திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -1-10-4–ஸ்ரீ M.A V .சுவாமிகள் ..

நெஞ்ச மே! நல்லை நல்லைஉன் னைப்பெற்றால்
என்செய் யோம்இனி என்ன குறைவினம்
மைந்த னைமல ராள்மண வாளனைத்
துஞ்சும் போதும்வி டாது தொடர்கண்டாய்.

பொ-ரை : மனமே, நல்ல தன்மையையுடையை, நல்ல தன்மையையுடையை! உன்னைத் துணையாகப் பெற்றால் எந்தக் காரியத்தைத்தான் செய்யமாட்டோம்? இனிமேல் என்ன குறைவினையுடையோம்; எப்பொழுதும் மாறாத இளமைப்பருவத்தையுடையவனை திருமகள் கணவனை நான் பிரிகின்ற காலத்தும் நீ விடாது அவனைத் தொடர்வாயாக.

வி-கு : இத்திருப்பாசுரம் இன எதுகையாய் அமைந்தது. நல்லை நல்லை – அடுக்குத்தொடர் ; மகிழ்வின்கண் வந்தது. ‘குறை என்பது முடிக்கப்படுங்கால் முடிக்கப்படும் பொருள்,’ என்பர் புறநானூற்று உரையாசிரியர். ‘குறை – இன்றியமையாப்பொருள்; அது, ‘பயக்குறையில்லைத் தாம் வாழுநாளே’ என்பதனாலும் அறிக,’ என்பர் பரிமேலழகர் (குறள், 612). துஞ்சுதல் – பிரிதல்.

ஈடு : நான்காம் பாட்டு. 1தாம் கூறிய போதே மேல் விழுந்து தொழுதவாறே நெஞ்சைக் கொண்டாடி, ‘என் தாழ்மையை நினைந்து நான் பிரிகின்ற காலத்திலும் நீ’ விடாதே கொள் என்கிறார்.

நெஞ்சமே நல்லை நல்லை – சொன்ன காரியத்தைச் சடக்கெனச் செய்த நல்ல புத்திரர்களை மடியிலே வைத்துக்கொண்டாடும் தாய் தந்தையர்களைப் போன்று, இவரும் நெஞ்சை 2மார்விலே அணைத்துக் கொண்டாடுகிறார்.3‘என் நெஞ்சினாரைக் கண்டால் என்னைச் சொல்லி அவரிடை நீர், இன்னம் சொல்லீரோ?’ என்கிறபடியே, இவர்தாம் இறைவன் பக்கல் தூது விடுமாறு போன்று, நெஞ்சாகிய தனக்கும் தூது விடும்படி இவர்தம்மை விட்டு இறைவன் பக்கலிலே நிற்க வல்ல நெஞ்சு ஆகையாலே ‘நல்லை நல்லை’ என அடுக்குத் தொடரால் கூறுகின்றார், கேட்ட நெஞ்சு, ‘என்னை இப்படிக் கொண்டாடுதல் என்?’ என்ன, ‘உன்னைப் பெற்றால் என் செய்யோம்? நீ என்னோடு ஒரு மிடறான பின்பு, நமக்குச் செய்ய முடியாதது உண்டோ?’ என்றபடி. ‘ஆயின், பலம் கைப்புகுந்ததோ?’ எனின், ‘பலன் தருகைக்கு இறைவன் உளன்; விலக்காமைக்கு நீ உண்டு;இனிச் செய்ய முடியாதது உண்டோ? இனி என்ன குறைவினம் – 1‘உன்னைப் பெற்றால் என் செய்யோம்?’ என்று சாத்தியாமிசம் உண்டாகச் சொன்ன இடம் தப்பச் சொன்னோம்; உன் பக்கல் விலக்காமையே பற்றாசாக அவன் காரியம் செய்வானாக இருந்தால் சாத்தியாமிசந்தான் உண்டோ? அதாவது, அவன் உபாயம் நித்தியமாய் ஒருவருடைய விருப்பத்தை எதிர் பாராததாய் இருக்குமாயின், நாம் செய்யக்கூடிய காரியந்தான் யாது?’ என்றபடியாம்.

‘அங்ஙனம் ஆயின், நான் செய்ய வேண்டுவது யாது?’ என்ன, ‘செய்ய வேண்டுவது உண்டு,’ என்கிறார்; தான் அவனைக் கிட்டும் போது, 2‘வளவேழ் உலகு’ தலை எடுத்து அகலப் பார்ப்பது ஒன்று உண்டு; நீ அப்பொழுது அவனை விடாதேகொள்’ என்கிறார்; மைந்தனை – நித்திய யௌவன சுபாவனை. 3கெடுவாய், இவ்விஷயத்தைச் சிலரால் விடப்போமோ? மலராள் மணவாளனை – பெரிய பிராட்டியார் 4‘அகலகில்லேன் இறையும்’ என்னும் விஷயத்தையன்றோ நான் உன்னை ‘விடாதே கொள்’ என்கிறேன்? துஞ்சும் போதும்-தாழ்ந்தவன் என்று அகலும் போதும். ‘துஞ்சுதல்’ என்பது, பிரிதல் என்னும் பொருளைக் காட்டுமோ?’ எனின். பிரிதல் என்பது இறத்தலுக்குப் பரியாயம்; ஆதலின், காட்டும் என்க. 5‘உம்மைப் பிரிந்தாலே ஒரு முகூர்த்தகாலமும் பிழைத்திரேன்’, என்ற இளைய பெருமாளைப் போன்றவர் அன்றோ இவரும்? விடாது தொடர் கண்டாய் – நீ அவனை விடாதே தொடரப் பார். ஆக, இவ்வேப்பங்குடி நீரை அன்றோ நான் உன்னைக் குடிக்கச் சொல்லுகிறேன்? பிராட்டி ‘அகலகில்லேன் இறையும்’ என்கிற விஷயத்தையன்றோ உன்னை நான் அனுபவிக்கச் சொல்லுகிறேன்? ஆதலால், நான் அவனை அகன்று முடியும் அன்றும் நீ விடாதே அவனைத் தொடருவதற்குப் பார்,’ என்கிறார் என்பதாம்.

1. ‘நெஞ்சமே, நல்லை நல்லை’ என்றதனை நோக்கி, ‘நெஞ்சைக் கொண்டாடி’
என்கிறார். ‘துஞ்சும்போதும் விடாது தொடர்’ என்றதனை நோக்கி, ‘நான்
பிரிகிற காலத்திலும் விடாதே கொள்’ என்கிறார்.

2. நெஞ்சு இருப்பது மார்பிலேயாகையாலே ‘மார்விலேயணைத்து’ என்கிறார்.

3. திருவிருத்தம், 30. இவ்விடத்து.

‘ஆரி ருக்கிலுமென் நெஞ்ச மல்லதொரு வஞ்ச மற்றதுணை இல்லையென்று
ஆத ரத்திவனொடு தூது விட்டபிழை யாரி டத்துரைசெய் தாறுவேன்?
சீரி ருக்குமறை முடிவு தேடரிய திருவ ரங்கரைவ ணங்கியே
திருத்து ழாய்தரில்வி ரும்பி யேகொடு திரும்பி யேவருதல் இன்றியே
வாரி ருக்குமுலை மலர்ம டந்தையுறை மார்பி லேபெரிய தோளிலே
மயங்கி யின்புற முயங்கி என்னையும் மறந்து தன்னையும் மறந்ததே’

என்ற திவ்விய கவியின் திருதாக்கு ஒப்பு நோக்கல் தகும், (திருவரங்கக்
கலம்பகம், 24)

தாம் சொன்னவரே மேல் விழுந்து தொழ
விஸ்லேஷ சமயத்திலும் நீ விடாதே கொள்
நைச்ய அனுசந்தானம் செய்து விலகினாலும் விடாதே கொள்
நல்லை -நல்லவன் முன்னிலை வார்த்தை –
சடக்கு என சொன்ன  சத் புத்ரர்களை மடியில் வைத்து கொண்டாடும் மாதா பிதா போல் –
மடியிலே -பருவம் அது போல் இருந்தால் தான்
மார்பில் அனைத்து கொண்டாடுகிறார்
திரு மார்பில் கை வைத்து திரு காஞ்சி சேவை ஆழ்வார் இன்றும்
நல்லை நல்லை -வீப்சை
இவர் தான் அவர் பக்கல் தூது விடுமா போலே -நெஞ்சுக்கே தூது விட வேண்டுமே
நெஞ்சினாரும் அங்கே ஒழிந்தார்
அப்புள்ளின் பின்  போன தனி நெஞ்சமே
இவரை விட்டு அவன் பக்கல் நிற்க வல்ல நெஞ்சு
அதனால் கொண்டாடுகிறார்
முன்புற்ற நெஞ்சே –
முயற்சி சுமந்து எழுந்து -ஆழ்வாருக்கு முன்னே
மீ மிசை மென் மேலும் -நல்லை நல்லை
ச்லாக்கிக்கிறது என் -என்ன விஷயம் நெஞ்சு கேட்டதாம்
உன்னை பெற்றார் என் செய்வோம்
ஒரு மிடறு போல் ஆன பின்பு -செய்ய முடியாதது உண்டோ –
நெஞ்சு ஒத்தபின்பு முடியாதது உண்டு
பலன் தருகைக்கு அவன் இருக்க
விலக்காமை நீ இருக்க
உன்னைப் பெற்றால் செய்ய முடியாதது உண்டோ
இனி என்ன குறைவினோம் அதிகபட்ட வார்த்தை யா இது
அவன் கார்யம் செய்வான் -இருக்க சத்யாம்சம்  தான் உண்டோ
சாதனம் அனுஷ்டித்தில் வரை இந்த வார்த்தை  கொண்டு போகும் என்பதால் –
என் செய்தோம் சொல்லி இருக்க இப்படி சொன்னோமே
தானே முகம் காட்ட அவன் சித்தமாய் இருக்க
நம் விஷயத்தில் சொல்லி இருக்க கொடாது தப்பை சொன்னோம்
செய்ய வேண்டியது ஒன்றும் இல்லாததால்
நித்ய நிரபேஷம் சித்த உபாயம் இருக்க சாத்திய அம்சம் உண்டோ
பின்னை கிருத்திய அம்சம் என் –
மைந்தனை மலராள் மணவாளன்
மிடுக்கு -கிட்ட கொள்ள புக
வள எழ உலகு தலை எடுக்க -நைச்ய அனுசந்தானம் பண்ணி விலகினாலும்
அகலப் பார்ப்பது ஓன்று உண்டு விடாதே
மைந்தன் -இந்த விஷயம் இனிமை அழகு மிடுக்கு
மேலே மலராள் மணவாளனை
பெரிய பிராட்டியார் அகலகில்லேன் இறையும்-என்று சொல்லிக் கொள்ளும் விஷயத்தை
 உன்னை விடாதே  என்று கெஞ்ச வேண்டி இருக்கிறது
துஞ்சும் போதும் அகன்ற பொழுதும் விடாதே
பிராணன் போகும் சமயம் இல்லை
அயோக்யன் என்று அகலும் போதும்
விச்லேஷம் விநாச பர்யந்தம் தானே ஆழ்வாருக்கு
பிரிந்தால் சாவு கூடினால் வாழ்வு
முகூர்தமபி ஜீவித சீதை
நீரை விட்டு பிரிந்த மீன் போல்
இது தான் துஞ்சுதல்
அகன்று முடியும் அன்றும் விடாது தொடரு –
மைந்தனை
இவ் வேப்பம் நீரை அன்றோ உன்னை குடிக்க சொல்கிறேன்
இனிமை வஸ்துவை
கரும்பு தின்ன கூலி பால் குடிக்க கால் பிடிக்க
எதிர் மறையா வார்த்தை
அனுபவிக்க கெஞ்ச வேண்டுமா –

நம் ஜீயர் திருவடிகளே சரணம்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading