ஸ்ரீ மாறன் அலங்காரம்–பொருளணியிய லுரை–பகுதி- 2–ஸ்ரீ திருக்கருகைப் பெருமாள் கவிராயர்–

https://www.tamilvu.org/node/154572?linkid=118853

———–

3-வது உருவக வலங்காரம்
4-வது உள்ளுறையுவமம் –
5-வது ஒட்டலங்காரம்.–

——–

114.முக்கியப்பொருளையொப்புடைப்பொருளெனமதித்
திருபெயரொட்டாயிசைப்பதுமுருவகம்.
(எ-ன்) வைத்தமுறையானே யுருவகமென்னு மலங்காரமுணர்–ற்று.

(இ-ள்) உவமேயப்பொருளையு முவமப்பொருளாக வுட்கொண் டிரண்டுபொருளையு மிருபெயரொட்டாக
வொற்றுமைகொளுத்தி யுரைப்ப துருவகமென்னும் அலங்காரமா மென்றவாறு.

உம்மையா லிரண்டுபொருளையு மொற்றுமைகொளுத்தா துவமையாத லுவமேயமாத லிரண்டிலொன் றுருவகச்
சொல்லொடுதொக்கு மாட்டேறில்லா துவரு முருவகமு முளவென்றவாறு. மூன்றுதொக்கு வருவனவு முள.
இவற்றிற்கெல்லாஞ் செய்யு ளுருவகவிரியுண் முன்னர்க் காட்டுதும்.

அஃதாக ; உவமையும் பொருளுமென இதன் முதனூலுடையார் கூறவும், இந்நூலுடையார் முக்கியப்பொருளை
முதல்வைத்ததியாதோ வெனின், உவமைபோலாது முக்கியப்பொருளை முதல்வைத் தொப்புமைப் பொருளை
யதன்பின்னர்வைத் தொற்றுமைகொளுத்துவதே யுருவகத்திற்கு மிக்கதோர் அறிகுறி யென்பது தோன்ற வைத்தாரெனக் கொள்க.

115.பொருண்முதலினுமுவமையதாம்புணர்வுழி
யொற்றிடைதோன்றறிரிதலோடொன்றிய
மற்றதற்குறுசொல்விரியாவயினே.
(எ-ன்) உவமைக்கு முருவகத்திற்கு மெய்தியதோ ரைய மறுத்துணர்-ற்று.

(இ-ள்) முக்கியப்பொருண் முன்னு முவமப்பொருள் பின்னுமாக வருவ துருவகத்திற்கு மிக்க வறிகுறியென்றார்;
அவ்வாறன்றிப் பொருண்முதலேவரினு நிலைமொழியாகி யுயிரு மொற்று மீறாய்வரு முவமேயச் சொல்லும்
வருமொழியா யவைமுதலேவரு முவமச்சொல்லுந் தம்மிற் புணருமிடத் தவற்றினிடையி லொற்றுத்
தோன்ற றிரிதலின்றி யவற்றோடு மவ்வுருவகத்திற்குரியசொல்லும் விரியாவிடத் துவமையாம் பகுதியு முள வென்றவாறு.

உதாரணம் :- வாய்ப்பவளம், (வாயென்றபவளம், வாய்பவளமாக. ) குழற்கொன்றை, கொங்கைக்குரும்பை யெனவு மிவை யுருவகம்.
வாய்பவளம், குழல் கொன்றை, கொங்கை குரும்பை யெனவு மிவை யுவமை, “வாய்பவளந், துடிக்கின்றவா” எனவும்,
“குவவின கொங்கை குரும்பை குழல்கொன்றை” எனவுங் கண்டுகொள்க.
ஒன்றிய வென்றதனால் வதனசந்திரன், கரகமலம், கரபுண்டரீகம் எனவும் நிலைமொழியுவமேயவுயிரீற் றின்
முன்னர் உவமையாய வருமொழி முதல் வல்லெழுத்து முன்ன ரொற்றுமிகா துருவகமா மிடமுமுள. இது உவமவிரியினுள், தலைதடு
மாற்றவுவமையின்கண் பொருண்முதலேவந்து முவமையாயினவாறு கண்டுகொள்க.

116. அதுவே,
தொகையினும்விரியினுந்தொடரிருவகைத்தே.
(எ-ன்) இதுவு மவ்வுருவக மின்னவகைப்படு மென்கின்றது.

(இ-ள்) அவ்வுருவகமென்னு மலங்காரந் தனக்குரியசொற் றொக்கும் விரிந்தும் வருமொழியொடு
தொடர்ந்துநிற்கு மிரண்டுகூறுபாடுடைத் தென்றவாறு.

உம்மை யிரண்டனுண் முதலது சிறப்பும்மையாதலால் அதற்குரியசொற் றொக்குவருதலே சிறப்புடைத்தெனக் கொள்க.
ஏனைய தழிவுசிறப்பும்மை.

117. அடையிடைபுணரினுங்கடிநிலையிலவே.
(எ-ன்) இதுவு மவ் வுருவகந் தொகையினும் விரியினும் புணர்வுழி யெய்துவதோர் வழுவமைப் புணர்ற்று.

(இ-ள்) இரண்டுபொருளையுந் தம்மி லொற்றுமைகொளுத்தும் வழி யிடைப்பட வுவமைக்கண் ணடைச்
சொற்புணர்த்துக்கூறினு முருவகமேயாம் ; நீக்கப்படாதென்றவாறு.

உம்மையான் முதலே யடைபுணரினு நீக்கப்படாதாம் ; எனவே தொகைநிலைவகையானும் அடைச்சொற்புணராமலும்
புணர்ப்பதே சிறப்புடைத் தென்பதாம். இவற்றிற்குச் செய்யுள் வருமாறு :-

முருகவிழளகக்காட்டைமுன்னிடாவல்குற்றேரும்
பருமணிவடத்திற்சேர்த்தபடாமுலைக்களிறுமுந்திப்
புருவவிற்குனித்துநாட்டப்பொருகணையுடக்கிமைந்தர்
செருவிழந்தோடமார்பிற்செஞ்சவேசெலுத்துவாரே. (228)
என்பது தொகையுருவகம். இதனுள் படாமுலை, பொருகணை யென்பன அடை. துறை – நாடுவாழ்த்து.
(குருகாமான்மியம். )

கண்கழுநீராய்க்கரங்கள்காந்தளாய்த்தீங்கிளவி
பண்களாய்ச்செவ்வாய்பதுமமாய்–நண்பனே
வாய்ந்தமடவரற்குமாறன்மணிவரைவா
யீர்ந்தண்பொழிலாமிடம். (229)
இது விரியுருவகம். பகுதி – பாங்கற்கூட்டம். துறை – இயல்பிடங்கூறல்.

118. ஒருதொடர்பினுளிருமையுமுறலுளவே.
(எ-ன்) தொகைவிரியுருவக முணர்-ற்று.

(இ-ள்) தொக்கும் விரிந்தும் வரு மிரண்டுதன்மையு மொரு செய்யுளகத்துவருதலுமுள வென்றவாறு.

பெண்ணாரமுதளித்தபேரின்பத்தீஞ்சுவைபெற்
றுண்ணாநினைவேற்குறுதியெனக்–கண்ணா
லளித்தவருணோக்காமமிர்தினைக்கண்டுள்ளந்
தளிர்த்ததையிங்கார்க்குரைப்பேன்றான். (230)
இது தொகைவிரியுருவகம். துறை – பாங்கியையறிதல்.

கதிர்முலைக்குவடுந்திண்டோட்சயிலமுங்கலவிமுந்நீ
ரெதிர்கொளநிறீஇமத்தாகவிவறலாந்தாம்புபூட்டி
முதிர்பொறிப்புலவர்மாண்பின்முறைமுறைசுழற்றுமாற்றாற்
சதிர்பெறப்பிறந்தவின்பத்தனியமிர்தருந்துநீரார். (231)
திணை – பாடாண். துறை – நாடுவாழ்த்து. இதனுள்ளு முதலேயு மிடையினு முவமேயத்தினு முவமையினும்
அடைச்சொற் புணர்ந்ததுங் காண்க. (குருகாமான்மியம். )

119. உரைத்தவையினிவரும்விரிக்குறுபொதுவே.
(எ-ன்) இதுவு மத் தொகைவிரிகளா லெய்து மிலக்கண முணர்–ற்று.

(இ-ள்) இங்ஙனமுரைத்த தொகையும் விரியு மேற்கூறப்படு முருவகவிரிக்கு மிக்க பொதுவிலக்கணமாமென்றவாறு.

120. இயைபியைபின்மையேகதேச
மொருபொருள்பலபொருளுருவகஞ்சிறப்பே
விருத்த மவிருத்த நட்புவியனிலை
யேகவங்க மனேகவங்க
மவயவ மவயவி முற்றெனவாய்ந்த
நவையறுசிறப்பினானான்கதன்விரியே.
(எ-ன்) உருவக மென்னு மலங்காரத்தின் விரியிலக்கண முணர்–ற்று.

(இ-ள்) இயைபுருவகமும், இயைபிலுருவகமும், ஏகதேச வுருவகமும், ஒருபொருளுருவகமும், பலபொருளுருவகமும்,
உருவகவுருவகமும், சிறப்புருவகமும், விருத்தவுருவகமும், அவிருத்தவுருவகமும், நட்புருவகமும், வியனிலையுருவகமும்,
ஏகாங்கவுருவகமும், அநேகாங்க வுருவகமும், அவயவவுருவகமும், அவயவியுருவகமும், முற்றுருவகமும்
என ஆராய்ந்த குற்றமற்ற சிறப்பினையுடைய வுருவகவிரி பதினாறா மென்றவாறு.

இவற்றிற்கெல்லாம் உருவகமென்னும்பெயரை யதிகாரத்தாற் கூட்டி யுரைத்ததனோடும் எண்ணும்மைத்தொகையும் விரித்துரைக்கப்பட்டது.
நட்பென்பது சமாதானம். இவையெல்லாஞ் சொல்லின்முடியு மிலக்கணத்தன. அல்ல துரையினுங் கொள்க.

அவற்றுள், இயைபுருவக மென்பது ஒரு தொடர்பினுட் பல பொருளையு முருவகஞ்
செய்யுங்காற் றம்முட் காரணகாரிய மியைபுடைத்தாகவைத் துருவகஞ்செய்வது :-

நித்தர்முத்தரிற்புகழ்நிபுணன்பராங்குச
னுத்தமஞானமென்றொளிர்திருப்பாற்கடல்
புரந்தசெந்தமிழ்மறையாயபுத்தமிர்த
நிரந்தரமுலகின்மெய்ந்நெறிநிலைதழைவான்
பூமகளெனும்பெயர்புனைமலர்நிதியொடந்
தாமமாதவனெனுஞ்சங்கநீணிதியினை
யருளுடைமையின்வெளிப்படுத்தருளவுமவை
வருபவர்வருகெனவாழ்வுபெற்றிருப்பவும்
வாழ்நாளதன்கண்வழிபடுசரிதையின்
வீழ்நாள்படாமைவீட்டினையெய்தா
தொல்லையிற்பிறந்திறந்துழல்வோர்
வல்வினையதனில்வலியதொன்றிலையே. (232)
இஃ தியைபுருவகம்.

(இ-ள்) அநந்த கெருட சேனாபதிகளோடும் பரமபதத்து முத்தரும் புகழு மிகவும் வல்லோனாகிய
சீபராங்குசன் றிருஞான மென்றொளிரும் திருப்பாற்கடலளித்த திருவாய்மொழியெனும் புத்தமிர்தம்
எல்லாநாளு முலகின்கண் சீமந் நாராயணனே பரப்பிரமமென்னு முண்மை மார்க்கநிலை தழைக்கும்படி
மலர்மடந்தையெனப் பெயர்புனை பதுமநிதியுடன் கூடிய பரமபதத்தையுடைய மாதவனென்னுஞ் சங்கநீணிதியைத்
தனது திருவுள்ளக் கருணையுண்டானதன்மையால்வெளியிடவு மவை யீருட லேகமாகி முத்திவேண்டினவர்
வருவார் வருகவென்று தம்மினீங்காது வாழ்ந்திருக்கவுந் தமக்குள்ள வாழ்நாள் வீழ்நாள்படாமை
மனோவாக்குக் காயங்களால் அருச்சனைபுரியு மொழுக்கத்தினான் மோக்கத்தினைப் பொருந்தாது
சிறுவரையிற் பிறந்து மிறந்து முழல்வோ ரும்மையி லிழைத்த தீவினைபோல வலியுடையதொன் றில்லை யென்றவாறு.

மலர்நிதி-பதுமநிதி ; சங்கநீணிதி – பாஞ்சசன்னியத்தைத் தரித்த பெரியநிதி ; திருவு மாயோனும்.
இதனுள், திருப்பாற்கடன்முதலாக அடைவே காரணகாரியத்துடனியைந் துருவகமாயினவாறு காண்க.
பா-நேரிசையாசிரியம். திணை-பாடாண்பொதுவியல். துறை-பனுவல் வாழ்த்து.

ஆரவடநீரருவியாமாணிக்கத்
தார்கெழுசீர்த்தேனருவிதானாகப்–பேரழகு
பாரிக்குமாரன்பனிவரைமான்வார்புனைந்து
பூரிக்குங்கொங்கைப்பொருப்பு. (233)
இஃ தியைபிலுருவகம். ஆரவடம் – முத்துவடம். மாணிக்கத்தார் – மாணிக்கமாலை. பகுதி – பாங்கற்கூட்டம். துறை – செவ்வி செப்பல்.

ஏகதேசவுருவக மென்பது ஒரு செய்யுளகத்து ஓரிடத் தொரு பொருளை யுருவகஞ்செய்யுங்கான் மாட்டேறுபெற வுருவகஞ்செய்
தப்பொருளோடு சம்பந்தமுறப் பிறிதோர்பொருளைச் செய்யுளகத்துப் பிறிதோரிடத்து
மாட்டேறுபெற வுருவகஞ்செய்யாது தொகைநிலைவாய்பாட்டாற் கூறுதல் :-

அறியாமையென்னுமகவிருளைச்சீக்கப்
பிறியாதறிவிருக்கப்பெற்றுங்–குறியாத
தீச்சொற்பயில்வரேசெண்பகமாறன்பவள
வாய்ச்சொற்றிறம்பயிலாமல். (234)
இஃ தேகதேசவுருவகம். இதனுள் அறியாமையென்னு மகவிருளை யென மாட்டேறுபெற வுருவகஞ்செய்ததனோடு
மெதிராகச் சம்பந்தமுற ஞானமாம்விளக்கென மாட்டேறுபெற வுருவகஞ்செய்யாது தொகை
நிலைவாய்பாட்டா னறிவெனக் கூறியவாறு காண்க.

செண்பகமாறன் பவளவாய்ச்சொல்-திருவாய்மொழி. திறம் – சித்த சித்தீச்சுரத்தை மயக்கமறவிளங்கக்கூறுங்கூறுபாடு.
பயிலாமல் – இடைவிடா துணர்வினாற் சிந்தியாமல்.
இது, உவமேயமு முருவகவுருபுமாகிய இரண்டுதொக்க தொகையுருவகம்.
ஞானவிளக்காவது திருவாய்மொழி ; பிறரறியாமையென்னு மிருட்டறக் கூறிய ஞானமாகிய விளக்கு.
பயில்வரே யென்பது பரசமயவாதியரை. ஏகாரம் – இரக்கத்தின்கட் குறிப்பு. துறை – இதுவுமது.

புன்பனுவனஞ்சம்பொசிக்கின்றபேதையர்பே
ரின்பமுறமெய்யுணர்வாரேனோருந்–தன்பால்
விருந்தருந்தத்தானருணாவீறனார்கூறு
மருந்தருந்தாரந்தோமதித்து. (235)
இதுவுமது. இதனுள் நாவீறனார்கூறு மருந்தென்பது திருவாய் மொழியாகிய மருந்து. மருந்தென்பது – அமிர்தம்.
எனவே திருவாய் மொழியாகிய மருந்தென வுருவகஞ்செய்ததனோடுஞ் சம்பந்தமுறும்படி பிறவியாகிய பிணியைத்
தீர்த்து முத்தியாகிய பேரின்பத்தைத் தரு மருந்தென வுருவகஞ்செய்யா துவமேயமுதலிய
மூன்றினையு மிருவகைத் தொகைநிலைவாய்பாட்டாற் கூறியவாறு காண்க.

மெய்யுணர்வார்-தத்துவத்திரயத்தி னுண்மையுணர்வார். தன்பால் விருந்தருந்த – அம் மூன்றினையும் மயக்கமறவுணர்த்தும்
ஞானமான அமிர்தத்தைத் தமது மெய்யுணர்வா லுவட்டாது புதுவதுபுதுவதாக வுரிசிக்கவும் என்க.
அருந்தாரந்தோ என்ப திரக்கம். மெய்ப்பொருண் மாறன் – உண்மைப்பொருளை யுணர்ந்த மாறன் ; உண்மைப்பொருளாகிய மாறனென்றுமாம்.

மிக்கவரிதாளின்மெய்யன்பினைவித்தித்
தக்கதவந்தினமுந்தான்பொழிந்துட்–புக்கதோர்
ஞானமுருவியபின்னன்முத்தியைவிளைக்கு
மானபரன்காரிதருமன். (236)
இது, உவமையு முருவகவுருபு மாட்டேறில்லாதுவந்து வுருவகம் என்னை? அரிதாளாகிய செய்யின்கண்
அன்பாகிய வித்தை விதைத்துத் தவமாகிய நீரைப்பொழிந்து ஞானமாகிய முளையுருவியபின் முத்தியாகிய
போகத்தை யென மாட்டேறுபெறாதுவந்தமையானுணர்க. ஒழிந்த அகலமுரையிற்கொள்க.
இவை யிரண்டுதொக்கது. இவற்றுள் முன்னையது பனுவல்வாழ்த்து.
இது திணை – வாகையைச்சார்ந்த புறத்திணை. துறை-அறக்களவழி.
இவை மூன்று மாட்டேறிலாதுவந்த வுருவகம்.
இவற்றிற்கு “அறவாழி யந்தணன் றாள்சேர்ந்தார்க் கல்லாற், பிறவாழி நீந்த லரிது” எனவும்,
“சினமென்னுஞ் சேர்ந்தாரைக் கொல்லியினமென்னு, மேமப் புணையைச் சுடும்” எனவும்,
“பவழவாய்ச் செறுவுதன்னு ணித்திலம் பயில வித்திக், குழவிநா றெழுந்து காளைக் கொழுங் கதி ரீன்” றெனவும்,
“அஞ்சுவரு தானை யமரென்னு நீள்வயலுள், வெஞ்சினம் வித்திப் புகழ்விளைக்கும்” எனவும்
முந்து நூல்களினும் அடைவே வந்தவாறு காண்க.

ஒருபொருளுருவக மென்பது உயர்திணை அஃறிணை யென்று சொல்லப்பட்ட காட்சிப்பொருளுங்
கருத்துப்பொருளு மொருசெய்யு ளகத்துவந்தா லவற்று ளொருபொருளை யுருவகஞ்செய்தல் :-

பிறப்பாரிறப்பார்பிறப்பாயவேலை
துறப்பானொருபோதுந்தூவார்–சிறப்பாகுஞ்
செய்படைத்ததென்னரங்கர்சேவடிமேன்மானிடராய்க்
கைபடைத்தும்வாழ்ந்தகதை (237)
இஃ தொருபொருளுருவகம். அரங்கன், மானிடர்கை, சேவடி யென்னும் உயர்திணை யஃறிணைகளை
யுருவகஞ்செய்யாது கருத்துப் பொருளாய பிறப்பென்னும் அஃறிணையை யுருவகஞ்செய்தலா னென்றறிக.
திணை – பாடாண். துறை – வாயுறைவாழ்த்து.

பலபொருளுருவக மென்பது அவ்விருபொருளையு மொருசெய்யுளகத் துருவகஞ்செய்தல் :-

தீதற்றமெய்ஞ்ஞானத்தெப்பமுடன்மேதகுநால்
வேதக்கடல்கடந்தவித்தகத்தாற்–கோதற்ற
வந்தாமத்தீவினுட்புக்காழியானாமணியைத்
தந்தானம்பூதூர்வந்தான் (238)
இது பலபொருளுருவகம். அந்தாமத்தீவு-விரசைக்கக்கரையாகிய பரமபதம். திணை-பாடாண்.
துறை-அறுமுறைவாழ்த்தினுண் முனிவனை வாழ்த்தல்.

உருவகவுருவக மென்பது ஒன்றனை முதலே யுருவகஞ்செய் ததனைப் பெயர்த்து முருவகஞ்செய்தல் :-

மத்தம்புரியவிச்சைவாராழியாமிருளென்
சித்தமினித்தேறுமேதேமகிழ்த்தார்–முத்தன்
முகத்தாமரையாமுழுமதியென்செவ்வி
யகத்தாமரையகத்தாக. (239)
இஃ துருவகவுருவகம். இதனுள், மத்தம்-மயக்கம். புரிதல்-தருதல். அவிச்சை-அறியாமை.
அவிச்சையாம் வாராழி யென வுருவகஞ்செய்ததனை மறித்து மிருளென வுருவகஞ்செய்ததும்
முகத்தாமரையா முழுமதி யெனவும் உருவகவுருவகம் வந்தவாறுங் காண்க. துறை – இதுவுமது.

சிறப்புருவக மென்பது ஒருபொருளையெடுத் ததற்குச் சிறந்த அடைகளை யுருபித் தவற்றானே யதனை யுருபித்துரைப்பது :-

நாரங்குழலாய்நளினமுகமாய்முகுளங்
கூர்வெம்முலையாய்க்கொடியிடையா–யூர்திரைகள்
வெண்டுகிலதாகிவிளங்குமகிழ்மாறன்
வண்குருகூர்த்தண்பொருநைமாது. (240)
இது சிறப்புருவகம். நாரம்-பாசி. வெம்முலை-விருப்பத்தைத்தரும் முலை. பொருநைமாது-பொருநையாகியபெண். துறை-நதிவாழ்த்து.

விருத்தவுருவக மென்பது ஒருபொருட்குக் கூடாதனபலவுங் கூட்டி யுருவகஞ்செய்வது :-

வேம்பாலிசைந்தசுவைவெவ்விடத்தினோடுதித்த
தாம்பாலதன்றறலின்பாலன்று–பாம்பா
லிமிழ்திரைவாயிற்பிறந்ததென்பதன்றுமாறன்
றமிழ்மறையாஞ்செஞ்சொலமிர்தம். (241)
இது விருத்தவுருவகம். வேம்பு-கைப்பு. கைப்பைத் தனக்குச் சுவையாகவுடைய நஞ்சினோடும் பிறந்ததாம்
பகுதியையுடையதன்று; அறலின்பாலன்று – சலத்தினது மயமாம்பகுதியையுடையதூஉமன்று
பாம்பா…….. தன்று-பாம்பாகிய தாம்பா லாரவாரிக்குந் திரையையுடைய கடலைக் கடையப் பிறந்ததென்று கூறுவதூஉமன்று ;
காரிமாறப் பிரான் றிருப்பவளத்திற் பிறந்த திருவாய்மொழியாகிய வினிய சொல்லின்மயமா மமிர்தமென்றவாறு.

அமிர்திற்கு விடத்தினோடுதிப்பதுமுதலாயதுஞ் சலமயமாவதுஞ் சுபாவம்.
இந்த அமிர்தத்திற் சுவையின்மையால் விருத்தவுருவகமாயிற்று. துறை-பனுவல்வாழ்த்து.

அவிருத்தவுருவக மென்பது ஒருபொருட்குக் கூடுவனவாந்தன்மை பலவுங் கூட்டி யுருவகஞ்செய்வது :-

ஓர்பொழுதுந்துஞ்சாதலமந்துறுதுளித்தாம்
போர்புனைவேலண்ணல்பொருட்கேகிற்–சீர்பெருகுந்
தண்ணார்பசுந்துளபத்தார்மார்பன்றஞ்சைமான்
கண்ணாகியகார்க்கடல். (242)
இது, அவிருத்தவுருவகம். அண்ணல்-அண்மைவிளி. ஒழிந்த அகல முரையிற்கொள்க.
பகுதி-பொருள்வயிற்பிரிதல். துறை-செலவழுங்குவித்தல்.

நட்புருவக மென்பது ஒருபொருளை நன்றாக வுருவகஞ்செய்து அதனைத் தீங்குதருவதாகக் கூறி
யத்தீங்கு அதனால்வந்ததன்றென்றதற்குப் பிறிதோர்காரணங் கூறுதல் :-

தீங்கிளவியென்றுயிர்க்குந்தெள்ளமிர்தம்வெவ்விடத்துப்
பாங்கிழமைகூர்தலணிமாற–னாங்கைப்
பதித்திருவேதீவினையின்பாங்காயதென்றே
மதித்திருக்குமின்றென்மனம். (243)
இது நட்புருவகம்.

(இ-ள்) இனிய கிளவியென வொலிக்கு மொள்ளிய வமிர்தமானது வெம்மையைச்செய்யும் விடத்தின்
கயப்பா முரிமையை விளைத்தல் நின்னிடத்துண்டாய பாங்கினாலுண்டாயதல்லவென்றுமெனது
தீவினையின் பாங்காயதென்றுஞ் சந்தயமற விசாரியாநின்ற திப்பொழு தென்மன மென்றவாறு.

உயிர்த்தல்-ஒலித்தல். கூர்தல்-விளைதல். பாங்கு-வாரம். பகுதி-பரத்தையிற்பிரிதல்.
துறை-பரத்தையிற் பிரிந்துவந்த தலைமகன் வாயில்வேண்டப் புறத்தொழுக்க முண்டென்று வாயின்மறுத்துக்
கடுஞ் சொற்கூறிய விற்பரத்தையுடன் புறத்தொழுக்க மின்றென்றுகூறித் தனதாற்றாமையே வாயிலாகக் கூடியது.

வையம்பரவுமகிழ்மாறன்செவ்வாயுந்
துய்யநயனத்துணைப்போதுஞ்–செய்ய
முகத்தாமரையுடன்கைம்முத்திரையுங்கண்ட
சுகத்தார்க்குமுண்டோதுயர். (244)
இது வியனிலையுருவகம். இதனுள் அவயவி முகத்தாமரை. இதன் கண் ணவயவியுடன் அவயவங்களை யுருவகஞ்செய்து
மற்றையொன்றை யுருவகஞ்செய்யாமையுங் காண்க. துறை-கடவுள்வாழ்த்து. பழிச்சினர்ப் பரவலுமாம்.

ஏகாங்கவுருவக மென்பது ஒன்றினங்கம் பலவற்றினு ளொன்றை யுருவகஞ்செய்வது :-

வியனிலையுருவக மென்பது ஒன்றினங்கம் பலவற்றையு மொரு செய்யுளகத்துக்கூறி யவற்றுட் சிலவுருவகஞ்செய்து
சிலவற்றை யுருவகஞ்செய்யாது அவயவியை யுருவகஞ்செய்வது :-

மாறன்பனிவரைமேல்வாண்முகச்செவ்வாயிவட்கு
வேறன்றிவளெனவேமெய்யுணர்விற்–கூறொன்றக்
காட்டுகின்றதொண்பொற்கனங்குழைமேற்பல்காலு
மோட்டுகின்றகட்காவியுற்று. (245)
இது, ஏகாங்கவுருவகம். ஒருபொருளாவ திதனுண் முகமாகிய அவயவி. இதன்பொரு ளுரையிற் கொள்க. துறை-பாங்கியை யறிதல்.

அநேகாங்கவுருவக மென்பது ஒன்றினங்கம் பலவற்றையு முருவகஞ் செய்வது :-

செங்கைத்தளிர்நயனச்செவ்வேன்மறைப்பவர
மங்கைத்திருமால்வரைமடவாய்–கொங்கைக்
களியானைக்கட்படாநீக்கியோகண்ணுற்
றெளியானைக்காக்குமியல்பு. (246)
இது, அநேகாங்கவுருவகம்.

(இ-ள்) திருமால் சீவரமங்கைவரையில் வாழும் மடப்பத்தை யுடையாய்! பெறுதற்கரிய நின்னோடும்
பேரின்பத்தை யனுபவித்துப் பின்ன ரதுபெறாது வருத்தமிக்கு நின்கண் ணெளியனாவேனைக் கருணை புரிந்து காக்குமியல்பு,
செங்கையாகிய தளிரா னயனமாகிய சிவந்த வேலை மறைத்துக் கொங்கையாகிய களியானையினது
முகபடாத்தினை நீக்கிக் கொல்லும்படியே யவற்றை வெளியில் வைத்ததோ? இஃ தருளுக்குத் தகாதென்றவாறு.

பகுதி – பாங்கற்கூட்டம். துறை – நாணிக்கண்புதைக்கவருந்தல். எளியானை யென்றது தன்னைப் பிறன்போலக்கூறல்.

கொங்கைக்குவடுங்குழற்காருமேலிருந்த
சங்கைக்கருண்மாயன்றஞ்சைவாய்–மங்கைக்குப்
பொய்யேயுளதென்கைபோற்றாதிலதென்கை
மெய்யேயிடையாம்வெளி. (247)
இதுவுமது. சங்கை – வளம். ஏகார மிரண்டும் எதிர்மறை. இடையாம்வெளி யுளதென்கை பொய்யே யிலதென்கை மெய்யேயெனத்
தேற்றேகாரமாக்கிக் கூட்டினுமாம். பகுதி – இடந்தலைப்பாடு. துறை – மருங்கணைதல்.

அவயவவுருவக மென்பது அவயவமே யுருவகஞ்செய் தவயவியை வாளாது கூறுவது :-

நிறத்தாரைவேலிமையாநீடுறையைநீக்கிப்
புறத்தாயிடரிழைக்கும்போர்மே–லறத்தான்
வருந்தாவிரங்குவதென்மாலரங்கத்தின்பம்
பொருந்தானனத்தாய்புகல். (248)
இது, அவயவவுருவகம்.

(இ-ள்) திருமா லரங்கத்தினிடத் தழகுகுடிகொண்ட முகத்தினை யுடையாய் ! நினது செவ்வரிபரந்த கண்ணாகியவே லிமையாகிய
வுறையை நீக்கி வெளிப்பட்டுத் துன்பத்தைச் செய்யும் பூசன்மேலும் யான் மிகவும் வருந்தும்படி
கலுழ்வதற்குக் காரணம் யாதெனக்கூறுவாயாகவென்றவாறு.

தாரை-கண். உறை-கவிசனை. அற-மிக. வருந்தா-வருந்த. இரங்குதல்-அழுதல். இன்பம்-ஆகுபெயர்.
பகுதி-பொருட்குப்பிரிதல். துறை-கருத்தறிந்தழுத கண்ணீர்துடைத்தல்; என்னை?
பொருள் வயிற்பிரிந்த தலைவன் உள்ளக்குறிப்பினைக் கரந்து பன்னாளும் புதுவதுவாக வுறுப்பினைப்
பாராட்டியதா லிஃதொன்றுடைத்தென அவனது பிரிவையுட்கொண்டழுத கண்ணீராதலின்.

அவயவியுருவக மென்பது அவயவியை யுருவகஞ்செய்து அவயவத்தை வாளாதே கூறுவது :-

முதிராமுலையுமுறுவற்குறிவந்
தெதிர்பாயுங்கண்களுங்கண்டெய்தி–வதனமதிப்
பொற்றொடியைமாறன்பொருப்பிடைவைத்திங்கெதிர்ந்த
வற்புதனேதிண்ணியனாவான். (249)
இஃ தவயவியுருவகம். துறை-பாங்கன்றலைவனைவியத்தல். இதனுள் வதனமதியென்றது அவயவியுருவகம்.

பெண்ணமுதேயங்கையாற்பேரைமால்தண்சிலம்பிற்
றண்ணறும்பூவேங்கைதலைநாட்செய்–கண்ணி
தனைக்கொய்தனமேற்றமரிற்செறிப்பான்
றினைக்கொய்திறம்விளையாதே. (250)
இது மகா அவயவியுருவகம். இதனுள், பெண்ணமுதே யென்றது மகா அவயவியுருவகம்.
தண்ணறும்பூ…….. கண்ணி-குளிர்ந்த நறுவிதாம் பூவாமுன்பே வேங்கை வைத்த அரும்பு.
பகுதி – பகற்குறி. துறை – வேங்கையொடு வெறுத்து வரைவுகடாதல்.

முற்றுருவக மென்பது அவயவ அவயவிகளை யேற்றவிடத்தோடும் பிறவிடத்தினோடு முற்ற வுருவகஞ்செய்வது :-

வட்டவதனமதியுநுதற்பிறையும்
பெட்டநகைநிலவும்பேர்த்தறியாக்–கட்டளகக்
கங்குலின்மேன்மாறன்கனவரைவண்டீரிருந்தா
லிங்கிவளுக்குண்டோவிடை. (251)
இது முற்றுருவகம். பெட்ட – விரும்பப்பட்ட. பேர்த்தறியா – நீக்கியறியாத.
கட்டளகக்கங்குல் – ஐம்பாலாகக் கோலஞ்செய்த குழலாகிய விருட்பிழம்பு. ஒழிந்த அகல முரையிற்கொள்க.
பகுதி – இடந்தலை. துறை – வண்டகற்றி மருங்கணைதல்.

மண்படர்தாட்டாமரையுமைபடர்கட்காவியையுங்
கொண்டுமுலைக்கோங்கரும்புங்கொண்டதோர்–பெண்கொடியைக்
கண்டனையேனண்பாகழறலைமாறன்சிலம்பில்
வண்டமர்தண்பூஞ்சோலைவாய். (252)
இதுவுமது. பகுதி – பாங்கற்கூட்டம். துறை – கழற்றெதிர் மறுத்தல். இதன்பொரு ளுரையிற்கொள்க.

ஆக இயைபுருவக முதலாக முற்றுருவக மீறாகப் பதினாறு மடைவே கண்டுகொள்க.

121.உரைபெறுசிலேடைவேற்றுமையுடனேது
வபநுதியுவமையென்றவற்றொடும்விரவும்.
(எ-ன்) அவ்வுருவகம் என்னும் அலங்காரம் பிறவாய அலங்காரங்களோடும் விரவிவருமென்ப துணர்-ற்று.

(இ-ள்) சிலேடை முதலாக வுவமையீறாகக் கூறப்பட்டவைந்தலங் காரங்களோடும் விரவியும் வருமென்றவாறு.

உரைபெறுசிலேடையென்றதனால் வினைமுதலிய நான்கு காரணத்தா னுவமை பிறப்பதேயன்றி
யிரட்டுறமொழியுஞ் சொற்பொருள் காரணமாகவு முவமை பிறக்கும் என்பதும்,
சிலேடை இக்கூறிய வுருவகத்திற்கும் காரணம், இனிமேல்வரும் பிற அலங்காரட்கட்கு முபகாரங்களாம்
என்பதுந் தோன்ற நின்றதுங் காண்க. இச்சூத்திரஞ் சிங்க நோக்காம்.

அவற்றுட் சிலேடையுருவக மென்பது ஒரு பொருளை யொரு செய்யுளகத் திருபொருள்பயப்பதாகப்
பலவிடத்தினும் புணர்த் திறுதி யினு மிருபொருள்பயப்பதாக வுருவகஞ்செய்வது :-

விற்புடைக்கீழ்மன்னிமிகுநாணிடைதழீஇச்
சுற்றுடைமாண்கோதைத்தொடைசெறியும்–பொற்புடைத்தாம்
பாணிழையாவண்டுலவும்பைந்துளவமாலுறையூர்
மாணிழையார்சேயரிக்கண்வண்டு. (253)
இது செம்மொழிச்சிலேடையுருவகம். கண்ணிற்கும் அம்பிற்குஞ் சிலேடை.

(இ-ள்) (கண்ணின்மேற் செல்லுங்கால்) வில் – புருவம். இஃ துவமப்பேர் புருவத்தின்பரப்பின்கீழ்த் தங்கிப்
பெருத்த நாணிடத்துக் கூடிச் சுற்றுதலுடைய மாட்சிமைக் குழலின்மேல் மாலையை மேனோக்கத்தாற் பொருந்துங்
கண்ணாகிய வண்டெனவும், (அம்பின்மேற் சொல்லுங்கால்) தனுவி னகன்றவிடத்துக்கூடி மிகுந்த நாணுக்குநடுவே
யெய்தி விரலிற் கட்டுதலுடைய விரற்சாடுறத் தனுவிற்குவல்லார் தொடுத்தெய்வதை யெய்தும் அம்பு எனவுங் கொள்க.
பகுதி – சேட்படை. துறை – கண்ணயப்புரைத்தல்.

பூங்குமிழ்மீதேறிப்புணர்க்குமதனன்கலைதோய்ந்
தோங்குவனத்தாமரையினுட்பயிலுந்–தேங்குபுனல்
வெள்ளக்குளத்துறைமால்வெற்பினில்வாழ்மெல்லியலார்
வள்ளைக்குழையார்கண்மான். (254)

இது பிரிமொழிச்சிலேடையோடுங்கூடியவுருவகம். கண்ணிற்கும் மானிற்குஞ் சிலேடை.

(இ-ள்) (கண்ணின்மேற் சொல்லுங்கால்) பொலிவையுடைய மூக்கின்மீதேறிக் காமன் புணர்க்கு நல்ல
கலையைக் கற்றுப் பெருத்தெழுந்த தண்ணீரகத்துத் தாமரைபோன்ற முகத்தினுட்டங்கு மிகுந்த புனலையுடைய
திருவெள்ளக்குளத்துறையுந் திருமால்வெற்பில்வாழு மெல்லியலாராகிய வள்ளைக்குழையினையுடையார்கண்ணாகிய
மான் எனவும் (மானின்மேற் சொல்லுங்கால்) பூவினோடுங் கூடிய குமிழாகிய மரத்தினைப் பாய்ந்து,
காமத்தைத் தன்னிடத்தே விளைக்கும் நல்லகலையைப் புணர்ந்து, ஓங்கிவளருங் காட்டின் கண்ணுளவாம்
மரை கண்டு பழகு மெல்லிய வியல்பு மிகுந்த வள்ளைக்கொடியினது குழையைப்பருகுங் குறிப்பினையுடைய மானெனவுங் கொள்க.
இதனுள், கண்மா னென்ப துருவகம். புணர் மதன் என்பதனை மதன் புணர் எனப் பாடமாற்றுக. துறை – இதுவுமது.

மன்பார்குளிர்விக்குமாறன்குடைமதியு
நன்பான்மதியுமதிநாடுங்கான்–முன்பாங்
குடைமதிக்குண்டாவதல்லகுன்றுதன்மைவானத்
தடைமதிக்குண்டாங்குன்றுதல். (255)
இது குணவேற்றுமையுருவகம். வடநூலார் வெதிரேகவுருவக மென்பது மிது. குன்றுதல் – தேய்தல். மை – களங்கம்.
குடைமதி யென்ப துருவகம். திணை – பாடாண். துறை – குடைமங்கலம்.

பேரழகார்காரிதரும்பிள்ளைமாணிக்கநெறி
சீரியமாணிக்கமுறுஞ்செய்கைத்தோ–வாரியர்கா
ளுற்றுளதேற்றத்துவங்களெல்லாமுணர்ந்துணர்த்தக்
கற்றுளதாய்க்காணேன்களித்து. (256)
இதுவுமது. இதனை விலக்குருவக மென்றுங் கூறுவர். துறை – அறுமுறைவாழ்த்தினு ளடங்கும்.

வேகத்தால்வாயுவாம்வெண்ணீர்மைமேதகுகே
ழாகத்தாற்றாரசயிலாதியா–மோகநிலை
காய்ந்தவுணர்வாற்சுகனாங்காசின்றயிந்திரநூ
லாய்ந்துணர்ந்தவானரசிங்கம். (257)

இது, ஏதுவுருவகம். வெண்ணீர்மைமேதகுகேழாகம் – வாலிதாந் தன்மை பெருமையோடு பொருந்துந் திருமேனி.
தாரசயிலாதி – வெள்ளி யாங் கயிலை. மோகநிலை – காமத்தினிலைமை. சுகன் – சுகப்பிரமவிருடி. ஆசின்று – குற்றமின்றி.
அயிந்திரநூல் – ஐந்திரவியாகரணம். வானரசிங்கம் – சிறியதிருவடி. திணை – வாகை. துறை – சால்புமுல்லை.

முத்திரைக்கையன்றுமுளரிமலரீதிதுபூந்
தொத்தணிமார்பன்றுசுவணகிரி–பத்தி
திகழானனமன்றிதுதிங்கள்வாச
மகிழ்மாறனன்றிவனாமால். (258)
இது, அபநுதியுருவகம். பத்தி-பரமபத்தி ; அஃதாவது அன்பு. சுவணகிரி – பொன்மலை.
இதனுள் மகிழ்மாறனன்றிவனாமால் என்பது உருவகம். திணையுந் துறையு மிதுவுமது.

விடமனையகட்காவிமெல்லியலாள்சோர்ந்தாள்
குடவரைபுக்கான்வெயிலோன்கொல்வா–ரடல்வேடர்
வேலவனேகங்குல்விருந்தருந்திவைகறைவாய்
மாலுறையூர்க்கெய்தன்மதி. (259)
இஃ துவமையுருவகம். பகுதி – உடன்போக்கு. துறை – நெறி விலக்கல்; விருந்துவிலக்கென்பதுமிது.
இதனுள், ‘விடமனையகட்காவி’ என்ப துவமையுருவகம். “மையேர்குவளைக்கண்வண்டினம்வாழும்” என்பது மிது.

பொற்பிற்குரியதிருமால்கரிசொன்னபோழ்தினிலச்
சொற்பிற்படச்சென்றுதவியமாயன்றுவரையின்வாய்
வெற்பிற்புடைக்குந்தனவேழமானவிலங்கறுத்தாற்
கற்பிற்குரியவிப்புல்லோதடுத்திடைகாப்பதுவே. (260)
இதுவு முவமவுருவகம். இதனுள் வெற்பிற்புடைக்குந் தனவேழமென இடையி லடையடுத்துவந்தவாறுங் காண்க.
பகுதி – மணஞ்சிறப்புரைத்தல். துறை – அக்கினிசாக்ஷியாகத் தலைவன் றலைவியைக் கைப்பற்றித் தீவலம் செய்து,
வசிட்டனையு மருந்ததியையு மிருவருங்கண்டு மணவறைக்கட் பள்ளியிடத்தாராயகாலைத் தலைவ னருமறைச்சடங்கிற்குப்
படுத்த தருப்பையைநோக்கித் தலைவி காதலையுந் தனதாற்றாமையையு முட்கொண்டுரைத்தல்.

122.ஒழிவறவுருவகமுடனேயுவமையு
மொழிவதற்கடங்காமுறைமையவாகலின்
மொழியப்புகும்யான்மூதுணர்விலனா
லிவற்றினுக்கிதனுளிசைத்தவையொரீஇவரு
மவற்றையுமிவற்றினகப்படவுரைகொளீஇ
முற்றவுணர்த்தியமுறைமையவாக்குதல்
கற்றோரறிவின்காட்சியதாகும்.
(எ-ன்) மேற்சொல்லிய வுருவகமு முவமையு மென்னு மிரண்டிற்கும் புறனடையுணர்–ற்று.

(இ-ள்) உருவகமு மதற்குக் காரணமாகிய வுவமையு மென்னு மிரண்டலங்காரமு முற்றக்கூறுவதற் கடங்கா முறைமையை
யுடைய வாகலானும் அவற்றைக் கூறுவதற்காக முந்து நூலுணர்ந்தோரவையின் கண் புகுதாநின்ற யான்
முதியவுணர்விலனாதலானும் இக் கூறிய விரண்டலங்காரத்திற்கு மிந்நூலுள் யானிசைத்த தொகைவிரிகளைக் கடந்து
வருவனவா முருவக வுவமங்களையுங் கூறியவிவற்று ளகப்படுவதாக வுரை கொளுத்தி முழுதுமுணர்த்திய
முறைமையவாக்குதல் அலங்கார முதலிய விலக்கணங்களோடு மிலக்கியங்களையு முற்றக்கற்றோரறிவினுக் கழகென்றவாறு.

உவமையின்வழி பிறந்த துருவகமாதலி னுவமைக் குரைக்கத் தகுவனவெல்லா முருவகத்திற்கு முரைத்துக்கொள்க.
ஈண்டுருவக முற்கூறியதனா லதிகார மிடையறாதெனக் கொள்க.

கூறியவற்றை யொரீஇயினபோல்வருமவற்றுட் சில வருமாறு :-

காமரதத்தோகைகளிவண்டினமுலவுந்
தாமரைசாராம்பற்றளிநறவுண்–டேமுறுபே
ரின்பத்தினும்பெரிதேயெவ்வுண்மாலைப்பணிந்து
துன்பற்றவர்சேர்சுகம். (261)

இது, பேதத்தை யபேதமாக்கின வாய்பாட்டால்வந்த வுருவகம். இது முதலே உவமேயமு முவமவுருபுந் தொக்க தொகையுருவகம்.
என்னை? கண்ணாகிய வண்டினம் முகமாகிய தாமரை வாயாகிய வாம்பல் பானமாகிய நறவு என்பன
முறையே தொக்கதா லென் றறிக. ஆனால் அவற்றினை யவ்வாறாக்கியதென்னை?
வண்டினம்போன்ற கண்களுலவுந் தாமரைபோன்ற முகத்தி லென்பனவோடு மேனையவுந் தொக்கதாக விரித்துத்
தொகையுவமமாக்கப்பெறாவோவெனின், ஆகாது ; என்னை?
முற்றுவமவாய்பாடாக வுவமமொன்றனையுங் கூறும்வாய்பாடு உவமை யுருவக மென்னு மிரண்டற்கும்.
பொதுவாய்பாடேனு மீண்டு மருட்கை யென்னு மெய்ப்பாட்டுவயத்தனாகிப் புணர்ச்சியை மகிழ்ந்து பேதத்தை யபேதமாக்கி
விதந்துரைத்தானாதலிற் றொகையுருவகமாக வுரைகோடலே யாம்.
காட்சிக்குத் “திருவளர்தாமரை” யென்னு முதற்பாட்டு மருட்கை வயத்தனாகிக் கூறிய இவ்வாய்பாடென்றுணர்க.
அற்றேல், இதனகத்துப் பேதத்தை அபேதமாக்கிய தியாதோவெனின், தாமரை வேறு முகம் வேறாயிருக்கவு
முகத்தைத் தாமரையென்றே பேதமறக் கூறியவாற்றானு மேனையுவமேயத்தினையு மவ்வாறே கூறியவாற்றானு முணர்க.
பகுதி – இயற்கை. துறை – புணர்ச்சிமகிழ்தல்.

மேலிருந்தவிண்ணோர்வியத்தக்கசெம்மையதாய்ப்
பாலிகையுட்டெள்ளமுதம்பாலிக்குஞ்–சால்புடைய
திங்களைக்கண்டான்மாறன்செம்பொற்றுடரியுள்யார்
தங்களுளங்கோடாதவர். (262)
இது, அபேதத்தைப் பேதமாக்கிய சிலேடை வாய்பாட்டான்வந்த அற்புதவுவமை.
இதனுள் அபேதத்தைப் பேதமாக்குதல் சந்திரனொருவ னன்றி்ப் பிறனொரு சந்திரனின்றாகவுஞ் செம்மையுடையதாய்ப்
பாலிகையுட் டெளிந்த அமிர்தத்தை விளம்புந் திங்களெனப் பேதித்துக் கூறினமையா னறிக.
பாலிகை வள்ளமும் அதரமும் ஆதலாற் சிலேடை. பகுதி – இதுவுமது. துறை – தலைவனைவியத்தல். இதுவுந் தொகைநிலையுளடங்கும்.

காவிற்பிறவாக்கனகக்கொடிகமல
வாவிக்கடங்காமடவன்னம்–பூவிற்
பிறவாநறுந்தேறல்பேர்நகர்மால்வெற்பி
லுறவாய்நிறையுண்ணுரு. (263)
இது, சம்பந்தமுள்ளதைச் சம்பந்தமில்லையாக்கி வந்த வுருவகம்.
அன்றியும், காவிலும் வாவியிலும் என்றமையால் விரோதவலங்காரமு மிதனுள் விளைப்பாருமுளர்.
“மலையிடைப் பிறவா மணியே யென்கோ, வலையிடைப் பிறவா வமிழ்தே யென்கோ” என்பனவற்றையும்
விரோத வலங்கார மாக்குமாறுபோல என்றறிக. பகுதி – இதுவுமது. துறை – இயல்பிடங்கூறல்.

கோதிலாப்பொன்னைக்குழைத்துமதன்றூரியக்கோல்
காதலாற்கைப்பற்றிக்காட்கரைமால்-போதங்
குழைந்தருள்பொற்கொம்பிற்குறித்த்தென்கோவின்பந்
தழைந்தருளிக்கொம்பினையேதான். (264)
இது சம்பந்தமில்லாததனைச் சம்பந்தமாக்கிக் கூறிய மோகவுவமை. விகாரவுவமை அதிசயவுவமை எனினுமாம்.
பகுதி – இயற்கை. துறை – நலம்புனைந்துரைத்தல்.

மாயன்குருகாபுரியனையமாதரா
ளாயந்தொழவாழருமையுறிற்–றூய
கனவென்கோகூடிக்குழைந்ததனைக்காமர்
நனவென்கோயாதென்கோநான். (265)
இதனுள், குருகாபுரியனையாளென்பது குருகாபுரி செயற்கையா னன்றி யியற்கையானு முதலே யழகுடையது
போன் றிவளு மியற்கை யான் அழகுடையளென்பது தோன்ற நின்றமையா லிதுவு முவமையு ளோர் பேதம்.
பகுதி – இதுவுமது. துறை – ஆயவெள்ளம் வழிபடக் கண்டிது மாயமோவென்றல்.
“பாயும்விடையரன்றில்லையன்னாள்” என்பது மிது.
“வில்லே ருழவர் பகைகொளினுங் கொள்ளற்க, சொல்லே ருழவர் பகை” எனவும்,
“நல்லார்கட் பட்ட வறுமையி னின்னாதே, கல்லார்கட் பட்ட திரு” எனவும்,
இவைபோல்வன பிறவு மிவற்றின்பாற் கூட்டியுணர்க.

திருந்திழையாய்மாறன்றிருவாய்மொழியே
மருந்துபிறவிப்பிணிக்குமாதர்–தரும்பிணிக்கு
வாய்ந்தமருந்தென்பார்மடல். (266)
இது, மாதர்தருங் காமமாகியபிணிக்கென்பது மாதர்தரும் பிணிக்கென மாட்டேறிலாதுவந்த வுருவகம்.
பகுதி – மடல். துறை – உலகின் மேல்வைத்துரைத்தல். பா-இரண்டுவிகற்பத்தால்வந்த நேரிசைச் சிந்தியல் வெண்பா.

வழிமதுத்தார்மாறன்மணிவரைமேன்மாதர்
விழியெழுதினாலுமிணைவெற்பெழுதினாலு
மொழியெழுதலாமோமொழி. (267)
இது, மாட்டேறில்லாதுவந்த ஏகாங்கவுருவகம் ; என்னை? முலை யென்பவற்றை யுவமைவாய்பாடுதோன்றக்
கூறினமையா லுபயமுலை யாகிய விணைவெற்பெனக் கோடல்வேண்டுமென் றுணர்க.
பகுதி – இதுவுமது. துறை – எழுதவரிதென்றல். பா-ஒருவிகற்பத்தால்வந்த இன்னிசைச்சிந்தியல்வெண்பா.

நாணுநிறையுநறுநுதாஅன்மாணிழையார்
தந்தவெங்காமத்தழல்கதுவவெந்து
தருமடன்மாவேற்றந்தரும். (268)
இஃ தேகதேசவுருவகம். இதனுள், நாணும் நிறையுமாகிய பஞ்சென வுருவகஞ்செய்யாது காமத்தழலென வொன்றையே
யுருவகஞ்செய் தமையா னென்றறிக. பகுதி – இதுவுமது. துறை – நாணழிவுரைத்தல்.
பா-அடிதொறூஉமெ ரூஉத்தொடைபெற்றுவந்த இன்னிசைச்சிந்தியல்வெண்பா.

தருமன்றண்ணளியாற்றனதீகையால்
வருணன்கூற்றுயிர்மாற்றலின்வாமனே
யருமையாலழகிற்கணையைந்துடைத்
திருமகன்றிருமாநிலமன்னனே. (269)
என்பதும் ஒருவகையுருவகம் ; என்னை?
தண்ணளியால் மன்னனாகிய தருமன், தனதீகையால் மன்னனாகிய வருணன், உயிர்மாற்றலால்
மன்னனாகிய கூற்று, அருமையால் மன்னனாகிய வாமன், அழகால் மன்னனாகிய காமன் என வுருவகஞ்செய்துணர்க.

மன்னர்மடங்கன்மறையவர்சொன்மாலை
யன்னநடையினார்க்காரமிர்தந்–துன்னும்
பரிசிலர்க்குவானம்பனிமலர்ப்பைந்தா
ரெரிசினவேற்றானையெங்கோ. (270)
என்பதும் கூறிய ஒருவகை யுருவகம்.

வருந்தியீன்றாண்மறந்தொழிந்தாள்வளர்த்தாள்சொற்கேட்டில்கடிந்தாண்
முருந்தின்காறுங்கூழையைமுனிவார்நின்னையென்முனிவார்
பொருந்திற்றன்றாலிதுவென்னாய்பொன்றுமளித்திவ்வுயிரென்னாய்
திருந்துசோலைக்கருங்குயிலேசிலம்பவிருந்துகூவுதியால். (271)
என்றற் றொடக்கத்தன வுருவக இலக்கணம்விளங்கநின்றிலவேனு மதனிடத்து மயக்கிநின்றன கொள்க.
என்னை கொள்ளுமாறெனின், ஈன்ற குயிலாகிய பெண் மறந்தொழிந்த, வளர்த்த காக்கையாகியபெண் இல் கடிந்த,
பெண்குயிலாகியபெண்ணே யெனக் கொள்வதை மயக்கிநின்றமை காண்க.

3-வது உருவகம் முற்றும்

————–

4-வது உள்ளுறையுவமம்

——

123.உணர்வதற்கரிதாமுவமப்போலி
புணர்திறம்வினையேபொருண்மெய்யுருவெனப்
பிறப்பொடுமைந்தாம்பெற்றித்தாகிச்
சிறப்புறுதிணைகளிற்றெய்வதமொழிந்த
கருப்பொருள்களனாக்கட்டுரைபயின்று
முவமையோடெதிருள்ளுறுத்தலுற்றயலா
யுவமச்சொற்றொகலொருதலையாகியு
மன்பினதளவாமகத்திணையிருவயி
னின்பதுன்பத்திசைதிரிந்திசையாத்
துணைவன்றுணைவிதோழிசெவிலி
யிணையெனும்பாங்கன்பாணனென்றிவராற்
கொள்கையின்வரூஉங்குறிப்புரைத்தாகும்.
(எ-ன்) வைத்தமுறையானே யுள்ளுறையுவமமென்னுமதற்குப் பொதுவிலக்கணமுணர்–ற்று. உவமப்போலியென்று மதற்குப்பெயர்.

(இ-ள்) உணர்வினா லுணர்தற்கரிதாகிய வுள்ளுறையுவமமென்பது முற்கூறிய வெளிப்படையுவமம்போல
வினைபயமெய்யுருவுகாரணமாகத் தோன்றுமவற்றினோடும் பிறப்புங்கூட்டி நிலைக்களனைந்தினோடு
மவ்வவ நிலங்களிற் றெய்வதமொழிந்த கருப்பொரு ணிலைக்களனாகவு மழகிய வுரையுட் பயின்றும்
வெளிப்படையாகவரு முவமப்பொருளோடும் அதற்கெதிராகிய வுமமேயப்பொருள்களை யுள்ளுறுத்துக்கொள்ளும்
படித்தாயு முவமேயம் பாடலுட்பயின்றுவாராது அயலாகியு முவமவுருபு தொகுத லொருதலையாகவுங்
களவு கற்பென்னுங் கைகோளினிருவகையினு மின்ப துன்பங் காட்டுவனவா யிசைதிரிந் திசைப்பனவாய்த்
தலைவன் றலைவி முதலியபெயர்களாற் குறிப்புரையாய்வரு மென்றவாறு.

உணர்வதற்கரிதா மென்பதனால் ஏனையுவமம் புலப்படக்கூறாத வுள்ளுறையுவமத்தைத் தருகின்ற
கருப்பொருட்குச் சிறப்புக்கொடுத்துக் கூடி நிற்குமென்பதாம்.
கொள்கையின்வரூஉமென்பதனால் “கிழவி சொல்லி னவளறி கிளவி, தோழிக் காயி னிலம்பெயர்ந் துரையாது” எனவும்,
“கிழவோற் காயி னுரனொடு கிளக்கும், ஏனோர்க் கெல்லா மிடன்வரை வின்றே” எனவும்,
“கிழவோட் குவம மீரிடத் துரித்தே,” கிழவோற் காயி னிடன்வரை வின்றே” எனவும்,
“தோழியுஞ் செவிலியும் பொருந்துவழி நோக்கிக், கூறுதற் குரியர் கொள்வழி யான” எனவும்
வருங் கூற்றுக்களோடும் தோழியு முழையரும் தலைவன்கொடுமைகூறும் வழியினும் பிறவழியினுந்
தலைவனூரின்கண்ணுள்ள கருப்பொருள்களானவைசொல்லத் தலைவற்கேயன்றியுந் தலைவிக்கேற்றனவா முவமத்
தன்மைத்தோற்றத்தனவா யுள்ளுறையுவமங்கோடலும்,
பிறவாறு வரு வனவா மவைகளுங் குறிப்புரைத்தாகு மென்பதனானு முய்த்துக் கொள்க.
பிறப்பாவது அவ்வவ நிலங்களி லிழிந்தபிறப்போடுஞ் சார்த்திக் கூறல். உள்ளுறுத்தல் – உள்ளேகுறித்தல்.
ஒருதலை – நிச்சயம். அகத்திணை யிருவயினென்பது இறந்ததுபோற்றலென்னுந் தந்திரவுத்தி,
இசைதிரிந்திசைத்த லென்பது செய்யுட்சொற்கடம்பொருளுணர்த்தாது வேறுபடக்கூறுதல்.
இசையாவது சொல். சொல்லாவது எழுத்தினா லாக்கப்பட்டுப் பொருளறிவுறுத்துமோசையாகலி னிசையென்றார். இஃ தாகுபெயர். என்னை? “இசைதிரிந்திசைப்பினுமிசையுமன்பொருளே, யசைதிரிந்தியலா” என்னும் பொருளியற்சூத்திரத்தா னுணர்க.

இவற்றிற்கெல்லாம் செய்யுள் வருமாறு :-

காமர்பன்மலர்கஞலியபொதும்பர்
மாமரப்பணையின்மதுகரமிழைத்த
முதுநறுந்தேறனொதுமலர்முன்னுபு
கொளத்தகுமரபிற்குன்றவாண
வரைதலின்வரையாதொழுகலினிருவிரு
மாறுபட்டொழுகியமதியினிராகலிற்
றிருமகிழ்மாறன்றிருவருட்கிலக்கா
யொழுகாதவருளத்தொன்றா
மழுகாமதியின்மறுகுவல்யானே. (272)
என்பது வினையுவமப்போலி ; என்னை? மாமரப்பொதும்பரகத்து மது கரங்கள் தமக்குப் பின்னைக்கு
நுகர்வதாக மறைத்துவைப்ப விளைந்த தேனை நொதுமலராராய்ந்து கைப்பற்றிக்கொடுபோங் குன்றவாணனே
யென்றதனாற் களவினோடுங்கூடிய கூட்டத்தை நீட்டித்துப் பின்னரிவளை வரைந்துகொள்ளக்கடவேனென நினைந்த
நினைவு தவறும்படி பருவ முதிர்ந்த விவளையும் பிறர்நயந்து பொன்னணிந்து கொடுபோவ ரதுபோல வென்பவாகலான் ;
உவமைக்குப் பிறிதுபொருள் எதிர்த்துவமஞ்செய்யா தாண்டுப்பிறந்த கருப்பொரு ளவற்றோடு
முள்ளுறுத்துவைத்தலி னிஃ துள்ளுறையுவமமாயிற்று.
அவற்றோடு மிஃது நொதுமலர் கொடுபோரென்னுந் தொழிலோடு மிவளையும் பிறர்கொடுபோவரென்னுந்
தொழி லுவமங்கொள்ளநின்றமையின் வினையுவமப்போலியாயிற்று. அன்றியுங் காமர்பன்மலர் கஞலிய
பொதும்ப ரென்பது நற்றாய் தோழி செவிலி முதலியோர்வைகு மனைக்குவமையாம்.
திணை – குறிஞ்சி. கைகோள் – களவு. கூற்று – தோழி. கேட்போன் – தலைவன். இடம் – முன்னிலை. காலம் – நிகழ்வு.
பயன் – இற்செறிவுரைத்து வரைதல்வேண்டுமென்றது. மெய்ப்பாடு – அச்சத்தைச்சார்ந்த பெருமிதம்.
பகுதி – பகற்குறி. துறை- வருத்தங்கூறி வரைவுகடாதல். காமர் – அழகு. ஒழிந்தனவுமுரையிற் கொள்க.

இறைவறங்கூராவீர்ந்தண்பொய்கைத்
துறைதொறுந்துவன்றதோடவிழ்பன்மலர்
மாந்துபுவயினிறைவெய்தியகவரி
யேந்தெழின்மாடத்தீன்றகன்றுள்ளிப்
படர்வுழிப்படர்வுழிப்பணைமுலைக்குறுங்கண்
மடைதிறந்துவளகமடுநிறைத்தொழுகு
பாற்றடினியினயற்பழிதீர்பேடையைப்
போற்றறுகளிப்பிற்புணர்ந்தவண்மூழ்கிப்
புனிதமுற்றிருசிறைபுலர்த்தியவோதிமந்
தணந்தயற்கழனிச்சாதிப்பெடைகளை
மணந்ததனனந்தலைமள்ளர்தாமுழுத
நாற்றடியதன்கணறுந்தழைபதனழிந்
தூற்றெழுகளங்கவுறுபுனலாடிப்
பண்டுதான்மரீஇயபானிறப்பேடையைக்
கண்டுதான்வளைக்குங்காமருகடல்கெழு
கண்ணகன்ஞாலங்கண்டுகண்ணயப்பான்
விண்ணவர்வியப்பான்மேதகுபடிவத்
தரவணைத்துயின்றருளரங்கத்தமுதி
னுரவுநீர்க்காவிரிக்குறுபுனலூர
புல்லேன்பொதுவுணின்மார்பெனச்
சொல்லேன்புன்மனத்தொடர்புடையேனே. (273)
இதுவும் வினையுவமப்போலி. இதனுள், இறைவறங்கூரா என்பது சிறிதும் வற்றாதவென்றவாறு.
ஈர்ந்தண்பொய்கை – மிகவுங்குளிர்ந்த பொய்கை.
“துறைதொறுந்துவன்ற……………. கவரி” இடந்தோறுநெருங்கின இதழ்விரிந்த தாமரை முதலிய
பலமலரையு முண்டு வயிற்றைநிறைத்தல் பொருந்தின காரான்.
“ஏந்தெழில் . ,………….. தொடர்புடையேனே” எ-து உயர்ந்த அழகையுடைய மாளிகையினிடத் தீன்றகன்ற
குழக்கன்றைநினைந்து செல்லுமிடத்து முறுகின முலைக் குறுங்கண் மடைதிறந்து பள்ளவாவிகளைப் பெருக்கி யோடாநின்ற
பாலாற்றின்பக்கமே குற்றமற்ற தனதுபேடையைப் பாதுகாப்பற்ற களிப்பினோடும்புணர்ந்தப் பாலாற்றினடுமூழ்கிப்
பவித்திரமுற் றிருசிறரும் புலர்த்திய சேவலோதிம மப்பேடையை நீங்கி யயல்வயற் கூட்டப் பெடைகளை
மணந் தக்கழனிநடுவண் மள்ள ருழுத நாற்றடிநனந்தலை நறியதழைக ளழுகி யூற்றிருந்த சேறு மிகுந்த
புனலிடை யாடி முன்னர்த் தான் மணந்த வெண்ணிறப்பேடையைப் புணர்ச்சிகுறித்து வளையும்,
அரவணைத்துயின்ற அரங்கத்தமிர்தி னுரவுநீர்க்காவிரிக்குறுபுன லூரனே !
புல்லேன் பரத்தையர் பொதுவுணின்மார்பெனச் சொல்லேன் புன்மனத்தொடர்புடையே னென்றவாறு.

பொதுவுணல் – பரத்தையர் பலரா யேககாலத் தின்பத்தைப் பொதுவாக அநுபவித்தல்.
இதனுள், பரத்தையரென்பது சொல்லெச்சம். ஒழிந்த அகல முரையிற்கொள்க.

அஃதாக ; இதனையும் வினையுவமப்போலி என்ற தென்னையெனின், தனக்குரிய பேட்டோடும் பாலாற்றினயற்
புணர்ந் ததன்பின்னர் அப் பாலாற்றின் முழுகியசேவ லன்னப்பெடையைநீங்கி யயற்கழனியிடத்து வேற்றுப்
பேடைகள் பலவற்றையும்புணர்ந் ததனள்ளிடை நாற்றடிக் களங்க வுறுபுனலின் முழுகி யக்களங்கப்புனல்
புலராமுன்னம் பண்டு தான் மரீஇய பேடையைவளையு மென்பதனால் நமதகச்சோலையினடுவட் பனிநீராற் பூரித்த
புழுகுசுனையினதய லென்னோடும் பாதுகாப்பற்ற களிப்புடன் உவர்ப்பில்லாவின்பத்தைத் துய்த்துப் பவித்திரமெய்த
வேண்டி முழுகி யீரவாடைகளைந்து நனைந்த குழற்கற்றை புலர்த்தி யெதிர் முகமாகவிருந்த நீ நீங்கி
யெனதுமாளிகைக் கயலே சேரிப்பரத்தையர் பலரையுந்தோய்ந்த வேர்வோடுங் குழம்பிய மான்மதச்சேறு
புலரா முன்னம் வாயில்வேண்டாதுவந் தெனது பள்ளியிடத்தானாகி மணிமேகலையைப்பற்றுதற் கிருகையால்
வளையாநின்றா யென்னும் உவமேய வினை கருப்பொருள்களனாகத் தோன்றிநின்றமையா னென்றுணர்க.

இது திணை – மருதம். கைகோள் – கற்பு. பகுதி – பரத்தையிற் பிரிதல். கூற்று – தலைவி. கேட்போன் – தலைவன்.
இடம் – முன்னிலையாய பள்ளியிடன். காலம் – நிகழ்காலம். பயன் – ஊடறீர்தல்.
மெய்ப்பாடு – வெகுளியைச்சார்ந்த வுவகை. இதற்குத் திணையுட்டிணை – பெண்பாற்கூற்றுப் பெருந்திணை.
துறை – இல்லவைநகுதல் ; அல்லது பரத்தையிற் பிரிந்துவந் தாற்றாமையே
வாயிலாகப் புகுந்த தலைவனா னூடறீர் கின்றாளாய பரத்தைகூற்றுமாம்.

குவளையுங்குமுதமுந்தவளவொண்பதுமமுந்
திசைதிசையோசனைதேங்கமழ்திவ்விய
வசைதீரந்தண்மயிலைவேலிப்
பொய்கையுட்செவ்வியிற்பொதியவிழ்புனிதச்
செய்யதாமரைத்தேறலையளவளா
யுவட்டாதருந்தியுமுருகியசுரும்பதன்
கரைசேர்வெள்ளிடைக்கலித்தநீர்முள்ளியிற்
பாடவிழ்ந்தயற்சுரும்புளர்ந்துணப்பதனழி
பூநறாவுண்டின்புறுபுனலூரன்
றெண்டிரைக்காவிரித்திருவரங்கேசன்
றொண்டர்தந்தொண்டர்தொடர்பினையொரீஇப்
போதம்புறந்தரப்புரைதீரின்னுயிர்க்
கேதங்கொள்ளுநரிதயம்விட்டகலா
தொல்லாப்புலன்வழியுய்க்கும்
புல்லறிவினுட்குடிபுகும்புன்மையனே. (274)
இது பயனுவமப்போலி ; என்னை? பொய்கையுட் பவித்திரச் செய்யதாமரை பருவத்தின் மலர்ந்துகு புதிய தீந்தேறலை
யளவளாயுண் ணத்தெவிட்டா துள்ளமுருகிய சுரும்பு அதன்கரையினில் மலிந்த முள்ளுடை நீர்முள்ளி
முறுக்கவிழ்ந்தபருவத்து வேற்றுச்சுரும்பு பலவுந் துவைத்துண்ணச் செவ்வியிழந்த பழம்பூவிற் சுருங்கிய
தேனையுண் டின்புறுமெனவே தின்புறுதற் கியாவருமுரிய ரென்னும்பய னுள்ளுறுத்துக் கொள்ளக்கிடந்தமையா னென்றுணர்க.

திவ்ய – நல்ல. புனிதம் – பவித்திரம். அளவளாய் – உடலுமுயிருங் கலந்து. வெள்ளிடை – வெளி. கலித்தல் – மிகுதல்.
புன்மையன் -அறிவினாற் சிறுமையன். வெளியினிற்கும் நீர்முள்ளி யெனவே வீதியினிற்கும் வேசை என்பதாயிற்று.
ஒழிந்த அகலம் நம்பெருமாள் மும்மணிக்கோவை விரித்துரையுட் காண்க. திணையும் பகுதியு மிதுவுமது. துறை – உழைய ரியற்பழித்தல்.

இனியதெள்ளமிர்தாயெறித்தெழுகிரணப்
பனிமதியகடுழப்பணைநெடும்பொங்கர்ப்
பூந்துணர்ததைஇயபொழிலெழினள்ளிடை
யீர்ந்தண்கோட்டகத்தினமலர்முற்றிய
பொதியவிழ்தாமரைப்பொகுட்டாசனத்து
மதிநலனுறப்புணர்மாண்புடைப்பெடையொடும்
வீற்றிருந்தின்புறுமேன்மையோதிமமொரு
பாற்படுகரைசேர்பன்மரக்காவிற்
குறுகுபுகொடுமுட்டாழைக்கூன்சினை
வெறுநிலத்தடர்தரவிரித்தபாசடைமேற்
றளிநறைமாந்துபுசார்பெடைக்குருகொடு
புணர்தலுநலனுறும்புனன்மலியூரன்
பூமகளிலைகுவாம்பூண்முலைமுகடுழத்
தேமவிழ்பசுந்துழாய்த்திருமணிமார்பன்
றென்னரங்கேசன்றிருவருட்கிலக்கா
முரனுடையோர்களுயிர்த்துணையெனவா
ழில்லறம்பழிபிறங்காதிருந்தில்லி
னகனமர்ந்தானாதுறையுந்
தகவேதுமிலாததவறுளோனே. (275)
இதுவும் பயனுவமப்போலி ; என்னை? இருமனமு மொருமனம் போலப் பேரானந்தமெய்தப் புணர்ந்த பேடையோடும்
பொதியவிழ்ந்த தாமரைப்பொகுட்டி லரசுவீற்றிருந் தின்புறுஞ் சேவலோதிம மப்பேடை யைப்பிரிந்து
வாவிக்கொருபக்கமான கரைசேர் பன்மரக்காவின்புறத்து வளைந்த முள்ளுடைத்தாழை முடச்சினை
வெறுநிலத்துத் தகடுபட விரித்த பாசடைமேலிருந் ததனிடத்துத் துளித்துவிழுந் தேனையுண்ட களிப்பினால்
வெளுத்த சிறையுடைப் பெடைக்குருகைப் புணர்தலு மானந்தமெய்தும் புனன்மலியூரனெனவே
இப் பொற்புடையில்லின்க ணிருந் திக்கற்புடையவளோடு மிருமனமு மொருமனமாகப் புணர்ந்து பேரானந்த மெய்திய
பின்னர் யாம்புடைசூழ அரசுவீற்றிருந்தோன் இவளைநீங்கி எமது மாளிகைக் கயலாய்ப் பொலிவிழந்த
சேரிப்பரத்தையைப் பெண்டன்மைமாத்திர மொத்தலிற் காமபானத்தையுண்ட புத்திப் பிரமையா லுவர்ப்பின்றிப்
புணர்ந்ததனா லின்பமெய்துமூரன் றகுதி யொன்றுமில னென்றுரைத்தபான்மை யுள்ளுறுத்துக்கொள்ளக்கிடந்தமையா னென்றுணர்க.

இதற்கும் விரித்துரை நம்பெருமாள் மும்மணிக்கோவையுரையுட் காண்க. பகுதி – இதுவுமது.
துறை – தோழி தலைவனை யியற்பழித்தல்.

நீர்நிலைமுற்றியநிழன்மலிசோலையுட்
கார்வழங்காதகாலையுங்கவின்பெற
வேர்முதற்பழுத்துவியன்சினைப்பலவு
வளங்கெழுநாடவெம்மணிபுரைமாண்கவின்
புறந்தருமாயினும்புனிதநின்னின்றா
லரவணைத்துயிலமர்ந்தருளரங்கேசன்
றூநீர்க்காவிரித்துறைபடிந்தல்லதை
யொல்லேன்மலரமளியினுறப்
புல்லேன்பரத்தையர்ப்புணர்ந்தநின்மார்பே. (276)
இது மெய்யுவமப்போலி ; என்னை? கார்வழங்காதகாலையும் நிழன்மலிசோலையுட் பலவு வேர்முதற்பழுத்து
வாட்டமின்றி வளனெய்தினாற்போல நீ யென்னிடத் தருளின்றிப் பரத்தையர்மாட்டுப் பிரிந்தகாலத்தும்
ஆயவெள்ளம் விட்டுநீங்காத எனதுமனையிடத் தில்லறங்கோடாதுநடத்துதற்பொருட் டித்துணைப்போது
முளனானே னென்றதாக வுள்ளுறுத்துக்கொள்ளக்கிடந்தமையானென்றறிக.
இதற்கு மொழிந்த விரித்துரை மும்மணிக்கோவையுரையுட் காண்க. பகுதி – இதுவுமது. துறை – அணைந்தவழியூடல்.

உலைவினீரழுவத்துறுசிறையதன்க
ணலைகொழித்தலைதொறுமலைதொறுமொத்துண்
டழுங்கஞரெய்தியயாக்கையதாகியுந்
தன்னால்வளர்க்கத்தருசினையதன்மேன்
மன்னாதரவின்வளர்மீன்வைத்தகண்
வாங்காதுய்த்துவளர்புனலூரற்
கேவவிற்பிழையாவின்னிசைப்பாணர்
புதுவதுவாய்வழிபிழைத்திவண்போதரு
மதுநினைந்தருவிருந்தளித்திடற்கந்தோ
மதுமகிழ்மார்பினன்வழுதிநன்னாட்டவர்
குடிஞையைக்காய்திறன்குறிப்பதுமின்றாற்
காதோடுலவுகட்காரிகை
யாதோகறியீங்கினிதமைப்பதுவே. (277)
இதுவே மெய்யுவமப்போலி ; என்னை? அழிவில்லாத நீர்க்கயத்துண் மிக்க சிறையிடத்துத் திரையெடுத் தெற்றுந்
தோறு மெற்றுந்தோறு மதனா லெற் றுண்டு மிகவுந் துன்பமெய்திய யாக்கையோடுங்கூடிய மீன் றன்னால்
வளர்க்குஞ் சினையின்மேல் வைத்தகண்வாங்காது வளர்த்தாற்போல யானுந் தலைவர்பிரிந் தெனக்களித்ததுன்ப
மென்மேனியை வருத்தவு மம்மேனியோடு மில்லின்கணிருந்து மென்னாலோம்பப்படு மில்லற
மோம்புதற்குளனானே னென்ப துள்ளுறுத்துக்கொள்ளக்கிடந்தமையா னென்றறிக. இதுவும் பகுதி யது.
துறை – பாணனைப் பழித்தல் ; தலைவிகூற்று. இதற்கும் விரித்துறை கூறவேண்டுவதில்லை.

பன்மலர்கஞலியபழுமரச்சோலையுட்
டன்னிழறுணையாத்தளிர்த்தமௌவலின்மலர்
விரிகதிர்தெறுதலின்வெம்மையுற்றுணங்க
முட்புறக்குடக்கனிமுடப்பலவதனயற்
செங்கிடைமலர்கவின்சிறப்பவுநிழற்று
மொண்புனலூரற்குறுபழிவிளைக்கும்
யாமேதிலமேதிலமெனவெங்கையர்
மாளிகைபயின்றுமதங்கருற்றிலராற்
புவிப்பாவலர்புகழ்புரவலன்மதுர
கவிப்பாவலன்புகழ்கருணையங்கடவுண்
மதுமகிழ்மார்பினன்வண்குருகூரன்
சதுமறைப்பொருளாற்றருதமிழ்மறையினுண்
முதுமொழியுணராமூடமதடைந்த
மனனகமலமிகமறுகுன
ரினமெனலொன்றாயிகழ்பொய்ம்மையனே. (278)
இது நிறமல்லாத பண்புவமைப்போலி. என்னை ? சோலையுட்டன்னிழலே துணையாகத்தளிர்த்த முல்லைக்கொடியின்
மலரானது விரிந்த கதிர்தெறுதலான் வெம்மையுற்றுணங்க முடப்பலவு தனக் கயலாகத்தோன்றின
செங்கிடைமலர்க் கழகுமிக அதற்கு நிழல்செய்யுமது போலத் தலைவனும் தன்னையேதுணையாக
ஆவிதளிராநின்ற விவளுங்காமத்தீயால் வெந்து மேனி வாடத் தனக்கயலாய பரத்தையர்க்குடலு முயிருந் தளிர்ப்ப
நலங்கொடா நின்றா னெனப் பெண் புள்ளுறுத்துக் கொள்ளக்கிடந்தமையா னென்றுணர்க.
பகுதி – இதுவுமது. துறை பாணனொடுவெகுளல். கூற்று – தோழி.

ஒன்றாய்ப்பரந்தவுறுவளிகறங்கலின்
மின்றாழ்பன்மின்மிளிர்விசும்புழுசினை
சுமைமலிந்தொசிதரத்துணர்த்தமென்பூமுகை
பொறிச்சுரும்புளர்தொறுமுளர்தொறும்பொதும்பருண்
முறுக்குடைந்திழிதரூஉமொய்ந்நறுந்தேறல்
பரந்துபன்முகத்தவாய்ப்பவளக்கொடியொடுங்
குரூஉக்கட்பரூஉத்தாட்குடம்புரைசெருத்தற்
கயவாய்மேதிகட்கழுநீருண்
டுயவால்வைந்நுதித்தொடர்நெறிமருப்பிற்
புறக்காழ்வயிரப்பூங்கழைதடிந்துகு
நிறக்காழ்நித்திலநிரந்தரம்வரன்றயல்
வெள்ளிடைநிவந்தமேதகுசுவலினை
யுள்ளுயிர்ப்பெடையையுறைளினிருத்திப்
பாலுணீர்தெரித்துப்பருகுமொண்சேவ
லாலுநீர்ச்சிறைபுக்காய்ந்திரைகொணர்வலென்
றிகந்தயலிடைப்படிந்தெழுமயர்வுயிர்ப்பான்
வாலுகவைப்பெனமறுகுபுகுறுகிவீழ்ந்
தன்மையிற்றவக்குற்றச்சப்பார்வையிற்
புராதனப்பொய்கையுட்புகுபுனலூர
பொருவருதாமரைப்புதல்வனைப்பயந்த
திருமறுமார்பன்றிருவரங்கத்துப்
பொதுநலப்பெண்டிர்பொதுவுணின்மார்ப
மல்லனீர்படிந்தல்லது
புல்லேந்தீண்டலெம்பொன்னடிச்சுவடே. (279)
இதுவும் பண்புவமப்போலி; என்னை? சேவலன்னம் நித்திலங்கள் வெள்ளிடைநிவந்த மேதகுசுவலினை
வாலுகவைப்பெனக்குறுகி யிருத்தற்கு மென்மையில்லாததனோடு மறிவுமயக்கமுற்றதனால் இலச்சையுற்றுத்
தன் பேடையையிருத்திப்போந்த பொய்கையுட் புகாநிற்கு மதுபோல நீயுங் கற்பு நாணு முதலிய
நற்குணங்க ளின்றித் தன முதலியனவெய்தும் பெண்டன்மை மாத்திரமேயுடைய பரத்தையரையு நற்குண
நற்பெண்டிரென்று தோயுமளவிற் பொருண்மேற்சென்று வற்கென்ற துர்க்குணத் தாராதல்கண்டதனோடு
நினது புத்தி மயக்கமுற்றது நினக் கிழிபென நாணி யெம்மனையிடத்துவந்து வாயில் வேண்டா
நின்றா யென்ப துள்ளுறுத்துக் கொள்ளக்கிடந்தமையா னென்றுணர்க.

வெள்ளிடை – வெளி. நிவந்தது – உயர்ந்தது. சுவல் – மேடு. வாலு கவைப்பு – மணற் குன்றாகிய விடம்.
தவக்கு – இலச்சை; நாண், கருத்துப் பொருளாய பண்புவமப்போலி.
பகுதி-இதுவுமது. துறை – அணைந்த வழியூடல். இது கூற்று – இற்பரத்தை.

ஓங்கியகுரம்புசாருவளகவயின்வயின்
வீங்கியதிணிதோண்மிடலுடைமள்ளர்
கதைபெய்தாற்றலிற்சுடுமண்பன்முறை
ததைவுறப்படுத்தசால்பிற்றெண்ணீர்
வார்ந்துகுகவர்முழைமதகுபடர்குடுமியிற்
சேர்ந்தசைவறவிருசிறகருமொடுக்கி
மறைபுகுநோக்கின்மனப்பட்டிமையாற்
றுறைபுகுகயலினைச்சோர்புகண்டெடுத்துக்
கூர்வாய்வெண்சிறைக்குரண்டமென்பெடைக்
கார்வாயெனவருத்தியினருத்துபுதுடித்
தயல்வீழ்வதனையற்றம்பார்த்து
மிச்சிலென்றறிந்தும்விழுநெறியொரீஇ
நச்சியுண்புலவுநாற்றத்தோடுஞ்
செங்கால்வெள்ளுகிர்ச்சேவலோதிம
மொருசிறையிருந்தவோவாச்செவ்வி
யிருசிறைப்பேடையேழின்மலர்குறுகு
நளிமலர்ப்பொய்கைநல்வயலூர
திருநெடுமாயன்றிருவரங்கத்துப்
பொருணசைப்பரத்தையர்பொறித்தநின்மார்பிற்
றனக்குறியாநிற்றழுவுபுசிதைவுறின்
மனக்கிடரிழைப்பதுமன்றி
நினக்கிடருறுமானெருங்கலெம்மிடனே. (280)
இது பிறப்புவமப்போலி. என்னை? இழிந்தகுரண்டந் தன் பேடைக் கருத்துங் கயலை யதுவாய்க்கொள்ளத்
துடித் தயலேவீழ்ந்ததனை மிச்சி லென்றறிந்து மறிவினாலுயர்ந்த அன்னம் அதனை யற்றம் பார்த் தெடுத் துண்ட
புலானாற்றத்தோடுந் தன துத்தமப்பேடையுறையுமழகிய சேக்கை யாகிய தாமரைமலரைக் குறுகுமதுபோல
நீயு முயர்ந்த குலத்துட் பிறந்து மிழிந்தகுலத்துளோர் தோய்ந்தகன்ற மிச்சிலாகிய பரத்தையரிடத் தின்பத்தைத் துய்த்து
வேற்றுநாற்றத்தோடு மெமது நன்மனைக்கண் ணெம்மைத் தீண்ட வந்தனை யாதலா லெம்மைத்
தீண்டல் பொருந்தாதெனக் கூறினாளென் றுள்ளுறுத்துக்கொள்ளக்கிடந்தமையானென்றுணர்க.

பகுதி-இதுவுமது. திணை-பெண்பாற்கூற்றுப்பெருந்திணை. துறை-பள்ளி யிடத்தூடல். கூற்று – இதுவும் இற்பரத்தை.

விசும்புதூர்த்தெழுவியன்சினைமாத்தின்
பசும்புறத்தீங்கனிபறீஇநுகர்கடுவன்
புரப்பவர்குறுகுபுபுலம்புறீஇப்பொங்க
ரிரிந்தலம்போதருமீர்ந்தண்சோலையுட்
புளிங்கறிவேட்டபுன்றொழிற்றன்மையர்க்குப்
பழிப்பின்றாகப்பாகுசெய்தட்ட
கோதறுமான்பாற்குழம்புபொற்கலத்தினுட்
பெய்திருந்தாறும்பெற்றியேய்ப்ப
முடவடிப்பலவின்முதிர்பொற்குடக்கனி
வேர்முதற்பழுத்துவிரிந்தபொற்றீஞ்சுளை
பதனழிபான்மைப்பாய்புனலூர
நூற்கடற்பழகியநுண்ணுணர்வுடையோ
ராற்றலிற்பரவுசீரங்கனுக்கமைந்த
பாற்கடன்முற்றப்பருகுதற்கெழுந்த
பேராப்பெரும்பசியாளர்தம்முன்ன
ராராவள்ளத்தமிர்தமைப்பவர்போற்
சிறுவரையின்பத்துறுதுயரிழைத்தற்
கிரத்தலீங்கியல்பன்றாற்
பரத்தையிற்பிரிதனின்பண்பாகும்மே. (281)
இது, “உள்ளுறையுவமமேனையுவமமெனத், தள்ளாதாகுந்திணையுணர் வகையே” என்னு மகத்திணை
யியற்சூத்திரத்தான் உள்ளுறையுவமந்தா னேனையுவமமென்றுகூறும்படி யுவமையு முவமிக்கப்படும் பொருளுமாய்
நின் றுள்ளுறையுவமத்தினைத்தருங் கருப்பொருட்குச் சிறப்புக்கொடுத்துநின்றது ; என்னை?
ஆகாயத்தை மூடியெழாநின்ற அகன்ற கொம்பர்மாமரத்திற் செம்மை முற்றாப் பசுத்த வினிய கனியைப் பறித்து
நுகர் கடுவனான தச்சோலையைக் காப்பவர் முடுகத் தனிமையுற்று அத னயற்கொம்பரிற் சுற்றித்திரியுங்
காவினுட் புளிப்பாகினை யுண்ணவேட்ட புன்றொழிற்றன் னையுற்றவர்க் கூட்டுவதாகக் குற்றமில்லையாம் படி
பாகுபடுத்திக் காய்ச்சின எப்பிணியுந் தீர்க்கும் பசுவின்பாற்குழம்பு பொன்னின்கலத்துட் பெய்திருந் தாறுமுறைபோல
முடப்பலவின் வேரிற் குடக்கனி முற்றிப் பழுத்து விரிந்த பொன்போனிறத்தையுடைய வினியசுளை யருந்தும்
பருவத்தருந்தாது செவ்வியழியாநிற்கும் பரந்த புனலூரனே! என்றதற்கு ஊரனே !
நீ யுத்தமநாயகியில்லின்கண் மாலைக்காலத்தினுஞ் செல்லா திளைய செவ்வியுடைய சேரிப்பரத்தையைப் புணர்ந்து
விளையாடாநின்றகாலத் தவள் பொதுமகளாதலின் பிறரப்பரத்தை மாளிகையைக் குறுகத் தனியுற்றுத்
தணந் தப் பரத்தை மாளிகையைச் சுற்றித்திரியு மிவ்வூரிடத் தியானு நின்வரவுபார்த்தென்னை
யலங்கரித்து மிகுந்த காந்தியோடுமிருப்ப நின்வரவுதாழ்ப்பக் கவினழியாநின்ற வென் வருத்தத்தைத்
தீர்ப்பா னொருசேரியினிடத் தென்மாளிகைக்கண்வந்து வாயில்வேண்டாநின்ற யென்னிடத் தின்ப
நின்காதற் கார்த்தியுடையதொன்றல்ல வின்னு மச் சேரிப்பரத்தை மாளிகையிற்பிரித னினக்குக் கடனென்று
காமக்கிழத்தி யுள்ளுறை யுவமங்கூறி னளாதலி னெனவுணர்க.

அன்றியும், “உடனுறை யுவமஞ் சுட்டு நகை சிறப்பெனக், கெடலரு மரபி னுள்ளுறை யைந்தே” என்னும்
பொருளியற்சூத்திரத்தா னிது சிறப்பென்றவுள்ளுறை.
இச்சிறப்பென்றவுள்ளுறை “விரிகதிர்மண்டில”மென்னு மருதக்கலியுள்ளும் வந்தமை காண்க.
இது சேரிப்பரத்தையிற் புணர்ந்துவந்த தலைவன்வரவுகண்டு காமக்கிழத்தியூடியவாறுகண்டு சென்றுசார்ந்த
தலைவனுட னூடறீர்கின்றாள் கூறியது. ஒழிந்த அகலம் நம்பெருமாள்மும் மணிக்கோவை விரித்துரையுட் காண்க. கோது – ஆகுபெயர்.

மழைதவழ்பலவின்வான்சினைநீழற்
றழைதருமரம்பைதான்பொறையுயிர்ப்ப
விசும்புமிழ்திவலையின்விழுமிதின்முற்றிய
பசுங்காய்மதுரப்பலன்படுகாலை
நிறத்தபாசடைநீள்சினைவாட
விறப்பளித்துலகிற்பிறர்க்குறுபயனா
மடலவிழ்நறைமகிழ்மாலிகைமார்பன்
றுடரிமால்வரைதுறந்தனளாய்த்தொடர்ந்த
வினையேன்பெற்றமெல்லியலொருத்தியுங்
கனைகதிர்வேற்கைக்காளையுங்கடத்திடை
மன்னியதிருவுமாயோனும்போன
முன்னியதுளதெனின்முக்கோற்பகவீர்
மதிபெறவணங்கினன்மகிழ்ந்தே
சதிர்பெறவிளம்புமென்றளர்வகன்றிடவே (282)
(இ-ள்) மேகந்தவழாநின்ற பலவினது பெரியகொம்பர்நீழலில் வளர்ந்த வாழை யீனாநிற்ப முகில்பெய்யுந்
துளியி னன்றாய்விளைந்த பசுங்கா யினிய கனியானபருவத்துப் பசுத்த விலையாகிய நீண்டசினை வாடுதலோடு
மதற் கிறத்தலையுங்கொடுத் துலகின்கட் பிறர்க்கு மிக்க வூதியமாகு மாறனது துடரிமால்
வரையை நீங்கினளாதலிற் றொடர்ந்து போந்த வினையேன்பெற்ற மெல்லியசாயலையுடையாளொருத்தியும்
நெருங்கிய கிரணத்தையுடைய வேற்கைக்காளை யொருவனுமாக விருவரும் விட்டுநீங்காத திருமகளும் மாயோனும்போல,
முக்கோற்பகவீர் சுரத்தினிடத் தெதிர்வரக்கண்டதுளதேல் யான் கூறியவையெல்லாம் புத்தியுட்கொண்டு மகிழ்ந்து
எனது தளர்வுநீங்கச் சதிராக விளம்பும் ; நும்மை வணங்காநின்றே னென்றவாறு.

இதனுள் செய்து என்பது செயவென்னும் வினையெச்சவாய்பாடாக நின்றது.
இச்செய்யுள் நால்வகையுவமப்போலியும் விரவிவந்தவுவமப்போலி. என்னை ?
பலவின்கீழ் வளராநின்ற வாழையீன்ற தாறுபோல நற்றாயால்வளராநின்ற வென்னாற் பெறப்பட்டாள் என வினையுவமைப் போலியும்,
விசும்புமிழ்திவலையிற் றாறுமுற்றியதுபோல வென்னாலு மாயத்தாலும் இளையள் விளைவெய்தினளெனவே மெய்யுவமப்போலியும்,
பசுங்காய்மதுரப்பலன்படுகாலை நிறத்தபாசடை நீள்சினை வாட விறப்பளித் துலகிற் பிறர்க்குறுபயனா மெனவே
அங்ஙன மிளையளாய் விளைவெய்திய தலைவி யிந்திரியகலினம்வந் தின்பத்திற்குரியளாயின காலத்து
எனது மேனிக்கும் வாட்டந்தந் தெனதுயிரையுங் கொல்லாது கொன்றெனக் கொருபயனுமின்றி யயலானான கணவற்கே
யூதியமாயின ளென்றுகொள்ளப் பயவுவமப்போலியும்,
பண்புவமப்போலியும், வினையுவமப்போலியு மிதனோடேகூடி முன்னும் பின்னு மிவ்வண்ணமே
நால்வகை யுவமப்போலியு முள்ளுறுத்துக்கொள்ள நிகழ்ந்தமையா னென்றுணர்க.
பயவுவமப்போலியாவது வினைகாரணமாகப் புலப்படுங் காரியத்தை யுள்ளுறுத்துக் கொள்ளப்படுவதாம்.
அஃ தீண்டுக் கூட்டத்தாற் பிறக்கும் பேரானந்தம். என்னாற் பெறப்பட்டா ளென்மகள் என்பன
அன்பினதிகத்தானு நற்றாயென்றுந் தானென்றும் வேறல்லவாம் ஐக்கியத்தானுங் கூறினாள்.
பாலைக்கலியுள்ளும் “என்மகளொருத்தியு” மெனக் கூறியவாற்றானு முணர்க.
பகுதி-உடன்போக்கு. துறை-பின் சென்ற செவிலி முக்கோற்பகவரைவினாதல்.

இதனுள் தலைவி தோழி செவிலி இற்பரத்தை காமக்கிழத்தி உழையர் என்போர்கூற்று வந்தன. ஒழிந்தோர்கூற்றும் வந்தவழிக் காண்க.

4-வது உள்ளுறையுவமம் முற்றும்.

—–

5-வது ஒட்டலங்காரம்.

———–

124.குறித்ததைமறைத்துக்குறிக்கொளநிகர்த்ததை
நுவல்வகைதாமேயொட்டென நுவல்ப.
(எ-ன்) வைத்தமுறையானே ஒட்டென்னு மலங்கார முணர்-ற்று.

(இ-ள்) புலவனாற் குறித்தபொருளை மறைத் ததனைக் கற்று வல்லோ ருட்கொள்ளும்படிக் கதற்கொத்த பிறிதொன்றினை
வெளிப்படையாய்க் கூறுங் கூறுபாடுதாமே யொட்டென்னு மலங்காரமென்று கூறுவர் பெரியோரென்றவாறு.
வெளிப்படையாகவென்பது சொல்லெச்சம்.

(இ-ள்) அதுவே – அச்சொல்

125.அதுவே,
பொரு ளிடஞ் சாதி வினை குணம் பொழுதொடு
மருளறுநெறித்தாய்வருதிறனுடைத்தே.
(எ-ன்) இஃ தவ் வலங்காரத்தின் கூறுபாடுணர் – ற்று.

(இ-ள்) அதுவே – அச்சொல்லப்பட்ட ஒட்டுப் பொருள்முதற் காலமீறாகச் சொல்லப்பட்ட வாறு மிடனாக
மயக்கமற்ற நெறியுடைத்தாய்த் தோன்றுங் கூறுபாடுடைத்தா மென்றவாறு.

இவற்றிற்கெல்லாஞ் செய்யுள் வருமாறு;-

கற்றுணர்ந்தவாய்மைக்கவிப்புலவீர்கண்ணனருள்
பெற்றியன்றசெம்பொருளைப்பேணியே – சுற்றம்
வளைத்தருந்தவாழாதுவந்தயலார்கூண்டு
திளைத்தருந்தவாழ்வார்சிலர். (383)
(இ-ள்) கற்பனவாம் நூல்களைக் கற்றுணர்ந்த வுண்மையோடுங் கூடிய கவிப்புலவீர்காள்!
கண்ணனருளைப்பெற் றதனாலுண்டானவுண்மைநிதியை யழியாதோம்பி யதனை மாதா பிதா முதலிய வுரிமைச்
சுற்றங்க டம்மைவளைத்திருந்து நுகர்வெய்தத் தாமு முடனுண்டு வாழும் வாழ்வெய்தாதே சிலர்
தம்மோ டொருவழியு முறவில்லாத வயலார் களித்தருந்த வாழ்வா ரவரறியாமை தகாதென்றவாறு

இது புலவன் குறித்தபொருளை மறைத் ததனைக் குறிக்கொளற்கதற் கொத்த பிறிதொன்றனை வெளிப்படையாய்க் கூறியது.
குறித்த பொருளாவது கண்ணனருள் பெறுதலாலுண்டான வுண்மைப்பொருளாகிய கல்வியோடுங் கூடிய கவி.
பேணுதல்-வாய்மையிழவாது போற்றுதல். சுற்றம்வளைத்தருந்தவாழாதென்பது ஆன்மாவை யீடேற்று முறுதிச்
சுற்றமான பரமபதநாதனாகிய பிதாவும், பெரியபிராட்டியாகிய மாதாவும், ஆசிரியனும் அதனைக்கேட்டு மகிழ்வெய்த
அவர்களைப்புகழ்ந்தப்பாடலை யவர்களுக்கேகொடுத் திம்மைப்பயனோடு மறுமைப்பயனா முத்தியையும்
பெற்றுப் பேரின்பமெய்தி வாழா தென்றவாறு. சிலர் வந்தயலார் கூண்டுவளைத்தருந்த வாழ்வாரென்பது
முன்பிலவர்களைப்போலக் கவிகளாற்புகழ்தற் கியாதுமியைபில்லாத மானிடராகிய வயலாரை வாய்மையிழந்து
புகழ்வதனை யவர்கேட் டுட்கொண்டு களித்தளித்த கூறை சோறு முதலியன
வுடுத்து முண்டும் வாழ்வா ரிஃதென்ன உலகியற்கை யென்றவாறு.

இது, பொருணிலைக்களனாகத்தோன்றிய ஒட்டு; என்னை?
இருவகைப்பொருள் கல்விப்பொருளுஞ் செல்வப்பொருளு மென்பதனாலுணர்க.
ஒட்டென்பதற்கு நுவலாநுவற்சி, பிறிதுமொழிதல், சுட்டு என்பன பரியாயம். திணை – பாடாண். துறை – வாயுறைவாழ்த்து.

உழவுபயன்கொள்வாருயர்நிலத்தினுள்ளாய்
விழைவுபெறவித்தியவித்தல்லா–லழகமையா
வன்பாரில்வித்தியதூஉமால்பொருட்டாற்போர்நிலத்தா
மென்பார்புலவீரெவர். (284)
(இ-ள்) உழவினாற் பயன்கொள்வார் நல்ல கழனியகத்தவாய் மகிழ்வெய்த விதைத்த நல்லவித்துச் சீமன்னாராயணன்
பொருட்டால் விளைந்து களம்புகுமென உலகங்கூறுவதல்லா லுழவினுக்கியாதுஞ் சிறப்பில்லாத வலிய
பாறைநிலத்தில் விதைத்ததும் விளைந்து களம்புகுதுமென்று கூறுவார் புலவீர்காளுலகத் தொருவருமில்லையென்றவாறு.

இதுவுங் குறித்தபொருளை மறைத் ததற்கொத்த பிறிதொன்றனை வெளிப்படையாய்க் கூறியது.
குறித்தபொருளாவது:-தவமாகிய தொழிலாற் றமதுயிர்க்கு முத்தியாகிய வூதியத்தையெய்து மாரியர்கள்
பரவுபகாரத்தாற் பூலோகமாகிய செய்யகத்து நல்ல கழனியாகிய கோயில் முதலிய திருப்பதிகளுள்
விருப்பமுற்றிருத்திய சிறப்புடையுயிர்களே திருமால்பொருட்டாற் பரமபதமெய்துமென் றுலகங்கூறுவதல்லாற்
சிறப்பில்லாத பாறைநிலத்தில் விதைத்த வித்து விளைந்து களம்புகுதாததுபோல மனநலன்யாதுமில்லாத
தறுகண்மையோர்வைகும் பாறையாம் பாலைநிலங்களில் வைகியவுயிர்களறியாமை யேதுவாக
முத்தியைப் பெறுமென்றுகூறுவார்க ளொருவரு முலகின்க ணில்லை யென்றவாறு.

தவம் பெயர்ச்சொல்லெச்சம். உயர்நிலம்-கோயில்முதலிய திருப்பதிகள். விழைவுபெற-விருப்பம்பெற்று.
வித்தியது-நியமித்திருத்தல். வித்து-ஆன்மாக்கள். இது மாட்டேறில்லா வுருவகம்.
வன்பார்-திருப்பதிகளல்லாத பொல்லாதவூர்கள். மால்போர்நிலம் இரண்டுஞ்சிலேடை.
மால்-திருமாலும் அறியாமையும்; அல்லது மேகத்தின்பொருட்டாலென்பதுமொன்று.
போர்நிலம் – சூடுநிற்குங்களமும் பரமபதமும். எல்லா வண்டத்தையு மீன் றகத்திடும் பிரகிருதிக்கு மேற்பட்டகன்ற விரசையையும்
அகத்திருநிலமாதலங் முத்திக்குப் போர்நிலமென்று பெயராயிற்று. போர்த்தல் – மூடுதல்.
இஃது இடநிலைக்களனாகிய ஒட்டு. திணையுந் துறையுமிதுவுமது. ஓம்படை யெனினுமாம்.

வாய்ந்ததமிழ்மாறனருட்புலவீர்மத்திமநோய்க்
கேய்ந்தமருந்தாவின் பாலென்றக்கா–லாய்ந்ததையக்
கற்றாவின்பாலுணர்ந்து கைக்கொளார்மேதியின்பால்
பெற்றார்க்கும்போமோபிணி. (285)
இதனுள் மத்திமநோயென்பது பித்தம். அதற்கு மருந்தாவின் பாலென்றக்கால் என்பது வாகடநூ லதற்கு
ஆவின்பாலே மருந்தென்று கூறியக்காலென்றவாறு. மேதியின்பால் பெற்றார்க்கும் போமோபிணியென்பது
அப்பித்தமாகிய பிணி எருமைப்பாலைப்பெற்றார்க்குத் தீராதென்றவாறு. இது வெளிப்படையாகக்கூறியபொருள்.
குறித்தபொருளாவது, மத்திமநோய்க்கு (என்பது:-பிறர்கூறும் பதி பசு பாச மென்பவற்று ளிடைநின்ற
ஆன்மாவிற்குச் செய்த தீவினையடியாக வெய்தும் பிறவியாகிய பிணிக்கு) நால்வேதத்தின் சாரமாகிய
திருவாய்மொழியென்னு-மாவினிடத்துண்டாகிய வுண்மைஞானமாகிய பாலை யான்மஞானத்தினிடத்துத் தலைப்பெய்யாது,
வேதமார்க்கமல்லாத புன்பனுவலாகிய மேதியினிடத்துண்டான புன்மைஞானமாகியபாலாற் றீராதென்றவாறு.
வாய்ந்தது – உண்டானது. உம்மை-இழிவுசிறப்பு. ஓகாரம் – ஒழியிசை. ஒழிந்த அகல முரையிற்கொள்க.
இது சாதி நிலைக்களனாகத்தோன்றிய ஒட்டு. என்னை? ஆவின்பால் மேதியின்பால் என்பவற்றாலவை
நிலைக்களனாகப் புலப்படுதலானென்றறிக. திணை-இதுவுமது. துறை – செவியறிவுறூஉ;
அல்லது பாடாண்சார்ந்தபொதுவியற்பாற் சார்த்திற் பனுவல்வாழ்த்துமாம்.

வளைதவழ்நீர்மண்மேன்மதிப்புலவீரந்தோ
விளைகழனிச்சார்புள்விராய-களைகளைய
வாங்குங்களைக்கோலான்மாநிலத்தார்க்கேலாத
தீங்குபுரிவார்சிலர். (286)
என்பது, சங்கினந்தவழுங் கடல்சூழ்ந்தபூமியினுண்டாய புலவீர்காள் செந்நெல்விளையுங் கழனியிடத்துவிரவுங்களையைக்
களைவதற்குக் கத்தன் கொடுத்துக் கைக்கொண்ட களைகளையுங்கோலாற் களையைக்களையாது
பெரியநிலத்தின்கணுள்ளார்க்குப் பொருந்தாத தீங்காகச் சிலர் தமது கண்ணைக்களையுந் தீயதொழில்
விரும்பிச்செய்வா ரிஃதென்னபேதைமையோ வென்றவாறு.
இது வெளிப்படையாகக்கூறியபொருள் விளை கழனி-சீவியாநின்ற வுடம்பு. உள்-ஆன்மா. சார்பு-இடம்.
விராயகளை- உம்மையிழைத்ததீவினை. களைய – அதனைப்போக்குதற்கு.
வாங்குங்களைக்கோலால்-சீமந்நாராயணன்கொடுப்பக் கைக்கொண்ட மனோவாக்குக் காயங்களால்.
அவனைச் சிந்தித்தும் துதித்தும் கண்டுங் கீர்த்தியைக் கேட்டுந் தாமஞ்சாத்தியும் கோயில்வலம்வந்தும் போதுபோக்காது
முத்தியைவிரும்புவார்புத்திக்குப் பொருந்தாத தீத்தொழில்களை விரும்பிச் செய்து தமக்குள்ளவாழ்நாளை யந்தோ
வவமேபோக்காநின்றா ரினியெங்ஙனமீடேறுவ ரென்றவாறு. இதற்கும் அவரைப்போலெனக் கூட்டுக.
உள்-ஆகுபெயர். அந்தோவென்ப திரக்கத்தின்கட் குறிப்பு.
மாநிலம் – சிலேடை. இது குறித்தபொருள். இது வினைநிலைக்களனாகத் தோன்றியவொட்டு. என்னை?
தீங்குபுரியுந்தொழில் நிலைக்களனாகத் தோன்றுதலா னென்றுணர்க. திணை – இதுவுமது. துறை – வாயுறைவாழ்த்து.

வாழ்ந்தமதிப்புலவீர்மால்வழங்குந்தூயநீர்
வீழ்ந்தநிலத்தியல்பான்மெய்திரிந்தாற்-சூழ்ந்ததனைத்
தேற்றிற்றெளிப்பதல்லாற்சேற்றிற்செறிகளங்க
மாற்றப்படுநெறித்தோமற்று. (287)
என்பது, முற்றவுணர்ந்த மூதறிவாளரோடுங்கூடிவாழ்ந்த மதியையுடைய புலவீர்காள்! மேகம்பெய்யுந் தெளிந்தநீர்
தான் விழுந்தநிலத்தினியல்பா னிறம்வேறுபட்டா லதனைப்போக்குதற் குலகம் விசாரித்தறிந்த தேற்றினா லந்நீர்
தெளிவதன்றிச் சேற்றுநீரா லதற்கடைந்த களங்கத்தை யொருவராலு நீக்கப்படுமார்க்கமுடைத்தன் றென்றவாறு.
இது வெளிப்படையாகக் கூறியபொருள். அது தெளியாததுபோல மாயோனளித்த நற்குணஞ்சிற்றி னங்களை
விரும்பிக்கொண்ட வுறவினதுபெற்றியானுண்மைவேறுபட்டா லெல்ல நூல்களையு மனத்தாலுள்ளி யறிவறிந்தோர்
தெளிந்தஞானத்தாற் பண்டுபோற் றெளிவதன்றிக் கரியசேறுபோற் செறிந்த சிற்றினத்தார் மாசுண்டஞானத்தாற் றேற்றப்படாதென்றவாறு.
ஆதலான் மூதறிவுடையோர்நட்பு விடாது கொள்ளவேண்டு மென்றவாறு. இது குறித்தபொருள்.
இதனுள் மால், நீர் வீழ்ந்த, மெய், தேற்றில், களங்கம் என்பன சிலேடை.
ஆதலா னிது அடைபொதுவாய்ப்பொருள் வேறுபட்டுப் பண்பு நிலைக்களனாகத் தோன்றிய ஒட்டு; என்னை?
வீழ்ந்த நிலத்தியல்பான் மெய்திரிந்தாலெனக் குணநிலைக்களனாகக் குறித்த பொருடோன்றுதலா னென்றுணர்க.
திணை-இதுவுமது. துறை-ஓம் படை.

நன்புலவீர்கங்குற்கிசைந்ததெலாநாரணனா
லின்புறவாராய்ந்தியற்றுமெஃகற்றே-புன்புலன்பெற்
றீட்டாதவரெவனோவெண்ணியதுதாமுடிக்க
மாட்டாதழுங்குமதி. (288)
என்பது, நல்லறத்தினது பகுதியறிந்த புலவீர்கா ளிரவிற்கு வேண்டுவனவெல்லா நன்பகலே நாரணனருளாற்
புத்திகளித்தியற்றுங் கூரறி விலராகித் தமது மந்தபுத்தியா லவற்றை யியற்றாதிருந்தவர்
அக்கங்குல் வந்தகாலத்துக் கங்குற்குவேண்டுவனவின்றித் தாம் எண்ணியது முடிக்கமாட்டா
தழுங்குகின்ற தென்னபேதைமையோவென்றவாறு. இது வெளிப்படையாய்க்கூறியபொருள்.
அவரைப்போல நிலையாமையோடுங் கூடிய யாக்கை நிலைமைத்தா முயிரோடுங் கூடியிருக்கப்பெற்ற
காலத்திம்மைக்கண்ணே மறுமைப்பயனா முத்தியைப் பெறுதற் கேதுவாம் ஞான நூல்களை யாராய்ந்து
சித்தசித்தீச் சுரங்களையறிந் தவற்றோடும் அன்றறிவாமென்னா தறங்களைப் பயிலாதார் மரணம்
வந்தடுத்தகாலத்தி லெண்ணியிருந்த முத்தியையெய்த வேண்டுவன செய்து முடித்திலமென்றிய
மதூ துவர்கூட்டத்தைக்கண் டழுங்குகின்றமை என்னபேதைமையோ வென்றவாறு.
எனவே முத்தியை யெய்துதற்கு வேண்டுவனயாக்கையிருக்கப் பெற்றபொழுதே பின்னையென்னாது செய்துமுடிக்க வேண்டுமென்பது பயன்.
இதனுள், நல்லறத்தின்பகுதியறிந்தவென்பது சொல்லெச்சம். நன்பகலே யென்பது எதிர்மறையெச்சம்.
இது கால நிலைக்களனாகத் தோன்றிய ஒட்டு. என்னை?
இரவிற்குவேண்டுவனவெல்லா நன்பகலே யியற்றவேண்டுமென்னுங் காயநிலைக்களனாகக் குறித்தபொருடோன்றுதலா னென்றுணர்க.
திணையுந் துறையு மிதுவுமது. பொழுதொடுமென்னுமும்மையாற் சினைநிலைக்களனாகத் தோன்றும் ஒட்டு முள.
அதற்குச் செய்யுள் வருமாறு:-

எம்பெருமானின்னருள்சேரின்புலவீர்வான்பொருட்குச்
செம்பொனுளதீவிற்செலவுற்றாற்-பம்புதிரைச்
சங்கந்தவழ்கடலைத்தாம்பொடுபாய்கூம்பின்றி
வங்கங்கடந்து றுமோமற்று. (289)
என்பது, புலவீர்காள்! பெரும்பொருட்குப் பொன்விளைதீவிற் செல்ல நினைந்தாற் கப்பல் கயிற்றாற் கட்டப்பட்ட
பாயோடுங்கூடிய பாய்மரமின்றியத் தீவிற் றலைப்படாதென்றவாறு. இது வெளிப்படையாற் கூறியபொருள்.
அதுபோலப் பொன்மயமான பரமபதத்திற் செல்லக் குறித்தவர்கள் மனோ வாக்குக் காயங்களா னினைத்துந் துதித்துந்
தாமஞ்சாத்துவதுமுதலான சரியையின்றி யாண்டுத் தலைப்படாரென்பதாம்.
இது குறித்தபொருள். “கடல்-பிறப்பாயகடல். வங்கம்-ஆன்மா.
தாம்புங் கூம்பும் பாயும் – மனம் வாக்குக் காயம். திணை – இதுவுமது. துறை – வாயுறைவாழ்த்து.

தாந்தனுறையுளெனுந்தண்பொருநையின்வடபால்
வாய்ந்தகிரணமுழுமாணிக்க – மேந்திழாய்
ஞானமுணர்ந்துணர்த்துநன்முத்தியைவிளைக்குந்
தானவனாமீதெவனோதான். (290)
இதனுள், தாந்தனுறையுளெனுந்தண்பொருநையின்வடபால் – செம்பொன் மாடத்திருக்குருகூர்.
கிரணமுழுமாணிக்கம் – காரிமாறப் பிரான். இது அடைவிபரீதப்பட்டுப் பொருள்வேறுபட்டது; என்னை?
“ ஞானமுணர்ந்” தென்பது முதலாயினநான்கும் மாணிக்கத்திற் கில்லை யாதலி னடைவிபரீதமாயிற்று.
இது முதலதுபோலப் பொருணிலைக் களனாகத் தோன்றின ஒட்டு. திணை – இதுவுமது. துறை-செந்துறைப் பாடாண்பாட்டு.

தென்னம்பொதியந்தருபொருநைத்தென்கரையின்
மன்னும்புளிக்கீழ்வளர்தருவொன்-றின்னமிர்தொத்
தான்றசுவைத்தீங்கனியோராயிரமுந்தண்ணளிகூர்ந்
தீன்றளித்ததன்பாலெமக்கு. (291)
இதனுள், மன்னும்புளியென்பது திருப்புளியாழ்வார். திருப்புளிக் கீழ்வளர்தருவாவது காரிமாறப்பிரான்.
இன்னமிர்தொத்தான்றசுவைத் தீங்கனியோராயிரமென்பது திருவாய்மொழியாயிரப்பாடல்.
இதுவும் பொருணிலைக்களனாகத்தோன்றின ஒட்டு; அல்லது சாதிநிலைக்களனாகத் தோன்றிற்றெனினுமான்.
இவை யிரண்டிற்கும் ஒழிந்த அகல முரையிற் கொள்க. தருவுங் கடவுளாதலிற் றுறை-கடவுள்வாழ்த்துமாம்.
இதுவு முன்னதுபோற் செந்துறைப்பாடாண்பாட்டு. அஃதேலிதன் முன்னர்க் கூறிய வுள்ளுறையுவமத்தினோடும்
ஒட்டென்னு மிதனிடை வேற்றுமை யாதோவெனின், அஃதே! நன்று சொன்னாய்!
உள்ளுறையுவமமென்பது அகத்திணைக்கைகோளிரண்டிற்குமேயுரித்தாய் அகத்திணையைந்தினும்
அவ்வவ நிலங்களிற் றெய்வதமொழிந்த கருப்பொருள்களனாகப் பிறக்குமெனவும், அவ்வுள்ளுறையுவமங்கூறுவார்,
தலைவன் றலைவி செவிலி தோழி பாங்கன் பாணன் ஆக அறுவரெனவும், உள்ளுறையுவமங் கூறுதற் குரியரல்லாதார்,
நற்றாய், தந்தை, தன்னாயத்தார், ஐயன்மாராக நால்வரெனவும்,

அங்ஙனங் கூறுதற்குரியோர் கூறுமிடத்து மருதம் நெய்தலென்னு மீரிடத்தும் மிகுந்தும், குறிஞ்சிக்க ணவ்வளவின்றியும்,
ஒழிந்த நில மிரண்டினு மதனிற் குறைந்தும் வருமெனவும், அங்ஙனங் கூறுமிடத்தும் வெளிப்படக்கூறுமுவமையிடத் துவமேயங்
கேட்போர் மனத்தின்கண்ணும் புலவன்குறித்தவாறே நிகழ்த்துதலின் உள்ளுறையுவமமெனவும்,
மேற் கூறப்படுங் கருப்பொருள்களனாகப் பிறக்கு மிறைச்சிப்பொருளோடுங் கூடாதனவாயும் வருமெனவுணர்க.
இஃதன்னதன்றாய்க் கருப்பொருளிற்பிறக்க வேண்டுமென்னும் யாப்புறவின்றிப் புறத்தினும் புறப்புறத்தினுஞ்சென்று
செய்யுட்செய்யும் புலவன் முதலாயினோர் கூறுங் கூற்றாய்ச் சுட்டென்னும் உள்ளுறையவாய் நடத்தல் வேற்றுமையென்றுணர்க.

அங்ஙனமாதல் “பீலிபெய் சாகாடு மச்சிறு மப்பண்டஞ், சால மிகுத்துப் பெயின்”
“நுனிக்கொம்பரேறினாரஃ திறந்தூக்கி, னுயிர்க்கிறுதியாகிவிடும்” எனவும்,
“நெடும்புனலுள்வெல்லு முதலையடும்புனலி, னீங்கினதனைப்பிற”
“கடலோடா கால்வ னெடுந்தேர் கடலோடு, நாவாயு மோடா நிலத்து”
“காலாழ் களரி னரியடுங் கண்ணஞ்சா, வேலாண் முகத்த களிறு” எனவும்
திருவள்ளுவர் கூறிய வலியறிதல் இடனறிதல் என்னு மிரண்டினுள்ளும், பிற நூல்களினுங் கண்டு கொள்க.

தண்டியாசிரியர் ஒட்டென்னு மலங்காரத்தினுள் அடையும் பொருளு மயல்படமொழிவதாக
“வெறிகொளினச்சுரும்புமேய்ந்ததோர் காவி” யென்றதில் உள்ளுறையுவமமும்,
அடைவிபரீதப்படப் பொருள் வேறுபடக் “கடைகொலுலகியற்கை” யென்பதிற் கருப்பொருள்களனாகாது ஒட்டுங் கூறினாரெனினும்,
இந்நூலுடையார், “உடனுறையுவமஞ் சுட்டு நகைசிறப்பெனக், கெடலருமரபினுள்ளுறையைந்தே” என
உள்ளுறையை யைந்தாய்ப் பிரித்தமையான் உள்ளுறையுவமம் ஒட்டு இறைச்சியென மூன்றாக்கினார்.
இங்ஙன மாராய்ந்து பிரித்தவிவர் நோக்கமுந் தெள்ளிதினா ராய்ந்து கொள்க.

5-வது ஒட்டலங்காரம் முற்றும்.

————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருக்குருகைப் பெருமாள் கவிராயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading