மணியை வானவர் கண்ணனைத் தன்னதோர்
அணியைத் தென்குரு கூர்ச்சட கோபன்சொல்
பணிசெய் ஆயிரத் துள்இவை பத்துடன்
தணிவி லர்கற்ப ரேல்கல்வி வாயுமே.
பொ-ரை : முன்றானையிலே முடிந்து ஆளலாம்படி சுலபனாய் இருக்கிறவனை, நித்தியசூரிகள் தலைவனை, தனக்குத்தானே ஆபரணம் போன்ற அழகினையுடையவனை, அழகிய திருக்குருகூரில் அவதரித்த ஸ்ரீசடகோபர் சொற்களைக்கொண்டு அடிமை செய்யும் ஆயிரத் திருப்பாசுரங்களுள் இப்பத்துத் திருப்பாசுரங்களையும் கற்கவேண்டும் என்
னும் ஆசை குறைவு இல்லாதவர்களாகிக் கற்பார்களேயாயின், கல்வியின் பயனான தொண்டு செய்தல் அவர்களுக்கு உளதாம்.
வி-கு : தணிவிலர் – முற்றெச்சம். கல்வி என்பது அதன் பயனாகிய அறிவிற்காகி, அவ்வறிவு அதன் பயனாய தொண்டிற்கு ஆயிற்று; இருமடி ஆகுபெயர்.
ஈடு : முடிவில், ‘இப்பத்தைக் கற்றவர்கள் தன்னின் மேம்பட்டது இல்லாத புருஷார்த்தமான பகவானுடைய கைங்கரியத்தைப் பெறுவர்,’ என்கிறார்.
மணியை – முன்தானையிலே முடிந்து ஆளலாம்படி கைப்புகுந்திருப்பான் என்று அவனுடைய சௌலப்பியத்தைச் சொல்லுகிறார். ‘தென்குறுங்குடி நின்ற’ என்கிற இடத்தில் சௌலப்பியம். வானவர் கண்ணனை – இதனால், ‘உம்பர் வானவர் ஆதியம் சோதி’ என்கிற மேன்மையைச் சொல்லுகிறார். தன்னதோர் அணியை-இதனால் ‘அச்செம்பொனே திகழும் திரு மூர்த்தி’ என்கிற வடிவழகை நினைக்கிறார். இம்மூன்றுங்கூடின பசுங்கூட்டே பரத்துவம் எனப்படுதலின், இவற்றை ஈண்டு ஒருசேர அருளிச்செய்கிறார். தென்குருகூர்ச்சடகோபன் சொல்பணி செய் ஆயிரம் – ஆழ்வார் அருளிச்செய்ததாய் ‘நாம் இங்குத்தைக்குக் கிஞ்சித்கரித்தோம் ஆக வேண்டும்’ என்று, சொற்கள்தாம் ‘என்னைக்கொள், என்னைக் கொள்’ என்று 1‘மிடைந்தசொல்’ என்கிறபடியே, சொற்கள் பணி செய்த ஆயிரம் பாசுரங்கள். இனி, ‘சொல் பணி செய் ஆயிரம்’ என்பதற்கு, ‘சொற்களால் பணி செய்த ஆயிரம்; அதாவது, வாசிகமான அடிமையைச் சொல்லுகிறார்’ என்று பொருள் கோடலுமாம்.
உடன் தணிவிலர் கற்பரேல்-அபிப்பிராயத்தோடு கற்பாராகில். தணிவு – முயற்சி அற்று இருத்தல்; அதாவது, ‘வரில் போகடேன், கெடில் தேடேன்’ என்றிருக்கை அன்றி, சிரத்தை மாறாமல் கற்பராகில் என்றபடி. கல்வி வாயும் –2‘ஒண்தாமரையாள் கேள்வன் ஒருவனையே நோக்கும் உணர்வு’ என்கிறபடியே, ஞானமாகில் பகவத்விஷயத்தைப் பற்றியல்லது இராமையாலே, இதனைக்கற்க, இதற்குப் பலமாகத்தொண்டினை இது தானே தரும். இனி, இதற்குக் (கல்விதானே பயன்’ என்று பொருள் கூறலும் ஒன்று.
இத்திருவாய்மொழியில், மேல் பரக்க அருளிச்செய்யப் புகும் பொருள்களை எல்லாம் சுருக்கமாக முதற்பாட்டிலே அருளிச்செய்தார்; இரண்டாம் பாட்டில் ‘பரமபத்திக்கும் பரிகணனைக்கும் ஒக்க முகங்காட்டும்,’ என்றார்; மூன்றாம் பாட்டில், ‘கண்டாயே அவன் சொரூபம் இருந்தபடி; நீயும் உன் சொரூபத்துக்குத் தக்கபடி நிற்கப்பாராய்,’ என்றார்; நான்காம் பாட்டில் சொரூபத்திற்குத் தகுதியாக நெஞ்சு தொழுதவாறே நெஞ்சைக் கொண்டாடினார்; ஐந்தாம் பாட்டில், மேல் ‘எண்ணிலும் வரும்’ என்றது, பலத்தோடே சேர்ந்து முடிவுற்றபடியை நெஞ்சுக்கு அருளிச்செய்தார்; ஆறாம் பாட்டில், ‘நாம் இருவரும் இப்படி நிற்கப் பெறில் நமக்கு ஒரு கேடும் வாராது,’ என்றார்; ஏழாம் பாட்டில், மேல் இவர் அஞ்சினபடியே விடிந்தபடி அருளிச்செய்தார்; எட்டாம் பாட்டில் திருநாமத்தைக் கேட்டவாறே தம்முடைய காரணங்களுக்குப் பிறந்த வேறுபாட்டைச் சொன்னார்; ஒன்பதாம் பாட்டில், ‘வேறுபட்டவர் ஆகாதே மறந்தாலோ?’ என்ன, ‘என் மனத்திலே இருக்கிறவனை மறக்கப்போமோ?’ என்றார்; முடிவில், கற்றார்க்குப் பலஞ்சொல்லித் தலைக்கட்டினார்.
முதற்பதிகத்தால், ‘எல்லாரினும் அறப்பெரியன் இறைவன்’ என்றார்; இரண்டாம் பதிகத்தால், ‘வணங்கத் தக்கவன்’ என்றார்; மூன்றாம் பதிகத்தால், ‘அவன்தான் எளியவன்,’ என்றார்; நான்காம் பதிகத்தால், ‘எளியனானவன் குற்றங்களைப் பொறுப்பவன்,’ என்றார்; ஐந்தாம் பதிகத்தால், ‘அவன் சீலவான்,’ என்றார்; ஆறாம் பதிகத்தால், ‘எளிதாக ஆராதிக்கத் தக்கவன்,’ என்றார்; ஏழாம் பதிகத்தால், ‘எல்லை இல்லாத இனியன்,’ என்றார்; எட்டாம் பதிகத்தால், அவனுடைய ஆர்ஜவ குணத்தை அருளிச்செய்தார்; ஒன்பதாம் பதிகத்தால், பொறுக்கப் பொறுக்க இன்பத்தினைக் கொடுப்பவன் என்றார்; பத்தாம் பதிகத்தால், ‘இத்தன்மைகளையுடையவன் ஒருவன் இறைவன் ஆதலின், ஒருவிதக்காரணமும் இன்றியே உயிர்களை அங்கீகரிப்பவன்,’ என்றார்; ஆகையாலே, ‘அவன் துயரறு சுடரடி தொழுது எழு என்மனனே’ என்று தம் திருவுள்ளத்தைக் குறித்து அருளிச்செய்து தலைக்கட்டினார்.
ஆக, ‘அடி தொழுது எழு’ என்று தொடங்கி, ‘கல்வி வாயும்’ என்று முடித்ததனால், ஒரு மனிதன் விரும்பிப் பெறத் தக்க உயர்வு அற உயர்ந்த உறுதிப்பொருள், பகவானுக்குச்
செய்யும் கைங்கரியமேயாம் என்பதனை முதல் நூறு திருப்பாசுரங்களால் அறுதியிட்டு அருளிச்செய்தார் ஆயிற்று.
திருவாய்மொழி நூற்றந்தாதி
பொரும்ஆழி சங்குடையோன் பூதலத்தே வந்து
தருமாறுஓர் ஏதுஅறத் தன்னைத் – திரமாகப்
பார்த்துஉரைசெய் மாறன் பதம்பணிக என்சென்னி;
வாழ்த்திடுக என்னுடைய வாய்.
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
Leave a Reply