திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -3-3-8-ஸ்ரீ M.A V .சுவாமிகள் —

குன்றம் ஏந்திக் குளிர்மழை காத்தவன்,
அன்று ஞாலம் அளந்த பிரான்,பரன்
சென்று சேர்திரு வேங்கட மாமலை
ஒன்று மேதொழ நம்வினை ஓயுமே.

பொ-ரை : கோவர்த்தனமென்னும் மலையைத் தூக்கிக் குளிர்ந்த மழையினின்றும் பசுக்களையும் ஆயர்களையும் காத்தவன்; அக்காலத்தில் உலகத்தை அளந்த உபகாரகன்; எல்லார்க்கும் மேலானவன்; இவ்வாறான இறைவன் சென்று தங்கியிருக்கின்ற திருவேங்கடம் என்னும் மலை ஒன்றையுமே வணங்க, நம்முடைய வினைகள் நீங்கும்.

    வி-கு : ‘ஏந்திக் காத்தவன்’ என்றும், ‘தொழ ஓயும்’ என்றும் முடிக்க. ‘ஒன்றுமே’ என்பதில் ஏகாரம் பிரிநிலை.

    ஈடு : எட்டாம் பாட்டு. 1‘வேங்கடங்கள்’ என்கிற பாசுரத்திற்கூறிய விரோதி போக்கலையும் திருமலையாழ்வார் தாமே செய்து கொடுப்பர் என்கிறார். இனி, ‘ஒரு பேற்றினைத் தரல் வேண்டுமோ? திருமலையே நமக்கு உத்தேஸ்யம்; அடிமை கொள்பவனுக்கு உத்தேஸ்யமானது அடியவனுக்கு உத்தேஸ்யமாகச் சொல்ல வேண்டுமோ?’ என்கிறார் என்னுதல்.

    குன்றம் ஏந்திக் குளிர் மழை காத்தவன் – 2‘இந்திரன் கல் மழை பெய்த போது பசுக்கள் ஆயர்கள் ஆய்ச்சிகள் எல்லோரும் நோவுபட, அப்பொழுது அக்கோகுலத்தைப் பார்த்துக் கிருஷ்ணன் சிந்தித்தான்,’ என்கிறபடியே, பசுக்களும் ஆயர்களும் மழையிலே தொலையப் புக, கண்ணுக்குத் தோன்றியதொரு மலையைப் பிடுங்கி ஏழு நாள் ஒருபடிப்படத் தரித்துக்கொண்டு நின்று அவற்றைக் காத்தவன். 3இதனால், துக்கத்தைப் போக்கும் சாதனம் மலையே என்பதனைத் தெரிவித்தவாறு. அன்று ஞாலம் அளந்த பிரான் – ஓர் ஊருக்கு உதவினபடி சொல்லிற்று மேல்; இங்கு நாட்டுக்குஉதவினபடி சொல்லுகிறது; விரோதியான மஹாபலியாலே பூமி கவரப்பட்ட அன்று, எல்லை நடந்து மீட்டுக்கொண்ட உபகாரகன். பரன் – எல்லாப் பொருள்கட்கும் உயர்ந்தவன். சென்று சேர் திரு வேங்கட மா மலை – அவன் தனக்கு 1உத்தேஸ்யம்’ என்று வந்து வசிக்கிற தேசம். ஒன்றுமே தொழ – ‘ஒன்றையுமே வணங்க. உள்ளே எழுந்தருளி யிருக்கிறவன் தானும் வேண்டா, திருமலையாழ்வார்தாமே அமையும்,’ என்பார், ‘ஒன்றுமே’ என்கிறார். நம் வினை ஓயும் – ‘பெற வேண்டும் பேற்றினைப் பெற்றிலோம்’ என்கிற துக்கத்தைப் போக்கும்’ என்னுதல்; ‘வேங்கடங்கள்’ என்னும் பாசுரத்திற்கூறிய, அடிமை செய்வதற்குத் தடையாக உள்ளனவற்றைப் போக்கும் என்னுதல்.

புருஷார்த்தத்தை திருமலை தர வேணுமோ
திருமலையே புருஷார்த்தம்
சேஷிக்கு உத்தேச்யம் ஆனது சேஷ பூதனுக்கும் உத்தேச்யம்
மலை ஒன்றே போதுமே
குன்றம் ஏந்தி குளிர் மழை காத்தவன்
சென்று சேர் திருவேம்கடம் ஒன்றுமே தொழ
துக்க நிவ்ருதிக்கு நிவர்தகம் மலை
அங்கும் கோவர்த்தன மலை -மழைக்கு பரிகாரம்
துக்க வர்ஷினி சம்சாரம் –
கோ கோபி ஜனங்கள் -நலிய புக கண்ணுக்கு தோற்றின மலையை
அன்று ஞாலம் -அது ஊருக்கு செய்தான்
நாட்டுக்காக உதவின படி -வாமனன் -சர்வ ரஷகன் ஆஸ்ரித ரஷகன்
சர்வேஸ்வரன் உத்தேச்யம் என்று வர்த்திக்கும்
திருமலை தொழுதால் பிராப்யம் பெறவில்லை வினை என்னுதல்
வேம் கடங்கள் பிரதிபந்தகங்கள் போகும்
பூ தொடுக்க கூப்பிட்டு அனுப்பி -பரன் சென்று சேரும்
எம்பெருமான் ஆக்ஜை
போக சொல்ல நீயும் வந்து சேர்ந்தவனே
இரண்டு தடவை சேவிப்பார்கள் இந்த பாசுரத்தையும்

நஞ்சீயர் திருவடிகளே சரணம்.

நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading