பரம யோகிகளுக்கு சம்பவிப்பதான -பகவத் ஞான -வைராக்ய பக்தி பிரகாரங்களை -இத் திருவாய் மொழி அளவும் அனுபவித்து –
இனி இங்கு இருந்து அனுபவிப்பது ஒன்றும் இல்லாமையால் -திரு நாடு ஏறப் போக வேணும் -என்று மநோ ரதிக்கிற ஆழ்வாரை
ஈண்டென கொடு போக வேணும் என்று விரைகிற எம்பெருமான் இவருக்கு அங்குத்தைக்கு ஈடாகும் படி மிகவும் விடாய் பிறக்கைக்காக
திரு நாட்டுக்கு போகைக்கு ஈடாக வேதாந்தங்களில் பிரசித்தமான -அர்ச்சிராதி மார்க்கத்தையும் -அங்கு உள்ளார் பண்ணும் –
ஸத்காரங்களையும் -அவ்வழியே போய்ப் புக்க கடவிய திரு நாட்டையும் -அங்கே எம்பெருமான் அயர்வறும் அமரர்கள் சேவிக்க –
பிராட்டிமாரோடு வீற்று இருந்து அருளும் படியையும் -பரம ப்ராப்யரான அயர்வறும் அமரர்கள் நடுவே தாமே ஆனந்த நிர்ப்பரராய் இருக்கும் படியையும்
காட்டி அருளக் கண்டு ப்ரீதராய் அத்தை அந்யாபதேசத்தாலே பேசி அனுபவிக்கிறார் –
———————————————————–
திரு நாட்டுக்குப் போக உபக்ரமிக்கிற ஸ்ரீ வைஷ்ணவர்களைக் கண்ட ப்ரீதி அதிசயத்தாலே -ஸ்த்தாவர ஜங்கமங்களுக்குப் பிறந்த விக்ருதியை அருளிச் செய்கிறார்
சூழ் விசும்பு அணி முகில் தூரியம் முழக்கின
ஆழ்கடல் அலைதிரைக் கை எடுத்து ஆடின
ஏழ் பொழிலும் வளம் ஏந்திய என் அப்பன்
வாழ் புகழ் நாரணன் தாமரைக் கண்டு உகந்தே –10-9-1-
இடமுடைத்தான ஆகாசத்தில் அழகிய மேகங்கள் தூர்ய கோஷத்தை பண்ணிற்றன-ஆழ் கடல் அலையா நின்று இருந்துள்ள திரையாகிற கையை எடுத்துக் கொண்டு ஆடிற்றன-
ஏழ் பொழிலும் வளம் ஏந்திய–சப்த த்வீபங்களும் புதுக் கணித்தன -உபஹாரங்களை தரித்தார் என்றுமாம் –
எனக்கு பரம பந்துவாய் ஆஸ்ரிதர் எல்லாம் உஜ்ஜீவிக்கும் புகழை யுடைய நாரணன் தாமரைக் கண்டு உகந்தே-
——————————————————–
மேல் உண்டான லோகங்கள் பண்ணின ஸத்காரங்களை அருளிச் செய்கிறார் –
நாரணன் தாமரைக் கண்டு உகந்து நன்னீர் முகில்
பூரண பொற் குடம் பூரித்தது உயர் விண்ணில்
நீரணி கடல்கள் நின்றார்த்தன நெடுவரைத்
தோரணம் நிரைத்து எங்கும் தொழுதனர் உலகே–10-9-2-
அழகிய நீர் முகில்கள் நாரணன் தாமரைக்கு கண்டு உகந்தன–அவை தான் பூர்ண கும்பங்கள் ஆயின -ஆகாச சரரான தேவர்களால் ஆகாசம் எல்லாம் பூர்ண கும்பம் வைக்கப் பட்டது என்றுமாம் -நீராலே அணியப் பட்ட கடல்கள் ஹர்ஷத்தாலே நிரந்தரமாக ஆர்த்தன -லோகங்களில் உள்ளார் எங்கும் நெடுவரை போலே இருக்கும் தோரணங்களை நிரைத்து தொழுதார்கள் –
—————————————————————–
ஆதி வாஹிக லோகங்களில் உள்ளார் திரு நாட்டுக்கு நடக்கிற ஸ்ரீ வைஷ்ணவர்கள் எதிரே வந்து புஷ்ப வர்ஷாதிகளைப் பண்ணிக் கொண்டாடுகிற படியை அருளிச் செய்கிறார் –
தொழுதனர் உலகர்கள் தூப நல் மலர் மழை
பொழிவனர்பூமி அன்று அளந்தவன் தமர் முன்னே
எழுமின் என்று இருமருங்கு இசைத்தனர் முனிவர்கள்
வழி இது வைகுந்தர்க்கு -என்று வந்து எதிரே–10-9-3-
பூமி அன்று அளந்தவன் தமர்–திரு உலகு அளந்து அருளினவன் குணத்திலே அகப்பட்டு அடிமை புக்கு திரு நாட்டுக்குப் போகிற ஸ்ரீ வைஷ்ணவர்கள் –
எழுமின் என்று இருமருங்கு இசைந்தனர் முனிவர்கள்-வழி இது வைகுந்தர்க்கு -என்று வந்து எதிரே–ஸ்ரீ வைகுண்டத்துக்கு போவார்க்கு வழி இது வென்று எதிரே வந்து இரண்டு அருகும் நின்று -எழுந்து அருளலாகாதோ -என்றார்கள் –முனிவர்கள்– முனிவர்கள் என்று வாங்நியமம் தவிர்ந்தமைக்கு ஸூ சகம் –
———————————————————————-
மேலில் லோகங்களில் தேவாதிகள் ஸ்ரீ வைஷ்ணவர்கள் போகிற வழிகளில் தங்குகைக்கு பார்த்த பார்த்த இடம் எல்லாம் தோப்புக்கள் பண்ணியும் -வாத்யாதி கோஷங்களைப் பண்ணியும் -கொண்டாடுகிற படியை யருளிச் செய்கிறார் –
எதிர் எதிர் இமையவர் இருப்பிடம் வகுத்தனர்
கதிரவர் அவர் அவர் கைந்நிரை காட்டினர்
அதிர் குரல் முரசங்கள் அலை கடல் முழக்கு ஒத்த
மது விரி துழாய் முடி மாதவன் தமர்க்கே-10-9-4-
அர்ச்சிராதிகளான அவ்வவ ஆதி வாஹிக கணங்கள் -பார்த்து அருளீர் பார்த்து அருளீர் என்று கைகளை நீரையே காட்டினார்கள் -ஸ்ரீ யபதியினுடைய அழகிலே அகப்பட்ட ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு -இவர்களை எதிர் கொள்ளுகைக்குப் பெரிய பிராட்டியாரோடு ஒப்பித்து அருளுகிறபடி என்றுமாம் –
———————————————————————–
ஆதி வாஹிக கர்த்தாக்களான வருண இந்த்ராதிகளும் மற்றும் உள்ளாறும் ஸ்ரீ வைஷ்ணவர்களுக்குப் பண்ணும் ஸத்காரத்தை அருளிச் செய்கிறார் –
மாதவன் தமர் என்று வாசலில் வானவர்
போதுமின் எமது இடம் புகுதுக என்றலும்
கீதங்கள் பாடினர் கின்னரர் கெருடர்கள்
வேத நல் வாயவர் வேள்வியுள் மடுத்தே–10-9-5-
வாசலில் வானவர்–வழியில் தேவர்கள் -வந்து எங்கள் அதிகாரங்களைக் கொள்ள வேணும் என்று பிரார்த்திக்கிற அளவிலே கின்னர்களும் கருடர்களும் பாட்டுக்களை பாடினார்கள் -மேலில் லோகங்களில் வைதிகராய்க் கொண்டு சமாராதானம் பண்ணுமவர்கள் தங்களுடைய சமாராதான பலங்களை ஸ்ரீ வைஷ்ணவர்கள் திருவடிகளிலே சமர்ப்பித்தார்கள் –
———————————————————————-
ஸத்கார பூர்வகமாக தேவ ஸ்த்ரீகள் உகந்து ஸ்ரீ வசனங்களை ஆசீர் வசனங்களை பண்ணினார்கள் என்கிறார் –
வேள்வி உள் மடுத்தலும் விரை கமழ் நறும் புகை
காளங்கள் வலம் புரி கலந்து எங்கும் இசைத்தனர்
ஆண்மின்கள் வானகம் ஆழியான் தமர் என்று
வாள் ஒண் கண் மடந்தையர் வாழ்த்தினர் மகிழ்ந்தே–10-9-6-
சிலர் தாங்கள் பண்ணின யாக பலங்களை சமர்ப்பிக்கும் அளவிலே வேறே சிலர் அகில் தொடக்கமான த்ரவ்யங்களைக் கொண்டு நல்ல புகைகளை ப்ரவர்த்திப்பித்தார்கள் –கலந்து எங்கும் இசைத்தனர்–கலந்து எங்கும் த்வனித்தன –
——————————————————————-
மருத் கணமும் வஸூ கணமும் தங்கள் எல்லைகளுக்கு அப்பாலும் செல்லலாம் இடம் எல்லாம் சென்று ஸ்ரீ வைஷ்ணவர்களை ஸ்தோத்ரம் பண்ணினார்கள் என்கிறார்-
மடந்தையர் வாழ்த்தலும் மருதரும் வசுக்களும்
தொடர்ந்து எங்கும் தோத்திரம் சொல்லினர் தொடு கடல்
கிடந்த எம் கேசவன் கிளர் ஒளி மணி முடி
குடந்தை எம் கோவலன் குடி அடியார்க்கே–10-9-7-
ஆஸ்ரித அர்த்தமாக நிரதிசய ஸுந்தரிய உக்தனாய்க் கொண்டு திருப் பாற் கடலிலே கண் வளர்ந்து அருளி அங்குச் செல்ல மாட்டாதவர்களுக்காக திருக் குடந்தையிலே கண் வளர்ந்து அருளின கோபாலனுடைய க்ரமாகதமான அடியார்க்கு –
———————————————————————–
பிரகிருதி மண்டலத்துக்கு அவ்வருகாகத் திரு நாட்டிலே எல்லைக்கு புறம்பாக நித்ய ஸூரிகள் ஸ்ரீ வைஷ்ணவர்களை எதிர் கொள்ளுகிறபடியை யருளிச் செய்கிறார் –
குடி அடியார் இவர் கோவிந்தன் தனக்கு என்று
முடி யுடை வானவர் முறை முறை எதிர் கொள்ள
கொடி அணி நெடு மதிள் கோபுரம் குறுகினர்
வடிவுடை மாதவன் வைகுந்தம் புகவே–10-9-8-
கோவிந்தன் தனக்குத் தரும் சந்தான பிரயுக்தமான அடியார் என்று சேஷத்வத்துக்கு சூடின முடியை யுடைய அயர்வறும் அமரர்கள் பர்யாயமாக எதிர் கொள்ள –
கொடி அணி நெடு மதிள் கோபுரம் குறுகினர்–இவர்கள் வருகிறாள் என்று கொடிகளால் அலங்கரிக்கப் படுவதும் செய்து -திரு நாட்டுக்கு எல்லையான மதிலை யுடைய திருக் கோபுரத்தைக் குறுகினார்கள் -தங்கள் வரவால் உண்டான ஹர்ஷத்தாலே புதுக் கணித்த திருமேனியை யுடைய ஸ்ரீ ய பதியதான ஸ்ரீ வைகுண்டத்தில் புக்கு இருக்கைக்காக –
—————————————————————-
ஸ்ரீ வைகுண்டத்தில் சென்று திரு வாசலிலே முதலிகளாலே சம்மதரானவாறே-அங்குத்தை நித்ய ஸூரிகள் சம்சாரிகள் ஆனவர்கள் ஸ்ரீ வைகுண்டத்தில் வருவதே -இது என்ன புண்ய பலம் -என்று விஸ்மயப் பட்டார்கள் என்கிறார் –
வைகுந்தம் புகுதலும் வாசலில் வானவர்
வைகுந்தன் தமர் எமர் எமது இடம் புகுது என்று
வைகுந்தத்து அமரரும் முனிவரும் வியந்தனர்
வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே–10-9-9-
ஸ்ரீ வைகுண்டத்தில் புகும் காட்டில் திருவாசலில் முதலிகள் வைகுந்தனுடையார் எங்களுடைய ஸ்வாமிகள் எங்கள் பதத்தைக் கைக் கொள்ள வேணும் என்று -/ அமரரும் முனிவரும்-கைங்கர்ய தாரகரான அமரரும் அதுக்கும் ஷமர் அன்றிக்கே பகவத் குணங்களில் ஈடு பட்டு இருக்கும் ஸ்வபாவரான முனிவரும் –
——————————————————————–
சம்சாரத்தில் நின்றும் ஸ்ரீ வைகுண்டத்தில் ஸ்ரீ வைஷ்ணவர்களை அங்குள்ள அயர்வறும் அமரர்கள் கொண்டாடும் படியை அருளிச் செய்கிறார் –
விதி வகை புகுந்தனர் என்று நல் வேதியர்
பதியினில் பாங்கினில் பாதங்கள் கழுவினர்
நிதியும் நல் சுண்ணமும் நிறை குட விளக்கமும்
மதி முக மடந்தையர் ஏந்தினர் வந்தே–10-9-10-
தங்கள் பாக்யத்தால் அன்றிக்கே நம்முடைய பாக்யத்தாலே சம்சாரிகள் ஆனவர்கள் இங்கே வந்து புகுரப் பெற்றோம் என்று -வேதத்தில் உபநிஷத் பாகங்களாலே ப்ரதிபாத்யரான நித்ய ஸூ ரிகள் தங்கள் கோயில்களிலே-தங்கள் தாழ்ச்சி தோன்றும் படி இருந்து அவர்களுடைய ஸ்ரீ பாதங்களை விளக்கினார்கள் -ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு நீதியான திருவடி நிலைகளையும் நற் சுண்ணத்தையும் நிறை குடங்களையும் மங்கள தீபங்களையும் ஏந்தி நெடுங்காலம் பிரஜைகளை பிரிந்து கண்ட தாய்மாரைப் போலே ஹ்ருஷ்டமாய் பூர்ண சந்திரனைப் போலே இருக்கிற முகங்களையும் யுடைய பகவத் பரிசாரி கைகள் வந்து எதிர் கொண்டார்கள் –
———————————————————————-
நிகமத்தில் இத்திருவாய் மொழி அப்யஸிக்க வல்லார் வைகுந்தத்து முனிவரோடு ஒப்பர் -என்கிறார் –
வந்தவர் எதிர் கொள்ள மா மணி மண்டபத்து
அந்தமில் பேர் இன்பத்து அடியரொடு இருந்தமை
கொந்து அலர் பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன் சொல்
சந்தங்கள் ஆயிரத்து இவை வல்லார் முனிவரே–10-9-11-
வந்தவர் எதிர் கொள்ள--பிராட்டியோடே கூட எம்பெருமான் தானும் வந்து எதிர் கொள்ள –அயர்வறும் அமரர்கள் -என்றுமாம் -திருமா மணி மண்டபத்திலே பரம ப்ராப்யரான அயர்வறும் அமரர்கள் நடுவே ஆனந்த நிர்ப்பரராய்க் கொண்டு இருந்தமையை -மிகவும் பூத்த பொழிலொடு கூடின திரு நகரியை யுடைய ஆழ்வாருடைய உக்தியாய் சந்தோ ரூபமான ஆயிரம் திருவாய் மொழியிலும் –
————————————————————————-
ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply