ஏழைபேதை இராப்ப கல்தன
கேழ்இல்ஒண் கண்ணநீர்கொண் டாள்;கிளர்
வாழ்வை வேவஇலங்கைசெற் றீர்! இவள்
மாழைநோக்குஒன் றும்வாட் டேன்மினே.
பொ – ரை : ஏழையாய்ப் பேதையாய் இருக்கின்ற இவள், தனது ஒப்பில்லாத ஒள்ளிய கண்களில் எக்காலத்திலும் நீரைக் கொண்டாள்; மேன்மேலும் ஒங்குகிற செல்வமானது அழியும்படி இலங்கையை அழித்தவரே! இவளுடைய இளமை பொருந்திய மான் போன்று நோக்கு ஒன்றும் வாடும்படி செய்யாதீர்.
வி-கு : ’இலங்கை செற்றீர்! இவள் தன கண்ண நீர் கொண்டாள்; இவள் நோக்கு ஒன்றும் வாட்டேன்மின்’ என்பதாம். கேழ் -ஒப்பு. ‘ஆயிரம் இராமர் நின்கேழ் ஆவரோ தெரியின் அம்மா!’ என்பது கம்பராமாயணம். கிளர்வாழ்வு – வினைத்தொகை. வாழ்வை – ஐகாரம் சாரியை மாழை – இளமை; அழகுமாம் ‘வாட்டேன்மின்’ என்பது எதிர்மறைப் பன்மை வினைமுற்று.
ஈடு : பத்தாம் பாட்டு. 1‘இவள், நோக்கு ஒன்றும் ஒழிய, அல்லாதவை எல்லாம் இழந்தாள்; இந்நோக்கு ஒன்றையும் நோக்கிக் கொள்ளீர்’ என்கிறாள்.
ஏழை – ‘கிடைக்காது’ என்று பிரமாணங்களால் பிரசித்தமாகக் கூறப்பட்டுள்ள பொருளில், கிடைக்கக்கூடிய பொருளில் செய்யும் விருப்பத்தினைச் செய்பவள். பேதை -‘கிடைக்காது’ என்று அறிந்து மீளும் பருவம் அன்று; நான் ஹிதம சொன்னாலும் கேளாத பருவம். இராப்பகல் தன கேழ் இல் ஒண் கண்ண நீர் கொண்டாள் – ‘ஆனந்தக் கண்ணீருக்குத் தகுதியாய், ஒப்பு இல்லாதவையாய், கண்ண நீர் இல்லாவிடினும் கண்டவர்க்கு ஆலத்தி வழிக்கவேண்டும் படி ஒள்ளியவாள் உள்ள கண்களில், எல்லாக் காலங்களிலும் கண்ணீர் நிறையப் பெற்றாள். தாமரையிலே முத்துப் பட்டாற் போன்று, இக்கண்ணும் கண்ணீருமாய் இருக்கிற இருப்பை, காட்டில் எறித்த நிலவு ஆக்குவதே!3 இவ்விருப்புக்குக் கிருஷி பண்ணிப் பல வேளையிலே இழப்பதே!4 பொன்னும் முத்தும் விளையும்படி அன்றோ கிருஷி பண்ணிற்று?’ என்று இப்போது இவள் இழவுக்கு அன்றியே, அவன் இழவுக்காக இவள் கரைகின்றாள்‘நடுவே கண்ணீர் விழ விடும் இத்தனையோ, விரோதி கனத்திருக்க?’ என்ன, ‘இராவணனைக்காட்டிலும் வலிதோ இவளுடைய விரோதிகளின் கூட்டம்?’ என்கிறாள் மேல் : கிளர்வாழ்வை வேவ இலங்கை செற்றீர் – கிளர்ந்த ஐஸ்வர்யமானது வேகும்படி இலங்கையை அழித்தீர். 1‘கொழுத்தவனான இராவணனுடைய அழிவினை விரும்பிய தேவர்களால் பிரார்த்திக்கப்பட்டவரும் நித்தியமான வருமான விஷ்ணு, மனிதலோகத்தில் இராமானாக அவதரித்தார்; இது பிரசித்தம்’ என்கிறபடியே, வந்து அவதரித்த தமப்பனும் தாயும் சேர இருத்தற்குப் பொறாதவனுடைய செல்வம் ஆகையாலே ‘கிளர்வாழ்வை’ என்கிறாள். இவ்விளியால், 2‘ஒன்றை அழிக்க நினைத்தால், முதல் கிடவாமே அழிக்குமவராய் இராநின்றீர்,’ என்ற தொனிப்பொருள் தோன்றும். இவள் மாழை நோக்கு ஒன்றும் வாட்டேன்மின் – இவளுடைய இளமை பொருந்திய நோக்கு ஒன்றும் கிடக்கும்படி காரியம் பார்த்தருள வேண்டும். ‘இவள் தானே முடிந்து போகிறாள்? நாங்கள் தாமே இழக்கிறோம்? ஜீவிக்க இருக்கிற நீர் வேண்டுமாகில், 3உம்முடைய ஜீவனத்தை நோக்கிக் கொள்ளப்பாரும், என்பாள், ‘வாட்டேன்மின்’ என்று அவன் தொழிலாகக் கூறுகிறாள்.
1. ‘இவள் மாழை நோக்கு ஒன்றும் வாட்டேன்மினே’ என்றதனை நோக்கி அவதாரிகை
அருளிச்செய்கிறார்.
2. கண்ணை வர்ணிக்கிறவளுடைய மனோபாவம், ‘தாமைரையிலே முத்துபட்டாற்போன்று’
என்று தொடங்கும் வாக்கியம். அதாவது, கலவியாலே உண்டான ரசத்தைப்
பொறுப்பதற்காகவும், மேலும் மேலும் விருப்பம் மிகுவதற்காகவும் அன்றோ நீர் பிரிந்தது?
அவை அப்படியே பலித்த பின்பும், கண்ண நீரையும் மாற்றிக் கலக்கப் பெறாமல்
இழப்பதே!’ என்றபடி.
3. ‘இவ்விருப்புக்குக் கிருஷி பண்ணிப் பல வேளையில் இழப்பதே!’ என்றது, ‘இது
வேண்டும் என்று படைத்தல், அவதரித்தல் முதலியவைகளாலே பாடு பட்டு, இப்பொழுது
இழப்பதே!’ என்றபடி.
4. ‘ஒண்முத்தும் பைம்பொன்னும் ஏந்தி’ (திருவிருத். 11) என்றதனை உட்கொண்டு
ரசோக்தியாக அருளிச்செய்கிறார். ‘பொன்னும் முத்தும்’ என்று தொடங்கி பொன் –
பசலை நிறம். முத்து – கண்ணீர்த்துளி.
நஞ்சீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply