நம்மை நம் வசத்தே விடுமே -மனமே நையல் -என்று மனத்தை தேற்றினார் -கீழ் .
நம் வசத்தில் விட மாட்டார் என்னும் நம்பிக்கை குலையாமல் இருக்க வேண்டாமா –
பாஹ்யர்களும் குத்ருஷ்டிகளும் நிறைந்த இவ் உலகத்திலே அவர்களது சேர்க்கையாலே
அது குலைந்து விடில் என் செய்வது என்று -தம் மனம் தளர –
எம்பெருமானார் அவதரித்த பின்பு அவர்கள் அழிந்து ஒழிந்தனர் -தளரற்க-என்கிறார் .
தற்கச் சமணரும் சாக்கியப் பேய்களும் தாழ் சடையோன்
சொற் கற்ற சோம்பரும் சூனியவாதரும் நான் மறையும்
நிற்கக் குறும்பு செய் நீசரும் மாண்டனர் நீணிலத்தே
பொற் கற்பகம் எம்மிராமானுச முனி போந்த பின்னே – – 99- –
மாண்டனர் நீணிலத்தே —-பொற் கற்பகம் போந்த பின்னே —
நீணிலத்தே போந்த பின் -என்று இயைக்க –
விண் உலகில் அசையாது இருந்த கற்பகம் கண்ணனால் நீணிலதிற்கு வந்தது
அது வந்தது கருதிய காதலிக்காக –
விண்ணவரான எம்பெருமானாராம் கற்பகம் விண்ணனூரில் உள்ள கண்ணனால் இன் நீணிலத்தே வந்தது
இது வந்தது உயிர் இனம் மறையின் உண்மைப் பொருளை பெற்று உய்வதற்காக
கற்பகம் வந்து நீணிலத்திலே நல்ல பொருளை தருகிறது .
————-
இங்கனம் தேற்றப் பெற்ற நெஞ்சு -எம்பெருமானார் திருவடிகளிலே இன்பம் நுகர விழைந்து மேல் விழ-
அதனது இயல்பினை -எம்பெருமானாருக்கு விண்ணப்பம் செய்து
தேவரீர் வேறு ஒன்றினைக் காட்டி மயக்காது ஒழிய வேணும்-என்கிறார் .
போந்ததென் நெஞ்சு என்னும் பொன் வண்டு உனதடிப் போதில் ஒண் சீ
ராம் தெளி தேனுண்டமர்ந்திட வேண்டி நின் பாலதுவே
ஈந்திட வேண்டும் இராமானுச இதுவன்றி யொன்றும்
மாந்தகில்லாது இனிமற்றொன்று காட்டி மயக்கிடலே – – 100- –
உணவுள்ள நல்ல இடத்தில் வந்து சேர்ந்தமையின்-தம் நெஞ்சை -பொன் வண்டு -என்று
கொண்டாடுகிறார் .பொற் கற்பகம் பூத்த அடிப்போதில் வந்து சேருவதும் பொன் வண்டாய் இருப்பது
மிகவும் பொருந்துகிறது அன்றோ –
ஷட் பதமான ஆறு பதங்களைக் கொண்ட -த்வய மந்த்ரத்தை த்யானம் பண்ணிப் பண்ணி நெஞ்சும் ஷட்பதம்
ஆறு கால் உடைய -வண்டு ஆயிற்று –லஷ்மியினுடைய மீன் போன்ற கண்ணை த்யானம் பண்ணிப் பண்ணி
பகவான் தானே மீன் ஆனது போலே என்று ரசமாக பணிப்பர் பிள்ளை லோகம் ஜீயர் –
தெளி தேனுக்கு மாற்றாக காட்டும்மற்று ஓன்று மது ஸூதநனின்
தேனே மலரும் திருப்பாதம் -என்பது அமுதனார் உட் கருத்து .
அந்த குண அனுபவத்திலேயே மேலும் மேலும் திளைத்துக் கொண்டு இருக்குமாறு எம்பெருமானார்
தான் அருள் புரிய வேண்டும் என்று அவரிடம் அதனைப் பிரார்த்தித்தார் ஆயிற்று –
நம் ஆழ்வார் -எம்பெருமானை –சிற்றின்பம் பல நீ காட்டிப் படுப்பாயோ -திரு வாய் மொழி -6 9-9 —என்கிறார்
இவர் எம்பெருமானாரை மற்று ஓன்று காட்டி மயக்கிடல் என்கிறார் –எம்பெருமான் காட்டும் சிற்றின்பம் பல
எம்பெருமானார் காட்டுவதோ பேரின்பமான எம்பெருமான் என்னும் மற்று ஓன்று –
இதனால் தமது சரம பர்வ நிஷ்டையை வெளி இட்டு அருளினார் ஆயிற்று-
அனந்யார்க்க சேஷத்வம் -எம்பெருமானாருக்கு அன்றி மற்று ஒருவருக்கு உரியர் ஆகாமை –
அநந்ய சரணத்வம் -எம்பெருமானார் அன்றி வேறு உபாயம் இன்மை
அநந்ய போக்யத்வம் -எம்பெருமானாரே நீ யன்றி வேர் ஒருவரையும் அனுபவிக்கத்தக்கவராக கொள்ளாமை
என்னும் ஆகார த்ரயமும் தன் பால் அமைந்து உள்ளமையை
இங்கு அமுதனார் காட்டும் அழகு ரசித்து அனுபவிக்கத் தக்கதாய் உள்ளது
———–
இங்கனம் எம்பெருமானார் உடைய போக்யதையிலே நெஞ்சு படிந்ததும் -முன்பு தாம் அவர் திறத்து பண்ணின –
பாவனர் -தூய்மை படுத்துமவர் -என்னும் பாவனை குற்றமாகப் பட –
எம்பெருமானாரை நோக்கி தேவரீரது போக்யதையிலே ஈடுபட்டு இருப்பவர்களுக்கு-நான் -பாவனர் -என்னும்
பாவனையுடன் பேசினது குற்றமாக தோன்றும் என்று –நல்லவர்கள் சொல்லுவார்கள் என்கிறார்
மயக்கு மிருவினை வில்லியிற் பூண்டு மதி மயங்கித்
துயக்கும் பிறவியில் தோன்றிய வென்னைத் துயரகற்றி
உயக்கொண்டு நல்கு மிராமானுச என்ற துன்னை வுன்னி
நயக்கு மவர்க்கி திழுக்கென்பர் நல்லவ ரென்று நைந்தே – – 101- – –
தூயவன் தீதில் இராமானுசன் மாயும் என்னாவியை வந்து எடுத்தான் – 42- என்றும்
புன்மையினேன் இடைத் தான் புகுந்து தீர்த்தான் இருவினை -52 – என்றும்
பலகால் எம்பெருமானாருடைய பாவனத்வத்தை இவர் தானே அனுசந்தித்தையும் நினைவு கூர்ந்து
அவை அனைத்தையும் சேரப் பிடித்து –என்றது இது -என்கிறார்
அமுதம் போலே இனியர் என்றே அனுபவிப்பது நன்று-
சாணிச்சாறு போலே பாவனர் என்று அனுபவிப்பது ஏதமே என்பது -நயக்குமவர்கள் கருத்தாகும்-
————
இங்கனம் தூய்மைப் படுத்துபவர் என்பது கூடப் பொறுக்க ஒணாத படியான-இனிமை வாய்ந்த எம்பெருமானார் திறத்து –
தம் உட் கரணமும் -புறக் கரணங்களும் எவ்வித பாகுபாடும் இன்றி -தாமே மிகவும் ஈடுபட்டு இருப்பதைச் சொல்லி –
இப்பரந்த உலகினிலே அனைவரும் இருக்க -தேவரீருடைய வள்ளல் தனம்
என் மீது வளருவதற்கு ஹேது என்ன -என்று எம்பெருமானாரிடமே வினவுகிறார் .
நையும் மனமுன் குணங்களை வுன்னி என் நா விருந்தெம்
ஐயன் இராமானுசன் என்று அழைக்கும் அருவினையேன்
கையும் தொழும் கண் கருதிடும் காணக் கடல் புடை சூழ்
வையமிதனில் உன் வண்மை என்பால் என் வளர்ந்ததுவே – – 102- –
திரு நாமம் எவர் சொன்னாலும் இனிக்கும் -இதற்க்கு மேல் உறவு முறையும் அமைந்து விட்டாலோ
கேட்க வேண்டியது இல்லை -இவ்வினிமையோடு அவ்வினிமையும் சேர்ந்து பேரின்பம் பல்கா நிற்கும் அன்றோ
இதனால் எம்பெருமானார் இடத்தில் தமக்கு உள்ள ஆர்வ மிகுதியை காட்டினார் ஆயிற்று –
ஞானம் கொடுக்கும் ஆசார்யன் நிரந்தர உறவு . ஆத்ம ஹிதமளிக்கும் ஆசார்யன் தந்தை போன்றவர்
இந்த உறவைக் குறிப்பிட்டு அமுதனார் எம் அய்யன் என்று அழைத்துப் பெருமைப் படுகிறார்.
கண் கருதிடும் காண-கண் காண எண்ணாமல், கண் கருதிடும் காண-
ரசிகரான தம்மைப் போலே தனியாகத் தம் கருவிகளும் ஆர்வமுடையனவாம்படி எம்பெருமானார்-விஷயத்தில் உட் புக்கபடி இது –
உன்னை மெய் கொள்ளக் காணக் கருதும் என்கண்ணே -திரு வாய் மொழி – 3-8 4-
———
எம்பெருமானார் தம் வண்மையினால் உமக்கு மட்டும் கரணங்கள் அனைத்தும்
தாமே தம்மிடம் ஈடுப்படும்படியாக உபகரித்தது எவ் வழியாலே என்பாருக்கு
என் கருமத்தை நீக்கி உபகரித்து அருளினார் -என்கிறார் .
வளர்ந்த வெங்கோப மடங்க லொன்றாய் அன்று வாளவுணன்
கிளர்ந்த பொன்னாகம் கிழித்தவன் கீர்த்திப் பயி ரெழுந்து
விளைந்திடும் சிந்தை யிராமானுசன் என்தன் மெய்வினைநோய்
களைந்து நன்ஞானம் அளித்தனன் கையில் கனி என்னவே – – 103 –
நரசிம்ஹப் பெருமாளுடைய இந்தக்கீர்திகள் -எம்பெருமானார் திரு உள்ளம் ஆகிற நன்செய்யுள் பயிராகி –
ஓங்கி வளர்ந்து விளைகின்றனவாம்-அவர் நெஞ்சுப் பெறும் செய்யுள் பேணப்படும் கீர்த்திப் பயிர்கள்
பெரியனவாய் யெழுந்து விளைந்து விடுகின்றன –
சிங்கப் பிரானுடைய குண அனுசந்தானத்தின்-விளைவு தான் எனக்கு அளித்த நல் ஞானம் என்பது அமுதனார் கருத்து .
அடியாருக்கு ஆபத்து வரும்கால் ஓடி வந்து காப்பதும், உள்ளும் புறமும் எங்கும் வியாபித்து நிற்பதும்,
அடியாருக்கு தீங்கிழைத்தால் சொல்லொணா சினம் கொள்வதும்… இப்படி வளர்ந்த வெம் கோபம் –
கீர்த்திப் பயிரை விளைந்திடச் செய்தார் -என்க .-மடங்கலானதும் ஒரு கீர்த்தி
சரணா கதற்கு தஞ்சமான தனமாக அனுசந்தித்த சீற்றம் -என் மெய் வினை நோயாம் இரணியனை களைவதற்கும் பயன்படுவதாயிற்று –
இங்கனம் அடியார்களைக் காக்கும் திறம் -பரத்வம் -முதலிய பிறவும்
சரண்யனுக்கு வேண்டிய குணங்களாய் அனுசந்திக்கப்பட்டு அச்சம் இன்றி நிறைவுடன் தெள்ளிய அறிவினராய்
வாழும்படி பலித்து -அவரைச் சார்ந்த எனக்கும் நல் ஞானமாய் பயன்படுகின்றன
—————-
உபதேசித்த ஞானமே இப்படி ரசிக்கும்படி இருப்பின் -நேரே கண்ணனைக் காட்டிக் கொடுத்து விட்டால் எங்கனம் நீர் ரசிப்பீரோ –
என்று எம்பெருமானாருக்கு கருத்தாகக் கொண்டு –
கண்ணனை நன்றாக காட்டித் தந்தாலும் -தேவரீர் திரு மேனியில் விளங்கும் குணங்களை ஒழிய நான் வேண்டேன் –
இந்நிலையினுக்கு ஏற்றவாறு அருள் புரிந்தால் –சம்சாரத்திலும் பரம பதத்திலும் கால் பாவி நிற்பன் –
இன்றேல் தரித்து இருக்க வல்லேன் அல்லேன் -என்கிறார் .
கையில் கனி என்னக் கண்ணனைக் காட்டித் தரிலும் உன்தன்
மெய்யில் பிறங்கிய சீரன்றி வேண்டிலன் யான் நிரயத்
தொய்யில் கிடக்கிலும் சோதி விண் சேரிலும் இவ்வருள் நீ
செய்யில் தரிப்பன் இராமானுச என் செழும் கொண்டலே – – -104 –
எங்கும் உள்ள வ்யாபகனான கண்ணனை கையில் கனியைப் போலே உள்ளங்கையில்
அடக்கி அனுபவிக்கக் கொடுத்தாலும் நான் வேண்டேன் -என்கிறார்
வானுயர் இன்பமே எய்திலென் மற்றை நரகமே எய்திலென் -திருவாய் மொழி -என்னும் நம் ஆழ்வார்
தனக்கு புருஷார்த்தம் எம்பெருமானாரின் திருமேனி அழகே என்று அறிவிக்கிறார் அமுதனார்.
இராமானுசரின் மெய்யில் பிறங்கிய சீரை தான் கணண்ணை விட விரும்புவர் என்று தெரிவிக்கிறார் அமுதனார்
அவரது வண்மை இன்றித் தாம் உய்வதற்கு வேறு வழி இல்லாமையினாலே
அதனையே அமுதனார் மீண்டும் மீண்டும் அனுசந்திக்கிறார் .
இவ்வருள் செய்வதற்கு – தன்பால் தகுதி எதுவும் இல்லை –
தம் வண்மை கொண்டே இவ்வருள் புரிதல் வேண்டும் -என்பது கருத்து
———-
எல்லாரும் தோஷம் நிறைந்த சம்சாரத்தை அருவருத்து -பரம பத்திலே போய் இருக்க ஆசைப்படா நிற்பர் –
நீரோ -சம்சாரத்தையும் பரம பதத்தையும் ஓன்று போலேபேசா நின்றீர் -எங்கு இருப்பினும் சரியே என்றீர் .
நீர் போய் இருக்க ஆசைப்படும் இடம் தான் எது -அதனை சொல்லீர் -என்ன –அது தன்னை அருளிச் செய்கிறார் –
செழும் திரைப் பாற்கடல் கண்டுயில்மாயன் திருவடிக் கீழ்
விழுந்திருப்பார் நெஞ்சில் மேவு நன்ஞானி நல் வேதியர்கள்
தொழும் திருப்பாதன் இராமானுசனைத் தொழும் பெரியோர்
எழுந் திரைத்தாடுமிடம் அடியேனுக் கிருப்பிடமே – – -105 –
மாயன் திருவடிக் கீழ் விழுமவர் வேதியர்-
எம்பெருமானாரை தொழுமவர் நல் வேதியர் என்றது ஆயிற்று –
மாயன் திருவடிக் கீழ் வேதியர் விழுந்து இருப்பார் .
விழும் திருவடிகளை உடைய மாயனோ கண் துயில்பவன் .
எம்பெருமானார்பாதத்தை தொழுது பணி புரிபவராய் இருப்பர் நல் வேதியர் .
தொழப்படும் எம்பெருமானாரோ -காதலுற்றார்க்கும் உண்டோ கண்கள் துஞ்சுதலே -திரு விருத்தம் – 98-
என்றபடி கண் துயிலாதவர் –
எம்பெருமானாரை தொழுவது -சூழ்வது –
முதலியன செய்து எப்பொழுதும் அனுபவித்து கொண்டே இருக்கும் பெருமை வாய்ந்த பெரியோர்கள் –
அவ் அனுபவத்தால் உண்டான களிப்பு -உள் அடங்காது -இருந்த படியே இருக்க ஒண்ணாது
கிளர்ந்து எழுந்து ஆரவாரங்களைப் பண்ணிக் கொண்டு -பிரதம பர்வத்தில் -கும்பிடு நட்ட மிட்டாடி –
திருவாய் மொழி – 3-5 3- என்றபடி –கூத்தாடுகின்ற இடம் –
அவர்களது அந்நிலைக்கு அடிமை பட்டு விட்டவனாகிய-எனக்கு வாழும் இடம் ஆகும் -என்கிறார் .
அடியார்கள் குழாம் களுடன் அனுபவித்தற்கு வைகுந்தத்தில் வாழ -ஏனையோர் விரும்புவது போலே –
தொழும் பெரியோருடன் எம்பெருமானாரை அனுபவிப்பதற்கு அவர் எழுந்து அருளி உள்ள இடமே-
எனக்கு பேறான மோஷ பூமி -என்றது ஆயிற்று
————-
இப்படித் தம்பால் எல்லை கடந்த ஈடுபாட்டினை கண்ட எம்பெருமானார் அமுதனாருடைய திரு உள்ளத்தை
மிகவும் விரும்பி யருள -அதனை நோக்கி – அக மகிழ்ந்து அருளிச் செய்கிறார் .
இருப்பிடம் வைகுந்தம் வேங்கடம் மாலிரும் சோலை யென்னும்
பொருப்பிடம் மாயனுக்கென்பர் நல்லோர் -அவை தன்னொடும் வந்
திருப்பிடம் மாய னிராமானுசன் மனத்தின்றவன் வந்
திருப்பிடம் என் தனி தயத்துள்ளே தனக்கின்புறவே – – 106- –
அவை தன்னொடும் வந்து இருப்பிடம் மாயன் இராமானுசன் மனத்து
அர்ச்சிராதி வழியே வந்து உடலம் நீங்கினவர்க்கு அடிமை செய்ய பாங்கான இடம் என்று வைகுந்தத்தையும் –
போவான் வழி கொண்டு – -சிகரம் -வந்தடைந்த நீணிலத்தில் உள்ளார்கட்கும்
அடிமைத் தொழில் பூண்பதற்கு பாங்கான இடம் என்று திரு வேங்கடத்தையும்
போவான் வழிக் கொள்வதற்கும் -சிகரத்தில் ஏறுவதற்கும் -திறன் அற்றார்க்கும் விடாய்த்த உடனே
உடலோடு அடிமை செய்வதற்கு பாங்கான இடம் என்று திரு மால் இரும் சோலை மலையையும்
தனக்கு கோயில்களாக கொண்டது போலே –
மாயன் –எம்பெருமானார் இதயத்தையும் தனக்கு கோயிலாக கொண்டான்
இவ்விடம் ஒரே காலத்தில் பல்லாயிரம் பேர்கள் ஆட்பட்டு அடிமை புரிவதற்கு -பாங்காக அமையும் என்பது மாயனது அவா –
ஆயின் ஏனைய இடங்கள் போன்றது அன்று எம்பெருமானார் உடைய இதயம்
வேங்கடத்தை இடமாக கொண்ட போது -த்யக்த்வா வைகுண்டம் உத்தமம் -சீரிய வைகுண்டத்தை விட்டு –என்றபடி
வைகுண்டத்தை துறந்தான் –இங்கனமே திரு மால் இரும் சோலை யை இடமாக கொள்ளும் போது
ஏனைய இரண்டினையும் விட வேண்டியதாயிற்று .இம் மூன்று இடங்களிலுமே இருப்பவன்
மாயன் ஒருவனே -ஆயின் இடங்கள் வெவ்வேறு பட்டன .அவ்வவ இடங்களிலே வாசம் பண்ணினதன் பயன்
இவர் இதயத்தில் வாசம் பண்ண வேண்டியதாயிற்று
அங்கனம் வாசம் பண்ண வரும் போது –தான் கோயில் கொண்டு இருந்த மூன்று இடங்களையும் கூடவே கொணர்ந்து
இங்கே குடி புகுந்தானாம் அம் மாயன் –
ஏனைய இடங்கள் அவன் இருப்பதற்கே போதுமானவை – மற்ற இடங்களைக் கொணர்ந்தால் இடம் போதாது –
எம்பெருமானாரிதயமோ இன்னும் எத்தனை இடங்களோடு வந்தாலும் இடம் கொடுக்கும் .அவ்வளவு விசாலமானது –
இது போன்ற இதயம் இருப்பிடம் என்னாது -இதயத்து இருப்பிடம் -என்ற அழகு பாரீர் –
கையில் கணி என்ன கண்ணனைக் காட்டித் தரினும் என்று 104m பாசுரத்தில் ,
கண்ணன் கையில் கனிஎ ன்ன கிடைத்தாலும் வேண்டாம்-இராமனுசர் மெய்யில் பிறங்கிய சீரே வேண்டும் என்று உறுதி பூண்டார் அமுதனார்.
செழுந்திரைப் பாற்கடல் என்னும் அடுத்த பாசுரத்தில் இராமானுசர் அடியார் இருக்கும் இடமே தனக்கு இருப்பிடம் இடம் என்றார்
கீழ் இரண்டு பாட்டுக்களாலே எம்பெருமானார் திரு மேனி குணங்களின் அனுபவம் இன்றேல்
ப்ராப்யமான வைகுந்தம் சேரினும் கால் பாவி நிற்க மாட்டேன் என்றும் –
எம்பெருமானாரைத் தொழும் பெரியவர் களிக் கூத்தாடும் இடமே தனக்கு பிராப்யமான இடம்
என்றும் சர்வேஸ்வரனோடு ஒட்டு அறுத்து பேசினவர் –
இங்கே பிராப்யமான இடத்தோடு மாயனையும் தன்னோடு சேர்த்துக் கொண்டு
எம்பெருமானார்-தன் இதயத்துக்கு உள்ளே எழுந்து அருளி இருப்பதாக அருளிச் செய்து இருப்பது கவனத்திற்கு உரியது
ஆசார்ய சம்பந்த்தினுடைய மகிமை – இவர் கால் பாவ மாட்டேன் என்று ஒதுக்கின இடமும் –
ஆசார்யனோடும்-அவன் உகந்த ஈச்வரனோடும் தானாகவே இவரை நாடி வருகிறது –
ஆசார்யன் உகந்த இடமும் -அவன் உகந்த எம்பெருமானும் ஆசார்யன் முக மலர்ச்சிக்காக
நெஞ்சார ஆதரிக்கத் தக்க எய்தி விடுவதை இது புலப் படுத்து கிறது .
இதனால் ஆசார்யனைப் பற்றுகை -பகவானை பற்றுவதினின்றும் வேறு பட்டது அன்று –
பேற்றினை எளிதில் தர வல்லது எனபது தெளிவாகின்றது –
இங்கே -ஈஸ்வரனை பற்றுகை கையைப் பிடித்து கார்யம்கொள்ளுமோபாதி
ஆசார்யனைப் பற்றுகை காலைப் பிடித்து கார்யம் கொள்ளுமோபாதி –-47 – யென்னும்
ஸ்ரீ வசன பூஷணமும் அதன் வியாக்யானமும் சேவிக்கத் தக்கன
———–
தன்னுடைய மேன்மையைப் பாராது -எனது தண்ணிய இதயத்து உள்ளே இன்பமாய்
இடம் கொண்டு இருக்க வேண்டுமானால் -எம்பெருமானாருக்கு என் மீது எவ்வளவு வ்யாமோஹம்
இருக்க வேண்டும் என்று -அவரது வ்யாமோஹத்திலும் சீல குணத்திலும் தாம் ஈடுபட்டமை தோற்ற –
அவரை விளித்து –
தாம் ஒரு விண்ணப்பம் செய்யப் போவதாகச் சொல்லி –
எத்தகைய துன்பம் நேரும் காலத்திலும் தேவரீர் தொண்டர்கட்கு அன்புடன் நான்
ஆட்படும்படி யாக அருள் புரிய வேண்டும் என்று தமக்கு வேண்டியதை விண்ணப்பம் செய்கிறார் .
இன்புற்ற சீலத்து இராமானுச என்றும் எவ்விடத்தும்
என்புற்ற நோய் உடல் தோறும் பிறந்திறந்து எண்ணரிய
துன்புற்றுவீயினும் சொல்லுவது ஓன்று உண்டு உன் தொண்டர்கட்கே
அன்புற்று இருக்கும்படி என்னை யாக்கி யங்கு யாட்படுத்தே – – – 107-
என்னை யாக்கி அங்கு ஆட்படுத்து –
அன்புடையவனாய் இருக்கும்படியும் செய்ய வேணும் –
ஆட்செய்யும்படியாகவும் பண்ண வேணும்
இரண்டும் வேண்டிப் பெற வேண்டிய புருஷார்த்தங்கள் ஆகும் எனக்கு -என்பது கருத்து
புருஷார்த்தத்தை நிஷ்கர்ஷிக்கும் போது மட்டும் எம்பெருமான் திரு முகத்தை நோக்கி
முன்னிலையில் கூறாது –தனக்கேயாக -என்றது –
முகத்தை நோக்கில் புருஷார்த்தத்தில் கொண்ட துணிவு அவ் அழகினால் குலைவுறும்
என்று கவிழ்ந்து இருந்தமையினால் என்று ரசமாக பணிப்பர் ஆச்சார்யர்கள் –
ஆண்டாள் அங்கன் அன்றிப் புருஷார்த்தத்தை நிஷ்கர்ஷிக்கும் போது அதனில் ஊன்றி
நிற்பவள் ஆதலின் -புருஷார்த்தத்தில் தான் கொண்ட துணிவு குலைவுறுமோ என்னும்
அச்சம் ஏற்பட வழி இல்லாமையால் -கோவிந்தன் முகத்தை நோக்கி –
உனக்கே நாம் ஆட்செய்வோம் -என்று நிஷ்கர்ஷம் செய்து அருளினாள் –
அமுதனாரோ -பிரதம பர்வத்தில் ஆண்டாள் நிஷ்கர்ஷித்தது போல சரம பர்வத்தில் எம்பெருமானார்-திரு முகத்தை நோக்கி –
உன் தொண்டர்கட்கே ஆட்படுத்து -என்று நிஷ்கர்ஷிக்கிறார் .
தொண்டர்கட்கே அன்பும் -ஆட்படுதலும் உபயோகப் படுவனவாய் அமைய வேண்டும் .
தொண்டர்கட்கும் பிறர்க்குமாக ஒண்ணாது
தொண்டர் கட்கே யாக வேணும்
தொண்டர்கட்கும் எனக்குமாக ஒண்ணாது
தொண்டர்கட்கே யாக வேணும் என்பது அமுதனார் செய்யும் புருஷார்த்த நிஷ்கர்ஷமாகும் .
————
இந்தப் பிரபந்தத்தைப் பூர்த்தி செய்பவராய்த்-தொடங்கும் போது -இராமானுசன் சரணாரவிந்தம் நாம் மன்னி வாழ -என்று
தாம் அருளிச் செய்த பேறு–தமக்கு ஆத்மா உள்ள அளவும் கைப்படவும் –
அப் பேற்றினைப் பெறும் வேட்கை வடிவமான பக்தி தழைக்கவும் -விரும்பி-அவ் விரண்டும் தமக்கு கை கூடுவதற்காக –
ஸ்ரீ தேவி யாதலின் -அனைவராலும் ஆச்ரயிக்கப் படுவாளாய் -அதனுக்கு ஏற்ப –
தேன் அமரும் பூ மேல் திரு நமக்கு என்றும் சார்வு -மூன்றாம் திருவந்தாதி – 100-என்றபடி
உயரினம் அனைத்துக்கும் சார்வாகிச் செல்வம் அளிப்பவளான-பெரிய பிராட்டியாரை ஆஸ்ரயிப்போம் என்று
அமுதனார் தம் நெஞ்சை நோக்கிக் கூறுகிறார் .
அங்கயல் பாய் வயல் தென்னரங்கன் அணியாக மன்னும்
பங்கய மா மலர்ப் பாவையைப் போற்றுதும் பத்தி யெல்லாம்
தங்கிய தென்னத் தழைத்து நெஞ்சே நம் தலை மிசையே
பொங்கிய கீர்த்தி இராமானுசனடிப் பூ மன்னவே – – 108-
நெஞ்சே சரணாரவிந்தம் நாம் மன்னி வாழ -என்று தொடங்கினவர்
நெஞ்சே நம் தலை மிசை அடிப்பூ மன்ன -என்று முடிக்கிறார்
முதல் பாசுரத்தில் தொடங்கிய வண்ணமே -இந்த பாசுரத்திலும் முடித்து இருக்கும் அழகுகண்டு களிக்கத் தக்கது .-
பூ மன்னு மாது தொடக்கத்தில் வருகிறாள் –
பங்கய மா மலர் பாவை முடிவிலே வருகிறாள் .
அங்கே மார்பிலே போருந்தினவல் வருகிறாள்
இங்கே அணி யாகத்திலே மன்னுமவள் வருகிறாள் .
அங்கே மன்னி வாழ சரணாரவிந்தம் வருகிறது –
இங்கே மன்ன அடிப்பூ முடியிலே அடியிட வருகிறது –
இரண்டு இடங்களிலும் நெஞ்சு பாங்காய் அமைகிறது .
இராமானுசன் சரணாரவிந்தம் -நம் தலை மிசை மன்ன -மலர் சூடி மங்கள வாழ்க்கை பெற்று -நிரந்தரமாக
வீற்று இருப்பதற்கு -மங்கள வடிவினளான மலர் மகளை போற்றிடுவோம் என்பது இந்தப் பிரபந்தத்தின் திரண்ட பொருளாகும்-
—————————————————————————————————————————————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .
Leave a Reply