ஸ்ரீ திருமலை நல்லான் சக்ரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண அய்யங்கார் ஸ்ரீ ஸூக்தி- அமுத விருந்து–22-28–

எம்பெருமானார் ஸ்ரீ கிருஷ்ண அனுபவத்தில் ஆழ்ந்து
கார் போலே தம்மை ஆட்க்கொண்டு அருளியதை மேல்
எட்டு பாசுரங்களால் அருளிச் செய்கிறார் –

வாணன் பிழை பொறுத்த தீர்த்தனை ஏத்தும் இராமானுசன் என் தன் சேம வைப்பே – 22- –என்று உபக்ரமித்து
வஞ்ச நெஞ்சில் வைத்து முப்போதும் வாழ்த்துவன் என்னாம் இது அவன் மொய் புகழக்கே -23 –என்று நைச்யம் பாவித்து
இன்று கண்டு உயர்ந்தேன்– இராமானுசன் என்னும் கார் தன்னையே – 24- –என்று தேறி
நீ என்னை யுத்த பின் உன் சீரே உயிர்க்கு உயிராய் அடியேற்கு இன்று தித்திக்குமே -25 –என்று
போக்யதையில் ஆழங்கால் பட்டு
எக்குற்றவாளர் எது பிறப்பே எது இயல்வாக நின்றோர் அக்குற்றம் அப்பிறப்பு அவ்வியல்வே நம்மை ஆள் கொள்ளுமே –26- –என்று
ததீய சேஷத்வ நிஷ்டையில் ஆழ்ந்து
வெள்ளைச் சுடர் விடுமுன் பெரு மேன்மைக்கு இழுக்கு இது என்று தள்ளுற்று இரங்கும் இராமானுச என் தனி நெஞ்சமே -27-என்று
மீண்டும் நைச்யம் தலையெடுத்துப் பேசி
பின்னை தன் காதலன் பாதம் நண்ணா வஞ்சர்க்கு அரிய இராமானுசன் புகழ் அன்றி என் வாய்
கொஞ்சிப் பரவ கில்லாது என்ன வாழ்வின்று கூடியதே – -28 – என்று ஹ்ருஷ்டமாய் அருளிச் செய்கிறார் –

———–

கார்த்திகையானும் கரி முகத்தானும் முக்கண்
மூர்த்தியும் மோடியும் வெப்பும் முதிகிட்டு மூவுலகும்
பூத்தவனே என்று போற்றிட வாணன் பிழை பொறுத்த
தீர்த்தனை ஏத்தும் இராமானுசன் என் தன் சேம வைப்பே – 22- –

கீழ் கூறிய ஆழ்வார் -நாத முனிகள் -ஆளவந்தார் -இவர்கள் பர தேவதையாக வழி பட்ட கண்ணன் இடத்தில் –
அவருக்கு உள்ள ஈடுபாடு பேசப்படுகிறது –இந்த பாசுரத்தில் –

அமுதனார் -இங்கே முதுகிட்டு -போற்றிட -என்னும் சொல் அமைப்பாலே
முதுகிட்டமையால் பிரபாவத்தை அறிந்து -போற்றினதை உய்த்து உணர வைத்தார் –
போற்றிட வாணன் பிழை பொறுத்த -என்றமையின் போற்றின முக் கண்ணனுக்காக வாணன் பிழை
பொறுத்தமை தோற்றுகிறது
மூ வுலகும் பூத்தவனே என்று போற்றிட –
இந்த மூ வுலகு எனபது -பூ லோகம் -ஸ்வர்க்க லோகம்-பாதாள லோகம் என்னும் மூ வுலகைக் குறிப்பிட வில்லை –
எல்லா வுலகும் கண்ணன் படைப்பு ஆதலின் -ஆனவே அணைத்து உலகங்களையும் அடக்குவதற்காக –
கிருதகம்-அகிருதகம் -கிருதகா கிருதகம் –என்னும் மூ வகைப்பட்ட வுலகம் என்று கொள்ள வேணும் –
இந்த அண்டத்தையே -என்றதாயிற்று –
மூ வுலகும் பூத்தவனே -பொறுத்து அருள்க -எனபது சொல் எச்சம் -பிறப்பித்தவன் நீ -பிறந்தவர்கள் நாங்கள் –

தீர்த்தனை ஏத்தும் இராமானுசன் என் தன் சேம வைப்பே
அனுபவித்தோ அல்லது பிராயச்சித்தம் செய்தோ தீர்க்க வேண்டிய அபராதங்களையும் பகைவர் திறத்தும்
போக்கியும் போக்கி அவர்களை தூயராக்கிய தூய்மையை கருதி -தீர்த்தன் -என்கிறார் –
ஆபத்துக் காலத்திலேயே உதவிய கண்ணனது தூய்மையினை ஏத்தும் எம்பெருமானாரோ
எனக்கு ஆபத்து காலத்தில் உதவுவதற்காக சேமித்து வைத்த செல்வம் என்றார் ஆயிற்று –

———-

வைப்பாய வான் பொருள் என்று நல்லன்பர் மனத்தகத்தே
எப்போதும் வைக்கும் இராமானுசனை இரு நிலத்தில்
ஒப்பார் இலாத வுறுவினையேன் வஞ்ச நெஞ்சில் வைத்து
முப்போதும் வாழ்த்துவன் என்னாம் இது அவன் மொய் புகழக்கே -23 –

வைப்பாய –இராமானுசனை –
மது சூதனையே ஆழ்வார் வைத்த மா நிதியாக கொள்வது போலே –
நல்லன்பர் எம்பெருமானாரையே வைப்பாய வான் பொருளாக கொள்கின்றனர் என்க —
எனக்கு எய்ப்பினில் வைப்பினை -பெரிய திரு மொழி – 7-10 4- – -என்றபடி
மற்ற நிதி , வைப்பு, எல்லாம் பயன் படுத்த பயன் படுத்தக் குறைந்து போகும்.
எம்பெருமானார் என்னும் நிதி அள்ள அள்ளக் குறையாது .

நல்லன்பர்
என்னைப் போல வஞ்ச நெஞ்சர் அல்லர் இவ்வன்பர் -குற்றம் அற்றவர் -என்றபடி –
இனி நல்லதான அன்பை உடையவர் என்னலுமாம் –
அன்புக்கு நன்மையாவது -வேறு பயன் ஒன்றும் கருதாமை

மனத்தகத்தே வைக்கும் –
அருமை தெரிந்து அன்பு பூண்டவர் ஆதலின் -சீரிய பொருளை செப்பிலே வைப்பது போலே
உள்ளே வைத்து பேணுகின்றனர் -என்க

எப்போதும் வைக்கும் –
அல்லும் பகலும் என்றபடி-
எக்காலத்திலும் வெளியே வைக்கத் தக்க பொருள் அன்றே இது –
எப்போதும் -அகிஞ்சனராகிய நம்மைக் காப்பவர் எம்பெருமானாரே என்று
ப்ரீதி உடன் இடைவிடாது நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள்-எனபது கருத்து –

வஞ்ச நெஞ்சில் வைத்து முப்போதும் வாழ்த்துவன் –
வஞ்சிப்பது பிறரை மாத்ரம் அன்று -எம்பெருமானாரையே வஞ்சிக்க வல்லது என் நெஞ்சு என்கிறார் –
உன்னையும் வஞ்சிக்கும் கள்ள மனம் -திருவாய் மொழி – 5-1 3- –

————–

மொய்த்த வெம் தீ வினையால் பல்லுடல் தோறும் மூத்து அதனால்
எய்த்து ஒழிந்தேன் முன நாள்கள் எல்லாம் இன்று கண்டு உயர்ந்தேன்
பொய்த் தவம் போற்றும் புலைச் சமயங்கள் நிலத்து அவிய
கைத்த மெய் ஞானத்து இராமானுசன் என்னும் கார் தன்னையே – 24- –

விஷயங்களுக்கே இடம் கொடுத்து –
வஞ்சகனாகவே இருந்தேன் -அந்நிலையிலே எம்பெருமானாரை வைப்பாய வான் பொருளாக
வஞ்ச நெஞ்சில் வைத்து முப்போதும் வாழ்த்துவதாக நடித்தேன் -நெஞ்சில் வைத்ததும் -வாழ்த்தியதும் –
பொய்யே யாயினும் எம்பெருமானார் தன் வண்மையினால் தன்னை உள்ளபடி காட்டி
இந்நிலையை உண்மை நிலை யாக்கி விட்டார் -அவர் காட்டக் கண்ட நான் இப்பொழுது உயர்ந்தவனாகி
விட்டேன் -என்கிறார் அமுதனார் இப்பாசுரத்தில் –
பொய்யே கைம்மை சொல்லிப் புறமே புறமே ஆடி மெய்யே பெற்று ஒழிந்தேன் -திருவாய் மொழி – 5-1 1- –

அடை மொழி இட்டு காரனைய இராமானுசனை என்றோ கூறாது -இராமானுசன் என்னும் கார் தன்னையே -என்று
மேக மாகவே வருணிப்பது இவ் உபகாரத்தின் முக்கிய தன்மையை அமுதனார் கருத்தில் கொண்டு உள்ளார்
என்று நமக்கு புலப்படுகிறது –வள்ளல் தனத்தினால் வல் வினையேன் மனம் நீ புகுந்தாய் – 27- என்று மேலே இதனை
வெளிப்படையாக இவரே கூறுவதும் காண்க –

ஈஸ்வர விபூதியில் ஒருவனை ஹிம்சித்தாரை சொல்லுகிற பாபங்களுக்கு அவதி இல்லை -ஈஸ்வரனையும் –
ஈஸ்வர விபூதியையும் -அஞ்ஞா நாசியாலே -அறியாமை என்னும் வாளாலே -அழிக்கப் பார்க்கிறவர்கள் இறே-
புலை சமயம்-நீச சமயம்
நீச சமயங்கள் மாண்டன –என்பர் மேலும் –

வஞ்ச நெஞ்சில் வைத்து முப்போதும் தன்னை வாழ்த்துபவனாக நடிக்கும் என்னை -உள்ளபடி தன்னைக் காட்டி
மெய்யே நெஞ்சில் வைத்து முப்போதும் வாழ்த்தும்படி -உபகரித்ததில் வியப்பு ஒன்றும் இல்லை
என்னும் கருத்துடன் புலைச் சமயங்கள் நிலத்து அவிய கைத்த மெய்ஞ் ஞானத்தராக அமுதனார் அவரைக் கூறினார் என்க

———–

காரேய் கருணை இராமானுசா இக்கடல் இடத்தில்
ஆரே யறிபவர் நின்னருளின் தன்மை அல்லலுக்கு
நேரே யுறைவிடம் நான் வந்து நீ என்னை யுத்த பின் உன்
சீரே உயிர்க்கு உயிராய் அடியேற்கு இன்று தித்திக்குமே -25 – –

நின் அருளின் தன்மை-
இராமானுசா என்று விளித்து கூறி-நின் -என்று மேலும் -கூறுவதால் அருள் உடைய அவரது சிறப்பு தோற்றும் –
இறைவனது அருளின் தன்மை அறிவு எளிதாயினும் எம்பெருமானாரது அருளின் தன்மை அறிவு அரிதே –என்றபடி –
இறைவனது அருள் ஸ்வா தந்த்ரியத்தால் தடை படுவதற்கு உரியது –
எம்பெருமானார் அருளோ -தடை ஏதும் இன்றி என்றும் பெருகும் தன்மையது -என்க –
தானாக வந்து என் அல்லல்களை தீர்த்து தன் பேறாக என்னை ஏற்று அருளினார்-

வந்து நீ என்னை உற்ற பின் -என்னும் இடத்தில்
வந்தமையால்-சௌலப்யமும்
அல்லல் உள்ள இடத்தில் வந்தமையால்-வாத்சல்யமும்
என்னை உற்றமையால்-சௌசீல்யமும்-
தன் பேறாக ஹேது எதுவும் இன்றி -என்னை உற்றமையால்-ஸ்வாமித்வமும்
கருணை இராமானுசா -என்றமையால் வருவதற்கு ஹேதுவான கிருபையும் –
எம்பெருமானார் இடம் உள்ளமை தோற்றுகிறது –

உன் சீரே –அடியேற்கு இன்று தித்திக்கும் –
உன் சீர் –இறைவனுடைய சீர்கள் அல்ல –
உயிர்க்கு உயிராய் -ஆத்மாவுக்கு உயிராய் –தாரகமாய் -ஜீவனமாய்
இதனால் தாரகமும் போஷகமும் சீரே என்றது ஆயிற்று
தித்திக்கும் என்கையாலே போக்யமும் அதுவே என்றது ஆயிற்று –
உண்ணும் சோறு பருகும் நீர் தின்னும் வெற்றிலையும் எல்லாம் கண்ணன் -என்றார் நம் ஆழ்வார் –
அமுதனார் அவை எல்லாம் எம்பெருமானார் குணங்களே என்கிறார் –

அடியேற்கு
இயல்பான அடிமை இன்பம் உணரப் பெற்ற எனக்கு –
இனி சீரே உயிர்க்கு உயிராய் அடியேற்கு- என்கையாலே
கீழ் கூறிய சௌலப்யாதி குணங்களுக்கு தோற்று -அடிமை யானதும் தோற்றுகிறது –
இன்று –
எங்கோ என்றோ போய் சரீர சம்பந்தம் நீங்கின பிறகு பெரும் பகவத் குணா அனுபவம் அன்று –
இங்கேயே இப்பொழுதே இவ் உடலோடேயே ஆசார்ய குணம் அனுபவம் ஆகிற பெரும் பேறு
வாய்க்க பெற்றேன் என்று களிக்கிறார் –

————-

திக்குற்ற கீர்த்தி இராமானுசனை என் செய்வினையாம்
மெய்க்குற்றம் நீக்கி விளங்கிய மேகத்தை மேவும் நல்லோர்
எக்குற்றவாளர் எது பிறப்பே எது இயல்வாக நின்றோர்
அக்குற்றம் அப்பிறப்பு அவ்வியல்வே நம்மை ஆள் கொள்ளுமே –26- –

மெய்க் குற்றம்
ஆளவந்தார் போன்ற முன்னவர் சொன்ன நைச்ய அனுசந்தானம் போன்றது -அன்று –
மெய்யாகவே உள்ள குற்றம்
சரீர சம்பந்தத்தால் வரும் அஹங்கார மமகாரங்கள் ஆகிற குற்றம் என்னலுமாம் –
அப்பொழுது வினையாம்-என்பதற்கு
வினையினால் உண்டான -என்று பொருள் கொள்ள வேண்டும் –
என்னால் செய்யப்பட்ட கர்மங்களினால் ஆகிய தேக சம்பந்தத்தால் உண்டான அஹங்காராதி தோஷத்தை
என்றது ஆயிற்று –

விளங்கிய மேகத்தை
சேதன லாபம் ஈச்வாரனுக்கு என்னுமா போலே , அமுதனார் கிடைக்கப் பெற்று எம்பெருமானார் உகந்தார்.
இதைத்தான் விளங்கிய மேகம் என்று எம்பெருமானரைக் குறிக்கிறார் அமுதனார்

மேவும் நல்லோர் –என்னை ஆட் கொள்ளுமே –
மேவுதல்-நிழல் போலே விட்டுப் பிரியாது இருத்தல்-
எம்பெருமானாரை மேவுகையே நலம்
அத்தகைய நலம் வாய்ந்தவர் நல்லோர்
அந் நலத்தினால் அவர் பால் இருந்த குறை -அறிவினாலோ பிறப்பினாலோ -நடத்தையினாலோ-
ஏற்ப்பட்டு இருபினும் அதுவும் நலமாகவே ஆக்கப்பட்டு -என்னை ஆட் கொண்டு விடுகிறது -என்கிறார் –

வாத்சல்யத்தால் நம்மை அறிவுறுத்தி -அவ் வழிப் படுத்துவதற்காகவே –
அந் நல்லோர் அறிவு பிறப்பு நடத்தைகளில் இழிவான தன்மைகளை தங்கள் இடம் ஏறிட்டு கொண்டு நம்மை அணைந்து உள்ளனர் –
ஈஸ்வரன் தானே தன் இச்சையால் தாழ விட்டுக் கொள்வது போலே –
இவர்களும் தம்மைத் தாழ விட்டுக் கொண்டு உள்ளனரே அன்றி -கர்மத்தால் இன் நிலைக்கு உட்பட்டவர்கள் அல்லர்
என்று அமுதனார் கருதுவதால்-
ஈஸ்வரனுடைய எளிமையினுக்கு அடியார்கள் ஆட்படுவது போலே –
இவர்கள் உடைய எளிமையினுக்கும் அவர் ஆட்படுகின்றார் -என்க
வம்ச பூமிகளை உத்தரிக்க கீழ் குலம் புக்க வராஹா கபாலரைப் போலே –
இவரும் நமக்நரை-உயர்த்த தாழ இழிந்தார் –சூரணை -84 – என்று ஆச்சார்ய ஹ்ருதயத்தில் கூறியபடி

இராமானுசனை மேவும் நல்லோர் -அஹங்காரத்துக்கு ஹேது ஆதலின் –
உயர் குடிப்பிறப்பும் – அறிவுடைமையும் -ஒழுக்கம் உடைமையும் -தள்ளத்தக்கன –
அஹங்காரத்துக்கு இடம் தராத இழி குலப் பிறப்பும் -அறிவின்மையும் -ஒழுக்கம் இன்மையுமே அமையும் என்று கருதுகின்றனர்

அவ் இயலவே -ஏகாரத்தை அக்குற்றமே அப்பிறப்பே என மற்றை இரண்டுடன் கூட்டுக –
இதனால் ஒவ் ஒன்றே ஆள் கொள்ளுவது புலனாம் –

———-

கொள்ளக் குறைவற்று இலங்கிக் கொழுந்து விட்டு ஓங்கிய உன்
வள்ளல் தனத்தினால் வல் வினையேன் மனம் நீ புகுந்தாய்
வெள்ளைச் சுடர் விடுமுன் பெரு மேன்மைக்கு இழுக்கு இது என்று
தள்ளுற்று இரங்கும் இராமானுச என் தனி நெஞ்சமே -27-

இராமானுசன் என்னும் கார் -தன் வள்ளன்மையால் -தன்னைக் காட்டி நான் கண்டு -உயரும்படி செய்தது என்றார் கீழ்-
இங்கே காட்டியதோடு அமையாமல் -நெஞ்சத்திலே தன்னை நிரந்தரமாக நிலை நாட்டியதன் மூலம் –
அவ் வள்ளல் தன்மை கொழுந்து விட்டு ஓங்கினமை புலன் ஆகிறது -என்கிறார் –

வெள்ளை சுடர் –இழுக்கு இது என்று –
என் சிறுமையையும் -தன் பெருமையையும் -ஒப்பிட்டு பாராதே உட் புகுந்தது அவருக்கு இழுக்காய் முடியுமே
என்று பயப்படுகிறார் -தான் மிக உயர்வது பற்றி அமுதனார் மகிழ் உற வில்லை –
எம்பெருமானார் பெருமைக்கு மாசு நேர்ந்து விடல் ஆகாதே என்று கலங்குகிறார் –

தள்ளுற்று இரங்கும் தனி நெஞ்சமே –
அச்சத்தால் தள்ளாடிய நெஞ்சம் துணையாக -தேற்றுவார் இன்றி தத்தளிக்கிறது என்கிறார் –
இனி -எம்பெருமானார் தாமே வந்து வல் வினையை லஷ்யம் செய்யாது புகுந்த
நெஞ்சம் வேறு ஓன்று இன்மையின் –தனி நெஞ்சம் -என்றார் ஆகவுமம் –
இனி தமக்கு வரும் சீர்மைக்கு மகிழாது -பிறருக்கு நேரும் இழுக்குக்காக தள்ளாடும் நெஞ்சம்-
மற்று ஓன்று இன்மையின் –தனி நெஞ்சம்-என்றார் ஆகவுமாம்

————–

நெஞ்சில் கறை கொண்ட கஞ்சனைக் காய்ந்த நிமலன் நங்கள்
பஞ்சித் திருவடிப் பின்னை தன் காதலன் பாதம் நண்ணா
வஞ்சர்க்கு அரிய இராமானுசன் புகழ் அன்றி என் வாய்
கொஞ்சிப் பரவ கில்லாது என்ன வாழ்வின்று கூடியதே – -28 –

நெஞ்சில் கறை கொண்ட கஞ்சனைக் காய்ந்த நிமலன்
சொல் அளவில் கறை கண்டு கை விடாதே -நெஞ்சில் பொல்லாங்கு சோதித்து அறிந்த பின்னரே –
காய்ந்து கை விடுகிறான் கண்ணன்-
கைக் கொள்ளும் இடத்து -கழுத்துக்கு மேலும் அமையும் –
கை விடும் இடத்தில் அகவாயில் உண்டு என்று-என்று அறிந்தால் அல்லது கை விடான்-
தீங்கு நினைந்த -கருத்தைப் பிழைப்பித்து கஞ்சன் வயிற்றில்-நெருப்பு அன்ன நின்ற நெடுமாலே – என்றாள்
ஆண்டாள் திருப்பாவை யிலே –
உன்னைச் சிந்தனையால் இகழ்ந்த இரணியனது அகல் மார்பம் கீண்ட என் முன்னைக் கோளரியே –
திரு வாய் மொழி – 2-6 6- –என்றார் நம் ஆழ்வாரும் –

கஞ்சனைக் காய்ந்த -என்றமையின்
சீறின-மாத்திரத்தில் ஆயுதம் இன்றி தானே எதிரியை அழித்தமை தோற்றுகிறது -சக்கரவர்த்தி திருமகன் போலே
ஆளிட்டு -அனுமனைக் கொண்டு –தென்னிலங்கையை தீக்கு இரையாக ஊட்டுதல் –
வாளியினால் மாளச் செய்தல் இல்லாமல் -தானே நெருப்பாக கஞ்சன் வயிற்றில் பற்றி நின்றும் –
குஞ்சி பிடித்து இழுத்து -மஞ்சத்தில் இருந்து -அக்கஞ்சனை கீழே தள்ளி -அவன் மேலே தானே விழுந்தும்-
வதம் செய்தமையால் –கண்ணன் தூயன் ஆனான் –என்னும் கருத்துடன் –காய்ந்த நிமலன்-என்றதாகவும் கொள்ளலாம்

பொன்னன் பைம் பூண் நெஞ்சிடந்து குருதியுக உகிர் வேலாண்ட நின்மலன் –பெரிய திருமொழி -3 4-4- –
என்னும் திரு மங்கை மன்னன் ஸ்ரீ ஸூக்தியையும் –
ஆளிட்டு செய்தல்–ஆயுதத்தால் அழிய செய்தல்-செய்கை அன்றிக்கே -ஆஸ்ரித விரோதியை தானே கை தொட்டு திரு உகிராகிற
வேலாலே அழிய செய்து -அத்தாலே வந்த சுத்தியை -உடையவன்-என்று அதன் வியாக்யானமும் அனுசந்திக்க தக்கன –

நிமலன் -என்பதால்-ஹேய பிரத்யநீகத்வமும் -குற்றம் ஒழிக்கும் பெற்றிமையும் –
காதலன்-என்பதால்-நல் குணம் உடைமையும் பேசப்படுகின்றன –

பாதம் நண்ணா வஞ்சர்க்கு அரிய இராமானுசன் –
பின்னை தன் கேள்வன் தாள் கண்டு கொண்டு என் தலை மேல் புனைந்தேனே -திரு வாய் மொழி 10-4 3- – -என்றபடி..
திருவடிகளைக் கண்டு தலை மேல் புனைதற்கு காமுறாது கண்ணன் திறத்து பர தந்திரனான -உரியனான –தன்னை –
ஆத்மா ஸ்வரூபத்தை -ஸ்வ தந்திரனாக -தனக்கே உரியனாக -கொள்வது வஞ்சம் ஆயிற்று –
இதுவே ஆத்ம அபஹாரம் எனப்படும்
தன்னை உணர்ந்து ஆட் செய்தற்கு இசைபவரே எம்பெருமானாரைக் கிட்டுதற்கு அருகதை உடையவர் –என்பது கருத்து –

புகழ் அன்றி பரவ கில்லாது –
வாய் அவனை அல்லது வாழ்த்தாது -முதல் திருவந்தாதி –
அமுதனாரோ குழந்தை மழலை மொழியிலே அடைவின்றிக் குழறுவது போலே அன்பு ததும்ப
எம்பெருமானார் புகழையே-என் வாய் புகழ்ந்து யேத்துமே -அன்றி -மற்று ஒன்றான –
பின்னை தன் காதலன் புகழையும்-பரவ கொள்ளாது -என்கிறார் –
இதனால் தனது சரம பர்வ நிஷ்டை வெளி இட்டபடி –

அவர் பாதம் அன்றிப் பின்னை தன் காதலன் பாதம் நண்ணாது –
அவர் புகழ் அன்றி அவன் புகழ் பரவ கில்லாத நிலை எய்தப் பெற்றேன்-
என்னே எனக்கு இன்று கிடைத்த வாழ்வு -என்று வியக்கிறார் –
பிரதம பர்வமும் அறியாத நான்-எதிர்பாராது சரம பர்வத்தின் எல்லை நிலம் எய்தப் பெற்றது-
வியக்க தக்கது என்பது கருத்து –

—————————————————————————————————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading