ௨௫।௰௧௩
ைதேதயாஸ் ச பராபாவம்। அதுஷ்டாவ் அஸுரா யயு:। ௨௫।௰௧௪
ததஸ் ச ஷண்ேடா மர்கஸ் ச। ைதத்ேயந்த்ராணாம் புேராஹிெதௗ।
௨௫।௰௧௪
சக்ரது: கர்ம ேதவாநாம்। விநாஸாயாதிபஷணம் ீ । ௨௫।௰௧௪
தத்ேராத்பந்ேநா அதிக்ருஷ்ணாங்கஸ்। தம:ப்ராேயா அதிதாருண:।
௨௫।௰௧௫
தம்பாதார: ஸாட்யஸாேரா। நித்ராப்ரக்ருதிர் உல்வண:। ௨௫।௰௧௫

மஹாேமாஹ இதி க்யாத:। க்ருத்யரூேபா விபஷணீ :। ௨௫।௰௧௬
சதுர்தா ஸ விபக்தஸ் ச। தாபாம் அத்ர மஹீயேத। ௨௫।௰௧௬
ேவதேதவத்விஜாதீநாம்। ஏகாம்ேஸந ஸ நிந்தநம்। ௨௫।௰௧௭
கேராத்ய் அந்ேயந ந ரதிம்। ேயாககர்மஸு விந்ததி। ௨௫।௰௧௭
விகர்மண்ய் அபேரணாபி। ஸம்ேயாஜயதி மாநவாந்। ௨௫।௰௧௮
ஜ்ஞாநாபஹாரம் அந்ேயந। கேராதி த்விஜஸத்தம। ௨௫।௰௧௮
ஜ்ஞாநபுத்த்யா ததாஜ்ஞாநம்। க்ருஹ்ணாத்ய் அஜ்ஞாநேமாஹித:।
௨௫।௰௧௯
ேவதவாதவிேராேதந। யா கதா ஸாஸ்ய ேராசேத। ௨௫।௰௧௯
ஏவம் ஸ து மஹாேமாஹ:। ஷண்டமர்ேகாபபாதித:। ௨௫।௰௨
தம்பாதிதூஷிேதா அதர்ம । ஸ்வரூேபா அதிபயம்கர। ௨௫।௰௨
ஸ ேலாகாந் விவிேதாபாையர்। ேலாேகஷ்வ் ஏவ வ்யவஸ்தித:।
௨௫।௰௨௧
ேமாஹாபிபவநி:ஸாராண்। கேராதி த்விஜஸத்தம। ௨௫।௰௨௧
தந்ேமாஹிதாநாம் அசிராத்। விேவேகா யாதி ஸம்க்ஷயம்। ௨௫।௰௨௨
க்ஷீணஜ்ஞாநா விகர்மாணி। குர்வந்த்ய் அஹரேஹா த்விஜ। ௨௫।௰௨௨
நிஜவர்ணாத்மகம் தர்மம்। பரித்யஜ்ய விேமாஹிதா:। ௨௫।௰௨௩
தர்மபுத்த்யா தத: பாபம்। குர்வந்த்ய் அஜ்ஞாநதுர்மதா:। ௨௫।௰௨௩
ஜ்ஞாநாவேலபஸ் தத்ைரவ। ததஸ் ேதஷாம் ப்ரஜாயேத। ௨௫।௰௨௪
ஸுஹ்ருத்பிர் வார்யமாணாஸ் ேத। பண்டிைதஸ் ச தயாலுபி:।
௨௫।௰௨௪
ப்ரயச்சந்த்ய் உத்தரம் ம்ஊடா:। கூடயுக்திஸமந்விதம்। ௨௫।௰௨௪
ததஸ் ேத ஸ்வயம் ஆத்மாநம்। அந்யம் சால்பமதிம் நரம்। ௨௫।௰௨௫

விகர்மணா ேயாஜயந்தஸ்। ச்யவயந்தி ஸ்வதர்மத:। ௨௫।௰௨௫
பாஷண்டிேநா துராசாரா:। பராந்நகுணவாதிந:। ௨௫।௰௨௬
அஸம்ஸ்க்ருதாந்நேபாக்தாேரா। வ்ராத்யா: ஸம்ஸ்காரவர்ஜிதா:।
௨௫।௰௨௬
பாஷண்டா: பாபஸம்கல்பா। தாம்பிகா: ஸடபுத்தய:। ௨௫।௰௨௭
வர்ணஸம்கரகர்தாேரா। மாயாவ்யாேஜாபஜவிந ீ :। ௨௫।௰௨௭
நி:ெஸௗசா வக்ரமதேயா। நாந்யதஸ்தீதிவாதிந:। ௨௫।௰௨௭
ஏவம்விதாஸ் ேத ஸந்மார்காத்। ேவதப்ேராக்தாத் பஹி:ஸ்திதா:।
௨௫।௰௨௮
க்ரியாகலாபம் நிந்தந்த। க்ருக்யஜு:ஸாமஸம்ஜ்ஞிதம்। ௨௫।௰௨௮
ஆத்மாநம் ச பராம்ஸ் ைசவ। குர்வந்தி நரகஸ்திதாந்। ௨௫।௰௨௮
ேதஷாம் தர்ஸநஸம்பாஷ । ஸ்பர்ஸநாநி நைர: ஸதா। ௨௫।௰௨௯
பரித்யாஜ்யாநி த்ருஷ்ேட ச। ப்ேராக்த: ஸம்பாஷேண ச ய:। ௨௫।௰௨௯
ஸம்ஸ்பர்ேஸ ச புத: ஸ்நாத்வா। ஸுசி: ஸுசிஷதம் ஸ்மேரத்।
௨௫।௰௨௯
பவத்ய் அத: ஸைதைவஷாம்। ஆலாபஸ்பர்௧ஸநம் த்யேஜத்। ௨௫।௰௩
புண்யகாேமா மஹாபாக:। கிம் புநர் யத் உேபாஷித:। ௨௫।௰௩
யேதா ஹி நிந்திேத கர்மண்ய்। அப்யாேஸா ரதிர் ஏவ ச। ௨௫।௰௩௧
பாஷண்டிநாம் அேஸஷாணாம்। அப்ரீதிர் ேவதகர்மணி। ௨௫।௰௩௧
ேத ஹ்ய் அேதாகாமிந: ப்ேராக்தா। ஆஸுரம் பாவம் ஆஸ்ரிதா:।
௨௫।௰௩௧
அப்ராப்திர் ந ததா து:கம்। ஐஸ்வர்யாேதர் த்விேஜாத்தம। ௨௬।௰௰௧
யதா மேநாரைதர் லப்ைதர்। விச்யுதிர் தர்மஹாநிஜா। ௨௬।௰௰௧

ஐஸ்வர்யாத் வித்தேதா வாபி। ஸம்தேதர் ேதவேலாகத:। ௨௬।௰௰௨
அபஷ்டாத் ீ அந்யேதா வாபி। பதாத் ேயந ந விச்யுதிம்। ௨௬।௰௰௨
ப்ராப்ேநாதி புருேஷா ப்ரஹ்மந்। நாரீ வாபுண்யஸம்க்ஷயாத்। ௨௬।௰௰௩
தந் மமாசŠவ விப்ரர்ேஷ। து:கம் ஏப்ேயா ஹி விச்யுதி:। ௨௬।௰௰௩
ஸத்யம் ஏதந் மஹாபாக। து:கம் ப்ராப்தஸ்ய ஸம்க்ஷய:। ௨௬।௰௰௪
ஐஸ்வர்யாத் அத வித்தஸ்ய। பந்துவர்கஸுகஸ்ய வா। ௨௬।௰௰௪
தத் ஏதச் ச்ரூயதாம் தால்ப்ய। யதா ேநஷ்டாத் பரிச்யுதி:। ௨௬।௰௰௫
ஸர்காேதர் ஜாயேத ஸம்யக்। உபவாஸவதாம் ஸதாம்। ௨௬।௰௰௫
த்வாதஸர்க்ஷாணி விப்ரர்ேஷ। ப்ரதிமாஸம் து யாநி ைவ। ௨௬।௰௰௬
தந்நாமாந்ய் அச்யுதம் ேதஷு। ஸம்யக் ஸம்பூஜேயத் புத:। ௨௬।௰௰௬
புஷ்ைபர் தூைபஸ் ததாம்ேபாபிர்। அபஷ்ைடர் ீ அபைரஸ் ததா।
௨௬।௰௰௭
ஆதித: க்ருத்திகாம் க்ருத்வா। கார்த்திேக முநிபுங்கவ। ௨௬।௰௰௭
ைநேவத்யம் க்ருஸரம் பூர்வம்। அந்நம் மாஸசதுஷ்டயம்। ௨௬।௰௰௮
நிேவதேயத் கார்த்திகாதி। ஸம்யாவம் ச தத: பரம்। ௨௬।௰௰௮
ஆஷாடாெதௗ ச ேதவாய। பாயஸம் ைவ நிேவதேயத்। ௨௬।௰௰௯
ேதைநவாந்ேநந விப்ரர்ேஷ। ப்ராஹ்மணாந் ேபாஜேயத் புத:। ௨௬।௰௰௯
பஞ்சகவ்யஜலஸ்நாதஸ்। தஸ்ையவ ப்ராஸநாச் சுசி:। ௨௬।௰௧
ைநேவத்யம் ஸ்வயம் அஸ்நீயாந்। நக்தம் ஸம்பூஜிேத அச்யுேத।
௨௬।௰௧
ஏவம் ஸம்வத்ஸரஸ்யாந்ேத। தத: ஸுப்ேதாத்திேத அச்யுேத।
௨௬।௰௧௧
ஸம்யக் ஸம்பூஜ்ய விப்ரர்ேஷ। தம் ஏவ புருேஷாத்தமம்। ௨௬।௰௧௧

ப்ரணம்ய ப்ரார்தேயத் வித்வாஞ்। ஸுசி: ஸ்நாேதா யதாவிதி। ௨௬।௰௧௧
நேமா நமஸ் ேத அச்யுத ஸம்க்ஷேயா அஸ்து। பாபஸ்ய வ்ருத்திம்
ஸமுைபது புண்யம்। ௨௬।௰௧௨
ஐஸ்வர்யவித்தாதி ஸதாக்ஷயம் ேம। அக்ஷயா ச ேம ஸம்ததிர்
அச்யுதாஸ்து। ௨௬।௰௧௨
யதாச்யுதஸ் த்வம் பரத: பரஸ்மாத்। ஸ ப்ரஹ்மபூதாத் பரத: பராத்மந்।
௨௬।௰௧௩
ததாச்யுதம் ேம குரு வாஞ்சிதம் யந்। மயா பதம் பாபஹராப்ரேமய।
௨௬।௰௧௩
அச்யுதாநந்த ேகாவிந்த। ப்ரஸதீ யத் அபப்ஸிதம் ீ । ௨௬।௰௧௪
தத் அக்ஷயம் அேமயாத்மந்। குருஷ்வ புருேஷாத்தம। ௨௬।௰௧௪
ஏவம் அந்ேத ஸமப்யர்ச்ய। ப்ரார்தயித்வா ததாஸிஷ:। ௨௬।௰௧௫
யதாவந் முநிஸார்தூல। ச்யுதிம் நாப்ேநாதி மாநவ:। ௨௬।௰௧௫
ஸம்தேத: ஸ்வர்கவித்தாேதர்। ஐஸ்வர்யஸ்ய ததா முேந। ௨௬।௰௧௬
யத் வாபிமதம் அத்யந்தம்। தேதா ந ச்யவேத நர:। ௨௬।௰௧௬
தஸ்மாத் ஸர்வப்ரயத்ேநந। மாஸநக்ஷத்ரபூஜேந। ௨௬।௰௧௭
யேததாக்ஷயகாமஸ் து। ஸைதவ முநிபுங்கவ। ௨௬।௰௧௭
அத்ராபி ஸ்ரூயேத ஸித்தா। காசித் ஸ்வர்ேக மஹாவ்ரதா। ௨௭।௰௰௧
நாரீ தேபாதநா பூத்வா। ப்ரக்யாதா ஸாம்பராயண।ீ ௨௭।௰௰௧
ஸமஸ்தஸம்ேதஹஹரா। ஸதா ஸ்வர்ெகௗகஸாம் ஹி ஸா।
௨௭।௰௰௧
கஸ்யசித் த்வ் அத காலஸ்ய। ேதவராஜ: ஸதக்ரது:। ௨௭।௰௰௨
பூர்ேவந்த்ரசரிதம் ப்ரஹ்மந்। பப்ரச்ேசதம் ப்ருஹஸ்பதிம்। ௨௭।௰௰௨

பூர்ேவந்த்ரா பரத: பூர்ேவ। ேய பபூவு: ஸுேரஸ்வரா:। ௨௭।௰௰௩
ேதஷாம் சரிதம் இச்சாமி। ஸ்ேராதும் ஆங்கிரஸாம் வர। ௨௭।௰௰௩
ஏவம் உக்தஸ் ததா ேதந। ேதேவந்த்ேரணாமலத்யுதி:। ௨௭।௰௰௪
ப்ராஹ தர்மப்ருதாம் ஸ்ேரஷ்ட:। பரமர்ஷிர் ப்ருஹஸ்பதி:। ௨௭।௰௰௪
நாஹம் சிரந்தநாந் ேவத்மி। ேதவராஜ ஸுேரஸ்வராந்। ௨௭।௰௰௫
ஆத்மந: ஸமகாலீநம்। மாம் அைவஹி ஸுேரஸ்வர। ௨௭।௰௰௫
தத: பப்ரச்ச ேதேவந்த்ர:। ேகா அஸ்மாபிர் முநிபுங்கவ। ௨௭।௰௰௬
ப்ரஷ்டவ்ேயா அத்ர மஹாபாக। க்ருதாதிவஸதிர் திவி। ௨௭।௰௰௬
ப்ருஹஸ்பதிஸ் சிரம் த்யாத்வா। புநர் ஆஹ ஸசீபதிம்। ௨௭।௰௰௭
தபஸ்விநீம் மஹாபாகாம்। ஸ்ம்ருத்வாெஸௗ ஸாம்பராயணம்ீ ।
௨௭।௰௰௭
ந ேதவா ந ச கந்தர்வா। ந சாந்ேய சிரஸம்ஸ்திதா:। ௨௭।௰௰௮
சிரந்தநாநாம் சரிேதஷ்வ்। அபிஜ்ஞா த்ரிதேஸஸ்வர। ௨௭।௰௰௮
ஏைகவ சிரகாலஜ்ஞா। தர்மஜ்ஞா ஸக்ர ேகவலம்। ௨௭।௰௰௯
ஜாநாத்ய் அகிலேதேவந்த்ர । சரிதம் ஸாம்பராயண।ீ ௨௭।௰௰௯
இத்ய் உக்தஸ் ேதந ேதேவந்த்ர:। ெகௗதூஹலஸமந்வித:। ௨௭।௰௧
யெயௗ யத்ர மஹாபாகா। தாபஸீ ஸாம்பராயண।ீ ௨௭।௰௧
ஸா ெதௗ த்ருஷ்ட்வா ஸமாயாெதௗ। ேதவராஜப்ருஹஸ்பதீ। ௨௭।௰௧௧
ஸம்யக் அர்க்ேயந ஸம்பூஜ்ய। ப்ரணிபத்ய ஸுபவ்ரதா। ௨௭।௰௧௧
நேமா அஸ்து ேதவராஜாய। தைதவாங்கிரேஸ நம:। ௨௭।௰௧௨
யத் வாம் கார்யம் மஹாபாெகௗ। ஸகலம் தத் இேஹாச்யதாம்।
௨௭।௰௧௨
ஆவாம் அப்யாகெதௗ ப்ரஷ்டும்। த்வாம் அத்ராதிவிேவகிநீம்। ௨௭।௰௧௩

யச் ச கார்யம் மஹாபாேக। தத் ப்ருஷ்டா கதேயஹ ெநௗ। ௨௭।௰௧௩
யதி ஸ்மரஸி கல்யாணி। பூர்ேவந்த்ரசரிதாநி ெநௗ। ௨௭।௰௧௪
ததாக்யாஹி மஹாபாேக। ேதேவந்த்ரஸ்ய குதூஹலாத்। ௨௭।௰௧௪
யதி ஸக்யம் மயா கர்தும்। தத் கரிஷ்ேய விம்ருஷ்யது। ௰௨௭।௧௬
ேயா ைவ பூர்வ: ஸுேரந்த்ரஸ்ய। ததஸ் ச ப்ரதேமா ஹி ய:। ௨௭।௰௧௫
தஸ்மாத் பூர்வதேரா யஸ் ச। தஸ்யாபி ப்ரதமாஸ் ச ேய। ௨௭।௰௧௫
ேதஷாம் பூர்வதரா ேய ச। ேவத்மி தாந் அகிலாந் அஹம்। ௨௭।௰௧௬
ேதஷாம் ச சரிதம் க்ருத்ஸ்நம்। ஜாநாம்ய் ஆங்கிரஸாம் வர। ௨௭।௰௧௬
மந்வந்தராண்ய் அேநகாநி। ஸ்ருஷ்டிம் ச த்ரிதிெவௗகஸாம்। ௨௭।௰௧௭
ஸப்தர்ஷீந் ஸுபஹூந் ேதவ। மநூநாம் ச ஸுதாந் ந்ருப। ௨௭।௰௧௭
தத் ப்ருச்ச த்வம் வதாம்ய் ஏஷா। பூர்ேவந்த்ரசரிதம் முேந। ௨௭।௰௧௭
ஏவம் உக்ேத ததஸ் தாப்யாம்। ப்ருஷ்டா ஸா ஸாம்பராயண।ீ
௨௭।௰௧௮
யதாவத் ஆசஷ்ட தேயா:। பூர்ேவந்த்ரசரிதம் த்விஜ। ௨௭।௰௧௮
ஸ்வாயம்புேவ யஸ் து மெநௗ। மெநௗ ஸ்வாேராசிேஷ து ய:।
௨௭।௰௧௯
உத்தேம தாமேஸ ைசவ। ைரவேத சாக்ஷுேஷ ததா। ௨௭।௰௧௯
ேயா ேயா பபூவ ேதேவந்த்ரஸ்। தஸ்ய தஸ்ய தபஸ்விநீ। ௨௭।௰௨
தேயார் ஜகாத சரிதம்। யதாவச் சாம்பராயண।ீ ௨௭।௰௨
தத: ெகௗதூஹலபேரா। ேதவராட் தாம் தபஸ்விநீம்। ௨௭।௰௨௧
உவாச ஜாநாஸி கதம்। த்வம் ஏதச் சாம்பராயணி। ௨௭।௰௨௧
ஸர்வ ஏவ ஹி ேதேவந்த்ரா:। ஸ்வர்கஸ்தா ேய மநீஷிண:। ௨௭।௰௨௨
பபூவுர் ஏதச் சரிதம்। ஏேதஷாம் ேவத்மி ேதந ைவ। ௨௭।௰௨௨

கிம் க்ருதம் வத தர்மஜ்ேஞ। த்வயா ேயேநயம் அக்ஷயா। ௨௭।௰௨௩
ஸ்வர்ேலாேக வஸதி: ப்ராப்தா। யதா நாந்ேயந ேகநசித்। ௨௭।௰௨௩
அேஹா ஸர்வவ்ரதாநாம் தத்। உேபாஷிதம் மஹத் வ்ரதம்। ௨௭।௰௨௪
ப்ரதாநதரம் அத்யர்தம்। ஸ்வர்கஸம்வாஸதம் மதம்। ௨௭।௰௨௪
சரிதம் ச மயா ேதஷாம்। ஸ்ருதம் த்ருஷ்டம் தைதவ ச। ௰௨௭।௧௭
ஏவம் உக்தா ததஸ் ேதந। ேதேவந்த்ேரண யஸஸ்விநீ। ௨௭।௰௨௫
ப்ரத்யுவாச மஹாபாகா। யதாவச் சாம்பராயண।ீ ௨௭।௰௨௫
மாஸர்ேக்ஷஷ்வ் அச்யுேதா ேதவ:। ப்ரதிமாஸம் ஸுேரஸ்வர।
௨௭।௰௨௬
யேதாக்தவ்ரதயா ஸம்யக்। ஸப்த வர்ஷாணி பூஜித:। ௨௭।௰௨௬
தஸ்ேயயம் கர்மேணா வ்யுஷ்டிர்। அச்யுதாராதநஸ்ய ேம। ௨௭।௰௨௭
ேதவேலாகாத் அபிமதா। ேதவராஜ யத் அச்யுதி:। ௨௭।௰௨௭
ஸ்வர்கம் த்ரவ்யமையஸ்வர்யம்। ஸம்ததிம் வாபி ேயா அச்யுதாம்।
௨௭।௰௨௮
நேரா வாஞ்சதி ேதேநத்தம்। ேதாஷணேயா ீ அச்யுத: ப்ரபு:। ௨௭।௰௨௮
ஏதத் ேத பூர்வேதேவந்த்ர । சரிதம் ஸகலம் மயா। ௨௭।௰௨௯
ஸ்வர்கவாஸாக்ஷயத்வம் ச। மாஸர்க்ஷாச்யுதபூஜநாத்। ௨௭।௰௨௯
யதாவத் கதிதம் ேதவ। ப்ருச்சதஸ் த்ரிதேஸஸ்வர। ௨௭।௰௩
தர்மார்தகாமேமாக்ஷாம்ஸ் து। வாஞ்சதாம் விபுதாதிப। ௨௭।௰௩
விஷ்ேணார் ஆராதநாந் நாந்யத்। பரமம் ஸித்திகாரணம்। ௨௭।௰௩
தஸ்யாஸ் தத் வசநம் ஸ்ருத்வா। ேதவராஜப்ருஹஸ்பதீ। ௨௭।௰௩௧
தாம் தேதத்ய் ஊசது: ஸாத்வம்ீ । ேசரதுஸ் சாபி தத் வ்ரதம்। ௨௭।௰௩௧

தஸ்மாத் தால்ப்ய ப்ரயத்ேநந। ப்ரதிமாஸம் ஸமாஹித:। ௨௭।௰௩௨
மாஸர்க்ஷாச்யுதபூஜாயாம்। பேவதாஸ் தந்மநா: ஸதா। ௨௭।௰௩௨
பகவந் ப்ராணிந: ஸர்ேவ। விஷேராகாத்யுபத்ரைவ:। ௨௮।௰௰௧
துஷ்டக்ரேஹாபகாைதஸ் ச। ஸர்வகாலம் உபத்ருதா:। ௨௮।௰௰௧
ஆபிசாருகக்ருத்யாபி:। ஸ்பர்ஷேராைகஸ் ச தாருைண:। ௨௮।௰௰௨
ஸதா ஸம்பட்யமாநாஸ் ீ ேத। திஷ்டந்தி முநிஸத்தம। ௨௮।௰௰௨
ேயந கர்மவிபாேகந। விஷேராகாத்யுபத்ரவா:। ௨௮।௰௰௩
ந பவந்தி ந்ருணாம் தந் ேம। யதாவத் வக்தும் அர்ஹஸி। ௨௮।௰௰௩
வ்ரேதாபவாைஸர் ையர் விஷ்ணுர்। நாந்யஜந்மநி பூஜித:। ௨௮।௰௰௪
ேத நரா முநிஸார்தூல। க்ரஹேராகாதிபாகிந:। ௨௮।௰௰௪
ையர் ந தத்ப்ரவணம் சித்தம்। ஸர்வைதவ நைர: க்ருதம்। ௨௮।௰௰௫
விஷக்ரஹஜ்வராணாம் ேத। மநுஷ்யா தால்ப்ய பாஜநா:। ௨௮।௰௰௫
ஆேராக்யம் பரமாம் க்ருத்திம்। மநஸா யத் யத் இச்சதி। ௨௮।௰௰௬
தத் தத் ஆப்ேநாத்ய் அஸம்திக்தம்। பரத்ராச்யுதேதாஷக்ருத்। ௨௮।௰௰௬
நாதீந் ப்ராப்ேநாதி ந வ்யாதீந்। ந விஷக்ரஹபந்தநம்। ௨௮।௰௰௭
க்ருத்யாஸ்பர்ஸபயம் வாபி। ேதாஷிேத மதுஸூதேந। ௨௮।௰௰௭
ஸர்வதுஷ்டஸமஸ் தஸ்ய। ெஸௗம்யாஸ் தஸ்ய ஸதா க்ரஹா:।
௨௮।௰௰௮
ேதவாநாம் அப்ரத்ருஷ்ேயா அெஸௗ। துஷ்ேடா யஸ்ய ஜநார்தந:।
௨௮।௰௰௮
ய: ஸம: ஸர்வபூேதஷு। யதாத்மநி ததாபேர। ௨௮।௰௰௯
உபவாதாதிநா ேதந। ேதாஷ்யேத மதுஸூதந:। ௨௮।௰௰௯
ேதாஷிேத தத்ர ஜாயந்ேத। நரா: பூக்ருணமேநாரதா:। ௨௮।௰

அேராகா: ஸுகிேநா ேபாக । ேபாக்தாேரா முநிஸத்தம। ௨௮।௰௧
ந ேதஷாம் ஸத்ரேவா ைநவ। ஸ்பர்ஸேராகாபிசாருகா:। ௨௮।௰௧௧
க்ரஹேராகாதிகம் வாபி। பாபகார்யம் ந ஜாயேத। ௨௮।௰௧௧
அவ்யாஹதாநி க்ருஷ்ணஸ்ய। சக்ராதீந்ய் ஆத்மயுதாநி தம்। ௨௮।௰௧௨
ரக்ஷந்தி ஸகலாபத்ப்ேயா। ேயந விஷ்ணுர் உபாஸித:। ௨௮।௰௧௨
அநாராதிதேகாவிந்தா। ேய நரா து:கபாகிந:। ௨௮।௰௧௩
ேதஷாம் து:காபிபூதாநாம்। கர்தவ்யம் யத் தயாலுபி:। ௨௮।௰௧௩
பஸ்யத்பி: ஸர்வபூதஸ்தம்। வாஸுேதவம் மஹாமுேந। ௨௮।௰௧௪
ஸமத்ருஷ்டிபிர் ஈேஸஸம்। தந் மம ப்ரூஹ்ய் அேஸஷத:। ௨௮।௰௧௪
குஸமூலஸ்திேதா ப்ரஹ்மா। குஸமத்ேய ஜநார்தந:। ௰௨௮।௧௮।௰௰௨
குஸாக்ேர ஸம்கரம் வித்யாத்। த்ரேயா ேதவா வ்யவஸ்திதா:।
௰௨௮।௧௮।௰௰௩
க்ருஹீத்வா ச ஸ மூலாக்ராந்। குஸாஞ் ஸுத்தாந் உபஸ்ப்ருேஸத்।
௰௨௮।௧௮।௰௰௪
மார்ஜேயத் ஸர்வகாத்ராணி। குஸாக்ைரர் தால்ப்ய ஸாந்திக்ருத்।
௰௨௮।௧௮।௰௰௫
ஸரீேர யஸ்ய திஷ்டந்தி। குஸஸ்தஜலபிந்தவ:। ௰௨௮।௧௮।௰௰௬
நஸ்யந்தி தஸ்ய பாபாநி। கருேடைநவ பந்நகா:। ௰௨௮।௧௮।௰௰௭
விஷ்ணுபக்தா விேஸேஷண। ॥॥சித்கதமாநஸ:। ௰௨௮।௧௮।௰௰௮
ேராகக்ரஹவிஷார்தாநாம்। குர்யாச் சாந்திம் இமாம் ஸுபாம்।
௰௨௮।௧௮।௰௰௯
நாரஸிம்ஹம் ஸமப்யர்ச்ய। ஸுெசௗ ேதேஸ குஸாஸேந।
௰௨௮।௧௮।௰௧௰

மந்த்ைரர் ஏைதர் யதா லிங்கம்। குர்யாத் திக்பந்தம் ஆத்மந:।
௰௨௮।௧௮।௰௧௧
வாராஹம் நாரஸிம்ஹம் ச। வாமநம் விஷ்ணும் ஏவ ச।
௰௨௮।௧௮।௰௧௨
த்யாத்வா ஸமாஹிேதா பூத்வா। திக்ஷு நாமாநி விந்யாேஸத்।
௰௨௮।௧௮।௰௧௩
பூர்ேவ நாராயண: பாது। வாரிஜாக்ஷஸ் து தக்ஷிேண। ௰௨௮।௧௮।௰௧௪
ப்ரத்யும்ந: பஸ்சிமஸ்யாம் து। வாஸுேதவஸ் தேதாத்தேர।
௰௨௮।௧௮।௰௧௫
ஈஸாந்யாம் அவதாத் விஷ்ணுர்। ஆக்ேநய்யாம் ச ஜநார்தந:।
௰௨௮।௧௮।௰௧௬
ைநர்ருத்யாம் பத்மநாபஸ் ச। வாயவ்யாம் ைசவ மாதவ:।
௰௨௮।௧௮।௰௧௭
ஊர்த்வம் ேகாவர்தநதேரா। அதராயாம் த்ரிவிக்ரம:। ௰௨௮।௧௮।௰௧௮
ஏதாப்ேயா தஸதிக்ப்யஸ் து। ஸர்வத: பாது ேகஸவ:। ௰௨௮।௧௮।௰௧௯
அங்குஷ்டாக்ேர து ேகாவிந்தம்। தர்ஜந்யாம்ஸ் து மஹீதரம்।
௰௨௮।௧௮।௰௨௰
மத்யமாயாம் ஹ்ருஷீேகஸம்। அநாமிக்யாம் த்ரிவிக்ரமம்।
௰௨௮।௧௮।௰௨௧
கணிஷ்டாயாம் ந்யேஸத் விஷ்ணும்। கரமத்ேய து மாதவம்।
௰௨௮।௧௮।௰௨௨
ஏவம் ந்யாஸம் புரா க்ருத்வா। பஸ்சாத் அங்ேகஷு விந்யேஸத்।
௰௨௮।௧௮।௰௨௩
ஸிகாயாம் ேகஸவம் ந்யஸ்ய। மூர்த்நி நாராயணம் ந்யேஸத்।
௰௨௮।௧௮।௰௨௪

சக்ஷுர்மத்ேய ந்யேஸத் விஷ்ணும்। கர்ணேயார் மதுஸூதநம்।
௰௨௮।௧௮।௰௨௫
த்ரிவிக்ரமம் கபாலஸ்தம்। வாமநம் கர்ணமூலேயா:। ௰௨௮।௧௮।௰௨௬
தாேமாதரம் தந்தவக்த்ெரௗ। வாராஹம் சிபுேக ந்யேஸத்।
௰௨௮।௧௮।௰௨௭
உத்தேராஷ்ேட ஹ்ருஷீேகஸம்। பத்மநாபம் ததாதேர। ௰௨௮।௧௮।௰௨௮
ஜிஹ்வாயாம் வாஸுேதவம் ச। தால்வேக கருடத்வஜம்।
௰௨௮।௧௮।௰௨௯
ைவகுண்டம் கந்டமத்யஸ்தம்। அநந்தம் நாஸிேகாபரி। ௰௨௮।௧௮।௰௩௰
தக்ஷிேண து புேஜ விப்ர। விந்யேஸத் புருேஷாத்தமம்। ௰௨௮।௧௮।௰௩௧
வாமபுேஜ மஹாபாகம்। ராகவம் ஹ்ருதி விந்யேஸத்। ௰௨௮।௧௮।௰௩௨
பதாம்பரம் ீ ஸர்வதெநௗ। ஹரிம் நாெபௗ து விந்யேஸத்।
௰௨௮।௧௮।௰௩௩
கேர து தக்ஷிேண விப்ர। தத: ஸம்கர்ஷணம் ந்யேஸத்।
௰௨௮।௧௮।௰௩௪
வாேம விப்ர ஹரிம் வித்யாத்। கடிமத்ேய அபராஜிதம்।
௰௨௮।௧௮।௰௩௫
ப்ருஷ்ேட க்ஷிதிதரம் வித்யாத்। அச்யுதம் ஸ்கந்தேயார் அபி।
௰௨௮।௧௮।௰௩௬
மாதவம் பாஹு குெக்ஷௗ து। தக்ஷிேண ேயாகஸாயிநம்।
௰௨௮।௧௮।௰௩௭
ஸ்வயம்புவம் ேமட்ரமத்ேய। ஊருப்யாம் து கதாதரம்। ௰௨௮।௧௮।௰௩௮
சக்ரிணம் ஜாநுமத்ேய து। ஜங்கேயார் அச்யுதம் ந்யேஸத்।
௰௨௮।௧௮।௰௩௯

குல்பேயார் நரஸிம்ஹம் ச। பாதப்ருஷ்ேட அமிெதௗஜஸம்।
௰௨௮।௧௮।௰௪௰
ஸ்ரீதரம் சாங்குலீஷு ஸ்யாத்। பத்மாக்ஷம் ஸர்வஸந்திஷு।
௰௨௮।௧௮।௰௪௧
ேராமகூேப குடாேகஸம்। க்ருஷ்ணம் ரக்தாஸ்திமஜ்ஜாஸு।
௰௨௮।௧௮।௰௪௨
மேநாபுத்த்ேயார் அஹம்காேரஷ்வ்। ஏவம் சித்ேத ஜநார்தநம்।
௰௨௮।௧௮।௰௪௩
நேகஷு மாதவம் ைசவ। ந்யேஸத் பாததேல அச்யுதம்।
௰௨௮।௧௮।௰௪௪
ஏவம் ந்யாஸவிதிம் க்ருத்வா। ஸாக்ஷாந் நாராயேணா பேவத்।
௰௨௮।௧௮।௰௪௫
தநுர் விஷ்ணுமயீ தஸ்ய। யாவத் கிம்சிந் ந பாஷேத। ௰௨௮।௧௮।௰௪௬
ஏவம் ந்யாஸம் தத: க்ருத்வா। யத் கார்யம் ஸ்ருணு தத் த்விஜ।
௰௨௮।௧௮।௰௪௭
பாதமூேல து ேதவஸ்ய। ஸங்கம் தத்ைரவ விந்யேஸத்।
௰௨௮।௧௮।௰௪௮
வநமாலாம் து விந்யஸ்ய। ஸர்வேதவாபிபூஜிதாம்। ௰௨௮।௧௮।௰௪௯
கதாம் வக்ஷ:ஸ்தேல ைசவ। சக்ரம் ைசவ து ப்ருஷ்டத:।
௰௨௮।௧௮।௰௫௰
ஸ்ரீவத்ஸாங்கம் ஸிேரா ந்யஸ்ய। பஞ்சாங்ககவசம் ந்யேஸத்।
௰௨௮।௧௮।௰௫௧
ஆபாதாமஸ்தேக ைசவ। விந்யேஸத் புருேஷாத்தமம்। ௰௨௮।௧௮।௰௫௨
ஓம் அபாமார்ஜநேகா ந்யாஸ:। ஸர்வவ்யாதிவிநாஸந:।
௰௨௮।௧௮।௰௫௩

விஷ்ணுர் ஊர்த்வம் அேதா ரேக்ஷத்। ைவகுண்ேடா விதிேஸா திஸ:।
௰௨௮।௧௮।௰௫௪
பாது மாம் ஸர்வேதா ராேமா। தந்வ ீசக்ரீ ச ேகஸவ:।
௰௨௮।௧௮।௰௫௫
பூஜாகாேல து ேதவஸ்ய। ஜபகாேல தைதவ ச। ௰௨௮।௧௮।௰௫௯
ேஹாமாரம்ேபஷு ஸர்ேவஷு। த்ரிஸம்த்யாஸு ச நித்யஸ:।
௰௨௮।௧௮।௰௬௰
ஆயுர் ஆேராக்யம் ஐஸ்வர்யம்। ஜ்ஞாநம் வித்தம் பலம் பேவத்।
௰௨௮।௧௮।௰௬௧
யத் யத் ஸுககரம் ப்ேராக்தம்। தத் ஸர்வம் ப்ராப்நுயாந் நர:।
௰௨௮।௧௮।௰௬௨
அபயம் ஸர்வபூேதப்ேயா। விஷ்ணுேலாகம் ச கச்சதி। ௰௨௮।௧௮।௰௬௩
அத த்யாநம் ப்ரவŠயாமி। ஸர்வபாபப்ரணாஸநம்। ௰௨௮।௧௮।௰௭௭
வாராஹரூபிணம் ேதவம்। ஸம்ஸ்மரத்ய் அபராஜிதம்। ௰௨௮।௧௮।௰௭௮
ப்ருஹத்தநும் ப்ருஹத்காத்ரம்। ப்ருஹத்தம்ஷ்ட்ரஸுேஸாபநம்।
௰௨௮।௧௮।௰௭௯
ஸமஸ்தேவதேவதாங்கம்। யுக்தாங்கம் பூஷைணர் யுதம்।
௰௨௮।௧௮।௰௮௰
உத்த்ருத்ய பூமிம் பாதாலாத்। ஹஸ்தாப்யாம் உபக்ருஹ்ணதாம்।
௰௨௮।௧௮।௰௮௧
ஆலிங்க்ய பூமிம் ஸிரஸி। மூர்த்நி ஜிக்ரந்தம் ஆஸ்திதம்।
௰௨௮।௧௮।௰௮௨
ரத்நைவடூர்யமுக்யாபிர்। முக்தாபிர் உபேஸாபிதம்। ௰௨௮।௧௮।௰௮௩
பதாம்பரதரம் ீ ேதவம்। ஸுக்லமால்யாநுேலபநம்। ௰௨௮।௧௮।௰௮௪

த்ரயஸ்த்ரிம்ஸேகாடிேதைவ:। ஸ்தூயமாநம் முதாநிஸம்।
௰௨௮।௧௮।௰௮௫
ந்ருத்யத்பிர் அப்ஸேராபிஸ் ச। கீயமாநம் ச கிந்நைர:। ௰௨௮।௧௮।௰௮௬
இத்தம் த்யாத்வா மஹாத்மாநம்। ஜேபந் நித்யம் மஹாத்மந:।
௰௨௮।௧௮।௰௮௭
ஸுவர்ணமண்டபாந்தஸ்தம்। பத்மம் த்யாேயத் ஸேகஸரம்।
௰௨௮।௧௮।௰௮௮
ஸகர்ணிகதைலர் இஷ்ைடர்। அஷ்டபி: பரிேஸாபிதம்।
௰௨௮।௧௮।௰௮௯
கரம் கரஹிதம் ேதவம்। பூர்ணசந்த்ராப்தஸுப்ரபம்। ௰௨௮।௧௮।௰௯௰
தடித்ஸமஸடாேஸாபி। கண்டநாேலாபேஸாபிதம்। ௰௨௮।௧௮।௰௯௧
ஸ்ரீவத்ஸாங்கிதவக்ஷ:ஸ்தம்। தீŠணதம்ஷ்ட்ரம் த்ரிேலாசநம்।
௰௨௮।௧௮।௰௯௨
ஜவாகுஸுமஸம்காஸம்। ரக்தஹஸ்ததலாந்விதம்। ௰௨௮।௧௮।௰௯௩
பதவஸ்த்ரபரீதாநம் ீ । ஸுக்லயஸ்த்ேராத்தரீயகம்। ௰௨௮।௧௮।௰௯௪
கரம் கரஹிதம் ேதவம்। பூர்ணசந்த்ராப்தஸுப்ரபம்। ௰௨௮।௧௮।௰௯௫
கடிஸூத்ேரண ைஹேமந। நூபுேரண விராஜிதம்। ௰௨௮।௧௮।௰௯௬
வநமாலாதிேஸாபாட்யம்। முக்தாஹாேராபேஸாபிதம்।
௰௨௮।௧௮।௰௯௭
அேநகஸூர்யஸம்காஸம்। முகுடாேடாபமஸ்தகம்। ௰௨௮।௧௮।௰௯௮
ஸங்கசக்ரக்ருஹீதாப்யாம்। உத்பாஹுப்யாம் விராஜிதம்।
௰௨௮।௧௮।௰௯௯
பங்கஜாபம் சதுர்ஹஸ்தம்। தத்பத்ராபஸுேலாசநம்। ௰௨௮।௧௮।௧௰௰

ப்ராத: ஸூர்யஸமப்ரக்ய । குண்டலாப்யாம் விராஜிதம்।
௰௨௮।௧௮।௧௰௧
ேகயூரகாந்திஸஸ்யர்த்தி । முக்திகாரத்நேஸாபிதம்। ௰௨௮।௧௮।௧௰௨
ஜாநூபரிந்யஸ்தஹஸ்தம்। வரரத்நநகாங்குரம்। ௰௨௮।௧௮।௧௰௩
ஜங்காபரணஸஸ்யர்த்தி । விஸ்புர்யத்கங்கநத்விஷம்। ௰௨௮।௧௮।௧௰௪
முக்தாபலாப்தஸமஹத் । தந்தபங்க்திவிராஜிதம்। ௰௨௮।௧௮।௧௰௫
சம்பகாமுகுலப்ரக்ய । ஸுநாஸாமுகபங்கஜம்। ௰௨௮।௧௮।௧௰௬
அதிரக்ெதௗஷ்டவதநம்। வ்யாத்தாஸ்யம் அதிபஷணம் ீ । ௰௨௮।௧௮।௧௰௭
வாமாங்கஸ்தம் ஸிவபக்த । ஸாந்திதாம் ஸுநிதம்பிநீம்।
௰௨௮।௧௮।௧௰௮
அர்ஹணயாம் ீ ஸுஜாேதாரும்। ஸுநாஸாம் ஸுபலக்ஷணாம்।
௰௨௮।௧௮।௧௰௯
ஸுப்ரூம் ஸுேகஸம்ீ ஸுஸ்ேராணம்ீ । ஸுஸுபாம் ஸுத்விஜாநநாம்।
௰௨௮।௧௮।௧௧௰
ஸுப்ரதிஷ்டாம் ஸுவதநாம்। சதுர்ஹஸ்தாம் விசிந்தேயத்।
௰௨௮।௧௮।௧௧௧
துகூேல ைசவ சார்வங்கீம்। ஹாரிணம்ீ ஸர்வகாமதாம்।
௰௨௮।௧௮।௧௧௨
தப்தகஞ்சநஸம்காஸாம்। ஸர்வாபரணபூஷிதாம்। ௰௨௮।௧௮।௧௧௩
ஸுவர்ணகலஸப்ரக்ய । பேநாந்நதபேயாதராம் ீ । ௰௨௮।௧௮।௧௧௪
க்ருஹீதபத்மயுகலம்। உத்பாஹுப்யாம் ததாந்யேயா:। ௰௨௮।௧௮।௧௧௫
க்ருஹீதமாதுலங்காக்யம்। ஜாம்புநதகராந் ததா। ௰௨௮।௧௮।௧௧௬
ஏவம் ேதவம்ீ ந்ருஸிம்ஹஸ்ய। வாமாங்ேகாபரி ஸம்ஸ்மேரத்।
௰௨௮।௧௮।௧௧௭

அதிவிமலஸுகாத்ரம் ெரௗப்யபாத்ரஸ்தம் அந்நம்। ஸுலலிதததிகண்டம்
பாணிநா தக்ஷிேணந। ௰௨௮।௧௮।௧௧௮
கலஸம் அம்ருதபூர்ணம் ஸவ்யஹஸ்ேத ததாநம்। தததிஸகலது:கம் வாமநம்
பாவேயத் ய:। ௰௨௮।௧௮।௧௨௰
அந்யா பாஸ்கரஸப்ரபாபிர் அகிைலர் பாபிர் திேஸா பாஸயந்।
பமாக்ஷஸ்புரதட்டஹாஸவிலஸாத்தம்ஷ்ட்ராக்ரத ீ ீப்தாநந:। ௰௨௮।௧௮।௧௨௨
ேதார்பிஸ் சக்ரதெரௗ கதாப்ஜமுகுெலௗ த்ராஸாம்ஸ் ச பாஸாங்குெஸௗ।
பிப்ரத்பிங்கஸிேரா அருேஹாத்ததஸடஸ் சக்ரவிதாேநா ஹரி:।
௰௨௮।௧௮।௧௨௪
மேநாபூதாநீந்த்ரியாணி। குணா: ஸத்த்வம் ரஜஸ் தம:। ௰௨௮।௧௮।௧௩௯
த்ைரேலாக்யஸ்ேயஸ்வரம் ஸர்வம்। அஹம்காேர ப்ரதிஷ்டிதா:।
௰௨௮।௧௮।௧௪௰
ஓம் நம: பரமார்தாய। புருஷாய மஹாத்மேந। ௨௮।௰௧௫
அரூபபஹுரூபாய। வ்யாபிேந பரமாத்மேந। ௨௮।௰௧௫
நமஸ் ேத ேதவேதவாய। ஸுரஸூர நேமா அஸ்து ேத। ௰௨௮।௧௯
ேலாகாத்யக்ஷ ஜகத்பூஜ்ய। பரமாத்மந் நமஸ் ேத । ௰௨௮।௧௯
நிஷ்கல்மஷாய ஸுத்தாய। ஸர்வபாபஹராய ச। ௨௮।௰௧௫
நமஸ்க்ருத்வா ப்ரவŠயாமி। யத் தத் ஸித்யது ேம வச:।
௰௨௮।௰௧௬௨௰௨௧
வராஹநரஸிம்ஹாய। வாமநாய மஹாத்மேந। ௨௮।௰௧௭
ேகாவிந்தபத்மநாபாய। வாமேதவாய பூபேத। ௰௨௮।௨௰।௰௰௧
நாராயணாய ேதவாய। அநந்தாய மஹாத்மேந। ௰௨௮।௨௰।௰௰௩
கருடத்வஜாய க்ருஷ்ணாய। பதாம்பரதராய ீ ச। ௰௨௮।௨௰।௰௰௫

ேயாகீஸ்வராய ஸித்தாய। குஹ்யாய பரமாத்மேந। ௰௨௮।௨௰।௰௰௭
ஜநார்தநாய க்ருஷ்ணாய। உேபந்த்ரஸ்ரீதராய ச। ௰௨௮।௨௰।௰௰௯
பக்தப்ரியாய விதேய। விஷ்வக்ேஸநாய ஸார்ங்கிேந। ௰௨௮।௨௰।௰௧௧
ஹிரண்யகர்பபதேய। ஹிரண்யகஸிபுச்சிேத। ௰௨௮।௨௰।௰௧௩
சக்ரஹஸ்தாய ஸூலாய। தர்ஜந்யபத்ராய தீமேத। ௰௨௮।௨௰।௰௧௫
ஆதித்யாய உேபந்த்ராய। பூதாநாம் ஜவநாய ீ ச। ௰௨௮।௨௰।௰௧௭
வாஸுேதவாய வந்த்யாய। வரதாய மஹாத்மேந। ௰௨௮।௨௰।௰௧௯
விஷூவ்ருச்ச்ரவேஸ தஸ்ைம। க்ஷராம்புநிசிஸாயிேந ீ । ௰௨௮।௨௰।௰௨௧
அேதாக்ஷஜாய பத்ராய। ஸ்ரீதராயாதிமூர்தேய। ௰௨௮।௨௰।௰௨௩
விஸ்ேவஸத்வாரமூர்திஸ் ச। ம்ருத்யுராேயாஹிேதா அஸ்தி ஸ:।
௰௨௮।௨௰।௰௨௫
நாநாராகாம்ஸ் ச தக்ஷாம்ஸ் ச। விகடாய மஹாபதீ ீ। ௰௨௮।௨௰।௰௨௭
ஜாதுபதிம் வ்யக்ரஹஸ்தம்। வரரத்நநகாகரம்। ௰௨௮।௨௰।௰௨௮
நாராயணாய விஸ்வாய। விஸ்ேவஸாயாம்பராய ச। ௰௨௮।௨௰।௰௩௨
தாேமாதராய ேதவாய। அநந்தாய மஹாத்மேந। ௰௨௮।௨௰।௰௩௪
த்ரிவிக்ரமாய ராமாய। ைவகுண்டாய நராய ச। ௨௮।௰௧௭
நமஸ்க்ருத்வா ப்ரவŠயாமி। யத் தத் ஸித்யது ேம வச:। ௨௮।௰௧௮
வராஹநரஸிம்ேஹஸ। வாமேநஸ த்ரிவிக்ரம। ௨௮।௰௧௯
ஹயக்ரீேவஸ ஸர்ேவஸ। ஹ்ருஷீேகஸ ஹராஸுபம்। ௨௮।௰௧௯
அபராஜிதசக்ராத்ையஸ்। சதுர்பி: பரமாயுைத:। ௨௮।௰௨
அகண்டிதப்ரபாைவஸ் த்வம்। ஸர்வதுஷ்டஹேரா பவ। ௨௮।௰௨
ஹராமுகஸ்ய துரிதம்। துஷ்க்ருதம் துருேபாஷிதம்। ௨௮।௰௨௧
ம்ருத்யுபந்தார்திபயதம்। துரிஷ்டஸ்ய ச யத் பலம்। ௨௮।௰௨௧

பராபத்யாநஸஹிதம்। ப்ரயுக்தம் சாபிசாருக। ௨௮।௰௨௨
கரஸ்பர்ஸமஹாேயாக । ப்ரேயாகஜரயாஜர। ௨௮।௰௨௨
ஓம் நேமா வாஸுேதவாய। நம: Šருணாய ஸார்ங்கிேண। ௨௮।௰௨௩
நம: புஷ்கரேநத்ராய। ேகஸவாயாதிசக்ரிேண। ௨௮।௰௨௩
நம: கமலகிஞ்ஜல்க । பதநிர்மலவாஸேஸ ீ । ௨௮।௰௨௪
மஹாஹவரிபுஸ்கந்த । க்ருஷ்டசக்ராய சக்ரிேண। ௨௮।௰௨௪
தம்ஷ்ட்ேராத்த்ருதக்ஷிதித்ருேத। த்ரயமூர்திமேத ீ நம:। ௨௮।௰௨௫
மஹாயஜ்ஞவராஹாய। ேஸஷேபாேகாருஸாயிேந। ௨௮।௰௨௫
தப்தஹாடகேகஸாந்த। ஜ்வலத்பாவகேலாசந। ௨௮।௰௨௬
வஜ்ராதிகநகஸ்பர்ஸ। திவ்யஸிம்ஹ நேமா அஸ்து ேத। ௨௮।௰௨௬
கபில ேஹமாஸ்வஸர்ஷீ । அதிரிக்தவிேலாசந। ௰௨௮।௨௨
வித்யுத்ஸ்புரிததம்ஷ்ட்ராக்ர। திவ்யஸிம்ஹ நேமா அஸ்து ேத।
௰௨௮।௨௨
காஸ்யபாயாதிஹ்ரஸ்வாய। க்ருக்யஜு:ஸாமபூஷித। ௨௮।௰௨௭
துப்யம் வாமநரூபாய। ஸ்ருஜேத காம் நேமா நம:। ௨௮।௰௨௭
வராஹாேஸஷதுஷ்டாநி। ஸர்வபாபஹராணி ைவ। ௨௮।௰௨௮
மர்த மர்த மஹாதம்ஷ்ட்ர। மர்த மர்த ச தத்பலம்। ௨௮।௰௨௮
நரஸிம்ஹ கராலாஸ்ய। தந்தப்ராந்தாநேலாஜ்ஜ்வல। ௨௮।௰௨௯
பஞ்ஜ பஞ்ஜ நிநாேதந। துஷ்டாந்ய் அஸ்யார்திநாஸந। ௨௮।௰௨௯
க்ருக்யஜு:ஸாமகர்பாபிர்। வாக்பிர் வாமநரூபத்ருக்। ௨௮।௰௩
ப்ரஸமம் ஸர்வது:காநி। நயத்வ் அஸ்ய ஜநார்தந:। ௨௮।௰௩
ஏகாஹிகம் த்வ்யாஹிகம் ச। ததா த்ரிதிவஸம் ஜ்வரம்। ௨௮।௰௩௧

சாதுர்தகம் ததாத்யுக்ரம்। தைதவ ஸததஜ்வரம்। ௨௮।௰௩௧
ேதாேஷாத்தம் ஸம்நிபாேதாத்தம்। தைதவாகந்துகம் ஜ்வரம்। ௨௮।௰௩௨
ஸமம் நயாஸு ேகாவிந்த। சித்த்வா ச்சித்த்வா து ேவதநாம்। ௨௮।௰௩௨
ேநத்ரது:கம் ஸிேராது:கம்। து:கம் ேசாதரஸம்பவம்। ௨௮।௰௩௩
அநுச்ச்வாஸம் அதிஸ்வாஸம்। பரிதாபம் ஸேவபதும்। ௨௮।௰௩௩
குதக்ராணாம்ஹ்ரிேராகாம்ஸ் ச। குஷ்டேராகம் ததா க்ஷயம்। ௨௮।௰௩௪
காமலாதீம்ஸ் ததா ேராகாந்। ப்ரேமஹாம்ஸ் சாதிதாருணாந்। ௨௮।௰௩௪
பகம்தராதிஸாராம்ஸ் ச। முகேராகம் ஸவல்குலிம்। ௨௮।௰௩௫
அஸ்மரீமூத்ரக்ருச்ச்ராம்ஸ் ச। ேராகாந் அந்யாம்ஸ் ச தாருணாந்।
௨௮।௰௩௫
ேய வாதப்ரபவா ேராகா। ேய ச பித்தஸமுத்பவா:। ௨௮।௰௩௬
கேபாத்பவாஸ் ச ேய ேகசித்। ேய சாந்ேய ஸாம்நிபாதிகா:। ௨௮।௰௩௬
ஆகந்தவஸ் ச ேய ேராகா। லூதாவிஸ்ேபாடகாதய:। ௨௮।௰௩௭
ேத ஸர்ேவ ப்ரஸமம் யாந்து। வாஸுேதவாபமார்ஜிதா:। ௨௮।௰௩௭
விலயம் யாந்து ேத ஸர்ேவ। விஷ்ேணார் உச்சாரேணந ச। ௨௮।௰௩௮
க்ஷயம் கச்சந்து சாேஸஷாஸ்। ேத சக்ராபிஹதா ஹேர:। ௨௮।௰௩௮
அச்யுதாநந்தேகாவிந்த । நாேமாச்சாரணபஷிதா ீ :। ௨௮।௰௩௯
நஸ்யந்து ஸகலா ேராகா:। ஸத்யம் ஸத்யம் வதாம்ய் அஹம்।
௨௮।௰௩௯
ஸ்தாவரம் ஜங்கமம் வாபி। க்ருத்ரிமம் வாபி யத் விஷம்। ௨௮।௰௪
தந்ேதாத்பவம் நகபவம்। ஆகாஸப்ரபவம் விஷம்। ௨௮।௰௪
லூதாதிப்ரபவம் யச் ச। விஷம் அத்யந்தது:கதம்। ௨௮।௰௪௧
ஸமம் நயது தத் ஸர்வம்। கீர்திேதா அஸ்ய ஜநார்தந:। ௨௮।௰௪௧

க்ரஹாந் ப்ேரதக்ரஹாம்ஸ் ைசவ। ததா ைவ டாகிநீக்ரஹாந்।
௨௮।௰௪௨
ேவதாலாம்ஸ் ச பிஸாசாம்ஸ் ச। கந்தர்வாந் யக்ஷராக்ஷஸாந்।
௨௮।௰௪௨
ஸகுநீபூதநாத்யாம்ஸ் ச। ததா ைவநாயகக்ரஹாந்। ௨௮।௰௪௩
முகமண்டிநிகாம் க்ரூராம்। ேரவதீம் வ்ருத்தேரவதீம்। ௨௮।௰௪௩
வ்ருத்திகாக்யாந் க்ரஹாம்ஸ் ேசாக்ராம்ஸ்। ததா மாத்ருக்ரஹாந் அபி।
௨௮।௰௪௪
பாலஸ்ய விஷ்ேணா: சரிதம்। ஹந்து பாலக்ரஹாந் இமாந்। ௨௮।௰௪௪
வ்ருத்தாநாம் ேய க்ரஹா: ேகசித்। ேய ச பாலக்ரஹா: க்வசித்।
௨௮।௰௪௫
நரஸிம்ஹஸ்ய ேத த்ருஷ்ட்யா। தக்தா ேய சாபி ெயௗவேந।
௨௮।௰௪௫
ஸடாகராலவதேநா। நரஸிம்ேஹா மஹாரவ:। ௨௮।௰௪௬
க்ரஹாந் அேஸஷாந் நி:ேஸஷாந்। கேராது ஜகேதா ஹிதம்। ௨௮।௰௪௬
நரஸிம்ஹ மஹாஸிம்ஹ। ஜ்வாலாமாேலாஜ்ஜ்வலாநந। ௨௮।௰௪௭
க்ரஹாந் அேஸஷாந் ஸர்ேவஸ। காத காதாக்நிேலாசந। ௨௮।௰௪௭
ேய ேராகா ேய மேஹாத்பாதா। யத் விஷம் ேய மஹாக்ரஹா:।
௨௮।௰௪௮
யாநி ச க்ரூரபூதாநி। க்ரஹபடாஸ்ீ ச தாருணா:। ௨௮।௰௪௮
ஸஸ்த்ரக்ஷேதஷு ேய ேதாஷா। ஜ்வாலாகர்தபகாதய:। ௨௮।௰௪௮
யாநி சார்யாணி பூதாநி। ப்ராணிபடாகராணி ீ ைவ। ௰௨௮।௨௩
தாநி ஸர்வாணி ஸர்வாத்மந்। பரமாத்மஞ் ஜநார்தந। ௨௮।௰௪௯

கிம்சித் ரூபம் ஸமாஸ்தாய। வாஸுேதவ விநாஸய। ௨௮।௰௪௯
க்ஷிப்த்வா ஸுதர்ஸநம் சக்ரம்। ஜ்வாலாமாலாவிபஷணம் ீ । ௨௮।௰௫
ஸர்வதுஷ்ேடாபஸமநம்। குரு ேதவவராச்யுத। ௨௮।௰௫
ஸுதர்ஸந மஹாசக்ர। ேகாவிந்தஸ்ய கராயுத। ௰௨௮।௨௪।௰௰௧
ஜ்வலத்பாவகஸம்காஸ। ஸூர்யேகாடிஸமப்ரப। ௰௨௮।௨௪।௰௰௨
த்ைரேலாக்யரக்ஷகர்த்ரு த்வம்। த்வம் துஷ்டதாநவதாரண।
௰௨௮।௨௪।௰௰௩
தீŠணதார மஹாேவக। சிந்தி ச்சிந்தி மஹாஜ்வரம்। ௰௨௮।௨௪।௰௰௪
சிந்தி ச்சிந்தி மஹாவ்யாதிம்। சிந்தி ச்சிந்தி மஹாக்ரஹாந்।
௰௨௮।௨௪।௰௰௫
சிந்தி வாதம் ச தூதம் ச। சிந்தி ேகாரம் மஹாவிஷம்। ௰௨௮।௨௪।௰௰௬
ருஜதாகம் ச ஸூலம் ச। நிமிஷஜ்வாலகர்தபம்। ௰௨௮।௨௪।௰௰௭
ஸுதர்ஸந மஹாஜ்வால। சிந்தி ச்சிந்தி மமாரய:। ௨௮।௰௫௧
ஸர்வதுஷ்டாநி ரக்ஷாம்ஸி। க்ஷபயாதிவிபஷணீ । ௨௮।௰௫௧
ஹாம் ஹாம் ஹூம் ஹூம் பட்காேரண। டத்வேயந ஹதத்விஷ:।
௰௨௮।௨௫।௰௰௧
ஸுதர்ஸநஸ்ய மந்த்ேரண। க்ரஹா யாந்தி திேஸா திஸ:।
௰௨௮।௨௫।௰௰௨
த்ைரேலாக்யஸ்யாபயம் கர்தும்। ஆஜ்ஞாபய ஜநார்தந।
௰௨௮।௨௫।௰௰௯
ஸர்வதுஷ்டாநி ரக்ஷாம்ஸி। க்ஷயம் யாந்தி விபஷயா ீ । ௰௨௮।௨௫।௰௧௰
ப்ராச்யாம் ப்ரதீச்யாம் ச திஸி। தக்ஷிேணாத்தரதஸ் ததா। ௨௮।௰௫௨
ரக்ஷாம் கேராது ஸர்வாத்மா। நரஸிம்ஹ: ஸ்வகர்ஜிைத:। ௨௮।௰௫௨

பூம்யந்தரிேக்ஷ ச ததா। ப்ருஷ்டத: பார்ஸ்வேதா அக்ரத:। ௨௮।௰௫௩
வ்யாக்ரஸிம்ஹவராேஹஷு। அந்திேசாரபேயஷு ச । ௰௨௮।௨௬
ரக்ஷாம் கேராது பகவாந்। பஹுரூபீ ஜநார்தந:। ௨௮।௰௫௩
யதா விஷ்ணுக்ரு ஜகத் ஸர்வம்। ஸேதவாஸுரமாநவம்। ௨௮।௰௫௪
ேதந ஸத்ேயந துஷ்டாநி। ஸமம் அஸ்ய வ்ரஜந்து ைவ। ௨௮।௰௫௪
யதா விஷ்ெணௗ ஸ்ம்ருேத ஸம்யக்। ஸம்க்ஷயம் யாதி பாதகம்।
௨௮।௰௫௫
ஸத்ேயந ேதந ஸகலம்। துஷ்டம் அஸ்ய ப்ரஸாம்யது। ௨௮।௰௫௫
பரமாத்மா யதா விஷ்ணுர்। ேவதாந்ேதஷ்வ் அபிதீயேத। ௨௮।௰௫௬
ேதந ஸத்ேயந ஸகலம்। துஷ்டம் அஸ்ய ப்ரஸாம்யது। ௨௮।௰௫௬
யதா யஜ்ேஞஷ்வேரா விஷ்ணுர்। ேவேதஷ்வ் அபி து கீயேத।
௨௮।௰௫௭
ேதந ஸத்ேயந ஸகலம்। யந் மேயாக்தம் ததாஸ்து தத்। ௨௮।௰௫௭
யதா யஜ்ேஞஸ்வேரா விஷ்ணுர்। யஜ்ஞாந்ேத அபி கீயேத। ௰௨௮।௨௭
ேதந ஸத்ேயந ஸகலம்। யந் மேயாக்தம் ததாஸ்து தத்। ௰௨௮।௨௭
ஸாந்திர் அஸ்து ஸிவம் சாஸ்து। ப்ரஸாம்யத்வ் அஸுகம் ச யத்।
௨௮।௰௫௮
வாஸுேதவஸரீேராத்ைத:। குைஸர் நிர்மார்ஜிதம் மயா। ௨௮।௰௫௮
அபாமார்ஜதி ேகாவிந்ேதா। நேரா நாராயணஸ் ததா। ௨௮।௰௫௯
தவாஸ்து ஸர்வது:காநாம்। ப்ரஸேமா வசநாத் தேர:। ௨௮।௰௫௯
இதம் ஸாஸ்த்ரம் பேடத் யஸ் து। ஸப்தாஹந் நியத: ஸுசி:।
௰௨௮।௨௮

ஸாந்திம் ஸமஸ்தேராகாஸ் ேத। க்ரஹா: ஸர்ேவ விஷாநி ச।
௨௮।௰௬
பூதாநி ச ப்ரயாந்த்வ் ஈேஸ। ஸம்ஸ்ம்ருேத மதுஸூதேந। ௨௮।௰௬
ஏதத் ஸமஸ்தேராேகஷு। பூதக்ரஹபேயஷு ச। ௨௮।௰௬௧
அபமார்ஜநகம் ஸஸ்தம்। விஷ்ணுநாமாபிமந்த்ரிதம்। ௨௮।௰௬௧
ஏேத குஸா விஷ்ணுஸரீரஸம்பவா। ஜநார்தேநா அஹம் ஸ்வயம் ஏவ
சாகத:। ௨௮।௰௬௨
ஹதம் மயா துஷ்டம் அேஸஷம் அஸ்ய। ஸ்வஸ்ேதா பவத்ய் ஏஷ வேசா
யதா ஹேர:। ௨௮।௰௬௨
ஸாந்திர் அஸ்து ஸிவம் சாஸ்து। துஷ்டம் அஸ்ய ப்ரஸாம்யது।
௨௮।௰௬௩
யத் அஸ்ய துரிதம் கிம்சித்। தத் க்ஷிப்தம் லவணார்ணேவ। ௨௮।௰௬௩
ஸ்வாஸ்த்யம் அஸ்ய ஸைதவாஸ்து। ஹ்ருஷீேகஸஸ்ய கீர்தநாத்।
௨௮।௰௬௪
யத ஏவாகதம் பாபம்। தத்ைரவ ப்ரதிகச்சது। ௨௮।௰௬௪
ஏதத் ேராகாதிபடாஸு ீ । ஜந்தூநாம் ஹிதம் இச்சதா। ௨௮।௰௬௫
விஷ்ணுபக்ேதந கர்தவ்யம்। அபமார்ஜநகம் பரம்। ௨௮।௰௬௫
அேநந ஸர்வதுஷ்டாநி। ப்ரஸமம் யாந்த்ய் அஸம்ஸயம்। ௨௮।௰௬௬
ஸர்வபூதஹிதார்தாய। குர்யாத் தஸ்மாத் ஸைதவ ஹி। ௨௮।௰௬௬
ஸர்வாபராதஸமநம்। அபாமார்ஜநகம் பரம்। ௰௨௮।௨௯।௰௰௧
ஏதத் ஸ்ேதாத்ரம் இதம் புண்யம்। பேடத் ஆயுஷ்யவர்தநம்।
௰௨௮।௨௯।௰௰௨
விநாஸாய ச ேராகாணாம்। அவம்ருத்யுக்ஷயாய ச। ௰௨௮।௨௯।௰௰௩

வ்யாக்ராபஸ்மாரகுஷ்டாதி। பிஸாேசாரகராக்ஷஸா:। ௰௨௮।௨௯।௰௰௪
தஸ்ய பார்ஸ்வம் ந கச்சந்தி। ஸ்ேதாத்ரம் ஏதத் யதா பேடத்।
௰௨௮।௨௯।௰௰௫
ஸ்மரஞ் ஜபந்ந் இதம் ஸ்ேதாத்ரம்। ஸர்வவ்யாதிவிநாஸநம்।
௰௨௮।௨௯।௰௰௬
படதாம் ஸ்ருண்வதாம் நித்யம்। விஷ்ணுேலாகம் ஸ கச்சதி।
௰௨௮।௨௯।௰௰௭
ஸுரூபதா மநுஷ்யாணாம்। ஸ்த்ரீணாம் ச த்விஜஸத்தம। ௨௯।௰௰௧
கர்மணா ஜாயேத ேயந। தந் மமாக்யாதும் அர்ஹஸி। ௨௯।௰௰௧
ஸுரூபாணாம் ஸுகாத்ராணாம்। ஸுேவஷாணாம் ததா முேந।
௨௯।௰௰௨
ந்யூநம் ததாதிகம் வாபி। கிம்சித் அங்கம் ப்ரஜாயேத। ௨௯।௰௰௨
ஸமஸ்ைத: ேஸாபைநர் அங்ைகர்। நரா: ேகசித் ததா த்விஜ। ௨௯।௰௰௩
காணா: குப்ஜாஸ் ச ஜாயந்ேத। த்ருடிதஸ்ரவணாஸ் ததா। ௨௯।௰௰௩
நராணாம் ேயாஷிதாம் ைசவ। ஸமஸ்தாங்க்ஸுரூபதா। ௨௯।௰௰௪
கர்மணா ேயந பவதி। தத் ஸர்வம் கதயாமல। ௨௯।௰௰௪
லாவண்யகதிவாக்யாநி। ஸதி ரூேப மஹாமேத। ௨௯।௰௰௫
ப்ரயாந்தி சாருதாம் ரூபம்। ேதேநாக்த: பரேமா குண:। ௨௯।௰௰௫
வாக்யலாவண்யஸம்ஸ்கார । விலாஸலலிதா கதி:। ௨௯।௰௰௬
விடம்பநா குரூபாணாம்। ஸ்த்ரீபும்ஸாம் அபிஜாயேத। ௨௯।௰௰௬
ரூபகாரணபூதாய। யேதத மதிமாம்ஸ் தத:। ௨௯।௰௰௭
கர்மணா தந் மமாசŠவ। கர்ம யச் சாருரூபதம்। ௨௯।௰௰௭

ஸம்யக் ப்ருஷ்டம் த்வயா ஹீதம்। உபவாஸாஸ்ரிதம் த்விஜ।
௨௯।௰௰௮
கதயாமி யதா ப்ேராக்தம்। வஸிஷ்ேடந மஹாத்மநா। ௨௯।௰௰௮
வஸிஷ்டம் க்ருஷிம் ஆஸநம்ீ । ஸப்தர்ஷிப்ரவரம் பதிம்। ௨௯।௰௰௯
பப்ரச்சாருந்ததீப்ரஸ்நம்। யத் ஏதத் பவதா வயம்। ௨௯।௰௰௯
தஸ்யா: ஸ பரிப்ருச்சந்த்யா। ஜகாத முநிஸத்தம:। ௨௯।௰௧
யத் தச் ச்ருணுஷ்வ தர்மஜ்ஞ। மேமஹ வதேதா அகிலம்। ௨௯।௰௧
ஸ்ரூயதாம் மம யத் ப்ருஷ்டஸ்। த்வயாஹம் ப்ரஹ்மவாதிநி।
௨௯।௰௧௧
ஸுரூபதா ந்ருணாம் ேயந। ேயாஷிதாம் ேசாபஜாயேத। ௨௯।௰௧௧
அநப்யர்ச்ய யதாந்யாயம்। அநாராத்ய ச ேகஸவம்। ௨௯।௰௧௨
ரூபாதிகா குணா: ேகந। ப்ராப்யந்ேத அந்ேயந கர்மணா। ௨௯।௰௧௨
தஸ்மாத் ஆராதநீேயா ைவ। விஷ்ணுர் ஏவ யஸஸ்விநி। ௨௯।௰௧௩
பரத்ர ப்ராப்துகாேமந। ரூபஸம்பத்ஸுதாதிகம்। ௨௯।௰௧௩
யஸ் து வாஞ்சதி தர்மஜ்ேஞ। ரூபம் ஸர்வாங்கேஸாபநம்। ௨௯।௰௧௪
நக்ஷத்ரபுருஷஸ் ேதந। ஸம்பூஜ்ய: புருேஷாத்தம:। ௨௯।௰௧௪
நக்ஷத்ராங்கம் யதாஹார:। ஸமுேபாஷ்யதி ேயா ஹரிம்। ௨௯।௰௧௫
ஸுரூைபர் அகிலாங்ைகஸ் ச। ரூபவாந் அபிஜாயேத। ௨௯।௰௧௫
ேயாஷிதா ச பரம் ரூபம்। இச்சந்த்யா ஜகத: பதி:। ௨௯।௰௧௬
ஸ ஏவாராதநீேயா அத்ர। நக்ஷத்ராங்ேகா ஜநார்தந:। ௨௯।௰௧௬
நக்ஷத்ரரூபீ பகவாந்। பூஜ்யேத புருேஷாத்தம:। ௨௯।௰௧௭
முேந ேயந விதாேநந। தந் மமாக்யாதும் அர்ஹஸி। ௨௯।௰௧௭
ைசத்ரமாஸம் ஸமாரப்ய। விஷ்ேணா: பாதாதிபூஜநம்। ௨௯।௰௧௮

யதா குர்வதீ ரூபார்தீ। தந் நிஸாமய தத்த்வத:। ௨௯।௰௧௮
நக்ஷத்ரம் ஏகம் ஏகம் ைவ। ஸ்நாத: ஸம்யக் உேபாஷித:। ௨௯।௰௧௯
நக்ஷத்ரபுருஷஸ்யாங்கம்। பூஜேயத் ஸாத்வ ீசக்ரிண:। ௨௯।௰௧௯
மூேல பாெதௗ ததா ஜங்ேக। ேராஹிணஷ்வ்ீ அர்சேயச் சுேப। ௨௯।௰௨
ஜாநுநீசாஸ்விநீேயாக। ஆஷாேட ேசாருஸம்ஜ்ஞிேத। ௨௯।௰௨
பால்குநீத்விதேய குஹ்யம்। க்ருத்திகாஸு ததா கடிம்। ௨௯।௰௨௧
பார்ஸ்ேவ பத்ரபதாயுக்ேம। த்ேவ குக்ஷீேரவதீஷு ச। ௨௯।௰௨௧
அநுராத உர: ப்ருஷ்டம்। ஸ்ரவிஷ்டாஸ்வ் அபிபூஜேயத்। ௨௯।௰௨௨
புஜயுக்மம் விஸாகாஸு। ஹஸ்ேத ைசவ கரத்வயம்। ௨௯।௰௨௨
புநர்வஸாவ் அங்குலீம்ஸ் ச। ஆஸ்ேலஷாஸு ததா நகாந்। ௨௯।௰௨௩
ஜ்ேயஷ்டாயாம் பூஜேயத் க்ரீவம்। ஸ்ரவேண ஸ்ரவேண ததா।
௨௯।௰௨௩
புஷ்ேய முகம் ததா ஸ்வாெதௗ। தஸநாந் அபிபூஜேயத்। ௨௯।௰௨௪
ஹந்ெவௗ ஸதபிஷாேயாேக। மகாேயாேக ச நாஸிகாம்। ௨௯।௰௨௪
ம்ருேகாத்தமாங்ேக நயேந। பூஜேயத் பக்தித: ஸுேப। ௨௯।௰௨௫
சித்ராேயாேக லலாடம் ச। பரண்யாம் ச ததா ஸிர:। ௨௯।௰௨௫
ஸம்பூஜநீயா வித்வத்பிஸ்। சாத்ராஸு ச ஸிேராருஹா:। ௨௯।௰௨௫
நக்ஷத்ரேயாேகஷ்வ் ஏேதஷு। பூஜிேதா ஜகத: பதி:। ௨௯।௰௨௬
நக்ஷத்ரபுருஷாக்ேயா அயம்। யதாவத் புருேஷாத்தம:। ௨௯।௰௨௬
பாபாபஹாரம் குருேத। ஸம்யச் ச்ரத்தாவதாம் ஸதாம்। ௨௯।௰௨௭
அங்ேகாபாங்காநி ைசவாஸ்ய। பாபாதீநி யஸஸ்விநி। ௨௯।௰௨௭
ஸுரூபாந்ய் அபிஜாயந்ேத। ஸப்த ஜந்மாந்தராணி ைவ। ௨௯।௰௨௮

ஸர்வாணி ைசவ பத்ராணி। ஸரீராேராக்யம் உத்தமம்। ௨௯।௰௨௮
ஸம்ததிம் மநஸ: ப்ரீதிம்। ரூபம் சாதீவேஸாபநம்। ௨௯।௰௨௯
வாங்மாதூர்யம் ததா காந்திம்। யச் சாந்யத் அபிவாஞ்சிதம்। ௨௯।௰௨௯
ததாதி நக்ஷத்ரபுமாந்। பூஜிதஸ் ச ஜநார்தந:। ௨௯।௰௩
உேபாஷ்ய ஸம்யக் ஏேதஷு। க்ரேமண ர்ேக்ஷஷு ேஸாபேந। ௨௯।௰௩
ஸம்பூஜநீேயா பகவாந்। நக்ஷத்ராங்ேகா ஜநார்தந:। ௨௯।௰௩௧
கந்தபுஷ்பாதிஸம்யுக்தம்। பூஜயித்வா யதாவிதி। ௰௨௯।௩௰
ஜாநுப்யாம் தரணம்ீ கத்வா। இதம் ேசாதாஹேரத் தத:। ௰௨௯।௩௰
ஸ்வரூபம் ஆேராக்யம் அதீவ வர்சஸம்। ஸுஸம்ததிம் த்வ் அஸ்திதபக்திம்
அச்யுதாம்। ௰௨௯।௩௰
அபி ஸர்வம் ஏதம் ப்ேராதம்। ஸூத்ேர மணிகணா இவ। ௰௨௯।௩௰
ஏகபுருஷ மஹாபுருஷ। க்ருக்ஷபுருஷ நேமா அஸ்து ேத। ௰௨௯।௩௰
ப்ரதிநக்ஷத்ரேயாேக ச। ேபாஜநீயா த்விேஜாத்தமா:। ௨௯।௰௩௧
நக்ஷத்ரஜ்ஞாய விப்ராய। தத்யாத் தாநம் ச ஸக்தித:। ௨௯।௰௩௨
பாரிேத ச புநர் தத்யாத்। ஸ்த்ரீபூம்ஸாம் சாருஹாஸிநி। ௨௯।௰௩௨
சத்த்ேராபாநத்யுகம் ைசவ। ஸப்ததாந்யம் ஸகாஞ்சநம்। ௨௯।௰௩௩
க்ருதபாத்ரம் ச தர்மஜ்ேஞ। யச் சாந்யத் அதிவல்லபம்। ௨௯।௰௩௩
ஸ்த்ரீ வா ஸாத்வ ீஸதா விஷ்ேணார்। ஆராதநபராயணா। ௨௯।௰௩௪
அேநைநவ விதாேநந। ஸம்பூஜ்ையதத் அவாப்நுயாத்। ௨௯।௰௩௪
ஸர்வகாமாந் அவாப்ேநாதி। ஸமாராத்ய ஜநார்தநம்। ௩௰।௰௰௧
ப்ரகாைரர் பஹுபிர் ப்ரஹ்மந்। யாந் யாந் இச்சதி ேசதஸா। ௩௰।௰௰௧
ந்ருணாம் ஸ்த்ரீணாம் ச விப்ரர்ேஷ। நாந்யச் ேசாகஸ்ய காரணம்।
௩௰।௰௰௨

அபத்யாத் அதிகம் கிம்சித்। வித்யேத ஹ்ய் அத்ர ஜந்மநி। ௩௰।௰௰௨
அபுத்ரதா மஹத் து:கம்। அதிது:கம் குபுத்ரதா। ௩௰।௰௰௩
அபுத்ர: ஸர்வது:காநாம்। ேஹதுபூேதா மேதா மம। ௩௰।௰௰௩
தந்யாஸ் ேத ேய ஸுதம் ப்ராப்ய। ஸர்வது:கவிவர்ஜிதம்। ௩௰।௰௰௪
ஸஸ்தம் ப்ரஸாந்தம் பலிநம்। பராம் நிர்வ்ருதிம் ஆகதா:। ௩௰।௰௰௪
ஸ்வகர்மநிரதம் நித்யம்। ேதவத்விஜபராயணம்। ௩௰।௰௰௫
ஸாஸ்த்ரஜ்ஞம் தர்மதத்த்வஜ்ஞம்। தீநாநாதஜநாஸ்ரயம்। ௩௰।௰௰௫
விநிர்ஜிதாரிம் ஸர்வஸ்ய। மேநாஹ்ருதயநந்தநம்। ௩௰।௰௰௬
ேதவாநுகூலதாயுக்தம்। யுக்தம் ஸம்யக் குேணந ச। ௩௰।௰௰௬
மித்ரஸ்வஜநஸம்மாந । லப்தநிர்வாணம் உத்தமம்। ௩௰।௰௰௭
ய: ப்ராப்ேநாதி ஸுதம் தஸ்மாந்। நாந்ேயா தந்யதேரா புவி। ௩௰।௰௰௭
ேஸா அஹம் இச்சாமி தச் ச்ேராதும்। த்வத்த: கர்ம மஹாமுேந।
௩௰।௰௰௮
ேயேநத்ருக்லக்ஷண: புத்ர:। ப்ராப்யேத புவி மாநைவ:। ௩௰।௰௰௮
ஏவம் ஏதந் மஹாபாக। பித்ேரா: புத்ரஸமுத்பவம்। ௩௰।௰௰௯
து:கம் ப்ரயாத்ய் உபஸமம்। ேதந ேயேநஹ ேகநசித்। ௩௰।௰௰௯
அத்ராபி ஸ்ரூயதாம் வ்ருத்தம்। யத் பூர்வம் அபவந் முேந। ௩௰।௰௧
உத்பத்ெதௗ கார்தவர்யஸ்ய ீ । ைஹஹயஸ்ய மஹாத்மந:। ௩௰।௰௧
க்ருதவர்ேயா ீ மஹீபாேலா। ைஹஹயாநாம் அபூத் புரா। ௩௰।௰௧௧
தஸ்ய ஸலதநா ீ நாம। பபூவ வரவர்ணிநீ। ௩௰।௰௧௧
பத்நீஸஹஸ்ரப்ரவரா। மஹிஷீஸலமண்டநா ீ । ௩௰।௰௧௧
ஸா த்வ் அபுத்ரா மஹாபாகா। ைமத்ேரயம்ீ பர்யப்ருச்சத। ௩௰।௰௧௨

குணவத்புத்ரலாபாய। க்ருதாஸநபரிக்ரஹாம்। ௩௰।௰௧௨
தயா ச ப்ருஷ்டா ைவ ஸம்யக்। ைமத்ேரயீ ப்ரஹ்மவாதிநீ। ௩௰।௰௧௩
கதயாம் ஆஸ பரமம்। நாம்நாநந்தவ்ரதம் வ்ரதம்। ௩௰।௰௧௩
ஸர்வகாமபலாவாப்தி । காரகம் பாபநாஸநம்। ௩௰।௰௧௪
தஸ்யா: ஸா புத்ரலாபாய। ராஜபுத்ராஸ் தபஸ்விநீ। ௩௰।௰௧௪
ேயா அயம் இச்ேசந் நர: காமம்। நாரீ வா வரவர்ணிநி। ௩௰।௰௧௫
ஸ தம் ஸமாராத்ய விபும்। ஸமாப்ேநாதி ஜநார்தநம்। ௩௰।௰௧௫
மார்கஸர்ேஷீ ம்ருகஸிேரா। பருீ யஸ்மிந் திேந பேவத்। ௩௰।௰௧௬
தஸ்மிந் ஸம்ப்ராஸ்ய ேகாமூத்ரம்। ஸ்நாேதா நியதமாநஸ:। ௩௰।௰௧௬
புஷ்ைபர் தூைபஸ் ததா கந்ைதர்। உபஹாைர: ஸ்வஸக்தித:। ௩௰।௰௧௭
வாமபாதம் அநந்தஸ்ய। பூஜேயத் வரவர்ணிநி। ௩௰।௰௧௭
அநந்த: ஸர்வகாமாநாம்। அநந்தம் பகவாந் பலம்। ௩௰।௰௧௮
ததாத்வ் அநந்தம் ச புநஸ்। தத் ஏவாஸ்த்வ் அந்யஜந்மநி। ௩௰।௰௧௮
அநந்தபுண்ேயாபசயம்। கேராத்ய் ஏதந் மஹாவ்ரதம்। ௩௰।௰௧௯
யதாபிலஷிதாவாப்திம்। குர்வந் மா க்ஷயம் ஏது ச। ௩௰।௰௧௯
இத்ய் உச்சார்யாபிபூஜ்ையநம்। யதாவத் விதிநா நர:। ௩௰।௰௨
ஸமாஹிதமநா பூத்வா। ப்ரணிபாதபுர:ஸரம்। ௩௰।௰௨
விப்ராய தக்ஷிணாம் தத்யாத்। அநந்த: ப்ரீயதாம் இதி। ௩௰।௰௨௧
ஸமுச்சார்ய தேதா நக்தம்। புஞ்ஜயாத் ீ ைதலவர்ஜிதம்। ௩௰।௰௨௧
ததஸ் ச ெபௗேஷ புஷ்யர்ேக்ஷ। தைதவ பகவத்கடிம்। ௩௰।௰௨௨
வாமாம் அப்யர்சேயத் க்ருத்வா। ேகாமூத்ரப்ராஸநம் புத:। ௩௰।௰௨௨
அநந்த: ஸர்வகாமாநாம்। இதி ேசாச்சாரேயத் புத:। ௩௰।௰௨௩

புஞ்ஜதீ ச ததா விப்ரம்। வாசயித்வா யதாவிதி। ௩௰।௰௨௩
மாேக மகாஸு தத்வச் ச। பாஹும் ேதவஸ்ய பூஜேயத்। ௩௰।௰௨௪
ஸ்கந்தம் ச பல்குநீேயாேக। பால்குேந மாஸி பாமிநி। ௩௰।௰௨௪
சதுர்ஷ்வ் ஏேதஷு ேகாமூத்ர । ப்ராஸநம் ந்ருபநந்திநி। ௩௰।௰௨௫
ப்ராஹ்மணாய ததா தத்யாத்। திலாந் கநகம் ஏவ ச। ௰௩௰।௰௨௫௩௧
ேதவஸ்ய தக்ஷிணஸ்கந்தம்। ைசத்ேர சித்ராஸு பூஜேயத்। ௩௰।௰௨௬
தைதவ ப்ராஸநம் சாத்ர। பஞ்சகவ்யம் உதாஹ்ருதம்। ௩௰।௰௨௬
விப்ேர வாசநேக தத்யாத்। யாவந் மாஸசதுஷ்டயம்। ௩௰।௰௨௭
ைவஸாேக ச விஸாகாஸு। பாஹும் ஸம்பூஜ்ய தக்ஷிணம்। ௩௰।௰௨௭
தைதேவாக்தயவாந் தத்யாத்। தத்வந் நக்தம் புஜிக்ரியா। ௩௰।௰௨௮
கடிபூஜாம் ச ஜ்ேயஷ்டாஸு। ஜ்ேயஷ்டமூேல ஸுபவ்ரேத। ௩௰।௰௨௮
ஆஷாடாஸு ததாஷாேட। குர்யாத் பாதார்சநம் ஸுேப। ௩௰।௰௨௯
பதத்வயம் ச ஸ்ரவேண। ஸ்ராவேண ஸுப்ரு பூஜேயத்। ௩௰।௰௨௯
க்ருதம் விப்ராய தாதவ்யம்। ப்ராஸநீயம் ததா ததி। ௩௰।௰௩
கார்த்திகாந்ேதஷு மாேஸஷு। ப்ராஸநம் தாநம் ஏவ ச। ௩௰।௰௩
ஏதத் ஏவ ஸமாக்யாதம்। ேதவம் தத்வச் ச பூஜேயத்। ௰௩௰।௰௩௰௩௨
குஹ்யம் ப்ேராஷ்டபதாேயாேக। மாஸி பாத்ரபேத அர்சேயத்। ௩௰।௰௩௧
தத்வத் ஆஸ்வயுேஜ பூஜ்யம்। ஹ்ருதயம் சாஸ்விநீஷு ைவ। ௩௰।௰௩௧
குர்யாத் ஸமாஹிதமநா:। ஸ்நாநப்ராஸநெஸௗசவாந்। ௩௰।௰௩௨
அநந்தஸிரஸ: பூஜாம்। கார்த்திேக க்ருத்திகாஸு ச। ௩௰।௰௩௨
யஸ்மிந் யஸ்மிந் திேந பூஜா। தத்ர தத்ர ததா திேந। ௩௰।௰௩௩
நாமாநந்தஸ்ய ஜப்தவ்யம்। க்ஷுதப்ரஸ்கலிதாதிஷு। ௩௰।௰௩௩

க்ருேதநாநந்தம் உத்திஸ்ய। பூர்வமாஸசதுஷ்டயம்। ௩௰।௰௩௪
குர்வதீ ேஹாமம் ைசத்ராெதௗ। ஸாலிநா குலநந்திநி। ௩௰।௰௩௪
க்ஷீேரண ஸ்ராவணாெதௗ து। ேஹாமம் மாஸசதுஷ்டயம்। ௩௰।௰௩௫
ஸஸ்தம் து ஸர்வமாேஸஷு। ஹவிஷ்யாந்நம் ச ேபாஜநம்।
௩௰।௰௩௫
ஏவம் த்வாதஸபிர் மாைஸ:। பாரணம் த்ரிதயம் ஸுேப। ௩௰।௰௩௬
பாரிேத ஸமவாப்ேநாதி। ஸர்வாந் ஏவ மேநாரதாந்। ௩௰।௰௩௬
புத்ரார்திபிர் வித்தகாைமர்। ப்ருத்யதாராந் அபப்ஸுபி ீ :। ௩௰।௰௩௭
ப்ரார்தயத்பிஸ் ச கர்தவ்யம்। ஆேராக்யபலஸம்பதம்। ௩௰।௰௩௭
ஏதத் வ்ரதம் மஹாபாேக। புண்யம் ஸ்வஸ்த்யயநப்ரதம்। ௩௰।௰௩௮
அநந்தவ்ரதஸம்ஜ்ஞம் ைவ। ஸர்வபாபப்ரணாஸநம்। ௩௰।௰௩௮
தத் குருஷ்ைவவ ேதவி த்வம்। வ்ரதம் ஸலதேந ீ வரம்। ௩௰।௰௩௯
விஸிஷ்டம் ஸர்வேலாகஸ்ய। யதி புத்ரம் அபப்ஸஸி ீ । ௩௰।௰௩௯
இதி ஸலதநா ீ ஸ்ருத்வா। ைமத்ேரயவசநம் ீ ஸுபம்। ௩௰।௰௪
சசாைரதத் வ்ரதவரம்। ஸுஸமாஹிதமாநஸா। ௩௰।௰௪
புத்ரார்திந்யாஸ் ததஸ் தஸ்யா। வ்ரேதநாேநந ஸுவ்ரத। ௩௰।௰௪௧
விஷ்ணுஸ் துேதாஷ துஷ்ேட ச। விஷ்ெணௗ ஸா ஸுஷுேவ ஸுதம்।
௩௰।௰௪௧
தஸ்ய ைவ ஜாதமாத்ரஸ்ய। ப்ரவவாவ் அநில: ஸிவ:। ௩௰।௰௪௨
நீரஜஸ்கம் அபூத் வ்ேயாம। முதம் ப்ராபாகிலம் ஜகத்। ௩௰।௰௪௨
ேதவதுந்துபேயா ேநது:। புஷ்பவ்ருஷ்டி: பபாத ச। ௩௰।௰௪௩
ப்ரஜகுர் திவி கந்தர்வா। நந்ருதுஸ் சாப்ஸேராகணா:। ௩௰।௰௪௩
தர்ேம மந: ஸமஸ்தஸ்ய। தால்ப்ய ேலாகஸ்ய சாபவத்। ௩௰।௰௪௩

தஸ்ய நாம பிதா சக்ேர। தநயஸ்யார்ஜுேநதி ைவ। ௩௰।௰௪௪
க்ருதவர்யஸுதத்வாச் ீ ச। கார்தவர்ேயா ீ பபூவ ஸ:। ௩௰।௰௪௪
ேதநாபி பகவாந் விஷ்ணுர்। தத்தாத்ேரயஸ்வரூபவாந்। ௩௰।௰௪௫
ஆராதிேதா அதிமஹதா। தபஸா தால்ப்ய பூப்ருதா। ௩௰।௰௪௫
தஸ்ய துஷ்ேடா ஜகந்நாதஸ்। சக்ரவர்தித்வம் உத்தமம்। ௩௰।௰௪௬
தெதௗ ெஸௗர்யபேல சாதி । ஸகலாந்ய் ஆயுதாநி ச। ௩௰।௰௪௬
ஸ ச வவ்ேர வரம் ேதவ। வதஸ் த்வத்ேதா பேவத் இதி। ௩௰।௰௪௭
புராநுஸ்மரணம் ஜ்ஞாநம்। பதாநாம் ீ சார்திநாஸநம்। ௩௰।௰௪௭
ஸ்மரணாத் உபகாரித்வம்। ஜகேதா அஸ்ய ஜகத்பேத। ௩௰।௰௪௭
தம் ஆஹ ேதவேதேவஸ:। புண்டரீகநிேபக்ஷண:। ௩௰।௰௪௮
ஸர்வம் ஏதந் மஹாபாக। தவ பூப பவிஷ்யதி। ௩௰।௰௪௮
யஸ் ச ப்ரபாேத ராத்ெரௗ ச। த்வாம் நர: கீர்தயிஷ்யதி। ௩௰।௰௪௯
நேமா அஸ்து கார்தவர்யாேயத்ய் ீ । அபிதாஸ்யதி ைசவ ய:। ௩௰।௰௪௯
திலப்ரஸ்தப்ரதாநஸ்ய। ஸ நர: புண்யம் ஆப்ஸ்யதி। ௩௰।௰௪௯
அநஷ்டத்ரவ்யதா ைசவ। தவ நாமாபிகீர்தைந:। ௩௰।௰௫
பவிஷ்யதி மஹீபாேலத்ய்। உக்த்வா தம் ப்ரயெயௗ ஹரி:। ௩௰।௰௫
ஸ சாபி வரம் ஆஸாத்ய। ப்ரஸந்நாத் கருடத்வஜாத்। ௩௰।௰௫௧
பாலயாம் ஆஸ பூபால:। ஸப்தத்வபாம்ீ வஸும்தராம்। ௩௰।௰௫௧
ேதேநஷ்டம் விவிைதர் யஜ்ைஞ:। ஸமாப்தவரதக்ஷிைண:। ௩௰।௰௫௨
ஜித்வாரிவர்கம் அகிலம்। தர்மத: பாலிதா: ப்ரஜா:। ௩௰।௰௫௨
அநந்தவ்ரதமாஹாத்ம்யாத்। ஆஸாத்ய தநயம் ச தம்। ௩௰।௰௫௩

பித்ேரா: புத்ேராத்பவம் து:கம்। நாஸத்ீ ஸ்வல்பம் அபி த்விஜ।
௩௰।௰௫௩
ஏவம் ஏதத் ஸமாக்யாதம்। அநந்தாக்யம் வ்ரதம் தவ। ௩௰।௰௫௪
யச் சீர்த்வா ராஜபத்நீஸா। கார்தவர்யம் ீ அஸூயத। ௩௰।௰௫௪
யஸ் ைசதச் ச்ருணுயாஜ் ஜந்ம। கார்தவர்யஸ்ய ீ மாநவ:। ௩௰।௰௫௫
ஸ்த்ரீ வா து:கம் அபத்ேயாத்தம்। ஸப்த ஜந்மாநி நாஸ்நுேத।
௩௰।௰௫௫
ரூபஸம்பத் ஸமாக்யாதா। ஸ்த்ரீபும்ஸாம் ஜாயேத ஸுபா। ௩௧।௰௰௧
ஸமுேபாஷ்ய ஜகந்நாதம்। நக்ஷத்ரபுருஷம் ஹரிம்। ௩௧।௰௰௧
வாேஸா அதிேஸாபநம் சாரு । வஸ்த்ராத்யாபரேணாஜ்ஜ்வலம்।
௩௧।௰௰௨
க்ருஹம் ஸர்வகுேணாேபதம்। அேஸேஷாபஸ்கராந்விதம்। ௩௧।௰௰௨
கர்மணா ேயந விப்ரர்ேஷ। ேதாஷிேதா மதுஸூதந:। ௩௧।௰௰௩
ததாதி பகவாந் கர்ம। தந் ேநா விஸ்தரேதா வத। ௩௧।௰௰௩
யந் மாம் ப்ருச்சஸி தால்ப்ய த்வம்। க்ருேஹாபஸ்கரபூஷணம்।
௩௧।௰௰௪
நராணாம் ஜாயேத ேயந। தத் ஸர்வம் கதயாமி ேத। ௩௧।௰௰௪
நந்தா பத்ரா ஜயா ரிக்தா। பூர்ணா ச த்விஜஸத்தம। ௩௧।௰௰௫
திதேயா ைவ ஸமாக்யாதா:। ப்ரதிபத்க்ரமஸம்ஜ்ஞயா। ௩௧।௰௰௫
பஞ்சமீதஸமீைசவ। ததா பஞ்சதஸீ திதி:। ௩௧।௰௰௬
பூர்ணா ஏதா: ஸமாக்யாதாஷ்। திதேயா முநிஸத்தம। ௩௧।௰௰௬
ம்ருதா தாதுவிகாைரர் வா। வர்ணைகர் ேகாமேயந வா। ௩௧।௰௰௭
விஷ்ேணார் ஆயதேந தாஸு। ய: கேராத்ய் உபேலபநம்। ௩௧।௰௰௭

ப்ரவாதாவாதகுணவத்। வர்ஷாஸ்வ் அதிமேநாரமம்। ௩௧।௰௰௮
அநுலிப்தம் ஸுபாகாரம்। ஸுக்ருஹம் லபேத முேந। ௩௧।௰௰௮
பூர்ணம் தாந்யஹிரண்யாத்ையர்। மணிமுக்தாபேலாஜ்ஜ்வலம்।
௩௧।௰௰௯
ப்ரத்யாஸந்நஜலாேபாகம்। க்ருஹம் ஆப்ேநாதி ேஸாபநம்। ௩௧।௰௰௯
ஸாம்நதஸ்வஜநாநாம் யத்। ஸர்ேவஷாம் உத்தேமாத்தமம்। ௩௧।௰௧
தத் ஆப்ேநாதி க்ருஹம் ப்ரஹ்மந்ந்। அநுேலபநக்ருந் நர:। ௩௧।௰௧
ேயநாநுலிப்ேத திஷ்டந்தி। விஷ்ண்வாயதநபூதேல। ௩௧।௰௧௧
ப்ராஹ்மணக்ஷத்ரியவிஸ:। ஸூத்ரா: ஸாத்வ்யஸ் ததா ஸ்த்ரிய:।
௩௧।௰௧௧
தஸ்ய பூண்யபலம் தால்ப்ய। ஸ்ரூயதாம் யத் ப்ரஜாயேத। ௩௧।௰௧௧
அப்ஸேராகணஸம்கீர்ணம்। முக்தாஹாரகேணாஜ்ஜ்வலம்। ௩௧।௰௧௨
ஸ்ேரஷ்டம் ஸர்வவிமாநாநாம்। ஸ்வர்ேக திஷ்ண்யம் அவாப்நுேத।
௩௧।௰௧௨
யாவத்யஸ் திதேயா லிப்தம்। திவ்யாப்தாம்ஸ் தாவேதா த்விஜ।
௩௧।௰௧௩
தஸ்மிந் விமாேந ஸ நர:। ஸ்த்ரீ வா திஷ்டதி ஸத்தம। ௩௧।௰௧௩
ஸுகந்தகந்தஸத்வஸ்த்ர । ஸர்வபூஷணபூஷித:। ௩௧।௰௧௪
கந்தர்வாப்ஸரஸாம் ஸம்ைப:। பூஜ்யமாந: ஸ திஷ்டதி। ௩௧।௰௧௪
லிப்தம் ச யாவேதா ஹஸ்தாந்। விஷ்ேணார் ஆயதநம் த்விஜ।
௩௧।௰௧௫
தாவத்ேயாஜநவிஸ்தீர்ண । ஸ்வர்கஸ்தாநாதிேபா ஹி ஸ:। ௩௧।௰௧௫
பூஜ்யமாந: ஸுரகைண:। ஸேதாஷ்ணாதிவிவர்ஜித ீ :। ௩௧।௰௧௬

மேநாஜ்ஞகாத்ேரா விப்ேரந்த்ரஸ்। திஷ்டத்ய் அஸ்தாகஸம்ஹதி:।
௩௧।௰௧௬
ச்யுதஸ் தஸ்மாத் இஹாகம்ய। விஸிஷ்ேட ஜாயேத குேல। ௩௧।௰௧௭
தேதா அஸ்ய ஸத்க்ருஹவரம்। மர்த்யேலாேக அபிஜாயேத। ௩௧।௰௧௭
ந தத்ர தாவத் தாரித்ர்யம்। ேநாபஸர்கா ந வா கலி:। ௩௧।௰௧௮
ந சாபி ம்ருதநிஷ்க்ராந்திர்। யாவஜ் ஜவத்ய் ீ அெஸௗ த்விஜ। ௩௧।௰௧௮
விஷ்ணு: ஸமஸ்தபூதாநி। ஸஸர்ைஜதாநி யாநி ைவ। ௩௧।௰௧௯
ேதஷாம் மத்ேய ஜகத்தாதுர்। அதீேவஷ்டா வஸும்தரா। ௩௧।௰௧௯
க்ருேத ஸம்மார்ஜேந தஸ்யாஸ்। தைதேவாபரிேலபேந। ௩௧।௰௨
ப்ரயாதி பரமம் ேதாஷம்। ைவஷ்ணவயம்ீ மஹீயத:। ௩௧।௰௨
ப்ரஹ்மந் ேயந விதாேநந। ேதவாகாேராபேலபலம்। ௩௧।௰௨௧
கர்தவ்யம் புருைஷ: ஸம்யக்। ஸ்த்ரீபிர் வா தத் உதீரய। ௩௧।௰௨௧
ரிக்தாயாஸ் து திேதர் மத்ேய। குர்யாத் ஸம்கல்பம் ஆத்மந:। ௩௧।௰௨௨
உபேலபநக்ருத் விப்ேரா। விஷ்ேணார் ஆயதேந புவி। ௩௧।௰௨௨
த்விதீேய அஹ்நி தேதா ேதவம்। ப்ரணம்ய யதமாநஸ:। ௩௧।௰௨௩
தரணபிதரம் ீ விஷ்ணும்। இதம் வாக்யம் உதீரேயத்। ௩௧।௰௨௩
த்வம் ஸர்வபூதப்ரபேவா ஜகத்பேத। த்வய்ய் ஏதத் ஈேஸஸ ஜகத் ப்ரதிஷ்டிதம்।
௩௧।௰௨௪
த்வம் ஏவ பூதாநி யதஸ் தேதா அஹம்। த்வாம் பூஜயாம்ய் அத்ய
மஹீஸ்வரூபம்। ௩௧।௰௨௪
த்வம் மஹீஜகதாம் நாத। ஸர்வநாத நேமா அஸ்து ேத। ௩௧।௰௨௫
ஸுஸ்ரூஷித: ப்ரஸேதஸ ீ । புேவா ேலபநகர்மணா। ௩௧।௰௨௫
இத்ய் உச்சார்ய க்ஷிெதௗ க்ஷிப்த்வா। ப்ரதமம் தாரநீதேல। ௩௧।௰௨௬

புஷ்பாணி வா த்விஜஸ்ேரஷ்ட। ய: கேராத்ய் அநுேலபநம்। ௩௧।௰௨௬
ந தஸ்ய ஜாயேத பங்ேகா। கார்ஹஸ்த்யஸ்ய கதாசந। ௩௧।௰௨௬
யா ச நாரீ கேராத்ய் ஏவம்। யதாவத் அநுேலபநம்। ௩௧।௰௨௭
நாப்ேநாதி ஸா ச ைவதவ்யம்। க்ருஹபங்கம் கதாசந। ௩௧।௰௨௭
க்ருத்ேவாபேலபநம் பூய:। ப்ரணிபத்ய ஜநார்தநம்। ௩௧।௰௨௮
ஸ்நாேதா விஷ்ணும் ஸமப்யர்ச்ய। இதம் வாக்யம் உதீரேயத்।
௩௧।௰௨௮
ப்ரஸதீ பூதராநந்த। மயா யத் உபேலபநம்। ௩௧।௰௨௯
க்ருதம் ேதந ஸமஸ்தம் ேம। நாஸம் அப்ேயது பாதகம்। ௩௧।௰௨௯
ஏவம் ஸம்பூஜ்ய புஞ்ஜயாத் ீ । அபராஹ்ேந த்விேஜாத்தம। ௩௧।௰௩
ஸ்வநுலிப்ேத மஹாபாேக। புக்த்வா லிம்ேபச் ச தத் புந:। ௩௧।௰௩
பேக்ஷ பேக்ஷ த்ரிராத்ரம் து। ய: கேராத்ய் உபேலபநம்। ௩௧।௰௩௧
ஸர்வபாபவிநிர்முக்த:। ஸ்வர்கம் கச்சத்ய் அஸம்ஸயம்। ௩௧।௰௩௧
தத்க்ஷயாத் ஸ்வர்ேகேலாேக து। ஜாேதா க்ருஹவரம் யதா। ௩௧।௰௩௨
ஸமாப்ேநாதி யதாக்யாதம்। தத் ஸர்வம் தவ ஸத்தம। ௩௧।௰௩௨
ஸர்வாபரணஸம்பூர்ணம்। ஸர்ேவாபஸ்கரதாந்யவத்। ௩௧।௰௩௩
ேகாமஹிஷ்யாதிஸம்ேபாகம்। க்ருஹம் ஆப்ேநாதி மாநவ:। ௩௧।௰௩௩
தஸ்மாத் அபப்ஸதா ீ ஸம்யக்। கார்ஹஸ்த்யம் அவிகண்டிதம்।
௩௧।௰௩௪
விஷ்ேணார் ஆயதேந கார்யம்। ஸர்வைதேவாபேலபநம்। ௩௧।௰௩௪
ஸப்தத்வபவத ீ ீம் க்ருத்ஸ்நாம்। யேதந்த்ரஸ் த்ரிதிவம் ததா। ௰௩௧।௩௩
அல்ேபாபேலபநாத் யஸ்ய। மாந்தாதா ஸகலாம் மஹீம்। ௩௧।௰௩௫
அவாப விஷ்ண்வாயதநம்। ேநாபலிம்ேபத ேகா ஹி தத்। ௩௧।௰௩௫

தீபம் ப்ரயச்சதி நேரா। விஷ்ேணார் ஆயதேந ஹி ய:। ௩௨।௰௰௧
ஸதக்ஷிணஸ்ய யஜ்ஞஸ்ய। பலம் ப்ராப்ேநாத்ய் அஸம்ஸயம்।
௩௨।௰௰௧
கார்த்திேக து விேஸேஷண। ெகௗமுேத மாஸி தீபகம்। ௩௨।௰௰௨
தத்த்வா யத் பலம் ஆப்ேநாதி। தால்ப்ய தத் ேகந லப்யேத। ௩௨।௰௰௨
தால்ப்யாந்யத் அபி வŠயாமி। புராவ்ருத்தம் இதம் ஸ்ருணு।
௩௨।௰௰௩
விதர்பராஜதநயா। லலிதா யத் உவாச ஹ। ௩௨।௰௰௩
விதர்பராட் சித்ரரேதா। பபூவாஸ்த்ரவிஸாரத:। ௩௨।௰௰௪
தஸ்ய புத்ரஸதம் ராஜ்ேஞா। ஜஜ்ேஞ பஞ்சதேஸாத்தரம்। ௩௨।௰௰௪
ஏைகவ கந்யா தால்ப்யாஸல்ீ । லலிதா நாமநாமத:। ௩௨।௰௰௫
ஸர்வலக்ஷணஸம்பூர்ணா। ப்ராத்ருணாம் பிதுர் ஏவ ச। ௩௨।௰௰௫
ஸமஸ்தப்ருத்யவர்கஸ்ய। மாத்ருணாம் ஸ்வஜநஸ்ய ச। ௩௨।௰௰௬
தைதவ ெபௗரவர்கஸ்ய। யஸ் சாந்ேயா தத்ருேஸ ஸுபாம்। ௩௨।௰௰௬
தஸ்ய தஸ்யாதிசார்வங்கீ। பபூேவஷ்டா த்விேஜாத்தம। ௩௨।௰௰௬
தாம் தெதௗ காஸிராஜாய। ஸ பிதா சாருவர்மேந। ௩௨।௰௰௭
உபேயேம ச தாம் ஸுப்ரூம்। சாருவர்மா மஹீபதி:। ௩௨।௰௰௭
ஸதாந்ய் அந்யாநி பார்யாணாம்। த்ரீண்ய் ஆஸம்ஸ் சாருவர்மண:।
௩௨।௰௰௮
தாஸாம் மத்ேய அக்ரமஹிஷீ। லலிதா தஸ்ய சாபவத்। ௩௨।௰௰௮
ஸா ச நித்யம் ஜகத்தாதுர்। ேதவேதவஸ்ய சக்ரிண:। ௩௨।௰௰௯
தீபவர்திபரா தத்வத்। ைதலஸ்யாஹரேணாத்யதா। ௩௨।௰௰௯
விஷ்ேணார் ஆயதேந தஸ்யா:। ஸஹஸ்ரம் த்விஜஸத்தம। ௩௨।௰௧

தீபாநாம் ைவ ப்ரஜஜ்வால। திவாராத்ரம் அதந்த்ரிதம்। ௩௨।௰௧
தஸ்யா த்யுதிபராபூதாஸ்। தஸ்யா லாவண்யநிர்ஜிதா:। ௩௨।௰௧௧
ஸர்வா: ஸபத்ந்ேயா லலிதாம்। பப்ரச்சுர் இதம் ஆதித:। ௩௨।௰௧௧
லலிேத வத பத்ரம் ேத। பத்ரம் ேத லலிேத வத। ௩௨।௰௧௨
ெகௗதூஹலபரா: ஸர்வா। யத் ப்ருச்சாமஸ் தத் உச்யதாம்। ௩௨।௰௧௨
விஷேய ஸதி வக்தவ்யம்। யந் மயா தத் இேஹாச்யதாம்। ௩௨।௰௧௩
நாஹம் மத்ஸரிணீபத்ரா। ந ச ராகாதிதூஷிதா। ௩௨।௰௧௩
பவத்ேயா மம ஸர்வாஸாம்। பவதீநாம் அஹம் ததா। ௩௨।௰௧௪
அப்ருதக்பர்த்ருஸாமந்யா। ேதவேலாகாபிகாமுகா:। ௩௨।௰௧௪
பூர்வம் யூயம் அஹம் ைசவ। பவதீநாம் ஸதர்மிண।ீ ௰௩௨।௩௪
ந ததா புஷ்பதூேபஷு। ந ததா த்விஜபூஜேந। ௩௨।௰௧௫
ப்ரயத்நம் தவ பஸ்யாேமா। விஷ்ேணார் ஆயதேந ஸுேப। ௩௨।௰௧௫
யதாஹநி ததா ராத்ெரௗ। யதா ராத்ெரௗ ததாஹநி। ௩௨।௰௧௬
தவ தீபப்ரதாநாய। யதா ஸுப்ரு ஸேதாத்யம:। ௩௨।௰௧௬
தத் ஏதத் கதயாஸ்மாகம்। லலிேத ெகௗதுகம் பரம்। ௩௨।௰௧௭
மந்யாேமா தீபதாநஸ்ய। பவத்யா விதிதம் பலம்। ௩௨।௰௧௭
ஏவம் உக்தா ததஸ் தாபிர்। லலிதா லலிதம் வச:। ௩௨।௰௧௮
வ்யாஜஹார ஸபத்நீஸ் தா। ந கிம்சித் அபி பாமிநீ। ௩௨।௰௧௮
புந: புநஸ் ச ஸா தாபிர்। பஹுேஷா தால்ப்ய ேசாதிதா। ௩௨।௰௧௯
தாக்ஷிண்யஸாரா லலிதா। கதாயாம் ஆஸ பாமிநீ। ௩௨।௰௧௯
ெகௗதுகம் பவதீநாம் ேசத்। அதீவால்ேப அபி வஸ்துநி। ௩௨।௰௨
தத் ஏஷா கதயாம்ய் ஏதத்। யத் வ்ருத்தம் மம ேஸாபநா:। ௩௨।௰௨

ெஸௗவரராஜஸ்ய ீ புரா। ைமத்ேரேயா அபூத் புேராஹித:। ௩௨।௰௨௧
ேதந சாயதநம் விஷ்ேணா:। காரிதம் ேதவிகாதேட। ௩௨।௰௨௧
அஹந்ய் அஹநி ஸுஸ்ரூஷாம்। புஷ்பதூேபாபேலபைந:। ௩௨।௰௨௨
தீபதாநாதிபிஸ் ைசவ। சக்ேர தத்ர ஸ ைவ த்விஜ:। ௩௨।௰௨௨
கார்த்திேக தீபேகா ப்ரஹ்மந்। ப்ரதத்தஸ் ேதந ைவ ததா। ௩௨।௰௨௩
ஆஸந்ீ நிர்வாணபூயிஷ்ேடா। ேதவார்சாபுரேதா நிஸி। ௩௨।௰௨௩
ேதவதாயதேந சாஸம்। தத்ராஹம் அபி மூஷிகா। ௩௨।௰௨௪
ப்ரதீபவர்திஹரேண। க்ருதபுத்திர் வராநநா:। ௩௨।௰௨௪
க்ருஹீதா ச மயா வர்திர்। வ்ருஷதம்ேஸா நநாத ச। ௩௨।௰௨௫
நஷ்டா சாஹம் ததா தஸ்ய। மார்ஜாரஸ்ய பயாதுரா। ௩௨।௰௨௫
வர்திப்ராந்ேதந நஸ்யந்த்யா। ஸ தீப: ப்ேரரிேதா மயா। ௩௨।௰௨௬
ஜஜ்வால பூர்வவத் தீப்த்யா। தஸ்மிந்ந் ஆயதேந புந:। ௩௨।௰௨௬
ம்ருதாஹம் ச தேதா ஜாதா। ைவதர்பீ ராஜகந்யகா। ௩௨।௰௨௭
ஜாதிஸ்மரா காந்திமதீ। பவதீநாம் ஸமா குைண:। ௩௨।௰௨௭
ஏஷ ப்ரபாேவா தீபஸ்ய। கார்த்திேக மாஸி ேஸாபநா:। ௩௨।௰௨௮
தத்தஸ்ய விஷ்ண்வாயதேந। யஸ்ேயயம் வ்யுஷ்டிர் உத்தமா।
௩௨।௰௨௮
அஸம்கல்பிதம் அப்ய் அஸ்ய। ப்ேரரணம் யத் க்ருதம் மயா। ௩௨।௰௨௯
விஷ்ண்வாயதநதீபஸ்ய। யஸ்ேயதம் புஜ்யேத பலம்। ௩௨।௰௨௯
ேலாபாபிபூதா ஹர்தும் தம்। ப்ரதீபம் அஹம் ஆகதா। ௩௨।௰௩
அவேஸைநவ தத்வர்த்யா। ப்ேரரணம் தத்ர ேம க்ருதம்। ௩௨।௰௩
தேதா ஜாதிஸ்ம்ருதிர் ஜந்ம। மாநுஷ்யம் ேஸாபநம் வபு:। ௩௨।௰௩௧

வஸ்ய: பதி: ப்ருதிவஸீ :। கிம் புநர் தீபதாயிநாம்। ௩௨।௰௩௧
ஏதஸ்மாத் காரணாத் தீபாந்। அஹம் ஏதாந் அஹர்நிஸம்। ௩௨।௰௩௨
ப்ரயச்சாமி ஹேரர் தாம்நி। ஜ்ஞாதம் அஸ்ய ஹி யத் பலம்। ௩௨।௰௩௨
பவதீநாம் இதம் ஸத்யம்। மேயாக்தம் ேகஸவாலேய। ௩௨।௰௩௩
மூஷிகத்வாத் அஹம் ேயந। கர்மணா ஸித்திம் ஆகதா। ௩௨।௰௩௩
ஏஷ ப்ரபாேவா தீபஸ்ய। கார்த்திேக மாஸி ஸத்தம। ௩௨।௰௩௪
விஷ்ண்வாயதநதத்தஸ்ய। ஜகாத லலிதா யதா। ௩௨।௰௩௪
திேந திேந ஜகந்நாத। ேகஸேவதி ஸமாஹித:। ௩௨।௰௩௫
ததாதி கார்த்திேக யஸ் து। விஷ்ண்வாயதநதீபகம்। ௩௨।௰௩௫
ஜாதிஸ்மரத்வம் ப்ரஜ்ஞாம் ச। ப்ராகாஸ்யம் ஸர்வவஸ்துஷு।
௩௨।௰௩௬
அவ்யாஹேதந்த்ரியத்வம் ச। ஸம்ப்ராப்ேநாதி ந ஸம்ஸய:। ௩௨।௰௩௬
ேஸஷகாேல ச சக்ஷுஷ்மாந்। ேமதாவ ீதீபேதா நர:। ௩௨।௰௩௭
ஜாயேத நரகம் வாபி। தம:ஸம்ஜ்ஞம் ந பஸ்யதி। ௩௨।௰௩௭
ஏகாதஸம்ீ த்வாதஸம்ீ வா। ப்ரதிபக்ஷம் ச ேயா நர:। ௩௨।௰௩௮
தீபம் ததாதி க்ருஷ்ணாய। தஸ்யாபி ஸ்ருணு யத் பலம்। ௩௨।௰௩௮
ஸுவர்ணமணிமுக்தாட்யம்। மேநாஜ்ஞம் அதிேஸாபநம்। ௩௨।௰௩௯
தீபமாலாகுலம் திவ்யம்। விமாநம் ேஸா அதிேராஹதி। ௩௨।௰௩௯
தஸ்மாத் ஆயதேந விஷ்ேணார்। தத்யாத் தீபம் த்விேஜாத்தம। ௩௨।௰௪
தாம்ஸ் ச தத்தாந் ந ஹிம்ேஸத। ந ச ைதலவிேயாஜிதாந்। ௩௨।௰௪
குர்வதீ தீபஹர்தா து। மூேகா அந்ேதா ஜாயேத யத:। ௩௨।௰௪
ஜாயேத நரகம் சாபி। தப:ஸம்ஜ்ஞம் ஸ பஸ்யதி। ௰௩௨।௩௫

அந்ேத தாமஸி துஷ்பாேர। நரேக பதிதாந் கில। ௩௨।௰௪௧
விக்ேராஸமாநாந் க்ஷுத்க்ஷாமாஞ்। ஜகாத யமகிம்கர:। ௩௨।௰௪௧
விலாைபர் அலம் அத்ராபி। கிம் ேவா விலபிேத பலம்। ௩௨।௰௪௨
யதா ப்ரமாதிபி: பூர்வம்। ஆத்மாத்யந்தம் உேபக்ஷித:। ௩௨।௰௪௨
பூர்வம் ஆேலாசிதம் ைநதத்। கிம் அப்ய் அந்ேத பவிஷ்யதி। ௩௨।௰௪௩
இதாநீம் யாதநாேபாக:। கிம் விலாப: கரிஷ்யதி। ௩௨।௰௪௩
ேதேஹா திநாநி ஸ்வல்பாநி। விஷயாஸ் சாதிதுர்தரா:। ௩௨।௰௪௪
ஏதத் ேகா ந விஜாநாதி। ேயந யூயம் ப்ரமாதிந:। ௩௨।௰௪௪
ஜந்துஜந்மஸஹஸ்ேரப்ய। ஏதஸ்மிந் மாநுஷ்ேயா யதி। ௩௨।௰௪௫
தத்ராப்ய் அதிவிமூடத்வாத்। கிம் ேபாகாந் அபிதாவதி। ௩௨।௰௪௫
விருத்தவிஷயாஸ்வாத । முதிைதர் ஹஸிதம் ச யத்। ௩௨।௰௪௬
பவத்பிர் ஆகதம் து:கம்। விலாபபரிணாமிகம்। ௩௨।௰௪௬
அத்யகாலிகயா புத்த்யா। யத் ஆகாமி ந சிந்திதம்। ௩௨।௰௪௭
பரிதாபாய தஜ் ஜாதம்। து:கம் கர்மவிபாகஜம்। ௩௨।௰௪௭
ஸ்வல்பம் ஆயுர் மநுஷ்யாணாம்। ததந்ேத பரதந்த்ரதா। ௩௨।௰௪௮
புஜ்யேத ச க்ருதம் பூர்வம்। ஏதத் கிம் ேவா ந சிந்திதம்। ௩௨।௰௪௮
யத் அபூத் பரதாேரஷு। ப்ரீதேய அங்ககுசாதிகம்। ௩௨।௰௪௯
யாதநாது:கரூபாய। நரேக ச தத் ஆகதம்। ௩௨।௰௪௯
பரதாரமேநாஹாரி। யத் பவத்பிர் அகீயத। ௩௨।௰௫
ஹா மாத இத்யாதி ருதம்। தத் இதாநீம் விலப்யேத। ௩௨।௰௫
ஸம்திக்தபரேலாகாநாம்। ஐஹிேக நிஹதாத்மநாம்। ௩௨।௰௫௧
ம்ருதாநாம் ஸ்வக்ருதம் கர்ம। பஸ்சாத்தாபாய ேகவலம்। ௩௨।௰௫௧

முஹூர்தார்தஸுகாஸ்வாத । லுப்தாநாம் அக்ருதாத்மநாம்। ௩௨।௰௫௨
அேநகவர்ஷேகாடிஷு। து:கதம் கர்ம ஜாயேத। ௩௨।௰௫௨
ஹா மாதஸ் தாத தாேததி। பவத்பி: கிம் விலப்யேத। ௩௨।௰௫௩
ஸுபாஸுபம் நிஜம் கர்ம। தத் அத்ய ஹ்ய் அத்ர புஜ்யேத। ௩௨।௰௫௩
புத்ரதாரக்ருஹேக்ஷத்ர । ஹிதாய ஸதேதாத்யதா:। ௩௨।௰௫௪
ந குர்வத்நி கதம் மூடா:। ஸ்வல்பம் அப்ய் ஆத்மேநா ஹிதம்।
௩௨।௰௫௪
வஞ்சிேதா அெஸௗ மயா லப்தம்। இதம் அஸ்மாத் உபாயத:।
௩௨।௰௫௫
ந ேவத்தி கஸ்சித் ஆத்மார்தம்। ேவத்தி ப்ரக்ரமேதா நர:। ௩௨।௰௫௬
ந ேவத்தி ஸூர்யசந்த்ராதீந்। காலம் ஆத்மாநம் ஏவ ச। ௩௨।௰௫௭
ஸாக்ஷிபூதாந் அேஸஷஸ்ய। ஸுபஸ்ேயஹாஸுபஸ்ய ச। ௩௨।௰௫௭
ஜந்மாந்ய் அந்யாநி ஜாயந்ேத। புத்ரதாராதிேதஹிநாம்। ௩௨।௰௫௮
ததர்தம் யத் க்ருதம் கர்ம। தஸ்ய ஜந்மஸதாநி தத்। ௩௨।௰௫௮
அேஹா ேமாஹஸ்ய மாஹாத்ம்யம்। மமத்வம் நரேகஷ்வ் அபி।
௩௨।௰௫௯
க்ரந்தேத மாதரம் தாதம்। பட்யமாேநா ீ அபி யத் ஸ்வயம்। ௩௨।௰௫௯
ஏவம் ஆக்ருஷ்டசித்தாநாம்। விஷயாஸ்வாததர்ஷுைல:। ௩௨।௰௬
ந்ருணாம் ந ஜாயேத புத்தி:। பரமார்தாவேலாகிநீ। ௩௨।௰௬
ததா ச விஷயாஸக்திம்। கேராத்ய் அவிரதம் மந:। ௩௨।௰௬
ேகா அதிபாேரா ஹேரர் நாம்நி। ஜிஹ்வாயா: பரிகீர்தேந। ௩௨।௰௬௧
வர்திைதேல அல்பெமௗல்ேய அபி। யத் அக்நிர் லப்யேத முதா।
௩௨।௰௬௨

அேதா அதிகதேரா ேலாப:। ேகா வஸ் சித்ேத அபவத் ததா। ௩௨।௰௬௨
ேயேநயம் ேதஷு ஹஸ்ேதஷு। ஸ்வாதந்த்ர்ேய ஸதி தீபக:। ௩௨।௰௬௩
மஹாபேலா விஷ்ணுக்ருேஹ। ந தத்ேதா நரகாபஹ:। ௩௨।௰௬௩
ந ேவா விலபிேத கிம்சித்। இதாநீம் த்ருஸ்யேத பலம்। ௩௨।௰௬௪
அஸ்வாதந்த்ர்ேய விலபதாம்। ஸ்வாதந்த்ர்ேய அதிப்ரமாதிநாம்।
௩௨।௰௬௪
அவஸ்யம்பாதிந: ப்ராணா। ேபாக்தா ஜேவா ீ ஹ்ய் அஹர்நிஸம்।
௩௨।௰௬௫
தத்தம் ச லபேத ேபாக்தா। ஸமேய விஷயாந் இதி। ௩௨।௰௬௫
ஏதத் ஸ்வாதந்த்ர்யவத்பிர் ேவா। யுக்தம் ஆஸத்ீ பரீக்ஷிதும்।
௩௨।௰௬௬
இதாநீம் கிம் விலாேபந। ஸஹத்வம் யத் உபாகதம்। ௩௨।௰௬௬
யத்ய் ஏதத் அநபஷ்டம் ீ ேவா। யத் து:கம் ஸமுபஸ்திதம்। ௩௨।௰௬௭
தத் பூேயா அபி மதி: பாேப। ந கர்தவ்யா கதம்சந। ௩௨।௰௬௭
க்ருேத அபி பாபேக கர்மண்ய்। அஜ்ஞாநாத் அகநாஸநம்। ௩௨।௰௬௮
கர்தவ்யம் அவ்யவஸ்திதம்। ஸ்மரத்பிர் மதுஸூதநம்। ௩௨।௰௬௮
நாரகாஸ் தத்வச: ஸ்ருத்வா। தாம் ஊசுர் அதிது:கிதா:। ௩௨।௰௬௯
க்ஷுத்க்ஷாமகண்டாஸ் த்ருஷயா। பரிஸ்புடிததாலுகா:। ௩௨।௰௬௯
ேபா ேபா ஸாேதா க்ருதம் கர்ம। யத் அஸ்மாபிஸ் தத் உச்யதாம்।
௩௨।௰௭
நரகஸ்ைதர் விபாேகா அயம்। புஜ்யேத யஸ்ய தாருண:। ௩௨।௰௭
யுஷ்மாபிர் ெயௗவேநாந்மாத । முதிைதர் அவிேவகிபி:। ௩௨।௰௭௧
த்யூேதாத்ேயாதாய ேகாவிந்த । க்ருஹாத் தீப: புரா ஹ்ருத:। ௩௨।௰௭௧

ேதநாஸ்மிந் நரேக ேகாேர। க்ஷுத்த்ருஷ்ணாபரிபடிதா ீ :। ௩௨।௰௭௨
பவந்த: பதிதாஸ் தீவ்ர । ஸீதவாதவிதாரிதா:। ௩௨।௰௭௨
ஏதத் ேத தீபதாநஸ்ய। ப்ரதீபஹரணஸ்ய ச। ௩௨।௰௭௩
புண்யம் பாபம் ச கதிதம்। ேகஸவாயதேந த்விஜ। ௩௨।௰௭௩
ஸர்வத்ைரவ ஹி தீபஸ்ய। ப்ரதாநம் த்விஜ ஸஸ்யேத। ௩௨।௰௭௪
விேஸேஷண ஜகத்தாது:। ேகஸவஸ்ய நிேவஸேந। ௩௨।௰௭௪
ேய அந்தா மூகா நி:ஸ்ருதா நிர்விேவகா। ஹீநாஸ் ைதஸ் ைத: ஸாதைநர்
விப்ரவர்ய। ௩௨।௰௭௫
ைதஸ் ைதர் தீபா: ஸாதுேலாகப்ரதத்தா। ேதவாகாராத் அந்யேதா விப்ரணதாீ :।
௩௨।௰௭௫
ஆஹ்லாதம் சக்ஷுஷ: ப்ரீதிம்। கேராதி மநஸஸ் ததா। ௩௩।௰௰௧
ேகஷாம்சித் தர்ஸநம் ப்ரஹ்மந்। மநுஷ்யாணாம் அஹர்நிஸம்।
௩௩।௰௰௧
உத்ேவஜநீயா பூதாநாம்। அநிமித்தம் ததாபேர। ௩௩।௰௰௨
வதந்ேத விப்ரியம் ைநவ। ப்ரீதிம் குர்வந்தி மாநவா:। ௩௩।௰௰௨
ஏதத் யஸ்ய பலம் ப்ரஹ்மந்। தாநஸ்ய தபேஸா அதவா। ௩௩।௰௰௩
உபவாஸஸ்ய வா தந் ேம। யதாவத் வக்தும் அர்ஹஸி। ௩௩।௰௰௩
அப்ரீதிதஸ்ய விப்ரர்ேஷ। விபாேகா யஸ்ய கர்மண:। ௩௩।௰௰௪
மநுஷ்யாணாம் அேஸஷம் ைவ। தந் மமாசŠவ ஸத்தம। ௩௩।௰௰௪
ேதவப்ராஹ்மணேவேதஷு। யஜ்ேஞஷு ச நராதைம:। ௩௩।௰௰௫
ையர் ஜுகுப்ஸா க்ருதா தால்ப்ய। மநஸாப்ய் அதிமாநிபி:। ௩௩।௰௰௫
ேதஷாம் ஸம்தர்ஸநாத் ஸர்ேவா। ந ஸுகம் விந்தேத த்விஜ।
௩௩।௰௰௬

வதந்த்ய் அப்ய் அநுகூலாநி। ந ேதஷு ப்ரீயேத ஜந:। ௩௩।௰௰௬
ஸ்பர்ஸாத் உத்விஜேத ேலாக:। கடு ேதஷாம் ச தர்ஸநம்। ௩௩।௰௰௭
ஸம்பாஷணம் ச நிந்தா ைவ। க்ருதா ேவதத்விஜாதிேக। ௩௩।௰௰௭
தஸ்மாந் ந நிந்தாம் ேவதாெதௗ। ந ஜுகுப்ஸாம் ச பண்டித:। ௩௩।௰௰௮
யஜ்ஞாெதௗ ச நர: குர்யாத்। ய இச்ேசச் ச்ேரய ஆத்மந:। ௩௩।௰௰௮
ையஸ் து ப்ரீதி: ஸமஸ்ேதஷு। ேவதேதவத்விஜாதிஷு। ௩௩।௰௰௯
யஜ்ஞாதிேக ைசவ க்ருதா। தால்ப்ய தத்தர்ஸநம் ந்ருணாம்। ௩௩।௰௰௯
ஆஹ்லாதஸ் சக்ஷுஷ: ப்ரீதிர்। மநேஸா நிர்வ்ருதி: பரா। ௩௩।௰௧
ஸம்பாஷேண ததாஹ்லாத:। ஸர்வேலாகஸ்ய ஜாயேத। ௩௩।௰௧
ஸ்துதா: ப்ரஸஸ்தா: ஸம்ப்ரீத்யா। பூஜிதா பஹுமாநத:। ௩௩।௰௧௧
ஸ்ேரய: பரம் ப்ரயச்சந்தி। ேதவா ேவதா மகா த்விஜா:। ௩௩।௰௧௧
ேலாகத்வேய அபி சாப்ரீதிம்। பஸுபுத்ரதநக்ஷயம்। ௩௩।௰௧௨
குர்வந்தி த்விஜஸார்தூல। ஏத ஏவ விநிந்திதா:। ௩௩।௰௧௨
ஏத ஏவ ஸமாக்யாதா:। ஸ்தவாதிக்ரஹேண குணாஹ்। ௩௩।௰௧௩
நிந்தாயா: ஸ்ரவேண ேதாஷ। ஏேதஷாம் ஏவம் ஏவ ஹி। ௩௩।௰௧௩
தஸ்மாத் ஸ்தவ்யா: ப்ரஸம்ஸ்யாஸ் ச। ேதவா ேவதா த்விஜாதய:।
௩௩।௰௧௪
யஜ்ஞாஸ் ச மநஸாப்ய் ஏஷாம்। ந நிந்தாம் ஆசேரத் புத:। ௩௩।௰௧௪
அநாயாேஸந பகவந்। தாேநநாந்ேயந ேகநசித்। ௩௪।௰௰௧
பாபம் ப்ரஸமம் ஆயாதி। ேயந தத் வக்தும் அர்ஹஸி। ௩௪।௰௰௧
ஸ்ருணு தால்ப்ய மஹாபுண்யாம்। த்வாதஸம்ீ பாபநாஸநீம்। ௩௪।௰௰௨
யாம் உேபாஷ்ய பரம் புண்யம்। ப்ராப்நுேத ஸ்ரத்தயாந்வித:। ௩௪।௰௰௨

மாகமாேஸ து ஸம்ப்ராப்த। ஆஷாடார்க்ஷம் பேவத் யதி। ௩௪।௰௰௩
மூலம் வா க்ருஷ்ணபக்ஷஸ்ய। த்வாதஸ்யாம் நியதஸ் ததா। ௩௪।௰௰௩
க்ருஹ்ணயாத் ீ புண்யபலதம்। விதாநம் தஸ்ய ேம ஸ்ருணு। ௩௪।௰௰௪
ேதவேதவம் ஸமப்யர்ச்ய। ஸுஸ்நாத: ப்ரயத: ஸுசி:। ௩௪।௰௰௪
க்ருஷ்ணநாம்நா ச ஸம்ஸ்தூய। ஏகாதஸ்யாம் மஹாமேத। ௩௪।௰௰௫
உேபாஷிேதா த்விதீேய அஹ்நி। புந: ஸம்பூஜ்ய ேகஸவம்। ௩௪।௰௰௫
ஸம்ஸ்தூய நாம்நா ச தத:। க்ருஷ்ணாக்ேயந புந: புந:। ௩௪।௰௰௬
தத்யாத் திலாம்ஸ் து விப்ராய। க்ருஷ்ேணா ேம ப்ரீயதாம் இதி।
௩௪।௰௰௬
ஸ்நாநப்ராஸநேயா: ஸஸ்தாஸ்। ததா க்ருஷ்ணதிலா முேந। ௩௪।௰௰௬
திலப்ரேராேஹ ஜாயந்ேத। யாவத்ஸம்க்யாஸ் திலா த்விஜ। ௩௪।௰௰௭
தாவத்வர்ஷஸஹஸ்ராணி। ஸ்வர்கேலாேக மஹீயேத। ௩௪।௰௰௭
ஜாதஸ் ேசஹாப்ய் அேராேகா அெஸௗ। நேரா ஜந்மநி ஜந்மநி।
௩௪।௰௰௮
நாந்ேதா ந பதிரஸ் ேசஹ। ந குஷ்டீ ந ஜுகுப்ஸித:। ௩௪।௰௰௮
பவத்ய் ஏதாம் உஷித்வா து। திலாக்யாம் த்வாதஸம்ீ நர:। ௩௪।௰௰௮
விஷ்ேணா: ப்ரீணநம் அத்ேராக்தம்। ஸமாப்ேத வர்ஷபாரேண।
௩௪।௰௰௯
பூஜாம் ச குர்யாத் விப்ராய। பூேயா தத்யாத் ததா திலாந்। ௩௪।௰௰௯
அேநந தால்ப்ய விதிநா। திலதாநாத் அஸம்ஸயம்। ௩௪।௰௧
முச்யேத பாதைக: ஸர்ைவர்। நிராயாேஸந மாநவ:। ௩௪।௰௧
உத்ப்ருதபுலக: ஸர்வாந்। நிராயாேஸந மாநவ:। ௰௩௪।௩௬
தாநவிதிஸ் ததா ஸ்ரத்தா। ஸர்வபாதகஸாந்தேய। ௩௪।௰௧௧

நார்த: ப்ரபூேதா நாயாஸ:। ஸாரீேரா முநிஸத்தம। ௩௪।௰௧௧
அநந்தஸ்யாப்ரேமயஸ்ய। வ்யாபிந: பரமாத்மந:। ௩௫।௰௰௧
நாம்நாம் நக்ஷத்ரேபேதந। திதிேபேதந வா த்விஜ। ௩௫।௰௰௧
தாநேபேதந சாக்யாேதா। விபிந்நபலதஸ் த்வயா। ௩௫।௰௰௨
விேஸஷ: ேக்ஷத்ரேபேதந। கத்யதாம் யதி வித்யேத। ௩௫।௰௰௨
யத ர்க்ஷதிதிேபேதந। ேதஷாம் ஏவ புந: புந:। ௩௫।௰௰௩
விேஸஷ: கதிேதா நாம்நாம்। விேஸஷபலதாயக:। ௩௫।௰௰௩
ததா ேக்ஷத்ரவிேஸேஷண। ேபதம் நாமக்ருதம் வத। ௩௫।௰௰௩
ஸ்ருணு தால்ப்ய யதாக்யாதம்। அர்ஜுநாய மஹாத்மேந। ௩௫।௰௰௪
ப்ரணிபாதப்ரஸந்ேநந। விஷ்ணுநா ப்ரபவிஷ்ணுநா। ௩௫।௰௰௪
க்ருேத பாராவதரேண। நிவ்ருத்ேத பாரேத ரேண। ௩௫।௰௰௫
ஆகம்ய ஸிபிரம் விஷ்ணூ। ரதஸ்த: ப்ராஹ பால்குநம்। ௩௫।௰௰௫
இஷுதீகாண்டிவம் ைசவ। ஸமாதாய த்வராந்வித:। ௩௫।௰௰௬
அவதீர்ய ரதாத் வரீ। தூேர திஷ்ட்:அ தநம்ஜய। ௩௫।௰௰௬
அவேராŠயாம்ய் அஹம் பஸ்சாத்। அவதீர்ேண ததஸ் த்வயி।
௩௫।௰௰௭
ஏதத் குரு மஹாபாேஹா। மா விலம்பஸ்வ பால்குந। ௩௫।௰௰௭
ஏவம் உக்தஸ் ததா சக்ேர। வாக்யம் பார்ேதா கதாத்ருத:। ௩௫।௰௰௮
அவாேராஹத் தத: பஸ்சாத்। ஸ்வயம் ஏவ ஜநார்தந:। ௩௫।௰௰௮
அவதீர்ேண ஜகந்நாேத। ஸ்வஸமுத்ேதந வஹ்நிநா। ௩௫।௰௰௯
ஜஜ்வால ஸ ரத: ஸத்ேயா। பஸ்மீபூதஸ் ச தத்க்ஷணாத்। ௩௫।௰௰௯
ேஸாபஸ்கரபதாேகா அத। ஸத்வஜ: ஸஹ வாஜிபி:। ௩௫।௰௰௯
ஸச்சத்த்ேரா வஹ்நிநா ஸத்ேயா। ரேதா பஸ்மலவக்ருத ீ :। ௩௫।௰௧

வஹ்நிநா ச யதா காஷ்டம்। ஸத்ேயா பஸ்மலவக்ருதம் ீ । ௩௫।௰௧
தத் அத்புதம் மஹத் த்ருஷ்ட்வா। பார்த: பப்ரச்ச ேகஸவம்। ௩௫।௰௧௧
ஹ்ருஷ்டேராமா த்விஜஸ்ேரஷ்ட। பயவிஸ்மயகத்கத:। ௩௫।௰௧௧
ஆஸ்சர்யம் புருஷவ்யாக்ர। கிம் ஏதந் மதுஸூதந। ௩௫।௰௧௨
விநாக்நிநா ரேதா அயம் ேம। தக்தஸ் த்ருணசேயா யதா। ௩௫।௰௧௨
பஷ்மத்ேராணக்ருபாத ீ ீநாம்। கர்ணாதீநாம் ச பால்குந। ௩௫।௰௧௩
தக்ேதா அஸ்த்ைரர் விவிைதர் ஏஷ। பூர்வம் ஏவ ரதஸ் தவ। ௩௫।௰௧௩
மததிஷ்டிதத்வாத் ெகௗந்ேதய। ந ஸர்ேணா ீ அயம் ததாபவத்। ௩௫।௰௧௪
ப்ரத்யஹந் நிஸி சக்ேரண। மயா ந்யஸ்ேதந ரக்ஷித:। ௩௫।௰௧௪
ேஸா அயம் தக்ேதா மஹாபாேஹா। த்வய்ய் அத்ய க்ருதகர்மணி।
௩௫।௰௧௫
மயாவதாரிேத சக்ேர। மா பார்த குரு விஸ்மயம்। ௩௫।௰௧௫
கம் பவந்தம் அஹம் வித்யாம்। அதிமாநுஷேசஷ்டிதம்। ௩௫।௰௧௬
கர்மணாத்யத்புேதநாக்நிர்। தூேமைநேவஹ ஸூசித:। ௩௫।௰௧௬
பூர்வம் ஏவ யதாக்யாதம்। ரணாரம்ேப தவார்ஜுந। ௩௫।௰௧௭
காேலா அஸ்மி ேலாகநாஸாய। ப்ரவ்ருத்ேதா அஹம் யதாதுநா।
௩௫।௰௧௭
தந் மயா ஸாதிதம் கார்யம்। த்ரிதஸாநாம் ததா புவ:। ௩௫।௰௧௮
பாராவதரணார்தாய। மம ஜந்ம மஹீதேல। ௩௫।௰௧௮
ஏவம் உக்ேதா அர்ஜுந: ஸம்யக்। ப்ரணிபத்ய ஜநார்தநம்। ௩௫।௰௧௯
துஷ்டாவ வாக்பிர் இஷ்டாபிர்। உத்பூதபுலகஸ் தத:। ௩௫।௰௧௯
நேமா அஸ்து ேத சக்ரதேராக்ரரூப। நேமா அஸ்து ேத ஸார்ங்கதராருணாக்ஷ।
௩௫।௰௨

நேமா அஸ்து ேத அப்யுத்யதகட்க ெரௗத்ர। நேமா அஸ்து
விப்ராந்தகதாந்தகாரிந்। ௩௫।௰௨
பேயந ஸந்ேநா அஸ்மி ஸேவபேதந। நாங்காநி ேம ேதவ வஸம் ப்ரயாந்தி।
௩௫।௰௨௧
வாச: ஸமுச்சாரயத: ஸ்கலந்தி। ேகஸா ஹ்ருஷீேகஸ ஸமுச்ச்வஸந்தி।
௩௫।௰௨௧
காேலா பவாந் காலகராலகர்மா। ேயைநதத் ஏவம் க்ஷயம் அக்ஷயாத்மந்।
௩௫।௰௨௨
க்ஷத்ரம் ஸமுத்பூதருஷா ஸமஸ்தம்। நீதம் புேவா பாரவிேரசநாய।
௩௫।௰௨௨
ப்ரஸதீ கர்தர் ஜய ேலாகநாத। ப்ரஸதீ ஸர்வஸ்ய ச பாலநாய।
௩௫।௰௨௩
ஸ்திெதௗ ஸமஸ்தஸ்ய ச காலரூப। க்ருேதாத்யேமஸாந ஜயாவ்யயாத்மந்।
௩௫।௰௨௩
ந ேம த்ருக் ஏஷா தவ ரூபம் ஏதத்। த்ரஷ்டும் ஸமர்தா க்ஷுபிேதா அஸ்மி
சாந்த:। ௩௫।௰௨௪
பூர்வஸ்வபாவஸ்திதவிக்ரேஹா அபி। ஸம்லŠயேஸ அத்யந்தம்
அெஸௗம்யரூப। ௩௫।௰௨௪
ஸ்மராமி ரூபம் தவ விஸ்வரூபம்। யத் தர்ஸிதம் பூர்வம் அபூந் மைமவ।
௩௫।௰௨௫
யஸ்மிந் மயா விஸ்வம் அேஸஷம் ஆஸத்ீ । த்ருஷ்டம்
ஸயேக்ஷாரகேதவைதத்யம்। ௩௫।௰௨௫
ஸா ேம ஸ்ம்ருதிர் தர்ஸநபாஷநாதி । ப்ரகுர்வேதா நாத கதா ப்ரணாஸம்।
௩௫।௰௨௬

காேலா அஹம் அஸ்மீத்ய் உதிேத த்வயா து। ஸமாகேதயம் புநர் அப்ய்
அநந்த। ௩௫।௰௨௬
கர்தா பவாந் காரணம் அப்ய் அேஸஷம்। கார்யம் ச நிஷ்காரண கர்த்ருரூப।
௩௫।௰௨௭
ஆெதௗ ஸ்திெதௗ ஸம்ஹரேண ச ேதவ। விஸ்வஸ்ய விஸ்வம் ஸ்வயம்
ஏவ ச த்வம்। ௩௫।௰௨௭
ப்ரஹ்மா பவாந் விஸ்வஸ்ருக் ஆதிகாேல। விஸ்வஸ்ய ரூேபா அஸி ததா
விஸ்ருஷ்ெடௗ। ௩௫।௰௨௮
விஷ்ணு: ஸ்திெதௗ பாலநபத்தகேக்ஷா। ருத்ேரா பவாந் ஸம்ஹரேண
ப்ரஜாநாம்। ௩௫।௰௨௮
ஏபிஸ் த்ரிபிர் நாத விபூதிேபைதர்। யஸ் சிந்த்யேத காரணம் ஆத்மேநா அபி।
௩௫।௰௨௯
ேவதாந்தேவேதாதிதம் அஸ்தி விஷ்ேணா:। பதம் த்ருவம் தத் பரமம் த்வம்
ஏவ। ௩௫।௰௨௯
யந் நிர்குணம் ஸர்வவிகல்பஹீநம்। அநந்தம் அஸ்தூலம் அரூபகந்தம்।
௩௫।௰௩
பரம் பதம் ேவதவிேதா வதந்தி। த்வம் ஏவ தச் சப்தரஸாதிஹீநம்।
௩௫।௰௩
யதா ஹி மூேல விடபீ மஹாத்ரும:। ப்ரதிஷ்டிதஸ்கந்தவேராக்ரஸாக:।
௩௫।௰௩௧
ததா ஸமஸ்தாமரமர்த்யதிர்யக் । வ்ேயாமாதிஸப்தாதிமயம் த்வயதம்ீ ।
௩௫।௰௩௧
முஞ்சாமி யாவத் பரமாயுதாநி। ைவரிஷ்வ் அநந்தாஹவதுர்மேதஷு।
௩௫।௰௩௨

த்ருஷ்ட்வா ஹி தாவத் ஸஹஸா பதந்ேதா। நூநம் தைவவாச்யுத ஸ
ப்ரபாவ:। ௩௫।௰௩௨
ஹதா ஹதாஸ் ேத பவேதா த்ருைஸவ। மயா புந: ேகஸவ ஸஸ்த்ரபூைக:।
௩௫।௰௩௩
காஹ் கர்ணபஷ்மப்ரமுகாந் ீ விேஜதும்। யுஷ்மத்ப்ரஸாேதந விநா ஸமர்த:।
௩௫।௰௩௩
த்ரிஸூலபாணிர் மம ய: புரஸ்தாந்। நிஷூதயந் ைவரிபலம் ஜகாம।
௩௫।௰௩௪
ஜ்ஞாதம் மயா ஸாம்ப்ரதம் ஏதத் ஈஸ। தவ ப்ரஸாதஸ்ய ஹி ஸா விபூதி:।
௩௫।௰௩௪
யேமந்த்ரவித்ேதஸஜேலஸவஹ்நி । ஸூர்யாத்மேகா யஸ் ச மமாஸ்த்ரபூக:।
௩௫।௰௩௫
நாஸாய நாபூத் பதிேதா அபி காேய। த்வத்ஸம்நிதாநஸ்ய ஹி ேஸா
அநுபாவ:। ௩௫।௰௩௫
பால்ேய பவாந் யாநி சகார ேதவ। கர்மாண்ய் அஸஹ்யாநி ஸுராஸுராணாம்।
௩௫।௰௩௬
ைதர் ஏவ ஜாநீம ந யத் பரம் த்வாம்। ேதாஷ: ஸ நிர்ேதாேஷா மநுஷ்யதாயா:।
௩௫।௰௩௬
தாேலாச்ச்ரிதாக்ரம் குருபாரஸாரம்। ஆயாமவிஸ்தாரவத் அத்யஜாத:।
௩௫।௰௩௭
பாதாக்ரவிேக்ஷபவிபிந்நபாண்டம்। சிேக்ஷப ேகா அந்ய: ஸகடம் யதா த்வம்।
௩௫।௰௩௭
அந்ேயந ேகநாச்யுத பூதநாயா:। ப்ராைண: ஸமம் பதம்ீ அஸ்ருக்விமிஸ்ரம்।
௩௫।௰௩௮

த்வயா யதா ஸ்தந்யம் அதீவபால்ேய। ேகாஷ்ேட ச பக்ெநௗ யமலார்ஜுெநௗ
ெதௗ। ௩௫।௰௩௮
விஷாநேலாஷ்ணாம்புநிபாதபமம்ீ । ஆஸ்ேபாட்ய ேகா வா புவி மநுேஷா
அந்ய:। ௩௫।௰௩௯
நநர்த பாதாப்ஜநிபடிதஸ்ய ீ । பணம் ஸமாருஹ்ய ச காலியஸ்ய।
௩௫।௰௩௯
ஸுேரஸஸம்ேதஸவிேராதவத்ஸு। வர்ஷத்ஸு ேமேகஷு கவாந் நிமித்தம்।
௩௫।௰௪
திநாநி ஸப்தாஸ்தி ச கஸ்ய ஸக்திர்। ேகாவர்தநம் தாரயிதும் கேரண।
௩௫।௰௪
ப்ரலம்பசாணூரமுகாந் நிஹத்ய। கம்ஸாஸுரம் யஸ்ய பிேபதி ஸக்ர:।
௩௫।௰௪௧
தம் அஷ்டவர்ேஷா நிஜகாந ேகா அந்ேயா। நிராேயாேதா நாத மநுஷ்யஜந்மா।
௩௫।௰௪௧
பாணார்தம் அப்யுத்யதம் உக்ரஸூலம்। நிர்ஜித்ய ஸம்க்ேய த்ரிபுராரிம் ஏக:।
௩௫।௰௪௨
ஸகார்த்திேகயஜ்வரம் அஸ்த்ரபாஹும்। கேராதி ேகா பாணம் அநச்யுேதா
அந்ய:। ௩௫।௰௪௨
க: பாரிஜாதம் ஸுரஸுந்தரீணாம்। ஸேதாபேபாக்யம் விஜிேதந்த்ரைஸந்ய:।
௩௫।௰௪௩
ஸ்வர்காந் மஹீம் உச்ச்ரிதவர்யைதர்ய ீ :। ஸமாநயாம் ஆஸ யதா ப்ரேபா
த்வம்। ௩௫।௰௪௩
ஹத்வா ஹயக்ரீவம் உதாரவர்யம் ீ । நிஸும்பஸும்ெபௗ நரகம் ச ேகா அந்ய:।
௩௫।௰௪௪

ஜக்ராஹ கந்யாபுரம் ஆத்மேநா அர்தம்। ப்ராக்ஜ்ேயாதிஷாக்ேய நகேர
மஹாத்மந்। ௩௫।௰௪௪
ஸ்திெதௗ ஸ்திதஸ் த்வம் பரிபாஸி விஸ்வம்। ைதஸ் ைதர் உபாையர்
அவிநீதபைத ீ :। ௩௫।௰௪௫
ைமத்ரீ ந ேயஷாம் விநயாய தாம்ஸ் தாந்। ஸர்வாந் பவாந் ஸம்ஹரேத
அவ்யயாத்மந்। ௩௫।௰௪௫
ஹிதாய ேதஷாம் கபிலாதிரூபிணா। த்வயாநுஸஸ்தா பஹேவா அநுஜவா ீ :।
௩௫।௰௪௬
ேயஷாம் ந ைமத்ரீ ஹ்ருதி ேத ந ேநயா। விஸ்ேவாபகாரீ வத ஏவ ேதஷாம்।
௩௫।௰௪௬
இத்தம் பவாந் துஷ்டவேதந நூநம்। விஸ்ேவாபகாராய விேபா ப்ரவ்ருத்த:।
௩௫।௰௪௭
ஸ்திெதௗ ஸ்திதம் பாலநம் ஏவ விஷ்ணு:। கேராதி ஹந்த்ய் அந்தகேதா
அந்தருத்ர:। ௩௫।௰௪௭
ஏதாநி சாந்யாநி ச துஷ்கராணி। த்ருஷ்டாநி கர்மாணி ததாபி ஸத்யம்।
௩௫।௰௪௮
மந்யாமேஹ த்வாம் ஜகத: ப்ரஸூதிம்। கிம் குர்ம மாயா தவ ேமாஹநீயம்।
௩௫।௰௪௮
த்வம் ஸர்வம் ஏதத் த்வயி ஸர்வம் ஏதத்। த்வத்தஸ் தைததத் தவ ைசதத்
ஈஸ। ௩௫।௰௪௯
ஏதத் ஸ்வரூபம் தவ ஸர்வபூதம்। விபூதிேபைதர் பஹுபி: ஸ்திதஸ்ய।
௩௫।௰௪௯
ப்ரஸதீ க்ருஷ்ணாச்யுத வாஸுேதவ। ஜநார்தநாநந்த ந்ருஸிம்ஹ விஷ்ேணா।
௩௫।௰௫

மநுஷ்யஸாமாந்யதியா யதீஸ। த்ருஷ்ேடா மயா தத் க்ஷமஸ்வாதிேதவ।
௩௫।௰௫
ந ேவத்மி ஸத்பாவம் அஹம் தவாத்ய। ஸத்பாவபூதஸ்ய சராசரஸ்ய।
௩௫।௰௫௧
ேயா ைவ பவாந் ேகா அபி நேதா அஸ்மி தஸ்ைம। மநுஷ்யரூபாய
சதுர்புஜாய। ௩௫।௰௫௧
ேதவேதவ ஜகந்நாத। ஸர்வபாபஹேரா பவ। ௩௫।௰௫௨
ேஹதுமாத்ரஸ் த்வ் அஹம் தத்ர। த்வையதத் உபஸம்ஹ்ருதம்।
௩௫।௰௫௨
ப்ரஸேதஸ ீ ஹ்ருஷீேகஸ। அெக்ஷௗஹிண்யா தஸாஷ்ட ச।
௩௫।௰௫௩
த்வயா க்ரஸ்தா புேவா பூத்ைய। ேஹதுபூதா ஹி மத்விதா:। ௩௫।௰௫௩
வயம் அந்ேய ச ேகாவிந்த। நரா: க்ரீடநகாஸ் தவ। ௩௫।௰௫௪
மத்விைத: கரைணர் ேதவ। கேராஷி ஸ்திதிபாலநம்। ௩௫।௰௫௪
யத் அத்ர ஸத் அஸத் வாபி। கிம்சித் உச்சாரிதம் மயா। ௩௫।௰௫௫
பக்திமாந் இதி தத் ஸர்வம்। க்ஷந்தவ்யம் மம ேகஸவ। ௩௫।௰௫௫
ஏவம் ஸ்துதஸ் தத: ப்ராஹ। ப்ரீதிமாம்ஸ் தம் ஜநார்தந:। ௩௬।௰௰௧

———————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஸுவ்ன பகவான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ திருவேங்கடேச மஹாத்ம்யம் –ஸ்ரீ மதி விஸாலாட்சி ரமணன் அம்மாள் தொகுத்து அருளியது —

February 24, 2023

ஸ்ரீ வேங்கடேச புராணம்

த்ரை லோக்யம் கிம் சிரேஷ்ட ஸ்தலம் வால்மீகி நாரதர் இடம் வாமன புராணம்
சங்கர ஸ்கந்த -இதே கேள்வி உத்தம ஸ்ரீ வைஷ்ணவ ஸ்தலம் -பிரகலாதன் அம்பரீஷன் -வழியில்
அம்பரீஷ வனம் இங்கும் உண்டே
விஷ்ணுவே திருமலை வடிவம்ன் -தபஸ்
அகஸ்தியர் உபாசிட்டவசுக்கு உபதேசம் -சார்ங்கம் ஏந்திய வாசுதேவனுக்கு உகந்த
வராஹ புராணம்
ரிஷிகள் வியாசர் -அதி ப்ரேசியமான ஸ்வயம் வ்யக்த க்ஷேத்ரம்
பூமி தேவி வராஹ –
ஸ்ரீ வேண்டடேசன் வாசுதேவா ஆலயம்
பாத்திமா புராணம்
நாராயணன் ஆவிபிரபாவம் செய்த திருமலை
கருட புராணம்
அருந்ததிக்கு வசிஷ்டர் -நித்ய விபூதி விடவும் ஸூர்ய மண்டலம் விடவும் ஸ்வேதா தீபம் விட இங்கு உகந்து
ப்ருஹ்மாண்ட மாண்ட ப்ருகுவுக்கு நாரதர்புண்ய க்ஷேத்ரம் -ஸ்ரீ வைகுண்ட விரக்த்தாய
ரிக் வேதம் -அராயி காணே விகடே கிரீம் கச்ச யவிஷ்யோத்தர புராணம் 14-21) 6160. சொல்லப்பட்ட இயரிய திருமலையே …ஸ்ரீம் பீடன் -வேதமே சொல்லுமே

ரிக் வேதத்தில் உள்ள,
“அராயி காணே விகடே கிரிம் கச்ச ஸதான்வே
சிரிம்பிடஸ்ய ஸத்வபி: தே பிஷ்ட்வா சாதயாமஸி”என்ற மந்திரம்,
“மனிதா! நீ செல்வமில்லாதவனாகவோ, எதிர்காலம் பற்றிய பார்வை இல்லாதவனாகவோ, உலகியல் வாழ்க்கையில் தவிப்பவனாகவோ,
சுற்றி உள்ளவர்களால் ஒதுக்கப்படுபவனாகவோ இருக்கிறாயா? வருந்தாதே!
அலர்மேல் மங்கைத் தாயாரைத் திருமார்பில் கொண்ட திருவேங்கடமுடையானின் மலையைச் சென்று அடைவாயாக!
பக்தர்களோடு இணைந்து கோவிந்தா! கோவிந்தா! என கோஷம் இட்டபடி அந்தப் பெருமாளிடம் சென்றால்,
அவர் உன்னைக் காப்பார்! திருப்பதி வந்தால் திருப்பம் வரும்!” என்று சொல்கிறது.

ரிக்வேதம் போற்றும் திருவேங்கடம்

“அராயி காணே விகடே கிரிம் கச்ச ஸதான்வே, சிரிம்பிடஸ்ய ஸத்த்வபி: தேபிஷ்ட்வா சாதயாமஸி” என்ற ரிக் வேத மந்திரம் திருமலையைப் புகழ்கிறது. ஏழைகள், எதிர்காலம் பற்றிய அறிவில்லாதவர்கள், துன்பப்படுபவர்கள், சுற்றதாரின் ஆதரவுஅற்றவர்கள் ஆகிய அனைவரும் பக்தர்களோடு இணைந்து ஸ்ரீநிவாசன் திகழும் திருமலைக்குச் சென்று, அப்பெருமாளின் திரு வடிகளில் அடைக்கலம் புகுந்தால் அவன் காத்தருள்வான் என்பது இம்மந்திரத்தின் பொருள்.

சிலப்பதிகாரத்தில் திருமலை

சிலப்பதிகாரத்தில் மதுரைக் காண்டத்தில் காடு காண் படலத்தில் திருமலையைப் புகழ்ந்து இளங்கோவடிகள் பாடியுள்ளார். வீங்குநீர் அருவி வேங்கடம் என்னும் ஓங்குயர் மலயத்து உச்சி மீமிசை என்று அப்பாடல் தொடங்குகிறது.

திருமலை ஸ்ரீநிவாசன், முதலில் அங்கே அவதாரம் செய்தபோது விபவ அவதாரமாகத் தோன்றி, பத்மாவதியை மணம் புரிந்து, அதன் பின் அர்ச்சாவதார நிலைக்கு மாறிக் கோயில் கொண்டவர். விபவம், அர்ச்சை ஆகிய இருநிலைகளும் இணைந்திருப்பது ஸ்ரீநிவாசப் பெருமாளுக்கே உண்டான தனிச்சிறப்பு.

திருமலை கோயிலில் ஒரு மண்வெட்டி திருமலையப்பனுக்கான புஷ்பங்கள் அனைத்தும் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் ராமாநுஜரின் சீடரான அனந்தாழ்வான் அமைத்த நந்தவனத்தில் இருந்துதான் இன்றளவும் வந்துகொண்டிருக்கின்றன. ஒரு சமயம் திருமலையப்பனே சிறுவன் வடிவில் அனந்தாழ்வானுடன் லீலை புரியச் சென்றான். அப்போது அந்தச் சிறுவனைத் தன் மண்வெட்டியால் அனந்தாழ்வான் அடித்தார். சிறுவனின் தாடையில் இருந்து ரத்தம் பெருகி வந்தது. அத்துடன் அச்சிறுவன் ஓட, அவனை அனந்தாழ்வான் துரத்தி வந்தார்.

மலையப்பனின் கருவறைக்குச் சென்று அச்சிறுவன் மறைந்து போனான். வந்தவன் மலையப்பனே என உணர்ந்தார் அனந்தாழ்வான். மலையப்பனின் தாடையிலிருந்து ரத்தம் வந்தபடியால், அவ்விடத்தில் பச்சைக் கற்பூரம் வைக்கப்பட்டது. அதனால் தான் இன்றளவும் மலையப்ப சுவாமியின் தாடையில் பச்சைக் கற்பூரம் இருப்பதைக் காணமுடிகிறது. பெருமாளை அடிப்பதற்கு அனந்தாழ்வான் பயன்படுத்திய மண்வெட்டி இன்றளவும் சந்நதி நுழைவாயிலில் பராமரிக்கப் பட்டு வருகின்றது.

திருமலையில் உள்ள ராமாநுஜர் சந்நதியில் ராமாநுஜர் பெருமாளுக்குக் குருவாக அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார். அவருக்கு எதிரே சீடனாகப் பெருமாள் நிற்பதாக ஐதீகம். அதனால் தான் அமர்ந்திருக்கும் ராமாநுஜருக்கு எதிரே நின்றிருக்கும் பெருமாளின் திருவடிச் சுவடுகள் மட்டும் இருப்பதைக் காணலாம். பெருமாளுக்குச் சங்கு சக்கரங்கள் தந்தபடியாலும், வேதார்த்த சங்கிரகத்தை உபதேசம் செய்தபடியாலும், பெருமாள் தனக்குக் குருவாக ராமாநுஜரை அங்கீகரித்தார்.

திருமலையில் கோயில் கொண்டிருக்கும் நரசிம்மர் நிவாசனால் பூஜிக்கப்பட்டவர். ஸ்ரீநிவாச கல்யாணம் நடைபெறுவதற்கு முன் இந்த நரசிம்மரைப் பூஜித்து, அவருக்குப் பிரசாதங்களை நிவேதனம் செய்துவிட்டுத்தான் பத்மாவதியை மணந்துகொள்ளச் சென்றார் ஸ்ரீநிவாசன்.

விமான வேங்கடேசன்

பொன்மயமான ஆனந்த நிலைய விமானத்தின் வடக்குப் பகுதியில் விமான வேங்கடேச னாகப் பெருமாள் காட்சிஅளிக்கிறார். முன்பு ஒரு பொய்கைக் கரையில் கஜேந்திரன் என்ற யானை துயருற்றபோது அதைக் காத்த பெருமாள், சுவாமி புஷ்கரிணிக் கரையிலும் அப்படி அடியார்களின் குரல் ஏதும் கேட்டால், உடனே ஓடோடிச் சென்று காக்க வேண்டும் என்ற எண்ணத்திலே விமான வேங்கடேசனாக, விமானத்தின் மேல் தயார் நிலையில் காத்திருக்கிறார்.

தெய்வீக மலை

‘கட்டெதுர வைகுண்டமு’ என்ற கீர்த்தனையில், திருமலையில் உள்ள ஒவ்வொன்றுமே தெய்வீகமானது என்று அன்னமாச்சாரியார் பாடியுள்ளார். வைகுண்ட லோகமே திருமலை, வேதங்களே அதன் பாறைகள், பிரம்மா உள்ளிட்ட தேவர்களின் லோகங்கள் இம்மலையின் நான்கு மூலைகள், தேவர்களே இம்மலையில் வாழும் உயிரினங்கள் என்றெல்லாம் கொண்டாடியிருக்கிறார் அன்னமாச்சாரியார்.

வேங்கடம் என்றால் என்ன?

வடமொழியில் வேம் என்றால் பாபம், கடம் என்றால் போக்குவது. வேங்கடம் என்றால் பாபத்தைப் போக்குவது என்று வடமொழியில் பொருள்படும். தமிழில் வேம் என்றால் போக்குவது, கடம் என்றால் பாபம். எனவே தமிழிலும் வேங்கடம் என்றால் பாபத்தைப் போக்குவது என்றே பொருள்படும். நம் அனைத்துப் பாபங்களையும் தீர்க்கவல்ல மலை திருவேங்கட மலை.

ஒலியும் ஒளியும்

ஸர்வதர்மான் பரித்யஜ்ய மாம் ஏகம் சரணம் வ்ரஜ, அஹம் த்வா ஸர்வபாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மா சுச என்பது கீதையில் கண்ணன் கூறிய சரம ஸ்லோகம் ஆகும். அதாவது, இறைவனை அடைவதற்கான மார்க்கங்களாகப் பிற தர்மங்களை எண்ணாமல், இறைவனே அவனை அடைவதற்கான வழியாவான் என்பதை உணர்ந்து, அவன் திருவடிகளை அடைக்கலமாக நாம் பற்றினால், அவன் நம்மை அனைத்துப் பாபங்களில் இருந்தும் போக்கி, நமக்கு முக்தி அளிப்பான் என்பது இந்த ஸ்லோகத்தின் பொருள்.

ஒலி வடிவில் உள்ள இந்த சுலோகத்தின் ஒளி வடிவமாகத் திருமலையப்பன் திகழ்கிறார். அவரது வலக்கரத்தைத் திருவடிகளை நோக்கிக் காட்டி, தன்னிடம் அடைக்கலம் புகுமாறு அறிவுறுத்து கிறார். இடக்கரத்தைத் தொடை அருகே வைத்துக் கொண்டு, அவ்வாறு நாம் அடைக்கலம் புகுந்தால், பிறவிப் பெருங்கடலை நம் தொடை அளவுவறச் செய்வதாக உறுதி அளிக்கிறார்.

சுக்ரீவன் கூற்று சீதையைத் தேடுவதற்காக வானர வீரர்களை ஏவிய சுக்ரீவன், “வடசொற்கும் தென்சொற்கும் வரம்பிற்றாய் நான்மறையும் மற்றை நாலும் இடைசொற் பொருட்கெல்லாம் எல்லையதாய் நல்லறத்துக் கீறாய வேறு புடைசுற்றுந் துணையின்றிப் புகழ்பதிந்த மெய்யேபோல் பூத்துநின்ற வடைகற்றுந் தண்சாரல் ஓங்கிய வேங்கடத்தில் சென்றடைதீர் மாதோ தோடுறு மால்வரை அதனைக் குறுகுதிரேலும் நெடிய கொடுமை நீங்கி வீடுறுதிர் ஆதலினான் விலங்குதிர் அப்புறத்து நீர்” என்று அவர்களைப் பார்த்துச் சொல்வதாகக் கம்பன் பாடுகிறான்.

அதாவது, “திருமலையில் மட்டும் சீதையைத் தேடாதீர்கள். ஏனெனில், அங்கே சில காலம் இருந்தாலே நீங்கள் பாபம் நீங்கி முக்தி அடைந்து விடுவீர்கள். நீங்கள் எல்லோரும் முக்திக்குச் சென்று விட்டால் அதன் பின் யார் சீதையைத் தேடுவது எனவே திருமலையைத் தவிர்த்த பிற இடங்களில் மட்டும் சீதையைத் தேடுங்கள்!” என்று அறிவுறுத்துகிறான் சுக்ரீவன்.

கோவர்த்தன மலையே திருமலை

கண்ணன் ஏழு நாட்கள் கோவர்த்தன மலையைத் தாங்கிப் பிடித்து ஆயர்களையும் ஆநிரைகளையும் காத்தான் என்பதை நாம் அறிவோம். அந்த மலை கண்ணனுக்குக் கைம்மாறு செய்ய விழைந்ததாம். அதனால் அந்த கோவர்த்தன மலையே திருமலையில் ஏழு மலைகளாக மாறியது என்றும், தன்னை ஏழு நாட்கள் சுமந்த கண்ணனை ஏழு மலைகளாக மாறிக் காலந்தோறும் அது தாங்கி நிற்கிறது என்றும் சொல்வார்கள்.

கலியுக வைகுண்டம்

வைகுண்ட லோகத்தில் உள்ள திருமாலை நேரில் சென்று தரிசிக்கும் பேறு பெறாதவர்களுக்கு இந்தக் கலியுகத்தில் கண்கண்ட தெய்வமாக, கலியுக வரதனாகத் திருமலையப்பன் தரிசனம் தருவதால், திருமலையைக் கலியுக வைகுண்டம் என்று சொல்வார்கள்.

யசோதையே வகுளமாலிகை

கண்ணனின் வளர்ப்புத் தாயான யசோதையால், கண்ணன் செய்து கொண்ட பதினாறாயிரத்து நூற்றெட்டுத் திருமணங்களில் ஒன்றைக் கூடக் காண இயலவில்லை. அதை எண்ணி அவள் வருந்திய நிலையில், அந்த யசோதையையே வகுளமாலிகையாகத் திருமலையில் பிறக்க வைத்தார் திருமால். வகுளமாலிகை ஸ்ரீநிவாசனுக்கும் பத்மாவதிக்கும் திருமணத்தை ஏற்பாடு செய்து, தானே முன்நின்று நடத்தி வைத்துக் கண்ணாரக் கண்டு களித்தாள்.

வேதவதியே பத்மாவதி

திருமாலை மணக்க விரும்பிக் கடுந்தவம்புரிந்து வந்தாள் வேதவதி என்ற பெண். ராமாயணக் காலத்தில் ராவணன் சீதையை அபகரிக்க வந்தபோது, சீதையை அக்னி லோகத்துக்குப் பாதுகாப்பாக அனுப்பிவிட்டு, போலிச்சீதையாக இந்த வேதவதி வந்து ராவணனுடன் சென்றதாகப் பாத்ம புராணம் போன்ற நூல்கள் சொல்கின்றன. அந்த வேதவதிக்கு அருள்புரிய நினைத்தார் திருமால். அதனால் தான் அந்த வேதவதியைப் பத்மாவதியாகத் திருமலையில் அவதரிக்க வைத்து, தானே ஸ்ரீநிவாசனாக வந்து அவளை மணந்து கொண்டார்.

வேங்கடேச சுப்பிரபாதம்

மணவாள மாமுனிகளின் சீடரான பிரதிவாதி பயங்கரம் அண்ணா என்பவர் திருவேங்கடமுடையானுக்காக வேங்கடேச சுப்பிரபாதம் இயற்றினார். ராமனுக்குச் சுப்பிரபாதம் பாடும் விதமாக விசுவாமித்திரர் கூறிய,கௌசல்யா ஸுப்ரஜா ராம பூர்வா ஸந்த்யா ப்ரவர்த்ததே உத்திஷ்ட நர சார்தூல கர்தவ்யம் தைவம் ஆஹ்நிகம்என்ற ஸ்லோகத்தையே முதல் ஸ்லோகமாகக் கொண்டு, மேலே வேங்கடேசனின் சுப்பிரபாதம் இயற்றப்பட்டது.

திருமலையப்பன் நெற்றியில் இருப்பது என்ன?

திருமலையப்பன் நெற்றியில் அணிந்திருக்கும் திருமண் காப்புக்கு ஸ்ரீபாத ரேணு என்று பெயர். இறைவனின் பாதத்தூளியை நாம் நெற்றியில் திலகமாக அணிகிறோம். பக்தர்கள் மேல் பேரன்பு கொண்ட திருவேங்கடமுடையான், தன் பக்தர்களின் பாதத்தூளியைத் தன் நெற்றியில் திருமண் காப்பாக அணிகிறானாம்.

அதனால் தான் ஸ்ரீபாத ரேணு – அடியார்களின் பாதத் தூளி எனத் திருமலையப்பனின் திருமண் காப்பை அழைக்கிறார்கள்.

திருப்பதி மலையின் அடிவாரத்திற்கு அலிபிரி என்று பெயர்

——————————————————————————

ஸ்ரீநிவாச புராணம் என்று தனியாக எதுவும் இல்லை. பதினெட்டுப் புராணங்களில் வேங்கடேசரின் லீலைகள் பன்னிரண்டு புராணங்களில் காணப்படுகின்றன. அவற்றை எல்லாம் தொகுத்து திருவேங்கட மஹாத்மியம் என்ற பெயரில் ஒன்று சேர்த்துள்ளார்கள். திருமலையில் கிடைத்த கல்வெட்டு ஒன்று கி பி 1491 ஜூன் மாதம் 27ம் தேதி பாஸிந்தி வேங்கடதுறைவார் தாம் தொகுத்த திரு வேங்கட மஹாத்ம்யத்தை விண்ணப்பம் செய்ததாகக் காணப்படுகிறது. 1884 ல் இது தெலுங்கு புத்தகமாக தேவஸ்தானத்தரால் வெளியிடப்பட்டது 1896ல் இரண்டாவது பதிப்பும் 1928 ல் மூன்றாவது பதிப்பும் வெளி வந்தன.

க்ருதேது நரசிம்ஹோபூ4த்
த்ரேதாயாம் ரகு4 நந்தன:
த்3வாபரே வாஸு தே3வஸ்ச
கலௌ வேங்கட நாயக:–(ஆதித்ய புராணம்)

கிருத யுகத்தில் நரசிம்ஹராக இருந்தவரே, திரேதா யுகத்தில் ரகுநந்தனராக அவதரித்தார்.

அவரே துவாபரயுகத்தில் வாசுதேவர் ஆனார்.அவரே கலியுகத்தில் வேங்கடநாயகர் ஆனார்.

ஓம் நமோ பகவதே வாசுதேவாய ஓம் நமோ நாராயணாய

சூத முனிவர்

நைமிசாரண்யம் சிறந்த தபோவனம்; –நிமிஷம் வீணாகாமல் நடக்கும் அங்கு,

பகவத் தியானமும், பகவத் சர்ச்சைகளும், அகத்தை வென்ற முனிவர்கள் இடையே!

சூத முனிவரைக் கேட்டனர் பிற முனிவர்கள்,
“பூதலத்தில் ஆதி நாராயணனுக்கு உகந்த இடம், பகவான் நிகழ்த்திய லீலா விநோதங்கள் என்னும்
மகாத்மியத்தைக் கேட்க வேண்டும் செவிகள் குளிர!”

அன்புடன் அளித்த வேண்டுகோளை ஏற்றார்
என்றும் இறைவன் புகழ் பேச விரும்பும் சூதர்.

“கணக்கில் அடங்காது நாரயணனின் லீலைகள், வணக்கத்துக்குரிய சேஷாசலத்தில் நடந்தவை.

வராக கல்பத்தில் நிகழ்த்திய அற்புதங்களை ஒரு புராணமாக உரைக்கின்றேன் எனத் தொடங்கினார்.

ஸ்வேத வராஹம்

ஓராயிரம் சதுர் யுகங்கள் பிரமனின் ஒரு பகல்; ஓராயிரம் சதுர் யுகங்கள் பிரமனின் ஒரு இரவு.

பிரமனின் ஒருநாள் பொழுது நீளும் நமக்கு இரண்டாயிரம் சதுர் யுகங்களாக பூவுலகில்!

ஒரு நாள் முடிந்ததும் எரிப்பான் சூரியன்; ஒரு துளி மழை விழாது பூமியின் பரப்பில்!

முன்னமேயே இதை அறிந்த முனிவர்கள் சென்று அடைக்கலம் புகுவர் ஞான வுலகில்

மரம், செடி, கொடி, ஜீவராசிகள் அனைத்தும் எரிந்து சாம்பலாகிவிடும் அதீதஉஷ்ணத்தில். தொடர்ந்து வீசும் காற்று பல ஆண்டுகளுக்கு.

அடர்ந்த மேகத்திறள் உருவாகும் வானில். கொட்டும் கனமழை பூமியின் மேற்பரப்பு அதிர; கெட்டிப்பட்டு பூமி பதிந்துவிடும் பாதாளத்தில்!

பொங்கி எழுகின்ற ஜலப் பிரவாகத்தால் தாங்கும் நீர் மகர லோகம் வரையிலும்! வடியாது நீர் பிரமனின் இரவு முடியும் வரை

படைப்பைத் தொடங்க வேண்டும் மீண்டும்!

வெள்ளைப் பன்றி உருவெடுப்பார் விஷ்ணு; வெள்ளத்தில் தேடிச் செல்வார் பூவுலகினை. பாய் போலச் சுருட்டி ஒளித்து வைத்திருப்பான்
பாதாளத்தில் பூமியை அரக்கன் ஹிரண்யாக்ஷன்.

தரணியை வெளிக் கொணரும் முன்பு வராஹம் ஹிரண்யாக்ஷனை வெற்றி கொள்ள வேண்டும்!

தொடங்கும் துவந்த யுத்தம் இருவரிடையே! தொடரும் துவந்த யுத்தம் வெகு நீண்டகாலம்!

கூரிய நகங்களாலும், கோரைப் பற்களாலும் கிழித்து அரக்கனை அழித்து விடும் வராஹம்.

ஜலத்தில் கலந்து விடும் பெருகும் குருதி நதி ஜலப்ரவாஹம் ஆகிவிடும் செந்நீராக அப்போது!

கிரீடாசலம்

ஞான லோகத்தில், தியானத்தில் இருந்த, மோன முனிவர்கள் அறிந்தனர் இதனை.

தரணியைத் தன் முகத்தில் தாங்கி வந்தார் வராஹ பெருமான் நீரிலிருந்து வெளியே. ஸ்தாபித்தார் பூலோகத்தை முன்போலவே;
ஸ்தாபித்தார் சாகரங்களை முன்போலவே.

சிருஷ்டியைத் தொடங்கினான் பிரம்மதேவன் சிருஷ்டித்தான் சூரிய, சந்திரர்களை முதலில்.

பிற ஜீவராசிகளையும் படைத்தான் பின்னர் பிரம்மதேவன் சரியான வரிசைக் கிரமத்தில்.

பூலோகத்தை மீட்ட வராஹ பெருமான் பூவுலகிலேயே தங்கிவிட விழைந்தார்.

கருடனைப் பணித்தார், “வைகுந்தம் செல்க! பிரியமான கிரீடாச்சலத்தைக் கொணர்க!”

வைகுந்தம் விரைந்தான் உடனே கருடன்; வைக்கும் இடத்தையும் தேர்வு செய்தார்!

கோமதி நதிக்குத் தெற்கேயும், மற்றும் கீழ்க்கடலுக்கு மேற்கேயும் அமைந்தது. நாராயண கிரியே ஆகும் கிரீடாசலம்!
நவரத்தினங்கள் நிரம்பிய சிகரங்கள்!

காய் கனி, மூலிகைகளால் நிறைந்தது; கந்தம் கமழும் மலர்களால் நிறைந்தது;

ஒலிக்கும் பறவைகளின் பாடல் கொண்டது ஒலிக்கும் சுனைகள் நீரோடைகள் கொண்டது.

தேர்வு செய்த இடத்தில் மலையை வைக்கப் பார்மீது ஆதிசேஷன் படுத்ததுபோல இருந்தது.

இருந்தது ஸ்வாமி புஷ்கரிணி என்னும் தடாகம், கிரிகளின் இடையே மற்றும் தருக்களின் நடுவே.

நவரத்தினங்கள் இழைத்த தூண்கள் தாங்கிட நடுநாயகமாக அமைந்து இருந்தது விமானம்.

அழகிய மண்டபங்களோடு கூடிய விமானம் அமைந்தது ஸ்வாமி புஷ்கரிணிக் கரையில்.

எழுந்தருளினார் வராஹ பெருமான் – தாம் விழைந்தபடி பூவுலகில், விமானத்தின் கீழ்.

ஸ்துதி

வராஹ பெருமான் பூமியில் தங்கிவிட்டதால் வந்து பூமியில் துதித்தனர் வானவர், முனிவர், இந்திரன், பிரமன், துவாதச ஆதித்யர்கள்,
ருத்திரர், தேவர், வசுக்கள், திக்பாலகர்கள், கந்தருவர், சப்த ரிஷிகள், மருத் கணங்கள்!
வந்தவர் விண்ணப்பித்தனர் பெருமானிடம்,

“தரணியைப் பாதாளத்தில் ஒளித்து வைத்த ஹிரண்யாக்ஷனை சம்ஹரித்தீர்கள் போரில். ப்ரபாவமும், தோற்றமும் மாறவேயில்லை!
பக்தருக்கு அருள வேண்டும் இன்முகத்துடன்.’ மாற்றிக் கொண்டார் பெருமான் சிரித்தபடியே,
தோற்றத்தையும், தன் முக விலாசத்தையும்!

அழகிய வலிய புஜங்கள் ஒரு நான்குடனும்; அழகிய இருதேவியர் தன் இருமருங்கிலும்,.

கருணை பொழியும் கமலக் கண்களுடனும்; கருத்தைக் கவரும் ஒளிரும் வடிவத்துடனும்; கிரீடாச்சலத்தில் விளங்கும் வராஹ பெருமான்
நிறைவேற்றுகிறார் பக்தரின் கோரிக்கைகளை.

வெள்ளைப் பன்றி வடிவெடுத்ததால் – ஸ்வேத வராஹ கல்பம் என்ற பெயர் வழங்கலாயிற்று.

நாரதர்

கலியுகத்தில் நிகழ்த்தினர் மாபெரும் யாகம் காசியபர் முதலிய முனிபுங்கவர்கள் சேர்ந்து. வேதகோஷம் ஓங்கி ஒலித்தது யாகசாலையில்
தேவரிஷி நாரதர் வந்தார் அந்த யாகசாலைக்கு. “அவிர் பாகம் அளிக்கப் போவது யாருக்கு?” என ஆர்வத்துடன் கேட்டார் முனிவர்களை நாரதர்.

“இன்னமும் முடிவு செய்யவில்லை அதனை இருக்கிறதே காலஅவகாசம் அதற்கு” என்றனர்.

“சத்துவ குணமே முக்குணங்களில் உத்தமம்; சத்துவ குணம் கொண்டவரைக் கண்டறிந்து, பூர்த்தி செய்யுங்கள் உங்கள் யாகத்தை ” என்று
பற்ற வைத்தார் நாரதர் கலஹம் நடப்பதற்கு.

“இறைவன் குணத்தை ஆராயும் அளவிற்குத் திறமை உள்ளவர் யார் உள்ளார் உலகினில்?”

தேர்வு செய்தனர் பிருகுவை பிற முனிவர்கள்;
தேர்வு செய்யவேண்டும் அவர் சத்துவ குணனை. சத்திய லோகம் சென்றார் பிருகு முனிவர்;
பத்மாசனத்தில் அமர்ந்திருந்தார் பிரம்மன். சாவித்திரி, காயத்திரி தேவியருடன் இருந்தனர்
சரஸ்வதி தேவியும், திக்பாலகர்களும் குழுமி!

நின்று கொண்டே இருந்தார் பிருகு – அவரைக் கண்டதாகவே காட்டிக் கொள்ளவில்லை பிரம்மன்!

‘எத்தனை நேரம் தான் நிற்பது?” என்று எண்ணிச் சத்தம் இன்றி அமர்ந்துவிட்டார் பிருகு முனிவர்.

அனுமதி பெறாமலேயே அமர்ந்த முனிவரை அலட்சியம் செய்தார் பிரம்ம தேவன் சபையில்!

முனிவரை அலட்சியம் செய்த பிரம்மனுக்குக் கனிவான சத்துவகுணம் இல்லவே இல்லை

ஈசனும், உமையும்

பிரம்மனின் போக்குப் பிடிக்காத பிருகு பிரம்மலோகத்தை விட்டுச் சென்றார். அடுத்துச் சென்றார் கயிலை மலைக்கு;
அங்கும் ஆனார் சிவபூஜையில் கரடியாக!

தனிமையில் இனிமை கண்டிருந்தவரின் தனிமையைக் குலைத்தார் பிருகுமுனிவர்.

கவனம் வேறிடத்தில் இருந்ததால் ஈசன் கவனிக்கவில்லை முனி பிருகுவின் வரவை.

பெண்ணுக்கு உண்டு அதிக உள்ளுணர்வு; கண்டு விட்டாள் உமை முனிவர் வரவை.

விலகிச் செல்லுமாறு ஈசனுக்குணர்த்த விலகிச் செல்லாமல் நின்று கொண்டிருந்த, முனிவர் மேல் கொண்டான் சீற்றம் சிவன்;
முனிவரும்கொண்டார் சீற்றம் சிவனிடம்.

தேடி வந்தவரைக் காக்க வைத்தது ஒன்று; தேடி வந்தவரை வரவேற்காதது இரண்டு; நாடி வந்த காரணத்தை வினவாதது மூன்று;
நாடி வந்தவரிடம் சினம் கொள்வது நான்கு!

தவறுக்கு மேல் தவறு செய்து கொண்டிருந்த சிவபெருமான் மேல் சீற்றம் பொங்கியது.

கோபத்தின் மிகுதியால் பிருகு முனிவர் சாபத்தை அளித்தார் சிவ பெருமானுக்கு,

“உலகில் இனிக் கிடையாது உனக்கு உருவ வழிபாடு என்ற ஒன்று!” என்றார்

நின்றுவிட்டது சிவனுக்கு உருவ வழிபாடு! இன்றும் எங்கும் நடப்பது லிங்க வழிபாடே.

சத்துவ குணம் இல்லாதவன் சிவன் என பிருகு உத்தம குணனைத் தேடினார் வைகுந்தத்தில்.

நாரணன்

கைலாசம் விடுத்த பின்பு பிருகு முனிவர் வைகுந்த நாதனைச் சோதிக்க விரைந்தார்.

ஆனந்தமாகச சயனித்திருந்தார் நாரணன் ஆதிசேஷன் மீது; லக்ஷ்மி பாதங்களை வருட.

தேவியின் பணிவிடையில் மெய்மறந்திருந்த நாதன் உணரவில்லை பிருகுவின் வருகையை.

‘வேஷம் போடுகிறான் மாயவன் – இவன் வேஷத்தைக் கலைக்கிறேன் இப்போதே!’

இரண்டு இடங்களில் அலட்சியம் செய்தனர் இங்கும் அதுவே தொடருகின்றதே!’ என்று நாரணன் மார்பில் ஓங்கி உதைத்தார் பிருகு,
“நாடகம் போதும் கண்டும் காணாதது போல!”

உதைத்த காலைப் பற்றினார் நாரயணன், உதைத்த போதும் சினம் கொள்ளவில்லை.

“கால் வலித்திருக்குமே முனிவரே! ” எனக் கால் வலி போக அழுத்திவிட்டார் பாதத்தை.

“தூக்க மயக்கத்தில் இருந்து விட்டேன் நான்! துயர் அடைந்தீரோ என்னை உதைத்தால்?”

முனிவருகு ஏற்பட்ட திகைப்பு அளவற்றது!
‘கனிவுக்கும் ஓர் எல்லையே இல்லையோ? உதைத்த காலைச் சபித்திருக்க வேண்டும்
உதைத்த காலை உபசரிக்கிறாரே!’ என்று

“கண்டு கொண்டேன் நான் சத்துவ குணனை கண்டு கொண்டேன் நான் உத்தம குணனை!” பாதங்களில் விழுந்து வணங்கினார் முனிவர்.
பாதகத்தை மன்னிக்க வேண்டினார் முனிவர்.

யாகசாலை திரும்பினர் வெற்றியுடன் – மூன்று லோகத்திலும் சத்துவ குணனை கண்டறிந்ததால்.

லக்ஷ்மியின் கோபம்

ஏகாந்தமாக இருந்த வேளையில் உள்ளே வேகமாக வந்ததோடு நிற்கவில்லை பிருகு!

உதைத்தார் தன் இருப்பிடமான மார்பினை. உதைத்த காலுக்கு நாரணனின் உபசாரம் வேறு. வெகுண்டு எழுந்தாள் அமர்ந்த நிலையில் இருந்து.
வெலவெலத்துப் போனார் நாரணன் அதுகண்டு

பதறிய விஷ்ணு சாந்தப்படுத்தினார் லக்ஷ்மியை. உதறித் தள்ளினாள் கோபம் குறையாத லக்ஷ்மி.

‘அசுத்தம் செய்தான் என் இருப்பிடத்தை பிருகு! அதற்கு அவனைக் கொண்டாடினீர்கள்!” என்றாள்

“அவமதிக்கும் எண்ணம் இல்லை பிருகுவுக்கு! அதீத பக்தி தந்த உரிமையில் உதைத்தான்” என,

“பக்தன் அவன் என்றால் பக்தையே நானும். பக்தன் ஒரு பக்தையை அவமதிக்கலாமா?

வாசஸ்தலம் களங்கப் பட்டது பிருகுவால் வசிக்க முடியாது மீண்டும் அங்கு என்னால்.” எத்தனை சொல்லியும் கேட்கவில்லை அவள்.
“என்னிருப்பிடத்தை உதைத்தான்! ” என்றாள்

வைகுந்தம் விடுத்தாள் லக்ஷ்மிதேவி உடனே. வையகம் அடைந்தாள் தவக் கோலம் பூண்டிட. கரவீரபுரம் சென்று அடைந்தாள் – அங்கு
பரந்தாமனின் பாதங்களை தியானித்தாள்

எப்படி இருக்குமோ லக்ஷ்மி இல்லாத இடம் அப்படியே இருந்தது வைகுந்தம் இப்போது. சோபை மறைந்தது; சோகம் நிறைந்தது;
சூனியமாக இருந்தது காணும் இடங்கள்!

வைகுண்டம் விடுத்தான் நாரணனும்; வையகம் அடைந்தான் நாரணனும் ;

சேஷாச்சலம் இருந்தது கரவீரபுரத்தின் அருகே; சேஷாச்சலத்தைத் தேர்வு செய்தார் நாரணன்.

எறும்புப் புற்று

நாற்புறங்களிலும் மலைச் சிகரங்கள்; ஊற்றெடுத்து ஓடும் இனிய சுனைகள்; சலசலத்து ஓடும் அழகிய சிற்றோடைகள்;
கலகலப்பால் மகிழ்வூட்டும் பறவையினங்கள்;

பள்ளத்தாக்குகள் மலைகளின் இடையிடையில்; உள்ளம் கொள்ளை கொள்ளும் இயற்கையெழில்;

தெளிந்த நீர்த் தடாகத்தைக் கண்டார் நாரணன்; விளங்கிய ஆலயத்தையும் கண்டார் நாரணன்;

அழகிய மண்டபங்கள், விமானம் கொண்ட, ஆதி வராஹ மூர்த்தியின் அழகிய ஆலயம்.

தடாகத்தில் நீராடி வராஹப் பெருமானிடம் தங்குவதற்கு அனுமதி வேண்டினார் நாரணன்;

“எங்கு விருப்பமோ அங்கு தங்கலாம்!”எனத் தங்கு தடையின்றி அனுமதித்தார் வராஹர்.

“தங்குவேன் இங்கேயே கலியுகம் முழுவதும். தடாகத்தில் நீராடித் தங்களைத் தொழுத பிறகே

இங்கு வரும் பக்தர்கள் அனைவரும் என்னையும் இங்கே தொழ வரவேண்டும் இனிமேல்” என்றார்.

நாரணன் சேஷாசலம் சென்றதை அறிந்து நாரணனைத் தேடி ஓடினான் பிரம்மதேவன்.

பிரிவுத்துயர் தாங்காமல் வருந்தி நாரணன் திரிவதைக் கண்டு வருந்தினான் பிரமன்.

வெட்ட வெளியில், கட்டாந்தரையில், படுத்து உறங்கினார் வைகுந்தவாசன்.

அமைக்க விரும்பினான் இருப்பிடம் ஒன்றை; அமைத்தான் நிழல் தரும் புளிய மரத்தினை.

அமைத்தான் அதன் கீழ் எறும்புப் புற்றினை; அமைத்தான் இறங்கிச் செல்லப் படிக்கட்டு.

அமைத்தான் வேலைப்பாடுகள் நிறைந்த அழகிய மண்டபத்தினை புற்றினுள் பிரமன்.

இடைப் பெண்

நாரணனுக்குப் பிடித்திருந்தது புதிய மண்டபம்; நிரந்தரமாகத் தங்க விரும்பினான் அங்கேயே.

‘வைகுந்தம் விடுத்து விண்ணிலிருந்து நாரணன் வையகம் வந்ததை அறிவிக்க வேண்டும் உடனே’. கைலாசநாதனிடம் விரைந்து சென்றான் பிரம்மன்.
“சேஷாச்சலத்தில் உள்ளான் நாரணன்” என்றான்;

நாரணனுக்கு உதவிட ஆவல் கொண்டனர், பிரம்மனும், பிரானும் விரைந்தனர் வையகம்.

சிறு பிணக்கினால் நாரணனிடமிருந்து பிரிந்து சென்ற லக்ஷ்மியிடம் சென்றனர்.

கரவீரபுரம் வந்த பரமேச்வரன், பிரம்மனை வரவேற்றாள் லக்ஷ்மிதேவி மனமுவந்து.

“தாங்கள் பிரிந்து வந்து விட்டதால் நாரணன் தானும் வந்து விட்டார் இப்போது வையகம்.

அனாதை போல அலைந்து திரிகின்றார் வனாந்தரங்களிலும், மலைச்சரிவுகளிலும்!

வராஹ பெருமான் கோவில் தடாகத்தருகே இருப்பிடம் ஒன்றை அமைத்துவிட்டேன்.

ஆகாரத்துக்குச் செய்ய வேண்டும் ஒரு ஏற்பாடு. அரனும், நானும் வைத்துள்ளோம் ஒரு திட்டம்.

மாறிவிடுவோம் நாங்கள் இருவரும் உடனே மடி சுரக்கும் ஜாதிப் பசுவாகவும், கன்றாகவும்!

தடை சொல்லாமல் தாங்களும் உதவ வேண்டும்; இடைப் பெண்ணாக மாறிவிட வேண்டும் நீங்கள்.

சேஷாசலத்தின் அருகே சந்திரகிரியை ஆளும் சோழ ராஜனிடம் விற்று விடுங்கள் எங்களை!”

சந்திரகிரியை நோக்கிப் புறப்பட்டாள் லக்ஷ்மி தேவி, விந்தையான பசு, கன்றுடன் இடைப்பெண்ணாக மாறி.

பசுவின் மாயம்

கரவீர புரத்திலிருந்து புறப்பட்ட இம்மூவரும் விரைவாகச் சென்றடைந்தனர் சந்திரகிரியை.

கன்றையும், பசுவையும் விற்க வந்ததாக நின்ற காவலரிடம் கூறினாள் இடைச்சி.

கொழுகொழு பசுவும், மொழுமொழு கன்றும், அழகால் கவர்ந்தன காவலரின் உள்ளங்களை! அறிவித்தனர் அதை அரசனிடம் சென்று;
தருவித்தான் அவன் அவர்களைத் அருகே.

பளபளப்போடும், சுழிகளோடும் கூடிய பசுவும், கன்றும் கவர்ந்தன அரசனை.

அரசிக்கும் பிடித்துவிட்டது அவற்றை, பராமரித்தாள் தன் கவனத்தில் வைத்து.

இடையன் செல்வான் தினமும் மலைக்கு, விடியற் காலையில் பசுக்களை மேய்க்க.

அரண்மனை திரும்புவான் அன்றாடமும். ஆவினத்துடன், ஆதவன் மறையும் முன்.

மலைக்குச் சென்றபின் பசுவும், கன்றும், மலைச் சரிவில் ஒதுங்கிவிடும் தனியாக.

இடையனின் தலை மறைந்த உடனே எடுக்கும் ஓட்டம் சேஷாச்சலத்துக்கு.

புற்றின் மேல் நின்று பசு பால் பொழிய புற்றினுள்ளே பசியாறுவான் நாரணன்.

திரும்பக் கலந்துவிடும் பிற மாடுகளுடன்! அறியவில்லை இடையன் இம் மாயத்தை!

பசுவைக் கறந்தாள் ராணியே சுயமாக; பசு பால் தரவில்லை ராணிக்குச் சரியாக.

அதிக உணவு அளித்தாள் பசுவுக்கு எனினும் அதிகப் பால் கரக்கவில்லை அந்த மாயப் பசு!

பரந்தாமன்

அரசி சந்தேகித்தாள் அப்பாவி இடையனை,
‘கறந்து குடிக்கின்றனோ வருகின்ற வழியில்?’“மடி பெரிதாக இருக்கிறது பசுவுக்கு – ஆனால்
அடி தட்டுகிறது கறக்கும் பால் விந்தையாக!

கூறு உண்மையை என்ன நடக்கிறது?” அதட்ட ,“அறியேன் நான் ஒரு பாவமும் ” என அழுதான்.

“ஜாக்கிரதை நாளைக்குக் தரவேண்டும் பால்!” எச்சரித்தாள் இடையனைச் சந்திரகிரி அரசி.

இத்தனை ஆண்டுகள் பெறாத அவப் பெயரை பெற்றுத் தந்துவிட்டன இந்தப் பசுவும் கன்றும்.

நம்பவில்லை அந்தப் பசுவை இடையன் சற்றும், ‘ஓம்புகிறதோ பழைய எஜமானுக்குப் பால் தந்து?’ கண் இமைக்காமல் கண்காணித்தான் மறுநாள்;
நண்பகலில் பிரிந்து ஓடின அப் பசுவும், கன்றும். ஓடின சேஷாசலத்தின் மலைச் சரிவுகளில்,
ஓடினான் துரத்திய இடையன் கோடரியுடன்!

புற்றை அடைந்ததும் நின்று விட்டன அங்கு. புற்றின் உள்ளே சுரந்தது மொத்தப் பாலையும்!

கோபம் கொண்டான் இடையன் – ‘அரசியின் நோகும் சொற்களை நான் கேட்டது இதனால்’.

பாய்ந்தான் பசு மீது கோடரியை ஓங்கியபடி; பாய்ந்து வெளிவந்தார் புற்றிலிருந்த நாரணன்.

விழுந்தது வெட்டு நாரணன் நெற்றியில் பிளந்த நெற்றியிலிருந்து பீறிட்டது ரத்தம்!

நனைந்தன பசுவும், கன்றும் ரத்தத்தில்! நினைவிழந்தான் இடையன் அச்சத்தில்!

சோழராஜன்

ரத்தக் கறையுடன் ஓடிவந்தன பசுவும், கன்றும்! சித்தம் குழம்பியது அரண்மனைக் காவலருக்கு!

‘துஷ்ட மிருகங்கள் சேதம் விளைவித்தனவா? கஷ்ட காலம் காணவில்லை இடையனையும்!

யார் யாருக்கு என்னென்ன நிகழ்ந்தனவோ? யாருக்குத் தெரியும்?’ அரசனிடம் ஓடினர்.

வாசலுக்கு விரைந்தான் அரசன் – ஆனால் வழக்கத்துக்கு மாறாகக் குழம்பியது மனம்.

வாலைச் சுழற்றிய பசு ஓடியது தெருவில். வரச் சொல்லுகிறது எனத் தெரிந்து விட்டது.

“செல்லுங்கள் பசுவைத் தொடர்ந்து நீங்கள்! சொல்லுங்கள் அங்கு கண்டதை இங்கு வந்து!”

ஆயுதங்களுடன் விரைந்தனர் காவலர்கள்; அடைந்தனர் புற்று இருக்கும் இடத்தினை.

இடையன் மூர்ச்சித்து விழுந்து கிடந்தான்; கிடந்தது அவன் அருகே ரத்தக் கோடாரி!

கசிந்தது ரத்தம் புற்றின் துவாரத்தில்! வசித்த நாகம் வெட்டுண்டு விட்டதோ?

விரைந்து சென்று கூறினார் அரசனிடம் விரைந்து வந்தான் அரசன் பல்லக்கில்

‘நிகழ்ந்துள்ளது அசாதாரண சம்பவம் ஒன்று ! நிகழ்ந்து விட்டதோ தெய்வக் குற்றம் இன்று?’

தெய்வத்தை எண்ணி தியனித்தான் மன்னன்; “தெளிவாக்குவாய் நிகழ்ந்தவற்றை நீ எனக்கு!

பிழை செய்யப் பட்டிருந்தால் மனமுவந்து பிராயச் சித்தம் செய்கின்றேன் பாவத்துக்கு!”

நாரணன் சாபம்

கோபத்தோடு எழுந்தார் நாரணன் புற்றிலிருந்து கோடரி பிளந்த நெற்றியில் வழிந்தது ரத்தம்!

தரையில் விழுந்து நமஸ்கரித்தான் அரசன், “உரையுங்கள் தேவதேவா! நிகழ்ந்தது என்ன?”

கண்ணீர் விட்டுக் கதறினான் சோழராஜன், செந்நீர் வழிய நின்றிருந்த நாரணனிடம்.

“வைகுந்தம் விடுத்து வையகம் வந்த பின்னர் வாழ்ந்து வருகின்றேன் நான் இந்தப் புற்றில்!

தெய்வப் பசு வந்து சுரக்கும் பாலை எனக்காக; செய்வது ஏதென்று அறியவில்லை இடையன்.

கோடரியால் தாக்க வந்தான் பசுவினை – எனக்குக்கோடரி வெட்டு அடாத செயலைத் தடுத்ததற்கு!”

“ஏய்க்கிறது பசு என்று எண்ணினான் அவன், துய்க்கிறது இறைவன் என்று அறியவில்லை!

சாந்த மூர்த்தியான தாங்கள் கோபம் விடுத்துச் சாந்தம் அடைய வேண்டும் லோக ரக்ஷகா!”

“புற்றில் பால் சுரந்த உடனேயே அவனது சிற்றறிவுக்கு எட்டி இருக்கவேண்டும் இது!

புற்றில் உள்ளது ஏதோ விசேஷம் என்பது. குற்றமே இடையன் கோடரியை வீசினது!”

அத்தனின் உக்கிரம் குறையவில்லை – மன்னன் எத்தனை கெஞ்சினாலும் மாறவில்லை கோபம்!

“குடிமக்கள் செய்யும் பாவம் சேரும் சென்று, குடிமக்களை ஆளும் அரசனையே என்றும்!

யோசியாமல் இடையன் செய்த தவற்றுக்குப் பைசாசமாக மாறித் திரிவாய் நீ வனங்களில்!”

சாபம் இட்டார் அப்பாவிச் சோழமன்னனுக்குச் சாந்த மூர்த்தியாகிய சத்துவ குண நாரணன்.

சாப விமோசனம்

“பிரஜைகளின் தவறுகள் சேரும் அரசனையே! குறைப் படவில்லை கிடைத்த சாபத்துக்கு நான்.

கூறுவீர் சாப விமோசனம் என்ன என்பதை; கூறுவீர் சாபவிமோசனம் பெறும் வழியை!”

“திரிவாய் பிசாசாக மாறி மிகுந்த ஆயுளில்; பெறுவாய் பெருமை நீ அடுத்த பிறவியில்.

பிறப்பாய் சுதர்மன் மகன் ஆகாச ராஜனாக, பிறப்பாள் என் மனைவி உந்தன் மகளாக.

நற்கதி அடைவீர் நீயும், உன் வம்சத்தினரும்; கற்பகாலம் விளங்கும் புகழுடன் உன் பெயர்.”

“சாபமா இது? அரிய வரம் அல்லவோ இது? கோபத்தின் பரிசாகக் கிடைத்தவை இவை!

வைகுந்தவாசனை அடைவேன் மருமகனாக! வைபவ லக்ஷ்மியை அடைவேன் என் மகளாக!

மன்னித்து விடுங்கள் இடையனின் குற்றதை; புன்செயல் புரிந்தான் மதியற்ற மடையன்.”

மயங்கிய இடையன் விழித்துக் கொண்டான் தயங்கித் தயங்கி எழுவதற்கு முயன்றான்.

கண்கள் தெரியவில்லை; பார்வை போய்விட்டது! கண்ணீர் வழிய அழுதான் “ஆண்டவனே!” என்று.

“தண்டனை அனுபவிப்பான் சிறிது காலம் கண் மூடித்தனமான செயல் செய்ததற்கு.

நித்தியவாசனாக அமர்வேன் நான் இங்கு; எத்தினம் இவன் என்னிடம் வருவானோ,

கிடைக்கும் கண் பார்வை மீண்டும் அன்று. கிடைக்கும் வைகுந்தம் பாவத்தை வென்று!

விண்ணுலகு விட்டு பூமிக்கு வந்தபின் கண்டீர்கள் என்னை இந்தக் கோலத்தில்.

இதே கோலத்தில் தங்குவேன் இங்கே!” அதே நொடியில் அந்தர் தியானமானார்.

பைசாச உருவம் தாங்கினான் சோழ ராஜன்; வைகுந்தவாசன் மேல் செய்தான் தியானம்.

வகுள மாலிகை

விடை பெற்றுச் சென்று விட்டாள் லக்ஷ்மி! இடையன் பிளந்தான் நெற்றியைத் தாக்கி!

பிருஹஸ்பதி வந்தார் நாரணனைக் காண; வருந்தினார் நாரணன் படும் துயர் கண்டு.

“கசிகின்றதே நிற்காமல் இன்னமும் உதிரம்! கசியும் காண்போர்கள் கண்களிலும் உதிரம்!

சேஷாச்சலத்தில் இல்லாத மூலிகைகளா? ஈசா! தாங்கள் அறியாத வைத்தியமா?” என

மூலிகையைத் தேடிச் சென்ற நாரணனை – வகுள மாலிகை என்னும் மாது சிரோன்மணி கண்டார்.

ஆதி வராஹரிடம் அதீத பக்தி கொண்டிருந்த அகவை மிகுந்த ஒரு கண்ணியப் பெண்மணி.

பிளந்த நெற்றியிலிருந்து வழிந்த ரத்தம் பிளந்தது அவள் நெஞ்சத்தைத் துயரால்.

கொய்து கொண்டிருந்த மலர்களை விடுத்துத் தொய்ந்து நடந்திருந்த நாரணனிடம் வந்தாள்.

“யாரப்பா நீ? அலைகிறாய் ரத்தக் காயத்துடன் ! யாரும் இல்லையா உன்னைக் கவனிப்பதற்கு?”

கிழித்துத் துடைத்தாள் சேலைத் தலைப்பால்; பிழிந்து கட்டினாள் மூலிகையின் சாற்றால்.

கள்வர்கள் வழிமறித்துத் தாக்கினார்களா கூறு? காயம் வந்த மாயம் என்ன சொல்லு!” என்றாள்.

“அம்மா! யாரும் இல்லாத அநாதை நான் அழைப்பர் என்னை ஸ்ரீனிவாசன் என்று.

பசுவைத் தாக்க முயன்றான் ஒரு பாதகன்; பசுவைக் காத்தேன்; விழுந்தது ஒரு வெட்டு!”

இதயத்தைத் தொட்டது “அம்மா!” என்னும் சொல்! இவளும் யாருமில்லாத ஓர் அநாதை அல்லவா?

ஆனந்தக் கண்ணீருடன் நாரணனை அவள் நோக்க, அகக்கண்கள் திறந்து கொண்டன அதே நொடியில்!

‘தன் எதிரே நிற்பது ஸ்ரீனிவாசன் அல்லவே! தன் எதிரே நிற்பது ஸ்ரீ கிருஷ்ணன் அல்லவா?’

கண் இமைக்கும் நேரத்தில் கண்ட ஒரு காட்சி கண் முன் கொண்டு வந்தது பூர்வ ஜென்மத்தை!

யசோதை

கலியுகம் பிறக்கும் நேரம் நெருங்கி விட்டது. காலில் அம்பு தைத்திருந்தது கிருஷ்ணனுக்கு!

செயல் புரிந்தது ராமாவதாரத்தில் – ஆனால் செயல் பலன் தந்தது கிருஷ்ணாவதாரத்தில்!

வாலியோடு சுக்ரீவன் புரிந்த துவந்த யுத்தத்தில், வாலியைக் கொன்றான் மறைந்திருந்த ஸ்ரீ ராமன்.

கோபம் கொண்ட வாலி ராமச்சந்திரனுக்குச் சாபம் அளித்தான் தன் உயிர் பிரியும் முன்பு.

“மறைந்திருந்து வீழ்த்தினாய் ராமா நீ என்னை! மறைந்திருந்து வீழ்த்துவான் ஒருவன் உன்னை!”

தனிமையில் வனத்தில் அமர்ந்திருந்த கண்ணனின் இனிய பாதங்களை ஒரு பறவை என எண்ணினான்.

அம்பு எய்தான் வேடன் சாபத்தை நிறைவேற்ற. அன்பு கொண்டவர்கள் துடித்தனர் இதைக் கண்டு .

“வைகுந்தம் திரும்புகின்றேன் நான் – நீங்களும் மெய்யுருவம் அடையலாம் முன் போலவே!

சேஷாச்சலத்தில் உறைவேன் நான் கலியுகத்தில். சென்று காத்திருங்கள் என் வருகைக்கு!” என்றான்

விடுத்தனர் கோபியர் தங்கள் மாய உருவங்களை. எடுத்தனர் முன் போல் தம் பழைய உருவங்களை.

“எப்போதும் உன் அன்னையாகும் பாக்கியத்தைத் தப்பாமல் எனக்குத் தரவேண்டும் என் கண்ணா!”

யசோதை வேண்டினாள் கண்களில் அருவியுடன், யசோதைக்கு அருளினான் அவள் கேட்ட வரத்தை.

வகுள மாலிகையாகக் காத்திருப்பாய் அம்மா! வெகு விரைவில் வருவேன் சேஷாச்சலத்துக்கு.”

இருவரும் ஒருவரே!

கண நேரத்தில் உணர்ந்தாள் தான் யாரென! “கண்ணா! ” என அணைத்ததாள் அன்புடன்!

“அநாதைகள் அல்ல இனி நாம் என் மகனே! அநாதி காலமாக உள்ளது நமது உறவு!” என

அழைத்துச் சென்றாள் இனிக்கும் ஓடைக்கு; பழுத்த கனிகளைப் பறித்து உண்ணத் தந்தாள்.

“இனிமேல் இருந்துவிடு நீ என்னுடனேயே! தனியாக முன்போல் தவிக்க வேண்டாம்!”

“வந்து பார் நான் தாங்கும் இடத்தை!” என்று சிந்தை மகிழ்ந்து அழைத்தார் ஸ்ரீநிவாசன்

புற்றுக்கு அழைத்துச் சென்றார் அவளை; புற்றினுள் காட்டினர் தம் இருப்பிடத்தை!

வராஹ பெருமானை வணங்கச் சென்றாள், வகுள மாலிகை தினமும் செய்வது போல.

“வழக்கதை விடத் தாமதமாக வந்துள்ளாய்! வழக்கத்தை விட நீ ஆனந்தமாக உள்ளாய்!”

வம்புக்கு இழுத்தார் அந்த வகுள மாலிகையை, அன்புடன் அவள் தொழும் வராஹ பெருமான்!

ஸ்ரீனிவாசன் கதையைக் கூறினாள் அவள்.
“ஸ்ரீனிவாசன் வேறு,  நான் வேறு அல்ல!

அங்கே அவனுக்கு நீ செய்யும் தொண்டு இங்கே எனக்கு இனி வந்து சேர்ந்து விடும்.

கவனிப்பாய் நீ ஸ்ரீனிவாசனின் தேவைகளை. கலியுக முடிவில் சேர்வாய் என் பாதங்களை!”

ஆகாச ராஜன்

திரிந்தான் பைசாச உருவில் சோழராஜன்; பிறந்தான் பூவுலக வாழ்வை நீத்த பிறகு, நாராயண புரத்தை ஆண்டு கொண்டிருந்த
நல்ல மன்னன் சுதர்மனின் முதல் மகனாக. ஆகாச ராஜன் என்ற பெயரை வைத்தனர். அன்புடன் அவனைப் பேணி வளர்த்தனர்.

பிறகு பிறந்தது இன்னொரு ஆண் மகவு; பெயர் விளங்கியது தொண்டைமான் என. ஒற்றுமையாக வளர்ந்தனர் இருவரும்;
போற்றினர் அனைவரும் இருவரையும்.

சுதர்மன் விரும்பினான் வனவாசம் செல்ல; சுபமாக மணிமுடி தரித்தான் ஆகாசராஜன்.

இளவரசுப் பட்டம் கிட்டியது இளையவனுக்கு;  இருவரும் ஏற்றனர் தந்தையின் விருப்பத்தை.

உயர்குலப் பெண்களை மணந்து கொண்டனர்; பெயர் விளங்கும்படி நிர்வகித்தனர் நாட்டினை.

உருண்டோடின வருடங்கள் ஒவ்வொன்றாக, பெருகின வளமும், நலமும் அந்த நாட்டில்.

ஆனந்தம் கொண்டிருந்தனர் அனைவருமே ஆகாச ராஜன் என்னும் மன்னனைத் தவிர!

குழந்தை ஒன்று இல்லை கொஞ்சுவதற்கு! குழந்தை ஒன்றில்லை முத்தாடுவதற்கு!

“இப்பிறவியில் செய்யவில்லை ஒரு பாதகம்; முற்பிறவியில் செய்ததை யாம் அறிகிலோம்.

குலகுரு சுகர் அறிவார் மூன்று காலத்தையும். குலகுரு கூறுவார் நல்வழி ஒன்றை நமக்கு!”

அரசி ஆலோனை கூறினாள் அரசனுக்கு; அரசன் அழைத்து வரச் சொன்னான் சுகரை.

பல்லக்குச் சென்றது சுகரை அழைத்துவர, சொல்லுக்கு வல்லவர் சுகர் அங்கு வந்தார்.

மரப் பேழை

பல்லக்கில் வந்த குலகுரு சுகரை ஆகாசராஜன் உள்ளன்போடு வரவேற்றான் அரசியுடன் சென்று.

‘அழைத்த காரணம் என்ன அரசே?” என வினவ, “விழைகின்றோம் மழலைச் செல்வத்தை யாம்!

பலன் தரவில்லை புரிந்த தான தருமங்கள்; பலன் தரும் வழியைக் கூறவேண்டும் தங்கள்!”

“புத்திர காமேஷ்டி யாகம் செய்தால் – உனக்கு உத்திரவாதமாகப் பிறக்கும் குழந்தை!” என

“பொய்க்காது பெரியோரின் ஆசி மொழிகள்; செய்வோம் யாகத்தைத் தங்கள் ஆசியுடன்!”

குறித்தனர் நல்ல நாள் ஒன்றை யாகத்துக்கு; குவித்தனர் யாகப் பொருட்களைக் கொணர்ந்து.

குழுமினர் வேத விற்பன்னர்கள் யாகம் புரிந்திட அழைப்புகள் சென்றன அருமை நண்பர்களுக்கு!

உழுதான் ஆகாச ராஜன் அந்த யாக பூமியை, தொழுத பின்பு இறையையும், குருவையும்.

வேத கோஷம் செய்தனர் வேத விற்பன்னர்கள். கீத நாதம் ஒலித்தனர் இசை விற்பன்னர்கள்.

நிலத்தை உழுத ஆகாச ராஜனின் கலப்பை நின்று விட்டது ஓரிடத்துக்கு வந்தவுடன்.

அழுத்தி உழுதவுடன் எழுந்தது ஒரு சப்தம்; ஆழத்தில் கலப்பையைத் தடுத்தது எதுவோ!

தோண்டினர் காவலர் நிலத்தை விரைந்து; கண்டனர் அழகிய ஒரு மரப் பேழையை!

பேழை வந்தது அரசனிடம் பத்திரமாக! பேழை வீசியது ஓர் அரிய நறுமணத்தை.

பத்மாவதி

தென்றல் தழுவிச் சென்றது குளிர்ச்சியாக! தெளித்தது வானம் நன்னீர்த் துளிகளை!

பூமியை உழுத ஜனகனுக்குச் சீதையைப் போல, பூமியை உழுத மன்னனுக்கு கிடைத்தது என்ன?

பேழையைச் சமர்பித்தான் மன்னன் குருவிடம்; பேழையைத் திறந்தார் ஆர்வத்துடன் குலகுரு.

ஆயிரக் கணக்கான தாமரை இதழ்களில் ஆனந்தமாக சயனித்திருந்தாள் குழந்தை!

பெருகியது கண்ணீர் பெருகிய உவகையால்! பரிவுடன் வணங்கினான் குருவின் பாதங்களை!

ஆகாசத்தில் இருந்து ஒலித்தது ஓர் அசரீரி.“ஆகாச ராஜன்! பூர்வ ஜன்ம புண்ணியம் இது.

பூர்த்தியடைந்தது உன் நித்திய கோரிக்கை. புத்திரி கிடைத்தாள் உன் மனக் குறை தீர!”

மார்புறத் தழுவினான் மலர்க் குழந்தையை! ஆர்வத்துடன் அடைந்தான் அரண்மனையை.

பெயர் இட்டான் குழந்தைக்கு பத்மாவதி என. பெயர்க் காரணம் தாமரையிதழ்களில் சயனம்.

நடத்தினான் தான தருமங்கள் நாடெங்கும்; நடத்தினான் பூஜைகள் ஆலயங்கள் எங்கும்.

தன் வீட்டிலேயே தேவி வந்து பிறந்ததுபோல தன்னிறைவு அடைந்தனர் ஒவ்வொருவரும்.

நாரதர்

நாளொரு மேனி பொழுதொரு வண்ணம்;
நற்குணங்கள் அனைத்தின் ஓர் இருப்பிடம்.

நந்த வனத்தில் தோழியாரோடு ஆனந்தமாகப்
பந்து விளையாடுகையில் வந்தார் ஒரு கிழவர்.

வயது முதிர்ந்த கிழவராக வந்த நாரதர்
“பயத்தை விட்டுவிட்டு வா இங்கே!” என,

தயங்கினாள் பத்மாவதி அவரை அறியாது!
“தயக்கம் வேண்டாம் நான் அந்நியனல்ல!

கைரேகை கண்டு சொல்லுவேன் பலன்
தையல் உந்தன் எதிர் காலத்தைப் பற்றி!”

நீட்டினாள் தன் இடக் கரத்தை பத்மாவதி
நீட்டிய கரத்தைப் பிடித்து நோக்கினார் அவர்.

“தெய்வாம்சம் பொருந்திய கை கூறுகிறது!
வைகுந்த வாசனை நீ மணக்கப் போகிறாய்!”

“அத்தனை பாக்கியமா எனக்கு?” வியந்தாள்!
அவள் கண்டாள் நாரத முனிவரை எதிரில்.

“அறிவிக்கவே வந்தேன் உனக்கு நான் இன்று !
அறிவாய் உன் கணவன் வைகுந்தவாசன் என்று!”

ஆட்டத்தில் செல்லவில்லை அவள் மனம்;
நாட்டம் கொண்டு விட்டது பரந்தாமனிடம்!

நிறைத்தாள் உள்ளம் முழுவதும் நாரணனை.
உரைத்தாள் உள்ளன்போடு “நாராயணா!” என்று!

“பருவ வயதில் உனக்கு இத்தனை பக்தியா?” என
அருமைத் தோழிகள் கேலி செய்தனர் அவளை!

கேட்டாள் நாராயணன் செய்த லீலைகளை.
கண்டாள் நாராயணனின் திவ்விய ரூபத்தை.

உரைத்தாள் நாராயணின் திவ்ய நாமங்களை.
பணிந்தாள் நாராயணின் திவ்ய விக்ரஹத்தை.

வைகுந்தவாசனை மணக்கும் சுபவேளைக்குத்
தையல் காத்திருந்தாள் மிக்க ஆர்வத்துடன்.

11a. சந்திப்பு

உலவின துஷ்ட மிருகங்கள் தம் இஷ்டம் போல!
நிலவியது ஆபத்து வனத்தில் வசிப்பவர்களுக்கு!

சுனை அருகே வசிப்பவர்களுக்கு பிராண அபாயம்,
சுனையில் நீர் பருகும் சாது பிராணிகளுக்கும் கூட.

“வேட்டைக்குப் போகின்றேன் அம்மா – விலங்குகளின்
கொட்டத்தை அடக்குவதற்கு!” என்றான் ஸ்ரீனிவாசன்.

காட்டை விட்டு வெளியே வந்து திரிபவைகளைக்
காட்டுக்குள் விரட்டினான் அவற்றை அச்சுறுத்தி.

துவம்சம் செய்து கொண்டிருந்தது ஒரு மத யானை!
துரத்தியவுடன் ஓடியது காட்டை விட்டு வெளியே.

வெளியறியது அது சேஷாச்சலத்தை விட்டு விட்டு!
வெறி கொண்ட யானையை விடலாகாது அன்றோ?

நாரயணபுரத்தை நோக்கி ஓடியது மத யானை.
நாராயணனும் துரத்திச் சென்றான் யானையை.

நுழைந்தது ஆகாசராஜனின் உத்தியான வனத்தில்!
‘இழைக்குமோ ஆபத்து அங்கிருந்த பெண்களுக்கு?’

அம்பினால் அடித்தான் அந்த மத யானையை.
தும்பிக்கையைத் தூக்கிப் பிளிறிவிட்டு ஓடியது.

யானை சென்றபின் அழைத்தனர் பத்மாவதியை,
“யானை வந்துள்ளது, திரும்புவோம் அரண்மனை!”

யானையை விரட்டிய நாரணன் வந்தான் அங்கே.
யானை சென்று விட்டது; இருந்தனர் அப் பெண்கள்.

மற்ற பெண்களிடையே இருந்தாள் பத்மாவதி
மணிகளிடையே ஜொலிக்கும் வைரம் போல.

முககாந்தி ஈர்த்தது இரும்பைக் காந்தம் போல.
முன்னேறினான் பெண்கள் கூட்டத்தை நோக்கி.

11b. “வாசுதேவன் நானே!”

அந்நிய ஆடவனைக் கண்டதும் தோழியர்
சொன்னார்கள், “திரும்பிச் செல்வோம்!” என.

“தெரிந்து கொண்டு வாருங்கள் அவன் யார் என!”
“யார் நீங்கள்? இங்கு என்ன வேலை? கூறுவீர்!”

நடந்தான் ஸ்ரீநிவாசன் பத்மாவதியை நோக்கி
தடுக்க முடியவில்லை தோழிப் பெண்களால்!

“ஆடவருக்கு நுழைய அனுமதி இல்லையா?
அறியாமல் வந்து நுழைந்து விட்டேன் இங்கு!

கண்டேன் வனத்தில் மத யானை ஒன்றை!
கண்டதும் யானை ஓடலானது வேகமாக!

காட்டுக்குள் செல்லவில்லை அந்த யானை;
நாட்டுக்குள் நுழைந்தது; நந்தவனம் வந்தது !

கன்னியரைத் துன்புறுத்துமோ என்று அஞ்சி
கணை ஒன்றை எய்து விரட்டினேன் அதை.

பூரணச் சந்திரன் போன்ற முகம் கொண்ட
ஆரணங்குடன் பேச விரும்பி வந்தேன்.”

“யானை திரிந்தால் தெரிந்திருக்கும் எமக்கும்!
யார் நீர்? எதற்கு வந்துள்ளீர்? உண்மை கூறும்.”

“வசிப்பது சேஷாச்சலம்; சிந்து புத்திரர் குலம்;
வசுதேவர் தந்தையார்; தேவகி தாயார் ஆவார்.

பஞ்ச பாண்டவர்களுக்கு ஆப்த நண்பன் நான்;
கொஞ்சப் பெயர்களா நான் சொல்லுவதற்கு?”

“பித்தம் தலைக்கு ஏறி விட்டது உமக்கு!
வைத்தியரைப் போய்ப் பாரும் உடனே!

உத்தியான வனத்தில் பெண்களிடம் வந்து
எத்தன் வேடமா போடுகின்றீர்கள் நீங்கள்?

பைத்தியக்காரன்! யசோதை கிருஷ்ணனாம்!
வைத்தியம் செய்து கொள்ளும் விரைவாக.

ஜோலியைப் பார்த்துக் கொண்டு செல்வீர்!”
கேலி பேசினார் பத்மாவதியின் தோழியர்.

11c. சினம் பெருகியது

“அரசகுமாரி தங்களைப் பற்றிய விவரங்கள்
அனைத்தும் அறிய வேண்டும் நான் இப்போது.”

“தாராளமாகத் தெரிந்து கொள்ளுங்கள் ஐயா!
நாராயணபுர மன்னன் ஆகாசராஜனின் மகள்.

பத்மாவதி என்பெயர், தாரணி தேவி என் தாய்;
அத்திரி கோத்திரம், நாங்கள் சந்திர வம்சம்.

உத்தியான வனம் உண்டானது எனக்காக.
இத்தனை விவரங்கள் போதுமா உமக்கு?”

“என்ன பொருத்தம் நமக்குள் இந்தப் பொருத்தம்!
என்னை மணந்து கொள்ள உனக்கு விருப்பமா?”

கோபம் வந்து விட்டது இளவரசி பத்மாவதிக்கு!
கோபம் கொண்டனர் பத்மாவதியின் தோழியரும்.

“அத்து மீறிப் பேசவேண்டாம் பித்துப் பிடித்த ஐயா!
பத்திரம் இவள் அரசகுமாரி, நினைவிருக்கட்டும்!”

“கன்னி பெண்ணை நான் மணக்க விரும்புவதில்
என்ன தவறு எனத் தெரியவில்லையே!” என்றான்.

பல்லைக் கடித்தாள், கண்களை உருட்டினாள்,
தொல்லை தரும் மனிதனுடன் என்ன பேச்சு?

வைகுந்தவாசனை வரித்த என்னை ஒரு
வழிப் போக்கன் மணக்க விரும்புவதா?

சினம் தலைக்கு ஏறியது பத்மாவதிக்கு
மனம் அவனைத் தண்டிக்க விரும்பியது.

“அனுமதி இல்லாத இந்த இடத்துக்கு வந்து
அத்து மீறி நுழைந்தது உம் முதல் தவறு!

தனித்து இருக்கும் இளம் பெண்களிடம்
தவறாகப் பேசுவது இரண்டாவது தவறு.

கன்னிப் பெண் இவள் என்று அறிந்திருந்தும்
கண்ணியம் இன்றிப் பேசுவது மூன்றாவது.

சுய உணர்வு இல்லை போலும் உமக்கு!
மயக்கத்தில் பேசுகின்றீர் போலும் நீர்!

தயவு செய்து சென்று விடுங்கள் உடனே!
பயம் இல்லையா அரசனின் கோபத்துக்கு?”

விடாக் கண்டன் கொடாக் கண்டன் கதையானது!
இடத்தைக் காலி செய்ய மறுத்தான் ஸ்ரீநிவாசன்!

1d. மோதலும், காதலும்!

“எந்த விதத்தில் குறைந்துவிட்டேன் பெண்ணே?
என்னை மணக்கப் புண்ணியம் பண்ண வேண்டும்!”

“அம்பு எய்து மதயானையை விரட்டிய பின்பும்
வம்பு செய்து எம்மைத் துன்புறுத்துவது ஏனோ?”

“போகாவிட்டால் என்ன செய்ய முடியும் உன்னால்?”
“போகாவிட்டால் உங்கள் உயிரை வாங்கிவிடுவேன்!”

“உயிருக்கு அதிபதியான என் உயிரையா?”என்றான்.
“பயித்தியத்தை அடித்து விரட்டிவிடுங்கள்!” என்றாள்.

சொல்லடிகள் பட்டு நின்றிருந்த ஸ்ரீனிவாசனுக்குக்
கல்லடிகள் கொடுக்கலாயினர் தோழிப் பெண்கள்.

காயம் பட்டது சில கற்கள் தாக்கி – எனினும்
நியாயம் கேட்க நிற்கவில்லை ஸ்ரீநிவாசன்!

மோதல் ஏற்படும் இருவர் சந்தித்தவுடனே!
காதல் ஆகிவிடும் பின்னர் சிந்தித்தவுடனே!

அடித்து விரட்டச் சொன்ன பத்மாவதியை
அடித்து விட்டன மன்மதனின் பாணங்கள்.

நாரணன் வெளியேறிய பின்னர் உலகம் தன்
பூரணத்துவம் இழந்தது போல் தோன்றியது.

உலகமே இருண்டது போலத் தோன்றியது
கலகமே நிறைந்த மனதின் நினைவுகளால்!

பாலும் கசந்தது; பஞ்சணை வருத்தியது;
கோலம் மாறியது; பசலை நோய் படர்ந்தது.

“மந்திரம் போட்டுவிட்டானோ அந்தத்
தந்திரம் அறிந்த வம்புக்கார வாலிபன்?

உற்சாகமாகச் சண்டையிட்டாள் அவனுடன்!
உற்சாகம் இழந்து ஆளே மாறிப் போய்விட்டாள்.

ரதத்தில் ஏற்றி அமர்த்தினர் பத்மாவதியை;
ரதம் விரைந்தது மன்னனின் மாளிகைக்கு.

11e. காதல் நோய்

அந்தப்புரம் சென்று வணங்கினர் அரசியை
அரண்மனை திரும்பிய உடன் தோழிகள்

வாடிய முகங்கள்; வாயடைத்த பெண்கள்;
தேடினாலும் காணவில்லை பத்மாவதியை!

“அன்னியன் ஒருவன் நுழைந்து விட்டான்
அரண்மனை உத்தியான வனத்தில் இன்று!

மதயானையைத் துரத்தி வந்தானாம் அங்கு.
மதயானை ஓடிவிட்டது அவன் பாணத்துக்கு!

வம்பு செய்து பேசினான் பத்மாவதியிடம்;
கம்பு கொண்டு புடையாமல் கல் எறிந்தோம்.

நழுவினான் கழுவும் மீனில் நழுவும் மீனாக!
இழந்துவிட்டாள் இவள் தன் உற்சாகத்தை!

மகளைத் தேடி ஓடினள் அரசி அந்தப்புரத்தில்.
மகளோ வெட்டவெளியை வெறித்திருந்தாள்!

‘கெடுதலே நினையாத நான் இன்று மட்டும்
கொடூரமாக ஏன் நடந்து கொண்டு விட்டேன் ?

அடி பலமாகப் பட்டிருக்குமோ என்னவோ?
துடிப்பான இளைஞன்! பயித்தியம் அல்ல!’

அன்னை வந்ததையும் கவனிக்கவில்லை;
சொன்ன சொற்களையும் கவனிக்கவில்லை!

திருஷ்டி கழித்தாள் அரசி பத்மாவதிக்கு!
திரு நீறு பூசினாள் அரசி பத்மாவதிக்கு!

உணவு இறங்கவில்லை பத்மாவதிக்கு!
உறக்கமும் பிடிக்கவில்லை பத்மாவதிக்கு.

குலகுரு சுகர் வந்தார், அறிவுரைகள் தந்தார்;
“மலர்வனம் அருகேயே அகத்தியர் ஆசிரமம்!

பரமசிவன் அபிஷேக நீரைக் கொண்டுவந்து
அரசகுமாரி மேல் தெளித்தால் குணமாகும்!”

பதினோரு வேத விற்பன்னர்கள் சென்றனர்,
பரமசிவனுக்கு அபிஷேக ஆராதனை செய்ய!

12. பத்மாவதி யார்?

விடியலில் எழும் ஸ்ரீனிவாசன் அன்று
வெகுநேரம் வரையிலும் எழவில்லை.

வேட்டையாடின களைப்பு என்று எண்ணி
விட்டு விட்டாள் அவனை வகுளமாலிகை.

விழித்துக் கொண்டு விருதாகப் படுத்திருந்தான்;
எழுப்பினாலும் எழவில்லை மஞ்சத்திலிருந்து.

என்ன நடந்தது என்று பலவாறாகக் கேட்டும்,
என்ன நடந்தது என்று சொல்லவே இல்லை.

“எவள் மீதாவது மோஹம் கொண்டாயா?” என,
“எப்படிக் கண்டு பிடித்தீர்கள் அம்மா?” என்றான்!

“நீராடி உணவருந்திய பின் கூறு என்னிடம்,
நீ கண்ட பெண்ணைப் பற்றிய விவரங்களை!”

“காட்டில் வேட்டையாடும் போது நான் கண்டேன்
காட்டு யானை ஒன்று மதம்கொண்டு திரிவதை!

மனிதர்களுக்குத் தீங்கு செய்யுமோ என்றஞ்சி
கனத்த காட்டுக்குள் விரட்டி விட முயன்றேன்.

மலைச் சரிவில் இறங்கி ஓடியது மதயானை.
மலர் வனம் ஒன்றில் புகுந்தது அம்மதயானை.

நாராயண புரத்தை ஆட்சி செய்யும் மன்னன்
ஆகாசராஜனின் விசேஷ மலர்வனமாம் அது.

மன்னன் மகள் இருந்தாள் தன் தோழியருடன்;
மனதைப் பறிகொடுத்துவிட்டேன் கண்டவுடன்!

விருப்பத்தைத் தெரிவித்தேன் நான் அவளிடம்;
விரட்டி விட்டாள் என்னைக் கல்லால் அடித்து .

எங்கெங்கு நோக்கிலும் தெரிவது அவள் முகமே!
எங்கள் திருமணம் நடக்குமா அம்மா?” என்றான்.

“மணம் செய்ய விரும்புகிறாய் பத்மாவதியை.
குணம் கொண்டவளா உனக்கு ஏற்றவாறு?”

“அறியமாட்டாய் நீ அவள் யார் என்பதை!
அறிவேன் நான்! கூறுவேன் உனக்கும்!”

13a. வேதவதி

திரேதா யுகத்தில் இலங்கேஸ்வரன்
திரிலோக சஞ்சாரம் செய்து வந்தான்.

இமாலயச் சாரலில் கண்டு மோஹித்தான்
அமானுஷ்ய அழகுடைய ஒரு சுந்தரியை.

வேதவதி என்ற அந்தக் கன்னிகைக்கு
வேதவாக்கு ஆகும் தந்தையின் சொல்.

மகாவிஷ்ணுவை வரித்தாள் தன் மணாளனாக;
ஹிமாச்சலத்தில் செய்து வந்தாள் கடும் தவம்.

நெருங்கினான் வேதவதியை இலங்கேஸ்வரன்.
விரும்பினான் அவள் அழகை அனுபவிப்பதற்கு!

“பரந்தாமனை வரித்துவிட்டேன் மணாளனாக!
பர புருஷர்களுக்கு இடமில்லை மனதில்” என்றாள்.

“பரந்தாமனுக்கு இளைத்தவனோ இந்த ராவணன்?
பரம சுகமாக வாழலாம் என்னை மணந்துகொண்டு!”

வேதவதி ஏற்கவில்லை இந்தக் கோரிக்கையை.
வேண்டாம் என்றால் விடுபவனா இராவணன்?

தலைக்கு ஏறிவிட்ட மோக வேகத்தில் – அவள்
தலை மயிரைப் பற்றிக் கொண்டு சூளுரைத்தான்.

“அடையாமல் ஓய மாட்டேன் நான் விரும்பியதை!”
அடிபட்ட பெண் நாகமாக மாறிவிட்டாள் வேதவதி.

“கேசத்தைத் தீண்டி அதை மாசு படுத்திவிட்டாய்!
கேசவனுக்கு உகந்தது அல்ல அது இனிமேலும்!”

திட மனத்தோடு தவம் புரிந்துவந்த வேதவதியின்
இடக்கையே மாறி விட்டது ஒரு கூரிய கத்தியாக!

கேசத்தையே துண்டித்து விட்டாள் இடக் கையால்!
மோசமான எண்ணத்தை அது மாற்றிவிடவில்லை.

திடுக்கிட்டான் ராவணன்; மனம் தளரவில்லை;
தடுத்ததால் மேன்மேலும் வளர்ந்தது காம ஜுரம்.

13b. வேதவதியின் சாபம்

அண்டம் குலுங்க நகைத்தான் ராவணன்;
கொண்டது விடா முதலையும், மூர்க்கனும்!

“மந்திர, தந்திரப் பிரயோகங்கள் என்னிடத்திலா ?
தந்திரங்களில் பெயர் போனவன் இந்த ராவணன் !”

மீண்டும் நெருங்கினான் வேதவதியை ராவணன்;
மீண்டும் தியானித்தாள் வேதவதி பரந்தாமனை;

வேதவதி ஒரு புனிதவதி அதனால் அங்கு
வேகமாக வளர்ந்தது அக்கினி ஒரு தடுப்பாக.

திகு திகு என்று எரியத் தொடங்கியது அது
திகில் அடைந்த அபலையைக் காப்பதற்கு.

வரவழைத்தான் ராவணன் வஜ்ஜிராயுதத்தை.
எரியும் தீயை அணைக்க முயன்றான் அவன்.

‘கற்பைக் காத்துக் கொள்ள இருக்கும் ஒரே வழி
கயவன் தொடுமுன் உயிரை விடுவதே ஆகும்!’

“காமத்தால் கண்ணிழந்து விட்ட அரக்கனே!
காமம் நிறைவேற அனுமதிக்க மாட்டேன்!

விடுவேன் என்னுயிரை எரியும் தீயில் குதித்து;
விடாது என்றும் இந்தப் பாவம் உன் குலத்தை!

பழி தீர்க்கும் உன்னை என்றாவது ஒருநாள்!
அழிவாய் நீயும், உன் குலமும் பெண்ணால்!”

சாபம் இட்டாள்; குதித்தாள் அந்த நெருப்பில்
சாபம் வீண் போகவில்லை பலித்தது பிறகு.

சீதையிடம் கொண்ட விபரீத மோஹமே
சீரழித்துவிட்டது அவன் வம்சத்தினையே1

13c. இரண்டு சீதைகள்

தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை எனத்
தன்னாட்டை விடுத்துக் கனகம் ஏகினான்

தம்பியுடனும், சீதையுடனும் ஸ்ரீ ராமன்.
தங்கினர் பஞ்சவடியில் அமைதியுடன்.

தையல் சீதையைத் தாக்கினாள் – ராமனிடம்
மையல் கொண்டுவிட்ட அரக்கி சூர்ப்பனகை.

காது, மூக்கு அறுபட்டு அலறி ஓடிச் சென்று
ஓதினாள் சீதையின் அழகை ராவணனிடம்.

காமம் கொண்டான் கண்டிராத சீதைமீது!
ஏமாற்றினான் ஒரு மாய மானை அனுப்பி!

அப்புறப்படுத்தினான் ராம, லக்ஷ்மணர்களை.
அபகரித்தான் சீதையைப் பர்ணசாலையுடன்.

“அபாயம் நேரக் கூடாது சீதைக்கு!” என்று
உபாயம் ஒன்று. செய்தான் அக்கினிதேவன்

வேதவதியுடன் வந்தான் விரைந்து வெளியில்!
வேகமான ராவணனை மறித்தான் வழியில்!

“உண்மை சீதை இருக்கிறாள் என்னிடம்;
உன்னிடம் இருப்பவள் ஒரு மாயச் சீதை.

எடுத்துச் செல் இந்த உண்மை சீதையை!
விடுத்துச் செல் அந்த மாயச் சீதையை!”

நம்பினான் அக்கினியின் சொற்களை ராவணன்;
அம்பென விரைந்தான் வேதவதியுடன் இலங்கை.

சீதையை விட்டு விட்டான் அக்கினிதேவனிடம்;
சீதையை விட்டான் ஸ்வாஹாவிடம் அக்கினி.

ராவணன் அழிந்தபின் அக்கினிப் பரீட்சை
ராமன் செய்யச் சொன்னன் வேதவதியிடம்.

வலம் வந்தாள் அக்கினியை மூன்று முறை;
வணங்கினாள் ராமனை; இறங்கினாள் தீயில்!

வெளிப்பட்டார் அக்கணமே அக்கினி தேவன்!
வெளிப்பட்டனர் அவருடன் இரண்டு சீதைகள்!

13d. ஏக பத்தினி விரதம்

“இருவரையும் ஏற்றுக் கொள்ளுங்கள்” என்றான்.
ஒருவருக்கும் ஒன்றும் புரியவில்லை என்பேன்.

“இவர் தங்கள் தேவி சீதா பிராட்டியார்;
இவர் வேதவதி என்னும் பிராட்டியார் .

வேதவதியே ராவணனின் சிறையிலிருந்தவர்;
தேவன் விஷ்ணுவை மணாளனாக வரித்தவர்.

இமயத்தில் நிஷ்டையில் இருக்கும் வேளை,
இராவணன் கண்டு மோஹித்தான் இவளை.

பலவந்தம் செய்ய நெருங்கினான் இவளை;
பயந்து தீயினில் குதித்துவிட்டாள் இவள்.

பத்திரமாக ஒப்படைத்தேன் என் மனைவியிடம்
தந்திரமாக மீட்டோம் சீதா தேவியைப் பின்னர்.

இருவருமே தங்களுக்கு உரியவர்கள் தாம்!
இருவரையும் ஏற்க வேண்டும் தங்கள்!” என;

சீதையும் கூறினாள் ராமனிடம் சென்று
“வேதவதி துன்புற்று என்னைக் காத்தாள்.

தாமதம் இன்றி ஏற்றுக் கொள்வீர் அவளை!”
ராமன் ஏற்கவில்லை இந்த வேண்டுகோளை.

“ஏக பத்தினி விரதம் பூண்டுள்ளதை அறிவாய்
ஏற்றுக் கொள்ள முடியாது இவளை இப்போது!

கலியுகத்தில் வசிப்பேன் சேஷாச்சலத்தில்,
கலியுகத்தில் மணப்பேன் நான் வேதவதியை.

ஆகாசராஜன் மகள் பத்மாவதி ஆவாள் – இவள்.
அரும் தவம் பலித்து என்னையும் மணப்பாள்!”

14a. சிவ ஆராதனை

“வேதவதியே இப்போது பத்மாவதி – அதனால்
வேண்டுமென்றே விலகிச் சென்றாள் லக்ஷ்மி.”

மன்னனைச் சந்திக்கச் சென்றாள் வகுளமாலிகை;
அன்னையுடன் சற்று வழி நடந்தான் சீனிவாசன்.

மாலை மங்கியது நகரை நெருங்குகையில்;
கோலாகல ஆராதனைகளின் ஒலி கேட்டது

அருகிலே இருந்த அகத்தியரின் ஆசிரமத்தில்;
விரும்பிக் கலந்து கொண்டாள் பூஜைகளில்!

விரைந்து சென்று நகரை அடைந்தாலும்
இரவில் மன்னனைக் காண முடியாதே!

வேதபாராயணம் தொடர்ந்து நடந்தது;
வேத வல்லுனர் செய்தனர் அபிஷேகம்.

விமரிசையாக நடந்தன பூஜைகள்.
வந்த காரியத்தில் வெற்றி நிச்சயம்!

“ஆராதனைக்குக் காரணம் என்ன?” என
“நாரயணபுரி இளவரசிக்காக நடக்கிறது.

உற்சாகம் இழந்து விட்டாளாம் திடீரென்று!
உறங்குவதும், உண்பதும் இல்லையாம்!”

‘காதல் வயப்பட்டுள்ளாள் பத்மாவதி தேவி!
காதலுக்கு வைத்தியம் கல்யாணம் அன்றோ?’

பூஜை முடிந்தது பொழுது புலருகையில்!
பூஜைப் பிரசாதமும், தீர்த்தமும் சென்றன.

வகுள மாலிகையும் சென்றாள் அவற்றுடன்
வெகு விரைவாக மன்னனைக் கண்டு பேசிட!

14b. குறத்தி வந்தாள்!

அன்னையுடன் வழி நடந்த ஸ்ரீனிவாசனுக்குப்
பின்னர் இருப்புக் கொள்ளவில்லை தனியே.

‘சென்ற காரியம் வெற்றி அடையுமா? அன்னை
வென்று திரும்புவாளா? அல்லது தோற்பாளா?’

தோற்று விடும் எண்ணமே தோற்றுவித்தது
தேற்ற இயலாத மனக்கவலையை நெஞ்சில்.

தன் பங்குக்கும் செய்ய வேண்டும் ஏதாவது,
தன் விருப்பம் தடையின்றி நிறைவேறிட.

மாறினான் நகரின் எல்லையை அடைந்ததும்,
குறி சொல்லும் அழகிய குறத்தியாக அவன்!

“சொல்வேன் உள்ளபடி மூன்று காலத்தையும்!
வெல்வேன் உங்கள் எல்லா தோஷங்களையும்!”

குறத்தியை அழைத்து வரச் சொன்னாள் அரசி.
குறத்தியை அழைத்து வந்தனர் தோழியர்கள்.

“குறி சொல்வதில் நீ திறமைசாலியாமே!
குறி சொல்கிறாயா அரசகுமாரிக்கு?” என,

“நான் சொல்வது ஒன்றும் இல்லை தாயே!
நாவில் அமர்பவன் செந்தில் ஆண்டவன்!

அழையுங்கள் உங்கள் அரசகுமாரியை!”
“குழந்தையின் கைபார்த்துக் குறி சொல்!”

நாணத்துடன் வந்து அமர்ந்தாள் பத்மாவதி;
காணத் தந்தாள் தன் இடக்கரத்தை நீட்டி.

வெள்ளிப் பூண் போட்ட குழலால் தடவிய
கள்ளக் குறத்தியும் குறி சொல்லலானாள்!

14c. குறத்தி சொன்ன குறி

“குல தெய்வம் யார் கூறுங்கள் அரசி” எனவும்,
“குல தெய்வம் சேஷாத்ரி வாசனே!” என்றாள்.

“சேஷாத்ரி வாசன் உள்ளான் உங்கள் முன்பு!
பேசுவது அவனே என் நாவிலிருந்து இப்போது!

மலர் வனத்தில் இரண்டு தினங்களுக்கு முன்பு
மகள் சந்தித்தது அந்த சேஷாத்ரி வாசனையே!

மணக்கக் கேட்டான் இவளிடம் சம்மதம்;
பிணங்கிக் கொண்டு அடித்தாள் கல்லால்!

புறப்பட்டுப் போகுமுன் அவன் இவளுடைய
புறக் கண்களுக்கும் காட்சி அளித்துள்ளான்!

ஆகிவிட்டாள் அவன் நினைவால் இங்ஙனம்.
ஆகிவிடுவாள் சஹஜமாக, அவனை மணந்தால்.

விட்டு விட்டால் இவளை இப்படியே – இவள்
விட்டு விடுவாள் தன் உயிரையே ஏக்கத்தில்!”

யாரும் பேசவில்லை இதைக் கேட்ட பின்னர்.
யாரும் நம்பவில்லை குறத்தியின் குறியை!

“பகவானை மணப்பது நடக்கும் காரியமா?
பகவானிடம் மணம் பேசுவதும் சாத்தியமா?”

“மனதைப் பறி கொடுத்தவனே அனுப்புவான்;
மணம் பேசி முடிக்கத் தகுந்த நபரை!” என்றாள்.

பொற்காசுகளை அளித்தாள் அரசி குறத்திக்கு,
“நற்காரியம் நடப்பதே போதும் எனக்கு!” என்று

விடை பெற்றுச் சென்றவள் குறத்தி – ஆனால்
வீட்டைச் சென்று அடைந்தவன் ஸ்ரீனிவாசன்.

15a. அன்னையர் சந்திப்பு

விடியலுக்குக் காத்திருந்தாள் தரணி தேவி.
விடிந்தவுடன் விடியும் சில பிரச்சனைகள்.

வந்தனர் அந்தணர் சிவன் ஆலயத்திலிருந்து;
தந்தனர் அபிஷேகத் தீர்த்தப் பிரசாதங்கள்.

அழகிய கோலமிட்ட மணையில் அமர்த்தி,
அழகி பத்மாவதிக்குச் செய்தனர் அபிஷேகம்.

முழங்கின எங்கும் மங்கல வாத்தியங்கள்;
வழங்கினர் பரிசுகள் அங்கு வந்தவர்களுக்கு.

“சேஷாச்சலத்தில் இருந்து வந்துள்ள மாது
பேச விரும்புகிறார் அரசி தரணி தேவியிடம்”

வந்தவர், திருமணம் பேச வந்தவர் தான் என்று
அந்த மாதை அழைத்து வந்தனர் அரசியிடம்.

“சேஷாச்சலம் என் ஊர், வகுளமாலிகை என் பேர்;
பேச வேண்டும் அரசகுமாரியைப் பற்றி ” என்றார்.

“காத்திருக்கிறேன் உங்களிடம் பேசுவதற்கு – எதிர்
பார்த்திருந்தேன் உங்கள் இனிய வருகைக்கு!

குறத்தி வந்தாள் அரண்மனைக்கு நேற்று மாலை;
குறி சொன்னாள் சேஷாத்ரி வாசனைக் குறித்து.

உத்தியானவனத்தில் என் பெண்ணைக் கண்டானாம்;
பத்மாவதியிடம் மையல் கொண்டானாம்!” என்றாள்.

“குறத்தி சொல்லியது முற்றிலும் உண்மையே,
குமாரத்தியுடன் மணம் பேசவே வந்துள்ளேன்.

அனுப்பியவன் மகன் சேஷாச்சலம் ஸ்ரீனிவாசன்;
அனுமதி வேண்டும் இத் திருமணம் நடப்பதற்கு!”

பிள்ளையைப் பற்றிய விவரங்களைக் கேட்டு
கொள்ளை மகிழ்ச்சி கொண்டாள் தரணி தேவி.

அரண்மனையில் தங்க வைத்தாள் அந்த மாதை.
அரசனிடம் விரைந்தாள் செய்தி சொல்வதற்கு.

15b. திருமணப் பேச்சு

“உத்தமமானதே இந்த சம்பந்தம் என் ராணி!
பத்மாவதி யாரென்பதை மறந்து விடாதே நீ!

மஹாலக்ஷ்மியின் அம்சமே நம் பத்மாவதி;
மஹாவிஷ்ணுவை மனத்தால் வரித்தவள்.

சம்மதம் பெறுவோம் நமது குலகுருவிடம்;
சம்மதம் தருவோம் பின் அந்த மாதரசியிடம்.”

தொண்டைமானை அழைத்தான் ஆகாசராஜன்,
விண்டான் நடந்துள்ள நிகழ்ச்சிகளை எல்லாம்.

“கேட்போம் குலகுருவிடம் அவரது அபிப்ராயம்;
கேட்போம் நலம் விரும்பும் பிரதானிகளிடமும்.”

குலகுருவுக்குக் குதூகலம் கொப்பளித்தது!
“குமாரத்தியை மணம் செய் ஸ்ரீநிவாசனுக்கு!

வம்சம் அடைந்துவிடும் நற்கதியினை;
அம்சம் ஸ்ரீநிவாசன் மஹாவிஷ்ணுவின்.

வைகுந்தவாசனை அடைவதற்கு மருமகனாக,
வெகுபுண்ணியம் செய்தாய் முற்பிறவியில்!

நிலத்தில் கிடைத்தவள் நிலமகளே அல்லவா?
நிலமகள் மணாளன் அலைகடல் துயில்பவன்!”

பிரதானிகள் ஏற்றனர் இதனை மனமார.
பிரபுக்களும் ஏற்றனர் இதனை மனமார.

ஆடிப் பாடத் தொடங்கினாள் பத்மாவதி!
ஆனந்த வெள்ளத்தில் வகுள மாலிகை.

நிலவியது மகிழ்ச்சி அந்த அரண்மனையில்;
நிலவியது அமைதி பெற்றோரின் மனத்தில்.

பொன்னும், மணியும் அள்ளித் தந்தாள் அரசி.
“பின்னர் வரும் திருமணவோலை!” என்றாள்.

ஆசிகள் தந்தாள் பத்மாவதியை முத்தமிட்டு;
ஆவலுடன் காத்திருப்பான் ஸ்ரீநிவாசன் என;

அவசரமாகத் திரும்பினாள் வகுள மாலிகை;
அரசனும், அரசியும் வந்து வழியனுப்பினர்.

16. சுகரின் செய்தி

நாட்குறிப்புக்களைக் கொண்டு ஆராய்ந்து
நாளைத் தேர்வு செய்தனர் திருமணத்துக்கு.

மஞ்சள் தடவிய ஓலையில் எழுதினார்
மணப் பத்திரிக்கையை குலகுரு சுகர்.

வைத்தனர் திருமண ஓலையை பவ்யமாக
சந்தனப் பேழையில் அரசனும், அரசியும்.

மங்கல வாத்தியம் முழங்க ஓலையுடன்
அங்கிருந்து சென்றார் பல்லக்கில் சுகர்.

வகுள மாலிகையைக் கண்டவுடன் அவளை
வரவேற்றான் ஸ்ரீனிவாசன் ஆர்வத்தோடு வந்து.

“விருப்பம் நிறைவேறியது உன் மனம் போல.
திருமணத்துக்குக் கிடைத்து விட்டது சம்மதம்.

விவரித்தாள் முதல் நாள் நடந்த நிகழ்வுகளை.
அவளருகே அமர்ந்து ரசித்தான் ஸ்ரீனிவாசன்.

அகத்தியர் ஆசிரமத்தில் ஆலயம் சென்றது;
அபிஷேக ஆராதனையில் கலந்து கொண்டது;

அரசி தரணி தேவியை சந்தித்துப் பேசியது;
அரசனிடம்  பேசி அவன் அனுமதி பெற்றது;

பிரபுக்கள் மனம் மகிழ்ந்து சம்மதம் தந்தது ;
பிரதானிகள் மனம் மகிழ்ந்து சம்மதித்தது;

குறத்தி ஒருத்தி வந்து சொன்ன செய்திகள்;
குடி மக்களிடம் காணப்பட்ட மன மகிழ்ச்சி;

நகரத்தின் எல்லைவரை வந்து தன்னை
நட்புடன் வழியனுப்பிய அரசன், அரசியர்;

வகுள மாலிகையைப் பேசச் சொல்லி விட்டு
வெகு சுவாரசியமாகக் கேட்டான் ஸ்ரீனிவாசன்.

17a. பணம் தேவை!

பல்லக்குத் தூக்கிகளின் அரவம் கேட்டது;
பல்லக்கில் வருவது யாராக இருக்கும் ?

நெருங்கி அருகில் வந்து நின்றது பல்லக்கு;
இறங்கினார் சுகமுனிவர் பல்லக்கிலிருந்து.

மேனி சிலிர்க்கத் தொழுது வணங்கிய பின்,
ஸ்ரீனிவாசனிடம் சமர்ப்பித்தார் பேழையை.

“பத்மாவதியின் மணம் பற்றிப் பேச வேண்டும்.”
உத்தம முனிவரை வரவேற்றான் ஸ்ரீனிவாசன்.

பாத பூஜை செய்தான் முனிவருக்கு – பின்னர்
ஆதரவுடன் அழைத்துச் சென்றான் புற்றுக்கு.

மண நாள் பூரண சம்மதமே மணமகனுக்கு!
மன மகிழ்வோடு திரும்பினார் சுகர் மறுநாள்.

“பெரிய இடத்தில் நிச்சயித்துள்ளோம் பெண்ணை.
சரியான அந்தஸ்துடன் செல்ல வேண்டும் அங்கு!”

ஆதிசேஷனையும், பிரம்மனையும் நினைத்ததும்
ஆதிசேஷனும், பிரம்மனும் வந்து தோன்றினார்கள்.

“சித்திரை சுத்தத் திரயோதசியில் என் திருமணம்;
உத்தம மணப்பெண் இளவரசி பத்மாவதி தேவி.

முப்பத்து முக்கோடி தேவர்கள், முனிவர்கள்
தப்பாமல் வரவேண்டும் என் திருமணம் காண.

துரிதமாகச் செயல் படவேண்டும் நீங்கள்,
விரைந்து மணநாள் நெருங்கி வருவதால்!”

“கூட்டம் சேர்ப்பது எங்கள் வேலை – ஆனால்
வாட்டம் அடைகிறோம் பணம் இல்லாததால்!

லக்ஷ்மி இல்லாத இடத்தைச் செல்வம் – அ
லட்சியம் செய்வது நாம் அறிந்தது தானே!”

17b. குபேரன்

“பெறுவோம் குபேரனிடமிருந்து கடனாக;
திருப்புவோம் அதை வட்டியும், முதலுமாக!”

அழைக்கப்பட்டான் குபேரன் சேஷாச்சலத்துக்கு;
அடைந்தான் குபேரன் உடனேயே சேஷாச்சலம்.

திருமணச் செலவுக்குக் கடன் கேட்டான் பிரமன்;
திருப்பித் தருவதாக வாக்களித்தான் பிரம்ம தேவன்.

ஒரு கோடியே பதினான்கு லக்ஷம் பொற்காசுகள்!
ஒரு வருடத்திய வட்டி ஒரு லக்ஷம் பொற்காசுகள்!

“தந்து விடுவோம் வட்டியை பிரதி வருடமும்!
தந்து விடுவோம் கடனைக் கலியுக முடிவில்!”

எழுதினான் பிரமன் கடன் பத்திரத்தை – கை
எழுத்திட்டான் ஸ்ரீனிவாசன் கடன் பத்திரத்தில்.

கையெழுத்திட்டான் பிரமன் ஒரு சாட்சியாக;
கையெழுத்திட்டன இரு மரங்கள் சாட்சிகளாக.

தொடங்கின ஏற்பாடுகள் கடன் கிடைத்தவுடனே.
மடங்கல்கள் சென்றன தேவர், முனிவர்களுக்கு.

தங்கும் ஏற்பாடுகள் செய்தனர் அதிதிகளுக்கு.
தருக்கள் குலுங்கின காய், கனிகள் நிறைந்து.

சிவன், உமை அடைந்தனர் சேஷாச்சலத்தை.
சிவ கணங்கள் தொடர்ந்தன நந்தி தேவனை.

அளித்தான் குபேரன் பட்டுப் பீதாம்பரங்களை;
அளித்தான் குபேரன் நவரத்ன ஆபரணங்களை.

ஸ்ரீனிவாச கல்யாணம் காண வந்து குழுமினர்;
இனிமையான சூழ்நிலை நிலவியது அங்கே.

17c. முதல் உரிமை

மணமகனைப் புனித நீராட்டுவதற்கு
முன் வந்தனர் முதல் உரிமை கோரி!

வகுள மாலிகை முதல் உரிமை கோர,
வெகு நயமாகக் கூறினார் ஸ்ரீனிவாசன்;

“லக்ஷ்மிக்கு முதலுரிமை மறவாதீர்!”
“லக்ஷ்மி வருவாளா திருமணத்துக்கு?”

“கரவீரபுரத்திலிருக்கும் லக்ஷ்மியை
வரவழைக்க ஒரு வழி கூறுகிறேன்.

உடல் நலமில்லை எனக்கு என்றால்,
உடன் ஓடி வருவாள் லக்ஷ்மிதேவி!”

கதிரவனை அனுப்பினர் கரவீரபுரத்துக்கு;
கதிரவன் செய்தி சொன்னான் லக்ஷ்மிக்கு.

“வைகுந்தம் விட்டு நீங்கள் வந்ததால்,
வையகம் வந்துள்ளார் ஸ்ரீனிவாசரும்.

உடல் நிலை பாதிக்கப் பட்டுள்ளது தேவி!
தடை சொல்லாமல் வரவேண்டும் தாயே!”

கரவீரபுரத்திலிருந்து லக்ஷ்மி புறப்பட்டதும்,
பிரமனும், சிவபிரானும் கைலாகு கொடுக்க;

நலிவுற்றவன் போல நடித்தான் ஸ்ரீனிவாசன்
பொலிவிழந்து உடல் நலம் குன்றியவனாக!

“ராமாவதாரத்தில் தந்த வரம் நினைவுள்ளதா?”
“ஆமாம் ஸ்வாமி! நினைவுள்ளது நன்கு எனக்கு!

வேதவதியை ஏற்றுக் கொள்ளச் சொன்னேன்;
வேளை வந்ததும் ஏற்றுக் கொள்வேன் என்றீர்!”

“வேளை வந்து விட்டது தேவி இப்போது!
வேதவதியே ஆவாள் இளவரசி பத்மாவதி!

சித்திரை சுத்தத் திரயோதசியில் திருமணம்;
உத்தேசித்தேன் உன்னை இங்கு வரவழைக்க.”

ஆனந்தம் அடைந்தாள் லக்ஷ்மி இது கேட்டு.
அனைவரும் சென்றனர் ஸ்ரீநிவாசன் புற்றுக்கு.

18a. புறப்பாடு

நாராயண புரத்துக்குச் செல்லும் துடிப்பு
நாட்காலையிலேயே துவங்கி விட்டது.

அலங்கரித்துக் கொண்டனர் அழகாக – பிறர்
அலங்கரித்துக் கொள்ள உதவிகள் செய்தனர்.

சரசர என்றன புத்தம் புதிய பட்டாடைகள்;
கலகல என்றது மகிழ்ச்சியின் வெளிப்பாடு.

புனித நீரால் ஸ்ரீநிவாசனுக்கு அபிஷேகத்தை
இனிதே தொடங்கி வைத்தாள் லக்ஷ்மி தேவி.

பட்டுப் பீதாம்பரம் அணிந்தான் ஸ்ரீநிவாசன்;
இட்டாள் லக்ஷ்மி அவன் நெற்றியில் திலகம்.

வைத்தாள் திருஷ்டிப் பொட்டை அன்னை – அணி
வித்தாள் ரத்தின ஆபரணங்களைப் பார்வதி தேவி.

அழகுக்கு அழகு கூட்டினர் தேவர்கள் ஒன்றுகூடி,
அணிவித்தனர் பல வண்ண மலர் மாலைகளை.

கொட்டிக் கிடந்தன உணவுப் பொருட்கள்;
அட்டில் பணியோ அக்னி தேவனுடையது!

பாத்திரங்கள் இல்லை சமையல் செய்வதற்கு!
தீர்த்தங்கள் மாறின சமையல் பாத்திரங்களாக!

முனிவர்கள் தேர்ந்தெடுத்தனர் சமதளத்தை;
இனிய கோலங்கள் வரைந்தனர் பெண்கள்.

சங்கல்பம் செய்தான் மணையில் அமர்ந்து;
சமீ விருக்ஷமே தன் குலதெய்வம் என்றான்.

சுவாமி புஷ்கரிணியில் ஸ்தாபித்தான் அந்தச்
சமீ விருக்ஷத்தின் ஒரு கிளையை உடைத்து.

பகலுணவைத் தயார் செய்துவிட்டான் அக்னி.
பரிமாறினான் நரசிம்மருக்கு நிவேதனம் செய்து.

பரிமளச் சந்தனம், தாம்பூலம், புஷ்பம் இதைப்
பரிவுடன் அளித்தனர் வந்திருந்த அதிதிகளுக்கு.

நாராயணபுரம் புறப்பட்டனர் உணவு உண்டபின்;
ஏராளமான வாஹனங்கள் காத்திருந்தன அங்கே.

ஆரோஹணித்தனர் ஸ்ரீனிவாசன் கருடன் மீதும் ,
பிரமன் அன்னத்தின் மீதும், சிவன் நந்தியின் மீதும் .

கரிகள், பரிகள், ரதங்களில் அமர்ந்து கொண்டு
உரிமையுடன் சென்றனர் நாராயணபுரத்துக்கு.

18b. சுகரின் உபசரிப்பு

சுகமாக அடைந்தனர் பத்ம தீர்த்தத்தை;
சுகமுனிவரின் ஆசிரமம் இருந்தது அங்கு.

பூரண கும்பத்துடன் காத்திருந்தார் முனிவர்,
பூரண மகிழ்ச்சியுடன் ஒரு சிறு இடைவேளை.

பாத பூஜை செய்தார்; வலம் வந்தார் சுகர்
பரம பக்தியுடன் மணமகன் ஸ்ரீனிவாசனை.

“மணக் கோலத்தில் உம்மைக் காண்பதற்கு
மாதவம் செய்திருப்பேன் முற் பிறவியில்.

இளைப்பாறி விட்டுச் செல்ல வேண்டும்;
களைப்பு மாறும் வரை இங்கு தங்கி விட்டு.

உபசரித்துப் பெற வேண்டும் ஆனந்தம்!
உபசார வார்த்தையல்ல உண்மையே!”

“இத்தனை பேர்களை உபசரிப்பதா எனச்
சிந்தனை செய்கின்றேன் நான் முனிவரே!”

“ஈரேழு உலகங்களும் ஒன்றாகி ஒளிந்து
இருப்பது உமக்குள் அல்லவா நாராயணா?

ஒரு கவளம் தாங்கள் உண்ட மாத்திரத்தில்
ஒரு புவனம் முழுவதும் திருப்தி அடையுமே!”

பர்ணசாலைக்குச் சென்றான் முனிவருடன்,
பாலும், பழமும் உண்டான் ஸ்ரீனிவாசன்.

திருப்தி அடைந்தார் சுகர் அவன் உண்பது கண்டு.
திருப்தி அடைந்தனர் அதிதிகள் உண்டது போல .

பிரயாணம் தொடங்கியது கலகலப்பாக,
நாராயணபுரத்தை நோக்கி மறுபடியும்.

19a. மணவிழா

எல்லையில்லா ஆனந்தம் அடைந்தனர் – நகர
எல்லையை மணமகன் குழுவினர் அடைந்ததும்.

எல்லையில்லா ஆனந்தம் அடைந்தனர் – அதைச்
சொல்லக் கேட்ட ஆகாச ராஜனும், தரணி தேவியும்.

‘எதிர் கொண்டழைக்க வேண்டும் நாமே சென்று
இதர பிரதானிகள் அமைச்சர்களுடன் இன்று!”

பட்டத்து யானை நின்றது தயாராக – ரத்தினப்
பட்டத்தை அணிந்திருந்தது பெரிய நெற்றியில்.

தந்த நுனிகளில் துலங்கின தங்கக் குமிழிகள்.
தந்தனர் யானையிடம் ரோஜாமலர் மாலையை.

ஆகாசராஜன், தரணி தேவி அமர்ந்தனர் – யானை
அம்பாரியில் மணப் பெண் பத்மாவதியுடன்.

இசைக் குழுவினர் நடந்தனர் யானை முன்னால்;
இளம் பெண்கள் தொடர்ந்தனர் யானை பின்னால்.

மலர்கள், சந்தனம், பன்னீர் இவை சொரிந்து
மலர்ந்த முகத்தோடு மணமகனை வரவேற்க;

ஒலித்தது மணமகன் குழுவின் ஆரவாரம்!
தலை நிமிரவில்லை மணமகள் நாணத்தால்!

பூரண கும்பத்துடன் வரவேற்றான் மன்னன்
நாரணன் கோஷ்டியைத் திருமணத்துக்கு.

ஒலித்தது வெற்றி கோஷம் “ஜெயா விஜயீ பவ!”
தெளித்தனர் நறுமண மலர்களை நாட்டு மக்கள்.

வலம் வந்தது பகவானைப் பட்டத்து யானை;
தலையால் வணங்கித் தந்தது ரோஜா மாலை.

வெகு நாணத்துடன் முன் வந்தாள் பத்மாவதி;
வகுள மாலிகையும் முன் வந்தாள் குழுவிலிருந்து.

“பத்மாவதியை ஏற்றுக் கொள்ளுங்கள்!” என்றதும்
“உத்தமியை நீ  ஏற்பாய்!” என்றாள் வகுளமாலிகை.

19b. மாலை மாற்று

கருடனிலிருந்து இறங்கினான் ஸ்ரீனிவாசன்
கறுத்த மேனியில் ரத்தின மாலைகள் புரள.

அணிவித்தாள் மலர்மாலையைப் பத்மாவதி.
அணிவித்தான் மலர்மாலையை ஸ்ரீனிவாசன்.

பத்மாவதியின் கரம் பற்றி ரதம் ஏறியதும்
கூத்தாடினார் ஆனந்தத்தில் அனைவரும்.

வைகுந்தமாக மாறி இருந்தது நாராயணபுரம்.
வெகு நேர்த்தியான வளைவுகள், பந்தல்கள் !

வண்ணக் கோலங்களுடன், பூரண கும்பங்கள்;
பெண்கள் எடுத்தனர் ஆரத்தி வழி நெடுகிலும்!

நின்றான் மலர்த் தட்டுடன் ஆகாச ராஜன்;
நின்றாள் தீர்த்தக் குடத்துடன் தரணி தேவி.

வசுதானா என்னும் பட்டத்து இளவரசன்
வாசனை வீசும் சந்தனத்துடன் நின்றான்.

ஆகாச ராஜன் செய்தான் பாத பூஜை – பின்
அழைத்துச் சென்றான் தன் அரண்மனைக்கு.

கூடாரம் அமைத்திருந்தனர் தங்குவதற்கு,
கூட வந்தவர்களுக்குத் தனித் தனியாக!

நகரம் ஜொலித்தது ஜகஜ் ஜோதியாக!
பகலா? இரவா? பேதம் தெரியவில்லை.

ஆகாரம் வந்தது தங்கியிருந்த இடத்துக்கு;
ஆகாச ராஜன் உயர்வாக உபசரித்தான்.

மற்றவர் உண்டனர் அரண்மனை முற்றத்தில்;
குற்றம் சொல்ல முடியாத இனிய உபசரிப்பு!

இரவில் நடந்தது அப்சரசுகளின் நாட்டியம்;
இதுவரை கண்டதில்லை மனிதர் எவருமே!

உறங்கவில்லை எவருமே அன்று இரவு;
உற்சாகமாகக் காத்திருந்தனர் விடியலுக்கு.

20a. திருமணம்

நீராடிப் புத்தாடை அணிந்தனர் விடியற்காலை;
நடக்க விருந்த திருமணத்தால் மிக உற்சாகம்.

கண்ணைப் பறிக்கும் ஜரிகைப் பீதாம்பரத்தைப்
பெண்ணைப் பெற்ற மன்னன் அனுப்பினான்.

ஆபரணங்களை அணிவித்தனர் லக்ஷ்மி, உமை!
ஆணழகன் ஸ்ரீனிவாசன் ஆனார் மணமகனாக!

வாசனைத் திரவிய நீரில் குளிக்க வைத்தபின்
வாரி ஜடை போட்டனர் பத்மாவதி தேவிக்கு.

வைத்திருந்த புஷ்பங்களின் பாரத்தினால்
வைத்திருந்தாள் தன் தலையைத் தாழ்த்தி!

தான் தன் மணநாளன்று அணிந்தவற்றை
தன் மகளுக்கு அணிவித்தாள் தரணி தேவி.

நெருங்கி விட்டது சுப முஹூர்த்த வேளை;
நெருங்கினர் மணமண்டபத்தை அனைவரும்.

இந்திரன் வெண்கொற்றக் குடை தாங்க,
அந்த நிழலில் நடந்தான் ஸ்ரீனிவாசன்.

அளித்தான் தொண்டைமான் மலர்மாலை;
அணிவித்தாள் ஸ்ரீநிவாசனுக்குப் பத்மாவதி.

ஊஞ்சல் பாடினர் வாணியும், லக்ஷ்மியும்;
ஊஞ்சல் ஆடினர் ஒய்யாரமாக மணமக்கள்.

திருஷ்டி கழித்தபின் சென்றனர் மண்டபம்,
திருஷ்டி படும் மணமக்களைக் கண்டால்!

வைதீகக் காரியங்கள் செய்தார் வசிஷ்டர்;
வேத கோஷம் முழங்க மாங்கல்ய தாரணம்!

அன்னையர் இருவரும் தழுவி மகிழ்ந்தனர்;
ஆனந்த வெள்ளத்தில் மன்னன் ஆகாச ராஜன்!

வரிசைகள் வந்து சேர்ந்தன கூடாரத்துக்கு;
பரிசுகள் வழங்கினர் வந்த விருந்தினர்களுக்கு.

20b. பிரியாவிடை

நடந்தது திருமணம் நான்கு நாட்களுக்கு;
முடிந்ததும் திரும்பவேண்டும் தத்தம் இல்லம்.

விடை பெற்றனர் மணமக்கள் எல்லோரிடமும்;
மடை திறந்து பாய்ந்தது அரசியின் கண்ணீர்.

வகுள மாலிகை தேற்றினாள் தரணி தேவியை,
“வெகு தூரம் செல்லப் போவதில்லையே!” என்று.

“எப்படியும் கணவன் வீடு செல்ல வேண்டியவள்!
எப்போது வேண்டுமானாலும் காண முடியுமே!”

கணவன் வீட்டில் நடந்துகொள்ள வேண்டிய
கண்ணியத்தை எடுத்துரைத்தாள் அன்னை.

ஆகாச ராஜன் தன் மனம் திறந்து பேசினான்
பூலோக நாதன் மருமகன் ஸ்ரீனிவாசனிடம்.

“செல்லமாக வளர்ந்து விட்டாள் பத்மாவதி!
சொல்ல முடியாது பொறுப்பு உள்ளதாக.

தெரியாமல் அவள் தவறு செய்துவிட்டால்
பெரிய மனதுடன் அவளை மன்னிக்க வேண்டும் .

அம்மையாரிடம் நான் சொன்னதும் இதுவே;
தம்பதிகள் இனிதே வாழவேண்டும்!” என்றான்

வரிசைகள் வந்து இறங்கின வரிசையாக.
“வரம் தருவேன் கேளுங்கள்” என்றான்.

“ஒன்று தான் வரம் வேண்டும் எமக்கு;
என்றுமே உம்மை மறவாது இருப்பது!”

“மறக்கவே மாட்டீர்கள் என்னை எவருமே!
சிறப்பாகக் குடி இருப்பேன் உம் சிந்தையில்!”

சேஷாசலம் சென்றனர் மணமகன் குழுவினர்;
ஆகாச ராஜனும், தரணியும் உடன் சென்றனர்.

21a. பிரியா விடை

ஆகாசராஜன், தரணி தேவி திரும்பிப்
போகாமல் உடன் சென்றனர் வெகுதூரம்.

ஸ்ரீநிவாசன் சொன்னான் பத்மாவதியிடம்,
“இனிமையாகப் பேசித் திருப்பி அனுப்பி விடு!”

தேற்றினாள் பத்மாவதி தாய் தந்தையரை,
“ஏற்க வேண்டும் தவிர்க்க இயலாத பிரிவை!”

சேஷாச்சலம் செல்லவில்லை ஸ்ரீனிவாசன்;
சென்றனர் அகத்தியரின் ஆசிரமத்துக்கு.

சுவர்ணமுகி நதித் தீரத்தை அடைந்தனர்;
பர்ணசாலை அமைத்தனர் மணமக்களுக்கு.

இந்திராதி தேவர்கள் திரும்பிச் சென்றனர்;
தந்தார் பிரமன் பொன்னும் மணியும் பரிசாக!

கரவீர புரம் திரும்பினாள் லக்ஷ்மி தேவி;
தர விரும்பினாள் தடையில்லாத ஆனந்தம்.

ஆடிப் பாடிக்காலம் கழித்தனர் மணமக்கள்;
ஓடை நீரில்  விளையாடினர் மணமக்கள்.

மலருடன் சென்று ஆராதித்தாள் வராஹரை
மறவாமல் அனுதினம் தாய் வகுளமாலிகை.

மலர் சூட்டி அலங்கரித்தனர் பத்மாவதியை
மாலை வேளைகளில் முனிவர் மனைவிகள்.

குதிரை வீரன் விரைந்து வந்தான் ஒருநாள்;
அதிர வைக்கும் செய்தி ஒன்று சொன்னான்.

“அரசன் உடல்நிலை மோசம் அடைந்துள்ளது
அரசியார் அனுப்பினார் செய்தி தெரிவிக்க.”

ரதம் தயாரானது பயணத்துக்கு – இருவரும்
விரைந்தனர் உடன் நாராயண புரத்துக்கு.

22. விண்ணுலக வாழ்வு

சயனித்து இருந்தான் ஆகாசராஜன் மஞ்சத்தில்;
சோகமே வடிவாக தரணி தேவி அருகினில்!

இளவரசனும், இளவல் தொண்டைமானும்
இருந்தனர் கால் மாட்டில் அமர்ந்தபடி.

மகளைக் கண்டதும் மகிழ்ச்சி அடைந்தான்;
மருமகனைக் கண்டு நெகிழ்ச்சி அடைந்தான்.

ஒப்படைத்தான் இளவரசனை ஸ்ரீநிவாசனிடம்;
ஒப்புக் கொள்ளச் செய்தான் அரசன் தன் அரசி

தரணியின் உடன்கட்டை ஏறும் முடிவினை.
தரணி வாழ்வினைத் துறந்தான் அந்த மன்னன்.

சுகர் செய்வித்தார் இறுதிச் சடங்குகள்
சிதை மூட்டினான் இளவரசன் வசுதானன்.

சர்வாலங்கார பூஷிதையாக தரணி தேவி
சுற்றி வந்தாள் எரியும் சிதையை மும்முறை.

தீயினில் புகுந்து விட்டாள் ஒரு நொடியில்!
தீ எரிந்தது கொழுந்து விட்டு வானளவாக!

வந்து இறங்கியது விண்ணிலிருந்து விமானம்;
வந்தனர் வெளியே திவ்ய சரீரத்துடன் இருவரும்.

ஆகாசராஜனும், தரணி தேவியும் அமர்ந்ததும்
வேகமாக விண்ணில் பறந்து மறைந்தது அது!

23a. சிங்காதனம்

வசுதானனுக்கு முடிசூட்டினான் ஸ்ரீநிவாசன்;
வசுதானனுக்கு உதவிடத் தொண்டைமான்!

திரும்பினர் அகத்தியரின் ஆசிரமத்துக்கு;
திரும்பியது இயல்பு நிலை மனதில் மெல்ல.

தொண்டைமான் எதிர்த்தான் புதிய அரசனை!
“பண்டைக் காலத்தின்  இளவரசன் நானே!” என்று.

“தந்தைக்குப் பின் தனயன் ஆளவேண்டும்!” என்ற
தன் கட்சியை எடுத்து உரைத்தான் வசுதானன்.

பூசல் தொடங்கியது மிகச் சிறிய அளவில்;
பூசல் பெருகி விட்டது வெகு விரைவில்.

பிரதானிகளின் துணையோடு தொண்டைமான்
அரசன் வசுதானனைஅழிக்க விரும்பினான்.

உதவி கோரினான் தொண்டைமான் ஸ்ரீநிவாசனிடம்;
மதி இழந்தவனிடம் பேசி  என்ன பயன் விளையும்?

அளித்தான் அவனுக்குத் தன் சங்குச் சக்கரங்களை!
களித்தான் தொண்டைமான் தான் வென்றது போல.

செய்தி அறிந்ததும் பதறி ஓடி வந்தான் அங்கு
செய்வது அறியாத வசுதானன் ஸ்ரீநிவாசனிடம்.

“என்னைக் கொல்ல எண்ணும் சித்தப்பாவுக்கு
எந்தை போன்ற உங்கள் உதவி தேவையா?

பாசமே இல்லையா பத்மாவதி அக்கா! நான்
மோசம் போவதில் உனக்குச் சம்மதமா?”

தேற்றினான் ஸ்ரீநிவாசன் மைத்துனனை,
“தோற்றுப் போவான்; கவலைப் படாதே!

ஆயுதங்கள் உள்ளன அவனிடம் ஆனால்
ஆதரித்துப் போரிடுவேன் உன் பக்கம் நான்.

சமரசம் பேசு முதலில். சண்டையைத் தவிர்!”
சமரசத்துக்கு ஒப்பவில்லை தொண்டைமான்!

23b. சண்டை

அமைதியை விரும்பியது ஸ்ரீனிவாசன் மட்டுமே!
ஆகாயக் கோட்டை காட்டினான் தொண்டைமான்!

நாரணனின் சங்கும், சக்கரமும் கிடைத்ததும்
நாராயாணபுர சிங்காதனம் கிடைத்தது போல!

சமரசத்துக்குத் தயாராக இல்லை அவன்;
சமருக்குத் தயார் ஆனான் படை திரட்டி.

சிற்றப்பன் போருக்குத் தயார் ஆனதால்,
சிறப்பாகத் தயார் ஆனான் வசுதானனும்.

செய்தி அனுப்பினான் ஸ்ரீநிவாசனுக்கு;
செய்தி வந்ததும் சென்றான் களத்துக்கு.

“உயிர் சேதம் சம்மதமா?” என்றாள் பத்மாவதி
“உயிர் சேதம் தவிர்க்கவே செல்கிறேன் நான்!”

நிலமை தலைகீழாக இருந்தது அங்கு!
நிகழவில்லை சமரசம் நினைத்தபடி!

சொன்னபடித் தலைமை தாங்கினான்
மன்னன் வசுதானன் படைக்கு ஸ்ரீநிவாசன்

யுத்தத்தில் உயிர் சேதத்தைத் தவிர்க்க
யுக்தி ஒன்று செய்தான் யுத்தகளத்தில்.

தொண்டைமான் முன் ஸ்ரீநிவாசன் செல்லத்
தொண்டைமான் எய்தான் மார்பில் ஓர் அம்பு

மயங்கிச் சாய்ந்து விட்டான் ரதத்திலேயே!
தயங்கிச் சண்டையை நிறுத்தினான் எதிரி!

ஆசிரமத்தை எட்டியது போர்ச் செய்தி
“பேசி நிறுத்துவேன் போரை!” என்று கூறி

முனிவருடன் கிளம்பினாள் பத்மாவதி
தனி ஒருவளாகப் போரை நிறுத்துவதற்கு.

23c. சமரசம்

“அடிபட்டு மயங்கி விட்டான் ஸ்ரீநிவாசன்!”
துடித்து விட்டாள் பத்மாவதி செய்தி கேட்டு.

கதறி அழுதபடி ஓடி வந்தாள் அவனிடம்,
பதறிய அவன் கேட்டான், “ஏன் வந்தாய்?”

“சமரசம் பேச வந்தார் தேவியார் – தாங்கள்
சமரில் அடிபட்டது கேட்டு துடித்து விட்டார்.”

அகத்தியர் இடைமறித்துக் கூறினார் – ஆனால்
“அதற்கு இடமே இல்லை!” என்றான் அவன்.

“இருவரையும் வரவழையுங்கள் என்னிடம்;
இருவருக்கும் செய்கிறேன் நான் சமரசம்”

அகத்தியர் அழைத்து வந்தார் இருவரையும்;
அகத்தீ கண்களில் வெளிவந்தது பத்மாவதிக்கு!

“அழிவதென முடிவு செய்து விட்டீர்களா?
பழி பாவத்துக்கும் அஞ்சுவது இல்லையா?”

“இளவரசுப் பட்டம் காட்டினார் என் அண்ணா!
இது உனக்கு நினைவு இல்லையா பெண்ணே ?”

“அரசனாக்கினார் என்னை ஸ்ரீநிவாசனே!
தர வேண்டாமா நாம் அதற்கு மதிப்பு ?”

“சமரஸத்துக்கு ஏற்பாடு செய்வார் இவர்;
சம்மதமா இருவருக்கும் கூறுங்கள்!” என

“தந்தைக்குப் பின் அவர் இடத்தில் நாங்கள்
எந்தையாகக் கருதுவது இவரைத் தானே!”

“நாட்டை இரு சம பாகங்கள் ஆக்குவோம்
நாட்டை ஆள வேண்டும் இருவரும் நட்புடன்!’

இருவரும் ஏற்றனர் இந்த முடிவினை;
இரண்டாக்கப் பட்டது அந்த ராஜ்ஜியம்.

தொண்டை நாடு தொண்டைமானுக்கு!
சோழ நாடு கிடைத்தது வசுதானனுக்கு!

நிலைமையைச் சீர் செய்து திரும்பினர்
நிம்மதியாக அகத்தியருடன் அவர்கள்.

24a. ஆலயம்

தொண்டைமான் காண வந்தான் ஸ்ரீநிவாசனை;
கொண்டு வந்தான் ஏராளமான பரிசுகளை.

” ஒன்றும் குறை இல்லை இந்த ஆசிரமத்தில்;
என்ன செய்வேன் பரிசுகளை வைத்துக் கொண்டு?”

“எண்ணியிருந்தேன் அண்ணன் மருமகன் என்று!
உண்மை ஸ்வரூபத்தை உணர்ந்தேன் இன்று!”

“அன்னிய இடத்தில் எத்தனை காலம்?
பொன்னும் மணியும் தர வேண்டாம்

தங்குமிடம் ஒன்று அமைத்துத் தரலாமே;
எங்களுக்கு அது தனியிடம் என்று ஆகுமே!”

“எங்கே எப்படி அமைக்க வேண்டும்;
தாங்கள் கோடி காட்டினாலே போதும்!”

மாலையில் சென்றனர் மீண்டும் புற்றுக்கு.
“ஆலயம் நிர்மாணிப்பாய் இந்த இடத்தில்!

புற்று உள்ள இடத்தில் வேண்டும் கர்ப்பக்கிரகம்
சுற்றிலும் எழுப்ப வேண்டும் மதில் சுவர்களை.

வைகுந்த வாசல் வேண்டும் இடையில்;
இரண்டாம் பிராகாரத்தில் வேண்டியவை

மடைப் பள்ளியும், கல்யாண மண்டபமும்,
மணக்கும் திரவியசாலையும், பள்ளி அறையும்.

இருக்க வேண்டும் மூன்றாவது பிராகாரத்தில்
உக்கிராண அறைகள், ஆஸ்தான மண்டபங்கள்.

வேண்டும் அழகிய ஏழு வாயில்கள்;
வேண்டும் அழகிய இரு கோபுரங்கள்;

வேண்டும் ஒரு கோபுரம் நுழை வாயிலில்;
வேண்டும் ஒரு கோபுரம் பிராகார வாயிலில்;

வேண்டும் பலி பீடமும், துவஜ ஸ்தம்பமும்!”
தொண்டைமான் நினைவில் கொண்டான்.

24b. ரங்கதாஸன்

தோட்டத்தில் இருந்தது ஒரு கிணறு,
“தோண்டியவன் நீயே முற்பிறப்பில்!”

வைகாநஸன் ஒரு முனிவர் சோழநாட்டில்;
வைத்தார் தணியாத ஆசையை மனத்தில்.

வைகுந்தனைக் கிருஷ்ணணாகக் காணக்
கைக்கொண்டார் கடுமையான தவநெறி.

தவம் செய்தார் கனி, கிழங்குகள் உண்டு!
தவம் செய்தார் தழை, சருகுகள் உண்டு!

தவம் செய்தார் உணவே உண்ணாமல்;
தவம் செய்தார் காற்றை சுவாசித்து!

கண் எதிரே தோன்றினான் வைகுந்தன்
“கண்ணனாகக் காட்சி தர வேண்டும்” என,

“ஸ்ரீநிவாசனை ஆராதித்து வந்தால்
இனிதே நிறைவேறும் உம் விருப்பம்!”

கால் நடையாகச் சென்றார் சேஷாசலம்;
கண்டார் வழியில் பக்தன் ரங்கதாஸனை.

உடன் நடந்தான் முனிவருடன் அவன்;
“கேட்டான் எதற்கு சேஷாசலத்துக்கு?”

“கிருஷ்ணாவதாரத்தில் செய்தான் லீலைகள்;
கிருஷ்ணனைக் காணக் கடும் தவம் செய்தேன்.

சேஷாசலம் ஸ்ரீநிவாசனை ஆராதித்தால்
பேஷாக நிறைவேறுமாம் என் கோரிக்கை”

முனிவருடன்  நடப்பது நல்லதாகி விட்டது!
இனிக்கும் கண்ணனைத் தரிசிக்கலாமே!

“அனாதை என்னைப் பணியாளாக எற்பீர்.
அநேக சேவைகள் செய்து உதவுவேன்!”

சேஷாசலத்தைச் அடைத்தனர் இருவரும்
வாசஸ்தலம் ஸ்வாமி பூஷ்கரிணீ அருகே.

தினமும் ஆராதித்தனர் பகவானை – ரங்கன்
முனிவருக்குப் பணிவிடைகள் செய்தான்.

வனத்துக்குச் சென்று மலர் கொய்தவன்
நந்தவனம் ஒன்று அமைக்க விரும்பினான்.

முனிவரிடம் விண்ணப்பித்தான் ரங்கன்;
கனிவுடன் பாராட்டி முனிவரும் உதவினார்.

உருவானது அழகிய நந்தவனம் அங்கே!
இருவாக்ஷி, சம்பங்கி, ஜாதி, முல்லை

மல்லிகை, அலரி, மந்தாரை என்று
மலர்கள் பூத்துக் குலுங்கின விரைவில்.

நறுமணம் நிறைத்தது நாற்றிசைகளை;
நிறங்கள் மயக்கின காண்பவர் கண்களை!

விடியலில் நீராடி மலர் கொய்து வருவான்;
செடிகளுக்கு நீரூற்ற வெட்டுவித்தான் கிணறு.

மலர் பறிக்கச் சென்ற ரங்கதாசன் ஒருநாள்,
மனத்தை மயக்கும் காட்சியைக் கண்டான்!

திவ்விய தேஜசுடன் சென்றான் கந்தர்வன்,
திவ்விய அழகு வாய்ந்த தன் மனைவியுடன்.

ஆகாய மார்க்கமாகச் சென்றவர் கண்டனர்
ஆதி வராஹமூர்த்தி ஆலயத்தை அங்கே.

ஸ்வாமி பூஷ்கரிணீயில் புனித நீராடி
ஸ்வாமி தரிசனம் செய்ய விரும்பினர்.

கந்தர்வனும், மனைவியும் நீராடுவது கண்டு
வந்த வேலையை மறந்து போனான் ரங்கன்.

சௌந்தரியத்தில் மனம் பறி போனதால்
செல்லவில்லை மலர் கொய்து ஆசிரமம்.

கரையேறி, ஆலயத்தில் தொழுது, கண்ணுக்கு
மறையும் வரை பார்த்துக் கொண்டிருந்தான்!

24d. தவறும் தண்டனையும்

வானில் பறந்து மறைந்தனர் கந்தருவர்;
வந்தது சுய நினைவு ரங்கதாஸனுக்கு.

‘மலர் கொய்ய வந்தவன் அதைச் செய்யாமல்
மனதை அலைய விட்டு விட்டேனே அந்தோ!

கெடுத்தேனே பூஜையை அநாவசியமாக;
காக்க வைத்தேனே முனிவரை இதுவரை!

உல்லாசமாக வேடிக்கை பார்த்து நின்று
உபாஸனையில் தடங்கல் செய்தேனே!’

பதறியது உடல் செய்த தவற்றை எண்ணி;
பறித்துக் கொண்டு ஓடினான் மலர்களை!

உக்கிர மூர்த்தியாக மாறி இருந்தார் முனிவர்;
சிக்கெனக் காலைப் பற்றிக் கொண்டான் ரங்கன்.

“பாதகம் செய்துவிட்டேன் மன்னியுங்கள்!”
“தாமதம் ஏன் எனச் சொல்லு நீ முதலில்!”

“மாயைக்கு அடிமை ஆகிவிட்டேன் நான்!
மனதைத் தறிகெட்டு அலைய விட்டேன்!”

ஸ்ரீநிவாசன் தோன்றினார் அவர்கள் முன்பு;
சேவித்தான் ரங்கதாசன் விழுந்து விழுந்து.

“தவறு செய்தவன் தண்டனை அடைவான்;
தவறு தான் என் பூஜையைத் தாமதம் செய்தது!

சுதன்மனின் இளைய மகனாகப் பிறந்து பல
சோதனைகளை அனுபவி அடுத்த பிறவியில்!”

“பாதங்களை அடைய விரும்பியவனுக்குச்
சோதனைகளை அனுபவிக்கும் சாபமா?”என

“செய்த தவம் வீண் போகாது ஒரு நாளும்;
செய்தாய் தாமதம் பகவத் பூஜையில் – அது

செய்யும் சற்றுத் தாமதம் விரத பூர்த்தியில்;
எய்துவாய் எண்ணிய பேற்றைத் தாமதமாக!

மன்னன் மகனாகப் பிறந்து ஆள்வாய்
தொண்டை நாட்டை உன் குடைக் கீழ்.

அழைத்து வருவேன் நானே உன்னை இங்கு;
ஆலயம் எழுப்பச் செய்வேன் இதே இடத்தில்!”

25a. ஆனந்த நிலயம்

“ரங்க தாஸனாக இருந்தவனும் நீயே!
இங்கு கிணறு வெட்டுவித்தவனும் நீயே!

சாபம் காரணமாக நின்றுவிட்ட பணியைத்
தாபம் தீரத் தொடருவாய் இந்தப் பிறவியில்!”

தொண்டைமான் தொடங்கினான் ஆலயப் பணியை;
கொண்டு வந்து குவித்தான் கற்களைப் பாறைகளை!

வண்டி வண்டியாக வந்தன மரங்கள்,
சுண்ணம்பு, பிற தேவையான பொருட்கள்.

பாறைகளைச் செதுக்கினார் சிற்பிகள் தொடர்ந்து;
யாரும் ஊர் திரும்பவில்லை பணி முடியும் வரை!

சிற்பிகள் உழைத்தனர் உற்சாகத்துடன்
புற்று இருந்த இடத்தில் கர்ப்ப கிரகம்!

வைகுந்த வாசல் அமைந்தது அதன் வாயிலில்
எழுந்தது முதல் பிராகாரத்தைச் சுற்றி மதில்!

பள்ளியறை, மடைப்பள்ளி, திரவிய சாலை;
கல்யாண மண்டபம், உக்கிராண அறைகள்.

பலிபீடம், துவஜஸ்தம்பம், கோரியாவாறு;
ஆஸ்தான மண்டபங்கள், கோரியாவாறு;

உயர்ந்த கோபுரம் விளங்கியது வாயிலில்;
உச்சி வரையில் உயர்ந்த வேலைப்பாடுகள்.

கண் கவர் தூண்கள்; பாறைகளால் தளம்;
கண் கவர் விமானம் கர்ப்பகிரகத்தின் மேல்.

சந்தித்துக் கூறினான் ஸ்ரீநிவாசனிடம் சென்று,
“சந்தோஷத்துடன் ஏற்று அருள வேண்டும்!”

25b. சிலாரூபம்

நெருங்கியது சுபதினம் ஆலயம் புகுவதற்கு;
ததும்பியது குதூகலம் அகத்தியர் ஆசிரமத்தில்.

வந்து குவிந்தனர் இந்திராதி தேவர்கள் அங்கே;
சொந்தமாக ஏற்பாடுகளைக் கவனித்தார் பிரமன்.

வந்து சேர்ந்தனர் வசுதானனும், தொண்டைமானும்;
வந்து சேர்ந்தனர் அனைவரும் ஆனந்த நிலயம்.

ரதத்தில் வந்தனர் ஸ்ரீநிவாசனும் பத்மாவதியும்;
ரதத்தை ஓட்டினார் சுயமாக பிரம்மதேவன்.

கண்ணைப் பறித்தன வண்ணக் கோலங்கள்
மண்ணைத் தெளித்திருந்தனர் பன்னீரால்.

தோரணங்கள் தொங்கின பார்த்த இடம் எல்லாம்!
பூரணத் திருப்தி ஸ்ரீநிவாசன் உள்ளத்தில் நிலவ;

ஆனந்தம் பொங்கியது பத்மாவதி மனதில்!
ஆனந்த நிலயம் ஆனது விமானத்தின் பெயர்.

ஹோமகுண்டத்தை வளர்த்தான் பிரமன்;
வேத காரியங்களை முடித்தான் பிரமன்.

விமானத்தின் கீழ் நின்றான் ஸ்ரீநிவாசன்-
விரும்பி அமர்த்தினான் தேவியை மார்பில்!

வலது கரம் காட்டியது ஒரு திருவடியை;
இடது கரம் மடங்கியது முழங்கால் அருகில்!

“ஆகும் பாதம் வைகுந்தமாக பக்தருக்கு.
ஆகும் சம்சாரம் முழங்கால் அளவு நீராக!”

பிரமன் பணிந்து வணங்கி வேண்டினான்,
“பிரபு தங்க வேண்டும் இங்கு கலியுகத்தில்!”

“பூலோக வைகுந்தம் ஆகவேண்டும் இது – நான்
சிலா ரூபத்தில் இருப்பேன் ஆனந்த நிலயத்தில்!”

தூண்டா விளக்குகளை ஏற்றினான் பிரமன்!
ஆண்டாண்டு காலமாகப் பிரகாசிக்கின்றன.

சுபதினம் ஆனது முதல் பிரம்மோத்சவமாக;
சிலா உருவெடுத்து நிற்கின்றான் ஸ்ரீநிவாசன்!

25c. பிரம்மோத்ஸவம்

பிரமன் தெரிவித்தான் தொண்டைமானுக்கு
பிரம்மோத்ஸவத்துக்கான பல விவரங்களை.

பொன்னும், மணியும் வாரித் தந்தான் – அவன்
முன் வந்தான் உற்சாகமாக உற்சவம் நடத்த.

செய்தி பரவியது நான்கு திசைகளிலும்;
எய்தினர் உவகை செய்தியைக் கேட்டவர்.

குவிந்தனர் ஜனங்கள்; உருவாகின வீதிகள்;
குழுமினர் தேவர்கள்; உருவாகின கூடாரங்கள்!

காணக் கிடைக்காத காட்சிகள் கிடைத்தன.
காணிக்கை அளித்தனர் தம் சக்திக்கு ஏற்ப.

திருவிழா நடந்தது வெகு கோலாகலமாக.
திரும்பினர் தம் இருப்பிடம் குதூகலமாக.

தொண்டைமானுக்குப் பிரிய மனம் இல்லை.
“தொண்டை நாட்டை மறந்து விடாதே நீ!

தொண்டு புரியவேண்டும் உன் மக்களுக்கு.
மீண்டும் வருவாய் மோக்ஷம் அடைவதற்கு.

தொண்டை நாட்டை ஆட்சிசெய் அதுவரையில்!”
தொண்டைநாடு திரும்பினான் தொண்டைமான்.

26a. கிருஷ்ண சர்மா

கூர்மன் விரும்பினான் கங்கையில் நீராட.
ஆர்வம் மட்டும் இருந்தால் போதுமா?

நிறைவேறவில்லை ஒருநாளும் கோரிக்கை;
நீத்து விட்டான் உலக வாழ்வையே ஒருநாள்.

கிருஷ்ண சர்மா கூர்மனின் மகன் ஆவான்;
விரும்பினான் தந்தையின் கனவை நனவாக்க.

‘இறந்தார் தந்தை ஆசை நிறைவேறாமல்!
கரைக்க வேண்டும் அஸ்தியை கங்கையில்.’

குடும்பத்தோடு புறப்பட்டான் காசி நகருக்கு.
தடங்கல் மேல் தடங்கல்கள் வந்து சேர்ந்தன.

அடைந்திருந்தான் அப்போது தொண்டை நாட்டை.
அதிசயித்தான் தொண்டைமான் புகழைக் கேட்டு.

தோன்றியது ஒரு எண்ணம் அவன் மனத்தில்.
மூன்று மாதக் குழந்தையை, மனைவியை,

மன்னன் பாதுகாப்பில் விட்டுச் சென்றால்
முன்னேற முடியும் தனியாளாக, வேகமாக.

தொண்டைமானைச் சந்தித்தான் கிருஷ்ண சர்மா.
ஒண்ட ஓரிடம் தந்து பாதுகாக்க வேண்டினான்.

“காசி செல்ல ஆசைப்பட்டார் என் தந்தையார்.
தாசில் பண்ண ஆசை இருந்தால் மட்டும் போதுமா?

கைக் குழந்தையை, மனைவியைப் பாதுகாத்து
கை கொடுத்து உதவிட யாருமில்லை அரசே!

இளம் குழந்தையை, இளைய மனைவியைத்
தளிர் போலப் பாதுகாப்பீரா நான் வரும் வரை?”

தொண்டைமான் அளித்தான் சம்மதம் – உடனே
தொண்டைமானிடம் விடுத்தான் குடும்பத்தை.

மனப் பளு அகன்றவனாக விரைந்தான்
மகனின் கடமையைச் செய்யக் காசிநகர்.

26b. பட்டினிச் சாவு!

தொண்டைமான் சுயமாக கவனித்தான்
தன்னிடம் ஒப்படைக்கப் பட்டவர்களை.

ஏற்பாடு செய்தான் தனி வீடு ஒன்றை;
ஏற்படுத்தினான் சகல வசதிகளையும்.

பொருட்களைக் கொண்டு குவித்தான் – பிறர்
நெருங்க வண்ணம் பூட்டினான் கதவுகளை.

அடிக்கடி விசாரித்தான் முதலில் சில நாட்கள்;
அடியோடு மறந்து விட்டான் அதன் பின்னர்.

அரசனே கவனித்து வந்ததால் வேறு எவரும்
அக்கறை எடுக்கவில்லை மறந்தே விட்டனர்!

குந்தித் தின்றால் குன்றும் மாளும் அன்றோ?
முந்தி சேமித்த உணவுப் பொருட்கள் தீர்ந்தன!

பூட்டி இருந்ததால் செல்ல முடியவில்லை வெளியே!
மாட்டிக் கொண்டனர் பொறியில் இரு எலிகள் போல.

பட்டினி கிடந்தனர் தாயும் சேயும் பல நாட்கள்!
விட்டனர் தம் இன்னுயிரை ஒருவர் பின் ஒருவராக.

காசியிலிருந்து திரும்பினான் கிருஷ்ண சர்மா;
காசித் தீர்த்தம் அளித்தான் தொண்டைமானுக்கு.

“யாத்திரை இனிதே முடிந்தது உங்கள் தயவால்!
பத்திரமாக உள்ளனரா என் மனைவியும், மகனும் ?

திடுக்கிட்டான் தொண்டைமான் இது கேட்டு
நடுக்கம் எடுத்தது அவர்களை நினைத்ததும்!

“சிரம பரிஹாரம் செய்யுங்கள் – அவர்களைச்
சிறிது நேரத்தில் வரவழைக்கிறேன் இங்கு.”

மகனிடம் தந்தான் அந்த வீட்டுச் சாவியை.
ரகசியமாகப் பார்த்து விட்டு வரச் சொன்னான்.

26c. சரணாகதி

ஆடிப் போய்விட்டான் தொண்டைமான் மகன்
ஆவி பிரிந்த உடல்களை அங்கு கண்டவுடன்.

ஓடினான் தந்தையிடம் மிகுந்த துயருடன்,
“தேடி வந்தது நம்மை பிரம்மஹத்தி தோஷம்.

இறந்து விட்டனர் இருவரும் பட்டினியால்
மறந்தே போய் விட்டோம் நாம் அவர்களை.

களங்கம் ஏற்பட்டுவிட்டதே நல்ல பெயருக்கு!
விளங்குமா இதைச் சொன்னால் யாருக்காவது?”

மீண்டும் வந்தான் கிருஷ்ண சர்மா – “நான் காண
வேண்டும் என் மனைவியை, மகனை!”என்றான்.

“ஆலயம் சென்றுள்ளனர் இந்த அந்தப்புர மகளிர்.
அவர்களுடன் சென்றுள்ளனர் இவர்கள் இருவரும்!

இரண்டு நாட்களில் திரும்ப வந்துவிடுவார்கள்.
இருங்கள் நீங்கள் அரண்மனையில் அதுவரை.”

கிருஷ்ண சர்மா நிம்மதியாகச் சென்றுவிட்டான்;
கிருஷ்ண சர்மாவுக்கு உண்மை தெரிந்துவிட்டால்?

‘ஸ்ரீனிவாசனே என்னைக் காக்க முடியும் இப்போது!’
ஸ்ரீனிவாசனை விரைந்து சென்று சரணடைந்தான்.

பாதங்களைப் பற்றிக் கொண்டு கண்ணீர் விட்டான்.
” பாதி இரவில் வந்து கண்ணீர் விடுவது ஏன்?” என

“வாக்குத் தந்தால் விடுவேன் பாதங்களை அன்றிச்
சாக்குச் சொன்னால் விடுவேன் என் உயிரையே!”

“உனக்கு வந்த இடர் என்னுடையது அல்லவா?
என்னிடம் கூறுவாய் நடந்தது என்னவென்று!”

ஆதியோடு அந்தமாக உரைத்தான் அனைத்தையும்;
“பாதிப்பு அடைந்தவனுக்கு என்ன பதில் சொல்வேன்?”

26d. விஸ்வரூபம்

” இந்த முறை உதவுகிறேன் தொண்டைமான்
இன்னொரு முறை நடக்கக் கூடாது இது போல!

உடல்களைக் கொண்டு வா என் சன்னதிக்கு!” என
உடல்களைக் கொண்டு கிடத்தினான் சன்னதியில்.

“உயிர்ப்பித்துத் தருவாய் மீண்டும் ஸ்ரீனிவாசா!
உயிர்ப் பிச்சை தருவாய் குற்றவாளி எனக்கும்!”

பாத்திரத்தில் இருந்து பகவான் எடுத்துத் தெளித்த
தீர்த்தத்தினால் உயிர் பெற்றனர் தாயும், சேயும்.

எழுந்தனர் தூக்கத்தில் இருந்து எழுவது போல;
விழுந்தனர் வியப்புக் கடலில் அதைக் கண்டவர்.

“பட்டினியால் மெலிந்து நலிந்த மகன் இப்போது
பட்டொளி வீசி ஜொலிப்பது எப்படி?” என்றாள்.

“சரணடைந்தேன் ஸ்ரீனிவாசநிடம் நான் – அவன்
அரவணைத்து உயிர்ப்பித்தான் தன் கருணையால்!”

அவளும் தொழுதாள் பகவான் பாதங்களை;
“அருளுங்கள் என்றும் குறையாத பக்தியை!”

“நித்திய வாசம் செய்வேன் நாடி வருபவருக்கு!
சத்தியமாக உதவுவேன் தேடி வருபவர்களுக்கு!”

பகவான் மார்பில் தோன்றி மறைந்தன – ஈரேழு
லோகங்கள் பதினான்கும், கடல்கள் ஏழும்!

அழைத்து வந்தனர் கிருஷ்ண சர்மாவை அங்கு,
அடைந்தான் ஆச்சரியம் அவர்களைக் கண்டு.

‘இத்தனை வனப்புள்ளவளா என் மனைவி?
இத்தனை தேஜஸ் உடையவனா என் மகன்?’

“மறுபிறவி எடுத்து வந்துள்ள்ளோம் நாங்கள்!
மறவோம் என்றும் ஸ்ரீனிவாசன் கருணையை!”

விளங்கவில்லை ஒன்றும் கிருஷ்ண சர்மாவுக்கு;
விளக்கினான் அனைத்தையும் தொண்டைமான்.

ஊர் திரும்பும் அந்தணனுக்கு அளித்தான் அவன்
சீர் போலப் பொன்னும், மணியும், பல பரிசுகளும்.

27a. மண் பூக்கள்

முதிர்ந்து விட்டது வயது தொண்டைமானுக்கு;
முன்போல் சுமக்க முடியவில்லை ராஜ்யபாரம்.

நாடியது மனம் ஸ்ரீநிவாசனுடன் இருப்பதையே;
தேடின கண்கள் ஸ்ரீனிவாசனின் திருவுருவத்தையே!

முடி சூட்டினான் மகனுக்கு அடுத்த மன்னனாக;
விடை பெற்றான் அன்பு மனைவியிடமிருந்து.

ஆனந்த நிலையத்தில் மிகுந்த ஆர்வத்துடன்
ஆராதனை, பூஜைகள் செய்தான் ஸ்ரீநிவாசனுக்கு.

மாறுபாடு தெரிந்தது ஸ்ரீனிவாசனிடம் – அவன்
வேறுபட்டு நின்றான் கற்சிலையாக இப்போது.

அளவளாவுவான் முன்பு அழைத்த போதெல்லாம்;
அழைத்த போதிலும் வருவதே இல்லை இப்போது.

“பிழை என்ன செய்துவிட்டேன் ஸ்ரீனிவாசா? கூறும்
அழைத்தாலும் நீங்கள் வாராததின் காரணம் எனக்கு!

பக்தியில் குறை ஏற்பட்டு விட்டதா கூறுவீர்!
பழிகளில் இருந்து காத்தீரே முன்பெல்லாம்!”

கல்லாகவே நின்றான் ஸ்ரீனிவாசன் அப்போதும்;
சொல்லொன்றும் கூறவே இல்லை இப்போதும்.

அர்ச்சனை செய்தான் அன்றலர்ந்த மலர்களால்;
அடையவில்லை அவை இறைவன் பாதங்களை!

மண்ணால் செய்யப்பட மணமற்ற மலர்களே
அண்ணலின் இரு பாதங்களை அலங்கரித்தன!

“மணம் வீசும் புது மலர்களை நிராகரித்து விட்டு
மணமில்லாத மண்மலர்களை நீங்கள் ஏற்பது ஏன் ”

பாதங்களைப் பற்றிக் கொண்டு படுத்து விட்டான்!
“பாராமுகம் ஏன்?” என அழுதான், எழவே இல்லை.

மனம் இளகிவிட்டது ஸ்ரீநிவாசனுக்கு – வாய் திறந்து
“இனிப் போதும் நீ அழுதது எழுந்திரு!” என்றான்.

27b. பீமாவரம் பீமன்

“மௌனம் கழிய இத்தனை நேரமா உமக்கு?”என,
“சௌகரியமாக நீ வாழலாம் உன் அரண்மனையில்!

வருத்திக் கொள்கிறாய் அனாவசியமாக உன்னையும்;
வருத்துகின்றாய் அனாவசியமாக என்னையும்!” என்றான்

“வெறுப்பு ஏற்பட்டுவிட்டது உலக வாழ்வில் எனக்கு;
நறுமண மலர்களால் நான் அர்ச்சிக்கின்றேன் – ஆனால்

மணம் வீசும் என் மலர்களை நீங்கள் ஏற்பதில்லை;
மணமற்ற மண் மலர்களை நீங்கள் ஏற்கின்றீர்கள்!

குறை ஏற்பட்டு விட்டதா என்னுடைய பக்தியில் ?
குறை ஏற்பட்டதா என்னுடைய ஆராதனையில் ?

ஆனந்த நிலையத்தை அமைத்திட உழைத்தேன்;
அடுத்த சேவையைச் சிந்தித்துக் கொண்டுள்ளேன்!

பக்தி நிலவுகிறது என் மூச்சுக் காற்றில் கலந்து;
பக்தியை வெளிப்படுத்த முடியுமா இதை விட?”

கலகலவென நகைத்தான் ஸ்ரீனிவாசன் இப்போது;
“கலப்படம் இல்லாதது உன் பக்தி என்று அறிவேன்!

இருக்கின்றது உன்னுடைய மனதில் ஓர் இறுமாப்பு;
‘இவை அனைத்தும் செய்தவன் நானே!’ என்ற கருத்து.

ஆணவம் அகன்றால் மட்டுமே ஐக்கியம் சித்திக்கும்.
காண விரும்பினால் உடனே செல்வாய் பீமாவரம்!

மயங்காமல் கண்டால் மனதுக்குத் தெரியும்
குயவனும், மனைவியும் கொண்டுள்ள பக்தி!”

தொண்டைமான் சென்றான் பீமாவரத்துக்கு;
கண்டு கொண்டான் குயவன் பீமன் வீட்டை.

ஏழ்மை நிலையைக் கண்டு அதிர்ந்து போனான்.
‘தாழ்மையையே விரும்புகின்றான் ஸ்ரீனிவாசன்.

எளிமையையே விரும்புகின்றான் ஸ்ரீனிவாசன்
வலிமையைக் காட்டுபவர்களை அல்லவே அல்ல!’

27d. விமானம்

பீமன் மனைவி கழுவினாள் அன்புடன்
பகவான் திருப் பாதங்களை நீரினால்.

பரப்பி இருந்தது குடிசையில் மண்.
பரப்பினர் அதன் மேல் ஒரு பாயை.

அமர்ந்தான் ஸ்ரீனிவாசன் அதன் மேல்,
அழகிய மணை மேல் அமர்வது போல்.

இரவு உணவு வெறும் கூழும், உப்பும்.
இருப்பதை மிக விரும்பிக் குடித்தார்.

‘எளியவருக்குஎளியவன் இறைவன்!’
என்பது எத்தனை பெரிய உண்மை!

விமானம் இறங்கியது விண்ணிலிருந்து;
விண்ணில் பறந்தான் கருடன் உடனே.

பத்மாவதி வந்தாள் கருடன் மீதேறி.
பகவானுடன் இணையாக நின்றாள்.

ஆசி பெற்ற பீமனும், மனைவியும்
அதிசய விமானம் ஏறிச் சென்றனர்!

“நான், எனது என்பதை ஒழித்தேன்!
நாயேனுக்கும் அருள்வீர் பரமபதம்!”

இறங்கியது ஒரு தங்கவிமானம் தரையில்;
பறந்தது தொண்டைமானுடன் விரைவில்.

27d. விமானம்

பீமன் மனைவி கழுவினாள் அன்புடன்
பகவான் திருப் பாதங்களை நீரினால்.

பரப்பி இருந்தது குடிசையில் மண்.
பரப்பினர் அதன் மேல் ஒரு பாயை.

அமர்ந்தான் ஸ்ரீனிவாசன் அதன் மேல்,
அழகிய மணை மேல் அமர்வது போல்.

இரவு உணவு வெறும் கூழும், உப்பும்.
இருப்பதை மிக விரும்பிக் குடித்தார்.

‘எளியவருக்குஎளியவன் இறைவன்!’
என்பது எத்தனை பெரிய உண்மை!

விமானம் இறங்கியது விண்ணிலிருந்து;
விண்ணில் பறந்தான் கருடன் உடனே.

பத்மாவதி வந்தாள் கருடன் மீதேறி.
பகவானுடன் இணையாக நின்றாள்.

ஆசி பெற்ற பீமனும், மனைவியும்
அதிசய விமானம் ஏறிச் சென்றனர்!

“நான், எனது என்பதை ஒழித்தேன்!
நாயேனுக்கும் அருள்வீர் பரமபதம்!”

இறங்கியது ஒரு தங்கவிமானம் தரையில்;
பறந்தது தொண்டைமானுடன் விரைவில்.

28a. வட்டி கட்ட வழி?

ஆனந்தமாக இருந்தான் ஸ்ரீனிவாசன்,
ஆனந்த நிலயத்தில் பத்மாவதியுடன்.

பக்தர்கள் தேடி வந்தனர் பகவானை;
சக்திக்கு ஏற்பக் காணிக்கை அளித்தனர்.

மகிழ்வுடன் பகவான் இருந்த போதிலும்,
நெகிழ்வுடன் நினைப்பதுண்டு லக்ஷ்மியை!

‘உற்சாகம் குன்றி பகவான் இருப்பதற்கு
உபசரணையில் உள்ள குறைபாடுகளோ?’

பத்மாவதி ஆலோசிப்பதுண்டு அடிக்கடி;
பகவானிடம் கேட்டுவிட்டாள் நேரடியாக.

“சுகமாக இருப்பதை விட்டு அடிக்கடி நீங்கள்
சோகமாகி விடுவதன் காரணம் கூறுங்கள்!”

“லக்ஷ்மி என்னைப் பிரிந்ததனால் வாழ்க்கை
லக்ஷ்யம் இழந்ததைப் போல ஆகிவிட்டது.

திருமணச் செலவுக்கு வாங்கினேன் கடன்;
திருப்பித் தர வேண்டும் கலியுக முடிவில்.

வட்டி கட்ட வேண்டும் வருடா வருடம்
கட்ட வில்லை வட்டி ஒரு வருடம் கூட.

லக்ஷ்மி மீண்டும் என்னிடம் வந்தால் தான்
லக்ஷணமாகும் நம் வாழ்க்கை!” என்றான்.

“லக்ஷ்மி வருவதில் தடை என்ன சுவாமி?”
“லக்ஷ்மி உனக்குப் போட்டி அல்லவா?”என,

“இந்த வாழ்க்கையே லக்ஷ்மி தந்தது!
அந்த லக்ஷ்மியை நான் வெறுப்பேனா?

அழைத்து வருவோம் நாம் சென்று!” என்றாள்.
“அழைத்து வருவேன் நான் சென்று!” என்றான்.

வகுள மாலிகை துணையானாள் அவளுக்கு.
பகவான் மட்டும் சென்றார் கரவீரபுரத்துக்கு.

28b. பத்ம ஸரோவர்

பகவான் கரவீரபுரம் வருகின்றான் என்றதும்,
பாதாள லோகம் சென்று விட்டாள் லக்ஷ்மி!

கபில முனிவரைக் கண்டாள் லக்ஷ்மி தேவி;
கபில முனிவர் வரவேற்றார் அங்கே தங்கிவிட!

எந்த இடமானால் என்ன பகவானைத் தியானிக்க?
அந்த இடத்திலே தங்கிவிட்டாள் லக்ஷ்மி தேவி.

கரவீரபுரம் அடைந்த ஸ்ரீனிவாசன் கண்டது எது?
வெறிச்சோடிக் கிடந்த தேவியின் இருப்பிடத்தை.

கடுமையான தவம் மேற்கொண்டு விட்டாளா?
காடுகளில் தேடி அலைந்தான் லக்ஷ்மி தேவியை.

திருவுருவத்தின் அருகே அமர்ந்தான் ஸ்ரீனிவாசன்;
தியானம் செய்தான் தன் லக்ஷ்மி தேவியின் மீது.

பத்து ஆண்டுகள் உருண்டு ஓடிவிட்டன – ஆனால்
பார்க்க முடியவில்லை பகவானால் லக்ஷ்மியை!

அசரீரி ஒன்று பேசியது ஆகாயத்தில் இருந்து,
“வசப்படமாட்டாள் லக்ஷ்மி உன் தியானத்துக்கு!

ஆயிரம் இதழ்கள் கொண்ட தாமரை மலரினை
அமைப்பாய் பத்ம ஸரோவர் என்ற பொய்கையில்.

கிழக்கில் இருந்து சூரியன் ஒளி வீசும் பொழுது,
அழகிய தாமரையில் உன் தேவி தோன்றுவாள்!”

அடைந்தான் சுவர்ணமுகி தீரத்தை ஸ்ரீனிவாசன்.
அனுப்பினான் வாயு தேவனை இந்திர லோகம்.

பறித்து வந்தான் இந்திரனின் அனுமதியோடு
அரிய தாமரை மலர் ஒன்றை வாயுதேவன்.

ஆயிரம் இதழ்த் தாமரையை ஸ்தாபித்தான்;
ஆயிரம் இதழ்த் தாமரை மீது தியானித்தான்.

29a. அப்சரஸ்

நாட்கள் உருண்டு ஓடின – பகவானின் தவம்
நாளுக்கு நாள் தீவிரம் அடைந்தது மேலும்!

பத்ம தீர்த்தத்தின் கரையில் ஒருவன் அமர்ந்து
உக்கிர தவம் செய்வது ஒரு செய்தியானது!

பூலோகத்தில் தவம் நடந்தால் ஆபத்து நிகழும்
தேவலோகத்தை ஆளும் இந்திரனின் பதவிக்கு.

தவத்தைக் குலைத்துக் கலைப்பதற்கு இந்திரன்
தேவ மகளிரை அனுப்பினான் பூலோகத்திற்கு.

பூலோகப் பெண்களைப் போல மாறிவிட்டனர்.
பூஜைக்கு உதவி செய்திட விரும்பி வந்தனர்.

தடை சொல்லவில்லை பகவான் அவர்களிடம்;
நடை பெறவில்லை அவர்கள் விரும்பியதும்!

நெருங்க வில்லை பகவான் அந்த சுந்தரிகளை!
நெருங்கவும் விடவில்லை அந்த சுந்தரிகளை!

அடுத்த திட்டத்தினை அமல்படுத்தினர்அப்சரஸ்.
அடுத்து அடுத்துப் பாடினர் இனிய பாடல்களை!

அர்ப்பணித்தான் அந்தப் பாடல்களை லக்ஷ்மிக்கு;
கற்பனை பலிக்கவில்லை பெண்கள் எண்ணியபடி.

மாலைகளை அணிவிக்க வந்தனர் பகவானுக்கு;
மாலைகளை அணிவித்தான் அவன் தாமரைக்கு!

“நாட்டியம் செய்யலாமே நீங்கள்!” என்று சொல்லப்
போட்டி போட்டுக் கொண்டு இனிய நடனம் ஆடினர்.

மேனி எழிலை வெளிப்படுத்தினர் ஆடும் போது;
பேணினான் பிரம்மச்சரியத்தை பகவான் நன்கு!

கற்பனையில் உருவான அழகிய பெண்ணை
கண்முன் கொண்டு வந்து நிறுத்தினான் பகவான்

‘படைக்கும் சக்தி படைத்த இவன் மனிதன் அல்ல!’
மடை திறந்தது போல எல்லாம் நினவு வந்தது!

இந்திரன் தந்தான் வாயுவிடம் தாமரை மலரை;
இந்தத் தாமரை மலரே அவன் தந்த மலர் என்று!

விழுந்து வணங்கினர் பகவான் பாதங்களில்;
அழுதும், தொழுதும், கேட்டனர் மன்னிப்பு.

“செய்ய வந்தீர்கள் உங்களுக்கு இட்ட ஆணையை;
எய்தவன் இருக்க அம்பை நான் நோக மாட்டேன்!”

தப்பித்தோம், பிழைத்தோம் என்று ஓடியவர்கள்
அப்போதே சென்றனர் இந்திரனின் சபைக்கு.

29b. பத்மாவதியின் கனவு

“அழிவுக்கு ஆளாகாமல் வந்துள்ளோம்!
பழிச் செயலைச் செய்திருந்த போதும்!”

கூறினர் பூலோகத்தில் நடந்தவற்றை;
மாறினான் இந்திரன் அதைக் கேட்டதும்.

ஓடினான் பத்மஸரோவருக்கு உடனே;
தேடினான் தவம் செய்யும் பகவானை.

விடவில்லை பற்றிய பாதங்களை அவன்;
எழவில்லை மன்னித்தேன் என்னும் வரை!

“தவறு ஒன்றும் நிகழவில்லை இந்திரா!
தவத்தில் திருப்தி செய்தோம் லக்ஷ்மியை.

மனம் உருகி வருந்திடும் ஒருவருக்கு
மன்னிப்பு உண்டு நிச்சயம்!” என்றான்.

இந்திரன் திரும்பினான் தன் இந்திரலோகம்.
சொந்த சிருஷ்டியான தேவதையிடம் அவன்

“வன தேவதையாக இருந்து காப்பாற்றுவாய்
தினமும் தேடி வரும் பக்தர்களை!” என்றான்.

தவம் தொடர்ந்தது மீண்டும் நெடுங்காலம்;
தவத்துக்கு இரங்கி வரவே இல்லை லக்ஷ்மி.

இருபத்து இரண்டு ஆண்டுகள் ஓடி விட்டன;
வருத்தத்தில் மூழ்கியிருந்தாள் பத்மாவதி.

‘லக்ஷ்மியுடனேயே தங்கி விட்டாரா அவர்?
லக்ஷ்மியைத் தேடித் திரிகின்றாரா அவர்?

கண்டு பிடிக்கவே முடியாதபடி எங்கோ
கண் காணாது ஒளிந்து இருக்கின்றாளா?’

இரவு முழுவதும் உறங்கவில்லை அவள்;
துறவுக் கோலத்தில் கனவினில் கண்டாள்

விடியற்காலை நேரத்தில் ஸ்ரீனிவாசனை!
இடி விழுந்தது போலாகிவிட்டது உள்ளம்!

வகுள மாலிகையிடம் கூறினாள் கனவை;
வெகுவாகத் துயருற்றாள் அதை எண்ணி!

30a. தீப லக்ஷ்மி

மன நிம்மதி இழந்து விட்டாள் லக்ஷ்மி;
மனம் கலங்கியது நடப்பதைக் கண்டு.

‘கபிலரின் ஆசிரமத்தில் தங்கிவிட்டால்
கரவீர புரத்திலிருந்து திரும்பி விடுவான்!’

எண்ணிய எண்ணம் தவறானது – கணவன்
பண்ணுகின்றான் தவம் பத்ம ஸரோவரில்.

கூறினாள் மனக் கவலையைக் கபிலரிடம்;
கோரினார் கபிலர் பிரிந்து வந்த காரணத்தை.

“வாசஸ்தலத்தைக் களங்கம் செய்த பிறகு
வசிக்க முடியுமா மீண்டும் என்னால் அங்கு?”

“மகன் போன்றவன் அல்லவா பிருகு ருஷி ?
மகனிடம் கோபம் கொள்ளலாமா ஒரு தாய்?

கணவனைப் பிரிந்து தனியே வரலாமா?
கணவனைத் தவத்தில் தவிக்க விடலாமா?

பாராமுகம் செய்வது தகுமா தேவி – இங்கு
யாராவது மகிழ்ச்சியாக உள்ளார்களா?

தவிக்கின்றீர்கள் நீங்கள் தனிமையில்;
தவிக்கின்றான் பகவான் தவம் செய்து;

தவிக்கின்றாள் பத்மாவதி கவைலையில்;
தவிப்பினால் விளைந்த நன்மை என்ன?

மலரில் சென்று எழுந்தருள்வீர் தாயே!
பல காலம் செய்த தவம் பலிக்கட்டும்!”

தீபச் சுடர் உருவில் தோன்றி பகவானின்
தாபம் தீர்த்தாள் தாமரையில் லக்ஷ்மி.

தேவி தோன்றியவுடன் பிரகாசித்தது
கோடி சூரிய ஒளியுடன் தாமரை மலர்.

நிஷ்டை கலைந்து எழுந்தான் பகவான்;
இஷ்டத்துடன் நோக்கினான் லக்ஷ்மியை.

30b. பிணக்குத் தீர்ந்தது!

தாமரையில் மகாலக்ஷ்மி தோன்றியதும்
தாமதமின்றி விரைந்து வந்தனர் தேவர்.

பிரிந்தவர் சேரும் வைபவத்தைக் காணப்
பெரிய பாக்கியம் செய்திருக்க வேண்டுமே!

தேவர்கள் துதித்தனர் தேவியைப் பலவாறு;
தேவி இறங்கவில்லை தாமரையை விட்டு.

பிருகுவிடம் பேசினார் ஈசன் தனிமையில்,
“பிரிவுக்குக் காரண கர்த்தா நீரே அல்லவா?

தேவியிடம் சென்று மன்னிப்புக் கேட்பீர்!” என,
தேவியிடம் சென்று பிருகு கேட்டார் மன்னிப்பு.

சாந்தம் அடைந்து இறங்கினாள் லக்ஷ்மி தேவி.
சந்தனம் பூசினாள் பகவான் வக்ஷஸ்தலத்தில்.

வணங்கினாள் அவனை மண்டியிட்டு – அவளைப்
பிணக்குத் தீர்ந்து மார்பில் அமர்த்தினான் அவன்.

கந்தருவர் இசையுடன் கலந்து மலர் சொரிந்திட,
துந்துபி முழங்கியது எண் திசைகளிலும் பரவி.

அப்சரஸ் விண்ணில் ஆடினர் ஆனந்த நடனம்.
அருளினார் பகவான் உலகுக்குச் சிறந்த வரம்.

“கார்த்திகை மாத சுத்த பஞ்சமியில் – பத்ம
தீர்த்தத்தில் நீராடுபவருக்கு சகல சம்பத்து.”

அனைவரும் அடைந்தனர் சேஷாசலம் ;
அனைவரையும் வரவேற்றாள் பத்மாவதி/

ஆரத்தி எடுத்தாள்; திருஷ்டி கழித்தாள் அவள்;
ஆனந்தத்தில் தத்தளித்தாள் வகுள மாலிகை!

31a. ஆனந்தம் ஆனந்தம்!

ஆனந்த மயமாக மாறிவிட்டது அங்கே
ஆனந்த நிலயத்தில் மூவரின் வாழ்க்கை.

சக்களத்திகள் போல இருக்கவில்லை – இரு
சஹோதரிகள் போல அன்பு செலுத்தினர்.

பரம சந்தோஷம் பக்த கோடிகளுக்கு;
வரம் அளிக்க இருந்தனர் மூவர் என்று!

தனிமையில் கூறினான் லக்ஷ்மியிடம்,
ஸ்ரீனிவாசன் குபேரனின் கடனைப் பற்றி.

“வட்டி கட்ட ஒப்புக் கொண்டேன் நான்
வட்டி கட்ட வில்லை ஒரு முறை கூட.

பழிக்கு ஆளாகி விடுவேனே – நான்
இழிச் சொற்களைக் கேட்க நேருமோ?

உதவ முடியும் உன்னால் எனக்கு!
அதுவும் மிக எளிதான் முறையில்!

உன்னைத் தேடி வரும் பக்தருக்கு வழங்கு
பொன்னையும், பொருளையும் வாரி வாரி.

என்னைத் தேடி வருபவர்கள் அளிப்பர் – அந்தப்
பொன்னையும், பொருளையும் காணிக்கையாக!”

புறப்பட்டாள் லக்ஷ்மி தேவி கேட்ட உடனே,
“நிறைவேற வேண்டும் நம் நோக்கம் சுவாமி!

தனியே இருக்க வேண்டும் நான் – நம்முடைய
பணிகள் சரிவர நடை பெறுவதற்கு!” என்றாள்.

பாதாள லோகம் சென்றாள் லக்ஷ்மி
பகவானுக்கு உதவத் தயார் ஆனாள்.

“நினைத்த காரியம் இனிதாக நடைபெறப்
புனிதப் படுத்திக் கொள்ள வேண்டும் நான்.”

பகவன் பாடு மீண்டும் திண்டாட்டம்
பாதாள லோகத்தில் லக்ஷ்மி தவத்தில்

பூலோகத்தில் வந்து நிலை பெற்றால் தான்
ஆலோசிக்க முடியும் குபேரன் வட்டியை!

31b. மீண்டும் தவம்

சென்றான் ஸ்ரீனிவாசன் பாதாள லோகம்;
நின்றான் தியானம் செய்த லக்ஷ்மி முன்பு.

கண்டாள் லக்ஷ்மி அகக்கண்களில் அவனை;
காணவில்லை அவள் புறக்கண்கள் அவனை.

“தரிசனம் தந்தீர்கள் எனக்கு – ஆனால்
அரிதாகி மீண்டும் மறைந்து விட்டீர்கள்.”

கலைந்து விட்டது உன் தவம் லக்ஷ்மி!
வேலைகள் அநேகம் காத்திருக்கின்றன.

தடைபட்டுள்ளன அவை உன் தவத்தால்;
உடைபடும் தடை நீ பூலோகம் சென்றால்!

சுகரின் ஆசிரமத்தில் காத்திருக்கின்றது,
சுகமான ராஜ போகம் உனக்கு!” என்றான்.

ஆதிசேஷனை தியானித்தாள் லக்ஷ்மி;
ஆதிசேஷன் வந்து வணங்கி நின்றான்.

“சேர வேண்டும் சுகரின் ஆசிரமத்தை!”
தேர் நின்றது வெள்ளைப் பரிகள் பூட்டி!

ஏறி அமர்ந்தாள் அழகிய ரதத்தினில்,
அரிய ஆபரணங்கள் அணிந்த லக்ஷ்மி.

ரதத்துடன் தேவியைத் தலையில் தாங்கி,
வேகத்துடன் வெளிப்பட்டான் ஆதிசேஷன்.

சாயாசுகர் கண்டார் மஹாலக்ஷ்மியை,
“சரணம் சரணம் லோக மாதா!” என்றார்.

31c. சாயா சுகர்

சுகர் விரும்பினார் சாயுஜ்ய முக்தியை;
சுகர் எழும்பினார் தம் யோகசக்தியால்.

தடுத்தான் சூரியன் சுகரின் பிரயாணத்தை;
விடுத்தான் சுகரிடம் கேள்விக் கணைகளை.

“முன்னோர்கள் பூவுலகில் வாழ்ந்திருக்க,
முன்பாக சாயுஜ்யம் அடைய முடியுமா?

அருகதை இல்லை உமக்கு சாஸ்திரப்படி,
அறிந்திருப்பீர் இதனை நீரும் முன்பாகவே!

கிருஹஸ்தாஸ்ரமத்தை ஏற்க வேண்டும்;
பிறக்க வேண்டும் புத்திரர்கள், சந்ததியினர்;

பிரம்மஞானி ஆவது அதற்கும் பின்பு;
அரிய சாயுஜ்யம் அதற்கும் பின்பு என்று.”

“மனிதனுக்குத் தேவை நான்கு ஆசிரமங்கள்;
முனிவனுக்குத் தேவை இல்லை ஆசிரமங்கள்;

நீர்க்குமிழி போன்றது வாழ்க்கை என்று
நீத்து விடுகிறோம் அதை முற்றிலுமாக.

அடைய முடியுமா ஞான மார்க்கத்தை என
விடை அறிய விரும்பினேன் தந்தையிடம்.

அனுப்பினார் என்னை ஜனக ராஜனிடம்,
வனப்புடன் விளக்கினார் ஜனகர் எனக்கு.

பக்குவம் அடையாதவனுக்குத் தேவை இவை;
பக்குவம் அடைந்தவனுக்கு அல்ல என்பாதை.”

“விதிகளைக் கூறுபவர்களே தாம் கூறிய
விதிகளை உடைக்கவில்லை முனிவரே!

விஷ்ணு, பிரமதேவன், வசிஷ்டர், சக்தி,
பராசரர், வியாசர், நீர் ஒரு வம்சத்தினர்.

தேவை ஒரு சந்ததி சேவை செய்திட;
தோற்றுவித்தால் உமக்கு சாயுஜ்யம்!”

31d. சூரியனும், சுகரும்.

சக்தியினால் தோற்றுவித்தார் மானசீக புத்திரனை,
யுக்தியுடன் நிறுத்தினார் அவனை சூரியனின் முன்பு.

சாயாசுகர் வணங்கிய பின் கேட்டார் சுகரிடம்,
“மாயையால் என்னைத் தோற்றுவித்தது ஏன்?”

“கங்கைக் கரையில் வசிக்கும் என் தந்தைக்குத்
தங்கு தடையின்றி சேவை செய்து வருவாய்!”

வியாசருக்குப் பணிவிடை செய்வதற்குச்
சாயாசுகர் வசித்தார் சுவர்ண முகி தீரத்தில்.

கவர்ந்தது சுகரின் அறிவாற்றல் சூரியனை;
கதிரவன் கேட்டான் புதிர் போலச் சுகரிடம்,

தத்துவம் என்ன உள்ளது என் உருவில்?”
“சித்தத்துக்கு எட்டிய வரை கூறுகின்றேன்,

உண்டாயிற்று பிரணவம் நாரணனிடம்;
உண்டாயிற்று ஆகாசம் பிரணவத்திடம்;

உண்டாயிற்று வாயு ஆகாசத்திடம்;
உண்டாயிற்று அக்னி இவைகளிடம்.

வாயுவும், ஆகாசமும் கலந்த போது
வியாபித்தது அக்னி தோன்றிப் பரவி.

பிரளயம் தோன்றியது ஜல வடிவத்தில்!
பிரளய ஜலம் தோற்றுவித்தது பலப்பல

தங்க நிறம் கொண்ட ஒளிக் கிரணங்களை;
தங்க நிற ஒளிக்கிரணங்கள் ஆயின சூரியனாக!

அண்ட சராசரம் தோன்றியது அதிலிருந்து!
கொண்டிருந்தது வாழ வைக்கும் சக்தியை.

அசையும் அசையாப் பொருட்கள் வாழ
அவசியம் ஆனது அந்த சூரியனின் சக்தி.

சூரிய சக்தியால் மனிதன் பிறக்கிறான்;
சூரிய சக்தியால் மனிதன் வாழ்கிறான்.

அவன் சக்தி அடைகின்றது மீண்டும்
அதே சூரியனை ஒளிக்கிரணம் வழியே!”

அனுமதித்தான் சூரியன் சுகர் செல்வதற்கு;
வியந்தான் சுகரின் அறிவாற்றல் கண்டு!

சுக க்ஷேத்ரம்

போற்றினார் லக்ஷ்மியை சாயா சுகர்; போற்றினர் லக்ஷ்மியை மும்மூர்த்திகள்;

போற்றினர் லக்ஷ்மியைத் தேவ கந்தர்வர்கள்; போற்றினர் லக்ஷ்மியை முனி புங்கவர்கள்.

பிரமன் வேண்டினான் லக்ஷ்மி தேவியிடம், “தர வேண்டும் பத்ம தீர்த்தத்தில் நீராடினால் அஷ்ட ஐஸ்வரியங்களையும் அள்ளி அள்ளி!
கஷ்டங்கள் எல்லாம் தொலைய வேண்டும்!

ஆலயம் அமைக்கும் எண்ணம் கொண்டேன்; அனுமதி வேண்டும் அதை இங்கு அமைக்க”.

“சுக க்ஷேத்திரத்தை விடுத்தது என்னுடன் சேஷாச்சலம் நீயும் வரவேண்டும் தேவி” பகவான் கூறினான் லக்ஷ்மி தேவியிடம்,

பகவானுக்கு பதில் அளித்தாள் லக்ஷ்மி.

“சுக க்ஷேத்திரத்தில் இருக்க விருப்பம்; இக பரம் தர வேண்டும் என் பக்தருக்கு!”

விசுவகர்மா அமைத்தான் ஆலயத்தை! விசுவாசி சாயா சுகர் ஆராதனைகளை!

“செல்வதை வாரி வாரி வழங்குவாய் நீ! செல்வர் என்னை வந்து தொழுத பின்பே.”

“கார்த்திகை மாதம் சுக்கில பஞ்சமியன்று காத்திருப்பேன் தங்கள் மாலை, சேலைக்கு!

மறக்காமல் தர வேண்டும் ஆண்டுதோறும்!” இறைவனிடம் வேண்டினாள் லக்ஷ்மி தேவி.

சுக க்ஷேத்திரத்தில் குடி கொண்டாள் லக்ஷ்மி; சேஷாச்சலத்தில் குடி கொண்டான் பகவான்.

மலர்ந்த தாமரை மேல் தோன்றியவளை அலர்மேல் மங்கை என அழைக்கின்றனர்.

——————

ஸ்ரீ  வேங்கடேச புராணம் முற்றுப் பெற்றது.

சுபம், சுகம், சாந்தி நிலவட்டும் எங்கும்!

————-

தீர்த்த மஹிமை

தீர்த்தமாட விரும்பினான் ஓரந்தணன்;
யாத்திரை நீளும் நெடுங் காலம் என்று

உற்றார் உறவினரிடம் விடை பெற்றுப்
பிற்பாடு யாத்திரை செல்வது வழக்கம்.

கனவிலே தோன்றினார் மஹாவிஷ்ணு!
“கருதுகின்றாய் அகல தீர்த்த யாத்திரை!

புஷ்கர சைலம் என்பது சேஷாச்சலம்;
புனித தீர்த்தங்கள் பதினேழு உள்ளன.

புவனமெங்கும் உள்ள தீர்த்தங்கள் – அப்
புண்ணிய தீர்த்தங்களிலும் உள்ளன!

சகல பாவங்களிலிருந்து விடுதலையும்,
சகல சம்பத்துக்களும் கிடைப்பது உறுதி.

நாடெங்கும் அலைந்து திரிய வேண்டாம்.
நாடுவாய் நீ சேஷாச்சலத்தை!” என்றார்.

பழம் நழுவிப் பாலில் விழுந்தது – மேலும்
பலன் இரண்டுக்கும் ஒரு போலானது.

பதினேழு தீர்த்தங்களிலும் சென்று நீராடிப்
பரம பாவனம் அடைந்தார் அந்த அந்தணர்.

02. சேஷாச்சலம்

நாரதர் சென்றார் திருப்பாற் கடலுக்கு;
நாரணனைத் தேவியருடன் தரிசித்தார்.

ஒளிர்ந்தது கௌஸ்துபம் மார்பினில்;
மிளிர்ந்தன நாரணனின் பஞ்சாயுதங்கள்.

“பூலோகத்தில் நான் திருவிளையாடல்
புரிவதற்கு ஏற்ற இடத்தைக் கூறு!” என்று

நாரணன் கேட்டான் நாரத முனிவரிடம்,
நாரதர் விண்ணப்பித்தார் நாரணனிடம்.

‘கங்க தீரத்துக்குத் தெற்கே உள்ளது
தண்டகாரண்யம் என்னும் ஓர் இடம்.

விண்ணோரும் மண்ணோரும் வந்து
தெண்டனிடத் தகுந்த இடம் ஆகும்”.

தேவருஷி சென்றதும் நாரணன் – ஆதி
சேஷனுக்கு ஆணை இட்டார் இங்கனம்.

“மலை உருக் கொள்வாய் நீ அனந்தா!
சில காலம் தங்குவேன் பூவுலகினில் !”

“மலையாக மாறுகிறேன் ஆணைப்படி.
மலை மீது எழுந்தருளும் தேவியருடன்!

இருப்பிடம் ஆகவேண்டும் என் தலை;
திருவடிகள் பதித்து நின்றிட வேண்டும்.

புண்ணிய தீர்த்தங்கள் பலவற்றையும்
என்னிடம் நீங்கள் உருவாக்க வேண்டும்!”

அருள் செய்தான் நாரணன் அவ்வாறே;
திருப் பாற்கடல் விடுத்தான் அனந்தன்.

மலையானான் தண்டகாரண்யத்தில்;
தலை ஆனது திரு வேங்கடாச்சலமாக.

உடல் ஆகிவிட்டது அகோபிலமாக;
முடிவில் வால் ஆனது ஸ்ரீ சைலமாக.

அனந்தன் பூமியில் மலை ஆனபோது;
அருந்தவம் தொடங்கியது அவன் மீது.

வேங்கடேசனாகக் காட்சி தந்தருளினார்
வேங்கடமலையில் குடிகொண்ட நாரணன்

03. நாராயணாத்ரி

நாராயண முனிவர் ஒரு நல்ல தபஸ்வி.
நாராயணனைத் தேடியலைந்தார் எங்கும்.

காட்சி தரவில்லை நாராயணன் அவருக்கு
மாட்சிமை பொருந்திய தவம் செய்வித்திட.

பிரம்மனைக் குறித்துத் தவம் செய்தார்.
பிரம்மன் கேட்டான்,” என்ன வரம் தேவை?”

“நாரணனைத் தரிசிக்கத் தவம் செய்தேன்.
காரணம் என்னவோ காண முடியவில்லை!

காணும் வழியினைக் கூறுங்கள் சுவாமி!
காணும் பாக்கியத்தை அருளுங்கள் சுவாமி!”

“கோனேரிக் கரையிலே சேஷாச்சலத்திலே
கோவில் கொண்டுள்ளார் ஸ்ரீமன் நாராயணன்.

தவம் செய்வீர் நீர் சேஷாச்சலம் சென்று!
தவமும் பலிக்கும்; தரிசனமும் கிடைக்கும்”

சேஷாச்சலம் அடைந்தார் முனிபுங்கவர்;
செய்தார் கடும் தவம் பன்னெடுங் காலம்!

தேவியுடன் காட்சி தந்தான் நாரயணன்;
“தேவை எதுவோ கூறுங்கள்!” என்றான்.

“தரிசனம் வேண்டித் திரிந்தேன் – எங்கும்
தரிசனம் கிடைக்காமல் தவித்தேன் நான்.

பிரம்மன் கூறினார் இங்கு தவம் புரியுமாறு,
அரிய தரிசனம் பெற்றேன் உமது அருளால்!

முனிவர்களுக்கே கடினமான இத் தவத்தை
மனிதர்கள் செய்வது எங்கனம் சாத்தியம் ?

புனிதத் தலத்திலேயே தங்கி வசிப்பீர்!
மனிதர்களுக்கும் ஆசிகள் வழங்குவீர்!

என் பெயரால் விளங்க வேண்டும் – நீர்
எனக்கு தரிசனம் தந்த இந்த இடம்” என,

“நிறைவேற்றுவேன் உம் கோரிக்கையை.
நித்தியவாசம் செய்வேன் இந்தத் தலத்தில்.

தீரும் வரும் அடியவர் குறைகள் எல்லாம்!
பேரும் விளங்கும் நாராயணாத்திரி என்று!”

04. ரிஷபாத்ரி

வேட்டைக்குச் செல்ல விழைந்தான் ஸ்ரீனிவாசன்;
காட்டுக்குச் செல்லத் தயாராயினர் படைவீரர்கள்.

சேனைத் தலைவன் தலைமையில் வந்தனர்,
சேஷாத்திரி வாசனைத் தொடர்ந்து வீரர்கள்.

வேட்டை ஆடினர் வெகுநேரம் மிருகங்களை;
வேட்கை மிகுந்தது நீர் பருகித் தாகம் தீர்ந்திட.

அழகிய சோலை ஒன்று தென்பட்டது அங்கு;
தழுவியது வீசிய குளிர்ந்த தென்றல் காற்று.

ரிஷபன் என்னும் அசுரனின் சோலை அது;
ரிஷபன் தடுத்தான் அதில் நுழைந்த வீரர்களை.

அரச குமாரன் என்று எண்ணினான் பகவானை;
பரந்தாமனையும் அச்சுறுத்தினான் அசுரன் ரிஷபன்!

“சம்பரா! இவனுக்குப் பதில் கூறு!” என்று சொல்ல
சம்பரன் தயாரானான் ரிஷபனுடன் போர் புரிய.

சிவ பக்தி மிகுந்தவன் அசுரன் ரிஷபன் – எனவே
தேக சக்தியும் மிகுந்தவன் அசுரன் ரிஷபன் !

நொடியில் அடித்து வீழ்த்தினான் சம்பரனை;
அடுத்து ஓடி வந்தான் ஸ்ரீனிவாசனை நோக்கி!

சரங்களைப் பொழிந்தான் சேனை நாயகன்;
சரங்கள் தடுத்தன அசுரனைச் சுவராக மாறி!

கரங்களாலே உடைத்தான் சுவற்றை அசுரன்,
பரபரவென்று முன்னேறினான் அசுரன் ரிஷபன்

அஸ்திரங்களை ஏவினான் அசுரன் ரிஷபன்;
அஸ்திரங்களை ஏவினான் சேனை நாயகன்!

06. அஞ்சனாத்ரி

திரேதா யுகத்தில் கடும் தவம் செய்தான்,
பரமசிவனைக் குறித்துக் கேசரி என்பவன்.

“வேண்டும் வரம் யாது?” என்று கேட்க
வேண்டினான் கேசரி இந்த வரத்தினை.

“எவராலும் வெல்ல முடியாத பலத்துடன்,
என்றும் வாழ்ந்திருக்கும் மகன் வேண்டும்!”

“புதல்வி தான் பிறப்பாள் உமக்கு – அந்தப்
புதல்விக்குப் பிறப்பான் நீர் கோரும் மகன்!”

அஞ்சனை அவதரித்தாள் அந்தக் கேசரிக்கு;
அருமை பெருமையாக அவளை வளர்த்தான்.

வானரத் தலைவன் விரும்பிக் கேட்டதால்,
வானரனுக்கு அவளை மணம் செய்வித்தான்.

குறை இருந்தது புத்திரன் இல்லையென்று!
குறத்தி போல் வந்தாள் தருமதேவதை அங்கே.

“வேங்கடம் சென்று தவம் செய்தால் – மனம்
வேண்டியபடிப் பிறப்பான் நல்ல மகன்!” என

அனுமதி பெற்றாள் தன் கணவனிடமிருந்து,
அடைந்தாள் வேங்கட மலையைச் சென்று.

ஆகாய கங்கையில் நீராடினாள் – பின்பு
அமர்ந்தாள் அஞ்சனைஅரும் தவம் புரிந்திட.

காற்றை மட்டுமே உட்கொண்டாள் – அவள்
மற்றவற்றைத் துறந்தாள் முற்றிலுமாக!

அஞ்சனை தவத்துக்கு இரங்கினான் வாயு;
கொஞ்சமேனும் தானும் உதவ நினைத்தான்.

கனிந்த பழத்தைக் கரத்தில் கொண்டு போட,
இனிய பிரசாதமாக அதைத் தினமும் புசிப்பாள்.

07. அஞ்சனாத்ரி

வந்தனர் அங்கே சிவனும், உமையும்.
கண்டனர் மந்திகள் கூடிக் களிப்பதை!

இன்புற விரும்பினர் தாமும் அவ்விதமே ;
இருவரும் மாறினர் இரண்டு மந்திகளாக!

பரம சிவனிடம் வெளிப்பட்ட தேஜசைப்
பிரசாதமாகத் தந்துவிட்டான் வாயு அன்று!

கனி என்று எண்ணிப் புசித்துவிட்டாள்!
கனி அல்ல அது; சிவனுடைய தேஜஸ்!

அசரீரி கேட்டது அஞ்சனைக்கு அப்போது;
“அசாதரணமான மகன் பிறப்பான் உனக்கு!

மகேஸ்வரனின் ஒரு அருட் பிரசாதமாக;
மகா பலவானாக; ஒரு மகா பண்டிதனாக;

மகா பக்தனாக, ஒரு சிரஞ்சீவியாக!” என்று.
மன நிம்மதி கொண்டாள் தேவி அஞ்சனை.

வானர உருவில் வந்து பிறந்தான் ஒரு மகன்,
வானில் பாய்ந்து சென்று விளையாடினான்!

கனி எனக் கருதினான் செங்கதிரவனை!
இனித்துச் சுவைக்கப் பறிக்கச் சென்றான்.

தடுத்தான் பிரம்மாஸ்திரத்தால் பிரமன்;
தரையில் விழுந்தான் மயங்கிய குழந்தை!

அஞ்சனையின் கண்ணீருக்கு அளவில்லை.
அஞ்சி ஓடி வந்தனர் தேவர்கள் அவர்களிடம்.

“பாலகனுக்கு இல்லை என்றுமே ஆபத்து!
பாலகனுக்கு இல்லை என்றுமே மரணம்!”

தேவ கானமும், சாஸ்திர ஞானமும் தந்து,
தேஹ வலிமை, தொண்டு மனப்பான்மை,

வாக்கில் சாதுர்யம், மனதில் பூரண பக்தி,
திக்கெட்டும் பரவிய புகழ், அஷ்டசித்திகள்;

அனைத்தும் தந்தனர் அஞ்சனை மகனுக்கு;
“இனி ஒருவர் இணையாகார் இவனுக்கு!

புனிதத் தலம் விளங்கிடும் இப் புவனத்தில்
இனி அஞ்சனாத்ரி என்று உன் பெயரால்!”

08. மாதவன்

நந்தனத்தில் வாழ்ந்து வந்தான்,
அந்தணன் புரந்தரன் என்பவன்.

நன்கு தேர்ந்தவன் கல்வி, கேள்வியில்;
நல்ல மகன் இருந்தான் மாதவன் என்று.

தந்தையைப் போல உத்தமன் அவன்,
சந்திரரேகை அன்பு கொண்ட மனைவி.

தீர்த்த யாத்திரை சென்றனர் இருவரும்;
தீர்த்தமாடித் தரிசித்தனர் இறைவனை.

தங்கி இருந்தாள் மனைவி தடாக்கரையில்,
தான் மட்டும் சென்றான் கனிகள் கொணர!

புல்லறுக்க வந்த புலைச்சியைக் கண்டு,
மெல்ல அவளைத் தன் வசப்படுத்தினான்!

உடன் வந்த மனைவியை மறந்து விட்டுத்
தொடர்ந்து போனான் புலைச்சி குடிசைக்கு.

அந்தணன் தான் என்பதை மறந்து விட்டான் ;
சொந்த குல ஆசாரத்தைத் துறந்து விட்டான்;

வழிப்பறிக் கொள்ளைகள் செய்தான் – பின்பு
வழிப்பறியே வாழ்வாதாரம் ஆகி விட்டது!

காலம் செல்லக் கட்டுத் தளர்ந்தது மேனி;
காமக் களியாட்டம் கிழவனாக்கி விட்டது.

வழிப்பறி செய்ய உடல் வலிமை இல்லை;
வழியில் வந்த அவள் வழியோடு போனாள்!

09. வேங்கடம்

தனியனாக ஆகி விட்டான் மாதவன்;
தன் நிலைமைக்கு மிக வருந்தினான்.

மனைவியிடம் செல்லவும் வழியில்லை
தனியே தவிக்க விட்டு விட்டு வந்ததால்!

நோய் வாய்ப்பட்டு அவளிடம் செல்வது
நேர்மை அல்ல என்பதை உணர்ந்தான்.

ஊர் ஊராகச் சுற்றி அலைந்து திரிந்தான்!
தீர்மானம் என்று எதுவும் இல்லை மனதில்!

சேஷாச்சலத்தை அடைந்தான் – ஆதி
சேஷனே அங்கு மலையாகக் கிடந்தான்.

பாவங்கள் தீரப் பிரார்த்தனை செய்தான்;
பாவனமாகிடப் பிரார்த்தனை செய்தான்;

காலடி வைத்தவுடன் அவனை எரித்தான்,
கால் முதல் தலை வரை அக்னி தேவன் .

பாவங்கள் எரிந்து சாம்பல் ஆனதும்,
பார்ப்பவர் வியக்கும் தேஜஸ் வந்தது.

வணங்கினர் அவனைக் கண்ட பேர்கள்,
வணங்கினர் அவனை முனிபுங்கவர்கள்.

கருணை எரித்தது பாவக் குவியலை;
கருணை அளித்தது புனிதமான உடலை!

வேங்கடம் என்றால் பாவத்தை எரிப்பது;
வேங்கடம் எரிக்கும் பக்தனின் பாவத்தை!

மாதவனின் பாவத்தை எரித்தது முதல்
மறு பெயர் பெற்றது வேங்கடகிரி என.

10. நாக கன்னிகை

சோழ ராஜன் சென்றான் வேட்டைக்கு,
சேஷாச்சலத்தை அடைந்தான் திரிந்து.

பிரிந்து விட்டான் படை வீரரிடமிருந்து;
மறந்து விட்டான் வெளிச்செல்லும் வழி!

தட்டு தடுமாறி வெளிவர முயன்றவன்
பட்டு ரோஜாப் பெண்ணைக் கண்டான்!

மலரே மலர்களைக் கொய்யுமா என்ன?
மலர் மங்கை மலர்கள் கொய்திருந்தாள்!

மையல் வசப் பட்டான் சோழ மன்னன்
தையலின் லாவண்யத்தைக் கண்டதும்.

“கொடிய விலங்குகள் திரியும் வனத்தில்
கொடி இடையாள் நீ என்ன செய்கிறாய்?

நீ யார்? எந்த ஊர்? என்ன பேர்? ” என
நீளமாக அடுக்கினான் கேள்விகளை.

“நாகர் குலத்தைச் சேர்ந்தவள் நான்
நாகர்களின் வேந்தன் என் தந்தை! ”

“மணம் செய்து கொள்கிறாயா என்னை?
மனம் பறி போய்விட்டது கண்டவுடன்!”

“நற்குணங்கள் பொருந்திய மன்னனைக்
கற்பு மணம் புரிய வேண்டுமாம் நான்!

தந்தையிடம் நீர் பேசினால் நடக்கும்
தடைகள் இல்லாமல் நம் திருமணம்! ”

“நாக லோகம் செல்ல நேரம் இல்லை!
காம வேதனை தாங்க முடியவில்லை!

கந்தர்வ விவாஹம் செய்து கொள்வோம்;
தந்தையிடம் சொல் திரும்பச் சென்றபின்.”

காமவசப் பட்டிருந்தாள் நாககன்னிகை;
தாமதம் இன்றிக் கந்தர்வ விவாஹம்!

ஆனந்த வெள்ளத்தில் நீந்தினர் பல நாள்;
அவரவர் வீட்டுக்குச் சென்றனர் ஒரு நாள்.

11. யுவராஜன்

பாதாள லோகம் சென்ற நாக கன்னிகை
பூலோகத்தில் நடந்ததைச் சொன்னாள்.

மணந்தாள் அவள் சோழ மன்னனை என
மகிழ்ந்தான் தந்தை மன்னன் தனுசன்.

கந்தர்வ விவாஹத்தின் பலன் கர்ப்பம்!
சுந்தரனான ஆண் மகவு ஒன்று பிறந்தது.

பிறந்த நேரமும், அவன் தோற்றமும்,
சிறந்த அரசனுக்கு மட்டுமே உரியவை.

கண்ணும் கருத்துமாக வளர்த்தனர் அவனை;
கண்மணி வளர்ந்தான் கண்களைக் கவரும்படி.

“என் தந்தை யார்?” எனக் கேட்டான் தாயை.
“உன் தந்தை சோழ மன்னர்!” என்றாள் தாய்.

தந்தையைக் காண விரும்பினான் அவன்;
தடை சொல்லாமல் அனுப்பினர் அவனை.

சோழ மன்னனை வந்து வணங்க – மன்னன்
” தோழமையோடு கேட்டான் நீ யார்?” என.

“வந்தீர்கள் நீங்கள் சேஷாச்சலம் வேட்டையாட;
தந்தீர்கள் கந்தர்வ மணம் அன்னை நாககன்னிக்கு!”

அகன்ற ஆகாயத்தில் எழுந்தது ஓர் அசரீரி ;
“புகன்றது உண்மையே! இவன் உன் மகன்!

ஸ்ரீனிவாசனுக்குத் தொண்டுகள் புரிவான்;
மேதினியில் அழியாத புகழ் அடைவான்!”

அணைத்துக் கொண்டான் அருமை மகனை;
வினவினான் அன்னை, பாட்டனைப் பற்றி .

முதுமை எய்தி விட்டான் சோழ மன்னன்;
புதிய மன்னன் ஆனான் நாககன்னி மகன்.

நாடினான் நாட்டு மக்களின் நன்மைகளை,
நாற்றிசையும் அவன் புகழ் பரவி விரவியது

12. அபூர்வக் கனவு

இடையர்கள் கண்டனர் மன்னனை;
இயம்பினர் வியத்தகு நிகழ்ச்சிகளை.

“வேங்கட மலையினில் வாழ்பவர்கள் நாங்கள்;
தங்களுக்குப் பால் குடங்கள் எடுத்து வருவோம்.

வழியில் உள்ள புற்றின் அருகே வந்ததும்
வழிந்தோடுகிறது பால் குடங்கள் உடைந்து!

தினமும் நிகழ்கிறது இது போலவே மன்னா!
இனம் புரியவில்லை இதன் காரணம் எமக்கு!”

விந்தையாக இருந்தது சோழ மன்னனுக்கு;
“இந்த நிகழ்வைக் கண்டு பிடிப்பேன் நான்!”

கனவு கண்டான் மன்னன் அன்றிரவு;
கருமை நிற அழகன் ஒருவன் வந்தான்.

கையில் வில்,  மார்பில் பெண் உருவம்;
“கையுடன் அழைத்து வரச் சொன்னார்

சேஷகிரி ஸ்ரீனிவாசன் தங்களை!” என்றான்.
பேசாமல் அவன் பின் சென்றான் மன்னன்.

சேஷகிரியை அடைந்தனர் இருவரும் – வி
சேஷமான நவரத்தினம் மின்னும் மண்டபம்!

சங்குடன் சக்கரம், மகர குண்டலங்கள்;
பொங்கும் அழகுடைய தேவியர் மூவர்;

கோடி சூரியப் பிரகாசத்துடன் நாரயணன்;
தேடி வந்து கண்ட காட்சியில் உருகினான்!

அள்ள அள்ளக் குறையாத ஆனந்தம்;
மெல்ல மெல்ல மறைந்தது அக்காட்சி.

கனவு என்றே நம்ப முடியவில்லை அவனால்;
நனவு போலவே இருந்தது விழித்த பின்னரும்.

சபா மண்டபத்தில் உரைத்தான் தன் கனவை,
“அபாரமான கனவின் பொருள் என்ன?” என,

ஆழமாகச் சிந்தித்தனர் விசுவாச மந்திரிகள்;
சோழ மன்னனிடம் கூறினர் சிந்தனைகளை.

13. வேடுவன்

“இடையர்கள் குடம் உடைவதற்கும், கனவுக்கும்,
தொடர்பு உள்ளது இதில் ஐயம் இல்லை மன்னா!

புற்றிலே உள்ளாரா ஸ்ரீநிவாசன் என்று அறியப்
புற்றுக்குச் செய்வோம் பால்குடம் அபிஷேகம்.

இறைவன் வெளிப்பட்டால் பொருள் விளங்கும்
சிறந்த ஆலயம் கட்டுவிக்க விழைகின்றான் என.”

வேடன் வந்தான் வேந்தனிடம் சேதி சொல்ல.
வேடனின் சேதியைக் கேட்கும் ஆவல் மீறியது!

“புங்கம் விதையை உண்கின்றோம் மாவாக்கி;
எங்கிருந்தோ வருகிறது வெள்ளைஆண் பன்றி.

தின்றுவிட்டுப் போய் விடுகிறது புங்கம் மாவை!
இன்று காவல் வைத்துச் சென்றேன் என் மகனை.

உண்டான் அவன் புங்கம் மாவை வெண்ணையுடன்!
கண்டதும் என் கோபம் எல்லை மீறியது – அவனிடம்

‘பன்றி தின்கிறது என்று உன்னைக் காவல் வைத்தால்
பன்றிக்குப் பதிலாக நீயே தின்கின்றாயா?’ என்றேன்.

கொடுவாளை ஓங்கியபடிப் பாய்ந்த போது – என்னை
நடுங்க வைத்தது இடி போன்று முழங்கிய கர்ஜனை.

‘உண்டார் பரந்தாமன் உங்கள் புங்கம் மாவை,
வெண்ணை கலந்து உங்கள் மகன் உருவினில்!

நேராகச் சென்று கூறு இதை உன் மன்னனிடம்;
வேறு கனவு கண்டிருப்பான் உன் மன்னனும் கூட.’

விளங்கவில்லை என் அறிவுக்கு எதுவுமே மன்னா!
விளம்ப வந்தேன் விவரங்களை உமக்கு!” என்றான்.

“வேடன் கூறுவதற்கும், கண்ட கனவுக்கும், இடையர்
குடம் உடைவதற்கும் தொடர்பு உள்ளது உறுதியாக!”

ஆராய விரும்பினான் திருமலைக்குச் சென்று;
பிரதானி, மந்திரிகளுடன் சென்றான் புற்றுக்கு.

வேடன் ஓடி வந்தான்; சொன்னான் மன்னனிடம்,
“கூட வந்தால் காட்டுவேன் வெள்ளைப் பன்றியை!”

4. ஆலயங்கள்

வேடுவனைப் பின் தொடர்ந்தனர் அனைவரும்;
ஓடத் தொடங்கியது பன்றி இருந்த புதரை விட்டு.

வளைந்து, நெளிந்து, புகுந்தோடி வெள்ளைப் பன்றி
நுழைந்து, மறைந்தது ஒரு புற்றுக்குள் திடீரென்று!

“மன்னா! நாங்கள் சொன்ன புற்றும் இதுவே தான்!” என்று
சொன்னார்கள் இடையர்கள் சோழ மன்னனிடம் அப்போது.

“ஹிரண்யாக்ஷன் பூமியை ஒளித்து வைத்த போது,
தரணியைக் காக்க வந்த வெள்ளைப் பன்றி இதுவே!

புற்றின் அடியில் இருக்க வேண்டும் பகவான் – நாம்
புற்றைத் தோண்டினால் தெரியும் உண்மை!” என்ற

வேடனைக் கடிந்து கொண்டான் சோழ வேந்தன்;
“வேறு வழியில் வெளிப்படுத்துவோம் இறைவனை!”

பால் குடங்கள் வந்து குவிந்தன அங்கே உடனே!
பால் அபிஷேகம் செய்தான் சோழமன்னன் புற்றுக்கு.

கரைந்தது புற்று; கண்டனர் அதன் உள்ளே
இருந்தது ஆதி வராஹரின் அழகிய உருவம்!

பரவசம் அடைந்துக் கை தொழுது நின்றிருந்த
அரசனிடம் கூறினார் ஆதி வராஹப் பெருமான்.

“சுவாமி புஷ்கரிணியின் அருகே பகவான்
ஸ்ரீனிவாசன் உள்ளான் புளிய மரத்தின் கீழ்!

பூலோகம் வந்துள்ளான் பக்தருக்கு அருள;
புற்று மூடி விட்டது முழந்தாள் வரையில்!

ஆலயம் எழுப்பி ஆராதிப்பாய் ஸ்ரீனிவாசனை.
ஆலயம் எழுப்பு எனக்கும் மேற்குக் கரையில்.”

சென்றனர் அனைவரும் சுவாமி புஷ்கரிணி;
கண்டனர் ஸ்ரீனிவாசனைப் புளிய மரத்தடியில்.

புற்றுக் கரைந்து போனது பால் அபிஷேகத்தால்.
பூரணம் ஆனது பகவானின் திவ்விய தரிசனம்!

“திருமலையில் என்றும் இருந்திட வேண்டும்!”
திரும்பத் திரும்ப வேண்டினான் சோழ மன்னன்.

“திருக் கோவில்கள் அமைத்துத் திருப்பணி செய் !
தினமும் மூன்று காலமும் ஆராதனைகள் செய்!”

கண் கவர் ஆலயங்களை விரைந்து எழுப்பினான்.
விண்ணோரும், மண்ணோரும் வந்து தொழுதனர்

15. ஆதிசேஷன்

சேஷன்:

‘சயனிக்கின்றான் என் மேல் பகவான்;
தயங்காமல் தாங்குகிறேன் உலகினை.

பாக்கியசாலி என் போல் யார் உளர்?
பகவானிடம் நெருங்கிப் பழகுவதற்கு!’

கர்வம் தலை தூக்கியது மனத்தில்,
சர்வம் தனக்குத் தாழ்ந்தவை என்று.

வந்தான் வாயுதேவன் தரிசனத்துக்கு;
“இந்த நேரத்தில் இல்லை தரிசனம்.

ஏகாந்தத்தில் உள்ளார் இறைவன்;
போகவிட மாட்டேன் காண்பதற்கு!”

காற்று:

“என்னைத் தடுக்க முடியுமா உன்னால்?
எங்கும் நிறைந்திருக்கும் காற்று நான்!”

சேஷன்:

“விரிகிறேன் பாயாக இறைவனுக்கு;
விரிகிறேன் குடையாக இறைவனுக்கு!

ஈடு எவர் பக்தி செய்வதில் எனக்கு?
ஈடு எவர் சேவை செய்வதில் எனக்கு?”

காற்று:

“ஆதாரம் அனைத்துக்கும் காற்று!
அதிகம் என் ஞானம், பக்தி, சக்தி.

பணியாள் நீ; சுதந்திரன் நான்;
உணர்ந்து கொள் வேறுபாட்டை!”

சேஷன் வெகுண்டான் இது கேட்டு!
“சோதிப்போம் யார் பலசாலி என்று!”

உரைத்தனர் இருவரும் தமது கட்சியை;
உன்னினார் இறைவன் மமதையை நீக்க.

6. கர்வ பங்கம்

 

“தொண்டாற்றும் எனக்குச் சக்தி இல்லையாம்!
கொண்டாடுகின்றனர் அனைவருமே என்னை!”

“உனக்கு என்று சக்தி இல்லை அனந்தா – ஆனால்
தனக்கு என்று சக்தி உள்ளவன் வாயு தேவன்.

அனைத்து உயிர்களுக்கும் ஜீவாதாரம் வாயு;
அனைத்து இடங்களிலும் வியாபித்துள்ளான்.

சக்தி அதிகம் உடையவன் வாயு தேவனே!
சந்தேகம் வேண்டாம் உண்மையும் இதுவே!”

“சோதித்துப் பார்க்கலாம் இந்த உண்மையை;
பாதிக்காது நம்மை பலப் பரீட்சை!” என்றான்.

“மேருவை நான் கட்டிக் கொள்கிறேன் – வாயு
வேருடன் பெயர்க்கட்டும் முடிந்தால் அதனை.”

அழுத்திக் கட்டிக் கொண்டான மேரு மலையை,
ஆதிசேஷன் தன் பலத்தை ஒன்றாகத் திரட்டி.

வாயு தேவன் முயன்றான் நகர்த்துவதற்கு;
வாயு தேவனின் முயற்சி வெற்றி பெற்றது.

வேருடன் பெயர்க்கப் பட்டது மேரு மலை!
வேறு இடத்தில் பறந்து சென்று விழுந்தது!

விழுந்த இடம் சுவர்ணமுகி தீர்த்தம் – அங்கு
விழுந்த சேஷன் மலையாகக் கிடக்கின்றான்!

சேஷகிரி ஆகிவிட்டது அந்த மலை – அதன் பின்
சேஷனின் கர்வம் சென்ற இடம் தெரியவில்லை.

நீராடினான் கோனேரித் தீர்த்தத்தில் ஆதிசேஷன்,
நாக தீர்த்தத்தை அடைந்தான் பிறகு சென்று.

தவம் செய்தான் தீவிரமாக நாராயணன் மீது;
தவம் பலித்து நாராயணன் தரிசனம் தந்தான்.

“மன்னித்து எழுந்தருள வேண்டும் என் மீது;
மக்களுக்கு என்றும் அருள் புரிய வேண்டும்;”

கோனேரியில் எழுந்தருளினான் ஸ்ரீநிவாசன்;
கோரிக்கையை நிறைவேற்றுகிறான் இன்றும்!

17. சரஸ்வதியின் தவம்

“புண்ணிய தீர்த்தங்கள் அனைத்திலும்
புனிதமானவள் ஆக வேண்டும் நான்”

நதி வடிவாகி தியானித்தாள் சரஸ்வதி;
விதி விளையாடியது அவள் தவத்தில்.

புலஸ்தியர் வந்தார் சரஸ்வதி தேவியிடம்;
புலஸ்தியர் தன்னுடைய மகன் என்பதால்

உபசரிக்கவில்லை சரஸ்வதி சரியாக,
அபசாரமாகக் கருதிவிட்டார் முனிவர்.

“எல்லாத் தீர்த்தங்களிலும் சிறந்ததாகும்
பொல்லாத கனவு இல்லாது போகட்டும்.

அறிந்தவர்கள் அனைவரும் கூறுவர்,
திரிபதகைத்  தீர்த்தமே சிறந்தது என!”

தடையானான் மகனே தவத்துக்கு;
உடைந்து போனாள் சரஸ்வதி தேவி.

“பரந்தாமனுக்கு எதிரியாக அசுரனாகப்
பிறவி எடுப்பாய் நீ!” என்று சபித்தாள்.

“சாப விமோசனம் எப்போது?” என்று
சாந்தம் அடைந்த புலஸ்தியர் கேட்டார்.

“ராமனாக அவதரிப்பார் நாரணன் – நீ
ராவணன் தம்பி விபீஷணன் ஆவாய்!

இறைவனின் நட்புக் கிடைக்கும் – அதனால்
சிரஞ்சீவியாக இருப்பாய் உலகில் என்றும்!”

கருடாரூடராக வந்தார் நாராயணன்;
“சிறந்த தீர்த்தமாக அனுகிரஹியுங்கள்!”

“புலஸ்தியர் சாபத்தால் கிடைக்காது அது!
புஷ்கரிணியாக வேங்கடத்தில் இருந்து வா!

லக்ஷ்மியும் நானும் வாசம் செய்வோம் – ஒரு
லக்ஷியத்துடன் உன் தீர்த்தக் கரையினில்!

நீராடுவர் பக்தர்கள் தனுர் மாதத்தில்,
சூரியோதயத்தில், சுக்கில துவாதசியில்.

பாவங்கள் தீர்க்கும் புஷ்கரிணியாகிப்
பாரினில் நீ விரும்பும் புகழ் பெறுவாய்!”

வேங்கடத்தில் ஸ்வாமி புஷ்கரிணியாகி
வேண்டிய மகிமைகள் பெற்றாள் சரஸ்வதி.

18. தேக காந்தி

வாயுதேவன் விரும்பினான் மனதார
வாசுதேவன் போன்ற தேக காந்தியை.

ஆயிரம் தேவ வருடங்கள் செய்தான்
அரும் தவம் அறிதுயில் பிரான் மீது.

காட்சி தந்தார் பகவான் – பின்னர்
கனிவுடன் கூறினார் ஓர் உபாயம்.

“வேங்கட மலையில் குமார தாரிகையில்
முங்கி எழுந்து ஆராதிப்பாய் என்னை!”

வாயுதேவன் அடைந்தான் வேங்கடம்;
வாசுதேவனை ஆராதனை செய்தான்;

வேங்கட மலையில் குமார தாரிகையில்
முங்கிப் புனித நீராடித் தூயவனான பின்.

தவத்துக்கு மெச்சிக் காட்சி தந்தார்;
தயவுடன் அருளினார் தேக காந்தியை.

வியப்பு அடைத்தனர் கண்ட பேர்கள்
வாயுவின் ஒளிரும் தேக காந்தியால்!

பிரமன், மகேசன் முதலியோரும்
பிரமிக்கத் தக்க காந்தி பெற்றனர்,

வாயுதேவன் செய்தது போலவே
வாசுதேவனை ஆராதனை செய்து.

19. அகஸ்தியர்

அரியதொரு தவம் செய்தார் அகத்திய முனிவர்
கரிய நிறக் கண்ணனைப் பொதிகையில் காண.

பிரத்தியக்ஷம் ஆனார் பிரம்ம தேவன் அங்கே.
“பரந்தாமனைக் காணச் செல்வீர் சேஷகிரி!”

வேங்கடத்தை அடைந்து தவம் செய்கையில்
ஓங்கி ஒலித்தது விண்ணில் ஓர் அசரீரி.

“திருமலையில் உள்ளன நீராடுவதற்கு
திவ்விய தீர்த்தங்கள் ஆயிரத்து எட்டு!

மூல மந்திரத்தை உச்சரித்து நீராடி விட்டு
மலையின் மகிமை கூறி வலம் வருவாய்!

தவம் செய்தால் தவறாமல் கிடைக்கும்
பவம் ஒழிக்கும் பரந்தாமனின் தரிசனம்!”

ஆயிரத்தெட்டு தீர்த்தங்களிலும் நீராடி,
வாயால் மூல மந்திரத்தை உச்சரித்து;

வலம் வந்தார் அகத்தியர் திருமலையை;
தவம் செய்தார் பரந்தாமனைக் குறித்து.

சுவாமி புஷ்கரிணி அருகே பெற்றார்,
சுவாமி தரிசனம் லக்ஷ்மி சமேதராக!

20. சங்கன்

சூரிய வம்சத்தின் ஓரரசன் சங்கன்,
கோரினான் இறைவன் தரிசனத்தை.

கேட்டான் வசிஷ்ட முனிவரிடம் சென்று,
“நாட்டம் கொண்டேன் இறை தரிசனத்தில்!

தேட்டம் இல்லை தவம் செய்யும் இடம்;
வாட்டம் அடையாது தரிசிக்க உதவுவீர்.”

“சுவர்ணமுகி தீரத்தில் அமைந்துள்ளது
சேஷாச்சலம் என்னும் வேங்கடமலை.

முனிவர்கள் செய்தனர் அங்கே தவம்
புனிதன் நாராயணனின் தரிசனம் பெற.

பரம சிவன் உள்ளான் அடிவாரத்தில்;
பரந்தாமன் உள்ளான் மலையுச்சியில்.

விண்ணோர், மண்ணோர் தொழுவர்
கண்ணனை ஸ்ரீனிவாசனாக அங்கே.

பர்ணசாலை அமைத்துத் துதித்தான்,
சுவர்ண முகி தீரத்தில் வாயு தேவன்.

வந்தார் வயோதிகர் ஒருவர் அங்கு.
வாயுவின் தவத்தை மெச்சினார் .

வந்தவர் இறைவனோ என ஐயுற்றுத்
தங்க வைத்தான் சதுர்மாச விரதத்தில்.

திருவுருவைக் காட்டினார் வாயுவுக்கு,
விரதத்தைப் பூர்த்தி செய்ய உதவினர்.

கற்பத்தின் முடிவில் குழுமுவர் முனிவர்
சக்கர தீர்த்தத்தில்!” என்றார் சுக முனிவர்.

“மலையை வலம் வந்து ஞானயோகம் செய்.
அலைமகளுடன் தரிசிக்கலாம் நாரணனை!”

சங்கன் செய்தான் அவர் கூறியவாறு;
சங்கன் முன் தோன்றினான் நாரணன்.

“சந்திரன் சூரியன் உள்ள வரையில்
சன்னதி கொள்வீர் திருமலையில்!”

“சகலரும் வணங்கி அர்ச்சிக்கும்படி
சமைப்பாய் என் உருவத்தை இங்கு!”

ஆராதித்தான் திருவுருவை அமைத்து;
மாறாத பரமபதம் அடைந்தான் பிறகு.

21. பசு நெய் விளக்கு

அந்தணன் ஒருவன் விஷ்ணு சர்மன்,
சொந்த குல ஆசாரத்தை மறந்தான்.

இன்பம் தூய்த்தான் பல பெண்களுடன் கூடி;
இன்பம் தூய்த்தான் குரு பத்தினியைக் கூடி!

பாவம் பற்றியது முதுமையுடன் கூடி;
நோய் வாய்ப்பட்டான் மனது மிக வாடி.

வெறுத்தனர் அவனை உற்றார், உறவினர்;
துரத்தினர் வீட்டை விட்டு, ஊரை விட்டு!

ஓடிச் சென்றான் காட்டுப் பிரதேசத்துக்கு;
வாடி விழுந்து விட்டான் நாடிகள் தளர்ந்து.

கடித்துத் தின்றன நாய்களும், நரிகளும்;
துடி துடித்து இறந்தான் விஷ்ணு சர்மன்.

“குரு பத்தினியைக் கூடியவன் இவன்;
குருத் துரோகம் செய்தவன் இவன்!”

கூசியது இதைக் கேட்ட யமதர்மன் உடல்;
ஏசியபடி அனுப்பி விட்டான் நரகத்துக்கு.

வேத நாமன் விஷ்ணு சர்மனின் மகன்;
‘ வேத குலத்தில் பிறந்தார் என் தந்தை.

பேதம் பாராமல் செய்தார் பாவங்கள்;
வேதனையோடு துறந்தார் உடலை.

நற்கதி கிடைக்காது; நரகமே கதி !’
நன்கு அறிந்திருந்தான் வேத நாமன்.

“பாவம் தீர்த்து நற்கதி தர வேண்டும்;’
தேவனைப் பிரார்த்தித்து ஏற்றினான்

பசு நெய் விளக்குகளை ஸ்ரீநிவாசனுக்கு;
நசித்தது விஷ்ணு சர்மன் செய்த பாவம்!

முற்றிலும் பாவங்கள் நீஙகிய பின்னர்,
நற்கதி அடைந்து சென்றான் வைகுந்தம்.

22. அவிர் பாகம்

வையகத்தில் நடந்தான் லக்ஷ்மியுடன்,
வைகுந்தவாசன் இயற்கையை ரசித்தபடி.

சேஷாச்சலத்தின் மலைச் சரிவுகளில் யாகம்
செய்து கொண்டிருந்தனர் முனி புங்கவர்கள்.

திருமலையில் செய்யும் யாகமும், தவமும்,
ஒரு குறைவும் இன்றி நிறைவேறும் அல்லவா?

அரசன் என எண்ணிய முனிவர் இறைவனை,
வரவேற்று அளித்தனர் பாலும், பழங்களும்.

பீதாம்பரம், இரத்தின ஹாரம் அணிந்தவன்
சாதாரண மனிதனாக இருக்க முடியாதே!

“எந்த நாட்டு அரசர்? தங்கள் பெயர் என்ன?
இங்கு வந்த காரணம் கூறுங்கள்!” என்றனர்.

“அரசனும் அல்ல, நான் அந்தணனும் அல்ல;
ஆசாரம், ஜாதி, குலம், கோத்திரம் இல்லை!

தந்தையும் இல்லை, தாயும் இல்லை எனக்கு!
எந்த தேசமும் என் தேசமே! எப்போதுமே!

எங்கும் இருப்பவன், எல்லாம் என் ரூபம்;
எத்தனை பெயர்கள், அத்தனை குணங்கள்!”

‘மனநிலை சரியாக இல்லையோ இவருக்கு?’
முனிவர்கள் தொடர்ந்தனர் தம் ஹோமத்தை.

மந்திரங்கள் ஓதி ஹோமம் செய்கையில்,
வந்தன இரு கரங்கள் அவிர் பாகம் பெற்றிட.

அக்கினியின் நடுவில் கரங்களை நீட்டி – அச்
சக்கரவர்த்தி பெற்றார் முனிவரின் ஹவிசை!

சங்குச் சக்கரதாரியாகக் காட்சி அளித்தார்;
அங்கு வந்திருந்தவர் ஸ்ரீனிவாசன் அல்லவா?

23. குமார தாரிகை

அழகிய இளைஞனாக மாறிய ஸ்ரீனிவாசன்
ஆடித் திரிந்தார் மலைச் சரிவில் ஒருநாள்.

வந்து கொண்டிருந்தார் அந்தணர் ஒருவர்,
வயது முதிர்ந்தவர் தன்னந் தனியாளாக!

கூனி விட்ட முதுகு; வலுவிழந்த கால்கள்,
பனி மறைக்கும் கண்கள், பசியுடன் தாகம்!

துணைக்கு வந்த மகனைத் தேடிக் கொண்டு,
‘ துணைக்கு வந்தவன் எங்கே போய்விட்டான்?

தண்ணீர் எடுக்கச் சென்றவன் வரவில்லையா?’
கண்ணீருடன் தேடிக் கொண்டிருந்தார் அவனை!

முள்ளிலும், கல்லிலும் அவர் நடப்பது கண்டு,
உள்ளம் வெண்ணையானது ஸ்ரீனிவாசனுக்கு!

“இறைவா! ஏன் நான் உயிரோடு உள்ளேன்?
இருக்கிறேன் ஒரு பாரமாக மற்றவர்களுக்கு!

வாட்டி வதைக்கின்றது முதுமையில் வறுமை.
வாழ்வதால் ஒரு பயன் இல்லையே இனி நான்”

மெள்ளத் தடவினான் முதுகை ஸ்ரீனிவாசன்,
“துள்ளும் இளமையோடு இருக்க விருப்பமா?”

“கேலி செய்கிறாயா தம்பி கிழவன் என்னை? என்
வேலைகளைச் செய்ய முடிந்தாலே போதுமே!

சேவை செய்வேன் இறைவனுக்கு முடிந்தவரை,
தேவை இல்லை துள்ளும் இளமை !” என்றார்.

“சுனைக்கு அழைத்துப் போகிறேன் முதலில்;
நனைத்தால் குறையும் உடலின் உஷ்ணம்.”

நீரில் முங்கி எழுந்தவர் மாறி விட்டிருந்தார்!
நிமிர்ந்து விட்ட முதுகு; இறுகிய தசைகள்!

நூறு வயது குறைந்து விட்டது – பதி
னாறு வயது வாலிபனாக மாற்றியது!

காணோம் கரையில் இருந்த இளைஞனை;
நாரணன் காட்சி தந்தான் புன் முறுவலுடன்.

“நித்திய கர்மங்களைச் செய்வீர் முன்போல்.”
பக்தியுடன் விழுந்தார் கால்களில் அந்தணர்.

முதியவரை இளையவராக ஆக்கிய சுனைக்குப்
புதிய பெயர் கிடைத்தது குமார தாரிகை என்று!

24. சங்கனன்

சங்கனன் ஆண்டு வந்தான் காம்போஜ நாட்டில்
சங்காச்யம் என்னும் நகரைக் கீர்த்தியுடன்.

கர்வம் மிகுந்து விட்டது பராக்கிரமத்தால்;
தர்மம் குறைந்து நலிந்து மெலிந்து விட்டது.

புண்ணியம் குறையலானது சங்கனனுக்கு
கண்ணியம் குறையலானது சங்கனனுக்கு.

விலகி விட்டனனர் பாதுகாத்த வீரர்கள்;
விலை போயினர் மறைந்திருந்த எதிரிக்கு.

வழக்கம் போலப் பழகவில்லை பிரதானிகள்;
குழப்பம் மேலிட்டது; குறைந்தது அவன் மதிப்பு.

அவதிப் பட்டனர் அவன் நாட்டு மக்கள்;
அவன் மேல் விழுந்தது அந்தப் பழியும்!

ஆட்சியைக் கைப் பற்ற முயன்றனர்;
மாட்சிமை இல்லை அவர்களை அடக்க.

உயிருக்கு ஆபத்து என்ற நிலை உருவாக
எவருக்கும் தெரியாமல் தப்பி ஓடினான்!

பட்டத்து ராணியுடனும் இன்னமும் தன்
கட்டளைக்குப் பணியும் அமைச்சருடன்.

சேது கரையைச் சென்று அடைந்தனர்.
வேதனை தீரும் ராமேஸ்வரம் சென்றால்.

கடல் நீராடினான் சேதுவில் சங்கனன்
உடன் சென்று தரிசித்தான் இராமநாதரை.

அடைந்தான் சுவர்ணமுகி தீர்த்தத்தை!
விழைந்தான் வேங்கடத்தில் தவம் புரிய!

வட பகுதியைத் தேர்ந்தெடுத்தான் சங்கனன்;
“விட நேர்ந்த்தது நற்பணிகளைச் செருக்கால்.

அரியணையும் துறந்து அஞ்சி வாழ்கிறேன்!
சரியாகுமா மீண்டும் முன்போல இந்த நிலை?

நாட்டை அடைந்து ஆட்சி செய்வேனோ?
காட்டிலேயே காலத்தைக் கழிப்பேனோ?”

25. சங்கனன்

அன்றிரவு தூங்கும் போது குரல் கேட்டது,
நின்று தேடியும் காணவில்லை எவரையும்!

விண்ணில் இருந்து ஒலித்தது அந்தக் குரல்,
எண்ணங்களை அறிந்தது போலப் பேசியது!

“வடக்கே உள்ளது வேங்கடம் எனும் திருமலை;
தடாகம் உள்ளது சுவாமி பூஷ்கரிணி என்பது.

தடாகக் கரையில் உள்ளது எறும்புப் புற்று;
தடாகத்தில் நீராடி விடாமல் துதித்து வா!”

வேங்கட மலையில் தடாகத்தை அடைந்தனர்;
தங்குவதற்குக் குடில் அமைத்தனர் புற்றருகே.

மூன்று வேளை நீராடினான் பூஷ்கரிணியில்-மனம்
ஊன்றித் தொழுதான் பகவானை நாள் முழுவதும்.

சுவாமி மனம் கனிவதற்கு ஆறு மாதமானது!
சுவாமி பூஷ்கரிணியில் தோன்றியது ஓர் ஒளி!

ரத்தின மயமான விமானத்தில் இருந்தனர்
யத்தனம் பலித்திட நாரணனும் தேவியரும்.

குழுமினர் தேவர்கள், துதித்தனர் முனிவர்;
ஆடினர் தேவ மகளிர்; பாடினர் கந்தருவர்.

புல்லரித்தது சங்கனனின் உடல் மகிழ்வால்,
சொல்லைக் கேட்டதும் துள்ளியது மனம்!

“உன் நாடு திரும்பும் நேரம் வந்தது!
உன் ஆட்சி திரும்பும் நேரம் வந்தது!”

சங்காச்யத்தில் சங்கடமான குழப்பம்;
சங்கனன் ஆட்சியே மேல் என்றானது!

தங்களுக்கே அரசபதவி வேண்டும் என்று
தானைத் தலைவர்கள் போட்டி இட்டனர்.

வேங்கட நாதன் அருள் பெற்ற மன்னன்
சங்கனன் திரும்பி வருவதை அறிந்தனர்.

குடிமக்கள் போர்க் கொடி தூக்கினர்;
பிடிவாதமாக அதிகாரிகளைச் சாடினர்!

சிற்றரசர்கள் ஆதரித்தனர் அரசனையே;
முற்றிலும் தோற்று விட்டனர் அதிகாரிகள்.

நாட்டை விட்டு ஓடிவிட்டனர் காட்டுக்கு;
நாட்டை மீட்டு ஆட்சி செய்தான் சங்கனன்.

வேங்கட நாதனின் பேரருளே அவனுக்குச்
சங்கடம் தீர்த்தது; ராஜ்ஜியம் அளித்தது.

26. ஆத்மா ராமன் (1)

விந்தியப் பிரதேசத்தில் வாழ்ந்த
அந்தணரின் மகன் ஆத்மா ராமன்.

தெய்வ பக்தி மிகுந்தவன் – எனவே
தெய்வ அருள் பெற்று இருந்தான.

வேத, வேதாந்தங்களைக் கற்றவன்;
பேதமின்றி மதித்தனர் அனைவரும்.

மறைந்து போனார் அவன் தந்தை – ஆனான்!
பெரும் செல்வத்துக்கு புது அதிபதியாக!

பணம் வந்ததும் முழுதும் மாறி விட்டான்;
குணத்தை முற்றிலும் இழந்து விட்டான்.

குல ஆசாரங்களைத் துறந்து விட்டான்;
குல தெய்வத்தையும் மறந்து விட்டான்.

தலைக்கு ஏறியது செல்வச் செருக்கு;
விலைக்கு வாங்கினான் இன்பத்தை.

“குந்தி தின்றால் குன்றும் மாளும்” அல்லவா?
குறைந்தும், மறைந்தும் போனது செல்வம்!

பணம் போனவுடன் போயிற்று கௌரவம்!
குணம் என்றோ போய்விட்டது அல்லவா?

ஒதுக்கி வைத்தனர் வறுமை வந்தவுடன்;
மதிக்கவில்லை குலத்தைச் சேர்ந்தவர்கள்.

“குலத்தைக் கெடுக்க வந்த கோடரிக் காம்பு!”
பலவித பரிஹாசங்களைக் கேட்டு நொந்தான்.

நட்பு என்று சொல்ல யாரும் இல்லை!
நாணம் வந்தது உறவினரைக் காண.

ஊரை விட்டே வெளியேறி விட்டான்;
ஊர் ஊராக அலைந்து திரிந்தான் அவன்.

கால்போன திசையில் நடந்து சென்றவன்
கலியுக வரதனின் திருமலை அடைந்தான்.

27. ஆத்மா ராமன் (2)

பாவங்கள் தீரும் தாபங்கள் மாறும் என,
பகவானை ஆராதித்தான் திருமலையில்.

கபில தீர்த்தத்தில் நீராடினான் முதலில்,
கபிலேஸ்வரரைத் தரிசித்தான் கண்குளிர.

தீர்த்தங்கள் அனைத்திலும் நீராடினான்;
தீர்ந்தன அவன் பாவச்சுமைகள் அவற்றில்.

சுவாமி புஷ்கரிணியை நோக்கிச் சென்றான்.
சுவாமி தரிசனம் செய்தது போல மகிழ்ந்தான்.

கோடி சூரியப் பிரகாசத்துடன் ஒரு குஹையில்
தேடினாலும் கிடைக்காத சனத்குமாரர் இருந்தார்.

வலம் வந்து நமஸ்கரித்தான் அவரை – தன்
வளம் குன்றிவிட்ட பின்புலத்தைக் கூறினான்.

“முற்பிறவியில் நான் செய்த பாவம் என்ன?
முக்காலமும் அறிந்த நீர் சொல்லுங்கள்!” என,

“தான தர்மங்களை இகழ்ந்து பேசினாய்;
தானம் பெறுபவர், தருபவர் இருவரையும்.

நல்ல செயல்களைத் தடுத்தாய் – போனாய்
பொல்லாத வழிகளில் நன்னெறி தவறி!

தந்தையின் புண்ணியம் காத்தது உன்னை!
தந்தை சென்ற பின்னர் பற்றின பாவங்கள்.”

“வியாதியஸ்தனுக்கு வைத்தியன் போலவும்,
வறியவனுக்குக் கிடைத்த புதையல் போலவும்,

காயும் பயிருக்குப் பெய்யும் மழை போலவும்,
தீயோன் எனக்குக் கிடைத்துள்ளீர்கள் நீங்கள்.

இன்னல்கள் தீர வழி கூறுங்கள் சுவாமி!
இனியும் என்னால் தாள முடியாது சுவாமி!”

28. ஆத்மா ராமன் (3)

“ஒரு வழி இருக்கிறது இன்னல் தீர்ந்திட,
திருமகள் கருணையைப் பெறுவது அது!

திருமால் மார்பில் உறைபவள் அவள்,
திருவென்னும் செல்வத்துக்கு அதிபதி!

பூரணச் சந்திரன் போன்ற முகத்தினள்;
கருணையே வடிவாகிக் காக்க வந்தவள்,

வியூக லக்ஷ்மியாக இருந்து தருவாள்,
விஜயம், புகழ், செல்வம் இவை நமக்கு.

முற்பிறப்பில் செய்த பாவங்கள் தீர்ந்திட
பொற் பதங்களைச் சிக்கெனப் பற்றுவாய்!

தாமரை மலரில் அமர்ந்து கொண்டு அவள்
தங்குகிறாள் வேங்கட நாதனின் மார்பில்.”

லக்ஷ்மியின் திருமந்திரத்தை உபதேசித்தார்.
லக்ஷியத்துடன் அவனை ஜபிக்கச் சொன்னார்.

பய பக்தியுடன் பெற்றான் உபதேசம்-அதை
சுய புத்தி மாறாமல் நடந்தான் உச்சரித்து.

சுவாமி புஷ்கரிணியை அடைவதற்குள்
சுலபமாகி விட்டது அந்த மந்திர ஜபம்.

அனைத்துத் தீர்த்தங்களிலும் மேலான
அந்தத் தீர்த்தத்திலும் நீராடினான் அவன்.

அரிய காட்சி தெரிந்தது அருகே வனத்தில்.
அழகிய விமானத்துடன் ஆலயம் ஒன்று.

மண்டபத்தில் குழுமி இருந்தனர் தேவர்;
கண்டான் ஆலயத்தில் அற்புத தரிசனம்.

சங்கு, சக்கரம், கிரீட, குண்டலங்களுடன்
வேங்கடேசன் இருந்தார் தேவியர்களோடு.

கண் கொள்ளாக் காட்சியில் மெய் சிலிர்த்து
தெண்டனிட்டவன் இருந்தான் தடாகம் அருகே!

குறைவற்ற செல்வம் தேடி வந்தது அவனை!
நிறைவான வாழ்க்கை வாழ்ந்தான் நெடுநாள்.

29. சக்கர ராஜன்

துஷ்டர்கள் சாது ஜனங்களுக்கு நானாவிதக்
கஷ்டங்கள் தந்தனர் முன்பொரு சமயம்.

அசுரர்கள் தபஸ்விக்களின் கர்மங்களைப்
பிசுபிசுக்கச் செய்து துன்புறுத்தி வந்தனர்.

முனிவர்கள் குழுமினர் சேஷாச்சலத்தில்;
கனிவுடன் காட்சி தந்தார் ஸ்ரீனிவாசன்.

துயரப் பட்டியலைக கேட்ட ஸ்ரீனிவாசன்,
அயரவில்லை அதனைக் கேட்டுச் சற்றும்!

“நிர்பயமாகத் தொடருங்கள் பணிகளை;
அபயம் அளிப்பான் இனிச் சக்கர ராஜன்!”

அனல் விழிகளுடன் அவன் வீசிய சக்கரம்
அழகிய ராஜகுமாரனாக உருவெடுத்தது.

“எட்டுத் திசைகளிலும் சென்று வேரறுப்பாய்
துஷ்டர்களைக் கூண்டோடு!” உத்தரவிட்டார்.

பெற்றான் சக்கர வேந்தன் என்ற பெயரை;
பெற்றான் அழகிய ரதத்தை மானசீகமாக.

பெற்றான் வலிய கரங்கள் ஓராயிரம்!
பெற்றான் அரிய ஆயுதங்கள் ஓராயிரம்!

கிழக்குப் பக்கம் சென்றான் அவன் முதலில்;
அழித்தான் துஷ்டரைக் கேசிமலைக் காட்டில்.

தென் கிழக்குப் பக்கம் சென்றான் அடுத்து;
தேடி துவம்சம் செய்தான் துஷ்டர்களை!

தெற்கு நோக்கிச் சென்றான் சக்ரராஜன்;
துடிப்புடன் எதிர்த்து வந்தனர் அவனை

உக்கிராங்கன், அங்கன், புளிந்தன், காலகன்
முக்தாயிகன் என்ற ஐந்து அரக்கர்கள்.

சதுரங்க சேனையுடன் வந்தவர் கண்டனர்
எதிரில் வருபவன் தன்னந்தனியன் என்பதை!

நகைத்தனர் சக்கர ராஜனைக் கண்டு!
பகைவர் வந்து சூழ்ந்தனர் ஒன்று சேர்ந்து!

30. அயி சிரசன்

ஐந்து அசுரர்கள் சூழ்ந்தனர் படையுடன்
அஞ்சா நெஞ்சன் சக்கர வேந்தனை!

ஆயிரம் கரங்களால் எய்தான் பாணங்களை;
ஆயிரம் பாணங்களை விலக்கினான் போரில்.

சக்கரம் போலவே சுற்றிச் சுழன்றான்;
சக்கராஜன் போரிட்டான் அசுரருடன்!

போரினைத் தொடர்ந்தனர் வெகுநேரம்;
சூரியனை மறைத்தது பரவிய புழுதி.

கரங்களால் பொழிந்த சர மழையால்
சிரங்களை அறுத்தான் சக்கர ராஜன்!

அயசிரசன் ஆவான் ஐவரின் தலைவன்;
ஐயுற்றான் ஐவரின் அழிவைக் கேட்டு.

“அழிப்பேன் சக்கரனை!” சபதம் இட்டவன்
அழிவது கண்டான் தன் எஞ்சிய படையும்!

வளைத்துக் கொள்ள ஆணையிட்டான்;
அழிக்கும் அஸ்திரத்தையும் விடுத்தான்.

ஆக்னேய அஸ்திரம் விடுத்தான் சக்கர ராஜன்
அக்னிக்கு முன்னால் நிற்க முடியுமா எதுவும்?

அக்னி அஸ்திரம் அழித்தது பாணத்தை;
அக்னி அஸ்திரம் அழித்து அயசிரசனை!

“யமனிடம் அனுப்புவேன் அவனை!” என்று
போர்க்களம் சூளுரைத்து வந்த அயசிரசன்,

யமனிடம் சென்று விட்டான் தான் அவனே
போர்க்களம் வந்து நாழிகைப் பொழுதில்!

தெற்கு திசையில் அழித்தான் துஷ்டர்களை;
தென் மேற்கிலும் அழித்தான் துஷ்டர்களை;

மேற்கு திசை நோக்கிச் சென்றான்,
மேற்கொண்டு அசுரரை அழிப்பதற்கு!

31. வனகர்த்தன்

மேற்கில் வசித்தான் அசுரன் வனகர்த்தன்,
மேற்கொண்டான் தவம் சிவனைக் குறித்து.

“பிறக்க வேண்டும் புஜபலம் மிகுந்த ஒரு மகன்;
சிறக்க வேண்டும் மூவுலகங்களையும் வென்று!”

காலம் கடந்தது; காட்சி தரவில்லை சிவபிரான்,
ஞாலம் வெல்லும் மகனை விரும்பிய அசுரனுக்கு.

தலையை அறுத்து அக்கினியில் இடும் போது,
பலியைத் தடுத்துத் தரிசனம் தந்தான் சிவன்.

“மனிதரும் தேவரும் வெல்ல முடியாத – வீர
மகன் பிறக்க அருள் புரிவீர்!” என்றான் இவன்.

பெருமிதம் கொண்டான் மகன் பிறந்ததும்;
செருக்கு மிகுந்துவிடத் துன்புறுத்தலானான்.

சாதுகளைத் தாக்கினான் ஈவு இரக்கமின்றி.
பேதமின்றிச் சேதப்படுத்தினான் முனிவரை.

சக்கர ராஜனை எதிர்க்க அனுப்பினான் – ஒரு
சதுரங்க சேனையைத் திரட்டி வனகர்த்தன்.

நெருப்பில் வீழ்ந்த விட்டில்கள் ஆயினர்.
நெருங்க முடியவில்லை சக்கர ராஜனை.

படை அழிந்து விட்டது என்று கேட்டதும்
மடை திறந்து கோபம் பெருக்கெடுத்தது.

ஜ்வால பாதனை அனுப்பினான் போருக்கு.
ஜெயிக்க முடியாத மகனே ஜ்வால பாதன்!

அரசகுமாரன் என்று எண்ணினான் பகைவனை.
அறியவில்லை அவன் சுதர்சனத்தின் உருவென!

அஸ்திரங்கள் பாய்ந்தன இரு திசைகளிலும்;
அஸ்திரங்கள் மாய்ந்தன தாக்கிக் கொண்டபின்.

சக்கர ராஜனின் அஸ்திரம் விரைந்து சென்றது;
மிக்க பலத்துடன் ஜ்வால பாதனை நெருங்கியது.

மாயையால் மறைந்துவிட முயன்ற அசுரனை
மாய்த்தது பாய்ந்து தாக்கிய சக்கரனின் பாணம்!

திரட்டி வந்தான் போரில் சிதறி ஓடிய வீரர்களை.
மரித்தான் தொடர்ந்து நடந்த போரில் வனகர்த்தன்.

32. பேரண்டவன்

வடதிசையில் வாழ்ந்தான் அரக்கன் பேரண்டவன்;
வெடவெடக்கும் அண்ட சராசரம் பேர் கேட்டவுடன்!

பிரம்மாண்டமான சேனை வெள்ளத்துடன் வந்ததும்,
பெருமானை தியானித்தான் சக்கர ராஜன் ஒரு கணம்.

அசுர சேனைக்கு இணையான அரிய சேனை ஒன்று
அதே கணத்தில் தோன்றியது ஆயுதங்களுடன் அங்கு.

கொடிய யுத்தம் தொடங்கி நடந்தது உடனே – போரில்
மடிந்தனர் எண்ணற்ற வீரர்கள் இரு சேனைகளிலும்.

வெற்றியும், தோல்வியும் இன்றி நீண்ட போரில்
வெறி கொண்ட அசுரர்களின் கை ஓங்கலானது.

சக்கர ராஜனின் படை வீரர்கள் பின் வங்கலாயினர்;
மிக்க சினம் கொண்டு அவன் செய்தான் ஹூங்காரம்.

சினத்தில் தோன்றினான் தேவ புருஷன் பாவகன்!
“சின்னா பின்னம் செய்வாய் அசுரர்களை!” என

பாவகன் தலைமையில் பொருதனர் மீண்டும்;
பாய்ந்து முன்னேறிய சக்கர ராஜனின் வீரர்கள்.

பாவகன் மீது பாய்ந்தனர் அசுரர்கள் இப்போது!
பாவகன் எய்தான் மயக்கும் மோகன அஸ்திரம்!

மறந்தனர் தம்மையே; துறந்தனர் போரையே;
எறிந்தனர் ஆயுதங்களை; மறிந்தனர் நிலத்தில்!

பேரண்டவன் எய்தான் ஹாஹாகாரம் செய்தபடி
மோகன அஸ்திரத்தை வெல்லும் ஞான அஸ்திரம்.

தூக்கத்தில் இருந்து எழுபவர்போல மீண்டும்
எழுந்து தாக்கினர் ஆயுதங்களால் அசுரர்கள்.

எய்தான் பாவகன் தன் கிரௌஞ்ச வாளியை!
எய்தான் பேரண்டவன் பைசாச அஸ்திரத்தை!

இரண்டும் தாக்கின அசுரர்கள் படையினையே!
பேரண்டவன் எய்தான் பிரமன் தந்த சூலாயுதம்!

வாயு அஸ்திரத்தை எடுத்து விடுத்தான் பாவகன்;
வாயு அஸ்திரம் வாயுவென விரைந்து சென்றது.

வாரிச் சுருட்டிப் பாய்போல எறிந்தது அசுரனை!
நேரில் பார்த்தவர் வீழ்ந்தனர் வியப்புக் கடலில்!

மண்டை உடைந்து மடிந்தான் அசுரன் பேரண்டவன்;
சண்டை முடிந்து திரும்பி விட்டான் சக்கர ராஜன்.

இனிதாக ஆணைகளை நிறைவேற்றிய பின்னர்
இணைந்தான் ஸ்ரீனிவாசனின் சக்கரத்தில் மீண்டும்.

வேறு புராணங்களில் காணப்பட்ட சில கதைகளின் தொகுதி முற்றியது.

பொங்குக மங்களம்!!! தங்குக எங்கும்!!!

————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ விஷ்ணு புராணம் — ஆறாம் அம்சம்- ஸ்ரீ சீதாராம ஸ்வாமிகள் தொகுத்தவை-

February 24, 2023

06_01 கலியுக தர்மம்
ஸ்ருஷ்டி, அரச வம்சங்கள், மன்வந்த்ரங்கள் இவைகளை இதுவரை பராசரரிடமிருந்து கேட்டு மகிழ்ந்த மைத்ரேயர் கல்பத்தின் முடிவில் (ப்ரஹ்மாவின் பகல்) நிகழும் மஹா ப்ரளயத்தைப் பற்றிக் கூறுமாறு கேட்கிறார்.
“க்ருத, த்ரேதா, த்வாபர, கலி என்று யுகங்கள் நான்கு.  மனிதர்களின் ஒரு மாதம் பித்ருக்களுக்கு ஒரு நாள்.  மனிதர்களின் ஒரு வருஷம் தேவர்களுக்கு ஒரு நாள். இப்படி நமது இரண்டாயிரம் சதுர்யுகங்கள் ப்ரஹ்மாவுக்கு ஒரு நாள் (கல்பம்).  ஒவ்வொரு கல்பத்தின் முதல் க்ருதயுகத்தையும், முடிவான கலியுகத்தையும் விட்டு மற்ற சதுர்யுகங்கள் யாவும் அளவு, தர்மாதர்மங்களில் சமமாகவே இருக்கும்” என்று கூறிக்கொண்டிருக்கும் போதே மைத்ரேயர் கலியின் லக்ஷணங்களைக் கூறுமாறு கேட்கிறார்.

“கலியுகத்தில் ப்ராஹ்மண, க்ஷத்ரிய, வைச்ய, சூத்ர முதலான வர்ணங்களும், அவற்றிற்குரிய ஆசாரங்களும் கெடும்.  நான்கு வேதங்களில் விதிக்கப்பட்டுள்ள க்ரியைகள் நடக்காது.  தர்ம விரோதமாகக் கல்யாணங்கள் நடக்கும்.  குரு-சிஷ்ய, கணவன்-மனைவி உறவுகளில் தர்மங்கள் அழியும்.  அக்னி கார்யங்களும், தேவ பூஜைகளும் கெடும்.  பலம் உள்ளவன் அரசனாவான்.  கன்னிகையை மணக்க வர்ணம், ஜாதி, கல்வி, ஒழுக்கம் எதுவும் தேவையின்றி பணமிருப்பவனே வரனாவான்.  ப்ராஹ்மணன் எந்த தகுதியுமின்றி தீக்ஷிதனாவான்.  சாஸ்த்ரங்களில் விதிக்கப்படாத க்ரியைகள் ப்ராயச்சித்தமாக ஏற்கப்படும்.  ப்ரியமான வார்த்தைகளே சாஸ்த்ரங்களாகும்.  அவைதீகமான காளி முதலான தேவதைகளையே அனைவரும் வணங்குவர்.

ப்ரஹ்மசர்ய, க்ருஹஸ்த, வானப்ரஸ்த, ஸன்யாஸ ஆச்ரமங்கள் கெடும்.  வைராக்யமில்லாமலேயே எவரும் எந்த ஆச்ரமத்தையும் கொள்வர்.
சாஸ்த்ரத்தை அனுஸரிக்காமல் தங்கள் இஷ்டப்படி உபவாஸம், தீர்த்த யாத்ரை, தானங்களைச் செய்வர்.  கொஞ்சம் பணம் இருப்பவனும் செருக்கடைவான்.  கூந்தல் அழகை மட்டும் கொண்டே பெண்கள் தங்களை அழகிகளாகக் கர்வம் கொள்வர்.  தங்கம், மணி, ரத்னங்கள், துணி முதலானவை குறைந்து அழிந்து போகும்.  இவைகளின்றி பெண்கள் கூந்தலாலேயே தங்களை அலங்கரித்துக் கொள்வர்.  பெண்கள் பணமில்லாத கணவனை விட்டு, பணம் வைத்திருப்பவனைக் கணவனாகக் கொள்வர்.  நல்ல குடும்பம், ஞானம் இவைகளை விட்டு நிறைய பணம் கொடுப்பவனையே ஆண்டவனாகக் கொள்வர்.  புத்தியை ஆத்ம ஞானம் அடைவதில் செலுத்தாது, எவரும் பணம் சம்பாதிப்பதற்கே செலுத்தி, கிடைத்த பணத்திலும் யாகாதி கர்மங்களைச் செய்யாது வீடு கட்டுவதற்கே செலவழிப்பர்.  அந்த வீடுகளும் அவர்களுக்கும், அதிதிகளுக்கும் பயன்படாத வகையிலேயே இருக்கும்.

அழகான ஆடவர்களையே விரும்பி பெண்கள் வேசிகளாவர்.  அதர்ம வழியில் சம்பாதித்திருந்தாலும், அவனிடமே மக்கள் விரும்பிச் செல்வர்.  நெருங்கிய நண்பன் கெஞ்சிக் கேட்டாலும் சுயநலத்தால் உதவ மாட்டார்கள்.  தாழ்ந்தவர்கள் ப்ராஹ்மணர்களை மதிக்க மாட்டார்கள்.  ஜாதியைக் கொள்ளாது பால் தருவதாலேயே பசுவும் கொண்டாடப்படும்.  மழை பொய்த்துப் போகும்.  இதனால் எவரும் உணவின்றி முனிவர்களைப் போல் வேர், கிழங்கு, கனிகளையே உண்டு பின் அதுவும் கிடைக்காமல் பசியால் தற்கொலை செய்து கொள்வர்.  சந்தோஷமும், சௌக்யமும் ஜனங்களிடையே கெடும்.  எங்கும் பஞ்சமும், துன்பமுமே மிகும்.  ஆசாரங்கள் கெடும், குளிக்காமலேயே சாப்பிடுவர்.  தேவ, பித்ரு, அதிதி பூஜைகள் அழியும்.

பெண்கள் நிறைய உண்டும், மெலிந்தும், பேராசையோடும் இருப்பார்கள்.  நிறைய குழந்தைகள் பிறந்தும் ஏழ்மையில் வாடுவார்கள்.  இரண்டு கைகளாலும் தலையை சொரிந்து கொள்வர்.  மாமனார், மாமியார் வார்த்தைகளைக் கேளார்.  சுயநலமும், கோபமும், தாழ்வு மனப்பான்மையும் மிகுந்து தீய சொற்களையே பயன்படுத்துவர்.  நல்ல குடும்பத்துப் பெண்களும் தீயவர்களிடம் ஆசை கொண்டு தங்கள் கணவனுக்கே பல கெடுதிகளைச் செய்வர்.
ப்ரஹ்மசாரிகள் வ்ரதங்கள், அனுஷ்டானங்களின்றியே அத்யயனம் செய்வர்.  க்ருஹஸ்தர்கள் ஹோம, தானாதிகளைச் செய்யார்.  வானப்ரஸ்தர்கள் காட்டில் கிடைக்கும் கிழங்கு, பழ வகைகளை உண்ணாது அருகிலுக்கும் க்ராமங்களுக்குச் சென்று அங்கு கிடைப்பவைகளை உண்பர்.  ஸன்யாஸிகள் பெற்றோர், உடன்பிறந்தோரை விட்டு வந்தும், புதிதாக நண்பர்களைச் சேர்த்துக் கொண்டு அவர்கள் வசமாகி விடுவர்.

அந்யாயமாக வரி என்ற பெயரில் அரசர்கள் பணம் பறித்தும், மக்களை நன்கு போஷிக்க மாட்டார்கள்.  வ்யாபாரிகளின் பணத்தைப் பறித்துக் கொள்வர்.  ஸேனை உள்ளவனே அரசனாவான்.  அரச குலத்தோனும் பலமின்றி ஸேவித்து ஊழியம் செய்வான்.  மேல் வர்ணத்தோர் அவர்களுக்கு அடுத்த தாழ்ந்த வர்ணத்தாரின் தொழிலை மேற்கொள்வர்.  நான்காம் வர்ணத்தவர் மேல் வர்ணத்தாரின் தொழில் செய்து ஜீவிப்பர்.
அரசர்களின் உபத்ரவம் தாங்காது மக்கள் வேறு நீச ராஜ்யங்களுக்கு சென்று வசிப்பர்.  வேத மார்க்கம் மறைந்து பாஷண்டிகள் மலிவர்.  அதர்மம் அதிகரிக்கும்.  முறை தவறிய அரசுகளால் மக்களும் முறை தவறுவர்.  வீணான தவங்களைச் செய்து இளமையிலேயே மரணமடைவர்.  ஆயுசு குறையும்.  பெண்கள் ஐந்து, ஆறு வயதிலேயே குழந்தை பெறுவர்.  ஆண்கள் எட்டு, ஒன்பது வயதிலேயே ப்ரஜா வ்ருத்தி செய்யும் சக்தியைப் பெறுவர்.  பன்னிரண்டாவது வயதில் தலை நரைத்து, இருபது வயதுக்கு மேல் வாழமாட்டார்கள்.

அறிவு குறைந்து, வைதீக வேஷம் அதிகரிக்கும். தீய எண்ணத்தால் விரைவிலேயே மக்கள் அழிவர்.  தர்ம கார்யங்கள் பாதியிலேயே தடைபடும்.  இவைகளாலேயே புத்திசாலிகள் கலி வளர்வதை அறிந்து கொள்வர்.  பாஷண்டிகளால் மதி மயங்கிய மக்கள் விஷ்ணுவை ஆராதிக்க மாட்டார்கள்.
தெய்வம், வேதம், ப்ராஹ்மணர்களால் யாருக்கு என்ன பயன்?  நீரால் செய்யப்படும் புண்யாஹவாசனங்கள் எதற்கு? என்ற கேள்விகள் மிகும்.  மழையும், விளைச்சலும் குறையும்.  கோணி போன்ற ஆடைகளை அணிவர்.  மரங்கள் யாவும் வன்னி மரங்களைப் போல் மலிவடையும்.  யாவரும் சூத்ர ஜாதியைப் போலிருப்பர்.  தான்யங்கள் சிறுத்து விடும்.  பால் நெய் போல இருக்கும்.  சந்தனம் கோரைக் கிழங்கு போலாகும்.  கிடைப்பது அரிதாகும்.  ஆண்கள் மாமனார், மாமியார்களையே மதிப்பர்.  மைத்துனர்களுக்கும், அழகிய மனைவியை உடையவர்களுக்கும் மதிப்பு ஏற்படும்.  யார் தாய்? யார் தகப்பன்? என்று தத்வங்களைக் கூறுவர்.  மனதாலும், வாக்காலும், உடலாலும் தினந்தோறும் மக்கள் பாவங்களையே செய்வர்.  சத்யமும், தூய்மையும், தகாத செயல்களில் வெட்கமும் அழியும்.  தர்மம் எங்கோ ஒளிந்து கொண்டு வசிக்கும்.
இந்தக் கொடுமைகளால், க்ருத யுகத்தில் தவத்தால் அடையும் பயன், கலியுகத்தில் நாம ஸங்கீர்த்தனம் முதலிய சிறு முயற்சிகளிலேயே கிடைக்கும்.

06_02 குறைந்த முயற்சியால் மிகுந்த பலனை எளியோனும் இந்த கலியில் அடையலாம் என்பது குறித்து தன் மகனான வ்யாஸரின் கருத்தை பராசரர் இங்கு விவரிக்கிறார்.
ஒரு ஸமயம் மஹர்ஷிகளிடையே “எந்த காலம் சிறிய தர்மத்திற்கும் பெரும் பலனைக் கொடுக்கும்? அந்த தர்மத்தையும் எளிதில் அனுஷ்டிக்கத் தகுந்தவர் யார்?” என்ற வினா எழுந்தது.  இதற்கு விடையறிய அவர்களனைவரும் வ்யாஸரிடம் சென்றனர்.  அப்போது என் மகனான வ்யாஸர் கங்கையில் மூழ்கியிருந்தார்.  அவர்களும் காத்துக் கொண்டிருந்தனர்.  ஒரு முறை வெளியே வந்த அவர் “சூத்ரன் நல்லவன், கலி நல்லது” என்று கூறி விட்டு மீண்டும் மூழ்கிவிட்டார்.  மீண்டும் வெளியே வந்த அவர் “ஆமாம், சூத்ரனே மிகுந்த புண்யசாலி” என்று கூறினார்.  சிறிது நேரத்தில் மீண்டும் நீரிலிருந்த எழுந்த அவர் “பெண்களே புண்யவதிகள், அவர்களை விட புண்யம் செய்தவர் யாருமில்லை” என்று கூறிவிட்டு மூழ்கினார்.
பின் ஸநானம், அனுஷ்டானங்களை முடித்துக் கொண்டு வந்த அவரிடம் இந்த மஹர்ஷிகள் “நீங்கள் கங்கையிலிந்து அவ்வப்போது வெளியே வந்து கூறின வார்த்தைகளின் பொருளை அறிய விரும்புகிறோம்.  ரஹஸ்யமில்லையென்றால் அருள வேண்டும்” என்று விண்ணப்பித்துக் கொண்டனர்.  வ்யாஸர் சிரித்துக் கொண்டே “க்ருத யுகம் புண்ய பலனை பத்து வருஷங்களிலும், த்ரேதாயுகம் ஒரு வருஷத்திலும், த்வாபரயுகம் ஒரு மாதத்திலும் தரும்.  ஆனால் கலியோ ஒரே நாளில் தரும்.  அதேபோல் க்ருதயுகத்தில் கடினமான நெடுந்தவத்தாலும், த்ரேதா யுகத்தில் பெரும் யாகங்களாலும், த்வாபரத்தில் பூஜைகள், அர்ச்சனைகளாலும் அடையும் பயனை கலியில் கேசவனின் நாமஸங்கீர்த்தனத்தாலேயே அடைந்து விடலாம், சிறு முயற்சிகளான இந்த காரணங்கள் பற்றியே கலி நல்லது என்று சொன்னேன்.
அவ்வாறே ப்ராஹ்மணனுக்கும் கடும் கட்டுப்பாடுகள் உள்ளன.  வேதாத்யயனத்தை முறையோடு செய்து, பின் தர்ம வழியில் பொருளீட்டி, அதை வேதத்தில் விதித்துள்ள கர்மங்களில் டம்பமின்றி செலவிட வேண்டும்.  வீண் பேச்சு, செயல்களில் ஈடுபடாது, ஸதா இறை த்யானத்திலேயே இருக்க வேண்டும்.  உணவையும், நீரையும் கூட இஷ்டப்படி எடுத்துக் கொள்ள சுதந்திரம் இல்லை.  சாத்வீகமான உணவை இறைவனுக்குப் படைத்த பின்பே உண்ண வேண்டும்.  புலனடக்கத்தோடு இருக்க வேண்டும்.  இவர்கள் எப்போதும் இப்படி சாஸ்த்ரங்களுக்குக் கட்டுப்பட்டே இருக்க வேண்டும். இந்த கடும் விதிகளாலேயே அவர்களுக்கு புண்ய லோகங்கள் கிடைக்கின்றன.  இல்லையென்றால் ப்ராஹ்மணன் பாபிஷ்டனாகி, தீண்டத்தகாதவனாகி விடுகின்றான்.
வேளாளர்களுக்கு இப்படி எந்த விதக் கட்டுப்பாடுகளும் இல்லை.  வேதாத்யயனம் இல்லை.  மந்த்ரங்களின்றியே எளிய ஹோமங்களைச் செய்யலாம்.  மேல் வர்ணத்தாருக்குப் பணி செய்தே நல்ல உலகங்களை அடைகின்றனர்.  இதனாலேயே சூத்ரர்களை நல்லவர்கள் என்று கூறினேன்.
பெண்களும் இவ்வாறே.  ஆண்கள் சம்பாதிக்க வேண்டும், அதைக் காக்க வேண்டும்.  பின் ஸத்பாத்ரங்களைத் தேடி அதை செலவிட வேண்டும். இதனாலேயே புருஷர்களுக்கு மேலான லோகங்கள் கிடைக்கின்றன.  ஆனால் அவர்களுக்கு உண்மையாகப் பணிவிடை செய்வதாலேயே பெண்கள் புண்ய லோகங்களைப் பெற்று விடுகின்றனர்.  இதனாலேயே பெண்கள் புண்யவான்கள் என்று கூறினேன்” என்றார் வ்யாஸர்.  இவ்வாறாக தங்கள் ஐயம் தீர்ந்த மஹர்ஷிகளும் வ்யாஸரைப் பூஜித்துப் புகழ்ந்து கொண்டே தங்கள் இடத்திற்குச் சென்றனர்.
இவ்வாறாக கலி ஸ்வரூபத்தை மைத்ரேயருக்கு விளக்கினார் பராசரர்
06_04 இந்த வெள்ளம் ஸப்தரிஷி மண்டலத்தையும் மூழ்கடித்து அப்போது எங்கும் ஒரே ஜல மயமாக இருக்கும்.  அப்போது மஹாவிஷ்ணுவின் முகத்திலிருந்து பெருங்காற்று உண்டாகி இந்த மழை மேகங்களைக் கலைத்து விடும்.  பின் இந்த காற்று நூறு வருஷங்களுக்கு வீசிக் கொண்டிருக்கும்.  பின் இதுவும் விஷ்ணுவிடம் லயித்து விடும்.  அப்போது ப்ரளயக் கடலில் ஆதிசேஷன் மேல் சயனித்துக் கொண்டிருக்கும் ப்ரஹ்மரூபமான மஹாவிஷ்ணுவை ஜன லோகத்திலிருக்கும் ஸனகர் முதலான ஸித்தர்களும், முக்திபெற்று ப்ரஹ்ம லோகத்திலிருப்பவர்களும் வணங்கித் துதிப்பார்கள்.  வாஸுதேவன் என்ற பெயருடன் ப்ரஹ்ம ரூபியான மஹாவிஷ்ணு அப்போது ஆயிரம் சதுர்யுகங்கள் யோகநித்ரையில் இருப்பார்.  இவர் தூங்குவதன் நிமித்தமாக இந்த ப்ரளயம் நிகழ்வதாலேயே இதற்கு நைமித்திக ப்ரளயம் (அவாந்தர) என்று பெயர்.  இந்த இரவு கழிந்து அவர் கண் விழித்து மீண்டும் ஆரம்பத்தில் கூறிய ப்ரகாரம் ஸ்ருஷ்டியைத் தொடங்குகிறார்.
இனி ப்ராக்ருத ப்ரளய வர்ணனை.  நைமித்திக ப்ரளயத்தின் முடிவில் எல்லா லோகங்களும் அழிந்து விட, அதன் பின் மஹாவிஷ்ணு தத்வங்களும் அழியும்படி நினைக்கிறார்.  அப்போது ப்ராக்ருத ப்ரளயம் தொடங்குகிறது.  முதலில் தண்ணீர் நிலத்தின் (ப்ருத்வி) குணமான கந்தத்தைப் (வாஸனை)பறித்து விடும்.  அப்போது தன் குணம் அழியவே நிலம் நீரோடு நீராகி விடும்.  பின் நீரின் குணமான ரஸத்தை (ருசி) நெருப்பு எடுத்துக் கொண்டு விடும்.  அப்போது நீர் முழுதும் வற்றி நெருப்பில் ஒன்றி விடும்.  பின் நெருப்பு தன் குணமான ரூபத்தை வாயுவிடம் இழந்து, அதோடு ஒன்றி விடும்.  பின் அதுவும் தன் குணமான ஸ்பர்சத்தை ஆகாயத்திடம் இழந்து ஆகாயத்தோடு ஒன்றி விடும்.  கடைசியில் இந்த ஆகாயத்தின் குணமான சப்தத்தையும் தாமஸ அஹங்காரம் எடுத்துக் கொண்டு தன்னோடு லயப்படுத்திக் கொள்கிறது.  (இவ்வாறே பஞ்சேந்த்ரியங்கள் ஸாத்விக அஹங்காரத்தில் லயமடைகின்றன)
இந்த அஹங்காரங்கள் பின் மஹத் தத்வத்தில் ஒடுங்குகின்றன.  பின் அதுவும் ப்ரக்ருதியில் ஒடுங்குகிறது.  ஸத்வ, ரஜ, தமோ குணங்கள் சமமாக இருக்கையில் இது ப்ரக்ருதி எனப்படுகிறது.  இது வ்யக்த, அவ்யக்தங்கள் என இரு வகையில் இருக்கும்.  இதில் வ்யக்தம் இறுதியில் அவ்யக்தத்தில் லயப்படும்.  இப்படியே வ்யக்தமான ஜீவனும் முடிவில் அவ்யக்தமான பரமாத்ம ஸ்வரூபத்தில் ஒடுங்கி விடுகிறான்.  இப்படி ஜீவனும், ப்ரக்ருதியும் லயப்பட்ட பரமாத்ம ஸ்வரூபத்தையே வேதங்களும், வேதாங்கங்களும் மஹாவிஷ்ணு என்று அழைக்கின்றன.
வேதம் ப்ரவ்ருத்தி, நிவ்ருத்தி என இரு வழிகளை போதிக்கிறது.  இவையிரண்டுமே பரமாத்மாவான விஷ்ணுவையே ஆராதிக்கின்றன.  ப்ரவ்ருத்தி மார்க்கத்தில் ருக், யஜுஸ், ஸாம வேதங்கள் இந்த விஷ்ணுவையே யாகங்களில் யக்ஞேச்வரனாக ஆராதிக்கின்றன.  நிவ்ருத்தி மார்க்கமான யோகவழியில் நிலைபெற்ற யோகிகளும் ஞானமாகவும், ஞான மூர்த்தியாகவும், மோக்ஷத்திற்கு அதிகாரியாகவும் இவனையே துதிக்கின்றனர்.  குறில், நெடில் முதலான சொற்களில் அடங்கும் அசேதனப் பொருட்களும், சொல்லில் பொருளாகாத சேதனங்களும் இவனுடைய அவயவங்களே.
இந்த ப்ரமாத்மாவிற்கு இரண்டு பரார்த்தங்கள் ஒரு பகல்.  இப்படி வ்யக்தங்கள் அவ்யக்தத்தில் ஒடுங்கவும், அந்த அவ்யக்தங்கள் ஜீவனில் ஒடுங்கவும், பின் அதுவும் பரமாத்மாவில் ஐக்யப்படவும் ஆகும் காலமான இந்த த்விபரார்த்தங்கள் பரமாத்மாவுக்கு ஒரு இரவாகும்.  கார்யங்களை ஒட்டியே இந்த இரவு, பகல் கணக்குகளேயன்றி புருஷோத்தமனுக்கு இவையெதுவுமில்லை.
06_05 ஆத்யந்திக ப்ரளயம்
மோக்ஷமே ஆத்யந்திக ப்ரளயம்.  ஞானமும், வைராக்யமும் வந்தால்தான் இந்த மோக்ஷத்தை அடைய முடியும்.  நாம் அனுபவிக்கும் விஷயங்களில் இருக்கும் கஷ்டங்களையெல்லாம் அறிந்து கொண்டால் தான் அந்த விஷயங்களையெல்லாம் அதனால் வெறுத்து அவற்றிலிருந்து விடுபட வழி தேடத் தோன்றும்.  ஆத்யாத்மிகம், ஆதிபௌதிகம், ஆதிதைவிகம் என்ற தாபத்ரயங்களை இதற்கு நாம் அறிந்து கொள்ள வேண்டும்.ஆத்யாத்மிக தாபம் சரீர சம்பந்தமாகவும், மன சம்பந்தமாகவும் வரலாம்.  உடலுக்கு வரும் வ்யாதிகள் சரீர சம்பந்தமான தாபங்கள்.  காம, க்ரோதாதி வ்யாதிகள் மன சம்பந்தமானவை.  இவ்வாறே மற்ற விலங்குகள், பறவைகளால் உண்டாகும் துக்கங்கள் ஆதிபௌதிகம்.  இயற்கையான சீதோஷ்ணங்களால் உண்டாகும் துக்கங்கள் ஆதிதைவிகமாகும்.  இந்த தாபங்கள் கர்ப்ப ஸம்பந்தத்தாலும், நம் வினைகளாலும், அஞ்ஞானம், நரகம் இவைகளாலும் உண்டாகி ஆயிரக்கணக்கில் சூழ்ந்து இருக்கின்றன.கர்ப்பவாஸ துக்கங்கள்
கர்ப்பத்தில் இந்த உயிர் மிகவும் ம்ருதுவான சரீரத்தோடு இருக்கிறது.  மலங்களில் நடுவே தாயின் வயிற்றில் வசிக்கிறது.  உல்பம் என்ற தோல் இதன் உடலை மூடியிருக்கிறது.  முதுகு, கழுத்து எலும்புகள் வளைந்து, கை, கால்களை நீட்ட முடியாமல், மூச்சு விடவும் கஷ்டப்பட்டுக் கொண்டு, இந்த உயிர் அப்போது முடங்கிக் கொண்டிருக்கிறது.  தாயின் உணவில் இருக்கும் காரம், புளிப்புகளால் இது கடுமையாக தாக்கப்படுகிறது.  தன் அறிவைக் கொண்டு தான் செய்த வினைகளாலேயே இப்போது கஷ்டப்பட்டுக்கொண்டிருப்பதை அறிந்து மிகுந்த வேதனையோடு இருக்கும்.பின் ப்ரஹ்மத்தின் காற்றால் மேலும் சரீர எலும்புகள் நொறுங்கும்படி ஒடுக்கப்பட்டு, ப்ரஸவ வாயுக்களால் தலை கீழாக திருப்பப்பட்டு மல, மூத்ர சேற்றுப்பூச்சோடு மிகவும் ச்ரமப்பட்டு தாயின் கர்ப்பத்திலிருந்து வெளியே வந்து விழுகிறது.  துர்நாற்றமுடைய யோனி த்வாரத்திலிருந்து விழும்போது முட்களால் குத்தப்படுவது, வாளால் அறுக்கப்படுவது போன்ற துன்பங்களை அனுபவித்து ஒரு புழு வெளியே வந்து விழுவதைப் போலவே இந்த ஜீவனும் வந்து விழுகிறது.  வெளியே விழுந்ததும் வெளிக்காற்றான சடம் என்ற காற்று பட்டதும் மூர்ச்சையடைந்து கர்ப்பவாஸத்தில் உண்டான விவேகத்தை முழுதும் மறந்து விடுகிறது.

பிறந்தபிறகும் உடல் அறித்தால் சொறிந்து கொள்ள முடியாது.  உடலைத் தன்னிஷ்டப்படி திருப்ப முடியாது. குளிப்பது, குடிப்பது, உண்பது என எதுவும் ஏனையோர் இஷ்டப்படியே.  எண்ணத்தை வெளிப்படுத்தவும் முடியாது.  மல, மூத்ரங்கள் நிறைந்த படுக்கை.  எறும்பு, கொசுக்கள் கடித்தாலும் ஒன்றும் செய்ய முடியாது.

இதன் பின் யௌவனம் வந்த பின்பும் அஞ்ஞானத்தால் அறிவிழந்து சிற்றின்பங்களிலேயே நாட்டம் செலுத்துகிறது இந்த ஜீவன்.  நான் யார்? எங்கிருந்து வந்தேன்? எங்கே செல்வேன்? நான் பிறந்த காரணம் என்ன? ஏன் இப்படிக் கட்டுண்டிருக்கிறேன்? காரண, கார்யங்கள் என்ன? எதைச் செய்யலாம்? எதைச் செய்யக் கூடாது? எதைப் பேசலாம்? பேசக்கூடாது? தர்மாதர்மங்கள் எவை? எதில் குணம் உள்ளது? எதில் தோஷம் உள்ளது? இவையெதிலுமே ஆர்வம் செலுத்தாது விலங்குகளைப் போல புணர்வதையும், உண்பதையுமே முக்யமாகக் கொண்டு காலம் கழிக்கிறது இந்த ஜீவன்.  தமோகுணத்தால் வந்த அஞ்ஞானத்தால் கெட்ட கார்யங்களைச் செய்கிறான்.  வைதீக கார்யங்கள் அழிகின்றன.  இதனால் மேலும் புண்ய, பாவங்களைச் சேர்த்துக் கொள்கிறான்.

முதுமை எய்தியதும் உடல் சிதைந்து விடுகிறது.  பற்களும், அவயவங்களும் ஆடி விடுகிறது.  பற்கள் விழுந்தும் விடுகிறது. கண்பார்வை மங்கி, தலை நரைத்து, உடல் சுருங்கி விடுகிறது.  கருவிழிகள் கண்குழிகளில் ஒடுங்கி விடும்.  முதுகெலும்பு வளைந்து, மற்ற எலும்புகள் வெளிப்படையாகத் தெரிய, ஜீர்ண சக்தி குறைந்து, நடக்கவும், படுக்கவும் முடியாமல் துன்படைகிறது இதே ஜீவன்.  எதற்கும் அடுத்தவர் உதவியை நாடி, இந்த்ரியங்கள் செயலிழந்து வார்த்தையும் வெளிவராது அனைவரிடமும் அவமானப்படுகிறான்.  தான் இளமையில் அனுபவித்தவைகளை முன் ஜன்மத்தில் நடந்தவைகளைப் போல நினைக்கிறான்.

மரணத் தருவாயிலும் சிந்தையை மனை, மக்கள், சுற்றம், செல்வம் இவைகளில் செலுத்தி, கவலை கொள்கிறான்.  வ்யாதிகள் ரம்பங்களைப் போலவும், யம பாசங்கள் போலவும் வாட்டி, வதைக்க, கண்கள் சுழல, உடல் உதற, நாக்கு உலரத் திண்டாடுகிறான்.  உதான வாயு மேலெழும்பித் தொண்டையை அடைக்க, நெஞ்சில் கர், கர் எனக் கோழைச் சப்தம் உண்டாகி, யமபடர்கள் பிடித்திழுக்க, பழகிய உடலை விட்டு பெரும் கஷ்டத்தோடு இந்த ஜீவன் மிகுந்த தாபத்தோடும், பசி, தாகத்தோடும் வெளிக்கிளம்புகிறான்.

வெளிக்கிளம்பியதும் தன் தீவினைப்பயன்களை அனுபவிக்க யாதனா சரீரத்தைப் பெறுகிறான்.  யமகிங்கரர்கள் ஜீவனைப் பாசத்தால் கட்டி, தடியால் அடித்து, துன்பங்கள் நிறைந்த பாதையில் நடத்தி யமனிடம் இட்டுச் செல்கிறார்கள்.  பின் காய்ந்த மணலிலும்,  நெருப்பிலும் வாட்டுதல், கத்தி, வாள், கோடரிகளால் பிளப்பது, சூலத்தில் இடுவது, கொடிய விலங்குகளிடம் உணவாக விடுவது எனப் பல வகையில் துன்புறுத்துவர்.  ஸ்வர்க்கத்திற்கு சென்றாலும் புண்ய பலன் தீர்ந்து என்று மீண்டும் பிறந்து துன்பத்தை அனுபவிக்க நேருமோ என்ற நினைப்பிலேயே கிடைக்கும் ஸுக விஷயங்களையும் அனுபவிக்க முடியாமல் தவிக்கிறான்.  பின் மீண்டும் பிறப்பு.  எப்போது இறப்போம் என்பதும் தெரியாது.  இப்படி மீண்டும், மீண்டும் இந்த சக்ரத்தில் ஜீவனுக்கு, எப்படி பருத்திக் கொட்டையை பஞ்சுகள் சூழ்ந்திருக்குமோ அப்படி எங்கும் துன்பமே.  ஸுகம் தரும் என்று நினைக்கும் பல விஷயங்களையும் ஆராய்ந்து பார்த்தால் துன்பமே அதிகம்.

கொடிய ஸூர்யனைப் போன்ற இந்த துக்கங்களிலிருந்து ஜீவன்களுக்கு விடுதலை மோக்ஷமே.  அந்த மரமே ஸம்ஸார துக்கமென்கிற இந்த வெயிலில் வாடிய ஜீவன்களுக்கு நிழல் தந்து ஸுகம் அளிக்கும்.  வேறெங்கும் அது கிடைக்கப் போவதில்லை.  பிறப்பு, இறப்புகளால் உண்டாகும் மூவகைத் துன்பங்களுக்கும் இறைநினைப்பே மிகச்சிறந்த ஒரே மருந்தாகும்.  இறைவனை நினைத்து அனுபவிப்பதில் உண்டாகும் ஆனந்தம் மற்றெதையும் மறக்கச் செய்து விடும்.  துன்பம் சிறிதும் கலவாத அத்தகைய உயர்வுடையது பகவத்ப்ராப்தி.

அதனால் அறிஞர்கள் இந்த ஸுகத்தைப் பெற முயற்சிக்க வேண்டும்.  நம் கார்யங்களால் ஸித்திக்கும் ஆகமஜம், விவேகத்தால் ஸித்திக்கும் விவேகஜம் என்ற இருவகை ஞானமும், அதற்குரிய செயல்களுமே இதை அடையும் வழி.  சாஸ்த்ரங்களைப் படிப்பதாலும், நடைமுறைப்படுத்துவதாலும் கிடைக்கும் ஞானம் விளக்கு போன்றது. இது அஞ்ஞானத்தால் உண்டான இருளைக் களைந்து ஆத்மாவிற்கும், சரீரத்துக்கும் உள்ள வேற்றுமை, ஜீவாத்மா, பரமாத்மாவிற்குள்ள வேற்றுமை, இவைகளின் உண்மை ஸ்வரூபம் முதலியவைகளை விளங்கச் செய்கிறது.  நம் நற்கார்யங்களால் கிடைக்கும் இந்த ஞானம் ஆகமஜம்.  விவேகஜந்ய ஞானம் இதைவிட உயர்ந்தது.  அது ஸூர்யனுக்கு ஒப்பானது.  விளக்கை விட ஸூர்யன் எப்படிப் பொருட்களைத் தெளிவாக நமக்குக் காட்டுமோ அதுபோல இந்த விவேகஜம் அஞ்ஞானத்தை அடியோடு அழித்து விடும்.  இந்த காரணத்தாலேயே மனு ஸ்ம்ருதி வேதார்த்தங்களான உபநிஷத்துகள் போதிக்கும் விவேகஜன்ய ஞானத்தை பரப்ரம்ஹம் என்றே கோஷிக்கிறது.

அதர்வ வேதத்தைச் சேர்ந்த முண்டகோபநிஷத்  விவேகஜன்ய ஞானத்தை பரவித்யை என்றும், ஆகமஜன்ய ஞானத்தை அபர வித்யை என்றும் கூறுகிறது.  பரப்ரஹ்மமான இந்த விவேகஜமே இறைவனாகும்,  ஜீவன்முக்தர்களும் அதுவே.  பகவான் என்ற பதத்திற்குப் பொருள் படைத்து, காத்து, பின் தன்னுள் லயப்படுத்துதலே.  ஸம்ஸ்க்ருத பதமான “பக” என்பது ஞானம், சக்தி, பலம், ஐச்வர்யம், வீர்யம், தேஜஸ் என்ற ஆறு குணங்களைக் குறிக்கும்.  இந்த குணங்களை உடையவனே பகவான் எனக் குறிக்கப்படுகிறான்.  இந்த சொல்லே முக்தர்களைக் குறிக்கும் போது ப்ரஹ்மத்தை அறிந்தவர் என்ற பொருளில் உபயோகிக்கப்படுகிறது.  வாஸு என்ற நாமம் எங்கும் நிறைந்திருப்பதையும், அவனிடத்திலேயே எல்லாம் வஸிக்கின்றன என்பதையும் குறிக்கும்.

இந்த விஷயத்தை முன்பே ஒரு ஸமயம் கேசித்வஜன் என்பவர் காண்டிக்ய ஜனகருக்கு உபதேஸித்திருக்கிறார்.  இந்த வாஸுதேவன் ப்ரக்ருதியும், அதன் கார்யமான துக்கமும், அஞ்ஞானமும் அற்றவன்.  அவன் அசேதனனுமில்லை, சேதனனுமில்லை.  அனைத்திற்கும் ஆத்மா அவன்.  அனைத்து நற்குணங்களும் நிறைந்தவன்.  தன் சக்தியின் சிறு அம்சத்தாலேயே உலகனைத்தையும் தாங்கக் கூடியவன்.  ஸாது ஸம்ரக்ஷணத்திற்காக தன்னிச்சைப்படியே பல அவதாரங்களை எடுக்கக் கூடியவன்.  உலகிற்கு எல்லா நன்மைகளையும் தருபவன்.  முன்பு கூறிய ஷட்குணங்களின் இடமாய் இருப்பவன்.  கர்மங்களும், அதன் தோஷங்களும் அற்றவன்.  பரப்ரஹ்மமாயிருக்கையில் அவ்யக்தனாக நமக்கு விளங்காதவனாகவும், ராம, க்ருஷ்ணாதி வ்யூஹ நிலைகளில் வ்யக்தமாக நமக்கு விளங்கும்படி இருப்பவனும் இவனே.  ஸர்வக்ஞன், ஸர்வ சக்தன், ஸர்வேச்வரன்.  இவனையே சாஸ்த்ரஞ்ய ஞானம் பொதுவாகக் கூறுகிறது.  விவேகஜம் தெளிவாகக் கூறுகிறது.

06_06  அளவற்ற கல்யாண குணங்கள், செல்வம், திவ்ய மங்கள விக்ரஹங்களையுடைய அந்த இறைவனை நம் ஊணக்கண்களால் அறிய முடியாது.  அதற்கு ஸ்வாத்யாயம், யோகம் என்ற இரு கண்கள் தேவை.  வேதாந்த சாஸ்த்ரம், த்வாதசாக்ஷரீ, ப்ரணவம் முதலிய தத்வங்களை அறிந்து தனதாக்கிக் கொள்வதே ஸ்வாத்யாயம்.  இந்த வாக்ய விசாரங்களால் தத்வங்களை நன்கு அறிந்த பிறகு அந்த ப்ரஹ்மத்தை உபாஸிக்க வேண்டும்.  இந்த உபாஸனையே யோகம்.  இந்த ஞானங்கள் ப்ரஹ்மத்தையே விஷயமாகக் கொண்டிருப்பதாலும், ப்ரஹ்மத்தையே அடைவிப்பதாலும் இவைகளே ப்ரஹ்மம் என்றும் சொல்லப்பெறுகின்றன.  யோகம் செய்ய ஆரம்பித்த பின்பும் அவ்வப்போது சாஸ்த்ரார்த்த சிந்தனையான ஸ்வாத்யாயமும் வேண்டும்.  இவ்விரண்டினுள்ளும் ஸ்வாத்யாயம் ஸாதாரணக் கண்.  யோகம் சிறந்த கண்.  இந்த சிறந்த யோகத்தைத் தனக்கு விரிவாய் விளக்குமாறு மைத்ரேயர் பராசரரை வேண்டிக் கொள்ள அவர் இது ஸம்பந்தமாக கேசித்வஜருக்கும் சாண்டிக்ய ஜனகருக்கும் நடந்த ஸம்வாதத்தைக் கூறுகிறார்.

ஜனக வம்சத்தில் தர்மத்வஜர் என்ற ஜனகர் ஒருவர் இருந்தார்.  அவருக்கு மிதத்வஜர், க்ருதத்வஜர் என்ற இரு பிள்ளைகள் இருந்தனர்.  இவர்களில் க்ருதத்வஜர் எப்போதும் வேதாந்த விசாரம் செய்து கொண்டு, மகிழ்ந்திருப்பார்.  மிதத்வஜர் கர்ம மார்க்கத்தில் அரசாண்டு கொண்டிருந்தார்.  க்ருதத்வஜருக்கு கேசித்வஜர் என்ற மகனும், மிதத்வஜருக்கு காண்டிக்யரும் பிறந்தனர்.  இருவரும் அவரவர் தந்தை வழியில் சிறந்தவர்களாக இருந்தனர்.  ஒரு ஸமயம் இவர்களிடையே பகை மூண்டு, அதில் கேசித்வஜர் வென்று, காண்டிக்யரை ராஜ்யத்திலிருந்து விரட்டி விட்டார்.  காண்டிக்ய ஜனகர் தன் மந்த்ரி, புரோஹிதருடன் காட்டிற்கு சென்று வஸிக்கலானார்.

ப்ரஹ்மத்தை உபாஸித்துக் கொண்டே ராஜ்ய பரிபாலனம் செய்து வந்த கேசித்வஜர் தன் தீவினைகள் தீர பல யாகங்களையும் செய்து வந்தார்.  அப்படி ஒரு ஸமயம் யாகம் செய்து கொண்டிருக்கையில், அதற்கு பால் தரும் அவருடைய பசுவை காட்டில் புலி ஒன்று கொன்று விட்டது.  இந்த யாகம் இப்படித் தடைபட்டதற்குக் கவலைப்பட்ட கேசித்வஜர் அதற்கான ப்ராயச்சித்தத்தை ருத்விக்குகளிடம் கேட்டார்.  அவர்கள் தங்களுக்கு அதுபற்றி தெரியவில்லை என்றும், கசேரு என்பவர் அறிவார் என்றனர்.  கசேரு தனக்கும் தெரியாது என்று கூறி பார்க்கவர் என்பவரிடம் கேட்குமாறு கூறினார்.  பார்க்கவர் சுனகர் என்பவரிடம் கேட்குமாறு கூறினார்.  அவர் அரசரிடம் தங்கள் யாருக்கும் தெரியாது என்றும், அரசரால் தோற்கடிக்கப்பட்டு, ஓடிய காண்டிக்ய ஜனகரே இந்த விஷயம் தெரிந்தவர் என்றும், விருப்பமிருந்தால் அவரிடமே சென்று கேட்டுக் கொள்ளும் என்று கூறிவிட்டார்.

“தர்மகார்யம் செய்து கொண்டிருக்கும்போது ஒருவன் மரணமடைந்தால் அவன் தர்ம பலனைப் பெற்று விடுகிறான் என்றே சாஸ்த்ரங்கள் கூறுகின்றன.  எனவே தவறாகப் புரிந்து கொண்டு, ப்ராயச்சித்தம் கேட்க வரும் நம்மைக் காண்டிக்யர் கொன்று விட்டாலும், நமக்கு ஒரு குறையுமில்லை.  யாகப்பலன் கிடைத்து விடும்.  இல்லாது ப்ராயச்சித்தத்தைக் கூறினாலோ யாகம் நிறைவேறி விடும், ஆகவே எது நடந்தாலும் பிழையில்லை” என ஒரு நிமிஷம் இதை யோசித்த கேசித்வஜர், பின் தன் சத்ருவான அவரிடத்திலேயே ப்ராயச்சித்தம் அறிந்து கொள்ள முடிவு செய்து அவரிடம் சென்றார்.

மான்தோலைப் போர்த்திக் கொண்டு தன்னை நோக்கி காட்டில் வந்து கொண்டிருக்கும் கேசித்வஜனைக் கண்டதும்,  காண்டிக்யரின் கண்கள் சிவந்தன.  வில்லில் நாணேற்றி, பாணத்தைக் கையில் எடுத்துக் கொண்டார்.  கேசித்வஜனை நோக்கி “அடே மூடா! உன் வேஷத்தில் நான் ஏமாறுவேன், அப்போது என்னைக் கொன்று விடலாம் என்று நீ நினைக்கிறாய். நீ க்ருஷ்ணாஜினம் தரித்துக் கொண்டு வந்தாலும் நான் ஏமாற மாட்டேன்.  உன்னைக் கொல்லவே செய்வேன்.  நானும், நீயும் சேர்ந்து எத்தனை மான்களைக் கொன்றுள்ளோம், அவைகள் க்ருஷ்ணாஜினம் போர்த்திக் கொண்டிருக்கவில்லையா?  என் ராஜ்யத்தைப் பறித்துக் கொண்ட நீ எனக்கு ஆததாயீ ஆவாய்.  உன்னைக் கொல்வதில் ஒரு தவறுமில்லை, என் கையில் நீ இறப்பது நிச்சயம்” என்று கூறினார்.

கேசித்வஜர் சிரித்துக் கொண்டே “காண்டிக்யரே! நாம் உம்மிடம் ஒரு ஸந்தேஹத்தைத் தீர்த்துக் கொள்ளவே வந்துள்ளேன்.  கொல்ல வரவில்லை.  இதையறிந்த பின் நீங்கள் கோபத்தையோ அல்லது பாணத்தையோ விடுங்கள்” என்றார். உடனே தன் மந்த்ரிகளுடன் இதை ஆலோசித்தார் காண்டிக்யர்.  மந்த்ரிகள் பகைவன் சிக்கியிருக்கும்போதே அவனைக் கொன்று விட்டால் ராஜ்யம் மீண்டும் வசமாகிவிடுமாதலால், அவனைக் கொன்று விடுவதே நல்லது என்று கூறினர்.  ஆனால் காண்டிக்யர் “இவனைக் கொன்று நான் இந்த ராஜ்யத்தை அடைந்தால் இவனுக்கு பரலோகம் வசமாகும்.  நான் இவனைக் கொல்லாது விட்டால் எனக்குப் பரலோகமும், இவனுக்கு பூலோகமும் கிடைக்கும்.  பூலோகஜயம் குறுகிய காலத்திற்கே ஸுகத்தையளிக்கும்.  பரலோகஸுகமோ நீண்ட காலத்திற்காகும்.  ஆகவே நான் பரலோகத்தையே பெறுவேன்.  இவனைக் கொல்ல மாட்டேன்” என்று கூறினார்.

அப்படியே கேசித்வஜருக்கு நேர்ந்ததற்கான ப்ராயச்சித்தத்தை விரிவாகக் கூறி, அவர் யாகம் முடிப்பதற்கான உதவியைச் செய்தார்.  ஆனால் யாகம் நன்கு முடிந்த பின்பும் கேசித்வஜருக்கு மனம் சந்தோஷமாயில்லை.  குழப்பமாகவே, நிம்மதியின்றியே இருந்தது.  யோசித்துப் பார்த்தார்.  “ப்ராஹ்மண பூஜைகள் நன்கு நடந்தன.  பொது மக்களுக்கும் வேண்டியவைகள் செய்யப்பட்டன.  யாசகர்களும் சந்தோஷமாகவே சென்றனர்.  எல்லாருக்குமே தகுந்த முறையில் உபசாரம் செய்தோம்.  இருந்தாலும் ஏதோ ஒன்றை விட்டு விட்டதாகவே தோன்றுகிறதே” என்று சிந்திக்கலானார்.  இறுதியில் ப்ராயச்சித்த உபதேசம் செய்த காண்டிக்ய ஜனகருக்கு குருதக்ஷிணை என்று ஒன்றும் தரவேயில்லை என்பது நினைவிற்கு வந்தது.  மீண்டும் காட்டிற்கு ஓடினார்.

தன்னைப் பார்த்ததும் மீண்டும் கோபமடைந்த காண்டிக்யரிடம் தான் வந்த காரணத்தைக் கூறினார் கேசித்வஜர்.  காண்டிக்யர் உடன் மந்த்ரிகளிடம் கலந்தாலோசித்தார்.  அவர்கள் மீண்டும் ராஜ்யத்தையே கேட்டுப் பெறுமாறு கூறினர்.  “மந்த்ரிகளுக்கு செல்வம் சேர்ப்பதைத் தவிர வேறென்ன வேலை” என்று அவர்களிடம் கூறிச் சிரித்தார்.  பின் அவர்களிடம் நிலையான மோக்ஷத்தை விளக்கி விட்டு, கேசித்வஜரிடம் ஸம்ஸார துக்கத்தைப் போக்கும் அத்யாத்ம வித்யையான யோக மார்க்கத்தைத் தனக்கு உபதேசிக்குமாறு கேட்டுப் பெற்றார்.

06_07 குருதக்ஷிணையாக, கேட்பதையெல்லாம் தருவதாகக் கூறிய தன்னிடம் யோகமார்க்கத்தை மட்டுமே உபதேசிக்குமாறு கேட்ட காண்டிக்ய ஜனகரைக் கண்டு பெரு வியப்புடன் “அரசர்கள் ராஜ்யத்தையல்லவா விரும்புவர்? அதுவும் சண்டை, எதிரிகள் இன்றி எளிதில் கிடைக்கும் ராஜ்யத்தை யாராவது மறுப்பார்களா?  நீர் ஏன் ராஜ்யத்தைக் கேட்கவில்லை?  அதுவும் ராஜ்யபரிபாலனம் நமது தர்மமாயிற்றே? ஸ்வதர்மத்தை விடுவது குற்றமல்லவா?” என்று கேட்கிறார் கேசித்வஜர்.  தான் ஏன் அந்தப் பெரும் ராஜ்யத்தை விரும்பவில்லையென்பதை என்று பின்வருமாறு பதிலுரைக்கிறார் காண்டிக்யர்.

“இந்த அரசை அறிவுள்ளவர்கள் விரும்ப மாட்டார்கள்.  நீர் கூறியது சரியே.  க்ஷத்ரியர்களுக்கு ராஜ்ய பரிபாலனமும், தர்மயுத்தங்களும் ஸ்வதர்மமே.  சக்தியிருந்து என் தர்மத்தை நான் விட்டிருந்தால் அது குற்றமே.  ஆனால் அதற்கு எனக்கு சக்தியும் இல்லை, ஆசையும் இல்லை.  ஆகையால்தான் நீங்களும் அதை பறித்துக் கொண்டீர்கள்.  எனவே இதில் என் குற்றம் எதுவுமில்லை. எனக்கும், என் மந்த்ரிகளுக்கும் இந்த ராஜ்யத்தில் தர்மத்தைக் காரணமாகக் கொண்டு ஆசை வரவில்லை.  எனக்கு வந்த ஆசை முன் ஜென்ம கர்மபலன்களை அனுபவிப்பதற்காக வந்தது.  மந்த்ரிகளுக்குள்ள ஆசை ராகத்வேஷங்களால் வந்தது.  எவருக்குமே தர்ம பரிபாலனம் செய்வதற்காக இந்த ராஜ்யத்தில் ஆசை வரவில்லை.

மேலும் நான் இப்போது ராஜ்யபரிபாலனம் செய்ய வேண்டுமானால் உம்மிடம் இந்த ராஜ்யத்தை யாசிக்க வேண்டும்.  க்ஷத்ரியர்கள் யாசிக்கக் கூடாது என்கிறது சாஸ்த்ரம்.  எனவேதான் நான் இதை விரும்பவில்லை.  மேலும் பகுத்தறிவு இல்லாதவர்களே பெரும்பாலும் இந்த ராஜ்யங்களை விரும்புவர்.  நான், எனது என்று மதிமயங்கி இருப்பார்கள்.  என் போன்ற விவேகிகள் இதை மதிக்க மாட்டார்கள்” என்று கேசித்வஜ ஜனகருக்கு, காண்டிக்ய ஜனகர் கூறினார்.  இதைக் கேட்டு மகிழ்ந்த கேசித்வஜரும் காண்டிக்யருக்கு யோக மார்க்கத்தை பின்வருமாறு உபதேசிக்கிறார்.

ஸம்ஸாரத்தில் உள்ள துன்பங்களுக்குக் காரணங்களைக் கூறி, அவைகளை விலக்குவதற்கான வழிகளையும் கூறுகிறார்.  “யோகம் செய்பவர்கள் முதலில் பரமாத்மா, ஜீவாத்மாவின் ஸ்வரூபங்களை பகுத்தறிய வேண்டும்.  வர்ணாச்ரம தர்மங்களையும் ஒரு அங்கமாகவே செய்து வர வேண்டும்.  காண்டிக்யரே! நானும் அவ்வாறே இந்த ப்ரஜா பரிபாலனம், யாகம் முதலியவைகளைச் செய்து வருகிறேன்.  இதனால் பாவங்கள் அழிந்து, உபாஸனம் நன்கு வளர்கிறது.  ஸுகங்களை அனுபவிப்பதால் புண்யபலனையும் அழித்து வருகிறேன்.  பாவ, புண்யங்கள் இரண்டுமே உபாஸனம் செய்பவனுக்கு விரோதிகளாதலால் இரண்டையுமே அவன் போக்கிக் கொள்ள வேண்டும்.  இப்படிக் கடினமான வழிகளால் தான் நானும் ரஜ, தமோ குணங்களை ஒழித்து, ஸத்வ குணத்தால் அறிவை வளர்த்துக் கொள்கிறேன்.

உங்கள் மனமோ இயற்கையாகவே விவேகத்துடன் விளங்குகிறது.  இப்போது அவித்யையின் ஸ்வரூபத்தைக் கூறுகிறேன், கேளும்.  பலன்களில் பற்று கொண்டு செய்யப்படும் கர்மாக்கள் அவித்யை என்று அறியப்படுகிறது.  இந்த காம்ய கர்மாவாகிய மரத்தை வளர்ப்பதால் ஸம்ஸாரம் என்ற பலன் உண்டாகிறது.  இதற்கு இரண்டு காரணங்கள்.  ஒன்று ஆத்மாவை விட்டு சரீரத்தையே ஆத்மாவாக நினைப்பது.  மற்றொன்று ஆத்ம வளர்ச்சிக்கு உதவாமல், இந்த சரீரத்தை மட்டுமே வளர்க்கும் உணவு, நீர், மனை, மக்கள் முதலானவைகளைத் தனதாக நினைத்துக் கொள்வது. இவ்விரண்டுமே ப்ரமைகள்.

இந்த சரீரம் பஞ்ச பூதங்களாலானது.  ஆத்மாவோ பஞ்சபூதங்களிலிருந்து வேறுபட்டு நிற்பது.  ஆனால், மூடர்கள் அனாத்மாவான இந்த சரீரத்தையே நான் என்றும், சரீர ஸுக, துக்கங்களுக்கு உண்டான உணவு, நீர், மனைவி, மக்கள் இவைகளை என்னுடையவை என்றும் எண்ணிக் கொண்டிருக்கின்றனர்.  இப்படி இந்த ஜீவாத்மா முன் ஜென்ம கர்ம வினைகளால் எல்லா விஷயங்களிலும் இருளில் மூழ்கிக் கிடக்கிறான்.  உண்மையை அறிந்து கொள்ளாமல் இந்த ப்ரமைகளால் சரீர ஸுகத்திற்கான கார்யங்களையே செய்து வருகிறான்.  அவித்யையான இந்த கர்மாக்களால் மறுபடி ஸம்ஸாரமே உண்டாகிறது.

மண்ணாலான வீட்டுச் சுவர்களை மீண்டும் மண்ணைக் கொண்டே பூசி, மெழுகி உறுதி செய்து கொள்வது போலவே, பஞ்ச பூதங்களாலான இந்த உடலையும் உணவு, நீர் இவைகளைக் கொண்டே காத்து வளர்த்துக் கொள்கிறோம்.  பஞ்ச பூத மயமான இவைகளால் உடல் வளர்ந்து உறுதி பெறுமேயல்லாது, ஆத்மாவிற்கு ஒரு ப்ரயோஜனமுமில்லை.  ஆத்ம வளர்ச்சிக்கு உபாஸனமே வழியாகும்.  மேலும், ஆயிரக்கணக்கில் பிறவிகளை உடைய ஸம்ஸார வழியில் வந்த இந்த ஜீவன் அஞ்ஞானம் மற்றும் கர்ம வாஸனைகள் என்ற புழுதியால் துக்கங்களையே பெறுகிறான்.

உடலின் புழுதியையும், ச்ரமங்களையும் வெந்நீர்க் குளியல் எப்படிப் போக்கி ஸுகத்தைத் தருமோ, அப்படியே, வருந்தும் இந்த ஆத்மாவின் அஞ்ஞான, மோஹங்களால் உண்டாகும் துக்கங்களையும் தத்வ ஞானம் போக்கும்.  மோஹம் தொலைந்தால் ஜீவன் தன்னிலையில் இருப்பான்.  பின் ஒப்புயர்வற்ற மோக்ஷ ஸுகத்தையும் அடைகிறான்.  ஜீவன் குற்றமற்ற ஆனந்த ஸ்வரூபமே. மோக்ஷமும், ஞானமும் ஜீவன்களுக்கு இயல்பாகவே உள்ளவை,  கர்ம பலன்களைப் போல் அவை புதிதாக உண்டானவைகளல்ல.

ஆனந்த மயனான இந்த ஆத்மாவுக்கு ஸம்ஸாரத்தில் உண்டாகும் துக்கமும், அஞ்ஞானமும் இயல்பான குணங்காளாகாது.  அவை ப்ரக்ருதியின் ஸம்பந்தத்தால் வந்தவையே.  தண்ணீர் இயற்கையில் குளிர்ச்சியாகவும், பொங்காமலும், சப்தமில்லாமலும் இருக்கிறது.  ஆனால் அது தங்கியிருக்கும் பாத்ரத்திற்கு அக்னி ஸம்பந்தம் ஏற்பட்டால், அது சூடாகிறது, சப்தத்தை உண்டாக்குகிறது, பொங்கவும் செய்கிறது.  தண்ணீருக்கும் அக்னிக்கும் நேரில் ஸம்பந்தமும் கிடையாது,  அது அந்த பாத்ரத்தில் தங்கியிருப்பதால் தான் இந்த மாறுபாடுகளை அடைகிறது.  ஆனந்த ஸ்வரூபமான ஆத்மாவும் இந்த ஜலம் போன்றதே.  ப்ரக்ருதி பாத்ரம் போன்றது.  இந்த ப்ரக்ருதியுடனே தாப த்ரயங்கள் (ஆத்யாத்மிகம், ஆதிபௌதிகம், ஆதிதைவிகம்)  நெருப்பு போல ஸம்பந்தப்படுகின்றன.  இதனாலேயே  ஆத்மாவும் அஞ்ஞானம், துக்கம், பசி, தாகம் முதலான மாறுதல்களை அடைகிறது.  ஆனாலும் ஆத்மா நித்யமானது.

இப்படி அவித்யைக்குக் காரணமான இருவகை ப்ரமைகளும், அதனால் வரும் துன்பங்களும் அழிவதற்கு உபாஸனம் ஒன்றே வழி.  அந்த யோகத்தைப் பற்றிக் கூறுகிறேன், கேளுங்கள்.  யோகத்தில் உள்ளவன் இந்த ஸம்ஸாரத்தை அடைவதில்லை.  இந்த மோக்ஷத்தை அடைவதற்கு முக்ய காரணம் மனம்.  இந்த மனம் வேறு விஷயங்களைப் பற்றியிருக்கும் போது அது ஸம்ஸாரத்திற்குக் காரணமாகிறது.  அவைகளில் பற்றாமலிருந்தால் அதுவே மோக்ஷத்திற்குக் காரணமாகிறது.  ப்ரக்ருதி, ஜீவன், ஈச்வரன் இம்மூன்று விஷயங்களைப் பகுத்தறிந்தவன் இதில் வென்று மனதை ப்ரஹ்மத்திடம் செலுத்த வேண்டும்.  அப்படிச் செய்தால் அந்த ப்ரஹ்மம் அவன் அழுக்குகளைப் போக்கி, தன்வயப்படுத்திக் கொள்கிறது.  காந்தமும், அக்னியும் தன் அருகில் இருப்பவைகளை எப்படி தன்னிடம் இழுத்துக் கொள்கிறதோ, சுத்தப்படுத்துகிறதோ அதைப் போலவே ப்ரஹ்மமும் தன்னை த்யானிப்பவனைச் செய்கிறது.

இப்படி பற்பல விஷயங்களிலேயே சுழன்று கொண்டிருக்கும் மனதை இதுவரை நினைத்துப் பார்க்காத இந்த விஷயத்தில் திருப்ப பெரு முயற்சி செய்ய வேண்டியிருக்கும்.  இறை த்யானத்தின் நடுவில் வேறு நினைவொன்றும் புகாதவாறு அவனை ஸ்மரிக்க வேண்டும்.  இந்த ஸ்ம்ருதியே ஒரு நிலையில் ஆனந்தமாகும்.  இறைவனிடம் நம்மை சேர்ப்பிக்கும்.

இந்த யோகம் யம, நியம, ஆஸன, ப்ராணாயாம, ப்ரத்யாஹார, தாரண, த்யான, ஸமாதி என்று எட்டு அங்கங்களுடன் கூடியது.  இதில் முதல் நிலையிலுள்ளவன் யுஞ்ஜானன் என்று அறியப்படுகிறான்.  ஸமாதி கைகூடியவன் விநிஷ்பன்னஸமாதி என்றும் யோகி என்றும் அழைக்கப்படுகிறான்.  த்யானம் வரை அடைந்தவன் யோகயுக் எனப்படுகிறான்.  இதில் யுஞ்ஜானன் பயிற்சியின் போது இடையூறுகள் வந்து மனம் வேறு வழிகளில் சிதறுமாயின் மேலும் பல பிறவிகள் யோகம் செய்து அதன் பிறகே மோக்ஷத்தை அடைகிறான்.  யோகி அவன் பாவங்கள் அனைத்தையும் த்யானத்தின் போதே போக்கிக் கொண்டு விடுவதால் அந்தப் பிறவியிலேயே மோக்ஷத்தை அடைந்து விடுகிறான்.

இந்தப் பயிற்சியிலுள்ளவன் தன் தகுதியை உறுதி செய்து கொள்ள ப்ரஹ்மசர்யம், அஹிம்ஸை, ஸத்யம், திருடாமை, தானம் வாங்காமை என்ற யமத்தின் அங்கங்களையும், ஸ்வாத்யாயம் (வேதமோதுதல்), தூய்மை, ஸந்தோஷம், தவம் முதலான நியமத்தின் அங்கங்களையும் பலனைச் சிறிதும் கருதாமல் ப்ரஹ்மத்தில் மனதை வைத்துச் செய்து வர வேண்டும்.  இதன் பின் அவன் யோகாஸனங்களில் ஒன்றில் இருந்துகொண்டு பயிற்சியைத் தொடர்ந்து செய்ய வேண்டும்.  இதையடுத்த ப்ராணாயாமம் என்பது ப்ராண வாயுவை பயிற்சியின் மூலம் வசப்படுத்துதல்.  அதை ஒரு இறையுருவை த்யானித்து, மந்த்ர ஜபங்களோடு செய்தால் ஸபீஜம் என்றும், இல்லையேல் அபீஜம் என்றும் அழைக்கப்படுகிறது.

இந்த ப்ராணாயாமம் பூரகம், கும்பகம், ரேசகம் என்ற மூன்று அங்கங்களுடையது.  காற்றை மூக்கு, வாய்களால் வெளியே மட்டும் விடுவது ரேசகம், உள்ளே இழுப்பதை மட்டும் செய்வது பூரகம், காற்றை வெளியேயும் விடாமல், உள்ளேயும் இழுக்காமல் ஹ்ருதயத்திலேயே நிறுத்துதல் கும்பகம். இதையடுத்த ப்ரத்யாஹாரம்
என்பது இந்த்ரியங்களை வெளியே நாட்டம் காட்ட விடாது, இறை வழிபாட்டில் திருப்பி விடுவது.  இப்படி ப்ராணனையும், இந்த்ரியங்களையும் வசப்படுத்தி விட்டால் அதன் பின் இறையுருவை மனதில் நிலை கொள்ளச் செய்ய வேண்டும்.  அது தாரணையாகும்.

இந்த தாரணை மூர்த்தம், அமூர்த்தம் என்று இரு வகையாகும்.  சரீரத்தோடு கூடின ப்ரஹ்ம ஸ்வரூபத்தை மனதில் கொள்ளும் மூர்த்தம் அபரம் என்றும், மூர்த்தியற்ற ஸ்வரூபத்தை எங்கும் காணும் அமூர்த்தம் பரம் என்றும் அழைக்கப்படுகிறது.  இந்த தாரணை ப்ரஹ்ம பாவனை, கர்ம பாவனை, உபய பாவனை என்று மூன்று பாவனைகளோடு விளங்குகிறது.  எப்போதும் ப்ரஹ்மத்தையே நினைத்துக் கொண்டிருத்தல் ப்ரஹ்ம பாவனை.  நாம் செய்யும் கர்மாக்களையே எப்போதும் நினைத்துக் கொண்டிருப்பது கர்ம பாவனை.  ப்ரஹ்மத்தையே ஸதா சிந்தித்துக் கொண்டு கர்மாக்களைச் செய்து கொண்டிருப்பது உபய பாவனை.

சரீரத்தைக் கொண்டே தேவ, மனுஷ்ய வேறுபாடுகள் வருகின்றன.  ஜீவனுக்கு இது உண்மையில் கிடையாது.  இதை அறியாத வரையில் மூர்த்த ப்ரஹ்மமும் இருக்கும்.  அமூர்த்த ப்ரஹ்மத்தில் சரீரம் கிடையாது.  எனவே ஜாதி, அழிவு முதலிய பேதங்களும் அங்கில்லை.  அது ஞானத்தை முக்யமாகக் கொண்டு ஸ்வயம் ப்ரகாசமாய் இருப்பது.  இந்த பரப்ரஹ்மத்தை யோகத்தில் ஆரம்ப நிலையில் உள்ளவனால் சிந்திக்க முடியாது.  அவனுக்கு முதலில் மூர்த்த ப்ரஹ்மமே சிந்திக்க இயல்பானது.  அப்போது தேவ, கந்தர்வ, தானவ, யக்ஷ முதலான தேவ ஜாதிகளும், மனுஷ்யர்கள், பசுக்கள், மலைகள், கடல்கள், நதிகள், மரங்கள், கொடிகள் என அனைத்து ரூபங்களும், அதன் காரணங்களும், ஒன்று, இரண்டு என பல பாதங்கள் உள்ளவையும், பாதங்கள் அற்றவையும் மஹாவிஷ்ணுவின் ஸ்வரூபமே.

இந்த மூர்த்தம் முன் கண்ட பாவனைகளோடு இருப்பதால் இது சுபத்தைத் தரப்போவதில் சிறந்ததில்லை.  இந்த ப்ரபஞ்சம் விஷ்ணு சக்தியால் வ்யாபிக்கப்பட்டிருக்கிறது.  இதுவே முக்த ஸ்வரூபத்தில் பரசக்தியாகவும், பக்தஜீவர்களின் ஸ்வரூபத்தில் க்ஷேத்ரக்ஞ சக்தியாகவும்,  வேத விஹிதமான கர்மசக்தியான அவித்யையாகவும் மூன்று விதத்தில் பிரிந்திருக்கிறது.  கர்மசக்தியான அவித்யையால் க்ஷேத்ரக்ஞர்கள் மறைக்கப்பட்டு அவரவர் சரீரத்திற்கேற்றார்ப்போல் அறிவு, சுக, துக்கம் முதலியவற்றில் ஏற்றத் தாழ்வுகளை அடைகின்றனர்.

உயிரில்லாத பாறை, மரக்கட்டைகளில் இருக்கும் ஜீவன் அறிவையும், ஆனந்தத்தையும் மிகவும் குறைவாகவே பெறுகிறது.  தாவரங்கள் இவைகளை விட கொஞ்சம் அதிகமாக பெறுகின்றன.  இப்படி பாம்பு முதலான ஊர்வனவைகள், பின் பறப்பனவைகள், ம்ருகங்கள், மனிதர்கள், தேவர்கள், தேவராஜன், ப்ரஜாபதி, ஹிரண்யகர்பன் என வரிசைப்படி ஜாதிகள் ஒன்றை விட ஒன்றாக ஞானம், ஆனந்தம் இவைகளை அதிகமாகக் கொண்டுள்ளன.  நல்ல விலை கொடுத்து வாங்கும் உடை எப்படி சிறந்திருக்கிறதோ அப்படியே இந்த ஞானம், ஆனந்தத்தின் அளவுகள், செய்யும் நல்ல கர்மாக்களின் அளவைக் கொண்டே அமைகின்றன.  இதனால் அந்தந்த சரீரங்களும், அதைச் சார்ந்து இருக்கும் ஆத்மாவும் அமைகின்றன.

மஹாவிஷ்ணுவின் அமூர்த்தமான ரூபமே ஸத் என்று பண்டிதர்களால் அழைக்கப்படுகிறது.  அதை யோகத்தில் தேர்ச்சி பெற்றவனே சிந்திக்க முடிகிறது.  அந்த அமூர்த்த ப்ரஹ்மம் கீழ் கண்ட மூவகை சக்திகளுக்கு இருப்பிடமாகவும், விவரிக்கப்பட்ட ப்ரபஞ்சத்தை விட வேறாகவும் இருக்கிறது.  அதிலிருந்து கொண்டே மஹாவிஷ்ணு பலவகை ரூபங்களில் அவதரிக்கிறான்.  உபேந்த்ரனாக அவதரித்து தேவ கர்மாக்களையும், மீன் முதலானவைகளாக அவதரித்து விலங்குகளின் செயல்களையும், ராம, க்ருஷ்ண அவதாரங்களில் மனுஷ்ய செயல்களையும், நரஸிம்ஹமாக அவதரித்து இடைப்பட்ட செயல்களையும் இந்த அமூர்த்த ப்ரஹ்மமே செய்தது.

இந்த அவதாரங்களும், அவைகளும் செயல்களும் நம்மால் அளவிட முடியாதவை.  அவை எந்தப் பலனையும் கருதி செய்யப்பட்டவை அல்ல.  எந்த கர்மத்தின் பலனாகவும் நடந்தவை அல்ல.  அவை லோக உபஹாரமாக நடந்தவையே.  இந்த ரூபத்தையே யோகி பயிற்சி செய்ய வேண்டும்.  எப்படி நெருப்பு கிளம்பினால் சுற்றியிருக்கும் எரித்து விடுமோ, அப்படியே இந்த ஸ்வரூபமும் யோகியின் மனதில் நிலைபெற்றால் அவனது பாவங்கள் அனைத்தையும் ஸம்ஹரித்து விடும்.  இதுவே தாரணை.  சுபத்தைக் கொடுப்பதாலும், தாரணைக்கு ஆதரவாக (ஆச்ரயம்) இருப்பதாலும் இந்த அமூர்த்த ஸ்வரூபமே ஸுபாச்ரயம்.  பக்தர்களின் ஸ்வரூபம் தாரணைக்கு ஆச்ரயமாக இருந்தாலும் அவை கீழ்க்கண்ட மூவகை பாவனைகளோடு இருப்பதால் அவை சுபமாயிருப்பதில்லை.  விஷ்ணுவின் இந்த அமூர்த்த ஸ்வரூபமே இந்த இரு குணங்களோடும் இருப்பதால் அதுவே சுபம்.

எங்கெங்கோ அலைந்து, எதையெதையோ பற்றிக்கொண்டிருக்கும் மனதிற்கு பற்றுக் கோடாக இருப்பதும், ஸம்ஸார சக்ரத்திலிருந்து யோகிகளுக்கும் மோக்ஷத்தைக் கொடுப்பதும் இந்த மங்கள ஸ்வரூபமே.  தேவர் முதலான வேறெந்த ஸ்வரூபங்களுமே கர்ம வசத்தில் இருப்பதால் சுபஞ்செய்ய சக்தியற்றவர்களே.  வேறெதிலும் ஆசையில்லாது விஷ்ணுவின் மங்கள ஸ்வரூபம் ஒன்றையே மனத்தில் நிலை கொள்ளச் செய்வதே தாரணை.

எங்கும் ஒளி நிறைந்த சந்த்ர வதனமும், தாமரையையொத்த பெரிய கண்களும், அழகிய தாடைகளும், பரந்து விரிந்த நெற்றியும், ஒத்த அளவில் தொங்கும் ஒளி மிகுந்த குண்டலங்கள் கொண்ட காதுகளும்,  சங்கு போன்ற கழுத்தும், லக்ஷ்மியைக் கொண்டிருக்கும் சிறந்த மார்பும், மூன்று மடிப்போடும், ஆழ்ந்து சுழிந்துள்ள தொப்புளும் கொண்டு விளங்கும் திருவயிறும், நீண்டு திரண்ட நான்கு கைகளும், ஸமமான துடைகளும், கணுக்கால்களும், மலர்களையொத்தத் திருவடிகளும், அரையில் சிவப்பாடையும், க்ரீடம், ஹாரங்களைப் பெற்று பொலிவோடு விளங்கும் மஹாவிஷ்ணுவான பரப்ப்ரஹ்மத்தைத் த்யானிக்க வேண்டும்.

விஷ்ணுவுக்கு நான்கு கைகள், எட்டு கைகள் என்று சாஸ்த்ரங்கள் கூறுகின்றன.  எட்டு கைகள் என்று கொண்டால் அவைகளில் சார்ங்கம், சங்கம், கதை, கட்கம், சக்ரம், அக்ஷமாலைகளையும், மற்ற இரு கைகளில் தாமரையும், பாணமுமோ அல்லது வர, அபய முத்ரைகளையோ கொள்ள வேண்டும்.  நான்கு கரங்கள் எனக் கொண்டால் அவைகளில் சங்கம், சக்ரம், கதை, தாமரை இவைகளைக் கொண்டு த்யானிக்க வேண்டும்.  இப்படி அஸ்த்ரம், ஆபரணம், ப்ரத்யங்கம், ப்ரதான அங்கம் முதலியவைகளோடு கூடின ஸ்வரூபத்தை நினைத்து நிற்பது முதல் வகை தாரணை.  அஸ்த்ரங்களை விட்டு மற்ற மூன்று அங்கங்களையும் கொள்வது, பின் ஆபரணங்களையும் விடுவது, பின் கடைசியில் ப்ரதான அங்கம் ஒன்றை மட்டுமே பற்றி இருப்பது என தாரணை நான்கு வகையாகிறது.  நிற்கும் போதும், நடக்கும் போதும், எந்த செயலையும் செய்து கொண்டிருக்கும் போதும் இந்த உருவம் மனதை விட்டு அகலாதிருப்பின் யோகி தன் தாரணை ஸ்திரப்பட்டு விட்டதாகக் கொள்ளலாம்.

இதற்கடுத்த த்யானம், அஸ்த்ரம் முதலான நான்கு அங்கங்களோடு கூடின விஷ்ணுவின் ஸ்வரூபத்தை வேறெந்த நினைவுகளும் இன்றி ஸதா நினைப்பது.  இந்த த்யானம் ஸ்வரூபத்தைப் பற்றி இருப்பதால் ஸாலம்பன யோகம் என்றும், ஸபீஜ யோகம் என்றும் கூறப்படுகிறது.  இதுவே எந்த ஸ்வரூபமும், நாமமுமின்றி அமூர்த்தமான ஆத்ம ரூபமாக த்யானித்து லயிக்கும் போது ஸமாதி என்று அறியப்படுகிறது.  பரவித்யை என்றும், விவேகஜன்ய ஞானம் என்று அழைக்கப்படுகிறது.

ப்ரஹ்மத்தை அடைவிப்பது இந்த ஞானமே.  மூவகை பாவனைகளை அழித்து இந்த ஞானமே அடைய வேண்டியதான ப்ரஹ்மத்தை ஸமாதி என்ற உபாஸனத்தால் ஆத்மாவிற்குத் தருகிறது.  மோக்ஷத்தையும் தருகிறது.  இந்த உபாஸன ஞானம் இப்படி ஆதிகாலமாக மாயையால் மறைக்கப்பட்டிருந்த ஜீவாத்மாவுக்கு கருவியாக இருந்து மோக்ஷத்தைக் கொடுத்து தன் கடமையை நிறைவேற்றி, அனுக்ரஹிக்கிறது.  இப்படி மோக்ஷமடைந்த ஜீவாத்மா அந்த பரப்ரஹ்மத்தோடு லயித்து பேதமற்று விடுகிறது.

இயற்கையில் ஆனந்த மயமான இந்த ஆத்மா கர்மாக்களால் பேதங்களைக் கொள்கிறது.  பின் ஸமாதி தர்சனத்தில் கர்மங்கள் முற்றும் அழிகையில் அதன் கார்யமான பேதங்களும் முற்றிலும் அழிந்து விடுகிறது.  அப்போது எந்த பேதங்களையும் உண்டு பண்ணுபவனும் இல்லை, அவைகளை அறிபவனும் இல்லை.  இத்தகைய மோக்ஷத்தைக் கொடுப்பது இந்த ஸமாதி” என்று காண்டிக்யருக்கு கேசித்வஜர் அஷ்டாங்க யோகத்தை சுருக்கியும், விவரித்தும் கூறி “வேறு என்ன செய்ய வேண்டும்” என்று கேட்டார்.

காண்டிக்யர் “கேசித்வஜரே! நான் ப்ரார்த்தித்தபடி எனக்கு அஷ்டாங்க யோகத்தை முழுதாக உபதேசித்தீர்கள்.  தங்கள் உபதேசத்தால் என் மனதிலிருந்த அஞ்ஞானம் முதலான அழுக்குகள் முற்றும் அழிந்தன.  என் மமகாரமும், அஹங்காரமும் தவறே.  ஆத்ம ஸ்வரூபம் அழிவற்றது, அது சொல்லிற்கு எட்டாதது.  இனி ஆண், பெண், ஆடு, மாடு என்ற பேத வ்யவஹாரங்கள் எனக்கில்லை.  வேண்டிய நன்மைகள் யாவும் எனக்குச் செய்து விட்டீர்கள்.  இனி நீங்கள் செல்லலாம்” என உபசரித்து அனுப்பினார்.  கேசித்வஜரும் மீண்டும் ராஜ்யத்திற்குத் திரும்பினார்.

காண்டிக்யர் இதன் பின் மீண்டும் ராஜ்யத்தையும் பெற்றார்.  தன் குமாரனை ராஜ்யத்தில் அபிஷேகம் செய்து வைத்து விட்டு அவர் வனம் சென்று அஷ்டாங்க யோகத்தால் மோக்ஷத்தை அடைந்தார்.  கேசித்வஜரும் கர்ம பலன்களான விஷயங்களை அனுபவித்து, பலன் கருதாது கர்மங்களையும் செய்து புண்ய, பாவங்களைத் தீர்த்துக் கொண்டு மோக்ஷத்தை அடைந்தார்.

06_08 “நிலையான ப்ரஹ்மத்திடம் ஜீவன் இப்படி லயித்து விடுவது தான் முக்தி எனும் மூன்றாவதான ஆத்யந்திக ப்ரளயமாகும்.  மைத்ரேயரே! இப்படி அனைத்தையும் உமக்கு இதுவரை விளக்கி விட்டேன்.  இந்த விஷ்ணு புராணம் எல்லா பாவங்களையும் போக்கக் கூடியது.  சாஸ்த்ரங்களில் சிறந்தது.  புருஷார்த்தங்களை நன்கு விளக்குவது.  நீங்கள் விரும்பிக் கேட்டதால் நான் உள்ளதை ஒன்று விடாமல் உபதேசித்து விட்டேன்.  இன்னும் ஏதாவது கேட்க வேண்டுமானால் கேளுங்கள்” என்று பராசரர் கூறி முடித்தார்.

மைத்ரேயர் “ஆசார்யரே! நான் கேட்டதனைத்தையும் நன்கு உபதேசித்து விட்டீர்கள்.  நானும் பக்தியுடன் கேட்டேன்.  இனி வேண்டுவது ஒன்றுமில்லை.  என் ஸந்தேஹங்கள் யாவும் இப்போது நீங்கி விட்டன.  மனதும் சுத்தமானது.  உற்பத்தி, ஸ்திதி, லயங்களையும், இதன் காரண பூதர்களான ப்ரஹ்ம, விஷ்ணு ருத்ர சக்திகளையும், பாவனைகளையும் தங்கள் அனுக்ரஹத்தால் நன்கு அறிந்து கொண்டேன்.  நாம் காணும் இந்த ப்ரபஞ்சம் முழுதும் அந்த விஷ்ணுவின் சரீரமே, அதைத் தவிர வேறில்லை என்பதே அறியவேண்டுவது.  அதை அறிந்து கொண்டேன்.  வேறு விஷயங்களால் ஒரு பயனும் இல்லை.

குருவே! தங்கள் அனுக்ரஹத்தாலேயே நான் என் ஸந்தேஹங்களும், விபரீத ஞானமும் அழியப் பெற்றேன்.  பலன் பெற்றவனானேன்.  வர்ணாச்ரம தர்மங்கள், ப்ரவ்ருத்தி, நிவ்ருத்தி கர்மாக்களையும் அறிந்தேன்.  இனி அறிய வேண்டுவது ஒன்றுமில்லை.  என்னாலேயே தங்களுக்கு இவ்வளவு ச்ரமமும் நேர்ந்தது.  இந்த அபராதத்தைப் பொறுத்தருள வேண்டும்.  என்னைத் தங்கள் புத்ரனாகவே கருதி இவ்வளவு தத்வங்களையும் ச்ரமம் பாராமல் உபதேசித்து அருளினீர்கள்” என்று கூறி நமஸ்கரித்தார்.

இதைக் கேட்டு மகிழ்ந்த பராசரர் விஷ்ணு புராணத்தின் பெருமைகளை அவருக்கு மேலும் எடுத்துரைக்கிறார்.  “மைத்ரேயரே!  இப்படி சொல்லி முடித்த இந்த விஷ்ணு புராணம் வேதங்களுக்கு ஸமமானது.  இதைக் கேட்ட மாத்ரத்தில் எல்லா பாவங்களும் அழியும்.  இதில் ஸர்க்கம் முதலாக, தேவாஸுரர்கள், முனிவர்கள், மஹான்கள் வரலாறும், வர்ணாச்ரம தர்மங்களும், புண்ய ப்ரதேசங்களும், நதிகள், கடல்கள், மலைகள், சாஸ்த்ரங்கள் என அனைத்தையும் உங்களுக்கு விரிவாகக் கூறியுள்ளேன்.  இவைகள்  நினைத்த பொழுதிலேயே நம் பாவங்களைப் போக்கி விடும்.  மேலும், ஸ்ருஷ்டி, ஸ்திதி, ஸம்ஹார கர்த்தாவான விஷ்ணு இந்த புராணத்தில் பல இடங்களில் சொல்லப்படுகிறான்.  எப்படி பயந்திருக்கும் மானைச் சூழ்ந்திருக்கும் ஓநாய்கள் எல்லாம் அங்கு தற்செயலாய் வந்த ஸிம்ஹத்தைக் கண்டதும் ஓடிவிடுமோ, அப்படியே நம்மைத் துன்புறுத்த வந்திருக்கும் பாதகங்கள் அனைத்தும் தற்செயலாய் அவன் பெயரைச் சொன்னாலே ஓடிவிடும்.

அவன் திருநாமத்தை ஒருவன் பக்தியோடு பாடினாலே அவன் பாவங்கள் அனைத்தும் அழிந்து விடுகின்றன.  நெருப்பு எப்படி தங்கத்தின் அழுக்குகளைப் போக்கி சுத்தீகரிக்கிறதோ அப்படியே அவன் நாம ஸங்கீர்த்தனமும் நம் அழுக்குகளைப் போக்கி நம்மை பரிசுத்தப்படுத்துகிறது.  அவன் பெயரைச் சொல்லக்கூட வேண்டாம்.  ஒரு நொடி நினைப்பே மிகவும் கொடூரமான இந்த கலி தோஷத்தை அழித்து விடும்.  மேரு மலையின் முன் ஒரு அணு எப்படியோ அப்படியே மஹாவிஷ்ணுவுக்கு முன் இந்த ப்ரஹ்மாண்ட ப்ரபஞ்சமும்.

ப்ரஹ்மாதி தேவ ஜாதிகளும், ஸித்தர்களும், அஸுரர்களும், அப்ஸரஸ்ஸுகளும், நக்ஷத்ரங்களும், க்ரஹங்களும், ஸப்தரிஷிகளும், லோகங்களும், லோக பாலர்களும், ப்ராஹ்மணர் முதலான மனுஷ்யர்களும், பசுக்களும், ம்ருகங்களும், பாம்புகளும், பக்ஷிகளும், மரங்களும், காடுகளும், கடல்களும், நதிகளும், இந்த்ரியங்களுக்கான விஷயங்களும், இன்னும் பலவும் நிறைந்திருக்கும் இந்த ப்ரபஞ்சம் அவனுக்கு முன் அணுவேதான்.  இந்த ப்ரஹ்மாண்டத்திற்கு ஆத்மாவும் அவனே.  எல்லாமும், எல்லாம் அறிந்தவனாகவும் இருப்பவனும் அந்த விஷ்ணுவே.  இப்படி எல்லா பாவங்களையும் போக்கும் அவனை இந்த புராணம் பல இடங்களில் கூறுகிறது.

அச்வமேத யாகத்தின் முடிவில் செய்யும் அவப்ருத ஸ்நானமும், ப்ரயாகை முதலான க்ஷேத்ரங்களில் இருக்கும் உபவாஸமும், ஒரு வருஷ அக்னிஹோத்ரமும் கொடுக்கும் பலனை இந்த புராணம் கேட்பதாலேயே கொடுக்கிறது.  ஆனி மாத சுக்ல பக்ஷ ஏகாதசியில் உபவாஸமிருந்து, த்வாதசியில் யமுனையில் நீராடி, மதுராவில் பிறந்தவனை நமஸ்கரிப்பதால் ஒருவனுக்குக் கிடைக்கும் அச்வமேத புண்ய பலன், இந்த புராணத்தின் ஒரு அத்யாயத்தை அவன் திருவடிகளை நினைத்து மனதோடு கேட்டாலே கிடைத்து விடும்.  இந்த த்வாதசியில் நம் குலத்தில் பிறந்த யாராவது யமுனையில் நீராடி நமக்குப் பிண்டம் தரமாட்டார்களா? நாமும் மோக்ஷத்தை அடைய மாட்டோமா? என்று ஏங்கும் பித்ருக்களும் இந்த புராணத்தின் ஒரு அத்யாயத்தை ஒருவன் கேட்டாலே அடைந்து விடுகின்றனர்.

இந்தப் புராணம் ஸம்ஸார பயத்தைப் போக்கக் கூடியது.  கேட்கவேண்டிய விஷயங்களில் சிறந்தது.  புண்யங்களுக்குள் புண்யமானது.  கெட்ட கனவுகளின் பலன்களைப் போக்கக் கூடியது.  எல்லா தோஷங்களையும் நீக்கக் கூடியது.  பிள்ளைப் பேற்றைத் தரக்கூடியது.  இப்படிப் பட்ட இதை முதலில் நாராயண ரிஷி ப்ரஹ்மாவுக்கும், அவர் ருபு என்பவருக்கும் உபதேசித்தார்.  அவரிடமிருந்து ப்ரியவ்ரதருக்கும், பாகுரிக்கும், ஸ்தம்பமித்ரருக்கும், ததீசருக்கும், ஸாரஸ்வதருக்கும், ப்ருகுவிற்கும், புருகுத்ஸருக்கும், நர்மதைக்கும் வழி வழியாக வந்தது.  பின் நர்மதை இதை த்ருதராஷ்ட்ரன், ஆபூரணன் என்ற நாகர்களுக்கு உபதேசிக்க, அவர்கள் அதை நாகராஜனான வாஸுகிக்கும், அவர் வத்ஸருக்கும், அவர் அச்வத்தாமருக்கும், அவர் கம்பளருக்கும், அவர் ஏலாபுத்ரருக்கும் உபதேசிக்க இது பாதாள லோகத்தில் பரவி இருந்தது.

ஒரு ஸமயம் பாதாள லோகம் சென்றிருந்த வேதசிரஸ் என்ற முனிவர் இதை அங்கிருந்து பெற்று வந்து பூலோகத்தில் ப்ரமதிக்குக் கொடுத்தார்.  அவர் அதை ஜாதுகர்ணருக்குத் தந்தார், அவர் அதைப் புண்யம் செய்த பலருக்கும் சொல்லி வைத்தார்.  இப்படி பரம்பரையில் வந்த இந்த புராணம் இப்போது புலஸ்த்யரின் வரத்தினால் என் நினைவுக்கு வர நானும் இதை உனக்கு உபதேசித்தேன்.  நீயும் இதைக் கலியுகத்தின் முடிவில் சினீகர் என்பவருக்கு உபதேசிக்கப் போகிறீர்கள்.

இப்படி கலிதோஷத்தைப் போக்க வல்லதும், பரம ரஹஸ்யமுமான இந்த புராணத்தைப் பக்தியோடு கேட்பவன் ஸர்வ பாபங்களிலிருந்தும் விடுபடுகிறான்.  புண்ய தீர்த்தங்களில் ஸ்நானம் செய்த பலனையும், ஸர்வ தேவதைகளையும் துதித்த பயனையும் பெறுகிறான்.  இதில் பத்து அத்யாயங்களைக் கேட்பவன் காராம்பசுவை தானம் செய்த பலனைப் பெறுகிறான்.  இதில் முதல், இடை, முடிவு என எங்கும் விஷ்ணுவே சொல்லப்பட்டிருப்பதால் இதைக் கேட்பதாலும், படிப்பதாலும், சொல்வதாலும் கிடைக்கும் பலன் வேறெதிலும் மூவுலகிலும் கிடையாது.  இதில் மோக்ஷத்தைத் தரும் அவனே பலனாகக் கிடைக்கிறான்.  அவன் ப்ரபாவங்களை நினைத்துப் பார்த்தால், அவனைச் சொல்வதால் பாவம் தொலையும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.

அந்த மஹாவிஷ்ணுவை நினைப்பவன் நரகம் செல்வதில்லை, அவனுக்கு ஸ்வர்க்கமும் ஒரு தடையே. ப்ரஹ்ம லோக ப்ராப்தியும் அவனுக்கு ஸ்வல்பமே.  அவன் மனதிலிருந்து கொண்டு மஹாவிஷ்ணு அவனுக்கு மோக்ஷத்தையே அளிக்கிறான் என்றால் அவனைப் பாடுவதால் பாவங்கள் தொலைகின்றன என்பதில் ஒரு வியப்புமில்லை.  இவனையே யாகாதி கர்மங்களும் ஸ்துதிக்கின்றன. ஞானிகளும் இவனையே த்யானிக்கின்றனர்.  இவனைத் தவிர நாம் கேட்க வேண்டும் பொருள் வேறொன்றுமில்லை.  இவனே பித்ரு ரூபத்தில் ஸ்வதா எனப்படும் கவ்யத்தையும், தேவ ரூபத்தில் ஸ்வாஹா எனப்படும் ஹவ்யத்தையும் ஏற்கிறான்.  இவன் ப்ரமாணங்களால் அளவிட முடியாதவன்.

அந்த மஹாவிஷ்ணு பிறப்பு, இறப்பற்றவன், எந்த மாறுபாடுகளும், வளர்ச்சியும், தேய்வும் அவனுக்கில்லை.  அவனுக்கு நமஸ்காரம்.  புருஷனும் அவனே, அவன் நியமனத்தாலேயே புருஷன் விஷயங்களை அனுபவித்தும், ஞான ஸ்வரூபியாகவும், பேதமின்றியும், சுத்தனாகவும், சரீர ஸம்பந்தத்தால் அசுத்தனாகவும், கர்மங்களால் மஹதாதி தத்வங்களுக்குக் காரணனாகவும், அழிவற்றவனாகவும் இருக்கிறான்.  அந்த புருஷ ஸ்வரூபனுக்கு நமஸ்காரம்.

அவ்யக்தமான ப்ரக்ருதி ஸத்வாதி குணங்களால் உண்டாகும் கார்யங்களுக்கு லயஸ்தானமாக இருக்கிறது.  அது ஆத்மாக்களின் கர்மங்களுக்கு ஏற்ப பலன்களைத் தரவல்லது.  அதுவே கர்மாக்களுக்குக் காரணமுமாகும்.  நித்யமும் அதுவே.  இப்படி அவ்யக்த ஸ்வரூபமாயிருக்கும் விஷ்ணுவுக்கு நமஸ்காரம்.  பஞ்ச பூதங்களின் வடிவாகவும், கர்மேந்த்ரியங்களாகவும், ஞானேந்த்ரியங்களாகவும், இவைகளுக்கு விஷயங்களாகவும் இருந்து ஆத்மாவுக்கு உதவி செய்கிறதும், ஸூக்ஷ்ம ஸ்வரூபமாகவும் இருக்கும் வ்யக்தனான விஷ்ணுவுக்கு நமஸ்காரம்.

வ்யக்தம், அவ்யக்தம் என இருவகைப்பட்ட ப்ரக்ருதியும், பரமான ஜீவ சரீரங்களும், ஆத்ம ஸ்வரூபமும், பிறப்பு, இறப்பில்லாதவனும், நித்யனுமான விஷ்ணுவுக்கு உடலாய் இருக்கின்றன.  ஞானம் முதலான ஐச்வர்யங்களை உடைய அவன் எல்லா ஆத்மாக்களுக்கும் பிறப்பு, இறப்பில்லாத மோக்ஷ ஸுகத்தை ஆசிர்வதிப்பானாக.

எட்டாம் அத்யாயம் முற்றும்.  ஆறாம் அம்சம் முற்றும்.  விஷ்ணு புராணம் முற்றும்.

ஸர்வே ஜனா: ஸுகினோ பவந்து!

——————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ மைத்ரேய முனிவர் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பராசர முனிவர் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ விஷ்ணு புராணம் — ஐந்தாம் அம்சம்-ஸ்ரீ சீதாராம ஸ்வாமிகள் தொகுத்தவை-

February 24, 2023

05_01. எங்கும் வ்யாபித்திருக்கும் விஷ்ணு யாதவ குலத்தில், எவர்க்கும் எளியவனாய் அவதரித்துச் செய்த லீலைகளை விரிவாகக் கூறவேண்டும் என்று மைத்ரேயர் வினவ, அது பற்றிக் கூறுகிறார் பராசரர். தேவகனுக்கு தேவலோகத்துப் பெண் போன்ற அழகுடன் தேவகி என்ற ஒரு பெண் இருந்தாள். அவளை வஸுதேவன் திருமணம் செய்து கொண்டான். அவர்கள் அமர்ந்திருந்த தேரைத் தானே ஓட்டிச் சென்றான் கம்ஸன். “ஏய் மூடா! கம்ஸா! உடன் பிறந்த பாசத்தால் தேவகியை அவள் கணவனுடன் கூட்டிச் செல்கிறாய். இவள் வயிற்றில் பிறக்கும் எட்டாவது பிள்ளையே உன்னைக் கொல்லப் போகிறான்” என்று திடீரென வழியில் ஒரு அசரீரி கேட்டது. இதைக் கேட்டதும் கோபம் கொண்ட கம்ஸன் கடிவாளத்தை விட்டு, கத்தியைக் கையில் எடுத்தான். தேவகியைக் கொல்லத் திரும்பினான்.

இதைக் கண்ட வஸுதேவன் செய்வதறியாது அப்போதைக்கு சாதுர்யமாக “பெருமை வாய்ந்தவனே! இவளை ஏன் கொல்ல வேண்டும். இவளது எட்டாவது பிள்ளைதானே உனக்கு எமன். நான் இவளுக்குப் பிறக்கும் எல்லா குழந்தைகளையுமே உன்னிடமே கொண்டு வந்து கொடுத்து விடுகிறேன். அதை நீ உன் இஷ்டப்படி எதாவது செய்து கொள்” என்றான். இதைச் சரியென நினைத்து கம்ஸனும் அவர்களை அப்போதைக்கு விட்டான். அவர்கள் குழந்தைகளுக்காகக் காத்திருந்தான். இந்த ஸமயத்திலேயே பூபாரம் தாங்காத பூமாதேவி மேருமலையில் தேவர்களுடன் கூடியிருந்த ப்ரஹ்மாவிடம் சென்று “ஸ்வர்ணத்துக்குத் தந்தை அக்னியாவான். பசுக்களுக்கு ஸூர்யனே தந்தை.

அப்படியே எனக்கும் மற்ற லோகங்களுக்கும் நாராயணனே தந்தை. அவனுக்குத் தந்தை இல்லை. அந்த நாராயணனே என்னைக் காக்க வேண்டும். ப்ரஹ்மா, காலம், தேவ குலம், யக்ஷ, ராக்ஷஸ, அஸுர, க்ரஹ, நக்ஷத்ர, அக்னி, ஜலம், காற்று, நான், சப்தம் என அனைத்துமே விஷ்ணு மயம். விஷ்ணுவிற்கு சரீரம். இப்படி விஷ்ணுவின் சரீரமான இவைகளே ஒன்றையொன்று எதிர்த்துக் கொள்வது ஏன் என்ற சந்தேஹம் வேண்டாம். கடலிலும் பெரிய அலைகள் சிறிய அலைகளை அழிக்கவே செய்கின்றன. இப்படியே பலமுள்ளவர்கள் பலம் குன்றியவர்களை அழிக்கின்றனர். இப்பொதும் காலநேமி முதலான அப்படிப்பட்ட அஸுரர்கள் பூலோகத்தில் ப்ரஜைகளை அழித்து வருகிறார்கள்.

இவன் ஏற்கனவே விஷ்ணுவால் அழிக்கப்பட்டிருந்தும், இப்போது மீண்டும் உக்ரஸேனன் மகன் கம்ஸனாகப் பிறந்துள்ளான். அரிஷ்டன், கேசினி, ப்ரலம்பன், நரகன், தேனுகன், பாணாஸுரன் என இன்னும் பல துராத்மாக்கள் ராஜ குலங்களில் எண்ண முடியாதபடி பிறந்துள்ளனர். பல அக்ஷௌஹிணிக் கணக்கில் இருக்கும் இந்த அஸுரக் கூட்டங்களை என்னால் சுமக்க முடியவில்லை. இதுவே என் வேண்டுகோள். நான் பாதாளம் சென்று விடாதபடி என்னைக் காக்க வேண்டும்” என்று வேண்டிக் கொண்டாள். இதைக் கேட்ட தேவர்களும், ப்ரஹ்மனும் பாற்கடல் நோக்கிச் சென்றனர். “நீ வேதங்களுக்கும் எட்டாதவன், அணுவிற்கும் சிறியவன், பெரியதற்கும் பெரிதானவன்.

ப்ரஹ்மத்தைப் பற்றிய அறிவால் உண்டாகும் ஞானமாகிய பரவித்யையும் நீயே. சப்தத்தைப் பற்றிய அறிவால் உண்டாகும் ஞானமாகிய அபரவித்யையும் நீயே. உருவமும், அருவமுமானதும் நீயே. வேதங்களும், வேதாங்கங்களும், சாஸ்த்ரங்களும் நீயே. அனைத்துமறிந்தவனும் நீயே. உயர்ந்த வஸ்துவும் நீயே. வாக்கும் நீயே. நீயே ப்ரஹ்மன், அதற்கும் மேலானவனும் நீயே. மொழியும், அதன் உச்சரிப்பும், மாத்திரையும், அர்த்தமும், ஒலியும், கர்மாவும், வான சாஸ்த்ரமும், பரம்பரைகளும், பழக்கங்களும், இலக்கணமும், வேதாந்த சாரமும், தர்க்க சாஸ்த்ரமும், நீதியும் நீயே. அறியமுடியாதவன் நீ. ஆத்மா, வாழ்க்கை, உடல், குணங்கள், விஷயங்கள் இவைகளின் கோட்பாடுகளும் நீயே.

உன்னிடமிருந்தே எல்லாமும் தோன்றி, உன்னிடமே லயிக்கிறது. புலப்படாதவன் நீ, வர்ணிக்கமுடியாதவன் நீ, அறிவதற்கு முடியாதவன் நீ, முடிவில்லாதவன், உருவில்லாதவன், நிறமில்லாதவன், பெயரில்லாதவன், தூய்மையானவன், நிலையானவன் நீ. அனுபவிக்க மட்டுமே முடிந்தவன் நீ, அகக்கண்களுக்கே புலப்படுபவன் நீ. ஒன்றானதும், பலவானதும் நீ. வேகமானவன் நீ. அன்பிற்கு அகப்படுபவன் நீ. அனைத்துமாகவும், அனைத்தையும் அறிந்தவனாயினும் இருக்கும் உன்னை யாரும் அறியார். அறியாமையைப் போக்குபவன் நீ. உன்னை அறிந்தவர்கள் அனைத்தும் அறிந்தவர்களே. முதலாகவும், மத்யமாகவும், இறுதியாகவும் இருப்பவன் நீ. உலகைக் காப்பவன் நீ.

உன்னிடத்திலேயே அனைத்தும் நிலை கொண்டிருந்தது, நிலை கொண்டிருக்கிறது, இனியும் நிலை கொண்டிருக்கும். அணுவிற்கும் அணு நீ. ஆத்மாவும் நீ, வரலாறுகளுக்கெல்லாம் முந்தியவன் நீ, பூமிக்கு ஒளியும், வளமும் நீ. அனைத்துயிரின் கண் நீ, பல உருவங்களைக் கொண்டவன் நீ. எளிதில் மூவுலகும் செல்பவன் நீ. அக்னியைப் போல் ஒன்றாயிருந்தாலும் பல குணங்களானவன் நீ. உண்மையில் மாறுபாடில்லாவிடினும் எப்படி வேண்டுமானாலும் உருவகமாபவன் நீ. எங்கும் நிறைந்தவனும், இருக்கும் எல்லா உருவங்களையும் தரிப்பவன் நீ. ஞானிகளின் அறிவிற்கே புலப்படும் உயர்ந்த வஸ்து நீ. உன்னையன்றி எதுவும் இல்லை. இருந்ததும் இல்லை, இருக்கப்போவதுமில்லை.

கூறுகளாக்க முடியாததும், கூறுகளாக்க முடிந்ததும் நீயே, பொதுவானவன் நீ, தனியானவனும் நீயே. அளவிற்கரிய ஞானமும், பலமுமுடையவன் நீ, எல்லா ஞானத்தாலும், சக்தியாலும் அடையத்தக்கவனும் நீயே. வளர்ச்சியும், குறைவும் இல்லாதவன் நீ, சுயமானவனும், ஆரம்பமற்றவனும் நீ. அனைத்தையும் வெற்றி கொள்பவனும் நீ. களைப்பும், மந்தத்தன்மையும், பயமும், கோபமும், விருப்பும் உன்னைப் பாதிப்பதில்லை. செய்த தர்மத்தின் காரணமாக சுகத்தைப் பெற இருக்கும் ஆத்மா சரீரத்துடன் ஸ்வர்கத்திலும், அதர்மத்தின் காரணமாக துக்கத்தைப் பெற இருக்கும் ஆத்மா சரீரத்துடன் நரகத்திலும், இரண்டின் பயனையும் அனுபவிக்க இருக்கும் ஆத்மா பூமியிலும் பிறக்கிறது. ஆனால் உன் அவதாரங்கள் ஒன்றும் இப்படி எதனின் தொடர்ச்சியாகவும் இன்றி உலகில் பக்தியைச் செய்வதற்காகவே இருக்கிறது”

இப்படிப் பாற்கடலில் பள்ளி கொண்டிருப்பவனைப் பலவாறுத் துதிக்கிறார் தேவர்களுடன் கூடிச் சென்றிருக்கும் ப்ரஹ்மா. இந்த துதிகளைக் கேட்டு மகிழ்ந்த பரமன் தன் விச்வரூபத்தைக் காட்டி, “நான்முகனே, உன் விருப்பம் நிறைவேறினதாகுக. உன் வரவிற்கானக் காரணத்தைக் கூறு” என்கிறான். ப்ரஹ்மா “ஆயிரம் உருவும், கைகளும் உடையவனே, பல முகங்களும், திருவடிகளும் கொண்டவனே, ஸ்ருஷ்டி, ஸ்திதி, ஸம்ஹாரங்களைச் செய்யும் எல்லையற்றவனே, புத்தியும், இயற்கையும், நினைவுமாயிருப்பவனே, எங்களிடம் கருணை கூறுங்கள். அஸுரர்களால் எல்லையற்ற துன்பங்களுக்கு ஆளாகியிருக்கும் பூதேவி இங்கு வந்துள்ளாள். நீயே அவள் குறை போக்கிக் காத்தருள வேண்டும்.

நானும், இந்த்ரனும், அச்வினிகளும், வருணனும், யமனும், ருத்ரனும், வஸுக்களும், ஸூர்யர்களும், காற்றும், நெருப்பும் இன்னும் அனைத்து வானவர்களும் உன் ஆணையைச் செய்ய சித்தமாயிருக்கிறோம். குறைகளற்றவனே, தேவர் தலைவனே, கட்டளையிடு” என்கிறார். இதைக் கேட்டதும் பரமன் வெள்ளையாக ஒன்றும், கருப்பாக ஒன்றுமாய் இரு மயிர்களைக் களைந்து “இவைகள் பூமியில் அவதரித்து, பூதேவின் சுமைகளையும், கவலையும் போக்கும். தேவர்களும் தங்கள் அம்சங்களோடு பூமியில் அவதரித்து, அஸுரர்களோடு யுத்தத்தில் ஈடுபடட்டும். என் பார்வையாலேயே அவர்கள் அழிவது திண்ணம். ஸந்தேஹப்படவேண்டாம். கருமையான இந்த தேஜஸ் வஸுதேவனின் பத்னி தேவகியின் கர்ப்பத்தில் எட்டாவதாகப் பிறந்து விரைவில் கம்ஸனைக் கொல்லும்” என்று கூறி மறைந்தான்.

தேவர்களும் நமஸ்கரித்து விட்டு மேருமலைக்குத் திரும்பினர். நாரதர் உடனே இந்த தேவ ரஹஸ்யத்தைக் கம்ஸனிடம் வந்து கூறிவிட்டார். அவன் உடனே வஸுதேவனையும், தேவகியையும் சிறை வைத்தான். அங்கு பிறந்த ஆறு குழந்தைகளையும் வஸுதேவர் கம்ஸனிடம் கொண்டு வந்து கொடுக்க, அவன் அவ்வப்பொழுதே அவர்கள் ஒவ்வொருவரையும் கல்லில் மோதி கொன்று விட்டான். இவர்கள் முன்பே ஹிரண்யகசிபுவிற்குக் குழந்தைகளாய்ப் பிறந்திருந்து விஷ்ணு பூஜைகளைச் செய்து வந்ததால் “அடுத்த பிறவியில் தந்தையாலேயே உங்களுக்கு மரணம்” என்று சபிக்கப் பட்டவர்கள். அவ்வாறே இப்போது நடந்தது.

யோகநித்ரைக்கு இது விஷயமாக மஹாவிஷ்ணு இட்ட உத்தரவு “மாயா! பாதாளத்தில் சிறை வைக்கப்பட்டிருக்கும் ஹிரண்யகசிபுவின் ஆறு குழந்தைகளையும் தேவகியின் கர்ப்பத்தில் சேர்த்து விடு. அவர்களைக் கம்ஸன் பிறந்ததும் கொன்று விடுவான். ஏழாவது கர்ப்பமாக தேவகிக்கு ஆதிஸேஷன் இருப்பான். ஏற்கனவே நந்தகோபத்தில் வஸுதேவனின் இன்னொரு மனைவி ரோஹிணி ஏழு மாத கர்ப்பிணியாக இருக்கிறாள். ஆனால் அந்த கர்ப்பம் வாயு ரூபத்திலேயே இருக்கிறது. எனவே தேவகியின் ஏழாவது கர்ப்பம் ஏழு மாதம் வளர்ந்தவுடன் அதை நீ எடுத்துச் சென்று ரோஹிணியின் வாயு ரூபமாயிருக்கும் கர்ப்பத்தைக் கலைத்து விட்டு இதை அங்கு வைத்து விடு. இழுத்துச் சென்று வைக்கப்பட்டதால் ஸங்கர்ஷணன் என்ற பெயரில் ரோஹிணிக்கு மகனாக மிகுந்த பலத்துடன் அவன் அங்கு பிறப்பான். இங்கு பயத்தில் தேவகியின் ஏழாவது கர்ப்பம் கலைந்து விட்டது என்று உலகம் நினைக்கும்.

இதன் பின் எட்டாவது கர்ப்பமாக தேவகிக்கு நானே மழை காலத்தில் ஆவணி மாதம் க்ருஷ்ண பக்ஷ அஷ்டமியில் பிறப்பேன். நீ யசோதையின் கர்ப்பத்தில் நவமியில் பிறப்பாய். வஸுதேவன் நம்மிருவரையும் என் ஏவலால், பலம் கொண்டு இடம் மாற்றுவான். கம்ஸன் உன்னைக் கொல்ல முற்படும்போது அவன் கையிலிருந்து விடுபட்டு நீ ஆகாசத்தில் நிற்பாய். மாயையான உன்னை ஆயிரம் கண் கொண்ட தேவராஜனும் தன் தங்கையாக ஏற்றுக் கொள்வான். சும்ப, நிசும்பன் முதலாக அஸுரக்கூட்டங்களை ஆயிரக்கணக்கில் நீ கொல்லப்போகிறாய். பல யோகபீடங்களை அமைத்துக் கொண்டு பூமண்டலத்தை நீ அலங்கரிக்கப் போகிறாய்.

செல்வமும், சந்ததிகளும், புகழும், பொறுமையும், ஸ்வர்க்கமும், பூமியும்,தைர்யமும், நாணமும், சக்தியும், காலைப்பொழுதும் என அனைத்து ஸ்த்ரீ வர்க்கங்களும் நீயே. ஆர்யா, துர்கா, வேதகர்பா, அம்பிகா, பத்ரா, பத்ரகாளீ, க்ஷேமதா, பாக்யதா என உன் திரு நாமங்களைத் தினமும் காலை, மாலைகளில் துதிப்பவர்களுக்கு என் அனுக்ரஹமும், அவர்கள் விருப்பங்களும் ஈடேறும். கள், மாம்ஸம், பக்ஷணங்கள், சாப்பாடு முதலியவைகளால் அனைவராலும் உபசரிக்கப்பட்டு நீயும் உன்னை பூஜிப்பவர்களுக்கு அனைத்தும் அளிப்பாய். உன் வரங்கள் அனைத்தும் என் அருளால் நிச்சயம் நடக்கும். ஆகையால் என் சொல்வதைச் செய்வாயாக”. இந்த உத்தரவின் படியே யோகமாயாவும் நடந்தாள்.

05_02. பிறப்பறியாத இறைவனும் தேவகியின் வயிற்றில் எட்டாவது கர்ப்பமாக மூவுலகிற்கும் க்ஷேமம் செய்யும் பொருட்டு உண்டானான். ஜகத்தாத்ரியும் அதே தினத்தில் யசோதையின் கர்ப்பத்தில் ப்ரவேசித்தாள். க்ரஹங்கள் பொலிவுடன் இருக்க, ருதுக்கள் ஸந்தோஷிக்க, தேவகியும் புதுப் பொலிவு பெற்றாள். அவளை எவராலும் பார்க்க முடியவில்லை. பார்த்தவர் சித்தம் கலங்கின. தேவர்களும் “ப்ரக்ருதி மஹத் தத்வத்தைத் தரித்திருப்பது போல், ப்ரணவம் வேதங்களைத் தரித்திருப்பது போல், ஸ்ருஷ்டி ஸ்ருஷ்டிக்க இருக்கும் பொருள்களைத் தரிப்பது போல், வேதங்கள் யக்ஞங்களைத் தரிப்பது போல், பூஜை பலனைத் தரித்திருப்பது போல், அரணிக்கட்டை அக்னியைத் தரித்திருப்பது போல், அதிதி தேவர்களைத் தரித்திருப்பது போல்,

பின்மாலைப் பொழுது பகலைத் தரித்திருப்பது போல், பெரியோருக்குச் செய்யும் பணிவிடை ஞானத்தைத் தரித்திருப்பது போல், வெட்கம் வணக்கத்தைத் தரித்திருப்பது போல், ஆசை பொருள்களைத் தரித்திருப்பது போல், த்ருப்தி ஸந்தோஷத்தைத் தரித்திருப்பது போல், நினைவு அறிவைத் தரித்திருப்பது போல், ஆகாசம் க்ரஹங்களையும், நக்ஷத்ரங்களையும் தரித்திருப்பது போல் இந்த தேவகியும் பரமாத்மாவைத் தரித்திருக்கிறாள். எனவே அவைகளும், இந்த தேவகியும் ஒன்றே.

ஸமுத்ரங்கள், ஆறுகள், கண்டங்கள், சிறிதும் பெரிதுமான நகரங்கள், க்ராமங்கள், குக்ராமங்கள், அக்னிகள், நீர் நிலைகள், காற்றுகள், நக்ஷத்ரங்கள், நக்ஷத்ரக் கூட்டங்கள், க்ரஹங்கள், ஆகாயம், பல்வேறுபட்ட ரதங்களுடன் கூடிய தேவக்கூட்டங்கள், மூலக்கூறுகளின் மூலங்கள், பல குணங்களுடைய நிலப் பகுதிகள், ஸ்வர்க்கம், சாதுக்கள், ஞானிகள், துறவிகள், ப்ரஹ்மாவின் தேவ பூத பிசாச நாக புருஷ ம்ருக என அனைத்தையும் அடக்கிய ப்ரஹ்மாண்டமும், ப்ரஹ்மாவும், இன்னும் அனைத்து உயிர்களும் யாரிடம் லயித்து அடங்கியிருக்கிறதோ, எவனின் உண்மை ஸ்வரூபத்தையும், குணங்களையும், பெயர்களையும், பரிமாணங்களையும் எவராலும் அறிய முடியாதோ அந்த விஷ்ணுவே உலகங்களைக் காக்க இங்கு கர்ப்பத்தில் இருக்கிறார். தேவியே, உலகுக்கு நல்லதைச் செய்வாயாக, உலகைக் காக்கும் உத்தமனான இவனை நீயும் ஆசையோடு தரிப்பாயாக” என தேவகியைத் துதித்து நின்றனர்.

05_04. மாயையின் பேச்சுக்களைக் கேட்டுக் கலங்கிய கம்ஸன் உடனே மந்த்ராலோசனைக்கு ஏற்பாடு செய்தான். ப்ரலம்பன், கேசி, தேனுகன், பூதனை, அரிஷ்டன் இன்னும் பல கொடியவர்களைக் கூட்டி “மஹா அஸுரர்களே! பல முறை முயற்சித்த போதும் இந்த தேவர்களால் என்னைக் கொல்லவா முடிந்தது. இவர்கள் ஒரு பொருட்டே அல்ல. என்னால் அவர்கள் அனைவரும் பொசுங்கினவர்களே. அல்ப வீர்யம் கொண்ட இந்த்ரன், தனித்துத் தவம் செய்யும் பரமேச்வரன், ஏமாந்த ஸமயம் பார்த்து அஸுரர்களைக் கொல்லும் இந்த விஷ்ணு. இவர்களே இப்படிப் பட்டவர்கள் என்றால் மிச்ச தேவர்களைப் பற்றிக் கேட்கவே வேண்டாம்.

முன்பொரு ஸமயம் யுத்தத்தின் போது என் அம்புகளை மார்பில் தாங்காமல், முதுகில் ஏற்றுக் கொண்டு ஓடினவன் தானே இந்த தேவர் தலைவன் இந்த்ரன். அதையும் நீங்கள் அறிவீர்கள். என் நாட்டில் மழை பொழியாமல் அவன் தடுத்த போது, நான் என் பாணங்களாலேயே மேகங்களைப் பிளந்து மழையை வேண்டுமளவு பொழியச் செய்யவில்லையா. என் மாமனார் ஜராஸந்தனைத் தவிர வேறெவரும் என்னிடம் பணிந்து கிடப்பவர்களே. இப்படியிருக்க மீண்டும் தேவர்கள் என்னைக் கொல்ல முயற்சிப்பதைக் கண்டு எனக்கு சிரிப்பும், அவர்களிடம் அவமதிப்புமே உண்டாகிறது. ஆனாலும் கெட்ட புத்தியுடைய, ஒழுக்கமற்ற தேவர்களிடம் நாம் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும். அதற்கு இதுவே தக்க வழி. நான் சொல்வதைக் கேளுங்கள்.

பூலோகத்தில் தானம் செய்பவர்களிடமிருந்தும், யாகம் செய்பவர்களிடமிருந்துமே தேவர்கள் ஹவிஸ் முதலியவைகளைப் பெற்று வாழ்கின்றனர். எனவே இந்த யாகங்களையும், தானங்களையும், இவைகளைச் செய்பவர்களையும் நாம் அழிக்க வேண்டும். அப்போது தான் தேவர்களும் வாழ்வறியாது அழிவார்கள். மேலும் தேவகியின் வயிற்றில் பிறந்த அந்தப் பெண் என்னைக் கொல்லப் போகிறவன் ஏற்கனவே பிறந்து விட்டான் என்று கூறியதையும் நினைவில் கொள்ள வேண்டும். குழந்தைகளைக் கொன்று விட வேண்டும். விசித்ரமான பலமும், தோற்றமும் பொருந்திய குழந்தைகளைத் தேடித் தேடிக் கருணையின்றி கொல்ல வேண்டும். இவைகளை உடனே செய்யுங்கள்” என்று உத்தரவுகளைப் பிறப்பித்து விட்டு தேவகி, வஸுதேவரிடம் சென்றான்.

அவர்களை விடுவித்து “வீணாக உங்கள் குழந்தைகளைக் கொன்று விட்டேன். அவர்கள் விதி அப்படி. உங்களின் தீவினைப் பயனாகவும் இது நடந்திருக்கலாம். வருந்தாதீர்கள். இவ்வளவு செய்தும் என்னைக் கொல்லப் போகிறவன் எங்கேயோ, எப்படியோ பிறந்து விட்டான். உங்கள் விதி முடியும் வரை இனி உங்களுக்குத் துயரில்லை. ஸந்தோஷமாயிருங்கள்” என்று ஆறுதல் கூறிவிட்டு, ஸந்தேகங்களுடனும், குழப்பங்களுடனும் தன் மாளிகை திரும்பினான்.

05_06. ஒரு ஸமயம் வண்டியின் கீழே குழந்தை கிடத்தப்பட்டிருந்தது. அந்த வண்டியின் வடிவில் குழந்தையைக் கொல்வதற்காக முராஸுரன் என்பவன் புகுந்தான். இதையறிந்த குழந்தை பாலுக்கு உதைத்துக் கொண்டு அழுவது போல் பாவனை செய்து, பாரத்தோடிருந்த வண்டியைத் தலைகீழாக உதைத்துத் தள்ளி உடைத்தது. அதிலிருந்த பானை முதலியன விழுந்து உடைந்து, பொருள்கள் சிதறின. இதைக் கண்ட கோபர்கள் மேலும் வியப்படைந்தனர். வண்டியை யார் இப்படித் தள்ளியது என்று கேட்ட கோபர்களிடம், அங்கு விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் குழந்தை க்ருஷ்ணன் தான் இப்படிச் செய்தது. தன் கால்களால் வண்டியை உதைத்துத் தள்ளியது, வேறு யாரும் தள்ளிவிட வில்லை என்று கூறவும் கூடியிருந்தவர்கள் மேலும் ஆச்சர்யமடைந்தனர். நந்தகோபன் ஓடிவந்து குழந்தையை எடுத்துக் கொள்ள யசோதை உடைந்து போன பானை ஓடுகளை தயிர், பூ, அக்ஷதைகளால் அர்ச்சித்தாள்.

இப்படி இருந்து கொண்டிருக்கையில் குழந்தை பலராம, க்ருஷ்ணர்களுக்கு ஜாதகர்மா, நாமகரணங்களைச் செய்து வைக்கும்படி வஸுதேவர் தன் புரோஹிதரான கர்கரை கோகுலத்துக்கு ரஹஸ்யமாக அனுப்பி வைத்தார். கோபர்களுக்கும் தெரியாதபடி மிகவும் ரஹஸ்யமாக, எளிமையாக நடந்த அந்த விழாவில் மூத்தவனுக்கு ராமன் என்றும், இளையவனுக்குக் க்ருஷ்ணன் என்றும் பெயர் சூட்டினார் கர்கர். குழந்தைகளின் விளையாட்டு தொடர்ந்தது. சாம்பலையும், புழுதியையும் உடலெங்கும் அப்பிக் கொண்டு அங்குமிங்கும் தவழத் தொடங்கினர். மாட்டுக் கொட்டிலிலும், கன்றின் கொட்டிலிலும், அவற்றின் வாலைப் பிடித்து இழுத்துக் கொண்டும், ஒரு நிமிஷங்கூட ஓரிடத்தில் இருக்காமல் விளையாடிக் கொண்டிருந்த அவர்களை ரோஹிணியாலோ, யசோதையாலோ கட்டுப்படுத்தவே முடியவில்லை.

பார்த்தாள் யசோதை. ஒரு கயிற்றை எடுத்துக் கொண்டாள். சொல்வதைக் கேட்காமல் அங்குமிங்கும் திரிந்து கொண்டிருந்த க்ருஷ்ணனை ஒரு குச்சியால் மிரட்டி, அவன் இடுப்பில் அந்தக் கயிற்றைக் கட்டி மறு நுனியை ஒரு மர உரலோடு சேர்த்துக் கட்டினாள். “குறும்பா! இப்ப முடிஞ்சா எங்கயாவது போ, பாக்கலாம்” என்று குழந்தையிடம் விரட்டி விட்டு நிம்மதியாக வீட்டு வேலைகளைச் செய்யச் சென்று விட்டாள். ம்.. வண்டி கிளம்பியாச்சு! ஆமாம், குழந்தை உரலையும் சேர்த்து உருட்டிக் கொண்டு செல்லத் தொடங்கியது. வீட்டுத் தோட்டத்தில் அருகருகில் வளர்ந்திருந்த இரு மருத மரங்களின் நடுவில் குழந்தை சென்று விட்டது. ஆனால் உரல் இரு மரங்களின் நடுவில் மாட்டிக் கொண்டது.

முடிந்த வரை உரலைச் சேர்த்து இழுத்து, இரு பெரும் மரங்களையும் மிகுந்த சப்தத்துடன் அடியோடு முறிந்து விழச்செய்து, கண்களை ஆச்சர்யமாக விரித்து அதை வேடிக்கை பார்த்து விட்டு, வித்யாசமான அந்த சத்தத்தையும் கேட்டு விட்டு, குழந்தை உரலோடு மீண்டும் செல்லத் தொடங்கி விட்டது. சப்தம் கேட்டு ஓடி வந்த கோபர்கள் காற்றே இல்லாமல் விழுந்து கிடக்கும் மரங்களையும், இடுப்பில் கட்டப்பட்டிருக்கும் கயிறோடும், அதன் தழும்போடும், தன் சிறு பற்களைக் காட்டி சிரித்துக் கொண்டிருந்த குழந்தையையும் கண்டனர். இந்த நிகழ்வுக்குப் பிறகு க்ருஷ்ணன் தாம(கயிறு, கயிறு கட்டப்பட்ட)உதரன் (வயிறு)= தாமோதரன் என்று எங்கும் கொண்டாடப்பட்டான்.

தொடர்ச்சியாக நடந்த இந்த துர்ஸகுனங்களை பூதனை மரணம், ஸகடம் உடைந்தது, மரங்கள் முறிந்தது என்று பார்த்துக் கவலையும், பயமுமடைந்த கோபர்கள் தலைவர்களுடன் ஒன்று கூடி “இனி இந்த இடமும், நம் சேரியும் மேலும் அழிவதற்குள் நாம் அருகிலிருக்கும் இன்னொரு வனப்பகுதியான ப்ருந்தாவனம் சென்று விடுவோம். அதுவே நமக்கு நல்லது. கெடுதல்கள் இன்றி நாம் இனி அங்கு வாழ்வோம்” என்று முடிவெடுத்து குடும்பங்களைப் பொருள்களோடுத் தயார் படுத்தி வண்டிகளில் புறப்பட்டனர். பசுக்கூட்டங்களையும், கன்றுகளையும், காளைகளையும் முன்னே ஓட்டிக் கொண்டு சென்றனர். எங்கும் தயிரும், பாலும் சிதறிக் கிடந்தது கோகுலம்.

இது நாள் வரை ராம, க்ருஷ்ணர்களின் லீலைகளால் பொலிந்திருந்த கோகுலம் சிறிது காலத்திற்குள் காக்கை, கழுகு இவைகளின் கூடாரமாகி விட்டது. காடாய்க் கிடந்த ப்ருந்தாவனமோ அந்த கோடைக்காலத்திலும் புல்லும், நீரும் பெற்று புதுப் பொலிவுடன் விளங்கியது. ஆயர்குடி அர்த்த சந்த்ர (அரைவட்ட) வடிவில் தங்கள் குடியிருப்புகளை ஏற்படுத்திக் கொண்டு, வண்டிகள் நிறுத்த வசதிகளையும் செய்து கொண்டனர். குழந்தைகளிருவரும் கன்றுகளை மேய்க்கும் வயதடைந்தனர். மயில் தோகைகளாலும், வெவ்வேறு காட்டுப் பூக்களாலும் தங்களை அலங்கரித்துக் கொண்டு, இலைகளால் குழல்களைச் செய்தும், புல்லாங்குழலாலும் ஓசைகளை எழுப்பிக் கொண்டு, தாங்களும் மகிழந்து, பிறரையும் மகிழச்செய்து கொண்டு, பக்கவாட்டுகளில் தவழும் சுருள் கேசங்களுடன் அக்னி குமாரர்களான சாக, விசாகர்களைப் போல ப்ருந்தாவனமெங்கும் ஸஞ்சரித்துக் கொண்டிருந்தனர்.

தங்களை ஒத்த ஆயிரம் குழந்தைகளோடு ஒவ்வொருவர் தோள் மீது மற்றொருவர் ஏறியும், லோகபாலர்களான இருவரும் கோபாலர்களாக கன்றுகளை காத்துக் கொண்டும் விளையாடியும், சிரித்துக் கொண்டும் இப்படியே ஏழு வயதை எட்டினர். கோடை காலம் கழிந்து மழைக் காலம் தொடங்கியது. மழை நன்கு பொழிந்து எங்கு பார்த்தாலும் பசுமை விளங்கியது. பட்டுப் பூச்சிகள் பறக்க ஆரம்பித்தன. புதிதாய்ப் பணம் கிடைத்த துஷ்டனின் மனம் போல் கட்டுக்கடங்காது மழை நீர் திரண்டு வழிகளைப் புதிது, புதிதாகக் கண்டு பிடித்து ஓடியது. தூயவர்களின் வேதங்களுக்கும், நீதிகளுக்கும் ஒத்துப் போகும் பேச்சுக்களை, இவற்றை நம்பாத மூர்க்கர்கள் தங்கள் சத்தமான முரட்டுப் பேச்சுக்களால் மறைத்துப் பேசுவது போல், மேகங்கள் தங்கள் கறுமையால் நிர்மலனான சந்த்ரனை விளங்காதபடி மறைத்தன.

வில்லினுடைய குணமே அதன் நாண் கயிறு தான். ஆனால் நாண் இல்லாத இந்த்ர தனுஸ் மழைக் காலத்தில் உயர்ந்த இடத்திலே நிலையாக பளீரென்று இருக்கிறது. இது இந்நாளில் பகுத்தறிவில்லாத அரசனின் ஆதரவு பெற்று குணஹீனர்கள் உயர்ந்த பதவிகளில் நிலைத்திருப்பதை நினைவூட்டுகிறது. இப்படிப் பல வர்ணனைகளுடன் கூடிய மழைக் காலத்தில் அந்த ப்ருந்தாவனத்தில் ராம, க்ருஷ்ணர்கள் மற்ற இடைச்சிறுவர்களோடு கூடி உடலில் மூலிகைகளைக் கொண்டு பல வண்ணங்களைப் பூசிக்கொண்டு மகிழ்ச்சியாகத் திரிந்தனர். வனங்களில் திரிந்தனர். மயில் போலவும், தேனீக்களைப் போலவும், அடுத்தவர் போலவும் மாறிப் பேசி விளையாடுவார்கள். குழுவாகப் பாடுவார்கள். ஆடுவார்கள். மர நிழலில் தூங்குவார்கள். தூக்கம் வரும்போது இலைகளைக் குவித்து அதைப் படுக்கையாகக் கொண்டு அதில் உறங்குவர். மேகம் இடி இடிக்கும் போது கும்பலாகக் கூடி, பயப்படுவது போல் ஆ! ஆ! என்று கத்துவார்கள். இப்படி இவர்கள் இருவரும் பகலிலும், இரவிலும் பசுக்களோடும், மற்ற சிறுவர்களோடும் விளையாடி ப்ருந்தாவனத்தில் நந்த கோபன் க்ருஹத்தில் வளர்ந்து வந்தனர்.

05_07. இப்படி அண்ணாவுடன் சுற்றித்திரிந்து கொண்டிருந்த க்ருஷ்ணன் ஒரு நாள் தனியாக, நண்பர்களுடன் கூடி யமுனைக் கரையில் காட்டுப் பூக்களைச் சூடி விளையாடிக் கொண்டிருந்தான். அப்படியே யமுனையின் ஒரு மடுவிற்குச் சென்றான். அந்த மடுவில் தான் காளியன் என்ற ஒரு மஹா ஸர்ப்பம் வஸித்துக் கொண்டிருந்தது. அதன் விஷத்தால் அந்தப் பகுதியில் நீர் எப்போதும் கொதிப்போடிருந்து வந்தது. கரையிலிருந்த மரங்களும், வானில் பறக்கும் சிறு பறவைகளும் கூட அதன் கொடிய விஷத்தால் சாம்பலாகிக் கொண்டிருந்தது. இப்படி எமனின் வாயாக இருந்து வந்தது அந்த மடு.

“இந்த மடுவில் தான் காளியன் இருக்கிறான். இந்த துஷ்டனை இங்கிருந்து விரட்டி விட்டால் அவன் ஸமுத்ரத்திற்குச் சென்று விடுவான். யாருக்கும் பயன்படாமலிருக்கும் இந்த இடமும், மடுவும், யமுனையும் பசுக்களுக்கும், இடையர்களுக்கும் இன்னும் எல்லோருக்கும் பயன்படும் இடமாக மாறும். ஆக இவனை இங்கிருந்து நிக்ரஹம் செய்து விட வேண்டும்” என்று கூறிக்கொண்டு க்ருஷ்ணன் அருகில் பூத்துக் குலுங்கிக் கொண்டிருந்த கடம்ப மரத்தின் மேலேறி, உடைகளை இறுக்கமாகக் கட்டிக் கொண்டு காளியன் இருக்கும் அந்த மடுவில் வேகமாகக் குதித்தான். அப்போது அங்கிருந்து தெளித்த விஷ நீரில் நனைந்த மரங்கள் பற்றி கொழுந்து விட்டு எரிந்தன. கண்ணனும் தன் தோள்களைத் தட்டி சத்தம் போட்டான்.

சத்தம் கேட்டு ஸர்ப்பராஜனும், மேலும் பல ஸர்ப்பங்களும், ஹாரங்களுடனும், குண்டலங்களுடனும் நாக பத்னிகளும் நூற்றுக் கணக்கில் அங்கு வந்து கூடினர். சிவந்திருந்த காளியன் முகத்திலிருந்து விஷத்தீ வெளி வந்தது. ஸர்ப்பங்கள் க்ருஷ்ணனை இறுக்கிக் கட்டிக் கொண்டு, விஷத்தைக் கக்கிக் கொண்டு கடித்தன. இதைக் கண்ட மற்ற இடைச் சிறுவர்கள் கோகுலத்திற்கு ஓடி “க்ருஷ்ணன் முட்டாள் தனமாகக் காளியன் மடுவில் விழுந்து விட்டான், காளியன் அவனைக் கடித்து விழுங்குகிறான். வாருங்கள், வந்து பாருங்கள்” என்று கூக்குரலிட்டனர். இடி விழுந்தது போன்ற இந்த வார்த்தைகளைக் கேட்டு கோபியர்கள், யசோதையை முன்னிட்டுக் கொண்டு கால்கள் தடுமாறி, பயத்துடனும், அழுது கொண்டும் மடுவை நோக்கி ஓடினர்.

நந்தனும், மற்ற கோபர்களும், ஜயிக்கமுடியாத ராமனும் க்ருஷ்ணனுக்கு உதவ யமுனைக் கரைக்கு ஓடினர். மடுவில் காளியனால் தப்ப வழியில்லாமல் கட்டப்பட்டு, பொலிவற்று, செயலற்றிருக்கும் க்ருஷ்ணனைக் கண்டனர். நந்தகோபனும், யசோதையும் உணர்வற்று, நினைவற்றவராயினர். கோபியர்கள் “நாமும் யசோதையோடு இந்த மடுவிலேயே குதித்து விடுவோம். ஸூர்யனில்லாத பகலும், சந்த்ரனில்லாத இரவும், எருதுகள் இல்லாத பசுக்களும் போன்றது க்ருஷ்ணன் இல்லாத கோகுலம். நாம் அங்கு செல்ல வேண்டாம். பிறந்த வீடாக இருந்தாலும், க்ருஷ்ணன் இல்லாத கோகுலம் நீரில்லாத ஆறு போல் அழகழிந்து போனதே. நமக்கு அங்கு மகிழ்ச்சி இருக்காது. காளியன் பிடியில் இருந்தும் க்ருஷ்ணன் நம்மைக் கண்டதும் சிரிக்கிறான் பாருங்கள்” என்றெல்லாம் கூறி அழுது கொண்டிருந்தனர்.

இப்படி கோபியர் அழவும், நந்த கோபனும், யசோதையும் மூர்ச்சிக்கவும் கண்ட ரோஹிணியின் மகன் யாருக்கும் புரியாதபடி க்ருஷ்ணனைத் துதிக்கிறான். “தேவதேவ, என்ன இது. நீ மனிதர்களின் ஸ்வபாவத்தையே காட்டுகிறாயே. இந்தக் காளியன் கடிக்க, மூர்ச்சையடைகிறாயே. இன்னும் நீ உன்னை உணரவில்லையா. நீ அனந்தன் அல்லவா. ஸர்வேச்வரனல்லவா. வண்டிச் சக்ரத்தின் மையம் போல, நீயல்லவோ இந்த உலகிற்கு ஆதாரம். நீதானே முச்செயல் புரிபவனும். வேத ஸ்வரூபியே! உன்னையல்லவா தேவர்களும், யோகிகளும் பூஜிக்கின்றனர்.

பூதேவியின் ப்ரார்த்தனைப்படி அவள் பாரத்தைக் குறைக்கத் தானே நீ அவதரித்திருக்கிறாய். அப்படித்தானே உன் அம்சமான நானும் உனக்கு அண்ணனாகப் பிறந்திருக்கிறேன். நீ இப்படி மனுஷ்யனாக லீலைகள் செய்வதால், மற்ற தேவர்களும் அப்படியே இடையர்களாகப் பிறந்து உன்னுடனே வாழ்கின்றனர். நீயும் இடையனில்லை. அவர்களும் இடையர்கள் அல்ல. அவர்கள் தேவர்கள். நீ அவர்களுக்கெல்லாம் தேவன். கோபிகைகளையும் உன்னுடன் விளையாடுவதற்காக, நீயன்றோ முன்பாக அவதரிக்கச் செய்து, நீ பின்னால் பிறந்துள்ளாய். இப்போது நமக்கு இவர்களன்றோ பந்துக்களும் நண்பர்களும். உன் நிலைக் கண்டு கலங்கும் இவர்களை இப்போது புறக்கணிக்காமல் காக்க வேண்டுமல்லவா. உன் பிள்ளை ஸ்வபாவம் போதும். விளையாட்டை நிறுத்து. இந்த கொடிய காளியனை இப்போதே அடக்கி விடு”

இதைக் கேட்ட க்ருஷ்ணன் அண்ணாவைப் பார்த்து புன்முறுவல் பூத்தான். ஸர்ப்பங்களின் பிடிகளிலிருந்து வேகமாகத் தன்னை விடுவித்துக் கொண்டு மேலே வந்தான். காளியனின் வணங்காத தலையைத் தன்னிரு கைகளால் பிடித்து வளைத்து, அதன் மீதேறினான். பல தலைகள் கொண்ட காளியனின் தலைகளில் வெற்றி நடனமாடி அவனை வணங்கச் செய்தான். தலைகளைத் தூக்கும்போதெல்லாம் அவைகளை மீண்டும் வணங்கச் செய்து, கொடுமையான காயங்களை ஏற்படுத்தினான். இப்படி அங்குமிங்கும் நடனமாடிய க்ருஷ்ணனால் வாய்களில் ரத்தத்தைக் கக்கிக் கொண்டு மூர்ச்சையானான் காளியன். அவனின் இந்த நிலை கண்ட அவன் பத்னிகள் க்ருஷ்ணனையே துதித்தனர்.

“தேவ தேவா! உன்னைப் புரிந்து கொண்டோம். நீயல்லவோ அனைத்திற்கும் தலைவன். உயர்ந்தவன். அறிவுக்கெட்டாதவன். பரப்ரஹ்மத்தின் அம்சம். தேவர்களே உன்னைப் புகழ முடியாதல்லவா. அப்படியிருக்கும் போது பெண்களான நாங்கள் உன்னைத் துதிப்பது எப்படி. இந்த பஞ்ச பூத மயமான ப்ரஹ்மாண்டம் உனது ஓர் சிறு அம்சத்திலும், சிறு அம்சமல்லவா. அணுவிற்கும் அணுவான, பெரியதெற்கெல்லாம் பெரிதான உன் ஸ்வரூபத்தையும் யோகிகளும் அறியார்கள். ப்ரஹ்மாவும் உன்னைப் படைக்க இயலாது. சிவனாலும் உன்னை அழிக்க இயலாது. உன்னிருப்பிற்கும் எவரும் காரணமாக இயலாது. உன்னை வணங்குகிறோம். உனக்குக் கோபம் கிடையாது. உலக நன்மைக்காகவே இந்தக் காளியனை நீ அடக்குகிறாய்.

எங்களிடம் தயை கூர். பெண்களிடம் சாதுக்கள் இரக்கப் படுவார்களே. முட்டாள்களும் விலங்குகளிடம் இரக்கம் கொள்வார்களே. எனவே இளைத்துள்ள இந்த அல்ப ப்ராணியிடம் இரக்கம் காட்டு. உன் திருவடிகளால் துகைக்கப்பட்ட இந்த காளியன் சிறிது நேரத்தில் இறந்து விடுவான். உன் பெருமை எங்கே, இவன் எங்கே. உயர்ந்தவர்களிடம் பகையையும், ஸமமானவர்களிடம் நட்பையும் கொள்ள வேண்டும் என்பதல்லவா நீதி. இவன் உனக்குத் தாழ்ந்தவனல்லவா. இவனிடம் நீ த்வேஷம் கொள்ளாதே. இறக்கும் தருவாயில், துன்புற்றுக் கொண்டிருக்கும் இவனை அருள் கூர்ந்து விட்டு விடு. எங்களுக்கு பர்த்ரு பிக்ஷை இடு” என்றெல்லாம் வேண்டித் துதித்தார்கள்.

இப்படி நாக கன்னிகைகள் துதித்த பின், இறக்கும் தறுவாயிலிருந்த காளியனும், “என்னை மன்னித்து விடு. அணிமா முதலிய எட்டு குணங்களும், சக்தியும் உனக்கு இயல்பானதல்லவா. உன்னிடமிருந்தே தேவர்கள் முதற்கொண்டு அனைத்தும் உண்டாகிறது. நீ அனைத்திற்கும் அப்பாற்பட்டவனல்லவா. ப்ரஹ்ம, ருத்ர, இந்த்ர, மருத்துக்கள், அச்வினிகள், வஸுக்கள், ஆதித்யர்கள் என அனைவரும் கூடின இந்த உலகம் உன்னுடைய சிறு துளிதானே. ப்ரஹ்மா முதற்கொண்டு அனைவரும் உன்னை தேவலோகத்துப் பூக்களால் பூஜிக்கின்றனர். ரிஷிகளும் உன்னை இந்த்ரிய நிக்ரஹம் என்ற பூக்களால் பூஜித்துத் த்யானிக்கின்றனர். நான் எப்படி உன்னைத் துதிப்பேன்.

நீ மிகவும் பெரியவனல்லவா. நான் மிகவும் சிறியவனல்லவா. அதனாலன்றோ உன்னைத் துதிக்காமல் இருந்து விட்டேன். எனினும் உன் தயையால் என்னை நீ அனுக்ரஹிக்க வேண்டும்.
மிகக் கொடிதான எங்கள் ஸர்ப்ப ஜாதிக்குக் கடிப்பதென்பது ஸ்வபாவமல்லவா. அதனாலன்றோ உன்னை நான் கடித்து விட்டேன். என்னிடம் இதிலென்ன தவறு இருக்கிறது. உலகையும், ஜாதிகளையும் படைத்து, அவைகளின் ஸ்வபாவங்களையும் நீயன்றோ ஸ்ருஷ்டித்தவன். அப்படி நீ என்னை படைத்தபடிதானே நான் நடந்து கொண்டேன். இது ஒரு பெருந்தவறா. இதற்கு இவ்வளவு பெரிய தண்டனையா. இயல்புக்கு மாறாக நடந்து கொண்டால் தானே நான் தீயவனாவேன். நல்லவர்களைக் காப்பதற்காகத்தானே உன் அவதாரமும்.

அப்படி நல்லவனாக ஒரு குற்றமும் செய்யாமல் நீ ஸ்ருஷ்டித்தபடி நானிருக்கும் போது நீ என்னைத் தண்டிப்பது எப்படி ந்யாயமாகும். எனினும் இதையும் என் கொடுந்தன்மை அழிவதற்காக நீ கொடுத்த வரமாகவே நான் நினைக்கிறேன். உன்னிடமிருந்து இந்த வரத்தைப் பெற்றிருப்பதால் இந்த வரம் மேலும் சிறப்படைகிறது. நான் இனி ஒருவருக்கும் தீங்கு செய்யேன். என் விஷமும், வீர்யமும் நன்கு அழிந்தன. என்னை நன்கு ஒடுக்கியிருக்கிறாய். ப்ராணனை மட்டும் எனக்கு விட்டு விடு. நான் இனி உன் உத்தரவுப் படி நடந்து கொள்கிறேன்” என்று பலவாறுத் துதித்து வேண்டிக் கொண்டான்.

பரமனும் “காளிய! உன் மனைவி, மக்கள், பந்துக்களோடு உடனடியாக நீ ஸமுத்ரம் சென்று விட வேண்டும். யமுனை மடுவில் இனி நீ இருக்கக் கூடாது. என் பாதம் பதிந்த அடையாளங்களைக் கண்டு உங்கள் சத்ருவான கருடனும் உன்னை ஹிம்ஸிக்கமாட்டான். பயம் வேண்டாம்” என்று அபயமளித்து அனுப்பி வைத்தான். தானும் மடுவிலிருந்து வெளியேறினான். மீண்டும் பிழைத்து வந்ததாகவே க்ருஷ்ணனை எண்ணிய கோபர்கள் அவனைப் பெரிதும் கொண்டாடி அவனைக் கட்டியணைத்து, கண்ணீரால் நனைத்தனர். அண்ணன் வந்திருந்தால் இந்த க்ருஷ்ணனை அவர் மடுவில் குதிக்கவே அனுமதித்திருக்க மாட்டார். இவ்வளவும் நடந்திருக்கவும் நடந்திருக்காது. யமுனையும் சுத்தமானது. எவரும் புகழ்பாட க்ருஷ்ணனும் கோப, கோபியருடன் மகிழ்ச்சி பொங்க ப்ருந்தாவனத்திற்குத் திரும்பினான்.

05_08. பலராமனும், க்ருஷ்ணனும், மற்ற இடைச்சிறுவர்களும் மீண்டும் முன்பு போலவே காடுகளில் மாடுகளை மேய்த்துக் கொண்டு சுற்றித் திரிந்தனர். அப்போது அங்கிருந்த ஒரு பனங்காட்டை அடைந்தனர். இடைச் சிறுவர்கள் “இந்த பனங்காட்டில் தேனுகன் என்ற ஒரு அஸுரன் கழுதை வடிவில் இருந்து கொண்டு இதைக் காத்துக் கொண்டு, ம்ருகங்களை ஹிம்ஸித்து உணவாக்கிக் கொண்டு இருக்கிறான். இவனிடம் பயந்து கொண்டு யாரும் இதனுள் செல்வதில்லையாதலால் இங்கு பனம் பழங்கள் அதிகமாகப் பழுத்துக் குலுங்கிக் கொண்டு, இந்தப் பகுதி முழுதும் மணம் வீசிக் கொண்டிருக்கின்றன. இதை நீங்கள் பறித்துத் தந்தால், நாங்கள் விரும்பி சாப்பிடுவோம்” என்று க்ருஷ்ணனிடமும், பலராமனிடமும் கூறினர்.

க்ருஷ்ணனும், பலராமனும் உடனே இதற்குச் சம்மதித்துப் பழங்களை உதிர்க்கத் தொடங்கினர். அப்போது அவர்களை நோக்கி கொல்வதற்காக ஓடி வந்த தேனுகாஸுரன் சங்கர்சணன் மார்பில் தன் பின்னங்கால்களால் எட்டி உதைத்தான். அந்தக் கால்களைப் பிடித்து பலராமன் நன்றாக உயிர் போகும்படி சுழற்றி அவனை பனைமரங்களின் மீது எறிந்தான். மரங்களை சாய்த்துக் கொண்டு, பழங்களையும் மழைத்துளிகள் போல கீழே விழச்செய்து கொண்டு தேனுகன் உயிரை விட்டான். அவனைப் பின் தொடர்ந்து வந்த கழுதை உருவிலிருந்த மற்ற அஸுரர்களையும் க்ருஷ்ணனும், பலராமனும் கொன்று எறிந்தனர். எங்கு பார்த்தாலும் பழுத்த பனம் பழங்களும், இறந்து கிடக்கும் அஸுரர்களும் நிறைந்திருந்தது அந்த வனம். இதன் பின் சிறுவர்களும் மகிழ்வுடன் பழங்களை சுவைத்தனர். பசுக்களும் அங்கிருந்த காடு போல் இருந்த புது புற்களை நன்கு உண்டன.

05_09. இதற்குப் பின்னொரு ஸமயம், பாண்டீரம் என்ற ஆலமரத்தினருகில் இந்தச் சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர். பால் கறக்கும் போது மாட்டின் கால்களைக் கட்டும் கயிற்றைத் தோளில் போட்டுக் கொண்டு, காட்டு இலைகளால் தொடுக்கப்பட்ட மாலைகளை (வனமாலை) அணிந்து கொண்டு சின்னஞ்சிறு எருதுகள் போல ராம, க்ருஷ்ணர்கள் அப்போது விளங்கினர். சிங்கம் போல கத்திக் கொண்டும், ஏறுவதற்குத் தகுந்த மரங்களைத் தேடிக் கொண்டும், தூரத்தில் மேய்ந்து கொண்டிருக்கும் கன்றுகளின் பெயரைக் கூவி அழைத்துக் கொண்டும், கருப்புப் பட்டாடையில் ராமனும், பொன்னிறப் பட்டாடையில் க்ருஷ்ணனும் மேகங்களைப் போல் திரிந்து கொண்டிருந்தனர். இப்படி உலகைக் காக்கும் இவர்கள் மனிதர்களிடையே பிறந்து அந்தத் தன்மைகளையே காட்டிக் கொண்டு, மனித வர்க்கத்தைப் பெருமைப் படுத்திக் கொண்டு இருந்தனர்.

கைகளை இரு சிறுவர்கள் பிணைத்திருக்க அதில் ஏறி விளையாடுவது, மர விழுதுகளைக் கட்டி அதில் ஊஞ்சலாடுவது, கல், மரக்கட்டைகளை சுற்றி எறிவது என பல விளையாடல்களை அவர்கள் செய்து கொண்டிருந்தனர். ஹரிணாக்ரீடனம் என்ற ஒரு விளையாட்டை அவர்கள் ஒரு ஸமயம் ஆரம்பித்தனர். அதாவது இருவர், இருவராக மான் போலத் துள்ளிக் குதித்து ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குச் செல்ல வேண்டும். முதலில் வருபவரைத் தோற்றவர் முதுகில் தூக்கிக் கொண்டு குறிப்பிட்ட தூரம் வரை ஓடவேண்டும். இதுதான் ஹரிணாக்ரீடனம். க்ருஷ்ணனும், ஸ்ரீதாமன் என்பவனும் ஜோடி சேர்ந்தனர். பலராமனுடன் ப்ரலம்பன் என்ற அஸுரன் இடைச்சிறுவன் உருவில் யாருக்கும் ஸந்தேஹம் வராதபடி ஜோடி சேர்ந்தான்.

க்ருஷ்ணனைத் தன்னால் கொல்ல முடியாதென்பதை உணர்ந்த அவன் பலராமனைக் குறி வைத்தான். இதில் க்ருஷ்ணனும், அவன் கட்சியைச் சேர்ந்தவர்களும் வென்றனர். தோற்றவர்கள் வென்றவர்களை சுமந்து கொண்டு பாண்டீரம் வரை ஓடிச் சென்று திரும்பினர். ஆனால் பலராமனைத் தூக்கிச் சென்ற ப்ரலம்பன் வானில் பறக்க ஆரம்பித்து விட்டான். கருத்த மழைக்காலத்து மேகம் போல் இருந்த அந்த அஸுரன் மேல் வெளுத்த சந்த்ரன் போலமர்ந்திருந்த பலராமன் இதைக் கண்டதும் தன்னை அதிக எடை கொண்டவனாகச் செய்து கொண்டு ப்ரலம்பனை அழுத்தினான். ஆனால் அஸுரன் அதைத் தாங்குமளவு மலை போல உருவெடுத்துக் கொண்டு தொடர்ந்து பறந்தான். பலராமன் உடனே க்ருஷ்ணனிடம் திரும்பி, “க்ருஷ்ணா! மலைபோலிருக்கும் இவனை யாரென்று அறியாமல் இருந்து விட்டோம். இப்போது நான் என்ன செய்வது” என்று கேட்டான்.

இப்போது க்ருஷ்ணர் அண்ணாவைப் பார்த்துச் சிரித்துக் கொண்டு, “அண்ணா! நீர் ஸர்வ ஸ்வரூபி, ஸூக்ஷ்மங்களுக்கெல்லாம் ஸூக்ஷமமானவர். அனைத்திற்கும் முன்பாகத் தோன்றி ப்ரளயத்திலும் எஞ்சியிருப்பவர். பரப்ரஹ்ம ஸ்வரூபமான நீர் எதற்கு இப்படி மனுஷனைப் போல் நடிக்கிறீர். உங்களை நினைத்துப் பார்த்துக் கொள்ளுங்கள், உலகிற்கெல்லாம் மூலக் காரணமல்லவா தாங்கள். பூபாரம் தீர்க்கவே நாம் அவதரித்தொமென்பதை மறந்து விட்டீர்களா. உமக்கு ஆகாயமே தலை. மேகங்கள் கேசங்கள். பூமியே பாதம். அக்னி முகம். சந்த்ரன் உங்கள் மனம். வாயு மூச்சு. நான்கு திசைகளும் நான்கு தோள்கள். பலம் பொருந்திய தேவரே, ஆயிரம் தலை, கை, கால்களைக் கொண்டவரே, உங்களிடமிருந்தே ப்ரஹ்மாக்கள் தோன்றுகிறார்கள்.

அனைத்திற்கும் முந்தியவர் தாங்கள். சாதுக்கள் பலவாறு புகழும் உங்கள் ஸ்வரூபத்தை நானறிவேன். தேவர்கள் உங்களைப் புகழ்கிறார்களல்லவா. உங்களிடமிருந்தே உலகம் தோன்றி, லயிக்கிறது. ஸமுத்ரத்தின் நீர் ஆவியாகி, காற்றால் அலைக்கழிக்கப்பட்டு, இமயத்திலே பனியாய்ப் படர்ந்து, ஸூர்யக் கதிர்களால் மீண்டும் நீராகவே ஆவது போல இந்த உலகும் ஒவ்வொரு கல்பத்தின் இறுதியிலும் மீண்டும் தோற்றுவிப்பதற்காகவே உங்களால் அழிக்கப்படுகிறதல்லவா. அளவற்ற உங்கள் பலத்தால் அந்த கொடியவனை மனுஷ்ய பாவத்தோடே கொல்லுங்கள், சரி எனப்படுவதைச் செய்யுங்கள்” என்று பதில் கூறினார்.

இப்படி இந்த தயாளனால் தன் பெருமைகளை நினைவு படுத்திக் கொண்ட பலராமன் சிரித்துக் கொண்டு ப்ரலம்பனைத் தன் கை, முட்டிகளால் ரத்தம் வரும்படி த்வம்சம் செய்ய, விழிகள் வெளியே வந்து விழ, மூளை மண்டையோட்டைப் பிளந்து கொண்டு பிதுங்க, வாயில் ரத்தம் கக்கிக் கொண்டு பூமியில் விழுந்து இறந்தான் ப்ரலம்பன். ப்ரலம்பன் பிணமாய் விழுந்ததைக் கண்ட கோபர்கள் அதிசயித்து, எல்லோரும் ஒன்று கூடி, பலராமனைப் புகழ்ந்து கொண்டாடிக் கொண்டு க்ருஷ்ணனுடன் கோகுலம் திரும்பினர்.

05_10. மழைக்காலம் முடிந்து பனிக்காலம் (இலையுதிர் காலம், சரத் ருது) வந்தது. நீர் நிலைகளில் தாமரைகள் பூத்துக் குலுங்கின. ஸூர்ய வெப்பத்தால் அந்த நீர் நிலைகளில் இருந்த நீர் சூடானது. மனை, மக்கள், சுற்றங்களிலுள்ள பற்றால் க்ருஹஸ்தன் மிகுந்த தாபமடைவது (கஷ்டம், ஆனால் ஆசை, பாசமிருப்பதால் விடவும் முடியாது) போல், தாங்கள் இது நாள் வரை பழகிய குட்டைகளை விட முடியாது தவித்தன அங்கிருந்த மீன்கள். அவைகளும் அந்த சூட்டிலேயே அந்த நீரில் இருந்தன. சாரமில்லாத இந்த வாழ்வைப் புரிந்து கொள்ளாது கண்டபடி இதில் திளைத்துத் திரிந்து, பின் இளைத்து, யோகம் செய்து, இது ஸாரமற்றது என்பதை உணர்ந்து மௌனமடைந்த யோகிகளைப் போல, மழைக்காலத்தில் தோகை விரித்து ஆடிக் கொண்டிருந்த மயில்கள் இப்போது மௌனமாயிருந்தன.

எப்படி ஞானிகள் மனைவி, மக்கள், சுற்றங்களையும், அஹங்கார, மமகாரங்களையும், த்வேஷங்களையும் விட்டு பரிசுத்தமான உடலுடன் விலகுகிறார்களோ, அதேபோல் நீர் கொண்டு கருத்திருந்த மழைக்காலத்து மேகங்களும் நீரைப் பொழிந்து விட்டு, வெளுத்த நிறம் கொண்டு ஆகாயத்தை விட்டு மறைந்தன இந்த சரத் காலத்தில். பொருள்களில் பற்றுள்ளவர் மனம் போல, ஸூர்யக் கதிர்களால் குளங்களின் நீரும் வறண்டு விடுகிறது. ஞானத்தால் நல்லவர் மனம் சமத்வத்தில் நிறைந்தது போல் இந்த நீரும் வெள்ளை அல்லி மலர்களால் நிறைந்துள்ளது. பூர்ணமடைந்திருந்த சந்த்ரன், நற்குலத்தில் பிறந்து முக்தியடையத் தக்க கடைசி சரீரத்தைப் பெற்று விளங்கும் யோகிகளைப் போலிருந்தான்.

விவேகிகள் எப்படி தங்கள் மனைவி, மக்களிடமிருக்கும் பற்றிலிருந்து கொஞ்ச, கொஞ்சமாக விலகுகிறார்களோ, நதிகளும் அவ்வாறே கரைகளை விட்டு நகர்ந்து கொண்டிருந்தன. தேர்ச்சி அடையாதவர்கள் முதலில் யோகாப்யாஸம் செய்யும் போது அவர்கள் குறைகள் அவர்களை விட்டு விலகுகின்றன. பிறகு ஒரு ஸமயம் யோகத்தை விடும் போது மீண்டும் கணக்கற்ற மனக்கவலைகளும், குறைகளும் அவர்களிடமே வந்து சேர்ந்து விடுகின்றன. அதேபோல் இங்கும் மழைக்காலத்தில் நீர் நிலைகளை விட்டுச் சென்ற அன்னப்பறவைகள் இப்போது சரத்காலம் வந்தவுடன் மீண்டும் இங்கேயே வந்து சேர்கின்றன. ஸமுத்ரம் யோகத்தை அடைந்த ஸன்யாஸியின் மனம் போல் சலனமின்றி இருந்தது. விஷ்ணுமயம் ஜகத் என்பதை உணர்ந்தவனின் மனம் போல எங்கும் நீர் அழுக்கற்று விளங்கியது.

யோகிகளின் கவலைகள் யோகத்தால் அழிவது போல், ஆகாயத்தில் இருந்த மேகங்களும் இந்த சரத் காலத்தில் ஒழிந்தன. அஹங்காரத்தால் உண்டாகும் துக்கங்களை எப்படி பகுத்தறிவு போக்குகிறதோ, அதேபோல் இங்கு ஸூர்யனின் தாபத்தை சந்த்ரன் போக்குகிறான். யோகத்தின் மூலம் இந்த்ரியங்களை அவைகளின் செயல்களிலிருந்து ஒடுக்குவது போல் (ப்ரத்யாஹாரம்), சரத்காலமும் ஆகாயத்திலிருந்து மேகங்களையும், பூமியிலிருந்து சேற்றையும், தண்ணீரிலிருந்து கலக்கத்தையும் இழுக்கிறது. வாய்க்கால்கள் மூலம் நீர் நிலைகளிலிருந்து நீரை இழுத்து, தேவைப்படும் வயல் முதலான இடங்களிலே தேக்கி வைத்து, மீண்டும் அங்கிருந்து அவற்றை வெளியேற்றுவது, யோகிகள் பூரகம், கும்பகம், ரேசகம் என்ற ப்ராணாயாமத்தின் செயல்களைச் செய்வது போலுள்ளது. (மூச்சுப் பயிற்சி மூச்சை உள்ளே இழுப்பது, உள் நிறுத்துவது, வெளியே விடுவது என்ற மூன்று நிலைகளைக் கொண்டது)

இப்படி பல சிறப்புகளைக் கொண்ட அந்த சரத் காலத்தில் கோபர்கள் இந்த்ர விழாவிற்கான ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருந்தனர். இந்த உத்ஸவம் பற்றியும், இதை எப்படிச் செய்ய வேண்டும் என்ற முறைகளைப் பற்றியும் முதியோர்களிடம் க்ருஷ்ணன் ஆர்வத்தோடு கேட்டான். “குழந்தாய்! சதக்ரது என்ற இந்த்ரனே மேகங்களுக்கும், ஜலத்திற்கும் அதிபதி. அவனாலேயே ஏவப்பட்டு மேகங்கள் மழை பொழிகின்றன. மழையாலுண்டாகும் பயிர்களையே நாமும், மற்ற ப்ராணிகளும் உபயோகித்து ஸந்தோஷமாய் இருந்து வருகின்றன. தேவ பூஜைகள் நடக்கின்றன. புல்லைத்தின்று பசுக்களும் மிகுதியான பாலையும், நல்ல கன்றுகளையும் தருகின்றன. மழையாலேயே பூமி செழிக்கிறது. மழை பெய்யும் இடத்திலிருக்கும் மக்களுக்கு பசி, நோய் முதலியன இல்லை.

ஸூர்யன் தன் கிரணங்களைக் கொண்டு பூமியிலிருந்து நீரை எடுத்து மேகங்களில் விடுகிறான். இந்த்ரன் லோக க்ஷேமத்திற்காக அதை மீண்டும் மழையாகப் பொழிவிக்கிறான். இதனாலேயே மழைக்காலம் முடிந்ததும் அரசன் முதலனைவரும் யாகங்கள் மூலம் இந்த்ரனை பூஜிக்கின்றனர். நாமும் அப்படியே இந்த சரத் ருதுவிலும் இந்த உத்ஸவத்தை நடத்த முயன்று வருகிறோம்” என்று க்ருஷ்ணனுக்கு நந்தகோபன் பதிலளித்தான். இதைக் கேட்ட க்ருஷ்ணன் இந்த்ரனை வெறுப்பேற்றும் வகையில் “அப்பா! நாம் பயிரிடுபவர்களும் அல்ல, வாணிபம் செய்பவர்களும் அல்ல. காடுகளில் மாடு மேய்த்துத் திரிபவர்கள். எனவே பசுக்களல்லவா நமக்கு தெய்வம்.

தர்க்கம்(ஆன்வீக்ஷிகீ), மூன்று வேதங்கள்(த்ரயீ), வார்த்தா, அர்த்த சாஸ்த்ரம் என்ற நான்கு ப்ரதான சாஸ்த்ரங்களில் வார்த்தா சாஸ்த்ரம் பயிர் செய்வது, வணிகம் செய்வது, பசுக்களை மேய்ப்பது இவைகளைப் பற்றிக் கூறுவது. நமக்குத் தொழில் மாடு மேய்ப்பது. அதனாலேயே நாம் ஜீவிக்கிறோம். அதையே நாம் கொண்டாட வேண்டும். நமக்குப் பலன் கொடுப்பதை விட்டு மற்றொன்றை பூஜிப்பது இம்மை, மறுமை இரண்டிலும் பயன் தராது. பயிரிடும் நிலத்தின் எல்லைகளைத் தாண்டி உள்ளது காடுகள். அங்கேயே நாம் வஸிக்கிறோம். இந்தக் காடுகளின் எல்லைகளாக இருப்பவை மலைகள். ஆகவே மலைகளே நமக்கு மிகவும் முக்யம். வாசல், கதவுகளைக் கொண்ட வீடுகளில் வஸிக்கும் உழவர்கள், வணிகர்கள் போன்று நாம் இல்லை.

நாம் வண்டிகளில் சுற்றிக் கொண்டு, கண்ட இடங்களில் அவர்களை விட ஸுகமாக வாழ்கிறோம். நம் ஸுக வாழ்விற்கு இந்த மலைகளே முக்யம். மலைகள் விரும்பும் உருவெடுத்து எங்கும் ஸஞ்சரிப்பதாக அறிகிறோம். தனக்குத் தீங்கு செய்பவர்களை சிங்கம் முதலான பயங்கர ம்ருகங்களின் உருக்கொண்டு அவர்களைக் கொன்று விடுமாம். ஆகையால் இந்தப் பசுக்களும், மலைகளுமே நமக்குத் தெய்வங்கள். எனவே இவைகளைக் குறித்து யாகங்களைச் செய்யுங்கள். இந்த்ரனால் நமக்கு ஒரு பயனும் இல்லை. ப்ராஹ்மணர்களுக்கு மந்த்ர யக்ஞம், உழவர்களுக்கு ஸீர(கலப்பை) யக்ஞம், நமக்கு கிரியக்ஞம், கோயக்ஞம். இதோ இந்த சிறந்த கோவர்த்தன கிரியை நன்கு உபஸரித்து, பூஜை செய்யுங்கள்.

நம் சேரியிலுள்ள தயிர், பால், நெய் முதலியவைகளைக் கொண்டு அந்தணர்களுக்கும், இன்னும் விரும்பி வரும் அனைவருக்கும் அன்னமிட்டு உபஸரியுங்கள். இப்படி மலையைப் பூஜித்து, இவர்களுக்கு அன்னமிட்ட பின், இந்த சரத்கால புஷ்பங்களால் மாடுகளை நன்கு அலங்கரித்து, இந்த மலையை வலம் வரச் செய்யுங்கள். இதுவே என்னுடைய கருத்து. நீங்கள் மகிழ்வாக இவைகளைச் செய்தால் எனக்கும், பசுக்களுக்கும், இந்த மலைக்கும் மிகவும் பிடிக்கும்” என்று நந்தகோபரிடம் கூறினான். இப்படி க்ருஷ்ணன் சொன்னதைக் கேட்ட நந்தகோபனும், மற்ற கோபர்களும் மிகவும் மகிழ்ந்து அவன் கருத்தே சரியென கொண்டாடினார்கள். அதன்படியே கிரியக்ஞத்தையும் செய்து, கோயக்ஞத்தையும் சிறப்பாக செய்து மகிழ்ந்தனர்.

பசுக்கள் மிகுந்த ஸந்தோஷத்துடன் மலையை வலம் வந்தன. க்ருஷ்ணன் எவரும் அறியாதபடி தானே மற்றொரு உருவமும் கொண்டு மலையுச்சியில் இருந்து கொண்டு, தன்னையே கோவர்த்தன தெய்வம் என்று கோபர்களிடம் கூறிக் கொண்டு, அவர்கள் படைத்த உணவு பதார்த்தங்களை மகிழ்வாக உண்டான். கீழேயிருந்த உண்மையான க்ருஷ்ணனும் மற்றவர்களோடு இவைகளில் கலந்து கொண்டு மலையுச்சிக்கும் வந்து தன்னையே வணங்கிக் கொண்டான். இப்படி இந்த இருவர்களையும் தங்களின் புண்யம் செய்த கண்களால் கண்ட கோபர்கள் இவர்களின் ஒற்றுமையைக் கண்டு வியந்தனர். இதன் பின் மலைமீதிருந்த உருவம் மறைந்தது. அதனிடமிருந்து பல வரங்களைப் பெற்றுக் கொண்டு கோபர்களும் மகிழ்ச்சியோடு வீடு வந்து சேர்ந்தனர்.

05_11. பல காலமாக நடந்து கொண்டிருந்த இந்த்ர பூஜை நிறுத்தப்பட்டதை அறிந்த இந்த்ரன் கோபம் கொண்டு ஸம்வர்த்தகம் எனும் உலகையே அழிக்கக்கூடிய மேகக் கூட்டங்களைக் கூட்டி அந்த தேவதைகளிடம், “மேகங்களே, நான் சொல்வதைக் கேட்டு உடனே என் கட்டளையை நிறைவேற்றுங்கள். நந்த கோபன் க்ருஷ்ணனைப் பெற்றிருப்பதால் திமிர் கொண்டு, மற்ற கோபர்களோடு கூடி எனக்குச் செய்து வந்திருந்த யாகத்தை நிறுத்தி விட்டான். இந்த கோபர்களின் ஸுக வாழ்வுக்குக் காரணமாயிருக்கும் பசுக்களை ஒன்றும் விசாரிக்காமல் ஒன்று விடாமல் அழித்து விடுங்கள். நானும் யானையில் வருகிறேன். தண்ணீரையும், காற்றையும் ஒன்று சேர்த்து உதவுகிறேன். புறப்படுங்கள் உடனே. அப்போது தான் இவர்கள் திமிர் அடங்கும்” என்று உத்தரவிட்டுத் தானும் புறப்பட்டான்.

அதேபோல் எங்கும் அனைத்தும் அழியும்படி பலத்த மழை பெருங்காற்றோடு கூடி பொழிந்தது. கடும் இடியோடு, கண்ணைப் பறிக்கும் மின்னல்களோடு, இருள் சூழ்ந்து பொழிந்த இந்த மழையால் எங்கும் ஒரே வெள்ளக்காடானது. இதில் சிக்கி பசுக்கள் மூர்ச்சையடைந்தன. சில கன்றுகளைக் காத்துக் கொண்டு குளிரில் நடுங்கிக் கொண்டிருந்தன. கன்றுகளை வெள்ளத்தில் இழந்த வேறு சில பசுக்கள் கதறிக் கொண்டிருந்தன. கன்றுகள் வாட்டத்தால் சோர்ந்து தீனமாய்க் கத்திக் கொண்டிருந்தன. இப்படிப் பசுக்களும், கோபர்களும், கோபிகைகளும் துன்பப்படுவதைக் கண்ட க்ருஷ்ணன் “இந்த்ரன் தனக்கு நடந்து கொண்டிருந்த பூஜை நின்று விட்ட கோபத்தால் பகை கொண்டு இப்படிச் செய்கிறான். இதோ இந்த கோவர்த்தன மலையையே நான் பெயர்த்தெடுத்துக் இவர்களுக்குக் குடையாய்ப் பிடிப்பேன்” என்று நினைத்து அவ்வாறே அம்மலையைத் தன் ஒரு கையாலேயே பெயர்த்தெடுத்து இவையனைத்திற்கும் குடையாய்ப் பிடித்தான்.

இந்த்ரனை நினைத்து முகத்தில் புன்சிரிப்புடன் க்ருஷ்ணன் கோபர்களிடம், “கோபர்களே! காற்று, மழைக்கு அஞ்சாமல் இதற்கு அடியில் எங்கு ஸுகமோ அங்கு வந்து தங்குங்கள். இந்த மலை மேலே விழுந்து விடுமோ என்றும் அஞ்ச வேண்டாம். இதை நான் ஒரு சிறு பந்தைத் தாங்குவது போல்தான் தாங்கியிருக்கிறேன்” என்று கூறி அழைத்தான். அவர்களும் தங்கள் பசு, மனைவி, மக்கள், சட்டி, பானை, வண்டிகள் என அனைத்துப் பொருள்களோடும் இதனடியில் பள்ளத்தில் வந்து மகிழ்வோடு தங்கிக் கொண்டனர். தங்கள் வேலைகளையும் பால் கறப்பது, கடைவது எனத் தொடர்ந்தனர். ஏழு நாட்கள் விடாமல் இந்த மழை பொழிந்தது. இந்த ஏழு நாட்களும் க்ருஷ்ணனும் தன் விரல்களாலேயே ஆடாமல், அசையாமல் கோவர்த்தன கிரியைக் குடை போல் பிடித்து கொண்டிருந்தான்.

மேனியில் எங்கும் சிறிதும் வாட்டமில்லை. விரல்களும், நகங்களும் நோகவில்லை. சந்தோஷத்தாலும், வியப்பாலும் விரிந்த கண்களோடு கோபர்களும், கோபிகைகளும் க்ருஷ்ணனின் பெருமையைப் பாட ஆரம்பித்து விட்டனர். நந்தகோகுலம் அழிவதற்காக ஏழு நாட்கள் இரவு பகலாகப் பெய்த மழை வெற்றியைத் தராததால் தோல்வியடைந்த இந்த்ரன் மேகங்களைத் திருப்பி அழைத்துக் கொண்டான். மழை நின்றது. இந்த்ரனின் மிரட்டல் பயனற்றுப் போனது. மேகங்கள் வெளிர் வாங்கின. கோபர்கள் குடையிலிருந்து வெளிவந்து மீண்டும் தங்கள் இருப்பிடங்களைச் சேர்ந்தனர். க்ருஷ்ணனும் கோவர்த்தனத்தை மீண்டும் அதனிடத்திலேயே வைத்தான்.

05_13. தேவேந்த்ரன் புறப்பட்டபின், கோவர்த்தனகிரியை க்ருஷ்ணன் எளிதாகத் தூக்கிக் கொண்டிருந்ததைக் கண்டு வியந்திருந்த கோபர்கள் “க்ருஷ்ணா, பெரும் ஆபத்திலிருந்து எங்களையும், பசுக்களையும் மலையைக் குடையாய்ப் பிடித்துக் காத்தாய். உன் செயல் ஆச்சர்யகரமான குழந்தைத் தனமாயிருக்கிறது. இடையர் பிறப்பிற்குச் சம்பந்தம் இல்லாத, தெய்வீகச் செயல்களையே புரிந்து வருகிறாய். இது எப்படி என்று எங்களுக்குப் புரியவில்லை. நீயே உண்மையைச் சொல்லி விடு. முன்பு பெரும் யமுனையின் மடுவில் காளியனை ஒடுக்கினாய். ப்ரலம்பனைக் கொன்றாய். இப்போது மலையைத் தூக்கி எங்களைக் காத்திருக்கிறாய். இந்த அரிய செயல்களைக் கண்டு நாங்கள் ஸந்தேஹத்தால் மிகவும் குழம்பியுள்ளோம்.

ஹரியின் பாதங்களில் ஆணையாய் உண்மையைச் சொல்கிறோம். எல்லையற்ற வல்லமை படைத்தவனே! உன்னுடைய பெரும் பலத்தை கண்ட எங்களால் உன்னை மனிதனாக நம்ப முடியவில்லை. இந்த சேரியில் குழந்தைகள், பெண்கள், எவருக்கும் உன் மீது அன்பு உண்டு. தேவர்கள் எல்லாரும் ஒன்று சேர்ந்தாலும் செய்தற்கரிய செயல்களை நீ செய்துள்ளாய். ஆயர் குடியில் பிறந்ததையும், பிறப்பிற்கு ஒவ்வாத வீர்யத்தையும் நினைக்கும் போதெல்லாம் மிகுந்த ஸந்தேஹம் உண்டாகிறது. நீ யாரோ தேவ, ராக்ஷஸ, யக்ஷ, கந்தர்வனாகவோ தான் இருக்க முடியும். யாராயிருந்தாலும் எங்கள் உறவினன் நீ. அது ஒன்றே போதும். உன்னை நாங்கள் வணங்குகிறோம்” என்று கூறினர்.

சிறிது நேரம் இந்த வார்த்தைகளால் புண்படுத்தப்பட்டவன் போல் அமைதி காத்த க்ருஷ்ணன் “கோபர்களே, நீங்கள் என்னை உறவினன் என்று சொல்லிக் கொள்வதில் வெட்கப்படுகிறீர்கள் போலிருக்கிறது. இல்லையென்றால் உங்கள் சம்பந்தத்தை விரும்பி உங்கள் குலத்தில் பிறந்திருக்கும் என்னை ஏன் தேவன், தானவன் என்றெல்லாம் கூறவேண்டும். நான் கொண்டாடத் தக்கவனாகவே இருந்து, என் சம்பந்தத்தால் உங்களுக்கும் வெட்கமும் உண்டாகாமலிருந்தால் இந்த ஆராய்ச்சிகளைச் செய்ய வேண்டாம். நான் தேவனோ, கந்தர்வனோ, யக்ஷனோ, தானவனோ அல்ல. உங்கள் உறவினனே. வேறு வகையில் என்னை நினைக்காதீர்கள்” என்று கோபமாகக் கூறுவது போல் கூறினான். இப்படி இவன் கோபமாய்க் கூறியதைக் கண்ட கோபர்கள் மேலே எதுவும் பேசாமல் மௌனமாகி, க்ருஷ்ணனை உறவினனாகப் பெற்றதற்கு மகிழ்ந்து அவனோடு காட்டிற்குள் சென்றனர்.

இதன் பின் ஒருநாள் ஆகாயம் தெளிவாயிருக்க, சரத் காலத்து சந்த்ரன் உலா வந்து கொண்டிருக்க, அல்லிப் பூக்கள் நீர் நிலைகளெங்கும் மணம் பரப்பிக் கொண்டிருக்க, வண்டுகள் பாட என்று இப்படி எல்லாம் அழகாக இருந்த நிலையில் க்ருஷ்ணன் கோபிகைகளுடன் விளையாடக் கருதினான். வீட்டை விட்டு வனத்திற்கு வந்து, கோபிகைகளையும் வீட்டிலிருந்து அங்கு வரவழைக்கக் கருதி புல்லாங்குழலில் ஏற்ற, இறக்கங்கங்களுடன் அவர்கள் விரும்பும் இனிய கானம் செய்தான். இதன் இனிய ஓசையைக் கேட்டதும் கோபிகைகளும் காவல்களைக் கடந்து தங்கள் வீட்டை விட்டு க்ருஷ்ணனிடம் வந்து அவனைச் சூழ்ந்து கொண்டனர்.

ஒருத்தி அந்தக் குழலோசைக்கேற்ப தானும் மெல்லப் பாட, இன்னொருத்தி அவனையே மனதில் நினைத்திருக்க, மற்றொருத்தி “க்ருஷ்ணா! க்ருஷ்ணா” என்று அவன் பெயரைக் கூறிக் கொண்டு வெட்கப்பட்டுக் கொண்டிருக்க, இன்னொருத்தி க்ருஷ்ணன் பக்கம் சென்று நிற்க என்று ஒவ்வொருவரும் ஒவ்வொரு நிலையில் அவன் குழலோசையை அனுபவித்திருந்தனர். இன்னொரு பெண் மாமனார், மாமியாருக்குப் பயந்து தன் வீட்டிற்குள்ளேயே அவன் நினைவாகவே இருந்தாள். அவனையே நினைத்திருந்தலால் அவள் செய்த புண்யங்களின் பலனும் கழிந்து, வீட்டை விட்டு வெளியேறி அவனிடம் சென்று சேர முடியாத துக்கத்தில் இருந்ததால் அவள் பாபப் பலன்களும் கழியப் பெற்று அந்த இரவிலேயே அவள் பகவத் த்யானத்தால் முக்தியும் அடைந்தாள்.

இப்படி எல்லோரோடும் க்ருஷ்ணன் அந்த இரவில் ராசலீலை செய்து கொண்டிருக்கையில் அவர்கள் கண்களிலிருந்து மறைந்தான். க்ருஷ்ணன் திடீரென மறைந்ததால் துயருற்று வ்ருந்தாவனத்தில் அங்குமிங்கும் அலைந்த கோபியர் அவன் லீலைகளைத் தாங்களே ஒவ்வொருவராக செய்து காட்டி மகிழத் தொடங்கினர். ஒருத்தி “தோழி, நானே க்ருஷ்ணன். அவனைப் போலவே அழகாய் நடக்கிறேன் பாருங்கள்” என்றாள். இன்னொருத்தி “நான் தான் க்ருஷ்ணன். அவனைப் போலவே பாடுகிறேன். அதைக் கேளுங்கள்” என்றாள். இன்னொருத்திக் காளியனாக ஒருத்தியைப் பாவித்து, “துஷ்டா! காளியா! நில்! ஓடாதே!” என்றவாறு தோள் கொட்டி அவளைப் பிடித்து இழுத்துக் காண்பித்தாள். நான்காமவள் இதேபோல் கோவர்த்தனகிரியைத் தூக்குவது போலவும், ஐந்தாமவள் தேனுகாவதத்தையும் இப்படி இவர்கள் க்ருஷ்ணனின் பற்பல லீலைகளைப் பாவித்துக் காண்பித்துக் கொண்டு திளைத்திருந்தார்கள்.

இப்படி இவர்கள் வ்ருந்தாவனத்தில் சுற்றி வருந்தி வருகையில் ஓரிடத்தில் த்வஜ, வஜ்ர ரேகைகள் பொருந்திய இரு காலடிச் சுவடுகளைக் கண்டாள் ஒருத்தி. மிகமகிழ்ந்த அவள் “இதோ க்ருஷ்ணனின் காலடிகள், இங்கே பாருங்கள்” என்று மற்றவர்களுக்கும் காண்பித்தாள். சிறிது தொலைவில் இன்னொருவரின் காலடிகளும் அதன் கூட இருந்தன. உடனே அவள் “இதோ பாருங்கள், க்ருஷ்ணனுடன் புண்யம் செய்த ஒருத்தியும் சென்றிருக்கிறாள். நமக்குக் கிடைக்காத பாக்யம் அவளுக்குக் கிடைத்திருக்கிறது. சிறிய இந்த காலடிகள் நெருங்கி இருப்பதால் மெதுவாய் நடக்கும் இயல்புடையவள் அவள்” என்றும் கூறுகிறாள்.

இன்னும் சிறிது தூரத்தில் க்ருஷ்ணனின் முன் பாதப்பகுதிகள் மட்டும் இருப்பதையும், அருகில் பூச்செடிகள் இருப்பதையும் கண்ட அவள் “உடன் சென்றிருப்பவள் தனக்குப் பூக்கள் வேண்டும் என்று கேட்டிருக்கிறாள். இவன் அவள் ஆசையை நிறைவேற்ற உயரத்தில் இருக்கும் அந்தப் பூக்களை முன்னங்கால்கள் மட்டும் பூமியில் படுமாறு எழும்பிப் பறித்துக் கொடுத்துள்ளான், அதனால் தான் கால்களின் பின் பகுதிகள் இங்கில்லை, பாருங்கள் நம் ஆசைகளை நிறைவேற்றாமல் அவள் ஆசையை மட்டும் நிறைவேற்றி இருக்கிறான், அவள் பாக்யமே பாக்யம்” என்று பெருமூச்சு விடுகிறாள். இன்னும் ஒரு இடத்தில் பூக்கள் கீழே சிதறி, காலால் மிதிபட்டிருப்பதைக் கண்டு “அவன் அவளுக்கு இங்கேதான் உட்கார வைத்து அலங்காரம் செய்திருக்கிறான் போலிருக்கிறது, முன் பிறவியில் இவள் விஷ்ணுவுக்கு அர்ச்சனை செய்திருப்பாள், அதன் பலனே இது” என்று பொருமுகிறாள்.

சிறிது தூரத்தில் கண்ணன் காலடிகள் மட்டுமே காணப்படுகின்றன. உடனே ஆராய்ச்சி செய்யும் இந்தப் பெண் “கொஞ்ச நேரத்திற்கு முன் கண்ணனே பூக்களைப் பறித்து அவள் விரும்பியபடியெல்லாம் அவளுக்கு அலங்காரம் செய்து விட்டான் அல்லவா. அதனால் யாருக்கும் கிடைக்காத இந்த பாக்யம் நமக்கே கிடைத்தது என்று அவளுக்குக் கர்வம் வந்து விட்டது. கர்வம் கொண்டதால் அவளை விட்டு விட்டு தான் மட்டும் சென்றுள்ளான். அதனால் தான் அவள் காலடிகளைக் காணவில்லை” என்கிறாள்.

இன்னும் சிறிது தூரம் சென்றதும் “இங்கே பாருங்கள், க்ருஷ்ணனின் காலடிகளைத் தொடர்ந்து இன்னொரு காலடிகளும் அழுந்தித் தெரிகின்றன. ஒருத்தியை அவன் விட்டு விட்டுத் தனித்துச் செல்வதை அறிந்த இன்னொருத்தி ஓடிச் சென்று கண்ணனைப் பிடித்திருக்கிறாள் போலும். அதனால்தான் இவள் காலடிகள் அழுந்தித் தெரிகின்றன. இதோ இங்கே, இங்கே அவள் காலடிகள் ஒழுங்கீனமாக இங்குமங்கும் காணப்படுகின்றன. தன்னை நெருங்கி விட்ட அவளைத் தன் கைகளால் பிடித்திழுத்துக் கூட்டிச் சென்றிருக்கிறான் கண்ணன். இவளும் தன்னிலையிழந்து அவனோடு லயித்துச் சென்றிருக்கிறாள். அதனால் தான் இப்படி தாறுமாறாக இருக்கின்றன இங்கே அவள் கால்கள்” என்கிறாள்.

இன்னும் கொஞ்ச தூரத்தில் பெண்ணின் காலடிகள் தலைகீழாகத் தெரிவதைக் கண்ட அவள் “இவள் கண்ணன் கையைப் பிடித்ததோடு சரி போலும், வேறெந்த பாக்யத்தையும் அடையாமல் அந்த மோசக்காரனால் இவள் திருப்பியனுப்பப்பட்டிருக்கிறாள். அது தான் இது” என்கிறாள். “இங்கேயே இரு, நாம் விளையாடி மகிழ நல்ல ஒரு இடத்தைக் கண்டு பிடித்துக் கொண்டு வருகிறேன் என்று சொல்லி அவளை இங்கேயே விட்டு, வேகமாக ஓடிச் சென்றிருக்கிறான் இந்த அடர்ந்த கானகத்துள், இதற்குள் நிலவு கூடப் புகமுடியாது, இனி அவன் காலடிகளை நம்மால் தொடர முடியாது” என்று முடிக்கிறாள் அவள். இப்படி அவனைத் தேடிச் சென்ற அவர்கள் இப்போது வேறு வழியின்றி மீண்டும் வந்த வழியே திரும்பி, யமுனைக் கரையை அடைந்து அங்கேயே அவனைப் போற்றிப் புகழ்ந்து பாடி, விளையாடிக் கொண்டிருந்தார்கள்.

சிறிது நேரத்தில் கண்ணன் இவர்களின் பக்திக்கு மகிழ்ந்து மீண்டும் தோன்றி அவர்களை நோக்கி பரவசத்துடன் வரத்தொடங்கினான். அவன் வருவதைக் கண்ட ஒருத்தி வேறொன்றும் தோன்றாது “க்ருஷ்ணா! க்ருஷ்ணா” என்றே கூறிக் கொண்டிருந்தாள். இன்னொருத்தி அவனை ஊடலுடன் புருவங்களை நெரித்துத் தன் வண்டுக் கண்களால் அவன் முகமாகிய தாமரையை நுகர்ந்து கொண்டிருந்தாள். இன்னொருத்தி கண்களால் அவனை மனதில் இருத்தி, மீண்டும் வெளியே சென்று விடாதவாறு கண்களை மூடிக் கொண்டு, அவனையே த்யானித்துக் கொண்டிருந்தாள். இவர்களைக் கண்ணனும் சிரித்துப் பேசியும், தானும் புருவங்களை நெரித்தும், கைகளால் தழுவியும் தக்கபடி சமாதானம் செய்தான். இதனால் அவர்களும் மனக்கவலை தீர்ந்து மகிழ்வுற்றனர்.

இதன் பின் ராஸ லீலை (நர்த்தனமாடும் பெண்களை வட்டமாக நிற்க வைத்து விளையாடும் ஒரு விளையாட்டு) செய்ய விரும்பினான். ஆனால் ஒருவரும் அதற்கு இசையாதவாறு அவனிடமே, அவனை ஸ்பர்ஸித்துக் கொண்டே நின்றிருந்தனர். க்ருஷ்ணன் தானே ஒவ்வொருத்தியின் கையையும் பிடித்து இன்னொருத்தியின் கையோடு சேர்த்துப் பிடிக்க வைத்தான். அவன் கை பட்டதில் தங்களை மறந்த அவர்கள் க்ருஷ்ணன் தன் கையையே பிடித்துக் கொண்டிருப்பதாக எண்ணினர். மற்றவள் கையைப் பிடித்துக் கொண்டிருப்பதாக அறியவில்லை. க்ருஷ்ணனும் தன் மாயையால் ஒவ்வொருவர் பக்கத்திலும் இருப்பது போலவே தோற்றமளித்தான். க்ருஷ்ணன் சரத் காலத்து சந்த்ரனையும், அழகு பூத்துக் குலுங்கும் நீர் நிலைகளையும் பாட, கோபியர்களோ சலிப்பின்றி அவன் பெயரையே பாடிக் கொண்டிருக்க, அவர்கள் வளையொலிகளோடு சேர்ந்து ராஸக்ரீடை வளர்ந்தது.

இடையில் களைப்படைந்த இந்த பெண்கள் கண்ணன் தோள்களில் கைகளைப் போட்டுக் கொண்டும், அவன் தாடையோடு தங்கள் தாடையை சேர்த்து வைத்துக் கொண்டும், அவனைக் கட்டி அணைத்துக் கொண்டும் இப்படி ஒவ்வொரு முறையில் தங்கள் ச்ரமத்தைத் தீர்த்துக் கொண்டனர். அவன் பாடுவதை இரு முறை திரும்பப் பாடிக் கொண்டும், அவனோடு சேர்ந்தோடியும், அவனை எதிர்த்துச் சேர்ந்தும் பலவிதங்களில் அவனோடு ஒவ்வொரு நொடியையும் அனுபவித்தனர். அவனைப் பிரியும் ஒரு நொடியும் அவர்களுக்கு ஒரு கோடி வருஷமாகத் தோன்றியது. இவ்வாறு அவர்களோடு கண்ணனும் ஆடிக் களித்தான்.

தங்கள் கணவன், தகப்பன், ஸஹோதரன் இப்படி அனைவரையும் விடுத்து அன்பிற்குரிய அவனோடே திரிந்து கொண்டிருந்தனர். எல்லா உயிர்க்கும் அந்தர்யாமியாய், ஆத்மாவாய் இருப்பதனால் இவனோடு சேர்ந்து இப்படி விளையாடிக் கொண்டிருப்பது எந்த வகையிலும் தோஷமில்லை. அவர்கள் தங்கள் ஆத்மாவோடு விளையாடி ஆத்மானுபவம் அடைந்தார்களே அன்றி வேறு புருஷனாக க்ருஷ்ணனையும், தங்கள் புருஷனை விட்டு இவனோடு விளையாடிக் கொண்டிருந்ததாக இந்த கோப ஸ்த்ரீகளையும் நினைப்பதில் ஒரு பொருளும் இல்லை. அவனுக்கு உலகமே உடல், இந்த கோபஸ்த்ரீகளும் அதில் அடக்கம். இந்த கோபஸ்த்ரீகள் உட்பட எல்லா உயிர்க்கும் அவனே ஆத்மா. ஆக இருவரிடத்தும் ஒரு தோஷமுமில்லை, குறையுமில்லை, அதர்மமுமில்லை.

05_14. க்ருஷ்ணன் ஒரு நாள் மாலைப் பொழுதில் ராஸக்ரீடைக்குச் செல்ல எத்தனிக்கையில் அரிஷ்டன் என்ற ஒரு அஸுரன் கொடிய கரிய எருதின் உருவில் ஸூர்யன் போன்ற ஒளிப் பிழம்பான கண்களுடன், குளம்புகளால் பூமியைப் பிளந்து கொண்டு, நாக்கால் உதடுகளை நக்கிக் கொண்டு, வாலைத் தூக்கிக் கொண்டு அனைவரையும் பயமுறுத்திக் கொண்டு ஓடி வந்து கொண்டிருந்தான். கெட்டியான கழுத்தும், உயர்ந்த திமிளும் கொண்டு, பின் புறம் சாணம், மூத்திரம் இவைகளால் பூசப்பட்டு, பசுக்களையும் பயந்தோடச் செய்து கொண்டு வந்து கொண்டிருந்தான். காட்டில் முனிவர்களைத் துன்புறுத்திக் கொண்டிருந்த இவன் முகத்தில் மரங்களை முட்டித் தள்ளியதாலுண்டான வடுக்கள் இருந்தன.

இப்படி ஒரு எருது ஓடிவருவதைக் கண்டு, அதனருகில் கூட போகமுடியாமல் கோகுலத்தில் எவரும் க்ருஷ்ணா! க்ருஷ்ணா! என்று கதறிக் கொண்டு ஓடினர். க்ருஷ்ணனும் இவர்களைக் காப்பதற்காக ஸிம்ஹநாதம் செய்து கொண்டே அதன் எதிரில் வந்தான். க்ருஷ்ணன் வயிற்றில் குத்திக் கிழிப்பதற்காக அந்த எருதும் தன் கூரிய கொம்புகளை நீட்டி கொண்டு ஓடிவந்தது. பயப்படாமல் தான் இருந்த இடத்திலேயே இருந்து கொண்டு எருது அருகில் நெருங்கியதும் அதன் கொம்புகளைப் பிடித்து அதை அசைய விடாமல் செய்து, முழங்காலால் அதன் வயிற்றில் ஒரு உதை விட்டான் க்ருஷ்ணன். அதை பழைய துணியைப் பிழிவது போல் அடித்துப் பிழிந்து, அதன் ஒரு கொம்பையே பிடுங்கி, அதனாலேயே வாயில் ரத்தம் கக்கி இறக்கும் வரை அதை அடித்துக் கொன்றான் க்ருஷ்ணன். கோபர்கள் அவன் இறந்ததைக் கண்டு கண்ணனை மகிழ்ந்து கொண்டாடினர்.

05_15. க்ருஷ்ணனைக் கொல்வதற்காகச் சென்ற அஸுரர்கள் ப்ரலம்பன், தேனுகன், அரிஷ்டன் என்று அனைவருமே அழிந்தனர். கண்ணனோ வ்ருந்தாவனத்தில் கோவர்த்தனத்தைத் தூக்கித் தாங்குகிறான். காளியனை ஒடுக்குகிறான். மரங்களுக்கு சாப விமோசனம் கொடுத்தான். பூதனை, சகடாஸுரனை வீழ்த்தி விட்டான். இப்படி இவன் திருவிளையாடல்கள் நிகழ்த்திக் கொண்டிருக்கையில், பூலோகம் வந்த நாரதர் நேரே கம்ஸனிடம் சென்று க்ருஷ்ணன் பிறந்தது, வஸுதேவர் குழந்தைகளை ஒரே இரவில் இடம் மாற்றியது என இது வரை அவனுக்குத் தெளிவாயிராத அனைத்து ரஹஸ்யங்களையும் அவனிடம் கூறி விட்டார். இந்த விஷயங்களைக் கேட்டதும் கம்ஸன் வஸுதேவரிடமும், யாதவர்களிடமும் கடும் கோபம் கொண்டான்.

இளம் வயதிலேயே இவ்வளவு பேரை வதைக்கும் இந்த பலராம, க்ருஷ்ணர்கள் இன்னும் யுவர்கள் ஆனால் என்ன செய்வார்களோ என்ற பயத்தில், இப்போதே அவர்களைக் கொன்று விட வேண்டும் எனத் தீர்மானித்தான். “வ்ருந்தாவனத்திலேயே இருக்கும் கேசி என்பவனைக் கொண்டு மீண்டும் இவர்களைக் கொல்ல முயற்சி செய்வோம். அவன் அவர்களை நிச்சயம் கொன்று விடுவான். அவனிடம் தப்பி விட்டால், இங்கே ஒரு தனுர் யாகத்திற்கு ஏற்பாடு செய்து, அதற்கு ச்வபல்கனின் புதல்வரும், யதுக்களில் மதிப்பிற்குரியவருமான அக்ரூரர் மூலம் ராம, க்ருஷ்ணர்களை அழைப்போம். அதற்கு வரும் வஸுதேவனின் மகன்களான, அந்த இடைச்சிறுவர்களை நம் யானை குவலயாபீடம் கொன்று விடும், அதனிடமும் அவர்கள் தப்பி வந்தால், நம்முடைய ப்ரதான மல்யுத்தர்களான சாணூரன், முஷ்டிகன் இவ்விருவர்களைக் கொண்டு அவர்களைப் போட்டியில் கொன்று விடலாம்” என்று முடிவு செய்தான்.

உடனே அக்ரூரரையும் அழைத்து “அக்ரூரரே! நீர் எனக்கு நெருங்கிய நண்பர் அல்லவா. எனக்காக ஒரு உதவி செய்யுங்கள். என் கட்டளையை நிறைவேற்றுங்கள். தேரில் ஏறி, நந்தகோகுலம் சென்று பலராமன், க்ருஷ்ணன் இருவரையும் இங்கு அழைத்து வாருங்கள். விஷ்ணுவின் அம்சங்களான அவர்கள் என்னைக் கொல்வதற்காகவே அவதரித்துள்ளார்களாம். என் வீரர்களையும் அனுதினமும் கொன்று வருகிறார்கள். வரும் சதுர்தசியில் இங்கு ஒரு தனுர் யாகத்திற்கு ஏற்பாடு செய்துள்ளேன். அதற்கு நீங்கள் அவர்களை அழைத்து வரவேண்டும். அதற்கு வரும் அந்த வஸுதேவன் புத்ரர்களை என் யானை குவலயாபீடமே கொன்று விடும். மீறினால் இதே தனுர்யாகத்தில் ஒரு பகுதியாக பொது மக்கள் முன்னிலையில் ஒரு மல்யுத்தம் நடக்கும். அதில் என் வீரர்களான சாணூரன், முஷ்டிகன் இருவரும் அவர்களைத் திறமையாக நிச்சயம் கொல்வார்கள்.

அவ்விருவரும் ஒழிந்த பின் என்னைக் கொல்ல நினைப்பவர்களான வஸுதேவன், அந்த இடையன் நந்தகோபன், என் முட்டாள் தந்தை உக்ரஸேனன் இவர்களை நானே கொன்று விட்டு இவர்களின் தனத்தையும், பசுக்களையும் மற்ற அனைத்தையும் எடுத்துக் கொள்வேன். உம்மைத் தவிர மற்ற யாதவர்களனைவரும் எனக்குப் பகைவர்களே. கொஞ்சம், கொஞ்சமாக அவர்களையும் வேரில்லாமல் செய்து விட்டு, உம்முடன் சேர்ந்து நானே இந்த ராஜ்யத்தை எந்தத் தடையுமின்றி ஆளுவேன். எனவே நீங்கள் இப்போதே நந்தன் கோகுலத்திற்கு விரைவாகச் செல்லுங்கள். நான் உங்களிடம் சொன்ன எல்லா செய்திகளையும் அங்கே கூறி காரியத்தைக் கெடுத்து விடாதீர்கள். நடக்க இருக்கும் தனுர் யாக மஹோத்ஸவத்தை மட்டும் எடுத்துக் கூறி, அதற்காக அவர்கள் எல்லோரையும் தேவையான தயிர், பால் இவைகளை ஏற்பாடு செய்து கொண்டு வருமாறு கூறி விட்டு, ராம, க்ருஷ்ணர்களை மட்டும் உங்களுடன் கூட்டிக் கொண்டு வந்து விடுங்கள்” என்று அன்பாக உத்தரவிட்டான் கம்ஸன். இதைக் கேட்டதும் அக்ரூரரும் மகிழ்ச்சியோடு “அப்படியே ஆகட்டும்” என்று கூறிவிட்டுத் தன் அழகிய தேரிலேறி உடனே க்ருஷ்ணனைத் தர்ஸிப்பதற்காக மதுரையை விட்டுச் சென்றார்.

05_17. அக்ரூரர் தேர் விரைவாகச் செல்கிறது. பரமாத்மாவின் அம்சமாய் அவதரித்த ஒருவனைத் தர்ஸிக்கத் தனக்குக் கிடைத்த உயர்ந்த வாய்ப்பை, தான் பெற்ற பெறும் பேற்றை எண்ணித் தன்னைத் தானே வியந்து கொள்கிறார் அவர். “மஹா பாவியான கம்ஸனின் பணியாளாக இருந்து கொண்டு, அவன் பாவச் சோற்றையே நிதமுண்டு காலத்தைக் கழித்துக் கொண்டிருந்த என் பிறவி, மலர்ந்த தாமரையை ஒத்த திருமுகத்தை தர்ஸிக்க இருப்பதால் சாபல்யமடைந்தது. இதுநாள் வரை கம்ஸனின் கோர முகத்திலேயே விழித்து வந்த எனக்கு, இப்போது கண்ணனின் திருமுகத்தில் விழிக்கும்படி நேர்ந்திருப்பதற்கு நான் என்ன தவம் செய்திருக்கிறேனோ. பாவத்தைப் பெருகச் செய்யும் பாவியின் முகத்தையே கண்டு வந்திருக்கும் நான் இப்போது பாவமனைத்தையும் போக்கக்கூடியவனின் திருமுகத்தைக் காணப் போகிறேன்.

எவன் உருவை மனதில் நினைத்தாலே பாபங்கள் அனைத்தும் தொலையுமோ அவனை நான் நேரிலேயே பார்க்கப் போகிறேன். இந்த முகத்திலிருந்தல்லவா வேத, வேதாந்தங்கள் வெளிவருகின்றன. ஒளிரும் பொருள்களுக்கெல்லாம் இந்தத் திருமுகமல்லவா ஆதாரம். சந்த்ர, ஸூர்யர் இரு கண்களாக இருப்பதும் இந்த முகத்திலல்லவா. எவனால் இந்த உலகம் படைக்கப்பட்டு நிலைகொள்ளச் செய்யப்பட்டிருக்கிறதோ, எவனை சாதுக்கள் கொண்டாடுகிறார்களோ, எவன் யாக, பூஜைகளில் கொண்டாடப்படுகிறானோ அவனையல்லவா நான் தர்ஸிக்கப் போகிறேன். நூறு யாகங்களால் எவனை ஆராதித்து ஒருவன் தேவேந்த்ரனாகிறானோ, அந்த ஆதி அந்தமில்லா பரம்பொருளையல்லவா நான் தர்ஸிக்கப் போகிறேன். எவன் குணங்களை ப்ரஹ்ம, ருத்ர, இந்த்ர, அச்வினி, வஸுக்கள், மருத்துக்கள் எவரும் அறியாரோ அந்த ஹரி இன்று என்னைத் தொடும் பாக்யம் பெறுவேன்.

உலகிற்கு ஆத்மாவாகவும், அனைத்தும் அறிந்தவனாகவும், அனைத்துமாக இருப்பவனும், மறைந்தும், நிறைந்தும் இருப்பவனும், அளவிட முடியாதவனும், அழிவற்றவனுமாக இருப்பவன் இன்று என்னோடு பேசப் போகிறான். பிறப்பறியாதவனும், மீனாக, ஆமையாக, பன்றியாக, குதிரையாக, சிங்கமாகப் பிறந்து உலகைக் காத்தவனும் இன்று என்னோடு பேசப் போகிறான். பூபாலன், விருப்பப்படி தோற்றங்களை எடுக்கக்கூடியவன் இன்று எதையோ மனதில் நினைத்து அவதரித்துள்ளான். இந்த உலகையே தன் தலையில் தரித்துக் காக்கும், அவன் அண்ணன் பலராமனோ என்னை அக்ரூர என்று அழைக்கப் போகிறான்.

அறிந்தவனும், அறிய முடியாதவனுமான அவனைத் தங்கள் உள்ளத்தில் வைத்தே, யோகிகள் அறியாமையும், மாயைகளும் நிறைந்த இந்த ப்ரபஞ்சத்தைக் கடக்கிறார்கள். யாகம் செய்பவர்கள் யக்ஞபுருஷனென்றும், பக்தி முறையோடு பூஜிப்பவர்கள் வாஸுதேவனென்றும், தத்துவமறிந்தவர்கள் விஷ்ணு என்றும் எவனைத் துதிக்கிறார்களோ அவனை நான் வணங்குகிறேன். இவ்வுலகில் காரணமும், காரியமுமாயிருக்கும் அவன் என்னோடு அனுகூலமாயிருக்க வேண்டும். எவன் பிறப்பில்லாத அந்த ஹரியை நம்பிக்கையோடு, மனதால் த்யானிக்கிறார்களோ, அவன் எல்லா நற்குணங்களுக்கும் இருப்பிடமாயிருக்கிறான்” என்றெல்லாம் இப்படிப் பலவாறு க்ருஷ்ணனைப் பற்றி மகிழ்வோடு சிந்தித்துக் கொண்டு சென்ற அக்ரூரர் ஸூர்யாஸ்தமனத்திற்கு சற்று முன்பாக, பசுக்களிடம் கோபர்கள் பால் கறந்து கொண்டிருக்கும் வேளையில் கோகுலத்தை அடைந்தார்.

காடுகளிலிருந்து ஓட்டிக் கொண்டு வந்த மாடுகளைக் கொட்டில்களில் கட்டி விட்டு பால் கறப்பதற்காக அங்கு நின்றுக் கொண்டிருந்த கண்ணனை, பசுக்களுக்கு மத்தியில், அலர்ந்த அல்லியின் நிறத்து உடலோடு, தாமரைக் கண்களோடு, மார்பில் ஸ்ரீவத்ஸமென்னும் குறியோடு, நீண்ட கைகளோடு, அகன்ற மார்போடு, உயர்ந்த மூக்குடன் இப்படி எவரையும் கவரும் தோற்றத்துடன் புன்சிரிப்போடு பொலிந்து, சிவந்த நகங்களுள்ள கால்களால் பூமியில் அங்குமிங்கும் நடந்து கொண்டு, மஞ்சள் பட்டாடையும், வனமாலைகளும், கையில் அப்போதுதான் பறித்த கொடியோடு, தலையில் வெண்தாமரை மாலையணிந்திருக்கும் நிலையில் முதன் முதலாகக் கண்டார் அக்ரூரர்.

க்ருஷ்ணனை அடுத்து, அன்னப் பறவை, மல்லிகை, சந்த்ரன் இவைகளின் நிறத்தில் உடலோடு, நீலப்பட்டாடையுடுத்தி, பெருத்த பலம் பொருந்திய கைகளோடு, மேகங்கள் சூழ்ந்த கைலாஸ மலையைப் போல், ப்ரகாசமாய் நின்றிருந்த பலராமனையும் கண்டார். கண்டதும் உடல் மயிர் சிலிர்க்க, உடல் பூரித்து நின்ற அக்ரூரர் முகம் தாமரை மலர் போல் மலர்ந்து விரிந்தது. மனதிலேயே ரமித்து வந்த இந்த இரு வாஸுதேவர்களை நேரில் கண்டதும் பக்தி பொங்கியது. கண்கள் பெற்ற பேற்றை நினைக்கிறார். “இவன் என்னைத் தீண்டினால் என் உடலும் பேறு பெற்றதாகும். எல்லாப் பாபங்களையும், தீமைகளையும் போக்குவதல்லவா அந்தக் கை, அதன் ஸ்பர்சம்.

இந்தக் கரம் தானே சக்ராயுதத்தை ஏவி, அஸுரர்களை அழித்து, உலகிற்கு நன்மை தருகிறது. வேண்டுவதை எல்லாம் அளிப்பதும் இந்தக் கரம் தானே. இந்தக் கரத்தில் நீர் வார்த்துத் தானே தேவர்களுக்கும் மேலான போகங்களைப் பெற்று மன்வந்த்ரம் முடிய அனுபவித்தான் மஹாபலி. அந்தக் கைகளால் என்னை அணைப்பானா” என்றெல்லாம் நினைத்த அக்ரூரர் “ஆஹா! அந்தப் பாபி கம்ஸனுடன் எனக்குள்ள தொடர்பால் இவன் என்னை வெறுப்பானோ. இல்லை ஏற்று என் பாபங்களைப் போக்குவானா. நல்லோர் வெறுத்து விட்டால் இந்தப் பிறவி வீணல்லவா. ஆனால் எப்போதும், எல்லோர் உள்ளத்திலும் நிறைந்திருக்கும், களங்கமற்ற தூயவனான, உண்மைப் பரம்பொருளான இந்த க்ருஷ்ணனுக்கு இந்த உலகில் தெரியாதது ஒன்றுமில்லை. என்னையும் அவனறிவான். எனவே சிறிதும் ஸந்தேஹமின்றி முழுதாக என்னை பக்தியோடு அர்ப்பணித்து, முதலும், நடுவும், இறுதியுமில்லாத விஷ்ணுவின் அம்சமான இந்த தேவதேவனிடம் செல்வேன்” என்று நினைத்து க்ருஷ்ணனிடம் சென்றார்

05_18. இப்படி மனதால் நினைத்தபடியே கண்ணனை நெருங்கிய அக்ரூரர் “நான் அக்ரூரன்” என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு, க்ருஷ்ணனின் கால்களில் விழுந்து வணங்கினார். ஆனால் க்ருஷ்ணன் உடனே அவரை கொடியும், தாமரைச் சின்னங்களும் பொறிக்கப் பெற்ற தன் கைகளால் வாரி அன்பாக அணைத்துக் கொண்டான். அதேபோல் பலராமனையும் வணங்கினார். அவர்கள் அக்ரூரரைத் தங்கள் இருப்பிடத்திற்கு அழைத்துச் சென்று பேசிக் கொண்டிருந்தனர். அவர்களோடு உணவு உட்கொண்டு கௌரவமாக நடத்தப்பட்டார் அக்ரூரர். அவர்களிடம் உக்ரஸேனன், வஸுதேவன், இளவரசி தேவகி ஆகியோருக்குக் கம்ஸன் செய்த தீமைகளை எல்லாம் கூறிக் கொண்டிருந்த அக்ரூரர் தான் வந்த காரணத்தையும் கூறினார்.

இவையனைத்தையும் கேட்ட கேசவர் “இவையனைத்தையும் நான் முன்னமே அறிவேன். செய்ய வேண்டியதை விரைவில் செய்வேன். ஏதாவது மாறாக நடந்து விடுமோ என்று நீங்கள் நினைக்க வேண்டாம். இப்போதே கம்ஸன் அழிந்ததாக நினையுங்கள். நாளை நானும், பலராமனும் உங்களோடு கூடி மதுரை செல்வோம். கோபர்களில் மூத்தவர்களும் காணிக்கைகளோடு வரட்டும். இன்றிலிருந்து மூன்று இரவுகளுக்குள் கம்ஸனை அவன் கூட்டத்தாரோடு அழிப்பேன். நீங்கள் கவலைகளை விட்டொழித்து நிம்மதியாக இங்கு எங்களுடனேயே உறங்குங்கள்” என்று கூறினார். இதன் பின் அக்ரூரர் கம்ஸனின் உத்தரவுகளை கோபர்களிடன் தெரிவித்து விட்டு ராம, க்ருஷ்ணர்களோடு நந்தகோபரின் மாளிகையிலேயே சுகமாகப் படுத்து உறங்கினார்.

பொழுது விடிந்தது. அக்ரூரர் காலைக்கடன்களை முடித்துக் கொண்டார். ராம, க்ருஷ்ணர்களும் மகிழ்வோடு மதுரைக்குப் புறப்பட்டனர். இதையறிந்ததும் கோபியர்கள் கண்ணீர் விடலாயினர். க்ருஷ்ணன் பிரிவை நினைத்ததும் அவர்கள் கைகளிலிருந்து வளையல்கள் கழன்று விழுந்தன. “மதுரை சென்று விட்டால் அவன் எப்படி திரும்பி வருவான். ஒரு போதும் வர மாட்டான். அழகிய நாகரிக மங்கைகளின் அபிநயங்களோடு கூடிய தேன் மொழி வார்த்தைகளைப் பருகுவான். பட்டிக்காட்டுப் பெண்களான கோபியர்களிடம் இனி அவன் மனம் எப்படித் திரும்பும். நம்மை நினைக்கவும் மாட்டான். நம் அனைவருக்கும் ஸாரமான இவனை நம்மிடமிருந்து பிரித்து நகரத்துப் பெண்களின் நளினமான பேச்சு, வெளிப்படையான சிரிப்பு, அழகான தோற்றம், அர்த்தமுள்ள பார்வை இவைகளிடம் சேர்ப்பதால் அபலைகளான நம்மை இரக்கமில்லாத விதி அடித்து விட்டது.

மதுரை நகரத்துப் பெண்களின் பேச்சுக்கள் பாவங்கள் நிறைந்து, புன்சிரிப்போடு இருக்கும். அவர்கள் நடையும் அழகழகாயிருக்கும். பார்வைகள் கருத்தைக் கவர்ந்து விடும். க்ராமத்திலேயே பிறந்து வளர்ந்த கண்ணன் இவைகளைக் கண்டவுடன் மயங்கி, நம்மிடம் திரும்பப் போவதில்லை. இதோ, இதோ நம் கண் முன்னாலேயே கண்ணன் தேரிலேரி மதுரை செல்கிறானே. இந்த அக்ரூரர் என்பவர் நம்மை ஏமாற்றி விட்டார். இவருக்கு யார்தான் அக்ரூரர் (க்ரூரம் இல்லாதவர்) என்ற பெயரை வைத்தார்களோ. இவரை விட கொடியவர் யாரும் இருக்க மாட்டார்கள். நாமனைவரும் கண்ணனிடம் வைத்திருக்கும் அன்பை க்ரூரரான இந்த அக்ரூரர் அறியவில்லையா. கண்களுக்கு பரமானந்தத்தைத் தரும் இவனை நம்மிடமிருந்து பிரித்துச் செல்கிறாரே.

இந்தக் கண்ணனாவது நம்மீது தயை கொண்டு பிரியாமல் இருக்கக் கூடாதா. அவனும் சிறிதும் கருணையின்றி அண்ணனுடன் தேரிலேறிச் செல்கிறானே. யாராவது இவனைத் தடுக்கக் கூடாதா. நம் பெரியவர்களிடம் இவன் பிரிவை நம்மால் தாள முடியாது என்று சொல்லலாமா. அவன் பிரிவில் வாடும் நமக்கு அவர்களால் என்ன உதவி செய்ய முடியும். நந்தகோபன் தலைமையில் அவர்களும் தான் உடன் புறப்படுகிறார்கள். ஒருவரும் கோவிந்தனை இங்கேயே நிறுத்துவதற்கு முயலவில்லையே. இன்றைய இரவு கழிந்து, விடியும் பொழுது மதுரைப் பெண்களுக்கு மகிழ்வைத் தரப் போகிறது. தங்கள் கண்களாகிற வண்டுகளால் அச்யுதனின் முகமாகிற தாமரையைப் பருகிக் களிக்கப் போகிறார்கள் அவர்கள்.

மெய் மறந்து, கட்டுண்டு, கண்ணனோடு ஒரு தடையுமின்றி வழி நெடுக செல்லப் போகும் அவர்கள் பாக்யமுள்ளவர்கள். கண்ணனை நெருங்கி நின்று வணங்குவார்கள். நகரத்துப் பெண்களின் கண்கள் இமைக்காமல் க்ருஷ்ணனைக் கண்டு ஆனந்திக்கப் போகின்றன. ப்ரஹ்மன் ஒரு பெரும் நிதியை நம் கண்களில் காட்டி விட்டு அதை அனுபவிக்க விடாமல் பறித்து விட்டான். கண்ணனின் அன்பு எங்களை விட்டுப் பிரிவதைப் போல் வளையல்களும் எங்கள் கைகளை விட்டுக் கழலுகின்றனவே. இந்த க்ரூர அக்ரூரர் குதிரைகளை மெதுவாக ஓட்டக் கூடாதா. பெண்களை வருந்தவைக்கவே இந்த தயையில்லாத சதி நடக்கிறது. அந்தோ, தேர்ச் சக்ரங்களின் புழுதி மட்டும் தெரிகிறதே. வெகு தூரம் சென்று விட்டானே, புழுதியும் இப்போது காணவில்லையே” என்றெல்லாம் கோபியர் பொருமிக் கொண்டும், கதறிக் கொண்டும் இருக்க கேசவனும், ராமனும் சேரியின் எல்லையைத் தாண்டி சென்றார்கள்.

விரைந்து செல்லும் குதிரைகள் பூட்டப்பட்ட அந்தத் தேர் மதியம் யமுனைக் கரையை அடைந்தது. ரதத்தை நிறுத்தி விட்டுக் கீழிறங்கிய அக்ரூரர் “குழந்தைகளே! தேரிலேயே உட்கார்ந்து கொண்டிருங்கள். கீழே இறங்கினால் ஜலத்தில் விழுந்து விடுவீர்கள், நான் ஸ்னான, மாத்யாஹ்னிகங்களை முடித்துக் கொண்டு வந்து விடுகிறேன்” என்று ராம, க்ருஷ்ணர்களிடம் கூறிவிட்டு, “இந்தக் குழந்தைகள் எப்படி அந்த முரடன் கம்ஸனைக் கொல்வார்கள். வீணாக அழைத்து வந்து விட்டேனே” என்று மனதினுள் வருந்திக் கொண்டே, யமுனையில் இறங்கி, ஆசமனம் செய்து, பரப்ரஹ்மத்தைத் மனதால் த்யானித்து குளிப்பதற்காக நீரில் மூழ்கினார்.

அங்கே நீரினுள் ஆயிரம் தலைகளோடு ஆதிசேஷன் உருவில் பலராமனைக் காண்கிறார். மல்லிகை மலர் மாலைகளோடும், சிவந்து விரிந்த கண்களோடும், வாஸுகி, ரம்பை, மற்றும் மேலும் பல பலம் பொருந்திய ஸர்ப்பங்கள் சுற்றி நிற்க, கந்தர்வர்கள் புகழ்ந்து துதித்துக் கொண்டிருக்க, வனமாலை மார்பை அலங்கரிக்க, அடர்ந்த நிறத்தில் ஆடைகளோடு, திருமுடியில் தாமரை மலர்கள் தாங்கி, அழகான குண்டலங்களோடு மனதை மயக்குமாறு அங்கே நீரினுள் பலராமனைக் காண்கிறார். அதன் மடியிலேயே ஒய்யாரமாக, கருமுகில் நிறத்தில், சற்று சிவந்த விரிந்த கண்கள், சக்ரம் முதலான பஞ்சாயுதங்களுடன் நாற்கரங்கள், பொன்னிறப் பட்டாடை, பல நிறப் பூக்கள் கொண்ட பூமாலைகள், இந்த்ரதனுஸ்ஸும், மின்னல்களும் பெற்றுப் பொலியும் மேகம் போன்று கண்ணன்.

மார்பில் ஸ்ரீவத்ஸம், ஒளிவீசும் அணிகலன்களோடு கரங்கள், மின்னிக் கொண்டிருக்கும் க்ரீடம், கொண்டையில் வெள்ளைத் தாமரை. சுற்றிலும் ஸனந்தாதி முனிவர்கள் மூக்கின் நுனியில் பார்வையைக் கொண்டு துதித்துத் த்யானித்துக் கொண்டு நிற்க இப்படி அவர்களைப் பார்த்ததும் ஆச்சர்யமடைந்தார் அக்ரூரர். ரதத்திலிருந்த இவர்கள் எப்படி இவ்வளவு சீக்ரமாக இங்கு வர முடியும் என்று வியந்த அவர் ஏதோ கேட்க வாயெடுத்தார். வார்த்தைகளொன்றும் வெளியேறாமல் மாயம் செய்து விட்டான் கண்ணன். நீரிலிருந்து வேகமாக வெளியேறி ரதம் நின்றிருக்குமிடத்திற்குச் சென்றார். அங்கு ராம, க்ருஷ்ணர்கள் மனித உருவிலேயே அமைதியாக ரதத்தில் அமர்ந்திருக்கக் கண்டார்.

குழப்பத்தில் மீண்டும் குளிக்கச் சென்று நீரில் மூழ்கினார். அங்கு மீண்டும் அவர்களையே கந்தர்வர்களும், முனிவர்களும், சாதுக்களும், ஸர்ப்பங்களும் துதித்திருக்கக் கண்டார். அவர்களின் இயற்கைக் குணங்களின் உண்மையைப் புரிந்து கொண்டார். அவர்களை துதித்துப் பாடினார். “ஒன்றானவன், பலவானவன், எங்கும் நிறைந்தவன், பரமாத்மா, சொல்ல முடியாத புகழுடையோன், எப்போதும் இருப்பவன், அறிவிற்கெட்டாதவன், உண்மைப் பொருள், உன் குணங்கள் யாருக்கும் தெரியாது, முதற்பொருள், நீயே ஆத்மாவாகவும், விஷயங்களாகவும், பொருள்களாகவும், அணுக்களாகவும், பரமாத்மாவாகவுமிருப்பவன். நீயே ப்ரஹ்ம, விஷ்ணு, சிவ மூர்த்தங்களாக இருக்கிறாய். உன்னையும், உன் கார்யங்களையும் யாரும் புரிந்து கொள்ள முடியாது.

உன் பெயர் கூட தெரியாது. நீயே அது. மாற்றமில்லாதவன், நீயே க்ருஷ்ணனாகவும், அச்யுதனாகவும், அனந்தனாகவும், விஷ்ணுவாகவும் இருக்கிறாய். பிறப்பில்லாதவன், நீயே உலகம். நீயே கடவுள், நீயே எல்லாமும். உலகிற்கு ஆத்மாவும், உன்னையன்றி வேறொன்றும் எதிலுமில்லை. நீயே ப்ரஹ்மா, பசுபதி, அர்யமன், தாத்ரி, விதாத்ரி, இந்த்ரன், நீர், நெருப்பு, காற்று, செல்வங்களுக்கு அதிபதி, வாஸுதேவன், ஸங்கர்ஷணன், ப்ரத்யும்னன், அனிருத்தன்” என்று இன்னும் பலவாறுத் துதித்து அவர்களை வணங்கினார்.

05_19. யமுனையில் மூழ்கியிருந்தவாறே க்ருஷ்ணனைத் துதித்தார் அக்ரூரர். மானஸீகமாக புஷ்பங்களால் அர்ச்சித்து, தூப உபசாரங்களைச் செய்தார். மற்றதையெல்லாம் மறந்து வெகுநேரம் அவர் மனம் அந்த பரப்ரஹ்மத்தினிடமே நிலைத்திருந்தது. இப்படி த்யானத்தில் இருந்து விட்டுப் பின் ஆத்ம லாபம் பெற்றதை நினைத்துக் கொண்டே நீரிலிருந்து வெளியேறி தேரிருக்கும் இடத்தை அடைந்தார். ஒன்றுமறியாத குழந்தைகளாக அங்கே தேரில் பலராமனும், க்ருஷ்ணனும் இருக்கக் கண்டார். அவரது ஆச்சர்யமான பார்வையைப் பார்த்த கண்ணன் “அக்ரூரரே, உமது கண்கள் மலர்ந்திருக்கின்றனவே. ஏதோ அற்புதமான ஒன்றைப் பார்த்தால் தான் கண்கள் இப்படியாகும். யமுனை நீரில் என்ன அற்புதத்தைக் கண்டீர்” என்றான்.

அக்ரூரர் “கண்ணா! நீரினுள் நான் எந்த அற்புதத்தைக் கண்டேனோ அதுவேதான் இதோ என்னெதிரில் உருக்கொண்டிருக்கிறது. உலகையே உடலாகக் கொண்ட பரமாத்மாவாகவேதான் நீ காட்சி தருகிறாய். அங்கும் இங்கும் ஒரே பரம்பொருளுடன் தான் நான களித்திருக்கிறேன். ஆனாலும் இப்போது என்னை கம்ஸ பயம் வாட்டுகிறது. உன் விளையாட்டால் நேரமும் ஆகிவிட்டது. இனிமேல் கம்ஸன் நேரமாகிவிட்டதே என்று கோபிப்பான். அடுத்தவரிடம் வேலை செய்து அவர்கள் தருவதைக் கொண்டு ஜீவனம் செய்யும் எவர்க்கும் இதுதான் கதி. எனவே நாம் விரைந்து மதுரையை அடைவோம்” என்று கூறிக் கொண்டு, தேரிலேறி குதிரைகளை விரட்டினார்.

மாலைப் பொழுதில் மதுரை நகர எல்லையை வந்தடைந்ததும், அக்ரூரர் ராம, க்ருஷ்ணர்களிடம் “நீங்களிருவரும் நடந்தே கம்ஸன் மாளிகைக்கு வாருங்கள். நான் தேரில் செல்கிறேன். வாஸுதேவர் க்ருஹத்திற்குச் செல்லாதீர்கள். ஏற்கனவே அவர் உங்களால் பல துன்பங்களை கம்ஸனிடம் அனுபவித்து வருகிறார். எனவே நேராக கம்ஸன் மாளிகைக்கே வந்து விடுங்கள்” என்று கூறிவிட்டுத் தான் மட்டும் தேரில் கம்ஸனிடம் சென்றார். ராம, க்ருஷ்ணர்கள் ராஜ வீதியில் நடந்து செல்லலானார்கள். வழியெங்கிலும் ஆண்களும், பெண்களுமாக பலர் நின்று இவர்களைத் தர்ஸித்து ஆனந்திக்க, இரு இளம் யானைகள் போல இவர்கள் விளையாடிக் கொண்டே சென்று கொண்டிருந்தனர்.

வழியில் கம்ஸனுக்குத் துணிகளை எடுத்துச் செல்லும் வண்ணான் சென்று கொண்டிருந்தான். அவன் வைத்திருக்கும் உயர்ந்த வஸ்த்ரங்களைப் பார்த்ததும், தங்களுக்கு உடுத்திக் கொள்ள அவற்றில் இரண்டைத் தருமாறு அவனிடம் புன்சிரிப்புடன் கேட்டனர். கம்ஸனின் ஆதரவில் இருக்கும் அவன் இவர்கள் இருவரையும் வாயில் வந்தபடி தீய சொற்களால் அர்ச்சித்தான். இதனால் கோபம் கொண்ட கண்ணன் அவனை அங்கேயே அடித்துக் கொன்று போட்டான். பொன்னிறப் பட்டாடை ஒன்றை எடுத்து க்ருஷ்ணனும், நீல நிறத்தில் ஒன்றை பலராமனும் உடுத்திக் கொண்டு, ஒரு பூக்கடைக்காரனிடம் சென்றனர் இருவரும். அவன் அவர்களை ஆச்சர்யத்தோடு பார்த்தான்.

இவர்கள் யாராக இருக்கக் கூடும், எங்கிருந்து வந்திருப்பார்கள் என்று திகைப்போடு யோசித்தான். இவ்வளவு அழகாக பொன்னிறத்திலும், நீல நிறத்திலும் பட்டாடைகள் அணிந்து வந்திருக்கும் இவர்கள் பூலோகத்திற்கும் வந்திருக்கும் தேவர்களோ என்று நினைத்தான். குழந்தைகள் அவனிடம் கொஞ்சம் பூக்கள் கேட்டதும் அவன் மகிழ்ச்சியில் துள்ளினான். கீழே விழுந்து கைகூப்பி, சிரஸால் அவர்களை வணங்கினான். “தெய்வங்கள் பெருங்கருணையோடு என்னை உய்விக்க என் வீட்டிற்கே வந்திருக்கின்றன. எவ்வளவு புண்ணியம் செய்திருக்கிறேன் நான். இவர்களுக்கு நன்கு மரியாதை செய்வேன்” என்று கூறிக் கொண்டே அந்த பூக்காரர் பலமுறை அவர்கள் பாதங்களில் விழுந்து வணங்கியபடி, ஸந்தோஷமான முகத்தோடு, குழந்தைகள் விரும்பியபடி, அவர்கள் த்ருப்தி அடையும்படி, உயர்ந்த, பல வண்ணங்களில், அழகழகாக, பல வாசனைகளில், புத்தம் புதிதாக பூக்களை எடுத்து, எடுத்து அவர்களிடம் கொடுத்துக் கொண்டே இருக்கிறார்.

இப்படி இந்த பூக்காரரின் உபஸரிப்பில் பெரிதும் மகிழ்ந்த க்ருஷ்ணன் “நண்பா, புண்யம் செய்தவனே, என்னை அர்ச்சித்த உன்னை நான் ஒரு போதும் கைவிடேன். லக்ஷ்மி உன்னிடம் எப்போதும் நிலையாக இருப்பாள். உனக்கு சோர்வோ, பொருட்குறைவோ ஒருபோதும் நேராது. உன் ஸந்ததிகள் மேன் மேலும் பெருகும். பூலோகத்தில் பல போகங்களையும் அனுபவித்து, இறுதியில் என்னையே த்யானத்து, என் அனுக்ரஹத்தால் உயர்ந்த லோகத்தை அடைவாய். உன் மனம் எப்போதும் தர்மத்திலேயே லயித்திருக்கும். நீயும் உன் ஸந்ததிகளும் எந்தவொரு இயற்கை உபாதைகளும் அண்டாது, நீண்ட ஆயுளோடு வாழ்வீர்களாக” என்று பல ஆசிகளை அவனுக்கு அருளிச் செய்து விட்டு, பலராமனோடு அங்கிருந்து சென்றான்.

05_21. இப்படி உண்மையறிவு பெற்று தன்னைத் துதித்த வஸுதேவ, தேவகியையும் மற்றும் அங்குள்ள மற்ற யாதவர்களையும் மீண்டும் மயங்குமாறுச் செய்தான் க்ருஷ்ணன். பெற்றோர்களிடம் “அம்மா! அப்பா! நானும் பலராமனும் வெகு நாட்களாகவே உங்களைத் தர்ஸிக்க எண்ணியும், கம்ஸ பயத்தால் அது கைகூடாமல் போய் விட்டது. இப்போது தான் அந்த பாக்யம் எங்களுக்குக் கிடைத்திருக்கிறது. கொடியவர்களே இப்படி தாய், தந்தையருக்குப் பணிவிடை செய்யாமல் காலத்தைக் கழிப்பார்கள். பெற்றோர்களையும், ஆசார்யர்களையும், ப்ராஹ்மணர்களையும், தேவதைகளையும் பூஜித்துப் பணிவிடை செய்பவர்கள் வாழ்க்கையே பலன் கொடுக்கும். கம்ஸனின் பலத்திற்கும், கொடுமைகளுக்கும் அஞ்சி, அயலாரிடம் வளர்ந்து வந்ததால் உங்களுக்கு இதுவரைப் பணிவிடை செய்ய முடியாமல் போய் விட்டது. இந்த அபராதத்தைத் தாங்கள் மன்னித்தருள வேண்டும்” என்று கூறி கண்ணீர் மல்க அவர்களையும், மற்ற யாதவப் பெரியவர்களையும் தகுந்த முறையில் பூஜை செய்து, மரியாதைகளைச் செய்தனர் இருவரும்.

இதன் பின் பூமியில் விழுந்து கிடக்கும் கம்ஸனின் சடலத்தைச் சுற்றிக் கதறி அழுது கொண்டிருக்கும் அவனது மனைவிமார்கள், தாயார்கள் என அனைவருக்கும் அனுதாபத்தோடு தானே கண்களில் நீர் ததும்ப, பல வகைகளில் ஆறுதல் கூறித் தேற்றினான் கண்ணன். அதன் பின் சிறையிலிருக்கும் கம்ஸனின் தந்தை உக்ரஸேனரை விடுதலைச் செய்து ராஜ்யாபிஷேகம் செய்து வைத்தான். தன் பிள்ளைகளுக்கும், மற்றவர்களுக்கும் தகுந்த முறையில் ஈம க்ரியைகளைச் செய்து முடித்து, ராஜ்யம் செய்து கொண்டிருந்த யாதவ குல ச்ரேஷ்டரான உக்ரஸேனரிடம் ஒரு நாள் “மஹாராஜா! எனக்கு ஆணையிடுங்கள். தயக்கமின்றி கூறுங்கள் என்ன செய்ய வேண்டுமென்பதை. அவற்றையெல்லாம் நிச்சயம் செய்து முடிக்கிறேன் நான்.

யதுவின் இந்த வம்சம் சாபத்தால் ராஜ்யமிழந்ததாயினும், என்னைப் பணியாளனாகப் பெற்ற நீர் எதற்கும் அஞ்சாமல், கவலையின்றி அரசாளுங்கள். தேவர்களே உங்களுக்குப் பணி செய்வர், அப்படியிருக்க இந்த அற்ப அரசர்கள் கீழ்ப்படிவதில் அதிசயமென்ன” என்று எளியோனாய் உக்ரஸேனரிடம் பணிந்து நின்ற க்ருஷ்ணன், உடனே வாயு பகவானை மனதால் நினைத்தான். உடனே அவனும் அங்கு தோன்றி, பணிந்து நின்றான். “வாயு பகவானே! இந்த்ரனிடம் சென்று இதைச் சொல். இது நாள் வரை கர்வம் கொண்டு திரிந்தது போதும். இப்போது உக்ரஸேனர் அரசாள்கிறார். எனவே உன்னிடமுள்ள ஸபைகளில் உயர்ந்ததான ஸுதர்மாவை உடனே உக்ரஸேனருக்குக் கொடுத்து விடு. இனி அதில் அவரும், யாதவர்களுமே அமர்ந்து, அலங்கரிப்பர்” என்று வாயு பகவானிடம் கட்டளையிட்டான் க்ருஷ்ணன்.

இந்தத் தகவலை வாயு சசியின் கணவனிடம் கூறியதும் அவனும் அதற்கு அடிபணிந்து உடனே அப்படியே செய்து விட்டான். அதை வாயுவிடமிருந்து பெற்று உக்ரஸேனருக்கு அர்ப்பணித்தான் க்ருஷ்ணன். நகைகளால் அலங்கரிக்கப் பெற்றிருந்த அந்த ஸபையில் அமர்ந்து யாதவர்கள் க்ருஷ்ணனின் புஜ பலத்தையே நம்பி, பல தேவ போகங்களையும் பெற்றுத் திளைத்தனர். இதன் பின் உபனயனம் செய்விக்கப் பெற்ற இரு குழந்தைகளும், காசியில் பிறந்து, அவந்தீயில் வாழ்ந்து வந்த ஸாந்தீபனி என்பவரிடம் குருமுகமாகக் கல்வி கற்கச் சென்றனர். அங்கு முறைப்படி நாள் தவறாமல் குருவிற்குப் பணிவிடை செய்து கொண்டு, முறைப்படி வேதங்கள், சாஸ்த்ரங்கள், தனுர்வேதம், உயர்ந்த அஸ்த்ரங்களின் ப்ரயோக ரஹஸ்யங்கள், ராணுவ விஷயங்கள் என அறுபத்து நான்கு கலைகளையும் அறுபத்து நாட்களிலேயே கற்றுத் தேர்ந்தனர்.

இப்படி மனித சக்திக்கு அப்பாற்பட்ட இவர்களது திறமையைக் கண்டு, ஸூர்ய, சந்த்ரர்களே தனக்கு சிஷ்யர்களாக வந்தது போல் சாந்திபனியே ஆச்சர்யமடைந்தார். தங்கள் படிப்பை முடித்துக் கொண்ட இருவரும் குருவிடம் வந்து விருப்பமான குரு தக்ஷிணையைக் கேட்டுப் பெறுமாறு வேண்டி நின்றனர். இவர்களது அமானுஷ்யமான திறமைகளை அறிந்திருந்த சாந்திபனியும் சாதுர்யமாக, முன்பு ப்ரபாஸ தீர்த்தத்தில் (ஸமுத்ரம்) இறந்து போன தன் மகனையே குருதக்ஷிணையாக மீண்டும் உயிருடன் வேண்டினார். ராம, க்ருஷ்ணர்களும் சிறிதும் தயங்காது அதை நிறைவேற்ற ஆயுதங்களோடு கடற்கரைக்குச் சென்றனர்.

இவர்களை இப்படி ஆயுதபாணிகளாகக் கண்ட ஸமுத்ரராஜன் தானே உருக்கொண்டு வெளியே வந்து இவர்களுக்கு அர்க்யாதிகளைக் கொடுத்து உபஸரித்து “சாந்தீபனியின் புதல்வனை நான் ஒன்றும் செய்து விட வில்லை. என்னுள் பஞ்சஜனன் என்ற அஸுரன் சங்கின் உருவில் ஒளிந்து வாழ்ந்து கொண்டிருக்கிறான். அவன் தான் அந்தச் சிறுவனைக் கடத்திக் கொண்டு வந்தவன். இன்னும் அவன் இங்கு தான் இருக்கிறான்” என்று கூறினான். இதைக் கேட்டதும் கண்ணன் கடலினுள் சென்று பஞ்சஜனனைக் கொன்று, அவன் எலும்பினாலான பாஞ்சஜன்யம் என்ற சங்கத்தைக் கையில் எடுத்துக் கொண்டான். அதைத் தன் வாயில் வைத்து ஊதியபோது எழுந்த பேரொலி அஸுரர்கள் பலத்தைக் குறைத்து, தேவபலத்தை அதிகரித்தது. அதர்மங்களையும் அழித்தது. இந்த சங்கத்துடன் வெளிவந்த க்ருஷ்ணன், ஸமுத்ரத்தில் சிறுவன் கிடைக்காததால், அண்ணனோடு யமப் பட்டணம் சென்று, அங்கு நரகத்தை அனுபவித்துக் கொண்டிருந்த அந்தச் சிறுவனையும் முன்பிருந்த உடலோடு மீட்டுக் கொண்டு வந்து, தங்கள் ஆசார்யருக்குக் குருதக்ஷிணையாகக் கொடுத்து விட்டு, மீண்டும் உக்ரஸேனன் அரசாட்சியில் அனைவரும் ஸந்தோஷமாக வஸித்து வரும் மதுரை மாநகருக்கு வந்தருளினார்கள்.

05_22. கம்ஸனின் மாமனார் ஜராஸந்தன் மகத தேசத்து அரசன். அவனது பெண்களான அஸ்தி, ப்ராஸ்தி இருவரையும் கம்ஸன் மணந்திருந்தான். தன் மருமகன் கம்ஸன் கொல்லப்பட்டதை அறிந்த இவன் கண்ணன் மீது கடுங்கோபங்கொண்டு அவனையும், மற்ற யாதவர்களையும் அழிக்க முற்பட்டான். இருபத்து மூன்று அக்ஷௌஹிணீ ஸேனையுடன் அவன் வருவதையறிந்த ராம, க்ருஷ்ணர்கள் தங்கள் பலத்தையே நம்பி, ஒர் சிறு படையோடு மதுரைக்கு வெளியே யுத்தத்திற்குத் தயாராக வந்தனர். எடுக்க, எடுக்கக் குறையாத இரு அம்பறாத் தூணிகளும், சார்ங்கமும், கௌமோதகியும்(கதை), அதேபோல் கலப்பையும், உலக்கையும் க்ருஷ்ணனுக்கும், ராமனுக்கும் நினைத்த மாத்ரத்தில் வானிலிருந்து வந்து சேர்ந்தன. பழைய திவ்யாஸ்த்ரங்களான இவைகளைக் கொண்டு ஜராஸந்தனின் படைகளை அழித்து, அவனை விரட்டி விட்டு, வெற்றியோடு மதுரைக்குள் புகுந்தனர் இருவரும்.

ஆனால், ஜராஸந்தன் மட்டும் உயிரோடு தப்பி ஓடிவிட்டதால், க்ருஷ்ணன் இதைக் கொண்டாடவில்லை. ஜராஸந்தனே வென்றதாக நினைத்தான். அவ்வாறே அவனும் சில நாளில் மீண்டும் பெரும் படையைத் திரட்டிக் கொண்டு, மதுரை மீது படையெடுத்தான். இப்படிப் பதினெட்டு முறை மதுரை மீது படையெடுத்து, ஒவ்வொரு முறையும் ராம, க்ருஷ்ணர்கள் தலைமையிலான யாதவர்களிடம் தோற்றோடினான் ஜராஸந்தன். சக்ரதாரியான விஷ்ணுவின் அம்சம் தங்களிடம் இருப்பதனாலேயே போர் முறை எதுவும் அறியாத யாதவர்களும் பெரும் பலம் பொருந்திய ஜராஸந்தனை வென்று கொண்டிருக்கின்றனர். தன் ஸங்கல்பம் ஒன்றாலேயே எதையும் உண்டாக்கவும், அழிக்கவும் வல்லமை கொண்ட அவன் மனிதர்களைப் போல நடந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணப்படியே ஸாம, தான, பேத, தண்ட என்ற முறையில் ஒவ்வொரு இடத்திலும் நடந்து கொள்கிறான். சில இடங்களில் பகைவர்களைக் கண்டு பயந்து ஒளிந்து கொள்ளவும் செய்கிறான். இதெல்லாம் மனிதர்களைப் போல நடந்து கொள்ளும் அவனது லீலைகளே.

05_23. ஒரு நாள் யாதவ ஸபையில், ப்ரஹ்மசர்யத்தில் நிலை பெற்றிருந்த அவர்கள் புரோஹிதரான கார்க்யர் என்பவரை, அவர் மைத்துனர் ச்யாளன் என்பவன் அலி என்று எல்லோர் முன்னிலையிலும் கூறிக் கிண்டல் செய்தான். சபையோர் சிரிக்க, நடந்த இந்த அவமானத்தைப் பொறுக்காத கார்க்யர் யாதவர்களை அஞ்சச் செய்யும் பலம் பொருந்திய ஒரு பிள்ளையைப் பெற விரும்பி, விந்தியத்தின் தென் திசைக்குச் சென்று பனிரெண்டு ஆண்டுகள் இரும்புத் தூளை மட்டுமே ஆஹாரமாக உட்கொண்டு கடுந்தவம் இயற்றி, பரமேச்வரனை மகிழச் செய்து, தான் நினைத்த வரத்தையும் பெற்றுத் திரும்பினார். அப்போது பிள்ளைப் பேறு இல்லாமல் வருந்திக் கொண்டிருந்த யவன தேசாதிபதி கார்க்யர் இப்படி ஒரு வரத்தைப் பெற்றிருப்பதை அறிந்து, அவரிடம் நட்பு பூண்டு, நன்கு உபஸரித்து, தன் மனைவியிடம் தனக்கு ஒரு பிள்ளையை உண்டுபண்ணுமாறு வேண்டிக் கொண்டான்.

அவரும் அப்படியே செய்தார். பிறந்த பிள்ளை வண்டு போல கருமை நிறத்தில், வஜ்ராயுதம் போன்ற மார்புடன் இருந்தான். இவனுக்குக் காலயவனன் என்ற பெயரை வைத்து, பருவம் வந்ததும் இவனுக்குப் பட்டம் சூட்டி விட்டு, யவனராஜன் தவம் செய்ய கானகம் சென்று விட்டான். பெரும் பலத்தால் கர்வம் கொண்ட இவன் ஒரு ஸமயம் நாரதரிடம் தன்னுடன் போர் புரியத் தகுந்த பலம் கொண்டவர்கள் யாராவது இருக்கிறார்களா என்று கேட்டான். நாரதர் யாதவர்களோடு போர் செய். அவர்களே பலசாலிகள் என்று கூற, காலயவனன் வெகு வேகமாக அனேக கோடி ம்லேச்சர்களுடன் ரத, கஜ, துரக, பதாதிகள் என நால்வகைப் படைகளையும் தயார் செய்து கொண்டு, ஏராளமான போர்த் தளவாடங்களோடும் மதுரையை நோக்கிப் புறப்பட்டு விட்டான்.

தினம் ஒரு யானை, குதிரை, ரதம் என ஒவ்வொன்றும் களைப்படையும் போதும் வெவ்வேறு விலங்குகளை மாற்றிக் கொண்டு ரதங்களில் ஏறி விரைவாக மதுரை வந்து சேர்ந்து விட்டான் காலயவனன். காலயவனன் படையெடுப்பைக் கேள்விப்பட்ட க்ருஷ்ணன் “இவனோடு போரிட ஆரம்பித்தால் யாதவர்கள் மிகவும் பலம் குன்றி, அழிந்து விடுவார்கள். அப்போது ஜராஸந்தனும் வந்து யாதவர்களை பீடிக்கக் கூடும். எதிரிகள் வென்று விடக் கூடும். அல்லது ஜராஸந்தனும் இந்த கால யவனனுடன் சேர்ந்து யுத்தம் செய்யக் கூடும். இவர்களிருவரிடமிருந்தும் இந்த யாதவர்களைக் காக்க பகைவர்களால் நுழைய முடியாத கோட்டை ஒன்றை நிர்மாணிக்க வேண்டும். அங்குள்ள பெண்களும் போரிடுபவர்களாக இருக்க வேண்டும். அப்போது தான் இந்த வ்ருஷ்ணி குலத்தவர்கள் பாதுகாப்பாக இருப்பார்கள்.

எந்த இடத்தில் இந்த யாதவர்கள் குடித்திருந்தாலும், கவனக்குறைவாகவும், உறங்கிக் கொண்டிருந்தாலோ, அல்லது வெளியூர் சென்றிருந்தாலும் எந்த வித பயமும் இருக்காதோ, அங்கு இவர்களை குடியேற்ற வேண்டும். இப்படி யோசித்த கண்ணன் ஸமுத்ர ராஜனிடம் பனிரெண்டு யோஜனை அளவு இடம் தருமாறு வேண்டிப் பெற்றான். அந்த இடத்தில் த்வாரகையை நிர்மாணித்தான். வீடுகளும், மாளிகைகளும் நிறைந்திருக்க இந்த்ரனின் தலைநகரைப் போலிருந்தது அது. புது நகருக்கு மதுரா வாஸிகளைக் குடியேற்றி விட்டு, தான் மட்டும் மதுரையில் காலயவனனுக்காக நிராயுதபாணியாகக் காத்திருந்தான். க்ருஷ்ணனைக் கண்டதும் அடையாளங் கண்டு கொண்ட காலயவனன் நிராயுதபாணியான அவனைப் பிடிக்க எண்ணினான்.

கண்ணன் ஓடத் தொடங்கினான். யோகிகளின் மனதிற்கும் கிட்டாத அவனைப் பிடிக்க இவனும் பின் தொடர்ந்து ஓடினான். கண்ணன் ஓடிச் சென்று ஒரு குகைக்குள் சென்று ஒளிந்து கொண்டு விட்டான். அவனைப் பின் தொடர்ந்து வந்து, அங்கு அவனைத் தேடிய காலயவனன் ஒருவன் அங்கு படுத்திருப்பதைக் கண்டு, அது கண்ணனாகத் தானிருக்க வேண்டும் என்று முடிவு செய்து, காலால் அவனை ஓங்கி ஒரு உதை விடுகிறான். படுத்துறங்கிக் கொண்டிருந்தவன் உடனே கண் விழித்து காலயவனனைக் கோபத்தோடு ஒரு பார்வை பார்த்தான். அந்தப் பார்வையிலுண்டான அக்னியால் காலயவனன் அந்த இடத்திலேயே வெந்து சாம்பலானான்.

அங்கு படுத்து, அப்படி உறங்கிக் கொண்டிருந்தது முசுகுந்த சக்ரவர்த்தி. தேவர்களுக்கும், அஸுரர்களுக்கும் நடந்த ஒரு போரில் இந்த முசுகுந்த சக்ரவர்த்தி தேவர்கள் பக்கமிருந்து அவர்களுக்கு வெற்றியைத் தேடித் தந்தான். வெகுநாட்களாக நடந்து முடிந்த இந்த யுத்தத்தில் தூக்கமின்றி மிகவும் களைத்துப் போயிருந்த சக்ரவர்த்தி, ஆழ்ந்த, நீண்ட உறக்கத்தைத் தேவர்களிடம் வரமாகக் கேட்டான். அவர்களும் அவ்வாறே வரத்தைக் கொடுத்ததோடு, “உன்னை எவன் தூக்கத்திலிருந்து எழுப்புகிறானோ அவன் உன் உடலில் இருந்து எழும் கோபாக்னியிலேயே சாம்பலாகி விடுவான்” என்ற வரத்தையும் தந்தனர். இந்த வரத்தைக் கொண்டு உறங்கிக் கொண்டிருந்த முசுகுந்த சக்ரவர்த்தியைக் கொண்டுதான் இப்போது காலயவனனை நிராயுதபாணியாக ஸம்ஹரித்துள்ளான் க்ருஷ்ணன்.

காலயவனன் இப்படி சாம்பலானதும், தன் கண் முன்னே இப்போது நின்றிருக்கும் க்ருஷ்ணனைப் பார்த்து “நீ யார்” என்கிறான் முசுகுந்தன். தன்னை சந்த்ர வம்சத்தின் யது குலத்தில் வஸுதேவனுக்குப் புத்ரன் என்று அறிமுகப் படுத்திக் கொள்கிறான் க்ருஷ்ணன். இதையறிந்ததும் முதியவரான கர்க்கர் தன்னிடம் முன்பு கூறியிருந்தவைகளை நினைவு படுத்திக் கொண்ட முசுகுந்தன் ஹரியின் பாதங்களில் விழுந்து “இறைவனே! விஷ்ணுவின் அம்சமே! இருபத்தெட்டாம் த்வாபர யுகத்தின் இறுதியில் ஹரி யதுக்களின் குடும்பத்தில் பிறப்பார் என்பதை முன்னமேயே நான் கர்க்கரிடமிருந்து அறிந்துள்ளேன். நீயே தான் அது. சந்தேகமேயில்லை. மனிதகுலம் உய்யவே நீ அவதரித்துள்ளாய். உன் தேஜஸ்ஸை என்னால் தாங்க முடியவில்லை.

மழைமேகங்களின் கர்ஜனையை விட உன் குரலொலி மேம்பட்டிருக்கிறது. நீ நடக்கையில் பாரத்தால் பூமியே அசைகிறது. முன்பு தேவாஸுர யுத்தத்தில் அஸுரர்கள் என் தேஜஸ்ஸைப் பொறுக்க முடியாமல் திணறினார்களோ, அது போல் இப்போது நானே உன் தேஜஸ்ஸைப் பொறுக்க முடியாமல் இருக்கிறேன். நீ ஒருவனே இந்த உலகில் தத்தளிப்போருக்கு அபயமளிக்க வல்லவன். நீயே தீவினைகள் யாவையும் போக்குபவன். என் மீதும் கருணை காட்டு. என் கஷ்டங்கள் அனைத்தையும் போக்கிவிடு. ஸமுத்ரங்கள், பர்வதங்கள், ஆறுகள், காடுகள், பூமி, வானம், காற்று, நீர், நெருப்பு, புத்தி, ஆத்மா, மனம், வாழ்வாதாரம், ஆத்மாவிற்கு அப்பாற்பட்டவை, எங்கும் நிறைந்தது அனைத்தும் நீயே. உணர்வுகளுக்கு அப்பாற்பட்டவன் நீ,

பிறப்பால் வரும் வ்யவஹாரங்கள் உனக்கில்லை. அழிவற்றவன், அளவில்லாதவன், ஏற்ற, இறக்கமற்றவன், ஆதி அந்தமில்லா ப்ரஹ்மனும் நீ. தேவ, கந்தர்வ, சித்தர், விலங்கு, மனித, பறவை, தாவரங்கள் முதல் அனைத்து ஸ்தாவர ஜங்கமங்களும் உன்னிடமிருந்தே தோன்றுகின்றன. உன்னைத் தவிர வேறெதுவும் இல்லை. தேவா! நான் இந்த உலக வ்யவஹாரங்கள் அனைத்தையும் நன்கு அனுபவித்து விட்டேன். மூவகைத் தாபங்களால் அலைக்கழிக்கப்பட்ட எனக்கு எங்குமே ஸுகமில்லை. பூமி, ராஜ்யம், படைகள், பொருள்கள், நண்பர், குழந்தைகள், மனைவி, சுற்றத்தார் இன்னும் நான் ஸந்தோஷத்தைத் தருபவை என நினைத்து அடைந்த எதுவுமே அவைகளின் இயற்கையான மாறும் குணங்களால் எனக்குக் கடைசியில் கானல் நீர் போல் விரக்தியையும், துன்பத்தையுமே உண்டு பண்ணின.

ஸ்வர்க்கத்திலிருக்கும் தேவர்களே யுத்தத்தின் போது, தாழ்ந்த மனிதப் பிறவியைச் சேர்ந்த என்னிடமல்லவா உதவி கோரினர். ஆக அதுவும் ஆபத்தானதே. பின், எங்குதான் நிலையான ஸுகம் உள்ளது. உலகிற்குக் காரணமான உன்னை ஆராதனை செய்வதே நிலைத்த ஸுகம் பெற வழி. உன் மாயையாலும், இயற்கையான அறியாமையாலுமே மனிதன் பிறப்பு, இறப்புகளால் தளர்ந்து, பின் நரகத்திலும் யமனுடைய பிடியில் கொடிய துன்பங்களை அனுபவிக்கிறான். நானும் அப்படியே தானே உன் மாயையால் சுயநலம், பொறாமை முதலியவைகளால் இவைகளில் உழன்று வருகிறேன். இறுதியில் விரும்பி எவரும் அடையத் தக்கது உன்னைத் தவிர வேறெதுவும் இல்லை. உலகில் இப்படிப் பலவாறு துன்பப்பட்ட நான் இப்போது உன்னையே சரணமடைகிறேன். இந்தத் துன்பங்களிலிருந்து என்னை விடுவித்து எனக்கு மோக்ஷத்தைக் கொடு” என்று வேண்டிக் கொண்டான்.

05_24. “எதிர்க்க முடியாத வல்லமை பொருந்திய அரசே! நீ விரும்பும் லோகங்களுக்கெல்லாம் சென்று போகங்களை அனுபவித்து விட்டு, மீண்டும் ஒரு உயர்ந்த குலத்திலே முன் ஜன்ம நினைவோடு நீ பிறப்பாய். அந்தப் பிறவியில் என் அருளால் முடிவில் மோக்ஷத்தை அடையப் போகிறாய்” என்று முசுகுந்த சக்ரவர்த்திக்கு பேரருள் புரிந்தான் க்ருஷ்ணன். இந்த நிச்சயத்தைப் பெற்றுக் கொண்ட முசுகுந்தன் அச்யுதனை நமஸ்கரித்து விட்டு குகையை விட்டு வெளியே வந்தான். யுகம் மாறிவிட்டது. மனிதர்களின் குள்ள உருவத்தைக் கண்டு கலியுகம் வந்து விட்டதை அறிந்து கொண்ட முசுகுந்த சக்ரவர்த்தி, மேலும் வைராக்யத்தை வேண்டித் தவம் புரிவதற்காக நர, நாராயணர்களின் இருப்பிடமான கந்தமாதனத்திற்குச் சென்று விட்டான்.

இப்படித் தந்திரமாக காலயவனனை ஒழித்துக் கட்டிய க்ருஷ்ணன், மதுராவை சூழ்ந்திருந்த யானைகள், குதிரைகள், ரதங்கள் நிறைந்திருந்த அவனது படைகளையும் கைப்பற்றி, அதை த்வாரகையில் இருந்த உக்ரஸேன மஹாராஜருக்கு அர்ப்பணித்தான். அதன் பின் யது வம்சம் அங்கு எந்த பகை பயமும் இன்றி வாழ்ந்திருந்தனர். இப்படியாக யுத்தம் முடிந்ததும் பலராமர் நந்தகோகுலத்தில் இருக்கும் உறவினர்களைப் பார்க்க விரும்பி, அங்கு சென்று பெரியோர்களால் தழுவப்பெற்று, சிறியோர்களைத் தழுவி, தனக்குச் சமமானவர்களோடு சிரித்துப் பேசியும் மகிழ்ந்தார். அப்போது அங்கிருந்த பெண்கள் க்ருஷ்ணனிடம் ஊடல் கொண்டும், பொறாமையோடும் அவனைப் பற்றியும் பலராமரிடம் விசாரித்தனர்.

“எங்களைப் பிரிந்து போன கண்ணன் அங்கு மதுரை நகரத்துப் பெண்களுடன் நலமாக இருக்கிறானா. எங்கும், எவரிடமும் அவன் நிலைத்த அன்பு கொள்ள மாட்டானே அவன். அந்தப் பெண்களோடு அவர்களது செயல்களைப் பாராட்டும் போது, அவர்களை மகிழ்விக்க எங்களது பட்டிக்காட்டுப் பழக்கங்களைப் பரிஹஸிக்காமல் இருக்கிறானா. எங்களைப் பற்றி நினைக்கவாவது செய்கிறானா. அவனோடுப் பாட்டெல்லாம் பாடிக் கொண்டிருந்தோம். அவன் அம்மாவைப் பார்க்கவாவது இங்கு ஒரு முறை வருவானா. ஆனால் ஏன் இதையெல்லாம் பேசிக் கொண்டிருக்க வேண்டும். வேறு எதையாவது செய்து பொழுதைப் போக்கலாம். நாம் தான் அவன் நினைவாக வருந்திக் கொண்டிருக்கிறோம்.

அவனுக்காக அம்மா, அப்பா, ஸஹோதரன், புருஷன், உறவினர் என்று அனைத்தையும் மதிக்காதிருந்தோம். ஆனால் அவன் நன்றி மறந்தவர்களின் இலக்கணமாக இருக்கிறான். அதுதான் தாமோதரன், அதுதான் கோவிந்தன். நகரத்துப் பெண்களிடம் மனதைக் கொடுத்தவன், நம்மைப் பற்றிச் சிறிதும் கவலையில்லாதவன். நம்மை அலக்ஷ்யம் செய்தவன்” இப்படிக் கொஞ்சமும் பொறுமையின்றி, கோபத்தோடும், வருத்தத்தோடும், ஏக்கத்தோடும் தங்கள் நிலையை வெளிப்படுத்துகின்றனர். நிலை கடந்து பலராமரையே கண்ணனாக நினைக்கின்றனர். பின் அதையுணர்ந்து வெட்கத்தால் சிரிக்கின்றனர். இவர்களது பல நிலைகளை இப்படி கண்ட பலராமர் இவர்களிடம் மிகவும் குழைந்து போகிறார். க்ருஷ்ணனின் ஆறுதலான, ஏற்றுக் கொள்ளத்தக்க, ஆசையான, வசீகரமான, குணமான செய்திகளை அவர்களுக்குக் கூறி அவர்களைத் தேற்றுகிறார். இப்படியாக இடையர்களோடு பேசியும், விளையாடியும் அவர்களோடு சேர்ந்து வாழ்ந்து வந்தார்.

05_25. உலகையே தாங்கும் ஆதிஸேஷன் தேவ கார்யங்களை சாதிப்பதற்காக, இப்படி பலராமராக அவதரித்து அவைகளைச் செய்து கொண்டு, இடையர்களோடு கானகங்களில் ஸஞ்சரித்து வந்தார். ஒரு ஸமயம் வருணன் மதுவர்க்கங்களுக்குத் தேவதையான மதிரை(வாருணி)யை அழைத்து “மதிரையே! நீ எப்போதும் அனந்தனுக்கு ப்ரியமானவள். ஆகவே நீ இப்போது அவர் ஸந்தோஷப்படும்படியான கார்யங்களைச் சென்று செய், அவர் அருஞ்செயல்கள் பலவற்றைச் செய்யப் போகிறார். அவரிடம் சென்று சேர்” என்று வேண்டிக் கொண்டான். அவளும் அதற்கிசைந்து வ்ருந்தாவனத்தின் ஒரு கடம்ப மரப் பொந்தில் ஐக்யமானாள்.
கடம்ப மரத்திலிருந்து மது வழிந்தோடிக் கொண்டிருந்ததை, அதன் வாசனையால் இழுக்கப்பட்டு அங்கு வந்த பலராமர் கண்டு மகிழ்ந்து, கோபர்களுடனும், கோபிகைகளுடனும் உடனே அதைப் பருகி, களிப்பில் பாடி, ஆடிக் மகிழ்ந்து கொண்டிருந்தார். அவரது உடல் முத்து போன்ற வியர்வைத் துளிகளால் நிறைந்திருந்தது.மது மயக்கத்தில் அருகில் ஓடிக் கொண்டிருந்த யமுனா நதியை, நீராடுவதற்காகத் தன்னருகில் வருமாறு அழைத்தார் பலராமர். மதுவில் மூழ்கியிருந்த இவரது உத்தரவை யமுனை நதி மதிக்காமல் இருந்தது. இதனால் கோபம் கொண்ட பலராமர் தன் கலப்பையால் யமுனையை அதன் போக்கிலிருந்து மாற்றி, தன்னருகில் இழுத்துச் சென்று, “துஷ்ட நதியே, கர்வம் கொண்டவளே, வரமாட்டாயா! இப்போது உன்னிஷ்டம் போல் போ, பார்க்கலாம். என் பலத்தைத் தெரிந்து கொண்டாயா. இனி என்னை அவமதித்தால் உன்னை என் கலப்பை நுனியால் நூறு வழிகளில் கொண்டு போய் விடுவேன்” என்று எச்சரித்தார். மிகவும் பயந்து போன யமுனா நதி, உருக்கொண்டு அவரிடம் மன்னிப்புக் கோரியது. அவரும் அதை விடுவித்தார். விடுதலையடைந்த யமுனை அந்த ப்ரதேஸத்தை நீரால் நிறைத்துச் சென்றது.

யமுனையில் மூழ்கித் திளைத்துக் கொண்டிருந்த பலராமருக்கு அப்போது மஹாலக்ஷ்மி தோன்றி, ஒரு காதணியாக அல்லிமலரையும், இன்னொரு காதணியாக குண்டலத்தையும், வருணனால் அனுப்பப்பட்ட வாடாத ஒரு தாமரை மாலையையும், கடலின் நிறம் கொண்ட நீல நிறப்பட்டாடைகளையும் தந்தருளினாள். யமுனையில் நீராடி, மதிப்பற்ற இவைகளை அணிந்து கொண்ட பலராமர் முன்னிலும் பொலிவு பெற்று விளங்கினார். இப்படி இரு மாதங்கள் நந்த கோகுலத்தில் கழித்த பலராமர், மீண்டும் த்வாரகைக்குத் திரும்பி, அங்கு ரைவத மஹராஜனின் பெண் ரேவதியை மணந்து கொண்டு, நிசிதன், உல்முகன் என்ற இரு பிள்ளைகளையும் பெற்றார்.

05_26. விதர்ப தேசத்தரசன் பீஷ்மகனென்பவன் குண்டினமெனும் தலைநகரப் பட்டணத்திலிருந்து கொண்டு ஆண்டு வந்தான். இவனுக்கு ருக்மி என்ற புத்ரனும், ருக்மிணி என்ற அழகான பெண்ணும் இருந்தனர். இவளை க்ருஷ்ணன் காதல் வயப்பட்டு மணம் புரிய விரும்பினான். ருக்மிக்கு ருக்மிணியை க்ருஷ்ணனுக்கு மணம் செய்து கொடுப்பதில் விருப்பமில்லை. ஜராஸந்தனின் கருத்துப்படியும், ருக்மியின் கட்டாயப்படியும் பலம் பொருந்திய பீஷ்மகன் தன் பெண்ணை சிசுபாலனுக்கு மணம் முடிக்க நிச்சயம் செய்தான். திருமணத்திற்கு ஜராஸந்தன், சிசுபாலனைச் சேர்ந்த அனைத்து அரசர்களும், இளவரசர்களும் அழைக்கப்பட்டு விதர்ப தேசத்திற்கு வந்திருந்தனர். க்ருஷ்ணனும், பலராமனும் யாதவர்களோடு திருமணத்தைக் காண குண்டினபுரிக்கு வந்திருந்தனர்.

தான் ருக்மிணியைக் கடத்திச் செல்லவும், மற்றவர்கள் அண்ணாவோடு சேர்ந்து எதிரிகளைச் சமாளிக்கவும் திட்டம் போட்டு வந்திருந்தான் க்ருஷ்ணன். அதைச் செய்தும் விட்டான். பௌண்ட்ரகன், சிறப்புமிக்க தந்தவக்ரன், விதூரதன், சிசுபாலன், ஜராஸந்தன், சல்யன், இன்னும் பல அரசர்கள் இந்த அவமானத்தால் கோபம் கொண்டு, க்ருஷ்ணனைக் கொன்று விடுவதற்காகப் புறப்பட்டனர். ஏற்பாட்டின் படி இவர்களனைவரையும் பலராமர், யாதவ சைன்யத்தோடு தோற்கடித்துத் துரத்தி விட்டார். ருக்மி மட்டும் க்ருஷ்ணனைக் கொல்லாமல் குண்டினபுரிக்குத் திரும்புவதில்லை என்ற உறுதியோடு துரத்திச் சென்றான். அந்தப் போரில் க்ருஷ்ணன் விளையாட்டாக தன் சக்ரத்தாலேயே அவனுடைய குதிரை, யானை, ரதம், காலாட்படை என அனைத்தையும் அழித்து, அவனையும் வென்று கீழே தள்ளினார்.

“ருக்மி என்னுடைய ஒரே ஸஹோதரன், கோபத்தைத் தணித்துக் கொள்ளுங்கள். தேவ! என் ஸஹோதரனை கருணை கூர்ந்து விட்டு விடுங்கள்” என்று ருக்மிணி ப்ரார்த்தித்ததற்கிணங்க ருக்மியைக் கொல்லாமல் விட்டான் க்ருஷ்ணன். செயல்களின் பாதிப்புகளுக்கு அப்பாற்பட்ட க்ருஷ்ணனின் கருணையால் இப்படி உயிர் பிழைத்த ருக்மி, அதன் பின் போஜகடம் என்ற நகரை உருவாக்கிக் கொண்டு, அங்கேயே வஸித்து வந்தான். ராக்ஷஸ விவாஹ(போர் செய்து கன்னிகையை அபஹரித்துச் சென்று திருமணம் செய்து கொள்வது) முறைப்படி இப்படியாக ருக்மிணி கல்யாணமும் த்வாரகையில் சிறப்பாக நடந்தேறியது. அவளிடம் மன்மதனின் அம்சமாக ப்ரத்யும்னன் என்ற பிள்ளையைப் பெற்றான் க்ருஷ்ணன். இந்த ப்ரத்யும்னனை சம்பரன் என்ற அஸுரன் தூக்கிச் சென்றான். ஆனால் ப்ரத்யும்னனால் கொல்லப்பட்டான்.

05_27. மைத்ரேயர்: எப்படி ப்ரத்யும்னன் சம்பரனால் தூக்கிச் செல்லப் பட்டான். பலம் பொருந்திய அவனை எப்படி ப்ரத்யும்னன் கொன்றான். பராசரர்: ருக்மிணிக்கும், க்ருஷ்ணனுக்கும் பிறக்கும் குழந்தையே தன்னைக் கொல்லப் போகிறவன் என்பதை முன்னமே அறிந்திருந்த யமனை ஒத்த அந்த ஸம்பராஸுரன், ப்ரத்யும்னன் பிறந்து ஆறே நாட்களாயிருந்த போதே, ப்ரஸவ அறைக்குள் புகுந்து, குழந்தையைத் தூக்கிக் கொண்டு போய், கடும் உயிரினங்கள் நிறைந்த, கொடுங்கடலில் வீசியெறிந்து விட்டான். ஒரு பெரும் மீன் அதை விழுங்கியும், குழந்தை அந்த மீனின் வயிற்றில் இறக்காமலேயே இருந்து வந்தது. ஒரு ஸமயம் மீனவர்கள் பிடியில் சிக்கிய பல மீன்களில் இந்த மீனும் ஒன்றாகக் கிடைக்க, அவர்கள் அவையத்தனையையும் கொண்டு போய் ஸம்பராஸுரனிடம் ஸமர்ப்பித்தார்கள்.

ஸம்பராஸுரன் அந்த மீன்களை சமையல் வேலைகளை மேற்பார்வை செய்து கொண்டிருந்த தன் மனைவி மாயாதேவியிடம் கொடுத்தான். அவள் அந்த மீனை நறுக்கிய போது, மன்மதனையொத்த இந்த அழகான குழந்தையை அதன் வயிற்றில் கண்டாள். இது யாராக இருக்கும், இது மீனின் வயிற்றுக்குள் எப்படி வந்தது என்றெல்லாம் அவள் ஆச்சர்யப்பட்டுக் கொண்டிருந்த போது, கருணையுள்ள அவளிடம் வந்த நாரதர் “உலகையே படைத்து, அழித்துக் கொண்டிருக்கும் மஹாவிஷ்ணுவின் குழந்தை இது” என்று தொடங்கி குழந்தை பிறந்தது முதல் இவள் கைக்குக் கிடைத்தது வரையிலான விஷயங்களை விளக்கமாகக் கூறி, குழந்தையையும் அவளையே கவனமாக வளர்த்து வரும்படியும் கூறிச் சென்று விட்டார்.

குழந்தையின் அழகில் மயங்கிய அவளும் நாரதர் சொல்படி பொறுப்பாகவும், கவனமாகவும் அதை வளர்த்து வந்தாள். குழந்தை வளர்ந்து இளமைப் பருவம் எய்தியபோது, இவளது அன்பு காதலாக மாறியது. குலத்தில் சிறந்த ப்ரத்யும்னனிடம் மனதையும், கண்களையும் பறிகொடுத்த வைத்த மாயாவதி, முழு மதிப்புடன் அவனுக்கு எல்லா மாயைகளையும் கற்றுக் கொடுத்தாள். பெரும் உணர்ச்சி வயப்பட்ட இவளது அன்பைக் கண்ட க்ருஷ்ணனின் புத்ரன், ஒரு நாள் தாமரைக் கண்கள் கொண்ட மாயாவதியிடம் “அம்மா! உங்கள் ஆசை, தாயான தங்களுக்குத் தகாததே” என்று கூற, அவள் “நீங்கள் என் மகனல்ல, விஷ்ணுவின் மகன். காலஸம்பரன் உங்களைக் கடலில் எறிய, அங்குக் கிடைத்த ஒரு மீனின் வயிற்றிலிருந்து உங்களை எடுத்து வளர்த்து வருகிறேன். அன்பிற்குரியவரே, உங்கள் உண்மையான தாய் இன்னும் உங்களுக்காக அழுது கொண்டுதானிருப்பாள்” என்று பதிலுரைத்தாள்.

மாயாவதியின் இந்த பதிலைக் கேட்ட, துணிவுள்ள ப்ரத்யும்னன் கோபத்துடன் ஸம்பராஸுரனைப் போருக்கழைத்தான். அந்தப் போரில் ஸம்பராஸுரன் ஏழு மாயைகளை மாதவனின் புதல்வன் மேல் ஏவ, ப்ரத்யும்னன் அவைகளை அழித்து எட்டாவதான ஒரு மாயையால் அவனையும், அவன் ஸேனைகளையும் கொன்றான். பின் அதே வேகத்தில் மாயாவதியுடன் புறப்பட்டு, அப்பாவின் அந்தப் புறத்தில் வந்து குதித்தான். அவனைக் கண்டதும் அங்கிருந்த க்ருஷ்ணனின் மனைவியர்கள் க்ருஷ்ணனென்று நினைத்து விட்டனர். ஆனால், அவனைக் கண்ட ருக்மிணி கண்களில் கண்ணீர் மல்க “உன்னைப் போல் இப்படி யௌவனமாய் ஒருவனைப் பெற உன் தாய் தவம் செய்திருக்க வேண்டும். என் மகன் ப்ரத்யும்னன் உயிரோடு இருந்திருந்தால், அவனுக்கும் உன்னை ஒத்த வயதே இருக்கும். உன்னைப் பெற்ற அந்தப் புண்யவதி யாரோ.

உன் தோற்றத்தையும், எனக்கு உன் மீது உண்டாகும் பாசத்தையும் நோக்கும் போது, நீ நிச்சயமாக ஹரியின் மகனாகத் தானிருக்க வேண்டும்” என்று கனிவோடு அவனிடம் பேசினாள். அந்த ஸமயத்தில் க்ருஷ்ணன் நாரதருடன் அங்கு வந்தான். நாரதர் ருக்மிணியிடம் “குழந்தையாயிருக்கும் போது ப்ரஸவ அறையிலிருந்து ஸம்பராஸுரனால் கொண்டு செல்லப்பட்டு, அவனைக் கொன்று விட்டு இப்போது இங்கு வந்திருக்கும் இவன் உன் மகனே. மேலும், நற்குணமுள்ள மாயாவதி என்ற இந்தப் பெண், ப்ரத்யும்னனின் மனைவியே. ஸம்பராஸுரனின் மனைவியல்ல. நான் சொல்வதைக் கேள்.

மன்மதன் எரிந்து சாம்பலாகி விட்ட போது, அவன் மனைவி தன்னைக் காத்துக் கொள்ளவும், மன்மதன் திரும்பி வரும் வரை வாழவும் விரும்பி, தன் மாயைகளால் ஸம்பராஸுரனை மயக்கி ஆட்கொண்டிருந்தாள். அவனுடைய காம இச்சைகளிலிருந்து தன் கற்பைக் காத்துக் கொள்ள, வெவ்வேறு மாயா ரூபவதிகளை உண்டாக்கி, அவர்களிடமே அவனை மூழ்க வைத்திருந்தாள். இப்படி ஸம்பராஸுரனிடமிருந்து தன்னைக் காத்துக் கொண்ட இவளே ரதி தேவி. உன் மகனான இந்த ப்ரத்யும்னனே மீண்டும் அவதரித்திருக்கும் மன்மதன். எனவே இவள் ப்ரத்யும்னனுக்கு மனைவியே. ஸந்தேஹத்திற்கு எந்த இடமுமில்லை. இவள் உன் மருமகளே” என்று கூறி அவளுக்கும், மற்றவர்களுக்கும் இருந்த ஸந்தேஹங்களையும் தீர்த்து வைத்தார். நாரதரின் இந்த சொற்களால் ருக்மிணியும், கேசவரும் ஸந்தோஷம் கொண்டனர். தொலைந்து போன ருக்மிணியின் மகன் திரும்பக் கிடைக்கப் பெற்றதையறிந்த நகர மக்களும், த்வாரகையும் ஆச்சர்யங்களிலும், ஸந்தோஷத்திலும் மூழ்கித் திளைத்தது. விழாக் கோலம் பூண்டது.

05_28. ப்ரத்யும்னன், சாருதேஷ்ணன், ஸுதேஷ்ணன், சாருதேஹன், ஸுஷேணன், சாருகுப்தன், பத்ரசாரு, சாருவிந்தன், ஸுசாரு, சாரு ஆகிய பிள்ளைகளையும், சாருமதி என்ற பெண்ணையும் ருக்மிணி க்ருஷ்ணனுக்குப் பெற்றுத் தந்தாள். ருக்மிணி முதலாக மித்ரவிந்தை, ஸத்யை, ஜாம்பவதி, ரோஹிணி, ஸுசீலை, ஸத்யபாமை, லக்ஷ்மணை என்ற எழுவரோடு க்ருஷ்ணனுக்கு மொத்தம் அஷ்ட மஹிஷிகள். இவர்களைத் தவிர அவனுக்கு வேறு பதினாறாயிரம் மனைவிகளும் உண்டு. இதில் மித்ரவிந்தை களிந்த ராஜனின் புதல்வி என்பதால் காளிந்தி என்றும் அழைக்கப் படுவாள். ஸத்யை நக்னஜித்தின் மகள். ஜாம்பவதி ஜாம்பவானின் மகள். ரோஹிணி இஷ்டப்படி ரூபமெடுத்துக் கொள்வாள். நல்ல குணமுள்ள ஸுசீலை மத்ர தேசத்து இளவரசி. ஸத்யபாமா ஸத்ராஜித்தின் மகள். லக்ஷ்மணைத் தன் அழகான சிரிப்பால் சாருஹாஸினி என்றும் அழைக்கப்பட்டாள்.

தன்னிடம் விருப்பமுள்ள, வீரனான ப்ரத்யும்னனை, ருக்மியின் மகள் ஸுயம்வரத்தில் விரும்பி மணந்து பலமும், பெருந்தன்மையுமுள்ள அனிருத்தனைப் பெற்றெடுத்தாள். கவனமாகவும், விருப்பத்துடனும் யுத்த முறைகளைப் பயின்று தேர்ச்சி பெற்றிருந்த இவன் எவராலும் தடுக்க முடியாத பராக்ரமத்துடன், எதிரிகளின் படைகளை உடைப்பவனாயிருந்தான். ருக்மியின் மகன் வழி பேத்தியை இந்த அனிருத்தனுக்கு மனைவியாகக் கொடுக்குமாறு தானே ருக்மியிடம் சென்று பெண் கேட்டான் க்ருஷ்ணன். க்ருஷ்ணனிடம் பகையிருந்தாலும், அவனே நேரில் வந்து கேட்டதால் ருக்மி தன் மகன் வழிப் பேத்தியை, மகள் வழிப் பேரனுக்கு மணம் முடிக்க சம்மதித்தான். நிச்சயிக்கப்பட்ட இந்தத் திருமணத்திற்கு பலராமனும், மற்ற யாதவர்களும் க்ருஷ்ணனோடு சேர்ந்து ருக்மியின் நகரமான போஜகடத்திற்கு வந்தனர். க்ருஷ்ணனின் பேரனுக்கும், ருக்மியின் பேத்திக்கும் திருமணம் வெகு விமர்சையாக நடந்தேறியது.

அதன்பின் அரசர்கள் பலரும் களிங்கன் என்பவனின் தலைமையில் ருக்மியிடம் வந்து “கலப்பையைக் கையாளும் இந்த பலராமனுக்கு முறையாக சூதாடத் தெரியாது. ஆனால் சூதாட்டத்தில் ஆசையுண்டு. இதையே அவன் துரத்ருஷ்டமாகப் பயன்படுத்தி நாம் அவனை வெற்றி கொள்ளலாம், அவனைச் சூதாட அழை” என்று கூற, சக்தியுள்ள ருக்மியும் அழைக்க, பலராமனும் ஒப்புக்கொண்டு வர, அரண்மனையில் தொடங்கியது சூதாட்டம். ஆயிரம் வராகன் பொன்னை ருக்மியிடம் முதலில் இழந்தான் பலராமன். மறுமுறை, மறுமுறை என்று மூன்று முறை சூதில் வல்லவனான ருக்மியிடம் ஆயிரமாயிரம் வராகன்களாகப் பொன்னை இழந்தான்.

பலராமன் தொடர்ந்து இப்படித் தோற்பதைக் கண்ட களிங்கன் சத்தமாகச் சிரித்தான். கர்வங்கொண்ட ருக்மியும் “கொஞ்சம் கூட ஆடத் தெரியாத இந்த பலராமன் வெறும் கர்வத்தாலும், ஆசையாலும் மிகவும் விளையாடத் தெரிந்தது போல் ஆடி மீண்டும், மீண்டும் என்னிடம் தோற்கிறான்” என்று பலராமனைப் பார்த்துக் கூறினான். களிங்க தேசத்தரசனின் ஏளனமாக சிரிப்பாலும், ருக்மியின் இறுமாப்பான பேச்சாலும் அவமானமும், கோபமும் கொண்ட ஹலாயுதர் பொறுமையிழந்து ஒரு கோடி வராகனை மீண்டும் பந்தயமாக வைத்தார். பந்தயத்தை ஏற்று காய்களை உருட்டிய ருக்மி இம்முறை தோற்றான். ஆட்டத்தில் வெற்றி பெற்ற பலராமர் இப்போது நானே வென்றேன் என்று சத்தம் போட்டுச் சிரித்தார்.

ஆனால் ருக்மி, பலராமரின் வெற்றியை ஒப்புக் கொள்ளாது “ராமா, பொய் சொல்லாதே. இது செல்லாது. பந்தயத்தை இருவரும் ஒப்புக் கொண்டால் தானே அது செல்லும். உங்கள் கோடி வராகன் பந்தயத்தை நீங்கள் தான் சொன்னீர். நான் அதை ஒப்புக் கொள்ளவே இல்லை. எனவே இது செல்லாது. நானே வென்றவன்” என்றான். அப்போது அசரீரி ஒன்று “பலராமனே இந்தப் பந்தயத்தில் வெற்றி பெற்றவன். ருக்மியே தவறாக, பொய் பேசுகிறான். வாயால் பந்தயத்தை ஒப்புக்கொள்ளாவிட்டாலும், செய்கையால் ஒப்புக்கொண்டிருக்கிறான். பந்தயத்தை ஒப்புக்கொள்ளாதவன் காய்களை உருட்டுவானா” என்றது.

அசரீரி வாக்கைக் கேட்டதும் பலராமர் கண்கள் சிவக்க மேலும் பெருங்கோபம் கொண்டு, விளையாடிக் கொண்டிருந்த சூதாட்டப் பலகையாலேயே ருக்மியை அடித்து, அங்கேயே கொன்று போட்டு விட்டார். இவர் தோற்றபோது பற்களைக் காட்டிச் சிரித்த களிங்கன் இப்போது பயத்தில் உறைந்து போயிருந்தான். அவனையும் பிடித்திழுத்து அந்தப் பலகையாலேயே அவன் பற்களனைத்தையும் தகர்த்தெறிந்தார். மேலும் எதிர்த்து வந்த இளவரசர்களையும் அங்கிருந்த ஒரு தங்க மயமான தூணைப் பிடுங்கியெடுத்து, அதையே ஆயுதாகக் கொண்டு அடித்துப் போட்டார். உயிர் பிழைத்த மீதம் பேர்களனைவரும் இவரது கோபத்தைக் கண்டு அழுது கொண்டும், அலறிக் கொண்டும் ஓடி விட்டனர். பெரும் சப்தமும், ஆரவாரமும் எழுந்தது அங்கு. இப்படி கல்யாணத்திற்கு வந்த இடத்தில் மணமக்களின் தாத்தா ருக்மி, தன் அண்ணனால் கொல்லப்பட்டதை அறிந்த க்ருஷ்ணன், ஒரு பக்கம் மனைவி ருக்மிணிக்கும், மறுபக்கம் பலராமனுக்கும் பயந்து இதைப் பற்றி ஒன்றும் கருத்து கூறாமல், புது மண தம்பதிகளோடும், யாதவர்களோடும் த்வாரகைக்கு வந்து சேர்ந்தான்.

05_29. மூவுலகிற்கும் அதிபதியான தேவேந்த்ரன் ஒரு ஸமயம் அவனது மூர்க்கமான ஐராவதத்தின் மீதேறி சௌரியை சந்திப்பதற்காக த்வாரகை வந்தான். ஹரியால் வரவேற்கப்பட்ட அவன் நரகாஸுரனின் கொடுமைகளைப் பற்றிக் கூறலானான். “மதுஸூதனா! தேவதேவ! நீரே எங்களுக்குத் துயர் நேர்ந்த போதெல்லாம் அவற்றிலிருந்து எங்களைக் காத்தீர். மனிதனாகப் பிறந்தும் அரிஷ்டன், தேணுகன், சாணூரன், முஷ்டிகன், கேசினி, கம்ஸன், குவலயாபீடம், குழந்தைகளைக் கொல்லும் பூதனை இப்படி உலகைத் தங்கள் தீச்செயல்களால் அடக்கியாளும் அனைவரையும் அழித்தீர். உங்கள் பராக்ரமத்தாலும், அறிவாலுமே மூவுலகும் காக்கப்பட்டு, தேவர்களும் யாகப் பங்குகளைப் பெற்று த்ருப்தியோடிருக்கின்றனர். ஆனால் இப்போது மீண்டும் உங்களால் மட்டுமே தீர்க்கக்கூடிய ஒரு விஷயத்தோடு நான் இங்கு வந்திருக்கிறேன்.

பூமாதேவியின் புத்ரன், நரகனென்பவன் எல்லா உயிர்களுக்கும் பெரும் தீங்குகளை உண்டாக்கிக் கொண்டு ப்ராக்ஜ்யோதிஷ நகரத்தை ஆண்டு வருகிறான். தேவலோகத்துக் கன்னிகைகளையும், சாதுக்களையும், அரசர்களையும் அடக்கித் தன் அரண்மனையில் சிறை வைத்திருக்கிறான். எப்போதும் நீரைப் பொழிந்து கொண்டிருக்கும் வருணனின் குடை, மந்தர மலையின் மணி பர்வதமென்னும் சிகரம், என் தாய் அதிதி அணிந்திருந்த அமுத குண்டலங்கள் இப்படி அனைத்தையும் அபஹரித்துச் சென்றுள்ள அவன், இப்போது என் ஐராவதத்திற்கு ஆசைப்பட்டுக் கொண்டிருக்கிறான். விஷயங்களை உங்களிடம் கூறி விட்டேன். நீங்கள் தான் செய்ய வேண்டியதைத் தீர்மானித்து, இவனிடமிருந்து எங்களைக் காக்க வேண்டும். இதற்கு முன் தோன்றிய ஹிரண்யன், ஹிரண்யாக்ஷன், மதுகைடபன் ஆகியோரை விட, உங்களிடம் தோன்றிய இவன் மிகவும் துஷ்டனாக, கொடியவனாக இருக்கிறான்” என்றான்.

இந்த்ரனின் குறைகளைக் கேட்ட க்ருஷ்ணன் புன்சிரிப்போடு ஸிம்ஹாஸனத்திலிருந்து எழுந்தான். இந்த்ரனைக் கையில் பிடித்துக் கொண்டு, ஸர்ப்பங்களை உணவாய்க் கொள்ளும் கருடனை மனதால் நினைத்தான். உடனே தோன்றினான் அவனும். ஸத்யபாமாவையும் தன் பின்னால் ஏற்றிக் கொண்டு, உடனே பறந்தான் க்ருஷ்ணன் ப்ராக்ஜ்யோதிஷ நகருக்கு. இந்த்ரன் த்வாரகா வாஸிகள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே ஐராவதத்தின் மீதேறி தன்னகருக்குச் சென்றான். ப்ராக்ஜ்யோதிஷம் நரகாஸுரனுடைய மந்த்ரி முரன் என்பவனால் கத்திகள் செருகப்பட்டிருந்த பாசக் கயிறுகளால் சுற்றிலும் காக்கப்பட்டிருந்தது. அதைத் தன் சக்ராயுதத்தால் அறுத்து விட்டு, தன்னை எதிர்த்து வந்த முரனையும், அவன் பிள்ளைகள் ஏழாயிரம் பேரையும், ஹயக்ரீவன், பஞ்சஜனன் என்பவர்களையும் பூச்சிகளைப் போல் சக்ரத்தாலேயே கொன்று விட்டு வேகமாக நகரத்திற்குள் நுழைந்தான் க்ருஷ்ணன்.

ஆயிரக்கணக்கில் நரகாஸுரனின் படைகளை வேகமாகக் கொன்று கொண்டிருந்த க்ருஷ்ணனை எதிர்த்து வந்த நரகாஸுரன் பல விதமான பாணங்களால் அடித்தான். அஸுரர்களைப் பூண்டோடு அழிக்கும் சக்ரதாரி அவனை இரு துண்டுகளாக அறுத்தெறிந்தார். நரகாஸுரன் மாய்ந்து வீழ்ந்ததும், பூமாதேவி(இப்போது ஸத்யபாமா) அவனிடமிருந்த அதிதியின் குண்டலங்களை எடுத்துக் கொண்டு லோகநாதனிடம் வந்தாள். “ப்ரபோ! தாங்கள் வராஹ மூர்த்தியாய் அவதரித்த போது, உங்கள் ஸம்பந்தத்தால் இவனை என்னிடம் உண்டாக்கினீர். நீங்களே அவனை அனுக்ரஹித்து, இப்போது மீண்டும் நீங்களே அவனை கொல்லவும் செய்தீர். இதோ இந்த குண்டலங்களை எடுத்துக் கொண்டு, அவன் ஸந்ததியை விட்டு விடுங்கள். பரம்பொருளின் அம்சமே, என் பாரத்தைக் குறைப்பதற்காக இந்த பூலோகத்தில் அவதரித்தீர்கள்.

நீங்களே படைத்து, காத்து, அழிப்பவர். உலகிற்கு ஆதாரமும், உலகமும் தாங்களே. என்னால் உங்கள் பெருமைகளைத் துதிக்க முடியுமா. எங்கும் வ்யாபித்திருப்பதும் தாங்களே. செயல், அதைச் செய்பவன், செயலின் பயன் அனைத்தும் நீங்களே. அழியாத ஆத்மாவும் தாங்களே. உன்னை முழுதும் உணர்ந்து துதிக்க என்னால் இயலாது. கருணை கொள்ளுங்கள். நரகனின் குற்றங்களை மன்னித்தருளுங்கள். பல பாவங்கள் செய்திருந்தும் உங்கள் புத்ரனான இவன் உங்களாலேயே அழிக்கப்பட்டதால் பாபமற்றவனானான்” என்று துதித்தாள். வேண்டிக் கொண்டாள். அனைத்துயிர்களுக்கும் ஸாரமான தேவதேவனும் அப்படியே அனுக்ரஹித்து விட்டு, பின்னர் நரகாஸுரனால் அடைத்து வைக்கப்பட்டிருந்தவைகளை விடுவிப்பதற்காக அவன் அரண்மனையில் ப்ரவேஸித்தான்.

நரகாஸுரனின் அந்தப்புரத்தில் பதினாறாயிரத்து நூறு கன்னிகைகளைக் கண்டான். மேலும் நான்கு தந்தங்கள் கொண்ட ஆறாயிரம் உயர்ந்த யானைகளையும், இருபத்தோரு லக்ஷம் காம்போஜத்துக் குதிரைகளையும், இன்னும் மேன்மையான இனங்களையும் கண்டான். இவைகள் அனைத்தையும் நரகாஸுரனின் சேவகர்களைக் கொண்டே த்வாரகைக்கு அனுப்பி வைத்தான் க்ருஷ்ணன். பின் வருணனின் குடை, மணி பர்வதம் இவைகளையும் கைப்பற்றி கருடன் மீதேற்றி, தானும், ஸத்யபாமையோடு ஏறிக் கொண்டு, அதிதியின் குண்டலங்களைத் திரும்பக் கொடுப்பதற்காக தேவலோகம் நோக்கிச் சென்றான்.

05_30. வருணனின் குடை, மணி பர்வதம், ருக்மிணி, ஹ்ருஷிகேசன் இவர்களை ஏற்றிக் கொண்டு அனாயாஸமாக இந்த்ர ஸபையை நோக்கிப் பறந்தான் கருடன். வாசலையடைந்ததும் ஹரி தன் சங்கத்தை எடுத்து ஊதினான். இதைக் கேட்டதும் தேவர்கள் ஸமர்ப்பணங்களுடன் க்ருஷ்ணனை வரவேற்பதற்கு வந்தனர். அவர்களின் மரியாதைகளை ஏற்றுக் கொண்ட க்ருஷ்ணன், தேவமாதாவான அதிதியின் மாளிகைக்குச் சென்றான். வெண் மேகங்களை ஒத்திருந்த ஒரு மாளிகையில் வஸித்து வந்த அதிதியை இந்த்ரனுடன் சேர்ந்து நமஸ்கரித்து, அவள் குண்டலங்களையும் ஒப்படைத்து, நரகாஸுரன் வதம் செய்யப்பட்டதையும் கூறினான். பெரிதும் மகிழ்ந்த தேவமாதா ஜகத்கர்த்தாவான ஹரியைத் துதிக்கலானாள்.

“தாமரைக் கண்ணா! உன்னைத் துதிப்போர்க்கு ஒரு பயமும் இல்லை. சாச்வதமானவன், லோகரூபமானவன், ஆத்மா, அனைத்திற்கும் ஆதாரம், முக்குணமும், அதற்கு அப்பாற்பட்டவனும், தூய்மையானவன், வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டவன், அனைவரின் இதயத்தும் நிறைந்தவன், நிறம், வளர்ச்சி முதலிய மாறுபாடுகளில்லாதவன், பிறப்பு, இறப்பு, உறக்கம், விழிப்பு இவைகளால் பாதிப்பில்லாதவன் நீ. பகலும், இரவும், மாலையும், பூமியும், வானும், காற்றும், நீரும், நெருப்பும், மனமும், புத்தியும், குணங்களும், ப்ரஹ்ம, விஷ்ணு, சிவ, தேவ, யக்ஷ, தைத்ய, ராக்ஷஸ, சித்த, கூஷ்மாண்ட, பிசாச, கந்தர்வ, நர, ஸ்தாவர, புல், புதர், ஊர்வன, தாவுவன, பெரிது, மத்யமானது, சிறிது, உயர்ந்தது, தாழ்ந்தது என அனைத்தும் நீ.

உன் மாயையில் மோஹித்தே பலரும் உண்மையறியாமல் ஆத்மா அல்லாததை ஆத்மா என்றும், நான், எனது என்றும் கூறி வருகிறார்கள். இந்த மாயையே ஸம்ஸாரத்தை வளர்க்கும் தாய். ஸ்வதர்மங்களை அனுஷ்டித்து, உன்னைத் துதித்து வருபவர்கள் இந்த மாயைகளைக் கடந்து மோக்ஷத்தை அடைகிறார்கள். ப்ரஹ்மா முதல் அனைத்து தேவ, மனுஷயர்களும் உன் மாயையாகிற இந்த இருட்டினால் சூழப்பட்டவர்களே. மோக்ஷத்தைத் தரும் உன்னைத் துதிப்பவர்களும் தங்கள் ஆசை, பாதுகாப்பு இவைகளையே உன்னிடமும் யாஸிக்கிறார்கள். சாச்வதமானதை விடுத்து தங்கள் வம்சங்களின் வளர்ச்சி, எதிரிகளின் நாசம் இவைகளையே இவர்கள் உன்னிடம் வேண்டுவது உன்னுடைய விளையாட்டே.

எதையும் அருளும் கற்பக வ்ருக்ஷத்திடம் போய், தன் அரையை மறைக்க ஒரு துணி வேண்டுவது போல இவர்கள் இப்படி வேண்டுவது தங்கள் பாபங்களால் தானே. இப்படி அக்ஞானத்தாலுண்டாகும் மாயைகளான பாபங்களிலிருந்தும் நீயே காக்க வேண்டும். நானும் அப்படியே. ஹே சங்கு, சக்ரதாரி! சார்ங்கபாணி! கதாயுதத்தைத் தரிப்பவனே! உன் ஸ்வரூபத்தை நானும் அறியேன். என் மீது கருணை கொள். காத்தருள்” என்று துதித்தாள் அதிதி. இப்படித் துதிக்கப்பெற்ற விஷ்ணு தேவமாதாவிடம் “என்னை ஆசித்து அருளுங்கள்” என்று புன்னகையுடன் வேண்டினான். அதிதியும் “அப்படியே ஆகட்டும். தேவர்கள், அஸுரர்கள் என்று எவராலும் வெல்லமுடியாத புருஷோத்தமனாயிருப்பாய்” என்று க்ருஷ்ணனை ஆசிர்வதித்தாள்.

அதன் பின் இந்த்ராணியுடன் தன்னை வணங்கிய ஸத்யபாமையை “நிலையான அழகும், யௌவனத்தோடும் இருப்பாய்” என்று ஆசிர்வதித்தாள். தாயின் அனுமதியோடு இந்த்ரன் இந்த்ராணியோடு கூடி ஜனார்த்தனருக்கும், ஸத்யபாமைக்கும் வேண்டிய உபஸரிப்புகளைச் செய்து, அவர்களை தேவலோகத்து நந்தவனங்களுக்கு அழைத்துச் சென்றான். அங்கே கேசவர் பாற்கடலைக் கடைந்தபோது அதிலிருந்து கிடைத்த, இந்த்ராணிக்கு மிகவும் ப்ரியமான பாரிஜாத மரத்தைக் கண்டார். அங்கிருந்த வேலைக்காரர்கள் பாரிஜாத மலர்களைக் கொண்டு வந்து சசீயினிடம் தந்தனர். மனிதப் பிறவியைச் சேர்ந்தவள் என்பதால் ஸத்யபாமைக்கு அந்தப் பூக்களைக் கொஞ்சமும் தராமல் தானே சூட்டிக் கொண்டாள் இந்த்ராணி. தங்க மயமான மரப்பட்டைகளோடும், தாம்ரத்தையொத்த இளந்தளிர்களோடும், மணம் மிக்க பழங்கள் பூத்துக் குலுங்கும் இந்த பாரிஜாத மரத்தைக் கண்ட ஸத்யபாமா ஆசையோடு கண்ணனிடம், “நாதா! ருக்மிணி, ஜாம்பவதி இவர்களை விட நான் தான் உங்களுக்கு எப்போதும் மிகவும் ப்ரியமானவள் என்று அடிக்கடி கூறுவீர்களே, நினைவிருக்கிறதா? அந்த வார்த்தைகளை முகஸ்துதிக்காக அப்போதெல்லாம் கூறினீர்களா, இல்லை உண்மையா?” என்று ஆரம்பித்தாள். க்ருஷ்ணன், “ப்ரியே! நான் ஒரு போதும் பொய் கூறுவதில்லை. அதுவும் உன்னிடம், உன்னைப் பற்றி ஏன் பொய் கூறுவேன்” என்றார்.

இதைக் கேட்டு மிகவும் சந்தோஷமடைந்த ஸத்யபாமா, “அப்படியானால், இந்த மரத்தை எடுத்துச் சென்று த்வாரகையில் என் வீட்டுத் தோட்டத்தில் நட வேண்டும். இதன் பூக்களை என் சக்களத்திகளின் மத்தியில், அவர்கள் ஏங்க, நான் என் தலையில் அழகாக சூட்டிக் கொள்ள வேண்டும். இதை நீங்கள் செய்ய வேண்டும்” என்றாள். அவ்வளவுதான், உடனேயே க்ருஷ்ணன் அந்த பாரிஜாத மரத்தைப் பிடுங்கி, கருடனின் சிறகுகளின் மத்தியில் வைத்துக் கொண்டு அங்கிருந்துப் புறப்பட்டு விட்டார். இதைக் கண்ட தோட்டத்துக் காவலர்கள், “ஏ கோவிந்தா! இது உன்னால் முடியாதது. இந்த மரம் அம்ருதம் கடைந்த போது பாற்கடலில் கிடைத்தது. தேவராஜனுக்கென்று கொடுக்கப்பட்ட இதை, அவர் தன் மனைவிக்கு மலர்களைக் கொண்டு அழகு படுத்திக் கொள்வதற்காகக் கொடுத்து விட்டார். சசிதேவிக்கு மிகவும் பிடித்த இதை நீ எடுத்துக் கொண்டு வீடு செல்ல முடியாது. மனைவியின் மனம் கோணாமல் நடந்து வரும் தேவராஜர், கையில் வஜ்ரத்தோடும், தேவர்களோடும் உன்னிடம் போர் புரிய வந்து விடுவார். கேடு விளைவிக்கும் செயலை புத்திசாலிகள் செய்ய மாட்டார்கள். இந்த மரத்தை இங்கேயே விட்டு விட்டுச் செல்” என்று அவமதித்துத் தடுத்தனர். இவர்களுக்குக் கண்ணன் பதில் கூறுவதற்குள்ளாகவே, ஸத்யபாமா “யாரிந்த இந்த்ரனும், சசியும். இது கடலைக் கடைந்த போது கிடைத்தது தானே. அம்ருதம், காமதேனு, சந்த்ரன் எனக் கடலில் கிடைத்த எல்லா பொருளும், பொதுவாயிருக்கையில், இதை மட்டும் அந்த சசிதேவி எடுத்துச் செல்வதைத் தடுத்தால், அது அவள் கணவனின் பலத்தில் கொண்ட கர்வத்தினால் தான் இருக்க வேண்டும். இப்போது அவளை விட கர்வம் கொண்டுள்ள நான் சொல்வதை உங்கள் ராணியிடம் சென்று சொல்லுங்கள். என்று பின் வருமாறு கூறினாள்.

“சசி தேவியே! என் நாதன் இப்போது உன் தோட்டத்திலிருந்து பாரிஜாத மரத்தை அபகரித்துச் செல்கிறார். நீ உன் பர்த்தாவுக்கு வேண்டியவளாயிருந்து, அவனும் உனக்கடங்கி இருப்பவனாயிருந்தால் இதைத் தடுத்து, மரத்தைக் காத்துக் கொள். உன்னையும், உன் கணவனையும், அவன் தேவர்களை ஆளும் திறனையும் அறிவேன். நான் சாதாரண மனுஷ்ய ஸ்த்ரீ என்று தானே, எனக்கு இந்தப் பாரிஜாதத்தின் பூக்களைத் தராமல் அவமதித்தாய். இப்போது அதே மனுஷ்ய ஸ்த்ரீ, தன் பர்த்தாவைக் கொண்டு இந்தப் பாரிஜாத மரத்தைக் கொண்டு செல்கிறாள். முடிந்தால் உன் கணவனை வந்து தன் பராக்ரமத்தைக் காட்டச் சொல்” என்று அலக்ஷ்யமாகக் கூறினாள். இதை அந்தக் காவலர்களும், சசியிடம் சொல்ல, அவள் இந்த்ரனை மரத்தை மீட்டு வருமாறு உற்சாகப்படுத்த, அவனும் சேனையுடன் புறப்பட்டு விட்டான் கண்ணனிடம் போரிட.. மூண்டது போர். எல்லா தேவர்களும் க்ருஷ்ணன் மீது அஸ்த்ரங்களை ப்ரயோகிக்கத் தொடங்கி விட்டனர். வருணனின் பாசங்களை கருடன் மூக்கால் துண்டிக்க, யமனின் கால தண்டத்தை கண்ணன் ஒடித்து, குபேரனின் பல்லக்கைப் பொடித்து, ஏகாதச ருத்ரர்களின் சூலங்களைத் தன் சக்ரத்தால் நாசமாக்கி, தேவர்களனைவரையும் இவ்வாறே கருடனும், க்ருஷ்ணனும் தோற்கடிக்கின்றனர். தானுட்பட அனைவரின் முயற்சியும் தோல்வியுறவே, இந்த்ரன் வேறு வழியின்றி வஜ்ராயுதத்தை ஏவி விடுகிறான். க்ருஷ்ணன் அதை விளையாட்டாகத் தன் கையில் பற்றிக் கொண்டு, சக்ரத்தை எடுத்துக் கொண்டு தேவேந்த்ரனைத் துரத்தலானான். கருடனும் ஐராவதத்தை அடித்து அயரச் செய்தான்.

அப்போது ஸத்யபாமையும், “ஏ இந்த்ரா! ஓடாதே, நில். இந்த மரத்தை எடுத்துக் கொள். கணவனின் பலத்தில் கர்வம் கொள்வது பெண்களின் இயற்கை. இதில் நானும், உன் மனைவியும் விலக்கல்ல. வீடு தேடி வந்த என்னை உன் மனைவி கௌரவப் படுத்தவில்லை. ஆனால் தன் அழகில் கர்வம் கொண்டு, என்னை மனுஷ்ய ஸ்த்ரீ என அவமதித்தாள். உன் மனைவிக்குப் பாடம் புகட்டவே நான் இவ்வாறு செய்தேன். இந்த மரத்தில் தானே உன் பெருமை இருக்கிறது. இப்போது மனுஷ்ய ஸ்த்ரீ தருகிறேன். மீண்டும் இதன் பூக்களை உன் மனைவியை சூடச் சொல். எனக்குப் பிறர் பொருளான இந்த மரத்தாலும், இதன் பூக்களாலும் ஆக வேண்டியதொன்றுமில்லை. என் பர்த்தாவின் பெருமையைக் காட்டவே, அவரைப் போருக்குத் தூண்டினேன். இதை இப்போது நீயே எடுத்துச் செல்” என்று கூறினாள். வஜ்ரத்தையிழந்து தோல்வியுற்றிருக்கும் போது, இவ்வாறு ஸத்யபாமா கூறிய கடுஞ்சொற்களைக் கேட்டு மனம் நொந்த இந்த்ரன், “கொடியவளே! இது எனக்குத் தோல்வியல்ல. அவமானமுமல்ல. உங்களின் நண்பனான என்னை அவமதித்தது போதும். ஜகத்காரணனிடமல்லவா நான் தோற்றிருக்கிறேன். மஹான்களாலும் அறிய முடியாதவனிவன். ஸூக்ஷ்மமானவன். உற்பத்தியில்லாதவன். கர்ம சம்பந்தமற்றவன். சாச்வதமானவன். இவனை யார்தான் ஜயிக்க முடியும்” என்று துதிக்கலானான்.

05_31. தேவேந்த்ரனின் ஸ்துதியைக் கேட்டு, அர்த்தத்துடன் அமர்க்களமாகச் சிரித்தான் கண்ணன். ஒவ்வொரு முறையும் சண்டை செய்வதும், பிறகு தோற்றதும் துதிப்பதும் இந்த்ரனிடம் முதல் அனுபவமல்லவே. “தேவராஜரே! நீங்களோ தேவன். நானோ சாதாரண மனிதன். என் தவறை
தேவர்களான தாங்கள் தான் மன்னிக்க வேண்டும். என்னைப் பொறுத்தருளுங்கள். இந்த மரம் எனக்கு வேண்டாம். ஸத்யபாமா கேட்டதால் தான் நான் இதைப் பறித்தேன். இதையும், என் மீது நீங்கள் ஏவிய, சத்ருக்களை அழிக்கும் உங்கள் வஜ்ரத்தையும் நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்” என்று ஏளனமாகக் கூறினான் கண்ணன். மிகுந்த வெட்கம் கொண்ட இந்த்ரன், “க்ருஷ்ணா! என்னை மேலும் மயக்காதே. ஏன் இப்படிச் செய்கிறாய். உன்னை நானறிவேன். ஆனால் இப்போதுள்ள உன் நிலையில் தான். உன்னுடைய ஸூக்ஷ்ம ரூபத்தையல்ல. இந்த மரத்தை நீயே த்வாரகைக்
கொண்டு செல். நீ பூலோகத்தில் இருக்கும் வரை இதுவும் அங்கு இருக்கும். நீயே உலகைப் படைத்துக் காப்பவன். துஷ்டர்களை சிக்ஷிப்பவனும் நீயே. தேவராஜனும் நீயே. நானல்ல. நீயே ஜகன்னாதன். விஷ்ணுவும் நீயே. பஞ்சாயுதன் கொண்ட பரமனும் நீயே. என் அபராதத்தைப்
பொறுத்தருள்” என்று வேண்டிப் பணிந்தான்.க்ருஷ்ணனும் அதையேற்று பாரிஜாத வ்ருக்ஷத்துடன் அனைவரும் புகழ கருடனுடன் த்வாரகை திரும்பினான். த்வாரகைக்கு மேலே வந்ததும் தன் சங்கத்தை முழக்கி, மக்களைத் தன் வரவால் மகிழச் செய்தான். பாரிஜாத மரத்தை ஸத்யபாமையின் தோட்டத்தில் நட்டான். மூன்று யோஜனை தூரம் மணம் பரப்பும் அதன் அழகில் மயங்கி எவரும் அதனருகில் சென்று ரஸிக்கின்றனர். ஒவ்வொருவருக்கும் அதன் சக்தியால் முற்பிறவியும் ஞாபகத்திற்கு வருகிறது. சரீரம் தேவசரீரம் போல் பொலிவு பெறுகிறது. இப்படி கொண்டாட்டத்திலிருக்கும் த்வாரகையில், க்ருஷ்ணன் தான்
ப்ராக்ஜ்யோதிஷத்திலிருந்து வெற்றி கொண்ட யானை, குதிரை என செல்வங்களைத் தன் பந்துக்களோடுப் பங்கிட்டுக் கொள்கிறான். நரகாஸுரனின் சிறையில் இருந்து விடுவித்த பதினாறாயிரம் பெண்களையும் அவர்கள் விரும்பியபடியே ஒரு சுப வேளையில் தானே விதிப்படி விவாஹம் செய்து கொண்டான் க்ருஷ்ணன். திருமண முஹூர்த்தத்தின் போதும், அதன் பின்னும் ஒவ்வொருவருடனும் அவரவர் மனம் விரும்பியபடி உருவங்களை ஏற்படுத்திக் கொண்டு, அவர்கள் மாளிகைகளில் மகிழ்வித்துக் கொண்டிருந்தான்.

ஸ்ரீ விஷ்ணு புராணம் -நான்காம் அம்சம்-ஸ்ரீ சீதாராம ஸ்வாமிகள் தொகுத்தவை–

February 24, 2023

04_01. அரசர்களின் வம்சங்களைப் பற்றிக்கூறுமாறு மைத்ரேயர் கேட்க, பராசரர் “ப்ரஹ்மத்தை முதலாகக் கொண்ட இந்த மனு வம்சத்தின் வரலாற்றை கேட்பவர்களின் வம்சம் மேன்மேலும் வளரும். ஸகல பாபங்களும் அகலும். ரிக், யஜுர், ஸாமமயனான விஷ்ணுவிடம் ஹிரண்யகர்ப்பனான ப்ரஹ்மாவும், அவர் வலக்கால் கட்டை விரலிலிருந்து தக்ஷ ப்ரஜாபதியும் தோன்றினார். தக்ஷனின் புதல்வி அதிதியின் பிள்ளை விவஸ்வான். விவஸ்வான் பிள்ளை மனு. மனுவிற்கு இக்ஷ்வாகு, ந்ருகன், த்ருஷ்டன், சர்யாதி, நரிஷ்யந்தன், நாபாகன், திஷ்டன், கரூசன், ப்ருஷத்ரன் என்று ஒன்பது புத்ரர்கள்.

இவர்கள் பிறப்பதற்கு முன் மனு மித்ராவருணர்களை உத்தேஸித்து புத்ரனை வேண்டி ஒரு யாகம் செய்த போது, அவர் மனைவி ஹோதாவிடம் சென்று புத்ரியை வேண்டுமாறு கூறினாள். இந்தக் குழப்பத்தால் இளா என்ற பெண் யாகப் பயனாகப் பிறந்து, உடனே மித்ர வருணர்களின் ஆசியால் ஸுத்யும்னன் என்ற ஆண் பிள்ளையாகவும் மாறிவிட்டாள். முன்பொரு ஸமயம் பரமேச்வரனும், பார்வதியும் ஒரு காட்டில் விளையாடிக் கொண்டிருந்த பொது சில மஹரிஷிகள் அங்கு வந்து விட்டனர். வெட்கமும், கோபமும் கொண்ட பார்வதி குடிசையில் மறைந்து கொண்டாள். நிலைமையைப் புரிந்து கொண்ட ரிஷிகளும் வெளியே சென்று விட்டனர். பார்வதியை த்ருப்தி செய்வதற்காக அந்தக் காட்டில் இனி யார் நுழைந்தாலும் அவர்கள் பெண்ணாக மாறி விடுவர் என்று வரம் கொடுத்தார்.

வேட்டைக்குச் சென்றிருந்த ஸுத்யும்னன் தற்செயலாக இதே காட்டிற்குள் நுழைந்து விட மீண்டும் பெண்ணாகி விடுகிறான். இந்தக் காட்டிற்கு இளாவ்ருதம் என்று பெயர். வெட்கமும், துயரமும் கொண்ட அவன்(ள்) சந்த்ரனின் புத்ரனான புதனுடைய ஆச்ரமத்தினருகில் சுற்றிக் கொண்டிருந்தான். அவளிடம் புதன் புரூரவஸ் என்ற பிள்ளையைப் பெற்றான். இதன் பின் மஹரிஷிகளின் பெருமை வாய்ந்த ஒரு யாகத்தால் ஸுத்யும்னன் மீண்டும் ஆண்மை எய்தினான். இவனுக்கு இப்போது உத்கலன், கயன், விதானன் என்ற மூன்று பிள்ளைகள் பிறந்தனர். ஆண், பெண் குழப்பத்தால் ஸுத்யும்னனுக்கு அரசுரிமை வாய்க்கவில்லை.

வஸிஷ்டரின் உத்தரவால் தந்தையிடமிருந்து கிடைத்த ப்ரதிஷ்டானம் என்ற நகரத்திற்குத் தனக்குப் பின் புரூரவஸ்ஸை மன்னனாக்கினான் இளா என்ற ஸுத்யும்னன். மனுவின் மற்றொரு புத்ரனான ப்ருஷத்ரன் ஆசார்யர் வஸிஷ்டரின் பசுக்களைக் காத்துக் கொண்டு இருந்தபோது ஒரு நாள் இரவு ஒரு புலி பசுக்களை உண்பதற்காக அவற்றுள் புகுந்து விட்டது. அப்போது தவறுதலாக ஒரு பசுவை ப்ருஷத்ரன் கொன்று விட, வஸிஷ்டர் அவனை சூத்ரனாக சபித்து விடுகிறார். மற்றொருவனான கரூசன் கரூச தேசத்தை ஆண்டு வந்தான். அவனுக்கு பராக்ரமர்களான க்ஷத்ரியர்கள் பிறந்தனர். மற்றொருவனான த்ருஷ்டனுக்கு நாபாகனும், அவனுக்குப் பலந்தனனும் பிறந்தான். தாழ்ந்த செய்கைகளால் வைச்யத் தன்மை அடைந்த நாபாகனால் பலந்தனனுக்கும் க்ஷத்ரியத் தன்மை போய்விட்டது.

பலந்தனனுக்கு வத்ஸப்ரீதியும், அவனுக்கு ப்ராம்சுவும், அவனுக்கு ப்ரஜாபதியும், அவனுக்கு கனிமித்ரனும், அவனுக்கு சாக்ஷுஷனும், அவனுக்கு விம்சனும், அவனுக்கு விவிம்சகனும், அவனுக்கு கநிநேத்ரனும், அவனுக்கு அதிவிபூதியும், அவனுக்கு கரந்தமனும், அவனுக்கு அவிக்ஷித்தும், அவிக்ஷித்துக்கு மருத்தனும் பிறந்தனர். மருத்தன் செய்த யாகங்களில் கருவிகள் அனைத்தும் தங்கத்தாலானவை. இந்த்ரன் ஸோமபானத்தாலும், ப்ராஹ்மணர்கள் தக்ஷிணையாலும் இந்த யாகத்தில் த்ருப்தி அடைந்தனர். இவன் சபையில் தேவர்கள் இருந்தனர். இந்த மருத்தன் சக்ரவர்த்தியாக விளங்கினான். இவனுக்கு நரிஷ்யந்தனும், அவனுக்கு தமனும், அவனுக்கு ராஜவர்தனனும், அவனுக்கு ஸுவ்ருத்தியும், அவனுக்குக் கேவலனும், அவனுக்கு ஸுத்ருதியும், அவனுக்கு நரனும், அவனுக்கு சந்த்ரனும், அவனுக்கு கேவலனும், அவனுக்கு பந்துமானும், அவனுக்கு வேகவானும், அவனுக்கு புதனும், அவனுக்கு த்ருணபிந்துவும், அவனுக்கு ஜலபிலா என்ற பெண்ணும் பிறந்தனர்.

த்ருணபிந்துவை அலம்புஸா என்ற அப்ஸரஸ்ஸுக்கும் விசாலன் பிறந்தான். அவன் விசாலன் எனும் நகரை நிர்மாணித்தான். இவனுக்கு ஹேமசந்த்ரனும், அவனுக்கு சந்த்ரனும், அவனுக்கு தூம்ராக்ஷனும், அவனுக்கு ஸ்ருஞ்ஜயனும், அவனுக்கு ஸஹதேவனும், அவனுக்கு க்ருசாச்வனும், அவனுக்கு ஸோமதத்தனும் பிறந்தனர். இந்த ஸோமதத்தன் பத்து அச்வமேத யாகங்களைச் செய்தான். இவனுக்கு ஜனமேஜயன் பிறந்தான். இந்த அரசர்கள் அனைவரும் விசாலா நகரை ஆண்டவர்கள். இதேபோல் மனுவின் மற்றொரு புத்ரனான சர்யாதிக்கு ஸுகன்யா என்ற பெண்ணும், ஆனர்த்தன் என்ற புத்ரனும் பிறந்தனர். ஸுகன்யா ச்யவன மஹரிஷியை மணந்தாள்.

ஆனர்த்தனுக்கு ரேவதன் பிறந்தான். அவன் குதஸ்தலீ நகரிலிருந்து கொண்டு ஆனர்த்த ராஜ்யத்தை ஆண்டு வந்தான். இவனுக்கு ரைவதனும், அவனுக்கு ககுத்மி முதலான நூறு புத்ரர்கள் பிறந்தனர். ககுத்மிக்கு ரேவதி என்ற பெண் பிறந்தாள். அவளுக்கு யாரை மணம் முடிப்பது என்பதைக் கேட்கலாம் என்று ப்ரஹ்மலோகத்திற்கு அழைத்துச் சென்ற ககுத்மி அங்கு ஹாஹா, ஹூஹூ என்ற இரு கந்தர்வர்கள் பாடிக் கொண்டிருந்ததை மனம் லயித்து கேட்டுக் கொண்டிருந்தான். அதிதானம் என்ற அந்த ஸங்கீதம் சித்ரை, தக்ஷிணை, வார்த்திகைகளில் சுற்றிக் கொண்டு அனேக யுகங்கள் பாடப்பட்டு வந்தது. ககுத்மியும் அவ்வளவு காலமும், காலம் போவதறியாமல் அதை விரும்பிக் கேட்டுக் கொண்டிருந்தான்.

இது முடிந்ததும் ப்ரஹ்மாவிடம் சென்று தன் பெண்ணுக்கு யாரை மணம் முடிக்கலாம் என்று கேட்ட அரசனிடம், நீர் யார், யாரைத் தேர்ந்தெடுதுள்ளீர்கள் என்று ப்ரஹ்மா கேட்க, அரசன் சிலரைக் கூறுகிறான். தலையைக் கவிழ்த்துக் கொண்டு சிரிப்புடன் ப்ரஹ்மா கூறலானார்: “அரசே! நீங்கள் கூறும் வரன்களின் ஸந்ததிகள் கூட இப்போது பூலோகத்தில் இல்லை. பூலோகத்தில் நீங்கள் இங்கு கச்சேரியில் லயித்திருந்த காலத்தில் பல சதுர் யுகங்கள் சென்று விட்டன. இப்போது வைவஸ்வத மனுவின் இருபத்தெட்டாவது சதுர்யுகத்தில் கலியுகம் நெருங்கிய வண்ணம் இருக்கிறது. ஆகையால் வேறு ஒருவனுக்குத் தான் உன் பெண்ணை நீ தர வேண்டும். உன் சுற்றம், பொருள், வேலையாட்கள் என எதுவும் இப்போது இல்லை”.

வரன்கள் கிடைக்காததற்கு வருந்திய ககுத்மி ப்ரஹ்மாவிடமே தகுந்த வரனைச் சொல்ல வேண்டினான். “அரசே! பூமியில் விஷ்ணுவே இப்போது அம்சமாய் அவதரித்திருக்கிறார். அவருடைய ஆதி, மத்யம், அந்தம், ஸ்வரூபம், ப்ரபாவம், பலம் இவைகளை நானும் அறிந்திலன். காலமும் அவருக்கு எந்த மாறுதலையும் உண்டாக்குவதில்லை. சரீரமும், அழிவும், நாம, ரூபங்களுமற்றவரவர். அவர் அனுக்ரஹத்தாலேயே நான் ஸ்ருஷ்டியையும், ருத்ரன் ஸ்ம்ஹாரத்தையும் செய்கின்றோம். மற்ற தேவதைகளின் ஸ்வரூபமும் அவரே. அவரிடமே உலகம் நிலைத்துள்ளது. அவரும் எதிலும் நிறைந்துள்ளார். உன் குதஸ்தலி நகரம் இப்போது யாதவர்கள் அரசாளும் த்வாரகையாக உள்ளது. ஆதிசேஷனின் அம்சமாய் அவதரித்திருக்கும் பலதேவனுக்கு உன் பெண்ணை மணம் முடி” என்றார் ப்ரஹ்மா.

குதஸ்தலியை விட முழுதும் வேறுபட்டிருக்கும் த்வாரகையையும், குள்ளமாகவும், சக்தி குறைந்தவர்களாகவும் இருக்கும் மனிதர்களையும் திரும்பிப் பெண்ணுடன் வந்த ககுத்மி கண்டான். ஸமுத்ரத்தின் கரையில் இருந்தது குதஸ்தலி. த்வாரகை ஸமுத்ரத்தின் நடுவில் இருக்கிறது இப்போது. கலப்பையை ஆயுதமாகத் தரித்து, ஸ்படிக மலை போல் வெளுத்து, உயர்ந்து அகன்ற மார்புடன் இருக்கும் பலராமருக்குத் தன் பெண் ரேவதியை மணம் முடித்தான் ககுத்மி. அவரும் ஏற்றுக் கொண்டார். தன்னை விட மிகவும் உயரமாக இருந்த பெண்ணை கலப்பையால் அழுத்தித் தனக்கு உரியவளாக்கிக் கொண்டார் பலராமர். ககுத்மி பின் இமயம் சென்று தவம் புரிந்தார்.

04_02. ககுத்மி ப்ரஹ்மலோகம் சென்றிருந்த போது குதஸ்தலியை புண்யஜனர் என்ற ராக்ஷஸக் கூட்டம் அவர் தம்பிகளை நான்கு திசைகளிலும் விரட்டி விட்டு தாங்கள் ஆண்டனர். தம்பிகளில் ஒருவனான வ்ருஷ்டனிடமிருந்து வார்ஷ்டகம் என்ற ராஜ குலம் உண்டாயிற்று. மனுவின் மற்றொரு புதல்வனான நாபாகனுக்கு நாபாகனும், அவனுக்கு அம்பரீஷனும், அவனுக்கு விரூபனும், அவனுக்கு ப்ருஷதச்வனும், அவனுக்கு ரதீதரனும் பிறந்தனர். ரதீரதனின் மனைவியிடம் அங்கிரஸ் என்ற ப்ராஹ்மணர் ப்ரம்ஹ வர்ச்சஸ் உள்ள பிள்ளைகளை உண்டாக்கவே, அவர்கள் ப்ராஹ்மண்யமும், க்ஷத்ரியத்வமும் கலந்தவர்கள் ஆனார்கள்.

இதேபோல் ஒரு ஸமயம் மனு தும்மியபோது அவர் மூக்கிலிருந்து தோன்றிய இக்ஷ்வாகுவிற்கு நூறு பிள்ளைகள் பிறந்தனர். விகுக்ஷி, நிமி, தண்டன் என்ற மூவரே அதில் முக்யமாயிருந்தனர். சகுனி முதலான ஐம்பது பேர்கள் உத்தராபதத்திற்கும், நாற்பத்தெட்டு பிள்ளைகள் தக்ஷிணாபதமென்ற நாட்டிற்கும் அரசராயினர். ஒரு ஸமயம் காட்டிற்கு வேட்டைக்குச் சென்றிருந்த விகுக்ஷி பல ம்ருகங்களைக் கொன்று மிகவும் களைத்திருந்தான். தந்தை அஷ்டகை ச்ராத்தத்திற்கு மாம்ஸம் கொண்டு வரச் சொல்லி உத்தரவிட்டிருந்ததை நினைவில் கொண்ட அவன் பசியால் சேமித்த விலங்குகளுள் முயலை மட்டும் தான் சாப்பிட்டு விட்டு, மற்ற அனைத்தையும் தந்தையிடம் ச்ராத்தத்திற்காகக் கொண்டு வந்து தந்தான்.

அவற்றை பரிக்ஷித்த வஸிஷ்டர் “அரசே! ச்ராத்தத்திற்கு என ஸம்பாதித்த இந்த மாம்ஸங்களுள் ஒன்றான முயல் மாம்ஸத்தை உன்னுடைய துராத்மாவான இந்த பிள்ளை தின்று விட்டதால் இவையனைத்துமே தோஷம் காரணமாக விலக்கத்தக்கவை, அசுத்தமாகிவிட்டன இவை” என்று கூறி விட்டார். இதனால் விகுக்ஷி சசாதன் (முயலைத் தின்றவன்) என்று அழைக்கப்பட்டான். இக்ஷ்வாகுவும் அவனைக் கைவிட்டான். இக்ஷ்வாகுவின் இறப்பிற்குப் பின் இவன் அரசாண்டான். புரஞ்ஜயன் என்ற புத்ரனையும் பெற்றான்.

முன்பொரு ஸமயம் த்ரேதா யுகத்தில் பலத்தால் அஸுரர்கள் தேவர்களை வென்றனர். விஷ்ணுவை ஆராதித்த அவர்களிடம் “சசாதனுடைய புத்ரன் புரஞ்ஜயன் உடலில் நான் புகுந்து அஸுரர்களை வெல்வேன். எனவே நீங்கள் அவனிடம் சென்று உதவி கோருங்கள்” என்றார். தேவர்களின் வேண்டுதலைக் கேட்ட புரஞ்ஜயன் “நூறு அச்வமேதங்கள் செய்த உங்கள் தலைவன் இந்த்ரன் எனக்கு வாஹமானால் ஒழிய அந்த அஸுரர்களை வெல்வது கடினம்” என்று நிபந்தனை விதித்தான். இந்த்ரன் இதற்குடன்பட்டு வ்ருஷபமானான் (எருது). எருதின் முதுகுக் கொண்டையின் (ககுத்)மீதிருந்து போர் புரிந்து வென்றதால், புரஞ்ஜயனுக்கு ககுத்ஸ்தன் என்ற பெயர் நிலைத்தது. இவனுக்கு அநேநஸ் என்பவனும், அவனுக்கு ப்ருதுவும், அவனுக்கு விஷ்டராச்வனும், அவனுக்கு யுவனாச்வனும் பிறந்தனர்.

யுவனாச்வனுக்கு சந்த்ராம்சம் பொருந்தியிருந்ததால் சாந்த்ரன் எனப்பட்டான். அவனுக்கு சாபஸ்தன் பிறந்து சாபஸ்தீ நகரை நிர்மாணித்தான். இவனுக்கு ப்ருஹதச்வனும், அவனுக்குக் குவலயாச்வனும் பிறந்தனர். அவன் உதங்க மஹரிஷியின் பகைவனான துந்து என்ற அஸுரனைத் தன் இருபத்தோராயிரம் புத்ரர்களோடு சென்று கொன்று, துந்துமாரன் என்ற பெயர் கொண்டான். அந்த சண்டையில் த்ருடாச்வன், சந்த்ராச்வன், கபிலாச்வன் என்ற மூன்று பிள்ளைகளைத் தவிர மீதம் ஆயிரமாயிரம் புத்ரர்களும் துந்துவின் மூச்சுக் காற்றால் இறந்தனர். த்ருடாச்வனுக்கு ஹர்யச்வனும், அவனுக்கு நிகும்பனும், அவனுக்கு அமிதாச்வனும், அவனுக்கு க்ருசாச்வனும், அவனுக்கு ப்ரஸேனஜித்தும், அவனுக்கு யுவனாச்வனும் பிறந்தனர்.

இந்த யுவனாச்வனுக்கு நெடுங்காலமாக புத்ரன் இல்லாமையால் வெறுத்துப் போய், காட்டிலும், ரிஷிகளின் ஆச்ரமங்களிலுமே இவன் திரிந்து கொண்டிருந்தான். இவனிடம் கருணை கொண்ட மஹரிஷிகள் தாங்களாகவே அவனுக்கு ஒரு புத்ரனை வேண்டி இஷ்டியைச்(வேள்வி) செய்தனர். நள்ளிரவில் அந்த வேள்வி முடியவே மந்த்ர தீர்த்தம் நிரம்பிய கலசத்தை யாக வேதியின் நடுவில் வைத்து விட்டு, மஹரிஷிகள் அயர்ந்து விட்டனர். அப்போது பெரும் தாஹத்துடன் அங்கு வந்த யுவனாச்வன் தூங்குபவர்களை எழுப்ப வேண்டாம் என்று, பராக்ரமம் வாய்ந்த பிள்ளையைப் பெற அவன் மனைவி அருந்த வேண்டிய அந்த மந்த்ர தீர்த்தத்தைத் தான் குடித்து விடுகிறான்.

முனிவர்கள் விஷயமறிந்து வருத்தமடைந்து கொண்டிருக்க, அவன் வயிற்றில் ஒரு கர்ப்பம் உண்டாகி, காலத்தில் வலக்கைக் கட்டை விரலாலேயே யுவனாச்வன் வயிற்றைக் கிழித்துக் கொண்டு ஒரு குழந்தை வெளியேயும் வந்து விடுகிறது. யுவனாச்வன் இறந்து விடுகிறான். இந்தக் குழந்தைக்கு யார் பால் கொடுப்பார்கள் என்று முனிவர்கள் வருந்தும்போது இந்த்ரன் “என்னைத் தாயாகக் கொண்டு இது பாலுண்ணும்” என்று கூறி தன் பவித்ர (மோதிர)விரலால் அம்ருதத்தை வர்ஷிக்க, அதை உண்ட குழந்தையும் விரைவில் வளர்ந்தது. இந்தக் குழந்தையே மாந்தாதா என்ற பெயரில் பின்னர் சக்ரவர்த்தியாகி ஸூர்யன் உதித்து அஸ்தமிக்கும் எல்லை வரை ஆண்டது. இவனுக்கும் சசிபிந்து என்பவனின் பெண்ணான இந்துமதிக்கும் புருகுத்ஸன், அம்பரீஷன், முசுகுந்தன் என்ற மூன்று பிள்ளைகளும், ஐம்பது பெண்களும் பிறந்தனர்.

இந்த நேரத்தில் ரிக் வேதியான ஸௌபரி மஹரிஷி, ஜலத்திற்குள் பனிரெண்டு வருஷமாகத் தவம் செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வஸித்து வந்த ஸம்மதன் என்ற மீன்களின் அரசன் தன் பிள்ளை, பேரன்களோடு அங்குமிங்கும் உல்லாஸமாக அங்குமிங்கும் விளையாடி மகிழ்ந்து கொண்டிருந்ததில் தன் தவத்தைக் கலைத்துக் கொண்ட ஸௌபரி மஹரிஷி மீன்கள் ஸம்மதன் மேல் அங்குமிங்கும் விளையாடுவது போல தானும் பிள்ளை, பேரன்களோடு விளையாட வேண்டும் என்ற எண்ணம் கொண்டார். வந்தார் மாந்தாதாவிடம். அவனின் பூஜை, உபஸரிப்புகளை ஏற்றுக்கொண்டு “அரசே! நான் திருமணம் செய்ய நினைத்திருக்கிறேன். எனக்குப் பெண் தா.

எத்தனையே அரசர்கள் பெண் வைத்துக் கொண்டிருக்கிறார்கள். எனினும் ககுத்ஸ்த வம்சத்தவர்களே இரப்போரின் மன விருப்பத்தை நிறைவேற்றுபவர்கள் என்று உன்னிடம் நான் வந்துள்ளேன். உங்களிடம் வந்தவர்கள் வீணே திரும்புவதில்லை. உனக்கோ ஐம்பது பெண்கள். அவர்களில் ஒரு பெண்ணையாவது எனக்குக் கொடு. என் துக்கத்தைப் போக்கு” என்றார். உடல் தளர்ந்த கிழவரின் வேண்டுகோளுக்கும், அவர் கோபத்துக்கும் பயந்து அவன் யோஸிப்பதைக் கண்ட மஹரிஷி “பெண்ணாகப் பிறந்தால் யாருக்காவது கொடுத்துதானே ஆக வேண்டும். நான் என்ன தவறாகக் கேட்டு விட்டேன். உனக்கும், எனக்கும் லாபமே, கொடுத்து விடு” என்றார்.

அரசன் உசிதமாக “நற்குடியில் பிறந்த எவரையாவது தாங்களே எங்கள் பெண்கள் தேர்ந்தெடுப்பதே எங்கள் குல வழக்கம். நான் இதில் என்ன செய்ய. நீங்களோ கேட்டு விட்டீர்கள். எனக்கு ஒன்றும் தோன்றவில்லை, அதனால் தான் யோசித்துக் கொண்டிருக்கிறேன்” என்றான். முனிவரா விடுவார். “சரி, குடும்ப வழக்கத்தைக் கெடுக்க வேண்டாம். என்னை அந்தப் புரத்திற்குள் விடச்சொல். எந்தப் பெண் என்னைத் தானாக வரிக்கிறாளோ அவளையே நான் மணக்கிறேன். ஒருவரும் வரிக்கவில்லையெனில், இந்த கிழப்பருவத்திற்கு இது வீண் என்று விட்டு விடுகிறேன்” என்றார். இந்தக் கிழவரை எவள் வரிக்கப் போகிறாள் என்று அரசனும் காவலாளியைக் கூப்பிட்டு முனிவரை அந்தப்புரத்திற்கு அழைத்துச் செல்லச் சொல்கிறான்.

அவனும் அவ்விடத்திற்கு அழைத்துச் சென்று “இவரை வரிப்பவர் எவராயினும் மன்னர் மறுப்பின்றி அவருக்கே இவரை மணம் முடிப்பார்” என்று அறிவிக்கிறான். முனிவர் இப்போது எவரும் வியக்கும், விரும்பும் அழகையும், உருவத்தையும் கொள்கிறார். ஐம்பது இளவரசிகளும் போட்டிப் போட்டுக் கொண்டு அவரிடம் மனதைப் பறி கொடுக்கின்றனர். இந்த விஷயத்தை அறிந்த மன்னன், வேறு வழியின்றி தன் வார்த்தையின் படி தன் ஐம்பது பெண்களையும் அவருக்கே விவாஹம் செய்து வைக்கிறான். அனைவரும் முனிவருடன் ஆச்ரமம் சென்று விடுகின்றனர்.

இளவரசிகளான அவர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக குடியிருப்புகளை உண்டாக்கித்தர நினைத்த மஹரிஷி விச்வகர்மாவை உடனே அழைத்து “பறவைகள் சப்தமிடும் தாமரைக் குளங்கள், பூச்செடிகள், பழ மரங்கள், நந்தவனங்கள், பரந்த மெத்தை, மேடைகள், மாடங்கள், கூடங்கள் நிறைந்த தனித்தனி மாளிகைகளை உண்டாக்கித் தர வேண்டும்” என உத்தரவிடுகிறார். அப்படியே செய்து முடிக்கிறான் விச்வகர்மா. நந்தனன் என்ற நித்ய நிதியையும் படைக்கிறார் மஹரிஷி. அவைகளோடும், பல போகங்களோடும், அவர்களோடும் அதிதி பூஜைகளோடும், மனம் மகிழ்வோடு உள்ள வேலைக் காரர்களோடும் காலத்தைக் கழித்து வந்தனர்.

ஆண்டுகள் கழிகின்றன. பெண்கள் ஸந்தோஷமாக இருக்கிறார்களா என்ற அறிய விரும்பிய மாந்தாதா மாப்பிள்ளையான ஸௌபரி மஹரிஷியின் ஆச்ரமத்திற்கு வருகிறான். வசதிகளைக் கண்டு வியந்தபடி ஒவ்வொரு பெண்ணின் மாளிகைக்கும் சென்று உபசரிப்புகளை ஏற்றுக் கொண்டு அவர்களை நலம் விசாரிக்கிறான். அனைவருமே அப்பாவின் ஆசியில் மிகவும் உல்லாசமாகவும், த்ருப்தியுடன் இருப்பதாகவும் கூறுகின்றனர். மேலும் ஒவ்வொருவருமே மஹரிஷி எப்போதும் தங்களுடனே இருப்பதாகவும், எனவே மற்ற ஸஹோதரிகளைப் பற்றி இது குறித்து வருந்துவதாகவும் கூறுகின்றனர். இதைக் கேட்டு ஆச்சர்யமடைந்த மன்னன் மஹரிஷியிடமும் சென்று அவரைப் பூஜித்து, கொண்டாடுகிறான்.

“தேவரீருடைய மஹிமையை நன்கு அறிகிறேன். இத்தகைய செல்வங்களும், சிறப்புகளும் வேறெங்கும் நான் கண்டதில்லை, தங்களின் தவத்தின் சக்தியைப் புரிந்து கொண்டேன்” என்று அவரைப் பலவாறு புகழ்ந்து விட்டு, சிலகாலம் தானும் அங்கு இருந்து அவைகளை அனுபவித்து விட்டு, நகருக்குத் திரும்புகிறான். நூற்றைம்பது குழந்தைகளுக்குத் தகப்பனாகிறார் ஸௌபரி மஹரிஷி. கொஞ்சி மகிழ்கிறார். அவர்கள் சிரிப்பையும், விளையாட்டையும், ஸேஷ்டைகளையும், தவழ்வதையும், நடப்பதையும் கண்டு ஸந்தோஷிக்கிறார். அவர்களின் பல்வேறு பருவங்களைப் பற்றி யோசித்தும் மகிழ்கிறார். இப்படி சிந்தித்துக் கொண்டிருக்கையில் ஒரு ஸமயம் அவருக்கு விழிப்பு வருகிறது.

“மோஹம் வளர்ந்து விட்டது, எவ்வளவு லக்ஷம் வருஷங்கள் கழிந்தாலும் இந்த ஆசைகள் முடியாது போலிருக்கிறதே. பிள்ளைகளைப் பார்த்தால், பேரன்களைப் பார்க்க வேண்டும் என்றும், அதன் பின் கொள்ளுப் பேரன்களைப் பார்க்க வேண்டும் என்றும் நீண்டு கொண்டே தான் இருக்கிறது. ஒவ்வொரு ஆசையும் பூர்த்தியானதும், புதிதாக இன்னொரு ஆசை பிறக்கிறது. மரணத்தின் போதுதான் இவைகளுக்கு முடிவு போலும். தவம் செய்து கொண்டிருந்த நான் மீனின் ஸஹவாசத்தால் இப்படி அழிந்து விட்டேனே. இனி எவரோடும் கூட்டு வைக்கக் கூடாது. அது பல தோஷங்களை உண்டாக்குகிறது. ஒரு மனைவியோடு இருப்பவனுக்கே பல கஷ்டங்கள் இருக்கும் போது, பலரை மணக்க நினைத்தேனே.

ஆஹா, எவ்வளவு தூரம் வந்து விட்டேன். யோகம், ஸித்திகளைப் பெற்றவர்களுக்கே ஸஹவாஸம் இவ்வளவு கஷ்டங்களைத் தருமென்றால், அல்பர்கள் இப்படிப்பட்டக் கூட்டுறவால் பதிதராகவே ஆகிவிடுவரே” இப்படிப் பலவாறு புலம்பி முடிவில் ஒரு முடிவுக்கு வந்தார். லோக குருவான விஷ்ணுவே இதற்கு கதி. அவனையே மீண்டும் சரணடைந்து தவத்தால் இந்த கஷ்டங்களை விட்டு விலகுவேன் என்று முடிவு செய்து போகங்களைத் துறந்து, மனைவிகளோடு வானப்ரஸ்தராகி, பல தர்மங்களை வனத்தில் அனுஷ்டித்து, பக்வம் அடைந்ததாக உணர்ந்த போது அக்னி ஹோத்ர அக்னிகளை தன் ஆத்மாவில் முடிந்து, ஸன்யாஸ ஆச்ரமத்திலிருந்து அழிவில்லாத மோக்ஷத்தையும் அடைந்தார்.

இந்த ஸௌபரி மஹரிஷியின் சரிதத்தை நினைப்பவனும், படிப்பவனும், படிக்கச் செய்பவனும், கேட்பவனும், கேட்கச் செய்பவனும், மனதில் வைப்பவனும், எழுதுபவனும், எழுதச் செய்பவனும், கற்பவன், கற்பிப்பவன் என அனைவரும் எட்டு பிறப்புக்கள் வரை தீய சிந்தையும், தீய ஒழுக்கமும் அண்டாது வாழ்வார்கள். அத்தனை புண்யமானது இந்த சரிதம்.

04_03. மாந்தாதாவின் மகன்களுள் அம்பரீஷனுக்கு யுவநாச்வனும், அவனுக்கு ஹரிதனும் பிறந்தனர். இவனைக் கொண்டே அங்கிரஸ்ஸுக்கள் ஹாரீதர்கள் என்று ஆனார்கள். ஒரு ஸமயம் ரஸாதலத்தில் இருந்த நாகர்களை காச்யபருக்கும், அவர் மனைவி முனிக்கும் பிறந்தவர்களான மௌனேயர் என்ற ஆறு கோடி கந்தர்கவர்கள் வென்று அவர்களின் உயர்ந்த ரத்னங்களையும், ஆட்சியையும் கைப்பற்றினார்கள். நாகர்கள் இது பற்றி மஹாவிஷ்ணுவிடம் முறையிட அவர்கள் ப்ரார்த்தனைக்கு மனமிறங்கிய பெருமான் தானே மாந்தாதாவின் மகனான புருகுத்ஸனிடம் ப்ரவேசித்து அந்த துஷ்ட கந்தர்வர்களை அழித்து, ஆட்சியை மீண்டும் நாகர்களுக்கேக் கொடுப்பதாகக் கூறினார்.

இதைக் கேட்ட நாகர்களும் பெரிதும் மகிழ்ந்து தங்கள் ஸஹோதரியான நர்மதையை புருகுத்ஸனுக்கு மனைவியாக்கி, அவனை நாகலோகத்திற்கு அழைத்து வந்தனர். மஹாவிஷ்ணுவின் அனுக்ரஹத்தால் புருகுத்ஸனும் மௌனேயர்களை அழித்து, ஆட்சியை மீண்டும் நாகர்களுக்கு அளித்து விட்டுத் தன் நகரம் திரும்பினான். மிகவும் ஸந்தோஷப்பட்ட நாகர்கள் நன்றிக்கடனாக “நர்மதையின் பெயரைக் கூறுபவனையும், மனதில் நினைப்பவனையும் எந்த விஷமும் ஒன்றும் செய்யாது. விஷத்தையே உண்டாலும் அவனுக்கு அதனால் எந்த பாதிப்பும் இருக்காது. இரவிலும், பகலிலும் எங்கு சென்றாலும் அவனைப் பாம்புகள் கடிக்காது” என்ற வரத்தைக் கொடுத்தனர். புருகுத்ஸனுக்கும் ஸந்ததி விளங்க வரம் அளித்தனர்.

புருகுத்ஸனுக்கும், நர்மதைக்கும் த்ரஸதஸ்யு என்பவனும், அவனுக்கு அனரண்யனும், அவனுக்கு ப்ருஷதச்வனும், அவனுக்கு ஹர்யச்வனும், அவனுக்கு ஹஸ்தனும், அவனுக்கு வஸுமனஸ்ஸும், அவனுக்கு த்ரிதன்வாவும், அவனுக்கு த்ரைய்யாருணியும், அவனுக்கு ஸத்யவ்ரதனும் பிறந்தனர். இதில் அனரன்யனை ராவணன் திக் விஜயம் செய்த போது கொன்று விட்டான். இந்த ஸத்யவ்ரதனே பிறகு த்ரிசங்கு என்று பெயருடன் சண்டாளனானான். சங்கு என்றால் முளையுடன் கூடிய குச்சி. அடித்தால் அப்படி வலிக்கும். மணக்கோலத்தில் இருந்த ப்ராஹ்மணப் பெண்ணைக் கவர்ந்து, அவள் தந்தையிடம் “சண்டாளனாகப் போவாய்” என்ற சாபம் பெற்றது, வஸிஷ்டர் ஹோமத்திற்கு உதவிக் கொண்டிருந்த பசுவைக் கொன்றது, மாம்ஸத்தை ஒரு முறை ப்ரோக்ஷிக்காமலே உண்டது இப்படி மூன்று துக்கம் தரும் பாபங்களை செய்ததால் ஸத்யவ்ரதனுக்கு அவன் தந்தை த்ரையாருணி த்ரிசங்கு என்று பெயர் வைத்தான்.

இப்படி சண்டாளனான த்ரிசங்குவின் காலத்தில் பனிரெண்டு வருஷங்கள் மழை பொய்த்து விட்டது. பெரும் பஞ்சத்தில் மாம்ஸம் சாப்பிட்டுத்தான் உயிர் வாழ வேண்டும் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டனர். மாம்ஸமும் சண்டாளனிடமிருந்து தான் கிடைத்தது. சண்டாளனிடமிருந்து ஒன்றைப் பெறுவது மிகவும் பெரிய பாபம், குற்றம். அந்த நிலை மஹரிஷி விச்வாமித்ரருக்கும் வந்தது. மஹரிஷி இந்தச் செயலுக்குட்பட்டதைக் கண்ட த்ரிசங்கு மிகவும் மனமுடைந்து மஹரிஷிக்காகத் தானே வனத்தில் வேட்டையாடி தினமும் மாம்ஸங்களை கங்கைக் கரையில் ஒரு ஆலமரத்தில் கட்டி வைத்தான். இந்த உதவியால் தன் குடும்பத்துடன் பெரிதும் மகிழ்வுடன் வாழ்ந்த விச்வாமித்ரர் அவனை ஸ்வர்கத்திற்கு அனுப்பி வைத்தார்.

த்ரிசங்குவிற்கு ஹரிச்சந்த்ரனும், அவனுக்கு ரோஹிதாச்வனும், அவனுக்கு ஹரிதனும், அவனுக்கு சஞ்சுவும், அவனுக்கு விஜயன், வஸுதேவன் என்ற இருவரும் பிறந்தனர். விஜயனுக்கு ருருகனும், அவனுக்கு வ்ருகனும், அவனுக்கு பாஹுவும் பிறந்தனர். ஹைஹயர், தாளஜங்கர் முதலான பகைவர்களிடம் போரில் தோற்ற பாஹு கர்ப்பிணியாக இருந்த தன் ஒரு மனைவியுடன் காட்டிற்குள் சென்று விட்டான். அவனின் மற்றொரு மனைவி சக்களத்தியின் கர்ப்பம் அழிவதற்காக விஷத்தைக் கொடுத்து விடுகிறாள். கர்ப்பம் ஏழு வருடங்களாக இந்த விஷத்தால் பிறக்காமல் வயிற்றிலேயே இருந்தது. வயது முதிர்ந்த பாஹுவும் ஒரு ஸமயம் ஔர்வ மஹரிஷியின் ஆச்ரமத்தினருகில் மரணமடைந்து விடுகிறான்.

கணவன் சிதையிலேயே உடன்கட்டை ஏறத் துணிந்த அவனது கர்ப்பிணி மனைவியை ஔர்வர் தடுத்து நிறுத்தி “அம்மா, பிடிவாதம் செய்யாதே. உன் வயிற்றில் பெரும் பூமண்டலாதிபதியும், பராக்ரமசாலியும், யாகங்களைச் செய்பவனும், சத்ருக்களை அழிப்பவனுமான ஒருவன் இருக்கிறான். நீ இறந்தால் அவனும் இறப்பான். எனவே உன்னுடைய இந்த ஸாஹஸத்தை நிறுத்தி விடு” என்று கூறுகிறார். அவளைத் தன் ஆச்ரமத்திற்கே அழைத்துச் செல்கிறார். அங்கு விஷத்துடனேயே பிறக்கும் ஆண் குழந்தைக்கு ஔர்வ மஹரிஷியே சடங்குகளைச் செய்து “ஸகரன்” என்ற பெயரையும் வைத்து, தகுந்த பருவத்தில் உபனயனம் செய்வித்து, ஸகல வித்தைகளையும் கற்பிக்கிறார். ப்ருகு மஹரிஷியிடமிருந்து பெற்ற ஆக்னேயம் என்ற அஸ்த்ரத்தையும் உபதேஸிக்கிறார்.

தகுந்த ஸமயத்தில் தாயிடமிருந்து தன் ராஜ்யம், தந்தை, பகைவர்கள் என அனைத்து விஷயங்களையும் அறிந்து கொண்ட ஸகரன் பெரும் கோபம் கொண்டு, சபதம் பூண்டு ஹைஹயர், தாளஜங்கர் மேலும் அவர்களைச் சேர்ந்த சகர், யவனர், காம்போஜர், பாரதர், பப்லவர் என அனைவரையும் கொன்று குவிக்கிறான். அந்த வம்சங்களைச் சேர்ந்த மிஞ்சியவர்கள் ஸகரனின் குல குருவான வஸிஷ்டரைத் தஞ்சமடைகின்றனர். அவர்களிடம் கருணை கொண்ட அவரும் ஸகரனிடம் வந்து “குழந்தாய்! இவர்களைக் கொல்லாதே, தர்மங்களிலிருந்து விலகினாலே ஒருவன் இறந்தவனாகி விடுகிறான். எனவே உன் சபதத்தைக் காக்க நானே இவர்களை வைதீக தர்மங்களிலிருந்து விலக்குகிறேன். இனி இவர்கள் வெறும் உயிரை மட்டும் கொண்ட பிணங்களே (ஜீவத் ம்ருதர்கள்). இவர்களை நீ விட்டு விடு” என்று கூறுகிறார்.

ஆசார்யரின் வார்த்தைக்குப் பெரிதும் மதிப்பு கொடுத்து அதன்படியே அவர்களின் உயிரை மட்டும் விட்டு, வேஷங்களையும், ஆசாரங்களையும் பறித்து விடுகிறான். யவனர்களின் தலையை மொட்டையடித்து, பாரதர்களின் தலைமயிரைத் தொங்கவிட்டு, பப்லவர்களுக்குக் காரணமின்றி தாடி, மீசை வைத்து, இன்னும் சிலருக்கும் இப்படி எதையாவது செய்து அவர்களை கர்மாக்களைச் செய்வதற்கும் அதிகாரமின்றி வேதாத்யனனம் முதலியவைகளை அழித்து விட்டான். இவர்களே ம்லேச்சர்கள் என்று ஆனார்கள். ப்ராஹ்மணர்களாலும் கைவிடப்பட்டார்கள். ஸகரனும் ஏழு த்வீபங்களையும் எந்த தடைகளுமின்றி நன்கு ஆண்டு வந்தான்.

04_04. ஸகரனின் மனைவிகளாக சாச்யபரின் பெண் ஸுமதியும், விதர்ப்ப ராஜனின் பெண் கேசினீயும் அமைந்தனர். புத்ர பாக்யத்திற்காக இவ்விருவரும் ஔர்வரைப் பூஜித்தனர். அவர்களிடம் கருணை கொண்ட ஔர்வர் ஒருவருக்கு வம்ச வ்ருத்தி செய்யும் ஒருவனையும், மற்றொருவருக்கு அதற்கு உதவாத அறுபதினாயிரம் பிள்ளைகளையும் அனுக்ரஹிப்பதாக அருளினார். விதர்ப்பராஜனின் மகள் கேசினீ குலம் விளங்கும் ஒரு பிள்ளையையும், ஸுமதி அறுபதினாயிரம் பிள்ளைகளையும் இசைந்து பெற்றுக் கொண்டனர். கேசினீக்கு அஸமஞ்ஜஸனும், அவனுக்கு அம்சுமானும் பிறந்தனர்.

அஸமஞ்ஜஸனும், ஸுமதிக்குப் பிறந்த அறுபதினாயிரம் புதல்வர்களும் பிறந்ததிலிருந்தே தீய வழிகளில் சென்று கொண்டிருந்தனர். இளமைத் திமிர் அடங்கியதும் சரியாகிவிடுவார்கள் என்ற ஸகர மன்னனின் எண்ணம் பலிக்கவில்லை. யாகங்களையும், பல தர்ம கார்யங்களையும் அழித்துக் கொண்டிருந்தனர் அஸமஞ்ஜஸனும், அறுபதினாயிரம் பேரும். ஸகரன் வேறு வழியின்றி அஸமஞ்ஜஸனை நாடி கடத்தி விட்டான். அறுபதினாயிரம் பேர்களின் அட்டூழியங்களைப் பொறுக்காத தேவர்கள் மஹாவிஷ்ணுவின் அம்சமாய் அப்போது அவதரித்திருந்த கபில மஹரிஷியிடம் சென்று முறையிட்டனர். இவர்களின் துன்பங்களிலிருந்து உலகைக் காத்தருள வேண்டினர். அவரும் இன்னும் சில நாட்களிலேயே அவர்கள் அழிவார்கள் என்று ஆறுதல் கூறி அனுப்பினார்.

இந்த ஸமயத்தில் ஸகரன் அச்வமேதம் செய்ய ஆரம்பித்தான். யாகக் குதிரையைக் காக்கும் பொறுப்பைத் தன் அறுபதினாயிரம் புத்ரர்களிடம் விடுத்து யாகத்தை ஆரம்பித்தான். அவர்கள் பாதுகாப்புடன் உலகெங்கும் சுற்றிக் கொண்டிருந்த அந்தக் குதிரையை ஒருவன் ரஹஸியமாக பாதாள லோகத்திற்கு ஓட்டிச் சென்று விடுகிறான். பயமும், பெரும் கோபமும், பரபரப்பும் அடைந்த ஸகர புத்ரர்கள் குதிரையின் குளம்படியை அனுஸரித்து பாதாள லோகத்தை நோக்கி பூமியைத் தோண்டிக் கொண்டுச் சென்றனர். பாதாள லோகத்தையும் அடைந்தனர். அங்கே தவம் செய்து கொண்டிருந்த கபில மஹரிஷியையும், அவருக்கருகில் யாகக் குதிரையையும் கண்டனர். முனிவரையே குற்றவாளியாகத் தீர்மானித்து யாகத்தைக் கெடுத்த அவரைக் கொன்று விடுவதாக பெரும் கூச்சலுடன் அவரிடம் ஓடினர். தன் பார்வையாலேயே அறுபதினாயிரம் ஸகர புத்ரர்களையும் கொளுத்திச் சாம்பலாக்கி விட்டார் கபில மஹரிஷி.

பிள்ளைகளையும், யாகக் குதிரையையும் காணாத ஸகரன் தன் பேரனான அம்சுமானை அழைத்து அவர்களைத் தேடி அழைத்து வரச் சொன்னான். தந்தைமார்கள் தோண்டிய வழியே அவர்களைத் தேடிப் பாதாளத்தை அடைந்த அம்சுமான் அங்கு ப்ரகாசமாயிருக்கும் கபில மஹரிஷியைக் காண்கிறான். அவரைப் பலவாறு போற்றிப் புகழ்ந்து, நமஸ்கரிக்கிறான். இவனின் உபஸரிப்பால் பெரிதும் உவந்த மஹரிஷி “குழந்தாய்! யாகக் குதிரையை அழைத்துச் செல். தாத்தாவிடம் சேர்த்து விடு. உன் பௌத்ரன் பகீரதன் ஸ்வர்க லோகத்திலிருக்கும் கங்கையைப் பூலோகம் கொண்டு வரப் போகிறான். பெரும் பேறு பெற்ற நீயும் என்னிடம் வரத்தைப் பெற்றுக் கொள்” என்றார்.

மஹரிஷியின் வார்த்தைகளால் மகிழ்ந்த அம்சுமான் மஹரிஷியின் கோபத்தால் இறந்து போன தன் பித்ருக்களுக்கு ஸ்வர்கத்தை வேண்டுகிறான். “நான் முன்னமே கூறிய படி உன் பேரனால் பூலோகத்திற்கு வரும் கங்கையின் தீர்த்தம் இந்த சாம்பல் குவியலில் பட்டதும் இந்த ஆத்மாக்கள் ஸ்வர்கத்தை அடையும். இந்த கங்கை பகவானின் கால் கட்டை விரலிலிருந்து தோன்றியது. அளவிட முடியாத பெருமை பெற்றது. பாவங்களைப் போக்கிக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்துடன் ஸ்னானம் செய்யாவிட்டாலும், இறந்தவனுடைய சரீரத்தைச் சேர்ந்த சாம்பல், எலும்பு, தோல், நரம்பு, மயிர் என ஏதாவதொன்று இதில் நனைந்தாலும் அவன் பதிதனாக இருந்தாலும் அவனுக்கு ஸ்வர்கத்தைத் தரும் புனித கங்கை.

அம்சுமான் கொண்டு வந்த குதிரையைக் கொண்டு யாகத்தையும் முடித்த ஸகரன், அவன் பிள்ளைகள் பாதாளம் செல்வதற்காகத் தோண்டிய குழியில் நீர் நிரம்பி உண்டான ஸமுத்ரத்தைத் தன் பிள்ளையாக எண்ணினான் (ஸாகரம்). அம்சுமானுக்குத் திலீபனும், அவனுக்குத் தான் பகீரதனும் பிறந்தனர். அவன் பலகாலம் கடும் தவம் புரிந்து ஆகாச கங்கையையும் பூமிக்குக் கொண்டு வந்தான். அதனால் கங்கையும் பாகீரதி எனப்பட்டாள். பகீரதனுக்கு ஸுஹோத்ரனும், அவனுக்கு நாபாகனும், அவனுக்கு அம்பரீஷனும், அவனுக்கு ஸிந்துத்வீபனும், அவனுக்கு அயுதாயுவும், அவனுக்கு ருதுபர்ணனும் பிறந்தனர். இந்த ருதுபர்ணனே நள மஹராஜன் புஷ்கரனிடம் சொக்கட்டான் ஆடி தன் போகங்களை இழந்து தவித்த போது, ஆட்டத்தின் மர்மங்களை அவனுக்குச் சொல்லிக் கொடுத்து மீண்டும் புஷ்கரனிடமிருந்து ராஜ்ய போகங்களைப் பெறுவதற்கு உதவியவன்.

ருதுபர்ணனுக்கு ஸர்வகாமனும், அவனுக்கு ஸுதாஸனும், அவனுக்கு மித்ரஸஹனும் (ஸௌதாஸன்) பிறந்தனர். இந்த ஸௌதாஸன் ஒரு முறை வேட்டைக்குச் சென்றிருந்த போது மற்ற அனைத்து விலங்குகளையும் துன்புறுத்திக் கொண்டிருந்த இரு புலிகளைக் கண்டான். ஒன்றை வேட்டையில் கொன்றான். அது இறக்கும் போது பயங்கரமான ராக்ஷஸ உருவத்துடன் இறந்தது. மற்றதும் “இதற்கு உன்னை தகுந்த ஸமயத்தில் பழி வாங்குவேன்” என்று கூறி மறைந்து விட்டது. ஸமயத்தை எதிர்பார்த்திருந்த அது ஒரு ஸமயம் ஸௌதாஸன் யாகம் செய்ய ஏற்பாடுகள் செய்து கொண்டிருக்கும் போது, குலகுரு வஸிஷ்டரின் உருவில் வந்து யாக முடிவில் நர மாம்ஸத்தைத் தனக்குத் தரவேண்டும் என்று கூறிவிட்டுச் சென்றது.

அதுவே சமையல்காரனாக உருவம் தாங்கி நர மாம்ஸத்தைப் பக்வம் செய்து அரசனிடம் பணிவுடன் கொடுத்தது. உண்மை அறியாத ஸௌதாஸனும் அதைத் தங்கத் தாம்பாளத்தில் வைத்து குருவிற்குச் சமர்பித்தான். உண்மையான வஸிஷ்டர் அதைக் கண்டு மாம்ஸம், அதுவும் நர மாம்ஸம் என்று உணர்ந்து பெரும் கோபத்துடன், நீயே இதை விரும்பிச் சாப்பிடுபவனாக ஆகக்கடவது என்று அரசனை சபித்து விட்டார். குழப்பமும், பதட்டமும் அடைந்த மன்னன் அவரிடமே நடந்த விஷயங்களைக் கூறி “நீங்களே ஏற்பாடு செய்யச் சொல்லி விட்டு, இப்போது என்னை சபித்து விட்டீர்களே” என்று வருந்தினான்.

த்யானத்தால் விஷயங்களை முழுதும் தெரிந்து கொண்ட வஸிஷ்டரும் ராக்ஷஸன் செய்த தவறுக்கு ஒன்றும் அறியாத இவனை சபித்து விட்டோமே என்று வருந்தினார். மீண்டும் அவனிடமே இந்த சாபம் பனிரெண்டு வருஷங்கள் உன்னிடம் இருந்து பின் விலகும் என்று அருளினார். தவறே செய்யாமல் நாம் ஏன் பனிரெண்டு வருஷங்கள் தண்டனை அனுபவிக்க வேண்டும். ஆராயாமல் சபித்த குருவை நாமும் சபித்தால் என்ன என்று கோபத்துடன் சபிப்பதற்காக ஜலத்தையும் எடுத்து ஜபித்தான். மனைவி மதயந்தீ கணவனின் எண்ணத்தை அறிந்து கொண்டாள். பூஜிக்கத்தக்க குலகுருவைச் சபிப்பதிலிருந்து தன் கணவனைத் தடுத்து, அவன் செய்ய நினைப்பது தகாத செயல். பாபச்செயல் என்று அறிவுரை கூறினாள்.

அவளின் உபதேஸத்தால் தான் செய்ய இருந்த தவறை உணர்ந்த ஸௌதாஸன் ஜபித்த நீரை எங்கு விட்டாலும் அங்குள்ள வளமை அழியும் என்று தன் காலிலேயே விட்டுக் கொண்டான். மந்த்ரதீர்த்தம் பட்ட அவனது கால் உடனே வெளுப்பும், கறுப்பும் கலந்த ஒரு விசித்ர வர்ணத்தில் (கல்மாஷம்) மாறிவிட்டது. இதனால் அன்றிலிருந்து அவன் கல்மாஷபாதன் என்று அழைக்கப்பட்டான். ராக்ஷஸனாக மாறிய கல்மாஷபாதன் (என்ற ஸௌதாஸன் என்ற மித்ரஸஹன்) காடுகளில் அலைந்து திரிந்து மனிதர்களைப் பிடித்துத் தின்று கொண்டிருந்தான். இப்படி ஒரு ஸமயம் காட்டில் தன் பத்னியுடன் சேர்ந்திருந்த ஒரு முனிவரைப் பிடித்துக் கொண்டான். முனிபத்னி அவனிடம் பலவாறு கெஞ்சினாள்.

அவனது பூர்வங்களையும், சிறப்புகளையும் எடுத்துக் கூறினாள். இக்ஷ்வாஹு குல திலகமான மித்ரஸஹனல்லவா நீ. உனக்குத் தெரியாத தர்மங்கள் உண்டோ. ஸ்த்ரீ தர்மத்திலிருக்கும் நான் ஸுகத்தை அனுபவிக்காமலிருக்கும் போது என் பர்த்தாவைக் கொல்வது பாபமல்லவா. எனவே அவரை விட்டுவிடு எனப் பலவாறு கெஞ்சினாள். புலிக்கு தர்மோபதேசம் செய்தால் அதற்குப் புரியவா போகிறது. முனிவரை அடித்துக் கொன்றான். சாப்பிட்டான். சொல்வதைக் கேட்காத, புரிந்து கொள்ளாத அவனிடம் கடுங்கோபம் கொண்ட முனிபத்னி நீயும் இதேபோல் காம ஸுகத்திற்கு முயலும் போது இறந்து படுவாய் என்று சபித்து விடுகிறாள். இரண்டாவது சாபம். பனிரெண்டு வருடங்கள் கழித்தும், இந்த முனிபத்னியின் சாபத்தை நினைவில் கொண்டு அவனும் பலகாலம் இல்லற சுகம் இல்லாமலேயே கவனமாக இருந்தான்.

ஸந்ததியே இல்லாமல் தன்னுடன் வம்சம் முடிவதால் வருந்திய கல்மாஷபாதனும், மனைவி மதயந்தீயும் புத்ர ப்ராப்திக்காக வஸிஷ்டரை வேண்டிக்கொண்டனர். அவருடைய அனுக்ரஹத்தால் மதயந்தீ கர்ப்பவதி ஆனாள். ஆனால் ஏழு வருடங்கள் ஆகியும் குழந்தை பிறக்கவில்லை. பொறுமையிழந்த அரசி கல்லினால் வயிற்றில் இடித்துக் கொண்டாள். ஆண்குழந்தை ஒன்று அப்போது பிறந்தது. அச்மகன் (அச்மா=கல்) என்று பெயர் வைத்தனர் இந்தக் குழந்தைக்கு. இவனுக்கு மூலகன் என்பவன் பிறந்தான். இவன் காலத்தில் தான் க்ஷத்ரியர்களைப் பூண்டோடு அழித்துக் கொண்டிருந்தார் பரசுராமர். இவனையும் கொல்ல வந்தபோது பல பெண்கள் ஆடையின்றி இவனை சூழ்ந்து மறைத்துக் கொண்டனர். இதனால் இவன் உயிர் தப்பினான். பெண்கள் இவனுக்குக் கவசமாய் இருந்து இவனுக்கு நாரீகவசன் என்ற பெயர் உண்டாயிற்று.

இந்த மூலகன் என்ற நாரீகவசனுக்கு தசரதனும், அவனுக்கு இலிபிலி என்பவனும், அவனுக்கு விச்வஸஹனும், அவனுக்கு கட்வாங்கனும் பிறந்தனர். கட்வாங்கன் தேவர்களுக்குத் துணையாயிருந்து அஸுரர்களை வெல்ல உதவினான். அதற்கு ப்ரதிபலனாக அவனை ஸ்வர்கத்திற்கு அழைத்துச் சென்று பல போகங்களை அவன் அனுபவிக்கச் செய்து, அதன் பின் வேண்டிய வரத்தைப் பெறுமாறு கூறுகின்றனர். புத்திசாலியான கட்வாங்கன் முதலில் தனது மீதமிருக்கும் ஆயுசைக் கூறுமாறும், அதற்குத் தக்கவாறு வரங்களைக் கேட்பதாகவும் கூறுகிறான். வேறு வழியின்றி தேவர்களும் அவனது ஆயுசைக் கணக்கிட்டு “இன்னும் ஒரு முஹூர்த்தமே உள்ளது உன் ஆயுள்” என்ற செய்தியைக் கூறுகின்றனர். (ஒரு முஹூர்த்தத்துல என்னத்த அனுபவிக்கறது, அவன் புத்திசாலிதான்) இதைக் கேட்டவுடன் விமானம் மூலம் உடனேயே பூலோகம் வந்து சேர்ந்தான் கட்வாங்கன்.

“ப்ராஹ்மணர்களுடன் இருப்பதை விட பெரிதொன்றுமில்லை. நான் ஒரு பொழுதும் ஸ்வதர்மங்களை விட்டதில்லை. அனைத்து ஸ்தாவர, ஜங்கம ஜீவ ராசிகளிலும் பரமனைத் தவிர வேறெதையும் நான் கண்டதில்லை. இவையெல்லாம் உண்மையானால் மஹரிஷிகள் உபாஸிக்கின்ற பெருமானையே நான் அடைவேனாக” என்று விஷ்ணுவினிடமே தன் ஆத்மாவை அர்ப்பணம் செய்து, அந்த ஒரு முஹூர்த்த காலத்திலேயே மோக்ஷத்தையும் அடைந்தான் கட்வாங்கன். இந்த கட்வாங்கனுக்குத் தீர்க்கபாஹுவும், அவனுக்கு ரகுவும், அவனுக்கு அஜனும், அவனுக்கு தசரதனும் பிறந்தனர்.

இந்த தசரதனுக்குத் தான் தன் அம்சங்களுடன் பகவான் ராம, லக்ஷ்மண, பரத, சத்ருக்னர்களாகப் பிறந்தார். விச்வாமித்ரரின் யாகம் காக்க இளமையிலேயே கானகம் சென்று, தாடகையைக் கொன்று, மாரீசனை ஸமுத்ரத்தில் தள்ளி, ஸுபாஹு முதலான ராக்ஷஸர்களை அழித்தான். தன் பாதத்தால் அஹல்யைக்கு சாப விமோசனம் தந்து, விச்வாமித்ரரின் யாகம் காத்த ராமன் அவருடனேயே மிதிலை சென்று ஜனகரின் சிவதனுசை ஒடித்து, ஜனகருக்கு யாக சாலைக்காக பூமியை உழுதபோது கிடைத்த ஸீதை என்ற அயோநிஜையை பத்னியாக்கிக் கொண்டான். அயோத்தி செல்லும் வழியில் க்ஷத்ரியர்களை அழிப்பவரும், ஹைஹய குலத்தை ஒழித்தவருமான பரசுராமரின் வீர்யத்தை அடக்கி, அதன் பின் தந்தை சொல்படி ராஜ்யத்தைத் துறந்துத் தம்பியோடும், மனைவியோடும் கானகம் புகுந்தான்.

கானகத்தில் கர, தூஷணர்களைக் கொன்று, பின் ஸீதையின் பிரிவால் வருந்தி அலைந்து கொண்டிருந்த போது, வழியில் கபந்தனைக் கொன்று, ஸுக்ரீவனைத் தோழனாகக் கொண்டு, வாலியையும் கொன்றான். அதன் பின் அனுமன் மூலம் ஸீதை இருக்குமிடம் அறிந்து, கடலில் அணை கட்டி ராவணாதி அரக்கர் குலத்தை அழித்து, அக்னி ப்ரவேசத்தினால் ஸீதையைப் புனிதையாக்கி, தேவர்கள் புகழ்ந்த ஸீதையுடன் மீண்டும் அயோத்தி திரும்பினான். இப்படி ராமாயணத்தைச் சுருக்கிச் சொல்லி விட்டேனே என்று நினைக்க வேண்டாம். மைத்ரேயே! உண்மையில் பல நூறு வர்ஷங்கள் வர்ணித்தாலும் அந்த மஹோத்ஸவத்தை முடிக்க முடியாது. எனவே அந்த மங்களமான மஹோத்ஸவத்தைச் சுருங்கக் கூறுகிறேன் கேள்” என்றார் பராசரர்.

லக்ஷ்மணன், பரதன், சத்ருக்னன் ஆகிய தம்பிகளுடன், விபீஷணன், ஸுக்ரீவன், அங்கதன், ஜாம்பவான், அனுமான் முதலான துணைவர்களுடம் மலர்ந்த முகத்துடன் குடை, சாமரங்களை ஏந்திக் கொண்டிருக்க, ப்ரஹ்மா, இந்த்ரன், அக்னி, யமன், நிருருதி, வருணன், வாயு, குபேரன், ருத்ரன் என எல்லா தேவர்களும் துதிக்க, வஸிஷ்டர், வாமதேவர், வால்மீகி, மார்க்கண்டேயர், விச்வாமித்ரர், பரத்வாஜர், அகஸ்த்யர் என ரிஷிகள் மூன்று வேதங்களால் துதி செய்ய, வீணை, புல்லாங்குழல், ம்ருதங்கம், பேரி, படஹம், சங்கம், காஹளம், கோமுகம் முதலான வாத்யங்கள் முழங்க, இன்னும் பல கோலாகலங்களுடன் ஸர்வ லோக ரக்ஷணனாக ராமன் பட்டாபிஷேகம் செய்யப் பட்டான். பதினோராயிரம் ஆண்டுகள் நல்லாட்சியும் புரிந்தான்.

இளவரசனான பரதன் மூன்று கோடி கந்தர்வர்களைக் கொன்று, அந்த ராஜ்யத்தை வென்றான். சத்ருக்னனும் மது புத்ரனான லவணன் என்ற அஸுரனைக் கொன்று மதுரா நகரை ஏற்படுத்தினான். இப்படி இந்த ராம, லக்ஷ்மண, பரத, சத்ருக்னர்கள் தங்கள் பராக்ரமங்களால் துஷ்ட நிக்ரஹம் செய்து விட்டு இப்பூமியை விட்டுக் கிளம்பிய போது, அவர்களிடம் பக்தி கொண்ட அந்நாட்டு ப்ராணிகளும் கூட மோக்ஷத்தை அடைந்தன. ராமனுக்கு லவ, குசனும், லக்ஷமணனுக்கு அங்கதன், சந்த்ரகேதுவும், பரதனுக்குத் தக்ஷகன், புஷ்கலனும், சத்ருக்னனுக்கு ஸுபாஹு, சுரஸேனனும் பிறந்தனர்.

இந்த சந்ததி குசன், நிஷதன், அனலன், நபஸ், புண்டரீகன், க்ஷேமதன்வா, தேவானீகன், அஹீனகு, குரு, பாரியாத்ரன், பலன், சலன், உத்கன், வஜ்ரநாபன், சங்கணன், வ்யுஷிதாச்வன், விச்வஸஹன், ஹிரண்யநாபன், புஷ்யன், த்ருவஸந்தி, ஸுதர்சனன், அக்னிவர்ணன், சீக்ரகன், மரு,ப்ரசுச்ருகன், ஸுஸந்தி, அமர்ஷன், ஸஹஸ்வான், விச்வபவன், ப்ருஹத்பலன் என வளர்ந்தது. இதில் ஹிரண்யநாபன் ஜைமினி சிஷ்யரான மஹா யோகீச்வரர் யாக்ஞவல்க்யரிடமிருந்து யோகத்தைக் கற்றவன். மரு என்பவனே இன்றும் இமயமலைக்கருகில் கலாபம் என்ற க்ராமத்திலே தன் யோக பலத்தால் யாருக்கும் தெரியாமல் வஸித்து வருகிறான். இவனே இனி வரும் க்ருத யுகத்திலே ஸூர்ய வம்ச முதல்வனாகப் போகிறான். ப்ருஹத்பலனென்பவன் மஹாபாரத யுத்தத்திலே அர்ஜுன புத்ரன் அபிமன்புவால் கொல்லப் பட்டான். இப்படிப் பட்ட இந்த ஸூர்ய வம்சத்தைப் பற்றிக் கேட்பவர்களும், படிப்பவர்களும் இவ்வுலகிலும், ஸ்வர்கத்திலும் விரும்பிய போகங்களைப் பெற்று, எல்லோராலும் கொண்டாடப்படுவர்.

04_05. இக்ஷ்வாகுவின் புதல்வர்களில் ஒருவனான நிமி ஆயிரம் வருடங்கள் செய்யத்தக்க ஸத்ரயாகத்தை ஆரம்பித்தான். அதில் ஹோதாவாக இருக்க வஸிஷ்டரை வேண்டிக் கொண்டான். அவர் இந்த்ரனின் ஐநூறு ஆண்டுகள் செய்யத்தக்க மற்றொரு யாகத்தில் ஏற்கனவே ரித்விக்காக இருக்க ஒப்புக் கொண்டு விட்டதாகவும், அது முடியும் வரைப் பொறுத்திருக்கும் படியும் நிமியிடம் கூறுகிறார். நிமி இதற்குப் பதிலொன்றும் கூறாமல் மௌனமாக இருக்கிறான். அவன் ஒப்புக்கொண்டு விட்டதாக நினைத்துக் கொண்ட வஸிஷ்டர் இந்த்ரனின் யாகத்திற்குச் சென்று விட்டார். ஆனால் நிமி, குலகுரு இல்லாததால் கௌதமர் முதலான மஹரிஷிகளைக் கொண்டு தன் யாகத்தை ஆரம்பித்து விட்டான்.

இந்த்ரன் யாகம் முடிந்து நிமியிடம் வந்த வஸிஷ்டர் தம்மை எங்கும் போக வேண்டாம் என்று கூறி இருந்தால் இங்கேயே இருந்திருப்போமே, அப்போது மௌனமாக இருந்து விட்டு இப்படி யாகத்தை ஆரம்பித்து விட்டானே என்று வருத்தமும், கோபமும் கொண்டார். தூங்கிக் கொண்டிருந்த நிமியை நோக்கி இவன் உடலற்றவனாவான் (விதேஹன்) என்று சாபமிட்டார். இதையறிந்த நிமி தூங்கிக் கொண்டிருந்த போது, எதையும் கூறாமல் தனக்குச் சாபமிட்ட வஸிஷ்டரையும் விதேஹராவார் என ப்ரதி சாபமிட்டான். இருவருமே கண்ணுக்குத் தெரியாதவர்களானார்கள். இதன் பின் மித்ரா வருணர் ஊர்வசியிடம் மோஹம் கொண்ட போது அதிலிருந்து வஸிஷ்டர் வேறு தேஹம் கொண்டார்.

நிமியினுடைய தேஹத்தை யாகம் செய்து கொண்டிருந்த ரித்விக்குகள் (தனக்கு உதவியாக இருப்பதற்காக யஜமானன் தக்ஷிணைகள் கொடுத்து வரித்த அத்வர்யு, ஹோதா, உத்காதா, ப்ரஹ்மா ஆகியோர்) தைலங்களால் பதப்படுத்திக் காத்து வந்தனர். யாகம் தொடர்ந்து முடிந்தது. தங்கள் பங்கைப் பெறுவதற்காக யாகத்தின் இறுதியில் வந்த தேவர்களிடம் இந்த ரித்விக்குகள் யஜமானனுக்காக வரம் வேண்ட, அவர்களும் தர இசைந்தனர். ஆனால், நிமி தான் அந்த சரீரத்தை விரும்பவில்லையென்றும், தான் இனி அனைவரின் கண்களிலும் வஸிக்க வேண்டும் என்ற வரத்தைக் கோரிப் பெற்றான். இதனாலேயே கண்களை ஜீவராசிகள் இமைக்கின்றன. அரசனில்லாமல் ராஜ்யம் கெட்டு விடக்கூடாது என்று நிமியின் உடலைக் கடைந்து ஜனகன் (வைதேஹன், மிதி) என்ற புத்ரனை உண்டாக்கினர் மஹரிஷிகள்.

இந்த மிதியின் வம்சம் உதாவஸு, நந்திவர்த்தனன், ஸுகேது, தேவராதன், ப்ருஹதுக்தன், மஹாவீர்யன், ஸுத்ருதி, த்ருஷ்டகேது, ஹர்யச்வன், மரு, ப்ரதிகன், க்ருதிரதன், தேவமீடன், விபுதன், மஹாத்ருதி, க்ருதராதன், மஹாரோமா, ஸ்வர்ணரோமா, ஹ்ரஸ்வரோமா என்று வளர்ந்தது. இந்த ஹ்ரஸ்வரோமாவிற்கு ஸீரத்வஜனும், குசத்வஜனும் பிறந்தனர். இந்த ஸீரத்வஜன் தான் பிள்ளைப் பேறுக்காக யாகம் செய்ய பூமியை உழுத போது, ஸீதை தோன்றினாள். குசத்வஜன் ஸாங்கர்ய தேசத்திற்கு அதிபதியாக இருந்தான். ஸீரத்வஜனுக்குப் பின் பானுமான், சதத்யும்னன், சுசி, ஊர்ஜன், சதத்வஜன், க்ருதி, ரஞ்ஜனன், புருஜித், அரிஷ்டநேமி, ச்ருதாயுஸ், ஸுபார்ச்வன், ஸ்ருஞ்ஜயன், க்ஷேமாவி, அநேநஸ், பௌமதன், ஸத்யரதன், உபகு, உபகுப்தன், ஸ்வாகதன், ஸ்வாங்கன், ஸ்வாபனன், ஸுவர்சஸ், ஸுபாஷன், ஸுச்ருதன், ஜயன், விஜயன், ருதன், ஸுநயநன், வீதஹவ்யன், த்ருதி, பஹுளாச்வன், க்ருதி என்று வளர்ந்தது. பெரும்பாலும் ஆத்ம வித்யையில் நிலை பெற்ற இந்த ஜனக (மிதி, விதேஹ) வம்சம் மிதிலா நகரை ஆண்டது.

04_06. ஸூர்ய வம்ச வ்ருத்தியைக் கேட்டறிந்த மைத்ரேயர், சந்த்ர வம்சத்தையும் கூறக் கேட்கிறார். விஷ்ணுவின் நாபியிலிருந்து தோன்றிய ப்ரஹ்மாவின் புத்ரர் அத்ரி மஹரிஷி. இவரின் புத்ரன் தான் சந்த்ரன். ஓஷதிகள், ப்ராஹ்மணர்கள், நக்ஷத்ரங்கள் இவைகளுக்கு அதிபதியாக ப்ரஹ்மாவால் பட்டம் சூட்டப்பட்ட இவன் ராஜஸூய யாகமும் செய்து முடித்தான். செருக்கால் தேவகுரு ப்ருஹஸ்பதியின் பத்னி தாரையை அபஹரித்தான். மற்ற தேவர்களும், குருவும், ப்ரஹ்மாவும் சொல்லியும் அவளை விடாத சந்த்ரனின் பக்கம் ப்ருஹஸ்பதியின் பகையாளியான சுக்ராச்சார்யார் இந்த சமயம் பார்த்து தன் சிஷ்யர்களான ஜம்பன், கும்பன் முதலான தைத்ய, தானவர்களுடன் சேர்ந்து கொண்டு தேவர்களுக்கெதிராக யுத்த முயற்சிகளையும் கொண்டார்.

ப்ருஹஸ்பதியின் பிதாவான அங்கிரஸ்ஸிடமே ருத்ரரும் வித்யாப்யாஸம் செய்தார். எனவே குரு புத்ரராதலால் ருத்ரரும், தங்களின் குருவாதலால் தேவ ஸைன்யமும் ப்ருஹஸ்பதியின் பக்கம் சேர்ந்தது. தாரையின் நிமித்தாமாய் தாரகாமயம் என்ற தேவாஸுர யுத்தம் கடுமையான யுத்தம் மூண்டது. ப்ரஹ்மா இதில் தலையிட்டு தாரையை ப்ருஹஸ்பதியிடமே விடுமாறு சந்த்ரனிடம் கூற, முடிவில் அவனும் அவ்வாறே செய்தான். ஆனால் இப்போது அவள் கர்ப்பிணி. சந்த்ரனால் பலாத்காரமாக உண்டாக்கப்பட்ட அந்தக் கர்ப்பத்தை விட்டு விடுமாறு அவளிடம் ப்ருஹஸ்பதி கூற பதிவ்ரதையான அவளும் அதை நாணற்கற்றையில் விட்டாள்.

ஆனால் உண்டான குழந்தையின் உன்னதமான தேஜஸ்ஸைக் கண்டு ப்ருஹஸ்பதி, சந்த்ரன் இருவருக்குமே அதனிடம் ஆசை உண்டாயிற்று. ஆனால் எவர் கேட்டபோதும் அது யாருடைய குழந்தை என்பதைக் கூற வெட்கத்தினால் தாரை மறுத்துவிட்டாள். இதனால் கோபம் கொண்ட குழந்தை தாயைத் தண்டிக்க முடிவு செய்தது. மீண்டும் சமாதானம் செய்து வைத்த ப்ரஹ்மா, தாரையிடம் உண்மையை உரைக்குமாறு கூறுகிறார். தாரை அந்தக் குழந்தைச் சந்த்ரனுக்குப் பிறந்தவன் என்று கூறுகிறாள். சந்த்ரனும் மிகுந்த ஸந்தோஷத்துடன் அவனுக்கு புதன் என்று பெயர் சூட்டிக் கொண்டாடுகிறான்.

இந்த புதனுக்கும், இளைக்கும் புரூரவஸ் என்பவன் பிறந்தான். அவன் யாக, தானங்களில் சிறந்தவன். ஊர்வசிக்கும் இவனுக்கும் காதல். இதனால் மித்ராவருணர்கள் ஊர்வசியிடம் காமம் கொண்ட போது அதற்கு ஊர்வசி உடன்படாததால், பூலோகத்தில் ஒருவனுக்கு மனைவியாக சில காலம் வசிக்கக்கடவாய் என்று அவர்கள் ஊர்வசியைச் சபித்து விட்டனர். பூலோகத்தில் இவளிடம் மனதைப் பறிகொடுத்த புரூரவஸ் இவளிடம் தன்னை மணக்குமாறு வேண்டுகிறான். அதற்கு இவள் மூன்று நிபந்தனைகளை விதித்து, அவைகளுக்கு உடன்பட்டால் அவனை மணப்பதாகக் கூறுகிறாள்.

தான் குழந்தைகளைப் போல் வளர்க்கும் இரு ஆடுகளை படுக்கையறையிலேயேதான் எப்போதும் வைத்திருப்பேன் என்பது முதலாவது நிபந்தனை. ஆடையின்றித் தான் புரூரவஸ்ஸைப் பார்க்க நேரிடக்கூடாது என்பது இரண்டாவது. எப்போதும் நெய்யையே உணவாகக் கொள்வேன் என்பது மூன்றாவது நிபந்தனை. இவைகளை ஏற்றுக்கொண்டு அவளை மணந்த புரூரவஸ்ஸும் அவளுடன் அறுபத்தொரு வருஷங்கள் இன்பம் துய்த்திருந்தான். ஊர்வசியும் தேவலோகத்தையும் இந்த ஆனந்தத்தில் வெறுத்திருந்தாள். ஊர்வசியில்லாத ஸ்வர்க லோகம் குறையோடு இருந்தது.

இதனால் ஊர்வசியை மீண்டும் தேவலோகத்திற்குக் கொண்டு வருவதற்காக விச்வாவஸு என்ற கந்தர்வ ராஜன் ஒரு இரவு கந்தர்வர்களுடன் வந்து ஆடுகளை அபஹரித்துச் சென்றான். ஆடுகள் கத்துவதைக் கேட்டு ஊர்வசியும் நான் குழந்தைகளைப் போல வளர்த்து வந்த ஆடுகளை எவனோ அபஹரித்துச் செல்கிறானே. நான் அனாதையானேனே. இதை யாரும் தடுக்கவில்லையே. ஒன்றுக்கும் உதவாத ஒருவனை நான் புருஷனாக அடைந்திருக்கிறேனே என்று கத்தத் தொடங்கி விட்டாள். அப்போது புரூரவஸ் ஆடையின்றி இருந்தான். இருட்டில் இவள் நம்மை நிர்வாணமாகப் பார்க்க முடியாது என்று அப்படியே கத்தியை எடுத்துக் கொண்டு ஆட்டைத் திருடியவர்களைப் பிடிக்க அவஸரமாகச் சென்றான்.

இதுதான் ஸமயம் என்றிருந்த விச்வாவஸுக்கள் ப்ரகாசமான ஒரு மின்னலையும் ஏற்படுத்தி ஊர்வசியைப் புரூரவஸ்ஸின் நிர்வாணக்கோலத்தைக் காணச் செய்தனர். இரண்டு நிபந்தனைகளும் மீறப்பட்டு விட்டதால் ஊர்வசியும் தேவலோகம் திரும்பி விட்டாள்.
கந்தர்வர்களும் வந்த வேலை முடிந்ததென்று ஆட்டுக்குட்டிகளை அங்கேயே விட்டு விட்டு மறைந்து விட்டனர். ஊர்வசியைக் காணாத புரூரவஸ் பித்துப் பிடித்து திகம்பரனாகவே அலையத் தொடங்கி விட்டான். பல நாள் கழித்து அவளையும், கூட நான்கு அப்ஸரஸ்ஸுக்களையும் ஒரு தாமரைக் குளத்தில் குருக்ஷேத்ரத்தில் கண்டான். பலவாறு அவளைப் புகழ்ந்தும், திட்டியும், நல்லதும் கூறினான் புரூரவஸ்.

ஊர்வசி, “விவேஹத்தை இழக்காதீர்கள். உங்களால் கர்ப்பிணியாய் இருக்கிறேன் இப்போது நான். உங்களுக்கு ஒரு புத்ரன் பிறக்கப் போகிறான். எனவே ஒரு வருஷம் கழித்து வாருங்கள். நான் ஓரிரவு உங்களுடன் கூடி வஸிக்கிறேன்” என்று கூறினாள். புரூரவஸ்ஸும் சந்தோஷச் செய்திகளுடன் நாடு திரும்பினான். ஊர்வசி அவனைப் பற்றியும், தான் அவனுடன் வாழ்ந்தது பற்றியும் மற்ற அப்ஸரஸ்ஸுக்களிடம் புகழ்ந்து கூறினாள். அவர்களும் அவனைக் கொண்டாடி, தாங்களும் அவனுடன் வஸிப்பதை விரும்புவதாகக் கூறினர். ஒரு வருஷம் கழிந்ததும், “ஆயுஸ்” என்ற புத்ரனை அவனிடம் கொடுத்து விட்டு, தானும் அவனுடன் ஒரு இரவு அவனுடன் கூடியிருந்தாள். அவ்வாறே மற்ற அப்ஸரஸ்ஸுக்களும் அவள் அனுமதியுடன் அவனுடன் கூடி இருந்து தாங்களும் பிள்ளைகளைப் பெற்றனர்.

மஹாராஜரே! எங்களிடம் அன்பு கொண்ட கந்தர்வர்கள், அதனால் தங்களுக்கு வரங்களைத் தர முன் வந்துள்ளார்கள் என்றாள் ஊர்வசி. புரூரவஸ் “நான் பகைவர்களை வென்று, இந்த்ரிய சக்தி மிகுந்தவனாக, உறவினர், பொக்கிஷங்கள் குறைவின்றி இருக்கிறேன். எனவே ஊர்வசியே எனக்கு வேண்டியது. அதை அருளுங்கள்” என்று கந்தர்வர்களிடம் வேண்டினான். கந்தர்வர்கள் ஒரு அக்னி ஸ்தாலியை அவனிடம் கொடுத்து வேத வழியில் அந்த அக்னியை மூன்றாக்கி, ஊர்வசியின் கூடுதலை விரும்பி யாகம் செய்யுங்கள். அவளை அடைவீர்கள் என்று கூறிச் சென்றனர். சரியென்று அதைப் பெற்றுக் கொண்ட வந்த அவன் வழியில் யோசித்தான்.

ஊர்வசியைப் பெற்று வராமல் இந்த ஸ்தாலியைப் போய் பெற்றுக் கொண்டு வந்து விட்டோமே என்று அதை அங்கேயே வைத்து விட்டு வருத்தத்தோடு நாட்டுக்கு வந்து விட்டான். நள்ளிரவில் உறங்காமல் குழப்பத்தில் “ஊர்வசியை அடைய உதவுமென்று கந்தர்வர்கள் கொடுத்த அக்னி ஸ்தாலியையும் காட்டிலேயே வைத்து விட்டு வந்து விட்டோமே” என்று மீண்டும் காட்டிற்கு வந்தான். அக்னி ஸ்தாலியை வைத்து விட்டுப் போன இடத்தில் வன்னி மரத்தை நடுவில் கொண்ட ஒரு அரச மரத்தைக் கண்டான். “இந்த அக்னி ரூபமான மரத்தையே அரணியாக்கி, கடைந்து அக்னியை உண்டாக்கி உபாஸிப்போம்” என்று அந்த மரத்தைத் தன் நாடு கொண்டு வந்தான்.

காயத்ரீ மந்த்ரத்தை உச்சரித்துக் கொண்டே அரணியைச் செய்ய, இருபத்து நான்கு அளவுள்ள அரணியும் உண்டாயிற்று. அதைக் கடைந்து மூன்று அக்னியையும் பெற்று வேத விதிப்படி, ஊர்வசியை உத்தேஸித்து யாகங்களைச் செய்த புரூரவஸ் மீண்டும் கந்தர்வ லோகத்தையும், ஊர்வசியையும் நிரந்தரமாகப் பெற்றான். ஒன்றாய் இருந்த அக்னி இப்படி இந்த மன்வந்த்ரத்தில் மூன்றாயிற்று.

04_07. புரூரவஸ்ஸுக்கு ஆயுஸ், அமாவஸு, விச்வாவஸு, ச்ருதாயுஸ், சதாயுஸ், அயுதாயுஸ் என்று ஆறு பிள்ளைகள். அமாவஸுக்குப் பீமனும், அவனுக்குக் காஞ்சனனும், அவனுக்கு ஸுஹோத்ரனும், அவனுக்கு ஜஹ்னுவும் பிறந்தனர். இந்த ஜஹ்னு மஹாராஜன் ஒரு ஸமயம் தன் யாகசாலையை முழுதும் மூழ்கடித்து விட்ட கங்கையைக் கோபத்தால் குடித்து விட்டார். பகீரதனும், மற்ற தேவர்களும், ரிஷிகளும் வேண்டிக்கொள்ளவே மீண்டும் மனமிரங்கித் தன் காதின் வழியாகக் கங்கையை வெளியே விட்டார். இப்படி ஜஹ்னுவிற்குப் பெண்ணானதால் கங்கைக்கு ஜாஹ்னவீ என்ற பெயர் உண்டாயிற்று.

இந்த ஜஹ்னுவின் வம்சம் ஸுமந்து, அஜகன், பலாகாச்வன், குசன் என வளர்ந்தது. குசனுக்கு குசாம்பன், குசநாபன், அதூர்த்தரஜஸ், வஸு என்று நான்கு பிள்ளைகள். இதில் குசாம்பன் இந்த்ரனுக்கொப்பான மகன் வேண்டும் என்று கடும் தவமிருந்தான். இவன் தவத்தால் பயந்த இந்த்ரன் தானே இவனுக்குக் காதி (கௌசிகன்) என்ற பெயரில் மகனாய்ப் பிறந்தான். இவனுக்குப் பிறந்த பெண்ணான ஸத்யவதியைத் தனக்கு மணம் முடித்து தரும்படி ப்ருகு மஹரிஷியின் புத்ரர் ரிசீகர் வேண்டினார். ஆனால் முதுமையும், கோபமும் மிகுந்த அந்த ப்ராஹ்மணருக்குத் தன் பெண்ணைக் கொடுக்க விரும்பாத காதி கன்யா சுல்கமாக ஒரு காது கறுத்தும், உடலெங்கும் வெளுத்தும் இருக்கிற காற்றை விட வேகமுடைய ஆயிரம் குதிரைகளைத் தந்தால் நீங்கள் இவளை அடையலாம் என்றார்.

ஆனால் ரிசீகர் வருணனிடம் சென்று அச்வதீர்த்தத்தில் தோன்றிய அத்தகைய குணங்களுடைய ஆயிரம் குதிரைகளைப் பெற்றுக் கொண்டு வந்து காதியிடம் விட்டார். ஸத்யவதியையும் மணந்தார். சென்று விட்டார் அவளுடன் காட்டிலிருக்கும் தன் ஆச்ரமத்திற்கு. ஸத்புத்ரனை வேண்டி மந்த்ரங்களின் வீர்யத்துடன் கூடிய ஒரு வகையான அன்னத்தை(சரு) தன் மனைவி ஸத்யவதிக்காக உண்டாக்கினார் ரிசீகர். இதையறிந்த ஸத்யவதியின் தாய் தனக்கும் அம்மாதிரி செய்து தரச்சொல்லி புத்ரியிடம் கூறினாள். மனைவியின் வேண்டுகோளின்படி க்ஷத்ரிய தேஜஸ்ஸுடன் கூடிய மற்றொரு சருவைத் தன் மாமியாருக்காகச் செய்தார். இதை உன் தாயிடம் கொடுத்து சாப்பிடச் சொல், இதை நீ சாப்பிடு என்று இரண்டையும் தன் மனைவியிடம் கொடுத்து விட்டு கானகம் சென்றார் ரிசீகர்.

ஆனால் ஸத்யவதியின் தாய் “மகளே, உலகில் தனக்குப் பிறக்கும் குழந்தைக்கு இருக்கும் வீர்யத்தை வேறெவர்க்கும் விரும்ப மாட்டார்கள் எவரும். எனவே உனக்குத் தந்திருக்கும் சருவில் நிச்சயமாக உன் கணவர் சிறப்புக்களைச் சேர்த்திருப்பார். உன் தம்பியோ பூமண்டலத்தை ஆள வேண்டியவன். உன் மகனோ ப்ராஹ்மணன். அவனுக்குச் சிறப்பாக அவ்வளவு ஸாமர்த்யங்கள் தேவையிராது. எனவே சிறந்த சக்திகளங்கிய உன் சருவையும், என்னுடைய இந்த சருவையும் நாம் மாற்றிக் கொள்ளலாம்” என்று மகளிடம் கூறினாள். அவளும் அப்படியே தாயின் சொற்படி சருவை மாற்றிக் கொண்டாள். சருவை இருவரும் சாப்பிட்டனர். இருவரும் கருவுற்றனர்.

சில காலம் சென்று ஆச்ரமம் திரும்பிய ரிசீகர் தன் மனைவியை உற்று நோக்கினார். “பாபியே! செய்யத் தகாததைச் செய்து விட்டாய். உன் தாயின் சருவை மாற்றி நீ உபயோகித்திருப்பதாலேயே இது நடந்துள்ளது. உன் தாயின் சருவில் க்ஷத்ரிய தேஜஸ்க்குரிய ஐச்வர்யம், வீர்யம் முதலியவைகளையும், உன்னுடையதில் ப்ரஹ்மதேஜஸ்க்குரிய சாந்தி, ஞானம், பொறுமை முதலான வீர்யங்களையும் மந்த்ரங்களால் ஏற்றியிருந்தேன். எனவே உங்களிருவருக்கும் நீங்கள் உண்ட சருக்களின் குணங்களுடனேயே குழந்தைகள் மாறிப் பிறக்கப் போகின்றன” என்றார்.

இதைக் கேட்டதும் கலங்கிய ஸத்யவதி ரிசிகரின் பாதங்களில் விழுந்து, “ஸ்வாமி! அறியாமையால் நான் செய்த தவறை மன்னியுங்கள். ப்ராஹ்மண குலத்தில் வாழ்க்கைப்பட்ட எனக்கு இப்படித் தகாத வகையில் க்ஷத்ரிய குணங்கள் கொண்ட புத்ரன் வேண்டாம். என் புத்ரனுடைய புத்ரனுக்கு வேண்டுமானால் இந்தச் சருவின் குணத்தைக் கொடுத்து எனக்கு அருள் புரியுங்கள்” என்று வேண்டிக் கொண்டாள். ரிசிகரும் அருள் கூர்ந்தார். ஸத்யவதி ஜமதக்னியைப் பெற்று, நாளடைவில் கௌசிகீ என்ற நதியாக மாறி விட்டாள். ஸத்யவதியின் தாய் விச்வாமித்ரரைப் பெற்றாள். ஜமதக்னிக்கும், இக்ஷ்வாகு குலத்தில் உதித்த ரேணுகைக்கும் அரச குலங்களை அழித்த பரசுராமர் பிறந்தார் (ஸத்யவதியின் வரம் இது). விச்வாமித்ரர் ப்ரஹ்மரிஷியானார்.

ஜமதக்னியின் ஸஹோதரனென்பதால் தேவர்கள் விச்வாமித்ரருக்கு ப்ருகு வம்சத்தைச் சேர்ந்த சுநச்சேபன் என்பவனை புத்ரனாக முறைப்படிக் கொடுத்தனர். அவன் தேவராதன் எனப் பெயர் பெற்றான். இவனைத் தவிர விச்வாமித்ரருக்கு மதுச்சந்தன், தனஞ்ஜயன், க்ருததேவன், அஷ்டகன், கச்சபன், ஹரிதன் என்ற ஆறு புத்ரர்களும் உண்டாயினர். இவர்களால் அனேக கௌசிக கோத்ரங்கள் உண்டாயின. இப்படி இந்தக் கௌசிக கோத்ரங்களில் வெவ்வேறு முன்னோர்களைக் கொண்டவர்கள் தங்களுக்குள் விவாஹம் செய்து கொள்ளலாம்.

04_08. புரூரவஸ்ஸின் மூத்த மகன் ஆயு ராஹுவின் மகளை மணந்து, நஹுஷன், க்ஷத்ரவ்ருத்தன், ரம்பன், ரஜி, அனேனஸ் என்ற ஐந்து புத்ரர்களைப் பெற்றான். க்ஷத்ரவ்ருத்தனுக்கு ஸுஹோத்ரனும் அவனுக்கு காச்யன், காசன், க்ருத்ஸமதன் என்ற மூவரும் பிறந்தனர். க்ருத்ஸமதனுக்கு சௌனகர் பிறந்தார். இவர் தான் நான்கு வர்ணங்களை உண்டாக்கினார். காச்யனுக்குக் காசேயன் என்ற காசீராஜனும், அவனுக்கு ராஷ்ட்ரனும், அவனுக்குத் தீர்க்கதபஸ்ஸும், அவனுக்குத் தன்வந்த்ரியும் பிறந்தனர். இவர் இந்த்ரியங்களை ஸ்வாதீனமாக வைத்திருந்தார். இவர் முன்பு க்ஷீர ஸாகரத்தில் தோன்றிய போதே “காசிராஜ கோத்ரத்தில் பிறந்து எட்டு வகையான வைத்ய சாஸ்த்ரங்களை விளங்கச் செய்வாயாக. யாகங்களிலும் ஹவிர்ப் பாகத்தைப் பெறுவாயாக” என்று பரமனால் அருளப் பெற்றிருந்தார்.

தன்வந்த்ரிக்குக் கேதுமான், அவனுக்குப் பீமரதன், அவனுக்குத் திவோதாஸன், அவனுக்கு ப்ரதர்தனன், அவனுக்கு அலர்கன் என்பவனும் பிறந்தனர். ப்ரதர்தனனுக்கு சத்ருஜித், வத்ஸன், ருடத்வஜன், குவலயாச்வன் என்று பெயர்கள் உண்டு. இவன் மகன் அலர்கனைப் போல் அறுபத்தாறாயிரம் வருஷங்கள் பூமியை ஆண்டவர் வேறு எவருமில்லை. இவனுக்கு ஸன்னதியும், அவனுக்கு ஸுகேதுவும், அவனுக்கு தர்மகேதுவும், அவனுக்கு ஸத்யகேதுவும், அவனுக்கு விபுவும், அவனுக்கு ஸ்வவிபுவும், அவனுக்கு ஸுகுமாரனும், அவனுக்கு த்ருஷ்டகேதுவும், அவனுக்கு வீதிஹோத்ரனும், அவனுக்கு பார்கனும், அவனுக்கு பார்கபூமியும் பிறந்தனர். இவனால் நான்கு வர்ணங்களும் நன்கு நடைபெற்றன.

04_09. ஆயுஸ்ஸின் மற்றொரு புதல்வனான ரஜி என்பவனுக்கு ஐநூறு பிள்ளைகள். அனைவருமே ஒப்பற்ற பராக்ரமங்கள் உடையவர்கள். இந்த ஸமயத்தில் தேவாஸுர யுத்தம் நடந்தது. இவர்களிருவருமே அப்போது ப்ரஹ்மாவிடம் போய் இந்தப் போரில் யாருக்கு வெற்றி கிடைக்கும் என்று வேண்டினர். ப்ரஹ்மா ரஜி எவர் பக்கம் இருந்து யுத்தம் செய்கிறானோ அவர்களே வெற்றி பெறுவர் என்று கூறிவிட்டார். உடனே அஸுரர்கள் முதலில் சென்று ரஜியைத் தங்கள் பக்கம் இருந்து யுத்தம் செய்யுமாறுக் கேட்டனர். அதற்கு ரஜி போரில் வென்றதும் தன்னை அவர்களுக்கு இந்தரனாகக் (தலைவனாக) கொண்டால் இதற்குச் சம்மதம் என்று கூறினான்.

“முதலில் ஒன்றைக் கூறிப் பின் அதை மாற்றிக் கூறும் பழக்கம் எங்களுக்கில்லை. இப்போது சொல்லி விடுகிறோம். ஏற்கனவே ப்ரஹ்லாதன் எங்களுக்கு இந்த்ரன். அவரே இந்த்ரனாய்த் தொடர வேண்டுமென்றே இந்த யுத்தமும். எனவே வெற்றிக்காகப் பொய் சொல்ல நாங்கள் விரும்பவில்லை” என அஸுரர்கள் ரஜியின் நிபந்தனைக்கு மறுப்பு கூறிச் சென்று விட்டனர். இதன்பின் தேவர்கள் இந்த நிபந்தனையை ஏற்று ரஜியைக் கொண்டு அஸுரர்களை வென்றனர். ஆனால் அதன் பின் இந்த்ரன் ரஜியின் கால்களில் விழுந்து “நீங்களே எங்களை பயத்திலிருந்து காத்து உணவளித்தீர்கள். எனவே நீங்கள் எனக்குத் தகப்பன் முறை. புத்ரன் இந்த்ரனாக இருப்பது தகப்பனுக்குப் பெருமை தானே. ஆகையால் நானே இந்த்ரனாகத் தொடர அருள வேண்டும்” என்று வேண்டினான்.

ரஜியும் சிரித்துக் கொண்டு “பகைவர்களே பாதம் பணிந்தால் அருள வேண்டும். உனக்கென்றால் சொல்லவும் வேண்டுமா. நீயே இந்த்ரனாக இரு” என்று கூறி தன் நகரம் திரும்பி விட்டான். ரஜிக்குப் பின் அவன் புத்ரர்கள் அரசாண்டு கொண்டிருந்த போது நாரதர் அவர்களிடம் வந்தார். இந்த்ரனும் உங்கள் தகப்பனுக்குப் புத்ரன் முறையே. எனவே நீங்கள் அவனுக்குப் பங்காளிகள். எனவே உங்களுக்கும் இந்த்ர பதவியில் உரிமையுண்டு என்று போதித்தார். இவர்களும் இதைக் கேட்டுக் கொண்டு இந்த்ரனிடம் சென்று உரிமை கோரினர். மறுத்த இந்த்ரனையும், தேவர்களையும் ஒடுக்கித் தாங்களே இந்த்ர லோகத்தில் அதிகாரம் செலுத்தலாயினர்.

சில நாட்கள் இங்குமங்கும் அலைந்த இந்த்ரன் குரு ப்ருஹஸ்பதியிடம் சென்று தன் கவலையைக் கூறி யாகங்களில் இலந்தைப் பழ அளவிலாவது புரோடாசம் (யாக அடை)கிடைக்க அருள் வேண்டினான். ப்ருஹஸ்பதி முன்னமே என்னிடம் வந்திருந்தால் இந்த நிலையே உனக்கு வந்திருக்காதல்லவா. சரி, போனது போகட்டும். விரைவிலேயே உனக்கு உன பதவியை மீட்டுத்தருகிறேன் என்று கூறி இந்த்ர தேஜஸ் அதிகரிக்கவும், ரஜியின் புத்ரர்களுக்கு அழிவையும் வேண்டி நாள் தோறும் அபிசாரம் செய்ய ஆரம்பித்தார். இதனால் புத்தி பேதலித்த ரஜி புத்ரர்கள் வர்ணாச்ரமங்களை விட்டு, வைதீக மார்கத்துக்கு எதிராக செயல் படத்தொடங்கினர். இவர்கள் இப்படி ஆனதால் இவர்களை இந்த்ரன் எளிதில் வென்று ப்ருஹஸ்பதியின் ஹோமத்தால் பெற்ற தேஜஸ்ஸுடன் மீண்டும் ஸ்வர்க பதவியை அடைந்தான். இந்த இந்த்ரன் தன் பதவியை இழந்து, மீண்டும் அதை அடைந்த கதையைக் கேட்பவர்கள் தங்கள் பதவியிலிருந்து விலகாமலும், தர்மாத்மாக்களாகவும் இருப்பார்கள்.

ஆயுவின் மற்றொரு புத்ரனான ரம்பனுக்கு சந்ததியில்லை. க்ஷத்ரவ்ருத்தனுக்கு ப்ரதிக்ஷத்ரனும், அவனுக்கு ஸஞ்ஜயனும், அவனுக்கு ஜயனும், அவனுக்கு விஜயனும், அவனுக்கு க்ருதனும், அவனுக்கு ஹர்யதனனும், அவனுக்கு ஸஹதேவனும், அவனுக்கு அதீனனும், அவனுக்கு ஜயத்ஸேனனும், அவனுக்கு ஸங்க்ருதியும், அவனுக்கு க்ஷத்ரதர்மனும் பிறந்தனர்.

04_10. புரூரவஸ்ஸின் மகன் ஆயுஸ்ஸின் மற்றொரு மகன் நஹுஷனுக்கு யதி, யயாதி, ஸம்யாதி, ஆயாதி, வியாதி, க்ருதி என்று ஆறு ஸத்புத்ரர்கள். யதி ராஜ்யத்தை விரும்பாததால் யயாதி அரசனானான். இவன் சுக்ராச்சார்யாரின் பெண் தேவயானியையும், வ்ருஷபர்வாவின் மகளான சர்மிஷ்டையையும் மணந்து, தேவயானியிடம் யது, துர்வஸு என்ற இரு பிள்ளைகளையும், சர்மிஷ்டையிடம் த்ருஹ்யன், அனு, பூரு என்ற மூன்று புத்ரர்களையும் பெற்றான். தனக்குப் பணிவிடை செய்வதற்காகத் தன்னுடன் வந்த சர்மிஷ்டையிடம் உரிமை கொண்டு பிள்ளைப் பெற்றதை அறிந்த தேவயானி, இதைப் பற்றித் தந்தையிடம் பொருமவே, சுக்ராச்சார்யார் யயாதிக்கு கிழத்தன்மை வரும்படி சபித்து விட்டார்.

அகாலத்தில் கிழத்தன்மை பெற்ற யயாதி ஆச்சார்யரின் திருவடிகளில் விழுந்து மன்னிப்பு கோர அவரும் மனங்கனிந்து, உன் மூப்பை மற்றொரு யுவனுடன் (யௌவனமாயுள்ளவன்) மாற்றிக் கொள் என்று அருளினார். யயாதி தன் பிள்ளைகளிடம் சென்று தன் மூப்பைப் பெற்றுக் கொண்டு அவர்களின் யௌவனத்தைத் தனக்குத் தருமாறு கேட்டான். இளையவன் பூருவைத் தவிர அனைவரும் மறுத்து விட்டனர். அவர்களுக்கு ராஜ்யம் கிடையாது என்று சபித்து விட்டு, பூருவுடன் தன் மூப்பை மாற்றிக் கொண்டான். விச்வாசீ என்ற அப்ஸரஸ்ஸுடனும், தேவயானியுடனும் பல ஆண்டுகள் ஸுகமாகக் கழித்தான். தர்மத்துடன் ஆட்சி செலுத்திப் பற்பல போகங்களையும் அனுபவித்தான். புதிது, புதிதாக ஆசையும், சுகமும் தோன்றியதே தவிர சலிப்பு உண்டாகவில்லை.

ஒரு நாள் புத்தி வந்தது யயாதிக்கு. “காமத்தை அனுபவிக்க, அனுபவிக்க அது அழிந்து விடும் என்று அனுபவித்தேன். ஆனால் அது வளர்ந்ததேயன்றி அழியவில்லை. அக்னி நெய்யால் நன்கு வளர்வது போல்தான் இந்தக் காமமும் அனுபவத்தால் நன்கு வளர்கிறது. உலகிலுள்ள அனைத்துத் தான்யங்களும், பொன், பசுக்கள், பெண்கள் என அனைத்தும் ஒருவனின் ஆசைக்கே போதாது. எனவே ஆசையை விடுவதே ஒரே வழி. நாம் தளர்ந்தாலும், பல்லும், மயிரும் உதிர்ந்து விட்டாலும் ஆசை தளர்வதில்லை. ஆசையே அனைத்துத் துக்கங்களுக்கும் காரணம். எனவே புத்தியுள்ளவன் ஆசையை விட வேண்டும். அப்போது தான் ஸுகம். இதற்கு நானே சரியான உதாரணம்.

என் புத்ரனின் யௌவனத்தைப் பெற்று ஆயிரம் வருடங்கள் ஆகி விட்டன. இன்னும் ஆசை ஒழியவில்லை. தினமும் புதிதாகவே தோன்றுகிறது. எனவே ஆசையை விடுத்து பசி, தாகம், நான், எனது என்ற எண்ணங்களை ஒழித்து, மனதை ப்ரஹ்மத்திடம் செலுத்தி, ம்ருகங்களுடன் வாழ்வதே சிறந்தது” என்று கூறிவிட்டு மீண்டும் பூருவுடன் தன் யௌவனத்தை மாற்றிக் கொள்கிறான். தென் கிழக்கு ராஜ்யங்களுக்கு துர்வஸுவையும், மேற்கே த்ருஹ்யனையும், தெற்கே யதுவையும், வடக்கே அனுவையும் சிற்றரசர்களாக்கி விட்டு யௌவனமடைந்த பூருவை பூமண்டல அதிபதியாக்கி விட்டுத் தவம் செய்ய கானகம் சென்று விடுகிறான் யயாதி.

04_12. யதுவின் புத்ரன் க்ரோஷ்டுவிற்கு த்வஜிநீவானும், அவனுக்கு ஸ்வாதி என்பவனும், அவனுக்கு ருசங்குவும், அவனுக்கு சித்திரரதனும், அவனுக்கு சசிபிந்துவும் பிறந்தனர். இந்த சசிபிந்து பதினான்கு ரத்னங்களுடனும் (ப்ராணன் இல்லாதவை ஏழு – சக்ரம், ரதம், மணி, கட்கம், சர்மம், கொடி, நிதி; ப்ராணன் உள்ளவை ஏழு – மனைவி, புரோஹிதன், ஸேனாபதி, ரதகாரன், காலாட்படை, குதிரைப்படை, யானைப்படை), லக்ஷம் பத்னிகளுடனும், பத்து லக்ஷம் பிள்ளைகளுடனும் சக்ரவர்த்தியாக இருந்தான். இவர்களில் ப்ருதுச்ரவஸ், ப்ருதுகர்மா, ப்ருதுகீர்த்தி, ப்ருதுயசஸ், ப்ருதுஜயன், ப்ருதுதாஸன் என்ற ஆறு புத்ரர்கள் முக்யமானவர்கள். ப்ருதுச்ரவஸ்ஸுக்கு ப்ருதுதமனும், அவனுக்கு உசநஸ்ஸும் (நூறு அச்வமேதங்கள் செய்தவன்), அவனுக்கு சிதபு என்பவனும், அவனுக்கு ருக்மகவசனும், அவனுக்குப் பராவ்ருத் என்பவனும், அவனுக்கு ருக்மேஷு, ப்ருதுக்மன், ஜ்யாமகன், பதிதன், ஹரிதன் என்ற ஐந்து புதல்வர்களும் இருந்தனர்.

ஜ்யாமகனுக்கு சைப்யை என்ற மனைவி. அவளுக்குப் பிள்ளையில்லை. ஜ்யாமகனுக்கு அவளிடம் பயம். எனவே இன்னொரு கல்யாணம் செய்து கொள்ளாமலே அவளிஷ்டப்படி இருந்து விட்டான். குழந்தைகளில்லை. அப்போது நடந்த ஒரு சண்டையில் இந்த ஜ்யாமகன் அனைத்துப் படைகளையும் கொன்றும், துரத்தியும் வெற்றி வாகை சூடினான். அப்போது அங்கு ஒரு பெண் தன்னைக் காப்பாற்ற எவரும் இன்றி அலறிக் கொண்டிருந்தாள். அவளைக் கண்டதும் “மலடியின் கணவனாகப் பிள்ளைகளின்றி இருக்கும் தனக்காகவே இந்த ஸ்த்ரீ ரத்னம் தெய்வத்தால் அனுப்பப்பட்டுள்ளது. இவளை மணக்கலாம்” என்று நினைத்தான். ஆனால் சைப்யையிடம் இருக்கும் பயத்தால் இவளை அவளிடம் உத்தரவு கேட்டே மணக்க வேண்டும் என்று நிச்சயித்துத் தன்னுடன் அவளைத் தேரில் ஏற்றிக் கொண்டு வந்து விட்டான்.

வெற்றி வாகை சூடி வரும் அரசனை வரவேற்க வந்த சைப்யை, புதிதாக ஒரு பெண்ணை அவனிடம் கண்டதும் யாரிவள் என்று கோபத்துடன் கேட்கிறாள். அவளைக் கண்டதும் கதி கலங்கிய ஜ்யாமகன் நாக்குழறி மாற்றுப்பெண் என்று கூறி விடுகிறான். “நமக்கேது பிள்ளை, எந்தப் பிள்ளைக்கு இவளை மணம் முடிக்கப் போகிறீர்கள்” என்று மீண்டும் சைப்யை கேட்க, தான் முன்னம் கூறியதையே ஒட்டி “அன்பானவளே, உனக்கே ஒருவன் பிறப்பான். அவனுக்கு மணம் முடிக்கவே இவளை அழைத்து வந்தேன்” என்று ஒருவாறு முடித்தான். தனக்கு மகன் பிறக்கப் போவதாகக் கூறியதைக் கேட்ட சைப்யை இப்போது கோபம் மறைந்து ஸந்தோஷத்துடன் “அப்படியே ஆகட்டும்” என்கிறாள். தர்மம் தவறாத அரசனும், பதிவ்ரதையான சைப்யையும் இப்படிக் கூறியதால் அஸ்து தேவதைகளும் அதை உறுதி செய்தன.

வயது முதிர்ந்திருந்த போதும் இப்படி சில நாட்களில் கர்ப்பவதியான சைப்யை விதர்பன் என்ற புத்ரனைப் பெற்றெடுத்தாள். விதர்பனும் தன் தந்தை முன்பே தனக்காகக் கொண்டு வந்திருந்த ஸ்நுஷை (மருமகள்) என்பவளையே மணந்து கொண்டான். இவர்களுக்கு க்ரதன், கைசிகன், ரோமபாதன் என்று மூன்று குழந்தைகள். நாரதரிடமிருந்து ஞானத்தைப் பெற்றுச் சிறந்த ரோமபாதனுக்கு பப்ருவும், அவனுக்கு த்ருதியும், அவனுக்குக் கைசிகனும், அவனுக்கு சேதியும் பிறந்தனர். இவன் வம்சத்தவர்கள் சேதி நாட்டரசர்கள் ஆவர். விதர்பனின் இன்னொரு புதல்வனான க்ரதனுக்குக் குந்தியும், அவனுக்கு த்ருஷ்டியும், அவனுக்கு நித்ருதியும், அவனுக்குத் தாசார்ஹனும், அவனுக்கு வ்யோமனும், அவனுக்கு ஜீமூதனும், அவனுக்கு விக்ருதியும், அவனுக்குப் பீமரதனும், அவனுக்கு நவரதனும், அவனுக்குத் தசரதனும், அவனுக்குச் சகுனியும், அவனுக்குக் கரம்பியும், அவனுக்கு மதுவும், பின் குருவம்சன், அனு, புருஹோத்ரன், அம்சு, ஸத்வதன் என இந்த வம்சம் நீண்டது. இந்த ஸத்வதனிடமிருந்து ஸாத்வதர்கல் உண்டாயினர். இந்த ஜ்யாமக வம்ச வ்ருத்தியைக் கேட்பவர்கள் பாபங்களிலிருந்து விடுபடுகின்றனர்.

04_13. ஸத்வதனுக்கு பஜனன், பஜமானன், திவ்யன், அந்தகன், தேவாப்ருதன், மஹாபோஜன், வ்ருஷ்ணி என்ற புத்ரர்கள் பிறந்தனர். இவர்களில் பஜமானனுக்கு நிமி, க்ருகணன், வ்ருஷ்ணி என்ற மூவர் ஒரு மனைவியிடமும், சதஜித், ஸஹஸ்ரஜித், அயுதஜித் என்ற மூவர் மற்றொரு மனைவியின் வயிற்றிலும் பிறந்தனர். தேவாப்ருதனுக்குப் பப்ரு பிறந்தான். இந்த தேவாப்ருதனும், பப்ருவும் மிகவும் புகழ் பெற்றிருந்தனர். பக்கத்திலும், தூரத்திலும் இவர்களின் புகழுரைகள் ஒரே போல் இருந்தது. பிள்ளை மனிதர்களில் சிறந்தவன் என்றும், தகப்பன் தேவர்களுக்கு ஒப்பானவன் என்றும் போற்றப்பட்டனர். இவர்களிடம் உபதேசம் பெற்று எழுபத்து நாலாயிரம் பேர்கள் மோக்ஷம் பெற்றனர்.

மஹா போஜனுக்குப் பிறந்தவர்களே போஜர்கள். இவர்கள் ம்ருத்திகாவரம் என்ற நகரில் வஸித்ததால் மார்த்திகாவரர் என்றும் அழைக்கப்படுகின்றனர். வ்ருஷ்ணிக்கு ஸுமித்ரன், யுதாஜித் என்ற இரு பிள்ளைகள். ஸுமித்ரனுக்கு அனமித்ரனும், அவனுக்கு நிக்னனும், அவனுக்கு ப்ரஸேனன், ஸத்ராஜித் என்ற இருவரும் பிறந்தனர். இந்த ஸத்ராஜித் ஸூர்ய உபாஸகன். ஸூர்யனின் நண்பன். ஒரு ஸமயம் கடற்கரையில் நின்று ஸூர்யனைத் துதிக்கையில், அதனால் மகிழ்ந்த ஸூர்ய பஹவான் அவனுக்குத் தன் தோற்றத்தைக் காண்பித்தார். ஆனால் ஸத்ராஜித்தால் அந்த உருவை அறிந்து கொள்ள முடியவில்லை.

எனவே “பகவானே! வானில் எப்படி உருண்டையாய் உள்ளீரோ அதோ போலவே என் முன்னேயும் காட்சி அளிக்கிறீர். எப்படி ஸ்தொத்ரம் செய்தாலும் உங்கள் உருவை அறிந்து கொள்ள முடியவில்லை. அனுக்ரஹித்துத் தங்கள் ஸ்வரூபத்தைக் காட்டுங்கள்” என்று வேண்டிக் கொண்டான். இதைக் கேட்ட ஸூர்ய பகவான் தான் அணிந்திருக்கும் ஸ்யமந்த்க மணியாலேயே இவனால் தன்னைக் காண முடியவில்லை. கூசி நிற்கிறான் என்பதை அறிந்து அதை எடுத்து மறைத்துக் கொண்டார். இப்போது சிறிது சிவந்ததும், குறுகியதுமான ஸூர்யனையும், அவரின் பொன்னிறம் போன்ற கண்களையும் ஸத்ராஜித் கண்டான். ஸூர்யனை இன்னும் மகிழ்வுடன் துதித்து வணங்கினான்.

இவன் துதியால் மகிழ்ந்த ஸூர்யன் வரங்களைப் பெற்றுக் கொள்ளக் கூறினார். ஸத்ராஜித் மிகுந்த ப்ரகாசம் பொருந்திய அந்த ஸ்யமந்தக மணியைத் தனக்குத் தந்து விடுமாறு கேட்டு அதைப் பெற்றுக் கொண்டு விட்டான். இந்த ரத்னத்தைத் தன் கழுத்தில் அணிந்து கொண்டு, மிகுந்த ப்ரகாசத்தோடு த்வாரகை சென்றான். த்வாரகாவாஸிகள் ஸூர்ய பகவானே தங்களைத் தரிஸிக்க இங்கு வந்து கொண்டிருக்கிறார் என்று க்ருஷ்ணனிடம் கூறினர். அவர் அவர்களிடம் உண்மையை எடுத்துக் கூறி, பயமின்றி அவனைத் தரிஸிக்கச் சொன்னார். அதன் பின் தன்னிடம் சேர்ந்த ஸத்ராஜித்திற்கு, இந்த ஸ்யமந்தகம் தினம் தினம் எட்டு பாரம் பொன்னைத் தந்து கொண்டிருந்தது. மேலும் இதன் மஹிமையால் அவன் ராஜ்யத்தில் வ்யாதி, பாம்பு, நெருப்பும், நீர், பஞ்சம் இவைகளாலுண்டாகும் பயங்கள் எதுவும் இல்லாதிருந்தது.

க்ருஷ்ணன் ஸ்மந்தகத்தைக் கண்டதிலிருந்தே “இதைப் பறித்து ராஜா உக்ரஸேனருக்குத் தர வேண்டும், ஆனால் வீணாக குல பேதம் வந்து விடும்” என்று நினைத்து மௌனமாயிருந்தான். க்ருஷ்ணனின் விருப்பத்தையறிந்த ஸத்ராஜித், ஸ்யமந்தகத்தைத் தன் ஸஹோதரன் ப்ரஸேனனிடம் கொடுத்து விட்டான். சுத்தக் குறைவுள்ளவர் இந்த மணியைத் தரித்தால் அது அவர்களைக் கொன்று விடும். ப்ரஸேனன் இப்படிப்பட்டவன். எனவே அவன் வேட்டைக்குச் சென்றிருந்த போது ஒரு சிங்கம் இவனைக் கொன்று மணியை வாயில் கவ்விக் கொண்டு ஓடி விட்டது. அதனிடமிருந்து ஜாம்பவான் என்ற கரடியரசன், சிங்கத்தைக் கொன்று மணியைத் தன் குழந்தை ஸுகுமாரகனுக்கு விளையாடக் கொடுத்து விட்டது. இதையறியாமல் யாதவர்கள் க்ருஷ்ணன் தான் ப்ரஸேனனைக் கொன்று விட்டான் என்று நினைத்தனர்.

இவர்கள் எண்ணத்தை அறிந்த க்ருஷ்ணன் அபவாதத்தைப் போக்கிக் கொள்ளவும், ப்ரஸேனன் நிலையறியவும் தானே அவர்களுடன் காட்டிற்குள் சென்றார். வழியில் அனைவரும் ப்ரஸேனனையும், சிங்கத்தின் காலடிகளையும் கண்டனர். அதன் பின் சிங்கத்தின் காலடிகளைத் தொடர்ந்து சென்ற போது இறந்து கிடந்த சிங்கத்தையும், கரடியின் காலடிகளையும் கண்டனர். அதைத் தொடர்ந்து சென்ற போது அது ஒரு குகையில் போய் முடிந்தது. ஸைன்யங்களை மலைவாசலிலேயே நிறுத்தி விட்டு உள்ளே சென்ற க்ருஷ்ணர் அங்கு ஒரு பெண் ரத்னத்தைக் காட்டி குழந்தையுடன் கொஞ்சிக் கொண்டிருப்பதைக் கண்டார். “ப்ரஸேனனைக் கொன்று இந்த ஸ்யமந்தகத்தை எடுத்துச் சென்ற சிங்கத்தைக் கொன்று நம் ஜாம்பவான் அதை உனக்குக் கொடுத்திருக்கிறார், பார் இதை, இது உன்னுடையது” என்று அவள் கூறிக் கொண்டிருந்தாள்.

இவ்வாறு குழந்தையை வளர்த்துக் கொண்டிருந்த பெண்ணிடமிருந்து உண்மைகளைத் தெரிந்து கொண்ட க்ருஷ்ணனை அந்தப் பெண்ணும் பார்த்து விட்டாள். புதியதாக ஒருவனைப் பார்த்ததும் பயத்தில் அலறிய அவள் குரல் கேட்டு ஜாம்பவானும் அங்கு வந்தார். அவருக்கும் க்ருஷ்ணனுக்கும் இருபத்தொரு நாட்கள் பயங்கர யுத்தம் நடந்தது. வெளியே ஏழெட்டு நாட்கள் காத்திருந்த யாதவர்கள் க்ருஷ்ணன் ஒருவருடனும் இவ்வளவு காலம் சண்டை செய்ததில்லை. எனவே அவன் குகைக்குள்ளேயே இறந்து விட்டான் என்று உறுதி செய்து, அதை த்வாரகையிலும் சென்று பரப்பினர். இதைக் கேட்ட க்ருஷ்ணனின் உறவினர்களும் ச்ரத்தையும் க்ருஷ்ணனுக்குச் செய்ய வேண்டிய உத்தர க்ரியைகளைச் செய்தனர்.

இந்த ச்ராத்தங்களால் தெம்பும், ப்ராணனும் வலுத்தது க்ருஷ்ணனுக்கு. இதே ஸமயம் ஜாம்பவானும் உணவின்றி வலுவிழந்து, க்ருஷ்ணனை வணங்கி, “தாங்கள் தேவ, தானவ, ராக்ஷஸ, கந்தர்வர் என எவராலும் வெல்ல முடியாதவர் போலும். உம்மை மனிதர்களோ, விலங்குகளான நாங்களோ வெல்ல இயலாது. நீங்களும் எங்கள் ராமனைப் போல நாராயணனின் அவதாரமாயிருக்க வேண்டும்” என்று துதித்தார். க்ருஷ்ணனும் பூபாரம் குறைப்பதற்காகத் தான் அவதரித்துள்ளதைத் தெரிவித்து, ஜாம்பவானை இறுகத் தழுவி, அவர் களைப்பைப் போக்கினார். விஷயத்தை முழுதும் அறிந்து கொண்ட ஜாம்பவான் மகிழ்ச்சியில் திளைத்தார். அதிதிக்கு உபசாரங்களைச் செய்து, தன் பெண்ணான ஜாம்பவதியையும் முறைப்படி கன்யாதானமாகக் கொடுத்தார். ஸ்யமந்தகத்தையும் க்ருஷ்ணனுக்கேக் கொடுத்தார்.

இறந்து விட்டதாக நினைத்திருந்த க்ருஷ்ணனை ஜாம்பவதியுடனும், ஸ்யமந்தகத்துடனும் கண்டு பெரும் உபஸரிப்புடன் வரவேற்றனர் த்வாரகாவாஸிகள். ஸபையில் அனைவர் முன்பாகவும் நடந்தவைகளை விவரித்துக் கூறிய க்ருஷ்ணர் ஸ்யமந்தகத்தை மீண்டும் ஸத்ராஜித்திடமே கொடுத்து விட்டு, ஜாம்பவதியுடன் அந்தப்புரம் சென்றார். க்ருஷ்ணனின் இந்த உதார குணத்தால் மிகவும் வெட்கப்பட்ட ஸத்ராஜித் தன் பெண் ஸத்யபாமையை க்ருஷ்ணனுக்கே மணம் முடித்தான். ஸத்யபாமாவை ஏற்கனவே அக்ரூரன், க்ருதவர்மா, சததன்வா முதலானவர்கள் கேட்டிருந்தனர். ஸத்ராஜித்தின் இந்த முடிவைக் கேட்ட அவர்கள் சததன்வாவைத் தலைமையாக்கி அவனைப் போருக்குத் தூண்டினர்.

“நாம் ஏற்கனவே கேட்டிருந்தும் பெண்ணை நமக்குத் தராமல் க்ருஷ்ணனுக்குத் தந்திருக்கிறான் ஸத்ராஜித். எங்களை மதித்திராவிடினும், உன்னையாவது மதித்திருக்க வேண்டும். எனவே இனி ஸத்ராஜித் இருப்பதில் ப்ரயோஜனமில்லை. நீ அவனைக் கொன்று ஸ்யமந்தகத்தையும் எடுத்துக் கொள். க்ருஷ்ணன் எதிர்த்து வந்தால் நாங்கள் இருக்கிறோம்” என்று அவர்கள் சததன்வாவிடம் கூற, அவனும் இதற்கிசைந்து ஸத்ராஜித்தைக் கொல்ல ஸந்தர்பத்தை எதிர்பார்த்திருந்தான். அந்த ஸமயத்தில் பாண்டு புத்ரர்கள் வாரணாவத அரக்கு மாளிகையில் இறந்து விட்டனர் என்ற செய்தி வந்தது. அவர்கள் இறக்கவில்லை என்ற உண்மை தெரிந்திருந்தும், துர்யோதனனுக்குப் பாண்டவர்கள் இறப்பில் சந்தேஹம் வராமலிருப்பதற்காக அவனை துக்கம் விசாரித்து விட்டு வருவதற்காக க்ருஷ்ணன் வாரணாவதம் சென்றான்.

இந்த ஸந்தர்பத்தில் தூங்கிக்கொண்டிருந்த ஸத்ராஜித்தைக் கொன்று ஸ்யமந்தகத்தையும் அபஹரித்து விட்டான் சததன்வா. இதையறிந்த ஸத்யபாமை மிகுந்த துயரமும், கோபமும் கொண்டு தன் தேரிலேறி வாரணாவதம் வந்தாள். கணவனிடம் சென்று “என்னை உங்களுக்கு மணம் முடித்த கோபத்தில் சததன்வா என் தந்தையைக் கொன்று உலகின் இருளைப் போக்கும் அந்த உயர்ந்த ஸ்யமந்தகத்தையும் எடுத்துச் சென்று விட்டான். இது உங்களுக்கே அவமானம். எதைச் செய்ய வேண்டுமோ அதைச் செய்யுங்கள்” என்று கூறி அழுதாள். உள்ளூர ஸத்ராஜித்தின் முடிவையும், ஸ்யமந்தகத்தையும் நினைத்து ஸந்தோஷப்பட்ட க்ருஷ்ணன் ஸத்யபாமாவிற்காகத் தன் கண்களைச் சிவப்பாகக் காட்டிக் கொண்டு “நீ சொன்னது சரியே.

இந்த அவமானம் என்னுடையதே. இதை நான் ஒருக்காலும் ஸஹிக்க மாட்டேன். இதற்குத் தீர்வு சததன்வாவின் முடிவேயாகும். அருகிலிருக்கும் மரத்தில் பறவைகள் கூடு கட்டிக் கொண்டு தொந்தரவு செய்தால் அதற்குச் சரியான தீர்வு அந்த மரத்தையே வெட்டி விடுவது தான். பக்ஷிகளைக் கொல்வதல்ல. அதேபோல் இங்கும் சததன்வாவைக் கொல்வதை விட வேறெந்த பரிஹாரமும் சிறந்ததாக இருக்காது. வேறு வழியில்லை. நீ அழாதே, நான் பார்த்துக் கொள்கிறேன்” என்று கூறித் தேரிலேறி த்வாரகை திரும்பினான். அங்கு பலராமனுடன் சேர்ந்து “அண்ணா! ஸ்யமந்தகத்திற்கு இருவர் சொந்தம் கொண்டாடினர். ஒருவனைக் காட்டில் சிங்கம் கொன்று விட்டது. மற்றொருவனை சததன்வா கொன்று விட்டான். இப்போது அது பொது. எனவே சததன்வாவைக் கொன்று ஸ்யமந்தகத்தை நாமிருவரும் எடுத்துக் கொள்வோம், உடனே தேரிலேறுங்கள்” என்றான்.

இவர்களிருவரும் புறப்பட்டுத் தன்னைக் கொல்ல வருவதை அறிந்த சததன்வா, க்ருதவர்மாவிடம் ஓடினான். அவன் க்ருஷ்ணனையும், பலராமனையும் சேர்த்து என்னால் எதிர்க்க முடியாது என்று மறுத்து விட்டான். சததன்வா உடனே அக்ரூரனிடம் சென்றான். அவன் “இவர்களை தேவர்களாலும் வெல்ல இயலாது. சக்ரதாரி உலகத்தையே அடக்கி விடுவான். அஸுரர்களின் மனைவிகளை கணவனை இழந்தவர்களாகச் செய்தவர்கள் இவர்கள். எவராலும் இவர்களை வெல்ல இயலாது” என்று பயந்து மறுத்து விட்டான். வேறு வழியில்லாத சததன்வா அக்ரூரனிடமே “இந்த ஸ்யமந்தக மணியையாவதுப் பத்திரமாகக் காத்துக் கொடுக்க முடியுமா” என்று கேட்டான்.

“நீ இறக்க நேர்ந்தாலும் இது என்னிடமிருப்பதை எவரிடமும் சொல்லாமலிருப்பாயானால், நான் வைத்துக் கொள்கிறேன்” என்று நிபந்தனை விதிக்க, அதற்குட்பட்டு, ஸ்யமந்தகத்தை அக்ரூரனிடம் கொடுத்து விட்டு நாளொன்றுக்கு நூறு காத தூரம் (ஒரு காதம் தோராயமாக மூன்று மைல்கள்) ஓடக் கூடிய ஒரு பெண் குதிரையிலேறி ஓடி விட்டான் சததன்வா. பலராமனுடன் க்ருஷ்ணனும் உயர்ந்த நான்கு குதிரைகள் பூட்டிய தேரிலேறி அவனைத் துரத்தினான். நூறு காதம் முடிந்து மிதிலைக்கருகில் மிகவும் களைப்படைந்த சததன்வாவின் குதிரை இறந்து விழுந்து விட்டது. சததன்வா கால்களாலேயே ஓடத் தொடங்கினான். அவன் குதிரையைக் கண்ட க்ருஷ்ணன் பலராமனிடம் “நம் குதிரைகளும் களைத்து விட்டன. இந்த இறந்த குதிரையைப் பார்த்து பயந்தும் விட்டன. எனவே தாங்கள் தேரிலேயே இருங்கள். நானும் ஓடிச் சென்றே, அவனைக் கொல்கிறேன்” என்று கூறி விட்டு ஓடியே அவனைத் துரத்தினான்.

இரண்டு க்ரோச தூரம் துரத்திச் சென்ற க்ருஷ்ணன் சததன்வாவைக் குறித்து தன் சக்ரத்தைப் ப்ரயோகித்தான். அது அவன் தலையை அறுத்து, அவனைக் கொன்றது. அவனிடம் ஸ்யமந்தகத்தைத் தேடி, ஏமாந்து பலராமனிடம் வந்தான் க்ருஷ்ணன். “அண்ணா! நாம் சததன்வாவைக் கொன்றது வீண், அவனிடம் அந்த மணி இல்லை” என்றான் க்ருஷ்ணன். இதை நம்பாத பலராமன் “நீ பொருளாசையால் இப்படிப் பொய் கூறுகிறாய். நான் உன் ஸஹோதரனென்பதால் இதைப் பொறுக்கிறேன். நீ நிந்திக்கத் தக்கவன். உன்னாலோ, பந்துக்களாலோ எனக்கு இனி த்வாரகையில் ஒன்றும் ஆகத் தேவையில்லை. நான் என் வழி செல்கிறேன். த்வாரகைக்கு இனி நான் வரவில்லை. உன்னுடன் வஸிக்கவும் விரும்பவில்லை. நீ உன் இஷ்டப்படி செல்” என்று கூறிவிட்டான்.

க்ருஷ்ணன் பலமுறை பலராமனிடம் விஷயங்களைக் கூறி வேண்டியும், அவனைப் புறக்கணித்துக் கோபத்துடன் விதேஹம் சென்று விட்டான் பலராமன். க்ருஷ்ணன் வேறு வழியின்றி தான் மட்டும் த்வாரகை வந்து சேர்ந்தான். விதேஹத்தில் ஜனகரால் வரவேற்று, உபஸரிக்கப்பட்டுத் தங்கியிருந்த பலராமனிடம் அந்த ஸமயத்தில் தான் துர்யோதனன் வந்து கதாயுத்தம் செய்யக் கற்றுக் கொண்டான். மூன்று வருஷங்கள் இப்படி ஓடின. உக்ரஸேனன், பப்ரு முதலான மூத்த யாதவர்கள் உண்மையிலேயே க்ருஷ்ணனிடம் ஸ்யமந்தகம் இல்லை என்பதை அறிந்து, அதை பலராமனிடம் விளக்கிக் கூறி, மீண்டும் அவனை க்ருஷ்ணனிடம் கொண்டு வந்து சேர்த்தனர்.

அக்ரூரர் அந்த ஸ்யமந்தகத்திற்குரிய யோக்யதையுடன் இருந்தார். அதுவும் அவருக்கு நிறைய பொன்னைத் தந்தது. தர்மத்திலும், பகவானிடத்திலும் ச்ரத்தையுள்ள அவர் அந்த செல்வத்தைக் கொண்டு பல யாகங்களைச் செய்து வந்தார். இதற்கு மற்றொரு காரணமும் உண்டு. அக்ரூரர் போஜ வம்சத்தைச் சேர்ந்தவர். இவர்களுக்கு க்ருஷ்ணனைச் சேர்ந்த யாதவர்களால் என்றுமே பகை பயம் உண்டு. யாக தீக்ஷையிலிருப்பவனைக் கொன்றால் வரும் ப்ரஹ்மஹத்தி தோஷத்திற்குப் பயந்து யாதவர்கள் தன்னைக் கொல்ல மாட்டார்கள் என்ற காரணத்தாலும் அக்ரூரர் எப்போது ஏதாவதொரு யாக தீக்ஷையிலேயே இருந்தார். இவர் இப்படி மணியுடன் இருந்ததால் த்வாரகையிலும் வ்யாதி, பஞ்சம், கொலை என்று எந்த தீயவைகளும் இல்லாதிருந்தது. இப்படியே அறுபத்திரண்டு வருஷங்கள் உருண்டோடின.

இந்த ஸமயத்தில் ஸத்வதனுடைய கொள்ளுப் பேரனான சத்ருக்னன் என்பவனை போஜர்கள் கொன்று விட்டனர். இந்த ஸாத்வதர்-போஜர் சண்டையை விரும்பாத அக்ரூரர் போஜர்களுடன் த்வாரகையிலிருந்து வெளியேறினார். இப்படி அக்ரூரர் வெளியேறியதும் த்வாரகைக்குத் பாம்புகள், வ்யாதி, அகால மரணம் என அனைத்துத் தீங்குகளும் வரத் தொடங்கின. க்ருஷ்ணன் முதியோர்களுடன் ஒரு ஸபையைக் கூட்டி இது குறித்து ஆராய்ந்த போது, யாதவர்களில் மூத்த அந்தகன் என்பவர் “அக்ரூரர் நாட்டை விட்டு வெளியேறினதாலேயே இவ்வாறெல்லாம் நடக்கின்றன. இவன் பெற்றோர்களும் இப்படியே. ச்வபல்கர் என்ற அக்ரூரரின் தகப்பனார் இருக்குமிடங்களிலும் எந்த துர்பிக்ஷங்களும் இருந்ததில்லை.

இதனாலேயே மழையே இல்லாதிருந்த காசிக்கு ஒரு முறை, காசிராஜன் ச்வபல்கரை அழைத்துச் சென்றார். அவர் சென்றதும் உடனே மழை பொழிந்து விட்டது. காசிராஜன் தன் பெண்ணையே அவருக்கு மணம் முடித்தான். அவளும் அப்படியே புண்யமானவள். காலம் ஆகியும் ப்ரஸவம் ஆகாதிருந்த காசீராஜன் தன் மனைவியின் கர்ப்பத்திடம் “குழந்தாய்! ஏன் இன்னும் வெளியில் வராதிருக்கிறாய். உன் முகத்தைப் பார்க்க நாங்கள் ஆவலோடு இருக்கிறோம். தாயையும் வருத்தாமல் சீக்ரமாக வெளியே வந்து விடு” என்று கூறினான். பனிரெண்டு வருஷங்களாக கர்ப்பத்திலேயே இருந்த அந்தப் பெண் குழந்தை “அப்பா, நீங்கள் தினமும் ஒரு ப்ராஹ்மணனுக்கு ஒரு பசு வீதம் மூன்று வருஷங்கள் தானம் செய்தால் நான் பிறப்பேன்” என்று உறுதி கூறி, அதன்படி பிறந்தாள்.

கோதானம் செய்து பிறந்தவளாதலால் காந்தினீ என்று பெயரிடப்பட்டாள். இந்த காந்தினீயே அக்ரூரரின் தாய். இப்படி அவர்கள் அனைவருமே தூய்மையானவர்கள். எனவே சிறு குற்றங்களைப் பொறுத்து அக்ரூரரைத் திரும்ப அழைத்து வாருங்கள்” என்றார். யாதவர்களும் இதை ஒப்புக்கொண்டு அவரை மீண்டும் அழைக்க, உக்ரஸேனர், ராம, க்ருஷ்ணர்களின் அபயத்தில் அவரும் மீண்டும் வந்தார். த்வாரகையும் முன்பு போல் ஸுபிக்ஷமானது. ஆனால் க்ருஷ்ணன் ஸுதாரித்துக் கொண்டான். “அக்ரூரர் வம்சத்தார் பாவனமானவர்கள் என்பதும், அதனால் அவர்களிருக்குமிடத்தில் ஸுபிக்ஷம் இருக்கிறது என்பது அல்பமாயிருக்கிறதே. நடப்பதையெல்லாம் பார்த்தால் ஸ்யமந்தகத்தின் மஹிமை போல இருக்கிறது.

எனவே அது அக்ரூரனிடம் தான் இருக்க வேண்டும். மேலும் இவ்வளவு யாகங்கள் செய்ய அக்ரூரனுக்கும் அதுதான் செல்வத்தைப் பொழிந்து கொண்டிருக்க வேண்டும். எனவே ஸ்யமந்தகம் அக்ரூரனிடம் தான் இருக்கிறது. இது முடிவு” என்று நிச்சயித்துக் கொண்டான்.
அரண்மனையிலேயே கபடமாக ஒரு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்து யாதவர்களையும், அக்ரூரையும் அழைத்தான். எல்லோரும் உற்சாகமாகவும், ஸந்தோஷமாகவும் பேசிக் கொண்டிருக்கும் போது, க்ருஷ்ணன் அக்ரூரரைப் பார்த்து “அக்ரூரரே! சததன்வா ஸ்யமந்தகத்தை உங்களிடம் கொடுத்திருப்பதை நான் அறிவேன். அது உங்களிடமே இருக்கட்டும். நீங்கள் வைத்திருந்தாலும் அதன் பயனைத் தேசமே அனுபவித்து வருகிறது.

ஆனால் அண்ணா பலராமர் அதை நான் வைத்துக் கொண்டிருப்பதாக நினைத்து என் மீது கோபத்திலும், வருத்தத்திலும் இருக்கிறார். அதை நீக்குவதற்காகவாவது எனக்காக அதைக் காட்டுங்கள்” என்று எல்லோர் முன்னிலையிலும் கூறிவிட்டார். அக்ரூரர் இதைச் சிறிதும் எதிர்ப்பார்க்கவில்லை. இல்லை என்று கூறி, க்ருஷ்ணன் எல்லோர் முன்னிலையிலும் தன்னைச் சோதனை செய்து அதை வெளியே எடுத்து விட்டால், வீணான விரோதமும், அபவாதமும் வரும். வேறு வழியின்றி உரைக்கலானார் “க்ருஷ்ணா, நீ கூறுவது உண்மை. சததன்வா அதை என்னிடம் தான் தந்துள்ளான். அவன் இறந்ததும் என்றோ ஒரு நாள் நீ அதைக் கேட்பாயென்றே தான் தினமும் நானும் நினைத்துக் கொண்டிருந்தேன்.

அதற்கு மதிப்பு கொடுத்து நானும் ஸுக போகங்களை சிறிதும் அனுபவிக்காமலேயே இருந்து வருகிறேன். உன்னிடம் இதை நானாகக் கொடுத்தாலும் விரோதம் வரக்கூடும் என்று நினைத்தேன். நானே இதை என்னிடமே வைத்திருந்தாலும் நாட்டுக்கு நல்லது தானே என்றும் நீ நினைப்பாயோ என்று இருந்தேன். இதோ, இப்போது நீயே அதை வெளிப்படையாகக் கேட்டு விட்டாய். நான் அதை உன்னிடமே கொடுத்து விடுகிறேன். நீ வைத்துக் கொள். அல்லது உனக்கு உகந்தவர்களுக்குக் கொடு” என்று கூறி அக்ரூரர் துணியில் முடிந்து, தங்கச் சிமிழில் வைத்துத் தன் மடியில் செருகி வைத்திருந்த அந்த ஸ்யமந்தகத்தை எல்லோர் முன்னிலையிலும் பிரித்தார்.

அதன் கண் கூசும் ப்ரகாசத்தால் ஸபையே ஜொலித்தது. ஸபையோர் முன்னே அதை வைத்து “இது தான் என்னிடம் சததன்வா தந்த மணி, இது யாருக்குச் சொந்தமோ அவர் எடுத்துக் கொள்ளட்டும்” என்று வைத்து விட்டார். வந்தது அடுத்த குழப்பம். மணி உண்மையில் ஸத்யபாமாவின் அப்பாவினுடையது. ஆனா சததன்வாவைக் கொன்று நாம் அந்த மணியை எடுத்துக் கொள்வோம் என்று ஏற்கனவே க்ருஷ்ணன் பலராமனிடம் கூறியுள்ளான். இப்போது அதை யாரிடம் கொடுப்பது. வண்டிச் சக்ரத்திற்கும், எருதுக்கும் இடையில் மாட்டிக் கொண்ட நிலை க்ருஷ்ணனுக்கு. “அக்ரூரரே! மணி என்னிடம் இல்லை என்பதை நிரூபிக்கவே நான் அதைக் காட்டச் சொன்னேன்.

இப்போது மணி யாருக்கு சொந்தம் என்றால் அது ஏற்கனவே எங்கள் வார்த்தைப்படி எனக்கும், அண்ணாவுக்கும் தான் சொந்தம். அதேபோல் அது ஸத்யபாமாவின் அப்பாவுடையது என்பதால் அவளுக்கும் சொந்தமானது. மேலும் இந்த மணியோ ப்ரஹ்மசர்யம், ஒழுக்கம் என்று பல நியமங்களுடன் இருப்பவர்களிடமே தானும் ஒழுங்காக இருக்கும். தேசத்தையும் ஸுபிக்ஷமாக்கும். இல்லையேல் வைத்திருப்பவர்களையே இது கொன்று விடும். இது இதன் ஸ்வபாவம். நானோ பதினாறாயிரம் மனைவிகளைக் கொண்டவன். ஆக நானும் இதை வைத்திருக்கத் தகுதியில்லாதவன், என் மனைவி என்பதால் ஸத்யபாமைக்கும் தகுதியில்லை என்றாகிறது.

அண்ணா இதை வைத்திருக்க நினைத்தால், அவர் இவ்வளவு நாள் பழகியிருக்கும் கள் குடிப்பது முதலான எல்லா போகங்களையும் அவரும் விட வேண்டும். அது அவ்வளவு எளிதல்ல. எனவே அக்ரூரரே! யாதவர்கள், நான், ஸத்யபாமா, அண்ணா அனைவரும் உம்மை வேண்டுகிறோம். இதைத் தரித்துக் கொள்ள முழுத்தகுதியுள்ளவர் நீங்களே. எனவே நீங்களே இதை மறுப்புக் கூறாமல் லோகக்ஷேமத்திற்காகத் தரிக்க வேண்டும்” என்று முடிவாகக் கூறி, தன் மீதான பழியையும் போக்கிக் கொண்டதோடு, ஸ்யமந்தகத்தை யாருக்கு சொந்தமாக்குவது என்ற குழப்பத்தையும் ஒருவாறு போக்கிவிட்டான் க்ருஷ்ணன். தானும் எந்த புது ப்ரச்னைகளிலும் மாட்டிக் கொள்ளவில்லை.

அக்ரூரரும் க்ருஷ்ணனுக்கு இணங்கி எல்லோரும் பார்க்கும் படி ஸ்யமந்தகத்தைத் தன் கழுத்தில் அணிந்து கொண்டு இன்னொரு ஸூர்யன் போல ஸஞ்சரிக்கலானார். இப்படி இறைவனுக்கே வீண்பழி வந்து நீங்கிய இந்த பரம பாவனமான ஸ்யமந்த்க உபாக்யானத்தை நினைப்பவர்களுக்கு ஒரு நாளும் வீண் பழி வராது. இதைக் கேட்பவர் பூலோகத்தில் வாழும் வரை சரீரத்தில் எந்த கெடுதலும் இன்றி திடத்துடனும், வீண் பாபங்களின்றியும் வாழ்வார்கள்.

04_14. அனமித்ரனுக்கு சினியும், அவனுக்கு ஸத்யகனும், அவனுக்கு யுயுதானன்(ஸாத்யகி), அவனுக்கு ஸஞ்ஜயன், அவனுக்குக் குணி, அவனுக்கு யுகந்தரன் என்பவனும் பிறந்தனர். இவர்களே சைநேயர்கள். இந்த வம்சத்தில்தான் வ்ருஷ்ணியும், அவன் பிள்ளைகள் ச்வபல்கன், சித்ரகன். இந்த ச்வபல்கனுக்கும், காந்தீனிக்கும் பிறந்தவனே அக்ரூரன். ச்வபல்கனுக்கே இன்னொரு மனைவியிடம் உபமத்கு என்பவன் பிறந்தான். இவனுக்கு ம்ருதாம்ருதன், விச்வன், அரிமேஜயன், கிரிக்ஷத்ரன், உபக்ஷத்ரன், சத்ருக்னன், அரிமர்தனன், தர்மத்ருக், த்ருஷ்டதர்மன், கந்தமன், ஓஜவாஹன், ப்ரதிவாஹன் என்ற பிள்ளைகளும், ஸுரா என்ற பெண்ணும் பிறந்தனர். அக்ரூரனுக்கு தேவவான், உபதேவன் என்ற பிள்ளைகளும், அவன் தம்பி சித்ரகனுக்கு ப்ருது, விப்ருது முதலானோரும் பிறந்தனர்.

முன்கதையில் பார்த்த ஸத்வதன் பிள்ளையான அந்தகனுக்குக் குகுரன், பஜமானன், சுசி, கம்பளன், பர்ஹிஷன் என்பவர்கள் பிள்ளைகள். குகுரனுக்கு த்ருஷ்டனும், அவனுக்குக் கபோதரோமாவும், அவனுக்கு விலோமாவும், அவனுக்கு அனுவும் (தும்புருவின் தோழன்), அவனுக்கு ஆனகதுந்துபியும், அவனுக்கு அபிஜித்தும், அவனுக்குப் புனர்வஸுவும், அவனுக்கு ஆஹுகனும், ஆஹுகி என்ற புத்ரியும் பிறந்தனர். ஆஹுகனுக்குத் தேவகன், உக்ரஸேனன் இருவரும், தேவகனுக்குத் தேவவான், உபதேவன், ஸஹதேவன், தேவரக்ஷிதா என்ற நால்வரும், வ்ருகதேவா, உபதேவா, தேவரக்ஷிதா, ஸ்ரீதேவா, சாந்திதேவா, ஸஹதேவா, தேவகி என்ற ஏழு பெண்களும் பிறந்தனர். இந்த எழுவரையும் க்ருஷ்ணன் மணந்தான்.

உக்ரஸேனனுக்குக் கம்ஸன், ந்யக்ரோதன், ஸுனாமா, அனகாஹ்வன், சங்கு, ஸுபூமி, ராஷ்ட்ரபாலன், யுத்ததுஷ்டி, ஸுதுஷ்டிமான் என்ற புத்ரகளும், கம்ஸை, கம்ஸவதீ, ஸுதனு, ராஷ்ட்ரபாலிகை என்ற புத்ரிகளும் உண்டு.

ஸத்வதன் மகனான அந்தகனின் பிள்ளைகளில் மற்றொருவனான பஜமானனுக்கு விதூரதனும், அவனுக்கு சூரனும், அவனுக்கு சமீயும், அவனுக்கு ப்ரதிக்ஷத்ரனும், அவனுக்கு போஜனும், அவனுக்கு ஹ்ருதிகனும், அவனுக்கு க்ருதவர்மா, சததனு, தேவார்ஹன், தேவகர்பன் முதலானோரும், தேவகர்பனுக்கு சூரனும்(தேவபீடன்) பிறந்தனர். இவனுக்கும் மாரிஷைக்கும் பிறந்தவர்களே வஸுதேவன், தேவபாகன், தேவச்ரவன், அஷ்டகன், ககுச்சக்ரன், வத்ஸதாரகன், ஸ்ருஞ்ஜயன், ச்யாமன், சமிகன், கண்டூஷன் என்ற பத்து புதல்வர்கள். இவர்களைத் தவிர ப்ருதை, ச்ருதஸேவை, ச்ருதகீர்த்தி, ச்ருதச்ரவஸ், ராஜாதிதேவி என்ற ஐந்து பெண்களும் சூரனுக்குப்(தேவபீடன்) பிறந்தவர்களே.

இந்த வஸுதேவருக்கே பகவான் பிறக்கப் போவதை அறிந்த தேவர்கள், இவர் பிறந்த தினத்தின் போதே ஆனகம், துந்துபி முதலான வாத்யங்களை (முரசு வகைகள்) முழங்கினர். ஆகையால் இவர் ஆனகதுந்துபி என்றும் வழங்கப்படுகிறார். வஸுதேவரின் தந்தையான சூரனின் நண்பன் குந்திக்குக் குழந்தைகள் எதுவும் இல்லாததால் சூரன் தன் மூத்த மகளான ப்ருதையை முறையாக அவனுக்குத் தத்துக் கொடுத்தான். இந்த ப்ருதையையே பாண்டு திருமணம் செய்து சொண்டார். இவள் யமன், வாயு, இந்த்ரன் இவர்கள் அருளால் யுதிஷ்ட்ரன், பீமஸேனன், அர்ஜுனன் என்ற மூவரைப் பாண்டுவின் பிள்ளைகளாகப் பெற்றாள்.

இந்த மூவரைத் தவிர இவள் கன்னிகையாக இருந்த போதே ஸூர்யனின் அருளால் கர்ணன் என்ற மகனையும் பெற்றிருந்தாள். கன்னிகையாக இருந்த போது பிறந்ததால் கர்ணனுக்கு கானீகன் என்ற பெயரும் உண்டு. இவர்களைத் தவிர பாண்டுவிற்கு மற்றொரு மனைவியான மாத்ரீயிடம் நாஸத்யன், தஸ்ரன் என்ற இரு தேவர்களின் அருளால் நகுல, ஸஹதேவன் என்ற இருவரும் பிறந்தனர். சூரனின் மற்றொரு பெண்ணாகிய ச்ருததேவாவை கரூச தேசத்து அரசனான வ்ருத்த வர்மா மணந்து தந்தவக்ரனைப் பெற்றான். ச்ருதகீர்த்தியை கேகயராஜன் மணந்து ஸந்தர்தனன் முதலான ஐந்து கேகயர்களை உண்டாக்கினான்.

ராஜாதிதேவி அவந்தி தேசத்தரசனை மணந்து விந்தன், அனுவிந்தனைப் பெற்றாள். ச்ருதச்ரவஸ் சேதி தேசத்தரசன் தமகோஷனை மணந்து சிசுபாலனைப் பெற்றாள். இந்த சிசுபாலனே முன்பு ஹிரண்யகசிபுவாக தைத்யர்களிடம் பிறந்து நரஸிம்ஹ அவதாரத்தின் போது கொல்லப்பட்டான். பின்பு மூவுலகையும் ஆட்சி செய்த தசகண்ட ராவணனாகப் பிறந்து, ராமரால் மடிந்ததும் இவனே. இப்போது மீண்டும் தமகோஷனுக்குப் பிள்ளையாகப் பிறந்து க்ருஷ்ணனிடம் பகைமை பாராட்டி, கடைசியில் அவராலேயே கொல்லப்பட்டு அவரிடமே லயமடைந்தான். ஆக விஷ்ணுவிடம் பக்தி, த்வேஷம் என்று எந்த விதத்தில் தொடர்பு வைத்துக் கொண்டாலும் உயர்ந்த ஸ்தானமே கிடைக்கும் என்பது உண்மை.

04_15. போன பிறவிகளிலும் இறைவனாலேயே தானே சிசுபாலன் கொல்லப்பட்டான். அப்போதெல்லாம் அவனுக்கு ஏன் மோக்ஷம் கிடைக்கவில்லை என்று மைத்ரேயர் பராசராச்சார்யாரைக் கேட்கிறார். முதலில் ஹிரண்யகசிபுவாகப் பிறந்த போது, நரஸிம்ஹரை ஒரு புண்யம் செய்த ப்ராணி என்றே நினைத்தான். பகவான் என்று அறியவில்லை. எனவே தான் அப்போது மோக்ஷம் பெறவில்லை. எனினும் பகவானால் கொல்லப்பட்டதால் மூவுலகையும் தன் பராக்ரமத்தால் ஆண்டு செல்வங்களையும், போகங்களையும் அனுபவிக்கத்தக்க ராவணனாகப் பிறந்தான். அப்போதும் காமவசப்பட்டு ஸீதையை அபஹரித்த போது, ராமனை மனிதனாகவே எண்ணினான். எனவே அப்போதும் மோக்ஷம் அடையவில்லை. பலனாக ஜகம் புகழும் சேதி குலத்தில் உதித்தான்.

இப்பிறப்பில் இவன் பகை நன்கு முற்றியது. அதன் விளைவாக தூங்கினாலும், நடந்தாலும், நின்றாலும், அமர்ந்தாலும் எப்போதும் க்ருஷ்ணனையே நினைத்து வந்தான். திட்டுவதற்காக க்ருஷ்ணனின் நாமங்களையும் உச்சரித்து வந்தான். அன்றலர்ந்த தாமரையிதழ் போன்ற கண்கள், சிவந்த பீதாம்பரங்கள், க்ரீடம், தோள் வளை, ஹாரங்கள், நான்கு கரங்களும், பஞ்சாயுதங்களும் என பெருமானின் திருத்தோற்றம் எப்போதும் அவன் நினைவை விட்டகலாதிருந்தது. இப்படி அவன் சொல், மனம் என்று எதுவும் இறைவன் தொடர்பை ஒரு க்ஷணமும் பிரியாதிருந்தது. இதனாலேயே சக்ரதாரி அவனைக் கொன்ற போது இப்பிறப்பில் பாபங்கள் அனைத்தும் தீர்ந்து அவருடனேயே ஐக்யமானான். இதுவே உன் கேள்விக்கு பதில்.

வஸுதேவருக்குப் பௌரவி, ரோஹிணி, மதிரை, பத்ரை, தேவகி எனப் பல மனைவிகள் இருந்தனர். இதில் ரோஹிணி பலராமன், சடன், சாரணன், துர்மதன் முதலான புத்ரர்களைப் பெற்றாள். பலராமர் ரேவதியிடம் விசடன், உல்முகன் என்ற இரு பிள்ளைகளைப் பெற்றார். சாரணனுக்கு ஸார்ஷ்டி, மார்ஷ்டி, சிசு, ஸத்யன், ஸத்யத்ருதி என்பவர் பிள்ளைகள். பத்ராச்வன், பத்ரபாஹு, துர்தமன், பூதன் முதலானோர் ரோஹிணியின் வம்சத்தில் பிறந்தவர்கள். மதிரைக்கு நந்தன், உபநந்தன், க்ருதகன் முதலானோர் பிறந்தனர். பத்ரைக்கு உபநிதி, கதன் முதலானோரும், வைசாலிக்கு கௌசிகனும் பிறந்தனர்.

தேவகிக்குப் பிறந்த கீர்த்திமான், ஸுஷேணன், உதாயு, பத்ரஸேனன், ருஜுதாஸன், பத்ரதேவன் என்ற முதல் ஆறு குழந்தைகளையும் கம்ஸன் கொன்று விட்டான். தேவகியின் ஏழாவது கர்ப்பத்தை யோகநித்ரை என்ற தேவதை விஷ்ணுவின் ஆணையால் நள்ளிரவில் எடுத்து ரோஹிணியின் கர்ப்பத்தில் வைத்து விட்டது. இதனால் ரோஹிணிக்கு அப்போது பிறந்த பலராமனுக்கு ஸங்கர்ஷணன் (இழுத்துக் கொண்டு போய்ச் சேர்க்கப்பட்டவன்) என்ற பெயருண்டு. எட்டாவதாகத் தேவகிக்கு ப்ரஹ்மா முதலானோர் வேண்டுதலுக்கிணங்க பூபாரம் தீர்ப்பதற்காகத் தானே உண்டானார். அவருடைய ஆக்ஞையால் யோகநித்ரை நந்தகோபனின் பத்னி யசோதையின் கர்ப்பத்தையடைந்தாள்.

ஒரு நல்ல வேளையில் தானும் அவதரித்தார். அப்போது உலகெங்கிலும் சுப ஸகுனங்கள் தோன்றின. எவர்க்கும் மனது பயங்களின்றி லேசானது. அதர்மங்கள் அழிந்தன. இந்த க்ருஷ்ணனுக்கு ருக்மிணி, ஸத்யபாமா, ஜாம்பவதி, சாருஹாஸினி முதலான எட்டு முக்ய பத்னிகள் உட்பட மொத்தம் பதினாறாயிரத்து நூற்றி ஒன்று பத்னிகளும், ப்ரத்யும்னன், சாருதேஷ்ணன், ஸாம்பன் முதலான பதிமூன்று முக்ய புத்ரர்களுடன் லக்ஷத்தெண்பதாயிரம் புத்ரர்களும் இருந்தனர். ருக்மிணியின் புதல்வன் ப்ரத்யும்னன் ருக்மியின் பெண் ருக்மவதியை மணந்து அனிருத்தனைப் பெற்றான். இவனுக்கும் ருக்மியின் பௌத்ரியான ஸுபத்ரையை மணந்து வஜ்ரனைப் பெற்றான். அவனுக்கு ப்ரதிபாஹுவும், அவனுக்கு ஸ்சாருவும் பிறந்தார்கள்.

இப்படி ஆயிரக்கணக்கில் வளர்ந்த இந்த யது குலத் தோன்றல்களை எண்ண பல நூறாண்டுகளும் போதாது. இந்தக் குழந்தைகளுக்கு வில் வித்தைக் கற்பிக்கும் ஆசிரியர்களே மூன்று கோடியே எண்பத்தெட்டு லக்ஷம் பேர்கள். இவர்கள் தலைவன் ஆஹுகன் என்ற ஒருவனே பதினாயிரம் பதினாயிரம் லக்ஷம் பேரோடு வாழ்கிறான் என்றால் மொத்தமாக இவர்களை யாரால் கணக்கிட முடியும். முன்பு தேவாஸுர யுத்தத்தில் இறந்த அஸுரர்களே மனிதர்களாகப் பிறந்தனர். இவர்களை அழிக்கவே தேவர்கள் யாதவ குலத்தில் நூற்றி ஒன்று குலங்களில் பிறந்தனர். இவர்கள் அனைவரும் க்ருஷ்ணனின் சொல் கேட்டு, அவன் தலைமையிலேயே நடந்து வ்ருத்தி அடைந்தனர். இந்த வ்ருஷ்ணி வம்ச வரலாற்றைக் கேட்பவர்கள் அனைத்துப் பாபங்களும் தீர்ந்து விஷ்ணு பதத்தை அடைவர்.

04_16. தேவயானியின் புதல்வர்களுள் யதுவின் வம்சத்தையே இதுவரைக் கூறியுள்ளார் பராசரர். இப்போது துர்வஸுவின் வம்சம். துர்வஸு, வஹ்னி, பார்கன், பானு, த்ரயீஸானு, கரந்தமன், மருத்தன் என வளர்ந்த வம்சம் அதன் பின் ஸந்ததியில்லாதிருந்தது. ஆகையால் மருத்தன் பூருவின் வம்சத்துதித்த துஷ்யந்தனையே தனக்கும் புத்ரனாகக் கொண்டான். யயாதியின் சாபத்தால் விளைந்தது இப்படி.
04_17. சர்மிஷ்டைக்குப் பிறந்த த்ருஹ்யன், அனு, பூரு என்பவர்களுள் த்ருஹ்யனுக்குப் பின் அவன் வம்சம் பப்ரு, ஸேது, ஆரப்தன், காந்தாரன், கர்மன், க்ருதன், துர்மதன், ப்ரசேதஸ், சததர்மன் என வளர்ந்தது. இவனும் யயாதியின் சாபத்தாலேயே வடமேற்கிலுள்ள ம்லேச்சர்களுக்குத் தலைவனாக வாழ்ந்தான்.

04_18. சர்மிஷ்டைக்குப் பிறந்த யயாதியின் நான்காம் புத்ரன் அனுவிற்கு ஸபாநலன், சக்ஷு, பரமேஷு என்ற மூன்று பிள்ளைகள். ஸபாநலன், காலாநலன், ஸ்ருஞ்ஜயன், புரஞ்ஜயன், ஜனமேஜயன், மஹாசாலன், மஹாமனஸ் என இவன் வம்சம் வளர்ந்தது. மஹாமனஸுக்கு உசீநரன், திதிக்ஷு என்ற இருவரும், இதில் உசீநரனுக்கு சிபி, ந்ருகன், நவன், க்ருமி, வர்மன் என்ற ஐவரும், சிபிக்கு ப்ருஷதர்பன், ஸுவீரன், கேகயன், மத்ரகன் நால்வரும் பிறந்தனர். திதிக்ஷுவுக்கு உசத்ரதனும், அவனுக்கு ஹேமனும், அவனுக்கு ஸுதபஸ்ஸும், அவனுக்குப் பலியும் பிறந்தனர். இவன் மனைவியினிடமே தீர்க்கதமஸ் என்ற மஹரிஷி அங்கன், வங்கன், களிங்கன், ஸுஹ்மன், பௌண்ட்ரன் என்ற ஐவரை உண்டாக்கினார். இவர்கள் தங்கள் பெயரிலேயே ராஜ்யங்களை ஆண்டனர்.

அங்கன், அணபானன், திவிரதன், தர்மரதன், சித்ரரதன்(ரோமபாதன்), சதுரங்கன், ப்ருதுலாக்ஷன், சம்பன், ஹர்யங்கன், பத்ரரதன், ப்ருஹத்ரதன், ப்ருஹத்கர்மா, ப்ருஹத்பானு, ப்ருஹன்மனஸ், ஜயத்ரதன், விஜயன், த்ருதி, த்ருதவ்ரதன், ஸத்யகர்மா, அதிரதன், கர்ணன், வஸுஷேணன் என அங்க வம்சம் வளர்ந்தது. இதில் ஒருவனான ரோமபாதனுக்கு(சித்ரரதன்) அஜனின் புத்ரனான தசரதன் நண்பன். எனவே குழந்தைப்பேறு இல்லாமல் வெகுகாலம் ரோமபாதன் இருந்த போது தசரதன் தன் பெண்ணான சாந்தாவை இவனுக்குப் பெண்ணாகத் தந்தான். அதேபோல் சம்பன் என்பவன் சம்பா என்ற நகரை நிர்மாணித்தவன்.

இந்த வம்சத்தில் ஒருவனான ஜயத்ரதன் ப்ராஹ்மணப் பெண்ணுக்கும், க்ஷத்ரியனுக்கும் பிறந்த ஒரு பெண்ணையே மணந்தான். ஒரு பெண் தன்னை விட மேல் வர்ணத்தைச் சேர்ந்தவனை மணந்தால் அவர்கள் வம்சம் அனுலோம ஜாதி என்றும், ஒரு பெண் தன்னை விட கீழ் வர்ணத்தைச் சேர்ந்தவனை மணந்தால் அவர்கள் வம்சம் ப்ரதிலோம ஜாதி என்றும் அழைக்கப்படும். இந்த விதத்தில் ஜயத்ரதன் மணந்த பெண் ப்ரதிலோம ஜாதியின் பிரிவான ஸூத (தேரோட்டி) ஜாதியைச் சேர்ந்தவள். இதனால் ஜயத்ரதன் வரை க்ஷத்ரிய ஜாதியாக இருந்த இந்த வம்சம், விஜயன் முதல் ஸூத ஜாதியானது. இந்த ஸூத ஜாதியைச் சேர்ந்த அதிரதன் தான் கன்னிகையாக இருந்த குந்திக்கு ஸூர்யனின் அனுக்ரஹத்தாலும், துர்வாஸரிடம் பெற்ற மந்த்ரஸித்தியாலும் பிறந்து, அவளால் கைவிடப்பட்ட கர்ணனைக் கங்கைக் கரையில் ஓர் கூடையில் கண்டெடுத்து தன் பிள்ளையாக வளர்த்தவன்.

04_19. யயாதியின் கடைசி புத்ரனாக சர்மிஷ்டைக்குப் பிறந்த பூருவின் வம்சம், பூரு, ஜனமேஜயன், ப்ரசின்வான், ப்ரவீரன், மனஸ்யு, அபயதன், ஸுத்யு, பஹுகதன், ஸம்யாதி, ரௌத்ராச்வன் என வளர்ந்தது. இந்த ரௌத்ராச்வனுக்கு ருதேபு, கக்ஷேபு, ஸ்தண்டிலேபு, க்ருதேபு, ஜலேபு, தர்மேபு, த்ருதேபு, ஸதலேபு, ஸன்னதேபு, வனேபு என்று பத்து புத்ரர்கள். ருதேபு அந்திநாரனையும், அவன் ஸுமதி, அப்ரதிரதன், த்ருவன் என்ற மூவரையும் பெற்றனர். அப்ரதிரதனுக்கே கண்வர் பிறந்தார். அவருக்குப் பிறந்த மேதாதிதி முதல் இந்த வம்சத்தைச் சேர்ந்த அனைவரும் ப்ராஹ்மணர்கள் ஆயினர். கண்வரைத் தவிர அப்ரதிரதனுக்கு ஐலீனன் என்ற மற்றொரு மகன் உண்டு.

இந்த ஐலீனனுக்கு துஷ்யந்தன் முதலான நான்கு புத்ரர்கள். இந்த துஷ்யந்தனுக்கே சக்ரவர்த்தி என்று பெயர் பெற்ற பரதன் பிறந்தான். விச்வாமித்ர மஹரிஷிக்கும், அப்ஸரஸ் மேனகைக்கும் பிறந்த சகுந்தலையை கண்வர் காத்து வந்தார். அவளை காந்தர்வ முறையில் மணந்து, அவளை கர்ப்பவதியாக்கி விட்டு நாடு திரும்பிய துஷ்யந்தன் அவளை மறந்து விட்டான். தன் பிள்ளையுடனும், கண்வ சிஷ்யர்களுடனும் ஸபைக்கு வந்திருந்த சகுந்தலையை ஏற்கவும் மறுத்து, அவமதித்துப் பேசி விடுகிறான். அப்போது “தாய் புத்ரனைத் தாங்கும் தோல் பை போன்றவளே. அவளிடம் எவன் கர்ப்பாதானம் செய்கிறானோ அவனுக்கே பிறக்கும் குழந்தை சொந்தம்.

தகப்பனே மீண்டும் புத்ரனாகப் பிறக்கிறான் என்கிறது வேதமும். எனவே துஷ்யந்த மஹாராஜனே! நீ தான் சகுந்தலையிடம் கர்ப்பாதானம் செய்திருக்கிறாய். அவள் உன் மனைவியே. எனவே அவளையும், உனக்கே உரிய இந்தக் குழந்தையையும் ஏற்றுக் கொண்டு காப்பாற்று(பரஸ்வ). அவளை அவமதிக்காதே. இந்த விஷயம் ஏற்கனவே முடிவு செய்யப்பட்டது. யமனுடைய ஸபையில் இதேபோல் ஒரு முறை யாருக்குப் பிள்ளை சொந்தம் என்ற வாக்குவாதம் வந்த போது கர்ப்பாதானம் செய்தவனுக்கே பிள்ளை சொந்தம் என்று நிர்ணயிக்கப்பட்டது. எனவே இங்கும் நீயே இந்தக் குழந்தையைக் காக்க வேண்டியவன்.

உறையில் போட்டு வைக்கும் நெல், அதைக் கொட்டியவனுக்கே சொந்தமேயன்றி ஒருபோதும் உறைக்குச் சொந்தமில்லை. இங்கு சகுந்தலை கூறுவது போல் இந்தக் குழந்தையைக் காப்பதும் உன் கடமையே. நீயே அவனுக்குத் தந்தை. சகுந்தலைக்குக் கணவன்” என்று தேவர்கள் துஷ்யந்தனுக்கு உபதேஸித்த பின்பே அவன் இவர்களை ஏற்றுக் கொள்கிறான். காப்பாற்று (பரஸ்வ) என்ற பதத்திலிருந்தே அந்தக் குழந்தையும் பரதன் என்ற பெயரைப் பெற்றது. பரதனுக்கு மூன்று மனைவிகள். இவர்களிடமிருந்து பரதனுக்கு மொத்தம் ஒன்பது குழந்தைகள். ஆனால் அந்தக் குழந்தைகளைக் கண்டு பரதன் தனக்குப் பிறந்தவர்கள் போல இல்லை, எவரும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள் என்று ஸந்தேகப்பட்டான். இதனால் இவன் மனைவிகள் மூவரும் வ்யபிசாரப் பேச்சுக்குப் பயந்து குழந்தைகளைக் கொன்று விட்டனர். பரதன் இப்படிக் குழந்தைகள் இல்லாமல் போனது பற்றியும், தன் வம்ச வ்ருத்தி பற்றியும் வருத்தப்பட்டுக் கொண்டிருந்தான்.

இது இப்படி இருக்க இதே ஸமயத்தில் தேவ குரு ப்ருஹஸ்பதி கர்ப்பவதியாயிருந்த தன் ஸகோதரன் உசத்யனின் மனைவி மமதையோடு புணர்ந்து தன் வீர்யத்தை அவளுக்குள் செலுத்தினான். தான் வளர்ந்து வரும் கருப்பையில் புதிதாக மற்றொரு கரு வளர்வதைக் கண்ட உசத்யனின் கரு, புதிதாக வந்திருக்கும் ப்ருஹஸ்பதியின் கருவை உதைத்து வெளியே தள்ளி விட்டது. இதனால் கோபம் கொண்ட ப்ருஹஸ்பதி உசத்யனின் கருவைக் குருடாகும்படி சபித்து விட்டார். அந்தக் குழந்தையே தீர்க்கதமஸ் என்ற பெயருடன் பிறந்தது. வெளியே விழுந்த வீர்யத்திலிருந்தும் ஒரு குழந்தை தோன்றியது. இது நம்மிருவரின் குழந்தை (த்வாஜம்). இதை நீயே காப்பாற்று (பர), என்று ப்ருஹஸ்பதியும், ஆண் உதவியின்றி நான் எப்படி காப்பாற்றுவது என்று மமதையும் அந்தக் குழந்தையை அங்கேயே விட்டு விட்டுச் சென்று விட்டனர்.

காப்பாற்று (பர), இருவருக்கும் பிறந்த குழந்தையை(த்வாஜம்) என்ற தொடர்களால் இந்தக் குழந்தை பரத்வாஜர் என்று பெயர் பெற்றது. இந்த ஸமயத்தில் தான் பூலோகத்தில் பரதன் குழந்தைப்பேற்றுக்காக மருத்துக்களைக் குறித்து ஸோமயாகம் செய்து கொண்டிருந்தான். அவனுக்கு இந்த பரத்வாஜனையே மகனாகக் கொடுத்து விட்டனர் மருத்துக்கள். ஸந்ததி அழிந்திருந்த போது கிடைத்ததால் பரதனின் இந்தக் குழந்தைக்கு விததன் என்ற பெயரும் உண்டு.

விததனுக்கு மன்யுவும், அவனுக்கு ப்ருஹத்க்ஷத்ரன், மஹாவீர்யன், நகரன், கர்கன் என்ற நால்வரும் பிறந்தனர். நகரனுக்கு ஸங்க்ருதியும், அவனுக்கு குருப்ரீதி, ரத்தி தேவன் என்ற இருவரும் பிறந்தனர். கர்கனுக்கு சினி பிறந்தான். இவர்களே சைன்யர் என்றும், கார்க்யர் என்றும் அழைக்கப்படுகின்றனர். பிறப்பால் க்ஷத்ரியர்களான இவர்கள் ப்ராஹ்மணர்களானார்கள். மஹாவீர்யனுக்கு துருக்ஷயனும், இவனுக்கு த்ரய்யாருணி, புஷ்கரிணன், கபி என்ற மூவரும் பிறந்து, இவர்களும் ப்ராஹ்மணர்களாக மாறினர். ப்ருஹத்க்ஷத்ரனுக்கு ஸுஹோத்ரனும், அவனுக்கு ஹஸ்தியும்(ஹஸ்தினாபுரத்தை உண்டாக்கியவன்) பிறந்தனர். அஜமீடன், த்விஜமீடன், புருமீடன் மூவரும் ஹஸ்தியின் பிள்ளைகள்.

அஜமீடனுக்குக் கண்வர் (முன்பு அப்ரதிரதருக்குப் பிறந்தவர் கண்வர் என்று கூறப்பட்டிருந்தது, இப்போ அஜமீடனுக்கு, இன்னும் எவ்ளோ பேருக்கோ, ரிஷி மூலம் ஒண்ணும் புரியல, போங்க), ப்ருஹதிஷு என்று இரு புத்ரர்கள். கண்வரின் புதல்வர் மேதாதிதி. இவர்களும் ப்ராஹ்மணர்கள். ப்ருஹதிஷுவின் வம்சம் ப்ருஹதிஷு, ப்ருஹத்தனு, ப்ருஹத்கர்மா, ஜயத்ரதன், விச்வஜித், ஸேனஜித், அவனுக்கு ருசிராச்வன், காச்யன், த்ருடஹனு, வத்ஸஹனு என்பவர்களும், இதில் ருசிராச்வன், ப்ருதுஸேனன், பாரன், நீலன், அவனுக்கு ஸமரன் முதலாக நூற்றி ஒன்று பிள்ளைகளும், ஸமரனுக்கு பாரன், ஸுபாரன், ஸதச்வன் மூவரும் பிறந்தனர். இந்த ஸமரன் கம்பில்யா நகரத்திற்கு அதிபதியாக இருந்தான்.

ஸுபாரனுக்கு ப்ருதுவும், அவனுக்கு விப்ராஜனும், அவனுக்கு அணுஹரும் பிறந்தார். இந்த அணுஹரே வ்யாஸ புத்ரரான ஸுக ப்ரஹ்மத்தின் பெண்ணான கீர்த்தியை மணந்தார். இவருக்கு ப்ரஹ்மதத்தனும், அவனுக்கு விஷ்வக்ஸேனனும், அவனுக்கு உதக்ஸேனனும், அவனுக்கு பல்லாடனும் பிறந்தனர். ஹஸ்தியின் இன்னொரு மகனான த்விஜமீடன் வம்சம் த்விஜமீடன், யவநரன், த்ருதிமான், ஸத்யத்ருதி, த்ருடநேமி, ஸுபார்ச்வன், ஸுமதி, ஸந்ததிமான், க்ருதன், உக்ராயுதன், க்ஷேம்யன், ஸுதீரன், ஸஞ்ஜயன், பஹுரதன் என்பவர்களும் பிறந்தனர். இதில் க்ருதன் ஹிரண்யநாபன் என்பவனிடமிருந்து யோகம் பயின்றான். ப்ராச்ய ஸாமர்களுடைய இருபத்து நான்கு ஸம்ஹிதைகளையும் செய்தான். இவர்களே பௌரவ வம்சத்தவர்கள். இவன் மகன் உக்ராயுதன் நீபர்கள் எனும் க்ஷத்ரியர்களை அழித்தான்.

அஜமீடனுக்கு நளினி என்ற மனைவியிடம் நீலனும், அவனுக்கு சாந்தியும், அவனுக்கு ஸுசாந்தியும், அவனுக்குப் புரஞ்ஜயனும், அவனுக்கு ருக்ஷனும், அவனுக்கு ஹர்யச்வனும், அவனுக்கு முத்கலன், ஸ்ருஞ்ஜயன், ப்ருஹதிஷு, யவநரன், காம்பில்யன் என்ற ஐவரும் பிறந்தனர். இந்த ஐவரே பாஞ்சாலர்கள். ஹர்யச்வன் இவர்களை தன் ஐந்து ராஜ்யங்களையும் பாதுகாக்க நியமித்தான். முத்கலனிடமிருந்து மௌத்கல்யர்கள் தோன்றி அவர்களும் பின்னர் ப்ராஹ்மணர்களாயினர். முத்கலனுக்கு திவோதாஸன் என்ற மகனும், அஹல்யை என்ற பெண்ணும் இரட்டைகள். இந்த அஹல்யையின் கணவர் சரத்வதர் என்ற கௌதமர். இவர்களின் மகன் சதானந்தர்.

தனுர் வேதத்தில் முழுமை பெற்றிருந்த ஸத்யத்ருதி இவரது மகன். இவர் ஒரு ஸமயம் அப்ஸரஸ் ஊர்வஸியைப் பார்த்துக் காமமுற்ற போது இவரது வீர்யம் வெளிப்பட்டு ஒரு நாணற்புதரில் விழுந்தது. அதிலிருந்து ஒரு ஆண் குழந்தையும், ஒரு பெண் குழந்தையும் தோன்றின. அவர்களை அந்த ஸமயம் வேட்டைக்கு வந்திருந்த ஸந்தனு மஹராஜன் க்ருபையால் எடுத்துச் சென்று வளர்த்தான். இதனால் இவர்களுக்கு க்ருபன், க்ருபி என்று பெயர். இந்த க்ருபி மஹரிஷி த்ரோணரை மணந்து அச்வத்தாமாவைப் பெற்றாள். திவோதாஸன் (அஹல்யையின் ஸஹோதரன்) மித்ராயுவைப் பெற்றான். அவனுக்கு ச்யவனனும், அவனுக்கு ஸுதாஸனும், அவனுக்கு ஸௌதாஸனும், அவனுக்கு ஸஹதேவனும், அவனுக்கு ஸோமகனும், அவனுக்கு ஜந்து முதலான நூறு பிள்ளைகளும் பிறந்தனர்.

ப்ருஷதன் இந்த நூறு பிள்ளைகளில் கடைசி. இவனுக்கு த்ருபதனும், அவனுக்கு த்ருஷ்டத்யும்னனும், அவனுக்கு த்ருஷ்டகேதுவும் பிறந்தனர். அஜமீடனின் இன்னொரு புதல்வனான ருக்ஷனுக்கு ஸம்வரணனும், அவனுக்குக் குருவும் பிறந்தனர். இவன் நிர்மாணித்ததே தர்ம க்ஷேத்ரம் எனப்படும் குருக்ஷேத்ரம். இந்த குருவிற்கு ஸுதனு, ஜஹ்னு, பரீக்ஷித் முதலானோர் பிறந்தனர். இதில் ஸுதனுக்கு ஸுஹோத்ரனும், அவனுக்கு ச்யவனனும், அவனுக்கு க்ருதகனும், அவனுக்கு உபரிச்ரவஸுவும், அவனுக்கு ப்ருஹத்ரதன், ப்ரத்யக்ரன், குசாம்பன், குசேலன், மாத்ஸ்யன் முதலான எழுவரும், ப்ருஹத்ரதனுக்கு குசாக்ரனும், அவனுக்கு வ்ருஷபனும், அவனுக்கு புஷ்பவானும், அவனுக்கு ஸத்யஹிதனும், அவனுக்கு ஸுதன்வாவும், அவனுக்கு ஜந்துவும் பிறந்தனர்.

இந்த ப்ருஹத்ரதனுக்குப் பிறந்த இன்னொரு மகன் இரு பிளவுகளாகப் பிறந்ததால் தூக்கி எறியப்பட்டு, ஜரா என்ற ராக்ஷஸியால் மீண்டும் உடல்கள் சேர்க்கப்பட்டான். இதனால் அவன் ஜராஸந்தன் என்றழைக்கப்பட்டான். இவன் மகன் ஸஹதேவன், அவனுக்கு ஸோமபன், அவனுக்கு ச்ருதிச்ரவஸ்ஸும் பிறந்தனர்.

இதுவே மாகதர்களின் வரலாறு.

04_20. குருவின் மற்றொரு பிள்ளையான பரீக்ஷித்திற்கு ஜனமேஜயன், ச்ருதஸேனன், உக்ரஸேனன், பீமஸேனன் என்ற நால்வர் பிறந்தனர். இன்னொரு பிள்ளையான ஜஹ்னுவின் வம்சம் ஜஹ்னு, ஸுரதன், விதூரதன், ஸார்வபௌமன், ஜயத்ஸேனன், ஆராதிதன், அயுதாயு, அக்ரோதனன், தேவாதிதி, ருக்ஷன், பீமஸேனன், திலீபன், ப்ரதீபன், ப்ரதீபனுக்கு தேவாபி, சந்தனு, பாஹ்லீகன் மூவரும் பிறந்தனர். தேவாபி குழந்தையாயிருக்கும் போதே தவம் புரியச் சென்று விட்டான். சந்தனு எவரைத் தொட்டாலும் அவர்கள் முதுமை நீங்கி யௌவனமடைவர், மக்களுக்கு சாந்தியையும் தருபவன் சந்தனு என்று சிறப்பு. அப்படி தர்மவழியில் அரசாண்டு வந்தான் சந்தனு.

இப்படியிருக்கும் சந்தனுவின் ராஜ்யத்தில் பனிரெண்டு வருடங்கள் மழை பொய்த்தது. பெரிதும் கவலையுற்ற சந்தனு ப்ராஹ்மணர்களிடம் தான் செய்த தவறென்ன. ஏன் இப்படி நடந்தது என்று கேட்க, “அண்ணன் நலமுடன் இருக்கையிலேயே அவனுக்குரிய ராஜ்யத்தை நீ ஏற்று நடத்துவதே நீ செய்திருக்கும் தவறு. நீ பரிவேத்தாவாக (அண்ணன் திருமணம் செய்து கொள்வதற்கு முன்பே தான் திருமணம் செய்து கொண்ட தம்பி)இருக்கிறாய். இந்த காரணத்தினாலேயே மழை பொய்த்து விட்டது. உடனே இந்த போகங்களையும், ராஜ்யத்தையும் தேவாபியிடமே விட்டு விடு” என்கின்றனர் அவர்கள். இதைக் கேட்ட சந்தனுவும், அவர்களோடு அண்ணாவைத் தேடி நாட்டை ஒப்படைப்பதற்காகக் கானகம் சென்றான்.

அச்மராவி என்ற சந்தனுவின் மந்திரிக்கு தர்மவானான சந்தனுவே ஆள வேண்டும் என்று விருப்பம். அவன் இதற்காக என்ன செய்வது என்று ஆராய்ந்து, தேவாபியை பதிதனாக்கி விடலாம், அப்படிச் செய்து விட்டால் அதைக் காரணம் கொண்டு தம்பியே அரசாளலாம் என்ற சாஸ்த்ரத்தைக் கொண்டு மீண்டும் சந்தனுவே அரசாள்வார் என்று அதன்படி சிலரை சந்தனுவிற்கு முன்னதாகவே அனுப்பி, அவர்கள் போதனையால் தேவாபியை வேத மார்க்கத்திலிருந்து விலகச் செய்தான். இந்த நிலையில் அவனைக் கண்ட ப்ராஹ்மணர்கள் அவன் போக்கைக் கண்டு, சந்தனுவையே அரசாளும்படியும், இப்போது அது குற்றமாகாது என்றும் கூறி அழைத்து வந்து விட்டனர். மழையும் நன்கு பொழிந்தது. சந்தனுவுக்கும், கங்கைக்கும் பீஷ்மரும், சந்தனுவின் தம்பி பாஹ்லீகனுக்கு ஸோமதத்தனும், அவனுக்கு பூரி, பூரிச்ரவன், சல்யன் என்ற மூவரும் பிறந்தனர்.

பீஷ்மர் சிறந்த புகழோடும், சாஸ்த்ரங்களை நன்கு அறிந்தவராகவும் இருந்தார். சந்தனுவுக்கும், ஸத்யவதி என்பவளுக்கும் சித்ராங்கதன், விசித்ரவீர்யன் இருவரும் பிறந்தனர். இதில் சித்ராங்கதன் அவன் பெயருள்ள கந்தர்வனாலேயே கொல்லப்பட்டான். காசி ராஜனின் பெண்களான அம்பை, அம்பாலிகை என்ற இருவரை மணந்து கொண்ட அவன் தம்பி விசித்ரவீர்யன் காம போகத்திலேயே மூழ்கி காச நோயால் இறந்தான். ஸந்ததியில்லாமல் ராஜ்யம் இருந்த இந்த நிலையில், பராசரருக்கும், ஸத்யவதிக்கும் பிறந்திருந்த வேத வ்யாஸர் தாயின் கட்டளையால் விசித்ரவீர்யன் மனைவிகளிடம் த்ருதராஷ்ட்ரனையும், பாண்டுவையும் உண்டாக்கினார். அவர்களால் அனுப்பப்பட்ட வேலைக்காரியிடம் விதுரரையும் உண்டாக்கினார்.

ஸத்யவதி தான் கன்னிகையாயிருக்கும் போதே பராசரரிடம் கூடி வேத வ்யாஸரைப் பெற்று பின் மீண்டும் பராசரரின் அருளால் களங்கமற்றவளாகவும் ஆனவள். அதன் பின்னே அவள் சந்தனுவை மணந்திருந்தாள். த்ருதராஷ்ட்ரனுக்கும், காந்தாரிக்கும் துர்யோதனன், துச்சாஸனன் முதலான நூறு பிள்ளைகள் பிறந்தனர். பாண்டு, சூரனின் புதல்வியான குந்தியை மணம் புரிந்தான். ஒரு ஸமயம் இவன் வேட்டைக்குச் சென்றிருந்த போது தர்மம் தெரிந்திருந்தும், மான் வேடத்தில் களித்திருந்த ஒரு ரிஷி தம்பதியரை வேட்டையாடி விட்டான். அவர்கள் இறப்பதற்கு முன் பாண்டுவையும் மனைவியோடு கூடினால், இவ்வாறே நீயும் இறந்து போவாய் என்று சபித்து விட்டு இறந்தனர். அது முதல் அவன் சிற்றின்பத்தைத் துறந்து, பிள்ளைப் பேறின்றி இருந்தான்.

இதற்காக, தான் கன்னிகையாயிருக்கும் போதே துர்வாஸரிடமிருந்து பெற்றிருந்த மந்த்ர உபதேஸங்களைக் கொண்டு தேவர்களை வசீகரீக்கலாம் என்பதைக் கொண்டு, குந்தி அந்த மந்த்ரங்களால் இப்போது வாரிசுகளாக யமன், வாயு, இந்த்ரன் இவர்களை வசீகரித்து முறையே யுதிஷ்ட்ரன், பீமஸேனன், அர்ஜுனன் இவர்களைப் பெற்றாள். பாண்டுவின் இன்னொரு மனைவியான மாத்ரீயும் குந்தியிடமிருந்து ஒரு மந்த்ரத்தைப் பெற்று, அதன் மூலம் அச்வினீ தேவதைகளிடமிருந்து நகுல, ஸஹதேவனைப் பெற்றாள். பாண்டுவின் இந்த ஐந்து புதல்வர்களே பஞ்ச பாண்டவர்கள். இவர்களை மணந்த த்ரௌபதி என்பவள் யுதிஷ்ட்ரரிடம் ப்ரதிவிந்த்யனையும், பீமஸேனனிடம் ச்ருதஸேனனையும், அர்ஜுனனிடம் ச்ருதகீர்த்தியையும், நகுலனிடம் சதாநீகனையும், ஸஹதேவனிடம் ச்ருதகர்மாவையும் பெற்றாள்.

இதைத்தவிர யுதிஷ்ட்ரருக்கும், யௌதேயீ என்பவளுக்கும் தேவகனும், பீமஸேனன் ஹிடும்பைக்கு கடோத்கசனும், பீமஸேனன் காசீக்கு ஸர்வகனும், ஸஹதேவன் விஜயாவிற்கு ஸுஹோத்ரனும், நகுலன் ரேணுமதீக்கு நிரமித்ரனும் பிறந்தனர். அர்ஜுனன நாக கன்னியான உலூபியிடம் இராவானையும், மணலூர் அரசனின் பெண் மூலம் பப்ரூவாஹனனையும் பெற்றான். தனக்குப் புத்ரனில்லாததால் மகளுக்குப் பிறந்த இந்த பப்ருவாஹனனையே தனக்குப் புத்ரனாகத் தரவேண்டும் (புத்ரிகா தர்மம்)என்று அர்ஜுனனோடு மணலூர் அரசன் செய்திருந்த ஒப்பந்தப்படி அர்ஜுனனின் மகனான பப்ருவாஹனன் மணலூர் அரசனுக்கே பிள்ளையானான். அர்ஜுனனுக்கும் ஸுபத்ரைக்கும் பிறந்த அபிமன்யு இளமையிலேயே அதிரதன் என்ற பராக்ரமனாயிருந்தான். இவனுக்கும் உத்தரைக்கும் பரீக்ஷித் பிறந்தான்.

வம்சமே அழிந்திருந்த போது பிறந்ததால் பரீக்ஷித் என்ற பெயர் பெற்றிருந்தான் இவன். தாய் வயிற்றில் இருக்கும்போதே அச்வத்தாமாவின் அஸ்த்ரத்தால் அழிந்து போன இந்த பரீக்ஷித், மனித உருவில் அவதரித்திருக்கும் தேவரும், மூவரும், அஸுரரும் துதிக்கும் க்ருஷ்ணனின் மஹிமையால் மீண்டும் உயிர் பிழைத்தான். இவனே இப்போது இந்த பூமண்டலத்தைச் செழிப்போடும், சிறப்போடும் ஆண்டு வருகிறான்.

04_21. இந்த பரீக்ஷித்துக்கு ஜனமேஜயன், ச்ருதஸேனன், உக்ரஸேனன், பீமஸேனன் என நான்கு குழந்தைகள் பிறக்கப் போகின்றனர். ஜனமேஜயனுக்கு சதாநீகன் என்பவன் பிறந்து, யாக்ஞவல்க்யரிடமிருந்து வேதங்களையும், க்ருபாச்சார்யாரிடமிருந்து அஸ்த்ர வித்தைகளையும் கற்று, சிற்றின்பங்களை முற்றிலும் ஒழித்து சௌனகர் உபதேசத்தால் ஆத்ம ஞானமடைந்து மோக்ஷத்தையும் பெறப்போகிறான். இவனுக்கு அச்வமேத தத்தனும், அவனுக்கு அதிஸீமக்ருஷ்ணனும், அவனுக்கு நிசக்துவும் பிறப்பான். இவன் காலத்தில் கங்கையால் ஹஸ்தினாபுரம் அழியும். அதன் பின் இவன் கௌசாம்பி நகரில் வஸிப்பான்.

இவனுக்கு உஷ்ணனும், அவனுக்கு விசித்ரரதனும், அவனுக்கு சரசிரதனும், அவனுக்கு வ்ருஷ்ணியும், அவனுக்கு ஸுஷேணனும், அவனுக்கு ஸுநீதனும், அவனுக்கு ந்ருபசக்ஷுஸ்ஸும், அவனுக்கு ஸுகிபலனும், அவனுக்குப் பாரிப்லவனும், அவனுக்கு ஸுநயனனும், அவனுக்கு மேதாவியும், அவனுக்கு ரிபுஞ்ஜயனும், அவனுக்கு அர்வனும், அவனுக்குத் திக்மனும், அவனுக்கு ப்ருஹத்ரதனும், அவனுக்கு வஸுதாஸனும், அவனுக்கு சதாநீகனும், அவனுக்கு உதயனனும், அவனுக்கு விஹீநரனும், அவனுக்கு தண்டபாணியும், அவனுக்கு நிமித்தனும், அவனுக்கு க்ஷேமகனும் பிறக்கப் போகிறார்கள். இவனோடு தேவர்களும், ரிஷிகளும் பூஜித்த, ப்ராஹ்மண, க்ஷத்ரியர்களுக்கு மூலாதாரமான பாண்டவ வம்சம் முடியப் போகிறது இந்தக் கலி யுகத்தில்.

04_22. இதேபோல் ஸூர்ய வம்சத்தில் ப்ருஹத்பலனென்பவன் பாரத யுத்தத்தில் அபிமன்யுவால் கொல்லப்படுகிறான் என்று முன்பு கூறப்பட்டது. அவனுக்குப் பின் வம்சம், ப்ருஹத்பலன், ப்ருஹத்க்ஷணன், உருக்ஷயன், வத்ஸவ்யூஹன், ப்ரதிவ்யோமன், திவாகரன், ஸஹதேவன், ப்ருஹதச்வன், பானுரதன், ப்ரதீதாச்வன், ஸுப்ரதீகன், மருதேவன், ஸுநக்ஷத்ரன், கின்னரன், அந்தரிக்ஷன், ஸுபர்ணன், அமித்ரஜித், ப்ருஹத்பாஜன், தர்மீ, க்ருதஞ்ஜயன்,ரணஞ்ஜயன், ஸஞ்ஜயன், சாக்யன், சுத்தோதனன், ராஹுலன், ப்ரஸேனஜித், க்ஷுத்ரகன், குண்டகன், ஸுரதன், ஸுமித்ரன் என வளரப் போகிறது.இந்த ஸுமித்ரனுடன் இக்ஷ்வாஹுவின் வம்சம் இந்தக் கலியுகத்தில் முடியப் போகிறது.
04_23. இதே போல் ஜராஸந்தன் முதலானோர் இருந்த மாகத வம்சம் ஜராஸந்தன், ஸஹதேவன், ஸோமாபி, அனுச்ருதச்ரவஸ், வியுதாயு, நிரமித்ரன், ஸுநேத்ரன், ப்ருஹத்கர்மா, ச்யேனஜித், ச்ருஞ்ஜயன், விப்ரன், சுசி, க்ஷேம்யன், ஸுவ்ரதன், தர்மன், த்ருடஸேனன், ஸுபலன், ஸுனீதன், ஸத்யஜித், விச்வஜித், ரிபுஞ்ஜயன் என வளர்ந்தது. இவர்களே ப்ருஹத்ரத வம்சத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் இனி ஓராயிரம் ஆண்டுகள் அரசாள்வார்கள்.

04_24. இந்த ராஜ வம்சங்கள் மிகவும் பரிசுத்தமானவை. இந்த வம்சங்களை அறிந்தாலே மிகுந்த புண்யமுண்டாகும். இதனாலேயே இது பற்றிக் கூறியுள்ளேன். ப்ருஹத்ரத வம்சத்தில் கடைசியாக வரும் ரிபுஞ்ஜயனின் மந்த்ரி முனிகன் என்பவன். இவனுக்கு ப்ரத்யோதன் என்ற ஒருவன் பிறக்கப் போகிறான். இந்த மந்த்ரி அரசனைக் கொன்று தன் மகனை அரசனாக்குவான். அந்த வம்சம் ப்ரத்யோதன், பாலகன், விசாகயூபன், ஜனகன், நந்திவர்த்தனன், நந்தி என ஐந்து பேர்களுடன் ப்ரத்யோதர் என்ற பெயரில் எண்ணூற்று முப்பத்தெட்டு வருஷங்கள் ராஜ்யத்தை ஆளும். பின் சிசுநாபன், காகவர்ணன், க்ஷேமதர்மா, க்ஷதௌஜஸ், விதிஸாரன், அஜாதசத்ரு, அர்ப்பகன், உதயனன், நந்திவர்த்தனன், மஹாநந்தீ என்ற சைசுநாபர்கள் பத்து பேர்கள் முன்னூற்று அறுபத்திரண்டு வருஷங்கள் அரசாள்வர்.

இந்த மஹாநந்தீ என்பவன் நான்காம் வர்ணத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணிடம் நந்தன் (மஹாபத்மன்) என்ற ஒரு பிள்ளையைப் பெற்றான். பேராசையும், உடல் பலமும், படை பலமும் வாய்ந்த அவன் இன்னொரு பரசுராமனைப் போல் க்ஷத்ரியரனைவரையும் அழித்து, தானே அரசாளத் தொடங்குவான். இவனுக்குப் பிறக்கும் ஸுமாலி முதலான எட்டுப் பிள்ளைகளுமான இந்த நந்தர்கள் நூறு வருஷ காலம் நந்தனுக்குப் பின் ஒரே குடையின் கீழ் அரசாள்வார்கள். க்ஷத்ரியர்கள் அரசாள மாட்டார்கள். நான்காம் வர்ணத்தவரான இவர்களே அரசாள்வர். இவர்களை கௌடில்யன் என்ற ப்ராஹ்மணன் அழிக்கப் போகிறான். நான்காம் வர்ணத்தைச் சேர்ந்த முரை என்பவளுக்கும், நந்தனுக்கும் பிறந்த சந்த்ரகுப்தனை அந்த கௌடில்யன் பட்டத்துக்குரியவனாக்கப்போகிறான்.

இந்த சந்த்ரகுப்தன் முதல் சில காலம் மௌர்யர்கள் அரசாள்வர். சந்த்ரகுப்தன், பிந்துஸாரன், அசோகவர்த்தனன், ஸுயசஸ், தசரதன், ஸம்யுதன், சாலிசூகன், ஸோமசர்மா, சததன்வா, ப்ருஹத்ரதன் என்ற இந்த பத்து மௌர்யர்கள் நூற்று முப்பத்தேழு வர்ஷங்கள் இந்த பூமியை அரசாள்வர். இவர்களுக்குப் பின் சுங்கன் எனும் பத்து பேர் அரசாள்வர். கடைசி மௌர்யனான ப்ருஹத்ரதனை அவன் ஸேனாதிபதி புஷ்யமித்ரனே கொன்று விட்டுத் தானே அரசாளத் தொடங்கி விடுவான். இவனே சுங்கர்களில் முதல்வன். இவனுக்குப் பின் அக்னிமித்ரன், ஸுஜ்யேஷ்டன், வஸுமித்ரன், உதங்கன், புளிந்தகன், கோஷவஸு, வஜ்ரமித்ரன், பாகவதன், தேவபூதி என்ற சுங்கர்கள் நூற்றுப் பனிரெண்டு ஆண்டுகள் அரசாள்வர். இவர்களுக்குப் பின் ராஜ்யம் கண்வர்களின் கைக்கு மாறப்போகிறது.

கடைசி சுங்க ராஜனான தேவபூதியை வஸுதேவன் என்ற கண்வன் கொன்று அவனும், அவனுக்குப் பின் பூமித்ரன், நாராயணன், ஸுசர்மா என்ற கண்வர்களும் நாற்பத்தைந்து வருஷங்கள் அரசாள்வர். இந்த ஸுசர்மாவை ஆந்த்ர ஜாதியைச் சேர்ந்த அவன் வேலைக்காரன் பலிபுச்சகன் கொன்று அதன் பின் அவனும், அவன் ஸஹோதரன் க்ருஷ்ணனும், அவன் மகன் சாதகர்ணி, அவன் மகன் பூர்ணோத்ஸங்கன், அவன் மகன் இரண்டாம் சாதகர்ணி, அவன் மகன் லம்போதரன், அவன் மகன் இவீலகன், அவன் மகன் மேகஸ்வாதி, அவன் மகன் பத்மன், அவன் மகன் அரிஷ்டகர்மன், அவன் மகன் ஹாலன், அவன் மகன் தாலகன், அவன் மகன் ப்ரவீலஸேனன், அவன் மகன் ஸுந்தரன்(சாதகர்ணி), அவன் மகன் சகோர சாதகர்ணி, அவன் மகன் சிவஸ்வாதி, அவன் மகன் கோமதிபுத்ரன், அவன் மகன் புலிமன், அவன் மகன் சிவஸ்ரீ சாதகர்ணி, அவன் மகன் சிவஸ்கந்தன், அவன் மகன் யக்ஞஸ்ரீ, அவன் மகன் விஜயன், அவன் மகன் சந்த்ரஸ்ரீ, அவன் மகன் புலோமார்ச்சிஸ் என முப்பது ஆந்த்ரர்கள் நானூற்றைம்பது வருஷங்கள் அரசாள்வர்.

(இன்னும் கொஞ்சம் ராஜ்யங்களையும், அதை எவரெவர் ஆள்வார்கள் என்பதையும் கூறி இருக்கிறார்)

இனிமேல் நாடுகளை ம்லேச்சர்களும், வேளாளர்களுமே ஆள்வார்கள். இவர்களால் தன்னை அண்டியிருப்பவர்களுக்கு எந்த நன்மைகளையும் தர இயலாது. அற்பமானவர்கள். கோபம் மிகுந்தவர்கள். பொய்யிலும், அதர்மத்திலும் விருப்பமுள்ளவர்கள். பெண்கள், சிறுவர், பசுக்களை அழிப்பவர்களாக இருப்பார்கள். பிறர் சொத்துக்களை அபஹரிப்பார்கள். பலம் குன்றியும், ஆயுள் குறைந்தும், பேராசையுடனும் இருப்பார்கள். இவர்களைச் சுற்றி இருப்பவர்கள் இவர்களின் தைர்யத்தில் பலம் மிகுந்தும், அதர்மம் மிகுந்தும் மக்களை அழிப்பார்கள். இப்படி உலகிற்கு அழிவு உண்டாகும் நேரத்தில் பல விபரீதங்கள் தோன்றும். நற்குலப் பிறப்பை விடுத்துப் பொருளும், பணமுமே ஒருவனை உயர் குலத்தில் பிறந்தவனாகக் காட்டும்.

நல்லொழுக்கம் இல்லாமலிருந்தும், பலமே தர்மங்களை அனுஷ்டிக்கக் காரணமாகும். குலம், கோத்ரங்களை விடுத்துத் திருமணம் நடக்க ஆண், பெண்களின் மன ஒற்றுமையே போதுமானதாக இருக்கும். ஒரு பெண்ணைப் புணர அவள் தன் மனைவியாக இருக்க வேண்டும் என்ற காரணம் தேவையில்லாததாக ஆகிவிடும். உடலையே காரணமாகக் கொண்டு பெண்கள் கருதப்படுவர். உண்மை, தர்மங்களை விடுத்து, வழக்குகள் பொய்யால் வெற்றி அடையும். புண்ய பூமி, சுத்தமானது என்பனவைகளை விடுத்து உணவுப் பொருள் கிடைக்குமிடமும், நல்ல தண்ணீர் கிடைக்குமிடமுமே இருப்பிடமாகும். வேதாத்யயனத்தையும், ஆசாரத்தையும் விடுத்து பூணூல் அணிந்திருந்தாலே ப்ராஹ்மணன் எனப்படுவான்.

ப்ரஹ்மசர்யம் முதலான ஆச்ரமங்களிலும் அதற்குரிய தர்மங்களை அனுஷ்டிப்பதை விடுத்து, அவைகளுக்குரிய வேஷங்களைத் தரித்தலே முதன்மையாகும். தவறான வழியிலேயே வாழ்க்கை செல்லும். ந்யாயமாக வாழ வழியில்லாமல் போகும். சொந்தமாக பயிர் முதலிய சொத்துக்கள் இருந்தாலும், பலமில்லையானால் அவைகளால் வாழ இயலாது. சத்தமாக, உறுதியாகப் பேசுபவனே ஸபைகளில் பண்டிதனாகக் கருதப்படுவான். குணங்களைக் கொண்டு சாதுக்கள் அறியப்படமாட்டார்கள். பொருளில்லாமலிருப்பவன் தீயவனாக இருந்தாலும் சாது எனப்படுவான். ஸ்னானம் முதற்கொண்டு எதுவுமே வேத மந்த்ரங்களுடன் சடங்காகச் செய்யப்படாமல், அலங்காரத்திற்கென ஆகும். யாக, ஹோமங்களெதுவுமின்றி வெறும் தானமே தர்மமாகக் கருதப்படும்.

விவாஹத்திலும் வைதீகக் கர்மங்களுக்கு முக்யத்துவம் அழிந்து, ஒப்புதலே முக்யமாகிவிடும். யோக்யமானவனுக்குக் கிடைக்காமல், வேஷதாரிகளுக்கே தானங்களும் கிடைக்கும். தூரத்திலிருந்து கொண்டு வந்தால் அது சுத்தமில்லாததாயினும் புண்ய தீர்த்தம் என்று கருதப்படும். அரசனாவதற்கெனத் தகுதிகள் எதுவும் தேவையில்லை. எந்த ஜாதியைச் சேர்ந்தவனானாலும் பலம் இருந்தால் அவனே அரசன். இவன் ஆட்சியில் வஸிக்க விரும்பாத மக்கள் மலைகளில் எந்த வசதியும், உணவும், உடையும் இன்றி வாழ்ந்து கஷ்டப்படுவார்கள். கலியின் முடிவில் வாழ்நாள் ஒருவனுக்கு இருபத்து மூன்று வருஷங்களுக்கு மேல் இருக்காது.

இப்படி வேத, ஸ்ம்ருதிகளில் சொல்லி இருக்கும் எல்லா தர்மங்களும் அழிந்து, மக்களும் அழிந்திருக்கும் போது சம்பலம் என்ற க்ராமத்தில் விஷ்ணுயசஸ் என்ற ஒரு ப்ராஹ்மணனுக்கு கல்கி பகவான் அவதரிப்பார். அஷ்டமா சித்திகளுடன் விளங்குவார். தீயவர்கள், கடையர்கள் என அனைவரையும் ஒழித்து, மீண்டும் எஞ்சியுள்ளோரிடம் தர்மத்தை நிலை நாட்டுவார். தூங்கி எழுந்திருக்கும் போது எப்படி புத்தி தெளிவாக இருக்குமோ, அப்படி இவர்களும் கல்கி அவதாரத்தால் புத்தி தெளிவார்கள். இவர்களின் புத்ரர்கள் க்ருதயுக தர்மத்தை அனுஸரிப்பார்கள். சந்த்ரன், ஸூர்யன், ப்ருஹஸ்பதி இம்மூன்றும் புஷ்ய நக்ஷத்ரத்தில் ஒன்றாக ப்ரவேஸிக்கும் காலத்தில் க்ருத யுகம் பிறக்கும். மைத்ரேயா! உனக்கு இறந்த, இருக்கும், இன்னும் வரப் போகும் அரச வம்சங்களைக் கூறினேன். பரீக்ஷித் பிறப்பிலிருந்து நந்தன் பட்டாபிஷேகம் வரையான காலம் ஆயிரத்து ஐனூறு ஆகும்.

பெட்டி வண்டியின் உருவில் இருக்கும் ஸப்தரிஷி மண்டலம் ஆகாயத்தில் வடக்கே உள்ளது. இதில் ஏர்க்கால் போலிருக்கும் மூன்று நக்ஷத்ரங்களில் கிழக்கு நுனியில் மரீசியும், அவருக்கு மேற்கில் கொஞ்சம் கீழே வஸிஷ்டரும், அவருக்கருகில் தென் கிழக்கே அவர் மனைவி அருந்ததியும், வஸிஷ்டருக்கு மேலே அங்கிரஸ்ஸும் இருக்கிறார்கள். இந்த ஏர்க்காலுக்கு சதுரமாக அங்கிரஸ்ஸின் வழியிலேயே ஈசான்யத்தில் அத்ரியும், அவருக்கு தெற்கே புலஸ்த்யரும், அவருக்கு மேற்கே புலஹரும், அவருக்கு வடக்கே க்ரதுவும் இருக்கிறார்கள். நக்ஷத்ரங்களுடன் இந்த ஸப்த ரிஷிகள் மானுஷ வருஷத்தில் நூறுவருஷம் இருப்பார்கள். பரீக்ஷித்தின் காலத்தில் இவர்கள் ‘மக’ நக்ஷத்ரத்தில் இருந்தார்கள். அப்போது தான் ஆயிரத்திருநூறு தேவ வர்ஷங்கள் அடங்கிய கலி தொடங்கியது.

க்ருஷ்ணன் பூவுலகை விட்டுச் செல்லும் வரை கலி காத்திருந்தது. அது ஆரம்பமானதுமே அஞ்சிய யுதிஷ்ட்ர மஹாராஜர் பரீக்ஷித்திடம் ராஜ்யத்தை ஒப்படைத்து விட்டு ஸ்வர்க்க ஆரோஹனம் செய்தார். ஸப்தரிஷிகள் பூராட நக்ஷத்ரத்திற்குச் செல்லும் காலம் நந்தர்கள் காலம் ஆரம்பமாகும். அப்போது கலி நன்கு வளரும். வரப்போகும் க்ருத யுகத்தில் புரு வம்சத்தைச் சேர்ந்த தேவாபியும், இக்ஷ்வாஹு வம்சத்தைச் சேர்ந்த மருவும் கலாப க்ராமத்திலிருந்து கொண்டு க்ஷத்ரிய வம்சங்களை மீண்டும் பரவச் செய்வர். இப்படிப் பல அரசர்களைக் கண்டு “செல்வம் நிலையானதன்று என்று அறிந்திருந்தும், அரசர்கள் இப்படி மேலும், மேலும் ராஜ்யங்களைப் கைப்பற்றப் புறப்படுகின்றார்களே” என்று பூதேவி பூக்களாகிய தன் பற்களைக் காட்டிச் சிரிக்கிறாள்.

“அரசர்கள் அனைவருமே புத்திசாலிகள் தான். ஆயினும் அக்ஞானமடைந்தனர். நீர்க்குமிழி போன்ற இவர்கள் தங்களை அழிவில்லாதவர்கள் போல நினைத்துக் கொள்கிறார்களே. என்ன ஒரு அறியாமை. தன்னை வென்றவர்களே அரசர்கள். தன்னை வென்றதற்குப் பலனாக மோக்ஷத்தைத் தேடாமல் மந்த்ரிகளையும், வேலைக்காரர்களையும், மக்களையும், பகைவர்களையும் வென்று பூமண்டலம் முழுதுமே தனதாக ஆக்கிக் கொள்ள விரும்புமிவர்கள் தாங்கள் அழியப்போவதை உணர்வதேயில்லை. தன்னையே வெல்லும் அரிய செயலைச் செய்த இவர்கள் இப்படி அற்பமான வஸ்துக்களைப் பலனாக நினைக்கிறார்களே. ஆத்மஜயத்திற்கு இதுவா பலன்.

தந்தையும் ஆள்கிறான், மகனும் ஆள்கிறான். ஆனால் போகும் போது எவரும் என்னை எடுத்துச் செல்லாமல் இங்கேயே விட்டுச் செல்கின்றனர். மேலும் அவர்கள் வம்சத்தாரும் மீண்டும் என்னைக் கைப்பற்றவே நினைக்கின்றனர். ஆளும் அரசர்கள் ஒவ்வொருவரும் பல பேர் கை மாறும் என்னை வைத்துக் கொண்டு தூதுவர்களை அடுத்த அரசர்களிடம் அனுப்பி, “இது என் இடம், நீ வெளியேறு” என்று வேறு கூறுகின்றனர். இது மிகவும் வேடிக்கையானது” என்று பூதேவி கூறியுள்ள இவைகள் ப்ருத்வீ கீதங்கள் எனப்படுகின்றன. இதைக் கேட்பவனுக்கு ஸூர்யன் முன் பனி அழிவது போல் எனது என்ற எண்ணம் (மமகாரம்) ஒழியும். இது நிச்சயம்.

மைத்ரேயா! இப்படியாக உனக்கு மனுவின் வம்சத்தைப் பற்றிக் கூறினேன். இதில் விஷ்ணுவின் அம்சமாகப் பல அரசர்கள் தோன்றியுள்ளனர். இதை பக்தியோடு கேட்பவர்களுக்கு பாபங்கள் அனைத்தும் அழிந்து மனம் பரிசுத்தமடையும். சந்த்ர, ஸூர்ய வம்சத்து இந்த அரசர்களின் வரலாற்றைக் கேட்பவர்களுக்கு ஸகல ஸம்பத்துக்களும் உண்டாகும். இந்த்ரியங்கள் பொலிவு பெற்று ஸத்விஷயங்களில் செல்லும். பராக்ரமும், வீர்யமும், செல்வங்களும் குவிந்திருக்க வாழ்ந்திருந்த இக்ஷ்வாஹு, ஜஹ்னு, மாந்தாதா, ஸகரன், ரகு, யயாதி, ப்ருது, கார்த்த வீர்யார்ஜுனன், ராவணன் என்று ஒரு அரசர்களும் இன்று இல்லை. ஆயிரக்கணக்கான வருஷங்கள் தவம் செய்து பலன் பெற்றவர்களும் அழிந்து விட்டனர். காலத்திற்குட்பட்டு அழிந்தனர் அனைவரும். அவர்கள் கதை மட்டுமே எஞ்சியுள்ளது. அவர்கள் வாழ்ந்தார்களா என்பதே இன்றைய நிலையில் சந்தேஹமாக உள்ளது. எனவே வீடு, நிலம், உற்றார், சுற்றார் என ஒன்றிலும் பற்று வேண்டாம். எதுவும் சாச்வதமன்று. தன் ஆத்மாவிடமும் பற்றுதல் வேண்டாம்.