ஸ்ரீ திருமலை நல்லான் சக்ரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண அய்யங்கார் ஸ்ரீ ஸூக்தி- அமுத விருந்து–89-98–

போற்ற முற்பட்டவர் -தகுதி யற்ற நான் புகழின்-தேவரீர் புகழ் மாசூணாதோ என்று தவிர்ந்து புகழின்
ஏற்றத்தை நிலை நிறுத்தலே நல்லது என்று தீர்மானித்தாலும் -என் மனம் தாங்குகிறது இல்லை .
போற்றியே யாக வேண்டி இருக்கிறது –
தேவரீர் நினைப்பு இவ் விஷயத்தில் எத் தகையதோ -என்று பயமாய் இருக்கிறது -என்று
தம் நிலையை எம்பெருமானார் இடத்தில் விண்ணப்பம் செய்கிறார் .

போற்றரும் சீலத்து இராமானுச நின் புகழ் தெரிந்து
சாற்றுவனேலது தாழ்வது தீரில் உன் சீர் தனக்கோர்
எற்றமென்றே கொண்டிருக்கிலும் என் மனம் ஏத்தி யன்றி
ஆற்ற கில்லாது இதற்கென்னினைவா என்றிட்டஞ்சுவனே – – -89 – –

என் கருவி மனம் -என் வசத்தில் இல்லை –
கருவியின் வசத்திலேயே நான் உள்ளேன் என்கிறார் -இதற்கு என் நினைவாய் –அஞ்சுவனே

பெரி யாழ்வார் வாக்குத் தூய்மை யிலாமையினாலே மாதவா வுன்னை வாய்க் கொள்ள மாட்டேன்-
நாக்கு நின்னை யல்லால் லறியாது நனதஞ்சுவன் என் வசமன்று
மூர்க்குப் பேசுகின்றான் இவன் என்று முனிவாய் யேலும்
என் நாவினுக்கு ஆற்றேன் — 5-1 1- – என்று அருளிச் செய்தது இங்கு ஒப்பு நோக்கத் தக்கது –

———–

எம்பெருமானார் கடாஷத்தாலே அச்சம் தீர பெற்ற அமுதனார் –மூன்று கரணங்களுள் ஏதேனும் ஓன்று கொண்டு –
எம்பெருமானார் திறத்தில் அநு கூலமான-செயலில் ஈடுபட்டு உய்யலாமே -அங்கன் உய்யாமல்
மாந்தர் பிறந்து படும் துன்பத்தில்-அழுந்து கிறார்களே -என்று பிறருக்காக வருந்துகிறார் .

நினையார் பிறவியை நீக்கும் பிரானை இந்நீணிலத்தே
எனையாள வந்த விராமானுசனை இருங்கவிகள்
புனையார் புனையும் பெரியவர் தாள்களில் பூந்தொடையல்
வனையார் பிறப்பில் வருந்துவர் மாந்தர் மருள் சுரந்தே – – 90-

எம்பெருமானார் அருளுக்கு இலக்காகி பண்டைய அந்நிலை தவிர்ந்து-அவர் குணங்களை அனுபவிக்க வல்லனாய்
அவ் வனுபவத்தை இந்நூல் வடிவத்தில்-அடிவத்து தரும்படி பண்ணினதை நினைந்து -எனை ஆள –என்கிறார்

நினைத்தலும் புனைதலும் எம்பெருமானார் திறத்து செய்ய வேண்டியவைகளாகவும்
பூம் தொடையல் வளைதல் -எம்பெருமானாரை கவி பாடும் பெரியவர் திறத்து செய்ய
வேண்டியதாகவும் அமுதனார் அருளிச் செய்வது குறிக் கொள்ளத் தக்கது .
உத்தாரகரான ஆசார்யர் எம்பெருமானார் ஒருவரே ஆதலின் பிறவியை நீக்குவதற்காக
அவரே நினைக்க தக்கவர் ஆகிறார்

புனையும் பெரியவரை மட்டும் கூறி நினையும் பெரியவரை குறிப்பிடாதது கவனித்தற்கு உரியது .
நினைத்தால்- பிறர் அறியாது தனித்து செய்யப் படுவதாதலின் நினையும் பெரியவரை-அறிதல் அரிதே –
புனையும் பெரியவரையோ அவர்கள் இரும் கவியே காட்டும் ஆதலின்
அவர் தாள்களில்-பூம் தொடையல் வளைவது யாவர்க்கும் எளிதாகி விடுகிறது .
இங்கு நினைத்தல்- புனைதல்- வனைதல்கள் -முறையே
மனம் வாக்கு காயம் என்று மூன்று-கரணங்களின் செயல்களாக கூறப்பட்டு உள்ளன

——–

இன்னும் பிறப்பில் வருந்தும் மாந்தர் உய்வதற்காக எம்பெருமானார்
கைக் கொண்ட முயற்சியை-நினைவு கூர்ந்து அவரைக் கொண்டாடுகிறார் ..

மருள் சுரந்தாகம வாதியர் கூறும் அவப் பொருளாம்
இருள் சுரந் தெய்தவுலகிருள் நீங்கத் தான் ஈண்டிய சீர்
அருள் சுரந் தெல்லாவுயிர் கட்கும் நாதன் அரங்கன் என்னும்
பொருள் சுரந்தான் எம்மிராமானுசன் மிக்க புண்ணியனே – – -91 —

தமோ குணம் அடியாக சொன்ன அவப் பொருள்-தூய சத்தவ குணம் அடியாக சொன்ன
நற் பொருளாக மாற்றப் பட்டது –
நல் ஆகமமான பாஞ்ச ராத்ரத்தின் படி -முடிய இடர் இலா வழியே -களி நடை நடந்து –
அரங்கனை வழி பட்டு -அந்தமிலா ஆனந்த கடலில் ஆழ முழுகுங்கள் என்று-
பாஞ்ச ராத்ர வழியில் உலகினை நடத்தும் கருத்துடன் அரங்கனை -எல்லா-உயிர் கட்கும் நாதன் -என்கிறார்
வைகுண்டத்தின் கண் உள்ள பரவாசுதேவனான-நாராயணன் அரங்கனே -எனபது எம்பெருமானார் கொள்கை .
வடிவுடை வானோர் தலைவனே – 7- 2- 10-

மிக்க புண்ணியன் இராமானுசன்-இருள் நீங்கப் பொருள் சுரந்தான் –

அரங்கனாம் -பெரிய பெருமாளும் -நீட்டிய திருக் கரத்தாலே -தன் திருவடிகளையே
உபாயமாகப் பற்றும்படி காட்டிய வண்ணமாய் பள்ளி கொண்டு இருப்பதனால் –
பாஞ்ச ராத்ரப் பொருளை விளக்கும் நிலையில் இருப்பதைப் பொறுத்து அரங்கனைப் குறிப்பட்ட தாகவுமாம்-

—————

தாமறியத் தம்மிடம் ஒரு ஹேதும் இல்லாத போது – தம்மை ஏற்று அருளுகைக்கும் –
பின்னர் கண் என்னும் வெளிக் கரணத்திற்கும் -நெஞ்சு என்னும் உட் கரணத்திற்கும் விஷயமாய் –
நிலை நின்று எழுந்து அருளி இருப்பதைக் கண்டு -மிக்க ஈடுபாட்டுடன் -இதனுக்கும் காரணம் -இன்னது
என்று அருளிச் செய்ய வேணும் என்று -எம்பெருமானார் இடமே கேட்கிறார் .

புண்ணிய நோன்பு புரிந்துமிலேன் அடி போற்றி செய்யும்
நுண்ணரும் கேள்வி நுவன்றுமிலேன் செம்மை நூற் புலவர்க்
கெண்ணரும் கீர்த்தி இராமானுச ! இன்று நீ புகுந்ததென்
கண்ணுள்ளும் நெஞ்சுள்ளும் நின்ற விக் காரணம் கட்டுரையே – – 92–

வரவாறு ஓன்று இல்லையால் வாழ்வினிதால் -பெரிய திருவந்தாதி – 56-
என் கண்ணுள்ளும் -உலகியல் இன்பத்தில் நாட்டம் கொண்ட எண் கண்ணுக்கும் என் நெஞ்சுக்கும்-
தன்னை விஷயமாகக் காட்டி அருளுவதே -என்கிறார் .
கமலக் கண்ணன் என்கண்ணின் உளான் -திருவாய் மொழி – 1-9 8- –
மாயன் என் நெஞ்சின் உள்ளான் -திருவாய் மொழி -1 9-5 – – என்னும் நம் ஆழ்வார் அனுபவம்
அமுதனாருக்கு-எம்பெருமானார் விஷயத்தில் கிடைக்கிறது –
திருமாலே கட்டுரையே -திருவாய் மொழி – 3-1 1- – என்பது போலே இதனையும் கொள்க –
நிர் ஹேதுகமான தேவரீர் கிருபை தவிர வேறு காரணம் இல்லை -என்பது கருத்து .

—————

அவர் செய்யும் அவை யாவையும் -கருணை யன்றி வேறொரு-காரணம் அற்றவைகளாய் அல்லவோ -உள்ளன -என்கிறார் .

கட்டப் பொருளை மறைப் பொருளென்று கயவர் சொல்லும்
பெட்டைக் கெடுக்கும் பிரானல்லனே என் பெரு வினையைக்
கிட்டிக் கிழங்கொடு தன்னருள் என்னும் ஒள் வாளுருவி
வெட்டிக் களைந்த இராமானுசன் என்னும் மெய்த்தவனே – – -93 –

தன் அருள் என்னும் ஒள் வாள் உருவி –
ஸ்வா தந்த்ரியத்தால் அவனது அருளும் ஒரு கால் ஒளி மங்கி மழுங்கியும் போகக் கூடும்
எம்பெருமானார் உடைய அருளோ -அங்கனம் ஒரு காலும் ஒளி மங்கி மழுங்காத சாணை பிடித்த-வாளாய் –
அதனை ஒழித்துக் கட்டியே தீரும் -அது தோன்ற –தன் அருள் என்னும் ஒள் வாள் –என்றார் .
உருவி -என்றமையால் -அவ்வாள் இதுகாறும் வெளிப்படாமல் உறையில் இடப் பட்டமை தெரிகிறது –
சமயம் வரும்போது -அது வெளிப்படுகிறது -அமுதனாரை ஆட் கொள்ளும் சமயம் வரும் அளவும்-அதனை வெளிக் காட்டாது –
மறைத்துக் கொண்டு இருக்கிற எம்பெருமானார் உடைய சங்கல்பம்-என்கிற உறையில் இருந்து உருவப் பட்டது –
அருள் என்னும் ஒள் வாள் -என்க .

நம் ஆழ்வார் பெரிய திருவந்தாதியில் – 26-யானும் என் நெஞ்சும் இசைந்து ஒழிந்தோம் வல் வினையைக்-
கானும் மலையும் புகக் கடி வாள் -தானோர்-இருளன்ன மா மேனி எமமிறையார் தந்த-அருளென்னும் தண்டால் அடித்து -என்று
எம்பெருமான் தந்த அருளைத் தண்டாகக் கொண்டு வல் வினையை அடித்துத் துரத்துவதாக கூறினார் .
திரு மங்கை மன்னன் பெரிய திரு மொழியில் – 6-2 – 4- –
நீ பணித்த அருள் என்னும் ஒள் வாளுருவி எறிந்தேன் ஐம்புலன்கள் இடர் தீர -என்று
எம்பெருமான் பணித்த அருளை ஒள் வாளாக கொண்டு ஐம்புலன்களின் இடர் தீர எறிந்ததாக-கூறுகிறார்

நம் ஆழ்வார் வாள் ஏந்தாது அந்தணர் போல் சாந்தமாய் இருப்பவர் ஆதலின்-அவருக்கு அருள் தண்டாக கிடைத்தது
திரு மங்கை மன்னனோ ஷத்ரிய வீரர் போன்று-மருவலர் தம் உடல் துணிய வாள் வீசும் பரகாலன் — 3-9 10- –
ஆகையாலே அவருக்கு அருள் வாளாக கிடைத்தது .

அவர்கள் இருவரும் முறையே அடிப்பவர்களையும் எறிபவர்களாயும் தாமே யாயினர் .
அமுதனார்க்கோ அங்கன் அன்றி எம்பெருமானாரே தம் அருள் என்னும் வாள் கொண்டு
பெருவினையை வெட்டிக் களையும் படியான பெருமை கிடைத்தது –
நம் கூடஸ்தர் நமக்கு வைத்து இருக்கும் சொத்து சரணாகதி –அதுவே நமக்கு உஜ்ஜீவனம்

————–

எம்பெருமானார் -தம்மைச் சார்ந்தார்க்கு தவம் தொடங்கி திவம் முடிய அளிப்பரே யாயினும்–
நான் அவருடைய குணங்களை ஒழிய வேறு ஒன்றையும் விரும்பி அனுபவியேன்-என்கிறார் –

தவந்தரும் செல்வம் தகவும் தரும் சரியா பிறவிப்
பவந்தரும் தீவினை பாற்றித் தரும் பரந்தாம மென்னும்
திவந்தரும் தீதிலிராமானுசன் தன்னைச் சார்ந்தவர் கட்கு
உவந்தருந்தேன் அவன் சீரன்றி யான் ஒன்றும் உள் கலந்தே – – – 94- –

ஆச்சர்யணைக்கு கைங்கர்யம் பண்ணும் ருசி விளைவிப்பது செலவும் தகவும் தரும் என்னும் பதம்
மருந்தே நாங்கள் போக மகிழ்ச்சி என்று ஆழ்வார் தாமும் எம்பெருமனிடமே கேட்டது போல் ,
இங்கு எம்பெருமானார் தாமே அளிப்பதாகக் இந்த பாசுரம்

ஸ்ரீ மான் ஆகிய எம்பெருமானார் நம் ஆழ்வாருடைய அழகிய இணைத் தாமரை யடியாக விளங்குகிறார் –
பகவானைப் பற்றிய நம் ஆழ்வார் -தம் வினைகள் கமலப் பாதம் காண்டலும் விண்டே ஒழிந்தன -என்றார் .
நம் ஆழ்வாரைப் பற்றிய மதுர கவிகள் -பண்டை வல் வினை பாற்றி யாருளினான் -கண்ணி நுண் – 7- என்றார் .
விண்டிடில் மீண்டும் உருப்படியாதலும் கூடும் .பாறு ஆக்கி விட்டாலோ தீ வினைகள்
மீண்டும் தலை தூக்க வழி இல்லை .ஆசார்ய அபிமானத்தின் வீறுடைமை இது.
மதுர கவிகளை அடி ஒற்றி –பாற்றித் தரும் -என்கிறார் அமுதனாரும்-

யான் அவன் சீர் அன்றி ஒன்றும் அருந்தேன் –
எம்பெருமானார் தரும் அவையான தவத்தில் இருந்து -திவம் உட்பட -யாதொன்றையும்
மன மகிழ்வுடன் விரும்பி அனுபவிக்க மாட்டேன் –அவருடைய கல்யாண குணங்களையே
மன மகிழ்வுடன் விரும்பி அனுபவிப்பேன் -என்றதாயிற்று -அவைகள் வலுவிலே என் மடியில்
கட்டப்படில் தவிர்க்க ஒண்ணாது -நானாக மனம் மகிழ்ந்து விரும்பி அவற்றுள் ஒன்றினையும்
விரும்பி அருந்தேன் -என்கிறார் .
எம்பெருமானார் கல்யாண குணங்கள் அவ்வளவு இனிக்கின்றன அமுதனார்க்கு –
நம் ஆழ்வார் செங்கண் மாலை நோக்கி –நின் புகழில் வைக்கும் தம் சிந்தையிலும்
மற்றினிதோ நீ யவர்க்கு வைகுந்தம் என்றருளும் வான் -பெரிய திருவந்தாதி – 53- என்று-
அவன் தரும் வைகுந்தத்தினும் அவன் குணங்கள் இனிப்பதாக கூறுவதை இங்கே நினைவு கூர்க-

—————-

இவர் இவ் உலகத்தவர் அல்லர் -சம்சார சம்பந்தம் அறவே அற்று இருக்கும் நித்ய ஸூரிகளில் ஒருவர் –
வீடளித்து பிறரை உய்விப்பதற்க்காகவே அவதாரம் செய்தவராய் இருத்தல் வேண்டும் என்று
தீர்மானித்து அவதரித்து செய்யும் அவற்றை அனுசந்திக்கிறார் –-இந்தப் பாசுரத்திலே –

உண்ணின்று உயிர் களுக்கு உற்றனவே செய்து அவர்க்கு உயவே
பண்ணும் பரனும் பரிவிலனாம் படி பல்லுயிர்க்கும்
விண்ணின் தலை நின்று வீடளிப்பன் எம்மிராமானுசன்
மண்ணின் தலத் துதித்துய் மறை நாலும் வளர்த்தனனே – – -95 – –

குன்றாத வாழ்வான வைகுண்ட வான் போகம் தன்னை இகழ்ந்து உயிர் களுக்காக இங்கே வந்து அவதரிக்கிறார்
ஸூர்யனுக்கும் கிழக்குத் திசையில் உதிக்கும் போது அத்திசைக்கும் எங்கனம் யாதொரு தொடர்பும் உண்மையில் இல்லையோ –
அங்கனம் இம் மண்ணின் தலத்திற்கும்-அவருக்கும் யாதொரு தொடர்பும் உண்மையில் இல்லை என்றது ஆயிற்று
மண்ணின் தலத்து உதித்த -என்றதில்-மண்ணின் தோஷம் தட்டாத ஆற்றல் உடைமையும் –
உய் மறை நாளும் வளர்த்தனன் –-என்றதில் வளர்க்க வல்ல அறிவுடைமையும் தோன்றுமே
கீதையினைப் பரிஷ்கரித்து அதன் பொருளை எல்லாருக்கும் தெரியும்படி செய்ய
கீதா பாஷ்யம் -அருளிச் செய்வதற்கு என்றே எம்பெருமானார் பாரினில் அவதரிக்க வேண்டியதாயிற்று-
இப்படி எல்லாம் வல்ல பரனிலும் சீரிய முறையிலேயே அவதரித்து வேதார்த்த ஞானத்தை பரப்பி
உயிர் களை எல்லாம் உய்வித்து அருளுவதே –

————

நான் பிரபத்தி நிஷ்டன் அல்லேன்
எம்பெருமானாரைச் சேர்ந்தவர்களுடைய அபிமானத்திலே நிஷ்டை உடையேன் நான் என்கிறார் .

வளரும் பிணி கொண்ட வல்வினையால் மிக்க நல்வினையில்
கிளரும் துணிவு கிடைத்தறியாது முடைத்தலை யூன்
தளருமளவும் தரித்தும் விழுந்தும் தனி திரிவேற்கு
உளரெம் மிறைவன் இராமானுசன் தன்னை வுற்றவரே – – 96- –

மிக்க நல் வினையில் கிளரும் துணிவு கிடைத்தறியாது .
மிக்க நல்வினை –பிரபத்தி
வினை -கர்ம யோகமும் ஞான யோகமும்
நல் வினை -பக்தி யோகம்
தரித்தும் -விழுந்தும் துணை இன்றி -தனியே திரிகின்றவனான எனக்கு
விழாமல் காப்பதற்கு துணையாக இராமானுசன் தன்னை உற்றவர்கள் உள்ளார்கள் -என்கிறார்
இதனால் குழியைக் கடத்தும் கூரத் ஆழ்வானை அண்டை கொண்டு -அவரது அபிமானத்திலே
நிஷ்டை கொண்டு உள்ளமையை குறிப்பிட்டார் ஆயிற்று –
தேவு மற்று அறியேன் என்று எம்பெருமானாரைப் பற்றிய உற்றவர் அபிமானமே
சம்சாரக் குழியில் விழாது என்னைக் காக்க வல்லது -என்பது இப்பாசுரத்தின் கருத்து-

————

அவர் தம்மை உற்றவர் அபிமானத்திலே நிஷ்டை ஏற்படும் படியான விருப்பம் – எவ்வாறு உமக்கு வந்தது
என்பாரை நோக்கி அதுவும் எம்பெருமானார் கிருபையினாலே வந்தது -என்கிறார் –

தன்னை வுற்றாட் செய்யும் தன்மையினோர் மன்னு தாமரைத் தாள்
தன்னை வுற்றாட் செய்ய என்னை வுற்றானின்று தன் தகவால்
தன்னை வுற்றாரன்றித் தன்மை வுற்றாரில்லை என்றறிந்து
தன்னை உற்றாரை இராமானுசன் குணம் சாற்றிடுமே – – -97 –

முதல் வாக்யத்தால் எம்பெருமானார் தம்மை ஆழ்வான் திருவடிகளில் ஆஸ்ரயிப்பித்ததும்
இரண்டாம் வாக்யத்தால் -இறாய்க்காமல் ஆசார்யன் ஆணைக்கு ஆட் பட்டு ஆழ்வான் தமக்கு
ஆசார்யனாகி -அவ் எம்பெருமானாராலே கொண்டாடப் பட்டதும் -குறிப்பால் உணர்த்தப் படுகின்றன
ஆழ்வான் எம்பெருமானார் விஷயமாக கவி பாடக்
கட்டளை இட்டாரே யன்றி தன் விஷயமாக கவி பாட சற்றும் இசைய வில்லை –
மொழியைக் கடக்கும் என்று ஓரிரு இடங்களில் ஆங்கங்கே கவி பட முடிந்தது அவ்வளவே
மணவாள மா முனிகள் கொண்டு கூட்டி ஒரே வாக்யமாக உரை அருளிச் செய்து உள்ளார்-

———-

எம்பெருமானார் சரணம் -என்றவரை திரிந்து உழலும்படி விட்டுக் கொடுக்க மாட்டார்
பேறு கிடையாதோ என்று வருந்த வேண்டாம் -என்கிறார் .

இடுமே இனிய சுவர்க்கத்தில் இன்னும் நரகிலிட்டுச்
சுடுமே யவற்றைத் தொடர்தரு தொல்லைச் சுழல் பிறப்பில்
நடுமே யினி நம் இராமானுசன் நம்மை நம் வசத்தே
விடுமே சரணமென்றால் மனமே நையல் மேவுதற்கே – – -98 – –

நம் இராமானுசன் -நம்மை கை தூக்கி விட வேணும் என்பதற்காகவே அவதரித்த எம்பெருமானார் .
வீடளிப்பான் மண்ணின் தலத்து உதித்தவர் -என்றபடி –
மோஷத்திற்கு மட்டும் ஹேதுவானவர் -பந்தத்துக்கு உள்ளாகும்படி நம்மை நம் வசத்தே விடுவாரோ -என்பது கருத்து

ஸ்வ தந்த்ரனை உபாயமாக தான் பற்றின போது இறே பிரசங்கம் –பயம் அபயம் -இரண்டும்-மாறி மாறி நடப்பது –
தான் உள்ளது -என்னும் ஸ்ரீ வசன பூஷண ஸ்ரீ ஸூக்தியும் –
பரதந்திர ச்வரூபனாய் மோஷ ஏக ஹேதுவான ஆசார்யனை உபாயமாக பற்றில் இப் பிரசங்கம்-இல்லை –
சதத நிர்ப் பரனாய் இருக்கலாம் என்று கருத்து -என்னும் மணவாள மா முனிகள்-வியாக்யானமும் அறியத் தக்கன .

—————————————————————————————————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading