ஸ்ரீ திருமலை நல்லான் சக்ரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண அய்யங்கார் ஸ்ரீ ஸூக்தி- அமுத விருந்து–79-88–

உலகில் உள்ளோர் உய்வு பெற வேணும் என்னும் ஆசை இருந்தும் -அருமந்த ஜ்ஞானத்தை-உபதேசித்து
உஜ்ஜீவிப்பிக்க காத்திருக்கும் எம்பெருமானாரைத் தெய்வமாக பற்றி –-அவ அருமந்த ஜ்ஞானத்தை பெற கிலாது இழந்து –
வேறு தெய்வத்தை தேடி அலைந்து-உழல்கிறார்களே என்று வருந்திப் பேசுகிறார் -இப்பாசுரத்தில் .

பொய்யைச் சுரக்கும் பொருளைத் துரந்து இந்தப் பூதலத்தே
மெய்யைப் புரக்கும் இராமானுசன் நிற்க வேறு நம்மை
உய்யக் கொள்ள வல்ல தெய்வம் இங்கி யாதென்று லர்ந்தவமே
ஐயப்படா நிற்பர் வையத்துள்லோர் நல்லறி விழந்தே – – 79- –

தேகாத்ம அபிமானத்தையும் -ஸ்வா தந்த்ர்யா அபிமானத்தையும் –அந்ய சேஷத்வ அபிமானத்தையும் -ஒட்டி என்றபடி
இவ் அபிமானங்களை தம் உபதேசத்தால் ஒட்டி இந்த பூதலத்தே மெய்யைப் புரக்கிறார் எம்பெருமானார் -என்க .
மெய் என்பது -பிறப்பு இறப்புகள் இன்றி -என்றும் ஒருபடி பட்டு -மாறுபாடு அற்று -விளங்கும்
ஆத்மா தத்துவத்தை –மெய் போலே என்றும் குலையாமல் இருத்தலின் -ஆத்மா ஸ்வரூபத்திற்கு மெய் எனபது
ஆகு பெயர் ஆயிற்று

ஆதிப்பிரான் நிற்க மற்றைத் தெய்வம் நாடுதிரே -திருவாய்மொழி -4 10-1 – – என்றார் நம் ஆழ்வார் .
மெய்யைப் புரக்கும் இராமானுசன் நிற்க வேறு நம்மை உய்யக் கொள்ள வல்ல தெய்வம் இங்கியாதென்று
உழலுகிறீரே என்கிறார் அமுதனார் .
உடல் கொடுக்கும் -படைக்கும் -அவனே தெய்வம் என்றார் நம் ஆழ்வார் .
நல் அறிவு கொடுக்கும் ஆத்மா ரஷணம் பண்ணுமவனே தெய்வம் என்கிறார் அமுதனார்

————

எம்பெருமானாரைத் தெய்வமாகப் பற்றும் அளவில் நின்றேன் அல்லேன் –
அவரையே தெய்வமாகப் பற்றி இருப்பாரைத் தமக்கு உரிய தெய்வமாக கருதிக் கொண்டு இருக்கும் அவர்களுக்கே
ஒழிவில் காலம் எல்லாம் வழுவிலா அடிமை செய்யும் நிலை வாய்க்கப் பெற்றேன் என்கிறார் இதனில் .

நல்லார் பரவும் இராமானுசன் திரு நாமம் நம்ப
வல்லார் திறத்தை மறவாதவர்கள் யவர் அவர்க்கே
எல்லா விடத்திலும் என்றும் எப்போதிலும் எத் தொழும்பும்
சொல்லால் மனத்தால் கருமத்தினால் செய்வன் சோர்வின்றியே – -80 – –

வீட்டின்பத்தையும் சம்சார பந்தத்தையும் -தருவது நாராயண சதுரஷரீ .
வீட்டின்பமொன்றினையே தர வல்லது ராமானுஜ சதுரஷரி –இதனால் இது சாதுர்யம் வாய்ந்தது

நம் ஆழ்வார் -திருமால் திருப்பேர் வல்லாரடிக் கண்ணி சூடிய மாறன் -திரு விருத்தம் – 100- என்று தம்மை
சொல்லிக் கொள்கிறார் .இவரோ இராமானுசன் திரு நாமம் நம்ப வல்லாரை மறவாதவர்க்கு
அடிமை செய்பவன் நான் -என்று மேலும் ஒரு படி விஞ்சி தம்மை சொல்லிக் கொள்கிறார்

நம் ஆழ்வார் ஒழிவில் காலம் எல்லாம் ….அடிமை செய்ய வேண்டும் நாம் -என்று
பகவத் விஷயத்தில் கூறியதை –இவர் இராமானுசர் அடியார் திறத்து கூறுகிறார் –

——

இசைவில்லாமல் இருந்த தமக்கு -எம்பெருமானார் அருளாலே -ருசி உண்டாகியதை நினைத்து அவர் புரிந்த உபகாரத்தை –
நேரே அவரை நோக்கி – விண்ணப்பித்து -தேவரீர் கருனைக்கு ஒப்பு இல்லை -என்கிறார்

சோர்வின்றி வுன்தன் துணை அடிக்கீழ் தொண்டு பட்டவர் பால்
சார்வின்றி நின்ற வெனக்கு அரங்கன் செய்ய தாளிணைகள்
பேர்வின்றி யின்று பெறுத்தும் இராமானுச இனி யுன்
சீரொன்றிய கருணைக்கு இல்லைமாறு தெரிவுறிலே – – 81- –

அடியார்க்கு ஆட்படுதலும் –பேர்வின்றி அரங்கன் தாளிணைகளைப் பெறுதலும் –
இன்று எனக்கு பாகவத சேஷத்வத்திலே விருப்பம் உண்டாம்படி திருப்பத்தை ஏற்படுத்தின-
எம்பெருமானார் திருவருளால் கிடைத்த பேறுகள்-என்கிறார் .
பாகவதர்க்கே உரிமைப் பட்டது ஆத்மா -என்று எம்பெருமானார் உண்டு பண்ணின உணர்வு-
அடியாராகிய ஆழ்வானுக்கு அரங்கனால் ஆட்படுத்தப் பட்டு –
அரங்கன் தாளிணைகளை-பேர்வில்லாமல்-பெறும்படி செய்வதனால் -உரம் பெற்று நின்றது -என்க .
பாகவத சேஷத்வத்தை உணர்த்தி -அருளினதாக கூறாது –
அவ் உணர்வில் நிற்பார் பேர்வின்றி பெரும் அரங்கன் தாளிணைகளை பெறுவித்ததாக-கூறுவதனால்
அவ் உணர்வு உரம் பெற்று மிளிருவது காண்க –

பாகவத சேஷத்வத்தின் பயனாக அரங்கன் செய்ய தாளிணைகள் பெறுவித்ததாக கூறாமல்
நேரே பாகவத சேஷத்வத்தையே பெறுவித்ததாக உரை கூறலுமாம் –

———–

இன்று பெறுத்தும் என்று கீழ்க் கூறிய பேற்றினுக்கு உடலாகத் தமக்கு பண்ணின உபதேசத்தை
நினைவு கூர்ந்து -ஈடுபாட்டுடன் எம்பெருமானார் என்ன தார்மிகரோ-என்கிறார் –

தெரிவுற்ற ஞானம் செறியப் பெறாது வெந்தீ வினையால்
உருவற்ற ஞானத் துழல்கின்ற வென்னை ஒரு பொழுதில்
பொருவற்ற கேள்வியனாக்கி நின்றான் என்ன புண்ணியனோ !
தெரிவுற்ற கீர்த்தி இராமானுசன் என்னும் சீர் முகிலே – – 82- –

தெரிவுற்ற கீர்த்தி –
இன்னாருக்கு தெரிவுற்ற என்னாமையாலே -பூமி எங்கும் உள்ள பண்டிதர் பாமரர் என்கிற
வேறுபாடு இன்றி -எல்லோருக்கும் தெரிந்த கீர்த்தி -என்க –திக்குற்ற கீர்த்தி – 26- என்றார் கீழும்

இராமானுசன் என்னும் சீர் முகில்
சீர் முகில் -என்னும் இராமானுசன் -என்று மாறுக
சீர் -இங்கே வள்ளன்மை குணம்
வள்ளன்மை உடைய முகிலாக சொல்லப் படுபவர் இராமானுசன் -என்க
குணம் திகழ் கொண்டல் – 60- என்று கீழும் முகிலாக எம்பெருமானார் கூறப் பட்டுள்ளமை காண்க .
சீரிய முகில் -சீர் முகில் -சீர் -அழகாகவுமாம் –

—————

பொருவற்ற கேள்வி -என்று உமது கேள்வி அறிவை சிறப்பிப்பான் என் – ஏனையோரும் கேள்வி அறிவு பெற்றிலரோ என்ன –
ஏனையோர் கேள்வி அறிவு பிரதம பர்வத்தை பற்றியதாதலின் -பகவானிடம் பிரபத்தி பண்ணி பரம பதத்தை அடைவராய்-நின்றனர் அவர் –
நானோ சரம பர்வத்தின் எல்லை நிலையான ஆசார்யராகிய தேவரீரைப் பற்றிய கேள்வி அறிவு உடையவனாக ஆக்கப்பட்டமையின் –
அவர் கூட்டத்தில் சேராது -தேவரீர் திருவடிகளையே பரம பதமாய் கொண்டு –
அதனை தேவரீர் வள்ளன்மையால் பெறுமவனாய் உள்ளேன் –இது என் கேள்வி யறிவினுடைய பொருவற்றமை -என்கிறார்

சீர் கொண்டு பேரறம் செய்து நல்வீடு செறிதும் என்னும்
பார்கொண்ட மேன்மையர் கூட்டனல்லேன் உன் பத யுகமாம்
ஏர் கொண்ட வீட்டை எளிதினில் எய்துவன் உன்னுடைய
கார் கொண்ட வண்மை இராமானுச ! இது கண்டு கொள்ளே – – 83-

எம்பெருமானாருடைய வண்மை கார் கொண்டது -அதாவது மேகத்தை வென்றது –
சிலருக்கு சில காலத்திலே மழை பொழிவது கார்
எல்லாருக்கும் எல்லாகாலத்திலும் பயன் படுவது வண்மை-ஆதலின் காரை வென்றது வண்மை
இது கண்டு கொள்
தேவரீர் வழங்க நான் பெற்றமை -வழங்கின தேவரீருக்கு தெரியாதோ –
ஏற்ற என் வாயாலே சொல்லிக் கேட்க வேணுமா என்கிறார் .
நான் கேள்வியினால் பிரபத்தி செய்து பகவானை அடைவார்கள் கூட்டத்தில் சேர்ந்திலேன்-
பொருவற்ற கேள்வியினால் ஆசார்யனுடைய அபிமானத்திற்கு பாத்ரமாகி எம்பெருமானார்-திருவடிகளையே
பெரும் பேறாக பெறுமவன் ஆனேன் –என்பது கருத்து .

———–

எம்பெருமானார் வள்ளன்மையாலே இனிமேல் பெற வேண்டியவை
ஒரு புறம் இருக்க -இதற்கு முன்பு பெற்றவை தாம் -ஒரு கணக்கில் அடங்குமோ –என்கிறார் .

கண்டு கொண்டேன் எம் இராமானுசன் தன்னை காண்டலுமே
தொண்டு கொண்டேன் அவன் தொண்டர் பொற்றாளில் என் தொல்லை வெந்நோய்
விண்டு கொண்டேன் அவன் சீர் வெள்ள வாரியை வாய் மடுத்தின்
றுண்டு கொண்டேன் இன்னுமுற்றனவோ தில் உலப்பில்லையே – -84 – –

காண்டலுமே –தொண்டர் பொற்றாளில்-
கண்ட மாத்திரத்திலே -அவர் அளவோடு நில்லாது அவர்க்கு ஆட்பட்டாருடைய
அழகிய திருவடிகளில் அடிமைப் பட்டு விட்டேன் -என்கிறார் .
அவன் சீர் —உண்டு கொண்டேன்
சீர் -குணம் அது வெள்ளமாய்ப் பெருக்கெடுத்து கடலாய் தோற்றுகிறது –
விடாய் தீர அக்குணக் கடலையே வாய் மடுத்து உண்டு கொண்டேன் என்கிறார்
இன்னம் -உலப்பு இல்லையே
இனி மேலும் நான் பெற்றவைகளை சொல்லிக் கொண்டே போனால் ஒரு முடிவே இல்லை -என்கிறார் .

———-

எம்பெருமானாரை தொழும் பெரியோர்கள் திருவடிகளைத் தவிர
என் ஆத்மாவுக்கு வேறு ஒரு பற்று இல்லை -என்கிறார் .

ஓதிய வேதத்தின் உட் பொருளாய் அதன் உச்சி மிக்க
சோதியை நாதன் என வறியாது உழல்கின்ற தொண்டர்
பேதைமை தீர்த்த விராமானுசனைத் தொழும் பெரியோர்
பாத மல்லால் என்தன் ஆர் உயிர்க்கு யாதொன்றும் பற்று இல்லையே – – 85- –

நாதன் என்னும் அறிவை -ஊட்டி -அறியாமை தீர்த்து -அருளினார் எம்பெருமானார் -என்க –
நாம் அனைவரும் நமது ஆத்மாவான இறைவனுக்கே சேஷப் பட்டவர்கள் ஆகிறோம் -என்னும் உபதேசத்தினால்
அறிவை ஊட்டி எம்பெருமானார் பேதைமை தீர்த்து அருளினார்
இராமானுசனைத் தொழுவார் -என்பதே அவர்கள் பெயர் .
தொழுகையே அவர்களுக்கு நிரூபகம் -இத்தகைய பெருமை வாய்ந்தவர்கள் என்றபடி –
ஆழ்வான் -ஆண்டான் போல்வார்கள் பாதம் அல்லால் –பற்று இல்லை –
என் தன் ஆர் உயிர்க்கு பாதமே பற்றுக் கோடு-பிறிது ஒன்றும் இல்லை -என்கிறார் .

———-

எம்பெருமானார் இடம் ஈடுபடும் உள்ளம் படைத்தவர் எவராயினும் -அவர் மேல் உள்ள காலம் எல்லாம் –
என்னை ஆள்வதற்கு உரிய பெரியவர் ஆவார் -என்கிறார் –

பற்றா மனிசரைப் பற்றி அப் பற்று விடாதவரே
உற்றார் என உழன்றோடி நையேன் இனி ஒள்ளியநூல்
கற்றார் பரவும் இராமானுசனைக் கருதும் உள்ளம்
பெற்றார் யவர் அவர் எம்மை நின்றாளும் பெரியவரே – – 86-

பெரியவர் ஆளுவதோ என்றும் அடிமை இன்பம் ஒன்றையே தருவதாய் இருத்தலின் ஒருபடிப் பட்டு இருக்கும்
எம்பெருமானாரைப் பற்றிய பெரியவர் -நாம் பையல் எனக் கொண்டு -தாமாகவே முன் போல் உழன்று ஓடி நைய விடாது ஆள்கின்றனர் .
என்னே என் நிலை அடியோடு மாறின படி -என்கிறார் .
அற்ப மனிசரைப் பற்றி அவரை உற்றாரஎன உழன்று ஓடி நைந்தேன் –இது நானாக தேடிக் கொண்ட கேடு
இன்று பெரியவர் என்னை அபிமானித்து அங்கன் நைய விடாது ஆள்கின்றனர் .
இது ஹேது எதுவும் இன்றி எனக்கு கிடைத்த பேரும் பேறு -என்ற வியந்து பேசுகிறார் .

————

ஸ்ரீ எம்பெருமானார் -உபதேசித்த ஞானம் வாய்க்காதவர்களுக்குத் தான் கலியினால் கேடு உண்டாகும் என்கிறார்

பெரியவர் பேசிலும் பேதையர் பேசிலும் தன் குணம் கட்கு
உரிய சொல்லென்றும் உடையவன் என்று என்றென்று உணர்வில் மிக்கோர்
தெரியும் வண் கீர்த்தி யிராமானுசன் மறை தேர்ந்து உலகில்
புரியு நன் ஞானம் பொருந்தாதவரைப் பொரும் கலியே – – 87- –

ஸ்ரீ எம்பெருமானார் இடம் அமைந்த மேன்மைக் குணங்களும் .
பேதையர் பேசும் போது அவர்களுடைய அறியாமை இயலாமை களின் அளவிற்கு ஏற்ப
ஸ்ரீ எம்பெருமானார் இடம் அமைந்த எளிமை குணங்களும் பொருளாகின்றன .
இங்கு -பேசுவார் எவ்வளவு பேசுவர் அவ்வளவே வடிவு -21-என்னும் ஸ்ரீ பேய் ஆழ்வார் ஸ்ரீ ஸூக்தியும் –
செலக் காண்கிற்பார் காணும் அளவும் செல்லும் கீர்த்தியாய் -ஸ்ரீ திருவாய் மொழி -5 -8-4- – –என்னும்
ஸ்ரீ ஸூக்தியும் ஒப்பு நோக்கத் தக்கன
பாம்பின் கால் பாம்புக்கு தெரியும் -என்னும் முறையிலே உணர்வின் மிக்கோரே
தெரிந்து கொள்ள வல்லவர் -என்க
(ஆதி சேஷன் மகிமையை விஷ்வக்சேனர் உணர்வார் -எம்பெருமானார் மஹிமையை நம்மாழ்வார் அறிவார் என்றவாறு )

எம்பெருமானார் என்னும் ஆசார்யன் ஆகிற துறையிலே -சத்துவ குணம் தலையெடுத்து -ஞானஸ்தானம் செய்தவர்கள்
மிகத் தூயராய் இருப்பதனால் -கலி அவர்களை நலிய இயலாது ..
அசுத்தி சிறிதேனும் காணப்படில் அன்றோ -கலியினால் ஆக்ரமிக்க முடியும் –

அந்த நல் ஞானத்தில் சேர்ந்து இருப்பவர்களைக் கலி நலியாதாதலின் அவர்கள் கோஷ்டியில் சேர்ந்த எனக்கு –
ஸ்ரீ இராமானுசனைக் கருதும் உள்ளம் பெற்றார் எவராயினும் -அவர் எம்மை ஆளும் பரமர் -என்னும் துணிபு
கலியினால் குலைவு பெறாது –என்பது கருத்து —

——–

எம்பெருமானார் ஆகிற சிம்மம்-குத்ருஷ்டிகள் ஆகிற புலிகளைத் தொலைப்பதற்காக
இவ் உலகில் வந்ததாக உருவகம் செய்து -அவரது அவதாரத்தை
ஸ்தோத்ரம் பண்ணுவேன் -என்கிறார் –

கலி மிக்க செந்நெல் கழனிக் குறையல் கலைப் பெருமாள்
ஒலி மிக்க பாடலைக் வுண்டு தன்னுள்ளம் தடித்து அதனால்
வலி மிக்க சீயம் இராமானுசன் மறைவாதியராம்
புலி மிக்கதென்று இப்புவனத்தில் வந்தமை போற்றுவனே – – 88- –

கலைப் பெருமாள்-என்கிறார் .
வட மொழி மறையின் அங்கங்களை –கலை -என்னும் சொல்லாலே வழங்கி உள்ளார் திரு மங்கை ஆழ்வார் –
பன்னு கலை நூல் வேதப் பொருள் எல்லாம் -பெரிய திருமொழி -7 8-2-

ஒலி மிக்க பாடல் -மிகுந்த ஒலியை உடைய பாடல் -என்றபடி -ஒலி -ஓசை
துள்ளலோசை முதலியவை இவருடைய பாடலில் மிகுந்து இருப்பதைக் காணலாம் .
ஒலி கெழு பாடல் -11 4-10 –

இவ்வாறு மறை வாதியரைவெல்லும் வலி -கலை பெருமான் பாடல்களினால் மிகுந்ததாம் .
எம்பெருமானாருக்கு –ஆரண சாரம் அல்லவோ அப்பாடல்கள்-அடையார் சீயம் –பெரிய திரு மொழி – 3-4 10- –
பாடல் வலி மிக்க சீயமாக்கிற்று

ஒலி மிக்க பாடலை உண்டு : இந்த கலியனின் பாடலே இவருக்குத் தாரகம் என்றபடி
மாறன் கலை உணவாகப் பெற்றோம் என்று மாமுனிகள் சொவது போல் , எம்பெருமானாருக்கு இது தாரகம் என்றபடி

—————————————————————————————————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading