திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -7-6-11-ஸ்ரீ M.A V .சுவாமிகள்–

  புக்க அரிஉருவாய் அவுணன்உடல் கீண்டுஉகந்த
சக்கரச் செல்வன்தன்னைக் குருகூர்ச்சட கோபன்சொன்ன
மிக்கஒர் ஆயிரத்துள் இவைபத்தும்வல் லார்அவரைத்
தொக்குப்பல் லாண்டிசைத்துக் கவரிசெய்வர் ஏழையரே.

பொ-ரை : அந்த நரசிங்கத்தின் உருவமாகிப் புக்கு அவுணனாகிய இரணியனுடைய சரீரத்தைப் பிளந்து மகிழ்ந்த சக்கரத்தையுடைய சர்வேசுவரனை, திருக்குருகூரில் அவதரித்த ஸ்ரீசடகோபர் அருளிச்செய்த மேம்பட்ட ஒப்பற்ற ஆயிரம் திருப்பாசுரங்களுள் இத்திருப்பாசுரங்கள் பத்தையும் கற்று வல்லவர்களாகிய அவர்களைப் பெண்கள் சூழ்ந்துகொண்டு பல்லாண்டு பாடிச் சாமரை வீசுவார்கள்.

ஈடு : முடிவில், 3‘இத்திருவாய்மொழி கற்றாரை மதிமுக மடந்தையர் விரும்பித் திருப்பல்லாண்டு பாடிச் சிறப்பிப்பர்கள்,’ என்கிறார்.

புக்கு அ அரி உருவாய் – அந்த அரி உருவாய்ப் புக்கு. 1அவ்வரியுரு என்னுமித்தனையாயிற்றுச் சொல்லலாவது.2நரசிங்கமான வேடத்தைக்கொண்டு பகைவன் அண்மையிலே கிட்டி. அன்றிக்கே, இரணியன் உடலைப் பிளந்துகொடு புறப்பட்ட போதைக்கடுமை, புறம்பு இட்டு ஒருவன் வந்து செய்தானாகை அன்றிக்கே, உள்ளுநின்றும் ஒரு சிங்கம் பிளந்துகொண்டு புறப்பட்டாற்போலேயாயிற்று அதனைச் சொல்லுதல். அவுணன் உடல் கீண்டு உகந்த – இரணியன் உடலைப் பிளந்து போகட்டு, ‘சிறுக்கன் விரோதி போகப்பெற்றோம்!’ என்று உகந்தனாயிற்று. சக்கரச் செல்வன்தன்னை –3இரணியனுடைய உடலுங்கூடத் திரு உகிருக்கு அரை வயிறாகப் போகையாலே, பின்னை அழகுக்குப் பத்திரங்கட்டின இத்தனையாயிற்று.

குருகூர்ச் சடகோபன் சொன்ன – ஆழ்வார் அருளிச்செய்த. 4மிக்க ஓர் ஆயிரத்துள் இவை பத்தும் வல்லார்-பகவத் விஷயத்தை உள்ள அளவும் சொன்ன ஆயிரத்திலும் வைத்துக்கொண்டு இப்பத்தையும் கற்றவர்களை. தொக்குப் பல்லாண்டு இசைத்துக் கவரி செய்வர் ஏழையர் – 5கிண்ணகத்தில் இழிவாரைப்போலே தனி இழிய ஒண்ணாமை திரண்டு கொண்டு, ‘பொலிக! பொலிக!’ என்று மங்களாசாசனம் செய்து, சர்வேஸ்வரன் பக்கல் செய்யக்கூடிய 6அசாதாரண கைங்கரியங்களையடைய இப்பத்தைக் கற்றவர்கள்

பக்கலிலே செய்யாநிற்பார்கள் மதிமுகமடந்தையர். நெடுநாள் சம்சாரத்தில் பட்ட இழவெல்லாம் தீரும்படி அவர்களாலே கொண்டாடப்பெறுவர்கள்.

 

             திருவாய்மொழி நூற்றந்தாதி 

        பாமரு வேதம் பகர்மால் குணங்களுடன்
ஆமழகு வேண்டற்பா டாமவற்றைத்-தூமனத்தால்
நாண்ணியவ னைக்காண நன்குருகிக் கூப்பிட்ட
அண்ணலைநண் ணார்ஏ ழையர்

நிகமத்தில்
மதி முக மடந்தையர் பல்லாண்டு இசைத்து கவரி செய்வார்
அரி உருவாய் அவுணன் கொன்று
பல்லாண்டு பாடி சாமரம்
அரி உரு -அவ் ஒன்றே சொல்ல முடியும்
கடுமை -உள் நின்றும் சிம்ஹம் புறப்பட்டு வந்தது போலே
உடல் கீண்டு உகந்த
சிருக்கன் விரோதி போக்கிய உகப்பு
சக்கர செல்வன் தன்னை
திரு உகிர் அரை உடலாக போவதால்
அழகுக்கு மற்ற ஆயுதங்கள்
மிக்க -உள்ள அளவும் சொன்ன ஆயிரம்
தொக்கு பல்லாண்டு இசைத்து திரண்டு பொலிக பொலிக
கின்னகத்தில் இழிவாரைப் போலே
சர்வேஸ்வரன் பக்கல் பண்ண கடவ அசாதாராண
இந்த பத்தும் அப்யசிப்பார் பக்கல்
ஏழையர்-பாகவத கிஞ்சித்கார
சபல புத்தி நப்பாசை இதில் உள்ளவர்கள்-

சாரம் பாசுரம்
வேதம் பகரும் மாறன்
வேண்டப்பாடு பெருமை
தூ மனத்தால் நண்ணி
காண ஆசைப்பட்டு உருகி கூப்பிட்ட
அண்ணலை நண்ணா ஏழையர்

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

 வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.

பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading