காக்கும் இயல்வினன் கண்ண பெருமான்
சேர்க்கை செய்துதன் உந்தி உள்ளே
வாய்த்த திசைமுகன் இந்திரன் வானவர்
ஆக்கினான் தெய்வ உலகுகளே.
பொ-ரை : எல்லா உயிர்களையும் பாதுகாத்தலையே தனக்கு இயல்பாகவுடையவன் கண்ணபிரானாகிய நம் இறைவன்; அவன், அழிக்கும் காலம் வந்தவாறே, எல்லா உயிர்களையும் தன் திருமேனியில் சேரச் செய்து, பின்னர், தனது திருநாபிக்கமலத்திலே, எல்லாக்குணங்களும் பொருந்திய பிரமனையும், இந்திரனையும், தேவர்களையும், தேவர்களுக்குரிய உலகங்களையும் உண்டாக்கினான்.
வி – கு : ‘தன உந்தியுள்ளே ஆக்கினான்’ எனக் கூட்டுக. சேர்க்கை செய்தல் – அழித்தல்; ஒரு சொல். இனி, தன் திருமேனியில் சேர்தலாகிய தொழிலைச் செய்து என்று பொருள் உரைத்து இதனை இருசொல்லாகக் கோடலுமாம்.
ஈடு : ஒன்பதாம் பாட்டு. ‘படைத்தல் காத்தல் அழித்தல் என்னும் இம்முத்தொழிலையும் 1தன் அதீனமாம்படி இருக்கின்றான் ஆதலானும், இவனே இறைவன்,’ என்கிறார்.
காக்கும் இயல்வினன் – 2‘செல்வங்களைக் கொடுப்பதிலும் ஆபத்துக்களை நீக்குவதிலும் ஆடவர் திலகனான திருமகள் கேள்வனைத் தவிர, வேறு ஒருவரும் ஆற்றலுடையவராகக் காணப்படுகின்றார் இலர்,’ என்கிறபடியே, காப்பாற்றுதலை இயற்கையாகவுடையவன். கண்ண பெருமான் – காப்பாற்றும்பொருட்டுக் கிருஷ்ணனாய் வந்து அவதரித்த இறைவன். சேர்க்கை செய்து – அழிக்கிற காலம் வந்த அளவில், காரிய வடிவமான இவ்வுலகங்கள் முழுதும் தன் பக்கலில்சேர்தலாகிய செயலைச் செய்து. 1தன் உந்தியுள்ளே – தன்னுடைய திருநாபிக்கமலத்தில். வாய்த்த திசைமுகன் இந்திரன் வானவர் தெய்வ உலகுகள் ஆக்கினான் – பிரமன் இந்திரன் மற்றும் உண்டான தேவர்களோடே கூட அவர்களுக்கு இருப்பிடமான உலகங்களையும் கட்டளைப்பட உண்டாக்கினான். இறைவன், 2பிரமனைப் படைத்து அவனை நோக்கி, ‘உலகத்தை எல்லாம் படைப்பாய்’ என்று ஒருகால் ஏவிவிட்டால் பின்னைத் தன்னையும் கேட்க வேண்டாதபடி படைத்தலின் ஆற்றல் வாய்த்தவனாதலின் ‘வாய்த்த திசைமுகன்’ என்கிறார்.
. ‘பெரியவனை மாயவனைப் பேருலக மெல்லாம்
விரிகமல உந்தியுடை விண்ணவனை’– என்றார் இளங்கோவடிகள்.
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
Leave a Reply