பிரீதியாலே திரு நாமத்தைச் சொல்ல-ஸ்ரீ திருவனந்த புரத்துக்கு செல்ல விரோதி -தடையாக உள்ளவை
அனைத்தும் அழியும் அங்கே புக வாருங்கோள் -என்று அனுகூலரை அழைக்கிறார்-
கெடும் இடராய வெல்லாம் கேசவா வென்ன நாளும்
கொடு வினை செய்யும் கூற்றின் தமர்களும் குறுக கில்லார்
விடமுடை யரவில் பள்ளி விரும்பினான் சுரும்பலற்றும்
தடமுடை வயல் அனந்த புரநகர் புகுதும் இன்றே–10-2-1-
———————
தீ வினைகள் போகைக்கு சொன்ன-திருப் பெயர் தானே -கேசவா என்ன –
ஆயிரம் வகைகளாய் பாது காவலாய் இருக்கும்-என்கிறார் –
இன்று போய்ப் புகுதிராகில் எழுமையும் ஏதம் சாரா
குன்று நேர் மாட மாடே குருந்து சேர் செருந்தி புன்னை
மன்றலர் பொழில் அனந்த புர நகர் மாயன் நாமம்
ஒன்றும் ஓர் ஆயிரமாம் உள்ளுவார்க்கும் உம்பரூரே–10-2-2-
——————–
பிரதிபந்தகங்கள் -தீய வினைகள் போகைக்கு தேச ப்ராப்தியே அமையும் –அந்நகரத்தை அடைதலே போதியதாம்
ஆயிரம் திரு நாமங்களில் ஏதேனும் ஒன்றைச் சொல்லி அனுபவியுங்கோள்-என்கிறார்
ஊரும் புள் கொடியும் அக்தே உலகுஎல்லாம் உண்டு உமிழ்ந்தான்
சேரும் தண்ணனந்தபுரம் சிக்கெனப் புகுதிராகில்
தீரும் நோய் வினைகள் எல்லாம் திண்ணம் நாம் அறியச் சொன்னோம்
பேரும் ஓர் ஆயிரத்துள் ஓன்று நீர் பேசுமினே–10-2-3-
———————–
ஆஸ்ரயிப்பார்க்கு -பற்றுகின்றவர்க்கு ருசி பிறப்பதற்காக ஸ்ரீ திரு வனந்த புரத்திலே புக்கு அடிமை செய்கின்றவர்கள்
எத்தகைய புண்ணியம் செய்தவர்கள் -பாக்கியவான்கள் -என்கிறார் –
அன்றிக்கே
அவர்கள் பாக்யம் -புண்ணியம் செய்த படியைப் பேசுங்கோள் -என்கிறார் -என்னுதல் –
பேசுமின் கூசமின்றிப் பெரிய நீர் வேலை சூழ்ந்து
வாசமே கமழும் சோலை வயல் அணி அனந்த புரம்
நேசம் செய்து உறைகின்றானை நெறிமையால் மலர்கள் தூவி
பூசனை செய்கின்றார்கள் புண்ணியம் செய்தவாறே–10-2-4-
——————–
ஸ்ரீ திரு வனந்த புரத்தை ஆஸ்ரயிக்குமவர்கள் -அடையுமவர்கள் ஸ்ரீ நித்ய ஸூரிகள் ஆவார்கள்
ஆகையால் நீங்களும் ஆஸ்ரயியுங்கோள் -அடைமின் – என்கிறார்
புண்ணியம் செய்து நல்ல புனலொடு மலர்கள் தூவி
எண்ணுமின் எந்தை நாமம் இப்பிறப்பு அறுக்கும் அப்பால்
திண்ணம் நாம் அறியச் சொன்னோம் செறி பொழில் அனந்த புரத்து
அண்ணலார் கமலபாதம் அணுகுவார் அமரர் ஆவார்–10-2-5-
——————-
ஸ்ரீ நித்ய ஸூரிகளும் வந்து அடிமை செய்வது இங்கே ஆகையாலே ஸ்ரீ திரு வனந்த புரமே பரம ப்ராப்யம் –
அடையத் தக்க மேலான இடம் -அங்கே நாம் அடிமை செய்ய வேண்டும் – என்கிறார்-
சசைன்ய புத்ர சிஷ்ய சாத்ய சித்த பூசூரர் அர்ச்சனத்துக்கு முக நாபி பாதங்களை
த்வார த்ரயத்தாலே காட்டும் சாம்யம் -அனந்த சயனத்திலே -வியக்தம் -ஆச்சார்ய ஹிருதயம் ஸ்ரீ ஸூக்தி-3-84-
அமரராய் திரிகின்றார்க்கு ஆதி -பிரமன் முதலான தேவர்கள் -திரு நாபியின் பக்கம்
அமரர்கோன் -விஷ்வக் சேனர் -நித்ய ஸூரிகளுக்கு திருமுக மண்டலம்
நமர்களோ –நாமும் போய் நணுக வேண்டும் -திருவடியே புகல்
அமரராய்த் திரிகின்றார் கட்கு ஆதிசேர் அனந்த புரத்து
அமரர் கோன் அர்ச்சிக்கின்று அங்கு அகப்பணி செய்வர் விண்ணோர்
நமர்களோ சொல்லக் கேண்மின் நாமும் போய் நணுக வேண்டும்
குமரனார் தாதை துன்பம் துடைத்த கோவிந்தனாரே–10-2-6-
———————–
ஸ்ரீ சர்வேஸ்வரன் திருக் கண் வளர்ந்து அருளுகின்ற ஸ்ரீ திரு வனந்த புரத்திலே சென்று
அடிமை செய்யப் பெறில் ஒரு தேச விசேஷத்திலே போய் அடிமை செய்யப் பெற்றிலோம்
என்னும் துக்கம் போம் – என்கிறார் –
துடைத்த கோவிந்தனாரே உலகு உயிர் தேவு மற்றும்
படைத்த வெம் பரம மூர்த்தி பாம்பணைப் பள்ளி கொண்டான்
மடைத் தலை வாளை பாயும் வயல் யணி யனந்த புரம்
கடைத்தலை சீய்க்கப் பெற்றால் கடு வினை களையலாமே–10-2-7-
————————
ஸ்ரீ திரு வனந்த புரத்திலே திருக் கண் வளர்ந்து அருளுகிற ஸ்ரீ சர்வேஸ்வரன் திருவடிகளை
காணப் போருங்கோள் என்று அனுகூலரை அழைக்கிறார்
கடுவினை களையலாகும் காமனைப் பயந்த காளை
இடவகை கொண்ட தென்பர் எழில் அணி அனந்த புரம்
படமுடை யரவில் பள்ளி பயின்றவன் பாதம் காண
நடமினோ நமர்கள் உள்ளீர் நாமும் உமக்கு அறியச் சொன்னோம்–10-2-8-
———————–
சரீரத்தின் அவசானம் முடிவு அணித்தாயிற்று-ஈண்டென ஸ்ரீ திரு வனந்த புரத்திலே புக்கு
அடிமை செய்ய –தாஸ்ய -அடிமை செய்வதற்கு விரோதியான கர்மங்கள் தாமே அழியும் –-என்கிறார்
நாமும் உமக்கு அறியச் சொன்னோம் நாள்களும் நணியவான
சேமம் நன்குடைத்துக் கண்டீர் செறி பொழில் அனந்த புரம்
தூம நல் விரை மலர்கள் துவளற வாய்ந்து கொண்டு
வாமனன் அடிக்கென்று ஏத்த மாய்ந்து அறும் வினைகள் தாமே–10-2-9-
——————–
ஸ்ரீ திரு வனந்த புரத்திலே புக்கு அடிமை செய்கிறவர்கள் பெருமை பேச நிலம் அன்று – என்கிறார்
மாய்ந்து அறும் வினைகள் தாமே மாவதா வென்ன நாளும்
ஏய்ந்த பொன் மதிள் அனந்த புர நகர் எந்தைக்கு என்று
சாந்தொடு விளக்கம் தூபம் தாமரை மலர்கள் நல்ல
ஆய்ந்து கொண்டு ஏத்த வல்லார் அந்தமில் புகழினாரே–10-2-10-
———————-
நிகமத்தில்-இத் திருவாய் மொழி வல்லார் ஸ்ரீ திரு நாட்டில் உள்ளாருக்கு போக்யர் -இனியர் ஆவார் என்கிறார்
அந்தமில் புகழ் அனந்த புர நகராதி தன்னை
கொந்தலர் பொழில் குருகூர் மாறன் சொல் லாயிரத்துள்
ஐந்தினோடு ஐந்தும் வல்லார் அணைவர் போய் அமர் உலகில்
பைந்தொடி மடந்தையர் தம் வேய் மரு தோள் இணையே–10-2-11-
————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ராமானுஜ ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஆத்தான் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply