ஸ்ரீ திருமலை நல்லான் சக்ரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண அய்யங்கார் ஸ்ரீ ஸூக்தி- அமுத விருந்து–69-78–

எம்பெருமானார் உடைய பேருதவி நினைவிற்கு வர –
இறைவன் செய்த உதவியினும் சீரியதாய் -அது தோன்றலின் -அவ்வுதவியில் ஈடுபட்டுப் பேசுகிறார் –

சிந்தையினோடு கரணங்கள் யாவும் சிதைந்து முன்னாள்
அந்தமுற்றாழ்ந்தது கண்டு அவையென் தனக்கு அன்றருளால்
தந்த வரங்கனும் தன் சரண் தந்திலன் தானது தந்து
எந்தை இராமானுசன் வந்து எடுத்தனன் இன்று என்னையே – 69- –

தானது தந்து –என்னையே
தன் சரணங்களைத் தானே தந்திலன் அரங்கன்
அவ்வரங்கன் திருவடிகளைத் தாமே -என் வேண்டுகோள் இல்லாமலே -தந்து அருளினார் எம்பெருமானார் .
அரங்கன் சரணம் எம்பெருமானாருக்கு சொந்தம் போலும் –

தாமாகவே எம்பெருமானார் அரங்கன் சரணங்களை எனக்குத் தந்ததற்கு காரணம் தந்தையானமையே என்கிறார் .
இராமானுசன் எந்தையே –தான் அது தந்து என்று இயைக்க –தந்தை தானாக தனயற்கு தனம் அளிப்பது போலே –
எந்தை இராமானுசன் அரங்கன் சரணமாம் தனத்தை தானே தந்தார் -என்க
அரங்கர் செய்ய தாளினையோடு ஆர்த்தான் -என்று முன்னரே இவ் விஷயம் கூறப்பட்டு இருப்பதும் காண்க .
ஞானப் பிறப்புக்கு மூல காரணமாய் இருந்தமை பற்றி –எம்பெருமானார் எந்தை-எனப்படுகிறார் .

எம்பெருமானார் தந்தவைகளோ -அரங்கனுடைய திவ்ய சரணங்களாம்.
சம்சாரத்தில் இருந்து கரை ஏறுவதற்கு உறுப்பான திவ்ய சரணங்களே
ப்ராப்யமும் ப்ராபகமுமாம் என்னும் திண் மதி எம்பெருமானார் தந்தது -என்றது ஆயிற்று

எடுத்தனன் -என்கையாலே ஆழமான சம்சாரக் கடலிலே விழுந்து கரை ஏற இயலாது தவித்தமை தெரிகிறது .-
என்னை –
அரங்கனும் இரங்காத நிலையில் உள்ள பாபியான என்னை –
ஆச்சார்ய சம்பந்தம் இதுகாறும் இல்லாமையின் அரங்கன் சரண் பெற்றிலர் அமுதனார் .
இராமானுசன் மன்னு மா மலர்த்தாள் பொருந்தாதவர்களுக்கு நன்மை செய்ய மாட்டார் அன்றோ
அரங்கனாம் பெரும் தேவர் .இன்று இராமானுசன் சம்பந்தம் வாய்த்ததும்
அரங்கன் சரண் பெற்று மேன்மை உற்றார் அமுதனார் -என்க –

———–

மேலும் விடாது -அருளல் வேண்டும் -என்று தம் கோரிக்கையை திரு முகத்தைப் பார்த்து விண்ணப்பிக்கிறார் .

என்னையும் பார்த்து என்னியல்வையும் பார்த்து எண்ணில் பல் குணத்த
உன்னையும் பார்க்கில் அருள் செய்வதே நலம் அன்றி என்பால்
பின்னையும் பார்க்கில் நலமுளதே யுன் பெரும் கருணை
தன்னை என் பார்ப்பர் இராமானுசா வுன்னைச் சார்ந்தவரே – 70 –

தமாசார்யான ஆழ்வான் நைச்ய அனுசந்தானம் செய்ததை தாமும் பின்பற்றி –
அமுதனார்-இங்கனம் அருளிச் செய்கிறார்
என்னையும் எண் இயல்வையும் பார்த்து -என்னாது
தனித் தனியே பார்த்து -என்றது -ஒவ் ஒன்றே அருள் செய்வதற்கு போதுமானது -என்று
தோற்றற்கு-என்க
அரங்கன் தராதையும் தந்து சம்சாரப் படு குழியில் இருந்து பெரும் பாவியான என்னை
எடுத்தலின் எம்பெருமானாரது கருணை பெரும் கருணை யாயிற்று-
முன் பாசுரத்தில் ஞானப் பிறப்பிற்கு ஹேதுவான தந்தையைக் கூறப் பட்டார் எம்பெருமானார் .
இந்தப் பாசுரத்தில் அவர் -பெற்றவனை வளர்க்கும் வளர்ப்புத் தகப்பனாராகக் கருதப்படுகிறார்

————-

இவர் விண்ணப்பத்தை எம்பெருமானார் இசைந்து ஏற்று அருளி -விசேஷ கடாஷத்தாலே –
இவருடைய ஞானத்தை தம் திறத்தில் ஊன்றி நிற்குமாறு தெளிவுறுத்தி விட
தமக்கு கிடைத்தவைகளைக் கூறி க்ருதார்த்தர் ஆகிறார்-

சார்ந்த தென் சிந்தை வுன் தாளிணைக் கீழ் அன்பு தான் மிகவும்
கூர்ந்த தத் தாமரைத் தாள்களுக்கு உன்தன் குணங்களுக்கே
தீர்ந்த தென் செய்கை முன் செய்வினை நீ செய்வினையதனால்
பேர்ந்தது வண்மை யிராமானுசா ! எம் பெரும் தகையே !–71-

தாளிணையில் சார்ந்த -என்னாது –தாளிணைக் கீழ்ச் சார்ந்தது -என்றமையின் –
நிழலும் அடிதாறும் போலே விட்டுப் பிரியாது பொருந்தி விட்டது -என்றது ஆயிற்று –
நீ செய்வினை யதனால் என்னும் ஹேதுவை ஒவ் ஓர் இடத்திலும் கூட்டிக் கொள்ள வேண்டும் .
நித்யம் யதீந்திர தவ திவ்ய வபுஸ் ஸ்ம்ருதவ் மே சக்தம் மனோபவது
வாக்குண கீர்த்தநேசவ் க்ருத்யஞ்ச தாஸ்ய கரனேது கரத்வயச்ய -என்று பிரார்த்தனை பண்ணுகிறார் .
அந்நிலை அமுதனார் தமக்கு எம்பெருமானார் கடாஷத்தால் பலித்து விட்டதாக அருளிச் செய்கிறார்.

எம்பெருமானுடைய கமல மலர்ப்பாதத்தை கண்டதும் ஆழ்வாருடைய வினைகள் விண்டு ஒழிந்தன .
மதுர கவி ஆழ்வாருடைய பண்டை வல்வினையை நம்மாழ்வார் கண்டு கொண்டு பாற்றி அருளினார்
அமுதனார் முன் செய்வினை எம்பெருமானார் செய்து அருளிய அத்தகைய
விசேஷ கடாஷத்தால் தானே பேர்ந்து ஒழிந்தது

செய்வினையதனால் -எனபது ஸ்ரீ ரெங்கநாதன் இடம் எம்பெருமானார் செய்த சரணா கதியை
கூறுவதாக பொருள் கொண்டு -அவர் செய்த சரணா கத்தியினால் தன்வினை பேர்ந்தது என்று
அமுதனார் அருளிச் செய்வதாக வியாக்யானம் செய்கின்றனர் சிலர் .
சிந்தை தாள் இணைக் கீழ் சார்ந்தமை முதலியவற்றுக்கு –அது –சரணாகதி காரணம் ஆகாமையாலும் –
அவதாரிகையில் விசேஷ கடாஷத்தாலே இவருடைய கரணங்கள் எல்லாம் ஸ்வ விஷயத்தில் ஊன்றி இருக்கும்படி
பண்ணி அருளினதாக கூறி இருப்பதாலும் -அந்த வியாக்யானம் ஆராயத் தக்கதாகும் –

வண்மையாவது, பெறுகிறவர் தகுதி பாராமல், கொடுக்கிற விஷயத்தின் சீர்மை கருதாமல் , கொடுப்பது.
இப்படி கொடுத்தது எம்பெருமானார் பதினெட்டு முறை நடந்து சரம ச்லோகார்த்தம் கேட்டு
அதை ஆசையுடையோர்க்கெல்லாம் வழங்கியது வண்மைத் தன்மை என்று முழங்குகிறார்
ஸ்ரீ நல்லான் சக்கரவர்த்தி ராமகிருஷ்ண ஐயங்கார்

எம்பெருமானார் வண்மையினால் என் மீது விசேஷ கடாஷம் செலுத்த –என் கரணங்கள் அவர் பால் ஈடுபட்டன .
வினைகள் தொலைந்தன –இனி எனக்கு என்ன குறை -என்று
தாம் கிருதார்த்தர் ஆனமையை இப்பாசுரத்தால் பேசினார் ஆயிற்று .

————-

எம்பெருமானாருடைய வள்ளன்மையால் தாம் பெற்ற பேறுகளை கூறினார் கீழே .
அவ்வள்ளன்மை மிக்கு மேலும் அவர் தமக்கு செய்து அருளிய பேருதவியை நினைவு கூர்ந்து-அதனிலே ஈடுபடுகிறார் .

கைத்தனன் தீய சமயக் கலகரைக் காசினிக்கே
உய்த்தனன் தூய மறை நெறி தன்னை என்றுன்னி வுள்ளம்
நெய்த்த வன் போடிருந்தேத்தும் நிறை புகழோருடனே
வைத்தனன் என்னை இராமானுசன் மிக்க வண்மை செய்தே -72- –

மிக்க வண்மை செய்து வைத்தனன்
இருந்து ஏத்துதல்-இடைவிடாமல் துதித்து கொண்டு இருத்தல்
புகழோர் உடனே வைத்தல்-குணம் நிரம்பினவர் கூட்டத்திலே என்னையும் குணம்
நிரம்பினவன் ஒருவன் என்று ஒக்க எண்ணலாம் படி சேர வைத்தல் .
இனி தீய குணம் உடையோரிடை இது காரும் கூடி இருந்த என்னை-அடியாரோடு இருந்தமை -என்றபடி
நிறை புகழோர் ஆன ஸ்ரீ வைஷ்ணவர்கள் நடுவே இருக்கும்படி பண்ணினார் -என்னவுமாம் .

கீழ்ப் பாசுரத்தில் கூறப்பட்ட பேறுகள் அனைத்துக்கும் நிறை புகழோர் உடனே
வைத்தல் அடித்தளமாய் முக்கியமாதல் பற்றி இதனைத் தனிந்து நினைவு
கூர்ந்து மிக்க வண்மையினால் இங்கன் உபகரித்து அருளுவதே ! என்று ஈடுபடுகிறார் .

—————

தம்முடைய வள்ளன்மை முதலியவற்றால் இவ் உலகத்தவர் கட்குத் தாமே ரஷகராய் –
உண்மையான ஞானத்தை உபதேசித்து அருளும் எம்பெருமானாரை ரஷகராக அனுசந்திக்கும் பலம் ஒழிய
எனக்கு வேறு ஒரு தரித்து இருக்கும் நிலை இல்லை என்கிறார் –

வண்மை யினாலும் தன் மாதகவாலும் மதி புரையும்
தண்மை யினாலும் இத்தாரணி யோர்கட்குத் தான் சரணாய்
உண்மை நன் ஞானம் உரைத்த விராமானுசனை வுன்னும்
திண்மை யல்லால் எனக்கில்லை மற்றோர் நிலை நேர்ந்திடிலே – – 73- –

உண்மை ஞானத்தை -உபதேசிப்பதனால் சம்சார தாபத்தை தீர்த்தலாலும்-
பகவானுடைய குணங்களை துய்க்க செய்து ஆனந்தப் படுத்தலாலும் –
எம்பெருமானார் இடம் சந்தரன் இடத்தில் போன்ற குளிர்ச்சி உள்ளது என்க .-
சுடர் மா மதி போல் உயிர்க்கு எல்லாம் தாயாய் அளிக்கின்ற தன்மை எம்பெருமானிடம் உள்ளதே யாயினும்
அவன் பால் உள்ள ஸ்வா தந்த்ரியத்தின் வெப்பத்தினால் அத் தண்மை தாக்கு உறுவதும் உண்டு
எம்பெருமானார் இடமும் ஸ்வா தந்த்ரிய வெப்பம் அடியோடு இல்லாமையின் தண்மை என்றும் குன்றாது –
தனிப்பட்டதாய் அமைந்தது -என்க –

ஸ்ரீ பராசார பட்டர்-ஔ தார்ய காருணி கதாஸ்ரித வத்சலத்வ பூர்வேஷூ – என்று
வண்மை கருணை அடியார்கள் இடம் வாத்சல்யம் முதலிய குணங்கள் -என்று லோக மாதாவான-
ஸ்ரீ ரெங்க நாச்சியார் இடம் இம் மூன்று குணங்களை முக்கியமாக அனுசந்த்திது இருப்பது போலே –
அமுதனாரும் இம் மூன்று முக்கிய குணங்களை எம்பெருமானார் இடம் அனுசந்திக்கிறார் –

மாதகவால் சரணானார்
1-வண்மையினால் தானே சரணானார்
2-தண்மை யினால் உண்மை நன் ஞானம் உரைத்தார் -என்னலுமாம் –
உண்மை ஞானம் உள்ளதை உள்ளவாறே உணர்த்துவதால் தாபத்தை தீர்ப்பதாகவும்
நல் ஞானம் எம்பெருமான் குணங்களை பற்றியதாய் இருத்தலின் ஆனந்தத்தை விளைவிப்பதாயும் உள்ளது ..
மதி போன்ற தண்மை யினால் உரைக்கும் ஞானமும் மதி புரைவது ஆயிற்று .

———

எம்பெருமானார் உரைத்த உண்மை நல் ஞானத்திற்குப் பகைவரான புறச் சமயத்தவரையும் –
அகச் சமயத்தவரான குத்ருஷ்டிகளையும் -களைந்து எறியும் விஷயத்தில் சர்வேஸ்வரனைப்
பார்க்கிலும் அவ் எம்பெருமானார் எளிதினில் காட்டி யருளும் திறமையை பாராட்டி அதனில் ஈடுபடுகிறார் .

தேரார் மறையின் திறமென்று மாயவன் தீயவரைக்
கூராழி கொண்டு குறைப்பது கொண்டலனைய வண்மை
ஏரார் குணத் தெம்மி ராமானுசன் அவ் எழில் மறையில்
சேராதவரைச் சிதைப்பது அப்போதொரு சிந்தை செய்தே – -74-

1-மாயவன் மறையின் திறம் தேராதவர்களை புத்தியினால் வெல்லலாகாது- கைப்பிடித்த படையினால் வெல்லுகிறான் ..
எம்மிராமானுசனோ மறையில் பொருந்தாத அன்னாரைத் தம் யுக்தியினாலேயே வென்று விடுகிறார் ..
2-மாயவன் குறைக்கிறான் -குறைப்பது மீண்டும் தளிர்ப்பதும் உண்டு
இராவணன் தலை அற்றற்று வீழ மீண்டும் முளைத்தன அன்றோ –
எம்மிராமானுசனோ –சிதைக்கிறார் -சிதைத்தது மீண்டும் தளிர்க்க வழியே இல்லை
3-மாயவன் வேறு ஒரு பொருளான ஆழி கொண்டு குறைக்கிறான்
எம்மிராமானுசனோ தம் சிந்தனா சக்தியாலே சிதைக்கிறார் .
4-மாயவன் குறைப்பது என்றும் உள்ள கூராழி என்னும் ஒரே கருவி கொண்டே
எம்மிராமானுசன் சிதைப்பதோ அவ்வப்போது புதிது புதிதாய்த் தோற்றும் சிந்தை கொண்டே –
அப்போதொரு சிந்தை செய்தே –
ப்ரஜ்ஞா நவ நவோன் மேஷ சாலி நீ பிரதிபாமாதா -புதிது புதிதாக தோன்றி விளங்கும் அறிவு
பிரதிபை -என்று கொள்ளப்படுகிறது -என்றபடி இங்கே கூறப்படும் சிந்தையை பிரதிபை என்று உணர்க

————–

பகவான் தான் அழகு அனைத்தையும் புலப்படுத்திக் கொண்டு கண் எதிரே வந்து -உன்னை விடேன் என்று இருந்தாலும் –
தேவரீர் குணங்களே வந்து போட்டி இட்டு நாலா புறங்களிலும் சூழ்ந்து மொய்த்துக் கொண்டு
என்னை நிலை குலைந்து ஈடுபடும்படி செய்யும் -என்கிறார் .

செய்த்தலைச் சங்கம் செழு முத்த மீனும் திருவரங்கர்
கைத்தலத் தாழியும் சங்கமு மேந்தி நம் கண் முகப்பே
மெய்த்தலைத் துன்னை விடேன் என்று இருக்கிலும் நின் புகழே
மொய்த்தலைக்கும் வந்து இராமானுசா ! வென்னை முற்று நின்றே – – 75-

கையில் ஆழியும் -என்னாது கைத்தலத்து ஆழியும் -என்றது கையின் பரப்புடைமை தோற்றற்கு -என்க –
நம் கண் முகப்பே –
திருவரங்கர் கூரார் ஆழி வெண் சங்கேந்தி வந்து தன் சௌந்தர்யம் முதலிய குணங்களில்
ஈடுபடுத்த முற்படினும் தாம் நிலை பேராது நிற்றலுக்கு ஸ்வாமியை சாஷியாக சேர்த்து கூறும்
நோக்கம் உடையவராய் -என் கண் முகப்பே -என்னாது –நம் கண் முகப்பே -என்கிறார் –
எம்பெருமானார் முக்கோல் ஏந்திய கைத்தலத்து அழகே என்னை ஈடுபடச் செய்கிறது .
சஸ்த்ரம் பிடித்த அரங்கர் கையில் எனக்கு ஈடுபாடு இல்லை .
சாஸ்திரம் பிடித்த எம்பெருமானார் கையில் தான் எனக்கு ஈடுபாடு .

தன் வடிவைக் காட்டி ஈடுபடுத்த முற்படுவது இயல்பு -ஆதலின் அவன் அங்கனம் முற்படினும்
என் ஆசார்ய நிஷ்டையை குலைக்க ஒண்ணாது என்கிறார் இப்பாசுரத்தில் .
தேவ பிரான் தன் கரிய கோலத் திரு உருவை மதுர கவியாருக்கு தானே மேல் விழுந்து காட்டினான் அன்றோ மதுர கவியார் கண்டார்
அமுதனாரோ விடேன் என்று தம் அழகைக் காட்டி திருவரங்கர் நிலை நிற்பினும்
கண் எடுத்தும் பாராது எம்பெருமானார் குணங்களிலேயே தாம் ஈடுபட்ட நிலை குலையாமல் இருப்பதாக பேசுகிறார் .

நம்மாழ்வார் தாமும் , கருட வாஹணன் வந்தாலும் அவனுக்கு ஒரு கும்பீடு போட்டு விட்டு இங்கேயே இருப்பேன்
என்று திவ்ய தேசமே தஞ்சம் என்று சொல்வதாக இருப்பதாக பேசுகிறார்-

கூடும் கொல் வைகலும்* கோவிந்தனை மதுசூதனை கோளரியை,*
ஆடும் பறவைமிசைக் கண்டு* கைதொழுது அன்றி அவன் உறையும்,*
பாடும் பெரும் புகழ் நான்மறை வேள்வி* ஐந்து ஆறு அங்கம் பன்னினர் வாழ்,*
நீடு பொழில் திருவாறன்விளை தொழ* வாய்க்கும்கொல் நிச்சலுமே!

————–

ஆசார்யர் ஆகிய தேவரீரை அன்றிக் கண் எடுத்தும் பாரேன் என்றார் கீழ் –
இதனை உகந்த எம்பெருமானார் இவருக்கு எதனை அளிப்போம் என்னும் கருத்து தோன்ற எழுந்து அருளி இருப்பதை கண்டு –
தமக்கு வேண்டும் பேற்றினை இன்னது என்று முடிவு கட்டிக் கோருகிறார் –

நின்ற வண் கீர்த்தியும் நீள் புனலும் நிறை வேங்கடப் பொற்
குன்றமும் வைகுண்ட நாடும் குலவிய பாற் கடலும்
உன்றனக் கெத்தனை இன்பந்தரு முன்னிணை மலர்த்தாள்
என்றனக்கு மது இராமானுசா !இவை ஈந்தருளே – -76 –

திரு மலையின் கீர்த்தி என்றும் ஒருப்பட்டு இருத்தலின் –நின்ற கீர்த்தி -என்கிறார் .
வண் கீர்த்தி
வேறு பயனைக் கோராதவர்க்கு பகவத் ஆபிமுக்க்யம் தொடங்கி-கைங்கர்யம் ஈறாக -தர வல்லது திரு மலையின் கீர்த்தனமே
பொற் குன்றம்
பொன் போலே சீறியதும் -விரும்பத் தக்கதுமாய் இருத்தலின் -பொற் குன்றம் -என்றார் .எம்பெருமான் பொன் மலை -என்றார்
குலசேகரப் பெருமாளும் -பெருமாள் திரு மொழி –4 10-

வேம்கடப் பொற் குன்றத்தில் நிறைந்த வண் கீர்த்தி வாய்ந்த நின்ற திருக் கோலமும் –
வைகுண்ட நாட்டில் செம் தாமரைக் கண் பிரான் காட்டிய இருந்த திருக் கோலமும் –
பாற்கடலில் -கிடததோர் கிடக்கை -என்று கொண்டாடும் சயனத் திருக் கோலமும்
இம் மூன்று இடங்களிலும் எம்பெருமானைத் தன மீது கொண்ட ஆதி சேஷனாய் இருத்தலின் எம்பெருமானாருக்கு பேரின்பம் தருகின்றன

பரம ப்ராப்யமான இடம் ஆதல் பற்றி வேம்கடப் பொற் குன்றம் முன்னரும் –
ப்ராப்யமான இடம் ஆதல் பற்றி வைகுண்ட நாடு அதனை எடுத்தும் –
ஆர்த்தி தீர ஆஸ்ரயிக்கும் இடமாதல் பற்றி திருப்பாற்கடல் அதன் பின்னரும் முறைப்படுத்தப் பட்டன

ஏனைவ குருணா யஸ்ய நயாச வித்யா ப்ரதீயதே தஸ்ய வைகுண்ட துக்தாப்த்தி த்வாரகாஸ் சர்வ ஏவ ச -என்று
எந்த ஆசார்யனாலேயே எவனுக்கு சரணாகதி விதியை அளிக்கப்படுகிறதோ
அவனுக்கு அந்த ஆசார்யனே வைகுண்டமும் பாற்கடலும் த்வாரகையும் -எல்லாம் ஆவான் –

வில்லார் மணி கொழிக்கும் வேம்கடப் பொற் குன்ற முதல்
செல்லார் பொழில் சூழ் திருப்பதிகள் எல்லாம்
மருளா மிருளோடே மத்தகத்துத் தன் தாள்
அருளாலே வைத்த அவர் -என்னும் ஞான சாரப் பாசுரமும் அனுசந்திக்கத் தகன

எம்மா வீட்டுத் திறமும் செப்பம் நின் செம்மா பாத பற்புத் தலை சேர்க்க வேணும் அம்மா அடியேன் வேண்டுவது ஈதே -என்று
நம் ஆழ்வாரும் எம்பெருமானைப் பிரார்த்தித்தது போலே அமுதனார் எம்பெருமானைப் பிரார்த்திக்கிறார்

————-

கோரிய படி திருவருளை ஈந்து அருள -அவைகளைப் பெற்று க்ருதார்த்தராய் -அவர் செய்த உபகாரங்களை அனுசந்தித்து –
இவை எல்லாம் செய்த பின்பு இனிச் செய்யப் போவது ஏதோ -என்கிறார் .

ஈந்தனன் ஈயாத இன்னருள் எண்ணில் மறைக் குறும்பைப்
பாய்ந்தனன் அம்மறைப் பல் பொருளால் இப்படியனைத்தும்
ஏய்ந்தனன் கீர்த்தியினால் என் வினைகளை வேர் பறியக்
காய்ந்தனன் வண்மை இராமானுசற்கு என் கருத்து இனியே – 77 –

வண்மை இராமானுசற்கு என்கருத்து இனியே –வள்ளலாகிய எம்பெருமானார் இவ்வளவு உபகரித்ததோடு அமையாமல்
மேலும் உதவுதற்கு முற்படுகிறார் -இவ்வளவுக்கு மேலும் உதவுதற்கு என்ன தான் இருக்கிறதோ – என்றபடி –
என்னை முற்றுமுயிர் உண்டு …இன்னம் போவேனோ கொலோ என் கொல் அம்மான் திருவருளே -திருவாய் மொழி – 10-7 3- –
என்னும் நம் ஆழ்வார் ஸ்ரீ ஸூக்தியையும் –
நின்னருளே புரிந்திருந்தேன் இனிஎன் திருக் குறிப்பே –பெரியாழ்வார் திரு மொழி 5-4 1-
என்னும் பெரியாழ்வார் ஸ்ரீ ஸூக்தியையும் இங்கு ஒப்பு நோக்குக .

————-

இப்படி என்னைத் திருத்தி -தேவரீருக்கு உகந்த விஷயமான திரு மகள் கேள்வனுக்கு உறுப்பாக்கின பின்பு-
வேறு ஒரு பொய்ப் பொருளை என் நெஞ்சில் பொருந்துமாறு செய்ய இயலாது -என்கிறார் .

கருத்தில் புகுந்து உள்ளில் கள்ளம் கழற்றிக் கருதரிய
வருத்தத்தினால் மிக வஞ்சித்து நீ யிந்த மண்ணகத்தே
திருத்தித் திருமகள் கேள்வனுக்கு ஆக்கிய பின் என்னெஞ்சினில்
பொருத்தப்படாது எம்மிராமானுச! மற்றோர் பொய்ப் பொருளே – – 78- –

ஆளுமாளார் -என்கிறவனுடைய-தனிமையை தவிர்க்கைக்காக யாயிற்று பாஷ்ய காரரும் இவரும் உபதேசிப்பது -ஸ்ரீ வசன பூஷணம் – 255-

மெய்ப் பொருள் -ஜீவாத்மா திரு மகளுக்கும் அவள் கேள்வனுக்குமே உரியதாய் இருத்தல் –

பொய்ப் பொருளான ஜீவாத்மா பரப்ரம ஐக்யமடைதல் –
அது தனக்கு உரிய ஸ்வ தந்திரப் பொருளாய் இருத்தல் –
பிரரான தேவர்களுக்கு உரியதாய் இருத்தல் -போல்வன-மற்று ஓர் பொய்ப் பொருள்-

எம் குருவான ராமானுசன் உபதேசித்த சேஷத்வமே மெய்ப் பொருள் –
அவர் உபதேசிக்காத ஒவ் ஒரு பொருளும் பொய்ப் பொருள் -என்றபடி

—————————————————————————————————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading