உள்உள்ஆவி உலர்ந்து உலர்ந்து, என
வள்ளலே! கண்ணனே! என்னும்;பின்னும்
வெள்ளநீர்க் கிடந்தாய்! என்னும்; என
கள்வி தான்பட்ட வஞ்சனையே?
பொ – ரை : உள்ளே இருக்கிற உயிரானது சருகாக உலர்ந்து, எனக்கு உதவியைச் செய்தவனே! கண்ணனே!’ என்று கூப்பிடுகின்றாள்.
அதற்குமேல், ‘திருப்பாற்கடலில் கண்வளர்ந்தருளுகிறவனே!’ என்கிறாள்; ஆதலால், என்னுடைய கள்வியானவள் பட்டவைகள் வஞ்சனையேயாகும்.
வி-கு : ‘உலர்ந்து என்னும்’ என்க. என வள்ளல், என கள்வி என்பன; ஒருமை – பன்மை மயக்கம். என – அகரம் ஆறனுருபு. கள்வி – பெண்பாற்பெயர். ‘எற்பெறத் தவஞ்செய்கின்றார் என்னை நீ இகழ்வது என்னே? நற்பொறை நெஞ்சின் இல்லாக் கள்வியை நச்சி என்றாள்’என்றார் கம்பர். தன் மனத்தின் நிகழ்ச்சிகளைத் தாயும் அறியாதவாறு மறைக்கின்றாளாதலின், ‘கள்வி’ என்கிறாள். பட்ட வினையாலணையும் பெயர். எச்சமெனக் கோடலுமாம்.
ஈடு : ஏழாம் பாட்டு. 1‘தன் நெஞ்சில் ஓடுகின்றவற்றைப் பிறர் அறியாதபடி அடக்கும் இயல்புடைய இவள், வாய் விட்டுக் கூப்பிடும் படி இவளை வஞ்சித்தான்’ என்கிறாள்.
உள்உள் ஆவி உலர்ந்து – உள்ளே இருக்கும் மனத்திற்குத் தாரகமான ஆத்துமா சருகாய் வருகிறபடி. 2‘இவ்வாத்துமா வெட்ட முடியாதவன், கொளுத்த முடியாதவன், நனைக்க முடியாதவன், உலர்த்த முடியாதவன்’ என்று சொல்லப்படுகிற இத்தன்மையும் போயிற்று என்கிறாள். ‘ஆயின், உடல் உலர்ந்த பின்பு அன்றோ ஆவி உலர்தல் வேண்டும்?’ எனின், 3பாவபந்தம் அடியாக வருகிற நோயாகையாலே அகவாயே பிடித்து வெந்துகொண்டு வருமாயிற்று. என வள்ளலே கண்ணனே என்னும் – விடாயர் கற்பூரத்திரள் வாயில் இடுமாறு போன்று, இவ்வளவான துன்பத்திற்கு இடையில் வந்து உன்னை எனக்குக் கையாளாகத் தருமவனே என்னாநின்றாள். பின்னும் – அதற்குமேலே. வெள்ளம் நீர்க் கிடந்தாய் என்னும் -‘என்விடாய்க்கு உதவத் திருப்பாற்கடலிலே வந்து சாய்ந்தருளிற்றே’ என்னும். 4‘தாபத்தாலே பீடிக்கப்பட்டவன் தண்ணீரில் சயனித்திருக்கிற நாராயணனை நினைக்கக் கடவன்’ என்பது விஷ்ணு தர்மம்.
இக்கிடை, இவளுக்கு ஒரு படுக்கையிலே சாய்ந்தாற்போலே இருக்கிறதுகாணும். என கள்வி – தன் மனத்தில் ஒடுகிறது பிறர் அறியாத படி மறைத்துப் பரிமாறக்கூடிய இவள் படும் பாடே இது! தான் பட்ட – 1‘கருமை பொருந்திய திருக்கண்களையுடைய சீதையைப் பிரிந்து நான் ஒருபோதும் ஒரு நொடிப்பொழுதும் பிழையேன்,’ என்கிற தான், வேறுபாடு இல்லாதவனாய் இருக்க, இவள் வேறுபடுவதே! வஞ்சனையே – பகலை இரவு ஆக்கியும், ‘ஆயுதம் எடேன்’ என்ற கூறிப் பின்னர் எடுத்தும் செய்த செயல் போலே, இவளை வஞ்சித்தீர் இத்தனை. அளவு படைக்குப் பெரும்படை தோற்பது வஞ்சனையால் அன்றோ?
Leave a Reply