என்னுள் கலந்தவன் செங்கனிவாய் செங்கமலம்;
மின்னும் சுடர்மலைக்குக் கண்,பாதம், கைகமலம்;
மன்னும் முழுஏழ் உலகும் வயிற்றின்உள;
தன்னுள் கலவாதது எப்பொருளும் தான்இலையே.
பொ – ரை : ‘என்னுள் வந்து கலந்தவனாகி மின்னுகின்ற ஒளி மயமான மலை போன்ற இறைவனுக்கு, சிவந்து கனிந்த திருவதரம் செந் தாமரையைப் போன்றதாகும்; திருக்கண்களும் திருவடிகளும் திருக்கைகளும் தாமரை மலர்களேயாம்; நிலைபெற்ற பதினான்கு உலகங்களும் திருவயிற்றிலே உள்ளன; ஆதலால், இறைவனாகிய தனக்குள் கலவா தனவாகிய எப்பொருள்களும் இல்லை என்றவாறு.
வி – கு : உலகு -இடவாகுபெயர். மலை என்றது, உருவகம். மூன்றாம் அடியில் ‘வயிற்றின் உள’ என உடன்பாட்டாற்கூறிய அதனை நான்காமடியில் கலவாதது எப்பொருளும் தான் இலையே’ என எதிர் மறை முகத்தால் அருளிச்செய்கிறார். ‘கலவாத அது எப்பொருளும்’ என்பது ஒருமையோடு பன்மை மயங்கி வந்தது.
ஈடு : மூன்றாம் பாட்டு. 1’தன்னின் வேறுபட்ட எல்லாப் பொருள்களும் தன்னைப் பற்றி உளவாம்படி இருக்கிற சர்வேஸ்வரன், தான் என்னைப்பற்றி உளனாய் என்னோடே வந்து கலந்தான்’ என்கிறார்.
என்னுள் கலந்தவன் –‘அகஸ்தியர்க்கு உடன்பிறந்தவன்’ என்னுமாறு போன்று, நிரூபகம் இருக்கிறபடி. ‘நாராயணன், வாசுதேவன்’ என்பன போன்று, ‘என்னுள் கலந்தவன்’ என்று காணும் அவனுக்குத் திருநாமம். செம் கனி வாய் செம் கமலம் – சிவந்து கனிந்த வாய் செங்கமலம் போலே இராநின்றது, மின்னும் சுடர் மலைக்கு –2‘வாட்டம்இல் புகழ் வாமனன்’ இவரோடு கலந்த பின்பு வளர்ந்தபடியும், புகர் பெற்றபடியும், தரையிலே கால் பாவித்தரித்தபடியும், திண்மையை உடையனானபடியும் நோக்கி, ‘மின்னும் சுடர்மலை’ என்கிறார். கண் பாதம் கை கமலம் – முகமறிந்து கோத்தவாறே முத்து விலை பெறுமாறு போன்று, இவரும் திவ்விய அவயவங்களைச் சேர்த்து அனுபவிக்கிறார்.
மன்னும் முழு ஏழ் உலகும் வயிற்றின் உள – 3பிரவாஹ ரூபத்தாலே நித்தியமான எல்லா உலகங்களும் தன் சங்கற்பத்தைப் பற்றிக் கிடக்கின்றன. தன்னுள் கலவாதது எப்பொருளும் தான் இலையே –
தன் திருவுள்ளத்தைப் பற்றுக்கோடாக உடைத்து அன்றிக்கே இருக்கிற பொருள் யாது ஒன்று, அது இல்லை என்ற சொல்லுக்குப் பொருளாகிறது. 1இனி, ‘தன்னுள் கலவாதது எப்பொருளும் தான் இலையே’ என்பதற்கு, ‘இறைவன் உருவமாக இல்லாத பொருள் தான் இல்லை என்று பொருள் கூறலுமாம். 2‘இயங்கியற்பொருளும் நிலையிற்பொருளுமாகக் காணப்படுகின்றவை எவையோ, அவை எல்லாம் என்னை அன்றி இல்லை’ என்பது ஸ்ரீ கீதை. உலகத்துப் பொருள்கள், இறைவனைப் பற்றாத போது சத்தை இன்றியே இருக்கிறது, சொரூபத்தாலே; இறைவன், ஆழ்வாரைக் கலவாத போது சத்தை இன்றியே இருப்பது, காதலாகிய பண்பாலே.
Leave a Reply