எம்பெருமானார் அவதரித்து அருளின பின்பு உலகிற்கு உண்டான நன்மைகளை கூறி இனியராகிறார்
எம்பெருமானாருக்கு பெரிய பெருமாள் திருவடிகளில் உண்டான ஈடுபாடு கூறப்பட்டது .-
ஆனது செம்மை யற நெறி பொய்ம்மை அறு சமயம்
போனது பொன்றி இறந்தது வெங்கலி பூம் கமலத்
தேனதி பாய் வயல் தென்னரங்கன் கழல் சென்னி வைத்துத்
தானத்தில் மன்னும் இராமானுசன் இத்தலத்து உதித்தே -49 –
பூம் கமலத் தேனதி பாய் வயல் தென்னரங்கன் கழல்
திருவரங்கத்தில் தாமரை மலர்கள் தேன் சொரியும்–
வயல்கள் தண்ணீரினால் அல்ல—இந்த தாமரை மலர்கள் தேனினால் செழிப்பாகும் .
அது போல், இராமானுசரும் பெரிய பெருமாள் திருவடியை தனக்குத் தாரகமாகக் கொண்டு தரிக்கிறார்.
கழல் சென்னி வைத்து -என்கிறார்
அரசர்க்கு தம் முடி போல் இவருக்கு தென்னரங்கர் திருவடிகள் நினைத்த போது சூடலாம் படி சொந்தமாயின போலும் –
உடையவர் -யதிராஜர் -அடி சூடும் அரசர் ஆனார்
பருப்பதத்துக் கயல் பொறித்த பாண்டியர் குலபதி போல்
திருப் பொலிந்த சேவடி என் சென்னியின் மேல் பொறித்தாய் -பெரியாழ்வார் திரு மொழி -5 4-7 – -என்றபடி –
பெரி யாழ்வார் சென்னியில் இறைவன் முயன்று திருவடியைப் பொறித்த-அருமை எம்பெருமானார் திறத்து இல்லை –
தானே எடுத்து வைத்துக் கொண்டது –நீள் கழல் சென்னி பொருமே -திருவாய் மொழி – 1-9 11- -என்றபடி
இவர் சென்னியின் வைத்துக் கொள்ளும்படி போலும்– கழல் நீட்டி யரங்கன் துயில்வது –
உதித்து ஆனது செம்மை அற நெறி –
ஸூரியன் உதித்து அன்றோ வழி செம்மையாய் துலங்குவது –
இராமானுச திவாகரன் உதித்து அற நெறி செம்மை யாயிற்று -என்க-
இத்தலத்து தானதில் மன்னும்-
இந்தளத்தில்-கும்மிட்டியில் -செந்தாமரை போலே இருள் தருமா ஞாலத்தில்
தென்னரங்கன் கழலில் மன்னி இருப்பது-
————
எம்பெருமானாருக்கு பெரிய பெருமாள் திருவடிகளில் உண்டான ஈடுபாடு முன் பாசுரத்தில்-கூறப்பட்டது .
இங்கு தமக்கு உத்தேச்யமான எம்பெருமானார் திருவடிகளின் ஸ்வபாவத்தை அனுசந்தித்து ஈடுபாடுகிறார்
உதிப்பன வுத்தமர் சிந்தையுள் ஒன்றலர் நெஞ்சம் அஞ்சிக்
கொதித்திட மாறி நடப்பன கொள்ளை வன் குற்றம் எல்லாம்
பதித்த வென் புன் கவிப் பாவினம் பூண்டன பாவு தொல் சீர்
எதித்தலை நாதன் இராமானுசன் தன் இணை யடியே – – 50-
உதிப்பன -என்று போக்யதையும்
நடப்பன -என்று ரஷகத்வமும்
பூண்டன -என்று குணம் உடைமையும் தோற்றுகின்றன-
திருமங்கை ஆழ்வாரும் தானே , நின்ற மாமருது இற்றிற்று-என்றும்
வானவர் கை தொழும் இணைத் தமரையடி என்றும் கலியன் கண்ணனின் திருவடியால் இருவர வீழ்ந்தது அருளிச் செய்தார்.
எம்பெருமானாரின் இணையடியோ பலரை அஞ்சும்படி பண்ணியது .
பாவு தொல் சீர் கண்ணா என்பரம் சுடரே -திருவாய் மொழி – 3-2 7- -என்றார் நம் ஆழ்வார் பிரதம பர்வதத்தை –
இவர் சரம பர்வதத்தை -பாவு தொல் சீர் எதித் தலை நாதன் -என்கிறார்.
எம்பெருமானார் சீர் சத்ரு கோஷ்டியிலும் பிரசித்தமாய் இருத்தல் பற்றி -பாவு தொல் சீர் -எனப்பட்டது.
உலகம் அளந்த -தென்னரங்கன் -பொன்னடியிலே ஈடுபட்டார் எம்பெருமானார் .
இவ்வமுதனார் அவ்வெம்பெருமானார் இணை யடிகளில் ஈடுபட்டுப் பேசுகிறார் .
அச்சுதனுடைய இரண்டு திருவடித் தாமரைகள் ஆகிற பொன்னில் -வ்யா மோஹம் உடைய-
எம்பெருமானார் திருவடிகளை ஆழ்வான் ஆஸ்ரயித்தால் போன்று இருக்கிறது இது
————
என்னை அடிமை கொள்வதற்காகவே எம்பெருமானார் அவதாரம் செய்து அருளினார் –என்கிறார்
அடியைத் தொடர்ந்து எழும் ஐவர் கட்காய் அன்று பாரதப்போர்
முடியப் பரி நெடும் தேர் விடும் கோனை முழுது உணர்ந்த
அடியர்க்கு அமுதம் இராமானுசன் என்னை யாள வந்திப்
படியில் பிறந்தது மற்றில்லை காரணம் பார்த்திடிலே –51 –
ஐவர்கட்காய் -என்றதனால் -ஐவர்கள் கையாளாய் தன்னை நினைத்துக் கண்ணன் இழி தொழில் செய்தமை தோற்றுகிறது –
நாடுடை மன்னர்க்குத் தூது செல்னம்பிக்கு -என்றதும் காண்க –
ராஜ்யமுடையார் பாண்டவர்களே -நாம் அவர்களுக்கு ஏவல் செய்து நிற்கிறோம் என்று ஆயிற்று
அவன்-நினைத்து இருப்பது -என்பது அவ்விடத்திய- 6-8 3- – – ஈடு
பாண்டவர்கள் தங்களைக் கண்ணன் அடிமைகளாக-நினைத்து இருக்க –
இவன் அவர்களுக்குத் தன்னை யடிமையாகக் காணும் நினைத்து இருப்பது –
நம் ஆழ்வாரும் -குரு நாடுடை ஐவர்கட்காய் ஆடிய மா நெடும் தேர்ப்படை நீர் எழச் செற்ற பிரான் -திருவாய் மொழி – 6-8 3-
ஆயுதம் எடாமைக்கு அனுமதி பண்ணுகையாலே தேர்க் காலாலே சேனையைத் துகள் ஆக்கினான் -என்பது ஆங்கு உள்ள ஈட்டு ஸ்ரீ ஸூக்தி
தேர் விடும் கோனை
தேர் விடும் -என்பதால் சௌலப்யமும்
கோனை -என்பதால் பரத்வமும் புலன் ஆகின்றன
முழுது உணர்ந்த –இராமானுசன்
ஐவர்கட்காய் என்று ஆஸ்ரித பஷ பாதமும்
தேர் விடும் -என்று ஆஸ்ரித பாரதந்திரியமும்
முடிய விடும் என்று விரோதி நிரசன சாமர்த்தியமும்
முழுதும் -என்பதனால்-உணர்த்தப்படுகின்றன –
———–
ஒருவராலும் ஆள முடியாத என்னை ஆண்டதுபோலே -இன்னும் பல
பொருந்தாவற்றையும் பொருந்த விடும் திறமை -எம்பெருமானார் இடம் உண்டு என்கிறார் .
பார்த்தான் அறு சமயங்கள் பதைப்ப இப் பார் முழுதும்
போர்த்தான் புகழ் கொண்டு புன்மையினேன் இடைத்தான் புகுந்து
தீர்த்தான் இரு வினை தீர்த்து அரங்கன் செய்ய தாள் இணையோடு
ஆர்த்தான் இவை எம் மிராமானுசன் செய்யும் அற்புதமே –52-
புன்மையினேன் இடை –ஆர்த்தான்
இப்படியில் பிறந்து -தன்னை ஆண்ட விதத்தை அருளிச் செய்கிறார் –
நன்மையால் மிக்க நான் மறையாளர்கள் புன்மையாக கருதிய தன்னை –
அன்னையாய் அத்தனாய் நம் ஆழ்வார் ஆண்ட தன்மையை மதுர கவிகளும் அருளிச் செய்தார் –
தம்மிடம் புன்மையே மிக்கு இருத்தலின் -அதனையே தமக்கு நிரூபகமாக –புன்மையினேன் -என்கிறார்.
புன்மையினேன் இடைப் புகுந்து -என்றமையால்-வாத்சல்யம் -தோற்றுதலின் -அன்னையாய் ஆண்டமை கூறப்பட்டதாயிற்று -.
இரு வினை தீர்த்தமையின் அத்தனாய் ஆண்டமை-கூறப்பட்டதாயிற்று
தான் புகுந்து -என்றமையின் –நிர்ஹேதுகத்வம் -காண்பிக்க பட்டதாயிற்று –
சாதன அனுஷ்டானம் இன்றி புகுந்தமை கூறப் பட்டதாயிற்று –
புன்மையினேன் இடைத்தான் புகுந்து என்று -புன்மை இல்லாது புகுந்தமைக்கு ஹேது வேறு இல்லை-
என்பது தோன்ற அருளிச் செய்ததனால் -புன்மையாகக் கருதுவராதலின் என்னை யாண்டிடும் தன்மையான் –
என்ற பொருள் காண்பிக்க பட்டதாயிற்று –
புகுந்து என்ற சொல் நயத்தாலே -எம்பெருமானாரையும் வர ஒட்டாது-தடுக்க வல்ல புன்மையின் திண்மை தோற்றுகிறது –
ஈஸ்வரன் சார்ந்த இரு வல் வினைகளும் சரித்து-மாயப் பற்று அறுத்து –தீர்ந்து
தன் பால் மனம் வைக்கத் திருத்தி-தன் அடியார்க்காக வீடு திருத்துவான் –
எம்பெருமானாரோ -இவ்வமுதனாரை புன்மையினர் ஆதலின் அரங்கன் செய்ய தாள் இணையோடு ஆர்த்து வைத்தார் .
————-
சகல சேதன அசேதனங்களும் சர்வேஸ்வரனுக்கே சேஷம் என்கிற விலஷணமான
அர்த்தத்தை ஸ்தாபித்து அருளினார் -என்கிறார் –
அற்புதன் செம்மை இராமானுசன் என்னை யாள வந்த
கற்பகம் கற்றவர் காமுறு சீலன் கருதரிய
பற் பல்லுயிர்களும் பல்லுலகி யாவும் பரன தென்னும்
நற் பொருள் தன்னை இந் நானிலத்தே வந்து நாட்டினனே – -53 –
என்னை ஆள வந்த கற்பகம்-கற்பகத்தின் நின்றும் வேறுபாடு -தோற்ற ஆட் கொள்கையும் –
இரப்பாளர் இருக்குமிடம் தேடி வருகையும் -எம்பெருமானார் ஆகிய கற்பகத்துக்கு கூறப்பட்டன –
வந்த கற்பகம் –பெருமாள் கோயிலில் இருந்து ஸ்ரீ ரங்கத்திற்கு எம்பெருமானார் வந்தது
தம்மை ஆளுவதற்காகவே-என்று கருதுகிறார் -அமுதனார் –
என்னை-இரக்கவும் அறியாத என்னை -என்னை யாக்கி எனக்கே தன்னைத் தந்த கற்பகம் -என்னும்
நம் ஆழ்வார் திரு வாய் மொழியை-இங்கு நினைவு கூர்க-
வந்த கற்பகம் –சக்கரவர்த்தி திருமகன் -சமேத்யப்ரதி நன்த்யச -இரப்பாளர் இடம் வந்தும் கொண்டாடியும் -என்றபடி –
இரப்பாளர் இடம் வந்து கொடுப்பது போலே எம்பெருமானாரும் இரப்பாளனாகிய என்னிடம் வந்து-தன்னையே வழங்கினார்
பற் பல்லுயிர் பரனது என்கையாலே
ஜீவான்மாவிற்க்கும் பரமான்விற்கும் உள்ள பேதமும் –
ஜீவான்மாக்களுக்குள் ஒருவருக்கு ஒருவர் உள்ள பேதமும்
காட்டப்படுகின்றன –
பல்லுலகு என்கையாலே –
அவ் வான்மாக்கள் இருக்கும் இடமாகிய பிரக்ருதியின் பரிணாமமான அசித்து என்னும் பொருள் கூறப்பட்டது –
பரன் என்கையாலே ஈஸ்வர தத்வம் காட்டப்பட்டது –
ஆக
சித்து -அசித்து -ஈஸ்வரன் -என்கிற தத்வ த்ரயமும்
பரனது -என்னும் இடத்து அது என்றதால் நம்முடைய மதத்திற்கே உரிய
சரீர ஆத்ம பாவ ரூபமான சம்பந்தமும் கட்டப்பட்டன ஆயின
பரனது எனும் நற் பொருள்-பிரதான பிரதி தந்த்ராரத்தம்
—————
நற்பொருள் நாட்டிய தன்மை கண்டு -புற மதங்களும் -வேதங்களும் -திருவாய்மொழியும்-
அடைந்த நிலைகளை -இதில் அருளிச் செய்கிறார்
நாட்டிய நீசச் சமயங்கள் மாண்டன நாரணனைக்
காட்டிய வேதம் களிப்புற்றது தென் குருகை வள்ளல்
வாட்டமிலா வண் தமிழ் மறை வாழ்ந்தது மண்ணுலகில்
ஈட்டிய சீலத்து இராமானுசன் தன்னியல்வு கண்டே – 54- –
எம்பெருமானார் இயல்வு கண்டதும்-வேதம் களிப்புற்றது .வண் தமிழ் மறை வாழ்வுற்றது
————–
நாரணனைக் காட்டிய வேதம் களிப்புரும்படி யாகச் செய்த எம்பெருமானார் உடைய வள்ளன்மையில்-ஈடுபட்டு –
அவரை ஆஸ்ரயித்து இருக்கும் குடி எங்களை ஆள்வதற்கு உரிய குடி –என்கிறார்
கண்டவர் சிந்தை கவரும் கடி பொழில் தென்னரங்கன்
தொண்டர் குலாவும் இராமானுசனைத் தொகை யிறந்த
பண்டரு வேதங்கள் பார்மேல் நிலவிடப் பார்த்தருளும்
கொண்டலை மேவித் தொழும் குடியாம் எங்கள் கோக்குடியே – -55 –
கண்ண புரத்தம்மானைக் கண்டவர் தன மனம் வழங்குவர்
தென்னரங்கன் கண்டவர் சிந்தை கவருவார்-
தங்கள் சிந்தை கவரும் தென்னரங்கன் உடைய தொண்டர்கள் அவ்வரங்கனை விட்டு எம்பெருமானாரைக் குலாவுகின்றனர் –
அரங்கனை விட அவர்கள் சிந்தையை எம்பெருமானார் கவர்ந்து விடுகிறார் -அவர்களை அவர் அப்படி ஆனந்தப்படுத்துகிறார் .
அவர்கள் தொண்டு பட்ட அரங்கனே வேதாந்த விழுப் பொருள் என்று ஸ்ரீ பாஷ்யத்தாலே நிரூபித்து வேதம் களிப்புரும்படி செய்யவே
வைதிகர்களான அத் தொண்டர்கள் இவ் எம்பெருமானாரைக் குலாவத் தொடங்கி விடுகின்றனர் –
பார்த்தருளும் என்றமையால்-எம்பெருமானாருக்கு அதில் அருமை இன்மை தோற்றுகிறது .
அறு சமயங்கள் பதைப் பட பார்த்தார் முன்பு –வேதங்கள் பார்மேல் நிலவிடப் பார்த்தார் இங்கு –
இங்கனம் செய்தது வேறு பயன் கருதி யன்று –
நீர் நிலம் என்கிற வேறு பாடு இன்றி மேகம் மழை பொழிவது போலே எல்லாருக்கும்
அநந்ய ப்ரயோஜனராய் உபகரித்தமை தோற்ற –கொண்டல்– என்றார் –
அவர் சம்பந்தம் வாய்ந்த அனைவருமே நம்மை யாள்பவர் என்னும் எண்ணம் கொண்ட
எங்களுக்கு ஆட் கொள்வதற்கு உரிய குலமாகும் –
———–
எம்பெருமானாரை பற்றின பின்பு -மற்று ஒரு விஷயத்தை -என் மனம் பற்றி நினையாது –
என் வாக்கு உரையாது -என்கிறார் –
கோக்குல மன்னரை மூ வெழு கால் ஒரு கூர் மழுவால்
போக்கிய தேவனைப் போற்றும் புனிதன் புவனம் எங்கும்
ஆக்கிய கீர்த்தி இராமானுசனை யடைந்த பின் என்
வாக்குரையாது என் மனம் நினையாது இனி மற்று ஒன்றையே -56-
புனிதன் -தூய்மை அற்றவர்களையும் -தன் சம்பந்தத்தால் தூயர் ஆக்க வல்ல தூய்மை படைத்தவர் -என்க .
புவனம் எங்கும் ஆகிய கீர்த்தி –
இப் பார் முழுதும் போர்த்தான் புகழ் கொண்டு -என்று கீழ்க் கூறியதை இங்கு நினைக்க
வகுத்த எம்பெருமானார் திறத்தே விளைந்த ஈடுபாட்டுடன் திகழ்வது கண்டு -பேருவகை கொண்டு
உறவு பாராட்டி –என் வாக்கு -என் மனம் -என்று அவற்றை தனித் தனியே கொண்டாடுகிறார் –
புறம்புள்ள விஷயத்தில் தமக்கு ஏற்பட்ட வெறுப்பு தோற்ற -மற்று ஒன்றை -என்கிறார்
தென்னரங்கன் தொண்டர்கள் அரங்கனை விட்டு எம்பெருமானாரைக் குலாவுவது போலே
என் வாக்கு எம்பெருமானாரை விட்டு மற்று ஒன்றை -தென்னரங்கனை -உரையாது
என் மனம் மற்று ஒன்றை நினையாது -என்னலுமாம்
————-
இன் நானிலத்தில் எம்பெருமானாரை நான் பெற்ற பின்பு நன்மை தீமைகளைப் பகுத்து அறியாது
கண்டதொன்றை விரும்பும் பேதைமை ஒன்றும் அறியேன் -என்கிறார் –
மற்றொரு பேறு மதியாது அரங்கன் மலரடிக்கா
ளுற்றவரே தனக்குற்றவராய்க் கொள்ளும் உத்தமனை
நற்றவர் போற்றும் இராமானுசனை யின் நானிலத்தே
பெற்றனன் பெற்ற பின் மற்று அறியேன் ஒரு பேதமையே -57-
திருவரங்கத்தில் அரங்கனுக்கு ஆளுறுகை தவிர்ந்து பரம பதத்தில் பர வாசுதேவனுக்கு ஆளுறுகை நேரினும் –
அதனையும் மதிக்கிலர் என்னும் கருத்தில் –மற்றொரு பேறு மதியாது –
வான் இளவரசு வைகுந்தக் குட்டன் தானே அவன் –
அரங்கனோ புவனியும் விண்ணுலகும் ஆதும் சோராமல் ஆள்கின்றவன்-
சரணா கதியை எங்கும் -என்றும் -நிலை நிறுத்தின
பெருதவிக்குத் தோற்று நல் தவத்தவர்கள் எம்பெருமானாரைப் போற்றுகின்றனர் –
பேதமையை பற்றி எதுவுமே அறிந்து கொள்ள முடியாத படி அடியோடு அது ஒழிந்தமையின்
இனி அது தலை காட்டவே முடியாது என்பது கருத்து –
தன் இயல்பினை விஷய வைலஷண்யம் மாற்றியது போலே இருள் தரும் மா ஞாலத்தின்
இயல்பையும் மாற்றி விட்டது-
————
கீழே தம் பேதைமை தீர்ந்தமை கூறினார் –
இங்கே வேதப் பொருள் கூறுவதில் வரும் பேதைமை தீர்ந்தமையைக் கூறுகிறார்
புறச் சமயங்களை களைந்த ஸ்வபாவம் கீழ்ப் பல கால் ஈடுபாட்டுடன் கூறப்பட்டது
குத்ருஷ்டி மதம் களைந்தபடி இங்கே ஈடுபாட்டுடன் அனுசந்திக்கப் படுகிறது
பேதையர் வேதப் பொருள் இது என்று உன்னிப் பிரமம் நன்று என்று
ஓதி மற்று எல்லா வுயிரும் அக்தென்று உயிர்கள் மெய் விட்டு
ஆதிப் பிரானோடு ஒன்றாம் என்று சொல்லும் அவ்வல்லல் எல்லாம்
வாதில் வென்றான் எம் இராமானுசன் மெய்ம் மதிக் கடலே – 58- –
வேதத்தின் பொருளை அவர்கள் சொல்ல வில்லை –
தாங்கள் சொல்வதை அவர்கள் வேதப் பொருளாக ஆக்குகின்றனர் –
ஸ்ரீ பாஷ்யத்தில் –
அந்தி கதபத வாக்ய ஸ்வரூப ததர்த்த யாதாத்ம்ய பிரத்யஷாதி சகல பிரமாண
ததிகர்த்தவ்யதாரூப சமீசீ நந்யாய மார்க்காணாம்-என்று
சொல்-வாக்யங்களின் ஸ்வரூபம் பொருளின் உண்மைக் கருத்து ப்ரத்யஷம் முதலிய பிரமாணங்கள் உணர்த்துவது –
அதற்கு உறுப்பான நேரிய யுக்தி வழிகள் இவற்றை அறியாதவர்கள் -என்று
மகாசித்தாந்தத் தொடக்கத்தில் அருளி உள்ளதை அடி ஒற்றி –பேதையர்-என்கிறார்
நிர் விசேஷ பிரம்மமே சத்யம் -மற்றவை அனைத்தும் பொய் -என்னும்-அத்வைத மதமே
வேதம் ஓதும் வைதிக மதம் என்கிற நிரூபணம் தவறு என்று தெளிவுறுத்தப் பட்டது
ஜீவான்மக்களுள் பேதமும் –பிரம்மத்திற்கும் ஜீவான்மக்களுக்கும் பேதமும்-உணர்த்தப் படுகின்றன
அவர்கள் செய்த மோஷ நிர்ணயத்தையும் மிக மிக எளிதில் வென்று விடுகிறார் ஸ்ரீ பாஷ்ய காரர்
சரீரம் ஆத்ம என்னும் தொடர்பு பற்றி-அறியும் ஜீவனும் -அறியப்படும் பிரம்மமும் ஒன்றாக
கூறப்படுகின்றனவே அன்றி -ஸ்வரூப ஐக்கியம் அங்கே கூறப் படவில்லை-என்பது உணரத் தக்கது .
உயிர்கள் மெய் விட்டு ஆதிப்பிரனோடு ஒன்று-உடலை ; மெய் என்கிறார் அமுதனார்.
உலகம் மாயை என்று இதை மெய் என்று சொல்லிட்டு இந்த உடலின் மாயையை உணர்த்துகிறார்
‘அஸ்மாத் சரீராத் சமுத்தாய ‘ இந்த் உடலினின்று விடுபட்டதாக கொள்ளாமல் ,
இந்த உடல் மாயை என்று உணருவதே இவர்கள் புருஷார்த்தம் சரி,
உடல் மாயை என்ற உன்னத நிலையை அடைந்த பின் இந்த ஆத்மா தன்னை பிரமனோடு ஒன்றாக உணர்கிறது
ப்ர்ஹமவித் பிரஹ்மைவ பவதி -ப்ர்ஹமத்தை உணர்பவன் ப்ர்ஹமம் ஆகிறான் .
அல்லல் எல்லாம் இராமானுசன் வெல்வதற்கு ஹேது மெய் மதிக் கடலாய் இருத்தலாம் –
அவ்விருளை துரந்திலரேல்-நாராயணனே உயிரை உடையவன் -என்று உற்று உணர்ந்தவர் அறிவார் இல்லை
என்று அடுத்த பாசுரத்தில் பேசுவதால் -உலகம் உய்யும் நோக்குடனே வாதில் வென்றமை தெளிவு .
மெய் மதிக் கடல் இப்படி வாதில் வென்று அருளுவதே -என்று அமுதனார் ஈடுபடுகிறார்-
—————————————————————————————————————————————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .
Leave a Reply