இப்படி எம்பெருமானை அனுபவித்து மிகவும் ப்ரீதரான ஆழ்வார் ஹர்ஷ ப்ரகரஷத்தாலே இவனை ஒழிய ஐஸ்வர் யாதிகளை
ஆசைப்பட்டுள்ளவர்களுக்கு -அவற்றினுடைய அல்ப அஸ்திரத்வாதி தோஷங்களைக் காட்டி ஹேயதையை சாதியா நின்று கொண்டு
பரம புருஷார்த்த பூதமான -எம்பெருமான் திருவடிகளை ஸமாச்ரியிங்கோள்-என்கிறார்
வீடுமின் முற்றவும் -பகவத் ஸமாச்ரயண ப்ரதிபாதன பரம்
இத்திருவாய் மொழி வைராக்ய ஜனன அர்த்தமாக இதர புருஷார்த்தங்களுடைய ஹே யதா ப்ரதிபாதன பரம் –
—————————————————————————————————————-
முதல் பாட்டில் சர்வ பவ்மரானவர்கள் ராஜ்யத்தை இழந்து இரந்து ஜீவிக்கும் படி துர்க்கதராவார் –
ஆனபின்பு நித்ய ஐஸ்வர்ய உக்தனான திரு நாராயணனுடைய திருவடிகளையே பரம ப்ராப்யமாக ஆஸ்ரயித்து உஜ்ஜீவியுங்கோள் என்கிறார் –
ஒரு நாயகமாய் ஓட உலகு உடன் ஆண்டவர்
கருநாய் கவர்ந்த காலர் சிதைகிய பானையர்
பெரு நாடு காண இம்மையிலே பிச்சை தாம் கொள்வர்
திரு நாரணன் தாள் காலம் பெறச் சிந்தித் துய்ம்மினோ.–4-1-1-
ஏகாதிபதிகமாய் நெடும் காலம் லோகத்தை எல்லாம் ஆண்டவர்கள் ராஜ்யத்தை இழந்து காரியவான நாய்களால்
கவர பட்ட கால்களை உடையராய் பொளிந்த பாண்டங்களைக் கொண்டு பண்டு தங்களைக் காண அவசரம் பெறாத மனுஷ்யர் எல்லாம்
காணும் படி தாங்கள் சம்ருத்தராய் வாழ்ந்த இந்த லோகத்திலேயே பிக்ஷையை விரும்பிக் கொள்வர் –
——————————————————————————————————————-
தங்களால் அபிபூதரான சத்ருக்களாலே தங்களுடைய மஹிஷிகளையும் இழப்பர் என்கிறார் –
உய்ம்மின் திறை கொணர்ந்து’ என்று உலகு ஆண்டவர் இம்மையே
தம் மின்சுவை மடவாரைப் பிறர் கொள்ளத் தாம் விட்டு
வெம்மின் ஒளி வெயில் கானகம் போய்க் குமைதின்பர்கள்;
செம்மின் முடித் திரு மாலை விரைந்து அடி சேர்மினோ. –4-1-2-
உய்ம்மின் திறை கொணர்ந்து-இத்யாதி
எனக்குத் திறையிட்டுப் பிழைத்து இருங்கோள் -என்று ராஜாக்களை சொல்லி இந்த யுக்தி மாத்ரத்தினாலே இந்த லோகத்தை அடைய
ஆண்டவர் தாங்கள் இப்படி வாழ்ந்த இப்பிறவியில் தாங்கள் ஜீவிக்கைக்காகத் தங்களுக்கு நிரதிசய போக்யைகளான ஸ்திரீகளை
சத்ருக்கள் பரிக்ரஹித்து போக்கற்றுத் தாங்களே அவர்களே கொண்டு போக வேணும் என்று பிரார்த்தித்து விட்டு
வெம்மின் ஒளி-இத்யாதி
நாடுகளிலே சஞ்சரிக்கப் பெறாதே கொடிய வெயிலை உடைய காட்டிலே போய் அங்கும் சத்ருக்களாலால் நலிவு படா நிற்பர்
இப்படி பரிபூதராகாதே வாழ வேண்டி இருந்து கோளாகில்-சிவந்த ஒளியை உடைய திரு அபிஷேகத்தை உடையனான ஸ்ரீ யபதியை
ஈண்டென ஆஸ்ரயிங்கோள் -ஆஸ்ரயித்தார் தலையிலே வைக்கச் சூடின முடி என்று கருத்து –
—————————————————————————————————————-
மற்றுள்ள ராஜாக்கள் தங்களை ஆஸ்ரயித்து அவர்களை ஒன்றாக மதியாதே வாழ்ந்தவர்கள்
அந்த ஐஸ்வர் யத்தை இழந்து ஒருவரும் மதியாதபடி யாவார் என்கிறார் –
அடி சேர் முடியினர் ஆகி அரசர்கள் தாம் தொழ
இடி சேர் முரசங்கள் முற்றத்து இயம்ப இருந்தவர்
பொடி சேர் துகளாய்ப் போவர்கள் ஆதலில் நொக்கெனக்
கடி சேர் துழாய் முடிக் கண்ணன் கழல்கள் நினைமினோ.–4-1-3-
தங்கள் காலிலே முடி படியும்படியாக அந்நிய ராஜாக்கள் வந்து தொழுது க்ருதார்த்தராகா நிற்க -இடி இடித்தால் போலே
வாத்தியங்கள் முற்றத்திலே த்வனிக்க இருந்தவர்
ஷூ த்ர தூளி போலே அவதீர்ணம் பண்ணினோம் என்று நினைக்கப் பாத்தம் போராத படி மதிப்புக் கெடுவர் –
ஆகையால் இங்கண் எளிவரவு படாதே பெரு மதிப்பு உண்டாம் படி சர்வ ஐஸ்வர்ய ஸூசகமாய் தன் திருக் குழலின் செவ்வையாலே
க்ஷணம் தோறும் பரிமளம் மிகா நின்றுள்ள திருத் துழாயாலே அலங்க்ருதனாய் பரம போக்யனான
கிருஷ்ணன் திருவடிகளை ஈண்டென நினையுங்கோள் –
——————————————————————————————————————–
ஐஸ்வர்யம் ஒன்றுமே அன்று நிலை நில்லாது ஒழிகிறது -போக்தாக்கள் ஆனவர்களும் சபரிகரமாக நசிப்பர் என்கிறார் –
நினைப்பான் புகின் கடல் எக்கலின் நுண் மணலிற் பலர்
எனைத்தோர் உகங்களும் இவ்வுலகு ஆண்டு கழிந்தவர்
மனைப்பால் மருங்கு அற மாய்தல் அல்லால் மற்றுக் கண்டிலம்
பனைத்தாள் மத களிறு அட்டவன் பாதம் பணிமினோ.–4-1-4-
எனைத்தோர் உகங்களும்-அநேக யுகங்கள்
வாழ்ந்த ஸ்தலமும் அருகும் தெரியாத படி நசித்து போமித்தனை போக்கி ஸ்திரராய் இருப்பாரையும் கண்டிலோம்
ஆஸ்ரயண விரோதிகளை போக்கும் ஸ்வபாவனானவனுடைய திருவடிகளை ஆஸ்ரயிங்கோள்
————————————————————————————————————————
அங்க நா சம்ச்லேஷ ஸூ கமும் செல்வக் கிடப்புப் போலே அஸ்திரத்தவாதி தூஷிதம் என்கிறார் –
பணிமின் திருவருள் என்னும் அம் சீதப் பைம் பூம் பள்ளி
அணி மென் குழலார் இன்பக் கலவி அமுது உண்டார்
துணி முன்பு நாலப் பல் ஏழையர் தாம் இழிப்பச் செல்வர்
மணி மின்னு மேனி நம் மாயவன் பேர் சொல்லி வாழ்மினோ.–4-1-5-
பணிமின் -தொடங்கி
அழகியதாய் குளிர்ந்து பரம்பி இருந்துள்ள பூம் படுக்கைகளில் இருந்து ரசிகத்வத்தின் மிகுதியாலே போக்தாவானவன் தான்
-பணிமின் திருவருள் என்று கீழ்மை சொல்ல வேண்டும் படி வேண்டற் பாடு உடையராய் இவன் கொண்டாட்டத்தை அங்கீ கரியாதே
குழலை பேணா நின்றுள்ள அந்த ஸ்த்ரீகளுடைய அநங்கீகார பிரமுகமான சம்ச்லேஷ அம்ருதத்தை பானம் பண்ணினவர்கள் –
பணிமின் திருவருள் -என்று கீழ்மை சொல்லுகிறார் -ஸ்த்ரீகள் என்றும் சொல்லுவார்
துணி முன்பு-என்று தொடங்கி –
ஆசச்சாதிக்கப் பொறாமையால் துணி முன்பு நாலும் படி க்ருபணராய் இவனைப் பெறா விடில் செல்லாதபடியான ஸ்த்ரீகள் பல வகைகளால் உபேக்ஷிக்க
அத்தைப் புத்தி பண்ணாதே பின்னையும் அவர்கள் இருந்த இடங்களிலே செல்லா நிற்பர்
நிரதிசய போக்யமான திரு அழகையும் ஆஸ்ரிதரை விடில் தரிக்க மாட்டாத படி அதிமாத்ரமாய் நிருபாதிகமான ஸ்நேஹத்தையும் உடையவன் என்று
ப்ரசித்தனான எம்பெருமானுடைய திரு நாமத்தை வாயாலே சொல்லி வாழுங்கோள் –
—————————————————————————————————————–
ஸ்ருஷ்ட்டி காலம் தொடங்கி இன்று அளவும் ஐஸ்வர்யவான்களாக ஜீவித்தார் ஒருவரையும் கண்டிலோம் என்கிறார் –
வாழ்ந்தார்கள் வாழ்ந்தது மாமழை மொக்குளின் மாய்ந்து மாய்ந்து
ஆழ்ந்தார் என்று அல்லால், அன்று முதல் இன்று அறுதியா
வாழ்ந்தார்கள் வாழ்ந்தே நிற்பர் என்பது இல்லை ; நிற்குறில்
ஆழ்ந்தார் கடற் பள்ளி அண்ணல் அடியவர் ஆமினோ.–4-1-6-
வாழ்ந்தார்கள்-இத்யாதி
ஐஸ்வர்யத்தை பெற்று வாழ்ந்தோர் ஒருவரும் இல்லையோ என்னில் -வாழ்ந்தவர்கள் வாழ்ந்தது வர்ஷ ஜல புத்பதம் போலே நசித்து நசித்து
ஜீவித்த நாள் பண்ணின பாபத்தாலே அதோ கதியில் விழுந்து போன அத்தனை போக்கி
மா மழை மொக்குள் என்றது -மஹா வர்ஷத்தில் குமிழி சடக்கென மாயும் என்னும் இடம் தோற்றுகைக்காக
நிற்குறில்-இத்யாதி –
நிலை நின்ற புருஷார்த்தம் வேண்டி இருக்கில் ஆழ்ந்து அகன்று இருந்துள்ள திருப் பாற் கடலிலே ஸமாச்ரயணீயனாய் கொண்டு
கண் வளர்ந்து அருளுகிற சர்வேஸ்வரனுக்கு அடியார் ஆகுங்கோள் –
————————————————————————————————————–
அந்நிய பாநாதி போகங்களுடைய அநித்யையை அருளிச் செய்கிறார் –
ஆமின் சுவை அவை ஆறோடு அடிசில் உண்டு ஆர்ந்த பின்
தூமென் மொழி மடவார் இரக்கப் பின்னும் துற்றுவர்,
‘ஈமின் எமக்குஒரு துற்று’என்று இடறுவர் ; ஆதலின்,
கோமின் துழாய்முடி ஆதிஅம் சோதி குணங்களே.–4-1-7-
ஆமின் சுவை-இத்யாதி
இனிதான ரசம் ஆறோடு ச பஹு மானமாக இட்ட சோற்றை உண்டு சமைந்த பின்பு பேச்சின் இனிமையால் சொல் மறுக்க ஒண்ணாத
படியான ஸ்த்ரீகள் இரக்க-மறுக்க மாட்டாமையால் பின்னையும் நிற்குமவர்கள்
ஈமின் எமக்குஒரு துற்று’என்று-இத்யாதி –
அந்த ஸ்த்ரீகள் வாசலிலே சென்று -எல்லீரும் கூடி எனக்கு ஒரு பிடி ஐடா வேணும் -என்று வேண்டித் தட்டித் திரிவர்
இப்படி விஷய போகங்கள் அநித்தியம் ஆகையால் ஜகத்துக்கு காரணமாய் நிரவதிக ஸுந்தர்ய உக்தனுமாய்
திருத் துழாயாலே அலங்க்ருதன் ஆனவனுடைய கல்யாண குணங்களை அநுஸந்தியுங்கோள்
—————————————————————————————————————
இந்த ராஜ்யாதி போகங்கள் எம்பெருமானை ஆஸ்ரயியா விடின் கிடையா -ஆஸ்ரயித்து பெற்றாலும் நிலை நில்லா என்கிறார் –
குணங்கொள் நிறை புகழ் மன்னர் கொடைக்கடன் பூண்டிருந்து
இணங்கி உலகு உடன் ஆக்கிலும், ஆங்கு அவனை இல்லார்
மணங்கொண்ட போகத்து மன்னியும் மீள்வர்கள்; மீள்வு இல்லை;
பணங்கொள் அரவணையான் திரு நாமம் படிமினோ.–4-1-8-
குணங்கொள் -என்று தொடங்கி –
மேலுக்கு குணவான்களாய் -குண வத்தா பிரதையையும் உடைய ரான ராஜாக்கள் தங்களுக்கு உள்ளே தனத்தை எல்லாருக்கும்
கொடுக்கையே ஸ்வ பாவமாய் இவ் வழி யாலே எல்லோரோடும் சேர்ந்து தங்களை பிரிய ஒண்ணாதபடி
சேர்த்துக் கொண்டார்கள் ஆகிலும் எம்பெருமான் பிரசாதம் இல்லையாகில் ராஜ்யம் கிடையாது –
மணங்கொண்ட-என்று தொடங்கி –
ராஜ்ய ஸூ கம் பெற்றாலும் நிலை நில்லாது -ஆனபின்பு தன்னுடைய நாம உச்சாரணம் பண்ணினாரை
திரு அனந்த ஆழ்வானை போலே சேஷம் ஆக்கிக் கொள்ளுமவனுடைய திரு நாமங்களில் பிரவணர் ஆகுங்கோள்
போகத்துக்கு மீள் வில்லை –
தான தர்மத்துக்கு பலமாக எம்பெருமானைப் பற்றாதே ஸ்வர்க்காதி போகங்களை பற்றினால் நிலை நில்லா என்றுமாம் –
————————————————————————————————————–
ஐஹிகமான ராஜ்யாதிகளே அல்ல -உடம்பை ஒறுத்துப் பெறும் ஸ்வர்க்காத் ஐஸ்வர்ய ஸூ கங்களும் நிலை நில்லா என்கிறார் –
படி மன்னும் பல்கலன் பற்றோடு அறுத்து,ஐம் புலன்வென்று,
செடி மன்னு காயம் செற்றார்களும், ஆங்கு அவனை இல்லார்
குடி மன்னும் இன் சுவர்க்கம் எய்தியும் மீள்வர்கள்; மீள்வு இல்லை;
கொடி மன்னு புள்ளுடை அண்ணல் கழல்கள் குறுகுமினோ. –4-1-9-
படி மன்னும் -என்று தொடங்கி
பழையதாய் வருகிற பூமியையும் ஆபரணங்களையும் அவற்றால் நசையோடே கூட விட்டு ஐந்து இந்த்ரியங்களையும் வென்று
தபஸ் ஸூ க்குக்காக உண்டான தீர்க்க கால அவஸ்தா நத்தாலே தூறு மண்டும்படி உடம்பைச் செறுத்தவர்களும்
அவனைப் பெற்றார் ஆகில் ஸ்வர்க்கம் கிடையாது
கொடி மன்னு புள்ளுடை அண்ணல் கழல்கள் குறுகுமினோ.
பூமியைப் போலே அன்றியே நெடு நாள் இருக்கலாம் ஸ்வர்க்கத்தை பெற்றும் இழப்பர்
ஆனபின்பு ஆஸ்ரிதரை தனக்கு வ்யாவர்த்தக விசேஷணமான பெரிய திருவடி போலே அந்தரங்கராக விஷயீ கரிக்கும்
ஸ்வ பாவனான சர்வேஸ்வரன் திருவடிகளை ஆஸ்ரயிங்கோள்
மீள்வு இல்லை; –
உடம்பை பொறுத்து தபஸ்ஸூ பண்ணினாலும் அதுக்கு பலதயா எம்பெருமானைப் பற்றாதே
ஸ்வர்க்க ப்ராப்தியை பற்றினால் அது நிலை நில்லாது என்றுமாம் –
————————————————————————————————————–
கைவல்ய புருஷார்த்தம் துஸ் சாதம் என்றும் -அது தான் அபுருஷார்த்தம் என்றும் ப்ரதிபாதிக்கிறார் –
குறுக மிக உணர்வத்தொடு நோக்கி எல்லாம் விட்ட
இறுகல் இறப்பெனும் ஞானிக்கும் அப்பயன் இல்லையேல்,
சிறுக நினைவது ஓர் பாசம் உண்டாம்; பின்னும் வீடு இல்லை,
மறுகல் இல் ஈசனைப் பற்றி விடாவிடில், வீடு அஃதே.–4-1-10-
குறுக மிக-என்று தொடங்கி
பாஹ்ய அர்த்தங்களில் தூரப் போய் பழகின மனசை அவற்றின் நின்றும் மீட்டு பிரத்யாகாத்மாவின் பக்கலிலே பிரவணம் ஆக்கி
விசததமமாம் படி ஆத்ம அவலோகநத்தை பண்ணி ஆத்ம வ்யதிரிக்த சகல புருஷார்த்தங்களிலும் தொற்று அற்ற அந்த சங்குசித தசையை
மோக்ஷம் என்னும் ஞான நிஷ்டனுக்கும் ஸ்வயம் புருஷார்த்த ரூபமான எம்பெருமானை சுபாஸ்ரயமாக பற்றா விடில்
ஆத்ம அவலோகன விரோதியான கர்மம் போகாதே நிற்கும்
பின்னும் வீடு -என்று தொடங்கி
ஆத்ம அவலோகநாம் கை வந்தாலும் ஹேய ப்ரத்ய நீகனாய் ஞான ஏக காரனான சர்வேஸ்வரனை அனுசந்தித்து அவனோடு சஜாதீயம் என்று
ஆத்மாவை அனுசந்திக்கை யாகிற இந்த அந்திம ஸ்ம்ருதி இல்லையாகில் மோக்ஷத்துக்கு உபாயம் இல்லை
இப்படி துஸ் சாதகம் ஆகையால் சாதிக்கும் இடத்திலும் எம்பெருமானைப் பற்றியே சாதிக்க வேண்டுகை யாகையாலும்
தத் கைங்கர்யத்தை குறித்து தண்ணியது ஆகையால் பகவத் கைங்கர்யமே பரம புருஷார்த்தம் –
———————————————————————————————————-
நிகமத்தில் இது திருவாய் மொழி கற்றார் ஐஸ்வர்ய ஷூ த்ர புருஷார்த்தங்களை தவிர்ந்து பகவத் கைங்கர்ய ஏக போகர் ஆவார் -என்கிறார் –
அஃதே உய்யப் புகும் ஆறு என்று கண்ணன் கழல்கள் மேல்
கொய் பூம் பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன் குற்றேவல்
செய்கோலத்து ஆயிரம் சீர்த்தொடைப் பாடல் இவை பத்தும்
அஃகாமல் கற்பவர் ஆழ் துயர் போய் உய்யற் பாலரே.–4-1-11-
அதுவே உஜ்ஜீவன உபாயம் என்று எம்பெருமான் திருவடிகளில் ஆழ்வார் அருளிச் செய்த விலக்ஷணமான
ஆயிரத்தில் அவனுடைய கல்யாண குணங்களையே தொடுத்த இது திரு வாய் மொழி –
அஃகாமை -தப்பாமை
————————————————————————————————————–
ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply