ஸ்ரீ.வில்லிபாரதம் – மூன்றாம் பாகம் -41. பதின்மூன்றாம் போர்ச் சருக்கம்- ஸ்ரீ.உ.வே.சே.கிருஷ்ணமாசாரியர் ஸ்ரீ உ.வே.வை.மு.கோபாலகிருஷ்ணமாசாரியர் உரைகள்

சங்கை இலாவகை யம படரால் உயிர் தளர்
பொழுதத்து, அருகே
மங்கையர் சூழ இருந்து அழுது, உள்ளம் மயக்கினும்,
யான் மறவேன்-
கங்கையும் நான்மறையும் துளவும் கமழ் கழல் இணையும்,
திருமால்
அம் கையின்மீது ஒளிர் சங்கமும், நேமியும்,
அஞ்சன மேனியுமே.கடவுள் வாழ்த்து

 சங்கை இலா வகை – சந்தேக மில்லாதபடி[நிச்சயமாக], யம
படரால் -யமனது வேலையாட்களால், உயிர்- (எனது) சீவன், தளர் பொழுதத்து-
வருத்தமடையுங்காலத்தில, அருகுஏ- (எனது) சமீபத்திலே, மங்கையர் –
இளம்பெண்கள் [உரியமகளிர்], சூழ இருந்து – சுற்றிலும் இருந்துகொண்டு, அழுது –
புலம்பி, உள்ளம் மயக்கின் உம்- (என்) மனத்தை மயக்கமடைவித்தாலும்,- யான்-, –
திருமால். திருமகள்கணவனான ஸ்ரீமகா விஷ்ணுவினது, கங்கைஉம் நால் மறைஉம்
துளவுஉம் கமழ் கழல் இணைஉம்- கங்கா நதியும் நான்குவேதங்களும் திருத்துழாயும்
பரிமளிக்கிற உபயதிரு வடிகளையும், அம் கையின்மீது ஒளிர் சங்கம்உம் நேமிஉம் –
அழகிய திருக்கைகளின்மேல் விளங்குகிற சங்க சக்கரங்களையும், அஞ்சனம்
மேனிஉம் – மைபோற்கரிய திருமேனியையும், மறவேன் – மறக்க மாட்டேன்;
(எ-று.) – எப்பொழுதும் இடைவிடாது சிந்திப்பே னென்பதாம்.

     இது- தியாநமென்னும் மனவணக்கம். மரணவேதனையொடு மாதர் பாசத்துக்கு
உட்படுங்காலத்திலும் எம்பெருமானை மறவேனென்று தமது மனவுறுதியை
விளக்கினார். உலகத்தில்பிறப்பெடுத்த உயிர் என்றைக்கேனும் ஒரு நாளில் இறத்தல்
நிச்சய மாதலால், ‘சங்கையிலாவகை’ என்றார். சங்கையிலாவகை தளர்பொழுதத்து
என்ற இயைப்பின்- அளவு இல்லாமல் துனபப்படும்பொழுது என்க. கங்கை
கமழ்தல்- கங்காநதி தோன்றுதல். திருமால் திரிவிக்கிரமனாய் உலகமளந்த காலத்தில்
மேலேசென்ற தொரு திருவடியைச் சத்திய லோகத்தில் பிரமன்
தன்கைக்கமண்டலதீர்த்தத்தாற்கழுவிவிளக்க, அந்த ஸ்ரீபாததீர்த்தமே கங்கையாய்ப்
பெருகிற் றென்பது, கதை. நான்மறைகமழ்தல் – வேதங்கள் இடைவிடாது
துதித்தலும்,சரண மடைதலும்.

     இதுமுதற் பத்தொன்பது கவிகள்- பெரும்பாலும் ஆறாஞ்சீரொன்று
கூவிளங்காய்ச்சீரும், மற்றையைந்தும் விளச்சீர்களுமாகிய கழிநெடிலடி நான்கு
கொண்ட அறுசீராசிரியவிருத்தங்கள்.  

நஞ்ச வியாளம் உயர்த்த பதாகை நராதிபன்
ஏவலினால்,
விஞ்ச வரூதினி மன்னர் திரண்டனர், விசயனை
மேலிடுவான்;
நெஞ்சு அவரால் அழிவுண்ட தபோதனன்
நெருநலினும் கடுகி,
பஞ்சவர் கோ முதல்வன்தனை வன்பொடு படை
பொர எண்ணினனே.2.- துரோணன் தருமனோடு வன்புடன்பொர எண்ணுதல்.

நஞ்சம்- விஷத்தையுடைய, வியாளம்- பாம்பின் வடிவத்தை,
உயர்த்த- உயரத்திலெழுதியுள்ள, பதாகை- கொடியையுடைய, நர அதிபன் –
துரியோதனராசனது, ஏவலினால் – கட்டளையினால், வரூதினி மன்னர்-
சேனைகளையுடைய அரசர்கள்(பலர்), விசயனை மேலிடுவான்- அருச்சுனனை
வெல்லும்பொருட்டு, விஞ்ச திரண்டனர்- மிகுதியாக ஒருங்குகூடினார்கள்; அவரால்-
அவ்வரசர்களால், நெஞ்சு அழிவுண்ட – மனம்வருந்திய, தபோதனன்- துரோணன்,
நெருநலின்உம் கடுகி – நேற்றையப்பொழுதினும் விரைந்து, பஞ்சவர் கோ
முதல்வன்தனை- பாண்டவரைவருள் முந்தினவனான தருமராசனை, வன்பொடு –
வலிமையோடு, படை பொர – ஆயுதங்களாற் போர்செய்ய, எண்ணினன் –
கருதினான்; (எ -று.)

     துரியோதனன்கட்டளையால் அநேக அரசர்கள் அருச்சுனனை வெல்லத்
திரண்டது, ‘நாங்கள், அருச்சுனன் தருமனுக்கு உதவியாகாதபடி தடுத்திடுகிறோம்;
நீமுன் சொன்னபடி தருமனைப் பிடித்திடு, பார்ப்போம்’ என்னுங் கருத்தை
வெளியிட்டுத் துரோணனுக்கு வருத்தத்தை மூட்டுதலால், ‘ நெஞ்சு
அவராலழிவுண்டதபோதனன்’ என்றார். அவரால் – கர்ணன் முதலியோரால்
எனினுமாம். பாண்டவரால் எனக்கொண்டு, முந்தினநாட் போரிற் பட்ட
பரிபவத்தைக்குறித்தாகவும் உரைக்கலாம். நஞ்ச என எடுத்தால், குறிப்புப்
பெயரெச்சமாம்.வ்யாளம்-வடசொல். கோமுதல்வனை – முதல்வனாகிய
கோவையென்க.       

இலக்கணமைந்தனும், மைந்துடை மன்னவன்
இளைஞரும், எம்முனையும்
கலக்குற வென்ற கலிங்கரும் உட்படு காவலர் பற்பலரும்,
சிலைக் கை வயம் பெறு சிந்து நராதி செயத்திரதன் சிரமா,
நிலக்கண் எழும் துகள் வானிடை சென்றிட, நின்றனர்
பேர் அணியே.3,-இலக்கணமைந்தன்முதலோர் படைவகுப்பில் வந்து நிற்றல்.

இலக்கண் மைந்தன்உம் – லக்ஷணகுமாரனும், மைந்து உடை
மன்னவன் இளைஞர்உம்- வலிமையையுடைய துரியோதனன் தம்பிமாரும், எ
முனைஉம் – எல்லாப்போர்களிலும், கலக்கு உற- (பகைவர்க்குக்) கலக்க
முண்டாம்படி,வென்ற – (முன்பு) சயித்துள்ள, கலிங்கர்உம்- கலிங்கநாட்டு வீரரும்,
உள் படு -(என்னும் இவர்கள்) உள்ளிட்ட [இவர்கள்முதலான], காவலர்
பல்பலர்உம்- மிகப்பலஅரசர்களும், சிலை கை வயம் பெறு- வில்லையேந்திய
கையின் வலிமை பெற்ற,சிந்து நர ஆதி – சிந்துதேசத்துச் சனங்களுக்குத்
தலைவனாகிய, செயத்திரதன்-ஜயத்ரதனை, சிரம் ஆ – (தங்களுக்குத்)
தலைமையாகக் கொண்டு, நிலக்கண் எழும்துகள் வானிடை சென்றிட –
(சேனைகளால்) பூமியிலே மேலெழுந்த தூளிஆகாயத்திற் செல்லும்படி, பேர்
அணி நின்றனர் – பெரிய படைவகுப்பில் ஒருங்குநின்றார்கள்;

அக்கரம் யாவும் உணர்ந்த சிலைக் குரு, ஆசுர
சேனை நடுச்
சுக்கிரனார் நிகர் என்ன, வகைப் படு தூசியின்
மா முறையே
எக் கரமும் படை கொண்டு எழு சேனையை
எயில்கள் வளைப்பனபோல்,
சக்கரயூகம் வகுத்து இரதத்திடை சயம் உற
நின்றனனே.4.- துரோணன் தன்சேனைகளைச் சக்கரவியூகமாக வகுத்தல்.

அக்கரம் யாஉம் உணர்ந்த- எல்லாஇலக்கணங்களையும் அறிந்த,
சிலை குரு – வில்லாசிரியனான துரோணன், அசுரர் சேனை நடு – அசுரர்களது
சேனையின் மத்தியில், சுக்கிரனார்- (அவர்களுக்குச்சேனைத்தலைவராய் நிற்கிற)
சுக்கிராசாரியார், நிகர்- (தனக்கு) ஒப்பு, என்ன- என்று சொல்லும்படி, வகை படு
தூசியின் மா முறைஏ – பிரிக்கப்படுகிற படைவகுப்பிற்குரிய சிறந்தமுறைமைப்படியே,
எ கரம்உம் படை கொண்டு எழு சேனையை – கைகளிலெல்லாம்
ஆயுதங்களேந்திக்கொண்டு (போருக்கு) எழுந்த சேனைகளை, எயில்கள் வளைப்பன
போல்- மதில்கள் சூழ்வனபோல, (சுற்றிலும் இடைவிடாது சூழ்ந்திருக்கும்படி),
சக்கரயூகம் வகுத்து- சக்கரவியூகமாக அணிவகுத்து, இரதத்திடை- தேரின்மீது,
சயம்உற நின்றனன்- வெற்றியுண்டாக நின்றான்; ( எ-று.)

     பதின்மூன்றாநாளில் துரோணன் பதுமவியூகம் வகுத்ததாகவும் அதனுள்
அபிமன் அகப்பட்டு இறந்ததாகவுமே பிரசித்தம்; இங்ஙனமே முதனூலாகிய
வடமொழி வியாசபாரதத்திலு முள்ளது; பெருந்தேவனாரோ ‘காலிங்கராசனையும்
கௌசலேசுரனையும் வணிகரையும் சூரசேனரையும் சுற்று முற்றும் அதற்கு
விளிம்பாக நிறுத்தி, லக்ஷணகுமாரனையும் எழுபத்தாறாயிரந்தேராட்களையுந்
துரியோதனனையும் நடுவண் நிறுத்தி, சயத்திரதனையும் பல பதினாயிரம் யுத்த
வீரரையும் தூசிமுகத்தின்கண் நிற்பாராக்கிச் சக்கர மென்னும் யூகம் வகுத்து’
என்றார். சக்கரவியூகம் – சக்கரவடிவமாகச் சேனையை ஒழுங்குபட நிறுத்தல்.
நாற்புறத்தும் பயமுண்டாம்போது சக்கரவியூகம் வகுக்கத்தக்கதென்றும், அது
எட்டுச்சுற்றுடன் ஒருவழியையே யுடையதென்றும், சுக்கிரநீதி கூறும்; அம்
முறைமையை அறிந்து சமயோசிதமாகச் செய்த வல்லமைக்கு, சுக்கிரனையே
உவமைகூறினார்: வடநூலிலும் இவ்வுவமை கூறப்பட்டுள்ளது.

     அக்கரம்- அக்ஷரம்; எழுத்து: எனவே, அதனோடு ஒற்றுமையுடைய
சொல்லும் அடங்கிற்று; இது- ஆகுபெயராய் இலக்கண நூலை யுணர்த்துதலை,
“எண்ணென்ப வேனை யெழுத்தென்ப விவ்விரண்டும், கண்ணென்ப வாழுமுயிர்க்கு”
என்றவிடத்திலுங் காண்க. இனி, அக்கரமென்பது – எல்லா நூலுக்கும் இலக்கணை
யென்றலும் ஒன்று. ஏகாக்ஷரம், பஞ்சாக்ஷரம், ஷடக்ஷரம் அஷ்டாக்ஷரம்,
துவாதசாக்ஷரம் முதலிய மந்திரங்களுமாம். அக்கரம்- அழியாப் பொருள் என்று
கூறினாருமுளர், ஆசுரர்- அசுரர் என்பதன் நீட்டல். சுக்கிரன் – அசுரர்க்குக்குருவும்,
புரோகிதனும், பிரதான மந்திரியும், படைத்தலைவனுமாவன்; ஆர் என்னும்
பலர்பால்விகுதி, சிறப்புப்பொருளது. கரம் – பக்கமுமாம்.  

ஒப்பு அறு போரினில் வாகை புனைந்த உதிட்டிரன்,
அன்று அடையார்
தப்பு அற எண்ணிய எண்ணம் உணர்ந்து,
தனஞ்சயனுக்கும் உரைத்து,
அப்பு அறு கோடையில் வெங் கதிரோன் என,
ஆகவ நீள் வரி வில்
துப்பு உறு சிந்தை மகீபர் வரூதினி சூழ,
நடந்தனனே.5.- தருமன் மாற்றாரெண்ணத்தையுணர்ந்து அருச்சுனனிடம்
அதனைத்தெரிவித்துப் போர்க்களத்து உக்கிரமாக நடத்தல்.

ஒப்பு அறு – உவமையில்லாத, போரினில் – (முந்தின நாளை)
யுத்தத்தில், வாகை புனைந்த – வெற்றி மாலையைச் சூடிய,  உதிட்டிரன்-,
அன்று -அன்றைக்கு, அடையார் – பகைவர்கள், தப்பு அற- தவறுதலில்லாதபடி,
எண்ணிய -ஆலோசித்த, எண்ணம்- நினைப்பை, உணர்ந்து – (ஒற்றரால்) அறிந்து,
தனஞ்சயனுக்குஉம் உரைத்து- (அதனை) அருச்சுனனுக்குங் கூறி, அப்பு அறு
கோடையில் வெங்கதிரோன் என – சீர்வற்றிய கோடைக்காலத்துச் சூரியன்போல
[மிக உக்கிரமாக], நீடு ஆகவம் அளவி – பெரிய போர்க்களத்தைச் சேர்ந்து, துப்பு
உறு சிந்தை மகீபர் வரூதினி சூழ வலிமைமிக்க மனத்தையுடைய அரசர்களும்
சேனைகளும் சுற்றிலும் வர, நடந்தனன்- வந்தான்; (எ-று.)- எண்ணம் –
இரண்டாங்கவியிற் கூறியது. பி -ம் : ஆகவநீள்வரிவில்.

ஈர்-இரு தேரினர், மூவகை யானையர், எண்
அறு மா மிசையோர்,
ஓர் இரு-நால் உடை ஐ-இரு பூமியில்
உள்ள பதாதியுடன்,
பார் இரு-நாலு திசாமுகமும் படையோடு
பரந்து வரும்
பேர் இரு மான வரூதினியின் திரள் பேசுறலாம்
அளவோ?6.- பாண்டவரின் சேனை மிகுதி.

ஈர் இரு தேரினர் – நால்வகைத் தேர்வீரர்களும், மூவகை யானையர்
– மூன்றுவகை யானையின் மேலேறிய வீரர்களும், எண் அறு மா மிசையோர் –
கணக்கற்ற குதிரைகளின்மே லேறிய வீரர்களும், ஓர் இரு நால் உடை ஐ இரு
பூமியில் உள்ள பதாதருடன் – பதினெட்டுத் தேசங்களிலுள்ள காலாள்வீரர்களும்
ஆகிய இவர்களோடு. பார் இரு நாலு திசாமுகம்உம் – பூமியின் எட்டுத்
திக்குக்களினிடத்திலும், படையோடு பரந்து வரும் – ஆயுதங்களோடு பரவிவருகிற,
பேர் இரு மானம் வரூதினியின் திரள் – பிரசித்தி பெற்றதும் பெரியதும்
மானத்தைக்காப்பதுமான ( பாண்டவ ) சேனையின் கூட்டம், பேசுறல் ஆம் அளவுஓ
– சொல்லுதற்கு ஏற்ற அளவுடையதோ? ( எ-று.)- அன்று; சொல்லவொண்ணாதபடி
அளவிறந்தது என்பதாம்.

     அதிரதர், மகாரதர், சமரதர், அர்த்தரதர் எனத்தேர்வீரர் நால் வகைப்படுவர்.
அதிரதர்– முழுத்தேரரசர்; அவராவார் – ஒருதேரில் ஏறிநின்று தம்தேர் குதிரை
சாரதிகளுக்கு அழிவுவாராமற் காத்துப் பலவாயிரந் தேர்வீரரோடு எதிர்த்து வேறு
துணையில்லாமலே போர் செய்து வெல்லும் வல்லமை யுடையார். அவரிற் சிறிது
தாழ்ந்தவர் – மகாரதர்; இவர் பதினோராயிரந் தேர் வீரரோடு பொருபவர். சமரதர்
ஒரு தேர் வீரனோடு தாமும் ஒருவராய் எதிர்க்க வல்லவர். அர்த்தரதர்– அவ்வாறு
எதிர்க்குமளவில் தம் தேர்முதலியவற்றை இழந்து போம்படியானர்; இவர் இருவர்
சேர்ந்தால், ஒரு சமரதனுக்கு ஒப்பாவார். இனி, இரண்டுசக்கரம் நான்குசக்கரம் ஆறு
சக்கரம், எட்டுசக்கரம் என்றார்போலத் தேரில் நான்குவகை கூறவுங் கூடும்.

     மூவகையானை கிரிசரம், நதிசரம், வனசரம் என்பன: “கிரிசரம் வனசரம்
நதிசர மென்றிவை, நிலைபெறு நிலமென நிறுத்திசினோரே” என்ற
பன்னிருபாட்டியலாலும், “கிரிசரம் வனசரம் நதிசரமடுத்துப், பெறுமே யானை பிறந்த
நிலப்பெயர்” என்ற பிங்கலந்தை திவாகரங்களாலும் இலக்கண விளக்கவுரையாலும்
அறிக; இவற்றுள், கிரிசரம் – மலையிற்பிறந்தது; நதிசரம்- யாற்றுச் சார்பிற் பிறந்தது;
வனச்சரம்-காட்டிற்பிறந்தது. இனி, வேறும் யானையின் மூன்று வகை- பத்ரம்,
மந்த்ரம், ம்ருகம்
 என்பன: “இவற்றின் இலக்கணம் வருமாறு:- தேனின்நிறம்
போன்றநிறமுள்ள தந்தமும் மிக்க வலிமையும் ஒத்தஅவயமும் வட்டமானவடிவமும்
அழகியமுகமும் அவயவச்சிறப்பு முடையது, பத்ரம். பருத்தவயிறும் சிங்கநோக்கும்
பருத்ததோலுள்ள கழுத்து துதிக்கைகளும் நடுத்தரமான அவயமும் நீண்ட
உடம்புமுடையது, மந்த்ரம். பருத்ததல்லாத கழுத்தும் பருத்த காது துதிக்கைகளும்
பருத்தகண்களும் குறுகியஉதடு குறிகளும் குள்ள வுடம்பு முடையது, ம்ருகம்.
பத்ரத்துக்கு உயரம் ஏழு முழமும், நீளம் எட்டு முழமும், வயிற்றின் சுற்றளவு பத்து
முழமுமாம்; மந்தரத்துக்கு இவ்வளவினும் ஒவ்வொரு முழம் குறைவும், ம்ருகத்துக்கு
அதனளவினும் ஒவ்வொருமுழம் குறைவு மாகும்: பத்ரத்துக்கும் மந்த்ரத்துக்கும் நீளம்
ஓரள வென்பதும் உண்டு. பத்ரத்தின் மதநீர் பசுமையாகவும், மந்த்ரத்தின் மதநீர்
மஞ்சளாகவும், ம்ருகத்தின் மதநீர் கருமையாகவும் இருக்கும்.

     இனி, ‘எண்இருமா’ என்ற பாடத்துக்கு – “மங்காளன் சாரங்கன் கங்காநீலம்
மௌவழகன் கொங்காளன் சன்ன சம்பான், குங்குமச்சோரன் கரியான் நீலன் சாரன்
குலவுமள்ளான் உரஞ்சிவந்தான் நல்லான் பொல்லான், தங்குகருங்காற்செம்பான்
என்று கூறும் தன்மையுள்ள பன்னிறமும்புனைந்த சாதித், துங்கமிகும் பரியிவை”
என்று திருவாதவூரர்புராணத்துக் கூறிய பதினைந்துவகையும்,
சீவகசிந்தாமணியுரையிலும் வைஷ்ணவசம்பிரதாயத்திலும் வழங்குகிற ‘ நம்பிரான்’
என்னும் வகையும் என்ப.

     ஓரிருநாலுடை யையிரு பூமி- எட்டு என்னும் எண்ணை இறுதியிலுடைய
பத்தாகிய நாடுகள்; சிங்களம், சோனகம், சாவகம், சீனம் துளுவம், குடகம்,
கொங்கணம், கன்னடம், கொல்லம், தெலுங்கம், கலிங்கம், வங்கம், கங்கம், மகதம்,
கடாரம், கௌடம், குசலம் , திரவிடம் என்பன – பதினெட்டுப் பாஷைவழங்குத்
தேயங்களாம். அன்றி, ‘ஓரிருநாலுடை பையிருபூமி’ என்பதற்கு – எட்டோடு
பெருக்கியஏழாகிய ஐம்பத்தாறு தேசங்கள் என்றும் உரைக்கலாம். கீழ்ப்படை
யெழுச்சிச்சருக்கத்தில் “ஐயிரண்டெண்பூமி” என்றது இங்ஙனமே இருபொருள்படும்.
இனி, பதினெட்டுதீவுக ளெனினுமாம். இப் பாட்டு – எண்ணுவண்ணம்; அது –
எண்பயின்றுவருவது: “எண்ணுவண்ணமெண்ணுப்பயிலும்” பி-ம்: பதாதியுடன்

வரு படைதன்னை நிறுத்தி விதம்பட, மகரவியூகம்
வகுத்து,
ஒரு பகல் யூகமும் இப் பகலுக்கு இனி ஒப்பு
அல என்றிடவே,
குருபதியும் திருமாலும் மதிக்க அணிந்து, அடு
கோள் அரிபோல்,
துருபதன் மைந்தனும் நின்றனன், அந்தர
துந்துபிமீது எழவே.7.- பாண்டவசேனை மகரவியூகமாக வகுக்கப்படுதல்.

துருபதன்மைந்தன்உம் – (பாண்டவசேனாபதியாகிய) துருபத குமாரனான
திட்டத்துய்மனும் வரு படைதன்னை- (போருக்கு) வருகின்ற (தன் சேனையை, விதம்
பட நிறுத்தி – ஒழுங்குபட நிற்கவைத்து, மகரவியூகம் வகுத்து – மகரவியூகமாக
அமைத்து, ‘இ பகலுக்கு – இந்நாளைவியூகத்துக்கு, இனி ஒரு பகல் யூகம் உம் –
வேறு ஒரு நாளை யூகமும், ஒப்பு அல- ஒப்பாகமாட்டாது’, என்றிட- என்று
(கண்டவர்) கருதவும், குருபதிஉம் – குரு குலத்தலைவனான தருமனும், திருமால்உம்
கண்ணனும், மதிக்க – நன்கு மதிக்கவும், அணிந்து -அணிவகுத்து, அடு கோள்
அரி போல்- ( மற்றைவிலங்குகளை) அழிக்கவல்ல வலிய ஆண்சிங்கம்போல,
அந்துர துந்துபி மீது எழ- ஆகாயத்தில் (தேவர்கள் கொண்டாடி முழங்குந்)
துந்துபிவாத்தியம் மிக்குஒலிக்க, நின்றனன்- (தனது தலைமைதோன்ற) நின்றிட்டான்;
(எ – று.)

     முன்னே பயகாரண முள்ளபொழுது மகரவியூகம் அமைக்கத் தக்கதென்றும்,
அது நான்குகால்களையும் நீண்டபருத்தமுகத்தையும் இரண்டுவாயையு முடைய
தென்றும் சுக்கிரனார் கொள்கை. நிலவுலகத்தில் வியக்கத்தக்க செய்கையைக்
கண்டால், தேவர்கள் வானத்தில் துந்துபிமுழக்குதல், இயல்பு. பெருந்தேவனார்
பாரதவசனத்தில் மண்டல மென்னும் வியூகமென்று கூறியுள்ளது. 

இத் தகவாக அணிந்து இரு சேனையும் எதிர்
முனையும் பொழுதில்,
முத்து அக வெண்குடை மன்னவன் ஏவலின்,
முன் பகலின்படியே,
மத்தக மா முதல் ஆகிய நான்மை வரூதினிதன்னொடு சஞ்-
சத்தகர் வந்து அறைகூவ, வெகுண்டு, தனஞ்சயன் ஏகினனே8.- அணிவகுத்துஇருசேனையும்நின்றபின் சஞ்சத்தகர் அருச்சுனனை
அறைகூவ அவனேகுதல்.

இ தகவு ஆக- இவ்விதமான, இரு சேனைஉம் – இருதிறத்துச்
சேனைகளும், அணிந்து – அணிவகுக்கப்பட்டு, எதிர் முனையும் பொழுதில்,-
முத்துஅகம் வெள்குடை மன்னவன் ஏவலின் – முத்துக்களைத் தன்னிடத்தேயுடைய
ஒற்றை, வெண்கொற்றக்குடையையுடைய துரயோதனனது கட்டளைப்படி, முன்
பகலின்படி ஏ- முந்தினநாளிற்போலவே, சஞ்சத்தகர்- சம்சப்தகர்கள், மத்தகம் மா
முதல் ஆகிய- மஸ்தகத்தையுடைய யானை முதலான, நான்மை  வரூதினி
தன்னொடு – நால்வகைச்சேனைகளுடனே, வந்து- ( எதிரில்) வந்து, அறை கூவ –
வலிவிற் போருக்கு அழைக்க, தனஞ்சயன் – அருச்சுனன், வெகுண்டு – கோபித்து,
ஏகினன்- (அவர்களோடு போர்செய்யச்) சென்றான்; ( எ-று.)

     தன்னைப் போருக்கு அழைப்பாரோடு தவறாமற்பொருதலை விரதமாகப்
பூண்டவனாதலால், அருச்சுனன் இங்ஙனஞ்  செல்பவனானான். சஞ்சத்தகர்
அருச்சுனனைத் தனியே அழைத்துப்போனது தென்திசையி லென முதனூலால்
தெரிகிறது. மத்தக மா – மஸ்தகத்தையுடைய மிருகம்; எனவே, யானையாம்.
நான்மை என்றது – எண்ணையே உணர்த்திற்று.  

மால் விடு தேர்மிசையான் வரி சாபம் வளைத்ததும்,
மல் இகல் வெங்
கோல் விடு பூசலும், வில்லுடனே பொழி கொண்டல்
வியப்பு எனலாம்;
மேல் விடு தேர்களும், யானையும், வாசியும், வீரரும்,
மெய் உருவ,
கால் விடு தாரை எழும் சருகு என்ன உடைந்தனர்,
கையறவே.9.- அருச்சுனன் அம்புமழைபொழிய, மாற்றார்சேனை யுடைதல்

 மால் – திருமால், விடு – செலுத்துகிற, தேர்மிசையான் – தேரின்மீது
உள்ளவனான அருச்சுனன், வரி சாபம் வளைத்ததுஉம்- கட்டமைந்த வில்லை
வணக்கினதையும், மல் இகல் – வலிமையோடு பராக்கிரமித்துச் செய்த, வெம் கோல்
விடு பூசல்உம்- கொடிய அம்புகளைப் பிரயோகிக்கிற போரையும், வில்லுடனே
பொழி கொண்டல் வியப்பு எனல் ஆம்- இந்திரவில்லோடு (கூடி) மழை பொழிகிற
காளமேகத்தின் அதிசயிக்கத்தக்க தன்மை யென்று சொல்லலாம்; மேல் விடு-
அவன்மேல் ( எதிர்த்துச்) செலுத்தப்படுகிற, தேர்களும்-, யானைஉம்- யானைகளும்,
வாசிஉம் – குதிரைகளும், வீரர்உம் – காலாள்வீரர்களும், மெய் உருவ –
(அவ்வம்புகளால்) உடல் துளைபட, கால் விடு தாரை எழும் சருகு என்ன-
காற்றுவீசுகிற வேகத்தால் மேலெழுகிற உலர்ந்த இலைகள்போல, கை அற –
செய்ததொழி லொன்று மில்லாமல், உடைந்தனர் – தோற்று அழிந்தனர்; ( எ-று.)

     முதல்வாக்கியத்தில், காளமேகம் – அருச்சுனனுக்கும், இந்திரவில் – அவனது
காண்டீவவில்லுக்கும், நீர்மழை – அம்புமழைக்கும், இரண்டாம் வாக்கியத்தில்,
காற்றின்வேகம்- அம்பின் வேகத்துக்கும், சருகு- சேனைக்கும் உவமையாம்.
தேர்களும் யானையும் வாசியும் வீரரும் உடைந்தனர் – அஃறிணையும்
உயர்திணையும் எண்ணி, சிறப்பினால் உயர்திணைமுடி பேற்றன. இகல்பூசல் –
வினைத்தொகை. இனி, மல்லிகல்- ஒருபொருட்பன்மொழி யென்றலும் ஒன்று:
மிக்கவலிமை யென்க. ‘மல்லிகைவெங்கோல்’ என்ற பாடத்துக்கு – (மன்மதனது
மலரம்பு ஐந்தனுள் மோகத்தையுண்டாக்குகிற.) நவமல்லிகையம்புபோலக் கொடிய
அம்பு என்க. தாரை – ஒழுங்குமாம். பி -ம்: மெய்யுருவி.  

பட்டவர் எத்தனை ஆயிரர்; நின்று படாமல்
உயிர்ப்புடன் வென்
னிட்டவர் எத்தனை ஆயிரர்; அஞ்சலின், ‘ஏகுக!’
என்று, அமர்வாய்
விட்டவர் எத்தனை ஆயிரர்; தம் குல மேன்மையும்
வெந் திறலும்
கெட்டவர் எத்தனை ஆயிரர்;-அன்று கிரீடி
தொடும் கணையால்!

அன்று – அப்பொழுது, கிரீடி தொடும் கணையால் – அருச்சுனன்
எய்த அம்புகளால், பட்டவர் – இறந்த பகைவீரர் எதனை ஆயிரர் –
மிகப்பலவாயிரந்தொகை யுடையார்; நின்று- ( எதிரில் நிலைத்து) நின்று, படாமல் –
இறவாமல், உயர்ப்புடன்- உயிருடனே, வென் இட்டவர்- முதுகு கொடுத்தவர்கள்,
எத்தனை ஆயிரர்-; அஞ்சலின் – (தாம்) பயப்படுதலால், ஏகுக என்று –
நீங்கிச்செல்லுங்களென்று (அவனாற் சொல்லப்பட்டு), அமர்வாய் விட்டவர்- போரில்
நீங்கினவர்கள், எத்தனை ஆயிரர் -; தம் குலம் மேன்மைஉம்- தங்கள்குலத்தின்
பெருமையும், வெம் திறல்உம்- கொடிய வலிமையும், கெட்டவர் – அழிந்தவர்,
எத்தனை ஆயிரர்-?

     அமர் வாய்விட்டவர் என எடுத்து, போரில் வாய்திறந்து சொல்லப்பட்டவர்
எனினுமாம் ; அஞ்சுபவரை அழித்தல் நீதியன் றாதலால், அப்படிபட்டவர்,
உயிரோடுஒடிப்போங்களென்று சொல்லி அவனால் அருளோடு விடப்பட்டனரென்க;
“அரிவையர் வெஞ்சம ரஞ்சுவோர் பெருங், குரவரென்றிவர்களைக் கோறல்
பாவமே”எனக் கீழ் நிரைமீட்சிச்சருக்கத்தில் வந்தது காண்க. கிரீடி என்ற
வடசொல்லுக்கு-கிரீட முடையவ னென்று பொருள்; இந்திரன் அருச்சுனனைத் தன்
உலகத்துக்குஅழைத்துப்போன பொழுது, அங்குத் தன் ஆசனத்தில் அருத்தாசனங்
கொடுத்துஅதிலிருக்க வைத்து, முன்பு தனக்குப் பிரமதேவன் தந்தருளியிருந்ததொரு
இரத்தினகிரீடத்தைச் சூட்ட, அதனைத் தரித்ததுபற்றி, அருச்சுனனுக்கு ‘கிரீடி’ என்று
பெயர்.’எத்தனையாயிரர்’ என்பது பல முறை ஒரே பொருளில் வந்ததனால்,
சொற்பொருட்பின்வருநிலையணி. பி-ம்: ஏகுவமென்று. 

ஓர் ஒர் உடம்பினில் ஆயிரம் ஆயிரம் உற்பல
வாளி பட,
தாரை படும்படி பொழி முகில் ஒத்தனர், சமர்
முனையில், தரியார்;
மாரனை அங்கம் எரித்தருள் கண்ணுதல் வடிவம்
எனும்படியே
பார் ஒரு பாதி சிவந்தது, மேனி பரந்து எழு
சோரியினால்.11.- படுகளச்சிறப்பு.

சமர் முனையில்- யுத்தகளத்தில், ஓர் ஓர் உடம்பினில் – (பகைவரது)
உடம்புதோறும் ஆயிரம் ஆயிரம் – பல ஆயிரக்கணக்கான, உற்பலம் வாளி –
கருங்குவளைமலர் போன்ற [கொல்லுந்தன்மையையுடைய] (அருச்சுனனது) அம்புகள்,
பட -தைத்தலால், தரியார் – (உடம்புமுழுவதும் புண்பட்டு இரத்தஞ்சொரிகிற)
அப்பகைவர்கள், தாரை படும்படி பொழி முகில் ஒத்தனர்- நீர்ப்  பெருக்கு
இடைவிடாதிருக்கும்படி சொரிகிற மேகத்தைப் போன்றார்கள் ; பார்- அவ்யுத்தபூமி ,
மாரனை அங்கம் எரித்தருள் கண் நுதல் வடிவம் எனும்படிஏ – மன்மதனை
உடம்பை யெரித்தருளிய நெருப்புக்கண்ணை நெற்றியிலுடைய சிவபிரானது
திருமேனிபோல, மேனி பரந்து எழு சோரியினால் – (அப்பகைவர்) உடம்பினின்று
வெளியெழுந்து பரவிய இரத்தத்தால், ஒரு பாதி சிவந்தது –
(துரியோதனாதியர்சேனையுள்ள) ஒரு பாதியிடம் செந்நிறமாயிற்று;

     உத்பலம் என்னும் வடசொல், திரிந்தது. மன்மதனது பஞ்சபாணங்களுள்
நீலோற்பலமலராகிய அம்பு கொல்லுந்தன்மையதாதலால், அது அருச்சுனனம்புக்கு
உவமை கூறப்பட்டது; “முழு நீலம், கொல்லும் மதனம்பின் குணம்” என்றது
காண்க. சிவபிரானது அர்த்தநாரீசுவரவடிவத்தில், சிவரூபமாகவுள்ள வலப்பக்கம்
சிவந்தும், உவமை ரூபமாகவுள்ள இடப்பக்கம் கறுத்தும் இருத்தலால், ‘கண்ணுதல்
வடிவமெனும்படி ஒருபாதி சிவந்தது’ என்றார்: உவமையணி, மாரன் என்ற
வடசொல்லுக்கு – (ஆடவரையும் மகளிரையும் காதல்நோயால்)
மரணவேதனைப்படுத்துபவனென்று காரணப் பொருள். கண்நுதல்-
வேற்றுமைத்தொகைப் புறத்துப்பிறந்த அன்மொழித்தொகை. சொரிவது –
சோரியெனக்காரணப்பெயர்.

     சிவவடிவம் இரண்டுதன்மைகலந்த விவரம்:- பிருங்கியென்னும் மகாமுணி
பரமசிவனை மாத்திரம் பிரதக்ஷிணஞ்செய்யக் கண்ட பார்வதீதேவி, தன்
பதியைநோக்கி ‘முனிவன் என்னைப்பிரதக்ஷிணஞ்செய்யாமைக்கு ஏது என்ன?’
என்றுவினவ, உருத்திரமூர்த்தி ‘இஷ்டசித்திபெற விரும்புபவர் உன்னையும்,
மோக்ஷம்பெற விரும்புபவர் என்னையும் வழிபடுவர்’ என்ன, அதுகேட்ட தேவி
பெருமானோடு பிரியாதிருக்குமாறு தவம்புரிந்து வாமபாகம் பெற்றனரென்பது

இந்திரன் மா மகன் இங்கு இவர்தம்முடன் இம்
முறை போர் புரிய,
சந்திர சூரிய மண்டலம் ஒத்து அணி தானை
இரண்டும் முனைந்து
உந்திய வேலையின், உந்திகள் நாலுடை உந்து
இரதத்திடை போய்,
அந்தணன்மேல் வரி சாபம் வளைத்தனன்,
ஐவர் படைத்தலைவன்.12.-மற்றொருபக்கத்தில் திருஷ்டத்யும்நன் துரோணன்மேல்
வில் வளைத்தல்.

இந்திரன் மா மகன் – தேவேந்திரனது சிறந்த குமாரனான
அருச்சுனன், இங்கு-இவ்விடத்தில், இவர்தம்முடன் –  இச்சஞ்த்தகவீரர்களுடனே,
இமுறை- இவ்விதமாக, போர் புரிய – யுத்தஞ்செய்துகொண்டிருக்க, சந்திர சூரிய
மண்டலம் ஒத்து அணி-சந்திரமண்டலத்தையும் சூரியமண்டலத்தையும் போன்று
(எதிரெதிரில்) ஒழுங்குபடத் திரண்டுள்ள, தானை இரண்டும்உம் –
இருநிறத்துச்சேனைகளும், முனைந்து – போர்கலந்து, உந்திய வேலையின்-தாக்கிய
சமயத்தில்,-ஐவர் படை தலைவன் – பாண்டவர் சேனாதிபதியான திட்டத்துய்மன்,-
உந்திகள் நால்உடை-நான்கு சக்கரங்களையுடைய, உந்து இரதத்திடை-உயர்ந்த
தேரிலே, போய்,- அந்தணன்மேல் – துரோணாசாரியன் மேல், வரி சாபம்
வளைத்தனன்-கட்டமைந்த வில்லை வளைத்துப் போர் செய்தான்:   (எ – று.)

     உந்தியென்பது உருளையாதலை “உந்தி தேருருளே யாறேயுவரி நீர்ச்சுழியே
கொப்பூழ்” என்னும் நிகண்டினாலும் அறிக. உந்துதல்- உயர்ச்சி, செலுத்தல்,
தள்ளுதல். 

நூலொடு சாபம் வளைத்து, அவன் மற்று இவன்
நொய்தின் உகைத்த வடிக்
கோலொடு கோல் முனை அற்று விழத் தொடு குனி
சிலை நாண் அழிய,
சேலொடு சேல் பொரு சீலம் எனும்படி, தேர்கள்
இரண்டும், மணிக்
காலொடு கால் பொர, வன் துவசத்தொடு கவசம்
அழித்தனனே.13.-துரோணன் திருஷ்டத்யும்நனுடைய துவசத்தொடு கவசமழித்தல்.

மற்று – பின்பு, அவன் – துரோணன், நூலொடு சாபம் வளைத்து –
தநுர்வேதமுறையோடு ஒப்ப வில்லை வளைத்து, நொய்தின் உகைத்த – விரைவாகப்
பிரயோகித்த, வடி கோலொடு- கூர்மையான அம்புகளால், இவன் – திட்டத்துய்மனது,
கோல் –  அம்புகள், முனை அற்று – நுனியறுந்து, விழ – கீழ்விழவும், தொடு-
(கையில்) ஏந்திய, குனி சிலை – வளைந்த வில்லின், நாண்- நாணி, அழிய –
துணிபடவும், சேலொடு சேல் பொரு சீலம் எனும் படிதேர்கள் இரண்டுஉம் மணி
காலொடு கால் பொர – சேல்மீனோடு சேல்மீன் போர்செய்ய மொழுங்கு போலு
மென்னும்படி, தன்தேரும் திட்டத்துய்மன் தேரும் அழகிய கால்களோடு கால்கள்
தாக்க, வல் துவசத்தொடு கவசம் அழித்தனன் – (அத்திட்டத்துய்மனது) வலிய
தேர்கொடியையும் உடற்கவசத்தையும் அழித்தான்:

     நொய்தின் – அலட்சியமாக, எளிதாக, மென்மையாக எனவும் பொருள்கள்
படும். கால் என்றது – தேரின் ஏர்க்கா லென்றேனும், முன்நிற்குந்
தூண்களென்றேனும் சக்கர மென்றேனும் கொள்க. கோலொடு, ஓடு – கருவிப்
பொருளது. சீலம் – வடசொல்.  

அரு முனி ஆதி வதிட்டனும், மன் குல ஆதியும்,
அந்தணனாம்
பெரு முனிதானும், உடற்றிய போர் சிலர் பின்
பொருதார் உளரோ?
ஒரு முனி ஏழ் கடலும் கரம் ஒன்றில் ஒடுக்கினன்;
மன்னனை மேல்
வரு முனி வென்றனன்;-முனிவருடன் பொர வல்லவர்
யார், புவிமேல்?14.-கவிக்கூற்று: துரோணன் செய்த போரின் சிறப்பு.

(முன்பு), அரு முனி ஆதி – (உலகத்தில்) அருமையான
முனிவர்களுக்கு முதல்வனான, வதிட்டன்உம்- வசிட்டனும், மன் குலம் ஆதிஉம்-
க்ஷத்திரியசாதியில்தோன்றிய சிறந்தவனான விசுவாமித்திரமகாமுனிவனும், அந்தணன்
ஆம் பெரு முனிதான் உம்-பிராமணசாதியனான சிறந்த முனிவனாகிய பரசுராமனும்,
உடற்றிய – பெருங்கோபங்கொண்டுசெய்த, போர்-யுத்தம்போன்ற யுத்தத்தை, பின்-
பின்பு, பொருதார் – செய்தவர், சிலர் உளர் ஓ – சிலபேராயினும் இருக்கின்றனரோ?
[எவருமில்லை என்றபடி] ஒரு முனி – ஒப்பற்ற அகஸ்தியமகாமுனிவனொருவன்,
ஏழ்கடல்  உம் – ஏழுசமுத்திரத்தையும், கரம் ஒன்றில் ஒடுக்கினன் – (தனது
வலிமையால்) ஒருகையிலொடுங்கச்செய்தான்:  (இப்பொழுது), மன்னனை –
இராசனான திட்டத்துய்மனை, மேல் வரு முனி – எதிர்த்துவந்த முனிவனான
துரோணன், வென்றனன் – சயித்தான்;  (ஆதலால்), முனிவருடன் பொர வல்லவர் –
முனிவர்களோடு போர்செய்யவல்லவர், புவிமேல் யார் – பூலோகத்தில்
யாவர்உள்ளார்?

     ‘திட்டத்துய்மனை முனி வென்றனன்’ என்ற சிறப்புப் பொருளை (வேறுசில
திருஷ்டாந்தங்களுங் காட்டி) ‘முனிவருடன் பொரவல்லவர் யார் புவிமேல்’ என்ற
பொதுப்பொருளால் விளக்கியதனால், வேற்றுப்பொருள்வைப்பணி. ஏழ்கடல்-
உவர்நீர், கருப்பஞ்சாறு, கள், நெய், தயிர், பால், நன்னீர் இவற்றின்மயமானவை.

    அறிவு ஒழுக்கங்களில் ஒப்புயர்வின்மையை உணர்த்துதற்கு ‘அருமுனி’
என்றும்,வசிஷ்டன் பிரமனது குமாரனாய்ப் படைப்பின் தொடக்கத்தில்
மற்றைமுனிவர்களுக்கு முந்தித் தோன்றியதனால் ‘முனியாதி வதிட்டன்’ என்றும்,
விசுவாமித்திரன் க்ஷத்திரியசாதியில் காதியென்னும் ராசருஷிக்குக் குமாரனாய்த்
தோன்றினவனாயினும் தனதுஉத்பத்திக்குக் காரணமான சருவின் [சரு – ஒருவகைச்
சோறு]  பேதத்தால் பிராமணத்தன்மையைப் பெற்றுப் பின்பு பலகாலம் பெருந்தவம்
புரிந்து பிரமவிருடியானதனால் அவனையும் முனிவர்களுட் சேர்த்துங் கூறினார்.

குசனென்னுஞ் சந்திரகுலத்து அரசனது குமாரனான காதியின் புத்திரியும்
கௌசிகியென்னும் மறுபெயருடையவளுமாகிய சத்தியவதியை மணஞ்செய்து
கொண்ட ருசீகனென்னும்முனிவன், அந்தத் தன் மனைவிக்கும் அவள் தாய்க்கும்
அவரவர் சாதிக்கு ஏற்ற சிறந்த புத்திரசந்தாந முண்டாம்படி பிரமமந்திரத்தாலும்
அரசமந்திரத்தாலும் இரண்டுசருக்களை யமைத்துக் கொடுத்தான்: அவற்றில்,
பிரமசருவைத் தாயும், அரசர்சருவை மகளுமாக அவர்கள் மாற்றி யுண்டு,
அதற்கேற்றபடி கருக்கொண்டனர்; அதனை அப்பொழுது அவரவருடம்பினொளியால்
அறிந்த ருசீகன், தன் மனைவியைநோக்கி ‘சருவை மாற்றி யுண்டகாரணத்தால், நீ
கோபகுணமுள்ள பராக்கிரமசாலியான புத்திரனைப் பெற, உன் தாய்
சாந்தகுணமடையும் புதல்வனைப் பெறுவள்’ என்று கூற, அது கேட்டு வருந்திய
சத்தியவதி கணவனைமிகப்பிரார்த்தித்து ‘என் மகன் அங்ஙனமாகாதபடி அருள்
செய்யவேண்டும்’ என்று வேண்ட, முனிவன், அத்தன்மை புத்திரனுக்கு இலதாகவும்
பௌத்திரனுக்கு உளதாகவும் அருள் செய்தனன்: ஆதலால் காதிமைந்தனான
விசுவாமித்திரன் தவஞ் செய்தலாகிய அந்தணவொழுக்கத்தையும், ருசீகனதுமகனான
ஜம்தக்நியின் குமாரனாகிய பரசுராமன் சினந்து போர்செய்யும்
அரசவொழுக்கத்தையும் பூண்டன ரென வரலாறுகாண்க. இத்தன்மைகள்,
‘மனகுலவாதியும் அந்தணனாம் பெருமுனிதானும்’ என்றவற்றாற் குறிப்பிக்கப்
பட்டன.

     விசுவாமித்திரன்: பலவரசர்களைப் போரில் வென்றதன்றி, வேட்டைக்குச்
சென்றபொழுது தனக்கும் தனதுசேனைக்கும் காமதேனுவைக் கொண்டு விசேஷமாக
விருந்திட்டு உபசரித்த வசிட்டனுடன் அத்தெய்வப்பசுவைப் கவர்ந்துபோதற்
பொருட்டாகப் பெரும்போர் செய்தவாறும். அப்போரில் வசிஷ்டன்
தன்கைப்பிரமதண்டத்தை ‘நீ எதிர்ப்பாய்’ என்ற ஏவி விசுவாமித்திரன் விட்ட
ஆயுதங்களை யெல்லாம் விழுங்குவித்து மற்றும் அவன் பிரயோகித்த பாசுபதாஸ்
திரத்தைத் தான் விழுங்கி அவனைப் பங்கப்படுத்தினவாறும், உலகத்திலே எவரும்
அழிப்பவரில்லாமையாற் கொழுத்துத்திரிந்து கொடுமையியற்றி வந்த
க்ஷத்திரியவம்சங்கள் பலவற்றைப் பற்றறநாசஞ் செய்யும் பொருட்டு
நாராயணாமிசமாய் அவதரித்த பரசுராமன், தனது தந்தையின் ஓமதேனுவைக்கவர்ந்து
அவனைக்கொன்றிட்டதுகாரணமாக, (திக்குவிசயஞ்செய்த இராவணனைச்
சிறையிலிட்ட) கார்த்த வீரியார்ச்சுனனையும் அவனது குமாரர்களையுங் கொன்று
அழித்து, அக்காரணத்தாலேயே க்ஷத்திரியவம்சம் முழுவதன் மேலுங் கோபா
வேசங்கொண்டு உலகத்திலுள்ள அரசர் பலரையும் இருபத்தொரு தலைமுறை
பொருது ஒழித்திட்டவாறும், பிரசித்தம்.

     அகத்தியன் கடலைக் கரத்திலொடுக்கிய கதை:-இந்திரன் முதலிய
தேவர்கள்,தம்பகைவனாகிய விருத்திராசுரன் மற்றும்பல அசுரர்களுடனே கடலில்
ஒளித்துக்கொண்டபோது, அகத்தியமகா முனிவனை வந்து பிரார்த்திக்க,
அம்முனிவரன், அக்கடலின் நீரைத் தனது ஒருகையால் முற்றும் முகந்துபருகியருளி,
உடனே ஒளித்திருந்த அவ்வசுரரை இந்திரன் கொன்றபின், அவர்வேண்டுகோளின்
படி மீண்டும் உமிழ்ந்தன னென்பதாம்.    

வந்து எதிர் முட்டுதலும், தன தேரினை மாறுபடத்
திருகி,
சிந்தையும் மானமும் வீரமும் விட்டு, ஒரு செயல்
அற, வென்னிடலும்,
‘தந்திரநாதன் உடைந்தனன்’ என்று, இரு தானையின்
மன்னவரும்,
அந்தணன் ஆண்மையும், வன்மையும், வின்மையும்,
அன்று துதித்தனரே.15.- இருதிறத்துச் சேனையோரும் துரோணன்திறலைப் புகழ்தல்.

வந்து எதிர் முட்டுதலும் – (துரோணன்) வந்து எதிரில்
தாக்கியவளவில், (திட்டத்துய்மன்), தனதேரினை மாறுபட திருகி – தன்னுடைய
தேரைப் பின்னாகத் திருப்பிக்கொண்டு, சிந்தை உம் மானம்உம் வீரம்உம் விட்டு –
எண்ணத்தையும் மானத்தையும் பராக்கிரமத்தையும் இழந்து, ஒரு செயல் அற –
செய்யுந்தொழிலொன்று மில்லாமல், வென் இடலும் – புறங்கொடுத்தவளவிலே,-
தந்திரநாதன் உடைந்தனன் என்று – (பாண்டவர்) படைத்தலைவன் தோற்றா
னென்றுஅறிந்து, இரு தானையின் மன்னவர்உம் – இரண்டு சேனையின்
அரசர்களும்,அன்று – அப்பொழுது, அந்தணன் – முனிவனான துரோணனது,
ஆண்மைஉம் -பராக்கிரமத்தையும், வன்மை உம் – வலிமையையும், வின்மைஉம் –
வில்தொழில்திறத்தையும் துதித்தனர் – புகழ்ந்து கொண்டாடினார்கள்; (எ-று.)-
‘தனதேர்’ – இங்கு வருமொழி ஒருமையாயிருக்கும் பொழுது ‘அ’ உருபு
வந்தது.

வேதியன் விட்ட சரங்களின் நொந்து, வெரீஇ வரும்
மன்னவனைத்
தாது அவிழ் பொன்-தொடை மார்பில் அணைத்து உயர்
தருமன் உரைத்தருள்வான்;
‘நீ தவறின், பினை யார் நிலைநிற்பவர்? நிருபர்
சிகாமணியே!
மோதி இளைத்தனை; ஆறுக!’ எனப்பல
முகமன்மொழிந்தனனே.16.- தருமபுத்திரன் திருஷ்டத்யும்நனைத் தழுவி முகமன்கூறுதல்.

வேதியன் விட்ட சரங்களின் – துரோணன் எய்த அம்புகளால்,
நொந்து – வருந்தி, வெரீஇ வரும் – அஞ்சி ஓடிவருகிற, மன்னவனை –
திட்டத்துய்மனை,- உயர் தருமன் – சிறந்த யுதிட்டிரன், தாது அவிழ் பொன்
தொடைமார்பில் அணைத்து – பூந்தாதுகள் சிந்துகிற அழகிய மாலையைத் தரித்த
மார்பிலேபொருந்தத் தழுவிக் கொண்டு, உரைத்தருள்வான்-கருணையோடு தைரியங்
கூறுபவனாய்,-‘நிருபர் சிகாமணியே – அரசர்களுக்குத் தலைமேலணியும்
இரத்தினம்போன்றவனே! நீ தவறின் -(துரோணனுக்குமுன்) நீயே பின்னிட்டால்,
பிணை யார் நிலைநிற்பவர் – வேறுயாவர் உறுதியாய் நிற்க வல்லார்? மோதி
இளைத்தனை – போர்செய்து சோர்ந்தாய், ஆறுக – (அவ்விளைப்புத்) தணிவாயாக,’
என – என்று, பல முகமன் மொழிந்தனன் – அநேக உபசார வார்த்தைகளைக்
கூறினான் (எ -று.)

     தாது – மகரந்தப்பொடி, நீ தவறின் – உன்னைவிட்டாலென்றுமாம். பின்னை –
என்பது,வேறு என்றும் பொருளில் வந்தது. நிருபர்சிகாமணி-அரசர்கள்
தலைமேல்வைத்துக்கொண்டாடத்தக்கவனென்றபடி.

தன் எதிர் மா மயிலோன் என நின்ற தனஞ்சயன்
மா மகவை,
பொன் எதிர் பேர் ஒளி அருள் வடிவு ஆகிய பூபதி,
‘வருதி!’ எனா,
‘நின் எதிர் போரினில் நிற்பவர் வேறு இலர்; நேமி
வியூகமும் நீ
முன் எதிரா, அமர் புரி பொழுது அன்றி, முரண்
குலையாது, இனியே.17.-இதுமுதல்மூன்றுகவிகள்-ஒருதொடர்: ‘நீசக்கரவியூகத்தைப்பிளந்து
வெல்க’ என்று அபிமனைத் தருமன்தழுவி விடைகொடுத்தனுப்பியமை
கூறும்.

 (பின்பு), பொன் எதிர் – பொன்னையொத்த, பேர்ஒளி-மிக்க
உடம்பினொளியையுடைய, அருள் வடிவு ஆகிய-கருணையின் வடிவமான, பூபதி –
தருமராசன்,-தன் எதிர்-தனது எதிரில், மா மயிலோன் என நின்ற – சிறந்த
மயிலைக்(கொடியும் வாகனமுமாக) உடைய முருகக் கடவுள்போல நின்ற,
தனஞ்சயன் மா மகவை – அருச்சுனனது சிறந்த புத்திரனான அபிமனை, வருதி
எனா – வா வென்று அழைத்து, ‘நின் எதிர்-உனது எதிரில், போரினில் நிற்பவர் –
யுத்தத்தில் நிற்கவல்லவர், வேறு இலர் -எவரு மில்லை; இனி-, நீ-, முன் எதிரா-
முன்னே எதிர்த்துச்சென்ற அமர் புரி பொழுது அன்றி-போர்
செய்யும்பொழுதில்லாமல், நேமி வியூகம் உம் – சக்கரவியூகமும், முரண் குலையாது
– வலிமை யழியாது;’ (எ – று.)-இப்பாட்டில், ‘என’ என்ற வினையெச்சம், மேல்
பத்தொன்பதாம்பாட்டில் வருகிற “புல்லுக வென்றனன்” என்பதிலுள்ள ‘என்றனன்’
என்ற முற்றோடு முடியும்; இப்பாட்டின் பின் இரண்டடிமுதல் 19-ஆம் பாட்டில்
“புல்லுக” என்பதுவரை – தருமன் அபிமனை நோக்கிக் கூறிய வார்த்தைகள்.

     முருகன் – அபிமனுக்கு, இளமை அழகு பலம் பகைவெல்லும் பராக்கிரமம்
சிவபிரான்ருள்பெற்றமை இவற்றில்உவமை. தருமன் செந்நிறமுள்ளவ னாதலால்,
‘பொன்னெதிர்பேரொளி’  எனப்பட்டது; இனி, இத்தொடருக்கு-
பிருகஸ்பதிபதியையோத்த சிறந்த ஞானமுடைய என்றும் பொருள் கொள்ளலாம்.
கருணைநிரம்பியவனென்றும், அக்குருணையின் அமைதி இவனது தோற்றங்
கண்டமாத்திரத்திலே விளங்கு மென்றுங் கூறுவார், ‘அருள்வடிவாகிய’ என்றார்

என்னை வளைத்திட நென்னல் உடன்று வென்னிட்ட
வில் ஆசிரியன்,
மன்னை வளைத்து ஒரு சக்கரயூகம் வகுத்து,
எதிர் நின்றனனால்;
நின்னை அளித்த தராபதிதன்னையும் நின்னையுமே
ஒழியப்
பின்னை எடுத்த விலோடு எதிர் சென்று, பிளந்திட
வல்லவர் யார்?

நென்னல் – நேற்று, என்னை-, அழைத்து- (போருக்குக்) கூப்பிட்டு,
உடன் -என்னுடனே, உடன்று-போர்செய்து, வென் இட்ட – புறங்கொடுத்த, வில்
ஆசிரியன்- வில்லில்வல்ல துரோணாசாரியன், அக்கறுவையுட்கொண்டு இன்றைக்கு),
மன்னை வளைத்து – (தன்சேனை) அரசர்களைச் சூழநிறுத்தி, ஒரு சக்கரயூகம்
வகுத்து-ஒப்பற்ற சக்கர வியூகமாக அணிவகுத்து, எதிர் நின்றனன்- எதிரில்
(போருக்கு) நின்றான்; நின்னை அளிந்த – உன்னைப் பெற்ற, தராபதிதன்னைஉம் –
அருச்சுனராசனையும், நின்னைஉம்ஏ- உன்னையும் ஆக உங்களிரண்டுபேரையும்,
ஒழிய-தவிர, எடுத்து விலோடு- ஏந்திய வில்லுடனே, எதிர் சென்று-எதிரிற் போய்,
பிளந்திடவல்லவர் – (அந்தவியூகத்தை) சிதைத்திடவல்லவர், பின்னை யார்- வேறு
யாவர் உளர்? (எ – று.)

     ‘அபிமந்யு அருச்சுனன்  கிருஷ்ணன் (கிருஷ்ணனது குமாரனான)
பிரத்யும்நன்இந்நால்வரு மொழிய வேறு ஐந்தாமவனொருவன் பதும வியூகத்தைப்
பிளக்கவல்லானல்லன்’ என்று வியாசபாரதங் கூறுகிறது. உடல் – விரைவில்
என்றுமாம்: இதனை ‘வென்னிட்ட’ என்றதனோடு கூட்டலுமாம். ஆல் -சுற்றுலா.
பி-ம்:-
என்னை வளைத்திட.   

புல்லுக!’ என்றனன்; மார்பு உற அன்பொடு புல்லி,
‘இமைப்பொழுதில்
செல்லுக!’ என்றனன், ‘வன் சமரத்திடைசென்று,
மிகப் பகையைக்
கொல்லுக!’ என்றனன், ‘நின் புயம் மேவரு கொற்றவைதன்
அருளால்
வெல்லுக!’ என்றனன்,-அன்று துரோணனை வென்ற
பெருந்தகையே.

‘புல்லுக – (என்னை வந்து) தழுவுவாயாக,’ என்றனன்-என்று சொல்லி,-
அன்று துரோணனை வென்ற பெருந்தகை-  முந்தின நாளில் துரோணனைச் சயித்த
பெருமைக்குணமுடைய  தருமன், மார்பு உற அன்பொடு புல்லி – (அபிமனை)
மார்பிலே பொருந்தப் பிரீதியோடு அனைத்துக்கொண்டு, இமை பொழுதில் செல்லுக
என்றனன் – ‘மிகவிரைவில் செல்லுவாயாக’ என்றுங் கூறினவனாய், ‘வன் சமரத்திடை
சென்று-கொடியபோரிற்போய், பகையை மிக கொல்லுக – பகைவர்களை மிகுதியாகக்
கொல்லுவாயாக,’ என்றனன்-என்றுங்கூறி. ‘நின்புயம்-உனது தோள்களில், மேவரு-
பொருந்திய, கொற்றவைதன் – துர்க்காதேவியின், அருளால்-, வெல்லுக- (பகை)
வெல்வாயாக,’ என்றனன் – என்றுங் கூறினான்: (எ – று.)

     போருக்கு உரிய தேவதை துர்க்கையாதலாலும், அவளருளே வெற்றிக்குக்
காரண மாதலாலும், ‘கொற்றவைதன்னருளால் வெல்லுக’ என்றான். வீரம்
தோளின்திறமையா லுண்டாதலால், வீர மகளாகிய அவனைத் தோளின் மேல்
தங்குகிறவளாகக் கூறுதல் கவிசமயம். ‘கொற்றவை’ என்னும் பெயருக்கு –
வெற்றியைத் தருபவ ளென்று காரணப்பொருள் கூறலாம்.   

மூத்த தாதைதன் ஏவலின் கழல் முளரி கைதொழுது,
உரன் உறச்
சேர்த்த நாணுடை வில்லன், வெய்ய தெரிந்த வாளியன்,
முதுகு உறக்
கோத்த தூணியன், வாள் முதல் பல கொற்றம் முற்றிய
படையினன்-
பார்த்தன் மா மகன்-இரதமீது உயர் பரிதியாம்
என ஏறினான்.20.-மூன்றுகவிகள்  – அபிமன் யுத்தசன்னத்தனாய்ச் சென்றமை கூறும்.

பார்த்தன் மா மகன்-அருச்சுனனது சிறந்த புத்திரனான அபிமன்,
மூத்ததாதைதன் ஏவலின்- (தனது) பெரிய தந்தையான தருமனது கட்டளைக்கு
இணங்கி,கடில் முளரி கை தொழுது-(அவனது) தாமரை மலர்போன்ற பாதங்களைக்
கைகூப்பிவணங்கி, உரன் உற சேர்த்த-வலிமை பொருந்தக்கட்டிய, நாண் உடை –
நாணியையுடைய, வில்லன் – வில்லை யுடையவனும், தெரிந்த-ஆராய்ந்தெடுத்த,
வெய்ய வாளியன் – கொடியஅம்புகளை யுடையவனும், முதுகு உற கோத்த- (தனது)
முதுகிற் பொருந்த மாட்டிய, தூணியன் – அம்பறாத்தூணியை யுடையவனும், வாள்
முதல் – வாள் முதலான, பல-அநேகமான, கொற்றம் முற்றிய – வெற்றி மிக்க,
படையினன் – ஆயுதங்களை யுடையவனுமாய், இரதம் மீது – (தனது) தேரின்மேல்,
உயர்பரிதி ஆம் என – சிறந்த சூரியன்போல, ஏறினான்-(எ – று.)

     கழல் முளரி – முன்பின்னாகத் தொக்க உவமத்தொகை: தொடர்ச்சி தோன்றக்
கூறாமையின் உருவகமாக்கி யுரைத்தற்கு இங்கே இயைபு இன்று முளரி –
முட்களையுடைய அரியை [அரையை] யுடையது எனவேற்றுமைத்தொகையன்
மொழியாகிய காரணப்பெயர் சூரியனுவமை – விரைந்தோடுஞ்
சிறந்த தேர்மீது ஏறுதற்கும், விளக்கத்துக்கும், பகையிருளொழித்தற்குமாம்.

     இதுமுதற் பத்தொன்பது கவிகள் – பெரும்பாலும் ஒன்று மூன்று
ஐந்தாஞ்சீர்கள்மாச்சீர்களும், மற்றையான்கும் விளச்சீர்களுமாகிய கழிநெடிலடி
நான்குகொண்ட எழுசீராசிரியவிருத்தங்கள்.

வீர வார் கழல் கழலின்மீது விளங்க, மார்பினில்
வெண் நிலா
ஆர மாலை துலங்க, மாசுண வலயம் வாகுவில்
அழகு எழ,
சேர வானம் அது இருள் அகற்றும் இரண்டு
செஞ்சுடர் என்னவே
சார மா மணி குண்டலங்கள் வயங்க,
மௌலி தயங்கவே,

இதுவும், மேற்கவியும் – குளகம்.

     (இ-ள்.) வீரம் – பராக்கிரமத்துக்கு அறிகுறியான, வார்-நீண்ட, கழல் –
கழலென்னும் அணி, கழலின்மீது – பாதத்தின் மேல், விளங்க- பிரகாசிக்கவும்,
மார்பினில்-, வெள் நிலா வெண்ணிறமான ‘சந்திரகாந்திபோன்ற ஒளியை வீசுகிற,
ஆரம் மாலை – முத்துமாலை, துலங்க – அசைந்துவிளங்கவும், மாசுணம் வலயம்
– பாம்பின்வடிவந்தோன்றத் தொழில்செய்யப்பட்டுள்ள வளை, வாகுவில்-
தோள்களில், அழகு ஏழ – அழகோடுவிளங்கவும், வானம் அது -ஆகாயத்தில்,
சேர-ஒருசேர, இருள் அகற்றும்- இருட்டைப் போக்குகிற, இரண்டு செம் சுடர்
என்ன – இரண்டு சிவந்த சூரியர்கள் (இருந்தாற்) போல, சாரம் மா மணி
குண்டலங்கள்-சிறந்த பெரிய இரத்தினம்பதித்த குண்டல்மென்னும் காதணிகள்,
வயங்க – விளங்கவும், மௌலி,-கிரீடம், தயங்க – பிரகாசிக்கவும்,- (எ-று.)- “தேர்
செலுத்தினான்”(22) எனமுடியும்.

     மூன்றாமடி – இல்பொருளுவமை. வானமது, அது – பகுதிப் பொருள்விகுதி,
செஞ்சுடர் என்பதை – அடையடுத்த பண்பாகு பெயரென்றாவது,
பண்புத்தொகையன்மொழி யென்றாவதுகொள்க 
சாரம் ஆம் அணி யென்று
பதம்பிரித்துப் பொருள் கொள்ளலாம். விளங்க, துலங்க,ஏழ வயங்க, தயங்க என
ஒரு பொருள் குறித்த பலசொற்கள் வந்தது – பொருட்பின்வருநிலையணி.

இனம் செய் கேண்மை கொள் துருபதேயனும், எண்
இல் கோடி மகீபரும்,
கனம் செய் தூரியம் எழ வெகுண்டு எறி கால்
எனும்படி கை வர,
தினம் செய் நாதன் நடாவு தேர் நிகர் தேர்
விரைந்து செலுத்தினான்-
தனஞ்சயன் தலைநாள் முயன்ற தவம் பலித்தன
தன்மையான்.

தனஞ்சயன் – அருச்சுனன், தலைநாள் – முற்காலத்தில்
[பூர்வசந்மத்தில்], முயன்ற – ஊக்கத்தோடு செய்த, தவம்-,  பலித்து அன-
(இங்ஙனம்) பயன்பட்டாற் போன்ற, தன்மையான் –  சிறந்ததன்மையையுடைய
குமாரனான அபிமன்,-இனம் செய் உறவாகச் செய்கிற, கேண்மை – சினேக
குணத்தை, கொள் – கொண்ட, துருபதேயன்உம்-துருபதபுத்திரனான
திட்டத்துய்மனும், எண் இல் கோடி மகீபர்உம்- அளவிறந்த கோடிக்கணக்கான
அரசர்களும், கனம் செய் தூரியம் எழ-பெருமைசெய்கிற வாத்தியங்கள் முழங்க,
வெகுண்டு எறி கால் எனும்படி – கோபித்து வீசுகிற பெருங்காற்றென்று (உவமை)
சொல்லும்படி, கை வர – பக்கங்களில் (உதவியாய்) வர,-தினம் செய் நாதன்
நடாவு தேர் நிலர் தேர்-நாளை யுண்டாக்குகிற தலைவனான சூரியன் செலுத்துகிற
தேவர் யொத்த (தன்) தேரை, விரைந்து செலுத்தினான் – துரிதமாகச் செலுத்தி
வந்தான்: (எ – று.)

     சூரியன்தேர் – ஓய்வின்றி விரைந்து செல்லுதற்கு உவமம்,
தவஞ்செய்திருந்தாலன்றி இப்படிப்பட்ட அருமையான உத்தம புத்திரனைப்
பெறுதல் கூடாதென்பார், ‘தவப்பயனன்ன தன்மையான்’ என்றார்;
“மகன்றந்தைக்குஆற்று முதவியிவன்றந்தை, யென்னோற்றான்
கொல்மெலனுஞ்சொல்” என்றது காண்க: ஒழுக்கங்களிலும், பலபராக்கிரமங்களிலும்
மிகச்சிறந்தவனென்க. நட்பு மிக்க அன்பை விளைத்துச் சுற்றத்தார்க்குஉரிய
உரிமையை உண்டாக்குதலால், ‘இனஞ்செய்கேண்மை’ எனப்பட்டது. கனம்செய்
தூரியம் – மேகவொலியைச்செய்கிற தூரியமுமாம்: அவை, முரசம் முதலியன

ஓதை கொண்டு அணி நின்ற சக்கரயூக மன்னர்
உரம்தொறும்
கோதை தங்கு கரத்தில் வில் உதை கூர வாளி
குளிக்கவே,
சீதை கொண்கனும், மேவலார் உயிர் தென்புலத்து
இடு தன் பெருந்
தாதையும், தரம் என, இமைப்பிடை தாவு தேரினன்,
ஏவினான்.23.-அபிமன் அம்புகளைச் சக்கரவியூகத்துள்ள வீரரின்மீது ஏவுதல்.

தாவு தேரினன்-தாவிச்செல்லுந் தேரையுடைய அபிமன்,-ஒதை
கொண்டு-ஆரவாரத்தைச் செய்துகொண்டு, சக்கர யூகம்-சக்கரயூகத்திலே, அணி
நின்ற- ஒழுங்காய் நின்ற, மன்னர் பகையரசரின், உரம்தொறுஉம்-மார்பிலெல்லாம்,-
கோதைதங்கு- நாணி பூட்டிய, கரத்தில் வில்-(தன்) கைவில்லினால், உதை-
தள்ளப்படுகிற, கூரவாளி – கூர்மையுள்ள அம்புகள், குளிக்க- மூழ்கும்படியும்,-
சீதை கொண்கன்உம் -சீதையின் கணவனான இராமபிரானும், மேவலார் உயிர்
தென் புலத்து இடு – பகைவர்களின் உயிரைத் தெற்குத்திக்கில் [யமலோகத்தில்]
செலுத்துகிற, தன் பெரு தாதைஉம் – தனது சிறந்ததந்தையான அருச்சுனனும், தரம்
என-(தனக்கு) ஒப்பென்று சொல்லுமாறு,- இமைப்பிடை – கணப்பொழுதிலே,
ஏவினான் – பாணப்பிரயோகஞ்செய்தான்: (எ- று.)

கோதை தங்கு கரம் –  உடும்புத்தோலாலாகிய முன்னங்கைச் சட்டைதங்கிய
கரமுமாம்: கோதா – வடசொல். சீதை – ஸீதா என்னும் வடசொல்லின் திரிபு:
இதற்கு- கலப்பையுழுசாலென்று முதலிற் பொருள்: சனகமகாராசான்
கேள்விக்காகச்சாலையுழுதபோது, பிராட்டி பூமிதேவியின்மகளாய்க்
கலப்பையுழுபடைச் சாலிற் காணப்பட்டதனால், சீதையென்று திருநாமம்; இது –
இடவாகுபெயரின்பாற்படும்.

அச்சுதப் பெயர் மாதுலன் புகல் அரிய மந்திரம்
அன்பினோடு
உச்சரித்து, ஒரு நொடியினில் பல கோடி பாணம்
உடற்றினான்-
எச் சிரத்தையும், எப் புயத்தையும், இடை துணித்தலின்,
அடைய முன்
வச்சிரத்தவன் உரைசெய் சக்கர மாறு இலா
அணி பாறவே.24.- அபிமனம்பினால் சக்கரவியூகத்துஅணி சிதறுதல்.

இதுவும், மேற்கவியும் – குளகம்.

     (இ-ள்.) அச்சுதன் பெயர் மாதுலன் புகல்-அச்சுதனென்னும் ஒரு
திருநாமத்தையுடைய (தன்) மாமனான கண்ணபிரான் (தனக்கு) உபதேசித்துள்ள,
அரிய மந்திரம் – அருமையானதொரு மந்திரத்தை, அன்பினோடு உச்சரித்து –
பக்தியோடு சொல்லி, ஒரு  நொடியினில் – ஒருமாத்திரைபொழுதிலே. பலகோடி
பாணம்- அநேகங்கோடி அம்புகளை, உடற்றினான் – பெருங்கோபத்தோடு
பிரயோகித்தான்;(அவைகள்), எ சிரத்தைஉம்-(பகைவரது) தலைகளெல்லாவற்றையும்
எ- புயத்தையும்உம்-தோள்களெல்லாவற்றையும், இடைதுணித்தலின் – நடுவிலே
துண்டித்தலால்,-வச்சிரத்தவன் முன் உரைசெய்-வச்சிராயுதமுடைய இந்திரன் முன்பு
உபதேசித்துள்ள, சக்கரம் – சக்கரவியூகத்தினது, மாறு இலா அணி – ஓப்பில்லாத
ஒழுங்கு, அடைய பாற-முழுவதுஞ் சிதைய,-(எ – று.) ‘பற்றினான்’ என அடுத்த
கவியில் முடியும்.

     முன்னிரண்டடியிற்குறித்தது, வைஷ்ணவாஸ்திரம். ‘முன்
வச்சிரத்தவனுரைசெய்சக்கரம் என்றதனால், சக்கரவியூகத்தின் உபதேசபரம்பரை
இந்திரனிடத்தினின்று வந்ததென்று தெரிகிறது. ‘என்பது, ஸ்ரீவாசுதேவன் பக்கல்
பெற்றதோர் அஸ்திரத்திரத்தினையுச் சரித்து……………….சக்கரயூகத்தைப் பிளந்து
உள்புக்கு’ என்றது, பெருந்தேவனார் பாரதம். மாதுலன் – மாதாவினுடன்பிறந்தவன்.
மாறு இலா – மாறுபடுதலில்லாத எனினுமாம் பாற உடற்றினானென முத்தகமுமாம்

மல்லல் அம் புய அபிமன் வெஞ் சர மழை
அனைத்தையும், மால் என,
பல்ல வெங் கணை கொடு விலக்கி, முனைந்து வந்து,
எதிர் பற்றினான்;
வெல்ல வந்த துரோண மா முனி விறல் அழிந்தது;
குரு எனும்
சொல் அழிந்தது; வில் அழிந்தது; தேர்
அழிந்தது;-தொடைகளால்.25.-அபிமனைத் துரோணன் எதிர்த்துத்தோற்றல்.

மல்லல், – வலிமையையுடைய, அம்-அழகிய, புயம்- தோள்களையுடைய,
அபிமன் – அபிமந்யுவினது, வெம் சரம் மழை அனைத்தைஉம்-கொடிய அம்புமழை
முழுவதையும், (துரோணன்) மால் என-கண்ணபிரான் போல, பல்ல வெம் கணை
கொடு விலக்கி-பலவாகிய கொடிய (தன்) அம்புகளைக்கொண்டு தடுத்து, முனைந்து
வந்து-கோபித்து வந்து, எதிர் பற்றினான் – எதிரில் தகைந்தான்; தொடைகளால்-
(அப்பொழுது அபிமனெய்த) அம்புகளால், வெல்ல வந்த துரோண மா முனி-
சயிக்கவந்த துரோணசாரியனது, விறல்-பராக்கிரமம் – அழிந்தது-; குரு எனும்
சொல்- ஆசிரியனென்னும் புகழ், அழிந்தது-; வில் அழிந்தது-; தேர் அழிந்தது-,
(எ – று.)

     இந்திரனது அம்புமழையை மலைகொண்டு தடுத்த  க்ருஷ்ணனையொப்ப,
‘மாலென’என்றார், பல்லம் வெம் கணைஎனப்பிரித்து- பல்லமாகிய
வெவ்வியகணையெனினுமாம்.  

தந்தை வென்னிடு முன்னர், முப்புர தகனனே
நிகர் மகன், மிகச்
சிந்தை கன்றி, வெகுண்டு, தேரொடு சென்று,
கால் வளை சிலையினால்
உந்துகின்ற சிலீமுகம் பல பகை முகங்களில்
உருவவே,
முந்தினான், அவன் அப்பு மாரியின் முழுகினான்,
உடல் முற்றுமே.26.- பின்புஎதிர்த்த அசுவத்தாமன் அபிமன்கணையில் மூழ்குதல்.

(இவ்வாறு யாவும் அழிந்து), தந்தை வென் இடு முன்னர் – (தனது)
பிதாவான  துரோணன் புறங்கொடுக்கு முன்னே, மு புரம் தகனன்ஏ நிகர் மகன் –
திரிபுரசங்காரஞ்செய்திட்ட சிவபிரானையே போன்ற புத்திரனான அகவத்தாமன்,
வெகுண்டு-கோபித்து, சிந்தை மிக கன்றி – மனம் மிகவெதும்பி, தேரொடு சென்று-
(தன்) தேருடன்போய், கால் வளை சிலையினால் – கழுந்து வளைந்த (தன்)
வில்லினால், உந்துகின்ற-பிரயோகிக்கிற, சிலீமுகம் பல – அநேகம் அம்புகளால்,
பகை முகங்களில்-பகைவர்களது முகங்களிலே, உருவ-துளைத்துச் செல்லும்படி,
முந்தினான்-போரில் முற்பட்டு, (உடனே), அவன் அம்பு மாரியின் – அந்த
அபிமனது அம்புமழையில், உடல் முற்றுஉம் முழுகினான் -(தனது) உடம்பு
முழுவதும்மூழ்கப்பெற்றான்:    (எ-று.)

     சிவாநுக்கிரகத்தாற் பிறந்த குமார னாதலால், அவனுக்குச் சிவபிரானையே
உவமைகூறினார். புரதஹநன் – வடமொழித்தொடர், ‘கால்வளைசிலை’ என்பதற்கு –
பாதத்தால்’ ஒருகோடியை அழுத்தி வளைக்கப்பட்ட வில்லென்றுமாம். ‘முழுகினான்’
என்ற வினைக்கு  ஏற்ப, ‘அப்புமாரி’என்பது – நீர்மழை யென்றும் பொருள்படும்;
தொனி. அம்பு, அப் என்ற வடசெற்கள், நீரின்பெயராம். 

கன்னன் என்று உலகு எண்ணும் வீரனும், மொய்ம்புடன்
பல கணைகள் வான்
மின் ஒழுங்கு ஒரு கோடி என்ன நிறுத்தி, மெய்
உற வீசினான்;
அன்னவன் பகழிக் குலங்கள் அநேக மோகரம்
ஆகையால்,
‘என்ன வெஞ் சமம் இனி நமக்கு?’ என ஏறு தேருடன்
ஏகினான்.27.-கன்னன் அபிமனையெதிர்த்துப் பின்னிடுதல்.

(பின்பு), கன்னன் என்று  உலகு எண்ணும் வீரன் உம்-கர்ணனென்று
பெயர்பெற்று உலகத்தாரால் (கௌரவமாக) எண்ணப்படுகிற பராக்கிரமசாலியும்
மொய்ம்புடன்-வலிமையோடு, பல கணைகள் – அநேக அம்புகளை, வான் மின்
ஒழுங்கு ஒரு கோடி என்ன,-ஆகாயத்திற்காணப்படும் மின்னலின் வரிசைகன்
மிகப்பல போல, நிறுத்தி-வில்லில் தொடுத்து, மெய்உற வீசினான்-(அபிமனது)
உடம்பிற்படும்படிபிரயோகித்தான்; (ஆயினும்), அன்னவன் பகழி குலங்கள்
அநேகம்மோகரம் ஆகையால் – அவ்வபிமனது அம்புக் கூட்டங்கள் மிக
உக்கிரமாயிருத்தலால்,-இனி நமக்கு வெம் சமம் என்ன என – ‘இனிமேல் நமக்கு
(அவனோடு) கொடிய போர் செய்யும் ஆற்றல் யாது உள்ளது? என்று (கருதி), ஏறு
தேருடன் ஏகினான் – (நான்) ஏறிவந்த தேரொடு பின் சென்றான்; (எ – று.)

     ஒருகோடி – மிகப்பலவாகிய எண்ணிற்கு ஓன்று எடுத்துக் காட்டியவாறு. வில்
முதலிய ஆயுதங்கள் அழிந்தமை தோன்ற, ‘ஏறுதேருடன் ஏகினான் என்றார், வேறு
எனப் பதம்பிரித்தல், மோனைத்தொடைக்குச் சிறவாது.  

கிருப மா முனிதானும் மேதகு கிருதவன்மனும்
ஓர் புறத்து
இருவர் ஆண்மையும் நிலை பெறும்படி சென்று
தூவினர், ஏவினால்;
ஒருவனே இவன்; இவன் எடுத்ததும் ஒரு
சராசனம்; அம்பிலே
வெருவி ஓடினர், தங்கள் ஓர் இரு வில்லும் அற்று,
வெறுங் கையே.28. கிருபனும் கிருதவர்மனும் எதிர்த்து, அபிமனுடைய
ஒருதொடுப்பிலே வெருவியோடுதல்.

கிருபன் மா முனி தான்உம் – சிறந்த கிருபாசாரியனும், மேதகு
கிருதவன் மன்உம்-மேன்மை பொருந்திய கிருதவர்மாவென்னும் யதுகுலத்தரசனும்,
ஓர் புறத்து-ஒரு பக்கத்தில், இருவர் ஆண்மை உம் நிலை பெறும்படி, சென்று-
(எதிர்த்துச்) சென்று, ஏவினால் தூவினர்- அம்புகளால் பொழிந்தார்கள் –
(அப்பொழுது), இவன் ஒருவன்ஏ – (எதிர்ப்பவன்) இவ்வபிமந்யு ஒருத்தனேதான்:
இவன் எடுத்ததுஉம் ஒரு சராசனம் – இவன் (கையில்) ஏந்தினதும் ஒரு வில்தான்;
(அங்ஙனம் இருந்தும்), அம்பிலே- (இவனது) அம்புகளாலே, (அவ்விரண்டு பேரும்),
தங்கள் ஒர் இரு  வில்உம் அற்று – தங்களது வில்லிரண்டும் அறுபட்டு, வெறு
கை-ஆயுதமில்லாத கைகளையுடையவராய், வெருவி ஓடினர்-அஞ்சிஓடிப்
போனார்கள்:

சகுனியும், திருமகனும், மற்று உள தமரும், மேல்
இடு தானையோடு
‘இகல் நெடுங் களம் வென்று கொள்குவம்!’ என்று
வந்து எதிர் அணுகினார்;
மகன் விழுந்தனன், மார்பின் மூழ்கிய வாளி ஒன்றினில்;
மற்று உளார்
மிக நடுங்கி ஒடுங்கி ஓடினர், வீழும் மன்னர்கள்
வீழவே.29.-அபிமனால் சகுனியின் மகன் முதலோர் இறந்துவிழ,
மற்றையாவரும் நடுங்கி யோடுதல்.

(அதன்பின்), சகுனியும்-, திருமகன்உம்- (அவனது) சிறந்த புத்திரனும்.
மற்று உள தமர்உம் மற்றுமுள்ள உறவினர்களும். மேல் இடு தானையோடு –
மேலெழுந்துவருகிற சேனையுடனே, நெடு இகல் களம் வென்று கொள்குவம் என்று-
‘பெரிய போர்களத்தில் (பகைவனைச்) சயித்துக் கைப்பற்றுவோம்’ என்று கருதி,
எதிர்வந்து அணுகினார்- எதிரில் வந்து நெருங்கினார்கள்; (உடனே அவர்களுள்),
மகன் -சகுனிபுத்திரன், மார்பில் மூழ்கிய வாளி ஒன்றினில்- (தன்) மார்பில்
முழுவதும்புதைந்தஓரம்பால், விழுந்தனன் – இறந்து கீழ்விழுந்தான்; வீழும்
மன்னர்கள் வீழ -(போர்வெல்ல) விரும்பிவந்த அரசர்கள் இறந்துவிழ, மற்று
உளார்- மற்றும் (இறவாது)உள்ளவர்கள், மிக நடுங்கி ஒடுங்கி ஓடினர்-
(அச்சத்தால்) மிகநடுக்கமுற்று வலிமைகுன்றி ஓடிப்போனார்கள்:

     சகுனிமகன் உலூகனென்றும், அவனைச் சகதேவன் கொன்றானென்றும்
வியாசபாரதத்தால் தெரிகின்றது. மேலிடுதானை-சிறப்புப்பெற்ற சேனையெனினுமாம்.
‘மார்பில்மூழ்கிய வாளி ஓன்றினில் என்பதைப் பிந்தினவாக்கியத்துக்குங் கூட்டுக.
வீழ்தல் என்பது –  விரும்புதலாதலை “தாம் வீழ்வார்மென்றோள் துயில்” எனத்
திருக்குறளிலுங் காண்க. இனி, ‘வீழுமன்னர்கள் வீழ’ என்பதற்கு –  இறக்கும்
அரசர்கள் தவிர என்றும் பொருள் கொள்ளலாம். 

வில் முகந்து எழு வாளி வாளி விலக்க வந்த
விகன்னனும்,
துன்முகன் தலையாக மற்று உள துணைவரும்
சமர் துன்னினார்;
நல் முகம் பெறு விசயன் மைந்தனும், ‘நான் உமக்கு
எதிர் அன்று; நீர்
பின் முகம் பட ஓடி இன்று உயிர் பிழையும்’ என்று,
உரை பேசினான்.30.-விகன்னன் முதலியோர் பொரவர, அபிமன் அவர்களை
அவமதிப்புப்படச்சொல்லி விடுத்தல்.

(அதன்பின்), வில் முகந்து எழு – வில்லினாற் கொள்ளப்பட்டு
வெளிப்படுகிற, வாளி – (தன்) அம்புகள், வாளி விலக்க-(அபிமனது) அம்புகளைத்
தடுக்கும்படி, வந்த-, விகன்னன்உம்-விகர்ணனென்பவனும் துன்முகன் தலை ஆக –
துர்முகனென்பவன் முதலாக, மற்று உள துணைவர்உம் – இன்னுமுள்ள
துரியோதனன் தம்பிமார்களும்,  சமர் துன்னினார்-போரில் நெருங்கினார்கள்;
(நெருங்க), நல் முகம் பெறு – அழகிய முகத்தைப் பெற்ற விசயன்மைந்தன்உம்-
அருச்சுனனது புத்திரனான அபிமனும், (அவர்களை நோக்கி), ‘நான் உமக்கு எதிர்
அன்று-நான் உங்களுக்குச் சமமானவனல்லன் [மிகமேம்பட்டவன்] நீர்-நீங்கள், பின்
முகம் பட  ஓடி-முகம்பிற்படும்படி [முதுகுகாட்டி] விரைந்து சென்று, இன்று-
இப்பொழுது, உயிர் பிழையும்-சீவித்திடுங்கள்,’ என்று-, கூரை பேசினான்-வார்த்தை
சொன்னான்: (எ – று.)- நான் உமக்கு எதிர் அன்று, ‘அன்று’ என்னும் எதிர்மறைப்
பொதுக்குறிப்புமுற்று-இங்கே தன்மையொருமைக்கு வந்தது.

மற்றும் மற்றும் முனைந்து வந்து மலைந்த வெஞ்
சின மன்னர் மெய்ம்
முற்றும் முற்றும் இவன் கை வாளிகள் முனை
புதைந்திட மூழ்கலால்,
இற்ற இற்ற படைக்கலங்களும், எய்த்த எய்த்த
பதாதியும்,
அற்ற அற்ற விதங்கொள் வாகமும் ஆகி ஏகினர்,
அடையவே.31.-மற்றுமுள்ள பலரும் அபிமனுக்குத் தோற்றேகுதல்.

மற்றும் மற்றும் – இன்னும் இன்னும், முனைந்த வந்து –
உக்கிரங்கொண்டுவந்து, மலைந்தபோர்செய்த, வெம் சினம் மன்னர் – கொடிய
கோபத்தையுடைய அரசர்கள், மெய் முற்றுஉம் முற்றுஉம் – (தங்கள்) உடம்பு
முழுவதிலும் இடைவிடாமல், இவன் கை வாளிகள்-இவ்வபிமன் கையம்புகள்,
முனை புதைந்திட நுனியழுந்தும்படி, மூழ்கலால் – தைத்து ஊடுருவுதலால், இற்ற
இற்ற படைக்கலங்கள்உம் – மிகத்துணிபட்ட ஆயுதங்களையும், எய்த்த எய்த்த
பதாதிஉம் -மிகஇளைத்த காலாள்களையும், அற்ற அற்ற விதம் கொள் வாகம்உம்
ஆகி-மிக அறுபட்ட யானை குதிரை தேர்என்ற இவற்றில் வகைகளையு
முடையவர்களாய், அடைய ஏகினர்-எல்லோரும் ஓடிப்போனார்கள்;   (எ-று.)

     வாஹம் – தாங்குவதெனக்காரணப்பொருள்படும். பி – ம்: விதங்களாகியும்

இளையவன் தனி மதலை தெவ்வர் இளைக்க
இப்படி இகல் செய,
தளை அவிழ்ந்த அலங்கல் மீளி சமீரணன்
திருமதலை போய்,
வளைய வன் சிலை மன்னவன் கழல் மலர்
வணங்கி, வணங்கலார்
உளைய வந்து அமர் முடுகி நின்றமை கண்டு,
சோகமொடு உரைசெய்தான்:32.-அபிமன் தனியே சக்கரவியூகத்துள் இவ்வாறு கடும்போர்புரிய
வீமன் தருமனிடத்து வருத்தத்தோடு கூறத்தொடங்குதல்.

இளையவன் தனி மதலை – தம்பியான அருச்சுனனுடைய ஒப்பற்ற
புத்திரனான அபிமன், தெவ்வர் இளைக்க-பகைவர்கள் சோர்வடையும்படி, இ படி
இகல் செய-இவ்வாறு போரைச் செய்ய,-தளை அவிழ்ந்த-(அரும்புகளின்) முறுக்கு
விரிந்த. அலங்கல்-போர்மாலையைத் தரித்த, மீளி – சிறந்தவீரனாகிய, சமீரணன்
திருமதலை-வாயுவினது சிறந்த புத்திரனான வீமன், வணங்கலார் –  பகைவர்கள்
பலர்,வளைய-(தன்னைச்) சூழ்ந்து கொள்ள, (சகாய மில்லாத அபிமனொருத்தனே),
உளைய – (அவர்களெல்லோரும்) வருந்தும்படி, வந்து-(எதிர்த்துச்) சென்று, அமர்
முடுகி நின்றமை- போரை உக்கிரமாகச் செய்துநின்றதன்மையை, கண்டு-,-
சோகமொடு-(துணையில்லாத)அபிமனுக்குச் சோர்வுண்டாகுமே யென்ற)
துன்பத்துடனே, போய்-(தருமனிடம்) சென்று, வல் சிலை மன்னவன் -வலிய
வில்லினையுடைய அத்தருமராசனது. கழல் மலர்-தாமரை மலர்போன்ற
திருவடிகளை, வணங்கி – நமஸ்கரித்து, உரைசெய்தான்-(சிலவார்த்தைகள்)
சொல்பவனானான்: (எ – று.)-அவற்றை, அடுத்த கவிமுழுவதிலும்.
அதற்கடுத்தகவியின் முதலிலும் காண்க.

    ஸமீரணன் என்ற வடசொல்லுக்கு – நன்றாகச் சஞ்சரிப்பவனென்று பொருள்
‘வணங்கலார் உளைய வந்து அமர்முடுகிநின்றமை’ என்பதற்கு – பகைவர்கள்பலர்
அபிமன் வருந்தும்படி வந்து போரைக் கொடுமையாகச்செய்து நின்ற தன்மையை
யென்று உரைப்பாரு முளர்.

தோல் அநேகம், அநேகம் நேமி, துரங்கமங்கள்
அநேகம், நீள்
வேல் அநேகம், அநேகம் வாள், வரி வில் அநேக
விதம் பட,
கால் அநேகம் எழுந்தது ஒத்து அமர் ஆடுகின்ற
களத்திடை,
பாலனே கடிது ஏகி, வெம் முனை பயிலுவான்
ஒரு பாவமே!33.-வீமன் தருமனை நோக்கிக்கூறுவது.

இதுமுதல் மூன்று கவிகள் – குளகம்.

     (இ-ள்.) ‘தோல் அநேகம்-பல யானைகளும், அநேகம் நேமி – பல தேர்களும்,
துரங்கமங்கள் அநேகம் -பல குதிரைகளும், நீள் வேல் அநேகம் – நீண்ட பல
வேல்களும், அநேகம்  வாள்-பல வாள்களும், வரிவில் அநேக விதம்-கட்டமைந்த
பலவகை விற்களும், பட – பொருந்த, கால் அநேகம் எழுந்தது ஒத்து-பலதிசைக்
காற்றுக்களும் கிளர்ந்துவீசுவது போன்று, அமர் ஆடுகின்ற-போர்செய்கிற
களத்திடை-யுத்தகளத்திலே, பாலன்ஏ – இளங்குமரனான அபிமனொருவனே,
கடிதுஏகி- விரைவிற்சென்று, வெம்முனை பயிலுவான் – கொடியபோரைச் செய்து
பொருந்துவான்: ஒரு பாவம்ஏ- (இங்ஙனம் அவனைத் தனியே
பகைவர்சேனாசமூகத்தினிடையில் போருக்கு விட்டுப் பார்த்திருப்பது) ஒப்பற்ற
பெரும்பாவமேயாம்: (எ-று.)

     களிற்றுத்தானை தேர்த்தானை பரித்தானை வேற்றானை வாட்டானை
விற்றானை என்ற அறுவகைச்சேனைகளும், இப்பாட்டின் முதலிரண்டடிகளிற்
குறிக்கப்பட்டன. கால் அநேகம் – எட்டுத் திக்குகளினின்றும் விசும்
பலவகைக்காற்றுகள்; இனி,  சப்தமருத்துக்களுமாம். அவற்றின் பெயர் – ஆகவம்,
பிரவகம், சம்வகம், உத்வகம், விவகம், பரிவகம், பராவகம் என்பன:
இவ்வெல்லாக்காற்றுக்களும் உகாந்தகாலத்தில் ஒருங்கு எழுந்து உலகையழிக்கும்
நேமி- சக்கரம்; இது – சினையாகுபெயராய், தேரைக்குறித்தது, பட என்பதற்கு-
அழியஎன்றும் உரைக்கலாம். பாலனே, ஏ – பிரிநிலை, பாவமே, ஏ – தேற்றம்.  

எனக்கு நீ விடை நல்குக!’ என்று அவன் இரு
பதம் தொழுது, யாரினும்
தனக்கு நேர் தனை அல்லது இல் என வெல்ல
வல்லது ஓர் தண்டினான்,
மனக்கு நேர் வரு தேரினன், பல மண்டலீகரும்
மன்னரும்,
சினக் குழாம் உறு சேனையும், புடை சூழ, அன்று
எதிர் செல்லவே,34.-தருமனிடம் விடைபெற்றுக்கொண்டு வீமன் அபிமனுக்குத்
துணையாகும் பொருட்டுச் செல்லுதல்.

எனக்கு-, நீ-, விடை  நல்குக- (அபிமனுக்குத் துணைசென்று
போர்செய்ய) அனுமதிகொடுப்பாயாக,’ என்று- என்றுசொல்லி(த்தருமனைப்
பிரார்த்தித்து), அவன் இரு பதம் தொழுது – அவனது உபயதிருவடியை வணங்கி,
தனக்கு நேர்- தனக்குச் சமானம், தனை அல்லது – தன்னையேயன்றி, யாரின்உம்
இல்- (வேறு மனிதர் தேவர் முதலிய) யாவருள்ளும் இல்லை, என-என்று
சொல்லும்படி, வெல்ல வல்லது ஓர் தண்டினான் பகைவரைச்
சயிக்கவல்லமையையுடையதொரு (சத்துருகாதிநியென்னுங்) கதாயுதத்தையுடைய வீமன்,
மனக்கு நேர்வரு தேரினன்- (தன்) மனத்துக்கு ஒத்த தேரின்மேலேறினவனாய்,
பலமண்டலீகர்உம் –  அநேக சிற்றரசர்களும், மன்னர்உம்-அரசர்களும், சினம்
குழாம் உறு சேனைஉம் – கோபத்தையுடைய கூட்டமாகப்பொருந்திய சேனைகளும்,
புடைசூழ – பக்கங்களிற் சூழ்ந்துவரும்படி, அன்று – அப்பொழுது, எதிர்சொல்ல –
எதிர்த்துச்செல்ல,-(எ – று.)-‘சக்கரமண்டலம் ஈயை ஒத்தது’என அடுத்த
கவியோடுமுடியும். தொழுதியாரினும் – குற்றயலிகரம்.

சாயை ஒத்து எழு சேனையோடு எதிர் தடவி,
மன் குல அடவியில்
தீயை ஒத்து விளங்கும் மாருதி சென்று மண்டிய
திசையெலாம்,
மாயை ஒத்து ஒரு வடிவம் இன்றி, வகுத்த
சக்கர மண்டலம்
ஈயை ஒத்தது; கலுழன் ஒத்தனன், ஈறு இலா
அரி ஏறு அனான்.35.-வீமன்செல்லச் சக்கரவியூகச்சேனை பொலிவிழந்து சிதறுதல்

மன் குலம் அடவியில் – பகையரசர்களது கூட்டமாகிய காட்டிலே,
தீயைஒத்து-(அதனை யெரித்து அழிக்கும்) நெருப்பைப் போன்று, விளங்கும் –
பிரகாசிக்கிற, மாருதி-வாயுபுத்திரனான வீமன்,-சாயை ஒத்து எழு சேனையோடு-
நிழலையொத்து (விடாதுகூடப்புறப்பட்டு) வருகிறசேனையுடனே, எதிர் தடவி –
எதிரிலே (வீரர்களைத்)தேடிக்கொண்டு, சென்று மண்டிய-போய் நெருங்கின, திசை
எலாம் – பக்கங்களிலெல்லாம். வகுத்த சக்கர மண்டலம்- (துரோணனாற்)
பகுத்தமைக்கப்பட்டுள்ள சக்கரவியூகம், மாயை ஒத்து ஒரு வடிவுஉம்
இன்றி-மாயையைப் போன்று ஒரு வடிவமுங் காணப்படாதபடி, ஈயை ஒத்தது –
ஈக்கூட்டம்போலச் சிதறிற்று: (சிதற), ஈறு இலா அரி ஏறு அனான் – அழிவில்லாத
ஆண்சிங்கத்தைப்போன்ற வீமன், கலுழன் ஒத்தனன் – கருடன்போன்று எதிரற்று
விளங்கினான்; (எ – று.)

    சிதறிய எதிரிகள் கூட்டத்துக்குப் பறவைகளுள் எளியதாகிய ஈயை
உவமைகூறியதற்குஏற்ப, அவற்றைச் சிதறடித்த வீமனுக்குப் பறவைகளுள்
வலியதாகிய கருடனைஉவமைக்கூறினார், ‘ஈறிலா அரியேறு’ என்றது, திருமாலின்
திருவவதாரமானநரசிங்கமூர்த்தியையுமாகும், மாயை – உள்ளதை இல்லாததாகவும்,
இல்லாததைஉள்ளதாகவும், ஒன்றை மற்றொன்றாகவும் அற்புதங்காட்டும் மந்திரசக்தி.
மண்டலம் -வட்டமாகத்திரண்ட படை.  

கலிங்கர், சோனகர், மகதர், கன்னடர், கங்கர்,
கொங்கணர், கௌசலர்,
தெலுங்கர், ஆரியர், துளுவர், பப்பரர், சீனர்,
சாவகர், சிங்களர்,
குலிங்கர், மாளவர், களமர், ஒட்டியர், குகுரர்,
கொப்பளர், கூபகர்,
புலிங்க சாலம் எனச் சதாகதி புதல்வனோடு
உறு போர் செய்தார்.36. – கலிங்கர் முதலிய வீரர் வீமனோடு பொருதல்.

(அதுகண்டு), கலிங்கர் சோனகர் மகதர் கன்னடர் கங்கர் கொங்கணர்
கௌசலர் தெலுங்கர் ஆரியர் துளுவர் பப்பரர் சீனர் சாவகர் சிங்களர் குலிங்கர்
மாளவர் களமர் ஓட்டியர் குகுரர் கொப்பளர் கூபகர்- இந்நாட்டுவீரர்கள், புலிங்க
சாலம்என – தீப்பொறிகளின் கூட்டம்போல, சதாகதி புதல்வனோடு -வாயுபுத்திரனான
வீமனுடன், உறு போர் செய்தார் – மிக்கபோரைச்செய்தார்கள்; (எ – று.)

போசம்என்பதுதவிரப் போசலமென்று ஒருதேசம் கூறப்படுதல்போல, கொப்ப
மென்பது தவிரக் கொப்பளமென்பது ஒருநாடு போலும். இப்பாட்டில் முதல்மூன்று
அடிகள் – அடைமொழியின்றிவந்தது ஒர் அழகாம்.

பொருத பற் பல பாடை மன்னவர் பொன்னிலம்
குடி புகுதவே,
விருத வித்தகனுடன் வரும் பல பாடை
மன்னவர் வெட்டினார்;
ஒரு திறத்த வலீமுகங்கள் உறுக்கி ஓடி
உடன்ற நாள்,
நிருதர் பட்டது பட்டு இறந்தனர், நேமியுள்
படும் நிருபரே.37.-வீமனுடன்வந்த பலமன்னர் சக்கரவியூகத்திலிருந்த
வீரர்களை வெட்டுதல்.

பொருத – (எதிர்த்துப்) போர்செய்த, பல்பலபாடை மன்னவர் –
(துரியோதனன்சேனையிலுள்ள) பலபல பாஷைகளைப் பேசும் அரசர்கள், பொன்
நிலம் குடிபுகுத- பொன்னுலகமான தேவலோகத்திலுள்ள வீரசுவர்க்கத்திற்
குடியேறும்படி, – விருதன் வித்தகனுடன் வரும் பல பாடை மன்னவர் – வீரனும்
அறிவுடையவனுமான வீமனுடன்வந்த அநேகபாஷைபேசும் (பலதேசத்து) அரசர்கள்,
வெட்டினார் – துணித்தார்கள்; (துணிக்கவே), நேமியுள்படும் நிருபர் –
சக்கரவியூகத்திற் பொருந்திய (துரியோதனனைச் சார்ந்த) அரசர்கள்,- ஒரு திறந்த
வலிமுகங்கள் உறுக்கி ஓடி உடன்ற நாள் – ஓரேவிதத் தன்மையுடையனவான
(இராமனுடன் சென்ற) குரங்குகள் சினங்கொண்டு ஓடிப்போர் செய்த காலத்தில்,
நிருதர் பட்டது-அரக்கர்கள் அடைந்த துன்பத்தை, பட்டு-(தாம்) அடைந்து,
இறந்தனர்-; (எ –  று.)

     வலீமுகம் – வடசொல்: தோற்சுருக்கங்கொண்ட முகமுள்ளதென்று
காரணப்பெயர். பி- ம்: ஒருதலத்து. ஒருதிறத்து, வலீமுகங்கொடு, சிலீமுகங்கள்.

மண்டு கொண்டலின் மிக அதிர்ந்து மருத்தின்
மைந்தன் உருத்து எழும்
தண்டு கொண்டு வியூகமாகிய சக்கரத்தை
உடைத்தலால்,
விண்டு கொண்டு முருக்கும் மாருதி மீள
வந்தனனாம் என,
கண்டு கொண்டனன், வெஞ் சினக் கனல் நின்று
காய்தரு கண்ணினான்.38.-வீமன் தண்டுகொண்டு சக்கரவியூகத்தைப் பிளத்தலைத்
துரியோதனன் காணுதல்.

மருத்தின் மைந்தன் – வாயுபுத்திரனான வீமன்,- மண்டு கொண்டலின்-
நெருங்கிய காளமேகம்போல, மிக அதிர்ந்து, மிகுதியாக ஆரவாரித்து, உருத்து-
கோபித்து, எழும் தண்டு கொண்டு – உயர்ந்த (தனது) கதாயுதத்தால், வியூகம் ஆகிய
சக்கரத்தை உடைத்தலால் – சக்கரவியூகத்தை உடைத்ததனால், வெம்சினம் கனல்
நின்று காய்தரு கண்ணினான் – பொடிய கோபாக்கினி நிலைபெற்றுமூண்டெரிகிற
கண்களையுடையவனான துரியோதனன்.- ‘விண்டு கொண்டு முருக்கும் –
மலைகளைப்பறித்தெடுத்து (அவற்றால் பகையை) அழிக்கிற, மாருதி –
வாயுகுமாரனான அநுமான், மீள வந்தனன் ஆம் – திரும்பவும் (போருக்கு)
வந்தான்போலும் என –  என்று, கண்டுகொண்டனன் – அறிந்துகொண்டான்:(எ -று.)

கதைகொண்டு கொடுமையாகப்போர்செய்து பகையையழிக்கிற வலிமைமிக்க
தம்பியான வீமனைக்கண்டு, மலைகொண்டு கொடுமையாகப் போர்செய்து
பகையையழித்த வலிமைமிக்க தமையனான அநுமன் வந்திட்டானோ என்று
துரியோதனன் கருதினான். முன்திரேதாயுகத்தில் இராமபிரானது தூண்டுதலால்
அரக்கரை யழித்தற்கு வந்தமைபோல, துவாபரமாகிய இப்பொழுது கண்ணபிரானது
தூண்டுதலால் அரசரையழித்தற்கு வந்தனனென்று கருதினானென்பது, ‘மீள’
என்றதனால் விளங்கும். விண்டு – விஷ்ணு என்னும் வடசொல்லின்சிதைவாய்,
வியாபித்ததெனப்பொருள்படும்; எனவே மலைக்காயிற்று.
‘வெஞ்சினக்கனல்நின்றுகாய்தருகண்ணினான்’ என்பது துரியோதனனாதலை, மேல்
41-ஆங் கவியில் ‘புயங்ககேது’ என வருவதனால் அறிக. வியூகமாகிய சக்கரம் –
சக்கரவியூகம்,

‘நப முகில் முழங்கி ஏறி இடிவிட நடுநடுநடுங்கி
மாயும் அரவு என,
உபரி எழுகின்ற சீயம் வர வர உடையும் இப
சங்கம் ஓடுவன என,
அபிமன் ஒருவன் கை ஏவின் நம படை அடைய
நெளிகின்றது ஆய பொழுதினில்,
விபினமிசை மண்டு தீயொடு அனிலமும் விரவும்
இயல்பு, அந்த வீமன் அணுகிலே.39. – வீமன் வருவதுகுறித்துத் தன்சேனையரசரைநோக்கித்
துரியோதனன் கூறுதல்.

இது முதல் நான்குகவிகள் – குளகம்.

     (இ-ள்.) – நபம் – ஆகாயத்திற்சஞ்சரிக்கிற, முகில் – மேகம், முழங்கி –
ஆராவரித்து, ஏறி -மேல்நின்று, இடிவிட – இடியிடித்தலால், நடுநடுநடுங்கி –
அளவில்லாத அச்சங்கொண்டு, மாயும்-இறக்கிற, அரவு என – பாம்புகள்போலவும்,-
உபரி எழுகின்ற-மேலே பாயுந்தன்மையுள்ள, சீயம்-சிங்கம், வரவர –
அடுத்தவருதலால், உடையும் – வலிமை குலைகிற, இப சங்கம் –
யானைக்கூட்டங்கள், ஓடுவன என-ஓடுபவைபோலவும்,-அபிமன் ஒருவன் கை
ஏவின் –  அபிமந்யு ஒருத்தனது கையம்புகளால், நம படை அடைய – நம்முடைய
சேனை முழுவதும், நெளிகின்றது ஆய-மிகவருந்துகிறதான, பொழுதில் –
இச்சமயத்தில்,-அந்த வீமன் அணுகில் – அந்த வீமசேனனும் (அவனுக்குத்
துணையாகநெருங்கிச்) சேர்ந்தால், (அது), விபினம்மிசை மண்டு தீயோடு – காட்டிற்
பற்றியெரிகிற நெருப்புடளே, அணிலம்உம் விரவும் – காற்றுங் கலக்கிற, இயல்பு –
தன்மையாம்; (எ – று.)

     நபம் – வடசொல். நபமுகில் என்பதற்கு கார்காலத்துமேகமென்று
பொருள்கொள்ளுதலும் பொருத்தம்; ஆவணிமாசத்தைக் குறிக்கின்ற ‘நபா;’
என்னும் வடசொல், நபம் எனச்சிதைந்து, இலக்கணையாய், கார்காலத்தை
உணர்த்தும்; ஆவணிபுரட்டாசி மாதங்கள் வர்ஷாகால மாதலால்,
உபரி,இபஸங்கம், விபிநம் – வடசொற்கள். ஒருசிங்கத்தைக்கண்டு யானைகள்
பலவும் வலிஅழிதல், பிரசித்தம். ஏவின் – ஐந்தாம்வேற்றுமை விரி: ஏ –
முதல்வேற்றுமை.

     இதுமுதல், பன்னிரண்டு  கவிகள் – கீழ்ச்சருக்கத்தின் 45ஆங் கவிபோன்ற
எண்சீர்க்கழிநெடிலடியாசிரியச்சந்தவிருத்தங்கள்.  ‘தன தனன தந்த தான
தனதனதனதனன தந்த தான தனதன’ என்பது, இவற்றிற்குச் சந்தக்குழிப்பாதலால்,
இச்சந்தம்சிறிது வேறுபட்டது.    

‘சகுனியுடன் விந்துபூரி முதலிய தரணிபர் அடங்க
ஏகி, மகபதி
மகன் மகனொடு இங்கு உறாதபடி எதிர் வளைமின்,
வரு கந்தவாகன் மதலையை;
விகனனும், மடங்கல் போலும் இளைஞரும், விருதர்
பலரும், துரோணன் மதலையும்,
இகல் மலையில் இந்த நாழிகையில் இவர் இருவரையும்
வென்று கோறல் எளிதுஅரோ!’40.-துரியோதனன் தன்சேனையோரை நோக்கி வீமஅபிமன்னுக்களைப்
பிரித்துப் பொருதாலே எளிதில்வெல்லலாமென்று உபாயம் கூறுதல்

விந்துபூரி முதலிய – விந்துபூரி யென்பவன் முதலான, தரணிபர்
அடங்க-அரசர்களெல்லோரும், சகுனியுடன் – சகுனியுடனே, ஏகி-சென்று, வரு
கந்தவாகன் மதலையை-எதிர்த்து வருகிற வாயுகுமாரனான வீமனை, மகபதி மகன்
மகனொடு இங்கு உறாதபடி – இந்திரகுமாரனான அருச்சுனனது புத்திரனாகிய
அபிமனுடன் இவ்விடத்துச் சேராதபடி, எதிர்வளைமின் -எதிரில்
வளைத்துக்கொள்ளுங்கள்: (அங்ஙனம்வளைய), விகனன்உம் – விகர்ணனும்,
மடங்கல்போலும் இளைஞர்உம்-சிங்கம்போன்ற, (மற்றைத்) தம்பிமார் பலரும்,
விருதர்பலர்உம்-(மற்றும்) அரசர்கள் அநேகரும், துரோணன் மதலைஉம்-
அசுவத்தாமாவும்இகல் மலையில்-(அபிமனுடன்) போர்செய்தால், இந்த
நாழிகையில் – இவ்வொருநாழிகைப்பொழுதிலே, இவர் இருவரைஉம் – (வீமன்
அபிமன் என்னும்) இவர்இரண்டுபேரையும், வென்று கோறல் – சயித்தலும்
கொல்லுதலும், எளிது -எளியதாம்; (எ – று.) அரோ ஈற்றசை; தேற்றமுமாம்;
‘இடைச் சொற்கள்இடத்துக்கேற்றபடி பல பொருள்தர உரியன’,

     விந்து, பூரி என இரண்டுபேராக எடுத்தால், பூரி என்பது-பூரிசிரவா என்னும்
அரசனைக் குறிக்கும்; இங்ஙனம் ஒருபெயரின் ஒரு பகுதி அப்பெயர்முழுவதையும்
உணர்த்துதலை வடநூலார் ‘நாமைகதேஸே நாமக்ரஹணம்’  என்பர், பூரிஸ்ரவஸ்
என்பவன், அதிரதத்தலைவரில் ஒருவன்; பூரி எனவும் ஓர் அரசன் உண்டு.
மகபதிமகன் மகன் – இந்திரனது பேரன்.  தரணிபர் அடங்க எதிர் வளைமின் –
இடவழுவமைதி. 

என உயர் புயங்ககேது உரைசெய, இவனை விடை
கொண்டு வீரர் அனைவரும்,
முனை பட அணிந்து, கால முகில் என முரசினம்
முழங்க, ஓடி, எதிர் எதிர்
கனல் என வெகுண்டு, சேனை பல பல கச ரத
துரங்க ராசியுடன் வர,
அனில குல மைந்தனான பதியொடும், அபிமனொடும்,
வந்து போரில் முடுகவே,41.-துரியோதனன்மொழி கேட்டவீரர். இருவரோடும் பொரமுடுகுதல்.

என – என்று, உயர் புயங்க கேது – உயர்ந்த
பாம்புக்கொடியையுடைய துரியோதனன், உரை செய – கட்டளைகூற, வீரர்
அனைவர்உம் – போர்வீர ரெல்லோரும், இவனை விடை கொண்டு –
இத்துரியோதனனிடம் அனுமதிபெற்று, காலம் முகில் என – கார்காலத்து
மேகம்போல, முரசுஇனம் முழங்க – வாத்திய  வகைகள் ஆரவாரிக்க, ஓடி-
விரைந்துசென்று, முனைபட அணிந்து- போர்களத்திலே பொருந்த ஒழுங்குபட
நின்று, கனல் என  வெகுண்டு – அக்கினிபோலக் கோபாவேசங்கொண்டு, சேனை
பல பல- மிகப்பலவாகிய சேனைகள், கச ரத  துரங்க ராசியுடன் வர-யானை தேர்
குதிரைகளின் கூட்டத்துடனே வர, அனில குலம் மைந்தன் ஆன பதியொடும்உம் –
வாயுவின் சிறந்த புத்திரனும் (வீரர்க்குத்) தலைவனுமான வீமனுடனும்,
அபிமனொடுஉம் – அபிமந்யுவுடனும், எதிர் எதிர் வந்து – எதிரிலே எதிரிலே
வந்து,போரில்முடுக- யுத்தத்தில் நெருங்க,-(எ – று.)-‘வாயுமதலை வாளி
உதையினன்’ எனஅடுத்த கவியோடு குளகமாய் முடியும்.

     உயர்தல் – சிறத்தலும், மேலிருத்தலும். காலமுகில்-யுகாந்த காலத்து
மேகமுமாம்; காளமேக மென்றலுமாம், முரசு-இங்கே, வாத்தியப்பொது.
‘குலமைந்தன்’என்றதில், குலம் என்பது-சிறப்பு பொருளது.   

விழி மலர் சிவந்து, கோல மதி நுதல் வெயர் வர,
இரண்டு தோளும் முறை முறை
அழகு உற விளங்க, மூரல் நிலவு எழ, அணி மகர
குண்டலாதி வெயில் எழ,
முழவினொடு சிங்க நாதம் எழ, எழ, முடுகி எதிர்
சென்று மோதி, அவர் அவர்
எழில் வடிவம் எங்கும் வாளி உதையினன், இரதமிசை
நின்ற வாயு மதலையே.42.- இதுவும், மேற்கவியும்-தன்னுடன் எதிர்த்தாரை வீமன்
அழித்தல் கூறும்.

இரதம்மிசை நின்ற வாயு மதலை-தேரின்மேல்நின்ற வீமன்,-விழி மலர்
சிவந்து-தாமரைமலர்போலுங் கண்கள் (கோபத்தாற்) செந்நிறம் பெற்று, கோலம் மதி
நுதல் – அழகிய சந்திரன் போன்ற நெற்றியில், வெயர் வர-(கோபாவேசத்தால்)
வேர்வை யுண்டாகவும், இரண்டு தோளும்-, முறைமுறை-மாறிமாறி(ப்புடைபருத்து)
(பூரித்து), அழகு உற விளங்க – அழகுமிக விளங்கவும், மூரல் – புன்சிரிப்பின்,
நிலவுஎழ – வெள்ளொளி வீசவும் அணி மகர குண்டல(ம்)ஆதி-அழகிய
மகரகுண்டலம்முதலிய ஆபரணங்களின், வெயில் -சூரியகாந்திபோன்ற சிவந்த ஒளி,
எழ-வெளித்தோன்றவும், முழுவினொடு-வாத்தியகோஷத்துடனே, சிங்க நாதம் –
சிங்ககர்ச்சனை போன்ற (தன்) கனைப்பொலியும், எழ எழ- மிகுதியாகத்
தோன்றவும்,முடுகி எதிர் சென்று-வேகமாக எதிரிற் போய், மோதி-தாக்கி, அவர்
அவர் எழில்வடிவம் எங்கும்உம்-அந்தந்தப் பகைவீரரது அழகிய உடம்பு
முழுவதிலும், வாளிஉதையினன்-அம்புகளைச் செலுத்தினான்; (எ – று.)

     இங்கே, ‘மதி’ என்றது. அஷ்டமீ திதியிலுள்ள பாதிச்சந்திரனை; அதுவே
நெற்றிக்குவடிவத்திலும் ஒளியிலும் உவமையாம். பி – ம்: நிலவுடன்.  

மணி முடி சிரங்களோடு தறிபட, வலயமொடு அணிந்த
தோள்கள் தறிபட,
அணி கழலொடு உந்து தாள்கள் தறிபட, அயிலொடு
கரங்கள் ஆன தறிபட,
நணிய இரதங்கள் சாய, இவுளிகள் நடுவு அற,
வளைந்த சாபம் முதலிய
துணி பட, அழிந்து, மீள நடவினர்-துவச புயகன்
பதாதி நிருபரே.

 (வீமனம்புகளால்), சிரங்கள் – தலைகள், மணி முடியோடு-
இரத்தினகிரீடத்தோடு, தறிபட – துணிபடவும், அணிந்த தோள்கள்-அழகிய
புயங்கள்,வலயமொடு-வளைகளுடனே, தறிபட- துணிபடவும், உந்து தாள்கள்-
உயர்ந்தகால்கள், அணி கழலொடு –  அழகிய வீரக்கழலுடனே, தறிபட –
துணிபடவும்,கரங்கள் ஆன- கைகளானவை, அயிலொடு-(ஏந்திய) வேலுடனே,
தறிபட-துணிபடவும், நணிய – அருகில் வந்த, இரதங்கள்-தேர்கள், சாய-அழியவும்,
இவுளிகள்-குதிரைகள், நடுஅற – (உடம்பின்) நடுவிலே  அறுபடவும், வளைந்த
சாபம் முதலிய-வளைந்த வில் முதலிய ஆயுதங்கள், துணிபட-துண்டுபடவும்,
அழிந்து-, துவசபுயகன் பதாதி நிருபர் – கொடியிற் பாம்பையுடைய
துரியோதனனுடையசேனையரசர், மீள நடவினர் – பிற்படச் சென்றார்கள்;(எ – று.)

     உந்து தாள் – (அவரவரைச்) செலுத்துங்கால் எனினுமாம். ஆன, முதலிய-
பெயர்கள், கரங்களான என்பதில், ‘ஆன’ என்பது- முதல்வேற்றுமைச் சொல்லுருபு.
பதாதி-இங்கே, சேனைப்பொது.

விசயன் மகனும், தன்மீது வரும் வரும் விருதர்
உடலங்கள் யாவும் நிரை நிரை,
தசை, குருதி, என்பு, மூளை, இவை இவை
தரணிமிசை சிந்தி வேறுபட விழ,
அசைய இரதம் கடாவி, வளைதரும் அணி
சிலையும் அம்பும் ஆகி, முனை முனை
திசைதொறும் நடந்து சீற, ரவி எதிர் திமிர
படலங்கள் ஆன, அடையவே.44.- தன்னுடன் எதிர்த்தாரை அபிமன் அழித்தல்.

விசயன் மகன்உம் – அபிமந்யுவும்,-தன்மீது வரும் வரும்-தன்மேல்
மிகுதியாக வருகிற, விருதர்-வீரர்களது, உடலங்கள் யாஉம்-உடம்புகளெல்லாம்,
நிரைநிரை-வரிசை வரிசையாய், தசை குருதி என்பு மூளை இவை இவை தரணிமிசை
சிந்தி-சதை இரத்தம் எலும்பு மூளை என்னும் இவற்றையெல்லாம் தரையிற் சொரிந்து,
வேறு பட-(உயிர்) வேறாகி நீங்க, விழ-இறந்துகீழ் விழும்படி, அசைய இரதம் கடாவி-
அசைந்துசெல்லும்படி தேரைச்செலுத்தி,-வளைதரும் அணி சிலைஉம் அம்புஉம்
ஆகி – வளைந்த அழகிய வில்லும் அம்பும் (கைகளில்) உடையனாய்,-முனைமுனை
திசைதொறுஉம் நடந்து – போர்க்களத்தில் (அவரவர்) எதிர்க்கிற இடந்தோறும்
சென்று, சீற-கோபித்துப் போர்செய்ய,-அடைய (அவ்வெதிரிகள்கூட்டம்) எல்லாம்,
ரவி எதிர் திமிர(ம்) படலங்கள் ஆன-சூரியன்முன் இருட்கூட்டம்போல ஆயின;
(எ- று.)

     மாற்றர்கூட்டங்கள் இருந்துவிடமுந் தெரியாதபடி மிகவிரைவில் மிகஎளிதில்
அழிந்தன என்க. எழுவகைத்தாதுக்களுள் இங்குக் கூறப்படாத தோல், மச்சை,
சுவேதநீர் என்பன ‘இவையிவை’ என்பதனாற்  குறிக்கப்பட்டன.  ஆன-முற்று;
உவமவுருபு.      

இருவர் எதிரும் பொறாமல் முடுகிய இரு படையும்
நொந்து மீள, அவனிபன்
வெருவொடு தளர்ந்து போன நிருபரை மிக வசை
மொழிந்து, போத நகைசெய்து,
கருகி முகம், நெஞ்சு கோப அனல்கொடு கதுவி,
நயனங்கள் சேய நிறம் உற,
அருகு வரு சிந்துராச திலகனொடு அபரிமிதம்
இன் சொலாக உரைசெய்தான்:45.-இருவரெதிரிலும் தன்படைபின்னிட, கண்ட துரியேதனன் சினந்து
சைந்தவனிடம் சொல்லலுறுதல்.

முடுகிய – வேகமாக எதிர்த்துச்சென்ற, இருபடை உம்-தன்
சேனையின் பகுப்பு இரண்டும், இருவர் எதிர்உம்-(வீமன் அபிமன் என்னும்)
இரண்டுபேரின் எதிரிலும், பொறாமல்-(அவரவரம்பின் கொடுமையைப்)
பொறுக்கமாட்டாமல், நொந்து – வருந்தி, மீள-பின்னிட,-(அதுகண்டு). அவனிபன் –
துரியோதனராசன்,-வெருவொடு தளர்ந்து போன நிருபரை-அச்சத்தோடு சோர்ந்து
ஓடிய அரசர்களை, மிக வசை மொழிந்து-மிகவும் நிந்தையாகப் பேசி, போத நகை
செய்து -மிகவும் (இகழ்ச்சியாகச்) சிரித்து,-நெஞ்சு கோபம் அனல்கொடு கதுவி-மனம்
கோபாக்கினியாற் பற்றப்பட்டு, முகம் கருகி-(அதனால்) முகங் கறுத்து, நயனங்கள்
சேய நிறம் உற-கண்கள் சிவந்தநிற மடைய,-அருகு வரு சிந்துராசதிலகனொடு-(தன்)
பக்கத்தில் வருகிற சிந்துதேசத்து அரசனும்  திலகம் போலச் சிறந்தவனுமான
சயத்திரதனுடன், இன் சொல் ஆக- இனிய உபசாரமொழியாக, அபரிமிதம்-
அளவில்லாத பல வார்த்தைகளை, உரைசெய்தான் – சொல்லினான்; (எ – று.)-
துரியோதனன் இன்சொலாக வுரைசெய்ததை மேல் மூன்று கவிகளிற் காண்க.

     நயனம், ஸிந்துராஜதிலகன், அபரிமிதம் – வடசொற்கள், சேய-
குறிப்புப்பெயரெச்சம். பி-ம்: உரைசெய்தே.   

மறன் உடையை; செம் பொன் மேரு கிரி நிகர் வலி
உடையை; வென்றி கூரும் அரசியல்
அறன் உடையை; பஞ்ச பாணன் என வடிவு அழகு
உடையை; நின்ற சேனை அரசரில்
நிறன் உடையை; திங்கள் சூடி வியன் நதி நிறை
புனல் பரந்து உலாவு மவுலியர்
திறனுடைய மன்றல் நாறும் மலர் அடி தெளிவொடு
பணிந்த ஞான முடிவினை;46.-மூன்றுகவிகள்-சைத்தவனைநோக்கித் துரியோதனன்புகழ்ந்து
அபிமனை உயிர்கவர்வதற்குச் செய்யவேண்டுவது இன்னதெனத்
தெரிவித்தலைக் கூறும்.

ஏழுகவிகள் -ஒருதொடர்.

     (இ – ள்.) ‘(நீ), மறன் உடையை – பராக்கிரமமுடையாய்; செம்பொன் மேரு
கிரி நிகர் – சிவந்த பொன்மயமான மகாமேரு மலையையொத்த, வலிஉடையை-
வலிமையை உடையாய்: வென்றி கூரும்-வெற்றி மிக்க, அரசு இயல்
அரசாட்சியையும், அறன் – தருமத்தையும், உடைய-;பஞ்சபாணன் என – ஐந்து
அம்புகளையுடைய மன்மதன்போல, வடிவு அழகு உடையை -உடம்பின்
அழகையுடையாய்; நின்ற சேனை அரசரில்-(இங்கு) நின்ற சேனையிலுள்ள
அரசர்களுள், நிறன் உடையை–மேன்மையையுடையாய்: திங்கள் சூடி-சந்திரனைத்
தரித்து, வியன் நதி நிறை புனல் பரந்து உலாவும்-ஆகாச(கங்கா) நதியினது
நிறைந்தநீர் பரவித் தளும்பப்பெற்ற, மவுலியர் – திருமுடியையுடைய பரமசிவனது,
திறன்உடைய-மகிமையையுடைய, மன்றல் நாறும் மலர் அடி – பரிமளம் வீசுகிற
தாமரைமலர்போன்ற திருவடிகளை, ஞானம் தெளிவோடு பணிந்த-
தத்துவஞானத்துக்கு உரிய தெளிவோடு வணங்கிய, முடியினை-சிரத்தையுடையாய்;
(எ – று.)

     அரசியல்- சேனை, குடிகள் செல்வம், மந்திரி, நண்பர், அரண் என்னும்
ஆறுஇராசாங்கமுமாம். இனி, அரசியலறன்-அரசியல் ஆறில் அறநிலையறம்
அறநிலைப்பொருள், அறநிலையின்பம் என்னும் மூன்றுமாம்: மற்றவை –
மறநிலையறம், மறநிலைப்பொருள்,மறநிலையின்பம் என்பன. அவையாவன:-நான்கு
சாதியாரும் தம்தம் வருணவொழுக்கத்திற் பிறழாது நிலைபெறப் பாதுகாத்தல்-
அறநிலையறம்; நல்நெறியில் நின்று தம்தம் நிலையினால் முயற்சி  செய்து பெறும்
பொருள்-அறநிலைப்பொருள்; குலமும் ஒழுக்கமும் குணமும் பருவமும் ஒத்த
கன்னிகையை அக்கினிசாட்சியாக விவாகஞ்செய்து அவளோடு கூடிவாழ்தல் –
அறநிலையின்பம்; நிரைமீட்டுப் பகைவென்று செஞ்சோற்றுக் கடன்கழியாதாரைத்
தண்டித்துக் குறைவறச் செய்தல் – மறநிலையறம்; பகைவர் பொருளும்
திறைப்பொருளும் குற்றஞ்செய்தோரைத் தண்டித்தலால் வரும் பொருளும் சூதில்
வெல்பொருளும் – மறநிலைப்பொருள்; ஏறு தழுவியும், வில்லில்தொடுத்த
அம்பினாற்குறியெய்தும், பொருள்கொடுத்தும், வலிந்தும் மகளிரைக்கொண்டு
மணஞ்செய்தல் -மறநிலையின்பம். திருவடிக்குத் திறன்-தன்னைச்சரண
மடைந்தார்க்கு வேண்டியவேண்டியாங்கு எய்துவிக்கும் வல்லமை. தெளிவு –
ஐயந்திரி பில்லாமை.      

வய விசயன் நின்ற தேர் கடவி வரும் வலவன்
மருகன்தனோடு வரை புரை
புயம் உடைய தண்ட வீமன் உறில், இரு பொருநரையும்
இன்று பூசல் பொர அரிது;
அயல் இவர் அகன்று போகில், அமர் பொர அறவும்
எளிது; உண்டு உபாயம்; நுதல் எரி
நயனன் அருள் கொன்றை மாலைதனை இவர் நடு
இடில் இரண்டு பாலும் அகல்வரே

‘வயம்-வெற்றியையுடைய, விசயன்-அருச்சுனன், நின்ற-பொருந்திய,
தேர் – தேரை, கடவிவரும் – செலுத்திவருகிற, வலவன் – சாரதியான
கண்ணனுக்கு,மருகன்தனொடு-மருமகனான அபிமனுடனே, வரை புரை புயம்
உடைய-மலையையொத்த தோளையுடைய, தண்டம்-கதையில்வல்ல, வீமன்-,
உறில்-கூடிவிட்டால், இரு பொருநரைஉம்-(இந்த) இரண்டு போர்வீரரையும் இன்று
பூசல்பொர அரிது – இப்பொழுது (எதிர்த்துப்) போர்செய்ய முடியாது; இவர் –
இவ்விரண்டுபேரும், அயல் -வெவ்வேறு இடத்தில், அகன்று போகில் -(தனித்தனி)
விலகிச்சென்றால், அமர் பொரஅறஉம் எளிது – (இவர்களோடு) போர்செய்ய மிகவும்
எளியதாம்; உபாயம் உண்டு – (அவ்வாறு இவர்களைக் கூடாமற் செய்
தற்கு) ஓர்
உபாயம் உள்ளது; (அது யாதெனில்), -நுதல் எரி நயனன்-நெற்றியில்
நெருப்புக்கண்ணையுடைய சிவபிரான், அருள் – (உனக்குக்) கொடுத்தருளிய,
கொன்றை மாலைதனை-கொன்றைப்பூ மாலையை, இவர் நடு இடில் – (வீமன்
அபிமன்யுஎன்ற) இந்த இரண்டுபேர்களுக்கு மத்தியிற் போகட்டால், இரண்டு
பால்உம்அகல்வர்-(அதனைத்ததாண்டி ஒருவரோடொருவர் சேராமல் இவர்)
இரண்டுபக்கங்களிலும் பிரிந்துசெல்வாரகள்;’ எ – று.) ஏ- தேற்றம்.

     நுதலெரிநயனனருள் கொன்றைமாலையென்பதிலடங்கிய கதை;-
பாண்டவர் வனவாசஞ்செய்கையில் ஒருநாள் வேட்டைக்குப்போயிருந்த சமயம்
பார்த்துச் சயத்திரதன் சென்று ஆச்சிரமத்தில் தனித்திருந்த திரௌபதியை
வலியக்கவர்ந்து தேரெற்றிக்கொண்டுசெல்ல, பின்பு மீண்டுவந்து செய்தியுணர்ந்த
பாண்டவருள் வீமன் சினந்து தருமன்கட்டளையால் அருச்சுனனோடும்
எதிர்த்துச்சென்று பொருது தன்வலியால் அவனை முடிபிடித்திழுத்துத்
தரையில்தள்ளிக் கைகால்களால் அடித்தும் உதைத்தும் வலியடக்கி உயிருடன்
பற்றிக்கொண்டு திரௌபதியையும் மீட்டுத் தருமனிடங் கொண்டு வந்து
‘இவனைக்கொன்றிடுவதே ஏற்ற தண்டனை’ என்றுகூற, அதற்குத் தருமன்
‘பெருங்குற்றமுடையனாயினும் நெருங்கின சுற்றத்தானாகிய இவனைக் கொன்றிடின்,
நம்முடையதங்கை துச்சளைக்கு அமங்கலியம் உண்டாகும்: ஆதலால், அங்ஙனஞ்
செய்யவேண்டா; வேறு வகையாகப் பங்கப்படுத்தி உயிருடன் விடுவதே தகுதி’
என்றுகருணையுடன் கூற, அத்தமையனார்கட்டளையைக் கடக்கமாட்டாத வீமன்
அச்சந்தவனை ஐங்குடுமிவைத்து அம்பாலே தலையைச் சிரைத்துக்
கழுதையின்மேலேற்றிப் பரிபவப்படுத்தி அனுப்பிவிட, அங்ஙனம் அவமானப்பட்ட
சிந்துராசன் பாண்டவரைக் கொல்லுமாறு வரம் பெறும்பொருட்டு இமயகிரியிற்சென்று
தவஞ்செய்து பரமசிவனைத் தியானித்துப் பலநாள் பிராயோபவேசமாகக் கிடக்க,,
பிரதியக்ஷமான சிவபிரான் ‘ஸ்ரீகிருஷ்ணசகாயரான அப்பாண்டவர்களைக்
கொல்லுதலும் வெல்லுதலும் உன்னா லாகுவதன்று: பெரும்போரில் ஒரு நாள்
அருச்சுனனொழிந்தோரைத் தகைவதற்கே யாகும்’ என்று தனது கொன்றைப்பூ
மாலையையும், பகைவெல்லவல்லவொரு கதாயுதத்தையும் அன்போடு
கொடுத்தருளினனெனக் காண்க. ‘தான் முன்னம் வீமசேனனால் அபசயப்பட்ட
அவமானந் தீரவேண்டிப் பரமேசுவரனை நோக்கித் தபசுபண்ண, ஆங்கு அவனும்
பிரசந்நனாய் ‘உன் அபிப்ராயம் ஏன்?’ என்றலும், ‘பாண்டவரைச் சயஞ்செய்யுமாறு
எனக்கு அருள்செய்வாயாக’ என்றலும், ‘சக்கரபாணிசகாயராகிய பாண்டவரை
வெல்லவரிது; மற்றவரை ஒருகால் மானபங்கப்படுத்தி’ என்று தன்சடாமகுடத்துக்
கொன்றை மாலையைப் பிரசாதிப்ப, பெற்றுப் போந்த அக்கொன்றைமாலையால்,
வீமசேனன் துணைபுகுதாது விலக்கியிட்டான் சயத்திரதன்’ என்று பெருதேவனார்
கூறியவாறு உணர்க.  

அரன் முடி அணிந்த தாமம் இது என அடிகொடு
கடந்து போக வெருவுவர்;
பரவை நிகர் நம் பதாதி அவனிபர் பலருடன்
வளைந்து கோலி, அமரிடை
வரம் உற வணங்கு நாளில் அருள் செய்து மனம்
மகிழ மங்கை பாகன் உதவிய
உரனுடைய தண்டினால் இவ் அபிமனை உயிர்
கவர்தல் இன்று சால உறுதியே.’

அரன் முடி அணிந்த தாமம் இதுஎன – சிவபிரான் திருமுடியில்
தரித்த மாலை இதுவென்று, அடி கொடு கடந்து போகவெருவுவர் – (வீமனும்
அபிமனும் தமது) கால்களால் (அதனைத்) தாண்டிச்செல்ல அஞ்சுவார்கள்;
(அச்சமயத்தில்) பரவைநிகர் நம்பதாதி-கடல்போன்ற நமது சேனையிலுள்ள,
அவனிபர் பலருடன்- அரசர்கள் அநேகருடனே, வளைந்து கோலி-இடைவிடாமற்
சூழ்ந்து, அமரிடை- போரில், வரம் உற வணங்கு நாளில் மங்கைபாகன் அருள்
செய்து மனம் மகிழ உதவிய உரன் உடைய தண்டினால்-வரம்பெறும்படி
வணங்கியகாலத்தில் சிவபிரான் கருணைசெய்து மனம்மகிழ (உனக்கு)க்கொடுத்த
வலிமையுள்ள கதாயுதத்தால், இஅபிமனை உயிர் கவர்தல்-இந்தஅபிமந்யுவைக்
கொல்லுதல், இன்று சால உறுதிஏ-இப்பொழுது மிகநன்மைதரும் உபாயமாம்;’
(எ -று.)

     மங்கைபாகன் – உமாதேவியை (இட)ப்பக்கத்தி லுடையவன், எப்பொழுதும்
மங்கைப்பருவத்தையே உடைமையால், உமாதேவி ‘மங்கை’ எனப்பட்டாள். உறுதி-
காரியவாகுபெயர். ஏ தேற்றம்.

என இவன் மொழிந்த போதில், அவன் இவன் இணை
அடி வணங்கி, ‘யாது நினைவு? இனி,
உனது நினைவு எஞ்சிடாமல், அபிமனை உயிர் கவர்வன்’
என்று தேற உரைசெய்து,
கனக தரு மன்றல் மாலை என ஒளிர் கடி இதழி அம்
தண் மாலை, பரமனை
மனன் உற உணர்ந்து, நாவில் நிகழ்தரு மறையொடு,
வளைந்து வீழ எறியவே,49.-சயத்திரதனும் துரியோதனன் கூறிய உபாயத்தைச்செய்ய உடன்
பட்டு, சிவபெருமானருளிய கொன்றைமாலையை யெறிதல்.

என -என்று, இவன் -துரியோதனன்-மொழிந்த போதில்-
சொன்னபொழுதிலே,-அவன்-சயத்திரதன், இவன் இணை அடி வணங்கி-
துரியோதனனது, உபயபாதத்தை நமஸ்கரித்து, ‘யாது நினைவு-(வேறு)என்ன
எண்ணம்உள்ளது? (ஒருசிந்தையும் பட வேண்டுவதில்லை); இனி-இப்பொழுதே,
உனதுநினைவு எஞ்சிடாமல்-உன்கருத்துக்குக் குறையுண்டாகாதபடி, அபிமனை
உயிர்கவர்வன்-அபிமந்யுவைக் கொல்வேன்,’ என்று-, தேற -(துரியோதனன்)
மனந்தெளியும்படி, உரைசெய்து-சொல்லி,-(சயத்திரதன்),-பரமனை – (எல்லாரினுஞ்)
சிறந்த சிவபிரானை, மனன் உற  உணர்ந்து – மனத்திலே பொருந்தத் தியானித்து,
கனக தரு-பொன் மயமான கற்பகவிருட்சத்து மலர்களினாலாகிய, மன்றல் –
பரிமளமுள்ள, மாலைஎன – மாலைபோல, ஒளிர் – விளங்குகிற, கடி –
வாசனையையுடைய, அம் – அழகிய, தண் – (தேனினாற்) குளிர்ந்த, இதழி மாலை –
கொன்றைப்பூமாலையை, நாவில் நிகழ்தரு மறையொடு – நாக்கில் உச்சரிக்கப்படுகிற
மந்திரத்துடனே, வளைந்து விழ எறிய- (அபிமன்தேரைச்) சூழ்ந்துவிழும்படிவிசிப்
போகட,-(எ-று.)- “எறிதொடையல்வளைந்து சூழவருதலும்” என அடுத்தகவியோடு
தொடரும்.

     பொன்னுலகமாகிய சுவர்க்கத்தில் உள்ளனயாவும் பொன்மயமாதலால்
‘கனகதரு’ எனப்பட்டது. கனகத்தை மலருக்கு அடையாக்கினுமாம்: கொன்றைமலர்
பொன்னிறமாதலால், கனகதருமலரோடு உவமிக்கப்பட்டதென்க. இதழி-நிறைந்த
இதழ்களையுடையதெனக் காரணப்பெயர்போலும். மறை- மறைக்கப்படுவது என
மந்திரத்துக்குக் காரணக்குறி; “மந்த்ரம்யத்நேந கோபயேத்” [மந்திரத்தை
முயற்சியால்மறைக்கவேண்டும்] என்பது, விதி.   

எறி தொடையல், சங்கபாணி மருமகன் இகலும் அமர்
வென்று மீளும் அளவையில்,
நெறியிடை விளங்கி வாள கிரி என நிமிர்வு உற
வளைந்து சூடி வருதலும்,
அறிவுடன் இறைஞ்சி, ‘ஆதி பகவனது அணி முடி
அலங்கலாகும்; அடையலர்
முறிய இனி மண்டு போரில் அமர் செய்து, முடிதும்!’ என
வந்து, மீள முடுகவே,50.-வென்றுமீளுகையில்,சிவபிரான்மாலை குறுக்கிட,
அபிமன் கடவாது பகையைமுறியடித்து மடிவதாகத்துணிந்துபொருதல்.

எறி தொடையல்-(சயத்திரதனால்) வீசப்பட்ட அம் மாலை, சங்கபாணி
மருமகன் இகலும் அமர் வென்று மீளும்அளவையில்-சங்கத்தைக் கையிலுடைய
கண்ணனுக்கு மருமகனான அபிமன்  எதிர்த்துச்செய்த போரில்செயித்து (வீமனுடன்
சேர்தற்கு)த் திரும்புமளவில், நெறியிடை – வழியிலே, விளங்கி – பிரகாசித்து, வாள
கிரி என – சக்கரவாளமலைபோல, நிமிர்வுஉற – விளக்கம் பொருந்த, சூழ
வளைந்துவருதலும் – சுற்றிலுஞ் சூழ்ந்து பொருந்தியிட,-(அதுகண்டு அபிமன்),
அறிவுடன்இறைஞ்சி – (இது இறைவனதுமாலையென்ற) அறிவோடு வணங்கி, ‘ஆதி
பகவனதுஅணி முடி அலங்கல் ஆகும்-முதற்கடவுளான சிவபிரானது அழகிய
திருமுடியில்தரித்த மாலையாகும்; (இதனைத் தாண்டிடுதல் தகுதியன்று): (ஆதலால்),
இனி-,மண்டுபோரில் – நெருங்கிய யுத்தத்தில், அடையலர் முறிய-பகைவர் அழிய,
அமர் செய்து-போர் செய்து, முடிதும்-இறப்போம்,’ என-என்றுஎண்ணி, மீள வந்து
முடுக -திரும்பிவந்து போர்செய்யத்தொடங்க,-(எ – று.)-“இதழித்தொடைவிலங்கியது”
என்மேல் 52-ஆங் கவியோடு முடியும். பி – ம்: நெறியிடைவிலங்கி.

     சக்கரவியூகத்தினிடையில் தனியனாய் அகப்பட்டுக்கொண்ட தனக்கு
வேறுஎவரும் துணையில்லாமையாலும், அவ்வியூகத்தினின்று மீண்டுவருதற்குத் தான்
முழுவதும் வழியறியாமையாலும், அபிமன்முடிவோமென்று கருதினான்.
சக்கரவாளமலை – பூமியைச் சூழ்ந்த கடலைச்சுற்றிலும் கோட்டைமதில்போலச்
சூழ்ந்துள்ள தொரு பருவதமென்ப. ஆதிபகவன்- இருபெயரொட்டு

பரிசன குமாரன் விடும்
எரி கணைகளால் முடுகு
தரியலர் பதாதி படை
நெரிய வரு காலையிலே,51.- மூன்றுகவிகள்-அம்மாலையைக் கடத்தற்கு அஞ்சி
வீமன்வெளிநின்றமை கூறும்.

பரிசன குமாரன்-வாயுகுமாரனான வீமன், விடும்-(தான்)
பிரயோகிக்கிற, எரி கணைகளால்-உக்கிரமான அம்புகளால், முடுகு தரியலர்
பதாதி படை -விரைந்துபோர்செய்த பகைவர்களது சேனைக்கூட்டம், நெரியவரு
காலையிலே-சிதையமீளுகிற பொழுதிலே,-(எ – று.)-” என்று குறுகலும் என வருங்
கவியோடுஇயையும்.

     எரிகணை – பகைவரையழிக்கும் அம்பும், விளங்குகிற அம்பும், நெருப்பில்
வைத்து வடிக்கப்பட்ட அம்புமாம்: வினைத்தொகை. பதாதிபடை – நிலைமொழி
வடமொழியாதலின், இயல்பு.

     இதுமுதல் இருபத்தெட்டுக் கவிகள் – பெரும்பாலும் இரண்டு சீர்களும்
விளங்காய்ச்சீர்களாகியகுறளடி நான்குகொண்ட வஞ்சித் துறைகள். இவற்றிற்
சிறுபான்மை மாச்சீர்களும் வந்துள்ளன.   

விறல் அபிமன் நின்ற களம்
உறுதும், இனி’ என்று நனி
குறுகலும், விலங்கியது,
நறை இதழி அம் தொடையே

விறல் – வெற்றியையுடைய அபிமன்-, நின்ற- பொருந்தின, களம் –
இடத்தை, இனி -இப்பொழுது, உறுதும்- (நாம்) அடைவோம்,’ என்று-என்று எண்ணி,
(வீமன்), நனி குறுகலும் – மிகச்சமீபித்தவளவிலே,-நறை-வாசனையுடைய,அம்-
அழகிய, இதழிதொடை – கொன்றைப்பூமாலை, விலங்கியது -குறுக்கிட்டது;(எ-று.)

     நறை – தேனுமாம்; இதனை ‘ஐ’ விகுதிபெற்ற பண்புப்பெயரென்னலாம் ஈற்று
ஏகாரத்தை இங்குப் பிரிநிலை யென்னலாம். 

இன்று அமரின் யாரும் உயிர்
பொன்றிடினும், ஈசன் அணி
கொன்றை கடவேன்’ என, முன்
நின்றனன், நராதிபனே.

அதுகண்டு), நர அதிபன் -வீமராசன், ‘இன்று-இன்றைக்கு, அமரின்
போரில், யார்உம் -எல்லோரும், உயிர்பொன்றிடின்உம் – உயிரழிவாரானாலும்,(யான்),
ஈசன் அணி கொன்றை – சிவபிரான் தரித்த கொன்றைப்பூமாலையை, கடவேன் –
தாண்டமாட்டேன்,’ என – என்றுகருதி, முன் நின்றனன்-முன்னே நின்றுவிட்டான்:
(எ – று.)

     இங்ஙனங் கூறியதனால், வீமனது சிவபக்தி மிகுதி விளங்கும். கொன்றை –
அதன் மலர்மாலைக்கு இருமடியாகுபெயர்.    

முந்து வடி வாள் அமரின்
வந்து அணுகுவான், மதலை;
நிந்தனைகொல் ஆம் இது!’ என,
நொந்து சில கூறினனே:54.- அபிமனுக்குத் தான் உதவாமைக்கு வீமன் நொந்து கூறலுறுதல்.

முந்து – சிறந்த, வடி வாள் அமரின் – கூர்மையான
ஆயுதங்களைக்கொண்டு செய்யும்போரில், வந்து அணுகுவான் –
வந்துநெருங்கியுள்ளவன், மதலை-குமாரனான அபிமன்: இது-அவனுக்கு யான்
உதவியாகாத) இத்தன்மை, நிந்தனை ஆம்-பழிப்புக்குக் காரணமாம்,’ என – என்று
எண்ணி, நொந்து- வருந்தி, (வீமன்), சில கூறினன் – சில(கோபவார்த்தைகளைக்)
கூறுபவனானான்; (எ – று.) – அவற்றை, நோக்கி மேல்மூன்றுகவிகளிற் காண்க.

நிந்தனை இது-காரணம் காரியமாக உபசரிக்கப்பட்டது. கொல்- அசை.
பி-ம்:
முந்தமுடிவானமரில்.

இந்த மது மாலை இடை
தந்து, அபிமன் ஆர் உயிரை
உந்திவிடவோ? எளிது,
சிந்து பதி சேவகமே!55.-  மூன்றுகவிகள் – வீமன் நொந்து கூறியமையைத் தெரிவிக்கும்.

சிந்து பதி சேவகம்-சிந்துதேசத்தரசனது வீரம்,- இந்த மது மாலை
இடைதந்து- தேனையுடைய இக்கொன்றைப்பூ மாலையை நடுவிலே போகட்டு,
அபிமன் ஆர் உயிரை உந்தியிடஓ- (தனிப்பட்ட) அபிமந்யுவின் அருமையான
உயிரைப் போக்கிவிடுதற்கோ (வல்லது)? எளிது – (அவ்வீரம்) எளிமையையுடையது:
(எ – று.)-எளிமை – இகழப்படுந்தன்மை; தாழ்வு தருமயுத்த மாகவன்றி
வேறுசூழ்ச்சிசெய்து கடவுள்மாலையைக் குறுக்கிடுவித்துத் துணையில்லாதபடி
தனிப்படுத்திக் கொல்லமுயலுதல் பழிக்கத் தக்க தென்றதாம்

விரகு பட, எப்பொழுதும்
முரண் அமர் தொடக்கும் வலி
உரக துவசற்கு ஒழிய,
அரசரில் எவர்க்கு உளதோ?

எப்பொழுதும்-, விரகு பட-வஞ்சனையாக, முரண் அமர் தொடக்கும்
– மாறுபட்ட போரைத் தொடங்கிச்செய்கிற, வலி-வலிமை, உரக துவசற்கு ஒழிய –
பாம்புக்கொடியனான துரியோதனொருவனுக்கே தவிர, அரசரில் எவர்க்கு உளதுஓ-
அரசர்களில் வேறுயார்க்கேனும் உள்ளதோ? (எ- று.)

     ‘உரகதுவசன்’-கொடுமையை விளக்குகிற சாபிப்பிராயவிசேடியம்:
கருத்துடையடைகொளியணி: பரிகராங்குராலங்காரம்.    

தன் மகனையும் சமரில்
வன்மையொடு கொன்று ஒழிய,
மன் முனை திரண்டிடினும்,
என் மகன் மடிந்திடுமோ?’

மன் – (பல) அரசர்கள், முனை – போர்க்களத்தில், திரண்டிடின்
உம் -கூட்டம்கூடி எதிர்த்துப்போர்செய்தாலும், என் மகன் – எனது புத்திரனான
அபிமன்,தன் மகனைஉம் சமரில் வன்மையோடு கொன்றுஒழிய –
அத்துரியோதனனுக்குக்குமாரனான இலக்கணனையும் போரில் வலிமையாற்
கொன்றாலன்றி, இறந்திடும்ஓ -இறந்திடுவானோ? (எ – று.)-பி – ம்: மடிந்திடுமோ.

     இங்ஙனம் கூறியதனால் அபிமனது பல பராக்கிரம விஷயத்தில் வீமனுக்கு
உள்ள நம்பிக்கை வெளியாம் தம்பிமகனிடத்தில் அபேதமாகவுள்ள அபிமானத்தால்,
‘என்மகன்’ என்றான். ‘தன் என்றது படர்க்கை யாதலால், இங்கே, துரியோதனனைக்
குறித்தது; (இது, வடமொழியில் ஸர்வநாம சப்தங்களுள் ஒன்றாம்.) மன் –
சாதிப்பெயராய், இராசசமூகத்தை உணர்த்தியது.    

என்று, இதழி மாலைதனை
நின்று தொழுது, அன்பினொடு
சென்றனன்-இடிம்பனை முன்
வென்ற திறல் வீமனுமே.58. – வீமன் அக்கொன்றைமாலையைக்கடவாது வணங்கிச்செல்லுதல்.

இடிம்பனை – இடிம்பாசுரனை, முன் வென்ற-முன்பு சயித்த [கொன்ற],
திறல்-வலிமையையுடைய, வீமனும்-, என்று- என்றுசொல்லி, இதழி மாலைதனை
அன்பினொடு நின்று தொழுது- கொன்றைப்பூ மாலையைப் பக்தியோடு எழுந்து
நமஸ்கரித்து, சென்றனன் – மீண்டுசென்றான்; (எ – று.)

     தேரில்வீரர்வீற்றிருத்தல் இயல்பாதலின், ‘நின்றுதொழுது’ எனவேண்டிற்று

மாலை கடவாமல் வரு
பாலன், அரசர்க்கு நடு,
வேலை வடவைக் கனலி
போல் ஒளிர, நின்றனனே.59.- மாலைகடவாத அபிமன் பகைநடுவில் உக்கிரத்தேசொடு நிற்றல்

மாலை கடவாமல் – கொன்றைமாலையைக் கடக்க மாட்டாமல், வரு-
மீண்டுவந்த, பாலன் இளையவனான அபிமன், அரசர்க்கு நடு – பகையரசர்களுக்கு
மத்தியில், வேலை வடவை கனலி போல் – கடலின்மத்தியில் படபாமுகாக்கினிபோல,
ஒளிர நின்றனன்- விளக்கமாக நிலைநின்றான்; (எ-று)

     பகையரசர் குழாத்தினிடையில் அகப்பட்டுள்ள அபிமனொருவன் தானே
அக்கூட்டமுழுவதையுஞ் செருக்கடக்கவல்லனாந் தன்மைக்கும்,
தேககாந்திமிகுதிக்கும், கடலிடையுள்ள வடவையனலை உவமைகூறினார்

யாளி என நின்ற வய
மீளியை வளைந்து, பல
வாளிகள் பொழிந்தனர்கள்,
கூளிகள் நடம்செயவே.60.- இரண்டுகவிகள் – அர்த்தரதரான எதிரிகள் அம்புமழை
பொழிதலைக்கூறும்.

யாளி என நின்ற-யாளியென்னும் மிருகவிசேஷம்போல
(மிகவலியனாய்) நின்ற, வய மீளியை – வெற்றியையுடைய வீரனான அபிமனை,
(பகையரசர்கள்), வளைந்து-சூழ்ந்துகொண்டு, கூளிகள் நடம் செய-பேய்கள்
கூத்தாட,பல வாளிகள் – அநேக பாணங்களை, பொழிந்தனர்கள்-; (எ – று.)

     அபிமனை ‘யாளி’ என்றதற்கு ஏற்ப, பகையரசரை யானையென்னாமையால்,
ஏகதேசவுருவகம். பி-ம்: மீளிமிசைவந்துபல.   

பற்பலரும் அர்த்த ரதர்
வில் பல வணக்கி, எதிர்
சொல் பொலி வயப் பகழி
சிற்சில தொடுத்தனரே.

பல் பலர்உம் அர்த்தரதர் – மிகப்பலரான அர்த்தரத வீரர்கள்;
வில்பல வணக்கி-(தம்தம்) விற்கள் பலவற்றை வளைத்து, எதிர் – அபிமனெதிரில்,
சில்சில – சிலசிலவாகிய, சொல் பொலி வய பகழி – புகழ் விளங்குகிற வலிய
அம்புகளை, தொடுத்தனர் – பிரயோகித்தார்கள்;

பெய் கணை அடங்க, இவன்
எய் கணை விலக்கியிட,
மொய் கணை அனந்தம் அவர்
மெய்கள் நைய உந்தினனே.62.- எய்த அம்புகளைவிலக்கி அபிமன் பகைநையப் பலகணை சிந்துதல்.

பெய் கணை அடங்க – (அவர்கள்) சொரிந்த அம்புகளையெல்லாம்,
இவன் எய் கணை – இந்தஅபிமனெய்த அம்புகள், விலக்கியிட-(இவன்மேல்
வந்திடாதபடி இடையிலே) தடுத்துவிட, (பின்பு இவன்), மொய் அனந்தம் கணை –
நெருங்கின அளவில்லாத அம்புகளை, அவர் மெய்கள் நைய – அந்த
அர்த்தரதர்களது உடம்புகள் வருந்தும்படி, உந்தினன் – செலுத்தினான் :
(எ-று.)-ந +அந்தம்  = அநந்தம்: எல்லை யில்லாதது

கன்னனும், மடங்கல் அபி-
மன்னுவும், உடன்று, முனை
முன் இரதமும் கடவி,
மன் அமர் தொடங்கினரே.63.- மூன்றுகவிகள் – கன்னனை அபிமன் பொருது வென்றமை கூறும்.

(பின்பு), கன்னன்உம் – கர்ணணும், மடங்கல் அபிமன்னுஉம்-
ஆண்சிங்கம்போன்ற அபிமந்யுவும், உடன்று- கோபித்து, முனை முன் இரதம்உம்
கடவி – போர்களத்தின் முன்னிடத்தில் தேரைச்செலுத்துதலுஞ்செய்து, மன் அமர்
தொடங்கினர் – பெரிய போர்செய்யத் தொடங்கினார்கள்

அங்கர் பதி தேரில் இவன்
வெங் கணைகள் நாலு விட,
மங்குல் என, நாலு துர-
கங்களும் விழுந்தனவே.

அங்கர் பதி தேரில்-அங்கநாட்டார்க்கரசனான கர்ணனது
இரதத்தின்மேல், இவன்-அபிமன், வெம் கணைகள் நாலுவிட- கொடிய நான்கு
அம்புகளைச் சொரிய, (அதனால்), நாலு துரகங்கள்உம்-(அக்கன்னது தேர்க்)
குதிரைகள் நான்கும், மங்குல் என- உம்- (அக்கன்னனது தேர்க்) குதிரைகள்
நான்கும், மங்குல் என –  மேகங்கள்போல, விழுந்தன – (இறந்து கிழ்) விழுந்தன-:
(எ – று.)

     வெள்ளைக்குதிரைகளாதலால், நீர்கொள்ளாத வெள்ளைமேகம்
உவமையென்க:இவ்வாறே வியாசபாரதத்திலுங் கூறியுள்ளது

தொடுத்த சிலை கோலி, அவன்
எடுத்த சிலையும் கொடியும்
நடுத் தறிய வெட்டி, முனை
கெடுத்தனன், அனந்தரமே.

அனந்தரம் – பின்பு, (அபிமன்), தொடுத்த சிலை கோலி – பிடித்த
வில்லை வளைத்து, (எய்த அம்புகளால்), அவன் எடுத்த சிலைஉம் நடு தறிய
வெட்டி – அக்கன்னன் ஏந்திய வில்லையும் (அவனது கச்சைக்) கொடியையும்
நடுவிலே முறியும்படி துணித்து, முனை கெடுத்தனன்-(அவனது) போரை
அழித்தான்:(எ – று.)

    தொடுத்த – அம்பு தொடுக்குந்தன்மையுள்ள எனினுமாம்; இனி, சிலை
கோலித்தொடுத்த என மொழிமாற்றி, வில்லை வளைத்துத் தொடுத்த அம்புகளால்
என்றலுமொன்று: இவ்வுரைக்கு, தொடுத்த – பலவின்பாற்பெயர். 

இரவி மகன் ஏகுதலும்,
அரவ துவசன் துணைவர்
விரவினர், வளைந்து தம
புரவி அணி தேர் படவே.66. – இதுவும், மேற்கவியும் – குளகம்: துரியோதனன் தம்பிமார்
பொருது தோற்றமை கூறும்.

(இங்ஙனம் தோற்று), இரவி மகன் ஏகுதலும்-  சூரியபுத்திரனான
கர்ணன் சென்ற வளவில், -அரவ துவசன் துணைவர்- பாம்புக்கொடியனான
துரியோதனனது தம்பிமார், விளைந்து விரவினர் – மிகுயாகச் சூழ்ந்து,-தம புரவி
அணி தேர் பட-தங்களுடைய குதிரைகள் பூட்டிய தேர் அழிய,-(எ-று.)-
“கணைதைக்க முதுகிட்டனர்” என அடுத்த கவியில் முடியும. ‘அரவதுவசன்’-
சந்தவின்பம் நோக்கியஇயல்பு.

விட்ட இரதத்தினொடு
வட்ட வரி வில் குரிசில்
தொட்ட கணை தைக்க, அவர்
கெட்டு, முதுகிட்டனரே.

வட்டம் வரி வில் குரிசில் – வளைவான கட்டமைந்த வில்லையுடைய
அபிமன், தொட்ட – தொடுத்த, கணை – அம்புகள், தைக்க – தைத்தலால், அவர்-
அத்துரியோதனன் தம்பிமார், கெட்டு- தோற்று, விட்ட இரதத்தினொடு – விட்ட
தேருடனே (தேரை நீங்கியவர்களாய்), முதுகு இட்டனர்-புறங்கொடுத்தார்கள்;(எ-று.)

     மோனைக்குப் பொருத்தமாக, விட்ட விரதத்தினொடு எனப் பிரித்து, தாம்
வென்றே மீளுவோ மென்னும் விரதத்தை விட்டவர்களாய் எனினுமாம்: ஒடு-
மூன்றனுருபு, அடைமொழிப்பொருளது, வட்டம் – வருத்தம்: வடசொல். 

சுகன் நிகர் துரோணனொடு,
மகன், விசயன் மைந்தன் எதிர்
முகன் அமரில் வந்து, புர-
தகனன் என நின்றனரே.68. – மூன்றுகவிகள் – துரோணனும் குமாரனும் அபிமனையெதிர்த்துத்
தோற்றவை கூறும்.

சுகன் நிகர் துரோணனொடு-சுகமுனிவனை யொத்த துரோணனும்,
மகன்-(அவன்) மகனான அசுவத்தாமனும், விசயன் மைந்தன் எதிர் –
அருச்சுனபுத்திரனான அபிமந்யுவின் எதிரில், முகன் அமரில்-முற்போரில்,
புரதகனன்என-திரிபுரமெரித்த பரமசிவன் போல, வந்து நின்றனர்,-(எ – று.)

     சுகன் – வேதவியாச புத்திரன்; அவ்வியாசபகவானினும் மேம்பட்ட
அறிவொழுக்கங்களையும்;    வைராக்கியத்தையும் உடையவன்: பகவானது
அமிசமானவன்; பரமபாகவதர்களில் ஒருத்தன்; பாகவத புராண சரித்திரத்தைப்
பரீக்ஷித்து மகாராசனுக்குக் கூறியவன்: கிளியினிடமாகப் பிறந்ததனாலும்.
கிளிமூக்கையுடைமையாலும், சுகனெனப் பெயர். இவனைத் துரோணனுக்கு
உவமைகூறினது,ஞானசீலங்களின் மேன்மைக்கு. எதிர் முகன்-எதிர்முகத்தில்
என்றுமாம்.புரதகனனுவமை, உக்கிரத்தன்மையில்.  

நிற்கும் நிலை நின்று, வரி
விற்களும் வளைத்தனர்கள்,
உற்கைகளின் நூறு பல
பொற் கணை தொடுத்தனரே

(எதிர்த்துவந்த அவ்விரண்டுபேரும்), நிற்கும் நிலை நின்று – (தாம்)
நிற்றற்கு உரிய நிலையிலே நின்று, வரி விற்கள்உம் வளைத்தார் – கட்டமைந்த (தம்)
விற்களையும் வளைத்து, உற்கைகளின் – அனற்கொள்ளிகள் போல, நூறு பல பொன்
கணை – பல நூற்றுக்கணக்கான அழகிய அம்புகளை, தொடுத்தார்-; (எ – று.)

     நிலை – யுத்தத்தில வில் வளைத்து அம்பினை யெய்வார்க்கு உரிய நிலை,
உற்கை – உல்கா என்னும் வடமொழியின் திரிபு. நூறு என்பதை வினைத்
தொகையாகஎடுத்தால், அழிக்கிற எனப்பொருள்; இனி, மோனைப்
பொருத்தத்திற்காக ஊறு எனப்பதம் பிரித்தால், அச்சொல் – இடையூறு, கொலை,
தழும்பு, தீமை, பரிசம் எனப்பொருள்படும்: அவற்றைச் செய்யவல்ல என்க.

வரு கணை விலக்கி, எதிர்
பொரு கணைகளாலே,
ஒருவன் ஒர் இமைப் பொழுதில்
இருவரையும் வென்றான்.

ஒருவன் – தனியனான அபிமன், எதிர் பொரு கணைகளால் –
(தான்)எதிரில் எய்கிற அம்புகளால், வரு கணை விலக்கி –  (தன்மேல்) வருகிற
(துரோணஅசுவத்தாமரது) அம்புகளைத் தடுத்து, ஓர் இமை பொழுதில் – ஒரு
மாத்திரைப்பொழுதிலே, இருவரைஉம் வென்றான்-

தேர்முகம் இழந்தும், இரு
கார்முகம் இழந்தும்,
போர்முகம் இழந்தும், அவர்
நேர் முகம் இழந்தார்.71.- துரோண அசுவத்தாமர் புறங்கொடுத்தமை.

அவர் – அவ்விரண்டுபேரும்,- (அபிமனம்புகளால்), தேர் முகம்
இழந்துஉம்- தேராகிய இருப்பிடத்தை யிழந்தும், இரு கார்முகம் இழந்துஉம் –
இரண்டுவிற்களையும் இழந்தும், போர்முகம் இழந்துஉம்-போர் செய்யுந்தன்மையை
யிழந்தும், நேர் முகம் இழந்தார்-(அவனுக்கு) எதிர்முகமாக இருத்தலையும்
இழந்தார்கள் (புறங்காட்டிப் போயினர் என்றபடி); (எ – று.)-தேர் முகம் –
தேர்முதலியனவும், போர்முகம் – போர்க்களமுமாம்.

துன்முகனும், அன்று அமரின்
முன் முன் அமர் செய்தே,
வன்மிகம் மறிந்தது என
நல் முடி தறிந்தான்.72.- துன்முகன் பொருது முடிதறிதல்

அன்று-அப்பொழுது, துன்முகன்உம்-துர்முகனென்பவனும் அமரில்-
போர்களத்தில், முன் முன் அமர் செய்து-முந்தி முந்தி வந்து போர்செய்து,
வன்மிகம்மறிந்தது என – புற்றுச் சரிந்ததுபோல, நல்முடி தறிந்தான் –
(அபிமனம்பால் தனது)அழகிய கிரீடம் அழியப்பெற்றான்; (எ – று.)

   வன்மிகம் – வல்மீகமென்னும் வடசொல்லின் திரிபு. துர்முகன் துரியோதனன்
தம்பியாதலாலும், அவனை அபிமன் கொன்றனனென்றால் நூற்றுவரையுங்கொல்வே
னென்ற வீமன்சபதம் பொய்க்குமாதலாலும், மேல் இவனை வீமன் கொல்வதனாலும்,
‘முடிதறிந்தான்’ என்பதற்கு -இவ்வாறு பொருள் கொள்ளப்பட்டது. துர்
முகனென வேறோரரசனுள னெனக்கொண்டால், தலைதுணிபட்டு விழுந்தா
னென்னலாம்.   

சித்திர வில் வீரன் எனும்
மத்திரர் பிரானும்,
புத்திரரில் ஆதி உரு-
மித்திரனும், வந்தார்.73. – நான்குகவிகள் – அபிமனோடு சல்லியனும் அவன் மகனும்
பொருகையில் மகனிறக்கத் தந்தை புறங்கொடுத்தமை கூறும்.

சித்திரம் வில் வீரன் எனும் – அழகிய வில்லில் (சிறந்த)
வீரனெனப்படுகிற, மத்திரர் பிரான்உம்-மத்திரதேசத்தார்க்கு அரசனான சல்லியனும்,
புத்திரரில்-(அவனது) மக்களுள், ஆதி – முதல்வனான, உருமித்திரன்உம் –
உருமித்திரனென்பவனும், வந்தார் – (எதிர்த்து) வந்தார்கள்; (எ – று.)

     துணைவரோடும் புத்திரரோடும் போர்புரி சேனையோடும், மத்திரபதி
சுயோதனன் சூழ்ச்சியால் அவனுக்குப் படைத்துணையாயினான் ஆதலால்,
சல்லியபுத்திரனும் துரியோதனன்பக்கத்தவ னாவன்.

வந்து, அபிமனோடு அமரின்
முந்தி, இருவோரும்
சிந்து கணை மாரிகளின்
அந்தரம் மறைத்தார்.

வந்து-, அபிமனோடு-, அமரில் முந்தி-போரில் முற்பட்டு,
இருவோர்உம் -அவ்விரண்டுபேரும், சிந்து கணை மாரிகளின் – (தாம்) சொரிந்த
அம்புமழைகளால்,அந்தரம் அடைத்தார் ஆகாயத்தை மறையச்செய்தார்கள்;
(எ-று.) –பி – ம்:மறைத்தார்.

அவர் அவர் எடுத்த இரு
தவரும் நடு வெட்டா,
இவர் கணை விலக்குவன
கவர் கணை தொடுத்தான்.

உடனே அபிமன், தன் அம்புகளால்), அவர் அவர் எடுத்த இரு
தவர்உம்- இவ்விரண்டுபேரும் எடுத்துவந்த இரண்டு விற்களையும், நடு வெட்டா –
நடுவிலேதுண்டித்து, இவர் கணை விலக்குவன – இவர்களது அம்புகளைத்
தடுப்பனவான,கவர் கணை (பகைவருயிரைக்) கவரவல்ல அம்புகளை,
தொடுத்தான்-(இவர்கள்மேற்)பிரயோகித்தான்; (எ-று.)-கவர்கணை – நுனியிலே
பிளப்புள்ள அம்பும், ஒன்றுபலவாகும் அம்புமாம்.

மைந்தன் ஒரு வாளியினில்
அந்தரம் அடைந்தான்;
நொந்து பல வாளியொடு
தந்தை புறகிட்டான்.

(அப்பொழுது), மைந்தன் – சல்லியபுரத்திரன், ஒரு வாளியினில் –
(அபிமனது)அம்புஒன்றால், அந்தரம் அடைந்தான்- வீரசுவர்க்கஞ் சேர்ந்தான்
[இறந்தான்]:(பின்பு), தந்தை – அவன் தந்தையான சல்லியன், நொந்து-
(புத்திரசோகத்தால்)வருந்தி, பல வாளியொடு- (தன்மேல் தைத்த) அநேக
பாணங்களுடனே,புறகுஇட்டான் – முதுகுகொடுத்தான்;

வென்று அமரில் வாள் அபிமன்
நின்ற நிலை கண்டே,
ஒன்று பட மா இரதர்
சென்றன உடைந்தே.77.- அபிமனது உறுதிநிலைமைகண்ட மகாரதர்பலர் உடைந்துபோதல்.

(இவ்வாறு), அபிமன்-, வாள் அமரில்-ஆயுதங்களைக் கொண்டு
செய்யும்போரில். வென்று-(அவர்களைச்) சயித்து, நின்ற-, நிலை-உறுதிநிலையை,
கண்டுஏ- பார்த்தமாத்திரத்தாலே, மர இரதர்-மகாரதவீரர் (பலர்), ஒன்றுபட-
ஒருசேர,உடைந்து சென்றனர்-அழிந்துபோயினர்; (எ – று.)

     வாளமர் கொடியபோர் எனவுமாம். மோனைக்கும் இடத்திற்கும் ஏற்ப,
‘வில்லமரில்’எனப் பாடங்கொள்ளுதல், சிறக்கும்.   

கெட்டவர்கள் இன்னர் என
முட்ட உரைக்கொண்ணா;
பட்டவர் அநேகர், இவன்
விட்ட கணையாலே78. கவிக்கூற்று: அபிமனாலடிபட்டவர் மிகப்பலரெனல்.

இவன் விட்ட கணையால்ஏ – அபிமன் எய்த அம்புகளாலே, பட்டவர்-
இறந்தவர், அநேகர்-பலர்; கெட்டவர்கள்- தோற்று ஒழிந்தவர்கள், இன்னர் என –
இவ்வளவின ரென்று முட்ட உரைக்க ஒண்ணா-முழுவதும் சொல்லமுடியாது; (எ-று.)

     உரைக்க என்னும் வினையெச்சமே தொழிற்பெயர்ப்பொருளதாய், ஒண்ணா(து)
என்னும் ஒருமைமுற்றுக்கு எழுவாயாம்: இனி, ‘உரைக்கொண்ணார்’
எனப்பாடமிருப்பின்நலம். கெட்டார்-காணாது போனவரொனினுமாம்.

முன் சக்ரயூகம் பிளப்புண்ட பின், முன்பினோடும்
பொன் சக்ரம் என்ன வெறித் தாமம் பொலிந்து சூழ,
வில் சக்ரம் ஆக, மணித் தேரினின்மீது நிற்பான்,
கல் சக்ரம் ஆக நடு ஊர் செங்கதிரொடு ஒத்தான்.79. – இரண்டுகவிகள் – சக்கரவியூகத்தைப்பிளந்துநடுநிற்கும்
அபிமனைக் குறித்த வருணனை.

சக்ரயூகம் – (துரியோதனனது) சக்ரவியூகம். முன் பிளப்புண்டபின்-(தன்
அம்புகளால்) முன்னிடம் பிளக்கப்பட்ட பின்பு, முன்பினோடுஉம்- வலிமையுடனே,
வெறி தாமம்-வாசனையையுடைய வெற்றிமாலை, பொன் சக்கரம் என்ன-
பொன்வட்டம் போல, பொலிந்து சூழ-(தன்கழுத்தைச்) சுற்றிலும் விளங்க, வில்சக்ரம்
ஆக-(கையிற்பிடித்த) வில் வட்டமாக வளைந்திருக்க, மணி தேரின்மீது-
மணிகள்கட்டிய தேரின்மேல், நிற்பான்-(சக்கரவியூகத்தின் மத்தியில் தனியே)
நின்றுவிளங்குபவனான அபிமன், கல் சக்ரம் ஆக சக்கரவாளமலை சூழ்ந்துநிற்க,
நடுஊர்- (அதன்) நடுவிடத்தில் [ஆகாயத்திற்] செல்லுகிற, செம் கதிரொடு –
சிவந்தகிரணங்களையுடைய சூரியனை, ஒத்தான்- எ – று.)

     பொற்சக்ரம் – வட்டமாகிய பொன்னாரம். ‘வெறித்தாமம் பொலிந்து சூழ’
என்பதற்கு- பரிமளமுடைய (சிவனது) கொன்றைப்பூமாலை (தன்னைச்) சுற்றிலும்
விளங்கஎன்றும் உரைக்கலாம். கதிரொடுஒத்தான்-மூன்றாமுருபு
இரண்டாம்வேற்றுமைக்குஉரிய ஒப்புப்பொருளில் வந்தது; உருபுமயக்கம். பி-ம்:
மொய்ம்பினோடும். எறிதாமம்.கற்சக்ரநாகம்.

     இதுமுதல் ஐந்துகவிகள்-பெரும்பாலும் மூன்றாஞ்சீ ரொன்று
புளிமாங்கனிச்சீரும், மற்றைநான்கும் மாச்சீர்களுமாகிய நெடிலடி நான்குகொண்ட
கலிநிலைத்துறைகள். 

வடாதும் தெனாதும், பர ராசர் வகுத்த நேமி,
குடாதும் குணாதும், அவற்று உட்படு கோணம் நான்கும்,
விடாது உந்து தேரின்மிசை எங்கும் விராய போது,
சடா துங்க மௌலிப் புரசூதனன் தன்னை ஒத்தான்.

 பர ராசர்-பகைவரான அரசர்கள், வகுத்த- அமைத்த, நேமி –
சக்கரவியூகத்தில், வடாதுஉம்-வடக்குப்பக்கத்திலும், தெனாதுஉம்-தெற்குப்
பக்கத்திலும்,குடாதுஉம்-மேற்குப் பக்கத்திலும், குணாதுஉம்-கிழக்குப்பக்கத்திலும்,
அவற்றுஉள்படு-அந்நான்கு பெருந்திசைகளின் இடையிற் பொருந்திய, கோணம்
நான்கும்உம்-(தென்கிழக்கு தென்மேற்கு வடமேற்கு வடகிழக்கு என்னும்) நான்கு
மூலைத்திசைகளிலும், எங்கும்உம்-(ஆக) எல்லா விடத்திலும், விடாது உந்து
தேரின்மிசை – விடாமற் செலுத்துந் தேரின்மேல் விராயபோது-(போர்க்குப்)
பொருந்திய பொழுதில், (அபிமன்), சடாதுங்கம் மௌலி- (கபர்த்த மென்னுஞ்)
சடையையுடைய உயர்ந்த முடியையுடைய, புரசூதனன் தன்னை-திரிபுர
மெரித்தபரமசிவனை, ஒத்தான்-; (எ – று.)

     அளவிறந்த பகைவர்கூட்டத்தின்மத்தியில் அஞ்சாது வீரத்தோடுநின்று
தானொருவனே தொழில்செய்தற்குப் பரமசிவன் உவமம். பரராஜர், கோணம்,
ஜடாதுங்கமௌலி, புரஸூதநன்-வட சொற்கள், வடாது-வடக்கிலுள்ளது; இது-
மரூஉமொழி-மற்றை மூன்றையும் அங்ஙனமே காண்க. விராய- விராவு என்னும்
பகுதி,ஈறுதொக்கது.   

வில் மைந்து கொண்டு தகுவோர்தமை வென்ற வீரன்
நல் மைந்தனுக்கு முதுகு இட்டனர்’ என்று நாணி,
மன் மைந்தர் எண் இல் பதினாயிரர் வந்து சூழ,
தன் மைந்தனையும் உடன் ஏவினன், சர்ப்பகேது.81,-அபிமன் வென்றமைக்கு நாணித் துரியோதனன் அவன்மீது
பல்லாயிரவர்சூழத் தன்மகனைச் செலுத்துதல்.

வில் மைந்துகொண்டு – வில்லின் வலிமையால், தகுவோர்தமை
வென்ற-(நிவாதகவசர் காலகேயர் என்னும்) அசுரர்களைச் சயித்த, வீரன்-
பராக்கிரமசாலியானஅருச்சுனனுடைய, நல் மைந்தனுக்கு-சிறந்த புத்திரனான
அபிமனுக்கு, முதுகுஇட்டனர்- (தன்சேனையார்) புறங்கொடுத்தார்கள்,’ என்று-
என்றகாரணத்தால், நாணிவெட்கப்பட்டு,-சர்ப்ப கேது-பாம்புக்கொடியனான
துரியோதனன்,-எண்ணில்பதினாயிரர் மன்மைந்தர் வந்து சூழ- அளவிறந்த
பதினாயிரக்கணக்கானஇராசகுமாரர்கள் சுற்றிலும் வர, தன் மைந்தனைஉம்-
தன்மகனான இலக்கணனையும்,உடன் ஏவினன்-விரைவில் எதிர்செலுத்தினான்;
(எ-று.)-தகுவர்.

மேல் வந்த வேந்தன் மகனும், பல வேந்தும், ஊழிக்
கால் வந்து வேலைக் கடல்தன்னைக் கலக்குமாபோல்,
நூல் வந்த கொற்றச் சிலை ஆசுகம் நொய்தின் ஏவி,
மால் வந்த கைக் குன்று அனையானை முன்
வந்து சூழ்ந்தார்.82.- இரண்டுகவிகள் – வந்துபொருத யாவரும் முதுகிட்டமை கூறும்.

ஊழி கால் – பிரளயகாலத்துப் பெருங்காற்று, வந்து-, வேலை
கடல்தன்னை – கரையையுடைய கடலை, கலக்கும் ஆ போல் – கலங்கச்செய்யும்
விதம்போல, (சேனாசமூகத்தைக் கலங்குவிக்கும்படி), நூல் வந்த –
தநுர்வேதமுறைப்படி பொருந்தின கொற்றம் சிலை – வெற்றியையுடைய
வில்லினாலெய்யப்படுகிற, ஆசுகம் – அம்பை, நொய்தின் ஏவி – (எதிரிகள்மேல்)
விரைவாகச் செலுத்தி, மால் கைவந்த குன்று அனையானை-திருமாலாகிய
கண்ணனது கையிற் (குடையாகப்) பொருந்திய கோவர்த்தனமலையை
யொத்தவனானஅபிமனை, மேல் வந்த வேந்தன் மகன்உம்-எதிர்த்து வந்த
துரியோதனகுமாரனானஇலக்கணனும், பல வேந்துஉம்-(மற்றும்) பல அரசர்களும்,
முன்வந்து சூழ்ந்தார்-எதிரில்வந்து வளைந்து கொண்டார்கள்; (எ – று.)

     ஊழிக்கால்-அபிமனுக்கும், வேலைக்கடல்-பகைவர்சேனைக்கும் உவமை.
கலக்குமாபோல் ஏவிஎன்க. இந்திரனேவலால் எல்லா மேகங்களுஞ் சூழ்ந்தும்
கண்ணனெடுத்த கோவர்த்தனகிரியை யாதொன்றும் ஊறுசெய்ய மாட்டாமைபோல,
துரியோதனனேவலால் மிகப்பல அரசர் சூழ்ந்தும் அபிமனை யாதொன்றுஞ்
செய்யமாட்டாமையின். இவ்வுவமை கூறினார்.  

முன் முன்பு முந்திப் பலர் ஏவிய மூரி வாளி
தன் முன்பு தூவும் மலர்போல் இரு தாளில் வீழ,
வில் முன்பு உடையோன் ஒரு வில்லின்
விசித்த அம்பால்,
பின் முன்பு பட்ட, பல கோடி பிறங்கு சேனை

பலர் – அநேகவீரர்கள், முன் முன்பு முந்தி – (ஒருவரினும் ஒருவர்)
முன்பாக விரைந்துமுற்பட்டு, ஏவிய-பிரயோகித்த, மூரி வாளி-வலிமையையுடைய
அம்புகள், தன் முன்பு-அவ்வபிமனதுஎதிரில், தூவும் மலர்போல்-தூவிய
பூக்கள்போல, இரு தாளில் வீழ-இரண்டு பாதங்களிலும் வந்துவிழுந்திட,-
(அப்பொழுது), வில் முன்பு உடையோன் வில்லின்வலிமையையுடைய அபிமன்-ஒரு
வில்லின்-(தனது) வில் ஒன்றைக்கொண்டு, விசித்த-இழுத்துவிட்ட, அம்பால்-
அம்புகளால், பலகோடி பிறங்கு சேனை-அநேக கோடிக்கணக்காண விளங்குகிற
பகைவர்சேனைகள், பின் முன்பு பட்ட-பின்முன்னாகப் புறங்கொடுத்தழிந்தன;
(எ-று.)

     கீழ் அபிமனுக்குச் சிவபிரானை உவமை கூறிப்போந்தனராதலால், இங்கு,
அவன்மேலெய்யப்பட்ட அம்புகளுக்கு மலர்களை உவமை கூறினார். இருதாளில்
தூவுமலர்போல் என மொழிமாற்றினுமாம். பின்முன்புபடுதல்-மார்பு பின்பும் முதுகு
முன்னுமாக மீளுதல். 

அரவு உயர்த்தவன் மதலையொடு, அடலுடை அரசர்
புத்திரர் அனைவரும், எழு பரி
இரவி பொன் கதிர் தெறுதலின் இரிதரும் இருள் என,
திசை திசை தொறும் முதுகிட,
உரனுடைப் பணை முழவு உறழ் திணி புயன் ஒரு
சமர்த்தனும், ஒரு தனி இரதமும்,
விரவி, முன் பொரு களம் அழகுறும்வகை விறல் வயப்
புலி என எதிர் முடுகவே,84.- வென்றஅபிமன் புலிபோன்று மேற்செல்லுதல்.

அரவு உயர்த்தவன் மதலையொடு-பாம்புக்கொடியை உயர எடுத்த
துரியோதனனுக்குக் குமாரனான இலக்கணனுடன் (வந்த), ‘அடல்உடை அரசர்
புத்திரர் அனைவர்உம்-வலிமையையுடைய (மற்றைய) இராசகுமாரர்களெல்லோரும்,-
எழுபரி இரவி-ஏழு குதிரைகளையுடைய சூரியனது, பொன் கதிர்-பொன்னிறமான
அல்லது அழகிய கிரணம், தெறுதலின் – அழித்தலால், இரிதரும்- சிதறியோடுகிற,
இருள் என – இருள்போல, திசை திசைதொறும்- எல்லாத்திக்குக்களிலும், முதுகு
இட- புறங்கொடுத்தோடும்படி,-உரன் உடை-வலிமையையுடைய, பணை-பருத்த,
முழவுஉறழ்- மிருதங்கமென்னும் வாத்தியத்தை (வடிவத்தில்) ஒத்த, திணிபுயன் –
வலியதோள்களையுடைய, ஒரு சமர்த்தன்உம்-அசகாயசூரனான அபிமனொருத்தனே,
ஒருதனி இரதம்உம் வீரன்- ஒப்பற்ற (தன்) ஒருதேரின்மீது பொருந்தி, முன் பொரு
களம்அழகு உறும் வகை எதிரிற் போர்செய்கிற யுத்தகளத்தின் இடம் அழகுமிகும்
படி,விறல் வயம் புலி என- வெற்றியையும் வலிமையைமுடைய புலிபோல, எதிர்
முடுக-எதிர்த்துநெருங்க. (எ – று)- “இளையவித்தகன் எதிருறவருதலும்” (85)என
இயையும்;குளகம்.

     பெருந்திசையும் கோணத்திசையு மெனத் திசை இருவகைப் படுதலால்.
‘திசைதிசைதொறும்’ என்றார் மூன்றாம்அடியில், உம்மைகள் இரண்டும் –
இழிவுசிறப்பாய், தனித்திருக்குந்தன்மையைக் காட்டும். இவற்றில் குற்றெழுத்துக்கள்
பயின்றுவந்தது, குறுஞ்சீர்வண்ணம்; இவற்றில்வந்த சில ஐகாரங்களும்
குறுக்கமாதலால், குற்றெழுத்தோ டொக்கும்.

     இதுமுதல் ஏழு கவிகள் – ஒன்று ஐந்தாஞ் சீர்கள் புளிமாச்சீர்களும், இரண்டு
ஆறாஞ் சீர்கள் கூவிளச் சீர்களும், மற்றைநான்கும் கருவிளச்சீர்களுமாகிய
கழிநெடிலடி நான்குகொண்ட எண்சீராசிரியச் சந்தவிருத்தங்கள். ‘தனன தத்தன
தனதன தனதன தனன தத்தன தனதன தனதன’ எனச் சந்தக் குழிப்புக் காண்க. 

வளைய முத்து உதிர் விழியுடை வரி சிலை மதனன்
மைத்துனன், அவனிபர் பலரையும்
இளை எனப் புறமிட அமர் பொருத பின், இளைய
வித்தகன் எதிருற வருதலும்,
முளை எயிற்று இள நிலவு எழ, அகல் வெளி முகடு
உடைப்பது ஓர் நகை செய்து கடவினன்,
உளை வயப் பரி இரதமும் இரதமும் உரனொடு ஒத்தின,
உருள்களும் உடையவே.85.-ஆறுகவிகள் – அப்போது எதிர்ப்பட்ட இலக்கணகுமாரனொடுபொருது
அபிமன் அவனது தலையைத்துணித்தமை கூறும்.

வளைய – சுற்றிலும், முத்து உதிர் – முத்துக்கள் சிந்துகிற, விழி
உடை-கணுக்களையுடைய, வரி சிலை – கட்டமைந்த (கரும்பு) வில்லையுடைய,
மதனன் -மன்மதனுக்கு, மைத்துனன் – அத்தைமகனான அபிமந்யு,- இளை என –
மேகம்போல, அவனிபர் பலரைஉம் புறம் இட அமர் பொருதபின்-அரசர்கள்
அநேகரையும்முதுகு கொடுக்கும்படி போர் செய்த பின்பு, இளைய வித்தகன்-
இலக்கணகுமாரன்,எதிர் உற வருதலும்- எதிரிற் பொருந்த வந்தவளவில்,-முளை
எயிறு-முளைத்துள்ளபற்களின், இள நிலவு-இளமையான சந்திரகாந்திபோன்னற
வெள்ளொளி, எழ -வெளித்தோன்றும்படி, அகல் வெளி முகடு உடைப்பது ஓர்
நகை செய்து-பரந்த(அண்டகோளத்தின்) மேல்முகட்டை (அதிர்ச்சியால்)
உடையச்செய்வதானஒருபெருஞ் சிரிப்பைச் செய்து, கடவினன் -(அவன் மேல்
தன் தேரைச்)செலுத்தினான்; (செலுத்தவே), உளை வய பரி இரதம்உம் இரதம்உம்-
பிடரிமயிரையுடைய வலிய குதிரைகளையுடைய இருவர்தேர்களும், உருள்கள்உம்
உடைய-சக்கரங்களும் உடையும்படி, உரனொடு ஒத்தின-வலிமையோடு
(ஒன்றையொன்று) தாக்கின; (எ – று.)

     சிறந்தகரும்பினின்று முத்துப் பிறக்குமென்பது நூற்கொள்கை யாதலால்,
கரும்புவில்லை ‘வளையமுத்துதிர்விழியிடை வரிசிலை’ என்றார், ‘வளையமுத்துதிர்’
என்பதற்கு-தான் வளைதலால் முத்தைச்சொரிகிற எனினுமாம். விழி என்பது-
கண்ணை உணர்த்த, அது-கணுவைக் குறிக்கும்; இங்ஙனம் குறித்தல், வடநூலில்
‘லக்ஷிதலக்ஷணா’ எனப்படும்: தமிழ் நூலில் ஆகுபெயரிலக்கணத்திலாவது,
பிறகுறிப்புவகையிலாவது இது அறிந்து அடக்கத்தக்கது: (திவ்வியப்  பிரபந்தத்தில்,
பக்தியை “எட்டினோடிரண்டு” [பத்து] என்றும், சிந்தாமணியில் புத்திசேனனை
“திங்கள் [மதி]  விரவியபெயரினான்” என்றுங் கூறியவை இத்திறத்தன.)

   அத்தை மைந்தனை ‘மைத்துனன்’ என்பது, முற்காலவழக்கு; பாண்டவர்களைக்
கண்ணனுக்கு ‘மைத்துனன்மார்’ என்று பலவிடத்திலும் கூறுதல் காண்க. இங்கே,
‘மதனன்’ என்றது. மன்மதனது அமிசமான பிரத்யும்நனை.  சிவபிரான்
மன்மதனை யெரித்த காலத்தில் அம்மன்மதன் மனைவியான ரதீதேவி
மிகவருந்திப்பரமசிவனைச் சரணமடைந்து பலவாறு பிரார்த்திக்க, அக்ககடவுள்
அவளுக்கு மாத்திரம் அவன் ரூபமுடையவனாகவும், மற்றையோர்க்கு,
ரூபமில்லாதவனாகவும் இருக்கும்படி அருள்செய்ய, அவ்விரதி ‘எண்கணவன்
என்னை உருவமுடையவனாய் மீளவும் கூடுங்காலம் எப்பொழுது?’ என்று வினாவ,
‘பூமிபாரநிவ்ருத்தியின் பெருட்டுத் திருமால் கண்ணனாகத் திருவவதரிக்கையில்,
அப்பிரானுக்குக் குமாரனாய்க் காமன் தோன்றி நின்பால் கூடுவன்’ என்று
சிவபெருமான் அருளிச்செய்திருந்தான்:  அதன்படி பின்பு கண்ணனுக்கு மனைவியும்
திருமகளின் திருவவதாரமுமான ருக்மிணிப்பிராட்டியினிடம் மன்மதன்
பிரத்யும்நனென்னுங் குமாரனாகத் தோன்றினானென வரலாறு காண்க. பிரத்யும்நனது
தந்தையான கிருஷ்ணனுக்கு உடன்பிறந்தவளான சுபத்திரையினிடந்
தோன்றினமைபற்றி, அபிமன், மதனன்மைத் துன்னாவன். ‘வளையமுத்துதிர்விழி’
என்ற சொற்போக்கில், முற்றும் முத்துப்போன்ற நீர்த்துளி சிந்துகிறகண்கள் என
ஒருபொருள் தொனிக்கும். கரும்புவில்லை ‘வளையமுத்துதிர்விழியுடை வரிசிலை’
என்றும், அபிமனை ‘மதனன் மைத்துனன்’ என்றும் சுற்றுவழியாற் சொன்னது-
‘பர்யாயோக்தம்’  என்னும் அலங்காரம்: தமிழில், பிறிதினவிற்சியணியெனப்படும்;
கருதிய பொருளை அதற்குரியவிதத்தாற் கூறாது மற்றொருவிதத்தாற் கூறுவது அது.

“மங்குலு மிளையு மாலு மம்புதமும், விண்டுவு மென்றிவை மேகப் பெயரே”
என்ற பிங்கலந்தையால், இளையென்பது மேகமாதல் அறிக. இனி, ‘இளையொன்’
என்பதற்கு-சுற்றுவேலியை அழித்தல்போல் எனினுமாம்; “இளைபுய லிளமை வேலி
தலைக்காவ லிவை நாற்பேரே” என்ற நிகண்டினால், இதன் பலபொருள்களும்
விளங்கும். இங்கே, மேகம்-அம்பு மழைபொழிதற்கு உவமை. இளையவித்தகன் –
வித்தகவிளையவனெனன மொழி மாறுக; இது – லக்ஷண குமார னென்பதற்கு ஒரு
பரியாயப் பெயராக நின்றது. பி -ம்: உடையவே.   

ரகு குலத்தவன் இளவலும், நிசிசரர் இறை அளித்தருள்
இளவலும், இருவரும்
நிகர் என, துணை விழி கடை நிமிர்தர, நெறி கடைப்
புருவமும் மிக முரிதர,
முகில் இடித்தென, எழு கடல்களும் மிக மொகுமொகுத்தென,
அனிலமும் அனலமும்
உகம் முடித்தென, முறை முறை பல பல உரையெடுத்தனர்,
ஒருவரொடு ஒருவரே.

ரகு குலத்தவன்-ரகுவென்னும் அரசனது வமிசத்திலவதரித்த
இராமபிரானுக்கு, இளவல்உம்-தம்பியான இலக்குமணனும், நிசிசரர் இறை-
இராக்கதர்க்கு அரசனான இராவணன், அளித்து அருள் – பெற்று அன்போடு
வளர்த்த, இளவல்உம்-இளங்குமரனான இந்திரசித்தும், நிகர் – (தமக்கு) ஓப்பு,
என-என்று (கண்டவர்) சொல்லுபடி, இருவர்உம்-(அபிமன் இலக்கணன்
என்னும்)இரண்டுபேரும், துணை விழி-(தம்தம்) கண்களிரண்டும், கடை நிமிர்தர-
(கோபத்தால்) நுனி விழிக்கவும், புருவம்உம்-புருவங்களும், நெறி கடை-நெறித்த
நுனியையுடையனவாய், மிக முரிதர- மிகவும் முரிபடவும் முகில் இடித்து என-
மேகங்கள் இடித்தாற் போலவும், எழு கடல்கள்உம் மிக மொகுமொகுத்து என-ஏழு
கடல்களும் மிகவும் ஒலித்தாற் போலவும், அனிலம்உம் அனலம்உம் உகம் முடித்து
என- காற்றும் நெருப்பும் உகாந்தகாலத்தில் (உலகத்தை) முடிக்க எழுந்தாற்போலவும்,
ஒருவரொடு ஒருவர்-ஒருத்தரோடு ஒருத்தர், முறைமுறை-மாறிமாறி, பலபல உரை
எடுத்தனர் – அநேகம் வீரவாதங்களைக் கூறத்தொடங்கினார்கள்; (எ-று.)-
அவற்றைமேல் இரண்டு கவிகளிற் காண்க. பி – ம்: அனிலமுமனிலமும்.

     சூரியகுலத்தில் ரகுவென்பவன் திக்குவிசயஞ்செய்து பிரசித்தி பெற்ற
ஓரரசனானதலால், அவன்மரபிற் பிறந்த ஸ்ரீராமனை ‘ரகுகுலத்தவன்’ என்றார்;
‘ராகவன்என்ற ஒரு திருநாமமுங் காண்க. மேல், கொல்பவனான சிறந்த
அபிமனுக்குஇலக்குமணனும், கொல்லப்படுபவனான கொடிய இலக்கணனுக்கு
இந்திரசித்தும்உவமையெனக் காண்க: இதில், அயோக்கியனான இராவணன்
துரியோதனனுக்கு ஒப்புமையாதலும் ஏற்கும். விழிகடை நிமிர்தர் ‘கோபத்தோடு
கடைக்கண்களால் உறுக்கிவிழித்துப்பார்த்தல். நெறி கடைப் புருவம் மிகமுரிதல் –
கோபத்தாற் புருவத்தை மிகுதியாக நெறித்தல்.  மொகுமொகுத்தல் – ஈரடுக்கு
ஒலிக்குறிப்பு; இரட்டைக் கிளவி.   

ஞெலி மரத்தினும் மனன் எரி எழ எழ, நிருபர்
விட்டன கச ரத துரகமும்
மெலிவு எழப் பிறகிடவும், நின் ஒரு தனி விறல்
குறித்து இரதமும் எதிர் கடவினை;
ஒலிபடுத்து எதிர் வரின், விரி சுடர் எதிர் உலவு
விட்டிலின் உயிர் அழிகுவை!’ என,
வலியுறுத்தினன், அவனிபன் மதலையை, வலிய
வச்சிரன் மதலைதன் மதலையே.

ஞெலி மரத்தின்உம் – அரணிக்கட்டையினின்று உண்டாவதனினும்,
மனன் எரி எழ எழ-மனத்தில் கோபாக்கினி மிகுதியாக உண்டாக, நிருபர் –
அரசர்கள், விட்டன-(எதிர்) செலுத்தினவையான, கச ரத துரகம்உம் – யானைகளும்
தேர்களும் குதிரைகளும் (எல்லாம்), மெலிவு எழ – தளர்ச்சிமிக, பிறகு இடஉம்-
பின்னிட்டுஓடவும், (நீ), நின் ஒரு தனி விறல் குறித்து-(துணையில்லாமல்) தனிப்பட்ட
நின் ஒருத்தனது வலிமையை நன்குமதித்துக்கொண்டு, இரதம்உம் எதிர் கடவினை –
தேரையும் (என்) எதிரிற் செலுத்தினாய்; (இங்ஙனம்), ஒலி படுத்து எதிர் வரின் –
ஆரவாரத்தை மிகுதியாகச்செய்து எதிரில்வந்தால், விரி சுடர் எதிர் உலவு
விட்டிலின்- பரவியெழுகிற விளக்கி னெதிரிற்பட்ட விட்டிலென்னுஞ்சிறுபறவை
போல உயிர்அழிகுவை – இறப்பாய், என- என்று, அவனிபன் மதலையை –
துரியோதனராசன்மகனான இலக்கணனை (நோக்கி), வலிய வச்சிரன் மதலைதன்
மதலை -வலிமையையுடைய வச்சிராயுதத்தையுடைய இந்திரனது மகனான
அருச்சுனனுடைய புத்திரனாகிய அபிமன், வலி உறுத்தினன்-வலிமையோடு
உறுத்திக்கூறினான்: (எ-று.)-இது – அபிமனுடைய வீரவாதம்.

     ஞெலிமரம் – தீக்கடைந்தெடுக்கப்படும் மரம்; “அரணி ஞெலி கோல்
ஞெகிழிதீக்கடைகோல்” என்பது பிங்கலந்தை; “தீயைத்தரு கோலே ஞெலிகோ
லென்ப” என்றநிகண்டுங் காண்க. விட்டில்-பறந்து விளக்கில் வீழ்ந்து அழிவதொரு
செந்து.        

இவனும், அப்பொழுது எதிர் ஒலி என, நனி இகல்
அருச்சுனன் மதலையை, ‘உனது உயிர்
அவனிபர்க்கு எதிர் கவருவன், ஒரு நொடி அளவையில்
பொருது!’ என, முனை அணுகினன்.
சிவன் வளைத்த பொன்மலையினும் வலியின சிலை
வளைத்தனர் இருவரும்; எறிதரு
பவனன் மைக் கடல் வடவையின் முனிதரு பருவம்
ஒத்தது, படுகளம் முழுதுமே.

இவன்உம் – இலக்கணனும், அப்பொழுது-, எதிர் ஒலி என –
பிரதித்தொனிபோல, நனி – மிகுதியாக, இகல் அருச்சுனன் மதலையை-வலிய
அருச்சுனனுக்குக் குமாரனான அபிமனை (நோக்கி), ‘(யான்), பொருது – போர்
செய்து,ஒருநொடி அளவையில்- ஒருகைந் நொடிப்பொழுதினுள்ளே, உனது உயிர் –
உன்உயிரை, அவனிபர்க்கு எதிர்- அரசர்களெதிரில், கவருவன் – வாங்கிவிடுவேன்,’
என- என்று (வீரவாதஞ்) சொல்லிக்கொண்டு, முனை அணுகினன்-

     எதிரிற் சமீபித்தான், (பின்பு), இருவர்உம், இந்த இரண்டுபேரும் சிவன்
வளைத்த பொன் மலையின்உம் வலியின் சிலை வளைத்தனர்-சிவபிரான் (முன்பு
ஒருகால் வில்லாக) வணக்கிய பொன்மயமான மகாமேருகிரியினும்
வலிமையையுடைய (தம்) வில்லை வளைத்துப் பொருதார்கள்: (அச்சமயத்தில்), படு
களம்முழுவதும்-அப்போர்க்களம் முழுவதும், எறிதரு பவனன்-வீசுகிற காற்று, மை
கடல் வடவையை முனிதரு-கரியகடலிலுள்ள படபாமுகாக்கினியைச் சினந்து
எழுப்புகிற, பவனம்-காற்றை, ஒத்தது-; (எ – று.)

     தன்னைநோக்கி அபிமன் கூறியவாறே இலக்கணன் தான் அவனைநோக்கிக்
கூறினா னென்பதை, ‘எதிரொலியென’என்ற உவமையால் விளக்கினார், பவநம்-
வடசொல். ஏறிதருபவனன் மைக்கடல்வடவையை முனிதரு பவன மொத்தது-
போர்க்களம் மிகக் குழப்பமடைந்தது என்றவாறாம். எரிகிற நெருப்பைக் காற்று
மிகுவித்த வியல்பு. பவநம்-இடத்தையென்று கூறுவாருமுளர். பி – ம்: வடவையின்.
முனிதருபருவம்.

துரகதத்து உடல் கெழுமின சில கணை; துவசம்
அற்றிட விரவின சில கணை;
இருவர் நெற்றியும் எழுதின சில கணை; இரு
புயத்திடை சொருகின சில கணை;
அரணி ஒத்து எரி கதுவின சில கணை; அகல்
முகட்டையும் உருவின சில கணை;
முரண் இலக்கணகுமரனும் அபிமனும், முடுகி,
இப்படி முரண் அமர் புரியவே,

இதுவும், மேற்கவியும் – குளகம்.

     (இ-ள்.) (இருவரும் ஒருவர்மேல்ஒருவர் எதிர்த்து எய்த அம்புகளுள்), சில
கணை-சிலஅம்புகள், துரகதத்து உடல்-(எதிரியின்) தேர்க்குதிரைகளின் உடம்பில்,
கெழுமின-நிறைந்தன; சிலகணை-, துவசம் அற்றிட – கொடிஅறும்படி, விரவின –
கலந்தன; சிலகணை-, இருவர் நெற்றிஉம்-இரண்டுபேரது நெற்றியிலும்,  எழுதின-
பதிந்தன; சிலகணை,-    இரு புயத்திடை இரண்டு தோள்களிலும், சொருகின –
தைத்தன;சிலகணை-, அரணி ஒத்து அரணிக்கட்டைபோன்று, எரி கதுவின-தீயை
உண்டாக்கின, சிலகணை-, அகல் முகட்டைஉம்-பரந்த ஆகாயத்தின்
மேலிடத்தையும், உருவின-ஊடுருவிச்சென்றன; முரண்- வலிமையையுடைய,
இலக்கணகுமாரனும் அபிமனும்-, முடுகி-முனைந்து, இ படி-இவ்வாறு, முரண் அமர்
புரிய-கொடும்போரைச்செய்ய,-(எ – று.) -“கணை ***முழுகின’ என அடுத்தகவியோடு
முடியும்; இனி, இச்செய்யுளைக் குளகமாக்காமல் ‘அமர்புரிய’என்பதை, ‘கெழுமின’
என்பது முதலியவற்றோடு முடித்தலும் ஒன்று. அரணி – தீக்கடைகோல்.

மழை முகிற்குலம் நிகர் திரு வடிவினன் மருகன்
முட்டியும், நிலையும், மெய் வலிமையும்,
அழகு உறத் தொடு கணை குருபதி மகன்
அவயவத்தினில் அடைவுற முழுகின;
கழல்கள் அற்றன; இரு தொடை நழுவின; கவசம்
அற்றது; கர மலர் புயமுடன்
முழுதும் அற்றன; ஒளி விடு நவ மணி முகுடம்
அற்றது, முகிழ் நகை முகனொடே.

மழை – மழையைப்பொழிகிற, முகில்-காளமேகத்தின், குலம்-இனத்தை, நிகர்-ஒத்த, திருவடிவினன்-(கரிய) திருமேனியையுடைய கண்ணனுக்கு, மருகன்-
மருமகனான அபிமன், முட்டிஉம்- (வில்லைப்பிடிக்குங்)கைப்பிடியும், நிலைஉம் –
நிற்கிறநிலைமையும், மெய் வலிமைஉம்-தேகபலமும், அழகு உற – அழகாகப்
பொருந்த, தொடு-எய்த, கணை-அம்புகள்,குரு பதி மகன்-குருகுலத் தலைவனான
துரியோதன புத்திரனாகிய இலக்கணனது,அவயவத்தினில்-உடம்பின் உறுப்புக்களில்,
அடைவு உற – பதியும்படி, முழுகின -முழுவதுந் தைத்தன; (அவற்றால், அவனது),
கழல்கள்- கால்கள், அற்றன -அறுப்புண்டன; இரு தொடை – இரண்டு
தொடைகளும், நழுவின – கீழ்விழுந்தன;கவசம்-உடற்கவசம், அற்றது-அறுபட்டது:
கரம் மலர் – தாமரைமலர்போன்ற கைகள்,பயமுடன்-தோள்களுடனே, முழுதும்
அற்றன – முழுவதும் அறுபட்டன; ஒளிவிடுஒளியைவீசுகிற, நவமணி –
நவரத்தினங்களைப் பதித்த, முகுடம் -கிரீடம், முகிழ்நகை முகனொடே -அரும்புகிற
(புன்)  சிரிப்பையுடைய முகத்துடனே, அற்றது-; (எ -று.)

முட்டி-முஷ்டி யென்னும் வடசொல்லின் திரிபு, நவமணி – கோமேதகம், நீலம்,
பவழம், புஷ்பராகம், மரகதம், மாணிக்கம்’ முத்து, வைடூரியம். வைரம் என்பன.
முகுடமெனினும் மகுட மெனினும் ஓக்கும். ‘முகிழ்நகை முகன் என்றதனால், போரில்
இலக்கணனுக்கு இருந்த உற்சாகம் விளங்கும். முகன் முகுடத்தொடு அற்றது என
உருபுபிரித்துக்கூட்டி யுரைக்க.

இலக்கணகுமரன், வெங் கான் எரித்தவன்
குமரன் ஏவால்,
அலக்கண் உற்று, ஆவி மாய்ந்தான், அமரிடை’
என்று கேட்டு,
கலக் கணீர் சொரிய நின்று, கண்ணிலி
குமரன் வெம்பி,
வலக்கண் நேர் முனிவரோடும் மன்னவரோடும்
சொல்வான்:91. – புதல்வனிறந்ததுகேட்டுத் துரியோதனன் கண்ணீர்வடித்து வெம்பி
துரோணன் முதலியவரோடு சில கூறலுறுதல்.

(இவ்வாறு), ‘இலக்கணகுமரன்-, வெம் கான் எரித்தவன் குமரன்
ஏவால்-கொடிய காண்டவவனத்தை எரியச் செய்திட்ட அருச்சுனனுக்குப்
புத்திரனானஅபிமன்யுவின் அம்புகளால், அமரிடை-போரில், அலக்கண் உற்ற-
துன்பமடைந்து,ஆவி மாய்ந்தான் – உயிரொழிந்தான்’, என்று கேட்டு – என்று
கேள்விப் பட்டு, கண்இலி குமரன் – பிறவிக்குருடனான திருதராட்டிரனுக்குப்
புத்திரனான துரியோதனன்,கலம் கண் நீர் சொரிய நின்று- மிக்க கண்ணீர்
வடிய நின்று, வெம்பி -தாபங்கொண்டு, வலக்கண் நேர்-(தனக்கு)
வலக்கண்ணையொத்த, முனிவரோடுஉம்-(துரோணன் கிருபன் முதலிய),
அந்தணர்களுடனும், மன்னவரோடுஉம்-அரசர்களுடனும், சொல்வான் –
(ஒருவார்த்தை) சொல்பவனானான்; (எ – று.)-அதனை அடுத்த கவியிற் காண்க.

     கிருஷ்ணனும் அருச்சுனனும் ஒருநாள் பூம்பந்து விளையாடுகையிலே,
அக்கினிபகவான் மிகப்பசித்து அந்தணவடிவங் கொண்டு வந்து ‘இந்திரனது
காவற்காடாய் யாவர்க்கும் அழிக்கவொண்ணாத படியாய் நிலவுலகத்திலிருக்கின்ற
காண்டவவனமென்னும் பூஞ்சோலையை அதிலுள்ளசராசரங்களுடனே எனக்கு
விருந்திடவேண்டும்’ என்று வேண்ட, கிருஷ்ணஅருச்சுனர்கள் அங்கேபுக்கு ஒதுங்கி
யிருக்கின்ற அசுரர் முதலிய துஷ்டர்களைஅழித்தருள வேண்டுமென்னும்
நோக்கத்தால், ‘ நீ இதனைப் புசி’ என்று இசைந்துஅளிக்க, உடனே நெருப்புப்பற்றி
யெரித்ததென்பது. (கதை). அங்ஙனம்எரிக்கையில்,இந்திரன் சினந்து பெய்வித்த
பெருமழையைச் சரக்கூடுகட்டித் தடுத்தும், கோபித்துத்தேவர்கூட்டத்துடன் வந்து
பொருத இந்திரனைப் புறங்கொடுத்தோடச்செய்தும்.அவ்வனத்தினின்று தப்பியோடுகிற
பிராணிகளை அம்பெய்து கொன்று தழலில்விழுத்தியும் பலவாறு உதவிபுரிந்தமையால்,
அருச்சுனன் ‘வெங்கானெரித்தவன்‘எனப்பட்டான்.

     கலம் – ஒரு முகத்தலளவு; பன்னிரண்டுமரக்கால் கொண்டது: இதனை இங்கு,
மிகுதியை விளக்குதற்கு எடுத்துக்கூறினார். “கண்ணிற்சிறந்த வுறுப்பில்லை”
என்றபடிகண் சிறந்த உறுப்பாதலால், சிறந்த அங்கமாகியவ ரென்றற்குக் கண்ணை
உவமைக்கூறினார். ஆடவர்க்கு வலக்கண் சிறத்தலால். அதனைக் குறித்தார். இனி,
வலக்கண் என்பதற்கு- மேன்மையையுடைய கண்ணென்றல். பொருத்தம்;
“இடக்கணாகவலக்கணாக விரண்டு மொக்கும்” எனக் கீழ்ச்சஞ்சயன்றூதுசருக்கத்தில்
வந்தது காண்க.

     இதுமுதற் பதினாறு கவிகள் கீழ்ப் பதினொன்றாம்போர்ச்சருக்கத்தின்
முதற்கவிபோன்ற அறுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தங்கள்

மன்னவர் மைந்தரோடு என் மைந்தனைக்
கொன்ற மைந்தன் –
தன்னையும் இமைப்பில் சென்று சயம் உறச்
செகுத்திலீரேல்,
பின்னை இவ் அரசும் வேண்டேன்; பெருமித
வாழ்வும் வேண்டேன்;
என் உயிர் தானும் வேண்டேன்’ என்றனன்,
இராசராசன்.92.-துரியோதனன் ‘என்மைந்தனைக் கொன்றவனைக்கொல்லாவிடின்
இவ்வரசு முதலியன வேண்டா’ எனல்.

மன்னவர் மைந்தரோடு-(பல) ராசகுமாரர்களுடனே, என் மைந்தனை
– என்மகனான இலக்கணனையும். கொன்ற-, மைந்தன் தன்னைஉம்-அருச்சுனன்
புத்திரனான அபிமந்யுவையும், இமைப்பில் – கண்ணிமைப்பொழுதிலே.
(நீங்கள்).சென்று-, சயம் உற-வெற்றியுண்டாக, செகுத்திலீர் ஏல்-பகையழித்திடீராயின்,
பின்னை-பின்பு. (யான்). இ அரசுஉம் வேண்டேன்-இந்த அரசாட்சியையும்
விரும்பேன்: பெருமிதம் வாழ்வுஉம் வேண்டேன் – பெருந்தன்மையையுடைய இன்ப
வாழ்க்கையையும் விரும்பேன்; என் உயிர் தான்உம் வேண்டேன்-என்று உயிரையும்
விரும்பேன், ‘என்றனன்-என்று(தன்சேனைவீரர்களை நோக்கிக்) கூறினான்:
இராசராசன் – துரியோதனன்; (எ – று.)-பி-ம்: கொன்றுசயமுற.

தனித் தனி அரசர் எல்லாம், தாள் இணை
பணிந்து போற்றி,
‘பனித்து உயிர் பொன்றி வீழ, பார்த்தன் மா
மகனை, இன்னே
குனித்த வில் நிமிராவண்ணம் கொடுஞ் சமர்க்
கொன்றிலேமேல்,
இனித் தனு என்று போரில் எடுக்கிலேம்,
இறைவ!’ என்றார்.93.- அபிமனைக் கொல்வதாக அவர்கள் சபதஞ்செய்தல்.

(அதுகேட்டு, அரசர் எல்லாம்-, தனி தனி-, தாள் இணைபணிந்து-
(துரியோதனனது) உபயபாதத்தை வணங்கி, போற்றி – துதித்து, ‘இறைவ-அரசனே!
பனித்து உயிர் பொன்றி வீழ-(உடம்பு) நடுக்கமுற்று உயிரொழிந்து கீழ்விழும்படி,
பார்த்தன் மா மகனை-அருச்சுனனுக்குச் சிறந்த புத்திரனான அபிமனை, இன்னே-
இப்பொழுதே, குறித்த வில் நிமிரா வண்ணம்-வளைத்தவில் வளைவு மாறாமல்,
கொடுசமர்-கொடிய போரில், கொன்றிலேம் ஏல் -(நாங்கள்) கொன்றிடோமாயின்,
இனி-பின்பு, தனு என்று போரில் எடுக்கிலேம்-வில் என்று யுத்தத்தில்
ஏந்துவோமல்லோம்,’என்றார் – என்று சபதங் கூறினார்கள்

குன்ற வில்லவனை ஒக்கும் குமரனும்,
பகைகள் ஆறும்
வென்ற வில் முனியும், மற்றும் வேந்தராய்
அருகு தொக்கு
நின்ற வில் விருதர் யாரும், நிருபன் மா
மதலை ஆவி
பொன்ற வில் வளைத்தோன் தன்னைப் புலி
வளைந்தென்னச் சூழ்ந்தார்94.- இரண்டுகவிகள் – அசுவத்தாமன் துரோணன்  முதலியோர்பலர்
திரண்டுவளைந்து, அபிமன்மீது கோடிக்கணக்காக அம்புபொழிதலைக்கூறும்.

குன்றம் வில்லவனை ஓக்கும் – மேருமலையை வில்லாகக்கொண்ட
சிவபிரானைப் போன்ற, குமரன்உம் – துரோணபுத்திரனான அகவத்தாமனும்,
பகைகள் ஆறுஉம் வென்ற-உட்பகையாகிய ஆறு குற்றங்களையும் சயித்த,
வில்முனிஉம்-வில்லில்வல்ல துரோணாசாரியனும், மற்றும்-, வேந்தர் ஆய்-
அரசர்களாய், அருகுதொக்கு நின்ற-பக்கத்திற் கூடி நின்ற, வில் விருதர் யார்உம்-வில்
வீர ரெல்லோரும், நிருபன் மா மதலை ஆவி பொன்ற வில் வளைத்தோன்தன்னை-
துரியோதனராசனது சிறந்த குமாரனான இலக்கணனது உயிர் ஒழியும்படி வில்லை
வளைத்துப் பொருத அபிமனை, புலி வளைந்து என்ன சூழ்ந்தார் – புலிகள்
சூழ்ந்துகொண்டாற் போலச் சூழ்ந்து கொண்டார்கள்; (எ – று.)

     பகைகள் ஆறு-காமம், கோபம், லோபம், மோகம், மதம், மாற்சரியம் என்பன;
வடநூலார் ‘அரிஷட்வர்க்கம்’ என்பர். இவற்றை வெல்லுதல் – இவை தன்னிடம்
உண்டாகாதபடி விலக்குதல். புலி வளைந்தென்ன-புலியைச் சூழ்ந்தாற்போல எனினும்
அமையும்.    

போர் ஒரு முகத்தால் அன்றி, பொருப்பு
ஒன்றில் புணரி ஏழும்
கார் ஒரு முகமாய் மொண்டு கணக்கு அறப்
பொழியுமாபோல்,
தேர் ஒரு வளையமாகச் சென்று, திண்
சிலைகள் கோலி,
ஓர் ஒரு வீரர் கோடி ஆசுகம் உடற்றினாரே.

கார் – மேகங்கள், புணரிஏழ்உம்- ஏழுகடல்களின் நீரையும், மொண்டு-
முகந்து எடுத்துக்கொண்டு. பொருப்பு ஒன்றில்-ஒருமலையின்மேல், ஒரு முகம் ஆய்-
ஒரே தன்மையாய், கணக்கு அற பொழியும் ஆபோல் – அளவில்லாமல்
மழைபொழியும் விதம் 
போல, போர் – அப்போரில், ஒரு முகத்தால் அன்றி -ஒரு
முகமாக வல்லாமல் [பலமுகங்களாக]. தேர் ஒரு வளையம் ஆக சென்று –
(அபிமனது) தேரைச் சுற்றிலும்  ஒரு வளையம்போலப் போய்ச் சூழ்ந்துகொண்டு,
திண் சிலைகள் கோலி- வலிய (தம்தம்) விற்களை வளைத்து, ஓர் ஒரு வீரர் –
ஒவ்வொரு (பகை) வீரரும், (அபிமன்மேல்), கோடி ஆசுகம்
உடற்றினார்-கோடிக்கணக்கான அம்புகளைப் பெருங்கோபத்தோடு செலுத்தினார்கள்:
(எ – று.)

     எவ்வளவு மழை பொழிந்தாலும் அதனால் மலை கலங்காதவாறு போல,
அபிமன் கலங்காநிலைமைய னென்பதை உவமையால் விளக்கினார். புணரி –
(ஆறுகளோடு) புணர்வதுஎனக் காரணப்பெயர்; புணர்தல்-கலத்தல்.  

தரணிபர் எய்த எய்த சரங்களைச் சரங்களாலே
முரண் அற விலக்கி, பாதம் முடி அளவாக,
அந்தக்
கரணமும் புலனும் மெய்யும் கலங்கி, அக்
கணத்தில் யாரும்
மரணம் என்று உன்ன, வல் வில் வளைத்தனன்,
வளைவு இலாதான்.96.- நான்குகவிகள் அபிமன்கடுமையாகப்பொரப் பலரும் ஆவிமாள,
சகுனிதுச்சாதனன்முதலியோர் முதுகுகொடுத்தோடினமை கூறும்.

வளைவு இலாதான்-(பகைவர்க்கு) வணங்குத லில்லாதஅபிமன்,
தரணிபர் எய்தஎய்த சரங்களை-அரசர்கள்(தன்மேல்) மிகுதியாக எய்த அம்புகளை,
சரங்களால்ஏ-(தன்) அம்புகளாலே, முரண் அற – வலிமைகெட, விலக்கி – தடுத்து,-
பாதம் முடி அளவு ஆக – கால் முதல் தலைவரையில், மெய்உம்- உடம்பும்,
புலன்உம்- உறுப்புக்களும், அந்தக்கரணம்உம் – மனமும், கலங்கி-, யார்உம் –
எல்லாவீரரும், அ கணத்தில் -அந்தக்ஷணத்திலே, மரணம் என்று உன்ன-
(தந்தமக்கு)அழிவென்று நினைக்கும்படி, வல் வில் வளைத்தனன் – வலியவில்லை
வளைத்துப்பொருதான்; (எ – று.)-முரண் அற – மாறுபடுதலில்லாமல் எனினுமாம்:
நேராகஎன்றபடி

ஆகவம்தன்னில் முந்த மனு குலத்து அரசன்
பட்டான்;
கேகயன் குமரன் மாய்ந்தான்; கிருபன் வில்
ஒடிந்து மீண்டான்;
மாகதக் குரிசிலோடு மகுடவர்த்தனர் அநேகர்
நாகம் உற்றனர்கள்; கோடி நரபதி குமரர் வீந்தார்.

(அப்பொழுது அபிமன் அம்புகளால்), ‘ஆகவந்தன்னில்- போரிலே,
முந்த-முன்னே, மனு குலத்து அரசன் மனு சக்கரவர்த்தியின் குலத்திற் பிறந்த
அரசன்,பட்டான்-இறந்தான்: கேகயன் குமரன்-கேகயதேசத்தரசனுக்குக் குமாரன்,
மாய்ந்தான்.இறந்தான்; கிருபன் – கிருபாசரரியன், வில் ஒடிந்து-, மீண்டான்-
புறங்கொடுத்துச்சென்றான்; மாகதம் குரசிலோடு – மகததேசத்து அரசனுடனே,
மகுடவர்த்தனர் அநேகர்- அநேகம் மகுடவர்த்தனராசர்கள், நாகம் உற்றனர்கள்-
வீரசுவர்க்க மடைந்தார்கள்; கோடி – கோடிக்கணக்கான, நரபதிகுமார் –
இராசகுமாரர்கள், வீழ்ந்தார்- இறந்து விழுந்தார்கள்; (எ – று.)-பி -ம்: வீந்தார்.

     மரித்தா ரென்ற ஒரு பொருளை, பட்டான், மாய்ந்தான், நாக முற்றனர்கள்,
வீழ்ந்தார் என்ற பலசொற்களால் குறித்தது-பொருட்பின்வருநிலையணி. கிருபன்
கௌதமமுனிவனது பௌத்திரன்; சரத்துவந்தமுனிவனது குமாரன்; துரோணன்
மனைவியாகிய கிருபியினுடன் பிறந்தவன்: கௌரவ பாண்டவர்க்கு முதல்
வில்லாசிரியன். நாணற்காட்டிற் பிறந்திருந்த முனிமக்களை வேட்டைக்கு வந்த
சந்தனுமகாராசன் பார்த்துக் கிருபையினால் பரிக்கிரகித்ததனால். கிருபனென்றும்
கிருபியென்றும் பெயருண்டாயின வென விஷ்ணுபுராணத்தால் அறிக.
வைவகவதமநுகுலத்தவனான கோசலன் பெயர் பிருகத்பல னென்றும்,
கேகயன்பெயர்பிருகத்க்ஷத்ரனென்றும், மாகதன் பெயர் அசுவகேது வென்றும்
முதனூலால்தெரிகிறது.      

சிலை அழிந்தவர் அநேகர்; தேர் அழிந்தவர் அநேகர்;
தலை அழிந்தவர் அநேகர்; தாள் அழிந்தவர் அநேகர்;
நிலை அழிந்தவர் அநேகர்; நெஞ்சு அழிந்தவர் அநேகர்;
துலை அழிந்தவர் அநேகர்; தோள் அழிந்தவர் அநேகர்.

சிலை – வில். தாள் – கால். நிலை – உடம்பு;
உறுதிநிலைமையுமாம். துலை -வலிமை: இது – நிறைக்கோலின்பெயர்:
இலக்கணையால், பாரமெனப் பொருள்பட்டு வலிமையென்னுங் கருத்தில்
வந்ததுபோலும்: ஒப்பு என்றாரு முளர்.

இனைவு அருஞ் சகுனி மைந்தர் எழுவரும்,
துணைவர் உள்ளார்
அனைவரும், ஆவி மாள அமர் அழிந்து,
அவனும் போனான்;
துனை வரும் புரவித் தேர்த் துச்சாதனன்
துணைவரோடு
முனை வரும் அளவில், பாலன் முனை வெரீஇ,
முதுகு தந்தான்.

இனைவு அரு – வருந்துதலில்லாத, சகுனிமைந்தர் எழுவர்உம் –
சகுனியின் குமாரர் ஏழுபேரும், துணைவர்உள்ளார் அனைவர்உம்-(அவனுக்கு)
உடன்பிறந்தவராயுள்ளவ ரெல்லோரும், ஆவி மாள – உயிரொழிய, அவன்உம்-
சகுனியும், அமர் அழிந்து போனான் – போரில் தோற்றுச் சென்றான்: துனைவரும் –
விரைந்து செல்கிற, புரவி-குதிரைகளைப்பூட்டிய, தேர்-தேரையுடைய, துச்சாதனன்-
துணைவரோடு- (தன்) தம்பிமாருடனே, முனை வரும் அளவில்-எதிரில்
வந்தமாத்திரத்தில், பாலன் முனை வெரீஇ- இளங்குமாரனான அபிமனது
போருக்குஅஞ்சி. முதுகு தந்தான்-: (எ-று.)-பி-ம்: அம்பால் முகம்வெரீஇ

காவலர் உடைதல் கண்டு, கன்னனை அரசன்
பார்த்து,
‘கேவலம் அல்ல இப் போர், கிரீடி வந்து
இவனைக் கூடின்;
நீ வலையாகின் சென்று, நேர் மலைந்து
அடர்த்தி’ என்ன,
கோவலன் மருகன்தன்னைக் குறுகினன்,
கொடையால் மிக்கோன்.100.- துரியோதனன் சொல்லக்
கர்ணன் அபிமனுடன் பொரச் செல்லுதல்
.

காவலர் – (இந்த) அரசர்கக்ளெல்லோரும், உடைதல்-
(அபிமன் முன்) அழிதலை, கண்டு-பார்த்து, அரசன்-துரியோதனன். கன்னனை
பார்த்து-கர்ணனைநோக்கி, ‘கிரீடி வந்து இவனை கூடில்- அருச்சுனன் வந்து
இவ்வபிமனைக் கூடிவிட்டால், (பின்பு) இபோர், கேவலம் அல்ல – இந்தப் போர்
(வெல்ல) எளிதன்று: (ஆதலின் விரைவிலே.) நீ வலை ஆகின் சென்று நேர்
மலைந்து அடர்த்தி – நீ வல்லவனாவையானால் (எதிரிற்) சென்று போர் செய்து
(இவ்வபிமனை) அழிப்பாய்,’ என்ன-என்றுசொல்ல, (அப்படியே), கொடையால்
மிக்கோன் – ஈகைத்தொழிலாற்சிறந்த கர்ணன், கோவலன் மருகன் தன்னை
குறுகினன் – கண்ணன்மருமகனான அபிமனைச் சமீபித்தான்

மன் முரி குவவுத் திண் தோள் வாசவன்
பேரன்தன்னோடு
அல் முரி இரவி மைந்தன் அருஞ் சமர்
விளைத்த காலை,
செல் முரிந்தென்ன ஏறு தேர் முரிந்து,
எடுத்த வாகை
வில் முரிந்து, உள்ளம்தானும் மிக முரிந்து,
உடைந்து மீண்டான்.101. கர்ணனுந் தோற்றுப் போதல்.

மன் – அரசர்கள், முரி- அழிதற்குக்காரணமான, குவவுதிண் தோள்-
திரட்சியையுடைய வலிய தோள்களையுடைய, வாசவன் பேரன்தன்னோடு –
இந்திரனது பௌத்திரனான அபிமனுடனே, அரு சமர் விளைத்த காலை –
(செய்தற்கு) அரியபோரை மிகுதியாகச்செய்தபொழுது, அல்முரி இரவி மைந்தன் –
இருள் அழிந்தற்குக் காரணமான சூரியனுக்குப் புத்திரனான கர்ணன், செல்முரிந்து
என்ன-மேகம் மிகச்சிதைந்தாற்போல, ஏறு தேர் முரிந்து- (அபிமனம்புகளால் தான்)
ஏறியிருந்த தேர் உடைந்து, எடுத்த வாகை வில் முரிந்து-(கையிற்பிடித்த)
வெற்றியைத்தருகிற வில் முரிபட்டு, உள்ளம் தான்உம் மிக முரிந்து- மனமும்
மிகக்கலங்கி, உடைந்து- தோற்று, மீண்டான் – திரும்பினான் [புறங்கொடுத்தான்]:
(எ-று.)  

     மன் என்பது- அரசச்சாதியை யுணர்த்திற்று. மல் முரி எனப் பிரித்து,
மற்போர்த்தொழிலிற் சிரமப்பட்ட என்றும், மற்போர்வீரரை அழிக்கவல்ல என்றும்
பொருள்கொள்ளலும் அமையும். விரைந்து செல்லுதலிலும். பெரிய வடிவத்திலும்,
மேகத்துக்குத் தேர் உவமை. 

தேறினான்; தேறி, துச்சாதனன் தரும் செம்
பொன் தேரின்
ஏறினான்; மீள வில்லும் எரி கணை பலவும்
கொண்டு
தூறினான்; அபிமன் செங் கைத் தொடைகளால்
எதிர்த்தல் அஞ்சி
மாறினான், முகமும் தேரும் வரி வில்லும்
அழிந்து மன்னோ.102.-  கர்ணன் அபிமனை மீண்டும் எதிர்த்துத் தோற்றல்.

(அஞ்சிப்புறங்கொடுத்த கர்ணன், பின்பு), தேறினான்-
மனந்தைரியப்பட்டான்; தேறி-தைரியப்பட்டு, துச்சாதனன் தரும் செம் பொன்
தேரின்- துச்சாதனன் கொடுத்த சிவந்த பொன்மயமான தேரில், ஏறினான் –
ஏறிக்கொண்டு, வில்உம் எரிகணை பலஉம் கொண்டு- வில்லையும் அழிக்கிற
அநேக பாணங்களையும் எடுத்துக்கொண்டு, மீள-மறுபடியும், தூறினான்-
(அவ்வம்புகளைச்) சொரிந்து, அகிமன் செம் கை தொடைகளால் – அபிமந்யுவின்
சிவந்த கையால் விடப்பட்ட பாணங்களால் முகம்உம் தேர்உம் வரிவில்உம்
அழிந்து- (தன்னுடைய)முகமும் தேரும் கட்டமைந்த வில்லும் அழிபட்டு, எதிர்த்தல்
அஞ்சி மாறினான் – அவனெதிரில்நிற்றற்கும் பயந்து புறங்கொடுத்தான்; (எ – று.)-
மன் ஓ – ஈற்றசை.

வில்லுங்கொண்டு எரிகணைபலவும் தூறினான் என்றும், தேரும் வரிவில்லும்
அழிந்து முகமும் மாறினான் என்றும் மொழி மாற்றி யுரைப்பினும் அமையும்.
தூறுதல்-சிதறுதல். எதிர்த்தல்-பொருதலுமாம்.

தூண்டினன், மேலாள் ஆகி, துனை பரித்
தடந் தேர் தூண்டி,
மீண்டனன் காலாள் ஆகி விழுந்தனன்;
தெளிந்து, மீளத்
தாண்டின பரித் தேர் தேடி, சாபமும் தேடி,
நெஞ்சால்
பூண்டனன், பொருவான்-தன் கைப் பொரு
கணைப் புயங்கம் போல்வான்.103.- துரியோதனன் தூண்டச் சென்ற கர்ணன் தோற்று மீண்டும்
அபிமனோடுபொரச் செல்லுதல்.

தன்  கை – தனதுகையிலுள்ள, பொரு கணை-போர்ச்செய்கிற
அம்பின் வடிவமான, புயங்கம்-நாகத்தை, போல் வான்-ஓப்பவனான கர்ணன்,
(இங்ஙனம்), தூண்டினன்-(துரியோதனனால்) தூண்டப்பட்டவனாய், மேல் ஆள்
ஆகி-(தேரின்) மேல்நிற்கும் வீரனாய், துனை பரி தட தேர் தூண்டி -விரைந்து
செல்லுகிற குதிரைகளைப் பூண்ட பெரிய தேரை (முன்னே) செலுத்திவந்து,
(உடனே)அம்புகளால் யாவும் அழிந்து), கால் ஆள் ஆகி மீண்டனன்-
(வாகனமின்றிக்)கால்களால்நடக்கும் வீரனாய்த்திரும்பி, விளிந்தனன்-
தோற்றழிந்தான்; (அங்ஙன்தோற்றவன்), தெளிந்து-மனந்தைரியப்பட்டு, மீள-
மறுபடி, தாண்டினபரி தேர் தேடி -தாவிச்செல்லுந்தன்மையனவான குதிரைகளைப்
பூண்ட தொரு தேரைத்தேடி,(அதன்மேலேறி), சாபம்உம் தேடி-வில்லொன்றையுந்
தேடியெடுத்துக்கொண்டு,பொருவான் – போர் செய்யுந்தொழிலை, நெஞ்சால்
பூண்டனன் -மனத்தினால் ஏற்றுக்கொண்டான்; (எ-று.)-போர்செய்யச் சித்தனானான்
என்பதாம். பி-ம்: விழுந்தனன்றெளிந்து.

     ‘தன்கைப்பொருகணைப்புயங்கம்’ என்றது. கர்ணன்கையிலுள்ள
நாகாஸ்திரத்தை: அதன் வரலாறு;- 
காண்டவதகநகாலத்தில் அவ்வனத்தினின்று
ஓடுகிற பிராணிகளை அருச்சுனன் அம்பெய்துகொன்று அத்தழலிலே விழுத்தி
வருகிறபொழுது, தக்ஷகனென்னும் நாகராசனதுமனைவி தன் குழந்தையான
அசுவசேநனென்னுஞ் சிறுநாகத்தைத் தன்வாய்க்குள் மறைத்து வைத்துக்கொண்டு
அங்கிருந்து ஆகாயமார்க்கத்தில் எழும்ப, அதுகண்டு பார்த்தன் தன் பாணத்தால்
அந்த நாககன்னியின் தலையைத் துணிக்க. உடம்பு நெருப்பிலும் தலை
வெளியிலுமாக விழுந்தது; அப்பொழுது அதன் வாயிலிருந்த நாககுமரான்
வால்மாத்திரம் அறுப்புண்டு பிழைத்து  எழுந்து, தன் தாயைக்கொன்ற அவன்மீது
கறுக்கொண்டு, அவனுக்குப் பகைவன் யாரோன்று விசாரித்து, அவனைக்
கொல்லும்பொருட்டு அஸ்திரவடிவமாகக் கர்ணனை அடைந்தன னென்பதாம்.
அந்தநாகத்தைக் கர்ணனுக்கு உவமைகூறினது, கறுவுடைமைக்கும் கொடுமைக்கும்
என்க. முன்னிரண்டடி-அநுவாதமென்னலாம்.

வில் குனித்து, இரவி மைந்தன் விடும் விடும்
கணைகள் பட்டு,
பற்குனன் மைந்தன் திண் தேர்ப் பரிகளும்
பாகும் பட்டு,
முன் குனித்து எய்த வில்லும் முரிந்தது;
மூரித் தேரும்
நிற்கும் நல் நிலைமை குன்றி, நேமியும்
நெறிந்தது அன்றே.104.-  கர்ணனம்புகளால் அபிமன்யுவின் தேர்முதலியன அழிதல்

(இவ்வாறு), இரவி மைந்தன் – கர்ணன், வில் குனித்து – வில்லை
வளைத்து, விடும் விடும் – மிகுதியாகச் சொரிகிற, கணைகள் – அம்புகள், பட்டு –
தைத்ததனால், பற்குனன் மைந்தன் – அருச்சுனபுத்திரனான அபிமனது, திண் தேர்
பரிகள்உம்-வலிய தேரிற்பூட்டிய குதிரைகளும், பாகுஉம் – சாரதியும், பட்டு –
அழிய, முன் குனித்து எய்த வில்உம்- முன்னே வளைத்து அம்பெய்து
கொண்டிருந்த(அவன்கை) வில்லும், முரிந்தது – ஒடிந்தது; மூரிதேர் உம்-
வலிமையையுடையதேரும், நிற்கும் நல் நிலைமை குன்றி நிற்றற்குரிய நல்ல
உறுதிநிலைமைகுறைபட்டு,நேமிஉம் நெரிந்தது- சக்கரங்களுஞ் சிதையப்பெற்றது;
(எ – று.)-அன்று, ஏ -ஈற்றசை; அப்பொழுதே யெனினுமாம்.

     பட்டு என்பது – இரண்டிடத்திலும், பட வென்னுஞ் செயவெ னெச்சத்தின்
திரிபு: முன்னே காரணப்பொருளதும், பின்னேஉடனிகழ்ச்சிக்பொருளதும் எனக்
காண்க. அபிமன்தேர் கோங்குமரக் கொடியையுடைய தென்றும் அவன்தேர்ப்பாகன்
சுமித்திர னென்றும் வடநூலால் தெரிகிறது. தேர்நேமி நெரிந்தது – சினைப்பெயர்
முதல்வினையைக்கொண்ட வழுவமைதி. 

தன்னை அத் தனயன் செய்த தாழ்வு எலாம்
தனையன்தன்னை
பின்னை அத் தந்தை செய்து, பின்னிடாது
அசைந்து நிற்ப,
முன்னைய புரவித் தேரும் மூரி வெஞ்
சிலையும் இன்றி,
மின்னை ஒத்து இலங்கும் வாளோடு அவனிமேல்
விரைந்து பாய்ந்தான்.105.- தேரையிழந்த அபிமன் வாளேந்தித் தரையி லிழிதல்.

தன்னை அதனயன் செய்த தாழ்வு எலாம்-(தந்தையாகிய) தன்னைப்
பிள்ளையாகிய அவ்வபிமன் (முன்னே) செய்த தோல்விகளையெல்லாம், பின்னை-
பின்பு, அ தந்தை – அந்தத்தந்தையாகிய கர்ணன், தனயன் தன்னை செய்து –
பிள்ளையாகிய அவ்வபிமனை (அடைய)ச் செய்து, பின் இடாது-(முன்போலப்)
புறங்கொடாமல், அசைந்துநிற்ப-மகிழ்ச்சிகொண்டு முன்நிற்க, (அபிமன்), முன்னைய
புரவி தேர்உம் மொய்த்த வெம் சிலைஉம் இன்றி – முன் இருந்த குதிரைபூண்ட
தேரும் வலிமையுடைய கொடிய வில்லும் இல்லாமல், மின்னை ஒத்து இலங்கும்
வாளோடு-மின்னலைப் போன்று விளங்குகிற வாளுடனே, அவனிமேல் – தரையில்,
விரைந்து பாய்ந்தான் – துரிதமாய்க் குதித்து இழிந்தான்; (எ – று.)

     தன்னை அத்தனயன் செய்த தாழ்வு – தேரையும், வில்லையும் இழத்தல்;
கீழ்101, 102,103,-ஆங் கவிகளைக் காண்க. ‘தனயன் தன்னை’ என்பதை
உருபுமயக்கமாகத் தனயனுக்கு என்றுங் கொள்லாம். தந்தை –
பெரிய தந்தை. தனயன்-தம்பியின் மகன். கர்ணன் அபிமன்முன்
பலமுறைபின்னிட்டதனைக் கருதி, இங்கே ‘பின்னிடாது’ என்றார். அசைந்து-
களிப்பினாற் கூத்தாடி யென்க. இனி, அசைந்து பின்னிடாது நிற்ப என
மொழிமாற்றினுமாம்; இவ்வுரைக்கு, அசைதல்-சோர்தல் உன்னயப்புரவித்தேரு
மொத்தஎன்ற பாடத்திற்கு, உன்னயம் – அசுவசாஸ்திரமென்பர்

வாளொடு பரிசை ஏந்தி, மண்டலம்
பயிற்றி, இற்றை
நாளொடு துறக்கம் எய்த நயந்தனன்
நின்ற வீரன்,
தோளொடு புரையும் செம் பொன் மேருவைச்
சுடரோன் நாகக்
கோளொடு சூழ்வது என்ன, சுழற்றினான்,
குமரர் ஏறே.06.-  அபிமன் வாளோடு பரிசையேந்தி மண்டலம் பயிற்றுதல்.

இற்றை நாளொடு – இன்றைத்தினத்துடனே [இன்றைத்தினத்திலே
என்றபடி],துறக்கம் எய்த – இறந்து வீரசுவர்க்கத்தையடைய, நயந்தனன் நின்ற –
விரும்பிநின்ற,வீரன்-பராக்கிரமசாலியான, குமார் ஏறு – இராசகுமாரர்களுக்குச்
சிங்கம்போன்றவனான அபிமன்,-வாளொடு பரிசை ஏந்தி-(வலக்கையில்) வாளையும்
(இடக்கையில்) கேடகத்தையும் எடுத்துக் கொண்டு, மண்டலம் பயிற்றி -மண்டலமாகச்
சுற்றிவருதலைச் செய்து,-தோளொடு புரையும் – (தனது) தோளோடு ஒத்த, செம்
பொன்  மேருவை-சிவந்த பொன்மயமான மேருமலையை, சுடரோன்-சூரியன். நாகம்
கோளொடு- பாம்பின் வடிவமான (கேதுவென்னுங்) கிரகத்துடனே, சூழ்வதுஎன்ன-
சுற்றுவது போல, சுழற்றினான்-(கேடகத்தையும் வாளையும் கைகளாற்) சுழற்றினான்.
(எ – று.)

     கேடகம் – எதிரிகள் எறியும் ஆயுதங்களைத் தன்மேற் பட வொட்டாமல்
தடுப்பதொரு கருவி. மண்டலம்பயிற்றுதல்-வட்டமாகவருதல். இடசாரி,வலசாரி,
மண்டலம், நடநம், பவுரி [தானே சுழலுதல்] என்பன-வீரர்க்குஉரிய
கதிவிசேஷங்களாம். ‘தோளொடு புரையும்மேரு’ எனப் பிரசித்த உபமானத்தை
உபமேயமாகவும் உபமேயத்தை உபமானமாகவும் மாற்றிக்கூறியது, எதிர்நிலையணி;
வடநூலார் ‘பிரதீபாலங்காரம்’  என்பர். மேரு-சலியாத அபிமனுடம்புக்கும்,
சூரியமண்டலம் – வட்டவடிவான பரிசைக்கும் நாகக்கோள்-கொடிய வாளுக்கும்
உவமை யெனக் காண்க. கோள்-க்ரஹமென்னும் வடசொல்லின் பொருள்கொண்டது;
(காலத்தை அளந்து) கொள்வ தென்று பொருள்: பகுதிநீண்ட பெயர். குமரர் ஏறு-
மிருகங்களுள் அரசாகிய சிங்கம் போல, இராசகுமாரர்களுள் சிறந்தவனென்க;
அல்லது, பகையரசகுமாரரான யானைகளுக்குச் சிங்கம்போன்றவனெனக்
கொள்ளினுமாம்.        

தேர் போனது; பரி போனது; சிலை போனது;
சிறுவன்
போர் போனது; இனிச் சென்று அமர் புரிவோம்
என நினையா,
கார்போல் நனி அதிரா, இதழ் மடியா,
எறி கடல்வாய்
நீர்போல் உடன் மொய்த்தார்,-வெருவுற்று
ஓடிய நிருபர்.107.- முன்பு தோற்றோடிய நிருபர்
அப்பொழுது ஒரு சேர அபிமன்மேல் நெருங்குதல்.

(அப்பொழுது), வெருவு உற்று ஓடிய நிருபர் – (முன்பு) அச்சம்
மிக்குஓடிப்போன அரசர்கள், ‘சிறுவன் – சிறு பிள்ளையான அபிமானது, தேர்-,
போனது-ஒழிந்தது: பரி-தேர்க் குதிரை, போனது-; சிலை-வில், போனது-; போர்-
(அவனது)யுத்தம், போனது-; இனி சென்று அமர் புரிவோம் – இனிமேல் (நாம்
தைரியமாகப்)போய்ப் போர்செய்வோம்,’ என நினையா என்று எண்ணி, கார்
போல் நனி அதிரா -மேகம்போல மிகுதியாக ஆராவரித்து, இதழ் மடியா –
(கோபத்தால்) உதட்டைக்கடித்துக் கொண்டு, ஏறி கடல்வாய் நீர் போல் –
அலைவீசுகிற கடலில் யாற்று நீர்கள்(ஒருங்குவந்து விழுதல்) போல, உடன்
மொய்த்தார் – ஒரு சேர (அபிமன்மேல்வந்து) நெருங்கினார்கள்; (எ – று.)-
அபிமனுக்குக் கடலுவமைகூறியதனால், அவனதுகம்பீரத்தன்மை விளங்கும்.
பி-ம்: வெருவுறவோடிய.

     இதுமுதற் பத்துக்கவிகள் – பெரும்பாலும் ஈற்றுச்சீரொன்று மாச்சீரும்,
மற்றைமூன்றும் மாங்கனிச்சீர்களுமாகிய கலிவிருத்தங்கள்.

துச்சாதனன் மகன், மன்னர் தொழும் துச்சனி
என்னும்
நச்சு ஆடு அரவு அனையான், ‘இனி நானே
பழி கொள்வேன்,
இச் சாயகம் ஒன்றால்!’ என எய்தான்; அவன்
முடியோடு
அச் சாயகம் வடி வாள்கொடு அறுத்தான்,
அடல் அபிமன்.108.- எதிர்த்துவந்த துச்சாதனகுமாரனை அபிமன் தலையறுத்தல்.

துச்சாதனன் மகன் – துச்சாதனனது புத்திரனான, மன்னர்தொழும்-
அரசர்களால் வணங்கப்படுகிற, துச்சனிஎன்னும்-துச்சனியென்று பெயர் கூறுப்படுகிற,
நஞ்சு ஆடு அரவு அனையான்-விஷத்தையுடைய படமெடுத்து ஆடுகிற
பாம்புபோலக் கொடிய வீரன், ‘இனி- இப்பொழுது, நானே – யான் ஒருவனே, இ
சாயகம் ஒன்றால்-இந்த ஓரம்பினால், பழி கொள்வேன்-(அபிமனைக்கொல்லுதலாகிய)
பழியை ஏற்றுக்கொள்வேன் (தவறாமற் கொல்வேன்), என – என்று (வீரவாதஞ்
செய்துகொண்டு), எய்தான்-(அபிமன்மேல் ஓரம்பைப்) பிரயோகித்தான்; (உடனே),
அடல் அபிமன் – வலிமையையுடைய அபிமந்யு, அவன் முடியோடு – அந்தத்
துச்சனியில் தலையுடனே, அ சாயகம் – அந்த அம்பையும், வடி வாள்கொடு
அறுத்தான் – கூரிய (தன்) வாளினால் அறுத்திட்டான்; (எ – று.)

     துச்சனியென்பது – துச்சாதனியென்பதன் திரிபுஆக இருக்கலாம்.
துச்சாசனனதுமகன் சயசேன னென்று பெருந்தேவனார் பாராதத்தால் தெரிகிறது.
விரைவுதோன்ற, முடியை முன்னும் சாயகத்தைப் பின்னுங் கூறினார். பழிகொள்ளுதல்
– இலக்கணனைக் கொன்றதாகிய அவன் செய்த பழிக்கு எதிர்ப்பழிவாங்குதலுமாம்.
பழிகொள்ளுத லென்ற சொல்லின் தகுதியால், தேர் முதலியவற்றை யிழந்த வீரனைக்
கொல்லுதல் பழிப்பாமென்பது, தோன்றும் நானே,ஏ- பிரிநிலையோடு, தேற்றம்

துரியோதனன் மகனும், பொரு துச்சாதனன்
மகனும்,
புரி யோதன முனை வென்றமை புரி வில்
முனி கருதா,
அரி ஓம் எனும் மறையால் அடல் அம்பு
ஆயிரம் எய்தான்;
வரி ஓலிடு கழலான், அவை வாள் கொண்டு
துணித்தான்.109.- மூன்றுகவிகள்- எதிர்த்தஅபிமன் வாளால் மும்முறைவென்று
துரோணனை நகைத்தமை கூறும்.

 துரியோதனன் மகன்உம் – துரியோதனனுக்கு மகனான
இலக்கணனையும், பொரு துச்சாதனன் மகன்உம் – போர் செய்த துச்சாதனனுக்கு
மகனான துச்சனியையும், புரி யோதனம் முனை – போர்செய்கிற யுத்தகளத்தில்,
வென்றமை – (அபிமன்கொன்று) சயித்ததை, புரி வில் முனி-கட்டமைந்த
வில்லில்வல்ல துரோணாசாரியன், கருதா-எண்ணி, அரி ஓம் எனும் மறையால்-
‘ஹரி! ஓம்’ என்று தொடங்கிச் சொல்லப்படுகிற வேதமந்திரத்தைக் கொண்டு, அடல்
அம்பு ஆயிரம் எய்தான்-வலிமையுடைய  ஆயிரம் பாணங்களைத் தொடுத்தான்;
(தொடுக்க), வரி ஓல் இடு கழலான்-அழகிய ஒலித்தல் செய்கிற வீரக்கழலையுடைய
அபிமன், அவை – அந்த அம்புகளையெல்லாம், வாள் கொண்டு துணித்தான்-
வாளினால் துண்டித்தான்; (எ – று.)

     புரிவின் முனி என எடுத்து, அவர்கள்பக்கல் அன்பையுடைய
முனிவனெனினுமாம்; புரிவு- அன்பு, இன்- சாரியை. அரிஓம் –
திருமாலேபிரணவப்பொருள் என்பதைக்குறிக்குமென்ப.  

சொரியும் கணை மழை ஏவு துரோணாரியன் வில்லும்,
பரியும், கடவு இரதத்தொடு பாகும் பல பலவாய்
முரியும்படி, வடி வாள்கொடு மோதா, அமர் காதா,
விரியும் சுடர் என நின்றனன், விசயன் திருமகனே.

(அதுவுமன்றி), விசயன் திரு மகன் – அபிமன்,-  சொரியும் கணை
மழைஏவு-பொழிகிற பாணவர்ஷத்தைச் செலுத்துகிற, துரோண ஆரியன் –
துரோணசாரியனது, வில்உம்-, பரிஉம்-தேர்குதிரைகளும், கடவு இரதத்தொடு –
செலுத்துப்படுகிற தேருடனே, பாகுஉம் – சாரதியும், பல பல ஆய் முரியும்படி –
அநேகந் துண்டுகளாய் அழியும்படி, வடி வாள் கொடு மோதா- கூரிய
வாளாயுதத்தால் வீசி, அமர் காதா – போரை (உக்கிரமாக)ச் செய்து. விரியும் சுடர்
என நின்றனன்-(நெடுந்தூரம்) பரவுகிற (மிக்க) ஒளியையுடைய சூரியன்போல
(விளக்கமுற்று) நின்றான்

ஒருக் கால் அழி தேர் அன்றியும், உருள் ஆழி
கொள் தேர்மேல்
இருக் கால் வர, முக் கால் வர, எக் காலும்
அழித்தே,
பெருக்கு ஆறு அணை செய்தொத்து, அவிர்
பிள்ளைப் பிறை அனையான்,
செருக்கால் நகை செய்தான், வரி சிலை
ஆசிரியனையே.

ஒரு கால் அழி தேர் அன்றிஉம்- ஒருதரம் தேரழிந்தது மாத்திர
மல்லாமல்,உருள் ஆழி கொள் தேர்மேல் – உருளுந்தன்மையுள்ள சக்கரங்களைப்
பூண்டவேறு தேரின் மேல், (துரோணன் ஏறிக்கொண்டு), இருகால் வர முக்கால்
வர -இரண்டாந்தரம் மூன்றாம்தரம் (மீண்டுமீண்டு) வர, எ காலும் அழித்து-எல்லா
முறையிலும் (அத்துரோணனைத்) தோற்கடித்து, பெருக்கு ஆறு  அணை செய்து
ஒத்து-யாற்றுநீர்ப் பெருக்குக்கு அணை செய்தாற் போன்று, (அவனைத் தடுத்து),
-அவிர் விளங்குகிற, பிள்ளை பிறை அனையான் – இளஞ்சந்திரனையொத்த
அபிமன்,- செருக்கால்-வீரக்களிப்பினால், வரி சிலை ஆசிரியனை – கட்டமைந்த
வில்லில் வல்லதுரோணணை (நோக்கி), நகை செய்தான்- (இகழ்ச்சிதோன்றச்)
சிரித்தான்: (எ – று.)

“மூன்றாறுருபெண்” என்ற சூத்திர விதிப்படி ஒருகால், இருகால் என
இயல்பாகவரவேண்டியவை, இங்கு, சந்தவின்பத்திற்காக வலிமிக்குநின்றன

முன்னும் சுருதியினால் உயர் முனி, வீரனை முனியா,
பின்னும், பனி வரைபோல் ஒரு பெருந் தேர்மிசை
கொள்ளா,
மன்னும் சிலை குனியா, முனை வடி வாளொடு கையும்
மின்னும் பிறை முக வாளியின் வீழும்படி விட்டான்.112. -துரோணன் அபிமனது வலக்கையை வாளோடும் வீழ்த்துதல்.

முன்னும்- (யாவராலும் சிறந்ததாகக்) கருதப்படுகிற, கருதியினால் –
வேதங்களில் வல்லவனாதலால், உயர் – சிறந்த, முனி – துரோணன், வீரனை
முனியா- (தன்னைப் பரிகசித்த) அபிமனைக் கோபித்து, பின்உம் – மீண்டும், பனி
வரை போல் – பனிமயமான இமயமலைபோன்ற, ஒரு பெரு தேர்மிசை-ஒரு பெரிய
தேரின் மேல், கொள்ளா – ஏறிக்கொண்டு, மன்னும் சிலை குனியா – பெரிய (தன்)
வில்லை வளைத்து, முனை வடி வாளொடு கைஉம்-(அபிமனது) கூரிய வடிக்கப்பட்ட
வாளுடன் வலக்கையும், மின்னும் பிறை முகம் வாளியின் – விளங்குகின்ற
அர்த்தசந்திரபாணத்தால், வீழும்படி –   துணிந்து கீழ்விழும்படி, விட்டான் –
(அதனைப்) பிரயோகித்தான்;  (எ-று.)- மலையரசனாதலின், இமயத்தை
எடுத்துக்கூறினார்

பேணார் உயிர் பருகும் பசி பெட்ப, பகு வாய் வெங்
கோள் நாகம் உலாவந்து, எதிர், கொடுநா எறிவதுபோல்,
பூண் ஆர் கடகக் கையொடு புகர் வாளமும் மண்மேல்,
நீள் நாகர் வியக்கும்படி, விழ, மீளியும் நின்றான்.113.-வாள் வீழ அபிமன் நின்றமை.

பேணார் உயிர் பருகும் – பகைவர்களது உயிரைக் குடிக்க
வேண்டுமென்ற, பசி-, பெட்ப-மிக, பகுவாய் வெம் கோள் நாகம் – திறந்த
வாயையும்கொடிய வலிமையையுமுடைய சர்ப்பம், உலா வந்து – உலாவிவந்து,
எதிர் கொடு -எதிரிற் பெருந்தி, நா எறிவது போல்-நாக்கை வெளிநீட்டுவதுபோல,-
கடகம் பூண்ஆர்கையொடு – கடகமென்னும் ஆபரணம் பொருந்தின கையுடனே,
புகர்வாளம்உம் – பளபளப்பையுடைய வாளாயுதமும், மண்மேல் – தரையிலே, நீள்
நாகர்வியக்கும்படி விழ – உயர்ந்த தேவலோகத்தவர்கள் ஆச்சரியப்படும்படி
(துணிந்து)வழ, மீளிஉம் – அபிமனும், நின்றான் – (சலியாது) நின்றான்; (எ – று.)

எளிதில் கவர்ந்துகொள்ளுதல் தோன்ற. ‘உயிர்பருகும்’ என்றார், துஷ்ட
ஜந்துக்கள் பெரும்பாலும் வாய்திறந்துகொண்டேயிருத்தல், இயல்பு, உலாவருதல்-
புறப்பட்டு உல்லாசமாக வெளி வருதல். பாம்பு- நீண்ட அபிமன் கைக்கும், நாக்கு-
வாளுக்கும்உவமை. கைக்குக் கடகம், இயற்கையடைமொழி

இரு தோள்களின் ஒரு தோள் முனி இகல்
வாளியின் விழவும்,
ஒரு தோள் கொடு பொர நிற்பது ஒர் மத
வாரணம் ஒத்தான்-
கருது ஓகையொடு அளகாபதிதனயோர் கதி பெற, முன்
மருது ஓர் அடி இணை சாடிய மாயன் திருமருகன்.114. – ஒற்றைக்கையோடு பொர நிற்கும் அபிமன் வருணனை.

அளகாபதி தனயோர் – அளகாபுரிக்கு அரசானான குபேரனுக்குப்
புத்திரராகிய (நளகூபரன் மணிக்கிரீவன் என்னும்) இருவரும், கருது ஒகையொடு-
மனத்துக்கொண்ட மகிழ்ச்சியுடனே, கதி பெற – நற்கதியை யடையும்படி, முன் –
முன்பு [இளமையில்], மருது-(இரட்டை) மருதமரங்களை, ஓர் இணை அடி சாடிய-
ஒப்பற்ற உபயபாதத்தால் முறித்துத்தள்ளின, மாயன்- ஆச்சரிய சக்தியையுடைய
கண்ணனுக்கு, திரு மருகன்-சிறந்த மருமகனான அபிமன்,- இருதோள்களின்-(தனது)
இரண்டுதோள்களில், ஒரு தோள்-, முனி இகல் வாளியின் – துரோணனது வலிய
அம்பினால், விழஉம்- துணிந்துவிழவும், (சலியாமல்),-ஒரு தோள் கொடு-
ஒருகையைக்கொண்டு, பொர-போர்செய்ய, நிற்பது-நிற்பதான, ஓர் மதம்
வாரணம் – ஒருமதயானையை, ஒத்தான்-;(எ-று.)-துதிக்கையொன்றே யுடைமையின்,
யானையைஉவமை கூறினார். தனயோர்-தநயர்;விகாரம்.

தன் மாதுலன் முதல் நாள் உரைதரு மந்திரம் ஒன்றால்,
எல் மா மணி உருள் ஒன்றினை எறி சக்கரம் ஆக்கி,
கல் மாரி விலக்கும் கிரி என, மேல் வரு கருதார்
வில் மாரி விலக்கா, அதுகொடு யாரையும் வீழ்த்தான்115.- தேருருளையைச் சக்கரப்படையாகக்கொண்டு அபிமன் பொருதல்.

(பின்பு அபிமன்), தன் மாதுலன் – தனக்கு மாமனான கண்ணன்,
முதல்நாள்- முன்னொருகாலத்தில், உரைதரு- (தனக்கு) உபதேசித்தருளிய, மந்திரம்
ஒன்றால் -ஒருமந்திரத்தால், எல் மா மணி உருள் ஒன்றினை – பிரகாசத்தையுடைய
சிறந்தஇரத்தினம் பதித்த (தன்) தேர்சக்கர மொன்றையே, எறி சக்கரம் ஆக்கி –
(பகைவர்களைத்) துணிக்கிற சக்கராயுதமாகச் செய்து, அதுகொடு-அந்த ஆயுதத்தால்,
கல் மாரி விலக்கும் கிரிஎன-(இந்திரன்பொழிவித்த) கல்மழையைத்தடுத்திட்ட
கோவர்த்தனமலைபோல, மேல் வரு கருதார் வில்மாரி விலக்கா-தன்மேல்(எதிர்த்து)
வருகிற பகைவர்களின் வில்லினாற் சொரிந்த அம்புமழையைத் தடுத்து, யாரைஉம்
வீழ்த்தான் – எல்லோரையும் அழித்துத்தள்ளினான்:

     ‘இவ்வகை துரோணாசாரியனால் தோளறுப்புண்டு மற்று அதற்குத் துளங்காது
மானத்தேரின்மணியாழியை மற்றைக்கையாற் பறித்துக்கொண்டு சக்கரபாணியிடைத்
தான் பயின்ற அபியோகத்தினால் ஆங்கு அதனை அபிமந்திரித்து அங்குலிப்படுத்தி
அந்தரத்திடைத் திரித்துவிடுதலும்’ என்பதுபாரதவெண்பாவின் உரைநடை அது
கொடியாரையும்-உகரம் இகரமாயிற்று. 

ஒரு கையினில் உருள் நேமிகொடு ஓடித் திசைதோறும்
வரு கை அற எறிவான் உயர் வனமாலியை ஒத்தான்;
இரு கை ஒருவரை மண்ணில் இறைஞ்சா முடி இறைவன்
பொருகை அற, அபிமன் பொரு போர் கண்டு புழுங்கா,116.- அபிமன் போர்த்திறமைகண்டு துரியோதனன் மனம்புழுங்குதல்.

இதுவும், மேற்கவியும் – குளகம்.

     (இ-ள்.) ஒருகையினில் – (தனது) கையொன்றிலே, உருள்நேமி கொடு-
தேர்ச்சக்கரமாகிய சக்கரத்தை யெடுத்துக்கொண்டு, திசை தோறும்உம் ஓடி –
எல்லாத்திக்குகளிலும் சுழன்று, வரு கை அற – பொருந்தின படைவகுப்பு அழிய,
எறிவான் – துணிப்பவனான அபிமன், உயர் வனமாலியை ஒத்தான் – சிறந்த
வநமாலையையுடைய (சக்கரபாணியான) திருமாலைப் போன்றான்; (அப்பொழுது),
இரு கை ஒருவரை மண்ணில் இறைஞ்சா முடி இறைவன் – தன்இரண்டு
கைகளைக்கொண்டு [அஞ்சலிசெய்து] ஒருத்தரையும் பூமியில் வணங்காத
சிரசையுடைய மன்னனான துரியோதனன்,-பொருகை அற – (எவரும் எதிர்த்துப்)
போர்செய்த லில்லாதபடி, அபிமன் பொரு-அபிமந்யு செய்கிற, போர்-யுத்தத்தை,
கண்டு-, புழுங்கா-மனங்கொதித்து,-(எ-று.)-“சயத்திரதனையழையென” என்று
மேற்கவியோடு தொடரும்.

     கை – படைவகுப்பு- வநமாலீ என்ற வடமொழித்திருநாமம்-
வநமாலையையுடையவனென்று பொருள்படும்; வநமாலை – ஒருவகைமாலை:இது –
திருமாலுக்கு உரியது. சக்கரத்தைக் கையிலேந்திய அபிமனுக்கு, வியாசரும்
சக்கரபாணியையே உவமைகூறினார்.     

ஒருவன் நம் படைத் தலைவர்கள் எவரையும் ஒரு கை
கொண்டு அடல் திகிரியின் விழ
எதிர்பொருவது என் கொல்? இச் சிறுவனொடு ஒரு படி
பொழுது சென்றது; எப்பொழுது அமர் முடிவது?
வெருவரும் திறல் தரணிபர்களில் இவன் விளிய
வென்றிடத் தகுமவர் இலர்; இனி
அருளுடன் சயத்திரதனை அழை’ என, அவனும் வந்து
புக்கனன் ஒரு நொடியிலே.117. துரியோதனன் சயத்திரதனையழைக்க அவன்வருதல்.

ஒருவன் – (இந்தஅபிமன்) ஒருத்தன், நம் படை தலைவர்கள்
எவரைஉம் -நமது சேனையிலுள்ள சிறந்தவீரர்களெல்லோரையும், அடல் திகிரியின்
விழ-வலியசக்கரத்தால் துணிந்து விழும்படி, ஒருகை கொண்டு-ஒருகையைக்
கொண்டே, எதிர்பொருவது – எதிரிற் போர்செய்வது, என்கொல் – என்ன
சாமர்த்தியமோ?இசிறுவனொடு-இந்தச் சிறுபிள்ளை யொருத்தனுடனே, ஒரு படி
பொழுது சென்றது -இன்றையொருநாளைப் பொழுது முழுவதும் பெரும்பாலும்
கழிந்துவிட்டது; எ பொழுது அமர் முடிவது – (இனி) எப்பொழுது போர் முடியும்?
(இங்குள்ள). வெருவரும் திறல் தரணிபர்களில்- அஞ்சும்வலிமையையுடைய
அரசர்களுள், இவன் விளிய வென்றிட தகுமவர்- இவ்வபிமன்இறக்கும்படி
சயிக்கத்தக்கவர், இலர் – (எவரும்) இல்லை: (ஆதலால்), இனி-,அருளுடன்-
கருணையோடு, சயத்திரதனை அழை-,’என- என்று (துரியோதனன்துரோணனை
நோக்கிக்) கூற, (அங்ஙனமே துரோணனால் அழைக்கப்பட்டு),அவன்உம்-
அச்சயத்திரதனும், ஒருநொடியில் வந்து புக்கனன்- ஒருநொடிப்பொழுதிலே வந்து
சேர்ந்தான்; (எ – று.)

     சேனைமுழுவதுக்குந்தலைவனாகிய துரோணனொழியக் கிருபன் கர்ணன்
முதலியோரும் சேனையின் ஒவ்வொருபகுதிக்குத் தலைவராதலால்,
‘நம்படைத்தலைவர்கள்’எனப்பட்டார். கீழ் யாவரும் அபிமனுக்கு அஞ்சித்
திசைதோறும் ஓடியதனால், ‘வெருவரும்’ என்ற அடைமொழி, தரணிபர்களுக்குக்
கொடுக்கப்பட்ட தென்னலாம். ‘அருளுடன் அழை’ என்றதனால், துரோணனை
நோக்கித் கூறினனென்பது பெறப்படும்; இனி, அன்போடு (ஒருவனைநோககித்
துரியோதனன்) கூற எனக் கருத்துக்கொள்ளினுமாம்.

     இதுமுதல் பதினான்கு கவிகள்- இச்சருக்கத்தின் 84-ஆம் கவிபோன்ற
எண்சீர்க்கழிநெடிலடியாசிரியச்சந்தவிருத்தங்கள்; 
ஆயினும், ‘தனன தந்தனத்
தனதன தனதன தனன தந்தனத் தனதன தனதன’ என இவற்றிக்குச் சந்தக்குழிப்பு
வேறுபடும்.      

அருகு நின்ற கொற்றவர்களும், அவர் அவர் அரிய திண்
திறல் குமரரும், அமரில் உன்
மருகனும் படப் பொருதனன்; மகபதி மகன் மகன்தனைப்
பசுபதி அருளிய
உரு கெழும் கதைப் படைகொடு கவருதி உயிரை’ என்று
எடுத்து உரைசெய, அரசனை
இரு கையும் குவித்து, அருளுடன் விடைகொளும் எழில்
கொள் சிந்துவுக்கு ஒரு தனி முதல்வனே.118.- சிவபிரான் கதைகொண்டு அபிமனைச் உயிர்கவருமாறு
சயத்திரதனுக்குச் சொல்ல அவன் விடைபெற்றுப்போதல்.

இதுவும், மேற்கவியும் – குளகம்.

     (இ-ள்.) (வந்துபுக்க சயத்திரதனை நோக்கித் துரியோதனன்), ‘அருகு நின்ற-
சமீபத்தில் எதிர்த்துநின்ற, கொற்றவர்கள்உம்-அரசர்களும், அவர் அவர்-அந்தந்த
அரசரின், அரிய திண் திறல்குமார்உம்-அருமையான கொடிய வலிமையையுடைய
குமாரர்களும், உன் மருமகன்உம்-உனக்கு மருமகனான இலக்கணனும், அமரில்-
யுத்தத்தில், பட-அழியும்படி, பொருதனன்-போர்செய்தவனான மகபதி மகன் மகன்
தனை-இந்திரனது பௌத்திரனாகிய அபிமனை, பசுபதி அருளிய-
சிவபிரான்(உனக்குக்) கொடுத்தருளின, உரு கெழும் கதை படைகொடு-அச்சம்
விளங்குகிற கதாயுதத்தால், உயிரை கவருதி-உயிரைவாங்குவாய்,’ என்று எடுத்து
உரை செய-என்று தொடங்கிச் சொல்ல, (அதற்கு உடன்பட்டு), அரசனை –
துரியோதனனை, இரு கைஉம் குவித்து-இரண்டு கைகளையுங் கூப்பித்தொழுது,
அருளுடன் விடை கொளும்- (அவனுடைய) கருணையுடனே அனுமதிபெற்றுப்போன,
எழில் கொள்-அழகைக்கொண்ட, சிந்துவுக்கு ஒரு தனி முதல்வன்-சிந்துதேசத்துக்கு
ஒப்பற்ற தனியரசனான சயத்திரதன்,-(எ – று.)- “உரைசெய்து***எடுத்தனன்” என
மேற்கவியில் முடியும். முதல்வன் விடைகொளும்என முடித்தலுமாம்.

இவன்மனைவிக்கு மருமகனாகவே இவனுக்கும் மருமகனெனப் பட்டான்.
பசுபதிஎன்ற வடமொழித்திருநாமம் -இடபத்துக்குத் தலைவனென்றும்
உயிர்களுக்குத்தலைவனென்றும், பொருள்படும். “உருவுட்காகும்” என்பது,
தொல்காப்பியம்.     

உரக வெங் கொடித் தரணிபன் அலமரும் உளம்
மகிழ்ந்திட,’கதி பல பட வரு
துரகதம் பிணித்து, அணி கொள் இரதமிசை துவசமும்
தொடுத்து, அடல் உடை வலவனை,
‘விரைவுடன் செலுத்துக’ என, உரைசெய்து, விழி
சிவந்து, சிற்றிள மதி புனைதரு
கரக வண் புனல் சடை முடியவன் அடி கருதி நின்று,
எடுத்தனன், ஒரு கதையுமே.119. – சயத்திரதன் தேரை விரையச் செலுத்துமாறு சொல்லிச்
சிவபிரானைத் தியானித்து ஒருகதையை யெடுத்தல்.

உரகம் – பாம்பையெழுதிய, வெம் – பயங்கரமான, கொடி –
துவசத்தையுடைய,தரணிபன் – துரியோதனராசனது, அலமரும் உளம் – கலங்கிய
மனம், மகிழ்ந்திட-மகிழ்ச்சியையுடைய, (சயத்திரதன்), ‘கதி பலபட வரு –
அநேகவகைக்கதிகள்பொருந்த வருகிற, துரகதம் – குதிரைகளை, பிணித்து – பூட்டி,
அணி கொள்-அழகைக்கொண்ட, இரதம்மிசை-தேரின்மேல், துவசம்உம் தொடுத்து –
கொடியையும்நாட்டி, விரைவுடன் செலுத்துக – வேகமாக (த்தேர்) செலுத்துவாய்’
என – என்றுஅடல் உடை வலவனை உரைசெய்து – வலிமையையுடைய (தன்)
சாரதியை(ப்பார்த்து)க் கூறி,-விழி சிவந்து-(கோபத்தாற்) கண்சிவந்து,-சிறு இள
மதிபுனை தரு-சிறிய இளஞ்சந்திரனைத் தரித்த, கரகம் கண் புனல்-(பிரமன்கைக்)
கமண்டலத்தினின்று உண்டான சிறந்த கங்கை நீரையுடைய, சடை முடியவன் –
சடைமுடியையுடையசிவபிரானது, அடி – திருவடிகளை, கருதி நின்று –
தியானித்துநின்று, ஒரு கதைஉம் எடுத்தனன்-ஒப்பற்ற கதாயுதத்தையும்
எடுத்துக்கொண்டான்; (எ – று.)

     பலகதி – ஐவகைநடை; அவை -“விக்கிதம் வற்கிதம் வெல்லுமுபகண்டம்,
மத்திமஞ்சாரியோ டைந்து” என்பன. ஆஸ்கந்திதம், தோரிதகம், ரேசிதம், வல்கிதம்,
புலுதம்-எனவும்படும்; இவற்றுள், நிச்சலமாக அதிவேகமும் அதிமந்தமு மாகாமல்
சமமானகதி-ஆஸ்கந்திதம்; அதனினும் அதிகமாய்ச் சதுரமான கதி-தோரிதகம்;
தாளகதியுடன்வட்டமிட்ட கதி – ரேசிதம்; வேகத்தினால் முன்னங்கால்களைத்தூக்கி
வரும் நடை-வல்கிதம்; அவ்வளவு வேகமாகவும் சமமாகவும் போகுகை – புலுதம்:
இனி, வேகமும்மெதுவுமின்றிச் சமமான நடை – ஆஸ்கந்திதம், வேகமான
சமத்காரமுள்ள நடை-தௌரிதகம், கோணலில்லாத நேர்நடை-ரேசிதம்,
நாலுகாற்பாய்ச்சல்- வல்கிதம், குதித்துக்குதித்துப்போதல்-புலுதம்என்றும் கூறு
வாருமுளர். இனி மல்லகதி, மயூரகதி, வியாக்கிரகதி, வாநரகதி, விருஷபகதி
என்பனவுமாம். இவை- பஞ்சகதி யெனவும், பஞ்சதாரையெனவும்படும். இவற்றோடு
பஞ்சளி, முரளி, சுடால வலநம் என்னும் நான்குங் கூட்டி நவகதி கூறுதலும் உண்டு.
கரகம் – வடசொல். பரிசுத்திக்காகச் சலபாத்திரத்தை எப்பொழுதும் கையில்
வைத்திருத்தல், வைதிக ரியல்பு. கங்கைப் புனலுக்கு வண்மை -தன்னில்
ஒருகால்மூழ்கியவர்க்கும் அருவினையொழித்து உயர்பத மருளுவது. 

மறலி தண்டு எனக் கொலை புரி தொழில் மிக வலிய
தண்டு கைக் கொளும் அளவினில், இவன்
விறல் புனைந்த கைத் திகிரியை ஒழிய, முன் வினை
அழிந்து பற்றலர் முதுகிட விழு
திறல் விளங்கு பொன் கதைகொடு, விரைவொடு திருகி,
‘நின் கதைக்கு இது கதை’ என உரை
உற விளம்பி, அப் பொரு களம் முழுவதும் உரும்
எறிந்தது ஒத்து உவகையொடு அதிரவே,120. – அபிமனும் திகிரியையொழித்துக் கதாயுதத்தைக்கொண்டு
கர்ச்சித்தல்.

இதுவும், மேற்கவியும் -குளகம்.

     (இ-ள்.) மறலி தண்டு என – யமனது தண்டாயுதம்போல, கொலைபுரி தொழில்
மிகவலிய-கொலைசெய்யுந்தொழிலிலே மிகவும்வலிமையையுடைய, தண்டு-
கதாயுதத்தை,கை கொளும் அளவினில்-(அந்தச்சயத்திரதன்)
கையிலெடுத்துக்கொண்டவளவிலே,-இவன்-அபிமன், விறல் புனைந்த கை
திகிரியை ஒழிய-வெற்றியைக்கொண்டதன்கையிலுள்ள சக்கராயுதத்தை நீங்க(வீட்டு),-
முன் – முன்னே[பலபோர்களில்],பற்றலரர் – பகைவர்கள், வினை அழிந்து-
போர்த்தொழிலை யொழிந்து, முதுகுஇட -புறங்கொடுக்கும்படி, விழு –
(அவர்கள்மேல்) விழுந்தன்மையதான, திறல் விளங்கு -வலிமைமிக்க, பொன் கதை
கொடு – அழகியதொரு கதாயுதத்தை யெடுத்துக்கொண்டு, விரைவோடு திருகி –
வேகமாகச் சுழற்றி, நின் கதைக்கு இது கதைஎன-‘உனது கதாயுதத்துக்கு (ஏற்ற)
கதாயுதம் இது’ என்று, உரைஉற விளம்பி -விரவாதத்தை மிகுதியாகச் சொல்லி,
அ பொரு களம் முழுவதுஉம்-அந்தப்போர்க்களம் முழுவதிலும், உரும் எறிந்தது
ஒத்து – இடியிடித்தாற்போன்று,உவகையொடு அதிர-உற்சாகத்தோடு கர்ச்சிக்க,-
(எ – று.)- “இருவரும் உடற்றினர்”என மேற்கவியில் முடியும்.

     மறல் – கொலைத்தொழில்; அதனையுடையவன், மறலி, மறலிதண்டு-
காலதண்டம்.    

சினவும் சிங்கம் ஒத்து, இருவரும் முறை முறை திருகி,
வெஞ் செருப் புரிதலின், எழும் ஒலி,
கனல் வளைந்து சுட்டு அனிலமும் எறிதரு கடல்
அதிர்ந்தென, கனம் அதிர்வன என,
மினல் பரந்து எழத் திசைகளின் முடிவு உற, வெடிகொடு
அண்டபித்தியும் உடைதர எழ,
மனம் அழன்று பொற் கிரி நிகர் தம புய வலிமை
; கொண்டு உடற்றினர், வயம் மலியவே.121.- அபிமன் சயத்திரதன் இருவரும் பொருதல்.

சினவு சிங்கம் ஒத்து- கோபித்து (இரண்டு) சிங்கங்கள் போன்று,
இருவர்உம்-(அபிமன் சயத்திரதன் என்னும்) இரண்டு பேரும், முறை முறை திருகி-
மாறிமாறி(க்கதை) சுழற்றி, வெம் செரு புரிதலின்-கொடிய போரைச் செய்தலால்,
எழும் -உண்டான, ஒலி-ஓசை,-கனல் வளைந்து கட்டு-காலக்கினியாற் சூழ்ந்து
எரிக்கப்பட்டு,அனிலம்உம் எறி தரு-காற்றும் வீசப்பெற்ற, கடல்-, அதிர்ந்து என-
முழங்கினாற்போலவும், கனம்-மேகங்கள், அதிர்வன என-முழங்குவனபோலவும்,-
மினல் பரந்து எழு-மின்னல் பரவிக் காணப்படுமாறும், திசைகளின் முடிவு உற –
திக்குக்களின் எல்லையை அளாவ, வெடி கொடு-வெடித்தலைக் கொண்டு, அண்ட
பித்திஉம்-அண்டகோளத்தின் சுவர்களும், உடைதர-உடையுமாறும்,-எழ-
மிக்கொலிக்க,-மனம் அழன்று-மனங்கொதித்து, பொன் கிரி நிகர் தம் புயம்
வலிமைகொண்டு-மேருமலையை யொத்த தங்கள் தோள்களின் வலிமையினால்,
வயம் மலிய – வெற்றி மிக, உடற்றினர்-போர் செய்தார்கள்; (எ – று.) பி-ம்:
கட்டனிலமும். வெடிகொள்.

     ஒலிஎழ என இயையும். மின்னல்பரந்துஎழுதலும் அண்ட பித்தியுடைதலும்,
ஆரவாரமிகுதிபற்றிய அதிர்ச்சியாலாகும்

உரிய சிந்துவுக்கு அரசனது இரு புயம் ஒடிய, என்பு
நெக்கு உடல் முரிதர, உரம்
நெரிய, வெங் குடர்க் கொடி நெடு வளையமும் நிமிர,
வன் தொடைப்புடை மிடை நடை உற,
அரிய கண் கனல் பொறி எழ, மணிமுடி அழகு அழிந்து
பொற் பிதிர்பட, உதிர்பட,
எரி எழும் சினத்தொடு தனது ஒரு கையின் இலகு தண்டம்
இட்டு, இகலுடன் எறியவே,122.-அபிமன் வெற்றிபடக் கதாயுத மெறிந்தமை.

இதுமுதல் நான்கு கவிகள் – குளகம்.

     (இ-ள்.) சிந்துவுக்கு உரிய அரசனது – சிந்துதேசத்துக்கு உரிமையையுடைய
அரசனான சயத்திரதனது, இரு புயம் – இரண்டு தோள்களும், ஒடிய – ஒடியவும்,
என்பு நெக்கு – எலும்புகள் நொருங்கி, உடன் முரிதர – உடனே பின்னப்படவும்,
உடல் நெரிய-உடம்பு நசுங்கவும், வெம் குடர் நெடு கொடி வளையம்உம் -கொடிய
குடலாகிய நீண்ட கொடிச்சுற்றும், நிமிர-(அத்தன்மைநீங்கி) நீட்சியடையவும், வல்
தொடை புடை-வலிய தொடைகளினிடம், மிடை நடை உற-(ஒன்றோடொன்று)
நெருங்கிய தோற்றத்தையடையவும், அரிய கண்- அருமையான கண்களினின்று,
கனல் பொறிஎழ-தீப்பொறி கிளம்பவும், மணி முடி-இரத்தினங்கள் பதித்த கிரீடம்,
அழகு அழிந்து-, பொன் பிதிர்பட உதிர்பட – பொற்பொடிகள் மயமாக உதிரவும்,
(அபிமன்), எரி எழும் சினத்தொடு – தீப்பற்றி யெழும்படியான கோபத்துடனே, தனது
ஒரு கையின் இலகு தண்டம் இட்டு-தனது ஒன்றாகிய கையிலே விளங்குகிற
கதாயுதத்தை வீசி, இகலுடன் எற்றிய – வலிமையோடுதாக்க,- (எ – று.)-
“சிந்துவுக்கரசனுங் கதையெறிய” என அடுத்த கலியோடு தொடரும். பி – ம்:
முரிதரவுரம்.

     ‘சிந்துவுக்கரசனது’ என்பதை, என்பு முதலிய ஆறனொடுங் கூட்டுக.
தொடைப்புடை – தொடைகள் மோதுகின்ற என்றலும் ஒன்று. இப்பாட்டில் டகரம்
பலவிடத்துவந்தது, ‘விருத்தியநுப்பிராசம்’ என்னுஞ் சொல்லணி; அதாவது-
எழுத்துஒன்றேனும் பல வேனும் இடையிட்டுப் பல்கால் வருவது.  

வசை அறும் புகழ்க் குருகுல திலகனை, மருது இரண்டு
ஒடித்தவர் திருமருகனை,
விசயன் மைந்தனை, பணை முகில்மிசை வரு விபுதர்தம்
குலத்து அதிபதி பெயரனை,
அசைவு இல் வன் திறல் பகை முனை நிருபரை அடைய
வென்ற கட்டழகுடை அபிமனை,
இசை கொள் சிந்துவுக்கு அரசனும் ஒரு கதை இரு கை
கொண்டு எடுத்து இகலுடன் எறியவே,123.- சயத்திரதன் கதாயுதத்தால் எதிர்தாக்கினமை.

வசை அறும்-பழிப்பு இல்லாத, புகழ் – கீர்த்தியையுடைய, குரு
குலதிலகனை – குருவென்னும் அரசனது குலத்துக்கு நெற்றித்திலகம் போல
அழகுசெய்பவனும், மருது இரண்டு ஓடித்தவர் திரு மருகனை –
இரட்டைமருதமரங்களை முறித்த கண்ணபிரானுக்குச் சிறந்த மருமகனும், விசயன்
மைந்தனை – அருச்சுனனுக்குப் புத்திரனும், பணை முகில்மிசை வரு – பருத்த
மேகமாகிய வாகனத்தின்மேல் வருகிற, வீபுதர்தம் குலத்து அதிபதி –
தேவர்களுடைய கூட்டத்துக்குத் தலைவனான இந்திரனுக்கு, பெயரனை –
பௌத்திரனும்,  அசைவு இல்-சோர்தலில்லாத, வல் திறல்-கொடியவலிமையையுடைய,
பகை நிருபரை அடைய-பகைவர்களான அரசர்களையெல்லாம், முனை-போரில்,
வென்ற – சயித்த, சுட்டு அழகு உடை – நிறைந்த அழகையுடையவனு மாகிய,
அபிமனை – அபிமந்யுவை, இசை கொள் சிந்துவுக்கு அரசன்உம் –
கீர்த்தியைக்கொண்ட சிந்து தேசத்துக்கு அரசனான சயத்திரதனும், ஒரு கதை இரு
கைகொண்டு எடுத்து – ஒப்பற்ற (தன்) கதாயுதத்தை இரண்டு கைகளாலும் எடுத்து,
(அதனால்), இகலுடன் எறிய – வலிமையோடு தாக்க,- (எ-று.)-
“களிறனையவன்***முதுகுகண்டபின்” என வருங்கவியோடு தொடரும்

கரம் இழந்து மற்று ஒரு கரமிசை ஒரு கதை கொள்
வெஞ் சினக் களிறு அனையவன், இவன்
இரதமும் தகர்த்து, உறு கதியுடன் வரும் இவுளியும்,
துணித்து, அடலுடை வலவனை
முரணுடன் புடைத்து, அணி துவசமும் விழ முதுகு
கண்ட பின், சரபம்அது எனும் வகை
அரன் வழங்கு பொன் கதையுடன் அவனியில் அவனும்
முன் குதித்து, அடலுடன் முனையவே,124,- அபிமன் கதாயுதத்தால் தன் தேர்முதலியன அழிக்க, சயத்திரதன்
சிவபிரானளித்தகதாயுதங்கொண்டு பூமியிற் குதித்துப் பொருதல்.

கரம் இழந்து-(முன்னே) ஒருகையை யிழந்து, மற்று ஒரு கரம்மிசை
– மற்றொருகையில், ஒரு கதை கொள் – ஒரு கதாயுதத்தை யேந்திய, வெம் சினம்
களிறு அனையவன் – கொடிய கோபத்தையுடைய ஆண்யானையைப்
போன்றவனான அபிமன், இவன் – சயத்திரதனது, இரதம்உம்-தேரையும், தகர்த்து-
உடைத்து, உறு கதியுடன் வரும் – மிக்கவேகத்தோடு வருகிற, இவுளிஉம்-
குதிரைகளையும், துணித்து – துண்டாக்கி, எதிர் முனை – எதிரில் தொழில்செய்கிற,
வலவனை-சாரதியையும், முரணுடன் புடைத்து-வலிமையோடு தாக்கி, அணி
துவசம்உம்- அழகிய கொடியையும், விழ-ஒடிந்து விழ (ச்செய்து), முதுகு கண்ட
பின்-புறங்கொடுக்குமாறு வெல்லத் தொடங்கியவுடனே,-அவன்உம் -சயத்திரதனும்,
சரபம், அது எனும் வகை-(சிங்கத்தைக்கொல்லவல்ல) சரபம்போல, அரன் வழங்கு
பொன் கதையுடன்-சிவபிரான் அளித்த பொன்மயமான கதையுடனே, அவனியில்
முன் குதித்து – பூமியிலே வேகமாகக்குதித்து, அடலுடன் முனைய -வலிமையோடு
போர்செய்ய,-(எ – று.)-“சிதறின” என அடுத்த கவியில் முடியும் களிறு-
ஒருகையோடுஇருத்தற்கும் உவமை. பி-ம்: அடலுடைவலவனை,

பதயுகங்கள் ஒத்திய வலி பல கண பண புயங்கர்
பற்பல முடி சிதறின;
எதிர்கொள் தண்டம் மொத்திய ஒலி திசைகளில் இபம்
அடங்க மெய்ப் பிடியொடு சிதறின;
கதியில் வந்த சித்திரம் என முறை முறை கதுவி
மண்டலித்து, ஒரு பகல் முழுவதும்
அதிசயம் படப் பொருதனர், எதிர் எதிர், அபிமனும்
சயத்திரதனும் அமரிலே.125.- இருவரும் தரையிற் கைகலந்து பொருதல்.

அபிமன்உம் சயத்திரதன்உம் – அவ்விரண்டுபேரும். பதயுகங்கள்
ஒத்திய – (தம்தம்) இரண்டுகால்களையும் உறுதியோடு வைத்த, வலி-வலிமையினால்,
பணம்- படத்தையுடைய, கணம் – கூட்டமான, பல புயங்கர் (கீழிருந்து
பூமியைத்தாங்குகிற) அநேக நாகர்களது, பல் பல முடி – பலபலதலைகள், சிதறின –
நெருங்கின; எதிர் கொள் – எதிரெதிரிற் கொண்ட, தண்டம் – கதாயுதம், மொத்திய-
(ஒன்றோடொன்று) தாக்குவதனாலுண்டான, ஒலி –  ஒளியினால், திசைகளில் நின்று-
(எட்டுத்) திக்குக்களினின்று, இபம்உம்-திக்குயானைகளும், மெய்- உண்மையாக
பிடியொடு-(தம்தம்பெண்யானையுடனே, சிதறின-நிலைகுலைந்து ஓடின;
(இவ்வாறுஅபிமனும் சயத்திரதனும்), அமரில்-போர்க்களத்தில், கதியில் வந்த
சித்திரம்என- வேகமாகவந்த புலிகள்போல, முறைமுறை கதுவி-மாறிமாறி
(ஒருவரையொருவர்) பற்றி, மண்டலித்து சுழன்றுவந்து, ஒரு பகல் முழுவது
உம்-(அந்த) ஒருபகற்பொழுது முடியுமளவும். எதிர் எதிர் -எதிரிலே எதிரிலே,
அதிசயம் பட – (காண்பவர்க்கு) வியப்புண்டாக, பொருதனர் – போர் செய்தார்கள்;
(எ – று.)

     ஐந்தலை, இருதலை முதலாக ஒவ்வொருநாகத்துக்கே பலதலைகள் உண்மை
பற்றி, ‘பற்பலமுடி’ எனப்பட்டது. மெய்ப்பிடியொடு – தேகபலத்தோடு எனினுமாம்.
வீமசேனனை வீமனென்றும், சத்தியபாமையைச் சத்தியை யென்றும்,
கிருதவர்மாவைக் கிருதனென்றுங் கூறுதல்போல, சித்திரகாயத்தைச்
சித்திரமென்றார்; 
சித்திரகாயம் என்று புலிக்குப்பெயர்(கோடுகளால்) பலவகை
நிறமுள்ள உடம் புடையதென்று காரணப்பொருள். இனி, இவ்விருவருள் ஒருவன்
செய்த தொழிலை மற்றொருவன் அவ்வாறே செய்தலால், ‘சித்திரமென’ என்பதற்கு –
ஒன்றில் உள்ளபடி யெழுதப்படுகிற சித்திர வடிவம்போல என்றும் உரைக்கலாம்.
முறைமுறை கதுவி மண்டலித்து-மேல் பதினேழாம்போர்ச்ருக்கத்து வருகிற ”
இடம்புரிந்திடில் வலம்புரியு மெண்ணின் முறையால், வலம்புரிந்திடி லிடம் புரியு
மண்டலமுமாய்” என்பது போலக்கொள்க. பி -ம்: மொத்தியவலி. இபமடங்க

உலைவு இல் தண்டினில் பரிசனன் மதலையும் உவமை
இன்று என, பகழியின் மழை பொழி
சிலையின் வன் தொழில் திறலுடை மகபதி சிறுவனும்
தனக்கு எதிர் இலன் இனி என,
மலையும் வெஞ் சமத்து, ஒரு தனி முது புய வலிமை
கண்டு, பொற்புறு கழல் அபிமனை,
அலை நெடுங் கடல் தரணிபர் அனைவரும், அமரரும்
துதித்தனர், முகடு அதிரவே.126.- அபிமன்புயவலிமையைத் தேவரும் புகழ்தல்.

உலைவு இல்-அழிதலில்லாத, தண்டினில்-கதாயுதத்தில், பரிசனன்
மதலைஉம்- வாயுகுமாரனான வீமனும், உவமை இன்று -(தனக்கு) ஒப்பாகான், என
என்று (காண்பவர்) சொல்லவும்,-பகழியின் மழை பொழி-அம்புமழையைச் சொரிகிற,
சிலையின் வல் தொழில்-வில்லினாற்செய்யுங் கொடிய போர்த்தொழிலில், திறல் உடை
மகபதி சிறுவன்உம் – வலிமையையுடைய இந்திரன் மகனான அருச்சுனனும், தனக்கு
இனி எதிர் இலன்-இவனுக்கு இனி ஒப்பாகான், என-என்று(காண்பவர்) சொல்லவும்,-
வெம் சமத்து-கொடிய போர்க்களத்தில், மலையும்-(அன்றைத்தினத்தில் அபிமன்)
போர்செய்த, ஒரு தனி முது புயம் வலிமை-ஒப்பில்லாத தனிப்பட்ட வலிய
தோள்களின்பலத்தை, கண்டு-, அலை நெடு கடல் தரணிபர் அனைவர்உம்-
அலைகளையுடையபெரிய கடல்சூழ்ந்த பூமியைக் காக்கிற அரசர்களெல்லோரும்,
அமரர்உம்-தேவர்களும்,பொற்பு உறு கழல் அபிமனை-அழகுமிக்க
வீரக்கழலையுடைய அந்த அபிமந்யுவை,முகடு அதிர – (ஆரவாரத்தால்
அண்டகோளத்தின்) மேல்முகடு அதிர்ச்சியடையும்படி,துதித்தனர் –
(உரத்தகுரலோடு) தோத்திரஞ் செய்தார்கள்; (எ – று.)

     வீமன் கதைத்தொழிலிலும், அருச்சுனன் வில்தொழிலும் மிகச்சிறந்தவரென்பது
பிரசித்தம். முதுபுயம்-போர்த்தொழிலில் முதிர்ந்த [மிகப்பயின்ற] புயம் என்றுமாம்.

கழுகு பந்தர் இட்டன, மிசை; விசையொடு கழுது
இனங்கள் இட்டன, பல கரணமும்;
எழு கவந்தம் இட்டன, பல பவுரிகள்; இரு புறங்கள்
இட்டன எதிர் அழிபடை;
ஒழுகு செம் புனல் குருதியின் வரு நதி உததியும்
சிவப்பு உறும்வகை பெருகலின்,
முழுகி எஞ்சி இட்டன, சுழி இடை இடை முகிலின்
வெங் குரல் கச ரத துரகமே.127.-படுகளச் சிறப்பு.

 (அப்பொழுது), கழுகு-கழுகுகள். (இறந்தவற்றைத் தின்னும்பொருட்டு),
மிசை-மேலே, விசையொடு-வேகத்தோடு, பந்தர் இட்டன-பந்தல்போகட்டாற்போல
இடைவிடாது பரவின, கழுது இனங்கள்- பேய்களின் வகைகள், பல கரணம்உம்
இட்டன – களிப்புமிகுதியால்) அநேக விதமான கரணங்களைப் போகட்டன; எழு
கவந்தம்-எழுந்த உடற்குறைகள், பல பவுரிகள் இட்டன-அநேகவகைப்
பௌரியென்னுங் கூத்தை யாடின; எதிர் அழி படை-எதிரிலே
அழிந்தசேனைகள், இரு புறங்கள் இட்டன -இரண்டுபக்கங்களிலும் விழுந்தன;
ஒழுகு செம்புனல் குருதியின் வரும் நதி -வழிகிற செந்நீராகிய
இரத்தவெள்ளத்தாலுண்டானஆறுகள், உததிஉம் சிவப்பு உறும் வகை-(தான்
சென்று சேருஞ்) கடலும் செந்நிறம்மிகும்படி, பெருகலின்-பெருகுதலால், முகிலின்
வெம் குரல் கச தர துரகம்-மேகம்போலப் பயங்கரமான முழக்கத்தையுடைய
யானைதேர்குதிரைகள், முழுகி-(அவ்விரத்தப்பெருக்கில்) அமிழ்ந்து, சுழி இடை
இடை- (அதிலுள்ள)சுழிகளினிடந்தோறும், எஞ்சி யிட்டன – மறைந்து அழிந்தன;

     கரணம் – கூத்தின் ஓர்விகற்பம்; அதனை இடுதல் – ஆடுதல், மிகப்பலர்
இறக்கையில் கவந்தம் எழுந்தாடுதல், முற்கூறப்பட்டது. பவுரி – தானே சுழன்று
ஆடுங்கூத்து.   

முறைமை இன்றி, எத் தரணிபர்களும் எதிர் முடுக வந்து,
முன் தெறுதலின், அவர் அவர்
பொறை அழிந்து கெட்டு, அனைவரும் வெருவொடு
புறமிடும்படிக்கு ஒரு தனி பொருத பின்,
நிறை வலம்புரித் தொடை கமழ் புயகிரி நிருப துங்கன்
மைத்துனன் உளம் வெருவர,
அறை பெருங் கதைப் படைகொடு வலியுற அமர் புரிந்து
இளைத்தனன், அடல் அபிமனே.128. – அபிமன் கதாயுதப்போரி லிளைத்தல்.

 எ தரணிபர்கள்உம்- எல்லா வரசர்களும், முறைமை இன்றி –
(ஒருவர்பின் ஒருவர் என்ற) முறைமை யில்லாமல், முடுக-வேகமாக, எதிர் வந்து-
(தன்னொருத்தனை) எதிர்த்து வந்து, முன் தெறுதலின்- முன்னே போர்செய்தலால்,-
அடல் அபிமன்-வலிமையையுடைய அபிமந்யு,-அவர் அவர் – வந்த வந்த
அவ்வீரர்கள், பொறை அழிந்து- (துன்பத்தைப்) பொறுக்குந் தன்மை யொழிந்து,
கெட்டு-தோற்று, அனைவர்உம்-எல்லோரும். வெருவொடு-அச்சத்தோடு, புறம்
இடும்படிக்கு-முதுகுகொடுக்கும்படி, ஒரு தனி – தன்னந் தனியாய், பொருத பின் –
போர்செய்த பின்பு,-நிறை-நிறைந்த. வலம்புரி தொடை – நஞ்சாவட்டைப்பூமாலை,
கமழ்- வாசனைவீசுகிற புயம்கிரி-மலைகள்போலுந் தோள்களையுடைய, நிருப
துங்கன்-அரசரிற் சிறந்த துரியோதனனுக்கு, மைந்துனன்-உடன்பிறந்தவள்
கணவனானசயத்திரதன், உளம் வெருவர-மனம் அஞ்சும்படி, அறை பெரு கதை
படை கொடு-தாக்குகிற பெரிய கதாயுதத்தால், வலி உற-பலமாக, அமர் புரிந்து-
(அவனுடன்)போர்செய்து, இளைத்தனன்-சோர்ந்தான்:

     ஏற்கனவே தன்னந்தனியனாய் அபிமன் பலருடன் பொருது
இளைத்துள்ளானென்பதை, முன்னிரண்டடிகள் காட்டவந்தன, தெறுதல்-
வருத்துதலென்பாருமுளர். அழிந்துகெட்டு-ஒருபொருட்பன்மொழியுமாம், அறை-
சிறப்பித்துச்சொல்லப்படுகிற என்றுமாம்.     

இவன் மயங்கி மெய்த் தளர்வுடன் மெலிவுறும் இறுதி
கண்டு, ‘இனித் தெறுவது கடன்’ என,
அவனி கொண்ட பற்குனன் மதலையை அவன் அருகு
வந்து அடுத்து, அணி புய வலிகொடு
சிவனை அஞ்செழுத்து உரைசெய்து, தொழுது, ஒரு
சிகர தண்டம் விட்டு எறிதலின், எறிதரு
பவனன் அன்று குத்தின கிரி என விசை பட விழுந்தது,
அப் பரு மணி மகுடமே.129.- இரண்டுகவிகள் – ஜயத்ரதன் சிவபிரானளித்த கதைகொண்டு
அபிமனைத் தலைதுணித்துவீழ்த்துதலைக் கூறும்.

இவன் – அபிமன், மயங்கி-,மெய் தளர்வுடன் – உடம்பின்
சோர்வுடனே,மெலிவு உறும் -வாட்டம் மிகுகிற, இறுதி-அந்திமதசையை, கண்டு-
,(சயத்திரதன்), இனிதெறுவது கடன் என – ‘இப்பொழுதே(இவனை) அழிப்பது
செய்தொழில்’ என்றுகருதி,அவனி கொண்ட பற்குனன் மதலையை –
(பராக்கிரமத்தால்) பூமிமுழுவதையும்(தன்னுடையதாகக்) கொள்ளவல்ல
அருச்சுனபுத்திரனான அபிமனை, அவன் அருகுவந்து அடுத்து- அவனது
சமீபத்தில் வந்து நெருங்கி, சிவனை அஞ்சு எழுத்துஉரைசெய்து தொழுது-
சிவபிரானை ஸ்ரீபஞ்சாக்ஷரமகாமந்திரத்தை உச்சரித்து வணங்கி,அணி புயம் வலி
கொடு-அழகிய தோள்களின் வலிமையால், ஒரு சிகர தண்டம்விட்டு-ஒம்பற்ற
நுனியையுடைய (தன்) கதாயுதத்தை வீசி, எறிதலின் – தாக்கியதனால்,-
எறிதருபவனன்-வீசுகிற வாயு, அன்று-(ஆதிசேடனோடு பகைத்த) அக்காலத்தில்,
குத்தின – தாக்கிக் கொடிமுடி யொடித்த, கிரி என – மேருமலைபோல, அபரு
மணிமகுடம்-அபிமனது பருத்த இரத்தினங்கள்பதித்த கிரீடம், விசை பட
விழுந்தது-வேகமாகக் கீழ் விழுந்தது; (எ – று.)

     மதலையை எறிதலின் என்றும், சிவனைத்தொழுது என்றும் இயையும்.
புயவலிகொடு-தனதுதோள்களிரண்டுக்கும் எவ்வளவு வலிமை யுண்டோ
அவ்வளவையுங் கொண்டு. அஞ்சு – முழுப்போலி.  

தலை துணிந்து தத்திட விழ, இவன் ஒரு தனது திண்
கையில் கதைகொடு தரியலன்
நிலை அறிந்து புக்கு உரன் உற எறிதலின், நெரிநெரிந்தது,
அத் தரணிபன் உடலமும்;
மலை மறிந்தது ஒத்து அபிமனது உடலமும் மகிதலந்தனில்
தரி அற விழுதலின்,
அலை எறிந்து மைக் கடல் புரளுவது என, அரவம்
விஞ்சியிட்டது களம் அடையவே.

 (அப்பொழுது), இவன் – அபிமன், தனது ஒரு திண்கையில் கதை
கொடு- தனது வலிய ஒற்றைக்கையிலுள்ள கதாயுதத்தால், தரியலன் நிலை அறிந்து
புக்குஉரன் உற எறிதலின் – பகைவனான சயத்திரதனது (மார்புமுதலிய)
உயிர்நிலைகளைஉணர்ந்து சென்று  பலம்மிக வீசியடித்தலால், அ தரணிபன்
உடலம்உம்-அந்தச்சிந்துராசனது உடம்பும், நெரிநெரிந்தது-மிக நொருங்கிற்று;
அபிமனதுஉடலம்உம்-அபிமந்யுவின் உடம்பும், (சைந்தவன் கதை தாக்கலால்),
தலை துணிந்துதத்திட விழ – தலைதுணிபட்டுச்சரியவிழ, மலை மறிந்தது
ஒத்து-மலைசாய்ந்ததுபோன்று, மகிதலந்தனில் -தரையிலே, தரி அற விழுதலின் –
நிற்றலின்றிவீழ்ந்ததனால், அலை எறிந்து – அலைவீசி, மை கடல் புரளுவது என –
கரிய கடல்கரைபுரள்வதுபோல, களம் அடைய-போர்க்களம் முழுவதிலும், அரவம்
விஞ்சி யிட்டது- ஆரவாரம் மிக்கது: (எ – று.)

     நிலை – கதைப்போரில் அடிக்கத்தக்க இடம். நெரிநெரிதல் இரட்டைக்கிளவி.
தரி-தரிப்பு: முதனிலைத்தொழிற்பெயர். அரவம்-ரவம்; வடசொல்.    

மாயனாம் திருமாமன்; தனஞ்சயனாம் திருத்தாதை;
வானோர்க்கு எல்லாம்
நாயனாம் பிதாமகன்; மற்று ஒரு கோடி நராதிபராம்
நண்பாய் வந்தோர்; சேயனாம்
அபிமனுவாம், செயத்திரதன் கைப்படுவான்! செயற்கை
வெவ்வேறு
ஆய நாள், அவனிதலத்து, அவ் விதியை வெல்லும்
விரகு ஆர் வல்லாரே?131.- இதுமுதல் நான்குகவிகள் – அபிமனதுமரணத்துக்குக் கவி இரங்கல்.

(அபிமனுக்கு), திரு மாமன் – சிறந்த மாதுலன், மாயன் ஆம் –
கண்ணனாம்; திரு தாதை-சிறந்த தந்தை, தனஞ்சயன் ஆம்-அருச்சுனனாம்;
பிதாமகன்- பாட்டன், வானோர்க்கு எல்லாம் நாயன் ஆம்-தேவர்களுக்கெல்லாந்
தலைவனானஇந்திரனாம்; மற்று-மேலும், நண்பு ஆய் வந்தோர் – சினேகமும்
உறவுமாகப்பொருந்தினவர், ஒரு கோடி நராதிபர் ஆம் – ஒரு கோடிக்கணக்கான
அரசர்களாம்;(இப்படியிருக்க), சேயன் ஆம்-இளங்குமரனாகிய, அபிமனு-அபிமந்யு,
செயத்திரதன்கை படுவான்  அம் -சயத்திரதனது கையால் இறப்பானாம்; செய்கை-(ஊழ்வினையின்)செய்கைகள், வெவ்வேறு ஆய நாள்- வேறுவேறுவிதமாக
நிகழ்ந்தகாலத்தில்,அவனிதலத்து-உலகத்தில், அ விதியை வெல்லும் வகைவல்லார்-
அவ்வூழ்வினையைச்சயிக்கவல்லவர்கள், யார்-யாவர் (உளர்)? [எவருமில்லை
யென்றபடி]; (எ – று.)

     எல்லாச்சிறப்புக்களும் அமைந்திருக்கவும் அபிமன் அழிந்தா
னென்றசிறப்புப்பொருளை ‘விதியை வெல்லவல்லார்யார்? என்னும் பொதுப்பொருள்
கொண்டு விளக்கியதனால் வேற்றுப்பொருள்வைப்பணி. “ஊழிற்பெருவலியாவுள
மற்றொன்று, சூழினுந் தான்முந்துறும்” என்ற இதனால், ஊழின்விலக்கலாகாத
வலிமையைஉணர்க. இக்கவியில்வந்த ‘ஆம்’ என்னுஞ்சொற்கள் பலவும்-உயர்வு,
சிறப்பு, வியப்பு முதலிய சிலகுறிப்புக்களை விளக்கின: “கைத்தோடுஞ்
சிறைகற்போயை,வைத்தோனின்னுயிர்வாழ்வானாம், பொய்த்தோர்வில்லிகள்
போவாராம். இத்தோடொப்பதி யாதுண்டோ” எனக் கம்பராமாயணத்திலுங் காண்க.
இது இடைச்சொல்லின்பாற்பட்டது. ஆகும்என்னும்செய்யுமென்முற்றாகக்
கொள்வோமெனின் ‘நராதிபராம்’ எனப் பலர்பாற்பெயரோடும் வந்ததனால், அது
பொருந்தாது; “பல்லோர்படர்க்கைமுன்னிலை தன்மையில், செல்லாதாகுஞ்
செய்யுமென்முற்றே” என்பதுஇலக்கணமாதலால். இரட்டுற மொழிதலால், நண்பு-
உறவுமாயிற்று, நாயகன் என்றவடசொல், நாயன் என விகாரப்பட்டது. மாயன்,
தநஞ்சயன், வானோர்க்கெல்லாம்நாயன் என்ற பெயர்களாற் குறித்தது,
அவரவர்பெருமையை நன்குவிளக்கும். ‘சேய்’ என்னும் ஆண்பாற் சிறப்புப்பெயர்
அன்விகுதிபெற்றது. செயற்கை யென்ற தொழிற்பெயரில், அல்-சாரியை. பி-ம்:
வெல்லும்விரகார்.

இதுமுதல் பதினைந்து கவிகள்-பெரும்பாலும் ஈற்றுச்சீரிரண்டும் மாச்சீர்களும்,
மற்றைநான்கும் காய்ச்சீர்களு மாகிய அறுசீராசிரியவிருத்தங்கள்.  

சேடன் முடி நெளிய வரு செம் பொன் தேர் அழிவதோ,
அந்தோ, அந்தோ!
கேடக வாள் அணி வலயக் கிளர் புயத் தோள் அறுவதோ,
அந்தோ, அந்தோ!
கூடக வெங் கதை ஒன்றால் சிந்து பதி கொல்வதோ,
அந்தோ, அந்தோ!
ஆடு அமரில் ஒருவரும் வந்து உதவாமல் இருப்பதோ,
அந்தோ, அந்தோ!

சேடன் – (கீழிருந்து பூமியைத் தாங்குகிற) ஆதி சேஷனது, முடி-
தலை,நெளிய-(பாரமிகுதியைப் பொறுக்கமாட்டாமல்) வளையும்படி, வரு-வருகிற,
செம் பொன்தேர்- (அபிமனது) சிவந்த பொன்மயமான தேர், அழிவதுஓ- அழிதல்
தகுதியோ!அந்தோ அந்தோ-ஐயோ ஐயோ!! கேடகம் வாள்-கேடகத்தையும்
வாளையும் ஏந்திய,அணி வலயம் – அழகிய வளையை அணிந்த, கிளர் புயம்-
விளங்குகிறதோள்களையுடைய, தோள் – (அபிமனது) கைகள், அறுவதுஒ-
அறுபடுதல் தகுதியோ!அந்தோ அந்தோ-!! கூடகம்-வஞ்சனையையுடைய, வெம்
கதை ஒன்றால் -கொடியதொரு கதாயுதத்தால், சிந்துபதி-சிந்துதேசத்தரசன்,
கொல்வதுஓ-(அபிமனைக்)கொல்லுதல் தகுதியோ! அந்தோ அந்தோ-!! ஆடு
அமரில் – செய்கிற போரில், அருகுஒருவர் வாரமல் இருப்பதுஓ- (இவ்வபிமனது)
சமீபத்தில் ஒருத்தரும்துணைவராதிருத்தல் தகுதியோ-! அந்தோ அந்தோ-!! (எ-று.)

     ஓகாரங்கள்-சிறிதுந்தகுதியன் றென்று இரங்குதலை உணர்த்தும். சேஷன்
என்றுவடசொல் -(பிரளயகாலத்திலும் அழியாமல்) மிகுந்து நிற்பவனென்று
காரணப்பொருள்படும். வரத்தா லமைந்ததாதலின், ‘கூடகவெங்கதை’எனப்பட்டது;
இனி, கூடகம்-நுனியுமாம். பி-ம்: வந்துதவாமல்.  

கன்னனையும் தேர் அழித்தான், கந்தனிலும் வலியனே,
அந்தோ, அந்தோ!
மன்னவர் ஐவரும் இருக்க, மைந்தன் உயிர் அழிவதே,
அந்தோ, அந்தோ!
பொன்னுலகோர் வியந்து உருகிப் புந்தியினால் மலர்
பொழிந்தார், அந்தோ, அந்தோ!
அன்ன நெடுந் துவசன் இவற்கு ஆயு மிகக் கொடுத்திலனே,
அந்தோ, அந்தோ!

(அபிமன்), கன்னனைஉம் தேர் அழித்தான் – கர்ணனையுந்
தேரழியச்செய்தான்; கந்தனில்உம் வலியன்ஏ – முருகக் கடவுளினும்
பலசாலியேயாவன்! அந்தோ அந்தோ-!! மன்னவர்ஐவர்உம் இருக்க-
பாண்டவராசர்கள்ஐந்துபேரும் உயிருடனிருக்க. மைந்தன்-அவர்கள் மகனான
அபிமன், உயிர்அழிவதுஏ-இறப்பதோ! அந்தோ அந்தோ-!! பொன் உலகோர் –
பொன்மயமானசுவர்க்க லோகத்திலுள்ள தேவர்கள், வியந்து-(இவன்பராக்கிரமத்தை)
அதிசயித்து, உருகி-மனமுருகி, புந்தியினால் – நல்லறிவோடு, மலர் பொழிந்தார்-
(இவன்மேல்) பூமாரிபொழிந்தார்கள்! அந்தோ அந்தோ-!! அன்னம் நெடு துவசன் –
அன்னப்பறவையின் வடிவத்தையெழுதிய பெரிய கொடியையுடைய பிரமன், இவற்கு-
இந்த அபிமனுக்கு, ஆயு மிக கொடுத்திலன்ஏ-ஆயுளை மிகுதியாகக்
கொடுத்தானில்லையே! அந்தோ அந்தோ-!! (எ – .று)

     கந்தன் – ஸ்கந்தன் என்னும் வடசொல்லின் திரிபு; இதற்கு- (சத்துருக்களை)
வற்றச்செய்பவனென்பது அவயவப்பொருள்; ‘சேயவன்வடிவமாறுந் திரட்டிநீ
யொன்றாய்ச் செய்தாய், ஆயதனாலே கந்தனாமெனுநாமம் பெற்றான்” எனக்
கந்தபுராணத்திற் கூறியபடி, (சக்திசொரூபமான உமாதேவியினால்) சேர்க்கப்பட்டவ
னென்றும் பொருள்கொள்ளலாம்.  இவன், தேவர்கள் வேண்டுகோளுக்கு இரங்கிய
பரமசிவனது திருவருளால் அப்பிரானதுகுமாரனாகத் தோன்றித் தேவசேனாபதியாகிச்
சூரபதுமன் முதலிய அசுரர்களை அழித்தது, பிரசித்தம். மேன்மையுடையாரது
இயல்பை யுணர்ந்து அழுக்காறும் உபேட்சையுமில்லாமல் அப்பொழுதப்பொழுது
கொண்டாடுதல் அறிவின்பயனாதலால். ‘புந்தியினால் மலர்பொழிந்தார்’ என்றார்.

சரம் அறுத்தான், வில் அறுத்தான், கொடி அறுத்தான்,
தேர் அறுத்தான், சமர பூமி
உரம் அறுத்தான், முதல் பொருத உதய தினகரன்
மைந்தன்; உடன்று சீறிக்
கரம் அறுத்தான், நடுப் பொருத கார்முகத்தின் குரு;
விசயன் காளைதன்னைச்
சிரம் அறுத்தான், பின் பொருத சயத்திரதன்; இவன்
வீரம் செப்பலாமோ!

சமர பூமி-யுத்தகளத்தில், முதல் பொருத-முதலில் எதிர்த்துப் போர்
செய்த,உதய தினகரன் மைந்தன் – உதித்தலையுடைய சூரியனுக்குப் புத்திரனான
கர்ணன்,உடன்று சீறி – பகைத்துக் கோபங்கொண்டு, (இவ்வபிமனது), சரம் –
அம்பை,அறுத்தான்-துணித்தான்; வில் அறுத்தான்-; தேர் அறுத்தான்-; கொடி
அறுத்தான்-;உரம் அறுத்தான்-வலிமையை அழித்தான்; (பின்பு), நடு பொருத –
இடையிற்போர்செய்த, கார் முகத்திங் குரு – வில்லாசிரியனான துரோணன்,
கரம்அறுத்தான்-ஒருகையைத் துணித்தான்; பின் பொருத சயத்திரதன் – அதன்பின்
இறுதியாகப் போர்செய்த சைந்தவன், விசயன் காளைதன்னை – அருச்சுனன்
மகனான இவனை, சிரம் அறுத்தான் – தலை துணித்தான்; இவன் – (இங்ஙனம்
ஒருவரால் எதிர்த்துப் பொருது கொல்ல முடியாமல் பலரால் ஒருங்குகூடிப்
பொருதுஅழிக்கப்பட்ட) இவ்வபிமனது, வீரம் – பராக்கிரமம், செப்பல் ஆம்ஓ –
சொல்லமுடியுமோ? (எ – று.)-எவராலும் முழுவதும் எடுத்துச்சொல்ல முடியாது
என்பதாம்.

     சமரபூமி, உடன்றுசீறி, விசயன்காளைதன்னை என்றவற்றை,
மற்றைவாக்கியங்களிலும் எடுத்துக்கூட்டுக. உரம் என்பதற்கு –  மார்பென்று பொருள்
கூறுதல் பொருந்தாமையை. கீழ் 104 – ஆங் கவி நோக்கி யுணர்க. 

எட்டு ஆனைத் தம்பமுடன் சயத் தம்பம் நாட்டிய
பேர் இறைவன் மைந்தன்
பட்டான் என்பது கேட்டுத் திருகினார், முதுகிட்டுப்
பறந்த வீரர்;
ஒட்டாமல் செயிர் அமரில் உயிர் இழந்த தன் புதல்வற்கு
உருகும் சோகம்
விட்டான், ‘வெஞ் சமரம் இனி வென்றோம்!’ என்று
உட்கொண்டான், வேந்தர் வேந்தன்.135. அபிமனிறந்ததுகேட்ட மாற்றலரின்செய்கை.

எட்டு ஆனை தம்பமுடன் – எட்டுத்திசைகளிலும் திக்கஜங்களைக்
கட்டிநிற்கிற தூண்களுடனே, சயத்தம்பம் நாட்டிய-(தனது) வெற்றிக்கொடிக்
கம்பத்தைநிலைநிறுத்திய, பேர் இறைவன்-சிறந்த அரசனான அருச்சுனனுக்கு,
மைந்தன் -மகனான அபிமன், பட்டான்-இறந்தான், என்பது-என்கிறசெய்தியை,
கேட்டு-கேள்விப்பட்டு,-முதுகு இட்டு பறந்த வீரர் திருகினார் -(முன்பு
அபிமனெதிரிற்)புறங்கொடுத்துப் பறந்தோடியவீரர்கள் (மகிழ்ந்து தைரியத்தோடு)
திரும்பினார்கள்;வேந்தர் வேந்தன் – ராஜராஜனான துரியோதனன், செயிர்
அமரில்-கோபத்தோடுசெய்யும் போரில், ஒட்டாமல்-நிலைநிற்காமல், உயிர்
இழந்து-இறந்த, தன்புதல்வற்கு-தனக்குமகனான இலக்கணன்பொருட்டாக,
உருகும் – மனங்கரைகிற, சோகம்-விசனத்தையும், விட்டான்-நீங்கி, இனி-,
வெம்சமரம் வென்றோம் என்று உள்கொண்டான்-கொடிய போரில்
(பாண்டவரைச்) சயித்திட்டோமென்று கருதினான்;(எ – று.)

     ‘ஆனைத்தம்பமுடன்’ என்பதற்கு – யானைகட்டுந்தறியோடு ஒப்ப என்று
பொருள்கொள்ளுதலும் பொருந்தும்; “தனித்தனியே திசையானைத் தறிகளாகச்
சயத்தம்பம் பலநாட்டி” என்ற கலிங்கத்துப்பரணியைக் காண்க. ‘கேட்டு’ என்றதனால்
நெடுந்தூரம் ஓடியமை விளங்கும். வென்றோம் – காலவழுவமைதி. ஒட்டாமல் –
வாழும் ஊழ்வினை இல்லாமலெனினுமாம். பி-ம்: போரிறைவன்.

ஓர் இரண்டு வயவர் முனைந்து உடன் பொருதல்
உலகியற்கை; ஒருவன் தன்மேல்
போர் இரண்டு புறமும் வளைந்து, ஒரு கோடி முடி
வேந்தர் பொருது கொன்றார்;
தேர் இரண்டு கிடையாத குறை அன்றோ, களத்து
அவிந்தான், சிறுவன்!’ என்று என்று,
ஈர்-இரண்டு பெயர் ஒழிய மற்று உள்ளார் அழுது
இரங்கி என் பட்டாரே!’136.- துரியோதனன் முதலிய நால்வர்தவிர யாவரும்
அபிமனிறந்தமைக்கு இரங்குதல்.

ஓர் இரண்டு வயவர் – இரண்டுவீரர்கள், முனைந்து-பிரயத்தனப்பட்டு,
உடன் பொருதல் – (தம்மில் ஒருவரோடொருவர்) போர்செய்தல், உலகு இயற்கை-
உலகத்துஇயல்பாம்: (அங்ஙனமிருக்க), ஒருவன்தன்மேல்-(அபிமன்) ஒருத்தன்மேலே,
ஒரு கோடி முடி வேந்தர்-கிரீடந்தரித்த மிகப்பல அரசர்கள், இரண்டு புறம்உம்
வளைந்து-இரண்டுபக்கத்திலும் எதிர்த்துச்சூழ்ந்து, போர் பொருது- போர்செய்து,
கொன்றார்-(அவனைக்) கொன்றுவிட்டார்கள்; தேர் இரண்டு கிடையாத குறை
அன்றுஓ – இரண்டாவது ஒரு தேர்கிடைக்காத குறைவினா லன்றோ, சிறுவன் –
இளங்குமரனான அபிமன், களத்து அவிந்தான் – போர்க்களத்தில் இறந்தான்,
என்று என்று-என்று (பலவாறு) எண்ணி, ஈர் இரண்டு பெயர் ஒழிய மற்று உள்ளார்-
நாலுபேர்தவிர மற்றுள்ளவர் எல்லோரும், அழுது இரங்கி-புலம்பிச் சோகித்து, என்
பட்டார் – என்னபாடு பட்டார்கள்? [மிகத் துன்பமுற்றார்கள் என்றபடி] எ – று.)-
ஏ-இரக்கம்.

     ஈரிரண்டுபேர் – துரியோதனன், சயத்திரதன், சகுனி, கர்ணன் என இவர்;
கர்ணனைநீக்கித் துச்சாதனனைச் சேர்த்தலும் ஒன்று. தனதுதேர் கர்ணனம்பால்
அழிந்தகாலத்தில் மறுபடி ஏறிக்கொள்ளுதற்கு உதவியாக மற்றொருதேர்
கிடைத்திருந்தால் அபிமனைக் கொல்ல எவராலும் ஆகாதென்பது, மூன்றாம்
அடியால் விளங்கும்.

தாள் விசயம் பெற முனைந்து, சக்கரயூகம் பிளந்து,
தானே நின்று,
வாள் விசயன் திருமதலை, வானோரும் வியந்து
உரைக்க, மாய்ந்தான்!’ என்று,
வேள்வியினால், உண்மையினால், திண்மையினால்,
தண் அளியால் விறலால், பல் நூற்
கேள்வியினால் மிகுந்து, எவர்க்கும் கேளான
உதிட்டிரனும் கேட்டான் அன்றே.137.- அபிமனிறந்தமையைத் தருமன்  கேட்டல்.

வேள்வியினால்-யாகங்களினாலும், உண்மையினால்- சத்தியத்தினாலும்,
திண்மையினால் -வலிமையினாலும், தண் அளியால் – குளிர்ந்த கருணையினாலும்,
விறலால் – வெற்றியினாலும், பல்நூல் கேள்வியினால் – பல சாஸ்திரார்த்தங்களைக்
கேட்டலாலும்,  மிகுந்து-, எவர்க்குஉம் கேள் ஆன – எல்லோர்க்கும் சினேகிதனான,
உதிட்டிரன்உம் – தருமபுத்திரனும்,-‘வாள் விசயன் திருமதலை-ஆயுதம்வல்ல
அருச்சுனனுக்குச் சிறந்த குமாரனான அபிமன், தாள்-(தனது) முயற்சியால், விசயம்
பெற – வெற்றியை யடையும்படி, முனைந்து – போர்செய்து, சக்கரயூகம் பிளந்து –
சக்கரவியூகத்தைப் பேதித்து, தான் ஏ நின்று-தான்மாத்திரமே தனியாகநின்று,
வானோர்உம் வியந்து உரைக்க – தேவர்களும் அதிசயித்துப் புகழ, மாய்ந்தான்-
இறந்தான்,’ என்று கேட்டான் – என்று கேள்விப்பட்டான்; (எ – று.)-அன்றே-
ஈற்றசை.

     தருமன் சக்கரவியூகத்துக்கு வெளியேநின்றவனாதலால், ‘கேட்டான்’ என்றார்.
எவர்க்குங் கேளான உதிட்டிரன் – அஜாதசத்ருவென்று தருமனுக்கு ஒருபெயர்;
அதற்குப் பகையில்லாதவனென்று பொருள்   

பிறந்த தினம் முதலாகப் பெற்றெடுத்த விடலையினும்
பீடும் தேசும்
சிறந்தனை”என்று உனைக் கொண்டே தெவ்வரை வென்று
உலகு ஆளச் சிந்தித்தேன் யான்;
மறந்தனையோ, எங்களையும்? மாலையினால்
வளைப்புண்டு, மருவார் போரில்
இறந்தனையோ? என் கண்ணே! என் உயிரே! அபிமா!
இன்று என் செய்தாயே!138.- நான்குகவிகள் – அபிமனிறந்ததற்குத் தருமன் புலம்பலைக் கூறும்.

என் கண்ணே – எனது கண்போன்றவனே! என் உயிரே-எனது
உயிர்போன்றவனே! அபிமா-அபிமந்யுவே! பிறந்த தினம் முதல் ஆக-(நீ)
பிறந்தநாள்முதற்கொண்டு, பெற்று எடுத்த விடலையின்உம்-(உன்னைப்)
பெற்றெடுத்த வீரனானஅருச்சுனனைக் காட்டிலும், பீடுஉம் தேசுஉம் சிறந்தனை –
(நீ) பெருமையும் ஒளியும் மிக்குள்ளாய், என்று – என்ற காரணத்தால், உனை
கொண்டு ஏ தெவ்வரை வென்று உலகு ஆனசிந்தித்தேன்  ஏ – உன்னைக்
கொண்டே பகைவர்களைவென்று (யான்) உலகத்தைஅரசாள எண்ணியிருந்தேனே!
எங்களைஉம்-(உனது அன்புள்ள தந்தையரான)எங்களையும், மறந்தனைஓ-
மறந்துவிட்டாயோ? (மறந்திடாமல்), மாலையினால்வளைப்புண்டு – கொன்றை
மாலையாற் சூழப்பட்டு, மருவார் போரில்-பகைவர்கள்செய்தபோரில், இறந்தனை ஓ-?
இன்று என்செய்தாய்ஏ-இன்றைக்குஎன்னசெய்துவிட்டாயே!

     தந்தைக்கு ‘பெற்றெடுத்த’ என்ற அடைமொழிகொடுத்தல், உபசாரம். இனி,
‘பெற்றெடுத்தவிடலையினும்’ என்பதற்கு-யான்பெற்றுவளர்த்த (விந்தனென்னும்
எனது)குமாரனினும் என்று உரைத்தல் சிறப்பன்று, என்கண், என் உயிர் –
சிறப்பினால்உயர்திணையில் அஃறிணைவந்த வழுவமைதி; [நன்-பொது-28.] பி-ம்:
சிந்தித்தேன்யான்.   

தேன் இருக்கும் நறு மலர்த் தார்ச் சிலை விசயன்
இருக்க, வரைத் திண்தோள் வீமன்-
தான் இருக்க, மா நகுல சாதேவர் தாம் இருக்க,
தமராய் வந்து
வான் இருக்கின் முடிவான மரகத மா மலை இருக்க,
வாழ்வான் எண்ணி
யான் இருக்க, வினை அறியா இளஞ் சிங்கம் இறப்பதே?
என்னே! என்னே!

தேன் இருக்கும் -தேன்பொருந்தின, நறு-வாசனை வீசுகிற, மலர்-
பூக்களாலாகிய, தார் – வெற்றிமாலையையுடைய, சிலை-(காண்டீவமென்னும்)
வில்லையுடைய, விசயன் – அருச்சுனன், இருக்க – வாழ்ந்திருக்க,- வரை திண்
தோள் – மலைகள்போலும் வலியதோள்களையுடைய, வீமன்-,  தான் இருக்க-,
மா-சிறந்த, நகுல சகாதேவர்-, தாம் இருக்க-, வான் இருக்கின் முடிவு ஆன-
சிறந்தவேதங்களின் அந்தத்துப்பொருளான, மரகதம் மா மலை-சிறந்த
மரகதரத்தினமயமான மலை போன்ற கண்ணபிரான், தமர் ஆய் வந்து-
உறவினனாய்ப் பொருந்தி, இருக்க-, யான்-, வாழ்வான் என்ணி – (பகைவென்று
அரசாண்டு) வாழக் கருதி,  இருக்க-, வினை அறியா – செய்தொழிலை முற்ற
அறியாத, இளசிங்கம் சிங்கக்குட்டிபோன்ற நீ, இறப்பது தகுதியோ? என்னே
என்னே-(இது) என்ன அநீதி! என்ன அநீதி!! (எ – று.)-பி-ம்; விளைவறியா.

     அபிமன்சக்கரவியூகத்தின் உட்செல்லுதல்மாத்திரம் உணர்ந்து
மீண்டுவரவிதறியாதவ னென்பது தோன்ற, ‘வினையறியா இளஞ்சிங்கம்’ என்றார்;
இதனை முதனூலால் அறிக. ‘தமராய்வந்து’ என்பது, எல்லோருக்குங் கூட்டத்தக்கது:
ஆனதுபற்றியே, ‘தமர்’ எனப் பண்மையாற் கூறியது. மாநகுலன் என எடுத்து,
குதிரைத் தொழிலில்வல்ல நகுலனென்றுமாம். நகுலசகதேவர் இரட்டைப்
பிள்ளையராதலால், ஒருதொடராகக் கூறப்பட்டனர். இருக்கு- நான்குவேதங்களுள்
முதலாவதன் பெயராவதே யன்றி, எல்லா வேதங்களுக்கும் பொதுப்பெயராகவும்
வழங்கும். ‘இருக்கின்முடிவு’ என்றது-வேதத்தின்பிரிவான கர்மகாண்டம் பிரகாண்டம்
என்ற இரண்டனுள் சிறந்ததும், பிந்தினதுமான உபநிஷத்துக்களின்
சித்தாந்தமானபொருளை, மரகதம்-மரகதம்: எழுத்துநிலைமாறுதல்: இலக்கணப்போலி,
மரகதம்-பச்சையிரத்தினம், மரகதமாமலை-உவமையாகுபெயர்;
“பச்சைமாமலைபோல்மேனி” என்றதுங் காண்க.   

‘நின்றனையே எனைக் காத்து; “நீ ஏகு” என்று யான்
உரைப்ப, நெடுந் தேர் ஊர்ந்து
சென்றனையே இமைப் பொழுதில்; திகிரியையும்
உடைத்தனையே; தெவ்வர் ஓட,
வென்றனையே; சுயோதனன்தன் மகவுடனே மகவு
அனைத்தும் விடம் கால் அம்பின்
கொன்றனையே; நின் ஆண்மை மீண்டு உரைக்கக்
கூசினையோ?-குமரர் ஏறே!

குமார் ஏறே – இராசகுமாரர்களுள் சிங்கம்போன்றவனே!  எனை
காத்து நின்றனைஏ-(நீ இதுவரையில்) என்னை(ப்போரில்) பாதுகாத்து நின்றாயே; நீ
ஏகு என்று யான் உரைப்ப- (சக்கரவியூகத்தைப் பிளத்தற்கு) ‘நீ செல்’ என்று நான்
சொல்ல, நெடு தேர் ஊர்ந்து சென்றனைஏ – பெரிய தேரைச்செலுத்திக்
கொண்டுபோயினாயே; இமை பொழுதில்-கண்ணிமைப்பொழுதிலே, திகிரியைஉம்
உடைத்தனைஏ – சக்கரவியூகத்தையும் பேதித்தாயே; தெவ்வர் ஓட வென்றனைஏ –
(பின்பு) பகைவர்கள் ஓடச் சயித்தாயே; சுயோதனன்தன் மகவுடனே-
துரியோதனன்புத்திரனான இலக்கணனுடனே, மகவு அனைத்துஉம்-(மற்றும்)
இராசகுமாரர் பலரையும், விடம் கால் அம்பின்-விஷத்தை வெளிச்சொரிகிற
பாணங்களால், கொன்றனைஏ-கொன்றிட்டாயே; நின் ஆண்மை- உனது
(இப்படிப்பட்ட) பராக்கிரமத்தை, மீண்டு உரைக்க-திரும்பி வந்து (என்னுடன்)
சொல்ல,கூசினைஓ – நாணங்கொண்டுவாராது சென்றாயோ? (எ – று.)

     “போர்வாய்ப்பச் செய்தவைநாடாச் சிறப்புடைமை,… நலமாட்சி நல்லவர்
கோள்” என்றபட, போரில்வெற்றியுண்டாம்படி தான் செய்த செயல்களைத் தானே
எடுத்துச்செல்ல நாணுதல்  சுத்த வீராது நற்குண மாதலின், ‘நின்னாண்மை
மீண்டுரைக்கக் கூசினையோ’ என்றான்.   

உனக்கு உதவி ஒருவர் அற, ஒரு தனி நின்று
அமர் உடற்றி, ஒழிந்த மாற்றம்,
தனக்கு நிகர் தான் ஆன தனஞ்சயனும் கேட்கின்,
உயிர் தரிக்குமோதான்?
எனக்கு அவனி தர இருந்தது இத்தனையோ?
மகனே!’ என்று என்று மாழ்கி,
மனக் கவலையுடன் அழிந்து, மணித் தேரின் மிசை
வீழ்ந்தான், மன்னர் கோவே.

உனக்கு உதவி ஒருவர் அற- உனக்கு உதவிசெய்பவர்
ஒருவருமில்லாமல், ஒரு தனி நின்று-(நீ சக்கரவியூகத்தினுள்) தன்னந்தனியே
நின்று,அமர் உடற்றி-போர்செய்து, ஒழிந்த- இறந்த, மாற்றம்-செய்தியை,
கேட்கின்-கேட்டால்,தனக்கு  நிகர்தான் ஆன தனஞ்சயன்உம்-(வேறுஉவமை
பெறாமையால்)தனக்குத்தானேஒப்பான அருச்சுனனும், தான் உயிர்தரிக்கும்
ஓ-தான்பிழைத்திருப்பானோ? மகனே-!- (நீ), எனக்கு அவனி தரஇருந்தது- எனக்கு
இராச்சியத்தைக் கொடுக்க இருந்தது, இதனைஓ இவ்வளவு தானோ? என்று
என்றுமாழ்கி-என்றுபலவாறு சொல்லிப் புலம்பிச் சோகித்து, மன்னர் கோ-அரசர்க்கு
அரசனான தருமன், மனக்கவலையுடன்-, அழிந்து-மூர்ச்சித்து, மணி தேரின்மிசை-
அழகியதேரில், வீழ்ந்தான்

சங்கலார், இடை வளைத்த சக்கரத்தை உடைப்பதற்குத்
தமியேன் எய்தி,
அங்கு உலாவரும் இரதத்து அரசரையும் தொலைத்து,
உன்னை அடுப்பான் வந்தேன்;
பங்கு எலாம் மரகதமாம் பவள நிறப் பொருப்பு உதவு
பைம் பொன் கொன்றைத்
தொங்கலால் உனை வளைத்த சூழ்ச்சியை இன்று
அறிந்திலனே, தோன்றலே! நான்.142.- இதுமுதல் மூன்றுகவிகள் – வீமன்புலம்புதல்.

தோன்றலே – குமாரனே! சங்கலார் – பகைவர்கள்,இடை
வளைத்த-(நீ)நடுவிலிருக்க (உன்னைச்) சூழ்ந்துகொண்ட, சக்கரத்தை-சக்கர
வியூகத்தை,உடைப்பதற்கு-, தமியேன்-தனியனான யான், எய்தி – மனம்பொருத்தி,
அங்கு உலாவரும் – அந்தச் சக்கரவியூகத்தில் உல்லாசமாகப்பொருந்திய, இரதத்து
அரசரை உம்-தேர்வீரர்களையும், தொலைத்து-அழித்து, உன்னை அடுப்பான்
வந்தேன்-உன்னைச்சமீபித்தற்கு வந்தேன்; பங்கு எலாம் மரகதம் ஆம்-
(பார்வதீரூபமான) இடபக்கம் முழுவதும் பச்சை ரத்தின நிறமான, பவளம் நிறம்
பொருப்பு -பவழநிறத்தையுடையமலை போன்ற சிவபிரான், உதவு-கொடுத்தருளிய,
பை பொன்கொன்றை தொங்கலால்-பசிய பொன்னின்நிறமான கொன்றைப்
பூமாலையைக்கொண்டு, கோறுவித்த-(உன்னைக்) கொல்வித்த, சூழ்ச்சியை-
வஞ்சனையை, இன்று நான் அறிந்திலன்ஏ – இன்று நான்
அறிந்திட்டேனில்லையோ!(எ – று.)

     சங்கு – ஸங்க மென்னும் வடமொழி விகாரப்பட்டது; கூடுதலென்று பொருள்,
அதனையுடையவரல்லாதவர் – சங்கலார்; எனவே, பகைவராவர். தமியேன்-ஒப்பற்ற
யான், ஒன்றியானயான், அர்த்தநாரீசுவரனாதலால், இவ்வாறு கூறினார். பொருப்பு-
இங்கே, உவமவாகுபெயர். ‘கோறுவித்த’ என்பதில், றுவி என்னும் இரண்டு
பிறவினைவிகுதிகள் விகுதிமேல்விகுதியாய் அடுக்கி வந்தன வெனக் கொள்ளல்
வேண்டும்; கொல் என்னும் பகுதி, முதல் நீண்டு இறுதிகெட்டது. சந்திவிகாரங்கள்.
பி-ம்: உனை வளைத்தசூழ்ச்சியை, கோறல்புரிசூழ்ச்சியை.  

மின்னாமல் இடித்தது என வீழ்த்த பொலந் தொடையாலும்,
விடையோன் ஈந்த
பொன் ஆர் வெங் கதையாலும், அல்லது, அபிமனை
அமரில் பொர வல்லார் யார்?
தன் ஆண்மை நிலை நிறுத்தி, சங்கம் முழக்கிய வீர
சிங்க சாப
என் ஆனை இறந்து பட, இன்னமும் நான் இவ் உயிர்
கொண்டு இருக்கின்றேனே!

மின்னாமல் இடித்தது என – மின்னலில்லாமலே இடியிடித்தது
போல,வீழ்ந்த – (எதிர்பாராதிருக்கக்) கொணர்ந்து போகட்ட,
பொலம்தொடையால்உம்-பொன்னிறமான கொன்றைப்பூமாலையினாலும்,
விடையோன் ஈந்த-இடபத்தை(வாகனமுங்கொடியுமாக) உடைய சிவபிரான்
கொடுத்த, பொன் ஆர் வெம்கதையால்உம்-பொன்மயமாய்நிறைந்த கொடிய
கதாயுதத்தினாலும், அல்லது-(இவ்விரண்டினாலும்) அன்றி, அபிமனை-,
அமரில்-யுத்தத்தில் பொர வல்லார்-(தம்வலிமையால்) அழிக்கவல்லவர், யார்-யாவர்
(உளர்)? [எவருமில்லை யென்றபடி]; தன் ஆண்மை நிலை நிறுத்தி –
தனதுபராக்கிரமத்தை நிலைநிற்கச்செய்து, சங்கம் முழக்கிய-(அதற்கு அறிகுறியாகத்
தனது) வெற்றிச்சங்கத்தை ஊதி ஒலிசெய்த, வீரம் சிங்க சாபம் –
வீரத்தன்மையையுடைய சிங்கக் குட்டிபோன்ற, என் ஆனை-எனது யானை போன்ற
இளங்குமரன், இறந்து பட-அழிந்து ஒழிய இன்னம்உம்-அதன் பின்பும். நான்-, இ
உயிர் கொண்டு இருக்கின்றேன்ஏ- (இறவாமல்) இவ்வுயிரை
வைத்துக்கொண்டிருக்கிறேனே.! (எ-று.)

     இப்பாடலை நகுலன் புலம்பலாகவும், அடுத்த பாடலைச் சகதேவன்
புலம்பலாகவும் கொள்ளினுமாம்.
 மின்னல் காணப்படுதலும், இடி முழக்கங்
கேட்கப்படுதலும் என்னும் இரண்டும் உண்மையில் ஒரு தொழிலின்பயனேயாயினும்,
மின்னற்காட்சி முன்னும் இடிக் கேள்வி பின்னுமாகி மின்னல் தோன்றுதல்
இடிமுழக்கத்தை முன்னர்த்தெரிவிக்கிற அறிகுறியாகும் இயல்பைக் கருதுக

எடுத்த படை அனைத்தினுக்கும் எதிர் இல்லை எனக்
கலைகள் எல்லாம் உன்னை
அடுத்தது கண்டு, ஐயா! நின் ஆர் உயிர்க்குக் கரைந்து
கரைந்து ஐயுற்றேன் யான்;
விடுத்த பெருந்தாதை இரு விழி களிப்பப் பகை வென்று
மீளாது, என்னைக்
கெடுத்தனையே! பிழைத்தனை என்று இனி ஒருவர்
வந்துஉரைக்கக் கேளேன் கொல்லோ?’

எடுத்த-(கையில்) ஏந்திய, படை அனைத்தினுக்கு உம்-
ஆயுதங்களெல்லாவற்றிலும், எதிர் இல்லை – (உனக்கு) ஓப்பு இல்லை, என –
என்றுசொல்லும்படி, கலைகள் எல்லாம் – எல்லாக்  கல்விகளும், உன்னை
அடுத்தது-உன்னைச் சேர்ந்து அமைந்ததை, கண்டு-, ஐயா-! யான்-, நின் ஆர்
உயிர்க்கு -உனது அருமையான உயிரின்பொருட்டு, கரைந்து கரைந்து ஐயுற்றேன்-
மிகமனமுருகி (முன்னமே) சங்கித்திருந்தேன்; (அதற்கு ஏற்க), விடுத்த பெரு திரு
தாதை-(பகைவெல்லுதற்கு உன்னை) அனுப்பின சிறந்த  பெரிய தந்தையான
தருமன், விழிகளிப்ப-கண்களாற் கண்டு  களிக்கும்படி, பகை வென்று மீளாது –
பகைவர்களைவென்று திரும்பாமல், (இறந்து), என்னை கெடுத்தனைஏ- என்னை
அழித்துவிட்டாயே; இனி-, பிழைத்தனை என்று ஒருவர் வந்து உரைக்க, (நீ)
பிழைத்தாயென்று ஒருத்தர் வந்து சொல்ல, கேளேன் கொல் ஓ-கேட்கமாட்டேனோ?
(எ – று.)

     ‘அதி ஸ்நேஹ: பாபஸங்கீ’ என்றபடி ஒருவனுக்கு ஒருத்தனிடம் மிக்க அன்பு
இருந்தால் அவனுக்கு என்ன தீங்குநேருமோ என்ற பயசங்கையே முன்னர்த்
தோன்றுவது இயல்பாதலாலும், ஒப்புயர்வில்லாமல் மிக்க இளமையிலேயே
கல்விமுற்றும் நிரம்பியவர் திருஷ்டிதோஷம் பட்டாற்போல அற்ப ஆயுளுடையராய்
விரைவில் இறத்தல் உலக வியல்பாதலாலும், இவ்வாறு கூறினான்-கெடுத்தல் –
துன்படையச்செய்தல். ‘உன்னைக் கெடுத்தனையே’ என்ற பாடமும் பொருந்தும்:
அப்பொழுது, கெடுத்தல்- போக்கிக் கொள்ளுதல், பி-ம்: பெருந்தாதையிருவிழி.
கேட்பேன் கொல்லோ,  

என்று என்று, வீமனும் தன் இளையோரும் அழுது
அரற்ற, ‘இறந்தோன் வீரம்
நன்று!’ என்று, தளம் இரண்டின் நரபாலர் பலர்
திரண்டு நவிலா நிற்ப,
அன்று, என்று மனம் மருளுற்று, அபிமன் அடு
தலைக் குன்றை அடுத்து, மேலைக்
குன்று என்று தடுமாறி, பின்னையும் போய்த் தனது
தடங் குன்று சேர்ந்தான்.145.- சூரியாஸ்தமன வருணனை.

என்று என்று-என்று பலவாறு சொல்லி, வீமனும்-, தன்
இளையோர்உம் அவன் தம்பிமாரன நகுலசகதேவரும், அழுது அரற்ற -புலம்பிக்
கதறவும், ‘இறந்தோன் வீரம்- மரித்த அபிமனது பராக்கிரமம், நன்று – சிறந்தது’
என்று-, தளம் இரண்டில்- இருதிறத்துச் சேனைகளிலும், நரபாலர் பலர் திரண்டு –
அரசர்கள் பலர் ஒருங்குகூடி, நவிலாநிற்ப-கூறிய புகழ்ந்துநிற்கவும், (கேட்டு,
அதனால்), என்று – சூரியன், அன்று- அப்பொழுது, மனம் மருள் உற்று-
மனம்மயங்கி, அபிமன் அடு தலை குன்றை – அபிமன் கொன்றுவிழுத்திய
பகைவர்தலைகளா லாகிய மலையை, மேலை குன்று என்று தடுமாறி அடுத்து –
மேற்குத்திக்கிலுள்ள அஸ்தகிரி யென்று மாறாகக்கருதிச் சமீபித்து, (அது
அங்ஙனமல்லாமையால்), பின்னைஉம் போய்-பின்பு அப்பால் விலகிச் சென்று,
தனதுதட குன்று சேர்ந்தான்-தனக்கு உரிய பெரிய அஸ்தகிரியை  அடைந்தான்;
(எ – று.)

     தலைக்குவியலை மலையென்று மயங்கியதாகக் கூறியதனால், மயக்கவணி:
வடநூலார் ‘பிராந்திமதலங்காரம்’ என்பர். ‘என்று’  என்ற தெய்வப்பெயர்
உயர்திணையாக, ‘சேர்ந்தான்’ என்று கூறப்பட்டது. ‘அன்று என்று’ என எடுத்து-
அல்லதென்று அறிந்து என்று உரைத்து, ‘அடுத்து’ என்பதன் பின் கூட்டினால்,
‘சூரியன்’ என்ற தோன்றாஎழுவாய் வருவிக்க.

இந் நிலத்து அவனி பாலர் இவ் வகை
இரங்கி ஏங்க,
தென் நிலத்து எதிர்ந்துளாரைத் தென்
நிலம்தன்னில் ஏற்றி,
எந் நிலத்தினும் தன் ஆண்மைக்கு எதிர்
இலா விசயன்தானும்,
அந் நிலத்து அகன்று, மீண்டான் உற்றவாறு
அறிகிலாதான்.146.-சஞ்சத்தகரைவென்ற அருச்சுனன் அங்குநின்றுமீளுதல்.

இ நிலத்து – இப்போர்களத்தினிடத்திலே, அவனிபாலர்- பூமியைக்
காப்பவரான அரசர்கள், இ வகை இரங்கி ஏங்க- இவ்வாறு சோகித்துப் புலம்ப,- எ
நிலத்தின்உம்-எவ்விடத்திலும், தன் ஆண்மைக்கு எதிர் இலா-தனது
பராக்கிரமத்துக்குஎதிரில்லாத, விசயன்தான்உம்- அருச்சுனனும், தென் நிலத்து-
தெற்குத்திக்கில்,எதிர்ந்துளாரை-(தன்னை) எதிர்த்துச்சென்ற சஞ்சப்தகர்களை,
தென் நிலந்தன்னில்ஏற்றி -தென் திசையிலுள்ள யமலோகத்தில் குடிபுகுத்தி
(கொன்று), உற்ற ஆறுஅறிவுறாதான்-(இங்கு) நடந்தசெய்கையை அறியாதவனாய்,
அ நிலத்து  அகன்றுமீண்டான் அவ்விடத்தினின்று நீங்கித் திரும்பினான்;
(எ – று.)-எதிர்-ஒப்புமாம்.உற்றவாறு-அபிமந்யுமரணம். பி-ம்: அறிகிலாதான்.

     இதுமுதல் இருபத்திரண்டு கவிகள் -பதினோராம்போர்ச்சருக்கத்து முதற்கவி
போன்ற அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தங்கள். 

போனது வருவது எல்லாம் புரை அற
உணருகிற்கும்
மான் அதிர் கனகத் திண் தேர் வலவனாம்
மதுரை மன்னன்,
தேன் அதிர் கடுக்கை மாலை இடு
சயத்திரதன்தன்னால்
ஆனதும் குறித்து, வானோர் அரசையும்
குறிக்கலுற்றான்.147.- ஸ்ரீக்ருஷ்ணன் அபிமன்யுமரணத்தை நினைந்து
இந்திரனை நினைத்தல்.

போனது வருவது எல்லாம் – நடந்ததும் நடப்பதுமாகிய
செய்கைகளெல்லாவற்றையும், புரை அற-குற்றமில்லாமல், உணருகிற்கும்-அறியவல்ல,
மான் அதிர் கனகம் திண் தேர் வலவன் ஆம்- குதிரைகள் பூட்டிய ஆராவாரிக்கிற
பொன்மயமான வலிய (அருச்சுனனது) தேரைச் செலுத்துகிற பாகனாகிய,
மதுரைமன்னன் வடமதுரைநகரத்து அரசானா கண்ணபிரான், (அப்போது), தேன்
அதிர் கடுக்கை மாலை இடு செயத்திரதன் தன்னால் ஆனதும்உம்  குறித்து –
வண்டுகள் ஆரவாரிக்கிற கொன்றைப்பூமாலையைப் போகட்ட சயத்திரதனா லாகிய
செய்கையையும் [அபிமந்யு மரணத்தையும்] திருவுள்ளத்தில் அறிந்து, வானோர்
அரசைஉம் குறிக்கல் உற்றான் – தேவாரசனான இந்திரனையும் நினைத்தான்;

     இந்திரனை நினைத்தது, இவன்மகனானா அருச்சுனனுக்குப்புத்திர சோகத்தால்
பிராணபாயமுண்டாகாதபடிதடுக்க உபாயஞ்செய்தற்கு என்பது, மேல்விளங்கும்.
போனது வருவது எல்லாம் – ஒருமைப்பபன்மைமயக்கம்: முக்காலத்துவரலாற்றுள்,
முன்பு நடந்தவற்றையும் இனி நடப்பவற்றையும் அறிதலாகிய அருமையான
தன்மையைக் கூறவே, அப்பொழுது நடக்கின்றவற்றை அறிதலாகிய எளியதன்மை
தானே பெறப்படும். உணர்ச்சிக்குக் குறைவு- சந்தேகவிபரீதங்கள். மது என்னும்
அரசனால் சீர்திருத்தி ஆளப்பட்டதனாலும், கண்ணுக்கு இனியதாயிருத்தலாலும்,
மதுரா என்று பெயர்; அது ஈறுதிரிந்தது. இது,  முத்திதரும் நகரம் ஏழனுள் ஒன்று;
மற்றவை-அயோத்தி, மாயை, காசி, காஞ்சி, அவந்தி, துவாரகை என்பன. 

மதித்தலும், மனத்தில் தோன்றும் வலாரியை,
குறிப்பினால், ‘உன்
கதித் தடந் திண் தேர் மைந்தன் உயிரை
நீ காத்தி’ என்ன,
துதித்து அவன் தொழுது, மாயச் சூழ்ச்சியால்
முனியும் ஆகி,
‘விதித்தலைப் பட்ட காதல் சுதனுடன் விளிவேன்!’
என்னா,148.-நான்குகவிகள்-மனத்துவந்தஇந்திரனை ‘உன்மைந்தனைக் காவாய்’
என்ன, அவன் முனிவனாகி ஊழாலிறந்தமைந்தனோடுஇறப்பேனென்று
நடிக்க, ஸ்ரீக்ருஷ்ணன் அருச்சுனனைக்கொண்டு தடுத்தலைக் கூறும்

மதித்தலும்-(கண்ணபிரான்)கருதியவளவிலே,  மனத்தில் தோன்றும்-
அவன்மனத்தில்வந்து காணப்பட்ட வலாரியை- இந்திரனை(ப்பார்த்து), (கண்ணன்),
குறிப்பினால் – இங்கிதத்தால், ‘உன்-உனது, கதி தட திண் தேர் மைந்தன் –
வேகத்தையுடைய பெரிய வலிய தேரையுடைய புத்திரனான அருச்சுனனது, உயிரை-,
நீ-, காத்தி-(புத்திரசோகத்தால் இறவாதபடி) பாதுகாப்பாய்,’ என்ன – என்றுசொல்ல,
அவன் – அவ்விந்திரன், துதித்து – (கண்ணனைத்) தோத்திரஞ்செய்து, தொழுது –
நமஸ்கரித்து, (அதற்கு இசைந்து), மாயம் சூழ்ச்சியால் முனிஉம் ஆகி-
(வேண்டியவடிவத்தைப் பெறவல்ல) மாயையின் வலிமையால் (உடனே)
ஒருமுனிவேடங்கொண்டவனுமாய், விதித்தலை பட்ட காதல் சுதனுடன் விழுவன்
என்றான் – ‘ஊழ்வினையின்வசப்பட்டு இறந்த அன்புள்ள (என்) மகனுடன் (யான்
நெருப்பில்) விழுந்து இறப்பேன்’ என்று கூறினான்; (எ – று.)

இந்திரன், ஒருபிராமணவடிவங்கொண்டு, சிறிதுபொழுதுக்குமுன் இறந்த
தன்புதல்வன்பொருட்டுச் சோகித்து அம்மகனுடன் அக்கினிப்பிரவேசஞ்செய்து
பிராணத்தியாகம்பண்ண நிச்சயித்தவன்போல வழியிடையிற்
காணப்பட்டனனென்பதாம். இந்திரன் வந்ததும் அவனுக்குக் கண்ணன்
கட்டளையிட்டதும் கண்ணபிரானுடன் தேரிலிருக்கிற அருச்சுனனுக்குத் தெரியாதபடி
நிகழ்ந்தது தோன்ற. ‘மனத்தில் தோன்றும்’ என்றும், ‘குறிப்பினால்’என்றுங்
கூறினார்.விதியில் தலைப்பட்ட என்றும், தலைவிதியில்பட்ட என்றும் உரைத்ததற்கு
இடமுண்டு.வலாரி-பலாரி யென்ற வடசொல் திரிந்தது பி-ம்: விளிவேனென்னா.

நெறியிடை, இவர்கள் காண நெருப்பினை
வளர்த்து, தானும்
பொறி உற வீழும்காலை, புவனங்கள்
அனைத்தும் ஈன்றோன்,
அறிவுடை விசயற்கு, ‘இந்த அந்தணன்
தழலில் வீழாது,
எறி கணை வரி வில் வீர! விலக்கு நீ
ஈண்டை’ என்றான்.

நெறியிடை-(அருச்சுனனும் கண்ணனும் செல்லும்) வழிநடுவிலே,
இவர்கள்காண-இவ்விருவரும் பார்க்க,  நெருப்பினை வளர்த்து-அக்கினியை
மூட்டிவிருத்திசெய்து, (அம்முனிவன்), தான் உம் பொறி உற வீழும் காலை-(இறந்த
தன்குமாரனோடு) தானும் அவ்வக்கினியிலே பொருந்த விழவிருக்குமவ்வளவில்,-
புவனங்கள் அனைத்துஉம் ஈன்றோன்-உலகங்களையெல்லாம்
உண்டாக்கியருளியவனான கண்ணன், அறிவு உடை விசயற்கு – அறிவுள்ள
அருச்சுனனை நோக்கி, ‘எறி கணை வரி வில் வீர-எறிகிற அம்புகளையுடைய
கட்டமைந்தவில்லில்வல்ல வீரனே! இந்த அந்தணன் தழலில் வீழாது-இந்த முனிவன்
நெருப்பில் விழாதபடி நீ-,ஈண்டை-இப்பொழுது இவ்விடத்தில், விலக்கு-தடுப்பாய்,’
என்றான்-என்று கூறினான்; (எ – று.)

     படைத்தல்தொழிற்கடவுளான பிரமனையும் படைத்தவ னாதலாலும்,
பிரமரூபியாயிருந்து தொழில்செய்பவன் பகவானே யாதலாலும்,
‘புவனங்களனைத்துமீன்றோன்’  எனப்பட்டான் இரட்டுறமொழிதலால், ‘ஈண்டை’
என்பதற்கு – காலமும் இடமுமாகிய இருபொருள் கொள்ளப்பட்டன. பொறி-
அக்கினிக்கு, இலக்கணை: இனி, பொறிஉற-மனப்பூர்த்தியாக என்றாலும் ஒன்று. 

என்றலும் விசயன் எய்தி, ‘எந்தை! நீ
எரியில் வாளா
பொன்றல்; உய்ந்திருந்தால், இன்னம் புதல்வரைப்
பெறலும் ஆகும்;
நன்று அல, தவத்தின் மிக்கோய், நல் உயிர்
செகுத்தல்! என்னா,
குன்றினும் வலிய தோளான் முனிவனைத்
தழுவிக்கொண்டான்.

என்றலும்-என்று(கண்ணன்) கூறியவளவிலே, விசயன்-அருச்சுனன்,
எய்தி-(அம்முனிவனருகிற்)சென்று, ‘எந்தை-சுவாமி! நீ-,வாளா – வீணாய் எரியில்
பொன்றல்-நெருப்பில் (வீழ்ந்து) இறக்காதே: உய்ந்திருந்தால்-பிழைத்திருந்தால்,
இன்னம் புதல்வரை பெறல்உம் ஆகும்- இன்னமும் புத்திரைப் பெறுதலும் கூடும்;
தவத்தில் மிக்கோய் – தவத்திற் சிறந்தவனே! நல் உயிர் செகுத்தல் – சிறந்த
(உன்)உயிரை (நீயே) போக்கிக்கொள்ளுதல், நன்று அல-நல்லதன்று’ என்னா-
என்று (உபசாரமொழி) கூறி, குன்றின்உம் வலிய தோளால்-மலையிலும்
வலிமையையுடைய (தன்) கைகளால், முனிவனை தழுவிக்கொண்டான்-
அம்மமுனிவனை அணைத்துக்கொண்டான்: (எ – று.)

     உயிரைவைத்துக்கொண்டிருந்தால் பலபுத்திரரை இன்னும் பெறுதலாகும்:
மறுமையில் மோட்சமடைவதற்கும் உபாயஞ்செய்யலாகுமென்று தடுத்தனனென்க.
அயலானை ‘எந்தை’ என்றது, உயர்வுபற்றிவந்த மரபுவழுவமைதி, அதிக சமாதான
முண்டாதற்கு, ‘புதல்வர்’ எனப் பன்மையாற் கூறினான். வீடுபெறுமுயிரென்பான்,
‘நல்லுயிர்’ என்றான்.

வீதலும் பிழைத்தல்தானும் விதி வழி
அன்றி, நம்மால்
ஆதலும் அழிவும் உண்டோ? நின்னில்
வேறு அறிஞர் உண்டோ?
பூதலம் தன்னில் யாவர் புதல்வரோடு
இறந்தார்? ஐயா!
சாதல் இங்கு இயற்கை அன்று’ என்று,
அருளுடன் தடுத்த காலை,

இதுவும், மேற்கவியும் – குளகம்.

     (இ-ள்.) ‘வீதம்உம்-(ஒருபிராணி) இறந்தாலும், பிழைத்தல்தான்உம்-
பிழைத்திருத்தலும், வீதி வழி அன்றி-ஊழ்வினையின்படி நடப்பனவே யல்லாமல்,
நம்மால்-,ஆதல்உம் அழிவுஉம் உண்டுஓ-உண்டாதலும் அழிதலும் உண்டோ?
நின்னில் அறிஞர் வேறு உண்டுஓ-உன்னினும் அறிவுடையோர் வேறு உளரோ?
பூதலந்தன்னில்-உலகத்தில், யாவர் புதல்வரோடு இறந்தார்-எவர்தாம் புத்திரரோடு
இறந்தவர்? ஐயா-! இங்கு-இப்பொழுது, சாதல்-(நீ)  இறந்தல், இயற்கை அன்று-
உலகவியல்புக்கு ஒத்ததன்று,’ என்று-என்றுஞ்சொல்லி, அருளுடன் –
கருணையுடனே, தடுத்த காலை – (அம்முனிவனைத்)தடுத்தபொழுது,-(எ-று.)-
“நின்மகனிறந்தாலென்சொன் மறாதொழி நீயுமென்றான்” என அடுத்த கவியோடு
முடியும்.

தன் மகனுடன் தீ மூழ்கத் தவிர்ந்த நல்
தவனும், மீள,
வில் மகன் ஆகி நின்ற விசயனை
வெகுண்டு நோக்கி,
‘என் மகன் இறக்க, என்னை இருத்தினை
ஆயின், அம்ம
நின் மகன் இறந்தால், என் சொல் மறாது ஒழி,
நீயும்!’ என்றான்.152. – அந்தமுனிவன் வெகுண்டு ‘உன்மகனிறந்தால் நீ என்சொல்லை
மறாதொழி’ என்று அருச்சுனனிடம் கூறுதல்.

தன் மகனுடன் -(இறந்த) தன்புத்திரனுடனே, தீ மூழ்க – நெருப்பில்
பாய்தலை, தவிர்ந்த – ஒழிந்த, நல் தவன்உம்- சிறந்தவத்தையுடைய அம்முனிவனும்,
மீன – பின்பு, வில் மகன் ஆகி நின்ற விசயனை வெகுண்டு நோக்கி –
வில்வீரனாய்நின்ற அருச்சுனனைக் கோபித்துப்பார்த்து, ‘அம்ம-(யான்சொல்வதைக்)
கேட்பாயாக; என் மகன் இறந்த என்னை இருத்தினை ஆயின் – எனக்குப் புத்திரன்
மரிக்க என்னை (அவனுடன் இறவாதபடி) இருக்கச் செய்தாயாயின், நின் மகன்
இறந்தால் நீஉம் என் சொல் மறாது ஒழி- உனக்குப்புத்திரன் இறந்தால்
(அப்பொழுது)நீயும் எனது வார்த்தையை மறுக்காமலிருப்பாய்’, என்றான்-என்று
கூறினான்; (எ -று.) பி-ம்: தன்மகவுடன்.

     தனது கருத்தை நிறைவேறவொட்டாதபடி தடுத்ததனால், வெகுளி கொண்டான்.
ஆயின் – ஆதலாலென்க. ‘அம்ம’-முன்னிலையிடைச்சொல்.   

ஐ எனத் தொழுது வீரன் அந்தணன்
உயிரை மீட்டு,
மை எனக் கரிய மேனி வலவனும் தானும்
திண் தேர்
ஒய்யெனச் செலுத்து காலை, வேலையின்
ஓதைதானும்
பொய் எனப் பரந்து, ஓர் ஓதை செவிகளைப்
புதைத்தது அன்றே.153.- அருச்சுனன்உடன்பட்டு முனிவனைமீட்டுத்தேரேறிச்செல்லுகையில்
பேரோசை செவிப்படல்.

வீரன் – அருச்சுனன், ஐஎன – (அதற்கு) இசைந்து, தொழுது –
வணங்கி, அந்தணன் உயிரை மீட்டு- அம்முனிவனது உயிரை இறவாதுகாத்து, மை
என கரிய மேனி வலவன்உம் தான் உம்-மேகம்போலக் கறுத்த திருமேனியையுடைய
சாரதியான கண்ணனும் தானுமாக, திண் தேர்-வலிய தேரை, ஒய்யென செலுத்து
காலை-விரைவாகச் செலுத்திவருகிற பொழுதில்,- வேலையின் ஓதை தான்உம் பொய்
என-கடலோசையும் (தனக்குமுன்) இல்லையென்னும்படி, ஓர்ஒதை-ஒருபேரொலி,
பரந்து-பரவி, செவிகளை புதைத்தது-(அவர்கள்) காதுகளை நிறைத்தது; (எ – று.)-
கேட்கப்பட்டது என்பதாம். அன்றே – ஈற்றசை.

     ஐயென-உடன்பாட்டுக் குறிப்பு. ஒய்யென-விரைவுக்குறிப்பு. ஓர் ஓதை-
அபிமனதுமரணத்துக்குத் தருமன்முதலியோர் புலம்பும் ஆரவாரம்.

பாசறை அணுகும் முன்னம், பாசடைப்
பதுமம் போல
மாசு அற விளங்கும் மேனி வண் துழாய்
அலங்கல் மூர்த்தி,
ஆசு அறு வரி வில் காளை அம் கையும்
அருகும் நீங்காத்
தேசு உறு படைகள் யாவும் ஒழித்தனன்,
தீமை தீர்ப்பான்.154. – பாசறை சேருமுன் ஸ்ரீக்ருஷ்ணன் அருச்சுனனைக்
கையில்ஆயுதமொன்றும் இல்லாதபடி செய்தல்.

பாசு அடை பதுமம் போல – பசிய இலைகளையுடைய செந்தாமரை
போல, மாக அற விளங்கும்- குற்றமில்லாமல் விளங்குகிற, மேனி – திருமேனியையும்,
வண் துழாய் அலங்கல்- அழகிய திருத்துழாய் மாலையையு முடைய, மூர்த்தி –
கடவுளாகிய  கண்ணன்,-பாசறை அணுகும் முன்னம்-படைவீட்டைச் சமீபித்தற்கு
முன்னமே, ஆசு அறு வரி வில் காளை – குற்றமில்லாத கட்டமைந்த வில்லையுடைய
வீரனான அருச்சுனனது, அம் கைஉம்- அழகிய கைகளையும், அருகு நீங்கா-
சமீபத்தை விட்டுநீங்காத, தேசு உறு படைகள் யாஉம் – ஒளி மிக்க
ஆயுதங்களெல்லாவற்றையும், தீமை தீர்ப்பான்- (அவற்றாலாகுந்) தீமையை
ஒழிக்கும்பொருட்டு, ஒழித்தனன் – தனியே பிரித்துவிட்டான்: (எ – று.)

அருச்சுனன் பாசறையையணுகி அங்கு அபிமன்மரணத்தை அறியும் பொழுது
கையில் ஏதேனும் ஆயுதமுடையனாயிருந்தால், புத்திரசோகத்தைப்
பொறுக்கமாட்டாமல் அவ்வாயுதத்தைக் கொண்டு தன்னைக் கொலைசெய்து
கொள்ளக் கூடுமென்று மூன் சாக்கிரதையாகக் கண்ணன் அவன் கைகளில் எந்த-
ஆயுதமுமில்லாதபடி ஒழித்தருளினனென்பதாம். எம்பெருமானது கரிய திருமேனி
பசியதாமரையிலைகள் போலவும், அத்திருமேனியிலுள்ள கண் கை கால் வாய்
உந்திஎன்னும் அவயவங்கள் இடையிடையிற்பூத்த செந்தாமரை மலர்கள்போலவும்
இருத்தலால், ‘பாசடைப்பதுமம்போல மாசற விளங்குமேனி’ என்றார்.
பசுமை+அடை=பாசடை; பண்புப்பெயர் ஈறு போய் ஆதிநீண்டது. தீமைதீர்ப்பான்-
தன்னைச் சரணமடைந்தவர்களது துன்பங்களையெல்லாம் தானே
வலியத்தீர்த்தருளுபவனெனக் கண்ணனுக்கு அடைமொழியாகவுமாம்.

அம் கை ஆர்த்து, அனைத்துளோரும் அரற்று
பேர் அரவம் கேட்டு,
கங்கை அம் பழன நாடன் கண்ணனை
வணங்கி நோக்கி,
‘இங்கு அயல் எழுந்த கோடம் யாது?’ என,
யாதும் சொல்லான்,
பங்கய நெடுங் கண் சேப்ப, நித்திலம்
பரப்பினானே.155.-‘இந்தப்பேரொலி என்?’ என்று அருச்சுனன் வினவ,
ஸ்ரீக்ருஷ்ணன் கண்ணீர்வடித்தல்.

அனைத்து உளோர்உம்-(பாசறையிலுள்ளவர்) எல்லோரும், அம் கை
ஆர்த்து – அழகிய கைகளால் அடித்துக் கொண்டு, அரற்று-கதறுகிற, பேர் அரவம்-
பெரிய ஆரவாரத்தை, கேட்டு-, கங்கை அம் பழனம் நாடன் – கங்காநதிபாய்கிற
அழகிய கழனிகளைக்கொண்ட குருநாட்டையுடைய அருச்சுனன், கண்ணனை
வணங்கி நோக்கி-, இங்கு அயல் எழுந்த கோடம் யாது என- ‘இப்பொழுது
சமீபத்திலுண்டான ஆரவாரம் என்ன? என்று கேட்க, (அதற்குக் கண்ணன்),
யாதுஉம் சொல்லான்-யாதொருமறு மொழியுங் கூறாமல், பங்கயம் நெடு கண்
சேப்ப- தாமரைமலர்  போன்ற நீண்ட (தன்) கண்கள் செந்நிறமடைய, நித்திலம்
பரப்பினான் – முத்துப்போன்ற கண்ணீர்த்துளிகளை மிகுதியாகச் சொரிந்தான்;
(எ -று.)

     சேப்ப – செயவெனெச்சம்: செம்மையென்பதன் விகாரமாகிய ‘சே’
என்பதனடியாப்பிறந்தது. நித்திலம் – உவமவாகு பெயர்; வடிவுவமை.
கோடம்=கோஷம்; வடமொழி

வன்கணன் இளகி, செங் கண் மால் அடி
வீழ்ந்து, ‘மேன்மேல்
என் கணும் தோளும் மார்பும் இடன் உறத்
துடிக்கை மாறா;
நின் கணும் அருவி சோர நின்றனை;
இன்று போரில்,
புன்கண் உற்றவர்கள் மற்று என் புதல்வரோ?
துணைவர் தாமோ?156. – இரண்டுகவிகள் – ஒருதொடர்: அருச்சுனன் மனம்நொந்து
கேட்க, ஸ்ரீகிருஷ்ணன் நடந்ததைக் கூறியதைத் தெரிவிக்கும்.

(அதனைக்கண்டு) வன்கணன்-வலிமையையுடைய அருச்சுனன், இளகி-
மனம்நெகிழ்ந்து, செம் கண் மால் அடி வீழ்ந்து-சிவந்த திருக்கண்களையுடைய
கண்ணபிரானது திருவடியில் விழுந்து நமஸ்கரித்து, ‘என்-எனது, கண்உம்-கண்களும்,
தோள்உம்- தோள்களும், மார்புஉம்-, மேல் மேல்-, இடன் உற துடிக்கை மாறா-
இடப்பக்கம் மிகுதியாகத் துடித்தலை நீங்கா; நின் கண்உம் அருவி சோர நின்றனை-
உனது கண்களினின்றும் கண்ணீர்ப்பெருக்கு வழிய (நீ) நின்றாய்; இன்று –
இன்றைக்கு, போரில்-, புன்கண் உற்றவர்கள் – துன்படைந்தவர்கள், என்
துணைவர்ஓ- எனது உடன்பிறந்தவரோ? மற்று-அன்றி, புதல்வர் தாம்ஓ –
புத்திரரேயோ? (எ-று.)-“என்று” என மேற்கவியோடு தொடரும்.

     ஆடவருக்கு இடந்துடித்தல்-துர்நிமித்தம். இடையறாது மிக்குப் பெருகுதலைக்
காட்டுதற்கு, ‘அருவி’ எனப்பட்டது. இன்னாரென்று அறியாமையின், ‘புன்கணுற்றவர்
துணைவரோ புதல்வர் தாமோ’ எனப் பன்மையாற் கூறினான். புன்கண் – மரணம்.
பி-ம்: புதல்வரோ துணைவர்தாமோ

திரு உளத்து உணராது இல்லை, செப்புக!’
என்று அயர்வான்தன்னை
மருவுறத் தழுவி, ‘திங்கள் மரபினுக்கு உரிய
செல்வா!
வெருவுறப் பகையை வென்ற வீரன், என்
மருகன்!’ என்று என்று,
அரு வரைத் தோளினானுக்கு உற்றவாறு
அனைத்தும் சொன்னான்.

திரு உளத்து உணராது இல்லை – (உனது) சிறந்த மனத்தில்
அறியப்படாதது(எதுவும்) இல்லை; செப்புக-(நிகழ்ந்த உண்மையைக்) கூறுவாயாக,
என்று-என்றுசொல்லி, அயர்வான் தன்னை-தளர்பவனான அருச்சுனனை,
(கண்ணன்),மருவுற தழுவி-சேர அணைத்துக்கொண்டு, ‘திங்கள் மரபினுக்கு உரிய
செல்வா-சந்திரவமிசத்துக்கு உரிய செல்வத்துக்கு உடையவனே!  வெருவுற
பகையை வென்றவீரனே-அஞ்சும்படி பகைவர்களைச் சயித்த பராக்கிரமசாலியே!
மருகன்-(இன்றுஅழிவடைந்தவன் என்) மருமகனான அபிமன்,’ என்று என்று-என்று
பலமுறைசொல்லி, அரு வரை தோளினானுக்கு உற்ற ஆறு அனைத்துஉம்-
அழித்தற்கரிய மலைபோன்ற தோள்களையுடைய அபிமனுக்கு நேர்ந்த
தன்மைமுழுவதும், சொன்னான்-(விவரமாக எடுத்துக்) கூறினான்;

     ‘திருவுளத்து உணராதில்லை’ என்றதனால், எம்பெருமானது சர்வஜ்ஞதை
வெளியிடப்பட்டது. அயர்வானாகிய வன்கணனை எனக் கீழ்க்கவியோடு
தொடர்ப்படுத்துக, ‘அருவரைத்தோளினானுக்கு’ என்பதற்கு அருச்சுனனுக்கு என்று
உரைத்தால், ‘சொன்னான்’ என்பதோடு கூட்டவேண்டும். செப்புகென்று- தொகுத்தல்.
பி-ம்: வீரனென்மருகனென்றென்று.  

மைத்துனன் உரைத்த மாற்றம் மைத்துனன்
செவிக்குத் தீக் கோல்
ஒத்து, இரு புறனும் வேவ, உள் உறச்
சுட்ட போது,
புத்திர சோகம் என்னும் நஞ்சினால்
பொன்றினான்போல்,
அத் தடந் தேரினின்றும் அவனிமேல்
அயர்ந்து, வீழ்ந்தான்.158. – அதுகேட்ட அருச்சுனன் புத்திரசோகத்தால் தேரினின்று
தரையிலயர்ந்து வீழ்தல்.

மைத்துனன் உரைத்த மாற்றம்-மனைவியினுடன் பிறந்தவனான
கண்ணன்சொன்னவார்த்தை, மைத்துனன் செவிக்கு-அத்தைமகனான அருச்சுனனது
காதுகளுக்கு, தீ கோல்ஒத்து-கொள்ளிக்கட்டை போன்று, இரு புறன்உம் வேவ-
இரண்டு பக்கங்களிலும் வேகும்படி, உள் உற சுட்ட போது-மனத்திலே பொருந்தத்
தபித்தபொழுது, (அருச்சுனன்), புத்திரசோகம் என்னும் நஞ்சினால்
பொன்றினான்போல்-புத்திரன் இறந்ததனாலாகிய விசன மென்கிற விஷத்தினால்
இறந்தவன்போல, அ தடதேரினின்றும்- அந்தப் பெரிய இரதத்தினின்றும்,
அவனிமேல்-பூமியில், அயர்ந்து வீழ்ந்தான் – மூர்ச்சித்து விழுந்திட்டான்; (எ – று.)

    சேர்ந்தமாத்திரத்தில் வருத்துதலால், கொடுஞ்சொல்லுக்குத் தீக்கோலை
உவமைகூறினார். செவி இரண்டாதலின், ‘இருபுறன்’ எனப்பட்டது.

அயர்ந்தனன் விழுந்த கோவை அச்சுதன்
பரிவோடு ஏந்தி,
புயம் தழீஇ எடுத்து, வாசப் பூசு நீர்
தெளித்து மாற்ற,
பயம் தரு கொடிய கூடபாகலம் தணிந்து,
மெல்லக்
கயம் தெளிவு உற்றது என்னக் கண் மலர்ந்து,
அழுதலுற்றான்:159. -ஸ்ரீக்ருஷ்ணன் சைத்தியோபசாரத்தால்தெளிவிக்க,
தெளிந்த அருச்சுனன் அழுதலுறுதல்.

அயர்ந்தனன் விழுந்த-மூர்ச்சித்துக் கீழ்விழுந்த, கோவை-
அருச்சுனராசனை,அச்சுதன்-கண்ணபிரான், பரிவோடு ஏந்தி – அன்போடு தாங்கி,
புயம் தழீஇ எடுத்து-கைகளால் அணைத்து எடுத்து, வாசம் பூசு நீர் தெளித்து-
பரிமளத்தையுடையபூசுதற்குரிய பனிநீரை (அவன்மேல்) தெளித்து, மாற்ற-(அவனது
மூர்ச்சையைப்)போக்க,-(அவ்வருச்சுனன்), பயம்தரு-அச்சத்தைத்தருகிற, கோடி-
புதுமையான,கூடபாகலம்-கூடபாகலமென்னும்ந் தீராப்பெருநோய், தணிந்து –
குறைய, கயம்-யானை, மெல்ல தெளிவு உற்றது என்ன-மெல்லத்தெளிவை
யடைந்தாற் போல, கண்மலர்ந்து-கண்களை விழித்து[தெளிந்து], அழுதல் உற்றான்-
புலம்பத் தொடங்கினான்;(எ – று.)-அதனை மேல் எட்டுக் கவிகளிற் காண்க.

     தணிந்து-தணிய; செயவெனெச்சம் செய்தெனெச்சமாகத் திரிந்தது. பரிவோடு
ஏந்தியதற்கு ஏற்ப, அச்சுதனென்றார். அச்சுதன்-தன்னைச் சரணமடைந்தவர்களை
நழுவவிடாதவன.

     பாகலமென்பது யானைநோயின்பெயரென்று தமிழ்நிகண்டுபிங்கலந்தைகளால்
தெரிகிறது. அந்நோயின் வகைகளையும், அவற்றில் பரிகாரமில்லாத
கூடபாகலமென்னுங் கொடியபகுப்பின் தன்மையையும் அடியில் வருமாறு அறிக:-
உருத்திரமூர்த்தியின் கோபத்தினின்று உண்டான ஜ்வரம் யானையிடத்திற்
காணும்பொழுது அதற்குப் பாகலமென்று பெயர்; இப்பெயர்-பாகஞ்செய்வது
[வேவிப்பது] என்னும் பொருளுடையது; இது-சுத்த பாகலம், பாலபாகலம்,
பக்வலபாகலம், ம்ருதுக்ஹரபாகலம், குக்குடபாகலம், ஏகாங்கக்ரஹபாகலம், ப்ரஸு
ப்தபாகலம் கூடபாகலம், புண்டரீக பாகலம் மகாபாகலம் எனப் பத்துவகைத்து; இது-
பொருந்தாதவையும் அளவுக்குவிஞ்சினவையுமாகிய உணவின்வகைகளாலாவது,
மிக்கசுமையைச்சமத்தல் கடத்தற்கரியதைக்கடத்தல் என்னுமிவற்றாலாவது,
உள்ளிருக்கும் வாயு கெடுதல்பற்றி, உளதாவது; கூடம்-விரைவிற்கொல்லுதல்;
இந்நோய், தொடக்கத்திலேயே யானையைக் கொல்லுதலால், கூடபாகமெலனப்படும்;
கூடம்-கபடம்: அதனால் [வெளித்தெரியாமலே] கொல்லும் பாகலம். கூடபாகலம்
என்றும்; கூடம்-வலை; அது மிருகங்களைப்பிடித்துக்கொல்லுதல்போல யானையைப்
பற்றிக்கொல்லுவது கூடபாகலம் என்றும்; கூடம்- கூட்டம்; வாதம் பித்தம் சிலேஷ்மம்
என்னும் மூன்றின் தோஷங்களுஞ் சேர்ந்து உண்டாக்கின பாகலம் கூடபாகலம்
என்றுங் காரணங் கூறுவர்; இந்நோய் வந்தமாத்திரத்தில் கை கால் கண் காது வால்
என்னும் உறுப்புக்கள் தம்பித்து இடிவிழுந்தாற்போல யானை கீழ் விழுந்து
இறந்துவிடும்: மிக விரைவில் இறந்துவிழுந்திடுதலால் இதன்குறிகளை அறிதல் அரிது;
கட்டுத்தறியிற் கட்டியிருக்கையிலும், நீர்பருகுகையிலும், கதிபயிலுகையிலும்,
நீராடுகையிலும் வழிநடக்கையிலும், மற்றுஞ் சிலசமயங்களிலும் இந்நோய் திடுக்கென
நேரிடும். இந்நோயால் இறந்துபட்ட யானையைச் சிற்றறிவினர் இலக்கணமின்மையால்
விஷந்தீண்டியதென்பர்; மற்றுஞ்சில பேதையர் பொய்யறிவாற் பேய்பிடித்ததென்பர்:
அவற்றிற்கு அறிகுறியும் சிகிச்சையும் உண்டு; இதற்கோ அவையில்லை, இது,
பாலகாப்யமென்னும் வடமொழி யானை வைத்தியநூலிற் கண்டது.  (இன்னும்
இதைப்பற்றி எழுதத்தக்கவற்றை விரிவஞ்சி விடுத்தனம்.) அந்நூலில் ‘பாம்பும்
நெருப்பும் இடியும் போலக்கொடிய இந்நோய்க்கு எப்பொழுதும் அஞ்சவேண்டும்’
என்று கூறியுள்ளதற்கு ஏற்ப, இங்கே ‘பயந் தரு’ என்ற அடைமொழி
கொடுக்கப்பட்டது. இது ஆச்சரியகரமானநோயென்றதற்கு, ‘கோடி’ என்ற
அடைமொழி கொடுத்தார்;  இதுவரையிற் கூறியதனால், கூடபாகலந்தணிந்து
மெல்லக்கயந் தெளிவுற்றதுஎன்றது, இல்பொருளுவமையாம்.  இதனால்,
அருச்சுனனது மூர்ச்சை மரணத்தோடு ஒத்திருந்ததெனப் புலப்படும். கயம்=கஜம்.
பி-ம்:
 மாற்றிப். கோடிகூடப்பாகலம், கொடியகூடப்பாகலம். 

போரினில் துணைவரோடும் புயங்க கேதனனை
வென்று,
பார் எனக்கு அளித்தி நீயே” என்று உளம்
பரிவு கூர்ந்தேன்;
நேர் உனக்கு ஒருவர் இல்லாய்! நீ களம்
பட்டாய்ஆகில்,
ஆர் இனிச் செகுக்க வல்லார்?-ஐவருக்கு
உரிய கோவே!160.- இதுமுதல் எட்டுக்கவிகள்-அருச்சுனன்புலம்புவதைத்தெரிவிக்கும்

ஒன்பது கவிகள் – ஒருதொடர்.

     (இ-ள்.) உனக்கு நேர் ஒருவர் இல்லாய் – உனக்கு ஒப்பு ஒருத்தரும்
இல்லாதவனே !ஐவருக்கு உரிய கோவே – (எங்கள்) ஐந்து பேருக்கும் உரிய
அரசனே ! போரினில்-யுத்தத்தில், துணைவரோடு உம்-தம்பிமார்களுடனே,
புயங்ககேதனனை -பாம்புக்கொடியனான துரியோதனனை, நீயே-, வென்று –
சயித்து, எனக்கு-, பார்அளித்தி-இராச்சியங்கொடுப்பாய், என்று-, உளம் பரிவு
கூர்ந்தேன் – மனத்தில்ஆசைமிகுந்திருந்தேன்; நீ-, களம் – போர்க்களத்தில்,
பட்டாய் ஆகில்  -இறந்தாயானால், இனிசெகுக்க வல்லார் ஆர் – இனிமேல்
(பகைவரை)அழிக்கவல்லவர் எவர்? (எ-று.)      

‘சக்கரம் பிளந்தவாறும், தரியலர் உடைந்தவாறும்,
துக்கரம் ஆன கொன்றைத் தொடையலால்
வளைத்தவாறும்,
மெய்க் கரம் துணிந்தவாறும், மீண்டு உருத்து
அடர்த்தவாறும்,
உக்கிரமுடன் என் முன்னே ஓடி வந்து, உரை
செய்யாயோ?

சக்கரம் பிளந்த  ஆறுஉம்-சக்கரவியூகம்(உன்னால்) பிளப்புண்ட
விதத்தையும் தரியலர் உடைந்த ஆறுஉம்-(அதில்)  பகைவர்கள் அழிந்த
விதத்தையும்,துக்கரம் ஆன-செய்யவொண்ணாத [தெய்வத்தன்மையுள்ள),
கொன்றைதொடையலால்-கொன்றைப்பூமாலையால், வளைத்த ஆறுஉம்-[உன்னைச்
சயத்திரதன்]  சூழ்ந்த விதத்தையும், மெய் கரம் துணிந்த ஆறுஉம்-(உன்) உடம்பில்
ஒருகை(துரோணனால்) துணிபட்ட விதத்தையும்,மீண்டு-அதன் பின்பும், உருத்து
அடர்த்த ஆறுஉம்-(நீ)கோபித்துப் போர்செய்தவிதத்தையும், உக்கரமுடன்-வீரத்தோடு,
என் முன்னே ஓடி வந்து உரைசெய்யாய்ஓ-எனதுமுன்னே (நீ) வேகமாகவந்து
சொல்ல மாட்டயோ? (எ-று.)

     சக்கரம்பிளத்தல் முதல் மீண்டுருத்தடர்த்த விறுதியாக உள்ள
விவரங்களையெல்லாம்,கீழ்க் கண்ணன் கூறியதனால் அருச்சுனன் அறிந்தானென்க:
கீழ் 157-ஆங் கவியைநோக்குக. துக்கரம்- துஷ்கரம்: வடசொல். உக்கரம்=உக்ரம்:
இது, உக்கிரம் எனப்பெரும்பாலும்வரும். பி-ம்: உக்கிரம்.

பன்னக அரசன் பெற்ற பாவை மா
மதலைதன்னை
முன் உற முனையில் தோற்றேன்; மூர்க்கனேன்
முடியாது உண்டோ?
உன்னையும் இன்று தோற்றேன்; உன்னுடன்
தொடர்ந்து வாராது,
இன்னமும் இருக்கின்றேன் யான்; என் உயிர்க்கு
இறுதி உண்டோ?

பன்னக அரசன்பெற்ற-சர்ப்பராசன் பெற்ற, பாவை-பெண்ணாகிய
உலூபியினது, மா மதலைதன்னை-சிறந்தகுமாரனான இராவானை, முன்உற-முற்பட,
முனையில் – போரில், தோற்றேன் – இழந்தேன்; உன்னையும்-, இன்று – இன்றைக்கு,
தோற்றேன் – இழந்தேன்; ஐயா-! இன்னம்உம் – நீ இறந்தபின்பும், உன்னுடன்,
தொடர்ந்து வாராது – உன்னுடன் கூட வந்திடாமல், இருந்தது – (என்உயிர்
என்உடம்பில்) இருந்தது! என் உயிர்க்கு இறுதி உண்டுஓ – என்னுயிருக்கும் அழிவு
உள்ளதோ? மூர்க்கனேன்- மூர்க்கனாகிய யான், முடியாது – முடிக்காததொரு
தொழிலும், உண்டோ-? (எ – று.)

     மூர்க்கமாவது-கொண்டதுவிடாமை: என்னசங்கடம் நேர்ந்த விடத்தும் தான்
உயிரைவிடாமையால், தன்னை ‘மூர்க்கனேன்’  என்று பழிக்கிறான். நிரந்தரமானதும்,
பரிகாரமில்லாததுமான இப்படிப்பட்ட புத்திரசோக பரம்பரையை எளிதில் பொறுத்த
தனக்கு வேறு பொறுக்கவொண்ணாத துயரம் எதுவுமில்லையென்பான், ‘மூர்க்கனேன்
முடியாதுண்டோ’ என்றான். பந்நகம் என்ற வடசொல்-பத் நகம் என்று பிரிந்து
கால்களால் நடவாததென்றும், பந்நம் கம் என்றுபிரிந்து வளைந்து செல்வதென்றும்
பொருள்படும். பாவை-சித்திரப்பதுமைபோல் அழகியவள்; அல்லது, கண்மணிப்
பாவைபோல் அருமையானவள்; உவமையாகுபெயர்,

     தீர்த்தயாத்திரையாகப்புறப்பகட்ட அருச்சுனன் கங்காநதியில் நீராடுகையில்,
அங்கு நீர்விளையாடவந்த நாககன்னிகைகளுள் உலூபியென்பவள் அருச்சுனனைக்
கண்டு காமுற்று அவனைப் பிலத்துவாரவழியாய்த் தன் உலகத்துக்கு
அழைத்துச்சென்று அவனை மணஞ்செய்துகொண்டு இராவானென்னும் புத்திரனைப்
பெற்றாள். இவனைத் துரியோதனன் வஞ்சனையாகவந்து வேண்டி உடன்படுத்தித்
தனக்குப்போரில் வெற்றியுண்டாகும்பொருட்டு அமாவாசையில்
துர்க்கைக்குப்பலிகொடுப்பதென்றிருக்க, கண்ணபிரான் அதனையறிந்து
முந்தினநாளாகிய சதுர்த்தசியன்றைக்கே தனது திவ்விய சக்தியால் அமாவாசையை
வருவித்து இவ்விராவானையே தந்திரமாய் இந்தப்பக்கத்துக்குப் பலியாகுமாறு
உடன்படுத்த, அதற்கு இசைந்து” கடியநேர்பலிதந்தாலுங் காயமர்சிலநாட்கண்டு,
முடியநேரலர்வெம்போரின் முடிவெனக் கருளுக” என்று இவன் கண்ணனை
வேண்டி வரம்பெற்று அன்றையிரவில் தானே தன்உறுப்பனைத்தையுங் கொய்து
யுத்ததேவதைக்குப் பலிகொடுத்ததுமன்றி, கண்ணனருளிய வரத்தின்படி
பலவடிவங்கொண்டு. போர்செய்து வென்று முடிவில் எட்டாம்போர்நாளில்
இறந்தனன்.   

கதிரவன் உதிக்கும் முன்னே கண் துயில்
உணர்த்தி, என்னை
அதிர் அமர்க் கோலம் கொள்வான் அறிவுறுத்து
உரைக்க வல்லாய்;
முதிர் அமர் முருக்கி மீண்டேன்; இத்தனைப்
போதும் முன்போல்
எதிர் வரக் காண்கிலேன்; இங்கு இல்லையோ?
என் செய்தாயோ?

கதிரவன் உதிக்கும் முன்னே -சூரியனுதிப்பதற்கு முன்னமே,
என்னை-,கண் துயில் உணர்த்தி – தூக்கத்தினின்று எழுப்பி, அதிர் அமர் கோலம்
கொள்வான்-ஆராவாரிக்கிற போருக்கு உரிய அலங்காரத்தைச்செய்துகொள்ளும்படி,
அறிவுறுத்து உரைக்க வல்லாய்-தெரிவித்துக்கூறுதல் வல்லவனே! இ தனை
போதுஉம்- இவ்வளவுபொழுதும், முதிர் அமர் முருக்கி-மிக்க போரைச்செய்து,
மீண்டேன் – திரும்பிவந்தேன்; முன்போல்-வழக்கம்போல, எதிர்வர காண்கிலேன் –
(நீ இன்றைக்கு) எதிரில் வரக்காண்கிறேனில்லை; (நீ), இங்கு இல்லையோ? என்
செய்தாயோ-? (எ-று.)

தந்திரம் யாவும் இன்றி, தனித்து நீ தானே
போர் செய்து,
“அந்தரம் அமையும்” என்று, இவ் அகல்
இடம் துறந்த ஐயா!
‘மைந்துடன் நம்மைக் காண மகன் மகன்
வருகின்றான்’ என்று,
இந்திரன் ஏவ, உன்னை இமையவர்
எதிர் கொண்டாரோ?

தந்திரம் யாஉம் இன்றி – சேனைகளெவையுந் துணையில்லாமல்,
நீதான்ஏ தனித்து போர் செய்து-, அந்தரம் அமையும் என்று – சுவர்க்கலோகமே
(உன்சிறப்புக்கு) ஏற்ற இடமாகு மென்று கருதி, இ அகல் இடம் துறந்த – பரந்த
இந்தப்பூமியினிடத்தை நீங்கின, ஐயா-! ‘மைந்துடன் – களிப்போடு, நம்மை காண-
நம்மைப்பார்ப்பதற்கு, மகன் மகன் – (நமது) பௌத்திரன், வருகின்றான்-,’ என்று-
என்று எண்ணி, இந்திரன்-, ஏவ- செலுத்த, இமையவர் – தேவர்கள், உன்னை-, எதிர்
கொண்டார்ஓ- அமையுமென்றிவ்வகலிடந் துறந்தவையா – தற்குறிப்பேற்றவணி.

தேர் அழிந்து, எடுத்த வில்லும் செங்
கதிர் வாளும் இன்றி,
ஓர் உதவியும் பெறாமல் ஒழிந்து, உயிர்
அழிந்த மைந்தா!
போர் அமர் உடற்றி, நீ அப் பொன்நகர்
அடைந்த போது, உன்
பேர் அமர் ஆண்மை கேட்டு, பிதாமகன்
என் சொன்னானோ?

தேர் அழிந்து-, எடுத்த-(கையில்) பிடித்த, வில்லும்-, செம் கதிர்-
(பகைவ ரிரத்தந் தோய்தலாற்) சிவந்த ஒளியையுடைய, வாளும்-, இன்றி –
இல்லாமல்,ஓர் உதவிஉம் பெறாமல் ஒழிந்து-, உயிர் அழிந்த- இறந்த, மைந்தா-
மகனே! நீ-,போர் அமர் உடற்றி – சிறந்த போரைச்செய்து, (பின்பு), அ பொன்
நகர்அடைந்தபோது-பொன்மயமான அந்த அமராவதிபட்டணத்தை யடைந்த
பொழுது.(அங்கு) பிதாமகன் -பாட்டனான இந்திரன், உன்பேர் அமர் ஆண்மை
கேட்டு-உனதுபெரும்போர் வல்லமையைக் கேட்டறிந்து, (உன்னைக் குறித்து), என்
சொன்னான்ஓ-?(எ – று.)-பேர் அமர் ஆண்மை – பிரசித்திபெற்ற
பராக்கிரமமுமாம்.

மல் புயக் குன்றில் ஒன்று வாளுடன்
வீழ்ந்த பின்னும்,
பொற்பு உறப் பொருத நீ அப் பொன்னுலகு
அடைந்த காலை,
அற்புதப் படைகள் வல்லாய்! அபிமனே!
அமரர் ஊரும்,
கற்பகக் காவும், வானில் கங்கையும்,
காட்டினாரோ?

அற்புதம் படைகள் வல்லாய் – ஆச்சரியகரமான ஆயுதங்களில்
வல்லவனே! அபிமனே-! மல்-வலிமையையுடைய, புயம் குன்றில்-மலைகள்போன்ற
தோள்களில், ஒன்று-,வாளுடன்-(ஏந்திய) வாளாயுதத்துடனே, வீழ-(துணிந்து) விழவும்,
பின்உம்- அதன்பின்பும், பொற்புஉற – அழகு மிக, பொருத – போர்செய்த,
நீ-, அ பொன் உலகு அடைந்த காலை-பொன்மயமான அந்தத்தேவ லோகத்தைச்
சேர்ந்தபொழுது, (அங்கு), அமரர் – தேவர்கள், ஊர்உம்- (தங்களுடைய)
அமராவதிநகரத்தையும், கற்பகம் காஉம் கற்பகவிருட்சங்களையுடைய
(நந்தனவனமென்னும் பூஞ்சோலையையும், வானில் கங்கைஉம் –
ஆகாயகங்காநதியையும், காட்டினார்ஓ- (உனக்குக் காண்பித்தார்களோ? (எ – று.)

     புதியராய்வந்தாரை அழைத்துக்கொண்டுபோய் அவர்க்குத் தமது நகரம்
முதலிய சிறப்புக்களைக் காண்பித்தல், உலககவியல்பு-  கல்பகம் என்பதற்கு-
(தன்னிடம் வந்து நினைத்த பொருள்களை அவரவர்க்குக்) கல்பிப்பது
[உண்டாக்குவது] என்று காரணப்பொருள்; இது-சந்தாநம், மந்தாரம், பாரிஜாதம்,
கல்பகம், ஹரிசந்தநம் என்ற ஐந்துதேவதருக்களுள் ஒன்றற்கு உரிய பேராத லன்றி,
ஐந்துக்கும் பொதுப்பெயராகவும் வழங்கும். தேவ கங்கைக்கு ‘மந்தாகிநீ’ என்று
பெயர்; (பாதாளகங்கை-‘போகவதீ’ எனப்படும்.)    

வளைத்த வில் நிமிராவண்ணம் வாளியால்,
மாவும் தேரும்
துளைத்து, முன் காலாள் ஆகத் துரோணனைத்
துரந்த வீரா!
‘திளைத்த வெஞ் சமரில் நொந்து, தனஞ்சயன்
சிறுவன் மேனி
இளைத்தது!’ என்று இந்திராணி இன் அமுது
ஊட்டினாளோ?’

வளைத்த வில் நிமிரா வண்ணம்-வணக்கின வில் நிமிராதபடி,
வாளியால்-அம்புகளை எய்ததனால், மாஉம் தேர்உம் துளைத்து-குதிரைகளையும்
தேரையும் பிளந்து, காலாள் ஆக-பதாதியாய்ச் செல்லும்படி, முன்-முதலில்,
துரோணனை-, துரந்த – ஓட்டிய, வீரா வீரனே! ‘தனஞ்சயன் சிறுவன் மேனி –
அருச்சுனன்  மகனது உடம்பு, திளைத்த-இடைவிடாது செயத, வெம் சமரில்-
கொடிய போரில், நொந்து-சிரமப்பட்டு, இளைத்தது-மெலிவடைந்து விட்டது, என்று
என்றுஎண்ணி, இந்திராணி – இந்திரன் மனைவி, (தனதுபௌத்திரனாகிய உனக்கு),
இன் அமுது ஊட்டினாள்ஓ- இனிய அமிருதத்தை உண்பித்தாளோ? (எ – று.)

என்ன மகவான் மகன் இரங்கினன் அரற்ற,
முன்னவர்கள் பின்னவர்கள் முறை முறை புலம்ப,
சென்னி கரம் வைத்து அனைவரும் கலுழி செய்ய,
அன்ன பொழுது, ஆரணம் அளித்த முனி வந்தான்.168. – இங்ஙன் புலம்புகையில் வியாசமுனிவன் வருதல்.

என்ன-என்று, மகவான் மகன் – இந்திரகுமாரனான அருச்சுனன்,
இரங்கினன்அரற்ற – சோகித்துக் கதற,-முன்னவர்கள்-(அவனது) முன்பிறந்தவரான
தருமனும்வீமனும், பின்னவர்கள்-பின்பிறந்தவரான நகுலசகதேவர்களும், முறை
முறை புலம்ப-மாறிமாறி (அடுத்தடுத்து) அழ,- அனைவர்உம்-எல்லோரும், சென்னி
கரம் வைத்து,-தலைமேற் கைகளைவைத்துக்கொண்டு, கலுழிசெய்ய-
கண்ணீர்வெள்ளஞ்சொரிதலைச்செய்ய, அன்னபொழுது-
அந்தச்சமயத்தில், ஆரணம் அளித்த முனி-வேதங்களை அருளிய
வியாசமாமுனிவன், வந்தான் – (அங்கு) எழுந்தருளினான்; (எ -று.)

     சென்னி கரம் வைத்தல் – சோகக்குறிப்பு, வரம்பின்றியிருந்த வேதங்களைத்
துவாபரயுகமுடிவில் இருக்கு, யசுர், சாமம் அதர்வணம் என நான்காகப்பகுத்து
ஒழுங்குபடுத்தி அக்காரணத்தால் வ்யாஸனென்று பெயர் பெற்றவ னென்பார்,
‘ஆரணமளித்தமுனி’ என்றார்.

     இதுமுதல் பதினெட்டுக்கவிகள் -பெரும்பாலும் நான்காஞ்சீரொன்று மாச்சீரும்,
மற்றைமூன்றும் விளங்காய்ச்சீர்களுமாகிய கலிவிருத்தங்கள்  

வந்த முனி, மற்றும் உடன் வரு முனிவரோடும்
அந்த நரபாலர் கண் அரும் புனல் துடைத்து,
கந்தன் நிகர் மைந்தனொடு கையற நினைக்கும்
பந்தனை அறுக்கும் மொழி பற்பல பகர்ந்தான்:169.- வந்தமுனி கண்ணீர்போக்கி பலஉபதேசமொழிகூறத்தொடங்கல்.

வந்த முனி-எழுந்தருளின வேதவியாசபகவான்,- மற்றும் உடன்
வரும்முனிவரோடுஉம்-இன்னுங்கூடவந்த முனிவர்களுடனே,- அந்த நரபாலர் கண்
அரும்(பு) புனல் துடைத்து-(தருமன் முதலிய) அந்த அரசர்களது
கணகளில்தோன்றுகிற நீரைப் போக்கி,-கந்தன் நிகர் மைந்தனொடு –
முருகக்கடவுளை யொத்த குமாரனான அபிமனுடனே, கை அற-(தாமும்)
செயலற்றிருக்க,  நினைக்கும்- (அப்பாண்டவர்கள்) எண்ணுகிற, பந்தனை –
(அவர்களது) பாசபந்தத்தை [அன்பின்தொடக்கை], அறுக்கும்-ஒழிக்கும்படியான,
பல்பல மொழி – அனேக உபதேசவார்த்தைகளை, பகர்ந்தான் – கூறுபவனானான்;
(எ -று.)-அதனை, அடுத்த மூன்று கவிகளிற் காண்க.  

     கையாறு-உயிர்ப்புமின்றி வினையொழிந்து அயர்தல். அரும்பு புனலென்பது,
அரும்புனலென விகாரப்பட்டது: இனி, அரும்புனல் எனப் பண்புத்தொகையாக
எடுத்து – அரிய [இதுவரையில் இல்லாத] நீர் எனினுமாம்.    

தாயரொடு தந்தையர்கள், தாரமொடு தனயோர்,
தூய துணைவோர்களொடு சுற்றம் என நின்றோர்,
மாயை எனும் வல்லபம் மயக்குறும் மயக்கால்
ஆய உறவு அல்லது, அவர் ஆர்? முடிவில் யாம் ஆர்?170.- நான்குகவிகள் ஒரு தொடர்: – வியாசமுனிவனுபதேசித்துப்
போதலைத் தெரிவிக்கும்,

தாயரொடு-தாய்மார்களும், தந்தையர்கள்- தகப்பன்மார்களும்,
தாரமொடு-மனைவியரும், தனயோர்-புதல்வரும், தூய-(மனத்தில்) சுத்தியையுடைய,
துணைவோர்களொடு – உடன் பிறந்தவர்களும், சுற்றம் – (மற்றும்) பந்துவர்க்கமும்,
என- என்று நின்றோர்-நின்றவர்களெல்லோரும், மாயை எனும் வல்லபம்-மாயை
யென்கிற (பகவானுடைய) சக்தி, மயக்குறும்-(மனத்தை) மயங்கச்
செய்தலாலாகிற, மயக்கால்-மயக்கத்தினால், ஆய-உண்டான, உறவு அல்லது-
சம்பந்தமே யல்லாமல்,(உண்மையை நோக்குமிடத்து), முடிவில்-முடிவிலே, அவர்
யார்- அந்தத் தாய்மார் முதலியஉறவினர் யார்? யாம்ஆர்?-[அவருக்கும் நமக்கும்
யாதோருறவுமில்லை யென்றபடி].

     கண்ணன் அருச்சுனனுக்குக் கீதை உபதேசிக்கையில்,
“மாயையென்றொருத்திதன்பால்மனமெனு மைந்தன் தோன்றித், தூயநல்லறிவன்
றன்னைத் தோற்றமின் றாக்கி வைத்தான். தாயொடு தந்தை மக்கள் தார மென்
றிவர்பால்வைத்த, நேயமு மவன்றனாலே நிகழ்ந்த தோர்நினைவு கண்டாய்”
என்றும்,”பந்தம் துணர்ந்து நேரே பார்க்குங்காற் பகையார் நண்பார்” என்றும்
அருளிச்செய்தமை காண்க. மனம் மாயைக்கு வசப்பட்டபோது பொருள்களின்
நிலையை உள்ளபடியறியுந் தத்துவஞானம் தோன்றுகிறதில்லை;  ஆகவே,
நிலையுள்ளபொருள்களை நிலையில்லாதனவென்றும் நிலையில்லாதபொருள்களை
நிலையுள்ளனவென்றும் மாறுபட அறியும்  விபரீதஞானம் தலையெடுக்கும்;
அதனாலேயே, நித்தியமான ஆத்துமாவுக்கு யாதோரு சம்பந்தமும் படாமல்
அநித்தியமான தேகத்தையே பற்றியே தாய் முதலியோரிடத்துச் சுற்றத்தவரென்ற
பொய்யபிமானம்உண்டாகி நிலைநிற்கின்றது; அத்திரிபுணர்ச்சியை ஒழித்து
மெய்யுணர்ச்சிகொண்டு நோக்குமிடத்து, யாவும் மாயாகாரிமென்றஉண்மை
புலப்படும்மென்பதாம். தாய்வழியிலும் தந்தைவழியிலும், பெரியதாய் சிறியதாய்
பெரியப்பன்சிற்றப்பன் எனத் தாய்தந்தையர் பலராவர். சுற்றம்-(உரிய காலங்களில்
வந்து)சுற்றிநிற்ப தெனக் காரணப்பெயர்:  அம்-கர்த்தாப்பொருள்விகுதி. மயக்கு-
மயங்குஎன்னும் முதனிலை திரிந்த தொழிற்பெயர். உறவு-உறுதல்; சேர்க்கை;
இந்தொழிற்பெயர்-உறவினர்க்கு ஆகுபெயராம். முதலடி-முற்றுமோனை. பி-ம்:முடிவில்யார்யார். 

வந்து பிறவாத மனை இல்லை; முலை மாறித்
தந்து பரியாமல் ஒழி தாயர்களும் இல்லை;
புந்தி உணர்வு அற்றவர் புலம்புறுவது அல்லால்,
இந்த உலகத்து அறிஞர் யாதினும் மயங்கார்.
 

(ஓர்உயிர்), வந்த பிறவாத மனை-(உடம்பெடுத்து) வந்து பிறக்காத
வீடுகள், இல்லை-; (அவ்வுயிர்க்கு), முலை மாறி தந்து-முலைப்பாலை மாறிமாறிக்
கொடுத்து, பரியாமல்- காப்பாற்றாமல், ஒழி-நீங்குகிற, தாயார்கள்உம்-தாய்மாரும்,
இல்லை-; (ஆதலால், அவ்வுயிர் நீங்கியவிடத்து), புந்தி உணர்வு அற்றவர்
புலம்புறுவது அல்லால்-மனத்தில் தத்துவஞானமில்லாதவர்கள் அழுதலேயல்லாமல்,
இந்த உலகத்து-இவ்வுலகத்தில்,அறிஞர்-மெய்யுணர்வுடையோர், யாதின்உம்
மயங்கார்-எந்தவிதச்சங்கடம் நேர்கையிலுங் கலங்கமாட்டார்கள்; (எ – று.)

     அநாதியான கருமத்துக்கு வசப்பட்டுப் பலபலவீடுகளில்பற்பலர் கருப்பத்திற்
பிறந்தும் பிறக்கவும் இருக்கிற ஓருயிரை, தனதுகைனென்றும் பிறவாறும்
உறவுமுறைபாராட்டி அன்புகொண்டு, அது விதிவசத்தால் நீங்கிய காலத்திற்
சோகிப்பது, அறிவுடையோர்க்கு உரியதன்று என்பதாம். மனம் புத்தி சித்தம்
அகங்காரம் என்னும் அந்தக்கரணங்கள் நான்கையும் அபேதமாகக்கூறுவது
கவிசமயமாதலால், இங்கே மனம் ‘புந்தி’ எனப்பட்டது. 

உம்மையினும், யார் உறவு உணர்ந்திலம்; இனிப் போம்
அம்மையினும், யாவர் உறவு ஆவர் என அறியேம்;
இம்மையில் நிகழ்ந்த உறவு இத்தனை; இரங்கல்,
மும்மையும் உணர்ந்து வரும் மூதறிவினீரே!

உம்மையின்உம் – கழிந்து பிறப்பிலும் யார் உறவு – (நமக்கு) எவர்
சுற்றத்தவராயிருந்தவர்? (என்று) உணர்ந்திலம், – (நாம்) அறிந்தோமில்லை; இனி
போம் – இனிமேல் வரப்போகிற, அம்மையின்உம் – மறுபிறப்பிலும், யாவர் உறவு
ஆவர் என – (நமக்கு) எவர் சுற்றத்தவராகுபவர் என்று, அறியேம் – (நாம்)
அறியமாட்டோம்: (அங்ஙனமிருக்க), இம்மையில் நிகழ்ந்த உறவு இத்தனை –
இப்பிறப்பில்மாத்திரமுள்ள சுற்றமாகிய இவ்வளவுக்கு? இரங்கல்- வருந்துதல்,-
மும்மைஉம் உணர்ந்து வரும் – மூன்று காலத்துச் செய்கைகளையும் அறிந்துவருகிற,
மூது அறிவின்-பழமையான ( சிறந்த) அறிவுக்கு (உரிய), நீர்எ – தன்மையாகுமோ?
(ஆகாது எனறபடி); ( எ- று.)

     உலகத்தில் உயிருக்கு அநாதியான கருமத்தின் தொடக்கத்தால் அளவிறந்த
பிறப்புக்கள் உள; அவற்றில் ஒவ்வொருபிறப்பிலும் உறவினர் பலர் அமைதல்
இயல்பே: அவற்றில் இப்பிறப்பில் உறவினராகவுள்ளவரைமாத்திரம் அறிதல்
கூடுவதேயன்றி முன்பின் பிறப்பின் உறவினரை யுணர்தல் இப்பொழுது
சாத்தியமில்லை:என்றதனால், உறவு நிலையில்லாததாகிய உடம்பைப்பற்றினதேயன்றி
நிலையுள்ளதாகிய உயிரைப் பற்றின தன்று என்றும், முன்பும், பின்பும் உறவல்லாத
உயிர் இப்பொழுது உறவாகவும், உறவாகவிருந்த உயிர் உறவன்றாகவும்,
ஓருறவாகவிருந்தது மற்றோருறவாகவும் எல்லாவித விகாரங்களுக்கும் இடமுண்டு
என்றும் தெரிகிறது: இப்படியிருக்க, இவ்வொருபிறப்பில் உறவாகவிருந்த உயிரின்
ஒழிவுக்கு விசனப்படுவது நல்லுணர்வன்று என்பதாம். இன்னும்,
இப்பாட்டின்முன்னிரண்டடிகளால், உடம்பின் நிலையில்லாமையையும், உயிர்
என்றைக்கேனும் உடம்பினின்று நீங்குதலையே இயல்பாகவுடைய தென்பதையும்
குறிப்பித்தார். இம்மை அம்மை உம்மை என்றவற்றில், பகுதியாகிய
மூன்றுசுட்டெழுத்துக்களும்-முறையே சமீபம் தூரம் முன் என்னும் பொருளை
யுணர்த்தின. இரண்டாமடியில் ‘ஆவரென’ என்பதற்கு ஏற்ப, முதலடியில்
‘ஆனாரென’ என்பது வருவிக்கத்தக்கது. மும்மை-மூன்றுகாலத்துச் செய்கைகளுக்கு,
இருமடியாகுபெயர். நீர்மை யென்னும் பண்புப்பெயர், ஈறுபோய் ‘நிர்’ என நின்றது.
இரங்கல் – தொழிற்பெயர்.    

ஆற்றி உமது ஆண்மை அழியாமல் இரும்’ என்று என்று,
ஏற்றி அடைவே, சுருதி யாவையும் எடுத்துத்
தேற்றி உரைசெய்து, தன சேவடி இறைஞ்சிப்
போற்றிய மகீபரை இருத்தி, முனி போனான்.

(ஆதலால்), ஆற்றி- (சோகத்தைப்) பொறுத்து, நுமது ஆண்மை
அழியாமல் -(அதனால்) உங்கள் பராக்கிரமம் சிதையாமல், இரும் –
(மனவுறுதிநிலையோடு)இருங்கள், என்று என்று-என்று (இங்ஙனம்) பலவிதமாக,
அடைவுஏ ஏற்றி -முறையாய் (அவர்கள் மனத்தில்) ஏற்கச்செய்து, சுருதி
யாவைஉம் எடுத்து உரைசெய்து – வேதவாக்கியங்கள் பலவற்றையும் எடுத்துச்
சொல்லி, தேற்றி -(அவர்களைச்) சமாதானப்படுத்தி, தன் சேவடி இறைஞ்சி
போற்றிய மகீபரை -தன்னுடைய சிவந்த பாதங்களை நமஸ்கரித்துத் துதித்த
அப்பாண்டவராசர்களை,நிறுத்தி-(ஒருவாறு சோகம்நீஙகிய நிலையில்) நிற்கச்செய்து,
முனி -(எழுந்தருளின)அந்த வியாசமுனிவன், போனான் (அப்பால்) சென்றான்;
( எ- று.) அடைவேஏற்றுதல் – ஒவ்வொரு விஷயத்தை ஒவ்வொருவர்க்கும்
உபதேசித்தல். தேற்றுதல் -தேறப்பண்ணுதல். பி-ம்: தமசேவடி இருத்தி.
அவர்போனார்.

தேற்றினும் மகப் பரிவு தேறல் அரிது அன்றே!
ஆற்ற அரிது ஆதலின், அருச்சுனன், அரற்றா,
‘மாற்று அரிய பேர் அழல் வளர்த்தி!’ என வல்லே
ஏற்றது உணராது, தனது இளவலொடு உரைத்தான்.174.-அப்போதும் தேறாது அருச்சுனன் அக்கினிப்பிரவேசஞ்செய்யத்
தீமூட்டச் சொல்லுதல்.

ஆற்ற அரிது ஆதலின் – (அத்துன்பம்) பொறுக்க முடியாதாதலால்,
அருச்சுனன்-, அரற்றா – வாய்விட்டுப் புலம்பி, தனது இளவலொடு தனது
அடுத்தம்பியானநகுலனுடனே, ‘மாற்று அரிய – அவிக்க முடியாத, பேர் அழல் –
பெருந்தீயை,  வளர்த்தி – (எனது அக்கினிப்பிரவேசத்துக்காக) வளரச்செய்வாய்,
‘என – என்று, ஏற்றது உணராது – (செய்யத்) தக்கதை (இன்னதென்று) அறியாமல்,
வல்லே உரைத்தான் – விரைவிற் கூறினான்; தேற்றின்உம் – (எவ்வளவு) தேறுதல்
செய்தாலும், மக பரிவு-புத்திரசோகம், தேறல் அரிது – சமாதானப்படுதற்கு
முடியாதது. அன்றே – அல்லவோ? (எ -று.)

     ‘தேற்றினாலும் புத்திரசோகம் தேறவொண்ணாததன்றோ’ என்ற
பொதுப்பொருள், மற்றைமூன்றடிகளாற் கூறப்படுஞ் சிறப்புப்பொருளைச்
சமர்த்தித்துநின்றது-வேற்றுப்பொருள்வைப்பணியாம். பி – ம், அரிதென்றே.   

மத்திரை மகன் கனல் வளர்க்க, அதனூடே,
மித்திரரும் யாவரும் விலக்கவும் விலங்கான்,
‘சித்திரவில்லூடு உயிர் செகுப்பல்’ என நின்றான்-
புத்திரர் இலா இடர் பொறுத்திடலும் ஆமோ?175.- அருச்சுனன் யார்தடுக்கவும் கேளாது அக்கினியிற்புகச் சித்தனாதல்.

மத்திரை மகன் – மாத்திரியின் குமாரனான நகுலன் கனல் வளர்க்க-
(தமையன்கட்டளையைக் கடக்கவொண்ணாமையால் அங்ஙனமே) தீயை
மூட்டிவளரச்செய்ய, – (அருச்சுனன்), 
மித்திரர்உம் யாவர்உம் விலக்கவும் அதனூடு
விலங்கான்-தனது) நண்பர்களும் (மற்றும் உறவினர் முதலிய) எல்லோரும் தடுக்கவும்
அக்கினிப்பிரவேசமாகிய அத்தொழிலிலே தடைப்படாதவனாய், ‘சித்திரம்வில்லூடு –
அக்கினியிலே, உயிர் செகுப்பன் – (என்) உயிரை ( நானே) மாய்த்துக்கொள்வேன்,’
என – என்றுகூறி, நின்றான் – (அக்கினிப்பிரவேசத்துக்குச்) சித்தனாய் நின்றான்:
புத்திரர் இலா இடர் – புதல்வரையொழிந்தமையாலான சோகம், பொறுத்திடல்உம்
ஆம்ஓ-பொறுத்தற்குங் கூடுமோ? ( எ- று.)

     இப்பாட்டில், நான்காமடி-பொதுப்பொருள்: இதனால், அருச்சுனனது
செய்கையாகிய சிறப்புப்பொருளை விளக்கியது- வேற்றுப்பொருள்வைப்பணி.
ஒருவன்மனத்தை அதுபோகிறவழியினின்று வேறு வழியில் மீட்டுக்கொணர்தலில்
நண்பர் சிறத்தலால், அவரைமுதலிற் கூறினார். சித்திரவில்-பலவகையான
ஒளியையுடையது என அக்கினிக்குப் பண்புத்தொகையன்மொழி; (வில்-ஒளி).
சித்திரபாநு என்ற வடமொழிப்பெயரையுங் காண்க. மத்திரை – மத்திரதேசத்து
அரசனது மகள், பி- ம்: சித்திரவில்லோடு.

அன்பொடு துழாய் முதல்வன் அப்பொழுது அழைக்க,
முன்பு தழல் மூழ்கல் ஒழி முனி விரைவின் வாரா,
‘நின் புதல்வனோடு எரியின் நீ புகுதல் நெறியோ,
என் புதல்வனோடு எனை இறப்பது தவிர்த்தோய்?176.- இரண்டுகவிகள் – ஒருதொடர் : ஸ்ரீக்ருஷ்ணன் அழைக்க இந்திரன்
முனிவன் வடிவாய்வந்து அருச்சுனனைத் தடுத்தமை கூறும்.

துழாய் முதல்வன் – திருத்துழாய்மாலையையுடைய தலைவனான
கண்ணபிரான், அன்பொடு – (அருச்சுனன்பக்கல்) அன்புடனே, அப்பொழுது
அழைக்க – அச்சமயத்தில் (மனத்திற் சிந்தித்துக்) கூப்பிட, முன்பதழல் மூழ்கல்
ஒழிமுனி – முன் (அருச்சுனனது தடையால்) அக்கினிப்பிரவேசம் நீங்கின
(இந்திரனாகிய)முனிவன், விரைவின் வாரா-துரிதமாக (அருகில்) வந்து,
(அருச்சுனனை நோக்கி),’என்புதல்வனோடு எனை இறப்பது தவிர்த்தோய் – என்
புத்திரனுடனே யான் இறக்கஇருந்ததைத் தடுத்தவனே! நீ அக்கினிப்பிரவேசஞ்
செய்தல் நீதியாகுமோ? (ஆகாதுஎன்றபடி),

     முதல்வன் – எல்லாப்பொருள்களுக்கும் முந்தினவரான திரிமூர்த்திகளுள்ளும்
மற்றையிருமூர்த்திக்கும் முதலாய் நிற்பவன்: உலகத்துக்கு முதலானவன், ‘எனை
யிறப்பது தவிர்த்தோய்’ – என்னை யிறப்பதைத் தவிர்த்தோய் என இரண்டு
செயப்படு பொருளாகவாவது, யான் இறப்பதைத்தவிர்த்தோய் என உருபுபிரித்துக்
கூட்டலாகாவது உரைக்க. 

வழிப்பட வழக்கின் வழி வருக’ என, முனிவன்
மொழிப்படி பொறுத்து, அழலின் மூழ்கு தொழில் மாறி,
விழிப் புனலின் மூழ்கி, மனம் வெந்து தளர்வு உறுவோன்
பழிப்படு சுரத்தில் முளி பாதவம்அது ஆனான்.177.- முனிவன்சொல்லினால் அக்கினிப்பிரவேசந் தவிர்ந்து
அருச்சுனன் நிலைகெட்டிருத்தல்.

வழி பட ஒழுங்காக, வழக்கின் வழி-நீதிவழியிலே, வருக-(நீ)
பொருந்துவாயாக, என – என்று (அருச்சுனனைநோக்கி முனிவனாகி வந்த இந்திரன்)
சொல்ல, முனிவன் மொழி படி-(அந்த) இருடியின் வார்த்தையின்படி, பொறுத்து-
(துயரத்தைப்) பொறுத்துக்கொண்டு, அழலில் மூழ்கு தொழில் மாறி -அக்கினியிலே
பிரவேசிக்குந் தொழி லொழிந்து, விழி புனலில் மூழ்கி-கண்ணரில் முழுகி, மனம்
வெந்து-மனந்தவித்து, தளர்வு உறுவோன்-தளர்ச்சி மிகுபவனான அருச்சுனன்,-பழி
படு-(யாவராலும்) இகழப்படுகிற, சுரத்தில்-பாலைவனத்திலே, முளி-உலர்ந்துகிடக்கிற,
பாதவம்அது ஆனான்-மரத்தின்தன்மையுடையவனானான்;(எ- று.)

     பட்டுப்போன மரம்போல நிலைகெட்டுநின்றனன் அருச்சுனனென்பதாம்.
‘வழிப்பட வழக்கின்வழி வருக’ என்றது, கீழ் “என்மகனிறக்க வென்னை
யிருத்தினையாயினம்ம, நின்மக னிறந்தாலென்சொல் மறாதொழி நீயும்” என்று யான்
கேட்ட வரத்துக்கு நீ உடன்பட்டபடிஉறுதியாய் நிற்கவேண்டு மென்றபடி, ‘அழலின்
மூழ்குதொழில்மாறிப் புனலில் மூழ்கி’ எனச் சமத்காரந்தோன்றக் கூறினார்,
‘விழிப்புனலின் மூழ்கி’ -கண்ணீர் வெள்ளத்தை மிகச் சொரிந்து என்றபடி. ‘அழலின்
மூழ்கு தொழில் மாறிப் புனலின் மூழ்கி மனம்வெந்து’ என்றதனால், நீருட்குளிப்பினும்
மனவெப்பம் தணியா தென்பதும், தீயிற்குளித்து இறந்தாலே மனவெப்பம் தணிந்திடு
மென்பதும் விளக்கப்பட்டன. புனன் மூழ்கி…..வெந்து என்றதில் மாறுபட்டதொழில்
தோன்றியதாகக் கூறியது-விஷமாலங்காரமாகும். பி-ம்;பொறித்தழலின்

காமர் பிறை அன்ன சிறு காளைதனை வாளா
ஏமம் உறு வெஞ் சமரில் ஏவினர்கள்!’ என்னா,
மா முரசு அணிந்த கொடி மன்னனையும், வண் தார்
வீமனையும், நின்ற இளையோரையும் வெகுண்டான்.178.- அபிமனைப் போரிற்செல்லவினதன்பொருட்டுத்
தருமன்முதலியோரை அருச்சுனன் வெகுளல்.

காமர்-அழகிய, பிறை-இளஞ்சந்திரனை, அன்ன- ஓத்த, சிறு
காளைதனை-இளங்குமரனான அபிமனை, வாளா-வீணாய், ஏமம் உறுவெம் சமரில் –
உற்சாக மிக்க கொடிய போரில், ஏவினர்கள்-செலுத்தினார்கள்,’ என்னா-என்று, மா
முரசு அணிந்த கொடி மன்னனைஉம்-சிறந்தபேரிகைவடிவத்தைத் தரித்த
துவசத்தையுடைய தருமராசனையும், வண்தார் வீமனைஉம்-அழகியமாலையையுடைய
வீமசேனனையும், நின்ற இளையோரைஉம்-(மற்றும்) நின்ற தம்பிமாரான
நகுலசகதேவரையுங்குறித்து, வெகுண்டான்-(அருச்சுனன்) கோபித்தான்: (எ – று.)

     காமமருவு என்பது, காமர்என மரூஉவாயிற்று. வாளா-துணையின்றித் தனியே
என்றுமாம்.    

சிந்து பதி ஆகிய செயத்திரதனைத் தேர்
உந்து அமரின் நாளை உரும் ஏறு என உடற்றா,
அந்தி படும் அவ் அளவின் ஆவி கவரேனேல்,
வெந் தழலின் வீழ்வன்; இது வேத மொழி!’ என்றான்.179.- இதுமுதல் ஆறுகவிகள்-அடுத்தநாள் சூரியாஸ்தமனத்துக்குள்
சயத்திரதனைக் கொல்வதாக அருச்சுனன் செய்யுஞ்
சபதங்களைத் தெரிக்கும்.

தேர் உந்து அமரில் – தேர் செலுத்திச் செய்யும் போரில், நாளை
அந்திபடும்அ அளவின்-நாளைத்தினத்தில் மாலைப்பொழுதுவருகிற
அச்சமயத்திற்குள், சிந்துபதிஆகியசெயத்திரதனை- சிந்துதேசத்து அரசனான
சயத்திரதனை, உரும் ஏறு எனஉடற்றா-பேரிடிபோல(க்கொடியதாக)ப் போர்செய்து,
ஆவி கவரேன் ஏல்-(நான்)உயிர்பறிக்காதொழிவேனானால், வெம் தழலின்
வீழ்வன் – (நான்)உயிர்பறிக்காதொழிற்குறித்து இறப்பேன்: இது-, வேதம் மொழி-
வேதவாக்கியம்போலத் தவறுபடாத சபதவார்த்தை, என்றான் – என்று (அருச்சுனன்
பிரதிஜ்ஞை) கூறினான்: (எ – று.)

இன்று அமரில், வாள் அபிமன் இன் உயிர் இழக்கக்
கொன்றவனை, நாளை உயிர் கோறல் புரியேனேல்,
மன்றில் ஒரு சார்புற வழக்கினை உரைக்கும்
புன் தொழிலர் வீழ் நரகு புக்கு உழலுவேனே!

இன்று – இன்றைக்கு, அபிமன் – அபிமந்யு, வாள்அமரில் – கொடிய
போரில், இன் உயிர் இழக்க – இனிமையான உயிரை ஒழியும்படி, கொன்றவனை-
வதைத்தவனான சயத்திரதனை, நாளை-நாளைக்கு, உயிர் கோறல் புரியேன்ஏல்-
(நான்) உயிரையழித்தல் செய்திடேனாயின்,- மன்றில்-நியாயத்தலத்தில்,
ஒருசாரபுஉற-(வாதிப்பிரதிவாதிகளுள்) ஒருவர் பக்கத்தில் பக்ஷபாதம் மிக, வழக்கு
அற உரைக்கும்-நீதியில்லாமற் பேசுகிற, புன் தொழிலர்-இழிதொழிலையுடையவர்கள்,
வீழ்-விழுகிற,நரகு-நரகத்தில். புக்கு உழலுவேன் – (யான்) வீழ்ந்து
வருந்துபவனாவேன்; (எ – று.)

     சயத்திரதனை நாளைக்கொல்லாவிடின் மன்றோரஞ் சொன்ன
பெரும்பாவத்தையான்  அடைவேனென்பதாம். ஏ – தேற்றம். பி-ம்: இன்றமரில்
வாளபிமன்.வழக்கினை.     

மோது அமரின் என் மகன் முடித் தலை துணித்த
பாதகனை நான் எதிர் படப் பொருதிலேனேல்,
தாதையுடனே மொழி தகாதன பிதற்றும்
பேதை மகன் எய்து நெறி பெற்றுடையன் ஆவேன்!

மோது அமரின் – தாக்கிச்செய்யும்போரில், என் மகன் முடி தலை
துணித்த-எனது புத்திரனது கீரிடந்தரித்த தலையைத் துண்டித்த, பாதகனை-பாவியான
சயத்திரதனை, நான்-,எதிர்பட-(அவன் தொழிலுக்கு) எதிராக (பழிக்குப் பழிவாங்க),
பொருதிலேன்ஏல்-போர்செய்து கொல்லேனாயின்,- தாதையுடனே மொழி தகாதன
பிதற்றும் – தந்தையோடு (எதிர்த்துத்) தகுதியில்லாத வார்த்தைகளை உளறுகிற,
பேதை மகன் – மூடனான புத்திரன், எய்தும்- (மறுமையில்) அடையும், நெறி –
நரகவழியை. பெற்றுடையன் ஆவேன் – பெற்றுள்ளவனாவேன்; (எ – று.)

போரில் எதிரியைக் கொல்லுதல் நீதியாயிருக்க, அதுசெய்த சைந்தவனை
அருச்சுனன் ‘பாதகன்’ என்றது, வஞ்சனையாகக் கொன்றைமாலையை
இடையிலிட்டுஅபிமனைத் துணையிலனாக்கியதனா லென்க.

சேய் அனைய என் மதலை பொன்ற அமர் செய்தோன்
மாய, முன் அடர்த்து, வய வாகை புனையேனேல்,
தாயர் பசி கண்டு, நனி தன் பசி தணிக்கும்
நாய் அனைய புல்லர் உறு நரகில் உறுவேனே!

சேய் அனைய-முருகக்கடவுளை யொத்த, என் மதலை-எனது புத்திரன்,
பொன்ற-இறக்க, அமர் செய்தோன் – போர் செய்தவனான சயத்திரதன், மாய –
அழியும்படி, முன் அடர்த்து –  எதிரில் பொருது,  வயம் வாகை புனையேன்ஏல் –
வெற்றிக்குரிய வாகைப்பூமாலையைத் தரித்திடேனாயின்,-தாயார் பசி கண்டுஉம்-
தாயார் பசித்திருத்தலைப்பார்த்தும், (அதனைத்தீர்த்திடாமல்), தன் பசி நனி
தணிக்கும்- தனது பசியை நன்றாக (ப் போசனத்தால்) தீர்த்துக்கொள்ளுகிற, நாய்
அனையபுல்லர் – (கடைப்பட்ட)நாயை யொத்த அற்பகுணமுடையோர், உறும்-
(மறுமையிற்)சேரும், நரகில் – நரகத்தில், உறுவேன்-(யான்) சேருவேன்; (எ – று.)
-ஏ- தேற்றம்.

     மற்றொன்றையும் பாராது தன்பசியைத் தீர்த்துக் கொள்ளுதலிலேயே
கருத்தைச்செலுத்துதற்கு, நாய் உவமை கூறப்பட்டது. முன்- விரைவில் என்றுமாம்.
உம் – இழிவுசிறப்பு.    

வஞ்சனையில் என் மகனை எஞ்ச முன் மலைந்தோன்
நெஞ்சம் எரி உண்ண அமர் நேர் பொருதிலேனேல்,
தஞ்சு என அடைந்தவர் தமக்கு இடர் நினைக்கும்
நஞ்சு அனைய பாதகர் நடக்கு நெறி சேர்வேன்!

வஞ்சனையில், – என் மகனை – எனது புத்திரனை, எஞ்ச –
அழியும்படி, முன் மலைந்தோன்-முன்பு பொருதவனான சயத்திரதனது, நெஞ்சம் –
மனம், எரி உண்ண- எரிபடும் படி, அமர் – போர்க்களத்தில், நேர் பொருதிலேன்
ஏல்-(அவனுக்கு)  நேராக (யான்) போர் செயிதிடேனாயின்,-தஞ்சு என அடைந்தவர்
தமக்கு – அடைக்கலமென்றுகூறிச் சரணமடைந்தவர்களுக்கு, இடர்நினைக்கும் –
தீங்குசெய்ய எண்ணுகிற, நஞ்சு அனைய பாதகர் – விஷத்தையொத்த
பாவமுடையவர், நடக்கும் – (மறுமையிற்) செல்லும், நெறி – நரகவழியில்,
சேர்வேன்- ; (எ – று.)

     எரியுண்ண-மிகவருந்த, இறந்தொழிய, தகநஸம்ஸ்காரத்துக்கு இலக்காக, நேர் –
எதிரில் என்றேனும், தகுதியாக என்றேனும் கொள்க.  தஞ்சு-தஞ்ச மென்பதன்
கடைக்குறை. தஞ்சம்-பற்றுக்கோடு, ரக்ஷகம். பாவத்துக்கு, நஞ்சு உவமை- தவறாது
அழிக்குங் கொடுமைக்கு, வஞ்சனை இல்-வஞ்சனையில்லாத, என்மகன் எனினுமாம்.

வினையில் என் மகன்தன் உயிர் வேறு செய்வித்தோனைக்
குனி சிலையின் நாளை உயிர் கோறல் புரியேனேல்,
மனைவி அயலான் மருவல் கண்டும், அவள் கையால்
தினை அளவும் ஓர் பொழுது தின்றவனும் ஆவேன்!’

வினையில்- (தனது வஞ்சனைத்) தொழிலால், என் மகன்தன் உடல்
வேறு செய்வித்தோனை –  என்புத்திரனது உடம்பை உயிர் நீங்கச்செய்த
சயத்திரதனை, குனி சிலையின் – வளைத்த (என்) வில்லைக்கொண்டு, நாளை-
நாளைக்கு, உயிர் கோறல் புரியேன்ஏல்- உயிரை யழித்தல் செய்திடேனாயின்,-
மனைவி உயிர் வீய – (தன்) மனையாள் இறக்க, நல் மகன் மனைவி கையால்-
நல்ல(தன்) புத்திரனுக்கு மனையாளின் கையினால், தினை அளவுஉம் ஓர் பொழுது-
மிகச்சிறியதொரு பொழுதாயினும், சீவித்தவன் ஆவேன் – பிழைத்தவனது
பாபத்தையுடையவனாவேன்; (எ-று.)-என்று அருச்சுனன் வஞ்சினங்கூறி
முடித்தானென்க.

     அநாச்சிரமியாயிருக்கிற தோஷத்தையே இவ்வாறு குறித்ததென்க; மனிதன்
எப்பொழுதும் பிரமசரியம் கிருகஸ்தம் வாநப்பிரஸ்தம் சந்யாசம் என்ற நான்கு
ஆச்சிரமங்களுள் ஏதேனும்  ஒன்றிலே இருத்தல் வேண்டு மென்றும்,
ஓராச்சிரமத்திலுஞ்சேராமல் வெறுமையாயிருத்தல் கூடா தென்றும், ஒருவனுக்கு
மனைவி இறந்துபோன மாத்திரத்தில் கிருகஸ்தாச்சிரமவுரிமை போய்
விடுகிறதென்றும்.உடனே அவன் வேறுவிவாகஞ் செய்துகொண்டு கிருகஸ்தனாதல்
அல்லதுவாநப்ரஸ்த சந்நியாசங்களின் ஒன்றைசேர்தல் என்னும் இரண்டில்
யாதாயினும்ஒன்றைச் செய்யத்தக்கவனென்றும், அவ்வாறன்றி மணம் புரிந்து
கொள்ளாமல்மருமகள்  முதலியோர் உபசரிக்க இல்வாழ்க்கையிலே
இருக்கலாகாதென்றும்.அங்ஙனமிருத்தல் பிராயச்சித்தஞ்செய்யத்தக்க பாதகமென்றும்,
அதுசெய்யாவிட்டால்நரகம்  புகுவா னென்றும் குமார விஜயம், கௌதமஸ்மிருதி
முதலியஅறநூல்களால் அறியப்படுகிறது. ஈழநாட்டில் மருமகள் சமைக்க
வுண்ணுதல்இழிவாகக் கருதப்படுகின்றதெனக் கேள்வி.

     இனி, கையால், என்றதனை  இடக்கரடக்கலாக் கொண்டு, ‘மகன்மனைவி
கையாற் சீவித்தவன்’ என்பதற்கு –  மருமகளுடன் கூடி வாழ்ந்தவ னென்று
கருத்துக்கொள்ளுதலும் ஒருவாறு பொருந்தும். மருமகளோடு கூடுதல், குரு
பத்நீகமநத்துக்குச் சமமான பெரும்பாவமென்று மநு, நாரதர், வசிஷ்டர், வியாக்கிரர்,
யாஜ்ஞவல்க்யர் என்னும் இவர்கள் தருமசாஸ்திரங்களாலும், தாயோடு கூடுதலுக்குச்
சமமான அதிபாதக மென்று விஷ்ணுஸ்மிருதியாலும் தெரிகிறது. பி- ம்:
மகன்றனுயிர்.தின்றவனுமாவேன்.                                  (322)

 இப்பாட்டு, யாம் கண்ட ஏட்டுப்பிரதிகளில் இல்லை.”மனைவியயலான்
மருவல்கண்டுமவள் கையால்” என்று மூன்றாமடிக்குப் பாடமோதுவாருமுளர்

இன்னணம், இருந்தவர்கள் யாவரும் நடுங்க,
மன் அவையில் அன்று பல வஞ்சினம் உரைக்க,
சொன்ன உரை ஆன கனல் சுட்ட செவியோடும்,
பின்னை, அறன் மைந்தன் நெடு மாலினொடு பேசும்:185. – அருச்சுனன் வஞ்சினமுரைத்ததுகேட்ட தருமன் கிருஷ்ணனோடு
பேசலுறுதல்.

இன்னணம் – இவ்வாறு, மன் அவையில்-இராசசபையிலே,
இருந்தவர்கள் யாவர்உம் நடுங்க – (அங்கு) உள்ளவர்கள் எல்லோரும் (கேட்டு)
மிகஅஞ்சும்படி-(அருச்சுனன்), அன்று – அப்பொழுது, பல வஞ்சினம் உரைக்க –
அநேக சபதங்களைக்கூற,-சொன்ன-(அவ்வருச்சுனன்) கூறின, உரை ஆன-
சபதவார்த்தைகளாகிய, கனல்-அக்கனி, சுட்ட-(சென்று) வருத்தின, செவியோடு உம்-
காதுகளுடனே (அச்சபதங்களைக் கேட்டமாத்திரத்தில் மிக வருத்தியவனாய்)
பின்னை – பின்பு, அறன் மைந்தன்- தருமபுத்திரன், நெடு மாலினொடு –
பெருமைக்குணமுள்ள கண்ணனுடனே, பேசும் – (சிலவார்த்தை) கூறுவான். (எ –
று.)-அவற்றை மேல் காண்க. நெடுமால் – முன்பு திரிவிக்கிரமனாய் நீண்ட
மூர்த்தியுமாம்; விசுவரூபமெடுத்தருளியவனுமாம்.

வடி சுடர் வாளியான் மொழிந்த வஞ்சினப்-
படி சயத்திரதனைப் படுத்தல் கூடுமோ?
பொடி அனல் இவன் புகின், புகுந்து நால்வரும்
இடி பொரும் அரவு என, இறத்தல் திண்ணமே.186.- இதுவும், அடுத்த – கவியும் தருமன் கண்ணனை நோக்கிக்
கூறுவன.

மூன்றுகவிகள் – ஒருதொடர்.

     (இ – ள்.) வடி சுடர் வாளியான்-கூரிய ஒளியையுடைய அம்புகளையுடைய
அருச்சுனன், மொழிந்த வஞ்சினம் படி-சொன்ன சபதவார்த்தையின்படி,
சயத்திரதனை படுத்தல் கூடும்ஓ – சயத்திரதனைக் கொல்லுதல் முடியுமோ?
(ஒருகால்அங்ஙனம் முடியாமல்), இவன் – இவ்வருச்சுனன், பொடி அனல் புகின் –
சாம்பல்செய்யும்படியான அக்கினியிற் பிரவேசித்தால், நால்வர்உம் –
(மற்றைநாங்கள்)நாலுபேரும், புகுந்து – (அவனுடனே தீக்) குதித்து, இடிபொரும்
அரவு என இறத்தல்-இடியினால் அழியும் பாம்புபோல மரிப்பது, திண்ணம்-:ஏ –
தேற்றம். பி-ம்: சுடர்வேலினான்.

     இதனால், பாண்டவர் ஐவரும் உடல்வேறு உயிரொன்று என்னும்படி
அந்நியோந்நியமாயிருப்பவரென்பது விளங்கும். நால்வரும்-  தன்மையிற் படர்க்கை
வந்த இடவழுவமைதி; ‘நால்வேமும்’ என்றிருப்பின், வழாநிலையாம்.

     இதுமுதல் முப்பத்து மூன்று கவிகள்-பெரும்பாலும் மூன்றாஞ்சீரொன்று
மாச்சீரும், மற்றை மூன்றும், விளச்சீர்களுமாகிய கலிவிருத்தங்கள்.

முப்பது கடிகையின் முரண் கொள் மொய்ம்பனைத்
தப்பு அறக் கொல்லுவேன்!’ என்று சாற்றுமால்;
அப் பெருஞ் சேனையில் அவனை உள் உறத்
துப்பு உற அணிந்திடின், துன்னல் ஆகுமோ?

‘முரண் கொள்-மாறுபாடுகொண்ட, மொய்ம்பனை-வலிமையையுடைய
சயத்திரதனை, முப்பது கடிகையின்-(நாளைப்பகல்) முப்பது நாழிகைக்குள்ளே, தப்பு
அற-தவறாமல், கொல்லுவேன்,- என்று-, சாற்றும் -(அருச்சுனன் இப்பொழுது
சபதம்கூறுகிறான்; அ பெரு சேனையில்-அந்தப் பெரிய கௌரவசேனையில்,
அவனை – அச்சயத்திரதனை, உள் உற – உள்ளிடத்திலே பொருந்த, துப்புஉற –
வலிமைமிக, அணிந்திடில்-(எதிரில்) அணி வகுப்பில் நிறுத்தியிட்டால், துன்னல்
ஆகும்ஓ-(அவனைக்) கிட்டுதல் முடியுமோ? (எ – று.)-கிட்டுதலே அரிதாயின்,
கொன்று சபதத்தை நிறைவேற்றுவது எவ்வாறு? என்றபடி – பி-ம்: கடிகையின்
முரண்டு கடிகை-கடிகா என்னும் வடசொல் திரிந்தது; இருபத்து நான்கு நிமிஷங்
கொண்ட பொழுது.  ஆல் – ஈற்றசை ‘மால்’ என எடுத்துத் திருமாலே என
விளியாகக் கொள்ளினுமாம். துப்பு-துணையும், காவலுமாம்.

எஞ்சின் மற்று என் செய்வேன்?’ என்னும் ஏல்வையின்,
‘அஞ்சல்!’ என்று அறன் மகன் அவலம் ஆற்றினான்-
கஞ்ச வான் பொய்கையில் கராவின் வாய்ப் படு
குஞ்சரம்தனக்கு அருள் கொண்டல் மேனியான்.188. – ஸ்ரீகிருஷ்ணன் தருமனுக்கு அபயமளித்தல்.

எஞ்சின் – (அருச்சுனன்) அழிவதானால், மற்று என்செய்வேன் –
(யான்) வேறு யாது செய்வேன்? என்னும் – என்று சொன்ன, ஏல்வையின் –
சமயத்தில்,- அஞ்சல்  என்று- பயப்படாதேயென்று சொல்லி, அறன் மகன்
அவலம்ஆற்றினான்-தருமபுத்திரனது கவலையைத் தணியச்செய்தான்;
(யாவனெனில்),-வான்கஞ்சம் பொய்கையில்-சிறந்த தாமரைத்தடாகத்திலே,
கராவின்வாய் படு-முதலையின்வாயில் அகப்பட்ட, குஞ்சரந்தனக்கு-யானைக்கு,
அருள் -கருணைசெய்த,கொண்டல் மேனியான் – காளமேகம்போலுந்
திருமேனியையுடைய கண்ணபிரான்;(எ – று.)

     குஞ்சரந்தனக்கருள் கொண்டல்மேனியான் அவலமாற்றினான் என்ற
தொடரில், அடியார்க்கு வருந்துயரை ஆற்றுவிக்குந்தன்மையன் திருமால் என்பது
பெறப்படும்: இதுகருத்துடையடைகொளியணி. எஞ்சின்-(சபதந்) தப்பினால் என்றும்.
(அவன்) ஒழிந்தால் என்றும் பொருள்கள்படும். மற்று-யான் இறத்தலே யொழிய
என்றபடி. அஞ்சலென்னுதல் – அபயப்பிரதானம். இரண்டாம் அடி முற்று
மோனை
யாதலால். மாற்றினானென்று பிரித்தல் சிறவாது. 

இந்திரன் காக்கினும், ஈசன் காக்கினும்,
சிந்துவின் தலைவனைத் தேவர் காக்கினும்,
கந்தனின் சிறந்த நின் கனிட்டன், நாளையே,
மைந்து உறப் பொருது, அவன் மகுடம் கொள்ளுமே.189. – ஸ்ரீக்ருஷ்ணன் தருமனை நோக்கி யாவர்காப்பினும்சயத்திரதனை
நாளைத் தவறாமல் அருச்சுனன் கொல்வா னெனல்.

இரண்டுகவிகள் – ஒருதொடர்.

     (இ-ள்.) சிந்துவின் தலைவனை – சைந்தவனை, இந்திரன் காக்கின்உம் –
தேவேந்திரன் (வந்து) பாதுகாப்பனானாலும், ஈசன் காக்கின்உம்-சிவபிரான் (வந்து)
பாதுகாப்பனானாலும், தேவர் காக்கின்உம்-, கந்தனின் சிறந்த நின் கணிட்டன்-
முருகக்கடவுளினும் மேம்பட்ட உனது தம்பியான அருச்சுனன். நாளைஏ-
நாளைத்தினத்திலே, மைந்து உற பொருது-வலிமை மிகப் போர் செய்து, அவன்
மகுடம் கொள்ளும் – அவனது தலையைத் துணித்திடுவான்; (எ – று.)

     தந்தையும் தேவராசனு மாதலால் இந்திரனையும், அழித்தற்றொழிற் கடவு
ளாதலால்உருத்திரனையும் இங்குத் தலைமையாக எடுத்துக்கூறினார். காக்கினும்
என்றஉம்மையால், அவர்கள் காவாரென்பதும் விளங்கும். கநிஷ்டன்-வடசொல்;
இளையோன் – நாளையே, ஏ – பிரிநிலை. மகுடமென்ற கிரிடத்தின் பெயர் –
தானியாகுபெயராய், அதற்கு ஆதாரமான தலையைக் குறித்தது. தேவர் என்ற
வடசொல்-விண்ணுலகத்திலுள்ளவரென்றும்.  ஒளிவிளங்குபவ ரென்றும்
பொருள்படும். ஈற்று ஏ-தேற்றம். பி-ம்: இமயங்

வெயில் எழுவதன் முன் இவ் விசயன் தன்னொடும்
கயிலை அம் பொருப்பனைக் கண்டு, மீளவும்,
துயில் உணர்த்திடும்படி தோன்றுவோம்’ எனா,
அயில் அணி ஆழியான் அவனொடு ஏகினான்.190.-ஸ்ரீக்ருஷ்ணன் சூரியோதயத்துக்குமுன் கயிலைப்பொருப்பனைக்
கண்டு வருவோமெனல்.

வெயில் எழுவதன் முன் – சூரியன் உதிப்பதன்முன்,
இவிசயன்தன்னொடுஉம்-இந்தஅருச்சுனனுடனே (சென்று), கயிலை அம்பொருப்பனை
– கைலாசகிரியையுடைய சிவபிரானை, கண்டு –  தரிசித்து, மீளவும்-பின்பு, துயில்
உணர்த்திடும்படி- (உன்னைத்) தூக்கத்தினின்று எழுப்பும்படி பொழுதுவிடிவதற்குள்),
தோன்றுவோம்-(இங்கு) வந்திடுவோம், எனா – என்று (தருமனை நோக்கிச்) சொல்லி,
அயில் அணி ஆழியான்-கூர்மையையுடைய அழகிய சக்கராயுதத்தையுடைய
கண்ணபிரான், அவனொடு-அருச்சுனனுடனே, ஏகினான்-(கயிலைக்குப் புறப்பட்டுச்)
சென்றான்: (எ – று.)

     இங்கே ‘ஆழியான்-ஏகினான்’ என்றதனால், அச்சயத்திரதனைத்தான்
நேரிலேஅழிக்கக் கண்ணன் வல்ைமையில்லாதவனல்லனென்றும், இந்தத்
திருவாழியேஅவனை அழிக்கும்பொருட்டுச் சூரியனைமறைத்தற்கு நாளை உதவுவ
தென்றும்.இங்ஙனம் கைலாச யாத்திரை சென்றது மனிதனாக அவதரித்தற்கு
உரியதொருதிருவிளையாட்டே யென்றும் குறிப்பிக்கப்படும். வெயிலெழுவதன்முன்
மீளவும்தோன்றுவோம் என இரண்டடித்துங் கூட்டுக. ‘வெயிலெழுவது’ என்பதனை,
காரியம்காரணத்தின்மேல்நின்ற உபசார வழக் கொன்னலாம். திருமாலின்
சுதரிசநமென்றசக்கரம் ஆயிரம் அரங்களை யுடைய தென்பது தோன்ற ‘அயிலாழி’
என்றும், ‘பகவானுக்குச் சக்கரம் முதலியன பகைவர்பார்வைக்கு அச்சஞ்செய்து
ஆயுதகோடியிலும், அன்பர்கண்ணுக்கு அழகியனவாய்த் தோன்றி ஆபரண
கோடியிலும், அமையும்’ என்ற சாஸ்திரார்த்தம் விளங்க, ‘ அணியாழி’ என்றும்
கூறப்பட்டது.   

ஏகிய நெறியிடை இளைத்து, வாசவற்கு
ஆகிய குமரன் மெய் அயர்ந்து வீழ்தலும்,
போகியின் அறிதுயில் புரியும் நான்மறை
யோகி அம் கையின் அணைத்து, உயக்கம் மாற்றியே,191.-வழியிடையில் அருச்சுனனுக்குநேர்ந்த அயர்ச்சியை
ஸ்ரீக்ருஷ்ணன் ஆற்றுதல்.

இதுமுதல் நான்குகவிகள் – குளகம்.

     (இ-ள்.) ஏகிய நெறியிடை – (கிருஷ்ணஅருச்சுனர்) சென்ற வழி நடுவிலே,
வாசவற்கு ஆகிய குமரன் – இந்திரனுக்குப் பிறந்த குமாரனான அருச்சுனன்,
இளைத்து – மெலிந்து மெய் அயர்ந்து- உடம்பு சோர்ந்து, வீழ்தலும்-(கீழே)
விழுந்தவளவிலே, -போகியின் அறிதுயில் புரியும் நால்மறை யோகி –
ஆதிசேஷனிடத்து யோகநித்திரைசெய்கிற நான்குவேதங்களாலும் புகழப்படுகிற
யோகம்வல்ல கடவுளான கண்ணன், அம் கையின் அணைத்து – (தனது) அழகிய
திருக்கைகளால் (அருச்சனனைத்) தழுவி, உயக்கம் ஆற்றி-(அவனது) தளர்ச்சியைத்
தணியச்செய்து,- (எ-று.)-‘ஆற்றி’ என்பது, மேல் 194 ஆம் பாட்டிலுள்ள
‘உரைத்தலும்’ என்பதனோடு தொடரும்.

     போகம் என்றால், பாம்பினுடல்; அதனையுடையது போகீ: இது -பாம்புக்கு
வடமொழியிற் காரணப்பெயர். அறிதுயில்-எல்லாவற்றையும் அறியாநின்று செய்யுந்
தூக்கம்; விழிதுயில், துயிலாத் துயில், பொய்த்துயில் எனவும் படும். யோகம்-இமயம்
நியமம் முதலிய எட்டு அங்கங்களோடு செய்யும் ஒருவகைத்தவவொழுக்கம்:
அதனையுடையவன், யோகீ: இது-திருமாலின் ஆயிரத்தொட்டுத் திரு நாமங்களுள்
ஒன்றாம். கடவுள் சிலசமயங்களில் தான் யோகு செய்து நின்றதனாலும், பிறர்க்கு
யோகநிலையை உபதேசித்திருத்தலாலும், முனிவர் முதலியோரது யோகத்துக்கு
விஷய மாகுதலாலும், யோகி யென்று பெயர்: பகவத்கீதையில் “யத்ர
யோககேச்வரக்ருஷ்ண,” என்றவிடத்தில், கண்ணபிரானை யோகங்களுக்குத் தலைவ
னென்றதுங் காண்க. கோயம் – லோகரக்ஷணசிந்தையுமாம். உயக்கம் –
தொழிற்பெயர். மாற்றி என்றும் பதம் பிரிக்கலாம்  

உண்டிலை அடிசிலும்; உண்ணும் தீம் புனல்
கொண்டிலை; பசிக் கனல் கொளுந்தி, வீழ்ந்தனை;
மண்டு இலை வேலினாய்! மகவின் அன்பினால்,
கண்டிலை, உலகுஇயல் காட்டக் காட்டவே.192.- இதுவும், மேற்கவியும் – கண்ணன் அருச்சுனனைப்
பசியும் விடாயும் நீங்க அருந்துமாறு கூறுதல்.

மண்டு – (வலிமை) மிக்க, இலை வேலினாய்-அரசிலைவடிவமான
வேலாயுதத்தை யுடையவனே! அடிசில்உம்- சோற்றையும், உண்டிலை-புசித்தாயில்லை;
உண்ணும்-குடிக்கதக்க, தீம்புனல் – இனிய நீரை, கொண்டிலை-
உட்கொண்டாயுமில்லை; பசி கனல் கொளுந்தி – பசியாகிய தீப்பற்றி, வீழ்ந்தனை –
(கீழ்) விழுந்தாய்; உலகு இயல்-(யாக்கைநிலையாமையாகிய) உலகத்தின் இயல்பை,
காட்ட காட்ட-(முனிவர்கள்) நன்றாக எடுத்துக் காண்பிக்கவும், மகவின் அன்பினால்-
புத்திரவாற்சல்லியத்தால், கண்டிலை-(அதனைநீ) அறிந்தாயில்லை; (எ – று.)

     ‘சோற்றாலெடுத்தசுவர்’ என்னும்படி உடம்பிற்குஉறுதிதருகிற உணவை
முற்கூறினான். ‘உண்ணும் புனல்’ என்ற இடத்து ‘உண்ணல்’ என்பது-பொதுவினை.
பசி என்பது ஜாடராக்நியெனப்படுகிற வயிற்றினுள் உள்ளதொரு தீயின் செயலே
யாதலாலும், நெருப்புப் போலப் பசி சேர்ந்துவிடத்தை மிக வருத்தலாலும்,
‘பசிக்கனல்’எனப்பட்டது. காணுதல்-அறிதல், காட்டுதல்-அறிவித்தல். 

மாங்கனி, வாழையின் கனி, வருக்கையின்
தீம் கனி, கன்னலின் செய்ய நீர், உள;
வேம் கனல் பசியும், நின் விடாயும் ஆறவே
ஈங்கு இனிது அருந்துதி; ஏந்தல்!’ என்னவே,

மா கனி-மாம்பழங்களும், வாழையின் கனி – வாழைப்பழங்களும்,
தீம் வருக்கையின் கனி-இனிய பலாப்பழங்களும், கன்னலின் செய்ய நீர்-
கருப்பஞ்சாற்றினும் செம்மையான (மிகஇனிய) நீரும், உள-(இங்கு) உள்ளன;
(அவற்றை), ஏந்தல்-பெருமையிற் சிறந்தவனே! நின்-உனது, வேம் கனல் பசிஉம்-
எரிகிற நெருப்புப்போன்ற பசியும், விடாய்உம்-இளைப்பும், ஆற- தணிய, ஈங்கு-
இப்பொழுது (இவ்விடத்தில்), இனிது அருந்துதி- இனிமையாக உண்பாய், என்ன-
என்ற,- (எ- று.)-“இவையுரைத்தலும்” என அடுத்த கவியோடு தொடரும்.

     மா+கனி=மாங்கனி: மரப்பெயர் முன்னர்இனமெல்லெழுத்து வரப்பெற்றது; (நன்-
உயிர்-16.) மா, வாழை. வருக்கை என்பன-முக்கனியெனச் சிறப்பித்துக் கூறப்படும்.
கன்னலென்னுங் கரும்பின் பெயர்-அதன் இரசத்துக்கு ஆகுபெயராம். ஏந்தல்-
உயர்ந்தவன்; ஆண்பாற்சிறப்புப்பெயர்; அல்- கருத்தாப்பொருள்விகுதி; இங்கே,
அண்மைவிளி; ஆதலின், இயல்பு. பி-ம்: கன்னலிற் செழும்புனலுள,
கன்னலிற்செய்தமாவுள. நீர்விடாயும்.    

சரிந்தவர் சரிவு அறத் தாங்கும் நாயகன்
பரிந்து, இவை உரைத்தலும், ‘பாவை பங்கன்மேல்
புரிந்திலன் இன்னமும் பூசை!’ என்றனன்,
வரிந்த வெஞ் சிலைக்கு மண் மதிக்கும் வீரனே194.- அருச்சுனன் இன்னுஞ் சிவபூசை செய்யவில்லையே யெனல்.

சரிந்தவர் – தளர்ச்சியடைந்தவர்களது, சரிவு-தளர்ச்சி, அற- நீங்க,
தாங்கும்-(அவர்களைப்) பாதுகாத்தருளுகிற, நாயகன் தலைவனான கண்ணன்,
பரிந்து, அன்புகொண்டு, இவை-இவ்வார்ததைகளை உரைத்தலும் – சொன்ன
வளவிலே,-வரிந்த வெம் சிலைக்கு மண் மதித்த வீரன் – கட்டமைந்த கொடிய
வில்லின் தொழிலில் (மிகச்சிறந்தவனென்று) நிலவுலகத்தாரால்
நன்குமதிக்கப்பட்டவீரனான அருச்சுனன், ‘இன்னம்உம்-இன்றைத்தினம் இது
வரையிலும், பாவைபங்கன்மேல் பூசை புரிந்திலன்- உமாதேவியைவலபாகத்திலுடைய
சிவபிரான்மேல் பூசனைசெய்தேனில்லை,’ என்றனன் – என்றுகூறினான்; (எ – று.)

     இன்னும் யான் சிவபூசைசெய்யாமையால், உண்ணுதல் தகாதென்பதாம்:
இதனால், நித்தியபூசைசெய்தாலன்றி உண்ணுதல் செய்யாத அருச்சுனனது
சிவபக்திமிகுதி விளங்கும். இங்கே இளைத்து மெய்சோர்ந்து வீழ்ந்த அருச்சுனனைக்
கண்ணன் கைகளால் அணைத்து எடுத்ததற்கு ஏற்ப, ‘சரிந்தவர் சரிவறத்
தாங்குநாயகன்’ என்றார்: முதலடி -கருத்துடையடைகொளியணி. பிறவித்துயரத்தில்
வீழ்ந்திட்டாரைக்கரையேற்றுபவன் என்றதும் இதிற் பெறப்படும். சிலைக்கு-
உருபுமயக்கம். மண்-ஆகுபெயர். பி- ம்: மேன்மதிக்கும்.    

மரு வரு கானக மலரினால் எமைப்
பொரு அரு பூசனை புரிதி, ஐய! நீ
இருவரும் ஒருவரே என்பது, இன்று போய்,
அரு வரை அவன் அடி அடைந்து காண்டியே.’195.- இதுவும் மேற்கவியும் -குளகம்: ‘எம்மைப்பூசைபுரி:
இருவரும்ஒருவரேயென்பதைக் காண்பாய்’ எனல்.

‘ஐய-! நீ-, மரு வரு- பரிமளம் மிக்க, கான் அகம் மலரினால்-
காட்டினிடத்திலுள்ள பூக்களால், எமை-எம்மை பொருவு அரு பூசனை புரிதி-
ஒப்பில்லாத பூசைசெய்வாய்: (செய்தபின்பு), அரு வரை போய்-(செல்லுதற்கு) அரிய
கைலாசத்துக்குச் சென்று, அவன் அடி அடைந்து- அச்சிவபிரானது திருவடிகளைச்
சேர்ந்து, இருவர்உம் ஒருவர்ஏ என்பது-(அப்பரமசிவனும் யானும் ஆகிய)
இரண்டுமூர்த்தியும் ஒருமூர்த்தியே யென்பதை, இன்று- இன்றைக்கு, காண்டி-
பிரதியக்ஷமாகப் பார்ப்பாய்; (எ – று.)- “என்ற அரி யியம்பலும்” என எடுத்த
கவியோடு தொடரும்.

     இதனால், ‘அரியும் அரனும் ஒன்று’ என்ற அபேதசித்தாந்தம் விளக்கப்
பட்டது. 
சிவபிரானுக்கு அந்தராத்மாவாக வுள்ளவனும் ஸ்ரீமந்நாரயணனே என்ற
தன்மை குறிப்பிக்கப்பட்ட தென உரைப்பர்: “சிவனா யயனானாய்”, ” முனியே
நான்முகனே முக்கண்ணப்பா”, “அவாவறச்சூழ் அரியையயனையரனையலற்றி” என்ற
ஆழ்வார் அருளிச்செயலுங் காண்க. மருவரு கானகம்-பொருந்திய இக்காட்டில்.
(இப்பொழுது) எம்மைப் பூசைசெய் எனினுமாம். மருவு அரு எனப் பிரித்தால்,
பெறுதற்கரிய என்று பொருளாம். பி- ம்:  அரனடி.  

என்று அரி இயம்பலும், இரு மருங்கினும்
நின்ற நல் மலர் கொடு, நிகர் இல் கேள்வியான்,
மன்றல் அம் துழாய் முடி மாயன்மேல் மனம்
ஒன்றியே, சிவாகம உரையின் சாத்தினான்.196.- அருச்சுனன் சிவனாக ஸ்ரீகிருஷ்ணனைப் பூசித்தல்.

என்ற -, அரி- கண்ணபிரான், இயம்பலும் – கூறிய வளவிலே,-
நிகர்இல் கேள்வியான் – ஒப்பிலாத நூற்கேள்வியையுடைய அருச்சுனன்,- இரு
மருங்கின்உம் நின்ற – இரண்டுபக்கங்களிலும் பொருந்தின, நல்மலர்கொடு-சிறந்த
பூக்களைக் கொண்டு, மன்றல் அம் துழாய் முடி மாயன் மேல் மனம் ஒன்றிஏ –
பரிமளத்தையுடைய அழகிய திருத்துழாய்மாலையைச் சூடிய திருமுடியையுடைய
அக்கண்ணபிரான்மேல் (தன்) மனம் பதியவைத்துக்கொண்டு, சிவ ஆகம உரையின்-
சைவாகமங்களிற் கூறப்பட்ட சொற்களின் படியே, சாத்தினான் – இட்டு
அருச்சித்தான்; (எ-று.)

     வேதம் ஆகமம் என்ற இரண்டனுள், வேதம் பல தேவர்களுக்குப் பொதுவும்
ஆகமம் சிவபிரானுக்குச் சிறப்பும் ஆதலாலும், ஆகமம் சிவபிரானால்
அருளிச்செய்யப்பட்டதாகிச் சிவனைத் தியானித்தல் பூசித்தல் முதலியவற்றின்
முறைமைகளை வெளியிடுவதாதலாலும், ‘சிவாகமம்’ எனப்பட்டது. இவ்வாகமம்,
இருபத்தெட்டாம். நன்மலர் – வாடாதமலர், கொன்றைமுதலிய சிவனுக்குரிய மலர்.
முன்னர்ப் பாசுபதம்பெறத் தவஞ்செய்யும்பொருட்டுச் செல்லுமுன் ஸ்ரீவேதவியாசரிடம்
சிவபிரானுக்குரிய மந்திரத்தை அருச்சுனன் உபதேசம் பெற்றமை தோன்ற, ‘நிகரில்
கேள்வியான்’ என்றார். மாயன்மேல் மனம்ஒன்றியே – கண்ணனைப் பரமசிவனாகப்
பாவித்தே யென்றவாறு. பி – ம் : மலர்கொய்து. ஒன்றுபட்டாகமவுரையின்

சாத்தினன் தொழுது, பின் தலைவன் தாள் மலர்த்
தீர்த்தமும், கனிகளும், தெவிட்ட உண்டு, தன்
காத்திரம் தேறினன், கருத்தும் தேறினன்;
பார்த்தன் முன் தவப் பயன் பலித்தவாறுஅரோ!197-.பூசைசெய்தபின் அருச்சுனன் கனியுண்டு தேறுதல்.

(அருச்சுனன்) , சாத்தினன் – (கண்ணன்மேல் மலர்களை அணிந்து,
தொழுது – நமஸ்கரித்து, பின் – பின்பு, தலைவன் – (எல்லாவுயிர்களுக்கும்)
நாயகனான அக்கண்ணனது, தாள் மலர்- திருவடித்தாமலைமலர்களை விளக்கின,
தீர்த்தம்உம் – தீர்த்தத்தையும், கனிகள்உம் – பழங்களையும் ,தெவிட்ட – அதிக
திருப்தியுண்டாம்படி, உண்டு உட்கொண்டு, தன் காத்திரம் தேறினன் – தனது
உடம்புதெளிந்து, கருத்துஉம் தேறினன் – மனமுந்தெளிந்தான்; பார்த்தன்-
அருச்சுனனது,முன் தவம் பயன்- முன்புசெய்த தவத்தின் பலன், பலித்த ஆறு-
சித்தித்த விதம்,(இதுவாம்); (எ – று.)- அரோ, ஈற்றசை ; வியப்புவிளக்கும்
இடைச்சொல்லாகக்கொள்ளுதலும் பொருந்தும்.

     அரியையேனும் அரனையேனும் ஒருகடவுளைத் தனியேபூசித்தல் உலகத்தில்
உளதாயினும், இப்படிப்பட்ட அபோதமான பாவனையோடு பூசனைசெய்தல்
அரிதாதலின், இதனை வியந்து கூறினார். தாள்மலர்தீர்த்தம் – ஸ்ரீபாததீர்த்தம்

போய், அரு நெறியிடைப் புள்ளின் வேந்தனைத்
தூயவன் நினைத்தலும், அவனும் தோன்றினான்;
மாயனைத் தோளினும், வலாரி மைந்தனைச்
சேய் எனக் கரத்தினும், சேர ஏந்தியே,198.-ஸ்ரீக்ருஷ்ணன் கருடனைநினைக்க அவன் இவரிருவரையும்
ஏந்திச் செல்லுதல்.

(அதன்பின்பு), போய் – (அப்பால்) சென்று, அருநெறியிடை –
(செல்லுதற்கு) அரிய வழிநடுவிலே, தூயவன்- பரிசுத்தகுணமுள்ள கண்ணன்,
புள்ளின் வேந்தனை – பறவைகளுக்கு அரசனான கருடனை, நினைத்தலும் –
(திருவுள்ளத்திற்) கருதியமாத்திரத்தில், அவன்உம் – அந்தப்பக்ஷிராசனும்,
தோன்றினான் – (அங்கு) வந்து, மாயனை- கண்ணனை, தோளின்உம் – (தனது)
தோள்களிலும், வலாரி மைந்தனை- இந்திரகுமாரனான அருச்சுனனை, சேய தன்
கரத்தின்உம் – சிவந்த தனது கைகளிலும், சேர- ஒருசேர, ஏந்தினான் –
வகித்துக்கொண்டான்; (எ-று.) – சேய – குறிப்பெயரெச்சம். பி-ம்; சேயெனக்.

நீலம் முற்றிய மலை இரண்டொடு ஒன்று பொற்
சீலம் முற்றிய மலை செல்வது என்னவே,
ஆலம் முற்றிய களத்து ஐயன் வெள்ளி அம்
கோலம் முற்றிய மலை குறுகினான்அரோ. 199.- க்ருஷ்ணார்ச்சுனருடன் கருடன் கயிலையைக் குறுகுதல்.

சீலம் முற்றிய – அழகு மிக்க, பொன் மலை ஒன்று –
பொன்மயமானதொரு மலை, நீலம் முற்றிய – நீலநிறம் மிக்க, மலை இரண்டொடு –
இரண்டுமலைகளைச் சுமந்துகொண்டு, செல்வது என்ன- பறந்துபோவது போல,
(கருடாழ்வான் கிருஷ்ணார்ச்சுனரை எழுந்தருளப்பண்ணிக்கொண்டு), ஆலம்
முற்றியகளத்து ஐயன்- விஷம்மிக்க ஸ்ரீகண்டத்தையுடைய தலைவனான
சிவபிரானது, கோலம் முற்றிய – அலங்காரம் மிக்க, வெள்ளி – வெள்ளிமயமான,
அம் – அழகிய,மலை – கைலாசபருவத்தை, குறுகினான் – சமீபித்தான்.

     முன்னிரண்டடி – இல்பொருளுவமை. இரண்டுநீலமலைகள் – நீலநிறமுள்ள
கண்ணனுக்கும் அருச்சுனனுக்கும், பொன்மலை – பொன்னிறமள்ள கருடனுக்கும்
ஒப்பு எனக் காண்க.     

மாற்றினால் விளங்கு பொன் வடிவன், வெஞ் சிறைக்
காற்றினால் விசை உறக் கழன்று போயின,
ஆற்றினால் அறம் புரி அம்மையோடு ஒரு
கூற்றினான் வரை படி கொண்டல் ஏழுமே.200.- இரண்டகவிகள்- கருடன் வேகத்தை விளக்கும்.

ஆற்றினால் – நல்லநெறியினால், அறம் புரி- தருமங்களைச்செய்த,
அம்மையோடு – தலைவியான உமாதேவியோடு, ஒரு கூற்றினான் –
ஒருபாகத்தையுடைய பரமசிவனது, வரை – கைலாச மலையிலே, படி – படிந்துள்ள,
கொண்டல் ஏழ்உம் – ஏழு மேகங்களும்,- மாற்றினால் விளங்கு பொன் வடிவன் –
உயர்ந்தமாற்றுடன் பிரகாசிக்கிற பொன் போன்ற வடிவத்தையுடைய கருடனது,
வெம்சிறை – கொடிய இறகுகளின், காற்றினால்-, விசை பெற – வேகமாக, கழன்று
போயின- விலகிச்சென்றன; (எ-று.)

     கருடனுக்கு ‘ஸ்வர்ணவர்ணன்’ என்று ஒரு பெயர். சிவபிரான் இரு
நாழிநெல்கொடுக்க அதுகொண்டு உமாதேவி அப்பிரானது விருப்பத்தின்படி
முப்பத்திரண்டு தருமங்களையும் நடத்தின ளென்பது, கதை. இனி, ஆற்றினால்
அறம்புரி – சன்மார்க்கத்தில் நின்று (பரம சிவனைத் திருமணஞ் செய்யும்
பொருட்டுத்)தவமியற்றிய என்றுங்கொள்ளலாம், திருக்குறளில் ‘அறன் வலியுறுத்தல்’
என்றஅதிகாரத்தில், அறம் என்பது – இல்லறம், தவம் என்னும் இரண்டுமாத
லுணர்க.அம்மை – அம்பா என்னும் வடசொல்லின் திரிபு. அம்மையோடு
ஒருகூற்றினான் – அம்பிகைக்குத் தன்வடிவத்தில் இடப்பக்கத்தைக் கொடுத்துத்
தான் வலப்பக்கத்தைமாத்திரங் கொண்டு அர்த்தநாரீசுவரனாகியவன், கொண்டல்
ஏழ் – சம்வர்த்தம், ஆவர்த்தம், புட்கலாவர்த்தம், சங்கிருதம், துரோணம், காளமுகி,
நீலவர்ணம் என்பன. இப்பாட்டு – கருடனது வேகத்தை விளக்கியது. 

பறிந்தன கொடு முடி பலவும்; வேரொடு
மறிந்தன, சாரலின் மரங்கள் யாவையும்;
அறிந்தன, மயில் முதல் ஆன புள்இனம்;
செறிந்தன, பணிந்தன, செய்ய தாள்களே.

(கருடனுடைய சிறைக்காற்றின் விசையால்), கொடு முடி பலஉம் –
வளைந்துள்ள மலைச்சிகரங்கள்பலவும், வேரொடு பறிந்தன – அடியோடு
பறியுண்டன: சாரலின்  மலைச்சாரலிலுள்ள, மரங்கள் யாவைஉம் – எல்லா
மரங்களும், மறிந்தன – தலைசாய்ந்தன; மயில் முதல் ஆன புள்இனம் – மயில்
முதலிய பறவைக்கூட்டங்கள், அறிந்தன – (கருடன்வருவதை) அறிந்தனவாய்,
செறிந்தன – திரண்டனவாகி, செய்ய தாள்கள் – அந்தக் (கருடனுடைய)
செவ்வியபாதங்களை, பணிந்தன – வணங்கின; (எ-று.) பி – ம் : மரங்களாயின.
  

பாண்டவ சகாயன் ஊர் பறவையின் குலத்து
ஆண்தகை இரு சிறகு அசையும் ஓதையால்,
காண்தகு சடைமுடிக் காலகாலன் மெய்ப்
பூண்டன பணிகளும், புரண்டு வீழ்ந்தவே.202.- கருடன் சிறகுஅசைவினால்தோன்றும் ஓசையின் தன்மை.

 (பாண்டவ(ர்) சகாயன் – பாண்டவர்க்குத்துணைவனாகிய
ஸ்ரீக்ருஷ்ணன், ஊர் – ஏறிச்செல்லுகிற, பறவையின்குலத்து ஆண்டகை-
பறவைக்குலத்தையெல்லாம் அரசனாகியாளுந்தன்மை வாய்ந்த
ஆண்மைக்குணமுள்ள கருடனுடைய, இரு சிறகு – இரண்டு இறக்கைகளும்,
அசையும் – அசைகின்ற, ஓதையால் – ஓசையினால்,- காண்தகு – காணத்தக்க
[அழகிதாகத்தோன்றுகிற], சடைமுடி – சடைமுடியையுடைய, காலகாலன் –
யமனுக்கும் யமனான சிவபெருமானுடைய, மெய் – திருமேனியிலே, பூண்டன –
ஆபரணமாக அணிந்தனவான, பணிகள்உம்- பாம்புகளும், புரண்டு வீழ்ந்த –
(அச்சத்தால்) கீழ் வீழ்ந்துபுரளலாயின;    (எ-று.)

     காலகாலனென்றவிவரம் :- ஊழ்வினையாற் பதினாறுபிராயம் பெற்ற
மிருகண்டுபுத்திரனாகிய மார்க்கண்டேயனென்னும்முனிவன், கூற்றுவன்வந்து
காலபாசத்தாற் கட்டியிழுங்குங்காலத்துப் பரமசிவனைச் சரணமடைய, அப்பெருமான்
யமனைக் காலாலுதைத்துத்தள்ளி முனிகுமாரனுக்கு என்றும் பதினாறாகத் தீர்க்காயுசு
கொடுத்தருளினனென்பதாம். இச்சரித்திரத்தால், அனுபவித்தே தீரவேண்டும்
பெருவலிதாகிய ஊழ்வினையையும் தன் அடியார்க்குக்கடக்கச்செய்கிற கடவுளது
பேராற்றல் புலப்படும். காலன் – பிராணிகளின் ஆயுட்காலத்தை
வரையறுப்பவன்.                                            (340)

   * இந்தப்பாடலும் அடுத்த பாடலுமாகிய இரண்டுபாடல்கள், யாம்கண்ட
ஏட்டுப்பிரதிகளிலெல்லாம் உள்ளன. சென்னை இராசாங்கக் கையெழுத்துப்
புத்தகசாலையிலுள்ள ஏட்டுப்புத்தகம் இரண்டிலும் இவை உண்டு. மேல்காட்டப்படும்
208 – முதல் 220 – வரையிலுமுள்ளசெய்யுள்களும் இவ்வாறே. கோயமுத்தூரைச்
சார்ந்ததொரு கிராமத்திலுள்ள வித்துவான் ம-ள-ள- ஸ்ரீமுத்துநாயுடு
அவர்களுடையகுமாரர் வேணுகோபாலசாமி நாயுடு அவர்களும், அந்தப்பக்கத்துப்
பிரதிகள் பலவற்றை ஒத்திட்டுப் பார்த்து இங்ஙனமே தெரிவித்தனர்.
மதுரைச்சங்கப்பதிப்பிலும் இவையுள்ளன

விரிந்த பைங் கனை கழல் வயினதேயனை,
விரிந்த வெண் கிரி அரமாதர், மீது கண்டு,
‘எரிந்திடு வச்சிரன் இந்த மால் வரைக்கு
அரிந்திலன் சிறகு!’ என, ஐயம் எய்தினார்.203.- கருடனைக் கண்ட அரமாதர் ஐயுறுதல்.

வரிந்த – (காலிற்) கட்டிய, பை – பசுமையான [பசும்பொன்னாலாகிய],
கனை – ஒலிக்கின்ற, கழல் – வீரக்கழலையுடைய, வயினதேயனை- கருடனை,
விரிந்த வெள் கிரி அரமாதர் -(ஒளி) விளங்குகிற வெள்ளிமயமான
கைலாசமலையில்வாழ்கிற தேவமாதர்கள், மீது கண்டு மேலே [ஆகாயத்திலே]
பார்த்து, ‘எரிந்திடு வச்சிரன் – விளங்குகிற வச்சிராயுதத்தையுடைய தேவேந்திரன்,
இந்த மால் வரைக்கு – இந்தப் பெரிய மலைக்கு, சிறகு அரிந்திலன்- இறகுகளை
அறுத்தானில்லைபோலும்’, என – என்று, ஐயம் எய்தினார் – சங்கைகொண்டார்கள்;
(எ-று.)

     ‘இந்த மால்வரை’ என்றது, கருடனது பெருவடிவத்தை. கருடனைச்சிற
கறுபடாதமலையோ வென்று ஐயமுற்றதனால், ஐயவணி. அரமாதர் – அமரமாதர்
அல்லதுஅரம்பைமாதர் என்பதன் விகாரம்.

நிறை மதி நிகர் என நிறத்த வெள்ளி அம்
பொறை மலை திசைதொறும் பொழியும் வாள் நிலா,
நறை மலர் இதழி சேர் நாதன் வார் சடைப்
பிறை மதி நிலவினும் பிறங்க வீசுமால்.204.- கைலாயவருணனை.

நிறை மதி நிகர் என (கலைகள்) நிறைந்த [பூர்ண] சந்திரன் ஒப்பு
என்னும்படி, நிறத்த – வெண்ணிறத்தையுடைய, வெள்ளி- வெள்ளி மயமான, அம் –
அழகிய, பொறைமலை – (பூமியைத்) தாங்குவதான கைலாசகிரி, திசைதொறுஉம் –
எல்லாத்திக்குக்களிலும், பொழியும்- சொரிகிற, வாள் நிலா- பிரகாசமான
வெள்ளொளி,நறை – தேனையுடைய, இகழி மலர் – கொன்றைப்பூ, சேர் –
பொருந்தின, நாதன் -தலைவனான சிவபிரானது, வார்சடை – நீண்ட சடையிலுள்ள,
பிறை மதி -இளஞ்சந்திரனது, நிலவின்உம் – நிலாவொளியைக் காட்டிலும்,
பிறங்க -மிக்குவிளங்க, வீசும் – பரவும்; (எ-று.)- ஆல் – ஈற்றசை

     பிறைச்சந்திரன் நிலவினும் கைலாயத்தின்வெள்ளொளி மிக்கதென்பதாம்.
மலைபூமியைத் தாங்குவதாதலை, பூதரம் என்ற பெயரினாலும் அறிக.  

நீர் அறு தருக்களும் தழைக்க நின்று, முன்
நாரதன் முதலியோர் நவிற்று நாத யாழ்,
பாரத அமர் புரி பச்சை மா முகில்
ஆர் அதர் விடாயை வந்து ஆற்றுகின்றதால்.205.- அங்கு யாழிசை, வந்த விடாயைப் போக்குவதாகை.

நீர் அறு தருக்கள்உம் – ஈரம் வற்றிய மரங்களும், தழைக்க –
செழிக்கும்படி, முன் நின்று – (சிவபிரானது) முன்னே நின்றுகொண்டு, நாரதன் –
முதலியோர் – நாரதமுனிவன் முதலானவர்கள், நவிற்று – பாடுகிற, யாழ் நாதம் –
வீணையின் இசை,- பாரதம் அமர் புரி – பாரதயுத்தத்தை நடத்துகிற, பச்சை மா
முகில்- பசுநிறமுள்ள பெரியமேகம்போன்ற கிருஷ்ண அருச்சுனரது, ஆர் அதர்
விடாயை- (செல்லுதற்கு) அரிய நெடுவழியில் வந்தாலாகிய இளைப்பை, வந்து
ஆற்றுகின்றது – (அருகில்) வந்து தணிக்கின்றது;

     சங்கீத சாஸ்திரலக்ஷணத்துக்குச் சிறிதுந் தவறாத மிக இனிய இசைப்பாட்டைக்
கேட்டமாத்திரத்தில் பட்டுப்போன மரங்களும் தளிர்த்துப்பூத்துக் காய்த்துப் பழுத்துச்
செழிக்குமென்றல் மரபாதலால்,    ‘நீரறுதருக்களுந்தழைக்க நவிற்று நாதயாழ்’
எனப்பட்டது; “கலைத்தொழில்பட வெழீஇப்பாடினாள் கனிந்து, இலைப்பொழில்
குரங்கின வீன்ற தூண் தளிர்” என்ற சிந்தாமணியையுங் காண்க. நாரதன் –
தேவமுனி; பிரமனது குமாரன்; நரம் – மனிதர், அவர்களுள் உள்ள ஒற்றுமை –
நாரம்: அதனை, தன் – (கலகத்தாற்) கெடுப்பவன் என்றாவது, நாரம் –
ஆத்மசம்பந்தமான ஞானம்: அதனை, தன் – (பிறர்க்கு உபதேசத்தாற்)
கொடுப்பவன்என்றாவது காரணப் பொருள். முகில் – உவமாகுபெயர்.

சங்கரன் மணி வரைச் சாரல் மாருதம்,
திங்களின் நிலவு உமிழ் செக்கர் வேணிமேல்
கொங்கு அவிழ் செழு மலர்க் கொன்றை வாசமும்,
கங்கை நுண் துவலையும், கலந்து, வீசுமால்.206.-ஆங்கு வீசுங் காற்றின் தன்மை.

சங்கரன் – சிவபிரானது, மணி – அழகிய, வரை- கைலாசகிரியின்.
சாரல் – பக்கங்களிலே (வீசுகிற), மாருதம்-காற்று,- திங்களின் நிலவி உமிழ் –
சந்திரனது நிலாவைச் சொரிகிற, செக்கர் வேணி மேல் – செந்நிறமுள்ள
(சிவபிரானது)சடையின்மேல் (தரித்த), கொங்கு அவிழ் – வாசனை வீசுகிற, செழு –
செழிப்பான,கொன்றை மலர் – கொன்றைப்பூவின், வாசம்உம் – பரிமளத்தையும்,
கங்கை நுண்துவலைஉம் – (அச்சடையிலுள்ள) கங்காநதியின் சிறிய
நீர்த்துளிகளையும், கலந்துவீசும் – ஒருங்கு வெளிவீசும்.

அங்கு உள விடர் அகத்து அநேகம் ஆயிரம்
பொங்கு அழல் உமிழ் விழிப் புயங்க மா மணி
எங்கணும் இருள் அற இலங்கு சோதியால்,
கங்குலும் பகலவன் கரங்கள் காட்டுமால்.207.- அரவங்களின் மாணிக்கவொளி

அங்கு உள – அவ்விடத்திலுள்ள, விடர் – மலை வெடிப்புக்களின்,
அகத்து – உள்ளேயிருக்கிற, அநேகம் ஆயிரம் – பல ஆயிரக்கணக்கான, பொங்கு
அழல் உமிழ் விழி புயங்கம் – மிக்க கோபாக்கினியைச் சொரிகிற கண்களையுடைய
நாகங்களின், மா மணி- சிறந்த மாணிக்கங்கள்,- எங்கண்உம் இருள் அற –
எவ்விடத்திலும் இருள் நீங்கும்படி, இலங்கு – விளங்குகிற, சோதியால் –
ஒளியினால்,- கங்குல்உம் – அந்த இராப்பொழுதிலும், பகலவன் கரங்கள்
காட்டும் -சூரியனது கிரணங்கள்போலத் தோன்றும்; (எ – று.)

     ஆங்குள்ள சிறந்தசாதிப்பாம்புகளின் மாணிக்கங்களுடைய ஒளியால் எங்கும்
இருள்நீங்கிப் பகல்போல்விளங்கிற்றென்பதாம்.

செந்திரு மட மயில் கேள்வன் சென்றமை
அந்தி வான் நிறத்தவன் அறிந்து, முன்னமே
நந்தியும் உரைசெயக் கேட்டு, ‘நன்று!’ எனப்
புந்தியால் மகிழ்ந்து, எதிர் போந்து, புல்லினான்.208.-நந்தி ஸ்ரீ க்ருஷ்ணன்வருகையைத் தெரிவிக்க,
சிவபெருமான் நன்றென்றுவந்து எதிர்போந்து தழுவுதல்.

செந் திரு மடமயில் – செவ்விய திருவென்னும் பேரையுடைய
மடப்பமுள்ள மயில்போலுஞ்சாயலையுடைய இலக்குமிக்கு, கேள்வன் –
கணவனாகியஸ்ரீ க்ருஷ்ணன், சென்றமை – வந்துள்ள செய்தியை,-அந்திவான்
நிறத்தவன் -செவ்வானம்போலுந் திருமேனியையுடைய சிவபெருமான்,- முன்னம்ஏ
அறிந்துஉம் -முன்னமே அறிந்திருந்தும், நந்திஉம் உரைசெய – நந்திதேவரும்
திருமுன் வந்துதெரிவிக்க, கேட்டு-, நன்று என புந்தியால் மகிழ்ந்து – நன்றென்று
மனத்தினாற்சந்தோஷித்து, எதிர் போந்து – எதிர் கொண்டு, புல்லினான் –
(அப்பிரானைத்)தழுவினான்; (எ – று.) – செல்லுதல் – தன்னிடத்தினின்று நடத்தல்

     திருமால் கண்ணனாகத் திருவவதரித்தபொழுது திருமகள்
உருக்குமணிப்பிராட்டியாகத் தோன்றின ளென்று புராணங்கூறம், ‘அந்திவண்ணன்’
என்று சிவபிரானுக்கு ஒரு திருநாமம். நந்தி – சிவனைச்சூழ்ந்து நிற்கிற அடியவர்
கூட்டமாகிய பிரமதகணங்களுக்குத்தலைவர்; திருவாயில்காப்பவரும், சிலசமயங்களில்
வாகனமுமாய் நிற்பவர்.

     முன்பு அச்சிட்டுள்ள பிரதியில் இங்கு, “செந்திருமடமயில்” (208) என்ற
இந்தப்பாடலுக்குப் பதிலாகக் காணப்படும் பாடல் வருமாறு:-

     * (1) செந்திருமடமயில்கேள்வன்சென்றுசெவ்
வந்திவானிறத்தினனருள்செய்வாய்மையா
னந்தியுள்விடுத்திடநரன்றனோடுதன்
புந்தியின்மகிழ்ந்துமந்திரத்துட்போயினான்.

     (இ-ள்.) இளமையான மயில்போன்ற சாயலையுடையசெந்நிறமுள்ள
இலக்குமிக்குக் கணவனான கண்ணன், அருச்சுனனுடனே (அந்தக் கைலாசகிரியிற்)
சேர்ந்து, மாலைப்பொழுதிற் காணப்படுகிற செவ்வானம்போன்ற செந்நிறமுடைய
சிவபிரான் கருணையோடு கூறிய கட்டளைமொழியின்படி (அச்சிவபிரானது
வாயில்காவலராகிய) திருநந்திதேவர் உள்ளே அனுப்ப, (தனது) மனத்தில்
மகிழ்ச்சிகொண்டு, ஆலயத்தினுட் சென்றான்; (எ – று.)]   

ஆங்கு ஓர் ஆசனத்திடை இருத்தி ஐயனை,
பாங்கினால் வினவினான், பவள மேனியான்-
ஈங்கு இவன் பிறந்ததும், இளைத்த பார்மகள்
தீங்கு அறப் புரிதரு செயலும், யாவுமே.209 – திருமாலை ஓராசனத்திருத்தி, அப்பிரானுடைய திருவவதாரம்
முதலியவற்றைக்குறித்துச் சிவபெருமான் வினாவுதல்.

ஆங்கு – அங்கே, ஐயனே – தலைவனா ஸ்ரீக்ருஷ்ணனை, பவளம்
மேனியான் – பவழம்போற் செந்நிறத்தவனான சிவபெருமான்,- ஓர் ஆசனத்து
இருத்தி – ஓராசனத்திலே வீற்றிருக்குமாறு செய்து, ஈங்கு – இங்கே
[இவ்வுலகத்திலே],இவன் பிறந்தது உம் – இந்தத் திருமால்க்ருஷ்ணனாகத்
திருவவதரித்ததும், இளைத்த – (பலதுஷ்டவரசரையும் அசுரரையும் சுமப்பதனால்)
இளைப்படைந்த, பார்மகள் – பூமிதேவியின், தீங்கு-தீமை [சுமை], அற – நீங்குமாறு,
புரிதரு – செய்துவருகின்ற, செயல்உம் – செய்கையும் ஆகிய, யாஉம் – எல்லாச்
செய்கையையும், பாங்கினால்- பாங்காக [ஆர்வமோடு], வினாவினான் – கேட்டான்;
(எ-று.)

இதுவும் இன்னும் 10 – பாடல்களும் இந்தச்சருக்கத்தில் 220 – ஆம்
பாடலுக்குள் முன்பு அச்சிட்டபிரதிகளில் மாத்திரம் உள்ளன. ஏட்டுப்பிரதிகளுள்
எதிலுமில்லை. இவை முறையே இலக்கமிட்டு இந்த [] இருதலைப்பகரத்தினுள்
பொழிப்புரை முதலியவற்றோடு காட்டப்படும். ஏட்டுப்பிரதியிலுள்ளனவே
இந்தப்பதிப்பிற் பிரதானமாகக் கொள்ளப்பட்டன.      

  + இதுமுதல் 220 – வரையிலுமுள்ள பாடல்கள் இங்குக்காட்டிய முறைப்படியே
ஏட்டுப்பிரதிகளிலெல்லாம் உள்ளன: அச்சிட்ட சங்கப்பிரதியிலும் உள்ளன. இவற்றுள்
212, 213 – இலக்கங்களிலுள்ள இரண்டுபாடல்கள்தவிர, மற்றவை மற்றை அச்சிட்ட

கேசவன் புரிவு எலாம் கிரீசன் என்னும் அத்
தேசவன் தெளிவுறச் செப்பிவிட்ட பின்,
வாசவன் புதல்வனை, ‘வருக!’ என்றலும்,
பாச அன்புடன் அவன் பணிந்து, போற்றினான்.210.-ஸ்ரீக்ருஷ்ணன் தான் செய்ததையெல்லாம் சொல்லியபின், சிவ
பெருமான் அருச்சுனனை வரவேற்க, அக்கடவுளை அருச்சுனன்
பணிதல்.

கேசவன் – கேசியென்னும் அசுரனைக் கொன்றவனாகிய க்ருஷ்ணன்,
புரிவு எலாம் – (தான்) செய்த செயல்களையெல்லாம், கிரீசன் என்னும் அ
தேசவன்-கிரீசனென்று திருநாமம்பூண்ட ஒளியுள்ள அந்தக்கடவுள், தெளிவுஉற-
நன்குதெளியும்படி, (செவ்வனே), செப்பிவிட்ட பின்-சொல்லி முடித்தபின்பு,-
(அச்சிவபெருமான்),-வாசவன்புதல்வனை – இந்திரனுக்குப் புதல்வனான
அருச்சுனனைப்பார்த்து, வருக என்றலும் – ‘வருவாயாக’ என்று வரவேற்றலும்,-
அவன்-அந்த அருச்சுனன், பாசம்- மனத்தைப் பிணித்தலையுடைய, அன்புடன்-
அன்போடு [பக்தியோடு], பணிந்து (அந்தச் சிவபெருமானை) வணங்கி,
போற்றினான்- வாழ்த்தினான்; (எ-று.)

     கிரீசன் என்ற வடசொல் – மலையிலிருக்குந் தலைவனென்று
காரணப்பொருள்படும். அன்பு பற்றுதலை யுண்டாக்குதலால், ‘பாசவன்பு’ என்றார்.

      (2) புரநகையாலெரிபுராரிதன்முன
நரனொடுநாரணனணுகியன்பினாற்
சரணபங்கயமுறத்தாழ்ந்துபன்முறை
கரனுறமுகிழ்த்திகழறன்மேயினார்.

     (இ-ள்.) திரிபுரத்தை சிரிப்பினால் எரித்திட்ட சிவபிரானது முன்னிலையில்
[சந்நிதாநத்தில்] அருச்சுனனும் கிருஷ்ணனும் சேர்ந்து, அன்பினால் (அப்பிரானது)
திருவடித் தாமரைகளில் நன்றாக நமஸ்கரித்து, கைகளைச் செவ்வையாகக்
கூப்பிக்கொண்டு, அநேகமுறை இவ்வார்த்தையைச் சொல்லத்தொடங்கினார்கள்;
(எ-று.) – அதனை மேற்காண்க. இதன்பின் “பொங்கரா” (212) என்றும்
“விண்ணிடைத்திரிபுரம்” (213) என்றும் தொடங்குகிற பாடல்கள் முன்பு
அச்சிட்டுள்ளபிரதிகளில் உள்ளன. அவற்றை, (3) (4) பாடல்களாகக்கொள்க

கண்ணன்மேல் அணி மலர் அனைத்தும் காய் கனல்
வண்ணன்மேல் காண்டலும், மனம் களிப்புறா,
‘எண்ணின், மேல் இரண்டு என இலது’ என்று, அவ் விறல்
அண்ணல் மேனியும் புளகு அரும்பினான்அரோ.211.-தான்முன்பு கண்ணன்மேல் அணிந்த மலர்களைச் சிவபிரான்மீது
காணலும் அருச்சுனன் இருவர்க்கும் பேதமில்லையென்று
உடற்புளகமுண்டாகப்பெறுதல்.

கண்ணன்மேல் அணி – (தான் முன்பு) க்ருஷ்ணன் மேற் சாத்தின,
மலர் அனைத்துஉம் – மலர்களையெல்லாம், காய் கனல் வண்ணன் மேல் –
எரிக்குந்தன்மையுள்ள அக்கினிபோன்ற செந்நிறமுடைய சிவபெருமான்மீது,
காண்டலும்-கண்டவுடனே,- அ விறல் அண்ணல்-வெற்றி பொருந்திய பெருமையிற்
சிறந்த அந்த அருச்சுனன், மனம் களிப்பு உறா – மனமகிழ்ச்சியடைந்து, ‘மேல்
எண்ணில் – மேலே [நன்றாக] ஆலோசிக்குமிடத்து, இரண்டு – இரண்டு பொருள்
(உள்ளன), என-என்று சொல்லுமாறு, இலது-இல்லை, ‘என்று – என்றுகருதி,
மேனிஉம் – தன்னுடல்முழுதும், (அப்பெருங்களிப்பினால்), புளகு அரும்பினான்-
மயிர்க்கூச்செறியப் பெற்றான் ; (எ-று.)

     உலகத்துப் பரம்பொருள்ஒன்றே பலபடியாகத் தோன்றுவதென்று
உணர்ந்தனனென்றவாறு. இங்குச்சிவனது மகிமையைக் கூறுமிடமாதலால், அதற்கு
ஏற்ப, இக்கவிஇங்ஙனம் எழுதின ரென்பர். சிவனை யருச்சிக்கவிரும்பிய அருச்சுனன்
கண்ணன்  கட்டளைப்படி அப்பிரானது திருவடிகளிலே யிட்ட மலர்கள் பின்பு
பரமசிவனது முடியின்மேல் காணப்பட, அதுகண்டு பார்த்தன்
பரதத்துவமுணர்ந்தனனென இவ்வரலாறு வைஷ்ணவசம்பிரதாயத்திற் சிறிது
வேறுபாடாக் கூறப்படும்; “தீர்த்தனுலகளந்த சேவடிமேற் பூந்தாமஞ், சேர்த்தி
யவையே சிவன்முடிமேல் தான் கண்டு, பார்த்தன் தெளிந்தொழிந்த பைந்துழாயான்
பெருமை, பேர்த்து பார்த்தன் தெளிந்தொழிந்த பைந்துழாயான் பெருமை,
போர்த்துமொருவராற் பேசக் கிடந்ததே” என்ற திருவாய்மொழியைக் காண்க

பொங்கு அரா வெயில் மணிப் பூணும், பேணும் நீற்று
அங்கராகமும், உவந்து அணியும் மேனியாய்!
சங்கரா! மேரு வெஞ் சாபம் வாங்கிய
செங் கரா! சிவ சிவ! தேவ தேவனே!212.-நான்குகவிகள் – அருச்சுனன் செய்யும் சிவஸ்தோத்திரம்.

பொங்கு-விளங்குகிற, அரா-நாகங்களாகிய, வெயில் மணி
பூண்உம் -சூரியகாந்திபோலச் செந்நிறமாய்விளங்குகிற மாணிக்கத்தையுடைய
ஆபரணங்களையும், பேணும் – விரும்பப்படுகிற, நீறு – விபூதியாகிய,
அங்கராகம்உம்- உடற்பூச்சையும், உவந்து அணியும்- மகிழ்ச்சியோடு தரித்த,
மேனியாய்-திருமேனியையுடையவனே! சங்கரா-! மேரு – மேருமலையாகிய, வெம்
சாபம் -கொடிய வில்லை, வாங்கிய- வளைத்த, செம் கரா-சிவந்த
திருக்கையையுடையவனே!சிவ சிவ-!  தேவ தேவனே-எல்லாத்தேவர்களுக்கும்
ஆதிதேவனாக வுள்ளவனே

விண்ணிடைத் திரிபுரம் வெந்து நீறு எழப்
பண்ணுடைச் செந் தழல் பரப்பும் மூரலாய்!
எண்ணுடைக் காமனை எரித்த பேர் அழல்
கண்ணுடைக் கடவுளே! கால காலனே!

விண்ணிடை – அந்தரத்திலே, திரி புரம் – மூன்று பட்டணம்,
வெந்து-எரிபட்டு, நீறு எழ-சாம்பலாய் மேலெழும்படி, பண் உடை –
செய்யுந்தன்மையையுடைய, செம் தழல் பரப்பும் மூரலாய் – சிவந்த நெருப்பை
வெளிவிட்ட புன்சிரிப்பையுடையவனே! எண் உடை – (யாவர்) மனத்தையும்
(இடமாக) உடைய, காமனை – மன்மதனை, எரித்த – கொளுத்திய, பேர் அழல்
கண்-பெரிய தீயின் வடிவமான நெற்றிக்கண்ணை, உடை – உடைய, கடவுளே-!
கால காலனே-யமனுக்கு யமனானவனே!  (எ – று.)

     (5) தருவதுமுயிரெலாங்காக்குந்தன்மையு
முருவறவொழித்தலுமுன்றனாடலே
கருவராதொழிந்தவர்கருத்திற்கண்டுதே
றொருவனேயெம்மனோர்க்குரைக்கற்பாலையோ

     (இ-ள்.) எல்லாச்சீவன்களையும் படைப்பதும், பாதுகாக்கிற இயல்பும்,
வடிவமில்லாதபடி [அடியோடு] அழித்துவிடுதலும், உனது திருவிளையாட்டேயாம்;
(மீண்டும்) கருப்பத்தில் வராதபடி பிறப்புத்துன்பத்தை நீங்கின முக்தர்கள்
மனத்திலேதரிசித்து [ஞானத்தினாலறிந்து] தெளியும்படியான ஏகமூர்த்தியே!
எங்களைப்போன்றவர்களுக்கு (நீ) புகழ்ந்துசொல்லுந் தரமுடையையோ?
[அல்லையென்றபடி]; (எ – று.)

     (6) நித்தனேநிமலனேநிகழ்நின்னாமனே
யத்தனேயடியவர்க்கெளியவண்ணலே
பித்தனேயாதியந்தங்கள்பேசொணா
முத்தனேயுயிர்தொறுமுலாயமுன்பனே.

     (இ-ள்.) முக்காலத்திலும் ஒரேவிதமாகவுள்ளவனே! ஆணவம் கன்மம்
மாயைஎன்னும் மும்மலங்களின் தொடர்ச்சியில்லாதவனே! விளங்குகிற நிர்நாமனாக
வுள்ளவனே!  தலைவனே! அடியவர்க்கு எளிய அண்ணலே!  பித்துடையவனே!
முதலும் இறுதியும் சொல்லமுடியாத முத்தியுலகத்துக்கு உரியவனே!
எல்லாவுயிர்களிடத்தும் பொருந்திய முதல்வனே ! (எ – று.)

     நின்னாமன் – நிர்நாமன் என்ற வடசொல் திரிந்தது; அதற்கு –
பேரில்லாதவனென்று பொருள். வியவகாரநிலையில் கடவுளுக்கு அநந்தமான
திருநாமங்கள் உளவாயினும், தத்துவநிலையில் ஏற்றதொரு  திருநாமமும் இல்லை
யென்பதுகொள்கை; “ஊரும் பேருமுருவு மில்லான்” என்றதுங்காண்க. வில்லாலும்
கல்லாலும் பிரம்பாலும் செருப்பாலும் அடியும் உதையும் படுதல் மண்சுமத்தல்
விறகுவிற்றல் முதலிய இழிதொழில்களை அடியார்பொருட்டுச் செய்ததனால், கடவுள்
அடியவர்க்கு எளியவனாதல் அறிக; “அடியார்க்கெளியன் சிற்றம்பலவன்” என
நடராசப்பெருமான் தன்னைத் தானே குறித்தவாறுங்காண்க. அப்பிரானது
சௌலப்பியத்தோடு பரத்துவமுந்தோன்ற, ‘அடியவர்க்கு எளிய அண்ணலே’
என்றார்.பித்து – ஆசைமிகுதி ; அதனை அடியார்களிடத்தும்,
அம்பிகையினிடத்தும் உடைமையால், பித்தனெனப்பெயர்; தோலுடுத்தல்,
ஆடையின்றிநிற்றல், எலும்பணிதல், பெண்சுமத்தல், கூத்தாடுதல் முதலியவற்றால்
பித்தகுணமுள்ளவன்போலக் காணப்படுபவ னென்றுமாம்.

     (7) என்றுபற்பலவுரையெடுத்துக்கூறியே
நின்றுளநெக்குநெக்குருகிநேயமோ
டொன்றுகண்ணருவிகளுகுத்தனோக்கியே
யன்றுமாபதியவர்க்கருள்செய்தானரோ

     (இ-ள்.) என்று இவ்விதமாகப் பல பல துதிமொழிகளை எடுத்துச்சொல்லி,
(கண்ணனும் அருச்சுனனும் அருகில்) நின்று கொண்டு, மனம் மிகநெகிழ்ந்து
கரைந்து, பக்தியுடனே பொருந்தின ஆனந்தக்கண்ணீர்ப் பெருக்குகளைச்
சொரிதலைப் பார்த்து, அப்பொழுது, பார்வதிகொழுநனான பரமசிவன்
அவர்களுக்குப்பிரசந்நனானான்;(எ-று.)- கட்புலனாகத்
தரிசனந்தந்தருளினனென்பதாம்.

     * (8) கண்ணன்மேலணிமலரனைத்துங்காயெரி
வண்ணன்மேற்காண்டலுமகிழ்ந்துமேதினி
யுண்ணுமாதவன்சிவனுருவமென்றுணர்ந்
தண்ணலுமுடல்புளகரும்பினானரோ.

     (இ-ள்.) (அங்ஙனம் பிரதியக்ஷமானபொழுது முன்பு தான்)
கிருஷ்ணன்மேற்சாத்தின மலர்களையெல்லாம் சொலிக்கிற அக்கினி போன்ற
செந்நிறமுடைய சிவபிரான்மேல் பார்த்தவளவிலே, சிறந்தவீரனான அருச்சுனனும்
மகிழ்ச்சிகொண்டு, உலகத்தை உட் கொள்ளுகிற திருமால் சிவனது வடிவமென்று
அறிந்து உடம்பில் மயிர்ச்சிலிர்ப்பு உண்டாகப்பெற்றான்; (எ – று.)

     (9) இமையநல்வரையினிதீன்றகன்னிகை
யுமையவள்கணவனெவ்வுயிர்க்குநாயகன்
சமைவுறத்துதித்திடுமடியர்தம்முக
மமைவுறுதிருவுளத்தருளினோக்கியே.

     (இ-ள்.) சிறந்த இமயமலை இனிமையாகப் பெற்ற இளமகளாகிய
உமாதேவிக்குநாயகனும், எல்லாவுயிர்களுக்குந் தலைவனுமான சிவபிரான்,-
பொருத்தமாகத்தோத்திரஞ்செய்கிற (தனது) பக்தர்களாகிய கிருஷ்ணார்ச்சுனரது
முகங்களைச்சாந்தமான (தன்) மனத்தில் மிக்க கருணையோடுபார்த்து,-
(எ – று.)- வேண்டுவது என்என’ என்று மேற்கவியோடு தொடரும்.

     தக்ஷப்பிரஜாபதியினிடம் மகளாகப் பிறந்து தாக்ஷாயணி யென்றும்
சதியென்றும்பெயர்கூறச் சிறந்து வீற்றிருந்த அம்பிகை, பின்னொருகாலத்தில்
சிவாபராதியானஅம்முனிவனதுசம்பந்தமான பேரோடும் உடம்போடும் உய்ந்திருக்க
மனமியலாமல்,சிவபிரான் கட்டளையிட்டபடியே, அவ்வுடம்பை யொழித்துத் தன்னை
மகளாகப்பெறும்பொருட்டுப் பலநாளாகத்தவம்புரிந்துவருகிற மலையரசனாகிய
இமவானினது எண்ணம் ஈடேறும்படி தான் ஒரு அழகிய சிறு
பெண்குழந்தைவடிவமாய் அவனெதிரில் அம்மலையில் ஒரு தடாகத்தில்
தாமரைமலரொன்றின்மேல் தங்கியிருக்க, அப்பர்வதராசன் அக்குழந்தையைக்கண்டு
மகிழ்ந்து எடுத்துச்சென்று மனைவியாகிய மேனையினிடம் கொடுத்து வளர்த்துவர,
அப்பார்வதியைப் பரமசிவன் திருமணஞ்செய்துகொண்டன னென்பது கதை.

     * (10) வேண்டுவதென்னெனவிண்டுதாழ்ந்தெழீஇப்
பூண்டருள்கருணையம்புனிதவிங்கிவ
னாண்டருள்படைகளாலவுணர்க்காய்ந்தன
னீண்டுநல்குதிவிறலெய்தும் வண்ணமே.

     (இ – ள்.) ‘(நீங்கள்) விரும்புவது யாது?’ என்றுவினாவ, விஷ்ணுவாகிய
கண்ணன், நமஸ்கரித்து எழுந்து, ஆபரணமாகக் கொண்டருளிய திருவருளையுடைய
அழகிய பரிசுத்தமூர்த்தியே! இங்குள்ள இவ்வருச்சுனன் (நீ) அப்பொழுது
கொடுத்தருளிய (பாசுபதம் முதலிய) ஆயுதங்களால் (நிவாதகவசர் முதலிய)
அசுரர்களை அழித்திட்டான்; இப்பொழுது, (சயத்திரதனைக் கொன்று)
வெற்றியடையும்படி (இவனுக்குப் படைக்கலம்) கொடுத்தருள்வாய்; (எ-று.)-
இப்பாட்டில் ‘விண்டு தாழ்ந்தெழீஇ’ என்றது, அடுத்தபாட்டில், ‘என்று
சொற்றனன்’என்பதனோடு முடியும்.

     * (11) தானவர்ப் பொருபடை கொண்டு தாரணி
மானவர்ப் பொருவது வழக்கன் றாதலாற்
கூனல்விற் கணையொடு குறைவு றாததோர்
தூநிறத் தடமருள் கென்று சொற்றனன்.

     (இ-ள்.) அசுரர்களைப்போர்செய்து அழித்த அவ்வாயுதங்களால்
பூமியிலுள்ளமனிதர்களைப் போர்செய்து அழிப்பது, முறைமையன்று: ஆதலால்,
(மனிதரை அழித்தற்கு வேறு) வளைந்த சிறந்த வில்லும் அம்பும் குறைவுபடாததான
ஒரு பரிசுத்தமான தன்மையையுடைய தடாகத்தை அளித்தருள்வாய்’ என்று
கூறினார்;(எ – று.)-முன்பு ஒருகாலத்தில் பரமசிவன் தேவர்க்குப் பகைவரானார்
யாவரையும்பொருது அழித்து அவ்வில்லையும் அம்பையும் அமிருதசரசில்
வைத்திட்டனனென்பது, வரலாறு.]         

இந்தப்பாடல் முன்பு அச்சிட்டபிரதிகளில் சிறிது பாட பேதத்துடன்
காணப்படுகிறது :  அது (8) ஆவது பாடலாக மேலே காட்டப்படும்.

* இந்தப்பாடல் சிறிதுபாடபேதத்துடன் ஏட்டுப்பிரதிகளில் 211-ஆம் பாடலாக
உள்ளது.

கை உறு சிலையுடன் கான வேடன் என்று
ஐயுற அருகு வந்து அணுகி, மெய்யுடன்
மெய் உற அமர் புரி விநோதம், நாள் தொறும்,
மை உறு கண்டனே! மறப்பது இல்லையே

ஐயுற – (உனது பாரக்கிரமத்தைக் கண்டு யான் திகைத்துச்)
சந்தேகிக்குமாறு, உடன் – உடனே [விரைவாக], கை உறு சிலையுடன் –
கையிலேபொருந்திய வில்லுடனே, கானம் வேடன் என்று – காட்டிலேதிரிகின்ற
வேடனுருவத்தைக்கொண்டு, வந்து-, அணுகி- (என்னைச்) சமீபித்து, என்னுடன்-
என்னுடனே, மெய்உற – உண்மையாக, அமர் புரி – போர்புரிந்த, வினோத –
வினோதச்செயலையுடையவனே! மைஉறு கண்டனே-(நஞ்சுண்டதனாற்) கறுத்த
கண்டத்தையுடையவனே! நாள்தொறுஉம் – ஒருநாளும், (நான் உன்னை,),
மறப்பதுஇல்லை

இச்செய்யுள்கள் சிறிது பாடபேதத்துடன் ஏட்டுப்பிரதிகளில் 217, 218– ஆம்
பாடல்களாக உள்ளன.

    + குறிப்பு:- இது முதல் 220-வரையிலுள்ள பாடல்கள் முன்பு ஏட்டுப்
பிரதிகளிலும் சங்கப்பதிப்பிலும் மாத்திரமே கண்டவை; அச்சிட்டுள்ள
பிரதிகளில்இல்லை.

உமையவள் கணவனே! உகாந்த காலனே!
இமைய வில் வீரனே!’ என்று கொண்டு, இவன்
அமைவு உறத் துதித்தலின், அவனும் மற்று இவன்
சமைவு கண்டு, ஐயனோடு உவகை சாற்றினான்.

உமையவள் கணவனே-! யுகாந்தகாலனே-யுகாந்த காலத்துக்கு
உரியவனே! [சங்காரமூர்த்தியே!] இமையம் வில்வீரனே – மேருமலையை
வில்லாகக்கொண்ட வீரனே ! என்று-, கொண்டு – (வாயினாற்) சொல்லிக்கொண்டு,
இவன் – இந்தஅருச்சுனன், அமைஉற – மனவமைதிதோன்ற
[மனவொருமைப்பாட்டோடு என்றபடி], துதித்தலின் – தோத்திரஞ் செய்ததனால்,
அவன்உம் – அந்தச்சிவபெருமானும், மற்று – பின்பு, இவன் – இந்த
அருச்சுனனுடைய, சமைவு கண்டு – சாந்தமான மனநிலைமையைக் கண்டு,
ஐயனோடு – தலைவனான ஸ்ரீக்ருஷ்ணனோடு, உவகை-மகிழ்ச்சியோடு, சாற்றினான்
– சொல்லலானான்; (எ – று.)- சிவபெருமான் கூறுவதை, அடுத்தகவியிற் காண்க.

     மேரு மந்திரம் இமயம் முதலிய மலைகளை அபேதமாகக்கூறுதல் கவி சமயம்;
“இமையவில்வாங்கிய வீர்ஞ்சடையந்தணன்” என்ற கலித்தொகையையுங் காண்க.
இனி, இமையவில் – இமயமலையில் தோன்றிய மூங்கிலை வில்லாகவுடைய என்று
உரைப்பாரு முளர்.

ஆற்றினை, துயர்; மயல் அனைத்தும் மெய் உறத்
தேற்றினை; சிந்தையை, தெளிந்த வாய்மையால்
மாற்றினை; மும் முறைப் பிறப்பும் வந்து நின்
கூற்றினை அடைதலால், பிறவி கொள்ளுமே?’216.-சிவபெருமான் க்ருஷ்ணனைக் கொண்டாடுதல்.

துயர் மயல் அனைத்துஉம் – (இவனுக்குஉள்ள) துயரினாலாகிய
[புத்திரசோகத்தினாலாகிய] மயக்கத்தையெல்லாம், ஆற்றினை – (இப்போதே)
தணிப்பித்தாய்: தெளிந்த வாய்மையால் – தெளிவாகவுள்ள (உன்னுடைய)
வாய்ச்சொற்களால் [கீதையையுபதேசித்ததனால்], சிந்தையை- (இவன்) மனத்தை,
மெய்உற – உண்மை நன்குபட, தேற்றினை- தெளிவுறச்செய்தாய்: (இவ்வகையினால்),
மும்முறை பிறப்புஉம் வந்து-மூன்றுமுறைப் பிறவியிலும் (உன்னுடன்) வந்து, நின்
கூற்றினை-உன்னுடைய அமிசத்தை, அடைதலால்- அடைந்திருத்தலினால்,(இவன்),
பிறவிகொள்ளும்ஏ- பிறவியையடைவனோ? மாற்றினை – (நீ இவன்
பிறவியையடையாதவாறு) மாற்றிவிட்டாய்; (எ -று.)-பி-ம்: துயரமுமறுத்து,
மெய்ம்மையான்.

மும்முறைப்பிறப்பில் அருச்சுனன் திருமாலோடுகூடவந்ததனை “நரனும்
நாரணனுமானோம்,” “பின்னொருபிறப்பின் யாமே யிராமலக்குமப் பேர்பெற்றோம்,
இந்நெடும்பிறப்பில்நீயும் யானுமாயீண்டு நின்றோம்” என்று முதற்போர்ச்சருக்கத்து
வந்ததனாலு முணர்க. கொள்ளுமே, ஏகாரம் – வினாவகையால், எதிர்மறைகுறித்தது.
உன்னுடைய அமிசம் இவனுக்கு அமைந்திருத்தலினால், இனி
இவனுக்குப்பிறப்பில்லையென்றானென்க.

வேண்டுவது என்கொல் மற்று?’ என்ன, வீரனும்,
‘பூண்டது ஓர் பறை அறைந்து அன்றிப் போகலேன்;
ஆண்டு, அருள் படைகளால் அவுணர்க் காய்ந்தனன்;
ஈண்டு அருளுதி, விறல் எய்தும் வண்ணமே.217.-‘வேண்டுவது யாது?’ என்று சிவபெருமான் கேட்க. அருச்சுனன்
பகையறுக்கும்படையை வேண்டுதல்.

மற்று – இனி, வேண்டுவது-விரும்புவது, என்கொல்- யாது? என்ன-
என்று வினாவ,-வீரன்உம் – வீரனாகிய அருச்சுனனும், பூண்டது – (யான்)
மேற்கொண்ட போர்த்தொழிலை, பறை அறைந்து அன்றி – (வென்று)
வெற்றிப்பறையை எறிந்தல்லாமல், போகலேன்- இதனினின்று நீங்கேன்: ஆண்டு –
(நான் தவம்புரிந்த) அக்காலத்து, அருள் – ( ) கருணையோடுதந்த, படைகளால் –
ஆயுதங்களினால், அவுணர் – (நிவாதகவசர்முதலிய) அசுரர்களை, காய்ந்தனன்-
கொன்றேன்; ஈண்டு-இப்போது, விறல் எய்தும் வண்ணம் – (நான்)
வெற்றியையடையும் வகையை, நல்கு – அருள்புரிவாய் ; (எ – று.)-என்று தான்
வேண்டுவதை அருச்சுனன் சிவபெருமானிடம் கூறினான் என்க. வீரனும் என்பதற்கு
– ஸ்ரீக்ருஷ்ணனும் என்பாரு முளர். பி – ம்: பூண்டதோர்பகையறுத்தன்றி.
விறலெண்ணும்.

தானவர்ப் பொரு படை கொண்டு, தாரணி
மானவர்ப் பொருவது வழங்கும் அல்லவால்;
கூனல் வில் கணைகளும் குறைவு உறாதது ஓர்
தூ நிழல் பொய்கையும் கொடுத்தி, தோன்றலே!’218.-ஸ்ரீக்ருஷ்ணன் சிவபெருமானை நோக்கிக் கூறுதல்.

நான்குகவிகள் – ஒருதொடர்.

     (இ – ள்.) ‘தோன்றலே – விளங்குபவனே! தானவர் பொரும் படைகொண்டு-
அசுரரைக்கொல்லுதற்கு உரியபடையைக்கொண்டு, தாரணி- பூமியிலேயுள்ள,
மாணவர்-மனிதரை, பொருவது – போர் செய்வது, வழக்குஉம் அல்ல –
முறைமையுமன்று: ஆல் – ஆதலால், கூனல் வில் – வளைவுபொருந்திய
வில்லிற்பூட்டுதற்குஉரிய, கணைகள்உம்-அம்புகளும், குறைவு உறாதது ஓர்
தூநிழல்பொய்கை உம்-(எடுக்க எடுக்க அந்தக்கணைகள்) குறைதலில்லாத ஒப்பற்ற
பரிசுத்தமான சாயை பொருந்துதலுடைய பொய்கையையும், கொடுத்தி- கொடுப்பாய்,’
(எ – று.)- “என்றலும்” என மேலே தொடரும்.

தெளிவான நீரில் சாயைநன்கு விழுமாதலால், ‘தூ நிழற் பொய்கை’ என்றது.
பி-ம் :தோழநீ.   

இச்செய்யுள்கள் சிறிது பாடபேதத்துடன் (10, 11)-ஆம் பாடல்களாக 211-
ஆம் பக்கத்துக் காட்டப்பட்டுள்ளன.

என்றலும் ஈசன் நகைத்து உரைசெய்தனன்: ‘யான்
என நீ என வேறு
அன்று; இவை யாவும் அளித்திடுதற்கு உனை
அல்லது வல்லவர் யார்?
நின்றது ஒர் தூணிடை வந்தனை; யானைமுன்
நின்றனை; கஞ்சனையும்
கொன்றனை; மன் அவையூடு உரிய, பல கூறை
கொடுத்தனையே.219.-இரண்டுகவிகள்-ஸ்ரீக்ருஷ்ணனைச் சிவபெருமான் புகழ்தலைக்கூறும்.

என்றலும்-என்று (ஸ்ரீக்ருஷ்ணன்) கூறியவுடனே,- ஈசன்-
சிவபெருமான், நகைத்து – சிரித்து, உரைசெய்தனன் – (பின் வருமாறு)
சொல்லுபவனானான்; யான் என – யானென்றும், நீ என – நீ என்றும், வேறு
அன்று- வேறு இல்லை: இவையாஉம்-இப்போது வேண்டிய வில்முதலிய
எல்லாவற்றையும்,அளித்திடுதற்கு – கொடுத்திடுதற்கு, உனை அல்லது –
உன்னையல்லாமல், யார்வல்லவர்-? நின்றது ஒர் தூணிடை – (எதிரிலே)
நின்றதாகிய ஒருதூணினிடத்திலே,வந்தனை – (இரணியனைச் சங்கரிக்க)
நரசிங்கரூபியாகத்திருவவதரித்தாய்: யானைமுன் நின்றனை-(‘ஆதிமூலமே!’ என்று
கூவின) யானைக்குமுன்னே (அதனைப்பாதுகாக்குமாறு) வந்து நின்றாய் :
கஞ்சனை கொன்றனை – கஞ்சனைக் கொன்றாய்:மன் அவையூடு – இராசசபையிலே,
இரிய-(திரௌபதியின் துயரம்) நீங்க, பல கூறைகொடுத்தனை – பல ஆடைகளைச்
சுரக்குமாறு அருள்புரிந்தாய்;

     இதுமுதற் பதினான்கு கவிகள் – இச்சருக்கத்தின் முதற்கவி போன்ற
அறுசீராசிரியவிருத்தங்கள்.   

‘முன் உரு ஆயினை; நின் திரு நாபியின் முளரியின்
வாழ் முனிவன்
தன் உரு ஆகி, இருந்து படைத்தனை, பல சகத்
அண்டமும் நீ;
நின் உரு ஆகி அளித்திடுகின்றனை, நித்தவிபூதியினால்;
என் உரு ஆகி அழிக்கவும் நின்றனை, ஏதம்
இல் மாதவனே!’

எம்பெருமான்-எமது பெருமானே! முன்-முதலில், உருஆயினை –
(உலகத்தையெல்லாம் வெளிப்படுத்தத் திருவுளங் கொண்டு அவ்யக்த ஸ்வரூபியாகிய
நீ) உருவமுள்ளவனாகி, நின் திருநாபியின் – உன்னுடைய திருவுந்தியிலே,
முளரியின்வாழ் முனிவன்தன் – தாமரையில் வாழ்பவனாகிய இருடியின்
[நான்முகனுடைய],உருஆகி இருந்து – உருவத்தையுடையவனாயிருந்து, பல சகத்
அண்டம்உம் -பலலோகங்களையும் (தன்னிடத்துக்) கொண்ட
அண்டங்களையெல்லாம், நீ-,படைத்தனை-சிருஷ்டித்தாய்: நித்தவிபூதியினால்
நித்தியவிபூதியாகியஸ்ரீவைகுண்டத்தில், நின் உரு ஆகி-உன்னுடைய
உருவத்தையேகொண்டு[விஷ்ணுரூபத்துடனிருந்து] அளித்திடுகின்றனை –
பாதுகாத்தல் தொழிலைச்செய்கின்றாய்: என் உருஆகி – என்னுடைய உருவத்தை
[சிவவடிவத்தை] அடைந்தவனாகி, அழிக்க உம் நின்றனை
– அழிப்பதற்கும் நின்றருளினாய்; என – என்று (புகழ்ந்து) –   (எ-று.)-
“ஆயிடைநின்ற கிரீடியை மூழ்கென” என மேற்கவியோடு இயையும்.

     எம்பெருமானுடைய ஸ்ரீவைகுண்டலோகம் என்றும் அழியாது நித்தியமாக
இருப்பதாதலால், நித்தியவிபூதியெனப்படும் : அதை யொழிந்த இந்த
உலகங்களெல்லாம் அப்பெருமானுடைய விளையாடலுக்கு இடனாயிருத்தலால்,
லீலாவிபூதி யெனப்படும் என்ப.   

ஆயிடை நின்ற கிரீடியை, முக்கணன், அங்கு
ஒரு பொய்கையிலே,
‘போய் இடை மூழ்கு’ என, அப் புனலூடு ஒர்
புயங்கம் எழுந்தது; அதன்
வாயிடை வந்தனன், மாண் உருவாய் ஒரு மா
முனி; அம் முனி அச்
சேய் இடை நீரில் எடுத்தனன், மற்று ஒரு
சிலையுடன் வாளியுமே.221.-அருச்சுனனை அங்கொருபொய்கையில் ‘நீராடுக’ என்ன, அப்
பொய்கையிலே ஒருநாகத்தின் வாயினின்று வில் அம்புகளுடன்
ஒருமுனிவன் தோன்றுதல்.

 (பிறகு), முக்கணன் – மூன்றுதிருக்கண்களையுடைய சிவபிரான்,
ஆயிடை நின்ற கிரீடியை – அவ்விடத்தில் நின்ற அருச்சுனனை (ப்பார்த்து),
அங்குஒரு பொய்கையில்போய் இடை மூழ்கு என – அவ்விடத்திலுள்ளதொரு
சரசிலேசென்று அதனில் நீராடுவாய் என்று சொல்ல,- (அங்ஙனம் அருச்சுனன்
ஸ்நாநஞ்செய்த வளவிலே), அ புனலூடு – அந்தத்தடாகத்தின் நீரினின்று, ஓர்
புயங்கம் எழுந்தது – ஒரு நாகம் மேல்வந்தது; அதன் வாயிடை –  அதனுடைய
வாயிலே, மாண் உரு ஆய் – பிரமசாரிவடிவமாய், ஒரு மா முனி – ஒரு சிறந்த
முனிவன், வந்தனன் – தோன்றினான்; அ முனி – அந்தமுனிவன், அ சேய் இடை
நீரில் – நெடுங்தூரம்பரவிய இடத்தையுடைய அந்நீரினின்று, மற்று ஒரு சிலையுடன்
வாளிஉம் – வேறொரு வில்லையும் அம்பையும், எடுத்தனன்-:  (எ – று.)

     சிந்தாமணியுரையில் நச்சினார்க்கினியர் ‘பொய்கை-மானிடராக்காத நீர்நிலை’
என்றதை இங்கே யறிக. மாண் உரு ஆய் – (பிரமதேஜசு விளங்குகிற) சிறந்த
வடிவமாய் என்றுமாம். முன் அருச்சுனன் தவநிலைச்சருக்கத்தில் “ஐயனுமம்மையோ
டருள்புரிந்து பின், வெய்ய பொற்றூணியும் வில்லுமந்த்ரமுந், துய்ய பாசுபத மெய்த்
தொடையு முட்டியும், ஒய்யென நிலையுடனுதவினானரோ” என்றதை நோக்கி
‘மற்றொருசிலையுடன்வாளியும்’என்றார்.  

முப்புரம் நீறு எழு நாளின் இயற்றிய முட்டியும்,
நல் நிலையும்,
அப் புரசூதனன் ஏவலின், அந்தணன்
அமரர்பிரான் மதலைக்கு
ஒப்புறவோடு பயிற்றி, இதம் கொடு உருத்திர
மா மறையும்
செப்பினனால்; அவை பெற்றனன், வென்று
செயத்திரதன்-தெறுவான்.222.-வந்தமுனிவன் முட்டிநிலைகளைப்பயிற்றி
உருத்திரமறை யுபதேசிக்க, அருச்சுனன் பெற்றுக்கொள்ளுதல்.

மு புரம்- திரிபுரம், நீறு எழும் நாளின் – எரிந்து சாம்பரான
காலத்தில், இயற்றிய – (சிவபிரான்) கொண்டருளிய, முட்டிஉம் – கைப்பிடியையும்,
நல் நிலைஉம் – நல்ல நிற்கும்விதத்தையும், அ புர-சூதனன் ஏவலின்-திரிபுரமழித்த
அந்தப்பரமசிவனது கட்டளையால், அந்தணன்-அம்முனிவன், அமரர் பிரான்
மதலைக்கு-தேவராசனான இந்திரனது புத்தினாகிய அருச்சுனனுக்கு, ஒப்புறவோடு –
தகுதியோடு, பயிற்றி – கற்பித்துக்கொடுத்து, இதம்பொடு – (அவனிடத்து)
அன்புகொண்டு, உருத்திர மா மறைஉம் – உருத்திரமென்னுஞ்
சிறந்தமந்திரத்தையும், செப்பினன்-உபதேசித்தான்; அவை – அவற்றை, (அருச்சுனன்),
செயத்திரதன் – சயத்திரதனை; வென்று-சயித்து, தெறுவான் – அழிக்கும்பொருட்டு,
பெற்றதனன் – பெற்றுக்கொண்டான்; (எ-று).

     ‘ஒப்புரவோடு’ என்ற பாடத்துக்கு – உபகாரமாக என்க. ‘இதம் கொடு’
என்பதற்கு நன்மைகளைக் கொடுக்கிற என்றும் உரைக்கலாம்.
வென்றுதெறுவான்=தெற்று வெல்வான் என விகுதி பிரித்துக் கூட்டினுமாம்

யாது ஒரு போது நினைத்தனை, அவ் வழி
எய்தும், உனக்கு, இவை’ என்று
ஓதி, அநேக வரங்கள் கொடுத்த பின், உமை
ஒரு கூறு உடையோன்,
‘பூதல மாது இடர் தீர அருஞ் சமர் புரி தொழில்
முற்றிய பின்,
சீதர! நின் பதம் மேவுக!’ என்று, அருள்செய்து
விடுத்தனனே.223.-பிறகு வேண்டிபோது இவையெய்து மென்றுகூறிச் சிவபெருமான்
திருமாலைநோக்கிப் பூமிபாரத்தைத் தீர்த்துச்செல்க எனல்.

யாது ஒரு போது-எந்தச் சமயத்தில், நினைத்தனை-(நீ இவற்றை)
நினைத்தாயோ, அ வழி – அந்தச் சமயத்தில் (அவ் விடத்தில்), உனக்கு-, இவை –
இந்த வில்லும் அம்பும், எய்தும் – வந்து சேரும்,’ என்று ஓதி – என்று சொல்லி,
அநேக வரங்கள் கொடுத்தபின் – பலவரங்களை (அருச்சுனனுக்கு)க் கொடுத்தருளிய
பின்பு, உமை ஒருகூறு உடையோன் – உமாதேவியை ஒருபக்கத்திலுடைய சிவபிரான்,
(கண்ணனை நோக்கி), ‘சீதர-ஸ்ரீதரனென்னும் பெயருடையவனே! பூதலம் மாது இடர்
தீர – பூமிதேவியின் துன்பம் நீங்கும்படி, அரு சமர் புரி தொழில் முற்றிய
பின்-செய்தற்கரிய போர் செய்யுந்தொழிலை முடித்த பின்பு, நின்பதம் மேவுக-உனது
இடத்தை அடைவாயாக” என்று அருள் செய்து – என்று கருணையோடு சொல்லி,
விடுத்தனன்-(இருவரையும்) அனுப்பினான்:

     துஷ்டஅசுரர்கள்அநேகரும் கெட்ட அரசர்கள் பலரும்ஒருங்கே கூடி
வசிப்பதனா லுண்டான பூமிபாரத்தை நிவிருத்திசெய்யும் பொருட்டு அப்பூமிதேவியின்
பிரார்த்தனையின்படி தேவர்கள் வேண்டுகோளால் திருமால் வசுதேவகுமாரனாய்க்
கிருஷ்ணனாகத் திருவவதரித்ததனால், அவ்வவதார காரியம் முடிந்தபின் தன்னடிச்
சோதிக்குச் செல்லும்படி சிவபிரான் கூறினனென்க. ‘நின்பதம்’ என்றது –
ஸ்ரீவைகுண்டத்தை. பி-ம்: சீதரநீவரகென்று தழீஇயுரை செய்தனன்மீளவுமே.

எண்ணிய காரியம் எய்தி, இறைஞ்சிய இந்திரன்
மா மகனும்,
திண்ணிய நேமி வலம்புரி வாள் கதை சிலையுடை
நாயகனும்,
புண்ணியன் மால் வரை நின்று உரகாரி புயங்களும்
வன் கரமும்
நண்ணிய காலையில், வெள்ளி எழுந்தது, ஞாயிறு
எழும் திசையே.224.-க்ருஷ்ணர்ச்சுனர் மலையினின்றுபுறப்படுகையில் சுக்ரோதயமாதல்.

எண்ணிய காரியம் எய்தி இறைஞ்சிய – நினைத்த தொழிலைப்
பெற்றுவணங்கின, இந்திரன் மா மகன்உம் – அருச்சுனனும், திண்ணிய – வலய,
நேமி – சக்கரம், வலம்புரி – சங்கம், வாள்-, கதை-, சிலை-வில், (என்னும்
பஞ்சாயுதங்களை), உடை-உடைய, நாயகன்உம் – தலைவனான திருமாலும்,
புண்ணியன் மால் வரை நின்று – பரிசுத்தமூர்த்தியான சிவபிரானது பெரிய
கைலாசகிரியினின்று, உரக அரி-நாகங்களுக்குப் பகைவனான கருடனது, புயங்கள்
உம்-தோள்களையும், வல் கரம்உம் – வலிய கைகளையும், நண்ணிய
காலையில்-ஏறிச்சேர்ந்த பொழுதில், ஞாயிறு எழும் திசை – சூரியனுதிக்கும் திக்கில்,
வெள்ளி எழுந்தது-சுக்கிரன் உதித்தது; (எ-று.)

     திருமாலின் சக்கரம்சுதர்சந மென்றும், சங்கம் பாஞ்சஜந்ய மென்றும், வாள்
நந்தகமென்றும், கதை கௌமோதகீ யென்றும், வில் சார்ங்கமென்றும் பெயர்
கூறப்படும். உரகாரி – வடமொழித் தொடர். நாயகன் தோளிலும் இந்திரன்மகன்
கரத்திலும் நண்ணிய என மாறி இயைதலால், எதிர்நிரனிறைப்பொருள்கோளாம்.
வெண்ணிற முடைமையால், சுக்கிரனுக்கு ‘வெள்ளி’ என்று பெயர். ‘வெள்ளியெழுந்து
ஞாயிறெழுந்திசை’ என்றதனால், வைகறைப் பொழுதாயிற்று என்றவாறு;
சுக்கிரோதயம், இரவின் இறுதிப்பாகத்திலே உளதாவது. பி-ம்: புண்ணியமால்

இங்கு இவர் மூவரும் ஏகினர் மீளும் முன், எறி
முரசக் கொடியோன்,
அங்கு உரையாடியது உரைசெயின், மண்மிசை
யார் வியவாது ஒழிவார்?
பங்குனன் ஓதிய வஞ்சினமும், பசுபதியிடை ஏகியதும்
கங்குலின் ஏவினன், ‘உரை செய்க!’ என்று, கடோற்கச
மீளியையே.225.-அருச்சுனன்செய்தசபதம் முதலியவற்றைச் சொல்லிவருமாறு
தருமபுத்திரன் கடோற்கசனைத் துரியோதனாதியரிடம் அனுப்புதல்.

இங்கு-இவ்விடத்து, இவர் மூவர்உம்-(கண்ணன் அருச்சுனன் கருடன்
என்னும்) இம்மூன்றுபேரும், ஏகினர் மீளும் முன்-சென்று திரும்பி வருவதற்கு
முன்னே, எறி முரசம் கொடியோன்-அடிக்கப்படுகிற பேரிகையின் வடிவத்தை
யெழுதின கொடியையுடைய தருமன், அங்கு-அவ்விடத்தில் (பாசறையில்) உரை
ஆடியது – சொல்லியதை, உரை செயின்-சொன்னால். மண்மிசை-பூலோகத்தில்,
வியவாது ஒழிவார் – (கேட்டு) ஆச்சரியப் படாதொழிபவர், யார்-யாவர் (உளர்)?
(எவருமில்லை): (அது யாதெனில்):-‘பங்குனன்-அருச்சுனன், ஓதிய-(நாளை
அஸ்தமனத்திற்குள் சயத்திரதனைத் தான் கொல்லாவிட்டால் அக்கினிப்
பிரவேசஞ்செய்வதாகச்) சொன்ன, வஞ்சினம்உம் – சபதத்தையும், (அந்தச்
சபதத்தை நிறைவேற்றுதற்கு ஏற்றகருவி பெறும் பொருட்டு), பசுபதியிடை
ஏகியதுஉம்-(அவ்விரவிற்) சிவபிரானிடத்து(க் கண்ணனோடு) சென்றதையும், உரை
செய்க-(துரியோதனாதியர்க்கு நீ சென்று) சொல்வாயாக,’ என்று-,கடோற்கசன்மீளியை
– கடோற்கசனாகிய வீரனை, கங்குலின்-(அந்தப்பதின்மூன்றாநாள்) இராத்திரியிலே,
ஏவினன்-(தருமன்) கட்டளையிட்டான்.

மற்று அவன் முந்துறு தந்தையை வந்து வணங்கி,
‘முன் வஞ்சனையின்
செற்றவர்தம்முடன் உற்றது சொல்வது சேவகமோ?
அறிவோ?
கொற்றவர் மா முடி கமழ் கழலாய்! வலி கூர்
திறலும் செயலும்
அற்றவர் போல உரைப்பது என்?’ என்று உள்
அழன்று புகன்றனனே.226.-கடோற்கசன் மாற்றாருடன் சபதம்முதலியவற்றை
எதற்காகச் சொல்லுவதென்று தருமபுத்திரனை வினாதல்.

(அதுகேட்டு), மற்று-உடனே, அவன்-அக்கடோற்கசன், முந்து உறு
தந்தையை-முன்னே பொருந்தின [பெரிய] பிதாவான தருமனை, வந்து வணங்கி –
(அருகில்) வந்து நமஸ்கரித்து, ‘முன் – முன்பு, வஞ்சனையின் – வஞ்சனைவழியால்,
செற்றவர்தம்முடன் – (அபிமனை) அழித்த அப்பகைவர்களோடு, உற்றது சொல்வது-
இங்கு நடந்த உண்மையைக் கூறுவது, சேவகம்ஓ – பராக்கிரமமாகுமோ? அறிவுஓ –
நல்லறிவின்பயனாகுமோ? [இரண்டுமாகா என்றபடி]; கொற்றவர் மா முடி கமழ்
கழலாய்-வெற்றியையுடைய அரசர்களது சிறந்த சிரசின்மேல் பரிமளிக்கிற திருவடித்
தாமரையையுடையவனே! வலி கூர் திறல்உம் – வலிமையோடு மிகுந்த
பராக்கிரமமும், செயல்உம்-(அதற்கு ஏற்ற) வினைத்திறமும், அற்றவர் போல-
ஒழிந்தவர் போல, உரைப்பது-(நீ இவ்வாறு) சொல்வது, என் – என்னகாரணம்?’
என்று-, உள் அழன்று- மனங்கொதித்து, புகன்றனன்-சொன்னான்; (எ-று.)

     வஞ்சனையிற் செற்றவர் – இளமைமுதல் பலவஞ்சகங்களால் அழித்தவருமாம்.
அரசர்கள் தருமன்பாதத்தின்கீழ்த் தம்தலையை வைத்து வணங்கும்பொழுது,
இவ்வடிமலர் அவர்முடிமேல் மணப்பதென்க. கமழ் என்ற வினைக்குஏற்ப, கழல்,
தாமரையாக்கப்பட்டது.       

திறன் அறியாமல் உரைத்தனை, மாருதி சிறுவன்
எனும்படி, நீ;
மற நெறி ஏன்று, வயிர்த்தவர் கொல்வது வஞ்சனையோ?
விரகோ?
அற நெறியே பொருது அல்லது வெல்லுதல்
ஆண்மைகொலோ? அழகோ? விறல் நெறியாவது
பொய் இலது’ என்றனன், மெய்ம்மை உணர்ந்திடுவான்.227.-முந்துறச்சொல்லிவெல்வதே பொய்ம்மையில்லாதவெற்றிவழிஎன்று
தருமன்சமாதனங்கூறுதல்.

அதுகேட்டுக் கடோற்கசனை நோக்கி), மெய்ம்மை உணர்ந்திடுவான்-
தத்துவங்களை யறிந்திட்டவனான தருமன், ‘நீ-, மாருதி சிறுவன் எனும்படி-
வீமன்மகனென்றற்கு ஏற்றபடி, திறன் அறியாமல் உரைத்தனை – தகுதியை
அறியாமற்கூறினாய்; மறம் நெறி – கொடுமையானவழியை, ஏன்று மேற்கொண்டு,
வயிர்த்தவர்கொல்வது – வைரங்கொண்ட பகைவரைக்கொன்றிடுவது, வஞ்சனைஓ
விரகுஓ-வஞ்சகமோ (வேறுவகை) உபாயமோ? [வஞ்சனையேயாம் என்றபடி]:
அறம் நெறிஏபொருது அல்லது – தருமமார்க்கமாகப் போர்செய் தல்லாமல்,
வெல்லுதல்-சயித்தல்,(நமக்கு), ஆண்மை கொல்ஓ – பராக்கிரமமோ? அழகுஓ –
அழகுடையதோ?[இரண்டும் அன்று என்றபடி]; விறல் நெறிஆவது – வெற்றியின்
வழியாவது, பொய்இலது -பொய்ம்மையில்லாததே, என்றனன் – என்றுகூறினான்;
(எ – று.)

     முன் சிலசமயங்களில் வீமன் செய்வன தவிர்வன ஆராயாமலும் சாந்த
குணத்தை மேற்கொள்ளாமலும் கோபத்தையே பிரதானமாகக் கொண்டு
தருமன்கருத்துக்கு மாறுபாடாகக் கூறியுள்ளதனால், ‘தந்தைபோல்வான் மைந்தன்’
என்ற முறைப்படி நீ உன் தந்தையான வீமன்போலவே பேசினாயென்று
கடோற்கசனைக் தருமன் கூறினான். அங்ஙனம் வீமன் பேசுதலைக் கீழ்க்
கிருட்டிணன் தூது சருக்கத்தில் “விரிகுழற் பைந்தொடி நாணி வேத்தவையின்
முறையிடுநாள் வெகுளே லென்று, மரபினுக்கு நமக்கு முலகுள்ளளவுந் தீராத
வசையே கண்டாய், எரிதழற் கானக மகன்று மின்னமும் வெம்பகை முடிக்க
விளையா நின்றாய், அரவுயர்த்தோன் கொடுமையினு முரசுயர்த்தோ யுனதருளுக்
கஞ்சி னேனே” என்றது முதலியவற்றால் அறிக. மறநெறியன்றி வயித்தவர்
சொல்வதுஎன்ற பாடத்துக்கு – வீரமார்க்கத்தைவிட்டு   (உன்போல) முன்கோபங்
கொண்டவர்கள் கூறுவது வஞ்சனையாகுமே யன்றி அறிவாகாது எனக்
கருத்துக்கொள்ளுக.

நிருதன் நகைத்து, வணங்கி, நிணம் கமழ் நீள்
இலை வேலினொடும்
கருதலர் துற்றிய பாசறை அன்று ஒர் கணப்
பொழுதில் புகுதா,
ஒரு தன் இலக்கணமைந்தன் இறந்தனன் என்று
அழுது உள்அழியும்
விருதுடை வித்தகன் வாயிலில் நின்று, விளித்தனன்
ஓர் உரையே.228.-கடோற்கசன் சென்று துரியோதனன்வாயிலையடைந்து
ஒன்றுசொல்லிக் கூப்பிடுதல்.

அதுகேட்டவுடன்), நிருதன் – இராக்கதனாகிய கடோற்கசன்,-நகைத்து-
சிரித்து, வணங்கி – (தருமனை) நமஸ்கரித்து,- நிணம் கமழ்-(முன்பு குத்தப்பட்ட
பகைவர்களது) உடற் கொழுப்பு நாறுகிற, நீள்-நீண்ட, இலை-அரசிலைவடிவமைந்த,
வேலினொடுஉம்- வேலாயுதத்துடனே, அன்று – அப்பொழுது, ஓர் கணம் பொழுதில்
– ஒரு க்ஷணப்பொழுதிலே, கருதலர் துற்றிய பாசறை – பகைவர்கள் நிறைந்த
(எதிர்ப்) படைவீட்டை, புகுதா – சார்ந்து,- ஒரு – ஒப்பற்ற, தன் இலக்கண மைந்தன்
– தனது லக்ஷணகுமாரன், இறந்தனன் – (போரில்) அழிந்தான், என்ற –
என்றகாரணத்தால், அழுது,- உள் அழியும்-மனம் வருந்திய, விருதுஉடை வித்தகன்-
(அன்றைப்போரிலேயே அபிமனைக் கொல்வித்ததனால்) வெற்றியையுடைய
சதுரனான துரியோதனனது, வாயிலில் – (இருப்பிடத்தின்) வாசலிலே, நின்று-, ஒர்
உரை விளித்தனன் -ஒருவார்த்தைசொல்லிக் கூப்பிட்டான் ; (எ – று.)-தருமன்
கூறியதை  மடமையாகக் கருதியதனால், நிருதன் நகைத்தான்.

எதிர் எதிர் கொற்றவன் வாயிலில் நின்றவர், ‘யார்!’
என எய்துதலும்’
‘அதிர் முரசக் கொடியோன் அரவக் கொடி
அரசனிடைப் பகர்வான்
முதிர உரைத்தது ஓர் மொழி உளது; அம் மொழி
மொழிதர வந்தனன்; யான்
எதிர் அறு வெற்றி அரிக் கொடியோன் மகன்’
என்றனன் விக்ரமனே.229.-வாயில்காவலரிடம் தான் வந்த காரணத்தையும்,
தன்னை இன்னானென்பதையும் கடோற்கசன் தெரிவித்தல்.

அப்பொழுது), கொற்றவன் வாயிலில் நின்றவர்- வெற்றியையுடைய
துரியோதனராசனது மனைவாசலில் (காவல் செய்து) நின்றவர்கள், எதிர் எதிர் –
எதிரிலே எதிரிலே, யார்என – (நீ) யார்? என்று வினாவிக்கொண்டு, எய்துதலும் –
வந்தவளவிலே-,விக்ரமன் – பராக்கிரமசாலியான கடோற்கசன்,-‘அதிர் முரசம்
கொடியோன்- முழங்குகிற பேரிகையையெழுதிய கொடியையுடைய தருமன், அரவம்
கொடி அரசனிடை – பாம்புக்கொடியையுடைய துரியோதனனிடத்து, பகர்வான் –
சொல்லும்படி, முதிர உரைத்தது – நன்றாகக் கூறினதான, ஒர் மொழி –
ஒருவார்த்தை, உளது – இருக்கிறது; அ மொழி – அவ்வார்த்தையை, மொழிதர –
(அத்துரியோதனனுடன்) சொல்லுதற்கு, வந்தனன் – வந்தேன்: யான்-, எதிர் அறு
வெற்றிஅரி கொடியோன் மகன் – ஒப்பில்லாத சயத்தையுடைய
சிங்கக்கொடியுடையனான வீமனது புத்திரன்,’ என்றனன் – என்றுசொன்னான்:

    மொழி – கருவியாகுபெயராய், பலசொற்களாலாகிய வாக்கியத்தை
யுணர்த்திற்று. பி – ம் :அச்சொன்மொழிந்திட.  

அம் மொழி தீ உரும்ஏறு என நீடு அவை அரசர்
செவிப்பட, ஓர்
செம் மொழி அற்றவன் மொழிவழி சென்று, ஒரு
சிறிதும் மதித்தருளான் ‘நும்
மொழி விட்டு ஒரு மெய்ம்மொழி கேண்ம்’ என,
நோதகு நெஞ்சினனும்’
‘வெம் மொழி வித்தக! எம் மொழி நுந்தைதன்
மெய்ம்மொழி’? என்றனனே.230.-கடோற்கசன் உத்தரவுபெற்று பாசறையுட்சென்று,
சொன்னமை தெரிவிக்கத் துரியோதனனிடம் உடன்பாடுபெறுதல்.

அ மொழி – அந்தக்கடோற்கசன்வார்த்தை, தீ உரும் ஏறு என-கொடிய
பேரிடிபோல, நீடு அவை அரசர் செவி பட – (பாசறையினுள்) பெரிய சபையிலுள்ள
அரசர்களது காதுகளிற் பட, (உடனே), ஓர் செம்மொழி அற்றவன்மொழிவழி-நல்ல
வார்த்தையொன்று மில்லாதவனாகிய துரியோதனன் கட்டளையிட்ட சொல்லின்படி,
சென்று – (கடோற்கசன் உள்ளே) போய், ஒரு சிறிது உம் மதித்தருளான் –
(அங்குள்ளவர்கள் எவரையும்) மிகச்சிறிதும் இலட்சியஞ் செய்யாதவனாய், ‘நும்
மொழி விட்டு- உங்கள் வார்த்தையைநிறுத்திவிட்டு, ஒரு மெய்மொழிகேள்-(நான்
சொல்லும்) ஒரு சத்தியமான வார்த்தையைக் கேட்பாயாக,’ என-என்று சொல்ல,-
நோதகு நெஞ்சினன்உம்- (புத்திரசோகத்தால்) வருந்திய மனத்தையுடைய
அத்துரியோதனன்,’வெம் மொழி – வித்தக – கடுமையான சொல்லையுடைய
தூதனே!நுந்தை தன் மெய் மொழி- உன் பெரிய தந்தையின் உண்மை வார்த்தை,
எ மொழி -எந்தவார்த்தை?’ என்றனன்-என்று வினாவினான்; (எ – று.)

    செம்மொழி – நீதியும் இனிமையு முடைய வார்த்தை, தான் கூறும் தருமன்
வார்த்தையை ‘ஒரு மெய்ம்மொழி’ என்றதனால், நும்மொழி பொய்ம்மொழி என்பது
பெறப்படும்; இது – அருத்தாபத்தி. வித்தகன் – தூதன் : “வித்தகர்
வினையுரைப்போர் விதியுளி வழியுரைப்போர், உத்தம மான பண்புற் றுரைப்பவர்
தூதராகும்” என்பது  நிகண்டு.  

தன் திரு மைந்தனை மௌலி துணித்த
சயத்திரன்தனை, ‘வாள்
வென்றி கொள் காவலர் காவல் மிகுப்பினும்,
வெயிலவன் வீழ்வதன்முன்,
கொன்றிடுவேன்! அது தப்பின் அருங்
கனலூடு குதித்திடுவேன்!’
என்று மொழிந்து, அரன் வாழ் கயிலாயமும்
எய்தினன், வில் விசயன்.231.- இதுவும், அடுத்தகவியும்- ஒருதொடர்: கடோற்கசன் அருச்சுனனது
சபதம் முதலியனதெரிவித்து, தன்னைத்தூதனுப்பினதன்
காரணத்தையும் தெரிவித்தமை கூறும்.

தன் திரு மைந்தனை – தனது சிறந்த புத்திரனான அபிமனை,
மௌலிதுணித்த – தலையைத் துண்டித்த, சயத்திரதன்தனை- சயத்திரதனை, வாள்
வென்றிகொள் காவலர் – ஆயுதங்களால் வெற்றியைக்கொள்ளும் அரசர்கள்,
காவல்மிகுப்பின்உம் – காத்திடுதலை மிகுதியாகச்செய்தாலும், வெயிலவன் வீழ்வதன்
முன் -(நாளைச்) சூரியன் அஸ்தமித்தற்குமுன்பு, கொன்றிடுவேன்-; அது தப்பின் –
அங்ஙனச்செய்தல் தவறினால், அரு கனலூடு குதித்திடுவேன் – (மீளுதற்கு) அரிய
அக்கினியிலே பிரவேசித்துவிடுவேன்; என்று மொழிந்து – என்று சபதஞ்செய்து,
வில்விசயன் – வில்லில் வல்ல அருச்சுனன், (அதற்குஏற்ற கருவி பெறும்பொருட்டு),
அரன்வாழ் கயிலாயம்உம் எய்தினன்- சிவபிரான் வாழ்கிறகைலாசகிரியையடை
தலையுஞ் செய்தான்; (எ -று.) – பி – ம்: காவல்வீரர் தடுப்பினும்.

‘வஞ்சனையால் அமரில் பகைதன்னை மலைப்பது
பாதகம” என்று
அஞ்சினன் ஆதலின், நீ அறியும்படி ஐயன் விடுத்தனனால்;
“எஞ்சினன் நாளை உன் மைத்துனன்’ என்று கொள”
என்றனன்-வன் திறல் கூர்,
நெஞ்சினில் வேறு ஒரு சஞ்சலம் அற்ற, நிசாசரன்
மா மருகன்.

‘வஞ்சனையால்-, அமரில்-போரில், பகைதன்னை – பகைவனை,
மலைப்பது-அழிப்பது, பாதகம்-தீவினை,’ என்று-என்று எண்ணி, அஞ்சினன்
ஆதலின் – பயந்தா னாதலால், நீ அறியும்படி – நீ (இவ்வுண்மையை) உணரும்படி,
ஐயன்- (என் தலைவனானதருமன், விடுத்தனன் – (என்னைத்) தூதனுப்பினான்;
‘நாளை – நாளைக்கு, உன் மைத்துனன்-உனது உடன்பிறந்தவள்
கணவனானசயத்திரதன், எஞ்சினன்- இறந்தொழிந்தான்,’ என்று கொள் – என்று
நிச்சயித்துக்கொள், என்றனன் – என்றுகூறினான்: (யாவனெனில்),- வல்திறல் கூர் –
கொடிய பராக்கிரமம் மிக்க, நெஞ்சினில் – மனத்தில், வேறு ஒரு சஞ்சலம் அற்ற –
(அதற்கு) மாறான கவலைசிறிதுமில்லாத, நிசாசரன் மா மருகன் – (இடிம்பனாகிய)
அரக்கனது சிறந்த மருமகனான கடோற்கசன்; (எ – று.)

     இங்கே, ‘வஞ்சனை’ என்றது – முன்புதெரிவியாமற் பின்பு கொல்வதனையே.
நாளை எஞ்சினன் – தெளிவுபற்றிய காலவழுமைதி. நிசாசரன்மாமருகன் –
இடிம்பனுடன்பிறந்த இடிம்பியின்மகன்.  

மன் மைந்தர் பலரொடும் போய், மறித்து ஒருவர்
மீளாமல் மலைந்து வீழ,
என் மைந்தன் இறந்திடவும், யாது ஒன்றும் புகலாமல்
இருக்கின்றேன் யான்;
தன் மைந்தன் இறந்தனனாம்! தான் தழலில் மூழ்குவனாம்!
சபதம் கூறி,
வில் மைந்தின் மிகுந்தவருக்கு அழுது இரங்கி,
அரற்றுவது வீரம்தானோ?233.- இதுமுதல் நான்குகவிகள்-ஒருதொடர்: அதுகேட்டுத் துரியோதனன்
கடோற்கசனைநோக்கிக் கூறுவன.

மன் மைந்தர் பலரொடுஉம் – இராசகுமாரர்கள் அநேகருடனே,
போய்- (அபிமனையெதிர்த்துச்) சென்று, மறித்து ஒருவர் மீளாமல்-மறுபடி
ஒருவருந்திரும்பிவராமல், மலைந்து வீழ- போர்செய்து (அவனால்) இறந்து விழ,
என்மைந்தன்- எனது மகனான இலக்கணனும், இறந்திடஉம்- (அவனால்)
அழிவுபட்டிருக்கவும், யான்- (இராசராசனான) நான், யாது ஒன்றுஉம் புகலாமல்
இருக்கின்றேன்- யாதொருசபதத்தையுஞ் சொல்லாமலிருக்கிறேன்; (அங்ஙனமிருக்க),
தன் மைந்தன் இறந்தனன் ஆம் – தன்மகனான அபிமன் இறந்துவிட்டானாம்;
(அதற்காக), தான் தழலில் மூழ்குவன்ஆம் – அருச்சுனன்தான் அக்கினியிற்
பிரவேசிப்பானாம்; வில் மைந்தில் மிகுந்தவருக்கு – வில்வலிமையில் மிக்க வீரர்கள்
இறந்ததற்காக, அழுது – புலம்பி, இரங்கி- விசனமுற்று, சபதம் கூறி-
சபதவார்த்தைசொல்லி, அரற்றுவது-கதறுவது, வீரம்தான்ஓ – பராக்கிரம
நிலையாகுமோ? [ஆகாது என்றபடி]; (எ – று.)

     இதுமுதற் பதின்மூன்று கவிகள் – இச்சருக்கத்து 145 – ஆங் கவி போன்ற அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தங்கள்.    

பயத்து இரவின் நடுங்கி, அரன் பருப்பதம் புக்கு, அவன்
கொடுத்த படையும் வாங்கி,
வயத்து இரதம் மால் கடவ வந்து எதிர் தோன்றுவன்ஆகில்,
மகரம் மோதும்
கயத்து, இரவி விழுவதன் முன், கை அறு தன்
புதல்வனைப்போல் களத்தில் மாளச்
சயத்திரதன் தொடும் கணையால், தான் படுதல் உறுதி’
எனச் சாற்றுவாயே.

(அருச்சுனன்), நடுங்கி – (தன்சபதம் நிறைவேறுமோ மாட்டாதோ
என்று) மிக அச்சங்கொண்டு, பயத்து இரவில் – அச்சந் தருவதான இராத்திரியில்,
அரன் பருப்பதம் புக்கு- சிவனது கைலாச பருவதத்துக்குச் சென்று, அவன்
கொடுத்த படைஉம் வாங்கி – அச்சிவபிரான்கொடுத்த ஆயுதங்களையும்
பெற்றுக்கொண்டு, வயத்து இரதம் மால் கடவ – வலிமையையுடைய தேரைக்
கிருஷ்ணன் செலுத்த, எதிர் வந்து தோன்றுவன் ஆகில் – (நாளைப்போரில்)
எதிரில்வந்து நிற்பானானால்,- மகரம் மோதும் கயத்து – சுறாமீன்கள் பாய்கிற
நீர்நிலையாகிறகடலிலே, இரவி விழுவதன்முன் – சூரியன் வீழ்ந்து அஸ்தமித்தற்கு
முன்பு, கை அறுதன் புதல்வனை போல்- (இன்று) செயலற்று அழிந்த
தன்மகனானஅபிமனைப்போலவே. களத்தில் – போர்க்களத்தில், மாள-உயிரழிய,
சயத்திரதன்கொடுகணையால் – சயத்திரதனது கொடிய அம்பினால், தான்
படுதல் – அவ்வருச்சுனன்தான் இறப்பது, உறுதி – நிச்சயம், என – என்று, சாற்று
வாய்-(அவனுக்கு நீ போய்ச்) சொல்லுவாய்; (எ-று.)

பிறர் பலர் கூறுங்கொள்கையைப்பற்றி, கண்ணனைத் துரியோதனன் ‘மால்’
என்றான். மகரம் – இயல்பிற் கடலில்மாத்திரமே வாழும் பெருமீன் கயம் –
ஆழமான இடம். இப்பாட்டில், திரிபு என்னுஞ் சொல்லணி காண்க.

என்னினும் பார் தனக்கு உரியன்; சிலைத் தொழிலில் சிலைக்
குருவாய் எவரும் போற்றும்
மன்னினும் தான் மிகப் பெரியன்; தண்டு எடுத்தால்
உந்தையினும் வலியன் சால;
உன்னினும் தோள் உரன் உடையன்; மதியாமல் இப்படி நீ
உரைக்கலாமோ?
தன்னினும் போர்க்கு எளியனோ, சயத்திரதன்-தான்?’
என்று சாற்றுவாயே.

தான் – சயத்திரதன், பார்தனக்கு – உலகத்தை அரசாளுந்திறத்தில்,
என்னின்உம் – (இராசராசனான) என்னைக்காட்டிலும், உரியன் –
உரியவல்லமையுடையான்; சிலை தொழிலில்-வில்லினாற்செய்யும் போர்த்தொழிலில்,
சிலை குரு ஆய் எவர்உம் போற்றும் மன்னின்உம்- வில்லாசிரியனாய்
எல்லாராலுஞ்சிறப்பித்துக்கூறப்படுகிற தலைவனான துரோணனைக்காட்டிலும்,
மிகவலியன் – மிகவலிமையுடையான்; தண்டு எடுத்தால் – கதாயுதத்தை யேந்தி
வந்தால்,உந்தையின்உம் சால வலியன் – உன் தந்தையான வீமனிலும் மிக
வலிமையுடையான்; உன்னின்உம் – (அரக்கனான) உன்னைக் காட்டிலும், தோள்
உரன் உடையன் – மிக்கதோள்வலிமையுடையான், (இங்ஙனமிருக்க), மதியாமல் –
(அவனை) லட்சியஞ்செய்யாமல், நீ -, இ படி உரைக்கல் ஆம்ஓ- இவ்வாறு
கூறுதல்தகுதியோ? சயத்திரதன்-, தான்-, தன்னின்உம் – அருச்சுனனினும்,
போர்க்கு-யுத்தஞ்செய்தலில், எளியன்ஓ – கீழ்ப்பட்டவனோ? [அல்லன்], என்று-,
சாற்றுவாய்-(நீ சென்றுஅருச்சுனனுக்குச்) சொல்லுவாய்.   

     ‘என்னினும் பார்தனக் குரியன்’ என்றதனால் , துரியோதனனது
அரசாட்சிச்செருக்கு விளங்கும். ‘சிலைத்தொழிலில் சிலைக்குருவாய் எவரும்
போற்றும் மன்னினும் தான் மிகவலியன்’ என்றதனால், அருச்சுனனை வில்லுக்கு
ஒருவனாக மதியாமையோடு குருவையும் அலட்சியஞ்செய்தல் வெளிப்படும்.
வலியில்மிக்கவனானான வீமனைக் கதைப்போருக்குச் சிறப்பாக எடுத்து,
அவன்மைந்தனானகடோற்கசனுக்கு அவமானமுண்டாகுமாறு, அவனினுஞ்
சயத்திரதனைவலியனென்றான். ‘உன்னினுந் தோளுரனுடையன்’ என்றது,
அவனைக் கீழ்ப்படுத்த.’இப்படி நீ உரைக்கல்’ என்றது – கீழ் அவன்’ எஞ்சினன்
நாளை உன்மைத்துனன்என்றுகொள்” என்ற தனை. பி-ம்: மிகப்பெரியன்

ஆளை ஆள் நிலை அறிவது அல்லது, மற்று அறிபவர்
யார்? அணிந்த போரில்,
நாளை யார் வெல்வர் எனத் தெரியுமோ?’ என நவின்று
நகைத்தான் மன்னோ-
பாளை வாய் நெடுங் கமுகின் மிடறு ஒடிய, குலைத்
தெங்கின் பழங்கள் வீழ,
வாளை பாய் குரு நாடும், எந் நாடும், முழுது ஆளும்
மன்னர் கோமான்.

ஆளை- (ஒரு) மனிதனை, ஆள் – (மற்றொரு) மனிதன், நிலை
அறிவது அல்லது – (எதிரில்நின்று காணப்படும்) வடிவத்தை மாத்திரம்
அறிவதல்லாமல், மற்று- மற்றை வலிமை திறமைமுதலிய குணாதிசயங்களை,
அறிபவர் – அறியவல்லவர், யார் – எவர்? (ஆதலால்), அணிந்த போரில் – அணி
வகுத்துச்செய்யும் யுத்தத்தில், நாளை – நாளைக்கு, யார் வெல்வர் – எவர் சயிப்பர்?
என – என்று, தெரியும்ஓ – (இன்றைக்குத்) தெரியுமோ? என – என்று, நவின்று-
சொல்லி, நகைத்தான் – (பரிகாசமாகச்) சிரித்தான்; (யாவனெனில்?) – பாளை
வாய் -பாளை யமைந்த, நெடுங்கமுகின் – நீண்ட பாக்கு மரத்தின், மிடறு –
கழுத்து[மேலிடம்], ஒடிய – ஒடிபடவும், குலை தெங்கின் பழங்கள் –
குலையாகவுள்ளதென்னைமரத்தின் முதிர்ந்த காய்கள், வீழ – கீழ்விழவும், வாளை
பாய் -வாளைமீன்கள் தாவிப் பாயப்பெற்ற, குரு நாடுஉம்- குருநாட்டையும், எ
நாடுஉம்-மற்றை யெல்லாநாடுகளையும், முழுது ஆளும் – முழுவதும் அரசாளுகிற,
மன்னர்கோமான் – ராஜராஜனான துரியோதனன்;  ( எ-று.)

     ‘நாளை யார்வெல்வ ரெனத் தெரியுமோ’ என்ற துரியோதனனது உட்கோள்,
அருச்சுனனைச் சயத்திரதன் வெல்வானென்பது. மீனின்கொழுமையைக் கூறி,
அதனால், நாட்டுவளத்துக்குப் பிரதானகாரணமான நீர்வளச்சிறப்பைத்
தெரிவித்தவாறு;இங்ஙனம் வருணித்தல் கவிகளுக்கு இயல்பு. தெங்கின் முற்றின
நெற்று பழமெனப்படுவதை “காய்மாண்ட தெங்கின் பழம் வீழ” எனச் சிந்தா
மணியிலுங்காண்க. மன், ஓ – ஈற்றசை.   

தார் அரசன் மகன், துச்சாதனன் மகன், சல்லியன் மகன்,
வேல் சகுனி என்னும்
பேர் அரசன் மகன், முதலா எத்தனை பேர் பட்டாலும்
பெரியது அன்றே;
பார் அரசாளுதற்கு இருந்த பார்த்தன் மா மகன்
ஒருவன் பட்டான்ஆகில்,
ஆர் அரசுக்கு இனி உரியார்? அந்தோ!’ என்று உரைத்தான்
மற்று அங்கர் கோமான்.237.- இதுவும், மேற்கவியும் – கர்ணன் கூறுதல்.

தார் அரசன் மகன்-வெற்றிமாலையையுடைய துரியோதனது
குமாரனான இலக்கணனும், துச்சாதனன் மகன் – துச்சாசனனது புத்திரனான
துச்சனியும், சல்லியன் மகன் – சல்லியனது புதல்வனும், வேல் சகுனி என்னும்
பேர்அரசன் மகன் -வேலில்வல்ல சகுனியென்னும் பெரிய அரசனது மைந்தனும்,
முதல்ஆ-முதலாக, எத்தனை பேர் பட்டால்உம் – எத்தனையோபேர் இறந்தாலும்,
பெரியதுஅன்றே – (அதுவெல்லாம்) பெரியதன்றாம்; அரசு ஆளுதற்கு இருந்த –
பூமிமுழுவதையும் (இனி) அரசாட்சிசெய்ய இருந்த-பார்த்தன் மா மகன் ஒருவன் –
அருச்சுனனது சிறந்த பிள்ளையான அபிமனொருத்தன், பட்டான் ஆகில்-
இறந்தானானால், இனி அரசுக்கு ஆர் உரியார்-இனி அரசாட்சிக்கு எவர் உரியர்?
அந்தோ – ஐயோ! என்று -, மற்று – பின்பு, அங்கர் கோமான் –
அங்கநாட்டார்க்குத்தலைவனான கர்ணன், உரைத்தான் – (பரிகாசமாகக்)
கூறினான்;

     இராச்சியத்துக்கு உரியவரான துரியோதனன் முதலியோரது மக்கள் இறந்ததை
அவர்கள் பெரிதும் பாராட்டாமலிருக்க, அரசின்றி அலைதற்கே யுரிய
அபிமனிறந்ததற்கு அருச்சுனன் அரற்றுதல் ஆச்சிரியமென்றபடி.  

அங்கு இருந்து, ‘சயத்திரதன் ஆவி கவர்ந்திடுவல்!’ என
ஆண்மை கூறி,
பங்கு இருந்த உமாபதிபால் பணிந்து, வரம் பெறச்
சென்றான் பார்த்தன் ஆகில்,
கொங்கு இருந்த தாராய்! நின் குடை நிழற்கீழ் இது
காலம் கூட்டம் கூடி,
இங்கு இருந்த ஏழையரேம், என் செய மற்று இருக்கின்றேம்?’
என்றும் சொன்னான்.

கொங்கு இருந்த தாராய் – வாசனை தங்கிய மாலையையுடைய
துரியோதனனே! பார்த்தன் – அருச்சுனன், அங்கு இருந்து – எதிர்ப்பக்கத்திலிருந்து,
சயத்திரன் ஆவி கவர்ந்திடுவல் என ஆண்மை கூறி – ‘சயத்திரதனது உயிரைக்
கவர்ந்திடுவேன்’ என்று வீரவாதஞ்சொல்லி, பங்கு இருந்த உமாபதிபால் – (தனது)
வாமபாகத்திலுள்ள உமாதேவிக்குக் கணவனான சிவபிரானிடத்து, பணிந்து வரம்
பெற- வணங்கி வரம்பெறும்பொருட்டு, சென்றான் ஆகில் – போயினனானால்,-
இங்கு-இந்தப்பக்கத்தில், நின் குடை நிழல் கீழ் – உனது குளிர்ந்த அரசாட்சியின்
கீழ், இதுகாலம் – இவ்வளவு காலமாய், கூட்டம் கூடி இருந்த – திரண்டிருந்த,
ஏழையரேம்-எளியவரான நாங்கள், மற்று என் செய இருக்கின்றேம் –
(அவ்வருச்சுனனைஅழிப்ப தல்லாமல்) வேறு யாதுசெய்ய இருக்கிறோம்?
என்றுஉம் சொன்னான் -என்றும் கூறினான், (கர்ணன்); (எ -று.) – கீழ்ப்பாட்டு –
சபையிற் பொதுவாகவும்,இப்பாட்டு – துரியோதனனை நோக்கியுங் கூறியதெனக்
காண்க.

     கர்ணனும் அருச்சுனனும் இளமைதொடங்கி ஒருவர்க்கொருவர் வைரங்
கொண்டவ ராதலாலும் ஒருவரையொருவர் போரிற் கொல்வதாகச் சபதஞ்
செய்திருத்தலாலும், இங்ஙனம் கர்ணன் அருச்சுனன்விஷயத்தில்
அலட்சியமாகப்பேசினான். ‘ஏழையரேம்’ என்று தம்மை யிழித்துக்கூறி, அதனால்
தமது சிறப்பை வெளியிடுகிறான்; இது செருக்கின் காரியம். பி – ம் :இதுகாறும்.

இவன் மொழிந்த இகழ்உரை கேட்டு, இடிம்பன் மருமகன்
வெகுளுற்று, ‘என் சொன்னாலும்,
அவனி தலம் முழுதும் இனி அரசாள நினைந்திருந்தீர்;
அறிவிலீர்காள்!
சிவன் எரி செய் புரம் போலும் பாடிவீடு அழல் ஊட்டி,
சேனை யாவும்
பவனன் மகன் மகன் என்னும் பரிசு அறியத் தொலைத்து,
ஈடுபடுத்துவேனே.239.-மூன்றுகவிகள் – அதுகேட்டுக் கடோற்கசன் கூறுதலைக்
தெரிவிக்கும்.

இதுமுதல் நான்குகவிகள் – குளகம்.

     (இ-ள்.) இவன் மொழிந்த – கர்ணன் (இவ்வாறு) சொன்ன, இகழ்உரை –
நிந்தைமொழியை, கேட்டு-, இடிம்பன் மருமகன்- இடிம்பனது மருமகனான
கடோற்கசன், வெகுளுற்று – கோபங் கொண்டு , (கூறுவான்;-) அவனிதலம்
முழுதுஉம் – பூலோகம் முழுவதையும், இனிஅரசு ஆள நினைந்து இருந்தீர் –
இனிஅரசாட்சி செய்ய எண்ணியிருந்தவர்களான அறிவு இலீர்காள் –
புத்தியில்லாதவர்களே ! என் சொன்னால்உம் – (நீங்கள்) எதைச்சொன்னாலும்,
(லக்ஷ்யஞ்செய்யாமல் நான்), சிவன் எரி செய் புரம் போல் – சிவபிரான் எரித்திட்ட
திரிபுரத்தைப்போல, உம் பாடி வீடு – உங்களுடைய படைவீட்டை, அழல் ஊட்டி –
தீயுண்ணச்செய்த, சேனையாஉம்- (உங்கள்) சேனைகளெல்லாவற்றையும், பவனன்
மகன் மகன் என்னும் பரிசு அறிய – வாயுகுமாரனான வீமனது புத்திரன்
நானென்னுந்தன்மையை (யாவரும்) அறியும்படி, தொலைத்து – நாசஞ்செய்து, ஈடு
படுத்துவேன் – பெருமையழிப்பேன்; (எ-று.)- இப்பாட்டில் ‘வெகுளுற்று’ என்றது,
மேல் 242 – ஆம் பாட்டில் “உரைக்கும்” என்றதோடு இயையும். பி -ம்:
இடிம்பிமகன்மிக.

     என்சொன்னாலும் என்பதற்கு-(நாங்கள்) என்னசொன்னாலும் (நீங்கள்
கேளாமல்) என்றும் உரைக்கலாம். அக்கினியை மூட்டி வளர்க்கத்
துணையாந்தன்மைவாயுவினிடத்திலும், அரக்குமாளிகையையும் இலங்காபுரியையுந்
தீயிட்டழித்ததன்மைஅவ்வாயுவின் குமாரனான வீமனிடத்திலும் அனுமனிடத்திலும்
உள்ளதனால்,’பவனன்மகன்மகனென்னும் பரிசறிய’ என்றான்

தசை குருதி நிணம் ஒழுக, தனித் தனியே எதிர்த்தவரைத்
தலைகள் சிந்த,
விசையன் வரவேண்டுமோ? மற்று உள்ளார் திரண்டு
வரவேண்டுமோதான்?
நிசை புலரும் முனம் முனைந்து, நீறு ஆக்கி விடுகுவன்;
“எம் நிருபன் சொன்ன
அசைவு இல் மொழி மறுத்து, உடற்றல் ஆகாது” என்று
இருக்கின்றேன்; அறிகிலீரே?

எதிர்த்தவரை – எதிர்த்துப் போர்செய்தவர்களை, தசை குருதிமிசை
ஒழுக-சதையும் இரத்தமும் மேல்வழியும்படி, தனி தனியே -, தலைகள் சிந்த –
தலைகளைச் சிதறடித்தற்கு, விசையன் வரவேண்டும்ஓ – அருச்சுனன்தான்
(போருக்கு) வருவது அவசியமோ? மற்று உள்ளார் திரண்டு வரவேண்டும்ஒ தான் –
மற்றுமுள்ள (வீமன் முதலிய) வீரர்கள் ஒருங்குகூடிவருதல்தான் அவசியமோ?
(யான்ஒருவனே), நிசை புலரும் முனம் – இவ்விரவு விடியமுன்னே, முனைந்து –
போர்செய்து, நீறு ஆக்கி விடுகுவேன்- (உங்களையெல்லாம்) பொடியாக்கிவிடுவேன்;
(ஆனால்), எம் நிருபன் சொன்ன – எங்களது அரசனான தருமன் கூறின, அசைவு
இல் மொழி – தளர்ச்சியில்லாத வார்த்தையை, மறுத்து – விலக்கி, உடற்றல் –
(இப்பொழுது) போர் செய்தல், ஆகாது – தகுதியன்று, என்று –
என்றகாரணத்தாலேயே, இருக்கின்றேன்- (நான் சும்மா) இருக்கிறேன்;
அறிகிலீரே -(இதனை நீங்கள்) அறியமாட்டீர்களா?(எ-று.)-அறிகிலீரே, ஏ –
அசையுமாம். பி -ம்: குருதிநிணம். அறிவிலீரே.

     தூதுசென்று தான் கூறிய செய்தியைச்சொல்லி வரும்படியே கட்டளையிட்ட
தருமனது வார்த்தைக்கு மாறாக யான் பொருதலாகா தென்கிறான்.   

இருவர் எதிர் எதிர் தம்மில் இகல் பொருதல் உலகு
இயற்கை; யாரும் கூடி,
பருவம் உறாத் தனிக் குதலைப் பாலகனுக்கு ஆற்றாமல்
பறந்து போனீர்;
ஒருவன் நெடுந் தேர் அழிக்க, ஒருவன் மலர்க் கை
துணிக்க, ஒருவன் பின்னை,
“பொருவன்” என அறைகூவிப் பொன்றுவித்தான்; இது
கொண்டோ புகல்கின்றீரே?’

இருவர் – இரண்டுபேர், எதிர் எதிர் – எதிர்க்கு எதிராக (நின்று),
தம்மில் – தமக்குள் [ஒருவரோடொருவர்], இகல் பொருதல் – போர்செய்தல்,
உலகுஇயற்கை -; (அப்படியிருக்க), யார் உம் – (நீங்கள்) எல்லோரும், கூடி –
ஒன்றுசேர்ந்து, (வந்துஎதிர்த்து) பருவம் உறா- தக்கபிராயம் நிரம்பாத, தனி –
ஒப்பற்ற,குதலை – மழழைச் சொற்களையுடைய, பாலகனுக்கு – இளங்குமரனான
அபிமனுக்கு.ஆற்றாமல் – முன்நிற்கமாட்டாமல், பறந்து போனீர் – (முதலில்)
விரைந்தோடிப்போனீர்கள் ; (அப்படிப்பட்ட உங்களில்), (பின்பு) ஒருவன் –
[கர்ணன்],நெடு தேர் அழிக்க – பெரியதேரைச்சிதைக்க, ஒருவன் -[துரோணன்],
மலர் கைதுணிக்க – தாமரைமலர்போன்ற ஒருகையைத் துண்டிக்க, ஒருவன்-
[சயத்திரதன்],பின்னை – அதன் பின், பொருவன் என – (நான் உன்னோடு)
போர்செய்வேனென்று சொல்லி, அறை கூவி- வலியப் போருக்கு அழைத்து,
பொன்றுவித்தான் -(அபிமனை) அழியச்செய்தான்; இது கொண்டுஓ – இந்தப்
பராக்கிரமத்தாலோ,புகல்கின்றீர் – (நீங்கள் செருக்கிப்) பேசுகின்றீர்கள்; ( எ-று.)-
என்று கடோற்கசன்கூறினான். ஈற்றேகாரம்- இகழ்ச்சி.

     மழலையும் குதலையும் ஒருபொருளன வென்பது ஒருசாரார் துணிபு;
பரிமேலழகர்கருத்தும் இதுவே. மற்றொருசாரார், குதலை-
எழுத்துவடிவுபெறாததென்றும். மழலை- எழுத்துவடிவுபெற்றுச்
சொல்வடிவுபெறாததென்றும் வேறுபாடுகூறுவர். இருவரெதிரெதிர் தம்மில்
இகல்பொருதல்-‘த்வந்த்வயுத்தம்’.     

வரைக்கு உவமை பெறும் தடந் தோள் வீமன் மகன்
இப்படியே மதியான் ஆகி,
உரைக்கும் மொழி கேட்டு இருந்த உரகம் அணி கொடி
வேந்தன், உருத்து நோக்கி,
‘இருக்கும் எழில் அவைக்கு ஏற்ப இயம்பாமல், தன்
மதத்தால் இயம்புகின்ற
அரக்கி மகனுடன் ஒன்றும் கழறாதீர்!’ என்று உரைத்தான்,
அரசர் யார்க்கும்.242.-அதுகேட்டுத் துரியோதனன் கூறுதல்.

வரைக்கு – மலைக்கு, உவமை பெறும்- ஒப்பாகத்தக்க,
தடதோள் -பெரிய தோள்களையுடைய, வீமன் மகன் – கடோற்கசன், மதியான்
ஆகி- (தம்மை)லட்சியஞ்செய்யாதவனாய், இ படி ஏ உரைக்கும் –
இவ்வாறேமேல்மேல் கூறுகிற,மொழி- வார்த்தையை, கேட்டு இருந்த-, உரகம்
அணிகொடி வேந்தன் -பாம்பின்வடிவைத் தரித்த துவசத்தையுடைய துரியோதனன்
,உருத்து நோக்கி -கோபித்துப்பார்த்து, அரசர் யார்க்குஉம் – (அங்கிருந்த)
அரசரெல்லோருக்கும்,’இருக்கும் – (நாம்) வீற்றிருக்கிற, எழில் – அழகிய,
அவைக்கு – இச்சபைக்கு, ஏற்ப -தக்கபடி, இயம்பாமல் – பேசாமல், தன் மதத்தால்
தனது கொழுப்பினால்,இயம்புகின்ற – பேசுகிற, அரக்கிமகனுடன்- இராக்கதியின்
புத்திரனானகடோற்கசனோடு, ஒன்றுஉம் கழறாதீர்- யாதொருவார்த்தையையும்
சொல்லாதீர்’,என்று உரைத்தான் – என்று கூறினான்; (எ -று.)

     ‘வரைக்கு உவமைபெருந் தோள்’ என்றதற்கு – மலையினுஞ் சிறந்த தோள்
என்று கருத்து. இதில் ‘அரக்கிமகன்’ என இகழ்ந்தவாறு. இரவில் வலிமை
மிகுதியுடைய இராக்கதனான கடோற்கசனை இப்பொழுது யாதொன்றுஞ்
செய்யமுடியாதென்று கருதித் துரியோதனன் அவனுடன் எவரும் ஒன்றும்
பேசவேண்டா என்று கட்டளையிட்டதாகவுங் கொள்ளலாம். 

அந்த உரை மீண்டு இவன் கேட்டு, ஆங்கு அவனை
நகைத்து, உரைப்பான்: ‘அரக்கரேனும்,
சிந்தனையில் விரகு எண்ணார்; செருமுகத்தில் வஞ்சகமும்
செய்யார்; ஐயா!
வெந் திறல் கூர் துணைவருக்கு விடம் அருத்தார்; நிரைக்
கழுவில் வீழச் செய்யார்;
உந்து புனலிடைப் புதையார்; ஓர் ஊரில் இருப்பு அகற்றார்;
உரையும் தப்பார்.243.- இதுமுதல் மூன்றுகவிகள் – அதுகேட்ட கடோற்கசன்
துரியோதனாதியரின் கொடுமைதோன்றக்கூறி,
அருச்சுனன் திறமையைச்சொல்லி மீளுதலைத் தெரிவிக்கும்.

இதுவும் மேற்கவியும் – ஒருதொடர்.

     (இ -ள்.) அந்த உரை – (இங்ஙனங்கூறிய) அத்துரியோதனன் வார்த்தையை,
கேட்டு-, இவன்- இந்தக்கடோற்கசன், ஆங்கு – அப்பொழுது, மீண்டு – மறுபடியும்,
அவனை நகைத்து உரைப்பான் – அத்துரியோதனனைப் பரிகசித்துப்பேசுவான்;-
ஐயா-!  அரக்கர்ஏன் ஒம் – (எனதுசாதியார்) இராக்கதரேயானாலும், (உம்மைப்போல),
வெம் திறல் கூர் துணைவருக்கு – கொடிய வலிமைமிக்க உடன் பிறந்தவர்களுக்கு,
சிந்தனையில் – மனத்தில், விரகு எண்ணார் – வஞ்சனையா நினைக்கமாட்டார்கள்;
செரு முகத்தில் – போர்க்களத்தில், வஞ்சகம்உம் செய்யார் – வஞ்சனைசெய்யவும்
மாட்டார்கள்; விடம் அருத்தார் – விஷத்தை உண்பிக்கமாட்டார்கள் ; நிரை கழுவில்
வீழ செய்யார் – வரிசையான கழுமுனையிலே விழும்படி செய்ய மாட்டார்கள் ;
உந்து புனலிடை புதையார் – பாய்கிற நீர்ப் பெருக்கில் அழுத்தமாட்டார்கள்; ஓர்
ஊரில் இருப்பு அகற்றார்- (தாம் இருக்கும்) ஓரூரிலே அவர்களிருத்தலை
விலக்கமாட்டார்கள்; உரைஉம் – (சொன்ன) வார்த்தையும், தப்பார்-; (எ -று.)

     இதிற்குறித்த தீங்குகள்யாவும் துரியோதனனிடம் உள்ளன வென்பதை,
மேற்பாட்டில் ‘இவையெல்லா மடிகளுக்கே ஏற்ப’ என்று விளக்குவன். துரியோதனன்
சிந்தனையில் விரகெண்ணியது, அநந்தம், செருமுகத்தில் வஞ்சகஞ்செய்ததும்,
அபிமந்யுவதம் முதலாகப் பலவாம்.

     துரியோதனாதியரும் பாண்டவரும், இளம்பிராயத்தில் ஒருநாள் கங்கையில்
நீர்விளையாடி அதன் துறையில் ஒருசார் இன்னுணவுண்டு களித்துக் கண்டுயில,
அவ்விரவில் துரியோதனன் வீமனைக் கொல்லும் பொருட்டுச் சகுனிமுதலானாரோடு
ஆலோசித்து அவனை வலியகயிறுகளால் கைகால்களைக் கட்டி அப்பெருநதியில்
எறிந்து விட, அதில்விழுந்து துயிலுணர்ந்த வீமன் தன் உடல் வலியால்
அக்கட்டுக்களைத் துணித்துக்கொண்டு கரையேறிப் பிழைத்தானென்பதும்;
மற்றொருநாள் கங்கைத்துறையில் எழுக்களினாலும் இரும்புகளினாலும்
செம்மரங்களினாலும் கூரிய கழுக்களை நீரின்மேல் தோன்றாதபடி நாட்டச்செய்து
துரியோதனன் வீமனை ‘நீரில் விளையாடலாம் வா’ என்று வஞ்சனையாக
அழைத்துப்போய் ‘இங்கிருந்து நீ நீரில் குதிக்கிறாயா, பார்ப்போம், என்ன,
அப்பொழுது கண்ணன். கருவண்டின் உருவங்கொண்டு கழுமுனைதோறும்
உட்கார்ந்திருக்க, வீமன் அதனைநோக்கி ‘இது என்ன? நீரோட்டத்தில் வண்டுகள்
உட்கார்ந்திருக்கின்றனவே’ என்று உற்றுப் பார்க்கும்போது மூன்று அங்குலத்தின்கீழ்
வசிகள் நாட்டியிருக்கக் கண்டு தன் சந்தேகப்படி அவை நாட்டியிராத இடம்பார்த்துக்
குதித்துக் கரையேறி மீண்டானென்பதும்; வேறொருநாள் துரியோதனன் வீமனுக்கு
விருந்து வியாஜமாகச் சமையற்காரரைக் கொண்டு மிக்க விஷத்தைக் கொடுத்து
உண்பித்து அதனால் மயங்கியிருக்கிற சமயத்தில் அவனைக் கயிற்றாற் கட்டிக்
கங்கை நீரிலே போகட்டுவிட, அதில் வீழ்ந்து பாதாளஞ்சேர்ந்த அவ்வீமனை
அங்குள்ள சிறுநாகங்கள்  கடிக்க, முந்தினவிஷம் இவ்விஷத்தால் நீங்கினவளவிலே,
கயிற்றுக்கட்டையும் மெய்வலியால் துணித்திட்ட அவனுக்கு, வாசுகி
வாயுகுமாரனென்ற அபிமானத்தோடு மிக உபசரித்து ஆங்குள்ள
அமிருதகலசங்களிற்சிலவற்றையுண்பிக்க, வீமன் உண்டு மீண்டனன் என்பதும்,
கீழ்வாரணாவதச்சருக்கத்தில் வந்த கதைகள்.

     ஒரூரில் இருப்பகற்றியது-அஸ்தினாபுரத்திலிருந்து வாரணாவத நகரத்திற்
சென்றுவாழும்படியும், இந்திரப்பிரஸ்தநகர மேற்படுத்திக்கொண்டு செல்லும்படியும்,
வனம்புகுத்தியும், பாண்டவரைத் துரியோதனன் பலகால் துரத்தியது. உரைதப்பியது
வனவாசஅஜ்ஞானவாசங்கள் கழித்தபின்னும் நாடுதராதது. பி – ம்; அவன்.
சொல்லார்.  

செழுந் தழல் வாழ் மனைக் கொளுவார்; செய்ந்நன்றி
கொன்று அறியார்; தீங்கு பூணார்;
அழுந்து மனத்து அழுக்குறார்; அச்சமும் அற்று, அருள்
இன்றி, பொய்ச் சூது ஆடார்;
கொழுந்தியரைத் துகில் உரியார்; கொடுங் கானம் அடைவித்துக்
கொல்ல எண்ணார்;
எழுந்து அமரில் முதுகிடார்; இவை எல்லாம் அடிகளுக்கே
ஏற்ப!’ என்றான்.

( என்சாதியார் அரக்கரேயானாலும் உம்மைப் போல), வாழ்மனை –
(உடன்பிறந்தவர்கள்) வாழ்ந்துகொண்டிருக்கிற வீட்டில், செழு தழல் கொளுவார் –
மிக்க நெருப்பைப் பற்றவைக்க மாட்டார்கள்; செய் நன்றி கொன்று அறியார் –
(தமக்குப் பிறர்) செய்த நன்றியைச் சிதைத்தறியமாட்டார்கள்; தீங்கு பூணார்-
(அவ்வுபகாரஞ் செய்தவர்களுக்கு) அபகாரஞ்செய்தலை மேற்கொள்ள
மாட்டார்கள்;அழுந்து மனத்து – கீழ்ப்பட்ட (தங்கள்) மனத்திலே, அழுக்குறார்-
பொறாமைகொள்ளமாட்டார்கள் ; அச்சம்உம் அற்று- (பழிபாவங்களுக்குப்)
பயப்படுதலுமில்லாமல், அருள் இன்றி – கருணையில்லாது, பொய் சூது ஆடார்-
(உடன்பிறந்தவர்களோடு) வஞ்சனைக் கிடமான சூதை ஆடமாட்டார்கள்; கொழுந்தி
– உடன்பிறந்தவர் மனைவியின், அரை துகில் – இடையிற்கட்டிய சேலையை,
உரியார் – அவிழ்க்கமாட்டார்கள்; (அவ்வுடன்பிறந்தவர்களை), கொடுகானம்
அடைவித்து – கொடிய காட்டை யடையச் செய்து, கொல்ல எண்ணார் – (பின்பு
அவர்களைக்) கொலைசெய்யக் கருத மாட்டார்கள்; எழுந்து – (முன்னே போருக்குப்)
புறப்பட்டுவந்து, அமரில்- அப்போரில் . முதுகு இடார் – புறங்கொடுக்கவும்
மாட்டார்கள்; இவை எல்லாம் – இங்குக்கூறிய எல்லாத்தீயொழுங்கங்களும்
அடிகளுக்கு ஏற்ப – தேவரீர்களுக்கே அமைந்துள்ளன, என்றான்- என்று
( கடோற்கசன் துரியோதனனை நோக்கிக்) கூறினான்; (எ -று.)

துரியோதனன், வாரணாவதநகரத்தில் வஞ்சனையாக அழகியதோ ரரக்கு
மாளிகையைஅமைப்பித்து அதில் பாண்டவரைவரையுங் குந்தியையும் வசிக்கச்செய்து,
புரோசனனென்னுந்துர்மந்திரியையுங் குற்றேவலார் ஆறுபேரையும்
கூடஇருக்கநியமித்து, ஒருநாளிரவிற் பாண்டவருந்தாயும் கண்துயில்கையில்
மற்றையோரைக் கொண்டு அம்மனையில் தீப்பற்றவைத்து இங்ஙனம்
பங்காளிகளைத்தொலைத்துவிடுவதாகத் துணிந்திருக்க, அவ்வஞ்சகத்தை
விதுரனேவிய ஒருசிற்பியால்அறிந்து அதனினின்று தந்திரமாகத் தப்பிச் செல்லும்
வழியையும் அவன்பா லுணர்ந்தவீமன், அத்துர்மந்திரி முதலியோர்
எரிபட்டழியும்படி தான் ஓர் இரவில் தீக்கொளுவிவிட்டுத் தாயையும்
உடன்பிறந்தாரையும் கைகளிலுந் தோள்களிலும் முதுகிலுமாகஎடுத்துக்கொண்ட
அவ்வீட்டில் இரகசியமாக அமைத்துவைத்திருந்ததொருதூணின்கீழுள்ள
சுரங்கவழியால் தப்பிச்சென்று இடிம்பவனம் முதலிய இடங்களிற்சென்று பிழைத்து
வாழ, துரியோதனாதியர் பாண்டவர்களே எரிபட்டழிந்ததாகக்கருதி
அகமகிழ்ந்தனரென்றது, கீழ் ஆதிபருவத்து வரலாறு. தீக்கொளுவத்
துணிந்ததையும் கொளுவியதாகக்கருதி மகிழ்ந்ததையுமே கொண்டு,
செழுந்தழல்வாழ்மனைக் கொளுவியதாகச் சொன்னது.

     பாண்டவர் வனவாசஞ்செய்கையில் ஒருகால், துரியோதனன் தன்
பெருமையைக் காட்டிப் பாண்டவர்க்குப் பொறாமையுண்டாக்கி அவரை
அழுங்கச்செய்யவேண்டு மென்று ஆடம்பரத்துடனே அருகிற்சென்றபோது,
இந்திரனேவலாற் சித்திரசேனென்னுங் கந்தருவராசன் வந்து துரியோதனனைக்
கயிற்றாற்கட்டி வானத்தில் தூக்கிக்கொண்டுபோக, அப்பொழுது கர்ணன்
முதலானோர்எதிர்த்துப் பொருது, தோற்று ஓட, பின்பு துரியோதனனது
பரிதாபமானநிலைமையைஅவனதுபரிவாரத்தாலறிந்த தருமபுத்திரனது
கட்டளையால் வீமன் அருச்சுனனோடுசென்று கந்தருவனைவென்று
துரியோதனனைமீட்டு மறுபடியும் அக்கந்தவருவனால்துரியோதனனுக்குத்
தீங்குநேராதபடி அவனை ஊர்வரையிலும் வழிவிடுவதாகத்துணை வர, தன்
ஊர்ப்புறத்தளவும் வந்த மாத்திரத்தில், துரியோதனன்,அந்நன்றியறிவு சிறிது
மில்லாமல், வீமனை நோக்கி ‘என்எல்லையிற் கால்வையாதே’என்று
கடுமையாகச் சொல்லித் துரத்திவிட்டமையின்; செய்ந்நன்றிகோறல்
துரியோதனனுக்கு உரியதாயிற்று. பாண்டவர் துரியோதனனுக்குச் செய்த
உபகாரங்களும், அவன் அந்நன்றியைச் சிறிதும் பாராட்டாது அவர்களுக்குச்
செய்ததீமைகளும் மிகப்பல; நூல்முழுவதிலும் ஆங்காங்குக் காணலாம்.

     பாண்டவர் தன் ஆற்றலால் திக்குவிசயஞ்செய்து இராசசூயயாகம்
முடித்துச்சிறப்புற, அதனைக்கண்டு துரியோதனன் அழுக்காற்றில் அழுந்திச் சகுனி
முதலானாரோடு ஆலோசித்து வஞ்சனையாக அப்பாண்டவரை வரவழைத்து மாயச்
சூதால் அரசு கவர்ந்து கொண்டதுமன்றி, சபையில் திரௌபதியைத் துகிலுரிந்ததும்
அவர்களை வனவாசத்துக்கு அனுப்பியதும் பிரசித்தம். பாண்டவர் வனத்தில்
வசிக்கையில், துரியோதனன் காளமா முனியைக்கொண்டு
அபிசாராயாகமொன்று செய்வித்து அவ்வோமத்தீயினின்று எழுந்த பெரும்பூதத்தைப்
பாண்டவரைக்கொல்லுமாறு  செலுத்தினமையும், போரிற் பாண்டவரைக்கொல்ல
முயல்கின்றமையுந் தோன்ற, ‘கொல்லவெண்ணார்’ என்றான். திரௌபதி சுயம்
வரகாலத்திலும், நிரைமீட்சியிலும், மற்றும் பதினெட்டுநாளிலும் போரிற்
பாண்டவர்க்குமுன் துரியோதனன் புறங்கொடுத்தல் காண்க. ‘அடிகள்’ என்றசொல் –
‘பாதா:’ என்னும் வடசொல்லின் மொழிபெயர்ப்பாகத் தமிழில் வழங்குவது; இதற்குச்
சிறந்தவ ரென்று பொருள். உயர்வுக்குஉரிய இச்சொல்லால் கடோற்கசன்
துரியோதனனைக்கூறியது, சந்தர்ப்பத்தால் இகழ்ச்சிவிளக்கும்; பிறகுறிப்பு.

தேன் இடறிப் பாண் முரலும் செழுந் தாம விசயனுடன்
செருவில் வந்தால்,
மானிடரில் பொர வல்லார் சிலர் உண்டோ? தெரியாது,
வான் உளோரில்;
கோன் இடை உற்று அருகு இருந்த திறல் வேந்தர்
காத்திடினும், குறித்த வீரன்-
தான் இடர் உற்று உயிர் அழிகை தப்பாது!’ என்பதும்
உரைத்துத் தனயன் மீண்டான்.

தேன் – வண்டுகள், இடறி – நெருங்கிமொய்த்து, பாண் முரலும் –
இசைப்பாட்டை யொலிக்கப்பெற்ற, செழு தாமம்- செழிப்பான பூமாலையையுடைய,
விசயனுடன் – அருச்சுனனுடனே, செருவில் வந்தால்- போர்க்களத்தில்
எதிர்த்துவந்தால், மானிடரில் – மனிதருள், பொர வல்லார் – போர் செய்ய
வல்லவர்,சிலர் உண்டுஓ – சிலரேனும் உளரோ? [எவரும் இலரென்றபடி]; வான்
உளோரில் -மேலுள்ள தேவர்களுள், தெரியாது – (அருச்சுனனுடன் பொரவல்லார்
உளர்என்பதுந்) தெரியாது; கோன் இடை உற்று – சிந்து தேசத்தரசனிடத்திற்
பொருந்தி,அருகு இருந்த திறல் வேந்தர் காத்திடின்உம் – (உன்) பக்கத்திலுள்ள
வலிமையுடையஅரசர்கள் (எல்லோரும்) பாதுகாத்திட்டாலும், குறித்த வீரன் –
(அருச்சுனன்கொல்வதாக) உத்தேசித்த வீரனான அச்சைந்தவன், இடர் உற்று
உயிர் அழிகை -அருச்சுனனால் துன்பமடைந்து இறத்தல், தப்பாது -தவறாது,
என்பதுஉம் உரைத்து -என்பதையுஞ் சொல்லிவிட்டு, தனயன் – (வீமன்) மகனான
கடோற்கசன், மீண்டான் -திரும்பி வந்தான்;

அரக்கன் அப் பேர் அவை அகன்ற பின், பகை
துரக்கும் வெங் குனி சிலைத் துரோணன்தன்னொடும்,
பரக்கும் வெண் திரைக் கடல் பார் எலாம் உடன்
புரக்க நின்றவன், சில புகழ்ந்து கூறுவான்:246.-இரண்டுகவிகள் – பிறகு துரோணனை நோக்கித் துரியோதனன்
நாளைச்சயத்திரதனைக் காத்துவிடின்
அருச்சுனன் தீக்குளிப்பானெனல்.

அரக்கன்- கடோற்கசன், அ பேர் அவை – அந்தப் பெரிய சபையை,
அகன்றபின் – நீங்கிச்சென்றபின்பு, – பரக்கும்- பரவுகிற, வெள்திரை –
வெண்மையான அலைகளையுடைய, கடல்- சமுத்திரஞ்சூழ்ந்த, பார்எலாம் –
பூலோகம் முழுவதையும், உடன் புரக்க – ஒருசேரஆள, நின்றவன் – (எண்ணி)
நின்றவனான துரியோதனன்,- பகை துரக்கும் -பகைவரை அஞ்சியோடச்செய்யவல்ல,
வெம் குனி சிலை – கொடியவளைந்தவில்லையுடைய, துரோணன் தன்னொடுஉம்-
துரோணனுடனே, சில புகழ்ந்துகூறுவான் – சில வார்த்தைகளைப் புகழ்ச்சியாகச்
சொல்லுவான்;  (எ -று.) -அவற்றை அடுத்த கவியிற் காண்க.

இதுமுதல் இச்சருக்கம் முடியுமளவும் பதினான்கு கவிகள் – இச்சருக்கத்தின்
186 – ஆங் கவிபோன்ற கலிவிருத்தங்கள்.

கொடி நெடுஞ் சேனையைக் கூறு செய்து, நீ,
கடிகை முப்பதும் உடன் காக்க வல்லையேல்,
வடிவுடைச் சிந்து மா மகனும் உய்குவன்;
வெடி அனல் குளிக்குவன், விசயன்தானுமே.

நீ-, கொடி நெடு சேனையை – துவசங்களையுடைய பெரிய (நமது)
சேனையை, கூறுசெய்து- (ஒழுங்காக) அணிவகுத்து, கடிகை முப்பதுஉம் உடன் –
(நாளைப்பகல்) முப்பதுநாழிகை முழுவதும், காக்க வல்லைஏல்- (சயத்திரதனைப்)
பாதுகாக்கவல்லவனாவையானால்,- வடிவு உடை – (அழகிய) வடிவத்தையுடைய,
சிந்து மா மகன்உம் – சிந்துதேசத்தையாளும் சிறந்த ஆண்மகனான
அச்சயத்திரதனும், உய்குவன் – பிழைத்திடுவான் ; விசயன் தான்உம்- அருச்சுனனும்,
வெடி அனல் குளிக்குவன் – அழிக்கிற தீயில் மூழ்கியிறந்திடுவான் ; ( எ-று.)-
என்றுதுரோணனிடம் துரியோதனன் கூறினான். வெடி – வெடிக்கிற எனினுமாம்.

நாளை ஓர் பகலுமே, நமக்கு வெய்ய போர்;
காளையர் அனைவரும் காமின், காமின்’ என்று,
ஆளையும் அடு களிற்று ஆழி மன்னவன்,
வேளை புக்கவரினும் வீழ்ந்து, வேண்டினான்.248.- மற்றும் போர்வீரரைத் துரியோதனன் வேண்டுதல்.

(பின்னரும்), ‘நாளை ஓர் பகல்உம்ஏ – நாளையொரு தினத்தின்
பகற்பொழுது மாத்திரமே, நமக்கு வெய்ய போர் – நமக்குக் கொடிய போர்
(நிகழ்வது); காளையர் அனைவர்உம் – வீரர் யாவரும், காமின் காமின் –
(சயத்திரனைப்) பாதுகாத்திடுங்கள் பாதுகாத்திடுங்கள்,’ என்று – என்று
(போர்வீரரனைவரையும் நோக்கிப் பலமுறை) சொல்லி, ஆளைஉம் அடு களிறு
ஆழிமன்னவன்- (தன்னை உணவளித்துக்காக்கிற) பாகனையும் கொல்லுகிற
மதயானைபோன்ற ஆஜ்ஞாசக்கரத்தையுடைய துரியோதனராசன், வேளை
புக்கவரின்உம்-ஆபத்துக்காலத்தில் சரணமடைந்தவர்களினும் அதிகமாக, வீழ்ந்து
வேண்டினான் -(அவர்களை) வணங்கிப் பிரார்த்தித்தான்; ( எ -று.)

     சயத்திரதனைக் கொல்லமாட்டாது அருச்சுனனொருவன் இறந்தமாத்திரத்தில்
மற்றைப் பாண்டவர்நால்வரும் உடனே இறந்திட, நாளையோடு
பகையொழியுமென்பது உட்கோள். ஆதலின் வணங்காமுடிமன்னனான இவன்
இங்ஙனம் வீழ்ந்து வேண்டினான். காளையர் அனைவரும் காமின் –
இடவழுவமைதி.
 உபகாரஞ்செய்தவர்க்கும் அபகாரஞ்செய்பவ னென்பது தோன்ற,
ஆளையும் அடு களிற்றுமன்னவனென்றார். ஆளையும் என்ற உயர்வுசிறப்பும்மையால்,
அதனை அவன் ஓம்புந்தன்மைவிளங்கும். வேலைபுக்கவரினும் – (மரக்கலமுடைந்து)
கடலில் வீழ்ந்தவரினும் மிகுதியாக என்றும்உரைக்கலாம்.    

மணி மதில் அரண் என மன்னு சேனையை
அணி பட நிறுத்தி, ஆம் அளவும் காப்பன் யான்!
பணிவுறு புண்ணிய பாவம் முற்றுவ
துணிவுறத் தெரியுமோ? தும்பை மாலையாய்!249. – இதுமுதல் மூன்று கவிகள் – ஒரு தொடர்:
துரோணன் தைரியங் கூறுதலைத் தெரிவிக்கும்.

தும்பை மாலையாய் – (போருக்குரிய) தும்பைப்பூ
மாலையையுடையவனே! யான்-, மன்னு சேனையை – நிலைபெற்ற (நமது)
சேனையை, மணி மதில் அரண் என – அழகிய மதிலாகிய அரண்போல,
அணிபடநிறுத்தி – இடைவிடாது பொருந்த நிற்கச் செய்து, ஆம் அளவுஉம் –
(என்னால்)இயலுமளவும், காப்பன் – (சயத்திரனைப்) பாதுகாப்பேன்; பணிவு உறு-
(தம்மைச்செய்த வரை) நியமித்தல் பொருந்திய, புண்ணியம் பாவம்- (அவரவர்
செய்த)நல்வினை தீவினைகள், முற்றுவ – நிறைவேறும் வகைகள், துணிவுஉற
தெரியும்ஓ -நிச்சயமாக முந்தி அறியப்படுமோ? [படா என்றபடி]; ( எ – று.)

     என்னாலியன்றமட்டில் யான் பாதுகாப்பேன்; யார் விதி எப்படி பலிக்குமோ?
தெரியாது என்பதாம். ‘பணியுறு’ என்ற பாடத்துக்கு – முந்திச் செய்து பொருந்திய
என்க; பணி = பண்ணி.         

‘முப்பது கடிகையின் மொழிந்த வஞ்சினம்
தப்பது படாதுஎனின், தனஞ்சயன் சிலைக்கு
ஒப்பது ஒன்று இல்லை; மற்று உரைத்தவா செயல்
அப் பதுமாசனன்தனக்கும் ஆகுமோ?

மொழிந்த வஞ்சினம்- (அருச்சுனன்) சொன்ன சபதம், முப்பது
கடிகையின் – (நாளைப்பகல்) முப்பதுநாழிகைக்குள்ளே, தப்பு அது படாது
எனின் -தவறாமல் நிறைவேறிவிடுவதானால், தனஞ்சயன் சிலைக்கு ஒப்பது ஒன்று
இல்லை -அருச்சுனனது வில்லுக்குச் சமமாவது யாதொன்றுமில்லை; (ஏனெனில்),-
உரைத்த ஆ(று) செயல்- சொன்னபடி செய்தல், அ பதுமஆசனன் தனக்கும்
ஆகும்ஓ-திருமாலின் திருவுந்தித்தாமரைமலரை இருப்பிடமாகவுடைய
அந்தப்பிரமதேவனுக்குத்தான் முடியுமோ? ( எ -று.)

     “சொல்லுதல் யார்க்குமெளிய வரியவாஞ், சொல்லியவண்ணஞ் செயல்”
என்றபடி சொன்னவாறுசெய்தல் படைக்குங் கடவுளான பிரமனுமுட்பட அரிதாதலின்,
அருச்சுனன் சொன்ன சபதத்தை நாளைநிறைவேற்றி விடுவானானால் அவனுக்கு
ஒப்பில்லையென்பதாம். மற்று – வினைமாற்று.  

மல்லினால் மல்லரை மலைந்த மால் அவண்
புல்லினான் என்னினும், சிந்து பூபனை
வில்லினால் வெல்ல அரிது’ என்று, மீளவும்
சொல்லினான், மறை மொழித் துரோணன்தானுமே.

(இங்ஙனஞ்சொன்ன), மறை மொழி துரோணன் –
வேதவாக்கியங்களைவல்ல துரோணாசாரியன்,’ மல்லினால் – மற்போரினால்,
மல்லரை- மற்போர்வீரரை, மலைந்த – அழித்த, மால் – கண்ணபிரான், அவண் –
அவ்விடத்தில் [எதிர்ப்பக்கத்தில்], புல்லினான் என்னின்உம் –
சேர்ந்துள்ளானாயினும்,சிந்து பூபனை – சிந்துநாட்டரசனான சயத்திரதனை,
வில்லினால் வெல்அரிது -விற்போரினால் வெல்லுதல் அரியதே, ‘ என்று மீளஉம்
சொல்லினான் – என்றுதிரும்பவும் சொன்னான்; ( எ -று.)- தான், உம் – அசை.

     துரோணன்தானும் என்ற உம்மையை உயர்வுசிறப்பு எனக் கொண்டு, இங்ஙன்
அறிஞனான துரோணன் சொல்லியது தகாது என்றபொருளைக் குறிப்பதெனினுமாம்.
பி -ம்: துரோணசாதனே.

     மல்லினால் மல்லரை மலைந்தகதை; – கம்ஸனது சபையிற்
கிருஷ்ணபலராமர் செல்லுகையில், அவனால் ஏவப்பட்ட சாணுரன் முஷ்டிகன்
முதலிய பெருமல்லர்கள் சிலர் அவர்களைக் கொல்லும்பொருட்டு வந்து எதிர்த்து
உக்கிரமாகப் பெரும்போர் செய்ய, அவர்களையெல்லாம் இவ்யாதவ வீரரிருவரும்
மற்போரினாலேயே கொன்று வென்றிட்டனரென்பது. 

கோப் பலருடன் பல கூறல்; மற்று அவர்
நாப் பல நவிலினும், நாளை வான் பகல்
தாப் புலி நிகர் சயத்திரதன்தன் உயிர்
காப்பல் யான்!? என்றனன், கதிரின் மைந்தனே52.- கர்ணன் தான் நாளைச் சயத்திரதனைக் காப்பதாகக் கூறுதல்.

கதிரின் மைந்தன் – சூரிய புத்திரனான கர்ணன்,- ‘கோ –
துரியோதனராசன், பலருடன் – அநேகராசர்களுடனே, பல கூற – (சயத்திரதனைக்
காக்கும்படி) அநேகவார்த்தைகளைச் சொல்ல, (அவற்றிற்கு), அவர் – அவ்வீரர்கள்,
நா – (தம்) நாவினால், பல நவிலின்உம் – அநேக உத்தரங்களைச் சொன்னாலும்,-
நாளை வான் பகல்- நாளைச் சிறந்த பகலில், தா புலி நிகர் சயத்திரதன் உயிர்
யான்காப்பல் – வலிமையையுடைய புலியை யொத்த சயத்திரதனது உயிரை நான்
பாதுகாப்பேன்,’ என்றனன் – என்று (உறுதிமொழி) கூறினான்; ( எ -று.) –
பாண்டவரது ஆக்க அழிவுகள் நாளையொரு பொபதின் தொழிலிலே நின்றுள்ளன
வாதலின், ‘வான்பகல்’ என்றான். தாப்புலி – தாவுதலையுடைய புலியுமாம். பி-ம்:
பலகூறல்.

அல் மருள் திமிரம் எய்து அளவும் நாளை, இத்
தென் மருள் தெரியல் வேல் சிந்து வேந்தனைக்
கல் மருள் திகிரியின் காப்பன் யான்!’ என்றான்,
துன்மருடணன் எனும் துணைவன் தானுமே.253.- துர்மர்ஷணன் கூறுதல்.

துன்மருடணன் எனும் – துர்மர்ஷணனென்கிற, துணைவன்தான்உம் –
(துரியோதனன்) தம்பியும்,-‘ அல்- இரவுக்குரிய, மருள் – மயக்கத்தைத் தருகிற,
திமிரம் – இருள், எய்து அளவுஉம் – வரும்வரையிலும்[சூரியாஸ்தமனமட்டிலும்],
நாளையின் – நாளைக்கு, தென் மருள் தெரியல் வேல் சிந்து வேந்தனை –
வண்டுகள் (தேனை மிகுதியாகக்குடித்து) மயங்குதற்குக்காரணமான பூமாலையைத்
தரித்த வேலாயுதத்தையுடைய சிந்துதேசத்தரசனை, மருள் -(காண்பவர்)
அஞ்சுதற்குக்காரணமான, திகிரி கல்லின் – சக்கரவாளமலை போல்
(வளைந்துகொண்டு), யான்காப்பன் – நான்பாதுகாப்பேன்,’ என்றான் -; -தென் –
தேன்என்பதன்குறுக்கல். பி -ம்: இரவிவீழ்.

விரல் புனை கோதை வல் வில்லின் வல்லவர்
குரல் படச் சேவகம் கூறுகிற்பரோ?
உரல் புரை நீடு அடி ஓடை யானையாய்!
சரற் புயல்ஆனது தனிதம் செய்யுமோ?254.-இதுவும், அடுத்தகவியும் – அசுவத்தாமன் கூறுதலைக் தெரிக்கும்.

இது முதல் மூன்றுகவிகள் – குளகம்.

     (இ -ள்.) உரல்  புரை – உரலை யொத்த, நீடு – அடி – பெரிய கால்களையும்,
ஓடை – நெற்றிப்பட்டத்தையு முடைய, யானையாய் – யானை போன்றவனே ! விரல்
– கைவிரலினால், புனை- அழகாகத்தெறிக்கிற, கோதை – நாணியையுடைய, வல் –
வலிய, வில்லின் – வில்லின் தொழிலிலே, வல்லவர் – வல்லவர்கள், குரல் பட –
உரத்தகுரலுண்டாக, சேவகம்- (தம்) பராக்கிரமத்தை, கூறுகிற்பர்ஓ –
எடுத்துச்சொல்லுவார்களோ ? சரத் புயல் ஆனது – சரத்காலத்து மேகமானது, தனி
தம் செய்யும் ஓ – இடிமுழக்கத்தைச் செய்யுமோ?                    

     எடுத்துககாட்டுவமையணி. இதனை, ஒரு சாரார் மறுபொருளுவமை
யென்பர். ஸரத், ஸ்தநிதம் என்னும் வடசொற்கள் திரிந்தன. சரத்காலம் –
கூதிர்ப்பருவம் : ஐப்பசி கார்த்திகை மாதங்கள்.    

பொரு தொழில் விதம் படப் புரிந்த காலையில்,
விருதர்கள் இருவரும் வேறல் கூடுமோ?
ஒரு தலை நின்று இவன் உடற்றும் வின்மையும்,
கருதலன் வின்மையும் காண்டி, காவலா!?

காவலா – அரசனே! பொரு தொழில் – போர்த்தொழிலை, விதம்
பட- ஒழுங்காக, புரிந்த காலையில் – செய்த பொழுது, விருதர்கள் இருவர்உம் –
இரண்டு வீரர்களும், வேறல் – சயித்தல், கூடும்ஓ-சாத்தியமோ? [ஒருத்தர்வெல்ல
மற்றொருத்தர் அழிதலே கூடுவது என்றபடி]; ஒரு தலை நின்றவன் – ஒருபக்கத்
தில் நின்ற சயத்திரதன், உடற்றும் – போர் செய்யும், வின்மைஉம் – வில்லின்
திறமையையும், கருதலன் – பகைவனான அருச்சுனனது, வின்மைஉம் – வில்லின்
திறமையையும், காண்டி – (நாளைக்குப்) பார்ப்பாய், ( எ -று.)

     இருதிறத்தவரும் தாம்தாம் பிறரைத் தவறாது வெல்வதாகத் தனித்தனி
சபதஞ்செய்தால், அச்சபதத்தில் ஒன்று பங்கப்பட்டே தீரும்; ஆதலின்,
வாயாற்சொல்லுதலில் பயனில்லை: காரியத்திற் காட்டுதலே சிறப்பு என
அசுவத்தாமன்நிஷ்பக்ஷபாதமாக நீதி கூறினான். பி – ம்: நின்றிவன்.

என்று சேனாபதி மகன் இயம்பினான்.
நின்ற காவலர்களும், ?நிசை புலர்ந்துழிச்
சென்று போர் புரிந்து, நின் தெவ்வர் யாரையும்
வென்று மீளுதும்? என விடை கொண்டார்அரோ.256.- யாவரும் துரியோதனனிடம் விடைபெற்றுச்செல்லுதல்.

என்று-, சேனாபதி மகன் – சேனைத்தலைவனாகிய துரோணனது
புத்திரனான அசுவத்தாமன், இயம்பினான் – கூறினான்; (பின்பு), நின்ற
காவலர்கள்உம்- (அங்கு) உள்ள அரசர்களெல்லோரும், ‘நிசை புலர்ந்தஉழி-
இவ்விரவு கழிந்தபொழுது [நாளை உதயத்தில்], சென்று போர் புரிந்து –
எதிர்த்துப்போய்ப் போர்செய்து, நின் தெவ்வர் யாரைஉம் – உன்
பகைவர்களெல்லோரையும், வென்று மீளுதும் – சயித்துத்திரும்புவோம்,’ என –
என்றுசொல்லி, விடை கொண்டார்- (துரியோதனனிடம்) அனுமதிபெற்றுச்
சென்றார்.

பூதனை முலை நுகர் பூந் துழாய் முடி
நாதனும், விசயனும், நலத்தொடு ஏவிய
பூதனும், அருக்கனும், துயில் உணர்த்தினார்,
சேதனர், புகழ் மொழித் திகிரி வேந்தையே.57.- கிருஷ்ணர்ச்சுனரும் கடோற்கசனும் மீள, சூரியனுதித்தல்

பூதனை முலை நுகர்- பூதனையென்னும் பேய்மகளது
தனத்தையுண்ட, பூ துழாய் முடி நாதன்உம் – அழகிய திருத்துழாய் மாலையைத்
தரித்த திருமுடியையுடைய கண்ணபிரானும், விசயன் உம்- அருச்சுனனும்,
நலத்தொடுஏவிய தூதன்உம் – நல்லெண்ணத்தோடு ( தருமன் துரியோதனனிடம்)
அனுப்பினதூதனான கடோற்கசனும், அருக்கன்உம்- சூரியனும்,- சேதனர் புகழ்
மொழி திகிரிவேந்தை – அறிவுடையார் புகழ்ந்துகூறுகிற சொற்களையுடைய
ஆஜ்ஞாசக்கரத்தையுடைய தருமராசனை. துயில் உணர்த்தினார் – தூக்கத்தினின்று
எழுப்பினார்கள்; ( எ -று.)

     கைலைக்குச் சென்ற கிருஷ்ணார்ச்சுனரும், துரியோதனன் பாசறைக்குத்
தூதுசென்ற கடோற்கசனும் மீளுமளவில், சூரியனுதிக்க, தருமன்
துயிலுணர்ந்தனனென்பதாம். பி -ம்: ஏகிய.

     பூதனைமுலைநுகர்ந்த கதை:- தன்னைக் கொல்லப் பிறந்தவன் ஒளித்து
வளர்கிறா னென்று உணர்ந்த கம்சனால் விசேஷமான பலம். சாமர்த்தியம் அழகு
முதலிய சிறப்புக்களையுடைய குழந்தைகளைக் கொல்லும்படி யேவியனுப்பப்பட்ட
பூதனையென்னும் ராட்சசி நல்ல பெண்ணுருவத்தோடு இரவிலே
திருவாய்ப்பாடிக்கு வந்து தூங்கிக்  கெண்டிருந்த கண்ணனாகிய குழந்தையை
யெடுத்து நஞ்சுதீற்றிய தனதுமுலையைக் கொடுத்துக் கொல்லதுமுயல, யெடுத்து
நஞ்சுதீற்றிய தனதுமுலையைக் கொடுத்துக் கொல்லமுயல, பகவானானகுழந்தை
அவ்வரக்கியின் முலைகளைக் கைகளால் இறுகப்பிடித்து அவளுயிரோடும் உறிஞ்சி
அவளைப் பேரிரைச்சலிட்டுக் கதறிவிழுந்திறக்கும்படி செய்த தென்பதாம்

கயிலை புக்கதும்; அரன் கணையும், சாபமும்,
வியன் மலர்ப் பொய்கையும், விசயற்கு ஈந்ததும்;
புயல் எனக் கரிய மெய்ப் பூந் துழாயவன்
துயில் உணர் குரிசிலுக்கு அடைவில் சொன்ன பின்,258.- அருச்சுனனோடு சென்று மீண்டசெய்தியைக் கண்ணன்
தருமபுத்திரனிடங் கூறுதல்.

இதுவும் மேற்கவியும் குளகம்.

     (இ-ள்.) புயல் என கரிய- மேகம்போலக் கறுத்த, மெய் – திருமேனியையும்,
பூதுழாயவன் – அழகிய திருத்துழாய்மாலையையு முடைய கண்ணன்,- துயில்
உணர்குரிசிலுக்கு – தூக்கம்விழித்த தருமராசனுக்கு,- கயிலை புக்கதுஉம்- (தாம்)
கைலாயத்தைச் சேர்ந்ததையும், (அங்கு), அரன்- சிவன், கணைஉம் – அம்பையும்,
சாபம்உம் – வில்லையும், (கணைவிற்களைக்கொண்ட), வியன் மலர் பொய்கைஉம் –
பெரிய பூக்களையுடைய தடாகத்தையும், விசயற்கு – அருச்சுனனுக்கு ஈந்ததுஉம்-
கொடுத்ததையும், அடைவின் – முறையே, சொன்னபின் – கூறியபின்பு, (எ-று.)-
“கடோற்கசனும் கூறினான்” என அடுத்தகவியோடு முடியும்.    

பை திகழ் மணிப் பணிப் பதாகையானிடை
எய்தி அங்கு உரைத்ததும், இருந்த மன்னவர்
வெய்து உறப் புகன்றதும், மீண்டு வந்ததும்,
கொய் தொடைக் கடோற்கசன்தானும் கூறினான்259.- கடோற்கசன் தான் தூதுசென்று மீண்ட செய்தியைக் கூறுதல்.

கொய் தொடை – (பூக்களைப்) பறித்துத்தொடுத்த மாலையுடைய,
கடோற்கசனும்–, –பை திகழ்- படத்தில் விளங்குகிற, மணி – மாணிக்கத்தையுடைய,
பணி- பாம்பையெழுதிய- பதாகை யானிடை – துவசத்தையுடைய
துரியோதனனிடத்து, எய்து – சேர்ந்து, அங்கு- அவ்விடத்து, உரைத்ததுஉம் –
(தான்)பேசினதையும், இருந்த மன்னர் – (அங்கு) இருந்த அரசர்கள், வெய்து உற-
கொடுமை பொருந்த, புகன்றதுஉம்- பேசினதையும், மீண்டு வந்தது உம் – (தான்)
திரும்பிவந்ததையும், கூறினான்-; ( எ-று.) பி -ம்: கொய்திறற். பதாகை –
பெருங்கொடி யென்பர், நச்சினார்க்கினியர்.

———————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading