ஸ்ரீ.வில்லிபாரதம் – நான்காம் பாகம் -43. பதினைந்தாம் போர்ச் சருக்கம்- ஸ்ரீ.உ.வே.சே.கிருஷ்ணமாசாரியர் ஸ்ரீ உ.வே.வை.மு.கோபாலகிருஷ்ணமாசாரியர் உரைகள்

சித்து அசித்தொடு ஈசன் என்று செப்புகின்ற மூவகைத்
தத்துவத்தின் முடிவு கண்ட சதுர் மறைப் புரோகிதன்,
கொத்து அவிழ்த்த சோலை மன்னு குருகை ஆதி, நெஞ்சிலே
வைத்த முத்தி நாதன் அன்றி, வான நாடர் முதல்வன் யார்?கடவுள் வாழ்த்து

சித்து – சித்தும், அசித்தொடு-அசித்தும், ஈசன் – ஈசுவரனும்,
என்றுசெப்புகின்ற-என்றுசொல்லப்படுகிற, மூவகை தத்துவத்தின் –
மூன்றுவகைப்பட்டதத்துவப் பொருள்களின், முடிவு-தேர்ந்தநிலையை, கண்ட-
அறிந்த,சதுர் மறைபுரோகிதன்- நான்குவேதங்களும்வல்ல ஆசிரியரும்,  கொத்து
அவிழ்த்தசோலை மன்னு குருகை ஆதி – பூங்கொத்துக்கள் மலரப்பெற்ற
சோலைகள் பொருந்திய திருக்குருகூரி லவதரித்த தலைவருமான நம்மாழ்வரால்,
நெஞ்சிலே வைத்த – மனத்திலே வைத்துத்தியானிக்கப் பெற்ற, முத்தி நாதன்
அன்றி-பரமபதத்துக்குத் தலைவனான ஸ்ரீமந்நாராயணனே யல்லாமல், வானநாடர்
முதல்வர் – தேவர் கட்குத் தலைவராகவுள்ளவர், யார் – யாவர் (உளர்)?
(எவருமில்லையென்றபடி); (எ – று.)

சித் அசித் ஈஸ்வரன் என்ற மூன்றுவகைக் தத்துவங்களைக் கொண்ட
சித்தாந்தத்தை உள்ளபடி யுணர்ந்தவரும், நான்கு வேதங்களின் பொருளில்
வல்லவரும், ஸ்ரீவைஷ்ணவ விசிஷ்டாத்வை தமார்க்கப் பிரவர்த்தனத்துக்குப்
பிரதானஆசாரியராகவுள்ளவரும், திருக்குருகூரென்கிற திருநகரில் திருவவதரித்த
பிரபந்நஜநகூடஸ்தருமான நம்மாழ்வாரால் மனத்திலே கொண்டு தியானிக்கப்படுகிற
பரமபதநாதனான திருமாலே தேவர்க்கெல்லாந் தலைவனும் முந்தினவனுமான
னென்பதாம். சித்-ஆத்மா. அசித்-ஜடம். ஈசன்-முழுதற்கடவுள்-ஸ்ரீவைஷ்ணவ
விசிஷ்டாத்வைத சித்தாந்தத்துக்கு உரிய  இந்த மூன்று தத்துவங்களின் தன்மையை,
தத்வத்ரயம், ஸ்ரீவிஷ்ணுபுராணம் முதலிய நூல்களிற் பரக்கக் காண்க. ருக் யஜு ஸ்
ஸாமம் அதர்வணம் என்ற நான்கு வேதங்களின் தேர்ந்தபொருளையும் முறையே
திருவிருத்தம் திருவாசிரியம் திருவாய்மொழி பெரியதிருவந்தாதி யென்ற நான்கு
திவ்வியப் பிரபந்தங்களாகத் திருவாய்மலர்ந்தருளியமை தோன்ற,
‘சதுர்மறைப்புரோகிதன்’ என்றார். புரோகிதன் – வை திககாரியங்களை
முன்னிருந்துநடத்துபவன்.

     இதுமுதற் பதினொரு கவிகள் – கீழச்சருக்கத்தின் 12-ஆங் கவிபோன்ற
எழுசிராசிரியவிருத்தங்கள்.   

எடுத்த தீப ஒளியும் ஏனை இருளும் ஏக, ஏழு மாத்
தொடுத்த தேர் அருக்கர் சோதி தொழுது, தங்கள் தொழில் கழித்து,
எடுத்த கோபம் மூள நின்று, இரண்டு சேனை அரசரும்
கடுத்து உளம் கறுத்து, வெய்ய கண் சிவந்து, கடுகினார்.2.-இருதிறத்தவரும் போர்க்கு எழுதல்.

எடுத்த தீபம் ஒளிஉம் – ஏற்றியவிளக்குகளின் பிரகாசமும், ஏனை
இருள்உம்-(அதற்கு) மாறான இருளும் ஏக-நீங்கிச்செல்ல (சூரியனுதிக்க),-இரண்டு
சேனைஅரசர்உம்-இருதிறத்துச்சேனை அரசர்களும்,-ஏழு மா தொடுத்த தேர்
அருக்கர்சோதி தொழுது-ஏழுகுதிரைகள் பூட்டிய தேரையுடைய சூரியபகவானது
ஒளியைவணங்கி, தங்கள் தொழில் கழித்து-(மற்றும் உதயகாலத்தில்) தாங்கள்
கடமையாகச்செய்தற்கு உரிய கருமங்களைச் செய்துமுடித்து, எடுத்த கோபம் மூள
நின்று-மிக்ககோபம் பற்றி யெழ நின்று, உளம் கடுத்து கறுத்து – மனம் மாறுபட்டுச்
சினந்து, வெய்ய கண் சிவந்து-(அதனாற்) கொடியகண்கள் செந்நிறமடையப்பெற்று,
கடுகினார்-(போர்க்கு) விரைந்துசென்றார்கள்;

     உளங் கறுத்து, கண் சிவந்து – முரண்தொடை, ஏனை யிருள் –
விளக்கொளி செல்லாத இடங்களில் தங்கிய இருள் – எடுத்ததீபவொளியு மேனை
யிருளுமேக – உடனவிற்சியணி.   

நாலு சாப நிலையும் வல்ல நரனும், வீமன், நகுலனும்,
நாலு பாகம் ஆன சேனை நாதனும், சிரங்களா,
நாலு கூறு செய்து, தானும் நரனும் முந்த நடவினான்-
நாலு வேத முடிவினுக்கும் ஆதியான நாரணன்.3.-கண்ணன் அருச்சுனன் முதலியோருடன் போர்க்களஞ்சேர்தல்.

நாலு வேதம்முடிவினுக்குஉம் ஆதி ஆன நாரணன்-நான்கு
வேதங்களின் தேர்ந்தகொள்கைகட்கெல்லாம்  விஷயமான முதற்கடவுளாகிய
திருமாலின் திருவவதாரமான கண்ணபிரான்,- சாபம் நாலு நிலைஉம் வல்ல-
வில்வளைத்துஅம்பு  தொடுப்பார்க்கு உரிய நான்குவகை நிலைகளுந்தேர்ந்த,
நரன்உம் –  அருச்சுனனும், வீமன் – வீமனும், நகுலனும்-, நாலுபாகம் ஆன
சேனைநாதன்உம்-தேர்  யானை குதிரை காலாளென்று நான்கு பகுதியாகிய
சேனைக்குத் தலைவனான திட்டத்துய்மனும், சிரங்கள்  ஆ -தலைகளாக
(தலைமையாக), நாலு கூறு செய்து – (தம்பக்கத்துச் சேனையை) நான்கு பங்காகப்
பிரித்து, தான்உம் நரன்உம் முந்த நடவினான் – (அவற்றைத்) தானும்
அருச்சுனனுமாக முற்படச்செலுத்தினான்; (எ – று.)-பி-ம்; வீமநகுலரும்.

வாலவீமன் என்று பார் மதித்த ஆண்மை மன்னனும்,
சூலபாசபாணிதன்னொடு ஒத்த சோமதத்தனும்,
ஆலகாலம் என உருத்து அடர்த்த போரில் முந்துறக்
காலன் ஊரில் ஏகினார், கிரீடி ஏவு கணைகளால்.4.-வாலவீமனும் சோமதத்தனும் அருச்சுனனால் அழிதல்.

வாலவீமன் என்று –  வாலவீமனென்று பெயர் சொல்லப்பட்டு,
பார்மதித்த – நிலவுலகத்தாராற் கொண்டாடப்பட்ட, ஆண்மை –
பராக்கிரமத்தையுடைய,மன்னன்உம்-அரசனும்,-சூலபாசபாணிதன்னொடு ஒத்த –
சூலாயுதத்தையும்பாசமென்னு மாயுதத்தையும் கையிலுடைய யமனோடு சமனான,
சோமதத்தன்உம்-சோமதத்தனென்ற அரசனும், – ஆலகாலம் என உருத்து
அடர்ந்த போரில்-ஆலாகலவிஷம் போலக் கோபித்து நெருக்கிச்செய்த போரிலே,
முந்துற-முற்பட,கிரீடி ஏவு கணைகளால்-அருச்சுனன் செலுத்திய அம்புகளினால்,
காலன் ஊரில்ஏகினார்-யமலோகத்திற் சேர்ந்தார்கள்; (எ – று.) – வாண்மை எனப்
பிரிப்பின்-ஆயுதத் திறமை யென்க. பாசம் – கயிற்று வடிவமான ஆயுதம்,
சோமதத்தன் -பூரிசிரவாவின் தந்தை.

என் முன், என் முன்!’ என்று மன்னர் யாரும் யாரும் இகலவே,
முன் முன் நின்று, யாவரோடும் மூரி வில் வணக்கினான்-
வில் முன் எண்ண வில்லும் இல்லை, வெஞ் சமத்து மற்று இவன்-
தன்முன் எண்ண வீரர் இல்லை, என வரும் தனஞ்சயன்.5.-அருச்சுனனது போர்த்திறம்.

என்முன் என்முன் என்று-எனக்குமுன்னே (போர்செய்யவேண்டும்)
எனக்குமுன்னே (போர்செய்யவேண்டும்) என்று,  மன்னர் யார்உம் இகலஏ –
பகையரசர்கள்யாவரும் மாறு பட்டுநின்ற வளவிலே, முன் முன் நின்று
ஒவ்வொருவரெதிரிலும் நின்று , யாவரோடுஉம்-அவர்களெல்லாரோடும், மூரி வில்
வணக்கினான்-வலிய வில்லை வளைத்துப் பொருதான்; (யாவனெனில்),- ‘வில்முன்
எண்ண வில்உம் இல்லை – (இவனது காண்டீவ)   வில்லின்முன்  (ஒருபொருளாக)
மதிக்கப்படுதற்கு வேறோரு வில்லும் இல்லை; வெம் சமத்து-கொடிய போரில்,
இவன்தன் முன் எண்ண – இவனெதிரில் நன்குமதிக்கப்படுதற்கு, மற்றுவீரர்இல்லை
-வேறொரு வீரரும் இல்லை’,என – என்றுசொல்லும்படி, வரும் –
(சிறப்புடையவனாய்) வருகிற, தனஞ்சயன்-அருச்சுனன்; (எ – று.) பி-ம்: நவிலவே..

     இனி, ‘வில்முன் எண்ண வில்லும் இல்லை’ என்பதற்கு – இவனது வில்லுக்கு
மேலாக முதலில்வைத்து விரல்மடக்கி யெண்ணுதற்கு வேறொரு வில்லு மில்லை
யென்று உரைப்பினும் அமையும்; ‘இவன்றன்முனெண்ண வீரரில்லை,’என்பதற்கும்
இங்ஙனமே கொள்க. முன் முன் இன்றி யாவரோடும் எனப் பிரித்து, (அவர்களை
ஒருபொருளாக மதித்தில னாதலால் அவர்கள்விருப்பின்படி) ஒவ்வொருவர்முன்புந்
தனித்தனி போர்புரியாமல் ஏக காலத்தில் அனைவரோடும் வில்லைவளைத்துப்
போர்செய்தான் என்றுமாம்.      

ஈர்-இரண்டு முகமும் வந்து எதிர்ந்த வீரர் சேனைகள்
ஈர்-இரண்டும் வேறு வேறு பட்டு வென்னிடப் புடைத்து,
ஈர்-இரண்டு ஒர் தொடையில் வாளி ஏவி ஏவி இகல் செய்தான்-
ஈர்-இரண்ஐ-இரண்டும் ஆன விஞ்சை எய்தினான்..6.-துரோணனது போர்த்திறம்.

 ஈர் இரண்டும்உம் ஐ இரண்டுஉம் ஆன வீஞ்சை எய்தினான் –
பதினான்குவகையான வித்தைகளை யடைந்துள்ளவனாகிய துரோணன்,-ஈரிரண்டு
முகம்உம் வந்து எதிர்ந்த-நான்கு பக்கங்களிலும் வந்து எதிரிட்ட, வீரர் சேனைகள்
ஈரிரண்டுஉம்- பாண்டவரது சேனைகள் நான்கும். வேறு வேறுபட்டு வென் இட-
சின்னபின்னமாகிய புறங்கொடுக்கும்படி, புடைத்து-மோதி, ஓர் தொடையில்
ஈரிரண்டுவாளி ஏவி ஏவி-தொடுக்குந்தரமொவ் வொன்றிலும் நந்நான்கு
பாணங்களைச் செலுத்தி,இகல் செய்தான்-போர் செய்தான்; (எ – று.)

     இச்செய்யுளின் இறுதியடியிற் குறிக்கப்பட்டவன் துரோணனென்பது
மேற்கூறியது கொண்டு உணரப்படும். பதினான்குவித்தைகள் – வேதம்
நான்கு. 
சிஷை வியாகரணம் சந்தஸ் நிருக்தம் ஜ்யோதிஷம் கல்பம் என்ற
வேதாந்தங்கள்ஆறு, மீமாம்சை தர்க்கம் புராணம் தர்மசாஸ்திரம் என்ற
உபாங்கம் 
நான்கு என இவை, ஈண்டு, வாரணாவதச்சருக்கம்
“ஈரேழ்விஞ்சைத்திறனுமீன்றோன்றன்பாலெய்தி, நிரேழென்னயாவு
நிறைந்தகேள்வி நெஞ்சன்” (33) என்றது நினைக்கத்தக்கது, நாற்புறத்துஞ் சூழ்ந்த
நால்வகைச் சேனைக்கும் ஒவ்வொன்றுக்கு ஒவ்வொரு அம்பாக நான்கு அம்புகள்
ஒவ்வொருமுறையிலுஞ் செலுத்தப்பட்டன வென்க. 

புந்தி கூர் துரோணனுக்கு யாவரும் புறந்தர,
குந்திபோசன் எண் இல் ஆயிரம் குறித்த தேர்களோடு
உந்தி, மீள முடுகி, அந்த முனிவனோடு உடன்ற போது,
அந்தி வானம் ஒத்தது அம்ம, அமர் புரிந்த ஆகவம்.7.-குந்திபோசன் துரோணனுடன் எதிர்த்தல்.

புந்தி கூர் துரோணனுக்கு-ஞானம் மிக்க துரோணாசாரியனுக்கு,
யாவர்உம் புறம் தர-எல்லாரும் (இப்படி) முதுகு கொடுக்க,-குந்தி போசன்-, எண்
இல்ஆயிரம் குறித்த தேர்களோடு-கணக்ககில்லாத (மிகப்பல) ஆயிரங்களாகக்
குறிக்கப்பட்ட தேர்களுடனே, மீள  உந்தி-மறுபடி சென்று, முடுகி-விரைந்து, அந்த
முனிவனோடு-அந்தத் துரோணசாரியனுடனே, உடன்ற போது-பகைத்து எதிர்த்த
பொழுது,-அமர் புரிந்த ஆகவம் –  போர்செய்த அந்தயுத்தகளம், அந்தி வானம்
ஒத்தது-(இரத்தப் பெருக்கினால்) மாலைச்செவ்வானம் போன்றது; (எ – று.)-ஒருதரம்
புறங்கொடுத்தமைபற்றி, ‘மீளவுந்திஎன்றார்.-பி-ம்: அவர்புரிந்த  வாகவம். அம்ம
என்பது – ஆகவம் செவ்வான்போன்றமையைப் பற்றிய வியப்புக்குறிக்கும்

குருவொடு உற்று அடர்ந்து குந்திபோசன் வில் குனிக்கவே,
வரு சமத்து மத்திரன் தன் மருகனோடு முடுகினான்,
முரண் மிகுத்த கோப அங்கி மூள வந்த மாளவன்
கரு நிறத்து அனந்தசாயி இளவலோடு கடுகினான்.8.-சல்லியன் நகுலனோடும், மாளவன் சாத்தகியோடும் பொருதல்

குருவொடு உற்று அடர்ந்து – (கௌரவபாண்டவர்க்கு)
வில்லாசிரியனான துரோணனுடனே யெதிர்த்துப் பொருது நெருங்கி,
குந்திபோசன்-,வில் குனிக்க – வில்வளைத்துப் போர் செய்ய,-வரு சமத்து-எதிர்த்துவருகிற போரில்,மத்திரன் – மத்திரநாட்டரசனான சல்லியன் தன்
மருகனோடு – தன் உடன்பிறந்தவள்மகனான நகுலனுடனே, முடுகினான்-விரைந்து
போர் செய்தான்; முரண்மிகுந்த கோபம் அங்கி மூளவந்த – பகைமையை
மிகுவிக்கிற கோபாக்கினிபற்றியெழ (எதிர்த்து) வந்த, மாளவன் – மாளவ
நாட்டரசனான இந்திரவர்மா, கருநிறத்து அனந்த சாயி இளவலோடு – கரிய
திருநிறமுடையனாய் ஆதிசேஷனிற்பள்ளி கொள்பவனான திருமாலின்
(கண்ணபிரானது) தம்பியாகிய சாத்தகியுடன்,கடுகினான்-விரைந்து போர்செய்தான்;
(எ – று.)-மாளவன் பெயர், மேல்19-ஆங்கவியால் விளங்கும்.

முனிவன் மைந்தன் இந்திரன்தன் மைந்தனோடு முடுகினான்;
தினகரன்தன் மதலை காலின் மைந்தனோடு சீறினான்;
தனுவின் விஞ்சு தென்னனோடு சகுனி போர் தொடங்கினான்-
இனி அகண்டமும் சிதைக்கும் இறுதி காலம் என்னவே.9.-மற்றும்பலர் மற்றும்பலரோடு எதிர்த்தல்.

இனி-இப்பொழுது, அகண்டம்உம் சிதைக்கும் இறுதி காலம் –
உலகமுழுவதையும் அழிக்கின்ற கற்பராந்தகாலம்,’ என்ன – என்று (யாவரும்)
எண்ணும்படி,-முனிவன் மைந்தன் – துரோணபுத்திரனான அகவத்தாமன், இந்திரன்
தன் மைந்தனோடு-அருச்சுனனுடன், முடுகினான்-விரைந்து பொருதான்; தினகரன்
தன் மதலை – கர்ணன், காலின் மைந்தனோடு – வாயுபுத்திரனான வீமனுடன்,
சீறினான் – கோபித்துப் பொருதான்; தனுவின் விஞ்சு தென்னனோடு –
வில்தொழிலிலேமிக்க (சித்திரவாகன) பாண்டியனுடன், சகுனி போர்தொடங்கினான்-;
(எ -று)-‘இறுதிக்காலம்’ என வலிமிகாதது, செய்யுளோசைநயத்தின் பொருட்டு,
பி-ம்:
செறுக்கும்.

எந்த எந்த மன்னர் தம்மில் இருவர் ஆகி அமர் செய்தார்
அந்த அந்த வீரர் செய்த ஆண்மை சொல்லும் அளவதோ?
முந்த முந்த வென்று வென்று மோகரித்த தெவ்வர்தாம்
வந்த வந்த வழி மடங்க நின்றது, அவ் வரூதினி.10.-கௌரவசேனை வெல்லுதல்.

எந்த எந்த மன்னர் – எந்தெந்த அரசர்கள், தம்மில் இருவர்
ஆகிஅமர் செய்தார்-(கீழ்க் கூறியபடி) தமக்குள் இரண்டிரண்டு பேராய்ப்
போர்செய்தார்களோ, அந்த அந்த வீரர் – அந்தந்த வீரர்கள், செய்த-,ஆண்மை-
பராக்கிரமச்செயல், சொல்லும் அளவதுஓ-சொல்லுந் தரமுள்ளதோ? (அன்றென்றபடி);
முந்த முந்த வென்று வென்று மோகரித்த தெவ்வர்-முன்னே முன்னே
(பலநாட்களில்) மிகுதியாகச் சயித்து ஆரவாரித்த பகைவர்களாகிய
பாண்டவசேனையார், தாம் வந்த வந்த வழி மடங்க-தாம் தாம் வந்த வந்த வழியே
மீண்டு புறமிட, அ வரூதினி-அந்தக்கௌரவசேனை, நின்றது- (வெற்றிகொண்டு)
நின்றது

தேயு வாளி, வருணன் வாளி, தேவர் வாளி, திண்மை கூர்
வாயு வாளி, முதல் அனைத்து வாளியாலும் மலைதலால்,
ஆயு நூல் முனிக்கு உடைந்தது-அன்பு மிக்க தந்தையும்
தாயும் ஆகி மண் புரந்த தருமன் விட்ட தானையே.11.-பாண்டவசேனைதோற்றல்.

தேயு வாளி-ஆக்நேயாஸ்திரமும், வருணன் வாளி –
வாருணாஸ்திரமும், திண்மை கூர் வாயு வாளி-வலிமைமிக்க வாயவ்யாஸ்திரமும்,
தேவர் வாளி-(மற்றும்பல) தேவர்களின் அஸ்திரமும், முதல்-முதலான, அனைத்து
வாளியால்உம்-எல்லா அஸ்திரங்களினாலும், மலைதலால்-(துரோணன்)
போர்செய்ததனால்,-அன்பு மிக்கஉம் தந்தைஉம் தாய்உம் ஆகி-மிக்க அன்புள்ள
தந்தையும் தாயும் போன்று, மண்புரந்த-இராச்சியத்தை யாண்ட, தருமன்-யுதிஷ்டிரன்,
விட்ட-செலுத்தின,  தானை-சேனை,-ஆயும்நூல் முனிக்கு-தேர்ந்தெடுத்த (சிறந்த)
சாஸ்திரங்களில் வல்ல (அந்தத்)துரோணாசாரியனுக்கு, உடைந்தது-தோற்று
நிலைகுலைந்தது

குருவும், அக் குருகுலேசன் கொற்ற வெஞ் சேனைதானும்,
பொரு களம் கொண்டு வாகை புனைந்து, அவண் நின்ற போதில்,
ஒருவரை ஒருவர் ஒவ்வா உம்பர் மா முனிவர் யாரும்
துருவனும் உவமை சாலாத் துரோணனை வந்து சூழ்ந்தார்.12.-அச்சமயத்தில் முனிவர்பலர் துரோணனிடம் வருதல்.

குருஉம் – துரோணாசாரியனும், அ குருகுல ஈசன் கொற்றம் வெம்
சேனைதான்உம் – குருகுலத்துக்குத்தலைவனான துரியோதனனது வெற்றியையுடைய
கொடிய அச்சேனையும், பொரு களம் கொண்டு-போர்
செய்யுங்களத்தைவெற்றிகொண்டு, வாகை புனைந்து அவண் நின்ற போதில்-
(அவ்வெற்றிக்கு அறிகுறியாக) வாகைப்பூமாலையைத்தரித்து அப்போர்க்களத்து
நின்றபொழுதில்,-ஒருவரை ஒருவர் ஒவ்வா-ஒருத்தர்க்கு மற்றொருத்தரை உவமை
சொல்லக்கூடாத (ஒப்பில்லாத), மா உம்பர் முனிவர் யார்உம் – சிறந்த
தேவவிருடிகள்பலரும், துருவன்உம் உவமை சாலா துரோணனை-துருவனும்
உவமையாகப்பொருந்தாத (மிக்க சிறப்பையுடைய) அந்தத் துரோணாசாரியனை,
வந்து சூழ்ந்தார் -(இம்மண்ணுலகில்) வந்து சூழ்ந்தார்கள்; (எ – று.)

     இவர்கள் சூஷ்மரூபங்கொண்டு வந்தன ரென்று முதனூலால் அறிக.
துருவன்
-சுவாயம்புவமனுவின்மகனான உத்தாநபாதனுக்குச் சுநீதியென்னும்
மூத்தமனைவியினிடம் பிறந்த குமாரன்; இவன், தன்மாற்றாந்தாயான சுருசியாலும்
அவளுக்கு வசப்பட்ட தன் தந்தையாலும் இளமையிலே உபேக்ஷிக்கப்பட்டு
நகரத்தைவிட்டு நீங்கி வனம்புகுந்து சப்தருஷிகளிடம் மந்திரோபதேசம் பெற்று
ஸ்ரீமகாவிஷ்ணுவை இடைவிடாது தியானித்து, அப்பெருமானருளால்,
மூன்றுலோகங்களுக்கும் மேற்பட்டதும் சகல கிரகநக்ஷததிரங்களுக்கும்
ஆதாரமானதும் அவர்களுடைய ஸ்தாநங்கட்கெல்லாம் அதியுந்நதமுமான
திவ்வியபதவியை யடைந்து வாழ்கின்ற னென்பது, வரலாறு. அப்படிப்பட்ட
துருவனும் உபமானமாகக் கூறுதற்கேற்காத மேம்பாடுள்ளவன் என்று
துரோணனைச்சிறப்பித்துக்கூறினார், நிலவுலகமுழுவதும் ஆளும் அரசர்களான
கௌரவபாண்டவராதியோர்க்குக் குருவாய்ச் சிறந்த துரோணனது நிலைமை –
உலகத்தவரனைவரது நிலைமையினும் மேம்படுதலும், துருவன் கிரகநஷத்ரங்களைச்
செலுத்துந் திறத்தினும்மேலாகத் துரோணன்சேனைகளைச்செலுத்துகிறவனாதலுங்
காண்க. பி-ம்: புனைந்துதாம். உவமைசாலத்.

     இதுமுதல் பதினெட்டுக் கவிகள்-கீழ்ச்சருக்கத்தின் 155-ஆங்கவிபோன்ற
அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தங்கள். 

மகத்து இயல் மரீசி ஆதி எழுவரும், மலயச் சாரல்
அகத்தியன் முதலா உள்ள அனைவரும், வருதல் கண்டு,
செகத்தினில் நிறைந்த கேள்விச் சிலை முனி, எதிர் சென்று ஏத்தி,
முகத்தினால் இறைஞ்சி நிற்ப, மொழிந்தனர், மொழிகள் வல்லார்.13.-அம்முனிவர்கள் துரோணனை நோக்கிப் பேசத்தொடங்கல்.

மகத் இயல் – பெருமையாகிய தன்மையையுடைய, மரீசி ஆதி –
மரீசிமுதலிய, எழுவர்உம் – ஏழுபேரும் (ஸப்தருக்ஷிகளும்,) மலயம் சாரல்
அகத்தியன்முதல் ஆ உள்ள – பொதிய மலையின்சாரலிலே வாழ்கின்ற
அகத்தியன்முதலாகவுள்ள, அனைவர்உம் – எல்லாவிருடிகளும், வருதல் –
(தன்னிடம்)வருதலை, கண்டு – பார்த்து,-செகத்தினில் நிறைந்த கேள்வி சினை
முனி -உலகத்தில் நிரம்பிய நூற்கேள்விகளையுடைய வில்வித்தைவல்ல
அந்தணனானதுரோணாசாரியன், எதிர் சென்று ஏத்தி – (அவர்களை)
எதிர்கொண்டு சென்றுதுதித்து, முகத்தினால் இறைஞ்சி நிற்ப – தலைவணங்கி
நமஸ்கரித்து நிற்க,-மொழிகள்வல்லார் – பேச்சுக்களில் வல்லவர்களான
அம்முனிவர்கள், மொழிந்தனர் -(துரோணனைநோக்கிச் சில) சொன்னார்கள்;
(எ – று.)- அவற்றை, அடுத்தஇரண்டுகவிகளிற் காண்க.

     மஹத் – மகிமை வடசொல்; மரீசியாதி யெழுவர் – மரீசி, வசிஷ்டர், அத்திரி,
விசுவாமித்திரர், கௌதமர், ஜமதக்நி, பரத்துவாசர் என்பவர்; இதனை முதனூலால்
அறிக. இது, ஒருவகைச் சப்தருஷிக்கிரமம், அகஸ்தியமுனிவர் வடதிசைநீங்கித்
தென்திசை வந்து பொதியமலையில் வாழ்ந்தன ரென்பது பிரசித்தம். மகத்து
இயல்எனப்பிரித்து – யாகவுரிமையை யுடைய என்றுமாம்

மறை கெழு நூலும், தேசும், மாசு இலாத் தவமும், ஞானம்
முறை வரும் உணர்வும், அல்லால் முனிவரர்க்கு உறுதி உண்டோ?
துறை கெழு கலைகள் வல்லாய்! துன்னலர்ச் செகுக்கும் போரும்,
நிறைதரு வலியும், வாழ்வும், நிருபர்தம் இயற்கை அன்றோ?14.-இதுவும், அடுத்தகவியும்-ஒருதொடர்:முனிவர்கள் துரோணனுக்குச்
செய்யும் உபதேசம்.

துறை கெழு கலைகள் வல்லாய் – (பற்பல) பொருட்டுறைகள்
விளங்கப்பெற்ற சாஸ்திரங்களில் வல்லவனே! மறைகெழு நூல்உம் – வேதங்களும்
(அவற்றின்பொருள்) விளங்கப்பெற்ற சாஸ்திரங்களும், தேசுஉம்-பிரமதேஜகம், மாசு
இலா தவம்உம்-குற்றமில்லாத தபசும், ஞானம் முறைவரும் உணர்வும்உம் –
ஞானநூல்களின்படியே உண்டாகின்ற மெய்யறிவும், அல்லால் –
என்னும் இவையே யல்லாமல், முனி வரர்க்கு – சிறந்தஇருடி கட்க, உறுதி
உண்டுஓ- நன்மைதருவது வேறுஉண்டோ? துன்னலர் செகுக்கும் போர்உம் –
பகைவர்களையழிக்கின்ற போரும், நிறைதரு வலிஉம் – நிறைந்தபலமும், வாழ்வுஉம்
– செல்வவாழ்க்கையும், நிருபர்தம் இயற்கை அன்றுஓ – அரசர்கட்கு உரிய
இயல்பன்றோ? (எ -று.)

     அந்தணனாகிய நீ அரசர்க்குரியபோரையும் வலிமையையுஞ்
செல்வவாழ்க்கையையுங் கைவிட்டு, முனிவரர்க்குஉரியவேதசாஸ்திரங்கள்
முதலியவற்றைக் கைக்கொள்வாயாக என்றபடி. 

தொடு கணை வில்லும் வாளும் துரகமும் களிறும் தேரும்
விடுக; வெஞ் சினமும் வேண்டா; விண்ணுலகு எய்தல் வேண்டும்;
கடுக, நின் இதயம்தன்னில் கலக்கம் அற்று, உணர்வின் ஒன்று
படுக!’ என்று, உரிமை தோன்றப் பகர்ந்தனர், பவம் இலாதார்.

தொடு கணை வில்உம் – தொடுக்கின்ற அம்புகளையுடைய
வில்லையும், வாள்உம் – வாளையும், துரகம்உம் – குதிரையையும், களிறுஉம் –
யானையையும், தேர்உம் – தேரையும், வெம் சினம்உம் – கொடிய கோபத்தையும்,
விடுக – விட்டிடுவாயாக: வேண்டா- (இவை) வேண்டுவதில்லை: விண்  உலகு
எய்தல் வேண்டும் – மேலுகத்தை யடைதல்வேண்டும்: (ஆதலால்) கடுக –
விரைவாகநின் இதயந்தன்னில் கலக்கம் அற்று – உனது மனத்திலுள்ள சஞ்சலம்
ஒழிந்து,உணர்வின் ஒன்று படுக – ஒப்பற்ற பரதத்வஞானத்தில் ஒன்றுபட்டு
நிற்பாயாக, என்று-, உரிமை தோன்ற – (தமக்கு அவனிடமுள்ள) உரிய அம்பு
வெளியாகுமாறு,பகர்ந்தனர் – சொன்னார்கள்; பவம் இலாதார் –
பிறப்பில்லாதவரான அம்முனிவர்கள்;(எ -று.)

     உரிமைதோன்ற – ஸ்வாதந்திரியமாக வென்க; அவனுக்கு உரியகடமை
அவனுக்குப் புலனாகுமாறு என்றலு மொன்று.   

ஆன போது, ஆசான் நெஞ்சில் அரு மறை அந்தத்து உள்ள
ஞானமும் பிறந்து, போரில் ஆசையும் நடத்தல் இன்றி,
தூ நலம் திகழும் சோதிச் சோமியம் அடைந்து நின்றான்-
யானமும் விமானம் அல்லால், இரதமேல் விருப்பு இலாதான்16.-அப்போது துரோணன் கடும்போரொழிந்து
பொறுமை மேற்கொளல்.

ஆன போது – இங்ஙனம் முனிவர்கள் உபதேசித்த பொழுது,
ஆசான்- துரோணாசாரியன்,- அரு மறை அந்தத்து உள்ள ஞானம்உம் நெஞ்சில்
பிறந்து -(அறிதற்கு) அரிய வேதாந்தத்தி லமைந்துள்ள தத்துவஞானமும் மனத்தில்
தோன்றப்பெற்று, போரில் ஆசைஉம் நடத்தல் இன்றி – போர்செய்தலில்
விருப்பமும்செல்லுதலில்லாமல், யானம்உம் விமானம் அல்லால் இரதம்மேல்
விருப்பு இலாதான் -வாகனங்களுள்ளும் (வானத்திற் சஞ்சரிப்பதான)
விமானத்தின்மேலே (விருப்பஞ்)செல்வது அல்லாமல் தேரின்மேல்
விருப்பமில்லாதவனாய், தூ நலம் திகழும் சோதி சோமியம் –
பரிசுத்தமான நற்குணங்கள் விளங்கப்பெற்ற பரஞ்சோதியாகிய கடவுளை
யடைதற்குரியசாந் தகுணவமைதியை, அடைந்து நின்றன்-; (எ – று.)

     அரசர்க்குரிய தேரின்மேல் ஏறிநிற்றலை ஒரு சிறப்பாகக்கொள்ளலாம்,
புண்ணியப்பயனால் விமானம் வந்துதோனற அதன்மேலேறி வானுலகஞ்
சேர்தலிலேயே கருத்தைச் செலுத்தினனென்க. சோதி-சோதிவடிவமாகிய கடவுள்,
சோமியம்=ஸௌம்யம்: சாந்தகுணம்.   

கோடையால் வற்றி மீண்டும் கொண்டலால் நிறைந்த தெண் நீர்
ஓடையாம் என்ன நின்றோன் முன்னரே உரைத்த வார்த்தை,
‘மாடையால் இந்த்ர நீல மணி வரை வளைத்தாலன்ன
ஆடையான் அறிந்து சொற்ற அவதி ஈது’ என்று கொண்டான்.17.-துரோணனைக்கொல்ல இதுவே சமய மென்று கண்ணன் கருதுதல்.

கோடையால் – கோடைக்காலத்து முதிர்ந்த வெயிலினால், வற்றி-
நீர்வறண்டு, மீண்டுஉம்-மறுபடியும்,கொண்டலால்நிறைந்த-மேகம் மழை
பெய்ததனால்நிரம்பிய, தெள் நீர் – தெளிவான் நீரையுடைய, ஓடை ஆம் என்ன-
நீரோடைபோல,நின்றோன்-(அகம்நிரம்பித் தணிந்து) நின்றவனான துரோணன்,
முன்னர்ஏ -முன்னமே (முதல்நாட்போர்த் தொடக்கத்திலேயே), உரைத்த –
சொன்ன,  வார்த்தை-பேச்சை, இந்த்ரநீலமணி வரை மாடையால் வளைத்தால்
அன்ன ஆடையான் -இந்திர நீலரத்தினமயமானதொரு மலை பொன்னினாற்
சூழப்பட்டாற்போன்றபொற்பட்டாடையுடையவனான கண்ணபிரான்,-அறிந்து –
ஞாபகத்திற் கொண்டு,சொற்ற அவதி ஈது என்று கொண்டான் – (அவன்) சொன்ன
சமயம் இதுவேயென்று திருவுள்ளம்பற்றினான்; (எ – று.)

     மனம் ஒழுக்கநிலையில் நிற்றற்குஉரிய தத்துவஞானத்தை
இதுவரையிலுங்கொள்ளா திருந்த நிலைக்கு ஓடை கோடையால் வற்றிய
தன்மையையும், இப்பொழுது முனிவர்களின் இதோபதேசத்தால் அந்தமெய்யுணர்வு
நிரம்பப்பெற்ற நிலைக்கு அவ்வோடை கொண்டலால் தெண்ணீர்நிறைந்த
தன்மையையும் உவமைகூறினார். கோடைக்காலம் – முதுவேனிற்பருவம்;
க்ரீஷ்மருது:ஆனி ஆடிமாதங்கள். முன்னரே யுரைத்த வார்த்தை-
முதற்போர்ச்சருக்கச்செய்யுட்கள் 14, 15 காண்க. பி-ம்: கோறற்கவதி.

கடல் வடிம்பு அலம்ப நின்ற கைதவன்தன்னோடு ஓதி,
சுடு கனல் அளித்த திட்டத்துய்மனை அவன்மேல் ஏவி,
வடு உரை மறந்தும் சொல்லா மன் அறன் மைந்தனோடும்
அடியவர் இடுக்கண் தீர்ப்பான் ஆம் முறை அருளிச் செய்வான்:18.-கண்ணன் திட்டத்துய்மனைத் துரோணன்மேலேவித்
தருமனோடு பேசல்.

அடியவர் இடுக்கண் தீர்ப்பான்-(தனது) அடியார்களுடைய
துன்பங்களைப்போக்கியருள்பவனான கண்ணபிரான்,-கடல் வடிம்பு அலம்ப நின்ற-கடலானது (தன்) கால்விளிம்பை அலம்பும்படி (ஓங்கி)நின்ற, கைதவன் தன்னோடு-பாண்டியனுடனே, ஓதி-சொல்லி, கூடு கனல் அளித்த திட்டத்துய்மனை – சுடுகின்ற
நெருப்பினாற் பெறப்பட்ட த்ருஷ்டத்யும் நனை,அவன்மேல் ஏவி – துரோணன்மேற்
(போர்க்குச்) செலுத்தி,-வடு உரைமறந்துஉம்சொல்லா மன் அறன் மைந்தனோடுஉம்-
குற்றமாகிய வார்த்தைகளை மறந்துங்கூறாதபெருமையையுடைய தருமபுத்திரனுடனே,
ஆம் முறை-தக்கபடி, அருளிச்செய்வான்-(சிலவார்த்தைகளைக்) கூறியருள்வான்;
(எ – று.)-அவற்றை, அடுத்தஇரண்டுகவிகளிற் காண்க.

திட்டத்துய்மன் அப்பொழுது அருகிலில்லாமல் தூரத்திலிருந்ததனால்,
கண்ணன் பாண்டியனுடன் சொல்லி, அவன்  மூலமாக, துரோணனைப் பொருது
கொல்லுதற்கேற்ற சமய மிதுவேயென்ற செய்தியைத் திட்டத்துய்மனுக்குத்
தெரிவிக்கவைத்து, தருமபுத்திரனுடனே சிலகூறலாயின னென்பதாம். அடியவரிடுக்
கண்டீர்ப்பான் – கருத்துடையடைகொளியணி.

     முன்னனொருகாலத்தில் மதுரையையழித்தற்குவந்த கடலை
உக்கிரகுமாரபாண்டியன் ஸ்ரீசோமசுந்தரக்கடவுள் அருளிய வேலையெறிந்து
வற்றச்செய்து அக்கடல் தன்னுடையகாலின் விளிம்பை அலம்பும்படி
உயர்ந்துநின்றமையால், அவனுக்குக்கடல்வடிம்பலம்பநின்ற
பாண்டியனென்றுபெயராயிற்று. இந்தச் சரித்திரம், திருவிளையாடற்புராணங்களிற்
கூறப்பட்டுள்ளது, “அடியிற்றன்னளவரசர்க்குணர்த்தி, வடிவேலெறிந்த
வான்பகைபொறாது, பஃறுளியாற்றுடன் பன்மலையடுக்கத்துக்,
குமரிக்கோடுங்கொடுங்கடல் கொள்ள,” “ஆழிவடிவம்பலம்பநின்றானும்”
என்பனவும்காண்க. (அவன் பெயர் மதுரைக்காஞ்சியிலும், புறநானூற்றிலும்
‘நெடியோன்’என்றசொல்லாற்குறிக்கப்பட்டுள்ளது.) அப்பாண்டியனது தன்மையை
இங்கேஅருச்சுனனுக்குப்பெண்கொடுத்த சித்திர வாகனன்மேலேற்றி,
‘கடல்வடிம்பலம்பநின்றகைதவன்’ என்றார்.  இங்ஙனம் ஒருகுலத்தரசருள்
ஒருவர்க்குஉரிய தன்மையை மற்றொருவர்மேலேற்றி உபசாரவழக்காகக் கூறுவது
ஒருவகைக்கவிமரபு.

     ‘சுடுகனலளித்த திட்டத்துய்மன்’ என்றதன் விவரம்:-
அங்கிவேசமுனிவனிடத்தில் துரோணாசாரியனுடன் வில்வித்தையைக்கற்றுவந்த
பொழுது’ ‘எனக்கு இராச்சியங்கிடைத்தபின்னர்ப் பாதி உனக்குப்
பங்கிட்டுக்கொடுப்பேன்’ என்று அவனுக்கு வாக்குதத்தஞ்செய்திருந்த
பாஞ்சாலராசனான துருபதன், பின்பு ஒருகாலத்தில் அத்துரோணன் தன்
குழந்தைக்குப்பாலுக்காகப் பசுவேண்டுமென்று சென்று கேட்டபொழுது,
முகமறியாதவன்போல’நீயார்? என்று வினவிச் சிலபரிகாசவார்த்தைகளைச்
சொல்லிச் சபையிற் பங்கப்படுத்த, அப்பொழுது அவன்’ ‘என்மாணாக்கனைக்
கொண்டுஉன்னை வென்றுகட்டிக்கொணரச்செய்து உன் அரசையுங்
கைக்கொள்வேன்’ என்றுசபதஞ்செய்துவந்து, பின்பு அங்ஙனமே  அருச்சுனனைக்
கொண்டு பங்கப்படுத்தி அந்தப்பிரதிஜ்ஞையை நிறைவேற்றிவிட,
அவ்யாகசேனன் துரோணன்மீது  மிகக் கறுக் கொண்டு அவனைக்
கொல்லும்பொருட்டு ஒருபுத்திரனும் அருச்சுனனது பல பராக்கிரமங்களைக்கண்டு
மகிழ்ந்து அவனுக்குமணஞ்செய்து கொடுக்கும்பொருட்டு ஒருபுத்திரியும்
உதித்தல்வேண்டு மென்று புத்திரகாமயாகஞ் செய்விக்க, அவ்வோமத் தீயினின்று
திட்டத் துய்மனும் திரௌபதியும் தோன்றின ரென்பதாம். 

மந்தரம் அனைய பொன்-தோள் மாருதி மாளவக் கோன்
இந்திரவன்மாமேல் சென்று எரி கணை தொடுத்த போரில்,
அந்தரம் அடைந்தது ஐய! அச்சுவத்தாமா என்னும்
சிந்துரம்; அதனை வென்றித் திசைக் களிறு ஒப்பது அன்றே:19.-இதுவும், அடுத்த கவியும்-ஒருதொடர்: துரோணனைக்
கொல்லும் வகையைக் கண்ணன் தருமனுக்குக் கூறல்.

ஐய-ஐயனே! மந்தரம் அனைய – மந்தரமலையை யொத்த, பொன்
தோள் – அழகிய தோள்களையுடைய, மாருதி – வீமசேனன், மாளவம் கோன்
இந்திரவன்மா மேல் சென்று – மாளவதேசத்தரசனாகிய இந்திரவர்மாவென்பவன்
மேல் எதிர்த்துப்போய், எரி கணை  தொடுத்த – ஜ்வலிக்கின்ற அம்புகளைச்
செலுத்திச் செய்த, போரில்-, அச்சுவத்தாமா என்னும் சிந்துரம்-அகவத்தாமா
வென்னும் பெயருள்ள (அவ்விந்திரவர்மாவின் பட்டத்து) யானையானது, அந்தரம்
அடைந்தது – (இறந்து) மேலுலகடைந்தது; வேறு ஓர் திசை களிறு அதனை ஒப்பது
அன்று – (அவ்யானைக்கு அதுவே உவமையாவதன்றி) வேறாகிய
திக்குயானையொன்றும் அதற்குஒப்பாகமாட்டாது; (எ – று.) பி-ம்: அதனை
வெற்றித்,வலத்தாலந்தத்.

மதலை பேர் எடுத்துப் போரில் மடிந்தவாறு உரைத்த போதே,
விதலையன் ஆகி, பின்னை வில் எடான், வீதல் திண்ணம்;
முதல் அமர்தன்னில் அந்த முனிவரன் மொழிந்த மாற்றம்
நுதலுதி; நீயே சென்று நுவலுதி, விரைவின்!’ என்றான்.

மதலை பேர் எடுத்து-துரோணன் மகனான அசுவத்தாமாவென்ற
பேரையெடுத்து,  போரில் மடிந்த ஆறு உரைத்த போதுஏ-போரில் இறந்ததாகக்
கூறியபொழுதே, (துரோணன்), விதலையன் ஆகி – மனச்சஞ்சலமுடையவனாய்,
பின்னை – பின்பு, வில் எடான் – வில்லையெடுத்துப் போர்செய்யாமல் வீதல் –
இறத்தல், திண்ணம் – நிச்சயம்; முதல் அமர்தன்னில்-முதல்நாட்போரில். அந்த
முனிவரன் – சிறந்த முனிவனான அந்தத்துரோணன், மொழிந்த – சொன்ன,
மாற்றம்- வார்த்தையை, நுதலுதி-கருதுவாயாக: நீஏ சென்று விரைவின் நுவலுதி –
நீயே(துரோணன்முன்) சென்று விரைவில் (அங்ஙனம்) கூறுவாய், என்றான் –
என்று(கண்ணன் தருமனை நோக்கிச்) சொன்னான்; (எ – று.)

    இந்திரவர்மாவின் அசுவத்தாமாவென்னும்யானை இறந்த உண்மையைத்
துரோணபுத்திரனான அசுவத்தாமா இறந்ததாகத்தோன்றும்படி நீ துரோணனுக்குக்
கூறி அதனால் அவன் மனம் வருந்திப் போரொழிந்து இறக்கும்படி செய்திடவேண்டு
மென்று கண்ணன் தருமனுக்குக்கூறினான்.   

வையினால் விளங்கும் நேமி வலம்புரி வயங்கு செம் பொன்
கையினான், அந்தணாளன் கையறல் புகன்ற காலை,
மெய்யினால் வகுத்தது அன்ன மெய்யுடை வேந்தன் கேட்டு,
‘பொய்யினால் ஆள்வது இந்தப் புவிகொலோ?’ என்று நக்கான்21.-அதற்குத் தருமன் உடன்படாமை.

வையினால் விளங்கும் நேமி-கூர்மையோடு விளங்குகின்ற சக்கரமும்,
வலம்புரி – சங்கமும், வயங்கு – விளங்கப்பெற்ற, செம் பொன் கையினான் –
சிவந்தஅழகிய திருக்கைகளையுடையவனான கண்ணன், அந்தணாளன் கையறல்
புகன்றகாலை – (இங்ஙனம்) துரோணன் செயலற்று ஒழியும்வகையைச் சொன்ன
பொழுது,-மெய்யினால் வகுத்தது அன்ன மெய் உடை வேந்தன் –
சத்தியத்தினாலமைக்கப்பட்டது போன்ற உடம்பையுடைய தருமராசன், கேட்டு-,
பொய்யினால் ஆள்வது இந்த புவி கொல்ஓ என்று-இந்தப்பூமியைப் பொய்கூறி
அதனாற் பெற்று ஆளுவது தகுதியோ? என்று கூறி, நக்கான் – சிரித்தான்; (எ –
று.)-‘மெய்யினால்வகுத்ததன்னமெய்’ என்றது, தற்குறிப்பேற்றவணி.

அண்ணிய கிளையும், இல்லும், அரும் பெறல் மகவும், அன்பும்,
திண்ணிய அறிவும், சீரும், செல்வமும், திறலும், தேசும்,
எண்ணிய பொருள்கள் யாவும் இயற்றிய தவமும், ஏனைப்
புண்ணியம் அனைத்தும் சேர, பொய்மையால் பொன்றும் அன்றே.’22.-இதுவும், தருமன்வார்த்தை: பொய்ம்மையின் தீப்பயன்.

இரண்டுகவிகள் – ஒருதொடர்.

     (இ-ள்.) இல்உம் – மனைவாழ்க்கைத்துணையும் (தாரமும்), அரும்பெரு மக
உம் – அரிய பெரிய சந்தாநமும், அண்ணிய கிளைஉம்-நெருங்கிய மற்றைப்
பந்துவர்க்கமும், அன்பும்-, திண்ணிய சீர்உம் – உறுதியுள்ள அழியாத புகழும்,
மிக்கசெல்வமும்-, திறல்உம்-வலிமையும், தேசுஉம்-ஒளியும், எண்ணிய பொருள்கள்
யாஉம்-மற்றும் எண்ணப்படும் பொருள்கள் யாவையும், இயற்றிய தவம்உம்-செய்த
தவசும், ஏனை புண்ணியம் அனைத்துஉம்-மற்றைப்புண்ணியங்கள் யாவையும்,
சேர -ஒருசேர, பொய்ம்மையால் – பொய் சொல்லுதலினால், பொன்றும்
அன்றே -அழிந்துவிடுமன்றோ! (எ – று.)-அன்றே – தேற்றம்; பொய்கூறிய
அப்பொழுதேயெனினுமாம். பி-ம்: மனமுங்கேள்விச்செல்வமுநிதியுந்.

என்று கொண்டு, இனம் கொள் கோவின் இடர் கெட எழிலி ஏழும்
குன்று கொண்டு அடர்த்த மாயன் கூறவும், மறுத்துக் கூற,
கன்று கொண்டு எறிந்து, வெள்ளில் கனி நனி உதிர்த்து, வஞ்சம்
வென்று கொண்டவனும், மீள விளம்புவன் என்ப மாதோ:23.-அதற்குக் கண்ணன் சமாதானங்கூறத் தொடங்குதல்.

என்று கொண்டு – இவ்வாறு, இனம் கொள் –
கூட்டமாகத்திரளுதலைக்கொண்ட, கோவின் – பசுக்களின், இடர்-துன்பம், கெட-
நீங்கும்படி, எழிலி ஏழ்உம் – ஏழுமேகங்களையும், குன்று கொண்டு அடர்த்த-
(கோவர்த்தன) மலையைக்கொண்டு வலியஎதிர்த்துத்தடுத்துவிட்ட, மாயன் –
அற்புதசக்தியையுடையவனான கண்ணாபிரான் தானே, கூறஉம் – சொல்லவும்,
மறுத்து கூற,- (தருமன் அதனைத்) தடுத்துச் சொல்லலே,-கன்றுகொண்டு எறிந்து –
கன்றினால்வீசி, வெள்ளில் கனி நனி உதிர்த்து – விளாமரத்தின் பழத்தை
மிகுதியாய்உதிரச்செய்து, வஞ்சம் வென்று கொண்டவன்உம் – (அவற்றின்)
வஞ்சனையைச்சயித்துக் கொண்டவனாகிய  கண்ணணும், மீள விளம்புவன் –
மறுபடி கூறுவான்; (எ- று.)-அதனை, அடுத்த இரண்டுகவிகளிற்காண்க. என்ப,
மாதுஓ-ஈற்றசைகள், ‘என்றுகொண்டு’ என்பதில், கொண்டு-அசை; இனி, என்று
எண்ணிக்கொண்டு என்றலுமாம்.

உம்மையில் மறுமைதன்னில் உறு பயன் இரண்டும் பார்க்கின்,
இம்மையில் விளங்கும் யார்க்கும் அவர் அவர் இயற்கையாலே
மெய்ம்மையே ஒருவர்க்கு உற்ற விபத்தினை மீட்கும் ஆகின்,
பொய்ம்மையும் மெய்ம்மை போலப் புண்ணியம் பயக்கும் மாதோ!24.-இரண்டுகவிகிள்-ஒருதொடர்:தருமனுக்குக்கூறுஞ்
சமாதானத்தைத் தெரிவிக்கும்.

உம்மையில்-கழிந்த பிறப்பிலும், மறுமைதன்னில்-வரும்பிறப்பிலும்,
உறு-பொருந்திய, பயன் இரண்டுஉம்-வினைப்பயன்கள் இரண்டும்,-பார்க்கின் –
ஆராயுமிடத்து, இம்மையில் அவர் அவர் இயற்கையாலே –
இப்பிறப்பிற்காணப்படுகிற அவரவரது தன்மைகளினாலே, யார்க்குஉம் –
எல்லார்க்கும், விளங்கும்-; ஒருவர்க்கு உற்ற விபத்தினை -ஒருவர்க்கு மிக்க
ஆபத்தை, பொய்ம்மைஉம் – அசத்தியமும், மெயம்மைஏ மீட்கும் ஆகில் –
உண்மையாகவே போக்குமானால், மெய்ம்மைபோல – சத்தியம்போலவே,
புண்ணியம்பயக்கும். நல்வினைப்பயனைத் தரும்; (எ-று.)-மாதோ-ஈற்றசை.

     இப்பிறப்பில் ஒருவர் அநுபவிக்கிற இன்பதுன்பங்களினால் முற்பிறப்பில்
அவர்செய்த நல்வினை தீவினைகளை ஊகித்தறியலாமென்பதும், இப்பிறப்பில்
ஒருவர்செய்யும்நல்வினை தீவினைகளைகொண்டு வருபிறப்பில் அவர்அடையும்
இன்பதுன்பங்பளை ஊகித்தறியலா மென்பதும் முன்னிரண்டடிகளின் கருத்து,
பின்னிரண்டடியினால், பெரிய ஆபத்துக்காலத்தில்  அதனை நீக்கும் பொருட்டுப்
பொய்கூறலா மென்று வற்புறுத்தியபடி, “பொய்ம்மையும் வாய்மையிடத்த புரைதீர்ந்த,
நன்மை பயக்கு மெனின்” என்றதுங் காண்க. இதனால் அசுவத்தாமா
இறந்தானென்பது ஒருவகையாற் பொய்யாயினும் நன்மைபயத்தலால் மெய்போன்றதே
யென்று கூறியவாறு.   

வல்லவர் அனந்த கோடி மறைகளின்படியே ஆய்ந்து,
சொல்லிய அறங்கள் யாவும் நின்னிடைத் தொக்க ஆற்றால்,
புல்லிய பொய் ஒன்று என் ஆம்? பொரு பெரு நெருப்புக்கு ஈரம்
இல்லை; நீ ஒன்றும் எண்ணாது இயம்புதி, இதனை!’ என்றான்.

வல்லவர்-அறிந்த பெரியோர்கள், அனந்த கோடிமறைகளின்படிஏ –
அளவிறந்த கோடிக்கணக்கான வேத வாக்கியங்களிற் கூறியபடியே, ஆய்ந்து –
ஆராய்ந்து, சொல்லிய-சொன்ன,அறங்கள் யாஉம் – தருமங்களெல்லாம், நின்னிடை
தொக்க ஆற்றால்-உன்னிடத்துக் கூடியுள்ளபடியால், புல்லிய பொய்ஒன்று-
(இப்பொழுது நேர்கிற) இந்த ஒருபொய்யானது, என் ஆம்-(உனக்கு) யாதுதீங்கு
தருவதாம்? பொரு பெரு நெருப்புக்கு ஈரம் இல்லை – மூண்டெழுந்த மிக்க
நெருப்புக்கு ஈரத்தாலாகும் அபாயம் இல்லை; (ஆகவே), நீ ஒன்றுஉம் எண்ணாது
-நீயாதொன்றையுஞ் சிந்தியாமல், இதனை இயம்புதி – இப் பொய் யொன்றைக்
கூறக்கடவாய், என்றான்-என்று (கண்ணன் தருமனுக்குப்) கூறினான்; (எ – று.)
பி-ம்:
தொக்கவானாற்.

     ‘நான்கூறுவது நம்முடையபக்கத்தார்க்கு நன்மைதருவதானாலும்
எதிர்ப்பக்கத்தார்க்குத் தீமையை விளைத்தலால் இது பொய்யேயன்றோ!”என்று
தருமனுக்குத் தோன்றுஞ் சங்கையை,  இதனாற்பரிகரிக்கின்றான்
ஸ்ரீக்ருஷணனென்க.அசுவத்தாம இறந்தமைகூறுதல், நிகழாததுகூறலன்றி
நிகழ்ந்ததனையே மாறுபாடாக்கூறுத லாதலால், ‘புல்லியபொய்’ எனப்பட்டது
பொரு நெருப்பு-எல்லாவற்றையும் எரித்துவிடத்தக்க நெருப்பு எனினுமாம்.
‘பெருநெருப்புக்குஈரமில்லை’ என்பது, பழமொழி. பெரியோர் கூறிய அறங்கள்
யாவும் நின்னிடத்துஒருங்கேஅமைந்துள்ளதனால், இச்சிறு பொய்யினாற் சிறிதும்
தவறுண்டாகாது;பெருநெருப்புக்குச் சிறியஈரத்தினாற் சிறிதுங் கெடுதியில்லாத
வாறுபோல என்றான்;எடுத்துக்காட்டுவமையணி.  

போர் அற மலைந்து வென்று, போதத்தால் பவங்கள் ஏழும்
வேர் அற வெல்ல நிற்பான், வீடு உற நின்ற எல்லை,
வார் அற வய மா ஓட்டி, வயங்கு தேர் கடவிச் சென்று,
பேர் அறன் மைந்தன், நாவின் பிழை அறப் பேசுவானே:26.- தருமன் துரோணனருகிற் பிழையறக் கூறத்தொடங்குதல்.

போர் அற மலைந்து-போரை மிகுதியாகச் செய்து, வென்று-
வெற்றிகொண்டு,(பின்பு), போதத்தால் – தத்துவஞானத்தினால், பவங்கள் ஏழ்உம்
வேர் அற வெல்ல -எழுவகைப் பிறப்புக்களையும் வேரோடறும்படி சயித்திட,
நிற்பான் – சித்தனாய்நிற்பவனான துரோணன், வீடு உற நின்ற எல்லை-
முத்தியடையும்படி நின்றஇடத்திலே,-போ அறன் மைந்தன் – பெருமையையுடைய
தருமபுத்திரன், வார் அற வய மா ஓட்டி வயங்கு தேர் கடவி சென்று-
(குதிரைகளைக் கட்டிய) தோற்கயிறு அறுபடும்படி வலிய குதிரைகளை
விசையாகத்தூண்டி விளங்குகிற (தனது) தேரை நடத்திக்கொண்டு போய், நாவின்-
(தனது) நாவினால், பிழை அற பேசுவான் – தவறு இல்லையாகச்
சொல்பவனானான்;(எ – று.)-அதனை, அடுத்த கவியிற்காண்க.

     அசுவத்தாமா இறந்தா னென்று தான் கூறுவதை முழுப்பொய்யாகவன்றிச்
சிலேடைவகையாற் சமத்காரமாக அக்கருத்து நிகழக் கூறுதலால் ‘பிழையறப்
பேசுவான்’ என்றார் அத்தன்மையை, அடுத்த கவிவிற்  காண்க.   

அத்தனே அடு வல் ஆண்மை அச்சுவத்தாமா என்னும்
மத்த வாரணத்துக்கு, ஐயோ! மாருதி சிங்கம் ஆனான்;
எத்தனை கோடி சேனை இக் களத்து இறந்தது! அந்த
வித்தகன் மலைந்து செற்ற விரகை என் சொல்வது!’ என்றான்.27.- தருமன் பிழையறக் கூறும் வகை.

அத்தனே-தலைவனே! அடு வல் ஆண்மை-(பகையை) அழிக்குங்
கொடியவலிமையையுடைய, அச்சுவத்தாமா என்னும்-அசுவத்தாமாவென்கிற,
மத்தவாரணத்துக்கு-மதங்கொண்ட யானைக்கு, மாருதி-வீமசேனன், சிங்கம்
ஆனான்-சிங்கம்போலாயினான்; ஐயோ! எத்தனை கோடிசேனை –
எத்தனைகோடிக்கணக்கான சேனை, இ களத்து இறந்தது-இந்தப்போர்க்களத்திலே
(அசுவத்தாமனால்) இறந்திட்டது; இந்த வித்தகன்-இந்தச்சதுரப்பாடுடையவன்
(வீமன்), மலைந்து செற்ற-(அவ்வசுவத்தாமவைப்) பொருதுஅழித்த, விரகை –
தந்திரத்தை, என் சொல்வது-என்னவென்று சொல்லமுடிவது”
என்றான்-என்று (துரோணனைநோக்கிச்) சொன்னான், (தருமன்); (எ -று.)

     அசுவத்தாமா வென்ற யானையை வீமன் சிங்கம்போல அழித்தான் என்றும்,
அசுவத்தாமாவாகிய யானையை வீமனாகிய சிங்கம் அழித்திட்டது என்றும்
கவர்பொருள்படக் கூறிய நய மறிக. பி-ம்: அத்தனேயெனும் வல்லாண்மை

தீது இலான் உரைத்த மாற்றம் செவிப் படும் அளவில், நெஞ்சில்
கோது இலான் எடுத்த வில்லும் கொடிய வெங் கணையும் வீழ்த்தி,
‘போது இலான், இறந்தான் போலும், புதல்வன்!’ என்று
இனைதல் இன்றி,
ஏதிலான் போல நின்றான், யார்கணும் பந்தம் இல்லான்.28.-அதுகேட்டுத் துரோணன் படைக்கலம் கைவிட்டுநிற்றல்

முள் இயல் நாளக் கோயில் முனி நடுத் தலையை முன்னம்
கிள்ளிய பினாக பாணி, கிரீசனொடு ஒத்த வீரன்,
துள்ளிய பரித் தேர்த் திட்டத்துய்மனது அம்பு சென்று,
தள்ளியது அப்போது, அந்தத் தவ முனி தலையை அந்தோ!.29.-அச்சமயத்தில் திட்டத்துய்மன் துரோணன்தலையைத் துணித்தல்.

முள் இயல் நாளம் கோயில்-முட்கள் பொருந்திய தண்டையுடைய
தாமரையைத்தங்குமிடமாகவுடைய, முனி – அந்தணனான பிரமனது, நடு தலையை-
(ஐந்துதலைகளுள்) நடுவிலுள்ள தலையை, முன்னம் கிள்ளிய-முன்பு கிள்ளியெடுத்த,
பினாகபாணி கிரீசனொடு-பிநாகமென்னும் வில்லைக் கையிலுடையவனான
சிவபிரானுடனே, ஒத்த-,வீரன்-வீரனாகிய, துள்ளிய பரி தேர் திட்டத்துய்மனது
துள்ளியோடுகிற குதிரைகள் பூண்டதேரையுடைய திட்டத்துய்மனுடைய, அம்பு-
,சென்று-போய், அப்போது-,அந்ததவம் முனி தலையை-தவத்தையுடைய
முனிவனானஅந்தத் துரோணனது தலையை, தள்ளியது – துணித்துக் கீழே
தள்ளிற்று; அந்தோ-ஐயோ!(எ – று.)-‘அந்தோ’-கவி கூறிய இரக்கச்சொல்.

     துரோணன் சோர்ந்துநின்ற நிலையில் திட்டத்துய்மன் அவன்  தலையைத்
துணித்தது அக்கிரம மென்னுங் கருத்துப்பட, பிரமனைச் சிவன் நிஷ்காரணமாகத்
தலைகிள்ளியதனை உவமைகூறினரென்பர். முன்னியனாளம் – தாமரைக்கு,
அன்மொழித்தொகை.      

பட்டனன் வாசபதி நிகர் சேனாபதி என்ன,
கெட்டது, நாககேதனன் வீரம் கிளர் சேனை;
தொட்ட வில் ஆண்மைத் துரகததாமா எதிர் ஓடி,
கட்டு அழல் வேள்வித் தாதை இறந்த களம் கண்டான்.30.-துரோணன் இறந்ததனை அசுவத்தாமன் காணுதல்.

வாசபதி நிகர்-பிருகஸ்பதியை யொத்த, சேனாபதி-(கௌரவ)
சேனைத்தலைவனான துரோணன், பட்டனன்-இறந்தான், என்ன-என்று
அறிந்தவளவிலே,-நாககேதனன் வீரம் கிளர் சேனை-பாம்புக்கொடியனான
துரியோதனனது பராக்கிரமம் மிக்க சேனை, கெட்டது- நிலைகுலைந்தது;
(உடனே) தொட்ட வில் ஆண்மை துரகத்தாமா – (கையிற்) பிடித்த
வில்லின் வலிமையையுடைய   அசுவத்தாமன், எதிர் ஓடி-முன்னே ஓடிச்சென்று,
கட்டு அழல் வேள்வி தாதை இறந்த கனம் கண்டான்-நியமந்தவறாத
வைதிகாக்கினியில் யாகஞ்செய்தலையுடைய (தனது)  தந்தையான துரோணன்
இறந்துகிடந்த  போர்க்களத்தைப் பார்த்தான்; (எ – று.)

     வாசபதி=வாசஸ்பதி; சொல்லுக்கு(கல்விக்கு)த் தலைவனென்பது பொருள்.
பிருகஸ்பதி தேவர்கட்குக் குருவாதல்பற்றி, கௌரவர்க்குக் குருவான துரோணனுக்கு
அவனை உவமைகூறினார்; கல்வித்திறத்தை விளக்குதற்கு உவமைகூறிரென்றுங்
கொள்ளலாம். பி-ம்: தந்தை.

     இதுமுதல் நான்குகவிகள்-முதற்சீர் விளச்சீர் அல்லது மாச்சீரும், இரண்டு
நான்காஞ் சீர்கள் மாச்சீர்களும், மூன்றாஞ்சீர் விளச்சீரும், ஐந்தாவது
மாங்காய்ச்சீருமாகிய நெடிலடி நான்கு கொண்ட கலிநிலைத்துறைகள்.  

கண்டான், வீழ்ந்தான்; அம் முனி பாதம் கமழ் சென்னி
கொண்டான் மோதி, கண் பொழி நீரில் குளித்திட்டான்;
வண் தார் சோர, மண் உடல் கூர, வல் நஞ்சம்
உண்டார் போல, எண்ணம் அழிந்தான், உளம் நொந்தான்31.-அசுவத்தாமன் பித்ருசோகத்தால் வருந்துதல்.

(அசுவத்தாமன்),-கண்டான் – (தந்தையிறந்து கிடத்தலைப்)
பார்த்தான்;வீழ்ந்தான் – கீழேவிழுந்தான்; அ முனி பாதம் கமழ் சென்னி
கொண்டான் -அந்தத்துரோணாச்சாரியனது திருவடிகளை ஈறுமணமுள்ள (தனது)
சிரசின்மேற்கொண்டான்; மோதி-(தன்னைத் தானே) தாக்கிக்கொண்டு, கண் பொழி
நீரில்குளித்திட்டான் – கண்களினின்று பெருகுகிற நீரிலே முழுகினான்; வள் தார்
சோர -செழிப்புள்ள (தனது) போர்மாலை கீழேசரியவும், உடல் மண் கூர-உடம்பிற்
புழுதிமிகப்படியவும் (பெற்று),  வல் நஞ்சம் உண்டார் போல எண்ணம்
அழிந்தான் -கொடிய விஷத்தை யுட்கொண்டவர்போல நினைப்பற்றான்; உளம்
நொந்தான்-;(எ-று.)

     தன்மைநவிற்சியணி; ‘நஞ்சையுண்டார்போல’ என்ற உவமையை
அங்காமாகப் பெற்றுவந்தது, ‘வண்டார்சோர,’மண்ணுடல்கூர’ என்ற
அடைமொழிகளை ‘வீழ்ந்தான்’ என்றதனோடு இயைத்தலும் அமையும்,
கமழ்சென்னி-போர்ப்பூமாலை சூடியதனால் வாசனைவீசுகிறமுடி யென்க.
மோதிக்குளித்திட்டான் என இயையும்; மோதிப் பொழி என்று இயைத்து,
அலைமோதிக்கொண்டு கண்களினின்று மிகுதியாகச்சொரிகிற நீரி லெனினுமாம்.
வல்நஞ்ச முண்டார்போல வென்பதற்கு – சிவபிரான்போல வென்றலுமொன்று;
சிவகுமாரனுக்குச் சிவபிரானோடு உவமைஏற்கும்.

வன்பின் மிக்க வீடுமன் உன்னை, ‘மன் ஆகு!’ என்று,
அன்பின் இப் பார் அளவும், அன்றே அருள்செய்தான்;
முன் பின் எண்ண உவமை இலாதாய்! முடிவாயோ!
உன் பின் வந்தேன், உன்னை ஒழிந்தும், உய்வேனோ!32.- இதுமுதல் மூன்றுகவிகள்-ஒருதொடர்;அசுவத்தாமன்
புலம்பலைத் தெரிவிக்கும்.

வன்பில் மிக்க வீடுமன்-வலிமையின் மிக்க பீஷ்மன், உன்னை-, ஆகு
என்று-‘அரசனாவாய்’ என்றுசொல்லி, அன்பின் இ பார் ஆளஉம் – அன்போடு
இந்தவுலகத்தை யாளும் படியாகவும், அன்றே – அக்காலத்திலே, அருள்செய்தான்-
கருணையோடு கூறியுள்ளான்; முன்பின் எண்ண உவமை இலாதாய் – முன்னும்
பின்னும் (உன்னோடு ஒரு நிகராகவைத்து) எண்ணுதற்கு
ஓரொப்புமையில்லாதவனானநீ, முடிவாய்ஓ – இறந்திடுவாயோ? உன் பின்
வந்தேன் – உனக்குப்பின்பிறந்தவனான நான், உன்னை ஒழிந்துஉம் உய்வேன்ஓ –
உன்னையொழியப்பெற்றும் உயிர் வாழ்வேனோ? (எ – று.)

     துரோணன் வீடுமனிடம் வந்து சேர்ந்தபொழுது அவன் இவனைக்
கௌரவபாண்டவர்க்குப் பிரதானவில்லாசிரியனாக்கி அவனுக்கு இராசபட்டத்தையும்
அரசர்க்கு உரிய குடை கொடி தேர் முதலிய அங்கங்களையும் தந்தன னென்பதை
“முனி நீயையா இதற்கு முன்ன மின்று முதலா, இனி யிவ்வுலகுக் கரசாயெம்மி
லொருவனாகிக் குனிவில் வலியா லமருங் கோடியென்று கொடுத்தான்,
பனிவெண்குடையு நிருபர்க்குரிய வரிசை பலவும்” என்பதனாலும் அறிக.

வில்லாய் நீ; வெம் போர் முனை வெல்லும் விறலாய் நீ;
சொல்லாய் நீ; தொல் வேதியர் உட்கும் தொழிலாய் நீ;
வல்லார் வல்ல கலைகள் அனைத்தும் வல்லானே!
எல்லாம் இன்றே பொன்றின, உன்னோடு; எந்தாயே!

வில்லாய் நீ – வில்வல்லமையுடையாய் நீ; வெம் போர்முனை
வெல்லும்விறலாய் நீ – கொடிய போர்க்களத்திற் பகை வெல்லுந் திறமையுடையாய்
நீ;சொல்லாய் நீ – பழமையான அந்தணர்களும் அஞ்சும்படியான வைதீகத்
தொழிலுடையாய் நீ; வல்லார் வல்ல கலைகள் அனைத்துஉம் வல்லானே –
(ஒவ்வொரு சாஸ்திரத்தில்)வல்லமையுடையார் பலர் தேர்ந்துள்ள
சாஸ்திரங்களெல்லாவற்றையும் (ஒருங்கே தனியே) தேர்ந்தவனே! எந்தாயே.-எனது
தந்தையே! எல்லாம் – (கீழ்க்கூறிய விற்றிறம் முதலில்)  யாவும், இன்றே-
இன்றைக்கே,உன்னோடு-உன்னுடனே, பொன்றின – அழித்தனவாம்; (எ – று.)-
எந்தாயே -எமதுதாய்போன்றவனே! எனினுமாம்.

     வைதிக லௌகிக தருமங்க ளெல்லாவற்றுக்கும் துரோணன் ஒரு
நிதிபோன்றவனென்பது, இதில் விளங்கும். சொல்லாய்-
சாபாநுக்கிரகச் சொற்களையுடையாயெனினுமாம்; புகழையுடையாய் என்றலு
மொன்று.       

கற் கொண்டு கல்மழை முன் காத்த கள்வன் கட்டுரைத்த
மொழிப்படியே, கருதார் போரில்,
முன் கொண்ட விரதம் மறந்து, யாரும் கேட்ப, முரசு உயர்த்தோன்
பொய் சொன்னான்; முடிவில், அந்தச்
சொற் கொண்டு, வெறுங் கையன் ஆம் அளவில், திட்டத்துய்மன்
என நின்ற குருத் துரோகி கொன்றான்;
விற் கொண்டு பொர நினைந்தால், இவனே அல்ல; விண்ணவர்க்கும்
எந்தைதனை வெல்லல் ஆமோ?’

34. கற்கொண்டு கன்மழைமுன் றடுத்த கண்ணன் கற்கறித்துப்
பன்முறித்துத் கழறத் தானு.

 

கல் கொண்டு – (கோவர்த்தன) மலையைக்கொண்டு, கல்மழை
முன்தடுத்த – கல்மழையை முன்பு தடுத்த, கண்ணன்-, கல்கறித்து பல் முறித்து-
கல்லைக்கடித்தாற்போலப் பற்களைக் கடித்துக்கொண்டு, கழற-சொல்லவே, முரசு
உயர்த்தோன் தான்உம்-முரசக்கொடியை உயர நிறுத்தியவனான  தருமபுத்திரனும்,
முன் கொண்ட விரதம் மறந்து – பழமையாக (த்தான்) கொண்டுள்ள
(சத்தியமேபேசுதலாகிய)விரதத்தைத் தவறி, யார்உம் கேட்ப-
எல்லாருங்கேட்கும்படி(வெளிப்படையாக), பொய் சொன்னான்; முடிவில்-முடிவிலே
(அதன்பின்பு என்றபடி), அந்த சொல் கொண்டு வெறுங்கையன் ஆம் அளவில் –
அந்தவார்த்தையை உண்மையாகக்கொண்டு (என்தந்தை படைக்கலமொழிந்து)
வறுங்கையனாகுமளவில், திட்டத்துய்மன் என நின்ற குருத்துரோகி –
த்ருஷ்டத்யும்நனென்று பெயர்கூறப்பட்டுநின்ற குருத்துரோகியானவன், கொன்றான்-
(அவனைக்) கொன்றிட்டான்; (இங்ஙனமன்றி), வில்கொண்டு பொர நினைந்தால்-
(என்தந்தை) வில்லைக் கையிற்கொண்டு போர்செய்ய எண்ணினால், இவன்ஏ
அல்ல -இந்தத்திட்டத்துய்மனே யல்லன்: விண்ணவர்க்குஉம் – தேவர்கட்கும்,
எந்தைதனைவெல்லல் ஆம்ஓ – என் தந்தையை வெல்லுதல் இயலுமோ? (இயலா
தென்றபடி);(எ – று.)-என்று அசுவத்தாமன் புலம்பினான்.

     கற்கொண்டுகன்மழைதடுத்த, கண்ணன்-‘கன் மாரியாகையாலே,
கல்லையெடுத்து ரக்ஷித்தான்; நீர் மாரியாகில், கடலை யெடுத்து ரஷிக்குங்காணும்
என்று பட்டர் அருளிச்செய்வர்; இத்தால், இன்னத்தைக்கொண்டு இன்னகார்யஞ்
செய்யக்கடவோ மென்னும் நியதி யில்லை; ஸர்வசக்த னென்கை’ என்ற
வியாக்கியாநவாக்கியம் இங்கு அறியத்தக்கது,’ ‘கற்கொண்டு’ என்றது –
அந்தமலைமுழுவதையும்ஒருகல்லை யெடுத்தாற்போல அநாயஸமாக எளிதில்
எடுத்தமை தோன்றுதற்கு.வற்புறுத்தித் தருமனைப் பொய் கூறச்
சொல்லினனென்பது, ‘கற்கறித்துப் பன்முறித்துக்கழற’ என்பதனால் விளங்கும்.
‘கற்கறித்துப் பன் முறித்து’-தொகையுவமையணி.குருவைக் கொன்றதனால்,
திட்டத்துய்மன் ‘குருத்துரோகி’ எனப்பட்டான்- பி-ம்: காத்தகள்வன்கட்டுரைத்த
மொழிப்படியே கருதார்போரின்.

     இதுமுதல் எட்டுக்கவிகள்-பெரும்பாலும் ஒன்று இரண்டு ஐந்து ஆறாஞ்சீர்கள்
காய்ச்சீர்களும், மற்றைநான்கும் மாச்சீர்களுமாகிய கழிநெடிலடி நான்கு கொண்ட
எண்சீராசிரியவிருத்தங்கள்  

இப் புதல்வன் திருத் தாதை பாடு நோக்கி இவ் வகையே இரங்குதலும்,
இராசராசன்
அப் புதல்வன்தன்னை எடுத்து ஆற்றித் தேற்றி, அம்புயக் கண்
அருவி துடைத்து, அளி செய் காலை,
‘எப் புதல்வருடனும் விறல் குந்தி மைந்தர் யாவரையும் சென்னி
துணித்து, யாகசேனன்
மெய்ப் புதல்வன்தனையும் அற மலைவன்’ என்னா, வில்
வளைத்தான், சொல் வளையா வேத நாவான்.35.-அசுவத்தாமன் எதிர்ப்பக்கத்தவரனைவரையுங் கொல்வேனென்று
தொடங்குதல்.

இ புதல்வன் துரோணபுத்திரனான இந்த அசுவத்தாமன், திரு
தாதைபாடு நோக்கி-(தனது) மேலான தந்தையின் அழிவைக்குறித்து, இ வகைஏ
இரங்குதலும் – இவ்வாறே சோகித்தவளவிலே,-இராசராசன்-அரசர்க்கரசனான
துரியோதனன், அ புதல்வன் தன்னை –  அந்தத்துரோணபுத்திரனை, எடுத்து-,
ஆற்றி – ஆறுதல்கூறி, தேற்றி – சமாதானப்படுத்தி, அம்புயம் கண் அருவி
துடைத்து – தாமரைமலர்போன்ற அவன்கண்களினின்று இடையறாதுபெருகும்
நீர்ப்பெருக்கைத் துடைத்து, அளி  செய் காலை-அன்பு காட்டியபொழுது,-சொல்
வளையா வேதம் நாவான்-சொல்தவறாத வேதம்வல்லநாக்கையுடையவனான
அசுவத்தாமன்,-எ புதல்வருடன்உம் – இராசகுமாரரெல்லாருடனே, விறல் குந்தி
மைந்தர் யாவரைஉம் – வெற்றியையுடைய குந்தி புத்திர ரெல்லாரையும்
(பாண்டவரைவரையும்), சென்னி துணித்து-தலையறுத்து, யாகசேனன் மெய்
புதல்வன்தனைஉம் அற மலைவன்-துருபதனது சிறந்த புத்திரனான
திட்டத்துய்மனையும் உயிர்நீங்கக் கொல்வேன்,’ என்னா-என்று சபதஞ்செய்து,
வில்வளைத்தான்; (எ-று.)- ‘சொல்வளையா’என்பதற்கு-எவராலும் இகழ்ந்து
சொல்லுதற்குக்கூடாத என்றும் உரைக்கலாம். பி – ம்: தனைச்சேர

பாகசாதனன் மதலை தெய்வப் பாகன், பாகு அடரும் நெடும் பனைக்
கைப் பகட்டின் மேலான்,
மேக மேனியன், விரைவில், தங்கள் சேனை வேந்தையெல்லாம் சென்று
எய்தி, ‘வில் வாள் வேலும்
வாகனாதியும் அகற்றி, நின்மின்!’ என்ன, மாருதி மைந்தனை ஒழிந்தோர்
மண்ணின் மீது,
யோக ஞானியர் ஆகி அனைத்துளோரும் ஒருவரைப்போல் நிராயுதராய்
ஒடுங்கி, நின்றார்.36.- கண்ணன் கட்டளையால் அனைவரும் படைக்கலமும்
வாகனமும் ஒழிதல்.

மேகம் மேனியன்-மேகமபோலாக்கரிய திருமேனியையுடையவனும்,
பாகசாதனன் மதலை தெய்வம் பாகன் – இந்திரனுடைய குமாரனான அருச்சுனனது
தெய்வத்தன்மையுள்ள தேர்ப்பாகனுமாகிய கண்ணன், பாகு அடரும் நெடும் பனை
கைபகட்டின் மேலான்-பாகனைக்கொல்லுந் தன்மையதும் நீண்ட பனைமரம்போன்ற
துதிக்கையையுடையதுமான ஓர் ஆண்யானையின் மேல்ஏறினவனாய், விரைவில்
தங்கள் சேனை வேந்தை எலாம் சென்று எய்தி – சீக்கிரத்தில் தங்கள்
சேனையிலுள்ள அரசர்களையெல்லாம் போய்ச்சேர்ந்து, வில் வாள் வேல்உம்
வாகன ஆதிஉம் அகற்றி நின்மின் என்ன – ‘வில்முதலிய ஆயுதங்களையும்
வாகனம் முதலியவற்றையும் நீக்கிவிட்டு நில்லுங்கள்’ என்று சொல்ல,-மாருதி
மைந்தனை ஒழிந்தோர் அனைத்துளோரஉம் – வாயுபுத்திரனான
வீமசேனனாகிய வீரனொருத்தனை யொழிந்த மற்றுள்ளாரெல்லாரும், யோகம்
ஞானியர் ஆகி – யோகப்பயிற்சியாற் பெறுதற்கு உரிய தத்துவஞானத்தைக்
கொண்டவர்களைப்போன்று, ஒருவரை போல் நிராயுதர் ஆய் –
ஒருத்தரைப்போலவே படைக்கல மில்லாவர்களாய், மண்ணின்மீது ஒடுங்கி
நின்றார் -(வாகனங்களினின்று இறங்கி) வெறுந்தரையில் (போர்ச்செயலற்று)
ஒடுங்கிநின்றார்கள்;(எ – று.)

     மாருதியென்பது – வாயுபுத்திரனென்னும் பொருளதாதலால்,
மைந்தனென்பதற்கு – வீர னெனப்பட்டது, யோகஞானங்களையுடையவர்
திரிகரணமுமொடுங்கிநிற்றல் இயல்பு ஆதலால், அவர்கள்போன்று இவர்கள்
ஒடுங்கிநின்றாரென்றார். 

மாற்று அரிய மறையொடு நாராயணன்தன் வாளி தொடுத்தலும், அந்த
வாளி ஊழிக்
காற்று எரியோடு எழுந்தது என, கார்கோள் மொண்டு கார் ஏழும்
அதிர்ந்தது என, கனன்று பொங்கி,
ஏற்று அரிபோல் குழாம் கொண்ட வயவர்தம்மை எய்திய போது,
அனைவரும் தம் இதயம் ஒன்றிச்
சாற்று அரிய உணர்வினராய், ஏத்தி ஏத்தி, தாள் தோய் செங் கர
முகுளம் தலை வைத்தாரே.37.-அசுவத்தாமனதுநாரயணாஸ்திரத்தை யாவரும் வணங்குதல்.

மாற்று அரிய மறையொடு-விலக்குதற்கு அருமையான
மந்திரப்பிரயோகத்துடனே, நாரயணன்தன் வாளி தொடுத்தலும்.(அசுவத்தாமன்)
நாராயணாஸ்திரத்தை ஏவிய வளவிலே- அந்த வாளி – அந்த அஸ்திரமானது,-
ஊழிகாற்று எரியொடு எழுந்தது என-கற்பாந்த காலத்துப் பெருங்காற்று
நெருப்புடனேகிளர்ந்து வீசியது போலவும், கார்கோள் மொண்டு கார் ஏழ்உம்
அதிர்ந்தது என-சமுத்திரசலத்தை நிரம்ப எடுத்துப் பருகி மேகங்களேழும்
இடிமுழங்கியது போலவும், கனன்று பொங்கி-உக்கிரங்கொண்டு எழுந்து, ஏறு
அரிபோல் குழாம் கொண்ட வயவர் தம்மை எய்திய போது –
ஆண்சிங்கங்கள்போலத்திரண்டுள்ள (பாண்டவசேனை) வீரர்களைச் சேர்ந்த
பொழுது,- அனைவர்உம் -அவ்வீரரெல்லாரும், தம் இதயம் ஒன்றி-தங்கள்
மனத்தில் ஒற்றுமைப்பட்டு, சாற்றுஅரிய உணர்வினர் ஆய் – சொல்லுதற்கும்
அரிய தத்துவஞானத்தையுடைவர்களாய்,ஏத்தி ஏத்தி – மிகுதியாகத் துதித்து,
தாள் தோய் செம் கரம் முகுளம்தலைவைத்தார்-முழங்காலையளாவிய சிவந்த
(தங்களுடைய) கைகளைக் குவித்துத்தலைமேல் வைத்துக்கொண்டு
வணங்கினார்கள்;(எ – று.)

     நாராயணாஸ்திரம் மந்திரபலத்துடனே எதிர்ப்பக்கத்தவரனைவரையு
மழித்ததற்கு வர, யாவரும் கைகள் அரும்புகள்போலக்குவியத் தலைமேல்
வைத்தன ரென்க. மாற்றரிய மறை-வேறு எந்த மந்திராஸ்திரபலத்தினாலுந்தடுக்க
முடியாத பேராற்றலையுடைய மந்திர; மென்றபடி.  

பார் உருவி, திசை உருவி, அண்டகூடம் பாதலத்தினுடன் உருவி,
பரந்து சீறி
ஓர் ஒருவர் உடலின்மிசை மயிர்க்கால்தோறும் ஓர்ஒரு வெங்
கணையாய் வந்து உற்ற காலை,
நேர் ஒருவர் மலையாமல், தருமன் சேனை நிருபர் எலாம் நிராயுதராய்
நிற்றல் கண்டு,
போர் உருவ முனிமைந்தன் தொடுத்த வாளி பொரு படை கொள்
மாருதிமேல் போனதாலோ.38.- நாராயணாஸ்திரம் அனைவரையும் நீங்கி வீமன்மேற் செல்லுதல்.

முனி மைந்தன் – துரோணபுத்திரனான அசுவத்தாமன், போர்
உருவ-போரிலே (பகைவர்மேல்) ஊடுருவிச்செல்லும்படி, தொடுத்த-பிரயோகித்த,
வாளி-அந்த நாராயணாஸ்திரமானது, பார் உருவி-பூமியைத்துளைத்தும், திசை
உருவி -திக்குகளைத் துளைத்தும், பாதலத்தினுடன் அண்டகூடம் உருவி-
பாதாளலோகத்துடனே, அண்டகோளத்தின்முகட்டையும் துளைத்தும், பரந்து-பரவி,
சீறி-கோபங்கொண்டு, ஓர் ஒருவர் உடலின்மிசை மயிர்க்கால் தோறுஉம் ஓர் ஒரு
வெம் கணை ஆய்-ஒவ்வொருவரது உடம்பிலுள்ளமயிர்க்காலொவ்வொன்றுக்கும்
ஒவ்வொரு கொடிய அம்பாய்ப் பெருகி, வந்து உற்றகாலை-வந்து அடுத்தபொழுது,-
தருமன்சேனை நிருபர் எலாம்-யுதிட்டிரனதுசேனையிலுள்ள அரசர்களெல்லாரும்,
நேர் ஒருவர் மலையாமல்-எதிரில் ஒருவரும்போர் செய்யாமல், நிராயுதர் ஆய்
நிற்றல்-(கையிற்) படையெடாதவராய்வணங்கிநிற்பதை, கண்டு-பார்த்து,
(அந்தத்தெய்வஅஸ்திரம்), பொரு படை கொள்மாருதி மேல் போனது-போர்க்குரிய
ஆயுதத்தை யேந்தியுள்ள வீமசேனன்மேற்சென்றிட்டது; (எ – று.)-ஆல்-ஈற்றசை.
ஓ-வியப்பிடைச்சொல்; தவறாமலழிக்கவல்லநாராயணாஸ்திரத்துக்கு அவரனைவருந்
தப்பியுய்ய, அது வீமன்மேல் மாத்திரம்சென்றமையா லாகிய வியப்புப்பற்றி வந்தது.

     அந்தச்சிறந்த அஸ்திரத்துக்கு, படையெடாதவர்மேற் புக்குத் தொழில்
செய்யாமைஇயல்பென்க. போர் உருவம் முனிமைந்தன்-போரிற்
பெருமிதத்தோற்றமுடைய அசுவத்தாமன்; யுத்தமே ஒருருவங்கொண்டுவந்தாற்
போன்ற துரோணன துகுமாரனான அசுவத்தாம னென்றலுமாம்.

காற்றின் மதலையும், தனது தடந் தேர் உந்தி, கண் சிவந்து, மனம்
கருகி, கால் வில் வாங்கி,
கூற்றம் என எதிர் சென்று, முனிவன் மைந்தன் கொடுங் கணையை
மதியாமல், கடுங்கணாளன்
வேற்று உருவம் கொடு கனலி முதலா உள்ள விண்ணவர்தம் பகழிகளாய்
மேன்மேல் வந்த
மாற்று அரிய பகழிகளை ஒன்றுக்கு ஒன்று மாறான பகழிகளால்,
மாற்றினானே.39.-வீமன் அந்த அஸ்திரத்தை யெதிர்த்தல்.

(பின்பு) காற்றின் மதலைஉம்-வாயுபுத்திரனான வீமனும், தனது தட
தேர்உந்தி-தன்னுடைய பெரிய தேரைச் செலுத்தி, கண் சிவந்து மனம் கருகி-
(கோபத்தாற்)கண்கள் சிவந்து மனம், வெதும்பி, வில்கால் வாங்கி-தநுர்த்தண்டத்தை
வளைத்து, கூற்றம் என எதிர் சென்று-யமன்போல எதிரிலே சென்று, முனிவன்
மைந்தன் கொடுங்க கணையை மதியாமல்-துரோணபுத்திரனான அசுவத்தாமனது
கொடிய அந்த அஸ்திரத்தை லக்ஷ்யஞ்செய்யாமல், கடுங்கண் ஆளன்-அஞ்சாத
வலிமையுடையவனாய், வேறு உருமம் கொடு கனலி முதல் ஆ உள்ள
விண்ணவர்தம் பகழிகள் ஆய்மேல் மேல் வந்த மாற்று அரிய பகழிகளை –
வெவ்வேறுவடிவங்கொண்டு அக்கினி முதலாகவுள்ள தேவர்களது அஸ்திரங்களாய்ப்
பரிணமித்து மேன்மேல் வந்த விலக்குதற்கரிய அம்புகளை, ஓன்றுக்கு ஒன்று மாறு
ஆன பகழிகளால் – (அவற்றில்) ஒவ்வொன்றுக்கும் பகையான எதிரம்புகளினால்,
மாற்றினான் – விலக்கினான்; (எ – று.)-மாற்றுதல்-தடுத்தல்.

மூச்சினால் அடியுண்டும், கடுங் கண் கோப முது கனலால் எரியுண்டும்
முனை கொள் வாளி
ஓச்சினால் ஒடியுண்டும், குனித்த விற் கால் உதையினால்
உதையுண்டும்,நெடு நாண் ஓசை
வீச்சினால் அறையுண்டும், கடக வாகு வெற்பினால் இடியுண்டும்,
வெகுளி கூரும் பேச்சினால்
வெருவுண்டும், படாதது உண்டோ, பேர் அனிலன் மகனால்,
அப் பெருமான் வாளி?40.-நாராயணாஸ்திரம்வீமனாற்பலவாறு தடுக்கப்படுதல்.

மூச்சினால்-(வீமசேனனது) மூச்சுக்காற்றினால், அடியுண்டுஉம்-
அடிபட்டும்,-கடுங் கண் கோபம் முது கனலால் – பயங்கரமான
அவன்கண்களினின்று வெளிப்பட்ட முதிர்த்த கோபாக்கினியினால்,
எரியுண்டுஉம் -எரிபட்டும்,-முனை கொள் வாளி ஓச்சினால் – கூர்மையைக்
கொண்ட அம்பின்பிரயோகத்தால், ஒடியுண்டுஉம்-ஒடிபட்டும்,-குனிந்த வில்கால்
உதையினால்-வளைத்தவிற்கழுந்தின் மோதுதலால், உதையுண்டுஉம்-தாக்கப்
பட்டும்,- நெடு நாண் ஓசைவீச்சினால்-நீண்ட நாணியின்ஓசையினது வேகத்தால்,
அறையுண்டுஉம்-அடிபட்டும்,-கடகம் வாகு வெற்பினால்- கடகமென்னும் வளையை
யணிந்ததோள்களாகியமலைகளினால், இடியுண்டுஉம்-இடிக்கப்பட்டும்,-வெகுளி கூரும்
பேச்சினால்-கோபம் மிக்க வீரவார்த்தையால், வெருவுண்டுஉம்- அச்சங்கொண்டும்,-
பேர் அனிலன்மகனால் – பெரிய வாயுபுத்திரனான அவ்வீமனால், அ பெருமன்
வாளி – அந்தநாரயணாஸ்திரம், படாதது உண்டுஓ – படாதபாடு உண்டோ?
(எ -று.)-இங்ஙன் அந்த அஸ்திரம்பட்டது திருமாலின் அருளினாலென்க.

தாள் வலியால் எனைப் பல பல் வினை செய்தாலும், தப்ப ஒணா விதி
போலத் தடந் தோள் வீமன்
தோள் வலியால் விலக்கவும், அத் தொடை போய், வாசத் தொடை மிடை
மார்பகம் அணுகு, சுராரி தோள்கள்
வாள் வலியால் அரிந்த பிரான், கையில் வில்லும் வாளியும் வாகனமும்
உடன் மாற்றுவித்தான்;
நாள் வலியார்தமைச் சிலரால் கொல்லல் ஆமோ? நாரணன் சாயகம்
மிகவும் நாணிற்று அன்றே!41.- கண்ணன் வீமனையும் அந்த அஸ்திரத்துக்குத் தப்புவித்தல்

தாள் வலியால் – முயற்சியின் வலிமையினால், எனைபல பல்வினை
செய்தால்உம்-எத்துணைப் பலபலவாகிய தொழில்களை எதிராகச்செய்தாலும், தப்ப
ஒணா – தப்பமுடியாத, விதி போல – ஊழ்வினைபோல,-தட தோள் வீமன் தோள்
வலியால் விலக்கஉம் – பெரிதோள்களையுடைய வீமன் (தனது) புஜபலத்தால்
தடுக்கவும்,(தடைப்படாமல்),அ தொடைபோய்-அந்த அம்பு சென்று, வாசம்
தொடைமிடை மார்பு அகம் அணு க- பரிமளத்தையுடைய போர்மாலை நிறைந்த
(அவனது) மார்பினிடத்தைச் சேர,- சுர அரி தோள்கள் வாள் வலியால் அரிந்த
பிரான் – தேவர்க்குப் பகைவனான வாணாசுரனது தோள்களை ஆயுதத்தின்
வலிமையால் அறுத்திட்ட கண்ணபிரான், கையில் வில்உம் வாளிஉம் வாகனம் உம்
உடன் மாற்றுவித்தான் – (வீமனது) கையிலுள்ள வில்லையும் அம்பையும் (அவனது)
வாகனத்தையும் உடனே நீக்குவித்தான்;(அதனால்), நாரணன் சாயகம் மிகஉம்
நாணிற்று – (அந்த) நாராணாஸ்திரம் (அவனைக்கொல்லுதற்கு) மிகவும்
வெள்கிப்போயிற்று; நாள் வலியார்தமை சிலரால் கொல்லல் ஆம்ஓ – ஆயுள்
வலிமையுடையாரை எவராலேனுங் கொல்லமுடியுமோ? (எ – று.)

வீமனை நாராயணஸ்திரம் கண்ணன்செய்வித்த தந்திரத்தாற்
கொல்லாமலொழிந்த தென்ற சிறப்புப்பொருளை ‘நாள்வலியார்தமைச்
சிலராற்கொல்லலாமோ’ என்ற பொதுப்பொருள்கொண்டு விளக்கினார்;
வேற்றுப்பொருள்வைப்பணி. அன்றே-ஈற்றசை: தேற்றமுமாம்..

விட்ட வெம் பகழி நாணி மீளுதலும் வில்லின் வேதம்
உணர் முனிமகன்
வட்ட வெஞ் சிலையின்மீது பாசுபத வாளி வைப்பது மனம் செயா,
முட்ட வன்பினொடு நின்ற காலையில், வியாதன் என்று உரை
கொள் முனிவரன்,
தொட்ட தண்டும் மிதியடியும் ஆகி, உயர் சுருதி வாய்மையொடு
தோன்றினான்.42.-அசுவத்தாமன் பாசுபதமெடுக்கத் தொடங்கியபொழுது
வியாசன் வருதல்.

விட்ட வெம் பகழி-(அசுவத்தாமன்) பிரயோகித்த கொடிய
நாரயணாஸ்திரம், நாணி – வெட்கப்பட்டு, மீளுதலும் – திரும்பியவுடனே,-வில்லின்
வேதம் உணர் முனி மகன் – தநுர் வேதத்தையறிந்த துரோணாசாரியனது
புத்திரனான அசுவத்தாமன், வட்டம் வெம் சிலையின்மீது-வட்டமாக வளைக்கப்பட்ட
கொடிய வில்லின்மேல், பாசுபதம் வாளி வைப்பது – பாசுபதாஸ்திரத்தை வைத்துத்
தொடுப்பதாக, மனம் செயா – எண்ணி, முட்டவன்பினொடு நின்ற காலையில்-மிகக்
கொடுமையோடு நின்ற பொழுதில்,-வியாதன் என்று உரை கொள் முனிவரன் –
வியாசனென்று புகழ்பெற்ற சிறந்த இருடி, தொட்ட தண்டுஉம் மிதியடிஉம் ஆகி-
கையிலேந்திய பிரமதண்டமும் (பாதத்தில் தரித்த) பாதுகையு  முடையவனாய், உயர்
சுருதி வாய்மையொடு – சிறந்த வேதவாக்கியங்களுடனே [வேதவாக்கியங்களை
உச்சரித்துக் கொண்டு], தோன்றினான் – (அங்கு) எழுந்தருளினான்; (எ – று.)

     பாசுபதம் – பசுபதியை[சிவபிரானை]த்தெய்வமாகவுடையது. மிதியடி-
அடியினால்(கால்களினால்)மிதிக்கப்படுவதுஎனப் பொருள்படுங் காரணக்குறி.

     இதுமுதல் இச்சருக்கமுடியுமளவுள்ள ஒன்பது கவிகள்-பெரும்பாலும் ஒன்று
மூன்று ஐந்தாஞ்சீர்கள் மாச்சீர்களும், இரண்டு நான்கு ஆறாஞ்சீர்கள்
கூவிளங்காய்ச்சீர்களும், ஏழாவதுவிளச்சீருமாகிய கழிநெடிலடி நான்கு
கொண்டுஎழுசீராசிரியவிருத்தங்கள்.  

நின்ற சாப முனி மைந்தன், வந்த முனி நிருபனைப் பரமன் நிகர் எனச்
சென்று கைதொழுது, பரசிட,
பரிவு தீர் கருத்தினொடு செப்பினான்-
‘அன்று, போரில் அழி யாகசேனன் மகன் அழலினூடு வரு சாபமும்,
வென்றி வாகை புனை விசயனோடு கரு மேக வண்ணன் வரு விதியுமே.43.-வியாசன் அசுவத்தாமனுக்குச் சமாதானங் கூறுதல்.

நின்ற சாபம் முனி மைந்தன் – போரில்நின்ற வில்லுக்கு உரிய
துரோணனது புத்திரனான அசுவத்தாமன், வந்தமுனி நிருபனை – (அங்கு)
வந்துசேர்ந்த முனிவர் தலைவனான வியாசனை, பரமன் நிகர் என-யாவரிலுஞ்
சிறந்தகடவுளோடு ஒப்பாக (எண்ணி), சென்று கைதொழுது – (எதிர்கொண்டு)
அருகிற்சென்று கைகூப்பிவணங்கி, பரசிட-துதிக்க,-(அம்முனிவன்),-பரிவு தீர்
கருத்தினொடு – (அசுவத்தாமனது) துன்பத்தை நீக்குங் கருத்துடனே,-அன்று
போரில்அழி யாகசேனன் மகன் அழலினூடு வரு சாபம்உம் – அக்காலத்திற்
போரிலே(துரோணசிஷ்யனான அருச்சுனனுக்குத்) தோற்ற துருபதனது புத்திரனாகிய
திட்டத்துய்மன் யாகாக்கினியினின்று வந்த வரத்தையும், வென்றி வாகை புனை
விசயனோடு கரு மேகவண்ணன் வரு விதிஉம்-வெற்றிக்கு அறிகுறியான
வாகைப்பூமாலையைச்சூடிய அருச்சுனனுடன் காளமேகவண்ணனான கண்ணபிரான்
திருவவதரித்த முறைமையையும், செப்பினான் – (அவனுக்கு)எடுத்துக்
கூறியருளினான்;

     தவாறாமைபற்றியும், துரோணனுக்குத் தீங்காய் முடிதல்பற்றியும்,
திட்டத்துய்மன்வரத்தோடு பிறந்தமை ‘சாபம்’ எனப்பட்டது. நான்காமடியிற்
குறித்த செய்தி,பூமிபாரந்தீர்த்தற்குநாரயாணர் கிருஷ்ணார்ச்சுனராய்த்
தோன்றியமையாகும்.

வரத்தினால் உனது தந்தை போரினில் மடிந்தது அன்றி, ஒரு
வயவர் தம்
சரத்தினால் அவனை வெல்ல வல்லவர் தராதலத்தின்மிசை
இல்லையால்;
உரத்தினால் விறல் மயூரவாகனனை ஒத்த வீர! இனி உள் உறச்
சிரத்தினால் அரனை அடி வணங்கி, இடர் தீருமாறு நனி சிந்தியாய்!44.-வியாசன் அசுவத்தாமனுக்குச் செய்யும் உபதேசம்.

இதுவும், அடுத்த கவியும் – ஒருதொடர்.

     (இ-ள்.) உரத்தினால்-வலிமையினால், விறல் மயூர வாகனனை ஒத்த-
பராக்கிரமமுள்ளவனான மயில்வாகனமுடைய சுப்பிரமணியனைப் போன்ற, வீர-
வீரனே! உனதுதந்தை – உனது பிதாவான துரோணன், வரத்தினால்-(துருபதன்
பெற்ற)வரத்தினால், போரினில் மடிந்தது அன்றி-போரில் இறந்ததே யல்லாமல்,
தம் சரத்தினால் அவனை வெல்ல வல்லவர்-தமது அம்பினால் அத்துரோணனைச்
சயிக்க வல்லமையுடையவர், ஒரு வயவர்-ஒருவீரரும், தாரதலத்தின்மிசை இல்லை-
இந்நிலவுலகத்தில் இல்லை; இனி-, உள் உற-மனப்பூர்வமாக, சிரத்தினால்-(உனது)
தலையினால், அரனை அடி வணங்கி-சிவபிரானைத் திருவடிதொழுது, இடர் தீரும்
ஆறு-பிறவித்தன்பம் நீங்கும்படி, நனி சிந்தியாய் – மிகவும் தியானிப்பாயாக;
(எ – று.)

     இனி, வரத்தினால் – துரோணன்தான் அளித்த வரத்தினால்;
போர்த்தொடக்கத்திலே பாண்டவரை முன்னிட்டுக்கொண்டுவந்து தன்னைப்புகழ்ந்து
தன்னைக்கொல்லும் வகையைக் கூறுமாறு தன்னையேவேண்டிய கண்ணனுக்குத்
துரோணன் தானே சொல்லிக்கொடுத்த உபாயத்தின்படி யெனினுமாம். 

ஒன்ற ஐம் புலனை வென்று நீடு தவம் உரிமையின் புரிதி, உற்பவம்
பொன்ற’ என்று உறுதி கூறி, அன்பொடு புகுந்த தெய்வமுனி போதலும்,
‘மன்ற என்றும் இவர் செற்றதின் சத மடங்கு செற்றனர்கள்
இன்று’ எனா,
நின்ற என்றும், வெளி நிற்றல் அஞ்சி, நெடு நீல வேலையில்
மறைந்ததே.45.- வியாசன் உபதேசித்து மீள, சூரியன் அஸ்தரித்தல்.

உற்பவம் பொன்ற-பிறப்பு ஒழியும்படி, ஐம்  புலனை -ஐந்து
பொறிகளின் ஆசையையும், ஒன்ற-ஒருசேர, வென்று-சயித்து(அடங்கி), நீடு தவம்-
மிக்க தவத்தை, உரிமையின்-உரிய ஒழுக்கத்துடனே, புரிதி-செய்வாயாக’, என்று-
,உறுதி கூறி – உறுதிமொழிசொல்லி (உபதேசித்து), அன்போடு புகுந்த தெய்வம்
முனி- அன்பொடுவந்த தெய்வத்தன்மையுள்ள வியாசமுனிவன், போதலும்-
சென்றவளவிலே,-என்றுஉம் இவர் செற்றதின்-எந்நாளிலும் இவர்கள்
அழித்தவளவினும், இன்று-இன்றைக்கு, சதமடங்கு-நூறுமடங்கு அதிகமாய், மன்ற-
நிச்சயமாக, செற்றனர்கள்-அழித்தார்கள், எனா-என்று எண்ணி, வெளி நிற்றல்
அஞ்சி-வெளியிலேநிற்பதற்குப் பயந்து, நின்ற என்றுஉம் நெடு நீலம்வேலையில்
மறைந்தது-(வானத்தில்) நின்ற சூரியமண்டலமும் பெரிய நீலநிறமுள்ள (மேல்)
கடலில்மறைந்திட்டது;(எ -று.)-ஏதுத்தற்குறிப்பேற்றவணி.   

இருள் பரந்தது, இனி; அமையும் இற்றை அமர்’ என்று, துன்று கழல்
இட்ட தாள்
அருள் பரந்த விழி அறனின் மைந்தனொடு சேனை பாசறை
அடைந்தபின்,
உருள் பரந்த ரத துரக குஞ்சர பதாதியோடு கடிது ஓடினான்,
மருள் பரந்த தனி நெஞ்சன் ஆகி அடல் மன்னர் மன்னன்
எனும் மன்னனே.46.-இருநிறத்தவரும் படைவீட்டை யடைதல்.

இருள் பரந்தது-இருட்டுப் பரவிவிட்டது; இற்றை அமர் இனி
அமையும்-இன்றைத்தினத்துப்போர் இவ்வளவோடு போதும், என்று-என்று
நிச்சயித்து,துன்று கழல் இட்ட தாள் அருள் பரந்த விழி அறனின் மைந்தனொடு-
பொருந்தியவீரக்கழலையணிந்த பாதத்தையும் கருணை பெருகுகின்ற
கண்களையுமுடைய தருமபுத்திரனுடனே, சேனை-(அவனுடைய) சேனையும், பாசறை
அடைந்த பின்- படைவீட்டை யடைந்த பின்பு,-அடல் மன்னர் மன்னன் எனும்
மன்னன்-வலிமையையுடைய இராசாராசனென்று பெயர் பெற்ற துரியோதனராசன்,
மருள் பரந்த தனி நெஞ்சன் ஆகி-(துரோணவதத்தால்) மயக்கமிக்க தனித்த
மனமுடையவனாய், உருள் பரந்த ரததுரக குஞ்சர பதாதியோடு-சக்கரங்களால்
விரைந்துசெல்லுகின்ற தேர்களும் குதிரைகளும் யானைகளும் காலாள்களுமாகிய
சதுரங்கசேனையுடனே, கடிதுஓடினான் – விரைவாக ஓடிப்போனான்;(எ – று.)பி-ம்:
மைந்தனடு-பரந்திரத்.

தனது பாசறையில் ஆன அக் குரிசில், சஞ்சயன்தனை அழைத்து, ‘நீ
நினது காதல் உயிர் அனைய எந்தைதனை நிசிதனில் கடிதின் எய்தியே,
புனை துழாய்மவுலி விரகினால் முரசு உயர்த்த பூபன் உரை
பொய்த்ததும்,
எனது வாழ்வு, வலி, வென்றி, தேசு, உறுதி, யாவும் ஆம் முனி இறந்ததும்,47,48,- இரண்டுகவிகள் ஒருதொடர்: துரியோதனன் சஞ்சயனைத்
தந்தையிடம் அனுப்புதலைத் தெரிவிக்கும்.

தனஞ்சயன் தலை துணிக்க நின்ற வரி சாப கோப முதிர் சாயகத்
தினம் செய் நாதன் அருள் செல்வ மா மதலை சேனை நாதன்
இனி ஆவதும்,
இனம் செய் வண்டு முரல் தாம மார்பனொடு இயம்பி, மேல்
நிகழ்வ யாவையும்
மனம் செய்து, இவ் இரவு புலரும் முன், கடிதின் வருக!’
என்றனன், வணங்கியே

தனது பாசறையில் ஆன – தன்னுடைய படை வீட்டிற் சேர்ந்த
அ குரிசில்-அந்தத்துரியோதனராசன்,-சஞ்சயன்தனை அழைத்து – சஞ்சயமுனிவனை
வரவழைத்து,-(48) வணங்கி – நமஸ்கரித்து,-(அவனைநோக்கி),-(47) ‘நீ-,-நினது காதல்
உயிர் அனைய எந்தைதனை-உன்னுடைய அன்புக்கிடமான உயிரையொத்த
(பிராணசினேகிதனான) என் தந்தையை, நிசிதனில்-இவ்விரவிலே, கடிதின் எய்தி –
விரைவாய் அடைந்து,-புனை துழாய் மவுலி – தரித்த துளசிமாலையையுடைய
முடியையுடையவனான கண்ணனது, விரகினால் தந்திரத்தால், முரசு உயர்த்த பூபன்
உரைபொய்த்ததுஉம் – முரசக்கொடியை உயர வெடுத்த யுதிட்டிரராசன்
பொய்பேசியதையும்,-எனது வாழ்வு வலி வென்றி தேசு உறுதி யாஉம் ஆம் முனி-
என்னுடைசெல்வ வாழ்க்கையும் வலிமையும் வெற்றியும் ஒளியும் தைரியமும் ஆகிய
எல்லாவற்றி னுருவமுமாயிருந்த துரோணன், இறந்ததுஉம்-இறந்ததையும்,-(48)
தனஞ்சயன் தலை துணிக்க நின்ற – அருச்சுனனது தலைதுணித்தற்குத்
துணிந்துநின்ற, வரி சாபம் கோபம் முதிர் சாயகம் – கட்டமைந்த வில்லையும் கறு
மிக்க நாகாஸ்திரத்தையுமுடைய, தினம் செய் நாதன் அருள் செல்வம் மா மதலை –
பகலைச்செய்கின்ற தலைவனான சூரியன் பெற்ற சிறந்த செல்வப் பிள்ளையாகிய
கர்ணன், இனி சேனைநாதன் ஆவதுஉம் – இனி மேல்(எனக்குச்)
சேனைத்தலைவனாவதையும்,-இனம் செய் வண்டு முரல் தாமம் மார்பனொடு –
திரளாகச்சேர்கின்ற வண்டுகள் மொய்த்தொலிக்கப் பெற்றமாலையைத்தரித்த
மார்பையுடையவனான அத்தந்தையுடனே, இயம்பி – சொல்லி,-மேல் நிகழ்வயாவை
உம் மனம் செய்து – இனி நடக்கவேண்டியவையெல்லாவற்றையும்
ஆலோசித்துக்கொண்டு,-இ இரவு புலரும் முன்கடிதின் வருக – இவ்விராத்திரி
கழிந்து விடிவதற்கு முன்னமே விரைவில் மீண்டுவருவாயாக’, என்றனன் –
என்றுசொன்னான்;

அந்த அந்தணனும் அந்தனோடு இவை அனைத்தும் ஓதிய
பின், அந்தனும்
சிந்தை நொந்து அழுது இரங்கி, ‘யாவும் வினை செய்து
இரங்குவது தீது’ எனா
மந்தணம் பெருக, எண்ணி மீள விட, வந்து நள்
இருளில் மைந்தனுக்கு,
‘உந்தை தந்த உரை இது’ எனப் புரை இல் உரை புரோகிதனும்
ஓதினான்.49.-சஞ்சயன் திருதராட்டிரனிடஞ் சென்று மீளுதல்.

அந்த அந்தணன்உம் – அந்தச்சஞ்சயமுனிவனும், அந்தனோடு-(பிறவிக்)
குருடனான திருதராட்டிரனுடன், இவை அனைத்து உம் ஓதியபின் – (சென்று)
இவையெல்லாவற்றையுஞ் சொன்னபின்பு,-அந்தன்உம்-திருதராட்டிரனும்,
சிந்தைநொந்துஅழுது இரங்கி-மனம்வருந்திப் புலம்பிச்சோகித்து, வினை யாஉம்
செய்துஇரங்குவது தீது எனா-தொழில்களை யெல்லாஞ் செய்து விட்டு(ப் பின்பு)
அநுதபிப்பது  தீயது என்று கருதி, பெருக மந்தணம் எண்ணி-, மிகுதியாக
மந்திராலோசனை செய்து, மீள விட-(அச்சஞ்யனைத்) திரும்ப அனுப்ப,-
புரோகிதன்உம் – புரோகிதனான அச்சஞ்சயமுனிவனும், நள் இருளில்-
நடுராத்திரியிலேயே, வந்து – மீண்டுவந்து, மைந்தனுக்கு-திருதராட்டிரபுத்திரனான
துரியோதனனுக்கு, உந்தை தந்த உரை இது என புரை இல் உரை உரை
செய்தான் -உன்தந்தை சொல்லியனுப்பிய வார்த்தை இது வென்று குற்றமில்லாத
(சில)வார்த்தைகளைச்சொன்னான்;(எ – று.)

     ஒருகாரியத்தைச் செய்யத்தொடங்குமுன் அதைப்பற்றித் தீரவிசாரிக்க
வேண்டுமேயன்றிச் செய்தபின்பு அதைக்குறித்துக் கழிவிரக்கமாக வருந்துவது
தகுதியற்றதுஎன்பது, இரண்டாமடியின் கருத்து; “என்றென்றிரங்குவசெய்யற்க
செய்வானேன்,மற்றன்னசெய்யாமை நன்று” என்பது, திருக்குறள், பி-ம்:
புரோகிதனுமோதினான்.     

புதல்வன் ஆன திறல் அங்கர் பூபன் இருள் புலரும் முன் பொரு
படைக்கு மா
முதல்வன் ஆம் என மகிழ்ந்து, வாள் இரவி முந்து தேர்
கடவி உந்தினான்-
‘அதலம் ஆதி உலகு ஏழும் ஆளுடைய அரவின் மா மணி
அனைத்தும் வந்து,
உதய மால் வரையின் உச்சி உற்றதுகொல்!’ என்ன மேதினி
உரைக்கவே.50.- மறுநாட் சூரியோதய வருணனை.

இருள் புலரும் முன் – இருட்பொழுது கழிந்து விடிவதற்கு முன்னமே
(விடிந்தவளவிலே யென்றபடி) புதல்வன் ஆன திறல் அங்கர் பூபன் – (தனது)
மகனான வலிய அங்கநாட்டார்க்கு அரசனாகிய கர்ணன், பொரு படைக்கு மா
முதல்வன் ஆம்-போர்செய்கின்ற (கௌரவ) சேனைக்குச் சிறந்த தலைவனாவன்’,
என-என்றுஎண்ணி, மகிழ்ந்து-மகிழ்ச்சிகொண்டு,-வாள் இரவி-ஒளியையுடைய
சூரியன்,-‘அதலம் ஆதி உலகு ஏழ்உம் ஆள் உடைய – அதலம் முதலிய
கீழேழுலகங்களையும்-ஆளுதலுடைய, அரவின்-சர்ப்பராசனான ஆதிசேஷனது,
மாமணி அனைத்துஉம்- சிறந்த மாணிக்கமெல்லாம், மால் உதயம் வரையின் உச்சி-பெரிய உதயகிரியின் சிகரத்திலே,வந்து உற்றது கொல் – வந்துசேர்ந்ததோ?
என்ன – என்று, மேதினி -நிலவுலகத்தவர், உரைக்க- சொல்லும்படி,-முந்து தேர்
கடவி உந்தினான்-சிறந்ததேரை(த் தனதுபாகனான அருணன்மூலமாக) நடத்திக்
கொண்டு தோன்றினான்; (எ -று.)

பயன்தற்குறிப்பேற்றவணி பின்னிரண்டடி, சூரியனது ஒளிக்கு
ஆதிசேஷனதுமாணிக்கங்களின் ஒளியை உவமை கூறியவாறு.

———————————  

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading