ஸ்ரீ பாஷ்யம் —2-1-9 : க்ருஸ்ந ப்ரஸக்தி அதிகரணம் –ஸ்ரீ உ. வே. ரங்கராமாநுஜ அய்யங்கார் ஸ்வாமிகள்-

அதி. 2-1-9 : க்ருஸ்ந ப்ரஸக்தி அதிகரணம்

சூத். 2-1-26 :: க்ருஸ்ந ப்ரஸக்தி : நிரவயவத்வ ஸப்தகோப : வா ::

கீழே க்ஷீர, ஜலாதி திராஷ்டாந்தங்கள் சொல்லப் போக , அவைகள் ஸாம்ச , ஸாவயவத்தோடு கூடியவைகள் ஆயிற்றே ?
திராஷ்டாந்திகமான பிரஹ்மமும் ஸாம்ச , ஸாவயவத்தோடு கூடியதோ? நிரம்ச , நிரவயவமோ ? என்பது கேள்வி.

சாது ஜனங்களை நலியும் காஞ்சனை சாதிப்பதற்கு
ஆதியும் சோதி உருவை அங்கு வைத்து இங்குப் பிறந்த வேத முதல்வன் – நம்மாழ்வார்.

அங்கு வைத்து இங்குப் பிறந்த – என்றதால் அவதார காலத்தில் அவன் இங்கு இருக்க, அங்கு பரமபத்தில் இருப்பு போலியோ?
ஸாம்சமான ஸாவயவ பிரஹ்மம் இரண்டு இடத்திலும் இருப்பது சாத்தியம் இல்லையே .
கறந்த பால் குவளையில் போட்டு நிறைத்த பின்பு குடத்தில் இல்லையாமாப் போலே ? – என்பதான உதங்க பிரஸ்னம் இங்கு.

ஸாவயத்தை ஒத்துக்க கொண்டால் க்ருஸ்ந பிரஸ்னம் வரும். அதாவது
இந்த பிரஹ்மம் முழுமையாக காரிய பொருளாக ஆயிற்று என்பதாய்
அதனுடைய சித் அம்சம் சேதனர்களாகவும் , அசித் அம்சம் ஜகத்தாகவும் மாறியது –
அங்கு வைத்து என்பது போலியாய், காரணப் பொருள் இல்லையாய், காரிய பொருட்கள் வந்தது –
எப்படி குடத்தில் இருந்த பால் குவளைகளில் நிரப்பப் பட்டு இல்லை ஆகிறதோ , அதுபோல் என்று கொள்ள வேண்டி வரும்.
நிரவயவத்வம் பிரஹ்ம ஸ்வரூபம் என்றால், திருஷ்டாந்தமும், திராஷ்டந்திக்கமும் ஒத்துப் போகிறது இல்லை என்பது மட்டும் அல்ல
பகு பவன சங்கல்பமும் ஒத்துப் போவதில்லை.
என்ன தான் சரீராத்ம பாவத்தை இட்டுச் சொன்னாலும், சரீரம் ஆத்மாவுக்கு அம்சம் என்பதிலேதான் முடியும்.
அத்தாலும் க்ருஸ்ந பிரஸ்னம் (தீர்ந்து போகும் நிலை) அநிவாரியம் என்பதாக நையாயிகனுடைய பூர்வ பக்ஷம்-

ப்ரஹ்மானந்தவல்லீ
ஸச்ச தயச்சாபவத் |
நிருக்தம் சாநிருக்தம் ச | நிலயநம் சாநிலயநம் ச |
விஜ்ஞாநம் சாவிஜ்ஞாநம் ச | ஸத்யம் சாஅநுருதம் ச ஸத்யமபவத் |
யதிதம் கிஞ்ச | ததசத்யமித்யாசக்ஷதே |
ததப்யேஷ ஸ்லோகோபவதி

ஸுத்த துவைதிகளான நையாயிகன் , வைசேஷிகன், மத்வ சம்பிரயதாயத்தவர்களான இவர்கள்
சரீராத்மா பாவத்தை ஒரு போதும் ஒத்துக் கொள்வதில்லை. சரீர தர்மம் வேறு. ஆத்ம தர்மம் வேறு
ஸூக்ஷ்ம சித்தசித் காரண பிரஹ்மமானாலும், ஸ்தூல சித்தசித் கரிய பிரஹ்மமானாலும்,
அம்சா-அம்சி; அவயவ-அவயவி ஒட்டு ஒழியாது. அதனால் இது
ஸது ஏவ சௌம்ய ! இதம் அக்ர ஆஸீத் அதுவிதீயம் பிரஹ்ம என்கிற நிரவயவி வாக்கியத்துக்கு விரோதிப்பதாய்
ஸாஅம்சமே சித்திக்கும். க்ருஸ்ந பிரஸக்தி வந்தே தீரும்.

அல்லது பிரஹ்மம் நிரவயவி என்று சொல்லுவதானால் –
ஸககாரி காரண வர்ஜிதமான பஹுஸ்யாம் பிரஜாயா யேதி என்கிற பஹுபவந சங்கல்பம் நோபபத்யதே – சேரவே சேராது.
ஆக பிரஹ்மம் ஜகத் காரணமாகாது. பிரஹ்ம க்ஞான ஆரம்பணம் அர்த்த மற்றது.
பிரஹ்மம் நிமித்த காரணம் மட்டுமே. பரமாணு உபாதான காரணம், கால, தேசம் சககாரி காரணம் என்கிற
எங்கள் சித்தாந்தம் தான் சாதுவானது. ஸமஞ்சஸமானது அத்தை ஏற்று நடங்ககோள் என்று
சொல்லும்படியான பூர்வ பக்ஷ சூத்ரம் இது.

ஜகத் அஸ்தமிதம் பூதம் என்பதான பரிஸ்திதி – கேசி என்கிற குதிரை வாயில் கண்ணன் தன் தோள் வரை கையைவிட ,
இனி என்ன அவனையும் உள்ளே இழுத்து விடுவானோ? என்கிற பர்யந்தமான பரிஸ்திதி.
அதிலிருந்து மீண்டு எப்படி கண்ணனெம்பெருமான் கோபர்களை ரக்ஷித்தானோ, அதுபோல இந்த வேதாந்த விசாரம்
அடியோடு விலக்கத்தக்கது என்கிற நிலைக்குத் தள்ளுகிற இந்த வைசேஷிக ஆக்ரஹத்துக்கு,
ஸ்வாமி எம்பெருமானார் என்ன பிரத்யஸ்திரம் கொண்டு அவர்களை நிரசிக்கிறார் என்பதை இனி பார்ப்போமாக.

வேதம் – 4.
அங்கம் – 6.
உபாங்கம் – 4
ஆக வித்யா ஸ்தானங்கள் 14.
இத்தோடு
ஆயுர்வேதம்
தனுர்வேதம்
காந்தர்வ வேதம்
அர்த்த சாஸ்திரம்
சேர்த்து வித்யா ஸ்தானங்கள் 18 என்றும் சொல்வர்.
மீமாம்ஸா சாஸ்திரம் 3 காண்டமாக
ஜைமினியுடைய கர்ம காண்டம் 12 அத்யாயம்
காஸக்ருஸ்னருடைய தேவதா காண்டம் 4 அத்யாயம்
பாதராயணருடைய சாரீரக மீமாம்ஸா 4 அத்யாயம் என
மீமாம்ஸா சாஸ்திரம் முழுவதும் அககண்டமாய் சூத்ரே மணிகணா இவ என்கிறபடியே ஒரே சாஸ்திரம் என்பதே நம் முடைய சம்பிரதாயம்.

அதில் , பிரஹ்ம மீமாம்ஸா சித்த துவிகம், ஸாத்ய துவிகம் இத்தால் பிரமேயமான பகவத் ஸ்வரூபம்,
பிரஹ்ம பிரதிபாத்யமான குண விக்ரக விபூதியாதிகள்,
அவனை அடைய ஆறு, தடை, பலன் இத்யாதிகளை 4 அத்யாயங்களால் காட்டுமுகமாக
அவனுக்கு ஆராத்யமான யஞ்ஞ யாகாதிகளை பூர்வ மீமாம்ஸையிலும்;
அங்காண்யங்காணி தேவதா: என்றவகையில் முப்பத்து முக்கோடி தேவதைகள் விஷயமான
தேவதா காண்டமும் சேர மூன்றும், மூன்று ஸாகளைகளை உடைய ஒரு விருக்ஷம் போலே – ஸா த்ரிதா பவதி.

அதில் முதல் அத்யாயத்தில்
பிரஹ்மம் ஜிக்ஞாசம்தான் என்றும், பிரஹ்ம காரணத்வம் சொல்லப்பட்டது.
அடுத்து முதல் சூத்ரத்தால் சித்த வஸ்துவான பிரஹ்மத்தை சொல்லி,
அதற்கு ஸ்ருஷ்டி, ஸ்திதி, சம்ஹார, மோக்ஷ பிரத்வாதி லக்ஷணத்தை 2வது சூத்திரத்தாலும் சொல்ல
இது பிரமாணாந்தர கோசரமே, சாஸ்திரம் ஏதுக்கு? அனுமானத்தாலே கொள்ளலாமே என்ன
ஸ்ருதி சிரஸி விதீப்யே என்கிறபடி
ஸ்ருத்யைக அநதிகம்யன் என்பதாக – சாஸ்திர யோனித்வாத் என்கிற 3வது சூத்ரத்தால் காட்டப்பட்டது.
அவனைக் கொண்டு இன்னொன்றை அடைகை அன்றிக்கே , ஸ்வயம் பிரயோஜனமாக இருக்கிறான் பகவான் என்பதை
தத் து ஸமன்வயாத் என்பதான 4வது சூத்ரத்தால் காட்டி, இந்த 4 அதிகரணத்தால் , சொல்லப்பட்ட விஷயங்களே
மீதமுள்ள மூன்று அத்யாயத்தில் விவரிக்கப்படுகின்றன.

இப்படி முதல் அத்தியாயத்தில், அயோக விவச்சேதம், அந்யயோக விவச்சேதம் இவைகளைக் கொண்டு
பிரதானம் போன்ற வேறு வேறு வஸ்துக்கள் ஏன் காரணமாக் கூடாது என்பன போன்ற ஸ்ருதி விபிரதிபத்திகளை பரிகரித்து
சித்தசித் விசிஷ்ட பிரஹ்மமே த்ரிவித காரணம் அதிலும் விசேஷித்து ஜகத் உபாதான அந்த பிரஹ்மமே காரணம் என்று காட்டப்பட்டது.

பிரகிருதம் அவிரோதாதியாயம் ஸ்ருதி பாதத்தில் வாதீய விப்ரதிபத்திகளைப் பரிகரிக்கிறது.
இங்கு போலே முதல் அத்தியாயத்திலும் வாதங்கள் உண்டு. அங்கு போலவே இங்கும் ஸ்ருதி வாக்கியங்கள் உண்டு.
அங்கு பரிகரித்தது ஸ்ருதி விப்ரதிபத்தியை . இங்கு வாத பிரதிபத்தியைப் பரிகரிக்கிறது. .

வேதார்த்தம் அருதியிடுவது ஸ்மிருதி இதிஹாச புராணங்களாலே – என்பதாலே தத்வ பிரதானமான
கபில ஸ்ம்ருதியாலே வைத்துக் கொண்டே வேத வாக்கியங்களை அர்த்தம் சொல்ல வேண்டும்.
அதை விடுத்து வேத வாக்கியங்கள் மட்டுமே கொண்டு அர்த்த நிர்ணயம் பண்ணுகை சரியில்லை.
எனவே எம்மையும் வாத பிரதிவாத்ததில் சேர்க்க வேண்டும் என்று நையாயிகர் வேண்ட,
பிரஹ்ம காரண வாதத்தை விடுத்து வேத விருத்தமான பிரதான காரண வாதத்த்தையே அவலம்பித்த காபில ஸ்ம்ருதி ,
அன்ய ஸ்மிருதி அநவகாச தோஷ பிரசங்க : என்பதால், உமக்கு பிரவேசமில்லை என மறுத்தார்கள்.

வேத: என்கிற சொல் புல்லிங்கம். ஸ்மிருதி என்பது ஸ்த்ரீ லிங்கம்.
தக்ஷ ஸ்மிருதி , மநு ஸ்மிருதி, ஆரீத ஸ்மிருதி, சௌநக ஸ்மிருதி இத்யாதிகள் பிரஹ்ம காரண வாதத்தை ஒப்புக் கொள்வதால்,
இப்படிப்பட்ட அன்யோன்ய தாம்பத்யமுடைய ஸ்மிருதிகளே போதும் என்ன ,
மநு ஸ்மிருதி ஆச்சார பிரதானமாய், வர்ணாஸ்ரம தர்மத்தை சொல்வதால், அது பூர்வ மீமாசைக்கு வேண்டுமானால் வைத்துக் கொள்ளுங்கால்.
உத்தர மீமாம்சா ஞான காண்டத்துக்கு விஷயமாக எங்களுடைய யோக விஷயமான காபில ஸ்மிருதியே சரி என்று மேலும் வாதிட
அதுவும் ரஜ தமோபூதனான பிரம்மா வாய் வழி வந்த படியால் அதுவும் தியாஜ்யம் என முதல் 2 அதிகரணத்தால் சொல்லப்பட்டது.

இந்த 3 வது அதிகரணத்தால் ஸாலக்ஷண்ய ஹேதுமத்வம் பிரஹ்மத்துக்கும் ஜகத்துக்கும் இல்லையாய்க் கொண்டு –
ஜகத்து சுக துக்க மோக அனுபவத்தோடு இருக்க, சுத்த முக்த ஞானந்த ஸ்வரூபமாக பிரஹ்மம் இருக்க
இரண்டுக்கும் ஸாலக்ஷ்ண்ய அபாவத்தால், முதல் அத்தியாயத்தில் சொல்லப்பட்ட பிரஹ்ம ஜகத் காரணத்வம் சேராது
காரணம் காரிய காரண சாலாக்ஷிண்யம் இன்மையையால் என்று பிரதிபக்ஷி காட்ட ,
கோமய விருச்சிக உதாரணத்தை இட்டு ஸர்வ பிரகாரத்தாலும் ஸாலக்ஷண்ய நிர்பந்தம் வேண்டியதில்லை என்று சொல்லி
பிரசங்காது சரீராத்மா பாவத்தையும் விலக்ஷ்ணத்வாதிகரணத்தில் நிரூபித்தார் ஸ்வாமி எம்பெருமானார்.
இப்படி பிரதானம் ஜகத் காரணம் அல்ல, பிரஹ்மம் தான் ஜகத் காரணம் என்பதை சொல்லி
ஏதேன யோக ப்ரத்யுக்த :
ஏதேன சிஷ்டா அபரிக்கிரஹா :
ஏதேன ஸர்வ வியாக்யாதா வியாக்யாத – என்று 3 இடங்களில் ஏதேன ஏதேன என்று எந்த வகையில்
வேதங்களில் ஏற்கப்படாத சாங்கியர்களுடைய ஜகத் காரண வாதங்கள் தள்ளப் பட்டனவோ -அதே வகையில் வேத விருத்தமான
கணாபருடைய வைசேஷிக பக்ஷம்
தார்கிகர்களான கௌதம பக்ஷம்
க்ஷபணர்களான ஜைன பக்ஷம்
பௌத்தர்களான பிக்ஷு பக்ஷம்
ஆகியோர்களுடைய வாதங்களும் தள்ளப் பட்டன.

சரீராத்மத்தைப் பிடித்துக் கொண்டு சேதானாசேதன தத்துவாராவருகிற சுக துக்கங்கள் சரீரியான பிரஹ்மத்துக்கும் வருமே என்ன,
அதற்கு சரீரம் காரணம் ஆகாது. கர்மம் தான் காரணம் அகர்ம வஸ்யனான பிரஹ்மத்துக்கு
ஸ்வேச்சா கிருஹீத அபிமத உரு தேஹ: என்பதாலே சுக துக்கங்கள் தட்டுவதில்லை.
நிக்ரானுக்கிரக சம்பந்தமே உள்ளது என்பதாக
போக்த்ராபத்தே: அதிகாரணத்தில் நிவர்த்தி பண்ணித்து.

இப்படி சாங்கியன் தலை மடிய,
வைசேஷிகன் காரணத்தைக் காட்டிலும் காரியம் வேறுதான் என்பதை நாம் காட்டுவோம் என்று
ததனன்யத்வம் ஆரம்பணாதிகரணத்துக்கு விஷயம்.
பர்த்ரு பிரபஞ்சருடைய ஸ்வரூப பரிணாம வாதம்
சங்கரருடைய மாயா வாதம்
பாஸ்கரருடைய உபாதி வாதம்
பாமதிக்காரர் , யாதவ பிரகாசர் இவர்களுடைய ஜீவாத்வைத வாதம்
இவைகளைத் தள்ளி காரணாது காரியம் அந்யதேவ என்று புறப்பட்டான்.

நம்முடைய பக்ஷத்தில் காரண காரியம் ஒன்றே என்ற போது, ஜீவனும்-பிரஹ்மமும் ஒன்றே என்று தேறாதோ?
ஜீவனுக்கான துக்க மோகங்கள் பிரஹ்மத்துக்கும் ஆகாதோ?
யாராவது கூரை தலைமேல் விழும்படியாக அல்லது தனக்குத்தான் நெருப்பு பாக சாலையில் வைப்பானா
அதுவுமன்றி தான் அடித்து செல்லும்படியான பிரவாகத்தை சூழ்த்துக் கொள்வானோ? என்பதாக வாதிக்க
சரீராத்ம பாவத்தால் ஒன்று என்கிறதே ஒழிய ஸ்வரூபத்தால் திரவ்யமே ஒன்று என்பதில்லை
பிரஹ்மம் வேறு தான். ஜீவன் வேறு தான்.
ஜீவன் அவித்யா கர்ம பந்தித்தன்தான். பகவத் பிரசாதத்தாலேயே அவித்யை விலக்கப்பெற்று அவனுக்கு மோக்ஷம்.
தர்சனம் பேத ஏவச.
பிரஹ்மம் தனக்குத் தானே அதிக்ருதம் பண்ணிக்கொள்கிற பிரசங்கமே இல்லை என்று
அதிகம் து பேத நிர்தேசாத் என்ற சூத்ரதால் விளக்கப் பட்டது.

முதல் தனி வித்தேயோ – என்கிற ஆழ்வார் ஸ்ரீஸூக்தி படிக்கு பிரஹ்மம் த்ரிவித காரணமாயும் இருக்கிறது என்பதை நிராகரித்து,
லோகத்தில் குயவனோ, நெய்பவனோ தண்ட, சக்கரம் , உண்டை, பாவு ஸககாரம் இல்லாமல் கேவலம் சங்கல்பத்தாலே
கட, படாதிகளை நிர்மாணிக்கப் போகாது என்பதால், பிரஹ்மம் உபாதான மில்லாமல் சங்கல்பத்தாலேயே ஜகத் வியாபாரம் செய்யப் போகாது
ஏகமேவ அதுவிதீயம் என்று சககாரி உபகரண அபாவம் சொல்லப்பட்டதாலே
பிரஹ்மம் ஜகத்துக்கு காரணமாக இருக்க முடியாது பூர்வ பக்ஷ ஆக்ஷேபம் பண்ணினான் வைசேஷிகன்.

இரவில் வைத்த பால் தன்னாலேயே காலையில் தயிராக மாறிப் போலே,
பனிப்பாறை தன்னாலேயே நீர்ப்பண்டமாவது போலே, பிரஹ்மம் உபகரணம் இல்லாமல் சங்கல்பத்தாலேயே
ஸ்ருஷ்டியைக் செய்கிறது என்பதாக உபஸம்ஹார தர்சநாத் என்ற சூத்திரத்தில் சித்தாந்தமாக காட்டினார் எம்பெருமானார்.

———–

சூத் . 2-1-26 :: க்ருத்ஸ்ந பிரசக்தி :நிரவயவத்வ சப்தகோப: வா ::

க்ஷீரவத்தி என்று ஸாவயவ திருஷ்டாந்தத்தை சொன்னபடியால்,
பிரஹ்மம் ஸாவயவமா ? நிரவயவமா ? ஸாம்சமா? நிரம்சமா? என்கிற கேள்வி எழ அத்தை பரிகரிக்கிறது
க்ருத்ஸ்ந பிரஸக்தி அதிகாரணத்தில்.
ஸாவயவம் என்றால் சூட்டு நன் மாலைகள் தூயன ஏந்தி பாசுரத்தில் சொன்னபடி பகவான் பரமபதத்தின்றும்
நப்பின்னையைப் புணர கீழ் இறங்கிய காலத்தில் மேல வைகுந்தத்தில் இல்லை என்பதும்;
நிரவயவம் என்றால் ஸ்ருஷ்டிக்குப் பின் அவன் இல்லை – காரிய வஸ்து உண்டான பின் காரண வஸ்து இல்லை என்பதான நிலை வருமே
அத்தால் பிரஹ்ம காரணவாத்ததை விட்டு ஜகத் உபாதான காரணம் பரமாணு என்கிற எங்களுடைய ஸம்பிரதாயத்துக்கு
வாருங்கோள் என்பதாக உத்கட ஸ்திதிக்கு தள்ளிவிட்டான் வேதாந்திகளான நம்மை.
அதற்கு வியாசர் காட்டும் பிரத்யுத்தரம்

—————-

சூத். 2-1-27 ::ஸ்ருதேஸ்து ஸப்த மூலத்வாத் —

பிரஹ்மம் நிரவயவம்தான்–பூர்வ பக்ஷ தோஷங்கள் பிரஹ்மத்துக்கு தட்டுவதில்லை, ஸ்ருதியாலே.
பிரஹ்மம் அவயவமற்றது; விசித்திர சக்தி கொண்டது என்று சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளதால், அதனை மறுப்பதற்கில்லை.
பர பிரஹ்மத்தையே ஒத்துக்கொள்ளாத சாங்கியர்களுக்கோ, அனுமானிக்க பிரஹ்மவாதிகளான உங்களுக்கோ
அது ஒப்புக்கொள்ளும்படி இல்லாமல் போகலாம். பரம வைதிகர்களான எங்களுக்கு வேதமே பிரமாணம்.
வேதத்தில் பிரஹ்மம் நிரவயவம் என்பதும், அந்த பிரஹ்மமே ஜகத் காரணம் என்றும் சொல்லப்பட்டுள்ளதாலே
விரோதிப்பதில்லை என்பது சித்தாந்தம்.
வேதம் நித்ய, நிர்துஷ்ட, ஸம்சய , விபரியாதி தோஷங்கள் இல்லையாய்க் கொண்டு, யதா வியவஸ்திதம் கொள்ள வேண்டியது.
ஸ்ருத்யைவ ஸமதிகம்யமான பிரஹ்மத்திடத்தில் தோஷங்களுக்கு பிரசக்தியே இல்லை. என்றாலும்
இனி வேத பிராமாண்யத்தைக் கொண்டே பிரமாணங்களை காட்டுகிறோம் என்று பலவான ஸ்ருதி வாக்கியங்களை உதாகரிகலாவது. .

திருப்பாற்கடலில் சயனித்திருக்கிற எம் பெருமான் நீலமேனி தான் நீல கடல் போலே காட்சி அளித்தாலும்,
கரையில் நின்றவன் கண்ணுக்கு, எப்படி ரத்நாகரமான கடலில் உள்ள முத்தும் மணியும் புலப்படுவதில்லையோ அது போல
அவனுடைய குணங்களாகிற ரத்னங்கள் பூர்வாச்சார்ய ஸ்ரீஸூக்திகள் கொண்டல்லது புலப்படுவதில்லை.

இந்த க்ருத்ஸன பிரஸக்தி அதிகாரணத்தில்
பிரதான காரண வாதியான சங்கியன் தான் முக்கிய பூர்வ பக்ஷி.
அவனோடு சேர்ந்து பரமாணு காரண வாதியான வைசேஷிகனும் உள்ளான்.

சாங்கியனுக்கும், நமக்கும் உள்ள வித்யாசம் தான் என்ன?
த்ரிகுணாத்மிகா மூல ப்ரக்ருதி ஜகத் காரணம் என்பது அவர்கள் பக்ஷம்.
நாமும்தான் –மாயாம் து பிரகிருதம் வித்தி, மாயினந்து மஹேஸ்வரம் – என்று த்ரிகுணவதியான பிரக்ருதியைக் கொண்டே
பகவான் ஜகத் ஸ்ருஷ்டியைப் பண்ணுகிறான் என்கிறோம்.
த்ரிகுணவதி என்றால் ஸத்வ, ரஜஸ், தமோ குணங்களை உடையது என்று பொருள்.
த்ரிகுணாதமிகா என்றால் , குணா -குணி அபேதத்தை சொல்லும்
அஸ்மாந் மாயி ஸ்ருஜதே என்று .ஈஸ்வர அதிஷ்டான மூலப் பிரக்ருதியைச் சொல்லுகிறோம்.
அவர்கள் த்ரிகுண ஸ்வரூபமாகவே இருக்கிற பிரக்ருதி,, ஈஸ்வரன் அதிஷ்டிக்காமலே ஸ்ருஷ்டிக்கிறது என்கிறார்கள்.

இப்போது இங்கு உள்ள விவாதம் பிரஹ்மம் ஸாவயவமா? நிரவயவமா? ஸாம்சமா ? நிரம்ஸமா ? என்பது.
ஸாவயவம் என்றால் நிஷ்களங்கம், நிரஞ்சனம், பரமம் என்கிற நிரவயவ, நிராகாரதத்வம் பிரஹ்மம் என்பதற்கு விரோதிக்கிறது.
ஸாவயவம் என்றால் விபுத்வத்துக்கும் விரோதிக்கிறது என்ன
ஆநுமானிக பிரஹ்மம் போலேயாவோ – என்ற வகையில் .
ஸ்ருத்யைக அநதிகம்யன் ஈஸ்வரன், ஸகலேதர விசஜாதியன்.ஸர்வசக்தன் என்பதற்கு பல ஸ்ருதி வாக்கியங்களை

சூத். 2-1-28 :: ஆத்மநி ச ஏவம் விசித்ராஸ்ச ஹி —

என்கிற சூத்திரத்தாலே காட்டுகிறார். –அக்நிக்கு உஷ்ணம், நீருக்கு குளிர்த்தி என்று ஒவ்வொரு பொருளிலும்
அதற்கே உரிய சக்தி இருப்பதற்கான காரணம் தர்க்க வாத விவாதங்களுக்கு அப்பாற்பட்டது.
அந்த பொருளைக் குறித்து உரைக்கவல்ல வேதமே இதற்கு பிரமாணம்.
ஜீவாத்மாவிடமும் இதுபோன்றே அசேதனத்தில் இல்லாத விசித்திர சக்தி உள்ளது.
சித்தசித் விலக்ஷண ஈஸ்வரனிடத்திலும் மற்றோன்றில் இல்லாத ஸ்ருஷ்டி முதலான சக்திகள் உள்ளன – என்பதை
ஸ்ரீ விஷ்ணுபுராண ஸ்லோகம் 1-3-2,3 களில் பராசரர் மைத்ரேயருக்கு பிரச்னோத்தரமாக எடுத்துக் காட்டியுள்ளார்.

முகம் தாமரையைப் போல. நிலாவைப் போல என்றால் திருஷ்டாந்தத்தில் எவ்வளவு அம்சம் திராஷ்டாந்திக்கத்திலே பொருந்துமோ
அவ்வளவே கொள்ள அமையும். பிராகிருத விஷயத்தில் இப்படியாக, பிரஹ்மத்தின் விஷயத்தில், சாதாரணமாக நாம் காணும்
பொருள்களை வைத்து இதில் சொல்லப்படும் –
இவ்விடத்தில் க்ஷீரவது என்பதிலான – ஆக்ஷேபங்கள் பிரஹ்மத்தின் விஷயத்தில் பொருந்தாது என்பது கருத்து.

சூத். 2-1-29 :: ஸ்வபக்ஷ தோஷாத் ச —

ஜகத் காரணியான மூலப் பிரக்ருதி நிரவயவம் என்கிற சாங்கியர்களான தங்கள் பக்ஷத்துக்குத் தான் இந்த தோஷங்கள் உள்ளன
என்று அவர்களுக்கே திருகு பாணம் ஆக்கி இட்டார் இந்த சூத்ரத்தாலே வியாசர் .
அவர்கள் சித்தாந்தம் – ஸத்வ, ரஜஸ் , தமஸ் சம நிலையில் இருந்தால் பிரளயம் என்றும்,
சமநிலை மாறி ஏற்றக்குறைவால் சிருஷ்டி நடக்கிறது என்றும் சொல்லப் படுகிறது.
முக்குணங்களும் ஒன்றோடு ஒன்று கலக்கும் போது , ஸ்ருஷ்டி தாரதம்யத்தாலே, ஒன்று தீர்ந்து, மற்றது மிக்கும்படியான நிலை ஏற்படலாம் –
எப்படி குமார சம்பவத்தில் பார்வதி தேவியை உத்பன்னம் பண்ணுகிற சமயத்தில்,
லாவண்ய, யௌவன, ஸ்ருங்காராதிகள் கால், ஜாநுவளவாக தீர்ந்து போக மற்ற அவயவங்களை படைக்க,
இன்னும் எங்கே அவை என்று தேடப் புறப்பட்டாப்போலே ஸாவயவ தோஷம் சாங்கிய பக்ஷத்திலே அநிவாரியமாகவன்றோ உள்ளது.

ஒன்றொன்றே – ஸத்வம் தனியாக காரியம் ஆகிறது.
ரஜஸ் தனியாக காரியம் ஆகிறது. தமஸ் தனியாக – காரியம் ஆகிறது என்னு சொல்வதானால்,
த்ரிகுணாத்மகம் சம்சாரம் என்பதை விரோதிக்கிறது–
அதாவது ஸத்வ, ரஜஸ் , தமஸ் குணாத்மகமான பிரதானம் விபு – நிரவயவம் என்றால்
ஸ்ருஷ்டி – ஸ்தூல வஸ்து பிராரம்பமாக பிரசித்தி இல்லை.
சாவயவம் என்றால் பிரகிருதி காரியமான 24 தத்துவங்களுக்கு மேற்பட , காரியமாகாத மூலப் பிரகிருதி என்று தனித்து இருக்க
தத்துவங்கள் எண்ணிக்கையில் 25 (அ ) 27 என்கிற குழப்பம் வரும்.
இங்கு இன்னுமொரு கேள்வி.
ஸத்வ, ரஜஸ் , தமஸ் சமூகம் பிரதானம் என்பதா? ஸத்வ, ரஜஸ் , தமஸ் சேர்ந்தத்தாலே பிரதானம் உண்டாயித்தா?
இரண்டாவது கருத்தால், பிரதான காரணவாதம் நிற்காது. காரணம் அதற்கும் காரணம் முக்குணம்.
முதல் கருத்தான முக்குண சமூகம் பிரதானம் என்றால் தேச அபரிச்சேத வஸ்துவால் ஸ்தூல காரிய பொருளை உருவாக்க இயலாது.
.
இதே காரணத்தால், பரமாணுவத்திகள் விஷயத்திலும் நிரவயவ நிரம்ஸ பரமாணுக்கள் ஸ்தூலமான
காரிய வஸ்துவை உண்டாக்கும் திறன் அற்றது என்றும் தேறுகிறது.

நாம் சொல்லுகிற பிரஹ்ம காரிய வாதத்தில், பிரஹ்மத்துக்கு தோஷம் இல்லை
சாஸ்திர பிரமாணத்தை வைத்துக் கொண்டு கூறுவதால். – என்பது சித்தாந்தம்.

————

சூத் . 2-1-30 :: ஸர்வோ பேதாச தத் தர்சநாத் —

கீழே சொன்ன ஸகல வஸ்து விஜாதீயம் பிரஹ்ம ஸர்வ சக்திமத்வம்
இரண்டுக்கும் பிரமாணங்களை எடுத்துக் காட்டுகிறார் இத்தால்.
பராஸ்ய சக்திர் விவிதைவ ச்ரூயதே ஸ்வாபாவிகீ க்ஞான பல க்ரியா ச – ச்வே .உபநிஷத்
அபஹத பாப்மா விஜரோ விம்ருத்யுர் விசோக : விஜிகத்ஸ : அபிபாஸ : – சாந்தோ. உபநிஷத்
இந்த 6 குணங்கள் ஜீவாத்மாவுக்கும் முக்த தசையில் சொல்லப் பட்டாலும், பிரஹ்மத்துக்கு அவை எப்போதுமே மழுங்காத ஒன்று.
ஸத்ய காம: ஸத்ய ஸங்கல்ப – – சாந்தோ. உபநிஷத்
மநோமய ப்ராண சரீரோ பாரூப—
ஸர்வமிதம் அப்யாத்த : அவாகீ அநாதர : – சாந்தோ. உபநிஷத்
இப்புடைகளால், பிரஹ்மம் அனைத்து வஸ்த்துக்களையும் விட வேறானதும் ,
தன்னைப் போல மற்ற எதற்கும் இல்லாததான உயர் பண்புகளைக் கொண்டது ஆகும் என்று சுருதிகள் பேசுகின்றனவே.

இதற்கு மேலும், ஒரு ஆக்ஷேபம் எழுபப்படுகிறது.. அது என்னவென்றால்

——————-

சூத். 2-1-31 :: விகரணத்வாத் ந இதி சேத் தத் உக்தம் —

கீழ் 24 வது சூத்ரத்தில் .- உபஸம்ஹார தர்சாநாத் – என்கிற அதிகரணத்தில் பிரஹ்மத்துக்கு ஸத்ய சங்கல்பத்துவம் இல்லை
அதாவது ஞான, சக்திகள் இருக்கலாம், சங்கல்பத்தாலேயே பண்ணுகிற ஜகத்வியாபாரம் கிடையாது என்பதை அங்கு பரிகரித்தார்.
இங்கு சிருஷ்டியை செய்ய அவசியமான
ந தஸ்ய கார்யம் கரணம் தத் வித்யதே – என்று உபநிஷத் சொல்லி இருக்கிறபடியால்
தேக இந்திரிய கரண்ங்கள் பிரஹ்மத்துக்கு கிடையாதே. அப்படிப்பட்ட பிரஹ்மம் நிமித்த காரணம் என்று சொல்வது எப்படிப் பொருந்தும்
என்கிற பூர்பக்ஷ ஆக்ஷேபத்துக்கு , பதில் முன்பே – கீழ் 24வது சூத்திரத்திலேயே உரைக்கப்பட்டது என்கிறார்.

கீழேயே பதில் சொல்லப்பட்டது என்றால். புநருக்தி தோஷம் வாராதோ ? என்னில்
அங்கு கழிக்கப்பட்ட அம்சம் சத்ய சங்கல்பத்தைப் பற்றி.
இங்கு கழிக்கிற அம்சம் விக்கிரக விஷயமான ஆக்ஷேபம். ஆகவே இதில் புநருத்தி தோஷம் ஏதுமில்லை.

கர்ம வஸ்யர்களான நமக்குப் போல் பாஞ்ச பௌதிகமான சரீரம் பகவானுக்கு இல்லையே ஒழிய,
பஞ்ச உபநிஷத் மயமான அபிராக்ருத திவ்விய மங்கள விக்ரகம் உண்டு என்பதே வைதிக சித்தாந்தம்.
இத்தால் நிர்விகார ஸ்ருதிக்கும் , காரண ஸ்ருதிக்கும் பரஸ்பரம் விரோதம் வரக் கூடாதாகில்–
அதற்கு சரீராத்மா பாவத்தை சொல்லுகிற விசிஷ்டாத்வைத சித்தாந்தமே ஏற்புடைத்தாகும்.

விசிஷ்ட பிரஹ்மமே ஸ்ருஷ்டி செய்ய முடியும் என்பதை உணர்ந்து,
பிரஹ்மாக்ஞான வாதியான சங்கரர் பிரஹ்மத்தை மாயா விசிஷ்ட பிரஹ்மம் என்றார்.
அடுத்து வந்த பாஸ்கரர் அந்த பிரஹ்மத்தை உபாதி விசிஷ்ட பிரஹ்மம் என்கிறார்.
உபாதியாவது தேகேந்திரிய மனப்ராண சம்பந்தம் என்றே கொள்ளத்தக்கது.
இதில் நாம் சொல்லக் கூடியதும் என்னவென்றால் பிரக்ருதியாகிற உபாதி பிரளயத்தில் ஸூக்ஷ்ம சிதசித்தாக பிரஹ்மத்தோடு
ஒட்டிக் கிடக்க, சிருஷ்டியில் அவை காரண சரீரமான திரிமூர்த்தி சரீரம், அதன் பிறகு ஆகாசம் இவை அனைத்தும்
கர்ம நிபந்தனமாக படைக்கப்படுகிற காரணத்தால், பிரஹ்மத்துக்கான சரீரம் அபிராக்ருதம். கர்மம் காரணம் அன்று.
பிரஹ்மத்துக்கு கரணங்கள் இல்லை என்றாலும், அவனுடைய ஸர்வ சக்திமத்வதுக்குச் சேர
ஸ்ருஷ்டியை செய்து போர இயலும் என்பதே சித்தாந்தம்.

இந்த க்ருஸ்த்ந பிரஸக்தி அதிகாரணத்தில் சொல்லப்பட்ட விஷயம் என்ன வென்றால்
பிரஹ்மம் நிரவயவம், நிரம்சம் என்பதே.
ஸாம்ச மாகாத போது ஜகத் ஸ்ருஷ்டி ஆகாதே என்றால், பிரஹ்மத்துக்கு விசித்திரமான சக்தி உண்டு.
அது கொண்டு படைக்கிறது என்று பார்த்தோம்.

ஸ்வாமி ஆளவந்தார் கஸ்ஸ்ரீ : ஸ்ரிய 😕 பரம ஸத்வ ஸமாச்ரயே க 😕 என்கிற ஸ்தோத்தர ரத்னம் 12 ஸ்லோகத்தில்
கஸ்யாயுதாயுத ஸதைக கலாம்ச காம்ஸே –விஸ்வம் விசித்ர சிதசித் ப்ரவிபாக வ்ருத்தம்? –என்பதாக பிரஹ்மம் ஸாம்சம் என்றே பேசுகிறார்.

ஆரம்பணாதிகரணத்தில் என்ன சொல்லிற்று ?
ததனனயத்வம் ஆரம்பண சப்தாதிப்ய : என்பதாய் காரணப் பொருளான பிரஹ்மத்துக்கும் காரியப் பொருளான ஜகத்துக்கும்
வேற்றுமை இல்லை என்பதால், பிரஹ்மமே ஜகத் காரணம் என்று நிரூபிக்கப் பட்டது.

இதர வ்யபதேசாதிகரணத்தில் ,
காரிய காரணங்கள் ஒன்றே என்று சொன்னபடியால், ஜீவனும் பிராமமும் ஒன்றே என்று ஆகிவிடும்
அப்போது ஜீவனுக்குண்டான தோஷங்கள் எல்லாம் பர பிரஹ்மத்துக்கும் உண்டாகும். பிரஹ்மம் தனக்குத் தான் அஹிதத்தை
உண்டு பண்ணிக் கொண்டதாகும் என்பதாக. அதை நிராகரிக்க
அதிகம் து பேத நிர்தேஸாத் – ஜீவனும் பிரஹ்மமும் வேறு வேறுதான் என்றதாயிற்று.

தற்போது க்ருத்ஸந பிரஸ்நத்தில் என்ன வந்தது?
பிரஹ்மம் ஸாம்சமா? நிரம்ஸமா ? என்பதற்கு நிரம்சம்தான் என்று காட்டப்பட்டது.

இவைகளில், இதுவா – அதுவா ? எது ? என்று கேட்டால்
பிரஹ்மம் விசிஷ்ட வஸ்து ஏகம் தான்.
பிரஹ்மத்துடைய ஸ்வரூபம் விபுதான். நிரவயவம் தான்.
ஆனாலும், அந்த பிரஹ்மம் நிர்விசேஷம் கிடையாது. ஸவிசேஷம்தான்.
அவனுடைய திவ்யாத்மா ஸ்வரூபத்திலும் பிராட்டிக்கு சாந்நித்யம் உண்டு.
அவள் பிரக்ருதிக்கு அபிமாநினி தேவதை என்பதால் சேதநாசேதனங்கள் விசிஷ்ட பிரஹ்ம ஏகதேசமாகக் கடவது.
ஞானா ஆநந்தங்கள் ஸ்வரூப ஏகதேசம் என்றால் சேதனாசேதனங்கள் திவ்யமங்கள விக்ரக ஏகதேசம்.

ஆக சித்தசித் விசிஷ்டம் ஹி பிரஹ்மண ஸ்வரூபம் . எதுபோல என்றால்
ஜாதி-வியக்தி களுக்குண்டான அபிரதத் சித்த சம்பந்தம் போலே.
நீல விசிஷ்ட-உத்பலத்திலான அபிரதத் சித்த ரூபாதிகளைப் போலே.
சரீர – சரீரி சம்பந்தம் போல பேதம் முக்கியமாக இருக்க, அப்பிரதத்வமாவது
நிரவயவத்வம் பாதியாத விசித்திர சக்தி யோகத்தோடே கூடிய பிரஹ்மத்துக்கு இவை அம்சமாகக் கடவது என்று கொள்க.

திலேவ தைலம் ததி மேய ஸர்பி : – வித்தினுள் எண்ணை போல் , பாலினுள் நெய்யேபோல் ஈஸா வாஸ்யம் ஜகத்து .

————

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ. வே. ரங்கராமாநுஜ அய்யங்கார் ஸ்வாமிகள்- திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஸ்ருதி பிரகாசர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ போதாயனர் -வ்ருத்தி காரர் – ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பாதராயணர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading