இரக்க மனத்தொடு எரிஅணை
அரக்கும் மெழுகும்ஒக் கும்இவள்;
இரக்கம் எழீர்;இதற்கு என்செய்கேன்,
அரக்கன் இலங்கைசெற் றீருக்கே?
பொ – ரை : இவள் இரக்கம் பொருந்திய மனத்தால் நெருப்பினைச் சேர்ந்த அரக்கினையும் மெழுகினையும் ஒப்பாள்; நீர் இரக்கம் உடையீர் ஆகின்றிலீர்; இது நிமித்தமாக, இரவாணனுடைய இலங்கையை அழித்த உமக்கு எதனைச் செய்வேன்?
வி – கு : ‘அரக்கன் இலங்கை செற்றீருக்கு’ என்ற தொடர், ‘உம்மைப் பிரிந்து வருந்தின பிராட்டியின்பொருட்டு இலங்கையை அழித்து அவள் துன்பத்தினை நீக்கினீர்; பிரிந்து வருந்துகிற இவளுடைய துன்பத்தை நீக்குதற்கு இப்பொழுது இரக்கமும் கொள்கின்றிலீர்’ என்ற கருத்தை உட்கொண்டது. மனத்தொடு – ஒடு உருபு, கருவிப் பொருளில் வந்தது. அணை அரக்கு – வினைத்தொகை. எழீர் – எதிர்மறை முற்று. செற்றீர் – பெயர்.
ஈடு : மூன்றாம்பாட்டு. ‘இன்று இச்செயல் செய்யக்கடவதாக நினைத்த நீர், அன்று, 1‘உண்ணாது உறங்காது ஒலிகடலை ஊடு அறுத்த’ லாகிய அச்செயலை எதற்காகச் செய்தீர்?’ என்கிறாள்.
இரக்க மனத்தொடு இவள் – இரங்கின நெஞ்சையுடைய இவள். இரக்கம் – நெஞ்சில் நெகிழ்ச்சி. 2அன்றி, ஈடுபாடு என்றும், ஈரிப்பு என்றும் பொருள் கூறலுமாம். எரி அணை அரக்கும் மெழுகும் ஒக்கும் – எரியை அணைந்த அரக்கும் மெழுகும் போலே உருகா நின்றாள். அரக்கும் மெழுகும் என்னும் இவற்றை நெஞ்சுக்கு ஒன்றும், இவள்தனக்கு ஒன்றுமாகக் கொண்டு பொருள் கூறுவர் பிள்ளை திருநறையூர் அரையர். நெஞ்சும் இவள்தனக்குக் 3கையடைப்பு ஆகையாலே இவள்தனக்கே இரண்டையும் அடை ஆக்கி அருளிச் செய்வர் பட்டர். 4‘சக்தியில் விஷ்ணுவைப் போன்றவர்; பார்க்கத் தகும் தன்மையில் சந்திரனைப் போன்றவர்’ என்கிறபடியே, பல பொருள்களையும் இவளுடைய படிக்கித் திருஷ்டாந்தமாகக் கூறக் கூடியவாறு இவள்தன் நிலை இருக்கிறது என்றபடி. 5அரக்கும் மெழுகும், நெருப்பிற்குள் புகில் கரிந்து போம்; கடக்க இருக்கில் வலிக்கும்; அதனைச் சார்ந்து நின்றுழி உருகும்; அது போன்று,4முடிந்து பிழைக்கவும் பெறாமல், தரித்திருக்கவும் பெறாமல், நோவு படும்படி செய்கின்றீரே!’ என்பாள், ‘எரிஅணை அரக்கும் மெழுகும்’ என்கிறாள். இவள் நிலை இது.
இரக்கம் எழீர் -‘நீரும் இவளைப் போன்று உருகவேண்டும் என்று வளைக்கிறோமோ? நொந்தார் பக்கல் செய்யும் அருளும் செய்கிலீர். இரக்க மனத்தையுடையள் ஆகாநின்றாள் இவள்; நீர் இரக்கம் எழுகின்றிலீர்; நீர் இரங்காவிட்டால் உம்முடைய நெஞ்சைப் போன்று இருப்பது ஒரு நெஞ்சை இவளுக்குக் கொடுத்தல் ஆகாதோ!’ என்கிறாள். இதற்கு என்செய்கேன் – உம்முடைய இரக்கம் ஒழிய ஏதேனும் வேறு உபாயத்தால் பெறத்தக்கதோ இப்பேறு? இனி, உம்மை இரங்கும்படி செய்யவோ? அன்றி, இவளை இரங்காமற் செய்யவோ? யாது செய்வேன்?’ என்பாள், ‘என் செய்கேன்?’என்கிறாள் எனலுமாம். அரக்கன் இலங்கை செற்றீருக்கு -‘ஒரு காதலிக்கு உதவினவன் நமக்கு உதவானோ?’ என்று ஈடுபடாநின்றான். 1புழுக்குறித்தது எழுத்தானாற்போலே ஒன்று வாய்த்ததைக் கொண்டு 2‘அது அந்யார்த்தம்’ என்று இராமல் நோவுபடாநின்றாள்’ என்கிறாள். ‘உமக்கு இரக்கம் இன்றியே ஒழிந்தால், 3இவள் இரங்குவது ஒரு செயலைச் செய்து வைக்க வேண்டுமோ?’ என்பது உட்கோள்.
கடல்வழி விடநிசி சரர்பொடி படிரு கண்சீறி
வடகயி லையில்எழு விடைதழு வியதும றந்தாரோ
அடல்அரவு அமளியில் அறிதுயில் அமரும்அ ரங்கேசர்
இடர்கெட வருகிலர் முருகலர் துளவும்இ ரங்காரே.”
(திருவரங்கக்கலம்பகம)
என்ற அருமைப்பாசுரம் இவ்வியாக்கியானத்தோடு படித்து இன்புறத் தகும்.
அந்யார்த்தம் – வேறொன்றற்காகச் செய்யப்பட்டது; அல்லது, பிறருக்காகச்
செய்யப்பட்டது, இவ்விடத்து,
‘உன்னைமீட் பான்பொருட்டு உவரி தூர்த்துஒளிர்
மின்னைமீட் டுறுபடை யரக்கர் வேரறப்
பின்னைமீட் டுறுபகை கடந்திலேன்; பிழை
என்னைமீட் பான்பொருட்டு இலங்கை எய்தினேன்’
(கம்பரா. மீட். 63)
‘சீதையைக் குறித்த தேயோ தேவரைத் தீமை செய்த
பேதையைக் கொல்வன் என்று பேணிய விரதப் பெற்றி
வேதியர் அபய மென்றார்க்கு அன்றுநான் விரித்துச் சொன்ன
காதையைக் குறித்து நின்ற அவ்வுரை கடக்க லாமோ?’
(கம்பரா. விபீட. 118
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
Leave a Reply