ஸ்ரீ நம் ஆழ்வார் அனுபவிக்கும் ஸ்ரீ நம் ஆழ்வார் -திருவாய் மொழி மூன்றாம் பத்து —

ஸ்ரீ நம் ஆழ்வார் அனுபவிக்கும் ஸ்ரீ நம் ஆழ்வார் -திருவாய் மொழி மூன்றாம் பத்து
பல சுருதி பாசுரங்களைப் பார்த்து அறிகிறோம் —

வியப்பு ஆய வியப்பு இல்லா மெய்ஞ்ஞான வேதியனைச்
சயப் புகழார் பலர் வாழும் தடங்குருகூர்ச் சடகோபன்-3-1-11-

வியப்பு ஆய வியப்பு இல்லா –
வேறு சில வ்யக்திகளிலே கண்டால்-விஸ்மய ஹேதுவாய் இருக்குமடைய இவன் பக்கலிலே கண்டால் ப்ராப்தமாய் இருக்கும்.
ஒருவன் நான்கு பசுக்களைத் தானம் செய்தான் என்றால், அது விசமய ஹேதுவாய் இருக்கும் ;
‘பெருமாள் செய்தார்’ என்றவாறே, ப்ராப்தமாய் இருந்தது இறே – என்றது, –
சர்வ ஸ்வ தானம் பண்ணிக் கையொழிந்த அளவிலே ‘திரிஜடன்’ என்பான் ஒரு பிராஹ்மணன் வர,
அப்பொழுது ஒன்றும் தோன்றாமையாலே ‘உனக்கு வேண்டும் பசுக்களை அடித்துக்கொண்டு போ,’ என்ன,
தண்டைச் சுழற்றி எறிந்து அதற்கு உட்பட்ட பசுக்களையடைய அடித்துக் கொண்டு போனான்’ என்னும்
சரிதப் பகுதியை உணர்த்தியவாறு.

மெய் ஞ்ஞான வேதியனை –
யதா பூதவாதியான -உண்மையைக் கூறுகின்ற வேதங்களாலே -ப்ரதிபாதிக்கப்பட்ட -சொல்லப்படுகின்ற –
உத் கர்ஷத்தை — ஏற்றத்தை (முதன்மையை) உடையவனை.

சயம் புகழார் பலர் வாழும் தனம் குருகூர்ச் சடகோபன் –
‘இந் நின்ற நீர்மை இனியாம் உறாமை’ என்ற இவர் தம்மைப் போன்று சம்சாரத்தை ஜெயிக்கையால் வந்த புகழையுடைய
ஸ்ரீ வைஷ்ணவர் பலரும் ஆழ்வாரை அனுபவித்து-வர்த்திகைக்கு – வாழ்க்கைக்குத் தகுதியாகப்
பரப்பை யுடைத்தான திருநகரிக்கு நிர்வாஹகரான ஆழ்வார்.

—————

உயிர்கள் எல்லா உலகமும் உடையவனைக்
குயில் கொள் சோலைத் தென் குருகூர்ச் சடகோபன்-3-2-11-

இவர் தரித்த பின்பாயிற்று அவன் எல்லா வுயிர்களையும் எல்லா உலகங்களை யுமுடையவனாயிற்று;
இங்கு இவர் ஒருவரையுமே ஆயிற்று இழக்கப் புக்கது;
அங்கு ஸ விபூதிகனானவனை ஆயிற்று இழக்கப் புக்கது’ என்றபடி.
இனி, ஏக அங்கம் விகலமானாலும் -‘உறுப்புகளில் ஒன்று குறையினும் -அங்க வை கல்யம் -உறுப்புக் குறைவு உண்டு அன்றோ?
அப்படி யின்றிக்கே, இவரைப் பெற்ற பின்பாயிற்று ஈஸ்வரத்வம் பூர்ணமாயிற்று ’-என்னுதல்.

குயில் கொள் சோலைத் தென் குருகூர்ச் சடகோபன் –
பிரகாரியானவன் தரித்து,-பிரகாரரான இவரும் தரித்து,-இவர் தம்மளவேயன்றித் திருநகரியும் தரித்து,
அங்கு உண்டான சோலைகளும் தரித்து,
அங்கு உண்டான திர்யக்குகளினுடைய – பறவைகளுடைய-ஹர்ஷ ஸூசகமான த்வனியும் -மகிழ்ச்சிக்கு
அறிகுறியான ஒலியும் கேட்கும்படியாயிற்று,’ என்பதாம்.
அகால பலிநோ வ்ருஷ -‘காலம் அல்லாத காலங்களிலும் பழங்களை யுடையனவாயும்,
தேன்களைப் பொழிகின்றனவாயும்’ என்னும்படி யாயிற்று என்றபடி.

————–

தாள் பரப்பி மண் தாவிய ஈசனை
நீள் பொழில் குருகூர்ச் சடகோபன் சொல்-3-3-11-

கடின ஸ்தலத்தில் பூவைப் பரப்பினால் போலே ஸூகுமாரமான திருவடிகளைக் கொண்டு
காடும் மலையுமான பூமியை அநாயாசேந அளந்துகொண்ட சர்வேஸ்வரனை யாயிற்று கவி பாடிற்று
ஆயின், திருவேங்கடமுடையானை யன்றோ பாடிற்று இத் திருவாய்மொழியில்?
மண் தாவிய ஈசனைப் பாடிற்று என்றல் யாங்ஙனம்?’ எனின்,
’கொண்டாய் குறளாய் நிலம் ஈரடியாலே, விண் தோய் சிகரத் திருவேங்கடம் மேய, அண்டா!’ என்றும்,
’மண் அளந்த இணைத் தாமரைகள்’ என்றும்,
‘உலகம் அளந்த பொன்னடியே யடைந்து உய்ந்து’ என்றும்
ஆழ்வார்கள் அருளிச் செய்வர்கள்;
அன்றியும், எல்லாரையும் க்ரமத்திலே திருவடிகளின் கீழே இட்டுக் கொள்ளுகைக்காக நிற்கிற நிலையாலும்,
வரையாதே கானமும் வானரமுமான இவற்றுக்கு முகம் கொடுத்துக்கொண்டு நிற்கிற படியாலும்
திருவேங்கடமுடையானை ஸ்ரீ வாமனனாகச் சொல்லக் கடவது இறே

நீள் பொழில் குருகூர்ச் சடகோபன் சொல் –
திருவுலகு அளந்தருளின திருவடிகளுக்கு அணுக்கன் இட்டாற் போன்று நிழல் செய்யும்படி
வளர்ந்த பொழிலை யுடைய திருநகரிக்கு நிர்வாஹகரான ஆழ்வார்

————–

கூடி வண்டு அறையும் தண் தார்க் கொண்டல் போல் வண்ணன் தன்னை
மாடு அலர் பொழில் குருகூர் வண் சடகோபன் சொன்ன-3-4-11-

கிண்ணகத்திலே இழிவாரைப் போன்று வண்டுகளானவை திரண்டு தேனைக் குடித்து ஒலிக்கின்ற
ஸ்ரமஹரமான -சிரமத்தைப் போக்குகின்ற மாலையையும், ஸ்ரமஹரமான சிரமத்தைப் போக்குகிற மேகம்
போன்றிருக்கின்ற திருமேனியையு முடைய சர்வேஸ்வரனை.
இத் திருப்பதிகத்தில் பரக்கச் சொன்ன விபூதி முழுதும்,
தோளில் தோள் மாலையைப் போன்று அவனுக்குத் தகுதியா யிருக்கிற படியைக் கண்டு
அருளிச் செய்தமை தோற்ற ‘வண்டு கூடி அறையும் தண் தார் கொண்டல் போல் வண்ணன்’ என்கிறார்.

மாடு அலர் பொழில் குருகூர் வண் சடகோபன் சொன்ன –
பர்யந்தங்களிலே -பக்கங்களிலே அலர்ந்த சோலையை யுடைய திருநகரிக்கு-நிர்வாஹகராய் – உரியவராய் –
பரம உதாரரான – ஆழ்வார்

————–

தீர்ந்த அடியவர் தம்மைத் திருத்திப் பணி கொள்ள வல்ல
ஆர்த்த புகழ் அச்சுதனை அமரர் பிரானை எம்மானை
வாய்ந்த வள வயல் சூழ் தண் வளம் குருகூர்ச் சட கோபன்-3-5-11-

‘பிராப்யப் பிராபகங்கள் அவனே’ என்று இருக்குமவர்கள் ஆயிற்றுத் தீர்ந்த அடியவராகிறார்;
அவர்களைத் திருத்திப் பணி கொள்ளுகை யாவது,
அவர்களுடைய பிராப்யப் பிராபக விரோதிகளைப் போக்கி அடிமை கொள்ளுகை.
அஹம் சர்வம் கரிஷ்யாமி -‘ஒழிவில் காலமெல்லாம் உடனாய் மன்னி, வழுவிலா அடிமை செய்ய வேண்டும்’
என்று இருந்தாலும்,-க்ரியதாம் இதி மாம் வத- ‘முகப்பே கூவிப் பணிகொள்ளாய்’ என்கிறபடியே,
அடிமை கொள்ள வேண்டுமாதலின், ‘திருத்திப் பணி கொள்ள வல்ல’ என்கிறது.

ஆர்ந்த புகழ் அச்சுதனை –
குறை வற்ற கல்யாண குணங்களை யுடையவனாய்,
‘தன்னை -ஆஸ்ரயித்தாரை-அடைந்தாரை நழுவவிட்டான்’ என்னும் வார்த்தையை ஒரு நாளும் கேட்டு அறியாதவனை.

அமரர் பிரானை எம்மானை –
அஸ்ப்ருஷ்ட சம்சார கந்தரான -சம்சாரத்தின் வாசனை சிறிதும் இல்லாதவரான நித்ய ஸூரிகளைக் கொள்ளும்
அடிமையைத் தன் பக்கல் -ஆசா லேசமும் -ஆசை சிறிதுமின்றிக்கே இருக்கிற என்னைக் கொண்டவனை.
இதனால், அடியார்களை நழுவ விடாதவன் என்னும் தன்மை கேட்டார் வாய்க் கேட்டு அன்றிக்கே,
தம் பக்கலிலே அநுஷ்டான பர்யந்தமாகக் கண்டு சொல்லுகிறார் என்பது போதரும்.

வாய்ந்த –
பகவானுடைய குணங்களைச் சொல்லுகையும்-அனுசந்திக்கையும் –
அவ் வனுசந்தானம் -அச் சொல்லுகை ஒழியச் செல்லாமையுமாகிற இவ்வளவே யன்றி,
பகவானுடைய குணங்களைக் கேட்டால் -அவிக்ருதராய் -விகாரமில்லாமல் இருப்பாரை நிந்தித்தும்,-
விக்ருதராய் – உரையும் செயலும் வேறுபடுகின்றவர்களாய் இருப்பாரைக் கொண்டாடியும் போரும்படி
அவ் விஷயத்திலே-அவகாஹித்துச் மூழ்கிச் சொன்ன. வாய்கை – கிட்டுகை.

வளம் வயல் சூழ் தண் வளம் குருகூர்ச் சடகோபன்
வயலுக்குச் சொல்லுகிற சிறப்பையும் நகரங்களுக்குச் சொல்லுகிற சிறப்பையும் உடைத்தான திருநகரிக்கு
நிர்வாஹகரான ஆழ்வார்
தண்-குளிர்த்தி / நேர்ந்த -சொன்ன என்றபடி /
பகவானுடைய குண அநுசந்தானத்தாலே விக்ருதராய்க் கொண்டு -உரையும் செயலும் வேறுபட்டவராவார்-

—————

கண்கள் காண்டற்கு அரியனாய்க் கருத்துக்கு நன்றும் எளியனாய்
மண் கொள் ஞாலத்து உயிர்க்கெலாம் அருள் செய்யும் வானவர் ஈசனைப்
பண் கொள் சோலை வழுதி வள நாடன் குருகைக் கோன் சடகோபன்–3-6-11-

காணப்பெறாத இன்னாப்போடே சொல்லுகிறார்.
கண்களாற் காண அரியனாய், ‘காண ஒண்ணாது’ என்று மறந்து பிழைக்க ஒண்ணாதபடி
நெஞ்சுக்கு மிகவும் முன்னிலையாய்
இவர்க்குப் பிரிவாவது,-விஸ்லேஷமாவது -பாஹ்ய சம்ச்லேஷ அபேக்ஷையாலே – புறக் கண்களால் காண வேண்டும்
என்னும் நசையாலே- மனத்தின் அனுபவத்துக்கு வரும் கலக்கம்.
சம்ச்லேஷம் -கலவியாவது -ப்ரத்யக்ஷ சமானாகாரமான -புறக் கண்களால் நேரே காண்டலைப் போன்று-
ஞான சாஷாத்காரம் – உட் கண்ணால் காண்டல்.

மண் கொள் ஞாலத்து உயிர்க்கு எல்லாம் அருள் செய்யும் வானவர் ஈசனை –
நித்ய ஸூரிகளுக்கு-அனுபாவ்யனானால்- அனுபவிக்கத் தக்கவன் ஆனால் போலே, சம்சாரிகள் என்று
வாசி வையாமல் அர்ச்சாவதார முகத்தாலே வந்து ஸூலபன் ஆனவனை.

பண் கொள் சோலை –
வண்டுகளின் மிடற்று ஓசையாலே பண் மிக்கிருந்துள்ள சோலை;
முக் கோட்டை போலே காணும் சோலை இருப்பது.

வழுதி நாடன் குருகைக் கோன் சடகோபன் சொல் –
திருவழுதி நாட்டுக்கும் திருநகரிக்கும் நிர்வாஹகரான ஆழ்வார்

——————

அடி ஓங்கு நூற்றுவர் வீய அன்று ஐவர்க்கு அருள் செய்த
நெடியோனைத் தென் குருகூர்ச் சடகோபன் -3-7-11-

பாண்டவர்களை அரக்கு மாடத்திலே அகப்படுத்தியும், சூதிலே தோற்பித்தும்,
வனவாசம் முதலியவைகளைப் பண்ணுவித்தும், தாங்கள் புத்திரர் மித்திரர் முதலியவர்களாலே
நிறைந்து -பல்கி –ராஜ்யத்திலே வேர் விழுந்த துரியோதனாதிகள் நூற்றுவரும் முடியும்படி.

அன்று –
அவர்களாலே-நிரஸ்தரான – தள்ளப்பட்ட அன்று.

ஐவர்க்கு அருள் செய்த நெடியோனை –
இரண்டு இடத்திலும் ஒக்கும் காணும் ஐவர்க்கு அருள் செய்கை.
இங்குத் திசை திசை வலித்து எற்றுகின்ற ஐவர்க்கு அருள் செய்தான்;
அங்கு அவர்களாலே எற்று உண்ட ஐவர்க்கு அருள் செய்தான்.
இவர்களுடைய யானை குதிரை உள்ளிட்டவை அவர்கள் பறித்துக் கொள்ள,
யஸ்ய மந்த்ரீ ச கோப்தா ச ‘எவனுக்கு மந்திரியாயும் காக்கின்றவனாயும் இருக்கின்றானோ’ என்கிறபடியே,
இழந்தவை எல்லாம் தானேயாய் நின்றான் ஆதலின். ‘அருள் செய்த’ என்கிறார்.

நெடியோனை –
பாண்டவர்கள் காரியம் செய்து போகிற அன்றும்,
நாதிஸ் வஸ்த்தமநா ‘நிறைவு பெறாத மனத்தை யுடையவனாய் இருக்கிறேன்,’ என்கிறபடியே,
அவர்கள் காரியம் ஒன்றும் செய்யப் பெற்றிலோம்,’ என்றிருந்தபடி.

தென் குருகுகூர்ச் சடகோபன் குற்றேவல்கள் –
ஆழ்வார்-பாகவத சேஷத்வ பர்யந்தமான – பாகவதர்களுக்கு அடிமைப்பட்டிருக்கும் அடிமையை எல்லையாகவுடைய
கைங்கரியத்தை வாசிகமாகப் பண்ணுகையாலே அந்தரங்க அடிமை ஆயிற்றுச் சர்வேஸ்வரனுக்கு.

—————–

புலம்பு சீர்ப் பூமி யளந்த பெருமானை
நலங்கொள் சீர் நன் குருகூர்ச் சடகோபன் சொல்-3-8-11-

புலம்பு சீர்ப்
இவர் புகழுமா போலே லோகம் அடைய புகழும்படி யாயிற்று அவன் குணங்கள் –

பூமி யளந்த பெருமானை
பூமியை அளந்து –அந்ய சேஷத்வ /ஸூவ ஸ்வாதந்த்ர்யம் -இரண்டையும் தவிர்த்த –
சர்வ ஸ்வாமியை யாயிற்று இவர் கவி பாடிற்று –

நலங்கொள் சீர்-நன் குருகூர்ச் சடகோபன் சொல்
கரணங் களும் சேதன சமாதியால் விடாய்த்து
அவை தான் ஓர் இந்த்ரிய வ்ருத்தியை ஓர் இந்திரியம் ஆசைப்பட்டு-
இவை எல்லாவற்றின் விருத்தியையும் தாம் ஆசைப்பட்டு-
இப்படி பகவத் விஷயத்திலே விடாய்க்கும் படியான ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீ உடைய ஆழ்வார்
அனுபவ அபி நிவேசம் ஆகிற நன்மையையுடைய ஞானாதி குண விசிஷ்டராய்-
நன்றான திரு நகரிக்கு நிர்வாஹகரான ஆழ்வார் சொல்

————–

ஏற்கும் பெரும் புகழ் வானவர் ஈசன் கண்ணன் தனக்கு
ஏற்கும் பெரும் புகழ் வண் குருகூர்ச் சடகோபன் சொல்-3-9-11-

தகுதியான மிக்க புகழை யுடையவனாய், நித்ய ஸூரிகளுக்கு நிர்வாஹகனாய்,
அம் மேன்மையோடே வந்து அவதரித்து மனுஷயத்வே- மனிதத் தன்மையிலே பரத்வத்தையுடையவன் தனக்கு.
மனுஷ்யத்வே ‘மனிதத் தன்மையில் பரத்வம் சொல்லப்பட்ட இடம் உண்டோ?’ எனின்,
ஸ்ரீ கீதையில் ஒன்பதாம் ஓத்திலே நின்று மனுஷ்யத்வே- மனிதத் தன்மையிலே பரத்துவத்தைப் பரக்கப் பேசா
நின்றதே அன்றோ?

ஏற்கும் பெரும் புகழ் வண் குருகூர்ச் சடகோபன் சொல் –
‘அவன் உபய விபூதிகளை யுடையவன்’ என்றால், தக்கு இருக்குமாறு போன்று சர்வேஸ்வரன் கவி இவர்’ என்றால்
அதற்குப் போரும்படி யிருக்கிற ஆழ்வார்

————–

கேடு இல் விழுப் புகழ்க் கேசவனைக் குருகூர்ச் சட கோபன் சொன்ன பாடல் ஓர் ஆயிரத்துள் -3-10-11-

கேடு இல்லாமல் விழுப்பத்தை யுடைத்தான நித்யமாய் இருக்கிற மங்களம் பொருந்திய
கல்யாண குணங்களை யுடைய,கேசி ஹந்தாவை – கேசியைக் கொன்ற கிருஷ்ணனை.

குரு கூர்ச் சடகோபன் சொன்ன –
ரகுவீர சரிதம் முனி ப்ரணீதம் ‘முனிவரான வால்மீகி பகவானால் சொல்லப்பட்ட ஸ்ரீராகவனுடைய சரிதம்’ என்கிறபடியே,
அவதாரத்துக்கு அவ் வருகு போகமாட்டாத ஆழ்வாரால் அருளிச் செய்யப்பட்ட.

——————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading