ஸ்ரீ பரமபதத்துக்கு போக உபக்ரமிக்கிற ஸ்ரீ வைஷ்ணவர்களைக் கண்ட ப்ரீதி அதிசயத்தாலே
ஸ்த்தாவர ஜங்கமங்களுக்கு உண்டான விக்ருத்தியை அருளிச் செய்கிறார் –
சூழ் விசும்பு அணி முகில் தூரியம் முழக்கின
ஆழ்கடல் அலைதிரைக் கை எடுத்து ஆடின
ஏழ் பொழிலும் வளம் ஏந்திய என் அப்பன்
வாழ் புகழ் நாரணன் தாமரைக் கண்டு உகந்தே ––10-9-1-
—————–
மேல் உள்ள உலகங்கள்-பண்ணின ஸத்காரங்களை –செய்த உபகாரங்களை அருளிச் செய்கிறார் –
நாரணன் தாமரைக் கண்டு உகந்து நன்னீர் முகில்
பூரண பொற் குடம் பூரித்தது உயர் விண்ணில்
நீரணி கடல்கள் நின்றார்த்தன நெடுவரைத்
தோரணம் நிரைத்து எங்கும் தொழுதனர் உலகே–10-9-2-
——————–
ஸ்ரீ ஆதி வாஹிக லோகங்களில் உள்ளார் எதிரே வந்து புஷ்ப வ்ருஷ்டியைப் பண்ணி -மலர் மழையைப் பொழிந்து
கொண்டாடுகிற படியை அருளிச் செய்கிறார்
தொழுதனர் உலகர்கள் தூப நல் மலர் மழை
பொழிவனர்பூமி அன்று அளந்தவன் தமர் முன்னே
எழுமின் என்று இருமருங்கு இசைந்தனர் முனிவர்கள்
வழி இது வைகுந்தர்க்கு -என்று வந்து எதிரே–10-9-3-
——————–
மேலே உள்ள உலகங்களில் தேவர்கள் இவர்கள் போகிற வழிகளிலே தங்குகைக்காக தோப்புக்கள் சமைத்தும்-அமைத்தும் –
வாத்தியம் முதலானவற்றால் கோஷங்களை ஒலியை உண்டாக்கியும் கொண்டாடுகிற படியை அருளிச் செய்கிறார்
எதிர் எதிர் இமையவர் இருப்பிடம் வகுத்தனர்
கதிரவர் அவர் அவர் கைந்நிரை காட்டினர்
அதிர் குரல் முரசங்கள் அலை கடல் முழக்கு ஒத்த
மது விரி துழாய் முடி மாதவன் தமர்க்கே–10-9-4-
———————-
ஸ்ரீ ஆதி வாஹிகத் தலைவர்களான வருணன் இந்த்ரன் முதலானவர்களும் மற்றும் உள்ளாறும்
இவனுக்குச் செய்யும் ஸத்காரங்களை உபகாரங்களை அருளிச் செய்கிறார் –
மாதவன் தமர் என்று வாசலில் வானவர்
போதுமின் எமது இடம் புகுதுக என்றலும்
கீதங்கள் பாடினர் கின்னரர் கெருடர்கள்
வேத நல் வாயவர் வேள்வியுள் மடுத்தே–10-9-5-
———————–
ஸத்கார பூர்வகமாக -உபசரித்தல் முன்னாக-தேவ ஸ்த்ரீகள் -தெய்வப் பெண்கள் உகந்து
இவர்களை ஆசீர் வசனங்களை பண்ணினார்கள் -வாழ்த்தினார்கள் – என்கிறார் –
வேள்வி உள் மடுத்தலும் விரை கமழ் நறும் புகை
காளங்கள் வலம் புரி கலந்து எங்கும் இசைத்தனர்
ஆண்மின்கள் வானகம் ஆழியான் தமர் என்று
வாள் ஒண் கண் மடந்தையர் வாழ்த்தினர் மகிழ்ந்தே–10-9-6-
———————
மருத் கணங்களும் வஸூ கணங்களும் தங்கள் எல்லைக்கு இப்பாலும் தொடர்ந்து சென்று
இவர்களை ஸ்தோத்ரம் பண்ணினார்கள் -ஸ்துதி செய்தார்கள் என்கிறார் –
மடந்தையர் வாழ்த்தலும் மருதரும் வசுக்களும்
தொடர்ந்து எங்கும் தோத்திரம் சொல்லினர் தொடு கடல்
கிடந்த எம் கேசவன் கிளர் ஒளி மணி முடி
குடந்தை எம் கோவலன் குடி அடியார்க்கே–10-9-7-
——————–
ப்ரக்ருதி மண்டலத்துக்கு -இவ் உலகங்கட்கு எல்லாம் அவ்வருகே பரமபததுக்கு புறம்பாக
ஸ்ரீ நித்ய ஸூரிகள் இவர்களை எதிர் கொள்ளுகிறபடியை அருளிச் செய்கிறார் –
குடி அடியார் இவர் கோவிந்தன் தனக்கு என்று
முடி யுடை வானவர் முறை முறை எதிர் கொள்ள
கொடி அணி நெடு மதிள் கோபுரம் குறுகினர்
வடிவுடை மாதவன் வைகுந்தம் புகவே–10-9-8-
——————–
ஸ்ரீ பரம பதத்தில் சென்று திரு வாசலில் முதலிகளால் ஸதக்ருதராய் -உபசரிக்கப் பட்டவர்களாக
அங்குள்ள ஸ்ரீ நித்ய ஸூரிகள் ஸ்ரீ பரம பதத்தில் வருவதே –இது என்ன பாக்ய -புண்ணியத்தின் பலம் –
என்று ஈடுபட்டார்கள் -என்கிறார் –
வைகுந்தம் புகுதலும் வாசலில் வானவர்
வைகுந்தன் தமர் எமர் எமது இடம் புகுது என்று
வைகுந்தத்து அமரரும் முனிவரும் வியந்தனர்
வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே–10-9-9-
———————
ஸ்ரீ நித்ய சூரிகள் இவர்களை கொண்டாடும் படியை அருளிச் செய்கிறார் -.
விதி வகை புகுந்தனர் என்று நல் வேதியர்
பதியினில் பாங்கினில் பாதங்கள் கழுவினர்
நிதியும் நல் சுண்ணமும் நிறை குட விளக்கமும்
மதி முக மடந்தையர் ஏந்தினர் வந்தே–10-9-10-
——————–
நிகமத்தில்
இத் திருவாய் மொழியைக் கற்றவர்-அப்யசித்தவர்கள் – ஸ்ரீ நித்ய ஸூரிகளோடு ஒப்பர் என்கிறார்-
வந்தவர் எதிர் கொள்ள மா மணி மண்டபத்து
அந்தமில் பேர் இன்பத்து அடியரொடு இருந்தமை
கொந்து அலர் பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன் சொல்
சந்தங்கள் ஆயிரத்து இவை வல்லார் முனிவரே–10-9-11-
—————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ராமானுஜ ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஆத்தான் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply