திருவாய்மொழி ஒன்பதினாயிரப்படி –6-9-

இப்படி தூத ப்ரேக்ஷணம் பண்ணின இடத்திலும் வராதே -ஊற்றின்கண் நுண்மணல்போல் உருகாநிற்பர் -என்னும்படியாலே
ஸ்தாவர ஜங்கமாத்மகமான ஜகத் எல்லாம் தம்முடைய ஆர்த்த சப்தத்தால் உருகா நிற்கையாலே தம்முடைய தசையை அறிவிக்க வல்லார் என்று கோலி இவர்
பெரும் கூப்பீடாக கூப்பிடப் புக -தன்னுடைய ஜகதாகாரத்தையைக் காட்டியருளி -இனி என் செய்யக் கூப்பிடுகிறீர் -என்று
எம்பெருமான் அருளிச் செய்ய -வைஸ்வரூப்யம் கண்ட அர்ஜுனன் -சதுர்புஜமாய் ப்ரசன்னமான வடிவைக் காணப் பெற வேணும் -என்று ஆர்த்தித்தால் போலே –
ஜகதாகாரத்தையை காட்டினவற்றால் போராது -என்னுடைய விடாய்க்கு ஈடாக சங்க சக்ராதி பூஷிதமான உன்னுடைய அப்ராக்ருதமான திரு உடம்போடு
தோற்றி அருள வேணும் என்று பெரிய ஆர்த்தியோடே ஸ்ரீ வைகுண்ட நாதனுக்கு கேட்க்கும் படி கூப்பிடுகிறார் –
என்னுடைய ஆர்த்த்வ த்வனியாலே உன்னுடைய உபய விபூதியும் விஸீர்ணமாக புகா நின்றது -எனக்காக வந்திலையே யாகிலும்
உன்னுடைய விபூதி நிலை நிற்கும் படி வந்து தோற்றி அருள வேணும் என்று மிகவும் ஆர்த்தமான மஹா த்வனியோடே கூப்பிடுகிறார் -என்றுமாம் –

—————————————————————

ஜகதாகாரனாய் இருக்கிற படியை காட்டித் தந்தோம் இறே-என்ன அது போராது -அசாதாரணமாய் இருக்கிற வடிவைக் காண வேணும் என்கிறார் –

நீராய்  நிலனாய்த் தீயாய்க் காலாய் நெடுவானாய்
சீரார் சுடர்கள் இரண்டாய்ச் சிவனாய் அயனானாய்
கூரார் ஆழி வெண்சங் கேந்திக் கொடியேன்பால்
வாராய்! ஒருநாள் மண்ணும் விண்ணும் மகிழவே.–6-9-1-

காரணமான பூத பஞ்சகங்களுக்கும் -கார்யமான சந்த்ர ஸூர்யாதிகளுக்கும் ஆத்மாவாய்க் கொண்டு -அவற்றை சரீரமாகக் கொண்டு நின்று அருளினாய்
கூரார் ஆழி-கூர்மை மிக்கு இருந்துள்ள திரு வாழி –
ஜகதாகாரதா பிரதர்சனத்தாலே திருப்தன் ஆகாதே -அசாதாரண ஆகாரத்தைக் காண வேணும் -என்று அபி நிவேசிக்கிற என் பக்கலிலே என் ஆர்த்தி தீர்த்து அருள நினைத்தது இல்லை யாகிலும் உன்னுடைய உபய விபூதியும் அழிந்து போகாமே நிலை நிற்கைக்காக வர வேணும் –


மண்ணும்  விண்ணும் மகிழக் குறளாய் வலங்காட்டி
மண்ணும் விண்ணும் கொண்ட மாய அம்மானே
நண்ணி உனைநான் கண்டு உகந்துகூத்தாட
நண்ணி ஒருநாள் ஞாலத் தூடே நடவாயே.–6-9-2-

நீர் சொன்னபடி செய்யலாவது -திருநாட்டில் போலே காணும் –என்னில் சம்சாரத்தில் ஸ்ரீ வாமனனாய் வந்து பிறந்து அருளி -உன்னுடைய அழகை எல்லார்க்கும் புஜிக்கக் கொடுத்து அருளினாய் ஒருவன் அல்லையோ -ஆனபின்பு அடியேனுடைய அபேக்ஷிதம் இங்கேயே செய்து அருள வேணும் என்கிறார்
அழகைக் கண்டு லோகங்கள் எல்லாம் உஜ்ஜீவிக்கும் படி வாமனனாய் அழகு ஆகிற பலத்தைக் காட்டி ப்ருதிவ்யாதி சகல லோகங்களையும் அளந்து கொண்ட அத்யாச்சர்ய பூதனே-
மானஸ அனுசந்தானம் மாத்திரம் அன்றிக்கே நான் உன்னைக் கிட்டிக் கொண்டு அத்தாலே உகந்து கூத்தாடும் படி சம்சாரத்துள்ளே எனக்கு ப்ரத்யாசன்னமாக ஒரு நாள் வந்து உலாவி அருள வேணும் –

———————————————————

யாதிருச்சிகமாக ஒரு கால் அங்கனம் அவதரித்தோம் அத்தனை -என்ன ஒண்ணாதே யுகம் தோறும் ராம கிருஷ்ண ரூபேண வந்து திருவவதாரம் பண்ணி அருளின இடங்களிலும் சஞ்சாராதிகளான மநோ ஹாரி சேஷ்டிதங்களைப் பண்ணி ஜகத்தை ரசிகை உனக்கு ஸ்வ பாவமாக இருக்க -நான் உன்னைக் காண ப் பெறாதே இன்னமும் நெடு நாள் நோவு படக் கடவேனோ என்கிறார் –

ஞாலத் தூடே நடந்தும் நின்றும் கிடந்திருந்தும்
சாலப் பலநாள் உகந்தோறு உயிர்கள் காப்பானே!
கோலத் திருமா மகளோடு உன்னைக் கூடாதே
சாலப் பலநாள் அடியேன் இன்னும் தளர்வேனோ?–6-9-3-

கோலத் திருமா மகளோடு உன்னைக் கூடாதே-பெரிய பிராட்டியாரோடே இருந்து அருளுகிற உன்னைக் கண்டு அடிமை செய்யப் பெறாதே –

————————————————————-

பிரதிபந்தகங்கள் உண்டாகில் -அவற்றை நீக்கி அருளி என் ஆர்த்தி தீரும்படி வந்து தோற்றி அருள வேணும் என்கிறார் –

தளர்ந்தும் முறிந்தும் சகட அசுரர் உடல்வேறாப்
பிளந்து வீயத் திருக்கா லாண்ட பெருமானே!
கிளர்ந்து பிரமன் சிவன்இந் திரன்விண் ணவர்சூழ
விளங்க ஒருநாள் காண வாராய் விண்மீதே.–6-9-4-

சகடாசூரனுடைய சரீரம் -கட்டுக் குலைந்தும் முறிந்தும் வேறாக பிளந்து -ஸ்வரூபமும் காண ஒண்ணாத படி மாய்ந்து போம்படி திருவடியை ஆளுகையாலே ஜகத்துக்கு அடைய ஸ்வாமி யானவனே
ஐஸ்வர்யங்களாலே அந்நிய பரரான ப்ரஹ்மாதி தேவர்கள் எல்லாம் பெரிய கிளர்த்தியோடே வந்து சூழ்ந்து ஜய ஸ்துதி பண்ண -ஆகாசம் எல்லாம் அழகு வெள்ளம் இடும்படி ஒரு நாள் இங்கே வந்து தோற்றி அருள வேணும் –

————————————————————

ஸர்வத்ர சந்நிஹிதனாய்-ஹ்ருதயத்திலும் ஸ்பஷ்ட தரமாக பிரகாசியா நின்று வைத்து -என் கண்ணுக்கு விஷயம் ஆகாது ஒழிந்தால் நான் தரிக்க வல்லேனோ என்கிறாள் –

விண்மீ திருப்பாய்! மலைமேல் நிற்பாய்! கடற்சேர்ப்பாய்!
மண்மீ துழல்வாய்! இவற்றுள் எங்கும் மறைந்துறைவாய்!
எண்மீ தியன்ற புறஅண் டத்தாய்! எனதாவி
உண்மீ தாடி உருக்காட் டாதே ஒளிப்பாயோ!–6-9-5-

திரு நாட்டிலே பேர் ஓலக்கமாக இருந்து -திரு நாட்டில் உள்ளாரும் சம்சாரத்தில் உள்ளாரும் ஓக்க புஜிக்கலாம் படி திருமலையில் நின்று அருளி -திருப் பாற் கடலிலே தேவாதிகளுக்கு ஸமாச்ரயணீயனாய் வந்து கண் வளர்ந்து அருளியும் செய்து -ஆஸ்ரித அர்த்தமாக சம்சாரத்திலே வந்து திருவவதாரம் பண்ணி உலாவி அருளுமவனே –
சகல பதார்த்தங்களின் உள்ளும் அவற்றினுடைய ஹிதார்த்தமாக தெரியாதபடி ஆத்மதயா நிற்குமவனே –
எண்மீ தியன்ற புறஅண் டத்தாய்- அசங்க்யேயமான பாஹ்ய அண்டங்களிலும் உள்ளவனே —எனதாவி உண்மீ தாடி-என் உள்ளே மிகவும் பிரகாசித்து வைத்தே-

—————————————————————-

காண்கைக்கு இவர் தாம் அயோக்யர் என்று உபேக்ஷித்து அருளினானாகக் கொண்டு -யோக்யதை அயோக்யதை பாராதே லோகத்தை எல்லாம் அளந்து கொண்ட உன்னால் இழக்கப் படுவார் உண்டோ என்கிறார் –

பாயோர்  அடிவைத்து அதன்கீழ்ப் பரவை நிலமெல்லாம்
தாயோர் அடியால் எல்லா உலகும் தடவந்த
மாயோன்! உன்னைக் காண்பான் வருந்தி எனைநாளும்
தீயோடு உடன்சேர் மெழுகாய் உலகில் திரிவேனோ?–6-9-6-

ஓர் அடியை பரம்ப வைத்து -அவ்வடிக்கீழே யாம் படி கடலோடி கூடின நிலத்தை எல்லாம் அநாயாசேனே கடந்து -மற்றையோர் அடியாலே எல்லா லோகங்களும் உஜ்ஜீவிக்கும் படி தடவின ஆச்சர்ய பூதனே -இப்படி ஸூ லபனான உன்னை காண வேணும் என்று நெருப்பிலே பட்ட மெழுகு போலே  நோவு பட்டு முடியவும் பெறாதே திரிவேனோ –

————————————————————————-

நீரும் சிறிது யத்னம் பண்ண வேணும் காணும் என்று எம்பெருமான் அருளிச் செய்ய -எல்லோரையும் ரக்ஷிக்க கடவையாக சங்கல்பித்து இருக்கிற உன்னுடைய சங்கல்பத்துக்கு நான் புறம்போ -என்கிறார் –

உலகில் திரியும் கரும கதியாய் உலகமாய்
உலகுக் கேஓர் உயிரும் ஆனாய்! புற அண்டத்து
அலகில் பொலிந்த திசைபத் தாய அருவேயோ!
அலகில் பொலிந்த அறிவி லேனுக்கு அருளாயே.–6-9-7-

லோகத்துக்கு புருஷார்த்த உபாயமாகக் கொண்டு லோகத்தில் பரிமாறுகிற புண்ய பாப ரூப க்ரியைகளுக்கும்-வி லக்ஷணரான கர்ம அனுஷ்டாதாக்களுக்கும் நிர்வாஹகன் ஆனவனே -இருந்ததே குடியாக எல்லாருக்கும் ஆத்மதயா நின்று நிர்வஹிக்கிறவனே-பிரகிருதி விநிர்முக்தமாய் எண் கடந்து தன்னுடைய ஞான ப்ரபையாலே சர்வகதரான ஆத்மாக்களுக்கும் நிர்வாஹகன் ஆனவனே -உன்னையும் உன்னுடைய விபூதி பூத சேதன அசேதனங்களையும் பரிச்சேதிக்கிலும் பரிச்சேதிக்க முடியாத அறிவு கேட்டை யுடைய எனக்கு கிருபை பண்ணி அருள வேணும் -நீ சர்வ நிர்வாஹகன் ஆகையாலும் நான் அறிவு கேடன் ஆகையாலும் நீயே அருள வேணும் என்று கறுத்து –

———————————————————————

சடக்கென தன் அபேக்ஷிதம் பெறாமையாலே -உன்னால் அல்லது செல்லாது இருக்கிற என்னை கிறி செய்து அகற்றி அந்தர படுத்தவோ பார்த்து அருளிற்று -அங்கனம் செய்யாதே உன் கிருபையால் ரக்ஷித்து அருள வேணும் என்கிறார் –

அறிவி லேனுக்கு அருளாய் அறிவார் உயிரானாய்!
வெறிகொள் சோதி மூர்த்தி! அடியேன் நெடுமாலே!
கிறிசெய்து என்னைப் புறத்திட்டு இன்னம் கெடுப்பாயோ?
பிறிதொன்று அறியா அடியேன் ஆவி திகைக்கவே.–6-9-8-

அறிவி லேனுக்கு அருளாய் அறிவார் உயிரானாய்!
அறிவிலேனுக்கு அருளும் இது வன்றோ உன் குணாவைத்தை-அறிவாரை உயிராக உடையனாய் இருக்கை உனக்கு ஏற்றமோ -அறிவில்லை யாகில் அருளாக கடவதோ என்னில் -அறிவில்லாதார்க்கு அருளுகை அன்றோ அருளுகை யாவது -அறிவுடையோருக்கு அருளுகை ஏற்றமோ -என்றும் சொல்லுவர்
வெறிகொள் சோதி மூர்த்தி! அடியேன் நெடுமாலே!
அதி பரிமளமான தேஜோ ரூபமான திரு வடிவை உடையையாய் வைத்து -அவ் வழகிலே அகப்பட்ட எனக்கு எட்டாது இருக்கிறவனே
கிறிசெய்து என்னைப் புறத்திட்டு இன்னம் கெடுப்பாயோ?-பிறிதொன்று அறியா அடியேன் ஆவி திகைக்கவே.–
உன்னால் அல்லது மற்று ஒன்றால் செல்லாது இருக்கிற நான் பிரமிக்கும் படி ஏதேனும் ஒரு விரகுகளை பண்ணி இன்னமும் புறம்பே போக விட்டு என்னை முடிக்கவோ பார்த்து அருளிற்று –

—————————————————————-

கிறி செய்து முடிக்கை யாவது -வைஷயிக ஸூகங்களைக் காட்டி உன் திருவடிகளில் வாராத படி பண்ணுகை என்கிறார் –

ஆவி திகைக்க ஐவர் குமைக்கும் சிற்றின்பம்
பாவி யேனைப் பல நீ காட்டிப் படுப்பாயோ?
தாவி வையம் கொண்ட தடந்தா மரைகட்கே
கூவிக் கொள்ளும் காலம் இன்னம் குறுகாதோ.–6-9-9-

மனஸ் ஸூ கலங்க -ஐந்து இந்திரியங்களும் நலிவு செய்யும் படியான சப் தாதி விஷய அனுபவம் ஆகிற ஷூ த்ர சுகத்தையும் காட்டி அவற்றோடு பொருந்தாத படியாய் -அவற்றுக்கு பாங்கான நிலத்திலே இருக்கைக்கு ஈடான பாபத்தை பண்ணின என்னை இன்னம் முடிக்கப் பார்க்கிறாயோ –
த்வத் ஏக தாரகனாய் வைத்து உன்னைப் பெறாதே நான் முடியும் தசையானாலும் அநாயாசேன நீ எல்லார்க்கும் கொடுக்கும் நிரதிசய போக்யமான திருவடிகளில் அழைத்து அருளும் காலம் அணித்து ஆகாதோ-

————————————————————–

வைஷயிக ஸூகத்தை அல்பம் அஸ்திரம் என்று இருந்தீர் ஆகில் -அநந்தமாய் ஸ்திரமான கைவல்ய புருஷார்த்தை பற்றினாலோ என்னில் -அத்தை உன் திருவடிகளில் கைங்கர்யம் அல்லாமையாலே வேண்டா என்றேன் அத்தனை -அப்படியே கைவல்யமும் வேண்டேன் -என்கிறார் –

குறுகா நீளா  இறுதி கூடா எனை ஊழி
சிறுகா பெருகா அளவில் இன்பம் சேர்ந்தாலும்
மறுகால் இன்றி மாயோன்! உனக்கே ஆளாகும்
சிறு காலத்தை உறுமோ அந்தோ! தெரியிலே.–6-9-10-

ஸ்வத யாதல் -காலாத்யுபாதி   வசத்தால் யாதல் -சங்கோச விகாசங்களை யுடைத்தன்றிக்கே -அபரிச்சேதயமாய் இருந்துள்ள ஆத்மானுபவ ஸூ கம் கை வந்தாலும் -அந்த ஸூ கமானது-பின்னை வரக் கடவது அன்றிக்கே ஒரு க்ஷண மாத்ரமும் உன் திருவடிகளில் உண்டான கைங்கர்ய ஸூ கத்தை ஒக்குமோ அநுஸந்திக்கும் பக்ஷத்தில் -அத்யந்த வி சத்ருசங்களை ஒக்குமோ என்று சொல்ல வேண்டும்படியான முசிப்பாலே அந்தோ என்கிறார் –

———————————————————–

நிகமத்தில் இப்பத்தும் கற்றவர்கள் எம்பெருமானுக்கு அந்தரங்க கிங்கராவார் என்கிறார்

தெரிதல் நினைதல் எண்ண லாகாத் திருமாலுக்கு
உரிய தொண்டர் தொண்டர் தொண்டன் சடகோபன்
தெரியச் சொன்ன ஓராயிரத்துள் இப்பத்தும்
உரிய தொண்ட ராக்கும் உலகம் உண்டாற்கே.–6-9-11-

ஸ்ரவண மனநாதி களாலே பரிச்சேதிக்க முடியாத ஸ்ரீயபதிக்கு அசாதாரண தாஸ்ய பர்யவசான பூமியான ஆழ்வார் –
கரதலாமலகம் போலே எல்லார்க்கும் அறிந்து கொள்ளலாம் படி அருளிச் செய்த ஆயிரம் திருவாய் மொழியிலும் இது திருவாய் மொழி –

————————————

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading