வஞ்சனே! என்னும்; கைதொழும்; தன
நெஞ்சம்வேவ நெடிதுஉயிர்க் கும்;விறற்
கஞ்சனைவஞ்சனை செய்தீர்! உம்மைத்
தஞ்சம் என்றுஇவள் பட்டனவே!
பொ – ரை : ‘வலிமையினையுடைய கம்ஸனை அவன் நினைத்த நினைவு அவனோடே போமாறு கொன்றவரே! இவள், ‘குணங்களாலும் செயல்களாலும் என்னை வஞ்சித்தவனே!’ என்கிறாள்; கைகூப்பி வணங்குகிறாள்; தன்னுடைய நெஞ்சமானது வேகும்படி பெருமூச்சு எறிகின்றாள்; ஆதலால், உம்மையே பற்றுக்கோடாக நினைத்து இவள் பட்ட துன்பங்கள் எண்ணில் அடங்கா’ என்றவாறு.
வி-கு : தன நெஞ்சம்; ஒருமை பன்மை மயக்கம். வஞ்சனை செய்தீர் – பெயர். தஞ்சம் – பற்றக்கோடு. பட்டன -பெயர். ‘ஏ’காரம் இரக்கத்தின் கண் வந்தது.
ஈடு : எட்டாம் பாட்டு. ‘உம்மை அனுபவித்துச் சுகித்திருக்க வைத்தீர் அல்லீர்; கம்ஸனைப் போலே முடித்துவிட்டீர் அல்லீர்; உம்மை ‘ரக்ஷகர்’ என்ற இருந்த இவள் படும் பாடே இது,’ என்கிறாள்.
வஞ்சனே என்னும் – தாயார், ‘வஞ்சித்தான்’ என்னப் பொறுத்திலள்; 1தான் ஒட்டி வந்து என் தனி நெஞ்சை வஞ்சித்து ஊன் ஒட்டி நின்று என் உயிரிற்கலந்து’, ‘நான் அல்லேன் என்றாலும் தவிர ஒண்ணாதபடி என்னையும் அறியாதே வஞ்சித்து, உன் திருவடிகளிலே சேர்த்த உபகாரகனே!’ என்கிறாள். கைதொழும் – வஞ்சித்த உபகாரத்துக்குத் தோற்றுக் கைதொழும். தன நெஞ்சும் வேவ நெடிது உயிர்க்கும் – தாயார் சொன்ன குணமின்மைக்கு ஒரு பரிகாரம் செய்தும் ஆற்றாமை போகாமல் தன் நெஞ்சும் வேவ நெடுமூச்சு எறியாநிற்கும். 2‘பின் அழுக்குப் புடைவையை உடுத்தவளும் அரக்கியரால் சூழப்பட்டவளும் பட்டினியால் இளைத்தவளும் எளியவளும் அடிக்கடி பெருமூச்சு எறிகின்றவளுமான பிராட்டி’ என்கிறார். ஸ்ரீவால்மீகியும். 3‘உள்ளம் மலங்க’ என்ற இடம், வெட்டி விழுந்த படி சொல்லிற்று. 4‘உள் உள் ஆவி உலர்ந்து உலர்ந்து’ என்ற இடம், உலர்ந்தபடி சொல்லிற்று; இங்கு, ‘தன நெஞ்சம் வேவ’ என்கையாலே, நெருப்புப் பற்றி எரிகிறபடி சொல்லுகிறது.
விறல் கஞ்சனை வஞ்சனை செய்தீர் – ‘மிடுக்கனான கம்ஸனை அழியச் செய்தீர். உம்மைத் தோற்பிக்க நினைத்தாரை நீர் தோற்பிக்குமவராய் இருந்தீர். 5அடைந்தவர்கள் பகைவர்கள் என்னும் வேற்றுமை இன்றி உமக்கு இரண்டு இடத்திலும் காரியம் ஒன்றேயோ?’ என்கிறாள். உம்மைத் தஞ்சம் என்ற – 6தஞ்சமாகிய தந்தைதாயொடு தானுமாய்’ என்னும் சர்வ ரக்ஷகனைக் காதுகரைச் சொல்லுமாறு போன்று சொல்லுகிறாள். மகள் நிலையைப் பார்த்து.7தஞ்சம் அல்லாதாரைத் ‘தஞ்சம்’ என்று இருந்தால் சொல்லுமாறுபோன்று சொல்லுவதே! இவள் பட்டனவே – 1‘சம்சாரிகளைப் போன்று உண்டு உடுத்துத் திரிய வைத்தீர் அல்லீர்; நித்திய சூரிகளைப் போன்று அனுபவிக்க உம்மைக் கொடுத்தீர் அல்லீர்; 2‘இலங்கையை அழித்து என்னை அழைத்துக்கொண்டு போவராகில் போகும் அச் செயல் அவர்க்குத் தக்கதாம்’ என்னும் எங்களைப்போன்று இருக்கப் பெற்றிலள்; கம்ஸனைப் போன்று முடித்தீர் அல்லீர்; என் வழி வாராதே உம்மைத் தஞ்சமாகப் பற்றின இவளை எத்தனை படுத்த வேண்டும்? இனி, நீர் படுத்துவமவற்றைச் சொல்லில், ஒரு மஹாபாரதத்துக்குப் போரும் போலே’ என்கிறாள் எனலுமாம்.
Leave a Reply