இலங்கைசெற் றவனே! என்னும்; பின்னும்
வலங்கொள்புள் உயர்த்தாய்: என்னும்; உள்ளம்
மலங்கவெவ் வுயிர்க்கும்; கண்ணீர்மிகக்
கலங்கிக் கைதொழும் நின்றுஇவளே.
பொ – ரை : இவள், ‘இலங்கையினை அழித்தவனே!’ என்கிறாள்; அதற்குமேல், ‘வெற்றியைக் கொண்ட கருடப்பறவையினைக் கொடியாக உயர்த்தியவனே!’ என்கிறாள்; மனமானது கலங்கும்படி நெருப்பினைப் போன்று பெருமூச்சு எறிகின்றாள்; கண்களில் நீர் மிகும்படி நின்று அறிவு கலங்கிக் கைதொழுகின்றாள்.
வி-கு : ‘என்னும், என்னும், உயிர்க்கும், தொழும்’ என்பன, ‘செய்யுள்’ என் முற்றுகள். ‘நின்று கைதொழும்’ என மாற்றுக.
ஈடு : நான்காம் பாட்டு. ‘‘அரக்கன் இலங்கை செற்றீர்’ என்கிற இது எப்பொழுதும் உள்ளது ஒரு செயல் அன்றுகாண், எப்பொழுதாயினும் ஒரு கால விசேடத்திலே நிகழ்வதுகாண்’ என்றாள் திருத்தாய்; அது பொறுக்க மாட்டாமே, அதுதன்னையே சொல்லுகிறாள்.
இலங்கை செற்றவனே என்னும் -எனக்குப் பாண்டே உதவி உபகரித்தவனே!’ என்னாநின்றான். முன்பு தனக்கு உதவினவன் இப்பொழுது தனக்கு உதவாது ஒழித்தாற்போலே கூப்பிடுகிறாள். 1‘மலை எடுத்தல், கடல் அடைத்தல், அம்பு ஏற்றல் செய்ய வேண்டுமோ? என் பக்கல் வரும்போது என்ன தடை உண்டு?’ என்கிறாள் எனலுமாம். திருத்தாய், இவள் விடுக்கைக்குச் சொன்னது தானே இவளுக்குப் பற்றுகைக்கு உடலாய்விட்டது. பின்னும் – அதற்குமேல். வலம் கொள் புள் உயர்த்தாய் என்னும் – ‘மிடுக்கையடைய புள்ளாலே தாங்கப்பட்டவனே! என்கிறாள். ‘விடாயர் இருந்த இடத்தே 2சாய்கரகம் போலே உயர வைத்துக்கொண்டு வந்து காட்டும் பரிகரத்தையுடையவனே!’ என்கிறாள் என்றபடி. அன்றி, ‘மிடுக்கையுடைய புள்ளைக் கொடியாக உடையவன்’ என்று பொருள் கூறலுமாம்.உள்ளம் மலங்க வெவ்வுயிர்க்கும் – கொண்டு வருவதற்குப் பரிகரம் இருந்தும் வரக்காணாமையாலே மனமானது வேர்பறியும்படி நெடுமூச்சு எறியாநிற்கும். 1‘கழுத்தளவு நீரில் இருக்கிற தளிர்களை யுடைய மரங்களைத் தனது மூச்சுக் காற்றினால் கொளுத்துகின்றவள் போல இருக்கிற சீதை’ என்றார் ஸ்ரீவால்மீகி பகவான். 2தண்ணீர் மிக – நெடுமூச்சாகப் புறப்பட்டு, புறப்படாதது கண்ணீராய்ப் புறப்படா நின்றது. கலங்கிக் கைதொழும் – 3தெளிந்திருந்து தொழுமது இல்லை அன்றே காதலி? இவளே – 4அவன் தொழும்படியான வேண்டற்பாடுடைய தான் தொழாநின்றாள்.
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
Leave a Reply