ஸ்ரீ விஷ்ணு புராணம் முதல் அம்சம்—நான்காம் பாகம் –

21. தனு முதலியோர் வமிச வரலாறு
22. தேவரதிகாரமும் பகவத் மகிமையும்

————–

21. தனு முதலியோர் வமிச வரலாறு

மைத்ரேயரே! இத்தகைய புகழ்மிக்க பிரகலாதனனுக்குச் சிபிபாஷ்கலன், விரோசனன் என்ற மூன்று பிள்ளைகள் பிறந்தார்கள். விரோசனனுக்கப் பலிச் சக்கரவர்த்தி பிறந்தான். பலிக்கு பாணாசுரன் முதலிய நூறு பிள்ளைகள் பிறந்தனர். இது நிற்க, இரணியாட்சனுக்குச் சர்ச்சுரன் சகுனி, பூதசந்தாயனன், மகாநயான், மஹாபாஹி, காலநாபன் என்ற பிள்ளைகள் அறுவர் பிறந்தார்கள். இது திதியின் வமிசமாகும். இனி காசிபருக்குப் பாரியையான தனு முதலிய பெண்களின் வமிசங்களைச் சொல்கிறேன்; கேளுங்கள் தனு என்பவளுக்கு துவிமூர்த்தா, சம்பரன் அஜோமுகன், சங்குசிரன், கபிலன், சங்கரன், ஏகவத்திரன், தாரகன், சொர்ப்பானு, விருஷர்பர்வா, புலோமன், விப்ரசித்தி முதலிய அதிபலசாலிகளான பிள்ளைகள் பிறந்தார்கள். அவர்களிலே சொர்ப்பானுவுக்குப் பிரபை என்பவளும் விருஷபர்வாவுக்குச் சர்மிஷ்டையென்பவளும், வைசுவாநாதனுக்கு உபதாநவி அயசிரை புலோமை காலகை என்ற நான்கு கன்னிகைகளும் பிறந்தார்கள். அவர்களில் புலோமை, காலகை என்பவர்கள் மரீசிக்கு மனைவியாயினர். அவர்களுக்கு புலோலமர், காலகேயர் என்ற புகழ்பெற்ற அறுபதினாயிரம் பிள்ளைகள் பிறந்தார்கள். இரணியனுக்குச் சகோதரியான சிம்ஹிகை என்பவள் விப்பிரசித்திக் மனைவியாகி திரியமிசன் சல்லியன் நபன் வாதாவி இல்லலன், நமுசிககிருமன், அந்தகன், நரகன், காலநாபன் ராகு என்ற மகாசக்தியுள்ள பிள்ளைகளைப் பெற்றான். இவ்விதமாகத் தனுவென்பவனின் வமிச்தி மகாபலசாலிகளான அசுரர்கள் பலர் பிறந்தார்கள். இவர்களுக்கு சஹஸ்ர சங்கைகளாகப் புத்திர பவுத்திர சந்தானங்கள் உண்டாயின. முன்பு நான் சொன்னது போல ஆத்ம ஞானியான பிரகலாதாழ்வானின் வமிசத்தில் நிவாதகவசர் என்ற தைத்தியர் தோன்றினர். தாம்பரை என்பவளுக்குக் காசிபர் மூலமாக சுதி, சேனி, பரசி, சுக்ரீவை கிருத்தரி, சுசி என்ற ஆறுபெண்கள் பிறந்தார்கள். அவர்களில் சுகிக்குக் கோட்டான்களும், காக்கைகளும் பிறந்தன. சேனி என்பவளுக்குப் பருந்துகளும், பரசிக்குச் செம்போத்துகளும், கிருத்திரிக்கு கழுகுகளும்; சுகிக்குத் தண்ணீர்ப் பறவைகளும், சுக்ரீவைக்குக் குதிரைகளும் ஒட்டகங்களும் பிறந்தன. இது தாம்பரையின் வமிச விபரமாகும். இனி, விந்தைக்குக் கருடன், அருணன் என்ற இரண்டு புத்திரர்கள் பிறந்தார்கள். அவர்களில் கருடன் சர்ப்பங்களைப் புசிப்பவனாய் கடூரமான ரூபமுடையவனாய் பறவையினத்துக்கெல்லாம் உயர்ந்தோனாய் புகழ்பெற்றிருந்தான். சுரசை என்பவளுக்கு ஆகாயத்தில் பறக்கும் ஆற்றலுடைய ஆயிரம் பாம்புகள் பிறந்தன. கத்துருவுக்குப் பலமும் தேஜசுடைய அநேக பணமண்டல மண்டிதங்களாயுள்ள அநேகம் நாகங்கள் உண்டாயின. அவை கருடனுக்கு வயப்பட்டிருந்தன. அந்த நாகர்களில் சேஷன், வாசுகி, தக்ஷகன், சங்கன், சுவேகன், மகாபத்மன், கம்பளன், அசுவதரன், ஏலாபுத்திரன், கார்க்கோடகன், தனஞ்சயன் என்போர் முக்கியமானவர்கள். அவர்கள் விஷச்சுவாலையோடும் தந்தங்களுடனும் கூடிய முகங்களோடும் விளங்குவார்கள்.

குரோதவசை என்பவளுக்குப் பதினாயிரம் ராட்சச சர்ப்பங்களும், நிலத்திலும் நீரிலும் சஞ்சரிக்கும் பறவைகளும் பிறந்த குரோதவச கணம் என்ற பெயரைப் பெற்றார்கள். அவர்கள் அனைவரும் மிகவும் கோரமானவர்கள். சுரபி என்பவளுக்கு மரங்களும், கொடிகளும், புற்களும் உண்டாயின. சுஷை என்பவளுக்கு யட்ச ராட்சதர்களும், மனு என்பவளுக்க அப்சரசுகளும், அரிஷ்டை என்பவளுக்கு மகாபலசாலிகளான கந்தர்வர்களும் பிறந்தார்கள். இந்தவிதமாக தாவர ஜங்கமங்களான காசிபரின் சந்தானங்களையெல்லாம் சொன்னேன். அவர்களுடைய புத்திர பவுத்திராதி சந்ததிகளோ எண்ணமுடியாத அளவில் பெருகின. மைத்ரேயரே! இது சுவாரோசிஷ மனுவந்தரத்துப் படைப்பாகும். இனி வைவஸ்வத மனுவந்திரத்தில் வருணன் ஒரு யாகம் நடத்த, அதில் சதுர்முகப் பிருமன் ஹோதாவாகி அதை நிர்வாகம் செய்தான். அப்போது பிரஜா சிருஷ்டி செய்தவிதத்தை விவரமாகக் கூறுகிறேன் கேளுங்கள். தேவ, ரிஷி, கந்தர்வ பன்னகாதிகளுக்கும் பிதாமகனான சதுர்முகன் நூதன சிருஷ்டி செய்ய காலம் பெறாமல் பூர்வத்தில் சுவாரோசிஷ மனுவந்தரத்திலே தன் சங்கல்பத்தால் உண்டான சப்தரிஷிகளை நோக்கி, வைவசுவத மனுவந்தரத்திலே நீங்களே பிரஜைகளைப் படையுங்கள்! என்று நியமித்தான். இவர்களும் அப்படியே செய்தனர். இது நிற்க. தேவர் தேவதைகளினாலே அசுரர்கள் எல்லாம் விநாசமாய்ப் போனதால், திதி என்பவள் புத்திர சோகமடைந்து அநேக காலம் தன் கணவரான காசிபரை ஆராதித்து வந்தாள். அவர் அதனால் மகிழ்ந்து திதியை நோக்கி, பெண்ணே! உனக்கு பிரியமான வரத்தைக் கேள்! என்றார். அதற்கு அவள், எனக்கு இந்திரனைச் சங்கரிக்கத் தக்கவனான ஒரு மகன் உண்டாக வேண்டும் என்று பிரார்த்தித்தாள். அதைக் கேட்டதும் காசிபமுனிவர் அவளைப் பார்த்து எனது பிரிபுத்தினியே; உனக்கு இந்திரனை சங்கரிக்கத்தக்க மகன் வேண்டும் என்றால் நூறு ஆண்டுகள் சம சித்தத்துடன் சுசியாய்க் கர்ப்பத்தைத் தரித்திருக்க வேண்டும். அப்படிச் செய்தால் உன் விருப்பப்படி மகன் ஒருவன் பிறப்பான் என்று சொல்லி, அவளுடன் கூடிக் கலந்தார். அதனால் அவருடைய மனைவி கருவுற்று நித்தியமும் சுசியாய் விரதம் அனுஷ்டித்து வந்தாள். இப்படியிருக்க இந்தச் செய்தியை இந்திரன் அறிந்தான். உடனே அவன் சூழ்ச்சி செய்து அந்த ரிஷிபத்தினியின் அருகில் வந்து இருந்து; அவளுக்குப் பணிவிடைகள் செய்து கொண்டு அவளது கர்ப்பத்தை சிதைக்கச் சமயம் பார்த்துக் கொண்டிருந்தான். இப்படியிருக்க சிலநாள் குறைய நூறு ஆண்டுகள் நிறையும் காலத்தில் ஒருநாள் திதிதேவி பாதசுத்தி செய்யாமல் படுக்கையில் படுத்து நித்திரை செய்தாள். அப்போது இந்திரன் அவள் சுத்தமில்லாமல் அசுசியாக இருப்பதையறிந்து வஜ்ராயுதத்தை எடுத்துக்கொண்டு; அவள் வயிற்றிலே சூட்சும ரூபத்துடன் சென்று அந்தக்கர்ப்பத்தை ஏழு துண்டுகளாகத் துண்டித்தான். அப்போது அந்தச் சிசு, பெருஞ்சப்தத்துடன் ரோதனம் செய்ய இந்திரன், ரோதனம் செய்யாதே என்று பலமுறைகள் கூறி கோபங்கொண்டு அந்த ஏழு துண்டுகளையும் மறுபடியும் எவ்வேழாகத் துண்டித்தான். அந்த நாற்பத்தொன்பது துண்டங்களுக்கும் மரோதி (ரோதனம் செய்யாதே) என்று சொன்ன காரணத்தால் மருத்துக்கள் என்ற நாமதேயம் உண்டாயிற்று. பிறகு, அந்த மருத்துக்கள் விவேக சத்துவ சம்பன்னராய் இந்திரனுக்கு உதவலானார்கள்.

———————

22. தேவரதிகாரமும் பகவத் மகிமையும்

மைத்ரேயரே! பூர்வத்தில் மிருது மாமன்னன் மாமுனிவர்களால் முடிசூட்டப் பெற்ற போது கிரக நட்சத்திரங்களுக்கும் ஓஷதிகளுக்கும் பிராமணர்களுக்கும் வேள்விகளுக்கும், தவங்களுக்கும், சந்திரனை அரசாக பிருமதேவன் நியமித்தான். குபேரனை ராஜாக்களுக்கு அதிபதியாகவும் வருணனை ஜலத்துக்கு அதிபதியாகவும், விஷ்ணு என்னும் சூரியன் ஆதித்யர்களுக்கும் அதிபதியாகவும், தக்ஷனை கர்த்தமர் முதலிய பிரஜாநாகருக்கு அதிபதியாகவும், இந்திரனை வசு ருத்திர, ஆதித்திய பிரமுகமான தேவதைகளுக்கு அதிபதியாகவும், பிரகலாதனைத் தைத்யதானவருக்கு அதிபதியாகவும், யமதர்மனை பிதுர்தேவதைகளுக்கு அதிபதியாகவும், ஐராவதத்தை யானைகளுக்கு அதிபதியாகவும், வாசுகியை பாம்புகளுக்கெல்லாம் அரசாகவும் விருஷப ராஜனைப் பசுக்களுக்கு அதிபதியாகவும், ஹிமவானை மலைகளுக்கு அரசாகவும், கபிலரை முனிவர்களுக்கு அரசாகவும், சிங்கத்தை மிருகங்களுக்கு அதிபதியாகவும், கல்லால மரத்தை மரங்களின் அரசாகவும் ஏற்படுத்தி, இவ்விதமாக அந்தந்த சாதிகளுக்குத் தக்கபடி தலைவர்கள் ஆகும்படி ராஜ்யாதிபத்யங் கொடுத்தருளினான். இப்படிச் செய்த பிறகு அந்த பிரம்மா வைராசப் பிரஜாதிபதியின் குமாரனான சுதன்வாவைக் கீழ்த்திசைக்கு அதிபதியாகவும், கர்த்தமப் பிரஜாபதியின் தனயனான சங்கபதனை தென்திசைக்கு அதிபதியாகவும், ரஜசு என்ற பிரஜாபதியின் மகனான கேதுமா என்பவனை மேலைத்திசைக்கு அதிபதியாகவும், பர்வசன்யப் பிரஜாபதியின் மகனான ஹிரண்யரோமா என்பவனை வடதிசைக்கு அதிபதியாகவும் நியமித்தான். அவர்களால் தீவுகள், சமுத்திரங்கள், மலைகள் ஆகியவற்றுடன் கூடிய பூமண்டலம் யாவும், இது வரையில் தங்கள் எல்லைகளிலே தர்மமாக பரிபாலிக்கப்பட்டு வருகின்றன. இப்போது நான் சொன்னவர்களும் மற்ற அரசர்களும் ஜகத்தை ரக்ஷிப்பதில் புகுந்துள்ள ஸ்ரீமந்நாராயணனுடைய விபூதியாக இருப்பவர்கள் என்று அறிந்து கொள்வீராக. பூர்வத்தில் இருந்தோரும் இப்போது இருப்போரும் இனிமேல் உண்டாவோருமான பூதாதிபதிகள் யார் யாருண்டோ அவர்கள் அனைவரும் சர்வமயனாக இருக்கும். விஷ்ணுவின் அம்ச பூதர் என்று அறிவீராக. தேவ, தானவ பைசாச மானுட, பட்சி, மிருக, பன்னதாதிபதிகளும், கிரகாதிபதிகளும் விருட்ச பருவதாதிபதிகளுமாக இருப்போரும், சென்றோரும் உண்டாவோரும், யாவரும் சர்வ பூதமயனான ஸ்ரீவிஷ்ணுவின் அமிச பூதரேயன்றி வேறல்ல.

மைத்ரேயரே! ஜகத் ரட்சண தீட்சிதனும், சர்வேசுவரனுமான ஸ்ரீஹரியைத் தவிர யாருக்கும் காக்கும் திறமையில்லை இதுமட்டுமல்ல. அவன் சத்துவ குணாச்ரியமான சொரூபத்தோடு எப்படி ஜகத்தை ரட்சிக்கிறானோ அப்படியே ராஜச தாமச குணங்களை அங்கீகரித்துப் படைப்புக் காலத்தில் படைப்புக் கர்த்தாவாகிச் சங்காரஞ்செய்துகொண்டும் இருக்கிறான். அந்த ஜனார்த்தனன் சிருஷ்டியிலும் நான்கு வகையின்னாய் அப்படியே ஸ்திதி சங்காரங்களிலும், நந்நான்கு பேதமுடையவனாகவும் இருக்கிறான். எப்படியெனில் முதல் அம்சத்தில் பிரமாவாகவும், இரண்டாவது அம்சத்தில் மரீசிப் பிரஜாபதிகளாகவும், மூன்றாவது அம்சத்தில் காலமாயும், நான்காவது அம்சத்தில் சகலபூதங்களாயும், ரசோகுணத்தை ஆஸ்ரயித்துப் படைப்பான். ஸ்திதிக் காலத்தில் சத்தவ குணாசிரயமான முதலமிசத்தினால் நானாவித திவ்ய அவதார ரூபிராயும், இரண்டாவது அம்சத்தினால் மனுவாதி ரூபியாயும், மூன்றாவது அம்சத்தில் காலரூபியாயும், நான்காவது அம்சத்தில் சகல பூதங்களிலிருந்தும் ரட்சிப்பான். சங்கார காலத்தில் தமோ குணத்தை ஆஸ்ரயித்து முதலம்சத்தால் ருத்ரரூபத் தரித்தும், இரண்டாவது அம்சத்தால் அக்னி; வாயு, அந்தகாதி ரூபங்களைக் கொண்டும், மூன்றாவது அம்சத்தால் காலசொரூபந் தரித்தும், நான்காவது அம்சத்தில் சர்வபூத அந்தரியாமியாக இருந்தும் சங்கரிப்பான். மைத்ரேயரே! இவ்விதமாகக் கல்பந்தோறும் படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய கிரியைகளில் எம்பெருமானுக்கு நந்நான்கு பேதங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன. பிருமாவும் தஷாதிகளும் காலமும் சகல பூதங்களும் ஸ்ரீவிஷ்ணுபகவானுடைய லோகசிருஷ்டி ஹேதுக்களான லீலா விபூதிகளாகும். உபேந்திராதியவதார சொரூபங்களும் மனு முதலானவர்களும் காலமும் சகல பூதங்களும் ஸ்ரீவிஷ்ணுவினுடைய லோக சங்கார காரணங்களான விபூதிகளாகும். பிரம்மாவும் மரீசி முதலிய பிரஜாபதிகளும் ஆதிகாலம் முதலாகப் பிரளயகாலம் வரையிலும் சதுர்வித பூதசாதங்களைப் படைத்து வருகிறார்கள். ஆதிகாலத்தில் பிரம்மாவினாலும் இடையிலே மரீசி முதலிய பிரஜாபதிகளாலும் பிறகு அந்தந்த ஜந்துக்களாலும் படைக்கப்பட்டு வருகின்றன. படைப்புக்கெல்லாம் முக்கிய காரணம் காலம் கால சக்தியல்லாமல் பிரம்மாவும் தக்ஷõதிகளும் பிரஜைகளும் படைக்கமாட்டார்கள். ஸ்திதியும் இப்படியே கால சக்தியில்லாமல் நடைபெறாது.

பிரளயத்திலே ருத்திராதிகளும் கால சக்தியின்றி சங்கரிக்கமாட்டார்கள். மைத்ரேயரே! அநேக வார்த்தைகளினால் பிரயோசனமென்ன? எதனால் எது படைக்கப்படுகிறதோ, அந்தப் படைக்கப்படும் வஸ்துவின் படைப்பைக் குறித்துக் காரணமாக இருக்கும் அந்த வஸ்துவெல்லாம் எம்பெருமானின் திருமேனியேயாகும். இதுபோலவே, ஒன்றைச் சங்கரிக்கின்ற வஸ்து எதுவுண்டோ அதுவும் சங்கார ஹேதுவான ஜனார்த்தனனுடைய வுத்திர ரூபமாகும். ஸ்ரீவிஷ்ணுவே, சிருஷ்டியும் ரக்ஷணையும் சங்காரமும் செய்யும் ஜீவன்களுக்கு அந்தரியாமியாகிச் சிருஷ்டி, ஸ்திதி, சங்காரங்களைச் செய்தருளுகிறான். இந்தவிதமாகவே சத்துவ, ராஜச, தமோ குணங்களில் புகுந்து சிருஷ்டிக்காலம் முதலிய காலங்களினால் மூன்றுவிதமாக இருக்கிற பிரம்மாதி ஸ்தாவாரந்தமான நாராயணனுடைய ரூபத்தை விவரித்தேன். இனிமேல் முக்தஜீவமயமான அவனுடைய ரூப அந்தரத்தைச் சொல்கிறேன் கேளுங்கள். பிரகிருதி குணவர்ச்சிதமும் ஞானகுணவத்தும் சுயம்பிரகாசமும் உபமான ரகிதமும், சகலபூத வியாபகமும், பிரம்மாதி ஜீவசாதங்களைவிட உயர்ந்த முக்த ஜீவ ஸ்வரூபமும் ஸ்ரீமந்நாராயணனுடைய பரஸ்வரூபம் என்று வழங்கப்படும். அதுவும் நான்குவிதமாக இருக்கும். இவ்வாறு பராசர மகரிஷி கூறிவிரும்போது, மைத்ரேயர் குறுக்கிட்டு முனிவரே! ஞானமயமாய், நாராயணனுக்குச் சரீரபூதமான முக்த சொரூபம் நான்குவிதம் என்றீர்களே, அதைச்சற்று விளக்கமாகக் கூறவேண்டும்! என்று வேண்டினார். அதற்குப் பராசரர் பின்வருமாறு விளக்கம் கூறலானார். மைத்ரேயரே! உலகத்தில் விருப்பதற்கு உரிய பொருளைச் சம்பாதிப்பதற்குக் கருவியாக இருப்பது சாதனம் என்றும், இஷ்டவஸ்துவானது சாத்தியம் என்றும் சொல்லப்படும். மோட்சத்தை விரும்பும் யோகிகளுக்கு பிராணயாமம் போன்றவை சாதனமாயும் பரப்பிரம்மமானது சாத்தியமாகவும் உள்ளன. யோகிகளுக்கு முக்தி நிமித்தமாக யோக சாஸ்திரத்தினாற் பிறந்த பிராணாயாமம் முதலிய சாதனங்களுடைய ஞானமானது அந்த ஞானமய ஸ்வரூபத்திற்கு முதல் பேதமாகும். பாதமோட்சனார்த்தமாக யோகப் பயிற்சி செய்து கொண்டிருப்பவனுக்கு சாத்தியமாய் சாஸ்திரத்தினால் உண்டான ஆன்ம விஷயமான ஞானமானது இரண்டாவது பேதமாகும். இவ்விரண்டும் சாத்திய சாதன சம்பந்தத்தினாலே சேர்ந்ததாய், தேவ மனுஷியாதி பேதமில்லாத ஆன்மாவைப் பற்றி வியாபித்திருக்கிற தியான ரூபமான ஞானமானது மூன்றாவது பேதம். இந்த மூன்று வகையான ஞானங்களுக்கும் சாதனமாக இருத்தலாகிய விசேஷம் யாது உண்டோ அதைத் தள்ளுதலினாலே தோன்றும் ஆத்மசாட்சாத்காரமானது நான்காவது பேதம்! இந்த ஞானம் பொருளான ஆன்ம ஸ்வரூபமானது சாதனா அனுஷ்டானம் இல்லாததாய் ரூபாதிகளுக்கு கோசரமாகத்தாய் சுருக்கமின்றி வியாபித்திருப்பதாய், உபமான ரகிதமாய், தன்னாலேயே அறியத்தக்கதாய், விருத்தி க்ஷயாதிகளற்றதாய், குறிகளால் அறியப்படாததாய், உணவாசை முதலிய ஆறு ஊர்ஜிகமற்றதாய் பற்றாததாய் நின்று ஞானமயனான ஸ்ரீவிஷ்ணுபகவானுக்கு பிரமம் என்ற பெயர் கொண்ட சொரூபம் என்று வழங்கப்படும். எந்த யோகிகள் அந்த ஸ்வரூபத்திலே முடிவுகாலத்து நினைப்பின் சக்தியினாலே, வேறான நினைப்புகளையெல்லாம் தவிர்த்து, சகல உபாதிகளும் இல்லாமையாகிற லயத்தை அடைகிறார்களோ; அவர்கள் சம்சாரம் என்ற கழனியில் விதைப்பதற்கு உமி நீங்கிய அரிசியைப் போலாவார்கள்.

நான் இப்போது விவரித்த முக்த ஸ்வரூபத்துக்கு உள்ள சகல குணங்களையும் கொண்டதாய், நித்திய சுத்தமாய், சர்வாத்மகமாய், பரிபூரணமாய், வேறுகுணங்களில்லாததாய் கல்யாண குணங்களைக் கொண்டதாய், ஸ்ரீவிஷ்ணு என்ற திருநாமமுடைய உத்தம ஸ்வரூபம் ஒன்றுண்டு. அதுதான் பரப்பிரம்மம் என்று வழங்கப்படும். அந்த பரப்பிரம்மத்தை அடைந்த யோகியானவன் புனராவிருத்தி இல்லாமல், புண்ணிய பாவ வர்ஜிதனாய், சகல கிலேசமும் இல்லாதவனாய், அத்யந்த நிர்மலமான ஆனந்தானுபவஞ்செய்து கொண்டிருப்பான். அந்தப் பரப்பிரம்மத்துக்கு மூர்த்தம் அமூர்த்தம் என்று சொல்லப்பட்டு அழியாததாகையால் அக்ஷரம் என்ற பெயரைப் பெறும். ஏகதேசத்திலிருக்காத அக்கினியின் பிரபைச் சிறப்பு பரவலாக வியாபித்திருப்பதைப் போலவே, பரப்பிரம்மமான நாராயணனுடைய சக்தி சிறப்பானது. சகல ஜெகத்தையும் வியாபித்துள்ளது. அக்கினியின் அருகிலேயிருந்தால் பிரபைச் சிறப்பு அதிகமாக இருக்கும். தூரத்திலிருந்தால் அது சொற்பமாக இருக்கும். அதுபோலவே, ஸ்ரீமந்நாராயணனுடைய சக்தியும் பிரமாதி ஸ்தாவராந்தமான ஜகத்தில் ஏறவுங் குறையவும் வியாபித்துள்ளது. அதன் விவரத்தையும் சொல்லுகிறேன். கேளுங்கள். பிரம்ம, விஷ்ணு ருத்திரரிடத்திலே, பிரம சக்தியானது அதிகஅளவில் வியாபித்திருக்கும் அதிலே பிரம ருத்திரர்களிடத்திலே அனுப்பிரவேசமாகவும் விஷ்ணுவினிடத்திலே சொரூபமாகவும் இருக்கும் என்று அறியவேண்டும். இனி, அவர்களைக் காட்டிலும் தக்ஷõதிகளும் அவர்களைவிட மனிதர்களும், அவர்களைவிட பசு, பட்சி சரீஷ ரூபங்களும், அவற்றை விட மரஞ்செடி கொடிகளும் முறைமுறையாகக் குறைந்திருக்கும். இவ்விதமாக உற்பத்தி நாசம் முதலிய விற்பங்களையுடையதாயும், கணக்கற்றதாயும், நித்தியமாயும் இருக்கிற இந்தப் பிரபஞ்சம் எம்பெருமானுக்கு ஒரு ரூபமாகும்! பூர்வத்தில் சொல்லப்பட்ட சர்வ சக்திகளையும் கொண்டவனுக்கு மூர்த்தமான வேறொரு ரூபமும் உண்டு. மந்திர ஜபாதி சகிதமான சாலம்பனம் என்ற மகாயோகத்தை பயிலு போது யோகிகளுக்குள்ளே அஸ்திர பூஷணாதி சகிதமும் திவ்வியமுமான விஷ்ணு தேவனுடைய அந்த ரூபந்தான் தியானஞ்செய்ய வேண்டுவதாகும். சித்தத்தை நிச்சலமாக்கி யோகாப்பியாசஞ் செய்யும் யோகியாருக்கு இப்போது நான் அறிவித்த தியானச் சிறப்பு சித்திக்கும். மைத்ரேயரே! அந்த எம்பெருமானுக்கு முன்பு சொன்ன சகலரூபங்களை விட பரமமான ரூபம் அந்த விஷ்ணு ஸ்வரூபமேயல்லாது வேறல்ல. அதுவே திருவுள்ளமுகந்த ஸ்வரூபம். ஏனென்றால், அந்த ஸ்ரீஹரியே சர்வாத்துமகமான பரப்பிரம சொரூபம். அவனிடமே சகல லோகங்களும் வஸ்திரங்களில் நூல்களைப் போலக் கலந்து கோப்புண்டு இருக்கின்றன. எப்படியெனில் சகல உலகங்களும் அவனாலே உண்டாகி, அவனிடத்திலேயே நின்றிருக்கின்றன. க்ஷராக்ஷரமயனான ஸ்ரீவிஷ்ணு, பிரகிருதி புருஷாதிகளையெல்லாம் அஸ்திர பூஷணங்களாகத் திரிந்திருப்பவன்-இவ்வாறு பராசரர் கூறியதும் மைத்ரேயர் குறுக்கிட்டு, முனிவர் பெருமானே! ஸ்ரீமந்நாராயணன் சகல ஜகத்தையும் அஸ்திரபூஷண சொரூபமாகத் தரித்திருக்கும் விதத்தை சொல்ல வேண்டும்! என்று கேட்டார்.

பராசரர் அதற்கு பின்வருமாறு விவரித்து கூறினார். அப்பிரமேயனாயும், சர்வ சக்தனாயும் சர்வேசுவரனாயும் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீவிஷ்ணு பகவானுக்குத் தெண்டம் சமர்ப்பித்து , என் பிதாமகனான வசிஷ்ட முனிவர் அருளிச்செய்த வண்ணம் ஸ்ரீமந்நாராயணனுடைய அஸ்திரபூஷணாதி சொரூபத்தை விவரிக்கிறேன்; கேளுங்கள். உலகத்தோடு ஒட்டாதவனும் பிரகிருதி குணராகிதனுமான க்ஷேஷத்திரக்ஞனே, கவுஸ்துபமணியாகவும் ஜகதாதி காரணமான மூலப்பிரகிருதியே! ஸ்ரீவச்சம் என்ற மறுவாகவும், புத்தியே! கவுமோதகி என்ற கதாயதமாகவும், சாமசாகங்காரமே பாஞ்சசன்னியம் என்ற சங்காகவும், சாத்விகங்காரமே சாரங்கம் என்ற வில்லாகவும், சலனாத்மகமான மனமே மகாவேகத்தில் வாயுவையும் மிஞ்சக்கூடிய சுதர்சனம் என்ற சக்கரமாகவும், பஞ்ச மஹா பூதங்களும், முத்து மாணிக்க மரகத இந்திர நீல வஜ்ஜிரமயமாய், பஞ்சவர்ணமான வைஜயந்தி என்ற வனமாலையாகவும், ஞானேந்திரியங்களும் கர்மேந்திரியங்களும் அம்புகளாகவும், வித்தையே அத்யந்த நிர்மலமான நந்தகம் என்ற கத்தியாகவும், அவித்தையே அந்தக் கத்தியின் உறையாகவும் ஸ்ரீமந்நாராயணன் பிரகிருதி புருஷர்களையெல்லாம் அஸ்திர பூஷண சொரூபமாகத் தரித்துக் கொண்டு விசித்திர சக்தியுக்தனாகிச் சேதனருக்கெல்லாம் இதஞ்செய்தருள்வான். வித்தையும் அவித்தையும் சேதனமும் அசேதனமும் நாராயணனிடத்தில் தான் இருப்பவை கலா, காஷ்டா முகூர்த்த அகோராத்திர மாச அயன சம்வச்சரரூபமான காலமும் ஸ்ரீஹரி சொரூபமாகும். பூலோக புவர்லோக சவர்லோகங்களும், மகாலோக, ஜனலோக தவலோக சத்தியலோகங்களும், மகாலோக, ஜனலோக தவலோக சத்தியலோகங்களும், தேவ, மனுஷ்ய பசு, பக்ஷியாதி உயிர் வகைகளும், ரிக்கு, யஜுர், சாமம், அதர்வணம் என்கிற வேதங்களும், உபநிஷத்தக்களும் இதிஹாசங்களும், வேதாங்கங்களும், மநுவாதி ஸ்மிரிதிகளும், கல்ப சூத்திரங்களும் காவியங்களும் கீதங்களும் மற்றும் உண்டான இதர சாஸ்திர வகையும் மூர்த்தங்களாயும் அமூர்த்தங்களாயும் இருக்கும் பதார்த்தங்களும் ஸ்ரீமந்நாராயணனுடைய சரீரமே என்று நினையுங்கள். யாவருக்கும் ஸ்ரீஹரியே ஆத்மபூதன்! சகலமும் அவனே! அவனைக் காட்டிலும் காரியமும் காரணமுமான வேறுபொருள் இல்லை என்ற திடசித்தம் எவனுக்கு ஏற்படுகிறதோ, அவன் பிறவித்தொடர்புடைய, தொந்த துக்கமில்லாமல் பரமமான மோட்ச ஆனந்தத்தை அடைவான். மைத்ரேயரே! சகலபாபக்ஷயகரமான ஸ்ரீவிஷ்ணு புராணத்தில் முதலாம் அமிசத்தை, இருபத்திரண்டு அத்தியாயங்களில் விளக்கமாகச் சொன்னேன். இந்த முதலாவது அம்சத்தை கேட்ட மனிதருக்கு, புண்ணிய நதிகளில் பன்னிரண்டு ஆண்டுகள் கார்த்திகைப் பவுர்ணமி அமாவாசையில் ஸ்நானம் செய்த பயன் உண்டாகும். புத்திர பவுத்திர தன கனக, வஸ்து வாகனங்களும் அட்சயமான பரமபத சுகமும் உண்டாகும்! தேவ, ரிஷி, பிதுர், கந்தர்வ, யக்ஷர் ஆகியோரது படைப்பு வரிசை முறையைக் கேட்டவருக்க, தேவ, ரிஷி கந்தர்வாதிகளனைவரும் மகிழ்ந்து வலுவிலேயே சகல அபீஷ்டங்களையும் கொடுப்பார்கள்.

முதல் அம்சம் முடிந்தது.

———————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ மைத்ரேய முனிவர் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பராசர முனிவர் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading