Archive for the ‘கிருஷ்ணன் கதை அமுதம்’ Category

ஸ்ரீ வாசுதேவன் நிகழ்த்திய வேதாந்த லீலைகள் – ஸ்ரீ திருக்குடந்தை டாக்டர் உ.வே.வெங்கடேஷ் ஸ்வாமிகள்–

September 19, 2024

1. பூதனா மோட்சம்

வஞ்சனை செய்யத் தாயுருவாகி வந்த பேயலறி மண் சேரநஞ்சமர் முலை யூடுயிர் செக வுண்டநாதனை

கண் சோர வெங்குருதி வந்திழிய வெந்தழல் போல் கூந்தலாள் –மண் சேர்ந்தாள்

அவள் பால் உயிர் செகவுண்ட திருவாய் மொழி

விடப்பால் அமுதா அமுது செய்திட்ட மாயன் -நம்மாழ்வார்

“உழலை என்பின் பேய்ச்சி முலையூடு அவளை உயிர் உண்டான்” என்று நம்மாழ்வார் பாடியபடி

விஷப் பாலைக் கொடுத்துக் கண்ணனை அழிக்க வந்த பூதனையின் விஷப் பாலோடு சேர்த்து அவளது உயிரையும் உண்டு பூதனையை வதைத்தான் கண்ணன். இந்த லீலை நமக்கு உணர்த்தும் தத்துவம் என்ன?

பூதனை என்பவள் தான் அவித்யை எனப்படும் அறியாமை. நம் கர்ம வினைகளின் விளைவாக வந்த அந்த அறியாமை நம் ஞானத்தை மழுங்கச் செய்து பிறவிப் பிணியில் நம்மை அழுத்துகிறது. அவளது இரண்டு மார்பகங்கள் தான் நான் என்னும் அஹங்காரமும் (I), எனது என்னும் மமகாரமும் (2)ஆகும். அறியாமையிலிருந்து தோன்றும் அஹங்காரமும் மமகாரமும் விஷம் போன்றவையாகும். இதிலிருந்து வெளிவர என்ன வழி என்றால், கண்ணனின் திருவடிகளை நாம் சரணடைந்தோமாகில், அவன் பூதனையின் இரண்டு மார்பகங்களையும் உறிஞ்சியது போல், நம்முடைய அஹங்கார மமகாரங்களை முழுமையாக உறிஞ்சி எடுத்து, அந்தப் பூதனையை அழித்தது போல் நமது அறியாமையையும் அழித்து நமக்குப் பேரின்ப வாழ்வாகிய முக்தியை அருளுவான்.

2. சகடாசுர வதம் 

கம்சனால் ஏவப்பட்ட சகடாசுரன் என்னும் அசுரன், மாட்டு வண்டிச் சக்கர வடிவில் வந்து தொட்டிலில் கிடக்கும் கண்ணன் மேல் பாய்ந்து கண்ணனை அழிக்கத் திட்டமிட்டான். ஆனால், “பொன்றச் சகடம் உதைத்தாய்” என்று ஆண்டாள் பாடியபடி, தன் திருவடிகளால் உதைத்து அந்தச் சகடாசுரனைச் சம்ஹாரம் செய்தான் கண்ணன். இது உணர்த்தும் தத்துவம் என்ன?

சகடாசுரனின் வடிவமான மாட்டு வண்டிச் சக்கரம் என்பது நமது பிறவிச் சுழற்சியாகிய சக்கரத்தைக் குறிக்கிறது. சக்கரம் சுழல்வது போல், “புனரபி ஜனனம் புனரபி மரணம்” என்று இந்தப் பிறப்பு இறப்பு சுழற்சியில் நாம் உழல்கிறோம். கண்ணனின் திருவடிகளை நாம் சரணடைந்தால், அந்தச் சக்கரத்தை உடைத்து நொறுக்கியது போல், நம் பிறவிச் சுழற்சியாகிய சக்கரத்தையும் உடைத்து நமக்குப் பேரின்பப் பெருவாழ்வை அருளுவான்.

3. திருணாவர்த்தாசுர சம்ஹாரம்

யசோதை கண்ணனைத் தன் மடியில் வைத்துக் கொண்டு வீட்டின் திண்ணையிலே அமர்ந்திருந்த போது, திடீரென்று வந்த புயல்காற்று கண்ணனைத் தூக்கிச் சென்றது. அந்தப் புயல் தான் கம்சனால் ஏவப்பட்ட திருணாவர்த்தாசுரன் என்னும் அசுரன். ஆனால் கண்ணனோ, தனது எடையை அதிகரித்துக் கொண்டே போகவே, பாரம் தாங்க முடியாமல், விழி பிதுங்கி, ரத்தம் கக்கிப் பூமியில் விழுந்துமாண்டான் அந்த அசுரன். நம் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் ரஜோ குணம் தான் இந்த திருணாவர்த்தாசுரன். அதிகமான கோபம், காமம் கொண்டு செயல்படுவதை ரஜோகுணம் என்று குறிப்பிடுவார்கள். திருணாவர்த்தாசுரன் கண்ணனையே தூக்கிச் சென்றது போல், ரஜோ குணத்தால் ஏற்படும் காமமும், கோபமும் நம் பக்தியையும் நற்குணங்களையும் நம்மிடமிருந்து ஒரு நொடியில் அபகரித்துச் சென்று விடும். கண்ணனின் திருவடிகளை நாம் பற்றினால், திருணாவர்த்தாசுரனை அழித்தாப்போலே, ரஜோ குணத்தை அழித்து, நம் மனதில் தூய பக்தி வளரும்படி அருள்புரிவான்.

4. வெண்ணெய் திருடிய லீலை 

வெண்ணெய் என்பது நம் உள்ளத்தைக் குறிக்கிறது. பானை அந்த நம் உடலைக் குறிக்கிறது. நம் உடலாகிய பானையிலிருந்து உள்ளமாகிய வெண்ணெயைக் கண்ணன் திருடும் அழகைத் திருப்பாணாழ்வார் வெகு அழகாக,

“கொண்டல் வண்ணனைக் கோவலனாய் வெண்ணெய்

உண்ட வாயன் என் உள்ளம் கவர்ந்தானை

அண்டர்கோன் அணி அரங்கன் என் அமுதினைக்

கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணாவே!”

என்று பாடினார். “அன்று ஆயர்பாடியில் கண்ணனாக அவதரித்து வெண்ணெய் திருடியவன் இன்று அரங்கனாகத் திருவரங்கத்தில் பள்ளி கொண்டிருக்கிறான். அங்கே ஆயர்பாடியில் பானை இருந்தது, வெண்ணெயைக் காணவில்லை. இங்கே அரங்கத்தில் என் உடல் இருக்கிறது, உள்ளத்தைக் காணவில்லை. ஏனெனில் பானையிலிருந்து வெண்ணெயைத் திருடினாற்போல், என் உடலிலிருந்து உள்ளத்தை இந்த அரங்கன் கொள்ளை கொண்டு விட்டான்!” என்று இப்பாசுரத்தில் தெரிவிக்கிறார் திருப்பாணாழ்வார்.

வெண்ணெயைப் போல் வெண்மையான, தூய மனத்துடன் வாழும் அன்பர்களின் மனங்களைக் கவர்ந்து செல்லும் உள்ளம் கவர் கள்வனாகக் கண்ணன் விளங்குவதை இதன்மூலம் அறிய முடிகிறது. ஆனால், வெண்ணெயோ, நம் உடலோ, மனமோ, உயிரோ இவை அனைத்துமே அவனது சொத்து தானே? அவன் சொத்தை அவன் எடுத்துக் கொள்வதை ஏன் திருட்டு என்று சொல்ல வேண்டும்? வெண்ணையைத் திருடியதாலோ, மோர், பாலைத் திருடியதாலோ, நம் மனங்களையும் ஆத்மாக்களையும் திருடியதாலோ, அவனைத் திருடன் என்று குறிப்பிடுவதில்லை. வேறு எதைத் திருடினான் அந்தக் கண்ணன்? வாதிராஜர் விடைகூறுகிறார்:

“ஸ்வபக்த புஞ்ஜார்ஜிதம் பாப வ்ருந்தம் திவானிசம் சோஹரதி ஸ்ம பால:”

“கண்ணன் வெண்ணெய் திருடிய கதையை யாரெல்லாம் கேட்கிறார்களோ, அவர்களின் பாபங்களைக் கண்ணன் திருடிச் சென்று விடுகிறான். நாம் செய்த பாபங்கள் அனைத்துமே நம் சொத்து தானே? நம் சொத்தாகிய பாபங்களை அவன் திருடிச் செல்வதால் தான் அவனைத் திருடன் என்று குறிப்பிடுகிறோம்!” என்று இந்த ஸ்லோகத்தில் வாதிராஜர் தெரிவிக்கிறார்.

5. ருக்மிணி திருக் கல்யாணம்

பீஷ்மக ராஜாவின் மகளான ருக்மிணி கண்ணனையே மணந்து கொள்ள விரும்பினாள். ஆனால் அவளது ஐந்து உடன்பிறந்த சகோதரர்களான ருக்மி, ருக்மரதன், ருக்மகேசன், ருக்மபாகு, ருக்மமாலி ஆகியோர் அவளை சிசுபாலனுக்கு மணம் முடிக்கத் திட்டமிட்டார்கள். அப்போது ருக்மிணி ஓர் அந்தணரிடம் ஒரு காதல் கடிதத்தைக் கொடுத்து, அதைத் துவாரகையில் இருக்கும் கண்ணனிடம் சென்று கொடுக்கும்படிச் சொன்னாள். அவரும் கடிதத்தைக் கண்ணனிடம் சேர்த்தவாறே, கண்ணன் வந்து அவளது சகோதரர்களை வீழ்த்தி ருக்மிணியை மணந்து கொண்டான். இதில் ருக்மிணி தான் ஜீவாத்மா, கண்ணன் பரமாத்மா, சிசுபாலன் உலகியல் வாழ்வு. ஜீவாத்மாவுக்கு உடன்பிறந்தவர்கள் ஐவர் உள்ளார்கள், அதாவது மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐம்புலன்கள். ருக்மிணியாகிய ஜீவாத்மா பரமாத்மாவை அடைய விரும்பினாலும், உடன்பிறந்த ஐம்புலன்களும் சிசுபாலனாகிய உலகியல் வாழ்வில் ஜீவாத்மாவைத் தள்ளுகிறார்கள். 

அப்போது ருக்மிணிக்காக ஓர் அந்தணர் கண்ணனிடம் தூது சென்றது போல், ஜீவாத்மாவின் குரு ஜீவாத்மாவுக்காக இறைவனிடம் தூது பேசி இறையருளைப் பெற்றுத் தருகிறார். ருக்மிணியின் உடன்பிந்தவர்களை வென்று அவளை மணந்து கொண்டது போல், இந்தப் புலன்களை வீழ்த்தி ஜீவாத்மாவை இறைவன் மீட்டுச் செல்கிறார். இதுபோல் தான் செய்த ஒவ்வொரு லீலையிலும் எத்தனையோ வேதாந்தக் கருத்துகளை நமக்கு விளக்கினான் கண்ணன். அந்தக் கண்ணன் அவதரித்த நாளான ஆவணி ரோகிணி அஷ்டமி திருநாளில் நம் அனைவரின் இல்லங்களிலும் கண்ணனின் திருவருளும் சாந்நித்தியமும் நிறையட்டும்.

6. அனைவருக்கும் விழுந்த அடி 

ஆயர்பாடியில் ஒரு வீட்டில் ஏலக்காய் பால் மிகவும் பிரசித்தி பெற்றிருந்தது. மாட்டுக்குப் புண்ணாக்கோடு சேர்த்து ஏலக்காயையும் அதிக அளவில் அவர்கள் கொடுப்பதால், பால் கறக்கும் போதே ஏலக்காய் மணம் கமழுமாம். அந்த ஏலக்காய்ப் பாலைத் திருடுவதற்காக அவ்வீட்டுக்குள் கண்ணன் நுழைந்தான். பாலை எடுத்து அருந்தப் போனான். அதைக் கண்ட அவ்வீட்டு கோபிகை, ஒரு பிரம்பால் கண்ணனை அடித்தாள். அடித்ததும் என்ன ஆனது பிள்ளைப் பெருமாள் சுவாமி கூறுகிறார்:

“கடிக்கும் பிறை வெவ்வாள் எயிற்றுக் காளியன்மேல்

நடிக்கும் பெரிய பெருமாள் திருவரங்கர் நறைகமழ்பால்

குடிக்கும் களவுக்கு மாறுகொண்டு ஓர் கோபிகை பற்றி

அடிக்கும் போது பதினால் உலகும் அடிப்பட்டனவே!”

அந்தப் பெண் கண்ணனின் முதுகில் பிரம்பால் அடித்தவாறே, கண்ணனுக்கு வலிக்கவில்லை. ஆனால் பாதாள லோகம் தொடங்கி, சத்திய லோகம் வரை, ஈ எறும்பு தொடங்கி பிரம்மதேவர் வரை அனைத்து ஜீவராசிகளுக்கும் அந்த அடி விழுந்ததாம். அடிகொடுத்த அந்தப் பெண்ணுக்கும் அடி விழுந்தது. அனைவருக்கும் வலித்தது. இதன்மூலம் அனைத்து உலகங்களும் உயிர்களும் இறைவனுக்கு சரீரம், இறைவன் அனைத்துக்கும் ஆத்மா என்னும் வேதாந்த தத்துவத்தை நம்மால் உணர முடிகிறது. “யஸ்ய ப்ருதிவீ சரீரம், யஸ்ய ஆப சரீரம், யஸ்ய தேஜ சரீரம், யஸ்ய ஆத்மா சரீரம்” என்று சேதன – அசேதனங்கள் அனைத்தும் இறைவனுக்கு சரீரம் என்பதை பிருகதாரண்யக உபநிஷத் கூறுகிறது. “ஜகத் ஸர்வம் சரீரம் தே” என்ற ராமாயண சுலோகமும், “தானி ஸர்வாணி தத்வபு:” என்ற விஷ்ணு புராண ஸ்லோகமும், “ஸோபித்யாய சரீராத் ஸ்வாத்” என்ற மனுஸ்மிருதி சுலோகமும், “உடல்மிசை உயிரெனக் கரந்தெங்கும் பரந்துளன்” என்ற நம்மாழ்வார் பாசுரமும் இதே கருத்தைக் கூறுகின்றன. இந்த உடல் – உயிர் உறவு என்னும் வேதாந்தத் தத்துவத்தை இந்த லீலையின் மூலமாக வெகு எளிதில் நாம் புரிந்து கொள்ளும்படிக் கண்ணன் காட்டிவிட்டான்.

7. உரலுடன் கட்டுண்ட லீலை

கண்ணனை யசோதை உரலோடு கட்டிய போது, அவளது கட்டுக்குக் கட்டுப்பட்டுக் கட்டுண்டு நின்றான் கண்ணன். துரியோதனாதியர் கண்ணனைக் கட்ட எண்ணிய போது, விஸ்வரூபம் எடுத்து அத்தனை பேரையும் வென்ற கண்ணன் ஒரு ஆய்ச்சியின் கயிற்றுக்குக் கட்டுப்பட என்ன காரணம்? அன்பு தான். ஆணவத்துக்கு இறைவன் கட்டுப்பட மாட்டான், பக்தனின் அன்புக்குக் கட்டுப்படுவான் என்பதையே இது காட்டுகிறது.

“பத்துடை அடியவர்க்கு எளியவன் பிறர்களுக்கு அரிய

வித்தகன் மலர்மகள் விரும்பும் நம் அரும்பெறல் அடிகள்

மத்துறு கடைவெண்ணெய் களவினில் உரவிடை ஆப்புண்டு

எத்திறம் உரலினோடு இணைந்திருந்து ஏங்கிய எளிவே?”

என்று இதை நம்மாழ்வார் பாடுகிறார்.

8. மருத மரங்களைச் சாய்த்த லீலை

உரலுடன் கட்டுண்டிருந்த கண்ணன், உரலையும் இழுத்துக் கொண்டு தவழ்ந்து செல்லத் தொடங்கினான். அப்போது வழியிலிருந்த இரட்டை மருத மரங்களுக்கு நடுவே கண்ணன் சென்றான். அவனுடன் கட்டப்பட்டிருந்த உரல் அந்த மரங்களுக்கு இடையே மாட்டிக் கொண்டது. கண்ணன் வேகமாக இழுத்த போது, இரண்டு மரங்களும் முறிந்து கீழே விழுந்தன. அம்மரங்களின் வடிவில் இருந்த குபேரனின் மகன்களான நளகூபரன், மணிக்கிரீவன் இருவரும் சாப விமோசனம் பெற்றுக் கண்ணனைத் துதித்து விட்டு தேவலோகம் சென்றார்கள். இந்த இரட்டை மருத மரங்கள் நம் மனத்திலுள்ள காமம், கோபம் என்னும் இரட்டைத் தீய குணங்களைக் குறிக்கின்றன. நாம் எவ்வளவு முயன்றாலும், காமத்தையும் கோபத்தையும் நம் மனங்களிலிருந்து அகற்றுவது கடினம். ஆனால் கண்ணனை நம் மனத்தின் நடுவே கொண்டு வந்து வைத்து விட்டால், அதாவது இந்த இரட்டை மரங்களான காம கோபங்களுக்கு நடுவில் கண்ணன் வந்து விட்டால் இரண்டும் தானே முறிந்து விழுந்து விடும் என்பதில் ஐயமில்லை.

9. ஏழு காளைகளை அடக்கிய வரலாறு

கண்ணனின் தாய்மாமனான கும்பனுக்கு நப்பின்னை என்றொரு மகள் இருந்தாள். தன்னிடம் உள்ள ஏழு காளைகளை யார் அடக்குகிறார்களோ, அவர்களுக்கே தன் மகளை மணம்முடித்துத் தரப்போவதாகக் கும்பன் அறிவித்தான்.

“விடையேழ் வென்று மென்தோள் ஆய்ச்சிக்கு அன்பனாய்

நடையால் நின்ற மருதம் சாய்த்த நாதன் ஊர்

பெடையோடு அன்னம் பெய்வளையார் தம் பின்சென்று

நடையோடு இயலி நாணி ஒளிக்கும் நறையூரே!”

என்று திருமங்கையாழ்வார் பாடியபடி, கண்ணன் ஒருவனே அந்த ஏழு காளைகளையும் அடக்கி நப்பின்னையை மணந்து கொண்டான். இங்கே நப்பின்னை ஜீவாத்மா, கண்ணன் பரமாத்மா. ஜீவாத்மாவின் ஐம்புலன்கள், மனம், உடல் ஆகிய ஏழும் ஏழு காளைகள். இந்த ஏழு காளைகளும் ஜீவாத்மா பரமாத்மாவை அடைய ஒட்டாமல் தடுக்கின்றன. பரமாத்மாவான கண்ணன், ஐம்புலன்கள், மனம், உடல் ஆகிய ஏழு காளைகளையும் அடக்கி, ஜீவாத்மா தன்னை அடையும்படி அருள்புரிகிறார் என்னும் தத்துவத்தை இந்தச் சரித்திரம் உணர்த்துகிறது.

10. காளிய நர்த்தனம்

காளிய நாகம் என்பது நமது மனத்தைக் குறிக்கிறது. ஏனெனில் பாம்பு போல் நெளிந்து வளைந்து அலைபாய்ந்து கொண்டே இருக்கும் இயல்பு நம் மனத்துக்கு உண்டு. நாம் எவ்வளவு முயன்றாலும் அதைக் கட்டுப்படுத்துவது கடினம். மேலும், காளியன் விஷத்தைக் கக்கி யமுனை நதியை அசுத்தமாக்கியது போல், மனமானது தீய எண்ணங்களைக் கக்கிப் பிறரையும் அசுத்தமாக்கி விடும். இந்த மனத்தை வசப்படுத்த என்ன வழி? கண்ணனை நாம் நம் மனத்தில் கொண்டு வந்து நிறுத்தினோமாகில், காளியன் தலையில் கால் வைத்து நாட்டியமாடி அதை எப்படி அடக்கினானோ, அதே போல் நம் மனமாகிய காளியனையும் அவனே அடக்கி அதை வசப்படுத்தி விடுவான்.

11. கோவர்த்தன கிரிதாரி

ஆயர்கள் இந்திரனுக்காகச் செய்யும் விழாவைத் தடுத்த கண்ணன், இந்திரனுக்குப் பதிலாகக் கோவர்த்தன மலைக்குப் பூஜை செய்யும்படி அறிவுறுத்தினான். அதை ஏற்று ஆயர்களும் கோவர்த்தன மலைக்குப் பூஜை செய்ய, அதனால் கோபம் கொண்ட இந்திரன், ஆயர்பாடியில் கனமழையைப் பொழிந்தான். அப்போது கண்ணன் கோவர்த்தன மலையையே குடையாகத் தாங்கிப் பிடித்து ஆயர்களையும் ஆநிரைகளையும் அம்மழையிலிருந்து காத்தருளினான். இதன் தத்துவம் என்னவென்றால், இவ்வுலக வாழ்க்கையில், ஆத்யாத்மிகம், ஆதிதைவிகம், ஆதிபௌதிகம் என்ற மூன்று விதமான தாபங்கள் கல்மழை போல் நம்மை வந்து தாக்குகின்றன. நம் உடல் ரீதியாக நமக்கு வரும் உபாதைகளுக்கு ஆத்யாத்மிகம் என்று பெயர். இயற்கைச் சீற்றங்களால் வரும் இடையூறுகளுக்கு ஆதிதைவிகம் என்று பெயர். பிற உயிரினங்களால் நமக்கு உண்டாகும் தீங்குகளுக்கு ஆதிபௌதிகம் என்று பெயர். இவற்றிலிருந்து மீள என்ன வழி?

அன்று ஆயர்கள் கண்ணனைச் சரணடைந்தது போல், நாமும் கண்ணனைச் சரணடைந்தோமானால், குன்றைப் போல் உயர்ந்த தனது கல்யாண குணங்களையே குடையாகப் பிடித்து ஆத்யாத்மிகம், ஆதிதைவிகம், ஆதிபௌதிகம் எனப்படும் தாபத்ரய மழையிலிருந்து அவன் நம்மைக் காத்தருள்வான்.

12. ராச லீலை

சரத் காலத்தில், மாலை வேளையில், சந்திரோதயத்துக்குப் பின், ஒரு செண்பக மரத்தின் அடிவாரத்தில் அமர்ந்தபடி கண்ணன் குழலூதத் தொடங்கினான். அதைக் கேட்டு அவனிடம் ஓடி வந்த கோபிகைகளோடு சேர்ந்து இரவு முழுவதும் பிருந்தாவனத்தில் குரவைக்கூத்து என்று சொல்லப்படும் ராசலீலையைச் செய்தருளினான் கண்ணன். கோபிகைகளும் மெய்ம்மறந்து கண்ணனோடு ஆடிப்பாடி மகிழ்ந்தார்கள். இதன் மூலமாக ஜீவாத்மாவுக்கும் பரமாத்மாவுக்கும் உள்ள முக்கியமான உறவான மனைவி – கணவன் உறவைக் கண்ணன் உணர்த்தினான். ஜீவாத்மாவுக்கும் பரமாத்மாவுக்கும் இடையே சொல்லப்பட்ட ஒன்பது உறவுகளுள் இதுவும் ஒன்றாகும்.

1. மகன் – தந்தை

2. காப்பாற்றப்படுபவர் – காப்பவர்

3. தொண்டு செய்பவர் – தொண்டுகளைப் பெறுபவர்

4. மனைவி – கணவர்

5. அறிபவர் – அறியப் படுபவர்

6. தொண்டன் – எஜமானன்

7. தாங்கப்படுபவர் – தாங்குபவர்

8. உடல் – உயிர்

9. மகிழ்விப்பவர் – மகிழ்பவர்

இந்த ஒன்பது உறவுகளுள் ஒன்றான மனைவி – கணவன் என்னும் உறவை ராசலீலையால் உணர்த்தினான் கண்ணன்.

————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ திருக்குடந்தை உ.வே.வெங்கடேஷ் ஸ்வாமிகள்திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ கிருஷ்ணகானம் ஊத்துக்காடு ஸ்ரீ வெங்கடசுப்பையர் பாடல்கள்

January 18, 2024

பல்லவி

ஆருடம் ஒன்று சொல்லடி — என்
அந்தரங்க சிந்தையுடன் வந்து உறவாடின
நந்த முகுந்தன் எந்த நாளும் அகலாதிருக்க (அ)

அனுபல்லவி

பாரோடு விண்ணாகப் பரந்திருந்தானே
பச்சைப் பிள்ளைத் தனம் போக வில்லையே மானே
ஆரோடு சொல்வேனோ அந்தரங்கம் தானே
அந்தரங்கம் ஆனாலும் சிந்தை நாணம் தானே

(மத்யமகாலம்)
அலைந்து வெண்ணை திருட அதிலென்ன இருக்கோ
அத்தைமகன் மேலேயும் இவனுக்கென்ன வெறுப்போ
ஒரு பிடி அவலுக்கு உலகம்தான் கணக்கோ
உள்ளதைச் சொல்லப் போனால் உனக்கென்ன சிரிப்போ. (ஆ)

சரணம்

அச்சம் இல்லாமல் அரவமேலே நின்றாடுவான்
ஆரும் அழைக்க வந்தால் அவர் பின்னே ஓடுவான்
மிச்சம் மீதி இல்லாது வெண்ணைகளவாடுவான்
வேண்டாமே கண்ணா என்றால் வேணவழக்காடுவான். (ஆ)

——–

பல்லவி

இன்னமுது அன்ன உன் வண்ணமுகம் கண்டு
சொன்னபடி யாடுது மனமே – இங்கு
துள்ளித் துள்ளிப்பாடுது முன்னமே

அனுபல்லவி

பின்னலும் சாயக் கொண்டையும் சூழ மயில்
பீலிஒன்று நிரந்தரம் வாழ
மின்னலொளி கடைக் கண்ணில் தாழ – நீல
மேனிமுழுதான வனமலர் மாலைகள் மிருந்து தாழ கடைதலிராத (இ)

சரணம்

மெய்யுணர்ந்த மறைமாதவர் ஆனவர்
மெய்ப்பொருள் இதென்று உனைநாட — நீல
மேனிபடும் சுதமானதை ஒரு ஆவினம்
மிக்க அருகில் அணைந்து கூட
ஐயன் உன் முக வண்ணனை ஆராரோ சொல்லக் கேட்டு
அரம்பையர்கள் மண்ணுலகம் நாட –
அருந்ததியும் கூட தன்னிலை இழந்து
ஆவட்டமிட தூது – பா – ட … … …

மத்யமகாலம்

அதிலுமிதுவென்று தகுதிமியெனவொரு ஆடக மயில் நடமாட
அங்கிங் கெனாது தங்கி உறவாடும் தென்றலும் வந்து குழல் கூட
பொதுவில் நடமாடும் புனத நற் சுடலை பூத்துக் குலுங்கி வனமாக
பொங்கு கடலரவு மலையென இலாது பொரும்
எனாது ஒருபோதும் கடையாத (இ)

பல்லவி

கள்ளமே அறியா – த – கண்ணனை
கானக்குழல் எதிரொலி மாதுளப கானத்திடையுலவு நீல ஒளிதனைக்
கண்டபடி சொல்லப் போகாதே – அது அந்தரங்க மாகவும் ஆகாதே.

அனுபல்லவி

மெள்ள மறைபாடும் தேவனை……… வேணது தரும் கற்பக கா…வி…னை..
தெவள்வே குழலூதும் தேவாதி தேவனை
மெள்ள மனைசென்று உள்ளதயிர்கண்டு அள்ளிமிகவுண்ட கள்ளத்தனமன்றி (க)

சரணம்

தென்றல் ஊறவரும் சின்னக் குழலிசையில்
சிந்தை வழி…கா…ட்ட சென்றோமே அங்கு
நின்ற அழகினிலே நெஞ்சாரத் தந்திங்கு
சிந்தைகவர்கள்வன் என்றோமே.
கன்றோடு பசுவெல்லாம் காக்கும் அருளாளன்
கருணையினால் வந்த தென்றோ…மே…

கைக்கொள்ளும் வெண்ணையுண்ட கருணையை மனமார
கள்ளம் கள்ளம் கள்ளம் என்றோமே.
தொன்று முதல் வந்த தொரு கோடிபிறவி
தூயதென வாக ஆனதே
சொல்லழகிலும் பண்ணழகிலுமாக
சொன்னதொரு உறவும் ஆனதே
கதியெனவானதும் துதியெனவானதும்
காளீய நடனமும் ஆனதே
கண்கண்ட தெய்வம் பண்கொண்ட தெய்வம்
கைகொண்ட வெண்ணை அது உண்டதன்றி (க)

—–

பல்லவி

அலைபாயுதே–கண்ணா! என்மனம் மிக
அலைபாயுதே–உன் ஆனந்த மோஹன வேணுகானமதில்

அனுபல்லவி

நிலைபெயராது சிலைபோல நின்ற
நேரமாவதறியாமலே மிக வினோதமான முரளீதராமனம் (அ)

சரணம்

தெளிநத நிலவு பட்டப்பகல்போல் எரியுதே–உன்
திக்கை நோக்கி என்னிரு புருவம் நெரியுதே
கனிந்த உன் வேணுகானம் காற்றில் வருகுதே
கண்கள் சொருகி ஒரு விதமாய் வருகுதே

கதித்த மனத்தில் உறுத்தி பதத்தை எனக்கு அளித்து மகிழ்த்தவா–ஒரு
தனித்த வனத்தில் அணைத்து எனக்கு உணர்ச்சி கொடுத்து முகிழ்த்தவா
கனைகடலலையினில் கதிரவன் ஒளியென இணையிருக் கழலெனக் கனித்தவா
கதறிமனமுருக நானழைக்கவோ இதர மாதருடன் நீ களிக்கவோ
இது தகுமோ – இது முறையோ – இது தருமம் தானோ
குழலூதிடும் பொழுது ஆடிடும் குழைகள் போலவே மனது வேதனை மிகவொடு (அ)

———–

பல்லவி

ஆடாது அசங்காது வா, கண்ணா உன்
ஆடலில் ஈரேழு புவனமும் அசைந்து அசைந்தாடு எனவே (ஆடாது)

அனுபல்லவி

ஆடலைக் காணதில்லை – அம்பலத்திறைவனும் தன்
ஆடலை விட்டு இங்கே கோகுலம் வந்தான்
ஆதலினால் சிறுயாதவனே – ஒரு மாமயிலிறகணி மாதவனே நீ (ஆடாது)

சரணம்

சின்னம் சிறு பதங்கள் சிலம் பொலித்திடுமே அதை
செவிமடுத்த பிறவி மனம் களித்திடுமே
பின்னிய சடை சற்றே வகை கலைந்திடுமே – மயில்
பீலி அசைந்தசைந்து நிலைகலைந்திடுமே
பன்னிருகை யிறைவன் ஏறுமயில் ஒன்று – தன்
பசுந்தோகை விரிந்தாடி பரிசளித்திடுமே – குழல்
பாடிவரும் அழகா – உனைக் காணவரும் அடியார் எவராயினும்
கனகமணி அசையும் உனது திருநடனம் கண்பட்டுப் போனால் மனம் புண்பட்டுப் போகுமே (ஆடாது)

————

பல்லவி

நீலவானம்தனில் ஒளி வீசும் –
நிறைமதியோ உன் முகமே – கண்ணா (நீ)

அனுபல்லவி

கோல வண்ணம் காட்டி – குழலிசையைக் கூட்டி
மோன நிலையில் எம்மை – ஆட்டி வைத்த எங்கள்

இறைவா! என் மனமதிலே நிறைவாகி ஒளிமிளிர இன்பம் தர வந்
தவனே ப்ருந்தாவனம் நின்றவனே – காளிங்கனை வென்றவ –
னே-தித்தஜம் தஜம் தரி தாம் – தித் தஜம் தஜம் தரி தாம் – த
தாகிட குந்தரி – தரிஜகணம்தரி – ததீங்கிணதொம் – நீதாபதம மகாரிஸநி

சரணம்

நதிக்கரை ஓரத்திலே – யமுனை
நதிக்கரை ஓரத்திலே – அன்று ஒரு –
நாள் இந்நேரத்திலே – அன்
றலர்ந்த நறுமணமலரோ – மலரிதழோ உன் மதிமுகமென்றதும்
மதிமயங்கி வசமிழந்த என்னிடம் மனமிறங்கி அருள் புரிந்து சென்றதும்
மறவேனே – கணம் தரியேனே – தித்
தரிகுத ரிகுதீம் தததரிதீமித ஜணுத ஜணுததிம் தகததிங்கிணதொம் தத்தித்
தகதணக ஜம்தரி தித்தகணகஜம்தரி – தகணகஜம்தரி களங்கமிலா – த (நீ)

——

பல்லவி

யாரென்ன சொன்னாலும் அஞ்சாத நெஞ்சமே
ஐயன் கருணையைப் பாடு – ராக
ஆலாபனமுடனும் பாடு – முடிந்தால்
அடவோடும் ஜதியோடும் ஆடு –
அருமையென வந்தப் பிறவிகளோ – பல
ஆயிரம் தந்தாலும் வருமோ ஆதலின் (ஆ)

அனுபல்லவி

நாரத நாதமும் வேதமும் நாண
நாணக் குழல் ஒன்று ஊதுவான்
நீரதக் கழல் ஆட – கோபியரும் பாட
நேர் நேர் எனச் சொல்லி – தானாடுவான் அந்த (ஐ)

சரணம்

தோலை யறிந்து கனி தூர எறிந்து
வெறுந் தோலைத் துணிந்தொருவன்
தந்தானல்லவோ –
மேலைப்பிடி அவலை – வேணுமென்றே தெரிந்து
விரும்பி ஒருவன் அன்று தந்தானல்லவோ –
காலமெல்லாம் தவம் இருந்து கனிந்து கனி –
கடித்து சுவைத்தொருவள் தந்தாளல்லவோ – இந்த
ஞாலமும் ஆயிரம் சொன்னாலும் நாம் அதை
நமக் கெதற்கு என்று தள்ளி – நாமமும் ஆயிரம் சொல்லிச் சொல்லி (ஐ)

———

பல்லவி

வந்ததுவும் போனதுவும் இமைப்பொழுது ஆனானும்
மனமன்றோ களவானதே தயிரொடு நவனீதம் களவிட (வ)

அனுபல்லவி

நந்தகோபன் செய்ததவம் நல்வதொரு பயனாகி
இந்த விதமாக வந்து இன்பமுழுக் காட்டுதடி (வ)

சரணம்

காலினில் வழிந்த தயிர் கமலமலர்க் கோலமிட
கையில் வழி வாரும் வெண்ணைக் கானக் குழல் மூடியிட
நீலவண்ணக் கண்ணனிவன் நெட்டுமிழ்த்த தமுதாகி
நெஞ்சமெல்லாம் பொங்கி அவன் நினைவாலே ஆடலிட (வ)

———-

பல்லவி

நீதான் மெச்சிக் கொள்ள வேண்டும் எங்கள்
நீல நிறமேனி மாதவன் செய்வது
நிமிஷம் போவது யுகமாய் ஆகுது

அனுபல்லவி

காதாரக் குழலூதி கன்றோடு விளையாடி
கண்முன்னே வந்து நின்று ஆட்டமும் ஆடி
ஏதேதோ ஜாலங்கள் செய்வதும் ஓடி ஓடி
எழிலுறு மங்கையர் மனைதொறும் புகுந்து
களவாடிடும் எனதாருயிர் மகனை (நீ)

சரணம்

செய்யும் துஷ்டத்தனத்திற்கு எல்லையே இல்லை
தேடிப் பிடிக்க என்றால் சக்தியும் இல்லை
கையும் களவுமாக்க காலமும் வல்லை –
காலம் தவறாது கோள் சொல்ல வந்து நின்ற
மாதர்க்கு விடை சொல்ல நேரமுமில்லை (நீ)

கட்ட எண்ணிக் கயிற்றைத் தேடியும் காணோம்
கைக்கான கயிறெல்லாம் அளவாகக் காணோம்
மட்டமென உரலொடு கட்டிடத் தோணும் ஆனால்
மட மட வெனும் ஒலி செவிபுக வந்தால்
மருத மரமிரண்டைக் காணவே காணோம் (நீ)

——–

பல்லவி

ஆடும் வரை அவர் ஆடட்டும்
அறிந்து கொண்டேனடி……மயங்கேனடி குறையேனடி

அனுபல்லவி

தேடும் வரை எனைத் தேடட்டும்
தெறிவிக்காதேயடி இடத்தை மட்டும் ஏற்றமட்டும் (ஆ)

சரணம்

இங்கித மென்றாலே வீசை என்ன விலை
என்று கேட்பாரந்த மன்னன் – அதை
எடுத்துச் சொல்லவந்து நின்றாயே பெண்ணே நீ
ஏற்குமோடி எந்தன் எண்ணம்
ஸங்கீதம் அவர் கையில் கோயிற் குரங்காக
தவிக்குதே என் சொல்ல இன்னும
ஸரளி வரிசை முரளிக்காச்சு
ஜண்டை வரிசை கொண்டைக் காச்சு
அலங்கார பாம்பு மேலே
ஆடியாச்சு பாடியாச்சு

காவடிச்சிந்து

மாஞ்சி

1) கண்ணன் வருகின்ற நேரம் – கரையோரம்
தென்றல் கண்டு கொழித்தது பாரும்
கானத்திடை மோனக்குயில் ஓசைக்கிடையானத்தரம்
ஆனக் குழலிசைக் கேளும் – போன
ஆவியெல்லாம் கூட மீளும்.

2)
சல்லச் சலனமிட்டோடும் நதி பாடும்
வனம் தங்கித் தங்கி சுழன்றாடும் – நல்ல
துதிபாடிடும் அடியாரவர் மனமானது இதுபோல்என
துள்ளித் துள்ளிக் குதித்தோடும் – புகழ்ச்
சொல்லிச் சொல்லி இசைபாடும்.

3)
கண்ணன் நகைபோலும் முல்லை இணை இல்லை
என்று கண்டதும் வண்டொன்றும் வல்லை – இது
கனவோ அல நனவோ என கருதாதிரு மனமே
ஒரு காலமும் பொய்யொன்றும் சொல்லேன்
எங்கள் கண்ணனன்றி வேறு இல்லேன்.

4)
தாழைமடல் நீத்து நோக்கும் முல்லைப் பார்க்கும்
என்ன சௌக்கியமோ என்று கேட்கும் – அட
மொழிபேசிட இதுவோபொழுதெனவோ அதோ வரும் மாதவன்
முத்து முடியினில் சேர்வோம் அங்கே
மெத்த மெத்தப் பேசி நேர்வோம்.

சரணம்

பா பா – பா பா – பா பா     மாத ப – பமகரி – கஸரீ
இங்கி – த மென் – றா லே     வீசை – என்ன .-வி.லை
ரிக மாபம – காரீ – காரீ     ஸா; – ஸா; – ஸா ஸா
என் . று ..- கேட் பா ரந்த     மன் — னன் .- அதை
ஸஸ பா – பா பா – பநிதா மா     தநி – ஸர்ரிஸ் நீதா பா; பாநித – மா
எடுத் துச் – சொல்ல – வந் .- து    நின் .- றா .. யே – பெண்.ணே…நீ
பா பா – பாமா – காரீ     பம கரீம கரி ஸா ;; ||
ஏற் கு – மோடி – எந்தன்     எண் . .. ணம் … … . ||
பா பா – பா ப ப – பாநித தம     நிதநீ – ஸாஸா – ஸா ஸா
சங்கீ – தம் அவர் – கை … யில்     கோ.விற் – குரங் – காக
ஸ்ரி .ரீபம க்ரி ஸா – ஸாஸா     தாரிஸ் நித – ஸா :-;; ||
தவிக்கு … தே . என் – சொல்ல     இன் … … னும் .-… ||
ரிரிரிரி – க்ரி ஸ்க்ரி ஸர்ஸ்     ஸா ஸ் நி தி – ஸா ஸ் ஸா ஸ்
சரளிவ ரிசை முரளிக் காச்சு     ஜண்டைவரிசை-கொண்டைக் காச்சு
பபாபா க்ரி ஸா ஸ் பா ப     பா ப பதம – மபம – காரி ||
அலங்கா ர – பாம்பு மேலே     ஆடி யாச்.சு பாடி – யாச்சு || (ஆடும்)

——–

பல்லவி

அவராக வருவாரோ வரமாட்டார் இதில்
அதிசய மென்னடி அன்னமே கண்ணன் (அவ)

அனுபல்லவி

எவருக்கும் மேலான இன்னருளாளன் யமுனாவனம் பூத்த இனமலர் தாளன்
புவனம் மயக்கும் புல்லாங்குழல் இசையாளன் புண்ணிய மிகுந்த எங்கள் ராதை மணவாளன்

மத்யமகால ஸாஹித்யம்

தவமிருந்த காளியன் தலமிசை இருந்து தாண்டவ மாடிய பதங்கொண்டு
தமால மரநிழல் இருந்து என்னிடம் தனியாக பேசி அதை நினைவு கொண்டு
குவளை நீல திருமேனி கொண்டன்று கோவர்த்தனம் சுமந்தது போல – இன்று
குவலய முழுதுள கவலையை ஒருங்கு கொண்டவரங்கிருந்திங்கு நேராக

சரணம்

தூது சென்ற உந்தன் வாயாடி தனம் கண்டு தொல்லை என்றெண்ணி விட்டாரோ
நாத குழலிசையில் நவநவமாக ராகம் இணைத்து விட்டாரோ
ஆதவன் அஞ்சி அஞ்சி அங்கே நிற்க ஆனந்தமாக நினைந்தாரோ
அடியேனையுந் சைரந்திரி போலவே எண்ணி ஆகட்டும் என்று விட்டாரோ.

(மத்யமகால ஸாஹித்யம் பாடி பல்லவியை எடுக்கவும்)

———

பல்லவி

அசைந்தாடும் மயில் ஒன்று காணும்! – நம் –
அழகன் வந்தானென்று – சொல்வதுபோல் தோணும்! (அசைந்தாடும்)

அனுபல்லவி

இசையாரும் குழல் கொண்டு வந்தான் – இந்த –
ஏழேழ் பிறவிக்கும் இன்பநிலை தந்தான்
திசைதோறும் நிறைவாக என்றான் – என்றும் –
திகட்டாத வேணுகானம் ராதையிடம் ஈந்தான்

மத்யமகாலம்

எங்காகிலும் – எமதிறைவா! இறைவா! எனும் மனநிறை அடியவரிடம்
தங்கு மனத்துடையான்! – அருள் பொங்கும் முகத்துடையான்! – ஒரு –
– பதம் வைத்து மறு பதம்தூக்கி – நின்றாட – மயிலின் இறகாட – மகர குழையாட
– மதிவதனமாட – மயக்கு விழியாட – மலரணிகளாட – மலர்மகளும் – பா…ட –
இது “கனவோ நனவோ!” – என – மனநிறை முனிவரும் மகிழ்ந்து கொண்டாட –
(அசைந்தாடும் மயில்)

சரணம்

அசைபோடும் ஆவினங்கள் கண்டு – இந்த –
அதிசயத்தே சிலைபோலே நின்றதுவும் உண்டு
நிசமானசுகம் என்று ஒன்று – இருந்தால்
நீளுலகில் இதையன்றி – வேறெதுவும் அன்று!
இசையாரும் கோபாலன் இன்று – நின்று –
எழுந்தெழுந்து நடம்ஆட – எதிர்நின்று ராதைபாட -,

எங்………………………………….. கொண்டாட (அ)

—–

பல்லவி (ராகம்: தர்பார்)

இப்படியும் ஓர்பிள்ளை எங்கேயும் இல்லை
இன்பம் தரும் தொல்லை இதற்கீடிணையும் இல்லை (இப்படியும்)

அனுபல்லவி

பொற்புயத்தே வனமலரும் பூப்புனையும் பலராமா
தப்பிதமாகாத உன்தன் தம்பி என்றால் அறமாமோ
இப்போதே நீ சென்று எங்கள் மொழி ஈதென்று
எந்த விதமோ இதை யசோதையிடம் போய் சொல்லு (இப்படியும்)

சரணம் (ராகம்: தன்யாஸி)

எப்படியும் உறிக்கலயம் எட்ட முடியா உயரம்
கட்டி ஒரு வகை செய்து காவல் வைத்துப் போன பின்னர்

(ராகம்: வஸந்தா)

யாரென்று வினவ எம்மை அஞ்சுவோம் என்று கண்டுன்
பேர்சொல்லி உன்னுடனே பிறந்தோன் என்றான்
பார் இங்கே வந்து தயிர் பானையுள்ளேது எனில்
கார் ஒன்றைத் தவிர்த்த இளங்கன்றொன்றை காணுமென்றான் (இப்படியும்)

(ராகம்: மத்யமாவதி)

இத்தனையும் செய்து பின்னர் எங்கள் மனம் நோகு மென்று
முத்தம் ஒன்று ஈந்து நாங்கள் மயங்கி நின்ற வேளையிலே
கத்தைக் குழல் பற்றி எழில் மிக்க மயில் பீலி வட்டம்
சுற்றி ஒரு கையில் குழல் பற்றி விரைந்தோடினான் (இப்படியும்)

——–

பல்லவி

ஏனிங்கே வந்து வந்திருந்தென்னென்னமோ கண்ணனை
வண்ணனைப் பாடுராய் எல்லமறிந்த விளிவண்டே வண்டே (ஏ)

அனுபல்லவி

வானோடு மண்ணை அளந்தானை என் மனமோடு உறாவாடி களவாடினானை
வானரக் கொடியோன் தோழனானை

மத்யகால ஸாஹித்யம்

மனைவாசல் என்ற எல்லாம் துறந்து
அறியாது நின்ற அடியோங்கள் முந்தி

சரணம்

வடமாமதுரை நகர் வழி இதோபாரு மதுகர வாயிசை நிதமுரவாகிட
வண்டே வண்டே பறந்தோடு அங்கேபாடு மட நல்லார் அங்காயிரம் ஆயிரம்
மாதவன் உறவெனும் காதலியருண்டு வண்டே வண்டே பறந்தோடு அங்கே பாடு
மலரணிந்தேனை வனமளித்தானை மனமறிந்தானை வாயாரப் பாடு – அந்த
மங்கையர் இங்கிதம் அறிந்து உனக்கானது செய்வாரது பாரு (ஏனிங்கே வந்து)

———

பல்லவி

ஒய்யாரமாக ஒய்யாரமாக
ஒய்யாரமாக யமுனை நதி ஓரமாக வெகு
நேரமாக வந்தாரவாரமாக
மெய்யாக குழலொன்று ஊதிடுங் கண்ணா
நீலமேனி வண்ணம் கண்டு மனம் ஆடிடுங் கண்ணா(ஒய்யார)

அனுபல்லவி

கையார மலர் கொண்டு தூவினும் ஆகாதே – இரு
கண்ணார கண்டு கொண்டு நின்றாலும் ஆகாதே
மெய்யான நிலைவந்து மேவினும் ஆகாதே
மென்மேலும் மேலும் பேராசை கொள்வதும் தீராதே

மத்யமகாலம்

என்ன சொல்லியும் சொல்லியும் மனமதில் ஏறாதே
என் இறைவா நீதரும் புன்னகையில் தோயும்
நெஞ்சம் மறுமொழி கூறாதே மாறாதே
மன்னவனே மாதவனே மலர்முக ராதை மகிழ் மணவாளனே
கன்னல் எனஓடி முன்நிலவில் கூடி
நன்னயமொடு ஒரு புன்னை நிழலாடி

சரணம்

முத்தார மணி துள்ளி மொய்யுவன மாலை ஆட
மோன குறும்பு நகை முன்உதடு வந்து கூட
வித்தாரமான பண்ணில் வேணுமென்று இசைபாட
வேதங்கள் எல்லாம் தேட ப்ருந்தாவனம் வந்து கூடகூட

சரணம் (அதிமத்யமம்)

நாநாவிதமான புலந்தரு தொழில்
நான் எங்கென அகல் சரியை கிரியையும்
ஞானங்களொடு பரமும் பரஸுகமும்
நான் இங்கென வரு கருணை முகங்காட்டி
வேறெங்கிலும் இயலாதேன் தொழுதேன்
விழுந்து தஞ்சமென்றடைந்தேன் எனக்
கானந்த நிலை காட்டி அருள்கூட்டி
விண்மதியென ஒளிகாட்டி எனக் கெதிரில் (ஒய்யார)

——

பல்லவி

கண்ணல்லவோ ஸ்வாமீ
கார்மேனி கட்டழகா நீ என் (கண்)

அனுபல்லவி

வண்ண மலர் போலும் சின்னஞ்சிறு பெண்கள்
வந்து வந்து நகைப்பதைப் பாராய்
பண்ணுரு குழல் ஊதிடும் பிள்ளாய்
இங்கிதமோ தகுமோ சொல்லாய்
எண்ணமொடும் சினமானது தள்ளாய்
என்னெதிரில் முத்தம் தர நில்லாய்(கண்)

சரணம்

கொய்யுமலர் நீலக்குவளை விழியாலே வையாது வைகின்ற கண்ணா
சின்னகையளவு வெண்ணை தந்தால் மெய்யவும் போதா தென்று
பையப்பைய வாதாடுகிறாய் அய்யய் யய்யய்ய அய்ய என் (கண்)

ஓச்சலொழி வில்லாது – உன் காவல் செய்தால்
ஊராரென்ன சொல்வாரோ கண்ணா
ஆச்சியர்கள் இங்கே வந்து கூச்சலிட்டுப் போனார்கள்
பேச்சென்ன இனிமேலே – சேச் சேச் சேச்சே (கண்)

2வது சரணம் முதல் சரணம் போல்

——-

பல்லவி

கண்கண்ட தெய்வமே – எங்கள்
கதி நீயே குருநாதா கழலே துணை என்ன
கைமேல் பலன் ஆகுமே இதுவே மெய்மெய் எனலாகுமே (கண்)

அனுபல்லவி

பண்கொண்ட குழலூதும் பரமனடி காட்டி
பக்தியில் முக்தியில் பாட்டினில் ஆசையூட்டி
கண் என்ற குரல் காட்டி காலில் சதங்கை மாட்டி என்
எண்ணமெல்லாம் ப்ருந்தாவனத்திடை யோட்டும் (கண்)

சரணம்

சிந்தை கடலாடி விந்தை மிகவான பேரின்ப முத்து ஒன்று பெற்றேனே உடனே
பாடும் பணி செய்ய கற்றேனே
நந்தகோபன் மனை வந்து பிறந்தவனை நாதா என்று சொல்ல பெற்றேனே உடனே
ஆதியந்தம் எல்லாம் அற்றேனே

மத்யமகால ஸாஹித்யம்

இத்தனைக்கும் யாரென மிகையாகா
எங்கள் குருநாதனருள் அல்லவோஹ இதை
எத்தனையும் சொன்னாலும் அத்தனை அமுதூறும்
ஆனந்த நிலை என்று சொல்லவோ. (கண்)

——–

பல்லவி

காணீரே!……………..கஞ்சமலர்க்
கண்ணன் வந்து நின்றதுவும், கை வெண்ணையைத் தின்றதுவும் (காணீரே!)

அனுபல்லவி

தூணிறுத்ததாண நடு தொங்கும் உறுமேலே
துப்புக் கண்டு கொண்டான்! – யாரோ சொல்லி வைத்தாற் போலே!
நாணிக்கோணி நின்ற ஒரு – நங்கையவள் மேலே
நல்ல மணங்கமழ்ப்பதம் கொண்டேறி மெல்ல உரியாடி விந்தைக்களவாடக் (காணீரே!)

சரணம்

ஆனாலும் வெண்ணை வெண்ணை வெண்ணை என்றான் – கண்ணன்
ஆனாலும் வெண்ணை வெண்ணை வெண்ணை என்றான் இவனுக்கு
அப்படித்தான் வெண்ணை என்ன சுவையோஹ
அன்னை இவனைப்பெற என்ன தவம் செய்தாளோ!
ஆனாலும் இனிமேலும் குறையோஹ

போனாலும் வந்தாலும் …. கண்ணன்
– போனாலும் வந்தாலும் – முன்னழகைக் காட்டிப்
– போனாலும் வந்தாலும் – பின்னழகைக் காட்டிப்
– போனாலும் வந்தாலும் – தன்னழகைக் காட்டி என்
– புத்தியை மயக்குறான்! – இதென்னவோஹ

மத்யமகாலம்

புதுமலர் வண்டு-கருவிழியாகப் புன்னகை தண்ணொளி நிலவென்று ஆகக்
“கருகரு” வென்ன குழலலைந்து ஆடி-கார்முகிலோ என- ஒளியதுமாக
குளிர்மதி நீலத் தடநுதல் வந்து – குடிபுகுந்ததெனத் திலகமாக
கொற்றவன் செய்த களவை – “நற்றவம்” எனக் கருதிகூட நீ பாட – கோவிந்தனும் ஆடக் (காணீரே)

———

பல்லவி

தாயே! யசோதே! – உந்தன் ஆயர் குலத்துதித்த
மாயன் கோபாலக்ருஷ்ணன் செய்யும் ஜாலத்தைக் கேளடி! (தாயே)

அனுபல்லவி

தையலே! கேளடி உந்தன் பையனைப் போலவே – இந்த
வையகத்தில் ஒரு பிள்ளை ஐய்யய்ய! நான் கண்டதில்லை (தாயே)

சரணம்

1. காலினில் சிலம்பு கொஞ்சக் கைவளை குலுங்க – முத்து
மாலைகள் அசையத் தெரு வாசலில் வந்தான்!
காலசைவும் – கையசைவும் – தாளமோடிசைந்து வர
நீலவண்ணக் கண்ணனிவன் *நிர்த்தனமாடுகிறான்!
பாலனென்று தாலியணைத்தேன்! – அணைத்த என்னை
மாலையிட்டவன் போல் – வாயில் முத்தமிட்டாண்டீ!
பாலனல்லடி! உன்மகன் – ஜாலம்மிக செய்யும் க்ருஷ்ணன்
நாலுபேர்கள் கேட்கச் சொல்ல – நாணமிக வாகுதடீ! (தாயே)

2. அன்றொருநாள் இந்தவழி வந்த விருந்திருவரும்
அயர்ந்து படுத்துறங்கும் போதினிலே – கண்ணன்
தின்றதுபோகக் கையில் இருந்த வெண்ணையை – அந்த
விருந்தினர் வாயில் நிறைத்து மறைந்தனனே!
நிந்தைமிகு பழியிங்கே பாவமங்கே என்றபடி
சிந்தைமிக நொந்திடவும் செய்யத்தகுமோ
நந்தகோபற்கிந்தவிதம் – அந்தமிகு பிள்ளைபெற
நல்லதவம் செய்தாரடி – நாங்கள் என்ன செய்வோமடி (தாயே)

3. எங்கள்மனை வாழவந்த – நங்கையைத் தன்னம் தனியாய்
துங்க யமுனாநதிப் போகையிலே – கண்ணன்
சங்கையுமில்லாதபடி – பங்கயக் கண்ணால் மயக்கி
எங்கெங்கோ அழைத்துச் சென்று நிசி வந்தான்
“உங்கள்மகன் நான் என்றான்! – சொல்லி நின்றபின்
தங்குதடையின்றி வெண்ணைத் தாரும் என்றான்
இங்கிவனைக் கண்டு இள – நங்கையரைப் பெற்றவர்கள்
ஏங்கி – எண்ணித் தவிக்கின்றார்! – நாங்கள் என்ன செய்வோமடீ! (தாயே)

4. தொட்டிலிலே பிள்ளை கிள்ளி விட்டதும் அவை அலற
விட்ட காரியம் அகல வெண்ணை தின்றான்!
கட்டின கன்றை யவிழ்த்து – எட்டியும் ஒளித்துவிட்டு
மட்டிலாத் தும்பை கழுத்தில் – மாட்டிக் கொண்டான்!
விட்டு விட்டு – “அம்மே” என்றான் கன்றினைப் போலே
அட்டியில்லாத மாடும் “அம்மா” என்றதே!
கிட்டின குவளையோடும் எட்டினால் “உன் செல்வமகன்!”
பட்டியில் கறவையிடம் – பாலை யூட்டுறானடீ! (தாயே)

5. சுற்றி சுற்றி என்னை வந்து – அத்தை வீட்டு வழி கேட்டான்
சித்தத்துக் கெட்டும் வரையில் சொல்லி நின்றேன்
அத்துடன் விட்டானோ பாரும் ஆத்தங்கரை வழி கேட்டான்
அத்தனையும் சொல்லிவிட்டு நின்றேன்
வித்தகமாய் ஒன்று கேட்டான் நாணமாகுதே!!
முத்தத்துக்கு வழிகேட்டு சத்தமிட்டாண்டீ
அத்தனை இடம் கொடுத்து – மெத்தவும் வளர்த்து விட்டாய்!
இத்தனை அவனைச் சொல்லக் குத்தமில்லையேயடி! (தாயே)

6. வெண்ணை வெண்ணை தாருமென்றான்! வெண்ணை தந்தால் தின்றுவிட்டு
பெண்ணைத் தாரும்! என்று கண்ணடிக்கிறான்!
வண்ணமாய் நிருத்தமாடி – மண்ணினைப் பதத்தால் எற்றிக்
கண்ணிலே இறைத்துவிட்டுக் களவாடினான்!
பண்ணிசையும் குழலூதினான்! – கேட்டு நின்ற
பண்பிலே அருகில் வந்து – வம்புகள் செய்தான்!
பெண்ணினத்துக்கென்று வந்த – புண்ணியங்கள் கோடி கோடி
எண்ணீ உனக்காகுமடி – கண்ணியமாய்ப் போகுதடீ! (தாயே யாசோதே!)

7. முந்தாநாள் – அந்தி நேரத்தில் செந்தமுடன் கிட்டே வந்து
வித்தைகள் பலவும் செய்து விளையாடினான்
பந்தளவாகிலும் வெண்ணை – தந்தால் விடுவேனென்று
முந்துகிலைத் தொட்டிழுத்துப் போராடினான்
அந்த வாஸுதேவன் இவன்தான் – அடி யசோதே!
மைந்தனெனத் தொட்டிழுத்து மடிமேல் வைத்தேன் வைத்தால்
சுந்தர முகத்தைக் கண்டு – சிந்தையுமயங்கு நேரம்
அந்தர வைகுந்தமோடு – எல்லாம் காட்டினானடி! (தாயே யசோதே!)

———-

பல்லவி

தவமொன்றும் அறியாத பாமரத்தி பதத்
தாமரைக்கே நமஸ்காரம்

(மத்யமகாலம்)
தானாகி தன்னருளொடு தராதல மெங்கும் உள்ளம் புறமொடு துலங்கும்
தருணா மழை போலு வந்த தயாநிதியே உன் சன்னதியே பெரும் (தவ)

அனுபல்லவி

குவளை நீலமலர் கோலக் கண்ணா
கோவிந்த தாமோதரானந்த கண்ணா – எனக்

(மத்யமகாலம்)
கூவி குறை துறந்த அடியவர் தம்மொடு
குணங் கலந்திடு திருவே கண்டு கொள்ளா திருக்க
மாயை எனும் திரை மூடி மறைந்திடும் உருவே என்
ஆவி உடல் பொருள் சுமந்த பரமானந்த கற்பகத் தருவே
ஆதியந்த நடுவிலாது நின்றிடும் ஆனந்த நிறைவே அறவே (தவ)

சரணம்

புனைந்தான் ஒருவனை வேடமை நீங்கி புத்தி அற்றாரங்கு காணார் அது
போலே உன் மாயையை தாண்ட இயலாது புண்ணியத்தாரும் மயங்கி போனார்
முனைந்தார் தவநிலை முனிவரும் யோகியரும் முற்றும் துறந்தவைந்து ஆனார் உன்
மோகன புன்னகைக்கு தாகமும் மேலிட்டு
மோர் கடைந்து விற்கும் நிலை கோபியர்கள் ஆனார்

(மத்யமகாலம்)
புரியாத மாயை யுந்தன் லீலை யல்லவோ
புத்தியற்ற நானுமதை கண்டு கொள்ளவோ
சரியான தத்துவங்கள் உன்னை யல்லவோ
தானாக கொண்ட தென்றால் நானென்ன சொல்லவோ.

———–

பல்லவி

தேடி அருள வந்தான் தேவி திருவேதவல்லி முகங்காண
தேவதேவன் திருவல்லிக்கேணி கரை (தேடி)

அனுபல்லவி

நாடி தவமுறும் பார்க்கவ முனிக்காக நல்ல திருவேதவல்லி தனக்காக
பாடிப்பரவும் தொண்டர் பக்தி தனக்காக பக்தி இல்லாதவரை சுத்தி வளைத்தாக
பக்குவமான மனதறிந்தொரு கணம் பாதமலரினையும் காதலுறவாக
பண்ணார பற்றிய தவநிலையது முனம் ஒண்ணாத நிலைபெறும் புண்ணியந்தனக்காக (தேடி)

சரணம்

கள்ள மறியாத தன்னைக் காட்டிக் கொடுக்க வந்த
கான முனி நாரதரைக் காண வந்தானோ
காதல் வலை விரித்து கத்து மாட்டையும் வைத்து
கட்டிப் பிடித்தானவனை காண வந்தானோ

பிள்ளைக்கறி முகத்தன் பெற்றவன் பித்தானான்
பெண்ணைக் கண்டழைக்கவும் காண வந்தானோ
தேவாதி தேவன் தெள்ளிய சிங்கன் தேடித்தேடி இந்த திருத்தலம் காண
திரைகடவிடைமுனம் அலைந்தது போக சிகரமந்தரந்தனை சுமந்ததுபோக
அரனயன் அமரரும் பணிந்ததுபோக அத்தனையும் விட்டு இங்கு அந்தரங்கமாக (தேடி)

——

பல்லவி

நல்லதல்ல வென்று சொல்லடி (சென்று) நந்தவனந்தனில் அந்த
நடமிடும் நந்த முகுந்த கோவிந்தனிடம் சென்று (நல்லதல்ல)

அனுபல்லவி

அல்லும் பகலும் நான் அடியிணைக்கே ஏங்க
ஆரவாரம் நிறையும் ராஸ நடனம் ஓங்க
தளாங்கு தகதக திக ததிங்கிணதோம் தித்தாம் கிடதோம் கிடதகதோம்
அனந்த வ்ரஜயுவதிகளின் நடமிடும் ஆட்டம் நிறையும் அரவமுடன்
தளாங்கு தகதக திக ததிங்கிணதோம் தித்தாம் கிடதொம் கிடதஹஹஹம்
மலர்ந்த நறுமலருடன் வண்டினமிடும் கூட்டம் இசையும் இசைபலவும்
தளாங்கு தகதக திக ததிங்கிமதோம் தித்தாம் கிடதோம் கிடதகதொம்
கலந்த நறுமண துளபமணியவரும் தோற்றம் முறுவல் தவழ வரும்
முகமும் மகர குண்டலுமும் கனக அம்பரமும் களப சந்தணமும் அணிபணியும்
அகமும் புறமும் தவமிருந்து நான் வர மறந்து ப்ருந்தாவனந்தனில் அலைந்திடவும்

——-

பல்லவி

பார்வை ஒன்று போதுமே! – கள்ளப் –
பார்வை ஒன்று போதுமே! – சங்கப் –
-பதுமநிதி இரண்டும் – வலியத் தந்தாலன்ன கள்ளப் (பார்வை)

அனுபல்லவி

கார்முகில் போல் வண்ணக் கதிரென்ன மதியென்னக் –
கருவிழி கடலிணை சற்றே திறந்து
கருணை மழை பொழிந்தென் அகம் குளிரும் – கள்ளப் – (பார்வை)

சரணம்

அன்னை யசோதை – அருகினிலே சென்று – இவன்
-வெண்ணை திருடிவந்த விந்தை சொல்லப் போனால்-
அன்னையின் பின்னே சென்று அணைந்து கொண்டு நின்று-
-“சொல்லாதே !” என்று கண்ணால் சொல்லிடும் – கள்ளப் (பார்வை)

——-

பல்லவி

பால்வடியும் முகம் – நினைந்து நினைந்தென் உள்ளம்-
பரவச மிக வாகுதே!………………..கண்ணா! – (பால்)

அனுபல்லவி

நீலக் கடல் போலும் நிறத்தழகா! – எந்தன் –
நெஞ்சம் குடி கொண்ட – அன்றுமுதல் இன்றும் –
எந்தப் பொருள் கண்டும் – சிந்தனை செலா தொழியப் – (பால்)

சரணம்

வான முகட்டில் சற்று – மனம் வந்து நோக்கினும் – உன்-
-மோனமுகம் வந்து தோணுதே – தெளி-
-வான தெண்ணீர்த் தடத்தில் – சிந்தனை மாறினும் – உன்-
சிரித்த முகம் வந்து காணுதே – சற்று-
கானக் குயில் குரலில்- கருத் தமைந்திடினும் – அங்கு -உன்
கானக் குழலோசை மயக்குதே –

மத்தியம காலம்

கறுத்த குழலொடு நிறத்த மயிலிற கிறுக்கி அமைத்த திறத்திலே -,
கான மயிலாடும் – மோனக் குயில் பாடும்- நீல நதியோடும் வனத்திலே-,
குரல் முதல் எழில் அசை குழைய வரும் இசையில் – குழலொடு மிளிர் இளம் கரத்திலே-
கதிரும் மதியும் என- நயனவிழிகள் இரு – நளினமான சலனத்திலே-,
காளிங்க சிரத்திலே – கதித்த பதத்திலே – என் மனத்தை இருத்தி –
கனவு நனவினொடு- பிறவி பிறவி தொறும்-கனிந்துருக-வரந்தருக-பரங்கருணைப் (பால்)

——

பல்லவி

முன் செய்த தவப்பயனே! – எங்கள் –
முக்தி தரும் மாதவனைப் – பக்தி செய்யக் கிடைத்தது (முன் செய்த)

அனுபல்லவி

முன்னொரு காலடியில் மூவுல களந்தோன்! – இப்போ
மூவுலகும் வாழக் – கான மழை பொழிந்தோன்!
புன்னகை சிதறாமே – புள்ளின் வாய் பிளந்தோன்! – சின்னப்
-புல்லாங் குழலைக் கொண்டு – எல்லா உலகாள – வல்லானிவனைப் பாட-
வாயாறத் தோனூற (முன் செய்த)

சரணம்

நினைந்தாலும் ஒரு சுகமே! கண்ணணை – நினைந்தாலும் ஒரு சுகமே!
நினைந்து நினைந்து – மனம் கசிந்து கண்ணீருருக நனைந்தாலும் ஒரு சுகமே!!

1. ஞானமெனும் – ஆயர்வாழ் மனையில் வந்து – ,
தானுமுறவாகும் – தன்மையது சொல்லி (நினைந்தாலும்)

2. ஆடுவர் – ஆடாதவர்-புகழ்சொல்லிப் பாடுவர்-பாடாதவர் மறை வழி புகத்-
தேடுவர்-தேடாதவர்-யாவருளமும் அறிந்து அருள் மழை பொழிந்து நின்றதை (நினைந்து)

3. அரைக்கிசைந்த ஞாணொடு-புலிநகம் அசைந்தாட-கிண்கிணி சதங்கை ஒலிக்-
-கறவைகள் அணி-மணி-நாதமொடு காதல் மடவார் தரு-கரவளை யொலிகளும்-,
-கன்று குளம்பொலியும்-, மலரின்மது வண்டு நுகர்ந்திடு வண்டொலியும்- கலம்-
கொண்டிடையும் -சிறுவர்கள் பலருடன்-வனம் நின்று குழலோதும் பண்ணிசையும்-இங்கு (நினைந்து)

4. சங்கொடு, சாரங்கமும், ஆழியும்-குடை கமண்டலமும்-கோடரி கோதண்டமும்-,
இங்கிவை ஆகாதென வனமலர் மாலையும் – பொன் துகிலும்-மா-மயிலிறகும்-,
தங்கிய மரகத மேனியும்-ஆவரிக் கொம்பொடு-குழலும்-குஞ்சித பதமும் -,
எங்கெங்கு நோக்கினும் – பொங்கு குறு நகையும் – மங்கள முகமொடு மான்மதத் திலகமும் (நினைந்து)

5. மறை முதலிடை அந்தமாகிய பொருளும் மண்விண்ணொடு
பரந்த தொரு வெளியும்
அறமும் அறம் தமக்கோர் உருவமும் அறிவும் ஆவனவும் தானே என
பிறை மதி வந்தார்க் கொடு சமரிடையினில் பெரும் பவமகனார்க் கொடி நிழலும்
திறந்தருளும் வாயிதுவே மனைதொறும் தேடி வெண்ணையுண்ட வாயிதுவே என (நினைந்து)

6. எனையாளும் – ஈரெழு உலகாளும் – அடியவர்
மனமாளும் யதுகுலம் தனையாளும் – கண்ணனை
முனைந்தோடும் – யமுனைத்துறைவனை – எவ்வுயிர்க்கும்-
இறைவனே – என் மன நிறைவோனைப் – பாடப் பாட (முன்செய்த தவப் பயனே!)

——-

பல்லவி

வந்தே பிறந்தான்! – கண்ணன் வந்தே பிறந்தான் – மாதவன்
தேவகியோடணைந் தந்தே இருந்தான் (வந்தே)

அனுபல்லவி

மந்தமாருதம் மெல்லெனவீச – வானவர் மெதுவாய் வர்ணனைபேச
நந்தன் மனையெல்லாம் – சகுனங்கள் பேச
நம்முடை வஸுதேவன் கண்களும் கூசக்கூச (வந்தே)

சரணம்

1.
வலமும் இடமும் அபய வரதங்கள் நோற்க –
மற்றவை சங்க சக்கரம் ஏற்க –
தலையை நீட்டி – வசுதேவனும் பார்க்க – அங்கே
சதகோடி சூரியர்கள் ஒளியெல்லாம் தோற்கத் தோற்க (வந்தே)

2.
தலைவாசல் வேப்பிலை செற்றாரும் இல்லை –
சரியான மருத்துவம் பார்த்தவர் இல்லை
கலைசொல்லி – ஜாதகம் கணிப்பாரும் இல்லை – எங்கள்
கண்ணன் பிறப்பில் அந்தத் தொல்லையே இல்லை (வந்தே)

3.
கன்னாரக்காரர்கள் கையெல்லாம் வலிக்க
கணக்குத் தெரியாமல் நீங்களும் விழிக்க –
பின்னாலே தெரியும் அந்த ஜாலர்கள் ஒலிக்கப்
பெரியோர்கள் நாவெல்லாம் துடியாய்த் துடிக்க (வந்தே பிறந்தான்)

—–

பல்லவி

வையம் அளந்து வானளந்த ஓ மாதவா
வரதா பயகரம் தரு கருமுகில் வர்ண

அனுபல்லவி

செய்யத் தாமரை சீரடி கொண்டு சீரிய காளீயன் மேலாடியது கண்டு
உய்ய தானாசை கொண்டு உள்ளம் கண்டு
உரிமை பெற தானுமாடியது உண்டு
உலகீரேழையும் உண்டு உளமாயையற தரிசனம் அது தரும்

ஜதி

தாம் திஜ்ஜணு திகி தஜ்ஜணு திமிதிமி திர்ரீ தைய
ணந்தம் ணந்தம்பாரி ஜாத கந்தம்
கிடதகதிரி ஜமுணந்தரி குகுகுந்தம் ஜந்தரி திரி திலானா
தித்தளாங்கு தையததையத தித்ஜையத கஜ்ஜையத
திரி சையத்தைய புவனங்களும் உய்ய (வையம்)

——–

பல்லவி

கொஞ்சும் மழலை பேசி குறுநகையை வீசி
குற்றந்தனை மறைக்க பாராதே நான்
கோபங் கொண்டால் கொஞ்சத்தினில் மாறாதே (கொஞ்சும்)

சரணம்

1.
கெஞ்சினால் மிஞ்சும் கண்ணா மிஞ்சினால் கெஞ்சுவாய்
கிட்ட கிட்ட வந்த போது அஞ்சுவாய்
பஞ்சமோ இங்கு என்ன பாலுக்கும் வெண்ணைக்கும்
பாய்ந்தோட பாராதே ஆய்ந் தோய்ந்து பாராய் (கொஞ்சும்)

2.
செய்ததை செய்து விட்டு சிற்றன்னை பின்னாலே
செல்லங் கொண்டு மறைந்தாலே போதுமா
மெய் யெல்லாம் வெண்ணை பூச்சு வெட்ட வெளிச்சமாச்சு
வேணு கானம் ஊதி விட்டால் போதுமா கண்ணா (கொஞ்சும்)

3.
ஒன்றிரண்டு எண்ணுவேன் எட்டினுக்குள்ளே
ஓடோடி வந்தால் உன்னை ஒன்றும் செய்வதில்லை
பன்றி என்றும் ஆமை என்றும் பாதி மிருக மென்றும்
பற்பல வாய் வைய என்றால் பாழும் மனம் வல்லை (கொஞ்சும்)

——

பல்லவி

அகணித மஹிமாத்புத லீல ஸதா
கர்ஷித ரஜஸாதி சத்யாத்மக ப்ரபஞ்ச பரிபால
அனந்த பர்யங்க சயன நமோ நமஸ்தே (அகணித)

அனுபல்லவி

ககதுரங்க கருணால வால மது கைடபாதி ஸூரரிபு குலகால
கமலாமுக கமலசிலீமுக ஸூரகண முனிகண ஸஜ்ஜன நத்*ரங்க்ரியுக (அகணித)

சரணம்

நமோ நமஸ்தே புருஷோத்ம நமோ நமஸ்தே நாராயண புருஷோத்தம
நமோ நமஸ்தே புனரபி புனரபி நாராயணா அனந்த லோகபதே

1.
ஸ்ருத ஜன கலி கல்மஷ ஹரதானவ*ருல பஞ்ஜன ரமா ரமண (நமோ)

2.
மனஸாம்ருக நானாவித முக்தி வி*நாயக சரா சராத்மக ரூப (நமோ)

3.
விதூர குயோகிநாம் பத பங்கஜ வினுத ஜனாவன ரமித பரமீஸ (நமோ)

4.
தான ஸௌ மனதபோயசா*த்ய தந்த்ர மந்த்ர பல தாயக மங்கள
கான ஸம்பத நாரதாதி முனிகீய மானவர கீர்த்தி விதாரண (நமோ)

5.
க்ஷீர பாராவார தரங்க ம்ருதுதரள பங்கஜா பதயே
க்ஷிதி ஜா பதயே க்ஷிதிபதயே தினகர சந்த்ர பதயே பதயே
ஸாது ஜனாம்பதயே வ்ரஜபதயே தான யோக ஜபதப சாதன
சங்கீத பரமோத விதாயக பதயே மதுமுர ஹரயே (நமோ)

சரணம்

6.
திவ்ய மங்கள விக்ரஹ சோபமான ஜலத வர்ண கம்பீர ஸூபாங்க
தீர தரோன்னத விலாஸ பாஸூர தேவ தேவ மஹனீய உத்துங்க
பவ திமிர கோர ஹரமிகிர கோடி விஜித கமலதள கருணா பாங்க
பாவித வீஹித நிமித்த ஸத் ப்ரேம பாகவத ஜன ஹருதாயாந்த ரங்க (நமோ)

7.
சந்த்ர ஜடாதர பகவான்னத தைத்ய வர்ய மனு குடும்ப வேன
ஜனகாங்கத்ருவ மு*ககுந்த விதேஹ காதி ரகு நாருஷா மாந்தா தானு
சந்தனு ப*லி நந்திதேவ பிப்பிலாத பூரிஷேண திலீப
உதங்கதேவல ஸாரஸ்வத சகர பராசர விஜய விதுர அதூர்த்
தரயாம்பரீக்ஷ விபீஷண அதிசய மஹிமோத்தம சித்த பாவ
மாருத தனய ப்ரமுகாதி பாகவத வினுத நிரந்தர மனோ ரமண (நமோ)

***
ஸாமோத கோபீஜன ப்ருந்தாரக ஸரஸாங்க ஸூந்தர ராதாபதே
ஸர்வதாபரித கோகண ** தரண புஜங்க சிரஸீநடன (1)

—-

பல்லவி

வாஸூதேவாய நமோ நமஸ்தே (ஸ்ரீ)
ஸர்வபூதக்ஷயாய

(மத்யமகாலம்)
வனமாலாதர ஸூந்தர கந்தராய மணிகண பூஷண பூஷிதாய
மாதவாய மது ஸூதனாய வர நாரதாதி முனி பூஜிதாய பர (வா)

அனுபல்லவி

ஆஸூர மத ஹரணா க்ருஷ்ணாய
அனந்த சக்த்யாய நமோ நமஸ்தே
பாஸ*த பாஸகாய வ்ரஜேசாய
பவபய ஹரண அருண சரணாய

(மத்யமகாலம்)
வாஸித கனகாம்பராய நிதுவன வரரஸமதுகர ப்ரமுதிதமுகாய
ராஸலோக வ்ரஜயுவதி ஜனமுக நவதள ஸௌரப ஸங்கதுங்காய (வா)

சரணம்

சரதுதஞ்சித பாடலீ-தள-ஸௌரப் பரிவாதிலோசனாய
ஸகலவேத வேதாந்தாடவீ – சரிதாபாவ்ருத பாதாம்புஜாய

பரம கருணாரஸமய விகஸித
பங்கேருஹ ப்ரஸன்ன வதனாய
பாவராக முரளீ-ரவ நிநாத
பக்த மனோஹரணாய க்ருஷ்ணாய

பரிமள உலப லவங்க ஸதனாய பாகதேய ஜன மதனமதனாய
புஜக பணமணி தரள பதாங்குளி பூஷண நடவர வேஷணாய பர (வா)

——-

பல்லவி

ஸ்வாகதம் க்ருஷ்ண சரணகதம் க்ருஷ்ணா (மாமவ)
மதுகர ஸதன – ம்ருது வதனா – மது ஸூதன இஹ (ஸ்வாகதம்)

அனுபல்லவி

போக தாப்த ஸூலபா – ஸூபுஷ்பகந்த களபா – கஸ்த்
தூரிதிலக மஹிபா – மமகாந்தநந்த கோபகந்த (ஸ்வா)

சரணம்

முஷ்டிகாசூர சாணூர மல்ல மல்ல விசாரத மதுஸூதனா
முஷ்டிகாசூர சாணூர மல்ல மல்ல விசாரத குவலயாபீட
மர்த்தன – காளிங்கநர்த்தன – கோகு*லாக்ஷண – ஸகலஸூலக்ஷண தேவ
சிஷ்ட ஜனபால ஸங்கல்பகல்ப கல்ப சதகோடி அஸமபராபவ
தீரமுனிஜன விஹார மதனஸூகு – மார தைத்ய ஸம்ஹார – தேவ
மதுர மதுர ரதி ஸாஹஸ ஸாஹஸ வ்ரஜயுவதீ ஜனமானஸ பூஜித

*ஸா,த – பா, க ரீ , பகரிஸத ஸா ; தத்தித்தகஜணுதாம் திக்தகஜணதாம்
தக்ஜணுதாம்
தகதரி குருதண கிடதகதீம் – தகதரிகுகுதணகிடதகதீம்
தகதரி குகுதண கிடதக (ஸ்வா)

——–

பல்லவி

என்னதான் இன்பம் கண்டாயோ-
இணையில் எழில் காண விழையும் என்னிலும்
மிகவும் அதிகமோ அதிசயமோ – குழலிசையில் (என்)

அனுபல்லவி

புன்னகையாடும் புல்லென்ற குழல் ஊதும்
புனிதனே – எங்கள் – புண்ணியனே –
முன்னழகைக் கண்டால் மோகமிகும் என்று சொல்லி
பின்னழகை அருளும் பெம்மானே –

சரணம்

அலைஅலையாய்ப்பறந்து குழல் ஆடவே – காற்றில்
அணிஅணியாய் சரிந்து இடை மூடவே
தலையணிக் கம்பளம் புயம் கூடவே கண்டு
தரிசித்தபோது நாணம பறந்தோடவே (என்)

———

பல்லவி

எப்படித்தான் என்னுள்ளம் புகுந்து
என்னையடிமை கொண்டீரோ – ஸ்வாமி
இசைதரு குழலொடும் குண்டலம் ஒளிர இவைதரு சுவையினில் வண்டினமுரல (எ)

அனுபல்லவி

ஒப்புயரில்லாத உத்தமனே – ஒரு
உரக நடமாடும் வித்தகனே
உலகிருந்த வாய்திறந்த படியோ – உரலொடு பிணைந்து இருந்தபடியே (எ)

சரணம்

வெளியில் சொல்லமனம் துள்ளுதே – சொல்ல
வேணும் வேணும் என்ற ஆசை கொள்ளுதே – ஆனால்
குளிரொளி முகம் கண்டு நாணி நாணம் உன்
கொய்மலர் பதத்திலென்னைத் தள்ளுதே

இனியொருமுலகம் உனைத்தவிர எனக்கொருசுகம் இலை எனத் தந்தவா
தனியொருமுடிமேல் இளமயிலானது தருதோகையணியத் தந்தவா –
உறியேறி களவாடி தோழருடன் உனக்கு எனக்குஎனத் தின்றவா –
ஊரறி*யயுமுன்பு அன்னையிடம் சென்று ஒன்றுமறியாது நின்றவா – (எப்)

———

பல்லவி

குழலூதி மனமெல்லாம் – கொள்ளை கொண்டபின்னும்
குறையேதும் எனக்கேதடீ – ஒரு சிறு
குறையேதும் என்க்கேதடீ –

அனுபல்லவி

அழகான மயிலாடவும் – (மிக) காற்றில்
அசைந்தாடும் கொடி போலவும் –

மத்யம காலம்

அகமகிழ்ந்திலகும் நிலவொளி தனிலே – தனைமறந்து புள்ளினம் கூட
அசைந்தாடிமிக – இசைந்தோடிவரும் – நலம்காண ஒரு மனம் நாட
தகுமிது எனஒரு – பதம்பாட – தகிடததிமி என – நடம் ஆட
கன்று பசுவினொடு – நின்றுபுடைசூழ – என்றும் மலருமுக இறைவன் கனிவோடு (குழ)

சரணம்

மகர குண்டலம் ஆடவும் – அதற்கேற்ப
மகுடம் ஒளி வீசவும் ……..
மிகவும் எழிலாகவும் ……. காற்றில்
மிளிரும் துகில் ஆடவும் ….
அகமகிழ்ந் …………………………….இறைவன் கனிவோடு (குழ)

———

பல்லவி

மஞ்சனமாடநீ வாராய் – கண்ணா
மஞ்சனமாடநீ வாராய் – எங்கள்
மலர்*மகமது மாதவ யாதவகுல தாமரை நாயக (மஞ்)

அனுபல்லவி

கொஞ்சும் கிளி அன்னமே – எங்கள்
கோகுலம் ஆள – வந்த தெய்வமே – உன்னைக்
கெஞ்ச வேணுமோ – இன்னமே – ஆயர்
குலம் வாழ வந்து நின்ற நலம்தேறும் செல்வமே

மத்யம காலம்

கிண்ணமும் எண்ணையும் புங்கம் புலாவும்
வெம்புனலும் வர தண்ணென்றாகுது
பொன்பெறுமாடையளாவி எடுத்தது
போதுமுனக்கொரு புண்ணியமாகுது (மஞ்)

சரணம்

கதைக்கெங்கே போவேனோ ஸ்வாமி – நான்
கதைக்கெங்கே போவேனோ ஸ்வாமி – எங்கும்
காணாத ராஜ கோபால ஸ்வாமி – கதை
எதையும் சொன்னால் எனக்கு அதுவும் தெரியும் என்றாய்
இனிமேலே என்கதை ஒன்றுதான் ஸ்வாமி.

மத்யம காலம்

இந்தளம் சிறந்த பண்ணொடும் கலந்த எழிலான குழலூதி
இதுவரையறியாதொரு மாதவ மாமுனிகளும் மா மலரடிபணி மாதவ
நிதியறிந்து நீதியறிந்து நின் இளமுக ஸன்னிதியறிந்தமா
சுந்தரமுகமொடு மந்த நகை மிளிர வந்தருளுக இனி அந்தமுறும் நடையொடு (மஞ்)

———–

பல்லவி

எத்தனைக் கேட்டாலும் போதும் என்பதே இல்லை
ஏனோ – இப்படியாச்சே – – – –
இன்னிசையங்குழலூதி யதுகுலமொடு உறவாடும்
தன்னிகரில்லாத ராஜகோபால – ஸ்வாமி – உன்புகழ் (எத்)

அனுபல்லவி

முத்தாரமணியாடி – மோனஎழிலைக் கொள்ளும்
முன்னோடும் கன்று – கூட தன்னை மறந்து துள்ளும்
அத்தைக் கண்ட மனமோ – ஆனந்தக்கடல் *ள்ளும்
ஆனாலு*முன் கதையால் – ஆகாத தெது சொல்லும்

மத்யம காலம்

அறிவெனும் நந்த வனமலர்ந்த மாமலரே அருளுகந்த
நறுமணமே …….. மணமலைந்து மகரந்தந்தனை
நா-டி வரும் பண்ணுகர்ந்த கரு வண்டெனும் தீங்குழலே – குழ
லிசையே – அரவேறி – நடமாடும் – அரசே – என் உயிரே உன்புகழ் (எத்)

சரணம்

கண்ணைத் திறந்தால் ரூபம் –
காதைத் திறந்தால் – கானம்
காற்றை – யுகந்தால் – துளபகந்தம் – ஆனந்தம்
விண்ணை நோக்கினால் வண்ணம் – விண்
மதியை நோக்கினால் கன்னம்
வேறெங்கும் போகாது என் எண்ணம் – இது திண்ணம்
மண்ணையுகந்து உண்டாய் – பொன்னை அணிந்து கந்தாய்
மாற்றார் மயங்க எழில் கொண்டாய்.

(அறிவெனும் …………….உன் புகழ்) (எத்தனை)

————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ பாசுரப்படி ஸ்ரீ மத் பாகவதம் —ஸ்ரீ பாரதியின் கண்ணனின் அனுபவம் –ஸ்ரீ கிருஷ்ண மங்கள ஸ்லோகம்

February 21, 2023

ஸ்ரீ பாசுரப்படி ஸ்ரீ மத் பாகவதம் —

(ஸ்ரீ திருப்பாற் கடல் வர்ணனை )
பாலாலிலையில் துயில் கொண்ட பரமன்
மன்னிய நாகத்தணை மேல் ஓர் மா மலை போல்
சுடர் ஆழி சங்கு இரு பால் பொலிந்து தோன்றுத்
திரு மடந்தை மண் மடந்தை இரு பாலும் திகழ
ஆயிரம் தோள் பரப்பி முடி ஆயிரம் மின் இலகக்

கடலோதம் கால் அலைப்பக்
கடலோன் கை மிசைக் கண் வளர்வது போல்
உன்னிய யோகத்து உறக்கம் தலைக் கொண்டு
இணையில்லா இன்னிசை யாழ் கெழுமி
இன்பத் தும்புருவும் நாரதனும் இறைஞ்சி ஏத்தக்

கொத்தலர்ந்த நறுந்துழாய் சாந்தம் தூபம்
தீபம் கொண்டு அமரர் தொழப்
பக்தர்களும் பகவர்களும் பழ மொழி வாய் முனிவர்களும் சித்தர்களும் தொழுது இறைஞ்ச
அருள் கொண்டாடும் அடியவர் இன்புற
ஏழுலகும் தனிக்கோல் செல்ல வீற்று இருந்து

(திரு அவதார காரணம் )
விண் கொள் அமரர்கள் வேதனை தீர
மண்ணுய்ய மண்ணுலகில் மனிசர் உய்யப்
பாரேறு பெரும் பாரம் தீரத்
துவரிக் கனி வாய் நில மங்கை துயர் தீர
மண்ணின் பாரம் நீக்குவதற்கே வேண்டித் தேவர் இரக்கச்

சாது சனத்தை நலியும் கஞ்சனைச் சாதிப்பதற்கு
என்ன நோன்பு நோற்றாள் கொலோ இவனைப் பெற்ற வயிறுடையாள்
என்றும் வார்த்தை எய்துவிக்கத் தந்தை காலில் பெரு விலங்கு தாளவிழ
மக்கள் அறுவரைக் கல்லிடை மோத இழந்த தாயைக் குடல் விளக்கம் செய்யக்

(திரு அவதாரம் )
கதிராயிரம் இரவி கலந்து எரித்தால் ஒத்து
மல்லை மூதூர் வட மதுரையில்
மந்தக் களிற்று வீசு தேவர் தம்முடைச்
சித்தம் பிரியாத தேவகி தன் வயிற்றில்
அத்தத்தின் பத்தாம் நாள் தோன்றிக் கஞ்சன் வலை வைத்த அன்று கார் இருள் எல்லில் பிழைத்து

எடுத்த பேராளன் நந்த கோபன் தன் இன்னுயிர்ச் சிறுவன் எனக்
கூர் வேல் கொடும் தொழிலன் நந்தகோபன் குமரனாய்த் தெய்வ நான்கை யசோதைக்குப்
போத்தந்த பேதைக் குழவியாய்ப்
பலதேவர்க்கு ஓர் கீழ்க் கன்றாய்

(ஆயர்கள் நாயகனாய் )
ஆயர் பாடிக்கு ஓர் அணி விளக்காய்க்
கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தாய்க்
காண்டல் இன்றிக் கொண்டு வளர்க்கக்
குழவியாய்த் தான் வளர்ந்து

(திரு ஆயர்பாடியில் மங்களம் )
எண்னம் சுண்ணம் எதிர் எதிர் தூவிடப்
பாடுவார்களும் பல் பறை கொட்ட
அண்டர் மிண்டிப் புகுந்து நெய்யாட அயலிடத்துப் பேர்ந்து
தத்துக் கொண்டாள் கொலோ தானே பெற்றாள் கொலோ
பேணிச் சீருடைப் பிள்ளை ஒருத்தி மகனாய் ஒளித்து வளரத்

(பூதனை வதம்)
தீ மனத்தான் கஞ்சனது வஞ்சனையில் திரியும்
பெண்மை மிகு வடிவு கொண்டு
வன் பேய்ச்சி தன் மகனாகத் தான் முலை யுண்ணக் கொடுக்க
முலை யுண்பான் போலே முனிந்து உண்டு
வஞ்சனத்து வந்த பேய்ச்சி ஆவி பாலுள் வாங்கி
சூர் உருவின் பேய் அளவு கண்டு

(சகட பங்கம் )
மாணிக்கம் சுட்டி வயிரம் இடை கட்டி
ஆணிப் பொன்னால் செய்த வண்ணச் சிறு தொட்டிலில்
உறங்குவான் போல் கிடந்து
நாள்கள் ஓர் நால் ஐந்து திங்கள் அளவிலே
தாளை நிமிர்த்து உருளும் சகடம் உதைத்து

(திரு நாம கரணம் )
ஆய்ப்பாடி ஆயர் பத்து நாளும் கடந்த இரண்டாம் நாள்
எத்திறமும் சய மரம் கோடித்துக்
கரு வடிவில் செங்கண்ண வண்ணன் தன்னை
வேதம் வல்லார்களைக் கொண்டு
கார் முகிலே என் கண்ணா
செங்கண் நெடுமால் சிரீ தரா என்று அழைத்து
நாவினால் நவிற்று இன்பம் எய்த

(பால லீலைகள் )
மாயக் கூத்தன்
தன் முகத்துச் சுட்டி தூங்கத் தூங்கத் தவழ்ந்து போய்ப்
பொன் முகக் கிண் கிணி ஆர்ப்பப் புழுதி அளைந்து
கோல நறும் பவளச் செந்துவர் வாயினிடைக் கோமள
வெள்ளி முளைப் போல் சிறு பல் இலகக்
கண கண சிரித்து வந்து முன் வந்து
நின்று முத்தம் தந்து

ஆயர்கள் போர் ஏறாய்ச் செங்கீரை யாடி
எண்ணெய்க் குடத்தை உருட்டி இளம் பிள்ளை கிள்ளி எழுப்பிக்
கண்ணைப் புரட்டி விழித்துக் கழ கண்டு செய்து
வெண்ணெய் விழுங்கி விரைய உறங்கிப்
பானையில் பாலைப் பருகிப் பற்றாதார் எல்லாம் சிரிப்ப

மடம் கொள் மதி முகத்தாரை மால் செய்து
அழகிய வாயில் அமுத ஊறல் தெளிவுறா
மழலை முற்றா திளம் சொல்லால்
வனிலா அம்புலீ சந்திரா வா என்று அம்புலி விளித்து

(பிள்ளை வாயுள் ஏழு உலகம் )
மண்ணும் மலையும் கடலும் உலகு ஏழும் உண்ணும் திறத்து மகிழ்ந்து
கையும் காலும் நிமிர்த்துக் கடார நீர் பைய வாட்டிப் பசும் சிறு மஞ்சளால்
ஐய நா வழித்தாளுக்கு அங்கு ஆந்திட வாயுள் வையம் ஏழும் காண
ஆடி யாடி யசைந்து அசைந்திட்டு அதனுக்கு ஏற்ற கூத்தை ஆடி

(உரலில் கட்டுப்படுதல் )
வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைக்க
வெள்ளி மலை இருந்தால் ஒத்த வெண்ணெயைத்
தாயர் மனங்கள் தடிப்ப உள்ளம் குளிர அமுது செய்து
விரலோடு வாய் தோய்ந்த வெண்ணெய் கண்டு

ஒளியா வெண்ணெய் உண்டான் என்றும் உரலோடு ஆய்ச்சி ஒண் கயிற்றால்
விளியா ஆர்க்க ஆப்புண்டு விம்மி அழுது
பொத்த விரலைக் கவிழ்த்து அதன் மேல் ஏறித்
தித்தித்த பாலும் தடாவினில் வெண்ணெயும்
மெத்தத் திரு வயிறு ஆர விழுங்கி

சீரல் அசோதை அன்புற்று நோக்கி
அடித்தும் பிடித்தும் அனைவருக்கும் காட்ட
ஊரார்கள் எல்லாம் காணக்
கண்ணி நுண் சிறுத் தாம்பினால் கட்டுண்டு
பெரு மா யுரலில் பணிப்புண்டு இருந்து
விண்ணெல்லாம் கேட்க அழுது
எழில் கொள் தாம்பு கொண்டு அடிப்பதற்கு எள்கி

(மருத மரங்களை முறித்தது )
மணம் மருவு தோள் ஆய்ச்சி ஆர்க்கப் போய் உரலோடும்
ஒருங்கு ஒத்த இணை மருதம் உன்னிய வந்தவரை
ஊரு கரத்தினொடும் உந்தி
எண் திசையோரும் வணங்க
இணை மருதூடு நடந்து

(மாடு கன்றுகளை மேய்த்தல் )
அழகிய பைம்பொன்னின் கோல் அம்கையில் கொண்டு
கழல்கள் சதங்கை கலந்து எங்கும் ஆர்ப்ப
பழ கன்றினங்கள் மறித்துத் திரிந்து
புகழ்ப் பலதேவன் என்னும் நம்பியோடப் பின் கூடச் சென்று

தன்னே ராயிரம் பிள்ளைகளோடு தளர் நடையிட்டு
வெண்ணெய் விழுங்கி வெறும் கலத்தை வெற்பிடை விட்டு அதன் ஓசை கேட்டு
அசல் அகத்தார் பரிபவம் பேச
இல்லம் புகுந்து அவர் மகளைக் கூவிக்
கையில் வளையைக் கழற்றிக் கொண்டு
கொள்ளையில் நின்றும் கொணர்ந்து விற்ற அங்கு ஒருத்திக்கு அவ்வளை கொடுத்து
நல்லன நாவற் பழங்கள் கொண்டு

கறவைகள் பின் சென்று கானம் சேர்ந்து உண்டு
இட்டமான பசுக்களை இனிது மறித்து நீரூட்டி
விட்டுக் கொண்டு விளையாடி
கணங்களோடு மின் மேகம் கலந்தால் போல்
வனமாலை மினுங்க நின்று விளையாடி

கோவலனாய் ஆநிரைகள் மேய்த்துக் குழலூதிக்
கோவிந்தன் வருகிற கூட்டம் கண்டு
மழை கொலோ வருகிறது என்று சொல்லி
மங்கைமார் சாலக வாசல் பற்றி நுழையக்
குழல்களும் கீதமுமாகி

முற்றத்தூடு புகுந்து தன் முகம் காட்டிப் புன்முறுவல் செய்து
பஞ்சிய மெல்லடிப் பிள்ளைகளுடன்
வைத்த நெய்யும் காய்ந்த பாலும் வடிதயிறும் நறு வெண்ணெயும் இத்தனையும் பெற்று அறியாமே
ஆயிரம் தாழி வெண்ணெய் பாகந்தான் வையாதுண்டு

(வத்ஸாஸூர பகாஸூர வதம் )
கானக வல் விளவின் காய் உதிரக் கருதி கொன்றது கொண்டு எறிந்து
பள்ளத்தில் மேயும் பறவை உருக்கொண்டு
கள்ள அசுரன் வருவானைத் தான் கண்டு
புள்ளிது என்று பொதுக்கோ வாய்க்கீண்டிட்டு

(தேனுகாஸூர வதம் )
வாசியாகி நேசமின்றி வந்து எதிர்த்த தேனுகன்
நாசமாகி நாளுலப்ப நன்மை சேர் பனம் கனிக்கு
வீசி மெல் நிமிர்ந்த தோன் இல்லையாக்கி

(காளிய மர்த்தனம் )
ஆய்ச்சிமார்களும் ஆயரும் அஞ்சிடப் பூத்த நீள் கடம்பேறித்
தடம் படு தாமரைப் பொய்கை கலக்கி
விடம் படு நாகத்தை வால் பற்றி ஈர்த்துப்
படும் படு பைந்தலை மேல் ஏழப் பாய்ந்திட்டு
உடம்பை அசைத்து
வெயின் குழலூதி வித்தகனாய் நின்று
நீண் முடி ஐந்திலும் நின்று நடம் செய்து

(பிலம்ப வதம் )
பாண்டி வடத்தில் பிளம்பர் தன்னைப்
பண்ணழியப் பலதேவன் வெல்ல

(காட்டுத்தீயை விழுங்கல் )
நின்ற செந்தீ மொண்டு குறை நீள் விசும்பூடு எரியக்
காண்கின்ற வெந்தீ எல்லாம் யானே என்று தான் விழுங்கி உய்யக் கண்டு

(வேணு கானம் செய்தல் )
வல்லி நுடங்கிடை மாதர் வந்து அலர் தூற்றிட
துள்ளி விளையாடித் தோளரோடு
கானம் பாடி உலாவி உலாவிச்
சிறு விரல்கள் தடவிப் பரிமாறிச்
செங்கண் கோடச் செவ்வாய் கொப்பளிப்பக்
குறு வியர்ப்புருவம் கூடலிப்பக்

கோவலர் சிறுமியர் இளங்கொங்கை குதுகலிப்ப
மேனகையோடு திலோத்தமை அரம்பை உருப்பசியர் அவர் வெள்கி மயங்கி
நன்னரம்புடைய தும்புருவோடு நாரதனும் தம் தம் வீணை மறுப்பப்
பறைவவையின் கணங்கள் கூடு துறந்து வந்து சூழ்ந்து படுகாடு கிடப்பக்
கறவையின் கணங்கள் கால் பரப்பிட்டுக் கவிழ்ந்து இறங்க

மருண்ட மான் கணங்கள் மேய்கை மறந்து
மேய்ந்த புல்லும் கடைவாய் வழி சோர
இரண்டு பாடும் துலங்காப் புடை பெயரா
எழுது சித்ரங்கள் போல் நிற்க
மரங்கள் நின்று மது தாரைகள் பாய

மலர்கள் வீழ வளர் கொம்புகள் தாழக்
கோவிந்தனுடைய கோமள வாயில்
குழல் முடிஞ்சு களினூடு குமிழ்த்துக் கொழித்து இழிந்த அமுதப் புனல் தன்னை
குழல் முழவம் விளம்பக் கோவலனாய்க் குழலூதி யூதி

(கோபியர் வஸ்திர அபஹரணம் )
மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளில்
கோழி அழைப்பதன் முன்னம் குடைந்து நீராடுவான் போந்த
பங்கய நீர் குடைந்து ஆடுகின்றார்கள்
ஆயர் மட மக்களைப் பின்னே சென்று ஒளித்து இருந்து
அங்கவர் பூந்துயில் வாரிக் கொண்டிட்டு
அச்சேரி இடையார் இரப்ப
மங்கை நல்லீர் வந்து கொண்மின் என்று மரம் ஏறி இருந்து
கன்னியரோடு எங்கள் நம்பி கரியபிரான் விளையாடி

(வேள்வி மங்கையர் வேண்டடிசில் அளித்தது )
பக்த விலோசனத்தில்
வேர்த்துப் பசித்து வயிறு அசைந்து வந்து அடிசில் உண்டு

(கோவர்த்தன கிரி பிடித்தது )
இந்திரனுக்கு என்று ஆயர்கள் எடுத்த
எழில் விழவில் பழ நடை செய்
மந்திர விதியில் பூசனை பெறாது
இமயப் பெரு மலை போல்
அமைத்த சோறு அது எல்லாம்
போயிருந்து அங்கோர் பூத வடிவு கொண்டு
முற்ற வாரி வளைத்து உண்ண

மேலை அமரர் பதி மிக்க வெகுண்டு வரக்
காள நன் மேகவை கல்லொடு கால் பொழிய
வண்ண மால் வரையே குடையாகச்
செந்தாமரைக் கை விரல் ஐந்தினையும்
கப்பாக மடுத்து மணி நெடும் தோள் காம்பாகக் கொடுத்து
கல் எடுத்துக் கல் மாரி காத்து

(கண்ணன் கோபியரோடு விளையாடுதல் )
மங்கல நல் வனமாலை மார்பில் இலங்க
மயில் தழைப் பீலி சூடிப்
பொங்கிள ஆடை அரையில் சாத்திப்
பூங்கொத்துக் காதில் புணரப் பெய்து
கொங்கு நறும் குழலார்களோடு குழைந்து குழலூதிக்

கொல்லாமை செய்து குரவை பிணைந்து சுழலக்
குடங்கள் தலைமீது எடுத்துக் கொண்டாடி
மன்றமரக் கூத்தாடி மகிழ்ந்து
தேனும் பாலும் கன்னலும் அமுதமுமாகித் தித்தித்து
முற்றா இளையார் விளையாட்டொடு
காதல் வெள்ளம் விளைவித்து

(கேசி வதம் )
மா வாயின் அங்கம் மதியாது கீறி

(மதுராபுரிக்கு விஜயம் )
வில்லார் விழவில் வடமதுரை விரும்பி
கூனி கூன் நிமிர்ந்தது
நாறிய சாந்தம் நமக்கு இறை நல்கு என்னத்
தேறி யவளும் திரு உடம்பில் பூச
ஊறிய கூனை உள்ளொடுக்க அன்று ஏற உருவி

(குவலயா பீட வதம் )
விற் பிடித்து இறுத்து
வளவெழும் தவள மாட மதுரை மா நகரம் தன்னுள்
வெம்பு சினத்து அடல் வேழம் வீழ
வெண் மருப்பு ஓன்று பறித்து

(மல்லர் வதம் )
இரு மலை போல் எதிர்த்த இரு மல்லர்
வலிய முடி இடிய வாங்கி

(கம்ஸ வதம் )
செம் பொன் இலங்கு வலங்கை வாளி
திண் சிலை தண்டொடு சங்கம் ஒள் வாள்
உம்பர் இரு சுடர் ஆழி யொடு
கேடயம் ஒண் மலர் பற்றித்
தொட்ட படை எட்டும் தோலாத வென்றியான்

கறுத்திட்டு எதிர் நின்ற
கஞ்சன் வயிற்றில் நெருப்பு என்ன நின்று
அரையனை எழப் பாய்ந்து உதைத்துக்
குஞ்சி பிடித்து அடித்து உண்டு
அவன் மாளக் கண்டு

(ஸ்ரீ சாந்தீபனியின் புத்ரனை மீண்டது )
மாதவத்தோன் புத்திரன் போய் மறி கடல் வாய் மாண்டானை
ஓதுவித்த தக்கணையாய் உருவுருவே கொடுத்து

(ஸ்ரீ ருக்மிணி பிராட்டி திருக் கல்யாணம் )
கண்ணாலம் கோடித்துக் கன்னி தன்னைக் கைப்பிடிப்பான்
திண்ணார்ந்து இருந்த சிசுபாலன் தேசு அழிந்து
அண்ணாந்து இருக்கவே ஆங்கு அவளைக் கைப்பிடித்து
ருக்மிணி நங்கையைத் தேர் ஏற்றிக் கொண்டு

விருப்புற்று அங்கே ஏக விரைந்து எதிர் வந்து
செருக்குற்றான் வீரம் சிதையத் தலையைச் சிரைத்து
அன்று அங்கு அமர் வென்று நங்கை அணி நெடும் தோள் புணர்ந்து
ரடிலங்கு தாமரை போல் செவ்வாய் முறுவல் செய்து அருளித்
திருவுக்கும் திருவாகிய செல்வனாய் பெண் அமுது உண்டு

(ஸ்ரீ நப்பின்னை திருக் கல்யாணம் )

துப்புடை ஆயர்கள் தம் சொல் வழுவாது ஒரு கால்
தூய கருங்குழல் நல் தோகை மயில் அனைய
நப்பின்னை தன் திறமாக நல் விடை ஏழு அவிய
வீயப் பொருது வியர்த்து நின்று

(நரகாஸூர வதம் )
மன்னு நரகன் தன்னை சூழ் போகி வளைத்து எறிந்து
கன்னி மகளிர் தம்மைக் கவர்ந்து

(துவாரகை அமைத்தல் )
பதினாறாம் ஆயிரவர பணி செய்யத்
துவரை என்னும் அதில் நாயகராய் வீற்று இருந்து

(பாரிஜாத அபஹரணம் )
என்னதன் தேவிக்கு அன்று இன்பப்பூ ஈயாதாள்
தன்னாதன் காணவே தண் பூ மரத்தினை
வல் நாதப் புள்ளால் வலியப் பறித்துக்
கற்பக காவு கருதிய காதலிக்கு
இப்பொழுது ஈவன் என்று இந்திரன் காவினில்
நிற்பன செய்து நிலாத் திகழ் முற்றத்துள் உய்த்து

(வாணாஸூர வதம் )
மாவலி தன்னுடைய மகன் வாணன் மகன் இருந்த
காவலைக் கட்டழித்துப் பிரிவின்றி
வாணனைக் காத்து என்று
அன்று படையொடும் வந்து எதிர்ந்த
திரிபுரம் பெற்றவனும் மகனும் பின்னும் அங்கியும் போர் தொலையப்

பொரு சிறைப் புள்ளைக் கடாவிப்
பொரு கடலை அரண் கடந்து புக்கு
மாயப் பொரு படை வாணனை
ஆயிரம் தோளும் பொழி குருதியாய ஆழி சுழற்றி

(பவ்ண்ட்ரக வாஸூ தேவன் பங்கம் )
புகரார் உருவாகி முனிந்தவனைப்
புகழ் வீட முனிந்து உயிருண்டு
அசுரன் நகராயின பாழ் பட நாமம் எறிந்து
காய் சின காசி மன்னன்
நாசமுற்று வீழ நாள் கவர்ந்து

(சிஸூபால வதம் )
கேட்பார் செவி சுடு கீழ்மை வசவுகளே வையும்
சேட்பாற் பழம் பகைவன் சிசு பாலன் திருவடி
தாட்பால் அடைய பெரும் துன்பம் வேர் அற நீக்கித்
தன் தாளிணைக் கீழ் சேர்த்துப்

தந்தவக்கரனை முடித்தல்
(பொங்கரவ வக்கரணைக் கொன்று )

(திரௌபதி சரணாகதி )
அந்தகன் சிறுவன் அரசர் தம் அரசற்கு இளையவன்
அணியிழையைச் சென்று
எம் தமக்கு உரிமை செய் -எனத் தரியாது
எம்பெருமான் அருள் என்னப்

(கண்ணன் விஸ்வரூபம் காட்டியது )
பங்கயக் கண்ணன் ஒன்றே உரைப்பான்
ஒரு சொல்லே சொல்லுவான்
துன்னு முடியன் துரியோதனன் பக்கல் சென்று
கோதை வேல் ஐவர்க்காய் மண்ணகலம் கூறிடுவான்
தூதனாய் மன்னவனால் சொல்லுண்டு

அரவு நீள் கொடியோன் அவையுள்
ஆசனத்தை அஞ்சிடாதே இட
அதற்குப் பெரிய மா மேனி அண்டம் ஊடுறவப்
பெரும் திசை அடங்கிட நிமிர்ந்து
ஊர் ஓன்று வேண்டிப் பெறாத உரோடத்தால்
மண் மிசைப் பெரும் பாரம் நீங்க ஓர் பாரத மாப் பெரும் போரில்

(தேரோட்டியாய்த் திகழ்ந்தது )
பற்றலர் வீயக் கோல் கையில் கொண்டு
பார்த்தன் தன் தேர் முன் நின்று
தீர்த்தான் உலகு அளந்த சேவடி மேல் பூந்தாமம் சேர்த்தி
அவையே சிவன் முடி மேல் தான் கண்டு
பார்த்தன் தெளிந்து ஒழிய

(கீதோபதேசம் )
அறிவினால் குறைவில்லா அகல் ஞாலத்தவர் அறிய
நெறி எல்லாம் எடுத்து உரைத்து
நீர்மையில் நூற்றுவர் வீய
ஐவருக்கு அருள் செய்து நின்ற

(ஜயத்திரதனை முடித்தது )
ஆழி கொண்டு அன்று இரவி மறைப்பச்
சயத்திரதன் தலையைப் பாழில் உருளப் படை பொருது

(பரீக்ஷித்தை உயிர் மீட்டது )
மருமகன் தன் சந்ததியை உயிர் மீட்டு மைத்துனன் மார்
உருமகத்தே வீழாமே குரு முகமாய்க் காத்து
எல்லாச் சேனையும் இரு நிலத்து அவித்து
சந்தம் அல் குழலாளை அலக் கண் நூற்றுவர் தம்
பெண்டிரும் எய்தி நூல் இழப்ப
மைத்துனன் மார் காதலியை மயிர் முடிப்பித்து அவர்களையே மன்னராக்கி

( வைதிகன் மக்களை மீட்டது )
வேத வாய் மொழி அந்தணன் ஒருவன்
எந்தை நின் சரண் என்னுடை மனைவி
காதல் மக்களைப் பயத்தலும் காணாள்
கடிய தெய்வம் கொண்டு ஒளிக்கும் என்று அழைப்ப
இடர் இன்றியே ஒரு நாள் ஒரு போழுதில் எல்லா உலகும் கழியப்
படர் புகழ்ப் பார்த்திபனும் வைதிகனும் உடன் ஏற திண் தேர் கடவிச்
சுடர் ஒளியாய் நின்ற தன்னுடைச் சோதியில்
வைதிகம் பிள்ளைகளை உடலோடும் கொண்டு கொடுத்து

(ஆதி யஞ்சோதி யுருச் சேர்தல்)
துயரில் சுடர் ஒளி தன்னுடைச் சோதி
நின்ற வண்ணம் நிற்கவே
துயரில் மலியும் மனிதப் பிறவியில் தோன்றிக் கண் காண வந்து துயரங்கள் செய்து
தன் தெய்வ நிலை யுலகில் புகை உய்த்துக்
கதையின் திரு மொழியாய் நின்று
நல் குரவும் செல்வமும் நரகமும் ஸ்வர்க்கமுமாய்ப்
பல்வகையும் பரந்து வைகுந்தம் புகுதலும்
எண்மர் பதினொருவர் ஈர் அறுவர் ஓர் இருவர்
வண்ண மலர் ஏந்தி வைகலும் நண்ணி
ஒரு மலையால் பரவி ஓவாது எப்போதும்
மால் வண்ணன் தாள் தாமரை அடைவோம் என்று
மறை கொண்ட மந்திரத்தால் வாழ்த்து
சூட்டு நன் மாலைகள் தூயன ஏந்தி
ரதமில் தண்ணுமை எக்கம் மத்தளி
யாழ் குழல் முழவமொடு இசை திசை கெழுமிக்
கீதங்கள் பாடி மயங்கித் திருவடி தொழ
பாடு நல் வேதவொலி பரவைத் திரை போல் முழங்க
ஆயிரம் பெயரால் அமரர் சென்று இறைஞ்ச
உவந்த உள்ளத்தனாய்
அண்டமாய் எண் திசைக்கும் ஆதியாய்
நீதியான பண்டமாம் பரம சோதியாய்
ஆடரவு அமளியில் அறி துயில் அமர
இடம் கொள் சமயத்தை எல்லாம் எடுத்துக் களைவன போலே
தடம் கடல் பள்ளிப்பெருமான் தன்னுடைய பூதங்களேயாய்க்
கிடந்தும் எழுந்தும் இருந்தும் கீதங்கள் பல பல பாடி
நடந்தும் பரந்தும் ஒளித்தும் நாடகம் செய்கின்றனவே
தோட்டலர் பைந்தார் சுடர் முடியானை
தொழுது நல் மொழியால் தொகுத்து உரைத்த
பாட்டிவை பாடப் பத்திமை பெருகிச் சித்தமும் திருவொடு மிகுமே

பொலிக பொலிக பொலிக

—————

ஸ்ரீ பாரதியின் கண்ணனின் அனுபவம்

ஒரே சரணம் கண்ணன் திருவடி என்கிறார் பாரதி. ஸ்தித ப்ரக்ஞ நிலையைப் பற்றி உரைத்த கண்ணன் அல்லால் ஏது புகல்?

கண்ணன் திருவடி
எண்ணுக மனமே
திண்ணம் அழியா
வண்ணம் தருமே.

நிதி பெருமை எல்லாம் அதை நன்கு அனைவருடைய நல் எழுச்சி, நலமிக்க வாழ்ச்சிக்காகப் பயன்படுத்தும் போது அதனால் வருவது புகழ். கண்ணன் திருவடிகளைச் சரணடைந்தால், கண்ணன் என்னும் பெரும் தத்துவத்தை நன்கு புரிந்துகொண்டால் நிதி பெருமை புகழ் என்று அனைத்தும் அவன் தானே தருகின்றான். அவை தன்னடையே வந்து சேருகின்றன என்கிறார் பாரதி.

தருமே நிதியும்
பெருமை புகழும்
கருமா மேனிப்
பெருமா னிங்கே.

‘நிச்ரேயஸம்~அப்யுதயம்’, ’ஆன்மிக நன்மை, அதற்குத் துணையாக புற வாழ்வின் செழிப்பு’ என்று இலட்சியப் பொருள்வரைவு செய்தன.

இங்கே அமரர்
சங்கம் தோன்றும்
மங்கும் தீமை
பொங்கும் நலமே.

புலவர்கள் என்போர் நலம் என்பதை மட்டுமே விரும்பிப் பாடும் சொல்லேர் உழவர்கள் என்கிறார் பாரதி.

நிலமாமகளின் தலைவனாகக் கண்ணனைப் பாடுங்கள். திருமகள், நிலமகள், ஆயர்குலமகள் என்று அறிவின் ஆக்கம், நிலத்தின் ஆக்கம், உயிர்க்குல ஆக்கம் என்று முவ்வித ஆக்கங்களுடன் திகழ்வதுதான் பேருயிர்த் தத்துவம். இதில் உங்கள் போதாமையால் குறைவுபடப் பாடி அதனால் குறைகள் நேராவண்ணம் பார்த்துக் கொள்ளுங்கள்!

நலமே நாடில்
புலவீர் பாடீர்
நிலமா மகளின்
தலைவன் புகழே.

ண்ணன் திருவடி எண்ணி நீங்கள் தேவ வலிமைக்கு உங்களை ஆட்படுத்திக் கொள்ளும்போது ஒன்று நடக்கும். அது என்னவெனில் தீமைக் கூட்டங்கள் ஆகிய அசுரப் பகை ஒன்று அல்ல இரண்டு அல்ல தொகை தொகையாய் கண்ணன் தீர்க்கத் திரும்பிவராமல் தொலைந்து போகும். அதற்கு நீங்கள் தகைசேர் அமரராக ஆகவேண்டும். அந்தச் சிறப்பை நன்கு கவனித்துப் பாடுங்கள் –

புகழ்வீர் கண்ணன்
தகைசேர் அமரர்
தொகையோடு அசுரப்
பகைதீர்ப்பதையே.

ஒன்று நிச்சயம். கண்ணன் என்பவன் கலிதீர்ப்பவன். இருள் கடி ஞாயிறு. அக இருள் போக்கும் ஞான பாநு. அவன் கலி தீர்க்கும் விளைவாக அமரர்களின் ஆர்ப்பரிப்பு கேட்கும்.

நன்மைக்கான ஊக்கங்கள் பொங்குவதையே அமரர் ஆர்ப்பரிப்பு என்கிறார் பாரதி.

தீர்ப்பான் இருளைப்
பேர்ப்பான் கலியை
ஆர்ப்பார் அமரர்
பார்ப்பார் தவமே.

கண்ணன் – என் விளையாட்டுப் பிள்ளை 

கேதாரம் – கண்டஜாதி – ஏகதாளம்
ரசங்கள்; அற்புதம் , சிருங்காரம்
தீராத விளையாட்டுப் பிள்ளை – கண்ணன்
தெருவிலே பெண்களுக் கோயாத தொல்லை. … (தீராத)1. தின்னப் பழங்கொண்டு தருவான்; – பாதி
தின்கின்ற போதிலே தட்டிப் பறிப்பான்;
என்னப்பன் என்னையன் என்றால் – அதனை
எச்சிற் படுத்திக் கடித்துக் கொடுப்பான். … (தீராத)
 2. தேனொத்த பண்டங்கள் கொண்டு – என்ன
செய்தாலும் எட்டாத உயரத்தில் வைப்பான்;
மானொத்த பெண்ணடி என்பான் – சற்று
மனமகிழும் நேரத்தி லேகிள்ளி விடுவான்; … (தீராத)
3. அழகுள்ள மலர்கொண்டு வந்தே – என்னை
அழஅழச் செய்துபின், ”கண்ணை மூடிக்கொள்;
குழலிலே சூட்டுவேன்” – என்பான் – என்னைக்
குருடாக்கி மலரினைத் தோழிக்கு வைப்பான். … (தீராத)4. பின்னலைப் பின்னின் றிழுப்பான்; – தலை
பின்னே திரும்புமுன் னேசென்று மறைவான்;
வன்னப் புதுச்சேலை தனிலே – புழுதி
வாரிச் சொரிந்தே வருத்திக் குலைப்பான். … (தீராத)5, புல்லாங் குழல்கொண்டு வருவான்; – அமுது
பொங்கித் ததும்புநற்

​கீதம் படிப்பான்; 

கள்ளால் மயங்குவது போலே – அதைக்
கண்மூடி வாய்திறந் தேகேட் டிருப்போம். … (தீராத)

6. அங்காந் திருக்கும்வாய் தனிலே – கண்ணன்
ஆறேழு கட்டெறும் பைப்போட்டு விடுவான்;
எங்காகிலும் பார்த்த துண்டோ ? – கண்ணன்
எங்களைச் செய்கின்ற வேடிக்கை யொன்றோ? … (தீராத)

7. விளையாட வாவென் றழைப்பான்; – வீட்டில்
வேலையென் றாலதைக் கேளா திழுப்பான்;
இளையாரொ டாடிக் குதிப்பான்; – எம்மை
இடையிற் பிரிந்துபோய் வீட்டிலே சொல்வான். … (தீராத)

8. அம்மைக்கு நல்லவன் கண்டீர்! – மூளி
அத்தைக்கு நல்லவன், தந்தைக்கு மஃதே,
எம்மைத் துயர்செய்யும் பெரியோர் – வீட்டில்
யாவர்க்கும் நல்லவன் போலே நடப்பான். … (தீராத)

9. கோளுக்கு மிகவும் சமர்த்தன்; – பொய்ம்மை
குத்திரம் பழிசொலக் கூசாச் சழக்கன்;
ஆளுக் கிசைந்தபடி பேசித் – தெருவில்
அத்தனை பெண்களையும் ஆகா தடிப்பான். … (தீராத)
——-

கண்ணன் – என் காதலன் – 2

உறக்கமும் விழிப்பும்
நாதநாமக்கிரியை – ஆதி தாளம்
ரசங்கள்: பீபத்ஸம், சிருங்காரம்.

நோம் மிகுந்ததின்னும் நித்திரையின்றி – உங்கள்
நினைப்புத் தெரியவில்லை, கூத்தடிக்கிறீர்;
சோரன் உறங்கிவிழும் நள்ளிரவிலே – என்ன
தூளி படுகுதடி, இவ்விடத்திலே.
ஊரை யெழுப்பிவிட நிச்சயங் கொண்டீர்! – அன்னை
ஒருத்தியுண் டென்பதையும் மறந்து விட்டீர்;
சாரம் மிகுந்த தென்று வார்த்தை சொல்கிறீர், – மிகச்
சலிப்புத் தருகுதடி சகிப் பெண்களே! . … 1

நானும் பல தினங்கள் பொறுத்திருந்தேன் – இது
நாளுக்கு நாளதிக மாகி விட்டதே;
கூன னொருவன் வந்திந் நாணி பின்னலைக்
கொண்டை மலர்சிதற நின்றிழுத்ததும்,
ஆனைமதம் பிடித்திவ் வஞ்சி யம்மையின்;
அருகினி லோட இவள் மூர்ச்சை யுற்றதும்,
பானையில் வெண்ணெய் முற்றும் தின்றுவிட்டதால்
பாங்கி யுரோகிணிக்கு நோவு கண்டதும், … 2

பத்தினி யாளையொரு பண்ணை வெளியில்
பத்துச் சிறுவர் வந்து முத்தமிட்டதும்,
நத்தி மகளினுக்கோர் சோதிடன் வந்து
நாற்ப தரசர் தம்மை வாக்களித்ததும்,
கொத்துக் கனல் விழியக் கோவினிப் பெண்ணைக்
கொங்கத்து மூளிகண்டு கொக்கரித்தும்,
வித்தைப் பெயருடைய வீணியவளும்
மேற்குத் திசை மொழிகள் கற்று வந்ததும், … 3

எத்தனை பொய்களடி! என்ன கதைகள்!
என்னை உறக்கமின்றி இன்னல் செய்கிறீர்!
சத்தமிடுங் குழல்கள் வீணைக ளெல்லாம்
தாளங்க ளோடுகட்டி மூடிவைத் தங்கே,
மெத்த வெளிச்சமின்றி ஒற்றை விளக்கை
மேற்குச் சுவரருகில் வைத்ததன் பின்னர்
நித்திரை கொள்ளஎனைத் தனியில் விட்டே.
நீங்களெல் லோருமுங்கள் வீடு செல்வீர். … 4

(பாங்கியர் போன பின்பு தனியிருந்து சொல்லுதல்)

கண்கள் உறங்கவொரு காரண முண்டோ ,
கண்ணனை இன்றிரவு காண்பதன் முன்னே?
பெண்களெல் லோருமவர் வீடு சென்றிட்டார்
பிரிய மிகுந்த கண்ணன் காத்திருக்கின்றான்;
வெண்கல வாணிகரின் வீதி முனையில்
வேலிப் புறத்திலெனைக் காணமுடி யென்றான்;
கண்கள் உறங்கலெனுங் காரிய முண்டோ ,
கண்ணனைக் கையிரண்டுங் கட்ட லின்றியே? … 5 –

காக்கைச் சிறகினிலே
நந்தலாலா — நின்றன்
கரியநிறந் தோன்றுதையே
நந்தலாலா;1பார்க்கும் மரங்களெல்லாம்
நந்தலாலா — நின்றன்
பச்சைநிறந் தோன்றுதையே
நந்தலாலா;

​KE​

ட்கு மொலியிலெல்லாம்
நந்தலாலா — நின்றன்
கீத மிசைக்குதடா
நந்தலாலா;3

தீக்குள் விரலைவைத்தால்
நந்தலாலா — நின்னைத்
தீண்டுமின்பந் தோன்றுதடா
நந்தலாலா.

பாரதியின் கண்ணன்பாட்டை பொறுத்தவரை அதற்கு இரு முகங்கள் உண்டு. உணர்ச்சிகரமான காதல்பாடல்கள். அதேசமயம் பக்தி மற்றும் வேதாந்த பாடல்களும் கூட. அந்த இருமுகங்களும் பிரித்துப்பார்க்கக்கூடியவை அல்ல. ஒன்றை வைத்து ஒன்றை புரிந்துகொள்ளவேண்டியவை
——————————————————————————–

ஜீவாத்மாவாகிய உயிர் இறுதியில் பரமாத்மாவான இறைவனை அடைய முழு சரணாகதியே சிறந்த வழி என்று நம்பிய பாரதி,

கரணமும் தனுவும் நினக்கெனத் தந்தேன்-
கரணம் – மனம்,  தனு – உடல்)என்று முழுவதுமாகத் தம்மை அர்ப்பணிக்கிறார்.

தெய்வத்தின் உதவியின்றி மனித முயற்சியால் மட்டுமே எந்தச் செயலையும் செய்ய முடியாது என்பது பாரதியின் எண்ணம். ஆகவே
நல்லதும் தீயதும் செய்திடும் சக்தி
நலத்தை நமக்கிழைப் பாள் அல்லது நீங்கும் . . . . .(அல்லது – துன்பம்) என்று குறிப்பிடுகிறார்.

மகாபாரதத்தில் திரௌபதி கண்ணனிடம்,
வையகம் காத்திடு வாய் கண்ணா!
மணிவண்ணா என்றன் மனச்சுடரே!
ஐய, நின் பதமலரே – சரண்
ஹரி ஹரி ஹரி ஹரி ஹரி(பாஞ்.சப.299)
என்று முழு சரணாகதி அடைந்த பிறகே அவளுக்குக் கண்ணன் அருள் கிடைத்தது என்பதை நீங்கள் அறிவீர்கள்.

பூமணித் தாளினையே கண்ணிலொற்றிப்
புண்ணிய மெய்திடுவோம்(ஆறுதுணை – 4)
‘புண்ணியம்’ என்று அவர் நினைப்பது கல்வியை எனக் கொள்ளலாம்.

கவிதை இயற்றக் கல்வியறிவு தேவை, அந்த அறிவைப் பெற விரும்பும் பாரதி, ஒரு கணப் (விநாடி) பொழுதும் கலைமகளைப் பிரிய விரும்பவில்லை.
கலைமகளிடம் எங்ஙனம் சென்றிருந்தீர் – என
தின்னுயரே! யென்றன் இசையமுதே--என்று கேட்ட பாரதி,

பாதங்கள் போற்று கின்றேன் – என்றன்
பாவ மெலாங் கெட்டு ஞானகங்கை
நாதமொடு எப்பொழுதும் – என்றன்
நாவினி லேபொழிந் திடவேண்டும்-என்று வேண்டுகிறார். ஞானம் வந்து விட்டால் அகந்தை கெடும். எனவே ஞானம் வேண்டுகிறார்.

மந்திரம் சொல்லி புத்தகங்களை வரிசையாக அடுக்கி வைத்து வழிபடுவது கலைமகள் பூசை அல்ல என்று கண்டிக்கிற பாரதி,
அவளை முறையாக வழிபடுவது எங்ஙனம் என்று தெளிவுபடுத்துகிறார்.

அறியாமையில் மூழ்கிக் கிடக்கும் மக்கள் மனத்தில் அறிவுத் தீயை ஏற்றுகிறார். எனவே

மந்திரத்தை முணுமுணுத்து ஏட்டை
வரிசையாக அடுக்கி அதன்மேல்
சந்தனத்தை மலரை யிடுவோர்
சாத்தி ரமிவள் பூசனை யன்றாம்--என்று கலைமகளை வழிபடும் விதத்தைக் கண்டிக்கிறார்.
பின் எது தான் முறையான பூசை? இதோ அவரது விளக்கம்:

வீடு தோறும் கலையின் விளக்கம்
வீதி தோறும் இரண்டொரு பள்ளி
நாடு முற்றிலும் உள்ளன வூர்கள்
நகர்கள் எங்கும் பலபல பள்ளி
தேடு கல்வியி லாததொரு ஊரைத்
தீயி னுக்கிரை யாக மடுத்தல்(விளக்கம் – இருப்பிடம், மடுத்தல் – மூட்டுதல், அழித்தல்)

ஏடுகளை அடுக்கி வைத்து இன்னமுது படையலிட்டால் அறிவு வளராது, அறியாமை நீங்காது.
அறிவு வளர வீடுகளிலும் வீதிகளிலும் கல்வி முழக்கம் செழிக்க வேண்டும்.
கல்வியில்லாத ஊரைத் தீக்கிரையாக்க வேண்டுமென்று சினந்து கூறுகிறார் பாரதி.
ஊரையும் நாட்டையும் அழிக்கச் சொல்வது அவர் நோக்கமல்ல.

—————-

ஸ்ரீ கிருஷ்ண மங்கள ஸ்லோகம்–

மங்களம் யாதவேந்த்ராய மஹனீய குணாப்தயே
வசுதேவ தனூஜாய வாஸுதேவாய மங்களம்
கிரீடகுண்டல ப்ராஜ தனூ கைர்யன் முகஸ்ரியே
ஸ்ரீ வத்ஸ கௌஸ்துபோத்பாஸி வக்ஷஸே சாஸ்து மங்களம்

யாதவ குலத் தோன்றலே, கிருஷ்ணா உமக்கு நமஸ்காரம்.
நல்லறிவு வழங்கும் மகானே நமஸ்காரம்.
வசுதேவரின் மகனாக அவதரித்த வாசுதேவனே நமஸ்காரம்.
கிரீட, குண்டலங்களின் பேரொளியால் துலங்கும் பேரழகனே நமஸ்காரம்.
ஸ்ரீவத்ஸம், கௌஸ்துப மணி போன்ற மதிப்பு வாய்ந்த ஆபரணங்களை அணிந்திருக்கும் கிருஷ்ணா, நமஸ்காரம்.

———-

நீலாம்புத நிகாஸாய வித்யுத் ஸத்ரு ச வாஸஸே
தேவகீ வஸுதேவாப்யாம் ஸம்ஸ்துதாயாஸ்து மங்களம்
தாப்யாம் ஸம்ப்ரார்த்தி தாயாத ப்ராக்ருதார்பகரூபிணே
யஸோதாய க்ருஹம் பித்ரா ப்ரார்பிதாயாஸ்து மங்களம்

நீருண்ட மேகம் போன்ற நிறத்தையுடையவரே,
மின்னல் போன்று ஒளிவீசும் ஆடை தரித்தவரே,
தேவகி-வசுதேவரின் அருந்தவத்தால் அவதரித்து, அவர்களால் போற்றப்பட்ட பரந்தாமா, நமஸ்காரம்.
பிறகு அவர்களிடமிருந்து பிரிந்து, தந்தையார் வசுதேவரால் ஒப்படைக்கப்பட்டு,
யசோதையிடம் பாலகனாக வளர்ந்து வந்த பரம்பொருளே… கிருஷ்ணா, நமஸ்காரம்.

————–

பூதனாஸுபய: பானபேஸலாயா ஸுராரிணே
சகடாஸுர வித்வம்ஸி பாதபத்மாய மங்களம்
யசோதா லோகிதே ஸ்வாஸ்யே விஸ்வரூப ப்ரதர்ஸினே
மாயா மானுஷரூபாய மாதவாயாஸ்து மங்களம்

வஞ்சகமாக வந்த பூதனையின் பாலையும் அவள் உயிரையும் சேர்த்துக் குடித்தவரே,
யாவரையும் மயக்கும் பேரெழில் வாய்ந்தவரே கிருஷ்ணா, நமஸ்காரம்.
அசுரத் தனங்களை எதிர்ப்பவரே, சகடாசுரனை வதைத்தவரே, கிருஷ்ணா,
தங்கள் பாதத் தாமரைகளுக்கு நமஸ்காரம்.
சிறு வாய் திறந்து அதில் அண்ட சராசரங்களையும் தன் விஸ்வரூபத்தையும் காட்டி
யசோதையை பிரமிக்கவைத்தவரே, கிருஷ்ணா நமஸ்காரம்.
மனித உருக்கொண்டு மங்களம் அருளிய மாதவா… நமஸ்காரம்.

—————-

த்ருணாவர்த்த தனூஜாஸுஹாரிணே ஸுபகாரிணே
வத்ஸா ஸுரப்ரபேத்ரே ச வத்ஸபாலாய மங்களம்
தாமோதராய வீராய யமளார்ஜுன பாதினே
தாத்ராஹ்ருதானாம் வத்ஸானாம் ரூபதர்த்ரேஸ்து மங்களம்

த்ருணாவர்த்தன் என்ற அசுரனைக் கொன்றவரே,
அனைத்து பக்தர்களுக்கும் மங்களங்களை அருள்பவரே கிருஷ்ணா, நமஸ்காரம்.
இளம் கன்றுகளைக் காப்பதற்காக, அந்தக் கன்றுகளோடு தானும் ஒரு கன்றாக மாறிச் சென்று,
வத்ஸாஸுரனை வதைத்தவரே, மாயவா, நமஸ்காரம்.
தாமோதரனே, பரிசுத்த வீரனே, யமளார்ஜ்ஜுனம் எனும் மரத்தை (அசுரனை) வீழ்த்தியவரே… நமஸ்காரம்.

————

பிரம்மஸ்துதாய க்ருஷ்ணாய காளியபணந்ருத்யதே
தாவாக்னி ரக்ஷிதாஸேஷ கோ கோபாலாய மங்களம்
கோவர்த்தனேச லோத்தர்த்ரே கோபி கிரீடாபி லாஷிணே
அஞ்சல் யாஹ்ருத வஸ்த்ராணாம் ஸுப்ரீதாயாஸ்து மங்களம்

நான்முகனால் துதிக்கப்பட்டவரே, கிருஷ்ணா, காளியன் எனும் பாம்பின் தலைமீது நர்த்தனமாடியவரே, நமஸ்காரம்.
காட்டுத் தீயினின்று எல்லாப் பசுக்களையும் யாதவர்களையும் காப்பாற்றியவரே, கோபாலா, நமஸ்காரம்.
கோவர்த்தன கிரியை எளிதாகத் தூக்கி நின்றவரே, கோபியருடன் விளையாடி மகிழ்வித்தவரே,
அவர்களுக்கு இரு கரங்களாலும் ஆடைகளை அளித்து அவர்கள் பக்தியைப் பாராட்டியவரே, கிருஷ்ணா… நமஸ்காரம்.

————–

ஸுதர்ஸனாக்ய கந்தர்வ ஸாப மோக்ஷணகாரிணே
சங்கசூட சிரோஹர்த்ரே வ்ருஷபக்னாய மங்களம்
காந்தினீஸுத ஸந்த்ருஷ்ட திவ்யரூபாய ஸௌரிணே
த்ரிவக்ரயா ப்ரார்த்திதாய ஸுந்தராங்காய மங்களம்

சுதர்சனன் என்ற கந்தர்வனின் சாபத்தைப் போக்கியவரே,
சங்கசூடனின் தலையைக் கொய்து எறிந்து வீரத்தை நிரூபித்தவரே, கிருஷ்ணா, நமஸ்காரம்.
காளை வடிவமெடுத்து வந்த அசுரனை வதைத்தவரே, கிருஷ்ணா, நமஸ்காரம்.
காந்தினியின் மகனாகிய அக்ரூரரால் போற்றித் துதிக்கப்பட்ட சுந்தர சொரூபரே,
அழகிய நீண்ட கேசத்தைக் கொண்டவரே, த்ரிவக்ரையினால் பிரார்த்திக்கப்பட்டவரே, கிருஷ்ணா… நமஸ்காரம்.

————

கந்தமால்யாம் பராட்யாய கஜராஜ விமர்த்தினே
சாணூர முஷ்டிகப்ராண ஹாரிணே சாஸ்து மங்களம்
கம்ஸஹந்த்ரே ஜராஸந்த பலமர்த்தன காரிணே
மதுராபுர வாஸாய மஹாதீராய மங்களம்

சந்தனம், மாலை, பட்டுப் பீதாம்பரம் ஆகியவற்றைத் தரித்து அவற்றுக்குப் பெருமை சேர்த்தவரே,
எதிர்த்த குவலாபீடம் எனும் கஜராஜனைக் கொன்றவரே,
சாணூரன், முஷ்டிகன் முதலான துஷ்டர்களின் ஆயுளை முடித்தவரே, கிருஷ்ணா, நமஸ்காரம்.
கம்சனை வதைத்தவரே, ஜராசந்தனின் படையை அழித்தவரே,
மதுரா நகரில் வசித்த புண்ணிய புருஷரே, கிருஷ்ணா…நமஸ்காரம்.

————-

முசுகுந்த மஹானந்த தாயினே பரமாத்மனே
ருக்மிணி பரிணேத்ரே ச ஸபலாஸ்து மங்களம்
துவாரகாபுர வாஸாய ஹாரநூபுர தாரிணே
சத்யபாமா ஸமேதாய நரகக்னாய மங்களம்

முசுகுந்த சக்ரவர்த்திக்கு பெரு மகிழ்ச்சி அளித்தவரே, பரமாத்மா, ருக்மிணியைத் துணைவியாக அடைந்தவரே,
பலராமனின் பாசத்துக்கு உரியவரே, கிருஷ்ணா, நமஸ்காரம்.
துவாரகா பட்டணத்தில் வசிப்பவரே, ஒளிவீசும் மாலையும் இன்னிசை எழுப்பும் பாத கிண்கிணியும் அணிந்தவரே,
சத்யபாமாவுடன் கூடியவரே, நரகாசுரனை வதைத்தவரே, கிருஷ்ணா… நமஸ்காரம்.

————–

பாணாசுரகரச் சேத்ரே பூதநாதஸ்துதாயா ச
தர்மாஹுதாய யாகாரத்தம் சர்மதாயாஸ்து மங்களம்
காரயித்ரே ஜராசந்தவதம் பீமேன ராஜ பி:
முக்தைஸ் ஸ்துதாய தத்புத்ர ராஜ்ய தாயாஸ்து மங்களம்

பாணாசுரனின் கைகளை வெட்டி அவனை வீழ்த்தியவரே, பரமேஸ்வரனால் துதிக்கப்பட்டவரே,
யாகத்தில் கலந்து கொள்வதற்காக தர்மரால் அழைக்கப்பட்டவரே,
மங்களங்களைத் தரும் மாதவா, நமஸ்காரம்.
ஜராசந்தனை வதைக்க பீமனுக்கு அருளியவரே,
ஜராசந்தனின் சிறையிலிருந்து விடுதலை பெற்ற மன்னர்களால் வணங்கப்பட்டவரே,
அவனுடைய மகனுக்கே ராஜ்யத்தைத் தந்தவரே, கிருஷ்ணா… நமஸ்காரம்.

—————

சைத்யதேஜோ பஹர்த்ரேச பாண்டவப்ரிய காரிணே
குசேலாய மஹாபாக்ய தாயினே தேஸ்து மங்களம்
தேவ்யஷ்டக ஸமேதாயச புத்ர பௌத்ரயுதாயச:
ஷோடஸ ஸ்த்ரீ ஸஹஸ்ரைஸ்து ஸம்யுதாயாஸ்து மங்களம்

சிசுபாலனுடைய பராக்கிரமத்தைப் பறித்தவரே, பாண்டவர்களின் விருப்பங்களை நிறைவேற்றியவரே,
குசேலருக்கு மகா பாக்யங்களையும் அருளியவரே, கிருஷ்ணா, நமஸ்காரம்.
அஷ்டமகிஷிகளுடன் இருப்பவரே, பிள்ளை- பேரன் என்று சந்ததிகளைப் பெற்றவரே,
பதினாயிரம் மனைவியருடன் கூடியிருப்பவரே, கிருஷ்ணா…நமஸ்காரம்.

—————-

ஸ்ஸிஷ்டரக்ஷணபர: கருணாம்புராசி:
துஷ்டாஸுராம் ஸந்ருபதீன் விந்க்ருஹ்ய யஸுரான்
கஷ்டாம் தசாம் அபநுதந்தரஸா ப்ருத்வ்யா:
புஷ்டிம் ததாது ஸஹரி: குலதைவதம் ந:

எந்த பகவான் தன்னைச் சரணடைந்தவர்களைக் காக்கிறாரோ, கருணைக் கடல் எவரோ,
துஷ்டர்களை அழித்து பூமியைப் புனிதப்படுத்துபவர் எவரோ அந்த ஹரி என்ற கிருஷ்ணன்
எங்களுக்கு ஆற்றலைக் கொடுத்து, குலம் விளங்கச் செய்யும் குலதெய்வமாக அருளட்டும்!

————————————————————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஸூக பகவான் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ கிருஷ்ண த்வைபாயன பகவான் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நாரத பகவான் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ ரோஹிணி திரு நக்ஷத்ரம் —

January 16, 2023
ஸ்ரீ ஆவணி ரோஹிணி திரு நக்ஷத்ரம் —  ஸ்ரீ கிருஷ்ணன் எம்பெருமான் அவதார திருநக்ஷத்திரமாகும்.
ஞான யோகம், கர்ம யோகம், பக்தி யோகம் பற்றி சொல்லி, அர்ஜுனன் கேட்டான் என்றதும் விஸ்வரூபமும் காட்டிய கிருஷ்ண பரமாத்மா, அர்ஜுனனை பார்த்து சொல்கிறார்..
“அர்ஜுனா! வேதங்கள் அனைத்தும் என் ஒருவனை பற்றி மட்டுமே சொல்கிறது. வேதத்தால் அறிய பட வேண்டியவனும் நானே”
என்று அர்ஜுனனை பார்த்து ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா ஆச்சர்யமாக சொல்கிறார்.
வேதை: ச ஸர்வை: அஹம் ஏவ வேத்ய: |
வேதாந்தக்ருத் வேத விதேவ சாஹம் || – பகவத்கீதை:-அத்யாயம் 15: ஸ்லோகம் 15
வேதம், “நாராயணனை” பற்றி மட்டுமா சொல்கிறது?
வேதம், ‘இந்திரனை’ பற்றியும் சொல்கிறதே?!
வேதம் ‘ருத்ரனை’ பற்றியும் சொல்கிறதே?!
வேதம், ‘சகல தேவதைகளை’ பற்றியும் சொல்கிறதே?
இப்படி இருக்க,-‘வேதம் முழுவதும் என்னை பற்றி தான் சொல்கிறது’ என்று கிருஷ்ண பரமாத்மா எப்படி சொன்னார்?
வேதத்தின் அர்த்தத்தை புரிந்து கொள்ளாதவர்களுக்கு, பொதுவாக இப்படி ஒரு கேள்வி மனதில் எழுவது சகஜம்.
“வேதத்தை அறிந்து இருந்த அர்ஜுனனுக்கு,
சிவபெருமானையே தரிசித்து இருந்த அர்ஜுனனுக்கு,
சொர்க்க லோகம் சென்று தேவேந்திரனை பார்த்து இருந்த அர்ஜுனனுக்கு,
இது போன்ற கேள்வி மனதில் எழவில்லை”
என்பதை நாம் இங்கு கவனிக்க வேண்டும்.
இப்படி ஒரு கேள்வியை, அர்ஜுனன் ‘கேட்கவே இல்லை’ என்று நாம் பார்க்கிறோம்.
வேதத்தின் வாக்கியங்களை கவனிக்கும் போது, கிருஷ்ண பரமாத்மா சொன்ன ரகசியம் நமக்கு புரியும்.
நாராயணனே ‘பரமாத்மா’ (பரம்பொருள்)-என்று பல இடங்களில் வேதம் தெளிவாக சொல்கிறது…
பரமாத்மாவாகிய ப்ரம்மத்தை, “புருஷன்” என்ற பெயரை கொண்டு “ஸ ஏக புருஷ: (அந்த ஆதிபுருஷன் ஒருவரே முதலில் இருந்தார்)” என்கிறது வேதம்.
வேதத்தில் வரும் புருஷ சூக்தத்தில், ‘நாராயணனே அந்த புருஷன்’ என்று விளக்கி, அந்த ‘புருஷனின் பத்னியாக மஹாலட்சுமி (ஹ்ரீஸ்ச தே லட்சுமீஸ்ச பத்னி) இருக்கிறாள்’ என்று பரமாத்மாவின் அடையாளத்தை இங்கு தீர்மானிக்கிறது, வேதம்..
நாராயணனே ‘பரமாத்மா’ (பர), என்று நிரூபிக்கும் வேத வாக்கியங்களாக “நாராயண பரோ ஜ்யோதி: | ஆத்மா நாராயண பர: || நாராயணம் பரம் ப்ரஹ்ம | தத்வம் நாராயண பர: || நாராயண பரோ த்யாதா | த்யானம் நாராயண பர: ||” என்று பல முறை சொல்கிறது வேதம்.
இப்படி ‘பர’ என்ற சொல்லாலும், ‘பர ப்ரஹ்ம’ என்ற சொல்லாலும், ‘புருஷ’ என்ற சொல்லாலும் நாராயணனை அழைக்கும் வேதம்,
அந்த ஆதி புருஷனே! ஆயிரக்கணக்கான தலைகளுடன் (அதாவது ரூபங்களுடன்) காட்சி தருகிறார் (ஸஹஸ்ர சீர்ஷா புருஷ:) என்கிறது வேதம்.
அதாவது, ‘அவரே பல ரூபங்களாக (இந்திர, ருத்ர, யம..) இருக்கிறார்’ என்ற ரகசியத்தை சொல்கிறது.
ஒரு இடத்தில் வேதம், “பிரம்மாவும் நாராயணனே! சிவனும் நாராயணனே! காலமும் நாராயணனே!” (பிரம்மா நாராயண: | சிவ: ச நாராயண: | கால: ச நாராயண: |) என்று தெளிவாக சொல்கிறது..
இன்னொரு இடத்தில் “ஏகோ நாராயணோ ஆஸீத் ந ப்ரம்மா ந ஈசான:” என்று சொல்லும் போது, “பிரளய காலத்தில் பிரம்மாவும் இல்லை சிவனும் இல்லை நாராயணன் ஒருவரே இருந்தார்” என்று வெளிப்படையாக நாராயணனின் பெயரை கூறுகிறது வேதம்.
“அந்த ஆதி புருஷனையே, பல வித பெயர்களில் சொல்கிறேன் (ஏகம் ஸத் விப்ரா: பஹூதா வதந்தி)”-என்று வேதமே தெளிவாக சொல்கிறது.
மேற்சொன்ன, இந்த வேத வாக்கியத்தை (ஏகம் ஸத் விப்ரா: பஹூதா வதந்தி! ) நாம் கவனிக்கும் போது,
கிருஷ்ண பரமாத்மா “அர்ஜுனா! வேதங்கள் அனைத்தும் என் ஒருவனை பற்றியே சொல்கிறது. வேதத்தால் அறிய பட வேண்டியவனும் நானே” என்று சொன்னதன் ரகசியம் புரியும்.
—————-
கிருஷ்ண நாமத்தால் ”
சோறு கிடைக்குமா?
ஒரு கிராமத்தில் வேலையில்லாத இளைஞன் ஒருவன் ஊர்சுற்றித் திரிந்தான்.
அங்குள்ள குளக்கரையில் இருந்த கிருஷ்ணன் கோயிலில், திருவிழா விமரிசையாக நடந்து கொண்டிருந்தது.
பக்தர்கள் கூடி ஒருநாள் முழுக்க கிருஷ்ண நாமத்தை ஜபம் செய்தார்கள்.
“கிருஷ்ணா’ என்ற இந்த வார்த்தையில் என்ன தான் இருக்கிறது என்று அவன் சிந்தித்தான்.
விடை தெரியவில்லை.
அங்கிருந்த பெரியவரிடம்,
“கிருஷ்ணா! கிருஷ்ணா!”என்று கூச்சல் போடுகிறீர்களே! அதனால் என்ன கிடைத்து விடும்?
உங்களுடைய கிருஷ்ணனால் எனக்கு சோறு போட முடியுமா?” என்று கத்தினான்.
பெரியவர் அந்த இளைஞனிடம், “கிருஷ்ண” நாமத்தைச் சொன்னால் சோறு மட்டுமல்ல,
நீ எதை வேண்டுகிறாயோ அது கிடைக்கும்,” என்றார்.
இளைஞனுக்கு கிருஷ்ண மந்திரத்தின் மீது சிறிதும் நம்பிக்கையில்லை என்றாலும்,
அந்தப் பெரியவர் சொல்கிறாரே என்பதற்காக கிருஷ்ண நாமத்தைச் சொல்ல முடிவெடுத்தான்.
ஊருக்கு அடுத்தாற் போல் இருந்த காட்டுப் பகுதிக்குச் சென்று தனியாக அமர்ந்தான்.
அவன் வாயில் “கிருஷ்ணா’ என்பதைத் தவிர வேறு வார்த்தை வரவில்லை.
ஒரு வழிப்போக்கன் மர நிழலில் அமர்ந்து, அவன் கொண்டு வந்த கட்டுச் சோற்றை சாப்பிட்டான்.
அசதியில் அங்கேயே தூங்கி விட்டான்.
இளைஞனோ கண்ணை மூடியபடி மரத்தில் அமர்ந்தே “கிருஷ்ண ”-நாமத்தை ஜபித்துக் கொண்டிருந்தான்.
சிறிது நேரத்தில் கண் விழித்துப் பார்த்தவனுக்கு ஒரு ஆச்சரியம் காத்திருந்தது.
இன்னொரு கட்டு சாதத்தை மரநிழலில் மறந்து வைத்து விட்டு வழிப்போக்கன் சென்று விட்டான்.
கிருஷ்ணநாம மகிமையால் தான் இந்த சாதம் தனக்கு கிடைத்தது என்று எண்ணி வேகமாக மரத்தை விட்டு கீழே இறங்கினான்.
எவனோ, வழிப்போக்கன் மறந்து விட்டுப் போன சோற்றைச் சாப்பிடுவதில் அவனுக்கு உடன் பாடில்லை.
இந்தச் சாப்பாட்டை சாப்பிடும் படி நிர்ப்பந்தம் ஏற்படும் வரை பட்டினியாகவே இருப்பது என்று முடிவெடுத்தான்.
அப்போது காட்டுப் பாதையில்
சில கள்வர்கள் தாங்கள் திருடிய பொருள்களுடன் வந்து மர நிழலில் அமர்ந்து பங்கிட்டுக் கொண்டிருந்தனர்.
கள்வர் தலைவன், ஜபம் செய்து கொண்டிருந்த இளைஞனைக் கண்டான்.
தங்களை வேவு பார்க்க வந்திருப்பவன் என்று ஆத்திரம் கொண்டு, இளைஞனை அந்த மரத்திலேயே கட்டி வைத்தான்.
அதற்குள் பசியில் இருந்த திருடன் ஒருவன், மரத்தடியில் இருந்த சாப்பாட்டைப் பார்த்து மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்தான்.
ஆனால், கள்வர் தலைவன், “இந்தச் சோற்றை நாம் சாப்பிடுவது கூடாது.
நம்மைக் கொல்லும் நோக்கத்தில் விஷம் கலந்து இவன் தான் வைத்திருப்பான்.
அந்தச் சோற்றை அவனுக்கே கொடுப்போம்!” என்று சொல்லி இளைஞனை சாப்பிடும்படி கட்டாயப்படுத்தினான். இளைஞனும் அதை வயிறு நிறைய சாப்பிட்டான்.
இளைஞன் சாப்பிட்ட பிறகும் அவன் சாகாததைக் கண்ட திருடர்கள்,
உணவில் விஷம் இல்லை என்பதை அறிந்தனர்.
இளைஞனால் தங்களுக்கு எந்த தீங்கும் ஏற்படாது என்ற முடிவுக்கு வந்தார்கள்.
கள்வர் தலைவன் இளைஞனைக் கட்டிலிருந்து அவிழ்த்து விட்டதோடு இல்லாமல் தன்னிடம் இருந்த பணத்தில் கொஞ்சம் கொடுத்தான்.
“நம்பிக்கையில்லாமல்” “கிருஷ்ண நாமம்” சொன்னதற்கே இவ்வளவு பலன் கிடைத்ததே’ என்று எண்ணியவன்,
“அழியாத செல்வம் – கிருஷ்ண நாமம் தான்”
என்ற முடிவுக்கு வந்தான். காட்டிலிருந்து ஊரில் இருக்கும் கிருஷ்ணன் கோயிலுக்கு வந்து, திருடன் தந்தப் பணத்தை உண்டியலில் போட்டான்.
“இனி ஊர் சுற்றமாட்டேன். உண்மையாக பக்தி கொண்டு உழைத்து வாழ்வேன்,”
என்று கிருஷ்ணனிட்டம் சத்தியம் செய்தான். உழைப்பால், பெரும் பணக்காரனும் ஆனான் ஆகவே, “அழியாத செல்வம் ஆன கிருஷ்ண நாமத்தை” சொல்லி பயனடையுங்கள்
—————
சித்திரை ரோஹிணி ஸ்ரீ அஷ்டபுஜகர பெருமாள் திருஅவதார திருநக்ஷத்திரமாகும்
ஒரு சமயம் பிரம்மன் செய்யும் யாகத்தை நிலை நிறுத்த வரதராஜப் பெருமாள் உதவி புரிந்த போது யாகத்தைத் தடுக்க எண்ணிய கலைமகள் காளியைப் படைத்து அவளுடன் கொடிய அரக்கர்களை அனுப்பி அதைக் கலைக்க முற்பட்டாள். திருமால் எட்டு கரங்களுடன் தோன்றி காளியை அடக்கி அரக்கர்களை அழித்தார். எனவே இறைவன் அட்டபுயக்கரத்தோன் ஆனார்.
மேற்கு நோக்கி நின்ற கோலத்தில் வலப்புறம் நான்கு கைகளுடனும் இடப்புறம் நான்கு கைகளுடனும் காட்சி தருகிறார். ஆதி கேசவப் பெருமாள், கஜேந்திர வரதன் என்பன இறைவனின் பெயர்கள் திருமங்கையாழ்வாரின் பாடல் பெற்ற பிறகு அட்டபுயக்கரத்தான் ஆனார்.
வலப்புறமுள்ள கரங்களில் சக்கரம், வாள், மலர், அம்பு ஆகியவற்றையும் இடப்புறம் சங்கு, வில், கேடயம், தண்டாயுதம் ஆகியவற்றையும் தாங்கியுள்ளார்.
இத்தலத்தின் தலவரலாறு படி சித்திரை மாதம் ரோகிணி நட்சத்திரத்தன்று பெருமாள் காளியை இவ்விடத்தே அடக்கினார். இதற்குச் சான்றாக இச்சந்நதியின் அருகே கருங்காளியம்மன் கோயில் ஒன்றுள்ளது.
கோயில் திருக்குளத்தில் யானை ஒன்று தாமரை மலர் பறித்து பெருமாளை ஆராதித்து வரும் வேளையில் ஒருநாள் குளத்தில் இருந்த முதலை யானையை பிடித்துக் கொள்ள, பெருமாள் தமது சக்ராயுதத்தால் முதலையைக் கொண்டு யானையை காத்து அருளிய ஸ்தலம்.
ஸ்வாமி தேசிகன், மணவாள மாமுனிகள் ஆகியோர் மங்களாசாசனம் செய்த ஸ்தலம்.
திருமங்கையாழ்வார் 11 பாசுரங்களும், பேயாழ்வார் ஒரு பாசுரமுமாக மொத்தம் 12 பாசுரங்கள் பாடியுள்ளனர்.
பூமாதேவியை அழிக்க வந்த அரக்கனை இத்தல பெருமாள் அழித்து அவளை காப்பாற்றியதால், வீடுகட்ட நிலம் வாங்க இருப்பவர்கள், விளை நிலங்களை வாங்குபவர்கள், கட்டிய வீடுகளில் பிரச்னை உள்ளவர்கள் இங்கு வழிபட்டு பலனடைகிறார்கள்.
————–
கார்த்திகை ரோகிணி ஸ்ரீ திருப் பணாழ்வாரின் அவதார திருநக்ஷத்திரமாகும்.
ஸ்ரீவத்ஸாம்சராய் கலியுகம் 343-வதான துன்மதி வருஷம் கார்த்திகை மாசம் க்ருஷ்ண பக்ஷம் த்விதீயை புதன்கிழமை ரோகிணி நட்சத்திரத்தில் உறையூரின் புறத்தில் செந்நெல் பயிரில் அயோநிஜராய் அவதரித்து ஓர் பாணனால் கண்டெடுக்கப்பட்டு வளர்ந்து வந்தார். காண்பனவும் உரைப்பனவும் மற்றொன்றின்றி கண்ணனையே கண்டுரைத்த கடிய காதலாய் அருளிச் செய்தார்.
பாணர் அமலனாதிபிரான் என்னும் பத்து பாசுரங்களைப் பாடி நம் பெருமானின் திருவடியில் இரண்டறக் கலந்தார்.
ஆபாத சூடம் அனுபூய ஹரிம் ஶயாநம்
மத்யே கவேர துஹிதுர் முதிதாந்தராத்மா
அத்ரஷ்ட்ருதாம் நயநயோர் விஷயாந்தராணாம்
யோ நிஶ்சிகாய மனவை முநிவாஹநம் தம்–திருப்பாணாழ்வார் தனியன்:
உம்பர் தொழும் மெய்ஞ்ஞானமுறையூரான் வாழியே
உரோகிணி நாள் கார்த்திகையிலுதித்த வள்ளல் வாழியே
வம்பவிழ்தார் முனிதோளில் வகுத்த பிரான் வாழியே
மலர்க்கண்ணில் வேறொன்றும் வையாதான் வாழியே
அம்புவியில் மதிளரங்கரகம்புகுந்தான் வாழியே
அமலனாதி பிரான் பத்துமருளினான் வாழியே
செம்பொன் அடி முடி அளவும் சேவிப்போன் வாழியே
திருப்பாணன் பொற்பதங்கள் செகதலத்தில் வாழியே–திருப்பாணாழ்வார் வாழி திருநாமம்:
உம்பர்தொழும் மெய்ஞ்ஞானமுறையூரான் வாழியே – உம்பர்கள் என்னும் வார்த்தை நித்யஸுரிகள் / தேவர்களைக் குறிப்பதாகும். அந்த நித்யஸுரிகளே திருப்பாணாழ்வாரைத் தொழுவார்களாம். அப்படிப்பட்ட வைபவத்தை உடையவர் திருப்பாணாழ்வார். உறையூரில் அவதரித்த உண்மையான ஞானத்தை உடைய திருப்பாணாழ்வார் வாழ்க என்பது இவ்வரியின் விளக்கம்.
உண்மையான ஞானம் என்பது பரமபதத்தில் வீற்றிருக்கும் எம்பெருமான் தான் அர்ச்சாவதாரத்தில் எழுந்தருளியிருக்கிறார் என்பதை அறிவதாகும். “நாம் பரமபதம் தான் உயர்வு; அர்ச்சாவதாரம் அதை விடக் குறைந்தது” என்று எண்ணலாம். பரமபதத்தில் எம்பெருமானின் பரத்வம் தான் வெளிப்படும். ஆனால் ஸௌலப்யம் என்பது பகலிலே எரித்த விளக்கு போல இருக்கும். அவனுடைய ஸௌலப்யத்தை பரமபதத்தில் காட்டுவதற்கு வாய்ப்பே இல்லை. தவறு செய்பவர்கள் இருந்தால் தான் எம்பெருமானின் ஸௌலப்யம் வெளிப்படும். ஆகவே தவறு செய்பவர்கள் நிறைந்துள்ள பூலோகத்தில் அர்ச்சாவதார எம்பெருமானுக்குதான் ஏற்றம் எனலாம். அர்ச்சாவதாரத்தில் எம்பெருமான் அர்ச்சகருக்கு பரதந்த்ரன் ஆக இருப்பான். அவர் எப்போது திருமஞ்சனம் செய்கிறாரோ அப்போது அதை ஏற்றுக் கொள்கிறான். அர்ச்சகர் எப்போது உணவு கண்டருளச் செய்தாலும் அப்போது அதை ஏற்றுக் கொள்கிறான். அவர் அணிவிக்கும் ஆடைகளையே உகந்து அணிந்து கொள்கிறான். அவ்வாறு தன்னுடைய உயர்ந்த நிலையிலிருந்து இறங்கி தன்னை எளியவனாக அர்ச்சாவதாரத்தில் காட்டுகிறான். எம்பெருமானின் அர்ச்சாவதார மேன்மையை நன்கு உணர்ந்தவர் திருப்பாணாழ்வார். எனவேதான் அமலனாதிபிரான் பத்து பாசுரங்களிலும் எம்பெருமானின் வடிவழகை மட்டுமே பாடியிருக்கிறார். அவ்வாறு சிறப்புடைய திருப்பாணாழ்வார் வாழ்க.
உரோகிணிநாள் கார்த்திகையில் உதித்தவள்ளல் வாழியே – கார்த்திகை மாதம் ரோகிணி நக்ஷத்திரத்தில் அவதரித்தவர் திருப்பாணாழ்வார். இப்பூவுலகத்தாருக்கு அர்ச்சாவதார பெருமையை எடுத்துக் காட்டிய வள்ளல் திருப்பாணாழ்வார். அவர் பல்லாண்டு வாழ்க.
வம்பவிழ்தார் முனிதோளில் வந்த பிரான் வாழியே – பிரான் என்றால் நமக்கு நன்மை செய்பவர் என்று பொருள். நமக்கு நன்மை செய்யக்கூடியவரான திருப்பாணாழ்வார் வாசனை மிருந்த மாலையை அணிந்த லோக சாரங்க முனிவர் தோளிலே ஏறி திருவரங்கம் வந்தார். அவர் பல்லாண்டு பல்லாண்டு வாழ வேண்டும்.
மலர்க்கண்ணில் வேறொன்றும் வையாதான் வாழியே – மலர் போன்று இருக்கக் கூடிய கண்களில் பெரிய பெருமாளைத் தவிர வேறு ஒரு காட்சியும் அறியாதவர் திருப்பாணாழ்வார. அப்படிப்பட்ட திருப்பாணாழ்வார் வாழ்க.
அம்புவியில் மதிளரங்கர் அகம் புகுந்தான் வாழியே – அழகியதான இப்பூவுலகில் ஸப்த ப்ரகாரம் என்று சொல்லக்கூடிய ஏழு மதிள்களால் சூழப்பட்ட திருவரங்கத்தில் எழுந்தருளியிருக்கும் பெரிய பெருமாள் மனத்தில் புகுந்தவரான திருப்பாணாழ்வார் பல்லாண்டு வாழ்க.
அமலனாதி பிரான் பத்துமருளினான் வாழியே – திருப்பாணாழ்வார் அருளிய ப்ரபந்தம் பத்து பாசுரங்கள் கொண்ட அமலனாதி பிரான். அவர் வாழ்க பல்லாண்டு.
செம்பொன் அடி முடி அளவும் சேவிப்போன் வாழியே – திருவரங்கம் பெரிய பெருமாளின் சிவந்த பொன் போன்ற திருவடி தொடங்கி திருமுடி வரையிலும் அமலனாதி பிரான் ப்ரபந்தத்தில் திருப்பாணாழ்வார் வர்ணித்திருப்பார். அவ்வாறு திருவரங்கப் பெருமாளின் அவயவங்களை சேவிக்கும் திருப்பாணாழ்வார் வாழ்க என்ற இந்த வரியில் காட்டப்படுகிறது,
திருப்பாணன் பொற்பதங்கள் செகதலத்தில் வாழியே – பொன்னை ஒத்து இருக்கும் திருப்பாணாழ்வாரின் திருவடிகள் இப்பூவுலகில் பல்லாண்டு வாழ வேண்டும்.
ஆண்டாள் மாசம் இன்று அழைக்கபடும் மார்க்கழியில் ஸ்ரீ ரங்கநாதனுடன் ஐக்கியமானவர்கள் இவர்கள் இருவரே.
அரங்கனை நினைத்து 9 பாசுரங்கள் பாடிய பாணர். ‘என் அமுதினை கண்ட கண்கள், மற்றொன்றினை காணாவே; நான் பிறவி எடுத்ததன் பலன் முடிந்தது. இனி என் கண்களுக்கு வேலையில்லை. அவைகள் எனக்கு தேவையில்லை என்ற பொருளில் 10வது பாடலை பாடினார். இதை கேட்ட, அரங்கன், திருப்பாணரை, தன்னருகே அழைத்தான், தன் சோதியில் சேர்த்துக் கொண்டான்
கோயில் என்றாலே ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு ஸ்ரீரங்கம்தான்’ என்று போற்றிச் சொல்லப்படும் பெருமை கொண்டது திருவரங்கத் திருத்தலம்
குடதிசைமுடியை வைத்துக் குணதிசைபாதம் நீட்டி
வட திசைபின்பு காட்டித் தென்திசையிலங்கை நோக்கி
கடல்நிறக் கடவுளெந்தை அரவணைத்துயிலுமாகண்டு
உடலெனக்குருகுமாலோ என்செய்கேனுலகத்தீரே.”
எனத் தொண்டரடிப்பொடியாழ்வார் பாடிப் பரவசமடைந்த இந்த ஸ்ரீரங்கத்தில் அருளும் ஸ்ரீரங்கநாதர்,
இந்த ஆலயத்தின் ஏழு சுற்றுகளையும் ஏழு லோகங்களாகச் சொல்வார்கள்.
அவற்றில், திருமாடங்கள் சூழ்ந்த சுற்று `பூலோகம்’ என்றும்,
திரிவிக்ரம சோழன் சுற்று `புவர்லோகம்’ என்றும்,
அகளங்கன் சுற்று எனும் கிளிச்சோழன் சுற்று `ஸுவர்லோகம்’ என்றும்,
திருமங்கை ஆழ்வார் சுற்று `மஹர்லோகம்’ என்றும்,
குலசேகர ஆழ்வார் சுற்று `ஜநோலோகம்’ என்றும்,
ராஜமகேந்திரச் சோழன் சுற்று `தபோலோகம்’ என்றும்,
ஆதிதர்மவர்ம சோழர் சுற்று `சத்யலோகம்’ என்றும் போற்றப்படுகிறது.
மேலும், இங்குள்ள ஒன்பது தீர்த்தங்களும் இந்தியாவின் புனிதமான ஒன்பது நதிகளின் அம்சமாக அடங்கியுள்ளன என்கிறார்கள்.
சந்திர புஷ்கரணி கங்கையாகவும்,
வில்வ தீர்த்தம் யமுனையாகவும்,
சம்பு தீர்த்தம் சரஸ்வதியாகவும்,
பகுள தீர்த்தம் கோதாவரியாகவும்,
பலாச தீர்த்தம் கிருஷ்ணாவாகவும்,
அசுவ தீர்த்தம் நர்மதாவாகவும்,
ஆம்ர தீர்த்தம் துங்கபத்ராவாகவும்,
கதம்ப தீர்த்தம் கண்டகி நதியாகவும்,
புன்னாக தீர்த்தம் காவிரியின் வடிவாகவும் இங்கு போற்றப்படுகின்றன.
விண்ணகத்து லோகங்களும், மண்ணகத்து நதிகளும் ஒருசேர அமைந்திருக்கும் புண்ணியத்தலம் திருவரங்கம்.
‘இந்திரப்பதவி தரினும் வேண்டேன், இந்த அரங்கமாநகரத்து ஆலயம் போதும்’ என்று தொண்டரடிப்பொடியாழ்வார் பாடிய பெருமைக்குரிய ஆலயம்.
அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயில் ஸ்ரீரங்கம்.
நம்பெருமாள்
வைகுண்ட ஏகாதசி பெருவிழா
இராப்பத்து மூன்றாம் திருநாள்
ஆயிரம் கால் திருமாமணி மண்டபத்தில்  நம்பெருமாள், சௌரி சாயக் கொண்டை, அதில் புஜ கீர்த்தி, சிறு சிகப்பு கல் பதக்கம்,
பிராட்டி பதக்கம், முத்து பட்டை, மார்பில் விமான பதக்கம், வைர அபய ஹஸ்தம், ரத்தின கடி அஸ்தம்,
அடுக்கு பதக்கங்கள், 2 வட முத்து சரம், ஹஸ்த தொங்கல் கைகளில் சாற்றி,
பின் சேவையில்- காசு மாலை, வெள்ளை கல் ரங்கோன் அட்டிகை, வெள்ளை அரசிலை பதக்கம் சாற்றி சேவை சாதிக்கிறார்.
—————

ஆவணி ரோகிணி நக்ஷத்திரம்.

பெரியவாச்சான் பிள்ளையின் “இயற்பெயர் ஸ்ரீ கிருஷ்ணபாதர்.
தந்தை யாமுனதேசிகர், தாய் நாச்சியராமளுக்கும் ,
சேங்கநல்லூர் எனும் தலத்தில் கலி 4329 சர்வஜித்து வருடம் ஆவணி மாதம் ரோஹிணி நட்சத்திரத்தில் அவரித்தார்.
அதாவது, கி.பி. 1228-ல் பிறந்தார். “ஆச்சான் என்பது வைணவ பரிபாஷையில் ஆசாரியன். பலர் ஆச்சான் என்ற பெயரோடிருந்தமையால்,
இவரை வேறு பிரித்துக் காட்டப் பெரிய ஆச்சான் பிள்ளை என
இருந்த பெயர் உடம்படு மெய் பட்டு பெரியவாச்சான் பிள்ளை என அழைப்பதை அறிய முடிகின்றது.
வைணவ மரபில் ஆச்சான் என்று மட்டும் சொன்னால் இவரே. கிருஷ்ணசூரி என்றும்
இவர் வழங்கப் பெற்றார்.
ஆயர் குலத்துப் பெண்களை ஆய்ச்சி என்றும் ஆண்களை ஆச்சான்(அல்லது ஆயத்தான்) என்றும் அழைப்பார்கள்.
இயர் பெயர் கிருஷ்ணன் என்று இருந்தால் பெரும்பாலும் அழைக்கும் பெயர் ஆச்சான்/ஆயத்தான் என்று இருக்கும்.
பெரிய ஆய்த்தான் பிள்ளை என்பதை தான் நாம் பெரியவாச்சான் பிள்ளை என்கிறோம்.
ஆவணி ரோகிணியில் அவதரித்ததால், இவர் கண்ணனின் அம்சமாகவே கருதப்பட்டார். கிருஷ்ணர் என்னும் திருநாமத்தையும் பெற்றார்.
பெரியவாச்சான் பிள்ளையை வியாக்கியான சக்ரவர்த்தி என்றும், உரைமன்னன் என்றும்,
உரைவித்தகர் என்றும் பரம காருணிகர் என்றும் பற்பல அறிஞர்கள் போற்றுகின்றனர்.
ஒரு சமயம் திருவரங்கத்திலே தங்கி வாழ்ந்து வந்த இவர் நஞ்சீயரிடத்தும் நம்பிள்ளையிடத்தும்
எல்லா வகையான சாத்திர உண்மைகளையும், திருவாய்மொழி வியாக்கியானங்களையும் நன்கு கேட்டுணர்ந்தார்.
நம்பிள்ளையை அவர் தம்முடைய ஆசாரியராகக் கொண்டிருந்தார்.
அவர்தம் புலமையை நன்குணர்ந்த நம்பிள்ளை, திருவாய்மொழிக்கு வியாக்கியானம் எழுதுமாறு கட்டளையிட்டார்.
அவருடைய கட்டளையின்படி அவரும் திருவாய்மொழிக்கு உரை வகுத்தார்.
இராமயணத்தில் அவருக்கு மிகுந்த ஈடுபாடுண்டு.
அதன் விளைவால் அவர் தம்முடைய உரை விளக்கத்தில் பல இடங்களில் இராமாயணப் பாடல்களைச் சான்று காட்டுவார்.
தம் குருவின் கட்டளைக்கு ஏற்ப அவர், இராமாயணப் பாடல்களின் எண்ணிக்கையுடையதாக 24000 கிரந்தத்தில் திருவாய்மொழிக்கு உரை வழங்கியுள்ளார்
————-

ஆவணி ரோகிணி நக்ஷத்திரம்.

ஆவணி ரோகிணி ஸ்ரீ நயினாராச்சன் பிள்ளை அவதார திருநக்ஷத்திரமாகும்.
கவிதார்க்கிக சிம்ஹாய கல்யாண குணசாலிநே
ஸ்ரீமதே வேங்கடேசாய வேதாந்த குரவே நமஹ
என்ற ஸ்லோகத்தை அருளினார் நாயினாராசார்யர்.
இதன் பொருள் : கவிகள் வாதம் செய்பவர்கள் ஆகியவர்களுக்குச் சிங்கம் போன்றவரும் மங்களக் குணங்கள் பொருந்தியவரும்
உபய வேதாந்தங்களுக்கும் ஆசாரியரும் ஸ்ரீமான் வேங்கடேசன் என்ற திருநாமம் சூட்டப்பட்டவருமான ஸ்வாமி தேசிகனை வணங்குகிறேன்.
தேசிகன் விஷயமாக பிள்ளை அந்தாதி அருளினார். அதில் ஸ்ரீதேசிகனுக்கும் ஸ்ரீராமானுஜருக்கும் பொருந்துமாறு சில பாசுரங்களை அமைத்திருப்பது இதன் தனிச் சிறப்பு. இவரே ஸ்ரீரங்கநாச்சியார் நியமனப்படி ஸ்ரீரங்கத்தில் வேதாந்த தேசிகனின் விக்ரஹத்தை பிரதிஷ்டை செய்து ஆராதித்துக்கொண்டு வந்தார்.
———–
ஆவணி ரோகிணி நக்ஷத்திரம்.
திருவேங்கட ராமானுஜ எம்பார் ஜீயர் மதுரமங்கலத்தில் ராகவாசார்யருக்கும் ஜானகி அம்மாளுக்கும் ஆவணி ரோஹிணி அன்று அவதரித்தார்.
கண்ணன் மற்றும் பெரியவாச்சான் பிள்ளை ஆகியோரின் திருநக்ஷத்திரத்தன்று பிறந்ததால் இவருக்கும் கிருஷ்ணன் என்றே பெயரிட்டனர்.
இவர் சீரியதான ஸ்ரீவத்ஸ குலத்தில் அவதரித்தார். இவர் ஆங்கில ஆண்டு 1805இல் அவதரித்தார்.
,அப்பன் திருவேங்கட ராமானுஜ ஜீயர், தலைசிறந்த ஞானியாக விளங்கியதோடு
தன்னுடைய படைப்பிலக்கியங்களின் மூலம் நம்முடைய ஸம்ப்ரதாயதிற்கு பலவகையில் தொண்டு புரிந்துள்ளர்.
நாம் அனைவரும் ஸ்வாமிகளின் திருக்கமல பாதங்களை பணிந்து பகவத், பாகவத, ஆசார்ய விஷயங்களில்
அவரைப் போலவே நாமும் ஞானம், பக்தி ஆகியவற்றைப் பெற்று வாழ்வோமாக.
ஸ்ரீவாதூல ரமாப்ரவாள ருசிர ஸ்ரக்ஸைந்ய நாதாம்சஜ
ஸ்ரீகுர்வீந்த்ரம் மஹார்ய லப்த நிஜஸத் ஸத்தம் ச்ருதா பீஷ்டதம்
ஸ்ரீராமாநுஜ முக்ய தேசிகலஸத் கைங்கர்ய ஸம்ஸ்தாபகம்
ஸ்ரீமத்வேங்கடலக்ஷ்மணார்ய யமிநம் தம்ஸத்குணம் பாவயே–அப்பன் திருவேங்கட ராமானுஜ எம்பார் ஜீயர் ஸ்வாமிகள் தனியன்:
திருநக்ஷத்ர தனியன்கள்
அக்ஷயாப்தே ஸிம்ம க்ருஷ்ண ரோஹிண்யாம் கலிதோதயம் |
ராமாநுஜ பதச்சாயாம் வந்தே வேங்கட லக்ஷ்மணம் ||
அக்ஷயாத்ரே ஸிம்ம க்ருஷ்ண ரோஹிண்யாம் ஜாதமாச்ரயே |
ஸ்ரீ ப்ரவாள குரோர் சிஷ்யம் முநிம் வேங்கட லக்ஷ்மணம் ||
வாழித்திருநாமம்
சீர் பெரும்பூதூரைச் செழுப்பித்தோன் வாழியே
திருப்பாவை சீயர் உளம் தேர்ந்து உணர்ந்தோன் வாழியே
பார்மேவும் பரசமயப் பற்று அறுத்தோன் வாழியே
பாடியத்தின் உட்பொருளைப் பகருமவன் வாழியே
காரிசுதன் தமிழ்மறைக்குக் கருத்து உரைப்போன் வாழியே
கருணையினால் அடியேற்குக் கழல் அளித்தோன் வாழியே
ஏராரு முனிதிலகம் என வந்தோன் வாழியே
எங்கள் எம்பார் சீயர் தமது இணையடிகள் வாழியே
—————–
வைகாசி ரோகிணி நக்ஷத்திரம்.
திருக்கோஷ்டியூர் நம்பி திருக்குருகைப்பிரான் என்கிற திருநாமத்துடன் திருகோஷ்டியூரில் வைகாசி ரோகிணியில் அவதரித்தார்.
ஆளவந்தாருடைய முக்கியமான ஶிஷ்யர்களுள் இவரும் ஒருவர்.
ஸ்ரீ ஆளவந்தார் என்னும் மஹாசார்யர் அவதரித்துப் பதினொரு வருடங்கள் கழிந்தபின் (கி.பி.987) ஸர்வஜித் வருஷத்தில்
வைகாசி ரோகிணி நட்சத்திரத்தில், காஸ்யப கோத்ரத்தில் ருக்ஸாகையில் பெரியாழ்வாருக்குப் பரம ஆப்தரான (ப்ரீதியுடையவரான)
செல்வநம்பியின் வம்சத்திலே, ஸ்ரீபுண்டரீகர் என்னும் நித்யஸூரியின் அம்சமாய்,
பூர்வஸிக ஸ்ரீவைஷ்ணவ ப்ராஹ்மண குலத்திலே அவதரித்தவர் ஆவார் திருக்கோட்டியூர் நம்பி.
இவர் பிற்காலத்தில் ப்ரஸித்தமாகத் திருக்கோஷ்டியூர் நம்பி என்றே அழைக்கப்பட்டார்.
இவருக்கு கோஷ்டி பூர்ணர், கோஷ்டி புரீஶர் என்ற திருநாமங்களும் உண்டு.
ஸ்ரீவல்லப பதாம்போஜ தீபக்த்யம் ருதஸாகரம் |
ஸ்ரீமத கோஷ்டீபரிபூர்ணம தேஸிகேந்த்ரம் பஜாமஹே ||
ஸ்ரீயப்பதியின் திருவடித்தாமரையில் ஞானமும் பக்தியுமாகிற அமுதங்களுக்குக் கடல் போன்றவரும்,
திருக்கோட்டியூர் நம்பி என்னும் பெயருடையவருமான ஆசார்ய உத்தமரை ஆச்ரயிக்கிறோம்.
திருமங்கை ஆழ்வார் அருளிச்செய்த “பெரிய திருமொழி” என்னும் பிரபந்தத்திற்கு
“கலயாமி கவித்வம்ஸம் கவிம்லோக திவாகாரம் |
யஸ்ய கோபி: ப்ரகாஸாபிராவித்யம் நிஹதம் தம: ||”
என்னும் தனியனை அருளிச்செய்தவர் திருக்கோட்டியூர் நம்பிகள் ஆவார்.
திருநக்ஷத்ர தனியன்:
வைஸாக ரோஹிண்யுதிதம் கோஷ்டிபூர்ணம் ஸமாஸ்ரயே |
சரமஸ்லோக தாத்பர்யம் யதிராஜாய யோஸ்வதத் ||
வாழி திருநாமங்கள் :
மன்னியசீர் ஆளவந்தார் மலர்பதத்தோன் வாழியே
வைகாசி ரோகிணிநாள் வந்துதித்தோன் வாழியே
இன்னிள வஞ்சிக்கு இனிதுரைத்தான் வாழியே
எம்பெருமானார் எனும் பேர் இயம்புமவன் வாழியே
தென்னணியாம் காசிப கோத்திரத்துதித்தோன் வாழியே
திருக்குருகைப்பிரான் என்னும் பேர் திகழவந்தோன் வாழியே
முன்னர் அரும் பெரும்பூதூர் முனிக்குரைத்தோன் வாழியே
மொழிந்த திருக்கோட்டி நம்பி மூதுலகில் வாழியே.
காசிபன் தன்கோத்திரத்தைக் கருநிலத்தோன் வாழியே
கலையனைத்தால் முன்னவர்க்குக் கதியளித்தோன் வாழியே
மாசற மெய்ப்பொருளே திக்குவழங்குமவன் வாழியே
வைய்யகமுன் தரிசனத்தால் வாழுமென்றான் வாழியே
ஏசறவே உகந்தெதியை எடுத்துரைத்தான் வாழியே
எம்பெருமானார் எனும் பேர் இயம்புமவன் வாழியே
தேசுபுகழ் செல்வன்மொழி தேர்ந்துரைப்போன் வாழியே
திருக்கோட்டியூர் நம்பி செகதலத்தில் வாழியே.
ஈரேழு மூன்றொன்றில் இதமுரைத்தான் வாழியே
ஏற்றமாம் ஆளவந்தார் இணையடியோன் வாழியே
ஈரேழுலகுக்கும் பதம் ஈயுமவன் வாழியே
எம்பெருமானார் எனும் பேர் இயம்புமவன் வாழியே
நாலேழில் நாலாநாள் நாடிவந்தோன் வாழியே
நம் மதுரகவி நிலையை நண்ணினான் வாழியே
நாலேழு நாலெழுத்தை நன்குரைத்தான் வாழியே
நங்கள் திருக்கொட்டிநம்பி நற்பதங்கள் வாழியே.
அல்பகலும் ஆளவந்தார் அடிநினைவோன் வாழியே
அனவரதம் தெற்காழ்வார்க்கு ஆட்செய்வோன் வாழியே
வெல்பொருள் வெளியிட எதியை வெறுத்துகந்தான் வாழியே
மேதினியோர் உய்வரென்று மெச்சினான் வாழியே
உள்மந்திரம் எதிராசர்க்கு ஒளித்துரைத்தான் வாழியே
உந்துமதத்தெதியை உகந்தணைந்தான் வாழியே
செல்வநம்பிகுலம் தழைக்கச் செகத்துதித்தான் வாழியே
திருக்கோட்டியூர் நம்பி செகதலத்தில் வாழியே.
————–
ஹம்பியிலுள்ள புனித ஸ்தலங்களில் ஒன்று யந்த்ரோதாரகா ஆஞ்சநேயர் கோயில் ஆகும்.
இந்த கோயில் கோதண்ட ராமர் கோயிலுக்கு பின்புறம் அமைந்துள்ளது.
ஹனுமானின் விக்கிரகமானது இங்கு ஒரு யந்திரத்தில் பொதிக்கப்பட்டிருப்பது இந்த கோயிலின் பிரதான விசேஷமாகும்.
நெருங்கி உற்று பார்த்தால் இந்த யந்திரத்தின் மைய விக்கிரகத்தைச் சுற்றிலும்
எண்ணற்ற வானரங்களின் உருவம் பொறிக்கப்பட்டிருப்பதைக் காணலாம்.
இது தவிர தியானத்தில் உட்கார்ந்த நிலையில் ஒரு ஹனுமான சிலையும் இந்த கோயிலில் உள்ளது.
இது விசேஷமான ஒன்றாக கருதப்படுகிறது.
ஏனெனில் எல்லா ஆலயங்களிலும் ஹனுமானின் சிலை சக்தியைக்காட்டும் நிலையில் வடிக்கப்பட்டுள்ளதே
தவிர தியானத்தில் அமர்ந்துள்ளது போன்ற சிலை வேறெங்கும் இல்லை.
இக்கோயிலின் வெளிச்சுவர்கள் எல்லா ஹிந்து கோயில்களையும் போன்று வெள்ளை மற்றும் காவி நிற பட்டைகளால் வண்ணம் பூசப்பட்டுள்ளன. இங்குள்ள புனித மரத்தின் மீது மாணிக்க கற்கள் பதிக்கப்பட்டுள்ளதை காணலாம்
————–
நம்மாழ்வார் திருவாய்மொழிப் பிரபந்தத்தாலே துவயத்தின் பொருளை விவரணம் செய்கிறார்.
இதில், முதல் மூன்று பத்துகளாலே இரண்டாம் வாக்கியத்தின் பொருளை விவரிக்கிறார்;
மேல் மூன்று பத்துகளாலே முதல் வாக்கியத்தின் பொருளை விவரிக்கிறார்;
மேல் மூன்று பத்துகளாலே உபாயத்திற்குத் தகுதியான குணங்களையும்,
ஆன்மாவிலும், ஆன்மாவோடு சம்பந்தப்பட்ட பொருள்களிலும் தமக்கு நசையற்ற படியையும்,
அவனோடு தமக்கு உண்டான நிருபாதிக சம்பந்தத்தையும் அருளிச்செய்கிறார்.
பத்தாம் பத்தாலே தாம் வேண்டினபடியே பெற்றபடியைச் சொல்லித் தலைக்கட்டுகிறார்.
இவற்றுள்,
 முதற்பத்தாலே ‘உயர்வற உயர்நலமுடையவன் யவன் அவன் – அயர்வறும் அமரர்கள் அதிபதியவன் அவன் – துயரறு சுடரடி தொழுது எழு என் மனனே!’ என்றதனால் மங்களம் பொருந்திய எல்லா நற்குணங்களையும் உருவமாகவுடையவனாய்
வானவர்கட்கு இனியனானவன் திருவடிகளில் தொண்டு செய்தலே பேறு என்று உறுதி செய்து, கூறிய பொருளுக்கும்,
இனிக்கூறப் புகும் பொருளுக்கும் பிரமாணம்,
‘உளன் சுடர்மிகு சுருதியுள்’ என்றதனால் குற்றங்கள் அற்ற சுருதியே பிரமாணம் என்றும்,
‘இத்தன்மைகளையுடையவன் யார்?’ என்ன, ‘வண்புகழ் நாரணன்’ என்றும் ‘திருவுடை அடிகள்’ என்றும் ‘
செல்வ நாரணன் என்றும் சிறப்புற ஓதி,
‘தொழுது எழு என் மனனே!’ என்று தொடங்கி, ‘அயர்ப்பிலன் அலற்றுவன் தழுவுவன் வணங்குவன் அமர்ந்தே’ என்றதனால்
முக்கரணங்களாலும் அடிமை செய்து தலைக்கட்டுகையாலே ‘பகவானுக்குச் செய்யும் கைங்கரியமே புருஷார்த்தம்,’ என்று அறுதியிட்டார்.
மூன்றாம் பத்தால், இவர்க்குக் கைங்கரியத்தில் உண்டான ருசியையும், விரைவையும் கண்ட இறைவன்,
கைங்கரியத்துக்கு ஏகாந்தமான திருமலையில் நிலையைக் காட்டிக் கொடுக்கக் கண்டு,
‘வழுவிலா அடிமை செய்ய வேண்டும் நாம்’ என்று பாரித்து, பாரித்தபடியே,
பாகவதர்களுக்கு அடிமை அளவாக வாசிகமாக. அடிமை செய்து தலைக்கட்டுகிறார்.
ஆக, முதல் மூன்று பத்துகளால் துவயத்தின் பின் வாக்கியத்தின் பொருள் கூறப்பட்டது.
இனி,
• நான்காம் பத்தால், இப்புருஷார்த்தத்துக்கு உபாயம் ‘திருநாரணன் தாள்’ என்றும்,
விரோதி ‘குடிமன்னும் இன்சுவர்க்கம்,’ ‘எல்லாம் விட்ட இறுகல் இறப்பு’ என்பனவற்றால்,
ஐசுவரிய கைவல்யங்களே விரோதி என்றும் பிறர்க்கு உபதேசித்து,
‘ஐங்கருவி கண்ட இன்பம் தெரிவு அரிய அளவு இல்லாச் சிற்றின்பம்’ என்று தாமும் சொல்லிப் போந்தார்.
ஐந்தாம் பத்தால், விரும்பியவற்றை அடைவதற்கும், விருப்பம் இல்லாதனவற்றை நீக்குவதற்கும்
‘ஆறு எனக்கு நின்பாதமே சரணாகத் தந்தொழிந்தாய்’ என்றதனால், இறைவன் தன் திருவடிகளையே உபாயமாகத் தந்தான் என்றார்.
ஆறாம்பத்தால், அவன் தந்த உபாயத்தைச் சேர்ப்பாரை முன்னிட்டுப் பெரிய பிராட்டியார் புருஷகாரமாக
‘அலர்மேல்மங்கை உறைமார்பா, உன் அடிகீழ் அமர்ந்து புகுந்தேன்’ என்ற தனால் ஏற்றுக்கொண்டார்.
ஆக, இம்மூன்று பத்துகளாலும் (4 – 6) துவயத்தின் முன் வாக்கியத்தின் பொருள் கூறப்பட்டது.
ஏழாம்பத்தால், இப்படிச் சித்தோபாயத்தை ஏற்றுக்கொண்டிருந்தும் சடக்கெனப் பலியாமையாலே துயர் உற்றவராய்க்
‘கடல் ஞாலம் காக்கின்ற மின்னு நேமியினாய்’ என்று தொடங்கி, உபாயத்திற்கு உபயோகியான குணங்களைச் சொல்லிக் கூப்பிட
‘கூரார் ஆழி வெண்சங்கு ஏந்திக் கொடியேன்பால், வாராய்’ என்று இவர் ஆசைப்பட்டபடியே,
‘வெள்ளைச் சுரிசங்கொடு ஆழி ஏந்தி’ வந்து காட்சியளித்தான்;
அளித்த இது, மானச அனுபவ மாத்திரமேயாய்ப் புறச்சேர்க்கைக்குக் கிடையாமையாலே பிரிந்தபடியை அருளிச் செய்தார்.
எட்டாம் பத்தால், மேலே கிடைத்த மனக்காட்சி, வெளியில் புறக்கண்களாலும் காண இவர் விரும்பியவாறு கிடையாமையாலே
உமர் உகந்து உகந்த உருவம் நின் உருவமாகி உன்றனக்கு அன்பரானார்,
அவர் உகந்து அமர்ந்த செய்கை உன் மாயை’ என்கிறபடியே, அடியார்கட்கு அதீனப்பட்ட
சொரூபம் ஸ்திதி முதலான வைகளையுடையவன் நமக்குத் தன்னைக் காட்டி மறைக்கைக்குக் காரணம்,
ஆத்துமாவிலும் ஆத்துமாவோடு சம்பந்தப்பட்ட பொருள்களிலும் ஏதேனும் நசை உண்டாகவேண்டும் என்று ஐயங்கொண்டு,
அவற்றில் நசை அற்றபடியை அருளிச்செய்தார்.
ஒன்பதாம் பத்தால், ‘நீர் என்றிய ஐயங்கொண்டு படுகிறீர் இப்படி?’ என்று தன்னுடைய நிருபாதிக சம்பந்தத்தையும் காட்டி.,
‘நாம் நாராயணன்; எல்லா ஆற்றல்களோடும் கூடினவன்; உம்முடைய விருப்பமனைத்தையும் முடிக்கிறோம்’ என்று அருளிச்செய்ய,.
‘சீலம் எல்லை இலான்’ என்று அவனுடைய சீல குணங்களிலே ஆழங்கால்பட்டார்.
பத்தாம் பத்தால், ஆழ்வாருடைய ஆற்றாமையைக் கண்டு, ‘திருமோகூரிலே தங்கு வேட்டையாக வந்து தங்கி,
இவர்க்கு அர்ச்சிராதிகதியையுங் காட்டிக்கொடுத்து, இவர் வேண்டிக் கொண்டபடியே
‘என் அவா அறச் சூழ்ந்தாயே’ என்று இவர் திருவாயாலே அருளிச்செய்யும்படி பேற்றினை அளித்தபடியை அருளிச்செய்கிறார்.
——————
கார்த்திகை கார்த்திகை நக்ஷத்திரம்.
கார்த்திகை கார்த்திகை ஸ்ரீ நம்பிள்ளை அவதார திருநக்ஷத்திரமாகும்.
நம்பூர் என்ற கிராமத்தில் வரதராஜன் என்ற திருநாமத்தோடே திருவவதாரம் செய்த “வரதர்” பிற்காலத்தில்,
“நம்பிள்ளை” என்று தனது ஆசார்யராயன் மூலம் திருநாமம் சூட்ட பெற்றார்.
நஞ்ஜீயர் தனது திருவாய்மொழி வ்யாக்யானத்தை எழுத தகுந்த ஒருவர் தேடிக்கொண்டிருந்தார்.
அப்போது அனைவரும் வரதராஜன் அதற்கு ஏற்றவர் என கூற அந்த பணியை செய்ய நஞ்ஜீயர் வரதராஜனிடம் ஒப்படைத்தார்.
தனது மூல குறிப்புகளை கொடுத்து அதனை கொண்டு 9000 படி வ்யாக்யானத்தை எழுத பணித்தார்.
வரதனும் அந்த ஒலைகளை எடுத்துக்கொண்டு நம்பூர் சென்றார்.
பெருமாளின் விசித்ர சங்கல்பத்தால் அந்த ஓலைகள் காவிரியை கடக்கும் போது வெள்ளத்தில் அடித்து செல்லப்பட,
ஸ்வாமி வரதராஜன் தனது ஆசாரியனை வேண்டி மீண்டும் முழுவதுமாக எழுதி முடித்தார்.
இவர் தமிழிலும் வடமொழியிலும் நல்ல ஞானம் இருந்தமையால் சில இடங்களில் சில கூடுதல் அர்த்தங்களைச் சேர்த்து எழுதினார்.
நஞ்ஜீயர் அந்த வ்யாக்யானத்தைப் படித்துவிட்டு, தாம் எழுதிய வியாக்யானத்தை விட சற்று மாறுதல்கள் இருப்பதைக் கண்டு,
என்ன மாற்றம்? என்ன நடந்தது என்று கேட்டார்.
வரதரும் நடந்த விஷயத்தைக் கூறினார், அதைக் கேட்டவுடன் நஞ்ஜீயர் மிகவும் மகிழ்ந்தார்.
வரதராஜருடைய உண்மையான பெருமையை உணர்ந்து, நஞ்ஜீயர் அவருக்கு “நம்பிள்ளை” என்ற திருநாமத்தைச் சூட்டினார்.
பலருக்கு பெருமாள் என்னும் திருநாமம் இருக்க நம்பெருமாள் என்னும் திருநாமம் அழகியமணவாளனுக்கு ஒருவருக்கே
அதேபோல் பலருக்கு பிள்ளை என்னும் திருநாமம் இருக்க நம்பிள்ளை என்னும் திருநாமம் ஸ்வாமி நம்பூர் வரதராஜன் ஒருவருக்கே.
வேதாந்த வேத்ய அம்ருத வாரிராஸேர்
வேதார்த்த ஸார அம்ருத பூரமக்ர்யம்
ஆதாய வர்ஷந்தம் அஹம் ப்ரபத்யே
காருண்ய பூர்ணம் கலிவைரிதாஸம்–நம்பிள்ளையின் தனியன்:
நம்பிள்ளையின் வாழி திருநாமம்:
தேமருவும் செங்கமலத் திருத்தாள்கள் வாழியே
திருவரையில் பட்டாடை சேர்மருங்கும் வாழியே
தாமமணி வடமார்வும் புரிநூலும் வாழியே
தாமரைக் கை இணையழகும் தடம் புயமும் வாழியே
பாமருவும் தமிழ்வேதம் பயில் பவளம் வாழியே
பாடியத்தின் பொருள்தன்னைப் பகர்நாவும் வாழியே
நாமநுதல் மதிமுகமும் திருமுடியும் வாழியே
நம்பிள்ளை வடிவழகும் நாடோறும் வாழியே
காதலுடன் நஞ்சீயர் கழல்தொழுவோன் வாழியே
கார்த்திகைக் கார்த்திகை யுதித்த கலிகன்றி வாழியே
போதமுடன் ஆழ்வார் சொல் பொருளுரைப்போன் வாழியே
பூதூரான் பாடியத்தைப் புகழுமவன் வாழியே
மாதகவா லெவ்வுயிர்க்கும் வாழ்வளித்தான் வாழியே
மதிளரங்கர் ஓலக்கம் வளர்த்திட்டான் வாழியே
நாதமுனி ஆளவந்தார் நலம்புகழ்வோன் வாழியே
நம்பிள்ளை திருவடிகள் நாடோறும் வாழியே
———————————————————————————————————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ ஸ்ரீமத் வானமா மலை ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ கண்ணன் பிறந்தான்… எங்கள் கண்ணன் பிறந்தான்!–ஸ்ரீ திருக்குடந்தை டாக்டர்: உ.வே.வெங்கடேஷ்–ஸ்ரீ கண்ணன் கழலிணையே ஸ்ரீ நம்மாழ்வார் -ஸ்ரீ அத்திகிரி 24 படிகள் விவரணம் —

January 16, 2023

ஆவணி ரோகிணி அஷ்டமி திருநாளில் நள்ளிரவில், தேவகிக்கும் வசுதேவருக்கும் மகனாக, மதுரா நகரில் சிறைச்சாலையில் அவதரித்தான் கண்ணன். அவன் அவதரித்த நாளையே கோகுலாஷ்டமி, ஜன்மாஷ்டமி, கிருஷ்ண ஜயந்தி, ஸ்ரீஜயந்தி உள்ளிட்ட பல பெயர்களால் அழைத்து, நாம் கோலாகலமாகக் கொண்டாடுகிறோம்.

இத்திருநாளில் கண்ணன் பிறந்ததை அக்கால ரிஷிகள் தொடங்கி, இக்காலக் கவிகள் வரை எப்படி எல்லாம் அநுபவித்தார்கள் என்பதன் தொகுப்பே இக்கட்டுரை.

ஸ்ரீபராசர முனிவர் – விஷ்ணு புராணம்:
“ததோ அகில ஜகத் பத்ம போதாய அச்யுத பானுனா
தேவகீ பூர்வ ஸந்த்யாயாம் ஆவிர்பூதம் மஹாத் மனா”

வாடிய தாமரை மலர வேண்டும் என்றால், சூரியன் உதிக்க வேண்டும். அதுபோல் இவ்வுலகம் என்னும் தாமரை வாடிக் கிடந்த போது, சூரியனைப் போல் அவதாரம் செய்தான் கண்ணன். கண்ணன் என்ற சூரியன் உதித்ததாலே, உலகம் என்னும் தாமரை மலர்ந்தது, அதாவது உலக மக்களுக்கெல்லாம் முகமலர்ச்சியும் மகிழ்ச்சியும் உண்டானது.

சூரியன் கிழக்குத் திக்கில் உதிக்கும். கண்ணன் என்னும் சூரியன், தேவகியின் கர்ப்பத்தையே தான் உதிக்கும் கிழக்குத் திக்காகக் கொண்டு அவளது கருவிலிருந்து உதித்தான் என்றும் இந்த ஸ்லோகத்தில் தெரிவிக்கிறார் பராசர முனிவர்.சூரியனோடு கண்ணனை ஒப்பிட்ட பராசர முனிவர், கண்ணனுக்கும் சூரியனுக்கும் உள்ள வேறுபாட்டையும், இந்த ஸ்லோகத்தில் உள்ள ‘அச்யுத பானு’ என்னும் அடைமொழியால் காட்டுகிறார்.
சூரியன் காலையில் உதித்தாலும், மாலையில் அஸ்தமித்து விடுவதால், அதற்கு ‘ச்யுத பானு’ (மறையும் சூரியன்) என்று பெயர். ஆனால் கண்ணனோ, அஸ்தமிக்காமல், மறையாமல் எப்போதும் ஒளிவீசும் சூரியனாக இருப்பதால், ‘அச்யுத பானு’ (மறையாத சூரியன்) என்று கண்ணனைக் குறிப்பிடுகிறார்.

அதுமட்டுமின்றி, கர்மவினையால் நாம் பிறப்பது போல் அவன் பிறப்பதில்லை. தனது கருணையால் கீழே இறங்கி வந்து அவதரிக்கிறான். இதைத் தெளிவு படுத்தவே ‘ஆவிர்பூதம்’ (கண்ணன் ஆவிர்பவித்தான்) என்று இந்த ஸ்லோகத்திலே கூறுகிறார் பராசர முனிவர்.

இவ்வாறு கண்ணன் அவதாரம் செய்த போது, கடல்கள் வாத்திய கோஷம் போன்ற ஒலியை எழுப்பின. தேவ லோகத்துக் கந்தர்வர்கள் தேவ கானங்களைப் பாடினார்கள். தேவர்கள் பூமாரி பொழிந்தார்கள். அப்ஸரஸ் பெண்கள் ஆனந்தக் கூத்தாடினார்கள். உலகிலுள்ள தீ எல்லாம் சாந்தமாக எரியத் தொடங்கியது. மேகங்கள் முழங்கின.

குழந்தை கண்ணன் எப்படி இருந்தான்?

“புல்ல இந்தீவர பத்ர ஆபம் சதுர் பாஹும் உதீக்ஷ்ய தம்
ஸ்ரீ வத்ஸ வக்ஷஸம் ஜாதம் துஷ்டாவானக துந்துபி:” என்கிறார் பராசர முனிவர்.

அதாவது, நன்கு மலர்ந்த கருநெய்தல் பூப்போன்ற நிறத்தோடும்,
நான்கு கரங்களோடும், திருமார்பில் திருமகள் அமரும் வத்சம் என்ற மறுவோடும் குழந்தை கண்ணன்
விளங்கினான் என்பது இதன் பொருள்.

ஸ்ரீ சுக முனிவர் – ஸ்ரீ மத் பாகவத புராணம்:
“தேவக்யாம் தேவரூபிண்யாம் விஷ்ணு: ஸர்வகுஹாசய: ஆவிராஸீத் யதா ப்ராச்யம் திசி இந்துரிவ புஷ்கல:
தம் அத்புதம் பாலகம் அம்புஜேக்ஷணம் சதுர்புஜம் சங்க கதார்யுதாயுதம்
ஸ்ரீ வத்ஸலக்ஷ்மம் கலசோபி கௌஸ்துபம் பீதாம்பரம் ஸாந்த்ர பயோத ஸௌபகம்
மஹார்ஹ வைதூர்ய கிரீட குண்டல த்விஷா பரிஷ்வக்த ஸஹஸ்ர குந்தலம்
உத்தாம காஞ்ச்யங்கத கங்கணாதிபி: விரோசமானம் வஸுதேவ ஐக்ஷத”

“எல்லார் இதயத்திலும் ஒளிந்திருக்கும் திருமால், இருளடைந்த நள்ளிரவில், தேவப் பெண் போல் திகழ்ந்த தேவகியிடத்தில், கிழக்குத் திக்கில் பௌர்ணமி நிலவு உதிப்பது போல் வந்துதித்தார்.
தாமரைக் கண்களோடும், சங்கு சக்கரம் கதை போன்ற சிறந்த ஆயுதங்களோடும், நான்கு தோள்களோடும், மார்பில் வத்சம் எனும் மறுவோடும்,
கழுத்தில் கௌஸ்துப மணியோடும், இடையில் மஞ்சள் பட்டாடையோடும், வைடூரியத்தாலான கிரீட குண்டலங் களோடும்,
அவற்றின் பிரகாசத்தால் ஒளிவீசும் குழல் கற்றைகளோடும், ஒளிவீசும் அரைநூல், தோள்வளை, கங்கணம் ஆகியவற்றோடும்
விளங்கிய அந்த அற்புத இளங்குழந்தையை வசுதேவர் கண்டார்!” என்பது இந்த ஸ்லோகங்களின் திரண்ட பொருளாகும்.

நம்மாழ்வார் – திருவிருத்தம்:
“சூட்டு நன்மாலைகள் தூயன ஏந்தி விண்ணோர்கள் நன்னீர்
ஆட்டி அந்தூபந்தரா நிற்கவே அங்கு ஓர் மாயையினால்
ஈட்டிய வெண்ணெய் தொடுவுண்ணப் போந்திமிலேற்று வன்கூன்
கோட்டிடை ஆடினை கூத்து அடலாயர் தம் கொம்பினுக்கே”

“கண்ணா! வைகுண்டத்தில் உள்ள நித்திய சூரிகள் உனக்கு நன்றாக அபிஷேகம் செய்து, மணம்மிக்க மலர்மாலைகளைச் சமர்ப்பித்து, சாம்பிராணி தூபம் காட்டிய போது, அந்தப் புகை உன்னை முழுவதுமாக மறைத்த நிலையில், நீ ஒரு மாயம் செய்து, இப்பூமியில் கண்ணனாக அவதாரம் செய்து, வெண்ணெயைத் திருடி உண்டு, ஏழு காளைகளை அடக்கி, நப்பின்னையைத் திருக்கல்யாணம் செய்து கொண்டு, கூத்தாடி விட்டு, புகை அடங்குவதற்குள் மீண்டும் வைகுண்டத்துக்கே எழுந்தருளி விட்டாயே! உனது மாயத்தை என்னவென்று சொல்வேன்?” என்று இப்பாடலில் வினவுகிறார் நம்மாழ்வார்.

பெரியாழ்வார் திருமொழி:
திருக்கோஷ்டியூரில் கோவில் கொண்டிருக்கும் சௌமிய நாராயணப் பெருமாளையே கண்ணனாகக் கண்டு, அந்தப் பெருமாளே ஆயர்பாடியில் கண்ணனாக அவதரித்ததாகப் பெரியாழ்வார் பாடுகிறார்:

“வண்ணமாடங்கள் சூழ்த் திருக்கோட்டியூர்
கண்ணன் கேசவன் நம்பி பிறந்தினில்
எண்ணெய் சுண்ணம் எதிர் எதிர் தூவிடக்
கண்ணன் முற்றம் கலந்தளராயிற்றே”

திருக்கோஷ்டியூரில் கோவில் கொண்டுள்ள சௌமிய நாராயணப் பெருமாள், (மதுராவில் இருந்த கம்சனிடம் இருந்து தப்பி வந்து) ஆயர்பாடியில் நந்தகோபனின் திருமாளிகையில் குழந்தையாகத் தோன்றினான். அப்போது ஆயர்பாடியைச் சேர்ந்த மக்கள் எல்லோரும் எண்ணெயையும்
மஞ்சள் பொடியையும் மகிழ்ச்சியோடு ஒருவர் மீது ஒருவர் தூவிக் கொண்டு, கண்ணனின் அவதாரத்தைக் கொண்டாடினார்கள்.
அதனால் நந்தகோபனுடைய வீட்டின் பெரிய முற்றம் முழுவதும் சேறாகி விட்டது.

“உறியை முற்றத்து உருட்டி நின்று ஆடுவார்
நறுநெய் பால் தயிர் நன்றாகத் தூவுவார்
செறிமென் கூந்தல் அவிழத் திளைத்து எங்கும்
அறிவழிந்தனர் ஆய்ப்பாடி ஆயரே”

கண்ணன் பிறந்த சந்தோஷத்தில், ஆயர்கள் எல்லோரும் பால், தயிர் சேமித்து வைத்த உறிகளை முற்றத்தில் உருட்டி விட்டுக் கூத்தாடினார்கள். நெய், பால், தயிர் உள்ளிட்டவற்றை வறியவர்க்குத் தானம் செய்தார்கள். ஆய்ச்சியர்கள் தங்கள் கூந்தல் அவிழ்ந்து போனது கூடத் தெரியாமல் நடனம் ஆடினார்கள். பித்துப் பிடித்தவர்கள் போல் அனைவரும் கூத்தாடினார்கள்.
வேதாந்த தேசிகன் – யாதவாப்யுதயம்:

கண்ணனின் முழு வரலாற்றை யாதவாப்யுதயம் என்னும் இருபத்து நான்கு சர்கங்கள் கொண்ட மகாகாவியமாக வடித்துத் தந்தார் வேதாந்த தேசிகன். அதில்,

“புக்தா புரா யேன வஸுந்தரா ஸா ஸ விச்வ போக்தா மம கர்ப பூத:”–என்கிறார்.

தேவகி எட்டாவது முறையாகக் கருவுற்றிருந்த நிலையில், மண்ணை உண்டாளாம். மண்ணை உண்டதன் மூலமாக, இந்த மண்ணுலகத்தை எல்லாம் உண்ட கண்ணன் என் வயிற்றுக்குள் தான் இருக்கிறான் என்பதை உலகுக்குச் சூசகமாகத் தெரிவித்தாள் தேவகி என்று இந்த ஸ்லோகத்தில் வேதாந்த தேசிகன் தெரிவிக்கிறார்.

மேலும், கண்ணன் அவதரித்த காலத்தை ஜோதிட ரீதியில் துல்லியமாகத் தெரிவிக்கிறார் வேதாந்த தேசிகன்:
“அத ஸிதருசி லக்னே ஸித்த பஞ்ச க்ரஹோச்சே
வ்யஜனயத் அனகானாம் வைஜயந்த்யாம் ஜயந்த்யாம்
நிகில புவன பத்ம க்லேச நித்ரா அபனுத்த்யை
தினகரம் அனபாயம் தேவகீ பூர்வ ஸந்த்யா” என்ற ஸ்லோகத்தில்,

“சந்திரோதயம் ஆனபின், ரோகிணி நட்சத்திரத்தோடு கூடிய ஆவணி மாதத் தேய்பிறை அஷ்டமியில் (ஆவணி மாதத் தேய்பிறை அஷ்டமியோடு ரோகிணி நட்சத்திரம் இணைந்து வந்தால் அந்நாளை ஜயந்தி என்று அழைப்பார்கள்), ரிஷப ராசியில் சந்திரனும், மகர ராசியில் செவ்வாயும், கன்னி ராசியில் புதனும், கடக ராசியில் குருவும், துலா ராசியில் சனியும் என ஐந்து கிரகங்களும் உச்சத்தில் இருந்த நேரத்தில், சந்திரனுக்கு உகந்த ரிஷப லக்னத்தில், பூமியாகிய தாமரையைத் துயில் எழுப்புவதற்காக, தேவகி என்னும் கிழக்குத் திக்கில், கண்ணன் என்னும் சூரியன் தோன்றினான்!” என்று வர்ணித்துள்ளார்.

நாராயண பட்டத்ரி – நாராயணீயம்:
“ஆனந்த ரூப பகவன்னயி தே அவதாரே
ப்ராப்தே ப்ரதீப்த பவத் அங்க நிரீயமாணை:
காந்தி வ்ரஜை: இவ கனாகன மண்டலை: த்யாம்
ஆவ்ருண்வதீ விருருசே கில வர்ஷ வேலா”

“ஆனந்த வடிவமான குருவாயூரப்பா! உன் அவதாரக் காலம் நெருங்கிய போது, உன் திருமேனியில் இருந்து வெளிக்கிளம்பிய கதிர்ப் படலங்கள் போல் மேகங்கள் பெரிதாக வானில் தோன்றின. அவை வானையே மறைத்துக் கொண்டிருந்தன. இவ்வாறு கார்காலம் விளங்கிற்று.”

“ஆசாஸு சீதலதராஸு பயோத தோயை:
ஆசாஸிதாப்தி விவசேஷு ச ஸஜ்ஜனேஷு
நைசாகரோதய விதௌ நிசி மத்யமாயாம்
க்லேசாபஹ த்ரிஜகதாம் த்வம் இஹ ஆவிராஸீ:”

“மேகங்கள் பொழிந்த மழையால் திசைகள் எல்லாம் குளிர்ந்தன. நல்லோர் விரும்பிய அனைத்தும் கைகூடின. மக்கள் மகிழ்ச்சியில் திளைத்தார்கள். நள்ளிரவில் சந்திரன் தோன்றும் வேளையில், மூவுலகின் துன்பத்தை அழிப்பவனான நீ தோன்றினாய்!”

“பால்யஸ்ப்ருசா அபி வபுஷா ததுஷா விபூதீ:
உத்யத் கிரீட கடகாங்கத ஹார பாஸா
சங்காரி வாரிஜ கதா பரிபாஸிதேன
மேகாஸிதேன பரிலேஸித ஸூதி கேஹே”

“குழந்தை போல் தோற்றமளித்தாலும் வல்லமை மிக்க திருமேனி கொண்டவன் அல்லவோ நீ? கிரீடம், கைவளை, தோள்வளை, முத்து மாலை முதலியவற்றின் ஒளியோடும், சங்கு சக்கரம், தாமரை, கதை போன்றவற்றோடும் நீ விளங்கினாயே! கருமேகம் போல் நீல நிறத்தோடு நீ
விளங்கினாயே!”

ஆசுகவி வில்லூர் நிதி சுவாமிகள்:
மன்னார்குடியில் கோவில் கொண்டிருக்கும் வித்யா ராஜகோபாலனைக் குழந்தை கண்ணனாக அநுபவித்து,
அவனது தோற்றத்தை ஆசுகவி வில்லூர் நிதி சுவாமிகள் வடமொழியில் வர்ணித்துப் பாடுகிறார்
“லீலா யஷ்டி மனோஜ்ஞ தக்ஷிண கரோ பாலார்க்க துல்ய ப்ரப:
பாலாவேசித மௌலி ரத்ன திலகோ மாலாவலீ மண்டித:
சேலாவேஷ்டித மௌலி மோஹித ஜன: சோலாவனீ மன்மத:
வேலாதீத தயா ரஸார்த்ர ஹ்ருதயோ மே லாலிதோ மௌலினா”

வலக்கையிலே செண்டை ஏந்திக் கொண்டு, இளஞ்சூரியன் உந்தன் வடிவானதோ என்று வியக்கும்படி, இளஞ்சூரியனைப் போன்ற பொலிவுமிக்க வடிவுடன், திவ்யமான ரத்தினத் திலகத்தை நெற்றியில் அணிந்து கொண்டு, செண்பகம் போன்ற பூமாலைகளை அணிந்து கொண்டு, அழகிய தலைப்பாகைக் கட்டால் அனைவரையும் மயக்கும் சோழநாட்டு மன்மதனும், கருணைக் கடலுமான ராஜகோபாலனைத் தலையால் வணங்குகிறேன் என்பது இந்த ஸ்லோகத்தின் பொருள்.

மகாகவி பாரதியார்:
கண்ணன் பிறந்தான்! – எங்கள் கண்ணன் பிறந்தான்! – இந்தக் காற்று அதை எட்டுத் திசையிலும் கூறிடும்
திண்ணம் உடையான்! – மணி வண்ணம் உடையான்! – உயர் தேவர் தலைவன் புவிமிசைத் தோன்றினன்!
பண்ணை இசைப்பீர்! – நெஞ்சில் புண்ணை ஒழிப்பீர்! – இந்தப் பாரினிலே துயர் நீங்கிடும் என்று இதை
எண்ணிடைக் கொள்வீர்! – நன்கு கண்ணை விழிப்பீர்! – இனி ஏதும் குறைவில்லை! வேதம் துணையுண்டு!

இதைத் தழுவிக் கவிஞர் வாலி அவர்கள் எழுதிய புதுக்கவிதையும் நோக்கத் தக்கது:
கண்ணன் பிறந்தான் – எங்கள் கண்ணன் பிறந்தான் – புதுக் கவிதைகள் பிறந்ததம்மா
மன்னன் பிறந்தான் – எங்கள் மன்னன் பிறந்தான் – மனக் கவலைகள் மறந்ததம்மா

அயோத்தியில் ராமன் அவதரித்த போது, அதைத் தசரதச் சக்கரவர்த்தி கோலாகலமாகக் கொண்டாடினார். ஆனால் மதுராவில் சிறைச்சாலையில் கண்ணன் அவதரித்த வேளையில், விலங்குகளால் கட்டப்படிருந்த தேவகியாலும் வசுதேவராலும் பெரிதாக அவனது பிறப்பைக் கொண்டாட முடியவில்லை.
அக்குறை தீரவே, இன்று ஸ்ரீகிருஷ்ண ஜயந்தியை நமது இல்லங்களில் எல்லாம் வெகு கோலாகலமாகக் கொண்டாடுகிறோம். பல்வகை இனிப்புகளை வீட்டில் செய்து, கண்ணன் நம் இல்லத்துக்குள் நுழைவதன் அடையாளமாக அவனது திருப்பாத வடிவில் இழைகோலம் இட்டு, பஜனைகள், பாடல்கள்,

பாராயணம் எனப் பலவிதமான முறைகளில், நம்வீட்டில் குழந்தை பிறந்தது போல் மகிழ்ச்சியோடு ஸ்ரீகிருஷ்ண ஜயந்தி நன்னாளைக் கொண்டாடுகிறோம்.

கிருஷ்ணஜயந்தி நாளில் விரதம் இருப்போர்க்கு, ஒரு வருடத்தில் உள்ள அனைத்து ஏகாதசிகளிலும் விரதம் இருந்த பலன் கிட்டும். இந்நாளில் கண்ணனை வழிபடுவோர்க்குக் கண்ணனைப் போலவே ஒரு குழந்தை பிறக்கும் என்பதில் ஐயமில்லை!

—————–

ஏவம் யுக அநு ரூபாப்யாம் பகவான் யுக வர்த்திபி –கலவ் கலு பவிஷ்யந்தி நாராயண பராயணா
க்வசித் க்வசித் மஹா ராஜத்ரவிநேஷுச பூரிச
தாம்ரபர்ணீ நதீ யத்ர க்ருத மாலா பயஸ்வி நீ காவேரீ ச மஹா புண்யா ப்ரதீ சீச மஹா நதி
யே பிபந்தி ஜலம் தாஸாம் மனுஜா மனு ஜேஸ்வர ப்ரயோ பக்தா பகவதி வாஸூ தேவே அமலா சயா
தேவ ரிஷி பூதாத்ம ந்ரூணாம் பித்ரூணாம் ந கிங்கரோ நாயம் ரிணீ ச ராஜன்
ஸர்வாத்ம யச் சரணம் சரண்யம் கதோ முகுந்தம் பரிஹ்ருத் யகர்த்தம்
ஸ்வ பாத மூலம் பஜத ப்ரியஸ்ய த்யக்த அந்நிய பாவஸ்ய ஹரி பரேச விகர் மயச் சோத் பதிதம் கதம் சித் துநோதி ஸர்வம் ஹ்ருதி சந்நிவிஷ்ட

யுக வர்ண க்ரமம் கலவ் -என்பதால் வர்ணமும்
பக்தா நாராயண பராயணா பன்மையாலே ஆஸ்தே விஷ்ணு அசிந்த்யாத்மா பக்தைஸ் பாகவத ஸஹ -என்று ஓதிய பக்தர்களே ஆழ்வார்கள் என்றும்
ஸர்வாத்ம யச் சரணம் சரண்யம் கதோ முகுந்தம் பரிஹ்ருத் யகர்த்தம்-என்ற ஒருமையாலே
பூதம் தனியனில் போல் –நம்மாழ்வார் அங்கி மற்றவர்கள் அங்கங்கள் என்றும்
வாஸூ தேவ ஸர்வம் -உண்ணும் சோறு பருகும் நீர் தின்னும் வெற்றிலை எல்லாம் கண்ணன் என்று விடாய்த்துப் பெற்றவராயும்
அவர் தம்மிலும் ஸ மஹாத்மா ஸூ துர்லப-என்று பரன் தன்னாலும் பெரு விடாய்த்துப் பெறப்பட்டவராயும்-ஆழ்வாரே இந்த சுலோகத்துக்கு விஷயம் –

ஆழ்வார் கண்ணன் கழலிணை -என்று தேறி மதுரகவியாரும்
தேவு மற்று அறியேன்
மேவினேன் அவன் பொன்னடி மெய்ம்மையே

சேமம் குருகையோ செய்ய திருப்பாற் கடலோ நாமம் பராங்குசமோ நாரணமோ என்று
திண்ணம் நாரணமே என்றது திண்ணம் பராங்குசமே
பரன் திருப்பாதுகமே இவ்வாழ்வார் என்றதை
திருடித் திருடி தயிர் உருக்கும் நெய்யோடு உண்டான் அடிச் சடகோபன் –பொருநல் குருகூர் எந்தை என்றும்
திரு நாடனை வேலை சுட்ட சிலை ஆரமுதின் அடிச் சடகோபனைச் சென்று இறைஞ்சும் தலையார் எம்மை ஆளும் தபோ தநரே
திரு நாட்டிலும்
திரு அயோத்தியிலும்
திரு ஆய்ப்பாடியிலும்
திருக் குருகூரிலும்
விளங்கா நிற்கும் ஓர் ஒருவரே பரன் அடிச் சடகோபன்

குருகையில் கூட்டம் கொண்டார் –என்னை வானின் வரம்பிடை நின்று அழைத்தார்
அறிவும் தந்தார் -அங்குப் போய் அவர்க்கு ஆட் செய்வேனே
மாறன் -விலக்ஷணன் என்பதை பாவகத்தால் தன் திரு அவதாரம் பதினொன்று

என்று இப்பூவகத்தார் அறியாத வண்ணம் தன்னையே புகழ்ந்து
நாவாகத்தால் கவி ஆயிரம் பாடி நடித்து அளித்த கோவகத்தார்
மறையோர் பெற்ற ஆணிப்பொன்னே இவர்

—————-

உகாரம் -ம் -அகாரம் -துக்காராம் -உமது -சொத்தாகவே அனுசந்தேயம் உபக்ரமத்தில்
உப சம்ஹாரத்திலும் என் என்பது என் -யான் என்பது என் -என்று ஸ்வத்வ ஸ்வா தந்தர்யங்களையும் நிரஸித்து அருளினார் –
ஸாது -சந்திம் இச்சந்தி ஸாத்வ -ஸத் ஸந்தாதா -சந்திமான் -பரதனுக்கும் திரு நாமங்கள் –
சடகோபன் பொன்னடி மேவினாரே சத்து

——————

ஸ்ரீ அத்திகிரி 24 படிகள் விவரணம் –

அயர்வறும் அமரர்கள் அதிபதியான எம்பெருமானின் திவ்யதேசங்கள் நூற்றெட்டு என்று நம் முன்னோர் கூறுவது வழக்கம்.
இவையெல்லாம் மயர்வறுமதிநலம் அருளப் பெற்ற திவ்ய தேசங்கள் எனப்படும்
ஆழ்வார்களால் மங்களாசாஸனம் பண்ணப்பெற்றவை.
இந்த எல்லாத் திவ்யதேசங்களிலும் எம்பெருமான் அர்ச்சாரூபியாய் ஸகல ஜனங்களுக்கும் ஸர்வ அபேக்ஷதிங்களையும் கொடுத்துக் கொண்டும்,
‘அர்ச்ய: ஸர்வ-ஸஹிஷ்ணு:’ என்ற ரீதியில் நம்முடைய எல்லா அபராதங்களையும் பொறுத்துக் கொண்டும் ஸேவை ஸாதிக்கிறான்.
இவை அனைத்துக்குமே ஒவ்வோர் அம்சத்தை முன்னிட்டு உத்கர்ஷம் உண்டு.

அதிலும் நம் முன்னோர் நான்கு திவ்ய தேசங்களுக்குப் பிராதான்யம் கொடுத்திருக்கின்றனர்.
கோயில் (ஸ்ரீரங்கம்), திருமலை, பெருமாள் கோயில், திருநாராயணபுரம் என்ற இந்த நான்கு திவ்யதேசங்களைக்
காலை பகல் மாலை மூன்று வேளைகளிலும் ஸந்த்யாவந்தனம் செய்ததும் ஸ்ரீவைஷ்ணவர்கள் அநுஸந்தானம் செய்யாமலிருப்பதில்லை.

ஸ்ரீரங்க மங்கள நிதிம் கருணா நிவாஸம்,
ஸ்ரீவேங்கடாத்ரி சிகராலய காளமேகம் |
ஸ்ரீஹஸ்திசைல சிகரோஜ்ஜ்வல பாரி ஜாதம்,
ஸ்ரீசம் நமாமி சிரஸா யதுசைல தீபம் ||

என்று, ஸந்தியாவந்தனம் செய்ததும் இந்த ச்லோகத்தை நம் எல்லாரும் அநுஸந்திப்பது அனைவருக்கும் தெரிந்ததே.
மேலும், இந்த நான்கு திவ்ய தேசங்களிலும் நடை வடை குடை முடி என்று விசேஷங்கள் உண்டு.
கோவிலில் நடை மிகவும் அழகு.  திருமலையில் வடையின் ப்ரபாவம் எல்லாருக்கும் தெரியும்.
பெருமாள் கோவிலில் குடை விசேஷம்–கொடை என்றுமாம் -அபீஷ்ட வரதன் அன்றோ -.
திருநாராயண புரத்தில் வைர முடி விசேஷம்.
இப்படி இந்த நான்கு திவ்வ தேசங்களுக்கும் பெருமை உண்டு.
அதிலும் பெருமாள் கோவிலுக்கு மற்றும் பல விசேஷ பெருமைகள் உள்ளன.  இது காஞ்சி என்று பெயர் பெற்று விளங்குகிறது.
க என்று சொல்லப்படும் பிரம்மாவினால் பூஜிக்கபெற்ற பகவான் வசிக்கும் திவ்ய தேசமானபடியால் இதற்கு இந்த பெயர் வந்தது.
இதன் மகிமையை ஹம்ஸ ஸந்தேசத்தில் ஸ்ரீஸ்வாமி தேசிகன் பரக்ககக் கூறியிருக்கிறார்.

தாமாஸீதந் ப்ரணம நகாரீம் பக்திநம்ரேண மூர்த்நா
ஜாதாமாதெள க்ருதயுகமுகே தாதுவச்சாவசேந |
யத்வீதீநாம் கார்கிபதேர் வாஹவேகாவதூதாந்
தந்யாந் ரேணூந் த்வதசபதயோ தாரயந்த்யுத்தமாங்கை: ||   என்று.–தேவப்பெருமாளின் உத்ஸவம் விமா¢சையாக நடக்கிறது.

அப்பொழுது எம்பெருமான் கருடன், ஆனை, முதலிய வாகனங்களில் எழுந்தருளுகிறார்.
வாகன ஆரூடனான எப்பெருமானை ஸ்ரீபாதம் தாங்கிகள் மிகவும் அழகாக எழுந்தருளப் பண்ணுகிறார்கள்.  ஒவ்வொரு வாகனத்திலும் தேவாதிராஜன் எழுந்தருளும்போது அதிக அதிகமான சோபையுடன் கண்டவர் தம் மனம் கவரும்படி ஸேவை ஸாதித்து அநுக்ரகிக்கிறான்.
அந்த திவ்யதேசத்தில் ஸ்ரீபாதம் தாங்கிகள் மிகக் கடும் விசையுடன் எழுந்தருளப் பண்ணுவது வழக்கம்.  அவர்களுடன் ஸேவார்த்திகள் கூட உடன் செல்வது முடியாது. -அந்தச் சமயத்தில் ஸ்ரீபாதம் தாங்கிகளின் திருவடிகளிலிருந்து பாததூள் வெளிக்கிளம்பி ஆகாயம் வரையில் பரவுமாம்.
வாகனாதிரூடனான தேவப்பெருமாளை ஸேவிப்பதற்காக ஸ்வர்க்க லோகத்திலிருந்து ஆகாயத்தில் வந்துள்ள தேவர்கள் அந்தத் தூளைத் தங்கள் சிரத்தினாலே தாங்கிக் கொள்வார்கள். -அப்படிப் பட்ட மகிமையைப் பெற்றது இந்தத் திவ்யதேசம்.

மேலும், இந்தத் திவ்யதேசத்தின் மகிமை வாசாமகோசரம் என்று எண்ணி ஸ்ரீஸ்வாமி தேசிகன்,
“வந்தே ஹஸ்திகிரீ சஸ்ய வீதீசோதககிங்கராந்” என்று அருளிச்செய்தார்.
தேவப் பெருமாளின் வீதியைச் சுத்தம் செய்கிற வேலைக்காரர்களை வணங்குகிறேன் என்றால் இதன் மகிமையை அளக்க முடியாது.
‘தேவப் பெருமாளின் வீதியாவது வேதாந்தம்.  அந்த வேதாந்தத்தின் அர்த்தத்தை அபார்த்த நிரஸந பூர்வகமாக வெளிப்படுத்தினவர்கள் நம் ஆசார்யர்கள்.
அவர்களை வணங்குகிறேன்” என்பது அதன் உட்கருத்து.

இந்தத் திவ்யதேசத்து எம்பெருமானான பேரருளாளனாலே அல்லவா நம்முடைய ஸ்ரீவைஷ்ணவ ஸம்பிரதாயம் விளங்கிற்று?
ஸ்ரீபெரும்பூதூரில் அவதரித்த வள்ளல் ராமாநுஜர் முதலில் யாதவப்பிரகாசனிடம் ஸாமானிய சாஸ்திரங்களையும் சில வேதாந்தபாகங்களையும் கற்று,
அவர் மூலமாகத் தமக்கு அவத்யம் வருவதை அறிந்து, கங்கா யாத்திரையிலிருந்து மீண்டு திரும்பி வந்து திகைத்து நின்றபோது,
தேவப் பொருமாள் வேடனாகவும் பிராட்டி வேட்டுவச்சியாகவும் வேடம் பூண்டு இவரைக் காத்தார்கள்.
மேலும், திருக்கச்சி நம்பி மூலமாக இந்த எம்பெருமான் ஆறு வார்த்தைகளை ராமாநுஜருக்குத் தெரிவித்தான்.  இதன் மூலமாக நம் ராமாநுஜர் ஸ்ரீபாஷ்யகாரரானார்.

வேதாந்த வீதியை முள், கல் முதலிய தோஷங்கள் இல்லாமல் சீர்ப்படுத்திச் சோதித்துக் கொடுத்து,
இதரர் சொல்லும் அபார்த்தங்களையும் கண்டித்து, ஸித்தாந்தத்தை ஸ்தாபித்தார்.
ஆக, காஞ்சீபுரம் இல்லாவிட்டால் அந்த எம்பெருமான் எங்கே! அந்த எம்பெருமான் இல்லாவிட்டால் ஸ்ரீபாஷ்யகாரரை உணர்த்துபவர் யார்?
நம் ஸ்ரீவைஷ்ணவ ஸித்தாந்தமே விளங்குவது எப்படி? ஆக ஸ்ரீவைஷ்ணவ ஸித்தாந்த ஸ்தாபனமே இந்த திவ்யதேசத்தின் பிரபாவத்தினால் ஏற்பட்டது என்பதை மறக்க முடியாது.  மறைக்கவும் முடியாது.

மேலும் கருட உத்ஸவம் இந்த ஊரில்தான் விசேஷம்.
‘அத்தியூரான் புள்ளையூர்வான்’ என்று கருட உத்ஸவத்தை முன்னிட்டு ஆழ்வார்கள் இந்த திவ்ய தேசத்தை மிகச் சிறப்பாக கூறியுள்ளார்கள் என்பதும் சர்வ விதிதம்.
இப்படி பல படியால் காஞ்சி என்ற திவ்ய தேசத்திற்கு மகிமை ஏற்பட்டுள்ளது,

இதற்கு மற்றொரு வகையிலும் பிரபாவம் உண்டு
இருபத்துநான்கு என்ற எண்ணிக்கை இவ்வூரில் பல விஷயங்களில் உள்ளது.
குடை இருபத்து நான்கு சாண் கொண்டது.
வானவெடிகள் இருபத்து நான்கு வகைகள்.
த்வஜ ஸ்தம்பத்தில் இருபத்து நான்கு அடுக்கடுக்காக போடப்படும் கவசங்கள் உள்ளன.
அனந்த ஸரஸ்ஸில் இருபத்து நான்கு படிகள்.
கோவின் பிராகாரச் சுவர் இருபத்து நான்கு அடுக்குகள் கொண்டது.
கோவிலின் கீழிலிருந்து திருமலைக்குச் சென்று எம்பெருமானை ஸேவிப்பதற்கு படிகள் உள்ளன.  இவையும் இருபத்து நான்கே.
இப்படி இருபத்து நான்கு எண்ணிக்கை கொண்ட விசேஷம் இவ்வூரில்தான் உள்ளது.

ஸ்ரீமத் ராமாயணம் இருபத்து நான்காயிரம் கிரந்தங்கள் கொண்டது என்பது எல்லாருக்கும் தெரிந்ததே.
இதற்கு காரணம் இருபத்து நான்கு எழுத்துக்கள் கொண்ட காயத்ரியின் அர்த்தத்தை விவரிப்பதற்காக அந்த மகா காவியம் அவதாரித்தபடியால் இருபத்துநான்காயிரம் கிரந்தங்கள் கொண்டதாக வால்மீகி பகவான் அருளிச்செய்தார்.
அவ்வாறே அந்த மகா காவியத்தின் பிரதான அர்த்தமான பகவானை அறிந்துகொள்வதற்கு இருபத்து நான்கு எண்ணிக்கை கொண்ட விசேஷங்கள் இந்த ஆலயத்தில் ஏற்பட்டிருக்கின்றன.
‘காயத்ரியில் ப்ரதான ப்ரதிபாத்யமான அர்த்தம், ஸ்ரீராமாயணத்தில் ப்ரதான ப்ரதிபாத்யமான அர்த்தம் தேவப் பெருமாளே’
என்பதை அறிவிக்கவே இந்த ஆலயத்தில் இந்த விசேஷம் என்று எல்லாரும் சொல்லுவர்.

இப்படிச் சொல்வது ஒரு புறம் இருக்கட்டும்.
அப்பைய தீக்ஷ¢தர் என்ற மகான் இந்த விசேஷத்தின் பெருமையை ரஸ கனமாக அருளிச் செய்திருக்கிறார்.
இவர் அத்வைத மதத்தைச் சேர்ந்தவர்; ஆயினும் ஸ்ரீஸ்வாமி தேசிகனிடத்தில் மிக்க பக்தி பெற்றவர்.
ஸ்ரீதேசிகனின் பெருமையை நன்கறிந்து, அவர் இயற்றிய யாதவாப்யுதயம் என்ற மகா காவியத்திற்கு வியாக்கியானம் செய்தவர்.
‘ஸ்ரீமத்வேங்கட நாதஸ்ய காவ்யேஷு லலிதேஷ்வபி | பாவா: ஸந்தி பதேபதே’ என்று ஸ்வாமியின் காவியத்தைப் பலவாறு போற்றியவர்.
திருமலைக்குப் போகும்போது அமைந்துள்ள இருபத்து நான்கு படிகள் விஷயமாக இந்த அப்பைய தீஷிதர் இயற்றிய சுலோகத்தை இங்கே குறிப்போம் –
ஸம்ஸாரவாரிநிதிஸந்தரணைக போத –
ஸோ பாநமார்க சதுருத்தரவிம்சதிர் யா |
தாமேவ தத்வவிதிதம் விபுதோதிலங்க்ய
பஸ்யந் பவந்த முபயாதி காரிச நூநம் ||
வேதாந்த சாஸ்திரத்தில் இருபத்துநான்கு தத்துவங்கள் கூறப்பட்டிருக்கின்றன.

ப்ரக்ருதி, மஹத், அஹங்காரம், ஆகாசம், வாயு, தேஜஸ், ஜலம், ப்ருத்வி, கர்மேந்தி¡¢யம் ஐந்து, ஜ்ஞாநேந்தி¡¢யம் ஐந்து, பஞ்ச தந்மாத்ரைகள், மனம்
ஆக இவையெல்லாம் அசேதனத்தின் பிரிவுகள்,
சேதனன் என்பவன் ஜீவன்,
இவை எல்லாவற்றிற்னும் மேற்பட்டவன் பரம சேதனன் பரமாத்மா.

தன்னையும் அசேதனமான இருபத்துநான்கு தத்துவங்களையும் நன்கு அறிந்தவன்தான் சுலபமாகப் பரமாத்மாவை உணரவும் அடையவும் முடியும்.
அசேதனமான இந்தப் பொருள்களை அறிந்துகொள்வது, ‘அவை தோஷத்தோடு கூடியவை’ என்று அறிந்துவிடுவதற்காக.
இப்படி அறிந்தவன் தான் ஸம்ஸார ஸாகரத்திலிருந்து விடுபட்டுப் பரமாத்மாவை அடைவான்.
இந்த அசேதனம் இருபத்து நான்கு வகையாக இருக்கிறபடியால் இவை இருபத்து நான்கு படிகளாகின்றன.
‘ஸம்ஸார ஸாகரத்தை தாண்டுவதற்கு, சேதனனான இவன் தான் இருபத்து நான்கு படிகளை ஏறி வைகுண்ட லோகம் போல் உள்ள
அத்திகிரியில் இருக்கும் தேவாதிராஜனான பேரருளாளனை ஸேவிப்பது மோக்ஷத்தை அடைவது போல் ஆகிறது’ என்பது இந்த ச்லோகத்தின் கருத்து.

இப்படி வேதாந்தத்தில் சொல்லக் கூடிய விசேஷ அர்த்தத்தைக் காட்டுவதற்காகவே
கீழிருந்து மேலுள்ள பகவானை ஸேவிப்பதற்கு இருபத்துநான்கு படிகள் கட்டப்பட்டு அமைந்திருக்கின்றன போலும்.

இப்படிப பற்பல விசேஷங்களினால் காஞ்சி என்ற திவ்ய தேசத்திற்கு ஸர்வ திவ்ய தேங்களைக் காட்டிலும் வாசா மகோசரமான வைபவம் ஏற்பட்டுள்ளது.

—————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ கண்ணன் கதைகள் –

January 16, 2023

வட மதுரை -ஆல மரம் போல் மன்னி
தென் மதுரை -அழகிய -அழகர் சோமேஸ்வரர் எங்கும் அழகு
அவதாரம் லீலை -மிதுனம் -பராத்பரன்
யமுனை திருவடி சிலர்சதுக்கு உயர்ந்து பெற்றயுடன் தாழ்ந்து வற்றி
மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் -அஹங்காரம் இல்லாமல் சரணாகதி
அவன் பால் குடித்ததை நினைக்கவே நாம் தாய் பாலைக் குடிக்க வேண்டாமே
பூதனை -அஞ்ஞானம் அஹங்காரம் மமகாராம் இரண்டு முலைகள்
சகடாசூரன் -இரட்டை அழித்து அருளுபவன்
காளிங்கன் -நளிர் பால் உண்டு-பிள்ளைப்பெருமாள் ஐயங்கார் –உள்ளும் புறமும்-அந்தர் பஹிஸ் ஸ ஸர்வ வ்யாபி
கட்டுண்ணப் பண்ணி -தானே பக்தியும் அளித்து
ப்ரமனுக்குப் பாடம் -தானே அனைத்துமாக இசைவித்து தன் தாள் இணைக் கொள்ளுபவன்
வெண்ணெய் திருடி -பக்குவப்பட்ட உள்ளம் -கொண்டல் வண்ணன் கோவலனாய் உள்ளம் கவர்ந்தவர் வெண்ணெய் உண்டான் -பாப மூட்டங்களைத் திருடி
கோவர்த்தன லீலை -குணங்கள் -குன்றாகக் காட்டி தாப த்ரயங்கள் போக்கி
வஸ்திர அபகரணம் -தீய குணங்கள் -விளக்கி -அவனே உபாயம் மஹா விச்வாஸம்
ராஸலீலை -முனிவர் நித்யம் தியானிக்க -நித்யம் பாராயணம் -முக்தன் அனுபவத்துக்கு முன்னோட்டம்
கம்ச வதம் -தன்னடையே விட்டுப் போம் -பிரபன்னன் கரைந்தான் ஆகில் நாஸ்திகன் ஆவானே -நிர்ப்பரோ நிர்ப்பயோஸ்மி
ஸாந்தீபனி -ஆச்சார்யர் சிஷ்யர் முறை மாறக் கூடாதே –
மஹா பாரதம் -மனஸ் குரு க்ஷேத்ரம் -7 அஷவ்னி நல்ல -11 அஷவ்னி தீய
அர்ஜுனன் ஜீவாத்மா -அஸ்தானே –
எழு நூற்று -எழுந்து நோற்க -பார்த்த சாரதி -நம்மைக் கடாக்ஷிக்கவே சாரதி -700 ஸ்லோகங்கள்
சர்வம் கிருஷ்ண அர்ப்பணம்
ருக்மிணி கல்யாணம் -ஐந்து சகோதரர்கள் புலன்கள் -தூதுவர் ஆச்சார்யர் முகமாகவே -பேறு
ஒரு முமுஷுவைப் பெற ஏழு எருதுகளின் 14 கொம்புகளில் பாய்ந்து கைக் கொள்ளுவான் -ஆத்மா விவாஹம்

————–

தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்த போது பதினாறு வகை தெய்வீகப் பொருட்கள் வெளிவந்தன.

அவற்றுள் வலம்புரிச் சங்கும் திருமகளும் வர மஹாவிஷ்ணு இடக்கையில் சங்கையும் வலக்கையில் தேவியையும் ஏற்றுக் கொண்டார்.

இதே போல் கிருஷ்ணருக்கும் பலராமருக்கும் வில்வித்தை கற்றுக் கொடுத்த சாந்திபனி முனிவருக்கு குருதட்சணையாக என்ன வேண்டும் என்று கேட்ட போது குருவின் மனைவி, கண்ணீர் விட்டபடி *பஞ்சஜனன்* என்ற கடல் அரக்கன் அவர்களது ஒரே மகனைக் கடத்திக் கொண்டு போய்க் கடற் பாதாள அறையில் வைத்திருப்பதாகவும் குருதட்சணையாக அவனை மீட்டுத் தரும்படியும் வேண்டினாள்.

கிருஷ்ணரும் பலராமரும் கடல் ராஜாவை அழைத்து வழி கேட்டுச் சென்று அரக்கனை எதிர்த்துப் போரிட்டுச் சாம்பலாக்கி விட்டு, குரு மகனை மீட்டுத் தந்தனர். பஞ்சஜனனின் சாம்பலே ஒன்று திரண்டு சங்காகியதால் -சங்கிற்குப் *பாஞ்சஜன்யம்* என்ற பெயர் ஏற்பட்டது.

இதை வெற்றியின் சின்னமாகக் கிருஷ்ண பரமாத்மா கையில் எடுத்துக் கொண்டு ஊதத் தொடங்கினார், அவரது வாழ்க்கையில் இடம்பெற்ற பஞ்சபாண்டவர்களில் ஐவருமே ஒவ்வொரு விதமான சங்கை வைத்திருந்ததாக பாகவதம் கூறுகிறது.

*தருமருடைய சங்கு – அனந்த விஜயம்*
*அர்ஜுனனுடையது – தேவதத்தம்*
*பீமனுடையது – மகாசங்கம்*
*நகுலனுடையது – சுகோஷம்*
*சகாதேவனுடையது -மணி புஷ்பகம்*

கடலில் பிறக்கும் சங்குகளில்

*மணி சங்கு*
*துவரி சங்கு*
*பாருத சங்கு*
*வைபவ சங்கு*
*பார் சங்கு*
*துயிலா சங்கு*
*வெண் சங்கு*
*பூமா சங்கு*

என்ற எட்டு வகை சங்குகள் உள்ளன. இவற்றில் வலம்புரி சங்குதான் மிகவும் சக்தி வாய்ந்ததாக ஆகமமும், சாஸ்திரங்களும் சொல்வதைக் காணலாம். மேலே உள்ள இந்த சங்குகள் ஒவ்வொரு தெய்வத்தின் கரங்களில் இருப்பதாக விகனச ஆகமவிதியில் கூறப்பட்டுள்ளது.

*திருப்பதி பெருமாளுக்கு – மணி சங்கும்*
*ரெங்கநாதருக்கு – துவரி சங்கும்*
*அனந்த பத்மநாப சுவாமிக்கு – பாருத சங்கும்*
*பார்த்தசாரதி பெருமாளுக்கு – வைபவ சங்கும்*
*சுதர்ஸன ஆழ்வாருக்கு – பார் சங்கும்*
*சவுரிராஜப் பெருமாளுக்கு – துயிலா சங்கும்*
*கலிய பெருமாளுக்கு – வெண் சங்கும்*
*ஸ்ரீ நாராயண மூர்த்திக்கு – பூமா சங்கும்* உள்ளன.

வலம்புரிச் சங்கு என்கிற கடல் வாழ் நத்தையின் கூட்டை வழிபட்டால் நம்மைத் தேடி மகாலட்சுமி வருவாள் என்று வேதவாக்கியம் சொல்கிறது. நம் வீட்டில் வலம்புரிச் சங்கு பூஜை, முறையாக நடைபெற்றால் பிரம்மஹத்தி தோஷமும் அகன்று விடுகிறது. இதை

*சங்க மத்யே ஸ்திதம் தோயம் ப்ராமிதம் சங்கரோபரி*
*அங்க லக்ஷ்ணம் மனுஷ்யானாம் ப்ரம்மஹத்யாதிகம் தஹேத்*

என்ற வரிகளால் அறிந்து கொள்ளலாம். வாஸ்துக் குறை வீட்டில் காணப்பட்டால் மஞ்சள் நீரும் துளசியும் சங்கில் இட்டுக் காலையில் தெளித்து விட்டால் குறைகள் நீங்குவதாக ஐதீகம் இருக்கிறது.

முற்காலங்களில் மக்கள் செல்வச் செழிப்போடு வாழ்ந்து வந்ததற்குக் காரணம், வீடு கட்டும்போது ஐந்து வெள்ளிக் கிழமைகள் லக்ஷ்மி வஸ்ய பூஜை செய்த வலம்புரிச் சங்கை வீட்டு நிலை வாசற் படியில் வைத்து – நடு ஹாலில் சங்கு ஸ்தாபன பூஜை செய்து திருமகள் மற்றும் வாஸ்து பகவானை வழிபட்டார்கள். எந்தக் குறைவும் இல்லாமல் அவர்களால் வாழ முடிந்தது.

————-

கண்ணன் கதைகள் (1)

பக்தர்கள் விரும்பும் வடிவத்தில் பகவானைப் பார்க்க முடியும்

முன்னொரு சமயம் வில்வமங்கலம் ஸ்வாமிகளிடம் வாரியர் என்ற பக்தன் வேலை செய்து வந்தான். அவனுக்கு முறைப்படி பூஜை செய்யவோ, தியானம் செய்யவோ தெரியாது. அவன் ஒரு நாள் ஸ்வாமிகளிடம், “நான் குருவாயூரப்பனை எவ்வாறு தியானம் செய்ய வேண்டும்? அருள் கூர்ந்து எனக்கு சொல்லுங்கள்” என்று வேண்டினான். அவரோ அலட்சியமாக, “ஒரு பெரிய கொம்புள்ள எருமை போல் நினைத்து பூஜிக்க வேண்டும்” என்று சொன்னார். அவனும் அதை உண்மையென நம்பி அவ்வாறே பூஜித்து வந்தான்.

ஒரு நாள் ஸ்வாமிகளுடன் அவன் கோயிலுக்கு சென்றிருந்தான். அப்போது “ஸ்ரீவேலி” பூஜைக்காக உற்சவ விக்ரஹத்தை நம்பூதிரி எடுத்துக் கொண்டு வெளியில் வர முயற்சித்தார். வாசற்படியைத் தாண்ட முடியவில்லை. தாண்டும்போது ஏதோ இடிக்கும் சத்தம் மட்டும் கேட்கிறது. எது இடிக்கிறது என்று தெரியவில்லை, தாண்டவும் முடியவில்லை. ஸேவிக்க வந்த அனைவரும் கவலையுற்றனர். அங்கு இருந்த ஸ்வாமிகளிடம் அது பற்றிக் கேட்டனர். அவருக்கும் ஒன்றும் புரியவில்லை. அப்பொழுது, வேலையாளான பக்தன் நம்பூதிரியிடம், “நிதானமாக எடுத்து வாருங்கள், கொம்பு இடிக்கிறது, சற்று சாய்த்து எடுத்து வாருங்கள்” என்று சொன்னான். அதன்படி செய்ததும் விக்ரஹத்தை எடுத்து வர முடிந்தது. வில்வமங்கலம் ஸ்வாமிகள், “என்ன பிதற்றுகிறாய்”? என்று அவனைக் கடிந்து கொண்டார். அவனோ, “ஸ்வாமி, எருமையின் கொம்பு இடித்ததால் சொன்னேன்” என்று பணிவுடன் கூறினான். உடனே வில்வமங்கலத்திற்குத் தான் முன்பு சொன்னது நினைவுக்கு வந்தது. கண்களை மூடித் தியானித்தபோது அவரது மனக்கண்ணில், சங்கு, சக்கரம், கதை, பத்மத்துடன் ஒரு தெய்வீக எருமை தெரிந்தது !!!!

உடனே, அவர் அந்த பக்தனிடம், என்னை மன்னிக்க வேண்டும் என்று வேண்டினார். அவனும், நான் எவ்வாறு பூஜிக்க வேண்டும் என்று  எனக்குச் சொல்லித் தாருங்கள் என்று கூற, அவர் சந்தோஷத்துடன், “ஸ்ரீ குருவாயூரப்பனை சூர்யனை விடப் பிரகாசமான கிரீடம், மேல் நோக்கியுள்ள திலகத்தால் அழகிய கருணை பொங்கும் கண்கள், புன்சிரிப்புடன் கூடிய செவ்வாய், மீனைப் போன்ற நாசி, கன்னங்களில் ஒளி வீசும் மகர குண்டலங்கள், மார்பை அலங்கரிக்கும் கௌஸ்துப மணி, வனமாலை, முத்துமாலை, ஸ்ரீவத்ஸம், நான்கு கரங்களில் தோள்வளைகள், கங்கணம், சிறந்த ரத்னங்களால் இழைத்த மோதிரம், மேலும், கரங்களில் சங்கம், சக்ரம், கதை, தாமரை, இடுப்பில் பொன் அரைஞாண், பீதாம்பரம், தாமரை மலரை ஒத்த திருவடி கொண்ட அழகிய திருமேனியுடன் தியானம் செய்து பூஜை செய்ய வேண்டும்” என்று கூறினார். அந்த பக்தனும் அவ்வாறே தியானம் செய்து பூஜைகளை அனுஷ்டித்து நற்கதி அடைந்தான். இதிலிருந்து, “ பக்தர்கள் விரும்பும் வடிவத்தில் பகவானைப் பார்க்க முடியும் என்பதையும், பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் மனிதனின் தர்க்கத்திற்கும், கற்பனைக்கும் அப்பாற்பட்டவர்” என்பதையும் நாம் அறியலாம்.

————–

கண்ணன் கதைகள் (2)

மஞ்சுளாவின் மலர்மாலை

கிழக்கே இருந்து குருவாயூருக்குள் நுழையும் போது முதலில் தென்படுவது அடிப்பகுதியில் பிரம்மாண்டமான கருடனுடன் கூடிய ஒரு பெரிய ஆலமரம். இது “மஞ்சுளால்”, அதாவது மஞ்சுளாவின் ஆலமரம் என்று அழைக்கப்படுகிறது.

வாரியார் வகுப்பைச் சேர்ந்த மஞ்சுளா, மனப்பூர்வமான பக்தியுள்ள பெண். ஒவ்வொரு இரவும், அவள் மலர் மாலைகளைக் கட்டி, குருவாயூர் கோயிலில் கொண்டு கொடுப்பாள். மேல்சாந்தி அம்மாலையை அப்பனுக்கு ஸமர்ப்பிப்பார். ஒரு நாள் அவள் தாமதமாக வந்ததால், கிழக்கு நடையில் உள்ள ஆலமரத்தின் அருகே வரும்போதே கோவில் மூடப்பட்டு விட்டது. கண்களில் நீர் வழிய, மிகுந்த மன வேதனையுடன் அம்மரத்தின் அருகே அவள் நிற்பதைக் கோவிலில் இருந்து திரும்பிக் கொண்டிருந்த பூந்தானம் நம்பூதிரி கண்டார். அவர், அவளுக்கு ஆறுதல் கூறி, “ இறைவன் எல்லா இடத்திலும் உள்ளார். அதனால் நீ மாலையை ஆலமரத்தின் அடியில் உள்ள கல்லில் வைத்து விடு, அவர் அதை ஏற்றுக் கொள்வார்” என்று கூறினார். அவளும் நம்பிக்கையுடன் அந்த மாலையை மரத்தின் அடியில் வைத்துவிட்டு மனநிம்மதியுடன் வீடு சென்றாள்.

அடுத்த நாள் ஒரு அதிசயத்துடன் விடிந்தது. நிர்மால்ய தரிசனத்திற்குப் பிறகு, மேல்சாந்தி விக்ரகத்தின் மீதிருந்த முந்தைய நாள் மாலைகளை அகற்றினார். மிகவும் முயற்சித்தும் ஒரு மாலை மட்டும் அகற்ற முடியாமல் சிக்கிக்கொண்டு இருந்தது. நிர்மால்ய தரிசனத்திற்கு வந்திருந்த அனைவரும் வியந்தனர். அப்போது அங்கிருந்த பூந்தானம் நம்பூதிரிக்கு முதல் நாள் இரவு நடந்த சம்பவம் நினைவுக்கு வந்தது. “அது மஞ்சுளாவின் மாலையென்றால் அதுவும் வரட்டும்” என்று உரக்கக் கூவினார். உடனே அப்பனிடம் சிக்கிக் கொண்டிருந்த மாலை நழுவி, கீழே விழுந்தது. அனைவரும் ‘ஹரே கிருஷ்ணா’ என்று கோஷமிட்டுக் கொண்டே மஞ்சுளாவின் மாலையிலிருந்த பூக்களை எடுத்துக் கொண்டனர். ஆலமரத்தை நோக்கி அதனை வழிபட விரைந்தனர். அது முதல் அந்த மரம் “மஞ்சுளால்/மஞ்சுளா ஆல்” என்று அழைக்கப்படுகிறது.

உற்சவத்தின் முதல் நாள் நடத்தப்படும் ‘ஆனையோட்டம்’ (யானைப் பந்தயம்), கிழக்கு நடையில் உள்ள இந்த ‘மஞ்சுளால்’ என்ற மரத்தில் இருந்துதான் தொடங்குகிறது.

—————

கண்ணன் கதைகள் (3)

கொம்பு முளைத்த தேங்காய்

ஒரு கிராமவாசி பல தென்னங்கன்றுகளை நட்டான். தனது தென்னை மரங்களில் இருந்து காய்க்கும் முதல் தேங்காய்களை குருவாயூரப்பனுக்குக் காணிக்கை அளிப்பதாய் வேண்டிக்கொண்டான். மரங்கள் காய்க்கத் தொடங்கிய போது, அவன் மரங்களில் இருந்து முதல் தேங்காய்களைச் சேகரித்து, கோணியில் கட்டிக் கொண்டு குருவாயூர் கோவிலுக்குப் பயணித்தான்.

போகும் வழியில் ஒரு கொள்ளைக்காரன் வழிமறித்து “கோணிப் பையில் உள்ளதைக் கொடுத்துவிடு” என்று மிரட்டினான். கிராமவாசியோ, “இதில் தேங்காய்கள் உள்ளன. அவை குருவாயூரப்பனுக்குச் சொந்தமானவை” என்று கூறி தர மறுத்தான். கொள்ளைக்காரன் அலட்சியமாக, “ குருவாயூரப்பனின் தேங்காய் என்று ஏதாவது இருக்கிறதா? அதற்குக் கொம்புகள் இருக்கிறதா என்ன ? என்று கூறிக் கொண்டே கிராமவாசியின் கைகளில் இருந்து கோணியைப் பற்றி இழுத்தான். தேங்காய்கள் வெளியே சிதறின. அதிசயப்படும்படியாக ஒவ்வொரு தேங்காய்க்கும் கொம்பு முளைத்திருந்தது! திருடன் மனம் திருந்தி, குருவாயூரப்பனிடம் மன்னிப்பு கேட்டு, அந்த கிராமவாசியைப் போக விட்டான். கிராமவாசியும் தான் வேண்டிக்கொண்டபடியே தேங்காய்களைக் கோயிலில் காணிக்கையாகக் கொடுத்தான். இன்று கூட பக்தர்கள், கொம்புகள் உள்ள அந்தத் தேங்காய்களை, குருவாயூர்க் கோயிலின் முன் மண்டபத்தில் கட்டப்பட்டிருப்பதைப் பார்க்கலாம்.

————–

கண்ணன் கதைகள் (4)

கண்ணனும் முருகனும் நண்பர்கள்

கேரளத்தில் இரண்டு நண்பர்கள் ஒன்றாக வசித்து வந்தனர். ஒருவனுக்கு குருவாயூரப்பன் இஷ்ட தெய்வம். மற்றொருவனுக்கு முருகன் இஷ்ட தெய்வம். இருவரும் சேர்ந்து அவர்களது வீட்டில் ஒரு கதளி வாழை மரத்தை நட்டனர். முதல் நண்பன், வாழை மரம் கிழக்குப் பக்கம் குலை தள்ளினால் குருவாயூரப்பனுக்கு ஸமர்ப்பிப்பதாக வேண்டிக் கொண்டான். முருக பக்தனோ மேற்குப் பக்கம் குலை தள்ளினால் முருகனுக்கு ஸமர்ப்பிப்பதாக வேண்டிக்கொண்டான். இருவரும் வாழை மரத்தை நன்கு பாதுகாத்து வந்தனர். வாழை குலை தள்ளும் பருவமும் வந்தது. அது ஆகாயத்தை நோக்கிக் குலை தள்ளியது.

இதனால் நண்பர்களிடையே சண்டை உண்டானது. காய் முற்றிப் பழுத்த பிறகும் கூட, குலை எந்தப் பக்கமும் சாயாமல் நின்றது. இருவரும் செய்வதறியாது கலங்கினர். ஒரு நாள் இரவு, முருகன் தனது பக்தனது கனவில் தோன்றி, “ பக்தனே! நீ பழத்தை குருவாயூரப்பனுக்கே ஸமர்ப்பித்துவிடு. அதுவே எனக்கு சந்தோஷத்தைக் கொடுக்கும். நாங்கள் இருவரும் நண்பர்கள்தான். நீயும் உன் நண்பனுடன் பிரியமாகப் பழகு” என்று கூறி மறைந்தார். உடனே விழித்த அவன், சொப்பனத்தைத் தன் நண்பனிடம் சொன்னான். இருவரும் கதளிப்பழத்தை குருவாயூரப்பனுக்கு ஸமர்ப்பித்தனர்.

இன்றும் குருவாயூரில், துலாபாரத்தின் போது எடைக்கு எடை கதளிப்பழத்தை வேண்டுதலாக ஸமர்ப்பிக்கும் வழக்கம் இருக்கிறது.

————-

கண்ணன் கதைகள் (5)

குசேலரின் கதை

குசேலோபாக்யானம்

மார்கழி மாத முதல் புதன்கிழமை “குசேலர் தினம்” என்று கொண்டாடப்படுகிறது.

ஸாந்தீபனி முனிவரிடம் கண்ணனும், சுதாமா (குசேலர்) என்ற பிராமணரும் ஒன்றாக குருகுலம் பயின்றார்கள். கிருஹஸ்தனான அவர் கண்ணனிடத்தில் மிகுந்த பக்தி பூண்டிருந்ததால், செல்வங்களில் பற்றற்றவராய்ப் புலன்களை அடக்கி, தன்னுடைய நாட்களைக் கழித்தார். அவருடைய மனைவியும் அவரைப் போன்ற குணங்கள் உள்ளவளாய் இருந்தாள். வறுமையில் குழந்தைகளைப் பேண முடியாததால், ஒரு நாள் அவள் தன் கணவரிடம், லக்ஷ்மீபதியான கிருஷ்ணர் உங்கள் நண்பரல்லவா? வாழ்வதற்குப் பொருளைப் பெற ஏன் அவரை அணுகக்கூடாது? என்று கேட்டாள். பசியின் துன்பத்தாலேயே அவள் அவ்வாறு கூறினாள். செல்வம் கர்வத்தை உண்டாக்கி வாழ்க்கையைக் குலைக்கும் என்று அவர் உணர்ந்திருந்தாலும், கண்ணனைப் பார்க்க வேண்டும் என்ற ஆவலால், தனது வஸ்திரத்தின் நுனியில் மூன்று பிடி அவலை முடிந்துகொண்டு, காணிக்கையாய் எடுத்துச் சென்றார்.

கிருஷ்ணர் இருக்கும் துவாரகா நகரத்தை அடைந்தார். கிருஷ்ணனுடைய மாளிகைக்குள் நுழைந்ததும் வைகுண்டத்தில் இருப்பது போன்ற ஆனந்தத்தை அடைந்தார். பகவான் கிருஷ்ணர்,  அவரை வரவேற்று உபசரித்ததும் விளக்கமுடியாத ஆனந்தமடைந்தார்.  கிருஷ்ணர், அவருடைய கைகளைப் பற்றிக் கொண்டு குருகுலத்தில் நடந்த பழைய சம்பவங்களை நினைவு கூர்ந்தார். குருபத்தினிக்கு விறகு கொண்டு வர காட்டுக்குச் சென்றபோது மழையில் நனைந்ததைப் பற்றிப் பேசினார்..

கொண்டு வந்த அவலைக் கொடுக்க வெட்கப்பட்டுத் தயங்கிய குசேலரிடமிருந்து கட்டாயப்படுத்தி அவலை வாங்கி ஒரு பிடியை உண்டார். இரண்டாவது பிடியை எடுத்ததும், “போதும், போதும்” என்று மகாலக்ஷ்மியான ருக்மிணி கிருஷ்ணருடைய கையைப் பிடித்துத் தடுத்தாள். (இதற்குமேல் உண்டால் கொடுப்பதற்குப் பொருள் ஒன்றும் இல்லை என்று அர்த்தம்). பக்தர்களுக்கு அடியவனான கிருஷ்ணர், குசேலரை மிகவும் உபசரித்தார். குசேலர், மிகவும் மகிழ்ச்சியுடன் அன்று இரவு கிருஷ்ணருடன் தங்கினார். மறுநாள் பொருள் எதுவும் பெறாமல் தன்னுடைய ஊருக்குத் திரும்பினார்.

” பொருள் வேண்டும் என்று கேட்டிருந்தால் கிருஷ்ணன்  கொடுத்திருப்பார். மனைவியிடம் எவ்வாறு சொல்வது?” என்று வழிநெடுக யோசித்துக் கொண்டே சென்றார். அவரது மனம் முழுக்க பகவான் கிருஷ்ணருடைய புன்னகையும், பேச்சுக்களும் நிறைந்திருந்தது.

அப்போது அவர் பிரகாசம் மிக்க ரத்தினங்களால் விளங்கும் ஒரு மாளிகையை அடைந்தார். க்ஷணநேரம் வழி தவறி வந்து விட்டோமோ என்று திகைத்து, பின்னர் வீட்டினுள் நுழைந்தார். உள்ளே தோழிகள் சூழ, ரத்தினங்களாலும், தங்கத்தினாலும் ஆன ஆபரணங்கள் அணிந்திருக்கும் தன் மனைவியைக் கண்டார். கிருஷ்ணனுடைய கருணை மிக அற்புதமானது, ஆச்சர்யமானது என்று அறிந்தார்.

ரத்னமயமான மாளிகையில் வசித்துக் கொண்டு இருந்தாலும் அவர் கண்ணனிடமே மனதைச் செலுத்தி மிகுந்த பக்தி உடையவராய் இருந்தார். இறுதியில் மோக்ஷத்தையும் அடைந்தார்.

பகவான் கிருஷ்ணரை சந்திக்க குசேலர் அவலை எடுத்துச் சென்றது ஒரு மார்கழி மாத முதல் புதன்கிழமை. அதனால், மார்கழி மாத முதல் புதன்கிழமை “குசேலர் தினம்” என்று கொண்டாடப்படுகிறது. குருவாயூர் கோவிலில் பக்தர்கள் அன்றைய தினம் குருவாயூரப்பனான உன்னிக்கண்ணனுக்கு அவல் ஸமர்ப்பித்து வழிபடுவர். மார்கழி மாத முதல் புதன்கிழமையன்று  கண்ணனுக்கு அவல் நிவேதனம் செய்து வழிபட்டால் வீட்டில் செல்வம் செழிக்கும் என்பது நம்பிக்கை. வீடுகளில் அன்றைய தினம் “குசேலோபாக்யானம்” (குசேலரின் கதை) பாராயணம் செய்வார்கள். கையகலத்திற்கு ஒரு சிறிய சிவப்பு வஸ்திரம் (கண்ணனின் கௌபீனம் என்று ஐதீகம்) மடித்து வைத்து , அவல், வெல்லம் வைத்து வழிபடுவார்கள். பிறகு அந்த அவலை சிறு சிறு  கிழியாகக் (சிறிய மூட்டையைப் போல்) கட்டி அனைவருக்கும் விநியோகம் செய்வார்கள்.

இந்த கதையைப்  படித்து, அவலும் வெல்லமும் நைவேத்யம் செய்து கண்ணனை வழிபடலாம். பக்தர்களுடைய விருப்பத்தை குருவாயூரப்பன் நிச்சயம் நிறைவேற்றுவான். அது சரி, அதென்ன  சிவப்பு வஸ்திரம்? அதுவும் கண்ணனின் கௌபீனமா? அடுத்த கதைக்குப் பொறுத்திருங்கள்.

————

கண்ணன் கதைகள் (6)

சிவப்புக் கௌபீனம்

முந்தைய பதிவான “கண்ணன் கதைகள் (5)” -ல் சிவப்புக் கௌபீனம் பற்றிப் படித்திருப்பீர்கள். அதென்ன சிவப்புக் கௌபீனம்? குருவாயூரப்பனின் லீலைகளில் அதுவும் ஒன்றாகும்.

முன்னொரு சமயம் ஒரு வயதான மூதாட்டி இருந்தாள். அவள் குருவாயூர்க் கண்ணனின் தீவிர பக்தை. அவள், ஒவ்வொரு நாளும் காலையிலும் மாலையிலும் குருவாயூரப்பனின் ஸன்னிதிக்குச் சென்று தரிசனம் செய்து, மனமுருக வழிபடுவது வழக்கம். ஒரு நாள் “சீவேலி” தரிசனம் முடிந்து வீட்டுக்குச் செல்லும்போது பெருங்காற்றுடன் கனமழை பெய்தது. அந்த நாட்களில் சாலை விளக்குகள் கிடையாது. இருட்டில் வழி தவறிவிட்டது. மிகுந்த கவலையோடு, குருவாயூரப்பனின் நாமங்களைச் சொல்லிக்கொண்டே சென்று கொண்டிருந்தாள். அப்போது, ஒரு சிறிய பையன் அவள் முன் தோன்றி, “ பாட்டி, கவலைப் படாதீர்கள். உங்களை நான் வீட்டில் கொண்டு விடுகிறேன்” என்று சொன்னான். மழையில் இருவரும் தெப்பமாக நனைந்து விட்டனர். பேசிக் கொண்டே பாட்டியின் வீட்டை அடைந்தார்கள்.

வீட்டை அடைந்ததும் அந்த சிறுவனுக்கு நன்றி சொல்லி, “உன் பெயர் என்ன?” என்று கேட்டாள். அதற்கு அவன் ‘கோபாலன்’ என்று சொன்னான். மூதாட்டி, “ நீ செய்திருக்கும் உதவிக்கு உனக்கு ஏதாவது நான் தர வேண்டும், என்ன வேண்டும்? கேள்” என்று சொன்னாள். அவனும், “ மழையில் என் துணி நனைந்துவிட்டது. எனக்கு உம்முடைய புடவையிலிருந்து ஒரு கௌபீனம் தாருங்கள் போதும்” என்று கூறினான். அவள் சுற்றிப் பார்த்த பொழுது ஒரு சிவப்புப் புடவை இருந்தது. அதிலிருந்து ஒரு சிறு பகுதியைக் கிழித்து அவனிடம் கொடுத்தாள். அவனும் பெற்றுக் கொண்டு சென்றான்.

அடுத்த நாள் காலை, நிர்மால்ய தரிசனத்திற்காக ஸன்னிதியின் கதவைத் திறந்தபோது, மூர்த்திக்கு சிவப்பு வர்ணக் கௌபீனம் கட்டியிருப்பதைக் கண்டு அனைவரும் அதிசயித்தனர். முதல் நாள்  நன்கு அலங்காரம் செய்யப்பட்ட கண்ணன் இப்போது எப்படி கௌபீனத்தோடு காட்சி அளிக்கிறான்? என்று ஆச்சர்யமடைந்தனர்.. கண்ணனின் திவ்ய மேனி அனைவரையும் மயக்கும் வண்ணம் இருந்தது.

வழக்கம்போல் தரிசனத்திற்காக வந்திருந்த மூதாட்டியும் மகிழ்ந்து அனைவரிடமும் முந்தைய நாள் நடந்தவற்றைச் சொன்னாள். தன்னுடைய சிறிது கிழிந்த புடவையையும் காண்பித்தாள். அதன் கிழிந்த பகுதி, குருவாயூரப்பனின் கௌபீனமாக இருப்பதைக் கண்ட அனைவரும் வியந்தனர். மூதாட்டி, இந்த தெய்வீக நாடகத்தையும், குருவாயூரப்பன் தனக்கு அனுக்ரஹம் செய்ததையும் எண்ணியெண்ணி ஆனந்தித்தாள். அன்று முதல் ஸ்ரீ குருவாயூரப்பனுக்கு இரவில் சிவப்புக் கௌபீனம் சாற்றுவது வழக்கமாக இருந்து வருகிறது.

————–

கண்ணன் கதைகள் (7)

அம்பரீஷ சரித்திரம்

ராமபிரானின் முன்னோர்களில் ஒருவரான இக்ஷ்வாகு மிகவும்  புகழ் வாய்ந்தவர். அதனால் அந்த வம்சமே ‘இக்ஷ்வாகு வம்சம்’ என்று  பெயர் பெற்றது. இக்ஷ்வாகுவின் தந்தை  வைவஸ்வத மனு. வைவஸ்வத மனுவுக்கு பத்து புத்திரர்கள்.  அவர்களில் ஒரு பிள்ளை நபகன். அவனுடைய பிள்ளை நாபாகன். அவனுக்கு அம்பரீஷன் என்ற மகன் பிறந்தான்.

அம்பரீஷன் சிறந்த  பக்திமான். அவன் ஏழு கடல்களால் சூழப்பட்ட பூமிக்குத் தலைவனாக இருந்தான். இருப்பினும், விஷ்ணுவிடத்திலும், அவரது பக்தர்களிடத்திலும் அன்பு கொண்டு வாழ்ந்து வந்தான்.விரதங்களை மிகுந்த சிரத்தையுடனும் பக்தியுடனும் அனுஷ்டித்து வந்தான். விஷ்ணுவிடத்தில் கொண்ட பக்தியால், அனைத்து கர்மங்களையும் ஒன்றுவிடாமல் செய்து வந்தான். அவன் கேட்காமலேயே, அவனையும் அவன் நாட்டையும் காப்பதற்கு, ஆயிரக்கணக்கான முனைகளையுடைய சக்ராயுதத்தை விஷ்ணு அளித்தார்.

மகாவிஷ்ணுவிற்கு உகந்த  நாளான ஏகாதசிக்கு நிகரான விரதம் இல்லை என்பதை நன்கு அறிந்த அவன், ஏகாதசி விரதத்தை விவரம் தெரிந்த  நாள் முதல் கடைப்பிடித்து வந்தான். ஏகாதசிக்கு முதல் நாளான தசமியன்று இரவு முதல் உண்ணாமல் இருந்து, மறுநாள் ஏகாதசி முழுவதும் உபவாசமிருந்து விஷ்ணுவைப் பூஜித்து, அதற்கு அடுத்த  நாள் துவாதசியன்று அதிதிகளுக்கு உணவளித்து,  பின் பாரணை செய்வது (உணவு உண்பது) என்ற நியதி மாறாமல் பின்பற்றி வந்தான்.

ஒரு முறை அம்பரீஷன், யமுனைக் கரையில் உள்ள மதுவனத்தில், நற்குணங்கள் கொண்ட தன் மனைவியுடன், தியானம் செய்ய வந்தான். அறுபது கோடிப் பசுக்களை வேதமறிந்தவர்களுக்குத் தானம் செய்தான். ஒரு வருட காலம் துவாதசி விரதத்தை அனுஷ்டித்துத் தங்களைப் பூஜித்து வந்தான். விரதம் முடிந்து பாரணை செய்ய வேண்டிய நாளில் துர்வாசர் அம்பரீஷனின் மதுவனத்திற்கு வந்தார். அம்பரீஷன் அவரிடம் போஜனம் செய்ய வேண்டினான். விரைவில் கோபம் கொள்ளும் அவரும் சம்மதித்து, மெதுவே யமுனை நதிக்கு நீராடச் சென்றார். வெகு நேரமாகியும் நீராடச் சென்ற  முனிவர் வரவில்லை. துவாதசி திதி முடிவடையும் நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது. அதற்குள் பாரணையை முடிக்கவேண்டும் இல்லையேல் ஏகாதசி விரதம் தவறிவிடும். அதிதி போஜனமும் ஆகவில்லை. செய்வதறியாமல்  திகைத்த அவன் கற்றறிந்தவர்களிடம் ஆலோசனை கேட்டான்.   அவர்களும், “துர்வாசர் வராமல் பாரணை செய்வது தவறு. துவாதசி திதி முடிய சிறிது நேரமே உள்ளது.  அந்த நேரத்திற்குள் சிறிது துளசி தீர்த்தம் உட்கொண்டால் பாரணை செய்த மாதிரியாகிவிடும். முனிவர் வந்தபின் அவருக்கு போஜனம் செய்வித்துப் பிறகு உண்ணலாம்” என்று கூறினர். அம்பரீஷன், வேறு வழியின்றி துளசி தீர்த்தம் பருகி விரதத்தை முடித்துக் கொண்டான்.  முனிவருக்காகக் காத்திருந்தான்.

அரசனான அம்பரீஷன், பாரணை செய்யவேண்டிய திதி முடியப்போகிறதே என்ற கவலையில் தீர்த்தத்தைக் குடித்துப் பாரணையை முடித்தான். ஞான திருஷ்டியால் அதை அறிந்த முனிவர், கோபத்துடன் கடுஞ்சொற்களால் அம்பரீஷனைத் தூஷித்து, ” என்னை நீ அவமதித்து விட்டாய்” என்று கூறி, தன்னுடைய ஜடையைப் பிய்த்து எறிந்து, அதிலிருந்து ‘க்ருத்யை’ என்ற துர்தேவதையை உண்டாக்கி, “அம்பரீஷனை அழித்துவிட்டு வா” என்று ஏவினார். கையில் கத்தியுடன், உலகங்களை எரிக்கும் அந்த துர்தேவதையை நேரில் கண்ட அம்பரீஷன் சிறிதும் நகராமல் இருந்தான். சுதர்சன சக்கரமானது, அவனுக்கு நேர்ந்த தீங்கைப் பார்த்து அந்த க்ருத்யையை அழித்து, துர்வாசரைப் பின்தொடர்ந்து சென்றது. பயத்தினால் முனிவர் எல்லா உலகங்களுக்கும் ஓடினார். எல்லா இடத்திற்கும் சக்ராயுதம் பின்தொடர்ந்ததைக் கண்டு பிரமனை சரணடைந்தார். காலச்சக்கரத்தை யாரால் எதிர்க்க முடியும் என்று பிரம்மதேவர் முனிவரை அனுப்பிவிட்டார். பிறகு, பரமசிவனிடம் சென்றார். அவரும் தங்களை சரணடைய உபதேசம் செய்தார். கடைசியாக முனிவர் வைகுண்டத்தை அடைந்து, எங்கும் நிறைந்த மகாவிஷ்ணுவை சரணடைந்தார். விஷ்ணுவோ,”முனிவரே! நான் பக்தர்களுக்கு அடியவன். அறிவும், தவமும் அகங்காரமில்லாமல் இருக்க வேண்டும். நீங்கள் அம்பரீஷனையே சரணடையுங்கள்” என்று சொல்லிவிட்டார். முனிவரும் அம்பரீஷனின் கால்களைப் பற்றினார். அவன் விலகி, சக்ராயுதத்தைத் துதிக்க, அது திரும்பிச் சென்றது. இதற்குள் ஒரு வருடம் ஆகிவிட்டது. அம்பரீஷனும். ஒரு வருடம் துர்வாசரை எதிர்பார்த்து, உண்ணாமல் விரதமிருந்து, அவர் வந்ததும் அவருக்கு உணவளித்து, வழியனுப்பி, பிறகு பாரணை செய்தான். துர்வாசரும், அம்பரீஷனின் பக்தியையும், தீங்கு செய்தவர்களுக்கும் நன்மை செய்யும் குணத்தையும் மெச்சி அவனை ஆசீர்வதித்தார்.

அம்பரீஷன், முன்பு இருந்ததைவிட அதிகமாய் மகாவிஷ்ணுவிடம் பக்தி கொண்டு முக்தி அடைந்தான்.

————–

கண்ணன் கதைகள் (8)

உதவி சமையற்காரன்

ஒரு சமயம், ஒரு பக்தர் 100 படி அரிசி சமைத்து கோயிலில் அன்னதானம் செய்ய விரும்பினார். குருவாயூர்க் கோயிலில், வெளியாட்கள் சமைக்கவோ, சமைத்துக் கொண்டு வந்து கொடுக்கவோ முடியாது. கோயிலின் மடப்பள்ளியில் கீழ்சாந்திகள் (உதவி புரிபவர்) தான் சமைப்பார்கள்.

கோவிலில் மொத்தம் இரண்டு கீழ்சாந்திகளே இருந்தனர். அதிலும் ஒரு கீழ்சாந்தி விடுப்பில் சென்றிருந்தார். மல்லிசேரி நம்பூதிரி என்ற மற்றொரு கீழ்சாந்திதான் ஒருவனாக எவ்வாறு அவ்வளவு சமைப்பது என்று மிகுந்த கவலை கொண்டார். எப்படி அவ்வளவு ஏற்பாடுகளைச் செய்வது என்ற கவலையுடன் தூக்கமில்லாமல் இரவைக் கழித்தார். இரவு முழுவதும் நாராயண நாமத்தை உச்சரிப்பதைத் தவிர வேறு ஒன்றும் செய்யவில்லை.

அடுத்த நாள், அதிகாலையிலேயே கோவிலுக்குச் சென்றுவிட்டார். வேலைகளைச் செய்யத் தொடங்கினார். விடுமுறையில் சென்றிருந்த கீழ்சாந்தி அவர்க்கு முன்பாகவே வந்து விருந்து தயார் செய்ய ஆரம்பித்திருந்தார். சமையல் முடியும் தருவாயில் இருந்ததைப் என்று பார்க்க நிம்மதியாக இருந்தது. சமையல் முடிந்த பிறகு அந்த கீழ்சாந்தி நாராயண சரஸில் குளித்து விட்டு வருகிறேன் என்று சொல்லிச் சென்றார். வெகு நேரமாகியும் திரும்பி வரவில்லை. விருந்தும் நல்லபடியாகவே முடிந்தது.

அடுத்த நாளும் அவர் வரவில்லை. அவரை அழைத்து வரச் சொல்லி ஒருவரை அனுப்பினார். என்ன ஆச்சர்யம்! விடுமுறையில் சென்ற கீழ்சாந்தி சென்றது முதல் படுத்த படுக்கையாக இருப்பதாகத் தகவல் வந்தது. நம்பமுடியாததாய் இருந்தாலும் அவருக்கு உதவியாளராக வந்தது அந்தக் கண்ணனே என்பது மல்லிசேரிக்குப் புரிந்தது. குருவாயூரப்பனின் திருவிளையாடலை எண்ணி மிகவும் வியந்து மகிழ்ந்தார். நம்பியவரைக் காக்க இறைவன் எந்த உருவிலும் வருவார்!!

————

கண்ணன் கதைகள் – 10

சதுரங்க விளையாட்டு

கேரளத்திலுள்ள அம்பலப்புழா, ‘தென்னகத்து துவாரகை’ என்று பக்தர்களால் போற்றப்படுகிறது அம்பலப்புழா கிருஷ்ணர் கோயிலை தேவ நாராயணன் தம்புரான் என்ற மன்னன் கட்டியதாக வரலாறு. மூலவர் இங்கு குழந்தை கிருஷ்ணராகக் காட்சி தருகிறார். திப்பு சுல்தானின் படையெடுப்பின்போது குருவாயூர் உற்சவ மூர்த்தியை இங்கு வைத்திருந்ததாகச் சொல்கிறார்கள். இந்தக் கோயிலின் நைவேத்தியமான “அம்பலப்புழா பால் பாயஸம்” மிகவும் பிரசித்தி பெற்றது. குருவாயூரில் காலையில் பால் பாயசம் சாப்பிடும் கண்ணன், மதியம் அம்பலப்புழாவிற்குப் பால் பாயசம் சாப்பிட வருவதாக ஐதீகம். அம்பலப்புழா பால் பாயஸத்தைப் பற்றிய சுவையான கதை ஒன்று உண்டு.

கண்ணனின் சதுரங்க விளையாட்டும் அம்பலப்புழா பால் பாயஸமும்:

முன்னொரு சமயம் அம்பலப்புழையை ஆண்டு கொண்டிருந்த அரசன் முன் கிருஷ்ணர் ஒரு முனிவர் வடிவில் தோன்றினார். “இந்த நாட்டில் யாரேனும் என்னை சதுரங்கம் ஆடி ஜயிக்க முடியுமா? என்று சவால் விட்டார். அரசனுக்கு சதுரங்கத்தில் மிகுந்த ஆர்வம் இருந்ததால் மகிழ்ச்சியுடன் அரசனே சவாலை ஏற்றான்.

எந்த ஒரு சவாலிலும் பரிசு என்ன என்பதை முன்னமேயே முடிவு செய்ய வேண்டும் அல்லவா? அதனால் அரசன் முனிவரிடம், “சவாலில் நான்தான் ஜயிப்பேன், ஒரு வேளை நீர் ஜயித்தால் பரிசாக என்ன வேண்டும் என்பதை நீரே முடிவு செய்யும்” என்று சொன்னான். முனிவர், “என்னைப் போன்ற முனிவர்களுக்கு வேறென்ன தேவையாக இருக்க முடியும்? எனக்கு அரிசிதான் தேவை. ஆனால் நான் சொல்லும் முறையில் அரிசியைத் தர வேண்டும். முதல் கட்டத்தில் 1 அரிசி, இரண்டாவது கட்டத்தில் 2 அரிசி,, மூன்றாவது கட்டத்தில் 4 அரிசி, நான்காவது கட்டத்தில் 16 அரிசி என்ற ரீதியில் அரிசியைத் தர வேண்டும்” என்று சொன்னார்.

அரசனும், இவ்வளவு பெரிய ராஜ்ஜியத்தில் வெறும் அரிசியைக் கேட்கிறீர்களே, வேறு ஏதாவது கேளுங்கள் என்று சொல்ல முனிவர் வேறு எதுவும் வேண்டாம் என்று மறுத்துவிட்டார். அரசனுக்கு அந்தக் கோரிக்கையில் வருத்தம் இருப்பினும், அரிசிதானே என்று சந்தோஷமாக ஆடத் துவங்கினான். சதுரங்க விளையாட்டு துவங்கியது, கண்ணனுடைய விளையாட்டும் தான்!! அரசன் ஆட்டமிழந்தான். சொன்னபடி முனிவருக்குப் பரிசு தரும் நேரம் வந்தது. கட்டத்தில் முனிவர் சொன்னபடி அரிசியை வைக்க ஆரம்பித்த சிறிது நேரத்திலேயே அரசனுக்குத் தன் தவறு புரிந்துவிட்டது. முனிவரின் உண்மையான கோரிக்கையை உணர்ந்தான். 20-வது கட்டம் வரும்போது அரிசி அளவு 10 லட்சமாக (மில்லியன்) உயர்ந்தது. 40-வது கட்டத்தில் ஒரு மில்லியன் மில்லியனாக ஆயிற்று. இவ்வாறு ஒரு பெருக்குத் தொடர்ச்சியின் (geometric progression) வளர்ச்சியாக வளர்ந்துகொண்டே போனது. களஞ்சியத்தில் இருந்த அரிசி, நெல் அனைத்தும் தீர்ந்து, பக்கத்து ராஜ்ஜியங்களில் இருந்த நெற்குவியலையும், அரிசியையும் கொட்டியாயிற்று. இப்போது, அரசன் முனிவரின் கோரிக்கையை நிறைவேற்ற முடியாது என உணர்ந்தான். 64 கட்டங்கள் கொண்ட சதுரங்கத்தில் நிரப்ப ((2 ^ 64) – 1) அதாவது 18.446.744.073.709.551.615 டிரில்லியன் டன் கணக்கில் அரிசி தேவைப்பட்டது. அரசன் கலங்கினான். என்ன செய்வது என்று புரியவில்லை.

அரசனின் சங்கடத்தைக் கண்ட முனிவர், கிருஷ்ணர் வடிவில் அரசன் முன் தோன்றினார். அரிசியை உடனடியாகக் கொடுக்க வேண்டாம், கடன் தீரும்வரை அம்பலப்புழை கிருஷ்ணன் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அரிசியில் செய்யப்பட்ட பால் பாயஸம் செய்து கொடு என்று கூறினார். அரசனும் கர்வத்தை ஒழித்து, தனது சொத்துக்கள் அனைத்தையும் கோவிலுக்கே கொடுத்தான். இன்றளவும் கோயிலில் அரிசியால் செய்யப்பட்ட பால் பாயஸம் கிருஷ்ணனுக்கு நைவேத்தியம் செய்யப்பட்டு, வரும் பக்தர்களுக்குப் பிரஸாதமாகக் கொடுக்கப் படுகிறது.

———–

கண்ணன் கதைகள் – 11

நிவேதனம்

யசோதை கண்ணனை வெளியே எங்கும் போகக் கூடாது என்று சொல்லிவிட்டுத் தயிர் கடையச் சென்றுவிட்டாள். சிறிது நேரம் சாதுவாக இருந்த கண்ணன்., நண்பர்கள் விளையாடுவதைக் கண்டவுடன் மெதுவே வீட்டை விட்டு வெளியேறினான். அவனைக் கண்ட நண்பர்கள் மிக மகிழ்ந்து, “கண்ணா, வா வழக்கம்போல் வெண்ணை தின்னச் செல்லலாம்” என்று கூப்பிட்டார்கள்.

கோபிகைகள் அனைவரும் கூடிப்பேசி, கண்ணன் வெண்ணை திருட வருவான் என்பதால் உரியில் வெண்ணைப் பானையை வைத்துவிட்டு, தொட்டால் சத்தம் வரும்படியாக மணியைக் கட்டியிருந்தார்கள். பிறகு நிம்மதியாக வேலை செய்யச் சென்றுவிட்டார்கள். கண்ணனும் நண்பர்களும் மெதுவே ஒரு வீட்டில் நுழைந்தனர். உரியில் வெண்ணை இருப்பதைப் பார்த்த கண்ணன், அதில் மணி கட்டியிருப்பதையும் பார்த்து விட்டான். அக்கம்பக்கம் பார்த்துவிட்டு அந்த மணியிடம்,“மணியே! நாங்கள் சாப்பிட்டு முடிக்கும் வரை அடிக்காதே” என்று சொல்ல மணியும் சம்மதித்தது.

கண்ணன், உரியிலிருந்து ஒவ்வொரு பானையாக இறக்கி நண்பர்களிடம் கொடுத்துவிட்டு, கடைசியாக இருந்த பானையில் கை விட்டு வெண்ணையை எடுத்து வாயருகே கொண்டு சென்றான். அதுவரை சப்திக்காமல் இருந்த மணி, இப்போது கணகணவென்று ஒலிக்கத் துவங்கியது. கண்ணன் வேகமாகக் கீழே குதித்துவிட்டு மணியிடம், “ஏ மணியே! ஒலிக்க மாட்டேன் என்று சொல்லிவிட்டு இப்போது நான் உண்ணும்போது ஏன் ஒலிக்கிறாய்?” என்று கேட்டான். மணியோ,“கண்ணா, மணிவண்ணா, பலப்பல யுகங்களாக, உனக்கு நிவேதனம் செய்யும்போது நான் ஒலி எழுப்புவது வழக்கம்தானே, இன்று நீ உண்ணும்போது எப்படி ஒலிக்காமல் இருப்பேன்?” என்றது. சத்தம் கேட்டு கோபிகை வரவே அனைவரும் ஓடிச் சென்றார்கள். மெதுவே அடுத்த வீட்டில் நுழைந்தார்கள். அங்கும் உரியில் மணி கட்டியிருந்தது. இப்போது கண்ணன் ஒரு கையால் மணியின் நாக்கை ஒலிக்காதவாறு பிடித்துக் கொண்டு மறு கையால் வெண்ணை உண்டுவிட்டு ஓடினான். இடையர்கள் அனைவரும் ஓடுவதைக் கண்ட கோபிகைகள், தங்களுடைய யோசனையால் பயந்து கண்ணன் ஓடுவதாக நினைத்தனர். பிறகு உள்ளே சென்று பார்த்தபோது வெண்ணையைக் காணாமல், கண்ணனின் லீலையை நினைத்து வியந்து மகிழ்ந்தனர்.

————

கண்ணன் கதைகள் – 12

கயிறா? கதலியா?

ஒரு ஏழைப் பெண்மணி தென்னை மட்டையிலிருந்து கயிறு பிரித்து வியாபாரம் செய்து வந்தாள். அவளுக்கு நெடுநாட்களாகக் குழந்தைப் பேறு இல்லை. மிகவும் வருந்திய அவள் குருவாயூரப்பனிடம் தனக்குக் குழந்தை உண்டானால் கயிற்றுப் பிரியால் துலாபாரம் செய்வதாய் வேண்டிக் கொண்டாள்.

சிறிது நாட்களிலேயே அவள் கருவடைந்தாள். வியாபாரமும் செழிக்கத் தொடங்கியது. குழந்தைக்கு ஆறு மாதமானதும் பிரார்த்தனையை நிறைவேற்ற குருவாயூர் சென்றாள். இப்போது வசதியாய் இருப்பதால் கயிற்றுத் துலாபாரம் செய்தால் கேவலம், கதலித் துலாபாரம் செய்யலாம் என்று முடிவு செய்தாள். குழந்தையைத் துலாபாரத் தட்டில் கிடத்தி, மற்றொரு தட்டில் கதலிப் பழத்தை வைத்தார்கள். குழந்தையின் எடையை விட பத்து மடங்கு கதலியை வைத்தும், தட்டு சமநிலையை அடையவில்லை. கோவில் சிப்பந்தி அவளிடம், “ஏதோ தப்பு நடந்திருக்கிறது, என்ன பிரார்த்தித்தாய்?” என்று கேட்டனர். அவளும், “ஏழையாய் இருக்கும் சமயம் கயிறு வேண்டிக் கொண்டேன், இப்போது அவன் அருளால் வசதி பெருகிவிட்டது, அதனால் கயிற்றுத் துலாபாரம் செய்தால் கேவலம், கதலித் துலாபாரம் செய்யலாம் என்று செய்தேன்” என்று கூறினாள். கோவில் சிப்பந்திகள்,“ உன்னிடம் எவ்வளவு கோடி இருந்தாலும், பிரார்த்தித்த வேண்டுதலையே அப்பன் ஏற்பான்” என்று கூறினார்கள். பழங்களை இறக்கிவிட்டு கயிற்றை ஏற்றினார்கள், என்ன ஆச்சர்யம்! தராசு கீழே இறங்கியது. அப்பன் பொருட்களில் உயர்வு, தாழ்வைப் பார்ப்பதில்லை, அன்புடன் சமர்ப்பிக்கும் எதையும் ஏற்பான் என்பதற்கு இந்த லீலை உதாரணம்.

————-

கண்ணன் கதைகள் – 13

மோதிரம்

பூந்தானம் நம்பூதிரி என்பவர் சிறந்த பக்தர். அவர் தினமும் தனது ஊரிலிருந்து காட்டு வழியே தொலைதூரம் நடந்து குருவாயூருக்குச் சென்று அப்பனைத் தரிசனம் செய்வார். அவ்வாறு செல்கையில் ஒரு நாள் வழியில் சில கொள்ளைக்காரர்கள் அவரைத் தடுத்துத் தாக்கினர். அவரிடம் என்ன பொருள் இருக்கிறது என்று ஆராயத் தொடங்கினார்கள். அவர் மனமோ, தன் விரல்களில் உள்ள மோதிரத்தை அவர்கள் பார்த்துவிடக் கூடாது என்று பயந்தது. ஆபத்தினை உணர்ந்த அவர், கண்களை மூடி “குருவாயூரப்பா குருவாயூரப்பா,” என்று உரத்துக் கூறினார். சிறிது நேரத்தில் புதியதான மலரின் மணம் காற்றில் வீசியது. கண் திறந்து பார்த்தபொழுது மாங்காட்டச்சன் என்ற திவான் குதிரைமேல் வேகமாக வாளைச் சுழற்றிக் கொண்டு வந்தார். அவரைக் கண்டதும் கொள்ளையர்கள் வேகமாக அந்த இடத்தை விட்டு ஓடிவிட்டார்கள். மனம் நெகிழ்ந்த பூந்தானம் உமக்கு நான் என்ன கைம்மாறு செய்வேன் என்று வினவ, அவரும் உன்னுடைய கையில் இருக்கும் மோதிரத்தை எனக்குக் கொடு என்று கூறினார். மோதிரம் களவு போய்விடக் கூடாது என்று பயந்த பூந்தானம் இப்போது தயங்கி, திகைத்து, செய்வதறியாது அந்த மோதிரத்தை திவானுக்குப் பரிசாக அளித்தார். திவான் அவரைத் தன் குதிரையில் ஏற்றிக் கொண்டு குருவாயூர் எல்லையில் விட்டுவிட்டுச் சென்றார்.

அதே நேரம் கோவில் அர்ச்சகரின் கனவில் தோன்றிய அப்பன், “அர்ச்சகரே! என் கையில் ஒரு மோதிரம் இருக்கும், அதைப் பூந்தானத்திடம் கொடுத்துவிடுங்கள், கொள்ளையர்களிடம் இருந்து அவரைக் காப்பாற்ற மாங்காட்டச்சன் உருவில் சென்று அவரிடம் இருந்து விளையாட்டாக மோதிரத்தைப் பெற்றேன்” என்று கூறினார்.

பூந்தானம் குருவாயூர்க் கோயிலை நெருங்கும்போது, அர்ச்சகர் ஓடி வந்து பூந்தானத்தின் காலில் விழுந்தார். தன் கனவில் அப்பன் சொன்னதைக் கூறி மோதிரத்தை அவரிடம் கொடுத்தார். மோதிரத்தைப் பார்த்த பூந்தானத்திற்குப் புல்லரித்தது. முந்தைய இரவு மாங்காட்டச்சனிடம் கொடுத்த அதே மோதிரம்தான் அது!! தன்னைக் காப்பாற்ற குருவாயூரப்பனே மாங்காட்டச்சனாக வந்ததை எண்ணி ஆனந்தக் கண்ணீர் பெருக்கினார்.

அது சரி, பக்தியைத் தவிர வேறொன்றும் அறியாத, பொருட்களில் பற்றற்ற பூந்தானத்திற்கு மோதிரம் களவு போகக் கூடாது என்று
ஏன் தோன்றியது? தன்னைக் காப்பாற்றியவருக்கு அதைப் பரிசளிக்க ஏன் தயங்கினார்? நாளை வரை பொறுத்திருங்கள்.

————-

கண்ணன் கதைகள் – 14

இரு கண்கள்

பூந்தானம் நம்பூதிரி சிறந்த பக்தர். படிப்பறிவு இல்லாதவர். பக்தியுடன் இறைவன் பெயரில் தா மனதிற்குத் தோன்றியபடி மலையாளத்தில் சிறு சிறு கவிதைகள் எழுதுவார். ஒரு சமயம் அவர் கண்ணனைப் பற்றிய பாடல்களை எழுதி, மேல்பத்தூர் நாராயண பட்டத்திரியிடம் கொடுத்து, தயவு செய்து இதில் தவறு ஏதும் இருந்தால் திருத்தித் தாருங்கள் என்று சொன்னார். நாராயண பட்டத்திரி தான் சிறந்த அறிவாளியென்ற கர்வத்தில், “இதில் நிறைய இலக்கணப் பிழை இருக்கிறது, படிப்பறிவு இல்லாதவன் எழுதுவது போல் இருக்கிறது” என்று ஏளனமாகக் கூறினார். பூந்தானம் மிகுந்த வருத்தத்துடன் சென்று விட்டார். அவர் மனம் கலங்கியது. அவர் வருத்தத்தை குருவாயூரப்பனால் சகிக்க முடியவில்லை. நாராயண நம்பூதிரியின் ரோகத்தின் உபத்திரவத்தை அதிகப்படுத்தினார். ரோகத்தின் அவஸ்தையில் அவர் அலறினார்.

அடுத்த நாள் நாராயண பட்டத்திரியின் வீட்டிற்கு ஒரு அழகிய இளைஞன் வந்தான். நீங்கள் இயற்றிய நாராயணீயத்தைக் கேட்பதற்காக வந்திருக்கிறேன், படியுங்கள் என்று சொன்னான். பட்டதிரியும் மகிழ்ச்சியுடன் படிக்க ஆரம்பித்தார். அவர் படிக்கப் படிக்க, பல இடங்களில் பிழை இருக்கிறது என்று அந்த இளைஞன் சொல்லிக் கொண்டே வந்தான். பட்டத்திரி, “இத்தனை தவறுகளைச் சொல்லும் நீ யார்?” என்று கேட்டார். உடனே அந்த இளைஞன் மறைந்தான். புல்லாங்குழலை ஊதிக்கொண்டு அங்கே குருவாயூரப்பன் காட்சி அளித்தார். மேலும், “நாராயண நம்பூதிரியின் பக்தியை விட பூந்தானத்தின் பக்தியின் மேல் எனக்கு விருப்பம் அதிகம், அவரது பாடல்களில் இலக்கணம் இல்லாவிட்டாலும் பக்தி இருக்கிறது, பூந்தானத்திடம் மன்னிப்பு கேள், உன்னுடைய ரோகத்தின் உபத்திரவம் குறையும்” என்று கூறி மறைந்தார்.

உடனே நாராயண பட்டத்திரி, தன்னுடைய வித்யா கர்வத்தை எண்ணி வெட்கி, பூந்தானத்திடம் மன்னிப்பு கேட்டார். மேலும், அவரால் தனக்கு அப்பனின் தரிசனம் கிடைத்ததில் மகிழ்ந்து அவருக்குத் தன் மோதிரத்தையும் பரிசாக அளித்தார். “நமது இந்த நட்பின் அடையாளமாக இந்த மோதிரம் எப்போதும் உங்கள் விரலிலேயே இருக்கவேண்டும்,அந்தக் குருவாயூரப்பனே நேரில் வந்து கேட்டாலொழிய வேறொருவருக்கும் தரக் கூடாது” என்று அன்புக் கட்டளையிட்டார். அதனால்தான் அந்த மோதிரத்தைக் கொள்ளையர்கள் பார்த்துவிடக் கூடாது என்றும், மாங்காட்டச்சனிடம் அதைத் தரவும் தயங்கினார் பூந்தானம். இப்போது புரிகிறதா? முந்தைய கண்ணன் கதையில் அவர் ஏன் தயங்கினார் என்று? கண்ணனுக்கு பூந்தானம் நம்பூதிரியும், நாராயண பட்டத்திரியும் இரு கண்களைப் போன்றவர்கள் என்பது  இதிலிருந்து விளங்குகிறது. பின்னாளில் “ஞானப்பான” என்ற சிறந்த காவியத்தையும் பூந்தானம் இயற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் பதினாறாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். நீண்ட காலம் கழித்து பிறந்த குழந்தையை இழக்க நேரிட்டபொழுது குருவாயூரப்பனை வேண்டி எழுதியதே ஞானப்பான என்னும் நூல். இந்த நூல் எளிய மலையாள நடையில், சமசுகிருதம் கலக்காமல், உயர்ந்த தத்துவக் கருத்துகளை உள்ளடக்கியவாறு எழுதப்பட்டது.

———–

கண்ணன் கதைகள் – 15

மானவேடன்

வில்வமங்கலம் ஸ்வாமிகள் கண்ணனை நேரிலேயே பிரத்யக்ஷமாகக் கண்டவர். அவர் காலத்தில் மானவேடன் என்று ஒரு ராஜா இருந்தார். அவர் கவிஞர். சிறந்த பக்தரும் ஆவார். ஒரு முறை ராஜா குருவாயூருக்கு தரிசனம் செய்யச் சென்றார். அங்கே வில்வமங்கலம் ஸ்வாமிகளைக் கண்டார். அவரிடம் சென்று வணங்கி, ஸ்வாமிகளே! குருவாயூரப்பனை நேரில் காண எனக்கு வழிகாட்டுங்கள்” என்று வேண்டினார். ஸ்வாமிகள், “மிகுந்த பிரயத்தனத்துடன் முனிவர்கள் அடையும் அந்த மகாபாக்கியத்தை இவ்வளவு சுலபமாகக் கேட்கிறாயே! அது மிகவும் கடினம்” என்று சொன்னார். ராஜா மிகவும் வருந்தி, அழுது,”தாங்கள் எப்படியாவது பகவானைக் காண, அவனை அடைய வழி சொல்ல வேண்டும்” என்று கேட்டார்.

ஸ்வாமிகளும் அவனிடம் கருணை கொண்டு, கண்ணனிடம் கேட்டுவிட்டுச் சொல்கிறேன் என்று சொன்னார். பிறகு, கண்ணனிடம் கேட்டுவிட்டதாகவும், கண்ணனை அதிகாலையில் மகிழ மரத்தடியில் விளையாடும்போது பார்க்கலாம் என்றும் கூறினார். அதன்படி, மானவேடன் கண்ணனைக் கண்டான். அப்பொழுது கண்ணன், தலையில் மயில்தோகையுடனும், வனமாலை, கங்கணங்கள், கிண்கிணிகளால் ஆன அரைஞாண், பீதாம்பரம், தாமரை போன்ற திருவடிகள், மேகத்திற்கு ஒப்பான நிறமுடைய திருமேனியுடன், மயக்கும் அழகுடன் விளையாடுவதைக் கண்டான். உடல் புல்லரிக்க, தன்னை மறந்து ஓடி அப்பனைத் தழுவச் சென்றான். உடனே குருவாயூரப்பன், ” வில்வமங்கலம் உன்னிடம் பார்க்கத்தான் சொன்னார், தூக்கச் சொல்லவில்லை” என்று கூறி மறைந்தார். கண்ணனைத் தொட முடியவில்லையே என்று அரசனுக்கு ஏக்கமாக இருந்தது. அப்போது அரசன், தன் கையில் ஒரு மயில்தோகை இருக்கக் கண்டான். அதைக் கண்டு மகிழ்ந்து ஸ்வாமிகளிடம் சென்று நடந்ததைக் கூறினான். ஸ்வாமிகள் கூறியதன்பேரில் அந்தத் தோகையை ஒரு ரத்தினக் கிரீடத்தில் பதித்து, பூஜித்து வந்தான். மேலும், மகிழ மரத்தால் செய்யப்பட்ட கண்ணன் விக்ரகத்தைச் செய்து, அதைக் கோவிலின் தென்கிழக்குப் பகுதியில் வைத்து, அதன்முன் அமர்ந்து, பாகவதத்தின் தசம, ஏகாதசி ஸ்காந்தத்தைத் தழுவி, “கிருஷ்ணகீதி” என்ற நாட்டிய நாடகத்தை இயற்றி, அதை பகவானுக்கு அர்ப்பணித்தான்.

துலா மாதம் கடைசி தினத்தன்று அர்ப்பணித்ததால், கோவிலில் இன்றும் அந்த நாளை ‘கிருஷ்ணகீதி தினம்’ என்று கொண்டாடுகின்றனர். அன்றைய தினம் கிருஷ்ணகீதியை நாட்டிய நாடகமாக நடித்து ஆடுவார்கள், கிருஷ்ணராக நடிப்பவர் அந்த மயில்தோகை பதித்த கிரீடத்தைத் தரித்திருப்பார். ஸ்ரீ அப்பனை வழிபட்டால் யோகமும் க்ஷேமமும் தேடி வரும் என்பதைக் கண்கூடாக இன்றும் காணலாம்.

———-

கண்ணன் கதைகள் – 16
பார்வையிலே சேவகனாய்

கௌரி என்ற நம்பூதிரிப் பெண் கண்ணனின் பக்தை. அவள் சிறு குழந்தையாக இருந்தபோது அவளது மாமா அவளுக்கு  ஒரு  கண்ணன் விக்ரகத்தைக் கொடுத்தார். அவள் எப்போதும் அந்தக் கண்ணனுடனே விளையாடுவாள்.

அவள் வளர்ந்ததும்  குரூரில் உள்ள ஒரு பிராம்மணனுக்குத் திருமணம் செய்து கொடுத்தனர். குரூர் இல்லத்தில் வாழ்க்கைப்பட்டதால் அவளை குரூரம்மாள் என்று அழைத்தனர். திருமணத்திற்குப் பிறகு அவள்  கிருஷ்ண பக்தி இன்னும் அதிகரித்தது. திடீரென்று ஒரு நாள் அவள் கணவன் இறந்துவிட்டான். அப்போது அவளுக்கு வயது பதினாறு. குழந்தைகள் இல்லை.அதன் பிறகு அவள், முழுவதும் தன்னை கிருஷ்ண பக்தியிலேயே ஈடுபடுத்திக் கொண்டாள். பக்தி  பலவிதம். அவளது பக்தி யசோதையைப் போன்ற தாய்மை உணர்வுடன் கூடியதாக இருந்தது. கண்ணனுக்கு நைவேத்யம் செய்துவிட்டு அவன் வராவிட்டால் அழுவாள். அவள் அனைத்தையும் கண்ணனாகவே பாவித்தாள்.

காலம் கடந்தது. அவளது உறவினர்கள் ஒவ்வொருவராக இறந்தனர். அவள் தனித்து இருந்தாள்.  எப்போதும் கண்ணனின் நாம ஜபம் செய்து கொண்டிருப்பாள்.  ஒரு நாள் அவள், ” கண்ணா நீதான் எனக்குத் துணையாக எப்போதும் இருக்க வேண்டும், யசோதையை விட்டுச் சென்றதுபோல் என்னைக் கைவிட்டுவிடாதே” என்று மனமுருகப் பிரார்த்தித்தாள்.

ஒரு நாள், 7,8 வயதுள்ள ஒரு பாலகன் அவள் வீட்டு வாசலில் வந்து, “பாட்டி, .நான் ஒரு அநாதை. எனக்கு ஏதாவது வேலை தாருங்கள்” என்றான். அவள், “நீ மிகவும் சிறியவனாக இருக்கிறாய், உன்னால் வேலை செய்ய முடியாதே?” என்றாள். அவனோ,”நான் எல்லா வேலையும் செய்வேன். தங்குவதற்கு இடமும், உணவும் அளித்தால் போதும்” என்று கூறினான். இயல்பாகவே கருணை உள்ளம்  கொண்ட அவள், மிக மகிழ்ந்து அவனைத் தன் மகனாகவே நினைத்து ஏற்றுக் கொண்டாள். அவனை’ ” உன்னி” என்று அன்புடன் அழைத்தாள்.

வில்வமங்கலம் ஸ்வாமிகள் என்பவர் பூஜை  செய்யும்போது கண்ணனை நேரிலேயே பார்ப்பார் என்று கேள்விப்பட்டாள். அவரைத் தன் வீட்டிற்கு வந்து பூஜைகள் செய்து உணவருந்திப் போகுமாறு அழைத்தாள். அவரும் சம்மதித்தார்.

குரூரம்மாவின் அடுத்த வீட்டில் ‘செம்மங்காட்டம்மா’ என்று ஒரு பணக்காரப் பெண்மணி இருந்தாள். குரூரம்மாவிடம் ஊரிலுள்ள அனைவரும் மிகுந்த மரியாதையுடன் இருப்பதால் அந்தப் பெண்மணிக்கு எப்போதும் பொறாமை. குரூரம்மாவின் வீட்டிற்கு ஸ்வாமிகள் செல்லக் கூடாது என்று, அதே நாளில் தன் வீட்டிற்கு அவரை அழைத்தாள். குரூரம்மாவிற்கு இது பற்றித் தெரியாது.

பூஜையன்று காலை குரூரம்மா குளிக்க ஆற்றுக்குச் சென்றாள்.   குளித்துவிட்டு ஈரத் துணியைப் பிழியும்போது, அருகில் நீராடிக் கொண்டிருந்த  செம்மங்காட்டம்மாவின் மீது சில நீர்த் துளிகள் தெறித்தது. உடனே அவள் குரூரம்மாவை திட்டிவிட்டு, மீண்டும் நீரில் முங்கி எழுந்து ,”ஸ்வாமிகள் என் வீட்டிற்கு வருகிறார், இப்போது நான் செல்ல வேண்டும்” என்று கூறினாள். அதைக் கேட்ட  குரூரம்மாவிற்கு அதிர்ச்சியாக இருந்தது. மனம் நொந்தபடியே வீடு திரும்பி, ‘உன்னி’ யிடம் நடந்ததைக் கூறினாள். அவனும்,”கவலைப்படாதே பாட்டி, ஸ்வாமிகள் நிச்சயம் நம் வீட்டிற்கு வருவார்” என்று அவளைத் தேற்றினான். அவனை நம்பிய அவள், “அப்படியெனில், அதற்கான ஏற்பாடுகள் ஒன்றையும் நான் செய்யவில்லையே” என்றாள். அவனும்,” நீ  ஓய்வெடு பாட்டி, நான் எல்லாவற்றையும் கவனித்துக் கொள்கிறேன்” என்று கூறி பூஜைக்கு வேண்டியவற்றையும், மற்ற எல்லா வேலைகளையும் விரைவாகச் செய்து முடித்தான்.

செம்மங்காட்டம்மாவின் வீட்டில் ஸ்வாமிகள் வருவதற்கான  எல்லா ஏற்பாடுகளும் நடந்தது. ஸ்வாமிகள் வந்துவிட்டதன் அறிகுறியாக அவருடைய சிஷ்யன் சங்கை முழங்கியபோது சங்கிலிருந்து நாதம் எழவில்லை. அதை ஒரு துர்நிமித்தமாகக் கருதிய ஸ்வாமிகளுக்கு, உடனே குரூரம்மாவின் வீட்டிற்கு வருவதாக வாக்களித்தது  நினைவிற்கு வந்தது. அதனால் குரூரம்மாவின் வீட்டிற்கு சென்று. மீண்டும் சங்கை முழங்கியபோது அதிலிருந்து நாதம் எழுந்தது. இறைவனுடைய ஆணையாக  அதை ஏற்று அங்கே சென்றார். ‘உன்னி’ வரவேற்றான். கண்ணனை நேரிலே பார்த்திருந்தும்கூட, மாயையால் அவனை அவர் அறியவில்லை.

எப்போதும், ஸ்வாமிகளின் பூஜைக்கு வேண்டியவற்றை அவரது சிஷ்யர்கள்தான் செய்வது வழக்கம். வேறு எவருக்கும் எப்படி செய்ய வேண்டும் என்பது தெரியாது. இங்கோ, பூஜைக்கு வேண்டிய அனைத்தும் முறையாக செய்யப்பட்டு, தயாராக இருந்தது. சிஷ்யர்களுக்கு ஒரே ஆச்சர்யம்!

பூஜை ஆரம்பித்தது. ஸ்வாமிகள் கண்ணை மூடிக் கண்ணனைத் தியானித்தார். கண்களை மூடியதும் ‘உன்னி’ அவர் முன்னே சென்று நின்றான். சிஷ்யர்கள் திகைத்தனர். ஒருவரும் பேசாமல்  மௌனமாய் இருந்ததால், சிஷ்யர்களால் ‘உன்னி’யைக் கூப்பிட முடியவில்லை. ஸ்வாமிகள், பூக்களால் அர்ச்சனை செய்ய ஆரம்பித்தார். கண்களைத் திறந்தபோது,. எல்லா பூக்களும் ‘உன்னி’யின் காலருகே இருந்ததைப் பார்த்தார். அவனை நகர்ந்து அறையின் மூலைக்குச் சென்று நிற்கச் சொல்லிவிட்டு மீண்டும் கண்களை மூடித் தியானித்து அர்ச்சனை செய்தார்.  இப்போதும் பூக்கள் ‘உன்னி’யின் பாதங்களில் விழுந்தன. ஸ்வாமிகளுக்கு, குரூரம்மாவிற்காக பகவானே ‘உன்னியாக’ வந்திருப்பது புரிந்தது. இப்போது அவர் கண் முன் மாயக் கண்ணன் நின்றான்.

அவர் மெய்சிலிர்த்து நமஸ்கரிக்க எழுந்தார். கண்ணன் தடுத்து  நிறுத்தினான். “நமக்குள் இது ரகசியமாக இருக்கட்டும், நான் குரூரம்மாவுடன் அவளது ‘உன்னியாகவே’ இருக்க விரும்புகிறேன்” என்று கண்ணன்  அவர் காதருகில் கூறுவது கேட்டது.

பூஜையும் நல்லவிதமாக நடந்து முடிந்தது. ஸ்வாமிகளும் சிஷ்யர்களும் குரூரம்மாவிடம் விடைபெற்றுச் சென்றனர். குரூரம்மாவும் மிகுந்த மகிழ்ச்சியடைந்.தாள்.

குரூரம்மாவின் காலத்தில் நாமும் பிறந்திருந்தோமா என்று தெரியவில்லை. ஆனால் இந்தக் கதையைத் தட்டச்சு செய்யும்போது, பாரதியாரின்

“நண்பனாய், மந்திரியாய், நல்லாசிரியனுமாய், பண்பிலே தெய்வமாய்., பார்வையிலே சேவகனாய், எங்கிருந்தோ வந்தான் இடைச்சாதியென்று சொன்னான்” என்ற வரிகள்  நினைவிற்கு வருகின்றது.

“கண்ணா, மணிவண்ணா, உனை யாம் பெறவே என்ன தவம் செய்து விட்டோம்”!

————-

கண்ணன் கதைகள் – 17

குரூரம்மாவின் கிருஷ்ண பக்தி

வில்வமங்கலம் ஸ்வாமிகள்  பூஜை செய்யும்போது கண்ணனை நேரிலே காண்பார் என்பது அனைவரும் அறிந்ததே. ஒரு சமயம், ஒரு பிராம்மணனுக்கு வயிற்று வலி வந்தது. எல்லா மருத்துவர்களிடம் காண்பித்தும் வயிற்று வலி தீரவேயில்லை. நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே போனது. வில்வமங்கலம் ஸ்வாமிகளைப் பற்றிக் கேள்விப்பட்ட அவன், தனது வலி தீர வழி சொல்லும்படி அவரைக் கேட்டான். ஸ்வாமிகள்  கண்ணனைக் கேட்கிறேன் என்று சொல்லிவிட்டு அடுத்த நாள் பூஜையின் போது கண்ணனிடம் அது பற்றிக் கேட்டார். பகவானும் அது கர்ம வினையினால் என்று சொன்னார். வினை தீர வழி என்ன என்று அவன் கேட்க, ஸ்வாமிகளும், முற்பிறப்பில் செய்த தீமையால் வரும் இந்த வினை தீர வழியில்லை என்று சொன்னார்.அவனும்  தான் வினைப்பயனை நொந்துகொண்டு, வயிற்றைப் பிடித்துக் கொண்டு சென்றான்.

செல்லும்போது வயிற்று வலி அதிகமாகிவிடவே, அங்கு இருந்த வீட்டின் திண்ணையில் உட்கார்ந்தான். அது குரூரம்மாவின் வீடு. அவன் வயிற்றியப் பிடித்துக் கொண்டிருப்பதைக் கண்ட அவள், பசி என்று நினைத்து உணவளித்தால். அவன் மிகவும் வருந்தி, தனக்கு வயிற்று வலி இருப்பதால் ஒரு பருக்கை கூட சாப்பிட முடியாது என்று கூறினான்.

அதைக் கேட்ட அவள், சிறிதும் தயங்காமல்,”மகனே, ராமா, ராமா என்று ஜபிக்க ஆரம்பி, நம்பிக்கையோடு சொல், சரியாகிவிடும்” என்று சொன்னாள். அவனும் நம்பிக்கையோடு சொல்ல ஆரம்பித்தான். அவள் எப்போதும் ராமா, கிருஷ்ணா என்று நாம ஜபம் செய்வதால் அவளைவிட சிறந்த குரு வேறு யார் இருக்கமுடியும்?  சிறிது நேரத்திலேயே வலி சற்றே குறைந்தது போல் இருந்தது. இப்போது அவள், அவனிடம், “சரி, நீ அருகிலுள்ள  குலத்திற்குச் சென்று, கிருஷ்ண நாமத்தைச் சொல்லிக் கொண்டே முங்கிக் குளித்துவிட்டு வா, சாப்பிடலாம்” என்று சொன்னாள். அவனும் அவ்வாறே “கிருஷ்ணா, கிருஷ்ணா” என்று சொல்லிக்கொண்டு முங்கி எழுந்தான். என்ன ஆச்சர்யம்!!!! அவனது வயிற்று வலி  முற்றிலும் நீங்கிவிட்டது.  அவன் குரூரம்மாவின் வீட்டிற்கு சென்று மிக்க மகிழ்ச்சியுடன் உணவை உந்துவிட்டு நன்றி கூறிவிட்டுப் புறப்பட்டான். அதன்  பிறகு அவன் பக்தியுடன் எப்போதும் ராமநாமத்தையும் கிருஷ்ணநாமத்தையும் ஜபித்து வந்தான்.

ஒரு முறை, ஒரு  கதாகாலட்சேபத்தின்போது வில்வமங்கலம் ஸ்வாமிகளைக் கண்ட அவன், இந்த சம்பவத்தைக் கூறி, குரூரம்மாவால், தனது வயிற்று வலி தீர்ந்தது என்று சொன்னான்.

அடுத்த நாள் பூஜையின் போது, ஸ்வாமிகள் கண்ணனிடம், “கண்ணா, நீ இப்படிச் செய்யலாமா? நீ ‘கர்மாவினை’என்று சொன்னாயே தவிர, நாமஜபத்தால் வலி சரியாகும் என்று சொல்லவேயில்லையே?” என்று கேட்டார்.

கண்ணன் சிரித்துக் கொண்டே, “ஆமாம் கர்மவினை என்று சொன்னேன், நாமஜபம் செய்தால் .தீரும் என்று சொல்லவில்லை. வில்வமங்கலத்திற்கு நாமஜபம் அனைத்துப் பாபங்களையும் போக்கும் என்று தெரியாதா என்ன? இந்த விஷயத்தில் குரூரம்மாவிற்கு இருக்கும் நம்பிக்கையில், துளி கூட உனக்கு இல்லையே!” என்று கூறினார். பகவானான  கண்ணனே இவ்வாறு சொல்வதைக் கேட்ட வில்வமங்கலம், குரூரம்மாவின் பக்திக்குத் தலை வணங்கினார்.

————–

கண்ணன் கதைகள் – 18

தயிர் சாதமும் வடுமாங்காயும்

முன்னொரு சமயம், குருவாயூர் கோவிலில் பூஜை செய்து வந்த நம்பூதிரி, அவசரமாக வெளியூர் செல்ல வேண்டியிருந்தது. கோவிலில் பூஜைகள் தடை  இல்லாமல்  நடக்க வேண்டும் என்பதால், சிறு பாலகனான தனது மகனிடம் கோவிலைக் கவனித்துக் கொள்ளும்படியும்,  பூஜைகளைத் தடையின்றி செய்ய வேண்டும் என்றும், குறித்த நேரத்தில் நைவேத்யம் செய்யுமாறும் கூறிச் சென்றார்.

அவனும் அரிசியை சமைத்து அப்பனுக்கு  நைவேத்யம் செய்து, அப்பனிடம், ” கண்ணா, சாப்பிடு” என்று கூறினான். கண்ணன் அசையவில்லை. உடனே அவன், வெறும் சாதத்தை எவ்வாறு கண்ணன் சாப்பிடுவான், என நினைத்து, அருகில் உள்ள வீட்டில் இருந்து கொஞ்சம் தயிரும், வடுமாங்காயும் வாங்கி வந்தான்.  தயிரை சாதத்தில் கலக்கி, உப்புமாங்காயை வைத்தான். அப்பொழுதும் கண்ணன் சாப்பிடவில்லை. சாப்பிடு கண்ணா என்று கெஞ்சினான். சாதம் அப்படியே இருந்தது.

என்னுடைய  அப்பா வந்தால், உனக்கு சாப்பிட ஒன்றும் தரவில்லையென்று திட்டுவார், சாப்பிடு என்று சொல்லிக் கெஞ்சி அழுதான். குழந்தையின் அழுகையைப் பொறுக்க முடியாத கண்ணன், காட்சி தந்தான். அன்னத்தை உண்டான். குழந்தையும் ஸந்தோஷமாக, காலித் தட்டுடன் வெளியே வந்தான். பொதுவாக, நைவேத்யத்தை கோவிலுள்ள பிஷாரடிக்குக் கொடுப்பது வழக்கம். காலித் தட்டுடன் வெளியே வந்த அவனைக் கண்ட அவருக்கு மிகுந்த  கோபம் வந்தது. “சாதம் எங்கே?” என்று கேட்டார். குழந்தையும், “கண்ணன் சாப்பிட்டுவிட்டான்” என்று சொன்னான்.  நம்பூதிரி வந்ததும், பிஷாரடி,”நைவேத்தியத்தை உங்கள் மகன் சாப்பிட்டுவிட்டு, கண்ணன் சாப்பிட்டதாகச் சொல்கிறான்” என்று சொன்னார். நம்பூதிரி, “நைவேத்தியத்தை என்ன செய்தாய்?” என்று கேட்டார். மறுபடியும் குழந்தை, “கண்ணன் நேரிலேயே வந்து சாப்பிட்டுவிட்டான்” என்று சொன்னான். அப்போது  அருகில் உள்ள வீட்டில்  இருந்தவர்கள், தங்கள் வீட்டிலிருந்து தயிரும், மாங்காயும் அவன் வாங்கிச் சென்றதைச் சொன்னார்கள். நம்பூதிரி மிகுந்த கோபத்துடன், “தினமும் பூஜை செய்யும் எனக்குக் காட்சி தராமல், கண்ணன் உனக்குக் காட்சி தந்து உணவை உண்டாரா? உன்னால் வெறும் சாதத்தைத் தின்ன முடியாது என்று தயிரும் மாங்காயும் வைத்து சாப்பிட்டுவிட்டு, கண்ணன் சாப்பிட்டுவிட்டான் என்று பொய் சொல்கிறாயா? ” என்று அடித்தார். குழந்தை இடத்தைவிட்டு நகரவில்லை. குழந்தையை அடிப்பதைக் கண்ணனால் பொறுக்க முடியவில்லை. நம்பூதிரி மீண்டும் அடிக்கக் கையை  ஓங்கியபோது, “நான்தான் உண்டேன், குழந்தை குற்றமற்றவன்” என்று சன்னிதியிலிருந்து அசரீரி ஒலித்தது.  கூடியிருந்த அனைவரும் அதிசயித்தனர்.

நம்பூதிரி, கண்களில் நீர் வழிய, ” என் மகனுக்குக் காட்சி தந்து, அவன் தந்த உணவையும் உண்டாயே!! என்னே உன் கருணை!! என் மகன் பாக்யசாலி!!” என்று கூறித் தன் மகனை வாரி அணைத்துக் கொண்டார்.

————

கண்ணன் கதைகள் – 19
ஏகாதசி தோன்றிய கதை

பாத்ம புராணத்தில் ஏகாதசி தோன்றிய கதை சொல்லப்பட்டிருக்கிறது. ஒரு காலத்தில் முரன் என்ற ஒரு அரக்கன், தேவர்களாலும், மும்மூர்த்திகளாலும் தனக்கு மரணம் ஏற்படக்கூடாது என்று வரம் பெற்றிருந்தான். அசுரன் அபரிமிதமான பலம் வாய்ந்தவனாக இருந்தான். அதனால் தேவர்களுக்கும், ரிஷிகளுக்கும் மிகுந்த தொல்லைகளைக் கொடுத்தான். அவர்கள் திருமாலை சரணடைந்தனர். அவரும், அவர்களைக் காக்கத் திருவுள்ளம் கொண்டு, முரனுடன் சண்டையிட்டார். கடும்போர் நடந்தது. ஒவ்வொரு நாளும் சூரிய அஸ்தமனம் வரையில் சண்டை நடக்கும். பிறகு போரை நிறுத்திவிட்டு அடுத்த நாள் போர் தொடரும். இவ்வாறு ஆயிரம் வருடங்கள் சண்டை நடந்தது. திருமால், இதற்கு ஒரு வழி செய்யவேண்டும் என்று தீர்மானித்தார்.

ஒரு நாள் சூரிய அஸ்தமனத்திற்குப் பின், திருமால், பத்ரியில் உள்ள ஒரு குகையில் ஓய்வெடுக்கச் சென்றார். மும்மூர்த்திகளுள் அவரும் ஒருவராதலால் .முரனைக் கொல்ல முடியாது. அதே சமயம், முரன், பெண்ணால் மரணம் ஏற்படக்கூடாது என்று வரம் பெறவில்லை.அதனால், தனது திருமேனியிலிருந்து ஒரு பெண்ணை உருவாக்கினார். பிறகு, தூங்குவது போல் படுத்திருந்தார். முரன், போர் விதிக்குப் புறம்பாக, திருமாலைத் தாக்கும் எண்ணத்துடன் குகைக்கு வந்தான். திருமாலைத் தாக்கக் கையை ஓங்கினான். அப்போது திருமாலால் உருவாக்கப்பட்ட அந்தப் பெண்ணின் “ஹூம்” என்ற மூச்சுக் காற்றில் எரிந்து சாம்பலானான். திருமால் அவளைப் புகழ்ந்தார். மேலும், “என்னுடைய 11 இந்திரியங்களில் இருந்து உருவானதால் உனக்கு ‘ஏகாதசி’ என்று பெயரிடுகிறேன். நீ தோன்றிய இந்த நாளில், யார் உபவாசம் இருந்து என்னை வழிபடுகிறார்களோ, யார் உன்னைத் துதிக்கிறார்களோ, உன்னுடைய வரலாற்றை யார் கேட்கிறார்களோ, பேசுகிறார்களோ அவர்களுடைய பாபங்களெல்லாம் தொலையும்”என்று வரமளித்தார்.

மார்கழி மாதம் தேய்பிறையில் தோன்றியதால் இதற்கு ‘உற்பத்தி ஏகாதசி’ என்று பெயர். இதுவே பாத்ம புராணப்படி ‘ஏகாதசி’ தோன்றிய கதை.

மார்கழி மாதம் வளர்பிறையில் வரும் ஏகாதசி ‘வைகுண்ட ஏகாதசி’ எனப்படும். மிகவும் சிறப்பு வாய்ந்த இந்த ஏகாதசியில் திருமாலை வழிபடுகிறவர்களுக்கு, இம்மையில் அனைத்து செல்வங்களும், மறுமை இல்லாத வைகுந்தப் பேறும் கிடைக்கும்.

ஏகாதசியின் தத்துவம்: ஏகாதசி என்பதற்கு பதினொன்று என்று அர்த்தம். கர்மேந்திரியங்கள் ஐந்து, ஞானேந்திரியங்கள் ஐந்து, மனம் ஒன்று ஆகிய பதினொன்றையும் பெருமாளுடன் ஒருமைப்படுத்தி, தியானம் செய்வதே ஏகாதசியின் தத்துவமாகும். இவ்வாறு உடலும் உள்ளமும் ஒன்றி, உபவாசம் இருந்து திருமாலை வழிபடுவதை ‘ஏகாதசி விரதம்’ என்று கூறுவர்.

————

கண்ணன் கதைகள் – 20

பிரதக்ஷிணம்

ஒரு முறை ஒரு ஏழை சிறுவன், பசியின் கொடுமை தாங்காமல் ஒரு பழக்கடையில் இருந்து வாழைப்பழம் ஒன்றைத் திருடினான். குருவாயூரப்பனிடம் பக்தி கொண்ட அவன், கோவிலுக்குச் சென்று, தான் திருடிய பழத்தில் பாதியை உண்டியலில் போட்டுவிட்டு, மற்றொரு பாதியைத் தின்றான்.

அப்போது, கடைக்காரர் அவனைக் கையும் களவுமாகப் பிடித்தார். அவனும் பசியினால் திருடியதாக ஒப்புக் கொண்டான். கடைக்காரருக்கு அந்த சிறுவனைத் தண்டிக்க மனமில்லாவிட்டாலும், அவனுக்குப் பாடம்  கற்பிக்க நினைத்தார்.  அவர் அவனிடம், ” நீ இவ்வாறு தவறு செய்ததால், கோவிலை 108 தடவை பிரதக்ஷிணமாகச் சுற்றி வா” என்று கட்டளையிட்டார்.

அந்த சிறுவனும் பிரதக்ஷிணம் செய்ய ஆரம்பித்தான். அப்போது கடைக்காரர் ஸ்ரீ  குருவாயூரப்பனும் அந்தப் பையனைத் தொடர்ந்து  பிரதக்ஷிணம் செய்து கொண்டிருப்பதைக் கண்டார். ஒன்றும் புரியாமல் வீடு திரும்பினார். அன்றிரவு கடைக்காரரின் கனவில் தோன்றிய அப்பன், ” பழத்தில் பாதியை சிறுவன் எனக்கு ஸமர்ப்பித்தான். பாதியைத்தான் அவன் உண்டான். அதனால் எனக்கும் தண்டனையில் பங்கு உண்டு. நானும் கோவிலைச் சுற்றினேன்” என்று கூறினார். இதிலிருந்து  ஸ்ரீ அப்பன், அப்பாவி  மக்களின் எளிமையையும், அன்பையும்  நேசிக்கிறான் என்று அறியலாம்

————-

கண்ணன் கதைகள் – 21
பாததூளி

ஒரு முறை துவாரகையில் கண்ணனுக்குத் தலைவலி என்று ருக்மிணியும், ஸத்யபாமாவும் செய்வதறியாது வருத்தமுற்றிருந்தனர். அப்போது நாரதர் அங்கே வந்தார்.  அனைவரும் வாட்டமடைந்து இருப்பதைக் கண்ட அவர், என்ன விஷயம் கண்ணா? என்று கேட்டார். கண்ணனும், ” எனக்குத் தலை ரொம்ப வலிக்கிறது” என்று சொன்னான்.  நாரதர், “இதற்கு ஏதாவது மருந்து இருந்தால் சொல் கண்ணா, எப்பாடு பட்டாவது கொண்டு வருகிறேன்” என்று சொன்னார்.

கண்ணனும்,  “நாரதரே! எங்கும் செல்ல வேண்டாம், இந்தத் தலைவலி என்னுடைய பக்தர்களின் காலடி மண்ணைத் தடவினால் சரியாகிவிடும். இங்கு யாரேனும் தம்முடைய காலடி மண் இருந்தால் கொடுங்கள், அதை என் நெற்றியில் தடவினால் என் வலி தீரும் என்று சொன்னான்.  ருக்மிணியும் ஸத்யபாமாவும்,”எங்கள் காலடி மண்ணை உம்முடைய நெற்றியில் தடவுவதா? நாங்கள் உம்முடைய பத்தினிகள் அல்லவா? மகாபாவம் வந்து சேருமே” என்று பதறினார்கள்.   நாரதர், மற்றும் அங்கு உள்ள அனைவரும், “அந்தப் பாவத்தை நாங்கள் சுமக்க முடியாது” என்று கூறி மறுத்துவிட்டனர். நேரம் ஆக ஆக, கண்ணனுக்குத் தலை வலி அதிகரித்தது.

கண்ணன், ” வலி பொறுக்க முடியவில்லை நாரதா!! நீ  உடனே பிருந்தாவனம் சென்று கோபிகைகளிடம் அவர்களது பாததூளியைக் கேட்டு வாங்கி வா, சீக்கிரம்” என்று சொன்னார். நாரதர், ருக்மிணி, ஸத்யபாமா ஆகியோர் மனதில் நம்மை விட  பக்தர்கள் யார் இருப்பார்கள் என்ற எண்ணம் தோன்றியது. இருப்பினும், நாரதர் உடனே பிருந்தாவனம் சென்று இடைப்பெண்களிடம் கண்ணனுடைய தலைவலியைப் பற்றியும், அதற்கான தீர்வையும் கூறினார். அதைக் கேட்ட உடனேயே, ஒரு கோபிகை தனது மேலாக்கை அவிழ்த்துத் தரையில் போட்டாள். எல்லா கோபிகைகளும் மண்ணில் குதித்து, தங்களது காலில் ஒட்டியிருந்த மண்ணை அந்த மேலாக்கில் ஏறி நின்று உதிர்த்தனர். இவ்வாறு ஒரு சிறு மண் மூட்டையை செய்து நாரதரிடம் கொடுத்தனர். கண்களில் நீர் வழிய , “நாரதரே! சீக்கிரம் சென்று கண்ணனுடைய நெற்றியில் இதைத் தடவுங்கள்” என்று சொன்னார்கள். நாரதர் அவர்களிடம், இது  பெரிய பாவமென்று உங்களுக்குத் தெரியாதா என்று கேட்க,  கோபிகைகள், “கண்ணனுடைய தலைவலி தீர்ந்தால் போதும், நாங்கள்  எந்தப் பாவத்தைப் பற்றியும் கவலைப்படவில்லை” என்று கூறினார்கள்.

நாரதரும் துவாரகை சென்று கண்ணனிடம் அந்த மூட்டையைக் கொடுத்தார். கண்ணன், மூட்டையிலிருந்த கோபிகைகளின் பாததூளியை எடுத்துத் தன் நெற்றியில் தடவ , தலைவலியும் சரியாகிவிட்டது.  நாரதர், ருக்மிணி, ஸத்யபாமாவிற்கும் உண்மையான பக்தியைப் பற்றிப் புரிந்தது. கண்ணன் ஒரு விஷமச் சிரிப்புடன், “தலையில் இருந்து ஒரு சுமையை இறக்கி வைத்தாற்போல் உள்ளது, தலைவலி சரியாகிவிட்டது” என்று சொன்னான். கண்ணனின் தலைச்சுமை மட்டுமா? மற்றவர்களின் தலைக்கனமும் அல்லவோ இறங்கியது?!!!

இவ்வாறு, உண்மையான, தன்னலமற்ற பக்தியின் பெருமையை மற்றவர்க்கு உணர்த்த விரும்பிய கண்ணனின் தலைவலி நாடகமும் இனிதே முடிந்தது.

—————–

கண்ணன் கதைகள் – 22
திருமாங்கல்யம்

ஒரு சமயம் ஒரு அந்தணருக்கு வயிற்று வலி வந்தது. நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போன வலி, எந்த வைத்தியத்துக்கும் கட்டுப்படவில்லை. மனம் கலங்கிய அவரது மனைவி, குருவாயூரப்பனிடம்,
“கண்ணா, என் கணவருக்கு வயிற்று வலி  நீங்கவும், எங்கள் துன்பம் தீரவும் அனுக்ரஹிக்க வேண்டும். அவ்வாறு நீங்கினால், நான் என்னுடைய திருமாங்கல்யத்தை உனது திருவடியில் ஸமர்ப்பித்து, மஞ்சள் சரடைக் கட்டிக் கொள்கிறேன். எனக்கு மாங்கல்யப் பிச்சை தா கண்ணா” என்று மனமுருகி வேண்டிக் கொண்டாள். சில நாட்களிலேயே வயிற்று வலி மட்டுப்பட்டு, சரியாகி அவளது  கணவர் பூரண குணமடைந்தார்.

வேண்டிக்கொண்டபடி குருவாயூர் சென்று, ஸன்னிதியில் நமஸ்கரித்து, தனது திருமாங்கல்யத்தை அப்பனது திருவடிகளில் ஸமர்ப்பித்துவிட்டு, மஞ்சள் சரடைக் கட்டிக் கொண்டாள். பின் பிரதக்ஷிணம் செய்ய ஆரம்பித்தார்கள். சுற்றி வரும்போது அந்தப் பெண்மணியின்  கழுத்தில் திருமாங்கல்யம் முன்புபோலவே இருந்தது. மறுபடியும் அப்பனது திருவடிகளில் ஸமர்ப்பித்துவிட்டு, மீண்டும் பிரதக்ஷிணம் செய்ய ஆரம்பித்தார்கள். மீண்டும் அவள் கழுத்தில் திருமாங்கல்யம் மின்னியது. இவ்வாறு  பத்து தடவை ஸமர்ப்பித்தும் மாங்கல்யம் அவளது  கழுத்திலேயே இருக்கக் கண்டார்கள். ஏதோ அபசாரம் செய்துவிட்டோம் என்று அவர்கள் மிகவும் கலங்கினார்கள்.

அதே நேரம் ஸன்னிதியில் மேல்சாந்தி தியானித்துக் கொண்டிருக்கும்போது, அப்பன் அவரது தியானத்தில் வந்து, “அந்தப் பெண்ணின் திருமாங்கல்யத்தை வாங்க எனக்கு இஷ்டமில்லை, மறுபடி அவள் வரும்போது அதை ஸமர்ப்பிக்க வேண்டாம் என்று சொல்லிவிடு” என்று உத்தரவானது. மேல்சாந்தியும் அவ்வாறே சொன்னார். அப்பனின் கருணையைக் கண்டு அதிசயித்து, மிகுந்த மகிழ்ச்சியுடன் அவர்கள் ஊருக்குத் திரும்பினார்கள். இதிலிருந்து, வேண்டுதலாக இருந்தாலும், சுமங்கலிகளின் இன்றியமையாத ஆபரணமாகிய திருமாங்கல்யத்தை, குருவாயூரப்பன் ஏற்றுக் கொள்ள விரும்ப மாட்டார் என்று தெரிகிறது. – (சேங்காலிபுரம் அனந்தராம தீக்ஷிதரின் நாராயணீய உபன்யாஸத்தில் கேட்டது)

—————–

கண்ணன் கதைகள் – 23
கட்டுசாதம்

ஒரு ஊரில் ஒரு இளைஞன், சோம்பேறியாய்த் திரிந்து கொண்டிருந்தான். அவனுக்கு உழைக்க வேண்டும் என்ற எண்ணமே இல்லை. ஏதாவது சொன்னால் தர்க்கம் செய்வான். படித்திருந்தும், வேலைக்குப் போகாமல் சுற்றிக் கொண்டிருந்தான். ஒரு சமயம் அந்த ஊர்க்கோவிலில் ஒரு திருவிழா நடந்தது. இடைவிடாத ‘கிருஷ்ண நாம ஜபம்’ என்று ஒரு நாள் ஏற்பாடாகி இருந்தது. “கிருஷ்ண நாம ஜபத்தில்” தம்மை ஈடுபடுத்திக் கொள்ள, மக்கள் கூட்டம் கூட்டமாக வந்தனர்.

இந்த இளைஞனோ, ” இந்த கிருஷ்ண நாமத்தில் அப்படி என்னதான் இருக்கிறதோ?” என்று நினைத்தான். அருகிலிருந்த பெரியவர் ஒருவரிடம் இது பற்றிக் கேட்டான். அவரும், “அது மிகவும் உன்னதமான நாமம்” என்று கூறினார். அந்த இளைஞன், ” இதனால் ஒன்றும் ஆகப் போவதில்லை, உங்கள் கிருஷ்ணனால் என் பசிக்குச் சோறு தர முடியுமா?” என்று கேட்டான். பெரியவரும், ” கிருஷ்ண நாமம் சோறு மட்டுமல்ல, வேண்டிய அனைத்தையும் கொடுக்கும், மனதை ஒரு நிலைப்படுத்தி அந்த நாமத்தை ஜபித்துப் பார்” என்று கூறினார்.

அவனுக்கு அதில் துளியும் நம்பிக்கையில்லை. இருப்பினும், அருகிலுள்ள ஒரு காட்டுப் பகுதிக்குச் சென்று, ஒரு மரத்தடியில் தனியே அமர்ந்து, “கிருஷ்ண, கிருஷ்ண” என்று ஜபிக்க ஆரம்பித்தான். அப்போது ஏதோ சத்தம் வரவே, சிங்கம், புலி என்று பயந்து மரத்தின் மீது ஏறிக் கொண்டு மீண்டும் “கிருஷ்ண, கிருஷ்ண” என்று சொல்லத் தொடங்கினான்.

ஒரு வழிப்போக்கன் அந்த வழியே வந்து, மரத்தடியில் அமர்ந்து, தான் கொண்டு வந்த கட்டு சாதத்தைத் தின்று விட்டு, இளைப்பாறிவிட்டுச் சென்றான். கீழே இறங்கி வந்தவனுக்கு ஆச்சர்யம் காத்திருந்தது. அந்த வழிப்போக்கன் இன்னொரு கட்டு சாதத்தை மறந்து விட்டுச் சென்றிருந்தான். கிருஷ்ண நாம மகிமையால் தான் பசிக்குச் சோறு கிடைத்தது என்று மகிழ்ந்து, அதை உண்ணப் போனான். அவனது தர்க்கஅறிவு அப்போது எட்டிப் பார்த்தது. உண்மையிலேயே கிருஷ்ண நாமத்திற்கு மகிமை உண்டென்றால், இந்த சாதத்தை சாப்பிடும்படி நிர்ப்பந்தம் ஏற்படட்டும், அது வரை சாப்பிடக் கூடாது, பசித்தாலும் பரவாயில்லை என்று எண்ணினான். அப்போது மீண்டும் ஏதோ சத்தம் வரவே, சாதத்தைக் கீழே வைத்துவிட்டு அவசர அவசரமாக மரத்தின் மீது ஏறி மீண்டும், ‘கிருஷ்ண, கிருஷ்ண’ என்று ஜபிக்கத் தொடங்கினான்.

இப்போது அங்கே ஒரு கொள்ளைக்கூட்டம் வந்தது. மரத்தடியில் அவர்கள் அமர்ந்தனர். அவர்கள் கொள்ளையடித்த பொருட்களைக் கீழே இறக்கி வைத்தனர். பின்னர், யாராவது இருக்கிறார்களா என்று சுற்றுமுற்றும் பார்த்தனர். பின்னர் மரத்தின்மேல் பார்த்தனர். அங்கே இந்த இளைஞன் அமர்ந்திருந்தான். அவனைக் கீழே இறக்கி மரத்தில் கட்டி வைத்தனர்.

பசியுடன் இருந்த ஒரு கொள்ளையன், அங்கு இருந்த கட்டுசாதத்தைப் பார்த்து, எடுத்து அதைத் தின்னப் போனான். மறவர்கள் தடுத்து, “தின்னாதே! நம்மை வேவு பார்க்க வந்த இவன்தான் இதை வைத்திருப்பான். இதில் ஏதாவது விஷம் கலந்திருப்பான். அதை முதலில் அவன் சாப்பிடட்டும்” என்று கூறி வலுக்கட்டாயமாக அதை அவனுக்குக் கொடுத்தனர். அவனும் சாப்பிட்டான். அதற்குள் தூரத்தில் குளம்புச் சத்தம் கேட்டது. கொள்ளையர்கள், அவனை அப்படியே விட்டுவிட்டு, அவர்கள் கொள்ளையடித்த பொருட்களுடன் விரைந்து சென்றனர். அவசரத்தில் சிறிது தங்கக் காசுகள் கீழே சிதறின.

நம்பிக்கையில்லாமல் “கிருஷ்ண நாமம்” சொன்னதற்கே இவ்வளவு பலனா!! என்று ஆச்சர்யமடைந்த அந்த சோம்பேறி இளைஞன், இனிமேல் உழைக்க வேண்டும், தர்க்கம் செய்யக் கூடாது என்ற முடிவுக்கு வந்தான். ஊருக்குத் திரும்பிச் சென்று, உண்மையான செல்வம் கிருஷ்ண நாமம் தான் என்பதை உணர்ந்து, கோவில் உண்டியலில் அந்தத் தங்கக் காசுகளைப் போட்டான். இனிமேல் பக்தியுடன் இருப்பேன், உழைத்து சாப்பிடுவேன் என்று கிருஷ்ணன் முன் பிரதிக்ஞை செய்தான். வாழ்க்கையில் நன்கு முன்னேறி, நல்ல நிலைமையையும் அடைந்தான்.

————

கண்ணன் கதைகள் – 24
திட நம்பிக்கை

ஒரு கிராமத்தில் திருவிழா. அங்கிருந்த கிருஷ்ணன் கோவிலில், ‘கண்ணன் பெருமை’ என்ற தலைப்பில் உபன்யாசம் ஏற்பாடு செய்திருந்தார்கள்.

அப்போது திருடன் ஒருவன் ஊருக்குள் வந்தான். அனைவரும் உபன்யாசம் கேட்கச் சென்றுவிட்டதால், திருட ரொம்ப சௌகர்யமாகப் போய்விட்டது. ஒவ்வொரு வீடாகத் தேடியும் விலையுயர்ந்த பொருட்கள் ஏதும் சிக்கவில்லை. சரி, உபன்யாசத்தில் நிறைய கும்பல் இருக்கும், அதனால் அங்கு சென்றால் பணம் திருடலாம் என்று நினைத்து, கதை நடக்கும் இடத்திற்குச் சென்றான்.

உபன்யாசகர், கண்ணனுடைய பெருமையைக் கதையாகச் சொல்லிக்கொண்டிருந்தார். பொன்னில் கோர்த்த ஐம்படைத்தாலி, அழகிய ரத்தினங்களாலும், வைரங்களாலும் ஆன ஆபரணங்கள், ஹாரம், வளை, தங்க அரைஞாண், மாணிக்கமும், முத்தும் கோர்த்து செய்யப்பட்ட வெள்ளிக் கொலுசு ஆகியவற்றை அணிந்து கண்ணன் வரும் அழகை வர்ணித்துக் கொண்டிருந்தார்.

திருடனுக்கு ஏக சந்தோஷம். அவனுக்குக் கண்ணனைப் பற்றியெல்லாம் தெரியாது. சரியான பணக்காரப் பையன் போலிருக்கிறது என்று நினைத்து, கதை முடிந்ததும் அவரிடம் அவனைப் பற்றிக் கேட்க வேண்டும் என்று பொறுமையாகக் காத்திருந்தான்.

கதை முடிந்தது, கும்பல் கலைந்தது, உபன்யாசகரிடம் சென்று, “அந்தப் பையன் யார், எங்கிருக்கிறான், சொல்லாவிட்டால் கொன்றுவிடுவேன்” என்று மிரட்டினான். கண்ணனைப் பற்றிக் கூறியதை உண்மையென்று நினைத்துக் கேட்கிறான் என்பது அவருக்குப் புரிந்துவிட்டது. சட்டென்று, தூரத்தில் தெரிந்த பூஞ்சோலையைக் காட்டி, அங்கேதான் அவன் விளையாட வருவான் என்று சொன்னார்.

திருடனும் அவர் சொன்னது உண்மையென்று நம்பி, அந்தப் பூஞ்சோலைக்குச் சென்று கண்ணனிடம் திருடுவதற்காகக் காத்திருந்தான். அவன் நினைவு முழுவதும் கண்ணனைப் பற்றியே இருந்தது. சிறிது நேரத்தில் கண்ணன் வந்தான். உபன்யாசகர் சொன்னபடி எல்லா நகைகளும் போட்டுக் கொண்டிருந்தான். சின்னப் பையனாக இருந்ததால், மிரட்டாமல்,”குழந்தையே! உன் நகையெல்லாம் எனக்குத் தருகிறாயா?” எனக் கேட்டான். குழந்தையும் அனைத்தையும் கழற்றிக் கொடுத்தது!!!! எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு உபன்யாசகரை தேடிச் சென்று நன்றி சொன்னான். அவருக்கு ஒன்றும் புரியவில்லை. “நீங்கள் சொன்னமாதிரியே அந்தப் பணக்காரப் பையன் ரொம்ப அழகு, கேட்டவுடன் எல்லா நகையையும் கழற்றிக் கொடுத்துவிட்டான்” என்று சொன்னான்.

அவரால் நம்ப முடியவில்லை. “உண்மையாகச் சொல்கிறாயா?” என்று கேட்டார். “வாருங்கள், காட்டுகிறேன்” என்று கூறி, அவரை அழைத்துக் கொண்டு அந்தப் பூஞ்சோலைக்குச் சென்றான். அவரிடம், “அங்கே பாருங்கள்! அவன் விளையாடிக் கொண்டிருக்கிறான்” என்று காட்டினான். அவருக்கு ஒன்றும் தெரியவில்லை, ஆனால் சிரிப்பு மட்டும் கேட்டது.

இத்தனை நாள் கண்ணனின் திவ்ய ரூபத்தைக் கதையாகச் சொல்லும் எனக்கு அவன் தெரியவில்லையே! இந்தத் திருடனுக்குக் காட்சி அளித்திருக்கிறானே! என்று கண்ணீர் விட்டார். வருந்தும் அவரைக் கண்டு கண்ணன் கருணை கொண்டான். “அந்தத் திருடனின் கையைப் பிடித்துக்கொள்” என்று ஒரு குரல் ஒலித்தது. அவ்விதமே பிடித்துக் கொண்டு நோக்கினார். கண்ணன் அவர் கண்களுக்குத் தெரிந்தான். உபன்யாசகர், “உன் கதையைச் சொல்லும் எனக்குக் காட்சி தராமல், திருடனுடைய கையைப் பிடித்ததும் காட்சி அளிக்கிறாயே! கண்ணா, இது நியாயமா?” என்று கண்ணனிடம் கேட்டார்.

அப்போது மாயக்கண்ணன்,” நீ இவ்வளவு காலம் என் கதையைக் கூறினாலும், நான் வருவேன் என்று நம்பவில்லை, ஆனால், இந்தத் திருடன் நான் வருவேன் என்று திடமாக நம்பினான். அதனால் அவன்முன் வந்தேன். இறை சிந்தனையில் பற்றுடன், இதயத்தின் ஆழத்திலிருந்து மிகுந்த நம்பிக்கையுடன் பிரார்த்தித்தால், என்னைத் தரிசிப்பது உறுதி” என்று கூறிவிட்டு மறைந்தான்.  திருடனும், திருட்டுத் தொழிலை விட்டுவிட்டு கிருஷ்ண பக்தன் ஆனான்.

————–

கண்ணன் கதைகள் – 25
போதணா

துவாரகைக்கு அருகில் டாகோர் என்ற கிராமம் உள்ளது. சில காலம் முன்பு அங்கு ‘போதணா’ என்ற அந்தணர் வாழ்ந்து வந்தார். எப்போதும் துவாரகையில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணனையே எண்ணித் துதித்து, அவரைக் காண மாட்டோமா என்று ஏங்கிக்கொண்டிருப்பார். அதனால் அவரை அனைவரும் “துவாரகா ராமதாசர்” என்று கூப்பிட்டனர். தினந்தோறும் உஞ்சவிருத்தி எடுத்து வந்து மனைவியிடம் கொடுப்பார். அவள் அதை சமைத்து, இறைவனுக்கு அர்ப்பணித்துவிட்டு பிறகு சாப்பிடுவார்கள்.

ஒவ்வாறு ஏகாதசிக்கும் விரதமிருந்து, இறைவனைப் பாடி மறுநாள் துவாதசியன்று தன்னால் முடிந்த அளவு உணவளித்து, பின் உணவு உண்பதை வழக்கமாக்கிக் கொண்டிருந்தார். அதேபோல, ஆடி மாதம் ஏகாதசியன்று, டாகோரிலிருந்து பாதயாத்திரையாக துவாரகை சென்று, துவாரகாநாதனைத் தொழுது, மறுநாள் துவாதசியன்று தரிசித்துத் திரும்புவார். இவ்வாறு காலம் சென்றது. அவருக்கும் வயதாகிவிட்டது. தள்ளாமையால், முன்பு போல துவாரகைக்குச் செல்ல கஷ்டமாக இருந்தாலும், விடாமல் விரதத்தைப் பின்பற்றினார். ஒரு ஆடி மாதம் ஏகாதசியன்று துவாரகை புறப்பட்டார். அவரால் நடைப் பயணத்தைத் தொடர முடியவில்லை. ஒரு மரத்தடியில் அமர்ந்து,”கண்ணா! எனக்கு வயதாகிவிட்டது, முன்பு போல் என்னால் உன்னைத் தரிசிக்க வர முடியுமா தெரியவில்லை. என்னால் முடியாவிட்டாலும், நீ எனக்கு எப்படியாவது தரிசனம் தர வேண்டும்” என்று வேண்டிக் கொண்டு, அழுதுகொண்டே அசதியில் உறங்கிவிட்டார். அவர் கனவில் கண்ணன் தோன்றி, கவலைப்படாதே! உன் முன் ஒரு தேர் வரும், அதில் நான் இருப்பேன், என்னை நீ உன் ஊருக்குஅழைத்துச் செல்லலாம்” என்று கூறி மறைந்தார். கண் விழித்தபோது, எதிரே தேரும், அதில் துவாரகாநாதனும் இருப்பதைக் கண்டு மகிழ்ந்து, தேரில் ஏறி டாகோர் சென்றார். விக்ரஹத்தைப் பூஜை அறையில் வைத்து, தான் இல்லத்தையே கோவிலாக்கி,  நாம சங்கீர்த்தனம் செய்யத் தொடங்கினார்.

அதே சமயம், துவாரகையில் கண்ணனின் மூலவிக்ரஹத்தைக் காணாமல் அர்ச்சகர்கள் திகைத்தனர். டாகோரில் ராமதாசரின் வீட்டில் கண்ணன் விக்ரஹம் இருக்கும் தகவலறிந்து, அவர்கள் டாங்கேர் சென்றனர். ராமதாசரின் வீட்டிற்குச் சென்று கண்ணனை எடுத்துக் கொண்டு செல்லத் தொடங்கினர். ராமதாசர், “கண்ணா! உன்னைப் பிரிந்து என்னால் இருக்க முடியாது” என்று அழுது அரற்றினார். அப்போது கண்ணன் அவரிடம், “என் எடைக்கு எடை பொன் தருவதாகச் சொல்” அவர்கள் கொடுத்து விடுவார்கள்” என்று சொன்னார். அவரும் அவ்வாறே சொன்னார். உஞ்சவிருத்தி செய்து பிழைக்கும் அவர் எங்கே பொன் தரப் போகிறார்? என்று நினைத்த அர்ச்சகர்கள், அதற்கு சம்மதம் தெரிவித்தார்கள்.

ஒரு தராசில் துவாரகாநாதனின் விக்ரகத்தை வைத்தனர். ராமதாசர் வீட்டிற்குள் சென்று, அவரிடம் இருந்த ஒரே ஒரு பொன்னாலான, தனது மனைவியின் மூக்குத்தியை எடுத்து வந்து, இன்னொரு தட்டில் வைத்தார். தனது மனைவியுடன் தராசை பிரதக்ஷிணம் செய்து நமஸ்கரித்தார். பின்னர், கண்களை மூடிக் கண்ணனைத் தியானித்தார். என்ன ஆச்சர்யம்!!! தராசின் இருதட்டுகளும் சரிசமமாக நின்றது. அர்ச்சகர்களும், மற்றவர்களும் ராமதாசரின் பக்தியைக் கண்டு அதிசயித்து, ராமதாசரை வணங்கி, துவாரகாநாதனை அவரிடமே கொடுத்துவிட்டுத் திரும்பிச் சென்றனர். மெய்சிலிர்த்த ராமதாசரும், தினமும் நாமசங்கீர்த்தனத்தால் கண்ணனைப் பாடி, தொழுது வணங்கினார். இன்றும் அவர் பாடிய அந்தப் பாடல்கள் துவாரகையில் பாடப்படுகின்றது. தன்னலமில்லாத பக்தியுடன் இறைவனை வழிபட்ட பக்தனின் கோரிக்கையை ஏற்று, பகவானே வந்ததற்கு இதை விட வேறு வரலாறு வேண்டுமோ?

டாகோர் கோவிலில் உள்ள கண்ணனை ‘ராஞ்சோட்ஜி’ என்று அழைக்கின்றனர். கண்ணன் போதணருடன் டாகோருக்கு மாட்டு வண்டியில் வந்தான் என்றும் சிலர் கூறுகின்றனர். அங்குள்ள ஒரு வேப்பமரத்தில், ஒரு கிளையில் உள்ள இலைகள் இனிப்பாகவும், மற்ற கிளைகளில் உள்ள இலைகள் கசப்பாகவும் இருக்குமாம். கண்ணன் வரும் வழியில் அந்த மரத்தின் கிளையைப் பிடித்துக் கொண்டு சிறிது நேரம் நின்றான் என்றும், அதனால் அந்தக் கிளைகளில் உள்ள இலைகள் இனிக்கிறது என்றும் கூறுகின்றனர். அவன் அருள் இருந்தால்தான் அவனைத் தரிசிக்க முடியும். தரிசிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்.

———

கண்ணன் கதைகள் – 26

கிருஷ்ணாவதாரத்தின் காரணம் / கிருஷ்ணாவதார நோக்கம்

முன்பு தேவாசுர யுத்தம் நடந்தபோது பல அசுரர்கள் மோக்ஷமடைந்தனர். சிலர் கர்மவசத்தால் கம்ஸன் முதலிய அசுரர்களாகப் பிறந்தார்கள். அவர்களின் பாரத்தால் பூமாதேவி துன்பமடைந்து, தேவர்களுடன் பிரமனை அண்டினாள்.

“பிரம்மதேவனே! அசுரர்களின் பாரத்தால் நான் கடலில் மூழ்கிவிடும் நிலையில் உள்ளேன்”என்று அழுத பூமாதேவியையும், தேவர்களையும் பார்த்த பிரமன், அவர்களிடம் பரிதாபப்பட்டு, “தேவர்களே! பூமாதேவியே! உங்கள் கவலையை அறிந்தேன். உங்கள் அனைவரையும் காக்கும் சக்தி விஷ்ணுவுக்கே உள்ளது, நாம் அனைவரும் பாற்கடல் செல்வோம்” என்று கூறினார். பிறகு அனைவரும் பரமசிவனுடன் சேர்ந்து, குளிர்ந்த காற்றுடன் இருக்கும் பாற்கடலின் கரையை அடைந்தனர். அனைவரும் மகாவிஷ்ணுவைத் தியானித்தனர்.

தியானத்தின்போது பிரமன் மகாவிஷ்ணுவினுடைய சொற்களை உள்ளத்தில் கேட்டார். “ஆதிசேஷன் மேல் சயனித்திருக்கும் ஸ்ரீமன் நாராயணன் கூறிய சொற்களைக் கூறுகிறேன், கேளுங்கள்” என்று ஆனந்தமளிக்கும் அந்த சொற்களைக் கூறத் தொடங்கினார். “பூமாதேவிக்கும், தேவர்களுக்கும் அசுரர்களால் ஏற்படும் துன்பத்தை அறிவேன். அதைப் போக்க யாதவ குலத்தில், வசுதேவருக்கும்,தேவகிக்கும் மகனாக அவதரிக்கிறேன். தேவர்களும், தேவப்பெண்டிரும் என்னைப் பூஜிக்க பூமியில் பிறப்பார்கள்” என்று விஷ்ணு கூறியதை பிரமன் கூறினார். அதைக் கேட்டு அனைவரும் மகிழ்ந்து திரும்பிச் சென்றனர்.

திருமால், யாதவ குலத்தில், வசுதேவருக்கும்,தேவகிக்கும் மகனாக அவதரிப்பதாக வாக்களித்துவிட்டார். யார் அவர்கள்? சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன்பு, அரசன் யதுவின் வம்சத்தில், அரசனாக இருந்தவர் சூரசேனன். இவரது புத்திரன் வசுதேவர். யது வம்சத்தில் போஜகுலத்தில் தோன்றிய உக்ரசேனன், யமுனைக்கரையில் இருந்த, யாதவர்களின் தலைமையிடமான மதுராவை ஆண்டான். அவனுக்கு கம்ஸன் என்ற ஒரு மகன் இருந்தான். அவன், தனது சொந்தத் தந்தையான உக்ரசேனனையே சிறையிலிட்டு, அப்பாவி ஜனங்களைக் கொடுமை செய்து, கொடுங்கோலாட்சி நடத்தி வந்தான். உக்ரசேனனின் தம்பியான தேவகனுக்கு, தேவகி என்ற மிக அழகு வாய்ந்த ஒரு பெண் இருந்தாள். கம்ஸனுக்கு, தன் தங்கை தேவகியின் மீது மிகுந்த பாசம்.

சூரசேனனின் மகன் வசுதேவனுக்கு, தேவகன் மகள் தேவகியைத் திருமணம் செய்து கொடுக்க ஏற்பாடுகள் நடைபெற்றன. திருமணமும் நடந்து முடிந்தது. யாதவ குலத்தில் அனைவரும் மிக்க மகிழ்ச்சியில் இருந்தார்கள். கம்ஸன், தங்கையின் மீதுள்ள பாசத்தால், தம்பதியர்களைப் பெருமைப்படுத்தும் வகையில், அவளைப் புகுந்த வீட்டில் கொண்டு விடுவதற்காக, அவர்கள் அமர்ந்திருந்த ரதத்தைத் தானே ஓட்டிச் சென்றான். அப்போது, “மூடனே! இவளுடைய எட்டாவது பிள்ளை உன்னைக் கொல்வான்” என்ற அசரீரி வாக்கு கேட்டது. பயந்த கம்ஸன், தேவகியைக் கொல்ல வாளை எடுத்தான். தேவகியின் கூந்தலைப் பற்றி இழுத்தான். வசுதேவர் சமாதானப்படுத்தி, குழந்தைகள் பிறந்தவுடன், தன் குழந்தைகளை அவனிடம் தந்து விடுவதாகச் சொன்னார். அதனால் அவளைக் கொல்லாமல் விட்டான். ஆனால், அவர்கள் இருவரையும் சிறை வைத்தான்.

காலம் ஓடியது. தேவகி முதல் குழந்தையைப் பெற்றாள். முதல் குழந்தையை வசுதேவர் கொடுத்தும், கம்ஸன் கருணையால் கொல்லவில்லை. துஷ்டர்களிடமும் சில சமயம் கருணை இருக்கிறது!

வசுதேவர் சென்றதும், நாரதர் கம்ஸனைக் காண வந்தார். நாரதர் கம்ஸனிடம், “அரசனே! நீங்கள் அசுரர்கள். யாதவர்களோ தேவர்கள். இது நீ அறியாததா? மாயாவியான விஷ்ணு உன்னைக் கொல்ல அவதாரம் செய்யப் போகிறான்” என்று சொன்னார். அதைக் கேட்ட கம்ஸன் குழப்பமடைந்தான். யாதவர்களை நகரத்தை விட்டு விரட்டினான். வசுதேவருக்குப் பிறந்த ஆறு குழந்தைகளையும் கொன்றான்.

இவ்விதமிருக்க, மகாவிஷ்ணுவின் சித்தப்படி, ஆதிசேஷன் தேவகியின் ஏழாவது கர்ப்பத்தை அடைந்தான். திருமாலின் சக்தியான மாயையானவள், திருமாலின் கட்டளைப்படி அந்த கர்ப்பத்தை, வசுதேவரின் முதல் மனைவியான ரோகிணியிடம் கொண்டு சேர்த்தாள். மாயையிடம் விஷ்ணு, ” நீ செய்த இந்த உதவியால், உலகில் உள்ளோர், உன்னை என் தங்கையாகவும், துர்க்கா என்றும் பெயரிட்டு அழைப்பார்கள்” என்று வரமளித்தார். தேவகி தனது ஏழாவது கர்ப்பம் கலைந்துவிட்டது என்று கம்ஸனிடம் கூறினாள். தேவகிக்குப் பிறக்கப் போகும் எட்டாவது குழந்தைக்காக கம்ஸன் காத்திருந்தான்.

கோகுலத்தில், ரோகிணி அழகு மிக்க ஒரு ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தாள். அக்குழந்தைக்கு, ‘பலராமன்’ என்று பெயரிட்டனர். இவ்வாறு பலராமன் அவதரித்து, கோகுலத்தில் வளர்ந்து வந்தார்.

பூமாதேவிக்கும், தேவர்களுக்கும் கொடுத்த வாக்கின்படி, திருமால் தேவகியின் வயிற்றில் எட்டாவது கருவாக வந்து அடைந்தார். திருமாலின் கட்டளைப்படி, மாயையும் யசோதையின் வயிற்றில் கருவாக வந்து அடைந்தாள்

——–

கண்ணன் கதைகள் – 27
ஸ்ரீ கிருஷ்ண அவதாரம்

நந்தகோபரும், யசோதையும் மிகுந்த சந்தோஷமடைந்தனர். தேவகியும் வசுதேவரும் ஒரு புறம் மகிழ்ச்சியுடனும், மறுபுறம் கம்ஸன் குழந்தை பிறந்தால் கொன்றுவிடுவானே என்று கலக்கமும் அடைந்தனர். ஆவணி மாதம், கிருஷ்ணபட்சம், அஷ்டமி திதி, ரோகிணி நட்சத்திரத்தில், விருச்சிக லக்கினத்தில், நடு இரவில், மூவுலகங்களின் துன்பங்களையும் போக்க எண்ணம்கொண்டு, ஆனந்த வடிவான திவ்யமேனியுடன், வசுதேவருக்கும் தேவகிக்கும் எட்டாவது மகனாக கிருஷ்ணன் சிறையில்அவதரித்தான். அப்போது,வானம் மழைக்கால மேகங்களால் மூடியிருந்தது. கண்ணனின் நீலநிற மேனியில் இருந்து தோன்றிய ஒளியால் அவ்வாறு மூடியிருந்ததுபோல் தோன்றியது. கருமேகங்கள் மழைநீரைக் கொட்டித் தீர்த்தன. மழைநீரால் அனைத்து திசைகளும் குளிர்ந்திருந்தது. வேண்டிய வரம் கிடைத்ததால் தேவர்கள் மகிழ்ச்சியுடன் இருந்தார்கள்.

குழந்தை ரூபத்தில் இருந்த கண்ணன், தனது திருமேனியில், கிரீடம், கடகம், தோள்வளை, ஹாரம் ஆகியவற்றோடும், சங்கு, சக்கரம், தாமரை, கதை தரித்த கைகளுடனும் காட்சி அளித்தான். அவனது நீலமேனி இந்த எல்லாச் சின்னங்களையும் தரித்து பிரசவ அறையில் விளங்கியது. கம்ஸனுடைய அந்த அறை சோபையற்று இருந்தாலும், அவனது மார்பில் நிரந்தரமாக வசிக்கும் மகாலக்ஷ்மியின் பார்வையால் அந்த அறை லக்ஷ்மிகரமாக விளங்கியது.

ஞானிகளின் மனதிற்கும் எட்டாத அந்த திவ்யஸ்வரூபத்தை வசுதேவர் கண்களால் தரிசித்தார். மயிர்க்கூச்சலுடன், ஆனந்தக் கண்ணீர் வடித்துத் துதித்தார்.“தேவனே! துன்பங்களை அறுப்பவனே! மாயையினால் லீலைகளைச் செய்கிறவனே! தங்கள் கடைக்கண் பார்வையால் என் துக்கங்களைப் போக்கி அனுக்ரஹிக்கவேண்டும்” என்று துதித்தார். தாயான தேவகியின் கண்களிலும் ஆனந்தக் கண்ணீர் பெருகியது. அவளும் துதித்தாள். கருணை வடிவான குழந்தைக் கண்ணன், அவர்கள் இருவருக்கும், அவர்களது முந்தைய இரண்டு ஜன்மங்களைப் பற்றிச் சொன்னார். “நீங்கள் இருவரும், முன்பு திரேதாயுகத்தில்,

பன்னீராயிரம் ஆண்டுகள் தவம் செய்ததால், பிரஸ்னிகர்ப்பன் என்ற பெயருடன் உங்களுக்கு மகனாகப் பிறந்தேன். அதன்பிறகு அடுத்த பிறவியில் நீங்கள் காசியபராகவும் அதிதியாகவும் பிறந்தீர்கள். நான் உங்களிடத்தில் வாமனனாக அவதாரம் செய்தேன். தற்போது மீண்டும் உங்களுக்கு மகனாகப் பிறந்திருக்கிறேன்” என்று கூறினார். இவ்வாறு, மூன்று பிறவிகளிலும் பகவானையே மகனாக அடைந்த அவர்கள் மிகுந்த பேறு பெற்றவர்கள் ஆனார்கள். பின்னர், சங்கு சக்ரங்களைத் தரித்து விளங்கிய அக்குழந்தை, தாயின் வேண்டுகோளுக்கிணங்க மனித உரு எடுத்தார்.

பிறகு, வசுதேவரிடம், ” என்னை கோகுலத்தில் நந்தகோபன் வீட்டில் விட்டுவிட்டு, அவரது பெண் குழந்தையை எடுத்து வா” என்று ஆணையிட்டார். ஞானிகள் மனதில் இருப்பவரும், தாமரை மலரில் இருக்கும் அன்னக்குஞ்சு போல் அழகானவருமான அந்தக் கண்ணனை வசுதேவர் கையில் எடுத்துக்கொண்டார். திருமாலின் ஏவுதலால், கோகுலத்தில் யோகநித்ரையானவள், நந்தகோபர் வீட்டில் யசோதையிடத்தில் அவதரித்தாள்.

நகரமக்கள் அனைவரும் மாயையினால் தூங்கினர். அறிவற்ற கதவுகள் கூட  திருமாலின்  கட்டளையால் தாமே திறந்து கொண்டன! ஆச்சர்யம்!

பாக்யசாலியான வசுதேவர், கண்ணனை ஒரு துணியில் சுற்றி, கூடையில் சுமத்து, கோகுலம் எடுத்துச் சென்றார். ஆதிசேஷன் தன் படங்களால் மழையைத் தடுத்துக் குடை பிடித்தான். அவன் தலைகளில் இருந்த ரத்னமணிகளின் ஒளியால், இருட்டில் வழிகாட்டிக் கொண்டு வந்தான். யமுனை உயர்ந்த அலைகளுடன் வெள்ளப் பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருந்தது. வசுதேவர் அருகே சென்றதும், மாயவித்தையைப் போல் வடிந்து கணுக்கால் அளவாக ஓடியது. ஆச்சர்யம்!

கோகுலத்தில் எல்லாரும் நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்தார்கள். கதவுகள் திறந்திருந்தன. குழந்தை அழும் சத்தம் கேட்ட வீட்டிற்குள் வசுதேவர் சென்று, யசோதையின் அருகே கண்ணனைப் படுக்க வைத்துவிட்டு, அங்கிருந்த பெண் குழந்தையான யோகமாயாவை எடுத்துக் கொண்டு வேகமாகத் தன் இருப்பிடம் வந்து சேர்ந்தார்.

சிறையில், குழந்தையின் அழுகுரல் கேட்டு காவற்காரர்கள் எழுந்தனர். அரசனிடம் சென்று தகவல் கூறினர். அவிழ்ந்த தலையுடன் கம்ஸன் விரைந்தோடி வந்தான். தேவகியின் கைகளில் பெண் குழந்தை இருப்பதைக் கண்டு சந்தோஷப்படுவதற்குப் பதில் கலக்கமடைந்தான்.  இது நாராயணனின் மாயை என்று நினத்த கம்ஸன், அந்தக் குழந்தையை, தேவகியின் கரத்திலிருந்து வலுவாகப் பிடுங்கி இழுத்து, கற்பாறையில் அடித்தான்.

யமனுடைய பாசக்கயிற்றில் இருந்து விடுபடும் நாராயண பக்தர்கள் போல, அக்குழந்தை கம்ஸனுடைய கையிலிருந்து விடுபட்டு, வேறு உருவத்துடனும், ஆயுதம் ஏந்திய எட்டுக் கரங்களுடனும் வானில் பரந்து விளங்கினாள்.
“கொடிய கம்ஸனே! உன்னைக் கொல்லப் பிறந்தவன் வேறு எங்கோ இருக்கிறான், அதை நீயே தேடி அறிந்து கொள்” என்று சொன்னாள். பின்னர், தேவர்கள் துதிக்க பூவுலகில் உள்ள அனைத்து ஆலயங்களையும் அடைந்தாள்.
மாயை கூறியவற்றை கம்ஸன் அசுரர்களுக்குச் சொன்னான். அதை கேட்ட பிரலம்பன், பகன், பூதனை முதலிய அசுரர்கள், பிறந்த அனைத்து ஆண் குழந்தைகளையும் கொன்று குவித்தார்கள். கருணையில்லாதவர்களுக்கு செய்யக் கூடாதது என்று எதுவும் இல்லை.

நந்தகோபன் வீட்டில் யசோதையின் பக்கத்தில் கால்களை அசைத்துக் கொண்டு கண்ணனும் அழுதான். கண் விழித்த யசோதையும், கோபியர்களும் செய்தியை நந்தகோபனிடம் கூறினார்கள். கோகுலம் முழுவதும் ஆனந்தக் கடலில் மூழ்கியது. காயாம்பூ போன்ற குழந்தையின் மேனியைக் கண்டு யசோதை மகிழ்ந்தாள். சந்தோஷத்துடன் பாலூட்டினாள். தொட்டுப் பார்த்து ஆனந்தமடைந்தாள். இத்தகைய பேற்றைப் புண்ணியசாலிகளும் அடையவில்லை!!  நந்தகோபனும் மிக்க மகிழ்ச்சி அடைந்து, அனைவருக்கும் தானங்கள் செய்தார். எல்லா இடையர்களும் மங்கள காரியங்கள் செய்தனர். கண்ணனைக் கண்டு, கோகுலத்தில் அனைவரும், அளவற்ற மகிழ்ச்சியில் ஆடிப் பாடி கண்ணன் பிறந்ததைக் கொண்டாடினார்கள்.

——————-

கண்ணன் கதைகள் – 28
பூதனை மோக்ஷம் / பூதனா மோக்ஷம்

நந்தகோபன், கப்பம் கட்டுவதற்காக மதுரா நகரம் சென்றார். அசுரர்களின் முயற்சியை அறிந்த வசுதேவர், அதுபற்றி நந்தகோபனிடம் கூறினார். மேலும்,“உனக்குப் பிள்ளை பிறந்ததைக் கேட்டு எனக்குப் பிறந்ததைப் போல மகிழ்ச்சி அடைகிறேன். சில கெட்ட சகுனங்கள் காணப்படுகிறது, ஆகையால் நீ விரைந்து கோகுலத்திற்குச் செல்” என்று கூறினார். நந்தகோபனும் கண்ணனுக்கு ஆபத்து வருமோ என்று கவலை கொண்டு விரைந்து சென்றார்.

அதே சமயம், கம்ஸனால் ஏவப்பட்ட பூதனை என்கிற கோர ரூபமுள்ள ராக்ஷஸி, தன்னை மிக அழகிய பெண்ணாக மாற்றிக் கொண்டு, கோகுலத்திற்கு வந்தாள். தன் நடவடிக்கைகளால் அனைவரின் மனதையும் கவர்ந்தாள். எல்லாக் குழந்தைகளுடைய உள்ளத்தையும் கவரும் அவளைக் கண்டு கோபியர்கள் “இவள் யார்?” என்று யோசித்தனர். ஒய்யாரமாக நடந்து வந்து கண்ணனைக் கையில் எடுத்தாள். பின்னர், வீட்டின் உள்ளே அமர்ந்து, கண்ணனை மார்போடணைத்து விஷப் பாலூட்டினாள். பயமின்றி அவள் மடிமீது ஏறிய கண்ணன், விஷம் நிறைந்த அவளுடைய முலையில் வாய் வைத்து, பெரிய மாம்பழத்தை உறிஞ்சுவதுபோல் உறிஞ்சத் தொடங்கினான்.

ஏற்கனவே, அவள் பல குழந்தைகளைக் கொன்றதால், கண்ணன் அவள் மீது கோபமுற்றிருந்தான். பால் சாப்பிடுவது போல அவளுடைய உயிரையும் சேர்த்துக் குடித்தான். அவள், இடிபோலக் கூச்சலிட்டுக் கொண்டு, ராக்ஷஸ உருவத்துடன், இரண்டு கைகளையும் நீட்டிக் கொண்டு, கண்கள் பிதுங்கி, உயிரற்றுக் கீழே விழுந்தாள். அக்குரலைக் கேட்ட அனைவரும் நடுங்கினர். பகவானான கண்ணன், அவளுடைய மார்பில் பயமே இல்லாமல் விளையாடிக்கொண்டிருந்தான்.
உயிரற்ற அவள் மார்பின்மீது விளையாடிக் கொண்டிருந்த கண்ணனை, கோபிகைகள் வாரி எடுத்துத் தூக்கினார்கள். அவன்தான் திருமால் என்று அறியாமல், மங்கலங்களைக் கொடுக்கும் திருமாலின் நாமங்களைக் கூறிக்கொண்டே, ரட்சை செய்து அவனுக்கு அணிவித்தார்கள்.

வசுதேவர் கூறியதைக் கேட்ட நந்தகோபர் விரைந்து கோகுலத்திற்குத் திரும்பினார். வழியில் மரங்களை எல்லாம் வேரோடு சாய்த்து, வீழ்ந்து கிடந்த ஒரு பெரிய உருவத்தைக் கண்டு பயந்து, குழந்தையைக் காக்க வேண்டும் என்று திருமாலை வேண்டினார். கோபியர்கள் மூலம் விஷயம் அறிந்த இடையர்கள், பயத்தாலும், ஆச்சரியத்தாலும் பேச்சற்று இருந்தனர். பிறகு, கீழே கிடந்த அந்த பயங்கரமான ராட்சத உருவத்தைக் கோடாரியால் துண்டு துண்டாக வெட்டி, வெகுதூரத்திற்கப்பால் கொண்டு சென்று எரித்தார்கள். அப்போது, குழந்தையான கண்ணன் பால் அருந்தியதாலும், மடியில் அமர்ந்ததாலும், தூய்மை அடைந்த அந்த ராக்ஷஸியின் உடலிலிருந்து, சந்தனம், குங்கிலியம் போன்ற உயர்ந்த வாசனையுடைய புகை உண்டானது. என்ன ஆச்சர்யம்!!

இந்த தெய்வக் குழந்தையைத் தொடுகிறவர்களுக்கும், பார்ப்பவர்களுக்கும் மோக்ஷம் உடனேயே கிடைக்கும், காத்திருக்க வேண்டியதில்லை என்பதை இடையர்களுக்குச் சொல்வதுபோல், பூதனையை மணமுள்ளவளாகக் கண்ணன் செய்தான்.

வசுதேவனுக்கு இது எப்படி முன்னமேயே தெரிந்தது என்று நந்தகோபன் வியந்தார். “இது என்ன அதிசயம்!! இந்த அரக்கியால் குழந்தை கொல்லப்படவில்லையே!! ஆச்சர்யம்” என்று கோபர்கள் பேசிக் கொண்டார்கள். கண்ணனின் அழகிய திருமுகத்தைப் பார்த்து ஆனந்தத்தில் மூழ்கினார்கள்.

கண்ணனின் பிறப்பால், கோகுலத்தில் வாழ்ந்தவர்கள் செல்வங்கள் நிரம்பப் பெற்று, மங்கள காரியங்கள் செய்தனர். கோகுலம் முழுவதும் ஆனந்தத்தில் மூழ்கியது. கோபியர்கள் வீட்டில் வேலை செய்யும்போது கூட கண்ணனின் அழகைப் பற்றியும், புன்சிரிப்பைப் பற்றியும் பேசி மகிழ்ந்தனர். வேலை முடிந்ததும் கண்ணனைக் காண தினமும் நந்தகோபர் வீட்டிற்குச் சென்றனர். இடைப்பெண்கள் ஒவ்வொருவரும், “குழந்தை என்னைப் பார்க்கிறது, என்னைப் பார்த்து சிரிக்கிறது, என்னிடம் வா” என்று கூறி மகிழ்ந்து குழந்தையிடம் அன்பைப் பொழிந்தார்கள். கண்ணனைத் தொட வேண்டும் என்ற ஆசையால், மாற்றி மாற்றித் தூக்கிக்கொண்டு மகிழ்ந்தார்கள்.

நந்தகோபன், பரவசத்துடன் கண்ணனைக் கைகளில் எடுத்து, உச்சிமுகர்ந்து மகிழ்ந்தான். யசோதை, கண்ணனை மடியில் கிடத்தி, பாலூட்டி, அவன் முகத்தைப் பார்த்துச் சிரித்து ஆனந்தத்தை அடைந்தாள்.

கண்ணனால், பூதனையின் உயிர் மாத்திரம் உறிஞ்சப்படவில்லை; அவளுடைய பாபங்களும் சேர்த்து உறிஞ்சப்பட்டன. அதனால். அவள் மோக்ஷம் அடைந்தாள்.  இந்த பூதனா மோக்ஷத்தை, படிப்பவர்களுக்கும், கேட்பவர்களுக்கும், சொல்பவர்களுக்கும் மீண்டும் ஒரு தாயின் பாலைக் குடிக்கும் நிலைமை உண்டாகாது என்று அறிந்தோர் சொல்வார்கள். அதாவது, இவ்வுலகில் மீண்டும் பிறக்கமாட்டார்கள் என்று அர்த்தம்.

ஸ்வாமி தேசிகன், ‘யாதவாப்யுதயம்’ என்னும் காவியத்தில்,
“ஸ்தன்யேந க்ருஷ்ண: ஸஹ பூதநாயா:
ப்ராணாந் பபௌ லுப்த புநர்ப4வாயா:
யத் அத்3பு4தம் பா4வயதாம் ஜநாநாம்
ஸ்தநந்த4யத்வம் ந புநர் ப3பூ4வ”
என்று கூறுகிறார்.
பூதனையின் பாலைக் கண்ணன் உறிஞ்சினான். பாலை மட்டுமல்ல, அவள் உயிரையும் உறிஞ்சினான். உயிரை மட்டுமல்ல, அவள் பாபங்களையும் சேர்த்து உறிஞ்சினான். அவள் மீண்டும் பிறவாதபடி செய்தான். அவளுக்கு மோக்ஷத்தை அளித்தான். கண்ணனின் இந்த லீலையைப் படிப்பவர்களும், கேட்பவர்களும்,  பிறப்பு, இறப்பு அற்ற பேரின்ப நிலையை அடைவார்கள் என்று கூறுகிறார்.

————–

கண்ணன் கதைகள் – 29
சகடாசுர வதம்

குழந்தை கண்ணன் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்தான். அவன் பிறந்து மூன்று மாதங்கள் ஆகிவிட்டது. குப்புறக் கவிழ்ந்து கொள்ள ஆரம்பித்தான். யசோதை, அதைக் கொண்டாட ஒரு விழா ஏற்பாடு செய்திருந்தாள்.

இதற்கிடையே கம்ஸன் அனுப்பிய சகடாசுரன் என்ற மற்றொரு ராக்ஷஸன், வண்டியின் உருவெடுத்து, கோகுலத்தில் யசோதையின் வீட்டிற்கு அருகே. குழந்தையைக் கொல்வதற்காகக் காத்திருந்தான்.

விழாவிற்கு, யசோதையும் நந்தகோபரும், கோகுலத்தில் உள்ள அனைவரையும் அழைத்திருந்தார்கள். யசோதை, குழந்தையை நன்கு குளிப்பாட்டி, அலங்கரித்து விட்டாள். குழந்தைக்குத் தூக்கம் கண்ணைச் சொருகியது. அதனால், அருகில் இருந்த அந்தப் பெரிய வண்டியின் அடியில் தொட்டில் கட்டி, அதில் குழந்தையைப் படுக்க வைத்து, சமையல் வேலைகளில் ஈடுபட்டிருந்தாள்.

சிறிது நேரத்தில் கண் விழித்த குழந்தை கண்ணன் ஆழ ஆரம்பித்தான். வேலையின் மிகுதியாலும், கூடியிருந்தவர்களின் பேச்சு சத்தத்தாலும் யசோதைக்கு, குழந்தையின் அழுகைக் குரல் கேட்கவில்லை. குழந்தை கால்களை வேகமாக உதைத்துக் கொண்டு அழுதது. அப்போது, அருகே மரங்கள் முறியும் சப்தமும், குழந்தையைப் பார்த்துக் கொள்ள நியமித்திருந்த இடைச்சிறுவர்களின் கூக்குரலும் கேட்டது. அந்தப் பெருஞ்சத்தத்தைக் கேட்டு, இடைப்பெண்கள் உடல் குலுங்க ஓடி வந்தனர். அங்கே, வண்டி முறிந்து கிடக்க, அதன் நடுவே குழந்தையைக் கண்டனர்.

பெரியோர்களும், இடையர்களும், நந்தகோபனும், குழந்தைக்கு என்ன நேர்ந்ததோ என்று பயந்து ஓடி வந்தனர். யசோதை குழந்தையைத் தூக்கி வைத்துக் கொண்டிருப்பதைப் பார்த்து சமாதானம் அடைந்தனர். “இந்த வண்டி எப்படி முறிந்தது? ஒன்றும் புரியவில்லையே”! என்று அதிசயித்தனர். அப்போது, கண்ணனைப் பார்த்துக் கொள்ள நியமித்திருந்த இடைச்சிறுவர்கள், “இக்குழந்தை பால் சாப்பிட அழுதுகொண்டு காலை உதைத்துக் கொண்டது, அதன் கால் பட்டு இந்த வண்டி உடைந்தது, நாங்கள் பார்த்தோம்” என்று கூறினார்கள். “குழந்தையின் கால் பட்டு வண்டி முறியுமா? இருக்காது” என்று இடையர்கள் அதை நம்ப மறுத்தனர். பூதனையின் முடிவை நேரில் கண்டிருந்த சிலர் அப்படியும் இருக்கலாம் என்று சந்தேகப்பட்டனர். இவ்வாறு, வண்டியின் உருவில் வந்த சகடாசுரன், கண்ணனால் வதம் செய்யப்பட்டதால், ஸத்வவடிவான பரந்தாமனுடன் ஐக்யமடைந்துவிட்டான். அவனுடைய உடலின் சிறு பாகம்கூட அங்கு காணப்படவில்லை!!!

தாமரைப் பாதங்களில் காயம் பட்டதா? பிஞ்சுக் கைகளில் அடி பட்டதா? என்று இடைப்பெண்கள் கண்ணனைத் தூக்கித் தடவிப் பார்த்தனர். அந்தக் குழந்தைதான் ‘ஹரி’ என்று அறியாமல், ” உலகத்தைக் காக்கும் ஹரியால் என் குழந்தை காக்கப்பட்டது” என்று கூறிய நந்தகோபர், மயிர்க்கூச்சலுடன் குழந்தையைத் தூக்கித் தழுவிக் கொண்டார். பிறகு வேதமறிந்தவர்கள் குழந்தையை ஆசீர்வதித்தார்கள். கண்ணனும் தனது லீலைகளால் கோகுலத்தை மகிழ்வித்தான்.

—————-

கண்ணன் கதைகள் – 30
த்ருணாவர்த்த வதம்

ஒரு நாள் யசோதை குழந்தையான கண்ணனை, மடியில் வைத்திருந்தாள். குழந்தையின் எடை அதிகமாக இருந்ததால், அவளால் அதிக நேரம் மடியில் வைத்திருக்க முடியவில்லை. உடனே கண்ணனைப் படுக்கையில் கிடத்திவிட்டு, வீட்டு வேலைகள் செய்து கொண்டிருந்தாள்.

அப்போது, கம்ஸனால் அனுப்பப்பட்ட, த்ருணாவர்த்தன் என்ற மற்றொரு அசுரன் காற்று ரூபத்தில், புழுதி பறக்க, பெரும் சத்தத்துடன் வந்தான். குழந்தையையும் எடுத்துச் சென்றான்.  கோகுலம் முழுவதும் புழுதியால் இருண்டது. எதையும், பார்க்க முடியாத அந்த இருளில், யசோதை குழந்தையைக் காணாமல் கதறி அழுதாள்.  அவள் அழுத சத்தம் எங்கும் பரவியது. யசோதையின் அழுகையைக் கேட்ட இடையர்கள், நந்தகோபனின் வீட்டிற்கு வந்தனர். குழந்தையைக் காணாமல் அனைவரும் அழுதனர்.

அதே சமயம், த்ருணாவர்த்தன் கண்ணனைத் தோளில் சுமந்து கொண்டு வானில் உயரப் பறந்தான். அப்போது கண்ணன், தன்னுடைய எடையை மிகவும் அதிகமாக்கிக் கொண்டான். அவனுடைய பாரம் தாங்க முடியாமல், த்ருணாவர்த்தன் வேகம் குறைந்தவனானான். அவனுக்குக் கண்ணன் மலையைப் போல் கனத்தான். புழுதியும், சத்தமும் ஓய்ந்தது. இப்போது அசுரன் குழந்தையை விட்டுவிட நினைத்தான். ஆனால் கண்ணன் அவனை விடவில்லை. அவனுடைய  கழுத்தை இறுகப் பிடித்தான். அசுரன், உயிரிழந்து பூமியில் விழுந்தான். அவனுடைய உடல் ஒரு பாறை மீது விழுந்தது. அழுதுகொண்டு வந்த அனைவரும், அசுரனுடைய உடல் மேல், சிரித்துக் கொண்டு விளையாடிக் கொண்டிருந்த குழந்தையைக் கண்டனர்.

அசுரன் கல்லின்மீது விழுந்து உயிரிழந்து கிடந்தான். குழந்தையான கண்ணனோ, தன்னுடைய தாமரைக் கைகளினால் அவனை அடித்து விளையாடிக் கொண்டிருந்தான்.  இவ்வாறு, சூறாவளிக் காற்றாய் வந்த அசுரனையும் அழித்தான். மலைமேல் இருக்கும் ஒரு நீலமணியைப் போல் இருந்த குழந்தையைத் தூக்கி எடுத்து வந்தார்கள்.

நந்தகோபனும், மற்றவர்களும் சந்தோஷமடைந்தனர். அனைவரும் குழந்தையை அணைத்து முத்தமிட்டனர். தன்னைத் தூக்க வேண்டும் என்ற கோபியர்களின் எண்ணத்தை அறிந்து, கண்ணன் தானாகவே தாவிச் சென்று அவர்களுடைய கைகளில் விளையாடினான். யசோதையும், நந்தனும், மற்றவர்களும், “ஸ்ரீ ஹரியே! எங்கள் குழந்தையைக் காப்பாற்று” என்று வேண்டிக் கொண்டார்கள். மேலும், “நாம் பூர்வ  ஜன்மத்தில் நிறைய புண்ணியங்கள் செய்திருக்கிறோம், அதனால்தான் அந்த பகவான் நம் குழந்தையை ஆபத்திலிருந்து காப்பாற்றியிருக்கிறார்” என்று தங்களுக்குள் பேசிக் கொண்டனர். குழந்தையை அசுரன் எடுத்துச் சென்றும், எந்த ஆபத்துமில்லாமல் தங்களுக்குக் கிடைத்ததை எண்ணி, குழந்தையை உச்சி மோர்ந்து புளகாங்கிதமடைந்தனர்


கண்ணன் கதைகள் – 31 நாமகரணம் செய்தல் (பெயர் சூட்டுதல்)

வசுதேவர் குழந்தைக்குப் பெயர் சூட்ட விரும்பினார். வசுதேவர் வேண்டிக் கொண்டதன் பேரில் கர்க்க முனிவர், நாமகரணம் செய்ய, நந்தனது வீட்டிற்கு வந்தார். சந்தோஷமடைந்த நந்தகோபன், அவரை வரவேற்றுப் பூஜித்தார். யசோதையும், நந்தனும் கர்க்கரை நமஸ்கரித்தார்கள். புன்முறுவலுடன் விழாவிற்கு வேண்டியவற்றைச் செய்யச் சொன்னார். கர்க்கர் நந்தகோபனைப் பார்த்து,”நான் யதுகுலத்தின் குரு. இந்த விழாவை மிகவும் ரகசியமாகச் செய்ய வேண்டும்” என்று கூறினார். ஏனெனில், ஆடம்பரமாகச் செய்தால், கம்ஸனுக்குத் தெரிந்துவிடும் என்பதால் அப்படிச் சொன்னார். நந்தகோபனும் அதற்கு சம்மதித்தார்.

பிறகு கர்க்கர், ரோஹிணியின் குழந்தையை எடுத்து வரச் சொன்னார்.  அந்தக் குழந்தை, நல்லொழுக்கம் மிகுந்த  குழந்தையாக இருந்ததால், ‘ராமன்’ என்றும், பலசாலியாக இருந்ததால் ‘பல’ என்பதையும் சேர்த்து, “பலராமன்” என்று பெயரிட்டார்.  வசுதேவன், நந்தன் ஆகியோரின் இரு குடும்பங்களையும் இணைத்ததால், ‘ஸங்கர்ஷணன்’ என்றும் பெயரிட்டார்.

பிறகு, யசோதையின் குழந்தையை எடுத்து வரச் சொன்னார். கணக்கிலடங்கா ஆயிரக்கணக்கான பெயர்கள் கொண்ட இவருக்கு எந்த பெயர் சூட்டுவது? என்று கவலையடைந்தார். பிறகு ரகசியமாகப் பெயர் வைத்தார். மங்கலமாகவும், ஆனந்தமாகவும் இருப்பதைச் சொல்வதும், கருமையானதும், உலகத்தின் பாபத்தைப் போக்கும் தன்மை உடையதுமான “கிருஷ்ணன்” என்ற பெயர் வைத்தார். வசுதேவனின் குழந்தை என்பதால், “வாசுதேவன்” முதலிய பெயர்களையும் சூட்டினார். இந்தக் குழந்தைதான் ‘ஸ்ரீஹரி’ என்று சொல்லாமல், ஸ்ரீஹரியின் பெருமையை எடுத்துச் சொன்னார். மேலும் நந்தகோபனிடத்தில், “உன் மகனிடத்தில் பக்தி கொண்டவன் துன்பப்படுவதில்லை. உன் மகனுக்குத் துன்பம் தருபவன் நாசமடைவான்” என்று கிருஷ்ணனின் பெருமையை எடுத்துச் சொன்னார். மேலும், “இவன் அசுரர்களைக் கொல்வான். பந்துக்கள் நல்ல ஸ்தானத்தை அடையும்படி செய்வான். உன் மகனுடைய புகழைக் கேட்டு மகிழ்வீர்கள்” என்று கூறினார். பிறகு கர்க்கர், வெளிப்படையாக இக்குழந்தை ‘ஸ்ரீஹரி’ என்று சொல்லாமல், “இக்குழந்தையின் மூலம் அனைவரும் அனைத்துக் கஷ்டங்களையும் கடக்கப் போகிறீர்கள்” என்று கூறினார்.

பெயர் சூட்டும் விழா இனிதே நிறைவேறியது. அனைவரையும் ஆசீர்வதித்த பின்னர், கர்க்கர் தனது இருப்பிடம் சென்றார். நந்தகோபனும், மற்றவர்களும் மிகுந்த மகிழ்ச்சியுடன், குழந்தை கிருஷ்ணனை சீராட்டினர்.

————–

கண்ணன் கதைகள் – 32

பால லீலை

இப்பொழுது பலராமனும், கிருஷ்ணனும் நந்தனின் வீட்டில் தவழ்ந்து விளையாட ஆரம்பித்தார்கள். தாமரை போன்ற பாதங்களில் உள்ள சலங்கைகளின் சத்தத்தைக் கேட்க ஆசை கொண்டு வேகமாகவும், அழகாகவும் தவழ்ந்தார்கள். இருவரும் சிரித்தபோது தெரிந்த பற்கள் மிக அழகாக இருந்தது. கைகளில் இருந்து நழுவி மணிக்கட்டில் விழுந்த கங்கணங்கள் அழுந்தியதால் உண்டான வடுக்களுடன் இருவரும் அனைவரின் மனதையும் கொள்ளை கொண்டார்கள்.

கிருஷ்ணன், தாமரை போன்ற பாதங்களுடனும், முன் நெற்றியில் கலைந்து விழுந்த கேசங்களுடனும் மிக அழகாக விளங்கினான். அனைவரும் ஆசை கொண்டு அவனைப் பின்தொடர்ந்தனர். அதைப் பார்த்து, இனிமையான சப்தத்துடன் சிரித்துக்கொண்டு ஓடினான். பிறகு நின்று, திரும்பிப் பார்த்து அனைவருக்கும் ஆனந்தத்தை அளித்தான். இருவரும் வேகமாக ஓடி சேற்றில் விழுந்து, சேற்றை உடம்பில் பூசிக் கொண்டார்கள். ஆகாயத்திலிருந்து முனிவர்கள் துதித்தனர். ஓடி வந்த தாய்மார்கள், கருணையோடு வாரி அணைத்து முத்தமிட்டார்கள். யசோதை, பெருகிய அன்புடனும், பால் நிரம்பிய கொங்கைகளுடனும், கண்ணனை எடுத்துப் பாலூட்டினாள். பாலூட்டும்போது புன்சிரிப்புடன் கூடிய அவனது பற்களைப் பார்த்து ஆனந்தமடைந்தாள். இவ்வாறு தெய்வக் குழந்தைக்குப் பாலூட்டி, மிகவும் பேறு பெற்றவளானாள். இப்போது தளிர்நடைப் பருவம் வந்தது. கண்ணன் தன் பிஞ்சுக் கால்களால், தளிர்நடை நடந்து, மற்ற இடைச்சிறுவர்களுடன் அருகே உள்ள வீடுகளில் விளையாடினான். வீடுகளில் உள்ள கிளி, பூனை, கன்றுகளை அவிழ்த்துவிட்டு அவற்றின் பின்னே ஓடினான். இடைச்சிறுவர்கள் சிரித்துக் கொண்டு அவனைத் தொடர்ந்தனர்.

பலராமனுடன் கண்ணன் சென்ற இடங்களில் எல்லாம், கோபிகைகள் அவர்களைக் கண்டு களித்தனர். வீட்டு வேலைகளையும், குழந்தைகளையும் மறந்து கண்ணனையே நினைத்து, பரவசமாக ஆனார்கள். கண்ணன், கோபிகைகள் கொடுக்கும் புதிய வெண்ணைக்கு ஆசைப்பட்டு இனிமையாய்ப் பாடினான். அழகாய் ஆடினான். அவர்கள் கருணையோடு கொடுத்த வெண்ணையை உண்டான். சில இடங்களில் புதிதாய்க் காய்ச்சிய பாலைக் குடித்தான்.

ஒரு நாள், மரத்தின் கிளைகள் மேலே பிரகாசிக்கும் நிலவினைப் பார்த்து, பழம் என்று நினைத்து, பெற்றோரிடம் கேட்டான். அவர்கள் வேடிக்கையாக “நீயே கூப்பிடு, அது வரும்” என்றார்கள். கண்ணனும் கூப்பிட, நிலவு நேராக அவனது கைகளில் வந்தது. அப்போது அவன் மேனி முழுவதும் நட்சத்திரக் கூட்டங்களுடன் அண்டங்களின் வடிவாகத் தோன்றினான். திகைப்புடன் நந்தகோபர் நோக்கும்போது, அவரை பேரின்பக்கடலில் மூழ்கச் செய்து, மறுபடியும் மாயையால், தான் அவரின் மகன் என்ற நினைவை ஏற்படுத்தினான்.

வாமனாவதாரத்தில் மகாபலியிடம் யாசித்துவிட்டேன். மறுபடி யாசிக்கமாட்டேன் என்று முடிவு செய்தவனைப் போல, யாசிக்காமல் அழகாய்த் திருடத் தொடங்கினான். ஒவ்வொரு நாளும் கோபிகைகள் யசோதையிடம் வந்து புகார் கூறத் தொடங்கினார்கள். ஒரு பெண், “இன்று காலை கண்ணன் என் வீட்டிற்கு வந்து, கன்றினை அவிழ்த்துவிட்டதால், அது மாட்டின் எல்லா பாலையும் குடித்துவிட்டது” என்று சொன்னாள். வேறொருத்தி, “அவன் வெண்ணை திருட ஆயிரம் வழி வைத்திருக்கிறான், உயரே உரியில் வைத்தாலும், ஒருவர் மீது ஒருவர் ஏறிக் கொண்டு வெண்ணையைத் திருடுகிறான்” என்று சொன்னாள். மற்றொருத்தி, “பாதி வெண்ணையை அவன் உண்டுவிட்டு மீதியை குரங்குகளுக்குக் கொடுக்கிறான்” என்றாள். ஒரு பெண், உயரே இருக்கும் பானையில் கல்லெறிந்து உடைத்துவிட்டு, அடியில் வாயைத் திறந்து தயிரைக் குடிக்கிறான்” என்று புகாரிட்டாள். அவர்கள் கூறும் புகாரைக் கேட்ட யசோதை, கோபமாகக் கண்ணனைப் பார்க்கும்போது, அவன் கண்களில் நீருடன் நிற்பான். அதைக் கண்டு மனம் பொறுக்காமல், அவனை எடுத்துத் தன் மடியில் வைத்துக் கொள்வாள். இவ்வாறு கோகுலத்தில், தயிர், நெய், வெண்ணையை அவன் திருடினாலும், இடைப்பெண்கள் அவனிடம் கோபம், வருத்தம் கொள்ளவில்லை. வெண்ணையுடன், அவர்கள் மனதையும் திருடி, அவர்களை மகிழ்ச்சிக் கடலில் மூழ்கடித்தான்.

————-

கண்ணன் கதைகள் – 33

யசோதை – கண்ணன் வாயில் பிரபஞ்சம் கண்டது

ஒரு சமயம், யசோதையிடம் பாலருந்திவிட்டுப் படுத்துக் கொண்டிருந்தபோது கொட்டாவி விட்டபோது , யசோதை கண்ணன் வாயில் அனைத்து உலகங்களையும் கண்டாள். மாயையால் அதை அவள் மறந்தாள். கண்ணன், இடைச்சிறுவர்களுடன் விளையாடும்போது, அவர்களுக்குப் பழம் தருவதாகச் சொல்லி, தராமல் ஏமாற்றினான். அதனால், கோபம் கொண்ட அவர்கள், யசோதையிடம் அவன் மண் தின்றதாகக் கூறினர்.

பிரளய காலத்தில் பூமி மற்றும் அனைத்தையும் உண்ணும் மாயக் கண்ணனுக்கு, மண் தின்றதால் வியாதி வரும் என்று யசோதை பயந்து கோபம் கொண்டாள். “ மண் தின்றாயா?” என்று யசோதை கேட்டாள். கண்ணன் சிரித்துக்கொண்டே இல்லையென்று சத்தியம் செய்தான். “உன் நண்பர்கள் சொல்வது பொய் என்றால், உன் வாயைத் திறந்து காட்டு” என்று சொன்னாள். உடனே, மலர்ந்த தாமரை மலரைப் போன்ற தன் திருவாயைத் திறந்து காட்டினான். அவனது சிறிய வாயில் மண் இருக்கிறதா என்று பார்க்க விரும்பிய யசோதைக்கு, இந்த பூமி மட்டுமல்லாமல் அனைத்து உலகங்களையும் வாயில் காண்பித்தான்.

கண்ணனது வாயில், காடுகளையும், கடல்களையும், மேகத்தையும், பாதாளத்தையும் கண்டாள். மனிதர்கள், அசுரர்கள், தேவர்கள் மட்டுமல்லாமல், அனைத்து ஜீவன்களையும் கண்டாள். பாற்கடலில் பள்ளி கொண்டவராகக் கண்டாள். வைகுண்டத்தில் இருப்பவராகக் கண்டாள். தன் முன்னே தன் குழந்தையாகவும் நிற்பதைக் கண்டாள். உலகங்கள் அனைத்தையும் கண்டாள். கோகுலத்தில் கண்ணனாகவும், அவன் முன் அனைத்து உலகங்களையும் வரிசையாகக் கண்டாள். ‘இவன் பரமாத்மா’ என்று ஒரு நொடிப்பொழுது நினைத்தாள். மீண்டும் மாயை அகன்று, அன்பினால் அவன் தன் மகன் என்ற நினைவினை அடைந்தாள். கனவினைப் போல நடந்த அனைத்தையும் மறந்தாள். ‘பசிக்கிறது, எனக்குப் பால் கொடு’ என்று கேட்டு அவள் மடிமீது ஏறி அமர்ந்த கண்ணனுக்கு ஸ்தன்யபானம் செய்தாள்

————

கண்ணன் கதைகள் – 34

யசோதை – கண்ணனை உரலில் கட்டி வைத்தல்

யசோதை ஒரு முறை தயிர் கடைந்து கொண்டிருந்தாள். கண்ணன் தூங்கிக் கொண்டிருந்தான். கண்ணனுடைய விஷமங்களை நினைத்து மிகவும் பெருமிதத்துடன், பாட்டிசைத்துக் கொண்டு தயிர் கடைந்தாள். சிறிது நேரத்தில் விழித்துக் கொண்ட கண்ணனுக்கு, பால் குடிக்க ஆசை ஏற்பட்டது. உடனே யசோதையின் மடிமீது ஏறி, தயிர் கடைவதைத் தடுத்து, பால் குடித்தான். தாமரைமொட்டுக்கள் போன்ற மார்பில், தாமரை முகத்துடன் அவன் பால் குடித்துக் கொண்டிருந்தபொழுது, அடுப்பில் பால் பொங்கியதால் யசோதை அவனைக் கீழே இறக்கிவிட்டு உள்ளே சென்றாள்.

பாதி பால் குடித்துக் கொண்டிருக்கும்போது தடை ஏற்பட்டதால், கோபம் கொண்ட கண்ணன், மத்தை எடுத்து தயிர்ப் பானையை உடைத்தான். பானை உடைந்த சத்தம் கேட்டு வேகமாக வந்த யசோதை, கீழே சிதறிக் கிடந்த தயிரைக் கண்டாள். கண்ணனைத் தேடினாள். அவனைக் காணவில்லை. தயிரில் தோய்ந்த கண்ணனின் காலடித் தடத்தைப் பின்பற்றி மெதுவே சென்றாள். அங்கே, அவன் உரலில் அமர்ந்துகொண்டு பூனைக்கு வெண்ணை கொடுத்துக்கொண்டிருந்தான்.

பயந்தவன் போல் முகத்தை வைத்துக் கொண்டிருந்த அவனைக் கோபத்துடன் கையில் பிடித்து, ” உன் விஷமம் எல்லை கடந்து போய்விட்டது, கட்டிப் போட்டால்தான் சரியாகும்” என்று கூறி, அவனை உரலில் கட்டிப்போட கயிற்றை எடுத்தாள். பல கயிறுகளை ஒன்றாக இணைத்தும், கட்டுவதற்கு இரண்டு அங்குலம் கயிறு குறைவாக இருந்தது. வீட்டிலுள்ள எல்லா கயிறுகளையும் இணைத்தும் அவளால் கட்ட முடியவில்லை. கயிறு சற்று குறைந்தே இருந்தது. அவள் முகம் வியர்த்தது. இடைப் பெண்கள் அவளைப் பரிகாசமாய்ப் பார்த்தார்கள். அதைக் கண்ட கண்ணன், அவள்மேல் கருணை கொண்டு, அவள் கயிற்றால் உரலில் கட்ட உடன்பட்டான். யசோதை, “துஷ்டனே! இந்த உரலிலேயே கட்டுப்பட்டு இரு” என்று சொல்லி வீட்டிற்குள் சென்றாள். அவள் சென்றவுடன், மறுபடி முன்பே உரலில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெண்ணையைத் தின்னத் தொடங்கினான். தேவர்கள் கிருஷ்ணனை  “தாமோதரன்” (கயிற்றால் இடுப்பில் கட்டப்பட்டவன்) என்ற பெயரால் துதித்தனர்.

———–

கண்ணன் கதைகள் – 35

நளகூபர, மணிக்ரீவ சாப விமோசனம்

‘தாமோதரன்’ என்று தேவர்களால் துதிக்கப்பட்ட கண்ணன், உரலில் கட்டப்பட்டபடியே, உரலுடன் மெல்லத் தவழ்ந்து சென்றான். அருகில் இரண்டு மரங்களைக் கண்டான்.

முன்னொரு சமயம், குபேரனுடைய மகன்களான நளகூபரன், மணிக்ரீவன் இருவரும் சிவனைத் தொழுது, மிகுந்த ஐஸ்வர்ய செருக்குடன், உலக ஆசைகளில் ஈடுபட்டிருந்தனர். மது அருந்திவிட்டு, கங்கையில் அனேகப் பெண்களுடன் வஸ்திரம் இல்லாமல் ஜலக்ரீடை செய்து கொண்டிருந்தனர். இதை நாரதர் பார்த்தார். நாரதரைக் கண்டவுடன் அந்தப் பெண்கள் தம்முடைய ஆடைகளை எடுத்துக் கொண்டனர். அப்பொழுது கூட, நளகூபரன், மணிக்ரீவன் இருவரும் மயங்கி விளையாடிக் கொண்டிருந்தனர்.

நாராயணனிடத்தில் அவர்களுக்கு பக்தி உண்டாக வேண்டுமென்பதற்காக, நாரதர் அவர்களை சபித்தார். “நீங்கள் இருவரும் நெடுங்காலம் மராமரங்களாக இருந்து, பின்னர் ஸ்ரீஹரியைத் தரிசனம் செய்தவுடன் பழைய நிலையை அடைவீர்களாக” என்று சபித்தார். அவ்விருவரும், கண்ணனான ஸ்ரீஹரியைத் தரிசிக்க ஆவலுடன் மரங்களாகக் காத்துக் கொண்டிருந்தனர்.

கண்ணன் மெதுவாக அந்த மருதமரங்களின் அருகே சென்று, மரங்களின் குறுக்கே உரலை இழுத்துக் கொண்டு போனான். உடனே அவ்விரு மரங்களும் முறிந்து விழுந்தன. மரங்கள் விழுந்ததும், அதிலிருந்து இரண்டு யக்ஷர்கள் தோன்றினார்கள். கிருஷ்ணனைத் துதித்து நமஸ்கரித்தனர். சாப விமோசனம் பெற்று, பக்தியையே வரமாகப் பெற்றுச் சென்றனர்.

மரம் முறிந்த சத்தத்தைக் கேட்ட இடையர்கள் ஓடி வந்தனர். நந்தகோபர், கண்ணனைக் கயிற்றிலிருந்து விடுவித்தார். “தெய்வ அருளால் மரங்களுக்கு நடுவே அகப்பட்ட குழந்தை தப்பியது” என்று கூறிக்கொண்டே இடையர்களும், நந்தகோபனும் கண்ணனை வீட்டிற்கு அழைத்துச் சென்றனர்.

——–

கண்ணன் கதைகள் – 36

கோகுலத்திலிருந்து பிருந்தாவனம் செல்லுதல்

ஒரு நாள் கிருஷ்ணனும் பலராமனும், இடைச்சிறுவர்களுடன் முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்தார்கள். அப்போது வாசலில் ஒரு வயதான பெண்மணி,”பழம்! நாவல் பழம்” என்று கூவிக் கொண்டு சென்றாள். கிருஷ்ணனுக்கு உடனே அதைச் சாப்பிட வேண்டும் என்று ஆசை வந்துவிட்டது, ஆனால் அவனிடம் கொடுப்பதற்குப் பணம் இல்லை. அருகில் தானியங்கள் குவித்து வைக்கப்பட்டிருந்ததைக் கண்ட அவன், தன் பிஞ்சுக் கை நிறைய தானியங்களை அள்ளிக் கொண்டு, வாசலுக்கு ஓடினான். வழியெல்லாம் தானியம் இறைந்தது. வாசலில் நாவல் பழம் விற்றுக் கொண்டிருந்த பெண்மணியை அழைத்து, “இந்த தானியத்தைப் பெற்றுக் கொண்டு எனக்கு பழங்களை தருவாயா?” என்று கெஞ்சலாகக் கேட்டான். கண்ணனின் அழகும், துறுதுறுப்பும் அந்தப் பெண்ணின் மனதைக் கொள்ளை கொண்டன. அவனது கால் கொலுசின் சத்தம் அவள் காதில் இசையைப் போன்று ஒலித்தது. அவள் உடனே, “குழந்தையே! நீ வேண்டிய பழங்களை எடுத்துக் கொள்” என்று கூறினாள். பிறகு, கண்ணன் கொடுத்த, மீதி இருந்த கொஞ்சம் தானியங்களை பெற்றுக் கொண்டு, கண்ணனின் கை நிறைய பழங்களை அன்புடன் கொடுத்து மகிழ்ந்தாள். குடிசைக்கு சென்றதும் தன் கூடையைப் பார்த்த அவள் திகைத்துப் போனாள். கண்ணன் செய்த மாயத்தால், தானியங்கள் மிக உயர்ந்த ரத்தினங்களாகவும், தங்கமாகவும் மாறியிருந்தது. அன்புடன் கொடுத்தால், கண்ணன் அதைப் போல் பல மடங்கு அளிப்பான் என்பதை உலகுக்கு உணர்த்தவே இந்த அதிசயத்தை நிகழ்த்தினான்.

கண்ணனின் பெருமையை உணராத இடையர்கள், மரங்கள் முறிந்ததை கெட்ட சகுனமாக எண்ணினார்கள். வேறு இடத்திற்குச் செல்லத் தீர்மானித்தார்கள். உபநந்தன் என்ற வயது முதிர்ந்த இடையர், “மேற்கே பிருந்தாவனம் என்ற அழகிய காடு உள்ளது, பசுக்களுக்கும், ஆயர்குல மக்களுக்கும் வசிக்கத் தகுதியான இடமாக அது இருக்கும்” என்று கூறினார்.

நந்தனும், மற்ற இடையர்களும் கோகுலத்தை பசுக்கொட்டிலாகச் செய்தனர். தங்களது உடைமைகளை வண்டிகளில் ஏற்றினார்கள். வயதானவர்களும், பெண்களும், குழந்தைகளும் வண்டிகளில் ஏறினார்கள். யசோதையும் கண்ணனைத் தூக்கிக்கொண்டு வண்டியில் ஏறினாள். மற்ற கோபர்கள் பின்தொடர்ந்தனர். வழி நெடுக இசைக் கருவிகளை இசைத்துக் கொண்டு சென்றனர். வண்டிகளின் சத்தத்திலும், பசுக்களின் குளம்புச்சத்தத்திலும், கண்ணனின் அழகான பேச்சுக்களிலும் மனமகிழ்ந்த கோபியர்கள், அந்த நீண்ட வழியைக் கடந்ததைக்கூட அறியவில்லை. பிருந்தாவனத்தை அடைந்தார்கள். அங்கு, பச்சை மணிகளை வாரி இரைத்தது போன்ற புல்வெளிகளையும், பூத்துக் குலுங்கிய குந்த மரங்களால் நிறைந்திருந்த அழகான வனத்தையும் கண்டார்கள்.

பிருந்தாவனத்தில், அன்னங்களின் சப்தத்துடன், தாமரைப்பூ போன்ற முகத்துடனும் சுத்தமான நீருடனும், களிந்தனின் பெண்ணான யமுனை, வளைந்து வளைந்து சென்றாள். அழகாக அகவும் மயில்கள் நிறைந்திருந்தன. வானுயர்ந்த சிகரங்களுடன் கூடிய கோவர்த்தனம் என்னும் மலை இருந்தது. கண்ணனும், மற்றவர்களும் மிக்க ஆனந்தமடைந்தார்கள். புது வீடுகள் கட்டிக்கொண்டு இடையர்கள் அங்கு குடியேறினர்.

கண்ணனும் பலராமனும் சற்றே வளர்ந்ததும், கன்றுகளை மேய்க்கத் தொடங்கினார்கள். கண்ணன் இடைச்சிறுவர்களோடு பிருந்தாவனத்தின் அழகைக் கண்டு களித்தான். கண்ணன் இடைச்சிறுவர்களுடன் எங்கெங்கு செல்கிறானோ, அங்கெல்லாம் வளைந்து வளைந்து, ஆசை கொண்டவள்போல் வரும் யமுனையைப் பார்த்தான். வானை முட்டும் உயர்ந்த உச்சிகளோடு, பல்வேறு நிறங்களுடன் ஒளிவீசிக்கொண்டிருக்கும் கோவர்த்தனம் என்னும் மலையைக் கண்டான். அந்தக் காடு, பசுமையான புல்வெளிகளுடன், பசுக்களுக்கு மிகவும் ஏற்றதாய் இருந்தது. கண்ணன், பலராமனோடும் ஆயர் சிறுவர்களோடும், கன்றுகளை மேய்த்துக் கொண்டு, மகிழ்ச்சியாய் இருந்தான்


கண்ணன் கதைகள் – 37
பகாசுர, வத்ஸாசுர வதம்

வண்டுகள் ரீங்காரம் செய்யும் பிருந்தாவனத்தின் வனங்களில், கொம்பு, புல்லாங்குழல், பிரம்பு முதலியவற்றை எடுத்துக்கொண்டு, பலராமனோடும், ஆயர் சிறுவர்களோடும் கன்றுகளையும், பசுக்களையும் மேய்த்துக் கொண்டு, கண்ணன் திரிந்து மகிழ்ந்தான். அவனுடைய பிஞ்சுப் பாடங்கள் பட்டதால், அங்கு உள்ள மரங்கள், கொடிகள், நீர், பூமி, மலை, வயல்கள் முதலிய யாவையும் பெருமை உடையதாய் செழித்து விளங்கின.

பச்சைப் புல்வெளியிலும், கோவர்த்தன மலையிலும் குழலூதிக்கொண்டு கன்றுகளை மேய்த்துக் கொண்டிருந்த கண்ணன், ஒரு நாள், கன்றின் வடிவில் இருந்த வத்ஸாசுரனைப் பார்த்தான். அசுரன் வேகமாக வாலை அசைத்துக் கொண்டு, முகத்தைத் திருப்பிக்கொண்டு, கண்ணனை நெருங்க சரியான நேரத்தை எதிர்பார்த்துக் கொண்டு காத்திருந்தான். அப்போது கண்ணன், அவன் கால்களைப் பிடித்து வேகமாகச் சுற்றி, அவனை ஒரு மரத்தின் மீது எறிந்து கொன்றான். அவன் இறந்து கீழே விழுந்தான். அவன் விழுந்த வேகத்தில் பல மரங்கள் சாய்ந்து விழுந்தன. தேவர்கள் பூமாரி பொழிந்தனர். இடைச்சிறுவர்கள், கண்ணனின் தலையில் விழுந்த பூக்களைப் பார்த்து, “மிகவும் மணம் நிரம்பிய இந்தப் பூக்கள் எங்கிருந்து விழுகின்றன?” என்று கேட்டனர். கண்ணனும், “அசுரனை மரத்தில் எறிந்தபோது அம்மரத்திலிருந்த பூக்கள் உயரே கிளம்பி, மெதுவே கீழே விழுகிறது” என்று விளக்கம் அளித்தான்.

ஒரு நாள், வெயில் மிகவும் அதிகமாக இருந்தது. அதிக வெயிலால் தாபமடைந்த ஆயர் சிறுவர்களுடன், பலராமனும் கண்ணனும் யமுனை நதிக்குத் தண்ணீர் குடிக்கச் சென்றார்கள். தண்ணீரைக் குடித்துவிட்டு வரும்போது அங்கே, இறக்கைகளை அசைத்துக் கொண்டிருக்கும் ஒரு பெரிய கொக்கைக் கண்டார்கள். அந்தக் கொக்கு பெரிய மலையைப் போன்றதாய் இருந்தது.  சிறுவர்கள் மிகவும் பயந்தார்கள். கொக்கு கண்ணனை விழுங்கியது. கண்ணன் அதற்கு நெருப்பைப் போன்றதாய் ஆனான். அவனுடைய உஷ்ணத்தைத் தாங்க முடியாமல் வெளியே உமிழ்ந்தது.  மீண்டும் அந்தக் கொக்கு வேகமாக வந்து கண்ணனைக் கொத்தியது. அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே கண்ணன், அதன் அலகினைப் பற்றி, இரு கூறாகக் கிழித்துக் கொன்றான். தேவர்கள் பூமழை பொழிந்தனர். சிறுவர்களும் பிருந்தாவனத்திலிருந்து வீடு திரும்பினார்கள்.

கண்ணனின் குழலோசையைக் கேட்ட கோபியர்கள் சந்தோஷத்துடன் அருகே ஓடி வந்தனர். இடைச்சிறுவர்கள்  நடந்தவற்றைக் கூறினார்கள். அதை நம்பாமல், தந்தை நந்தகோபனும், தாய் யசோதையும் மிகுந்த மகிழ்ச்சியுடன் கண்ணனை அணைத்துக் கொண்டார்கள்

————–கண்ணன் கதைகள் – 38
அகாசுர வதம்ஒரு முறை கண்ணன், ஆயர் சிறுவர்களுடன் வனபோஜனம் செய்ய விருப்பம் கொண்டான். சிறுவர்களைக் கூப்பிட்டு தனது விருப்பத்தைக் கூறினான். சிறுவர்கள் அனைவரும் காய், கறி, குழம்பு முதலியவைகளுடன் கூடிய அன்னத்தை எடுத்துக்கொண்டு கன்றுகளுடனும் கோபர்களுடனும், குதூகலத்துடன் காட்டுக்குச் சென்றார்கள். உல்லாசமாக விளையாடிக்கொண்டும், ஆடிப்பாடிக் கொண்டும் இருந்தார்கள்.அப்போது, அகன் என்ற அசுரன், மலைப்பாம்பின் உருவெடுத்து வழிமறித்தான்.
அப்பாம்பு பெரிய மலை போலவும், திறந்திருந்த அதன் வாய் பெரிய குகை போலவும் தோற்றமளித்தது. ஆயர்சிறுவர்கள் அதை நிஜமான குகையென்று நினைத்து அதன் வாயில் புகுந்தனர். தவறுதலாகப் புகுந்த அவர்கள் மிக்க தாபத்தை அடைந்து மயங்கினார்கள். ஆதரவற்ற நண்பர்களைக் காப்பதற்காக கண்ணன் அப்பாம்பின் வாயில் நுழைந்தான். அதன் வாயில் இருந்துகொண்டு உருவத்தை மிகப் பெரியதாகச் செய்துகொண்டான். அந்தப் பாம்பு மூச்சு விட முடியாமல் புரண்டது. அதனுடைய கழுத்து கிழிந்து, உயிரை விட்டது. உடனே தன்னுடைய ஒரு பார்வையால், கோபகுமாரர்களையும், மாடு கன்றுகளையும் மயக்கம் தெளிய வைத்து, வெளியில் வந்தான். அகாசுரன் இறந்ததும், அவனுடைய உடலிலிருந்து புறப்பட்ட ஒளி, வானில் காத்திருந்து, கண்ணன் வெளியே வந்ததும் அவனுடன் கலந்து மறைந்தது. தேவர்கள் கண்ணனுடைய புகழ் பாடி ஆடினார்கள்.

உச்சிப் பொழுது ஆகிவிட்டதால் அனைவருக்கும் பசித்தது. கொம்பையும், புல்லாங்குழலையும் இடுப்பில் சொருகிக்கொண்டு, கையில் அன்னத்துடன், வேடிக்கையாகப் பேசி, சிறுவர்களைச் சிரிக்கச் செய்து கொண்டு, இடைச்சிறுவர்களுடன் வனபோஜனம் செய்தான். மகிழ்ச்சியுடன் சிறுவர்கள் அனைவரும் உணவு உண்டார்கள். அதைக் கண்ட பிரமனும், தேவர்களும்,”நாம் யாகத்தில் தரும் ஹவிர்பாகத்தை சாப்பிடுவதைவிட, இங்கு இடைச்சிறுவர்களோடு உண்பதில் அதிக ஆனந்தம் அடைகிறார்” என்று ஆச்சர்யத்துடன் கூறித் துதித்தனர்.

கண்ணன் கதைகள் – 39
பிரம்மனின் கர்வ பங்கம்

திருமால், முன்பு செய்த அவதாரங்களில் காணப்படாத சில அதிசயங்கள், க்ருஷ்ணாவதாரத்தில், அகாசுர வதத்தில் காணப்பட்டது என்று தேவர்கள் கூறியதைக் கேட்ட பிரம்மா, கண்ணனைப் பரீட்சிக்க விரும்பி, தன் சக்தியால் மாடு கன்றுகளை மறைவான இடத்திற்கு அழைத்துச் சென்று மறைத்து வைத்தார். கோபகுமாரர்கள் கன்றுகளைக் காணாமல் துயரம் அடைந்தனர். இடைச்சிறுவர்களின் துயரத்தைக் கண்ட கண்ணன், பாதி உண்டுகொண்டிருக்கும்போது கையில் சாதத்துடன் கன்றுகளைத் தேடச் சென்றான். அப்போது பிரம்மா, உணவு உண்டு கொண்டிருக்கும் இடையர்களையும் மறைத்து வைத்தார்.

பிரம்மனின் இந்த செயலை, கண்ணன் தியானத்தால் அறிந்தான். பிரம்மனுக்குப் பாடம் கற்பிக்க எண்ணம் கொண்டான். உடனே, கன்றுகளாகவும், இடைச்சிறுவர்களாகவும் தானே உருவெடுத்து, மேலும், உறி, உறியில் உள்ள பாத்திரம், புல்லாங்குழல், முதலியவைகளாகவும் வேடம் பூண்டு காட்டில் வெகு நேரம் விளையாடிவிட்டு மாலையில் வீடு சென்றான். கன்றுகளாகவும், கோபகுமாரர்களாகவும் உருவம் கொண்ட கண்ணனை, தாய்மார்கள் சந்தோஷத்துடன் வரவேற்றார்கள். அவர்களாலும் கண்டுபிடிக்க முடியவில்லை. தங்கள் பிள்ளைகள் என்றே நினைத்தார்கள். பரமாத்மாவையே குழந்தையாக அடைந்த தாய்மார்கள் அடைந்த ஆனந்தத்திற்கு அளவேது?

இவ்வாறு ஒரு வருடம் கழிந்த பின்னரே, கன்றுகளும், சிறுவர்களும் கண்ணன் தான் என்பதை பலராமன் உணர்ந்தார். வருடத்தின் முடிவில், பிரம்மதேவன் கன்றுகளையும், சிறுவர்களையும் கண்டு, அவை தன்னால் மறைத்து வைக்கப்பட்டவையா அல்லது புதியனவா என்று திகைத்தார். அப்போது கண்ணன் புதிதாக உள்ள எல்லாவற்றையும் கிரீடம், தோள்வளைகளுடன், நான்கு கரங்கள் கொண்டவைகளாக பிரம்மனுக்குக் காண்பித்தான். பிரம்மா, ஒவ்வொருவரையும் லக்ஷ்மிதேவியுடன் ஆதிசேஷன்மேல் பள்ளி கொண்டிருப்பவர்களாகவும், அழகிய வடிவமுடனும், ஸனகாதியரும், முனிவர்களும் சேவித்துக்கொண்டிருக்கக் கண்டார். கணக்கற்ற வடிவங்களைக் கண்டார். எங்கும் தான் சேவகனாய் இருப்பதாகவும் கண்டார். மிகுந்த குழப்பத்தை அடைந்தார். அப்போது கண்ணன், கையில் பாதி அன்னக்கவளத்துடன் காட்சி அளித்தான்.

பிரம்மன் கர்வம் நீங்கி, கிருஷ்ணனைத் துதித்துப் பாடி, நமஸ்கரித்து, பிரதக்ஷிணம் செய்து, சத்யலோகம் சென்றார். புதிய உருவம் கொண்ட சிறுவர்களும், கன்றுகளும் மறைந்தார்கள். இடைச்சிறுவர்களும், யமுனைக் கரையில் உணவு உண்டு கொண்டிருந்தார்கள். அவர்கள் ஒரு வருடம் சென்றதைக் கூட உணரவில்லை. கண்ணன் கன்றுகளுடன் யமுனைக் கரைக்கு வந்தான். சிறுவர்கள், கண்ணன் கன்றுகளை மேய்த்துவிட்டு மெதுவே வருகிறான் என்று நினைத்து, “கண்ணா! சீக்கிரம் வா! உணவு உண்ணலாம்” என்று கூறினார்கள். கண்ணனும் சிரித்துக் கொண்டேஉணவு உண்டுவிட்டு, மகிழ்ச்சியாக மற்ற சிறுவர்களுடன் வீடு திரும்பினான்.

———கண்ணன் கதைகள் – 39
பிரம்மனின் கர்வ பங்கம்திருமால், முன்பு செய்த அவதாரங்களில் காணப்படாத சில அதிசயங்கள், க்ருஷ்ணாவதாரத்தில், அகாசுர வதத்தில் காணப்பட்டது என்று தேவர்கள் கூறியதைக் கேட்ட பிரம்மா, கண்ணனைப் பரீட்சிக்க விரும்பி, தன் சக்தியால் மாடு கன்றுகளை மறைவான இடத்திற்கு அழைத்துச் சென்று மறைத்து வைத்தார். கோபகுமாரர்கள் கன்றுகளைக் காணாமல் துயரம் அடைந்தனர். இடைச்சிறுவர்களின் துயரத்தைக் கண்ட கண்ணன், பாதி உண்டுகொண்டிருக்கும்போது கையில் சாதத்துடன் கன்றுகளைத் தேடச் சென்றான். அப்போது பிரம்மா, உணவு உண்டு கொண்டிருக்கும் இடையர்களையும் மறைத்து வைத்தார்.பிரம்மனின் இந்த செயலை, கண்ணன் தியானத்தால் அறிந்தான். பிரம்மனுக்குப் பாடம் கற்பிக்க எண்ணம் கொண்டான். உடனே, கன்றுகளாகவும், இடைச்சிறுவர்களாகவும் தானே உருவெடுத்து, மேலும், உறி, உறியில் உள்ள பாத்திரம், புல்லாங்குழல், முதலியவைகளாகவும் வேடம் பூண்டு காட்டில் வெகு நேரம் விளையாடிவிட்டு மாலையில் வீடு சென்றான். கன்றுகளாகவும், கோபகுமாரர்களாகவும் உருவம் கொண்ட கண்ணனை, தாய்மார்கள் சந்தோஷத்துடன் வரவேற்றார்கள். அவர்களாலும் கண்டுபிடிக்க முடியவில்லை. தங்கள் பிள்ளைகள் என்றே நினைத்தார்கள். பரமாத்மாவையே குழந்தையாக அடைந்த தாய்மார்கள் அடைந்த ஆனந்தத்திற்கு அளவேது?

இவ்வாறு ஒரு வருடம் கழிந்த பின்னரே, கன்றுகளும், சிறுவர்களும் கண்ணன் தான் என்பதை பலராமன் உணர்ந்தார். வருடத்தின் முடிவில், பிரம்மதேவன் கன்றுகளையும், சிறுவர்களையும் கண்டு, அவை தன்னால் மறைத்து வைக்கப்பட்டவையா அல்லது புதியனவா என்று திகைத்தார். அப்போது கண்ணன் புதிதாக உள்ள எல்லாவற்றையும் கிரீடம், தோள்வளைகளுடன், நான்கு கரங்கள் கொண்டவைகளாக பிரம்மனுக்குக் காண்பித்தான். பிரம்மா, ஒவ்வொருவரையும் லக்ஷ்மிதேவியுடன் ஆதிசேஷன்மேல் பள்ளி கொண்டிருப்பவர்களாகவும், அழகிய வடிவமுடனும், ஸனகாதியரும், முனிவர்களும் சேவித்துக்கொண்டிருக்கக் கண்டார். கணக்கற்ற வடிவங்களைக் கண்டார். எங்கும் தான் சேவகனாய் இருப்பதாகவும் கண்டார். மிகுந்த குழப்பத்தை அடைந்தார். அப்போது கண்ணன், கையில் பாதி அன்னக்கவளத்துடன் காட்சி அளித்தான்.

பிரம்மன் கர்வம் நீங்கி, கிருஷ்ணனைத் துதித்துப் பாடி, நமஸ்கரித்து, பிரதக்ஷிணம் செய்து, சத்யலோகம் சென்றார். புதிய உருவம் கொண்ட சிறுவர்களும், கன்றுகளும் மறைந்தார்கள். இடைச்சிறுவர்களும், யமுனைக் கரையில் உணவு உண்டு கொண்டிருந்தார்கள். அவர்கள் ஒரு வருடம் சென்றதைக் கூட உணரவில்லை. கண்ணன் கன்றுகளுடன் யமுனைக் கரைக்கு வந்தான். சிறுவர்கள், கண்ணன் கன்றுகளை மேய்த்துவிட்டு மெதுவே வருகிறான் என்று நினைத்து, “கண்ணா! சீக்கிரம் வா! உணவு உண்ணலாம்” என்று கூறினார்கள். கண்ணனும் சிரித்துக் கொண்டேஉணவு உண்டுவிட்டு, மகிழ்ச்சியாக மற்ற சிறுவர்களுடன் வீடு திரும்பினான்.

————–

கண்ணன் கதைகள் – 40
தேனுகாசுர வதம்

குழந்தைப் பருவத்தைத் தாண்டி, பிள்ளைப் பருவத்தை அடைந்த கண்ணன், கன்றுகளை மேய்ப்பதை விட்டு, பசுக்களை மேய்த்து ரக்ஷிக்கத் தொடங்கினான். பூமியைக் காக்க அவதாரம் செய்த கண்ணன், ‘கோ’ எனப்படும் பசுக்களையும் காக்கத் தொடங்கினான்.

ஒரு முறை பலராமனுடன் காட்டின் அழகிய காட்சிகளில் மகிழ்ந்து செல்லும்போது, ஸ்ரீதாமன் என்ற நண்பன், “கண்ணா! இங்கு ‘தாளவனம்’ என்ற ஒரு பனங்காடு இருக்கிறது. ஆனால், தேனுகன் என்ற அசுரன் அதைக் காவல் காத்து வருகிறான், பறவைகளும் மிருகங்களும் கூட அங்கு செல்ல பயப்படும். அங்குள்ள பனம் பழங்கள் மிகுந்த சுவை உடையதாய் இருக்கும், அதை சுவைக்க வேண்டும் என்பது எங்களுடைய நீண்ட நாள் ஆசை” என்று சொன்னான். நண்பர்களின் ஆசையைப் பூர்த்தி செய்ய விரும்பிய கண்ணனும் பலராமனும், இடைச்சிறுவர்களுடன் தேனுகன் என்ற அசுரனின் காட்டிற்குச் சென்றார்கள். கண்ணன் கூறியதால், பலராமன், அங்கு உயர்ந்திருந்த பனைமரங்களை வலுவாக அசைத்தார். பழுத்ததும், பழுக்காததுமான பழங்கள் கீழே விழுந்தன. சத்தத்தைக் கேட்ட தேனுகன் என்ற அசுரன், கழுதை வடிவம் எடுத்துக் கொண்டு, விரைந்து வந்து பலராமனின் நெஞ்சில் உதைத்தான். பலராமன் அசுரனின் பின்னங்கால்களைப் பற்றி, சுழற்றி எறிந்து அவனைக் கொன்றார். தேனுகனென்ற அசுரனும் உயிரிழந்து கீழே விழுந்தான்.

உடனே, அந்த அசுரனுடைய பணியாட்கள் தாக்க வந்தனர். கண்ணன், அவர்களை அனாயாசமாக, நாகப்பழங்களைப் போல பனைமரங்களில் எறிந்து,
அனைவரையும் கொன்றான். “தாங்கள் அவதரித்த பலன் கிடைத்துவிட்டது” என்று கூறி தேவர்கள் பூமாரி பொழிந்து துதித்தனர். ‘ஆம் பழம் கிடைத்துவிட்டது’ என்று சிரித்துக்கொண்டே, பெரிதாகவும், நிறைய சாறுடன் இனிமையாக உள்ள அந்தப் பழங்களை சிறுவர்களுடன் சேர்ந்து உண்டு மகிழ்ந்து, நிறைய பழங்களை எடுத்துக் கொண்டு வீடு திரும்பினார்கள்.

தேனுகன் இறந்ததால், மக்கள் பயமின்றி ‘தாளவனம்’ சென்று பனம்பழங்களை சேகரித்து உண்டு மகிழ்ந்தார்கள். பசுக்களும், மிருகங்களும் பயமின்றி அந்த வனத்திலுள்ள புல்லை மேய்ந்து மகிழ்ந்தன.

—————-

கண்ணன் கதைகள் – 41
காளியமர்த்தனம்,
காளிங்கநர்த்தனம்

முன்னொரு சமயம் ஸௌபரி என்ற முனிவர், திருமாலைத் தரிசிக்க ஆவல் கொண்டு, பன்னிரண்டு வருடம் காளிந்தி நதியின் உள்ளே நீரில் தவம் செய்தார். அப்போது நீரில் இருந்த மீன்கூட்டங்களிடம் அன்பு கொண்டார். ஒரு நாள் எதிரே கருடன் வருவதைக் கண்டார். கருடன் பசியால் மீன்களைத் தின்பதைக் கண்டார். துயரமடைந்த அவர் ‘இங்கு உள்ள ஏதாவது ஒரு ஜீவனைத் தின்றால் உடனே உயிரிழப்பாய்’ என்று கருடனைச் சபித்தார்.

காளியன் என்ற பாம்பு, கருடனுக்கு வைக்கப்பட்ட பாகங்களைத் தின்று வந்தது. கோபமடைந்த கருடன், தன் இறக்கைகளால் காளியனை அடித்து விரட்டினான். காளியனும் கருடன் வரமுடியாத அந்த காளிந்தி மடுவிற்குச் சென்றது. அந்த மடுவில் காளியன் புகுந்ததும், அதன் விஷமான மூச்சுக் காற்றால் மடுவின் கரையிலுள்ள மரங்கள் கருகின. மடுவிற்கு மேல் வானில் பறக்கும் பறவைகளும் இறந்து விழுந்தன.

ஒரு முறை, இடையர்களும், கண்ணனும், பலராமனை விட்டுத் தனியே யமுனை நதியின் கரையிலுள்ள காட்டிற்குச் சென்றார்கள். கடுமையான வெய்யிலினால் துன்பமடைந்த இடையர்களும், பசுக்களும் அந்த மடுவின் விஷ நீரைப் பருகினார்கள்.உடனே உயிரிழந்து கீழே விழுந்தார்கள். கண்ணன் கருணையுடன் அவர்கள் அருகே வந்து, அமிர்தமாகிற தன்னுடைய கடைக்கண் பார்வையால் அவர்களைப் பிழைக்கச் செய்தான். உயிர் பிழைத்த அவர்கள், இந்த ஆனந்தம் எங்கிருந்து உண்டாகிறது? என்று கூறிக் கொண்டு எதிரில் கண்ணனைக் கண்டார்கள். கண்ணனே காரணம் என்று உணர்ந்து அவனைக் கட்டித் தழுவினர். நொடிப்பொழுதில் பிழைத்த பசுக்களும், ஆனந்தமுடன் மெதுவாகக் குரல் கொடுத்துக் கொண்டே கண்ணனைச் சுற்றி வந்தன. ‘எங்கள் தேகத்தில் மயிர்க்கூச்சலுடன், சொல்லமுடியாத ஆனந்தம் உண்டாகிறது. இந்த விஷவேகம் ஆச்சர்யமாக உள்ளது’ என்று கூறி இடையர்கள் வணங்கினார்கள்.

கண்ணன், அந்தப் பாம்பின் கொடிய செயலைத் தடுக்க முடிவு செய்து, மடுவின் கரையில் விஷக்காற்றால் வாடி நின்ற கடம்பமரத்தின்மீது ஏறினான். சிவந்த மென்மையான பாதங்களால் மரத்தின் மீது ஏறி, அலைகள் நிறைந்த அந்த மடுவில் உயரத்திலிருந்து குதித்தான். கண்ணன் குதித்ததும், அவனுடைய பாரத்தால் அலைகள் உயரே கிளம்பி, மிகுந்த ஓசையுடன், கரைகளை மூழ்கடித்தது. அந்த ஓசையைக் கேட்ட காளியன் கோபத்துடன் நீரிலிருந்து வெளியே வந்தான். ஆயிரக்கணக்கான அவன் படங்களிலிருந்து கொடிய விஷம் பெருக்கெடுத்து ஓட, பெரிய மலை போலத் தோற்றமளித்தான். பயங்கரமான விஷ மூச்சை விட்டுக்கொண்டு, கண்ணனை அசையாமல் இருக்கும்படி சுற்றிக் கொண்டான். கரையில் நின்ற இடையர்களும், பசுக்களும், சிறுவர்களும் கண்ணனைக் காணாமல் துயரமடைந்தனர். கோபர்களும், பல கெட்ட சகுனங்களைக் கண்டு யமுனைக்கரைக்கு விரைந்து வந்தனர். கண்ணனுடைய நிலையைக் கண்ட அனைவரும் பிராணனை விட நினைத்தார்கள்.

அப்போது கண்ணன், அப்பாம்பின் பிடியிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு, புன்சிரிப்புடன் ஆற்றிலிருந்து வெளியே வந்தான். மென்மையான சிறிய தன்னுடைய கால்களால் அப்பாம்பின் படங்களின் மேல் ஏறி நடனம் செய்தான். அவனுடைய கால்களில் அணிந்திருந்த கொலுசுகளும், கைவளைகளும் அந்த நடனத்திற்கு ஏற்றவாறு சப்தித்தன. காளியனுடைய படமெடுத்த தலைகளின் மீது ஏறி நடனம் செய்தான். காளியனுடைய தலை தொங்கியது. தொங்கிய தலைகளை விட்டுவிட்டு, மீண்டும் படமெடுத்த தலையின் மீது ஏறி, தனது தாமரைப் பாதங்களால் தாளமிட்டுக் கொண்டு நர்த்தனமாடினான். அந்த நடனத்தைக் கண்ட கோபர்கள் மகிழ்ச்சி அடைந்தார்கள். ஆகாயத்தில், தேவ மங்கையர் துந்துபி வாசிக்க, தேவர்கள் பூமாரி பொழிந்தனர். முனிவர்கள் ஆனந்தத்துடன் துதித்தனர். இவ்வாறு கண்ணன் ஆடியதும், காளியனுடைய படமெடுத்த தலைகள் யாவும் தொங்கிவிட்டது. காளியன் உடலில் ரத்தம் வடிந்தது. அவன் சோர்ந்து விழுந்தான். அப்போது, மடுவின் உள்ளே இருந்த காளியனின் மனைவியர் கண்ணனை சரணடைந்து, “எங்கள் கணவரை விட்டுவிடுங்கள்” என்று கூறி, பலவிதமான ஸ்தோத்திரங்களால் கண்ணனைத் துதித்தனர். காளியனும் தலைவணங்கித் துதித்தான். கண்ணன் அவர்கள் மீது இரக்கம் கொண்டான். அவர்களிடம்,” உங்களை நான் கொல்ல மாட்டேன்.இந்த மடுவில் குழந்தைகளும், பசுக்களும் நீர் அருந்த வருவதால், நீங்கள் இந்த மடுவை விட்டு சமுத்திரத்தில் இருக்கும் ரமணகம் என்னும் இடத்திற்கு செல்லுங்கள். அங்கு கருடன் உங்களைத் தொந்திரவு செய்ய மாட்டான்” என்று கூறினான். இவ்வாறு சொன்னதும், காளியன் மற்ற பாம்புகளுடன் ரமணகத்திற்குப் புறப்பட்டான். காளியனின் மனைவியர் கண்ணனுக்கு விலையுயர்ந்த ரத்தினங்களையும், ஜொலிக்கும் ஆபரணங்களையும், பட்டுத் துணிகளையும் கொடுத்தனர். அவற்றை அணிந்துகொண்டு ஆனந்தத்துடன் காளிந்தி மடுவின் கரையில் நிற்கும் சுற்றத்தாரிடம் வந்தான். தன்னுடைய அழகான கடைக்கண் கடாக்ஷத்தால், அங்குள்ளோரது தாபங்களைப் போக்கி மகிழ்வித்தான். கண்ணனைக் கண்ட ஆயர்கள், அவனைத் தோளில் சுமந்துகொண்டனர். பசுக்களும், ஆனந்தமுடன் மெதுவாகக் குரல் கொடுத்துக் கொண்டே கண்ணனைச் சுற்றி வந்தன. இடைச்சிறுவர்கள் அவனைச் சுற்றிலும் நின்றுகொண்டு ஆடிப் பாடி ஆனந்தித்தனர்.

————–

கண்ணன் கதைகள் – 42

கோபிகைகளின் ஆடைகளை அபகரித்தல் / கோபிகா வஸ்த்ராபஹரணம்

குருவாயூரப்பன் கதைகள்

கண்ணனின் அழகிய வடிவைக் கண்ட கோபிகைகள் மிகுந்த மோகத்தை அடைந்த கோபிகைகளின் மனம் சஞ்சலமுற்றது. அவர்கள் கண்ணனுக்கு சேவை செய்ய விரும்பி, யமுனா நதிக்கரையில் கூடி, மணலால் பார்வதிதேவியைப்போன்ற பிம்பம் செய்து பூஜித்தனர். கோபிகைகள், கண்ணனின் திருநாமத்தையும், கதைகளையும் கூறிக்கொண்டே யமுனாநதிக்கு வந்தார்கள். பிறகு, நந்தகோபனின் மகன் கோபாலனே கணவனாய் வரவேண்டும் என்று பூஜித்து வேண்டினார்கள். இவ்வாறு ஒரு மாதம் விரதமிருந்தார்கள்.

கண்ணன் அவர்களிடம் கருணை கொண்டு, அவர்களை ஆசீர்வதிக்க யமுனைக் கரைக்குச் சென்றான். விரதம் முடிந்ததும், கோபிகைகள், தங்கள் ஆடைகளைக் களைந்து, கரையின்மேல் வைத்துவிட்டு, யமுனையில் விளையாடத் தொடங்கினார்கள். யமுனைக் கரைக்குச் சென்ற கண்ணன் அந்த கோபிகைகளின் ஆடைகளை எடுத்துக்கொண்டு அருகிலுள்ள மரத்தின் மீது ஏறினான்.

குளித்துவிட்டு வந்த கோபிகைகள், எதிரே கண்ணனைக் கண்டு, வெட்கத்துடன் தலைகுனிந்து நின்றார்கள். “பெண்களே! இங்கு வந்து உங்கள் ஆடைகளைப் பெற்றுக் கொள்ளுங்கள்” என்று புன்சிரிப்புடன் கண்ணன் கூறினான். கோபிகைகள் வெட்கத்தினால் வெளியேவர முடியாமல் திகைத்தனர்.
‘செந்தாமரைக் கண்ணனே! தங்களுக்கு சேவை செய்ய வந்த எங்களை ஏன் கஷ்டப்படுத்துகிறீர்? எங்கள் ஆடைகளைக் கொடுக்கவேண்டும்’ என்று கோபிகைகள் வேண்டினார்கள். கண்ணனோ புன்சிரிப்பையே கோபிகைகளுக்குப் பதிலாகத் தந்தான்.

அவர்கள் கரையேறி, இரு கைகளையும் கூப்பி வணங்கினார்கள். தன்னை சரணடைந்ததால், கண்ணன் அவர்களுக்கு ஆடைகளை அளித்து, “நீங்கள் ஆடையில்லாமல் குளித்த பாபம் நீங்கவே இவ்வாறு செய்தேன்” என்று உபதேசமும் செய்தான். மேலும், “உங்கள் எண்ணத்தை அறிந்து கொண்டேன். நதியின் மணல் குன்றுகளில், நிலா வெளிச்சத்துடன் கூடிய இரவில் நீங்கள் வேண்டியது கிடைக்கும்” என்று கூறினான். தேனினும் இனிய அந்த சொற்களைக் கேட்ட கோபியர்கள், கண்ணனுடைய தாமரை முகத்தைத் திரும்பிப் பார்த்தபடியே மெதுவே வீடு சென்றார்கள். இவ்வாறு கருணையுடன் அனுக்ரஹம் செய்து கோபிகைகளுக்கு ஆனந்தத்தை அளித்தான்.

———–

கண்ணன் கதைகள் – 43

அந்தணப் பெண்களை அனுக்ரஹித்தல்

குருவாயூரப்பன் கதைகள்

ஒரு முறை, கண்ணன் பிருந்தாவனத்திலிருந்து வெகு தூரத்திலுள்ள காட்டிற்கு இடைச்சிறுவர்களுடன் பசுக்களை மேய்க்கச்சென்றான். மனித நடமாட்டமற்ற அக்காட்டில் சிறுவர்களும் பசுக்களும், பசியாலும் தாகத்தாலும் வாடினர். அதைக்கண்ட கண்ணன், அருகே யாகம் செய்து கொண்டிருக்கும் அந்தணர்களிடம் உணவு கேட்கச் சொல்லி அச்சிறுவர்களை அனுப்பினான். அவர்கள் அந்தணர்களிடம் சென்று யாசித்தார்கள். வேதமறிந்த அந்த அந்தணர்கள், காது கேட்காதவர்கள் போல் பேசாமல் இருந்தார்கள். உணவு கிடைக்காததால் சிறுவர்கள் வருந்தி, திரும்பி வந்தார்கள். கண்ணன், “அந்தணர்களின் மனைவியரிடம் சென்று நான் வந்திருப்பதாகக் கூறி உணவு கேளுங்கள், இரக்கம் மிகுந்த அவர்கள் அன்னம் கொடுப்பார்கள்” என்று சிறுவர்களிடம் கூறினான். அவ்வாறே குழந்தைகளும் அந்தப் பெண்களிடம் உணவு கேட்டனர். நெடுநாட்களாகத் கண்ணனைக் காண விரும்பிய அப்பெண்கள், கண்ணனுடைய பெயரைக் கேட்டவுடன், அவனை நேரில் காண ஆவல் கொண்டு, நான்கு விதமான அன்னங்களை எடுத்துக்கொண்டு வந்தார்கள். அவர்கள் கணவர்கள் தடுத்தும்கூட வேகமாய் கண்ணன் இருக்குமிடம் வந்தார்கள்.

தலையில் மயில் பீலியுடன், ஒளிவீசும் குண்டலங்களுடன், மஞ்சள் பட்டணிந்து, நீல மேனியுடன், வனமாலையணிந்து, கருணை நிரம்பிய பார்வையுடன், நண்பனின் தோளில் கையை வைத்துக் கொண்டு, பலராமனுடன் நிற்கும் கண்ணனை அப்பெண்கள் கண்டார்கள். அவர்களில் ஒரு பெண்ணுக்கு, அவளுடைய கணவன் தடுத்ததால் வரமுடியவில்லை. அவள் அங்கேயே கண்ணனை தியானம் செய்து அவனுடன் கலந்து மோக்ஷம் அடைந்தாள். அப்பெண்கள், உலகங்களின் தலைவனான கண்ணனையே விழிகளை இமைக்காமல் நெடுநேரம் பார்த்துக் கொண்டிருந்தனர். அவர்கள் மனம் முழுவதும் கண்ணனே நிறைந்திருந்தான். அவர்கள் கொண்டு வந்திருந்த உணவினை கண்ணனிடம் கொடுத்தனர்.

கண்ணன், அந்தணப்பெண்கள் அளித்த உணவை ஏற்று அவர்களை அனுக்ரஹம் செய்தான். கண்ணனுக்கு சேவை செய்ய விரும்பிய அவர்களை, அவர்களுடைய கணவர்கள் செய்யும் யாகத்திற்கு உதவும்படி உத்தரவிட்டு, அவர்கள் கணவர்களையும் அவர்களிடம் அன்புடன் இருக்கப் பணித்தான். அவர்களும் தங்கள் தவறுகளை உணர்ந்து, தத்தம் மனைவியரின் பக்தியையும் உணர்ந்து, கண்ணனைத் துதித்தனர். பிறகு, கண்ணன் அந்தணப் பெண்கள் அளித்த உணவை, தன் நண்பர்களுடன் உண்டு மகிழ்ந்தான்.

—————-

கண்ணன் கதைகள் – 44

கோவர்த்தன மலையைக் குடையாகப் பிடித்தல்

குருவாயூரப்பன் கதைகள்

ஒரு முறை, இடையர்கள் இந்திரனைப் பூஜிப்பதற்காக ஏற்பாடுகள் செய்து கொண்டிருந்தார்கள். இந்திரனுக்கு தான் மூவுலகங்களுக்கும் தேவன் என்ற மமதை அதிகரித்தது. அதனால் மும்மூர்த்திகளையும் வணங்காமல் அகம்பாவம் கொண்டிருந்தான். அவனுக்குப் பாடம் கற்பிக்க விரும்பிய கண்ணன், நந்தகோபரிடம், “தந்தையே! இந்த ஏற்பாடுகள் எதற்கு?” என்று அறியாதது போல் கேட்டான். நந்தனும், “மகனே! இந்திரன், மழை பொழியச் செய்து நம் பூமியைச் செழிப்பாக வைக்கிறார். அதனால் அவருக்கு ஒவ்வொரு வருடமும் பூஜை செய்ய வேண்டும். அனைவரின் பிழைப்பும் மழை மூலம் ஏற்படுகிறது. பசுக்களும் நீரையும் புல்லையும் நம்பி இருக்கின்றன” என்று கூறினார். தந்தையின் சொல்லைக் கேட்டு, “இந்திரனால் மழை கிடைக்கிறது என்பது உண்மையல்ல. நாம் முன் ஜன்மத்தில் செய்த தர்மத்தால் மழை பெய்கிறது. காட்டில் உள்ள மரங்கள் இந்திரனுக்கு என்ன பூஜை செய்கின்றன?” என்று கண்ணன் கேட்டான். மேலும்,”இந்தப் பசுக்கள் நம் இடையர்களின் சொத்து. அவைகளுக்குப் புல்லையும், நீரையும் கொடுப்பது கோவர்த்தன மலை. அதனால், கோவர்த்தன மலைக்கும், தேவர்களைவிடச் சிறந்த முனிவர்களுக்கும் பூஜை செய்ய வேண்டும்” என்று கூறினான். அதைக் கேட்ட இடையர்கள், முனிவர்களையும், கோவர்த்தன மலையையும் பூஜித்தனர். பிறகு மலையை வலம் வந்து நமஸ்கரித்தனர். அனைத்து பூஜைகளையும் திருமாலான கண்ணனே மலை வடிவில் பெற்றுக் கொண்டான். கண்ணனுடைய திருவிளையாடல் ஆரம்பமானது. சிரித்துக் கொண்டே இடையர்களிடம், “நான் சொன்னதுபோல் இம்மலை பூஜையை ஏற்றுக்கொண்டது. அதனால் இந்திரன் கோபித்துக் கொண்டாலும், இம்மலையே நம் எல்லோரையும் காக்கும்” என்று சொன்னான். அனைவரும் மிகுந்த மகிழ்ச்சியுடன் வீடு சென்றனர்.

தனக்குச் சேர வேண்டிய பூஜையில் இடையூறு ஏற்பட்டதைக் கேட்ட இந்திரன் கோபம் கொண்டான். மிகுந்த அகங்காரத்தால் “இடையர்களின் சொத்துக்களை அழித்து நாசம் செய்கிறேன்” என்று இந்திரன் ஆர்ப்பரித்தான். ‘ஐராவதம்’ என்ற தன் யானையின்மீது ஏறிக்கொண்டு, வஜ்ராயுதத்தை எடுத்துக்கொண்டு, பிரளயகாலத்து மேகங்களை உருவாக்கி, இடையர்களின் இருப்பிடத்தை அழிக்கப் புறப்பட்டான்.

கண்ணனது திருமேனிக்கு ஒப்பான கார்மேகங்கள் வானத்தில் சூழ்ந்தன. இடிமுழக்கம் அனைவரையும் நடுங்கச் செய்தது. அம்மேகங்களைப் பார்த்து அனைவரும் நடுங்கினார்கள். ஆனால், கண்ணன் சந்தோஷித்தான். பெரிய ஆலங்கட்டிகளுடன் கூடிய மழை பெய்தது. பிருந்தாவனம் நீரில் மூழ்கத் தொடங்கியது. இடையர்கள் பயந்து, “கண்ணா, இந்திரனின் கோபத்திலிருந்து எங்களைக் காக்க வேண்டும்” என்று கூக்குரலிட்டனர். இந்திரனால் நமக்கு ஒரு கெடுதலும் நேராது. முனிவர்களும், கோவர்த்தன மலையும் நிச்சயம் நம்மைக் காப்பார்கள் என்று இடையர்களுக்கு சமாதானம் கூறினான் கண்ணன். இந்த கோவர்த்தனமலை இந்திரனின் கொடுமையிலிருந்து அனைவரையும் காத்து, அழிவை நிச்சயம் தடுக்கும் என்று சொல்லிக்கொண்டே, புன்சிரிப்புடன் தனது இளம் கரங்களால் அம்மலையை வேரோடு பிடுங்கி இழுத்தான். தாமரைக் கரங்களால் மலையைக் குடைபோல உயரே தூக்கி, அதன் கீழ் இடையர்களின் உடைமைகளையும், பசுக்களையும், மக்களையும் இருக்கச் செய்தான். ஒரு கையால் மலையை தூக்கிக் கொண்டும், மறு கையால்அருகே வந்த பசுக்களைச் சொறிந்து கொண்டும், நண்பர்களுடனும், கோபியருடனும் விளையாட்டாய்ப் பேசிக்கொண்டு இருந்தான். இடையர்கள், “இவ்வளவு பெரிய மலையைக் கண்ணன் சிறு கரங்களால் தூக்கிக் கொண்டிருக்கிறார். ஆச்சர்யம்! இது மலையின் பெருமையாய் இருக்குமோ?” என்று அறியாது கூறினார்கள். இந்திரன், “இச்சிறுவனுக்கு என்ன தைரியம்? சிறிது நேரத்தில் மலையைத் தூக்க முடியாமல், கீழே போட்டுவிடுவான்” என்று நினைத்து ஏழு நாட்கள் கடுமையாக மழை பொழியச் செய்தான். ஆனால் கண்ணன் சிறிதும் நகரவில்லை. நீர் முழுவதையும் சொறிந்த மேகங்களைக் காற்று வெகுதூரம் தள்ளிச் சென்றது. இந்திரனும் பயந்து ஓடினான். மழை நின்றுவிட்டது. கண்ணன் அனைவரிடமும், “இப்போது நீங்கள் எல்லாரும் வெளியே வரலாம், இந்திரனால் இனிமேல் ஆபத்து வராது” என்று கூற, இடையர்களும், தங்களது உடைமைகளையும், பசுக்களையும் அழைத்துக் கொண்டு வெளியே வந்தார்கள். கண்ணன், மலையை மீண்டும் அதன் இடத்திலேயே வைத்தான். சந்தோஷமடைந்த கோபர்கள் அவனைக் கட்டித் தழுவினர். பெரியவர்கள் அவனை ஆசீர்வதித்தனர்!!

—————–

கண்ணன் கதைகள் – 45

கோவிந்த பட்டாபிஷேகம்

குருவாயூரப்பன் கதைகள்

தோல்வி அடைந்த இந்திரன், கர்வத்தை விட்டு, கண்ணனைப் புகழ்ந்து துதித்து, ‘காமதேனு’ என்ற தேவலோகத்துப் பசுவைப் பரிசாக அளித்தான். கண்ணனுடைய தாமரைப் பாதங்களில் தலை வைத்து வணங்கினான். காமதேனு என்ற அந்தப் பசு, “உலகிற்கெல்லாம் நாயகனே! தாங்கள் பசுக்களைக் காக்கும் குலத்தில் பிறந்தது எங்கள் பாக்கியம்! ‘கோ’க்களைக் காக்கும் உமக்கு என் பாலைச் சொரிந்து, கோவிந்தன் எனப் பெயரிடுகிறேன் ” என்று கூறி தனது பாலால் அபிஷேகம் செய்தது. இந்திரனும் ‘ஐராவதம்’ என்ற தனது யானை கொண்டு வந்த கங்கை ஜலத்தால் அபிஷேகம் செய்தான். இவ்வாறு கண்ணனுக்கு ‘கோவிந்தன்’ என்று பட்டாபிஷேகம் செய்ததும், ஆயர்பாடியில், வைகுண்டத்திலும் ஸ்வர்க்கத்திலும் கிடைக்காத ஐஸ்வர்யம் நிறைந்தது.

மலையைத் தூக்கியது போன்ற கண்ணனுடைய மகிமைகளைப் பார்த்த கோபர்கள், அவனை உலகிற்கெல்லாம் நாயகன் என்று உணர்ந்தனர். நந்தகோபனிடம் தங்கள் ஜாதகத்தின் பலனைக் கேட்டார்கள். அவர்களிடம் நந்தகோபர், முன்பு கர்க்க முனிவர் கூறியவற்றைச் சொன்னார். அவர்கள் அவன் மேல் அதிக அன்பும் பாசமும் கொண்டன

—————————-

கண்ணன் கதைகள் – 46

வருணன் நந்தனைக் கடத்திச் செல்லுதல்

குருவாயூரப்பன் கதைகள்

ஒரு நாள் நந்தகோபர் ஏகாதசி விரதமிருந்து, துவாதசி விடியற்காலை என்று நினைத்து இரவில் யமுனையில் நீராடினார். வருணனின் வேலையாளான ஒரு அசுரன் அவரை இழுத்துச் சென்றான். நந்தனைக் காணாமல் அனைவரும் கதறி அழுதனர். கண்ணனிடம் சரணடைந்தனர். கண்ணன் தனது யோக சக்தியால் வருணனின் லோகத்தில் நந்தகோபர் இருப்பதை அறிந்து, உடனே வருணலோகம் சென்றான்.

கண்ணனைக் கண்ட வருணன் பக்தியுடன் தொழுது, பூஜை செய்தான். பிறகு, “ஹரியே! இன்று நான் பாக்கியம் செய்தவனானேன். பிறவிப் பிணி அகற்றுபவரே! எனது வேலையாள் செய்த இந்தத் தவறை மன்னித்து அருளுங்கள். உம்முடைய தந்தையாரை அழைத்துச் செல்லுங்கள்” என்று கூறினான். அதே நொடியில் நந்தகோபரை அழைத்துக் கொண்டு கண்ணன் வீட்டிற்குச் சென்றான். நந்தகோபரும் தன் சுற்றத்தாரிடம் அதைப் பற்றிக் கூறினார்.

ஆயர்கள் கண்ணனை ‘ஸ்ரீஹரி’ என்று நிச்சயித்து, அவரது
இருப்பிடமான வைகுண்டத்தைக் காண விரும்பினார்கள். எங்கும் நிறைந்திருக்கும் திருமாலான கண்ணன், யாராலும் அடைய முடியாத வைகுண்டலோகத்தை உள்ளங்கை நெல்லிக்கனி போல அவர்களுக்குக் காண்பித்தான். வைகுண்டத்தைக் கண்ட கோபர்கள், ஆனந்த நிலையை அடைந்து, கைவல்யம் (மோக்ஷம்) என்ற சமுத்திரத்தில் மூழ்கினார்கள். அவர்களை மீண்டும் உலக உணர்வுக்கு அழைத்து வந்தான். மீண்டும் அவர்கள் பிருந்தாவனத்தில் இருந்தார்கள். இடையனாக வேடம் கொண்ட இந்த கிருஷ்ணாவதாரத்தில் பிரத்யக்ஷமாக வைகுண்டத்தைக் காண்பித்து அதிசயத்தக்க லீலைகளைப் புரிந்து வந்தான்.

—————

கண்ணன் கதைகள் – 47

கோபியர்களின் மதிமயக்கம்

குருவாயூரப்பன் கதைகள்

கோபிகைகள் கண்ணனையே கணவனாக அடைய வேண்டும் என்று காத்யாயனீ பூஜை செய்தார்கள். அந்தப் பூஜையின் முடிவில், முன்பே கோபியரிடம் கூறியபடி, நிலவொளியில், யமுனைக்கரையில் கண்ணன் குழலூதிக் கொண்டு நின்றான். அவன் புல்லாங்குழலில் இருந்து கிளம்பிய ஏழு ஸ்வரங்களால் உண்டான நாதம், உலகம் முழுவதையும் மயங்கச் செய்தது. அதைக் கேட்ட கோபியர்களும் சொல்லமுடியாத மதிமயக்கம் கொண்டனர்.வீட்டு வேலையில் ஈடுபட்டுக் கொண்டும், குழந்தைகளை கவனித்துக் கொண்டும், கணவனுக்குப் பணிவிடை செய்து கொண்டும் இருந்த கோபியர்கள், கண்ணனின் குழலோசையைக் கேட்டதும், மனம் மயங்கி, எல்லாவற்றையும் விட்டுவிட்டு ஓடி வந்தார்கள்.

சில கோபியர்கள் பாதி நகைகளைப் போட்டுக் கொண்டும், பாதி அலங்கரித்துக் கொண்டும் ஓடி வந்தார்கள். ஒரு பெண் தன் கழுத்தில் ஒட்டியாணத்தையும், இடுப்பில் ஹாரத்தையும் மாற்றி அணிந்துகொண்டு வந்தாள். மற்றொரு பெண், அதிக அன்பினால், ரவிக்கை அணிய மறந்து, மற்றவர்களுக்குத் தெரியாமல் ஓடி வந்தாள். அவள் ஓடி வந்தது, கண்ணனுக்கு அன்பாகிற பாரத்தை அபிஷேகம் செய்ய இரு குடங்களை எடுத்து வந்தது போலத் தோன்றியது. கணவர்களாலும் வீட்டிலுள்ளவர்களாலும் தடுக்கப்பட்ட சில பெண்கள், கண்ணனை மனதால் தியானம் செய்தார்கள். அவர்கள் உடலைவிட்டு ஆனந்த வடிவமான பரப்ரம்மத்தை அடைந்து மிகவும் புண்ணியம் செய்தவர்கள் ஆனார்கள்.அந்தப் பெண்கள் எவரும் கண்ணனைப் பரமாத்மா என நினைத்து வரவில்லை. காதலனாகவே நினைத்து வந்தனர். ஆயினும் நொடியில் துறவிகள் அடையக்கூடிய முக்தியை அடைந்தனர். கருணையான பார்வையாலும், புன்சிரிப்பினாலும் அழகாய் குழலூதிக் கொண்டு நிற்கும் கண்ணனை, கோபியர்கள் பார்த்துக் கொண்டே இருந்தார்கள். அவன் அருகே வந்த அந்த கோபியர்கள் மயங்கி நின்றார்கள்.

அவர்களின் எண்ணத்தை அறிந்திருந்தும், வானத்தில் கூடியிருக்கும் முனிவர்களும், உலக மக்களும் கேட்பதற்காக, குடும்பப் பெண்களின் தர்மத்தைப் பற்றி அப்பெண்களுக்கு கண்ணன் எடுத்துக் கூறினான். முன்பு கூறியதற்கு நேர்மாறான அவனுடைய வார்த்தைகளைக் கேட்ட கோபியர் மிகுந்த சோகம் அடைந்தனர். கண்ணா! எங்களைப் புறக்கணிக்காதீர்கள் என்று புலம்பினார்கள்.அவர்கள் புலம்பிக்கொண்டு அழுவதைப் பார்த்த கண்ணன், கருணை கொண்டு, யமுனைக் கரையின் மணல் குன்றுகளில் அவர்களுடன் விளையாடினான்.நிலவொளி வீசும் யமுனைக்கரையில், மணல் குன்றுகளில், கோபிகைகள் மேலாடையினால் ஆசனம் அமைத்து, கண்ணனை அமரச் செய்தார்கள். கண்ணன், அவர்களுடைய கைகளைப் பிடித்தும், முத்தமிட்டும், கட்டி அணைத்தும், இனிமையாகப் பேசியும், அந்த கோபிகைகளின் மனதை மயக்கி அவர்களை மகிழ்வித்தான். அழ்காகப் புன்னகைத்துக்கொண்டே அந்தப் பெண்களின் ஆடைகளை மறுபடி கவர்ந்தான். கண்ணனின் முகம் சிறு வியர்வைத் துளிகளால் நிறைந்து மூவுலகிலும் அழகு வாய்ந்ததாக இருந்தது. கோபியர்கள் கண்ணனைத் தழுவிக் கொண்டு அளவற்ற ஆனந்தம் அடைந்தார்கள். அளவற்ற ஆனந்தம் அடைந்ததால், மிகுந்த கர்வம் கொண்டார்கள்.உலகிலேயே அழகனான கண்ணன், என்னிடத்தில் மட்டும் அன்பு கொண்டிருக்கிறான் என்று ஒவ்வொரு கோபியரும் நினைத்தார்கள். அதனால் மிகுந்த கர்வம் கொண்டவர்களாக ஆனார்கள். அதையறிந்த கோவிந்தன், அந்த நொடியிலேயே மறைந்து போனான். ராதையென்ற கோபிகை மட்டும் கர்வமில்லாமல், அன்பு மிகுந்து இருந்தாள். .கண்ணன் அவளை அழைத்துக்கொண்டு வெகுதூரம் சென்று, அவளுடன் விளையாடினான்.

கண்ணன் மறைந்ததால், கோபியர் மிகுந்த துயரம் அடைந்தனர். அனைவரும் ஒன்றுகூடி கானகம் முழுவதும் தேடினார்கள். அவன் கிடைக்காததால் மிகுந்த வருத்தம் அடைந்தனர். மாமரமே, சம்பகமரமே, மல்லிகைக் கொடியே, எங்கள் கண்ணனைக் கண்டீர்களா? என்று மரங்களையும், கொடிகளையும் கேட்டு, கவலையுடன் புலம்பினார்கள்.கோபிகை ஒருத்தி, கற்பனையில் கண்ணனைக் கண்டு, மற்ற கோபியரிடம், கண்ணனை என் எதிரில் பார்த்தேன் என்று கூறினாள். அதைக் கேட்ட மற்றவர்களுடைய துன்பம் அதிகரித்தது. அவர்கள் எல்லாரும் கண்ணனையே நினைத்து, அவனுடைய செய்கைகளைப் பற்றியே பேசி வந்தார்கள்.

அப்போது ராதை கர்வம் கொண்டதால் அவளையும் விட்டு மாயமாய் மறைந்தான் கண்ணன். அனைவரும், ராதையுடன் கூட, இருட்டும்வரை கானகத்தில் தேடினார்கள். மனம் கலங்கி மீண்டும் யமுனைக் கரைக்கு வந்து புலம்பினார்கள். அவர்களது துன்பத்தைக் கண்டு கருணை கொண்டு, கோபியரின் முன், மன்மதனையும் மயங்கச் செய்யும் அழகுடன், மூவுலகங்களையும் மயக்கும் புன்சிரிப்புடன்மீண்டும் கண்ணன் தோன்றினான். அவனை நேரில் கண்ட கோபியர்கள் அளவற்ற மகிழ்ச்சி அடைந்தார்கள். தங்கள் மகிழ்ச்சியை விதவிதமாக வெளிப்படுத்தினார்கள். சிலர் அசைவற்று நின்றார்கள். ஒரு கோபிகை, மயிர்க்கூச்சலுடன், கண்ணனது கையை எடுத்து, தனது மார்பில் வைத்துக்கொண்டு நின்றாள். மற்றொருத்தி அவன் கையை எடுத்து, தன் மூச்சே நின்றுவிடும்படி தனது கழுத்தில் இறுகச் சுற்றிக் கொண்டாள்.

———

கண்ணன் கதைகள் – 48

ராஸக்ரீடை

குருவாயூரப்பன் கதைகள்

கோபியர்கள் மிகுந்த ஆனந்தமாக யமுனைக்கரையில் கண்ணனுடன் விளையாடினார்கள். தலையில் மயில் பீலியுடனும், காதுகளில் மீன் குண்டலங்களும், கழுத்தில் முத்து மாலைகளும், வனமாலையும் அசைய, பீதாம்பரமும், ஒட்டியாணமும், ரத்தினங்கள் இழைக்கப்பட்ட கொலுசுகளும் அணிந்து, வாசனைப் பொடிகள் முதலியவற்றால் மணம் வீசும் சரீரத்துடன், அலங்கரிக்கப்பட்ட கிருஷ்ணன் அனைவரின் மனம் மயங்கும்படியான அழகுடன் விளங்கினான். அப்போதே, மார்புக்கச்சைகளை இறுக்கிக் கட்டிக்கொண்டு, தங்களை அணிகலன்களால் அலங்கரித்துக் கொண்டு கோபியர்கள் அவனைச் சுற்றி வட்டமாய் நின்றார்கள். கிருஷ்ணனும் அப்பெண்களுக்கிடையில், (இரு கோபிகைகளுக்கிடையில் ஒரு கிருஷ்ணன், இரு கிருஷ்ணனுக்கு இடையில் ஒரு கோபிகை) நின்று கொண்டு, நர்த்தனம் செய்துகொண்டு, தனது யை ஆரம்பித்தான்.

நாரதர் கிருஷ்ணனுடைய ராஸக்ரீடையின் அழகைக் கூறக் கேட்ட தேவர்கள், தேவ மங்கையருடன் வேகமாய் வந்து ஆகாயத்தில் சூழ்ந்து நின்றனர். கண்ணனின் புல்லாங்குழலிலிருந்து இனிய ஓசை உண்டானது. அழகிய ஸ்வரங்களுடன், சிறப்பான ராகங்களுடன், மனோகரமான ஆலாபனங்களுடன் இனிமையான இசை உண்டானது. இசைக்கு ஏற்றவாறு அவனுடைய கால்கள் தாளமிட்டன. கைவளைகள் ஒலியெழுப்பின. இடுப்பிலுள்ள ஆடைகள் அசைய, தாமரை போன்ற கைகளைத் தோளில் வைத்துக் கொண்டிருக்கும் இந்த ராஸக்ரீடையின் காட்சி மிக்க மனோகரமாய் இருந்தது. இனிமையான இசையை மேல் ஸ்தாயியில் பாடிக்கொண்டு, பின்னணிக் கொத்து என்ற நடனம் ஆரம்பித்தது. நடனத்தின் அசைவின்போது, அனைவரும் அணிந்திருந்த ஆபரணங்கள் இடம் மாறி நகர்ந்து மிக அழகாய் இருந்தது. தேவர்கள் பூமாரி பொழிந்து, மனம் மயங்கினர். தேவமங்கையரும் மனம் மயங்கினர். வியர்த்துக் களைத்த அழகான கோபிகை ஒருத்தி, சோர்வுடன் நடனம் செய்ய முடியாமல், கிருஷ்ணனுடைய தோளைப் பிடித்துக் கொண்டு தொங்கினாள். முன் நெற்றிக்குழல்கள் கலைந்த ஒரு கோபிகை மயிர்க்கூச்சலுடன், சந்தன மணம் வீசும் அவனுடைய கைகளை முத்தமிட்டாள். அதிர்ஷ்டசாலியான ஒரு கோபிகை, குண்டலங்கள் ஆடும் தன்னுடைய கன்னத்தை, அவனுடைய கன்னங்களுடன் இணைத்து, அவன் வாயிலிருந்து தாம்பூலத்தைப் பெற்று, அதை உறிந்து சுவைத்தாள். அப்பெண்கள், நர்த்தனத்தின் போது, பல வித சுகமான நிலைகளை அடைந்தார்கள். பாட்டு நின்றது. வாத்தியங்களும் ஓய்ந்தன. பிரும்மானந்த ரஸத்தில் மூழ்கிய கோபிகைகள் மட்டும் ஆடிக்கொண்டிருந்தனர். அவர்கள், மேலாடை கலைந்ததையோ, ரவிக்கை அவிழ்வதையோ, கச்சத்தின் முடிச்சு அவிழ்வதையோ அறியவில்லை. வானில் நட்சத்திரக் கூட்டமும் நின்று விட்டன. கிருஷ்ணன், அகில உலகங்களையும் பிரும்மானந்த ரஸத்தில் மூழ்கச் செய்து, தனது ராஸலீலையை முடித்தான். நடனமாடியதால் உண்டான வியர்வைத் துளிகளுடன் கோபிகைகள் மனம் மயங்கி நின்றிருந்தனர். அங்கு, எத்தனை கோபிகைகள் இருந்தார்களோ அத்தனை கிருஷ்ணனாக வந்து அவர்களைக் களிக்கச் செய்தான்.

மிகவும் அழகான சரீரமுள்ளவர்களும், சோர்வை அடைந்தவர்களுமான அப்பெண்களோடு விளையாடினான். அக்காட்டில், மந்தமாருதம் வீசும் போது வந்த பூக்களின் வாசனையால் அப்பெண்கள் மயங்கி நின்றார்கள். யோகிகள் மட்டுமே அடையக்கூடிய பரமானந்த வெள்ளத்தில் அப்பெண்கள் மூழ்கினார்கள். இந்த கோபிகைகள் மிகுந்த பேறு பெற்றவர்கள், இவர்களால் நாம் ராஸக்ரீடையைக் காணும் பாக்கியம் பெற்றவர்கள் ஆனோம் என்று ப்ரம்மா, பரமசிவன், தேவர்கள் யாவரும் அதிசயித்தார்கள்.

—————

கண்ணன் கதைகள் – 49

சங்கசூட, அரிஷ்டாசுர, கேசீ, வ்யோமாசுர வதம்

குருவாயூரப்பன் கதைகள்

கோபியர்களுடன் ராஸக்ரீடை முடிந்தது. ஒரு நாள், கோபர்கள் அனைவரும் அம்பிகா வனத்தில் உள்ள சிவனைத் தொழுவதற்காகச் சென்றார்கள். சரஸ்வதி நதியில் நீராடிவிட்டு, அம்பிகையையும், சிவனையும் விரதமிருந்து தொழுதார்கள். தொழுது முடித்ததும் நதிக்கரையிலேயே கோபர்கள் கண்ணயர்ந்தார்கள். அப்போது ஒரு பெரிய மலைப்பாம்பு நந்தகோபனை விழுங்கியது. கொள்ளிக்கட்டைகளால் அடித்தும் அந்தப் பாம்பு பிடியை விடவில்லை. கோபர்கள் கதறினார்கள். அந்த சத்தத்தைக் கேட்டு அங்கே வந்த கிருஷ்ணன், அப்பாம்பின் அருகே சென்று அதைக் காலால் உதைத்தான். உடனே அப்பாம்பு, வித்யாதர உருவம் எடுத்தது. அந்த வித்யாதரன்,” சுதர்சன சக்கரத்தைக் கையில் ஏந்தியவரே! என் பெயர் சுதர்சனன். நான் வித்யாதரனாய் இருந்தபொழுது, முனிவர்களைப் பழித்தேன். அவர்கள் என்னை மலைப்பாம்பாக ஆகும்படி சபித்தனர். தங்கள் பாதம் பட்டு சுய உருவத்தை அடைந்தேன்” என்று கூறி, நமஸ்கரித்து வானுலகம் அடைந்தான். கோபர்களும் மகிழ்ந்து வீடு சென்றனர்.

ஒரு சமயம், கிருஷ்ணன் பலராமனோடும், கோபியர்களோடும் பிருந்தாவனத்தில் விளையாடிக் கொண்டிருந்தான். கண்ணனுடைய குழலோசையில் கோபியர்கள் லயித்திருந்தனர். அப்போது அவ்வழியே சென்ற குபேரனுடைய வேலையாளான சங்கசூடன் என்பவன் கோபிகைகளின் அழகில் மயங்கி அவர்களைக் கவர்ந்து சென்றான். கிருஷ்ணனும், பலராமனும் அவனைப் பின்தொடர்ந்தார்கள். அதைக் கண்ட அவன், கோபிகைகளை விட்டுவிட்டுத் தப்பி ஓடினான். பலராமன் பயத்திலிருந்த கோபிகைகளை பத்திரமாக பார்த்துக் கொள்ள, கிருஷ்ணன் சங்கசூடனைத் தொடர்ந்து சென்று, அவனுடைய தலையில் அடித்து அவனை வதம் செய்து, அவனுடைய தலையில் அணிந்திருந்த ரத்தின சூடாமணியை எடுத்து பலராமனிடம் கொடுத்தார்.

கிருஷ்ணன், பகலில் நண்பர்களுடன் காட்டில் விளையாடி, மனதைக் கவரும் திருமேனியுடன் குழலூதிக் கொண்டிருந்தான். அப்போது, கம்ஸனின் வேலையாளான அரிஷ்டன் என்ற அசுரன், காளைமாடு உருவம் எடுத்துக்கொண்டு, பயங்கரமாய் சத்தமிட்டுக்கொண்டு அங்கே வந்தான். அனைவரையும் நடுங்கச் செய்துகொண்டு, பெரிய உருவத்துடன் பசுக்கூட்டங்களை விரட்டினான். பிறகு, நீண்ட கொம்புகளால் மரங்களை முட்டித் தள்ளினான். சிறுவர்கள் பயந்து அலறினார்கள். பிறகு கிருஷ்ணனின் எதிரே வந்தான். உடனே கிருஷ்ணன் அந்த அரிஷ்டாசுரனின் கொம்பைப் பற்றிப் பிடித்து, ஒரு கொம்பைப் பிடுங்கி, சுழற்றி வீசி எறிந்து கொன்றார். தேவர்கள் மகிழ்ந்தனர். இடைச்சிறுவர்கள் கிருஷ்ணனைத் துதித்துப் போற்றினர். இடையர்கள் சிரித்துக்கொண்டு, “காளைகளே! வ்ருஷபாசுரனைக் கொன்ற கிருஷ்ணன் இங்கே இருக்கிறான், நீங்கள் வெகுதூரம் ஓடி ஒளிந்து கொள்ளுங்கள்” என்று கூறினர். பிறகு, இடையர்கள் வீடு திரும்பினார்கள்.

கேசீ என்பவன் கம்ஸனுடைய உறவினன். எந்த முயற்சியிலும் அவன் தோல்வியடைந்ததில்லை. அந்த அசுரன் குதிரை வடிவில் பிருந்தாவனத்தை வந்தடைந்தான். அந்த அசுரன் குதிரை வடிவம் எடுத்து வந்தாலும், அவனது குரல் அனைவரையும் நடுங்கச் செய்வதாய் இருந்தது. ஆயர்பாடியில் உள்ள அனைவரையும் துன்புறுத்தினான். பிறகு கிருஷ்ணனிடம் வந்தான். கிருஷ்ணனுடைய மார்பில் குதிரை எட்டி உதைத்தது. அந்த அசுரனுடைய கால்களின் உதையிலிருந்து விலகி, கிருஷ்ணன் அவனை வெகுதூரத்தில் வீசி எறிந்தார். அதனால் அவன் மயக்கம் அடைந்தாலும், மயக்கம் தெளிந்தவுடன் மீண்டும் அதிகக் கோபத்துடன் கண்ணனிடம் ஓடி வந்தான். அந்தக் குதிரையைக் கொல்லத் தீர்மானம் செய்த கிருஷ்ணன், தன்னுடைய கைகளை அவன் முகத்தில் வைத்து அழுத்தினார். அதனால், அந்த குதிரை வடிவெடுத்த அசுரன் மூச்சுத் திணறி உயிரிழந்தான். கேசீ என்ற குதிரையைக் கொன்றதால், தேவர்கள் மகிழ்ந்து கிருஷ்ணனைக் ‘கேசவன்’ என்று பெயரிட்டுப் போற்றித் துதித்தனர். அங்கு வந்த நாரதர், அசுரனான கேசீ வதம் செய்யப்பட்டதும் கிருஷ்ணனைத் துதித்து நமஸ்கரித்தார். பின்னர், கம்ஸனின் முயற்சிகளை கண்ணனிடம் கூறிவிட்டு அங்கிருந்து சென்றார்.

ஒரு நாள் இடையர்களுடன் கண்ணன் ஒளிந்து விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது, தேவர்களைத் துன்புறுத்துபவனும், அளவற்ற மந்திர சக்திகள் கொண்டவனும், மயனுடைய பிள்ளையுமான வ்யோமன் என்ற அசுரன், அங்கு வந்தான். திருடர்களும், காப்பாற்றுகிறவர்களும் என்ற விளையாட்டில் வ்யோமாசுரன் திருடனாய்க் கலந்து விளையாடினான். இடைச்சிறுவர்களையும், பசுக்களையும், திருடி குகையில் அடைத்து வைத்து, குகையின் வாயிலைப் பெரிய கல்லால் அடைத்து மூடினான். இதையறிந்த கிருஷ்ணர் அவனைப் பிடித்தார். வ்யோமாசுரன் மலையைப் போன்று தனது உருவத்தைப் பெரிதாக்கிக் கொண்டான். ஆனால் கிருஷ்ணன் அவனைத் தரையில் தள்ளி நொறுக்கிக் கொன்றார். கிருஷ்ணர், இவ்வாறு அதிசயக்கத்தக்க, நிகரற்ற பல விளையாட்டுக்களால் ஆயர்பாடி மக்களை ஆனந்தக் கடலில் ஆழ்த்தினார்.

———

கண்ணன் கதைகள் – 50

அக்ரூரர் தூது, மதுரா நகரப் பயணம்

குருவாயூரப்பன் கதைகள்

கம்ஸன் அனுப்பிய அத்தனை அசுரர்களையும் கண்ணன் கொன்றுவிட்டான். கம்ஸன் மிகவும் பயந்தான். நாரதர் மூலம் கண்ணன் கோகுலத்தில் வசிப்பதை அறிந்த கம்ஸன், கண்ணனையும், பலராமனையும் கொல்லத் திட்டம் தீட்டினான். தனுர் யக்ஞம் என்ற வில் பூஜையில் கலந்து கொள்ள கிருஷ்ணனை அழைத்து வருமாறு பண்பில் சிறந்த அக்ரூரரை அனுப்பினான்.

அக்ரூரர் கிருஷ்ணனிடத்தில் பரம பக்தி கொண்டவர். கம்ஸனிடம் இருந்த பயத்தால் கிருஷ்ணனைத் தரிசிக்காமல் இருந்து வந்தார். கம்ஸனே கிருஷ்ணனை அழைத்து வரக் கட்டளையிட்டதும் மிகவும் மகிழ்ந்தார். ரதத்தில் ஏறி, கோகுலம் நோக்கிப் புறப்பட்டார். கிருஷ்ணனையே நினைத்து, அந்த நினைவுகளை அனுபவித்து, அவரை சந்திப்பதில் எந்த இடையூறும் ஏற்படக்கூடாது என்று வேண்டிக்கொண்டே சென்றார். “பரமனை நான் தரிசிப்பேனா? தொட்டுத் தழுவுவேனா? அவர் என்னுடன் பேசுவாரா? அவரை எங்கு காண்பேன்?” என்று எண்ணியவாறே கிருஷ்ணனை நினைத்துக் கொண்டே வழியைக் கடந்தார். கண்ணனின் பாதம் பட்டதால் புனிதமானதும், சிவனும், பிரமனும், தேவர்களும் வணங்கத் தகுந்ததுமான பிருந்தாவனத்திற்குள் நுழைந்தார். எல்லையில்லா ஆனந்தத்தில் மூழ்கி, உணர்ச்சி மிகுந்த நிலைமைகளை அடைந்தார். கண்ணன் விளையாடிய இடங்களைப் பார்த்து வணங்கினார். கண்ணனின் பாதம் பட்ட புழுதியில் புரண்டார். அவர், கோபிகைகளின் வீடுகளைப் பார்த்துக் கொண்டும், அவர்கள் பாடும் தங்கள் புகழைக் கேட்டுக் கொண்டும், ஆனந்த வெள்ளத்தில் மூழ்கி, மாலையில் நந்தகோபரின் வீட்டு வாசலை அடைந்தார். பசுவிடமிருந்து பால் கறப்பதைப் பார்த்துக் கொண்டிருக்கும் கிருஷ்ணனையும் பலராமனையும் கண்டார். தான் உள்ளே அனுபவித்த ப்ரும்மானந்தத்தை வெளியில் பார்ப்பதுபோல் உணர்ந்தார்.

பீதாம்பரம், நீலாம்பரம் இவற்றை அணிந்து மிக அழகுடன் விளங்கும் கிருஷ்ணனையும், பலராமனையும் கண்டார். சில ஆபரணங்களை மட்டுமே அணிந்து, புன்சிரிப்பு தவழும் முகத்துடன் இருக்கும் இருவரையும் கண்டார். அவர்களைக் கண்டவுடன், வெகு தூரத்திலேயே ரதத்தை நிறுத்திவிட்டு இறங்கி, தரையில் விழுந்து வணங்கினார். கிருஷ்ணன் அவரை எழுப்பித் தழுவிக் கொண்டான் . நலன்களைப் பற்றி விசாரித்து, கையைப் பிடித்துக் கொண்டு பலராமனுடன் வீட்டிற்குள் அழைத்துச் சென்றான். யதுகுலத்தில் பிறந்த அக்ரூரரை, நந்தகோபரும், கிருஷ்ணனும், பலராமனும் நன்கு உபசரித்தார்கள். கம்ஸனுடைய அழைப்பைப் பற்றி அக்ரூரர் தெரிவித்தார். அதைக் கேட்ட கிருஷ்ணன், கோபர்களிடம் அதை அறிவித்தார். இரவு முழுவதும் அக்ரூரருடன் பல கதைகளைப் பேசிக்கொண்டு கழித்தார். கிருஷ்ணனைக் காணாததால், இன்று கிருஷ்ணன் சந்திரை, சந்திரபாகை, ராதை அல்லது மித்திரவிந்தையின் வீட்டில் தங்கியிருக்கிறான் என்று கோபிகைகள் மற்ற கோபிகைகளை சந்தேகித்தார்கள்.

 

 

அக்ரூரருடன் கிருஷ்ணன் மதுரா நகரம் செல்லப் போவதை அறிந்த கோபியர்கள் மிகவும் துயரமடைந்தனர். அவர்கள் அனைவரும் ஒன்று கூடி, கவலையுடன் புலம்பினார்கள். அவனைத் தவிர வேறு கதியற்ற நம்மை எப்படி விட்டுப் போகிறான்? இதுதான் தெய்வம் நமக்கு விதித்ததோ? என்று வருந்தி, அழுது புலம்பினார்கள். கிருஷ்ணன், கோபியர்களின் துயரைத் தீர்க்க, அங்கு ஒரு தோழனை அனுப்பினார். கிருஷ்ணன் அந்த இரவின் முடிவில் நந்தனுடனும், நண்பர்களுடனும் கலந்து பேசி, மதுரா நகரம் செல்லத் தீர்மானித்து பலராமனை கூட்டிக் கொண்டு அக்ரூரருடன் மதுரா புறப்படும் ஏற்பாடுகள் தொடங்கின. “நான் விரைவிலேயே தங்களிடம் திரும்பி வருவேன். என்னோடு உல்லாசமாய் இருக்கும் தருணமும் விரைவிலேயே ஏற்படும். ஆனந்தமயமான அம்ருத வெள்ளத்தில் மூழ்கடிப்பேன்” என்று கோபியர்களை சமாதானம் செய்தார். அவர்களும் மிகுந்த வருத்தத்துடன், வெகுதூரம் போகும்வரையில் அவரைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். கடைக்கண்ணால் அவர்களைப் பார்த்துக்கொண்டே பலராமனுடனும், அக்ரூரனுடனும் தேரில் ஏறிப் புறப்பட்டார். கோபர்களின் எண்ணற்ற தேர்களும் பின்தொடர்ந்தன. கானகத்திலுள்ள மிருகங்கள் வருந்தின. மரங்கள் வாடின.

அனைவரும் யமுனைக் கரையை அடைந்தார்கள்.
அக்ரூரர், நித்ய அனுஷ்டானம் செய்வதற்காக யமுனையில் மூழ்கினார். பரப்ரம்மமான கிருஷ்ணனை நீரினுள்ளேயும், வெளியே எழுந்ததும் தேரிலும் இருக்கக் கண்டார். இரண்டு இடங்களிலும் கண்ணனது தரிசனம் ஏற்படுகிறதே, என்ன ஆச்சர்யம்! என்று மெய்சிலிர்த்தார். மீண்டும் நீரில் மூழ்கினார். அங்கு அவரைப் பாம்பணையின்மேல் பள்ளி கொண்டிருப்பவராகவும், கரங்களில் சங்கு, சக்ரம், கதை, தாமரை ஏந்தியிருப்பவராகவும் கண்டார். தேவர்களும், சித்தர்களும் சூழ்ந்திருக்கக் கண்டார். அளவற்ற ப்ரும்மானந்த வெள்ளத்தில் திளைத்தார். பிரமனாகவும், சிவனாகவும், விஷ்ணுவாகவும் கண்டு ஸ்தோத்திரம் செய்தார். வைகுண்ட ஸ்வரூப காட்சியும் மறைந்தது. அனுபவித்த ஆனந்தத்தினால் மயிர்க்கூச்சலடைந்து தேரின் அருகே வந்தார்.

அவரிடம் கிருஷ்ணன், “ இந்த யமுனையின் ஜலம் மிகவும் குளிர்ச்சியாக இருக்கிறதா? உனக்கு ரோமாஞ்சம் உண்டாகியிருக்கிறதே” என்று அறியாதவர்போல் கேட்க, அக்ரூரரோ வைகுண்ட ஸ்வரூபத்தைக் கண்டதால் ஏற்பட்ட ஆனந்தத்தில் பேசமுடியாமல், பதில் கூறாமல் இருந்தார்

———–

கண்ணன் கதைகள் – 51

மதுரா நகரப்ரவேசம்

குருவாயூரப்பன் கதைகள்

கிருஷ்ணன் நண்பகலில் மதுராநகரம் அடைந்தார். அருகிலுள்ள தோட்டத்தில் உணவுண்டு, நண்பர்களுடன் நகரைச் சுற்றிப் பார்க்க முடிவு செய்தார். அந்த நகரிலுள்ளவர்கள் .கண்ணனைப் பற்றிக் கேள்விப்பட்டிருந்ததால் அவரை நேரில் காண ஆவல் கொண்டனர். கிருஷ்ணன் இப்போது ராஜவீதியை அடைந்தார். அவரைக் காண வந்த பெண்கள், எப்பொழுதும் கண்ணனையே மனதால் நினைத்துக் கொண்டிருந்ததால் அவரை நேரில் காண ஓடி வந்து கொண்டிருந்தார்கள். அப்பெண்கள் கள்ளமில்லாத தூய்மை உள்ளம் படைத்தவர்களாய் இருந்தார்கள். தனது கடைக்கண் பார்வையால், கிருஷ்ணன் அப்பெண்களை ஆனந்திக்கச் செய்தார். மக்களும் மகிழ்ச்சியுடன் கிருஷ்ணனைக் காணக் கூடினார்கள். அப்போது எதிரே வந்த கம்ஸனுடைய வண்ணானிடம் உடைகள் வேண்டும் எனக் கிருஷ்ணன் கேட்க, அவன், “ராஜாவின் உடைகளை உனக்கு எவன் கொடுப்பான்? தள்ளிப்போ” என்று கேலியாகக் கூறினான். உடனே கிருஷ்ணன் அவன் தலையைக் கிள்ளி எறிந்தார். அவனும் நற்கதியை அடைந்தான்.

அப்போது, ஒரு துணி நெய்பவன் கண்ணனுக்குப் பொருத்தமான ராஜஉடைகளைக் கொண்டு வந்து கொடுத்தான். அவற்றை அணிந்தார். மாலை கட்டும் ‘சுதாமா’ என்பவன், கண்ணனுக்கு மலர் மாலைகளை அணிவித்துப் போற்றித் துதித்தான். அவனுக்கு அவன் விரும்பிய பக்தியையும், அளவற்ற செல்வத்தையும் வரமாகஅளித்தார். இவ்வாறு செல்லும்போது, வழியில், அழகான கண்களை உடையவளும், முதுகில் கூன் உடையவளுமான ‘திரிவிக்ரா’ என்ற ஒரு பெண்ணைக் கண்டார். அவள் கிருஷ்ணருக்கு சிறந்த சந்தனத்தையும், வாசனைத் திரவியங்களையும் பூசினாள். மனமகிழ்ந்த கண்ணன், அவளிடம் அன்பு கொண்டு, தனது கால் விரலால் அவள் காலை அழுத்திக் கொண்டு, அவளைக் கையினால் மெதுவாகப் பிடித்து அவள் கூனை நிமிர்த்தினார். அவள் உலகிலேயே அழகானவளாக ஆனாள். பரிசுத்தமான, பாபமற்ற அந்நகர மக்கள், கண்ணன் வரும் வழி நெடுக நின்றுகொண்டு, பூமாலை, தாம்பூலம் முதலிய தமது சக்திக்குத் தகுந்த ஏதாவது ஒரு பொருளை கண்ணனுக்குக் கொடுத்தார்கள். கண்ணன் கோட்டைவாயிலில் நுழைந்தார். மக்களின் ஆரவாரத்தினால் கிருஷ்ணனுடைய வருகையை அறிந்த தேவகி, மிகுந்த குதூகலம் அடைந்தாள். அவளது ஸ்தனங்களிலிருந்து பால் சுரந்தது.

கிருஷ்ணன் மதுரா நகருக்குள் பிரவேசித்தபோது காவலர்களும், மக்களும் அவருடைய அழகைக் கண்டு மயங்கி வழி விட்டார்கள். தனுர்யாகம் நடந்து கொண்டிருக்கும் இடத்தை அடைந்தார். அங்கே அந்த வில்லானது, மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு, பூஜைகள் செய்யப்பட்டு ஒரு அறைக்குள் வைக்கப்பட்டிருந்தது. அந்த வில் வைத்திருந்த அறைக்குள் பிரவேசித்த கண்ணன், நொடிப்பொழுதில் அந்த வில்லை எடுத்து நாணேற்றி முறித்தார்.

வில் முறிந்த பெரிய ஒலியைக் கேட்டு தேவர்கள் மெய்சிலிர்த்தனர். அந்த ஓசையானது கம்ஸ வதத்திற்கு முன் வாசிக்கப்படும் மங்கள வாத்தியம் போல் இருந்தது. அந்த ஓசையைக் கேட்ட கம்ஸனுக்கும் நடுக்கம் ஏற்பட்டது. முறிந்த வில்லினால் அடிபட்ட காவலர்களின் கூக்குரல் கம்ஸனுடைய பயத்தை அதிகரித்தது. சிஷ்டர்களைப் பரிபாலனம் செய்யவும், துஷ்டர்களை நிக்ரஹம் செய்யவும் அவதரித்த கிருஷ்ணன், நகரத்தின் அழகைப் பார்த்துக் கொண்டே மாலையில், பூந்தோட்டத்தில் உள்ள தனது கூடாரத்தை அடைந்தார். அன்று இரவு, தனது நெருங்கிய நண்பரான ஸ்ரீதாமாவிடம், ராதையின் பிரிவால் ஏற்பட்ட துயரத்தைக் கூறிக் கொண்டு, பல கதைகளைப் பேசிக் கொண்டு அங்கு தங்கினார். அவதார நோக்கம் நிறைவேறும் அந்த நாளும் வந்தது.

———-

கண்ணன் கதைகள் – 52

கம்ஸ மோக்ஷம் / கம்ஸ வதம்

குருவாயூரப்பன் கதைகள்

கண்ணனின் அவதார நோக்கம் நிறைவேறும் அந்த நாளும் வந்தது. மறுநாள் அதிகாலையில், கம்ஸனின் ஆணைப்படி, மல்யுத்தத்திற்கான போட்டிகள் முரசொலி செய்து அறிவிக்கப்பட்டது. அதனைக் காண, பல அரசர்கள் வந்தனர். நந்தகோபரும் உப்பரிகைக்குச் சென்றார். கம்ஸனும் உப்பரிகைக்குச் சென்றான். கிருஷ்ணனும் பலராமனும் அழகிய ஆடை அலங்காரங்களுடன் மல்யுத்த களத்தை அடைந்தார்கள். அங்கு ‘குவாலயாபீடம்’ என்ற யானை அவர்களை வழிமறித்து நின்றது. வழிவிட்டுச் செல் என்று அந்த யானையைப் பணித்தார் கிருஷ்ணன். அப்போது யானைப் பாகனான ‘அம்பஷ்டன்’, கிருஷ்ணனைத் தாக்க யானையை ஏவினான். அந்த யானை, விரைந்து கிருஷ்ணனைப் பிடித்தது. அதனிடமிருந்து லாவகமாகத் தன்னை விடுவித்துக்கொண்ட கிருஷ்ணன், அதன் மத்தகத்தில் அடித்தார். பின்னர் அதன் காலடியில் மறைந்து, பிறகு சிரித்துக்கொண்டு வெளியே வந்தார். யானைக்கு அருகில் இருந்தாலும், அதன் பிடியில் அகப்படாமல் நழுவி, வெகுதூரம் ஓடி, விளையாட்டாய் விழுவது போல் கீழே விழுந்தார். அந்த யானையும் கிருஷ்ணனைத் தாக்க எதிரே வந்தது. உடனே கிருஷ்ணன், அதன் தந்தங்களை வேருடன் பிடுங்கி எறிந்தார். யானையைக் கீழே தள்ளி, அந்த தந்தங்களால் யானையைக் குத்திக் கொன்றார். தந்தத்தின் அடிப்பகுதியிலுள்ள உயர்ந்த முத்துக்களை எடுத்து, ஸ்ரீதாமனிடம் கொடுத்து, “இவற்றை அழகிய முத்து மாலையாகச் செய்து ராதையிடம் கொடு” என்று கூறினார். பிறகு, யானையின் இரு தந்தங்களையும், கிருஷ்ணனும் பலராமனும் தங்களுடைய தோளில் சுமந்துகொண்டு, மல்யுத்த களத்திற்குச் சென்றார்கள். அவர்களைக் கண்ட மக்கள், அவர்களுடைய தேககாந்தியால் அபகரிக்கப்பட்டு, ஆச்சர்யம்! என்றும், நந்தகோபன் மஹாபாக்கியசாலி என்றும், சிலர் யசோதை பாக்கியசாலி என்றும், வேறு சிலர், இல்லை இந்த நகரத்து மக்களாகிய நாம்தான் பாக்கியம் செய்தவர்கள், என்றும் உவகையுடன் கூவினார்கள். அந்நகர மக்கள் கண்ணனைப் பரப்ரம்மமாக அறியவில்லை. ஆயினும், முதன்முதலாய் அவரைப் பார்த்த அவர்கள், உடனேயே பாபம் நீங்கியவர்களாய் ஆனார்கள். கிருஷ்ணனுடைய செய்கைகளைப் பற்றிப் போற்றிப் பாடினார்கள்.

கம்ஸனுடைய ஆணையின்படி, மல்யுத்தத்தில் சிறந்த சாணூரன் என்ற மல்லன் கிருஷ்ணனையும், முஷ்டி யுத்தத்தில் சிறந்த முஷ்டிகன் என்பவன் பலராமனையும் சவாலுக்கு அழைத்தார்கள். பலவிதமான தாக்குதல்களுடன் யுத்தம் தொடங்கியது. “இது என்ன போட்டி? ஒரு புறம் அழகான சிறுவர்கள். மல்லர்களோ கடினமானவர்கள். இந்த யுத்தத்தை நாம் பார்க்க வேண்டாம், போய்விடுவோம்” என்று மக்கள் பேசிக் கொண்டார்கள். அப்போது கிருஷ்ணன், சாணூரனைத் தூக்கிச் சுற்றி உயிரிழக்கச் செய்தார். உயிரிழந்த அவனை பூமியிலே ஓங்கி அடித்தார். பலராமனும் முஷ்டிகனை அடித்துக் கொன்றார். மீதமிருந்த மல்லர்கள் அங்கிருந்து ஓடினர். திகைத்த கம்ஸன், முரசுகளையும், வாத்தியங்களையும் முழங்க விடாமல் தடுத்தான். உக்ரசேனன், நந்தகோபன், வசுதேவன் ஆகியோரைக் கொல்லும்படியும், கண்ணனையும் பலராமனையும் வெகுதூரத்திற்கப்பால் விரட்டும்படியும் காவலர்களுக்கு உத்தரவிட்டான். இதைக் கேட்டுக் கோபமடைந்த கண்ணன், உப்பரிகையில் வீற்றிருந்த கம்ஸனை நோக்கி சிங்கம்போலப் பாய்ந்து சென்றார். கம்ஸன் வாளெடுத்துச் சுழற்றினான். அவனை அசையவிடாமல் வலுவாகப் பிடித்து, அவனுடைய கேசங்களைப் பிடித்து இழுத்து, சிம்மாசனத்திலிருந்து தலைக்குப்புற கீழே சாய்த்துத் தள்ளினார். பூமியில் தள்ளி, அவன் மார்பு மேல் அமர்ந்து, அவனுடைய அங்கங்களை அடித்து நொறுக்கினார். கம்ஸனுடைய கிரீடம் சிதறுண்டு தரையில் உருண்டது. மயங்கி விழுந்த கம்ஸன் மாண்டு போனான். தேவர்கள் பூமாரி பொழிந்தனர். கம்ஸன் எப்போதும் கிருஷ்ணனையே மனதில் நினைத்திருந்தபடியால் மோக்ஷத்தை அடைந்தான்.

பிறகு கிருஷ்ணன், பெற்றோரான வசுதேவரையும், தேவகியையும் சிறையிலிருந்து மீட்டு, அவர்களை நமஸ்கரித்தார். கம்ஸனின் தந்தையான உக்ரசேனனை அந்த நாட்டிற்கு அரசனாக ஆக்கினார். யாதவ குலத்தினர் மிகவும் மகிழ்ந்தார்கள். தேவர்களின் குருவான பிருகஸ்பதியிடமிருந்து வித்தைகளைக் கற்ற உத்தவரை நண்பராக ஏற்றுக் கொண்டார். மிக்க மகிழ்ச்சியுடன் மதுரா நகரில் வசித்து வந்தார்.

—————-

கண்ணன் கதைகள் – 53

கோபிகைகளுக்கு உத்தவர் சேதி சொல்லுதல்

குருவாயூரப்பன் கதைகள்

பிறகு கிருஷ்ணர் பலராமனுடன், ஸாந்தீபனி முனிவரிடம் அறுபத்து நான்கு நாட்களிலேயே பல வித்தைகளையும், கல்விகளையும் கற்றார். குருதக்ஷிணையாக, இறந்த அவரது மகனை யமலோகத்திலிருந்து மீட்டு, அவரிடம் கொடுத்தார். பின்னர் மதுரா நகரத்தை அடைந்தார்.

பிருந்தாவனத்தில் கோபிகைகள், கிருஷ்ணரை நினைத்து மிகவும் துயரம் அடைந்தார்கள். அதனை அறிந்த கிருஷ்ணர், அவர்கள் மீது கருணை கொண்டு, தனது நண்பரும், சிறந்த பக்தருமான உத்தவரை அவர்களிடம் சேதி சொல்ல அனுப்பினார். எவ்வுலகிலும் காண முடியாத கோபிகைகளின் அன்பையும், பக்தியையும் உத்தவருக்குக் காண்பிக்க நினைத்து, அவரை அங்கு அனுப்பினார். உடனே உத்தவர் புறப்பட்டு, கோகுலத்திற்கு மாலையில் சென்றார். கிருஷ்ணனைப் பற்றிய செய்திகளைக் கூறி நந்தகோபரையும், யசோதையையும் சந்தோஷமடையச் செய்தார். நந்தனுடைய வீட்டின் அருகில் தேர் நிற்பதைப் பார்த்த கோகுலத்துப் பெண்கள், உத்தவர் வந்திருப்பதை அறிந்து, எல்லா வேலைகளையும் விட்டுவிட்டு நந்தனின் வீட்டை அடைந்தனர். கண்ணனுடைய பல்வேறு செயல்களையும் விளையாட்டுக்களையும் மீண்டும் நினைத்துப் பேச முடியாமல் ஆனார்கள். தடுமாற்றத்துடன் தயங்கிக் கொண்டு உத்தவரிடம் பேச முயன்றார்கள். “உத்தவரே! இரக்கமற்ற அந்தக் கண்ணன், தன் பெற்றோரைப் பார்ப்பதற்காக உங்களை அனுப்பினானா? நகரத்துப் பெண்களால் கவரப்பட்ட அவன் எங்கிருக்கிறான்? நாதனே! காக்க வேண்டும். உமது முத்தங்களையும், தழுவல்களையும், பேச்சுக்களையும், அழகிய விளையாட்டுக்களையும் யாரால் மறக்க முடியும்?” என்று அரற்றினார்கள். இவ்வாறு பலவிதமாய்ப் புலம்பிய கோபிகைகளிடம், உத்தவர் தத்துவங்கள் பொதிந்த கண்ணனின் சேதியைக் கூறி, சமாதானம் செய்தார். அதனைக் கேட்ட கோபியர்கள் மகிழ்ந்தனர். உத்தவர், அவர்களோடு கிருஷ்ணனின் செய்கைகளையும், விளையாட்டுக்களையும் பற்றிப் பேசிக்கொண்டு சில தினங்களை அங்கே கழித்தார். கோகுலத்தில், எப்பொழுதும், எல்லாரும் கிருஷ்ணனைப் பற்றியே பேசிக் கொண்டிருந்தார்கள். வீட்டு வேலைகள் செய்யும்போது கூட, அவருடைய லீலைகளையே பாடிக் கொண்டிருந்தார்கள். தூக்கத்திலும் கிருஷ்ணனைப் பற்றியே பேசினார்கள். அவர்களது செய்கைகள் யாவும் கிருஷ்ணனை அனுசரித்தே இருந்தன. அனைத்து செயல்களும் கிருஷ்ணமயமாக இருந்தது. இதைக் கண்ட உத்தவர் மிகுந்த ஆச்சர்யம் அடைந்தார்.

உத்தவர் ராதையிடம், “ராதையே! உன் கிருஷ்ணன் பூக்களைக் கண்டால், இது என் ராதைக்கு மிகவும் பிரியமானது என்பார். நான் பேசினால் ராதையும் இவ்வாறுதான் பேசுவாள் என்றும், நான் பேசாவிட்டால், கோபம் கொண்ட ராதையைப் போல் என் பேசாமல் இருக்கிறாய்? என்றும் என்னைக் கேட்பார்” என்று கூறி, தாமரைக்கண்களுடைய ராதையை ஆனந்தமடையச் செய்தார். “ நான் சீக்கிரமே திரும்பி வருவேன். மிகுந்த கார்யங்களினால் வரமுடியவில்லை. பிரிவைப் பற்றிக் கவலைப்படவேண்டாம். என்னைப் பற்றிய நினைவுகள் எப்போதும் உங்களுக்கு இருப்பதால் வெகு விரைவில் உங்களுக்கு பிரும்மானந்த சுகம் கிட்டப் போகிறது. அப்போது உங்களுக்கு பிரிவும், சேர்க்கையும் சமமான ஆனந்தத்தை அளிக்கும்” என்று கிருஷ்ணன் கூறியதை, உத்தவர் கோபிகைகளிடம் கூறி சமாதானப் படுத்தினார். இவ்விதமான அன்பையும், பக்தியையும் எந்த உலகிலும் கண்டதில்லை, கேட்டதில்லை. தவம் செய்வதாலோ, வேதங்களைக் கற்பதாலோ என்ன பயன்? கோபிகைகளை நமஸ்கரித்துத் தொழுதாலே போதும் என்று எவ்வுலகிலும் காண முடியாத கோபிகைகளின் அன்பையும், பக்தியையும் மெய்மறந்து, ஆனந்தத்துடன் கூறிக்கொண்டு உத்தவர் கோகுலத்திலிருந்து மதுரா திரும்பினார்

 

 

மதுராவில், ஸைரந்திரி கிருஷ்ணரைப் பற்றியே நினைத்துக்கொண்டு, ஒவ்வொரு நாளும் அவருடைய வருகையை எதிர்பார்த்துக் காத்திருந்தாள். தன் இல்லத்தையும், தன்னையும் நன்கு அலங்கரித்துக் கொண்டு காத்திருந்தாள். கிருஷ்ணன் உத்தவருடன் அவளது இல்லத்திற்குச் சென்றார். அவளது நீண்டநாள் எண்ணம் நிறைவேறியது. அதனால் மிகவும் மகிழ்ச்சியடைந்த அவள், கிருஷ்ணனைப் பலவிதமாகப் பூஜித்தாள். கிருஷ்ணன் அவளிடம் வேண்டிய வரம் கேள் என்று கூற, அவளும், பல இரவுகள் கண்ணனோடு கழிக்கும் விஷய சுகத்தையே வரமாக வேண்டினாள். பிறகு, சில இரவுகள் அவளுடன் தங்கி அவளுக்கு ஆனந்தத்தை அளித்து அவளுக்கு உபஶ்லோகன் என்ற புத்திரனையும் அளித்தார். அந்த உபஶ்லோகன், நாரத முனிவரிடம் இருந்து பாஞ்சராத்ர ஆகமத்தை உபதேசம் பெற்று அதில் பிரசித்தனாக விளங்கினான். பின்னர், கிருஷ்ணர் பலராமருடனும், உத்தவரோடும் அக்ரூரரின் வீட்டை அடைந்தார். அவருடைய வரவால் மிகவும் மகிழ்ந்த அக்ரூரர், அவர்கள் அனைவரையும் நன்கு வரவேற்று உபசரித்து, பூஜித்துத் துதித்தார். அவரை நகரத்திற்கு அனுப்பி, குந்தியின் புத்திரர்களான பாண்டவர்கள் காட்டிலிருந்து நகருக்குத் திரும்பி வந்ததைப் பற்றியும், திருதராஷ்ட்ரனின் கெட்ட செயல்களைப் பற்றியும் அறிந்தார்கள்.

ஜராஸந்தன் என்பவன், தன் நண்பனும், மாப்பிள்ளையுமான கம்ஸனின் வத

ம் பற்றிக் கேள்விப்பட்டு, மிகுந்த கோபம் கொண்டு, மதுராநகரத்தை அழித்தான். சிறிய படையையுடைய கிருஷ்ணர், தேவலோகத்திலிருந்து பலராமனுக்குக் கிடைத்த தேர் முதலியவற்றால், அவனது இருபத்திமூன்று அக்ஷௌஹிணிப் படைகளை முறியடித்தார். பலராமன் ஜராஸந்தனைக் கட்டி வைத்தார். அவனோடு யுத்தம் செய்ய ஆசைகொண்ட கிருஷ்ணன் அவனை விடுவித்தார். ஏனெனில், அனைத்து அரசர்களையும் வென்று, அவர்களது சேனைகளையும் அடைந்த ஜராஸந்தனைப் போன்ற வீரன் அப்போது யாரும் இல்லை. தோல்வியடைந்த ஜராஸந்தன், மற்ற அரசர்களின் உதவியுடன் பதினாறு முறை கண்ணனோடு யுத்தம் செய்தான். அவனது முன்னூற்று தொண்ணூற்று ஒன்று அக்ஷௌஹிணிப் படைகளையும் கிருஷ்ணர் அடித்துக் கொன்றார். அவனுடன் பதினெட்டாவது முறை யுத்தம் ஆரம்பிக்கும்முன், மூன்று கோடி யவனர்களுடன் ஒரு யவனன் படையெடுத்து வருவதை அறிந்த கண்ணன், உடனே, விஸ்வகர்மாவைக் கடலின் நடுவில் ஒரு நகரை உருவாக்கச் சொல்லி, அதில் மக்கள் அனைவரையும் குடியேறச் செய்தார். பிறகு, தாமரை மாலையணிந்து, நகரத்திலிருந்து வெளியே வந்தார். யவனர்களின் தலைவன் பின்தொடர்ந்து வந்தான். உடனே கிருஷ்ணர் ஒரு மலைக்குகையில் மறைந்தார். தொடர்ந்து வந்த யவனன், கிருஷ்ணன் என்று நினைத்து, குகையில் தூங்கிக் கொண்டிருந்த முசுகுந்தன் என்ற அரசனைக் காலால் உதைத்தான். விழித்த முசுகுந்தன், அந்த யவனனை, தன் பார்வையால் சாம்பலாக்கினான். அப்போது கிருஷ்ணன், குகையில், பக்தனான முசுகுந்தனுக்கு காட்சி கொடுத்தார். “எனக்கு அரச வாழ்வில் விருப்பம் இல்லை. தங்கள் அனுக்ரஹம் ஒன்றே வேண்டுகிறேன்” என்று முசுகுந்தன் துதித்ததைக் கேட்ட கிருஷ்ணன் மகிழ்ந்து, எல்லா துக்கங்களையும் போக்கும் பக்தியையும், அதன்பின் முக்தியையும் அவனுக்கு வரமாக அளித்தார். வேட்டையாடி உயிரினங்களைக் கொன்ற தோஷம் நீங்க அவனைத் தவம் செய்யச் சொன்னார்.

பிறகு கிருஷ்ணர் மதுராநகரம் சென்றார். யவனன் அழைத்து வந்த சேனைகளை அழித்தார். வழியில், ஜராஸந்தன் தடுத்தான். அவனுக்குக் கடைசியான வெற்றியைக் கொடுத்து, ஓடி ஒளிந்து கொள்வதுபோல் பாவனை செய்து, கடலின் நடுவே உள்ள துவாரகா நகரை அடைந்தார்.

————

கண்ணன் கதைகள் – 54

ருக்மிணி கல்யாணம்

குருவாயூரப்பன் கதைகள்

கிருஷ்ணர் துவாரகையை அடைந்தார். விஸ்வகர்மாவால் உருவாக்கப்பட்டதும், தேவர்கள் அளித்த ஐஸ்வர்யங்களை உடையதும், கடலின் நடுவே உள்ளதுமான அந்தப் புதிய துவாரகா நகரமானது, அவருடைய தேக காந்தியால் மிகவும் அழகாகவும், சிறப்பாகவும் விளங்கியது. பிரமனின் ஆக்ஞைப்படி, ரேவத நாட்டு அரசன், தன் பெண்ணான ரேவதியை, பலராமனுக்கு மணம் செய்து கொடுத்தான். கிருஷ்ணர், யாதவர்களோடு சேர்ந்து அந்தத் திருமணத்தில் உற்சாகத்துடன் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

விதர்ப்ப நாட்டு அரசனின் பெண்ணான ருக்மிணி, கிருஷ்ணரின் மீது அன்பு கொண்டாள். அவளுடைய அண்ணன் ருக்மி. சேதி நாட்டு அரசன் சிசுபாலன் அவனுடைய நெருங்கிய நண்பன். தீய எண்ணம் கொண்ட சிசுபாலனுக்கு, ருக்மிணியை மணம் செய்து கொடுக்க ருக்மி முடிவு செய்தான்.

ருக்மிணி கிருஷ்ணரிடம் வெகுநாட்களாகக் காதல் கொண்டிருந்தாள். தன் விருப்பம் நிறைவேறாமல் போய்விடுமோ என்று அஞ்சினாள். தனக்கு ஏற்பட்ட துன்பத்தை கிருஷ்ணரிடம் தெரிவிக்குமாறு ஒரு அந்தணரை அவரிடம் தூது அனுப்பினாள். அந்த அந்தணர், விரைவாக துவாரகா நகரை அடைந்தார். கிருஷ்ணர் அந்த அந்தணரை வரவேற்று உபசரித்தார். அந்தணரும் மிகுந்த சந்தோஷமடைந்தார். அவர், “கிருஷ்ணா! குண்டின தேசத்து இளவரசியான ருக்மிணி தங்களிடத்தில் காதல் கொண்டுள்ளாள். நான் அவளுடைய தூதுவனாக, அவள் அனுப்பிய சேதியோடு இங்கு வந்திருக்கிறேன்” என்று கூறினார். பிறகு,“உலகிற்கெல்லாம் நாயகனே! உம்முடைய குணங்களால் கவரப்பட்டு உம்மையே கணவனாக வரித்துவிட்டேன். தற்போது, சிசுபாலன் என்னை அடைந்து விடுவானோ என்று அஞ்சுகிறேன். கருணைக்கடலே! என்னைக் காக்க வேண்டும்” என்று ருக்மிணி கூறிய சேதியை அந்தணர் கிருஷ்ணரிடம் தெரிவித்தார். “வேறு கதியில்லாத என்னைக் கைவிட்டீரானால் நான் உடனே என் ஜீவனை விட்டுவிடுவேன்” என்று ருக்மிணி கூறியதை அந்தணர் சொன்னதும், கிருஷ்ணருடைய மனத்திலும் மிக்க சஞ்சலம் உண்டானது. கிருஷ்ணர் அந்த அந்தணரிடம், “அவளுடைய வேதனையைக் காட்டிலும் என் மனதில் அதிகமான மன்மத வேதனை ஏற்பட்டுள்ளது. நான் சீக்கிரமாக வந்து, அரசர்களின் முன்னிலையில், கருவிழிகளையுடைய என் பிரியையான ருக்மிணியைக் கரம் பிடிக்கிறேன்” என்று கூறினார்.

 

 

பின்னர் கிருஷ்ணர் ரதத்தில் ஏறிக்கொண்டு, அந்தணருடன் சீக்கிரமாகக் குண்டின தேசத்தை அடைந்தார். பலராமன் சேனைகளுடன் பின் தொடர்ந்து வந்தார். அரசனான பீஷ்மகன் அவர்களை வரவேற்று உபசரித்தான். கிருஷ்ணர் வந்த செய்தியைக் கூறிய அந்தணருக்கு, ருக்மிணி மிகுந்த அன்புடன் நமஸ்காரம் செய்தாள். உலகிலேயே அழகான கிருஷ்ணருடைய திருமேனியைக் கண்டும், ருக்மி எடுத்த முடிவைக் கேட்டும், குண்டின தேசத்து மக்கள் துயரமடைந்தார்கள். இரவும் கழிந்தது.

மறுநாள் காலை, ருக்மிணி மங்களகரமான ஆடை ஆபரணங்களுடன், காவலர்கள் சூழ, பார்வதிதேவியை வணங்கக் கோவிலுக்குக் கிளம்பினாள். அவள் மனத்தை கிருஷ்ணரிடத்திலேயே அர்ப்பணித்திருந்தாள். உயர்குலப் பெண்களுடன் பார்வதி தேவியின் ஆலயத்திற்குள் சென்று, நன்கு வழிபாடு செய்து, அவள் பாதங்களில் நமஸ்கரித்தாள். கிருஷ்ணனையே கணவனாக அளிக்க வேண்டும் என்று மீண்டும் மீண்டும் வேண்டினாள். ருக்மிணியைக் காண வேண்டும் என்ற ஆவலில் பல நாட்டு அரசர்கள் கோவில் வாசலில் கூடியிருந்தார்கள். கிருஷ்ணரும் ருக்மிணியைக் கிரஹிக்க எண்ணம்கொண்டு காத்திருந்தார். அப்போது ருக்மிணி, மிகுந்த அழகுடன் எல்லா திசைகளையும் ஆனந்தமுறச் செய்துகொண்டு, ஆலயத்திலிருந்து வெளியே வந்தாள். அவள் அழகானது உலகையே மயங்கச் செய்வதாய் இருந்தது. அவளது தேககாந்தியால் எல்லா அரசர்களும் மயங்கினர். அவளது கடைக்கண் பார்வையால் கிருஷ்ணரும் மோஹித்தார். சந்திரன் போன்ற முகத்தை உடைய ருக்மிணியை நெருங்கினார். “நிலவைப் போன்ற முகமுடையவளே! எங்கே போகிறாய்?” என்று கேட்டு, நொடிப்பொழுதில் அவள் அருகே சென்று, அவளது நுனிக்கை விரல்களைப் பிடித்து, அவளைக் கைகளினால் அன்புடன் பற்றி, அவளை கிரஹித்தார். மனோவேகத்தில் செல்லும் தன்னுடைய ரதத்தில் ஏற்றிக்கொண்டார். ருக்மிணியின் மனோரதமும் நிறைவேறியது.

உடனே, அனைத்து திசைகளில் இருந்தும் எதிரிகளின் கூச்சல் அதிகமானது. இந்த இடைச்சிறுவன் எங்கிருந்து வந்தான்? என்று கூடியிருந்த அரசர்கள் கோபமடைந்து போர்புரியத் தொடங்கினார்கள். யாதவர்கள் அவர்களை ஜயித்தார்கள். நாய்க்கூட்டங்களைப் பார்த்த சிங்கம் போல், அந்த அரசர்களைக் கண்ட கிருஷ்ணர் சிறிதும் அசையவில்லை. ருக்மி எதிர்த்துப் போர்புரிய வந்தான். அவனைக் கட்டி இழுத்து, அவன் தலையை மொட்டை அடித்து, மீசையைக் கத்தரித்து அவன் கர்வத்தை அடக்கினார். பலராமனின் வேண்டிக் கொண்டதன்பேரில் அவனை விடுவித்துக் கொல்லாமல் விட்டார்.

பிறகு, மஹாலக்ஷ்மியான ருக்மிணியுடன் துவாரகைக்குச் சென்றார். அனைவரும் அவர்களை வரவேற்றார்கள். துவாரகையில் முறைப்படி கிருஷ்ணருக்கும் ருக்மிணிக்கும் திருமணம் கோலாகலமாக நடைபெற்றது. துவாரகை நகரம் முழுவதும் பிரம்மாண்டமாக அலங்கரிக்கப்பட்டு, மங்கள வாத்தியங்களின் ஒலிகளால் ஸ்வர்க்கம் போன்று விளங்கியது. நகரத்து மக்கள் அனைவரும் கிருஷ்ணரையும், ருக்மிணியையும் காண ஓடோடி வந்தார்கள். உத்தமமான அவர்களுடைய சேர்க்கையைக் கண்டு மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார்கள். கிருஷ்ணருடைய சேர்க்கையால் ருக்மிணி மிகுந்த நாணத்தை அடைந்தாள். புதிய காதல் அனுபவத்தால் மிகுந்த சந்தோஷமடைந்தாள். அவள் முகம் மந்தஹாஸப் புன்னகையுடன் விளங்கியது. கிருஷ்ணர் தனிமையில் ருக்மிணிக்குப் பலவகையில் ஆனந்தமளித்தார். இரவும் பகலும் விளையாட்டுப் பேச்சுக்களால் மகிழச் செய்தார். முன்பை விடப் பலவிதமாய் அரவணைத்து, அவளை சந்தோஷமடையச் செய்தார் . மக்களும் சுபிட்சமாக, பேரானந்தத்துடன் வாழ்ந்து வந்தார்கள்.


கண்ணன் கதைகள் – 55

குருவாயூரப்பனும் கொன்னப்பூவும்

குருவாயூரப்பன் கதைகள்

சிறு வயதில், எனது பக்கத்து வீட்டில் இருந்தவர்கள், விஷு கொண்டாடியது நினைவுக்கு வருகிறது. முதல் நாள் இரவே, பூஜைக்கு உரிய வெற்றிலை, பாக்கு, வெள்ளரி, காசு, கண்ணாடி, உருளி, நாராயணீயம். கொன்னப்பூ, அரிசி முதலியவற்றை எடுத்து வைப்பார்கள். என்னையும் “கைநீட்டம்” பெற வரச்சொல்லுவார்கள். நான் காலையில் “கைநீட்டம்” பெற சந்தோஷமாகப்போவேன். குருவாயூரப்பன் மீது எனக்கு ‘மாளாக்காதல்’ உண்டாக எனது பாட்டியும், அவரது தோழியான ஒரு மாமியும் சொன்ன கதைகளே முக்கிய காரணம். ‘லாலு’ என்று நான் அன்புடன் அழைக்கும் அந்த மாமி, சிறு வயதில் எனக்குச் சொன்ன கதை இப்போது ஞாபகம் வருகிறது. கதைக்குச் செல்வோமா?

கேரளத்தில் ஒரு சிறு பாலகன் இருந்தான். அவன் தினமும் குருவாயூரப்பனை தரிசனம் செய்யக் கோவிலுக்குப் போவான். அவனுக்கு ஸ்ரீ குருவாயூரப்பனை நேரிலே பார்க்க மிகவும் ஆசை. ஒரு நாள், கண்ணனை எப்படியும் பார்த்தே தீருவது என்று முடிவு செய்து, கண்ணனிடம் பிரார்த்தித்தான். கண்ணனோ வரவில்லை. கண்ணா வா என்றான் . நான் உன்னை நேரிலே பார்க்க வேண்டும் என்றான். நீ வராவிட்டால் நான் இங்கேயே இருப்பேன் என்று கூறி கோவிலிலேயே உட்கார்ந்து விட்டான். நடையும் அடைத்தாயிற்று.

கண்ணன் வரவில்லை. அழுதான். அரற்றினான். குழந்தையல்லவா? அவன் அழுவது கண்ணனுக்கு பொறுக்கவில்லை. வந்தான். எப்படி? மயில் பீலி, பட்டு, பீதாம்பரம் உடுத்திக்கொண்டு, குழலூதிக்கொண்டுவந்தான். குழந்தையுடன் விளையாடினான். சிறுவனுக்கு ஒரே சந்தோஷம். கண்ணனோ தன்னுடைய அரைஞாணை அவனுக்கு அளித்தான்.

சிறுவன் சந்தோஷமாக வீட்டுக்குச்சென்று அம்மாவிடம் நான் கண்ணனுடன் விளையாடினேன் என்றான். அம்மாவோ நம்பவில்லை. இங்கே பார் “கண்ணன் தன்னுடைய கிண்கிணியை எனக்கு கொடுத்தான் பார்” என்றான்.

கோவிலிலும் அரைஞாணைக் காணாததால் அனைவரும் சிறுவன் அதைத் திருடியதாக நினைத்தார்கள். அம்மா திட்டினாள். அதைப்பிடுங்கி வீசினாள். அது பக்கத்தில் இருந்த கொன்றை மரத்தின்மேல் சிக்கிக்கொண்டது. உடனே, அந்த மரம் முழுவதும் தங்க நிறத்தில் கிண்கிணியைப்போன்ற பூக்கள் பூத்துக்குலுங்கின. அப்பொழுது, “உன் மகனுடன் நான் விளையாடியது நிஜம்” என்று அசரீரி வாக்கு கேட்டது. அது முதல் “கொன்னப்பூ” பூஜைக்கு மிகவும் உகந்ததாகப் போற்றப்பட்டது. இப்பொழுது மேலே உள்ள படத்தில் குருவாயூரப்பனின் அரைஞாணும் கொன்னப்பூவின் மொக்குகளும் ஒரே மாதிரி இருப்பது போல் தெரிகிறதா?

—————-

கண்ணன் கதைகள் – 56

குருவாயூரப்பனும் குந்துமணியும்

குருவாயூரப்பன் கதைகள்

குண்டுமணி சிவப்பு, கறுப்பு நிறங்களில் சிறிய உருண்டை வடிவில் இருக்கும். கேரளாவில் அநேகமாக அனைவரது இல்லங்களிலும் இந்த மரம் இருக்கும். மஞ்சாடி என்ற மரத்தில் இருந்து வரும் விதை என்பதால் இதை கேரளாவில் “மஞ்சாடிக்குரு” என்று சொல்வார்கள். நாங்கள் கோவையில் இருந்தபொழுது, சின்ன வயதில், பக்கத்தில் இருக்கும் பூங்காவிற்கு தினம் சென்று அங்கு இருக்கும் குண்டுமணிகளைப் பொறுக்கி வீட்டிற்கு எடுத்து வருவோம். பிறகு அதை நன்கு கழுவி “பல்லாங்குழி” விளையாட உபயோகப்படுத்துவோம். சென்ற வருடம் கூட கேரளாவில் ஒரு நண்பர் வீட்டிற்குச் சென்றிருந்தபொழுது நிறைய குண்டுமணிகளைப் பொறுக்கி வந்தோம். ”

குருவாயூர் கோயிலில் ஒரு பெரிய உருளியில் குண்டுமணியை நிரப்பி வைத்திருப்பார்கள். இரண்டு கைகளாலும் அதை அளைந்து கொண்டு நோய்கள் குணமாகவும், குழந்தை வரம் வேண்டியும் மனதார பிரார்த்தனை செய்யவேண்டும். பிறகு மீண்டும் அதிலேயே போட்டு விட வேண்டும்.

நாங்கள் ஒவ்வொரு வியாழக்கிழமையன்றும் வேண்டிக்கொண்டு வீட்டிலேயே ஒரு சின்னப் பெட்டியில், 7 மிளகு, கொஞ்சம் கடுகு, 7 குந்துமணி, ஒண்ணேகால் ரூபாய் எடுத்து வைத்து, குருவாயூர் செல்லும்போது அதை அங்கு சமர்ப்பிப்பது வழக்கம்.

 

 

அது சரி. குருவாயூர் கோயிலில் இதற்கு அப்படி என்ன விசேஷம்? இதன் பின்னால் ஒரு சுவையான கதை உண்டு.

முன்னொரு காலத்தில் ஒரு வயதான பெண்மணி இருந்தாள். அவளுக்கு ஸ்ரீகுருவாயூரப்பன் மிகவும் இஷ்டமான தெய்வம். அவளுடைய ஊர் குருவாயூருக்கு மிகத் தொலைவில் இருந்தது. அவளை அழைத்துச் செல்வார் யாருமில்லை. பணவசதி கிடையாது. ஆனால் குழந்தைக் கண்ணனைக் காண வேண்டும் என்றும், அவனுக்கு ஏதாவது கொண்டு செல்ல வேண்டும் என்றும் அவளுக்குக் கொள்ளை ஆசை.

அவள் வீட்டில் மஞ்சாடி மரம் (குந்துமணி மரம்) இருந்தது. அதிலிருந்து நிறைய குண்டுமணிகள் கீழே விழும். அவற்றைச் சேகரித்து, நன்கு அலம்பி, துடைத்து ஒரு பை நிறைய சேர்த்து வைத்திருந்தாள்.

ஒரு நாள் கண்ணனைக் காண வேண்டும் என்ற ஆவல் மிகுதியால் பயணம் புறப்பட்டாள். வசதி படைத்தவள் அல்லவே ! அதனால் நடந்தே செல்லத் தீர்மானித்தாள். தொலை தூரம். வயது வேறு ஆகிவிட்டது. நடுநடுவே இளைப்பாறிக் கொள்வாள். ஸ்ரமமாக இருப்பினும் “கண்ணனைக் காணவும் அவனுக்கு குண்டுமணிகளைக் கொடுக்கவும் வேண்டுமே” என்று தொடர்ந்து பயணம் செய்தாள்.

ஒரு மண்டலம் பயணம் செய்து குருவாயூரை அடைந்தாள். கோவிலையும்அடைந்தாள். அவள் சென்ற நாள் அந்த மாதத்தின் முதல் நாள். அவள் கோவிலைஅடைந்த சமயம், கோவிலில் மிகவும் பரபரப்பாக இருந்தது. ஏதோ விசேஷம் என்று அனைவரும் பேசிக் கொண்டிருந்தனர். ஒவ்வொரு மாதத்தின் முதல் நாள் அன்றும் அந்த ஊர் அரசன், அவன் பக்தியை வெளிப்படுத்த, கோயிலுக்கு ஒரு யானையை சமர்ப்பிப்பது வழக்கம். அதனால்தான் அந்த பரபரப்பு. சேவகர்கள், அரசன் வருவதால் வழியை விலக்கிக் கொண்டிருந்தனர்.

இந்த வயதான பெண்மணி, தன்னுடைய பையை கெட்டியாகப் பிடித்துக்கொண்டாள். சேவகர்களின் அஜாக்கிரதையால் அவள் கீழே தள்ளப்பட்டாள். பை கீழே விழுந்து அதிலிருந்த குண்டுமணிகள் சிதறி விழுந்தன. கிழவியின் கண்களில் இருந்து கண்ணீர் ஆறாகப் பெருகியது. ஒரு சொட்டுக் கண்ணீர் தரையில் விழுந்தது.

அதே சமயம், கோயிலுக்கு சமர்ப்பிக்கக் கொண்டு வந்த யானை மதம் பிடித்து ஓட ஆரம்பித்தது. அனைவரும் ” என்ன ஆயிற்று?” என்று பதறினர். கோவில்பொருட்களை யானை நாசம் செய்ய ஆரம்பித்தது. யானையை அடக்க முடியவில்லை. கலங்கிய மன்னனும் மற்றவர்களும் குருவாயூரப்பனிடமே ப்ரஸ்னம் கேட்டனர்.

அப்பொழுது கர்ப்பக்ருஹத்திலிருந்து ” நீங்கள் என் பக்தையை அவமானப்படுத்திவிட்டீர்கள். என் பக்தை அன்பாகக் கொண்டு வந்த குண்டுமணிகள் எனக்குவேண்டும்” என்று அசரீரி கேட்டது. கீழே சிதறிக் கிடந்த குண்டுமணிகளை, அனைவரும் பொறுக்கி எடுத்தனர். அதை அந்த வயோதிகப் பெண்மணியிடம் கொடுத்து அவளிடம் மன்னிப்பும் கேட்டனர். அவளை ஸகல மரியாதைகளுடன் சன்னிதிக்கு அழைத்துச் சென்றனர். அவள் ஆசையுடன் அதை அப்பனிடம் சமர்ப்பித்ததும், யானையின் மதம் அடங்கியது. அவள் பக்தியின் நினைவாக இன்றும் குருவாயூர் கோயிலில் உருளியில் குண்டுமணிகள் வைக்கப்பட்டுள்ளது .

பகவான் வஸ்துக்களின் உயர்வு தாழ்வைப் பார்ப்பதில்லை. உள்ளத்தில் தூய்மையான அன்புடன் தரப்படும் பக்தியின் மேன்மையைத்தான் பார்க்கிறான்.

————–

கண்ணன் கதைகள் – 57

கைசிக ஏகாதசி / நம்பாடுவான்

கரண்ட மாடு பொய்கையுள் கடும்பனைப் பெரும் பழம் புரண்டு வீழ வாளை பாய் குறுங்குடி நெடுந்தகாய்
திரண்டு தோளி ரணியன் சினங்கொளாக மொன்றையும்
இரண்டு கூறு செய்துகந்த சிங்க மென்ப துன்னையே

-திருமழிசையாழ்வார்!

திருக்குறுங்குடியின் அருகே உள்ள மகேந்திரகிரி மலையடிவாரத்தில் வசித்து வந்த ஹரிஜன வகுப்பை சேர்ந்தவர் நம்பாடுவான் என்னும் பாணன். வடிவழகிய நம்பியின் மேல் மிகவும் பக்தி கொண்டவர். அக்காலத்தில் அவருக்கு கோயிலுக்கு செல்ல அனுமதியில்லாமல் இருந்தது. கோயிலின் வாசலிலிருந்து பகவானை பார்க்க முடியாது. ஆயினும், வருத்தப்படாமல் தினமும் அதிகாலையில் நீராடிவிட்டு, கைசிகம் என்ற பண்ணில் (பைரவி ராகம்) திருக்குறுங்குடி நம்பியின் புகழை இசைத்து, திருப்பள்ளியெழுப்பும் சேவையை செய்து வந்தார். அவ்விதம் ஒரு நாள், கார்த்திகை மாதம் சுக்ல பட்ச ஏகாதசியன்று கோவிலுக்கு சென்றபொழுது, ஒரு பிரம்ம ராக்ஷஸன் அவரைத் தடுத்து, “ நீ எனக்கு உணவாக வேண்டும்” என்றது. நம்பாடுவானோ, “விரதம் முடித்துவிட்டு பெருமாளை வழிபட்டபின் உனக்கு உணவாகிறேன்” என்று சொல்ல, பிரம்ம ராக்ஷஸன் அதை நம்பவில்லை. அதற்கு நம்பாடுவான்,”பெருமாளின் உண்மையான பக்தன் பொய் சொல்லமாட்டான்” என்று கூறி பதினெட்டு விதமான சத்தியங்களைச் செய்கிறான். 16 சத்தியங்களைச் செய்தும் ராக்ஷஸன் நம்பாடுவானை விடவில்லை. 17-வதாக நம்பாடுவான்,” எவன் ஸர்வவ்யாபியான வாசுதேவனை ஆராதனை பண்ணாமல் இதர தேவதைகளை உபாஸிக்கிறானோ அவனது பாவத்தை அடைவேன்” என்று சொன்னதும் தனது பிடியை விட்டது. பிறகு நம்பாடுவான், 18–வதாக ,”எல்லா உயிரினங்களையும், ஜனங்களையும் காப்பவனும், இயக்குபவனும் , தேவர்கள், முனிவர்கள் முதலியோரால் ஆராதிக்கப்படுபவனுமான அந்த ஸ்ரீமன் நாராயணனையும் மற்ற தெய்வங்களையும் சமமாக பாவிப்பதால் வரும் பாவத்தை நான் அடையாக கடவேன்” என்று சொன்னான். இந்த வார்த்தையைக் கேட்டதும், பிரம்ம ராக்ஷஸ்,” சரி சரி சீக்கிரம் உனது விரதத்தை முடித்துவிட்டு வா” என்று அவனை அனுப்பியது.

நம்பாடுவான் கோவிலுக்கு ஓடிச் சென்று, ” பெருமானே! இனி உம்மைப் பாடவே முடியாதோ? நான் உம்மைப் பார்க்கவே முடியாதோ ?” என்று எண்ணிக் கொண்டு, கைசிகப் பண்ணை உருக்கமாகப் பாடினார். அப்போது பெருமாள், த்வஜஸ்தம்பத்தை விலகி இருக்கச் சொல்லி நம்பாடுவானுக்கு தரிசனம் தந்தார். திருக்குறுங்குடியில் மற்ற ஸ்தலங்களைப் போலல்லாமல் த்வஜஸ்தம்பம் சற்று விலகி இருப்பதை இப்போதும் காணலாம்.

 

 

பிறகு, தான் சத்தியம் செய்தபடி பிரம்ம ராக்ஷஸை நோக்கிச் சென்றபோது, திருக்குறுங்குடி எம்பெருமான் , ஒரு கிழப்பிராம்மணன் வேடத்தில் நம்பாடுவானுக்கு எதிரே தோன்றி, “இங்கே ஒரு பிரம்ம ராக்ஷஸ் இருக்கிறது. அதன் பசிக்கு இரையாகாமல் வேறு வழி செல்” என்று கூறினார். ஆனால், நம்பாடுவான் அதை மறுத்து, அந்த ராக்ஷஸனுக்கு உணவாவதற்காகவே செல்கிறேன் என்று கூறினான். இதைக்கேட்ட பிராம்மணன்,”ஆபத்துக் காலத்திலும், பெண்களுக்குத் திருமணம் செய்ய வேண்டிய சந்தர்ப்பத்திலும், பெண்களுடன் ஏகாந்தமாய் இருக்கும்போதும் பொய் சொல்வதும், சத்தியம் செய்வதும், பாபமாகாது” என்று கூற, நம்பாடுவான்,”நான் செய்து கொடுத்த சத்தியத்தை ஒரு போதும் மீறமாட்டேன்” என்று கூறி, வாக்களித்தபடி பிரம்ம ராக்ஷஸனிடம் சென்று என்னை உண்டு உன் பசியைப் போக்கிக் கொள் என்று கூறினான். நம்பாடுவானைப் பார்த்த பிரம்ம ராக்ஷஸ், “இப்போது எனக்குப் பசியே இல்லை. நான் என் மனதை மாற்றிக்கொண்டுவிட்டேன். நீ விரதத்தால் பெற்ற பலனை எனக்குக் கொடு என்று கேட்க, நம்பாடுவான் மறுத்தான். இன்றைய தினம் உனக்குக் கிடைத்த விரதப் பலனில் பாதியையாவது எனக்குக் கொடுத்தால் நான் சாபவிமோசனம் பெற்று சுய உருவைப் பெறுவேன்” என்றது. நம்பாடுவான், “உனக்கு ஏன் இந்த பிரம்ம ராட்சச உருவம் வந்தது? என்று கேட்க, பிரம்ம ராக்ஷஸன் தனது கதையைக் கூறினான். “நான் முற்பிறவியில் யோகசர்மா என்ற அந்தணன். யாகத்தை இழிவாகக் கருதிய நான், ஒரு யக்ஞத்தைத் தவறாகச் செய்து கொடுத்தேன். யாகத்தின் நடுவில் இறந்தேன். அதனால் , இவ்வாறு அலைகிறேன்” என்றது. மேலும், உனது தரிசனத்தால் எனக்கு முன் ஜன்ம ஞாபகம் உண்டானது என்றும் கூறியது.

நம்பாடுவான், கைசிகப் பண்ணினால் பகவானைப் பாடிய தன் புண்ணிய பலனில் பாதியை கைசிக துவாதசியன்று பிரம்மராட்சஸனுக்கு தத்தம் செய்துகொடுக்க, அந்த பிரம்ம ராட்சதனின் சாபம் நீங்கியது. நம்பாடுவானும் பலகாலம் பெருமாளை போற்றிப் பாடி மோக்ஷத்தை அடைந்தான்.

இந்த வரலாற்றை வராகமூர்த்தியே தன் மடியிலிருந்த பிராட்டிக்கு உரைத்ததாக புராணம் கூறுகிறது. இன்றும், இந்தப் புராணம் திருக்குறுங்குடியில் நாடக ரூபமாக கைசிக ஏகாதசியன்று இரவு நடக்கின்றது. இதில் நம்பாடுவான், பிரம்ம ராட்சசன், நம்பிக் கிழவன் ஆகிய மூன்று பாத்திரங்களில் நடிப்பவர்கள் 10 நாட்கள் விரதம் அனுஷ்டிக்கிறார்கள்.

ஒவ்வொரு கார்த்திகை மாதம் சுக்லபக்ஷ ஏகாதசி அன்று எல்லா வைஷ்ணவ கோயில்களிலும் கைசிக புராணம் இன்றும் வாசிக்கப்படுகிறது.

இந்த வரலாற்றை கைசிக ஏகாதசி தினம் அன்று படித்தாலும் கேட்டாலும் முன்னோர் சாபமும், துன்பங்களும் அகலும். பெருமாள் அருளும் புண்ணியமும் கிடைக்கும். நாமும் இந்த வரலாற்றைப் படித்து, திருக்குறுங்குடி நம்பியின் அனுக்ரஹத்தைப் பெறுவோமாக!

நம்பாடுவான் பிரம்மராக்ஷஸுக்கு சத்தியம் செய்து கொடுத்தபோது 18 வகை பாவங்களைக் குறிப்பிடுகிறான். அவற்றை வராக புராணத்திலே காணலாம். அவையாவன:

1. சத்தியம் தவறுதல்

2. பிறன் மனைவியிடம் இணைதல்.

3. தன்னுடன் உணவருந்துபவர்களிடம் ஏற்றத் தாழ்வுகளைக் காட்டி, தனக்கு சிறந்ததையும், உடன் உண்பவருக்கு அற்பமானதையும் அளித்தல்.

4. பிறருக்கு தானம் செய்த பொருளை திரும்பப்பெறுதல்.

5. அழகுள்ள பெண்ணை இளமையில் மணந்து, அனுபவித்து, வயதான காலத்தில் குற்றம் கூறி அவளைக் கைவிடுதல்.

6. அமாவாசையன்று மனைவியிடம் சுகம் அனுபவித்தல்.

7. உணவு கொடுத்து பசியாற்றியவனை நிந்தித்தல்.

8. ஒருவனுக்கு தன் பெண்ணை திருமணம் செய்து தருவதாக வாக்களித்து விட்டு, அவ்வாறு செய்யாமல் ஏமாற்றுதல்.

9. சஷ்டி, அஷ்டமி, அமாவாசை, சதுர்த்தி நாட்களில் ஸ்நானம் செய்யாமல் உண்ணுதல்.

10. தானம் தருவதாக வாக்களித்து, பின் தானம் செய்யாதிருத்தல்.

11. நண்பன் மனைவிமீது இச்சை கொள்ளுதல்.

12. குரு பத்தினி, மன்னன் மனைவி மீது காமம் கொள்ளுதல்.

13. இரண்டு மனைவியரை மணந்து, ஒருத்தியிடம் ஆசையும் இன்னொருத்தியை அலட்சியமாகத் தள்ளி வைத்தல்.

14. கற்புக்கரசியான தன் பத்தினியை யௌவனத்திலேயே புறக்கணித்தல்.

15. தாகத்துடன் வரும் பசுவைத் தண்ணீர் குடிக்க விடாமல் தடுத்தல்.

16. பிரம்மஹத்தி செய்தவன், பஞ்ச மகாபாவங்கள் செய்பவன் பெறும் பாபம்.

17. வாசுதேவனைவிட்டு இதர தெய்வங்களை ,தேவதைகளை உபாசனை செய்தல்.

18. ஸ்ரீமன் நாராயணனோடு மற்ற தெய்வங்களையும் மற்ற தேவதைகளையும் சமமாக நினைத்தல்.

மேற்கண்ட பாவங்களைச் செய்தவனுக்கு கிட்டும் பாவமும், தண்டனையும் , செய்த சத்தியத்தை மீறினால் என்னை வந்துசேரட்டும் என்கிறான் நம்பாடுவான்.

————

கண்ணன் கதைகள் – 58

சீசா

வயதான நம்பூதிரிப் பெண் ஒருத்தி தனியே வசித்து வந்தாள். அவள் பலகாலமாகத் தாங்க முடியாத தலைவலியால் மிகவும் அவதிப்பட்டு வந்தாள். பல சிகிச்சைகள் செய்தும் அவள் தலைவலி குணமாகவில்லை. அவள் எப்போதும் குருவாயூரப்பனையே தியானித்துத் தலைவலி சரியாக வேண்டும் என்று வேண்டிக் கொண்டிருப்பாள்.

ஒரு நாள் இரவு நேரம். அவளுக்குத் தலைவலி மிகவும் அதிகமாக இருந்தது. துணைக்கு வேறு யாரும் இல்லை. காற்றாட திண்ணையில் அமர்ந்திருந்தாள். அப்போது ஏழு அல்லது எட்டு வயதுள்ள சிறுவன் ஒருவன் அங்கு வந்தான். சிறுவன் அவளிடம் வந்து, “நீ எப்போதும் குருவாயூரப்பா, குருவாயூரப்பா என்று சொல்லிக் கொண்டிருக்கிறாயே, அப்படி இருந்தும் உனக்கு இந்தத் தலைவலி ஏன் போகவில்லை தெரியுமா? நீ உன்னுடைய முன் ஜென்மத்தில் உன் குடும்பத்தில் இருந்த பெரியவர்களை மிகவும் மனம் நோகச் செய்தாய். அதன் பலனை இப்போது அனுபவிக்கிறாய்” என்று கூறினான். மேலும், அந்த சிறுவன், நான் ஒரு சீசாவில் தைலம் தருகிறேன், அதைத் தடவிக் கொள் என்று கூறி ஒரு சீசாவைக் கொடுத்தான்.

தைலத்தின் பெயரைப் பார்க்கலாம் என்று பார்த்தபோது, அதன் மேலிருந்த காகிதத்தில் முகவரி, குருவாயூர் கிழக்கே நடை என்று இருந்தது. அந்தத் தைலத்தை எடுத்து மூன்று முறை தலையில் தடவுவதற்குள் அவள் தலைவலி குணமாகியிருந்தது. தைலத்திற்குப் பணம் கொடுக்கலாம் என்று அந்த சிறுவனைத் தேடினாள். சிறுவனைக் காணவில்லை. அவனை அவள் அந்த ஊரில் இதுவரை பார்த்ததே இல்லை. சாக்ஷாத் குருவாயூரப்பனே சிறுவன் வடிவில் வந்து தன் தலைவலியைப் போக்கியதை உணர்ந்து மெய்சிலிர்த்தாள். இதுபோன்ற பல அற்புதங்கள் இன்றும் நடக்கிறது. கண்ணனை நம்பினோர் கைவிடப்பட்டுவதில்லை

———–

கண்ணன் கதைகள் – 59

மீனவன்

குருவாயூரில் இருந்த ஒரு வியாபாரியின் மகன் கல்லூரியில் படித்து வந்தான். வாலிபனாக இருப்பினும் தீவிர பக்தனாக இருந்தான். நாள்தோறும் பகவானின் நாமஜபம் செய்து வந்தான். ஓய்வு நேரத்தில் பாகவதம் படிப்பான். ஒரு நாள் எட்டமனூரில் இருந்த தன் சகோதரிக்குத் துணையாக எட்டமனூரில் இருந்து குருவாயூர் சென்றான். படகுப் பயணம். பொதுவாக படகுப் பயணம் பச்சைப்பசேலென்ற மனதைக் கொள்ளைக் கொள்ளும் காட்சிகளைப் பார்த்துக் கொண்டு செல்வதால் மிகவும் உல்லாசமாக இருக்கும். அன்று வானம் இருண்டிருந்தது. ஒரே புயல் காற்று வேறு. அவர்கள் சென்ற படகில் திடீரென்று கோளாறு ஏற்பட்டது. படகு தண்ணீரில் மூழ்கிவிடும் அபாயம் அதிகரித்தது. இந்தப்பையனும் அவன் சகோதரியும் விடாது நாமஜபம் செய்தார்கள்.

அந்தப் படகு நீரில் சிறிது சிறிதாக மூழ்கிக் கொண்டிருந்தது. படகிலிருந்த அனைவரும் பீதியடைந்து கூச்சலிட்டார்கள். இவர்கள் இருவரும் நாமஜபம் செய்வதை நிறுத்தவே இல்லை. அப்போது யாரோ அவர்களை இழுத்துத் தண்ணீரில் வீசி எறிவதைப் போல் உணர்ந்தார்கள். அவர்கள் சுயநினைவு தப்பியது. சுயநினைவுக்கு வந்தபோது கரையில் பாதுகாப்பான இடத்தில் இருப்பதை அறிந்தார்கள். அவர்களைச் சுற்றியிருந்த மக்கள், அந்தப் படகு மூழ்கியதைப் பற்றியும், அதிலிருந்த அனைவரும் இறந்துவிட்டதாகவும், இவர்கள் இருவரை மட்டும் ஒரு மீனவன் காப்பாற்றியதாகவும் சொன்னார்கள்.

அன்றிரவு பகவான் அவர்கள் கனவில் தோன்றி, “மீனவனாக வந்து உங்களைக் காப்பாற்றியது நான்தான்” என்று திருவாய் மலர்ந்தருளினார். பகவான் ஸ்ரீஹரியை எப்போதும் நினைவில் கொண்டு ஜபிப்பவர்கள் எப்பேற்பட்ட ஆபத்திலிருந்தும் காப்பாற்றப்படுவார்கள் என்று அவன் பாகவதத்தில் படித்தது நினைவுக்கு வந்தது. அவன் பகவானுக்கு நன்றி செலுத்தி மேலும் சிறந்த பக்தனாக விளங்கினான்.

————-

கண்ணன் கதைகள் – 60

எது மதுரம்?

ஓர் ஊரில் ஒரு வயதான நம்பூதிரிப் பெண் இருந்தாள். அவள் ஒவ்வொரு மாதமும் முதல் தேதியன்று குருவாயூர் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தாள். அப்போது அவள் பகவானுக்கு திரிமதுரம் சமர்ப்பிப்பது வழக்கம். ஒரு சமயம் அவள் கால்கள் வீங்கி வலியும் வேதனையும் இருந்ததால் அவளால் செல்ல முடியாமல் இருந்தது. மேலும் மாதக் கடைசியானதால் அவளிடம் அதற்கான பணமும் இருக்கவில்லை. அதனால் பஸ்ஸிலும் செல்ல முடியாது, திரிமதுரம் சமர்ப்பிக்கவும் முடியாது. அடுத்த நாள் முதல் தேதி. தன்னால் செல்ல முடியாததை நினைத்து அவள் மிகவும் வருந்தினாள்.

தனது விதியை நொந்து தனது சினேகிதியிடம் சொல்லிவிட்டு படுக்கச் சென்றாள். படுக்கும்போது பகவானின் நாமங்களைச் சொல்லிக் கொண்டே தூங்கிவிட்டாள். அப்போது அவளுக்கு ஓர் கனவு வந்தது. சொப்பனத்தில் குருவாயூரப்பன் அவள் முன்பு தோன்றி, “உன்னுடைய பையில் செலவுக்குப் பணம் இருக்கிறது. நீ வழக்கம்போல் குருவாயூருக்கு வரலாம். திரிமதுரம் எனக்குப் பிடிக்கும். ஆனால், என் பக்தர்கள் எனது நாமத்தை ஜபிப்பதைக் கேட்பது அவர்கள் அளிக்கும் நெய்வேத்தியத்தைவிட மதுரமானது” என்று கூறி மறைந்தார். கனவு கலைந்து பகவானின் அருளை நினைத்து மிகவும் மகிழ்ந்தாள். காலையில் அவளது கால் வீக்கமும் வடிந்திருந்தது. சந்தோஷத்தோடு, எந்தவித சிரமமும் இல்லாமல் குருவாயூர் சென்று தரிசனம் செய்தாள்.

பகவானிடம், அவன் நாமங்களைத் தொடர்ந்து சொல்வதையே வரமாகக் கேட்டாள். பகவானுடைய திருவருளை நினைத்து, தனது அன்புக்குரலுக்கு ஓடோடி வந்ததையும் நினைத்து ஆனந்தக் கண்ணீர் வடித்தாள்.

———–

கண்ணன் கதைகள் – 61

திருமண அனுக்ரஹம்

முன்னோரு சமயம் தெய்வ பக்தி நிரம்பிய ஓர் வைதீகர் இருந்தார். அவர் பெரிய சம்சாரி. மிகவும் ஏழ்மையில் இருந்த அவர், தன் பெண்ணிற்குத் திருமணம் செய்ய வேண்டுமே என்று மிகவும் கவலைப்பட்டார். ஜோதிடர்கள் அந்தப் பெண்ணிற்கு திருமணம் சற்று தாமதமாக நடக்கும் என்று கூறியதால் மிகுந்த கவலையுடன் இருந்தார்.

அவர் கவலையை அறிந்த அவர் நண்பர், அவரைத் தேற்றி, “நான் சொல்வது படி செய்யுங்கள், விரைவிலேயே திருமணம் நடக்கும். ஸ்ரீ குருவாயூரப்பனின் படத்தை வைத்து, தினமும் பூஜை செய்து, ஸ்ரீ நாராயணீயத்தைப் பாராயணம் செய்து வாருங்கள், உங்கள் பெண்ணுக்குத் திருமணம் நடக்கும். ஸ்ரீ நாராயணீயத்தைப் படிப்பவர்களுக்கும், கேட்பவர்களுக்கும், நீண்ட ஆயுளையும், ஆரோக்கியத்தையும், மகிழ்ச்சியையும் கட்டாயம் அளிக்கும். தைரியமாக இருங்கள்” என்றார். அதன்படி வைதீகரும் தினந்தோறும் செய்து வந்தார். ஒரு வாரம் ஆயிற்று. ஒருநாள் பூஜை, பாராயணம் செய்துவிட்டு வந்தபோது அவரது நீண்ட நாள் நண்பர் தனது மனைவியுடன் அவர் வீட்டிற்கு வந்தார். க்ஷேமங்கள் பற்றி விசாரித்த அவர், உனக்கு ஒரு பெண் இருந்தாளே, அவளுக்குத் திருமணம் ஆகிவிட்டதா? என்று கேட்க, வைதீகரும் இன்னமும் ஆகவில்லை என்றார். உடனே நண்பர், தனக்குத் தெரிந்த ஒரு நல்ல குடும்பத்தைச் சேர்ந்த பையன் இருப்பதாகவும், அவர்கள் வீட்டிற்குச் சென்று பேசி வரலாம் என்றும் கூறினார். உடனே வைதீகரும் மகிழ்ச்சியுடன் அவர்கள் வீட்டிற்குச் சென்று அவர்களைப் பார்த்துப் பேசி பெண் பார்க்க வர வேண்டும் என்று சொன்னார்கள். ஒரு நல்ல நாளில் அவர்கள் பெண் பார்க்க வந்து அன்றே நிச்சயதார்த்தமும் செய்து சென்றார்கள். வெளியூரில் இருந்த மகனுக்கு இந்த நல்ல விஷயத்தைப் பற்றிக் கடிதம் எழுதினார்.

வைதீகருக்கு இதில் மிகவும் மகிழ்ச்சி என்றாலும், கல்யாணத்திற்குச் சில நாட்களே இருந்த நிலையில், அதற்குத் தேவையான பணம் இல்லாததால் மிகுந்த கவலையுடன் குருவாயூரப்பன் படத்தின்முன் சென்று மனதார வேண்டினார். அப்போது வாசலில் தபால்காரர் வந்து ஒரு தபால் கொடுத்தார். அவர் மகனிடமிருந்து கடிதம் வந்திருந்தது. நீண்ட நாட்களாக அவனிடமிருந்து கடிதம் வராமல் இப்போது வந்ததில் ஆனந்தமடைந்து அதைப் படித்தார். அதில், “அப்பாவுக்கு அனேக நமஸ்காரம். உங்கள் கடிதம் கண்டேன். இத்துடன் தங்கையின் கல்யாணத்திற்காக நான் சேர்த்து வைத்திருந்த பணம் இருக்கிறது, அதை வைத்து வேண்டிய செலவுகளைச் செய்து கொள்ளுங்கள், நானும் புறப்பட்டு வந்து விடுகிறேன், கவலை வேண்டாம்” என்று எழுதியிருந்தான். பிறகு, குறிப்பிட்ட தேதியில் அவர் பெண்ணின் திருமணமும் நல்லவிதமாக நிறைவேறியது. வைதீகர், குருவாயூரப்பனின் திருவருளை நினைத்து ஆனந்தத்துடன் மெய்சிலிர்த்து குருவாயூரப்பனுக்கு நன்றி கூறி மிக மகிழ்ந்தார்.

————–

ஸர்ப்ப தோஷ நிவர்த்தி

குருவாயூர் க்ருஷ்ணரின் மகிமை.

குருவும் வாயுவும் சேர்ந்து ப்ரதிஷ்டை செய்த குருவாயூரப்பனின் லீலைகளை அளவிட முடியாது. பாம்பின் தலையிலேயே தன் பாதத்தை வைத்து நடனமாடிய க்ருஷ்ணரை மனதார வணங்கினால் ஸர்ப்ப தோஷம், தொழு நோய், தோல் நோய், எல்லாம் பயந்து ஓடும் என்பதற்கு இந்த புராணக் கதையே எடுத்துக்காட்டு.

உத்தரையின் கர்ப்பத்திலிருந்த குழந்தையை ஸ்ரீ கிருஷ்ண பகவான் காப்பாற்றினார். அந்தக் குழந்தையே “விஷ்ணுரதன்” எனப்படும் பரீக்ஷித்.

பஞ்ச பாண்டவர்கள் இமயத்திற்குச் சென்றபின் அவர்கள் பேரனான பரீக்ஷித் அரசாட்சி ஏற்று, நீதி தவறாமல் ஆண்டு வந்தான். ஒரு சமயம் காட்டில் வேட்டையாடிக் கொண்டிருந்தபோது சமீகர் என்ற முனிவரைக் கண்டு தாகத்திற்குத் தண்ணீர் கேட்டான். தவத்திலிருந்த முனிவரிடம் சலனம் இல்லாததால், தனது வில்லின் நுனியால் அருகில் இருந்த ஓர் உயிரற்ற பாம்பை அவர் கழுத்தின் மீது போட்டுவிட்டுச் சென்றான். சற்று நேரம் கழித்து அங்கு வந்த முனிவரின் மகன் சிருங்கி, தன் தந்தைக்கு நேர்ந்த அவமானத்தைக் கண்டு, அன்றிலிருந்து ஏழாவது நாள், பரீக்ஷித் கொடிய விஷம் கொண்ட ‘தக்ஷகன்’ என்ற பாம்பால் கடிபட்டு இறப்பான் என சபித்தான். இதனை அறிந்த பரீக்ஷித், தான் செய்த தவற்றை உணர்ந்து, அரியணையைத் துறந்து, தனது மகன் ஜனமேஜயனுக்கு அரசை அளித்து, தன் கடைசி ஏழு நாட்களில் சுக முனிவரிடம் பாகவதக் கதையை கேட்டறிந்தான்.

சாபத்தின்படி, தக்ஷகன் என்னும் கொடிய விஷமுள்ள பாம்பு பரீக்ஷித்தை ஏழாம் நாளில் கடிக்க பரீக்ஷித் இறந்துவிடுகிறான். இதனால் கோபமடைந்த பரீக்ஷித்தின் மகன் ஜனமேஜயன், தன் தந்தையைக் கொன்ற பாம்புகளின் வம்சத்தையே அழிக்க முடிவு செய்து, பாம்பு வேள்விக்கு உத்தரவிட்டான். சரியான மந்திரங்களை உச்சரித்து, பாம்புகளின் பெயர்களைச் சொல்லி வேள்வி செய்ய, பாம்புகள் ஆயிரக்கணக்கில் அந்த அக்னியில் விழுந்து அழிந்தன. அறம் அறிந்த ‘ஆஸ்தீகர்’ என்பவர், ஜனமேஜயனிடம் சென்று, அவருடைய தவறை எடுத்துச் சொல்லி, பாம்புகள் அழிவதைத் தடுத்தார். ஜனமேஜயனும் மனம் திருந்தினார். ஆனால், பல பாம்புகளை கொன்றதால் ஜனமேஜயனுக்கு ஸர்ப்பதோஷம் உண்டானது. அவருக்கு தொழுநோய் உண்டானது.

பல சிகிச்சைகள் செய்தும் பலனில்லாமல், மரணத்தை ஏற்க முடிவு செய்தபோது, ஆத்ரேயர் என்ற முனிவர், அரசனிடம்,”உனக்கு ஏற்பட்டிருக்கும் ஸர்ப்பதோஷத்தையும், தொழுநோயையும் போக்க ஒரு வழியிருக்கிறது. பாம்பின் தலையிலேயே தன் பாதத்தை வைத்திருக்கும் ஸ்ரீ க்ருஷ்ணரை மனதார வணங்கினால் உன்னுடைய ஸர்ப்பதோஷமும், தொழுநோயும் நீங்கும். வைகுண்டத்தில் தன்னை தானே வழிபட்ட க்ருஷ்ணரின் விக்கிரகமானது குருவாயூரில் உள்ளது. நீ உடனே குருவாயூர் சென்று அங்கு உள்ள க்ருஷ்ண விக்கிரகத்தைத் தரிசித்து வணங்கு” என்று சொன்னார். ஜனமேஜயனும், குருவாயூர் சென்று, அங்குள்ள க்ருஷ்ண விக்கிரகத்தைத் தியானம் செய்து, அன்புடன் பூஜை முதலியவற்றை செய்து பத்து மாதங்கள் வழிபட்டார். தொழுநோய் படிப்படியாக நீங்கியது. ஸ்ரீ குருவாயூர் க்ருஷ்ணரும் ஜனமேஜயனுக்கு பூரண குணத்தை அருளினார். மகிழ்ச்சியடைந்த ஜனமேஜயன் குருவாயூர் கோவிலைப் புதுப்பித்துக் கொடுத்தார் என்பது புராணம்.

ஸர்ப்ப தோஷத்தை நீக்கும் சக்தி படைத்தவர் குருவாயூரப்பன். குருவாயூர்

க்ருஷ்ணரை மனதார வணங்கினால் ஸர்ப்ப தோஷம், தொழு நோய், தோல் நோய் அனைத்தும் நீங்கும் என்பது சத்தியம்

———–

கண்ணன் கதைகள் – 63

வாகைச்சார்த்து / வாகச்சார்த்து

சில ஆண்டுகளுக்கு முன் குருவாயூர் சென்ற பொழுது அதிகாலை நிர்மால்ய தரிசனம் செய்ய சன்னதிக்குச் சென்றோம். கூட்டம் அதிகமாக இருந்ததால், நாங்கள் சென்ற சமயம் நிர்மால்யம் முடிந்துவிட்டது, ஆனால் வாகைச்சார்த்து சேவிக்கும் பாக்கியம் பெற்றோம்.

வாகைச்சார்த்து என்றால் என்ன? குருவாயூரில் தரிசனம் தரும் குழந்தைக் கண்ணனுக்கு அபிஷேகம் செய்யப்படும் தீர்த்தமும், தைலமும், தோல் நோய்களையும், அனைத்து நோய்களையும் குணப்படுத்தும் என்பது நம்பிக்கை. பகவானின் திருமேனியில் வாகை மரத்துப் பட்டையின் பொடியைக் கொண்டு எண்ணெய் போகத் தேய்க்கிறார்கள். இதைத்தான் ‘வாகைச்சார்த்து’ என்று கூறுகிறார்கள். இந்த வாகைச்சார்த்து வழிபாடு வழக்கம் எப்படி வந்தது?

இது பற்றி ஒரு கதை கூறப்படுகிறது. ஒரு காலத்தில், ஒரு கிராமத்தில், காஷு என்ற சிறுவன் இருந்தான். பத்து, பனிரெண்டு வயதிருக்கும். தாய் தந்தை யாரும் இல்லை. மிகுந்த வறுமை. அந்த கிராமத்தில் சிறு சிறு வேலைகள் செய்து அதனால் கிடைக்கும் பணத்தை வைத்து தனக்கு வேண்டிய உணவை வாங்கி உண்பான். ஒரு சமயம் தொடர்ச்சியாக மூன்று நாட்கள் உணவில்லாமல் இருக்க நேரிட்டது. பசியின் கொடுமையைத் தாங்க முடியாத அந்த சிறுவன், அருகிலுள்ள நதிக்குச் சென்று அதில் மூழ்கி இறந்துவிட நினைத்தான். அப்போது நாரதர் அவன் முன் தோன்றி ஒரு பாத்திரத்தைக் கொடுத்து, அவன் விரும்பும் போதெல்லாம் அந்த பாத்திரத்திலிருந்து அவனுக்கு வேண்டிய உணவு கிடைக்கும் என்று கூறினார். அந்தப் பாத்திரத்தில் இருந்து அவனுக்கு வேண்டிய உணவை அவன் பலகாலம் பெற்று வந்தான்.

இந்நிலையில் ஒருநாள் காஷுவுக்கு வீடு, செல்வம் வேண்டும் என்ற பேராசை ஏற்பட்டது. மீண்டும் தண்ணீரில் மூழ்குவது போல நடித்தால், நாரதர் வருவார் என்ற எண்ணத்தில், நதியில் மூழ்கினான். நாரத முனிவரும் வரவில்லை, பாத்திரமும் மறைந்துவிட்டது. மீண்டும் பசியின் கொடுமையில் வாடினான். தனது பேராசை பெரு நஷ்டமாகிவிட்டதை உணர்ந்த காஷு, மிகவும் வருந்தினான். அப்போது நாரதர் மீண்டும் அவன் முன் தோன்றி, அவனிடம், ‘உன்னுடைய முன்ஜென்மத்தில் உனக்கு சாம்பு என்று ஒரு மகன் இருந்தான், அந்த மகனின் பக்தியால்தான் இப்போது என்னைப் பார்க்க முடிகிறது, நீயும் பக்தி செய்து முக்தியடை’ என்று கூற, அதன் பிறகு காஷு, எப்போதும் பகவானின் திருநாமங்களை உச்சரித்துக் கொண்டு தனது வாழ்நாளைக் கழிக்க ஆரம்பித்தான்.

அவனது நிலையைக் கண்ட மஹாலக்ஷ்மி, அந்தச் சிறுவனுக்கு உதவி செய்யுமாறு பகவானிடம் வேண்டினாள். அதற்கு பகவான் அவன் பாவங்கள் இன்னும் தீரவில்லை, முன்ஜென்மத்தில் அவன் ஒரு பூசாரியாய் இருந்தான். வேசிகளுடன் சுற்றிக்கொண்டு, கோவிலையும் கவனிக்கவில்லை. அப்போது அவன் மகன் சாம்பு, கோவிலில் பூஜைகளை பக்தியுடன் செய்து என்னை வந்தடைந்தான். முன்பைப் போலவே இப்போதும் காஷு தனது ஆசை நிறைவேறியதும் என்னை மறந்துவிடுவான். ஆகையால் அவனை சிறிது காலம் சோதித்துப் பிறகு ஏற்றுக் கொள்கிறேன் என்று கூறினார். காஷுவும் பகவானின் திருநாமங்களை உச்சரித்துக் கொண்டே இருந்தான். மீண்டும் மஹாலக்ஷ்மி பகவானிடம் வேண்ட, பகவானும் அதற்கு இணங்கினார்.

இதற்கிடையே, காஷு சுயநினைவை இழந்துவிட, பகவான் அவன் முன்னே தோன்றினார். அவன் தலையைத் தடவிக் கொடுத்தார். தன்னை அவரது திருவடிகளில் சேர்த்துக்கொள்ளுமாறு காஷு வேண்டினான். தன்னைப் போலத் துன்பமடைபவர்களுக்கு ஏதேனும் ஒரு வகையில் தானும் உதவ அருள் புரியுமாறும் வேண்டினான்.

பகவானும் அதை ஏற்றுக் கொண்டு, “கலியுகத்தில் நீ ஒரு வாகை மரமாகப் பிறப்பாய். அப்போது குருவாயூர் கோவிலில் குருவாயூரப்பனாக இருக்கும் எனக்கு, தினமும் காலையில் எனக்கு நல்லெண்ணெய் அபிஷேகம் செய்து, பின் என்னை வாகைத் தூளினால் தேய்ப்பார்கள். அந்த வகையில் நீ எனக்கு சேவை செய்வாய். என் மூலமாக எனது பக்தர்களின் தோல் நோய்களும் தீரும்” என்று கூறி காஷுவை ஆசீர்வதித்து விட்டு மறைந்தார்.

குருவாயூரப்பனுக்கு “வாகை சார்த்து’ வழக்கம் இவ்வாறுதான் ஏற்ப்பட்டது. அதன்படியே இன்றும், நிர்மால்யம் முடிந்தவுடன், தைலாபிஷேகம் செய்து, பின்னர் வாகை மரத்தின் பட்டையிலிருந்து தயாரிக்கப்படும் பொடியை குருவாயூரப்பனின் திருமேனியில் போட்டு எண்ணெய் போகத் தேய்க்கிறார்கள். இதைத் தான் வாகைச் சார்த்து என்கிறார்கள். பிறகு பகவானுக்கு அபிஷேகம் செய்து அலங்காரம் செய்கின்றனர். இந்த அபிஷேக தீர்த்தமும் தைலமும் பல நோய்களைக் குணப்படுத்தும் சக்தி பெற்றவை என்பது நம்பிக்கை.

குருவாயூரப்பனை வழிபட்டு, வாழ்வில் நோய்களும், தோஷங்களும் நீங்கப் பெறுவோம்! ஓம் நமோ நாராயணாய! நாராயண! நாராயண!

—————

கண்ணன் கதைகள் – 64

உறியமதம்

முன்னொரு சமயம் சிறந்த பக்தரான நம்பூதிரி ஒருவர் வாதநோயால் பீடிக்கப்பட்டார். அவருக்கு நோய் மிகவும் தீவிரமாகி, கை கால்களை நீட்ட முடியாமல், உடல் குறுகிவிட்டது. அவரால் நடக்க முடியாததால், அவரை உறியில் வைத்துத் தூக்கிச் செல்வார்கள். அதனாலேயே அவரை ‘உறியமதம்’ என்று அவ்வூர் மக்கள் அழைக்க ஆரம்பித்தார்கள். மருத்துவங்கள் பலனளிக்கவில்லை. பெருந்தொகையைக் காணிக்கையாகச் செலுத்துவதாகவும், தான் பூரண குணமடைய வேண்டும் என்றும் குருவாயூரப்பனுக்கு வேண்டிக்கொண்டார். குருவாயூர் செல்ல பயணப்பட்டார். உறியில் வைத்து அவரை அழைத்துச் சென்றனர்.

அதே சமயம், வறுமையால் வாடிய ஒருவன், குருவாயூர் சென்று வேண்டினால், வறுமை தீர்ந்து சௌகரியமாய் வாழலாம் என்ற நம்பிக்கையில் குருவாயூர் வந்தான்.

உறியமதம் ஸ்வாமி, தீர்த்தத்தில் நீராடி, நித்ய அனுஷ்டானத்தை முடிக்க ருத்ர தீர்த்தம் சென்றார். தன்னுடைய பணப்பையைப் குளத்துப் படிக்கட்டில் வைத்தார். உறியைக் குளத்தில் இறக்கி வைக்கச் சொன்னார். ஏற்கனவே அங்கிருந்த, பணமில்லாமல் வாடிக் கொண்டிருந்த பக்தன், அந்தப் பணப்பையை எடுக்கக் கையை வைத்தான். அதைக் கண்ட உறியமதம், யாருமே எதிர்பார்க்கா வண்ணம், உறியிலிருந்து குதித்து, அவனைப் பிடிக்க ஓடினார். ஆனால் அவன் ஓடிவிட்டான். தான் குணமடைந்ததையே உணராத

உறியமதம், காணிக்கை அளிக்க முடியவில்லையே என்று மனம் வருந்தினார். அப்போது “கவலைப்படாதே! உங்கள் இருவரின் ப்ரார்த்தனையும் நிறைவேறிவிட்டது” என்று அசரீரி கேட்டது. மகிழ்ந்த அவர் பெருமானை சேவித்து ஊர் திரும்பினார்.-அவரது நோயும் பூரணமாக நீங்கியது.

இவ்வாறு கலியுகத்தில் அப்பனின் லீலைகள் அனைவரையும் வியக்க வைக்கும் அற்புதமாகும்.

————

கண்ணன் கதைகள் – 65

வைர அட்டிகை

கோவையில் ஒரு செல்வந்தர் இருந்தார். அவருக்குத் திடீரென்று மிகுந்த கைவலி ஏற்பட்டது. பல டாக்டர்களிடம் காண்பித்தும் பலனில்லை. அவர் அவஸ்தைப்படுவதைக் கண்ட அவர் மனைவியும் மிகுந்த கவலையுற்றாள்.

ஒரு நாள், அவர்கள் இருவரும் சேங்காலிபுரம் ஸ்ரீ அனந்தராம தீட்சிதர் நிகழ்த்திய ‘நாராயணீய உபன்யாசம்’ கேட்கச் சென்றிருந்தார்கள். ஸ்ரீ குருவாயூரப்பனின் பெருமைகளைக் கேட்ட அவர்கள், வீடு திரும்பியதும் அவர் மனைவி அவரிடம், கை வலி நீங்கினால் தன்னுடைய கழுத்தில் இருக்கும் வைர அட்டிகையை காணிக்கையாகச் செலுத்துவதாக வேண்டிக் கொள்ளச் சொல்ல, அவரும் அவ்வாறே வேண்டிக் கொண்டார். சிறிது காலத்திலேயே, அவர் கைவலி படிப்படியாகக் குறைந்தது. வேண்டிக்கொண்டபடி குருவாயூர் சென்று அட்டிகையைக் காணிக்கை செலுத்த முடிவு செய்தார்கள்.

அந்த அட்டிகை அவரது தாத்தா கொடுத்தது. இதற்கிடையில், செல்வந்தர் வைர வியாபாரிகள் சிலரிடம் அதை மதிப்பீடு செய்யச் சொன்னார். அவர்களும் மதிப்பீடு செய்து விலையைச் சொன்னார்கள். குருவாயூர் சென்றார்கள். அங்கு சென்றதும், அவருக்கு தாத்தா அளித்ததைக் காணிக்கையாக்குவதற்கு மனம் வரவில்லை. அதனால் அதற்குப் பதிலாக அதன் மதிப்பைவிட அதிகமான பணத்தை உண்டியலில் சமர்ப்பித்தார்கள். பிறகு ஊர் திரும்பினார்கள்.

ஆனால், மீண்டும் அவருக்குக் கைவலி தொடங்கியது. குடும்ப ஜோசியர் தெய்வ குற்றத்தால் அவ்வாறு வலிப்பதாகச் சொன்னார். வேறு வழியில்லாமல் மீண்டும் குருவாயூர் சென்று அட்டிகையை உண்டியலில் சமர்ப்பித்துவிட்டு வந்தனர். கைவலியும் வேதனையும் நிரந்தரமாக நீங்கியது.

பகவான் கீதையில் கூறியபடி, பக்தியுடன் கொடுத்தால் தண்ணீரையும் ஏற்றுக் கொள்வார், பக்தியில்லாமல் கொடுத்தால் எவ்வளவு மதிப்பானதாக இருந்தாலும் ஏற்க மாட்டார் என்பதற்கு இந்த உண்மைச் சம்பவமே சான்று.

———

குருதக்ஷிணை

மேப்பத்தூர் நாராயண பட்டத்திரி ஸ்ரீமன் நாராயணீயத்தை இயற்றியவர்.

கேரளாவில் மேப்பத்தூர் என்ற ஊரில், ப்ராம்மண குடும்பத்தில் பிறந்த அவர், வேதம், தர்க்கம், மீமாம்சை என்று அனைத்தையும் கற்றார். அவருக்கு ஒரு அண்ணனும் ஒரு தம்பியும் இருந்தனர். அக்காலத்தில் நம்பூதிரி குடும்பத்தில் மூத்தவர் நம்பூதிரியை மட்டுமே திருமணம் செய்ய வேண்டும். மற்றவர் எந்த சமூகத்திலும் திருமணம் செய்யலாம் என்ற ஒரு கோட்பாடு இருந்தது.

நாராயண
பட்டத்திரிக்கு பிஷாரடி குலத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் சம்பந்தம் ஏற்பட்டது. பிறகு அந்தப் பெண்மணியைத் திருமணம் செய்து மணவாழ்க்கையே இன்பம் என்று அனுபவித்து வந்தார்.
அந்தப் பெண்ணின் குடும்பத்தில் அச்சுத பிஷாரடி (அச்சுத பிஷாரடியின் தமக்கை மகள்

பட்டத்திரியின் மனைவி) என்ற ஒரு பண்டிதர் இருந்தார். சிறந்த பக்திமான். ஒரு நாள் அவர் தியானத்தில் இருந்தார். அப்போது வீட்டின் உள்ளிருந்து அவரைக் கடந்து சென்ற பட்டத்திரியைப் பார்த்து, உயர்ந்த குடும்பத்தில் பிறந்து, அழிந்துபோகும் உணர்ச்சிகளுக்குப் பலியாகி, உன் வாழ்க்கையை ஏன் வீணாக்கிக் கொள்கிறாய் என்று கேட்டார். இந்த வார்த்தை பட்டத்திரியின் வாழ்க்கையை மாற்றியது. பிஷாரடியிடமே சிஷ்யனாக சேர்ந்து, சம்ஸ்க்ருதமும் கற்று பண்டிதரானார். வாலிபத்தில் தவறு செய்த அவர் சிறந்த பக்தரானார். பல நூல்கள் இயற்றினார்.
அந்த சமயம், அவரது குருவான அச்சுத பிஷாரடிக்கு முடக்குவாதம் ஏற்பட்டது. அது கண்டு வருந்திய

பட்டத்திரி, தன் குருவுக்குத் தர வேண்டிய குருதக்ஷிணைக்குப் பதிலாக, அவருடைய நோயை ஆவாஹனம் செய்து ஏற்றுக் கொண்டார். குருவின் நோய் நீங்கியது. பட்டத்திரிக்கு முடக்குவாதம் ஏற்பட்டது. அதனால் மிகவும் அவதிப்பட்டார். பல சிகிச்சைகள் செய்தும் பலனில்லை. அதைக் கண்ட துஞ்சத்து எழுத்தச்சன் என்பவர், நோய் நீங்க குருவாயூருக்குச் சென்று (மீன் தொட்டுக் கூட்டுக) அதாவது, “நாவிலே மச்சம் தொட்டு உண்” என்று பணித்தார். அறிவற்றவர்களாய் இருந்தால், மீனை உண்ணச் சொல்கிறார் என்று நினைத்திருப்பார்கள். ஆனால், பட்டத்ரிக்கு மச்சாவதாரம் தொடங்கி பகவானை வர்ணிக்கச் சொல்கிறார் என்று புரிந்தது.
பட்டத்திரியும் உடனேயே, குருவாயூர் சென்று அங்குள்ள புண்யதீர்த்தத்தில் ஸ்நானம் செய்து, சன்னிதியிலேயே அமர்ந்து, அவன் பெருமையைக் காவ்யமாக எழுத ஆரம்பித்தார். அந்தக் காவ்யமே “ஸ்ரீ நாராயணீயம்”.
ஸ்ரீமன் நாராயணீயத்தில் மொத்தம் 1034 ஸ்லோகங்கள் உள்ளன. 100 தசகங்கள் கொண்டது . ஒவ்வொரு தசகத்திலும் 10 ஸ்லோகங்கள் உள்ளன. சில தசகங்களில் 10 ஸ்லோகங்களுக்கு மேல் உள்ளன. ஸ்ரீமன் நாராயணீயத்தில் ஒவ்வொரு தசகமும் தமது நோயை குணமாக்கும்படி வேண்டுவது போல் அமைந்துள்ளது. படிப்பவர்களுக்கும் தங்கள் நோயை குணமாக்கும்கும்படி வேண்டுவதுபோல் அமைந்திருப்பது விசேஷம்.

பட்டத்திரியின் வாழ்வில் நிகழ்ந்த வேறொரு சம்பவத்தை அடுத்த பதிவில் பார்ப்போம்.
நாராயண! நாராயண !

————

கண்ணன் கதைகள் – 67

மன நிம்மதி

சென்ற பதிவில் நாராயண பட்டத்ரி பற்றியும் அவர் எப்படி நாராயணீயம் எழுதினார் என்பது பற்றியும் பார்த்தோம்.

நாராயண பட்டத்ரியின் வாழ்வில் நிகழ்ந்த மற்றொரு சம்பவம் இது.

நாராயணீயத்தை இயற்றிய நாராயண பட்டத்ரிக்கு பாகவதத்தின் சாரமாக
நாராயணீயத்தைத் தான் இயற்றிவிட்டதாக சிறு கர்வம் ஏற்பட்டது.
மன நிம்மதியை இழந்தார். பகவான் அவரது கனவில் தோன்றி முக்திபுரியில் (மலையாளத்தில் முக்கோலக்கல்) இருக்கும் பவானியின் கோவிலுக்குச் செல் என்று கூற, முக்திபுரியில் உள்ள முக்கோல தேவியின் கோவிலுக்குச் சென்றார். அப்போது அவர் முக்கோலக தேவியை வழிபட்டு, தேவியின்மீது ஸ்லோகத்தை எழுதத் தொடங்கினார். எழுபது ஸ்லோகங்கள் எழுதி முடித்துவிட்ட நிலையிலும் அவரால் தேவியின் திருப்பாதங்களைப் பற்றி மட்டுமே சொல்ல முடிந்திருந்தது. அதற்குமேல் எழுத வரவில்லை. அப்போது, தாம் இயற்றியதெல்லாம் பகவானின் திருவருளால்தான் என்பதை அவர் உணர்ந்தார். மிகுந்த மன நிம்மதியும் அடைந்தார்.

பின்னர், தேவியைத் துதித்து, தம் இறுதிக் காலம் வரை அங்கேயே கழித்தார். ‘ஸ்ரீபாத ஸப்ததி’ என்ற தேவியின் புகழ் பாடும் அந்த ஸ்லோகம் தான் அவர் கடைசியாக எழுதியது. ஒரு நாள் தேவியைத் தரிசனம் செய்துவிட்டுத் திரும்பியதும் நிம்மதியாக பகவானின் திருவடியை அடைந்தார்.

நாமும் அப்பனின் பாதாரவிந்தங்களை வணங்கி அவள் அருளைப் பெற்று மகிழ்வோமாக!

————

கண்ணன் கதைகள் – 68

தெய்வ குற்றம்

குருவாயூரப்பனின் மகிமைகளை இக்கலியிலும் கண்கூடாகக் கண்டவர் பலர் உண்டு. சில ஆண்டுகளுக்கு முன் பக்தர் ஒருவருக்கு நிகழ்ந்த சம்பவம் இது.

பக்தர் ஒருவரின் மகனுக்குத் திடீரென்று புத்தி ஸ்வாதீனமில்லாமல் போய்விட்டது. ஒருவருடனும் பேசாமல், கேட்ட கேள்விகளுக்கும் பதில் சொல்லாமல் பித்துப் பிடித்தவன்போல் ஆகிவிட்டான். பல சிகிச்சைகள் செய்தும் சரியாகவில்லை. மிகுந்த கவலையடைந்த பக்தர், பகவானே கதி என்று, தனது மகனை அழைத்துக் கொண்டு குருவாயூர் சென்று, பல நாட்கள் சன்னதியிலேயே தங்கி, கைங்கர்யங்களும் செய்து வந்தார். தன் மகனை நினைத்து மிகுந்த கவலையுடன் இருந்தார்.

ஒரு நாள், குருவாயூரப்பன் அவரது கனவில் தோன்றி, ‘உன் மகன் முன் ஜென்மத்தில் ஒரு குரங்கைக் கொன்று, ராமருக்கு அபசாரம் செய்ததால், தெய்வ குற்றம் உண்டானதால், இவ்வாறு உள்ளான். நீ அவனை திருப்பரையாறு அழைத்துச் சென்று, ராமரை சேவித்தால் அவன் குணமடைவான்’ என்று கூறினார். உடனே, அவர் திருப்பரையாறு சென்றார். அங்கேயே தங்கி, தினமும் ராமரை சேவித்து வந்தார்.

இவ்வாறிருக்கையில், ஒரு நாள், அவர் ராமர் சன்னதியில் இருக்கும் போது, ஸ்ரீ ஹனுமார், கையில் சந்தனம், குங்குமம், துளசியுடன் அவர் மகனின் கண்ணுக்கு மட்டும் தெரியும்படியாகத் தோன்றி, ‘இதை வாங்கிக் கொள்’ என்று கூறினார். அந்த பக்தரின் கண்களுக்குத் தெரியவில்லை. அவர் மகன் அவரிடம், ‘அப்பா, ஒரு குரங்கு சந்தனம், குங்குமம் கொடுக்கிறது, வாங்கிக் கொள்ளட்டுமா?’ என்று கேட்டான். என்றுமில்லாமல் மகன் நன்றாகப் பேசுகிறானே என்று மகிழ்ந்த அவர், வாங்கிக் கொள் என்று கூறினார். பக்தரின் கண்களுக்குத் தெரியவில்லையே தவிர, மகனின் கையில் இப்போது பிரசாதங்கள் இருப்பது தெரிந்தது. பகவானின் அனுக்ரஹத்தையும், மகிமையையும் அறிந்த பக்தர் மனம் மகிழ்ந்து அப்பனுக்கு நன்றி கூறினார். அதுமுதல் அவர் மகன் நன்றாகப் பேச ஆரம்பித்து, சித்தமும் தெளிந்தது.

திருப்பரையாறு கோவிலில் அதிர்வெடி வழிபாடு ப்ரசித்தம். பிரச்சனைகள் தீர, அதிர்வெடி வழிபாடு செய்து மக்கள் தமது பிரச்சனைகள் தீரப் பெறுகிறார்கள். கேரளக் கோவில்களில் வெடி வழிபாடு நடைமுறை உண்டு.

————-

கண்ணன் கதைகள் – 69

ஞானப்பான

கேரளாவிலுள்ள மலப்புரத்தில் கீழாத்தூர் என்னும் ஊரில் வாழ்ந்தவர் பூந்தானம் நம்பூதிரி. பூந்தானம் என்பது அவர்கள் இல்லத்தின் பெயர். இல்லப்பெயரே அவரது பெயராக நிலைத்துவிட்டது. சிறந்த பக்திமான். குருவாயூரப்பனிடம் மிகுந்த பக்தி கொண்டவர். மலையாளத்தில் பல ஸ்லோகங்கள் கண்ணன் மீது எழுதியுள்ளார்.

சரி, அதென்ன ஞானப்பான? மேலே படியுங்கள்.

பூந்தானத்திற்குத் தன் மடியில் கொஞ்சி விளையாட ஒரு பிள்ளை இல்லையே என்று குறை. குருவாயூரப்பனிடம் பிரார்த்திக்க, நீண்ட காலம் கழித்து அவருக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அவருக்குப் பரம சந்தோஷம். நாமகரணம் செய்தார். குழந்தைக்கு ஆறு மாதங்கள் ஆனபோது அன்னப்ராசனம் செய்ய முஹூர்த்தம் குறித்து, உறவினர்களை எல்லாம் அழைத்திருந்தார். அன்னப்ராசன தினத்தன்று, வீட்டில் உள்ள எல்லாரும் சீக்கிரமே எழுந்துவிட்டனர். அவர் மனைவி, குழந்தையை நீராட்டி, புதுத் துணிகள் உடுத்தி விட்டு, அலங்கரித்து, தாய்ப்பால் கொடுத்துவிட்டு, குழந்தையை ஒரு துணியில் சுற்றித் தூங்க வைத்தாள். குழந்தை உறங்க ஆரம்பித்ததும் உறவினர்களை வரவேற்கச் சென்றாள்.

கேரளத்தில், மிகவும் மடியாக இருக்கும் பெண்கள் கையில் தாழங்குடையையையும், மேலே வெள்ளைத் துணியையும் போர்த்தியிருப்பார்கள். வந்திருந்த பெண்களில் ஒருவர், தான் போர்த்தியிருந்த துணியை, குழந்தை இருப்பதை அறியாமல் அதன்மேல் போட்டாள். பின்னால் வந்த அனைவரும் மேலே மேலே துணிகளைப் போட்டார்கள். அன்னப்ராசனம் நடக்கவேண்டிய நேரம் நெருங்கவே, குழந்தையை எடுத்து வர உள்ளே சென்று பார்த்த போது, குழந்தை மூச்சு முட்டி இறந்துவிட்டிருந்தது. நீண்ட காலம் கழித்து பிறந்த குழந்தை இறந்ததைக் கண்ட

பூந்தானத்தின் மனைவி நிலைகுலைந்து போனாள். அழுது அரற்றினாள். கிருஷ்ணா ஏன் இப்படி? என்று கதறினார் பூந்தானம்.
அவரது சோகத்தைக் கண்ட குருவாயூரப்பன், “பூந்தானம் கவலைப் படாதே! இனி நானே உன் பிள்ளை, என்று கூறி அவர் மடியில் அமர்ந்து, உன் மடியில் படுத்துக் கொள்ளட்டுமா?” என்று கேட்டான். கண்ணனைத் தன் மடியில் கண்ட பூந்தானம், பரவசமடைந்து, “கண்ணனே என் மடியில் குழந்தையாகத் தவழும்போது, எனக்கென்று பிள்ளையும் வேண்டுமோ?” என்று பக்தியில் தன்னை மறந்தார். ‘ஞானப்பான’ என்ற தத்துவ முத்துக்கள் அவர் வாயிலிருந்து கவிதையாக வந்து விழுந்தது. சோகமே ஸ்லோகமானது. ‘ஞானப்பான’ எளிய மலையாள நடையில் உயர்ந்த தத்துவக் கருத்துகளைக் கொண்ட ஓர் காவியம். ஞானத்தைத் தரும் பானை அதாவது ஞானக் களஞ்சியம் என்றே சொல்லலாம்.

‘ஞானப்பானை’ சாஸ்வதமற்ற வாழ்க்கையைப் பற்றிய ஓர் கவிதை.

மனிதப்பிறவியின் அர்த்தத்தை மிக அழகாய்ச் சொல்லும் இந்தக் கவிதையிலிருந்து சில துளிகள்:

“எத்ர ஜென்மம் மலத்தில் கழிஞ்ஞதும்
எத்ர ஜென்மம் ஜலத்தில் கழிஞ்ஞதும்

எத்ர ஜென்மங்ஙள் மண்ணில் கழிஞ்ஞதும்

எத்ர ஜென்மங்ஙள் மரங்ஙளாய் நின்னதும்

எத்ர ஜென்மங்ஙள் மரிச்சு நடன்னதும்

எத்ர ஜென்மங்ஙள் ம்ருகங்ஙள் பஷுக்களாய்”

மானிடப் பிறவி அரியது. முன்பு புழுவாய், பூச்சியாய், மிருகங்களாய், மரங்களாய், பல ஜன்மங்களை எடுத்து பின்னர் இப்போது கிடைத்திருக்கிறது இந்த மனிதப் பிறவி. குறுகிய காலம் மட்டுமே இருக்கும் இந்த வாழ்க்கையில் நாம் பகவானது திருநாமத்தை உச்சரிக்காமல் இருக்கின்றோமே? என்று ஆச்சர்யப்படுகிறார் பூந்தானம்.

“இன்னலேயோளம் எந்தென்னறிஞ்ஞிலா
இனி நாளேயும் எந்தென்னறிஞ்ஞிலா
இன்னீக்கண்ட தடிக்கு வினாசவும்
இன்ன நேரம் என்னேதுமறிஞ்ஞிலா”

நேற்று வரை என்ன நிகழ்ந்தது என்று அறியவில்லை, இனி நாளை என்ன நடக்கும் என்றும் தெரியவில்லை, இன்றிருக்கும் இந்த சரீரத்திற்கு அழிவு எந்த நேரத்தில் என்றும் அறிவதில்லை.

“நம்மெயொக்கேயும் பந்திச்ச ஸாதனம்
கர்மம் என்னறியேண்டது முன்பினால்
முன்னில் இக்கண்ட விஸ்வம் அசேஷவும்
ஒன்னாயுள்ளொரு ஜ்யோதிஸ்வரூபமாய்”

நம் அனைவரையும் இந்த உலகத்தில் கட்டி இருப்பது கர்மமே என்பதை அறிய வேண்டும். ப்ரளயத்தில் நாம் காணும் இந்த உலகமெல்லாம் ஒன்றேயான ஒரே ஜோதிஸ்வரூபத்தில் ஒடுங்குகின்றது.

க்ருஷ்ண க்ருஷ்ண முகுந்தா ஜனார்த்தனா
க்ருஷ்ண கோவிந்த நாராயணா ஹரே
அச்யுதானந்த கோவிந்த மாதவா
சச்சிதானந்த நாராயணா ஹரே!!!

—————

கண்ணன் கதைகள் – 70

வாழைக்கு மோக்ஷம்

குருவாயூரப்பன் மீது மிகுந்த பக்தி கொண்டவர், பூந்தானம் எனும் பக்தர். மலையாள மொழியில் குருவாயூரப்பனின் பெருமையைச் சொல்லும் ஞானப்பான என்னும் பாடல்களை எழுதியவர் பூந்தானம். சிறந்த கவிஞர். பாகவத பாராயணம், ப்ரவசனம் செய்து கொண்டே இருப்பார்.

சென்ற பதிவில் பூந்தானத்தின் சோகம் எப்படி ஸ்லோகமானது, ஞானப்பான எப்படி உருவானது என்பது பற்றிப் பார்த்தோம். அவர் வாழ்வில் நடந்த அதிசயமான மற்றொரு சம்பவம் பற்றி இப்போது பார்க்கலாம்.

ஒருநாள் பூந்தானம் உறங்கும்போது, அவருக்கு ஒரு கனவு வந்தது. கனவில், வானரதம் வருகிறது. விஷ்ணுதூதர்கள் இருவர் வந்து அவரை வைகுண்டத்திற்கு அழைக்கிறார்கள். அவர் அவர்களை வரவேற்று ரதத்தில் ஏறுகிறார். ரதம் பல உலகங்களைக் கடந்து, வைகுண்டத்தை அடைகிறது. அங்கு பக்தி யோகத்தால் பகவானை அடைந்த பலரைப் பார்க்கிறார். வைகுண்டத்தின் வாயிலை அடைந்ததும், இருவர் அவரை வரவேற்று வணங்குகின்றனர். வைகுண்டத்தில் இருக்கும் நீங்கள் பூஜிக்கப்பட வேண்டியவர்கள், என்னை வணங்குகிறீர்களே, நானல்லவோ உங்களை வணங்க வேண்டும் என்று அவர்களிடம் கேட்கிறார். அப்போது அவ்விருவரும், நாங்கள் முந்தைய ஜென்மத்தில் உங்கள் வீட்டில் இரண்டு வாழை மரங்களாக இருந்தோம். தினமும் உங்கள் பாகவத பாராயணம் கேட்டு, அப்புண்ணியத்தின் பலனாக, இந்த உன்னதமான நிலையை அடைந்துள்ளோம், அதனால் நீங்களே எங்கள் குரு, அதனால் வணங்கினோம் என்று கூறினார்கள்.

இதைக் கேட்டதும், பூந்தானத்தின் கனவு கலைந்தது. தூக்கத்திலிருந்து விழித்தார். வீட்டின் வெளியே சென்று பார்க்கும்போது அங்கே இருந்த இரண்டு வாழைமரங்கள் கீழே விழுந்திருந்தன. பகவன் நாமத்தை கேட்பதால் உண்டாகும் பலனைக் கண்கூடாகக் கண்ட பூந்தானம், முன்னிலும் தீவிரமாக, பகவானை வணங்கி அவன் நாமத்தைப் பாடிப் பரப்பினார்.

————-

கண்ணன் கதைகள் – 71

வானரதம்

கிருஷ்ண பக்தரான பூந்தானம் செய்யும் பாகவத உபன்யாசங்களை மக்கள் மிகவும் நேசித்தார்கள். கேரளாவில் உள்ள கொட்டியூர் என்னும் ஊரில் உள்ள சிவன் கோவில் வருடத்தில் சில நாட்களுக்கு மட்டுமே திறந்திருக்கும். பூந்தானம் கொட்டியூர் சென்று அங்குள்ள குளத்தில் நீராடி, சிவபெருமானை வழிபட்டு மிகுந்த சந்தோஷத்துடன் அங்கேயே சில நாட்கள் தங்கினார்.

தினசரி கோவிலில் சிவன் முன்னால் பாகவத ப்ரவசனம் செய்தார்.
நூற்றுக்கணக்கான மக்கள் அவருடைய இனிமையான பிரவசனத்தைக் கேட்டார்கள்.

ஸ்ரீமத் பாகவதத்தில் கிருஷ்ணர் விளையாட்டாக ருக்மிணியிடம், சிசுபாலன், ஜராசந்தன், சால்வன் போன்றோர் இருக்கும்போது என்னை ஏன் திருமணம் செய்தாய் என்று பரிஹாஸமாகப் பேச, ருக்மிணி மயங்கி விழ, பின்னர் கிருஷ்ணர் சமாதானம் செய்வதைக் கூறும் ஸர்க்கம்.

பூந்தானம் இந்தப் பகுதியை வாசித்து முடித்து, அடுத்த நாள் தொடர்வதற்கு வசதியாய் அந்த அத்தியாயத்தின் முடிவில் அடையாளம் வைத்தார். ஆச்சர்யப்படும் வகையில் அடுத்த நாள் அவர் வைத்த அடையாளம் அந்த ஸர்க்கத்தின் தொடக்கத்தில் இருந்தது. அதனால் மறுபடியும் அந்த ஸர்க்கத்தையே வாசித்தார். மீண்டும் சில நாட்களுக்கு இவ்வாறு தொடர்ந்து நடந்தது. கோவிலை மூட வேண்டிய நாள் வந்தது. பூந்தானம் பிரவசனத்தை முடித்து, வீட்டிற்குத் திரும்பும் வழியில் பாகவத புத்தகத்தைக் கோவிலிலேயே மறந்து வைத்துவிட்டு வந்ததை உணர்ந்தார். அதை எடுக்க மீண்டும் கோவிலுக்குச் சென்றார். ஆனால் நடை சாத்திவிட்டார்கள். யாருமே அருகில் இல்லை.

அவர் ப்ரவசனம் செய்த பாகவத அத்தியாயத்தின் அதே பகுதியை யாரோ கோவிலின் உள்ளிருந்து சொல்வதைக் கேட்க முடிந்தது. சாவி த்வாரத்தின் வழியே உள்ளே பார்த்தார். அங்கே அவர் கண்ட காட்சி!!! பரமசிவனே அதைப் படித்துக் கொண்டிருந்தார். பார்வதிதேவியும், பூதகணங்களும் அதைக் கேட்டுக் கொண்டிருந்தனர். பூந்தானம் அசையாமல் அதைக் கேட்டார். கடைசியில் சிவன் பார்வதியிடம், நான் படித்த இந்த பாகவத ஸர்க்கம் உனக்குப் பிடித்ததா? என்று கேட்க, பார்வதி, “ நன்றாக இருந்தது, ஆனால் பூந்தானம் சொன்னதைப்போல் இல்லை” என்று கூறினாள். சிவனும், உண்மைதான் நானும் பூந்தானம் சொல்வதையே கேட்க ஆசைப்படுகிறேன். அதனால்தான், தினமும் அவர் வைத்த அடையாளத்தை இந்த ஸர்க்கத்தின் தொடக்கத்தில் வைத்தேன் என்று கூறினார்.

வெளியே நின்றுகொண்டிருந்த பூந்தானம் இதைக் கேட்டவுடன் மெய்சிலிர்த்து, க்ருஷ்ணா, க்ருஷ்ணா என்று உரக்கக் கூறினார். அவர் மீண்டும் பார்த்தபோது, சிவபெருமானும் பார்வதியும் மறைந்து விட்டனர். பாகவதத்தை ஏனைய தெய்வங்களும் நேசிக்கிறார்கள் என்பதற்கு இந்த சம்பவமே சான்று.

இவ்வாறு பாகவத பாராயணத்திலும், கிருஷ்ண நாமத்திலும் பூந்தானத்தின் காலம் ஓடியது. பூந்தானத்திற்கு வயதாகியது. ஒரு நாள் கிருஷ்ணன் பூந்தானத்தை ‘என்னிடம் வா’ என்று அழைத்தார். மிகுந்த சந்தோஷமடைந்த பூந்தானம், வீட்டில் உள்ளவர்களிடம், நாளை விஷ்ணுதூதர்கள் நம் இல்லத்திற்கு வருகிறார்கள். வீட்டை நன்கு அலங்கரியுங்கள்; யாரெல்லாம் கிருஷ்ணனைக் காண வருகிறீர்கள் என்று கேட்டார். எப்போதும் கிருஷ்ணனை நினைத்து அவருக்குப் பைத்தியம் பிடித்துவிட்டது என்று அவரது வீட்டாரும், அவ்வூர் மக்களும் நினைத்தார்கள். அடுத்த நாள் வானரதம் வருவதைக் கண்ட அவர், மனைவியிடம் சீக்கிரம் வா, நாம் செல்லலாம் என்று கூறினார். அவர் மனைவிக்கு சமையற்கட்டில் வேலை இருந்ததால் உள்ளே சென்றுவிட்டாள். அப்போது, அவர் வீட்டில் வேலைசெய்த ஒரு பெண், நான் வருகிறேன், என்னை அழைத்துச் செல்லுங்கள் என்று வேண்டினாள். பூந்தானமும் மகிழ்ச்சியுடன் ஒத்துக் கொண்டார். வேலை முடிந்து அவர் மனைவி வந்து பார்த்தபோது வேலைசெய்த அந்தப் பெண்மணி இறந்திருந்தாள். பூந்தானத்தைக் காணவில்லை; பூந்தானம் கிருஷ்ணனோடு ஐக்கியமாகிவிட்டார்.

————-

கண்ணன் கதைகள் – 72

பக்த கமலாகர்

பண்டரீபுரத்தில் கமலாகர் என்ற பக்தர் வாழ்ந்து வந்தார். நற்பண்புகளுடன் சிறந்த அறிவாளியாக இருந்தார். சிறந்த பக்திமான். அவரது மனைவி சுமதியும் மிகுந்த குணவதி. கணவனைப் போலவே நற்பண்புகளும், பக்தியும் உள்ளவள். அவர்களுக்கு பத்மாகர் என்ற ஐந்து வயது மகன் இருந்தான்.

அவர்கள் இருவரும் தினந்தோறும் சந்த்ரபாகா நதியில் குளித்து, பகவானை
ப்ரார்த்தித்து, தங்கள் சக்திக்குத் தகுந்தபடி பக்தர்களுக்கு உணவு வழங்கி, பிறகு உண்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.

ஒரு நாள், அவ்வாறு குளித்துவிட்டு வரும் வழியில், நாமதேவர் என்ற மகானையும், அவருடன் சில சாதுக்களையும் கண்டனர். தங்கள் இல்லத்தில் உணவருந்துமாறு அவர்களை அழைத்தனர். ஆனால், நாமதேவர் கமலாகரிடம், ‘இவ்வளவு பேருக்கு உணவிடுவது உனக்கு சிரமமாக இருக்கும், எங்கள் ஆசீர்வாதம் உனக்கு என்றும் உண்டு, கவலைப்படாதே’ என்று கூறினார். கமலாகரோ, ‘விட்டலனும், தாயார் ருக்மிணியும் இருக்கும்போது எங்களுக்கு என்ன கவலை? தயவு செய்து வீட்டிற்கு வந்து உணவருந்துங்கள்’ என்று கூறினார். ‘சரி, நீங்கள் செல்லுங்கள், நாங்கள் நீராடிவிட்டு வருகிறோம்’ என்று நாமதேவர் சொல்லி நீராடச் சென்றார்.

கமலாகர், மனைவியிடம் உணவு தயாரிக்கச் சொன்னார். சுமதி, அக்கம்பக்கத்தாரிடம் பொருட்களைக் கடனாக வாங்கி சமையல் வேலைகளைக் கவனிக்க ஆரம்பித்தாள். அப்போது விறகு தீர்ந்துவிட்டது. அதனால், கொல்லைப்புறத்தில் உள்ள சுள்ளிகளை எடுத்து வரும்படி தனது ஐந்து வயது மகனை அனுப்பினாள்.
சிறுவன் பத்மாகர் சுள்ளிகளை எடுக்கும்போது, அதனடியில் இருந்த பாம்பு அவனைத் தீண்டியது. சில நிமிடங்களில் அந்தக் குழந்தை இறந்தது. சுமதி அழுதாள். ஆனால், சாதுக்களுக்கு அன்னமிடுவது பாதிக்க

க்கூடாது என்று நினைத்து, அழுகையை அடக்கி, மனம் இறுகியவளாய், குழந்தையை வீட்டின் ஒரு மூலையில் கொண்டு வந்து கிடத்திவிட்டு, மீண்டும் குளித்து சமைக்க ஆரம்பித்தாள்.

சாதுக்கள் வந்ததும், கமலாகர் அவர்களை உபசாரம் செய்ய, உணவு பரிமாறினார்கள். நாமதேவர், ஏதோ ஒரு வித இறுக்கமான அமைதியை உணர்ந்தார். பின்னர் அவர், உன் குழந்தையைக் கூப்பிடு, அவனுடன் சேர்ந்து உண்கிறோம் என்றார். சுமதி, ‘ஸ்வாமி, அவன் உறங்கிக் கொண்டிருக்கிறான், இப்போதுதான் சாப்பிட்டான்’ என்றாள். குழந்தையை எழுப்பி அழைத்து வா என்றார். அவள், எவ்வளவு எழுப்பியும் எழுந்திருக்கவில்லை என்றாள். நாமதேவரோ, குழந்தை வராமல் நாங்கள் உண்ணமாட்டோம் என்று சொல்ல, சுமதி செய்வதறியாது வேறு வழியில்லாமல் உண்மையைச் சொன்னாள்.

நாமதேவர், விட்டலா, இது என்ன சோதனை? அந்தக் குழந்தை எழுந்து வராமல், நாங்கள் உன் பிரசாதத்தை உண்ணமாட்டோம். உன் பக்தனை இவ்வாறு சோதிப்பாயா? என்று பாண்டுரங்கனிடம் பிரார்த்திக்க, குழந்தை தூக்கத்திலிருந்து விழிப்பதுபோல் விழித்து எழுந்து ஓடி வந்தது. சுமதியின் சந்தோஷத்திற்கு அளவே இல்லை. குழந்தையை ஆரத் தழுவினாள். நாமதேவரை வணங்கினாள். குழந்தையுடன் சேர்ந்து சாதுக்கள் அனைவரும் உணவு உண்டார்கள். சாதுக்களும், நாமதேவரும் அவர்களை ஆசீர்வதித்து, குழந்தைக்கு ‘க்ருஷ்ண மந்த்ரம்’ உபதேசம் செய்து சென்றனர்.
ஒரு நாள் விட்டலன், வயதான ப்ராம்மண வேடம் பூண்டு, சுமதியிடம், எனக்குப் பசிக்கிறது, ஏதாவது கொடு என்றான். அவளும் பொருட்களை இரவல் வாங்கி சமைத்து, அவருக்கு உணவளித்தாள்.

வெளியே சென்றிருந்த கமலாகர் வீடு திரும்பியதும், கிழவனாக வந்த விட்டலனுக்குக் கால் அமுக்கிவிட, அவர்கள் மகன் விசிறினான். சுமதி உணவு உண்ண அழைத்தும்கூட, கமலாகர் செல்லவில்லை. பசியைப் பொருட்படுத்தாமல் கிழவருக்குப் பணிவிடை செய்துகொண்டிருந்தார். ‘யோக நித்திரையில்’ இருந்து வெகு நேரம் கழித்துக் கண்விழித்த கிழவர், நீ போய் சாப்பிடு என்றதும் அனைவரும் உண்டனர். அப்போது கிழவர் விட்டலனாக தரிசனம் கொடுத்து, ‘உன் பணிவிடையில் மகிழ்ந்தேன்’ என்று திருவாய் மலர்ந்தருளினார். ‘எப்போதும் உங்கள் மனதில் நீக்கமற நிலைத்திருப்பேன்’ என்றும் வரமருளினார்.

கமலாகர், தன் மனைவி, மகனுடன் பகவானை எப்போதும் துதித்தபடி சந்தோஷமாக நாட்களைக் கழித்தார்.

72 ம் பகுதியுடன் கண்ணன் கதைகள் நிறைவடைந்தது.

———————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ ராதா ப்ரணாமம்–ஸ்ரீ கீத கோவிந்தம் –

December 6, 2022

கீத கோவிந்தம் 12 அத்தியாயங்களைக் கொண்ட ஒரு காவியம் ஆகும். இதனை 12ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஜெயதேவர் என்பவர் இயற்றினார். பக்தி இலக்கியத்தின் முக்கியமான நூலாகவும், சமஸ்கிருத கவிதை நூல்களுக்கு ஓர் எடுத்துக்காட்டாகவும் திகழ்கிறது இந்நூல். சமஸ்கிருதத்தில் காவியங்கள் இரண்டு வகைப்படும். அவை சாதாரண காவியம், மற்றும் மஹா காவியம் ஆகும். கீத கோவிந்தம் மஹா காவியம் வகையைச் சார்ந்ததாகும்.

இதன் ஒவ்வொரு பாகமும் 24 பிரபந்தங்களை அடக்கியதாகும். ஒவ்வொரு பிரபந்தத்திலும் எட்டு இருவரிச் செய்யுள்கள் இருக்கும். அதனால் இவற்றுக்கு அஷ்டபதி என்றும் பெயர்.

அப்ரக்ருத தத்வ யார ஹய அகோசார
பௌதிகா பவேதே யார அபத்த அந்தரா

அப்ரகிருத-தத்துவம் (ஆன்மீகக் கொள்கைகள்) என்பது சாதாரணமான உணர்வுகளால் இதயம் கட்டப்பட்டிருப்பவர்களுக்குப் புலனாகாது.

அத்யாத்ம-நயனா யார உன்மிலிதா நய
பிரேம-தத்வே அதிகார தாஹார ந ஹயா

ஆன்மீகக் கண்கள் திறக்கப்படாதவர்களுக்கு, அத்தகைய நபர்களுக்கு பிரேமா – தத்வா (தெய்வீக அன்பின் கொள்கை) எந்த தகுதியும் இல்லை.

சமஸ்த தத்வேரா சாரா மதுர சாதனா
பூர்ணாநந்த லாப யாதே கரே சாது-ஜன

 அனைத்து ஆன்மீக உண்மைகளின் சாராம்சம் மதுரா-சாதனா (இணைய ரசத்தை வளர்ப்பது ), இதன் மூலம் சாதுக்கள் முழுமையான பேரின்பத்தை அடைகிறார்கள்.

சு-கீத-கோவிந்த க்ரந்தே சே பத்ம பிரகாஷா அதிகாரி பேதே தாரா
சாஸ்கோ-விகாசா

அந்தத் தாமரை ( மாதுர்ய-ரசத்தின் ) அற்புதமான புத்தகம், கீத கோவிந்தமாக வெளிப்படுகிறது , மேலும் பல்வேறு வகையான தகுதிகளின் அடிப்படையில், அது சுருங்கி அல்லது விரிவடைகிறது.

அதிகாரி பிரேமி ஜானே மானஸ-நயனே
நித்யானந்த ஞான-யோக தேகே விருந்தானே

மனக் கண்ணால், பிரேமை கொண்ட ஒரு தகுதியான நபர், நித்திய ஆனந்தமான ஞானத்தின் உதவியுடன் பிருந்தாவனத்தை உணர்கிறார் .

அதிகாரி நா ஹையா யஹார அந்தரா
ராதா-கிருஷ்ணா-பிரேம-சுதா யாசே நிரந்தர தாஹார
ஆகணாக்ஷா கபு நா ஹயா புராண
காராபிராபிராகல் தாதாயசித்ர-பிரமாணம்

 தகுதி பெறாத ஒருவருக்கு, ராதா-கிருஷ்ண பிரேமையின் அமிர்தத்திற்காக இடைவிடாது ஏங்கும் ஒருவருக்கு , அவரது ஆசை ஒருபோதும் நிறைவேறாது. மாயாவின் திட்டங்களால் உருவாக்கப்பட்ட ஒரு படத்தை மட்டுமே அவர் பார்க்கிறார்.

ப்ராக்ருத கரிய தேகே விருந்தாவன-தத்வா
ஹீனா பாவே லய பரப்ரஹ்மேர மஹத்வா

அவர் பிருந்தாவனத்தின் ஆன்மீக யதார்த்தத்தை ஜடப்பொருளாகக் கருதுகிறார் மற்றும் பரமாத்மாவின் பெருமைகளை மிகவும் அற்பமானதாகக் கருதுகிறார்.

நாயக-நாயக-பாவே பத்த கரி’மனா
ப்ராக்ருத காரிதே ஆத்மா கரே சமர்பணா

நாயகன், நாயகி என்ற கருத்துக்களுக்குக் கட்டுப்பட்ட மனதுடன், இந்தப் புத்தகம் உலகியல் சுரண்டல்களைப் பற்றியது என்று நம்புவதற்கு அவர் தன்னை ஒப்படைத்தார்.

அதாவ சாது-கனா இ கிரந்த-பதனே
ஆத்யாத்மிகா பவ லஹா நிஜ நிஜ மானே

எனவே, ஓ சாதுக்களே , இந்தப் புத்தகத்தைப் படிக்கும் போது, ​​உங்கள் மனதிற்குள் இருக்கும் ஆன்மீகப் பாவத்தைப் புகலிடம் பெறுங்கள்.

பத்மாவதி-நாதா யஹா கைலா ஆஸ்வதனா
சே விசுத்த பிரேம கராஹா சாதனா

 பத்மாவதியின் (ஜெயதேவனின்) கணவனால் எதை ருசித்ததோ – அதுவே நீ வளர்க்க வேண்டிய தூய பிரேமை .

 ப்ரஹ்ம-தத்வ பரி-சுத்த சத்வ-குண-தாம
ஸாரக்ராஹி வைஷ்ணவேர யஹதே விஷ்ரமா

 ஆழ்நிலை கொள்கைகள் மிகவும் தூய்மையானவை மற்றும் அவை சத்வ-குணத்தின் உறைவிடம் . அவர்கள் சாராகிரஹி வைஷ்ணவர்களின் (சாரத்தை தேடுபவர்கள்) ஓய்வு .

சே கோலோக-தாம தியாஜி’ தமோ-தர்மே ரதா
ஹைபே யஹார மனா யே பாபி சதாதா

தமோ-தர்மத்தில் (அறியாமையின் மதங்கள்) தங்கள் மனதை ஈடுபடுத்துவதற்காக கோலோக தாமத்தை நிராகரிப்பவர் எப்போதும் துரோகியாகவே கருதப்படுகிறார்.

கீத 
கோவிந்தம் பன்னிரண்டு அத்தியாயங்களைக் கொண்டுள்ளது, மேலும் இருபத்தி நான்கு பாடல்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பாடலும் எட்டு ஜோடிகளைக் கொண்டது, இது 
அஷ்டபதி என்று அழைக்கப்படுகிறது. அத்தியாயம் ஒன்று மற்றும் அத்தியாயம் இரண்டு, நான்கு ஐந்து மற்றும் பன்னிரெண்டாம் 
ஒவ்வொன்றிலும் இரண்டு 
அஷ்டபதிகள் உள்ளன; மூன்று, ஆறு, எட்டு, ஒன்பது மற்றும் பத்து அத்தியாயங்கள் ஒவ்வொன்றிலும் ஒரு 
அஷ்டபதி மட்டுமே உள்ளது . இவ்வாறு இருபத்து நான்கு 
அஷ்டபதிகள் உள்ளன . 
இந்த 
அஷ்டபதிகள் வெவ்வேறு மெல்லிசை 
ராகங்களில் இசை அமைக்கப்படலாம் 
, அவை பிற்காலத்தில் கவிஞர்களால் பாராட்டப்பட்டு பின்பற்றப்பட்டன. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட வர்ணனைகள் சமஸ்கிருதத்திலும், ஐம்பதுக்கும் மேற்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட வர்ணனைகளும் சமஸ்கிருதத்திலும், ஐம்பதுக்கும் மேற்பட்ட வர்ணனைகள் இந்தியாவில் பிராந்திய மொழிகளிலும் பல வெளிநாட்டு மொழிகளிலும் எழுதப்பட்டுள்ளன.

முதல் பாடலில் நான்கு அறிமுக வசனங்கள் உள்ளன, அதைத் தொடர்ந்து பதினொரு அஷ்டபதிகள் விஷ்ணுவின் பத்து அவதாரங்களின் நோக்கத்தை விவரிக்கின்றன மற்றும் முடிவில் பணியை தடையின்றி முடிக்க தர்ப்பணம் கொடுக்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து மற்றொரு அஷ்டபதியில் படைப்பின் நாயகன் போற்றப்படுகிறார். இங்கே ஆசிரியர் இந்த அஷ்டபதியை மங்களம் – ஆசிர்வாதம் என்று குறிப்பிட்டுள்ளார்.

மூன்றாவது பாடலில், வசந்த காலம், இனிமையான வாசனை மற்றும் குளிர்ந்த காற்று போன்ற பலதரப்பட்ட அம்சங்களுடன் விவரிக்கப்பட்டுள்ளது, தேனீக்கள் மற்றும் காக்காக்கள் கிருஷ்ணரை நினைத்துக்கொண்டிருக்கும் இனிமையான சத்தங்கள், கிருஷ்ணரைக் காணக்கூடிய இந்த வில்லுப்பாட்டுகளுக்கு தனது முதல் தோழியால் அழைத்துச் செல்லப்பட்டார். இந்த நம்பிக்கையில் ராதா தன் தோழியைப் பின்தொடர்கிறாள்.

நான்காவது பாடலில், விருந்தாவனத்தின் இருண்ட காட்டில் அனைத்து கோபியர்களுடன் கிருஷ்ணரின் காதல் நடனத்தை கவிஞர் விவரிக்கிறார். அனைத்து கோபியர்களும் அவரைச் சூழ்ந்துகொண்டு, மகிழ்ச்சியுடன் அவரைத் தழுவி, அன்புடன் அரவணைத்து, ஒருவரைக் கட்டிப்பிடித்து, இன்னொருவரை ஆவேசத்துடன் முத்தமிட்டு, இன்னொருவரைப் பார்த்து, மற்றப் பெண்ணுடன் சிரித்துப் பாராட்டுகிறார். உண்மையில், கிருஷ்ணர் அனைவருக்கும் பேரின்பத்தை அளிப்பதாக ஜெயதேவர் கூறுகிறார்.

பதினொன்றாவது பாடலில் விப்ரலம்பச் சிருங்காரத்தைப் பற்றிக் கவிஞர் விவரிக்கிறார் . அன்பின் கடவுள் கிருஷ்ணன் யமுனை நதிக்கரையில் ராதைக்காக காத்திருக்கிறான். கவிஞர் ராதை மற்றும் கிருஷ்ணரின் அரவணைப்பை மின்னலுடனும் கருமேகத்துடனும் வெள்ளை கொக்கு மற்றும் கருமேகத்துடனும் ஒப்பிடுகிறார்.

பன்னிரண்டாவது பாடலில், கவிஞர் ராதையின் வலியையும் துயரத்தையும் கிருஷ்ணரைப் பிரிந்ததை விவரிக்கிறார். அசைய முடியாமல் தன் வில்லில் அமர்ந்திருக்கும் ராதையின் நிலையைப் பார்த்து, ஆவேசத்தால் நிரம்பி, கிருஷ்ணரிடம் எப்போதும் தன் மனதை நிலை நிறுத்தினாள். கிருஷ்ணனை எங்கும் பார்க்கும் ராதாவை, தன் மனக்கண் முன்னே, தன் காதலனின் ஒரே நினைவுடன் தான் உயிரோடு இருக்கிறாள் என்று கிருஷ்ணனிடம் கூறுகிறாள் சகி . ராதாவைச் சந்திக்க விரைவாகச் செல்லும்படி சகி அவனைக் கேட்டுக்கொள்கிறாள் ; கிருஷ்ணரின் வருகைக்காக முழு அலங்காரத்துடன் காத்திருக்கிறார். 

————-

கீ³தகோ³வின்த³ம் ப்ரத²ம: ஸர்க:³ – ஸாமோத³ தா³மோத³ர:

॥ கீ³தகோ³வின்த³ம் ॥
॥ அஷ்டபதீ³ ॥

॥ ஶ்ரீ கோ³பாலக த்⁴யானம் ॥

யத்³கோ³பீவத³னேன்து³மண்ட³னமபூ⁴த்கஸ்தூரிகாபத்ரகம் யல்லக்ஷ்மீகுசஶாதகும்ப⁴ கலஶே வ்யாகோ³சமின்தீ³வரம் ।
யன்னிர்வாணவிதா⁴னஸாத⁴னவிதௌ⁴ ஸித்³தா⁴ஞ்ஜனம் யோகி³னாம் தன்னஶ்யாமளமாவிரஸ்து ஹ்ருத³யே க்ருஷ்ணாபி⁴தா⁴னம் மஹ: ॥ 1 ॥

॥ ஶ்ரீ ஜயதே³வ த்⁴யானம் ॥

ராதா⁴மனோரமரமாவரராஸலீல-கா³னாம்ருதைகப⁴ணிதம் கவிராஜராஜம் ।
ஶ்ரீமாத⁴வார்ச்சனவித⁴வனுராக³ஸத்³ம-பத்³மாவதீப்ரியதமம் ப்ரணதோஸ்மி நித்யம் ॥ 2 ॥

ஶ்ரீகோ³பலவிலாஸினீ வலயஸத்³ரத்னாதி³முக்³தா⁴க்ருதி ஶ்ரீராதா⁴பதிபாத³பத்³மபஜ⁴னானந்தா³ப்³தி⁴மக்³னோனிஶம் ॥
லோகே ஸத்கவிராஜராஜ இதி ய: க்²யாதோ த³யாம்போ⁴னிதி⁴: தம் வன்தே³ ஜயதே³வஸத்³கு³ருமஹம் பத்³மாவதீவல்லப⁴ம் ॥ 3 ॥

॥ ப்ரத²ம: ஸர்க:³ ॥
॥ ஸாமோத³தா³மோத³ர: ॥

மேகை⁴ர்மேது³ரமம்ப³ரம் வனபு⁴வ: ஶ்யாமாஸ்தமாலத்³ருமை-ர்னக்தம் பீ⁴ருரயம் த்வமேவ ததி³மம் ராதே⁴ க்³ருஹம் ப்ராபய ।
இத்த²ம் நன்த³னிதே³ஶிதஶ்சலிதயோ: ப்ரத்யத்⁴வகுஞ்ஜத்³ருமம் ராதா⁴மாத⁴வயோர்ஜயன்தி யமுனாகூலே ரஹ:கேலய: ॥ 1 ॥

மேகைர் மேதுரம் அம்பரம் வன-புவஹ் ஷ்யமாஸ் தமால-த்ருமைர்:
நக்தம் ப்ரேரு ராயயம் த்வம் ஏவ தத் இமம், ராதே காஹம் ப்ராபய |
இத்தம் நந்த-நிதேஷதஹ கலிதயோஉ ப்ரத்ய-அத்வ-குய்ஜ-த்ருமா
ராதா-மாதவயோர் ஜெயந்தி யமுனா-குலே ரஹௌ-கேலயா: ||1||

வானம் மேகங்களால் அடர்த்தியானது; வனப்பகுதி தமலா மரங்களால் இருண்டது; இரவு அவனை (கிருஷ்ணனை) பயமுறுத்துகிறது; ஓ ராதா! நீங்கள் அவரை வீட்டிற்கு அழைத்துச் செல்லுங்கள்; இது நந்தனிடமிருந்து வந்த கட்டளை. ஆனால், ராதாவும் மாதவனும் யமுனை நதிக்கரையில் உள்ள மரத்திற்கு வழிதவறி, அவர்களின் ரகசிய காதல் விளையாட்டு மேலோங்குகிறது.

வாக்³தே³வதாசரிதசித்ரிதசித்தஸத்³மா பத்³மாவதீசரணசாரணசக்ரவர்தீ ।
ஶ்ரீவாஸுதே³வரதிகேலிகதா²ஸமேதம் ஏதம் கரோதி ஜயதே³வகவி: ப்ரப³ன்த⁴ம் ॥ 2 ॥

ஸ்ரீ-வாஸுதேவ-ரதி-கேலி-கதா-ஸமேதம்
ஏதம் கரோதி ஜெயதேவ-கவிஹ் பிரபந்தம் ||2||

மகா கவி ஸ்ரீ ஜெயதேவரின் இதயம், பத்மாவதியின் காலடியில் இருக்கும் பேச்சாற்றல் தேவி (சரஸ்வதி)யால் அலங்கரிக்கப்பட்ட மாளிகை போன்றது, ஸ்ரீ மற்றும் வாசுதேவா ஆகியோரின் தெய்வீக நாடகங்களை உள்ளடக்கிய இந்த சிறந்த படைப்பை இயற்றுகிறது. ஜெயதேவா – ஜெயா என்றால் “மிகச் சிறப்பானது”; தேவா என்றால் த்யோதயாதி, ப்ரகாஷயதி அல்லது “அவர் ஒளிரச் செய்கிறார்”. ஸ்ரீஜெயதேவா என்பது ஸ்ரீ கிருஷ்ணரின் சிறந்த பொழுது போக்குகளை அவரது பக்தியின் மூலம் ஒளிரச் செய்பவர்.

யதி³ ஹரிஸ்மரணே ஸரஸம் மனோ யதி³ விலாஸகலாஸு குதூஹலம் ।
மது⁴ரகோமலகான்தபதா³வலீம் ஶ்ருணு ததா³ ஜயதே³வஸரஸ்வதீம் ॥ 3 ॥

யதி ஹரி-ஸ்மரணே சரசம் மன:
யதி விலாச-கலாசு குதூஹலம் |
மதுர-கோமலா-காந்த-பதாவலேம்
ஷ்ருணு ததா ஜெயதேவ-சரஸ்வதிம் ||3||

அன்பான பார்வையாளர்களே! ஸ்ரீ ஹரியின் பொழுது போக்குகளைக் கேட்கும் பொழுது உங்கள் மனம் எப்போதும் புதுமையான அன்பினால் நிரம்பியிருந்தால், காமக் கலைகளில் அவருடைய புத்திசாலித்தனத்தைப் பற்றி அறிய நீங்கள் ஆர்வமாக இருந்தால், மென்மையான, மென்மையான மற்றும் மென்மையானவற்றைக் கேட்டு நீங்கள் ஆனந்தத்தில் மூழ்கிவிடுவீர்கள். கவிஞர் ஜெயதேவாவின் இப்பாடல் தொகுப்பின் அன்பான வசனங்கள்

வாச: பல்லவயத்யுமாபதித⁴ர: ஸன்த³ர்ப⁴ஶுத்³தி⁴ம் கி³ராம் ஜானீதே ஜயதே³வ ஏவ ஶரண: ஶ்லாக்⁴யோ து³ரூஹத்³ருதே ।
ஶ்ருங்கா³ரோத்தரஸத்ப்ரமேயரசனைராசார்யகோ³வர்த⁴ன-ஸ்பர்தீ⁴ கோபி ந விஶ்ருத: ஶ்ருதித⁴ரோ தோ⁴யீ கவிக்ஷ்மாபதி: ॥ 4 ॥

vacaù பல்லவயதி உமாபதிதரா, ஸந்தர்ப-சுத்திம் கிரிஜா
ஜானிதே ஜெயதேவ ஏவ ஶரணா, ஶ்லாக்யோ துருஹ-த்ருதே |
ஶ்ருங்காரோத்தர-ஸத்-ப்ரமேய-ரசனைர்:, ஆசார்ய-கோவர்தன-
ஸ்பர்தே, கோ’பி ந விஷ்ருத, ஸ்ருதிதரோ தோயீ கவி-க்ஷ்மாபதி: ||4| |

உமாபதிதாரா என்ற புகழ்பெற்ற கவிஞரின் சொல்லாட்சிக் குறிப்புகள் மற்றும் பிற பேச்சு வடிவங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. சரண என்ற கவிஞன் தனது மறைநூல் வசனங்களால் பாராட்டைப் பெற்றுள்ளார். உலகக் காதல் சுவையை கோவர்த்தனத்தைப் போல் சாமர்த்தியமாகச் சொல்லக்கூடிய கவிஞரைப் பற்றி யாரும் கேள்விப்பட்டிருக்க மாட்டார்கள். கவிராஜ தோயி எதையும் கேட்ட பிறகு ஒருமுறை சொல்லலாம். இந்த வல்லமைமிக்க கவிஞர்கள் கூட திறமையின் ஒவ்வொரு துறையிலும் தேர்ச்சி பெற முடியாதபோது, ​​ஜெயதேவனின் கவிதை எப்படி அனைத்து பண்புகளுடனும் நிறைந்திருக்கும்? (இதன் மூலம் அவர் தனது பணிவை வெளிப்படுத்துகிறார்)

॥ கீ³தம் 1 ॥

ப்ரலயபயோதி⁴ஜலே த்⁴ருதவானஸி வேத³ம் ।
விஹிதவஹித்ரசரித்ரமகே²த³ம் ॥
கேஶவ த்⁴ருதமீனஶரீர ஜய ஜக³தீ³ஶ ஹரே ॥ 1 ॥

பிரளய-பயோதிஜலே கோபால கிருஷ்ணா, த்ருதவாநஸி வேதம்
விஹித-வஹித்ர-சரித்ரம் அகேதம் |
கேசவ த்ருத-மின-ஷரீர
ஜெய ஜகதீச ஹரே ||த்ருவபதா||

இறைவா, மீன் வடிவில்! கரைப்பு வெள்ளத்தில், வேதங்களின் வெளிப்பட்ட அறிவை, ஒரு படகு போல, முயற்சியின்றி தாங்கி வைத்திருக்கிறீர்கள். வாழ்க! ஹரி, உலக கடவுளே, உனக்கே வெற்றி!

க்ஷிதிரதிவிபுலதரே தவ திஷ்ட²தி ப்ருஷ்டே² ।
த⁴ரணித⁴ரணகிணசக்ரக³ரிஷ்டே² ॥
கேஶவ த்⁴ருதகச்ச²பரூப ஜய ஜக³தீ³ஶ ஹரே ॥ 2 ॥

கிதிரதி-விபுலதரே கோபால கிருஷ்ணா தவ திஹதி பே
தாரை-தாரா-கின-சக்ர-கரிஹே |
கேசவ த்ருத-கச்சப-ரூப
ஜெய ஜகதீச ஹரே ||1||

ஆண்டவரே, ஆமை வடிவில்! உங்கள் முதுகின் பரந்த பரப்பில், அது சுமக்கும் பூமியின் சுமையால் சோர்வடைந்து, உலகம் பாதுகாப்பாக நிற்கிறது. வாழ்க! ஹரி, உலக கடவுளே, உனக்கே வெற்றி!

வஸதி த³ஶனஶிக²ரே த⁴ரணீ தவ லக்³னா ।
ஶஶினி கலங்ககலேவ நிமக்³னா ॥
கேஶவ த்⁴ருதஸூகரரூப ஜய ஜக³தீ³ஶ ஹரே ॥ 3 ॥

வசதி தாசன-சிகரே கோபால கிருஷ்ணா தரணி தவ லக்ன ஷாசினி கலக
-கலேவ நிமக்னா |
கேசவ த்ருத-சுகர-ரூப
ஜெய ஜகதீச ஹரே ||2||

ஆண்டவரே, பன்றியின் வடிவில்! சந்திரனின் வட்டில் உள்ள இருண்ட குறியைப் போல, உங்கள் தந்தத்தின் நுனியில் உலகம் அமைதியாக இருக்கிறது. வாழ்க! ஹரி, உலக கடவுளே, உனக்கே வெற்றி!

தவ கரகமலவரே நக²மத்³பு⁴தஶ்ருங்க³ம் ।
த³லிதஹிரண்யகஶிபுதனுப்⁴ருங்க³ம் ॥
கேஶவ த்⁴ருதனரஹரிரூப ஜய ஜக³தீ³ஶ ஹரே ॥ 4 ॥

தவ கர-கமலா-வரே , நக அத்பூத-ஶ்ரீங்கம்
தலித-ஹிராயகசிபு-தனு-பிஹக |
கேசவ த்ருத-நர-ஹரி-ரூப
ஜெய ஜகதீச ஹரே ||3||

ஓ ஆண்டவரே, மனித சிங்கத்தின் வடிவில்! தாமரை போன்ற அழகுள்ள உங்கள் கையில், அற்புதமான நுனிகளைக் கொண்ட விரல் நகங்கள் உள்ளன, அவை மிகவும் சக்திவாய்ந்த அரக்கன் ஹிரண்யகசிபுவை ஒரு பெரிய பூச்சியைப் போல கிழித்தன. வாழ்க! ஹரி, உலக கடவுளே, உனக்கே வெற்றி!

ச²லயஸி விக்ரமணே ப³லிமத்³பு⁴தவாமன ।
பத³னக²னீரஜனிதஜனபாவன ॥
கேஶவ த்⁴ருதவாமனரூப ஜய ஜக³தீ³ஶ ஹரே ॥ 5 ॥

சலயஸி விக்ரமணே , பலிமத்பூத-வாமன
பத-நக-நிர-ஜனித-ஜன-பவனா |
கேசவ த்ருத-வாமன-ரூப
ஜெய ஜகதீச ஹரே ||4||

குள்ள வடிவான இறைவனே! உங்கள் கால்களை ஊன்றி பலசாலியான பாலியை ஏமாற்றி விட்டீர்கள். உலகையே புனிதப்படுத்தும் நதியான கங்கை உன் கால் நகங்களிலிருந்து வெளிவந்து விட்டது. வாழ்க! ஹரி, உலக கடவுளே, உனக்கே வெற்றி!

க்ஷத்ரியருதி⁴ரமயே ஜக³த³பக³தபாபம் ।
ஸ்னபயஸி பயஸி ஶமிதப⁴வதாபம் ॥
கேஶவ த்⁴ருதப்⁴ருகு⁴பதிரூப ஜய ஜக³தீ³ஶ ஹரே ॥ 6 ॥

காஷ்த்ரிய-ருத்திர-மயே , ஜகத் அபகத-பாபம்
ஸ்நபயஸி பயஸி ஸமித-பவ-தபம் |
கேசவ த்ருத-ப்ருகு-பதி-ரூப
ஜெய ஜகதீச ஹரே ||5||

ஆண்டவரே, பிருகுவின் வடிவில், கொடுங்கோல் ஆட்சியாளர்களின் இரத்தத்தில் உலகத்தை குளிப்பாட்டினீர்கள், இதனால் பாவத்தை நீக்கி, அதன் உறவின் துயரத்தை அழித்துவிட்டீர்கள். வாழ்க! பிரபஞ்சத்தின் கடவுளான ஹரி, உனக்கே வெற்றி!

விதரஸி தி³க்ஷு ரணே தி³க்பதிகமனீயம் ।
த³ஶமுக²மௌலிப³லிம் ரமணீயம் ॥
கேஶவ த்⁴ருதராமஶரீர ஜய ஜக³தீ³ஶ ஹரே ॥ 7 ॥

விதராசி திக்ஷு ரனே , திக்-பதி-கமணியம்
தச-முக-மௌலி-பலி ராமையாம் |
கேசவ த்ருதா- ரகுபதி ரூபா
ஜெய ஜகதீச ஹரே ||6||

ஸ்ரீராமனின் சரீரத்திலே! போரில் ராவணன் என்ற அரக்கனின் பத்துத் தலைகளை, கார்டினல் திசைகளின் காவலர்களுக்கு அழகான காணிக்கையாகச் செய்துள்ளீர்கள். வாழ்க! ஹரி, உலக கடவுளே, உனக்கே வெற்றி!

வஹஸி வபுஷி விஶதே³ வஸனம் ஜலதா³ப⁴ம் ।
ஹலஹதிபீ⁴திமிலிதயமுனாப⁴ம் ॥
கேஶவ த்⁴ருதஹலத⁴ரரூப ஜய ஜக³தீ³ஶ ஹரே ॥ 8 ॥

வஹஸி வபுஷி விஷதே , வசன ஜலதாபம்
ஹல-ஹதி-பீதி-மிலித-யமுனாபம் |
கேசவ த்ருத-ஹல-தார-ரூப
ஜெய ஜகதீச ஹரே ||7||

உழவைத் தாங்குபவனாகிய பலராமன் வடிவான இறைவனே! உனது கலப்பையால் இழுத்துச் செல்லப்படுமோ என்ற அச்சத்தால் கருமையாகிய யமுனை போன்ற நீலநிற மேகத்தின் நிற ஆடையை உனது மாசற்ற உடம்பில் அணிகிறாய். வாழ்க! ஹரி, உலக கடவுளே, உனக்கே வெற்றி!

நின்த³ஸி யஜ்ஞவிதே⁴ரஹஹ ஶ்ருதிஜாதம் ।
ஸத³யஹ்ருத³யத³ர்ஶிதபஶுகா⁴தம் ॥
கேஶவ த்⁴ருதபு³த்³த⁴ஶரீர ஜய ஜக³தீ³ஶ ஹரே ॥ 9 ॥

நிந்தாசி யஜ்ஞ-விதே ஆஹாஹா! ஸ்ருதி-ஜாதம்
சதய-ஹ்ருதய தர்ஷித-பசு-கதம் |
கேசவ த்ருத-புத்த-ஷரீர
ஜெய ஜகதீச ஹரே ||8||

ஓ ஆண்டவரே, புத்தரின் உடலில், ஞானம் பெற்றவர்! உங்கள் இதயத்தின் மீது இரக்கத்தால், விலங்குகளைக் கொல்லும் யாகத்தின் சடங்குப் பகுதியை நீங்கள் கண்டனம் செய்துள்ளீர்கள். வாழ்க! ஹரி, உலக கடவுளே, உனக்கே வெற்றி!

ம்லேச்ச²னிவஹனித⁴னே கலயஸி கரவாலம் ।
தூ⁴மகேதுமிவ கிமபி கராலம் ॥
கேஶவ த்⁴ருதகல்கிஶரீர ஜய ஜக³தீ³ஶ ஹரே ॥ 1௦ ॥

ம்லேச்ச-நிவாஹ-நிதனே கலயஸி ​​கரவலம்
தூம-கேதும் இவ கிம் அபி கரலாம் |
கேசவ த்ருத-கல்கி-ஷரீர
ஜெய ஜகதீச ஹரே ||9||

கல்கி வடிவில் ஆண்டவரே! துன்மார்க்கரை அழிப்பதற்காக, விண்கல் போன்ற வாளைக் கையில் ஏந்தி, அவர்களுக்குப் பேரழிவு தரும் ரயிலைக் கொண்டு செல்கிறீர்கள். வாழ்க! ஹரி, உலக கடவுளே, உனக்கே வெற்றி!

ஶ்ரீஜயதே³வகவேரித³முதி³தமுதா³ரம் ।
ஶ்ருணு ஸுக²த³ம் ஶுப⁴த³ம் ப⁴வஸாரம் ॥
கேஶவ த்⁴ருதத³ஶவித⁴ரூப ஜய ஜக³தீ³ஶ ஹரே ॥ 11 ॥

ஸ்ரீ-ஜெயதேவ-காவேரிடம் இடம் உதிதம் உதரம்
ஷ்ருணு சுகதம் ஷுபதம் பவ-சரம் |
கேசவ த்ருத-தஷவித-ரூப
ஜெய ஜகதீச ஹரே ||10||

பத்து வடிவங்கள் எடுத்தவனே! ஜெயதேவாவின் இந்தப் பாடலைக் கேளுங்கள். இது நன்மையையும் மகிழ்ச்சியையும் அளிக்கிறது; அது வாழ்க்கையின் சாராம்சம். வாழ்க! ஹரி, உலக கடவுளே, உமக்கு வெற்றி!

வேதா³னுத்³த⁴ரதே ஜக³ன்னிவஹதே பூ⁴கோ³லமுத்³பி³ப்⁴ரதே தை³த்யம் தா³ரயதே ப³லிம் ச²லயதே க்ஷத்ரக்ஷயம் குர்வதே ।
பௌலஸ்த்யம் ஜயதே ஹலம் கலயதே காருண்யமாதன்வதே ம்லேச்சா²ன்மூர்ச்ச²யதே த³ஶாக்ருதிக்ருதே க்ருஷ்ணாய துப்⁴யம் நம: ॥ 5 ॥

வேதான் உத்தாரதே, ஜகந்தி வஹதே…, பூகோலம் உத்பிப்ரதே
தைத்யம் தாரயதே, பலிம் சலயதே, க்ஷத்ரக்-ஷாயம் குர்வதே… |
பௌலஸ்த்யம் ஜாயதே, ஹலம் கலயதே, காருண்ய மாதன்வதே
ம்லேச்சன் மூர்ச்சயதே, தஷ க்ருதி-க்ருதே,கிருஷ்ணாய துப்யம் நம: ||

வேதங்களை விடுவிப்பவர், அசையும் மற்றும் நிலையான உயிரினங்களின் உலகத்தை நிலைநிறுத்துபவர், அன்னை பூமியின் மீட்பர், ஹிரண்ய-கசிபுவைக் கொன்றவர், பலியை வஞ்சிப்பவர், க்ஷத்ரியர்களை அழிப்பவர், பவுலஸ்தியரை (ராவணன்) வென்றவர். , ஆயுதா எனப்படும் கலப்பையை கையாள்பவர், இரக்கத்தின் வக்கீல் மற்றும் பார்ப்பனர்களைக் கொன்றவர்; இந்த பத்து ஆன்மிக வடிவங்களை எடுத்துக் கொண்ட உங்களுக்கு, ஓ ஸ்ரீ கிருஷ்ணா! நான் உங்களுக்கு என் வணக்கங்களைச் சமர்ப்பிக்கிறேன்.

॥ கீ³தம் 2 ॥

ஶ்ரிதகமலாகுசமண்ட³ல! த்⁴ருதகுண்ட³ல! ।
கலிதலலிதவனமால! ஜய, ஜய, தே³வ! ஹரே! ॥ 1 ॥

ஸ்ரீத-கமலா-குச-மண்டல த்ருத-குண்டல இ
கலித-லலிதா-வன-மாலா
ஜெய ஜெய தேவ ஹரே ||த்ருவபதா||

ஓ தேவா! ஓ ஹரி! உங்கள் திகைப்பூட்டும் குண்டலத்துடன் (காதணிகள்) ஸ்ரீ (ராதா) மீது நீங்கள் ஓய்வெடுக்கிறீர்கள் மற்றும் உங்கள் மயக்கும் வனமாலா மாலையுடன் விளையாடுகிறீர்கள்! ஓ ஹரி, நீ வெற்றி பெறுவாயாக!

தி³னமணீமண்ட³லமண்ட³ன! ப⁴வக²ண்ட³ன! ।
முனிஜனமானஸஹம்ஸ! ஜய, ஜய, தே³வ! ஹரே! ॥ 2 ॥

தின-மணி-மண்டல-மதன
பவ-கதனா இ
முனி-ஜன-மானஸ-ஹஸ
ஜெய ஜெய தேவ ஹரே ||1||

ஓ தேவா! ஓ ஹரி! ஆயிரம் சூரியன்கள் போல் பிரகாசிக்கும் ஆபரணம் நீ. நீங்கள் பொருள் இருப்பின் அடிமைத்தனத்தைத் துண்டிக்கிறீர்கள். முனிவர்களின் இதயங்களின் மானசா (மன) ஏரியில் விளையாடும் அன்னம் நீ. நீங்கள் வெற்றிபெறட்டும்! நீங்கள் வெற்றிபெறட்டும்!

காலியவிஷத⁴ரக³ஞ்ஜன! ஜனரஞ்ஜன! ।
யது³குலனலினதி³னேஶ! ஜய, ஜய, தே³வ! ஹரே! ॥ 3 ॥

கலிய-விஷ-தார-பஞ்சன
ஜன-ரஞ்சனா இ
யதுகுல-நளின-தினேஷ
ஜெய ஜெய தேவ ஹரே ||2||

ஓ தேவா! ஓ ஹரி! காளியா என்ற விஷப் பாம்பின் பெருமையைப் பொடியாக்குகிறாய். உங்கள் அன்புக்குரியவர்களின் இதயங்களை முடிவில்லா மகிழ்ச்சியால் நிரப்புகிறீர்கள். யது வம்சத்தின் தாமரையை மலரச் செய்யும் சூரியன் நீ. நீங்கள் வெற்றிபெறட்டும்! நீங்கள் வெற்றிபெறட்டும்!

மது⁴முரனரகவினாஶன! க³ருடா³ஸன! ।
ஸுரகுலகேலினிதா³ன! ஜய, ஜய, தே³வ! ஹரே! ॥ 4 ॥

மது-முர-நரக-வினாஷன
கருடாசன இ
சுர-குல-கேலி-நிதான
ஜெய ஜெய தேவ ஹரே ||3| |

ஓ தேவா! ஓ ஹரி! மது, முரா, நரகா ஆகிய அரக்கர்களை அழிப்பவனே! உன்னுடைய உன்னதமான கழுகு கருடா மீது சவாரி செய்பவனே! மற்ற கடவுள்களின் மகிழ்ச்சிகரமான விளையாட்டை நீங்கள் ஊக்குவிக்கிறீர்கள். நீங்கள் வெற்றிபெறட்டும்! நீங்கள் வெற்றிபெறட்டும்!

அமலகமலத³லலோசன! ப⁴வமோசன்! ।
த்ரிபு⁴வனப⁴வனநிதா⁴ன! ஜய, ஜய, தே³வ! ஹரே! ॥ 5 ॥

அமலா-கமலா-தல-லோசன
பவ-மோசன இ
திரிபுவன-புவன-நிதான
ஜெய ஜெய தேவ ஹரே ||4||

ஓ தேவா! ஓ ஹரி! உன்னுடைய அற்புதமான கண்கள் மாசற்ற தாமரை மலரின் இதழ்களை ஒத்திருக்கின்றன. பௌதிக இருப்பின் துக்கத்திலிருந்து நீங்கள் விடுதலையை வழங்குகிறீர்கள். நீங்கள் மூன்று உலகங்களுக்கும் அடித்தளம். நீங்கள் வெற்றிபெறட்டும்! நீங்கள் வெற்றிபெறட்டும்!

ஜனகஸுதாக்ருதபூ⁴ஷண! ஜிததூ³ஷண! ।
ஸமரஶமிதத³ஶக²ண்ட²! ஜய, ஜய, தே³வ! ஹரே! ॥ 6 ॥

ஜனக-சுத-குச்சா-பூஷண
ஜித-தூஷண இ
சமர-ஷமித-தாஸ-காந்த
ஜெய ஜெய தேவ ஹரே ||5||

ஓ தேவா! ஓ ஹரி! உங்கள் அவதாரத்தில் சீதாதேவியை ஸ்ரீ ராமராக அலங்கரிக்கிறீர்கள். நீங்கள் துசானா என்ற அரக்கனை தோற்கடித்து, பத்து தலைகள் கொண்ட ராவணனை போரில் கொன்றதன் மூலம் உலகிற்கு அமைதியை மீட்டெடுக்கிறீர்கள். நீங்கள் வெற்றிபெறட்டும்! நீங்கள் வெற்றிபெறட்டும்!

அபி⁴னவஜலத⁴ரஸுன்த³ர! த்⁴ருதமன்த³ர! ।
ஶ்ரீமுக²சன்த்³ரசகோர! ஜய, ஜய, தே³வ! ஹரே! ॥ 7 ॥

அபிநவ-ஜல-தார-சுந்தர
தூத-மந்தர இ
ஸ்ரீ-முக-சந்திர-சகோர
ஜெய ஜெய தேவ ஹரே ||6||

ஓ சியாமசுந்தரா, உங்கள் நிறம் புதிய மழைமேகம் போல் பளபளக்கிறது. மந்தார மலையை உடையவனே! சந்திரனுக்கு ஒரு காகோரா பறவை பைன்களாக, நீங்கள் அதிர்ஷ்டத்தின் உச்ச தெய்வமான ஸ்ரீயின் சந்திரன் போன்ற முகத்துடன் இடைவிடாமல் இணைந்திருக்கிறீர்கள். ஓ ஹரி! ஓ தேவா! நீங்கள் வெற்றிபெறட்டும்! நீங்கள் வெற்றிபெறட்டும்!

தவ சரண ப்ராத வயம்
இதி பாவய இ
குரு குசலம் ப்ரணதேஷு
ஜய ஜய தேவ ஹரே ||7||

ஓ பகவானே, நாங்கள் உனது தாமரை பாதங்களில் தஞ்சம் அடைந்தோம். பக்தி (அன்பு) என்ற பரிசைக் கொண்டு எங்களை ஆசீர்வதிப்பதன் மூலம் நீங்கள் ஐஸ்வர்யத்தை வழங்குவீர்கள். ஓ தேவா! ஓ ஹரி! நீங்கள் வெற்றிபெறட்டும்! நீங்கள் வெற்றிபெறட்டும்!

ஶ்ரீஜயதே³வகவேரித³ம் குருதே முத³ம் ।
மங்க³லமுஜ்ஜ்வலகீ³தம்; ஜய, ஜய, தே³வ! ஹரே! ॥ 8 ॥

ஸ்ரீ-ஜெயதேவ-கவேர் இட
குருதே மூடம் இ
மகல முஜ்ஜ்வல-கீதா
ஜெய ஜெய தேவ ஹரே ||8||

ஓ தேவா, ஸ்ரீ ஜெயதேவாவால் இயற்றப்பட்ட இந்த வசீகரமும், பிரகாசமும், இன்னிசையுமான மங்கள ஆவாஹனம் (மங்களாசாசனம்) உங்கள் மகிழ்ச்சியை அதிகரிக்கட்டும். உன்னுடைய மகிமையான குணங்களைக் கேட்கும் மற்றும் சொல்லும் உனது பக்தர்களுக்கு அது பேரின்பத்தை அளிக்கட்டும். நீங்கள் வெற்றிபெறட்டும்! நீங்கள் வெற்றிபெறட்டும்!

பத்³மாபயோத⁴ரதடீபரிரம்ப⁴லக்³ன-காஶ்மீரமுத்³ரிதமுரோ மது⁴ஸூத³னஸ்ய ।
வ்யக்தானுராக³மிவ கே²லத³னங்க³கே²த-³ஸ்வேதா³ம்பு³பூரமனுபூரயது ப்ரியம் வ: ॥ 6 ॥

பத்மா-பயோதர-ததி, பரிரம்ப-லக்ன- காஷ்மேர
முத்ரிதம் உரோ மதுஸு…தனஸ்ய |
வ்யக்தானு ராகம் இவ, கேலட்-அனங்க-கேதா
ஸ்வேதாம்பு-புரம், அனுபுரயது ப்ரியம் வா….||9||

“ராதாவின் அரவணைப்பில் அவன் தங்கியிருக்கும்போது, ​​மதுசூதனனின் குங்குமப் பொட்டு அவனது இதயத்தில் ஆழமான அன்பு வெளிப்படுவதைப் போல வெளிப்பட்டது. அனுராகாவின் சிவப்புத் துளிகளின் வியர்வைத் துளிகளால் கறை படிந்திருக்கிறது (ஆர்வம்) மதுசூதனனின் பரந்த மார்பு, தனது காதலியுடன் இணைந்திருக்கும் போது, ​​உங்கள் அனைவரின் இதய விருப்பங்களையும் நிறைவேற்றட்டும்.

வஸன்தே வாஸன்தீகுஸுமஸுகுமாரைரவயவை-ர்ப்⁴ரமன்தீம் கான்தாரே ப³ஹுவிஹிதக்ருஷ்ணானுஸரணாம் ।
அமன்த³ம் கன்த³ர்பஜ்வரஜனிதசின்தாகுலதயா வலத்³பா³தா⁴ம் ராதா⁴ம் ஸரஸமித³முசே ஸஹசரீ ॥ 7 ॥

வஸந்தே வஸந்தி-குஸும-சுகுமாரைர் அவயவைர்
ப்ரமாந்தி காந்தரே பஹு-விஹித-கிருஷ்ணாநுசாரம் |
அமண்ட கந்தர்ப-ஜ்வர-ஜனித-சிந்தகுலதயா
வளட்-பஹா ராதா சரசம் இடம் உசே சஹா-காரி 

ஒருமுறை, அற்புதமான வசந்த காலத்தில், ராதிகா கிருஷ்ணனைத் தேடிக்கொண்டிருந்தபோது, ​​அவள் ஒரு காட்டுத் தோப்பில் அவனைத் தேட ஆரம்பித்தாள். அவளது நேர்த்தியான, இளம் கால்கள், மத்தவட் மலர்களைப் போல மென்மையானவை, சோர்வடைந்தன, மேலும் மன்மதன் அவள் மனதை கவலையினால் மயக்கமடையச் செய்தாள். அப்போது அவளின் அந்தரங்க தோழி அன்புடன் பின்வருமாறு உரையாற்றினாள்.

॥ கீ³தம் 3 ॥

லலிதலவங்க³லதாபரிஶீலனகோமலமலயஸமீரே ।
மது⁴கரனிகரகரம்பி³தகோகிலகூஜிதகுஞ்ஜகுடீரே ॥
விஹரதி ஹரிரிஹ ஸரஸவஸன்தே ந்ருத்யதி யுவதிஜனேன ஸமம் ஸகி² விரஹிஜனஸ்ய து³ரன்தே ॥ 1 ॥

லலிதா-லவாக-லதா-பரிசிலனா-கோமலா-மலய-சாமிரே |
மதுகர-நிகர-கரம்பித-கோகில-குஜித-குஞ்ச-குயிரே ||1||

அவர் வந்து, மீண்டும் மீண்டும் மென்மையான, வசீகரமான படர்தாமரைகளை அணைத்துக்கொள்ளும் போது மலாயா தென்றல் மிகவும் மயக்குகிறது. குக்கூக்களின் இனிமையான குஹூ சத்தம் மற்றும் தேனீக்களின் ட்ரோன் ஆகியவை அங்கும் இங்கும் குதிக்கும்போது வனப் போவர் ஊடுருவுகிறது.

விஹரதி ஹரிரிஹ சரஸ-வசந்தே
நிருத்யதி யுவதி-ஜநேன ஸமம் சகீ, விரஹி-ஜனஸ்ய துரந்தே ராதே (விஹரதி ஹரிரிஹா) ||த்ருவபதா||

மேலும், வசந்தம் பூத்துக் குலுங்கும் போது, ​​அன்பின் (பக்தி) திருவிழாவில் மூழ்கியிருக்கும் போது, ​​ஹரி தனது கோபியர்களுடன் இந்தக் காட்டில் நடனமாடுகிறார்.

உன்மத³மத³னமனோரத²பதி²கவதூ⁴ஜனஜனிதவிலாபே ।
அலிகுலஸங்குலகுஸுமஸமூஹனிராகுலப³குலகலாபே ॥ 2 ॥

உன்மத-மதன-மனோரத-பதிக-வது-ஜன-ஜன-ஜனித-விலாபே |
அலி-குல-சகுல-குசும-சமுஹா-நிரகுல-பகுல-கலாபே, ராதே விஹரதி ஹரிரிஹா ||2||

மடிலடி மரங்கள் பூக்களால் மூடப்பட்டிருக்கும். அவர்களின் கிளைகளில் காலி இடம் இல்லை. பம்பல்பீக்களின் எண்ணற்ற குழுக்கள் பகுலா பூக்களின் கொத்துகளில் முனகுகின்றன. மன்மதனின் அம்புகள் கோபியர்களை காயப்படுத்தியது, அங்கே கிருஷ்ணர் மற்ற கோபியர்களுடன் காதலில் மகிழ்ச்சியுடன் நடனமாடுகிறார்.

ம்ருக³மத³ஸௌரப⁴ரப⁴ஸவஶம்வத³னவத³லமாலதமாலே ।
யுவஜனஹ்ருத³யவிதா³ரணமனஸிஜனக²ருசிகிம்ஶுகஜாலே ॥ 3 ॥

ம்ரிக-மட-சௌரப, ரபஸ-வஷவத-நவ-டல-மலா-தமலே |
யுவ-ஜன-ஹ்ருதய-விதாரண மனஸிஜா, நக-ருசி-கிஞ்சுக-ஜலே, ராதே விஹரதி ஹரிரிஹா ||3||

புதிய இலைகளால் அலங்கரிக்கப்பட்ட தமலா மரங்கள் கஸ்தூரி போன்ற நறுமணத்தை எல்லா திசைகளிலும் பரப்புவதில் மகிழ்ச்சி அடைகின்றன. சகி, பார்! இந்த பளபளப்பான பல்ட்சா மலர்கள் காமதேவரின் விரல் நகங்களை ஒத்திருக்கும். காதல் காதல் மன்னன் இளமைத் தம்பதிகளின் மார்பில் கிழித்து விட்டான் போலும் .

மத³னமஹீபதிகனகத³ண்ட³ருசிகேஶரகுஸுமவிகாஸே ।
மிலிதஶிலீமுக²பாடலிபடலக்ருதஸ்மரதூணவிலாஸே ॥ 4 ॥

மதன-மஹிபதி-கனக-தண்ட-ருசி, கேசர-குசும-விகாஸே |
மிலித-ஷிலி-முக-பாடலா-பாதாலா,க்ருத-ஸ்மர-துன-விலாஸே, ராதே விஹரதி ஹரிரிஹா ||4||

மலர்ந்த ndga-kesara மலர்கள் மன்மத மன்னனின் தங்கக் கம்பிகளாகத் தோன்றுகின்றன, மேலும் பம்பல்பீகளால் சூழப்பட்ட பிடிதலி மலர்களின் கொத்துகள் அவனுடைய நடுக்கமாகத் தோன்றும்.

விக³லிதலஜ்ஜிதஜக³த³வலோகனதருணகருணக்ருதஹாஸே ।
விரஹினிக்ருன்தனகுன்தமுகா²க்ருதிகேதகத³ன்துரிதாஶே ॥ 5 ॥

விகலித-லஜ்ஜித-ஜகத்-அவலோகன-தருண-கருண-க்ருத-ஹஸே |
விரஹி-நிக்ருந்தன-குந்த-முகக்ருதி, கேதகி-தந்துரி தஸே, ராதே விஹரதி ஹரிரிஹா ||5||

வசந்தத்தின் வலிமைமிக்க செல்வாக்கால் உலகம் முழுவதும் வெட்கக்கேடானது போல் தெரிகிறது. இதைப் பார்த்து கருணை மரங்கள் பூத்து குலுங்குகின்றன. பார்! தனிமையில் இருக்கும் காதலர்களின் இதயங்களைத் துளைக்கும் ஈட்டிகள் போன்ற வடிவில், திருக்குறள் பூக்கள் எல்லாத் திசைகளிலும் பிரகாசமாக மலர்கின்றன, மேலும் அவர்களுடன் ஒன்றிணைவதில் திசைகளும் மகிழ்ச்சியடைகின்றன.

மாத⁴விகாபரிமலலலிதே நவமாலிகஜாதிஸுக³ன்தௌ⁴ ।
முனிமனஸாமபி மோஹனகாரிணி தருணாகாரணப³ன்தௌ⁴ ॥ 6 ॥

மாதவிகா-பரிமலா-லலிதே நவ-மாலதி-ஜாதி-சுகந்தௌ |
முனி-மானஸம் அபி மோஹன-காரீ தருவாகரண-பந்தௌ, ராதே விஹரதி ஹரிரிஹா ||6||

இளவேனிற் பூக்களின் தேனும், மல்லிகைப் பூக்களின் நறுமணமும் மனதை மயக்கும். பெரிய முனிவர்களின் மனங்கள் கூட வசந்த காலத்தில் கிளர்ந்தெழுகின்றன, அவர்கள் திடீரென்று குழப்பமடைகிறார்கள். வசந்தம் இளைஞர்களின் தன்னலமற்ற நண்பன்

ஸ்பு²ரத³திமுக்தலதாபரிரம்ப⁴ணமுகுலிதபுலகிதசூதே ।
ப்³ருன்தா³வனவிபினே பரிஸரபரிக³தயமுனாஜலபூதே ॥ 7 ॥

ஸ்பூரததி -முக்த-லதா-பரி ரம்பனா, முகுலித-புலகித-சூடே |
வ்ருந்தாவன-விபினே பரிசர-பரிகத-யமுனா-ஜல-பூதே, ராதே விஹரதி ஹரிரிஹா ||7||


பிருந்தாவனத்தின் வனத் தோப்புகளில் உள்ள மா மரங்கள் , அமைதியற்ற மத்தவி படர்தாமரையின் அணைப்பினால் பரவசமடைந்ததால், புதிதாக துளிர்விட்ட மொட்டுகளால் மூடப்பட்டிருக்கும் . அந்த வனத் தோப்புகளை ஒட்டி ஓடும் யமுனையின் தூய நீரில் கோபியர்களுடன் அன்புடன் விளையாடிக் கொண்டிருக்கிறார் ஸ்ரீ ஹரி.

ஶ்ரீஜயதே³வப⁴ணிதமித³முத³யதி ஹரிசரணஸ்ம்ருதிஸாரம் ।
ஸரஸவஸன்தஸமயவனவர்ணனமனுக³தமத³னவிகாரம் ॥ 8 ॥

ஸ்ரீ-ஜெயதேவ-பனிதம் இடம் உதயதி, ஹரி-சரா-ஸ்ம்ருதி-சரம் |
சரஸ-வசந்த-சமய-வன-வாரணம், அனுகத-மதன-விகாரம், ராதே விஹரதி ஹரிரிஹ சரஸ.. ||8||

இந்த மங்களகரமான, ரசம் நிறைந்த பாடல் ஸ்ரீ ஜெயதேவா மூலம் மிகச்சரியாக வெளிப்பட்டது. வசந்த காலத்தில் காட்டின் சித்தரிப்பு ராதா கிருஷ்ணனைப் பிரிந்த கவலையில் மூழ்கியிருக்கும் போது அவளது சிற்றின்ப மாறுபாடுகளால் நிரப்பப்படுகிறது. பேரார்வத்தின் மாற்றங்களோடு பின்னப்பட்ட, வசந்த காலம் ஸ்ரீ ஹரியின் தாமரை பாதங்களின் நினைவை எழுப்புகிறது.

த³ரவித³லிதமல்லீவல்லிசஞ்சத்பராக-³ப்ரகடிதபடவாஸைர்வாஸயன் கானநானி ।
இஹ ஹி த³ஹதி சேத: கேதகீக³ன்த⁴ப³ன்து⁴: ப்ரஸரத³ஸமபா³ணப்ராணவத்³க³ன்த⁴வாஹ: ॥ 8 ॥

தாராவி-தலிதா-மல்லி, வல்லி-சம்சத்-பரகா
பிரகதித்த-பட-வசை:, வசயன் கானா…நானி |
இஹ ஹி, தஹதி சேத:, கேதகி-கந்த-பந்து:…
ப்ரசராத் அஸம-பான ப்ராணவத்-கந்தவாஹ:||9||

“புதிதாக மலர்ந்த மல்லிகைப்பூக்களில் இருந்து தளர்வாக அசைக்கப்படும் மெல்லிய மகரந்தத்தால் காற்று காடுகளை நறுமணமாக்குகிறது, அது அன்பின் நறுமண மூச்சை வீசுகிறது, அது தொடும் ஒவ்வொரு இதயத்தையும் சித்திரவதை செய்கிறது.”

உன்மீலன்மது⁴க³ன்த⁴லுப்³த⁴மது⁴பவ்யாதூ⁴தசூதாங்குர-க்ரீட³த்கோகிலகாகலீகலகலைருத்³கீ³ர்ணகர்ணஜ்வரா: ।
நீயன்தே பதி²கை: கத²ங்கத²மபி த்⁴யானாவதா⁴னக்ஷண-ப்ராப்தப்ராணஸமாஸமாக³மரஸோல்லாஸைரமீ வாஸரா: ॥ 9 ॥

உன்மேலன், மது-கந்த-லுப்த-மதுபா, வ்யதுதா-சூடாங்குர
கிரிடா * கோகில-காகலி-கலகலை:, உத்கேரன-கர்ண-ஜ்வர: |
நியந்தே பதிகை:, கதம் கதம் அபி, த்யானா….வதானா
க்ஷண ப்ராப்த-ப்ராண, ஸமா சமகம, ரஸோ ல்லசை:, அமி வஸர:||10||

“தேனீக்கள் மொட்டுகள் திறக்கும் தேன் வாசனையைத் தேடும் போது மாம்பழத் தளிர்களில் குக்கூவின் இனச்சேர்க்கையின் சப்தங்கள் தனிமையில் இருக்கும் பயணிகளின் காதுகளில் காய்ச்சலை எழுப்புகின்றன, எப்படியோ அவர்கள் தங்கள் தியானத்தில் பரமாத்மாவுடன் தெய்வீக லீலைகளை நினைத்து க்ஷண பிராப்த பிராணனைப் போல உயிர்வாழ்கிறார்கள்.”

அனேகனாரீபரிரம்ப⁴ஸம்ப்⁴ரம-ஸ்பு²ரன்மனோஹாரிவிலாஸலாலஸம் ।
முராரிமாராது³பத³ர்ஶயன்த்யஸௌ ஸகீ² ஸமக்ஷம் புனராஹ ராதி⁴காம் ॥ 1௦ ॥

அநேக-நரி……பரிரம்ப-சம்பிரம-
ஸ்பூரன்-மனோஹரி *விலாச-லாலசம்…. |
முரீம் …ärä…த், உபதர்ஷ யாந்த்யாஸௌ
சகி ஸமக்ஷம், புனராஹ… ராதிகாம்….

அப்போது ராதிகாவின் சாகி கிருஷ்ணாவை நிபுணத்துவத்துடன் தேடி அவர் அருகில் இருப்பதைக் கண்டார். அவரை மிகுந்த மரியாதையுடன் வரவேற்கும் அழகான கோபியர்களுடன் அவர் பொழுது போக்குகளில் மூழ்கியிருந்தார். கோபியர்கள் கிருஷ்ணரை அரவணைக்கும் ஆர்வத்தை வெளிப்படுத்தியபோது, ​​கிருஷ்ணரின் மனதில் சந்தோசமான, உணர்வுபூர்வமான பொழுதுபோக்கிற்கான தேவை திடீரென எழுந்தது. இந்தக் காட்சியை ராதாவிடம் சுட்டிக் காட்டி, சாகி மீண்டும் அவளிடம் பேசினாள்

॥ கீ³தம் 4 ॥

சன்த³னசர்சிதனீலகலேப³ரபீதவஸனவனமாலீ ।
கேலிசலன்மணிகுண்ட³லமண்டி³தக³ண்ட³யுக³ஸ்மிதஶாலீ ॥
ஹரிரிஹமுக்³த⁴வதூ⁴னிகரே விலாஸினி விலஸதி கேலிபரே ॥ 1 ॥

சந்தன-சர்சித-நிலா-கலேவர-பிட-வசன-வன-மாலி |
கேலி-காலன்-மணி-குண்டல-மண்டிதா, கந்த-யுக-ஸ்மிதா-ஷாலி ||1||

ஹரிரிஹ முக்த-வது-நிகரே, விலாசினி விலாசதி கேலி-பரே ||த்ருவபதா||

“ஓ விளையாட்டுத்தனமான ராதா, பார்! பீதாம்பரம் (மஞ்சள் துணி) மற்றும் வனமாலை (காட்டுப் பூக்களின் மாலை) அணிந்து, சந்தனப் பூச்சு (சந்தனம்) தனது நீல கைகால்களில் பூசப்பட்டு, இந்த விருந்தாவன வனத்தில் வசீகரிக்கப்பட்ட கோபியர்களுடன் ஹரி மிகுந்த மகிழ்ச்சியை உணர்கிறான். விளையாட்டில் தொங்கும் காதணிகள், சிரிக்கும் கன்னங்களை அலங்கரிக்கின்றன. அவரது கன்னங்களின் அழகு வியக்க வைக்கிறது மற்றும் அவரது விளையாட்டு சிரிப்பின் தேனுடன் அவரது முகம் அற்புதமான இனிமையைக் காட்டுகிறது.

பீனபயோத⁴ரபா⁴ரப⁴ரேண ஹரிம் பரிரம்ய ஸராக³ம் ।
கோ³பவதூ⁴ரனுகா³யதி காசிது³த³ஞ்சிதபஞ்சமராக³ம் ॥ 2 ॥

பின-பயோதர-பார-பரேண,. ஹரி பரிரப்ய சரகம் |
கோப-வது ரனு காயதி காசித், உதஞ்சித-பஞ்சம-ராகம் (ராதே, ஹரிரிஹ முக்த-வது-நிகரே) ||2| |

கோபியர்களில் ஒருவர் தீவிர பற்றுதலுடன் கிருஷ்ணரை உறுதியாகத் தழுவிக் கொண்டிருக்கிறார். கிருஷ்ணனின் மார்பில் அவளது கனமான மார்பகங்களை அழுத்தி, ஐந்தாவது இசை முறையில் அவனுடன் காதல் மெல்லிசையைப் பாடத் தொடங்கினாள்.

காபி விலாஸவிலோலவிலோசனகே²லனஜனிதமனோஜம் ।
த்⁴யாயதி முக்³த⁴வதூ⁴ரதி⁴கம் மது⁴ஸூத³னவத³னஸரோஜம் ॥ 3 ॥

கபி விலாஸ-விலோலா-விலோசனா, கேலன-ஜனதா-மனோஜம் |
த்யாயதி முக்த-வது மதுசூதன-வதன-சரோஜம் (ராதே, ஹரிரிஹ முக்த-வது-நிகரே) ||3||

மற்றொரு கோபி, அவனது அலாதியான நடுங்கும் தோற்றத்தால் ஈர்க்கப்பட்டு, மதுசூதனனின் தாமரை முகத்தில் தியானம் செய்கிறான். அவனது அமைதியற்ற கண்களின் காதல் பக்கவாட்டுப் பார்வைகளால் உணர்ச்சிமிக்க இளம் பெண்களின் இதயங்களில் அவன் காமத்தைத் தூண்டுகிறான், அவள் அவனது தாமரை முகத்தின் தேனைக் குடிக்க பேராசை கொண்டாள்.

காபி கபோலதலே மிலிதா லபிதும் கிமபி ஶ்ருதிமூலே ।
சாரு சுசும்ப³ நிதம்ப³வதீ த³யிதம் புலகைரனுகூலே ॥ 4 ॥

கபி கபோல-தலே மிலிதா லபிதும் கிமபி ஸ்ருதி-மூலே |
சாரு சுச்சும்பா நிதம்ப வதி, தயிதம் புலகைர் அணுகுலே (ராதே, ஹரிரிஹ முகதா-வது-நிகரே) ||4||

ஒரு வளைந்த கோபி தன் முகத்தை கிருஷ்ணனின் கன்னத்தில் சாய்த்து, அவனது காதில் ரகசியத்தை கிசுகிசுக்கிறாள். கிருஷ்ணர்
அவளது அன்பின் நோக்கத்தைப் புரிந்துகொண்டபோது , ​​அவர் பதிலடி கொடுத்தார். இந்தச் சாதகமான வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்ட கோபி, அவளது மிகவும் நேசத்துக்குரிய ஆசையை நிறைவேற்றிக் கொண்டான். மிகுந்த மகிழ்ச்சியுடன், அவள் அவனது கன்னத்தில் முத்தமிட ஆரம்பித்தாள்-

கேலிகலாகுதுகேன ச காசித³மும் யமுனாஜலகூலே ।
மஞ்ஜுலவஞ்ஜுலகுஞ்ஜக³தம் விசகர்ஷ கரேண து³கூலே ॥ 5 ॥

கேலி-கல-குடுகேன ச கச்சித், அமும் யமுனா-ஜல-குலே |
மஞ்ஜுல-வஞ்ஜுல-குஞ்ச-கதம், விச்சகர்ஷ கரேண துகுலே (ராதே, ஹரிரிஹ முக்த-வது-நிகரே) ||5||

காதல் கலையில் ஆர்வமுள்ள மற்றொரு கோபி, யமுனை நதிக்கரையில் ஒரு அழகான கரும்பு தோப்பில் ஒதுங்கிய இடத்தைக் கண்டுபிடித்தார். அமானுஷ்ய கலைகளின் மீதான மகிழ்ச்சியான மோகத்தால் தூண்டப்பட்ட அவள், கிருஷ்ணரின் பீதாம்பரத்தை இரண்டு கைகளாலும் இழுத்து இழுத்துச் சென்றாள்.

கரதலதாலதரலவலயாவலிகலிதகலஸ்வனவம்ஶே ।
ராஸரஸே ஸஹன்ருத்யபரா ஹரிணா யுவதி: ப்ரஶஶம்ஸே ॥ 6 ॥

கர-தல-தல-தரால-வலய வலி, கலித-கலஸ்வன-வம்ஷே |
ரஸ-ரஸே ஸஹ-ந்ருத்ய பரா, ஹரிண-யுவதி-ப்ரஶம்ஸே (ராதே, ஹரிரிஹ முக்த-வது-நிகரே)||6||


ஹரி ஒரு கோபி குடிபோதையில் உள்ளங்கைகளை அடித்து நடனமாடுவதைப் புகழ்ந்தார், அவரது தெய்வீக புல்லாங்குழலின் அற்புதமான மெல்லிசையைக் கேட்டு , அவளது வளையல்களின் ஒலியைக் கேட்டதும் அன்பின் சடங்கில் .

ஶ்லிஷ்யதி காமபி சும்ப³தி காமபி காமபி ரமயதி ராமாம் ।
பஶ்யதி ஸஸ்மிதசாருபராமபராமனுக³ச்ச²தி வாமாம் ॥ 7 ॥

ஶ்லிஷ்யதி கமாபி சும்பதி கம் அபி, கம் அபி ரமயதி ராமம் |
பஷ்யதி ச-ஸ்மித-சாரு-தாரம், அபரம் அனுகச்சதி வாமம் (ராதே, ஹரிரிஹ முக்த-வது-நிகரே) ||7||

கிருஷ்ணர் தனது அன்புக்குரியவர்களில் ஒருவரைத் தழுவிக் கொண்டிருக்கிறார்; அவர் இன்னொருவரை முத்தமிடுகிறார், வேறொரு இடத்தில் அவர் மற்றொருவருடன் உணர்ச்சிப்பூர்வமான அரவணைப்பை அனுபவிக்கிறார். வேறொரு இடத்தில் அவர் மற்றொரு காதலனின் முகத்தை எதிர்பார்ப்புடன் பார்க்கிறார், அதே நேரத்தில் அவளது இனிமையான புன்னகையின் அமிர்தத்தைப் பாராட்டுகிறார். வேறொரு இடத்தில் அவர் ஒரு விருப்பமுள்ள கோபியைப் பிரதிபலிக்கிறார்.

ஶ்ரீஜயதே³வகவேரித³மத்³பு⁴தகேஶவகேலிரஹஸ்யம் ।
வ்ருன்தா³வனவிபினே லலிதம் விதனோது ஶுபா⁴னி யஶஸ்யம் ॥ 8 ॥

ஸ்ரீ-ஜெயதேவ-பனிதம் இடம் அத்பூதம், கேசவ-கேலி-ரஹஸ்யம் |
விருந்தாவன-விபினே லலிதா விடனோது சுபானி யசஸ்யம் (ராதே, ஹரிரிஹ முக்த-வது-நிகரே, வில்சனி…)||8||

ஸ்ரீ ஜெயதேவரின் இந்த மங்களகரமான, மகிழ்ச்சிகரமான மற்றும் பிரமிக்க வைக்கும் பாடல் அனைவருக்கும் நற்பெயரை அதிகரிக்கட்டும். இந்தப் பாடல் அனைத்து நற்குணங்களையும் அருளுகிறது. கிருஷ்ணன் புலம்பும்போது நிகழ்த்திய சிற்றின்ப விளையாட்டுகளின் அற்புதமான மர்மத்தின் மீது ராதாவின் பார்வையை இது விவரிக்கிறது.

விஶ்வேஷாமனுரஞ்ஜனேன ஜனயன்னானந்த³மின்தீ³வர-ஶ்ரேணீஶ்யாமலகோமலைருபனயன்னங்கை³ரனங்கோ³த்ஸவம் ।
ஸ்வச்ச²ன்த³ம் வ்ரஜஸுன்த³ரீபி⁴ரபி⁴த: ப்ரத்யங்க³மாலிங்கித: ஶ்ருங்கா³ர: ஸகி² மூர்திமானிவ மதௌ⁴ முக்³தோ⁴ ஹரி: க்ரீட³தி ॥ 11 ॥

விஸ்வேஷம்* அனு ரஞ்சனேன ஜனயன், ஆனந்தம் இந்தேவர-
ஷ்ரேனே- ஷ்யாமலா-கோமளை:, உபநயன்… அங்கை: அனகோத்ஸவம் |
ஸ்வச்சந்தம் வ்ரஜ-சுந்தரி-பீர- பீட:, ப்ரத்ய-அங்க மா…லிங்கிதா:
ஶ்ரீங்கார: சகி மூர்த்திமான், இவ மாதௌ முகதோ, ஹரி: கிருதாதி… ||9||

“மக்களிடையே உலகில் பேரின்பத்தை ஏற்படுத்த, லக்ஷ்மி பதி (இந்திவரம்) தனது தெய்வீக நுரையுடன் (ஷ்யாமளா-கோமள ரூப) பிராணய லீலாவைத் தொடங்குகிறார். கிருஷ்ணர் மன்மதன் உருவமாகி, அவர் காதல் வசந்த கால சந்திப்புகளின் ரசத்தால் மகிழ்ந்தார். நீல தாமரை மலரின் அழகை மிஞ்சும் மென்மையான, நீல நிற உறுப்புகளுடன், அவர் மன்மதனின் பெரிய திருவிழாவைத் தொடங்குகிறார். தொடர்ந்து அதிகரித்து வரும் பற்றுதலுடன், கோபியர்களின் அலாதியான பேரார்வத்தை அவர்களின் எதிர்பார்ப்புகளை விட அதிகமாக திருப்திப்படுத்துகிறார். ஆயினும்கூட, அன்பின் பேரானந்தத்தில் ஆதரவற்ற முறையில் தொலைந்து போன வ்ரஜாவின் அழகிய கோபிகைகள், அவனது உடலின் ஒவ்வொரு பாகத்தையும் சுதந்திரமாகத் தழுவிக்கொண்டனர்.

அத்³யோத்ஸங்க³வஸத்³பு⁴ஜங்க³கவலக்லேஶாதி³வேஶாசலம் ப்ராலேயப்லவனேச்ச²யானுஸரதி ஶ்ரீக²ண்ட³ஶைலானில: ।கிம் ச ஸ்னிக்³த⁴ரஸாலமௌலிமுகுலான்யாலோக்ய ஹர்ஷோத³யா-து³ன்மீலன்தி குஹூ: குஹூரிதி கலோத்தாலா: பிகானாம் கி³ர: ॥ 12 ॥
அத்யோத் சங்க-வஸத்-புஜங்கா, கவாலா*க்லேஷாதி வேஷாசலம்
ப்ரலேய-ப்லவ நேச்சய, அநு சரதி, ஷ்ரே-கண்ட-ஷைல நிலா: |
கிஞ்ச ஸ்நிக்த-ரஸல-மௌலி , முகுலன் யா லோக்யா, ஹர்ஷோ தயாத்
உன்மிலந்தி* குஹு குஹுர் இதி, கலு தால:, பிகானாம் கிரா: ….||10||

சந்தன மலையிலிருந்து காற்று இப்போது இமயமலைச் சிகரங்களை நோக்கி வீசுகிறது, பல வாரங்களுக்குப் பிறகு பனியில் குதிக்க ஏங்குகிறது. வழுவழுப்பான மாம்பழக் கிளைகளின் நுனியில் இருக்கும் மொட்டுகளைப் பார்க்கும்போது குக்கூக்களின் இனிமையான குரல்கள் மகிழ்ச்சியான ஒலியை எழுப்புகின்றன.

ராஸோல்லாஸப⁴ரேணவிப்⁴ரமப்⁴ருதாமாபீ⁴ரவாமப்⁴ருவா-மப்⁴யர்ணம் பரிரம்யனிர்ப⁴ரமுர: ப்ரேமான்த⁴யா ராத⁴யா ।
ஸாது⁴ த்வத்³வத³னம் ஸுதா⁴மயமிதி வ்யாஹ்ருத்ய கீ³தஸ்துதி-வ்யாஜாது³த்³ப⁴டசும்பி³தஸ்மிதமனோஹரீ ஹரி: பாது வ: ॥ 13 ॥

räso lläsa-bharena ,vibrama-bhutäm, äbhira väma-bruväm
Abhyarnam, Parirabhya nirbhara mura:, premändhayä Rädhayä |
ஸாது த்வத்-வதனம், ஸுதா-மயம் இதி, வ்யஹ்ருத்ய கீதா-ஸ்துதி-
வ்யஜாத்…, உத்பாத-சும்பிதா, ஸ்மிதா-மனோஹரி, ஹரி: பத்து வ: ||11||

ராதா கிருஷ்ணன் மீதான காதலால் கண்மூடித்தனமாக மயக்கமடைந்தாள். இந்த நிலையில் அவள் முற்றிலும் வெட்கமற்றவளாகிவிட்டாள். ராச-லீலாவில் அன்பால் மூழ்கியிருந்த மற்ற பிரகாசமான கோபியர்களின் கவர்ச்சிகரமான கண்களுக்கு நேராக, ராதை கிருஷ்ணரின் மார்பில் இறுக்கமாகத் தழுவினார். அவரைப் புகழ்ந்து பாடி, “ஓ என் அன்பே, உன் தாமரை முகம் எவ்வளவு அழகாக இருக்கிறது. ஏராளமான அமிர்தத்தின் ஒப்பற்ற சுரங்கம், ”என்று அவள் அவனை ஒரு மகிழ்ச்சியான முத்தத்தில் ஈடுபடுத்தினாள். அவளது காதலின் தீவிரத்தைக் கண்ட கிருஷ்ணன், தன் இதயத்தில் இருந்த ரம்சத்தை ஒரு வசீகரமான சிரிப்புடன் வெளிப்படுத்தினான். ஓ ஸ்ரீ கிருஷ்ணா, நீ அனைவருக்கும் ஐஸ்வர்யத்தை வழங்குவாயாக.

ஏதி ஸ்ரீ கீத கோவிந்தே ஶ்ரீங்கார மஹாகாவ்யே
ஸ்ரீ கிருஷ்ண தாஸ ஜெயதேவ க்ருதவ்
ஸமோத-தாமோதரஹ் நம, ப்ரதம சர்க:

॥ இதி ஶ்ரீகீ³தகோ³வின்தே³ ஸாமோத³தா³மோத³ரோ நாம ப்ரத²ம: ஸர்க:³ ॥

கீ³தகோ³வின்த³ம் த்³விதீய: ஸர்க:³ – அக்லேஶ கேஶவ:

—————————-

விஹரதி வனே ராதா சதாரண-ப்ராணயே ஹரௌ
விகலித-நிஜோத் கர்ஷத் ஏர்ஷ-வசேன கத’ந்யதா |
க்வசித் அபி லதா-குஞ்ஜே குஞ்சன்-மது-வ்ரத-மௌலி
முகர-சிகரே லினா தினாப்யுவாச ரஹ சகீம் ||

பிருந்தாவனத்தின் தோப்புகளில் கிருஷ்ணர் அனைத்து கோபியர்களுடனும் அன்பாகப் பேசிக் கொண்டிருப்பதைக் கண்ட ராதை, தன் மேன்மையை அவர் அங்கீகரிக்காததால் கோபமடைந்தாள். அவள் உடனடியாக காட்டின் மற்றொரு பகுதிக்கு புறப்பட்டு, பம்பல்பீஸ் ட்ரோன் ஒலித்த ஒரு நிழலான வில்லுக்குள்ளே தன்னை மறைத்துக் கொண்டாள். பரிதாபமாக உணர்ந்த அவர், தனது நெருங்கிய பெண் தோழரிடம் ரகசியங்களை வெளிப்படுத்தத் தொடங்கினார்.

சஞ்சரத்-ஆதார-சுதா-மதுர-த்வனி-முகரித-மோகன-வம்சம் |
சலித-டிஜி-அஞ்சல-சஞ்சல-மௌலி-கபோல-விலோல-வதசம் |
ராஸே ஹரிம் இஹ விஹித-விலாசம்
ஸ்மரதி மனோ மம க்ருத-பரிஹாசம் ||த்ருவ-பதா||1||

” அவரது வசீகரிக்கும் உதடுகளில் இருந்து இனிமையான குறிப்புகள் ஒரு இனிமையான வெளிப்பாடான மெல்லிசையை உருவாக்குகின்றன. அவரது அமைதியற்ற கண்கள் பார்க்கின்றன, அவரது தலை அசைகிறது மற்றும் அவரது காதணிகள் அவரது கன்னங்களில் விளையாடுகின்றன. ஹரியின் கவர்ச்சியான நீல நிறம், அவரது சிரிப்பு மற்றும் அவரது நகைச்சுவையான நடத்தை எனக்கு மீண்டும் மீண்டும் நினைவிருக்கிறது.

சந்திரக-சாரு-மயூர-சிகண்டக-மண்டல-வலயிட்ட-கேசம் |
ப்ரசுர-புரந்தர-தனுர்-அனுரஞ்சித-மேதுர-முதிரா-சுவேஷாம் (ரஸே ஹரிம் இஹ) ||2||

“அவரது தலைமுடி அழகான மயில் இறகுகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது, நிலவொளியால் அவரது தலைமுடியை மகுடமாக்குகிறது. அவரது பளபளப்பு புதிய மழைமேகங்கள் மற்றும் புத்திசாலித்தனமான வானவில் போன்ற வண்ணமயமான மெல்லிய துணி அவரது மென்மையான உடலை அலங்கரிக்கிறது.

கோப-கதம்ப-நிதம்பவதி-முக-சும்பன-லம்பித-லோபம் |
பந்துஜிவ-மதுர்-ஆதார-பல்லவ, கலிதா தரஸ் -ஸ்மிதா-ஷோபம் (ரஸே ஹரிம் இஹ) ||3||

மன்மத உற்சவத்தில் கோபியர்களின் முகத்தில் முத்தமிட வேண்டும் என்ற ஆசையில் முகத்தைத் தாழ்த்திக் கொள்கிறார். அவரது மென்மையான உதடுகள் ஒரு கருஞ்சிவப்பு மல்லோ பூவின் மொட்டு போன்ற ஒரு மயக்கும் மென்மையான ரூபி-சிவப்பு நிறம். அவரது வசீகரிக்கும் புன்னகையின் முன்னோடியில்லாத பிரகாசம் அவரது அழகான முகத்தில் பரவுகிறது.

விபுல-புலக-புஜ-பல்லவ-வலயிதா, வல்லவ-யுவதி-ஸஹஸ்ரம் |
கர-சரணோ ராசி மணி-கன-பூஷண, கிரண-விபின்ன-தமிஷ்ரம்(ரஸே ஹரிம் இஹ) ||4||

மலர் இதழ்கள் போல மென்மையான, நீண்ட கரங்களால் ஆயிரமாயிரம் அழகான கோபிகைகளை ஆழமாக அணைத்துக் கொள்ளும்போது அவனது முழு உடலும் திகிலுடன் சிலிர்க்கிறது. அவனது கை, கால், மார்பில் உள்ள ஆபரணங்களில் இருந்து வெளிப்படும் அழகுக் கதிர்களால் எல்லா இருளும் விலகும்.

ஜலத-படலா-சல-திந்து-வினிந்தகா, சந்தன-பிந்து-லலாதம் |
பின-பயோதர-பரிசர-மர்தனா, நிர்தயா-ஹ்ருதய-கவதம் (ரஸே ஹரிம் இஹ) ||5||

அவரது நெற்றியில் வசீகர திலகம் உள்ளது. அதன் விவரிக்க முடியாத பளபளப்பானது, பல புதிய மழை மேகங்களின் மத்தியில் அமைதியற்ற நிலவின் அபரிமிதமான அழகை தோற்கடிக்கிறது, கோபியர்கள் கொடூரமான இதயம் கொண்ட கிருஷ்ணரால் எப்படி நசுக்கப்படுவார்கள் என்பதை நான் நினைவில் கொள்கிறேன்.

மணி-மய-மகர-மனோஹர-குண்டல, மண்டித-கந்த முதாரம் |
பிதா-வசனம் அனுகத-முனி-மனுஜா, ஸுராஸுர-வர-பரிவாரம் (ரஸே ஹரிம் இஹ)||6| |

அவரது கன்னங்களின் அழகை அவரது மயக்கும், நகைகள், மீன் (மகர) வடிவ காதணிகள் மேம்படுத்துகின்றன. அவர் ஒரு ஹீரோவின் பாத்திரத்தை ஏற்றுக்கொள்கிறார் மற்றும் அவரது பக்தர்களின் (காதலர்கள்) இதயங்களின் விருப்பங்களை தாராளமாக நிறைவேற்றுகிறார். பீதாம்பர உடையில், கிருஷ்ணர் தனது இனிமையைப் பரப்பி, தேவர்கள், முனிவர்கள் மற்றும் அசுரர்கள் (அசுரர்கள்) உட்பட அவரைப் பின்பற்றுபவர்களில் சிறந்தவர்களைக் கவர்ந்தார்.

விஷத-கதம்ப-தலே மிலிதம், கலி-கலுஷ-பய சமயந்தம் |
மாம் அபி கிம் அபி தரங்க-அனகா, த்ருஷா வபுஷ ராமயந்தம்(ரஸே ஹரிம் இஹ) ||7||

ஸ்ரீ கிருஷ்ணரை நினைத்து என் இதயம் மேலும் கலங்குகிறது. ஒரு அகன்ற கடம்ப மரத்தின் அடியில் பூத்து குலுங்கியதும், எதிர்பார்ப்புடன் சுற்றிப் பார்த்துக் கொண்டே எனக்காகக் காத்திருக்கிறார். பல புத்திசாலித்தனமான மற்றும் முகஸ்துதியான வார்த்தைகளால் என்னை ஆறுதல்படுத்துவதன் மூலம், பிரிவினை பற்றிய எனது பயத்தை அவர் முற்றிலும் அகற்றுகிறார். அவர் தனது அன்பான பார்வைகளால் விரைவாக என்னை மகிழ்விக்கிறார்.

ஸ்ரீ-ஜெயதேவ-பனிதம் அதி சுந்தர, மோகன-மது-ரிபு-ரூபம் |
ஹரி-சரணம்-ஸ்மரணம் ப்ரதி ஸம்ப்ரதி, புண்யாவதம் அனுரூபம் (ரஸே ஹரிம் இஹ விஹித-விலாசம்..) ||8||

ஸ்ரீ ஜெயதேவா இந்த கவிதையை பகவானின் சேவையில் அர்ப்பணித்த அந்த அதிர்ஷ்டசாலிகளுக்காக வழங்கியுள்ளார். இது கிருஷ்ணரின் வடிவத்தின் மயக்கும் அழகை விவரிக்கிறது. இது ஸ்ரீ ஹரியின் தாமரை பாதங்களின் நினைவின் உருவகமாகும், மேலும் இது தூய பக்தியின் முதன்மையான ரசத்தின் முழு அடைக்கலத்தைப் பெற்ற பிறகு அதை அனுபவிக்க வேண்டும்.

———–

கணயாதி குண-கிர…மம், ப்ரம்மம்* ப்ரமாத் அபி நேஹதே
வஹதி ச பரி தோஷம், தோஷம் விமுஞ்சதி துரத:… |
யுவதிஷு…, வலத்-த்ரிஷ்ணே… கிருஷ்ணே… விஹாரிணி மா வினா…
புனர் அபி, மனோ வாமம், காமம் கரோதி கரோமி கிம்… ||9||

“சகி, கிருஷ்ணர் என்னைக் கைவிட்டுவிட்டு இப்போது மற்ற கோபியர்களுடன் சென்றுவிட்டார். அவர் மீது என் அன்பை வெளிப்படுத்துவது வீண் என்று எனக்குத் தெரியும். இன்னும், நான் என்ன செய்ய வேண்டும்? அவர் மீது எனக்குள்ள பற்று எந்தச் சூழலிலும் நீங்காத அளவுக்கு சக்தி வாய்ந்தது. நான் அவருடைய அற்புதமான குணங்களை எண்ணிக்கொண்டே செல்கிறேன். நான் என் மேன்மையை உணரும்போது, ​​நான் பரவசத்தால் வெறித்தனமாகி விடுகிறேன். தவறுதலாகக் கூட நான் அவனிடம் கோபப்பட முடியாது; அவருடைய தவறுகளை நான் கவனிக்காமல் விடும்போது நான் திருப்தி அடைகிறேன். ஒவ்வொரு கணமும் அவருக்காக நான் ஏங்குகிறேன். சகி, என்னால் அவரை மறக்க முடியாது. என் இதயம் அவனை மட்டுமே விரும்புகிறது”

நிப்ருத-நிகுஞ்ச-க்ருஹம் கதயா, நிசி ரஹஸி நீலிய வசந்தம் |
சகித-விலோகித-ஸகல-திஷா, ரதி-ரபஸ-பரேண ஹஸந்தம், கிருஷ்ணம் ||1||

ஒருமுறை, நாங்கள் புத்திசாலித்தனமாக குறிப்புகள் மற்றும் சிக்னல்கள் மூலம் ஏற்பாடு செய்த திட்டத்தின்படி அவர் இரவில் தனிமைப்படுத்தப்பட்ட வன வில்வரிடம் சென்றார். குறும்புத்தனமான மனநிலையில், அவரைச் சந்திக்கும் என் ஆர்வத்தையும், அவர் இல்லாத நேரத்தில் என் வேதனையையும் கவனிப்பதற்காக அவர் காட்டின் அடர்ந்த இலைகளில் தன்னை மறைத்துக்கொண்டார். சோர்வு, பயம் நிறைந்த கண்களுடன், கவலையில் மூழ்கி, ‘அட, எப்போ வருவார்?’ அப்போது அவர் தனது காமச் சிரிப்பின் அமிர்தத்தால் என்னை மகிழ்வித்தார்.

சகி ஹே கேசி-மதன முதாரம்
ராமாய மாயா சஹ மதன-மனோரத-பவிதய ச-விகாரம் (கிருஷ்ணம், சகி அவர்)||துருவபதா||

காமதேவரின் எரியும் வெப்பத்தைத் தணிக்கும் விஷயத்தில் கேசி-மதன கிருஷ்ணருக்கு ஒருபோதும் தாராள மனப்பான்மை குறையாது. இன்னும் சொல்லப்போனால், என் மீதுள்ள பற்றுதலால் அவன் மனமும் கலங்குகிறது. என் உணர்வுகள் அவனால் அலங்கரிக்கப்பட்டுள்ளன; அவருடன் இணைய வேண்டும் என்ற எனது ஆசை எப்படி நிறைவேறும்? எங்கள் கூட்டத்திற்கு உடனடியாக ஏற்பாடு செய்யுங்கள்.

பிரதம-சமகம-லஜ்ஜிதாய, படு-சது-ஷதை ரனுகுலம் |
ம்ருது-மதுர-ஸ்மித-பாஷிதாயா, ஷிதி-லிக்ருத-ஜகன-துகுலம் (கிருஷ்ணம், சகி ஹெ) ||2||

“ஒருவரின் முதல் காதல் சந்திப்பின் போது ஏற்படும் இயற்கையான சங்கடத்தின் காரணமாக நான் மிகவும் அப்பாவியாகவும் ஏமாறக்கூடியவனாகவும் இருப்பதைப் பார்த்த அவர், என் கூச்சத்தைத் தணிக்க வரிசையாக மரியாதையான வார்த்தைகளையும் பணிவான வேண்டுகோளையும் பயன்படுத்தினார். அவரது முகஸ்துதியான வார்த்தைகளில் மயங்கி, மென்மையாகவும் இனிமையாகவும் சிரித்துவிட்டு அவருடன் உரையாட ஆரம்பித்தேன். ஓ சகி, உடனடியாக நான் அவரைச் சந்திக்க ஏற்பாடு செய்!”

கிசால-ஷயன-நிவேதிதய, சிரம் உரசி மமைவ ஷயனம் |
க்ருத-பரிரம்பான-சும்பனாய, பரிரப்ய க்ருததார-பானம் (கிருஷ்ணம், சகி ஹெ) ||3||

“அவர் என்னை மென்மையான, புதிய மலர்கள் கொண்ட ஒரு அழகான படுக்கையில் படுக்க வைத்தார், பின்னர், மிகுந்த மகிழ்ச்சியுடன், அவர் என் இதயத்தில் மிகவும் பிரகாசமாக வைத்தார். நான் அவரை முத்தமிட்டு ஆழமாக தழுவினேன். மேலும், அவர் என்னைத் தழுவி, அனங்க-ராசாவின் சக்திவாய்ந்த செல்வாக்கின் கீழ் என் உதடுகளின் அமிர்தத்தை மீண்டும் மீண்டும் குடித்தார். ஓ சகி, அவர் என் உயிரை விட எனக்கு மிகவும் பிடித்தவர். உடனே அவரைச் சந்திக்க என்னை அழைத்துச் செல்லுங்கள்.

அலச-நிமிலிதா-லோசனயா, புலக வலி-லலிதா-கபோலம் |
ஷ்ரம-ஜல-சகல-கலேவராய, வர-மதன-மத தாதிலோலம் (கிருஷ்ணம், சகி ஹெ) ||4||

“அவருடனான உணர்ச்சிகரமான அன்பின் மகிழ்ச்சியில் திடீரென, எதிர்பாராத பேரானந்தம் ஏற்பட்டதால், என் கண்கள் சோர்வடைந்து மூடப்பட்டன. இந்த காதல்-விளையாட்டின் மகிழ்ச்சியிலிருந்து கிருஷ்ணரின் கன்னங்கள் ஒரு அசாதாரண அழகையும் அழகையும் பெற்றன. அன்பின் வியர்வை முழுவதும், அவரது தோற்றம் என்னை மயக்குகிறது. கிருஷ்ணர் அன்பு நிறைந்தவர். ஓ சகீ, ஸ்ரீ கிருஷ்ணரை நான் சந்திக்க விரைவில் ஏற்பாடு செய்!”

கோகில-கலா-ரவ-குஜிதாய, ஜித-மனசிஜ-தந்திர-விசாரம் |
ஷ்லத-குசும குல-குந்தலயா, நகஹ-லிகித-கனா-ஸ்தான-பாரம் (கிருஷ்ணம், சகி ஹெ) ||5||

“ஸ்ரீ கிருஷ்ணர் உண்மையான கையேடுகளில் காதல் செய்யும் நுட்பங்களைப் பற்றிய இரகசியக் கோட்பாடுகளை நன்கு அறிந்தவர். கிருஷ்ணருடன் காதல் வயப்பட்ட நேரத்தில், நான் ஒரு காக்காயைப் போல் முணுமுணுக்கிறேன் & அவரை மட்டுமே நினைத்துக் கொள்கிறேன். என் பின்னல் திறக்கப்பட்டது மற்றும் மலர் பூக்களின் அமைப்பு நழுவி என் தலைமுடியிலிருந்து விழுந்தது & நான் அவரது நகங்களை தாங்கினேன். ஓ சகி, எனக்கு மிகவும் பிரியமான ஸ்ரீ கிருஷ்ணரை நான் உடனே சந்திக்க ஏற்பாடு செய்!”

சரண-ரனித-மணி-ன்பூராய, பரி பூரித-சுரத-விதானம் |
முகர-விஷ்ரு கல-மேகலாயா, சக சக்ரஹ-சும்பன-தானம் (கிருஷ்ணம், சகி ஹெ) ||6||

“நாங்கள் காதல் விளையாட்டை ரசித்தபோது, ​​அவருடைய அன்பைக் கண்டு என் காலில் இருந்த நகைகள் பதிக்கப்பட்ட கணுக்கால் மணிகள் ஒலித்தன. என்னை முடியைப் பிடித்து இழுத்து, மீண்டும் மீண்டும் என் முகத்தில் முத்தமிடும் அந்த ஸ்ரீ கிருஷ்ணருடன் என்னை ஒரேயடியாக இணைத்துவிடு. ”

ரதி-சுக-சமய-ரச லசய, தர-முகுலித-நயன-சரோஜம் |
நிசாஹ-நிபதித-தனு-லதாயா, மதுசூதன முதித-மனோஜம் (கிருஷ்ணம், சகி ஹெ) ||7| |

“அவருடன் மகிழ்ந்தபோது, ​​நான் படிப்படியாக சோர்வடைந்தேன். கிருஷ்ணரின் சற்றே திறந்த தாமரை கண்கள் மன்மதத்தின் மெல்லிசையில் நனைந்தன. நான் ஒரு கொடியைப் போல் ஒட்டிக்கொள்கிறேன் & மதுசூதனன் அவனுடைய அன்பில் என்னை மகிழ்விக்கிறான். ஓ சகீ, என் பிரியமான ஸ்ரீ கிருஷ்ணருடன் உடனே என்னை இணைத்துவிடு.”

ஸ்ரீ-ஜெயதேவ-பனிதம் இடம் அதிசய-மது-ரிபு-நிதுவன-ஷிலம் |
சுகம் உட்காந்தித-ராதிகாயா, கதிதம் விடனோது சலிலம் (சகி ஹே கேஷி…)||8||


ஸ்ரீ ஜெயதேவாவால் இயற்றப்பட்ட இந்த வர்ணனை ஸ்ரீ கிருஷ்ணரின் அன்பை சித்தரிக்கிறது, இது அவரது பிரிவின் வேதனையில் கவலையும் பொறுமையும் இல்லாத நாயகி விவரிக்கிறது . இதை பாராயணம் செய்து கேட்கும் அனைத்து பக்தர்களுக்கும் ஐஸ்வர்யம் பெருகட்டும்.

****************

ஹஸ்த-ஸ்ரஸ்த-விலாசம்-வம்சம் அன்ருஜு | ப்ரு-வல்லி மத்-பல்லவி
விருந்தோத்சரி-தாகந்த விக்ஷிதம், அதிஸ் வேதார்த்ரா, கந்த-ஸ்தலம் …|
மாம் உத்வேக்ஷ்ய, விலாஜ்ஜிதா, ஸ்மிதா-சுதா, முக்தா-நானம்-கனானே…
கோவிந்தம், வ்ரஜ-சுந்தரி, கண-வ்ருதம், பஷ்யமி ஹாஷ்யாமி கா ||10||

“அவரது கையில் மயக்கும் புல்லாங்குழல், அவரது மெல்லிய பார்வையில் விழுந்தது. காதல் மணிகளின் வியர்வை அவரது மென்மையான கன்னங்களை நனைக்கிறது. அவர் கோபியருடன் காட்டில் விளையாடுவதை நான் பார்த்து, அவரது மயக்கும் முகம் புன்னகைக்கிறது. அவரது எதிர்வினையைப் பார்க்கும்போது நான் விவரிக்க முடியாத மகிழ்ச்சியை உணர்கிறேன்.

துரலோக-ஸ்தோக-ஸ்தவக-நவக- ஷோக-லதிகா-
விகாச:, காஸரோ-பவன-பவனோயம், வ்யதாயதி… |
அபி ப்ராம்யாத், பிங்கி-ராணிதா, ரமணியா… ந முகுல
ப்ரஸுதிஷு சூடானாம், சகீ …ஷிகரா-நீயம் ஸுகயதி ||11||

“ஏரி பக்கத்திலுள்ள தோட்டத்தில் இருந்து வீசும் காற்று, மரங்களில் துள்ளிக் குதிக்கும் பறவைகள் மற்றும் கருஞ்சிவப்பு பூக்களின் கொத்துகள் அனைத்தும் என்னை எரிப்பதற்காக தீப்பிழம்புகளை எழுப்புகின்றன. புதிய மா மலர்கள் நிறைந்த இந்த மலை, அலையும் பம்பரங்களுடன் முனுமுனுப்பது, இப்போது எனக்கு ஆறுதலாக இல்லை, சகி”

சாகுத-ஸ்மிதம், ஆகுல குல-கலாத்-தம் மில்லம், உல்லாசித
ப்ரு…-வல்லிகம், அலேக-தர்ஷிதா, புஜே-முலோர்த்வா, த்ரிஷ்ட-ஸ்தானம் |
கோபினம், நிப்ருதம், நிரேக்ஷ்ய கமிதம்-கண்க்ஷ-சிரம்-சிந்தாயந்
அந்தர் முக்தா, மனோஹரம், ஹரது வ:, க்லேஷம், நவ கேஷவ: ||12||

கோபியர்களின் புன்னகை அவர்களின் நோக்கங்களை மிகத் தெளிவாக வெளிப்படுத்தியது, ஒரு அப்பாவியான நபரைக் கூட ஈர்க்கும். அவர்களின் தோலின் துளைகள் தீவிர ஆசையில் சிலிர்க்க, அவர்களின் ஜடைகள் தளர்ந்தன. ஆனால் அத்தகைய சைகைகள் பயனளிக்கவில்லை. கிருஷ்ணர் நீண்ட நேரம் ஆழமாகப் பிரதிபலித்தார், கோபியர்களின் சகவாசத்திற்கான தனது கடைசி அபிலாஷைகளை படிப்படியாக அழித்தார். இப்போது அவர் ராதாவின் உணர்ச்சிகளால் பிரத்தியேகமாக உற்சாகமடைந்தார் மற்றும் ஒவ்வொரு புதிய தருணத்திலும் அவரது ஆச்சரியம் அதிகரிக்கிறது. அந்த இளமை கேசவா உங்கள் அனைவரின் துன்பங்களையும் அழிக்கட்டும்.

ஏதி ஸ்ரீ கீத கோவிந்தே ஶ்ரீங்கார மஹாகாவ்யே
ஸ்ரீ கிருஷ்ண தாஸ ஜெயதேவ க்ருதவ்
அக் லேஷா கேஷவௌ நம, த்விதீய சர்கா

ராகம்: பூபாலா; சாப்பு தாலா

கம்ஸாரி-ரபி , சம்சார-வாசனா பத்த-ஷங்கலம் |
rädhäm- ädhäya- hridaye, ta tyäja vraja-sundari… ||

“கம்சனின் எதிரியான கிருஷ்ணன், ராதை முன்பு வெளிப்படுத்திய அந்தரங்க அன்பை நினைத்து, அதுவே உயர்ந்த பக்தியின் சாராம்சம் என்பதை உணர்ந்தான். அவனது இதயம் உலக ஆசையின் சங்கிலியால் பிணைக்கப்பட்டு, ராதையின் வடிவில் திகழ்ந்தது. எனவே, வ்ரஜாவின் மற்ற கோபிகளின் அன்பை அற்பமானதாகக் கருதி, அவர் அனைவரையும் கைவிட்டார்.

இதஸ் டாடஸ் தாம், அனுஸ்-ருத்ய ராதிகம்…
அனங்கா-பானா…வ்ரண-கின்னா, மனச:… |
க்ருதாநு தாப:, ச கலிந்த-நந்தினி….
தடான்..த-குஞ்சே, விஷசாத மாதவ: ||

“அவன் ராதையை வீணாகத் தேடிக்கொண்டிருந்தபோது, ​​அன்பின் அம்பு அவனைத் துளைத்தது. ஜமுனா நதிக்கரையில் உள்ள அடர்ந்த காட்டில் மாதவன் தவமிருந்தான்”

மாமியாம் கலிதா விலோக்யா, விருதம் வது-நிச்சயேன |
சபராததய மாயாபி ந, வாரித’தி பாயேன ||
ஹரி ஹரி ஹத’தராதயா.. ச கத குபிதேவ ஹரி ஹரி ||1||

“என்னை கோபியால் சூழப்பட்டதைக் கண்ட ராதா கோபமடைந்து அங்கிருந்து கிளம்பினாள். ‘நான் குற்றம் செய்துவிட்டேன்’ என்று நினைத்தேன், அதனால் நான் பயந்தேன், அவள் வெளியேறுவதைத் தடுக்க தைரியம் வரவில்லை. ஐயோ! கோபத்தில் அவளை வெளியேறச் செய்தேன்.

கிம் கரிஷ்யதி, கிம் வாதிஷ்யதி ச சிரம் விரஹேண |
கிம் தானேன ஜநேன, கிம் மம ஜீவிதேன க்ருஹேண ஹரி ஹரி (ஹத’தராதய) ||2||

“அவள் நீண்ட காலமாக பிரிவினையின் பேரழிவு வெப்பத்தால் அவதிப்படுகிறாள், அதனால் அவளுடைய நடத்தையை என்னால் கணிக்க முடியவில்லை. அவள் என்ன செய்வாள்? அவள் என்ன சொல்வாள்? ஐயோ! ராதா இல்லாததால், என் செல்வம், என் உறவினர்கள், என் உயிர், என் வீடு மற்றும் அனைத்தும் மதிப்பற்றதாகத் தோன்றுகிறது.

சிந்தயாமி ததானனம் குடில-ப்ரு-கோப பாரேண |
ஷோண-பத்மம் இவோபரி-பிரமதகுலம் பிரமரேண ஹரி ஹரி (ஹட’தரதய) ||3||

“ஸ்ரீ ராதையின் வளைந்த புருவம் போன்ற புருவங்களை நான் நேரடியாகப் பார்ப்பது போல் உணர்கிறேன். அவளது கோபமான முகம் சிவந்த தாமரை மலரைப் போன்றது.

தம் அஹம் ஹ்ருதி சங்கதம், அனிஷம் புருஷம் ராமயாமி |
கிம் வனே’னு சராமி தமிஹ கிம் வ்ருத விலாபாமி ஹரி ஹரி (ஹத’தரதய) ||4||

“ஐயோ! ராதையின் நேரடி இருப்பை நான் தொடர்ந்து உணர்ந்து, அவளை என் இதயக் கோவிலில் ஆழமாகத் தழுவிக்கொண்டிருக்கும்போது, ​​நான் ஏன் அவளைப் பற்றி வீண் புலம்புகிறேன், ஏன் காடு விட்டு காடு வரை அவளைத் திரும்பத் திரும்பத் தேடுகிறேன்?”

தன்வி கின்ன மசூயாய ஹ்ருதயம் தவ கலயாமி |
தன்னா வேத்மி குடோ கதாஸி, ந தேன தே’னு நயாமி ஹரி ஹரி (ஹத’தராதயா) ||5||

“ஓ மெல்லிய இடுப்பைக் கொண்ட மென்மையான பெண்ணே, உங்கள் இதயம் பொறாமையால் மாசுபட்டது போல் தெரிகிறது, இது உங்கள் இதயத்தை வீணாக்குகிறது. ஆனால் நான் என்ன செய்ய முடியும்? பெருமிதத்துடன் விட்டுவிட்டீர்கள். உங்கள் கோபத்தை போக்க நான் என்ன வகையான தாழ்மையான மன்றாட வேண்டும்? எனக்கு எந்த யோசனையும் இல்லை.

த்ருஷ்யஸே புரதோ கத, கதமேவ மே விததஸி |
கிம் புரேவ ஸஸம்ப்ரமம், பரிரம்பம் ந ததாஸி ஹரி ஹரி (ஹத’தரதய) ||6||

“மீண்டும் தோன்றுவதையும் மறைவதையும் நீங்கள் வேட்டையாடுகிறீர்கள். ஒருமுறை நீ எனக்குக் கொடுத்த அணைத்து வளைவுகளையும் ஏன் மறுக்கிறாய்”

க்ஷாம்யதம் அபாரம் கதாபி, தவேத்ருஷம் ந கரோமி |
தேஹி சுந்தரி தர்சனம் மம மன்மதேன துனோமி ஹரி ஹரி (ஹத’தராதய)||7||

“ஓ அழகானவளே, தயவுசெய்து என்னை மன்னியுங்கள். நான் உன்னை இனி ஒருபோதும் புண்படுத்த மாட்டேன். உங்களை ஒருமுறை பார்க்க அனுமதியுங்கள். மம்தா கொடுத்த வலியில் நான் தவிக்கிறேன்”

வர்ணிதம் ஜயதேவகேன ஹரேரிதம் ப்ரவணேன |
கிந்து-பில்வ-சமுத்ர-சம்பவ-ரோஹிணி-ரமணேன ஹரி ஹரி (ஹட’தரதய)||8||

கடலில் இருந்து சந்திரன் தோன்றுவது போல் ஸ்ரீ ஜெயதேவர் கிந்துபில்வ கிராமத்தில் அவதரித்தார். இந்தப் பாடலின் வடிவில் ஸ்ரீ கிருஷ்ணரின் ஆழ்ந்த உணர்ச்சிகளின் வெளிப்பாடுகளை அடக்கத்துடன் சேகரித்துள்ளார்.

****************

ஹ்ரிதி பிசா-லதா, ஹாரோ நாயம் புஜங்க மனயாக:
குவலயா-டலா-ஷ்ரேனி, காண்டேனா. sä கரால-த்யுதி: |
மலையஜ-ரஜோ நேதம், பஸ்ம ப்ரியா, ரஹிதே மயி
ப்ரஹார ந, ஹர-ப்ராந்த்யா, அனங்க க்ருதா, கிமு தவசி… ||9||

“தாமரை தண்டுகள் என் இதயத்தை மாலையாக்குகின்றன, பாம்புகளின் கழுத்தில் அல்ல! நீல லில்லி இதழ்கள் என் கழுத்தில் வட்டமிடுகின்றன, விஷத்தின் கோடு அல்ல! சந்தனப் பொடி, சாம்பலை அல்ல, என் காதலியின் உடலில் பூசப்பட்டது! மன்மதா, என்னை சிவன் என்று தவறாக நினைத்து தாக்காதே! ஏன் கோபத்தில் என் மீது விரைகிறாய்”

.
பனௌ மா குரு, சூட்ட-சாயகம், அமும் மா சாபம், ஆரோ…பயா
கிரிடா. நிர்ஜித-விஷ்வ- மூர்ச்சித-ஜனக தேன, கிம் பௌருஷம் |
தஸ்யா ஏவ, ம்ரி-த்ரிஷோ, மனசிஜா ப்ரீகத்-கடாக்ஷா, ஷுக-
ஷ்ரேணே-ஜர்ஜரிதம், மனக் அபி மனோ, நாத்யாபி ஸந்துக்ஷ் நாதே ||10||

“உன் மாவிளக்கு அம்பை தூக்காதே! உன் வில்லை குறிவைக்காதே! எங்கள் விளையாட்டுகள் உங்கள் வெற்றியை அங்கீகரிக்கின்றன, அன்பே. பலவீனமான பாதிக்கப்பட்டவர்களை தாக்குவது வெற்று வீரம். ராதாவின் கண்கள் சரமாரியான பார்வைகளால் என் இதயத்தை உடைத்தது. அன்பின் தூண்டுதலால் இப்போது எதுவும் என்னை ஆதரிக்க முடியாது!

ப்ரு-பல்லவம், தனுர் அபாங்க-த ரங்கிதானி
பானா குணா ஷ்ரவண:, பாலி: இதி ஸ்மரேண |
தஸ்யம். அனங்க-ஜெய, ஜங்கம-தேவதா…யாம்
அஸ்த்ரானி நிர்ஜித-ஜகந்தி, கிம் அர்பிதானி ||11||

“அவளுடைய வளைந்த புருவம் அவனது வில், அவளது பாயும் பார்வைகள் அம்புகள், அவளுடைய காது மடல் வில்லு – ஆயுதங்கள் ஏன் பாதுகாக்கப்படுகின்றன. அன்பின் வாழும் தெய்வம், உலகம் ஏற்கனவே தோற்கடிக்கப்பட்டது.

bhrü-chäpe, nihita: katäksha-vishikho, nirmätu marma-vyathäm
shyämätmä, kutila: Karotu, kabari-bhäro’pi, Märodyamam |
மோஹம் தவத் அயன் கா, தன்வி தனுதம், பிம்பா…தாரோ ராகவன்
சத்-வஸ்த: ஸ்தான-மண்டலங்கள், தவ கதம், ப்ரானை: மம கிருததி… ||12||

“உன் புருவத்தின் வில் மறைக்கும் அம்புகளைப் பார்ப்பது, என் மென்மையான மரண மையத்தில் வலியை ஏற்படுத்தக்கூடும். உனது கனமான கறுப்புப் பின்னல், என்னை வக்கிரமாகத் துரத்தலாம். உங்கள் சிவப்பு பெர்ரி உதடுகள், ராதா, ஒரு விசித்திரமான மயக்கத்தை பரப்பலாம். நீங்கள் என் வாழ்க்கையை நாசமாக்குகிறீர்கள்.

தானி ஸ்பர்ஷா, சுகானி தே கா தரால:, ஸ்நிக்தா… த்ரிஷோர் விப்ரமா:
தத்-வக்த்ரம் புஜா, சௌரபம், ச ச சுதா-ஸ்யந்தி, கிரி- வக்ரிம |
ச பிம்பதார-மாதுரிதி –விஷய, ஸங்கே’பிச்சேந் மானஸம்
தஸ்யாம், லக்ன-சமாதி, ஹந்த- விரஹ-வ்யதி:, கதம் வர்ததே ||13||

“என் தொடுதலுக்கு அவளது மகிழ்ச்சியான பதில்கள், அவளது கண்களின் நடுங்கும் திரவ அசைவுகள், அவளது தாமரை வாயிலிருந்து நறுமணம், இனிமையான தெளிவற்ற வார்த்தைகளின் ஓட்டம், அவளது சிவப்பு பெர்ரி உதடுகளிலிருந்து தேன்-உணர்வு பொருட்கள் மறைந்தாலும். என் மனம் அவளை ஒரு மயக்கத்தில் பிடித்துக்கொண்டது, அதனால் அவள் கைவிடப்பட்டதன் காயம் ஏன் ஆழமடைகிறது.

திர்யக்-காந்த-விலோல-மௌலி, தாரலோத்-தம்ஸஸ்ய, வம்ஷோச் காரத்
கீதா-ஸ்தான-கிருதவதானா-லாலனா…லக்ஷைர் ந, ஸம்-லக்ஷித: |
ஸம்முக்தம், மதுஸுதனஸ்ய- மதுரே- ராதா, முகேந்து
மிருதுஸ்-யந்தம், கண்டலித சிரம், ததாது வ:, க்ஷேமம் கடாக்-ஷோர்-மயா: ||14||

ஸ்ரீ கிருஷ்ணர் மூன்று இடங்களில் வளைந்து கோணலான தோரணையை ஏற்க பரவச உணர்ச்சிகளால் கட்டாயப்படுத்தப்படுகிறார். அவர் கழுத்தை ஒரு பக்கமாக சாய்த்ததால், அவரது கிரீடம் மற்றும் காதணிகள் அசைகின்றன. லட்சக்கணக்கான கவர்ச்சிகரமான கோபியர்களுக்கு நடுவே அமைந்திருப்பதால், ஸ்ரீ ராதாவின் மயக்கும் அமுத தாமரை முகத்தைப் பார்த்துக்கொண்டு, அவளைப் பார்ப்பதற்காக, அவர் தனது புல்லாங்குழல் பாடலின் மிகவும் ஆத்திரமூட்டும், மயக்கத்தைத் தூண்டும் குறிப்பை தியானிக்க அவர்களைத் தூண்டினார். அவர் மீது அளவுகடந்த பாசம். ஸ்ரீ கிருஷ்ணரின் ஓரக்கண்ணின் எண்ணற்ற அலைகள் அனைவருக்கும் ஐஸ்வர்யங்களை வழங்கட்டும்.

ஏதி ஸ்ரீ கீத கோவிந்தே ஶ்ரீங்கார மஹாகாவ்யே
ஸ்ரீ கிருஷ்ண தாஸ ஜயதேவ க்ருதவ்
முக்த-மதுஸுதனா நம, த்ரிதிய ஸர்க:

ராகம்: சௌராஷ்டிரா; ஆதி தாலா

யமுனா-திர-வனிர-நிகுஞ்சே மந்த மஸ்திதம் |
ப்ராஹ-ப்ரேம-பரோத்ப்ராந்தம் மாதவம் ராதிகா-சகி ||

யமுனை நதிக்கரையில், அடர்ந்த செடிகளுக்கு நடுவே, மாதவன் தீவிர அன்பினால் தத்தளித்துக் கொண்டிருந்த காட்டில், ராதையின் சகி(தோழி) பேசினாள்:

நிந்ததி சந்தனம் இந்து கிராம், அனு விந்ததி கேதம் அதிரம், கிருஷ்ணா |
வ்யால-நிலையா-மிலா நேனா கரளம் இவ, கலயாதி மலாய-சமீரம் ||1||

மாதவ மனஸிஜ-விசிக-பயாத் இவ பாவனாய த்வயி லினா, கிருஷ்ணா |
 ச விரஹே தவ தினா ||த்ருவபதா||

“ஓ மாதவா! ராதா உன்னைப் பிரிந்து கடுமையான துன்பத்தை அனுபவிக்கிறாள். மதனாவின் அம்புகளின் இடைவிடாத மழைக்கு அவள் மிகவும் பயந்தாள், அவள் மெதுவாக எரியும் இந்த துயர நெருப்பிலிருந்து விடுபட தியான-யோகத்தை நாடினாள். அவள் நிபந்தனையின்றி உன்னிடம் சரணடைந்தாள், இப்போது அவள் தியானப் பயிற்சியால் உன்னில் முழுமையாக மூழ்கிவிட்டாள். நீங்கள் இல்லாத நேரத்தில், சந்திரனின் கதிர்கள் கூட, அவள் அவளை எரிப்பதைப் போல உணர்கிறாள். சந்தன மணம் கொண்ட மலாயா தென்றல், அவளது பிரிவின் வலியை அதிகரிக்கிறது.

அவிரல-நிபதித-மதன-ஷரதிவ பவடவனய விசாலம், கிருஷ்ணா |
ஸ்வ-ஹ்ருதய-மர்மணி வர்ம கரோதி சஜல-நளினி-தல-ஜலம் (கிருஷ்ணா, ச விரஹே தவ தினா)||2||

“காமதேவரின் அம்புகள் அவள் இதயத்தில் இடைவிடாமல் விழுகின்றன. நீ அங்கே வசிப்பதால், அவளது பாதிக்கப்படக்கூடிய இதயத்தை நீர்த்துளிகள் தாங்கிய பெரிய தாமரை இதழ்களால் மூடி, உன்னைக் காக்க ஒரு மாயக் கவசத்தை (கவச்சா) உருவாக்குகிறாள்.

குசும-விஷிக-ஷர-தல்ப மணல்ப-விலாச-கலா-கமணியம், கிருஷ்ணா |
வ்ரதம் இவ தவ பரிரம்ப-சுகாய கரோதி குஸும-ஷயநியாம் (கிருஷ்ணா, ச விரஹே தவ தினா) ||3||

“மாதவா! ராதா உங்கள் இன்பத்திற்கு ஏற்ற வகையில் ஒரு மகிழ்ச்சியான மலர் படுக்கையை உருவாக்குகிறார். ஆயினும் அது மன்மத அம்புகளின் படுக்கையாகத் தெரிகிறது. உனது ஆழ்ந்த அரவணைப்பை அடையும் நம்பிக்கையில் அவள் அம்புப் படுக்கையில் சாய்ந்து கொள்வதாக சபதம் வடிவில் கடுமையான துறவறம் செய்கிறாள்.

வஹதி ச கலிதா-விலோசன-ஜல-தார, மனன-கமலம் உதரம், கிருஷ்ணா |
வித்தும் இவ விகட-விதுந்து-ததாந்த-தலன-கலிதா ம்ருத-தரம் (கிருஷ்ணா, ச விரஹே தவ தினா) ||4| |

கிரகணப் பற்களால் ஏற்பட்ட வெட்டுக்களில் இருந்து அமிர்தத்தை சொட்டும் சந்திரனைப் போல, மேகமூட்டமாகவும், கண்ணீருடன் வடிந்ததாகவும், தன் கம்பீரமான தாமரை முகத்தை உயர்த்துகிறாள்.

விலிபதி ரஹஸி குரக-மதேன பவந்தம் அசம-ஷர-பூதம், கிருஷ்ணா |
ப்ரணயாதி மகர மதோ விநிதாய கரே ச ஷரம் நவ-சூதம் (கிருஷ்ணா, ச விரஹே தவ தினா) ||5| |

“ஓ ஸ்ரீ கிருஷ்ணா, ஒதுங்கிய இடத்தில், ராதை மான் கஸ்தூரியில் உனது வசீகர வடிவத்தின் படத்தை வரைகிறாள். உன் கையிலும் மாதவாவிலும் மாங்காய் மொட்டு அம்புகளுடன் உன்னைச் சித்தரித்த பிறகு, அவள் உன் திருவுருவப் படத்திற்கு மரியாதையுடன் வணங்கி, உன்னை வணங்குகிறாள்.

தியான-லயேன புரா பரிகல்ப்ய பவந்தம் அதிவ துரபம், கிருஷ்ணா |
விலாபதி ஹஸதி விஷிததி ரோதிதி சஞ்சதி முஞ்சதி தபம் (கிருஷ்ணா, ச விரஹே தவ தினா) ||6||

“ஓ மாதவா, ராதா மீண்டும் மீண்டும் கெஞ்சுகிறாள் ‘ஹே ஸ்ரீ கிருஷ்ணா! உன் காலடியில் விழுகிறேன். நீ என்னைப் பற்றி அலட்சியமாக மாறியவுடன், சந்திரக் கடவுளான சந்திரமா அமிர்தம் கூட என் உடலில் நெருப்பு மழையைப் பொழிவது போல் உணர்கிறது.

ப்ரதி-பதம் இடம் அபி நிகததி மாதவ தவ சரணே பதிதஹம் , கிருஷ்ணா |
த்வயி விமுகே மயி சபதி சுதா-நிதி ரபி தனுதே தனு-தஹம் (கிருஷ்ணா, ச விரஹே தவ தினா) ||7||

“ஸ்ரீ ராதா உன்னைப் பற்றிய தியானத்தில் முழுமையாக மூழ்கிவிட்டாள். நீங்கள் நேரடியாக அவளுக்கு முன்னால் இருப்பதாக அவள் கற்பனை செய்கிறாள். சில சமயம் அவள் பிரிந்து புலம்புகிறாள், சில சமயங்களில் அவள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறாள், சில சமயம் அவள் அழுகிறாள், சில சமயங்களில் அவள் ஒரு கணப் பார்வையில் தழுவி அனைத்து துன்பங்களையும் கைவிடுகிறாள்.

ஸ்ரீ-ஜெயதேவ-பனிதம் இடம் அதிகம், யதி மானஸ நடனியம், கிருஷ்ணா |
ஹரி-விரஹாகுல-வல்லவ-யுவதி, சகி-வசனம் படனியம் கிருஷ்ணா (துருவபதா) ||8||

ராதாவின் அன்புத் தோழி சொன்ன வார்த்தைகளின் அடிப்படையில் ஸ்ரீ ஜெயதேவா இயற்றிய இந்தப் பாடல் இதயக் கோவிலுக்குள் இயற்றப்பட வேண்டும். ஸ்ரீ ஹரியை விட்டு பிரிந்த ராதையின் விரஹா (வலி) பற்றிய சாகியின் விளக்கம் தொடர்ந்து பாராயணத்திற்கு தகுதியானது.

ராகம்: பிலஹரி; ஆதி தாலா

அவாஸோ, விபிநாயதே ப்ரிய-சகி மாலாபி. ஜாலியாதே…
தபோ’பி நிஷ்-வசிதேன, தவ-தஹன-ஜ்வாலா கலாபயதே |
சாபி த்வத்-விரஹேண, ஹந்த ஹரிணி-ரூபயதே, ஹா கதம்
கந்தர்போ’பி யமாயதே, விரசயன், ஷர்துல-விக்ரேதிதம் ||

“ஓ ஸ்ரீ கிருஷ்ணா, என் சகி ராதை ஒரு மான் போல நடந்து கொள்கிறாள். அவள் வசிப்பிடம் காடு என்றும், தன் நண்பர்கள் வலையுடன் வேட்டையாடுபவர்களைப் போலவும் கருதுகிறாள். அவளது உடம்பில் எரியும் காட்டுத் தீயின் ஜுவாலை அவளது வலியின் பெருமூச்சுகளால் உக்கிரமாகிறது. ஐயோ, ஐயோ! மன்மதன் இரையை வேட்டையாடும் புலியைப் போல் மாறுவேடமிட்டு மரணத்தை வெளிப்படுத்தினான்.

ஸ்தான-வினிஹிதம் அபி ஹர முதாரம் |
ச மனுதே க்ருஷ-தனுராதி பரம் |
ராதிகா கிருஷ்ணா ராதிகா | ராதிகா விரஹே தவ கேசவ (ராதிகா கிருஷ்ண ராதிகா)| |1||

“ஓ கேசவா, ராதா உன்னைப் பிரிந்ததில் மிகவும் மெலிந்திருக்கிறாள், அழகான கழுத்தணி மாலை அவளுக்குச் சுமையாகிவிட்டது. ஏய் கேசவா, ராதிகா உன் பிரிவின் வேதனையில் தவிக்கிறாள் (விரஹா)”

சரஸம ஸ்ருண மபி மலையஜ-பங்கம் |
பச்யதி விஷமிவ வபுஷி சஷங்கம் |
ராதிகா கிருஷ்ண ராதிகா – தவ விரஹே கேசவா (ராதிகா கிருஷ்ணா ராதிகா)||2||

“ஓ கேசவா, உன்னைப் பிரிந்து, ராதா தன் உடலில் பூசப்பட்ட ஈரமான, வழுவழுப்பான சந்தனக் கட்டையைப் பார்க்கிறாள், அவளுக்கு விஷம் போல் உணர்கிறாள்.”

ஸ்வசித-பவனம் அனுபம-பரிணஹம் |
மதன-தஹன மிவ வஹதி ஸதஹம் |
ராதிகா கிருஷ்ண ராதிகா – தவ விரஹே கேசவா (ராதிகா கிருஷ்ணா ராதிகா)||3||

“அவளுடைய சொந்த பெருமூச்சின் வலுவான காற்று, அன்பின் நெருப்பை எரிப்பது போல் உணர்கிறது”

திசி திசி கீரதி சஜல-கா-ஜலம் |
நயன-நளினம் இவ விகலிதா-நலம் |
ராதிகா கிருஷ்ண ராதிகா – தவ விரஹே கேசவா (ராதிகா கிருஷ்ணா ராதிகா) ||4||

“அவளுடைய தாமரைக் கண்கள் எல்லாத் திசைகளிலும் பார்க்கின்றன, அவளது கண்ணீர்த் துளிகளின் மழையை அவற்றின் தண்டுகளிலிருந்து பிரிந்த நீர்ப் புள்ளிகள் கொண்ட தாமரை மலர்களைப் போல சிதறடிக்கின்றன.”

நயன-விஷய மாபி கிசலய-தல்பம் |
கலயாதி விஹித-ஹுதாஸ-விகல்பம் |
ராதிகா கிருஷ்ணா ராதிகா – தவ விரஹே கேசவா (ராதிகா கிருஷ்ணா ராதிகா)||5||

“”புதிய இதழ்கள் கொண்ட படுக்கையை அவள் நேராகப் பார்த்தாலும், அவளது திகைப்பில் அவள் அதை எரியும் நெருப்பாக உணர்கிறாள்.”

த்யஜதி ந பணி-தலேன கபோலம் |
பாலா-ஷஷினம் இவ, ஸயம் ஆலோலம் |
ராதிகா கிருஷ்ண ராதிகா – தவ விரஹே கேசவா (ராதிகா கிருஷ்ணா ராதிகா) ||6||

“அவளுடைய சிவந்த தாமரை கை அவளது கன்னத்தை அழுத்துகிறது, அது அந்தி வானத்தில் புதிதாக உதயமான நிலவின் அழகை ஒத்திருக்கிறது – அவள் தனிமையான இடத்தில் தனியாக அமர்ந்திருக்கும் போது.”

ஹரிரிதி ஹரிரிதி ஜபதி சகமம் |
விரஹ-விஹித-மரணேவ நிகாமம் |
ராதிகா கிருஷ்ண ராதிகா – தவ விரஹே கேசவா (ராதிகா கிருஷ்ண ராதிகா)||7||

“ராதா தன் உயிரை துறக்க முடிவு செய்துவிட்டதாகத் தெரிகிறது. உன்னைப் பிரிந்து, உன்னை அடைய வேண்டும் என்ற ஆசையுடன், ‘ஸ்ரீ ஹரி, ஸ்ரீ ஹரி’ என்று உனது நாமத்தைத் தொடர்ந்து ஆவேசமாக உச்சரிக்கிறாள்.

ஸ்ரீ-ஜெயதேவ-பனிதம் இதி கீதம் |
சுகயது கேசவ-பதம் உபநிதம் |
ராதிகா கிருஷ்ண ராதிகா – தவ விரஹே கேசவா (ராதிகா கிருஷ்ணா ராதிகா)||8||

ஸ்ரீ ஜெயதேவரின் இந்த பாடல் நிபந்தனையின்றி கேசவரின் பாதத்தில் சரணடையும் பக்தர்களுக்கு மகிழ்ச்சியைத் தரட்டும்.

****************

ச ரோமாஞ்சதி, சித்-கரோதி விலாபதி, உட்கம்பதே தம்யதி
த்யாயதி, உத்ப்ரமதி, பிரமேலதி, பததி, உத்யதி. முர்ச்சட் யாப்பி… |
ஏதாவதி, அதானு-ஜ்வரே- வர-தனு:, ஜெவேன்ன கிம் தே ரஸத்
ஸ்வர்-வைத்ய-ப்ரதிமா ப்ரஸிதாஸி, யதி த்யக்தோ அன்யதா ஹஸ்தக:…. ||9||

“ஓ சிறந்த மருத்துவர்களே! மிகவும் அழகான ராதா பிரிவினையின் கவலையால் நிலைகுலைந்து போனாள். சில சமயங்களில் அவள் தலைமுடி உதிர்ந்து நிற்கும், சில சமயம் அவள் மூச்சுத் திணறத் தொடங்குகிறாள், சில சமயம் அவள் திடுக்கிடுகிறாள். சில சமயம் சத்தமாக அழுவாள், சில சமயம் நடுங்குகிறாள். சில நேரங்களில் அவள் மிகுந்த கவனத்துடன் உன்னைப் பற்றி தியானிக்கிறாள். அவள் உங்கள் அன்பான பொழுதுகளின் இடங்கள் முழுவதும் அலைந்து திரிகிறாள். அவள் குழப்பத்தில் மூழ்கும்போது, ​​அவள் கண்களை மூடுகிறாள். சில நேரங்களில் அவள் தரையில் விழுகிறாள். பின்னர் அவள் எழுந்து செல்ல தயாராகிறாள், ஆனால் அவள் திடீரென்று மயக்கமடைந்து மீண்டும் தரையில் விழுந்தாள். அவள் சன்னிப்தா-ஜ்வரா என்ற ஆபத்தான காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருக்கிறாள். நீங்கள் திருப்தி அடைந்தால், தயவு செய்து ரசம்ருத மருந்தை வழங்குங்கள். அப்போது அவள் பிராணன் என்ற பொக்கிஷத்தை அடையலாம். தெய்வீக குணப்படுத்துபவராக விளையாடுங்கள் அல்லது நீங்கள் அவளை இழக்க நேரிடும்.

ஸ்மரதுரம்- தைவத-வைத்ய-ஹ்ருத்யா
த்வத்-அங்க-சங்கம்ருதா, மாத்ர-சாத்யம் |
நிவ்ருத்த-பாதம், குருஷே ந ராதம்
உபேந்திர வஜ்ரத் அபி தருணோ’ஸி ||10||

“ஓ உபேந்திரா! இதயத்தின் தெய்வீக மருத்துவரே, அவள் உன்னுடன் தெய்வீக ஐக்கியத்தின் மருந்தை உட்கொண்டால் மட்டுமே அவள் குணமடைய முடியும். ராதாவை அவளது வேதனையில் இருந்து விடுவிக்க கிருஷ்ணா அல்லது இந்திரனின் வஜ்ராயுதத்தை விட உன் கொடூரமானவள்”

kandarpa-jvara-saàjvarä-tura-tano:, ashcarya masyash ciram
cetash candana-candramaù-kamalini , cintasu santämyati |
கிந்து க்லாந்தி-வஷேந ஶீதல-தனும், த்வாம் ஏகம் ஏவ ப்ரியம்
த்யயந்தி. ரஹஸி ஸ்திதா கதம் அபி, ஷேனா ஷனம் ப்ரானிதி ||11||

“அவள் காதல் காய்ச்சலால் அவதிப்படுகிறாள், அவளது இதயம் சந்தன தைலம் நிலவொளி மற்றும் தாமரை மலர்களின் அதிசயங்களில் மெதுவாக மூச்சுத் திணறலை அனுபவிக்கிறது. சோர்வு அவளை தியானிக்கத் தூண்டும் போது, ​​தன் பிராணன் ஒரு கணம் திரும்பி வருவதை அவள் உணர்கிறாள்.

க்ஷணம் அபி, விரஹ:, புரா ந சேஹே
நயன-நிமிலன-கின்னய யய தே |
ஷ்வஸ் இதி கதம் அசௌ, ரஸல-ஷகாம்,
சிர-விரஹேண, விலோக்ய, புஸ்பிதாக்ரம் ||12||

“உன்னை உற்றுப் பார்க்கையில், கண் இமைப்பதால் ஏற்பட்ட பிரிவை ராதாவால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. ஆகவே, இந்த நீண்ட வலிமிகுந்த பிரிவின் போது அவள் எப்படி உயிருடன் இருக்கிறாள் என்று எனக்குத் தெரியவில்லை, குறிப்பாக ஒரு மகிழ்ச்சியான மாமரம் பூத்துக் குலுங்குவதைப் பார்க்கும்போது (அதன் மேல் கிளைகளில் புதிய பூக்கள் பூத்திருக்கும்).”

த்ருஷ்டி-வ்யகுல-கோகுல-வன-ரஷாத், உத்ருத்ய கோவர்தனம்
பிப்ரத் பல்லவ-வல்லபாபி:, அதிக ஆனந்த் சிரம், கும்பிட:… |
தர்பெனேவா, தட்-அர்பிடா, தாரா-ததி, சிந்துரா-முத்ராங்கிடோ….
பாஹு: கோப-தனோ:, தனோது பவதாம், ஷ்ரேயாஸி கம்ஸ-த்விஷ: ||13||

கிருஷ்ணனின் கரங்கள் இந்திரனுடன் போட்டியிட்டு, கிரி கோவர்தனைத் தூக்கிப் பிடித்துக் கொண்டு, கோகுலத்தில் உள்ள ஆர்வத்துடன் வசிப்பவர்களைக் கனமழையில் இருந்து பாதுகாக்கின்றன. அழகான இளம் கோபிகளால் அவரது கரங்கள் நீண்ட நேரம் முத்தமிட்டு, புதிதாக திருமணமான அந்த கோபியர்களின் உதடுகளிலிருந்து குங்குமமும், அவர்களின் நெற்றியில் இருந்து சிந்துராவும் பூசப்பட்டன. மாடு மேய்க்கும் சிறுவன் வடிவில் காட்சியளிக்கும் கம்சனை அழிப்பவனான ஸ்ரீ கிருஷ்ணனின் அந்தக் கரங்கள் உங்கள் அனைவருக்கும் ஐஸ்வர்யத்தை அளிக்கட்டும்.

ஏதி ஸ்ரீ கீத கோவிந்தே ஶ்ரீங்கார மஹாகாவ்யே
ஸ்ரீ கிருஷ்ண தாஸ ஜெயதேவ க்ருதவ்
ஸ்நிக்த-மதுஸுதனோ நாம, சதுர்த ஸர்க:

ராகம்: ஆனந்த பைரவி ; ஆதி தாலா

அஹம் இஹ நிவாஸாமி யாஹி, ராதாம்… அன் உனய
மத்-வசனேன சா அனா-யேதா:|
இதி மது-ரிபுனா சகி… நியுக்தா
ஸ்வய மிதம் ஏத்யா, புனர் ஜகதா, ராதம்…. ||

“நான் இங்கேயே இருப்பேன், நீ ராதாவிடம் போய் என் வார்த்தைகளால் அவளை சமாதானம் செய்து என்னிடம் அழைத்து வா” என்று மதுசூதனாவின் கட்டளைப்படி அவள் சகி ராதாவிடம் அவனது வார்த்தைகளை மீண்டும் சொல்ல சென்றாள்.

ராதே, வஹதி மலய-சமிரே, மதனம் உபநிதயா |
ராதே, ஸ்புயத்தி குசும-நிகரே, விரஹி-ஹ்ருதய-தலனாய ||1||

ராதே, தவ விரஹே வனமாலி.. சகி சிதாதி ராதே || துருவ-பதா ||

“எனது அன்பு தோழி ராதா, சந்தன (மலாயா) தென்றல் மெல்ல மெல்ல நகர்கிறது, எல்லோரையும் அமோக மனநிலையில் ஊறவைக்க. தனிமையில் இருக்கும் காதலர்களின் இதயங்களை பலவகையான மலர்கள் திறந்து கிழித்துக் கொண்டிருக்கின்றன. வசந்தத்தின் இந்த தூண்டுதல் நேரத்தில், உணர்ச்சிவசப்பட்ட வனமாலி உன்னைப் பிரிந்திருப்பதை உணர்கிறாள், ராதே.”

ராதே, தஹதி ஷிஷிர மயூகே மரணம் அனுகரோதி |
ராதே, படதி மதன-விசிகே விலாபதி விகல தாரோ’தி (ராதே, தவ விரஹே வனமாலி) ||2||

“சந்திரன் அவரை மரணத்தை அச்சுறுத்துகிறது. மன்மதனின் (காமதேவனின்) அம்புகள் போன்ற மரங்களிலிருந்து விழும் மலர்களால் அவன் இதயம் துளைக்கப்படுகிறது. உங்கள் பிரிவை நினைத்து அவர் கடுமையாக புலம்புகிறார்.

ராதே,த்வநதி மதுப-ஸமுஹே, ஷ்ரவணம் அபி ததாதி |
ராதே, மனஸி சலித-விரஹே, நிஷி நிஷி ருஜு உமுபயதி (ராதே, தவ விரஹே வனமாலி) ||3||

“பம்பல்பீஸின் ஓசையைக் கேட்கும்போது அவர் தனது கைகளால் காதுகளை மூடுகிறார். ஒவ்வொரு இரவும் அவர் உங்கள் நிறுவனத்தை அடைவார் என்று எதிர்பார்க்கிறார், ஆனால் அவர் ஏமாற்றமடைகிறார். நாளுக்கு நாள் அவர் பிரிவினையின் சித்திரவதைகளைத் தாங்கிக் கொள்ளும்போது அவரது உடல் பலவீனம் அதிகரிக்கிறது.

ராதே, வஸதி விபின-விதனே, த்யஜதி லலிதா-தாமா |
ராதே, லுததி தரணி-ஷயனே, பஹு விலாபதி தவ நாம (ராதே, தவ விரஹே வனமாலி) ||4||

“அவர் அரண்மனையில் உள்ள தனது அழகான படுக்கை அறையை விட்டுவிட்டு காட்டில் வசிக்கிறார். வீட்டில் வசதியாக வாழ்வதற்குப் பதிலாக, தரையில் உருண்டு, திரும்பத் திரும்ப உன் பெயரைச் சொல்லி, ‘ராதா! ராதா!”

ராதே, பானதி கவி-ஜயதேவே, விரஹ-விலாசிதேன |
ராதே, மனஸி ரபஸ-விபாவே.. ஹரி ருதயது ஸுக்ருதேன (தவ விரஹே வனமாலி, சகி சிதாதி ராதே) ||5||

ஸ்ரீ ஜெயதேவரின் இந்தப் பாடலில் கிருஷ்ணரின் பிரிவினை பற்றிய கவலை நிறைந்துள்ளது. இப்பாடல் புகுத்திய பக்தியின் பலனாக, இதனை ஓதுபவர்கள் பிரிவின் பொழுதுகளில் நிகரற்ற திளைப்பை அடைகிறார்கள். ஸ்ரீ கிருஷ்ணர் அவர்களின் இதயங்களில் வெளிப்படட்டும்-

ராகம்: யமன்; ஆதி தாலா

பூர்வம், யத்ர சாமம், த்வயா ரதி-பதேர்… ஆராதிதா சித்தய:
தஸ்மின் …ஏவ நிகுஞ்ச…மன்மத-மஹா-தீர்த்தே… புனர் மாதவ: |
த்யாயன்… த்வாம் அனிஷம், ஜபன்னாபி தவைவா, அலாப-மந்த்ராவலிம்
பூய:, த்வத்-குச-கும்ப-நிர்பர பரிரம்பாம்ருதம், வஞ்சதி ||

“மாதவா இன்னும் உங்களுக்காக மிகவும் புனிதமான புதர்க்காடுக்காக காத்திருக்கிறார், அங்கு நீங்கள் ஒன்றாக அன்பை பூர்த்தி செய்தீர்கள். அவர் தூங்காமல் உங்களை தியானிக்கிறார்.தொடர் மந்திர ஜெபங்களை முணுமுணுக்கிறார். அவர் உங்களுக்காக ஏங்குகிறார்”

ரதி-சுக-சரே கதம் அபிசரே மதன-மனோஹர-வேஷம் |
ந குரு நிடம்பினி கமன-விலம்பனம் அனுசர தம் ஹ்ருதயேசம் (ராதே) ||1| |

“வனமாலி கிருஷ்ணன் வன மலர் மாலையால் அலங்கரிக்கப்பட்டிருக்கிறான், அவனுடைய வடிவம் மின்னுகிறது. அவர் சிற்றின்பத்தின் கடவுளைப் போலவே மிகவும் கவர்ச்சிகரமான உடையை அணிந்துள்ளார். அவனை காத்திருக்க வைக்காதே ராதே. உங்கள் இதயத்தின் இறைவனைப் பின்பற்றுங்கள்.

திர-சாமிரே யமுனா-டையர் வசதி வனே வனமாலி
கோபி பினா பயோதர மர்தனா
சஞ்சல கர யுக ஷாலி ராதே
திர-சாமிரே யமுனா-டையர் வசதி வனே வனமாலி|| துருவ-பதா ||

“அவர் தற்போது யமுனையின் மென்மையான மலாயா-காற்றுக் கரையில் ஒரு காட்டுப் போரில் காத்திருக்கிறார். அவர் உனக்காகக் காத்திருக்கிறார் ராதே”.

நாம ஸமேதம் க்ருத-சங்கேதம், வாதயதே ம்ருதுவேனும் |
பஹு மனு தே நானு தே, தனு தே, தனு-சகத, பவனா-சலிதம் அபி ரேனும்(ராதே) ||2| |

“ஓ ராதா, உன் பெயரை அழைப்பது போல் அவன் புல்லாங்குழலை மென்மையாக வாசிக்கிறான். முதலில் உங்கள் உடலைத் தொட்ட மகரந்தத்தால் தீண்டப்பட்டதை அவர் மிகவும் அதிர்ஷ்டசாலி என்று கருதுகிறார். அவர்கள் தென்றலில் அவரிடம் வரும்போது, ​​அவர் அவர்களை மிகுந்த மரியாதையுடன் ஏற்றுக்கொள்கிறார்.

பததி படத்ரே விசலதி பத்ரே சகித-பவத் உபயனம் |
ரசாயதி சயன சசகித-நயன பச்யதி தவ பந்தனம் (ராதே)||3| |

“கிருஷ்ணர் மகிழ்ச்சியுடன் படுக்கையை உருவாக்கும்போது, ​​அவர் பல உள் பார்வைகளை அனுபவிக்கிறார். மரத்தின் மீது இறங்கும் பறவை இலைகளை சலசலத்து, சிறிய சத்தம் எழுப்பும்போது, ​​கிருஷ்ணர் திடுக்கிட்ட கண்களுடன் நீங்கள் எதிர்பார்க்கும் பாதையில் பார்க்கிறார்.

முகர மாத்திரம் த்யஜ மஞ்சிரம், ரிப்பும் இவ கேலி ஷூலோலம் |
சல சகி குஞ்சம் சதிமிர-புஞ்சம், ஷைலயா நிலா-நிச்சோலம் (ராதே)||4||

“சகி, போ! அந்த அடர்ந்த திசையில் நகரவும். உங்கள் கணுக்கால் மணிகளை கழற்றவும். உங்கள் நாடகத்தில் துரோகிகள் போல் முழங்குகிறார்கள். இந்தக் கருநீல நிற ஆடையை அணிந்துகொள்” என்றார்.

உரசி முராரே உபஹித-ஹரே, கானா இவ தரல-பாலகே
தைதி ரிவா பிதே, ரதி-விபரிதே, ராஜஸி ஸுக்ருத-விபாகே (ராதே)||5||

“இருண்ட மேகத்தின் மீது மின்னுவதைப் போல நகைகளால் அலங்கரிக்கப்பட்ட முராரியின் மார்பில் உனது மாலை விழுகிறது. அந்த போதையில் இருக்கும் அன்பைக் குடித்து உனது சுக்ருதத்தை (நல்ல அதிர்ஷ்டத்தை) அனுபவிக்கவும்.” .

விகலித-வசனம், பரிஹ்ருத-ரசனம், கதயா ஜகநம் அபி தானம்.
கிசலய-ஷயனே பகஜ-நயனே, நிதிம் இவ ஹர்ஷ-நிதானம் (ராதே)||6||

“ஓ நீல தாமரை கண்களையுடைய ராதா, உனது வசனங்களை அவிழ்த்து, பக்தி ரசத்தைக் குடி. புதிதாக முளைத்த இலைகளின் படுக்கையில், உங்கள் காதலரின் மகிழ்ச்சியான நிறைவோடு இருங்கள்.

ஹரிர் அபிமானி ரஜனி ரிதானிம், இயம் அபி யதி விரமாம் .
குரு மம வசனம், சத்வார-ரச்சனம், பூராய மாதுரிபு-காமம்(ராதே) ||7||

“இப்போது ஸ்ரீ ஹரி பெருமிதத்தால் நிறைந்திருக்கிறார். இரவின் கடைசிக் காலம் கடக்கப் போகிறது, எனவே என் ஆலோசனையை ஏற்றுக்கொள். இனியும் தாமதிக்காமல் உடனே சென்று, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் (மது) விருப்பங்களை நிறைவேற்றுங்கள்”

ஸ்ரீஜயதேவே க்ருத ஹரி சேவே, பானதி பரம-ராமியம்
ப்ரமுதித-ஹ்ருதயம், ஹரிம் அதி சதயம், நமத ஸுக்ருத-கமணியம்(ராதே) ||8||

புனிதர்களே! கிருஷ்ணர் உற்சாகமானவர், காரணமின்றி இரக்கமுள்ளவர், விதிவிலக்காக இனிமையானவர், நல்லொழுக்கமுள்ளவர் மற்றும் விரும்பத்தக்க அனைத்து குணங்களாலும் அலங்கரிக்கப்பட்டவர். மிகவும் மயக்கும் கவிதைகளை இயற்றியவரும், ஸ்ரீ ஹரியின் அடியவருமான ஸ்ரீ ஜெயதேவரின் இந்தப் பாடலைச் சொல்லி ஆனந்த இதயத்துடன் அவருக்கு வணக்கம் செலுத்துங்கள்.

****************

விகிரதி முஹு ஷ்வாஸன், அஷ புரோ முஹுர் ஏக்ஷ்ணதே
ப்ரவிஷதி முஹுர், குஞ்சன் குஞ்சன், முஹுர் பஹு தம்யதி |
ரசாயதி முஹுர் ஷய்யம், பர்யகுலம், முஹுர் ஏக்ஷ்ணதே
மதன-கடன-க்லாந்த:- காண்டே , ப்ரியஸ் தவ வர்ததே ||9||

“இடைவிடாமல் பெருமூச்சு விடுகிறார், அவர் தனது துயரத்தை ஊற்றுகிறார். வெற்று திசைகளை முடிவில்லாமல் தேடுகிறான். ஒவ்வொரு முறையும் தனக்குத்தானே முனுமுனுத்துக்கொண்டு காட்டுக்குள் நுழையும்போது மூச்சுத் திணறுகிறது. வெற்றுக் குழப்பத்துடன் உங்களின் அன்பின் படுக்கையை மீண்டும் மீண்டும் உருவாக்குகிறார். ஏய் ராதா, உன் ப்ரியா உன் விரஹாவை அனுபவிக்கிறாள்.

த்வத்-வாம்யேன, சமம், சமக்ரம் அதுனா, திக்மம்-ஷுரஸ் தம்கதோ
கோவிந்தஸ்ய-மனோரதேன-ச-சமம், ப்ராப்தம், தம சந்த்ரதம் |
கோகனம், கருணா-ஸ்வநேன சத்ருஷி, திர்கமத்-அப்யர்தனா
தன் முக்தே, விபலம், விலம்பனம் அசௌ , ரம்யோ அபிஷ-ரக்ஷண: ||10||

“உங்களுடைய மாறுபட்ட மனநிலையுடன், சூரியனும் அஸ்தமித்தது. கிருஷ்ணனின் ஆசையுடன் இருளும் உக்கிரமாகி விட்டது. இரவில் பரிதாபமான குரலில் புலம்பும் தனிமையான சக்ரவ்ட்கா பறவையின் தொடர்ச்சியான அழுகைப் போல, எனது கோரிக்கையும் பயனற்றதாகிவிட்டது. திகைத்தவனே, நான் உன்னிடம் நீண்ட நாட்களாக மன்றாடுகிறேன். இனி தாமதிப்பதால் பயனில்லை”

ஆஷ்லேனாத் அனு, கும்பனாத் அனு, நகோ-லேகாத், அனு ஸ்வாந்தஜா…
ப்ரோத்போதாத் அனு, ஸம்ப்ரமாத், அனு ரதாரம்பாத், அனு ப்ரிதாயோ:… |
அன்யார்த்தம் கதயோ:, ப்ராமன் மிலிதயோ:, ஸம்பாஷனைர் ஜானதோ:
தம்பத்யோர் இஹ, கோ ந கோ ந தாமஸி, விருதா-விமிஷ்ரோ ரஸ: ||11||

“இருளில் சந்திக்கும் காதலர்கள் அன்பின் மயக்கம் தரும் உயரங்களை தழுவி முத்தமிடுகிறார்கள். இருப்பினும், இங்கே மனநிலை வேறுபட்டது.

ச-பய-சகிதம், வின்யாஸ் யாந்திம், தஷாம் திமிரே
பதி ப்ரதிதரு முஹு: ஸ்தித்வா, மந்தம் பதானி விதன்வதிம் |
கதம் அபி ரஹ: ப்ராப்தம், அங்கைர் அனங்க-தரங்கிதி:…
சுமுகி, சுபக: பஷ்யன், ச த்வாம் உபைது, குடார் ததாம் ||12||

“இருண்ட பாதையில் பயமுறுத்தும் பார்வையை செலுத்தும்போது, ​​ஒவ்வொரு மரத்திலும் நின்று, மெதுவாக உங்கள் அடிகளை அளந்தால், நீங்கள் எப்படியாவது ஒதுக்குப்புறமான இடத்திற்கு வந்துவிடுவீர்கள். கிருஷ்ணர் உனக்காகக் காத்திருக்கிறார்!அவர் உங்கள் வருகையைக் கொண்டாடட்டும்.”

ராதா-முக்த-முகாரவிந்த-மதுப:, ட்ரைலோக்ய-மௌலி-ஸ்தாலி
நேபத் யோ…சிதா, நிலா-ரத்னம் அவனி, பரா அவதாரா, அந்தக: |
ஸ்வச்சந்தம் வ்ரஜ-சுந்தரி, ஜன-மனஸ்-தோஷ-பிரதோஷ ஷிரோù…
கம்ச-த்வம்சனா-தும-கேதுர்- அவது, த்வாம் தேவகி-நந்தன: ||13||

ராதையின் தாமரை முகத்தின் தேனைக் குடிக்கும் பம்பல்பீ அவர். அவர் மூன்று உலகங்களின் முகடு-மணியான பிருந்தாவனத்தின் நீலமணி ஆபரணம். இரவுப் பொழுதைப் போலவே, வ்ரஜாவின் அழகிய கோபியர்களைத் திருப்திப்படுத்த அவர் இயல்பாகவே திறமையானவர். அவர் பூமியின் மீது அதிக சுமைகளை சுமக்கும் ஆக்கிரமிப்பு அனுபவவாதிகளை நிர்மூலமாக்குகிறார். அவர் தூமகேது நட்சத்திரம் போன்றவர், கம்சனுக்கு அழிவை முன்னறிவிப்பவர். தேவகியின் மகனான அந்த ஸ்ரீ கிருஷ்ணரே உங்கள் அனைவரையும் காக்கட்டும்.

ஏதி ஸ்ரீ கீத கோவிந்தே ஶ்ரீங்கார மஹாகாவ்யே
ஸ்ரீ கிருஷ்ண தாஸ ஜெயதேவ க்ருதவ்
அபிசாரிக வர்ணனே, ஸகாங்க்ஷ புண்டரிகாஶோ நாம, பஞ்சம ஸர்க:

ராகம்: சங்கராபரணம்; ஆதி தாலா

அத தம் கந்து மாஷக்தம், சிர மனுரக்தம், லதா….க்ருஹே, த்ரிஸ்த்வா |
தக்-சரிதம்… கோவிந்தே, மனசிஜா-மண்டே… சகி ப்ராஹா | |

“ராதா மலர்ந்த கொடிகளின் அறையில் அமர்ந்திருந்தாள். ராதா கிருஷ்ணரின் சகவாசத்தை விரும்பினாலும் அவரிடம் செல்ல முடியாமல் இருப்பதைக் கண்ட சாகி, ராதாவின் நிலையை கோவிந்தனிடம் விவரித்தார்.

பச்யதி திசி திசி ரஹஸி பவந்தம் |
த்வத்-ஆதார-மதுர-மதுனி பிபந்தம் ||1||
நாத ஹரே சிதாதி ராதா வாச-கே ||த்ருவபதா ||

“ஓ ஹரி, நீ அவளுக்கு ஒரே அடைக்கலம். ஸ்ரீ ராதா சோதனையிடும் இடத்தில் விரக்தியின் ஆழத்தில் மூழ்குகிறாள். அவள் வேதனையில் இருக்கிறாள். எல்லாத் திசைகளிலும், அவள் இதயத்தின் மையத்திலும், அவள் உதடுகளின் இனிமையான அமிர்தத்தைக் குடிப்பதில் மிகவும் திறமையான உன்னைப் பார்க்கிறாள். ”

த்வத்-அபிசரா-ரபசேனா வாலந்தி |
படதி பதனி கியாந்தி காலந்தி ||2||

“உன்னைச் சந்திக்கும் அவசரத்தில், அவள் சில படிகளில் தடுமாறி கீழே விழுகிறாள்”.

விஹித-விசதா-பிஸ-கிசலய-வலயா |
ஜீவதி பரம் இஹ தவ ரதி-கலயா ||3||

“அவள் வளையல்கள், புடவைகள், மோதிரங்கள், கவசங்கள், கழுத்தணிகள் மற்றும் களங்கமற்ற வெள்ளைத் தாமரை-இழைகள் மற்றும் புதிதாக முளைத்த இலைகளால் செய்யப்பட்ட மற்ற ஆபரணங்களை அணிகிறாள். அவள் மீண்டும் உன்னுடன் இருப்பாள் என்ற நம்பிக்கையில் மட்டுமே வாழ்கிறாள்.

முஹூர் அவலோகித-மான-லீலா |
மது-ரிபுரஹம் இதி பாவனா-சிலா ||4||

“ஓ கிருஷ்ணா, அவளுடைய பிராணன் உன்னுடன் ஒன்றாகிவிட்டது. ‘நான் மதுசூதனா’ என்று கற்பனை செய்து கொண்டு, உங்களுடன் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு, தன் ஆபரணங்களை உற்றுப் பார்க்கிறாள்.

த்வரிதம் உபைதி ந கதம் அபிசாரம் |
ஹரிரிதி வததி சகிம் அனுவாரம் ||5||

“ஏன் ஹரி என்னை சந்திக்க சீக்கிரம் வரமாட்டான்?” அவள் இடைவிடாமல் தன் சகியிடம் (நண்பன்) கேட்கிறாள்.

ஸ்லியாதி சும்பதி ஜல-தார-கல்பம் |
ஹரிரூபகத இதி திமிரம் அனல்பம் ||6||

அடர்ந்த இருளில், அவள் உருவம் போன்ற மேகத்தைத் தழுவி முத்தமிட்டு, “ஹரி வந்துவிட்டான்” என்று கூறுகிறாள்.

பவதி விலாம்பினி விகலிதா-லஜ்ஜா |
விலாபதி ரோதிதி வாசக-சஜ்ஜா ||7||

“ராதா வெளி உணர்வுக்குத் திரும்பியதும், நீங்கள் இன்னும் வரவில்லை என்பதை உணர்ந்தவுடன், அவள் எல்லா வெட்கத்தையும் இழந்து சத்தமாக அழத் தொடங்குகிறாள்.”

ஸ்ரீ-ஜெயதேவா-காவேர் இடம் உதித்தம் |
ரசிக-ஜன தனுதம் அதிமுதிதம் ||8||

கவிஞர் ஜெயதேவாவின் இந்தப் பாடல் ரசத்தை ருசிப்பதில் வல்லவர்களின் உள்ளங்களில் மிகுதியான மகிழ்ச்சியை எழுப்பட்டும்.

****************

விபுல-புலக-பலிம்- ஸ்பித-சேத்-கார மாந்தர்-
ஜனிதா-ஜாதிமம்-ககு, வ்யகுலம் வ்யஹரந்தி |
தவகி தவ விதத், அமண்ட-கந்தர்ப-சிந்தம்
ரச-ஜல-நிதி-மக்னம், தியான-லக்னா, மிருகக்ஷி ||9||

“அவள் உடல் ஏக்கத்தால் துடிக்கிறது; குழப்பமான வார்த்தைகளில் அவள் மூச்சு உறிஞ்சும்; ஆழ்ந்த பயத்தில் அவள் குரல் உடைகிறது-உன் தீவிர எண்ணங்களால் ஆவேசப்பட்டது. ராதை உன் விரகத்தில் மூழ்கி, தன் தியானத்தில் உன்னோடு ஒட்டிக்கொண்டு உயிருடன் இருக்க முயல்கிறாள்”

அங்கேஷ்வ பரம், கரோதி பஹுஷா:, பத்ரே’பி சஞ்சாரிணி…
ப்ராப்தம் த்வாம்- பரிஷங்கதே விதனுதே, ஷய்யம் சிரம் த்யாயதி |
இத்ய கல்ப-விகல்ப-தல்ப-ரசான, சங்கல்ப-லீலாஷத-
வ்யசக்தாபி- வினா. த்வயா வர-தனுர், நைஷாம் நிஷாஷம் நேஷ்யதி ||10||

“அவள் தன்னை ஆபரணமாக்கிக் கொள்கிறாள், இலைகள் சலசலக்கும் போது, ​​’ஓ, நீ வந்துவிட்டாயா’ என்று நினைத்துக் கொண்டு எதிர்பார்ப்பில் நிறைந்திருக்கிறாள். அவள் ஒரு மென்மையான படுக்கையை உருவாக்கி, தியானத்தில் நீண்ட நேரம் காத்திருக்கிறாள். ஆபரணங்கள் மற்றும் கற்பனைகளின் படுக்கையை உருவாக்கி, தனது அழகான விளையாட்டில் உங்களைப் பற்றிய நூறு விவரங்களைத் தூண்டுகிறார். ஆனால் பலவீனமான பெண் நீங்கள் இல்லாமல் இரவில் வாழ மாட்டாள்.

கிம் விஷ்ராம்யஸி, கிருஷ்ண-போகி-பவனே, பாந்திர-பூமி-ருஹி
ப்ரதர் ​​யாஸி ந த்ரிஷ்டி-கோசாரம் இத:, ஸாநந்த-நந்தே…ஸ்பதம் |
ராதாயா வசனம் தத் அத்வாக-முகாந் நந்தாந்திகே கோபதோ
கோவிந்தஸ்ய, ஜெயந்தி ஷாயம், அதிதி-ப்ரஷஸ்த்ய-கர்பா கிரா: ||11||

நான் ஸ்ரீ ராதா வீட்டில் விருந்தினராக இருந்தபோது, ​​அவள் என்னிடம், ‘அண்ணே, இந்த பண்டிரா மரத்தின் அடிவாரத்தில் ஏன் ஓய்வெடுக்கிறீர்கள்? இங்கு விஷமுள்ள கருப்பு பாம்பு ஒன்று வாழ்கிறது. எழுந்து, உங்களுக்கு முன்னால் தெரியும் நந்தாவின் மகிழ்ச்சியான வீட்டிற்குச் செல்லுங்கள். நீங்கள் ஏன் அங்கு செல்லக்கூடாது?’” ராதாவின் இந்த வார்த்தைகளைக் கேட்டதும், ஒரு யாத்ரீகரின் உதடுகளிலிருந்து, கிருஷ்ணர் “அவருக்கு” ​​நன்றி கூறினார், ஸ்ரீ நந்த மகாராஜா தனது அறிக்கைகளின் உள் மனநிலையைப் புரிந்து கொள்ளாத வகையில். கோவிந்தரின் துதி வார்த்தைகள் ஜெயிக்கட்டும்.

ஏதி ஸ்ரீ கீத கோவிந்தே ஶ்ரீங்கார மஹாகாவ்யே
ஸ்ரீ கிருஷ்ண தாஸ ஜெயதேவ க்ருதவ்
சோத்கந்த-வைகுண்ட நம, சாஸ்தா சர்கா:

ராகம்: அஹிரி; ஜும்பா

அத்ராந்தரே ச குலத-குல, வர்த்ம-காதா
சஞ்ஜாத-பதாக, இவ ஸ்புடலா.லாஞ்சன-ஸ்ரீ:|
விருந்தா-வனந்தரம், அதிபயத், அம்சு-ஜாலை:
திக்-சுந்தரி, வதனா-சந்தன-பிந்துர் இந்து: ||

“இரவு வந்ததும், மனநிலை பள்ளம் படிந்த கறைகளைக் காட்டியது, பிருந்தாவனத்தின் ஆழத்தில் நிலவொளியுடன் ஒளி வீசியது. வானத்தின் முகத்தில் சந்தனப் பொடி படிந்த பொட்டு போல சந்திரன் தோன்றினான்.”

பிரசரதி ஷஷ-தார-பிம்பே விஹித-விலம்பேச, மாதவே விதுரா |
விரசித-விவித-விலாபம் ச-பரிதாபம்சகார உச்சை: | |

“சந்திரன் உதயமாகி, மாதவா சும்மா இருந்த போது, ​​தனிமையில் இருந்த ராதா, பரிதாபமான துக்கத்தில் தன் வலியை உரக்க அழுதாள்.”

கதிதசமயே’பி ஹரிரஹஹ ந யயௌ வனம் |
மம விபலா மிதா மமல ரூபம் அபி யௌவனம் ||1||

யாமி ஹே கம் இஹ சரணம் சகி-ஜன-வசன-வஞ்சிதஹம் ||த்ருவபதம்||

“வாக்களிக்கப்பட்ட நேரத்தில் ஹரி காட்டிற்கு வராததால் எனது மாசற்ற இளமை, அழகு அனைத்தும் வீணாகிவிட்டன. நான் என் நண்பர்களால் ஏமாற்றப்பட்டேன், இப்போது நான் யாரிடம் அடைக்கலம் தேடுவது?”.

யதனு கமனாய நிஷி, கஹனம் அபி ஷிலிதம் |
தேன மம ஹ்ருதயம் இடம், அசம-ஷர-கிளிதம் (யாமி ஹே கம் இஹ சரணம்)||2||

“இத்தகைய ஒரு இருண்ட இரவில் நான் யாரைப் பின்தொடர்ந்து இந்த காட்டுக் காட்டிற்குள் நுழைந்தேனோ, அந்த நபர் என் இதயத்தை அன்பின் அம்புகளால் துளைக்கிறார். நான் யாரிடம் அடைக்கலம் தேடுவது?”

மம மரம் ஏவ வரம், இதி விதத-கேதன |
கிம் இஹ விஷஹாமி, விரஹானாலம் அசேதன (யாமி ஹே கம் இஹ ஷரணம்) ||3||

“இனிமேலும் இந்த உடலை பராமரிப்பதில் பயனில்லை. நான் உடனே இறக்க வேண்டும். நான் உணர்வற்றவனாக மாறுகிறேன். இந்த சகிக்க முடியாத பிரிவினையை நான் எப்படி தாங்குவது?”.

மம ஹாஹா விதுரயதி, மதுர-மது-யாமினி |
கபி ஹரிம் அனுபவவதி, க்ருத-சுக்ருத-காமினி (யாமி ஹே கம் இஹ சரணம்)||4||

“ஓ, நான் எவ்வளவு துரதிர்ஷ்டசாலி. இந்த விதிவிலக்கான இனிமையான வசந்த இரவு தனிமையின் வலியால் என்னை நிலைகுலையச் செய்கிறது. இது போன்ற ஒரு நேரத்தில், சில உணர்ச்சிவசப்பட்ட இளம்பெண்கள் ஹரியின் தயவின் உச்சகட்ட மகிழ்ச்சியை அனுபவிக்கிறார்கள் என்பது உறுதியானது.

அஹஹா கலயாமி வளையாடி-மை-பூஷணம் |
ஹரி-விரஹ-தஹன-வஹனேன பஹு-தூஷணம் (யாமி ஹே கம் இஹ சரணம்) ||5||

“நான் அணியும் ஒவ்வொரு வளையலும், நகைகளும், ஹரியின் துறவறத்தின் நெருப்பைச் சுமந்து, என்னை வலியச் செய்கின்றன.”

குசும-சுகுமார-தனும், அசம-ஷர-லீலயா |
பிரகதி ஹ்ருதி ஹந்தி மாம், அதி விஷம-ஷிலயா (யாமி ஹே கம் இஹ சரணம்) ||6||

“என் மார்பில் இருக்கும் இந்த வன மலர் மாலையும் கூட மன்மதனின் அம்புகள் போன்ற பயங்கரமான அடிகளை என் உடலில் செலுத்துகிறது, இது மென்மையான பூக்களை விட மென்மையானது.”

அஹம் இஹ நிவாஸாமி, நவி-கணித-வேதஷா |
ஸ்மரதி மதுசூதனோ, மமாபி ந சேதஸ (யாமி ஹே கம் இஹ ஷரணம்) ||7||

“இந்தப் பயங்கரமான கரும்புகைக் காடுகளுக்கு நடுவே நான் கிருஷ்ணருக்காக அச்சமின்றி அமர்ந்திருக்கிறேன். ஆனால் மதுசூதனன் ஒரு முறை கூட என்னை நினைவில் கொள்ளாதது எவ்வளவு வியப்பாக இருக்கிறது.

ஹரி-சரண-ஷர்ணா, ஜெயதேவ-கவி-பாரதி |
வஸது ஹ்ருதி, யுவதி ரிவா, கோமலா-கலாவதி (யாமி ஹே கம் இஹ ஷரணம்)||8||

சகல கலைகளிலும் வல்லவளான ஓர் அழகிய இளம்பெண்ணின் குணங்கள் ஓர் இளைஞனின் இதயத்தில் எப்பொழுதும் ஒளிர்வது போல, ஸ்ரீ கிருஷ்ணரின் தாமரை பாதங்களில் நிபந்தனையின்றி சரணடைந்த ஸ்ரீ ஜெயதேவரின் இந்த இன்பமான பாடல் எப்பொழுதும் அருளட்டும். பக்தர்களின் இதயங்கள்.

****************

தத்-கிம் காமபி காமினிம், அபிஸ்ருத:, கிம் வா கலா-கேலிபி:…
பத்தோ பந்துபி:, அந்தகாரிணி வனாப்யர்ணே, கிமுத் ப்ராம்யதி |
காந்தா: கிளாந்த-மனா, மனக் அபி, பதி பிரஸ்தா தும் ஏவாக் ஷம:….
சங்கேதி-க்ருத-மஞ்சு-வஞ்சுல-லதா-குஞ்சே’பி , யான் நகதா:… ||9||

“ஸ்ரீ கிருஷ்ணர் என் உயிரை விட எனக்கு மிகவும் பிடித்தவர். மலரும் கொடிகளின் நியமிக்கப்பட்ட அறைக்கு அவர் ஏன் வரவில்லை? அதன் பின்னணியில் உள்ள மர்மம் என்ன? அவர் மற்றொரு உணர்ச்சிமிக்க பெண்ணுடன் முயற்சிக்கு சென்றாரா? தன் நண்பர்களுடன் விளையாடும் மகிழ்ச்சியில் குறிப்பிட்ட நேரத்தை அவர் கவனக்குறைவாக அனுமதித்தாரா? இந்த அடர்ந்த மரங்களின் நிழலால் ஏற்பட்ட பயங்கரமான இருளில் இந்த இடத்தைக் கண்டுபிடிக்க முடியாமல் அவன் அலைகிறானா? ஒரு அடி கூட நடக்க முடியாத அளவுக்கு என்னைப் பிரிந்த உணர்வுகளால் அவர் பலவீனமடைந்துவிட்டாரா?

ராகம்: சாரங்கா ; ஆதி தாலா

அதா… கடம், மாதவ மாந்தரேண
சகிமியம், வீக்ஷ்ய விஷத-முகம் |
விஷங்கமானா, ரமிதம் கயாபி
ஜனார்தனம் த்ருஸ்தவத், ஏதத் äஹ ||

ராதா, மாதவன் இல்லாமல், நாக்கு பிடிப்பும், நாக்கு பிடிப்பும் இல்லாமல் திரும்பி வந்ததைக் கண்ட ராதா, சில கோபி ஜனார்த்தனனை மகிழ்விப்பதைப் பற்றிய சந்தேகத்தை எழுப்பி, அவளிடம் சொன்னாள்.

ஸ்மர-சமரோசித-விரச்சித-வேஷா |
கலிதா-குசும-பார-விடுலித-கேஷா ||1||

கபி மாதுரிபுனா விலாசதி யுவதிர் அதிக-குணா ||த்ருவபதா||||

“ஓ சகி, அவள் ஒரு காமப் போருக்குத் தகுந்த ஆடைகளையும் ஆபரணங்களையும் அணிந்திருக்கிறாள். அவளது தளர்ந்த கூந்தலில் மலர்கள் சிக்குண்டு கிடக்கின்றன. என்னை விட அதிக தகுதியுள்ள சில இளம்பெண்கள், மதுரிபுவுடன் மகிழ்ச்சியுடன் களியாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

ஹரி-பரிரம்பான-வலித-விகாரா |
குச்ச-கலஷோபரி தரலிதா-ஹரா (கபி மாதுரிபுனா)||2||

“கிருஷ்ணன் அவளை ஆழமாக அணைத்துக் கொண்டபோது, ​​அவள் சிற்றின்பக் கிளர்ச்சியால் திகைக்கிறாள். அவளது தோலின் ஒவ்வொரு துளையின் சிலிர்ப்பிலும் தொடங்கி அவள் உடல் மாற்றங்களை அனுபவித்துக்கொண்டிருக்க வேண்டும், அவளுடைய கழுத்தணி அவளுக்கு அங்கும் இங்கும் ஆடிக்கொண்டிருக்க வேண்டும்.

விச்சலாட்-அலக-லலிதனனா-சந்திரா |
தத்-ஆதார-பான-ரபஸ-க்ருத-தந்த்ரா (கபி மாதுரிபுனா) ||3||

“அவளுடைய சந்திரன் போன்ற முகத்தின் அழகு அவளது சுருள் முடிகளால் மேம்படுத்தப்பட வேண்டும், மேலும் கிருஷ்ணரின் உதடுகளின் அமிர்தத்தைக் குடிக்கும் பேராசையால் அவள் கண்கள் ஆனந்தமாக மூடப்பட வேண்டும்.”

சஞ்சல-குண்டல-லலிதா-கபோல |
முகரித-தாஷன-ஜகனா-கதி-லோலா (கபி மாதுரிபுனா) ||4||

“அவளுடைய காதணிகள் ஆடும் போது அவளுடைய கன்னங்கள் இன்னும் அழகாக இருக்க வேண்டும். அவளது இடுப்பை நேர்த்தியாக அலங்கரித்திருந்த நகைப் புடவையில் உள்ள சிறிய மணிகள் நடுங்குவது போல் மிகவும் இனிமையாக ஒலித்துக் கொண்டிருக்க வேண்டும்.

தயிதா-விலோகிதா-லஜ்ஜித-ஹசிதா |
பஹு-விதா-குஜித-ரதி-ரஸ-ரசிதா (கபி மாதுரிபுனா) ||5||

“கிருஷ்ணன் அவளை அன்புடன் பார்க்கும்போது, ​​அவள் வெட்கப்பட்டு வெட்கத்துடன் சிரிக்கிறாள். அதீத பரவச நிலையில் மூச்சுத் திணறும்போது, ​​காக்கா அல்லது கலஹம்சா போன்ற பறவைகளின் சலசலப்பைப் போன்ற ஒரு தெளிவற்ற ஒலியை அவள் எழுப்பியிருக்க வேண்டும்.

விபுல-புலக-ப்ருது, வெபத்து-பங்கா |
ஷ்வசித-நிமிலிதா-விகாஸத்-அனகா (கபி மாதுரிபுனா) ||6||

“மன்மதன் பரவசத்தால் அவள் சிலிர்க்கப்படும்போது, ​​திகில் மற்றும் உடல் வலிப்பு அலைகள் போல அவளைக் கழுவுகிறது. அவள் கண்களை மூடிக்கொண்டு நீண்ட பெருமூச்சு விடுவதன் மூலம் கிருஷ்ணரிடம் அவளது முழுமையான உறிஞ்சுதல் வெளிப்படும்.

ஸ்ரம-ஜல-கன-பார-சுபக-சரீரா |
பரி பதி தோரசி ரதி-ரண-தீரா (கபி மாதுரிபுனா) ||7||

“அவளுடைய அழகான உடல் வியர்வைத் துளிகளால் மூடப்பட்டிருக்கும் போது அவள் இன்னும் கவர்ச்சியாகத் தோன்றுகிறாள். இறுதியாக கிருஷ்ணரின் மார்பில் தங்கும்போது அவள் எவ்வளவு அழகாக இருக்க வேண்டும்.

ஸ்ரீ-ஜெயதேவ-பனித-ஹரி-ரமிதம் |
கலி-கலுஷம் ஜனயது பரிசமிதம் (துருவபதா) ||8||

ஸ்ரீ ஹரியின் காதல் நாடகத்தைப் பற்றிய ஸ்ரீ ஜெயதேவரின் விளக்கம், கலி யுகத்தின் தீய விளைவுகளைத் தணிக்கட்டும். (இது தேவையற்ற ஆசைகளிலிருந்து இதயத்தை சுத்தப்படுத்தட்டும்.)
அத்தியாயம் 15

ராகம்: சவேரி; ஆதி தாலா

விரஹா…பந்து-முராரி, முகம்புஜா-
த்யுதி ராயம், திரையன் அபி வேதனம்… |
விதுர் அதிவ தநோதி மனோ-புவ:
ஸுஹ்ருதயே ஹ்ருதயே மதன-வ்யதம்… ||

“மதுசூதனனின் தாமரை முகத்தைப் போன்ற தனிமையான நிலவு, காதலின் அழிவில் வாடி, என்னைப் பிரிந்து வாடிவிடும். ஆனால் சந்திரன் மன்மதனின் நண்பன், அது இன்னும் என் இதயத்தில் வேதனையை ஏற்படுத்துகிறது.

சமுதித-மதனே ரமணி-வதனே சும்பன-சலித்ததாரே கோபாலம் |
ம்ருக-மட-திலகம் லிகதி சபுலகம் ம்ருகமிவ ரஜனி-கரே கோபாலம்||1||

ரமாதே யமுனா-புலினா-வனே, விஜயீ முராரிரதுனா கோபாலம்||த்ருவபதா||||

“காதல் போரில் மாதுரிபு வெற்றி பெற்றவர். இந்த கவர்ச்சியான கோபி, அவளது தோலின் ஒவ்வொரு துவாரமும் மகிழ்ச்சியுடன் வெடிக்கிறது, இது பேரின்பத்தின் அவதாரம். ஸ்ரீ கிருஷ்ணர், சந்திரனில் உள்ள மானின் அடையாளத்தை ஒத்த கஸ்தூரியில் தனது முகத்தை அலங்கரிக்கிறார். அவனது தலைமுடியும் நின்று அவளை முத்தமிட்டுக்கொண்டிருக்கிறது. இப்போது அவர் தனது காதலியுடன் யமுனை நதிக்கரையில் உள்ள ஒரு காட்டில் காதல் செய்து வருகிறார். ”

கானா-சாய-ருச்சிரே ரசாயதி சிகுரே, தரலித-தருஅணனே கோபாலம் |
குருவாக-குசுமம் கபால சுஷமம், ரதி-பதி-முர்க-கனனே கோபாலம்||2||

“அவளுடைய தலைமுடி மிகவும் கறுப்பாகவும், மென்மையாகவும், சுருளாகவும், ஏராளமாகவும் இருக்கும், அது பல மழை மேகங்களை ஒத்திருக்கிறது. அல்லது மன்மதன் அல்லது காமதேவன் என்றழைக்கப்படும் மான் பயமின்றி அலையக்கூடிய அடர்ந்த காடாகத் தெரிகிறது. ஸ்ரீ ஹரி அவள் தலைமுடியில் வரிசைப்படுத்தப்பட்ட ரோஜா லாரல் மலர்கள் கருமேகங்களில் மின்னலைப் போல பிரகாசமாக பிரகாசிக்கின்றன.

கதயதி சுகனே குச்ச-யுக-ககனே, ம்ருக-மட-ருச்சி-ருஷிதே கோபாலம் |
மணி-சர மாமலம், தாரக-படாலம், நக-பதா-ஷஷி-பூஷிதே கோபாலம் ||3||

“அவர் அவளை மான் கஸ்தூரியால் பூசுகிறார் & இரவு வானத்தின் வானத்தின் மீது மாசற்ற நட்சத்திரங்களின் விண்மீன்களை வைப்பது போல், மயக்கும் முத்து மாலையால் அவளை அலங்கரிக்கிறார்.”

ஜித-பிஸ-ஷகலே ம்ருது-புஜ-யுகலே, கர-தல-நளினி-தலே கோபாலம் |
மரகத-வலயம் மது-கர-நிசயம், விதரதி ஹிம-சீதலே கோபாலம்||4||

“அவர் அவளது தாமரை இதழ் கையின் மேல் ஒரு இருண்ட நீலக்கல் வளையலை நழுவ விடுகிறார். தாமரை மிருதுவான தண்டை விட குளிர்ச்சியான அவளது கரங்களை தேனீக்கள் சூழ்ந்திருப்பது போல் தெரிகிறது.

ரதி-க்ருஹ-ஜகனே, விபுல பாகனே, மனசிஜ-கனகாசனே கோபாலம் |
மணி-மய-ரசனம், தோரண-ஹாசனம், விக்கிரதி க்ருத-வசனே கோபாலம்||5||

“அவள் தொடைகளில் ரத்தினக் கச்சையை வைத்தான்”

சரண-கிசலயே, கமலா-நிலையே, நக-மணி-கன-பூஜிதே கோபாலம் |
பஹிர்-அப வரம், யவக-பாரம், ஜனயதி ஹ்ருதி யோஜிதே கோபாலம் ||6||

” அவன் அவளது கால் நகங்களில் பளபளக்கும் லாக்கைப் பயன்படுத்துகிறான். உள்ளே லக்ஷ்மியின் இடத்தைக் கௌரவிக்க முத்துக்களால் சூடப்பட்ட மென்மையான தளிர்கள் போல அவர் இதயத்தில் கிடக்கிறார்.

த்யாயதி ஸுத்ருஷம், கம் அபி ஸுத்ருஷம், கல-ஹல-தார-சோதரே கோபாலம் |
கிம பல மவாசம், சிரமிஹ விரசம், வட சகி விட்ட போடரே கோபாலம் ||7||

“ஹலதராவின் சகோதரர் – அந்த கண்மூடித்தனமான கிருஷ்ணர் – அழகான கண்களுடன் சில கோபியின் அரவணைப்பில் மகிழ்ச்சியடைகிறார். எனவே சகீ, சொல்லுங்கள் – அவருடைய பிரிவால் பிணிக்கப்பட்ட இந்த மலர்க்கொடிகளில் நான் எவ்வளவு நேரம் காத்திருப்பேன்.

இஹ ரஸ-பானனே, க்ருத-ஹரி-குணனே, மது-ரிபு-பதா-சேவகே கோபாலம் |
கலி-யுக-சரிதம், ந வசது துரிதம், கவின் ரூப-ஜெயதேவகே கோபாலம் (துருவபதா)||8| |

கவிகளின் மன்னன் ஜெயதேவா, ஸ்ரீ ஹரியின் பொழுது போக்குகளை, அவனது தெய்வீக குணங்கள் முழுவதுமாக நிரம்பப் போற்றுகிறான். கலியுகத்தில் மிகவும் பரவலாக இருக்கும் துன்மார்க்க நடத்தையின் தவறு, ஸ்ரீ மதுசூதனனின் இந்த அடியாருக்குள் ஒருபோதும் நுழையக்கூடாது.

ராகம்: புன்னாகவரலி ; ஆதி தாலா

நயத: சகி, நிர்தயோ யதி ஷத:, த்வம் துதி கிம் துயஸே…
ஸ்வச்சந்தம், பஹு-வல்லப:…, ச ராமதே, கிம் தத்ர தே, துஷணம் |
பஸ்யாத்யம், ப்ரிய-சங்கமாய தயிதஸ்யா, அகுஷ்ய மானம், குணை:…
உட்காந்த ஹார்தி-பாரத் இவ, ஸ்பூத இடம் சேத: ஸ்வயம் யஸ்யதி ||

.
“சகி, அவர் இன்னும் வராதது உங்கள் மீது என்ன தவறு? பார்! இன்று என் இதயம் தீவிர ஆர்வத்தின் சுமையால் உடைந்துவிட்டது. எனக்கு மிகவும் பிரியமான கிருஷ்ணரின் குணங்களால் ஈர்க்கப்பட்டு, என் இதயம் அவரைச் சந்திக்கச் செல்லும்.

அணில-தரால-குவலய-நயனேன |
தபதி ந ச கிசலய-ஷயனேன ||1||

சகி யா ரமிதா வன-மலினா ||த்ருவபதம் ||

“அவரது கண்கள் நீல இரவு அல்லிகள் காற்றில் பறக்கின்றன. ஓ சகி! இறைவனின் வனமாலா (காட்டுப் பூ மாலை) அவளைத் தழுவுகிறது.

விகசித-சரசிஜ-லலிதா-முகேனா |
ஸ்பூதி ந ச மனசிஜ-விஷிகேனா ||2||

“வனமாலி கிருஷ்ணனால் அருளப்பட்ட அந்த அழகிய பெண்ணை மன்மதனின் பயங்கர அம்புகளால் துளைக்க முடியாது. அவரது வசீகரமான முகம் முழுவதும் மலர்ந்த தாமரை மலரை ஒத்திருக்கிறது”

அம்ருத-மதுர-ம்ருது-தார-வச்சனேன |
ஜ்வலதி ந ச மலையஜ-பவனேன ||3||

“கிருஷ்ணன் அந்த கோபியிடம் அமிர்தமான இனிய மற்றும் இனிமையான வார்த்தைகளைப் பேசுகிறான். மலாயா தென்றலுடன் தொடர்பு கொள்வதன் மூலம் அவள் ஒருபோதும் எரிவதை உணர முடியாது.

ஸ்தல-ஜல-ருஹ-ருச்சி-கர-சரணேன |
லுததி ந ச ஹிம-கர-கிறேன ||4||

“வனமாலி கிருஷ்ணரின் கைகளும் பாதங்களும் பூக்களைப் போல குளிர்ச்சியாகவும், பளபளப்பாகவும் இருக்கின்றன. அவர்களால் மகிழ்ந்த வசீகரமான பெண், சந்திரனின் கதிர்களில் எரிந்து பூமியில் சுற்ற வேண்டியதில்லை.

சஜல ஜலதா-சமுதய-ருசிரேண |
தலதி ந ச ஹ்ருதி விரஹா பாரேணா||5| |

“வனமாலி கிருஷ்ணா, புதிதாக ஒடுங்கிய மழைமேகத்தை விடவும், வசீகரமாகவும், புத்துணர்ச்சியாகவும், பிரகாசமாகவும் இருக்கிறார். கிருஷ்ணனுடன் இருக்கும் அந்த கோபி நீண்ட காலப் பிரிவின் வடிவில் பெரிய அளவிலான விஷத்தால் ஒருபோதும் எரிக்கப்பட மாட்டார்.

கனக-நிச்சய-ருச்சி-சுசி-வசனேன |
ஸ்வசிதி ந ச பரிஜன-ஹஸனேன ||6||

“அவருடைய பிரகாசமான பீதாம்பரம் தங்கம் போல் ஜொலிக்கிறது. இந்த அதிர்ஷ்டசாலிப் பெண் தன் சொந்தக்காரர்களால் கிண்டல் செய்யப்பட்டாலும், அவளிடம் கையெழுத்திடும்.

ஸகல-புவன-ஜன-வர-தருணேன |
வஹதி ந ச ருஜம் அதி கருணேன ||7| |

“முழு பிரபஞ்சமும் அவரது அழகால் தொட்டது. கிருஷ்ணரின் வசீகரம், இளமை வடிவம் பளபளப்பானது. இப்போது அவனைக் காதலித்துக்கொண்டிருக்கும் அந்த கோபி, அவன் மிகுந்த இரக்கமுள்ளவனாக இருப்பதால், அவள் இதயத்தின் மையத்தில் பிரிவின் பயங்கரமான வலியை உணரமாட்டான்.

ஸ்ரீ-ஜெயதேவ-பனித-வச்சனேன |
ப்ரவிஷது ஹரிர் அபி ஹ்தயம் அனேனா ||8||

ஸ்ரீ ஜெயதேவா இங்கு வழங்கிய வார்த்தைகளால், ஸ்ரீ ஹரி பக்தர்களின் இதயங்களில் நுழையட்டும்.

****************

மனோ-பவ நந்தனா, சந்தனா நிலா
-பிரசிதரே தக்ஷிணா, முஞ்ச வாமதம் |
க்ஷணம் ஜகத்-ப்ராண, நிதாய மாதவம்…
புரோ மம ப்ராண-ஹரோ… பவிஷ்யஸி ||9||

“சந்தன மலைக் காற்றே, அன்பின் பேரின்பத்தைப் பரப்பும் தென்றல் காற்றை நீ வீசுவது போல, என்னை அமைதிப்படுத்து! முரண்பாடு முடிவுக்கு! ஏ பிராணா, நீ ஒரு கணம் மாதவாவை என்னிடம் அழைத்து வந்தால், என் உயிரை நீ எடுக்கலாம்!”

ரிபூர் இவ சகி-சம்வசோ’யம், ஷிகிவ ஹிமானிலோ
விஷம் இவ, சுதா-ரஷ்மிர், யஸ்மின் துனோதி மனோ-கேட்… |
ஹ்ருதய மதயே தஸ்மின்ன் ஏவம், புனர் வலதே பலாத்
குவலய-த்ரிஷம், வாம காமோ, நிகாம-நிரகுஷ: ||10| |

“ஓ சகீ, எதிரிகளின் சங்கமம் போல என் நண்பர்களின் மகிழ்ச்சியை என் இதயம் உணர்கிறது. குளிர்ந்த மெல்லிய தென்றல் ஒரு தியாகத்
தீயாகத் தெரிகிறது, நிலவு எனக்கு விஷம் போல் வலியைத் தருகிறது. கிருஷ்ணா என் இதயத்தில் வேதனைப்படுகிறார். ஆனால் அப்போதும் நான் அவரை திரும்ப அழைத்துச் செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன். அழகான அல்லி போன்ற கண்களை உடைய பெண்கள் அன்பின் வலியை உணர்கிறார்கள்.

பாதாம் விதேஹி, மலயநிலா பஞ்ச-பானா
ப்ரானான் க்ருஹா ந, ந க்ருஹம், புனர் ஆஷ்ர-யிஷ்யே |
கிம் தே க்ருதாந்த-பாகினி, க்ஷமாய தரங்கை:
அங்கனி, ஸிஞ்ச மம-ஶ்யாம்யது, தேஹ-தாஹ: ||11||

“மன்மத அம்புகளால் என் பிராணனை எடு, நான் இனி வீட்டிற்கு செல்லமாட்டேன். ஜானுமா, நீ ஏன் கருணையுடன் இருக்க வேண்டும், என் கைகால்களை அலைகளால் மூழ்கடித்துவிடு, என் உடலின் எரிப்பு தணியட்டும்!”

சந்தர-நாட- புரந்தரபி-திபிஷத், பிருந்தை: அமந்தர தரத்
அனம்பிரி: மகுதேந்திர நீல மணிபி:, சந்தர்ஷிதே நிவாரோ…
த்வத் சந்தம், மகரந்த்ர சுந்தரகலா, மந்தாகினி மேதுரம்
ஸ்ரீ கோவிந்த பதரா விந்தம், அசுப- ஸ்கந்தயா||-12||

ஏதி ஸ்ரீ கீத கோவிந்தே ஶ்ரீங்கர மஹாகாவ்யே
ஸ்ரீ கிருஷ்ண தாச ஜெயதேவ க்ருதவ்
விப்ர லப்த வர்ணனே, நகர நாராயணா நம, சப்தம சர்க:
அத்தியாயம் 17

ராகம்: அரபி ; ஆதி தாலா

அதா கதை அபி, யாமினி வினியா….
ஸ்மர-ஷர-ஜர் ஜரிதா…பி, ச பிரபதே |
அனுநயா-வசனம், வதந்தம்…
அக்ரே ப்ரணதம் அபி, ப்ரியா மஹா சப்ய-ஸுயம் ||

இரவு முழுவதும் போராடிய பிறகு, அவள் மன்மத அம்புகளால் சோர்வடைந்தாள். மன்னிப்புக் கோரி அவள் முன் குனிந்தபடி அவள் கோபத்துடன் அவனிடம் பேச ஆரம்பித்தாள்.

ரஜனி-ஜனதா-குரு-ஜாகர-ராக, கஷாயிதம் அலச-நிவேஷம் |
வஹதி நயனம், அனுராகம் இவ ஸ்பூதம், உதித-ரசாபி நிவேஷாம் கிருஷ்ணா||1||

“உறக்கமில்லாத இரவு உணர்ச்சியிலிருந்து உங்கள் சிவந்த கண்கள் மெதுவாக மூடுகின்றன. இப்போதும் அவர்கள் அந்த அழகான வ்ரஜ-கோபியரிடம் ஒரு சக்திவாய்ந்த மற்றும் அதிகரித்து வரும் பற்றுதலை வெளிப்படுத்துகிறார்கள்.

யாஹி மாதவ யாஹி கேசவ, மா வாதா கைதவ வதம் |
தம் அனுசர சரசிருஹ-லோச்சனா, யா தவ ஹரதி விஷதம் ||த்ருவபதா||||

போ மாதவா! போ கேசவா! என்னிடம் பொய் சொல்லாதே, அந்த தாமரை கண் கொண்ட கோபியின் பின்னால் செல். அவள் உங்கள் விரக்தியை எளிதாக்குவாள்.

கஜ்ஜால-மலின-விலோசன-சும்பனா, விரச்சித-நிலிம-ரூபம் |
தஷன-வசனம் அருணம் தவ கிருஷ்ணா, தனோதி தனோ ரனு ரூபம் கிருஷ்ணா ||2||

“கொல்லிரியம் தடவிய கண்களை முத்தமிட்டதால் உங்கள் அழகான சிவப்பு உதடுகள் கருமையாகிவிட்டன.”

வபுரனு சரதி, தவ ஸ்மர சங்கர, கார-நகர-கத-ரேகம் |
மரகத-ஷகல-கலித-கலா தௌத-லிபெரிவ ரதி ஜெய-லேகம் கிருஷ்ணா ||3||

“உன் உடம்பில் அந்த கோபியின் கூரிய நகங்களில் கீறல்கள் பதிந்துள்ளன. வெற்றிச் சான்றிதழ் மரகதச் சுவரில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட்டுள்ளது போல் தெரிகிறது.

சரண-கமலா-கலதா, லக்தக-சிக்தம், இடம் தவ ஹ்ருதய முதாரம் |
தர்சயதிவ பாஹிர், மதன-த்ருமா, நவ-கிசலய-பரிவாரம் கிருஷ்ணா ||4||

“உங்கள் கொண்டாடப்பட்ட மார்பு, அந்த கவர்ச்சியான பெண்ணின் தாமரை பாதங்களில் இருந்து சிவப்பு பாதத்தின் அடையாளங்களால் நிறமாக உள்ளது. உங்கள் இதயத்தின் மையத்தில் அமைந்துள்ள காம ஆசையின் உறுதியாக வேரூன்றிய மரம் அதன் புதிதாக துளிர்விட்ட சிவப்பு இலைகளை வெளிப்புறமாக வெளிப்படுத்துவது போல் தெரிகிறது.

தாஸன-பதா பவதாதார-கத மம ஜனயதி சேதஸி கேதம் |
கதயதி கதம் அதுனாபி மயா ஸஹ தவ வபுரேதத் அபேதம் கிருஷ்ணா||5||

“உன் உதடுகள் அந்த சிற்றின்பப் பெண்ணின் பற்கள் கடித்ததால் வெட்டப்பட்டு காயம் அடைந்துள்ளன. இதைப் பார்த்து, என் இதயத்தில் துக்கம் எழுகிறது, ஆனால் இப்போது கூட, ‘உன் உடல் என்னிடமிருந்து பிரிக்கப்படவில்லை. நாங்கள் வேறுபட்டவர்கள் அல்ல.

பஹிரிவ மலினா, தாரம் தவ கிருஷ்ணா, மனோ’பி பவிஷ்யதி நூனம் |
கதமாத வஞ்சயஸே ஜனம், அனுகதம் அசம ஷர-ஜ்வர-தூனம் கிருஷ்ணா ||6||

“உன் இதயம் இருளாக இருக்க வேண்டும் கிருஷ்ணா! உங்கள் அன்பினால் சித்திரவதை செய்யப்பட்ட ஒரு உண்மையுள்ள உயிரினத்தை எப்படி ஏமாற்ற முடியும்?”

பாமதி பவன் அபல-கவாலயா, வநேஷு கிமத்ர விசித்ரம் |
பிரதயாதி பூதானி, கைவ வது-வதா, நிர்தயா-பால சரித்திரம் கிருஷ்ணா ||7||

“நீங்கள் காட்டில் அப்பாவிப் பெண்களைத் தேடி அலைகிறீர்கள். இதில் என்ன ஆச்சரியம்? உன் குழந்தைப் பருவத்திலேயே பூதனாவைக் கொன்றதன் மூலம், உனது கொடூரமான இரக்கமற்ற தன்மையை எங்களுக்கு ஏற்கனவே அறிமுகம் செய்துவிட்டாய்.”

ஸ்ரீஜயதேவ-பனித-ரதி வஞ்சிதா, கண்டித-யுவதி-விலாபம் |
ஷ்ருணுதா ஸுதா மதுரம் விபுதா, வததாபி ஸுகம் ஸுதுரபம் கிருஷ்ணா||8| |

கற்றறிந்தவர்களே, அமிர்தத்தை விடவும் இனிமையான ராதை என்ற இளம் பெண்ணின் துரோகம் மற்றும் புலம்பலை நீங்கள் கேட்கலாம். சொர்க்கம் அத்தகைய இனிமையான அமுதத்தை அரிதாகவே அளிக்கிறது.

********

தா வேதம், பஷ்யந்தியா:, ப்ரசாரத்-அனுராகம் பஹிர் இவ,
ப்ரிய-பதா-லக்த-ச்சுரிதம், அருணா-சாயா ஹ்ருதயம்… |
மமத்யா ப்ராக்யாத-ப்ராணயா-பார, பங்கேன கிதவ
த்வதா-லோகாத் ஷோகாத் அபி, கிம் அபி லஜ்ஜாம், ஜனயதி ||9||

அவளது லாக் வர்ணம் பூசப்பட்ட பாதங்கள் உங்கள் இதயத்தில் அன்புடன் விட்டுச் சென்ற சிவப்பு கறைகள், என்னை அன்பாக (அனுராகம்) பார். ஏ ஏமாற்றுக்காரனே! அவமானம் மட்டுமே என் இதயத்தில் நான் உணரும் துக்கத்தை மிஞ்சுகிறது.

ப்ரதர் ​​நீல நிஷோலம், அச்சுத முர சம்வீத, பேதம் சுகம்…
ராதாயா ஸஹிதம், விலோக்ய ஹசதி ஸ்வைரம், சகி மண்டலே…
கிரிடா சஞ்சல மஞ்சலம் நயனயோ:, ஆதயா, ராதா நானே
ஸ்மேர ஸ்மேர முகோய மஸ்து, ஜகத்நந்த ஆத்மஜ: ||10||

ஒரு நாள் காலையில், முற்றிலும் திகைத்த நிலையில், அச்யுத கிருஷ்ணன் ராதாவின் நீல நிற மேல் ஆடையை அணிந்தாள், ராதை கிருஷ்ணனின் மஞ்சள் மேல் ஆடையால் மார்பகத்தை மூடினாள். இதைப் பார்த்து, அனைத்து சாக்கியர்களும் அடக்க முடியாத சிரிப்புச் சிரிப்பில் மூழ்கினர். அவர்கள் அனைவரும் சிரிப்பதைக் கண்ட கிருஷ்ணர் வெட்கமடைந்து, லேசான புன்னகையுடன், ராதையின் தாமரை முகத்தை நோக்கி வெளிப்படையான ஒரு பக்க பார்வையை வீசினார். அந்த நந்தனின் மகன் முழு பிரபஞ்சத்திற்கும் மகிழ்ச்சியைத் தரட்டும்.

ஏதி ஸ்ரீ கீத கோவிந்தே, ஶ்ரீங்கார மஹாகாவ்யே
ஸ்ரீ கிருஷ்ண தாஸ ஜெயதேவ க்ருதவ்
கண்டித வர்ணனே, விலக்ஷ்ய-லக்ஷ்மிபதி நாம, அஷ்டம சர்கா:

ராகம்: கம்போடி ; ஆதி தாலா

am அத மன்மத-கின்னம், ரதி-ரஸ-பின்னம்….,
விஷத-சம்பன்னம் அனு சிந்தித்த-ஹரி-சரிதம்,
கலஹந்தரிதம், உவாச ரஹஸி சகி… ||

ராதா மன்மதனின் அம்புகளால் கடுமையாக ஒடுக்கப்பட்டாள், கிருஷ்ணனுடன் இணைந்த பேரானந்தத்தை இழந்து ஏமாற்றமடைந்தாள். அவளது சண்டைக்கு ஹரியின் பதிலில் மனமுடைந்து பேய்பிடித்த அவள் சகி ராதாவிடம் பேசினாள்.

(ராதே) ஹரிர் அபி சரதி வஹதி மது-பவனே |
கிம் அபாரம் அதிக-சுக சகி பவனே ||1||
மாதவே மா குரு மணினி மனம் ஆயே ||துருவபதம் ||

“ஓ துர்நாற்றமான பெண்ணே, பார்! மென்மையான வசந்த காற்று வீசுகிறது, கிருஷ்ணர் உங்கள் முயற்சி அறைக்கு வந்துவிட்டார். என் அன்பான நண்பரே, இதைவிட பெரிய மகிழ்ச்சி வேறு என்ன இருக்க முடியும்?

தல-பலத் அபி குரும் அதிசரஸம் |
கிமு விபலி-குருஷே குச-கலஹசம் மாதவே ||2||

உங்கள் இளமையை வீணாக்காதீர்கள்.

கதி ந கதிதம் இடம் அனுபதம் அச்சிரம் |
மா பரிஹர ஹரிம் அதிஷய-ருச்சிரம் மாதவே ||3||

“உன்னிடம் எத்தனை முறை சொல்ல வேண்டும்? மிகவும் அழகான மற்றும் வசீகரமான ஸ்ரீ ஹரியைக் கைவிடாதே.”

கிம் இதி விசிதாஸி ரோதிஷி விகலா |
விஹாசதி யுவதி-சபா தவ ஸகல மாதவே ||4||

“ஏன் இப்படி புலம்புகிறாய்? ஏன் அழுகிறாய்? உங்கள் இளமைப் போட்டியாளர்கள் உங்களின் கவர்ச்சியான சைகைகளைக் கண்டு மகிழ்ச்சியடைகிறார்கள்.

ம்ருது-நளினி-தல-சீதல-ஷயனே |
ஹரிம் அவலோகய சபலய நயனே மாதவே ||5| |

“ஈரமான தாமரை இதழ்கள் கொண்ட குளிர்ந்த படுக்கையில் சாய்ந்திருக்கும் ஸ்ரீ கிருஷ்ணரை அன்புடன் பார்த்து உங்கள் கண்களை வெற்றியடையச் செய்யுங்கள்.”

ஜநயஸி மனஸி கிம் இதி குரு-கேதம் |
ஶ்ருணு மம வசனம் அநிஹிதம்-அபேதம் மாதவே ||6||

“உங்கள் இதயத்தில் ஏன் இவ்வளவு கலவரமாக இருக்கிறீர்கள்? நான் சொல்வதை கேள். நான் எந்த உள்நோக்கமும் இல்லாமல் உங்கள் நலனுக்காக மட்டுமே பேசுகிறேன்.

ஹரிர் உபயது வதாது பஹு-மதுரம் |
கிம் இதி கரோஷி ஹ்ருதயம் அதி விதுரம் மாதவே ||7||

“ஸ்ரீ ஹரியை உன் அருகில் வர அனுமதியுங்கள். சில இனிமையான வார்த்தைகளை பேச அனுமதிக்கவும். உங்கள் இதயத்தில் ஏன் இன்னும் அதிக வலியை ஏற்படுத்துகிறீர்கள்?

ஸ்ரீ-ஜெயதேவ-பனிதம் அதி லலிதம் |
சுகயது ரசிக-ஜனம் ஹரி-சரிதம் மாதவே ||8||

ஸ்ரீ ஜயதேவரால் இயற்றப்பட்ட ஸ்ரீ ஹரியின் செயல்பாடுகள் பற்றிய இந்த நேர்த்தியான விளக்கம், ரசத்தை அனுபவிப்பதில் நிபுணத்துவம் வாய்ந்த பக்தர்களின் மகிழ்ச்சியை அதிகரிக்கட்டும்.

ஸ்நிக்தே யத் பரு ஷாஸி யத் ப்ரணமதி, ஸ்தப்தாஸி யத் ராகினி
த்வேஷாம் தாசி- யத்-உன்முகே-விமுகாதம், யதாசி, தஸ்மின் பிரியே… |
தத் யுக்தம் விபரீத-காரிணிம், தவ ஸ்ரீ-கந்தா-சர்ச்சா விஷம்
ஷிதம்து, தபனோ ஹிமம், ஹுதவஹ:, கிரிடாமுதோ, யதாந: ||9| |

அவர் மென்மையாக இருக்கும் போது, ​​உங்கள் கடுமையான. அவர் இணக்கமாக இருக்கும் போது, ​​உங்கள் திடமான. அவர் உணர்ச்சிவசப்படுபவர், உங்கள் வெறுக்கத்தக்கவர். அவர் எதிர்பார்ப்புடன் காணும்போது, ​​நீங்கள் விலகிச் செல்கிறீர்கள். அவர் அன்பாக இருக்கும்போது நீங்கள் வெளியேறுகிறீர்கள். உங்கள் பிடிவாதமானது செருப்பை விஷமாகவும், குளிர்ந்த சந்திரனின் கதிர்களை வெப்பமாகவும், பனியை நெருப்பாகவும், கிரிதாவின் மகிழ்ச்சியை நரக வேதனையாகவும் மாற்றுகிறது.

அந்தர்-மோகன-மௌலி-குர் நானா-மிலன், மந்தார-விப்ரம்ஷன
ஸ்தம்ப-கர்ஷண-த்ரிஸ்டி-கர்ஷனா, மஹா-மந்திரம்: குரைகி-த்ருஷம் |
த்ரிப்யத்-தானவ, துயாமனா-திவிஷத், துர்வார-துக-பதாம்
ப்ரம்ஷ: கம்ஸ-ரிபோ:, ஸமர்பயது வஹ, ஷ்ரேயாம்ஸி வம்ஷி-ரவ: ||10||

கிருஷ்ணரின் புல்லாங்குழலின் சத்தம் கோபியர்களின் இதயங்களைக் குழப்புகிறது. இது அவர்களின் நகைகள் அணிந்த தலைப்பாகைகளை சுழற்றச் செய்கிறது மற்றும் அவர்களின் நேர்த்தியான மலர் அலங்காரங்கள் விழச் செய்கின்றன. அது வானவர்களின் அடக்க முடியாத துன்பத்தை விரட்டுகிறது. இது கண்களைக் கொண்ட பெண்களை திகைக்க வைக்கிறது. இது அவர்களை ஈர்க்கிறது மற்றும் அவர்களின் கண்களின் மகிழ்ச்சியை அதிகரிக்கிறது. அந்த புல்லாங்குழல் சத்தம் அனைவருக்கும் ஐஸ்வர்யத்தின் பாதையில் உள்ள அனைத்து தடைகளையும் அழிக்கட்டும்.

sändränanda-puraà-darädi-diviñad-våndair amandadaräd
änamrair mukuöendra-néla-maëibhiù sandarshitendivaram |
ஸ்வச்சந்தா மகரந்த-சுந்தர-கலன்-மந்தாகினே-மேதுரா
ஷ்ரே-கோவிந்த-பதாரவிந்தம் அசுப-ஸ்கந்தாய வந்தாமஹே ||11||

மன்னன் பாலியின் பெருமையை கிருஷ்ணன் அழித்தபோது, ​​வானவர்கள் ஆனந்தத்தில் மூழ்கினர். அவர்கள் மிகுந்த பயபக்தியுடன் அவரை வணங்கும்போது, ​​அவர்களின் கிரீடங்களில் பிரதிபலித்த நீலமணிகளின் பிரகாசம் அவரது பாதங்களை நீல தாமரை மலர்களாகத் தோன்றியது. வசீகரமான கங்கை அந்த பாத தாமரையிலிருந்து தேன் போல சிரமமின்றி தன்னிச்சையாக பாய்கிறது. எல்லா அசுபங்களையும் போக்குபவர்களான அந்த ஸ்ரீ கோவிந்தரின் தாமரை பாதங்களுக்குத் தலைவணங்குகிறோம்.

ஏதி ஸ்ரீ கீத கோவிந்தே ஶ்ரீங்கார மஹாகாவ்யே
ஸ்ரீ கிருஷ்ண தாஸ ஜயதேவ க்ருதவ்
கலந்தரித வர்ணனே, முக்த-முகுந்த நம, நவம ஸர்க:

ராகம்: பைரவி; ஜும்பா தாலா

அட்ரான்…தாரே *மஸ்ருண-ரோஷா வஸ்த் மசிமா….
நிஷ்வாஸ-நிஸாஹ-முகீம், ஸுமுகீம் உபேத்யா… |
சபரிதாம், ஏக்ஷித-சகி-வதானம், தினந்தே
ஸாநந்த-கட்கதா-பதம், ஹரிர் இத் யுவசா ||

இரவு வந்ததும், அவன் ராதாவை அணுகினான், அவளுடைய கோபத்தின் சக்தி தணிந்து, முடிவில்லாமல் கையெழுத்துப் போடாத அவளுடைய முகம் பலவீனமாக இருந்தது. தன் தோழிகளின் முகத்தை வெட்கத்துடன் வெறித்துப் பார்த்தாள், ஹரி தன் உணர்ச்சிகள் நிறைந்த ஆனந்த வார்த்தைகளை பேசினாள்.

வதாஸி யதி கிஞ்சிதபி தந்த-ருச்சி-கௌமுதி
ஹரதி தர-திமிரம் அதி கோரம் |
ஸ்பூரத் ஆதார-சிதவே தவ வதன-சந்திரமா
ரோசயது லோச்சன-சகோரா ||1||

“என் அன்பானவரே, கருணையுள்ளவரே, இந்த காரணமற்ற வெறுப்பைக் கைவிடுங்கள். நீ என்னிடம் கொஞ்சம் பேசினால், என் பயத்தின் பயங்கரமான இருள் உன் பற்களின் ஒளிரும் கதிர்களால் அகற்றப்படும். அப்போது உன் நிலவு போன்ற முகம் என் கண்களின் ககோரா பறவையை உன் உதடுகளின் அமிர்தத்தைக் குடிக்கத் தூண்டும். ”

ப்ரியே சாருஷிலே முஞ்ச
மயி மனம் அனிதானம் |
சபதி மதன மணலோ தஹதி மம மானசம்
தேஹி முக-கமலா-மதுபானம் ||த்ருவபதா ||

“என் நேசத்துக்குரிய அன்பே! உங்கள் அடிப்படையற்ற அகங்காரத்தை கைவிடுங்கள்.காம ஆசையின் நெருப்பு என் இதயத்தை எரிக்கிறது. உமது முகத் தாமரையின் தேனைக் குடிக்க எனக்கு அனுமதியுங்கள்” என்றான்.

ஸத்யம் ஏவாஸி யதி ஸுததி மயி கோபினி
தேஹி கார-நகர-ஷர கதம் |
கதாய புஜ-பந்தனம் ஜனய ரதா-கதானம்
யேன வா பவதி சுக-ஜாதம், ப்ரியே சாருஷிலே ||2||

“ஓ யாருடைய பற்கள் பிரகாசமாக உள்ளன, நீங்கள் உண்மையில் என் மீது கோபமாக இருந்தால், உங்கள் பார்வையின் கூர்மையான அம்புகளால் என்னைத் தாக்குங்கள். உமது கரங்களின் கயிற்றில் என்னைக் கட்டுங்கள். உன் பற்களால் என் உதடுகளை வெட்டு. உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும் எதையும் செய்யுங்கள். ”

த்வமஸி மம ஜீவனம், த்வமஸி மம பூஷணம்
த்வமஸி மம பவ-ஜலதி-ரத்னம் |
பவது பவதிஹ மயி, சததாம் அனுரோதினி
தத்ர மம ஹ்ருதயம் அதி யத்னம் , ப்ரியே சாருஷிலே ||3||

“நீ தான் எனக்கு ஒரே ஆபரணம். நீதான் என் உயிர். என் இருப்புப் பெருங்கடலில் உள்ள மாணிக்கம் நீ. எப்போதும் எனக்கு சாதகமாக இருங்கள் – என் இதயம் அதையே விரும்புகிறது.”

நிலா-நலினா பாம் அபி தன்வி தவ லோசனம்
தாரயதி கோக-நாத-ரூபம் |
குசும ஷர-பான-பாவேன யதி ரஞ்சயஸி
கம் இடம் ஏதத் அனுரூபம் , ப்ரியே சாருஷிலே||4||

“ஓ மெலிந்த பெண்ணே, உனது நீல தாமரை போன்ற கண்கள் இப்போது சிவப்பு நிறமாகிவிட்டன. மன்மதனின் அம்பு அன்பின் வெளிப்பாடாக எழுகிறது. கிருஷ்ணா காதல் அதற்கு அதே தீவிரத்துடன் பதிலளிக்கிறது.

ஸ்புரது குச்ச-கும்பயோர் உபரி மை-மஞ்சரி
ரஞ்சயது தவ ஹ்ருதய-தேசம் |
ரஸது ரஸனாபி தவ ஞான-ஜகன-மதாலே
ஶோஷயது மன்மத-நிதேசம் , ப்ரியே சாருஷிலே||5||

“உன்னை அலங்கரிக்கும் முத்துக்கள், உன் இதயத்தின் ஆழத்தை நகர்த்துகின்றன. உன்னை அழகாக அலங்கரிக்கும் இந்த மணிகள் மன்மதனின் வரிசையை அறிவிக்கட்டும்”

ஸ்தல-கமலா-கஞ்சன மம ஹ்ருதய-ரஞ்சனம்
ஜனித-ரதி ரங்க-பர-பகம் |
பான மஸ்ருணா வாணி கரவாணி சரணாத் வயம்
சரஸ-லஸத்-அலக்தக-சரகம் , ப்ரியே சாருஷிலே ||6||

“ஓ மென்மையாகப் பேசுபவனே, நிலத் தாமரையின் அழகை உன் பாதங்கள் தோற்கடித்து, என் இதயத்தின் பொலிவை அதிகரிக்கச் செய்கின்றன. அந்த பாதங்களுக்கு பாதம் பூசும்படி எனக்கு உத்தரவிடுங்கள்.

ஸ்மர-கரால-கதனம், மம ஷிரஸி மந்தனம்
தேஹி பத-பல்லவம் உதாரம் |
ஜ்வலதி மயி தருணோ மதன-கடனனலோ
ஹரது தத் உபஹித-விகாரம் , ப்ரியே சாருஷிலே||7||

“என் அன்பே! உனது மயக்கும் பாதங்களின் புதிய மொட்டுகளை என் தலையில் ஆபரணமாக வழங்கு, அதனால் மன்மத விஷத்தின் பேரழிவு விளைவு தணிந்து, காம ஆசைகளின் கடுமையான நெருப்பும் தணியக்கூடும்.

இதி சதுல-சௌபௌ-சாரு முர வைரிணம்
ராதிகம் அதி வசன-ஜாதம் |
ஜெயது பத்மாவதி ரமண, ஜெயதேவ-கவி-பாரதி
பனிதம் இதி கீதம், ப்ரியே சாருஷிலே||8||

பத்மாவதியின் பிரியமான ஸ்ரீ ஜெயதேவா, முராரி சொன்ன மென்மையான, முகஸ்துதியான வார்த்தைகளை ராதாவிடம் விவரித்தார். இந்த இனிமையான, மயக்கும் வார்த்தைகள் வெற்றிபெறட்டும்.

********

பரிஹார க்ருதா டாங்கே, ஷங்கன் த்வயே. சடதம் கானா-
ஸ்தான-ஜகனாய. க்ராந்தே, ஸ்வாந்தே பரண்-அவகாஷினி |
விஷதி விட்டநோர் அந்யோ, தன்யோ ந கோ’பி, மாமந்தரம்…
ஸ்தான பர பரி ரம்ப ரம்பே, விதேஹி விதேயதாம்… ||10| |

“பதட்டப்பட்ட ராதா, என்னை சந்தேகிக்காதே! ஒரு போட்டியாளருக்கு இடமில்லை, நீங்கள் எப்போதும் என் இதயத்தை ஆக்கிரமிக்கும்போது. எங்கள் விதியை நிறைவேற்றுங்கள்! ”

முகதே விதேஹி, மயி நிர்தயா-தந்த-தம்சம்
டோர்-வல்லி-பந்த-நிபிட-ஸ்தானா, பிடானானி |
காண்டித்வம் ஏவ முத மஞ்சனா, பஞ்ச-பான
சண்டல-காண்ட-டலானாத், அஸவ ப்ரயந்து ||11||

“என்னை அன்புடன் தண்டியுங்கள்! என்னைக் கடி, உன் தவழும் கரங்களால் என்னைச் சங்கிலியால் பிணைத்து, நசுக்கு, மகிழ்ச்சியில் தளர்ந்துவிடாதே! மன்மதனின் அம்புகள் என்னைத் துளைக்கட்டும்!”

ஷஷி-முகி தவ பதி, பாங்குரா-ப்ரு:
யுவ-ஜன. மோஹ-கரால-கல-சர்பி |
தத்-உதித-பய-பஞ்சனாய யுனாம்
த்வத்-ஆதார-சேது-ஸுதைவ, சித்த-மந்த்ர: ||12||

“சந்திரனைப் போன்ற ஒளிவீசும் முகத்தை உடைய பெண்ணே, உனது புருவத்தின் வளைந்த கொடி இளைஞர்களின் இதயங்களை மூழ்கடிக்கிறது. இது காலத்தின் பயங்கரமான செல்வாக்கைக் கூட தோற்கடிக்கும் ஒரு பெண் பாம்பை ஒத்திருக்கிறது. உன் உதடுகளில் இருந்து வழியும் போதை தரும் அமிர்தமே உன் புருவம் உண்டாக்கிய பயத்தைப் போக்க ஒரே மருந்து.”

bandhüka-dyuti-bändhavo’yam adhara:, snigdho madhü kacchavi:…
gadah candi ca kästi, nila-nalina-shri-mochanam Lochanam |
நாசாப்யேதி தில-ப்ரஸுன-பதவீம், குந்தபா-தந்தி ப்ரியே
ப்ராய:, த்வான்-முக-சேவயா விஜயதே, விஷ்வம் ச புஷ்ப,யுத: ||13||

“என் அன்பிற்குரிய கேண்டி, ஓ சூடான குணமுள்ள பெண்ணே, உன் மயக்கும் சிவந்த உதடுகள் ஒரு பந்துக மலரின் பிரகாசத்துடன் நட்பு கொள்கின்றன. உங்கள் குளிர்ச்சியான கன்னங்கள் ஒரு மதுக மலரின் சிறப்பைப் பெற்றன. உங்கள் கண்கள் நீல தாமரை மலரின் அழகை மறைக்கிறது. உங்கள் மூக்கு எள் பூ போன்றது. உங்கள் பற்கள் மல்லிகைப் பூக்கள் போல் பிரகாசமாக உள்ளன. அன்பே, மலர் வில்வீரன் காமதேவன் தனது ஐந்து மலர் அம்புகளால் உன் முகத்தை வணங்கி, பின்னர் முழு பிரபஞ்சத்தையும் வென்றான்.

வ்யத்தயாதி வ்ருத மௌனம், தன்வி பிரபஞ்சய பஞ்சமம்
தருணி? மதுரா லபை:, தாபம் வினோதய த்ரிஷ்டிபி: |
சுமுகி விமுகி-பாவம், தவத் விமுஞ்ச ந, முன்ச மாம்
ஸ்வயம் அதிஷய-ஸ்நிக்தோ, முகதே ப்ரியோயம், உபஸ்திதா:…. ||14||

“உன் ஈரமான உதடு, கிரிம்சன் இலையுதிர்காலம் போல் பளபளக்கிறது; கன்னத்தின் தோல் தேன் நிற மலர். ராதா, உங்கள் கண்கள் பளபளக்கும் கருமையான தாமரைகள் போல ஒளிர்கின்றன. உன் மூக்கு எள் பூ; உங்கள் பற்கள் வெள்ளை மல்லிகை. சரியான பாகுபாடு இல்லாதவரே, உங்கள் அன்பான அன்புக்குரியவர் உங்கள் முன் இருக்கிறார்.

த்ரிஷௌ தவ மதலஸே, வதனம் இந்து-மத்யுன்-மதம்
கதிர் ஜன-மனோரமா, விடுத-ரம்பம் உரு-த்வயம் |
ரதிஸ் தவ கலாவதி, ருசிர-சித்ர-லேகே ப்ருவம்
அஹோ விபுத-யௌவனம், வஹஸி தன்வி பிருத்வி-கதா… ||15||

“உன் கண்கள் மதலசாவைப் போல சோம்பலாக இருக்கின்றன. உன் முகம் சந்திர ஒளி பெண்மை இந்துமதியைப் போல் ஒளிர்கிறது. உங்கள் நடை மனோரமா போன்ற அனைத்து உயிரினங்களையும் மகிழ்விக்கிறது. உங்கள் தொடைகள் ரம்பாவைப் போல அசைவதில் உள்ளன. உங்கள் ஆர்வம் கலாவதியின் மாய சடங்கு. உங்கள் புருவங்கள் சித்ரலேகாவின் சிற்றின்ப வரியை உருவாக்குகின்றன. ராதா, நீ பூமியில் நடக்கும்போது, ​​நீ சொர்க்க நிம்ஃப்களின் இளம் அழகு.

ப்ரீதிம் பாக்-தனுதா ஹரி:, குவலயா-பிடேன, ஸார்தம் ரனே
ராதா…பின-பயோதர-ஸ்மரண, க்ருத்-கும்பேன ஸம்பேதவன் |
யத்ர ஸ்வித்யாதி, மீலாதி, க்ஷணம் அபி, ஷிப்தே பிதே, தத்-ஷனாத்…
கம்ஸஸ்-யாலம், அபூஜிதம் ஜிதமிதி, வ்யமோஹ கோலாஹல: ||16||

ஏதி ஸ்ரீ கீத கோவிந்தே ஶ்ரீங்கார மஹாகாவ்யே
ஸ்ரீ கிருஷ்ண தாஸ ஜெயதேவ க்ருதவ்
ராதா வர்ணனே, சதுர்-சதுர்-புஜஹ, தஷ்ம சர்கா:

ராகம்: கல்யாணி; ஆதி தாலா

சுசிர மனுனாயேன, ப்ரிண-யித்வா… மிருகாக்ஷி…
கடவதி க்ருதவேஷே கேஷவே குஞ்ச-ஷய்யம் |
ரசித-ருசிர-பூஷம், த்ரிஷ்டி-மோஷே பிரதோஷே
ஸ்பூரதி நிரவசாதம்…, காபி ராதம் ஜகதா ||

“அவரது வேண்டுகோள்களால் ராதாவை சமாதானப்படுத்தி, கேசவா விரிவாக உடை அணிந்து, படுக்கையில் படுக்கச் சென்றார். இரவு கண்களுக்குப் புலனாகும் போது, ​​ராதை பளபளக்கும் ஆபரணங்களை அணிந்தாள்.

விரசித-சது-வசன-ரச்சனம், சரணே ரசித-ப்ரணிபதம் |
ஸம்ப்ரதி மஞ்ஜுல-வஞ்சுல-சிமானி, கேலி-சயனம் உபயதம் ||1||

முகதே மது-மதனம், ஹே ராதே, அனுகதம் அனுசரா ராதே,ராதே,ராதே ||துருவபதா||

அவர் முகஸ்துதியால் உங்களை அமைதிப்படுத்தினார், அவர் உங்கள் காலடியில் விழுந்தார், இப்போது அவர் இனிமையான மலர்களின் கரையில் உங்களுக்காக காத்திருக்கிறார். ஏய் ராதே, மாதவா எப்போதும் உன்னுடையவன். அவரை ஒருபோதும் விட்டுவிடாதீர்கள், அவரைப் பின்பற்றுங்கள் ராதே.

கானா-ஜகனா-ஸ்தான-பார-பரே, தர-மந்தர-சரண-விஹாரம் |
முகரித-மணி-மஞ்சிரம் உபைஹி விதேஹி மரால-விகாரம் ராதே ||2||

முழங்கால்கள் முழங்க அவரை அணுகவும். அவர்களின் ஒலி உங்கள் நீடித்த கால்களை ஊக்குவிக்கட்டும். காட்டு வாத்தின் நடையுடன் ஓடுங்கள்.

ஷ்ருணு ராமையா தாரம் தருணி, ஜன-மோகன-மதுப-விரமம் |
குசும-ஷரசனா-ஷாசன-வந்தினி, பிக-நிகரே பஜ பாவம் ராதே ||3||

இளம் பெண்களின் இதயங்களைக் குழப்பும் பம்பல்பீஸின் மகிழ்ச்சியான வார்த்தைகளைக் கேளுங்கள். மன்மதனின் இனிமையான கட்டளைகளைப் பரப்பும் காக்காக்களின் பாடலில் உங்கள் சொந்த மனநிலையை உணருங்கள்.

அணில-தரால-கிசலய-நிகரேண, கரேண லதானி குரம்பம் |
ப்ரேராமிவ கரபோரு கரோதி, கதிம் ப்ரதி முஞ்ச விளம்பம் ராதே ||4||

கொடிகள் காற்றில் ஓய்வின்றி நகர்கின்றன, அவற்றின் புதிதாக துளிர்விட்ட இலைகளைக் காட்டி உங்களைப் போகத் தூண்டுவது போல், உங்கள் வேகத்தை விரைவுபடுத்துமாறு சைகை காட்டுவது போல் தெரிகிறது.

ஸ்பூரிதம் அனக-தாரக-வஷாதிவ, சுசித-ஹரி-பரிரம்பம் |
ப்ருச்சா மனோஹர-ஹர-விமலா, ஜல-தரமமும், குச-கும்பம் ராதே ||5||

மயக்கும் நெக்லஸ் வடிவில் உள்ள மாசற்ற நீரோடைகளால் நீங்கள் அழகு படுத்தப்படுகிறீர்கள். அன்பின் வலுவான அலைகள் உங்களில் துடிக்கிறது, ஸ்ரீ ஹரியின் உடனடி அரவணைப்பை நீங்கள் உணருங்கள்

அதிகதம் அகில-சகிபிரிதம், தவ வபுராபி ரதி-ரண-ஸஜ்ஜம் |
சண்டி ரசித-ரசனா-ரவ-டிண்டிமம், அபிசார சரசம் அலஜ்ஜம் ராதே||6||

நீங்கள் உணர்ச்சிப்பூர்வமான போருக்கு தயாராக உள்ளீர்கள் என்பதை உங்கள் நண்பர்கள் அறிவார்கள். உங்கள் கணுக்கால்களின் துடிப்பால், அவரது செழுமையான மனநிலையை சந்திக்கவும்.

ஸ்மர-சர-சுபக-நகேன சகீம், அவலம்ப்ய கரேண சலிலம் |
சல வலய-க்வைதைரவ போதய, ஹரிம் அபி நிஜ-கதி-ஷிலம் ராதே||7||

உங்கள் தாமரை கையின் கவர்ச்சிகரமான விரல் நகங்கள் காமதேவரின் ஐந்து அம்புகள். ஆதரவைப் பெறவும், மனதார செல்லவும் அவற்றைப் பயன்படுத்தவும். ஸ்ரீ ஹரியின் கதாபாத்திரம் பெரும் வரவேற்பைப் பெற்றது. உங்கள் வளையல்களின் முழக்கத்தின் மூலம் உங்கள் வருகையை அவருக்குத் தெரியப்படுத்துங்கள்.

ஸ்ரீ-ஜெயதேவ-பனிதம் அதரிக்ருத, ஹர முதாசித-வாமம் |
ஹரி-வினிஹித-மானஸம் அதிதிஹது காந்த-ததிமா விரமம் ||8||

ஸ்ரீ ஜெயதேவாவின் இந்தப் பாடல் நேர்த்தியான கழுத்தணியின் அழகைக் கிரகணம் செய்கிறது. இது அழகின் முரண்பாட்டை தீர்க்கிறது. ஹரிக்கு தங்கள் இதயங்களை முழுவதுமாக அர்ப்பணித்த அந்த பக்தர்களின் தொண்டையை அது நிரந்தரமாக அலங்கரிக்கட்டும்.

********

sä மாம் த்ரக்ஷ்யதி வக்ஷ்யதி, ஸ்மர-கதா:, ப்ரத்யங்க மாலிகனை:
ப்ரீதிம் யஸ்யதி, ரம்ஸ்யதே சகி, ஸம-கத்யேதி சிந்தாகுல: |
ச த்வாம் பஷ்யதி, வேபதே புலகயதி, ஆனந்ததி ஸ்வித்யாதி
ப்ரத்யுத்-கச்சதி, மூர்ச்சதி ஸ்திர-தமஹ்புஞ்சே நிகுஞ்சே ப்ரிய: ||9||

“அவள் என்னை பாசமான கண்களால் பார்ப்பாள், எனக்கு ஒரு காதல் கதை சொல்வாள், என் அணைப்பிலிருந்து ஒவ்வொரு உறுப்பிலும் இன்பம் அடைவாள், என்னை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைவாள், நண்பரே” என்று அவர் கவலையுடன் கூறுகிறார். உன் காதலன் உன்னைத் தேடுகிறான், நடுங்குகிறான், முட்கள் வீசுகிறான், மகிழ்ச்சியடைகிறான், வியர்த்து, முன்னேறுகிறான், இருளில் புதைந்திருக்கும் புதரில் மயங்கி விழுகிறான்.

அக்ஷ்ணோ: நிக்ஷ்பத் ரஞ்சனம், ஷ்ரவணயோ:, தபிச்ச-குச்சாவலிம்
மூர்தினி ஷ்யாம-சரோஜா, தாம குசயோ:, கஸ்தூரிகாபத்ரகம் |
துர்தனாம் அபிசார-ஸஹஸ க்ருதா, விஸ்வì-நிகுஞ்சே சகி
த்வாந்தம் நிலா-நிச்சோல-சாரு ஸுத்ருஷம், பிரத்யங்க மலிங்காதி ||10||

இரவு அவர்களின் கண்களில் கருப்பு லைனர், காதுகளில் தமலா மலர்கள், தலையில் கருமையான தாமரை மாலைகள், கஸ்தூரி இலை வடிவமைப்பு. யாருடைய இதயங்கள் சந்திக்க துடிக்கிறதோ அந்த இரவுகள் இருண்ட கைகால்களைத் தழுவுகின்றன.

காஷ்மிர-கௌர-வபுஷம், அபிசாரி கானாம்
அபத்த-ரேகம், அபிதோ ருசி மஞ்சரிபி: |
ஏதத் தமலா-தல-நிலதமம், தாமிஸ்ரம்…
தத்-பிரேம-ஹேம-நிகாஷோ, பலதம் தனோதி… ||11||

குங்குமப் பொலிவான உடல் கொண்ட பெண்கள், ஒளிக் கொத்துக்களுடன் அவரைச் சந்திக்க விரைந்தபோது, ​​இரவு தமல இலைகளைப் போல அடர்த்தியான இருளைப் பரப்பியது, அவர்களின் உண்மையான அன்பைச் சோதிப்பது போல.

ராகம்: நாதனமக்ரியா; ஜும்பா தாலா

ஹராவலி-தராலா, காஞ்சன-காஞ்சி-தாம
மஞ்சிர-கங்கனா-மணி-த்யுதி-திபிதஸ்யா… |
துவேரே நிகுஞ்ச-நிலையஸ்ய, ஹரிம்… நிரீக்ஷ்ய
கிரீடவதிம் அத சகீம், நிஜகதா ரதம் ||

புத்திசாலித்தனமான நகைகள், கௌஸ்துபம், காஞ்சி கலாப பர்யஸ்தம், நூபுரம்.

மஞ்ஜுதர-குஞ்ச-தல-கேலி-சதனே |
இஹ விலாஸ ரதி-ரபஸ-ஹசித-வதனே ||1||

“ஓ ராதா, உனது ஆர்வத்தால் உன் முகம் அதிகப்படியான ரசத்தால் மலர்கிறது . இந்த மயக்கும் மாதவாவின் ஆடம்பரத்தில் மகிழுங்கள். மாதவனிடம் சென்று அவருடன் மகிழுங்கள்.

ப்ரவிச ராதே மாதவ-சமீபம் |
குரு முராரே மகல-சதானி |||துருவபடா ||

“ராதே, மாதவனை நெருங்கி அவனுடன் மகிழ்ச்சியில் இரு.”

நவ-பவதா, ஷோக-தலா, ஷயனா-சரே |
இஹ விலாஸ குச்ச-கலச தரல-ஹரே ||2||

“ராதே, உன் முத்துச் சரம் நடுங்குகிறது. அவருக்குப் பிரசாதமாகப் பறிக்கப்பட்ட சிவப்பு இதழ்களின் படுக்கையில் களிகூருங்கள். ராதே, மாதவனை நெருங்கு”

சல மலாயா வரபவனா சுரபி-ஷிதே |
இஹ விலாஸ ரஸ வலிதா, லலிதா கீதே ||3||

“சந்தன மரங்களின் நறுமணமிக்க மெல்லிய காற்றில் மிகுந்த மகிழ்ச்சி அடைக. அவரை மகிமைப்படுத்த உங்கள் பாடலைப் பயன்படுத்துங்கள். ராதே, மாதவனை நெருங்கு”

குசும-சாயா ரசிதா ஶுசி-வாஸ-கேஹே |
இஹ விலாச குசும-சுகுமார-தேஹே ||4||

“பூக்களால் குவிக்கப்பட்ட பிரகாசமான பின்வாங்கலில் மகிழ்ச்சியாக இருங்கள்! நீங்கள் அவருக்கு என்று பூவை வழங்குங்கள். ராதே, மாதவனை நெருங்கு”

மது-தரால பிக நிகர நினத முகரே |
இஹ விலாஸ தாஷன ருசி ருசிர ஷிகரே ||5||

“ஓ ராதா, உன்னுடைய பற்கள் மாணிக்கங்கள் அல்லது முழுமையாக பழுத்த மாதுளை விதைகள் போன்றவை. பூக்கும் கொடிகளின் இந்த பந்தலில் நுழையுங்கள். காக்காக் கூட்டத்தின் இனிமையான கூச்சலுடன் அது ஒலிக்கிறது. ராதே, மாதவனை நெருங்கு”

விதத-பாஹு வல்லி-நவ பல்லவ-கானே |
இஹ விலாஸ பின குச்சா, குன்ப-ஜகனே ||6||


“ அதன் செழிப்பான கொடிகளின் புதிய இலைகளால் அடர்த்தியாக மூடப்பட்டிருக்கும் இந்த ஒதுங்கிய பின்வாங்கலில் மகிழுங்கள் .! அவரை அடைய உங்கள் உள் ஒளியைப் பயன்படுத்துங்கள். ராதே, மாதவனை நெருங்கு”

மது முடிதா மதுபாகுல கலிதா ராவே |
இஹ விலாஸ மதனா, ஷர-ரபஸ பாவே ||7||


“ தேனைக் குடித்து வெறிபிடித்த பம்பல்பீக்களின் ஓசையுடன் ஒலிக்கும் இந்த அழகிய இடத்தில் மகிழ்ச்சியடையுங்கள் . அன்பு நிறைந்த உங்கள் உணர்ச்சியை அவரிடம் கொடுங்கள் & அவரை மட்டும் நேசியுங்கள்.

விஹித-பத்மாவதி-சுக-சமாஜே |
பானதி ஜெயதேவ-கவி-ராஜ-ராஜே ||8||

எல்லாக் கவிஞர்களின் சக்கரவர்த்தியான ஜெயதேவா, ராதையின் இதயத்தை பல்வேறு வழிகளில் மகிழ்விக்க இந்தப் பாடலை இயற்றியுள்ளார்.
ஓ மாதவா, முழு உலகத்திற்கும் அளவற்ற ஐஸ்வர்யங்களை வழங்குவாயாக.

********

த்வம் சித்தேன சிரம் வஹன், அயம் அதிஷ்ராந்தோ, பீஷம் தபிதா:
கந்தர்பேன ச படும் இச்சதி சுதா…சம்பந்த-பிம்பதாரம் |
அஸ்யங்கம் தத் அலங்குரு, க்ஷணம் இஹ, ப்ரு-க்ஷேப-லக்ஷ்மி…
லவ-கிருதே தாஸ இவோப, ஸேவித-பதாம்போஜே, கூட: ஸம்ப்ரம:… ||9||

“இவ்வளவு காலம் உன்னை அவன் மனதில் தாங்கிக்கொண்டு, அவனை சோர்வடையச் செய்து, பிரேமாவைத் தூண்டியது. உனது பிம்பதாரத்தைக் குடிக்க ஆசைப்படுகிறான். நீ ஏன் பயப்படுகிறாய்”

ராகம்: மத்யமாவதி; ஆதி தாலா

ச ஸஸாத்-வஸ-ஸாநந்தம், கோவிந்தே லோல-லோகனா |
சிஞ்ஞான-மஞ்சு-மஞ்சிரம், பிரவிவேஷ நிவேஷனம் ||

“ராதா தனது அமைதியற்ற கண்களால் கோவிந்தனைப் பார்த்தபோது முழு மகிழ்ச்சியில் இருந்தாள். அவள் அவனது பின்வாங்கலுக்குள் நுழையத் தொடங்கியபோது அவளது நகைகள் அணிந்த கணுக்கால் மணிகள் வசீகரமாக ஒலித்தன. ”

ராதா-வதன-விலோகனா-விகாசித-விவித-விகார-விபாகம் |
ஜல-நிதி மிவ வது-மண்டல-தர்ஷன-தரலித-துங்க-தாரகம் ||1||

பௌர்ணமி தோன்றும்போது கடல் அலைகள் அலைவதைப் போல, ராதையின் முகத்தைப் பார்த்ததும் அவனது உணர்ச்சிகள் எல்லாம் பொங்கின.

ஹரிம் ஏக-ரசம் சிரம் அபிலாஷித-விலாசம் |
ச தாதர்ஸ குரு-ஹர்ஷ-வசம் வாத-வதன மனக-விகாசம் || துருவபாதம்||

பௌர்ணமி நிலவின் கோளத்தைக் கண்டு கடல் அலைகள் கொந்தளிப்பது போல, ஹரி அவள் முகத்தைக் கண்டு மகிழ்ச்சியில் மலர்ந்தான்.

ஹர மாமலதர-தாரா முரஸி ததாதம் பரிலம்ப்ய விதுரம் |
ஸ்பூதர-பேன-கதம்ப-கரம்பிதம் இவ யமுனா-ஜல-புரம் ||2||

ஹரி தனது பரந்த மார்பை அலங்கரித்து, பிரகாசமான முத்துக்களை அணிந்திருந்தான். யமுனை ஆற்றில் நுரை பெருக்கெடுத்து ஓடுவது போல் இருந்தது.

ஸ்யாமலா-ம்ருதுல-கலேவர-மண்டலம் அதிகத-கௌர-துகுலம் |
நிலா-நலினா மிவ பிட-பரகா படல-பார-வலயிட்ட-மூலம் ||3||

ஹரி தனது மென்மையான மற்றும் பளபளப்பான உடலில் பீதாம்பரத்தை அணிந்துள்ளார். ஒரு நீல தாமரை மலர் அதன் தங்க மகரந்தத்தால் நனைந்தது போல் தெரிகிறது.

தாரலா-துருக்-அஞ்சல-சலன-மனோஹர வதன-ஜனித்த-ரதி-ராகம் |
ஸ்புவ-கமலோதர-கேலித-கஞ்ஜன யுகம் இவ சரதி தடகம் ||4||

கிருஷ்ணரின் மயக்கும் முகம் இலையுதிர் காலத்தில் ஏரியின் தூய நீரில் முழுமையாக மலர்ந்த நீல தாமரை மலரைப் போல அழகாக இருக்கிறது. தாமரையின் மீது காஞ்சனா (தங்க) பறவையின் விளையாட்டாகத் தோன்றும் அவரது அமைதியற்ற கண்களின் வெளிப்படையான பக்கவாட்டுப் பார்வைகள்
ராதையின் உணர்ச்சிகளைத் தூண்டுகின்றன.

வதன-கமலா-பரிஷிலானா-மிலிதா மிஹிர-சம-குண்டல-ஷோபம் |
ஸ்மித-ருசி-ருசிர-சமுல்ல-சீத-ஆதார-பல்லவ-க்ருத-ரதி-லோபம் ||5||

கிருஷ்ணரின் காதில் அணிந்திருக்கும் நகைகளின் அழகு அவரது தாமரை முகத்தின் அழகைக் கவருகிறது. காலைச் சூரியனைப் போல் சிவந்த அவனது இனிமையான உதடுகள், அவனது பிரகாசமான புன்னகையின் பிரகாசத்தால் பிரகாசிக்கின்றன, அவனது நடுங்கும் பூ மொட்டு உதடுகள் ராதாவின் உணர்ச்சிகளைத் தூண்டுகின்றன.

ஷஷி-கிரண-ச்சுரிதோதர-ஜலதர-சுந்தர-குஸும-சுகேசம் |
திமிரோதித-விது-மண்டல-நிர்மலா மலையஜ-திலக-நிவேசம் ||6||

அவனுடைய கூந்தலில் மலர்கள் சிக்குண்டு, மேக முறிவுகளில் சிக்கிய நிலவுக் கதிர் போல் தெரிகிறது.
அவரது நெற்றியில் சந்தனப் பூசப்பட்ட திலகத்தின் மகிமை இருளை நீக்கும் சந்திரனைப் போல் தெரிகிறது.

விபுல-புலக-பார-தந்துரிதம் ரதி-கேலி-களபிராதிரம் |
மணி-கன-கிரண-சமுஹா-ஸமுஜ்ஜ்வல-பூஷண-சுபக-ஷரீரம் ||7||


அவரது அற்புதமான வடிவத்தை அலங்கரிக்கும் அவரது நகைகளின் பிரகாசம், மிகவும் வசீகரிக்கும் ஒளியைப் பெற்றுள்ளது . மேலும் ராதையின் அன்பான பார்வைகளுக்கு கிருஷ்ணர் பதிலளிக்கிறார்.

ஸ்ரீ-ஜெயதேவ-பனித-விபவ-த்விகுனிக்த-பூஷண-பாரம் |
ப்ரணமத ஹ்ருதி விநிதாய ஹரிம் ருசிரம் ஸுக்த்ருதோ-தயா-சரம் ||8||

ஸ்ரீஜெயதேவரால் இயற்றப்பட்ட பல்வேறு அலங்கார வெளிப்பாடுகளால் கிருஷ்ணரின் ஆபரணங்களின் மகத்துவம் இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது.
சுவைமிக்க பக்தர்களே! உங்களின் அனைத்து புண்ணிய செயல்களுக்கும் கிருஷ்ணரே பலன்.
மிகுந்த கவனத்துடன், உங்கள் இதயத்தில் அவரைப் பிடித்துக்கொண்டு அவருக்கு வணக்கம் செலுத்துங்கள்.

********

அதிக்ரம்ய பங்கம், ஷ்ரவண-பாத-பர்யந்த-கமன-
ப்ராயசேன ஏவக்ஷ்யோ:, தரலதர-தாரம் கமிதயோ:|
இதானேம் ராதாயா: ப்ரியதமா-சமாலோக-சமயே…
பாபாத ஸ்வேதாம்பு-ப்ரஸார இவ, ஹர்ஷஷ்ரு-நிகர: ||9||

தன் காதலியைச் சந்தித்த சில நிமிடங்களில், ராதாவின் உள்ளக் குதூகலம், அவள் கண்களின் உழைப்பினால் எழும் வியர்வையைப் போல் ஆனந்தக் கண்ணீராக வழிந்தது.

bhajantyäs talpäntam kuta-kapata-kantüti-pihita-
smitae Yäte… gehäd Bahir Avi, hitälé-parijane |
ப்ரியஸ்யாம் பஷ்யந்த்யா:, ஸ்மர-ஷர ஸமகுத-சுபகம்
சலஜ்ஜ-லஜ்ஜாபி, வ்யாக மத் இவ துரம், மிருக-த்ரிஷா: ||10||

ராதாவின் சகி அவளை மகிழ்ச்சியாக பார்க்க ஆவலுடன், தந்திரமாக தங்கள் புன்னகையை மறைத்து பின்வாங்கினாள். ராதா தன் மிகவும் பிரியமான கிருஷ்ணனின் முகத்தில் ஒரு அழகான பக்கவாட்டுப் பார்வையை வீசினாள். அப்போது அவளின் வெட்கமும் விலகியது.

ஜய-ஸ்ரீ-விந்யஸ்தை:, மஹிதைவ மந்தார-குசுமை:
ஸ்வயம் சிந்துரேண த்விப-ரண-முதா, முத்ரிதா இவ |
புஜேபிட-கிரிடா-ஹத-குவலயபிட-கரிண:….
பிரகேர äஷ்ரு-பிந்து:, ஜெயதி புஜ-டானோ, முராஜித: ||

மல்யுத்தப் போட்டியில் குவலயாபிடா என்ற யானையைக் கொன்று கிருஷ்ணரின் கரங்கள் அழகுபடுத்தப்படுகின்றன. யானையுடன் போரிடுவதில் அவரது உற்சாகத்தால், அவரது கரங்களில் வெண்ணிறம் பூசப்பட்டது மற்றும் வெற்றியின் தெய்வத்தால் மந்தார மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. முராவை வென்ற கிருஷ்ணரின் பரந்த கரங்கள் எப்போதும் வெற்றிபெறட்டும்.

ஏதி ஸ்ரீ கீத கோவிந்தே ஶ்ரீங்கார மஹாகாவ்யே
ஸ்ரீ கிருஷ்ண தாஸ ஜெயதேவ க்ருதுவா
ச நந்தோ கோடிந்தோ நம, ஏகாதச சர்க:

ராகம்: நாதனமக்ரியா; ஆதி தாலா

கதவதி சகி-பிருந்தே,மந்தத்ர-பாபார-நிர்பார-
ஸ்மர-பரவஷா-குதா, ஸ்பூதித-ஸ்மித-ஸ்னபிதா-தரம் |
சரஸ-மனாசம் த்ரிஸ்த்வா, ராதம் முஹு:, நவ-பல்லவ-
ப்ரஸவ-ஷயனே, நிக்ஷிப் தக்ஷிம், உவாச ஹரி: ப்ரியம்… ||

“ராதாவின் தோழிகள் சென்றதும் அவள் உதட்டில் புன்னகை பரவியது. ஆழ்ந்த காதலில் இருந்தபோது, ​​அடக்கத்துடன் போராடினார். ராதாவின் இதயத்தின் மனநிலையைப் பார்த்து, அவளது கண்கள் அவனது மலர்கள் மற்றும் மென்மையான தளிர்கள் மீது நிலைத்திருக்க, ஹரி அவனது அன்புடன் பேசினான்.

கிசலயா ஷயன-தலே குரு காமினி சரண-நளின-வினிவேஷம் |
தவ பத-பல்லவ-வைரி-பரபவம் இடம் அனுபவது சுவேஷாம் ||1||

“ராதே, புதிதாய் துளிர்விட்ட இலைகளைக் கொண்ட இந்தப் படுக்கையில் உனது பூ போன்ற பாதங்களை விடு. ”

க்ஷண மதுன நாராயணம், அனுகதம் அனுசர ராதே ராதே ராதே ||த்ருவ||

“நாராயணா உன்னுடையவள், என்னுடையவள் ராதே!”

கர-கமலேன கரோமி சரண மஹம், அகமிதஸி விதுரம் |
க்ஷணம் உபகுரு ஷயனோபரி மாம் இவ, நூபுரம் அனுகதி-ஶுரம் ராதே ராதே ||2||

“என் அன்பே, நீ தூரத்திலிருந்து இங்கு வந்திருக்கிறாய். என் தாமரை கைகளால் உங்கள் தாமரை பாதங்களை மசாஜ் செய்வேன். உங்கள் கணுக்கால் மணிகளை படுக்கையில் வைக்கவும்.

வதன-சுதா-நிதி-கலிதம் அம்ருத மிவ, ராசய வசனம் அனுகுலம் |
விரஹம் விபநயாமி பயோதரா, ரோதகம் உரசி துகுலம் ராதே ராதே ||3||

“ஓ ராதா, தயவு செய்து முகத்தைப் போன்ற சந்திரனிலிருந்து அமிர்தம் போல சில இனிமையான வார்த்தைகளைப் பேசுங்கள். எங்கள் பிரிவை முடிவுக்குக் கொண்டுவர, நான் என் மார்பில் பட்டுத் துணியைச் சுமக்கிறேன்.

ப்ரிய-பரிரம்பான-ரபஸ-வலிதா மிவ, புலகிதம் அதிதுரவபம் |
மதுரஸி குச்ச-கலச வினிவேஷயா, ஷோஷய மனசிஜ-தபம் ராதே ராதே ||4||

“உங்கள் மனக் கிளர்ச்சிகளைத் தணிக்க, என் மார்பில் ஓய்வெடுங்கள் (அவரது தொடுதலே மனதின் சிதைவுகளை நீக்கும்). அன்பின் நெருப்பை அன்பான அரவணைப்பால் அணையுங்கள்.”

ஆதார-சுதா-ரசம் உபநய பாமினி, ஜீவாய ம்ருதம் இவ தசம் |
த்வயி வினிஹித-மானஸா விரஹானாலா,தக்த-வபுஷாம் அவிலாசம் ராதே ராதே ||5||

“ராதே, என் மனம் உன்னில் லயிக்கிறது. பிரிவின் நெருப்பில் நான் எரிகிறேன், உங்கள் உதடுகளின் அமிர்தத்தை வழங்குங்கள்.

ஷஷி-முகி முகராய மணி-ரஷன-குணம், அனுகுண-காந்த-நினதாம் |
ஸ்ருதி-யுகலே பிக-ருத-விகலே, மம ஷமய சிராத் அவஸதம் ராதே ராதே ||6||

“உன் முகம் சந்திரனைப் போல் அழகு. உமது குரல் என் காதுகளுக்கு இதமளிக்கும்.”

மமாபி விபால-ருஷா விகலி-க்ருதம், அவலோகிதும் அதுநேதம் |
மிலதி லஜ்ஜித விமானயனம் தவ, விரமா விஸ்ருஜா ரதி-கேதாம் ராதே ராதே ||7||

“ராதே, ஆதாரமற்ற கோபத்தால் நான் சித்திரவதை செய்யப்படுவதைக் கண்டு உன் கண்கள் வெட்கப்படுகின்றன. என்னைப் பார்த்து விரக்தியை முடிவுக்குக் கொண்டு வாருங்கள்.

ஸ்ரீ-ஜெயதேவ-பனிதம் இடம் அனுபதா, நிகதித-மது-ரிபு-மோதம் |
ஜனயது ரசிக-ஜனேஷு மனோரமா, ரதி-ரஸ-பவ-வினோதம் ராதே ராதே ||8||

ஸ்ரீ ஜெயதேவா ஒவ்வொரு வார்த்தையிலும் மதுரிப்பு ஸ்ரீ கிருஷ்ணரின் பேரானந்த கேளிக்கைகளை விவரிக்கிறார்.
தூய ஆழ்நிலை மெல்லிசைகளை ருசிப்பதில் நிபுணத்துவம் பெற்ற பக்தர்களின் இதயங்களில் இன்பமான காதல் ரசத்தின் விளையாட்டுத்தனமான பொழுதுகளை அவரது பாடல் எழுப்பட்டும் .

********

ப்ரத்யுஹ-புலகன் குரேண, நிபில-ஷ்லேஷே-நிமேஷேன ச
கிரிடா-குட-விலோகனே, ஆதார-சுதா-பனே?, கதா-நர்மபி: |
ஆனந்தாதி-கமேன-மன்மத-கலா-யுத்தே’பி, யஸ்மின்ன் அபூத்
உத்பூதா ச தயோர் பாபுவ, ஸுரத-ரம்ப: ப்ரியம் பௌக: ||9||

பின்னர் அவர்கள் வியக்கத்தக்க மற்றும் உயர்ந்த பேரின்பத்தைத் தொடங்கினர், அதற்காக அவர்கள் இருவரும் நீண்ட காலமாக ஏங்கிக்கொண்டிருந்தனர். ஆழ்ந்த அரவணைப்பின் சிலிர்ப்பிலிருந்து திகிலடைவது ஒரு தடையாகத் தோன்றியது. அவர்களின் கண்கள் சிமிட்டுவது ஒருவரையொருவர் இனிமையாகப் பேசுவதை விடாமுயற்சியுடன் கவனிப்பதைத் தடுப்பதாகத் தோன்றியது.

தோர்பயம் சம்யமித:, பயோதர-பரேண, பீடித: பாணிஜை:
äவித்தோ தஷனை: க்ஷதாதார-பூத:, ஷ்ரோனிததே-நஹத: |
ஹஸ்தேனா நவித:, கசி’ம் ஆதார-சுதா-ஸ்வாந்தேன, ஸம்-மோஹிதா:
காந்தா: காமபி த்ரிப்திம் äப தத் அஹோ, காமஸ்ய வாம கதி: ||10||

ராதிகாவின் அன்பான காதலன் கிருஷ்ணா, அவள் கரங்களால் கட்டப்பட்டிருந்தாள். அவள் உதடுகளின் அமிர்தத்தால் அவனைப் பொழிவதற்காக, அவன் தலைமுடியை பின்னுக்குத் தள்ளினாள்.

மாரங்கே ரதி-கேலி, சங்குல-ரண-ரம்பே, தயா சஹாசத்-
ப்ராயாம், காண்ட-ஜெய கஞ்சித் உபரி, ப்ராரம்பி யத்-சம்ப்ரமாத் |
nishpandhä jaghana-sthali, Shithilitä, dor-vallir utkampitam
Vaksho militam akshi paurusha-rasa:, strinäm kuta: Sidhyati ||11||

“தனது ஆர்வத்தை வெளிப்படுத்தி, காதல் விளையாட்டில் அவள் அவனுக்கு மேலே ஒரு தைரியமான தாக்குதலைத் தொடங்கினாள் மற்றும் புருஷாவை வென்றாள்.”

தஸ்யா: பாடல-பனி ஜாங்கி மூரோ, நித்ரா-காஷாயே த்ரிஷௌ
நிர்தௌதோ ஆதார-ஷோணி மா, வில்லுலித-ஸ்ரஸ்த-ஸ்ரஜோ மூர்த-ஜ: |
காஞ்சி-தாம தர-ஷ்லதம் கால-மிதி, ப்ராதர் நிகதைர் த்ரிஷோ
யேபி: காம ஷரை:, தத்-அத்பூதம் அபூத், தத்யுர் மன: கிளிதம் ||12||

தூக்கமின்மையால் அவள் கண்கள் சிவந்திருந்தன. அவளது உதடுகளில் இருந்த சிவப்பு நிற ஒப்பனை நீண்ட முத்தத்தால் துடைக்கப்பட்டது. அவள் தலைமுடியில் நெய்யப்பட்டிருந்த மலர் மாலை வாடியிருந்தது. அதிகாலையில் ஐந்து அம்புகள் கிருஷ்ணரின் கண்களை எதிர்கொண்டபோது, ​​மீண்டும் காமதேவரின் ஐந்து அம்புகளால் அவரது மனம் குத்தப்பட்டது. எவ்வளவு ஆச்சரியமாக இருக்கிறது!

வ்யலோல: கேஷ-பாஷா ஸ்டாரலிதா மலகை:, ஸ்வேத-லூலௌ கபோலௌ தஸ்தா
பிம்பாதர-ஶ்ரீ:, குச-கலஷ-ருச்சா, ஹரிதா ஹார-யஸ்தி: |
காஞ்சி-காஞ்சித்-கடாஷாம், ஸ்தான-ஜகனா-பதம், பானினா ச்சத்ய:
பஷ்யந்தி சத்ரபம் மான், தத் அபி விழுலிதா, ஸ்ரக்த-ரீயம் தினோதி ||13||

அதிகாலையில், ராதாவின் தலைமுடி கலைந்து, சுருண்டிருந்த பூட்டுகள் அவிழ்ந்திருந்தன. அவள் கன்னங்கள் வியர்வையால் ஈரமாகி,
உதடுகளின் பிரகாசம் மங்கிப் போயிருந்தது.

ஏஷன்-மிலிதா-ட்ரிஸ்தி முக்த-ஹசிதம், ஷேத்-கார-தாரா-வஷாத்
அவ்யக்தா-குல-கேலி-ககு-விகாஸத்-தந்தாம்ஷு-தௌத-தரம் |
ஸ்வஷோ-தப்த-பயோதரூ பரி, பரிஷ்-வாங்கி குராகி-த்ரிஷோ
ஹர்ஷோத்கர்ஷா, விமுக்த-நிஸ்ஸஹ-தனோர் தன்யோ தயாத்-யானானம் ||14||

கோவிந்தரால் அலங்கரிக்கப்பட வேண்டும் என்ற தனது விருப்பத்தை வெளிப்படுத்தி அவரிடம் மரியாதையுடன் பேச ஆரம்பித்தாள் ராதா.

ராகம்: காந்தா; ஆதி தாலா

அத க்ரந்தம் ரதி ஷ்ராந்தம், அபி-மண்டன வாஞ்சயா…. |
ஞஜகதா மாதவம் ராதாம் முகதம், ஸ்வாதினா பத்ருகா ||

அவன் அவளது காதலுடன் விளையாடிக் கொண்டிருந்த போது, ​​ராதா அவளை அலங்கரிக்க விரும்பினாள்.

குரு யது-நந்தன சந்தன-ஷிஷிர, தாரேண கரேண பயோதரே |
ம்ருக-மட-பத்ரகம் அத்ர மனோ-பவ, மங்கள-கலச-சஹோதரே ||1||

“யது நந்தனா, நான் உன்னிடம் முழுமையாக உள்வாங்கும் வகையில் உன் கைகளால் என்னை அலங்கரிக்கவும். நான் கிருஷ்ணமாயி. முதலில், உங்கள் குளிர்ந்த கையால் மான் கஸ்தூரியில் இலைகளை வரிசையாக வரையவும். உங்கள் தொடுதல் சந்தன பேஸ்ட்டை விட (சந்தனம்) புத்துணர்ச்சி தருகிறது.

நிஜகதா ச யது-நந்தனே, கிருததி ஹ்ருதய-நந்தனே
நந்த நந்தனே, பக்த சந்தனே, நிஜகதாச யதுநந்தனே ||த்ருவபதா|| |

ஆனந்தமான யது நந்தனா, ராதையின் இதயத்தை மகிழ்விக்க விளையாடினார்.

அலி-குல-பஞ்சன மஞ்சனகம், ரதி-நாயக-சயக-மோச்சனே |
த்வத்-ஆதார-சும்பன-லம்பித-கஜ்ஜலம், உஜ்ஜ்வலயா ப்ரிய லோசனே, நிஜகதாஸ யதுநந்தனே ||2||

“ஓ என் அன்பே, இந்த புதிய ஐ-லைனரால் என் கண்களுக்கு அபிஷேகம் செய், இது பம்பல்பீஸ் கூட்டத்தின் சிறப்பை மிஞ்சுகிறது. காமதேவரின் அம்புகள் என் பக்கவாட்டுப் பார்வையிலிருந்து பறந்தன. உங்கள் உதடுகளின் முத்தத்தால் என் கண்களில் கோலிரியத்தின் முந்தைய பயன்பாடு மங்கிவிட்டது.

நயன-குரங்க-தரங்க-விகாஸ,நிரஸ-கரே ஷ்ருதி-மண்டலே |
மனசிஜ-பாஷ-விலாஸ-தாரே, சுபகே-வினிவேசய குண்டலே, நிஜகதாஸ யதுநந்தனே ||3||

“பிதாதம்பரத்தை அணிந்திருக்கும் என் அன்பே, காமதேவரின் பொறியைப் போன்ற நேர்த்தியான இந்த ஆபரணங்களால் என் காதுகளை அலங்கரிக்கவும். என் காதுகள் என் கண்களின் மான்களை
உதிர்வதைத் தடுக்கின்றன. என் இதயத்தின் மகிழ்ச்சியே, இளைஞர்களின் இதயங்களைக் குழப்பும் இந்த ஆபரணங்களால் என் காதுகளை அலங்கரிக்கவும்.

ப்ரமர-சாயம் ரச்சா யந்த முபரி, ருசிரம் சுசிரம் மம ஷம்முகே |
ஜித-கமலே விமலே பரிகர்மயா, நர்ம-ஜனகம் அல கா முகே,நிஜகதாஸ யதுநந்தனே ||4||

“என்னுடைய கறையற்ற மற்றும் மகிழ்ச்சியான முகம் ஒரு மாசற்ற தாமரை மலரின் அழகை தோற்கடிக்கிறது. என் நேர்த்தியான ஆடைகளை பின்னல் போடுங்கள், அல்லது தாமரை மலரில் எப்போதும் இறங்கும் பம்பல்பீக்கள் என்று என் சுருட்டை ஒருவர் தவறாக நினைக்கலாம்.

ம்ரிக-மட-ரஸ-வலிதம் லலிதம், குரு திலக மாலிகா-ரஜனி-கரே |
விஹித-கலங்க-காலம் கமலானா, விஷ்ரமித-ஷ்ரம-ஷிகரே, நிஜகதாஸ யதுநந்தனே ||5||

“ஓ கமலானா (தாமரை முகம் கொண்டவரே), வியர்வை என் நெற்றியில் நிலவில் உள்ள மான் வடிவ அடையாளத்தைப் போல கறைபட்டது. தயவு செய்து என் நெற்றியின் அரை நிலவில் இந்த வசீகரிக்கும் கஸ்தூரியைக் கொண்டு அழகான திலகத்தை வரையவும். கிருஷ்ணா! நீ என் அதிர்ஷ்டத்தின் மையப்புள்ளி – நீ என் நெற்றியில் திலகம்”

கானா ருசிரே சிகுரே குரு மனதா, மனசிஜ-த்வஜ-சாமரே |
ரதி-கலிதே லலிதே குசுமணி, ஷிகண்டி-ஷிகண்டக-தாமரே,நிஜகதாஸ யதுநந்தனே ||6||

“மற்றவர்களுக்கு (மானடா) மரியாதை கொடுப்பவனே, என் தலைமுடி, காமதேவரின் கொடியின் துடைப்பம் போன்றது. இது மயிலின் வால் இறகுகளை விட வசீகரமானது. தயவுசெய்து என் தலைமுடியை மலர்களால் அலங்கரிக்கவும். பூக்களால் பின்னப்பட்ட என் பின்னல் நீயாகி, அதை உன் தெய்வீக நறுமணத்தால் பரப்புவாயாக.”

சரஸ-கானே ஜகனே மம சாம்பரா, தாரன-வரண-கந்தரே |
மணி-ரஷனா-வசனா பரணானி சுபாஷாய வாசய சுந்தரே, நிஜகதாஸ யதுநந்தனே ||7||

“ஓ நல்லொழுக்கமுள்ளவனே, என் இதயத்தின் மகிழ்ச்சி! உங்கள் தாமரை கைகள் எல்லா அதிர்ஷ்டங்களுக்கும் உறைவிடம். உங்கள் இதயம், ரசத்தால் நிறைந்திருப்பது, அனைத்து ஐஸ்வர்யங்களுக்கும் ஆணிவேராகும்
. என் முழு உயிரும் உன்னுடையது, அவற்றை ஆடைகளாலும் ஆபரணங்களாலும் கொடுங்கள்.

ஸ்ரீ-ஜெயதேவ-ருசிர வசனே, ஹ்ருதயம் சதயம் குரு மந்தனே |
ஹரி-சரண-ஸ்மரண அம்ருத-நிர்மிதா,கலி-கலுஷ-த்வஜ-கந்தனே, நிஜகதாஸ யதுநந்தனே ||8||

ஸ்ரீ ஜெயதேவாவின் வார்த்தைகள் ஐஸ்வர்யத்தை அளித்து, உங்கள் இதயத்திற்கு அளவற்ற மகிழ்ச்சியைத் தருகின்றன.
கலி யுகத்தில் முக்கியமான அசுத்தங்களின் காய்ச்சலை நீக்கும் ஸ்ரீ ஹரியின் தாமரை பாதங்களின் அமுத நினைவுகள் அவை .

********

ரசாய குசயோ:, பத்ரம் சித்ரம், குருஷ்வ கபோலயோ:
கதயா ஜகனே, காஞ்சி முஞ்ச-ஸ்ரஜம், கபரி-பரே |
கலயா வலய-ஷ்ரேயீனிம், பானௌ, படே குரு-நுபுராவ்
இதி நிகதிதா:, ப்ரீத:, பிதாம்பரோ’பி, ததா காரோட் ||9||

“என் கன்னங்களில் கலர் போடு! என் பின்னலை மலர்களால் கயிறு! என் கைகளில் வளையல்களின் வரிசைகளையும், என் கணுக்காலில் நகைகள் பதிக்கப்பட்ட கணுக்கால்களையும் பொருத்துங்கள். கிருஷ்ணர், பீதாம்பர-தாரி, ராதை தன்னிடம் கேட்டதைச் செய்வதில் மகிழ்ச்சி அடைந்தார். ராதாவின் பிரேமாவின் இறுதி மாற்றத்தில், அவள் தன்னை முழுவதுமாக கிருஷ்ணரிடம் மூழ்கடிக்க விரும்புகிறாள். அவள் கிருஷ்ணமயமாக மாற விரும்புகிறாள் – கிருஷ்ணனில் மூழ்கி – அவனுடைய தெய்வீக கரங்களின் ஸ்பரிசத்தால். அவளுடைய இதயம் கிருஷ்ணனுடையது, அவளுடைய உடைகள் மற்றும் ஆபரணங்கள் அனைத்தும் கிருஷ்ணர்.

த்வாம-ப்ராப்ய-மயி, ஸ்வயம் வர-பரம், க்ஷிரோதா-திரோதரே…
ஷங்கே சுந்தரி, கால குட மாபிபன், பந்தோ மிருதானி-பதி: |
இத்தம் பூர்வ-கதாபிர் அந்ய-மானஸ:, விக்ஷிப்ய தக்ஷோன் சலம்
ராதாயா: ஸ்தான-கூர கோபரி-மிலன்-நேத்ரோ ஹரி: படுன: ||10||

“ஓ அழகானவளே! பாற்கடலின் கரையில் சிவபெருமான் உன்னை அடைய முடியாத போது; உன் அழகைக் கண்டு மயங்கி, அவன் கொடிய
கோலாகுடா விஷத்தை விழுங்கினான். பிறகு என்னைத் துணைவியாகத் தேர்ந்தெடுத்தாய்.”

பர்யங்கி-கிருத-நாக-நாயக-பனா, ஷ்ரேணி-மணினம் கணே
சங்க்ராந்த-பிரதிபிம்ப-சம் வளநாய, பிப்ரத்-விபு-பிரக்ரியாம்… |
பாதாம்போ-ருஹ-தாரி-வாரிதி-சுதம், அக்ஷம் தித்ரிக்ஷு ஷதை:
காயா-வ்யூஹம் இவ-சரந், உபசிதி பூதோ ஹரி: பது ந: ||11||

சர்ப்பங்களுக்கெல்லாம் தலைவனான சேஷ-ராஜாவைத் தன் படுக்கையாகக் கொண்டவன்; ஷேஷ-ராஜாவின் எண்ணற்ற பேட்டைகளில் உள்ள நகைகளில் பிரதிபலிப்பாக அதன் மகிமை விரிவடைகிறது; அவனை ஆயிரமாயிரம் கண்களால் பார்க்க ஆசைப்படும் சேஷா; & யாருடைய தாமரை பாதங்கள் அதிர்ஷ்ட தெய்வமான மகாலட்சுமியால் நித்தியமாக மசாஜ் செய்யப்படுகிறதோ; ஒரே நேரத்தில் பல வடிவங்களில் நிறைந்திருக்கும் ஸ்ரீ ஹரி உங்கள் அனைவரையும் காக்கட்டும்.

யத் கந்தர்வ-கலாசு கௌஷலம், அனுத்யானம் ச யத் வைஷ்ணவம்
யக் ஷிங்கர-விவேக-தத்வ-மபி, யத்-காவ்யேஷு லீலாயிதம் |
தத் ஸர்வம் ஜெயதேவ-பண்டித-கவே:, கிருஷ்ணை-கடா-நாத்மனா:
ஸாநந்த:, பரிஷோதா யந்து ஸுதியா:, ஸ்ரீ-கேதா-கோவிந்ததா: ||12||

“ஜெயதேவரின் இசைத்திறன், விஷ்ணவம், யதார்த்த தரிசனம், இந்த சர்காக்களில் அவரது லாவகமான நாடகம், இவையனைத்தும் மகா கவிஞன் கிருஷ்ணருடன் பொருந்தியிருப்பதைக் காட்டுகிறது – ஞானத்தின் பேரின்ப மனிதர்கள் கீத கோவிந்தத்தைப் பாடி உலகைத் தூய்மைப்படுத்தட்டும்”

சாத்வி மாத்விகா, சிந்தா ந பவதி, பவதா: ஷர்கரே கர்கஶாஸி
த்ராக்ஷே த்ரக்ஷ்யந்தி கே, த்வாம் அம்ருதா ம்ருதா மாஸி, க்ஷீரைரம் ரஸஸ்தே |
மகாண்ட க்ரந்தா, காண்ட-தார தரணி தாலம், கச்ச யச்சந்தி பவம்
யாவச் ஶ்ரீங்கார, ஸரஸ் ஸ்வத மிஹா, ஜயதேவஸ்ய விஷ்வ கச்சாம்ஸி ||13||

“ஏய் சக்தி வாய்ந்த மது! நீங்கள் மிகவும் போதை என்று நினைக்க வேண்டாம். ஏய் சர்க்கரை! நீங்கள் மிகவும் கடுமையானவர். ஏய் திராட்சை! உன்னை யார் பார்ப்பார்கள்? ஹே அமிர்தம் (அமதா)! நீங்கள்
மரணம் போன்றவர் (மாதா). ஏய் பால்! நீங்கள் தண்ணீரைப் போல சுவைக்கிறீர்கள். ஏய் பழுத்த மாம்பழம்! இப்போது போய் அழுங்கள். அழகான பெண்ணின் உதடுகளே! இப்போது நீங்கள் செல்ல இடமில்லை.
சிற்றின்பக் காதலின் முழுமையான சாராம்சம் ஸ்ரீ ஜெயதேவரின் அருளும், கலைநயமும் நிறைந்த வடிவில் இருக்கும் வரை , இந்தக்
கவிதையின் ரசத்தை ரசிப்பதில் வல்லவர்கள் உங்களுக்கு எந்த இனிமையையும் அனுபவிப்பதில்லை.

ஸ்ரீ-போஜதேவ-பிரபவஸ்ய வாமா-
தேவி ஸுதா ஸ்ரீ-ஜெயதேவகஸ்ய
பராஷராதி-ப்ரிய-பந்து-காந்தே,
ஸ்ரீ-கீதா-கோவிந்த-கவித்வம் அஸ்து||14||

“இந்த ராச லீலாவின் முன்னோடியில்லாத படம் பக்தர்களின் இதயங்களில் என்றென்றும் அழகுபடுத்தப்படட்டும். ஸ்ரீ கீதா-கோவிந்தம் அவர்களுக்கு
மிகவும் பிரியமான, மிகவும் பிரியமான மற்றும் மிகவும் பிரியமான அனைத்தையும் உள்ளடக்கிய ஜீவ மூச்சாக, ரசத்தின் அவதாரமான ஸ்ரீ கிருஷ்ணரின் நினைவை எழுப்பட்டும்.

ஏதி ஸ்ரீ கீத கோவிந்தே ஶ்ரீங்கார மஹாகாவ்யே
ஸ்ரீ கிருஷ்ண தாஸ ஜெயதேவ க்ருதவ்
ஸ்வாதினா பத்ருகா வர்ணனே, ஸுப்ரிதா-பீதாம்பரஹ நாம, த்வாதஶ சர்கா:

மேகேயர் மெதுரா அம்பரம். வன-புவ:, ஷ்யமாஸ் தமலா-த்ருமை:
நக்தௌ பிர்-உரயம், த்வமேவ தத் இமம், ராதே க்ருஹம் ப்ராபய |
இத்தம் நந்த-நிதேஷத:, கலிதயோù:, ப்ரத்-யத்வ-குஞ்ச-த்ருமம்
ராதா-மாதவ யோ: , ஜெயந்தி யமுனா-குலே, ரஹ-கேளயா: ||1||

 ஜெய் ஜெய் ஸ்ரீ ராதே!! 

——————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஜெயதேவர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்


ஸ்ரீ கேசவ நாம -வை லக்ஷண்யம் —

March 1, 2022

(புரஸ்தாத் கேசவ: பாது சக்ரி ஜாம்பூனத: பிரப:)
(இதீதம் கீர்தநீயஸ்ய கேசவஸ்ய மஹாத்மன:)

ஆகாசாத் பதிதம் தோயம் யதா கச்சதி சாகரம் சர்வ தேவ நமஸ்கார: கேசவம் ப்ரதிகச்சதி
எவ்வாறு ஆகாயத்திலிருந்து பெய்யும் மழையானது கடலையே சென்று அடைகிறதோ அதை போல
அனைத்து தெய்வங்களுக்கு செய்யும் நமஸ்காரமும் கேசவனையே சென்று அடைகிறது

“சத்யம் சத்யம் புனஸ் சத்யம் உத்ஸ்ரிஜ்ய புஜம் உச்யதே, வேதா சாஸ்திரம் பரம் நாஸ்தி ந தைவம் கேசவாத் பரம்”.
(இது உண்மை உண்மை என்று கைகளை உயர்த்தி சொல்லுங்கள் –
வேதங்களை காட்டிலும் உயர்ந்த சாஸ்திரம் இல்லை, கேசவனை காட்டிலும் உயர்ந்த தெய்வம் ஒன்று இல்லை).

ஒரு திருநாமம் என்றால் கீழ்கண்ட நான்கு வகைகளில் தான் பகவானை குறிக்கும்:
1. ரூபம்
2. ஸ்வாபாவிக தன்மை
3. குணம்
4. லீலை (திருவிளையாடல்)

பொதுவாக திருநாமங்களுக்கு பல பொருள்கள் உண்டு.
பல திருநாமங்கள் மேற்கண்ட நான்கில் எதாவது ஒரு வகையை மட்டும் சேரும்.
சில திருநாமங்கள் 2 அல்லது 3 வகைகளில் பகவானது மேன்மையை சொல்லும்.
கேசவ நாமம் மட்டுமே பகவானது மேன்மையை மேற்கண்ட நான்கு வகைகளிலும் கூற வல்லது.

அழகிய கேசங்களை உடையவன்
1. ரூபம்: அழகிய முடி கற்றைகளை (கேசங்களை) உடையவன் என்பதால் பகவானுக்கு கேசவன் என்று பெயர்.
ஸ்ரீ கிருஷ்ணனின் திருப்படத்தை பார்த்தால் போதும், இந்த அர்த்தம் எளிதில் விளங்கிவிடும்.

2. ஸ்வாபாவிக தன்மை: பகவானே பரம்பொருள்.
“கா இதி ப்ரஹ்மனோ நாம இஷோஹம் சர்வ தேஹினாம்
ஆவாம் தவாங்கே சம்பூதௌ தஸ்மாத் கேசவ நாமவான்”

பரமசிவன் கேசவ நாமத்திற்கு அர்த்தமாக இந்த ஸ்லோகத்தை கூறுகிறார்.
க என்றால் பிரம்மதேவரை குறிக்கும், ஈச என்றால் நான் (சிவபெருமான்).
நாங்கள் இருவரும் உங்களது உடலில் இருந்து தோன்றியதால், உங்களுக்கு கேசவன் (க + ஈச = கேசவன்) என்று பெயர்.

3. குணம்: துன்பங்களை அழித்தல்
கேசவ: க்லேஷ நாசன:
கெடும் இடராயவெல்லாம் கேசவாவென்ன (நம்மாழ்வாரின் திருவாய்மொழி)

4. லீலை (திருவிளையாடல்):
ஸ்ரீ கிருஷ்ணாவதாரத்தில் குதிரை வடிவில் வந்த கேசி என்ற அசுரனை வதம் செய்ததால் கேசவன்.

கஜேந்திர மோக்ஷம்
கேசவ நாமத்தை விளக்கும் ஒரு முக்கிய சரித்திரம் கஜேந்திர மோக்ஷம்.
இந்திரத்யும்னன் என்ற பாண்டிய மன்னன் சிறந்த விஷ்ணு பக்தன்.
அகஸ்த்ய மகரிஷியின் சாபத்தினால் அடுத்த பிறவியில் யானையாக பிறக்கிறான்.
ஒரு நாள் ஒரு பொய்கையில் நீராடும் பொழுது ஒரு முதலை அந்த யானையின் காலை பிடித்தது.
ஆயிரம் வருடங்கள் போராடிய பிறகு தனது முற்பிறவி பயனால். பகவானை துதிக்க,
அவரும் கருட வாஹனத்தில் எழுந்தருளி முதலையை கொன்று யானையை காக்கிறார்.

108 திவ்ய தேசங்களில் ஒன்றான அட்டபுயக்கரத்தில் பகவானுக்கு ஆதி கேசவன் என்று திருநாமம்.
பேயாழ்வருக்கு பகவான் இத்தலத்தில் கஜேந்திர மோக்ஷ லீலையை காட்டியதாக தல வரலாறு.

திருவட்டாறு என்னும் தலத்திலும் பகவான் ஆதிகேசவனாக அருள்பாலிக்கிறார்.
பொதுவாக இடமிருந்து வலமாக சயனிக்கும் பெருமாள், இத்தலத்தில் வடமிருந்து இடமாக சயனதிருக்கிறார்.
நம்மாழ்வார் இத்தலத்துப் பெருமாளை நமது பிறப்பு தளையை முக்தி கொடுப்பவனாக பாடியுள்ளார்
(வாற்றாட்டான் அடி வணங்கி மாஞால பிறப்பறுப்பான்…).
திருமயிலையிலும் பகவான் மயூரவல்லி நாயிகா சமேத ஸ்ரீகேசவஸ்வாமியாக அருள் பாலிக்கிறார்.

வாழி கேசவா!!!

நெற்றி – ஓம் கேசவாய நம: – ஓம் ச்ரியை நம:
வயிறு (நடு) – ஓம் நாராயணாய நம: – ஓம் அம்ருதோத்பவாயை நம:
நெஞ்சு (நடு) – ஓம் மாதவாய நம: – ஓம் கமலாயை நம:
கழுத்து (நடு) – ஓம் கோவிந்தாய நம: – ஓம் சந்த்ரஸோபிந்யை நம:
வயிறு (வலது) – ஓம் விஷ்ணவே நம: – ஓம் விஷ்ணுபத்ந்யை நம:
தோள் (வலது) – ஓம் மதுஸூதநாய நம: – ஓம் வைஷ்ணவ்யை நம:
கழுத்து வலது) – ஓம் த்ரிவிக்ரமாய நம: – ஓம் வராரோஹாயை நம:
வயிறு (இடது) – ஓம் வாமநாய நம: – ஓம் ஹரிவல்லபாயை நம:
தோள் (இடது) – ஓம் ஸ்ரீதராய நம: – ஓம் ஸார்ங்கிண்யை நம:
கழுத்து (இடது) – ஓம் ஹ்ருஷீகேஸாய நம: – ஓம் தேவ தேவ்யை நம:
கீழ் முதுகு (பின்புறம்) – ஓம் பத்மநாபாய நம: – ஓம் மஹாலக்ஷ்ம்யை நம:
கழுத்து (பின்புறம்) – ஓம் தாமோதராய நம: – ஓம் லோகஸுந்தர்யை நம:

துலஸ்யம்ருத ஜந்மாஸி ஸதா த்வம் கேசவ ப்ரியே |
கேசவார்த்தம் லுநாமி த்வாம் வரதா பவ சோபநே ||

———-

திவ்யப்ப்ரபந்தம் 3776 ஆக இருப்பினும் 4000 பாசுரமாக கணக்கில் கொள்வது எப்படி?

“இலங்கெழு கூற்றிருக்ககையிரு மடலீந்தான் வாழியே
இம்மூன்றிலிருநூற்றிருபத்தே ழீந்தான் வாழியே “
என்னும் அப்பிள்ளையருளிய வாழித்திருநாமத்தைப் பின்பற்றி திருமடல்களில் ஈரடி கொண்ட கண்ணிகளை
ஒரு பாட்டாகக்கொண்டு சிறிய திருமடல் 77 1/2 பாட்டாகவும்,
பெரியதிருமடல் 148 1/2 பாட்டாகவும் கொண்டு மூன்றாமாயிரத்தில் மொத்தப் பாசுரங்கள் 817 என்று கொண்டு
சில பதிப்புகளில் திருவாய்மொழியோடு சேர்த்து திவ்யப்ரபந்தம் நாலாயிரம் பாட்டாகக் கணக்கிடப்பட்டது.

“சிறியமடற்பாட்டு முப்பத்தெட்டிரண்டும் சீர்பெரியமடல்தனிற் பாட்டெழுபத்தெட்டும் (தேசிகப்ரபந்தம் 389) என்னும்
பிரபந்த பாட்டில் உள்ளபடி சிறியமடலை 40 பாட்டாகவும்
பெரிய திருமடலை 78 பாட்டாகவும் கொண்டு
மூன்றாமாயிரம் 709 பாசுரங்களாகவும்
திருவாய்மொழியையும் இராமானுஜ நூற்றாந்தாதி 108 பாட்டையும் சேர்த்து 4000 பாசுரங்களாக கணக்கிடப்படுகிறது.

————–

கேசவ (2)
கேசவ நம்பியை கால் பிடிப்பாள் என்னும் இ பேறு எனக்கு அருளு கண்டாய் – நாலாயி:511/4
கேசவ நம்பி-தன்னை கெண்டை ஒண் கண்ணி காணும்-கொலோ – நாலாயி:1833/4

கேசவநம்பீ (1)
பேய்ப்பால் முலை உண்ட பித்தனே கேசவநம்பீ உன்னை காதுகுத்த – நாலாயி:139/3

கேசவற்கு (1)
கேட்டும் உணர்ந்தவர் கேசவற்கு ஆள் அன்றி ஆவரோ – நாலாயி:3610/1

கேசவன் (10)
கண்ணன் கேசவன் நம்பி பிறந்தினில் – நாலாயி:13/2
கேசவன் பேரிட்டு நீங்கள் தேனித்து இரு-மினோ – நாலாயி:381/3
கேழல் ஒன்று ஆகி இடந்த கேசவன் என்னுடை அம்மான் – நாலாயி:2988/2
பண்ணில் பாட வல்லார் அவர் கேசவன் தமரே – நாலாயி:3074/4
கேசவன் தமர் கீழ் மேல் எமர் ஏழ் எழு பிறப்பும் – நாலாயி:3075/1
கேசவன் அடி இணை மிசை குருகூர் சடகோபன் சொன்ன – நாலாயி:3494/3
கேட்பார்கள் கேசவன் கீர்த்தி அல்லால் மற்றும் கேட்பரோ – நாலாயி:3607/1
மால் அரி கேசவன் நாரணன் சீமாதவன் கோவிந்தன் வைகுந்தன் என்றுஎன்று – நாலாயி:3688/1
கேட்டாயே மட நெஞ்சே கேசவன் எம் பெருமானை – நாலாயி:3947/2
கிடந்த எம் கேசவன் கிளர் ஒளி மணி முடி – நாலாயி:3985/3

கேசவன்-தன் (1)
திரை நீர் சந்திர மண்டலம் போல செங்கண்மால் கேசவன்-தன்
திரு நீர் முகத்து துலங்கு சுட்டி திகழ்ந்து எங்கும் புடைபெயர – நாலாயி:95/1,2

கேசவனே (2)
கேசவனே இங்கே போதராயே கில்லேன் என்னாது இங்கே போதராயே – நாலாயி:209/1
கேள்வா கிளர் ஒளி என் கேசவனே கேடு இன்றி – நாலாயி:2440/3

கேசவனை (6)
கேசவனை பாடவும் நீ கேட்டே கிடத்தியோ – நாலாயி:480/7
வங்க கடல் கடைந்த மாதவனை கேசவனை
திங்கள் திருமுகத்து சே இழையார் சென்று இறைஞ்சி – நாலாயி:503/1,2
தாயவனை கேசவனை தண் துழாய் மாலை சேர் – நாலாயி:2181/3
தொல் மாலை கேசவனை நாரணனை மாதவனை – நாலாயி:2649/3
கேடு இல் விழு புகழ் கேசவனை குருகூர் சடகோபன் சொன்ன – நாலாயி:3230/1
திருவடியை நாரணனை கேசவனை பரஞ்சுடரை – நாலாயி:3329/1

கேசவனோடு (1)
கேடு வேண்டுகின்றார் பலர் உளர் கேசவனோடு இவளை – நாலாயி:290/3

கேசவா (10)
மன்னிய சீர் மதுசூதனா கேசவா பாவியேன் வாழ்வு உகந்து – நாலாயி:245/2
கேட்டறியாதன கேட்கின்றேன் கேசவா கோவலர் இந்திரற்கு – நாலாயி:251/1
கேசவா என்றும் கேடிலீ என்றும் கிஞ்சுக வாய் மொழியாள் – நாலாயி:292/3
கேசவா புருடோத்தமா கிளர் சோதியாய் குறளா என்று – நாலாயி:369/3
கேசவா புருடோத்தமா என்றும் கேழல் ஆகிய கேடிலீ என்றும் – நாலாயி:371/3
கள்ள மாதவா கேசவா உன் முகத்தன கண்கள் அல்லவே – நாலாயி:518/4
கிடக்கை கண்டிட பெற்றிலன் அந்தோ கேசவா கெடுவேன் கெடுவேனே – நாலாயி:709/4
பாசம் நின்ற நீரில் வாழும் ஆமையான கேசவா ஏச அன்று நீ கிடந்தவாறு கூறு தேறவே – நாலாயி:771/3,4
வினையேன் வினை தீர் மருந்து ஆனாய் விண்ணோர் தலைவா கேசவா மனை சேர் ஆயர் குல முதலே மா மாயனே மாதவா – நாலாயி:2948/1,2
கெடும் இடர் ஆய எல்லாம் கேசவா என்ன நாளும் – நாலாயி:3902/1

கேசனே (1)
கிடந்தவாறு எழுந்திருந்து பேசு வாழி கேசனே – நாலாயி:812/4

கேசி (1)
மா சினத்த மாலி மான் சுமாலி கேசி தேனுகன் – நாலாயி:858/2

————–

கேசவ (2)
கேசவ நம்பியை கால் பிடிப்பாள் என்னும் இ பேறு எனக்கு அருளு கண்டாய் – நாலாயி:511/4

மாசுடை யுடம்போடு தலை யுலறி வாய்ப் புறம் வெளுத்து ஒரு போதும் உண்டு
தேசுடைத் திறலுடைக் காமதேவா நோற்கின்ற நோன்பினைக் குறிக்கொள் கண்டாய்
பேசுவது ஓன்று இங்கு உண்டு எம்பெருமான் பெண்மையைத் தலை யுடைத்தாக்கும் வண்ணம்
கேசவ நம்பியைக் கால் பிடிப்பாள் என்னும் இப் பேறு எனக்கு அருள் கண்டாய் –1-8-

பெண்மையைத் தலை யுடைத்தாக்கும் வண்ணம் கேசவ நம்பியைக் கால் பிடிப்பாள் –
என்னும் இப் பேறு எனக்கு அருள் கண்டாய் —
என் சத்தை தலைமை பெருவதொரு பிரகாரம் –
விரோதி நிரசன சீலனாய் –
கல்யாண குணங்களாலே பூர்ணனாய் இருக்கிறவனை
நான் ஸ்வரூப அநுரூபமான பேற்றைப் பெறும்படி பண்ணு கிடாய்

முலையாலே அணைக்க வென்றே தான் ஆசைப் பட்டது –
முதல் அடியே பிடித்து அடிமை செய்யத் தேடுகிறாள் —

முதலில் இருந்து -முதலான திருவடிகளையே அடைந்து
கைங்கர்யம் செய்வதே ஸ்வரூப அநு ரூபமான பரம புருஷார்த்தம் –

———

கேசவ நம்பி-தன்னை கெண்டை ஒண் கண்ணி காணும்-கொலோ – நாலாயி:1833/4

நேசமிலாதவர்க்கும் நினையாதவர்க்கும் அரியான்
வாச மலர்ப் பொழில் சூழ் வட மா மதுரைப் பிறந்தான்
தேசமெல்லாம் வணங்கும் திரு மாலிருஞ்சோலை நின்ற
கேசவ நம்பி தன்னைக் கெண்டை யொண் கண்ணி காணும் கொலோ —9-9-6-

வாச மலர்ப் பொழில் சூழ் வட மா மதுரைப் பிறந்தான் –
பர பக்தியையும்
அத்வேஷத்தையும்
பிறப்பிக்கைக்காக-வந்து அவதரித்தவன் –

தேசமெல்லாம் வணங்கும் திரு மாலிருஞ்சோலை நின்ற –
அந்த அவதார பலம் இருக்கிறபடி –

கேசவ நம்பி தன்னைக் –
பிரசஸ்த கேசனாய் இருக்கிறவனை –

கெண்டை யொண் கண்ணி காணும் கொலோ –
அக் குழலுக்கு தகுதியான
அவயவ சோபையை உடையவள்
கிட்ட வல்லளேயோ –

(அவருக்கும் ஒரு அவயவம்-குழலுக்கு- இவளுக்கும் ஓர் அவயவம் -கண்ணி-சொல்லி )

————–

கேசவநம்பீ (1)
பேய்ப்பால் முலை உண்ட பித்தனே கேசவநம்பீ உன்னை காதுகுத்த – நாலாயி:139/3

போய்ப்பாடுடைய நின் தந்தையும் தாழ்த்தான் பொரு திறல் கஞ்சன் கடியன்
காப்பாரும் இல்லைக் கடல் வண்ணா யுன்னைத் தனியே போய் எங்கும் திரிதி
பேய்ப்பால் முலையுண்ட பித்தனே கேசவ நம்பீ வுன்னைக் காது குத்த
ஆயப்பாலர் பெண்டுகள் எல்லாரும் வந்தார் அடைக்காய் திருத்தி நான் வைத்தேன் –2-3-1-

பேய்ப்பால் முலையுண்ட பித்தனே-
பேய்முலைக்கும் பாலுக்கும் வாசி அறியாமல் யுண்டவன் அன்றோ –
உன்னை நலிவதாக வந்தவர்கள் பிள்ளைகளுடைய வேஷத்தை எடுத்துக் கொண்டு விளையாடுவாரைப் போலே தோன்றுவார்கள்
அந்த பேய்ப்பாலுடைய வீர்யத்தாலே உனக்கு அறிவு கேடு விளைந்து அவர்களோடேயும் விளையாடக் கூடும் -என்ன –

ஆனால் தான் வந்தது என்
நான் – கேசவ நம்பீ காண்
என்னுடைய சௌர்யாதி குண பூர்த்தி லேசத்திலே கேசி பட்டது அறியாயோ -என்ன-

இப்படி நீ என் செய்ய பயப்படுகிறது -நான் கேசவ நம்பி அன்றோ -என் கையிலே
கேசி பட்டது அறியாயோ என்று -தன் ஸௌர்ய பூர்த்தியை காட்ட –
அத்தை (அந்த பயத்தை ) அவ்வளவிலே விட்டு –
தான் உபக்ரமித்த கார்யத்தில் புரிந்து –

அது தன்னாலே அன்றோ மிகவும் பயப்படுகிறேன்
(நாரதரே பயப்பட்டாரே
நீயோ பயப்படாமல் நானாச்சு என்று போனாய் )
நம்பி -என்றது
விஷாத அதிசய ஸூசகம் –

—————

கேசவற்கு (1)
கேட்டும் உணர்ந்தவர் கேசவற்கு ஆள் அன்றி ஆவரோ – நாலாயி:3610/1

கேட்டும் உணர்ந்தவர் –
ஓர் ஆசாரியன் ஓர் அர்த்தத்தை உபதேசித்தால் அதனைக் கேட்டு,
ஏவம் ஞாத்வா பவிதும் அர்ஹதி -அறிந்து இதன்படி ஆகக் கடவன்’ என்கிறபடியே,
பின்னை அந்த அர்த்தத்தைத் தெளிந்திருக்குமவர்கள்.

கேசவற்கு ஆள் அன்றி ஆவரோ –
புறம்பே ஆஸ்ரயணீயர் இல்லாதபடி தானே ஆஸ்ரயணீயனான வனுக்கு ஒழிய ஆள் ஆவரோ?
இதி ப்ரஹ்மணோநாம ஈஸோஹம் ஸர்வ தேஹிநாம்
ஆவாம் தவ அங்கே ஸம்பூதௌ தஸ்மாத் கேஸவ நாமவாந்’-பாரதம், ஹரிவம்ஸம், கைலாச யாத்திரை.
கேசவன்’ என்ற பெயர் பிரமனும் ஈசனுமாகிய நாங்கள் இருவரும் தேவரீருடைய திருமேனியில் உண்டானோம்;
ஆதலால், கேசவன் என்ற பெயரை யுடையரானீர்,’ என்கிறபடியே யாதல்
அடர்ந்து நீண்ட மயிர்முடியையுடையவன் என்ற காரணத்தாலாதல் வந்தது.

—————

கேசவன் (10)
கண்ணன் கேசவன் நம்பி பிறந்தினில் – நாலாயி:13/2

வண்ண மாடங்கள் சூழ் திரு கோட்டியூர்
கண்ணன் கேசவன் நம்பி பிறந்தினில்
எண்ணைய் சுண்ணம் எதிர் எதிர் தூவிட
கண்ணன் முற்றம் கலந்து அளராயிற்றே–1-1-1-

அழகிய மாடங்களாலே சூழப்பட்ட ஸ்ரீ திரு கோட்டியூரிலே பிரசஸ்த கேச யுக்தனாய்
கல்யாண பரிபூர்ணனான ஸ்ரீ கிருஷ்ணன் ஸ்ரீ நந்தகோபருடைய இனிய மாளிகையிலே
எண்ணையையும் மஞ்சள் பொடியையும் ஒருவருக்கு ஒருவர் எதிர்த்து தூவ
விசாலமாய் தர்ச நீயமான முற்றமானது எண்ணையும் மஞ்சள் பொடியும் துகை உண்டு தன்னிலே சேர்ந்து
சேறாய் விட்டது –
வண்ண நல் மணியும் மரகதமும் அழுத்தி நிழல் எழும் திண்ணை சேர் திரு கோட்டியூர் -என்கிறபடியே –
நானா வித ரத்னங்களை அழுத்தி சமைக்கையால் வந்த அழகை உடைத்தான மாடங்களால் சூழப் பட்ட ஸ்ரீ திரு கோட்டியூரில்
பிரசஸ்த கேசனாய்-பரிபூர்ண குணனான ஸ்ரீ கிருஷ்ணன்

பிறந்தினில் -பிறந்து இன் இல் -இன் இல் பிறந்து
ஸ்ரீ மதுரையில் சிறைக் கூடம் போலே பிறந்த இடம் தோன்றாமல் போக வேண்டாதே –
எல்லா உபாலாள நத்துக்கும் யோக்யமான ஸ்ரீ நந்தகோபர் திரு மாளிகை யாகிற
இனிய இல்லிலே பிறந்து –
அதவா –
பிரம ருத்ராதிகளுக்கு காரண பூதனாய்-பரி பூர்ண குணனானவன் ஸ்ரீ கிருஷ்ணனாய் வந்து
அவதரித்த -அளவில் என்னவுமாம் –

கண்ணன் –
கண்ணில் கூர்மை உடையராய் நிபுணராய் இருப்பாராலே பரிக்ராஹ்யமான
தேவகி புத்ர ரத்னம் திருஷ்டி கோசரம் ஆகையால் கண்ணன் என்கிறார்
(கண் -ஸூஷ்ம தர்சீ களுக்குக் காட்சி கொடுத்து அருளுபவர் -ஞானக் கண்ணால் அறியப்படுபவன்
பத்திமை -பக்தி அஞ்சனம் -ஞாதும் த்ரஷ்டும் பிராப்தி -)

கேசவன் நம்பி
அவனுடைய சர்வ காரணத்வத்தையும்
விரோதி நிரசனத்தையும் தாம் ஏறிட்டுக் கொள்ளுகையாலே
அவன் போக்யதைக்கு மங்களா சாசனம் பண்ணி
பிரசச்த கேசன் -கல்யாண குண பூரணன் -என்கிறார்

(ப்ரஸஸ்த கேசன்
கேசி அசுரனைக் கொன்றதால் -கேசவன் -விரோதி நிரசன சீலன்
க ஈஸா நியந்தா-சர்வ காரணத்வம்
நம்பி -கல்யாண குண பூர்ணன் –
பெரியாழ்வார் தாமே ஏறிட்டுக் கொண்டாரே -)

——————

கேசவன் பேரிட்டு நீங்கள் தேனித்து இரு-மினோ – நாலாயி:381/3

காசும் கரை வுடை கூறைக்கும் அங்கோர் கற்றைக்கும்
ஆசையினால் அங்கு அவத்தப் பேர் இடும் ஆதர்காள்
கேசவன் பேரிட்டு நீங்கள் தேனித்து இருமின்
நாயகன் நாரணன் தம் மன்னை நரகம் புகாள் – 4-6 -1-

கேசவன் பேர் இட்டு –
க இதி ப்ரஹ்மணோ நாம ஈசோஹம் சர்வ தேஹிநாம்
ஆவாம் தவாம் கே சம்பூதவ் தஸ்மாத் கேசவ நாமவான் -என்றும் –
கேசவ க்லேச நாசன -என்கிறபடியே
க்லேச நாசனாய் இருக்கிறவனுடைய திரு நாமத்தை இட்டு –
கேசவா -என்று அழைத்து

(ஸ்வரூப -ப்ரஹ்மாதிகளுக்கும் இடம் கொடுத்து
கேச பாசம் ரூபம்
குணம் -கிலேச நாசனம்
சேஷ்டிதம் விபவம் கேசி ஹந்த
நான்கையும் கேசவா காட்டுமே )

நீங்கள் தேனித் திருமினோ –
நீங்கள் அந்த பிள்ளை அளவிலே ஸ்நேஹித்து சந்தோஷத்தோடு இருங்கள்
தேனித்து இருக்கை யாவது -இனியராய் இருக்கை

நாயகன் நாரணன்
நாயகன் -என்றது – சர்வ சேஷி -என்றபடி
நாரணன் -என்றது -சமஸ்த கல்யாண குணாத்மகன்-என்றபடி

இத்தால் –
ஆஸ்ரிதரத்தை ரஷிக்கைக்கு ஈடான ப்ராப்தியையும்
குண யோகத்தையும் உடையவன் என்கை

கேசவன் என்றது
நாராயணன் அளவில் பர்யவசிக்கும் பேர் இடும் மாதர்கள் என்னவுமாம்

——————

கேழல் ஒன்று ஆகி இடந்த கேசவன் என்னுடை அம்மான் – நாலாயி:2988/2

சூழல் பல பல வல்லான் தொல்லை அம் காலத்து உலகைக்
கேழல் ஒன்றாகி இடந்த கேசவன் என்னுடை அம்மான்
வேழ மருப்பை ஒசித்தான் விண்ணவர்க்கு எண்ணல் அரியான்
ஆழ நெடுங்கடல் சேர்ந்தான் அவன் என் அருகலிலானே–1-9-2-

தொல்லை அம் காலத்து உலகைக் கேழல் ஒன்றாகி இடந்த கேசவன்-
ஸ்ரீ வராக கல்பத்தின் ஆதியிலே ஆதலில் ‘தொல்லை’ என்கிறார்.
தன் வடிவைக் கண்ணுக்கு இலக்கு ஆக்கின காலமாதலின், ‘அம் காலம்’ என்கிறார்.
‘ஒரு ஸ்ரீ திருவடி, ஸ்ரீ திருவனந்தாழ்வானுக்காகத் தான் இங்ஙனம் செய்தானோ!
உலகை-
சங்கல்பத்துக்கும் பாத்தம் போராத பூமிக்காகச் செய்தான்,’ என்பார், ‘உலகை’ என்கிறார்;
கேழல்-
தன் மேன்மையோடு அணைந்து இருப்பது ஒரு வடிவைத் தான் கொண்டானோ!’ என்பார், ‘கேழல்’என்கிறார்.
ஒன்றாகி-
பின்னர், சர்வ சத்தியான தானே ‘இவ் வடிவைக் கொள்ளவேண்டும்’ என்னிலும் ஒண்ணாதபடி
இரண்டு அற்றதாய் இருந்தது ஆதலின், ‘ஒன்றாகி’ என்கிறார்.
அதாவது, பூமி பிரளயத்தில் அகப்பட்டவாறே, நீருக்கும் சேற்றுக்கும் பின் வாங்காத வடிவைக் கொண்டான்;
அது அவன் கொண்ட வடிவாகையாலே அழிவுக்கு இட்ட வடிவு தனக்கே ஆலத்தி வழிக்க வேண்டியிருக்கின்றது என்றபடி.
‘பன்றியாம் தேசு’ என்பர் சூடிக் கொடுத்த சுடர்க்கொடியார்.
பன்றியின் ஜாதிக்கு உள்ளது ஒரு குணமாயிற்றுச் செருக்கு.
இடந்த-
ஸ்ரீ யபதி -திருமகள் கேள்வன் அவ்வடிவைக் கொண்டால் செருக்குச் சொல்ல வேண்டாவே! ஆதலின், ‘இடந்த’ என்கிறார்.
அதாவது, ‘அண்டப்பித்தியிலே சேர்ந்த பூமியைப் புக்கு எடுத்துக்கொண்டு ஏறினான்,’ என்பதாம்.
கேசவன்-
அப்போதைத் திருமேனியும் உளை மயிருமாய் நின்ற நிலையினை நினைந்து. ‘கேசவன்’என்கிறார். கேசம் – மயிர்.

————-

பண்ணில் பாட வல்லார் அவர் கேசவன் தமரே – நாலாயி:3074/4

கண்ணித் தண் அம் துழாய் முடிக் கமலத் தடம் பெருங் கண்ணனைப் புகழ்
நண்ணித் தென் குருகூர்ச் சடகோபன் மாறன் சொன்ன
எண்ணில் சோர்வு இல் அந்தாதி ஆயிரத்துள் இவையும் ஓர் பத்து இசை யொடும்
பண்ணில் பாடவல்லார் அவர் கேசவன் தமரே!–2-6-11-

அவர் கேசவன் தமரே –
அவர்கள் யாரேனுமாகவுமாம், குலம் சரணம் கோத்திரம் முதலானவைகள் -அப்ரயோஜம் -பயன் அற்றவைகள்;
‘விண்ணப்பஞ் செய்வார்கள்’ என்னுமாறு போன்று, இத்தன்மையாலே அவர்கள் பகவதீயர் -பகவானுக்கு உரிமைப்பட்டவர்கள்.

வைகுந்தன் வந்து கலந்ததற்பின் வாழ் மாறன்
செய்கின்ற நைச்சியத்தைச் சிந்தித்து – நைகின்ற
தன்மை தனைக் கண்டு உன்னைத் தான் விடேன் என்றுரைக்க
வன்மை அடைந்தான் கேசவன்–திருவாய்மொழி நூற்றந்தாதி-16-

வன்மை யடைந்தான் கேசவன் –
விஜ்வர ப்ரமுமோதஹா-என்னும்படி துளக்கற்ற அமுதமாய் எங்கும் பக்க நோக்கு அறியாதே – என்றும்
என் மரகத மலையே -என்னும்படி ஸ்தர்யத்தைப் பிராபித்தான் -பிரசக்த கேசவன் ஆனவன் –

——————-

கேசவன் தமர் கீழ் மேல் எமர் ஏழ் எழு பிறப்பும் – நாலாயி:3075/1

கேசவன் தமர் கீழ் மேல் எமர் ஏழ் பிறப்பும்
மா சதிர் இது பெற்று நம்முடை வாழ்வு வாய்க்கின்றவா
ஈசன் என் கரு மாணிக்கம் என் செங்கோலக் கண்ணன் விண்ணோர்
நாயகன் எம்பிரான் எம்மான் நாராயணனாலே –2-7-1-

நம்முடைய வாழ்வு -ஸ்ரீ வைஷ்ண ஸ்ரீ -வி லஷணமாக உள்ளது -கேசவன் தமர் என்னும்படியான சிறப்பு பெற்றார்கள்
சர்வேஸ்வரன் -கண் அழகால் என்னை ஈடுபடுத்திக் கொண்டு
வடிவு அழகாய் முடூட்டாக அனுபவிப்பித்து
விஷயீ கரித்த மகா உபாகாரகன் நாராயணனாலே மா சதிர் பெற்றோம்
கேசவன் -கேசாபாசம்/கேசி நிரசித்தவன் /பிரமனுக்கும் சிவனுக்கும் ஈசன் –

—————–

கேசவன் அடி இணை மிசை குருகூர் சடகோபன் சொன்ன – நாலாயி:3494/3

நாயகன் முழு வேழுல குக்குமாய் முழு வேழுலகுந் தன்
வாயகம் புக வைத்துமிழ்ந்து அவையாய் அவை அல்லனுமாம்
கேசவன் அடி யிணை மிசைக் குருகூர்ச் சடகோபன் சொன்ன
தூய ஆயிரத் திப்பத்தால் பத்த ராவர் துவளின்றியே–6-4-11-

கேசவன் அடியிணை மிசைக் குருகூர்ச் சடகோபன் சொன்ன –
கேசி ஹந்தாவான -கேசி என்னும் அசுரனைக் கொன்ற சர்வேஸ்வரன் திருவடிகளிலே.
கீழில் திருவாய் மொழியிற் -நல்குரவும்”-சொன்ன சர்வேஸ்வரத்வத்தையும்,
இத் திருவாய் மொழியிலே, கேசியைக் கொன்றவனான கிருஷ்ணனுடைய அவதாரத்தையும்
அநுபாஷித்துத் தலைக் கட்டுகிறது” என்று சொல்லுவர்.
அன்றிக்கே,
க்ருஷ்ண ஏவஹி லோகாநாம் உத்பத்திரபிசாப்யய:
க்ருஷ்ணஸ்ய ஹிக்ருதே பூதமிதம் விஸ்வம் சராசரம்”–மஹாபாரதம் சபாபர். 38 : 23.
எல்லா உலகங்கட்கும் காரணன் கிருஷ்ணனே” என்கிறபடியே, கிருஷ்ண விஷயமே சொல்லுகிறது என்னுதல்,

————–

கேட்பார்கள் கேசவன் கீர்த்தி அல்லால் மற்றும் கேட்பரோ – நாலாயி:3607/1

கேட்பார்கள் கேசவன் கீர்த்தி யல்லால் மற்றுங் கேட்பரோ?
கேட்பார் செவி சுடு கீழ்மை வசவுகளே வையும்
சேட்பாற் பழம் பகைவன் சிசுபாலன் திருவடி
தாட்பால் அடைந்த தன்மை அறிவாரை அறிந்துமே–7-5-3-

கேசவன் கீர்த்தி அல்லால் –
விரோதி நிரசன சீலன் -பகைவர்களை அழிக்கும் தன்மையனான ஸ்ரீ கிருஷ்ணன் கீர்த்தி அல்லது
வேறே சிலவற்றைக் கேட்பரோ?
பருவம் நிரம்பிக் கற்ற பின்பு அன்று விரோதிகளைப் போக்கியது;
பூதனை தொடக்கமான விரோதிகளைத் தொட்டில் பருவத்தே அன்றோ போக்கியது?
விரோதிகளை அழிப்பது தான் அறிந்ததனால் அன்று;
பொருளின் -சத்தயா -உண்மையாலேயே பாதகமாய் இருக்கிறபடி.
நஞ்சு கொல்லுவது அறிவு உண்டாய் அன்றே? ‘
வ்யாதிதாஸ்ய: மஹா ரௌத்ர: ஸ. அஸூர: க்ருஷ்ணபாஹூநா
நிபபாத த்விதாபூத: வைத்யுதேந யதா த்ரும:’-ஸ்ரீவிஷ்ணு புரா. 5. 16 : 14.
நன்றாகத் திறந்து வாயையுடைவனும் மஹா பயங்கரமானவனுமான அந்தக் கேசி என்னும் அசுரன் இடியேறு உண்ட மரம் போன்று
கிருஷ்ணனுடைய திருக் கரத்தால் இரண்டாகச் செய்யப் பட்டவனாய்க் கீழே விழுந்தான்,’ என்கிறபடியே,
இந்த ஸ்லோகத்தில், பாஹூப்யாம் என்னாமல்‘பாஹூ நா’ என்றதற்கும்,
த்விதா பூத;’ என்றதற்கும் கருத்து அருளிச் செய்கிறார்,
கேசி யானவன் வாயை அங்காந்து கொண்டு கண்டார் எல்லாரும் நடுங்கும்படி வந்து தோற்ற,
இளைஞராய் இருப்பார் துவாரம் கண்ட இடத்தே கை நீட்டக் கடவர்களாய் இருப்பார்கள் அன்றோ?
அந்த வாசனையாலே இவன் வாய்க்குள்ளே கையை நீட்ட, புதிதான அனுபவத்தால் கை விம்ம வளர்ந்து கொடுத்தது;
அப்போதோ இடியேறு உண்ட மரம் போலே இரு பிளவாய் விழுந்தான்.

மற்றும் கேட்பரோ –
கீழில் கூறிய ராமனுடைய வ்ருத்தாந்தம் -சரிதையைத்தான் கேட்பரோ?
இவர் ஸ்வபாவம் இருந்தபடி என்?
ராம பிரானை அல்லால் மற்றும் கற்பரோ?’ என்றார் கீழே –
இங்கே, ‘கேசவன் கீர்த்தி அல்லால் மற்றும் கேட்பரோ?’ என்னா நின்றார்;
இது தனக்கு அடி என்? என்னில்,
அந்த அவதாரத்தினை நினைத்த போது
தயரதற்கு மகன்தன்னை அன்றி மற்றிலேன் தஞ்சமாக’ திருவாய். 3. 6 : 8.-என்பர்;
இந்த அவதாரத்தை நினைத்தபோது ‘நம் கண்ணன் கண் அல்லது இல்லை ஓர் கண்ணே’ திருவாய். 2. 2 : 1.-என்பர்;
இப்படி இழிந்த துறைகள் தோறும் அழுந்த வல்லார் ஒருவர் அன்றோ?
ஒவ்வொரு குணத்தை அனுபவிக்கப் புக்கால் குணா ந்தரங்களில் -வேறு குணங்களில் கால் வாங்க மாட்டாதவாறு போலே ஆயிற்று,
ஒவ்வோர் அவதாரத்தில் இழிந்தால் மற்றை அவதாரங்களில் போக மாட்டாமையும்.

————

மால் அரி கேசவன் நாரணன் சீமாதவன் கோவிந்தன் வைகுந்தன் என்று என்று – நாலாயி:3688/1

மாலரி கேசவன் நாரணன் சீ மாதவன் கோவிந்தன் வைகுந்தன் என்று என்று
ஓலமிட வென்னைப் பண்ணி விட்டிட்டு ஒன்று முருவுஞ் சுவடுங் காட்டான்
ஏல மலர்க் குழல் அன்னைமீர்காள் ! என்னுடையத் தோழியர்காள் ! என் செய்கேன் ?
காலம் பல சென்றும் காண்ப தாணை உங்களோடும் எங்களிடை இல்லையே–8-2-7-

மால் –
அடியார்கள் பக்கல் வ்யாமோஹமே வடிவாய் உடையவன்
பொய் நின்ற ஞானம் தொடங்கி இவ்வளவும் வரக் கூப்பிடச் செய்த வியாமோஹம்

அரி –
விரோதிகளை அழிக்கும் தன்மையன்-விரோதி -நிரசன சீலன் –

கேசவன்
காலம் எல்லாம் அனுபவியா நின்றாலும் மீள ஒண்ணாத பிரசஸ்த கேசன் –
செறிந்த நீண்ட மயிர் முடியை உடையவன்

நாரணன் –
ஆஸ்ரித வத்சலன் -அடியார்கள் இடத்தில் அன்பை உடையவன்

சீ மாதவன் –
அதற்கு அடியான ஸ்ரீ யபதி -திருமகள் கேள்வன் ஆனவன்

கோவிந்தன்
அவளுடைய சேர்த்தியாலே ஆஸ்ரிதற்கு அடியார்கட்கு கையாளாய் இருக்குமவன்

வைகுந்தன்
இவற்றுக்கு எல்லாம் அடியான மேன்மையை உடையவன்

என்று என்று
நிரந்தரமாக -எப்பொழுதும்

ஓலம் இட
கார்யப்பாடு அற கூப்பிடும்படி

————–

கேட்டாயே மட நெஞ்சே கேசவன் எம் பெருமானை – நாலாயி:3947/2

வாட்டாற்றான் அடி வணங்கி மா ஞாலம் பிறப்பு அறுப்பான்
கேட்டாயே மட நெஞ்சே கேசவன் எம்பெருமானைப்
பாட்டாயே பல பாடிப் பல வினைகள் பற்று அறுத்து
நாட்டாரோடு இயல்வு ஒழிந்து நாரணனை நண்ணினமே–10-6-2-

வாட்டாற்றான் அடி வணங்கி மா ஞாலம் பிறப்பு அறுப்பான் –
மா ஞாலம் பிறப்பு அறுப்பான் –வாட்டாற்றான் அடி வணங்கி-
இந்த உடலின் சம்பந்தத்தை அறுத்துத் தந்து அருள வேண்டும் அன்றோ
நாம் சர்வேஸ்வரன் திருவடிகளைப் பற்றியது –
அதற்கு மேலே நம்மை அவன் அடிமையும் கொண்டானே கண்டாயே
வாக்கினாலாய அடிமை அன்றோ கொண்டது -பாட்டாய பல பாடுதல் –

கேசவன் எம்பெருமானை –
கேசி என்னும் அசுரனைக் கொன்ற சர்வேஸ்வரனை -என்றது
கேசியை கொன்றால் போல் நம் விரோதிகளை நீக்கி
நம்முடைய சேஷத்வத்தை -அடிமைத் திறத்தினை நிலை நிறுத்தி
நமக்கு ஸ்வாமியாய் உள்ளவனை -என்றபடி –
அன்றிக்கே –
பிரசஸ்த கேசன் -நீண்ட மயிரை உடையவன் தன் அழகினைக் காட்டி
நம்மை அடிமை கொண்டவன் -என்றுமாம் –

பாடிப் பழ வினைகள் பற்று அறுத்து –
நாம் அடிமை செய்ய-பிராப்தி பந்தகமாய் -அடைவதற்குத் தடைகளாய்-அநாதி கால ஆர்ஜிதமான –
பலகாலமாக ஈட்டப்பட்ட அவித்யை முதலியவைகள் எல்லாம் போகப் பெற்ற படியைக் கண்டாயே –
இவை வினை அறுக்க குடித்த வேப்பங்குடிநீர் இது காணும் –
மேரு மந்திர மாத்ரோபி ராசி பாபச்ய கர்மண
கேசவம் வைத்தியம் ஆசாத்ய துர்வ்யாதிரிவ நச்யதி -ஸ்ரீ விஷ்ணு தர்மம் –கேசவனாகிய மருத்துவனை –
இவன் பலகாலமாக ஈட்டின இவை -எல்லாவற்றையும் செய்து முடிக்கும் ஆற்றல் வாய்ந்த
இறைவன் போக்கப் புக்கால் ஒரு காலே போகலாய் இருக்கும் அன்றோ –

————-

கிடந்த எம் கேசவன் கிளர் ஒளி மணி முடி – நாலாயி:3985/3

மடந்தையர் வாழ்த்தலும் மருதரும் வசுக்களும்
தொடர்ந்து எங்கும் தோத்திரம் சொல்லினர் தொடு கடல்
கிடந்த எம் கேசவன் கிளர் ஒளி மணி முடி
குடந்தை எம் கோவலன் குடி அடியார்க்கே–10-9-7-

தொடு கடல் கிடந்த-
பரம பதத்தை கலவிருக்கையாக உடையவன் அதனை விட்டு
பிரமன் முதலாயினார்கட்கு முகம் கொடுக்கைக்காக
திருப் பாற் கடலிலே திருக் கண் வளர்ந்து அருளுகிற படி
தொடு கடல்
தோண்டப்பட்ட கடல்
ஆழ்ந்த கடல் -என்றபடி –

எம் கேசவன்
ஆஸ்ரித அர்த்தமாக -அடியார்களுக்காக கிருஷ்ணனாய் வந்து பாதுகாத்தவன் –

குடந்தை எம் கோவலன் குடி அடியார்க்கே —
அவதாரத்துக்கு பிற்பாடர் இழவாதபடி திருக் குடந்தையிலே திருக் கண் வளர்ந்து அருளுகிறவன் –
கிருஷ்ணன் தானே வந்து திருக் குடந்தையிலே கண் வளர்ந்து அருளுகிறான் -என்கிறது
மருதரும் வசுக்களும் அவன் போய்ப் பண்ணின கிருஷியின் பலம் அன்றோ என்று கொண்டாட நிற்பார்கள்

கிளர் ஓளி மணி முடி
மிக்க ஒளியை யுடைய ஆதி ராஜ்ய ஸூ சகமான திரு அபிஷேயம்
வ்யூஹ விபவங்கள் அளவு அன்றிக்கே திருக் குடந்தையில் கண் வளர்ந்து அருளுகையாலே நீர்மையிலே தோற்று
சந்தானமாக எழுதிக் கொடுத்தவர்கள் அன்றோ இவர்கள் என்றாய்த்து அவர்கள் ஆதரிப்பது –

————-

கேசவன்-தன் (1)
திரை நீர் சந்திர மண்டலம் போல செங்கண்மால் கேசவன்-தன்
திரு நீர் முகத்து துலங்கு சுட்டி திகழ்ந்து எங்கும் புடைபெயர – நாலாயி:95/1,2

திரை நீர் சந்திர மண்டலம் போல் செம் கண் மால் கேசவன் தன்
திரு நீர் முகத் துலங்கு சுட்டி திகழ்ந்து எங்கும் புடை பெயர
பெரு நீர் திரை எழு கங்கையிலும் பெரியதோர் தீர்த்த பலம்
தரு நீர் சிறுச் சண்ணம் துள்ளஞ் சோரத் தளர் நடை நடவானோ -1 7-10-

செம் கண் மால் இத்யாதி –
சிவந்த திருக் கண்களையும்
அதுக்கு பரபாகமான கருத்த நிறத்தையும் உடையவனாய் –
பிரசஸ்த கேசனாய் இருக்கிறவன்
மால்-கரியவன் –

————-

கேசவனே (2)
கேசவனே இங்கே போதராயே கில்லேன் என்னாது இங்கே போதராயே – நாலாயி:209/1

கேசவனே இங்கே போதராயே கில்லேன் என்னாது இங்கே போதராயே
நேசம் இல்லாதார் அகத்து இருந்து நீ விளையாடாதே போதராயே
தூசனம் சொல்லும் தொழுத்தை மாரும் தொண்டரும் நின்ற இடத்தில் நின்றும்
தாய் சொல்லுக் கொள்வது தன்மம் கண்டாய் தாமோதரா இங்கே போதராயே 2-9 8- –

கேசவனே இங்கே போதராயே –
பிரசச்த கேசன் ஆனவனே -அசைந்து வருகிற குழல்களும் -நீயுமாய் அசைந்து வருகிற போதை
அழகை நான் அனுபவிக்கும்படி அங்கு நின்று இங்கே வாராய்
ப்ரஸித்த நாமம் ஆதல்

—————

கேள்வா கிளர் ஒளி என் கேசவனே கேடு இன்றி – நாலாயி:2440/3

அன்பாவாய் ஆரமுதமாவாய் அடியேனுக்கு
இன்பாவாய் எல்லாமும் நீ யாவாய் -பொன் பாவை
கேள்வா கிளரொளி என் கேசவனே கேடின்றி
ஆள்வாய்க்கு அடியேன் நான் ஆள் -59-

என் பக்கல் பிரேமத்தை உண்டாக்கி-
நிரதிசய போக்யனுமாய்-
எனக்கு ஸ்வ அனுபவத்தையும் தந்து-
அனுக்த்தமான போக்யங்களையும் தந்து
இவை எல்லாம் செய்கைக்கு அடியான பிராட்டிக்கு வல்லபனாய்
இவளோட்டை சம்ஸ்லேஷத்தால்-நிரதிசய ஔஜ்வல்யனாய்
பிரசஸ்த கேசனாய்-
கைங்கர்ய அனுபவத்துக்கு விச்சேதம் இன்றிக்கே
என்னை அடிமை கொள்ளுகிற உனக்கு

பொற்கென்ற – பொன்னே வடிவான -ஹிரண்ய வர்ணாம்
நாரீணாம் உத்தமையான பிராட்டிக்கு வல்லபனாய்
அவ்ளோட்டை கலவியாலே யுத்தர உத்தர கிளரும் -(கிளர்ந்து கொண்டே இருக்கும்) வடிவின் ஒளியை உடையவன்
என்னால் அனுபவிக்கத் தக்க அழகிய கேச பாசங்கள் உடையவனே

மிக்கு இருந்துள்ள ஒளியை யுடையையாய் பிரசஸ்த கேசனானவனே –

————–

கேசவனை (6)
கேசவனை பாடவும் நீ கேட்டே கிடத்தியோ – நாலாயி:480/7

கீசுகீசு என்று எங்கும் ஆனைச்சாத் தன்கலந்து
பேசின பேச்சரவம் கேட்டிலையோ பேய்ப்பெண்ணே
காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து
வாச நறும்குழல் ஆய்ச்சியர் மத்தினால்
ஓசை படுத்த தயிரரவம் கேட்டிலையோ
நாயகப் பெண்பிள்ளாய் நாரா யணன்மூர்த்தி
கேசவனைப் பாடவும்நீ கேட்டே கிடத்தியோ
தேச முடையாய் திறவேலோர் எம்பாவாய்.

நாயகப் பெண்பிள்ளாய்! — இத்திரளுக்கெல்லாம் நீ தலைவியானபடி இதுவோ?
எல்லோரையும் திரட்டிக் கொண்டு போய் உத்தேச்யத்தைப் பெறுகை யன்றோ தலைவியின் காரியம் என ஏசியவாறு.

இங்ஙன் ஏசக் கேட்ட அவள், ‘என்னை நீங்கள் தலைவி என்னலாமோ, உங்களுக்கு நான் அடிமைப்பட்டவளல்லேனோ?
இதோ வந்து கதவைத் திறக்கிறேன்; எம்பெருமானுடைய சில அபதாநங்களைப் பாடிக்கொண்டிருங்கள் என்ன;
இவர்கள் கேசி வத வ்ருத்தாந்தத்தைப் பாடத் தொடங்கினார்கள்.

கேசியின் வாயைக் கீண்டெறிந்த வரலாறு:–
கம்ஸனால் ஏவப்பட்ட அஸுரர்களில் கேசி என்பவன் குதிரையின் உருவத்தோடு ஆயர்கள் அஞ்சி நடுங்கும்படி
கனைத்துத் துரத்திக் கொண்டு கண்ணபிரான் மேற் பாய்ந்து வர,
அப் பெருமான் திருக் கையை நன்றாகப் பெருக்கி நீட்டி அதன் வாயிற்கொடுத்துத் தாக்கிப் பற்களை உதிர்த்து
உதடைப் பிளந்து அதனுடம்பையும் இருபிளவாக வகிர்ந்து தள்ளினன் என்பதாம்.

நாராயணன் மூர்த்தி கேசவனை –
நாராயணமூர்த்தியாகிய கேசவனை;
அன்றி,
மூர்த்தி என்று ஸ்வாமிக்கும் பெயராகையாலே,
நாராயணாவதாரமாய் ஸர்வ ஸ்வாமியான கேசவனை என்றும் உரைக்கலாம்.
கேசவன் என்பதற்கு,
கேசியைக் கொன்றவன், சிறந்த மயிர் முடியையுடையவன், அயனரர்கட்குத் தலைவன் என மூவகைப் பொருள்களுண்டு.

கேசவன் –
கண்ணுக்கு தோற்ற நின்று–நம் விரோதிகளை போக்குமவன்-
கேசவன் இந்த்ரியங்கள் குதிரைகள் அழித்து-தேசுடையாய் உள் நாட்டு தேசு –
ஆழியம் கை பேராயர்க்கு ஆட்பட்டார்க்கு அடிமை —
பூதனை முதலில் கேசி இறுதியில் -ஸ்ரீ மத் பாகவதம் சொல்லி முடித்தார்கள்-
புள்ளும் சிலம்பின தொடங்கி கீசு கீசு பாசுரங்களில் –
கேசவ நம்பியைக் கால் பிடிப்பாளே-ஸ்வரூப ரூப குண சேஷ்டிதங்கள் அனைத்தையும் காட்டும் திரு நாமம்

நாராயணன் மூர்த்தி கேசவன் –
வாத்சல்யம் -சௌசீல்யம்-விரோதி நிரசன சாமர்த்தியம் –
கோளரி -மாதவன் -கோவிந்தன் -நாச்சியார் திருமொழி -6-2-தேஜஸ் -ராசிக்யம் -எளிமை –
கோவிந்தனை -மது சூதனை -கோளரியை -திருவாய்மொழி -7-10-3-வாத்சல்யம் -விரோதி நிரசன சாமர்த்தியம் -அநபவிநீயத்வம்

————–

வங்க கடல் கடைந்த மாதவனை கேசவனை
திங்கள் திருமுகத்து சே இழையார் சென்று இறைஞ்சி – நாலாயி:503/1,2

வங்கக் கடல் கடைந்த மாதவனை கேசவனை
திங்கள் திருமுகத்து சேயிழையார் சென்று இறைஞ்சி
அங்கு அப்பறை கொண்ட வாற்றை யணி புதுவை
பைங்கமலத் தண் தெரியல் பட்டர்பிரான் கோதை சொன்ன
சங்கத் தமிழ் மாலை முப்பதும் தப்பாமே
இங்கு இப்பரிசு உரைப்பார் ஈரிரண்டு மால் வரைத் தோள்
செங்கண் திரு முகத்து செல்வத் திருமாலால்
எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய்

கேசவனை –
விரோதி நிரசன ஸ்வ பாவனை —ஸ்த்ரீத்வ பிரயுக்தமாக ஸ்வாதந்த்ர்யத்தையும்–அந்ய சேஷத்வத்தையும்
போக்கினவனை —
கேசியை நிரசித்தாப் போலே–ஆத்ம வஸ்துவை அனுபவிக்கும் போது-அவ் வனுபவ விரோதியாய்
இச் சேதனனுக்கு பிறக்கும் போக்ருத்வாதிகளுக்கு நிவர்தகனாவனை-

மாதவனை கேசவனை –
அலை கடல் கடைந்து அதனுள் கண்ணுதல் நஞ்சுண்ணக் கண்டவனே
விண்ணவர் அமுதுண்ண அமுதில் வரும் பெண்ணமுது உண்ட எம்பெருமானே -என்கிறபடியே
தான் சாஷாத் அம்ருதத்தை உண்டு ப்ரஹ்மாதிகளுக்கு கோதைக் கொடுத்தான் –என்று பட்டர் அருளிச் செய்வர் –
ஆயிரம் தோளால் அலை கடல் கடைவன்–பூம் குழல் தாழ்ந்து உலாவா -அவளுக்கும் இது போலே தயிர் கடையவே
ஆமையாகிய கேசவா சுமக்கும் பொழுதும் கேசம் ஆசிய–கேசி ஹந்தா–விரோதி போக்க வல்லவன்
மா மாயன் மாதவன்–கேசவனை பாடவும்–சொல்லியது போலே தலை கட்ட–
கோதை ப்ரஹ்ம ருத்ராதிகளுக்கு கொடுத்து
கேசவா -இருவரையும் தாங்கும் -பட்டம் ருத்ரன் கொடுத்து –
க ஈசன் இருவரையும் உண்டாக்கி —தான் பிராட்டி பெற்று மாதவன் ஆனான்

மாதவனை கேசவனை
முதலில் அருளிய -நாராயணன் பரவஸ்துவை -இறுதியில் மாதவன் கேசவன் என்று விசேஷிக்கிறாள் –
முதலில் நாராயணன் -காரணத்வம் -அருளி- இறுதியில்
கேசவன் -பிரம ருத்ராதிகளுக்கும் ஈசன் நிர்வாகத்வன் -உதபாதகத்வன் -என்று அருளுகிறாள் –

———————–

தாயவனை கேசவனை தண் துழாய் மாலை சேர் – நாலாயி:2181/3

ஓரடியும் சாடுதைத்த வொண் மலர்ச் சேவடியும்
ஈரடியும் காணலாம் என்நெஞ்சே ஓரடியில்
தாயவனைக் கேசவனைத் தண் துழாய் மாலை சேர்
மாயவனையே மனத்து வை -100-

காணலாம் –காண ஒண்ணாதோ என்று இருக்கிற என்னெஞ்சே
தாயவனை -கீழ்ச சொன்ன ஓர் அடி – கேசவனை -சாடுதைத்த திருவடிகளை உடையவனை –
திருவடிகளைத் தருவானும் விரோதியைப் போக்குவானும் –
தண் துழாய்–போக்யதை – மாயவன் -இவன் என்று நினையாதபடி பண்ண வல்லவன் – மனத்து வை -அநுஸந்தி

ஓரடியில் தாயவனைக் –
கீழ்ச் சொன்ன சர்வ ஸூலபமான திருவடிகள் இருக்கிறபடி –

கேசவனைத் –
விரோதி நிரசன சீலனானவனை
கேசி ஹந்தா விறே

திருவடிகளைத் தருவானும்
விரோதியைப் போக்குவானும்
அவனே –

தண் துழாய் மாலை சேர் மாயவனையே –
திருத் துழாய் மாலையாலே அலங்க்ருதனாய்
போக்யதை அளவிறந்து இருந்து உள்ளவனையே
சாதனமாக ஹ்ருதயத்தில் அத்யவசி –

தண் துழாய் -இத்யாதி
ஸூலபனும் அன்றிக்கே
விரோதி போக்காதே ஒழியிலும்
விடப் போகாது –

மாயவனையே –
நாமும் சஹாகாரிகள் என்று இராதே –
மாயவனை அன்றி வேறு ஒன்றை நினையாத படி பண்ண வல்லவன் –

மனத்து வை –
இப்படி அத்யவசிக்க
அனந்தரம்
பிராப்யமாகச் சொல்லுகிற ஈர் அடிகளையும் காணலாம்
அவற்றை சாஷாத் கரிக்கைக்கு ஒரு தட்டு இல்லை –

——————-

தொல் மாலை கேசவனை நாரணனை மாதவனை – நாலாயி:2649/3

கலந்து நலியும் கடும் துயரை நெஞ்சே
மலங்க வடித்து மடிப்பான் விலங்கல் போல்
தொல் மாலைக் கேசவனை நாரணனை மாதவனை
சொல் மாலை எப்பொழுதும் சூட்டு–65-

உடனே வந்து கலந்து நலியா நின்ற அநுபவ விநாஸ்யமான பாபத்தை மலங்க அடித்துத் திரிய விடுகைக்காக
அபேத்யனாய் -(பிளக்க முடியாத -விலங்கல் போல்)
அபரிச்சின்னனாய் -(தொல் மாலை)
பிரசஸ்த கேசனாய் -(கேசவனை)
ஆஸ்ரித வத்ஸலனாய் -(நாரணனை) இருந்த
ஸ்ரீ யபதியை -(மாதவனை)
பரிமளம் மாறாத மாலையை எப்போதும் சூட்டும்படி தன்னைத் தாழ்த்துத் தரும் –

கேசவனை
சிறந்த குழல் கற்றையை உடையவனும்-பிரமனுக்கும் சிவனுக்கும் தலைவன்
குதிரை வடிவம் கொண்ட அசுரனைக் கொன்றவன்

——————

கேடு இல் விழு புகழ் கேசவனை குருகூர் சடகோபன் சொன்ன – நாலாயி:3230/1

கேடு இல் விழுப் புகழ்க் கேசவனைக் குருகூர்ச் சட கோபன் சொன்ன
பாடல் ஓர் ஆயிரத்துள் இவையும் ஒரு பத்தும் பயிற்ற வல்லார்க்கு அவன்
நாடும் நகரமும் நன்குடன் காண நலனிடை ஊர்தி பண்ணி
வீடும் பெறுத்தித் தன் மூ வுலகுக்கும் தரும் ஒரு நாயகமே–3-10-11–

கேடு இல் விழுப் புகழ் கேசவனை –
கேடு இல்லாமல் விழுப்பத்தை யுடைத்தான நித்யமாய் இருக்கிற மங்களம் பொருந்திய
கல்யாண குணங்களையுடைய,கேசி ஹந்தாவை – கேசியைக் கொன்ற கிருஷ்ணனை.

———————

திருவடியை நாரணனை கேசவனை பரஞ்சுடரை – நாலாயி:3329/1

திருவடியை நாரணனைக் கேசவனைப் பரஞ்சுடரைத்
திருவடி சேர்வது கருதிச் செழுங்குருகூர்ச் சடகோபன்
திருவடி மேல் உரைத்த தமிழ் ஆயிரத்துள் இப்பத்தும்
திருவடியே அடைவிக்கும் திருவடி சேர்ந்து ஒன்றுமினே–4-9-11-

புறம்பு உண்டான ருசியைப் போக்கித் தன் பக்கலிலே ருசியைப் பிறப்பித்த உபகாரத்தை நினைத்து
ஏத்துகிறார், ‘திருவடியை’ என்று தொடங்கி.
திருவடியை –
சர்வ -எல்லார்க்கும் ஸ்வாமியாய் உள்ளவனை.

நாரணனை –
இவை அல்லோம்’ என்ற அன்றும் தான் விடமாட்டாதபடி அன்பு உள்ளவனாய்-வத்சலனாய் – இருப்பவனை.

கேசவனை –
வத்சலனாய் -அன்பு உள்ளவனாய்க் கடக்க இருக்கை அன்றிக்கே,
இவர்களோடே -சஜாதீயனாய் -ஓர் இனத்தானாய் வந்து அவதரித்து, இவர்கள் விரோதியைப் போக்குமவனை.

பரஞ்சுடரை –
இப்படி அவதரித்து நின்ற இடத்திலே உண்டான மனிதத் தன்மையிலே பரத்வத்தைச் சொன்னபடி.

————–

கேசவனோடு (1)
கேடு வேண்டுகின்றார் பலர் உளர் கேசவனோடு இவளை – நாலாயி:290/3

நாடும் ஊரும் அறியவே போய் நல்ல துழாய் அலங்கல்
சூடி நாரணன் போம் இடம் எல்லாம் சோதித்து உழி தருகின்றாள்
கேடு வேண்டுகின்றனர் பலருளர் கேசவனோடி வளைப்
பாடு காவல் இடுமின் என்று என்று பார் தடுமாறினதே -3-7-5 –

கேசவனோடி வளைப் பாடு காவல் இடுமின் என்று என்று பார் தடுமாறினதே
கேசவனோடே –ப்ரசஸ்த கேஸனானவனோடே
இவளை -பருவத்து அளவே அன்றியே பரிபாகம் மிக்க இவள்
இவள் பிறங்கு இரும் கூந்தலானாலும் -இவள் சொல்லுவது
மயிரும் முடி கூடிற்று இல –என்று இறே

கேசவன் -இத்யாதி –
ஆன பின்பு -பிரசஸ்த கேசவனோடே-
அவ் வை லக்ஷண்யத்தில் எடுப்புண்டு பின் பற்றித் திரிகிற இவளை –

————

கேசவா (10)
மன்னிய சீர் மதுசூதனா கேசவா பாவியேன் வாழ்வு உகந்து – நாலாயி:245/2

கன்னி நன் மா மதிள் சூழ் தரு பூம் பொழில் காவிரித் தென்னரங்கம்
மன்னிய சீர் மதுசூதனா கேசவா பாவியேன் வாழ்வு உகந்து
உன்னை இளம் கன்று மேய்க்க சிறுகாலே யூட்டி ஒருப்படுத்தேன்
என்னின் மனம் வலியாள் ஒரு பெண் இல்லை என் குட்டனே முத்தம் தா – 3-3 2-

(கன்னி நன் மா மதிள் புடை சூழ் கண புரம் -குலசேகரப்பெருமாள் )

நித்ய வாசம் பண்ணுகிற ஸௌசீல்ய குணயுக்தனாய்-
ஆஸ்ரித விரோதிகளை -மதுவை – நிரசித்தால் போலே நிரசித்து பொகடுமவனாய் –
அவர்களுக்கும் அனுபாவ்யமாம்படி பிரசஸ்தமான திருக் குழலை உடையனாய் இருக்கிறவனே

பிரபத்தி மார்க்க பிரகாசகமான
தெற்கு திக்கு முதலான எல்லாத் திக்கு களுக்கும் ப்ரதாநமான கோயிலிலே நித்ய வாஸம் செய்கையாலே
ஆஸ்ரிதருக்கு ஸூ லபனாய்
விரோதி நிரசன சீலனுமாய்
ப்ரசஸ்த கேஸ ப்ரதானனுமாய் –இருக்கிறவனே

——————–

கேட்டறியாதன கேட்கின்றேன் கேசவா கோவலர் இந்திரற்கு – நாலாயி:251/1

கேட்டு அறியாதன கேட்கின்றேன் கேசவா கோவலர் இந்திரற்கு
காட்டிய சோறும் கறியும் தயிரும் கலந்து உடன் உண்டாய் போலும்
ஊட்ட முதல் இலேன் உன் தன்னைக் கொண்டு ஒரு போதும் எனக்கு அரிது
வாட்டமிலா புகழ் வாசுதேவா வுன்னை அஞ்சுவன் இன்று தொட்டும் -3 -3-8 –

கேசவா
ப்ரம்மா ஈஸா நாதிகளுக்கு காரணமாகை அன்றிக்கே
இப் பழிச் சொல்லுக்கு நீ காரணம் ஆவதே –
(அகில காரணம் அத்புத காரணம் அன்றோ )

பிரம ருத்ரர்களுக்கு காரண பூதன் ஆகையாலே -கேசவன் -என்னும்
திருநாமத்தை உடையவனே –

—————

கேசவா என்றும் கேடிலீ என்றும் கிஞ்சுக வாய் மொழியாள் – நாலாயி:292/3

பேசவும் தெரியாத பெண்மை என் பேதையேன் பேதை இவள்
கூசம் இன்றி நின்றார்கள் தம் எதிர் கோல் கழிந்தான் மூழையாய்
கேசவா என்றும் கேடிலீ என்றும் கிஞ்சுக வாய் மொழியாள்
வாசவார் குழல் மங்கைமீர் இவள் மாலுருகின்றாளே – 3-7 -7-

கேசவா என்றும்
பிரசச்த கேச வனானவனே-என்றும்

கேசவா என்றும்
விரோதி நிரசன சீலன் என்னுதல்
ப்ரசஸ்த கேசன் என்னுதல்

கேடிலீ என்றும் –
உன்னால் அல்லது செல்லாதவர்களை ஒரு நாளும் கை விடாதவனே -என்றும்

————–

கேசவா புருடோத்தமா கிளர் சோதியாய் குறளா என்று – நாலாயி:369/3

காசின் வாய்க்கரம் விற்கிலும் கரவாது மாற்றிலி சோறிட்டு
தேச வார்த்தை படைக்கும் வண் கையினார்கள் வாழ் திருக் கோட்டியூர்
கேசவா புருடோத்தமா கிளர் சோதியாய் குறளா என்று
பேசுவார் அடியர்கள் எம் தம்மை விற்கவும் பெறுவார்களே – 4-4 -10-

கேசவா என்கிற அநேக திரு நாமங்களை
பக்தி பாரவஸ்யத்தாலேயும்
ப்ராப்தியாலேயும்
பேசுவார் யாவர் சிலருடைய அடியார்கள்

கேசவா என்கிற அநேக திரு நாமங்களை
பக்தி பாரவஸ்யத்தாலேயும்
ப்ராப்தியாலேயும்
பேசுவார் யாவர் சிலருடைய அடியார்கள்

—————

கேசவா புருடோத்தமா என்றும் கேழல் ஆகிய கேடிலீ என்றும் – நாலாயி:371/3

ஆசை வாய்ச் சென்ற சிந்தையராகி அன்னை அத்தன் என் புத்திரர் பூமி
வாசவார் குழலாள் என்று மயங்கி மாளும் எல்லைக் கண் வாய் திறவாதே
கேசவா புருடோத்தமா என்றும் கேழலாகிய கேடிலீ என்றும்
பேசுவார் அவர் எய்தும் பெருமை பேசுவான் புகில் நம் பரம் அன்றே – 4-5 -1-

வாய் திறவாதே
அவ்வளவிலே கீழ் சொன்னவர்கள் பேரை சொல்லி அழையாதே-
அவர்கள் பேர் சொல்ல ஒண்ணாதாகில் பின்னை யார் பேரை சொல்லுவது என்னில்

கேசவா
உங்கள் மரண வேதனை போக வேணும் ஆகில் –
கேசவா க்லேச நாசன -என்னப் பாரும் கோள்
கெடும் இடர் ஆயவெல்லாம் கேசவா என்ன -என்று சொல்லக் கடவது இறே

புருடோத்தமா-
ஒவ்தார்யம்
அதாவது-
அநிஷ்ட நிவ்ருத்தியும் இஷ்ட பிராப்தியும் பண்ணுகை

—————-

கள்ள மாதவா கேசவா உன் முகத்தன கண்கள் அல்லவே – நாலாயி:518/4

வெள்ளை நுண் மணல் கொண்டு சிற்றில் விசித்திரப்பட வீதி வாய்த்
தெள்ளி நாங்கள் இழைத்த கோலம் அழித்தி யாகிலும் உன்தன் மேல்
உள்ளம் ஓடி உருகல் அல்லால் உரோடம் ஓன்று இலோம் கண்டாய்
கள்ள மாதவா கேசவா உன் முகத்தன கண்கள் அல்லவே –-2-5-

இவர்கள் தங்கள் அகவாயில் இழவு தோற்றச் சொல்லச் செய்தேயும் –
பின்னையும் தான் கொண்ட கோட்பாடு விடாது இருக்க –
அது தன்னையும் மறைத்து
ஸ்ரீ யபதியான செருக்குத் தோற்ற அங்கே இங்கே சஞ்சரிப்பது —
புறம்பே அந்ய பரதை பாவிப்பது —
குழலைப் பேணுவதாகப் புக்கான் –
அத்தை அறிந்து –

கள்ள மாதவா கேசவா உன் முகத்தன கண்கள் அல்லவே –
நீயும் இத்தைக் கண்டு அன்றோ அழிக்கிறாய்
உன் முகத்தன கண்கள் அல்லவே
இவை தண்ணளிக்கு உறுப்பு என்று இருந்தோம் -அது அங்கன் அன்றிக்கே
பீலிக்கண் மாலைக் கண்ணோ பாதியாய்த்தோ
கண் என்று பேராய் –
கண்டாரை முன்னடியிலே விழ விட்டுக் கொள்வதொரு வலை இறே
கண் என்னும் நெடும் கயிறு -14-4-என்னக் கடவது இறே

——————–

கிடக்கை கண்டிட பெற்றிலன் அந்தோ கேசவா கெடுவேன் கெடுவேனே – நாலாயி:709/4

வடி கொள் அஞ்சனம் எழுது செம் மலர் கண் மருவி
மேல் இனிது ஒன்றினை நோக்கி
முடக்கி சேவடி மலர் சிறு கரும் தாள்
பொலியும் நீர் முகில் குழவியே போலே
அடக்கி ஆர செஞ்சிறு விரல் அனைத்தும்
அம் கை யோடு அணைந்து ஆனையில் கிடந்த
கிடக்கை கண்டிட பெற்றிலன் அந்தோ!
கேசவா ! கெடுவேன் கெடுவேனே– 7-2-

கேசவா ! கெடுவேன் கெடுவேனே–
அப்போதைத் திருக் குழல் அழகை அனுபவிக்கவும் பெற்றிலேன்
முன்பு மலடு நின்று இழந்தேன்
பின்பு பெற்று வைத்தே அனுபவிக்கப் பெறாது ஒழிந்தேன்
இரண்டாலும் மஹா பாபி இறே நான் –

———–

பாசம் நின்ற நீரில் வாழும் ஆமையான கேசவா ஏச அன்று நீ கிடந்தவாறு கூறு தேறவே – நாலாயி:771/3,4

கூசமொன்றுமின்றி மாசுணம் படுத்து வேலை நீர்
பேச நின்று தேவர் வந்து பாட முன் கிடந்ததும்
பாச நின்ற நீரில் வாழும் ஆமையான கேசவா
ஏசவன்று நீ கிடந்தவாறு கூறு தேறவே –-20

பாச நின்ற நீரில் வாழும் ஆமையான கேசவா –
சமுத்திர மதன வேளையில் வருண பாசங்களை உடைத்தான கடலிலே முதுகிலே
மந்த்ரம் சுழலுகிற இது ஸ்வயம் பிரயோஜனமாக நினைத்து கூர்ம சஜாதீயன் ஆனவனே –
பாச நின்ற நீர் -என்று
பரம பதத்தில் காட்டில் பிரேம ஸ்தலமான கடலிலே என்னவுமாம்

கேசவா
ப்ரஹ்மாதிகள் சரணம் புகுர தத் ரஷண அர்த்தமாக கூர்ம சஜாதீயன் ஆகையாலே
அவ்வளவாலும் ப்ரஹ்ம ருத்ரர்களுக்கு உத்பாதகனான மேன்மை அழியாது இருக்கிறபடி
ஏச வன்று நீ கிடந்தவாறு –
தேவதைகள் அடங்க சாபேஷராய் நின்ற வன்று -சர்வாதிகனான நீ –
உன் படி அறியாதார் -ஆமையானான் -என்று உன்னுடையாரை ஏசும்படி -மந்த்ரம்
முதுகிலே நின்று சுழலக் கண் வளர்ந்து அருளின பிரகாரம்
கூறு தேற வவேறிதே –
தெரியும்படி எனக்கு அருளிச் செய்ய வேணும் –
ஆமையானே நீர்மையிலே சர்வாதிகத்வமும் பிரகாசியா நின்றது
ப்ரஹ்மாதிகள் ஏத்த கண் வளர்ந்து அருளுகிற இடத்திலே நீர்மை பிரகாசியா நின்றது
இவற்றை பிரித்து தெரிய அருளிச் செய்ய வேணும் -என்று கருத்து –

—————

வினையேன் வினை தீர் மருந்து ஆனாய் விண்ணோர் தலைவா கேசவா
மனை சேர் ஆயர் குல முதலே மா மாயனே மாதவா – நாலாயி:2948/1,2

வினையேன் வினை தீர் மருந்தானாய்! விண்ணோர் தலைவா! கேசவா!
மனை சேர் ஆயர் குல முதலே! மா மாயவனே! மாதவா!
சினை ஏய் தழைய மரா மரங்கள் ஏழும் எய்தாய்! சிரீதரா!
இனையாய்! இனைய பெயரினாய்! என்று நைவன் அடியேனே–1-5-6-

விண்ணோர் தலைவா-
நித்தியானுபவம் பண்ணும்போது ‘நான் அயோக்கியன்’ என்று அகல வேண்டாதார்க்கு-நியாந்தாவாய் –
ஏவுகின்றவனாய் இருக்கும் இருப்பில் நின்று வந்து போக்கினான்.

கேசவா-
அதுக்கு அவ்வருகே ஒரு பயணம் எடுத்து விட்ட படி –
ஆவாம் தவாங்கே ஸம்பூதவ் தஸ்மாத் கேசவ நாமவான் ( ‘க என்னும் இது பிரமனுக்குப் பெயராம்;
எல்லாரையும் ஏவுகின்றவன் நான் ஆதலின், எனக்கு ஈசன் என்று பெயராம்;
நாங்கள் இருவரும் தேவரீருடைய திருமேனியில் உண்டானோம்;
ஆதலால், ‘கேசவன்’ என்ற பெயரை அடைந்தீர்’ )என்கிறபடியே-

—————

கெடும் இடர் ஆய எல்லாம் கேசவா என்ன நாளும் – நாலாயி:3902/1

கெடும் இடராய வெல்லாம் கேசவா வென்ன நாளும்
கொடு வினை செய்யும் கூற்றின் தமர்களும் குறுக கில்லார்
விடமுடை யரவில் பள்ளி விரும்பினான் சுரும்பலற்றும்
தடமுடை வயல் அனந்த புரநகர் புகுதும் இன்றே–10-2-1-

கெடும் இடராய வெல்லாம் –
இடராய -எல்லாம் -கெடும் –
இடர் என்று பேர் பட்டவை எல்லாம் கெடும் -என்றது
ப்ரஹ்ம ஹத்யைக்கு -பிராயச்சித்தமாக -கழுவாயாக பன்னிரண்டு ஆண்டுகள் செய்யும் வேள்வியைச் சரித்தால்
மற்று ஒரு பாவத்திற்கு மற்று ஒரு பிராயச்சித்தம் -கழுவாய் செய்ய வேண்டி இருக்கும் அன்றோ –
இங்கு அது வேண்டா
பாபேந்தனாக்னி சசதைவ நிர்மல மமாஸ்து மாங்கள்ய விவ்ருத்தயே ஹரி -விஷ்ணு தர்மம் –
பாவங்கள் ஆகிற விறகுக்கு நெருப்பு போன்றவர் -என்கிறபடியே
எல்லா துன்பங்களும் ஒரு முறையிலேயே அழியும் -என்கிறார் -என்றபடி –
ப்ராயச்சித்தமும் -கழுவாயும் பலபலவாய் இருக்குமோ -என்ன

கேசவா வென்ன –
அவன் ஒரு விரோதியை போக்கின படியைச் சொல்ல
விரோதி என்ற பேர் பெற்றவை எல்லாம் நசிக்கும்
ராவணன் ஒருவனும் பிரதிகூல்யம் -தீ வினை செய்ய ராக்ஷஸ ஜாதியாக அழிந்தால் போலே –
இரக்கம் இன்றி எம் கோன் செய்த தீமை இம்மையே எமக்கு எய்திற்று காணீர் -பெரிய திருமொழி –
போய பிழையும் புகுதருவான் நின்றனவும் -என்கிறபடியே
எல்லாம்-
அனுபவிக்க கடவனவும்
முன்பே தொடங்கி அனுபவிக்கிறவையும்
எல்லாம் நசிக்கும் ஆதலால் -எல்லாம் -என்கிறார்
என்ன –
கார்யத்தில் வந்தால் -அர்த்தக்ரியா காரியாயே – அதன் பயனைக் கொடுத்தே தீரும் ஆதலின்
யுக்தி -வார்த்தை மாத்ரமே அமையும் என்பார் -என்னக் கெடும் -என்கிறார் –

இனி கேசவா என்னக் இடராய எல்லாம் கெடும் -என்பதற்கு
நரகே பஸ்யமா நஸ்து யமேன பரி பாஷித
கிம் த்வயா நார்ச்சிதோ தேவ கேசவ கிலேச நாசன -பாரதம் -என்கிறபடியே
பிரசஸ்த கேசனாய் -நீண்ட மயிர் முடியை உடையவனாய் இருக்கும் இருப்பைச் சொல்ல-சம்சார துரிதங்கள் –
பிறவியாலாய துன்பங்கள் அனைத்தும் போம் -என்றும்
க இதி ப்ரஹ்மனோ நாம ஈசோஹம் சர்வ தேஹிநாம்
ஆவாம் தவ அங்கே சம்பூதௌ தாஸ்மான் கேசவ நாமவான் -என்கிறபடியே
பிரமனுக்கும் சிவனுக்கும் நிர்வாஹகன் -தலைவனே என்ன
பிறவியாலாய துன்பங்கள் அனைத்தும் போம் -என்றும் பொருள் கூறலுமாம் –
ஆயினும் சொல்லிப் போருமது முன்னர் கூறிய பொருளே

————-

கேசனே (1)
கிடந்தவாறு எழுந்திருந்து பேசு வாழி கேசனே – நாலாயி:812/4

நடந்த கால்கள் நொந்தவோ நடுங்க ஞாலம் ஏனமாய்
இடந்த மெய் குலுங்கவோ விலங்கு மால் வரைச் சுரம்
கடந்த கால் பரந்த காவிரி கரைக் குடந்தையுள்
கிடந்தவாறு எழுந்து இருந்து பேசு வாழி கேசனே –61-

கேசனே —
கேசவ சப்தமாய் கடைக் குறைத்தலாய் கிடக்கிறது -என்னுதல்
கேசத்தை உடையவன் -என்னுதல்
இரண்டுக்கும்
ஸ்நிக்த நீல குடில குந்தளன் -என்று அர்த்தம்
இத்தால் -கேசவா க்லேச நாஸ -என்கிறபடியே திருக் குழலைப் பேணி என்னுடைய
க்லேசத்தை தீர்த்து அருள வேணும் -என்கை

————

கேசி (1)
மா சினத்த மாலி மான் சுமாலி கேசி தேனுகன் – நாலாயி:858/2

காய்சினத்த காசி மன்னன் வக்கிரன் பவுண்டிரன்
மாசினத்த மாலிமான் சுமாலி கேசி தேனுகன்
நாசமுற்று வீழ நாள் கவர்ந்த நின் கழற்கலால்
நேசபாசம் எத்திறத்தும் வைத்திடேன் எம் ஈசனே -107-

கேசி –
ஸ்வர்க்க வாசிகளான தேவதைகளுக்கும் பாதகனான கேசி –

இவ் வசுர வர்க்கத்தின் க்ரௌர்யத்தை பேசிற்று -தம்முடைய பிரதிபந்தங்களை-க்ரௌர்யம் தோற்றுகைக்காக
நாசமுற்று வீழ நாள் கவர்ந்த –
துக்கத்தை அனுபவித்து ம்ர்தராய் விழும்படி ஆயுஸை வாங்கின
நாசம் -துக்கம்
வீழ்தல் -என்று விடுதலாய் -பிராணனை விடும்படி என்னவுமாம்
இத்தால் –
ஆ ஸ்ரீ த விரோதிகளை ஸ்வ சத்ருக்களைப் போலே கண்ணற்று க்ரூரமாக வகுத்தபடி
நின் கழற்கலால் நேசபாசம் எத்திறத்தும் வைத்திடேன் –
விரோதி நிரசன சீலனான உன் திருவடிகளில் அல்லது
பக்தியாகிற கயிற்றை எவ் விஷயத்திலும் வையேன் –
பந்தகம் என்கையாலே பக்தியை கயிறு என்கிறது
எட்டினோடு இரண்டு என்னும் கயிற்றினால் -என்னக் கடவது இ றே

எம் ஈசனே –
என் நாதனே
விஷயாந்தர ப்ராவண்ய ஹேதுவான பாபங்களையும்
தேவரீர் பக்கலில் பிரேமத்துக்கு விரோதியான பாபங்களையும் போக்கி
இவ்வளவும் புகுர நிறுத்துகைக்கு அடி -இத்தை உடையவன் ஆகை -என்கை

————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ பாசுரப்படி ஸ்ரீ மத் பாகவதம் —

October 30, 2021

(ஸ்ரீ திருப்பாற் கடல் வர்ணனை )
பாலாலிலையில் துயில் கொண்ட பரமன்
மன்னிய நாகத்தணை மேல் ஓர் மா மலை போல்
சுடர் ஆழி சங்கு இரு பால் பொலிந்து தோன்றுத்
திரு மடந்தை மண் மடந்தை இரு பாலும் திகழ
ஆயிரம் தோள் பரப்பி முடி ஆயிரம் மின் இலகக்

கடலோதம் கால் அலைப்பக்
கடலோன் கை மிசைக் கண் வளர்வது போல்
உன்னிய யோகத்து உறக்கம் தலைக் கொண்டு
இணையில்லா இன்னிசை யாழ் கெழுமி
இன்பத் தும்புருவும் நாரதனும் இறைஞ்சி ஏத்தக்

கொத்தலர்ந்த நறுந்துழாய் சாந்தம் தூபம்
தீபம் கொண்டு அமரர் தொழப்
பக்தர்களும் பகவர்களும் பழ மொழி வாய் முனிவர்களும் சித்தர்களும் தொழுது இறைஞ்ச
அருள் கொண்டாடும் அடியவர் இன்புற
ஏழுலகும் தனிக்கோல் செல்ல வீற்று இருந்து

(திரு அவதார காரணம் )
விண் கொள் அமரர்கள் வேதனை தீர
மண்ணுய்ய மண்ணுலகில் மனிசர் உய்யப்
பாரேறு பெரும் பாரம் தீரத்
துவரிக் கனி வாய் நில மங்கை துயர் தீர
மண்ணின் பாரம் நீக்குவதற்கே வேண்டித் தேவர் இரக்கச்

சாது சனத்தை நலியும் கஞ்சனைச் சாதிப்பதற்கு
என்ன நோன்பு நோற்றாள் கொலோ இவனைப் பெற்ற வயிறுடையாள்
என்றும் வார்த்தை எய்துவிக்கத் தந்தை காலில் பெரு விலங்கு தாளவிழ
மக்கள் அறுவரைக் கல்லிடை மோத இழந்த தாயைக் குடல் விளக்கம் செய்யக்

(திரு அவதாரம் )
கதிராயிரம் இரவி கலந்து எரித்தால் ஒத்து
மல்லை மூதூர் வட மதுரையில்
மந்தக் களிற்று வீசு தேவர் தம்முடைச்
சித்தம் பிரியாத தேவகி தன் வயிற்றில்
அத்தத்தின் பத்தாம் நாள் தோன்றிக் கஞ்சன் வலை வைத்த அன்று கார் இருள் எல்லில் பிழைத்து

எடுத்த பேராளன் நந்த கோபன் தன் இன்னுயிர்ச் சிறுவன் எனக்
கூர் வேல் கொடும் தொழிலன் நந்தகோபன் குமரனாய்த் தெய்வ நான்கை யசோதைக்குப்
போத்தந்த பேதைக் குழவியாய்ப்
பலதேவர்க்கு ஓர் கீழ்க் கன்றாய்

(ஆயர்கள் நாயகனாய் )
ஆயர் பாடிக்கு ஓர் அணி விளக்காய்க்
கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தாய்க்
காண்டல் இன்றிக் கொண்டு வளர்க்கக்
குழவியாய்த் தான் வளர்ந்து

(திரு ஆயர்பாடியில் மங்களம் )
எண்னம் சுண்ணம் எதிர் எதிர் தூவிடப்
பாடுவார்களும் பல் பறை கொட்ட
அண்டர் மிண்டிப் புகுந்து நெய்யாட அயலிடத்துப் பேர்ந்து
தத்துக் கொண்டாள் கொலோ தானே பெற்றாள் கொலோ
பேணிச் சீருடைப் பிள்ளை ஒருத்தி மகனாய் ஒளித்து வளரத்

(பூதனை வதம்)
தீ மனத்தான் கஞ்சனது வஞ்சனையில் திரியும்
பெண்மை மிகு வடிவு கொண்டு
வன் பேய்ச்சி தன் மகனாகத் தான் முலை யுண்ணக் கொடுக்க
முலை யுண்பான் போலே முனிந்து உண்டு
வஞ்சனத்து வந்த பேய்ச்சி ஆவி பாலுள் வாங்கி
சூர் உருவின் பேய் அளவு கண்டு

(சகட பங்கம் )
மாணிக்கம் சுட்டி வயிரம் இடை கட்டி
ஆணிப் பொன்னால் செய்த வண்ணச் சிறு தொட்டிலில்
உறங்குவான் போல் கிடந்து
நாள்கள் ஓர் நால் ஐந்து திங்கள் அளவிலே
தாளை நிமிர்த்து உருளும் சகடம் உதைத்து

(திரு நாம கரணம் )
ஆய்ப்பாடி ஆயர் பத்து நாளும் கடந்த இரண்டாம் நாள்
எத்திறமும் சய மரம் கோடித்துக்
கரு வடிவில் செங்கண்ண வண்ணன் தன்னை
வேதம் வல்லார்களைக் கொண்டு
கார் முகிலே என் கண்ணா
செங்கண் நெடுமால் சிரீ தரா என்று அழைத்து
நாவினால் நவிற்று இன்பம் எய்த

(பால லீலைகள் )
மாயக் கூத்தன்
தன் முகத்துச் சுட்டி தூங்கத் தூங்கத் தவழ்ந்து போய்ப்
பொன் முகக் கிண் கிணி ஆர்ப்பப் புழுதி அளைந்து
கோல நறும் பவளச் செந்துவர் வாயினிடைக் கோமள
வெள்ளி முளைப் போல் சிறு பல் இலகக்
கண கண சிரித்து வந்து முன் வந்து
நின்று முத்தம் தந்து

ஆயர்கள் போர் ஏறாய்ச் செங்கீரை யாடி
எண்ணெய்க் குடத்தை உருட்டி இளம் பிள்ளை கிள்ளி எழுப்பிக்
கண்ணைப் புரட்டி விழித்துக் கழ கண்டு செய்து
வெண்ணெய் விழுங்கி விரைய உறங்கிப்
பானையில் பாலைப் பருகிப் பற்றாதார் எல்லாம் சிரிப்ப

மடம் கொள் மதி முகத்தாரை மால் செய்து
அழகிய வாயில் அமுத ஊறல் தெளிவுறா
மழலை முற்றா திளம் சொல்லால்
வனிலா அம்புலீ சந்திரா வா என்று அம்புலி விளித்து

(பிள்ளை வாயுள் ஏழு உலகம் )
மண்ணும் மலையும் கடலும் உலகு ஏழும் உண்ணும் திறத்து மகிழ்ந்து
கையும் காலும் நிமிர்த்துக் கடார நீர் பைய வாட்டிப் பசும் சிறு மஞ்சளால்
ஐய நா வழித்தாளுக்கு அங்கு ஆந்திட வாயுள் வையம் ஏழும் காண
ஆடி யாடி யசைந்து அசைந்திட்டு அதனுக்கு ஏற்ற கூத்தை ஆடி

(உரலில் கட்டுப்படுதல் )
வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைக்க
வெள்ளி மலை இருந்தால் ஒத்த வெண்ணெயைத்
தாயர் மனங்கள் தடிப்ப உள்ளம் குளிர அமுது செய்து
விரலோடு வாய் தோய்ந்த வெண்ணெய் கண்டு

ஒளியா வெண்ணெய் உண்டான் என்றும் உரலோடு ஆய்ச்சி ஒண் கயிற்றால்
விளியா ஆர்க்க ஆப்புண்டு விம்மி அழுது
பொத்த விரலைக் கவிழ்த்து அதன் மேல் ஏறித்
தித்தித்த பாலும் தடாவினில் வெண்ணெயும்
மெத்தத் திரு வயிறு ஆர விழுங்கி

சீரல் அசோதை அன்புற்று நோக்கி
அடித்தும் பிடித்தும் அனைவருக்கும் காட்ட
ஊரார்கள் எல்லாம் காணக்
கண்ணி நுண் சிறுத் தாம்பினால் கட்டுண்டு
பெரு மா யுரலில் பணிப்புண்டு இருந்து
விண்ணெல்லாம் கேட்க அழுது
எழில் கொள் தாம்பு கொண்டு அடிப்பதற்கு எள்கி

(மருத மரங்களை முறித்தது )
மணம் மருவு தோள் ஆய்ச்சி ஆர்க்கப் போய் உரலோடும்
ஒருங்கு ஒத்த இணை மருதம் உன்னிய வந்தவரை
ஊரு கரத்தினொடும் உந்தி
எண் திசையோரும் வணங்க
இணை மருதூடு நடந்து

(மாடு கன்றுகளை மேய்த்தல் )
அழகிய பைம்பொன்னின் கோல் அம்கையில் கொண்டு
கழல்கள் சதங்கை கலந்து எங்கும் ஆர்ப்ப
பழ கன்றினங்கள் மறித்துத் திரிந்து
புகழ்ப் பலதேவன் என்னும் நம்பியோடப் பின் கூடச் சென்று

தன்னே ராயிரம் பிள்ளைகளோடு தளர் நடையிட்டு
வெண்ணெய் விழுங்கி வெறும் கலத்தை வெற்பிடை விட்டு அதன் ஓசை கேட்டு
அசல் அகத்தார் பரிபவம் பேச
இல்லம் புகுந்து அவர் மகளைக் கூவிக்
கையில் வளையைக் கழற்றிக் கொண்டு
கொள்ளையில் நின்றும் கொணர்ந்து விற்ற அங்கு ஒருத்திக்கு அவ்வளை கொடுத்து
நல்லன நாவற் பழங்கள் கொண்டு

கறவைகள் பின் சென்று கானம் சேர்ந்து உண்டு
இட்டமான பசுக்களை இனிது மறித்து நீரூட்டி
விட்டுக் கொண்டு விளையாடி
கணங்களோடு மின் மேகம் கலந்தால் போல்
வனமாலை மினுங்க நின்று விளையாடி

கோவலனாய் ஆநிரைகள் மேய்த்துக் குழலூதிக்
கோவிந்தன் வருகிற கூட்டம் கண்டு
மழை கொலோ வருகிறது என்று சொல்லி
மங்கைமார் சாலக வாசல் பற்றி நுழையக்
குழல்களும் கீதமுமாகி

முற்றத்தூடு புகுந்து தன் முகம் காட்டிப் புன்முறுவல் செய்து
பஞ்சிய மெல்லடிப் பிள்ளைகளுடன்
வைத்த நெய்யும் காய்ந்த பாலும் வடிதயிறும் நறு வெண்ணெயும் இத்தனையும் பெற்று அறியாமே
ஆயிரம் தாழி வெண்ணெய் பாகந்தான் வையாதுண்டு

(வத்ஸாஸூர பகாஸூர வதம் )
கானக வல் விளவின் காய் உதிரக் கருதி கொன்றது கொண்டு எறிந்து
பள்ளத்தில் மேயும் பறவை உருக்கொண்டு
கள்ள அசுரன் வருவானைத் தான் கண்டு
புள்ளிது என்று பொதுக்கோ வாய்க்கீண்டிட்டு

(தேனுகாஸூர வதம் )
வாசியாகி நேசமின்றி வந்து எதிர்த்த தேனுகன்
நாசமாகி நாளுலப்ப நன்மை சேர் பனம் கனிக்கு
வீசி மெல் நிமிர்ந்த தோன் இல்லையாக்கி

(காளிய மர்த்தனம் )
ஆய்ச்சிமார்களும் ஆயரும் அஞ்சிடப் பூத்த நீள் கடம்பேறித்
தடம் படு தாமரைப் பொய்கை கலக்கி
விடம் படு நாகத்தை வால் பற்றி ஈர்த்துப்
படும் படு பைந்தலை மேல் ஏழப் பாய்ந்திட்டு
உடம்பை அசைத்து
வெயின் குழலூதி வித்தகனாய் நின்று
நீண் முடி ஐந்திலும் நின்று நடம் செய்து

(பிலம்ப வதம் )
பாண்டி வடத்தில் பிளம்பர் தன்னைப்
பண்ணழியப் பலதேவன் வெல்ல

(காட்டுத்தீயை விழுங்கல் )
நின்ற செந்தீ மொண்டு குறை நீள் விசும்பூடு எரியக்
காண்கின்ற வெந்தீ எல்லாம் யானே என்று தான் விழுங்கி உய்யக் கண்டு

(வேணு கானம் செய்தல் )
வல்லி நுடங்கிடை மாதர் வந்து அலர் தூற்றிட
துள்ளி விளையாடித் தோளரோடு
கானம் பாடி உலாவி உலாவிச்
சிறு விரல்கள் தடவிப் பரிமாறிச்
செங்கண் கோடச் செவ்வாய் கொப்பளிப்பக்
குறு வியர்ப்புருவம் கூடலிப்பக்

கோவலர் சிறுமியர் இளங்கொங்கை குதுகலிப்ப
மேனகையோடு திலோத்தமை அரம்பை உருப்பசியர் அவர் வெள்கி மயங்கி
நன்னரம்புடைய தும்புருவோடு நாரதனும் தம் தம் வீணை மறுப்பப்
பறைவவையின் கணங்கள் கூடு துறந்து வந்து சூழ்ந்து படுகாடு கிடப்பக்
கறவையின் கணங்கள் கால் பரப்பிட்டுக் கவிழ்ந்து இறங்க

மருண்ட மான் கணங்கள் மேய்கை மறந்து
மேய்ந்த புல்லும் கடைவாய் வழி சோர
இரண்டு பாடும் துலங்காப் புடை பெயரா
எழுது சித்ரங்கள் போல் நிற்க
மரங்கள் நின்று மது தாரைகள் பாய

மலர்கள் வீழ வளர் கொம்புகள் தாழக்
கோவிந்தனுடைய கோமள வாயில்
குழல் முடிஞ்சு களினூடு குமிழ்த்துக் கொழித்து இழிந்த அமுதப் புனல் தன்னை
குழல் முழவம் விளம்பக் கோவலனாய்க் குழலூதி யூதி

(கோபியர் வஸ்திர அபஹரணம் )
மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளில்
கோழி அழைப்பதன் முன்னம் குடைந்து நீராடுவான் போந்த
பங்கய நீர் குடைந்து ஆடுகின்றார்கள்
ஆயர் மட மக்களைப் பின்னே சென்று ஒளித்து இருந்து
அங்கவர் பூந்துயில் வாரிக் கொண்டிட்டு
அச்சேரி இடையார் இரப்ப
மங்கை நல்லீர் வந்து கொண்மின் என்று மரம் ஏறி இருந்து
கன்னியரோடு எங்கள் நம்பி கரியபிரான் விளையாடி

(வேள்வி மங்கையர் வேண்டடிசில் அளித்தது )
பக்த விலோசனத்தில்
வேர்த்துப் பசித்து வயிறு அசைந்து வந்து அடிசில் உண்டு

(கோவர்த்தன கிரி பிடித்தது )
இந்திரனுக்கு என்று ஆயர்கள் எடுத்த
எழில் விழவில் பழ நடை செய்
மந்திர விதியில் பூசனை பெறாது
இமயப் பெரு மலை போல்
அமைத்த சோறு அது எல்லாம்
போயிருந்து அங்கோர் பூத வடிவு கொண்டு
முற்ற வாரி வளைத்து உண்ண

மேலை அமரர் பதி மிக்க வெகுண்டு வரக்
காள நன் மேகவை கல்லொடு கால் பொழிய
வண்ண மால் வரையே குடையாகச்
செந்தாமரைக் கை விரல் ஐந்தினையும்
கப்பாக மடுத்து மணி நெடும் தோள் காம்பாகக் கொடுத்து
கல் எடுத்துக் கல் மாரி காத்து

(கண்ணன் கோபியரோடு விளையாடுதல் )
மங்கல நல் வனமாலை மார்பில் இலங்க
மயில் தழைப் பீலி சூடிப்
பொங்கிள ஆடை அரையில் சாத்திப்
பூங்கொத்துக் காதில் புணரப் பெய்து
கொங்கு நறும் குழலார்களோடு குழைந்து குழலூதிக்

கொல்லாமை செய்து குரவை பிணைந்து சுழலக்
குடங்கள் தலைமீது எடுத்துக் கொண்டாடி
மன்றமரக் கூத்தாடி மகிழ்ந்து
தேனும் பாலும் கன்னலும் அமுதமுமாகித் தித்தித்து
முற்றா இளையார் விளையாட்டொடு
காதல் வெள்ளம் விளைவித்து

(கேசி வதம் )
மா வாயின் அங்கம் மதியாது கீறி

(மதுராபுரிக்கு விஜயம் )
வில்லார் விழவில் வடமதுரை விரும்பி
கூனி கூன் நிமிர்ந்தது
நாறிய சாந்தம் நமக்கு இறை நல்கு என்னத்
தேறி யவளும் திரு உடம்பில் பூச
ஊறிய கூனை உள்ளொடுக்க அன்று ஏற உருவி

(குவலயா பீட வதம் )
விற் பிடித்து இறுத்து
வளவெழும் தவள மாட மதுரை மா நகரம் தன்னுள்
வெம்பு சினத்து அடல் வேழம் வீழ
வெண் மருப்பு ஓன்று பறித்து

(மல்லர் வதம் )
இரு மலை போல் எதிர்த்த இரு மல்லர்
வலிய முடி இடிய வாங்கி

(கம்ஸ வதம் )
செம் பொன் இலங்கு வலங்கை வாளி
திண் சிலை தண்டொடு சங்கம் ஒள் வாள்
உம்பர் இரு சுடர் ஆழி யொடு
கேடயம் ஒண் மலர் பற்றித்
தொட்ட படை எட்டும் தோலாத வென்றியான்

கறுத்திட்டு எதிர் நின்ற
கஞ்சன் வயிற்றில் நெருப்பு என்ன நின்று
அரையனை எழப் பாய்ந்து உதைத்துக்
குஞ்சி பிடித்து அடித்து உண்டு
அவன் மாளக் கண்டு

(ஸ்ரீ சாந்தீபனியின் புத்ரனை மீண்டது )
மாதவத்தோன் புத்திரன் போய் மறி கடல் வாய் மாண்டானை
ஓதுவித்த தக்கணையாய் உருவுருவே கொடுத்து

(ஸ்ரீ ருக்மிணி பிராட்டி திருக் கல்யாணம் )
கண்ணாலம் கோடித்துக் கன்னி தன்னைக் கைப்பிடிப்பான்
திண்ணார்ந்து இருந்த சிசுபாலன் தேசு அழிந்து
அண்ணாந்து இருக்கவே ஆங்கு அவளைக் கைப்பிடித்து
ருக்மிணி நங்கையைத் தேர் ஏற்றிக் கொண்டு

விருப்புற்று அங்கே ஏக விரைந்து எதிர் வந்து
செருக்குற்றான் வீரம் சிதையத் தலையைச் சிரைத்து
அன்று அங்கு அமர் வென்று நங்கை அணி நெடும் தோள் புணர்ந்து
ரடிலங்கு தாமரை போல் செவ்வாய் முறுவல் செய்து அருளித்
திருவுக்கும் திருவாகிய செல்வனாய் பெண் அமுது உண்டு

(ஸ்ரீ நப்பின்னை திருக் கல்யாணம் )

துப்புடை ஆயர்கள் தம் சொல் வழுவாது ஒரு கால்
தூய கருங்குழல் நல் தோகை மயில் அனைய
நப்பின்னை தன் திறமாக நல் விடை ஏழு அவிய
வீயப் பொருது வியர்த்து நின்று

(நரகாஸூர வதம் )
மன்னு நரகன் தன்னை சூழ் போகி வளைத்து எறிந்து
கன்னி மகளிர் தம்மைக் கவர்ந்து

(துவாரகை அமைத்தல் )
பதினாறாம் ஆயிரவர பணி செய்யத்
துவரை என்னும் அதில் நாயகராய் வீற்று இருந்து

(பாரிஜாத அபஹரணம் )
என்னதன் தேவிக்கு அன்று இன்பப்பூ ஈயாதாள்
தன்னாதன் காணவே தண் பூ மரத்தினை
வல் நாதப் புள்ளால் வலியப் பறித்துக்
கற்பக காவு கருதிய காதலிக்கு
இப்பொழுது ஈவன் என்று இந்திரன் காவினில்
நிற்பன செய்து நிலாத் திகழ் முற்றத்துள் உய்த்து

(வாணாஸூர வதம் )
மாவலி தன்னுடைய மகன் வாணன் மகன் இருந்த
காவலைக் கட்டழித்துப் பிரிவின்றி
வாணனைக் காத்து என்று
அன்று படையொடும் வந்து எதிர்ந்த
திரிபுரம் பெற்றவனும் மகனும் பின்னும் அங்கியும் போர் தொலையப்

பொரு சிறைப் புள்ளைக் கடாவிப்
பொரு கடலை அரண் கடந்து புக்கு
மாயப் பொரு படை வாணனை
ஆயிரம் தோளும் பொழி குருதியாய ஆழி சுழற்றி

(பவ்ண்ட்ரக வாஸூ தேவன் பங்கம் )
புகரார் உருவாகி முனிந்தவனைப்
புகழ் வீட முனிந்து உயிருண்டு
அசுரன் நகராயின பாழ் பட நாமம் எறிந்து
காய் சின காசி மன்னன்
நாசமுற்று வீழ நாள் கவர்ந்து

(சிஸூபால வதம் )
கேட்பார் செவி சுடு கீழ்மை வசவுகளே வையும்
சேட்பாற் பழம் பகைவன் சிசு பாலன் திருவடி
தாட்பால் அடைய பெரும் துன்பம் வேர் அற நீக்கித்
தன் தாளிணைக் கீழ் சேர்த்துப்

தந்தவக்கரனை முடித்தல்
(பொங்கரவ வக்கரணைக் கொன்று )

(திரௌபதி சரணாகதி )
அந்தகன் சிறுவன் அரசர் தம் அரசற்கு இளையவன்
அணியிழையைச் சென்று
எம் தமக்கு உரிமை செய் -எனத் தரியாது
எம்பெருமான் அருள் என்னப்

(கண்ணன் விஸ்வரூபம் காட்டியது )
பங்கயக் கண்ணன் ஒன்றே உரைப்பான்
ஒரு சொல்லே சொல்லுவான்
துன்னு முடியன் துரியோதனன் பக்கல் சென்று
கோதை வேல் ஐவர்க்காய் மண்ணகலம் கூறிடுவான்
தூதனாய் மன்னவனால் சொல்லுண்டு

அரவு நீள் கொடியோன் அவையுள்
ஆசனத்தை அஞ்சிடாதே இட
அதற்குப் பெரிய மா மேனி அண்டம் ஊடுறவப்
பெரும் திசை அடங்கிட நிமிர்ந்து
ஊர் ஓன்று வேண்டிப் பெறாத உரோடத்தால்
மண் மிசைப் பெரும் பாரம் நீங்க ஓர் பாரத மாப் பெரும் போரில்

(தேரோட்டியாய்த் திகழ்ந்தது )
பற்றலர் வீயக் கோல் கையில் கொண்டு
பார்த்தன் தன் தேர் முன் நின்று
தீர்த்தான் உலகு அளந்த சேவடி மேல் பூந்தாமம் சேர்த்தி
அவையே சிவன் முடி மேல் தான் கண்டு
பார்த்தன் தெளிந்து ஒழிய

(கீதோபதேசம் )
அறிவினால் குறைவில்லா அகல் ஞாலத்தவர் அறிய
நெறி எல்லாம் எடுத்து உரைத்து
நீர்மையில் நூற்றுவர் வீய
ஐவருக்கு அருள் செய்து நின்ற

(ஜயத்திரதனை முடித்தது )
ஆழி கொண்டு அன்று இரவி மறைப்பச்
சயத்திரதன் தலையைப் பாழில் உருளப் படை பொருது

(பரீக்ஷித்தை உயிர் மீட்டது )
மருமகன் தன் சந்ததியை உயிர் மீட்டு மைத்துனன் மார்
உருமகத்தே வீழாமே குரு முகமாய்க் காத்து
எல்லாச் சேனையும் இரு நிலத்து அவித்து
சந்தம் அல் குழலாளை அலக் கண் நூற்றுவர் தம்
பெண்டிரும் எய்தி நூல் இழப்ப
மைத்துனன் மார் காதலியை மயிர் முடிப்பித்து அவர்களையே மன்னராக்கி

( வைதிகன் மக்களை மீட்டது )
வேத வாய் மொழி அந்தணன் ஒருவன்
எந்தை நின் சரண் என்னுடை மனைவி
காதல் மக்களைப் பயத்தலும் காணாள்
கடிய தெய்வம் கொண்டு ஒளிக்கும் என்று அழைப்ப
இடர் இன்றியே ஒரு நாள் ஒரு போழுதில் எல்லா உலகும் கழியப்
படர் புகழ்ப் பார்த்திபனும் வைதிகனும் உடன் ஏற திண் தேர் கடவிச்
சுடர் ஒளியாய் நின்ற தன்னுடைச் சோதியில்
வைதிகம் பிள்ளைகளை உடலோடும் கொண்டு கொடுத்து

(ஆதி யஞ்சோதி யுருச் சேர்தல்)
துயரில் சுடர் ஒளி தன்னுடைச் சோதி
நின்ற வண்ணம் நிற்கவே
துயரில் மலியும் மனிதப் பிறவியில் தோன்றிக் கண் காண வந்து துயரங்கள் செய்து
தன் தெய்வ நிலை யுலகில் புகை உய்த்துக்
கதையின் திரு மொழியாய் நின்று
நல் குரவும் செல்வமும் நரகமும் ஸ்வர்க்கமுமாய்ப்
பல்வகையும் பரந்து வைகுந்தம் புகுதலும்
எண்மர் பதினொருவர் ஈர் அறுவர் ஓர் இருவர்
வண்ண மலர் ஏந்தி வைகலும் நண்ணி
ஒரு மலையால் பரவி ஓவாது எப்போதும்
மால் வண்ணன் தாள் தாமரை அடைவோம் என்று
மறை கொண்ட மந்திரத்தால் வாழ்த்து
சூட்டு நன் மாலைகள் தூயன ஏந்தி
ரதமில் தண்ணுமை எக்கம் மத்தளி
யாழ் குழல் முழவமொடு இசை திசை கெழுமிக்
கீதங்கள் பாடி மயங்கித் திருவடி தொழ
பாடு நல் வேதவொலி பரவைத் திரை போல் முழங்க
ஆயிரம் பெயரால் அமரர் சென்று இறைஞ்ச
உவந்த உள்ளத்தனாய்
அண்டமாய் எண் திசைக்கும் ஆதியாய்
நீதியான பண்டமாம் பரம சோதியாய்
ஆடரவு அமளியில் அறி துயில் அமர
இடம் கொள் சமயத்தை எல்லாம் எடுத்துக் களைவன போலே
தடம் கடல் பள்ளிப்பெருமான் தன்னுடைய பூதங்களேயாய்க்
கிடந்தும் எழுந்தும் இருந்தும் கீதங்கள் பல பல பாடி
நடந்தும் பரந்தும் ஒளித்தும் நாடகம் செய்கின்றனவே
தோட்டலர் பைந்தார் சுடர் முடியானை
தொழுது நல் மொழியால் தொகுத்து உரைத்த
பாட்டிவை பாடப் பத்திமை பெருகிச் சித்தமும் திருவொடு மிகுமே

பொலிக பொலிக பொலிக

—————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஸூக பகவான் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ கிருஷ்ண த்வைபாயன பகவான் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நாரத பகவான் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ அருளிச் செயல்களில் ஸ்ரீ கிருஷ்ணன் திரு நாமங்கள்–

August 30, 2021

வண்ண மாடங்கள் சூழ் திருக் கோட்டியூர் கண்ணன் கேசவன் நம்பி

தேவகி தன் வயிற்றில் அத்தத்தின் பத்தா நாள் தோன்றிய அச்சுதன்

வசுதேவர் தம் மகனாய் வந்து திண் கொள் அசுரரைத் தேய வளர்கின்றான்

திருவின் வடிவொக்கும் தேவகி பெற்ற உருவு கரிய ஒளி மணி வண்ணன்

உய்ய இவ்வாயர் குலத்தினில் தோன்றிய ஒண் சுடர் ஆயர் கொழுந்தே

நந்தகோபன் குமரன் யசோதை இளம் சிங்கம் –

மன்னு வடமதுரை மைந்தனே –

ஆயர் குலத்தினில் தோன்றும் அணி விளக்கை –

தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரனை –

மாலாய்ப் பிறந்த நம்பி

மன்னு மதுரை வசுதேவர் வாழ் முதலை

நந்தன் பெறப் பெற்ற நம்பீ நான் உகந்து உண்ணும் அமுதே எந்தை பெருமானே

சாது சனத்தை நலியும் கஞ்சனைச் சாதிப்பதற்கு ஆதி யஞ்சோதி வுருவை அங்கு வைத்து இங்குப் பிறந்த வேத முதல்வன்

வஞ்சப் பெண் நஞ்சுண்ட கற்றாயனே

அல்லிக் கமலக் கண்ணனை –

அமரர் முழு முதல் ஆகிய வாதியை அமரர்க்கு அமுதீந்த ஆயர் கொழுந்தை

தாமரைக் கண்ணனை விண்ணோர் பரவும் தலைமகனை –

தாமோதரனைத் தனி முதல்வனை ஞாலம் உண்டவனை

அமரர் தலைமகனை கண்ணனை நெடுமாலை

மூவராகிய மூர்த்தியை முதல் மூவர்க்கும் முதல்வன் தன்னை

அளிக்கும் பரமனைக் கண்ணனை ஆழிப் பிரான் தன்னை

ஏற்கும் பெரும் புகழ் வானவர் ஈசன் கண்ணன்

வல்வினை தீர்க்கும் கண்ணனை

என்னுடைய கோவலனே என் பொல்லாக் கரு மாணிக்கமே -என் திரு மார்பன் தன்னை –

எடுத்த பேராளன் நந்த கோபன் தன் இன்னுயிர்ச் சிறுவனே

அசோதைக்கு அடுத்த பேரின்பக் குல விளங்கு களிறே

மாயக் கூத்தா வாமனா கொண்டால் வண்ணா குடக் கூத்தா வினையேன் கண்ணா

மண்ணின் பாரம் நீக்குதற்கே வடமதுரைப் பிறந்தான்

மகன் ஒருவர்க்கு அல்லாத மா மேனி மாயன்

சேயன் அணியன் சிறியன் மிகப் பெரியன் ஆயன் துவரைக் கோனாய் நின்ற மாயன்

காக்கும் இயல்வினன் கண்ண பெருமான் –

பேய்ப்பால்முலையுண்ட பித்தனே -கேசவ நம்பீ

வஞ்சப் பெண் நஞ்சுண்ட அண்ணல்

பேய்முலை சார்ந்து சுவைத்த செவ்வாயன்

தேவக் கோலப் பிரான்

பேயின் முலையுண்ட பிள்ளை இவன் முன்னம் மாயச் சகடும் மருதும் இறுத்தவன் காயா மலர்க்கண்ணன் கண்ணன்

கள்ளச் சகடும் மருதும் கலக்கழிய வுதை செய்த பிள்ளை யரசே

மாயச் சகடம் உதைத்த மணாளற்கு

சகட வசுரருடல் வேறா பிளந்து வீயத் திருக் காலாண்ட பெருமானே

கள்ளச் சகடுதைத்த கரு மாணிக்க மா மலை-

கருளக் கொடி யொன்றுடையீர் தனிப்பாகீர்

பிள்ளை யரசே

மாயச் சகடம் உதைத்து மருது இறுத்து –வித்தகனாய் நின்ற ஆயர்கள் ஏறு –

மருதம் முறிய நடை கற்றவன் –மதுரைப்பதி கொற்றவன்

போனாய் மா மருதின் நடுவே என் பொல்லா மணியே -தேனே -இன்னமுதே

புணரேய் நின்ற மரமிரண்டின் நடுவே போன முதல்வாவோ -மருதிடை போய் –கண்ண பிரானுக்கு

கானக மா மடுவில் காளியின் உச்சியிலே தூய நடம் பயிலும் சுந்தர வென் சிறுவா

பணத்தின் மேல் பாய்ந்திட்டு அருள் செய்த அஞ்சன வண்ணன்

காளியன் தீய பணத்தில் சிலம்பார்க்கப் பாய்ந்தாடி–வித்தகனாய் நின்ற ஆயன்

கஞ்சனும் காளியனும் களிறும் மருதும் எருதும் வஞ்சனையின் மடிய வளர்ந்த மணி வண்ணன்

காளியன் மேல் நடமாடிய கூத்தனார்

பொய்கை வாய் விடம் கலந்த பாம்பின் மேல் நடம் பயின்ற நாதனே

சாடு சாடு பாதனே சலம் கலந்த பொய்கைவாய் ஆடரவின் வன்பிடர் நடம் பயின்ற நாதனே –

கானக வல் விளவின் காயுதிரக் கருதிக் கன்றது கொண்டு எறியும் கரு நிற வென் கன்றே –

விளங்கனியை இளங்கன்று கொண்டு உதிர எறிந்து –யுலகுண்ட காளை

விளங்கனி மேல் இளங்கன்று கொண்டு எறிந்த கூத்தர்

கற்றினம் மேய்த்துக் கனிக்கு ஒரு கன்றினை பற்றி எறிந்த பரமன்

கன்றதனால் விளவெறிந்து கனியுதிர்த்த காளை காமருசீர் முகில் வண்ணன்

ஆயர் புத்திரன் அல்லன் அரும் தெய்வம் –

வேயின் குழலூதி வித்தகனாய் நின்ற ஆயன் –

கார்க்கோடல் பூச் சூடி வருகின்ற தாமோதரா

யசோதை நல் ஆய்ச்சி தன புத்திரன் கோவிந்தனை

இந்த்ரன் போல் வரும் ஆய்ப்பிள்ளை

கோ நிரை மேய்த்தவனே எம்மானே

பட்டி மேய்ந்ததோர் காரேறு பல தேவற்கோர் கீழ்க் கன்றாய்

ஆவினை யன்று உய்யக் கொண்ட வாயர் ஏற்றை அமரரர்கள் தம் தலைவனை

கொண்டல் வண்ணனைக் கோவலனாய் வெண்ணெய் யுண்ட வாயன் என்னுள்ளம் கவர்ந்தானை அண்டர் கொண் அணி அரங்கன்

கன்று மேய்த்து இனிது உகந்த காளாய் –

ஆ மருவி நிரை மேய்த்த வமரர் கோமான் –

மனைசேர் ஆயர் குலமுதலே மா மாயனே மாதவா

பொரு சிறைப் புள்ளைக் கடாவிய மாயனை ஆயனைப் போர் சக்கரத்து தரியினை அச்சுதனை

இவ்வாயர் குலத்தை வீடுய்யத் தோன்றிய கரு மாணிக்கச் சுடர்

என்னுடைக் கோவலனே என் பொல்லாக் கரு மாணிக்கமே

திவத்திலும் பசு நிரை மேய்ப்பு உவத்தி செங்கனி வாய் எங்கள் ஆயர் தேவே

கோவலனாய் ஆநிரைகள் மேய்த்துக் குழலூதி மா வலனாய்க் கீண்ட மணி வண்ணன் –

குன்று எடுத்து ஆநிரை காத்த பிரான் கோவலனாய்

கோவலர் இந்திரற்கு காட்டிய சோறும் கறியும் தயிரும் கலந்து உடன் உண்டாய் –வாட்டமிலாப் புகழ் வாசுதேவா –

குன்று எடுத்து ஆநிரை காத்த வாயா கோ நிரை மேய்த்தவனே எம்மானே –

வண்ண மால் வரையே குடையாக மாரி காத்தவனே -மது சூதா -கண்ணனே –

வெற்பு எடுத்து மாரி காத்த மேக வண்ணன்-

குன்றம் ஏந்திக் குளிர் மழை காத்தவன் –பரன்

வேயின் குழலூதி வித்தகனாய் நின்ற ஆயன்-

கோலச் செந்தாமரைக் கண் மிளிரக் குழலூதியிசை பாடிக் குனித்து ஆயரோடு ஆலித்து வருகின்ற வாயப்பிள்ளை

கரும் சிறுக்கன் குழலூதின போது

நாகத்தணையான் குழலூத அமர லோகத்தளவும் சென்று இசைப்ப-

குழல் இருண்டு சுருண்டு ஏறிய குஞ்சிக் கோவிந்தனுடைய கோமள வாயில் குழல்-

அணி வேயின் குழலூதி வித்தகனாய் நின்ற ஆயர்கள் ஏற்றினை-

குடமாடு கூத்தா வேதப் பொருளே என் வேங்கடவா வித்தகனே-

கோத்து அங்கு ஆயர்தம் பாடியில் குரவை பிணைந்த எம் கோவலன்-

குரவை முன்னே கோத்தானை குடமாடு கூத்தன் தன்னை –எம்மானை-

குடமாடுவார் –தேவ தேவ பிரான்

குடமாடி உலகளந்த மாட்டார் பூங்குழல் மாதவனை

கோவிந்தன் குடக்கூத்தன் கோவலன்

குரவை கோத்த குழகனை மணி வண்ணனைக் குடக் கூத்தனை –

கொண்டல் வண்ணா குடக்கூத்தா வினையேன் கண்ணா என் அண்ட வாணா

சாளக்ராமமுடைய நம்பி சாய்த்துப் பருகிட்டுப் போந்து நின்றான்-

ஆயர்பாடி கவர்ந்து உண்ணும் குணுங்கு நாறிக் குட்டேற்றைக் கோவர்த்தனனை-

ஆய்ச்சி பாலையுண்டு மண்ணையுண்டு வெண்ணெய் யுண்டு பேய்ச்சி பாலையுண்டு பண்டு ஓர் ஏனமாய வாமனா —

கொண்டல் வண்ணனைக் கோவலனாய் வெண்ணெய் உண்ட வாயன் என்னுள்ளம் கவர்ந்தானை அண்டர் கோன் அணி யரங்கன் என் அமுதினை

ஆய்த்தாயர் தயிர் வெண்ணெய் அமர்ந்த கோவை அந்தணர் தம் அமுதத்தை

தயிர் வெண்ணெய் உளம் குளிர அமுது செய்து இவ்வுலகாண்ட காளை

ஆய்ச்சி வைத்த தயிர் வெண்ணெய் உண்டு உகந்த மாயோன்

கண்ணிக் குறும் கயிற்றால் கட்டுண்டான் ஆகிலும் எண்ணற்கு அரியன் இமையோர்க்கும்

வள வேழ் உலகின் முதலாய வானோர் இறையை கழ வேழ் வெண்ணெய் தொடு வுண்ட கள்வா

மாயோனே ஆயர் கொழுந்தாய் அவரால் புடையுண்ணும் மாயப்பிரானை என் மாணிக்கச் சோதியை

தாமோதரனைத் தனி முதல்வனை ஞாலம் உண்டவனை

ஆய்ச்சி யாகிய வன்னையால் அன்று வெண்ணெய் வார்த்தையுள் சீற்றம் உண்டு அழு கூத்தவப்பன்

மல்லரை சாவைத் தகர்த்த சாந்தணி தோள் சதுரன்

கஞ்சன் வயிற்றில் நெருப்பு என்ன நின்ற நெடுமாலே

கால நேமி காலனே

மா பிளந்த கைத்தலத்த கண்ணன்

கடம் கலந்தவன் கரி மருப்பொசித்து–நடம் பயின்ற நாதனே

கொம்பு ஒசித்து உகந்த வுத்தமா துரங்கம் வாய் பிளந்து மண்ணளந்த பாத —

விற்பெரு விழவும் கஞ்சனும் மல்லும் வேழமும் பாகனும் வீழ செற்றவன்

புள் வாய் பிளந்து எருதடர்த்த எந்தை –

கஞ்சனைக் கொன்று அன்று உலகமுண்டு உமிழ்ந்த கற்பகத்தை-

மல்லடர்ந்த்த மல்லா –

புள் வாய் பிளந்த புனிதா-

மல்லொடு கஞ்சனும் துஞ்ச வென்ற மணி வண்ணன்

கதியினைக் கஞ்சன் மாளக் கண்டு முன் அண்டமாளும் மதியினை மாலை –

பஞ்சவர் தூதனாய்ப் பாரதம் கை செய்து –அஞ்சன வண்ணனே-

பற்றார் நடுங்க முன் பாஞ்ச சன்னியத்தை வாய் வைத்த போரேறே என் சிற்றாயர் சிங்கமே

ஓர் தூது ஆதி மன்னர்க்காகி பெரு நிலத்தார் இன்னார் தூதன் என நின்றான்

கழல் மன்னர் கலங்கச் சங்கம் வாய் வைத்தான்

தேர் மன்னர்க்காய் அன்று தேரூர்ந்தான்

நீர்மையில் நூற்றுவர் வீய ஐவர்க்கு அருள் செய்ய நின்று பார் மல்கு சேனை யவித்த பரஞ்சுடரை

அறிவினால் குறைவில்லா அகல் ஞாலத்தவர் அறிய நெறி எல்லாம் எடுத்துரைத்த நிறை ஞானத்து ஒரு மூர்த்தி

நாடுடை மன்னர்க்குத் தூது செல் நம்பி

பிறந்த மாயா பாரதம் பொருத மாயா

அன்று பாரதப்போர் முடியப் பரி நெடும் தேர் விடும் கோனை

சரணம் அடைந்த தருமனுக்கா பண்டு நூற்றுவரை மரணம் அடைவித்த மாயவன்

நப்பின்னை தன் திறமா நல்விடை யேழவிய நல்ல திறலுடைய நாதனுமானவனே

பின்னை மணாளனை

ஆயர் பாவை நப்பின்னை தனக்கு இறை

பின்னை தன காதலன்

விடையோட வென்று ஆய்ச்சி மென் தோள் நயந்த விகிர்தா

எருத்து இறுத்த நல்லாயர் ஏறு

எருது ஏழ் அடர்த்த என் கள்ள மாயவனே கரு மாணிக்கச் சுடரே

அன்றுருவேழும் தழுவி நீ கொண்ட ஆய மகள் அன்பனே

பின்னை தோள் மணந்த பேராயா

அன்று அங்கு அமர் வென்று உருப்பிணி நங்கை அணி நெடும் தோள் புணர்ந்தான்

தண் பூ மரத்தினை வன்னாதப் புள்ளால் வலியப் பறித்திட்ட என்னாதன்

பல்லாயிரம் பெரும் தேவிமாரொடு பௌவம் எறிது வரை எல்லாரும் சூழச் சின்காசனத்தே இருந்தானை

பதினாறாமாயிரவர் தேவிமார் பணி செய்ய துவரை என்னும் அதில் நாயகராகி வீற்று இருந்த மணவாளர்

————–

ஸ்ரீ கிருஷ்ணாவதாரம் பற்றிய விசேஷ விஷயங்கள்
1-ஸ்ரீ கிருஷ்ண அவதாரம் -5235-வருஷங்களுக்கு முன்
2-பிறந்த நாள் -18th ஜுலை -3228-கி .மு –
3-பிறந்த மாதம் -ஆவணி -( ஸ்ரவணம் )
4-பிறந்த திதி -அஷ்டமி
5- பிறந்த நக்ஷத்ரம் -ரோஹிணி

6-பிறந்த கிழமை -புதன் கிழமை
7- பிறந்த நேரம் -இரவு 00-00 A M –
8- இங்கு இருந்து அருளியது –125 வருஷங்கள் -8 மாதங்கள் -7 நாள்கள்
9- தன்னுடை ஜோதிக்கு எழுந்து அருளிய நாள் -18th February 3102 கி மு
10-குருஷேத்ரா யுத்தம் -இவரது 89 -திரு நக்ஷத்திரத்தில்

11-மஹாபாரத யுத்தம் முடிந்து மேல் 36 திருநக்ஷத்ரங்கள் இங்கே இருந்து அருளி உள்ளார்
12-குருஷேத்ர யுத்தம் தொடக்கம் மிருகசீர்ஷ ஏகாதசி -3139 கி மு –8th Dec -முடிவு -25 th Dec
13-சூர்ய கிரஹணம் –21 st Dec -ஜெயத்ரன் முடிவு
14- பீஷ்மர் உயிர் நீத்தது -முதல் உத்தராயண ஏகாதசி -2nd -Feb –3138 கி மு

15-ஸ்ரீ வடமதுரை தேவகி வஸூதேவ புத்ரன்
16-ஸ்ரீ ஜெகன்நாத் -ஒரிசா
17-ஸ்ரீ நாதன் ராஜஸ்தான்
18-ஸ்ரீ துவாரகா தீசன் -குஜராத்
19-ஸ்ரீ உடுப்பி கிருஷ்ணன் கர்நாடக
20-ஸ்ரீ குருவாயூரப்பன் -கேரளா

21-ஸ்ரீ நந்தன் மதலை யசோதை இளஞ்சிங்கம் கோபீ வல்லபன் -திருவாய்ப்பாடி
22-நம்பி மூத்த பிரானின் தம்பி சுபத்ரா -தங்கை
23–ஸ்ரீ ருக்மிணி பிராட்டி -ஸ்ரீ சத்யபாமா பிராட்டி -ஸ்ரீ ஜாம்பவதி பிராட்டி -ஸ்ரீ காளிநிதி பிராட்டி –
ஸ்ரீ மித்ரவிந்தா பிராட்டி -ஸ்ரீ நக்நஜிதி பிராட்டி -ஸ்ரீ பத்ரா பிராட்டி -ஸ்ரீ லஷ்மணா பிராட்டி அஷ்ட திவ்ய மஹிஷிகள்

24) சாணூர -கம்ச -சிசுபால -தந்த்ரவத்ரன் -நால்வர் மட்டுமே கொல்லப்பட்டார்கள்

25- ஸ்ரீ ப்ருந்தாவனத்துக்கு ஒன்பதாவது திரு நக்ஷத்திரத்தில் –சென்று 20 மாதங்கள் அங்கேயே எழுந்து அருளி இருந்தான்
26-பின்பு வடமதுரை சென்று கம்சவதம் முடித்து தாய் தந்தை கால் விலங்கு விடுவித்து அருளினான்
27-ஸ்ரீ துவாரகா நிர்மாணம்
28-ஸ்ரீ சாந்தீபினி இடம் ஆய கலைகள் 60 தனது -16-18-திருநக்ஷத்ரத்தில் கற்றான்

——–

சர்வம் கிருஷ்ணார்ப்பணம் -ஸ்ரீ கீதா சாரமே இதுவே –

யத் கரோஷி யதஸ்நாஸி யஜ்ஜுஹோஷி ததாஸி யத்
யத் தபஸ்யஸி கௌந்தேய தத் குருஷ்வ மதர்பணம்–9-27-

கௌந்தேய-குந்தி மகனே!
யத்கரோஷி-எந்த கர்மத்தை செய்கிறாயோ,
யதஸ்நாஸி-எதை உண்கிறாயோ,
யத் ஜுஹோஷி-எதை ஹோமம் செய்கிறாயோ,
யத் ததாஸி-எதை தானம் அளிக்கிறாயோ,
யத் தபஸ்யஸி-எந்த தவம் செய்கிறாயோ,
தத் மதர்பணம் குருஷ்வ-அதை எனக்கு அர்ப்பணம் செய்து விடு.

நீ எது செய்யினும், எதனை நீ உண்பினும், எதை நீ ஓமம் பண்ணினும், எதனைக் கொடுத்தாலும்,
எத்தவத்தைச் செய்தாலும், குந்தி மகனே, கடவுளுக்கு அர்ப்பணமென்று செய்.

ஸர்வகர்மாண்யபி ஸதா குர்வாணோ மத்வ்யபாஸ்ரய:
மத்ப்ரஸாதாதவாப்நோதி ஸாஸ்வதம் பதமவ்யயம்–18-56-

மத்வ்யபாஸ்ரய:-என்னையே சார்பாகக் கொண்டோன்,
ஸர்வ கர்மாணி-எல்லாத் தொழில்களையும்,
ஸதா குர்வாண: அபி-எப்போதும் செய்து கொண்டிருந்தாலும்,
மத்ப்ரஸாதாத்-எனதருளால்,
ஸாஸ்வதம் அவ்யயம் பதம்-அழிவற்ற நித்தியப் பதவியை,
அவாப்நோதி-எய்துகிறான்.

எல்லாத் தொழில்களையும் எப்போதும் செய்து கொண்டிருந்தாலும், என்னையே சார்பாகக் கொண்டோன்
எனதருளால் அழிவற்ற நித்தியப் பதவியை எய்துகிறான்.

சேதஸா ஸர்வகர்மாணி மயி ஸந்ந்யஸ்ய மத்பர:
புத்தியோகமுபாஸ்ரித்ய மச்சித்த: ஸததம் பவ–18-57-

ஸர்வகர்மாணி-செயல்களை யெல்லாம்,
சேதஸா-அறிவினால்,
மயி ஸந்ந்யஸ்ய-எனக்கெனத் துறந்துவிட்டு,
புத்தியோகம் உபாஸ்ரித்ய-புத்தி யோகத்தில் சார்புற்று,
மத்பர:-என்னிடத்தே ஈடுபட்டு,
ஸததம் மத் சித்த: பவ-எப்போதும் என்னைச் சித்தத்தில் கொண்டு இரு.

அறிவினால் செயல்களை யெல்லாம் எனக்கெனத் துறந்துவிட்டு, என்னிடத்தே ஈடுபட்டு, புத்தி யோகத்தில் சார்புற்று,
எப்போதும் என்னைச் சித்தத்தில் கொண்டு இரு.

64. ஸர்வகுஹ்யதமம் பூய: ஸ்ருணு மே பரமம் வச:
இஷ்டோऽஸி மே த்ருடமிதி ததோ வக்ஷ்யாமி தே ஹிதம்

ஸர்வகுஹ்யதமம்-எல்லாவற்றிலும் ஆழ்ந்த ரகசியமாகிய,
மே பரமம் வச:-என்னுடைய பரம வசனத்தை,
பூய: ஸ்ருணு-மீட்டுமொருமுறை கேள்,
மே த்ருடம் இஷ்ட: அஸி-நீ திடமான நண்பன்,
தத: ஹிதம் இதி தே வக்ஷ்யாமி-ஆதலால் நல்லது என்று உனக்கு சொல்லுகிறேன்.

மீட்டுமொருமுறை எல்லாவற்றிலும் ஆழ்ந்த ரகசியமாகிய எனது பரம வசனத்தைக் கேள்.
நீ திடமான நண்பன். ஆதலால் உனக்கு ஹிதத்தைச் சொல்லுகிறேன்.

நீருக்குள் மிக ஆழமான இடத்தில் எல்லாரும் மூழ்கிப் பார்க்கமுடியாது. அதில் வல்லமை பெற்றவர்க்கே அது இயலும்.
இப்பொழுது பகவான் புகட்டுகிற கோட்பாடு மிகவும் ஆழ்ந்தது. ஏனென்றால் அது ஜீவனுக்குச் சிறப்பை அளிக்கவல்லது.
சிரேயஸைப் பெறவேண்டும் என்று அர்ஜுனன் ஆரம்பத்தில் விண்ணப்பித்தான்.
அதைப் பெறுதற்கு உற்ற வழி இப்பொழுது புகட்டப்படுகிறது. அதைக் குறித்து அவர் பகரும் சொல்லானது-
பரமம் வசனம்- மேலாம் மொழியாகிறது. மகாவாக்கியம் என்று அதை இயம்பலாம்.
வேதங்களில் உள்ள மகா வாக்கியங்கள் ஞானிகளால் நவிலப்பட்டவை. இது பரமாத்மாவானவர் தாமே பகர்கின்ற சொல்லாகிறது.
ஏற்கனவே இயம்பிய கோட்பாட்டை முடிவுரையில் அவர் சித்தாந்தப்படுத்துகிறார்.

புறவுலகின் அமைப்புப் பலர்க்கு மறைபொருளாயிருப்பது போன்று மனத்தகத்து உள்ள தெய்வீக மாண்பும் மறைபொருளாயிருக்கிறது.
எல்லார் உள்ளத்திலும் உறைந்திருக்கும் நல்ல உறவு ஆகின்றான் இறைவன்.
உயிர்களை உய்விப்பதற்கென்றே அவனுடைய அருள் இயங்குகிறது. இயற்கையில் நிகழ்கின்ற நிகழ்ச்சிகள்
அனைத்தும் முடிவில் அந்த ஒரு காரியத்தை நிறைவேற்றி வைக்கின்றன. ஒன்றுக்கும் உதவாத ஜீவனைத்
தனக்கு உகந்தவனாக்கிப் பிறகு அவனைத் தெய்வம் தன்மயமாக்குகிறது. இயற்கையென்னும் பெரிய
தொழிற்சாலையில் இந்த அரும்பணியானது ஓயாது நிகழ்ந்துகொண்டிருக்கிறது.
மக்கள் காலில் மிதியுண்டு ஒன்றுக்கும் உதவாத செத்தையாகப் போகக்கூடிய நாணல் ஒன்றைக் கண்ணன்
கையில் எடுத்துப் புல்லாங்குழலாக மாற்றுகிறான். பிறகு அவன் அதில் உண்டு பண்ணும் கானமோ
மண்ணுலகத்தவரை விண்ணுலகுக்குக் கொண்டுபோக வல்லது. ஜடப்பொருளில் அவன் செய்யும் ஜாலம் அத்தகையது.
பிறகு சேதன வஸ்துவாகிய ஜீவனைத் தனக்குரியவன் என்றே அவன் ஆட்கொள்கிறான்.
இனி, இதிலும் ஆழ்ந்ததொரு கருத்து இயற்கையின்கண் உளது. அது அடுத்த சுலோகத்தில் வருகிறது.

உண்மையான பக்தன் ஒருவன் ஈசுவரனை எவ்விதம் காண்கிறான்? பிருந்தாவனத்திலுள்ள கோபஸ்திரீகள்
ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவை ஜகந்நாதனாகக் காணாமல் அவர்களுடைய பிரிய கோபிநாதனாகவே கண்டதைப்போல,
பக்தனும் ஈசுவரனைத் தனது நெருங்கிய பிரிய பந்துவாகவே காண்கிறான்.

பகவான் புகட்டும் நலம்தான் யாது? விடை வருகிறது :

65. மந்மநா பவ மத்பக்தோ மத்யாஜீ மாம் நமஸ்குரு
மாமேவைஷ்யஸி ஸத்யம் தே ப்ரதிஜாநே ப்ரியோऽஸி மே

மந்மநா பவ-உன் மனதை எனக்காக்குக,
மத்பக்த:-என் தொண்டனாகுக,
மத்யாஜீ-எனக்கென வேள்விசெய்க,
மாம் நமஸ்குரு-என்னையே வணங்குக,
மாமேவ ஏஷ்யஸி-என்னையெய்துவாய்,
ஸத்யம் தே ப்ரதிஜாநே-உண்மை இஃதே, உனக்கிது சபதமுரைக்கிறேன்,
மே ப்ரிய: அஸி-எனக்கு இனியவனாக இருக்கிறாய்.

உன் மனதை எனக்காக்குக. என் தொண்டனாகுக. எனக்கென வேள்விசெய்க. என்னையே வணங்குக.
என்னையெய்துவாய், உண்மை இஃதே, உனக்கிது சபதமுரைக்கிறேன், நீ எனக்கினியை.

ஸர்வதர்மாந்பரித்யஜ்ய மாமேகம் ஸரணம் வ்ரஜ
அஹம் த்வாம் ஸர்வபாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மா ஸுச:–18-66

ஸர்வதர்மாந் பரித்யஜ்ய-எல்லா அறங்களையும் விட்டு விட்டு,
மாம் ஏகம் ஸரணம் வ்ரஜ – என்னையே சரண் புகு,
ஸர்வபாபேப்ய:-எல்லாப் பாவங்களினின்றும்,
அஹம் த்வாம் மோக்ஷயிஷ்யாமி-நான் உன்னை விடுவிக்கிறேன்,
மா ஸுச:-துயரப்படாதே.

எல்லா அறங்களையும் விட்டு விட்டு என்னையே சரண் புகு. எல்லாப் பாவங்களினின்றும்
நான் உன்னை விடுவிக்கிறேன். துயரப்படாதே.

ய இமம் பரமம் குஹ்யம் மத்பக்தேஷ்வபிதாஸ்யதி
பக்திம் மயி பராம் க்ருத்வா மாமேவைஷ்யத்யஸம்ஸய:–18-68-

ய: மயி பராம் பக்திம் க்ருத்வா-எவன் என்னிடம் உயர்ந்த பக்தி செலுத்தி,
இமம் பரமம் குஹ்யம்-இந்தப் பரம ரகசியத்தை (கீதையை),
மத்பக்தேஷு ய: அபிதாஸ்யதி-என் பக்தர்களிடையே சொல்லுவோனோ,
மாம் ஏவ ஏஷ்யதி-என்னையே எய்துவான்,
அஸம்ஸய:-ஐயமில்லை.

இந்தப் பரம ரகசியத்தை என் பக்தர்களிடையே சொல்லுவோன், என்னிடத்தே பரம பக்தி செலுத்தி
என்னையே எய்துவான். ஐயமில்லை.

————

காயேன வாசா மனஸேந்த்ரியைா் – வா புத்த்யாத்மனா வா ப்ரக்ருதே: ஸ்வபாவாத் l
கரோமி யத்யத் ஸகலம் பரஸ்மை நாராயணாயேதி ஸமா்ப்பயாமி ll

சரீரத்தாலோ,வாக்காலோ,மனத்தாலோ,கருமேந்திரியங்களாலோ, ஞானேந்திரியங்களாலோ,
இயற்கையின் இயக்கத்தாலோ எது எதைச் செய்கின்றேனோ
அது எல்லாவற்றையும் பரம புருஷனாகிிய நாராயணனுக்கே என்று ஸமா்ப்பிக்கிறேன்

————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –