திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -2-8-11–ஸ்ரீ M.A V .சுவாமிகள் —

கண்தலங்கள் செய்ய கருமேனி அம்மானை
வண்டுஅலம்பும் சோலை வழுதி வளநாடன்
பண்தலையில் சொன்னதமிழ் ஆயிரத்துஇப் பத்தும்வல்லார்
விண்தலையில் வீற்றிருந்து ஆள்வார்எம் மாவீடே.

பொ-ரை : சிவந்த கண்களையும் கரிய திருமேனியையுமுடைய இறைவனை, வண்டுகள் அலைகின்ற சோலைகளையுடைய திருவழுதிவள நாட்டையுடைய ஆழ்வார் தலையான பண்களிலே வைத்துப் பாடிய ஆயிரம் தமிழ்ப்பாசுரங்களிலே இப்பத்துப் பாசுரங்களையும் வல்லர்கள், பரமாகாசத்தில் சிறப்போடு இருந்து எனக்கும் என் சம்பத்திகளுக்கும் தருவதாக இருக்கிற அந்தமில் இன்பத்து அழிவில் வீட்டிலே இன்பத்தினை அனுபவிப்பார்கள்.

    வி-கு : அலம்புதல் – ஒலித்தலுமாம். ‘வீற்றிருந்து எம் மா வீடு ஆள்வர்’ என மாற்றுக. ‘வீற்றிருத்தல் – வேறு ஒன்றற்கு இல்லாத சிறப்போடு தங்கியிருத்தல்’ என்பர் நச்சினார்க்கினியர்.

    ஈடு : முடிவில், 1இத்திருவாய்மொழியைக் கற்கவல்லவர்கள் இத்திருவாய்மொழியிற்சொன்ன முத்தப் பிராப்பிய போகத்தைப் பெறுவர் என்கிறார்.

    கண் தலங்கள் செய்ய கருமேனி அம்மானை – 2‘பூதலங்கள்’ என்னுமாறு போலே திருக்கண்களின் பரப்பைச் சொல்லுகிறது. பரந்து சிவந்திருந்துள்ள திருக்கண்களையும், அவற்றுக்குப் 3பரபாக மாம்படி கருமை நிறைந்த திருமேனியையுமுடைய சர்வேஸ்வரனை. வண்டு அலம்பும் சோலை வழுதி வளநாடன் பண் தலையில் சொன்ன தமிழ் ஆயிரத்து இப்பத்தும் வல்லார் – வெள்ளத்திலே அலைவாரைப் போலே, தேன் வெள்ளத்திலே வண்டு அலையாநின்றுள்ள சோலையையுடைய திருவழுதி வளநாட்டையுடைய ஆழ்வார் தலையான பண்ணிலே சொன்ன தமிழ் ஆயிற்று இப்பிரபந்தந்தான்; இதன் பாசுரங்கள் ஆயிரத்திலும் வைத்துக்கொண்டு இப்பத்தையும் கற்க வல்லவர்கள். பண் தலையிற் சொன்ன – பண்ணின் மேலே சொன்ன என்று பொருள் கூறலுமாம். விண் தலையில் வீற்றிருந்து எம் மா வீடு ஆள்வர் – பரமபதத்திலே தங்கள் வேறுபாடு தோன்ற இருந்து எவ்வகையாலும் விலக்ஷணமான மோக்ஷமானது தங்களுக்கு

உரிமையாம்படி பெறுவர். விண்தலை – தலையான விண்ணிலே என்னுதல்; விண்ணின்மேலே என்னுதல். அங்குள்ளார் தங்கள் ஆணையைப் பின் பற்றும்படியாகப் பெறுவர் என்றபடி. ஆத்தும இலாபத்து அளவே அன்றி, பரம்புருஷார்த்த இலட்சண மோட்சத்தை ஆளப் பெறுவராதலின், ‘எம் மா வீடு ஆள்வர்’ என்கிறார். தொடர்ந்து வருகிற பிறவிகளாய் உண்டான துன்பங்கள் எல்லாம் தீரும்படி வீறுபட்டு இருப்பராதலின், ‘வீற்றிருந்து’ என்கிறார். இனி, ‘எம் மா வீடு ஆள்வர்’ என்பதற்கு, 1‘தன்பால் மனம் வைக்கத் திருத்தி வீடு திருத்துவான்’ என்கிறபடியே, 2‘எனக்கும் என் சம்பந்திகட்கும் தருவானாகச் சமைத்து நிற்கிற பரமபதத்தை ஆளப் பெறுவர்’ எனலுமாம்.            

(11)

    முதற்பாட்டில், இத்திருவாய்மொழியில் பரக்கச் சொல்லுகிற அர்த்தத்தைச் சுருங்க அருளிச்செய்யாநின்றுகொண்டு, ‘சம்சாரமாகிற இக்கடலைக் கடக்க வேண்டும்’ என்று இருப்பார்க்குக் கடத்திக் கொடுக்கும் என்றார்; இரண்டாம் பாட்டில், ‘அவன் வேண்டுமோ? அவனுடைய சம்பந்தமே கடத்தும்’ என்றார்; மூன்றாம் பாட்டில், ‘அவனுடைய அதிமாநுஷ சேஷ்டிதங்கள் எங்கும் காணலாம்’ என்றார்; நான்காம் பாட்டில், ‘அந்தம் இல் பேரின்பத்தைப் பெறவேண்டும் என்றிருப்பீர்! அவனைப் பற்றுங்கோள்’ என்றார்; ஐந்தாம் பாட்டில், மேல் ‘இணைவன் ஆம் எப்பொருட்கும்’ என்றதனை விவரித்தார்; ஆறாம் பாட்டில், ‘இவ்வுயர்வுகள் எல்லாம் அவனுக்கு உண்டோ?’ என்ன, ‘நாம் ஆராய வேண்டாதபடி அருச்சுனன் பண்டே தெரிந்து அறுதியிட்டான்’ என்றார்; எழாம் பாட்டில், ‘ஒருவன் 3அநுவர்த்தனம் கொண்டு அறிய வேண்டுமோ? அவன் விரும்பிச் செய்கிற எல்லாக் காரியங்கட்கும் உரியதாக அன்றோ இவ்வுலகம் இருக்கிறது?’ என்றார்; எட்டாம் பாட்டில், ‘எங்கும் பரந்திருத்தல் தொடக்கமான அவனுடைய செயல்கள் ஒருவரால் அளவிட முடியாது’ என்றார்; ஒன்பதாம் பாட்டில், ‘அவனுடைய எங்கும் பரந்திருக்கும் தன்மையை இசையாதார் இரணியன் பட்டது

படுவர்’ என்றார்; பத்தாம் பாட்டில், ‘இந்த விதமானவனை நான் கண்டு அனுபவிக்கப் பெற்றேன்’ என்றார்; முடிவில், இது கற்றார்க்குப் பலம் சொல்லித் தலைக்காட்டினார்.

திருவாய்மொழி நூற்றந்தாதி

        அணைந்தவர்கள் தம்முடனே ஆயன்அருட்கு ஆளாம்
குணந்தனையே கொண்டுஉலகைக் கூட்ட – இணங்கிமிக
மாசில்உப தேசம்செய் மாறன் மலர்அடியே
வீசு புகழ்எம்மா வீடு.

1. ‘விண்தலையில் வீற்றிருந்து ஆள்வர் எம் மா வீடே’ என்றதனைக் கடாட்சித்து
அவதாரிகை அருளிச்செய்கிறார்.

2 ‘கண்’ என்னாது, ‘கண் தலங்கள்’ என்றது, திருக்கண்களின் பரப்பைச் சொல்லுதற்கு
என்று திருவுள்ளம் பற்றி, அதற்கு மேற்கோள் காட்டுகிறார். ‘பூதலங்கள்’ என்று.
‘அரங்கத்து அமலன் முகத்து, கரியவாகிப்புடைபரந்து மிளிர்ந்து செவ்வரி ஓடி நீண்ட
அப்பெரியவாய கண்கள் என்னைப் பேதைமை செய்தனவே’ என்றார் பாண் பெருமாள்.

3. பரபாகம் -வண்ணப்பொயிவு; வர்ண உத்கர்ஷம்.

இங்கு ‘எம்’ என்பதற்கு ‘எங்கள்’ என்பது பொருள்; இந்தப் பொருளையே ‘எனக்கும்
என் சம்பந்திகட்கும்’ என்று விரித்து அருளிச் செய்கிறார். முன்னைய பொருளுக்கு ‘எ,
மா, வீடு’ எனப் பிரிக்க.

நிகமத்தில் -முக்த பிராப்ய போகத்தை பெறுவார் -பலன் சொல்லி தலைக் கட்டுகிறார் –
கண் தளங்கள் செய்ய -சிவந்த திருக் கண்கள்
கரு மேனி அம்மான்
வண்டுகள் ரீங்காரம் -சோலைகள்
பண  உச்சத்தில் உள்ள பாசுரங்கள்
விண் தலையில் இருந்து உபய விபூதியும் ஆள்வார்
தளங்கள் -பூதலங்கள் போல் விசாலமான கரிய வாகி புடை பரந்து
பரபாகமான திரு மேனி கருத்தும்
வெள்ளத்தில் அலைவாரைப் போலே தேன் வெள்ளத்தில் வண்டுகள் அலையா நின்றுள்ள சோலைகள்
பண -தலையில் -ஒவ் ஒரு பத்துக்கும் ஒரு பண உண்டே –
இப்பத்தையும் அப்யசிக்க வல்லார்கள் –
வேத சாம்யம் போல் மூன்று சுரம் -சப்த சுரங்களும் உண்டே -பண தலை -உண்டே
விண் தலை -பரம பதத்தில் தங்கள் வ்யாவ்ருத்தி தோன்ற அங்குள்ளார் இவர் சொன்னதை கேட்கும் படி
நியமிக்கும்படி -பரம புருஷார்த்த லஷணம்
சம்சார சந்கொசங்கள் தீர்ந்து வீற்று இருப்பார்கள் –
வீடு திருத்த -தம் பால் மனம் வைக்க -வீட்டைத் திருத்த தொடக்கி
கேசவ தமருக்கு அப்புறம் ஆழ்வார் தனியார் அல்லர்
பத்து பாசுர அர்த்தம் இதுக்கும் அருளி –
முதல்பாட்டில் சந்க்ரேகென அருளி
அவன் சம்பந்தமே போதும் –
வ்யாப்தி தொடக்கமான அவனது -சொல்லி முடிக்க முடியாதே

அணைந்தார்கள் தம்முடனே –
கேசவ தமர் சம்பந்தம்
ஆயன் அருளுக்கு ஆளாகி
உலகை கூட்ட இணங்கி
உபதேசம் செய்தார் –
மாறன் மலர் அடியே நமக்கு மோஷம்

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்

பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading