ஏத்த ஏழுலகும் கொண்ட கோலக்
கூத்தனைக் குருகூர்ச் சடகோ பன்சொல்
வாய்த்த ஆயிரத் துள்இவை பத்துடன்
ஏத்த வல்லவர்க்கு இல்லைஓர் ஊனமே.
பொ – ரை : ‘ஏழ் உலகங்களிலும் உள்ளவர் எல்லாரும் ஏத்த, எல்லா உலகங்களையும் தன் திருவடியால் அளந்துகொண்ட அழகு பொருந்திய கூத்தன் விஷயமாக, திருக்குருகூரில் அவதரித்த ஸ்ரீசடகோபரால் அருளிச்செய்யப்பட்ட பொருந்திய ஆயிரம் திருப்பாசுரங்களுள் இப்பத்துத் திருப்பாசுரங்களையும் பொருள் உணர்வோடு கற்று உணர்ந்து துதிக்க வல்லவர் ஒரு குற்றமும் இலர் ஆவர்,’ என்பதாம்.
வி – கு : ‘ஏத்த, கொண்ட கூத்தன்’ என்க. வல்லவர் – வினையாலணையும் பெயர். ஊனம் – குற்றம். குற்றமாவது, ஒப்பாரும் மிக்காரும் இலாத
இறைவனை மற்றைத் தேவர்கட்கு ஒப்ப நினைத்தல்; அன்றி, அவனைக் குறைய நினைத்தல்; அன்றி, அவனைக்காட்டிலும் மற்றைத் தேவர்களை உயர்வாக நினைத்தல்; ஆக, இவற்றால் உளவாய குற்றம்.
ஈடு : முடிவில், ‘இத்திருவாய் மொழியைக் கற்று உணரவல்லவர்கட்கு, மற்றைத் தேவர்களை இறைவர்களாக நினைத்தலாகிய குற்றம் இல்லை,’ என்கிறார்.
ஏழ் உலகம் ஏத்த ஏழ் உலகும் கொண்ட – 1‘வானத்திலும் பூமியிலும் உள்ள அமரர் கூட்டமும், அவ்வாறே மனிதர்களும், அங்கேயே சஞ்சரிக்கிற தேவர்களும் துதிக்க, இவ்வுலகங்களை எல்லாம் தன் அடிகளால் அளந்தவன் எவனோ, அவ்விறைவனான திரிவிக்கிரமன், என்னுடைய மங்களங்களின் விருத்தியின் பொருட்டு எனக்கு எப் பொழுதும் அருள் புரியவேண்டும்,’ என்கிறபடியே, ஏத்தித் துதிக்க, அம்மகிழ்ச்சியாலே எல்லா உலகங்களையும் திருவடியின்கீழே இட்டுக் கொண்ட. கோலக் கூத்தனை – திருவுலகு அளத்தருளினபோது வல்லார் ஆடியது போன்று இருந்தானாதலின் ‘கூத்தனை’ என்றும், அப்போதைய வடிவழகின் மிகுதியினைக் கூறுவார், ‘கோலக் கூத்தனை’ என்றும் அருளிச்செய்கிறார். இதனால், இந்திரன் இழந்த தனது ராஜ்யத்தைப் பெறும் பொருட்டு வணங்கியதுபோன்று, இவர் ஒரு பயனைக் கருதி வணங்குமவர் அல்லர் என்பதூஉம், அவ்விறைவனுடைய வடிவழகினை அனுபவித்தலே இவர்க்குப் பேறு என்பதூஉம் போதரும்.
குருகூர்ச் சடகோபன் சொல் – 2ஆப்திக்கு இன்னார் கூறியது என்ன வேண்டுதலின், ‘குருகூர்ச் சடகோபன்’ என்கிறார். இதனால், வேதாந்தத்தைக் காட்டிலும் ஆழ்வாரிடத்தில் பிறந்த திருவாய்மொழிக்குள்ள உயர்குடிப்பிறப்பின் சிறப்பினைக் கூறியபடி வாய்ந்த ஆயிரம் இத்தனைபோது இவர் கூறி வந்த பரம்பொருள் நேர்பட்டாற்போலேயாயிற்று இப்பிரபந்தமும் நேர்பட்டபடி. அன்றி,
1வாச்சியத்திற்காட்டில் வாசகம்நேர்பட்டபடி என்றுமாம். அதாவது, விஷயத்தை உள்ளபடி பேசவற்றாய் இருக்கை. இவை பத்து உடன் ஏத்த வல்லவர்க்கு – இத்திருவாய்மொழியை மனமாரத் துதிக்க வல்லவர்கட்கு. ஓர் ஊனம் இல்லை – இவ்வாத்துமாவுக்கு ஊனமாவது இறைவர் அல்லாதாரை இறைவர் என்று எண்ணுதலும், இறைவனை இறைவன் என்று எண்ணாமையும். இப்படி வரக்கூடிய ஊனம் இது கற்றார்க்கு இல்லை.
முதற்பாட்டில், மேல் பரக்க அருளிச்செய்கிற இத்திருவாய் மொழியின் அர்த்தத்தைத் தொகுத்து அருளிச்செய்தார். இரண்டாம் பாசுரம் முதல், துக்கத்தைப் போக்குமவன் ஆதலானும், சீலவான் ஆதலானும், சுகுமாரன் ஆதலானும், தாமரைக்கண்ணன் ஆதலானும், ஆபத்சகன் ஆகையானும், அகடிதகடநா சமர்த்தன் ஆதலானும், படைத்தல் காத்தல்களைச் செய்கையாலும், அழித்தலைச் செய்கையாலும், ஈஸ்வர அபிமானிகளாய் இருக்கிறவர்களுடைய துதிகள் முதலியவைகளாலும், இப்படிப் பல வகைகளாலே அவனுடைய பரத்துவத்தை அருளிச்செய்து, இது கற்றார்க்குப் பலம் சொல்லித் தலைக்கட்டினார்.
(11)
திருவாய்மொழி நூற்றந்தாதி
திண்ணியதாம் மாறன் திருமால் பரத்துவத்தை
நண்ணிஅவ தாரத்தே நன்குரைத்த – வண்ணமறிந்து
அற்றார்கள் யாவர் அவரடிக்கே ஆங்கவர்பால்
உற்றாரை மேலிடாது ஊன்.
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
Leave a Reply