https://www.tamilvu.org/node/154572?linkid=118853
ஸ்ரீ மாறன் அலங்காரம்–பொருளணியிய லுரை–
6-வது உல்லேகவலங்காரம்–
7-வது ஒப்புமைக்கூட்டம்–
8-வது வேற்றுமையலங்காரம்–
9-வது திட்டாந்த வலங்காரம்–
10-வது தற்குணவலங்காரம்–
11-வது பிரத்தியநீகவலங்காரம்–
12-வது சந்தயவலங்காரம்–
13-வது அற்புதவலங்காரம்–
14-வது நிதரிசனவலங்காரம்
15-வது தற்குறிப்பேற்றவலங்காரம்
16-வது அதிசயவலங்காரம்
17-வது சிலேடையலங்காரம்
ஸ்ரீ திருக்கருகைப் பெருமாள் கவிராயர்–
126.ஒருபொருட்குவமச்சொற்றொகக்கவர்த்த
பொருவமர்பொருள்பலபுணர்ப்பதுல்லேகம்.
(எ-ன்) வைத்தமுறையானே உல்லேகமென்னுமலங்கார முணர்-ற்று.
(இ-ள்) புலவனாற்குறிக்கப்பட்டதோ ருவமேயப்பொருட் குவமவுருபு தொகப் பலவேறுவகைத்தாய்க்
கவர்த்த வினைபயமெய்யுருவென்னு மேதுக்களா னொத்த வுவமானப்பொருள்களை
யதற்குக் கூறுவ துல்லேக மென்னும் அலங்காரமா மென்றவாறு.
127.அதுவே,
யொருவர்பலர்குறிப்புரைப்பதுமொன்றும்.
(எ-ன்) இதுவுமதற்கோர் புறனடையுணர்-ற்று.
(இ-ள்) அச்சொல்லப்பட்டவுல்லேகம் ஒருவர் தன்மையிற் கூறப்படுவதோடும், அவர் பிறராயுள்ளார் பலர்
குறிப்புரையையும் பெய்து ரைப்பதும் பொருந்துமென்றவாறு. உம்மை, யெச்சமாதலால் வினாவினும் வருமென்றுணர்க.
என்னாருயிரென்னிருகண்மணியென்னி தயத்துள்ளாய்
மன்னாரமிர்தமென்மெய்க்கணியாரம்வகுளப்பிரான்
முன்னாளெனையடிமைக்கொண்டபேரருண்மூர்த்திமண்மே
னன்னாவலர் தம்பிரானுயர் வானவர் நற்றுணையே. (292)
இது ஒருவர் பலகவர்ப்பாயுரைத்தது. இருகண்-அகக்கண்ணும் புறக்கண்ணும். இடம்-தன்மை. துறை-கடவுள்வாழ்த்து.
முத்திக்குவித்தென்பர்முத்திபெற்றார் முத்தியைவிளைக்கும்
பத்திக்குவித்தென்பர் பத்தியுற்றார்பனுவற்றோகைதேர்
புத்திக்குவித்தென்பர்முத்தமிழ்வாய்மைப்புலவர்மண்மே
லெத்திக்கும்போற்றுந்திருமகிழ்மாலையிறைவனையே. (293)
———–
இது பலர் பலகவர்ப்பாய்க் கூறுவரெனப் பெய்துரைத்தது. முத்தமிழ்-சித்தசித்தீச்சுரத்தைக் கூறுந்தமிழ்,
அது திருவாய்மொழி; எழுத்துஞ் சொல்லும் பொருளுந் தேரும் வாய்மையுமாம். வாய்மை – உண்மை. துறை-இதுவுமது.
அருளதென்கோநல்லறமதென்கோகற்றறிந்தவர்மெய்ப்
பொருளதென்கோசற்குணமதென்கோதொண்டர்புந்தியுள்ளாந்
தெருளதென்கோபிறதெய்வமென்றேதிரிகின்றசெய்கை
மருளதென்பாலணுகாதென்னையாண்மகிழ்மாறனையே (294)
இது தன்றொழிலுரைக்கும் வினாவின்கண்வந்தது. என்கோ என்பது யான் என்றுகூறுகோ என்னும்பொருட்டு.
அருள்-கருணை. நல்லறம்-துறவறம். மெய்ப்பொருள்-சீமந் நாராயணன். சிற்குணம்-சுத்தசாத்துவிக குணம்.
புந்தியுள்ளாந்தெருள்-பரமஞானம். மருள்-அறியாமை. அது என்பாலணுகாமை-அம்மரு ளென்னிடத்துச் சிறிது முறாமை.
என்னையாண் மகிழ்மாறன்-என்னையாட்கொண்ட மகிழ்மாறனென்றவாறு.
இதனுள் தன்றொழிலுரைக்கும் வினாவின்கண் ணீற்றினோகாரமுன்னர் வருமொழி முதற்கண்ணதாங் கசதபக்கண் மிகா தியல் பாயின. என்னை? “மாறுகொளெச்சமும்வினாவுமையமுங், கூறிய வல்லெழுத்தியற்கையாகும்” என்பதனாலறிக. திணை-பாடாண். துறை-பழிச்சினர்ப்பரவல்.
6-வது உல்லேகம் முற்றும்.
———————–
7-வது ஒப்புமைக்கூட்டம்
—–
128.தக்கதோர்பொருளினைச்சாற்றுழியதுபோன்
மிக்கபல்பொருள்களையுடன்விளம்புதறா
னொப்புமைக்கூட்டமெனவுரைத்தனரே.
(எ-ன்) வைத்தமுறையானே யொப்புமைக்கூட்டமென்னு மலங்கார முணர்-ற்று.
(இ-ள்) முக்கியமானதோர்பொருளினைப் புலவன்கருதிச் செய்யுளகத்துக் கூறுங்கா லதுபோன்ற மிக்க
பலபொருளையு மதனுடன் பொருளொப்புமையுடைத்தாய்க் கூட்டமுறச்சொல்லுத லொப்புமைக்
கூட்டமென மேனாட் கற்றுவல்லோ ருரைத்தனரென்றவாறு.
129. உயர்புகழ்பழியவற்றொடுமுறுமதுவே.
(எ-ன்) இதுவும் அவ் வலங்காரத்தின்பாகுபாடுணர்-ற்று.
(இ-ள். ) அவ் வொப்புமைக்கூட்டமென்னுமது உயர்ந்தபுகழோடு முயர்ந்த பழியோடும் பொருந்திவரு மென்றவாறு.
உயர்வு முதனிலைத் தீவகம். ஏகார மீற்றசை.
வையம்பரவுமகிழ்மாறன்வண்டமிழுஞ்
செய்யசதுர்மறையுந்தேசிகராய்-மெய்யுணர்ந்தோர்
பேரறிவும்பேருலகுண்டானேபிரமமெனப்
பாரறிந்ததாரறிதற்பாற்று. (295)
இதனுள், மகிழ்மாறன்வண்டமிழென்றது – திருவாய்மொழி. தேசிகர் – ஆசாரியன்மார். பேருலகுண்டான்-சீமந்நாராயணன்.
பாரறிந்தது-பெரியோர்களறிந்தது. அவையல்லவெனிலென்பதனைச் சொல்லெச்ச மாக்கிக்கூட்டிப்
பிரமமென்ப தாரறிதற்பாற்று என்பது ஒருவரும் அறியும்பகுதி யுடைத்தன்றென்பதாம்.
திணை-வாகை. துறை-சால்புமுலை. அல்லது திணை-பொதுவியல். துறை-பனுவல் வாழ்த்துமாம். இது புகழொப்புமைக்கூட்டம்.
என்றும்பிறர்மனையாளின்பநயவாரு
நன்றிமறவாநலத்தாரு-மொன்றினைக்கொன்
றூன்பரிந்துண்ணாதவுரவோரும்பூமகள்கோன்
வான்புரந்துநீடுவாழ்வார். (296)
இதுவும் புகழொப்புமைக்கூட்டம். இதனுள், நீடுவாழ்வார் என்றது அழிவின்றிவாழ்வாரென்றவாறு.
ஒழிந்த அகல முரையிற்கொள்க. திணையுந் துறையு மிதுவுமது.
வேரிமலர்மகள்கோன்மேவுந்திருமேனி
பாரிலுலோகமெனும்பாவிகளு-மாரியனை
மாந்தரிலொன்றென்பாரும்வன்றொண்டர்சென்மநிலை
யாய்ந்துரைப்பாருந்நகரத்தார். (297)
இது பழியொப்புமைக்கூட்டம். திணை-பாடாண். துறை-வாயுறை வாழ்த்து.
பொல்லாவழுக்காறுபூண்குநருமாலடியார்க்
கில்லாப்பழியொன்றிடுகுநரு-நல்லாற்றிற்
செல்குநரைமீட்குநருஞ்சேயிழையாயெய்துவன
நல்குரவுதீவாய்நரகு. (298)
இதுவுமது. நல்குரவு – வறுமை. தீவாய்நரகு – அக்கினிநரகம், எனவே இம்மைக்கு வறுமையும், மறுமைக்கு நரகு மென்பதாம்.
ஈரிடத்து மும்மை தொக்கன. திணையுந் துறையு மிதுவுமது.
மைந்தர்மூரல்வாய்முத்தமுண்ணாதவாய்வாயோ
மைந்தர்சொற்கொளாச்செவியுமோர்செவிகொலோமழலை
மைந்தர்சீறடிச்சுவடுழாமார்புமோர்மார்போ
மைந்தர்காட்சிகண்டின்புறாக்கண்கள்கண்மலரோ. (299)
இதுவுமது. திணை – வாகை. துறை – பொருளொடுபுணர்தல். அன்றித் திணை-பொதுவியல். துறை-மகப்பெறாதழுங்கல்.
7-வது ஒப்புமைக்கூட்டம் முற்றும்.
—————
8-வது வேற்றுமையலங்காரம்.
130.ஒப்புடையிருபொருளுரையினுங்குறிப்பினு
மெய்ப்படவேற்றுமைப்படுத்துதல்வேற்றுமை.
(எ-ன்) வைத்தமுறையானே வேற்றுமையென்னு மலங்கார முணர்-ற்று.
(இ-ள்) உலகத்தொப்புடையனவாயிருக்கு மிரண்டுபொருளை வைத்தவற்றைக் கூற்றினாலாதல் குறிப்பினாலாதல்
பொருள்பெறத் தம்முள் வேற்றுமைபடக்கூறுவது வேற்றுமையென்னும் அலங்காரமாமென்றவாறு.
131.அதுவே,
ஒருபொருளிருபொருள்சமமுயர்ச்சியதெனும்
பொருள்பெறுமரபிற்புலப்படுமென்ப.
(எ-ன்) இதுவும் அவ்வலங்காரத்தினது பொருட்கூறுபாடுணர்-ற்று.
(இ-ள்) அவ்வேற்றுமையென்னுமலங்காரமாகியவது, ஒரு பொருளான் வேற்றுமைசெய்தலும்,
இருபொருளான் வேற்றுமைசெய்தலும் அங்ஙனம் வேற்றுமைசெய்யுங்கா லொன்றினுக்கொன்று சமமாந் தன்மையும்,
உயர்ந்துளதன்மையு முடைத்தெனப் பொருள்படு மிலக்கணத்தோடுந் தோன்று மென்றுகூறுவர் பெரியோரென்றவாறு.
இவற்றிற்கெல்லாஞ் செய்யுள் வருமாறு:-
உண்ணத்தெவிட்டாதுடலுமுயிருந்தளிர்ப்பத்
தண்ணென்றினிமைதருமமிர்தம்-பெண்ணமிர்தின்
செவ்வாயமிர்தனையதென்றாலுஞ்செவ்வியினி
லொவ்வாதது பழமைத்தொன்று. (300)
என்பது, உண்ணாநிற்ப வுண்டோ ருடலுமுயிருந் தழைக்கும்படி குளிர்ந்து தெவிட்டா தினிமையைக்கொடுக்குந்
தேவர்பானமாகிய அமிர்தமொத்த திப் பெண்ணாகியவமிர்தின் செவ்வாயிடத்துண்டாகிய பானமாகிய
அமிர்தமென்றே னானாலுங் காலத்தினாற்பார்க்குமிடத்துப் பழமையுடைத் தஃ திஃ தப்படியன்று;
புதிதுபுதிதாந்தன்மையையுடைத்தாகையாற் காலச்செவ்வியா லொவ்வாதென்றவாறு.
இதனுள், பெண்ணாகிய அமிர்தின் செவ்வாயிடத்துண்டாகிய பானமாகிய அமிர்தமென உருவகவாய்பாடுகள்
மாட்டேறுபெற்றும் மாட்டேறுபெறாதும் வந்ததுங் காண்க. இஃதொருபொருள்.
பகுதி – இயற்கை. துறை-நலம்புனைந்துரைத்தல்.
வண்ணவாய்மைச்சுடர்கண்மன்னானனத்துலவு
கண்ணதாயம்பரமாய்க்கண்டவற்று-ளொண்மை
வெளியொன்றுவேங்கடத்துண்மெய்ப்பொருளாய்நின்ற
வொளியொன்றெனும்பேருலகு. (301)
இதனுள் அழகினோடுங்கூடிய வுண்மைச்சுடர்கள்-சந்திரனும் ஆதித்தனுமாம்.
ஆகாயமுந் திருவேங்கடமுடையானும் ஒப்புடைப்பொருள்.
ஆகாயத்தின்மேற்சொல்லுங்காற் சுடர்கள் பொருந்திய மகிழ்ச்சியோடுஞ் சுற்றிவரு மிடமுடைத்தாய்ச்
சலத்தைத்தரிக்கப்பட்டதா யெனவும்,
திருவேங்கடமுடையான்மேற்சொல்லுங்காற் சுடர்கணிலைபெற்ற திருமுகமண்டலத்துட்பிறழுந் திருக்கண்களாகவுடைய
அழகிய பரத்துவமாமெனவும் கொள்க.
இஃ திருபொருள். ஒருபொருள், இருபொருள் இவையிரண்டும் சமம். கூற்று. துறை-கடவுள்வாழ்த்து.
மாறன்றமிழ்மறைக்குவாய்ந்தமறைமுப்பொருளுங்
கூறுந்திறத்தாற்குறிப்பொக்குந்-தேறத்
துயவரவேகூறுமிதுசோதியையுட்கொள்ள
மயர்வறவேகூறாமறை. (302)
என்ப துயர்ச்சி. துயவு-அறிவுதிரிதல். இதுவும் கூற்று, திணை-பாடாண்சார்ந்தபொதுவியல். துறை-பனுவல்வாழ்த்து.
வெய்யநயனத்தசெவ்வாயவெண்ணகைய
தையல்வதனமிறைதண்காவுட்-பொய்கைதான்
வண்கழுநீர்சேதாம்பல்வால்வளைகடாமுயிர்த்த
தண்டரளநீணிரையதாம். (303)
உயிர்த்த – பெற்ற. இது சமம். குறிப்பு. பகுதி – இடந்தலை. துறை – தடங்கண்டுமகிழ்தல்.
மாதராள்வெய்யமுலைமாணிக்கமுத்துவட
மீதுலாவுந்தகைத்தாம்வேரிமகிழ்ச் – சோதி
துடரிவரைதேனருவிதூநீரருவி
படரியலநல்காதின்பம். (304)
வெய்யமுலை – விருப்பத்தைத்தருமுலை. வேரிமகிழ்ச்சோதி – காரி மாறப்பிரான்.
இன்பநல்காதென்பதனால் இதுவுங் குறிப்பு. உயர்ச்சி.
பகுதி-இதுவுமது. துறை-நலம்பாராட்டல்.
132–அதுவே,
பொருளாதியவாநான்கொடும்புணரும்.
(எ-ன்) இதுவும் அவ்வேற்றுமையலங்காரத்தின் விதப்புணர்-ற்று.
(இ-ள்) அது – அவ்வேற்றுமையலங்கார மென்னு மது பொருள் குணஞ் சாதி தொழி லென்னும்
நான்கினோடும் பொருந்திவரு மென்றவாறு.
அலையுட்படியுமரும்புனலைவாங்கி
யுலைவிலுலகுய்யவோங்கு-மலைமேற்
களிக்கும்புயல்வேங்கடவனைப்போன்முத்தி
யளிக்குந்திறனறியாதாம் (305)
இதனுள், அலையுட்படிதல் – திருப்பாற்கடலுட் கண்வளர்தலும், புனலையுண்ணக் கடலுட்டாழ்தலுமாம்.
அரும்புனலைவாங்கி யுலைவிலு லகுய்யவோங்குதல் – பெறுதற்கரியபுனலை மாவலிபால்வாங்கி யுலகத்துள்ளார்
பிழைக்க விச்சுவரூபங்கோடலும், கடலிற் புனலைவாங்கி யுண்டுலகு பிழைக்க விசும்பின்மே னிமிர்தலும்.
இது பொருள்வேற்றுமை. துறை-கடவுள்வாழ்த்து.
செம்பவளமுந்திருமால்சேறைமான்செவ்வாயின்
விம்பவளமுங்குணத்தால்வேறன்றே-யம்பவளம்
வல்லென்றிருக்குமலர்மாதர்வாயெஞ்ஞான்று
மெல்லென்றினிமைமிகும். (306)
இது குணவேற்றுமை. செவ்வாயின் விம்பவளம்-வடிவின்செல்வம். ஒழிந்த அகல முரையிற்கொள்க.
துறை-நலம்புனைந்துரைத்தல்.
மந்திரத்தால்வாகடஞ்சொன்மாமருந்தாற்றீராது
புந்தியிடங்கொண்டுபுறம்போகாவாஞ்-சந்ததமு
மைவளைவேற்கண்மடவீர்மாறன்றழுவாத
பெய்வளைபாற்காமப்பிணி. (307)
இது சாதிவேற்றுமை. திணை-பெண்பாற்கைக்கிளை. துறை -கண்டுகைசோர்தல்.
மாறுங்கொலைநமற்குமாறன்மணிவரைமேற்
றேறுமயில்விழிக்குஞ்சேர்வினைதான்–வேறன்றே
நின்றொறுக்குங்கூற்றுயிரைநேரிழைகண்மன்னுயிரைக்
கொன்றளிக்குமீட்டுங்குழைந்து. (308)
இதனுள் தேறும் என்பது (மானிடமகளெனத்) தெளியும் எனவும், மயில்விழிக்கென்பது மயில்போற்
சாயலையுடையாள் விழிக்கெனவுங் கொள்க. இது தொழில்வேற்றுமை.
கொன்றளிக்கை-நோய்செய்யும் நோக்கும், அதற்கு மருந்தாகிய நோக்கும்.
நோய்செய்யும் நோக்கு-இன்பத்தினாய காமக்குறிப் பினைவெளிப் படுத்துகின்ற நோக்கு.
மருந்தாய நோக்கு-தன்கணிகழ்கின்ற அற்புநோக்கு. பகுதி-இயற்கை. துறை-குறிப்பறிதல்.
நான்கொடும் புணருமென்ற தெச்சவும்மை யாதலாற் பிறவலங் காரங்க ளோடுங் கூடியும் வருவனவுள. அவை வருமாறு;-
ஊர்தியனமம்போருகமாசனஞான
நீதிவழுவாநெறிபடைத்தும்-வேதநெறி
யோதிப்பொறியிழந்தானொண்குரவனெங்கோமா
னாதித்திருமகிழ்மாறன். (309)
இது, சிலேடைவேற்றுமை. பொறியிழத்தல்-பிரமன் றலையிழத்தல்.
எங்கோமானாகிய மாறன் பொறியென்னும்பெயரையுடைய பெரிய பிராட்டியருளையெய்தினவ னென்றமையாற்
சிலேடையால் வேற்றுமையாயிற்று. திணை-பாடாண். துறை-பழிச்சினர்ப்பரவல்.
ஓவாதசெம்மையுதயத்துளதெனினுந்
தாவாமறுப்படைத்ததன்மையான்-மூவா
முதனமதுகண்ணனெனுமுத்திரைக்கைம்மாறன்
வதனமதுநேராமதி. (310)
இது விலக்குவேற்றுமை. திணையுந் துறையுமது. இன்னும்வேறுபடவரு வனவும் வந்தவழிக் கண்டுகொள்க.
8-வது வேற்றுமை முற்றும்.
———–
9-வது திட்டாந்த வலங்காரம்-
133.ஒருபொருட்டிறமுதற்குறித்தொப்புமைகொளத்
தெருள்புரிபிறபொருட்டிறமுஞ்செவ்விதி
னவ்வியலகத்தறைவது திட்டாந்தம்.
(எ-ன்) வைத்தமுறையானே திட்டாந்தமென்னு மலங்கார முணர்-ற்று.
(இ-ள்) யாதாயினு மொருபொருட் கெய்திய நன்மைதீமைக்கூறு பாட்டைப் புலவனுட்கொண்டதனைத்
தன்னாற்கூறப்படுஞ் செய்யுளகத்து முதலேகூறி, யதன்பின்ன ரதனோ டொப்புமைகொள்ளும்.
படிக்குத்தெளிவைத்தரு மற்றொருபொருளின்கூறுபாடும் அச் செய்யுளகத் தழகுபெறக் கூறுவது
திட்டாந்தமென்னு மலங்காரமா மென்றவாறு. எனவே, உள்ளுறையுவமம்போல வுவமப்பொருள் செய்யுளகத்து
வெளிப்படையாகநிற்ப வேனை யுவமேயப்பொருள்களெஞ்சிநிற்பக் குறிப்பினாற் கொள்ளப்படுவதன் றென்பதாயிற்று.
பூரணன்மலர்மகள்புணர்மணிமார்ப
னாரணன்மதிநலனயந்தனன்புரப்ப
முத்திரைக்கராம்புயமுதல்வனாவீற
னுத்தமச்சுருதியையோதாதுணர்ந்துணர்ந்
துரனுடையவற்றுளுமுபநிடதத்தால்
வரனுடைத்தாகவடித்தவண்டமிழ்மறைப்
பாடம்போற்றிநாப்பவித்திரம்படைத்தோ
ராடகமருமணிக்கிரணமோடளவளாம்
வீடடைவதுமெய்மெய்யேயாயினு
நாடரிதாகிநடைபெறுந்தொடர்புடைப்
பொதிந்தசொற்பொருணிலைபுலப்படப்புந்தியுட்
பதிந்தறியாரிருபசையறுத்துண்மை
யுணர்ந்துடலுயிர்தளிர்ப்பதுறாருறுமவர்
கணம்பயனிலவாங்காலங்கழியாத்
தேசிகரைவரைத்தேர்ந்துநற்றுணைக்கொளும்
பூசுரன்றிருப்பெரும்பூதூர்முனிவன்
குருபரம்பரையுரைக்குறிப்பினத்தமிழ்மொழிப்
பொருண்மலிநோக்கினைப்புணர்த்துணர்ந்தொண்மை
யிருநிலத்தொருவடிவெடுத்தகாட்சியதாந்
திருமலையாழ்வார்திருவருட்கிலக்கெனு
மறையவர்பிரான்மணவாளமாமுனிவர
னிறைநிலையுயிர்நிலையிஃதிஃதெய்து
முறைநெறியிஃதெனமுழுவதுமுனிவறத்
துறைதொறுந்துறைதொறுஞ்சோர்வறத்தொடுத்தெடுத்
துணர்த்தியவிசித்திரக்காண்டி கையொழிவின்முற்
குணத்தொடும்பழகுபுகூர்ந்துள்ளுறுத்தித்
தோய்ந்துவட்டாததூயபேரின்பம்
வாய்ந்தவர்தாமேபுலவிர்காண்மன்ற
விமிழ்திரைப்பாற்கடலினிற்பலவளஞ்சா
ரமிழ்தினைப்பசும்பொற்றசும்பகத்தடக்கியும்
பரிசிப்பதனொடும்பரிமளிப்பதலா
லுருசித்தறியாதுசிதமாமதன்சுவை
வானவர்சுவைக்கொளும்வாய்மை
நானிலத்தெவர்தெளியாதவர்நயந்தே. (311)
என்பது திட்டாந்தம்.
(இ-ள்) சொரூபமும், ரூபமும், ஞானமும், குணமும், விபூதியும், கருணையு முதலாகியவற்றுள்
யாதுமோர் குறைவிலனாம் நிறைவுள்ளான் பூமகள் விட்டுநீங்காத கவுத்துவமணியோடுங் கூடிய
மார்பனாஞ் சீமந் நாராயணன் ஞானத்தையும் பேரானந்தத்தையு மன்புற் றளித்தலான்
ஞானமுத்திரைக் கைத்தாமரை நாவீறுடையபிரான் ஒரு நூல்களு மொப்பில்லாத நன்மையையுடைய
சுருதியை நாவினாலோதாது பாடந்தரித்துஞ் சத்தவிற்பத்தியால்வரு மத்தங்களை யுட்கொண்டும்
ஞானமிகுந்த அச் சுருதிகளுள்ளும் நுட்பமா முபநிடத வாக்கியங்களாற் சேட்டமாகக் கோதற வடித்துரைத்த
திருவாய்மொழியின் மூலமுழுதும் பழுதறவோதித் தமதுநாவிற்குச் சுத்தி யுண்டாக்கினோர்
இவ்வுலகிற் பேதந்தரு மிரணியத்தளவு அருமணிக்கிரணத்தளவோடு மொரு தன்மைத்தாகக்கலக்கு மந்தாமத்தை
அந்தியகாலத் தடைவதோடும் சிறிது தமதுளத் தீண்டிருந்தானந்த மெய்துவதும் பிறராற் பூசனையெய்துவதும்மெய்;
மெய்யேயானாலும், அதன்க ணாராய்தற்கரியதாகி யொழுகும் பொருட்டொடர்புடைய மறைந்தசொல்லின்
பொருள் சென்று முற்றுதல் வெளிப்படைபோலப் புலப்பட்டுத் தமதுபுந்தியுட்டங்கியறியாதார்
அயனரனென்னு மிருவராலெய்தும் பயனைவிட்டுச் சீமந் நாராயணனே பரதத்துவமென்னும் வாய்மையுணர்ந்து
தமதுவாழ்நாளுளுடலுமுயிருந் தளிர்ப்பப் பேரானந்தமெய்துவ தறியார்;
அறிபவர் யாரெனிற் கணப்பொழுது முயிர்க் கிலாபமின்மையா மவப்பொழுது கழியாத பெரியநம்பி முதலாம்
ஆரியரைவரையும் ஆராய்ந்து முத்திக்கு நற்றுணையென்ன வுறவுகொண்ட பூலோகதேவனாந்
திருப்பெரும்பூதூர் முனிவன் குருபரம்பரைநோக்கத்தோடு முதலேசொன்ன தமிழ்மொழிப் பொருளான்மிகுத்த
நுட்பநோக்கத்தினையு மொன்றெனப்புணர்த் துட்கொண்ட ஒள்ளியஞானம் பெரியநிலத்தொப்பற்ற
மனுகுலவடிவெடுத்த காட்சிப்பொருளென்றுகூறத்தகுவதாய திருமலையாழ்வார் திருவுள்ளக் கருணைக்கிலக்கென்னு
மறையவர்க்கதிபதியாம் அழகியமணவாள மாமுனிவ னென்னுஞ்சேட்டவா னிறைநிலைமையிஃ துயிர்நிலைமையிஃ
திறையை யுயிர்சென்றெய்து மடைவாகிய வழி யிஃதெனவுமவற்றோடு மேனையவிரண்டுமாகிய
யாவையும் யாவரும் விரும்ப முதற்பத்து முதலாய்ப் பத்தாம்பத் தீறாகுமிடந்தோறு மிடந்தோறுஞ்
சந்தயமறத்தொடுத்தெடுத் துபதேசித்த பேரழகுடைத்தா முரைநடையை யொழிவில்லாத சுத்தசாத்துவிக
குணத்தோடும்பயின்று வரம்பறுத் துட்கொண்டழுத்தி யனுபவித்துத் தெவிட்டாத வீறில்பேரின்பம்பலித்துள்ளார் தாமே சந்தயமில்லை;
அஃதெப்படியொன்றெனி லொலிக்குந்திரையையுடைய திருப்பாற் கடல்பெற்ற சங்கநிதிமுதலிய
செல்வத்தோடும் பொருந்தியதா மமிர்தினைப் பசும்பொன்னாலாய குடம், தனதுவாய்க் கொண்டுள்ளடக்கியு
மூறுகொள்வதனோடும் பரிமளிப்பதல்லா லதற்கு யோக்கியமான மதுரத்தை யுருசித்தறியாதென்பதூஉம்,
துறக்கத்தவரேயிரதிக்கும் பெருமையுடையோ ரென்பதூஉ முலகத்து ளன்புற்றுத்தெளியாதவரில்லையாதலா லப்படியொன்றெனக்கொள்க.
இதனுண் முதலே குறித்தபொருளாவது திருவாய்மொழியும் பத்தரும். அவை யப்படியே முதல்வந்து
அதன்பின்ன ரதனோ டொப்புமைக்கொள்ளும்படிக்குத் தெளிவைத்தரும்படிக்குக் குறித்த அமிர்தமாம்
பொருட்டிறமு மதன்பின்ன ரிச்செய்யுளகத்துக் கூறியதூஉங் காண்க.
எனவே, போந்தபொருள் திருவாய்மொழிப் பாடம்போற்றுவதோடும் அதனகத் தைந்துபொருளையுங்
குருபரம்பரையா யோரான் வழியாய்வரும் வியாக்கியானங் கேட்பதே பேரின்பமெய்துதற் குறுதியென்பதாயிற்று.
திணை-பாடாண். துறை-ஓம்படை.
ஆதித்திருமாலடியார்நிரப்பிடும்பை
வாதிக்கினும்வளர்ப்பார்வண்மையே-பாதிப்
பிறையாகியுமதியம்பேரிருள்சீத்தற்குக்
குறையாகுறையாகுணம். (312)
இதுவுமது. நிரப்பு-வறுமை. வண்மை-கொடை. திணை-இதுவுமது. துறை-கொடுப்போர்ப்பழிச்சல்.
ஈத்துவக்குமின்பமியைந்தார்களேற்பவர்க்குச்
சேய்த்திருந்துமீத்துவப்பர்திண்ணமே-வாய்த்தமுகில்
வானம்பதியாயுமானிலத்தார்க்கேயுதவுந்
தானந்தவறாதுதான். (313)
இதுவுமது. இதனுள், மானிலத்தார்-மாயோனாலமைக்கப்பட்ட பூமியின்கணுள்ளார். இதுவுந் திணையுந் துறையு மது.
9-வது திட்டாந்தம் முற்றும்.
——
10-வது தற்குணவலங்காரம்
134.ஒருபொருட்குணத்தைமற்றொருபொருள்சார்ந்துழிப்
பற்றுதறற்குணமெனப்பகர்ந்தனரே.
(எ-ன்) வைத்தமுறையானே தற்குணமென்னுமலங்கார முணர்-ற்று.
(இ-ள்) யாதாயினு மொரு முக்கியப்பொருளினதுகுணத்தைச் சார்ந்தவிடத் தக்குணத்தைப்
பிறிதொருபொருள் பற்றுதல் தற்குணமென்னும் அலங்காரமா மென்றவாறு.
காமர்திருப்பாற்கடலுங்கருங்கடலா
நாமந்தனைப்பயிலுநாடோறும்-பூமடந்தை
சீர்மேனியைத்தழுவுந்தேவேசனாகணையான்
கார்மேனிவண்ணங்கவர்ந்து. (314)
கவர்ந்து-உட்கொண்டு.
சாந்தமலர்ப்பொதும்பர்ச்சார்ந்தவெளிற்றுத்தருவுஞ்
சாந்தமணநல்குஞ்சால்பிற்றே-யேந்தெழில்கூர்
வாசவனார்நான்முகனார்வந்திறைஞ்சிவாழ்வுபெறுங்
கேசவனார்சேடகிரி. (315)
இதுவுந் தற்குணம். சேடகிரி-திருமலை. ஒழிந்த அகல முறையிற்கொள்க.
அஃதேல், குணவதிசயத்திற்குந் தற்குணத்திற்கும் வேற்றுமை யாதோவெனின்,
அதிசயஞ் சிறுமையை மிகுத்துக்கூறும்; இது மிகுந்ததை மிகுந்ததாய்க்கூறல்.
இவ்விரண்டினுண் முன்னையது கடவுள் வாழ்த்து. இது மலைவருணனை.
10-வது தற்குணம் முற்றும்.
——-
11-வது பிரத்தியநீகவலங்காரம்
135.ஒருபொருட்கொருதிறத்துடைபொருண்மற்றதற்
கத்திறத்தினிலொப்புடைப்பொருளதன்மே
லமர்விளைப்பதுவேபிரத்தியநீகம்.
(எ-ன்) வைத்தமுறையானே பிரத்தியநீகமென்னு மலங்கார முணர்-ற்று.
(இ-ள்) யாதாயினு மோருவமேயப்பொருட் கொருதிறத்தாற்றோற்ற வுவமைப்பொருளத்திறத்தா லதற்
கொத்ததோ ருவமப்பொருண்மே லமர்விளைப்பதாகக்கூறுதல் பிரத்தியநீகமென்னு மலங்காரமா மென்றவாறு.
அநீகம்-படை. இது தற்குறிப்பேற்றத்தைப் பின் சென்றதோர்பேதம்.
தேமலர்வாவிப்புதுவைச்செல்விமுகப்பொற்பினுக்குத்
தூமதியந்தோற்றதற்பின்றோலாத – காமருசீ
ரந்தாமரைமேலமர்விளைக்குங்கங்குலின்கண்
வந்தாடல்பெற்றமதி. (316)
இது பிரத்தியநீகம். தேமலர்வாவிப்புதுவைச்செல்வி-சூடி கொடுத்த செல்வி; ஆழ்வார்திருமகள்:
ஒழிந்த அகல முரையிற்கொள்க. துறை-பெண்பாற்கடவுள்வாழ்த்து.
11-வது பிரத்தியநீகம் முற்றும்.
——–
12-வது சந்தயவலங்காரம்
———-
136.உற்றதோர்பொருளினையையுற்றுணர்தல்
கற்றவர்சந்தயமெனக்கழறினரே.
(எ-ன்) வைத்தமுறையானே சந்தயமென்னும் அலங்கார முணர்-ற்று.
(இ-ள்) புலனுகர்பொறிகளானாதல் கருத்தினானாத லுற்றதோர் பொருளினை யையமுறுதலுந்
தெளிதலுஞ் சந்தயமென்னும் அலங்காரமா மென்று கற்றோர்கூறின ரென்றவாறு.
137.அதுவே,
சுத்தசந்தய நிச்சயகெர்ப்ப
நிச்சயாந்த மெனநிகழ்மூன்றாம்.
(எ-ன்) இதுவு மதன் கூறுபா டுணர்-ற்று.
(இ-ள்) அச் சந்தயமென்னு மலங்காரம் சுத்தசந்தயமென்றும், நிச்சயகெர்ப்பமென்றும்,
நிச்சயாந்தமென்றும் மூன்றுகூறாய் நடைபெறுமென்றவாறு.
திருமகளோபார்மகளோதென்னரங்கன்வெற்பில்
வருமகளோயாரோவிம்மாது. (317)
இது சுத்தசந்தயம். பகுதி – இயற்கை. துறை-ஐயுறல். பா-குறள்வெண்பா.
மெய்த்தமிழ்மாறன் றுடரிவெற்பிலெதிர்நின்றதுபூங்
கொத்தமைந்தபொன்னங்கொடியோகொ-லித்தரணி
மீதாயுடுத்தொடுத்துமேயதகைமின்னுருவோ
யாதாயதொன்றோவிது. (318)
இதுவுமது. இதனுள், பூங்கொத்தென்றது கோடு, கொடி, நீர் என்னும் பல்வகைப்பூக்களை. அமைந்தது – மிகுந்தது.
இத்தரணி….. மின்னுருவோ-மேகத்தைவிட்டுப் புவியிடத்தாய் மேக படலத்தின்மேலாய வுடுக்கணத்தினைத்
தனக்குறுப்பாந்தொடர்படுத்திப் பொழிலிடத்தடைந்ததொரு மின்னுருவமோ.
யாதாயதொன்றோவிது என்பது எவ்வுருவ மவ்வுருவாயதொன்றெனத் தெரிதற்கரிதென்றவாறு.
பகுதி – இயற்கை. துறை – ஐயுறுதல்.
குன்றுபோற்புடைத்தெழுந்ததனத்தாளைச்சிறைவைத்த
கொடுமையானைத்
துன்றுபோர்க்களத்தெதிர்ந்துதொடுகணையான்முரணழியத்
துயரம்பூட்டி
யின்றுபோய்நாளைவாவெனவிமையோர்கணம்பரவ
வெம்பிரானே
யன்றுபோர்க்களத்துரைத்ததறநிலையோமறநிலையோ
வறிகிலேனே. (319)
இதுவுமது. திணை – பொதுவியல். துறை – வில்வென்றி. திணை-வாகையெனினுமாம்.
முண்டகத்தானென்னின்முகமொன்றேநான்குமுகங்
கண்டனமற்றில்லையாற்கண்ணனெனிற்-றண்டுளபத்
தாமத்தானன்றுமகிழ்த்தாமத்தானைத்துதித்தெந்
நாமத்தானென்றுரைப்பேநாம். (320)
இது நிச்சயகெர்ப்பம். திணை-பெண்பாற்கூற்றுக்கைக்கிளை. துறை-நயப்புரைத்தல்.
பாடற்சுரும்பெனிலோபண்மிழற்றுங்காவியெனி
லோடைக்குளன்றியுதியாதா-லேடவிழ்தார்
வள்ளல்ருண்மாறன்மால்வரைமான்கண்ணேயென்
னுள்ளந்திறைகொண்டது. (321)
இது நிச்சயாந்தம். பகுதி – இயற்கை. துறை – தெரிந்து தெளிதல்.
12-வது சந்தயம் முற்றும்.
——–
13-வது அற்புதவலங்காரம்
———-
138. அற்புதவாய்மையினறைவதற்புதமே.
(எ-ன்) வைத்தமுறையானே அற்புதமென்னுமலங்கார முணர்-ற்று.
(இ-ள்) ஆச்சரியந்தோன்று முண்மையினான்மொழிவ தற்புத மென்னுமலங்காரமா மென்றவாறு.
உண்ணீர்மையற்றவர்க்கண்டாலவர்மன்னுயிர்க்கிரங்கிக்
கண்ணீர்பனிற்றும்புயன்மனுராமன்கைக்கொள்வதொன்றோ
வெண்ணீர்மையுற்றநிருதரைச்சாலவெறுத்தவர்மேற்
புண்ணீர்பனிற்றச்சரமாரியன்றுபொழிந்ததுவே. (322)
இது, அற்புதம். திணை – பொதுவியல். துறை – வில்வென்றி.
சங்கத்தமிழ்ச்சொற்கவிப்புலவீர்சலராசிமண்மே
லுங்கட்குமற்புதமாவதொன்றேசிங்கவோங்கலின்வாய்த்
துங்கப்படைக்கையிரணியனாகஞ்சுகிர்ந்தநர
சிங்கத்தின்மார்பின்மலர்மகளாம்பிணைசேர்ந்ததுவே. (323)
இஃ துருவகவாய்பாட்டால்வந்த அற்புதம். சிங்கவோங்கல்-சிங்கவேள்குன்றமென்னுந் திருப்பதி.
மலர்மகளாம்பிணை-பெரியபிராட்டி. சிங்கம்- அழகியசிங்கர்.
சிங்கத்தின்மார்பிற் பிணைசேர்ந்ததென்பதனா லற்புதமாயிற்று. துறை – கடவுள்வாழ்த்து.
13-வது அற்புதம் முற்றும்.
———
14-வது நிதரிசனவலங்காரம்
139.இவ்வகைக்குலகத்திவைநிகழ்திறமெனு
மவ்வகைக்கவைபோன்றொருபொருட்டிறங்களைக்
கோட்டமில்குணந்தீங்கெனுமிருகுறிப்பிற்
காட்டுமென்றேகழறுதனிதரிசனம்.
(எ-ன்) வைத்தமுறையானே நிதரிசனமென்னுமலங்கார முணர்-ற்று.
(இ-ள்) உலகத்திவ்வகைப்பொருட் கிவை நிகழுங்கூறுபாடென்னுமக் கூறுபாட்டிற் சுவைபோன்ற
பிறபொருட்கூறுபாட்டை மாறுபாடின்றி நன்மையினுந் தீமையினுமிருதிறத்தாற் குறித்துக்காணக் காட்டு கின்றதெனக்
கூறுவது நிதரிசனமென்னு மலங்காரமா மென்றவாறு.
வாழ்ந்தார்வரவரவேவறிதாவர்வறுமையொடுந்
தாழ்ந்தார்தலைச்செய்வரென்பதுகாட்டுந்தரியலரைப்
போழ்ந்தார்திகிரிப்பிரான்புருடோத்தமப்பொன்னகரைச்
சூழ்ந்தாய்மதிகுறைவாய்நிறைவாம்வகைதூநகையே. (324)
இது நிதரிசனம். இது பரத்தையிற்பிரிந்துவந்ததலைமகன் வாயில் வேண்ட வூடியிருந்து வாயின்மறுத்த
தலைமகளோடும் வாயினேர்விக்குந் தோழிகூறியது. அன்றித் திணை – பாடாண். துறை -வள்ளிவாழ்த்தெனினுமாம்.
இதனுள் ‘வாழ்ந்தார்வரவரவேவறிதாவர் வறுமையொடுந், தாழ்ந்தார் தலைச்செய்வ ரென்பது காட்டு’ மென்பது
உலகத்து நல்வினையடிக்கொள வாழ்வெய்தினார் நல்வினைதேய்ந்து தீவினையடிக்கொள வறுமையெய்துவர்;
தீவினையடிக்கொளத் தாழ்வெய்தினார் தீவினைதேய்ந்து நல்வினையடிக்கொளச் செல்வமெய்தித்
தலைப்படுவ ரென்பதைக் காண்பிக்கு மென்பதாம் தரியலரைப்போழ்ந்தார் திகிரிப்பிரானென்பது
சத்துருக்களுடலைப்பிளந் துயிரைப்பருகுஞ் சக்கரத்தையுடையாரென்பதாம்.
ஆய்மதி-இயங்குமதி. குறைவாய் – இளம்பிறையாய். நிறைவாம்-பூரணையாம்.
அஃதேல், திட்டாந்தத்தோடிதனிடைவேற்றுமையாதோவெனின்,
திட்டாந்தம் புலவன் றன்னாற்குறித்த வொரு பொருட்கூறுபாட்டிற்குப் பிறிதொருபொருளின்கூறுபாட்டை
யதற் குவமைகுறிக்கொளும்படிக் குவமைவாய்பாடு தோன்றாதுதொகத் தன்வினையாக அப்புலவன் கூறுதல்;
இஃ தன்னதன்று. ஒருபொருளின் பண்பு தொழில் பயன் முதலிய கூறுபாட்டைப் பிறிதொருபொருள்
காட்டுவதாகப்படுத்திப் பிறவினையாற்கூறு தல் இவைதம்முள் வேற்றுமையாமென்றுணர்க.
14-வது நிதரிசனம் முற்றும்.
——–
15-வது தற்குறிப்பேற்றவலங்காரம்
140.உலகினுளொருபொருட்குற்றதன்மைத்திறம்
விலக்குபுபிறிதின்விளைந்ததென்றுட்கொண்
டேற்றுதலாகுந்தற்குறிப்பேற்றம்.
(எ-ன்) தற்குறிப்பேற்றமென்னும் அலங்காரமுணர்-ற்று.
(இ-ள்) உலகின்கணுண்டான வருதிணைப்பொருள்களுள் யாதாயினு மொருபொருட் கெய்திய
தன்மைக்கூறுபாட்டை விலக்கிப் பிறிதொருகாரணத்தால் விளைந்ததெனப் புலவன் விதித்துட்கொண்டதனை
யதன்கண்ணதாக வேற்றுவது தற்குறிப்பேற்றமென்னு மலங்காரமா மென்றவாறு.
141.அதுவே,
சராசரமெனுமிரண்டினுஞ்சார்தருமே.
(எ-ன்) இதுவும் அவ்வலங்காரத்தினது கூறுபாடுணர்-ற்று.
(இ-ள்) அத் தற்குறிப்பேற்றமென்னு மலங்காரம் இயங்குதிணையும்
நிலைத்திணையுமாகிய விரண்டினுஞ் சார்ந்துபிறக்கு மென்றவாறு.
செங்கேழ்கிளர்வேணியனாணுருவிற்
பைங்கேழுமையாளொருபாகமெனச்
சங்கேதமடைந்ததிவன்சமரிற்
கிங்கேறுவனென்றெதிரெண்ணியதே. (325)
இது, உயர்திணையிடத்துத் தற்குறிப்பேற்றம். செங்கேழ்-சிவப்பாகியநிறம்.
கிளர்வேணி- ஓங்கியசடை. பைங்கேழுமை – பச்சென்ற நிறத்தையுடைய வுமாதேவி.
எதிரெண்ணியது-வருங்காலங்குறிக்கொண்டது. திணை-வாகை. துறை-பொருநன்வென்றி.
பிலம்புகுந்தீரேழ்புவனமுந்தரித்தபெருந்தகையெம்பிரான்றனைவெண்
சலஞ்சலந்திகிரியெனப்புரப்பவர்கள் சந்த்ரசூரியரெனச்சயிலம்
வலம்பயின்றனரந்தரத்தவர்வருந்தாவகைதரித்திலமெனத்தரிப்பா
னிலம்புகுந்துயர்பூஞ்சினையெர்டுந்தருவாய்நிலைமரீஇயினதெனலாமே. (326)
இது நிலைத்திணைத் தற்குறிப்பேற்றம். இது பாடாண்புறத்திணையுட் சார்ந்த தாவரவாழ்த்து.
(இவை குருகாமான்மியம். )
தற்பயந்துமுற்றத்தனைவளர்த்ததண்டடநீ
ரெற்பயந்தவெப்புற்றிடையாதே-பொற்கமல
மின்பாசடைக்கவிகைமீநிழற்றுநீரகமே
யென்பாலுறைமாற்கிடம். (327)
இதுவும் நிலைத்திணைத்தற்குறிப்பேற்றம். நிழற்றும் – நிழலிடும். திணை-பாடாண். துறை-நகரவாழ்த்து.
142. உவமச்சொற்புணர்ந்தொழுகலுமுளதே.
(எ-ன்) இன்னு மதற்கோர் புறனடையுணர்-ற்று.
(இ-ள்) அத்தற்குறிப்பேற்றம் போல மான வென்னு முவமவுருபு புணர்ந்து நடப்பனவு முளதாமென்றவாறு.
மாயன்குருகூர்வளர்மறையோர்விண்புரப்பான்
றூயவழல்வளர்ப்பத்தோன்றுபுகை-நேய
வகைத்தோட்டுவார்குழலாய்வாசவனைவிண்போய்ப்
புகைத்தோட்டுகின்றதுபோன்ம்போன்ம். (328)
என்பது ஈரொற்றுடனிலையாய ஒப்பில்போலி. இது உவமவுருபுபுணர்ந்த தற்குறிப்பேற்றம். துறை-நகரவாழ்த்து.
15-வது தற்குறிப்பேற்றம் முற்றும்.
——–
143.விதந்தொருபொருளினைவிழுமிதினுரைப்புழி
யுயர்ந்தோர்மதிக்குறவுரைப்பததிசயம்.
(எ-ன்) வைத்தமுறையானே அதிசயமென்னு மலங்கார முணர்-ற்று.
(இ-ள்) ஒருபொருளினை யுயர்த்தி நன்றாகவுரைக்குங்காற் கற்றுயர்ந்தோரறிவிற்குப்
பொருந்தவுரைப்ப ததிசயமென்னு மலங்காரமாமென்றவாறு.
144.அதுவே,
வையம்புகழ்பொருள்பண்புவினைதிரி
பையந்தெளிவெனுமாறினும்வருமே.
(எ-ன்) இதுவும் அவ்வலங்காரத்தை விரித்துணர்-ற்று.
(இ-ள்) அதிசயவலங்காரமென்னுமது பெரியோர் புகழும் பொருளும் பண்பும் வினையும் திரிபும் ஐயமும்
தெளிவு மென்னும் ஆறுகூறு பாட்டினும் வருமென்றவாறு.
வென்றித்தனுராமன்வேலைவாய்நீறெழவே
கன்றிப்பொழிந்தகனல்வாளி-யன்று
வடவைநடுநடுங்கமாநீர்சுவறச்
சுடவைகியதாஞ்சொலின். (329)
இது பொருளதிசயம். வடவைநடுநடுங்க – வடவையும் வெருவியோடுவான். மாநீர் – சமுத்திரம்.
சுடவைகியதன்று – அன்றுசுட்டு அதன்கண் வைகாநின்றது.
சொலின் – அத்தழலின்பெருமையைக் கதைகூறியபடிகேட்டதனைச் சொல்லுமிடத்தென்றவாறு.
ஒழிந்த அகலம் உரையிற்கொள்க. திணை – வஞ்சி. துறை – உழபுலவஞ்சி.
அம்பொன்மதிட்சோதியம்புவியைப்புத்தேளிர்
தம்பொன்னகராக்குந்தன்மைசால்-செம்பொன்செய்
கோயிற்றிருமால்குணங்கற்றொழுகாதார்
நாயிற்கடையாநார். (330)
இது குணவதிசயம். இதன்பொருளுரையிற்கொள்க. துறை -நகரவாழ்த்து.
குழித்தததலத்தொடுநிலத்தையடிவைத்துயர்
குடிற்படர்முகிற்றிரளையே
கிழித்ததுபுழைக்கையினடுக்கலையடுக்கொடு
கிளைத்ததுகவுட்கள்வழியே
சுழித்தெழமதத்தினையுயிர்த்தொளிர்கடைக்கன
றுணுக்குறநெருப்பொழுகவே
விழித்ததுதெழித்ததுருமுக்குலம்வெருக்கொள
வெயர்த்ததுமழைப்பெயலெனா. (331)
இது தொழிலதிசயம். திணை – வாகை. துறை – யானைமறம்,
பூந்தேறல்வழிந்திழிந்துபொதும்பரினொண்புளினமுறப்
புரிவெண்சங்கந்
தீந்தேறல்வழிதவழ்ந்துதுழனியுடன்கழனிபுகத்
திணிதோண்மள்ளர்
தாந்தேறலுகக்களைகட்டெறிதவளமரைமுகையைச்
சார்ந்துசார்ந்து
மேய்ந்தேறவரிவளையைக்கொழுநனையென்றளிபுலம்பி
வீழுமோர்பால். (332)
இது திரிபதிசயம். துழனி-ஆரவாரம். திணிதோள்-திண்ணியதோள். தவளமரைமுகை-வெண்டாமரைமுகை.
துறை-நாடுவாழ்த்தாம்.
(இவையிரண்டுங் குருகாமான்மியம். )
இருநிலமுதலாமேழ்பெரும்புவனமும்
பெருவிறன்மாவலிபெய்புனலேற்றபின்
னீரடியெனத்தாண்டிணையடியொடுநின்
கூர்திருவுருவமுஞ்சொரூபமுங்குணனு
மோரடிமுதற்கணுற்றுளத்தடங்கியதாற்
பார்புகழ்குருகைப்பரமநின்பதமோ
காரிதந்ததருள்குருகாபுரிப்பரமன்
படைத்தவண்டமிழ்மறைப்பதமோவுணர்வோ
தடத்தயாதெனவெவர்தமிதெளிபவரே. (333)
இஃ தையவதிசயம். இதனுள் உருவமுஞ் சொரூபமுங் குணனுமென்பது.
திருமேனியுந் திவ்வியான்மாவுஞ் சுத்தசாத்துவிககுணனும் ஓரடிமுதற்கண் என்பது
திருவாய்மொழி முதற்பத்தின் முதற்பாட்டில் “உயர்வறவுயர்நலனுடையவனெவனவன்” என்னு முதற்பதம்.
திணை பாடாண். துறை-பழிச்சினர்ப்பரவல். பாடாண்சார்ந்தபனுவல் வாழ்த்துமாம்.
பொருள்கோடித்தெழுபடிவத்திரணியற்குமழவிடையோன்
பொருட்டிற்பொன்றா
வொருகோடியிருகோடியரைக்கோடிவாழ்நாள்பெற்
றுலந்துளாற்கு
மருள்கோடித்தெழுந்தசிசுபாலனுக்கும்வீடளிப்பான்
மாயாவுள்ளத்
தருள்கோடியென்றாலிங்குனைத்தொழுவார்பெறுங்கதிகட்
கையம்யாதே. (334)
இது தெளிவதிசயம். துறை-கடவுள்வாழ்த்து.
145. இடஞ்சினைகாலமென்றிவற்றொடுஞ்சிவணும்.
(எ-ன்) இதுவு மதனைப் பின்னுமோர்வகையான் விரித்துணர்-ற்று.
(இ-ள். ) அவ்வதிசயம் இடமுஞ் சினையுங் காலமுமென்னு மூன்றினோடும் பொருந்தியும்வரு மென்றவாறு.
வருமென்னும்வினைச்சொலெச்சமாகி விரிந்தது. அதிசயமென்ப ததிகாரத்தாற் கூட்டியுரைக்கப்பட்டது.
சிகரபந்திமேற்குடமதியகடுரிஞ்சியவாய்ப்
பகரும்வானமதுரகனுச்சியிற்பதிபடித்தா
யகலநாவலந்தீவொருங்குறினுமுய்த்தடக்கும்
புகலிடத்ததாலதனையாரளவிடும்பொற்பார். (439)
இது, இடவதிசயம். துறை-சினகரவாழ்த்து.
கறுத்தவனறுத்துவீழ்வன்கரிமருப்பகிலபாரம்
பொறுத்ததிக்கயமோரெட்டும்பொறுக்குமேலவற்றினாற்ற
லொறுத்ததென்றிமையோருட்கயமனுநின்றுட்குமெல்லை
நிறுத்ததுபுழைக்கைபற்றிநிறைமதியகடுபோழ்வான். (336)
இது சினையதிசயம். திணை – வாகை. துறை – யானைமறம்.
மாலையாயாமமாய்வைகறையாய்வைகுறுநன்
காலையாய்க்கங்குல்கழிந்துகமாம்-வேலை
யெழுபார்புகழ்மாறனேந்துபுகழ்மார்பந்
தழுவாத்தமியேன்றனக்கு. (337)
இது காலவதிசயம். திணை-பெண்பாற்கூற்றுக்கைக்கிளை. துறை – கங்குற்கிரங்கல்.
16-வது அதிசயம் முற்றும்.
——–
17-வது சிலேடையலங்காரம்
146.உயர்வுறுமொருமொழிதொடர்மொழிசெய்யுளி
னியல்பினுந்திரிபினுமியன்றுபல்பொருளைத்
தருபெயர்வினையிற்சார்வது சிலேடை.
(எ-ன்) வைத்தமுறையானே சிலேடையென்னுமலங்கார முணர்-ற்று.
(இ-ள்) ஒருமொழியாதல் தொடர்மொழியாதல் செய்யுளிடத்துச் செம்மொழியினும் பிரிமொழியினு
மொழுகலாறுடைத்தாய்ப் பல பொருளைத் தருவனவாய்ப் பெயரினும் வினையினுஞ் சார்வது
சிலேடை யலங்காரமாமென்றவாறு. உயர்வுறுமென்றதனால் அத்தச்சிலேடை யென்பதூஉ முன்னர்க்கூறப்படும்.
147.அவற்றுள்,
இயல்புசெம்மொழிதிரிபுபிரிமொழியே.
(எ-ன்) கூறியசூத்திரத்து ளியல்பினுந் திரிபினுமென்றா ரவை பொருணோக்கத்தா னிப்பெயரினவாமென்ப துணர்-ற்று.
(இ-ள்) இயல்பு திரிபு என்ற விரண்டினுள் இயல்பு செம்மொழியென்றும், திரிபு பிரிமொழியென்றுங் கூறப்படுமென்றவாறு.
பொன்னாழிமேவும்புவனமகத்தடக்கு
மன்னாகத்துச்சிவளைந்தாடு-நன்னீர்க்
களந்தழைமெய்காட்டுங்கலைமதியுட்டோயும்
வளந்தழையும்விண்ணகர்வாழ்மால். (338)
இது செம்மொழிச்சிலேடை. திருமாலுக்கும் மேகத்திற்குஞ் சிலேடை.
மேகத்தின்மேற்சொல்லுங்காற் பொலிவினையுடைய கடலுட் செறியும் புனலையுண்டு வயிற்றுளடக்கும்,
நிலைபெற்ற மலையினது கொடுமுடியைப் பொதிந்து பரக்கும்,
உவரறுத்த நல்லதண்ணீர்க்கிடமாகப் பெருத்தசொரூபத்தைப் புலப்படுத்தும், கிரணத்தையுடைய சந்திர மண்டலத்தைத்
தனது மண்டலத்திற்குமேலாகச் சேரும், உலகிற்கு வேண்டு மெல்லாவளங்களையுந் தழைக்கும்,
விசும்பினிடத்து மேகமெனவும், திருமான்மேற்சொல்லுங்கால், திருமகளையுந் திருச்சக்கரத்தினையும் பொருந்தும்,
விராட்புருடனாகி யண்டத்தையுள்ளடக்கும், பகையெனப் பெருகின பாம்பினுச்சியிலே பதிந்தாடும்,
நல்லவியல்பினையுடைய களங்கனிபோலுந் தழையாநின்ற மேனியைத் தோற்றும்,
சுருதிமுதலிய கலைகளினறிவிற்கு மேலாயிருக்கும், சகல செல்வமும் வளராநின்ற திரு விண்ணகரத்து
வாழ்வுபெறுந் திருமாலெனவுங் கொள்க. துறை-கடவுள் வாழ்த்து.
பாமாறன்வெற்பிற்படாமின்பயோதரங்க
டாமாகவட்டந்தனைமறைக்குங்-காமன்
வினைவளர்ப்பதன்றிமிகுபோகமென்ப
தனைவளர்த்தவம்பகற்றித்தான். (339)
இது, மேகத்திற்குந் தனத்திற்கும் பிரிமொழிச்சிலேடை
மேகத்தின் மேற்சொல்லுங்கால், வெற்பிற்றவழாநின்ற மின்னோடுங்கூடிய மேகங்கடாமாகாயப்பரப்புத்தன்னை மறைத்தன,
காவினிடத்துப்பொருந்துங் கிரியையுண்டாக்கின, அவையன்றியுந் தமதிடத்துண்டான தண்ணீரைப் பெய்
தெங்கும்பரப்பிச் சந்தனம் அகில் சாலி முதலிய போகங்களையும் வளர்த்தன வெனவும்,
முலைமேற்சொல்லுங்காற் பாமாறன்றுடரிவரையிடத் தியான் மானிடமெனக்குறித்த மின்போலும்
இடையினையுடையாண் முலைகளிரண்டுந் தம்மைப்பெற்ற மார்பினகலத்தளவைத் தோன்றாதுமறைத்தன,
காமனாலெழுப்பப்படு மோகமாகிய வினையை யென்னிடத்து வளர்ப்பதன்றி மிக்க போகசுகத்தையும்
வம்பையகற்றிநிறைத்தன வெனவுங் கொள்க.
இதனுள், பிரிமொழியாவன:- மாகவட்டம் ஆக வட்டம், காமன் காவினிடத்துமன், அம்பகற்றி வம்பகற்றி என்பனவாம்.
வம்பு-கச்சு. பயோதரம்-மேகமும் முலையும். பகுதி-இடந்தலை. துறை-நலம்புனைந்துரைத்தல்.
148. இவையினிவிரிப்பனவாமெவற்றினும்வரும்.
(இ-ள்) செம்மொழி பிரிமொழியாகிய விவ்விரண்டு மினி முன்னர் விரிப்பனவாஞ் சிலேடை
யனைத்தினும் பொதுவாய் விரவிவரு மென்றவாறு,
மேற் சிலேடைக்குரைத்த முதற்சூத்திரத்தினுளியல்பினுந் திரிபினும் பல்பொருளைத்தரு பெயர்வினையிற்சார்வது
சிலேடையென்னா தியன்று பல்பொருளைத்தருவ தென்றதனாற் சிலேடை நாலுவகைப்படும்;
அவையாவன:- அயல்பட விரண்டுபொருளை யொன்றுவமையாகவு மொன்றுவமேயமாகவுங் குறித்தவற்றைப் பாடுமிடத்துச்
செம்மொழியினும் பிரிமொழியினு மிரட்டுறமொழியுமிடத் துவமைப்பாற்படுத்திக் கூறுதலும்,
இரண்டுபொருளைக் கவிநாயகனுக்குவமையாய்க் குறித்தவற்றைப் பாடுமிடத் தொருமொழியினாலாதல்
தொடர்மொழியினாலாதல் புலவனாற் றொடுக்கப்படுஞ்சொற் கவிநாயகன் கிரியையோடு மூன்று பொருள்
பயப்பதாகப்புணர்த் தவனுமவைபோலிருந்தானெனக் கூறுதலும், இரண்டுபொருளை யொருமொழியினாலாதல்
தொடர்மொழியினாலாதலிரட்டுற மொழிந்து கவிநாயகன்மேற் சிலேடையின்றிக் கூறுதலும்,
ஒருசொல் லியல்புபெயரானு மாகுபெயரானு நாலுபொருள் பயப்பதாக உருவகவாய்பாட்டாற்கூறும்
உடனிலைச்சிலேடையுமென. அவற்றுள், முன்னையவிரண்டுஞ் சிலேடையுவமைப்பால் வந்தன.
ஒழிந்தவிரண்டும் வருமாறு:-
தேசுபெறுஞ்செவ்வித்திருமகிழ்மாறன்சரணங்
காசினிமேலெஞ்ஞான்றுங்காத்தருள்க-மாசிலா
வாய்ந்தபுகழ்ப்பூதூர்மகீபதியைநான்மறைநூ
லாய்ந்தவெதிராசனை. (340)
இது, அயல்பட விரண்டுபொருளைத் தொடர்மொழியா லிரட்டுற மொழிந்து கவிநாயகன்மேற் சிலேடையின்றிவந்தது.
என்னை? திரு மகிழ்மாறன்சரணமென்பது திருமகள் விரும்பப்பட்ட மாயோன்றிருவடியென்றும்,
அழகிய வகுளமாறன்றிருவடிகளெனவும் ஒரு தொடர்மொழிவந்து அவை யெதிராசனைக் காக்கவெனக்
கவிநாயகன்மேற் சிலேடையின்றிவந்ததனாலென்றறிக. திணை-பாடாண். துறை-புறநிலைவாழ்த்து.
தேங்கமலமாசிலாச்செங்காந்தள்பைங்குமிழ்பொற்
கோங்கரும்புகாவியுடன்கொண்டதோர்-பூங்கொடியை
வண்டுகளிக்கின்றமகிழ்மாறனார்மால்வரைமேற்
கண்டுகளிக்கின்றனவென்கண். (341)
இதனுள், கமலமுதலிய உவமப்பொருளைந்தனுள் கோங்கரும் பென்றதொன்று மியல்புபெயராகவு மொழிந்த
நான்கு மாகுபெயராகவும் வந்து அவையைந்தும் நாலுபொருள் பயப்பதாகவும் பாடினமையால் உருவகவாய்பாட்டால்
வந்த உடனிலைச்சிலேடையென்ப திதன்பெயர். என்னை?
தாமரையென்னு முதலைக்கூறச் சினையறிகிளவியாகிய வாகு பெயர் தாமரைப்பூவையும்,
முகமாகியதாமரையென மாட்டேறில்லாத வுருவகவாய்பாட்டான் முகத்தையும்,
அத்தாமரைப்பூவைக் கருப்பொருளாகவுடைய மருதநிலத்தையும்,
அந்நிலத்து நிகழும் ஒழுக்கமாகிய ஊடலையுங் காட்டிநிற்றலானென்றறிக.
ஒழிந்த காந்தண் முதலிய நாலுபூவானு மிம்முறையே நாலுபொருள் கொள்க.
எனவே, இப்பெண்ணாகிய பூங்கொடி ஊடிக் கூடியிருந்து பிரிந் திரங்குதற்குரித்தாமெனவுட்கொண்டு
களிக்கின்றன வென்கண் ணென்றானென்க. ஒழிந்த அகல முரையிற்கொள்க. பகுதி-இயற்கை. துறை-காட்சி
149.ஒன்று பல முரணொன்றியவினையே
நியம நியம விலக்கு விரோத
மவிரோதத்துடனதன்விரியேழுள.
(எ-ன்) அங்ஙனம் வகைப்பட்ட சிலேடையணியின்விரியுணர்-ற்று.
(இ-ள்) ஒருவினைச்சிலேடை, பலவினைச்சிலேடை, முரண்வினைச் சிலேடை, நியமச்சிலேடை
நியமவிலக்குச்சிலேடை, விரோதச்சிலேடை, அவிரோதச்சிலேடையென விரி யேழுளவாமென்றவாறு.
வினையென்பதனை முதலேவந்த மூன்றினுக்கு மிறுதிவிளக்காக்கி,
அதன் என்பதனை யதிகாரத்தாற் சிலேடையதன்விரியெனக் கொள்க.
150.அவற்றுள்,
ஒருவினைகொள்வதொருவினைச்சிலேடை.
(எ-ன்) வைத்தமுறையானே ஒருவினைச்சிலேடை யுணர்-ற்று.
(இ-ள்) இரண்டுபொருளை, ஒருமொழியினாலாதல் தொடர் மொழியினாலாதல் இரட்டுறமொழிந் திரண்டுபொருட்கு
மொருவினை கொள்ளமுடித்தல் ஒருவினைச்சிலேடையா மென்றவாறு.
நாதமுனிதம்பிரானாவீறன்வண்குருகூர்
மாதரணிமன்னிமழைதோயு-மோதி
யிருந்தும்பியுந்தேனுமெப்போதும்யாண்டும்
பொருந்திப்புரியும்பொறை. (342)
இது ஒருவினைச்சிலேடை, மலைக்கும், மாதராள்குழற்குஞ்சிலேடை.
(இ-ள்) நாவீறுடையபிரான் வளப்பத்தையுடைய குருகூரினிடத்துப் பெருமைபெற்ற ஆதித்திய மண்டலத்தை
யணவப்பட்டு மேகந்தவழு மலையானது, பெரிய யானைத்திரளையுந் தேனிறாட்டினையு மெக்காலத்து
மெவ்விடத்தும்பயிலப் பொறைபுரியுமெனவும், இம்மாதராளழகுசெறிந் திருண்ட நிறத்தைப்பயிலுங் குழலானது,
கரியவண்டினையுந் தேனினையுங் காந்தண்முதலிய வெல்லாப்பூக்களினையு மெவ்விடத்தும் பயின்று
பொறுத்தலைப்புரியுமெனவு மாம். இதனுள் எப்போதும் யாண்டும். பொருந்திப்புரியும்பொறை யென்பதற்குப்
பொறைபுரியுமென்ப திரண்டுதலைக்கு மொருவினை.
ஓதியென்பது மலையும், குழலும், திணை-ஆண்பாற்கூற்றுக்கைக்கிளை. துறை-நலம்பாராட்டல்.
151. பலவினைகொள்வது பலவினைச்சிலேடை.
(எ-ன்) பலவினைச்சிலேடையாமா றுணர்-ற்று.
(இ-ள்) ஒருசெய்யுளகத்துப் பலவினை யிருபொருட் கிரட்டுறக் கொள்வது பலவினைச்சிலேடையா மென்றவாறு.
ஆம்பன்மலர்த்தியகவிருள்சீத்தொண்கலைக
டாம்புல்லியதண்மதிவரவுந்-தீம்பர்
செறிவகற்றுமாறன்றிருவாக்கும்பேதை
யறிவகற்றியேநின்றன. (343)
இது பலவினைச்சிலேடை. சந்திரோதயத்திற்குந் திருவாய்மொழிக்குஞ் சிலேடை.
(இ-ள்) ஆம்பல்-பண்ணும், குமுதமும். அகவிருள்-உள்ளமயக்கமும், உலகினிடத்தந்தகாரமும்.
ஒண்கலைகள் – சுருதி. மிருதி புராணமும், சந்திரகிரணமும். பேதையென்பது அறிவிலியும், மகடூஉவும்,
அறிவகற்றியே நின்றன என்பது அறிவினைப்பெருப்பியாநின்ற தென்றும், அறிவினை யழியா நின்றதென்றுமாம்.
“அறிவகற்று, மாகலூழுற்றக்கடை” என்பதனா லறிக. மலர்த்தி, சீத்து, புல்லிய என அடைவேவந்தவாறுகாண்க.
திணை- பாடாண் சார்ந்த பொதுவியல். துறை – பனுவல் வாழ்த்து.
அல்லது திணை- பெண்பாற் கூற்றுக்கைக்கிளை. துறை-தோழிநிலவுகண்டழுங்கலுமாம்.
152. மொழிவினைமுரணுதன்முரண்வினைச்சிலேடை.
(எ-ன்) முரண்வினைச்சிலேடையாமாறுணர்-ற்று.
(இ-ள்) மொழியப்பட்டவினைப்பொருண்முரணச் சிலேடைப் படுத்துவது முரண்வினைச்சிலேடையா மென்றவாறு.
இன்பநந்தியவானகமதனையெய்துவதுந்
துன்பமுந்துறுமறநிலையடைவதுந்துணிவா
மன்பெரும்புகழ்மாறனைவாழ்த்துபுவணங்கி
யன்புறார்பினர்தாமெனுநாளுமிவ்வகிலம் (344)
இது முரண்வினைச்சிலேடை. அன்பில்லார்க்கு மன்புள்ளார்க்குஞ் சிலேடை.
(இ-ள்) நிலைபெற்ற பெரியபுகழையுடைய காரிமாறப்பிரானை வாழ்த்தி வணங்குவதுமின்றி
மனத்தினா லன்புறாருமாகிய மாறுபட்ட கிரியையுடையோர் பேரானந்தமென்பதுகெட்ட பெரியபாவங்களைக்
கூடுவதுந் துன்பம்வந்தெதிர் கொளுங் கொலைமுதலிய மறத்தினிலையையடைவதுஞ் சந்தயமில்லை யெனவும்,
காரிமாறப்பிரானை வாழ்த்துவதுடன் வணங்கி மனத் தினானினைந் தன்புமிகுமன்புடையோர் பேரானந்தமல்கிய
பரம வைகுண்டத்தைப்பெறுவதுந் துன்பங்களைதன்மிகும் அறநிலையடைவதுஞ் சந்தயமில்லையெனவும்
உலகங்கூறு மென்றவாறு. உலகமென்ப துயர்ந்தோரை. மாறனை யென்ப தற்குமால்தன்னையெனினுமாம்.
திணை-பாடாண். துறை-பழிச்சினர்ப் பரவலும், பாடாண் பகுதிப்புறத் திணைப்பாற்படும் பரவார்ப் பழித்தலுமாம்.
153.இயல்புடைப்பொருள்கட்குளதிலதிரட்டுற
நியமித்துரைத்தனியமச்சிலேடை.
(எ-ன்) நியமச்சிலேடையாமா றுணர் – ற்று.
(இ-ள்) உயர்திணை அஃறிணை யென்னு மிரண்டினுள் விகாரப் படாதவியல்பினையுடையபொருள்கட் குள்ளது
மில்லதுமாகச் சிலேடித்த பொருளைத் தேற்றம்பெற நியமஞ்செய் தவற்று ளொன்றினைக்
குறிப்பினாற்கொள்வனவாய்ப் புகல்வது நியமச்சிலேடையாமென்றவாறு. நியமித்தல் – தெளிதல்.
வண்டுளர்முண்டகக்கொழும்பொற்றுணரொன்றேபங்கமுற
வளர்ந்ததெல்லாந்
தண்டழைவானகடுரிஞ்சுஞ்சண்பகமேயளிதுறந்த
சால்பிற்றென்றும்
வெண்டாளப்பொறையுயிர்க்கும்வலம்புரியேகோடியதும்
விழவின்மாதர்
மொண்டலைவார்குளிர்புனலேகம்பலையுட்கொண்டதுவு
மொழியின்மன்னோ. (345)
இது நியமச்சிலேடை.
(இ-ள்) பங்கமுறவளர்ந்ததெல்லாந் தாமரைப்பூவினது சாதியொன்றுமே;
அளிதுறந்த சால்பினையுடையது சண்பகமரமொன்றுமே; கோடியதும் வலம்புரிக்குலமே;
குளிர்புனலே கம்பலையுட்கொண்டதும் என்று உலகங் கூறப்படுமாதலால் ஒழிந்த உயர்ந்தோருள் மானவீனமுற வளர்ந்தோருமில்லை;
கொடையைக் கைவிட்டோருமில்லை; மனக்கோட்ட முடையோருமில்லை; நடுக்குற்றோருமில்லை யென்பதாம்.
பங்கம் – சேறும், மானவீனமும். அளி – வண்டும், கொடையும். கோடியது – வளைவும், மனக்கோட்டமும்.
கம்பலை – ஆரவாரமும், நடுக்கமும். இவற்றுள், பின்னைய நான்கும் உயர்திணையைக்குறித்துக் குறிப்பினாற்கொண்டவாறு காண்க.
உளர்தல்-குடைதல். பொறையுயிர்த்தல்-பெறுதல். திணை – பாடாண். துறை – நாடுவாழ்த்து.
154. விளம்பியநியமம்விலக்குதல்விலக்கே.
(எ-ன்) நியமவிலக்குச்சிலேடையாமா றுணர் – ற்று.
(இ-ள்) இங்ஙனங் கூறப்பட்ட நியமத்தின்கூறுபாட்டை விலக்கிப் பிறிதும் ஒன்றுகூறுவது நியமவிலக்குச்சிலேடையா மென்றவாறு.
கடம்புணர்ந்ததளிக்கணம்பொங்கரினிழைத்ததேக்கெறிதேங்
கமழ்செந்தேனே
திடம்புணர்ந்தகெழுதகையாடவர்கடவுஞ்சிந்துரத்தின்
றிரளொன்றுண்டான்
மடம்புணர்ந்தாரியற்கொழுநருளந்தவறாமடந்தையரே
மறித்துநாடி
னடம்புணர்ந்ததுகிற்கொடித்திண்டேர்மறுகுந்திருமறுகே
நவிலின்மன்னோ. (346)
இது நியமவிலக்குச்சிலேடை.
(இ-ள்) கொள்கலத்துட்பொருந்தியது, வண்டின்கூட்டம் கொம்பர் தோறும்வைத்ததா யெடுத்துண்டார்யாவருந்
தேக்கிடுவதாய் மிகவும் பரிமளிக்குஞ் சிவந்த தேனே; அதுவுமன்றி, உண்மையோடுங்கூடிய நட்பையுடைய
வாடவர்கடாவும் யானைத்திரள்களு மதத்தோடுங்கூடியதுண்டு. மடப்பத்தைப் பொருந்தினவர்
தமதில் லறத்திற்குரிய விலக்கணத்தையுடைய கொழுநருள்ளக்குறிப்பிற் பிழையாத கற்புடைய மகளிரே;
மீட்டு மாராயி லாடுதலைப்பொருந்தின துகிற்கொடியையுடைய திண்ணியதேர்கள் சூழ்வரும் பொலிவினையுடைய வீதிகளும்
அறச்சாலையை மருவும். அவையன்றி வறுமையுற்றுத் தனிசுகொண்டவருமில்லை; அறியாமையுடையோரு மில்லையென்றவாறு.
கடம்-பாத்திரம், மதம், கடன்கோடல். மடம் – மடப்பம், அறச்சாலை, அறியாமை.
இதனுள்ளு மிறுதிநின்ற விரண்டுங் குறிப்பினாலுயர்திணை மேற்கொண்டவாறு காண்க.
இழைத்தல் – திரட்டிவைத்தல். இதுவும் நாடுவாழ்த்து.
155.சாதிமுதலாச்சாற்றியநான்கொடுந்
தீதறுபெயரினும்வினையினுந்திரிந்து
மேதகவிரோதத்தறைவதுவிரோதம்.
(எ-ன்) விரோச்சிலேடையாமா றுணர்-ற்று.
(இ-ள்) சாதிமுதலாகப் பொருளீறாகக்கூறப்பட்ட நான்கினோடுங் கூடிக் குற்றமற்ற பெயரினும் வினையினுந்
திரிந்துந் திரியாதும் பெருமை தகுவதாய் விரோதமாகச் சிலேடையாற்கூறுதல் விரோதச்சிலேடையா மென்றவாறு.
திரிந்துமென்னுமும்மை யெச்சமாதலாற் றிரியாது மென்றாயிற்று. சிலேடையென்ப ததிகாரத்தாற் பெற்றது.
மேதகவென்றதனாற் சாதியோடு நான்கும், கிரியையோடு மூன்றும், குணத்தோடிரண்டும்,
பொருளோ டொன்றுமாக விரோதச்சிலேடை பத்துளவென்றறிக. அவற்றிற்கெல்லாஞ் செய்யுள் வருமாறு:-
எத்திரமென்றேயறியேனென்னளவிற்காரிதரும்
புத்திரனார்பொன்னம்புயப்போது-முத்தநகை
மின்குமுதப்போதகலவேனிலானெய்வதற்கு
மன்குமுதப்போதாயவாறு. (347
(இ-ள்) முத்துப்போன்ற நகையினையும், மின்போன்ற இடையினையு முடையாய்!
காரிமாறப்பிரான் பொலிவினையுடைய புயத்திற் புனைவதாம் வகுளமாலிகை,
(வாங்கிச் சூடப்பெறாத) என்னளவில் யான் மகிழ்வெய்தும்போ தென்னைவிட்டு நீங்காநிற்பக் காமன்
பஞ்சபாணங்களையுந் தொடுப்பதற்கு நிலைபெற்ற கலகப்போதானபடி யென்னகாரணமென் றறியேனென்றவாறு.
இதனுள், பொன்னம்புயப்போது-பொன்போலும் நிறத்தையுடைய தாமரைப்போது.
மன்குமுதப்போதாயவாறு – ஆக்கஞ்செய்யு மாம்பற் போதானபடி யென்னகாரணமென்றறியேனென்றதனால்,
சாதிக்குச் சாதியினோடே விரோதச்சிலேடையாயிற்று.
மின் – அண்மைவிளி; உவமப் பெயர். குமுதமிரண்டினுண் முன்னையது மகிழ்ச்சி. பின்னையது கலகம்.
போது-பூவும், காலமும். திணை-பெண்பாற்கூற்றுக் கைக்கிளை. துறை-தாமம்பெறாதுதளர்வுற்றுரைத்தல்.
இது சாதிக்குச்சாதியோடே விரோதச்சிலேடை.
நாடறியமேனாணடந்ததலவின்றுளதாய்ப்
பீடழியவந்ததற்கென்பேசுகேன்-றாடகையென்
றாளையுயிருண்டானழுந்தூரன்வெற்பிளமான்
காளையுயிருண்டகதை. (348)
(இ-ள்) தாடகையென்பாளுயிரை வாளியினாலுண்ட திருவழுந்தூர் மாயோன்வெற்பினி லிளையமான்
முதியகாளையினறிவை யுண்டதென நீ கூறியகதை மேனா ணாடறியநிகழ்ந்த
தொன்றல்லவாகியு மஃதின்றுன்னிடத்துள தாகியுனது பெருமையழியவந்த துன்பத்திற் கியான்பேசுவ தென்னென்றவாறு.
இதனுள், இளையமான் முதியகாளைஉயிரை யுண்டதென்றதனால், சாதிக்குக் கிரியையோடே விரோதம்.
உயிரென்ற தீண்டறிவு. இளமான் – தலைவி. காளை – தலைவன். முதியவென்ற தெதிர்மறைச்சொல்லெச்சம். துறை – பாங்கன்கழறல்.
மாகருடனடுங்கமம்மர்தருவதன
யோகமயிலினுரத்தோங்கி-யாக
நுடங்குமுடன்பிறப்பைநோக்காதொறுக்கத்
தொடங்குமெமையென்செயாதோ. (349)
இதுவுமது.
(இ-ள்) துறக்கத்துள்ளாருமுடனடுக்கமுறும்படிக்கு அவருள்ளத்திற்கு மருந்து பிறிதில்லாத தீ
ராப்பிணியைக்கொடுப்பனவாகிய முலையினது கூட்டம், மயிலினது சாயல்போலுஞ் சாயலையுடையாண்
மருமத்தின்கண்ணே புடைத்துயர்ந்து தம்மைத்தாங்கி யுடல்வளையு முடன் பிறப்பாகிய விடையை
யுடன் பிறப்பென் றுட்கொள்ளாது கொல்வதைத் தொடங்காநிற்கும்; ஆகையால் நெஞ்சமே! நம்மை யென்செய்யாதென்றவாறு.
எனவே, மாகருடனடுங்க – பெரிய கருடனும் உடல் நடுங்க. மம்மர் தருவது-வருத்தத்தைத்தருவது.
அனயோகம்…………… ஓங்கி-அன்னத்தின் கூட்டம் மயிலினுரத்தோடும் பெருத்தென்பதனால்
இதுவுஞ் சாதிக்குக் கிரியையோடே விரோதமாயிற்று. பகுதி – இயற்கை. துறை-தகையணங் குறுத்தல்.
கோபம்பயின்றவிடங்கூர்தாபரங்குறுகத்
தாபந்தவிர்ந்துயிருந்தண்ணென்ற-பூபதிகைத்
தூரிகையாலேயமைத்தசொற்றமிழ்மாறன் றுடரிக்
காரிகைசெவ்வாயெனவேகண்டு. (350)
(இ-ள்) இந்திரகோபங்கள்விட்டு நீங்காத இடமிகுந்தசோலையைக் குறுகினகாலத்து விரகாக்கினியினாலுண்டான
எனதுவாட்ட நீங்கியுயிர்தண்ணென்று குளிர்ந்தது. நெஞ்சமே! யங்ஙனம் நீங்குதற்கேது யாதெனில்,
தாமரையையிடவகையாயுள்ள பிதாமகன் கையினாற் றூரியக் கோலையெடுத்தெழுதியுண்டாக்கின
வழகினையுடையாள் செவ்வாய்க் கொப்பெனவேகண் டென்றவாறு.
சொற்றமிழ் மாறன்றுடரிக்காவெனக் கூட்டுக. நெஞ்சமே யென்னுமெழுவாய் முன்னிலையெச்சம்.
கோபம்பயின்றவென்பது சினம்விட்டு நீங்காதவென்பதாய், இடங்கூர்தாபரம் விடங்கூர்தாபரமெனத் திரிந்து,
தாபரமென்பது ஆகுபெயராய்ச் சினமிகுந்த நச்சுமாமரச்சோலையைமுடுக வாட்டந்தீர்ந் துயிர் தண்ணென்றது
எனவே இது சாதிக்குக் குணத்தோடே விரோதச்சிலேடையாயிற்று. பகுதி – இடந்தலை. துறை-பொழில்கண்டுமகிழ்தல்.
கார்க்கடற்பார்வாழ்வுபெறக்காரிதருங்கண்ணனுளத்
தேர்க்கருணைக்கேசரியாயெய்துருவைப்-போர்க்கழியா
மெய்யனன்குபேரனென்பமெய்யுணர்ந்தவாரணங்க
ளையமின்றியேதெளிந்துளார். (351)
என்பது, கரியகடல்சூழ்ந்தபூமியின்கணுள்ளார் முத்தியாகியசெல்வத்தை யெய்தக் காரியார்பயந்தளித்த
கண்ணபிரான்றிருவுள்ளத்தழகிய கருணைக் கிணையாய் வந்தவுருவத்தைப் போர்க்கழியாகிய
சத்தியவாய்மையுடை யோனுக்கு நன்குமதிக்கும் பேரனென்றுகூறுவர் சித் தசித் தீச் சுரங்களி னுண்மை
யுணர்ந்த சுருதியினுண்மையைச் சந்தயமறத் தெளிந்துளாரென்றவாறு.
இதனுள், கண்ணபிரானழகிய திருவுள்ளக்கருணையைப்பெற்றுப் பரசமய களியானைகட்கோர்
சிங்கவேறாகிய சொரூபத்தை, நல்ல குபேரனென்பவெனத் திரிந்தமையா லிது சாதிக்குப் பொருளோடே
விரோதச் சிலேடையாயிற்று. திணை – பாடாண். துறை – முனிவர் வாழ்த்து.
பரவதியையேபணித்தருள்பாமாற
னுரவாவருமருகர்க்குண்மை-கரவாது
கோட்டுமதமால்யானைகூறியமால்வீட்டின்பங்
காட்டுவன்மன்னேபுலவீர்காள். (352)
என்பது, நித்தர் முத்தர் முதலாயுள்ள பத்தரும் பெத்தரு மேத்தப் பட்ட பரமபதநாதனைப் புகழ்ந்திடுந்
திருவாய்மொழியாகியபாவையுடைய மாறன் ஞானதிண்ணியராய்த் தன்னிடத்துவந்தடைந்தவர்க்குப்
பொய்யின்றித் திருமால்பதத்திலுள்ள பேரின்பத்தை யுண்டாக்கித்தருவன் புலவீர்கா ளென்றவாறு.
எனவே, நீரும் அவனையே சரணாகதியெனப்பற்றும்; உமக்கும் முத்தியெய்தலாமென்பது பயன்.
இதனுள், பவாதியைப் பணித்தருள் பாமாறன் – அந்நியசமயத்தைத் தாழ்த்துப்போடப்பட்ட திருவாய் மொழியென்னும்
பாடலையுடைய காரிமாறப்பிரான். உரவாவருமருகர்க்கு-தன்னோடு வாதுக்குத் திண்ணியராகிவரும்
அருகனைத்தெய்வ மாகவுடையார்க்கு. யானை மூலமே யென்றழைப்ப வந்தருள்செய்த சீமந்நாராயணன்
வீட்டின்பத்தைத் தருவனெனவே கிரியைக்குக் கிரியைடோடே விரோதச்சிலேடையாயிற்று. திணை-வாகை. துறை-அறிவன் வாகை.
இங்குமுளனோவெனச்சொன்னதானவனைப்
பொங்கியடலாளரியாய்ப்போர்வென்றான்-சிங்கவரைக்
கன்புற்றிருப்பானெதிர்கொண்டசுரரிடத்
தின்புற்றிருந்தவளனென். (353)
என்பது, மதலையே! நீ யெங்குமுளனென்றமாயோ னித்தூணிலுமுளனோவென்று கூறிய இரணியாசுரன்முன்
அடலாளரியாய்த்தோன்றியவனோடு பொரு தவனைவென்று கொன்றோன், சிங்காத்திரியிடத் தன்புற்றிருப்போன்,
அவனை நாவே! தன்னையெதிர்கொண்ட தேவர்களிடத் தின்புற்றிருந்த வளத்தையுடையவனென்றுகூறுவாயாக வென்றவாறு.
இதனுள், எதிர்கொண்டசுரரிடத்தென்பதனைத் தன்னோடு மாற்றங் கொண்ட அசுரனைக்கொன்றவன் மாறுகொண்ட
அசுரரிடத் தின்பமுற்றிருந்தவளன் யாதுதானெனக் கிரியைக்குக் குணத்தோடே விரோதமாசிலேடையாயிற்று.
இப்பொருட்குச் செய்தவென்னும்பெய ரெச்சத்தீற்றினகரஞ் செய்யுள்விகாரத்தாற் றொக்கது; என்னை?
“புகழ்புரிந்தில்லிலோர்க்கில்லை” யென்பதுபோலக் கொள்க. துறை – கடவுள் வாழ்த்து.
கருத்தகலாக்கண்ணனெனக்காவலருள்வானை
யுருத்திரனாமென்பதனோடொண்மைப்-பொருட்பரத
கண்டத்தாகிச்சிறந்தகங்கைக்கோடுற்றவிடக்
கண்டத்தானென்னுமுலகம். (354)
என்பது, திருவுள்ளத்தைவிட்டுநீங்காத கண்ணோட்டமுடையானென்று சொல்லும்படிக் குலகுயிர்களைக்
காவல்செய்வானைத் திவ்வியாத்தும சொரூப மழிவிலானென்பதோடு நல்லபயனைத்தரும் பரதகண்டத்தாகி
யழகெய்திய கங்கைக்கரையையுற்றவிடமாகிய கண்டத்தானுமாமென்று உலகங் கூறாநிற்கு மென்றவாறு.
கங்கைக்கோடுற்றவிடக்கண்டமென்பது கங்கைக்கரைக்கண்ட மென்னுந் திருப்பதி.
ஆதலால் அங்ஙனங் கண்ணோட்டமுடன் காவல் செய்வானை நெஞ்சமே! என்னுடன்கூடிப் பற்றுவாயாக;
நமக்கு முத்தியெய்து மென்பது பயன். ஒண்மை – நன்மை.
பொருள் – இனிக் கண்ணனென்னுந் திருநாமமுடையானென் றுலகங்குயிர்களைக் காவல்செய்வானைச்
சங்காரமூர்த்தி யென்பதனோடும் பிரமசிரத்தை யிரத்தற்குக் கையிலோடாகவுடையனுமாகி நஞ்சையணிந்த
மிடற்றையுடையனுமாமென் றுலகங் கூறாநிற்கு மென்னும் பொருடோன்றுதலா லிது
கிரியைக்குப் பொருளோடே விரோதச்சிலேடையாயிற்று.
உருத்திரன்-சொரூபமழிவிலாதான்; சங்காரமூர்த்தி என்றும், கம்- சிரம். கைக்கோடுற்ற- கைக்கோடாகவெய்திய.
இடக்கண்டத்தான்-இடமாகிய கண்டமென்னுந் திருப்பதியான்;
விடக்கண்டத்தான் – நஞ்சையணிந்தமிடற்றான் எனவுங் கொள்க. திணை-பாடாண். துறை-ஓம்படை.
என்னென்றறியேனியற்றமிழ்தேர்காரிதரு
மன்னன்றனையுலகமாறனென-முன்னுரைத்தோர்
வன்புலனையொன்றாமதியாமுனிவரிடத்
தன்புடையானென்னுமது. (355)
இதனுள், காரியார்பெற்ற விளவரசை மாறனென்னும் பிள்ளைத்திரு நாமத்தையுடையானென் றுலகின் முதலேகூறுவார்,
அதனோடும் வலியபுலன்களை யொருபொருளாக மனக்கொளாத இருடிகளிடத் தன்புடையா னென்றும்புகலுவர் என்பது போந்தபொருள்.
இனி இதனுள் அது என நின்றதனோடும் அன்றியும் என்பதனைச் சொல்லெச்சமாகவிரித்து
அஃதன்றியு மெனக்கூட்டிக் காரியார்பெற்ற இளவரசை யுலகம் யாவரோடும் மாற்றங்கொள்ளுங்
குணத்தையுடையானென்று முதலேகூறுவதோடு மனத்தையதுசென்ற விடத்துச்செலவிடா தப்புலத்தி னன்மை
தீமைகளை யாராய்ந்து தீமைகளைநீக்கி நல்லதன்கட்செலுத்தும் வலியவறிவியைுடையோரையுமொரு பொருளாக
மதித்திடாது, கோபிக்கப்பட்ட வரிடத்து மன்புடையானாகியிருப்பனென்றுங் கூறுமஃ தியாதென்றறியே னெனக்கூறியதாய்ப்
பொருள்கொள்ளக்கிடந்தமையா னிது குணத்திற்குக் குணத்தோடே விரோதச்சிலேடையாயிற்று. திணை-வாகை. துறை-சால்புமுல்லை,
புனமலிதேமாவின்புணர்சினையின்றண்மை
தினமகலிற்சேர்ந்தாரைக்கோல்லி-யெனலாகு
நாடிப்பரனையுணர்நாவீறன்றண்சிலம்பிற்
கூடிப்பிரிந்தார்குணம். (356)
என்பது, நண்பனே! ஞானத்தாலாராய்ந்து சீமந் நாராயணனே பர தத்துவ மென வுட்கொண்ட
நாவீறுடையபிரான் குளிர்ந்தமலைப்பக்கத்திற் புனத்தின் கண்ணே மிகுந்த பெண்பாற்கடவுளாகிய
திருமகள துபய வுறுப்பாகிய முலை களிற்றண்ணென்றகுணந் தம்மைப் பரிசித்தகாலத்துத் தண்ணென்னும்;
சேய்த் தாயகாலத்துப் போதுதோறும் நினைவையுஞ்சுடும் நெருப்பாய்நின்றன வாத லான் வாடினே னென்றவாறு.
தேமா – கடவுளாகிய திருமகள். புணர்சினை-உபயமுலை. பகுதி-பாங் கற்கூட்டம். துறை – உற்றதுரைத்தல்.
இதனுள், புனமலிதேமாவின் புணர் சினையின்றண்மை….. யென்பது, புனத்தின்க ணெருங்கவைத்த தேனையுடைய
மாமரங்களி னெருங்கின கொம்பரிற் சிவந்ததளிர்களின் குளிர்ச்சி தம்மைப் பரிசித்தகாலத்துத் தண்ணென்னும்;
சேய்த்தாய் நீங்கினகாலத்து நினைவோடும் பார்த்தகண்ணிற்கு நெருப்பாயத்தோன்றிப் பயங்கரமாகி
யுள்ளத்தையுஞ் சுடா நின்ற தெனப்பிறிது மோர்பொருடோன்றலாற் குணத்திற்குப் பொருளோடே விரோதச்சி லேடையாயிற்று.
சேர்ந்தாரைக் கொல்லி – நெருப்பு. சினை, தினம் ஆகுபெயர். நண்பனேயென்னு மெழுவாய்முன்னிலையும்,
வைத்த தேனென்பதுமுதலாக வாடினே னென்பதீறாய சொற்களு மெஞ்சி விரிந்தன. இதன்பொருளுண் மாட்டுறுப்பா யெச்சமுங் கூடின.
நாடகத்தையீறாய்நயந்ததமிழ்நன்குணர்ந்தோ
னாடகத்தைப்பித்தளையென்றாக்கியதூஉ-மேடவிழ்பூந்
தாமக்குழலிவளேதண்டமிழ்மாறன்சிலம்பி
லேமப்பொழிலுமிது. (357)
என்பது, இயன்முதலாக நாடகமீறாக வுலகம்விரும்பப்பட்ட தமிழ் மூன்றி னையு நன்றாயறிந்தோன் வெற்றியை
யுடையபுத்தியை மையலளைவாயாக வென்று கற்பித்ததும், இதழ்விரிந்த பூமாலையைச்சூடினகுழலையுடைய விவளே;
தலைவன்கூறிய தண்டமிழ்மாறன்வரையி லின்பத்திற்கிடங்கொடுத்த சோலையு மிஃதே; பிறிதில்லை யென்றவாறு.
ஏகாரம் தேற்றம். தலைவன் கூறியவென்ப தெச்சம். இதனுள் ஆடகத்தைப் பித்தளையாக்கிற்றென்பதனாற்
பொருட்குப் பொருளோடேவிரோதச்சிலேடையாயிற்று. பகுதி – பாங்கற்கூட்டம்.
துறை-குறி வழிச் சென்றபாங்கன் றலைவியைக் காண்டல்.
ஆகப் பத்தும் முன்னர்ச் சிலேடித்தவற்றைப் பின்னரும் விரோதமாகச் சிலேடித்த சிலேடை யடைவே வந்தமை காண்க.
திருமகிழ்மாலையனாமென்பர்மெய்யைச்சிறைப்படுத்திப்
பொருதளைகட்டுண்டறியானளியுறும்போதனென்பா
ருருவளர்பாரிபடைத்தறியானொண்புனிதனென்பா
ரருள்புரிவாய்வைத்தருந்தான்மின்சொர்க்கத்தமிர்தினையே. (358)
இதனுள், திருமகிழ்மாலையனாமென்பர் என்பது திருமகள் விரும்புமியல்பையுடைய திருமாலுக்கும்,
அழகியவகுளமாலிகையினையுடைய மாறனுக்கும் பெயராமென்றுகூறுவர் பெரியோர்.
திருமால் திருமேனியை யொளித் துறியினையெதிர்ந்து தயிரைக் களவுகண்டறிவான்;
மாறன் ஞானத்தைத் தனக்காணாக்கிக்கொண்டு தன்னோடு பூசல்பெருக்கும் பாசத்தளையிற் கட்டுப்பட்டறியான்;
என்றும், அளியுறும்போதனென்பார் என்பது வண்டுகள்சென்று முடுகும் பூவிலுள்ள பிரமனுக்கும்,
தண்ணளிமிக்க ஞானத்தையுடையமாறனுக்கும் பேர். பிரமன் வடிவகன்ற பூமியைப் படைத்தறிவன்;
மாறன் காந்திதழையாநின்ற இல்லறக் கிழத்தியைக் கொண்டறி யான்; என்றும்,
ஒண்புனிதனென்பார் என்பது நல்ல இந்திரனுக்கும், ஒள்ளியஞானத்தோடுங்கூடிய பவித்திரவானாம் மாறனுக்கும் பேர்.
இந்திரன் திருமால்கருணைபுரிந்துகொடுப்ப வொளிருஞ் சுவர்க்கத்திருக்கு மமிர்தினை வாய்வைத்துண்டறிவான்;
மாறன் மின்போலு மிடையையுடைய நங்கை யிரங்கிக்கொடுக்குந் திருமுலைப் பாலினைத் திருப்பவளவாய்
வைத்துண்டறியா னென்றுங் கூறியவாறாக வுணர்க.
இங்ஙனஞ் சிலேடை நிகழ்த்தலா லிதுவும் பொருளோடே கிரியைக்கு விரோதமாகவந்த சிலேடைவேறுபாடெனக் காண்க.
இன்னும் வேறுபடவரு வனவெல்லாம் பொருணோக்கமறிந்து கொள்க.
அவையெல்லா மீண்டுரைப்பிற் பெருகும். திணை – வாகை. துறை – தாபத வாகை.
156. அவிரோதத்தறைவதுமவிரோதம்.
(எ-ன்) அவிரோதச்சிலேடையாமாறுணர்-ற்று.
(இ-ள்) அவிரோதச்சிலேடையென்பது முன்னர்ச் சிலேடித்த பொருள் பின்னரும்
விரோதியாமற் சிலேடிப்பனவாய்க் கூறுவதாமென்றவாறு.
குருகையிடங்கொண்டான்மெய்க்கோலமுறுதுப்பான்
பெருமனத்தானிலஞ்சிபெற்றோ – னொருபுனித
னாகதருநிழலானன்னருறுமாதவன்பொன்
னாகமலம்வருநண்பான். (359)
(இ-ள்) திருமால், பாஞ்சசன்னியத்தை யிடதுகையிற்றரித்தான்; அழிவில்லாத வராகரூபியாய்ப் பூமிதேவி
தோன்றுதற்குப் பற்றுக்கோடாயினான். மாறன், குருகாபுரியை யிருப்பிடமாகப்பெற்றுளான்;
திருமேனியினது அழகு மிக்க பவளம்போல்வான். பிரமன், பெருமையெய்து மன்னவாகனத்தை யுடையான்;
மாயோன்றிருவுந்தி – பெறப்பட்டவன். மாறன், ஞானமிகுந்த மனத்தையுடையான்; மகிழமாலிகையையுடையவன்.
இந்திரன், புனிதனென்னும் ஒரு பெயரை யுடையவன்; சுவர்க்கத்திற்றருவினது நிழலையுடையவன்.
மாறன், ஒப்பற்ற பவித்திரவான்; சேடாவதாரமான திருப்புளிநீழலையுடையான்.
ஆதித்தன், நன்மைமிகும் வடமேருவை வலம்வருவான் மாறன், முத்தியைப்பெறும் பெரியதவத்தையுடையவன்.
ஆதலால் அவன் திருவடிகளைப்பற்றுவாரும் முத்திபெறுந்தன்மை யுடையவராவரென்பது பயன்.
இதனுள், கோலம்-பன்றியும், அழகும். துப்பு-பற்றுக்கோடும், பவளமும். இலஞ்சிகொப்பூழும், வகுளமாலிகையும்.
நாகதரு – சுவர்க்கத்துக் கற்பகதருவும், திருப்புளியாழ்வாரும் நன்னர்-மங்கலமும், முத்தியும். இஃ தாகுபெயர்.
ஆகம்-திருவுளம். அலம்வரல்-சுற்றுதலும், நிறைவெய்துதலும். இது. அவிரோதச்சிலேடை; இரண்டுங் கடவுள்வாழ்த்து.
அந்தணரறைந்தவுரையினைச்செவிக்கொண்
டகனமர்ந்தணிதிகழரையிற்
சுந்தரப்பீதாம்பரத்தினைநெகிழ்த்துச்
சுற்றுவிட்டதன்பினோர்வெண்பட்
டிந்துவினெறிப்பவரையுடீஇக்கடன்க
ளியற்றிவான்பொருநையுட்படியா
வுந்தியினுதித்தோனெனும்பெயர்பிரமற்
குண்மையாமெனும்படிக்கெழுந்தான். (360)
திணை-பாடாண். துறை-மண்ணுமங்கலம்.
வெம்புலால்கமழ்ந்துழுபடைவேடுவன்விறல்கண்
டும்பல்யாவையும்பறந்துவான்குரல்கிளைத்தொசிந்த
கொம்பின்மொய்த்தடர்போதகத்துறுமுழைகுறுகித்
தும்பியாமெனப்புலவராற்புணர்பெயர்துணிவார். (361)
திணை-வாகை. துறை-பேராண்முல்லை.
பாய்கதிர்க்கடவுளும்பனிவெண்டிங்களுஞ்
சேயிகந்திரிதருஞ்செம்பொன்மாளிகைத்
தூயநுண்டுகிற்கொடிதுவன்றித்தோன்றலாற்
காயமம்பரமெனும்வாய்மைகாட்டுமே. (362)
இது நகரவாழ்த்து. இங்ஙனம்வருஞ் சிலேடைவேறுபாடுகளுங் காண்க. இவைமூன்றுங் குருகாமான்மியம்.
இனி ஒரு தொடர்ச்சொலிரண்டு முதலாக ஐந்துபொருள்காட்டுவனவாஞ் சிலேடைகளு முள.
அவை சொல்லணியினு ளிடைவிடாமடக்கினுண் முந்துறக் காட்டுதும். அவை யாண்டுக்காண்க. ஈண்டுரைப்பிற் பெருகும்.
17-வது சிலேடை முற்றும்.
—————————————-
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருக்குருகைப் பெருமாள் கவிராயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply