ஸ்ரீ.வில்லிபாரதம் – மிகைப் பாடல்கள்- ஸ்ரீ.உ.வே.சே.கிருஷ்ணமாசாரியர் ஸ்ரீ உ.வே.வை.மு.கோபாலகிருஷ்ணமாசாரியர் உரைகள்

நீடு ஆழி உலகத்து, மறை நாலொடு ஐந்து என்று நிலைநிற்கவே,
வாடாத தவ வாய்மை முனிராசன் மாபாரதம் சொன்ன நாள்,
ஏடு ஆக வடமேரு வெற்பு, ஆகவம் கூர் எழுத்தாணி தன்
கோடு ஆக, எழுதும் பிரானைப் பணிந்து அன்பு கூர்வாம்அரோ.1. கடவுள் வாழ்த்து.

நீடு ஆழி உலகத்து – பெரிய கடலாற் சூழப்பட்ட
உலகத்திலே, ‘மறை நாலொடு – நான்கு வேதங்களுடனே, ஐந்து- (இது)
ஐந்தாவதுவேதமாகும், ‘ என்று நிலை நிற்க – என்று வழங்கும்படி நிலைத்து
நிற்குமாறு, வாடாததவம் வாய்மை முனிராசன் மாபாரதம் சொன்ன – அழியாத
தவத்தின்மெய்ம்மையையுடைய இருடியர்க்கு அரசனான வியாசமுனிவன்
மகாபாரதத்தைச்சொல்லிவந்த, நாள் – காலத்தில்,- வடமேரு வெற்பு ஆக ஏடு
ஆக -வடக்குத்திசையிலுள்ள மேருமலை முழுதும் (அந்நூலை) எழுதும்
ஏடாகுமாறும், தன்கோடு அம் கூர்எழுத்து ஆணி ஆக – தன்னுடைய (வாயில்
முளைத்துள்ள) தந்தமேஅழகிய கூரிய எழுத்தாணி யாகுமாறும், (அந்தத்
தந்தத்தைப் பிடுங்கிக்கையிற்கொண்டு), எழுதும்- (மகாபாரதம் முழுவதையும்)
எழுதின, பிரானை – விநாயகக்கடவுளை, பணிந்து – வணங்கி, அன்புகூர்வாம் –
அன்புமிகுவாம்; (எ – று.) அரோ -ஈற்றசை.

     “பாரத: பஞ்சமோவேத:” என்பது காண்க. பிரமன்தோன்றி
‘மகாபாரதத்தையெழுதுமாறு கணேசனை நினைப்பாய்’ என்ன, வியாச முனிவன்
அங்ஙனமே கணேசனைத் தியானித்துப் பாரதத்தை எழுதுமாறு வேண்டிக்கொள்ள,
அவ்வேண்டுகோட்கு இணங்கி விநாயகக் கடவுள் எழுதினா னென அறிக.
மகாபாரதத்தையெழுதின கடவுளாதல்பற்றி ஏற்புடைக் கடவுள் வணக்கமாக
விநாயகரைக் கவி வணங்குகின்றாரென்க. வெற்புஆக என்ற இடத்து ‘ஆக’
என்பது -எல்லாம் என்ற பொருளைக் குறிப்பிக்கவந்தது: ஊராக அவனுக்குப்பகை
என்றஇடத்துப்போல: இனி, வெற்பு ஏடாக, ஆகவம் கூர் தன் கோடு எழுத்தாணி
ஆகஎன்று பிரித்து எடுத்து-போரில்மிக்க தன்னுடைய தந்தக் கொம்பு
எழுத்தாணியாகஎன்று உரைப்பாருமுளர். மாபாரதம் சொன்ன நாள்
எழுதும்பிரான் என்றுவிநாயகரைக் கூறியதனால், யான் தமிழ்ப்படுத்த இதனையும்
இடையூறின்றி முடியுமாறுஅவன் அருள்வனென்ற கருத்துக் குறிப்பிக்கப்படும்.
‘மாமேரு’ என்றும் பாடம்.சிலபிரதிகளில், இந்தச் செய்யுளும் அடுத்த செய்யுளும்,
இந்நூலாசிரியரின் குமாரர்பாடிய சிறப்புப் பாயிரத்திற் காணப்படுகின்றன.

     முதலிரண்டுகவிகள்- பெரும்பாலும் முதல் நான்கு சீர்கள் காய்ச்சீர்களும்
ஈற்றுச்சீரொன்று கனிச்சீருமாகிவந்த கலிநிலைத்துறைகள்.

முருகு ஆர் மலர்த் தாம முடியோனை, அடியார் முயற்சித்திறம்
திருகாமல் விளைவிக்கும் மத யானை வதனச் செழுங் குன்றினை,
புருகூதன் முதலாய முப் பத்து முக் கோடி புத்தேளிரும்
ஒரு கோடி பூதேவரும் கைதொழும் கோவை, உற உன்னுவாம்.

முருகு ஆர் – வாசனைபொருந்திய, மலர் – (கொன்றைப்)
பூக்கள்தொடுக்கப்பட்ட, தாமம் – கொன்றைமாலையை, முடியோனை –
சிரசிற்கொண்டுள்ளவனும், அடியார் முயற்சி திறம் – பக்தர்களின் முயற்சியின்
கூறுபாடு,திருகாமல் – மாறுபட்டிடாமல், விளைவிக்கும் –
பயனைவிளையச் செய்கின்றவனாகி,மதம் யானை வதனம் செழுங் குன்றினை –
மதயானையின் முகம்போன்ற முகத்தைப்பெற்று வளமுள்ள மலைபோல் ஓங்கி
நிற்பவனும், புருகூதன் முதல் ஆய முப்பத்துமுக்கோடி புத்தேளிர்உம் –
இந்திரனைத்தலைவனாகவுடையராய் முப்பதுமுக்கோடியரென்று சொல்லப்படுகின்ற
தேவர்களாலும், ஒருகோடி பூதேவர்உம்-ஒரு கோடிக்கணக்கான அந்தணராலும்,
கைதொழும் -வணங்கப்படுகின்றவனுமான, கோவை – தலைவனாகிய
விநாயகக்கடவுளை, உற -மிகவும், உன்னுவாம் – தியானிப்போம்; (எ-று.)

     அடியார்முயற்சித்திறந் திருகாமல் விளைவிக்கும் குன்று எனவே,
அடியவனாகியஎனது முயற்சியை [மகாபாரதத்தைத் தமிழாற் பாடுதலை]யும்
இடையூறின்றிமுற்றுவிப்பான் அக்கடவுள் என்ற கருத்துக் குறிப்பிக்கப்படும்.
விநாயகக் கடவுள்வணக்கமாகவேயுள்ள இந்த இரண்டாவது செய்யுள், சில
பிரதிகளிலில்லை: ஒருகால்கவியினாற் பாடப்படாது இடைச்செருகலாய்
வந்ததாயிருக்கலாம். முப்பது முக்கோடியர்- அஷ்டவசுக்கள், ஏகாதசருத்திரர்,
துவாதசாதித்தர், அசுவினிதேவரிருவர் என்றமுப்பத்துமூவர்தேவர்களைத்
தலைமையாகக் கொண்டவர்கள்: இவர்கட்கெல்லாந்தலைவன் தேவேந்திரன்
என்க. வானுலகத்துத்தேவர் போலப் பூமியில்விளங்குபவரென்ற காரணத்தால்
பிராமணர், பூதேவரெனப்பட்டார். கோடி – மிகப்பலரென்ற பொருட்டது.
புருஹூதன் – யாகத்தில் மிகுதியாக அழைக்கபடுபவனெனஅவயவப்
பொருள்படும்.          

சூழ் ஆழி அகிலத்து மறைநாலு தமிழாகவே செய்தான், அவன்
கேழான மண நாறு கிளையான வரி வண்டு முகைகண்ட….ர
சூழான நற வேறு மகிழ் வீசு குருகூரன், உள்ளன்பர் கீழ்
ஆழாதபடி நாலு பதம் ஏற அருள் கூரும் அடி பேணுவாம்.

வாழி, வலம்புரி, தண்டு, எரி சக்கரம், வாள், அரி கைப் படையும்;
வாழி, நெடுஞ் சிலை; வாழி, அடுங் கணை; வாழி, மலர்ப் பதுமம்;
வாழி, தலம், புகழ்; வாழி, சவுந்தரி; வாழி, மலர்த்திருவும்;
வாழி, நலம் திகழ் பாடல்கள் ஏற்றுவர்; வாழி, தரித்தவரே.

வான் நாறு பெருஞ் சீர்த்தி வளர் குருகை, நம்பொருட்டு வந்து, தெய்வக்
கான் நாறு நறுந் துணர் வான் திருப்புளிக்கீழ் அமர்ந்து, நனி கருணை பூத்து,
தேன் நாறு தமிழ் மறைமுன் கிளந்தருளும் சிறுமுனிவன் செழு மெய்ஞ் ஞானப்
பால் நாறு பதகமலம் நமது பதக மலம் அறப் பழிச்சுவாமால்.

எவன் சொல் வாய்மையது என்று அருமறை எடுத்து இயம்பும்,
எவன் கொல் சாநவிப்புடைக் கரம் உயர்த்தி மெய் இசைத்தான்,
எவன் பொன்றாப் பரஞ் சுடர் ஒரு கூறு என இயைவான்,
அவன் செம் மாண் அடி அடைதும் நல் அருள்பெறற்பொருட்டே

——————————–  

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading