பிள்ளைதிருநறையூர் அரையர் : “ஒரு குருவி பிணைத்தபிணை ஒருவரால் அவிழ்க்கப்போகிறதில்லை; சர்வசக்தி கருமானுகுணமாகப் பிணைத்த பிணையை அவனையே கால் கட்டியவிழ்த்துக் கொள்ளுமித்தனைகாண்.”
ஆழ்வான் : “ஆழ்வான் பிள்ளைப்பிள்ளையைப் பார்த்து நிர்க்குணமென்பார் மிடற்றைப் பிடித்தாற்போலே ஆழ்வார் ‘நலமுடையவன்’ என்றபடி கண்டாயே.”
எம்பார் : “ஆழ்வார் பிரபந்நரோ, பத்திநிஷ்டரோ?” என்று எம்பாரைச் சிலர் கேட்க, “ ஆழ்வார் பிரபந்நர்; பத்தி இவர்க்குத் தேக யாத்ராசேஷம்,” என்று அருளிச்செய்தார். ‘எவ்வாறு?’ எனின், நாமனைவரும் பிரபந்நர்களாகவிருப்பினும், ஓராண்டிற்கு அல்லது, ஆறு மாதங்கட்கு வேண்டும் உணவுப் பொருள்களை முன்னரே தேடிக்கொள்ளுகிறோமன்றோ? அது போன்று, ‘உண்ணுஞ்சோறு பருகுநீர் தின்னும் வெற்றிலையு மெல்லாம் கண்ணனே’ ஆவன் இவர்க்கு.
எம்பார் : ‘தொழில் செய்வதற்காயின் இறைவன் திருவருள் வேண்டும்; தொழில் செய்யாதிருப்பதற்கு அவன் அருள் வேண்டுமோ?’ என்று எம்பாரைச் சிலர் கேட்க, ‘சுவர்க்கத்தினின்றும் விழுகிற திரிசங்குவைச் சத்திமான் நிற்கச் சொல்ல நிற்க வேண்டிற்றுக் கண்டாயே! அப்படியே, நிவர்த்திக்கும் அவன் வேணுங்காண்,’ என்று அருளிச்செய்தார்.
நஞ்சீயர் : ஒருவனுக்கு வைஷ்ணவத்துவம் உண்டு இல்லை என்னுமிடம் தனக்கே தெரியுங்காண்,’ என்று சீயர் பலகாலும் அருளிச்செய்வார்; அதாவது, பிறர் அநர்த்தம் கண்டால் ‘ஐயோ!’ என்று இரங்குவானாகில், அவன் நமக்குப் பகவத் சம்பந்தம்உண்டு’ என்றிருக்க அடுக்கும்; ‘இத்தனையும் வேண்டும் பட்டிடுவானுக்கு!’ என்றிருந்தானாகில், அவன் ‘நமக்குப் பகவத் சம்பந்தம் இல்லை’ என்றிருக்க அடுக்கும்,’ என்பதாம்.
பட்டர் : சம்பந்த ஞானமே வேண்டும் என்றார்; ‘எங்ஙனம்?’ எனின், ஒரு வணிகன் தன் மனைவி கருவுற்றிருக்குங்காலத்தில் பொருள் தேடும் விருப்பினால் வெளி நாடு சென்றான்; அவளும் கருவுயிர்த்தாள்; மகனும் தக்க வயது அடைந்து தனக்கும் தகப்பனாருடைய வாணிகமே தொழிலாய்ப் பொருள் தேடப் போனான்; இருவரும், தத்தமக்கு வேண்டிய சரக்குப் பிடித்துக் கொண்டு வந்து ஒரு பந்தலில் தங்கினார்கள்; அஃது, அவ்விருவருக்கும் இடம் போதாமையால் அம்பறுத்து எய்ய வேண்டும்படி விவாதமுண்டான சமயத்தில், இருவரையும் அறிவான் ஒருவன் வந்து, ‘இவன் உன் தமப்பன்; நீ இவன் மகன்,’ என்று அறிவித்தால், கீழ் இழந்த நாள்களுக்குச் சோகித்து, இருவர் சரக்கும் ஒன்றாய், அவன் காப்பாற்றுகின்றவனாய், இவன் காப்பாற்றப்படும் பொருளாய்க் கலந்துவிடுவார்களன்றோ? அது போன்று ‘சீவான்மாவும் பரமான்மாவும் சரீரமாகிற ஒரு மரத்தினைப் பற்றியிருந்தால் ஒருவன் இருவினைப் பயன்களை நுகராநிற்பவன்; நாம் ஏவப்படும் பொருள் என்னும் முறையறியவே பொருந்தலாமன்றே!
‘ஓர் அரசகுமாரன் பூங்காவொன்றினைக் கண்டு புக அஞ்சினால், ‘இது உன் தமப்பனதுகாண்’ என்னவே, நினைத்தபடி நடந்து கொள்ளலாமன்றோ! ஆன பின்னர், ‘அவனுடைய உடைமை இவையெல்லாம்’ என்னும் நினைவே வேண்டுவது, தானும் அதற்குள்ளே ஒருவனாகச் சேரலாம்,’ என்கிறார்.
எம்பெருமானார் : ஓர் அயநத்தினன்று குன்றத்துச் சீயர் எம்பெருமானார் ஸ்ரீபாதத்திலே புக, அவருடைய சிறு பெயரைச் சொல்லி, ‘சிங்கப்பிரான்! இன்று அயநங்காண்’ என்ன, திருவுள்ளத்தில் ஓடுகிறது இன்னது என்று அறியாமையாலே அவர் பேசாதிருக்க, ‘உயிர் உடலை விட்டு நீங்கும் அந்திம காலத்தில் பலம் கண்ணழிவற்ற பின்பு நடுவு விரோதியாய்ச் செல்லுகிற நாளில் ஓராண்டு கழியப்பெற்ற இது உனக்கு ஒன்றாய் இருந்ததில்லையோ!’ என்றருளிச்செய்தார்.
ஆழ்வான் : ஆழ்வான் இப்பாட்டளவு வரப் பணித்து, இப்பாட்டு வந்தவாறே ‘இத்தையும் நும் ஆசிரியர் பக்கல் கேட்டுக் கொள்ளுங்கள்,’ என்ன, பட்டரும் சீராமப்பிள்ளையும் எழுந்து போகப் புக்கவாறே, அவர்களை அழைத்து, ‘இன்ன போது இன்னார் இருப்பார், இன்னார் போவார் என்று தெரியாது. இருந்து கேளுங்கள்,’
என்று திருமந்திரத்தை உபதேசித்து, இப்பாட்டைக் கூறி, ‘இப்பாட்டை இதற்கு அர்த்தமாக நினைத்திருங்கள்’ என்று பணித்தார்.
எம்பெருமானார் : சர்வேஸ்வரன் அரியன் என்றால் சம்சாரத்தில் ஆள் பற்றாது என்று அவன் எளிமையை விவரமாகச் சொல்லிக்கொண்டு போந்தோம்; அதுதானே இவர்களுக்கு ‘இத்தனை எளியனோ?’ என்று விடுகைக்கு உடலாயிற்று; அவ்வெளிமைதானே பற்றுகைக்கு உடலாயிற்று உமக்கு ஒருவருக்குமே! என்று எம்பாரைப் பார்த்து உடையவர் அருளிச்செய்தார்.
பட்டர் : ‘சர்வேஸ்வரனை அடைந்தானாகில் அவன் பலனைக் கொடுக்கிறான்; பிராட்டியைத் துணையாகப் பற்ற வேண்டுகிறது என்?’ என்று நஞ்சீயர் பட்டரைக் கேட்க, ‘அவனையடையுமிடத்தில் இவன் குற்றம் பாராதே தன்னிழலிலே இவனை வைத்து, அவன் பக்கல் முகம் பெற்றவாறே குற்றத்தைப் பொறுப்பிக்கும் அவள் முன்னாகப் பற்றல் வேண்டும்’ என்று கூறி, ‘நாளும் நந்திருவுடையடிகள்தம் நலங்கழல் வணங்கி,’ என்னாநின்றது கண்டீரே!’ என்றருளிச்செய்தார்.
முற்காலத்தில் சிற்றறிஞன் ஒருவன், ‘பற்றற்ற பரமஞானிகளும் போற்றத் தக்கனவாக இருக்கின்றன; உண்மைப் பொருளை உள்ளவாறு கூறுகின்றன’ என்று இத்திருவாய்மொழி அளவும் பாடங்கேட்டு, இத்திருவாய்மொழி வந்த அளவில் ‘இது காமுகர் வாக்கியமாக இருந்ததே!’ என்று கைவிட்டுப் போனானாம்; ‘இறைவன் கேட்கத்தக்கவன், நினைக்கத்தக்கவன், தியானம் செய்யத்தக்கவன், பார்க்கத்தக்கவன்’ என்று விதிக்கிற பகவத் காமம் என்று அறிந்திலன், நல்வினை அற்றவனாதலாலே.
பட்டர் : ‘சக்கரவர்த்தி திருமகன் திருவவதரித்த பின்பு வானர சாதி வீறு பெற்றாற்போலே காணும், ஆழ்வார்கள் திருவவதரித்த பின்பு திரியச் சாதி வீறு பெற்றபடி,’ என்று ரசோக்தியாக அருளிச் செய்வர்.
தெற்காழ்வான் : ‘ஒரு முழுக்காலும் இரண்டு முழுக்காலும் போகாதுகாண்: தெற்காழ்வார் கையில் திருவாழியாலே வினையை அறுத்துக்கொண்டு போகில் போகும் அத்தனை ஒழிய, ஒன்றிரண்டு முழுக்கால் போகாதுகாண் நான் பண்ணின பாவம்!’ என்று திருக்கோட்டியூரிலே தெற்காழ்வான் கோளரியாழ்வானுக்குத் தீர்த்தத் துறையில் சொன்ன வார்த்தையை நினைவு கூர்வது.
பட்டர் : பட்டரை ஒரு தமிழ்ப் புலவர், ‘கேட்டிரங்கி’ என்னாது, ‘கண்டிரங்கி’ என்னப் பெறுமோ?’ என்ன, ‘அணைத்த கை நெகிழ்த்த அளவிலே வெளுத்தபடி கண்டால் பிரியத் தகாது என்றிருக்க வேண்டாவோ?’ என்றருளிச்செய்தார்; கேட்ட புலவர், ‘இவ்வாறு நிகழ்வதுமுளதோ?’ என்ன, ‘புல்லிக் கிடந்தேன்,’ ‘காதலர் தொடுவுழித் தொடுவுழி’ என்பன போன்ற தமிழ்ப்பாக்களை நீ அறியாயோ?’ என்றருளிச்செய்தார்.
பட்டர் : ‘நம்பியேறு திருவுடையான் தாசர் திருநாட்டுக்கு நடந்தார்,’ என்று பட்டர்க்கு விண்ணப்பஞ்செய்ய, பட்டர் துணுக்கென்று எழுந்து நின்று, ‘அவர் ஸ்ரீவைஷணவர்களுடன் பரிமாறும், படிக்குத் திருநாட்டுக்கு எழுந்தருளினார் என்ன வேண்டுங்காண்,’ என்றருளிச்செய்தார்.
பெரிய திருமலைநம்பி : பெரிய திருமலை நம்பி, தமது இறுதிக் காலத்திலே, தமக்கு வெண்ணெய்க்காடும் பிள்ளையாயிற்றுத் திருவாராதனம்; அவர் திருமுன்பு திருத்திரையை வாங்கச் சொல்லி, ‘சாயலொடு மணிமாமை தளர்ந்தேன் நான், இனியுனது, வாயலகில் இன்னடிசில் வைப்பாரை நாடாயே,’ என்றாராம்.
பட்டர் : புகைபூவே – அகிற்புகை, கருமுகைப்பூ என்று விசேடித்துச் சொல்லாமையாலே ஏதேனும் புகையும், ஏதேனும் பூவும் அமையும். இவ்விடத்தில், பட்டர் ‘செதுகையிட்டுப் புகைக்க அமையும், கண்டகாலி இடவும் அமையும்’ என்றருளிச்செய்வர். இங்ஙனம், பட்டர் அருளிச்செய்தவாறே, ‘இறைவனுக்குக் கண்டங்கத்தரிப்பூவை அருச்சித்தல் கூடாது’ என்று சாஸ்திரங்கள் விதிக்கின்றனவே!’ என்று நஞ்சீயர் கேட்க, ‘அவனுக்கு ஆகாது என்கிறதன்று; பறிக்கிற அடியார் கையில் முள் பாயும் என்பதற்காகத் தவிர்த்தனகாணும்! ‘கள்ளார் துழாயும் கணவலரும் கூவிளையும், முள்ளார் முளரியும் ஆம்பலும்முன் கண்டக்கால்’ என்று இறைவனுக்கே உரிய திருத்துழாயோடு அதற்கு வேறுபட்ட பூக்களையும் ஒரு சேர எடுத்துத் திருமங்கை மன்னன் அருளிச்செய்கிறது கண்டீரே! இதனால், இறைவன் பொருளில் ஏற்றத்தாழ்வு பார்ப்பது இன்று என்பது விளங்குமே! மற்றும், பிரகிருதி சம்பந்த
மில்லாத பொருள்தான் வேண்டும் என்றிருந்தானாகில், ‘புள்ளாய் ஓரேனமுமாய்’ அவதரிப்பானோ? ஸ்ரீவைகுண்டத்தில் இரானோ?’ என்றருளிச்செய்தார்.
நம்பி திருவழுதி நாடு தாசர் : நம்பி திருவழுதி நாடு தாசர், ‘இத்தேவசாதி வெறுமரையோ, உப்புச்சாறு கிளருவது எப்போதோ?’ என்று பார்த்துக் கிடப்பதே இவன் அழகையும் இனிமையும் விட்டு!’ என்பராம்.
பட்டர் : பட்டர் திருவோலக்கத்துக்குச் சாஸ்திரியாயிருப்பார் ஒரு பிராமணர் பல காலும் செல்வர்; அவரைக் கண்டால் பட்டர் ‘வந்தாயோ, போனாயோ’ என்று சாமான்யமாக வியவஹரித்து அருளிச்செய்வர்; ஒரு ஸ்ரீவைஷ்ணவர், பலகாலும் சேவிக்க எழுந்தருளுவர்; அவரைக் கண்டால் மிகவும் கிருபை பண்ணி ஆதரித்துக் கொண்டு எழுந்தருளியிருப்பார். இதனைப் பல காலும் கண்டிருப்பார் ஒருவர் வந்து, பட்டரைச் சேவித்து, ‘ஸ்வாமீ’ தேவரீர் திருவோலக்கத்துக்கு வருகிற சாஸ்திரி பிரசித்தராயிருக்கிறவர்; அவர் வந்தால் சாமான்யமாக வியவஹரித்தருளுகிறது, ஒரு சாது ஸ்ரீவைஷ்ணவர் வந்தார் என்றால் அவரை மிகவும் பிரதிபத்தி பண்ணி அருளுகிறது காரணத்தை எனக்கு அருளிச்செய்ய வேண்டும்,’ என்ன, ‘ஆனால், எப்போதும் போலே நாளையும் அவ்விரண்டு பேர்களும் வருவார்கள்; அப்போது நீயும் எப்போதையும் போலே பார்த்திரு; காரணம் சொல்லுகிறோம்’ என்ன, அவரும் அப்படியே பார்த்திருக்க, அவரை எப்போதையும் போலே வினவியருளி, ‘நீர் ஆரைத்தான் பரதத்துவம் என்று நினைத்திருக்கிறது?’ என்ன, ‘சில பிரமாணங்கள் பிரஹ்மாவே பரதத்துவம் என்று சொல்லுகின்றன; சில பிரமாணங்கள் விஷ்ணுவே பரதத்துவம் என்று சொல்லுகின்றன; சில பிரமாணங்கள் சிவனே பரதத்துவம் என்று சொல்லுகின்றன; ஆகையினாலே, நம்மாலே நிச்சயிக்கப் போமோ?’ என்ன, ‘நன்று’ என்று இருந்து, அவர் போனவாறே, ஸ்ரீவைஷ்ணவர் எழுந்தருளிச் சேவிக்க, அவரையும் கிருபை செய்தருளி, ‘தேவரீர் யாரைத்தான் பரதத்துவம் என்றிருப்பீர்?’ என்ன, ‘தேவரீர் ஸ்ரிய:பதி நாராயணனே பரதத்துவம் என்றருளிச்செய்யுமே! அஃதொழிய அடியேன் வேறு ஒன்றறியேன்,’ என்ன, ‘இன்னம் உமக்குத் தஞ்சமாக நினைத்திருப்பது என்?’ என்ன, ‘எம்பெருமானார் திருவடிகளே உபாயமும் உபேயமும் என்று பிரசாதித்தருளுமே, அத்தையே தஞ்சமாக நினைத்
திருப்பேன்,’ என்ன, திருவுள்ளம் உவந்து, ‘அபசாரத்தை க்ஷமித்தருள்க! திருமாளிகைக்கு எழுந்தருள்க!’ என்றருளிச்செய்து பார்த்திருந்தவரைப் பார்த்து, ‘கண்டீரே இருவர்க்கும் உண்டான தாரதம்யம்? ஆகையாலே, இவரை வணங்கவோ, அவரை வணங்கவோ? இப்படியன்றோ ஸ்வரூப ஸ்திதி இருந்தது?’ என்றருளிச்செய்ய, அவரும் கிருதார்த்தரானார் என்ற ஐதிஹ்யம் ‘துயக்கன் மயக்கன்’ (பா. 95) என்ற பாசுரத்தில், ஜீயர் அரும்பதத்தில் காணப்படுகின்றது.
வேல்வெட்டி நம்பியார் : வேல்வெட்டி நம்பியார், நம்பிள்ளையைப் பார்த்து, ‘பெருமாள் கடலைச் சரணம் புகுகிற காலத்தில் கிழக்கிருத்தல் முதலிய சில நியமங்களோடே சரணம் புக்கார்; ஆதலின், இப்பிரபத்தி உபாயம், வேறு சாதனங்களைப் போன்று, சில நியமங்கள் வேண்டியிருக்கிறதோ?’ என்று கேட்க, ‘அரசரான இராகவர் கடலைச் சரணம் அடைவதற்குத் தக்கவர்’ என்று பெருமாளுக்கு உபதேசித்தான் ஸ்ரீ விபீஷணாழ்வான்; அவன் தான் பெருமாளைச் சரணம் புகுகிறவிடத்தில், கடலில் ஒரு முழுக்கிட்டு வந்தான்’ என்றில்லை; ‘ஆக இத்தால் சொல்லிற்றாயிற்று என்?’ என்னில், ‘பெருமாள், இட்சுவாகு குலத்தராய் ஆசாரத்தில் மேம்பட்டவராகையாலே சில நியமங்களோடே சரணம்புக்கார்; ஸ்ரீவிபீஷணாஷ்வான் இராக்கதர் குலத்தனாகையாலே, நின்ற நிலையிலே சரணம் புக்கான்; ஆகையாலே, யோக்கியனுக்கு அயோக்கியதை சம்பாதிக்க வேண்டா; அயோக்கியனுக்கு யோக்கியதை சம்பாதிக்க வேண்டா; ஆகையாலே, சர்வாதிகாரம் இவ்வுபாயம்,’ என்றருளிச் செய்தார்.
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
Leave a Reply