இருளின் திணிவண்ணம் மாநீர்க் கழியே! போய்
மருளுற்று இராப்பகல் துஞ்சிலும்நீ துஞ்சாயால்
உருளும் சகடம் உதைத்த பெருமானார்
அருளின் பெருநசையால் ஆழாந்து நொந்தாயே?
பொ – ரை : ‘இருள் செறிந்தாற்போன்று செறிந்த நிறத்தை யுடைய கரிய நீரையுடைய கழியே! மிகவும் அறிவு கெட்டு, இராப்பகல் முடிவுற்றாலும் நீ தூங்குகிறாய் இல்லை; உருண்டு வருகின்ற சகடத்தின் உருவாக அமைந்த அசுரனை உதைத்துக் கொன்ற பெருமாள் திருவருள் புரிவான் என்னும் பெருவிருப்பால் ஈடுபட்டு வருந்தினாயோ?’ என்கிறாள்.
வி-கு : வண்ணம் – நிறம். மா – கருமை; பெருமையுமாம். போதல் – மிகுதல்; ‘வார்தல் போகல் ஒழுகல் மூன்றும், நேர்பும் நெடுமையுஞ் செய்யும் பொருள’ என்றார் தொல்காப்பியனார். துஞ்சுதல் – முடிவுறுதல். நசை – விருப்பம். ஆழாந்து – ‘ஆழ்ந்து’ என்ற சொல்லின் விகாரம்.
ஈடு : எட்டாம் பாட்டு. 2அவ்விருளுக்குப் பின்னடைந்து அங்கே இங்கே திரியாநிற்க, இருள் செறிந்தாற்போலே இருப்பதொரு கழியிலே சென்று இழிந்தாள்; அது மடல் எடுப்பாரைப் போன்று கெட்டு ஓடாநிற்றலைக் கண்டு, ‘பாவியேன், சகடாசுரனை அழித்த அச்செயலிலே நீயும் அகப்பட்டாயே?’ என்கிறாள்.
இருளின் திணி வண்ணம் மா நீர்க் கழியே – ‘இருளினது வயிரம் போன்று இருக்கின்ற நிறத்தையுடைத்தாய்ப் பெரிய நீரை
யுமுடைத்தான கழியே! 1‘வெளிறான இருள் அன்றி, இருளின் புற இதழை வாங்கி வயிரத்தைச் சேரப் பிடித்தாற்போன்றிருக்கிறது இருள்’ என்பாள். ‘இருளின் திணி வண்ணம்’ என்கிறாள். திணி – வயிரம். இனி,2‘அச்சமான இருள்’ என்று பொருள் கூறலுமாம். போய் மருளுற்று – மிகவும் அறிவு கெட்டு. 3‘மயர்வற மதிநலம் அருளப் பெற்றாருடைய அறிவு கேட்டிற்கும் அப்பாற்பட்டதாக இருக்கின்றதே அதனுடைய அறிவுகேடு!’ என்பாள், ‘போய் மருளுற்று’ என்கிறாள்.
இராப் பகல் துஞ்சிலும் நீ துஞ்சாயால் – காலத்துக்கு ஓர் எல்லை காணிலும் உன் ஆற்றாமைக்கு ஓர் எல்லை காண்கின்றிலோம். உருளும் சகடம் உதைத்த பெருமானார் – காவலாக வைத்த சகடந் தானே அசுர ஆவேசத்தாலே ஊர்ந்துவர, தாயுங்கூட உதவாத சமயத்திலே முலை வரவு தாழ்த்த காரணத்தால் சீறி நிமிர்த்த திருவடிகளால் முடித்து உலகத்துக்குத் தலைவனாகிய தன்னைத் தந்த உபகாரகன். அருளின் பெருநசையால் – ‘அத்தகைய உபகாரகன் காதலிக்கு உதவானோ?’ என்னும் ஆசையாலே. அருளின் கனத்துக்குத் தக்கபடியே நசையின் கனமும் இருக்குமாதலின், ‘உருளும் சகடம் உதைத்த பெருமானார் அருளின் பெருநசை’ என்கிறாள். ஆழாந்து நொந்தாயே – ‘தரைப்பட்டு நோவுபட்டாயே!’ என்கிறாள்.
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
Leave a Reply