தேவும் எப்பொருளும் படைக்கப்
பூவில் நான்முகனைப் படைத்த
தேவன் எம்பெருமானுக்கு அல்லால்
பூவும் பூசனையும் தகுமே?
பொ – ரை : தேவர்களையும் மற்றை எல்லாப் பொருள்களையும் உண்டாக்குவதற்குத் தனது திருவுந்தித் தாமரையினின்றும் நான்கு முகங்களையுடைய பிரமனைப் படைத்த ஒளியினையுடையவனான எம்பெருமானுக்கு அல்லாமல் ஏனையோர்க்கு மலர்களும் மலர்களால் அருச்சித்து வணங்கும் வணக்கமும் தகுவன ஆகுமோ? ஆகா என்றபடி.
வி – கு : ‘தேவு – தெய்வத்துக்கு ஒரு பெயர்’ என்பர், நச்சினார்க்கினியர். (சிந். கட. வாழ்த்) ‘படைக்கப் படைத்த தேவன்’ என்றும், ‘அல்லால் தகுமோ?’ என்றும் முடிக்க. தகுமே – ஏகாரம் எதிர்மறைப் பொருளது. பூசனை – நாடோறும் கடவுளர்க்குச் செய்யப்படும் வழிபாடு முதலியன. ‘சிறப்பொடு பூசனை செல்லாது’ என்றார் திருவள்ளுவர்.
ஈடு : நான்காம் பாட்டு 3‘சௌகுமார்யத்தாலும் முதன்மை யாலும் இவனே இறைவன்,’ என்கிறார்.
தேவும் எப்பொருளும் படைக்கப் 1பூவில் நான்முகனைப் படைத்த தேவன் – தேவர்களுடைய கூட்டங்களையும் மற்றை எல்லாப் பொருள்களையும் உண்டாக்குவதற்காக, 2ஒரு பூவில் நான்கு பூக்கள் பூத்தாற் போன்று நான்கு முகங்களையுடைய பிரமனை உண்டாக்கினவன். தேவன் – பிரமனைப் படைத்தவன் ஆதலின், அதனால் உண்டான காந்தியினையுடையவன். இனி, ‘தேவன்’ என்பதற்குப் படைத்தல் முதலிய தொழில்களை விளையாட்டாக உடையவன் என்றும், அழகு முதலியவைகளால் வந்த விளக்கத்தினை உடையவன் என்றும் கோடலுமாம். எம்பெருமானுக்கு அல்லால் – படைத்தல் முதலிய தொழில்களைச் செய்த உபகாரத்தாலும் படைத்தலுக்கு உறுப்பான குணங்களாலும் என்னை அடிமை கொண்டவனுக்கு அல்லாமல். பூவும் பூசனையும் தகுமே – 3‘சிக்குத் தலையனுக்குப் பூத்தகாது; பிச்சை உண்ணிக்குப் பூசனை தகாது; பூத்தகுவது சுகுமாரனுக்கு; பூசனை தகுவது முதன்மையுடையவனுக்கு; ஆதலால், இவனை ஒழிந்தவர்க்குத் தகாது,’ என்கிறார்.
இறைவனுடைய முதன்மையினை நெடும்போது விரிவாகக் கூறிக் கொண்டே வந்து, 5‘பெரியதாயும் விசாலமானதாயும் நீண்டதாயும் இருக்கிற திருக்கண்களையுடையவன்காண், உங்களுக்கு மைத்துனனாகப் புகுந்திருக்கிற கிருஷ்ணன்,’ என்று அவ்விறமைத் தன்மையினைக் கிருஷ்ணன்மேல் மாட்டெறிந்தான், தத்துவ ஞானியான வீடுமன். அவ்வாறு மாட்டெறிந்து முதன்மையினை அறுதியிட்ட வீடுமனுக்கு ஒரு சிறப்பும் செய்திலர் தேவர்கள், 6‘கிருஷ்ண பரமாத்துமாவை, இந்த இராய சூய யாகத்தில் பூசிக்கத் தக்கவராக நாங்கள் விரும்புகிறோம்; இச்சபையில் இருக்கிற நீங்கள் எல்லோரும்.
அவரைப் பூசிப்பத்தற்கு உங்கள் உடன்பாட்டினைத் தெரிவிப்பதற்குத் தக்கவர்களாய் இருக்கின்றீர்கள்,’ என்று சகாதேவன் கூறித் தனது வைராக்கியத்தைத் தெரிவித்த காலத்தில், அவன் வைராக்கியத்தைக் கண்ட தேவர்கள், அவன் தலையில் மலர் மாரியைப் பெய்து அவனை வாழ்த்தினார்கள். இதனால், ஒருதலையாக வேண்டற் பாலது ஞானத்தைக் காட்டிலும் வைராக்கியமே என்பது புலப்படும். ஆதலால். இவரும், ‘அல்லது இல்லை ஒரு கண்ணே’ என்றும், ‘கோள அரியேறு அன்றி அருளால் அளிப்பார் ஆர்’ என்றும், ‘மால்தனில் மிக்குமோர் தேவும் உளதே?’ என்றும், ‘பூவும் பூசனையுந் தகுமோ?’ என்றும் அவ்வைராக்கியத்தையே அருளிச்செய்தார்.
‘ஒரு பூ’ என்றது, பிரமன் உதித்த உந்தித் தாமரையினை ‘நான்கு பூ’ என்றது, நான்கு
முகங்களை.
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
Leave a Reply