வாட்டம்இல்புகழ் வாமன னைஇசை
கூட்டி, வண்சட கோபன் சொல்அமை
பாட்டுஓர் ஆயிரத்து இப்பத்தால்அடி
சூட்ட லாகும்அம் தாமமே.
பொ – ரை : குறைதல் இல்லாத புகழையுடைய வாமனனை, வள்ளலாரான ஸ்ரீ சடகோபர் இசையோடு சேர்த்து அருளிச்செய்த எல்லா இலக்கணங்களும் அமைந்த ஆயிரம் திருப்பாசுரங்களுள் இப்பத்துப் பாசுரங்களால், அழகிய செவ்வி மாலையினை அவனுடைய திருவடிகளில் சூட்டுதலாகிய பேற்றினை அடையலாம்.
வி-கு : வாட்டம் இல் புகழ் வானமனை, வண் சடகோபன் இசை கூட்டிச் சொல் அமை பாட்டு ஓர் ஆயிரத்து இப்பத்தால் அம் தாமம்
அடி சூட்டலாகும்’ என்க. ‘வாட்டம் இல் புகழ் வாமனன்’ என்பதனை, ‘தாவா விழுப்புகழ் மாயோன்’ (தொல். பொ. புறம்.) என்றதனோடு ஒப்பிடுக.
ஈடு : முடிவில், ‘இத்திருவாய்மொழியினைக் கற்க வல்லவர்கள் இவர் பிரார்த்தித்தபடியே நித்தியசூரிகள் திரளிலே போய்ப் புக்குச் சர்வேஸ்வரன் திருவடிகளிலே, 1‘சூட்டு நன்மாலை’ப்படியே திருமாலை சாத்தி அடிமை செய்யப் பெறுவார்கள்’ என்கிறார்.
வாட்டம் இல் புகழ் வாமனனை – ‘நோக்கு ஒன்றும் வாட்டேன் மினே’ என்றவாறே, ‘புறப்பட்டோம்’ என்று நாணத்தோடே வந்து தோன்றினான்; இவள் வாட, அவன் புகழாயிற்று வாடுவது. இத் துன்ப நிலையிலே வந்து முகம் காட்டுகையாலே பூர்ணமான கல்யாண குணங்ளையுடையவன் ஆனான் என்கிறாள். தன் உடைமை பெறுகைக்கு இரப்பாளனாமவன் ஆகையாலே ‘வாமனன்’ என்கிறாள். இசை கூட்டி – பரிமளத்தோடே பூ அலருமாறு போன்று, இசையோடே புணர்புண்டவைகள். வண்சடகோபன் சொல் –2‘உதாரகுணத்தையுடையவரும் மனனசீலருமான ஸ்ரீவால்மிகி இராகவனுடைய கீர்த்தியினை உண்டு பண்ணுகிற இந்தக் காவியத்தைச் சுலோகங்களாலே செய்தார்’ என்கிறபடியே, மானச அனுபவத்தோடு அல்லாமல் வாசிகம் ஆக்கி நாட்டை வாழ்வித்த வண்மையர் ஆதலின்,‘வண்சடகோபர்’ என்கிறார்.
அமை பாட்டு ஓர் ஆயிரத்து – அமைவு -சமைவாய், சொல்லும் பொருளும் நிறைந்திருத்தல். இப்பத்தால் அம் தாமம் அடி சூட்டலாகும் – இப்பத்தையும் கற்க வல்வர்கட்குச் செவ்வி மாலையைக் கொண்டு அவன் திருவடிகளிலே நித்திய கைங்கரியம் பண்ணப் பெறலாம். ‘ஆயின், நித்திய கைங்கரியத்தைச் செய்வதற்கு இவர்க்குப் பிறந்த ஆற்றாமை இதனைக் கற்குமவர்கட்கும் உண்டாக வேண்டாவோ?’ எனின், வேண்டா; தொண்டினைச் செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டு, அது பெறாமையாலே போலே காணும் இவ்வாற்றாமை எல்லாம் இவர்க்குப் பிறந்தன; 3தமப்பன் செல்வம் புத்திரனுக்குக்கிடைக்கவேண்டியது முறையாமாறு போன்று, இவ்
வாற்றாமையால் வந்த கிலேசம் இது கற்றவர்களுக்கு அனுபவிக்க வேண்டாமல், 1‘அடியார்கள் குழாங்களை உடன் கூடுவது என்று கொலோ!’ என்று இவர் ஆசைப்பட்டபடியே அத்திரளிலே போய்ப் புக்கு அனுபவிக்கப்பெறுவர்.
(11)
முதற்பாட்டில், ‘அடியார்களுடைய ஆபத்தே செப்பேடாக உதவும் தன்மையினை உடையவன், இவளுடைய ஆபத்துக்கு வந்து உதவுகின்றிலன்,’ என்றாள்; இரண்டாம் பாட்டில், ‘‘விரோதி உண்டே’ என்பது இறைவனுக்கு நினைவாக, ‘வாணனுடைய தோள் வலியிலும் வலிதோ இவளுடைய விரோதி?’ என்றாள்; மூன்றாம் பாட்டில், ‘இப்படிச் செய்ய நினைத்த நீர், முன்பு அச்செயலை எதற்காகச் செய்தீர்?’ என்றாள்; நான்காம் பாட்டில், ‘அது பொறுக்க மாட்டாமல் அதுதன்னையே உபகாரமாகச் சொல்லாநின்றாள்,’ என்றாள்; ஐந்தாம் பாட்டில், ‘அவ்வளவிலும் வாராமையாலே, அருள் இல்லாதவன்’ என்றாள் திருத்தாய்; ஆறாம் பாட்டில், அது பொறுக்கமாட்டாமல், ‘கெடுவாய்! ஆகரத்தில் தகவு மறுக்குமோ? அது நம் குறைகாண் என்கிறாள்,’ என்றாள்; ஏழாம் பாட்டில், ‘அவன் குணம் இன்மைதன்னையே குணமாகக் கொள்ளும்படி இவளை வஞ்சித்தான்,’ என்றாள்; எட்டாம் பாட்டில், ‘உம்மைத் தஞ்சமாகப் பற்றின இவள் படும் பாடே இது?’ என்றாள்; ஒன்பதாம் பாட்டில், ‘இவள் பேற்றில் நீர் செய்தருள நினைத்திருக்கிறது என்?’ என்றாள்; பத்தாம் பாட்டில், ‘எஞ்சி நிற்பது நோக்கு ஒன்றுமேயாயிற்று; இஃது ஒன்றையும் நோக்கிக் கொள்ளீர்,’ என்றாள்; முடிவில், இத் திருவாய் மொழியைக் கற்றார்க்குப் பலம் சொல்லித் தலைக்கட்டினார்.
திருவாய்மொழி நூற்றாந்தாதி
ஆடிமகிழ் வானில் அடியார் குழாங்களுடன்
கூடிஇன்பம் எய்தாக் குறையதனால் – வாடிமிக
அன்புற்றார் தம்நிலைமை ஆய்ந்துரைக்க மோகித்துத்
துன்புற்றான் மாறன்அந் தோ!
நஞ்சீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply